சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 29, 2021

யாரோ ஒருவன்? 25



ணாலி போலீஸ் ஸ்டேஷனில் இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முந்தைய ஆட்கள் யாருமே இப்போது இல்லை. இப்போதிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன் ரெகார்டுகளைத் தேடி எடுத்து அப்போதிருந்தவர்கள் பற்றிய தகவல்களைச் சொன்னார். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் ஓய்வு பெற்று தற்போது மணாலியிலேயே புறநகர்ப் பகுதியில் இருப்பது தெரிந்தது. அப்போது சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் இப்போது சிம்லாவில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் என்பதும் தெரிந்ததுநரேந்திரன் இருவரையும் சந்திப்பதற்கு முன் அவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்துப் படித்து விடுவது நல்லதென்று எண்ணினான்.

ஓய்வு பெற்ற அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லவர் என்றும் மக்களுக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர் என்றும் பெயர் எடுத்திருந்தார். பொதுமக்கள் அவரைத் தங்களுக்குள் ஒருவராகப் பார்த்தார்கள் என்று குறிப்புகள் கூறின. ஆனால் அப்போதைய சப் இன்ஸ்பெக்டர் மீது நல்ல அபிப்பிராயங்கள் யாருக்கும் இருக்கவில்லை.  இதுவரை  நான்கு முறை சஸ்பெண்ட் ஆகி இருப்பது தெரிந்தது. அந்த மாதிரி ஆளிடம் உபயோகமான தகவல்கள் சுலபமாக வர வாய்ப்பில்லை.

முதலில் மணாலியில் இருக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியையே  பார்ப்பது என்று முடிவெடுத்த நரேந்திரன் அவரைச் சந்திக்கச் சென்றான். அவன் யாரென்று அறிந்ததும் அவர் மிகுந்த மரியாதையுடன் அவனை வரவேற்றார். அவன் போய் ஐந்து நிமிடங்களில் அவர் மனைவி அவனுக்குச் சுடச்சுட டீயும், சமோசாவும் கொண்டு வந்து தந்தாள். அந்த உபசரிப்பில் நெருக்கமான உறவுக்காரர்கள் வீட்டுக்குப் போனது போல் நரேந்திரன் உணர்ந்தான்.

தான் வந்த விஷயத்தை நரேந்திரன் அவரிடம் தெரிவித்த போது அவர் வருத்தத்துடன் சொன்னார். “அந்தச் சமயத்தில் எனக்கு ஒரு விபத்து ஆகி நான் ஒரு மாதம் விடுமுறையில் இருந்தேன்.  அதனால் சப் இன்ஸ்பெக்டர் மதன்லால் தான் ஸ்டேஷன் இன் சார்ஜாக இருந்தார். என் சகாவைப் பற்றி நானே தவறாகச் சொல்லக்கூடாது. ஆனால் உங்களிடம் என்னால் உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவர் பணத்திற்காகத் தாயையும் விற்கக்கூடிய மனிதர். நான் அந்த ஆளுடன் நிறைய சிரமப்பட்டு விட்டேன். மேலதிகாரிகளிடம் புகார் செய்தது எதுவும் எடுபடவில்லை. காரணம் அவருக்கு அரசியல்வாதிகளிடம் செல்வாக்கு நிறைய இருந்தது. சஸ்பெண்ட் ஆனாலும் எப்படியாவது திரும்ப வந்து பெரிய உபத்திரவமாக இருந்தார்….”

உள்ளூர் போலீஸ் மகேந்திரனுக்குச் சரியாக உதவவில்லை என்பதற்கு இப்போது காரணம் புரிந்தது.   மோசமான அதிகாரிகளும், மோசமான அரசியல்வாதிகளும் கூட்டு சேர்ந்தால் சட்டம் ஒழுங்கு எல்லாம் சீரழிந்து எத்தனை அநியாயங்கள் நடக்கின்றன! நரேந்திரனுக்கு இயலாமையுடன் கூடிய கோபம் வந்ததை அவர் கவனித்துக் கனிவாகச் சொன்னார். “எனக்கு உங்கள் மனநிலை புரிகிறது. நானும் இந்த இயலாமையை உணர்ந்து வேதனைப்பட்டவன். என்ன செய்வது?...”

நரேந்திரன் கேட்டான். “அந்தச் சமயத்துல என் அப்பா சம்பந்தமாகவும், அஜீம் அகமது சம்பந்தமாகவும் ஏதாவது கூடுதல் தகவல்கள் கேள்விப்பட்டீர்களா? காலம் நிறைய கழிந்து விட்டது என்பதால் அதிகமாக நினைவுபடுத்திக் கொள்ள முடியாது என்று தெரியும். ஆனாலும் நினைவுக்கு வந்ததைச் சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும்….”

அவர் சொன்னார். “நான் விடுமுறை முடிந்து வேலைக்குப் போக ஆரம்பித்த பிறகு உங்கள் ரா தலைவர் என்னிடம் போனில் பேசினார். அவரிடம் நான் அந்தச் சமயத்தில் விடுமுறையில் இருந்ததைச் சொன்னேன். அவர் விரிவான விசாரணை செய்ய ஒரு அதிகாரியை அனுப்பியும் வைத்தார். அந்த அதிகாரி எல்லாரையும் விசாரணை செய்து விட்டுத் தான் போனார். அவருடைய விசாரணை விவரங்கள் உங்கள் ரா-வில் இருக்குமே….”

நரேந்திரன் திகைத்தான். அவனுக்கு இது புதிய தகவல். அவன் தந்தையைப் பற்றி ரா பெரிய அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அந்த வழக்கை சரிவர விசாரிக்காமல் பாதியில் அம்போ என்று விட்டு விட்டார்கள், ஃபைலை மூடி விட்டார்கள் என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தான்.  அதற்கு ஏற்ற மாதிரி இவர் சொல்லும் அந்த விசாரணை பற்றிய விவரங்கள் ரா வின் ஃபைலில் இருக்கவில்லையே.  

நரேந்திரன் கேட்டான். “அப்போது வந்த அதிகாரியின் பெயர் உங்களுக்கு நினைவிருக்கிறதா?”

அவர் யோசித்து விட்டுச் சொன்னார். “இல்லையே..... ஆனால் அஜீம் அகமது வழக்கை உங்கள் தந்தையுடன் சேர்ந்து விசாரித்துக் கொண்டிருக்கும் அதிகாரி என்று ரா தலைவர் சொன்னதாக ஞாபகம்

சஞ்சய் ஷர்மா! இப்போது நரேந்திரனுக்கு மனதில் குழப்பிக் கொண்டிருந்த விஷயங்கள் மெல்லத் தெளிவாகின. மகேந்திரன் வரவில்லை என்றான பிறகு, உள்ளூர் போலீஸார் மீதும் சந்தேகம் வந்த பிறகு அப்போதைய ரா தலைவர் சஞ்சய் ஷர்மாவை விசாரிக்க அனுப்பி இருக்கிறார். சஞ்சய் ஷர்மா வந்து விசாரித்து விட்டுப் போயிருக்கிறான். ஆனால் விசாரணையில் தெரிந்த எதையும் அவன் ரா விற்குச் சரியாகத் தெரிவிக்கவில்லை. எல்லாவற்றையும் மூடி மறைத்து விட்டிருக்க வேண்டும். அதன் பின் தான் அப்போதைய ரா தலைவருக்கு அவன் மீது சந்தேகம் ஏற்பட்டிருக்க வேண்டும். உடன் வேலை செய்த மேலதிகாரி விஷயத்திலேயே நம்பிக்கை துரோகம் அவன் செய்திருப்பது அவருக்கு எப்படியாவது தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் அவனை இனி ரா வில் வைத்திருக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார் அவர். தன் ராஜினாமாவைத் தரும் அளவுக்கு தீவிரமாக அவர் இருந்ததும், அப்போதைய பிரதமர் வளைந்து கொடுத்ததும் அவன் எதிரியின் ஆளாகச் செயல்பட்டிருக்கிறான் என்று சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப் பட்டதால் தான் இருக்க வேண்டும்….

அவரிடம் நன்றி சொல்லி விட்டு நரேந்திரன் கிளம்பினான்.


ஞ்சய்  ஷர்மாவுக்குக் கை கால் முட்டிகள் எல்லாம் வலியெடுக்க ஆரம்பித்திருந்தன.  ஒவ்வொரு இரவும் குளிர் தாங்க முடியாமல் அடிக்கடி விழிப்பு வந்து விடுகிறது. ஒரு முறை விழிப்பு வந்து விட்டால் மறுபடியும் உறக்கம் வர குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது ஆகிறது.  நரேந்திரன் திரும்பி வரவேயில்லை. அதனால் அவன் மூலம் இந்த இடத்தைக் கண்டுபிடிக்க ஜனார்தன் த்ரிவேதியாலோ, அந்தத் தீவிரவாதிகளாலோ முடியாது. தினமும் தன் முயற்சியில் சிறிதும் தளராத விக்கிரமாதித்தன் போல அவன் அந்தத் தடியனிடம் ஏதேதோ சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஒரு முறை பாய், ஒரு முறை போர்வை, ஒரு முறை கூடுதல் சப்பாத்திகள், ஒரு முறை விடுதலை என்று அவன் கேட்பதற்கெல்லாம் தடியன் அசைந்து கொடுப்பதாயில்லை.

இடையிடையே எல்லா உண்மைகளையும் கண்டிப்பாக நரேந்திரனிடம் சொல்லிவிடத் தயாராக இருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறான். ஒரே ஒரு தடவை நரேந்திரன் நேரில் வந்தால் அவனிடம் ரகசியமாய்ச் சொல்ல முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்றும் கூடச் சொல்லிப் பார்த்து விட்டான். அது தடியனின் காதில் விழுந்த மாதிரியே தெரியவில்லை.

கடைசியாக அவனைத் தப்பிக்க வைத்தால் பத்து லட்சம் வரை தருவதாகக்கூட சஞ்சய் சொல்லிப் பார்த்து விட்டான். அதற்காவது ஆசைப்படுகிறானா என்று பார்த்தால் தடியன் அதையும் கண்டுகொள்ளவில்லை. பத்திலிருந்து பதினைந்து சொல்லி இருபது வரை உயர்த்திப் பார்க்க வேண்டும் என்று இப்போது சஞ்சய் முடிவெடுத்திருக்கிறான். தடியனைப் பார்த்தால் பணக்காரனாய் தெரியவில்லை. அவன் உடைகள் எல்லாம் மிகச் சாதாரணமாகத் தான் இருந்தன. அதனால் சிறிய தொகைக்கு விலை போகாவிட்டாலும் பெருந்தொகைக்கு விலைபோகும் வாய்ப்பு இருக்கிறது.

அதிசயமாக சப்பாத்தி தரும் நேரமல்லாத மாலை ஏழு மணிக்கு தடியன் வந்தான். அவன் கையில் ஒரு பெரிய பக்கெட் இருந்தது. அதில் ஐஸ்கட்டிகள் நிறைந்திருந்தன.    அதைப் பார்த்த சஞ்சய் திகிலுடன் கேட்டான். “இது எதற்கு?”

நீ தானே குளிக்கணும்னு சொன்னாய். சார் ராத்திரி உன்னைக் குளிப்பாட்டச் சொல்லிட்டார்…  ஆனா ஒன்னு உடம்பைத் துவட்டிக்க துணி எதுவும் தர வேண்டாம். ட்ரஸ் எல்லாம் உடம்பு சூட்டுல தானா காய்ஞ்சுக்கும்னு சொல்லிட்டார்

சஞ்சயின் முகத்தில் பீதி உச்சத்தில் தெரிந்தது.  தடியன் எமதூதனாகத் தெரிந்தான்.  ”டேய் இதைச் சொல்லிப் பயமுறுத்தி தாண்டா அன்னைக்கு என் கிட்ட உண்மையைச் சொல்ல வெச்சீங்க. இப்ப என்னடா மறுபடியும்என்று பரிதாபமாக அவன் கேட்டான்.

நீ முக்கியமான உண்மை எதையும் இது வரைக்கும் சொல்லலையாம்”    
  
(தொடரும்)
என்.கணேசன்

கோபத்தை நீக்குவது எப்படி? ஒரு ஜென் கதையோடு விளக்கப்படும் கோபத்தின் காரணங்களும், தீர்வும்.

Thursday, March 25, 2021

இல்லுமினாட்டி 95



க்ரிஷ் ஆழ்ந்த ஆலோசனையில் இருந்தான். சற்று முன் தான் இம்மானுவல் அவனை அலைபேசியில் கூப்பிட்டுப் பேசினான். விஸ்வத்தின் கூட்டாளி பற்றிய குறிப்புகள் நிறையக் கிடைத்திருப்பதாகவும், அதை வைத்து அவனுடைய அடையாளம் பற்றி முடிவெடுப்பதற்கு க்ரிஷ் ம்யூனிக் வருவது நல்லது என்றும் இம்மானுவல் சொல்லியிருந்தான். இந்தியாவிலிருந்து கிளம்பிய கணம் முதல் அங்கு போய்ச் சேரும் வரை க்ரிஷின் பாதுகாப்புக்கு முழு ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொன்னான். விஸ்வம் அவர்களுக்குச் சிக்காமல் வெளியே இருக்கும் வரை எர்னெஸ்டோவுக்கு இணையாக க்ரிஷுக்கும் அவனால் நேரக்கூடிய அபாயம் இருப்பதால் எந்த விதமான அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் இம்மானுவல் இருந்தான்.

க்ரிஷுக்குத் தன் சொந்தப் பாதுகாப்பு பற்றிய கவலையை விடக் குடும்பத்தின் பாதுகாப்பு பற்றிய கவலை தான் பெரிதாக இருந்தது. முதலைமைச்சர் குடும்பம் என்பதால் அவர்கள் பாதுகாப்புக்கான வெளி ஏற்பாடுகள்  உயர்மட்டத்திலேயே இருக்கும், இல்லுமினாட்டியும் கூட அதற்கான ஏற்பாடுகள் செய்யும் என்றாலும் அவன் கவலைப்பட்டது உள் ஏற்பாடுகளைத் தான். சிந்து அவன் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருக்கும் வரை அந்த வீட்டில் எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். க்ரிஷ் போய் வருவதற்குள் எதிரியென்று வீட்டாரும், வெளியாட்களும் உணராத சிந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அந்த ஆபத்து தான் க்ரிஷை நிறைய யோசிக்க வைத்தது.

மாஸ்டர் “உன் இதயம் காட்டுகிற வழியில் போ. ஆனால் அறிவையும் கூடவே வைத்துக் கொள்” என்று சொன்னபடி இரண்டையும் சேர்த்து தான் இது வரை சிந்து விஷயத்தில் அவன் நடந்து வருகிறான்இப்போதைக்கு சிந்துவிடம் சில மாற்று சிந்தனைகளை அவன் ஏற்படுத்தி இருக்கிறான். உதயின் காதலையும் காப்பாற்ற வேண்டும்,  சிந்து இந்தக் குடும்பத்தில் எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று எதிர்மாறான இரண்டு ஆசைகளை நிறைவேற்ற எச்சரிக்கையுடன் செயல்படுகின்றான். சிந்து ஒரேயடியாக மாறுவது நடக்கக்கூடிய காரியமல்ல. அவன் அவளை மாற்ற முடிவதில் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தாலும் கூட அதற்குச் சிறிது காலமாவது தேவைப்படும். அது நடக்கும் வரை அவளை அவன் எதிரியின் ஆளாகவே தான் நினைக்க வேண்டும்.  

சிந்து விஸ்வத்தின் ஆள் என்றாலும் அவளிடம் விஸ்வம் முடிவாக என்ன செய்ய வேண்டும் என்பதை இன்னும் தெரிவித்திருக்கவில்லை என்பது அவன் யூகமாக இருந்தது, ஏனென்றால் அவன் மாஸ்டர் சொல்லிக் கொடுத்த பயிற்சிகள் செய்து ஓரளவு அவள் மனதை ஊடுருவிப் பார்க்க முயன்ற போது உதயைக் காதலிக்கும் திட்டத்தைத் தவிர வேறு ஒரு திட்டவட்டமான திட்டத்தை  அவனால் உணர முடியவில்லை. அதனால் உதயிடம் பழகி அவனைக் காதலித்து அவன் வீட்டுக்குப் போய்க்கொண்டிரு, பின் என்ன செய்ய வேண்டும் என்று சமயம் வரும் போது சொல்கிறேன் என்று மட்டுமே விஸ்வம் அவளிடம் சொல்லி இருக்கலாம் என்று தோன்றியது. அப்படி இருந்தால் எந்த நேரத்திலும் விஸ்வத்தின் கட்டளை அவளுக்கு வரலாம். அப்படி வந்தால் அவள் அதைக் கண்டிப்பாகச் செய்தே தீரவேண்டியிருக்கும். இல்லாவிட்டால் அவள் மனோகர் மாதிரியே உயிரை விடவேண்டி வரும்.

இப்படி ஒரு நிலைமை இங்கு இருக்கையில் அவன் எப்படி நிம்மதியாக வெளிநாடு போய் விட்டு வர முடியும்? போகவில்லை என்றால் அவன் என்ன காரணத்தை இல்லுமினாட்டியிடம் சொல்வான்? சிந்துவைப் பற்றி வந்திருக்கும் சந்தேகத்தைப் பற்றிச் சொன்னாலோ உடனடியாக சிந்துவை அப்புறப்படுத்தி விடுவார்கள். உதய்க்கு சிந்து கிடைக்க மாட்டாள். என்ன செய்வது என்று யோசித்து ஒரு முடிவுக்கு இறுதியாக வந்த க்ரிஷ் மறுநாள் அதிகாலையிலேயே சிந்துவுக்குப் போன் செய்து பேசினான். “அவசரமாக உன்னிடம் சிறிது பேச வேண்டியிருக்கிறது சிந்து” என்றான்.

இவனால் இரவெல்லாம் யோசித்து அழுது உறக்கம் கெட்டிருந்த சிந்து கறாராகச் சொன்னாள். “க்ரிஷ் நேற்றோட விஷயத்தைத் தொடரும் பேச்சாக இருந்தால் தயவுசெய்து வேண்டாம். நீ சொன்னது எனக்குப் புரிந்து விட்டது. அதை இன்னொரு தடவை சிறிது மாற்றிக் கூட நான் கேட்க விரும்பவில்லை”

“அதைப் பேசப் போவதில்லை. இது வேறு விஷயம்”

“சரி நான் வர வேண்டுமா இல்லை நீங்கள் வருகிறீர்களா?”

“நானே வருகிறேன். அரை மணி நேரத்தில் அங்கே இருப்பேன். பேச எனக்குப் பத்து நிமிஷங்கள் போதும்”

சிந்து சம்மதித்தாள். சொன்னபடியே க்ரிஷ் அரை மணி நேரத்தில் இருந்தான். சிந்து இரவெல்லாம் அழுது தூக்கம் தொலைத்திருந்தாலும் அதைத் தோற்றத்தில் அவனுக்குக் காட்டவில்லை. “என்ன விஷயம்?” என்று அமைதியாகக் கேட்டாள்.

“நான் அவசரமாய் வெளிநாடு போக வேண்டியிருக்கிறது. நான் இல்லாத நாட்களில் நீ என் வீட்டுக்கு வருவதை நான் விரும்பவில்லை” என்று க்ரிஷ் அமைதியாகச் சொன்னான்.

“இதை என்னிடம் சொல்வதற்குப் பதிலாக உங்கள் அண்ணாவிடமே சொல்லி இருக்கலாமே. அவர் தீர்மானமும் அதுவானால் வீட்டுக்கு அந்த நாட்கள் என்று இல்லை எந்த நாளிலுமே வர மாட்டேன்” என்று முகம் சிவந்து அவள் சொன்னாள்.

க்ரிஷ் சொன்னான். “அவனிடம் சொல்வதற்குப் பதிலாக நீ யார் என்பதை உன்னை இங்கே அனுப்பியவனின்  சக்தி வாய்ந்த எதிரிகளிடம் சொன்னால் போதும் அவர்கள் மீதியைப் பார்த்துக் கொள்வார்கள். நீ எங்கேயும் எப்போதும் போக வேண்டியிருக்காது”

முதல் முறையாக ஒரு வித்தியாசமான க்ரிஷை சிந்து பார்க்கிறாள். சுற்றி வளைத்துப் பேசாமல் ‘நீ யார் என்று எனக்குத் தெரியும், நீ யார் அனுப்பி வந்தாய் என்றும் எனக்குத் தெரியும், அனுப்பியவன் உத்தேசமும் எனக்குத் தெரியும்’ என்பதையும் அவளுக்கு அவன் புரிய வைத்தான். அவனிடம் வழக்கமான அன்பு தெரியவில்லை... மென்மை தெரியவில்லை.... அவளைப் புரிந்து கொண்டதன் சாயல் கூடத் தெரியவில்லை.

அவளுக்கு விஸ்வத்தின் எதிரிகள் யார் என்று தெரியாது. ஆனால் அவன் சொன்னதிலிருந்து யாராயிருந்தாலும் அவர்கள் வலிமை வாய்ந்தவர்கள், பொல்லாதவர்கள் என்ற தொனியை சிந்து உணர்ந்தாள். அவளைப் பற்றி அவன் அவர்களிடம் இது வரை சொல்லவில்லை, அவள் மறுத்தால் க்ரிஷ் சொல்லி விடுவான், பின் அவள் நீண்ட நாள் உயிர்வாழ முடியாது என்பதை கூடுதல் வார்த்தைகள் இல்லாமல் சிந்து உணர்ந்தாள்.

“உதய் கேட்டால் என்ன சொல்வது?” என்று மெல்ல சிந்து கேட்டாள்.

”அவசரமாக வெளியூர் போக வேண்டி இருக்கிறது. தவிர்க்க முடியாதது என்று சொல்”

“எப்போது நான் திரும்பி வருவது?”

“நான் உனக்கு போன் செய்து தெரிவிக்கிறேன்”

அவள் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலைமையை உணர்ந்தாள். போகா விட்டால் உயிரே போய் விடும் என்கிறான் இவன். போனாலோ அது தெரிய வந்தால் விஸ்வம் உயிரை எடுத்து விடுவான். ஏனென்றால் அவன் எந்த நேரத்திலும் அடுத்து செய்ய வேண்டிய வேலையை அவளிடம் சொல்லலாம். அவள் என்ன செய்வாள்?

ஓரளவு அவள் மன ஓட்டத்தை க்ரிஷால் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் விஸ்வத்துக்கும் பயப்படுகிறாள். அவனுக்குத் தெரிய வந்தால் ஆபத்தாயிற்றே என்ன செய்வது என்று யோசிக்கிறாள். க்ரிஷ் சொன்னான். “உன்னை அனுப்பியவன் கேட்டால் நான் உன்னைக் கண்டுபிடித்து விட்டேன், நான் மிரட்டித் தான் நீ போனாய் என்று சொல். அவன் நல்லவனாக இல்லாமலிருக்கலாம், ஆனால் முட்டாள் அல்ல. அதனால் புரிந்து கொள்வான். நான் சொல்லியும் கேட்காமல் நீ இங்கேயே இருந்து அவர்களிடம் சிக்கிச் செத்தால் அதை அவனும் வீரமாய்ப் பார்க்க மாட்டான், முட்டாள்தனமாய் தான் நினைப்பான்.”

சிந்து தளர்ந்து போனாள். இத்தனை நாட்கள் அவளிடமிருந்த அசாத்தியத் துணிச்சலும், தன்னம்பிக்கையும் இப்போது விலகிப் போயிருந்தன. விஸ்வம், க்ரிஷ் என்ற இரண்டு மலைகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டதைப் போல் உணர்ந்தாள். இவனும் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு விட்ட பின் அடுத்தது என்ன என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது.  

அதை அவள் நேரடியாகவே அவனிடம் கேட்டாள். “நீங்கள் திரும்பி வந்த பிறகு?”

க்ரிஷ் அமைதியாகச் சொன்னான். “அதை அப்போது பார்ப்போம்”

எல்லாமே அவன் அறிந்து கொண்ட பின் ’இனி பார்க்க என்ன இருக்கிறது’ என்று அவள் நினைத்துக் கொண்டாள். ஏன் இன்னும் உதயிடமும், வீட்டாரிடமும் சொல்லாமல் இருக்கிறான் என்பதும் புரியவில்லை. இனி இந்த நாடகத்தைத் தொடர்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று அவளுக்குத் தெரியவில்லை.

அதைப் புரிந்து கொண்டவன் போல் க்ரிஷ் சொன்னான். “நான் இப்போதும் உன்னைக் கெட்டவளாக நினைக்கவில்லை சிந்து. உன் குழந்தைப் பருவத்தின்  அநியாய பாதிப்புகளால் தடம் மாறிப் போனவளாகவே நினைக்கிறேன். அன்பினால் நீயும் மாற்றப்பட முடிந்தவளாகவே நினைக்கிறேன். ஆனால் அதே சமயத்தில் நீ மாறுவதற்கு முன் என் குடும்பத்தார் யாரும் உன் மூலமாகப் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருக்கிறேன்...”

அவன் போய் விட்டான்.

(தொடரும்)  
என்.கணேசன்

Wednesday, March 24, 2021

முந்தைய சிந்தனைகள் 67

 என் நூல்களில் இருந்து சில சிந்தனைகள்...













என்.கணேசன்

Monday, March 22, 2021

யாரோ ஒருவன்? 24


ரேந்திரன் அந்தப் பதிலை யாராவது சொல்ல மாட்டார்களா என்று தான் நேற்றிலிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் என்றாலும் அதை முதல் முறையாகக் கேட்கையில் திகைப்பு மேலிட்ட பின்பே மகிழ்ச்சியும் ஆர்வமும் மெல்ல மனதில் எழுந்தன. அவன் நன்றியுடன் சொன்னான். “விவரமாகச் சொல்லுங்களேன்

முகமது யூனுஸ் அவனையே சிறிது நேரம் பார்த்தார். ஆனால் அவர் கவனம் இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்பு போய் அன்றைய சூழ்நிலையைப் பார்ப்பது போல் நரேந்திரனுக்குத் தோன்றியது. அவர் சொல்ல ஆரம்பித்தார்.  “உன் அப்பா வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தான் அஜீம் அகமது மணாலிக்கு வந்தான். இங்கே ஒரு நட்சத்திர ஓட்டலில் அவன் தங்கியிருந்தான். அவன் ஒரு ராஜாவைப் போல.... எங்கே போனாலும் அவனுடன் ஒரு பட்டாளமே போகும். அவனை எல்லாராலும் பார்க்க முடியாது. அவன் கூட இருக்கும் அடியாட்களை வைத்து தான் அவன் வந்திருப்பது தெரிய வருமாம். அதை விவரமறிந்தவர்கள் சொன்னார்கள். அவனுடன் வரும் பட்டாளத்திலும் பல அடுக்குகள் உண்டு. அவனுக்கு மிக நெருங்கியவர்கள் மட்டும் அவனைச் சுற்றி இருப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் அவன் இருக்கும் பகுதியில் அங்கங்கே தங்கிக் கொள்வார்கள். அப்படிப்பட்ட ஆட்களில் ஐந்து பேர் இங்கே இரண்டு அறைகளில் தங்கியிருந்தார்கள்....”

கடுமையான கசப்பு மருந்தைச் சாப்பிட்டவர் போல முகமது யூனுஸ் முகம் சுளித்தார். “அவனோ, அவன் பட்டாளமோ எங்கே தங்கினாலும் தங்குவதற்குக் காசு தரமாட்டார்கள். சாப்பிட்டால் சாப்பாட்டுக்குக் காசு தரமாட்டார்கள். ஆனல் சாப்பிட என்ன தயாரிக்க வேண்டும் என்று எந்த விதமான தயக்கமும் இல்லாமல் சொல்வார்கள். சொன்னபடி சமைத்துப் போடவில்லை என்றால் அந்த இடத்தைத் துவம்சம் செய்து விடுவார்கள். அவன் நீண்ட காலத்துக்குத் தொழில் நடத்த முடியாதபடி செய்து விடுவார்கள். அதனாலேயே எல்லாரும் சகித்துக் கொள்வார்கள். எப்போது தான் போவார்களோ என்று ஆவலோடு காத்துக் கொண்டிருப்பார்கள். நானும் அப்படித் தான் இருந்தேன். அவர்கள் வந்திருந்தது நல்ல சீசன் சமயம்.  எங்களைப் போன்ற ஆட்கள் நாலு காசு சம்பாதிப்பதே அந்த சீசன் சமயத்தில் தான். ஐந்து அறைகளில் இரண்டு அறைகளை அந்தத் தடியர்களுக்கு ஒரு வார காலம் தரவேண்டியிருந்தது. எதிர்க்கவோ மறுக்கவோ வழியில்லை…. அப்போது தான் உன் அப்பா அஜீம் அகமது பற்றி விசாரித்துக் கொண்டு வந்தார்….”

சொல்வதை ஒரு நிமிடம் நிறுத்தி முகமது யூனுஸ் நரேந்திரனை யோசனையுடன் பார்த்தார். கிட்டத்தட்ட மகேந்திரனும் இந்த இளைஞனின் தோரணையில் தான் உட்கார்ந்திருந்தார். அசைக்க முடியாத தைரியம் அவருடைய முகத்திலும் நடவடிக்கைகளிலும் இருந்தது.  அவர் முகத்தில் ஒரு ஒளி வீசியது போல் அன்று உணர்ந்தது கூட இன்னும் முகமது யூனுஸுக்கு நினைவிருக்கிறது. ஹூம்…. அணையப் போகும் விளக்கில் இருந்த கூடுதல் பிரகாசம் அது என்று அப்போது புரிந்திருக்கவில்லை. வருத்தத்துடன் அவர் தொடர்ந்தார். உன் அப்பா கேட்டதற்கு நானும் அஜீம் அகமதைத் தெரியாது என்று தான் சொன்னேன். அவன்  ஆட்கள் ஐந்து பேர் இங்கேயே இருக்கையில் நான் வேறென்ன செய்ய முடியும்? அவர் இங்கிருக்கும் அறைகளைச் சோதிக்க வேண்டும் என்று சொன்னார். சோதனை போடவும் செய்தார். அஜீம் அகமது ஆட்கள் மேல் சந்தேகம் வந்து அவர்களை விசாரிக்கவும் செய்தார். அந்த ஆட்கள் டூரிஸ்ட் ஆட்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டார்கள். ஆனால் அவர் அதை நம்பவில்லை என்பது அவரைப் பார்க்கும் போதே எனக்குத் தெரிந்தது. அது அந்த ஆட்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். அவர் போனவுடன் ஐவரில் இரண்டு பேர் அஜீம் அகமதுக்குத் தகவல் தெரிவிக்க ரகசியமாய் ஓடினார்கள்…. அதற்குப் பின் உன் அப்பா இந்த ஊரிலேயே இரண்டு நாட்கள் அவனைப் பற்றி விசாரித்துக் கொண்டு இருந்தார் என்று நான் கேள்விப்பட்டேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை.   அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. மூன்று நான்கு நாட்கள் கழித்து இங்கிருக்கும் ஆட்கள் போய் விட்டார்கள். அதனால் அஜீம் அகமதுவும் போய்விட்டிருப்பான் என்று யூகித்தேன். ஆனால் உன் அப்பா பற்றிப் பின் யாரும் பேசவில்லை…”

நரேந்திரன் கண்களை மூடி யோசித்தான். அவன் தந்தை உயிரோடு இருந்து அந்த ஊரை விட்டு அஜீம் அகமது தப்பித்துப் போயிருக்க வழியில்லை. அவரைக் கொன்ற பிறகு தான் அஜீம் அகமது தப்பித்திருக்க வேண்டும்.

நரேந்திரன் கேட்டான். “நீங்கள் அஜீம் அகமதைப் பார்த்திருக்கிறீர்களா?”

இல்லை அவனைப் பார்த்ததில்லை. என் நண்பர் ஒருவர் பக்கத்தில் இருந்தார். அவர் அவனை ஒரு தடவை தூரத்திலிருந்தாவது பார்த்துவிட வேண்டும் என்று இரண்டு நாள் அவன் தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டலுக்கு வெளியே காத்திருந்து பார்த்திருக்கிறார். அவன் பார்வை அவர் மேல் விழுந்து நடுங்கியிருக்கிறார். இங்கே வந்து என்னிடம் சொன்னார். “சைத்தானின் பார்வை என் மேல் விழுந்த மாதிரி இருந்தது. பயங்கரமானவன் என்பதை அவன் பார்வையிலேயே உணர்ந்து விட்டேன்என்று சொன்னார். அதே போல் வேறொரு ஆளும் சொல்லக் கேட்டிருக்கிறேன்….”

அவர்கள் இரண்டு பேரும் இப்போது இருக்கிறார்களா?”

இல்லை. அல்லா அவர்களை அழைத்துக் கொண்டு பல வருடங்களாகி விட்டன. எனக்கு அவர்கள் சொன்னதைக் கேட்டபின் அவனைப் பார்க்க மனம் இல்லை. இறைவனையும், இறைவன் அருள் பெற்றவர்களையும் பார்த்தால் புண்ணியமாவது உண்டுஇது போன்ற சைத்தானைப் பார்க்க ஆசைப்படுவதும் ஒரு வகையில் பாவம் தான்.”

இந்த அளவு தீவிரமாக அந்த முதியவர் அஜீம் அகமதை வெறுப்பது நரேந்திரனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அவன் காரணம் கேட்ட போது முகமது யூனுஸ் சொன்னார். “மனிதன் உயர்ந்த நெறிகளுடனும், தர்மசிந்தனையுடனும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எங்கள் மதத்தில் தினமும் ஐந்து முறை தொழுகை சொல்லப்பட்டிருக்கிறது. தினசரி ஐந்து முறை கருணையே வடிவான இறைவனைத் தொடர்பு கொள்கிறவன் அடிக்கடி தன் மனதைத் தூய்மைப்படுத்திக் கொண்டவனாகிறான். அப்படிப்பட்டவனுக்கு அடுத்தவனுக்குத் தீங்கு நினைக்கவோ, செய்யவோ மனம் வராது. அப்படி  எண்ணம் வந்தால் அவன் அல்லாவைத் தொழவில்லை, இறைவன் அருள் அவன் மீது விழவில்லை என்று அர்த்தம். அப்படிப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பது தான் சரி…”

அவர் அந்த அளவு உறுதியாகச் சொன்னது மாறுபட்ட சிந்தனையை நரேந்திரனுக்குக் காட்டியது. அவன் கேட்டான். “அதற்குப் பிறகு அவன் திரும்பவும் மணாலிக்கு வந்திருக்கிறானா?”

எனக்குத் தெரிந்து இல்லை. ஏனென்றால் அவனோடு வரும் கூட்டம் பின் வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அவன் தனியாக ரகசியமாய் வந்து போயிருந்தால் எனக்குத் தெரிய வழியில்லை…”

அவன் தங்கிய நட்சத்திர ஓட்டல்?”

அது பத்து வருடங்களுக்கு முன் விற்கப்பட்டு இப்போது அது இப்போது ஒரு ஆஸ்பத்திரியாகி இருக்கிறது. அதில் வேலை செய்தவர்கள் எல்லாம் பல இடங்களுக்குப் போயிருப்பார்கள்.”

உங்களுக்குத் தெரிந்து அவனுடன் தொடர்பில் இருந்த யாராவது இங்கே இன்னமும் இருக்கிறார்களா? என் தந்தை வேறு யாரையாவது தொடர்பு கொண்டதாவது உங்களுக்குத் தெரியுமா?”

முகமது யூனுஸ் அவனைச் சிறிது தயக்கத்துடன் பார்த்தார். நரேந்திரன் சொன்னான். “என்னிடம் சொல்லப்படும் விவரங்கள் எனக்குள்ளேயே ரகசியமாக இருக்கும் பெரியவரே. நீங்கள் சொன்னதாக எந்தத் தகவலும் கண்டிப்பாக வெளியே தெரியாது.”

முகமது யூனுஸ் சொன்னார். “உங்கள் தந்தை உள்ளூர் போலீஸ் உதவியுடன் அவனைக் கைது செய்ய எதோ முயற்சி எடுத்ததாகச் சிலர் ரகசியமாய் பேசிக் கொண்டார்கள். அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அஜீம் அகமது சிக்கவில்லை. உங்கள் தந்தையைப் பற்றி அதன் பிறகு யாரும் பேசவில்லை….”

உள்ளூர் போலீஸ் சரியாக மகேந்திரனுக்கு உதவவில்லை என்ற அபிப்பிராயம் ரா உயர் அதிகாரிகளுக்கு இருந்ததென்பது இப்போதைய ரா தலைவர் மூலம் நரேந்திரனுக்குத் தெரிந்திருந்தது.   அப்போதைய ரா தலைவர் சில அதிகாரிகள் மூலம் விசாரணை கூட மேற்கொண்டார் என்றும் அவர் சொன்னார். ஆனால் அது சம்பந்தமான எழுத்துபூர்வமான எந்த விவரங்களும்ராவிடம் இப்போது ஏனோ இல்லை.



 (தொடரும்)
என்.கணேசன்