சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 28, 2010

சில நேரங்களில் சில மனிதர்கள்

நியூயார்க் நகரத்தின் சுரங்கப்பாதை ஒன்றில் பிரபல எழுத்தாளர் ஒருவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அமைதியாக அமர்ந்திருந்தார். ஆட்கள் அதிகமில்லாத அந்த இடத்தில் ஒரு அமைதியான சூழ்நிலை நிலவியது. சிலர் கண்களை மூடி அமர்ந்திருந்தார்கள். சிலர் பத்திரிகைகள் படித்தபடி அமர்ந்திருந்தார்கள். திடீரென்று அங்கு ஒருவர் தன் இரண்டு குழந்தைகளுடன் வந்தார். அவர் அந்த எழுத்தாளர் அருகே கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தார். அந்த சிறுவர்கள் இருவரும் ஆறு வயதைத் தாண்டாதவர்கள். அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் அங்கிருந்த அமைதி காணாமல் போயிற்று. குழந்தைகள் சத்தம் போட்டு விளையாட ஆரம்பித்து, பின்னர் சண்டையிட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் பொருட்களை எடுத்து வீசிக்கொள்ள ஆரம்பித்தனர். அந்த தந்தையோ அந்த சிறுவர்களைக் கண்டிப்பதாகத் தெரியவில்லை. கண்களைத் திறக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.

அங்கு அமர்ந்திருந்த மற்றவர்கள் எரிச்சலுடன் அவரைப் பார்த்ததை அவர் அறியவில்லை. அந்த எழுத்தாளரோ தன்னம்பிக்கை, பொறுமை பற்றியெல்லாம் நிறைய எழுதிக் குவித்த எழுத்தாளர். அவரே பொறுத்து பொறுத்துப் பார்த்து ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தன்னருகே கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்திருந்த அந்த நபரிடம் சொன்னார். "உங்கள் பிள்ளைகள் மற்றவர்களைத் தொந்திரவு செய்கிறார்கள். அவர்களைக் கொஞ்சம் கட்டுப்படுத்துங்களேன்."

அந்த நபர் கண்களை மெள்ளத் திறந்தார். "ஆமாம்....ஏதாவது செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவர்கள் தாய் இறந்து விட்டாள். அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அவள் உடலைத் தர சிறிது நேரம் ஆகும் என்றதால் அங்கிருக்க முடியாமல் இங்கு வந்தேன். இனி என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அவர்களுக்கும் இதை எப்படி எடுத்துக் கொள்வது, என்ன செய்வது என்று தெரியவில்லை என்று நினைக்கிறேன்.... மன்னிக்கவும்"

அந்த எழுத்தாளர் அதுவரை அந்த நபர் மீதும், அந்தச் சிறுவர்கள் மீதும் கொண்டிருந்த கோபமெல்லாம் ஒரு கணத்தில் காற்றாய் பறந்து போயிற்று. அதற்குப் பதிலாக இரக்கமும் பச்சாதாபமும் மனதில் எழ அவர் மனைவி இறந்ததற்கு வருத்தம் தெரிவித்து விட்டு ஏதாவது உதவி தேவையா என்று மனதாரக் கேட்டார்.

அந்த எழுத்தாளர் 'செயல்திறன் மிக்க மனிதர்களின் ஏழு பழக்கங்கள்' என்ற புகழ் பெற்ற புத்தகத்தை எழுதிய ஸ்டீபன் ஆர். கோவே. இந்த நிகழ்ச்சியில் அந்த சிறுவர்களின் செயல்கள் மாறவில்லை. அந்த அமைதியான சூழ்நிலை மீண்டும் திரும்பவில்லை. ஆனால் அந்த குழந்தைகளும், அவர்கள் தகப்பனும் இருக்கும் சூழ்நிலை விளங்கியதும் அவர் மனநிலை முற்றிலுமாக மாறி விட்டது.

இன்னொரு நிகழ்ச்சி. கராத்தே, குங்·பூ கலைகளில் எல்லாம் மிகவும் தேர்ச்சி படைத்த ஒரு வீரர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் தியான வகுப்புகளுக்கும் தொடர்ந்து செல்பவர். ரயிலில் நன்றாகக் குடித்து விட்டு ஒருவன் ரயில் பயணிகள் ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு வம்பு செய்து சண்டையிட்டுக் கொண்டு இருந்தான். நேரமாக ஆக அவன் வார்த்தைப் பிரயோகங்கள் மிக மோசமாகப் போய்க் கொண்டு இருந்தன. ஒருசிலர் திரும்பப் பேசினர். ஒருசிலர் முகம் சுளித்துக் கொண்டு வேறிடத்திற்குப் போய் அமர்ந்து கொண்டார்கள். நீண்ட பயணமானதால் இதை நிறைய நேரம் பார்க்க நேர்ந்த கராத்தே வீரருக்கு கோபம் பொங்கி வந்தது. போய் இரண்டு தட்டு தட்ட வேண்டும் என்று நினைக்கையில் அத்தனை நேரம் அமைதி காத்த இன்னொரு பயணி அந்தக் குடிகாரனை நோக்கி சென்றதைக் கண்டு நிதானித்தார்.

அந்தப் பயணியும் தன்னைப் போலவே அடிக்கத் தான் செல்கிறார் என்று நினைத்த கராத்தே வீரருக்கு வியப்பு ஏற்படும் வண்ணம் அந்த நபர் குடிகாரன் அருகில் அமர்ந்தார். கனிவுடன் அவனிடம் கேட்டார். "உனக்கு என்ன பிரச்சனை?"

அந்தக் குடிகாரன் அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை போலத் தெரிந்தது. திகைத்துப் போய் அவரை ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாமல் பார்த்த அவன் கண்களில் நீர் திரண்டது. அவர் தோளில் சாய்ந்து கொண்டு விம்மி அழ ஆரம்பித்தான். அழுகையினூடே தனக்குத் திடீரென்று வேலை போன செய்தியைச் சொன்னான். தன் சம்பாத்தியத்தை நம்பி வீட்டில் மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருப்பதைச் சொன்னான். அந்த முதலாளியின் இரக்கமற்ற குணத்தைச் சொன்னான். சொல்லி அழுது முடித்த பின் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த நண்பர் குடிப்பது எந்தப் பிரச்சனையையும் வளர்த்துமேயொழிய குறைக்காது என்று சொன்னார். முதலாளி மேல் இருந்த கோபத்தை சக பயணிகளிடம் காட்டுவது சரியல்ல என்று சொன்னார். குடிப்பதற்கு பதிலாக அடுத்த வேலை எங்கு கிடைக்கும், அதற்காக யாரை அணுகலாம் என்று யோசித்திருந்தால் ஒரு வழி கிடைத்திருக்கலாம் என்று சொன்னார்.

அவர் பேசப் பேச அந்தக் குடிகாரன் அடைந்த மாற்றத்தைக் கண்ட கராத்தே வீரர் அது தனக்குப் பெரிய படிப்பினையாக அமைந்தது என்று ஒரு கட்டுரையில் எழுதியதை நான் படித்தேன். அவர் எழுதியிருந்தார். "அந்த நபர் ஒரு நிமிடம் என்னை முந்திக் கொண்டு அந்தக் குடிகாரனிடம் போயிருக்கா விட்டால் கண்டிப்பாக நன்றாக அவனை அடித்து காயப்படுத்தி இருப்பேன் என்பதில் சந்தேகமில்லை. முதலிலேயே வேலை போன அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் என்னாலேயே மேலும் துக்கம் விளைந்திருக்கும். அவனுடைய செய்கைகளுக்குப் பின் உள்ள துக்கத்தை அந்த நபர் உணர்ந்திருக்க வேண்டும். அவருடைய கனிவான செய்கை அவன் புண்ணுக்கு மருந்தாக அமைந்தது. அவன் அமைதியடைந்தான். அவன் இறங்க வேண்டிய இடம் வரை அவனிடமிருந்து அதற்குப் பிறகு ஒரு சத்தமோ, தொந்திரவோ இருக்கவில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லோருக்கும் அவன் மீதிருந்த எரிச்சலும், கோபமும் விலகியது என்பதை சொல்லத் தேவையில்லை."

முதல் நிகழ்ச்சியில் இருக்கும் நியாயம் இரண்டாவது நிகழ்ச்சியில் இல்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அந்த இரண்டாவது நிகழ்ச்சியிலும் அந்த செயலுக்குப் பின்னால் ஒரு காரணம் இருப்பதாக உணர்ந்த ஒரு மனிதர் காட்டிய கனிவு எப்படி அந்த சூழ்நிலையை அடியோடு மாற்றியது என்பதைப் பாருங்கள்.

நமக்குத் தவறாகத் தோன்றும் பல செயல்களுக்குப் பின்னால் பல ஆழமான காரணங்கள் இருக்கின்றன. சில காரணங்கள் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிந்தவையாக இருக்கலாம். சில காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால் அந்தக் காரணங்களை அறியும் போது புரிந்து கொள்ளல் சாத்தியமாகிறது. மன்னித்தல் சுலபமாகிறது.

எப்போதும் ஒரே மாதிரி நடந்து கொள்ள மனிதன் எந்திரமல்ல. எந்திரங்கள் கூட பழுதாகும் போது சில நேரங்களில் சில மனிதர்கள் நம் எதிர்பார்ப்புக்கு எதிர்மாறாக நடந்து கொள்வது அதிசயமல்ல. அது போன்ற சமயங்களில் அவர்கள் மீது கோபம் கொள்வதற்குப் பதிலாக ஏதாவது காரணம் இருக்கலாம் என்ற சிந்தனை நமக்குள் எழுமானால் அதைப் பெரிதுபடுத்தாமல் நகர்கிற பக்குவம் நமக்கு வந்து விடும்.

-என்.கணேசன்

நன்றி: ஈழநேசன்

Monday, January 25, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-18




ஆழ்மன சக்தியின் தன்மை குறித்து அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சிகளுக்குப் போகும் முன், ஆழ்மன சக்திகள் இருப்பதை அவர்கள் அறிவியல் முறைப்படி உணர ஆரம்பித்தது எப்படி என்றறிந்து கொள்வது அந்த சக்திகள் பற்றி மேலும் தெளிவாய் அறிய உதவும் என்று நம்புகிறேன்.

ஆழ்மனதின் அற்புத சக்திகள் குறித்து யோகிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பே அறிந்திருந்தும், உபயோகித்தும் வந்தனர் என்றாலும் அவை அறிவியல் ரீதியாக ஆராயப்பட்டது பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் தான். ஆழ்மன சக்தியால் உடல் நோய்களை குணப்படுத்த முடியும் என்ற உண்மையை அறிஞர்கள் உணர ஆரம்பித்தது அந்த சமயத்தில் தான்.

அந்தக் கண்டுபிடிப்புக்கு முன்னோடி ·ப்ரான்ஸ் ஆண்டன் மெஸ்மர் (1734-1815) என்ற ஜெர்மானிய மருத்துவர். ஆரம்பத்தில் சாதாரண மருத்துவ முறையையே பாரிஸ் நகரத்தில் பின்பற்றி வந்த அவர் தன் ஆராய்ச்சிகளின் முடிவில் நோயாளியைக் குணப்படுத்த வேறு ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்தார். 1774ல் ஒரு பெண் நோயாளிக்கு இரும்புச் சத்து கலந்த திரவத்தைக் குடிக்கக் கொடுத்து அவள் உடம்பில் பல இடங்களில் காந்தங்களை வைக்க அந்தப் பெண்மணி தன் உடலெல்லாம் ஒரு விசித்திர திரவம் பயணிப்பதாக உணர்ந்தார். சில மணி நேரங்களில் அந்தப் பெண்ணின் உடல் உபாதை நீங்கி குணமடைந்தாள்.

மனித உடலில் ஒரு காந்த வகை திரவம் ஓடுகிறது என்றும் அது தடைப்படும் போது நோய்கள் உருவாகின்றன என்றும் அந்த திரவம் தங்கு தடையில்லாமல் செல்லும் போது நோய்கள் குணமடைகின்றன என்றும் அவர் நம்பினார். பின் உடலின் வெளிப்புறத்தில் காந்தங்கள் உபயோகப்படுத்துவதை நிறுத்தி விட்டார். தன்னிடம் உள்ள காந்த சக்தியாலேயே நோயாளியின் உடலில் உள்ள காந்த திரவ ஓட்டத்தில் தடைகளை நீக்குவதாக எண்ணி அதை செயல்படுத்தினார். நோயாளிகள் குணமடைந்தனர்.


பிரான்ஸ் அரசியின் உதவிப் பெண்களில் ஒருவர் பக்கவாதம் வந்து அவர் மெஸ்மரின் சிகிச்சையால் குணமாகி விட அந்தப் பெண்மணி அரண்மனையில் மெஸ்மரின் சிகிச்சைக்கு நடமாடும் உதாரணமாக மாறினார். இது போல் பல மேல்மட்ட பிரபுக்களும் சிகிச்சையால் பலனடைந்தார்கள். மெஸ்மரின் புகழ் பரவ ஆரம்பித்தது. அவரிடம் வரும் நோயாளிகளின் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரிக்கவே அவருடைய வீட்டில் சிகிச்சைக்கு இடம் போதவில்லை. ஒரு பெரிய ஓட்டலை ஆஸ்பத்திரியாக மாற்றி அங்கு சிகிச்சை செய்து வந்தார். ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை செய்தார்.

அங்கும் தினமும் வர ஆரம்பித்த நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகவே தனித்தனியாக நோயாளிகளைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக கும்பல் கும்பலாக குணப்படுத்த ஆரம்பித்தார். அவர்களைப் பல வழிகளில் ஹிப்னாடிச உறக்க நிலைக்குக் கொண்டு வந்து குணப்படுத்திய முறையில் இசையையும் பயன்படுத்தினார். தொலைதூரத்தில் இருந்தும் பலர் அவரைத் தேடி வர ஆரம்பிக்க அது பல மருத்துவர்களின் பொறாமையை வளர்த்தது. அவர்கள் மெஸ்மர் பயன்படுத்தும் முறைகள் மருத்துவத் துறைக்குப் பொருந்தாதவை என்று குற்றம் சாட்டினார்கள். மதவாதிகள் அவர் சாத்தானை பயன்படுத்தி நோயாளிகளைக் குணப்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டினார்கள்.

பிரான்ஸ் அரசரான பதினாறாம் லூயி 1784ல் மெஸ்மரின் சிகிச்சை முறை குறித்து ஆராய ஒரு குழுவை நியமித்தார். அதில் அமெரிக்க விஞ்ஞானியான பெஞ்சமின் ·ப்ராங்க்ளினும் இடம் பெற்றிருந்தார். அந்தக் குழு மெஸ்மர் நோய்களைக் குணப்படுத்தினாரா இல்லையா என்பதை விட அவர் சொன்னபடி மனித உடலில் அது வரை அறிந்திராத ஒரு வகை காந்த திரவம் ஓடுகிறதா என்பதில் கவனம் செலுத்தியது. கடைசியில் மெஸ்மர் சொன்னபடி மனித உடலில் அப்படியொரு காந்த திரவம் இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை என்று கூறி தன் அறிக்கையை சமர்ப்பித்தது. எந்த காந்த திரவ ஓட்டத்தை சமன்படுத்தி அவர் நோய்களைக் குணப்படுத்துவதாகச் சொன்னாரோ அந்த காந்த திரவமே இல்லை என்று ஆனதால் அவரது சிகிச்சை முறை கேள்விக்குறியாகியது. ஏராளமானோர் சிகிச்சையில் குணமாகியிருந்த போதும் அது விசாரணையாளர்களின் விஞ்ஞான அணுகுமுறைக்கு பதிலாகவில்லை. 1785ல் மெஸ்மர் நாட்டையே விட்டு வெளியேறினார். பின் அவர் வாழ்ந்த முப்பதாண்டுகள் பற்றி பெரிய செய்திகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.

(முன்பே குறிப்பிட்டது போல இந்தியா, திபெத் போன்ற நாடுகளில் ஆழ்மனதைக் குறித்து ஆழ்ந்த ஞானம் பெற்றிருந்த யோகிகள் மெஸ்மர் வாழ்ந்த காலத்திலேயே இருந்த போதிலும், மேலைநாடுகளில் மனம் ஒரு பெரிய விஷயமாகக் கருதப்படவில்லை. பதினேழாம் நூற்றாண்டில் டெஸ்கார்ட்டிஸ் என்ற ஞானியின் வரவிற்குப் பின்பு தான் அங்கு மனம், சிந்தனை ஆகியவை ஒரு அந்தஸ்தைப் பெற ஆரம்பித்திருந்தது. எனவே மெஸ்மர் தன் சிகிச்சையில் ஆழ்மனதை உபயோகித்தும் கூட அதன் பங்கை உணராமலிருந்தார். ஆரம்ப காலத்தில் செய்த சிகிச்சைகளால் மனித உடலில் காந்த திரவம் என்ற பெயரை அவர் நம்ப, பெயரை ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் விளைவை துரதிர்ஷ்டவசமாகப் புறக்கணித்தனர்.)

மெஸ்மர் தன் சிகிச்சை முறைகளில் ஓய்வு பெற்றும் கூட மெஸ்மரின் சீடர்களில் ஒருவரான மார்கி டி புய்செகுர் என்ற நிலப்பிரபு அவருடைய முறைகளைப் பின்பற்றி சிகிச்சை செய்தும், ஆராய்ச்சி செய்தும் வந்தார். அவர் ஒரு முறை விக்டர் ரேஸ் என்ற தன்னிடம் வேலை பார்க்கும் குடியானவனை ஆழ்மன உறக்கத்தில் ஆழ்த்திய போது சாதாரணமாக எஜமானிடம் பேசத் தயங்கும் விஷயத்தை எல்லாம் அவன் பேசினான். ஆனால் விழித்த போது தான் முன்பு பேசியது எதுவும் விக்டர் ரேசுக்கு நினைவிருக்கவில்லை. ஒரு முறை அவன் ஆழ்மன உறக்கத்தில் தன் சகோதரியிடம் இட்ட சண்டையைப் பற்றி சொல்ல மார்கி டி புய்செகுர் சகோதரியிடம் சமாதானமாகப் போகும் படி கட்டளையிட விழித்து எழுந்த விக்டர் ரேஸ் அவர் சொன்னது நினைவில்லாத போதும் அவர் சொன்னபடியே செய்து விட்டு வந்தது ஆழ்மன சக்தியை புய்செகுருக்கு அறிமுகப்படுத்தியது.

அவர் மெஸ்மரின் சிகிச்சை முறையிலிருந்து ஒருபடி முன்னேறி காந்த சிகிச்சை செய்பவர் சக்தியை விட சிகிச்சை பெறுபவரின் நம்பிக்கையான மனநிலை தான் சிகிச்சையின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் அந்த ஆழ்மன உறக்கத்தில் அந்த நம்பிக்கையை சிகிச்சை பெறுபவருக்கு சிகிச்சை தருபவர் ஏற்படுத்த முடிந்தால் அது பல அற்புதங்களை நிகழ்த்த வல்லது என்றும் கூறினார்.


இப்படி சிறிது சிறிதாக மெஸ்மரின் சிகிச்சை முறை காந்த சிகிச்சையுடன், ஆழ்மன சிகிச்சையுமாக சேர்ந்து உலகமெங்கும் பரவ ஆரம்பித்து 1834ல் ஜேம்ஸ் பெய்ர்டு என்ற மருத்துவரின் காலத்தில் ஹிப்னாடிசமாக உருவெடுத்தது. அவர் தன் ஆராய்ச்சிகளில் இந்த சிகிச்சையால் ஆழ்மன உறக்கத்தில் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒரு வித்தியாசமான மாறுபாடே உடலில் நோய்கள் குணமாகக் காரணமாக இருக்கிறது என்று கண்டு பிடித்தார். அவர் ஆராய்ச்சியில் காந்த சிகிச்சை பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆழ்மன உறக்க நிலை முக்கிய இடத்தை பிடித்தது. அது வரை ஆழ்மன உறக்கத்தில் ஆழ்த்தும் முறைக்கு 'மெஸ்மெரிசம்' என்ற இருந்த பெயர் போய் வித்தியாசப்படுத்திக் காட்ட ஜேம்ஸ் பெய்ர்டு 'ஹிப்னாடிசம்' என்ற பெயரை சூட்டினார்.

தவறான கருத்து ஒன்றால் அங்கீகாரம் மறுக்கப்பட்ட மெஸ்மர் ஆழ்மன ஆராய்ச்சிக்குப் போட்ட பிள்ளையார் சுழி பின் பல ஆராய்ச்சியாளர்களுக்கு ஆராய்ச்சி செய்ய இப்படி வழி வகுத்தது. ஹிப்னாடிசம் மூலம் ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி உடல் நோய்களில் பலவற்றை குணப்படுத்தலாம் என்ற கண்டுபிடிப்புக்கு இப்படி அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் எட்டினார்கள். இது ஒரு பெரிய மைல் கல்லாய் அமைந்தது.

(நாம் முந்தைய அத்தியாயங்களில் கண்ட அபூர்வ மனிதர்கள் எட்கார் கேஸ் முதலானோர் ஆழ்மன உறக்கத்தின் போதே தங்களின் அபூர்வ சக்தியை வெளிப்படுத்தினார்கள் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்)

மேலும் பயணிப்போம்.....

(தொடரும்)

நன்றி: விகடன்

Wednesday, January 20, 2010

கலைந்த கனவும் கலையாத மனமும்

அறிவு கூர்மையும், உழைக்கும் உறுதியும் இருந்து விட்டால் கூட காணும் கனவு நனவாக முடியும் என்கிற கட்டாயமில்லை. விதியின் தீர்மானமும் ஒத்துழைத்தால் மட்டுமே ஒரு கனவு நனவாக முடியும் என்ற கசப்பான உண்மையை ஒரு ஏழை இளைஞன் தன் வாழ்வில் உணர்ந்தான்.

மைசூரைச் சேர்ந்த அந்த இளைஞன் ஒரு ஆசிரியரின் மகன். பள்ளிக்கூடத்தில் அவன் மிக புத்திசாலியான மாணவன் என்று பெயரெடுத்தான். அவனுடைய நீண்ட நாள் கனவு ஐஐடியில் (IIT- Indian Institute of Technology) பொறியியல் வல்லுனராகப் பட்டம் பெற வேண்டும் என்பது தான். அதற்கு நுழைவுத் தேர்வில் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும். நுழைவுத் தேர்வு மிகக் கடினமானது. அதற்கான விலை உயர்ந்த புத்தகங்கள் வாங்குமளவு வசதி இல்லை. அதற்கு அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் பண வசதியும் இல்லை. ஆனாலும் அந்த இளைஞனும் அவனுடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து அந்த நுழைவுத் தேர்வை எழுத எண்ணினர்.

முந்தைய வருடக் கேள்வித்தாள்களுக்கான பதிலை எல்லாம் எல்லோரும் கலந்து விவாதித்து எழுதிப் பார்த்துக் கொண்டு என்னவெல்லாம் கேட்கக் கூடும் என்று ஆலோசித்து அனைவரும் கடினமாக உழைத்தனர். அந்தக் கடினமான நுழைவுத் தேர்வில் அந்த இளைஞன் அகில இந்திய அளவில் பதினேழாம் இடத்தில் வந்தான். புத்தகங்கள் வாங்காமல், பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாமல் அந்த இடத்தைப் பிடிப்பது சாதாரண விஷயமில்லை. அவன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை.

ஆனால் ஐஐடியில் பட்டப்படிப்பு முடிக்க ஆகும் செலவை அறிந்த போது அவனுடைய தந்தை அதிர்ச்சி அடைந்தார். ஐந்து மகள்களும், நான்கு மகன்களும் உடைய அந்தத் தந்தைக்கு ஒரு மகனின் கல்வியை மட்டும் கவனித்தால் போதாதல்லவா? ஆசிரியரான அவருக்கு அந்த அறிவாளியான மகனின் கனவுக்கு உதவ முடியவில்லையே என்ற வருத்தம் எந்த அளவு இருந்திருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. மகனை அழைத்து அவன் கனவுப் படிப்பு தற்போதைய குடும்ப சூழ்நிலையில் சாத்தியமல்ல என்று சொன்னார்.

இறுதியில் அந்த இளைஞன் தன் கனவைக் கலைக்க வேண்டியதாயிற்று. அவனை விடக் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற அவனுடைய சில நண்பர்கள் ஐஐடியில் சேர அவர்களை வழியனுப்பி விட்டு வந்த அந்த இளைஞன் மனம் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஆனாலும் அவன் இடிந்து போய் உட்கார்ந்து விடவில்லை. விதி கொடுமையானது என்று புலம்பிக் கொண்டு செயலற்று இருந்து விடவில்லை. தன்னுடைய வாழ்விற்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும், எது முடிகிறதோ அதை சிறப்பாகச் செய்து வாழ்வைத் தொடர வேண்டும் என்று எண்ணிய அந்த இளைஞன் மைசூரிலேயே உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் வல்லுனர் பட்டப் படிப்பு பெற்றார். சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே 1967ல் அந்தப்பட்டப் படிப்பையும், 1969ல் கான்பூரில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றான் அந்த இளைஞன். எழுபதுகளில் கணினி(கம்ப்யூட்டர்) என்ற அபூர்வ இயந்திரம் இந்தியாவிலும் அடியெடுத்து வைத்தது. அந்தக் காலக் கட்டத்தில் பெரிய பெரிய நிறுவனங்களிலும், சில அரசாங்கத் துறைகளிலும் மட்டுமே கணினிகள் பயன்படுத்தப்பட்டன. அந்த இளைஞன் "பத்னி கம்ப்யூட்டர்ஸ்" என்ற நிறுவனத்தில் 1977ல் பொது மேலாளராகச் சேர்ந்தான். அப்போது கணினிகளின் நுணுக்கத்தை அறிந்து வர அந்த இளைஞனை அந்த நிறுவனம் அமெரிக்காவுக்கு அனுப்பியது.

பட்டப்படிப்பு காலங்களில் கூட வேலைகள் செய்து கொண்டு பணத்தோடு அறிவையும் சேர்த்துக் கொள்ளும் பழக்கத்தைப் பெற்றிருந்த அந்த இளைஞனுக்கு அந்தப் பயணம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அமெரிக்காவில் கணினிகள் பற்றி முழுவதுமாக அறிந்து வந்த அந்த இளைஞன் எதிர்காலத்தில் கணினிகளின் தாக்கம் இந்தியாவிலும் கண்டிப்பாக அதிகமாகவே இருக்கும் என்பதைக் கணித்தான். கணினிகளின் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றைத் தானே ஆரம்பிக்க எண்ணினான். சேமிப்பு ரூபாய் பத்தாயிரம் மட்டுமே கையில் இருந்தது.

அப்போது அவனுக்கு திருமணமும் ஆகியிருந்தது. மனைவியும் படித்து நல்ல உத்தியோகத்தில் இருந்தவள். அவளிடம் அவன் ஆலோசனை கேட்ட போது நல்ல சம்பளம் உள்ள வேலையை விட்டு விட்டு சேமிப்பை எல்லாம் போட்டு ஒரு புதிய முயற்சியில் ஈடுபடுவது புத்திசாலித்தனமல்ல என்று சொன்னாள். நடைமுறைக்கு ஏற்ற நல்ல அறிவுரையாக அது இருந்த போதும் எதிர்காலத்தில் கணினிகள் ஆதிக்கம் கண்டிப்பாக அதிகம் இருக்கும் என்று கணக்குப் போட்ட அந்த இளைஞன் துணிவுடன் தன் மனைவியின் துணையுடனும், தன் நண்பர்கள் சிலர் துணையுடனும் ஒரு புதிய நிறுவனம் ஆரம்பித்தான். புனேயில் 7-7-1981ல் ஒரு சிறிய வீட்டில் ஆரம்பிக்கப்பட்ட அந்த நிறுவனம் இன்று உலக நாடுகளில் எல்லாம் கிளைகள் கொண்ட பிரம்மாண்டமான நிறுவனமாக கோலோச்சி நிற்கின்றது. அந்த நிறுவனம் இன்போசிஸ். அந்த இளைஞன் நாராயணமூர்த்தி.

ஐஐடியில் பட்டப்படிப்பு என்ற ஒரு கனவு கலைந்த போது அவர் தன்னை அதிர்ஷ்டமில்லாதவனாக முத்திரை குத்திக் கொள்ளவில்லை. என்ன செய்தாலும் நமக்கு வாய்ப்பதென்னவோ இவ்வளவு தான் என்று முயற்சிகளை அவர் குறைத்துக் கொள்ளவில்லை. ஒரு கதவை மூடும் இறைவன் அதை விடச் சிறந்த இன்னொரு கதவைத் திறந்து விடக்கூடும். சில கடினமான சூழ்நிலைகள் நம்மைப் பதப்படுத்தவே ஏற்படவும் கூடும். அதற்கெல்லாம் தயாராக இருந்து செயல்படுகிற மனிதனே காலப்போக்கில் வெற்றியடைகிறான் என்பதற்கு நாராயணமூர்த்தி ஒரு நல்ல உதாரணம்.

இறைவன் ஆலமரத்தை பெரியதாக வளர்ந்த மரமாகவே கொண்டு வந்து நட்டு விடுவதில்லை. ஒரு விதையாக உருவாகும் அது ஓர் பெரிய ஆலமரமாக வேண்டுமென்றால் கிடைக்கின்ற காற்று, நீர், பூமியின் சத்துக்கள் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். காலத்தோடு பொறுமையாகச் செயல்படவும் காத்திருக்கவும் அறிந்திருக்க வேண்டும். அது ஒரு நாள் மரமாகலாம். சில காலம் கழித்து காடே ஆகலாம். ஆனால் அதன் ஆரம்பம் மிகச் சிறிய விதை தான். அது அந்த நிலையில் தாழ்வு மனப்பான்மை கொண்டு விட்டால், சலிப்படைந்து விட்டால் மரமாகும் வாய்ப்பையும், காடாகும் வாய்ப்பையும் என்றுமே இழக்க நேரிடும்.

அறிவு கூர்மையும், உழைக்கும் உறுதியும் இருந்து விட்டால் கூட காணும் கனவு நனவாக முடியும் என்கிற கட்டாயமில்லை. விதியின் ஒத்துழைப்பும் தேவை தான். ஆனால் விதி ஒத்துழைக்காத போதும் மன உறுதியை இழந்து விடாமல் முன்னேறும் மனிதனை மெச்சி அதே விதி அவனுக்கு உதவத் தீர்மானிக்கிறது. எனவே இளைஞர்களே, உங்களுடைய ஓரிரு கனவுகள் கலையக்கூடும். எல்லாக் கனவுகளும் கைகூடும் மனிதர்கள் இது வரை பூமியில் வாழ்ந்ததில்லை. நாம் இன்று போற்றி பிரமிக்கும் எத்தனையோ பெரிய மனிதர்கள் கூட நினைத்தபடியெல்லாம் இருக்க முடிந்ததில்லை. அதை நினைவில் வையுங்கள். கனவு கலைந்தாலும், மனம் கலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள்ளும் ஒரு நாராயணமூர்த்தி இருக்கலாம். நீங்களும் காடுகளை உருவாக்கும் விதையாக இருக்கலாம். அந்த சாத்தியக்கூறை கௌரவியுங்கள். நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருக்குமானால் நீங்களும் நிறைய சாதிப்பீர்கள். சிகரங்களை எட்டுவீர்கள்!

- என்.கணேசன்

நன்றி: ஈழநேசன்

Friday, January 15, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-17



ஆழ்மனதின் அற்புத சக்திகளை வெளிப்படுத்திய அற்புத மனிதர்களைக் கண்டோம். அத்தகைய மனிதர்களை மட்டுமல்லாமல் அந்த மனோசக்திகளையும் ஆராயும் முயற்சியில் பலகாலமாக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த சக்திகளின் செயல்பாட்டை அறிய முடிந்தாலும் அந்த சக்திகளை விஞ்ஞான முறைப்படி விளக்கவோ, அளக்கவோ வழிகளைத் தேடினார்கள்.

அவர்களின் ஆராய்ச்சிகள் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. எத்தனையோ பொய்யும் புரட்டும் இந்த ஆழ்மன சக்திகள் போர்வையில் மலிந்து கிடந்தன. மேஜிக் நிபுணர்கள் சுலபமாகச் செய்து காட்டியவையை எல்லாம் தங்கள் சக்தியால் செய்வதாக சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் எல்லா கால கட்டங்களிலும் இருந்து வந்தது. இது ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் ஆழ்மன சக்திகளாகக் கருத முடியாத வேறு சில சக்தி வெளிப்பாடுகளும் இருந்து வந்தன. அவை அதிசயிக்க வைக்கும் சக்திகளாக இருந்த போதிலும் ஆராய்ச்சியாளர்களின் ஆழமன சக்தி அடைமொழிக்குப் பொருத்தமானதாக அவை இருக்கவில்லை.

சில சக்திகள் ஐம்புலன்களின் அசாதாரண அறிவாக இருந்தன. அவை விலங்குகளிடம் கூட இருந்தன. சாதாரண மனித அறிவுக்கு அவை அசாதாரணமானதாகத் தோன்றினாலும் அவை அந்தந்த விலங்கினங்களுக்கு சர்வசகஜமாக இருந்தன. உதாரணமாகச் சிலவற்றை சொல்லலாம். நாய்களின் மோப்ப சக்தி அசாதாரணமானது. ஒவ்வொரு மின்கம்பத்தின் அருகேயும், ஒவ்வொரு புதரின் அருகேயும் சென்று அங்கு நடந்த எத்தனையோ விஷயங்களையும் தன் மோப்ப சக்தியால் அதனால் அறிந்து கொள்ள முடியும். மனித கண்ணிற்குத் தெரியாத சிலவகை எக்ஸ் ரே கதிர்களை எலிகளால் பார்க்க முடியும். நிலநடுக்கம் வருவதற்குப் பல மணி நேரங்களுக்கு முன்பே அதன் அறிகுறிகள் சிலவகை கடற்பறவைகளுக்கும், குதிரைகளுக்கும் தெரியும் என்பதை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனிதனுக்கு அசாதாரணமாகத் தோன்றும் இவை எல்லாம் விலங்கினங்களின் தனித் தன்மைக்கு பெரிய விஷயமல்ல. ஒருசில அபூர்வ மனிதர்களும் இந்த அபூர்வத் தன்மையைப் பெற்று விடுவதுண்டு. அதை மற்ற ஆராய்ச்சிகளுக்கு ஏற்றுக் கொள்ளலாம், ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு அவை பொருந்தாது என்றே ஆழ்மன ஆராய்ச்சியாளர்கள் கருதினர்.

ஒரு சுவையான சம்பவத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். 1956ல் கனடாவில் டொரண்டோவைச் சேர்ந்த டாக்டர் ஹெரால்டு ரோசன் என்ற மனோதத்துவ மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு நபரை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்த அந்த நபர் எழுந்து உட்கார்ந்து எதையோ எழுத ஆரம்பித்தார். அவர் ஒரு பாரா எழுதி விட்டு ஓய்ந்து பின் சுயநினைவுக்கு வந்தார். அதைப் படிக்க முயன்ற டாக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. அது என்ன மொழி என்றே தெரியவில்லை. அதை எழுதிய நோயாளிக்கும் அது பற்றி ஒன்றும் தெரியாமல் போகவே அந்த டாக்டர் அது எதாவது மொழியா இல்லை அர்த்தமில்லாத வரை எழுத்துகளா என்று கண்டு பிடிக்க மொழி ஆராய்ச்சியாளர்களிடம் அந்தத் தாளை அனுப்பினார்.

அவர்களிடமிருந்து கிடைத்த பதில் அந்த டாக்டரை இன்னும் அதிகமாகக் குழப்பியது. அந்த மொழி ஆராய்ச்சியாளர்கள் அது மேற்கு இத்தாலியில் கிமு ஒன்றாம் நூற்றாண்டு வரை பேசப்பட்ட ஆஸ்கன் என்ற மொழி என்றும் அதன் எழுத்து வடிவிற்கான ஒரு ஆதாரம் கிமு ஐந்தாம் நூற்றாண்டில் ஒரு பிணத்துடன் சேர்ந்து புதைக்கப்பட்ட ஈயத் தகடில் கிடைத்திருக்கிறது என்றும் கூறினார்கள். அது ஏதோ மந்திரிக்கப்பட்ட சாபம் என்று பின்னர் ஆராய்ச்சியில் தெரிந்ததாகவும் அந்த சாபத்தைத் தான் ஆஸ்கன் மொழியிலேயே அந்த நோயாளி எழுதி இருக்கிறார் என்றும் தெரிவித்தனர்.

முதலில் டாக்டருக்கும் இந்த செய்தி தெரிந்து பரபரப்படைந்தவர்களுக்கும் தோன்றியது பூர்வஜென்மத்தில் அந்த நோயாளி அந்த ஆஸ்கன் மொழி பேசும் இனத்தவராக இத்தாலியில் கிமு காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது தான். இல்லா விட்டால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன ஒரு மொழியைத் திடீரென்று ஹிப்னாடிச மயக்கத்தில் அந்த நோயாளி எப்படி எழுதியிருக்க முடியும் என்று சிந்தித்தனர். அது வரை அவர்கள் அறிந்திருந்த பூர்வஜென்ம நினைவுகள் எல்லாம் ஒருசில நூற்றாண்டுகளுக்கு உட்பட்டவையாகவே இருந்தன. இப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய கி.மு காலத்தைய நினைவு என்றால் அது மிகப்பெரிய மைல்கல் என்று ஆரம்பத்தில் தோன்றியது.

ஆனால் நன்றாக விசாரித்ததில் உண்மை தெரிய வந்தது. ஒரு நாள் அந்த நோயாளி நூலகம் ஒன்றிற்குச் சென்று புத்தகம் படித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிரில் அமர்ந்திருந்த ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி பற்றி படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை விரித்து வைத்திருந்ததைக் கவனித்திருக்கிறார். அந்தப் பக்கத்தில் பெரிய எழுத்துகளில் ஆஸ்கன் மொழியில் ஈயத்தகட்டில் பதித்திருந்த சாபத்தின் படத்தை ஒரு கணம் பார்த்திருக்கிறார். ஒன்றும் புரியாத அதை அவர் அப்போதே மறந்தும் போயிருந்தாலும் ஒரு கணம் பார்த்த அந்தப் படத்தை அவர் அறியாமலேயே முழுவதுமாக அவர் மூளை படமாக உள்ளே பதித்துக் கொண்டிருக்கிறது. அது சில காலம் கழித்து அவருடைய ஹிப்னாடிச மயக்கத்தில் வெளி வந்திருக்கிறது. ஒரு கணமே தற்செயலாகப் பார்த்த ஒரு அறியாத மொழியில் எழுதப்பட்டதை சில காலம் கழித்து அப்படியே எழுத முடிவது ஆச்சரியமே என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இது போன்ற நிகழ்வுகளைக் கூட ஆராய்ச்சியாளர்கள் ஆழ்மன சக்தியாக நினைக்கவில்லை. ஏனென்றால் இதற்கு ஒரு விளக்கத்தை அறிந்திருந்த அறிவியல் ரீதியாக அவர்களால் அறிய முடிந்தது தான்.

ஆழ்மன ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி எல்லாம் தற்போதைய அறிவியலுக்கு அகப்படாத மனோசக்தியின் தன்மையை அறிய முற்படும் ஆவலாக இருந்தது. அந்த சுவையான ஆராய்ச்சிகளைப் பார்ப்போமா?

மேலும் பயணிப்போம்.....

(தொடரும்)

நன்றி: விகடன்

Monday, January 11, 2010

தவறு செய்யத் தூண்டாதீர்கள்!


அல் ·பாஹித் என்ற அரபு ஞானி ஒரு நாள் தன் நண்பரிடம் வருத்தத்துடன் சொன்னார். "நாம் கடவுளுடைய கருவியாக இருந்து செயல்பட வேண்டும் என்று நினைத்தாலும் சில சமயங்களில் சைத்தானுடைய கருவியாக இருந்து விடுகிறோம். இன்று கூட நான் சைத்தானுடைய கருவியாக மாற நேரிட்டது"

அவர் நண்பருக்கோ வியப்பு. இவரைப் போன்ற அப்பழுக்கில்லாத ஞானி எப்படி சைத்தானுடைய கருவியாக மாற முடியும்? "நீங்கள் மிகக் கவனமாக இருப்பீர்களே. பின் எப்படி அது சாத்தியம்?" என்று கேட்டார்.

"நான் இன்று மசூதிக்குத் தொழச் சென்ற போது என் செருப்பை வெளியே விட்டுச் சென்றேன். திரும்பி வந்து பார்த்த போது செருப்பைக் காணவில்லை. இன்று ஒரு திருடனை உருவாக்கி விட்டேனே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது"

"அதில் உங்கள் தவறு ஒன்றும் இல்லையே" என்றார் அந்த நண்பர்.

"என் தவறு தான் அது. ஒருவரை ஆசைப்பட வைப்பதும், கோபப்படுத்துவதும், சந்தேகத்தைக் கிளம்புவதும், வெறுப்பை விதைப்பதும், மனிதர்களைப் பிரிப்பதும் மிகவும் எளிது. சைத்தான் தன்னுடைய இந்த செயல்களைச் செய்ய மனிதர்களையே உபயோகப்படுத்துகிறது. அந்த வகையில் இந்தத் தவறு நிகழ நான் பயன்படுத்தப்பட அனுமதித்து விட்டேன்"

அல் ·பாஹிதின் சிந்தனையின் உயர்வைப் பாருங்கள்.

மற்றவர்களைத் தவறு செய்யத் தூண்டுவதில் இரண்டு வகை உண்டு. அறிந்து தூண்டுவது. அறியாமல் தூண்டுவது.

அறிந்தே மற்றவர்களைத் தவறு செய்ய மற்றவர்களைத் தூண்டுவது நேரடியாக அந்தத் தவறை விடக் கொடுமையானது. தங்களை நல்லவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலரை நான் கவனித்திருக்கிறேன். அவர்களாகத் தவறுகள் செய்து அடுத்தவர்களைத் துன்புறுத்தத் தயங்கும் எத்தனையோ பேர் அடுத்தவர்களைக் குற்றம் செய்யத் தூண்டுவதில் வருத்தம் கொள்வதில்லை. என்ன செய்கிறோம், இதன் விளைவு என்ன என்ற சிந்தனை கூட அவர்களிடம் இருப்பதில்லை.

எனக்குத் தெரிந்த ஒருவர் தானாக மற்றவர்களிடம் சண்டை போட மாட்டார். ஆனால் மற்றவர்களை சண்டைக்குத் தூண்டி விடுவதில் கெட்டிக்காரர். மற்றவர்கள் சொன்ன வார்த்தைகளை தொனியை மாற்றி, முகபாவனையை மாற்றிச் சொல்லி சண்டையை மூட்டி விடுவார். அவரைப் பொறுத்த வரை அவர் பொய் சொல்லவில்லை. வார்த்தைகளை மாற்றிச் சொல்லவில்லை. ஆனால் தொனியும், சொல்லும் முகபாவமும் மாறினால் வார்த்தைகளின் அர்த்தம் முற்றிலுமாக மாறி விடுகிறது, அது பொய்யிலே பெரிய பொய் என்பது அவர் அகராதியில் இல்லை.

இன்னொருவர் மேலதிகாரியைப் பற்றி ரோஷக்கார சக ஊழியர்களிடம் சொல்கையில் "அவருக்கு நாம் எல்லாம் அடிமைகள் என்று நினைப்பு. கிள்ளுக்கீரையாய் நம்மை நினைக்கிறதால் தான் மதிப்பதே இல்லை..." என்று சொல்லிக் கொண்டே இருப்பார். திடீரென்று யாராவது ஊழியர் கிள்ளுக்கீரை இல்லை என்று நிரூபிப்பதற்காகவே அந்த மேலதிகாரியிடம் போய் சண்டை போடுவார். இப்படி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வேண்டுமென்றே தவறாக ஊகித்து மற்றவர்களுக்கிடையில் மனஸ்தாபத்தை வளர்த்துவதில் சிலர் கில்லாடிகள். கடைசியில் பெரும் பிரச்னைகள் அவர்களுக்குள் வெடிக்கையில் இவர்கள் மட்டும் இரண்டு பக்கமும் வேண்டப்பட்ட ஆட்களாய் நிற்பார்கள்.

உண்மையில் நேரடியாகச் சண்டை போடுபவர்களை விட அதிகமாக இவர்கள் வெளிச்சத்திற்கு வராமலேயே கேடு விளைவிக்கிறார்கள். அல் ·பாஹித் கூறியது போல இது போன்ற மனிதர்களையே சைத்தான் தன் வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் என்றே தோன்றுகிறது. வதந்திகளைப் பரப்புவது, வெறுப்பு விதைகளைத் தூவுவது, மற்றவர் ஒற்றுமைக்கு பாதகம் விளைவிப்பது போன்ற செயல்களைச் செய்பவர்கள் சமூகத்திற்கு அளப்பரிய கேடுகள் விளைவிக்கிறார்கள்.

பல நேரங்களில் அவர்கள் அப்படியெல்லாம் செய்ய உண்மையான காரணம் நேரம் போகாமையே. உப்புசப்பில்லாத வாழ்க்கையில் சில நிமிட பரபரப்பிற்காக இப்படி அறிந்தே தவறுகள் செய்யத் தூண்டினாலும் விளைவுகள் அந்த சில நிமிடங்களையும் தாண்டி பல காலம் பலரைப் பாதிக்கிறது என்பதால் அது மிகப்பெரிய தவறு என்பதை அவர்கள் உணர மறந்து விடுகிறார்கள்.

அடுத்தது அறியாமல் தூண்டுவது. நம்முடைய செயல்கள் யார் யாரை எந்த அளவு பாதிக்கின்றன என்ற பிரக்ஞையே இல்லாமல் நடந்து கொள்வது. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். நாகரிகம் என்ற பெயரில் ஆபாச ஆடைகள் அணிந்து வலம் வரும் பெண்கள் பலர் மனதில் பல வக்கிரங்களை உருவாக்கி விடுகிறார்கள். அப்படி உருவாகும் வக்கிரங்கள் யார் யாரிடம் எப்படி எல்லாம் நடக்கத் தூண்டும், யாரெல்லாம் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான எண்ணங்களை எழுதுகிற, ஊக்குவிக்கிற எழுத்தாளர்களையும், பதிவர்களையும் கூட இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அதே போல் பேச்சாளர்கள், அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் கூட அந்த நேரத்திற்குப் பிரபலமாக வேண்டும் என்றும் பலர் கவனத்தைக் கவர வேண்டும் என்பதற்காகவும் கைத்தட்டலுக்காகவும் காரசாரமாகப் பேசி எத்தனையோ மனங்களில் விஷத்தைத் தடவி விடுகிறார்கள். அதன் விளைவுகளின் பிரம்மாண்டத்தை உணர அவர்கள் தவறி விடுகிறார்கள்.

அறிந்தும், அறியாமலும் செய்யும் இது போன்ற தூண்டுதல்களுக்கு இன்னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். தவறுகள் செய்யாமல் இருப்பது மட்டுமே போதுமானதல்ல. மற்றவர்களைத் தவறுகள் செய்யத் தூண்டாமல் இருப்பதும் மிக முக்கியம். விஷ விதைகளை விதைப்பது சுலபம். ஆனால் உருவாகும் விருட்சங்களை அழிப்பது சுலபமல்ல. விருட்சங்களை அழிக்க சக்தி இல்லாதவர்கள் விதைகளையும் விதைக்காமல் இருப்பதே உத்தமம். தங்கள் பாவக்கணக்கை கூட்டாமல் இருப்பதே நல்லது.

-என்.கணேசன்

நன்றி:ஈழ நேசன்

Wednesday, January 6, 2010

ஆழ்மன அற்புத சக்திகள்-16

1990ஆம் ஆண்டு பிபிசி தொலைக்காட்சியில் 'நாற்பது நிமிடங்கள்' என்ற நிகழ்ச்சியில் காட்டிய ஆக்ராவைச் சேர்ந்த டிட்டு சிங் என்ற சிறுவன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினான். தன்னை முன் பிறவியில் கொன்றவர்களைப் பெயருடன் அடையாளம் சொன்னான். பிபிசி செய்திக்குழு அவன் சொன்னதைத் தங்கள் பங்குக்கு ஆராய்ச்சி செய்து விவரங்களைக் கண்டறிந்தது....

வட இந்தியாவைச் சேர்ந்த டிட்டு சிங் இரண்டரை வயதுள்ள போதே தன் முற்பிறவி நினைவுகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். அவனுடைய பெயர் சுரேஷ் வர்மா என்றும், மனைவி பெயர் உமா என்றும், இரண்டு பிள்ளைகள் அவனுக்கு இருப்பதாகவும் சொன்ன அவன் அவர்களுடைய பெயரையும் சொன்னான். ஆக்ராவில் அவன் வசித்ததாகவும் அவன் ரேடியோ, டிவி விற்பனை செய்யும் கடை ஒன்றை வைத்திருந்ததாகவும் சொன்ன அவன் அதன் விலாசத்தையும் கூட சொன்னான். ஆரம்பித்தில் அவனை அவ்வளவாகப் பொருட்படுத்தாத பெற்றோர் நாளாவட்டத்தில் தங்கள் மூத்த மகனை எதற்கும் ஆக்ராவிற்குப் போய் விசாரிக்கும்படி சொன்னார்கள்.

டிட்டு சிங்கின் மூத்த சகோதரன் தன் தம்பி சொன்ன விலாசத்தைத் தேடிக் கண்டு பிடித்தான். நிஜமாகவே அங்கு அப்படி ஒரு டிவி, ரேடியோ கடை இருந்தது. உள்ளே சென்ற போது கல்லாவில் ஒரு விதவைப் பெண்மணி அமர்ந்திருந்தார். அவர் பெயர் உமா என்றறிந்த போது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்களா, அவருடைய கணவர் பெயர் சுரேஷ் வர்மாவா என்று கேட்க அந்தப் பெண்மணி ஆம் என்று சொன்னார். கடைசியில் தன் தம்பி சொன்னதையெல்லாம் சொல்ல அந்தப் பெண்மணியும் அதிர்ச்சி அடைந்தார். டிட்டு சிங் சொன்னது போல தன் கணவர் துப்பாக்கியால் தான் சுடப்பட்டு இறந்தார் என்பதையும் தெரிவித்தார்.

மறுநாளே உமா டிட்டுசிங்கைப் பார்க்க தானே பயணம் செய்தார். டிட்டு சிங் உமாவை சரியாக அடையாளம் கண்டு பிடித்ததோடு வேறு சில தகவல்களும் சொன்னான். அவையும் சரியாக இருந்தன. இரண்டு நாட்கள் கழித்து டிட்டுசிங் ஆக்ராவிற்கு அழைத்துச் செல்லப்பட்டான். பல பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த முற்பிறவியின் குழந்தைகளை அடையாளம் சொன்னான். கடைக்குச் சென்று தன் மரணத்திற்குப் பின் செய்த மாறுதல்களை சரியாகச் சொன்னான். தன்னைக் கொன்றவர்கள் பெயர் எப்படி சுட்டார்கள் எங்கு சுட்டார்கள் என்பதையெல்லாம் சொன்னான்.

பிபிசி குழு ஆக்ரா காவல் நிலையத்தில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் மற்றும் புகைப்படம் ஆகியவற்றைப் பார்த்த போது அதெல்லாம் டிட்டுசிங் சொன்னதற்கிணங்கவே இருந்தன. பிபிசி குழுவின் காமிரா அந்த ரிபோர்ட்டுகளைப் படம்பிடித்துக் காட்டியதோடு டிட்டு சிங்கின் மழித்த தலையையும் காட்டியது. சுரேஷ் வர்மாவின் தலையில் துப்பாக்கிக் குண்டு துளைத்த அதே இடத்தில் டிட்டு சிங்கின் தலையில் ஒரு மச்சம் இருந்ததைக் காட்டினார்கள்.

ஆச்சரியமாக உள்ளதள்ளவா? பூர்வ ஜென்மம் பற்றிய நம்பிக்கை இந்து மதம், புத்த மதம் போன்ற மதங்களில் மட்டுமல்லாமல் கிறிஸ்துவ மதத்திலும் பண்டைய காலத்தில் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். அதை ஆதார பூர்வமாக டாக்டர் ப்ரையன் வெய்ஸ் என்ற அமெரிக்க மனோதத்துவ நிபுணர் சுட்டிக் காட்டுகிறார். ரோமானியப் பேரரசர் கான்ஸ்டண்டைனும் அவர் தாய் ஹெலெனாவும் தங்கள் காலத்தில் மறுபிறவிகள் குறித்து பைபிளின் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் அழிக்கச் செய்தார்கள் என்று கூறுகிறார். பல பிறவிகள் இருக்கின்றன என்ற நம்பிக்கை மோட்சம் பெற பல காலம் இருக்கிறது என்ற அசட்டையை மக்களிடையே ஏற்படுத்தும், அது சர்ச்சை பலவீனப்படுத்தும் என்ற எண்ணமே அதற்குக் காரனம் என்கிறார் அவர்.


டாக்டர் ப்ரையன் வெய்ஸ் ஆழ்மன சக்திகளை நிறைய ஆராய்ச்சிகள் செய்தவர். அவருடைய ஆராய்ச்சிகளில் மனிதர்களின் முந்தைய பிறவிகள் பிரதான இடத்தைப் பெற்றிருந்தன. ஆனால் அவர் ஆரம்ப காலங்களில் இது போன்ற விஷயங்களில் சிறிதும் நம்பிக்கையில்லாத ஒரு மனோதத்துவ மருத்துவராக இருந்தார். ஆன்மீகம், அபூர்வ சக்திகள் ஆகியவற்றிலோ, மறுபிறப்பிலோ நம்பிக்கை இல்லாத அவரை அடியோடு மாற்றியது அவரிடம் 1980ஆம் ஆண்டு சிகிச்சை பெற வந்த காதரின் என்ற பெண்மணி தான்.

அவரிடம் 18 மாதங்கள் வந்து சிகிச்சை பெற்றும் காதரீன் குணமடையாமல் போனது ப்ரையன் வெய்ஸை குழப்பியது. வழக்கமான எல்லா உளவியல் மருத்துவ முறைகளையும் பயன்படுத்தியும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் போகவே ஒரு நாள் காதரினை ஹிப்னாடிசம் செய்து "உனக்கு இந்த உளவியல் பிரச்னைகளுக்கான அறிகுறிகள் ஆரம்பமான அந்தக் காலத்திற்கு செல்" என்று கட்டளையிட்டார்.

காதரின் தன் குழந்தைப்பருவத்திற்குச் சென்று அந்த நிகழ்ச்சிகளை வர்ணிப்பாள் என்று நம்பிய வெய்ஸ் ஏமாந்து போனார். பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன்னால் சென்று தன் முந்தைய பிறவிகளைப் பற்றி அவள் சொல்ல ஆரம்பித்த போது அவர் திகைப்பின் உச்சத்திற்கே சென்றார். அவள் நடிகை அல்ல, பலவித ஆளுமைகளை உடைய பெண்மணியுமல்ல என்று ஆராய்ந்தறிந்த வெய்ஸ் அவளுடைய முந்தைய பிறவித் தகவல்களை ஆராய முனைந்தார். சரிபார்க்க முடிந்த ஒரு சில விவரங்கள் உண்மையென்று தெரிந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அந்த தகவல்களை வைத்துக் கொண்டு காதரினை அவரால் குணப்படுத்தவும் முடிந்தது.

அந்தப் பெண்மணி காதரினை மையமாக வைத்து 1988ல் "பல வாழ்க்கைகள், பல ஆசான்கள்" (Many Lives, Many Masters) புத்தகத்தை ப்ரையன் வெய்ஸ் எழுதி அது மிகவும் பிரபலமடைந்தது. அவர் அதே போல் வேறு பல புத்தகங்களும் எழுதியுள்ளார். அவர் 1980ல் இருந்து சிகிச்சை செய்த நாலாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளின் உளவியல் பிரச்னைகளுக்கான காரணங்கள் முற்பிறவிகளில் இருந்ததாகக் கூறுகிறார்.

குழந்தைப் பருவத்திலேயே சில துறைகளில் அபார ஞானம் படைத்த சில அதிசயக் குழந்தைகளைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். அப்படிப்பட்ட ஞானமெல்லம் அவர்கள் முற்பிறவியில் இருந்தே பெற்றிருக்க வேண்டும் என்பதே ப்ரையன் வெய்ஸ் போன்ற ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

இது வரை அபூர்வமான சக்திகள் படைத்த தனி மனிதர்களைப் பற்றி கண்டோம். இது போல் இன்னும் ஏராளமான உதாரணங்களை ஆதாரங்களுடன் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த மனிதர்களின் வெளிப்படுத்தும் சக்தி வகைகள் நாம் இது வரை கண்ட சக்திகளின் தனி அல்லது கூட்டு வகைகளாகவே இருக்கக் கூடியவை என்பதால் அந்த செய்திகளை இத்துடன் நிறுத்திக் கொள்வோம். இனி மனோசக்தி பற்றிய பொதுவான சுவாரசியமான ஆராய்ச்சிகளைப் பற்றியும், அந்த சக்திகளை நமக்குள் அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகளைப் பற்றியும் காண்போமா?

மேலும் பயணிப்போம்...

- என்.கணேசன்

நன்றி: விகடன்

Friday, January 1, 2010

நூறாவது குரங்கு




1952 ஆம் ஆண்டு சில ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கோஷிமா என்ற தீவில் ஒரு வகைக் குரங்கினத்தின் இயல்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். அந்தக் குரங்குகளுக்கு உணவாக சர்க்கரைவள்ளிக் கிழங்கு தந்து வந்தார்கள். அவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வெட்ட வெளியில் போட குரங்குகள் அவற்றை எடுத்து சாப்பிட்டு வந்தன. பெரும்பாலும் ஈர சகதியில் விழுந்திருந்த கிழங்கை எடுத்து சாப்பிட்ட குரங்குகள் அந்த சகதியின் சுவையும் கிழங்கோடு சேரவே, அதை சிரமத்துடன் சாப்பிட்டன. அதில் பதினெட்டு மாதப் பெண் குரங்கு ஒன்று மட்டும் அந்தக் கிழங்கை பக்கத்தில் இருந்த ஓடையில் அந்த சகதியை நீக்கி சாப்பிட்டது. அது சுவை குறையாததாக இருக்கவே அப்படிக் கழுவி சாப்பிடும் வித்தையை தன் தாயிற்குக் கற்றுத் தந்தது. அதைப் பார்த்த மற்ற சில குரங்குகளும் சர்க்கரைவள்ளிக் கிழங்கைக் கழுவி சாப்பிட ஆரம்பித்தன. ஆனால் வயதான குரங்குகள் மட்டும் பழையபடி சகதியுடன் இருந்த கிழங்குகளையே சாப்பிட்டன என்றாலும் இளைய குரங்குகள் கிழங்குகளைக் கழுவி சாப்பிடும் வழக்கத்தை மேற்கொள்ள ஆரம்பித்தன.

கிட்டத்தட்ட 1958 ஆம் ஆண்டு ஒரு கணிசமான எண்ணிக்கையுடைய குரங்கினம் சர்க்கரைவள்ளிக் கிழங்கைக் கழுவி சாப்பிட ஆரம்பித்தவுடன் கிழங்கைக் கழுவாமல் சாப்பிடும் குரங்கே இல்லை என்கிற நிலை வந்தது. அந்தக் குறிப்பிட்ட சமயத்தில் அந்தத் தீவில் மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட எல்லா தீவுகளிலும் உள்ள குரங்குகளும் உடனடியாக இந்தப் புதிய முறையைக் கடைபிடிக்க ஆரம்பித்தது தான் அதிசயம்.

அந்த ஆராய்ச்சியாளர்கள் எந்தப் புதிய பழக்கத்தையும், வழிமுறையையும் பயன்படுத்துவோர் ஒரு கணிசமான எண்ணிக்கையை எட்டியவுடன் மன அலைகள் மூலமாகவே வெகுதூரம் அந்தப் புதிய பழக்கம் அல்லது வழிமுறை உடனடியாகவும் தானாகவும் பரவுகிறது என்று கண்டுபிடித்தனர். அந்தக் கணிசமான எண் என்ன என்று துல்லியமாகச் சொல்லா விட்டாலும் உதாரணத்திற்கு "நூறு" என்ற எண்ணைக் குறியீடாகச் சொன்னார்கள்.

இந்த தத்துவத்தை "நூறாவது குரங்கின் விளைவு" (Hundredth Monkey Effect) என்ற புத்தகத்தை கென் கேயஸ் (Ken Keyes) என்பவர் எழுதி பிரபலமாக்கினார். அவரும் அவருக்குப் பின் வந்த ஆராய்ச்சியாளர்கள், மற்றும் சிந்தனையாளர்களும் இதே தத்துவம் மனிதர்களுக்கும் பொருந்தும் என்று கருதினர். அந்த ஆரம்பக் கணிசமான தொகையை எட்டுவது தான் கடினமான விஷயம். அந்தக் கணிசமான தொகையை எட்டியபின் அந்த சிந்தனைகளும், செயல்களும் உலகின் பல்வேறு பாகங்களில் உள்ள மனிதர்களிடையே தானாக ஏற்பட்டு பரவும் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது.

இதே கருத்தை வாழ்க்கை அலை (Lifetide) என்ற புத்தகத்தில் லயால் வாட்சன் (Lyall Watson) என்ற எழுத்தாளரும் உதாரணங்களுடன் கூறுகிறார். இப்போது இந்தக் கருத்து பரவலாகப் பலம் பெற்று வருகிறது.

எந்தப் புதிய நன்மையையும் சிந்திப்பதும், கடைப்பிடிப்பதும் ஆரம்பத்தில் கடினம். அப்படி ஆரம்பத்தில் கடைபிடிப்பவர்களை யாரும் ஆரம்பத்தில் உற்சாகப்படுத்துவதில்லை. மாறாக சந்தேகப் பார்வையுடனேயே பார்க்கிறார்கள். பரிகசிக்கிறார்கள். ஆனாலும் தாக்குப்பிடித்து மனபலத்துடன் புதிய நல்ல விஷயங்களை சிந்தித்துப் பின்பற்றுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில் சரித்திரம் அவர்களாலேயே எழுதப்படுகிறது என்று கூட சொல்லலாம். அவர்களுடன் ஒரு கணிசமான ஒத்த சிந்தனையுள்ளவர்கள் சேர்ந்து செயல்படும் போது பெரிய மாற்றங்கள் தானாக ஏற்பட ஆரம்பிக்கின்றன.

நூறாவது குரங்கு ஒன்றைப் பின்பற்ற ஆரம்பித்தவுடன் அதிசயம் நிகழ்ந்து பல இடங்களில் அதே வழக்கம் பின்பற்றப்படுகிறது என்ற கோட்பாடு சிந்தனைக்குரியது. எத்தனையோ நன்மைகள் நிகழ, எத்தனையோ பெரும் மாற்றங்கள் ஏற்பட இன்னும் ஒரு நபரின் உதவி அல்லது பங்கு மட்டுமே கூட தேவைப்படலாம். ஏன் அந்த ஒரு நபராக, நூறாவது குரங்காக, நீங்கள் இருக்ககூடாது? உங்கள் பங்கும் சேர்ந்து அற்புதங்கள் நிகழுமானால் அது மிகப்பெரிய பாக்கியம் அல்லவா?

ஒவ்வொரு புதிய நல்ல சிந்தனை நடைமுறைப்படுத்தப் படுவதை நீங்கள் காணும் போதும், ஒவ்வொரு நல்ல மாற்றத்திற்காக சில முயற்சிகள் நடைபெறுவதை நீங்கள் பார்க்கும் போது இந்த நூறாவது குரங்குத் தத்துவத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஏதாவது நல்ல மாற்றங்களுக்கான வழிமுறைகள் புதியதாய் உங்கள் மனதில் உருவாகுமானால் அதற்குப் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பியுங்கள். அது சரியா, நடைமுறைக்கு ஒத்து வருமா, யாராவது பரிகசிப்பார்களோ என்ற தயக்கம் வேண்டாம். அதில் குறைகள் இருக்குமானால் அதைப் போகப் போக சரி செய்து கொள்ளலாம். ஏனென்றால் இன்று நாம் பயன்படுத்தும் எல்லாமே உருவான விதத்திலேயே இருப்பனவல்ல. காலப்போக்கில் மெருகூட்டப் பட்டவை தான். மேம்படுத்தப்பட்டவை தான்.

அதே போல் மற்றவர்கள் ஆரம்பித்த நல்ல மாற்றங்களிலும் உற்சாகமாகப் பங்கு பெறுங்கள். அதற்கு வலுவூட்டுங்கள். முதல் நூறில் ஒருவராக இருந்து பெரிய மாற்றங்களுக்கு வித்தாக இருக்க முடிந்தால் அதல்லவா அர்த்தமுள்ள வெற்றிகரமான வாழ்க்கை? இன்று நாம் அனுபவிக்கும் எத்தனையோ நன்மைகள் இது போன்ற ஒரு சிலரால் ஆரம்பிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டவையே அல்லவா? நம் பங்கிற்கு நாமும் ஏதாவது நன்மையை இந்த உலகில் ஏற்படுத்தி விட்டுச் செல்வதல்லவா நியாயம்?



- என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்