சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 31, 2018

சத்ரபதி – 53


காலச்சக்கரம் மெல்லச் சுழன்றது. துகாராம் சில மாதங்களில் இறைவனடி சேர்ந்து விட்டார். ஆன்மீகத் தேடலை சிவாஜி தக்க வைத்துக் கொண்டே இல்லற வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் சிவாஜி இயல்பு நிலைக்குத் திரும்பினான். இப்போதும் துகாராமின் பாடல்களை அவன் விரும்பிக் கேட்டான். ஆன்மீக அறிஞர்களை அழைத்துப் பேசுவதில் ஈடுபாடு காட்டினான். இராமதாசர் என்ற துறவியிடம் சென்று மணிக்கணக்கில் ஆன்மீகம் பேசினான். ஆரம்பத்தில் அவன் திரும்பி வர நேரமானால் ஜீஜாபாயும், அவன் மனைவிகளும் பதற்றத்தை உணர்ந்ததுண்டு. ஆனால் எத்தனை நேரம் கழிந்தாலும் திரும்பி வந்தான். நிர்வாகத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் குறைவற்ற அக்கறையைக் காட்டினான். சிவாஜியின் மனைவி சாய்பாய் அடுத்தடுத்து மூன்று பெண்களைப் பெற்றெடுத்தாள். குழந்தைகளுக்கு சக்குபாய், ராணுபாய், அம்பிகாபாய் என்ற பெயர்களிட்டார்கள். சிவாஜி தன் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக விளையாடி சில நேரங்களைப் போக்கினான்.

ஜீஜாபாய்க்கு மகனின் மாற்றம் பெருத்த நிம்மதியைத் தந்தது. சிவாஜிக்குப் பிறந்த குழந்தைகள் மூன்றுமே பெண்களாய் இருந்ததில் மட்டும் அவளுக்குச் சிறுவருத்தம் இருக்கத்தான் செய்தது. ஆனால் முந்தைய காலத்தைப் போல் இப்போதைய காலம் ஆபத்தில்லாமலும், சுபிட்சமாகவும் இருந்ததால் பெரியதொரு ஏமாற்றத்தை அவள் உணரவில்லை.

ஒரு நாள்  அவளுடைய தாய் மால்சாபாயின் மரணச்செய்தி வந்து சேர்ந்தது. தாயின் நினைவுகளில் இதயத்தில் அவள் பெரும் வலியை உணர்ந்தாள். தனியாக நிறைய நேரம் அழுதாள். சிவாஜி தூர இருந்து பார்த்துக் கொண்டே இருந்து விட்டு அருகில் வந்து கேட்டான். ”தாயே சிந்துகேத் சென்று வருகிறீர்களா?”
            
கண்களைத் துடைத்துக் கொண்டு ஜீஜாபாய் சொன்னாள். “யாரிடம் போய் துக்கம் விசாரிக்க? நியாயமாக உன் தாத்தாவும், மாமாவும் இறந்த போது நான் போய் என் தாய்க்கு ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும். அப்போதே போகாதவள் இப்போது அவரும் இறந்த பின் போவதில் அர்த்தமில்லை சிவாஜி….”

சிவாஜி கேட்டான். “அப்போது நீங்கள் போயிருந்தீர்களானால் தந்தை உங்களைத் தவறாக நினைத்திருப்பாரா தாயே”

ஜீஜாபாய் சொன்னாள். “அவர் தவறாக நினைத்துக் கொள்வார் என்று நான் போகாமல் இருக்கவில்லை சிவாஜி. நானே என் கணவரை மதிக்காத என் தாய்வீட்டுக்குப் போகக்கூடாது என்று இருந்து விட்டேன்.”

சிவாஜி மெல்லக் கேட்டான். “ஆனாலும் அவர்கள் உங்களுக்காக நிறைய செய்திருக்கிறார்கள் அல்லவா தாயே”

ஜீஜாபாய் குற்றவுணர்ச்சியும், பச்சாதாபமும் கலந்த துக்கத்தில் சொன்னாள். “உண்மை தான் மகனே! ஆனால் என் தாயும் தூர இருந்தே தான் அதைச் செய்திருக்கிறார்கள். நானும் தூர இருந்தே அழுது தீர்க்கிறேன்.”


ஷாஹாஜியின் வாழ்க்கை விடுதலைக்குப் பின் நான்கு ஆண்டுகள் பீஜாப்பூரிலேயே கழிந்தது. சாம்பாஜியும், துகாபாயும் வெங்கோஜியும் அவரை அவ்வப்போது வந்து பார்த்துச் சென்றார்கள். அவர்கள் வந்து போன பின் அவர் மனம் சிவாஜியை நினைக்கும். அவனையும் ஒரு முறை பார்த்தால் நன்றாக இருக்கும் என்று அவர் மனம் ஆசைப்படும். ஆனால் அவன் அங்கு வருவது ஆபத்து என்பதால், அவரும் சென்று பார்க்க முடியாது என்பதால், விரக்தியுடன் அந்த ஆசையை அவர் மறக்க நினைப்பார்.

அவர் இல்லாததால் கர்னாடகத்தில் அங்கங்கே புரட்சிகள், கலவரங்கள் வெடிக்க ஆரம்பித்தன. அவருக்குச் சரியான மாற்றை அங்கே ஆதில்ஷாவால் அனுப்ப முடிந்திருக்கவில்லை என்பதாலேயே அப்படி நடப்பதை உணர்ந்த ஆதில்ஷா வேறு வழியில்லாமல் ஷாஹாஜியை மறுபடியும் கர்னாடகத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார்.

அந்த முடிவில் இரண்டு முக்கியமான ஆட்கள் அதிருப்தியை உணர்ந்தார்கள். ஒருவன் பாஜி கோர்ப்படே. அவன் வஞ்சித்து சிறைப்படுத்தி பீஜாப்பூர் சுல்தானிடம் ஒப்படைத்த ஷாஹாஜி மறுபடி பழைய அதிகார பீடத்திற்கே திரும்பி வருவார் என்று அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆதில்ஷாவின் முடிவைக் கேள்விப்பட்டவுடன் அவன் தன் உயிருக்குப் பயந்தான். ஷாஹாஜியைப் போன்ற வீரர்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதைச் சுலபமாக மறந்து விடக்கூடியவர்கள் அல்ல என்பதை அவன் அறிவான். பக்கத்திலேயே வந்து விடப் போகிற ஷாஹாஜி அவனைக் கண்டிப்பாகப் பழிவாங்குவார் என்ற பயத்தில் அவன் பீஜாப்பூருக்கு ஓடோடி வந்தான்.

ஆதில்ஷாவைச் சந்தித்தவுடன் அவர் காலில் தடாலென்று விழுந்தான். “அரசே என் உயிருக்கு உத்தரவாதம் கொடுங்கள்”

ஆதில்ஷாவுக்குச் சிறிது நேரம் எதுவும் புரியவில்லை. “என்ன ஆயிற்று? உன்னை யார் அச்சுறுத்துகிறார்கள்? முதலில் அதைச் சொல்” என்றார்.

பாஜி கோர்படே சொன்னான். “அச்சுறுத்துபவர்கள் பெரும்பாலும் காரியத்தில் இறங்குவதில்லை அரசே. அச்சுறுத்தாமல் அமைதியாக இருப்பவர்களிடமே ஒருவன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டி வருகிறது”

ஆதில்ஷா புரியாமல் எரிச்சலடைந்து சொன்னார். “புதிர் போடாமல் ஆளைச் சொல் பாஜி கோர்படே. நீ யாரைப் பார்த்து பயப்படுகிறாய்? ஏன் பயப்படுகிறாய்?”

“ஷாஹாஜி அவர்களைப் பார்த்துத் தான் பயப்படுகிறேன் அரசே. நீங்கள் சொல்லித் தான் அவரைக் கைது செய்து கொண்டு வந்தேன். அவர் மேல் எனக்கு எந்தத் தனிப்பட்ட பகைமையும் இல்லை என்பது உங்களுக்கே தெரியும். அவரைப் போன்ற ஆட்கள் எப்போதும் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதை மறக்க மாட்டார்கள். அவரை மீண்டும் என் அருகிலேயே வசதியாக நீங்களும் அனுப்பி வைக்கவிருப்பதாக அறிந்ததால் தான் பயப்படுகிறேன் அரசே”

ஆதில்ஷா சொன்னார். “உன் பயமும், கவலையும் தேவையே இல்லை பாஜி கோர்படே”

பாஜி கோர்படே ஜுரத்தில் பேசுவது போல விரக்தியுடன் பேசினான். “ஆமாம். இறந்த பின் ஒருவனுக்குப் பயமும் கவலையும் இருக்கவே போவதில்லை”

ஆதில்ஷாவுக்கு வாய்விட்டுச் சிரிக்கத் தோன்றினாலும் அதை அடக்கிக் கொண்டு சொன்னார். “ஷாஹாஜியிடமிருந்து உனக்கு எந்தத் தீங்கும் வராது. அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.”

சொன்னதோடு நிற்காமல் அவர் ஷாஹாஜியை அவன் இருக்கையிலேயே வரவழைத்து அவரிடம் சொன்னார். “ஷாஹாஜி. உங்களை நான்  கர்னாடகத்துக்குத் திரும்ப அனுப்பவிருக்கும் சூழ்நிலையில் ஒரே ஒரு சத்தியம் செய்து தரவேண்டுகிறேன். சத்தியம் செய்து தருவீர்களா?”

பாஜி கோர்படேயைப் பார்த்தவுடன் ஷாஹாஜி அடிமனதிலிருந்து ஆத்திரத்தை உணர்ந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சொன்னார். “மன்னா. நீங்கள் கேட்டு இதுவரையில் நான் எதை மறுத்திருக்கிறேன். சொல்லுங்கள் நான் என்ன சத்தியம் செய்து தர வேண்டும்?

“பாஜி கோர்படே என் ஆணைக்கிணங்கவே உங்களைக் கைது செய்து இங்கு கொண்டு வந்தான். அதனால் அவனை நீங்கள் எதிரியாக எண்ணி அவனுக்கு எந்தத் தீங்கையும் எப்போதும் செய்யக்கூடாது. சத்தியம் செய்து கொடுங்கள்”

சிறிதும் யோசிக்காமல் ஷாஹாஜி சத்தியம் செய்து தந்தார். “உங்கள் விருப்பப்படியே நான் சத்தியம் செய்து தருகிறேன் அரசே. நான் எந்த நாளும் பாஜி கோர்படேக்குத் தீங்கிழைக்க மாட்டேன்….”

பாஜி கோர்படே பெரும் நிம்மதியையும், ஆதில்ஷா நெகிழ்ச்சியையும் உணர்ந்தார்கள். ஆதில்ஷா ஷாஹாஜியிடம் சொன்னார். “கசப்பான பழையவற்றை மறந்து விடுங்கள் ஷாஹாஜி. இனி இருவரும் நட்புடன் இருங்கள். அதுவே நான் வேண்டுவது.”

நட்பின் அறிகுறியாக ஷாஹாஜியும் பாஜி கோர்படேயும் அணைத்துக் கொண்டார்கள். அணைத்துக் கொண்ட போது அவன் தோளில் ஷாஹாஜியின் முகம் இருந்ததால் அவர் கண்களில் தெரிந்த மின்னல் வெட்டை பாஜி கோர்படே கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் அவன் நிம்மதியைத் தொலைத்திருப்பான்.


ஷாஹாஜி பழைய அதிகாரத்துடன் கர்னாடகத்துக்கு அனுப்பப்படுவதை விரும்பாத இன்னொருவன் அப்சல்கான். ஆதில்ஷாவின் மனைவியின் தூரத்து சகோதர உறவினன். அவரது படைத்தலைவர்களில் சக்தி வாய்ந்தவன். ஆறடிக்கும் மேல் உயரமும், யானை பலமும் கொண்டவன். ஆதில்ஷா ஆரம்பத்தில் இருந்தே ஷாஹாஜிக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக அவன் எண்ணி வந்தவன். சிவாஜி பீஜாப்பூர் வந்த சமயங்களில் அவன் பீஜாப்பூரில் இருக்கவில்லை என்றாலும் நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டு சிவாஜி என்ற சிறுவனுக்காக ஆதில்ஷா தேவையற்ற சமரசங்கள் செய்து கொண்டதாகக் கருதியவன் அவன். சராசரி உயரமும், தந்திரங்களும் நிறைந்த சிவாஜி என்னும் பொடியன் பின்னர் படிப்படியாகத் தன் அதிகாரத்தை விஸ்தீரணம் செய்த விதம் கண்டு பொருமியவன் அவன். கடைசியில் ஆதில்ஷா தீவிர நடவடிக்கை எடுத்து ஷாஹாஜியைச் சிறைப்படுத்திய போது மகிழ்ந்தவன். இப்போது பழையபடி அவர் அதிகாரத்திற்குத் திரும்பியதை அவனால் ரசிக்க முடியவில்லை.

அத்துடன் அவனுக்கு மிக வேண்டப்பட்டவர்கள் கர்னாடகத்தில் ஷாஹாஜி கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவன் ஊக்குவித்துக் கொண்டு இருந்தான். வெண்ணைய் திரண்டு வரும் போது தாழி உடையப் போவது போல் ஷாஹாஜி இப்போது அங்கே போவது அவன் நோக்கத்திற்கு எதிராகவும் இருந்தது. முக்கியமாக கனககிரி என்ற கோட்டையை அவனுக்கு மிக வேண்டப்பட்ட முஸ்தபா கான் கிட்டத்தட்ட தன் வசப்படுத்திக் கொண்டிருந்தான். ஷாஹாஜி அங்கு போய் விட்டால் அவனை அனுமதிக்க மாட்டார்…. அப்சல்கான் அவசர அவசரமாக கர்னாடகத்தில் புரட்சியில் ஈடுபட்டுள்ள தன் ஆட்களுக்கு உடனடியாக ஷாஹாஜி அங்கே வரவிருப்பதைத் தெரிவித்து எச்சரிக்கை செய்ய ஆட்களை அனுப்பி வைத்தான்.


(தொடரும்)
என்.கணேசன்

ஓரிரு நாட்களில் இந்தச் சரித்திர நாவல்  வெளியாகிறது! 704 பக்கங்கள், விலை ரூ.700/-

Thursday, December 27, 2018

இருவேறு உலகம் – 116



காலையில் கிளம்புவதற்கு முன்னும் சிசிடிவி கேமராவில் மனோகர் சிறிது நேரம் வெளிப்புறத்தை ஆராய்ந்தான்.  வெளிப்புறம் வழக்கம் போல் அமைதியாகவே இருந்தது. நிம்மதியடைந்தவனாகக் கிளம்பினான். அவன் கீழ்க்கதவைக் கிறீச்சிட்டுத் திறந்து பைக்கை வெளியே கொண்டு வந்த போது ஸ்கூட்டரில் காத்திருந்த அவனது சகா ஸ்கூட்டருடன் உள்ளே போனான்.

மின்னல் வேகத்தில்  இரண்டு பைக்குகளில் அங்கு வந்த நான்கு பேர் மனோகர் மீது பாய்ந்தார்கள். அவன் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு முன் இரண்டு பேர் அவனைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு குடோனுக்குள் நுழைந்து விட்டார்கள். சாவகாசமாக ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வெளியே என்ன சத்தம் என்று பார்க்க வெளியே வர முற்பட்ட மனோகரின் சகாவை மற்ற இரண்டு பேர்  தாக்கி மயக்கமடையச் செய்தார்கள்.

மேலும் இரண்டு பேர் ஒரு வேனிலும், இருவர் ஒரு காரிலும் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களும் உள்ளே நுழைந்தவுடன் குடோன் கதவு மறுபடி சாத்தப்பட்டது.  எல்லாம் மூன்று நிமிடங்களில் நடந்து முடிந்து வெளிப்புறம் பழைய அமைதிக்கு மாறியது. மனோகருக்கு அவர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்ற உண்மை விளங்கவில்லை. அவன் மனதில் பெரும்பயம் குடி கொண்டது. போலீஸ்காரர்களை நினைத்து அல்ல. விஸ்வத்தை நினைத்து தான். அருமையான இடம், கச்சிதமான திட்டம், அளவான ஆட்களை வைத்து யார் கவனத்தையும் அதிகமாய் ஈர்க்காதபடி அவன் போட்ட திட்டம் எப்படி தோற்றுப் போனது?....

செந்தில்நாதன் “எங்கே ஹரிணி?” என்று கேட்டார். அவன் பதில் பேசவில்லை. அவனை உறுதியாக இருவர் பிடித்துக் கொள்ள மூன்றாவது ஆள் அவன் உடைகளைச் சோதித்து ஒரு சின்னத் துப்பாக்கி, இரண்டு சாவிக் கொத்துகள் ஆகியவற்றை எடுத்து செந்தில்நாதனிடம் நீட்ட அவர் எடுத்துக் கொண்டார். ஹரிணியை அழைத்துக் கொண்டே மாடி ஏறினார்.

ஹரிணிக்குக் கீழே கேட்ட அசாதாரணமான சில சத்தங்கள் தன்னைக் காப்பாற்றும் முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் செந்தில்நாதன் அழைத்த குரல் கேட்ட பின் தான் முழுதாக நம்ப முடிந்தது. “நான் இங்கே இருக்கேன்” என்று கத்தியபடியே தானிருந்த அறையின் கதவைத் தட்டினாள்.

மனோகரிடம் இருந்து எடுத்த சாவிக் கொத்தில் ஒரு சாவி அந்த அறைக்கதவுக்குப் பொருந்தியது. உள்ளே இருந்து வெளி வந்த ஹரிணி பெரிதாகப் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என்பதைக் கவனித்த செந்தில்நாதன் அவளது தைரியத்தை மனதிற்குள் மெச்சினார்.

ஹரிணி ஈரக் கண்களுடன் உணர்ச்சி வயப்பட்டு ”ரொம்ப நன்றி சார்” என்றாள். புன்னகையுடன் தலையசைத்த செந்தில்நாதன் முதலில் அவளை இருவருடன் காரில் பத்திரமாக அனுப்பித்து வைத்தார்.

மனோகர் அவரிடம் அமைதியாகச் சொன்னான். “எனக்கு முதலமைச்சர் கிட்ட பேசணும்”

இது செந்தில்நாதன் எதிர்பார்த்தது தான். “சரி என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லித் தலையசைக்க மூன்று பேர் சேர்ந்து மனோகர், மயங்கிக் கிடந்த அவன் சகா இருவர் வாயிலும் துணியை அடைத்து கைகால்களைக் கட்டி இரண்டு சாக்கு மூட்டைகளில் அடைத்து அவர்களைக் கொண்டு போய் வேனில் போட்டார்கள். வெளியே அவர்கள் சாதாரணமாகப் பரபரப்பில்லாமல் நடந்து கொண்டார்கள்.  சரக்கை ஏற்றும் இயல்பான வேலை நடப்பது போல தெருவில் போய்க் கொண்டிருந்தவர்களுக்குத் தோன்றியது. அவர்களைக் கொண்டு போன பிறகு குடோனில் இருந்தவர்களில் இருவர் சிசிடிவி கேமராவில் ஆன பதிவுகளைப் பார்த்து கவனமாக அப்புறப்படுத்தி எடுத்து வைத்துக் கொண்டார்கள். பின் செந்தில்நாதனும் மற்றவர்களும் குடோன் கதவைப் பூட்டி விட்டுக் கிளம்பி விட்டார்கள். முப்பத்தைந்து நிமிடங்களுக்குள் அவர்களுடைய வேலை முடிந்து விட்டது.


ரிணியின் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. க்ரிஷ், உதய், பத்மாவதி மூவரும் அங்கு இருந்தார்கள். கிரிஜா மகளைப் பார்த்தவுடன் கட்டிப்பிடித்து பேரழுகை அழுது மீண்டு இப்போது பெரும் சந்தோஷத்தில் இருந்தாள். யார் கடத்தினார்கள், எதற்குக் கடத்தினார்கள் என்பதெல்லாம் தெரியாது என்றும் செந்தில்நாதன் வந்து மீட்டார் என்றும் சுருக்கமாய் பொதுவாய் சொன்ன ஹரிணி தனியாக க்ரிஷிடம் ஆரம்பத்திலிருந்து நடந்ததை விவரமாகவே சொன்னாள். கிரிஜா விருந்தாளிகளுடன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள கேசரி செய்ய சமையலறைக்குப் போக பத்மாவதி உதயிடம் சொன்னாள். “ஏண்டா, நான் மஞ்சள் துணியை மூணா கிழிச்சதைக் கிண்டல் செஞ்சியே. இப்ப என்னடா சொல்றே. கடவுள் அருள் வேலை செஞ்சுதா இல்லயா?”

உதய் தாயிடம் மெல்லச் சொன்னான். “நான் செந்தில்நாதன் தான் வேலை செஞ்சாருன்னுல்ல நினைச்சேன்”

“கடவுள் மனுசன் மூலமா தான் எதையும் செய்வாருன்னு அன்னைக்கே சொன்னேனேடா. அவர் மேல நம்பிக்கை முக்கியம்.”

உதய் குரலை மேலும் தாழ்த்தி தாயிடம் ரகசியமாய் கேட்டான். “ஆனா கடைசில நீ கடவுளுக்கு பதில் கோடியைத் தானே நம்பினே. உண்மையச் சொல்லு”

பத்மாவதி மகனை முறைத்தாள். “சம்பந்தி வீடுன்னு பாக்க மாட்டேன் தடியா. ஓங்கி அறைஞ்சுடுவேன். கடவுள் சித்தம் காசு கொடுத்து தான் ஆகணும்னு இருந்தா அதுக்கும் தயங்காதேன்னு தானடா சொன்னேன். அந்தக் காசு நீ என்ன கஷ்டப்பட்டு சம்பாதிச்சதா?”

“கிழவி, நானும் சம்பந்தி வீடுன்னு பார்க்க மாட்டேன். எங்க அரசியல் பத்திப் பேசுனா உன் கழுத்தை நெரிச்சுடுவேன்….” உதயும் மிரட்டினான்.

கிரிஜா வந்து கேட்டாள். “என்ன அம்மாவும் பிள்ளையும் ரகசியம் பேசிக்கிறீங்க?”

பத்மாவதி வாயெல்லாம் புன்னகைக்கு மாறினாள். “கடவுள் தயவுல எல்லாம் நல்லாச்சுல்லன்னு பேசிகிட்டிருந்தோம். அவ்வளவு தான்.”

கிரிஜா ஆத்மார்த்தமாய் சொன்னாள். “நீங்க அன்னிக்கு மஞ்சள் துணில காசு முடிஞ்சு வைக்கச் சொன்னப்ப இப்படி நல்லது நடக்கும்னு உங்க அளவுக்கு நான் நம்பலை. ஆனாலும் உங்க அளவு திடமான நம்பிக்கை யாருக்கும் வராது….”

உதய் சொன்னான். “அதெல்லாம் ’கோடி’ல ஒருத்தருக்கு தான் வரும் ஆண்ட்டி”. மகன் கோடிக்குக் கொடுத்த பிரத்தியேக அழுத்தம் பார்த்து ரகசியமாய் மகனைக் கிள்ளினாள் பத்மாவதி.

க்ரிஷ் தனியாக வெளியே போய் மாஸ்டருக்குப் போன் செய்து நடந்ததை எல்லாம் சொன்னான். ஹரிணி மீட்கப்பட்டதில் மகிழ்ந்த மாஸ்டர் விஸ்வம் ஆறாவதாக அனுப்பிய பணம் இல்லுமினாட்டிக்கு என்பதில் அதிர்ந்தார். கடத்தியவனை செந்தில்நாதன் தனியாக ஓரிடத்தில் அடைத்து வைத்திருக்கிறார், அவனிடம் விஸ்வம் குறித்த ஏதாவது தெரிந்து கொள்ள முடியுமா என்று முயற்சி செய்கிறார் என்று க்ரிஷ் சொன்ன போது சொன்னார். “க்ரிஷ், அவன் மூலமா அவர் விஸ்வத்தைக் கண்டுபிடிக்கறது இருக்கட்டும். அவன் மூலமா விஸ்வம் அவரைக் கண்டுபிடிச்சுடாம பார்த்துக்கச் சொல்….”

அது வரை அந்தக் கோணத்தில் யோசிக்காத க்ரிஷ் திகைத்தான். சக்தி அலைகள் பற்றி விஸ்வத்திற்கு இணையாக ஓரளவாவது அறிந்தவர் மாஸ்டர் மட்டுமே. க்ரிஷ் கவலையுடன் கேட்டான். “அதுக்கு என்ன செய்யலாம் மாஸ்டர்”

“இருட்டறைல அவனோட கண்களைக் கட்டி வைக்கச் சொல். அவன் கிட்ட எந்த விசாரணையும் வேண்டாம். பேச்சும் வேண்டாம். சாப்பிட மட்டும் ஏதாவது வேற ஆள் மூலமா அவனுக்குத் தரச் சொல். எந்தக் காரணத்தைக் கொண்டும் செந்தில் நாதன் அவன் பக்கத்துலக் கூட போக வேண்டாம். உடனடியா சொல்……”

உடனே க்ரிஷ் மாஸ்டர் சொன்னதை செந்தில்நாதனுக்குப் போன் செய்து சொன்னான். செந்தில்நாதன் மாஸ்டர் அதைச் சொல்லாமல் வேறு யார் அதைச் சொல்லி இருந்தாலும் மறுத்திருப்பார். ஆனால் அவர் மாஸ்டரை அறிவார். வட இந்தியாவில் விசாரித்ததில் எதிரியைப் பற்றியும் நன்றாகவே அறிவார். அவர் ஆபத்தை விலைக்கு வாங்க விரும்பவில்லை. மாஸ்டர் சொன்னபடியே மனோகரைக் கவனித்துக் கொள்ள சில ஆட்களை நியமித்து விட்டு, அமைதியாக முதலிலேயே உதய் அவருக்காக ஏற்பாடு செய்திருந்த இடத்திற்குப் போய் அடைக்கலமானார்.  


மாணிக்கத்திற்கு ஹரிணி  காப்பாற்றப்பட்ட செய்தி சற்று தாமதமாகத் தான் வந்து சேர்ந்தது. மணீஷிடம் அவர் சொன்னவுடன் அவன் முகத்தில் பல காலம் கழித்து சின்ன சந்தோஷம் தெரிந்தது. அவன் பெரிய மனபாரம் நீங்கியவனாய் அவளைப் பார்க்க விரைந்தான்.

சங்கரமணி மாணிக்கத்திடம் சொன்னார். “எதிரி எவ்வளவு பலசாலி. அப்படி இருக்கைல அவன் கிட்ட மாட்டின பொண்ணை செந்தில்நாதன் எப்படிடா மீட்டான்?’

அதைத் தெரிந்து கொள்ள மாணிக்கம் போலீஸ் டிபார்ட்மெண்டில் தொடர்பு கொண்ட போது அவர்கள் அறிந்திருக்கவில்லை. “உதய் கிட்ட தான் கேட்கணும். அவன் தான் செந்தில்நாதன் கூட இதுல நெருக்கமா இருந்தவன்” என்ற மாணிக்கம் உதய்க்குப் போன் செய்தார். “உதய். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. பெரிய நிம்மதி. மணீஷ் முகத்துல ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு தான் சிரிப்பையே பார்த்தேன். சரி எப்படி செந்தில்நாதன் கண்டுபிடிச்சார். கடத்துனது யாரு? ஏன் கடத்தினானாம். அவனைக் கைது செய்தாச்சா?”

“கடத்தினவன் தன்னை எக்ஸ்ன்னு தான் ஹரிணி கிட்ட அறிமுகப்படுத்தியிருக்கான். கடத்தினது எதுக்காகன்னு சொல்லலையாம். செந்தில்நாதன் அவளை பாதுகாப்பா அனுப்பிச்சுருக்கார். கடத்தினவனைக் கைது செய்துட்டு போலீஸ் ஸ்டேஷன் போறதா சொல்லி இருக்கார். ஆனா அப்பறமா அவர் கிட்ட இருந்து எந்த தகவலும் இல்லை. போன் போட்டா ஸ்விட்ச் ஆஃப் ஆயிருக்கு. என்ன ஏதுன்னு ஒன்னும் தெரியல”

மாணிக்கம் ஆபத்தை உணர்ந்தார்.

(தொடரும்)
என்.கணேசன்  

Monday, December 24, 2018

சத்ரபதி – 52


சிவாஜி தன்னுடைய வீரர்கள் காலிப் பல்லக்குடனும், அனுப்பிய பரிசுப் பொருள்களுடனும் திரும்பி வந்ததைக் கண்டு துகாராமை அவர்களுக்குச் சந்திக்க முடியவில்லை போலிருக்கிறது என்று சந்தேகப்பட்டான். ஆனால் அவன் வீரர்கள் துகாராமிடமிருந்து பதில் மடல் கொண்டு வந்திருந்தார்கள்.

சிவாஜி திகைப்புடன் அந்த மடலைப் படித்தான்.

என்னை அரண்மனைக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறாய் அரசனே. விட்டலனின் இந்தப் பக்தன் அவன் சன்னிதானம் விட்டு உன் சன்னிதானத்திற்கு வருவதனால் என்ன பலன் கண்டு விடப்போகிறேன். அதனால் மற்றவர்களுக்கும் என்ன பலன் வந்துவிடப் போகிறது?.

இறைவனைத் தவிர வேறு எவ்வித நோக்குமில்லாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன். அவனைத் தவிர வேறு நோக்கு எதுவும் என்னை மகிழ்விப்பதில்லை. அரண்மனை சுக போகங்கள் எனக்கானதல்ல. எனக்கு ஆகாரம் வேண்டுமென்றால் பிச்சை எடுத்துச் சாப்பிடுகிறேன். பட்டாடைகளும் எனக்குத் தேவையில்லை. உடுத்தக் கந்தல் உடைகள் இருக்கின்றன. படுப்பதற்கு எனக்கு மெத்தை தேவையில்லை. கற்பாறைகள் இருக்கின்றன. உடம்பை மூடிக் கொள்ள ஆகாயம் இருக்கிறது. இப்படியிருக்கிறபோது நான் யாருடைய தயவை எதிர்பார்த்து நிற்கவேண்டும்?  இறைவனிடமிருந்து விலகிப் போய் யாரும் என்ன மேன்மையைக் கண்டுவிட முடியும்?

துகாராம், மனநிறைவு என்ற செல்வத்தை நிறையப் பெற்றிருக்கிறான்; முற்பிறவியில் செய்த புண்ணிய வினைகளின் காரணமாக கடவுளின் அன்பைப் பெற்றிருக்கிறான். அதுவே அவனுடைய ஆஸ்தி. அதுவே அவனுக்குக் கவசம்.

இந்தப் பதிலில் நான் உன்னை அலட்சியப்படுத்துவதாக எண்ணி விடாதே.  இறைவனை அலட்சியப்படுத்த முடியாமல், விலக மனமில்லாமல் எழுதுகின்ற பக்தனின் பதிலாக இதைப் புரிந்து கொள்வாயாக!

சிவாஜியின் மனதை அந்தப் பதில் மடல் என்னென்னவோ செய்தது. கனவில் கேட்பவன் போலத் தன் வீரர்களிடம் அங்கு நடந்ததை எல்லாம் சொல்லச் சொல்லிக் கேட்டான். அவர்கள் துகாராம் விட்டலனைப் பார்த்துப் பேசியதைச் சொன்னார்கள். பழங்கள், பொன், பட்டாடைகளைத் தொடவும் துகாராம் மறுத்ததைச் சொன்னார்கள்….

சிவாஜி நீண்ட நேரம் தனிமையில் அமர்ந்திருந்தான். அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அரண்மனையை விட்டு அவன் புறப்பட்டான்.

வீரர்கள் துகாராமைக் கண்ட பாண்டுரங்க விட்டலன் கோயில் வாசலில் இப்போது துகாராம் இருக்கவில்லை. பல இடங்களில் தேடிச் சென்று கடைசியில் ஒரு காட்டுப் பகுதியில் துகாராமை சிவாஜி கண்டான். கருத்து, மெலிந்து, கந்தல் ஆடைகளுடன்  துகாராம் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். துகாராம் முகத்தில் தெரிந்த பேரானந்தத்தை சிவாஜி பார்த்தான். மனிதன் பொருள்கள் மூலமாகத் தேடும் பேரானந்தத்தை இறைவனைத் தவிர மற்ற எல்லாவற்றையும் துறந்து இருந்த அந்தத் துறவியின் முகத்தில் பார்த்த போது வாழ்வின் மிகப்பெரியப் பாடம் அவனுக்குக் கிடைத்தது. அவன் மனம் மிக லேசானது. ஒரு வார்த்தையும் சொல்லாமல் அவன் அவர் அருகே சென்றமர்ந்து கொண்டான். அவனும் பேசவில்லை. அவரும் பேசவில்லை. பேச்சின் அவசியம் அங்கு இருக்கவில்லை.

அரசன் தன்னைத் தேடி வந்ததும், அருகே வந்தமர்ந்ததும் துகாராமை ஆச்சரியப்படுத்தவில்லை. இறைவனின் லீலைகள் ஏராளம். எதற்கென்று ஆச்சரியப்படுவது?


சிவாஜியைக் காணாமல் அவன் அரண்மனை அல்லோலகல்லோலப்பட்டது. முந்தைய தினம் நடந்ததை எல்லாம் கேள்விப்பட்ட ஜீஜாபாய் வறண்ட குரலில் சொன்னாள். “துகாராமைக் கண்டுபிடியுங்கள். உங்கள் அரசனும் அங்கு தான் இருப்பான்”

அவள் பல காலமாகப் பயந்தது நடந்து விட்டது. எதிரிகளிடம் மகனை இழப்போம் என்ற பயம் அவளிடம் என்றுமே இருக்கவில்லை. பிரச்னைகள், துன்பங்கள், மனிதர்களிடம் மகனை இழப்போம் என்று அவள் என்றும் பயந்ததில்லை. அவள் மகனின் உறுதியை அவள் அறிவாள். ஆனால் ஆண்டவன் அவள் மகனின் மிகப்பெரிய பலமாக இருக்கும் அதே சமயம் மிகப்பெரிய பலவீனமாகவும் ஆகிவிடலாம் என்ற பயம் அவளிடம் என்றுமே இருந்து வந்தது. இன்று அது நிரூபணமாக மாறியும் விட்டது.

சிவாஜியைக் காட்டில் கண்டுபிடித்த வீரர்களும், அதிகாரிகளும் அவளிடம் கவலையுடன் வந்து சொன்னார்கள். “ராஜமாதா! மன்னர் அங்கே துகாராம் அருகே அமர்ந்திருக்கிறார். நாங்கள் அழைத்தும் வரவில்லை. அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவுமில்லை. வெறித்த பார்வை பார்க்கிறார்…. அந்தத் துறவி துகாராமிடம் மன்னரை அனுப்பச் சொன்னோம். அவர் காதிலும் நாங்கள் சொன்னது விழுந்ததாகத் தெரியவில்லை…..”

சாய்பாயும், சொரயாபாயும் விசித்து அழும் சத்தம் ஜீஜாபாய்க்குக் கேட்டது. உறுதியுடன் எழுந்த ஜீஜாபாய் மகன் வணங்கும் பவானி சிலை முன் சிறிது நேரம் பிரார்த்தித்து விட்டு, பின் அவளே மகனை அழைத்து வரப் புறப்பட்டாள்.


தாயின் வரவும் சிவாஜியின் முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தி விடவில்லை. அவன் வெறித்த பார்வை பார்த்தவனாக அமைதியாகவே அமர்ந்திருந்தான். துகாராமோ தான் மட்டும் தனிமையில் இருப்பவர் போலவே எந்தச் சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தார். ஜீஜாபாய் கம்பீரமாகவும் அமைதியாகவும் அவரை வணங்கி எழுந்து விட்டு மகன் எதிரில் நின்று பேச ஆரம்பித்தாள்.

“மகனே! அனைத்தையும் துறப்பவனே அமைதியைக் காண்கிறான் என்பதை நீ உணர்ந்து தான் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்து இங்கு அமர்ந்திருக்கிறாய் என்பதை நான் அறிவேன். ஞான மார்க்கம் என் அறிவுக்கு அதிகம் எட்டாதது என்றாலும் உன் ஆசிரியர் உனக்குப் போதித்த எத்தனையோ விஷயங்களை எட்ட இருந்து கேட்டுக் கொண்டு இருந்ததால் மேலோட்டமாகவாவது நான் அறிவேன். நீ ஒரு தனிமனிதனாக மட்டும் இருந்திருந்தால் இன்று நான் உன்னை அழைத்துப் போக வந்திருக்க மாட்டேன். உன் அமைதியைக் குலைக்க விரும்பியிருக்க மாட்டேன். நீ இன்று ஒரு அரசன். ஒரு தலைவன். அதிலும் சாதாரணமான அரசனோ, தலைவனோ அல்ல. இந்த மண்ணின் பெருமையை நிலைநாட்ட சுயராஜ்ஜியக் கனவு கண்டு சபதம் எடுத்துக் கொண்ட மாவீரன். அந்த மாவீரனிடமே நான் பேச வந்திருக்கிறேன்….”

சுயராஜ்ஜியக் கனவு பற்றி அவள் சொன்னதும் சிவாஜியின் கண்களில் ஒரு மின்னல் வந்து போனது. ஆனாலும் அவன் வெறித்த பார்வை மாறி விடவில்லை. ஆனால் தாயைச் சலனமில்லாமலாவது அவன் நேர் பார்வை பார்த்தான்.

“மகனே! கொள்ளைக்காரர்களாகவும், குறிக்கோள் இல்லாதவர்களாகவும் வாழ்ந்து வந்த ஒரு கூட்டத்தை நேர்பாதைக்கு மாற்றி இருக்கிறாய். எது கௌரவம், எது நன்மை என்று காட்டி இருக்கிறாய். சுயராஜ்ஜியக் கனவில் எதிர்களை வீரமாகவும், தந்திரமாகவும் வென்று சிறிது தூரமாகவும் வந்திருக்கிறாய். நீ உன் தனி அமைதியைத் தேடி வந்து விட்டால் உன்னை நம்பி வந்த மக்களுக்கு என்ன வழி? அவர்களை நடத்திச் செல்ல யார் இருக்கிறார்கள்? அவர்கள் என்ன செய்வார்கள்? நீ இல்லாத நிலையில் பீஜாப்பூர் சுல்தானும், முகலாயச் சக்கரவர்த்தியும் அந்த மக்களையும், நீ சேர்த்ததையும் என்ன செய்வார்கள்? இதையெல்லாம் யோசித்திருக்கிறாயா? உன் சுயராஜ்ஜியச் சபதத்திற்கும், கனவுக்கும் நீ என்ன பதில் வைத்திருக்கிறாய்?”

“இந்தத் துறவி வணங்கும் பாண்டுரங்க விட்டலனே மன்னனாக இருந்தவன். குடும்பஸ்தன். கர்ம யோகி. கீதையைப் போதித்தவன். அரசனாக மட்டுமல்ல, தர்மத்தைக் காப்பதற்காக சாரதியாகவும் கீழிறங்கி வந்து செயல்புரிந்த கதையை உனக்கு உன் ஆசிரியர் போதித்திருக்கிறாரே. அந்தப் போதனைகள் வீணா? அர்ஜுனன் யுத்த களத்தில் துறவே தேவலை என்று முடிவெடுத்தது போல் அல்லவா நீயும் முடிவெடுத்திருக்கிறாய். உனக்கு பகவத் கீதை போதித்த ஆசிரியர் உன் செயலை எந்த உலகில் இருந்தாலும் ஆதரிப்பாரா மகனே, யோசித்துப் பார்”

”அவரவர் கடமையையும், இயல்பையும் மீறி நடந்து கொண்டு யாரும் என்றும் நிரந்தர அமைதி அடைய முடியாது மகனே. உனக்குள் ஓடும் ரத்தம் வீர பரம்பரையுடையது. உன் கடமைகளை முடிக்காமல், உன் சுயராஜ்ஜியக் கனவை நிறைவேற்றாமல் நீ என்றும் அமைதியைக் காண முடியாது. உன் கடமைகளை முடித்த பின், எல்லாரையும் வழிநடத்த மாற்று ஏற்பாடுகள் செய்த பின் திருப்தியுடன் அமைதியை நாடிப் போ சிவாஜி. அப்போது தான் மனசாட்சியின் உறுத்தல் இல்லாமல், கடமைகளை முடித்து வந்திருக்கிற நிறைவில் நீ அமைதியைக் காண முடியும். நான் சொல்வதில் தவறு இருந்தால் நீயோ, இந்தத் துறவியோ சொல்லுங்கள். நான் கேட்டுக் கொள்கிறேன். தவறு இல்லையென்றால் உனக்காக, உன் சுயராஜ்ஜியக் கனவுக்காக, உன்னை நம்பி இருக்கும் மக்களுக்காக நீ என்னுடன் திரும்பி வர வேண்டும்…”

துகாராம் அப்போதும் ஒன்றும் பேசவில்லை. சிவாஜியை அவனுடைய சுயராஜ்ஜியக் கனவையும், கடமைகளையும், கர்மயோகத்தைக் குறித்து தாதாஜி கொண்டதேவ் போதித்த விஷயங்களையும் ஜீஜாபாய் நினைவுபடுத்திச் சொன்ன விதம் பெரிதும் பாதித்தது.

அந்தக் கனவைப் புதைத்து விட்டு அவன் மனம் அமைதி காண முடியுமா? அவன் மக்கள் கஷ்டப்பட்டால் அதைக் கண்ட பிறகும் அமைதி காண முடியுமா? ஜீஜாபாய் சொன்னது போல அவன் தனிமனிதன் அல்லவே? கனத்த மனதுடன் எழுந்த சிவாஜி தாயை வணங்கினான். துகாராமை வணங்கினான். தாயுடன் கிளம்பினான்.

ஜீஜாபாய் கண்கள் கலங்க நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

(தொடரும்)
என்.கணேசன் 

Thursday, December 20, 2018

இருவேறு உலகம் – 115

ந்த இல்லுமினாட்டி உறுப்பினரின் பெயர் நவீன்சந்திர ஷா. பூர்விகம் குஜராத் என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கிலாந்தில். உலக வங்கியில் வைஸ் பிரசிடெண்டாக இருக்கிறான். அவனுடைய உறவினர் ஒருவர் மூலம் அவனைப் பற்றி விஸ்வம் கேள்விப்பட்டான். அதிபுத்திசாலி என்றும் உலக நாடுகளில் எல்லாம் அவனுக்குச் செல்வாக்கு நிறைய இருக்கிறதென்றும் கேள்விப்பட்டு அவன் வரலாற்றை விஸ்வம் ஆராய்ந்தான். அவனுடைய வேகமான வளர்ச்சியும், செல்வாக்கும் அவன் ஒரு இல்லுமினாட்டியாக இருக்கலாம் என்று தோன்ற வைத்தது.  அகமதாபாத்தில் தன் பூர்விக சொத்தின் ஒரு பகுதி விற்பனைக்காக கிறிஸ்துமஸ் விடுமுறையில் வந்தவன் சில நாட்கள் இந்தியாவில் இருந்தான். ஹிந்துஸ்தானி இசையிலும் ஓஷோவின் கருத்துக்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவன் என்று அறிந்த விஸ்வம் அவன் புனேயில் ஓஷோ தியான நிலையத்தில் ஒரு வார தியான வகுப்பில் கலந்து கொண்ட போது தானும் கலந்து கொண்டான். அவனை நட்பாக்கிக் கொண்டான். இருவரும் ஒரே அறையில் தங்கினார்கள். அவனிடம் ஓஷோ பற்றி ஆழமாகப் பேசினான். ஹிந்துஸ்தானி இசையின் உன்னதத்தைப் பாராட்டினான். மூன்றாவது நாளில் ஆழ்நிலைத் தியானத்துக்குப் போய்க் காட்டினான். நவீன்சந்திர ஷா சந்தேகத்தோடு கேட்டான். “இவ்வளவு பாண்டித்தியம் பெற்ற நீ எதற்கு இந்த தியான வகுப்புக்கு வந்தாய்?”

“ஓஷோ சூழலில் ஒருவாரம் இருக்க ஆசைப்பட்டு தான்” என்றான் விஸ்வம்.

நவீன்சந்திரா ஷா புன்னகைத்தான். “ஆழ்நிலை தியானத்துக்குப் போகிற போது நீ எப்படி உணர்கிறாய்?” என்று கேட்டான்.

“அந்த நிலையில் பல விஷயங்கள் தெரிகின்றன. அது ஒரு பிரம்மாண்டமான உணர்வு. அந்த உணர்வில் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அடுத்தவர்கள் மனதில் இருப்பது உட்பட….”

நவீன்சந்திர ஷா உடனடியாக அதுசரி தானா என்று பார்க்க எண்ணினான். “சரி நான் ஒன்றை நினைக்கிறேன். நீ கண்டுபிடித்துச் சொல்கிறாயா பார்ப்போம்…” என்றான்.

சில நிமிடங்களில் ஆழ்நிலை தியானத்திற்குப் போனதாய் காட்டிக் கொண்ட விஸ்வம் சொன்னான். “நீ உன் பூர்விக வீட்டில் இருக்கும் தாத்தாவைப் பற்றி நினைத்தாய்…. “

விஸ்வம் சொன்னதையே நினைத்திருந்த நவீன்சந்திர ஷா திகைத்தான். பின் மெல்லக் கேட்டான். “எல்லா ரகசியங்களையும் இப்படியே உன்னால் தெரிந்து கொள்ள முடியுமா?”

“பெரும்பாலும் மனிதர்கள் மனதில் உள்ளதைத் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் பிரபஞ்சத்தில் எத்தனையோ ரகசியங்கள் இருக்கின்றன. அவை எல்லாம் உணர்வது கஷ்டம்” விஸ்வம் உண்மையையே சொன்னான். உதாரணத்துக்கு  அவனுடைய விதியிலேயே எல்லாம் பார்க்க முடிந்த ஜிப்ஸிக்கு ஒரு பகுதி மங்கலாகத் தான் தெரிந்திருக்கிறது. விஸ்வத்துக்கே ஏராளமான சக்திகள் இருந்தாலும் வசப்படாத சத்தியங்கள் எத்தனையோ இருக்கின்றனவே.

விஸ்வம் தொடர்ந்து மெல்லச் சொன்னான். “… இத்தனை தெரிந்த எனக்கே என் சம்பந்தப்பட்ட சிலதே புரிவதில்லை என்பதும் உண்மை. உதாரணத்துக்கு எனக்கு ஒரு கனவு அடிக்கடி வருகிறது. அதன் உண்மை என்ன, அந்தக் கனவு என்ன சொல்ல வருகிறது என்று என்னால் புரிந்து கொள்ளவே முடிந்ததில்லை…..”

“என்ன கனவு?” நவீன்சந்திர ஷா ஆர்வத்துடன் கேட்டான்.

“ஏதோ ஒரு பெரிய பிரம்மாண்டமான கட்டிடம்…. அதன் அஸ்திவாரத்தில் ஒரு பெட்டி இருக்கிறது….. பெட்டியின் மீது ஒரு பிரமிடும் அதன் நடுவில் ஒரு கண்ணும் கொண்ட படம் தெரிகிறது. அந்தக்கட்டிடம் இடிக்கப்பட்டு சிலர் அந்தப் பெட்டியைக் கண்டுபிடித்துத் திறந்து பார்க்கிறார்கள். ஒரு பழங்காலச் சுவடி இருக்கிறது. யாரோ சொல்கிறார்கள். ”இதில் உன்னைப் பற்றிச் சொல்லி இருக்கிறது”. அதோடு நான் விழித்துக் கொள்கிறேன். எனக்கு இந்தக் கனவில் எதுவுமே புரியவில்லை. ஆனாலும் என் ஏழாவது வயதில் இருந்து வருடத்துக்கு ஒரு தடவையாவது இந்தக் கனவு வருகிறது….”

நவீன்சந்திர ஷா முகத்தில் இனம் புரியாத உணர்ச்சி வந்து போனது. அவன் நிறைய யோசிப்பது தெரிந்தது. ஆனால் அவன் அந்தக் கனவு பற்றி  ஒன்றும் சொல்லவில்லை. மாறாக விஸ்வத்தின் முழு வரலாறையும் கேட்டான். விஸ்வம் ஜிப்ஸி பற்றி சொல்லாமல் சிறு வயதில் இருந்தே தனக்கு அமானுஷ்ய சக்திகளின் மீது அளவற்ற ஆர்வம் என்று ஆரம்பித்து மற்றதை எல்லாம் ஓரளவு உண்மையாகவே சொன்னான். ஒவ்வொரு சக்தியையும் பெற்றது எப்படி என்று அவன் விவரித்த போது நவீன்சந்திர ஷா பிரமிப்புடன் அவனைப் பார்த்தான்.

விஸ்வம் ஏதோ ஒரு ரகசிய சக்தி இயக்கத்தில் சேர் என்று ஆழ்மனதில் ஒரு குரல் அடிக்கடிச் சொன்னதாகச் சொன்னான். அதனால் அவன் ஒரு ரகசிய ஆன்மிக இயக்கத்தில் சேர்ந்ததாகவும் அங்கு ஆன்மிக போதனைகளே மேல் ஓங்கி சக்தி, அதிகாரம் ஒரு பொருட்டே அல்ல என்பது போல் இயக்கத்தினர் இருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாகச் சொன்னான். ஆழ்மனதில் கேட்ட குரல் இந்த இயக்கம் பற்றி அல்லவோ என்று இப்போது தான் சந்தேகப்பட ஆரம்பித்திருப்பதாகச் சொன்னான். எல்லாமே நவீன்சந்திர ஷாவை நிறைய யோசிக்க வைத்தது. ஆனால் உடனே அவன் இல்லுமினாட்டி பற்றிச் சொல்லி விடவில்லை.  

விஸ்வம் சேர்த்த சக்திகளைச் சோதித்துப் பார்க்க விரும்பிய நவீன்சந்திர ஷாவுக்கு அந்த ஒருவாரத்திலேயே விஸ்வம் தன் சக்திகளை வெளிப்படுத்தியும் காட்டினான். தியான வகுப்பில் சொற்பொழிவாற்ற வந்த ஒருவரைப் பேச விடாமல் தடுத்துக் காட்டினான். அந்தப் பேச்சாளர் வாயைத் திறப்பதும் மூடுவதுமாகவுமே இருந்தாரே ஒழிய அவருக்குப் பேச்சு வரவில்லை. ஐந்து நிமிடம் கழித்து ‘இப்போது பேச விடு’ என்று நவீன்சந்திர ஷா ஒரு தாளில் எழுதிக்காட்டிய பிறகு தன் சக்தியை விஸ்வம் விலக்கிக் கொண்டான். “நண்பர்களே” என்று பேச ஆரம்பித்த அந்தப் பேச்சாளர் பேச்சு திரும்பவும் வந்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனது இருவருக்கும் வேடிக்கையாக இருந்தது.

கடைசி நாளில் தியான அனுபவம் பற்றிப் பேச எழுந்த ஒரு இளைஞனை விஸ்வம் தியானத்துக்குப் பதிலாக அந்த இளைஞனின் காதல் அனுபவம் பற்றிப் பேச வைத்தான். எல்லோரும் தியானத்துக்கும் இவன் காதலுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்துக் கொண்டே இருந்த போது அவனைத் தியானம் பற்றிப் பேசாமலேயே விஸ்வம் பேச்சை முடிக்கவும் வைத்தான். நவீன்சந்திர ஷாவுக்கு அதைப் பார்க்கையில் பிரமிப்பு கூடியது.  ஆனால் அவன் இல்லுமினாட்டி பற்றி கடைசி வரை விஸ்வத்திடம் பேசவில்லை. மாறாக தொடர்பில் இருப்போம் என்று சொல்லி செல்போன் நம்பரை மட்டும் தந்து விட்டு நவீன்சந்திர ஷா பிரிந்தான்.

இரண்டு மாதங்கள் கழித்து ஒருநாள் லண்டனுக்கு வர முடியுமா என்று கேட்டு நவீன்சந்திர ஷா போன் செய்தான். அவன் காரணம் சொல்லா விட்டாலும் விஸ்வம் உடனே ஒத்துக் கொண்டான். அங்கு போன போது வேறு இரண்டு பேரை நவீன்சந்திர ஷா தன் நண்பர்களாக அறிமுகப்படுத்தினான். இருவரில் ஒருவர் ஸ்காட்லாண்டு யார்டில் பெரிய பதவியில் இருந்தார். இன்னொருவர் நாசாவில் விஞ்ஞானியாக இருந்தார். இருவரும் விஸ்வத்தின் கனவு, சிந்தனைகள் பற்றி ஆர்வத்துடன் கேட்டார்கள். அவர்களும் மனதில் சில வித்தியாசமான நினைவுகளை நினைத்து விட்டு அதைக் கண்டுபிடிக்க சொல்லிக் கேட்டார்கள். ஸ்காட்லாண்டு யார்டுக்காரர் நினைத்தது சிறுவயது கிரிக்கெட் விளையாட்டை என்று ஆரம்பித்த விஸ்வம் அவர் விளையாடியது எங்கே, கூட விளையாடிய நண்பர்கள் பெயர்கள் என்ன என்றெல்லாம் சொன்னான். நாசா விஞ்ஞானி நினைத்தது தாயின் மரணத்தை என்று ஆரம்பித்து அது எப்போது எப்படி நிகழ்ந்தது என்றும் சொன்னான். அவர்கள் பிரமித்துப் போனார்கள். அப்போது தான் இல்லுமினாட்டி பற்றியும், தாங்கள் அதன் அங்கத்தினர் என்றும் சொன்னார்கள்.

விஸ்வம் அந்த இயக்கம் இருப்பது உண்மை தானா என்று கேட்டு முறையான ஆச்சரியத்தைக் காட்டினான். அவர்கள் உனக்கு அதன் அங்கத்தினராக விருப்பமா என்று கேட்டார்கள். ”கண்டிப்பாக அது என் பாக்கியம்” என்று விஸ்வம் சொன்னான். உடனே அவனை லண்டனில் உள்ள ஒரு ரகசிய இல்லுமினாட்டி ஆலயத்திற்கு அழைத்துப் போனார்கள். அங்கு மேலும் இரண்டு முதியவர்கள் இருந்தார்கள். இருவரின் பெயர்கள் மட்டும் சொல்லி நவீன்சந்திர ஷா விஸ்வத்துக்கு அறிமுகப்படுத்தினான். அவர்கள் அவனைப் பற்றிச் சொல்லச் சொன்னார்கள். விஸ்வம் உண்மையும் பொய்யுமாய் கலந்து சொன்னான். தன் சக்திகளின் அளவைப் பாதியாக்கிச் சொன்னான். அவர்கள் அவன் சக்தி வாய்ந்தவன் என்பதை உணர வேண்டுமே ஒழிய அவனுடைய சக்தியின் முழு அளவு அவர்களைப் பயப்படுத்தி  விடக்கூடாது என்று நினைத்தான். அப்படியே அவர்கள் கண்டுபிடித்தாலும் அதைத் தன்னடக்கமாக அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று கணக்குப் போட்டான். இப்போது இந்தியாவின் ரகசிய ஆன்மிக இயக்கத்தில் இருப்பதையும் அதன் அதிகப்படியான ஆன்மிகம் அலுத்து விட்டது என்றும் சொன்னான். அவர்கள் கண்டுபிடிக்க முடியாத விவரங்களை எல்லாம் மறைத்தான்.

“நீ இந்த இயக்கத்தில் சேர்ந்தால் இந்த இயக்கத்துக்கு என்ன லாபம்? என்ன தரப் போகிறாய்” என்று ஒரு முதியவர் கேட்டார்.

“என் சக்திகள் எல்லாம் இந்த இயக்கத்துக்கு சமர்ப்பணம். பணமாக இவ்வளவு அனுப்புகிறேன்” என்று மிகப்பெரிய தொகையைச் சொன்னான்.

ஒரு குறிப்பிட்ட தேதியை சொல்லி அன்று ம்யூனிக் நகருக்கு வரச் சொன்னார்கள். அன்று இல்லுமினாட்டியின் சக்தி வாய்ந்த செயற்குழு கூடும் என்றும் அங்கு அவர்கள் முன் அவன் பேச வேண்டும் என்றும் அதன் பின் அவனைச் சேர்த்துக் கொள்வது பற்றித் தீர்மானிப்பார்கள் என்றும் இன்னொரு முதியவர் சொன்னார்.

விஸ்வம் நன்றி தெரிவித்து விட்டு வெளியே வந்தான். நவீன்சந்திர ஷா விஸ்வத்திடம் உற்சாகமாகச் சொன்னான். “உன்னைச் சேர்த்துக் கொள்ளும் உத்தேசம் இல்லை என்றால் இங்கே வரை கூட உன்னை வரவழைத்து இருக்க மாட்டார்கள். அது சம்பிரதாய நிகழ்வு மட்டுமே. உறுப்பினராக மட்டுமல்ல உன்னை செயற்குழு உறுப்பினராகக் கூட அவர்கள் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. தகுதி வாய்ந்த சக்தி வாய்ந்த ஆட்களை எப்போதுமே இல்லுமினாட்டி தவற விடுவதில்லை”…..

விஸ்வம் அதன் பின்னர் தான் ஆன்மீக இயக்கத்திலிருந்து மிகப்பெரிய தொகையை இல்லுமினாட்டிக்கு அனுப்பி வைத்தான்….. ஒரு இயக்கத்தில் இருந்து கழன்று கொண்டவன் உலக விதியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்த இன்னொரு இயக்கத்தில் இணையப் போகிறான்.

விஸ்வத்தின் விமானம் ம்யூனிக் நகரை வந்தடைந்தது.

(தொடரும்)
என்.கணேசன்  

Wednesday, December 19, 2018

முந்தைய சிந்தனைகள் 40

சிந்திக்க சில விஷயங்கள் என் நூல்களில் இருந்து










என்.கணேசன்

Monday, December 17, 2018

சத்ரபதி – 51


ஷாஹாஜி பயந்து கொண்டிருந்த விஷயத்தில் சிவாஜி தெளிவாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தான். ஷாஜஹானை இன்னொரு ஆதில்ஷாவாக அவன் அலட்சியமாய் நினைத்து விடவில்லை. அவன் சற்று அலட்சியமாக ஆதில்ஷா விஷயத்தில் இருந்ததே ஷாஹாஜிக்கு அபாயத்தை ஏற்படுத்தி பெரியதொரு படிப்பினையைத் தந்துவிட்டிருந்தபடியால் ஆதில்ஷாவை விட ஆயிரம் மடங்கு எச்சரிக்கையுடன் ஷாஜஹானிடம் இருக்க அவன் முடிவெடுத்திருந்தான்.

ஷாஜஹானைப் போன்ற பெரும் நிலப்பரப்பை ஆளும் சக்கரவர்த்திக்குப் பல பக்கங்களில் இருந்தும் தினசரி பல பிரச்னைகள் வந்து கொண்டிருப்பது தவிர்க்க முடியாதது. அதில் பலதும் உடனடியாக அவர் கவனிக்க வேண்டியதாக இருக்கும். அப்படி இருக்கையில் அத்தனை அவசரமில்லாத, ஆபத்தில்லாத விஷயங்களை அவர் அமைதியான காலங்களிலேயே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டி வரும். அவன் விஷயமும் அப்படிப்பட்ட குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இப்போது இருப்பதால் அவர் உடனடியாக எதுவும் கேட்க மாட்டார் என்று சிவாஜி கணக்குப் போட்டான்.

அவன் கணக்கு சரியாகவே இருந்தது. ஷாஜஹானின் பிள்ளைகளுக்குள் ஒற்றுமை இருக்கவில்லை. மகன்கள் அவ்வப்போது பிரிவதும் சேர்வதுமாக இருந்தார்கள். ஷாஜஹானின் மகள்கள் ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு சகோதரனுடன் சேர்ந்து கொண்டு தங்கள் பங்குக்கு தாங்களும் அரசியல் காய்களை நகர்த்தினார்கள். வயதான ஷாஜஹானுக்கு குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்னைகளைத் தீர்க்கவே அதிக நேரம் தேவைப்பட்டது. அத்துடன் பல இடங்களில் எல்லைப் பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டி இருந்தது. இத்தனை விஷயங்களைக் கவனிக்க வேண்டி இருக்கையில் சிவாஜி முகலாயர் சேவையில் இணைவதை உறுதிப்படுத்த எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை.

ஆறு மாதங்கள் கழித்து தான் ஷாஜஹான் தக்காணப்பீடபூமியின் கவர்னராக நியமிக்கப்பட்டிருந்த இளவரசர் முராத் மூலமாக சிவாஜி முன்பு சொன்ன விஷயமாக என்ன உத்தேசித்திருக்கிறான் என்று கேட்டு ஒரு மடல் வந்தது. சிவாஜி முடிவைச் சொல்வதற்கு முன்பு,  ஒரு காலத்தில் அவன் தந்தை வசம் இருந்த அகமதுநகர் பகுதிகளின் நிர்வாகத்தைத் திருப்பித் தருமாறு சாமர்த்தியமாக வேண்டிக் கொண்டு ஒரு மடலை இளவரசர் முராத்துக்கு அனுப்பினான். அந்த மடலை முராத் ஷாஜஹானுக்கு அனுப்பி வைத்தான். ஷாஜஹான் ஷாஹாஜியின் பழைய உரிமைகளைத் திருப்பித் தர ஆர்வம் காட்டவில்லை. சிவாஜி முகலாயர் சேவையில் இணைய வருகையில் இது குறித்து ஆதாரங்களுடன் தன் பங்கு நியாயத்தைச் சமர்ப்பிக்கலாம் என்றும் அப்போது அது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் ஷாஜஹான் பதில் சொல்ல அந்த விஷயம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

சிவாஜி ஆசைப்பட்டதும் அதைத்தான். இப்போதைய இக்கட்டான நிலைமையில் பாதுகாப்பாக இருக்க அமைதி காப்பது முக்கியம் என்று கணக்குப் போட்ட சிவாஜி பீஜாப்பூர் சுல்தானிடமோ, முகலாயர்களிடமோ எந்தப் பிரச்னைக்கும் போகாதது மட்டுமல்ல, இருக்கும் இடம் தெரியாதபடி அமைதி காத்தான். தன் முழுக்கவனத்தையும் நிர்வாகத்திலும் கோட்டைகளின் முறையான பராமரிப்பிலும் சிவாஜி கவனம் செலுத்த ஆரம்பித்தான்.



ரு நாள் மாலை மாளிகையில் அவன் இளைப்பாறிக் கொண்டிருந்த போது ஒரு யாத்ரீகன் தெருவில் பாடிக் கொண்டு போனான்:

”அனைவரிடத்திலும் ஆண்டவன் குடியிருக்கிறான்.
அதனால் அனைவரும் வணங்கத்தக்கவரே!
ஆனால் அவர்களது பண்புகளையும் ஆசைகளையும்
அரவணைத்துக் கொள்ளலாகாது!
தீ மூட்டிக் குளிர் விலகும் என்றாலும் யாரும்
தீயைத் துணியில் முடிந்து கொள்வதில்லை.
அதனால் துகா சொல்கிறான்:
“தேளிலும் பாம்பிலும் விட்டலன் இருந்தாலும்
தொட்டு வணங்காமல் தூரத்தில் வணங்கலாமே!”

பாடலைக் கேட்டவுடன் சிவாஜிக்கு அவன் ஆசிரியர் நினைவுக்கு வந்தார்.  பெரிய பெரிய தத்துவங்களை எளிய வார்த்தைகளில் சொல்லிப் புரிய வைப்பதில் தாதாஜி கொண்டதேவ் அதிசமர்த்தர். இந்தப் பாடலிலும், எளிமையிலும் அடங்கி நின்ற தத்துவத்தின் ஆழம் அவனை வியக்க வைத்தது. சிவாஜி ஒரு வீரனை அனுப்பி அந்த யாத்திரிகனை வரவழைத்தான்.

தெருவில் சத்தமாகப் பாடிச் சென்றது அரசனைத் தொந்தரவு செய்து விட்டதோ என்ற சந்தேகப் பதட்டத்துடன் அந்த யாத்திரிகன் சிவாஜி முன் வந்து நின்றான். அவன் குற்ற உணர்ச்சி தோற்றத்தில் தெரிய சிவாஜி புன்னகைத்தான்.

“மிக அருமையான, கருத்தாழம் மிக்க பாட்டைப் பாடினீர்கள் அன்பரே” என்று சொல்லி சிவாஜி அந்த யாத்திரிகனை இயல்பு நிலைக்கு மாற்றினான்.

அந்த யாத்திரிகனின் முகம் முதலில் நிம்மதியைக் காட்டிப் பின் பரவசத்திற்கு மாறியது. “துகாராம் அவர்களின் பாடல் அது அரசே. இறைவனை நெருங்கச் செய்யும் பாடல்களில் ஆழமும், சிறப்பும் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.”

சிவாஜி துகாராமைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் அவரைச் சந்தித்ததில்லை….

சிவாஜி கேட்டான். “அவருடைய பாடல்கள் அனைத்தையும் அறிவீரா யாத்திரிகரே”

“சிலவற்றை அறிவேன் அரசே. அவற்றைப் பாடிக் கொண்டே போகையில் போகுமிடம் நெருங்குவது மட்டுமல்லாமல் இறைவனையும் நெருங்குவது போல் உணர்வு ஏற்படுகிறது என்பதால் பயணத்தின் பிரயாசை தெரியாமல் இருக்க பாடிக் கொண்டே செல்கிறேன்”

சிவாஜி அந்த யாத்திரிகனை மேலும் சில துகாராம் பாடல்களைப் பாடச் சொன்னான். தயக்கமில்லாமல் அந்த யாத்திரிகன் சில பாடல்களைப் பாடப் பாட சிவாஜி மானசீகமாக வேறு உலகத்திற்குச் செல்ல ஆரம்பித்தான்.
                                            
“உன்னையே வணங்கி நிற்கும் என்னை
உன்னவனாக ஆக்கிக் கொள் இறைவா.
உன் நினைவில் இருக்கிறேன், உன்னை நம்பி இருக்கிறேன்
இது போதும் எனக்கு, இனி ஒன்றும் நான் வேண்டேன்.
கவனத்தைச் சிதற வைக்கப் பல உண்டு இவ்வுலகில்
காண்பதெல்லாம் வேண்டுமென்று பிடித்துக்கொள்ளும்
கோமாளிகளாகவே அனைவரும் இருக்கிறார்கள்.
அவர்கள் சொத்து என்று சேர்ப்பதை எல்லாம்
குப்பையாகவே நான் நினைக்கின்றேன்.
மரணம் வரை விதி விரிக்கும் வலையில்
சிந்திக்காமல் சிக்கிச் சீரழிக்கிறார்களே மக்கள்!”

அந்த யாத்திரிகனுக்கு உணவும், பரிசுப் பொருள்களும் தந்து கௌரவித்து சிவாஜி அனுப்பி வைத்தான். ஆனால் அந்தப் பாடல்கள் அவனிடம் தங்கி விட்டன. ஏதோ ஒரு தவிப்பை அவன் ஆத்மா உணர ஆரம்பித்தது. ’மரணம் வரை விதி விரிக்கும் வலையில் சிந்திக்காமல் சிக்கிச் சீரழியும் மனிதர்களில் நானும் ஒருவன் அல்லவா?’ என்று தோன்ற ஆரம்பித்தது.

துகாராம் எங்கு வசிக்கிறார் என்று சிவாஜி விசாரித்தான். பாண்டுரங்க விட்டலனின் கோயில்கள் வாசலில் தான் அவர் அதிகம் இருப்பார் என்றும், மற்ற சமயங்களில் விட்டலனைப் பற்றிப் பாடிக் கொண்டே கால் போன போக்கில் போய்க் கொண்டிருப்பார் என்றும் சொன்னார்கள். சிவாஜி துகாராமை அழைத்து வந்து தன் அரண்மனையிலேயே இருத்திக் கொள்ள ஆசைப்பட்டான். அரண்மனைக்கு வந்து தங்கியருளும்படி மடல் எழுதி, அதைப் பொற்காசுகள், பழங்கள், பட்டு வஸ்திரங்கள், பல்லக்குடன் அவருக்கு அனுப்பி வைத்தான்.

ந்த யாத்திரிகன் சொன்னது போலவே துகாராமை சிவாஜியின் வீரர்கள் பாண்டுரங்க விட்டலனின் கோயில் ஒன்றின் வாசலில் கண்டுபிடித்தார்கள். கந்தல் உடையில் மெலிந்த உருவத்திலிருந்த  துகாராம் பல்லக்கை எடுத்துக் கொண்டு வந்த வீரர்கள் அரசகுடும்பத்து ஆட்களை கோயிலில் வழிபடுவதற்காக அழைத்து வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் செல்ல வழிவிட்டு ஓரமாக உட்கார்ந்து கொண்டார்.

பல்லக்கிலிருந்து யாரும் இறங்கவில்லை. வீரர்களும் கோயிலுக்குள் நுழையாமல் அவரிடம் வந்து பழங்கள், பொற்காசுகள், பட்டு வஸ்திரங்கள் எல்லாம் முன் வைத்து வணங்கினார்கள். வணக்கத்திற்குப் பின் அவர்கள் சிவாஜியின் மடலையும் நீட்டியதும் துகாராம் அதைத் திகைப்புடன் வாங்கிக் கொண்டார். பிரித்துப் படித்தபின் அடக்க முடியாத பெருஞ்சிரிப்பு சிரித்த துகாராம் உள்ளே கருவறையில் நின்றிருந்த விட்டலனை எட்டிப் பார்த்தார்.

“விட்டலா. உன்னை நான் அவ்வளவு தொந்தரவு செய்கிறேனா என்ன? என்னை இங்கிருந்து துரத்தப் பட்டும், பொன்னும், பல்லக்கும் வைத்து ஆசை காட்டுகிறாயே இது நியாயமா? இதற்கெல்லாம் மசிபவனா நான்? என்னைச் சோதித்துப் பார்ப்பதை நீ இன்னும் நிறுத்தவில்லையா?....” என்று விட்டலனிடம் பேச ஆரம்பித்த துகாராமை வீரர்கள் வியப்புடன் பார்த்தார்கள்.

(தொடரும்)

என்.கணேசன்

Thursday, December 13, 2018

இருவேறு உலகம் – 114

விஸ்வம் ஒருசில சக்திகளைத் தன் வசப்படுத்தி விட்ட பிறகு மறுபடி ஒரு முறை அந்த ஜிப்ஸி அவன் பார்வைக்கு அகப்பட்டான். மைசூரை அடுத்த சாமுண்டி மலையில் சாமுண்டேஸ்வரி சிலையில் யோகசக்திக்கான சூட்சுமம் உள்ளது என்றும் கண்டுவரவும் சொல்லி ஒரு குரு அவனை அனுப்பி வைத்தார்.  ஒரு மாலைப் பொழுதில் அவன் அங்கு போய்ச் சேர்ந்த போது கோயிலுக்கு வெளியே இருந்த பிரம்மாண்டமான மஹிசாசுரன் சிலைக்குக் கீழே தலை கவிழ்த்தபடி அந்த ஜிப்ஸி உட்கார்ந்திருந்தான். ஆரம்பத்தில் விஸ்வம் அவனைக் கவனிக்கவில்லை. மஹிசாசுரனின் வலது கையில் இருந்த வாளையும், இடது கையில் இருந்த பெரிய நாகத்தையும் பார்த்துக் கொண்டே விஸ்வம் அவனைக் கடந்து போகையில் தற்செயலாக விஸ்வத்தின் கண்களுக்குத் முதலில் தட்டுப்பட்டது அந்த ஜிப்ஸியின் கிதார் தான். உடனே நின்று அந்த கிதார் அருகில் இருந்த உருவத்தை விஸ்வம் பரபரப்புடன் கூர்ந்து பார்த்தான். தலையைக் கவிழ்த்திருந்தாலும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிந்தது அந்த ஜிப்ஸியே தான். ஜிப்ஸி அந்தக் கணத்தில் தலையை நிமிர்த்தி அவனைப் புன்னகையுடன் பார்த்தபடி எழுந்து நின்று கேட்டான். “எப்படி இருக்கிறாய்?”

விஸ்வம் தன் வாழ்க்கையில் சிறிதாவது உண்மையாக நெருக்கத்தை உணர்ந்தது அந்த ஜிப்ஸியிடம் தான். அந்த ஜிப்ஸியால் தான் அவன் வாழ்க்கை மாற ஆரம்பித்தது என்ற காரணத்தினால் தானா இல்லை வேறு எதாவது காரணமா என்று அவனுக்கே சரியாகத் தெரியவில்லை. புன்னகையுடன் சொன்னான். “நன்றாக இருக்கிறேன்…..”

ஒரு சுற்றுலாப் பயண கும்பல் மஹிசாசுரன் சிலையை நோக்கி வரவே இருவரும்  அங்கிருந்து  நகர்ந்தார்கள். நடந்தபடியே விஸ்வம் ஆர்வத்துடன் கேட்டான். “இப்போது என்னைப் பார்த்தால் உனக்கு என்ன தெரிகிறது?”  

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் ஜிப்ஸி கேட்டான். “உனக்கு இல்லுமினாட்டி பற்றித் தெரியுமா?”

“கேள்விப்பட்டிருக்கேன். அப்படி ஒரு இயக்கம் உண்மையாய் இருக்கிறதா என்ன?”

“இருக்கிறது. இந்த உலகத்தின் விதியை ஒருநாள் அது எழுதலாம்….. அதற்கு வேண்டிய எல்லா பலத்தையும் பெற்று நாளுக்கு நாள் அது உச்ச சக்தியை நெருங்கி வருகிறது….”

விஸ்வத்திற்கு ஏமாற்றமாக இருந்தது. உலகத்தின் விதியை அவன் எழுத ஆசைப்பட ஆரம்பித்திருந்தான்….

ஜிப்ஸி கேட்டான். “மேசன் கோயில்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?”

“இல்லை”

“அவை இல்லுமினாட்டியின் கோயில்கள். பல ரகசியச் சுவடிகள், எதிர்கால ஆருடங்கள் எல்லாம் மேசன் கோயில்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் சிகாகோவில் உலகிலேயே பெரிய மேசன் கோயில் 1892 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.   21 மாடிகள் கொண்ட அந்தக் கோயில் அக்காலத்தில் சிகாகோவிலேயே மிக உயர்ந்த கட்டிடமாய் இருந்தது. அந்தக் கட்டிடத்தை 1939 ஆம் ஆண்டு சில காரணங்களால் இடித்தார்கள். அப்படி இடிக்கும் போது அஸ்திவாரத்தில் ஒரு பெட்டியில் ரகசியமாய் வைக்கப்பட்டிருந்த ஒரு பழங்காலச் சுவடி இல்லுமினாட்டியின் கைகளில் கிடைத்திருக்கிறது. அதில் உள்ள ஒரு எதிர்கால ஆருடம் உனக்கு உபயோகமாகலாம்…..”

“என்ன அது?”

“இந்தியாவில் இருந்து வரும் ஒருவன் இல்லுமினாட்டியின் போக்கை மாற்றி நிர்ணயிப்பான். புதிய சரித்திரம் படைப்பான் என்று இருக்கிறது. இல்லுமினாட்டியின் சக்தி வாய்ந்த சில தலைவர்களுக்கு மட்டும் இந்த ரகசியம் தெரியும். அந்தச் சுவடி இப்போதும் அவர்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது…. அவனைப் பற்றி நிறைய வர்ணனைகளும் அந்த சுவடில இருக்கு….”

விஸ்வம் தன் வாழ்க்கையில் இது வரை உணர்ந்திராத பரபரப்பை உணர்ந்தான். “என்ன வர்ணனைகள்?”

“தெரியலை. இல்லுமினாட்டிகள் அந்த வர்ணனைக்கேற்ற மாதிரி செயற்கையா ஒருத்தன் தயாராகி வர்றதை விரும்பல. அதனால அது பரம ரகசியமா இருக்கு.”

விஸ்வம் அவன் கையைப் பிடித்து நிறுத்தினான். “அரைகுறையாய் சொல்லி விட்டுப் போகிறாயே. முழுசா சொல்லேன்”

“எனக்குத் தெரிஞ்சதே அவ்வளவு தான். நீ தான் இப்ப சக்திகள் சேர்க்க ஆரம்பிச்சிருக்கியே. கண்டுபிடிச்சுக்கோ”

“சரி அன்றைக்கு முடிவுல மங்கலா தெரியுதுன்னு சொன்னாயே. இப்ப பார்த்து சொல்லு….”

ஜிப்ஸி அவனைக் கூர்ந்து பார்த்தான். “அது இப்பவும் மங்கலா தானிருக்கு. விதியே இன்னும் தீர்மானிக்கலையா இல்லை எனக்கு காட்ட மாட்டேங்குதான்னு தெரியல….. அந்தச் சுவடில இருக்கு எல்லா ரகசியமும். அதுல நீ உன் விதியையும் படிச்சுக்க முடியும்….கிளம்பட்டுமா?”

அவனிடம் விஸ்வம் கேட்டான். “மீண்டும் எப்போது சந்திப்போம்?”

“இனி நம் சந்திப்பு இருக்காது. அது உனக்குத் தேவையும் படாது. உன் விதியை நீயே எழுதிக் கொள்வாய்… ஆனால் கவனமாய் எழுது. ஏன்னா இதில் அழித்தல், திருத்தல் கிடையாது…..”

அவன் போய் விட்டான். போய் விட்டான் என்பதை விட சட்டேன்று மறைந்தான் என்பதே பொருத்தமாக இருக்கும். யாரவன்? ஒவ்வொரு முறையும் வந்து அடுத்த கட்ட வழியைச் சொல்லித் தந்து விட்டுப் போகிறானே. விஸ்வம் தன் சக்திகளை எல்லாம் திரட்டி ஜிப்ஸியை உணர முயன்றான். இப்போதைய அளவு இல்லாவிட்டாலும் அப்போது அவன் ஓரளவு வலிமையான சக்தியே பெற்றிருந்தான். ஆனாலும் மங்கலான பனிமூட்டமும் அதனூடே தூரத்தில் ஒரு பிரகாசமான நட்சத்திரமும் தெரிந்தது….. அதற்கு என்ன அர்த்தம் என்று சரியாக விளங்கா விட்டாலும் விதி அனுப்பிய ஆளே அவன் என்று விஸ்வம் உணர்ந்தான்.  அவன் கனவு இலக்கிற்கான வழி அவனுக்குத் தெரிந்து விட்டது. இனி அந்த வழியில் பயணிப்பது தான் அவன் செய்ய வேண்டியது…..

இல்லுமினாட்டி பற்றிய தகவல்கள் அவன் சேகரிக்க முயன்ற போது கற்பனை எது நிஜம் எது என்று பிரித்தறிய முடியாத அளவு எல்லாம் கலந்தே கிடைத்துக் குழப்பின. ஒன்றே ஒன்று தெளிவாகத் தெரிந்தது. இதை நவீன ஊடகங்கள் வழியாக அவன் கண்டிப்பாக எட்ட முடியாது. இல்லுமினாட்டி அறிஞர்களும், சக்தி வாய்ந்த மனிதர்களும் நிறைந்த இயக்கம். அதிலும் அறிவும், சக்தியும் உச்சமானால் மட்டுமே இல்லுமினாட்டியில் இணைய முடியும் என்பதில் அபிப்பிராய பேதம் யாருக்கும் இருக்கவில்லை. அதனால் அந்த இரண்டும் அதிகமுள்ள மனிதர்களுடன் நெருக்கமானால் இல்லுமினாட்டியின் ஏதாவது ஒரு தொடர்பு இழை அவனுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.  முதலில் அறிவு, சக்தி நிறைந்த சூழலில் இணைய வேண்டும் என்று அவன் எண்ணிய போது தான் அவனுக்கு மாஸ்டரின் ஆன்மீக இயக்கம் பற்றிக் கேள்விப்பட்டான். ஆன்மீகமும், மானுட நன்மையும் பிரதானமாக இருந்தாலும் மற்ற விதங்களில் கிட்டத்தட்ட இல்லுமினாட்டி உறுப்பினர்கள் போல சக்தி, அதிகாரம் மிக்கவர்களே அதிலும் இருந்தார்கள். ஒரு காலத்தில் அவன் கண்டிப்பாக இல்லுமினாட்டியையே தன் வசத்தில் கொண்டு வருவான். அதற்கு முன்னோடியாக அந்த இந்திய இயக்கத்தில் சேர்ந்து அது போன்றதொரு இயக்கத்தின் சூழலில் இருந்து கற்கத் திட்டமிட்டு அவன் அதில் இணைந்தான்.

விஸ்வம் அதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டான். முக்கியமாக மாஸ்டரிடம் இருந்து ஒரு இயக்கத்தின் தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் எப்படி இருக்கக் கூடாது என்பதையும் கற்றுக் கொண்டான். சில விஷயங்களில் மாஸ்டர் சிறந்த தலைவனாக இருந்தார். பிரச்னை என்று வரும் போது அதன் வேர் வரை சென்று புரிந்து அதைத் தீர்த்து வைப்பதில் அவர் சிறந்திருந்தார். அவர் சொல்வதை மறுப்பில்லாமல் இயக்கத்தினர் கேட்டுப் பின்பற்ற வைக்கும் ஆளுமையும் அவரிடம் இருந்தது. ஆனால் ஒரு முறை நம்பியவரை அவ்வப்போது சோதித்துப் பார்க்க அவர் தவறினார். யாரும் ஒரு முறை தோன்றுவது போல கடைசி வரை இருந்து விடுவார்கள் என்று நம்புவது முட்டாள்தனம் என்பதை அவர் உணரவில்லை. அந்த முட்டாள்தனத்தால் இயக்கத்தின் செல்வம் முழுவதும் இழந்து விட்டு ஒரு சரித்திர உதாரணமாக மாறி விட்டார்….

அந்த ரகசிய ஆன்மிக இயக்கத்தின் உறுப்பினர்களில் சக்தி வாய்ந்த அலைகள் வெளிப்படுத்துவோரிடம் மற்ற சக்தியும் அதிகாரமும் சேர்ந்திருக்கும்  மனிதர்கள் பற்றி சிறிது பேச்சுக் கொடுத்தான். அவர்கள் சொல்லும் மனிதர்கள் பற்றி குறித்துக் கொண்டு மாறுவேடத்தில் சென்று அந்த மனிதர்களிடம் பழகினான். அளவாக அவர்களிடம் தன் சக்தி அலைகளைப் பயன்படுத்தி அளந்தான். அலைவீச்சு அதிகமாக இருந்தால் அதை அவர்கள் உணர்வார்கள். அவனைப் பற்றி அடுத்தவர்களிடம் பேசுவார்கள். அதை அவன் விரும்பவில்லை. உண்மையான ஒரு இல்லுமினாட்டியிடம் மட்டுமே அவன் தன் சக்திகளின் உயரத்தைக் காட்ட நினைத்தான். அதில் தான் அவனுக்குப் பயனும் உண்டு. கண்டவனிடம் எல்லாம் சக்தி காட்டி அவன் அடையப் போவதென்ன? அளந்து அவர்கள் இல்லுமினாட்டியாக இல்லாதபட்சத்திலும் அவர்களிடம் மற்ற சக்தி, அதிகாரம் வாய்ந்த மனிதர்கள் பற்றிப் பேசினான். அவர்கள் சொல்லும் நபரைக் குறித்துக் கொண்டான்…. இப்படியே சங்கிலித் தொடராய் போனதில் ஒரு இல்லுமினாட்டியின் தொடர்பு அவனுக்குக் கிடைத்தது.

(தொடரும்)
என்.கணேசன்