சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 29, 2021

இல்லுமினாட்டி 113



க்ரிஷ் பெயரைத் தெரிவித்து அலைபேசி அடித்தது. சிந்து இதயத்தில் ஒரு பாரத்தை உணர்ந்தாள். இனி இவன் என்ன சொல்லப் போகிறானோ என்று நினைத்துக் கொண்டே எடுத்துப் பேசினாள். “ஹலோ

சிந்து, க்ரிஷ் பேசறேன்

சொல்லுங்கள்

விஸ்வம் போன் செய்தானா?”

அதற்குள் இவன் எப்படி அறிந்தான்என்று சிந்து திகைத்தாள். விஸ்வத்தைப் பற்றி இவனும் இவனைப் பற்றி விஸ்வமும் விவரங்களை எப்படியோ சீக்கிரமே தெரிந்து கொண்டு விடுகிறார்கள். க்ரிஷ் ஜெர்மனி போவான் என்று விஸ்வமும் முன்பே தெரிந்து வைத்திருந்து சொன்னது நினைவுக்கு வந்தது. அவள் பதில் சொல்லவில்லை.

ஆனால் க்ரிஷ் அந்த மௌனத்திலேயே பதிலைப் படித்துக் கொண்டுஅவன் என்ன சொன்னான் சிந்து?” என்று கேட்டான்.

சிந்து அதற்கும் பதில் சொல்லவில்லை. ஆனால் க்ரிஷ் அவளை வற்புறுத்திக் கேட்டான். “சொல் சிந்து. அவன் என்ன சொன்னான்?”

சிந்து சொன்னாள். “க்ரிஷ் என்னை வற்புறுத்திக் கேட்காதீங்க ப்ளீஸ். நான் யாரைப் பத்தியும் யார் கிட்டயும் சொல்ல விரும்பல. நீங்க பயப்படாதீங்க. நீங்க வர்றதுக்கு முன்னால் நான் உங்க வீட்டுக்குப் போக மாட்டேன். போய்த் தான் ஆகணும்கிற நிலைமை வந்தால் நானே தற்கொலை செய்துக்கறேன் போதுமா? என்னாலே யாருக்கும் எந்தக் கஷ்டமும் வராது...” சொல்லச் சொல்ல அவள் குரல் உடைந்தது.

முட்டாள் மாதிரி பேசாதே. உன்னை மாதிரி ஒரு தைரியமான பொண்ணு தற்கொலையைப் பத்திப் பேசலாமா?”

அடுத்தவங்க கையால சாகறதை விடத் தற்கொலை மேல் க்ரிஷ்சிந்து விரக்தியுடன் சொன்னாள்.

க்ரிஷ் மென்மையாகச் சொன்னான். “நீ என் அண்ணா கூட வாழ்ந்து பேரன் பேத்தி எல்லாம் பிறந்த பின்னால் செத்தா போதும் சிந்து

சிந்து அந்த வார்த்தைகளில் கண்கலங்கினாள். “க்ரிஷ் உங்களுக்கே தெரியும். இது ஆரம்பத்திலிருந்தே நாடகம்னு. அதனால தான் நீங்க ஊர்ல இல்லாதப்ப நான் அங்கே இருக்கக்கூடாதுன்னு ஊரை விட்டே அனுப்பியும் வெச்சீங்க இப்ப என்ன பேச்செல்லாம் மாறுது...”

இப்போ நீயும் பழைய சிந்துவா இல்லை.... அதனால நானும் பழைய மாதிரி பேசலை

நான் பழைய சிந்துவா இல்லைன்னு உங்களுக்கெப்படித் தெரியும்?”

உன் புதுக் குடும்பதோட நீ சேர்ந்திருக்கிற ஃபோட்டோஸ் எல்லாம் பார்த்தேன். நடிப்பில்லாத உண்மையான சந்தோஷம் உன் முகத்துல தெரிஞ்சுது. இந்த சிந்துவை நம்பலாம்னு என் மனசு சொல்லுச்சு...”

அவளைப் பற்றி அவ்வப்போதே அவன் வெளிநாட்டில் இருந்தாலும் கூட அறிந்து கொள்கிறான் என்பது அவளைத் திகைக்க வைத்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் கேட்டாள். “நம்பிக்கை இருக்கற ஆள் எதுக்கு விஸ்வம் என்ன சொன்னான்னு கேட்கறீங்க?”

விஸ்வத்தை உன்னால சமாளிக்க முடியாதுன்னு தான் கேட்டேன் சிந்துஎன் அளவுக்கு உனக்கு அவனைத் தெரியாது.... உன்னை அவன் கிட்டே இருந்து என்னால காப்பாத்த முடியும்னு நான் நம்பறேன்...”

ஆனால் சிந்துவால் அதை நம்ப முடியவில்லை. க்ரிஷ் புத்திசாலியாக இருந்தாலும் மிக மென்மையானவன். விஸ்வத்திடமிருந்து அவளைக் காப்பாற்ற அவனால் முடியாது. குரல் கரகரக்க சிந்து சொன்னாள். “க்ரிஷ். அன்னைக்கு நீங்க என் மனசை ஆராய்ச்சி செஞ்சு சொன்ன விஷயங்களுக்கும், என் அம்மா விலாசம் போன் நம்பரெல்லாம் தந்து டெல்லிக்கு அனுப்பி வெச்சதுக்கும் நான் உங்களுக்கு நன்றி சொல்லணும். இவ்வளவு செஞ்சதே போதும் வேறெந்த உதவியும் வேண்டாம். இப்போ நான் சந்தோஷமாய் இருக்கேன். ஆபத்து அவன் மூலமாய் வர்றப்ப நான் சந்தோஷமாவே செத்தும் போவேன். ஆனா உங்க குடும்பத்துக்கு எந்தப் பிரச்னையும் கண்டிப்பா ஏற்படுத்த மாட்டேன்...”

க்ரிஷ் கண்கலங்கக் கேட்டான். “அப்ப எங்கண்ணா கதி? நீ இல்லாட்டி அவன் உடைஞ்சு போயிடுவான் சிந்து. அவன் ரொம்ப நல்லவன்அவன் மாதிரி ஒருத்தன் உனக்குக் கணவனாய் கிடைக்க நீ கொடுத்து வெச்சிருக்கணும்...”

அவளுக்கும் கண்கலங்கியது. ஒரு நாடகத்தில் ஆரம்பித்திருந்தாலும் அவள் இந்த சில நாட்களாக உதயை நேசிக்க ஆரம்பித்திருக்கிறாள். முன்பெல்லாம் அவன் போன் செய்கையில் அவள் சலிப்போடு தான் பேச ஆரம்பிப்பாள். இப்போதெல்லாம் அவன் அழைத்துப் பேசும் நேரத்திற்காக அவள் ஆவலாகக் காத்திருக்கிறாள். கண்களில் நீர் வழியச் சொன்னாள். ”அவர் கிட்டே நான் யார் அனுப்பிச்சு வந்த ஆள்னு சொல்லிடுங்க. தானா அவர் என்னை வெறுக்க ஆரம்பிச்சுடுவார்

அப்படிச் சொல்றதானால் நான் ஆரம்பத்திலேயே சொல்லியிருப்பேனே சிந்து. அவன் மனசு வேதனைப்படறதைப் பார்க்க முடியாமல் தானே சிந்து நான் சொல்லலை. அவன் ஆரம்பத்திலிருந்தே உன்னை உண்மையாகவே காதலிச்சான் சிந்து.... இப்போ நீயும் மாறியிருக்கே. அவனை முதல் அளவுக்கு வெறுக்கலைன்னு நான் நினைக்கிறேன்....”

சிந்து வாயடைத்துப் போனாள். அவள் உதயிடம் ஆரம்பத்தில் என்ன உணர்ந்தாள் என்பது முதற்கொண்டு க்ரிஷ் அறிந்து வைத்திருக்கிறான்.... “க்ரிஷ் நான் என்ன மாறினாலும் பிரயோஜனம் இல்லை. விஸ்வத்தை ஏமாத்த முடியாது. அவன் எதையும் நான் சொல்லித் தான் தெரிஞ்சுக்கணும்கிற அவசியம் இல்லை. எப்போ வேணும்னாலும் என் மனசுக்குள்ளே இருக்கறத அவனால் தெரிஞ்சுக்க முடியும். அது போதும் என்னைக் கொல்றதுக்கு...”

அவன் இப்ப உன் மனசுக்குள்ளே இருக்கறதைப் படிக்கற நிலைமைல இல்லை சிந்து. இப்ப மட்டுமில்லை இன்னும் கொஞ்ச நாளைக்கு அவன் உன் கிட்ட சக்திகளைச் செலவு செய்யும் நிலைமையில் இல்லை.... அதனால தான் அவன் உன் கிட்ட போன் செய்து தான் பேசியிருக்கான்.....”

சிந்துவின் மனதில் பாதி நம்பிக்கையும், பாதி சந்தேகமும் குடிகொண்டன. அவள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே இப்படி எல்லாம் இவன் சொல்கிறானோ....

சிந்து என்னை நம்பு. நீ ஒத்துழைச்சா அவன் கிட்டே இருந்து உன்னையும் என் குடும்பத்தையும் சேர்ந்தே என்னால காப்பாத்த முடியும். அவன் என்ன சொன்னான்னு சொல்லு....”

சிந்து மெல்ல விஸ்வம் சொன்னதைச் சொன்னாள்.

க்ரிஷ் சொன்னான். “நல்லது. அடுத்த தடவை அவன் போன் பண்ணி என்ன செய்யணும்னு சொன்னால் மறுக்காமல் ஒத்துக்கோ. உடனே அவன் சொன்னதை என் கிட்டே சொல்லிட்டு நீ டெல்லியிலிருந்து சென்னை கிளம்பிப் போ. மீதியை நான் பார்த்துக்கறேன்... அண்ணா கிட்ட மட்டுமில்லாமல் எங்கம்மா கிட்டயும் பேசு... கூப்பிட்டுப் பேசினாலே அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க....”

பத்மாவதியைச் சொன்னவுடனே சிந்து புன்னகைத்தாள். “அவங்களே கூப்பிட்டு பேசிகிட்டு தான் இருக்காங்க....”

நல்லது..... சரி ஞாபகம் வெச்சுக்கோ. அவன் போன் பண்ணினவுடனேயே எனக்குத் தெரிவி. அதன் பிறகு டெல்லியில் இருக்காதே. சென்னை போயிடு.... எல்லாமே நல்லபடியா முடியும். தைரியமாயிரு...”

அந்த தைரியம் தான் சிந்துவுக்கு வரவில்லை. விஸ்வத்தை ஏமாற்றுவது சுலபம் அல்ல என்பதை அவள் அறிவாள்....


ம்யூனிக்கிலிருந்து வாஷிங்டன் போய் வர போலி பாஸ்போர்ட், விசா போன்ற உதவிகள் செய்ய வேண்டும் என்று விஸ்வம் கேட்டதற்கு வாங் வேயும், சாலமனும் திகைத்தாலும் பின் வாங் வே மெல்ல சாலமனிடம் சொன்னார். “நீங்கள் ஏதாவது செய்து தானாக வேண்டும் சாலமன்...”

ம்யூனிக்கில் எர்னெஸ்டோவைத் தீர்த்துக் கட்டுவது கஷ்டம் என்று விஸ்வம் நினைக்கிறான், வாஷிங்டனுக்குச் செல்லும் போதோ, வாஷிங்டனிலோ, வாஷிங்டனிலிருந்து திரும்பும் போதோ அவரைக் கொல்வது அவனுக்கு எளிதாக இருக்கலாம் என்று தான் இந்த உதவியைக் கேட்கிறான் என்று நினைக்கும் போதே வாங் வேக்கு இனித்தது. இந்த விஸ்வத்தை அவர் நன்றாக அறிவார். ஒன்றில் குறி வைத்து விட்டால் அந்த இலக்கை அடையாமல் அவன் ஓய மாட்டான் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். இதற்கு உதவ முடியா விட்டால் மற்ற கனவுகள் எதுவும் நிறைவேறாது என்று எண்ணியவராகத் தான் சாலமனிடம் அப்படி சொன்னார்.

ஆனால் சாலமனுக்கு அதில் உள்ள சிக்கல்களின் அளவு தெரியும். நாளையே அவர் வாஷிங்டன் போக வேண்டும். விஸ்வத்திற்கு போலி பாஸ்போர்ட், விசா கூட அவரால் ஏற்பாடு செய்து விட முடியும். ஆனால் ம்யூனிக்கிலிருந்து வாஷிங்டன் போக உதவ வேண்டும் என்றால் மற்ற ஆட்களின் உதவியையும் பெற்றால் ஒழிய அது நடக்காது. விமானநிலையம் அவர் கண்காணிப்பில் இல்லை... இம்மானுவல் இப்போது ம்யூனிக்கில் தான் இருக்கிறான்.... ஆனாலும் வருங்கால இல்லுமினாட்டி உளவுத்துறையின் தலைவனாகப் பொறுப்பேற்கவிருக்கும் அவர் தன்னை விஸ்வத்துக்கு நிரூபிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.....

கடைசியில் விஸ்வத்தின் வேண்டுகோளுக்கு அவர் ஒத்துக் கொண்டார்.



(தொடரும்)
என்.கணேசன்

Monday, July 26, 2021

யாரோ ஒருவன்? 42


ரத் தீபக்கின் வரவுக்காகப் பொறுமையில்லாமல் காத்துக் கொண்டிருந்தான். அவனால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. வெளியே காத்து நிற்கவும் முடியவில்லை. செய்தித்தாள் படிக்க முடியவில்லை. தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பதிலும் கவனம் போகவில்லை. சிறிது நேரம் உட்கார்வது, சிறிது நேரம் வெளியே நிற்பது, சிறிது நேரம் தொலைக்காட்சியில் சேனல்கள் மாற்றுவது, சிறிது நேரம் செய்தித்தாளைப் புரட்டுவது என்று மாறி மாறி ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருந்தான். நேற்று காலை சீக்கிரமாகவே தீபக் நடந்து முடிந்து வந்திருந்தான். நாகராஜ் சொன்னதை சொல்லி முடித்திருந்தான். இன்று ஏனோ இன்னமும் காணோம்...

ரஞ்சனி கேட்டாள். “நீங்க ஏன் இன்னும் வாக்கிங் போகாமலிருக்கீங்க?”

சரத்துக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எதைச் சொன்னாலும் அடுத்த கேள்வி கண்டிப்பாக எழும். ஆனால் அந்த அடுத்த கேள்விக்குச் சொல்ல அவனிடம் பதில் இல்லை. மெல்லச் சொன்னான். “இதோ கிளம்பிட்டேன்

 நல்ல வேளையாக தீபக் வாசலில் தெரிந்தான்.  ரஞ்சனி மகனிடம் கேட்டாள். “ஏன்டா லேட்

அவளும் மகன் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தாள் போலிருக்கிறது

வாக்கிங் முடிஞ்சு அப்படியே தர்ஷினி வீட்டுக்குப் போயிட்டு வந்தேன். அதான்”  என்றபடி உள்ளே வந்த தீபக் உடனடியாக அம்மாவிடம் சொல்ல ஆரம்பித்தான். “அம்மா இன்னைக்கு அந்த நாகராஜ் அங்கிள் என்ன சொன்னாரு தெரியுமா?... …”

சரத் தீபக் சொன்னதை எல்லாம் இதயம் படபடக்கக் காது கொடுத்து கேட்டான்அவனுக்கு அந்த நாகராஜ் அபாயகரமான ஆசாமியாய் தெரிந்தான். ரஞ்சனி மகன் சொன்னதை எப்படி எடுத்துக் கொள்கிறாள் என்று கூர்ந்து கவனித்தான். அவளும் எதோ அசவுகரியத்தை உணர்ந்தது போல் தெரிந்தாள். அவனுடைய இதயப்படபடப்பு அதிகரித்தது.

ரஞ்சனிக்கு எல்லாமே ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் இருந்தன. மூன்று நாள் ஒரே கனவு மகனுக்கு வந்ததில் ஆச்சரியம்இனி அந்தக் கனவு வராது என்று நாகராஜ் உறுதியாகச் சொன்னதில் ஆச்சரியம்... “நான் உனக்கு நெருங்கின ஆத்மான்னு தானே சொன்னேன். பின்னே ஏன் அவங்க கிட்ட போய் நீ கேட்டாய்?” என்று கேட்டதில் குழப்பம். இத்தனை சொன்னவன் அந்த ஆத்மா யாருடைய ஆத்மா என்று சொல்லாமல் நிறுத்திக் கொண்டதில் குழப்பம்...

தீபக் சொன்னான். “நான் அந்த நாகராஜ் அங்கிளை விடப் போறதில்லை. நச்சரிச்சாவது எல்லாத்தையும் தெரிஞ்சுக்கப் போறேன்...”

சரத் இதயத்துடிப்பு சம்மட்டி அடிகளாக மாறின. அடிவயிற்றில் என்னவோ செய்ய ஆரம்பித்தது. நல்ல வேளையாக அவன் உட்கார்ந்திருந்ததால் தலை சுற்றி விழவோ, சரியவோ இல்லை. அதன் மூலம் மனைவி, மகன் கவனத்தைக் கவரும் நெருக்கடி நேரவில்லை.

சரி முதல்ல குளிச்சுட்டு வாடா. காலேஜ் இன்னைக்கு இருக்கு. ஞாபகம் இருக்கா இல்லையா?” என்று ரஞ்சனி மகனை விரட்டினாள். தீபக் குளிக்கப் போக ரஞ்சனி சமையலறைக்குப் போனாள். சரத் அறைக்குப் போய் கல்யாணுக்குப் போன் செய்தான். தீபக் சொன்னதை எல்லாம் சரத் சொல்ல, கல்யாண் சந்தேகத்துடன் சொன்னான். “எங்கப்பா கேட்டப்ப தீபக் இதை எல்லாம் சொல்லலையே. இயற்கை பேசறதைக் கேட்கலாம்னு நாகராஜ் சொல்லிட்டதாய் சொன்னானே...”

அது அப்புறம். அதுக்கும் முன்னாடி நடந்தது இது...”

கல்யாண் சொன்னான். “அந்த ஆள் எனக்கென்னவோ கொஞ்சம் வில்லங்கமாய் தான் தெரியறான். எதுக்கும் அவனைப் பத்தி விரிவாய் விசாரிச்சுட்டு வரச் சொல்லியிருக்கேன். நாலஞ்சு நாள்ல அவனோட முழுவிவரங்கள் நமக்குக் கிடைச்சுடும். அப்பறமா நாம யோசிப்போம்


ள்ளிரவில் கிளம்பிப் போன மதன்லால் காலை ஒன்பது மணி வரைக்கும் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. அவனுக்காக டைனிங் டேபிளில் வைத்திருந்த ஐந்து சப்பாத்திகளையும், சப்ஜியையும் ஃபிரிட்ஜுக்குள் அவன் மனைவி எடுத்து வைத்தாள். அதற்கு மேல் அவள் அவனைப் பற்றிக் கவலைப்படவில்லை.  அவன் சொன்ன நேரத்தில் எப்போதும் வருவதில்லை. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அவனுடைய கான்ஸ்டபிள் ஒருவன் போன் செய்தான். “சார் இருக்காருங்களா மேடம்? இன்னமும் ஸ்டேஷனுக்கு வரலை. போனும் கிடைக்கலை…. அதான் உங்களுக்குப் போன் செஞ்சேன்

ராத்திரி போனவர் இன்னும் வீட்டுக்கே வரலைஎன்று தெரிவித்து விட்டு அலைபேசியில் வாட்சப் தகவல்களைப் படிக்க ஆரம்பித்தவள் காலத்தை மறந்து போனாள். பதினோரு மணிக்கு அவள் அலைபேசிக்கு அழைப்பு வந்தது. யார் என்று பார்த்தாள். வெறும் எண் தான் தெரிந்தது. “ஹலோ…”

உன் புருஷனை நாங்க புடிச்சு வெச்சிருக்கோம்ரிலீஸ் பண்ணனும்னா ஐம்பது லட்சம் ரூபாய் வேணும்…” என்று ஒரு கரகரத்த குரல் கேட்டது.

அவள் யாரோ தமாஷ் செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டாள்டேய் தமாஷ் செய்ய உனக்கு நானா கிடைச்சேன். அவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரியுமா? முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போட்டுடுவார் ஜாக்கிரதை.”

வெளிய இருந்தா செய்வான் தான். ஆனா பாவம் உள்ளே இருக்கானே. என்ன பண்றது?” அந்தக் குரல் கிண்டல் செய்தது.

சரளமாகக் கெட்ட வார்த்தைகளைச் சொல்லித் திட்டிய அவள் வைடா போனைஎன்றாள். அப்போதும் அவள் கணவன் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று அவளுக்குத் தோன்றவேயில்லை. அவள் கணவனைப் பார்த்துப் பலரும் நடுங்குவதை அவள் பார்த்திருக்கிறாள். அவனையே கடத்தும் தைரியம் யாருக்கு வரும்?

மறுபடியும் வாட்சப்பில் மூழ்கியவளுக்குச் சிறிது நேரம் கழிந்தவுடன் கணவனுக்குப் போன் செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. அலைபேசியில் கணவனை அழைத்த போது ஸ்விட்ச்டு ஆஃப் என்ற தகவல் வந்தது. கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பன்னிரண்டாயிருந்தது. இப்போதும் மதன்லால் வந்திருக்கவில்லை என்பதும், அழைத்த போது வந்த ஸ்விட்ச் ஆஃப் தகவலும் அவன் கடத்தப்பட்டிருப்பது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை மெள்ள அவள் மனதில் எழுப்ப ஆரம்பித்தது.

மகன்கள் இருவரும் அமெரிக்காவில் உத்தியோகத்தில் இருக்கிறார்கள் என்பதால் அவர்களை உடனடியாக அழைத்துப் பயமுறுத்த அவளுக்கு மனம் வரவில்லை. மெல்ல எழுந்து வெளியே வந்தாள். வெளியே ஒரு உறை விழுந்திருந்தது. அதை எடுத்துப் பார்த்தாள். உள்ளே ஒரு காகிதம் மடித்து வைக்கப்பட்டிருந்தது. அதைப் பிரித்துப் படித்தாள்.

இப்போது நான் சொன்னது உண்மை என்று தெரிய வந்திருக்கும் என்று நினைக்கிறேன். உன் கணவன் உயிரோடு வேண்டுமானால் ஐம்பது லட்சம் ரூபாயை ரொக்கமாகத் தயார் செய்து வை. தர வேண்டிய இடம், முறை குறித்துப் பிறகு தெரிவிக்கிறேன். போலீஸுக்குப் போனால் உன் கணவன் உயிரோடு உனக்குக் கிடைக்க மாட்டான்.”

ஐம்பது லட்சம் ரூபாய் தந்து கணவனை மீட்கும் எண்ணம் கண நேரத்திற்கும் அவளுக்கு வரவில்லை. சற்று முன் அவளை அழைத்துப் பேசிய கான்ஸ்டபிளுக்கு உடனே போன் செய்தாள். அவன் அவளை விட அதிகமாக அதிர்ந்தான். அவனுக்கு அவள் சொன்னதை நம்ப முடியவில்லை. மதன்லாலைப் போன்ற ஒரு சைத்தானை ஒருவன் கடத்திக் கொண்டு போய் பணம் கேட்டு மிரட்ட முடியும் என்பது அவனுக்கு எண்ணிக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாய் இருந்தது. உடனே அவனுக்கு அவள் வாட்சப்பில் அந்தக் கடிதத்தைப் படம் பிடித்து அனுப்பி வைத்தாள். அவன் உடனடியாக மேலதிகாரிகளுக்குப் போன் செய்து தகவலைச் சொன்னான்.

அவள் அந்தக் கான்ஸ்டபிளுக்கு அனுப்பிய அந்த மிரட்டல் கடிதப்படத்தை வேண்டிய சிலருக்கும் அனுப்பி வைத்தாள். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவள் வீடு நண்பர்கள், உறவுகள், போலீஸ்காரர்களால் நிரம்பி வழிந்தது.

ஒரு போலீஸ் உயரதிகாரி அவளிடம் சொன்னார். “கடத்தல்காரன் போன் செய்தால் முடிந்த வரை அதிக நேரம் பேசுங்கள். பணம் கொடுக்க மறுக்காதீர்கள். பணம் அதிகமானதால் கொடுக்கக் கொஞ்ச நாளாகும் என்று சொல்லுங்கள். மதன்லாலிடம் பேச வேண்டும் என்று சொல்லுங்கள்....”

கடத்தல்காரனின் பேச்சைப் பதிவு செய்ய சகல ஏற்பாடுகளும் செய்திருந்த அவர் அவளுக்கு நிறைய அறிவுரை சொல்லிக் கொண்டே போனார். அவள் கவனமாகக் கேட்டுக் கொண்டாள். அவளும் மற்றவர்களும் கடத்தல்காரனின் அழைப்பிற்காக பரபரப்புடன் காத்திருந்தார்கள். ஆனால் கடத்தல்காரன் அன்று இரவு வரை அவளைத் தொடர்பு கொள்ளவே இல்லை...


(தொடரும்)
என்.கணேசன்



Thursday, July 22, 2021

இல்லுமினாட்டி 112



வாங் வே சொன்னார். “வரும் புதன் கிழமை மாலை வாஷிங்டனில் ஒரு பொது நிகழ்ச்சி நடக்கிறது. அதில் அமெரிக்க ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி எல்லாரும் கலந்து கொள்கிறார்கள். அதில் தலைவரும் கலந்து கொள்கிறார். மறுநாள் காலை நம் இயக்கத்தின் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளப் போகிறார். அது முடிந்து அன்று மாலையே வீடுதிரும்புகிறார்...’

விஸ்வம் யோசித்தான். இப்போது எர்னெஸ்டோவின் வீட்டில் அக்ஷயும், அந்தப் பல அடுக்குப் பாதுகாப்பும் இருப்பதால் வீட்டில் அவரைத் தீர்த்துக் கட்டுவது அவ்வளவு சுலபமல்ல. இந்தப் போக்குவரத்து சமயமே அனுகூலம் என்று நினைத்த விஸ்வம் நிமிர்ந்து சாலமனிடமே கேட்டான். “போக்குவரத்தின் போது இதே அளவுப் பாதுகாப்பும் அவரைப் பின் தொடருமா?”

சாலமன் சொன்னார். “இல்லை. அவருக்குத் தன்னைச் சுற்றி இத்தனை பாதுகாப்பு எப்போதும் பிடித்தமானதல்ல. நாங்களாக வற்புறுத்தி ஓரளவு பாதுகாப்பை அவர் மீது திணிக்கிறோம். அதை மட்டும் வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொள்வார். இப்போது கூடுதலாக அந்த அமானுஷ்யனும் இருப்பான் என்று நினைக்கிறேன்....”

விஸ்வம் சொன்னான். “எனக்கு அவருடைய பயணத்தின் போது தரப்படும் அந்தப் பாதுகாப்பு விவரங்கள் வேண்டும்...”

சாலமன் சொன்னார். “பெரும்பாலும் அதை ஏற்பாடு செய்வது இம்மானுவல் தான். இந்த முறை பாதுகாப்புக்கு என்று அமானுஷ்யன் வந்திருப்பதால் அவனுடைய அபிப்பிராயத்தையும் கேட்பார்கள் என்று நினைக்கிறேன். இரண்டு நாட்களில் வெளியாகி விடும். அது வெளியானவுடன் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்

விஸ்வம் தலையசைத்து விட்டுச் சொன்னான். ”எனக்கும் வாஷிங்டன் போக ஒரு போலி பாஸ்போர்ட்டும், விசாவும் வேண்டும். நான் இங்கிருந்து வாஷிங்டன் போய் வர நீங்கள் எனக்கு உதவ வேண்டும்

சாலமன் திகைத்தார். அவர் ஒன்றும் சொல்லாமல் லேப்டாப்பைப் பார்த்தார். வாங் வேயும் திகைத்தார் என்பது அவருடைய முகபாவனையைப் பார்த்த போதே தெரிந்தது. ஆனால் விஸ்வம் அதைப் பார்த்துத் தன் கோரிக்கையைத் திரும்பப் பெறவில்லை. செய்ய முடியுமா, முடியாதா என்பது போல் பார்த்தான்.

வாங் வே சாலமனிடம் கேட்டார். “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் சாலமன்?”

ஜெர்மனியிலிருந்து கிளம்பும் ஒவ்வொரு விமானமும், ஒவ்வொரு கப்பலும், எல்லைப் பகுதியைக் கடக்கும் ஒவ்வொரு தரைவழி வாகனமும் கடும் பரிசோதனைக்குட்படுத்தாமல் வெளியே அனுப்பப்படுவதில்லை. அதில் கடுமையான சோதனைகள் இருக்கின்றன....” என்றார் சாலமன்.

விஸ்வம் வறண்ட குரலில் சொன்னான். “சுலபமாக முடியும் வேலைகளுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை

சாலமன் ஒன்றும் சொல்லவில்லை. வாங் வேயும் தர்மசங்கடமான மௌனம் காத்தார். அவருக்கு விஸ்வம் விடுத்த கோரிக்கைகளில் தவறு தெரியவில்லை. ஆனால் ஆரம்பத்திலிருந்து அவன் அவனுக்காக வேண்டியதை மட்டுமே பேசுகிறான், எல்லாம் செய்து தந்தால் அவர்களுக்கு அவன் என்ன திரும்பச் செய்வான் என்பதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை என்பது அவருக்கு நெருடலாக இருந்தது.

வாங் வே மெல்லச் சொன்னார். “அவர் ஏன் தயங்குகிறார் என்றால் இதிலிருக்கும் ஆபத்து மிகப் பெரியது. முக்கியமாக உங்களைத் தான் எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்....”

சாலமன் தொடர்ந்தார். ”ஆறடி உயரம், ஒடிசலான உடல்வாகு, முகவாய்க்கட்டையில் ஆழமான கீறல் இந்த மூன்றையும் தான் அவர்கள் பிரதானப்படுத்திப் பரிசோதிக்கிறார்கள். முதலிரண்டை மறைக்க முடியாது, மூன்றாவதைத் தாடியால் மறைக்க முடியும் என்பதால் முதலிரண்டு பொருந்தியிருந்து தாடி வைத்த ஆசாமிகளை அவர்கள் இரட்டிப்பு பரிசோதனைகள் செய்து விட்டுத் தான் போக அனுமதிக்கிறார்கள்.”

விஸ்வம் சொன்னான். “புரிகிறது. ஆனால் உங்களைப் போல் உயர்பதவியில் பல காலம் இருப்பவர்களுக்கு நண்பர்கள் பல இடங்களிலும் இருப்பார்கள். முயற்சி செய்தால் பல வழிகள் தெரியும்..”

சாலமனும் வாங் வேயும் யோசித்தார்கள். அதைப் பார்த்து விட்டு விஸ்வம் வாங் வேயிடம் சொன்னான். “இந்த இயக்கம் உலகத்தையே ஆளக்கூடியது. இதை ஆபத்துகள் இல்லாமல், கஷ்டங்கள் இல்லாமல் யாரும் கைப்பற்ற முடியாது. நேரடியாகப் பங்கேற்க முடியாது என்றீர்கள். அதை நான் ஏற்றுக் கொண்டேன். இந்த உதவிகளும் முடியாதென்றால் இந்த முயற்சியில் உங்கள் பங்கு பூஜ்ஜியமாகத் தான் இருக்கும். நாம் நம் முயற்சியில் வெற்றி பெற்றால் எனக்கடுத்த இடம் உங்களுடையதாகத் தான் இருக்கும் என்று வாக்குத் தருகிறேன். உளவுத்துறைத் தலைவராக உங்கள் நண்பர் தான் ஆக்கப்படுவார் என்பதையும் உறுதி கூறுகிறேன்....”

இருவர் முகங்களும் இந்த வாக்குறுதியில் மலர்ந்தன. விஸ்வம் தொடர்ந்து தன் நிலைமையைச் சொன்னான். ”என் பழைய சக்திகளோடு நான் இருந்தேன் என்றால் எந்த உதவியையும் உங்களிடம் நான் கேட்டிருக்க மாட்டேன். என்னாலேயே அனைத்தும் முடியும். இப்போதும் சேமித்து வைத்திருக்கும் சக்திகளில் இது முடியும் என்றாலும் இதிலேயே நான் என் சக்திகளை விரயம் செய்து விட்டால்  முக்கியமான வேலைக்கு என் சக்தி போதாமல் போய் விடும். சிறிய பின்னடைவும் நமக்கு ஆபத்தாகப் போய் விடும் என்பதால் உங்களைக் கேட்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?”


க்ரிஷ் எர்னெஸ்டோவின் பங்களாவிலிருந்து அவன் தங்கியிருந்த ஓட்டலுக்குத் திரும்பியது இம்மானுவலின் காரில் தான். போகும் போது இம்மானுவல் சொன்னான். “சிந்துவின் அலைபேசிக்கு இரண்டு நாள் முன்பு ஒரு வெளிநாட்டிலிருந்து போன்கால் வந்திருக்கிறது, முன்பு போலவே அந்த அழைப்பு எங்கிருந்து என்று கண்டுபிடிக்க முடியவில்லை

க்ரிஷுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. அழைத்திருப்பது விஸ்வமாகத் தான் இருக்க வேண்டும் என்பது அவனுக்கு உறுதியாகத் தெரியும்... அழைத்து அவன் என்ன சொன்னான், இவள் என்ன செய்யப் போகிறாள் என்றெல்லாம் தெரியவில்லை.

இம்மானுவல் க்ரிஷிடம் கேட்டான். “அவளிடம் பிரச்னை எதுவும் இல்லையல்லவா க்ரிஷ்?”

க்ரிஷ் சொன்னான். “இது வரை இல்லை. இனியும் இருக்காதபடி நான் எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டுத் தான் வந்திருக்கிறேன்....”

அவள் விஸ்வத்தின் ஆள் என்று சந்தேகப்படுபடி ஏதாவது இருக்கிறதா?” இம்மானுவல் க்ரிஷைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான்.

அவள் அவளுடைய கடந்த காலத்தால் பாதிக்கப்பட்டவள். அவளுடைய பல வினோதமான நடவடிக்கைகளுக்குமே அவளுடைய கடந்த காலம் தான் காரணமாக இருந்திருக்கிறது. அவள் தாய் போய் விட்டதும், தந்தை அலட்சியம் செய்ததும் தான் பிரச்னை

க்ரிஷுக்குத் தெரியும் இம்மானுவலின் கேள்விகளுக்கு இதெல்லாம் சரியான நேரான பதில்கள் இல்லை என்று. ஆனால் அவனுடைய சகோதரனின் காதலியை அவன் காட்டிக் கொடுப்பதாக இல்லை. ..

இம்மானுவல் சொன்னான். “இப்போது டெல்லி போய் அவள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறாள் போல் தெரிகிறது. தாயும் அவள் குடும்பமும் இவளுடன் இணைந்து விட்டார்கள் போலிருக்கிறது. ஃபோட்டோக்கள் பார்க்கிறாயா?”

இம்மானுவல் ஒரு உறையை நீட்டினான். அதில் சிந்து அவள் தாயுடனும், அவள் குடும்பத்துடனும் மகிழ்ச்சியாகவும், பாசமாகவும் இருக்கும் புகைப்படங்கள் நிறைய இருந்தன. ஒன்றில் சிந்துவும் அவள் தாயும் தோள் மேல் கை வைத்தபடி சிரித்திருந்தார்கள். இன்னொன்றில் சிந்துவும், ரகுவும், நவீனும் கைகோத்து நின்றிருந்தார்கள். இன்னொன்றில் நால்வரும் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இம்மானுவலிடம் க்ரிஷ் புகைப்படங்களைத் திரும்பத் தந்தான்.

ஓட்டலில் க்ரிஷை இறக்கி விட்டு இம்மானுவல் போய் விட்டான். க்ரிஷ் ஆழ்ந்த சிந்தனையுடன் அறைக்குப் போனான். இந்தப் படங்களைப் பார்த்தால் சிந்துவின் தாய் ஓடிப்போனவளாய் இருக்கும் என்று தோன்றவில்லை. அப்படி இருந்திருந்தால்  கடுமையான வெறுப்பைத் தாய் மீது வைத்திருந்த சிந்து இப்படிப் பாசத்துக்கு மாறியிருக்க மாட்டாள். தாய் மீது மட்டுமல்லாமல் அவள் இரண்டாம் கணவன் மீதும், அவள் மகன் மீதும் கூடப் பாசம் நீண்டு இருக்கிறது என்றால் தாய் கண்டிப்பாகக் குற்றமற்றவளாக இருக்க வேண்டும். அவர்களும் நல்லவர்களாகவே இருக்க வேண்டும். இவளைத் தாய் விட்டுப் போனதற்கும் வலுவான காரணம் இருக்க வேண்டும்.... அதனால் தான் நன்றி தெரிவித்து சிந்து குறுந்தகவல் அனுப்பி இருக்கிறாள். இதெல்லாம் நல்ல அறிகுறிகளாகத் தெரிந்தாலும் அவன் குடும்பத்திற்கிருக்கும் ஆபத்து முடிந்து விடவில்லை. விஸ்வம் அவளுக்குக் கட்டளையிட்டால் அவள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதைச் செய்து தானாக வேண்டும்....

க்ரிஷ் சிறிது யோசித்து விட்டு கடிகாரத்தைப் பார்த்தான். இப்போது இந்தியாவில் இரவு ஒன்பது மணியிருக்கும்.... அவளுக்கு அவன் போன் செய்து பேசத் தீர்மானித்தான்.


(தொடரும்)
என்.கணேசன்