
ஒரு செயலையும் போக்கையும் முடிவு வரை சிந்திக்க வேண்டும் என்று
க்ரிஷ் சொன்னது விஸ்வத்தின் வாழ்க்கை முறையாகவே இருந்தது. ஆனால் இலக்கை
வைத்து செயல்களையும், போக்கையும்
நிர்ணயித்தவன் அந்த இலக்கையும் தாண்டி அந்த இலக்கினால் முடிவில் அவன் அடையப்
போவதும் சாதிக்கப் போவதும் என்ன என்று யோசித்திருக்கவில்லை. ஒவ்வொரு
சக்தி இலக்கிலும் அதைக் கற்றுக் கொடுத்த குருவையும் மிஞ்சாமல் அவன் திருப்தி அடைந்ததில்லை. அந்த வகையில்
இது வரையில் அவன் பெற்றிருந்த எல்லா சக்திகளும் சில யோகிகள் சித்தர்கள் தவிர வேறு யாரும்
மிஞ்சாதவையே. அந்த இலக்குகளையெல்லாம் மூலதனமாக வைத்து முடிவான இலக்கு என்று
அவன் தேர்ந்தெடுத்த இல்லுமினாட்டியின் தலைமைப் பதவி, உலகச் சக்கரவர்த்தி
போன்ற பதவி, வைத்தது தான் சட்டம் என்கிற உயர்வு, என்றெல்லாம்
தோன்றியிருந்ததே தவிர க்ரிஷ் சொன்னதைப் போல அதற்குப் பின் என்ன என்று அவன் முடிவு வரை
சிந்தித்திருக்கவில்லை. ஒருவர் சலிப்போடு சுமந்திருக்கும் பதவிக்கா இத்தனையும் என்று
க்ரிஷ் கேட்ட போது அவரை விட அதிகம் சாதிப்பேன் என்ற வகையில் பதில் சொல்லிச் சமாளித்தாலும்
மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதாலும், உலக நிகழ்வுகளை
அதிகாரத்தால் தீர்மானிப்பதாலும் எத்தனை காலம் சந்தோஷப்பட முடியும் என்ற கேள்வி அவனுக்குள்
எழுந்தது. எர்னெஸ்டோவுக்கே சலித்த பதவி அவனுக்கும் விரைவாகச் சலிக்கும். போதையில்
சிக்குபவர்கள் சந்தோஷத்தை அதிகப்படுத்திக் கொள்ள அளவை அதிகப்படுத்திக் கொண்டே போவது
போல அவனும் ஒரு வெற்றியாகவே தொடர்ந்து உணர, அதிகார அளவை அதிகரித்துக்
கொண்டே போக வேண்டியிருக்கும். போதையின் முடிவைப் போலவே அகந்தையின் போக்கில் இந்த இலக்கின்
முடிவும் அழிவாகத்தான் இருக்கும். க்ரிஷ் சொன்னது போல் எதையும் அழிக்க எந்த ஒரு முட்டாளும்
போதுமே, விஸ்வம் வேண்டுமா? இலக்கின்
முடிவில், வாழ்க்கையின் முடிவில் இதை நான் செய்திருக்கிறேன் என்று நிறைவாக
அவன் உணர முடியுமா? க்ரிஷ் சொல்வது போல யாருக்கும் கிடைக்காத இரண்டாவது வாய்ப்பல்லவா
அவனுக்குக் கிடைத்திருக்கிறது….
கதேயின்
வரிகள் விஸ்வத்தின் மனத்திரையில் மறுபடி ஒளிர்ந்தன. ”Choose well; your choice is "Brief and yet endless; “சரியாகத் தேர்ந்தெடு. நீ
தேர்ந்தெடுப்பது சுருக்கமானது என்றாலும் முடிவில்லாதது”
விஸ்வம் முடிவெடுக்க வேண்டிய சமயம் வந்து விட்டது…
ஜிப்ஸி விஸ்வத்தின் மனம் மாறிக் கொண்டு வருவதை உணர்ந்து அவசரமாகச்
சொன்னான். “விஸ்வம் உன்னை இவர்கள் ஏமாற்றி
இருக்கிறார்கள். அவமானப்படுத்தி இருக்கிறார்கள் மறந்து
விடாதே. இவன் நோக்கம் உனக்குத் தெரிவது போல் தூய்மையானதல்ல”
க்ரிஷ் மனித மனத்தை நிறைய ஆராய்ந்தவன். பல பெரிய முக்கிய முடிவுகள் சில்லறைத்தனமான
விஷயங்களால் பல நேரங்களில் தீர்மானிக்கப்பட்டு விடுவதைக் கவனித்திருக்கிறான்.
இந்த அவமான உணர்வுகள் சாதாரணமாய் ஒதுக்கி
விட முடிந்தவை அல்ல என்பதை அவன் அறிவான். அதற்கு மேல் யோசிக்காமல்
மண்டியிட்டு விஸ்வத்தின் காலைப் பிடித்துக் கொண்டு சொன்னான். “நண்பனே. உன்னை அவமானப்படுத்தி இருக்கிறேன், ஏமாற்றியிருக்கிறேன் என்று நீ நினைத்தால்
நான் உன்னிடம் என் செய்கைகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்… தயவு செய்து என்னை மன்னித்து விடு.”
அக்ஷய் திகைத்தான். ஒரு மனிதன் இவ்வளவு நல்லவனாக இருக்க முடியுமா என்று தோன்றியது. விஸ்வம் அவன் மனக்கட்டுப்பாட்டையும் மீறிக் கண்கலங்கினான். அவன் முந்தைய உடலை விட்டு உயிர் பிரிந்த பின் உடல் எரிக்கப்படும் வரை அந்த
உடலைச் சுற்றி நடப்பதையெல்லாம், சுற்றி இருந்தவர்கள் நினைப்பதையெல்லாம்
கூட அவனால் உணர முடிந்திருந்தது. அவன் உடல்
ம்யூனிக் மின்மயானத்தில் இருந்த போது அவனுக்காக உண்மையாகவே வருத்தப்பட்டவன் க்ரிஷ்
ஒருவன் தான். க்ரிஷ் அப்போது மனதில் பிரார்த்தித்துச் சொன்ன வார்த்தைகள்
விஸ்வத்துக்கு இப்போதும் நினைவு இருக்கிறது. ”நண்பனே, நல்ல
விளைவுகளை விரும்புபவன் நல்ல வினைகளையே செய்ய வேண்டும். எத்தனை
சாமர்த்தியம் சக்தி இருந்தாலும் வினையை விதைத்து தினையை அறுவடை செய்ய முடியாது.
அது மாற்ற முடியாத பிரபஞ்ச விதி!. அடுத்த பிறவியிலாவது
எல்லாம் வல்ல இறைவன் உனக்கு இந்தப் பிறவியில் இருந்த அக்னி, உழைப்போடு
நல்ல மனதையும் சேர்ந்து கொடுத்துப் புதிய வாழ்க்கை ஆரம்பிக்கச்
செய்யட்டும்”. அவன் இறந்து போன பிறகும் பிரார்த்தித்தவனை இப்போது
சந்தேகப்பட எதுவுமில்லை. அவனுடைய இளகிய மனதைப் பலவீனமாக நினைத்தது
சரியல்ல என்று விஸ்வம் இந்தக் கணம் உணர்கிறான்.
க்ரிஷ் சொன்னான். “அதுசரி, என் நோக்கத்தைச் சந்தேகப்படச் சொல்லும் உன் நண்பனின் நோக்கத்தை நீ இது வரை
கேட்டிருக்கிறாயா? ஏன் நல்லது எதுவும் செய்வதற்கு உன்னை அனுமதிக்கவே
மாட்டேன்கிறான்?”
விஸ்வம்
ஜிப்ஸியைப் பார்த்தான். ஜிப்ஸி என்ன சொல்லலாம் என்று தடுமாறியது தெரிந்தது. விஸ்வம்
க்ரிஷிடம் சொன்னான். “அதை நான் அவனிடம் கேட்டுக் கொள்கிறேன். நீ வந்தது
எனக்கு அறிவுரை சொல்லத் தான் என்றால் உன் வேலை முடிந்து விட்டது க்ரிஷ். நான் யோசித்து
முடிவெடுக்கிறேன். இனி நீங்கள் இருவரும் கிளம்பலாம்..…”
க்ரிஷ் மெல்ல எழுந்து நின்றான். விஸ்வத்தை ஸ்தம்பிக்க வைத்திருந்ததைச் சரி செய்யும்படி
பார்வையால் அக்ஷயிடம் சொன்னான். அக்ஷய் திகைத்தான். வந்த வேலை
முடிந்து விட்டது போல் அவனுக்குத் தெரியவில்லை. விஸ்வம்
நல்ல முடிவெடுப்பான் என்று நம்பி க்ரிஷால் எப்படிக் கிளம்ப முடிகிறது என்றும் தெரியவில்லை. ஆனால் க்ரிஷின்
பாதுகாப்பு அவன் பொறுப்பில் இருக்கிறது. அவன் யோசித்து விட்டுச்
சொன்னான். “நீ போய் கார் பக்கம் நில் க்ரிஷ். நான் பின்
வருகிறேன்…”
க்ரிஷ் தலையசைத்து
விட்டு விஸ்வத்திடம் சொன்னான். “நான் கிளம்புகிறேன் நண்பனே”
விஸ்வம் தலையசைத்தான். க்ரிஷ்
வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் சில அடிகள் நடந்தவுடன் விஸ்வம் கண்கள் ஈரமாகச் சொன்னான். “நன்றி க்ரிஷ்”
க்ரிஷின் கண்களும், மனமும்
அந்த இரண்டு வார்த்தைகளில் நிறைந்தன. அவன் திரும்பிப்
பார்த்துச் சொன்னான். “நன்றி நண்பனே”
அந்த சர்ச் சுவர்களின்
ஓவியங்களில் ஒளிர்ந்து கொண்டிருந்த இல்லுமினாட்டிச் சின்னங்கள் தீஜுவாலைகள்
போல மிகப் பிரகாசமாய் ஒரு முறை ஒளிர்ந்து மெல்ல அணைந்தன. சர்ச்சில் மறுபடியும் இருள்
சூழ்ந்தது. க்ரிஷ் மெல்ல வெளியேறினான். அவன் கார் வரை போயிருப்பான் என்று தோன்றியவுடன்
அக்ஷய் விஸ்வத்தின் தோள்களில் பழைய வேகத்திலேயே கைகளை வைத்து எடுத்தான். விஸ்வம் உடலில்
ஏதோ மின்னல் பாய்ந்தது போல் உணர்ந்தான். அடுத்த கணம் அக்ஷய் வாசலில் இருந்தான். விஸ்வம்
மெல்ல உடலை அசைத்த போது அக்ஷய் கண்பார்வையிலிருந்து மறைந்திருந்தான்.
சிறிது நேரம் ஜிப்ஸியும்
பேசவில்லை, விஸ்வமும் பேசவில்லை. அவர்களுக்கு இடையில் ஒரு கனத்த மௌனம் நிலவியது. பின் விஸ்வம் சொன்னான்.
“நீ இது வரை செய்த உதவிக்கெல்லாம் உனக்கும் நன்றி நண்பனே. நீ என் வாழ்க்கையில் வராமல்
இருந்திருந்தால் நான் அனாமதேயமாய் வாழ்ந்திருப்பேன். க்ரிஷ் என் வாழ்க்கையில் வராமல்
இருந்திருந்தால் அர்த்தமில்லாமல் அழிந்தும் அழித்தும் இருப்பேன்…”
விஸ்வம்
ஜிப்ஸியிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. தன் செயல்களுக்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
ஜிப்ஸி சில நிமிடங்களில் ஒரு மனிதன் இப்படி அடியோடு மாறிவிட முடியுமா என்று திகைத்தான்.
அவனும் போக வேண்டிய நேரம் வந்து விட்டது. அவன் நிறைய பொருட்களைச் சேர்த்து பூமியில்
அங்கங்கே பதுக்கி வைத்திருக்கிறான். அவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு அமேசான் காடுகளில்
ஒளித்து வைத்திருந்த விண்கலத்தில் போட்டுக் கொண்டு போவதற்கு இப்போது கிளம்பினால் தான்
முடியும். அவன் ஆராய்ச்சியின் நோக்கம் என்னவாக
இருந்த போதிலும் விஸ்வத்திடம் நெருங்கிப் பழகிய இந்த நாட்களில் ஒரு பிரத்தியேக நெருக்கத்தையும்
அன்பையும் உணர்ந்திருந்த ஜிப்ஸி பிரிய வேண்டியிருந்த இந்தக் கடைசிக் கணத்தில் விஸ்வத்திற்கு
நன்மையையே எண்ணினான். ”நானும் கிளம்புகிறேன் நண்பனே. க்ரிஷ் சொன்னது போல மனித இனத்தில்
நீ ஒரு அபூர்வப் பிறவி. எந்தப் பாதையில் பயணித்தாலும் நீ நிறைய சாதிப்பாய். சாதனைகள்
உன் வாழ்க்கையின் இறுதி வரை தொடரட்டும்…”
காரில் ம்யூனிக் நகரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கையில்
அக்ஷய்க்கு க்ரிஷ் நன்றி சொன்னான். “நீங்கள் மட்டும் வந்திருக்கா விட்டால் என் வாழ்க்கை
அந்த சர்ச்சில் முடிந்திருக்கும் அக்ஷய். எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை…”
அக்ஷய்
இதெல்லாம் ஒரு விஷயமேயில்லை என்று உணர்த்தும் விதமாக க்ரிஷின் தோளைத் தட்டிக் கொடுத்தான்.
அவன் இப்படிப்பட்ட ஒரு உன்னதமான மனிதனைக் காப்பாற்ற முடிந்ததைத் தன் பாக்கியமாகவே நினைத்தான்.
மைத்ரேயனுக்குப் பிறகு அவன் பார்த்த மிக உயர்ந்த மனிதன் க்ரிஷாகவே இருந்தான். க்ரிஷ்
அந்தச் சர்ச்சில் சிறிது கர்வம் காட்டியிருந்தாலும், சிறிது பணிவைக் குறைத்திருந்தாலும்,
விஸ்வத்தை மாற்றியிருக்க முடியாது என்று அவன் நம்பினான். சிறிதும் கவுரவம்
பார்க்காமல் விஸ்வத்தின் காலில் விழுந்தது “நான்” என்ற அகந்தை அவனிடம் துளியும் இல்லாததைச்
சொன்னது. அந்த ஒரு கணம் தான் விஸ்வத்தை நன்மையின் பக்கம் ஒரேயடியாய் நகர்த்திய அதிசயத்
தருணம் என்று அக்ஷய் எண்ணினான்....
அக்ஷய் க்ரிஷிடம்
கேட்டான். “நீ உண்மையில் அவனை மாற்றி விட முடியும் என்று நம்பினாயா?”
க்ரிஷ் சொன்னான்.
“முயன்று பார்க்கலாம் என்று நினைத்தேன். அவனிடம் நான் சொன்ன எதுவுமே பொய்யில்லை அக்ஷய்.
அவனைப் போன்ற ஒருவனை நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்டவன் அழிவின் பக்கம் போவதை என்னால்
சகிக்க முடியவில்லை. அவனை மாற்றியது நான் என்று நினைக்கவில்லை. என் மாஸ்டரைப் போன்ற
எத்தனையோ மகான்கள் மானுடத்தைக் காக்க தவமிருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனுப்பிய
அன்பின் அலைகள் தான் அவனை மாற்றியிருக்கும் என்று நம்புகிறேன்...”
க்ரிஷ் மாஸ்டரைச்
சொன்ன போது அக்ஷய்க்கு மைத்ரேயனின் நினைவும் வந்தது. க்ரிஷ் சொல்வதைப் போல இந்த உலகம்
சிறிதாவது நன்மையைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது நம் கண்ணுக்குத் தெரியாத இது போன்ற
எத்தனையோ தன்னலமில்லாதவர்களின் தவ வலிமையால் இருக்கலாம் என்று அவனுக்கும் தோன்றியது!
முடிவில்...
·
க்ரிஷ் சொன்னதை நம்பி எர்னெஸ்டோவும் இம்மானுவலும் தங்கள்
எச்சரிக்கையைக் கைவிட்டு விடவில்லை. விஸ்வத்தைப் போன்ற ஒருவன் மனமாற்றம் அடைய முடியும்
என்ற நம்பிக்கை ஆரம்பத்தில் அவர்களிடம் இருக்கவில்லை. ஒரு
மாதம் கழித்து உதய்-சிந்து, க்ரிஷ்- ஹரிணி திருமணம் எந்தப் பிரச்னையுமில்லாமல் நடந்து
முடிந்த பிறகு தான் அவர்களுக்கு நம்பிக்கை வந்தது.
·
எர்னெஸ்டோ க்ரிஷின் திருமணத்திற்கு இந்தியா வந்திருந்தார்.
அமெரிக்க ஜனாதிபதியை விட அதிகப் பாதுகாப்போடு வந்து போன அவரை வெளிநாடு செல்லும் போது
பரிச்சயமான நண்பர் என்ற அளவில் தான் க்ரிஷ் எல்லோரிடமும் அறிமுகப்படுத்தியிருந்தான்.
·
இந்தியா வந்து போன பின் எர்னெஸ்டோ இன்னும் மூன்று மாதங்களில்
ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்து விட்டார். இல்லுமினாட்டியில் அடுத்த தலைவருக்கான
போட்டி மும்முரமாக ஆரம்பித்து விட்டது. அந்த வேளையில் அகிடோ அரிமா தன் நண்பரை வருத்தத்துடன்
நினைவுபடுத்திக் கொண்டார். வாங் வே தவறான முடிவுகளில் இறங்காமல் இருந்திருந்தால் இந்தத்
தேர்தல் கண்டிப்பாக அவருக்குச் சாதகமாக அமைந்திருக்கும் என்று அவர் பச்சாதாபப்பட்டார்.
·
விஸ்வம் தங்கியிருந்த சர்ச்சை இல்லுமினாட்டி தன் வசப்படுத்திக்
கொண்டது. வருடத்திற்கு ஒரு முறை உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் இடமாக
அது மாற்றப்பட்டது.
·
உதய்-சிந்து திருமணத்தில் மிருதுளா, ரகு இருவரும் மணப்பெண்ணின்
தாய் தந்தையாக இருந்து கன்யாதானம் செய்து கொடுத்தார்கள். தமிழக முதலமைச்சரின் மகனும்,
எம் பி யுமாக உதய் இருந்ததால் தொலைக்காட்சியில் அவன் திருமணம் காட்டப்பட்டது. சிந்துவின்
தந்தையின் இரண்டாம் மனைவி அதைப் பார்த்து விட்டுக் கணவரை அழைத்துக் காட்ட அவர் உடனடியாக
டி.வியை அணைத்து விட்டுப் போனார்.
·
அக்ஷயும் குடும்பத்தோடு க்ரிஷ்-ஹரிணி திருமணத்திற்கு வந்திருந்தான்.
இல்லுமினாட்டியின் தயவால் தலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் முழுவதுமாக நின்றிருந்தது.
அதனால் எந்தப் பயமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் எல்லா இடங்களுக்கும் அவர்கள் போய் வர
ஆரம்பித்திருந்தார்கள்.
·
திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து அவன் தனியாக இருந்த
ஒரு நேரத்தில் க்ரிஷின் மனதில் அவனுடைய வேற்றுக்கிரகவாசி நண்பன் “க்ரிஷ் எப்படி இருக்கிறாய்?”
என்று கேட்டான். க்ரிஷ் சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போனான். மானசீகமாகவே பேசிக்
கொள்ள முடிந்த அவனுடைய நண்பன் நீண்ட காலம் கழித்து வந்திருக்கிறான். அவனிடம் சொல்ல
நிறைய இருந்தது. ஆனால் சொல்ல அதிக நேரம் தேவைப்படவில்லை. சொல்லாமலேயே அவன் மனதில் பதிந்திருந்த
நிகழ்வுகளை எல்லாம் படித்து விட்ட வேற்றுக்கிரகவாசி நண்பன் அவனைப் பாராட்டிச் சொன்னான்.
“நான் உன் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை க்ரிஷ். சில மிக நல்ல மாற்றங்களை ஆரம்பித்து
வைத்திருக்கிறாய்”
க்ரிஷ்
வேற்றுக்கிரகவாசியிடம் நிகோலா டெஸ்லாவிலிருந்து கூடுவிட்டு கூடு பாயும் வித்தை வரை
பல விஷயங்களைப் பேசினான். பல சந்தேகங்கள் கேட்டு க்ரிஷ் அவனிடமிருந்து நிறைய தெரிந்து
கொண்டான்.
திடீரென்று
வேற்றுக்கிரகவாசி நண்பன் கேட்டான். “உன் எதிரி நண்பன் எங்கிருக்கிறான்? என்ன செய்கிறான்?”
க்ரிஷ்
அன்புடன் சொன்னான். “எதிரியல்ல. நண்பன் மட்டும் தான். இப்போது எங்கிருக்கிறான் என்று
தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக நல்லதைத் தான் செய்து கொண்டிருப்பான்.”
வேற்றுக்கிரகவாசி
நண்பன் சொன்னான். “அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
உன் லேப் டாப்பைத் திற”
க்ரிஷ்
லேப்டாப்பைத் திறந்தான். வேற்றுக்கிரகவாசி நண்பனின் சக்தியால் அவன் லேப் டாப் திரையில்
விஸ்வம் தெரிந்தான். அவன் ஒரு வீட்டறையில் பத்மாசனத்தில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு
இருந்தான். வேற்றுக்கிரகவாசி நண்பன் சொன்னான். “உன் நிகோலா டெஸ்லா சொன்னபடி விஸ்வம்
சக்தி அலைவரிசைகளைக்கு முக்கியத்துவம் தந்து அவற்றை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான். அதில் அவன் ஏற்கெனவே நிபுணன் தான் என்றாலும் இப்போது நன்மைக்குத் திரும்பியிருக்கிறான். நல்ல எண்ண அலைகளை
மற்றவர்கள் மனதில் அனுப்பி வைத்து அவர்களை எந்த அளவு மாற்ற முடியும் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான். ஓரளவு நல்ல வெற்றியும்
அடைந்து வருகிறான்”
வேற்றுக்கிரகவாசி ஒரு பார்வையிலேயே அறிந்து
கொண்டு சொன்ன தகவல் க்ரிஷை சந்தோஷப்படுத்தியது. விஸ்வம் கண்டிப்பாக இதில் அற்புதங்கள்
செய்வான் என்று நினைத்தபடியே அந்த அறையின் ஒரு சுவரில் ஏதோ எழுதப்பட்டிருந்ததைக் கவனித்தவன்
அதைப் பெரிதாக்கிப் பார்த்தான். கதேயின் அந்தக் கவிதையின் கடைசி ஐந்து வரிகள். அந்தக்
கவிதைக்கு மேல் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் தொங்கிக் கொண்டிருந்தது. அது யார் புகைப்படம்
என்று க்ரிஷ் அதையும் பெரிதாக்கிப் பார்த்தான். அது க்ரிஷின் புகைப்படம் தான். ஒரு வினாடி தான் க்ரிஷால் அதைப் பார்க்க முடிந்தது.
மறுவினாடி எதையும் பார்க்க விடாமல் அவன் கண்களில் நீர் திரண்டது.
வேற்றுக்கிரகவாசி
சொன்னான். “விஸ்வம் தன் விதியையும், உலகத்தின் விதியையும் மாற்றி எழுத ஆரம்பித்திருக்கிறான்”.
அவன் வாயிலிருந்தே அதைக் கேட்டவுடன் க்ரிஷின் மனமும் நிறைந்தது.
முற்றும்.
என்.கணேசன்
.
இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்-
https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV
(அல்லது)
என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம்.
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
அடுத்த வியாழன், 21.04.2022 சாணக்கியன் நாவல், இந்த வலைப்பூவில் ஆரம்பமாகிறது. பின் வியாழக்கிழமைகளில் வழக்கம் போல் தொடரும்.