சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 31, 2020

இல்லுமினாட்டி 83



சிந்து விஷயத்தில் ஒரு முடிவுக்கு வர முடியாத மனக்குழப்பத்தில் இருந்த க்ரிஷ் கடைசியில் மாஸ்டரிடமே ஆலோசனை கேட்பது என்ற முடிவுக்கு வந்தான். சென்ற முறை அவரை மானசீகமாகத் தொடர்பு கொள்ள முடிந்திருந்ததால் மறுபடியும் முடியும் என்ற நம்பிக்கை அவனுக்குள் பிறந்திருந்தது. அதனால் முயற்சி செய்தான்.

இந்த முறை அவரைத் தொடர்பு கொள்ளவும் உணரவும் அவனுக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. ’உதயிடம் தெரிந்த வசிய அலைகளின் மூலம் எங்கே என்று கேட்டாய். விஸ்வம் என்று தெரிவித்து விட்டேன். இனி என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டியவன் நீ. அதை விட்டு விட்டு மறுபடி என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்?’ என்று மாஸ்டர் பிடிகொடுக்காமல் நழுவுகிறாரோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. ஆனால் அவன் மாஸ்டரை விடுவதாய் இல்லை. குரு-சிஷ்ய பந்தம் எல்லா பந்தங்களுக்கும் மேலானது. கிட்டத்தட்ட இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள பிணைப்பு போலத் தான். அதில் எல்லைகளோ, கட்டுப்பாடோ கிடையாது. சரணாகதி என்று காலைப் பிடித்தால் காப்பாற்றாமல் போக இறைவனுக்கே வலிமை போதாது என்கிற போது குரு சிஷ்யனிடமிருந்து தப்பிக்க வழியேது?

இந்த சிந்தனையோடு விடாமல் முயன்ற க்ரிஷ் ஒரு கட்டத்தில் மனம் லேசாகி லேசாகி மிதப்பது போல உணர ஆரம்பித்தான். அவனே ஒரு பறவை போல இமயமலையில் பறந்து அவரைத் தேடிப் போவது போலப் போனான். முடிவில் மெல்ல மெல்ல மாஸ்டரை உணர ஆரம்பித்தான். மாஸ்டர் அவனைப் பார்த்துப் புன்னகைத்ததைத் தெளிவாக நேரில் பார்ப்பது போல் அவனால் பார்க்க முடிந்தது.

“வர வர உன் தொந்தரவு அதிகமாகி விட்டது” என்று அவர் செல்லமாகக் கடிந்து கொண்டார்.

“சிஷ்யன் மனதை தெளிவிக்க வேண்டியது குருவின் கடமை. அதைச் செய்யாமல் இமயமலையில் போய் உட்கார்ந்து கொண்டால் சிஷ்யன் மனம் தெளிய வேறெங்கே போவான்” என்று க்ரிஷ் புன்னகையுடன் சொல்லி விட்டு  மானசீகமாக அவரிடம் தன் நிலைமையைச் சொல்ல ஆரம்பித்தான். சிந்துவை அனுப்பி வைத்தவன் விஸ்வம் என்று தெரிந்தாலும் உதய் மனதில் அவள் நீக்க முடியாத இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டதால் அவனைப் படுகாயப்படுத்தாமல் அவளை அப்புறப்படுத்த முடியாது என்கிற நிலைமை இருப்பதை வருத்தத்துடன் சொன்னான். அதே போல் பத்மாவதி அவளை மருமகளாக மனதில் வரித்துக் கொண்டிருப்பதைச் சொன்னான். எதிரியின் கருவி என்று தெரிந்த பின்னும் அவளுடைய இளமைக்காலம் முதல் நடந்ததெல்லாம் அறிந்த பின் அவனுக்கே அவள் மீது பச்சாதாபம் தான் மேலோங்கி நிற்கிறது என்பதையும் சொன்னான். அவளை இல்லுமினாட்டியில் ஒப்படைப்பது தான் அவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்று அறிவு சொன்னாலும், அவள் சித்திரவதைக்கு ஆளாவதையும், முடிவில் கொல்லப்படுவதையும் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்பதையும் அவரிடம் கண்கலங்கச் சொன்னான். காரணம் அவள் பிறந்ததிலிருந்தே குற்றம் எதுவும் செய்யாமல் கடுமையாகத் தண்டிக்கப்பட்டவள் என்பதையும் இப்போது உதயின் காதலி என்பதையுமே மனம் திரும்பத் திரும்பச் சொல்கிறதென்று சொன்னான்.  ஆனால் அதே நேரத்தில் அவள் விஸ்வத்தின் கருவி என்பதால்,. அவன் உண்மையான உத்தேசம் தெரியா விட்டாலும் அவள் மூலம் அவன் என்னேரமும் அவர்களுக்கு எந்த ஆபத்தையும் வரவழைக்க முடியும் என்ற நிலைமையும் இருப்பதைச் சொன்னான். இந்தச் சூழ்நிலையில் அவன் என்ன செய்வது நல்லது என்று மாஸ்டரைக் கேட்டான்.


அவர் சொன்னார். “உன் இதயம் காட்டுகிற வழியில் போ. ஆனால் அறிவையும் கூடவே வைத்துக் கொள்”



”தகவலைச் சொன்னால் இல்லுமினாட்டி தலைமைக்குத் தெரிவித்து விடுகிறேன். அல்லது எழுதித் தந்தால் அதை அங்கே சேர்த்து விடுகிறேன்” என்று சொன்ன சாமுவலை கர்னீலியஸ் சிறு வருத்தத்துடன் பார்த்தார்.

“நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லாமல் சொல்கிறேன் என்று நீங்கள் எண்ணிவிடக்கூடாது. இது மிக முக்கியமான விஷயம். பல காலத்திற்கும் முன்னாலேயே தலைமைக்குத் தெரிவித்திருக்க வேண்டியது. அப்போது முக்கியமில்லை என்று நினைத்து விட்டு விட்டோம். இப்போது நடப்பதெல்லாம் பார்க்கையில் முக்கியத்துவம் புரிகிறது. அதனால் தான் தெரிவிக்க நினைக்கிறேன். ஆனால் தலைமையிடமே சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லி அனுப்பவோ, எழுதி அனுப்பவோ நான் விரும்பவில்லை....”

அந்தப் பணிவான பேச்சு பலவீனத்திற்கு அறிகுறி அல்ல என்பதையும் கிழவர் தன் முடிவில் இருந்து பின் வாங்க மாட்டார் என்பதையும் சாமுவல் புரிந்து கொண்டார். ’இப்போது நடப்பதெல்லாம் பார்க்கையில் முக்கியத்துவம் புரிகிறது. அதனால் தான் தெரிவிக்க நினைக்கிறேன்.’ என்று அவர் சொன்னது நடக்கும் சம்பவங்களுக்குச் சம்பந்தப்பட்டது என்பதைப் புரிய வைத்ததால் சாமுவலின் மூளை மிக வேகமாக வேலை செய்தது.

சாமுவல் மிகவும் கவனமாகப் பேசினார். “நீங்கள் நம் இயக்கத்தின் மிக மூத்த உறுப்பினர் என்பதால் உங்களிடம் சொல்வதற்கு எனக்குத் தயக்கமில்லை. விஸ்வத்தால் தலைவரின் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். அதனால் அவர் யாரையும் சந்திப்பதையோ, வெளியே எங்கும் செல்வதையோ தவிர்த்து வருகிறோம். விஸ்வத்தைக் கண்டுபிடித்து அவன் சம்பந்தமாக ஒரு முடிவு தெரியாமல் இந்த நிலைமை சரியாகும் என்று தோன்றவில்லை. எதற்கும் அவரிடம் நீங்கள் சொன்னதைத் தெரிவிக்கிறேன்.”

கர்னீலியஸ் தலையசைத்தார். ஆனாலும் அவர் அசைந்து கொடுக்கவில்லை.

சாமுவல் மெல்ல எழுந்து விடைபெற்றார். அப்போதும் கர்னீலியஸ் மனதை மாற்றிக் கொள்கிறபடி தெரியவில்லை. வாசலை நோக்கி நான்கு அடிகள் வைத்த சாமுவல் போகும் முன் ஏதோ நல்ல யோசனை புலப்பட்டது போலத் திரும்பி கர்னீலியஸிடம் சொன்னார். “ஒரு வேளை தலைவரை நீங்கள் சந்திக்க ஏற்பாடு செய்ய முடியா விட்டால் தலைமைக்குழு உறுப்பினர்கள் யாராவது ஒருவரைச் சந்திக்க நான் ஏற்பாடு செய்யட்டுமா?”

சாமுவல் வாங் வேயை மனதில் வைத்து தான் அப்படிச் சொன்னார்.

கர்னீலியஸ் யோசித்தார். தலைவரிடம் சொல்ல முடியா விட்டால் உபதலைவரிடம் சொல்வது தான் சரியாக இருக்குமென்று அவருக்குத் தோன்றியது. ஆனால் தலைவர் ம்யூனிக் பங்களாவிலேயே அடைபட்டுக் கிடக்க வேண்டி வந்தால் உபதலைவருக்கு வேலை அதிகமாகி விடும். தலைவர் போக வேண்டிய முக்கிய நிகழ்வுகளுக்கெல்லாம் அவர் தான் போக வேண்டி வரும். இந்த நிலையில் உபதலைவர் இருக்கையில் அடுத்ததாய் அவரிடம் தான் சொல்வேன் என்று முரண்டு பிடிப்பதும் தவறு என்று தோன்றியது. உபதலைவருக்கு அடுத்தபடியாக இருப்பது தலைமைக்குழு உறுப்பினர்களே. அவர்கள் யாராவது ஒருவரிடம் தெரிவிப்பதும் முறையான செயலே. சொன்னது மிக முக்கியமான தகவல் என்று அவர்கள் உணர்ந்தால் கண்டிப்பாய் தலைவரின் கவனத்திற்கு அவர்கள் கொண்டு செல்வார்கள். கூடி ஆலோசித்து முடிவெடுப்பார்கள்...

கர்னீலியஸ் சம்மதித்து விட்டுச் சொன்னார். “அவர்களே என்னிடம் வர வேண்டும் என்றில்லை. நான் வேண்டுமானாலும் போய் அவர்களைச் சந்திக்கச் சித்தமாக இருக்கிறேன்”

சாமுவல் சரியென்று தலையசைத்து விட்டு, தன் பரம திருப்தியை வெளியே காட்டிக் கொள்ளாமல் வணக்கம் தெரிவித்து அங்கிருந்து விடைபெற்றார்.

அன்றிரவு வாங் வேக்குப் போன் செய்து சாமுவல் தகவலைச் சொன்ன போது வாங் வே பரபரப்பானார். அவர் கர்னீலியஸை மிக நன்றாக அறிவார். அதிகார வட்டத்தில் கர்னீலியஸ் மிக முக்கியமாக ஆள் இல்லை என்றாலும் அனைவரும் அறிந்த ஆள் தான். வருடத்திற்கு ஒரு முறை இல்லுமினாட்டி உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நாளில் அவர்களுக்கு பழங்காலச் சுவடிகளிலிருந்து உறுதிமொழியைப் படித்துக் காட்டுவது கர்னீலியஸ் தான். எல்லோரும் மிகவும் மதிக்கக்கூடியவர். இல்லாததை இருப்பது போல் சொல்லி சில்லறைத்தனமாய் முக்கியத்துவம் தேடும் ஆள் அவரல்ல. இப்போதைய சூழ்நிலையில் பயன்படக்கூடிய மிக முக்கியமான தகவல் அவரிடம் இருக்கிறது, அது தலைமைக்கு முன்பே தெரிவித்திருக்க வேண்டிய தகவல் என்று அவர் சொன்னால் அப்படியே முக்கியமானதாகத் தான் இருக்க வேண்டும்...

சாமுவல் சொன்னார். “இதை எர்னெஸ்டோவிடமோ, இம்மானுவலிடமோ நான் சொல்லாமல் உங்களிடம் சொல்கிறேன் என்று வெளியே தெரிந்தால்....”

வாங் வே சொன்னார். “இதில் உங்களுக்கு எதுவும் பிரச்னை ஆகாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். கவலைப்படாதீர்கள்.”

முதல் முறையாக அதிர்ஷ்டம் அவர் கதவைத் தட்டுவது போல் வாங் வே உணர்ந்தார். கர்னீலியஸ் சொல்வது போலவே மிக முக்கியமான தகவலாக இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால் அவருடைய திட்டங்களில் ஏதாவது ஒன்றாவது நிறைவேறலாம். எதிர்பார்த்ததற்கு மாறாக கர்னீலியஸ் முக்கியம் என நினைத்திருக்கும் தகவல் வாங் வேக்கு முக்கியமாக இல்லாமல் போனால் கூட நஷ்டமில்லை. அவர் சொன்னதை தலைமைக்குச் செய்தியாக அனுப்பி விடலாம்...

வாங் வே அவசரமாக சாமுவலிடம் கேட்டார். “கர்னீலியஸை இங்கே அழைத்து வருகிறீர்களா? இல்லை நான் வாஷிங்டன் வரட்டுமா?”

(தொடரும்)
என்.கணேசன்

Monday, December 28, 2020

யாரோ ஒருவன்? 12

ஞ்சய் ஷர்மாவுக்கு நடப்பதெல்லாம் கனவாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. உண்மையில் இப்படியெல்லாம் நடக்க வழியே இல்லை. யாராவது இரும்புச் சங்கிலியால் இப்படி எல்லாம் ஒருவனைக் கட்டி வைப்பார்களா? சிறைகளில் கூட இப்படிக் கட்டி வைப்பதில்லையே. ஆனால் இரும்புச் சங்கிலியும் நிஜம், அவனும் நிஜம், அந்தத் தடியனும் நிஜம், கனவாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவன் நினைப்பது தான் கற்பனை என்று சிறிது நேரத்திலேயே உறுதியாகி விட்டது. தப்பிக்க வேண்டுமென்றால் எங்கிருக்கிறோம் என்பதை அவன் கண்டுபிடித்தாக வேண்டும்.

சஞ்சய் ஜன்னல் வழியே மெல்ல எட்டிப் பார்த்தான். ஒரு வராந்தா தெரிந்தது. வராந்தா அகலம் ஐந்தாறு அடிகள் தான் இருக்கும். அதைத் தாண்டி சுவர் தெரிந்தது. வராந்தாவின் தரையும் பழைய சிமெண்ட் தரையாகத் தான் இருந்தது. சில இடங்களில் அதுவும் பெயர்ந்து சிறிய குழிகள் விழுந்திருந்தன. ஜன்னல் வழியாக அந்தத் தரை மற்றும் சுவரைத் தவிர வேறு எதையும் அவனால் பார்க்க முடியவில்லை.   நகரின் ஒதுக்குப்புறமாகவே அந்த இடம் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அது டெல்லி தானா, இல்லை வேறெதாவது நகரமா என்பது தெரியவில்லை. வாகனங்கள் போய் வரும் சத்தம் தூரத்தில் தான் கேட்டது தெருவிலிருந்து நிறையவே உள்ளே தள்ளி தான் இந்தச் சிறை இருக்கிறது. பாத்ரூம் போய் வருமளவு இரும்புச் சங்கிலியை தடியன் தளர்த்தியிருந்ததால்  நாலாபக்கச் சுவர்களிலும் அவன் காது வைத்து கேட்டு பக்கத்து அறைகள் ஏதாவது இருக்கின்றனவா, அங்கிருந்து ஏதாவது சத்தங்கள் வருகின்றனவா என்று கவனித்தான். பக்கத்தில் அறைகள் இருக்கலாம். ஆனால் அங்கிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை. தடியன் கூட எங்கிருக்கிறான் என்பது தெரியவில்லை.

சஞ்சய் “சார்” என்று அழைத்துப் பார்த்தான். தடியன் வரவில்லை. சற்று குரலை உயர்த்தியும் அழைத்தான். கத்தியும் பார்த்தான். அவன் குரலே லேசாக எதிரொலித்ததேயொழிய தடியனைக் காணோம். இருந்திருந்தால் கண்டிப்பாக வந்து அறைந்தாவது போயிருப்பான். பசி வயிற்றைக் கிள்ளியது. தண்ணீர் குடித்தான்.

இரவு வரை காலம் ஆமை வேகத்தில் தான் நகர்ந்தது. தடியனின் காலடியோசை இரவு எட்டு மணிக்குத் தான் கேட்டது. ஒரு தட்டில் ஒரு சப்பாத்தியும் அதற்குச் சரியான அளவில் ஏதோ சப்ஜியும் இருந்தன. இரண்டுமே ஆறியிருந்தன. இரண்டுமே மதியம் தயாரித்ததாய் தான் இருக்க வேண்டும்.

சஞ்சய் கோபத்தோடு தடியனைக் கேட்டான். “இதை மனுசன் சாப்பிடுவானா?”

தடியன் அலட்சியமாய்ச் சொன்னான். “நீ சாப்டலாம்...”

சஞ்சய் அவனை முறைத்தான்.

தடியன் சொன்னான். “வேண்டாம்னா சொல்லிடு. எடுத்துட்டுப் போயிடறேன்.”

அவன் சொன்னது மட்டுமல்ல அதை எடுத்துக் கொண்டு போகவும் தயாராகவே இருந்தான். இரக்கமேயில்லாத தடியன். சஞ்சயின் கை தானாக அந்தத் தட்டை இறுக்கமாக பிடித்துக் கொண்டது.

“சாப்ட்டுட்டு தட்டைக் கழுவி வை. அப்புறமா வர்றேன்.” என்று சொல்லிவிட்டுத் தடியன் போய் விட்டான்.

சஞ்சய்க்கு அந்தச் சப்பாத்தியைச் சாப்பிடுகையில் தன் மேலேயே பச்சாதாபம் பெரிதாக எழுந்தது. அவன் வீட்டு வேலைக்காரி கூட இந்த ஆறிய சப்பாத்தி சப்ஜியைச் சாப்பிட மாட்டாள். அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து வாய்க்கு ருசியாக உணவு கிடைப்பதில் பிரச்சினை இருக்கவில்லை. அவன் தாய் நன்றாய் சமைப்பாள். உணவு சரியில்லை என்றால் தட்டை அவன் தூக்கி எறிவான். அவன் மனைவிக்கும் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்பதால் அவளும் நன்றாகவே சமைப்பாள். வித விதமாய் சாப்பிட்டு ருசி பார்த்த நாக்கு இந்த ஆறிய சப்பாத்தியை ரசிக்க மறுத்தது. ஆனாலும் வேறு வழியில்லாமல் அவன் சாப்பிட்டான். நிலவரம் புரியாமல் அந்த ஒரு சப்பாத்தி போதவில்லை என்று வயிறு அறிவித்தது.  

கழுவி வைத்திருந்த தட்டை எடுத்துப் போக வந்த தடியனிடம் சஞ்சய் சொன்னான். “படுக்க படுக்கை கொண்டு வா. ராத்திரி குளிர்ல தரையில படுக்க முடியாது.”

தடியன் அலட்சியமாய்ச் சொன்னான். “சரி படுக்காதே...” சொல்லிவிட்டு அவன் தட்டை எடுத்துக் கொண்டு போய் விட்டான். சஞ்சய் திகைப்பில் வாயடைத்துப் போய் நின்றான். அவன் திகைப்பிலிருந்து மீண்ட பிறகு இரண்டு மூன்று தடவை அந்தத் தடியனை அழைத்துப் பார்த்தான். தடியன் இருக்கிற இடம் தெரியவில்லை.

இரவில் குளிர் கடுமையாக இருந்தது. தரையே ஐஸ்கட்டி போல் குளிர்ந்தது. வீட்டில் இந்த குளிர்காலத்தில் ஹீட்டர் இல்லாமல் அவன் உறங்கியதே இல்லை. ஆனால் வேறு வழியில்லாமல் இரவு இரண்டு மணிக்கு மேல் அந்தக் குளிரிலும் அவனுக்கு உறக்கம் வந்தது.  அடிக்கடி இடையிடையே குளிர் தாங்காமல் விழிப்பும் வந்தது.  விடிந்து வெயில் வந்த பின் தான் சரியான உறக்கமே வந்தது. விழிப்பு வந்த பிறகு நேரம் தெரியாமல் அவன் தவித்தான். மறுபடி காலம் மெல்ல நகர ஆரம்பித்தது.

தடியன் மதியம் ஒரு சப்பாத்தி சப்ஜியுடன் வந்தான். சஞ்சய் கோபத்தில் கேட்டான். “மனுசங்களா நீங்க?”

“உன்னையே கேட்டுக்க வேண்டிய கேள்வியை நீ ஏன் அடுத்தவனைக் கேட்கிறே”

சஞ்சய் சொன்னான். “ஒரு கடிகாரமாவது இங்கே மாட்டு. நேரம் என்னன்னே தெரிய மாட்டேங்குது”

“உனக்கு தான் நேரம் சரியில்லையே. அதை பாத்து என்ன பண்ணப் போறே?”

தடியன் போய் விட்டான். நரேந்திரன் வந்தால் அரையும் குறையுமாய் உண்மையைச் சொல்லி இங்கே இருந்து போய் விட வேண்டும். இனியும் இங்கே அவனால் தாங்க முடியாது... சஞ்சய் நரேந்திரன் வந்தால் என்னவெல்லாம் சொல்ல வேண்டும், எப்படி நம்பும்படியாகச் சொல்ல வேண்டும் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.     

நரேந்திரன் மாலை நான்கு மணிக்குத் தான் வந்தான். சஞ்சய் அவனைப் பார்த்தவுடன் சொன்னான். “உங்கப்பா எத்தனையோ நல்ல மனுஷன். அந்த மாதிரி ஒருத்தருக்கு உன்னை மாதிரி ஒருத்தன் பிள்ளையான்னு ஆச்சரியமாய் இருக்கு”

நல்ல மனிதர்கள் மனசாட்சியும் இரக்கமும் உள்ளவர்கள். அதை வைத்துத் தான் அவர்களுக்கு மனசாட்சி உறுத்தலை உண்டாக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்த சஞ்சய் ஒரு படுக்கையோ, போர்வையோ இல்லாமல் வெறும் தரையில் இரும்புச் சங்கிலியோடு கட்டப்பட்டிருக்கும் தன் நிலைமையை கையை அசைத்துக் காட்டினான்.

நரேந்திரன் கேட்டான். “அந்த நல்ல மனுஷனை நீ எப்படி நடத்தினே? நல்லவங்களை தான் வாழ விட மாட்டேங்கறீங்களேடா?”

சஞ்சய் இவனிடம் அந்த மனசாட்சி வழி எடுபடாதென்பதைப் புரிந்து கொண்டான். சொல்லவிருக்கும் அரைகுறை உண்மையையும் கடைசியில் தான் இவனிடம் சொல்ல வேண்டும். அப்போது தான் இவன் நம்புவான்.... சஞ்சய் வெகுளியைப் போல் சொன்னான். “பாரு. நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்லை. எனக்குத் தெரிஞ்சதை எல்லாம் அந்த ஃபைல்ல எழுதியிருக்கேன். வேற எதுவும் தெரியாது. எங்கம்மா மேல சத்தியமா சொல்றேன்....”


நரேந்திரன் அவனை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்து விட்டுப் பின் தடியனைப் பார்த்தான். தடியன் போய் ஒரு பக்கெட் நிறைய ஐஸ்கட்டிகள் மிதக்கும் தண்ணீரைக் கொண்டு வந்தான். தண்ணீரிலிருந்து வந்து குளிர் காற்று அந்த நேரத்திலும் சஞ்சய்க்குக் கொடுமையாக இருந்தது.

நரேந்திரன் சொன்னான். “உன் கிட்ட விளையாட எனக்கு நேரமில்லை. நீ என்ன நடந்ததுன்னு சொல்றியா. இல்லை. இந்த ஐஸ்கட்டித் தண்ணியை உன் மேல ஊத்தவா?”

சஞ்சய் திகைப்புடன் நரேந்திரனைப் பார்த்தான். மனிதனா இவன்?

நரேந்திரன் எழுந்தான். அந்தத் தடியனிடம் சொன்னான். ”இப்ப ஆரம்பிச்சு நாளைக்கு காலைல வரைக்கும் மணிக்கொரு தடவை இவன் மேல ஐஸ்கட்டித் தண்ணிய ஊத்து. அதிகபட்சமாய் ரெண்டு நாளைக்கு மேல தாங்க மாட்டான். ஜன்னி காய்ச்சல் வந்து செத்துடுவான். பிறகு நான் ஏற்கெனவே சொன்னபடி பிணத்தை அப்புறப்படுத்திடு. ஒன்னுமே தெரியாதவனை இங்கே வெச்சுகிட்டு நாம சும்மா பேசிகிட்டிருக்கிறதுல அர்த்தமேயில்லை. என்ன சொல்றே?


தடியன் தலையாட்டினான். சஞ்சய் திகிலுடன் அலறினான். “வேண்டாம். நான் எல்லாத்தையும் சொல்லிடறேன்”
                                     

(தொடரும்)
என்.கணேசன்  



Saturday, December 26, 2020

சடங்குகளைக் கடந்து போ!

கீதை காட்டும் பாதை 6

வேதங்களைப் படிப்பதும், சடங்குகளைப் பின்பற்றுவதும் போதாது. வாழ்ந்து காட்டு