சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, May 30, 2020

உணர்ச்சி, மனநிலையின் பங்கு!

ஆழ்மனசக்தி இரகசியங்கள் 6

நம் மனநிலைகளும், ஆழமான உணர்ச்சிகளும் எப்படி ஆழ்மனதைப் பாதிக்கின்றன? நம் வாழ்க்கையைக் கூட எப்படி மாற்றி விடுகின்றன? ஆழ்மனசக்தி விஷயத்தில் இதுகுறித்து நாம் என்ன செய்ய வேண்டும்?



Thursday, May 28, 2020

இல்லுமினாட்டி 51


க்ஷய் தன் வாழ்க்கையின் அமைதியான ஓட்டத்திற்கு இப்படியொரு தடை வரும் என்று சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. க்ரிஷ் அவனிடம் நேற்று பேசி விட்டுப் போய் விட்டான். க்ரிஷ் இந்த முடிவு தான் எடுக்க வேண்டும் என்று அவனை வற்புறுத்தவில்லை. போவதற்கு முன் க்ரிஷ் என்ன முடிவு எடுக்கிறீர்கள் என்பதை மட்டும் தயவு செய்து எனக்குத் தெரிவியுங்கள்என்று அவனுடைய அலைபேசி எண்ணைத் தந்து விட்டுப் போயிருந்தான்.

அவன் செல்வதற்கு முன் அக்ஷய் தன் சந்தேகத்தை வெளிப்படையாகவே கேட்டிருந்தான். “ஒருவேளை நான் மறுத்து விட்டால் உங்கள் இயக்கம் என்னைத் தொந்திரவு செய்யாமல் விட்டு விடுமல்லவா? இல்லை என்னையும் ஒரு எதிரியாக நினைக்க ஆரம்பிக்குமா?”

க்ரிஷ் அந்தக் கேள்வியையோ, அப்படி ஒரு நிலைமையையோ எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவன் முகபாவனையிலேயே தெரிந்தது. ”உங்கள் சுதந்திரத்தில் தலையிட அந்த இயக்கத்திற்கு என்ன உரிமை இருக்கிறது. வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவிப்பவர்களை எல்லாம் எதிரிகளாய் நினைப்பது யாரானாலும் அது தவறல்லவா? என்று க்ரிஷ் உறுதியாகவே சொன்னான்.

அக்ஷய்க்கு அவன் நேர்மையும், அதிலிருந்த உறுதியும் மிகவும் பிடித்திருந்தது. அதே சமயம் அவன் வேண்டுமென்றேஉங்கள் இயக்கம்என்று சொல்லிப் பார்த்ததற்கு அவன் தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல்அந்த இயக்கம்என்று சொல்லி விலக்கிக் கொண்ட விதமும் பிடித்திருந்தது. அவன் புன்னகையுடன் சொன்னான். “அதை நீ சொல்கிறாய். ஆனால் அந்த இயக்கமும் அந்த விதமாகவே சிந்திக்கும் என்பது என்ன நிச்சயம்?”

க்ரிஷ் சொன்னான். “அப்படித் தங்கள் விருப்பத்தை மற்றவர்கள் மேல் பலவந்தமாகத் திணிக்கும் போக்கு அந்த இயக்கத்திற்கு இருந்தால் அதற்கும், விஸ்வத்திற்கும் இடையே என்ன வித்தியாசம் இருந்து விட முடியும்?”

அக்ஷய் எதுவும் சொல்லவில்லை. க்ரிஷ் போய் விட்டான். க்ரிஷ் போனாலும் இல்லுமினாட்டியின் காவலர்கள் அல்லது ஒற்றர்கள் அங்கேயே இருக்க வாய்ப்பு உண்டு என்று அக்ஷய் எதிர்பார்த்தான். ஆனால் அவனையோ அவன் வீட்டையோ யாரும் கண்காணிப்பதாக அவன் உணரவில்லை.  நள்ளிரவில் எழுந்து கூட ஜன்னல் வழியே பார்த்தான். மறுநாள் அதிகாலை எழுந்து நடைப்பயிற்சி போன போதும் யாராவது பின் தொடர்கிறார்களா என்று பார்த்தான். அப்படி யாரும் பின்தொடரவில்லை. அந்த அளவு நாகரிகத்தை இல்லுமினாட்டியிடமிருந்து அக்ஷய் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் அவனுக்கு அவர்களது கோரிக்கை குறித்து சுலபமாக ஒரு தீர்மானித்திற்கு வர முடியவில்லை. அவனுடைய குடும்பத்தினரிடம் சொன்னால் கண்டிப்பாக ஒத்துக்கொள்ள மாட்டார்கள். மனைவி, மகன்கள், அண்ணா யாருமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள்...

அண்ணா பற்றி எண்ணியதுமே அவனிடம் இல்லுமினாட்டி பற்றி கேட்டுப் பார்க்கலாமே என்று தோன்றியது. அண்ணா ஆனந்த் இப்போது சிபிஐ டைரக்டராக இருக்கிறான். அவனுக்குக் கண்டிப்பாகக் கூடுதலாகத் தகவல்கள் தெரிந்திருக்கும். உடனே அக்ஷய் அவனுக்குப் போன் செய்து பேசினான். பரஸ்பர குடும்ப நலன்களை எல்லாம் விசாரித்து, சமீபத்திய தகவல்கள் பரிமாறிக் கொண்டு விட்டுக் கேட்டான். “இன்றைக்கு ஒரு பத்திரிக்கையில் இல்லுமினாட்டி பற்றிக் கட்டுரை ஒன்றைப் படித்தேன். ஆனந்த் நீ என்ன நினைக்கிறாய்? உண்மையிலேயே இல்லுமினாட்டி இருக்கிறதா?”

ஆனந்த் யோசிக்காமல் மறு கேள்வி கேட்டான். “சூரியன் இருக்கிறதா?”

அக்ஷய் சிரித்தான். “சரி நீ இது வரை ஏதாவது இல்லுமினாட்டி உறுப்பினரைப் பார்த்திருக்கிறாயா?”

தொடர்ந்து அதிகார உச்சத்தில் இருக்கும் ஒவ்வொருவரைப் பார்த்தாலும் எனக்கு அவர்கள் இல்லுமினாட்டி ஆட்களாக இருக்குமோ என்று தோன்றும். அதை உறுதிப்படுத்திக் கொள்ள வழியில்லை. அவர்கள் எப்போதுமே தங்களை இல்லுமினாட்டிகளாகக் காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். அது சரி நீ ஏன் இல்லுமினாட்டி பற்றி திடீரென்று கேட்கிறாய்?”

நான் தான் சொன்னேனே, இல்லுமினாட்டி பற்றி ஒரு கட்டுரை சமீபத்தில் படித்தேன் என்று. அதனால் தான் கேட்டேன்...”

ஆனந்துக்கு அதை முழுவதுமாக நம்பி விட முடியவில்லை. “அக்ஷய். நீ சொல்வது உண்மை தானே?”

அக்ஷய் கேட்டான். “நான் இது வரைக்கும் ஏதாவது பொய் சொல்லி இருக்கிறேனா?”

ஆனந்த் சொன்னான். “ஏகப்பட்ட பொய் சொல்லியிருக்கிறாயே.”

அக்ஷய் வாய்விட்டுச் சிரித்தான். “ஏன் ஆனந்த் இப்படிக் காலை வாருகிறாய்?”

ஆனந்த் சொன்னான். “உன்னால் தொடர்ந்தாற்போல் பிரச்சினைகளில் இருந்து விலகி இருக்க முடியாது. அந்தப் பயத்தில் தான் சொல்கிறேன். எப்போதுமே விளையாட்டுக்காகக்கூட இல்லுமினாட்டியோடு சம்பந்தப்பட்டு விடாதே

ஏனிப்படி அவர்களுக்குப் பயப்படுகிறாய்?”

அவர்கள் பற்றி நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் அக்ஷய். அதனால் தான். யாரையும் பயமுறுத்திப் பணிய வைக்கப் பார்ப்பார்கள். அல்லது விலை கொடுத்து வாங்கப் பார்ப்பார்கள். இரண்டும் முடியா விட்டால் அலட்டிக் கொள்ளாமல் ஆளையே முடித்துக்கட்டி விடுவார்கள்...”

இல்லுமினாட்டி பற்றி சும்மா தான் விசாரித்ததாக ஆனந்தை நம்ப வைப்பதற்குள் அக்ஷய் படாதபாடுபட்டு விட்டான். போனில் பேசி முடித்த  பிறகு பெருமூச்சு விட்டான். அவன் ஆரம்பத்தில் நினைத்ததைத் தான் ஆனந்தும் சொல்கிறான். இல்லுமினாட்டி சகவாசமே வேண்டாம்!...


சிந்து மிகவும் கவனமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு கிளம்புவதற்கு முன்னால் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். சேலையில் அவள் மிக அழகாகவே தெரிந்தாள். மும்பையிலேயே பிறந்து வளர்ந்த அவளுக்கு சேலையை விட மற்ற சுடிதார், பேண்ட், சட்டை முதலான ஆடைகளே பிடித்தமானது என்றாலும் உதய்க்குப் பெண்களிடம் பிடித்த உடை சேலை என்பதால் அதையே அணிந்திருந்தாள். அவள் பெரும்பாலும் பொட்டு வைப்பதில்லை. வைத்தாலும் குண்டூசியின் தலைப்பகுதியை விடப் பெரிதாக அவள் வைத்துக் கொண்டதில்லை. ஆனால் உதய்க்குப் பிடிக்கும் என்பதற்காக கண்ணுக்குத் தெரிகிற அளவில் பொட்டு வைத்திருந்தாள். தனக்குப் பிடிக்காததை எல்லாம் செய்கிறோமே என்று ஒரு கணம் அவளுக்குத் தன் மீதே வெறுப்பாகக்கூட இருந்தது. ஆனால் ’இது பணம் சம்பாதித்துத் தரும் வேலை, அதற்குத் தேவையான நடிப்பு அவ்வளவு தான்’ என்று நினைவுபடுத்திக் கொண்டு கிளம்பினாள்.


தயின் உதவியாளன் வந்து பிரபல பத்திரிக்கையின் ஒரு பெண் நிருபர் பேட்டி ஒன்றுக்காக அப்பாயின்மெண்ட் கேட்டு வந்திருக்கிறாள் என்று சொன்ன போது உதய் முகம் சுளித்தான். அவனுக்கு இன்னமும் பேட்டிகள் எல்லாம் கசக்கவே செய்தன. ஒரே மாதிரியான கேள்விகள் கேட்கப்படுவதும், ஒரே மாதிரியான பாசாங்குகளும், நடிப்புகளும், வார்த்தை ஜாலங்களும் பதிலுக்குத் தேவைப்படுவதும் சலிப்பாகவே இருந்தன. எல்லாம் ‘க்ரிஷ் சிந்தனைகளின் தாக்கம்’ என்று நினைத்துக் கொண்டான். ஆனால் இப்போது மத்தியில் கூட்டணி ஆட்சிக்கான சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அந்தப் பிரபல பத்திரிக்கையில் பேட்டி வருவது அனுகூலம் தான் என்று நினைவு வந்தது.

“சரி அடுத்த வாரம் ஏதாவது ஒரு நாள் கொடுத்து அனுப்பு. கேள்விகளை முன்கூட்டியே கொடுக்கச் சொல்...” என்றான்.

தலையசைத்து விட்டுப் போன உதவியாளன் இரண்டு நிமிடங்களில் திரும்பவும் வந்தான். “அந்தப் பெண் உங்களை ஒரே ஒரு முறை பார்த்து விட்டுப் போகிறேன் என்று கெஞ்சுகிறாள்...”

உதய் குறும்பாகப் புன்னகைத்து விட்டுக் கேட்டான். “பெண் பார்க்க எப்படி இருக்கிறாள்?”

உதவியாளனும் புன்னகைத்தான். “தேவதை மாதிரி இருக்கிறாள்?”

உதய் சொன்னான். “சரி அனுப்பு. ஆனால் ஐந்து நிமிடத்துக்குள் கிளம்பி விட வேண்டும் என்று சொல்லி அனுப்பு”

உதவியாளன் தலையசைத்து விட்டுப் போனான். சிறிது நேரத்தில் சிந்து உள்ளே நுழைந்தான். அவளைப் பார்த்தவுடன் உதயின் இதயத்துடிப்பு ஒரு கணம் நின்றது. தேவதை என்று உதவியாளன் சொன்னது குறைத்துச் சொன்னதாகவே தோன்றியது. கல்லூரி நாட்களிலிருந்து இன்று வரை எத்தனையோ அழகான பெண்களை அவன் பார்த்திருக்கிறான், ரசித்திருக்கிறான். ஆனால் இந்தப் பெண் போல யாரும் அவனைப் பாதித்தது இல்லை. குடும்பப்பாங்கான, கண்ணியமான அழகு...

அவள் ”வணக்கம் சார்” என்று சிறு புன்னகையுடன் கைகூப்பினாள். கன்னத்தில் விழுந்த சிறு குழியும், விரிந்த உதடுகளின் புன்னகையின் அழகும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல அவனுக்குத் தோன்றியது.

ஒரு விஷ வலையில் விழுந்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே அவளிடம் தன் மனதை முதல் பார்வையிலேயே பறி கொடுத்தான். 

(தொடரும்)
என்.கணேசன்  

Wednesday, May 27, 2020

Monday, May 25, 2020

சத்ரபதி 126


ரங்கசீப் தன் வாழ்க்கையில் நிறைய கசப்பான அனுபவங்களைச் சந்தித்திருக்கிறான். அதிலிருந்து மீண்டும் இருக்கிறான். சிவாஜியுடனான கசப்பான அனுபவத்திலிருந்தும் மெல்ல அவன் மீண்டு வந்தான். சிவாஜி தன் ராஜ்ஜியத்திற்குப் போய்ச் சேர்ந்த செய்தி ஒருவிதத்தில் அவன் மன அமைதியை மீட்டுக் கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். சிவாஜி தப்பித்த பின், கடுமையாகத் தேடியும் கிடைக்கவில்லை என்ற நிலையில் அவன் தலைநகருக்கு அருகிலேயே எங்காவது மறைவாக ஒளிந்து கொண்டிருப்பானோ, தொழுகைக்குப் போகும் போதோ, தொழுகையிலிருந்து வரும் போதோ, மறைந்திருந்து திடீர் என்று தாக்குவானோ என்ற பயத்தில் கூடுதல் காவல் படைகளை உடனழைத்துப் போய் வந்து கொண்டு இருந்ததற்கு ஔரங்கசீப் முற்றுப்புள்ளி வைக்க முடிந்தது.  அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவனால் ஒழுங்காகச் சிந்திக்க முடிந்தது. மகன் முவாசிம்மை தக்காண கவர்னராக நியமித்துக் கட்டளையிட்ட அவன், மகன் தக்காணத்திற்குக் கிளம்பும் முன் அழைத்து அவனிடம் நிறைய அறிவுரைகள் சொன்னான்.

கவனமாக இருக்க வேண்டும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும், யாரையும் முழுமையாக நம்பி விடக்கூடாது, சாதுரியமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை எல்லாம் சிறுவயதிலிருந்தே தந்தையிடம் கேட்டுச் சலித்திருந்த முவாசிம் இப்போதும் கேட்டுச் சலித்தான்.

அறிவுரைகளை முடித்து விட்டு ஔரங்கசீப் விஷயத்துக்கு வந்தான். “மகனே இப்போது தக்காணத்தில் நமக்கு மூன்று எதிரிகள் இருக்கிறார்கள். முக்கியமாய் சிவாஜி, பின் பீஜாப்பூரின் அலி ஆதில்ஷா, அடுத்தது கோல்கொண்டா சுல்தான். மூன்று பேரையும் நீ எப்படி சமாளிக்கப் போகிறாய்?”

”என்னுடன் பெரும்படை ஒன்றை அனுப்புங்கள் தந்தையே. மூவரையும் வென்று வருகிறேன்” முவாசிம் சொன்னான்.

பெரும்படையை மகனுடன் அனுப்பினால் அவன் அதைத் தந்தைக்கு எதிராகவே பயன்படுத்தும் சாத்தியமும் இருக்கிறது என்பதால் அதற்குச் சம்மதிக்கும் எண்ணம் சிறிதும் இல்லாத ஔரங்கசீப் சொன்னான். “மகனே ஹிந்துஸ்தானத்தில் தெற்குப் பகுதி மட்டுமல்ல. வடக்கும் இருக்கிறது. அங்கும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதையும் சமாளிக்க வேண்டி இருப்பதால் கூடுதல் படையை உன்னுடன் அனுப்ப முடியாத நிலையில் நான் இருக்கிறேன். படை இல்லாமல் மூவரையும் சமாளிக்க ஏதாவது வழி யோசித்து வைத்திருக்கிறாயா?”

முவாசிம் சொன்னான். “என் சிற்றறிவுக்கு வழி எதுவும் தெரியவில்லை. ஆனால் தாங்கள் யோசித்து வைத்திருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். அதைத் தெரிவித்தால் அதன்படி நடந்து கொள்கிறேன்”

அந்தப் பதிலில் ஔரங்கசீப் திருப்தி அடைந்து சொன்னான். “மகனே. மூவரில் உண்மையான பிரச்சினை சிவாஜி தான். அவனைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து அவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள். அதிகபட்சமாய் அவன் இது வரை ஜெயித்த கோட்டைகள் அவனே வைத்துக் கொள்ளட்டும், அவனுக்கு ராஜா என்ற பட்டத்தை நான் தயாராக இருக்கிறேன் என்று சொல். அவன் மீது நாம் போர் தொடுக்கவும் போவதில்லை என்று சொல். அதற்குப் பதிலாக அவனை பீஜாப்பூர் சுல்தானுக்கு எதிராகவும், கோல்கொண்டா சுல்தானுக்கு எதிராகவும் போரில் இறங்கச் சொல். உதவுவதற்குப் படைகள் தரவும் தயார் என்று சொல். கேட்டால் அனுப்பவும் அனுப்பு.  வென்று கிடைப்பதை அவனே எடுத்துக் கொள்ளட்டும். இந்தத் திட்டத்தில் மூன்று எதிரிகளையும் நீ சமாளிக்க வேண்டியிருக்காது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வார்கள்.”

தந்தையின் ராஜதந்திரத்தை எண்ணி வியந்த முவாசிம் கேட்டான். “முதலில் சிவாஜியை ஒப்பந்தத்திற்கு நாம் சம்மதிக்க வைக்க முடியுமா? அவன் ஒப்புக் கொள்வானா? அவன் நம் மேல் கோபமாக அல்லவா இருப்பான்”

ஔரங்கசீப் சொன்னான். “அரசியலில் ஒரு புத்திசாலிக்கு கோபம் லாப நஷ்டங்களைக் கணக்கெடுத்த பிறகே வரும் அல்லது போகும், முவாசிம். சிவாஜி புத்திசாலி. அவன் கண்டிப்பாக ஒத்துக் கொள்வான். ஏனென்றால் அவன் மறுத்தால் நாம் பீஜாப்பூர் சுல்தானிடமோ, கோல்கொண்டா சுல்தானிடமோ கூட இதே ஒப்பந்தத்தைப்  போட்டுக் கூட்டணி வைத்துக் கொண்டு அவனை எதிர்க்க முடியும் என்பதை அவன் அறிவான். அந்த நிலைமையை உருவாக்கிக் கொள்ள விரும்ப மாட்டான். அதனால் அவன் சம்மதிப்பான்.”

முவாசிம் தலையசைத்தான்.

ஔரங்கசீப் தொடர்ந்தான். “ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் இப்போது நாம் பிடித்து வைத்திருக்கிற ஐந்து கோட்டைகளையும் கொடுக்கச் சம்மதிக்காதே. அதே போல் அவன் ஐந்தாயிரம் குதிரை வீரர்களுடன் அவன் மகன் சாம்பாஜியை நம் தலைமையகம் தௌலதாபாத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சொல். இது நாம் முந்தைய ஒப்பந்தத்திலேயே கேட்டது. தலைநகருக்கு மான்சப்தாராக அவன் மகன் வர வேண்டும் என்று கேட்டோம். சிவாஜி கண்டிப்பாக மகனை நம் தலைநகருக்கு அனுப்பச் சம்மதிக்க மாட்டான். ஆனால் தௌலதாபாத்துக்கு அனுப்பச் சம்மதிப்பான். இது நமக்கு அவசரத்திற்கு உதவும். இந்த இரண்டும் முக்கியம். ஆரம்பத்தில் அவனது மற்ற நான்கைந்து கோட்டைகளையும் சேர்த்துக் கேள். பேரம் பேசிக் குறைத்துக் கொள்….”

முவாசிம் அதற்கும் தலையசைத்தான். தந்தையின் தந்திரக்கணக்குகள் அவனை பிரமிக்க வைத்தன.

ஔரங்கசீப் தொடர்ந்து சொன்னான். “ராஜா ஜஸ்வந்த்சிங்கையும் உன்னுடன் அனுப்புகிறேன். சிவாஜியுடன் தொடர்பு கொள்ளும் போது ஒரு இந்து ராஜாவும் உன்னுடன் இருப்பது உனக்கு உதவியாக இருக்கும். ஆனால் ஒன்றை மறந்து விடாதே. அவர்கள் இருவரும் அதிகமாக நெருக்கமாவதை அனுமதிக்காதே…. அது ஆபத்து…”

முவாசிம் மறுபடி கேட்டுச் சலித்தான்.

உண்மையில் ராஜா ஜஸ்வந்த்சிங்கை முவாசிம்முடன் ஔரங்கசீப் அனுப்புவதற்குக் காரணம் மகன் ஒருவனாக இருந்து தனக்கெதிராக எதுவும் செய்து விடக்கூடாது, கண்காணிக்க அடுத்தவன் ஒருவன் மகனுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். முவாசிம் அவனை வணங்கிச் சென்ற பிறகு ஔரங்கசீப் தனிமையில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தான். முன்பு ஒரு காலத்தில் சீறி வந்த மதயானையை எதிர் கொண்டு நிறுத்திய அவன் வலிமை எல்லாம் போய் விட்டது. வயோதிகம் அவனை வந்தடைந்து விட்டது.  எதிரிகளை மட்டுமல்லாமல் பிள்ளைகளையும் சமாளிக்க வேண்டி இருக்கிறது…. எல்லாரையும் கண்காணிப்பில் வைக்க வேண்டி இருக்கிறது. என்னவொரு வாழ்க்கையிது என்று சிந்தித்தவனாய் களைப்புடன் கண்களை மூடிக் கொண்டான்.


முவாசிம் சமாதான ஒப்பந்தத்திற்காக அழைத்த போது சிவாஜி அதிகம் யோசிக்காமல் ஒத்துக் கொண்டான். காரணம் முவாசிம் குறித்து அவன் கேள்விப்பட்ட எதுவும் அவனை வஞ்சகனாகவோ, சூழ்ச்சிக்காரனாகவோ சித்தரித்ததில்லை. எதையும் நேரடியாகச் சொல்லவும், செய்யவும் பழக்கப்பட்டவனாகவே அனைவரும் அவனைச் சொல்லியிருந்தார்கள். நேரில் சந்தித்த போது அது உண்மை என்றே சிவாஜிக்கும் புரிந்தது.

முவாசிம் தந்தை சொன்னது போல் பேரம் பேசவில்லை. அவர் சொன்னபடி அதிகம் சொல்லிக் குறைக்கவோ, தேவையில்லாதவைகளைச் சேர்க்கவோ செய்யாமல் அவர் முக்கியம் என்று சொன்ன அம்சங்களை மட்டும் சொன்னான்.

இந்த ஒப்பந்தத்தை மறுத்தால் முவாசிம் பீஜாப்பூர் சுல்தானுடன் அல்லது கோல்கொண்டா சுல்தானுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது என்பதைப் புரிந்து கொண்ட சிவாஜி ஔரங்கசீப் எதிர்பார்த்தது போலவே சம்மதித்தான். இப்போதைக்கு முகலாயர்களுடன் சேர்ந்து கொள்வது பீஜாப்பூர், கோல்கொண்டா சுல்தான்களிடமிருந்து பெற முடிந்த லாபமாகவே அவனுக்குப் பட்டது.

கடைசியில் ஒப்பந்தத்தில் சிறு மாற்றத்தை மட்டும் சொன்னான். “இளவரசரே. என் மகன் சாம்பாஜியை ஐந்தாயிரம் குதிரைகளோடு மான்சப்தாராக இங்கு அனுப்பி பதவி ஏற்றுக் கொள்ள வைக்கிறேன். ஆனால் சிறுவனான அவனை இங்கேயே இருக்க வைக்க என் தாயார் சம்மதிக்க மாட்டார்கள். அதனால் அவன் பதவி ஏற்றுக் கொண்ட பின் அவனுக்குப் பதிலாக அவன் பிரதிநிதியாக ஐந்தாயிரம் குதிரைப்படையுடன் என் படைத்தலைவர் ப்ரதாப்ராவ் குசார் இங்கே இருக்கச் சம்மதிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்”

முவாசிம் யோசித்தான். அவனுக்கு சிவாஜி வளவளவென்று பேரம் பேசாமல் ஒரே ஒரு சிறிய மாற்றத்தைக் கேட்டது பிடித்திருந்தது. குதிரைப்படையுடன் ஒரு சிறுவனை இங்கே வைத்துக் கொள்வதை விட அனுபவம் வாய்ந்த படைத்தலைவர் இங்கு இருப்பது நல்லது என்று நினைத்து ”அப்படியே ஆகட்டும்” என்று உடனே சம்மதித்தான். ஒப்பந்தம் கையெழுத்தானது.

முவாசிம் ஒப்பந்தத்தைத் தந்தைக்கு அனுப்பி வைத்தான். சாம்பாஜிக்குப் பதிலாக ப்ரதாப்ராவ் குசார் என்ற படைத்தலைவன் தௌலதாபாத்தில் இருப்பதில் ஔரங்கசீப்புக்கு முழுத்திருப்தி இருக்கவில்லை. முவாசிம் ‘ஒரு சிறுவனை விட அனுபவம் வாய்ந்த படைத்தலைவர் நம்மிடம் இருப்பதன் பயன் அதிகமல்லவா?’ என்று எழுதியதைப் படித்து விட்டு ஔரங்கசீப் முணுமுணுத்தான். “முட்டாளே. முட்டாளே…. நாளை ஏதாவது அவசியம் வரும் போது மகனை வைத்துக் கொண்டு மிரட்டினால் எடுபடுமா, ஒரு படைத்தலைவனை வைத்துக் கொண்டு மிரட்டினால் எடுபடுமா? எப்போது அரசியல் பாடம் கற்றுக் கொள்ளப் போகிறாய்?”

(தொடரும்)
என்.கணேசன்

Sunday, May 24, 2020

உங்களுக்கு நிறைய பிரச்சினைகளா?

உங்களுக்கு நிறைய பிரச்சினைகளா? அப்படியானால் கண்டிப்பாக இந்தக் காணொளியைக் காணுங்கள். கண்டு முடிக்கையில் பிரச்சினைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்திருக்கும்.



என்.கணேசன்

அமேசான் கிண்டிலில் “இங்கே நிம்மதி!” வெளியீடு!




வணக்கம் வாசகர்களே!

என்னுடைய “இங்கே நிம்மதி” நூல் அமேசான் கிண்டிலில் தற்போது வெளியாகியுள்ளது. லிங்க் -



”எங்கே நிம்மதி எங்கே நிம்மதி?” என்று அலைவோருக்கு இங்கே நிம்மதி என்று பல வழிகளையும், மனமாற்றங்களுக்கான ஆழ்ந்த கருத்துகளையும் கூறி அமைதிப்படுத்தும் இந்த நூல் அச்சில் வெளிவந்த போதும் பல வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. இப்போது அமேசான் கிண்டிலிலும் வந்துள்ளதால் உலகளவில் உள்ள வாசகர்களுக்கு உடனே பயன்படக்கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி.

அன்புடன்
என்.கணேசன்

Saturday, May 23, 2020

ஆழ்மனதை மாற்றும் பயிற்சி


ஆழ்மனசக்தி இரகசியங்கள் 5


ஆழ்மனதில் தப்பான நம்பிக்கைகளும், ப்ரோகிராம்களும் உருவாவது எப்படி? அவற்றை மாற்றுவது எப்படி?







Thursday, May 21, 2020

இல்லுமினாட்டி 50


சிறையிலிருந்து தப்பித்துப் போக வேண்டுமா?” என்று இரக்கத்துடன் கேட்ட ராஜேஷை மனோகர்இது என்ன கேள்வி?’ என்பது போலப் பார்த்து விட்டுச் சொன்னான். ”சிறையிலிருந்து தப்பித்துப் போகும் ஆசை யாருக்குத் தான் இருக்காது? ஆனால் அப்படித் தப்பிக்க முடிய வேண்டுமே!”

ராஜேஷ் சொன்னான். “நான் முன்பே சொன்னது போல நீ பணம் செலவு செய்யத் தயாராக இருந்தால் தாராளமாக அவர்களே நீ தப்பிக்க வழி சொல்லிக் கொடுப்பார்கள்

மனோகர் எச்சரிக்கையுடன் கேட்டான். “பொதுவாக இங்கிருந்து தப்பிக்க ஒருவன் எத்தனை பணம் தர வேண்டியிருக்கும்?”

ராஜேஷ் சொன்னான். “அது நாம் எந்தக் குற்றத்திற்காக எவ்வளவு கால தண்டனையில் இருக்கிறோம் என்பதைப் பொருத்தது. சின்னக் குற்றங்கள், குறைந்த தண்டனையில் இருந்தால் சுமார் ஐம்பதாயிரம் தந்தால் கூடப் போதும் பெரிய குற்றம் பெரிய தண்டனையாக இருந்தால் ஐந்து லட்சம், பத்து லட்சம் கூட செலவழிக்க வேண்டி வரும்...”

மனோகருக்குக் கடத்தல் குற்றம் எந்த அளவுகோலில் இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்தது. சிறு தயக்கத்துக்குப் பின் கேட்டான். “நான் எவ்வளவு தர வேண்டியிருக்கும்?”

ராஜேஷ் சொன்னான். “நான் கேட்டுச் சொல்கிறேன்

மனோகருக்குப் பயமாகவும் இருந்தது. ’இவன் கேட்டுச் சொல்கிறேன் என்று நான் தப்பிக்க முயல்கிறேன் என்ற செய்தியைப் பரப்பி விட்டால் அது சிக்கலை அதிகப்படுத்தி விடுமேஎன்று யோசித்தான்.

அவன் முகபாவனையிலிருந்தே அவன் மனப்போக்கைப் படிக்க முடிந்த ராஜேஷ் அவன் தோளில் தட்டிக் கொடுத்தபடிச் சொன்னான். “கவலைப்படாதே. என் ஆட்கள் ரகசியம் காக்க முடிந்தவர்கள். உதவ முடியா விட்டாலும் மாட்டிவிட மாட்டார்கள். தாராளமாக நம்பலாம்

அவன் அப்படிச் சொன்னாலும் மனோகருக்கு மனதில் நெருடலாகத் தான் இருந்தது. இவன் யாரிடம் கேட்பான், எப்படிக் கேட்பான் என்று தெரியவில்லை. அதைக் கேட்டாலும் அவன் சொல்வான் என்று தோன்றவும் இல்லை. இவனிடம் சொல்லித் தேவையில்லாமல் பிரச்னை செய்து கொள்கிறோமோ என்று தோன்றியது. ஆனாலும் முயற்சி எதுவும் செய்யாமல் இப்படியே அடைந்து கிடப்பது ஆகாது, ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் நினைத்துக் கொண்டான். 

அன்று மதிய உணவின் போது ராஜேஷ் திடீரென்று காணாமல் போனான். கைதிகளுக்கு மத்தியில் மனோகர் எத்தனை தேடியும் அவனைக் காண முடியவில்லை. இருவரும் ஒன்றாகத் தான் சாப்பிடுமிடத்திற்கு வந்தார்கள். மனோகர்  பின்னால் தான் அவன் உணவுக்காக  வரிசையில் நின்றிருந்தான். மனோகர் தட்டில் சாப்பாட்டை வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்த்த போது ராஜேஷைக் காணவில்லை. சாப்பிடும் ஹாலில் கதவருகே இரண்டு காவலர்கள் துப்பாக்கியோடு நின்றிருந்தார்கள். அவர்கள் இருவருடைய பார்வையும் அங்கிருந்த கைதிகள் மீதே நிலைத்திருந்தன. அவர்களை ஏமாற்றி அவன் வெளியே போயிருக்க வழியேயில்லை என்பதால் அவர்கள் அனுமதியோடு தான் போயிருக்க வேண்டும். போய் மனோகர் தப்பிக்க முயற்சி செய்கிறான் என்று காட்டிக் கொடுத்து விடுவானோ என்று மெல்ல திகில் வந்தது. பல வித யோசனைகள், பயங்களுடன் அவன் சாப்பிட்டு முடித்துக் கைகழுவித் திரும்பிய போது ராஜேஷ் சாப்பாட்டுக்காக வரிசையில் நின்றிருந்தான். எப்போது வந்தான், எப்படி வந்தான் என்பது தெரியவில்லை.

சிறையறைக்குத் திரும்பவும் இருவரும் வந்து சேர்ந்த பிறகு சிறையறைகள் பூட்டப்பட்டு வராந்தாவில் காவலர்களின் காலடியோசை குறைந்து கொண்டே போய் வராந்தாவில் முழுஅமைதி திரும்பிய பிறகு ராஜேஷ் மனோகரிடம் சொன்னான். “பத்து லட்சம் கேட்கிறார்கள்?”

அப்படியானால் அவன் சார்பாகப் பேசுவதற்காகத் தான் ராஜேஷ் இடையே காணாமல் போயிருக்கிறான் என்பது மனோகருக்குப் புரிந்தது. காட்டிக் கொடுக்கிறவனாக இருந்தால் இப்படி பேரம் பேசிவிட்டு வந்திருக்க மாட்டான் என்று அவன் மனம் சிறிது நிம்மதி அடைந்தது.  கோடிக்கணக்கில் அவன் வங்கிக் கணக்கில் இருப்பதால் எத்தனையும் செலவழிக்க மனோகர் தயார் தான் என்றாலும் அத்தனை பணமா என்பது போல முகத்தில் திகைப்பைக் காட்டினான். பணம் அவனிடம் நிறைய இருக்கிறது என்கிற உண்மை யாருக்கும் தெரிவது அவசியமில்லை என்று அவன் நினைத்தான்.

மனோகர் திகைப்பைப் பார்த்து ராஜேஷ் வருத்தத்துடன் சொன்னான். “எனக்கும் அவர்கள் தொகையைச் சொன்னவுடன் திகைப்பாய் இருந்தது. ‘என்னைய்யா இவன் காஷ்மீர் தீவிரவாதியா, ஒரு பெண்ணைக் கடத்தியவனைத் தப்பிக்க வைக்க இவ்வளவு பணம் கேட்கிறீர்கள்என்று கேட்டேன்.  அவர்கள் முதலமைச்சர் குடும்பம் சம்பந்தப்பட்ட வழக்கில் இருக்கும் ஆளைத் தப்பிக்க வைத்தால் இரண்டு மூன்று பேருக்காவது சஸ்பென்ஷன், விசாரணை எல்லாம் உறுதி. அதெல்லாம் பரவாயில்லை என்று துணிந்து செய்ய வேண்டுமானால் குறைந்தபட்சம் பத்து லட்சமாவது வேண்டும். இல்லா விட்டால் பேசவே பேசாதே என்கிறார்கள்....”

மனோகர்  ஆழ்ந்து யோசிக்கும் பாவனை காட்ட, ராஜேஷ் அவனை இரக்கத்துடன் பார்த்தான். மனோகர் சிறிது யோசித்து விட்டுக் கேட்டான். “பணத்திற்கு நான் எப்படியாவது ஏற்பாடு செய்கிறேன் என்று வைத்துக் கொள். அவர்களுக்கு எப்படிப் பணம் தருவது?”

அவன் பணம் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னது ராஜேஷைச் சிறிது ஆச்சரியப்படுத்தியது போல் இருந்தது. இத்தனை பெரிய தொகையை அவனால் தர முடியாது என்று நினைத்திருக்கிறான் என்பது மனோகருக்கு அந்த ஆச்சரியத்தைப் பார்த்துப் புரிந்தது. 

ராஜேஷ் உற்சாகமாகச் சொன்னான். “அது பணமாகவும் தரலாம். அவர்கள் சொல்லும் அக்கவுண்டுக்கு நீ அனுப்பியும் வைக்கலாம். பணம் கிடைத்து அதிகபட்சமாய் மூன்றே நாளில் தப்பிக்க அவர்கள் ஏற்பாடு செய்து விடுவார்கள். அதற்கு நான் உத்திரவாதம் தருகிறேன்.  நீ பணத்தை எப்படி தரப்போகிறாய்?”


ந்தப் பிரபல பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்வது சிந்துவுக்குச் சிரமமாக இருக்கவில்லை. அவளிடம் இயல்பாகவே இருந்த அழகு, புத்திசாலித்தனம், துணிச்சலான அணுகுமுறை எல்லாம் ஒரு பத்திரிக்கை நிருபர் வேலைக்குக் கச்சிதமாகவே பொருந்தி இருந்ததாலும், சம்பளம் எவ்வளவானாலும் பரவாயில்லை என்று சொல்லியதாலும் உடனே வந்து சேர்ந்து கொள்ளச் சொல்லி விட்டார்கள். அவளுக்குப் பத்திரிக்கைத் துறையில் முன் அனுபவம் இல்லாததால் முதல் மூன்று மாதங்களைப் பயிற்சி மாதங்களாகத் தான் எடுத்துக் கொள்வோம், அந்த மூன்று மாதங்களில் சம்பளம் பாதியாகத் தான் தருவோம் என்று சொன்னதற்கும் சிந்து ஒத்துக் கொண்டாள். அவளுக்கு அந்தப் பத்திரிக்கையில் நிறைய நாட்கள் இருக்கும் எண்ணம் சுத்தமாக இல்லை. உதயை அணுக அந்தப் பத்திரிக்கை நிருபர் பதவி உதவியாக இருக்கும் என்பதைத் தவிர அந்த வேலையில் அவளுக்கு வேறெந்த அக்கறையும் இருக்கவில்லை.

முதலிரண்டு நாட்களில் அவள் ஒரு மூத்த நிருபருக்கு உதவியாளராக இருந்து அந்த வேலையின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டாள். மூன்றாவது நாள் இன்னொரு நிருபர் கொண்டு வந்த செய்தியைப் பிழை திருத்தும் வேலை அவளுக்குத் தரப்பட்டது. நான்காவது நாள் எந்த வேலையையும் அவர்கள் ஒதுக்குவதற்கு முன் அவள் பத்திரிக்கை ஆசிரியரைச் சந்தித்துச் சொன்னாள். “சார் நானாகவே ஒரு வேலையை முழுமையாகச் செய்ய ஆசைப்படுகிறேன்

அந்தப் பெண்ணிடம் இருந்த உற்சாகமும், தன்னம்பிக்கையும் அந்தப் பத்திரிக்கை ஆசிரியர் முகத்தில் சிறு புன்னகையை வர வைத்தது. “என்ன செய்யலாம் என்றிருக்கிறாய்என்று கேட்டார். 

ஒரு இளம் அரசியல்வாதியைப் பேட்டி எடுக்க ஆசைப்படுகிறேன்...”

யாரையாவது குறிப்பாக மனதில் நினைத்து வைத்திருக்கிறாயா?”

ஆமாம் சார். முதலமைச்சர் மகனும், எம்.பியுமான உதய் கமலக்கண்ணனைப் பேட்டி எடுக்க ஆசைப்படுகிறேன்

ஏன் அவரை?”

சிந்து சிறிதும் யோசித்து நிற்காமல் ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொள்பவள் போலச் சொன்னாள். “மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் உருவானால் உதய் கமலக்கண்ணனுக்குக் கண்டிப்பாக மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என்று டெல்லியிலிருக்கும் என் பத்திரிக்கை நண்பர் மூலம் கேள்விப்பட்டேன். அப்படி ஒருவேளை நடந்தால் அவரை முன்கூட்டியே பேட்டி எடுத்து வெளியிட்டிருப்பது நம் பத்திரிக்கைக்குச் சிறப்பாக இருக்கும் அல்லவா?”

அந்தப் பத்திரிக்கை ஆசிரியர் முகத்தில் புன்னகை விரிந்தது. இளமைக்கே உரிய உற்சாகம், வித்தியாசமான யோசனைகள், நடைமுறைப்படுத்த நினைக்கும் துடிப்பு இருக்கிற இந்த பெண்ணைத் தடுக்கத் தோன்றவில்லை. ”சரி முயற்சி செய். பேட்டி எப்படி வருகிறது என்று முதலில் பார்ப்போம். அப்புறமாய் வெளியிடுவது பற்றி யோசிக்கலாம்என்று சொல்லி அனுப்பினார்.

சிந்துவுக்குப் பேட்டி வந்தாலும் வராவிட்டாலும் ஒன்று தான். பேட்டி எடுக்கும் சாக்கில் உதயைச் சந்திக்கும் வாய்ப்பு தான் அவளுக்கு வேண்டியது. அதனால் முகமலர்ந்து இரண்டு முறை நன்றி சொல்லி விட்டு அவர் அறையை விட்டு வெளியே வந்தாள். உதயைச் சந்திக்க ஒரு சாக்கு கிடைத்து விட்டது.

அவள் உதயை அவனுடைய பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திலேயே முதலில் சந்திக்க முடிவு செய்தாள். எந்தக் காரணத்தைக் கொண்டும் தன் திட்டத்தில் முதல் பாகத்தைக் கடக்கும் வரை க்ரிஷ் கண்ணில் பட அவள் விரும்பாததால் உதயை வீட்டில் சந்திப்பதைத் தவிர்த்தாள்.

(தொடரும்)
என்.கணேசன்