சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 29, 2022

சாணக்கியன் 37

 

ம்பி குமாரன் கேகய நாட்டைப் பற்றிச் சொன்னவுடனேயே அலெக்ஸாண்டர் அதனுடன் போர் புரிந்து வெல்லத் துடிப்பான் என்று எதிர்பார்த்திருந்ததால் அலெக்ஸாண்டர் தூதனை அனுப்பத் தீர்மானித்தவுடன் ஏமாற்றமடைந்தான். ஆம்பி குமாரன் கேகய நாட்டை அவனுடைய எதிரி நாடு என்றும் சொல்லிப் பார்த்தான். அப்போதும் அலெக்ஸாண்டர் அதை ஒரு தகவல் போலக் கேட்டுக் கொண்டானேயொழிய நண்பனுடைய எதிரி தனக்கும் எதிரி என்று உடனே நிலைப்பாடு எடுக்காதது அவனுக்கு அதிருப்தியாகத் தான் இருந்தது. ஆனாலும் புருஷோத்தமனின் போர்க்குணம் பற்றித் தெரிந்திருந்ததால் அவர் தன்னைப் போல் நட்புக்கரம் நீட்டக்கூடியவரல்ல என்று மனசமாதானம் அடைந்தான். அலெக்ஸாண்டர் அனுப்பிய தூதன் புருஷோத்தமனின் அலட்சிய பதிலோடு இரண்டு நாட்களில் திரும்பி வரக்கூடும். வந்த பின் அலெக்ஸாண்டருடன் சேர்ந்து போருக்குச் சென்று கேகய மன்னன் புருஷோத்தமனைப் போர்க்களத்தில் சந்தித்து வென்று மண்டியிட வைக்க வேண்டும். முன்பு தந்திரமாக வந்து தட்சசீலத்தை ஆக்கிரமித்த கேகய அமைச்சர் இந்திரதத்தையும் சிறைப்படுத்த வேண்டும். அப்போது தான் ஆத்திரம் சற்றாவது குறையும் என்று ஆம்பி குமாரன் நம்பினான். அந்தக் காட்சிகளைக் கற்பனை செய்து பார்க்கும் போதே ஆம்பி குமாரனுக்கு இனித்தது.


அந்த மகிழ்வான மனநிலையை ஏற்படுத்திக் கொண்டு அலெக்ஸாண்டரை விருந்தினர் மாளிகையில் சந்திக்கச் சென்ற ஆம்பி குமாரனிடம் அலெக்ஸாண்டர் சொன்னான். “நண்பனே. இந்த பாரத பூமியில் நிறைய சக்தி வாய்ந்த யோகிகளும், துறவிகளும் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களில் சிறந்த ஒருவருடன் நான் பேச விரும்புகிறேன்.”


ஆம்பி குமாரன் அலெக்ஸாண்டரின் இந்த விருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. இவன் முரண்பாடுகளின் தொகுப்பாக இருக்கிறானே என்று அலெக்ஸாண்டரைப் பற்றி எண்ணாமல் இருக்க முடியவில்லை. போகங்களிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறான். போரிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறான். அதோடு இப்படி துறவிகள் மீதும் ஆர்வம் காட்டுகிறானே. இது எப்படி இவனால் முடிகிறது என்று நினைத்தபடியே ஆம்பி குமாரன் சொன்னான். “நண்பா. நீ சொல்வது போன்ற துறவிகள் இப்பகுதியிலும் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் அணுகிப் பேச உகந்தவர்கள் அல்ல. அவர்கள் அகம்பாவம் கொண்டவர்கள். அரசர்களைக் கூட அவர்கள் மதிக்க மாட்டார்கள்.”


ஆம்பி குமாரனின் எச்சரிக்கை அலெக்ஸாண்டரை திகைக்க வைக்கவில்லை. அலெக்ஸாண்டர் அதை லட்சியம் செய்யாமல் சிறு புன்னகையுடன் சொன்னான். “அது போன்ற மனிதர்களை நான் அறிவேன் நண்பனே. என் குரு அரிஸ்டாட்டிலின் குரு ப்ளேட்டோவின் குரு சாக்ரசிடீஸ் அப்படிப் போன்ற நபர் தான். அவர் அரசாள்பவர்களை மதிக்காமல், அவர்களை அனுசரிக்காமல் எந்த வருத்தமும் இல்லாமல் உயிரையும் துறந்தவர்.”


அலெக்ஸாண்டர் அதை ஒரு உயர்வான விஷயமாகவே எடுத்துக் கொண்டு சொன்னது ஆம்பி குமாரனைத் திகைக்க வைத்தது. ‘இவனால் எப்படி இது போன்ற மனிதர்களை உயர்வாகவே நினைக்க முடிகிறது?’ என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டான். அவனால் அது போன்ற மனிதர்களை என்றுமே சகிக்க முடிந்ததில்லை. ஆடைகள் உட்பட அனைத்தையும் துறந்த அந்தத் துறவிகளிடம் கர்வப்பட என்ன இருக்கிறது என்பது அவனுக்கு என்றுமே புரிந்ததில்லை. அவன் தந்தை பயபக்தியுடன் வணங்கிய துறவிகள் சிலரை அவன் பார்த்திருக்கிறான். அவர்கள் அரசன் வணங்கினாலும், அடிமை வணங்கினாலும் ஒரே போல் அலட்சியமாக இருப்பார்கள். கையை உயர்த்தி ஆசி வழங்குவதையே ஒரு பொக்கிஷத்தை வழங்குவது போல் காட்டிக் கொள்வார்கள். அவன் தந்தையும் அந்த ஆசியையே தன் பாக்கியமாக எண்ணிக் கொள்வார். அந்தத் துறவிகளின் அலட்சியத்திற்கு அவன் தந்தையைப் போன்ற அரசர்கள் தரும் மரியாதை தான் காரணம் என்று ஆம்பி குமாரனுக்கு இப்போதும் தோன்றுகிறது. அவன் அது போன்ற துறவிகளை என்றுமே லட்சியம் செய்ததில்லை. அவனைப் போலவே அலெக்ஸாண்டரும் இருக்காமல் அவர்களை மதித்து சந்திக்க விரும்புவது பிடிக்கவில்லை.


தட்சசீலத்திற்கு அருகிலிருக்கும் வனப்பகுதியில் சில சமணத்துறவிகள் இருக்கிறார்கள், அவர்கள் ஆடைகளையும் துறந்தவர்கள், நிர்வாணமாக இருப்பவர்கள், அழுக்கும், புழுதியும் மேனியில் கொண்டவர்கள், சிலர் பேசவும் மறுப்பவர்கள் என்றெல்லாம் ஆம்பி குமாரன் விவரித்தும் அலெக்ஸாண்டர் தன் விருப்பத்தை விட்டு விடவில்லை. அடுத்த போருக்குச் செல்வதற்கு முன் அப்படிப்பட்ட ஒரு துறவியிடமாவது சந்தித்துப் பேச வேண்டும் என்று பிடிவாதமாகச் சொல்லவே ஆம்பி குமாரன் அதற்கு ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்தான்.

அவன் தன் அமைச்சரையும், தட்சசீலத்துப் பண்டிதர்களையும் அலெக்ஸாண்டரின் முன்னிலையிலேயே அழைத்து அந்தத் துறவிகளில் சிறந்தவராகக் கருதப்படுபவர் யார் என்று விசாரித்தான். அவர்கள் ஏகோபித்த குரலில் தண்டராய சுவாமி என்ற துறவியைச் சொன்னார்கள். அவரை மிகச் சிறந்த ஞானி என்றும், அந்த வனத்தில் இருக்கும் பெரும்பாலான துறவிகள் தண்டராய சுவாமியின் சீடர்கள் என்றும் சொன்னார்கள்.


அலெக்ஸாண்டர் ஆர்வத்துடன் சொன்னான். “நான் தண்டராய சுவாமியிடம் பேச வேண்டும். அழைத்து வர ஏற்பாடு செய்யுங்கள்”


சசிகுப்தன் அதை மொழி பெயர்த்துச் சொன்னவுடன் ஒரு பண்டிதர் தயக்கத்துடன் சொன்னார். “அவர் பிக்‌ஷைக்காகக் கூட நகருக்குள் வருவதில்லை”


”என்னிடம் ஒரு முறை அவர் வந்து சென்றால் பின் தன் வாழ்நாளில் என்றுமே அவர் பிக்‌ஷைக்குச் செல்ல வேண்டியதில்லை” என்று உற்சாகமாக அலெக்ஸாண்டர் சொன்னான்.


அலெக்ஸாண்டரின் உற்சாகம் ஆம்பி குமாரனைத் தொற்றிக் கொள்ளவில்லை. அவனுடைய பழைய அனுபவங்கள் அதற்குத் தடையாக இருந்தன. அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அலெக்ஸாண்டர் சொன்னான். “நீ உன் வீரர்களை ஒனெஸ்க்ரீட்டஸுடன் அனுப்பு நண்பா. அவன் அவரை அழைத்து வருவான்”


ஒனெஸ்க்ரீட்டஸ் அலெக்ஸாண்டரின் மொழிபெயர்ப்பாளன். ஞான மார்க்கத்தில் அவனைப் போலவே ஆர்வம் கொண்டவன். அவனுக்கு காந்தார வீரர்களுடன் காட்டுக்குள் சென்றது மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. காட்டுக்குள் ஆங்காங்கே பல துறவிகளை அவன் கண்டான். சிலர் தவக்கோலத்தில் இருந்தார்கள். சிலர் ஒரு குழுவாக அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். சிலர் காவியுடை அணிந்து கொண்டிருந்தார்கள். சிலர் நிர்வாணமாக இருந்தார்கள். பெரும்பாலானவர்களிடம் எல்லையில்லாத அமைதி தெரிந்தது. குதிரைகளில் சென்று கொண்டிருந்த காந்தார வீரர்களையும் ஒனெஸ்க்ரீட்டஸையும் யாருமே கண்டு கொள்ளவில்லை. அதே போல அந்தத் துறவிகள் அவர்களைக் கடந்து சென்ற விலங்குகளையும் கண்டு கொள்ளவில்லை. அவர்களைப் பொருத்த வரை இரு பிரிவினரிடையே எந்த வித்தியாசமும் இல்லை என்று எண்ணியபடியே ஒனெஸ்க்ரீட்டஸ் புன்னகைத்தான்.


நீண்ட பயணத்திற்குப் பின் அவர்கள் தண்டராய சுவாமியைச் சந்தித்தார்கள். ஒரு பாறையின் மீது இலைகளைப் பரப்பி அதன் மீது அந்த வயதான துறவி நிர்வாணமாகப் படுத்துக் கொண்டிருந்தார். அவர் முகம் ஞான ஒளியால் பிரகாசித்ததை ஒனெஸ்க்ரீட்டஸ் கவனித்தான். குதிரையிலிருந்து இறங்கி மிகவும் பணிவாக அவரைத் தலை வணங்கி நின்ற ஒனெஸ்க்ரீட்டஸ் வீரர்களைப் பார்த்து சைகை செய்ய அவர்கள் பெரிய தாம்பாளங்களில் கொண்டு வந்திருந்த கனிவகைகளையும், மற்ற பரிசுப்பொருள்களையும் தண்டராய சுவாமி முன்பு வைத்தார்கள்.


ஒனெஸ்க்ரீட்டஸ் சொன்னான். “துறவிகளில் சிறந்தவரே! ஞானத்தின் உறைவிடமே! ஆகாயக் கடவுள் ஜீயஸின் புத்திரனும், உலகாளப் பிறந்தவரும் ஆன மாவீரர் அலெக்ஸாண்டர் அனுப்பி இந்த அடியவன் ஒனெஸ்க்ரீட்டஸ் தங்களை நாடி வந்துள்ளேன். மாவீரர் அலெக்ஸாண்டர் தங்களுக்கு அனுப்பி இருக்கும் இந்தக் கனிகளையும், பரிசுகளையும் ஏற்றுக் கொள்ளும்படி தங்களை வேண்டிக் கொள்கிறேன். தங்களைச் சந்தித்துப் பேச மாமன்னர் அலெக்ஸாண்டர் விரும்புகிறார். எனவே தாங்கள் எங்களுடன் வந்தருளும்படி தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.”


தண்டராய சுவாமியின் விழிகள் ஒனெஸ்க்ரீட்டஸைச் சலனமேயில்லாமல் பார்த்தன. ”ஆடைகள் உட்பட அனைத்தையும் துறந்திருக்கும் எனக்கு நீ தாம்பாளங்களில் கொண்டு வந்திருக்கும் பொருள்களும், உன் காலடி மண்ணும் ஒன்று தான். எனக்கு விருப்பமும், பயனும் இல்லாத இந்தப் பொருள்களை நீ திரும்பவும் எடுத்துச் செல்வாயாக! யாரையும் சென்று சந்திக்கும் உத்தேசமும் எனக்கு இல்லை என்று உன்னை அனுப்பியவனிடம் சொல்வாயாக!” சொல்லி விட்டு தண்டராய சுவாமி தன் கண்களை மூடிக் கொண்டார்.


கோபத்தில் கொந்தளித்த ஒனெஸ்க்ரீட்டஸ் கடுமையான வார்த்தைகளால் அவரைப் பயமுறுத்த நினைத்தான். ஆனால் அந்தத் துறவி கண்களை மட்டுமல்லாமல் காதுகளையும் உள்ளூர மூடிக்கொண்டதாகவே அவனுக்குத் தோன்றியது. என்ன சொன்னாலும் அந்தத் துறவியின் காதுகளில் விழப் போவதில்லை என்பது தெளிவாகப் புரிய அங்கிருந்து அவன் வேகமாகக் கிளம்பினான்.



(தொடரும்)

என்.கணேசன்



Wednesday, December 28, 2022

முந்தைய சிந்தனைகள் 90

 என் நூல்களிலிருந்து சில சிந்தனைச் சிதறல்கள்!













Monday, December 26, 2022

யாரோ ஒருவன்? 118



ரத், ரஞ்சனி, தீபக் மூன்று பேரும் மதியம் பன்னிரண்டு மணியளவில் கல்யாணின் வீட்டை அடைந்தார்கள். ஆனால் மூன்று பேர் பார்வையும் பக்கத்து வீட்டின் மீதே இருந்தது. சரத் படபடப்புடனும், ரஞ்சனி பரபரப்புடனும், தீபக் ஆர்வத்துடன் அந்த வீட்டைப் பார்த்தார்கள். அங்கே யாரும் தென்படவில்லை. ரஞ்சனியிடம் தீபக் தாழ்ந்த குரலில் சொன்னான். “அவர் எப்பவும் தியானம், பூஜைன்னு வீட்டுக்குள்ளேயே இருப்பார். தேவையில்லாம வெளியே வர மாட்டார்?”

ரஞ்சனி தலையசைத்தாள். அதற்கு மேல் பக்கத்து வீட்டைக் கவனிக்க முடியாதபடி தர்ஷினி ஓடி வந்தாள். “ஆண்ட்டி. உங்களுக்கு இப்ப தான் இங்கே வர வழி தெரிஞ்சுதா?”

கேட்டுக் கொண்டே அன்புடன் அணைத்துக் கொண்ட தர்ஷினியிடம் புன்னகையுடன் ரஞ்சனி சொன்னாள். “வரணும்னு நினைக்கறது. ஏதாவது ஒரு வேலை, தடங்கல் வந்துகிட்டே இருந்துச்சு. நானும் சரி நாளைக்கு போலாம், நாளானிக்குப் போலாம்னு நினைச்சு இருந்துடுவேன். இன்னைக்கு தான் வர முடிஞ்சுருக்கு

வீட்டுக்குள்ளே போகையில்இன்னைக்கு கூட பக்கத்துக்கு வீட்டுக்கு வர இருந்ததால வந்திருக்கீங்கஎன்று தர்ஷினி பொய்க்கோபத்துடன் குற்றம் சாட்டினாள்.

இல்லாட்டியும் அடுத்த வாரமாவது கண்டிப்பா வந்திருப்பேன் தர்ஷினி. உன்னை மாதிரி எனக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தாலாவது ஏதாவது சின்ன உதவியாவது வீட்டுல கிடைச்சிருக்கும். உன் ஃப்ரண்ட் தன்னோட வேலையைக் கூட அவன் செஞ்சுக்க மாட்டான். அவன் பின்னாடியே ஒரு ஆள் வேணும்என்று ரஞ்சனி சொல்ல தீபக் தாயை முறைத்தான்.

மேகலா அவளை வரவேற்றபடி சொன்னாள். “இவளை மாதிரி ஒரு பொண்ணு இருந்திருந்தாலும் உங்களுக்கு எந்த உதவியும் கிடைச்சிருக்காது. இங்கே இருக்கற துரும்பை அந்தப் பக்கம் வைக்க மாட்டா. அப்படியே எடுத்து வெச்சிட்டாலும் அதைச் சொல்லியே ஒரு வருஷம் வேறெந்த வேலையும் செய்யாம ஓட்டிடுவா

தர்ஷினி தாயைக் கோபித்துக் கொண்டாள். “எப்ப பாரு குற்றம் சொல்லிட்டே இரு.”

வேலாயுதம்வீட்டுக்கு வீடு வாசற்படி தான்.” என்றபடியே வந்து புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களை வரவேற்றார். “வாங்க…”

கல்யாணும் வந்துவா ரஞ்சனி. வாடாஎன்று வரவேற்று அவர்கள் புன்னகை செய்து கடந்தவுடன் பின் தங்கினான். நண்பன் நின்றதைப் பார்த்த சரத்தும் அங்கேயே நின்று விட்டான். மேகலாவும் ரஞ்சனியும் பேசிக் கொண்டே ஒரு சோபாவில் அமர தர்ஷினியும் தீபக்கும் பேசிக் கொண்டே இன்னொரு சோபாவில் அமரப் போனார்கள். வேலாயுதம் தீபக் அமரப் போகும் முன் அவன் கையைப் பிடித்து சற்றுத் தள்ளி அழைத்துக் கொண்டு போய் கேட்டார். “இன்னைக்குக் காலைல நீ வாக்கிங் போகலயா?”

தீபக் தர்ஷினியை அர்த்தமுள்ள ஒரு பார்வை பார்த்து விட்டு அவரிடம் சொன்னான். “இன்னைக்கு ஒரே தலைவலி தாத்தா

பரவாயில்ல. உடம்புன்னா அதெல்லாம் இருக்கும் தான். நீ ஒன்னு செய்யறியா? நீ உன் அம்மா கூட அங்கே போகறப்ப இந்த வீட்டுல நடந்த திருட்டு பத்தி மெல்லக் கேட்டுப்பாரேன். அவன் என்ன சொல்றான்னு பார்ப்போம்.”

தீபக் சொன்னான். “தாத்தா. அம்மாக்கு மட்டும் தான் அப்பாயின்மெண்ட். நான் கூட எல்லாம் போக முடியாது. எதோ எங்கம்மா புண்ணியத்துல அவங்களுக்கு ஓசில ஒரு அப்பாயின்மெண்ட் கிடைச்சிருக்கு. அதுமட்டுமில்லாம அவர் ஆள் ஒரு மாதிரி தாத்தா. வாக்கிங் போகிறப்பவே எதாவது கேட்டா பதில் சொல்லப் பிடிக்காட்டி அவர் பாட்டுக்கு வேகமாய் போய்கிட்டே இருப்பார். அதனால அதெல்லாம் கேட்டு பிரயோஜனம் இல்லை. நீங்க பேசாம ஒரு காரியம் பண்ணுங்க. போலீஸ்ல புகார் குடுங்க. அவங்க வேலைய நாம ஏன் பார்க்கணும்...”

இந்தப் பைத்தியக்காரனுக்கு எப்படி விளக்குவது என்று வேலாயுதம் சலிப்புடன் பார்த்து மெல்ல அவன் கையை விட்டு விட்டு நகர்ந்தார். தப்பித்தால் போதும் என்று போய் தர்ஷினியருகே உட்கார்ந்து கொண்டான். தர்ஷினி ஆச்சரியத்துடன் கேட்டாள். “நீ எப்படி எங்க தாத்தா கிட்ட இருந்து இவ்வளவு சீக்கிரம் தப்பிச்சே? நான், நான் தான் வந்து உன்னைக் காப்பாத்த வேண்டியிருக்கும்னு நினைச்சேன்.”

“போலீஸ்ல புகார் பண்ணுங்கன்னு சொன்னேன். உடனடியா நகர்ந்துட்டார். ஏய் எனக்கு ஒரு சந்தேகம். அந்த ரத்தினக்கல் சின்ன வயசுல இவர் எங்கேயிருந்தாவது ஆட்டையப் போட்டதாய் இருக்குமோ? அதனால தான் தயங்கறாரோ?”

தர்ஷினி தன் தாத்தாவைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னாள். “இருந்தாலும் இருக்கும்.... இவர் செய்யக்கூடிய ஆள் தான்”

அதே நேரத்தில் சரத்திடம் கல்யாண் கேட்டுக் கொண்டிருந்தான். “ரஞ்சனி என்ன கேட்கப் போறேன்னு எதாவது சொன்னாளா?”

“இல்லை. தீபக் தான் நாகராஜ் கிட்ட அப்படிப் பேசணும், இப்படிப் பேசணும்னெல்லாம் சொல்லிகிட்டிருந்தான். “எல்லாம் எனக்குத் தெரியும். கொஞ்சம் சும்மா இருடா”ன்னு சொல்லி அவன் வாயை அடைச்சுட்டா. ஆனா மாதவனைப் பத்தி தான் கேட்கப் போறான்னு உள்மனசு சொல்லுது” சொல்லச் சொல்ல அவனுக்கு குரல் வலுவிழந்தது.

கல்யாணின் அடிமனதில் சலிப்பு கலந்த ஆத்திரம் எழுந்தாலும் அது முகத்தையோ நாக்கையோ எட்டவில்லை. அவன் பொறுமையாகச் சொன்னான். “அவள் என்ன கேட்டாலும் சரி, நாகராஜ் என்ன சொன்னாலும் சரி நீ கவலைப்படாதே. எப்படியும் அவன் கிட்ட பேசிட்டு திரும்பி இங்கே தான் ரஞ்சனி திரும்பி வரப்போறா? அவன் எதாவது வில்லங்கமா சொன்னான்னா அதை உடனடியாய் நம்ம கிட்ட கேட்காம அவ இருக்க மாட்டா சரத். அப்படி எதாவது கேட்டா நீ வாயையே திறக்காதே. அமைதியாயிரு. நான் அவ கிட்ட பேசிக்கறேன். திருப்தி தானே?”

சரத்துக்கு ஓரளவு திருப்தியாக இருந்தது. அவன் மெல்லத் தலையசைத்தான்.


சுதர்ஷன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி இரண்டரை. இனி அரை மணி நேரத்தில் தீபக்கின் தாய் வந்து விடுவாள். இது வரை யார் வந்த போதும் அங்கு அவன் இல்லாமல் இருந்ததில்லை. ஆனால் இன்று அவள் இங்கு வரும் நேரத்தில் அங்கிருக்க வேண்டாம் என்று சுதர்ஷன் ஏற்கெனவே முடிவு செய்திருந்தான். நாகராஜிடம் போய்ச் சொன்னான். “சில பேக்கிங் சாமான்கள் வாங்கணும். டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்”

நாகராஜ் தலையை அசைத்தான். சுதர்ஷன் வெளியேறினான். எத்தனையோ சிந்தனைகள் மனதில் அலைபாய நாகராஜ் கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தான். கடிகாரம் 2.55 என்று நேரம் காட்டியது. இனி ஐந்து நிமிடங்கள் கழித்து ரஞ்சனி வந்து விடுவாள். எழுந்து போய் அலமாரியில் இருந்த கருப்புக் கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டு மீண்டும் அமர்ந்தான். இதை சத்தியமங்கலம் போன அன்று அணிந்த பிறகு கழட்டியது. பிறகு இன்று வரை அணியவில்லை. இப்போது அவனுக்கு அது மறுபடியும் தேவைப்படுகிறது.


ஞ்சனி மேகலாவிடம் ஒரு பெரிய தாம்பாளத்தட்டு கேட்டாள். மேகலா எடுத்துக் கொடுத்தவுடன் அதில் ஏற்கெனவே பையில் எடுத்து வந்திருந்த பூ, பழங்கள், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சையோடு ஐந்தாயிரம் ரூபாயும் எடுத்து வைத்து விட்டு ரஞ்சனி மேகலாவிடம் சொன்னாள். “அவர் எல்லார் கிட்டயும் அஞ்சு லட்சம் ரூபாய் வாங்கறாராம். அத்தனை நம்மளால தர முடியாட்டியும் மரியாதைக்கு ஒரு சின்னத் தொகையாவது தந்து கேட்கறது தானே மரியாதை”

மேகலா ஆமென்று தலையசைத்தாள். “உங்களுக்கு அவர் கிட்ட என்ன கேட்கணும்?”  

ரஞ்சனி சொன்னாள். “எப்பவோ இறந்து போன ஆத்மா ஒன்னு சில நாளா அடிக்கடி என் நினைவுக்கு வருது. என்ன காரணம்னு தெரியலை. அதைக் கேட்கணும்னு தான்...”

சொல்லச் சொல்ல அவள் கண்கள் லேசாகக் கலங்கியதைக் கவனித்த மேகலாவுக்கு மனம் நெகிழ்ந்தது. ’அப்பாவோ, அம்மாவோ இருக்கும். பாவம். காலம் எத்தனை போனாலும் அந்த அன்பு குறைஞ்சுடுமா என்ன?’

தாம்பாளம் எடுத்துக் கொண்டு ரஞ்சனி கிளம்பிய போது வாசல் வரை தாயைக் கொண்டு போய் விட தீபக்கும் போனான். சரத், கல்யாண், வேலாயுதம் மூன்று பேரும் படபடப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்...

(தொடரும்)
என்.கணேசன்




   

Thursday, December 22, 2022

சாணக்கியன் 36

 

ம்பி குமாரன் பரம திருப்தியான மனநிலையில் இருந்தான். எல்லாமே அவன் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே நன்றாக நடப்பது போல் அவனுக்குத் தோன்றியது.  அலெக்ஸாண்டரின் பரிசுப் பொருள்கள் முதல் சந்திப்பிலேயே நிறைய அவனுக்குக் கிடைத்திருந்த போதிலும் தட்சசீலம் வந்து சேர்ந்த பிறகு விருந்தினர் மாளிகையில் ஆம்பி குமாரன் செய்திருந்த சிறப்பான ஏற்பாடுகளைப் பார்த்து விட்டு மேலும் தாராளமாகப் பரிசுகள் தந்தான். அலெக்ஸாண்டரிடம் இருந்த மிகச்சிறந்த போர்க்குதிரைகளைப் பார்த்து ஆம்பி குமாரன் வியந்ததைக் கண்டு உடனே முப்பது போர்க்குதிரைகளைப் பரிசாகத் தந்தான். பரிசாகக் கிடைத்த மற்ற பொருள்களைக் காட்டிலும் அந்தப் போர்க்குதிரைகள் ஆம்பி குமாரனின் மனதைக் குளிர்வித்தன. அலெக்ஸாண்டருடைய தாராளத்தைப் பார்த்து ஆம்பி குமாரன் இவனை நட்பாக்கிக் கொள்ளத் தானெடுத்த முடிவு சரியானது தான் என்று மிகச் சந்தோஷமாக எண்ணிக் கொண்டான்.

 

சசிகுப்தன் அலெக்ஸாண்டருடன் வந்திருப்பது பல விஷயங்களைச் சுலபமாக்கி இருந்தது. அலெக்ஸாண்டரின் தேவைகளையும், அவன் மனநிலைகளையும் மிகத் தெளிவாக அறிந்திருந்த சசிகுப்தன் அவற்றை ஆம்பி குமாரனிடம் தெரிவித்ததால் அலெக்ஸாண்டருக்கு எந்தக் குறையும் இல்லாமல் ஆம்பி குமாரனால் பார்த்துக் கொள்ள முடிந்தது. அத்தோடு அலெக்ஸாண்டரின் பல பரிமாணங்களையும் ஆம்பி குமாரனால் அறிந்து கொள்ள முடிந்தது.

 

அலெக்ஸாண்டர் போர் நுணுக்கங்களை ஆழமாகத் தெரிந்து வைத்திருந்தது போலவே வாழ்க்கையின்  போகங்களையும் ஆழமாக அனுபவிக்கத் தெரிந்து வைத்திருந்தான்.  அதே நேரத்தில் எதிலிருந்தும் எப்போது வேண்டுமானாலும் விலக முடிந்த வித்தையும் அவனுக்கு மிக நன்றாகத் தெரிந்திருந்தது. அதே போல வழிபாடுகளிலும் கூட அவனுக்கு முழுமையான ஈடுபாடு இருந்தது. தன் வெற்றிகளுக்காக தட்சசீலத்தில் வழிபாடுகளை அவன் நடத்தினான். யவனர்களின் வித்தியாசமான வழிபாட்டு முறைகளை ஆம்பி குமாரன் அப்போது தான் பார்க்கிறான்.  

 

அந்த வழிபாடுகளை எல்லாம் முடித்து விட்டு அலெக்ஸாண்டர் ஆம்பி குமாரனிடம் கேட்டான். “நண்பா நாமிருவரும் இணைந்து விட்டோம். வீரர்கள் இணைந்த பின் அடுத்து செய்ய வேண்டியது பராக்கிரமங்களையே அல்லவா? எங்கிருந்து ஆரம்பிக்கலாம்?”

 

ஆம்பி குமாரன் இந்த ஒரு கேள்விக்காகத் தான் காத்திருந்தான். கேகய நாட்டுடன் தீர்க்க வேண்டிய ஒரு பழைய கணக்கு அவனுக்கும் இன்னும் பாக்கியிருக்கிறது. அதைத் தீர்க்க வேண்டும். அதற்கு இது மிகநல்ல சந்தர்ப்பம். “அருகில் கேகய நாடு இருக்கிறது நண்பா. அங்கே பெருஞ்செல்வம் கொட்டிக் கிடக்கிறது……”

 

காந்தாரத்தில் நடக்கும்  நிகழ்வுகள் குறித்த தகவல்கள் கேகய நாட்டுக்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்தன. கேகய மன்னர் புருஷோத்தமன் அந்தத் தகவல்களில் கவலையடைந்து விடவில்லை. அவர் தன் அமைச்சர் இந்திரதத்திடம் சொன்னார். ”ஆம்பி குமாரன் அந்த யவன அரசனிடம் தன் நாட்டை அடகு வைத்து விட்டான்.. இது அவன் தந்தை உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக நடந்திருக்காது.   அவர் வீரமும், தன்மானமும் உள்ள மனிதர். இருக்கட்டும். இது ஆம்பி குமாரனின் தனிப்பட்ட விஷயம்….”

 

இந்திரதத் கவலையுடன் சொன்னார். “ஆனால் யவன அரசன் அலெக்ஸாண்டர் காந்தாரத்தோடு நிற்க மாட்டானே. அடுத்தது நம்மிடமும் அவன் வராமலிருக்க மாட்டானே? அவன் வரும் போது அவனுடன் ஆம்பி குமாரனுமல்லவா சேர்ந்து கொள்வான்?”

 

புருஷோத்தமன் இந்திரதத்தை வியப்புடன் பார்த்தார். “நீ நம் படை வலிமையைச் சந்தேகிக்கிறாயா இந்திரதத்? எத்தனை பெரிய படை வந்தாலும் அதைச் சந்திக்கக்கூடிய வலிமையோடல்லவா நாம் இருக்கிறோம்? நீயே கவலைப்படுவது நம்மைக் குறைத்து மதிப்பிடுவது போல அல்லவா இருக்கிறது?”

 

இந்திரதத் சொன்னார். “நம் வலிமை மீது எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை அரசே. யவனப்படையும் காந்தாரப் படையும் இணைந்து வந்தாலும் சந்திக்கும் வலிமையுடன் தான் நாம் இருக்கிறோம். அதே நேரத்தில் எதிரியைக் குறைத்து மதிப்பிடுவதும் சரியல்லவே. அலெக்ஸாண்டரின் படை வலிமையை விட போர்த் தந்திரங்களில் அவன் யுக்திகள் சிறந்தவை என்று சொல்கிறார்கள்”

 

புருஷோத்தமன் கேட்டார். “நாமும் அறிவில் சளைத்தவர்கள் இல்லையே இந்திரதத்? எல்லா யுக்திகளையும் அனுமானிக்க முடிந்த அறிவு நம்மிடம் இல்லையா என்ன?”

 

இந்திரதத் பதில் ஏதும் சொல்லத் தயங்கினார். உண்மையில் அவருக்கு அந்தச் சந்தேகம் ஆரம்பத்திலிருந்தே இல்லை. ஆனால் விஷ்ணுகுப்தர் அலெக்ஸாண்டரைப் பற்றிச் சொன்னதை அவரால் அலட்சியம் செய்ய முடியவில்லை.  அவருக்கு அலெக்ஸாண்டரைப் பற்றித் தெரியா விட்டாலும் விஷ்ணுகுப்தரைத் தெரியும். அவர் வெற்று வார்த்தைகளையோ, அரைகுறை அனுமானங்களையோ சொல்பவர் அல்ல. அவர் சொன்ன வார்த்தைகள் இப்போதும் இந்திரதத் காதுகளில் ரீங்காரம் செய்கின்றன.

 

அலெக்ஸாண்டரின் போர் யுக்தியையும், தந்திரத்தையும் தான் உன்னிடம் எச்சரிக்கிறேன். போரிடப் போகும் இடங்களைப் பற்றி முழுவதுமாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்ளாமல் அலெக்ஸாண்டர் போருக்குப் போவதில்லை.  என் கணிப்பு சரியாக இருக்குமானால் இங்கே வருவதற்கு முன்பும் அதை மனதில் தெளிவுபடுத்திக் கொண்ட பிறகு தான் வருவான். போரில் உங்கள் அனுபவத்தை விட அவனுடைய அனுபவம் அதிகம் இந்திரதத். அவன் அறிவின் விசாலம் உங்களை வெல்லும் வழியை அவனுக்குக் காண்பிக்காமல் இருக்க வழியில்லை. ஏனென்றால் உங்களைப் போல் எத்தனையோ எதிரிகளைப் பார்த்து, வென்று விட்டு வந்து கொண்டிருப்பவன் அவன். அவன் இது வரை தோல்வியே கண்டறியாதவன் என்று சொல்கிறார்கள். ஆம்பி குமாரனின் உதவியும் அவனுக்கு இருக்குமானால் அவனுக்கு கேகய நாடு எளிமையாகவே இருக்கும்

 

ஆனால் நண்பர் சொன்னதை அவர் அப்படியே மன்னரிடம் சொல்ல முடியாது. இந்திரதத் மிகவும் கவனமாகச் சொன்னார். “நம்மிடம் அந்த அறிவு இல்லாமல் இல்லை அரசே. ஆனால் அலெக்ஸாண்டரும் பல நாடுகளை வென்ற அனுபவம் இருப்பவன் அவன் இது வரை தோல்வியே காணாதவன் என்றும் சொல்கிறார்கள். அதனால் அவனைக் குறைத்து மதிப்பிடும் தவறை நாம் செய்துவிடக்கூடாது என்று தான் எண்ணு,கிறேன்”

 

புருஷோத்தமன் சேனாதிபதியைப் பார்த்தார். ”என்ன சேனாதிபதி. அலெக்ஸாண்டரும் ஆம்பி குமாரனும் சேர்ந்து படையுடன் வந்தால் சக்தியிலும், யுக்தியிலும் நாம் அவர்களுக்குக் குறைந்து விடுவோமா என்ன?”

 

சேனாதிபதி சொன்ன பதிலில் இந்திரதத்தின் மனம் தங்கவில்லை. மகதம் சென்ற விஷ்ணுகுப்தர் இன்னும் திரும்பி வரவில்லை. கண்டிப்பாக தனநந்தனை அவர் கண்டு பேசியிருப்பார்.  அவன் என்ன சொன்னான் என்று தெரியவில்லை. சொன்ன பதில் சாதகமாக இருந்திருந்தால் விஷ்ணுகுப்தர் மிக விரைவாக இங்கே வந்து சொல்லியிருப்பார். சொல்லக்கூடிய நல்ல செய்தியாக இருந்திராதது தான் அவர் வரும் வேகத்தைக் குறைத்திருக்க வேண்டும். நண்பரை எண்ணுகையில் அவருக்கு மனம் வலித்தது. சுய மரியாதை மிக்க மனிதர் அவர். தனக்காக எதையும் யாரிடமும் கேட்கத் துணியாதவர். அப்படி உதவி கேட்பதை விட இறப்பது கௌரவம் என்று நினைக்கக்கூடிய மனிதர் அவர். அப்படிப்பட்டவர் பாரதம் அன்னியர் வசம் போய்விடக்கூடாது என்ற தேசபக்தி காரணமாக  தந்தையைக் கொன்றவனாக இருந்தாலும், முன்பே அவமதித்தவனாக இருந்தாலும் தனநந்தனிடம் உதவி கேட்கப் போயிருந்தார்…. ”விஷ்ணு. இந்தப் பாரதம் உன்னை ஈன்று பெருமை அடைந்திருக்கிறது. ஆனால் நீ பயப்பட்டது நடந்து விட்டது. அலெக்ஸாண்டர் பாரதத்தின் உள்ளே நுழைந்து விட்டான். இனி என்ன நடக்குமோ?”

 

“யவன மன்னர் அலெக்ஸாண்டரிடமிருந்து ஒரு தூதன் வந்திருக்கிறான் அரசே. தங்கள் அனுமதி வேண்டி வாயிலில் நிற்கின்றான்.” என்று வாயிற்காவலன் மன்னரிடம் சொல்வது காதுகளில் விழ இந்திரதத் கவனம் நிகழ்காலத்துக்குத் திரும்பியது.

 

“உள்ளே அனுப்பு” என்று புருஷோத்தமன் சொன்னார்.

 

சிறிது நேரத்தில் யவன் தூதன் உள்ளே வந்து தலைவணங்கிச் சொன்னான். “கேகய மன்னரை, மன்னர் மாவீர்ர் அலெக்ஸாண்டரின் தூதனாகிய நான் வணங்குகிறேன்.”

 

வலது கையை உயர்த்தி ஆசி தெரிவித்த புருஷோத்தமன் சொன்னார். “சொல் தூதனே. என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய்?”

 

தூதன் மறுபடி தலைவணங்கி விட்டுச் சொன்னான். “மன்னர் மாவீர்ர் அலெக்ஸாண்டர் தலைமையை தங்கள் அண்டை நாடான காந்தாரத்தின் அரசர் ஏற்றுக் கொண்டதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மாவீரர் அலெக்ஸாண்டர் தங்களையும் சந்திக்க விரும்புகிறார்.”

 

புருஷோத்தமன் சொன்னார். “கண்டிப்பாகச் சந்திப்போம் என்று உன் மன்னரிடம் சென்று சொல் வீரனே. ஆம்பி குமாரனைப் போல் அடிமையாக அலெக்ஸாண்டரைச் சந்திப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு வீரனாகப் போர்க்களத்தில் சந்திப்போம் என்று போய்ச் சொல்”

 

அந்தப் பதிலில் யவன தூதன் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை. “அப்படியே ஆகட்டும் கேகய மன்னரே” என்று சொல்லித் தலைவணங்கி விட்டு அங்கிருந்து வெளியேறினான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, December 19, 2022

யாரோ ஒருவன்? 117


ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாக்கிங் போகையில் தீபக் உள்ளூர சிறிய பதற்றத்தை உணர்ந்தான். அன்று மதியம் மூன்று மணிக்கு அவனுடைய தாயைச் சந்திக்க நாகராஜ் ஒப்புக் கொண்டிருந்தது ஒரு பக்கம் அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் இன்னொரு பக்கம் இனம் புரியாத ஒரு கலக்கத்தையும் ஏற்படுத்தியது ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை. நேற்றிலிருந்தே அவன் பொதுத் தேர்வுக்குப் பிள்ளையை அனுப்பும் தாயைப் போல தன் தாயைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறான். “கேள்வியை எல்லாம் வழ வழான்னு கேட்காம சரியா கேளு.... அவர் சிலசமயம் பட்டுன்னு பேசக்கூடியவர். அப்படி ஏதாவது சொன்னா வருத்தப்படாதே.... எல்லார் கிட்டயும் அஞ்சு லட்சம் வாங்கி அஞ்சு மாசம் கழிச்சு தான் சந்திக்கிறவர். எதோ என் மூஞ்சிக்காக இலவசமா இவ்வளவு சீக்கிரமா உன்னைச் சந்திக்க ஒத்துகிட்டிருக்கார்...”

ரஞ்சனி அவன் அளவு பதற்றத்தில் இருக்கவில்லை. அவளுக்குக் கேட்கச் சில கேள்விகள் இருக்கின்றன. அந்த மனிதர் ஒரு மகான் போன்றவர். அவரிடம் பயபக்தியோடு கேட்டு சொல்லும் பதிலைப் பெற்றுக் கொண்டு வந்து விடப் போகிறாள். அவ்வளவு தான். அதற்கேன் இவன் இவ்வளவு அறிவுரை சொல்கிறான் என்று ஆச்சரியமாய் இருந்தது. ஒரு கட்டத்தில் மகனைத் திட்டியே விட்டாள். “எல்லாம் எனக்குத் தெரியும். கொஞ்சம் சும்மா இருடா. காது புளிச்சுப் போகிற அளவு பாடம் நடத்தாதே.”

அம்மா அப்படித் திட்டிய பிறகு அவனுக்கு வேறுவிதமான பயம் பிடித்துக் கொண்டது. அம்மா நாகராஜின் மதிப்பு தெரியாமல் சாதாரணமாகப் பேசி நாகராஜுக்குக் கோபமோ வருத்தமோ வந்து விட்டால் என்ன செய்வது என்ற சந்தேகம் வந்துவிட்டது. அவன் இந்த மனக்குழப்பத்தில் இருக்கிற போது வேலாயுதம் அவனை அழைத்து அவர்கள் வீட்டுக்கு ஒரு நாள் அதிகாலை திருடர்கள் வந்து விட்டுப் போயிருப்பதாகவும், அது நாகராஜுக்குத் தெரிந்தாலும் தெரியாத மாதிரி நடிக்கின்றான் என்றும் சொல்லி  நீ பேச்சோட பேச்சா நான் அந்த திருடர்கள் வந்துட்டு போனதைச் சொல்லி புலம்பிகிட்டே இருக்கேன்னு சொல்லிப் பாரு. அவன் என்ன சொல்றான்னு  வந்து என்கிட்ட சொல்லுஎன்றார்.

அவரிடம்சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் சொல்கிறேன்என்று சொன்னாலும் அதையெல்லாம் நாகராஜிடம் கேட்பதில்லை என்று தீபக் முடிவு செய்திருந்தான். அதை அவன் தர்ஷினியிடம் சொல்லவும் செய்தான். “உன் தாத்தா சொல்றதை எல்லாம் நான் அவர் கிட்ட சொல்லிகிட்டிருந்தா அவர் நாளைலயிருந்து என்னை பக்கத்துலயே விட மாட்டார்.”

தர்ஷினியும் சொன்னாள். “தாத்தாவுக்குப் பைத்தியம் முத்திடுச்சு. அவரைக் கண்டுக்காதே. ஒரு சின்ன ரத்தினக்கல் காணோமாம். அதுக்கு அவர் பண்ணற ஆர்ப்பாட்டம் தாங்கல. இதுல எங்கப்பாவையும் சேர்த்துக்கறார். எதோ முழு சொத்தே போயிடுச்சுங்கற மாதிரி ரெண்டு பேரும் டென்ஷன் ஆறாங்க

அவளே கண்டு கொள்ள வேண்டாம் என்று சொன்னதால் தீபக் அவர் சொன்னதை  மனதிலிருந்து முற்றிலுமாக அகற்றி விட்டான்.  ஆனால் அம்மா ஏதாவது தவறாகச் சொன்னால் அதைப் பெருந்தன்மையோடு மன்னிக்க வேண்டும் என்று நாகராஜைத் தயார்ப்படுத்தி வைப்பது நல்லது என்று உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்ததால் ஞாயிற்றுக்கிழமை வாக்கிங் போகும் போது அவன் மெல்ல நாகராஜிடம் சொன்னான். “எங்கம்மா ரொம்ப புத்திசாலி. நல்லவங்க. ஆனா வெகுளி. அவங்க ஏதாவது பேசறதோ, சொல்றதோ மரியாதைக்குறைவு மாதிரி தோணினாலும் எனக்காக அவங்க மேல வருத்தப்படாதீங்க அங்கிள். ப்ளீஸ்

நாகராஜ் சிறிய புன்னகையுடன் சொன்னான். “எனக்கு நீயே பெரிய மரியாதை குடுத்து பேசற மாதிரி தோணலையே

தீபக் ஒரு கணம் திகைத்துப் பின் சிரித்து விட்டான். “என்ன அங்கிள் என்னை இப்படி காலை வாருறீங்க. என்ன கொஞ்சம் நச்சரிச்சிருப்பேன். அவ்வளவு தான். மரியாதை இல்லாம நான் நடந்திருக்கேனா. சொல்லுங்கஎன்று நாகராஜின் கைவிரல்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டே கேட்க நாகராஜ்எனக்கென்னவோ உன்னை விட உங்கம்மா மரியாதையா தான் நடந்துக்குவாங்கன்னு தான் தோணுது. அப்படி கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் தீபக்கோட அம்மான்னு நான் விட்டுடறேன். சரிதானேஎன்றான்.

தீபக் நிம்மதியடைந்து சொன்னான். “அது போதும் அங்கிள்.... நாங்க மூனு பேரும் இன்னைக்கு காலைல பன்னிரண்டு மணிக்கே தர்ஷினி வீட்டுக்கு வந்துடுவோம். மதிய சாப்பாடு அங்கே தான்.  அங்கேயிருந்து அம்மா சரியா மூனு மணிக்கு வருவாங்க....”

அன்று நாகராஜின் வீட்டை எட்டும் முன்பே ஒரு குறுக்குத் தெருவில் தீபக் விடைபெற்றுக் கொண்டான். “அங்கிள் நான் இப்படியே போயிடறேன். பை. பை சுதர்ஷன் அங்கிள்

சுதர்ஷன் கேட்டான். “ஏன் இன்னைக்கு இங்கிருந்தே...?”

தர்ஷினியோட தாத்தா கிட்ட மாட்டினேன்னா பிடிச்சுக்குவார். எப்படியும் பன்னிரண்டு மணிக்கு வந்து அந்த ஆள் கிட்ட மாட்ட தான் போறேன். ஒரு நாளைக்கு ரெண்டு தடவை மாட்டிகிட்டா தாங்க மாட்டேன்.” என்று சொல்லி விட்டு அவன் குறுக்குத் தெருவில் தப்பிச் சென்றான்.

வேலாயுதம் நாகராஜும், சுதர்ஷனும் தனியாக வருவதையும், தீபக் உடன் இல்லாததையும் பார்த்து ஏமாந்து போனார். ’இன்னைக்குன்னு பாத்து ராஸ்கல் வாக்கிங்குக்கு போகாம இருந்துட்டானே. பையனுக்கு பொறுப்பும் அனுசரணையும் கம்மி தான்என்று மனதுக்குள் திட்டிக் கொண்டு நாகராஜுக்குச் சத்தமாககுட் மார்னிங்சொன்னார். 

நாகராஜ் வழக்கம் போல கையுயர்த்திகுட் மார்னிங்சொல்லியபடி தன் வீட்டுக்குள் நுழைந்தான்.

ன்று காலையிலிருந்தே சரத்தும் பெரும் மனக்கொந்தளிப்பில் இருந்தான். இன்றைய தினம் அமைதியாக ஆரம்பித்திருந்தும் அமைதியாக முடிவடையப் போவதில்லை என்று உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. ஒரு முடிவெடுத்த பிறகு அதை யாருக்காகவும் ரஞ்சனி மாற்றிக் கொள்பவள் அல்ல என்ற போதும்  அவனால் முயற்சி செய்யாமல் இருக்கவில்லை. குறைந்தபட்சம் நாகராஜ் பேச்சுக்கு ரஞ்சனி பெரிய முக்கியத்துவம் தராமல் இருந்தால் கூடப் போதும் என்று அவனுக்குத் தோன்றியது.

காலையில் மூவரும் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சரத் சொன்னான். “கல்யாண் வீட்ல அவன் செண்டிமெண்டா வெச்சிருந்த ஒரு ரத்தினக்கல்லைக் காணோமாம். பக்கத்து வீட்டு ஆள் நடவடிக்கையும் கொஞ்சம் சந்தேகம் வர்ற மாதிரி இருக்குன்னு சொல்றான்...”

தீபக் கடுங்கோபத்துடன் சொன்னான். “ஏம்ப்பா உங்க ஃப்ரண்டுக்கும் அவங்கப்பாவுக்கும் மூளையே கிடையாதா? ஒரு தடவை அவரைப் பார்க்கறதுக்கு அஞ்சு லட்சம் வாங்கறார். ஒரு நாளைக்கு அவர் நூறு பேரைப் பார்க்கணும்னாலும் அஞ்சஞ்சு லட்சம் குடுத்து அவரைப் பாக்க ஆள் இருக்கு. அவர் மனசு வெச்சா ஒரு நாளைக்கு கோடி கோடியாவே சம்பாதிக்கலாம். பல கோடி ரூபாய்ல வடநாட்டுல எத்தனையோ தர்மம் பண்றாரு. பெருந்தன்மையா இன்னைக்கு அம்மாவைப் பார்க்கறதுக்கு காசு கூட அவர் வாங்கலை.  அவரைப் போய் இப்படி சொல்ல அவங்களுக்கு வெக்கமா இல்லையா?”

சரத் எச்சிலை முழுங்கி விட்டு பலவீனமான குரலில் சொன்னான். “பணத்துக்காக அவன் செஞ்சிருப்பான்னு அவங்க சொல்லலை. அந்த ஆளோட செய்கை எல்லாம் மூடுமந்திரமா இருக்கு. மனசுல எதையோ வெச்சுட்டு தான் கோயமுத்தூர் வந்திருக்கான்னு அவங்க நினைக்கிறாங்க

தீபக் கோபம் குறையாமல் சொன்னான். “அவர் பாவம் சிவனேன்னு தன் வேலையைப் பார்த்துகிட்டு இருக்காரு. அந்த ஆள் கிட்ட பேசிப்பழகணும், ஏதாவது லாபமடையணும்னு ரெண்டு பேரும் ரொம்பவே முயற்சி பண்ணினாங்க. முடியாம போனவுடனே வாய்க்கு வந்த மாதிரி பேசறாங்க. அதை எல்லாம் கேட்டுட்டு வந்து நீங்களும் இங்கே சொல்றீங்க. கொஞ்சம் சும்மா இருங்கப்பா

தீபக் இந்த அளவு கோபப்பட்டு இதுவரை இருவரும் பார்த்ததில்லை. சிறிது நேரம் மௌனமாகச் சாப்பிட்டார்கள். சரத்துக்கு ஏனோ இவனது கோபம் இன்று வெடிக்கப் போகும் எரிமலைக்கு ஆரம்ப அறிகுறியாகத் தோன்ற ஆரம்பித்தது....

(தொடரும்)
என்.கணேசன்