சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 30, 2014

பரம(ன்) ரகசியம் – 82


றக்கம் தழுவ ஆரம்பித்த வேளையில் தான் பார்த்தசாரதியின் செல்போன் இசைத்தது. பேசியவர் தன்னை  யாரென்று கூட அறிமுகப்படுத்தாமல் சொன்ன செய்தி அவரை அதிரச் செய்தது. “ஈஸ்வரைக் கொலை செய்யப் போறாங்க. அவனைக் காப்பாத்துங்க. ப்ளீஸ்

குரல் தென்னரசு குரல் போலத் தெரிந்தது பிரமையா, உண்மையா என்று அவருக்குத் தெரியவில்லை. பார்த்தசாரதி மின்னல் வேகத்தில் இயங்கினார். உடனடியாகச் சிலருக்குப் போன் செய்து பேசிய அவர் தானும் வேகமாகத் தோட்ட வீட்டுக்குக் கிளம்பினார். 

பாபுஜி சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு குருஜி ஒன்றும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டார். பாபுஜி சொன்னார். “எனக்குப் புரியுது குருஜி. அந்த ஆளை நீங்கள் மட்டுமல்ல எல்லாருமே நம்பினோம். திடீர்னு இப்படி பல்டி அடிப்பான்னு யாருமே எதிர்பார்க்கலை......

சிறிது நேரம் மௌனம் சாதித்த குருஜி பின் வரண்ட குரலில் கேட்டார். “தென்னரசு பார்த்தசாரதியிடம் பேசினது இது தான் முதல் தடவையா? இல்லை, இதற்கு முன்னாடியும் செல்போன்ல பேசி இருக்கானா?

இது தான் முதல் தடவை மாதிரி தெரியுது குருஜி

குருஜி கண்களைத் திறந்தார். அவர் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவில்லை என்பது பாபுஜிக்குப் புரிந்தது. மெல்ல ஒரு புகைப்படத்தையும் ஒரு காகிதத்தையும் அவர் குருஜியிடம் நீட்டினார். எகிப்தின் மிலிட்டரி இந்த ஆளைத் தேர்தலில் நிறுத்தலாமான்னு நினைக்குது. இந்த ஆள் நம் ஆளுக்கும் நெருங்கிய நண்பராம். விசேஷ மானஸ லிங்கத்தோட சக்தி காத்து, புயல், வெள்ளம்னு இயற்கை சக்திகளை மட்டும் தான் கட்டுப்படுத்துமா இல்லை மக்களோட மனசையும் கட்டுப்படுத்துமான்னு இன்னும் அவங்களுக்கு சந்தேகம் இருக்கு. சொல்லப்போனா எனக்குக் கூட அந்த சந்தேகம் இருக்கு. அதைத் தெரிஞ்சுக்க நமக்கு இது நல்ல சந்தர்ப்பம் இல்லையா?

அந்தப் புகைப்படத்தையும், குறிப்புகள் எழுதிய தாளையும் குருஜி வாங்கிக் கொண்டார். ஆனால் அவர் மனம் மட்டும் இன்னும் தென்னரசு சமாச்சாரத்திலேயே இருந்தது. “மகேஷுக்கு...?

“மகேஷ் தூங்கப் போயிட்டான். நாங்களா எதுவும் சொல்லப் போகலை

“சொல்ல வேண்டாம்...

ஸ்வர் இரவு பதினோரு மணி வரை சின்னத் தூக்கம் போட்டு விட்டு பின்பு தான் குளித்து விட்டுப் பூஜை அறைக்குப் போனான். விசேஷ மானஸ லிங்கத்தின் புகைப்படத்தை வணங்கி விட்டு மூச்சில் ஆரம்பித்து அந்தப் புகைப்படத்தில் கவனத்தைக் குவிக்க ஆரம்பித்த போது தான் தன் அருகில் யாரோ வந்து நிற்பதை உணர்ந்தான். கூடவே திருநீறின் மணம் அந்த பூஜை அறையை நிறைத்தது. கண்களைத் திறந்து அவன் பார்த்தால் பசுபதி தான் நின்றிருந்தார்.  பெரிய தாத்தா இது வரை அவனுக்குத் தரிசனம் தந்தது இல்லை.... அவரை அவன் திகைப்புடனும் பிரமிப்புடனும் பார்த்தான். அவர் கருணை நிறைந்த விழிகளால் அவரைப் பார்த்தார்.   

மெய்சிலிர்த்தவனாய் அவன் அவரைக் குனிந்து வணங்கினான். ஒரு துப்பாக்கிக் குண்டு அவன் தலை இருந்த இடத்தைத் தாண்டிச் சென்று சுவரில் பதிந்தது.  அதிர்ச்சியுடன் நிமிர்ந்த ஈஸ்வருக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. அப்போது தான் வீட்டு வாசலில் முகமூடி அணிந்திருந்த ஒருவன் துப்பாக்கியை நீட்டிக் கொண்டு நிற்பதை அவன் கவனித்தான். அருகே இருந்த பசுபதியைக் காணவில்லை.

அந்த முகமூடிக்காரனும் அவன் குனிவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. மறுபடி சுட அவன் யத்தனித்த போது ஈஸ்வர் சிவனை மனதில் தியானித்து  விட்டு அந்த அறையில் இருந்த தேவாரப் புத்தகத்தை அவன் மீது விட்டெறிந்தான். தேவாரப்புத்தகம் அந்த முகமூடி மனிதன் கையிலிருந்த துப்பாக்கியைத் தட்டிக் கொண்டு போய் விழுந்தது. அவன் மின்னலாய்ப் பாய்ந்து அந்தத் துப்பாக்கியை எடுத்த போது விசில் சத்தம் கேட்டது. அவனுடன் வந்த சகா வெளியில் இருந்து சிக்னல் தருகிறான். யாரோ வருகிறார்கள். திரும்பிப் பார்த்தான். ஈஸ்வர் காணவில்லை. ஒரு கணம் யோசித்தவன் பின் தலை தெறிக்க வெளியே ஓடினான். ஒரு போலீஸ்காரர் உள்ளே வந்து கொண்டிருந்தார். அவர் அவனைப் பிடிக்க யத்தனிப்பதற்குள் அவன் அவரைத் தாண்டி ஓடினான். அவனைப் பின் தொடர்வதா, இல்லை ஈஸ்வரைப் போய் பார்ப்பதா என்று குழம்பிய போலீஸ்காரர் ஈஸ்வருக்கு ஆபத்து உள்ளதா என்று பார்ப்பதே முக்கியம் என்று நினைத்தவராக வீட்டுக்குள் ஓடி வந்து பூஜையறையை எட்டிப் பார்த்த போது சுவரோடு ஓட்டி ஈஸ்வர் நின்றிருந்தான்.

அடுத்த கால் மணி நேரத்தில் வேறு இரண்டு போலீஸ்காரர்களும் பார்த்தசாரதியும் வந்து சேர்ந்தார்கள்.

ஸ்வரைக் கொல்ல முடியவில்லை என்ற செய்தி பாபுஜியை எரிச்சலூட்டியது. இத்தனைக்கும் அவர் அனுப்பிய ஆள் குறி தவறாமல் சுடுவதில் பேர் போனவன். “என்ன ஆச்சு?

“அவன் திடீர்னு குனிஞ்சு தரையக் கும்பிட்டான் சார். அப்ப மிஸ் ஆயிடுச்சு...என்று ஆரம்பித்து அந்த ஆள் நடந்ததை எல்லாம் சொன்னான்.

பாபுஜி குருஜியிடம் வந்து ஈஸ்வர் உயிர் தப்பியதைச் சொன்னான். “... அவன் திடீர்னு தரையைத் தொட்டுக் கும்பிட்டானாம். ஏன்னு தெரியலை

வேதபாடசாலையின் மண்ணை ஈஸ்வர் கும்பிட்டது நினைவுக்கு வர குருஜி சொன்னார். “அவனுக்கு அடிக்கடி தரையைத் தொட்டுக் கும்பிடற பழக்கம் உண்டு

பாபுஜி குழப்பத்துடனும், கோபத்துடனும் கேட்டார். “அவன் என்ன லூஸா குருஜி?

பார்த்தசாரதிக்கு ஈஸ்வர் நலமாய் இருப்பதைப் பார்த்த பிறகு தான் நிம்மதி ஏற்பட்டது. ஈஸ்வர் சொன்னதை எல்லாம் கேட்ட போது பசுபதி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளா விட்டாலும் கூடத் தன் குடும்பத்தாரைக் காப்பாற்றுவதில் இறந்த பின்னும் அக்கறை கொண்டவராகவே இருக்கிறார் என்று தோன்றியது. ஈஸ்வர் அந்த தேவாரப் புத்தகத்தை எறியாமல் இருந்திருந்தாலும் காப்பாற்றப்பட்டிருப்பானா என்று கேட்டுக் கொண்டார். விடை தெரியவில்லை.

ஈஸ்வர் மற்ற போலீஸ்காரர்களும், பார்த்தசாரதியும் அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தது எப்படி என்று கேட்டான். யாரோ ஒரு மர்மநபர் போன் செய்தார் என்று மட்டும் பார்த்தசாரதி தெரிவித்தார். கேட்ட குரல் தென்னரசுவின் குரல் போல் இருந்தது என்று அவனிடம் அவர் சொல்லவில்லை. தென்னரசு பற்றிய சந்தேகத்தை அவர் அவனிடம் சொல்லி இருக்காதது போலவே, குழம்ப வைத்த இந்தப் போன் கால் விஷயத்தையும் அவர் சொல்லவில்லை. தென்னரசு ஒரு புதிராகவே அவருக்கு இருந்தார்....

பரமேஸ்வரனின் பேரனுக்குப் பாதுகாப்பு அளிக்க மேலிடத்தில் சொல்வதில் அவருக்குப் பிரச்சினை இருக்கவில்லை.   ஒரு முறை கொலை முயற்சி நடந்திருக்கிறது என்று தெரிந்தவுடன் எத்தனை ஆட்கள் ஈஸ்வரின் பாதுகாப்புக்குத் தேவை என்று கேட்டு அனுமதி அளித்து விட்டார்கள். பார்த்தசாரதியும் ஈஸ்வர் அங்கிருக்கும் வரை தானும் அங்கிருப்பது என்ற முடிவுக்கு வந்தார்.  

ஈஸ்வர் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் முதல் வேலையாக கணபதியைத் தொடர்பு கொள்ள நினைத்தான். கொலை முயற்சி, பசுபதி தரிசனம் போன்ற எத்தனையோ விஷயங்களைப் பற்றி யோசிக்க மனம் முனைந்தாலும் அவன் அந்த விபரீத ஆராய்ச்சிகள் தொடர்ந்து விசேஷ மானஸ லிங்கம் தவறானவர்கள் வசம் போய் விடக் கூடாது என்பதற்கே முன்னுரிமை தந்தான். காலம் அவன் வசம் இல்லை.... அவன் நிதானித்தால் அவர்கள் முந்தி விடுவார்கள். பின் அவர்களை நிறுத்துவது கஷ்டம் என்பதை அவன் உணர்ந்திருந்தான்.

அதை பார்த்தசாரதியிடம் தெரிவித்து விட்டு பூஜையறைக்குப் போனவனுக்கு விசேஷ மானஸ லிங்கத்தின் அலைகளுடன் லயிக்க முன்பை விட அதிக நேரம் தேவைப்பட்டது. அது சாத்தியமான போது விசேஷ மானஸ லிங்கத்தின் தரிசனம் கிடைத்தது. ஓங்கார நாதம் கேட்டுக் கொண்டிருக்க விசேஷ மானஸ லிங்கம் தனியாக விளக்கொளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது. மனிதர்கள் யாரும் அருகில் தெரியவில்லை. ஈஸ்வர் மானசீகமாக கணபதியைத் தேடினான். மனக்கண்ணில் கணபதியைப் பார்த்து தன் கவனத்தைக் குவித்தான். சிறிது நேரத்தில் ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த கணபதி அவன் மனக்கண்ணில் தெரிந்தான். ஈஸ்வர் அவனை அழைத்தான். கணபதி, கணபதி

கணபதியை எழுப்புவது சுலபமாக இருக்கவில்லை. ஈஸ்வர் பல முறை முயற்சி செய்ய வேண்டி வந்தது. கணபதிக்கு கனவில் ஈஸ்வர் தெரிந்தான். ஈஸ்வரைக் கனவில் பார்த்த சந்தோஷம் கணபதி முகத்தில் தெரிந்தது. ‘அண்ணன்என்று மனதில் சொல்லிக் கொண்டு கணபதி புரண்டு படுத்தான்.

“கணபதி... கணபதி... எழுந்திரு கணபதி.. உன் கிட்ட பேசணும்

இயல்பாகவே தூக்கம் அதிகமாக இருந்த கணபதி என்ன இந்த அண்ணன் என்னைத் தூங்கவே விட மாட்டேன்கிறார்என்று சொல்லிக் கொண்டே  மீண்டும் உறங்கப் பார்த்தான். ஆனால் ஈஸ்வர் கூப்பிட்டுக் கொண்டே இருப்பது போல் தோன்றவே கஷ்டப்பட்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான். “என்ன இன்னைக்கு அண்ணன் கனவாவே வருது....

எழுந்து உட்கார்ந்த கணபதியிடம் என்ன சொல்வது, எப்படி சொல்வது என்பது ஈஸ்வருக்குத் தெளிவில்லாமல் இருந்தது. நேரில் சொல்வதே கஷ்டம் தான். அப்படி இருக்கையில் இப்படி டெலிபதியாக அனுப்பும் செய்திகள் அவனுக்கு எந்த அளவு புரியும் என்பதும் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் இவனோடு சேர்ந்து ஞானம் படைத்தவனைத் தேடுவது என்பது இமாலய சாதனையாகவே இருக்கும் போலத் தெரிந்தது.

ஈஸ்வர் சொன்னான். “கணபதி நீ தப்பான இடத்தில் இருக்கே. நீ நினைக்கிற மாதிரி அந்த குருஜி நல்லவர் இல்லை.... அந்த சிவலிங்கத்தை அவர்கள் கண்டிப்பாகத் தப்பான வழியில் தான் பயன்படுத்தப் போகிறாங்க

கணபதிக்கு ஆச்சரியமாய் இருந்தது. “என்ன இது கண்ணு முழிச்சா கனவு போயிடும்பாங்க. எனக்கு இன்னும் கனவு அப்படியே இருக்கு. அண்ணன் வேற ஏதோ சொல்றாரு

செய்தி அவனைப் போய் சேரவில்லை என்பது புரியவே ஈஸ்வர் சொன்னதில் சில வார்த்தைகளை மட்டும் அழுத்தமாய் சொன்னான். தப்பான இடம்... தப்பான இடம்.... குருஜி... குருஜி... நல்லவரில்லை..... தப்பு நடக்குது.... தப்பு நடக்குது...

கணபதிக்குத் தப்பு என்கிற சொல் மட்டும் தெளிவாக மனதில் பதிந்தது. அவனுக்குத் தெரிந்து அவன் சமீபத்தில் செய்த தப்பு சிவன் முன்னாலேயே உட்கார்ந்து கொண்டு சீடை சாப்பிட்டது தான். “ஆமா நான் சீடை சாப்பிட்டது தப்பு தான்.. அதை இவர் வேற சொல்லணுமா?... இது அண்ணனுக்கு எப்படித் தெரிஞ்சுது.... சிவன் வேலையா இது? ஏன் சிவனே, நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேனே, பின்ன ஏன் ஊர் பூரா அதைச் சொல்லி இருக்கே?

ஈஸ்வருக்கு அவன் ஏதோ சாப்பிடுவது பற்றி சொல்கிற மாதிரி இருந்தது. திடீர் என்று விசேஷ மானஸ லிங்கம் கணபதி அருகே தெரிந்தது. கணபதி அந்த சிவலிங்கத்தை நினைத்திருக்கிறான் போல இருக்கிறது! அவன் சொல்லி முடித்த வார்த்தைகளில் மறுபடி கவனம் வைப்பது சுலபமாக இருந்தது. கவனத்தைக் கூராக்கிய போது கணபதி சொன்னதைத் திரும்பக் கேட்க முடிந்தது.  ஈஸ்வருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

ஈஸ்வர் கணபதி அருகே தெரிந்த விசேஷ மானஸ லிங்கத்தை மானசீகமாக வணங்கினான். “கடவுளே, இப்படி ஒரு வெகுளியைப் படைச்சுட்டு அவனை இப்போது அவர்கள் பக்கம் நிறுத்தி இருக்கிறியே. இது நியாயமா? இவனுக்கு நான் என்ன சொல்லி எப்படி புரிய வைப்பேன்?

கணபதிக்கு ஈஸ்வர் விசேஷ மானஸ லிங்கத்தை வணங்குவது தெரிந்தது. சந்தோஷமாய் சொன்னான். “அண்ணா. இது தான் நான் சொன்ன சிவன்... இவருக்கு ரொம்பவே சக்தி இருக்கு. என்ன நினைச்சாலும் செய்து கொடுப்பார்.... ரொம்பவே நல்லவரு

ஈஸ்வர் பாதி சிரிப்புடனும் பாதி மனத்தாங்கலுடன் பரமனிடம் கேட்டான். “இவன் கிட்ட நல்லவருன்னு சர்டிபிகேட் வாங்கிற அளவு நீ நிஜமாகவே நல்லவன் தானா. அப்படியானால் அவனை ஏன் மோசமான ஆட்கள் பயன்படுத்த நீ அனுமதிக்கிறாய்?

விசேஷ மானஸ லிங்கம் மௌனம் சாதித்தது. பக்தர்களின் தர்மசங்கடமான கேள்விகளுக்கு இறைவன் பதில் அளிப்பதில்லை போலும்! ஈஸ்வர் மறுபடியும் கணபதிக்குப் புரிய வைக்க முயற்சித்தான். “கணபதி குருஜி கெட்டவர்நம்பாதே. சிவலிஙகத்தை வச்சு தப்பு பண்ணப் போறாங்க.என்று திரும்பத் திரும்ப அழுத்திச் சொன்னான்.
 
கணபதிக்கு அவன் சொல்வது புரிகிற மாதிரி இருந்தது. ஆனால் அதன் கூடவே ‘என்ன அண்ணன் குருஜியைப் போய் கெட்டவர்ன்னு சொல்றார்?என்று மனம் பதறியது. “அண்ணா உங்களுக்குக் குருஜியைத் தெரியாது. அதனால தான் அப்படிச் சொல்றீங்க. அவர் ரொம்ப நல்லவருஎன்றான்.

ஈஸ்வர் விசேஷ மானஸ லிங்கத்திடம் சொன்னான். “இவன் உன்னையும் நல்லவர்னு சொல்றான். குருஜியையும் நல்லவர்னு சொல்றான். இவன் அகராதியில கெட்டவங்கன்னு யாராவது இருக்காங்களா?

கணபதிக்கு ஈஸ்வர் சிவலிங்கத்தைப் பார்த்து ஏதோ கேட்பது போலத் தெரிந்தது. ‘ஓ குருஜி நல்லவரான்னு அண்ணன் சிவன் கிட்ட கேட்கறார் போலத் தெரியுது. சிவனே... நீயே அண்ணன் கிட்ட சொல்லு. குருஜி நல்லவர்ன்னு... அண்ணன் அமெரிக்காவுலயே இருந்தவருங்கறதால அண்ணனுக்கு குருஜி பத்தி தெரியாதுல்ல....

ஈஸ்வர் பேச்சும் செயலும் இழந்து போய் கணபதியைப் பார்த்தான். இவன் மனதில் இந்த அளவு உயர்ந்த இடம் பிடித்துள்ள குருஜியை அவன் எப்படி இறக்குவான்?

ஈஸ்வர் ஒன்றுமே சொல்லாமல் தன்னையே பார்ப்பது கணபதிக்கு மனதில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. அண்ணனும் நல்லவர் தான். அவர் ஏன் குருஜியை தப்பாய் சொல்றார்

அவனையும் கூட கணபதி நல்லவர் என்று சொன்னதற்கு விசேஷ மானஸ லிங்கம் சிரிப்பது போல் ஈஸ்வருக்கு பிரமை ஏற்பட்டது.  ஈஸ்வர் குருஜியைப் பற்றி இனி இவனிடம் எதுவும் சொல்லிப் பயனில்லை என்பதைப் புரிந்து கொண்டான். அடுத்ததாகச் சொன்னான். “கணபதி அங்கே தப்பு நடக்குது... தப்பு நடக்குது

ஈஸ்வர் சீடை விவகாரம் இல்லாத தப்பு ஒன்றைச் சொல்கிறான் என்று கணபதிக்குப் புரிந்தது. அநியாயமாய் சிவன் சீடை சமாச்சாரத்தை அண்ணனிடம் சொல்லிட்டார்னு நினைச்சுட்டமே. என்னை மன்னிச்சுடு சிவனே. எனக்கு அறிவு அவ்வளவு தான்.... கனவுல வந்து அண்ணன் நிஜமாவே பேசற மாதிரி இருக்கே. என்ன இது? அண்ணன் எதைத் தப்புன்னு சொல்றார்?”.  கணபதி எழுந்து விட்டான்.

ஈஸ்வர் திகைத்தான். ‘இவன் எங்கே கிளம்பிட்டான்?

கணபதி அறையை விட்டு வெளியே வந்தான். ஹரிராம் அறைக் கதவு திறந்திருந்தது. எட்டிப் பார்த்தான். ஹரிராம் பகவத் கீதை படித்துக் கொண்டிருந்தார். நீங்க இன்னும். தூங்கலையா. எனக்கு ஒரு உபகாரம் செய்யறீங்களா? என் கனவுல எங்க அண்ணன் வந்து தப்பு நடக்குது’ ’தப்பு நடக்குதுன்னு சொல்ற மாதிரி இருக்கு. இது தூக்கத்துல வர்ற கனவு இல்லை. முழிச்சுகிட்டே இருக்கறப்ப வர்ற கனவு. என்ன செய்யலாம். நீங்களே சொல்லுங்களேன்

ஹரிராமிற்கு கணபதி சொன்னது புரிய சிறிது நேரம் ஆனது. பகவத் கீதையை மூடி வைத்து விட்டு அவனைப் பார்த்துப் புன்னகை செய்தார். இவனுக்கு முழிச்சுகிட்டே இருக்கறப்ப வர்ற கனவுஎன்ன என்று பார்த்தார். அவன் மூலமாக அவருக்கு ஈஸ்வர் தெரிந்தான்.

ஈஸ்வருக்கு அதிர்ச்சியாக இருந்தது. கடைசியில் குருஜியின் கூட்டத்து ஆள் ஒருவரிடம் போய் இதைச் சொல்கிறானே இவன்?

ஹரிராம் கேட்டார். “இது தான் உங்கண்ணனா?

கணபதிக்கு ஆச்சரியமாய் இருந்தது. “ஓ... கனவுல வர்ற ஆளைக் கூட உங்களால பார்க்க முடியுமா? ஆமா அது தான் எங்கண்ணன். அண்ணன்னா சொந்த அண்ணன் இல்லை. அப்படி இருந்திருந்தா அவர் அழகுல பாதியாவது எனக்கு வந்திருக்காதா? அவர் எனக்கு அண்ணன் மாதிரி... இப்ப சிவலிங்கத்துக்கு ஒரு பட்டு வேஷ்டி கட்டியிருக்கேனே, அது அவர் வாங்கித் தந்தது தான்.....

கணபதி நிறுத்தாமல் அன்று நடந்ததை எல்லாம் சொன்னான்.  ஹரிராமிற்கு அவன் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்றில்லை, அவனைப் பார்க்கையிலேயே அவன் வாழ்க்கையில் இருந்து எந்த விஷயத்தையும் அவரால் தெரிந்து கொள்ள முடியும் என்றாலும் கூட அவன் சொன்னதை சுவாரசியத்துடன் கேட்டார்.

“...இன்னொரு வேஷ்டி என் பிள்ளையாருக்கு வாங்கித் தந்திருக்கார். அதையும் உங்களுக்குக் காட்டவா?...கேட்டு விட்டு பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் கணபதி உற்சாகமாகத் தனதறைக்கு ஓடினான்.

ஈஸ்வருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கணபதி அந்தப் பட்டுத் துணியுடன் வந்து ஆவலுடன் ஹரிராமைக் கேட்டான். “நல்லா இருக்கில்ல?

ஹரிராம் தலையசைத்தார். “இன்னும் இதை என் பிள்ளையார் பார்க்கல.என்று அவன் சொல்ல ஹரிராம் புன்னகைத்தார். அவ ர் இது வரை இப்படி ஒரு அன்பான நல்ல மனதைப் பார்க்கவில்லை. சொல்லப் போனால் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத ஒரு நல்ல உள்ளத்தை முதல் முறையாகத் தன் வாழ்க்கையில் அவர் பார்க்கிறார்.

அவனிடம் கேட்டார். “சரி உங்க அண்ணன் தப்பு நடக்குதுன்னு எதைச் சொல்றார்?

அது தான் புரியலைஎன்று சொன்ன கணபதி விரித்த பட்டு வேஷ்டியைக் கவனமாக மடிக்க ஆரம்பித்தான். ஹரிராம் பார்வை அவனை ஊடுருவி ஈஸ்வரைப் பார்த்தது. ஈஸ்வருக்கு அவரை நம்பலாமா கூடாதா என்று தெரியவில்லை. ஆனால் இப்போதைக்கு அவரை விட்டால் அவனுக்கு வேறு வழியில்லை. அவர் கணபதியைப் பார்த்த பார்வையில் இருந்த கனிவு அவரை நம்பச் சொன்னது.

“தயவு செய்து அவனுக்குப் புரிய வையுங்கள்...என்று ஆரம்பித்த ஈஸ்வர் கணபதிக்குத் தெரிவிக்க நினைத்த விஷயத்தைச் சொன்னான். ஈஸ்வர் மன அலைகளில் அனுப்பியதை ஹரிராம் அப்படியே அவனுக்கு பேச்சு வடிவில் தெரிவித்தார்.

கணபதி தலையைப் பலமாக ஆட்டிச் சொன்னான். “அண்ணன் தப்பா புரிஞ்சுகிட்டிருக்கார். குருஜி தப்பு செய்ய மாட்டார்..... அவரை எனக்கு எத்தனையோ வருஷமாத் தெரியும்.... இந்த ஆராய்ச்சி தப்பானதுன்னா அவர் அதுக்கு அனுமதிக்கவே மாட்டார்

ஈஸ்வருக்கு இனி எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. பரிதாபமாக அவனைப் பார்க்க கணபதிக்கு அதைப் பார்க்கவும் கஷ்டமாய் இருந்தது. இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்த கணபதி ஒரு முடிவுக்கு வந்தான். “குருஜியை நேராவே கேட்டுடறேன்.

அவன் உறுதியாகத் தீர்மானித்து விட்டு குருஜியின் அறையை நோக்கி நடந்தான். வேண்டாம்.. வேண்டாம்என்று ஈஸ்வர் பதற்றத்துடன் அனுப்பிய செய்தியை கணபதி பொருட்படுத்தவில்லை.

(தொடரும்)

என்.கணேசன்

Monday, January 27, 2014

ஆசையும் ஆண்டவனாவது எப்போது?


கீதை காட்டும் பாதை 29

ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாகச் சொல்கிறார். தனஞ்செயா, என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறெதுவுமில்லை. நூலில் மணிகளைப் போல் இவ்வையகமெல்லாம் என்னைப் பற்றிக் கொண்டு நிற்கிறது.

மேலோட்டமாகப் பார்த்தால் “என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறெதுவுமில்லைஎன்பது ஸ்ரீகிருஷ்ணரின் சுயபுராணம் போலத் தோன்றலாம். அது அல்ல என்பது அடுத்த சுலோகங்களைப் படிக்கையில் தெரியும். இந்த சுலோகத்தில் சொல்லப்படுகிற அடுத்த உவமை மிக அழகான பொருத்தமான உவமை. ஒரு நூலில் விதவிதமான மணிகளை முழுமையாகக் கோர்த்தால் அந்த மணிகள் தெரியுமே ஒழிய நூல் தெரியாது. ஆனால் கண்ணுக்குத் தெரியாத அந்த நூல் தான் அத்தனை மணிகளையும் சேர்த்து வைத்திருக்கிறது. மணிமாலை தோற்றத்தை அந்த நூல் தான் ஏற்படுத்துகிறது. அந்த நூலில்லா விட்டால் மணிமாலை இல்லை.

அந்த மணிகள் அந்த நூலைப் பற்றிக் கொண்டிருப்பது போல இந்த உலகங்கள் எல்லாம் இறைவனைப் பற்றிக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சம் இப்போதைய வடிவில் நமக்குப் புலப்படுகிறது என்பது இதில் காட்டப்படுகிறது. அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர்  சொல்கிறார்.  

குந்தி புத்திரனே, நான் நீரில் சுவையாகவும், சூரிய சந்திரர்களில் ஒளியாகவும்,  எல்லா வேதங்களிலும் ஓங்காரமான பிரணவமாகவும், ஆகாயத்தில் ஒலியாகவும், ஆண்களிடத்தில் ஆண்மையாகவும் இருக்கிறேன்.

மண்ணில் தூய மணமாகவும், தீயில் ஓளியாகவும், எல்லா உயிரினங்களிலும் உயிராகவும்,  தவம் செய்வோரின் தவமாகவும் நான் இருக்கிறேன்.

அண்டசராசரங்களுக்கும் நான் சநாதனமாகிய (நிலையான) விதையென்று உணர்ந்து கொள் பார்த்தா. நான் அறிவாளிகளின் அறிவாகவும், தேஜஸ் படைத்தவர்களின் தேஜஸாகவும் இருக்கிறேன்.

பரதகுலச் செம்மலே. ஆசையும், பற்றும் நீங்கிய பலசாலிகளின் பலம் நான். தர்மத்திற்கு மாறுபடாத ஆசையும் நானாக இருக்கிறேன்.

சுருக்கமாகச் சொன்னால் ஒவ்வொன்றின் சாராம்சமாகவும், மூல சக்தியாகவும் இறைவனே இருக்கிறார். தேவகி மைந்தனாக, அர்ஜுனனின் நண்பனாக ஸ்ரீகிருஷ்ணர் இந்த வார்த்தைகளை முழங்கவில்லை. அண்ட சராசரங்களுக்கும் சனாதன விதை என்று, பிறப்பும், இறப்பும் கொண்ட, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்து முடிந்த கண்ணன், கண்டிப்பாகச் சொல்ல முடியாது. கீதோபதேச கட்டத்தில் அந்த அவதாரத்திற்குப் பின் இருந்த பரம்பொருளாகவே ஸ்ரீகிருஷ்ணர் அந்த வார்த்தைகளைச் சொல்லி இருக்கிறார்.

ஒவ்வொன்றின் உயிராகவும், சாராம்சமாகவும், மூலமாகவும் இருக்கிற பரம்பொருள் என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறொன்றுமில்லை என்று சொல்வதில் தவறென்ன இருக்க முடியும்.

இதில் கடைசியாக ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது சிந்திக்கத் தக்கது. வெறுமனே பலசாலியின் பலம் நான் என்று சொல்லவில்லை.  ஆசையும் பற்றும் நீங்கிய பலசாலியின் பலம் நான் என்று கூறுகிறார். பலசாலி போல் தோன்றுபவனிடம் ஆசையும் பற்றும் இருக்குமானால் அவன் பலசாலி அல்ல. ஆசையும், பற்றும் இருந்தால் அதுவே பலவீனம் அல்லவா? பார்வைக்குத் தெரியும் பலம் வெறும் தோற்றமே அல்லவா? ஆசைக் கடலின் அலைகளில் சிக்கியவன் யாரேயானாலும் அவன் அலைக்கழிக்கப்படும் பரிதாபமே அல்லவா? அதனால் தான் ஸ்ரீகிருஷ்ணர் உண்மையான பலம் ஆசையும் பற்றும் நீங்கிய பின் மிஞ்சுவதே என்கிறார்.

அடுத்ததாக தர்மத்திற்கு மாறுபடாத ஆசையாக நான் இருக்கிறேன்என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்வதும் மிக முக்கியமான பிரகடனம். ஆசையினால் சங்கிலித் தொடர் போல வரும் பிரச்சினைகளை கணித கோட்பாடுகள் போலச் சொன்ன ஸ்ரீகிருஷ்ணர் திடீர் என்று இப்படி ஏன் கூறுகிறார்?

ஒரு மனிதன் எதற்காகப் பிறந்தானோ அதை நிறைவேற்றுவதே அவன் தர்மம். அதைச் செய்து முடிக்கும் வரை அவனுக்கு நிம்மதி இருக்காது. அதற்கான அவன் துடிப்பு ஆசை போல் தோன்றினாலும் அது தர்மமானது, இதயத்துடிப்பு போல இயல்பானது.

ஒரு கலைஞன் தன் கலையில் முன்னேறி சாதிக்க ஆசைப்படுவது, ஒரு விஞ்ஞானி கண்டுபிடிக்கத் துடிப்பது, ஞானவழியில் ஈடுபாடு உள்ளவன் மெய்ஞானம் அடைய ஆழமாய் ஆசைப்படுவது, ஒரு நல்ல மனிதன் உயர்ந்த நோக்கம் ஒன்றை ஆத்மார்த்தமாக உணர்ந்து அதை நிறைவேற்ற ஆசைப்படுவது போன்றவற்றை அந்த வகையில் சேர்க்கலாம். இந்த ஆசைகளும் தவறு என்றால் இந்த உலகின் அத்தனை அழகும், நன்மைகளும் சாத்தியப்பட்டிருக்குமா?

சங்கீத மேதைகளும், ஓவிய மேதைகளும், எழுத்துலக மேதைகளும் தங்களுக்குள் இருந்த திறமையை படைப்புகளாகப் படைக்க ஆசைப்பட்டதனால் ஏற்பட்ட விளைவுகளின் உன்னதங்கள் தான் எத்தனை? மின்சாரம் கண்டுபிடிக்க பல ஆயிரம் முறை தோற்றும் தன் ஆசையை விலக்கிக் கொள்ளாத ஒரு தாமஸ் ஆல்வா எடிசனின் ஆசையின் பலனை அல்லவா அவருக்குப் பிந்தைய தலைமுறைகளான நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ரமண மகரிஷியின் ஞானத்தேடலும், ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஞானத்தேடலும் எத்தனை லட்சம் பேருக்கு இன்று வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.  அன்னை தெரசா கல்கத்தா வீதிகளில் ஆதரவற்று அலைந்து கொண்டிருந்த தொழுநோயாளிகளுக்கு தொண்டாற்ற ஆசைப்பட்டாரே அந்த் ஆசையின் விளைவில் எத்தனை பேருடைய வாழ்க்கை காப்பாற்றப்பட்டிருக்கிறது. இது போன்ற ஆசைகளில் நாம் இறைவனைப் பார்க்க முடியா விட்டால் வேறு எதில் தான் அவரைக் காண முடியும்? அது போன்ற தர்ம நெறியில் இருக்கும் உயர்ந்த ஆசைகளில் தான் இருப்பதாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். உலகம் சீரழியாமல் ஓரளவாவது நல்ல முறையில் இயங்குவதே இந்த வகை மேலான ஆசைகளாலும், அவற்றை நிறைவேற்ற எதையும் செய்யத் துணியும் அந்த மனிதர்களின் மன உறுதியாலும் அல்லவா?

ஆனால் இந்த வாக்கியத்தில் இருக்கும் தர்மம் தவறாத என்ற சொற்கள் மிக முக்கியமானவை. மேலே சொன்ன மேன்மைகளின் போர்வையில் மனிதன் தன் ஈகோவையும், பேராசையையும் முன்னிலைப்படுத்தி இறங்கும் செயல்களில் இறைவன் இருக்க முடியாது. தன் மொழியையும், மதத்தையும், இனத்தையும் காப்பாற்றுவதாக காட்டிக் கொண்டு தங்கள் வழிகளில் இருந்து வேறுபட்டவர்களை அழிக்கத் துணிபவர்கள், தங்கள் தனிப்பட்ட லாபத்திற்காக உள்ளே ஆசைப்பட்டு, வெளியே ஒரு குறிக்கோளுக்காக இயங்குவதாய் காட்டிக் கொள்ளும் ஏமாற்றுப் பேர்வழிகள் எல்லாம் ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் வகையில் சேரமாட்டார்கள்.

தர்மம் தவறாத ஆத்மார்த்தமான ஆசைகளில் மட்டுமே ஆண்டவன் இருக்கிறான். அந்த ஆசைகளினால் தூண்டப்படுபவர்கள் இறைவனால் தூண்டப்படுபவர்கள். இது வரை உலகில் நடந்த அனைத்து நன்மைகளும் சரி, இனி உலகில் நடக்க இருக்கும் அனைத்து நன்மைகளும் சரி இது போன்ற ஆசைகளாலேயே சாத்தியமாகும். இந்த ஆசைகள் செயற்கையாய் ஒருவர் ஏற்படுத்திக் கொள்பவை அல்ல. இவை இயற்கையாய் இதயத்தின் ஆழத்தில் இருந்து எழுபவை. அதனால் அனைவருமே பலன் அடைவார்கள். இவற்றை அலட்சியப்படுத்த முடியாது, அலட்சியப்படுத்தவும் கூடாது.  அது நம் பிறப்பின் நோக்கத்தையும், இறைவனையுமே அலட்சியப்படுத்துவது போன்றது.

பாதை நீளும்.....

-          என்.கணேசன்


Thursday, January 23, 2014

பரம(ன்) ரகசியம் – 81



ஜான்சனுக்கு ஈஸ்வர் இந்த அளவு முன்னேறி இருப்பதை நம்பக் கஷ்டமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் ஒரு பதிலை வைத்திருந்த குருஜியின் அறிவுக்கு இது எட்டிய விஷயமாக இருந்தாலும் ஓரிரு நாட்களில் ஈஸ்வர் அவர்களை வேவு பார்க்கும் அளவுக்கு அசுர வேகத்தில் நெருங்கியிருப்பது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.  இதில் அக்னி நேத்ர சித்தர் வேறு அவனை சந்தித்திருக்கக் கூடும் என்று குருஜி நினைக்கிறார்....!

ஜான்சன் மனத்தாங்கலுடன் சொன்னார். “உங்க நண்பர் உதயன் சுவாமி அக்னிநேத்ர சித்தர் இந்த இடத்தில் நடக்கும் ஆராய்ச்சிகளைக் கெடுக்க முடியாதபடி மந்திரக்காப்பு செய்தது மாதிரி ஈஸ்வரும் எதுவும் செய்ய முடியாதபடி செய்திருக்க நீங்கள் சொல்லி இருக்கலாம்....

குருஜி சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் யோசித்தார். ஈஸ்வரை அவர் குறைத்து எடை போட்டு விட்டாரோ?

ஜான்சன் பயத்தோடு கேட்டார். “அவன் இன்னேரம் இந்த இடம் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டு பிடித்திருப்பானா குருஜி

“அதை அவன் கண்டு பிடிப்பது கஷ்டம் தான்... அந்த சித்தர் அவனுக்கும் கணபதிக்கும் சரியான ஒரு முகூர்த்த நேரத்தில், எனர்ஜி லெவல்னு நீங்கள் சொல்வீங்களே அதில், ஒரு நுட்பமான இணைப்பை ஏற்படுத்திட்டார். அதனால சரியா முயற்சி செய்தால் கணபதியும்,  விசேஷ மானஸ லிங்கமும் இருக்கிற இடத்தை அவனால் பார்க்க முடியுமே ஒழிய அந்த இடம் எங்கே இருக்குன்னு கண்டுபிடிக்கற அளவுக்கு உதயனோட மந்திரக் காப்பு அனுமதிச்சுடாதுன்னு நினைக்கிறேன்

அவன் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளும் நபர் அல்லவே என்று நினைத்த ஜான்சன் கணபதி குருஜியை நோக்கி வருவதைப் பார்த்து அங்கிருந்து நகர்ந்தார்.

கணபதியைப் பார்த்து குருஜி புன்னகையுடன் கேட்டார், “என்ன கணபதி, சிவலிங்கத்துகிட்ட அடுத்தது உனக்காக ஏதாவது கேட்கலாமா?

உலகில் தன்னைக் காட்டிலும் எத்தனையோ பேர் பெரும் கஷ்டத்தில் இருக்கும் போது தனக்காக மட்டும் வேண்டிக் கொள்வது நியாயமல்ல என்று கணபதி நினைத்தான். கேட்காமலேயே இறைவன் இப்போது அவனுக்கு நன்றாகவே படியளந்து வருகிறார்.... “வேண்டாம் குருஜி…”

அப்படின்னா அடுத்தது என்ன கேட்கலாம் சொல்லுகுருஜி விளையாட்டாய் கேட்டார்.

“எல்லாரும் நல்லா சந்தோஷமாயிருக்கணும்னு கேட்டா என்ன குருஜி?கேட்டு விட்டு கணபதி குருஜியை குழந்தைத்தனமாய் பார்த்தான். தனித்தனியாய் ஒவ்வொருவரும் கேட்பதை விட இப்படி எல்லாரும் சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்று கேட்பது நல்லது என்று அவனுக்குத் தோன்றியது.

குருஜி மெல்லச் சொன்னார். “அந்த அளவு சக்தி இந்த சிவலிங்கத்துக்கே இருக்கிறது சந்தேகம் தான் கணபதி

கணபதி போன பிறகும் அவன் வார்த்தைகளும், மனதார அவன் சொன்ன விதமும் அவர் மனதில் நிறைய நேரம் நின்றது. பின் ஒரு பெருமூச்சு விட்டவராக பாபுஜியை அழைத்து குருஜி சொன்னார். “பாபுஜி. இந்த விசேஷ மானஸ லிங்கத்தோட சக்தி பத்தி இனி ஆராய்ச்சி செய்ய எதுவுமில்லை. ஈஸ்வர் குறுக்கில் வராமல் இருந்தால் நம்ம கற்பனையோட எல்லை தான் நம்ம சாதனையோட எல்லையாய் இருக்கும்...

“ஈஸ்வர் குறுக்கே வராமல் இருக்க என்ன செய்யறது குருஜி?

“எல்லாத்துக்குமே ஒரு வழி இருக்கு. நான் யோசிச்சு சொல்றேன்... நீ அதைப்பத்தி கவலைப்படாதே..  நம்ம லட்சியத்தை அடைய நாம் முதல்ல என்ன செய்யலாம்னு நீங்க எல்லாரும் சேர்ந்து யோசிக்க ஆரம்பியுங்க. நானும் சிலதெல்லாம் யோசிச்சு வச்சிருக்கேன். பிறகு சேர்ந்து பேசி முடிவு செய்யலாம். இதை முதல்லயே செய்திருக்கலாம். ஆனால் அப்ப விசேஷ மானஸ லிங்கத்தை நான் நம்பின அளவு நீங்க யாரும் நம்பினதா தெரியலை. அதனால் தான் உங்களுக்கெல்லாம் அந்த நம்பிக்கை வந்த பிறகு பேசலாம்னு விட்டுட்டேன்.....”.

பாபுஜி போன பிறகு குருஜி ஈஸ்வரை எப்படித் தடுத்து நிறுத்துவது என்று யோசிக்க ஆரம்பித்தார்.

ஸ்வர் இனி என்ன செய்யப் போகிறான் என்பதை அறிய பார்த்தசாரதி ஆவலாய் இருந்தார். சீக்கிரமாக அவன் எதாவது செய்தால் தேவலை என்று அவருக்குத் தோன்றியது. ஆனால் ஈஸ்வரோ அவசரப்பட்டு எதையும் செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை.

விசேஷ மானஸ லிங்கத்தின் அருளாளோ, அக்னிநேத்ர சித்தர் மற்றும் பசுபதி ஆகியோரின் ஆசியாலோ இன்றைய தினத்தில் அவன் சாதித்தது அவன் எதிர்பார்த்திராத அளவு பெரிய வெற்றி தான். ஒரு இடத்தில் நடப்பதை ஓரளவாவது நேரில் பார்ப்பது போல் பார்க்க முடிந்தது சாதாரண விஷயம் அல்ல.  ஆழ்மனசக்திகளில் ஒன்றான Remote Viewing என்ற தொலைதூரத்தில் நடப்பதைக் காண முடிந்த சக்தி அவனுக்கு இன்று அருளப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த வெற்றியில் பெருமிதம் அடையும் நிலையில் அவன் இல்லை. காரணம் அவன் ஒருவனிடம் அந்த சக்தி உள்ளது என்றால் எதிரணியில் உள்ளவர்களில் எத்தனை பேரிடம் அந்த சக்தி உள்ளது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவனுக்குக் குருஜியைப் பார்க்க முடிந்தது போல குருஜிக்கும் அவனைப் பார்க்க முடிந்திருக்கிறது. அவருக்கு சற்று தொலைவில் வேறு மூன்று பேர் தியான நிலையில் அமர்ந்து கொண்டு இருந்தார்களே அவர்களுக்கும் அந்த சக்தி இருக்கலாம் என்று அவன் உள்மனம் சொன்னது. அது உண்மையானால் இங்கு இவன் ஒருவன் என்றால் அங்கு அவர்கள் நான்கு பேர் இருக்கிறார்கள். அது போதாதென்று அங்கு விசேஷ மானஸ லிங்கம் இருக்கிறது, ஜான்சன் இருக்கிறார், இன்னும் யாரெல்லாம் இருக்கிறார்களோ? இப்படி எண்ண ஓட்டம் போன போது அவன் சொல்லிக் கொண்டான். ‘ஆனால் அவர்களிடம் சத்தியம் இல்லை.... நியாயம் இல்லை. அதுவே ஒரு பெரிய பலவீனம் அல்லவா? என் பக்கம் அது இருப்பது மிகப்பெரிய பலம் அல்லவா?

மேலும் யோசித்த போது அவனை அந்த சித்தரின் வார்த்தைகளும் ஆசுவாசப்படுத்தின. “எனக்குத் தெரிஞ்சு சுமக்க முடியாத பாரத்தை இறைவன் தர்றதில்லை”.

சித்தர் சொன்னது போல் தைரியமும் தன்னம்பிக்கையும் இல்லாத நல்லவனாக இருக்க அவன் விரும்பவில்லை. முயலாமலேயே தோல்வியை ஒப்புக் கொள்ளும் முட்டாளாக இருக்கவும் அவன் விரும்பவில்லை. ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று உறுதியாக நினைத்தான். மனதில் உறுதி வந்தவுடனேயே கூடவே யானை பலம் அவனுக்கு வந்து சேர்ந்தது போல இருந்தது.

எதைச் செய்வதாக இருந்தாலும் கணபதியைத் தன் பக்கம் இழுத்துக் கொள்வது தான் அதற்கான முதல் படி என்று ஈஸ்வர் கணக்கிட்டான். முன்பு போலவே மறுபடி முயற்சிக்கலாம் என்றால் அது கண்டிப்பாக குருஜிக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை. மனிதர் கண்கொத்திப் பாம்பாக அங்கே காவல் காத்துக் கொண்டு இருக்கலாம்.

“துஞ்சாமல்என்ற வார்த்தைக்கு தூங்காமல் என்று பார்த்தசாரதி அர்த்தம் எழுதினாலும் அதற்கு சோர்வில்லாமல், கால தாமதம் செய்யாமல் என்று அர்த்தம் என பார்த்தசாரதி சொன்னது சரியாக இருக்க வேண்டும் என்றே பட்டாலும் இன்றைய சூழ்நிலைக்கு ‘தூங்காமல்என்ற அர்த்தமே பொருந்தும் என்பது போலத் தோன்றியது. இரவு நேரத்தில் குருஜி தூங்கிய பிறகு ஏதாவது முயற்சி செய்யலாம். அப்படிச் செய்தால் அவர் அவன் செய்கைகளை அறிய வாய்ப்பில்லை....  முடிவெடுத்து விட்டு அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

அவன் நிமிர்ந்து உட்கார்ந்த விதத்தையும், அவன் முகத்தில் தெரிந்த உறுதியையும் பார்த்த பார்த்தசாரதிக்கு அவன் ஏதாவது செய்வான் என்ற நம்பிக்கை பிறந்தது.

அவன் தன் எண்ண ஓட்டத்தை அவரிடம் வெளிப்படையாகச் சொன்னான். அதிகாலை இங்கு வந்த அவரை இரவாவது வீட்டுக்கு அனுப்புவது தான் முறை என்று தோன்றியதால் ஈஸ்வர் அவரை வீட்டுக்குப் போய் மறு நாள் காலை வரச்சொன்னான். முனுசாமியும் மதியமே போய் விட்டிருந்ததால் அவனைத் தனியாக விட்டுப் போக அவருக்குத் தயக்கமாய் இருந்தது. அவன் பூஜை அறையில் அமர்ந்து கொண்டு இருக்கையில் அவருக்கு வேலை எதுவும் இல்லை என்பதால் அவர் இரவில் தங்கியும் எந்தப் பயனும் இல்லை என்று சொல்லி ஈஸ்வர் வற்புறுத்தி அனுப்பி வைத்தான். ஆனாலும் இரவு ஒன்பது மணி வரை இருந்து அவனிடம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் தான் பார்த்தசாரதி போனார்.

மிழகத்தில் உட்கார்ந்து கொண்டு செங்கடலில் சோமாலியக் கடற்கொள்ளையர்களை அழிக்க முடிந்த சக்தி தங்கள் வசம் இருக்கிறது என்ற எண்ணமே தென்னரசுக்கு பெருமகிழ்ச்சியைத் தந்து கொண்டிருந்தது. அந்த சந்தோஷமான நேரத்தில் மகளிடம் பேச வேண்டும் போல இருந்தது.  மகளுக்குப் போன் செய்து பேசினார்.

விஷாலியின் குரலில் எல்லை இல்லாத சந்தோஷம் தெரிந்தது. மெல்ல ஈஸ்வரும், தானும் காதலிப்பதாக அவரிடம் சொன்னாள். ஈஸ்வர் அமெரிக்காவுக்குத் திரும்பிப் போவதற்கு முன்பே கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்று பரமேஸ்வரன் முடிவு செய்திருப்பதாயும், அவர் தென்னரசுவிடம் போனில் பேச இரண்டு நாளாக முறை முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் சொன்னாள். கனகதுர்கா வந்திருப்பதாகவும் சொன்னாள்.

விஷாலி தடை இல்லாமல் பேசும் பெண் அல்ல. மிகுந்த சந்தோஷம் மட்டுமே அவளை அப்படிப் பேச வைப்பதுண்டு. இன்று அவள் குரலில் கொப்பளித்த சந்தோஷமும், எல்லாவற்றையும் அப்பாவிடம் சொல்லி விடத் துடித்த துடிப்பும் தென்னரசுவை நிலை குலைய வைத்தது. கொந்தளித்த உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு கேட்டார். “ஈஸ்வர் எங்கேம்மா

“அவர் அந்த தோட்ட வீட்டுக்குப் போயிருக்கார்ப்பா. ஏதோ ஆராய்ச்சி செய்யணுமாம். முடிச்சுட்டு தான் வருவேன்னு சொல்லிட்டு போயிருக்கார்.

தென்னரசு பேச்சிழந்து போனார். தந்தையின் மனநிலையைப் புரிந்து கொள்ளும் மனநிலையில் விஷாலி இருக்கவில்லை. ஆனந்தவல்லி தன் நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து ‘உனக்கு எதெல்லாம் பிடிச்சுதோ அதெல்லாம் எடுத்துக்கோம்மாஎன்று சொன்னதையும், கனகதுர்கா மிக நல்ல மாதிரி என்பதையும் சொன்னாள். “எனக்கு அவங்க கிட்ட பேசறப்ப அம்மா கிட்ட பேசற மாதிரி இருக்குப்பா....

விஷாலி பேசிக் கொண்டே போனாள். மகள் இது நாள் வரை அவ்வளவு சந்தோஷமாக எப்போதுமே இருந்ததில்லை என்று தென்னரசுக்குத் தோன்றியது. கடைசியில் விஷாலி கேட்டாள். “ஈஸ்வரோட தாத்தா கிட்ட பேசறீங்களாப்பா?

“சிக்னல் அபப்ப்ப கிடைக்கறதில்லைம்மா. நான் அப்பறமா பேசறேன்ம்மா

மகளிடம் பேசி முடித்த பிறகு தென்னரசு நிறைய நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தார். விதி அவர் வாழ்க்கையில் ஒரு குரூர விளையாட்டு விளையாடி இருப்பதாக அவருக்குத் தோன்றியது. இப்படி ஒரு வாழ்க்கை மகளுக்கு அமையும் என்பது முதலிலேயே தெரிந்திருந்தால் தடம் மாறி வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே...

மகேஷ் வந்தான். “என்ன யோசிச்சுகிட்டிருக்கீங்க அங்கிள்

“இனி அடுத்ததா என்ன செய்யப் போறோம்னு யோசிக்கிறேன் மகேஷ்

“அதைப்பத்தி தான் ஜான்சனும், பாபுஜியும் அந்த வெளிநாட்டுக்காரங்க கிட்ட வீடியோ கான்ஃப்ரன்ஸிங்ல பேசிகிட்டிருக்காங்க. எகிப்து அரசியலைப் பத்தி பேச ஆரம்பிச்சாங்க. போரடிச்சுது. வந்துட்டேன்.

தென்னரசுக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இந்த விசேஷ மானஸ லிங்கம் விவகாரத்தில் அவனுக்கு இயல்பாய் பெரிய ஆர்வம் எப்போதுமே இருந்ததில்லை. அவருக்காகத் தான் அவன் எல்லாமே செய்திருக்கிறான். தனிப்பட்ட  அவருக்காகக் கூட இல்லை. அவர் விஷாலியின் அப்பா என்பதற்காக. அவனிடம் உலகப் பணக்காரர்களில் ஒருவனாகக் கூட நீ ஆகலாம், உன் தாத்தாவைப் போல இருக்கும் சக்தி வாய்ந்த பல பேரை உன் அப்பாயின்மெண்டிற்காக நீ காக்க வைக்கலாம், நீ ஆசைப்படுவதை எல்லாம் நடத்திக் காட்டலாம்...’  என்றெல்லாம் அவர் எத்தனையோ ஆசை காட்டி அவனைத் தன்னுடன் வைத்திருந்தாலும் எல்லாவற்றிற்கும் மேலாக அவனை அவர் சொன்னபடி எல்லாம் ஆடவைத்தது அவனுக்கு விஷாலியின் மீதிருந்த காதல் தான். அவர் அவளை அவனுக்கே திருமணம் செய்து தருவார் என்ற எதிர்பார்ப்பில் தான்....

இப்போது வீட்டில் நடந்திருக்கும் நிகழ்வுகள் அவனுக்கு இன்னும் தெரியவில்லை. தெரிந்தால் அவன் அதை எப்படி எடுத்துக் கொள்வான்? தென்னரசுக்கு யோசிக்கவே கஷ்டமாக இருந்தது. அவர் ஏதோ யோசனையில் இருக்கிறார், பேசும் மனநிலையில் இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட மகேஷ் உறங்கப் போனான். தென்னரசு அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள பாபுஜியின் அறைக்குப் போனார்.

அவர் நுழைந்த போது மகேஷ் சொன்னது போல வீடியோ கான்ஃப்ரன்ஸிங்கில் எகிப்து அரசியல் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். சோமாலியக் கொள்ளைக்காரர்கள் விஷயத்தில் நினைத்ததை சாதிக்க முடிந்த சிவலிங்கத்தின் சக்தி இயற்கை சக்திகளோடு நின்று விடுமா இல்லை அரசியல் வரைக்கும் வருமா என்ற கேள்வி அவர்களிடம் எழுந்திருந்தது. அந்தக் கேள்விக்குப் பதிலைத் தெரிந்து கொள்ள தற்போது நடக்க இருக்கும் எகிப்திய தேர்தலை உபயோகப்படுத்திக் கொள்ள அவர்கள் நினைத்தார்கள்.

பிப்ரவரி 2011ல் எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து இறங்கிய பிறகு அந்த நாட்டில் அரசியல் நிலவரம் ஸ்திரமாக இருக்கவில்லை. பின் நடந்த தேர்தலில் முகமது மோர்சி என்பவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் அவருக்கும் ராணுவத்தின் எதிர்ப்பு இருந்து வந்தது. 2013 ஜூனில் அவருக்கு எதிராக பெரிதாக கலவரம் ஒன்று வெடிக்க ராணுவம் அதைப் பயன்படுத்திக் கொண்டு அவரைப் பதவியில் இருந்து இறக்கியது. விரைவிலேயே தேர்தல் ஒன்றை நடத்துவோம் என்று உறுதிமொழி அளித்திருந்த ராணுவம் தங்களுக்குச் சாதகமான ஒரு நபரை தேர்தல் களத்தில் நிற்க வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது. அந்த நபர் இந்த அறுவரில் ஒருவரான எகிப்தியரின் நெருங்கிய நண்பர். மக்களிடம் அந்த நபருக்கு செல்வாக்கை அதிகப்படுத்த விசேஷ மானஸ லிங்கத்தால் முடியுமா என்பது பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பாபுஜி ஜான்சனிடம் கேட்டார். “நீங்க என்னை நினைக்கிறீங்க. அரசியல் மாற்றத்தையும் அந்த சிவலிங்கத்தால் ஏற்படுத்த முடியுமா?”.  இந்த ஆராய்ச்சிகள் ஆரம்பித்த்தில் இருந்து இருவரும் நெருக்கமாகி விட்டிருந்தார்கள். ஜான்சனிடம் முகம் காண்பிக்கவே தயங்கிய அறுவரும் கூட இந்த ஆராய்ச்சிகளின் ஆரம்பத்தில் இருந்தே அந்தத் தயக்கத்தை விட்டொழித்திருந்தார்கள். அந்த அளவு ஜான்சன் மீது அவர்களுக்கும் நம்பிக்கை உருவாகி இருந்தது.

ஜான்சன் சொன்னார். “கண்டிப்பாய் முடியும்னு தான் நினைக்கிறேன்

“அப்படின்னா முயற்சி செய்து பார்க்கலாம் பாபுஜி சொன்னார்.

ஜான்சன் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கி விட்டுச் சொன்னார். “ஆனால் முதல்ல ஈஸ்வரைக் கட்டுப்படுத்தி வைக்கணும். என்ன தான் குருஜி சொன்னாலும் அவர் அவனை கட்டுப்படுத்த முடியும்னு தோணலை

உடனடியாக இஸ்ரேல்காரர் சொன்னார். “பிரச்சினைக்குரிய ஆள்களைக் கட்டுப்படுத்தப் பார்க்கிறதை விட ஒரேயடியாய் அப்புறப்படுத்தறதே நல்லது.

பாபுஜிக்கும் அது சரியென்று பட்டது. எவனால் ஆபத்து என்று புரிந்து விட்டதோ அவனை உயிரோடு விட்டு வைப்பதே ஆபத்தை தக்க வைத்துக் கொள்வது போலத் தான். உடனே பாபுஜி ஈஸ்வரை உடனடியாகக் கொன்று விடும்படி செல்போனில் ஒருவரிடம் கட்டளை பிறப்பித்தார்.

தென்னரசு இதை எதிர்பார்த்திருக்கவில்லை. சில மணி நேரங்கள் முன்பு வரை அவன் விதி அவ்வளவு தான் என்று நினைத்து இரக்கப்பட்டு விட்டிருப்பார். இப்போதோ அவர் இதயத்தை இமயம் அழுத்தியது. அவன் விதியோடு அவர் மகள் விதியும் அல்லவா இணைந்திருக்கிறது. சற்று முன் மகளின் பேச்சில் இருந்த அளவுகடந்த ஆனந்தம் நினைவுக்கு வர அவருக்குத் தன் உயிரே போவது போல இருந்தது.  நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.

ஜான்சன் தென்னரசைக் கேட்டார். “என்ன ஆச்சு தென்னரசு

“வாயுத் தொந்தரவு தான். வேறொன்னுமில்லை”.  தென்னரசு சமாளித்தார். “ஒரு மாத்திரை சாப்பிட்டால் சரியாயிடும்என்றவர் கஷ்டப்பட்டு முறுவலித்து விட்டுத் தன் அறைக்குப் போனார்.

போனவர் அதிகம் யோசிக்கவில்லை. உடனடியாக அவர் பார்த்தசாரதிக்குப் போன் செய்தார். பார்த்தசாரதியின் ‘ஹலோகேட்டவுடன் அவசரமாக சொன்னார். “ஈஸ்வரைக் கொலை செய்யப் போறாங்க. அவனைக் காப்பாத்துங்க. ப்ளீஸ்

அதற்கு மேல் பேசாமல் இணைப்பைத் துண்டித்து விட்டு அவர் திரும்பிய போது பாபுஜி வாசலில் நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

(தொடரும்)
என்.கணேசன்                      




Monday, January 20, 2014

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 7



·         விசாரம் முற்றினால் வியாதி.
(கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்)

·         பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.
(நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.)

·         காற்றில்லாமல் தூசி பறக்காது.
(நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி)

·         பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.
(நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்)

·         பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.
(துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?)

·         பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.
(பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி)

·         இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.
(விதைத்ததெல்லாம் பயிராகி பலன் தருவதில்லை. அது போல பெற்றதெல்லாம் பிள்ளையாகி நல்லபடியாக நம்மைப் பார்த்துக் கொள்ளும் என்று நினைத்துவிட முடியாது)

·         கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.
(தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது.

·         வாங்குகிற கை அலுக்காது.
(வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என்றே சொல்லப்பட்ட பொருத்தமான பழமொழியோ?)

·         அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும்.
(என்ன சாமர்த்தியம் பாருங்கள்!)

-          தொகுப்பு : என்.கணேசன்


Thursday, January 16, 2014

பரம(ன்) ரகசியம் – 80

குருஜிக்கு அதற்கு மேல் தியான நிலையில் இருப்பது சாத்தியமாகவில்லை. விசேஷ மானஸ லிங்கத்தின் அலைகளோடு லயித்துக் கொண்டிருந்த நேரத்தில் தோன்றும் காட்சி வெறும் பிரமையாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர் உள்ளுணர்வு எச்சரித்தது. அவர் எழுந்து விட்டார்.

அவர் எழுந்தது தென்னரசுவையும், ஜான்சனையும், பாபுஜியையும் ஆச்சரியப்படுத்தியது. அந்த ஆராய்ச்சிகளை நேர் ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த அறுவரையும் கூட ஆச்சரியப்படுத்தியது. ஜான்சன் பதற்றத்துடன் என்ன என்று கேட்க நெருங்கிய போது சைகையால் ஒன்றுமில்லை என்று தெரிவித்த குருஜி சிறிது நேரத்தில் வந்து விடுவதாக சைகை மூலமாகத் தெரிவித்து விட்டு தனதறைக்கு விரைந்தார்.

இயற்கை உபாதை போல் இருக்கிறது என்று நினைத்தவர்களாய் எல்லோரும் நிம்மதி அடைந்தார்கள்.

ஸ்வர் எழுதி முடித்தவுடன் வெள்ளைக் காகிதத்தில் தெரிந்த அச்சு எழுத்துக்கள் அவன் பார்வையில் இருந்து மறைந்து போய் விட்டன. எழுதி முடித்து விட்டான் என்று அறிந்ததும் அருகில் இருந்து ஒரு ஆள் அதைத் திருப்பி எடுத்துக் கொண்டு விட்டதைப் போல இருந்தது.  ஓலை எழுத்துக்கள் புரியாத போது அச்சு எழுத்துக்கள் தெரிந்ததும், எழுதி முடித்தபின் மறைந்ததும் ஈஸ்வரைப் புல்லரிக்க வைத்தன. செய்யுள் வரிகளைப் போல் தெரிந்த அந்த வரிகளின் அர்த்தம் அவனுக்குச் சரியாக விளங்கவில்லை. அது விளங்காமல் தியான நிலையைத் தொடர அவனால் முடியவில்லை. மனம் முரண்டு பிடித்தது.

ஈஸ்வர் விசேஷ மானஸ லிங்கத்தை வணங்கி விட்டு எழுந்து வந்தான். அந்த செய்யுள் வரிகளில் புரியாத வார்த்தைகளை அடிக்கோடிட்டு பார்த்தசாரதியிடம் அந்த நோட்டுப் புத்தகத்தை நீட்டினான். இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்?

பார்த்தசாரதி அதைப் படித்தார்.

தூய உளமறிவு கூடித் துஞ்சாமல் நாடினால் சேர்ந்திடும் மெய்ஞானம் மூன்றும் காக்க மிஞ்சிடும் பூவுலகம் அன்றேல் நஞ்சாகும் சிவஞானம்

அதற்குக் கீழே அந்த வார்த்தைகளின் அர்த்தங்களை எழுதினார்.
தூய=தூய்மையான; உளமறிவு=உள்ளம்+அறிவு; துஞ்சாமல்=தூங்காமல்; அன்றேல்=இல்லாவிட்டால்; நஞ்சாகும்=விஷமாகும்.

அந்தக் கோடிட்ட சொற்களுக்குப் பதிலாக அந்த அர்த்தங்களை வைத்துப் படித்த போது ஈஸ்வர் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்தன. அக்னிநேத்ர சித்தர் தெரிவித்த அதே செய்தி தான்... அதே எச்சரிக்கை தான்....

குருஜி தனதறைக்குப் போய்  பீரோவைத் திறந்து ரகசியமாய் ஒளித்து வைத்திருந்த அந்த ஓலைச்சுவடிகளையும், தமிழாராய்ச்சி நிபுணர் எழுதித் தந்திருந்த விளக்கத் தாள்களையும் பிரித்துப் பார்த்தார். எல்லாமே இருந்தன. எதுவும் விடுபட்டது போலத் தெரியவில்லை. மறுபடி அவற்றை அப்படியே வைத்து விட்டு பீரோவைப் பூட்டியவர் வேகமாக தியான மண்டபத்திற்குத் திரும்பினார். தென்னரசுவை வெளியே சைகையால் வரவழைத்துக் கேட்டார்.

“அந்த தமிழாராய்ச்சிக்காரர் ஓலைச்சுவடிக்கு விளக்கம் எழுதித்தந்த பேப்பர்களை ஜெராக்ஸ் எடுத்து வச்சு வேற யாருக்காவது கொடுத்திருக்க வாய்ப்பிருக்கா?

தென்னரசு ஆணித்தரமாய் சொன்னார். “இல்லை குருஜி. ஏன் சொல்றேன்னா, அந்த ஆள் ரொம்பவே பயந்து போயிருந்தார்.  மூணு தடவை ட்யூப் லைட் ஃப்யூஸ் ஆயிடுச்சு, யாரோ கதவைத் தட்டற மாதிரி சத்தம் அடிக்கடி கேட்குதுங்கறதால அந்த ஆள் அந்த ஓலைச்சுவடிகளைப் பேய் பிசாசு சமாச்சாரம் மாதிரி நினைச்சுட்டு  அது கைய விட்டு போனா போதும்னு நினைச்ச மாதிரி தான் இருந்தது. அதனால் அதை ஜெராக்ஸ் எடுத்து வச்சிருக்கவோ, பிறகு யாருக்காவது தந்திருக்கவோ வாய்ப்பே இல்லை... ஏன் கேட்கறீங்க குருஜி   

ஒரு சந்தேகம் வந்துச்சு அதனால தான் கேட்டேன்”  என்ற குருஜி மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் மறுபடி சென்று விசேஷ மானஸ லிங்கத்தைப் பார்த்தபடி அமர்ந்தார். அமர்ந்தவர் தியானத்தின் மூலமாக ஆல்ஃபா சிபிஎஸ் அலைகள் 12லிருந்து 11, 10, 9, 8 அலைகளில் வேகமாக பயணித்துக் கொண்டு இருந்தார். விரைவில் தீட்டா அலைகள் சிபிஎஸ் 7ல் நுழைந்த போது, அவருக்கு மறுபடி அந்த அலைகளில் சிவலிங்க சக்தியுடன் லயிக்க முடிந்த போது, ஈஸ்வர் சம்பந்தப்பட்ட ஏதாவது காட்சி தெரிகிறதா என்று பார்த்தார். எதுவும் தெரியவில்லை. மனம் அமைதியடைந்தவராய் மனக்கண்ணில் சோமாலியக் கடற்கொள்ளைக்காரர்களின் அழிவைக் கொண்டு வந்து நிறுத்த ஆரம்பித்தார். அந்த நேரத்தில் மற்ற மூவரும் அந்த நிலைக்கு வந்திருந்தனர். கணபதியோ சிவன் ருத்ர தாண்டவம் ஆடி அந்த சோமாலியக் கொள்ளைக்காரர்களை அழிப்பது போல் மனதில் நினைத்துக் கொண்டிருந்தான். பாவப்பட்ட பல பேருக்கு தொந்தரவு கொடுத்துகிட்டா இருக்கீங்க. எங்க சிவன் யார் தெரியுமில்ல?

ஸ்வர் அந்தச் செய்யுள் வரிகளையும், சிவலிங்கத்தோடு சேர்ந்து பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருப்பதாய் முன்பு கண்ட காட்சியையும், அக்னி நேத்திர சித்தர் சொன்னதையும் நினைத்துப் பார்த்தான். வாய்ச்சொல்லாகவும், எழுத்தாகவும், காட்சியாகவும் கூட நேரவிருக்கும் ஆபத்து நிலை அவனுக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டது.  அவன் இனி அதிகம் தாமதிக்க முடியாது.....

பார்த்தசாரதிக்கு அவன் எப்படி அந்த செய்யுள் வரிகளை எழுதினான் என்பதை அறிய ஆவலாக இருந்தாலும் அவன் அதிகமாய் பேசுகிற மனநிலையில் இல்லை என்பதை ஊகிக்க முடிந்ததால் அமைதியாக இருந்தார். முனுசாமி கொண்டு வந்த டிபனை இருவரும் அமைதியாகவே சாப்பிட்டார்கள்.

சாப்பிட்டு முடித்தவுடன் ஈஸ்வர் திரும்பவும் கைகால் அலம்பிக் கொண்டு பூஜையறைக்குள் நுழைந்து வணங்கி விட்டு அமர்ந்தான். மறுபடி அவன் மனம் பலவிதமான எண்ணங்களில் பயணித்து சலித்து முக்கால் மணி நேரக் கடைசியில் விசேஷ மானஸ லிங்கத்தின் புகைப்படத்தில் ஐக்கியமாகியது. ஓங்கார ஒலி பின்னொலிக்க விசேஷ மானஸ லிங்கம் மறுபடி பிரத்தியட்சமாகத் தெரிந்தது. மெய்சிலிர்த்தது. இன்னும் எத்தனை முறை பார்த்தாலும் கூட இதே சிலிர்ப்பு இருக்கும் என்று தோன்றியது.

அதன் கூடவே கணபதியும் தெரிந்தான். அதன் அருகே அமர்ந்திருந்த அவன் ஏதோ சினிமா பார்ப்பது போல் பாவனை தெரிந்தது. கற்பனையில் சிவனிடமும் பேசுகிறானோ? இந்த முறை காட்சி கணபதியையும் தாண்டி நீண்டது. குருஜி தியான நிலையில் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அவர் முகத்திலும் ஏதோ காட்சி காண்பது போல் ஒரு பாவனை தெரிந்தது. கண்பதியையாவது அப்படிப் பார்க்க முடிந்ததில் ஈஸ்வருக்கு ஆச்சரியம் இல்லை. அவன் சுபாவமே அப்படித்தான். ஆனால் குருஜி?

ஈஸ்வர் அந்தக் காட்சியில் கவனத்தைக் குவித்தான். மேலும் என்ன எல்லாம் தெரிகிறது என்று பார்த்தான்.  சற்று தூரத்தில் மேலும் மூவர் தியான நிலையில் அமர்ந்திருந்தது போல் தெரிந்தது. ஆனால் அவர்கள் முகம் தெளிவாகத் தெரியவில்லை.

தன் கவனத்தைக் குருஜியிடம் கொண்டு வந்தான். என்ன பார்க்கிறார் என்று நினைக்க நினைக்க ஒரு பெரிய திரையில் ஒரு வரைபடம் தெரிந்தது. உலக வரைபடத்தில் ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதி போல் தெரிந்தது. கண்களைக் கூராக்கி தெரிந்த பெயர்களைப் பார்த்தான். செங்கடல், ஏடன் வளைகுடா , இந்தியப்பெருங்கடல், சோமாலியா, எதியோப்பியா, யேமன் என்ற பெயர்கள் எல்லாம் தெரிய இது காட்சிப்பிழையாக இருக்க வேண்டும் என்று ஈஸ்வர் நினைத்தான். அதை உறுதிப்படுத்துவது போல ஆயுதம் தாங்கிய சில ஆப்பிரிக்கர்களும் தெரிந்தார்கள். ஒரு பெரிய படகில் இருந்த அவர்கள் கடற்கொள்ளையர்கள் போலத் தெரிந்தார்கள். ஈஸ்வர் மறுபடி விசேஷ மானஸ லிங்கத்தின் மீது தன் கவனத்தைக் கொண்டு வந்தான். ஓரிரு நிமிடங்களில் விசேஷ மானஸ லிங்கம் மறைந்து போய் அந்த வரைபடமும், கடற்கொள்ளையர்களுமே தெரிந்தார்கள்.

ஈஸ்வருக்குக் குழப்பமாக இருந்தது. கவனத்தை கணபதி மீது கொண்டு வந்தான். கணபதி மறைந்து சிவனின் ருத்ர தாண்டவம் தெரிய ஆரம்பித்தது. சிவனின் கை, கால் அசைவில் எல்லாம் அந்தக் கடற்கொள்ளையர்களின் தலைகள் உருள ஆரம்பித்தன. சிவன் அவர்களைப் பந்தாடுவது போலத் தெரிந்தது. தனக்குத் தான் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று ஈஸ்வர் சந்தேகப்பட்ட போது எல்லாம் மறைந்து சிலர் டெலிவிஷனில் சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. ஈஸ்வர் குழப்பத்தின் உச்சத்திற்கே போனான். அந்த டெலிவிஷனைக் கூர்ந்து கவனித்தான். பிபிசி நியூஸ் சேனல் நிகழ்ச்சி அது.

அந்த நேரத்தில் குருஜி கண்களைத் திறந்தார். அவர் நேராகப் பார்த்தது ஈஸ்வரை. ஈஸ்வரும் அவரை நேராகப் பார்த்தான். விசேஷ மானச லிங்கத்தின் உபயத்தால் இடையே இருந்த பல மைல்கள் தூரம் இல்லாதது போலவே தோன்றியது. இருவர் கண்களும் சந்தித்துக் கொண்டதை இருவருமே விரும்பவில்லை. அந்த விருப்பக் குறைவாலேயே இருவரும் மளமளவென்று பீட்டா அலைகளுக்கு இறங்க காட்சிகள் தானாக மறைந்தன.

ஈஸ்வர் விசேஷ மானஸ லிங்கத்தின் புகைப்படத்தை வணங்கி விட்டு பூஜையறையை விட்டு வெளியே வந்தவன் பரபரப்புடன் தன் லாப்டாப்பை எடுத்து இணையத்தில் பிபிசி நியூஸ் சேனலைப் பார்க்க ஆரம்பித்தான். பார்த்தசாரதியும் அவன் பரபரப்பைப் பார்த்து அவனுடன் வந்து சேர்ந்து கொண்டார். அதே நேரத்தில் தியானமண்டபத்திலும் அலெக்ஸி, கியோமி, ஹரிராம் மூவரும் விசேஷ மானஸ லிங்கம் மூலம் ஐக்கியமாகி ஞான திருஷ்டியிலும், மற்றவர்கள் டிவி நிகழ்ச்சியிலுமாக அனைவரும் அதே நிகழ்ச்சியை பரபரப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

செங்கடல் பகுதியில் Sand storm  என்று சொல்லப்படும் மணல்/தூசு சூறாவளியை பிபிசி நியூஸ் சேனல் தொலைவில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது. இயற்கையின் சீற்றம் வார்த்தைகளுக்கு அடங்காதது. பேய்க்காற்றில் மணல், தூசியோடு சேர்ந்து கடலும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. செய்தியாளர் அந்த சுழல் ஆர்ப்பரிப்பின் நடுவே ஒரு படகும் சிக்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார். சற்று நேரத்திற்கு முன் ஒரு வினாடி நேரம் ஒரு பெரிய படகு மிக உயரத்திற்கு வீசப்பட்டு கீழிறங்கியதைப் பார்த்ததாக பார்வையாளர்கள் சிலர் சொன்னதை இடை இடையே ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். செங்கடலில் இது போன்ற மணல்/தூசு சூறாவளி புதிதல்ல என்று வானியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்ததும் ஒளிபரப்பாகியது. ஆனால் எந்த வருடத்திலும் இந்த மாத காலத்தில் இப்படி ஒரு சூறாவளி அந்தப் பகுதியில் ஏற்பட்டதில்லை என்றும் ஒரு வானியல் நிபுணர் வியப்பு தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் கடலின் சுழியில் தோன்றிய ஒரு கண் போன்ற தோற்றத்தை தியான மண்டபத்தில் இருந்த அனைவருமே பார்த்தார்கள். அலெக்ஸியின் இதயத்துடிப்பு ஒரு கணம் நின்று போனது. இரண்டாவது முறையாக அல்லவா அவர் அந்தக் கண்ணைப் பார்க்கிறார். சிவனின் மூன்றாவது கண்ணோ அது? மற்றவர்களும் வாய் விட்டுச் சொல்லா விட்டாலும் அந்த எண்ணம் அவர்களுக்குத் தோன்றாமல் இல்லை.

மூன்று மணி நேரம் நீடித்த அந்த சூறாவளி அடங்கிய பின்னர் அருகே இருந்த ஆப்பிரிக்க நாடுகளின் சீரமைப்புப் பணிகள் ஆரம்பமாயின. ஒரு உடைந்த படகின் பாகங்களோடு சில சடலங்களும் வேறு வேறு இடங்களில் கரை சேர்ந்திருந்தன. அந்த சடலங்கள் கொடூரமான சோமாலியக் கடற்கொள்ளைக்காரர்களுடையது என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட போது ஒரு செய்தியாளர் சொன்னார். “சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி வந்த இந்தக் கொள்ளையர்களால் இறைவனின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை போலும் 

அந்தப் பிணங்களைக் காட்டிய போது தியான மண்டபத்தில் பலத்த கைத்தட்டல் கேட்டது. அவர்கள் ஆராய்ச்சியின் மகத்தான வெற்றி என்று அவர்கள் மனம் மகிழ்ந்தார்கள். குருஜி தன்னை பிரம்மாவாக உணர்ந்தார். ஜான்சன், பாபுஜி, தென்னரசு, மகேஷ் நால்வர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இருக்கவில்லை. நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்த ஆறு வெளிநாட்டவர்களும் கைதட்டி தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அந்த இடமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

கணபதி கண்களில் மட்டும் கண்ணீரைக் கண்ட குருஜி கேட்டார். “என்ன கணபதி அழறே?

கணபதி உடைந்த குரலில் சொன்னான். “அந்த ஆள்களுக்கும் அம்மா எல்லாம் இருப்பாங்க இல்லையா? அவங்களுக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும்னு நினைக்கறப்ப அழுகையா வருது குருஜி...

ஸ்வருக்கு அங்கு நடந்தது என்னவென்று புரிய அதிக நேரம் ஆகவில்லை. செங்கடல் பகுதியின் வரைபடம், சோமாலியக் கடற்கொள்ளையர்களின் புகைப்படம், சிவனின் ருத்ரதாண்டவம் தோன்றல் எல்லாம் தெரிந்து முடிந்த போது நிஜமாகவே செங்கடலில் அந்த சோமாலியக் கடற்கொள்ளையர்கள் மணல் சூறாவளியில் சிக்கி இறந்து போனது அவனுக்குத் திகைப்பாக இருந்தது. விசேஷ மானஸ லிங்கத்தின் சக்தி எந்த அளவு செல்ல முடியும் என்பதை அறிய ஒரு சோதனை நடத்தி இருக்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். விசேஷ மானஸ லிங்கத்தை வைத்து எதையும் சாதிக்க முடியும் என்று அறிந்த இவர்கள் இனி என்ன தான் செய்ய மாட்டார்கள்?

தான் கண்டதையும், தன் கவலையையும் அவன் பார்த்தசாரதியிடம் சொன்ன போது அவருக்கு நம்பக் கஷ்டமாக இருந்தது.  ஆனால் பிபிசியில் அந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பைப் பார்த்த பின் அவரால் எப்படி நம்பாமல் இருக்க முடியும்? எதிரிகள் கையில் அணுகுண்டே இருக்கிறது, சூழ்நிலையும் அவர்களுக்கே சாதகமாக இருக்கிறது.....

பார்த்தசாரதி கவலையுடன் சொன்னார். “ஈஸ்வர் நீங்கள் ஏதாவது செய்தாகணும்!

தியான மண்டபத்தில் வெற்றிக் களிப்பில் அனைவரும் இருந்த போது குருஜி மட்டும் ஆழ்ந்த யோசனையுடன் உட்கார்ந்து கொண்டிருந்ததைப் பார்த்து நெருங்கிய ஜான்சன் கேட்டார். “என்ன குருஜி

இங்கே நாம என்ன ஆராய்ச்சி செய்துகிட்டிருக்கோம்கிறதை ஈஸ்வர் அங்கே இருந்தே பார்த்துகிட்டு இருக்கான்என்று குருஜி சொன்னார்.

ஜான்சன் திகைப்புடன் கேட்டான். “எப்படி? அவன் என்னை மாதிரி ஆராய்ச்சிகள் நடத்தறவனே ஒழிய அந்த சக்தி படைச்சவன் அல்லவே

விசேஷ மானஸ லிங்கத்தின் உபயம்...

“விசேஷ மானஸ லிங்கம் தான் இங்கே இருக்கே?

அந்த சித்தர் அவனை சந்திச்சிருப்பார்னு நினைக்கிறேன். அவன் அந்த மூணு பேரில் ஒருத்தன்.... அதனால அது எங்கே இருந்தாலும் மனசு வச்சா அதுகூட ட்யூன் ஆகிறது கஷ்டமில்லைன்னு நினைக்கிறேன். அறுபது வருஷங்களுக்கு மேல் இந்த விசேஷ மானஸ லிங்கம் இருந்த இடத்தில் இதோட அலைகளும் நிறைந்திருக்கும்கிறதால அங்கே இருந்து முயற்சித்தால் சீக்கிரமே ட்யூன் ஆக முடியும்....

ஜான்சன் திடுக்கிட்டார். குருஜி சொன்னார். இன்னேரம் அவனுக்கு நாம் என்ன செய்யப் போறோம்கிறது புரிஞ்சிருக்கும். அவனைத் தடுத்து நிறுத்தலைன்னா நம்ம அடுத்த முயற்சி அவ்வளவு சுலபமாய் இருக்க ஈஸ்வர் விடுவான்னு தோணலை ஜான்சன்

(தொடரும்)

என்.கணேசன்