சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, December 25, 2007

படகு புகட்டிய பாடம்


(கோபத்தைக் களைவது எப்படி?)

லின் சீ (Lin Chi) என்ற பிரபல ஜென் துறவிக்குச் சிறு வயதில் இருந்தே படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு. அவரிடம் ஒரு சிறு படகு இருந்தது. அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் இருப்பார். பல சமயங்களில் கண்களை மூடித் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான்.

ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது.

தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. யாரோ அஜாக்கிரதையாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார். பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது.

"என் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத் தான் நான் ஞானம் பெற்றேன். அந்தப் படகு எனக்கு குருவாக இருந்தது. இப்போதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ, மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது" என்று எனக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்வது எனக்குச் சுலபமாகி விட்டது" என்று அவர் பிற்காலத்தில் எப்போதும் கூறுவார்.

ஜென் தத்துவங்கள் ரத்தினச் சுருக்கமானவை; கருத்தாழம் மிக்கவை. இந்தக் காலிப் படகின் பாடமும் நன்றாகச் சிந்தித்தால் நமக்கு விளங்கும்.

பொதுவாக நாம் நமக்கு ஏற்படும் கோபத்தை இரண்டு விதங்களில் கையாள்கிறோம். ஒன்று, காரணமாகத் தோன்றும் மனிதர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறோம். அல்லது கோபத்தை அடக்கிக் கொண்டு விழுங்கிக் கொள்கிறோம்.

பிறர் மீது கோபித்து, அனல் கக்கி ஓயும் போது பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை. குற்ற உணர்வு, பச்சாதாபம், தேவை இருந்திருக்கவில்லை என்கிற மறுபரிசீலனை என்று பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்படுகிறோம். இது ஒரு புறமிருக்க இதன் விளைவாக அந்தப்பக்கமும் கோபமும், வெறுப்பும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தால் விளைவுகள் விபரீதமே.

ஏற்படும் கோபத்தை அடக்கி நமக்குள்ளே விழுங்கிக் கொண்டாலும் கோபம் மறைவதில்லை. உள்ளே சேர்த்து வைத்த கோபம் என்றாவது எப்போதாவது வெளிப்பட்டே தீரும். அது இயற்கை.

அது நம் கோபத்திற்குக் காரணமான நபர் மீதிருக்கலாம். அல்லது பாவப்பட்ட வேறு யார் மீதாகவோ இருக்கலாம். விழுங்கியது வெளிப்படவே செய்யும். நமக்குள்ளே தங்கி இருந்ததன் வாடகையாக அல்சர் முதலான நோய்களைத் தந்து விட்டே கோபம் நம்மை விட்டு அகலும்.

ஆக இந்த இரு வழி முறைகளும் நம்மைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்கின்றன. பின் என்ன செய்வது என்ற கேள்விக்குப் பதில் தான் காலிப்படகுப் பாடம்.

கோபமே அவசியமில்லை, கோபத்திற்கு யாரும் காரணமில்லை என்று உணர்ந்து அந்தக் கணத்திலேயே தெளிவடைவது தான் கோபத்திற்கு மருந்து.

ஒரு நண்பர் வந்து நம்மைக் கிண்டல் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலும் நாம் சிரித்து பதிலுக்கு நாமும் ஏதாவது கிண்டலாக சொல்வோம். ஆனால் ஒரு நாள் நாம் பல பிரச்னைகளால் மனநிலை சரியில்லாமல் இருந்தால் அன்று அந்த நண்பரின் கிண்டல் நம்முள் ஒரு எரிமலையையே ஏற்படுத்தக்கூடும். அவரது வார்த்தைகளுக்கு அந்த நேரம் ஒரு தனி அர்த்தம் தெரியும். மனம் வீணாகப் புண்படும். கடுகடுப்புக்கு முகமும், கடுஞ்சொற்களுக்கு நாக்கும் தயாராகும்.

இந்தச் சிறிய தினசரி அனுபவம் ஒரு பேருண்மைஅயை வெளிப்படுத்துவதை நாம் சிந்தித்தால் உணரலாம். அடுத்தவரது சொற்களோ, செயல்களோ மட்டுமே கோபத்திற்குக் காரணம் என்றால் அவற்றை எப்போதும் கோபமாகத் தான் எதிர்கொள்வோம். ஆனால் உண்மையில் கோபமும், கோபமின்மையும் நம் மனப்பான்மையையும், மனநிலையையும் பொறுத்தே அமைவதை நம் தினசரி வாழ்விலேயே பார்க்கிறோம்.

வறண்ட கிணற்றில் விடப்படும் வாளி வெற்று வாளியாகவே திரும்பும். நீருள்ள கிணற்றில் விடப்படும் வாளியே நீருடன் திரும்பும். உள்ளே உள்ளதை மட்டுமே வாளியால் வெளியே கொண்டு வர முடியும். வாளியால் நீரை உருவாக்க முடியாது.

அடுத்தவர்கள் வாளியைப் போன்றவர்கள். அவர்களது சொற்களும் செயல்களும் நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே இருப்பதைத் தான். அது கோபமாகட்டும், வெறுப்பாகட்டும், அன்பாகட்டும், நல்லதாகட்டும், தீயதாகட்டும்.

அவர்கள் நம்மில் வெளிக் கொணர்வது நாம் நம் ஆழ்மனதில் சேர்த்து வைத்திருப்பதையே. அந்த விதத்தில் அவர்கள் நமக்கு உதவியே செய்கிறார்கள். நமக்குள் என்ன உள்ளது என்பதை அவர்கள் நமக்கு உனர்த்துகிறார்கள்.

கம்ப்யூட்டர்கள் பதிவு செய்யப்பட்ட ப்ரோகிராம்கள்படி இயங்குகின்றன. அதுபோல நாமும் நம் ஆழ்மனதில் பதிவு செய்து கொண்டுள்ள ப்ரோகிராம்கள் படியே உந்தப்பட்டு செயல்படுகிறோம். அதில் எத்தனையோ பதிவுகள் தவறனவை என்பதை உணராமலேயே பலரும் வாழ்ந்து முடித்து விடுகிறோம்.

இதெல்லாம் கோபப்படத் தக்கவை, சொற்களாலோ, செயல்களாலோ தகுந்த பதிலடி தரத் தக்கவை என எத்தனையோ விஷயங்களை நாம் ஆழ்மனதில் பதிவு செய்து வைத்து இருக்கிறோம். அதன்படி அப்போதைய சூழ்நிலையையும், மனநிலையையும் பொறுத்து சிந்திக்காமல் பேசி விடுகிறோம் அல்லது செயல்பட்டு விடுகிறோம்.

எனவே ஒவ்வொன்றையும் நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம், நமது பதில் நடவடிக்கைகள் எப்படி அமைகின்றன என்பது நம்மைப் பொறுத்தே இருக்கிரது. காரணமாகத் தெரியும் மற்றவர்கள் முன்பு குறிப்பிட்டது போல் காலிப்படகுகள் அல்லது வாளிகளே.

இந்த உண்மையை நம் ஆழ்மனதில் பதிய வைத்து தவறாக மற்றவர்களைக் காரணம் காணும் ப்ரோகிராம்களைத் திருத்திக் கொள்வது மிகவும் நல்லது.

கோபம் தற்காலிகமாய் பைத்தியம் பிடிப்பது போன்றது என்பார்கள். கோபப்படுவது அதை அடையாளம் காட்டுவதற்குச் சமம். ஆராய்ந்து அறியாமல், கோபத்தைக் காட்டாமல் அடக்குவது என்பது உண்மையில் கோபத்தை ஒத்திப் போடுதலே.

எனவே இரண்டையும் தவிர்த்து விட்டு அமைதியாகவும் தெளிவாகவும் சூழ்நிலையைக் கையாளுங்கள். ஒருவர் கோபமூட்ட முனைகையில் அவரது செய்கை முக்கியமல்ல, அதை நீங்கள் எப்படி எதிர் கொள்கிறீர்கள் என்பது தான் முக்கியம் என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.

பல நேரங்களில் மௌனமே உத்தமம். புன்னகையே சிறந்த பதில். வார்த்தைகளில் பதில் அவசியம் என நீங்கள் உணரும் போது சற்றும் கோபம் கலக்காமல் அமைதியாய் தெளிவாய் பதில் அளியுங்கள். உங்கள் அமைதியைக் குலைக்கும் அதிகாரத்தை நீங்களாக மற்றவர்களுக்குத் தந்தால் ஒழிய அவர்கள் அதைப் பெற முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்.

அரிஸ்டாடில் சொன்னது போல் "கோபப்பட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றில் ஒன்றும் சரியானதாக இருக்காது" என்பதை உணர்ந்திருங்கள். கோபம் பிறக்கும் அக்கணமே அதன் அவசியமின்மையை உணர்ந்து, அழித்து, அமைதி காக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

- என்.கணேசன்

Wednesday, December 19, 2007

கௌரவம்!




"பார்த்தா பிச்சைக்காரி மாதிரித் தெரியுது. ஆனா நீங்க தான் வரச் சொன்னதா அந்தப் பொண்ணு சொல்லுது. பேரு காவேரியாம். வாட்ச்மேன் என்ன செய்யறதுன்னு கேட்கறான்"

வேலைக்காரி சொன்னவுடன் அமிர்தம் எதுவும் புரியாமல் விழித்தாள். "நான் ஏன் பிச்சைக்காரியை வரச் சொல்றேன்.." என்றபடி யோசித்தவளுக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை.

"நீங்க எழுதினதா ஒரு லெட்டரையும் கையில் வச்சிருக்காளாம்"

லெட்டர் என்றதும் அமிர்தத்தின் மூளையில் ஒரு பொறி தட்டியது. வீடு முழுவதும் ஏ.சி.யாக இருந்தாலும் அமிர்தத்திற்கு திடீரென வியர்த்தது. இதயம் படபடவென அடித்துக் கொண்டது. "வரச்சொல்லு" என்றாள்.

வேலைக்காரி திகைத்துப் போனாள். இப்படிப் பட்ட மனிதர்கள் அவளுக்குத் தெரிந்த வரை இந்த பங்களாவின் மெயின் கேட்டைத் தாண்டி இது வரை உள்ளே நுழைந்ததில்லை. தன் திகைப்பை மறைத்துக் கொண்டு அந்தப் பெண்ணை அழைத்து வரப் போனாள்.

அவள் அழைத்து வரும் வரை அமிர்தத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. மேற்கொண்டு சாப்பிடவும் பிடிக்கவில்லை. அந்தப் பெண் சிறு குழந்தையாக இருந்த போது பார்த்திருக்கிறாள். இப்போது அவள் எப்படி இருப்பாள் என்று பல உருவங்களை மனதில் ஏற்ப்படுத்திப் பார்த்தவளுக்கு நிஜமாகவே பார்க்கப் போகிறோம் என்ற போது பரபரப்பாய் இருந்தது.

அந்தப் பெண் தயக்கத்துடன் வந்தாள். ஏழ்மை தனது முத்திரையை அவள் மீது குத்தியிருந்தது. அமிர்தம் அவளைக் கூர்ந்து பார்த்தாள். கலைந்த தலைமுடி, ஆங்காங்கே கிழிசல் தைக்கப்பட்ட வெளிறிப் போன சேலை, முகத்தில் லேசாய் கலவரம், கையில் ஒரு பெரிய பழைய துணிப்பை...

காவேரி மௌனமாகக் கை கூப்பினாள்.

அமிர்தத்தின் வயிற்றை என்னவோ செய்தது. சமாளித்துக் கொண்டு வரவேற்றாள். "வாம்மா உட்கார்"

அந்தப் பெண் உட்காராமல் அவளையே பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றாள். இருவருக்கும் என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இந்தப் பெண்ணின் தாயார் இவளை வயிற்றில் சுமந்து கொண்டு இதே பங்களாவிற்கு வந்தது இன்னமும் அமிர்தத்திற்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர்களது கம்பெனியின் வெளியூர் கிளையில் அப்போது அவள் வேலை செய்து கொண்டிருந்தாள். மிகவும் அழகாக இருந்தாள். அன்று அமிர்தத்தின் மாமனார் தான் அவளிடம் கறாராகப் பேசினார். "அவன் பலாத்காரம் செஞ்சான், கல்யாணம் செஞ்சுக்கறேன்னு சொன்னான்னு சொல்லிப் பிரயோஜனம் இல்லை. இதோ இங்க நிக்கறாளே இவ தான் அவன் சம்சாரம். பேர் அமிர்தம். ஒரு ஆளுக்கு உசிரோட ஒரு சம்சாரம் தான் இருக்க முடியும். அதுக்கு மேல இருக்கிறவங்களுக்கு இந்த சமூகத்தில் பேர் வேற. என்கிட்ட சொன்னதை ஊரெல்லாம் சொல்லிகிட்டு திரிஞ்சேன்னு தெரிஞ்சா என் கம்பெனில பணம் கையாடல் பண்ணிட்டேன்னு உள்ளே தள்ளிடுவேன். இனி இந்தப் பக்கமோ என் கம்பெனிப் பக்கமோ வராம என் கண்ணில் படாம தப்பிச்சுக்கோ".

போவதற்கு முன்னால் அவள் முகத்தில் தெரிந்த வலி அமிர்தத்தை பல நாள் தூங்க விடவில்லை. விசாரித்ததில் அந்தப் பெண் ஒரு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள் என்றும் அவர்கள் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் தான் ஆகிறதென்றும் ந்¢ஜமாகவே ஒரு அப்பாவி என்றும் தெரிந்தது. கணவனுடன் இரண்டு நாள் பேசாதிருந்தாள். அந்தப் பெண்ணின் அப்பாவித்தனத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிறு குற்றவுணர்வு கூட இல்லாமல் இருந்த தன் கணவனுடன் வாழப் பிடிக்காமல் மூன்றாவது நாள் தாய் வீட்டுக்குப் போய் விட்டாள். தாய்வீட்டாரோ அவளது இரு குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கச் சொல்லித் திருப்பி அனுப்பினார்கள். அந்தக் காலச் சமூக நிர்ப்பந்தங்கள் அவளைக் கட்டிப் போடவே, இயலாமையுடன் கூனிக்குறுகிப் புகுந்த வீட்டுக்குத் திரும்பி வந்தாள். கனவில் எல்லாம் அந்தப் பெண் வந்து அவள் குடும்பத்தார்களையும் அவள் குழந்தைகளையும் சபித்தாள். சில நாட்கள் கழித்து அந்தப் பெண் ஒரு பெண் குழந்தையைப் பிரசவித்ததும் அவள் சுமார் நூறு மைல் தள்ளி ஒரு ஊரில் இருப்பதும் அமிர்தத்திற்குத் தெரிய வந்தது. வீட்டார் யாருக்கும் தெரியாமல் அவளை ஒரு முறை பார்த்து விட்டு வந்தாள். கையோடு சிறிது பணத்தையும் கொண்டு போயிருந்தாள். முதலில் அந்தப் பெண் அதை வாங்க மறுத்தாள்.

"உனக்காக இல்லம்மா. இந்தக் குழந்தைக்காக இதை வாங்கிக்கோ. இது என்ன பாவம் செய்தது சொல்லு. என்னால வேறெந்த உதவியும் செய்ய முடியாது. நான் மாசா மாசம் என்னால் முடிஞ்சதை அனுப்பறேன். இந்தக் குழந்தையை நல்லாப் படிக்க வை. இது என் புருசன் செஞ்சதுக்குப் பரிகாரம் காட்டியும் அவள் படிப்புக்கும் அடிப்படை வசதிக்கும் உபயோகமாயிருக்கும். எனக்கும் ரெண்டு குழந்தைகள் இருக்கு. அதுக நல்லா வரணும்னு பிரார்த்தனை இருக்கு. அது பலிக்கணும்னா உன் குழந்தைக்கு நான் ஏதாவது செய்யணும்னு என் மனசாட்சி சொல்லுது. வாங்கிக்கம்மா"

கடைசியில் அவள் அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டாள். அன்று முதல் எந்த மாதமும் பணம் அனுப்ப அமிர்தம் தவறியதேயில்லை. வருடா வருடம் அனுப்பும் தொகையையும் அதிகப்படுத்தி வந்தாள். ஆரம்பத்தில் விஷயம் தெரிய வந்த போது கணவனும் வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் அமிர்தம் மிக உறுதியாக இருந்ததால் மறுபடி அந்தப் பெண்ணையும் குழந்தையையும் போய் சந்திக்கக் கூடாது என்ற ஒரு கட்டுப்பாடோடு நிறுத்திக் கொண்டார்கள். அப்படி அவள் போனாள் என்று தெரிந்தால் பணம் அனுப்பக் கூட விட மாட்டோம் என்று பயமுறுத்தினார்கள். ஆனால் அந்தப் பெண்ணைப் பற்றி அமிர்தத்துக்குத் தகவல் தரும் நபர் உடனடியாக வேலையிலிருந்து நிறுத்தப் பட்டார். கிட்டத் தட்ட இருபது வருடங்கள் கழித்து இந்த மாத மணியார்டர் மட்டும் விலாசதாரர் இறந்து விட்டார் என்ற தகவலுடன் திரும்ப வந்தது. கணவனிடம் தகவலைத் தெரிவித்தாள்.

வேண்டா வெறுப்பாக அவர் கேட்டார். "இதை என்கிட்ட ஏன் சொல்றே"

""அம்மாவும் செத்துட்டா. ஒரு வயசுப் பொண்ணு அனாதரவா தனியா எப்படி இருக்க முடியும்"

"அதுக்கு என்ன செய்யணும்னு சொல்றே"

"அந்தப் பொண்ணுக்கு இனியாவது நாம ஆதரவு தரணும். நான் வரச் சொல்லப் போறேன்"

கணவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. "நீ என்னை நாலு பேர் முன்னாடி அவமானப் படுத்தாம விடமாட்டே"

"அவமானம் நம்ம கீழ்த்தரமான நடத்தையில் இருக்கு. அது வெளிய தெரிகிற போது புதிதாய் வர்றதல்ல. இது உங்கள மாதிரி ஆளுகளுக்குப் புரியாது"

தொடர்ந்த வாக்குவாதத்தின் முடிவில் அந்தப் பெண் வந்த பின் ஓரிரு வாரங்களில் ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் சேர்த்து விடுவது என்றும் பிறகு ஒரு நல்ல வாழ்க்கை அமைய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் முடிவாகியது.

"ந்¢யாயமா நாம போய் கூட்டிட்டு வரணும்"

அவர் பார்வையாலேயே அவளைச் சுட்டெரித்தார். "பெரிய நியாய தேவதை. லெட்டர் போடு போதும்"

இனி அதிகம் பேசினால் வேதாளம் பழையபடி முருங்கை மரம் ஏறினால் என்ன செய்வது என்று அவளுக்குப் பயம் வந்தது. இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே அதிகம் என்று நினைத்தவளாய் அமிர்தம் உடனடியாக அந்தப் பெண்ணிற்குக் கடிதம் எழுதினாள். எழுதி ஒரு வாரம் கழித்து அந்தப் பெண் வந்திருக்கிறாள்.

"ஏம்மா நிற்கிறாய். உட்கார்"

அவள் மிகுந்த தயக்கத்தோடு சோபாவில் உட்கார்ந்தாள். அந்தப் பங்களாவும், அங்கு தெரிந்த செல்வச் செழிப்பும் அவளுக்கு பிரமிப்பை உண்டாக்கியிருந்ததாய்த் தோன்றியது. தோற்றத்தில் தன் தாயைப் போலவே இருந்தாலும், தாயிடம் காணப் படாத ஒரு உறுதி மகளிடம் தென்படுவதாக அமிர்தத்திற்குத் தோன்றியது. மெள்ள அமிர்தம் பேச்சுக் கொடுத்தாள்.


"காவேரி நீ என்னம்மா படிச்சிருக்கே"

"ஒன்பதாவது வரைக்கும் படிச்சிருக்கேன். அம்மா பக்கவாதம் வந்து படுத்தப்புறம் மேல படிக்கலைங்க"

அவள் தாய் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது உண்மையில் அமிர்தத்திற்குத் தெரிந்திருக்கவில்லை. "எனக்கு ஒரு கடிதம் போட்டிருக்கலாமே. என்னால முடிஞ்ச உதவியைச் செஞ்சிருப்பேனே. படிப்பை நிறுத்தியிருக்க வேண்டாமே" அமிர்தத்தின் முகத்திலும் பேச்சிலும் நிஜமாகவே ஆதங்கம் தெரிந்தது. தனது மகனும் மகளும் நன்றாகப் படித்து பெரிய நிலையில் மேலை நாடுகளில் இருக்க, இந்தப் பெண் படிக்க முடியாமல் நின்றது அவளுக்கு மிக வருத்தமாக இருந்தது.

காவேரி பதில் சொல்லாமல் அமிர்தத்தையே ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

"என்னம்மா என்னை அப்படிப் பார்க்கறே"

உடனடியாகத் தன் பார்வையை விலக்கிக் கொண்டவள் தானும் பதிலுக்குக் கேட்டாள். "உங்க குழந்தைக என்ன படிச்சிருக்காங்க"

தயக்கத்துடன் அமிர்தம் சொன்னாள் "ரெண்டு பேரும் இஞ்சீனியரா அமெரிக்கால இருக்காங்க"

கேட்டு காவேரி சந்தோஷப் பட்ட மாதிரி தெரிந்தது. "எப்பவாவது வருவாங்களா?"

"வருஷத்துக்கு ஒரு தடவை வருவாங்க. போன மாசம் தான் வந்துட்டுப் போனாங்க" என்ற அமிர்தம் அப்போது தான் அவள் ஒரு பையைத் தவிர வேறு எதுவும் கொண்டு வராததைக் கவனித்து கேட்டாள். "வெறும் இந்தப் பையோட வந்திருக்கியே. உன்னோட பாக்கி சாமான் எல்லாம் எங்கே?"

ஒரு கணம் தயங்கி விட்டுச் சொன்னாள். "கொண்டு வரலைங்க".

"ஏம்மா, நான் விவரமா எழுதியிருந்தேனே"

"இல்லைங்க எனக்குத் திரும்பப் போகணும்"

அமிர்தம் திகைத்துப் போய்க் கேட்டாள். "எங்கே போறே?"

"எங்க ஊருக்குத்தான். எனக்கு அங்க ஒரு ஸ்கூல்ல ஆயா வேலை கிடைச்சிருக்கு. இப்பப் போனா ராத்திரிக்குள்ள போய் சேர்ந்து நாளைக்கு வேலைக்குப் போயிக்கலாம். லீவு எடுக்க முடியாது."

அமிர்தம் மறுப்பு சொல்ல வாயைத் திறந்தாள். அவளைப் பேச விடாமல், "ஒரு நிமிஷம்..." என்று சொல்லி விட்டு ஒரு ஓரமாக வைத்திருந்த துணிப்பையை எடுத்தாள்.

"நீங்க கண்டிப்பா தப்பா நினைக்கக் கூடாது. இதைத் திரும்பத் தரலைன்னா எனக்கு சமாதானம் கிடைக்காது. நீங்க மறுப்புச் சொல்லாம வாங்கிக்கணும்"

"என்ன இது..." என்ற படி பையைத் திறந்த அமிர்தம் திகைத்துப் போனாள். உள்ளே கட்டு கட்டாகப் பணம். "எனக்கு ஓண்ணும் புரியலை"

"இது நீங்க இது வரை எங்களுக்கு அனுப்பிச்ச பணம். இதிலிருந்து ஒரு பைசா கூட நாங்க எடுக்கலை. காரணம் அனுப்பினது நீங்கன்னாலும் இது உங்க கணவரோட பணம். அந்த ஆளோட பணத்தை எடுத்துக்க மனசு ஒத்துக்கல. எங்கள வேண்டாத ஆளை எங்களுக்கும் வேண்டாம். அவரோட காசு வேண்டாம். எத்தனையோ நாள் பட்டினி கிடந்துருக்கோம். மருந்துக்குக் காசு இல்லாம கஷ்டப் பட்டிருக்கோம். ஆனாலும் இதிலிருந்து பணம் எடுத்து உசிரோட இருக்க மனசு பிரியப்படல"

காவேரியின் வார்த்தைகளில் ஒரு பெருமிதம் இருந்தது. வந்த போதிருந்த பலவீனமான குரல் போய் இப்போது குரல் கணீரென்றிருந்தது.

"ந்£ங்க கேக்கலாம் ஏன் இந்தக் காசை அன்னைக்கே திருப்பி அனுப்பிச்சிருக்க வேண்டியது தானேன்னு. பணம் திருப்பி அனுப்புனா உங்க மனசு சங்கடப்படும்னு அம்மா நினைச்சாங்க. அவங்களத் தேடி வந்து பணத்தக் குடுத்து ஒரு பச்சக் குழந்தை கஷ்டப் படாம வளரணும்னு நினைச்ச உங்க மனசு வருத்தப்படக் கூடாதுன்னு அம்மா என்னைக்கும் சொல்லுவாங்க..." சொல்லச் சொல்ல அவளுக்குத் தொண்டையை அடைத்தது.

சுதாரித்துக் கொண்டு தொடர்ந்தாள். "இதை சேத்து வச்சு ஏதாவது அனாதை இல்லத்துக்குக் குடுத்துறலாம்னு அம்மா நினைச்சாங்க. பெருசான பெறகு நான் ஒத்துக்கல. யாரு பணத்த யாரு தர்மம் செய்யறது? செய்ய என்ன உரிமையிருக்குன்னு எனக்குத் தோணிச்சு. அதனால இதைத் திரும்பத் தரணும்னு நான் பிடிவாதமாய் இருந்தேன். அம்மா இதை திரும்ப உங்களுக்குத் தர்றது உங்கள அவமானப்படுத்தற மாதிரின்னு சொல்லி அப்ப தடுத்துட்டாங்க. ஆனா எனக்கு அப்படித் தோணல. அதான் அவங்க செத்துப் போனவுடனே இதைக் கொண்டாந்துட்டேன். நீங்க என்னப் புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன்"

"இந்தப் பணத்தில் உனக்கு உரிமை இருக்கும்மா. இது இனாம் அல்ல. இந்தப் பணத்துல மட்டுமல்ல. இந்த வீட்டுலயும் என் குழந்தைகளுக்கு இருக்கும் உரிமை உனக்கும் இருக்கு"

" நீங்க என்ன இன்னும் சரியாப் புரிஞ்சுக்கலன்னு தோணுது. நான் பொறக்கக் காரணமா இருந்ததால மட்டும் அந்த ஆள் எனக்கு அப்பான்னு ஆயிடாது. எடுத்துப் பாராட்டி சீராட்டாத ஒரு மனுசனை, ஒரு தடவை வந்து பார்க்கணும்னு கூடத் தோணாத அந்த ஆளை அப்பாங்கறதோ, அவர் காசுக்கு உரிமை கொண்டாடறதோ எனக்கு அருவருப்பா இருக்கு"

அமிர்தம் மிகுந்த வருத்தத்துடன் சொன்னாள் "நீ சொல்றது எனக்குப் புரியுதும்மா. ஆனா இத்தனை நாள் நான் கொஞ்சமாவது நிம்மதியா இருந்திருந்தேன்னா அதுக்குக் காரணம் உங்க வாழ்க்கையை நான் கொஞ்சமாவது பண ரீதியிலாவது சுலபமாக்கி இருக்கிறேன்னு நினைச்சுத் தான். ஆனா இத்தனை நாள் இப்படிக் கஷ்டப்பட்டுட்டீங்களேம்மா"

"அந்தக் கஷ்டத்துலேயும் இந்தக் காசைத் தொடாம வச்சிருக்கோம்கிற பெருமை இருந்துச்சும்மா" என்ற காவேரி லேசான மனத்துடன் தொடர்ந்தாள் " உங்கள ஒரு தடவை பார்க்கணும்னு எனக்குப் பல தடவை தோணியிருக்கு. ஒவ்வொரு மாசமும் மறக்காம பணம் அனுப்புன உங்க நல்ல மனசுக்கு நானும் அம்மாவும் ரொம்பவே கடன் பட்டிருக்கோம். பொதுவா இந்த இரக்கம் எல்லாம் நாளாக நாளாக கம்மியாய் கடைசில காணாமப் போயிடும். ஆனா உங்க மனசுல மட்டும் இன்னைக்கு வரைக்கும் இந்த மனிதாபிமானம் குறையல. உங்கள என்னைக்கும் மறக்க மாட்டேன்."

அமிர்தம் வாயடைத்துப் போய் நின்றாள். இந்தப் பெண்ணிற்கு இது வரை உதவவில்லை, இனியும் உதவ இவள் அனுமதிக்க மாட்டாள் என்ற உண்மை உறைத்ததால் அவள் மனம் கனத்தது.

அவளது களங்கமில்லாத மனதில் தோன்றியது அவள் முகத்திலும் பிரதிபலித்திருக்க வேண்டும். அவளது எண்ணத்தைப் புரிந்து கொண்டவளாய் காவேரி மனம் நெகிழ்ந்து போய் சொன்னாள். "நீங்க என்னைப் பத்திக் கவலைப்படாதீங்கம்மா. இவ்வளவு நாள் அம்மா மருந்துக்கே நான் சம்பாதிச்சதெல்லாம் செலவானதால தான் கொஞ்சம் சிரமப் பட்டுட்டேன். இனி அந்த செலவில்லாததால் என் சம்பாத்தியம் எனக்குத் தாராளமாப் போதும். நான் கிளம்பறேம்மா"

பணப் பையை டைனிங் டேபிள் மீது வைத்து விட்டு காவேரி திரும்பும் போது அறை வாயிலருகே முகம் சிறுத்து சிலையாக ஒரு மனிதர் நின்றிருந்தார். அவர் அவர்களிருவரையும் ஏதோ வேற்றுக் கிரக மனிதர்களைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறந்ததிலிருந்து ஒரு முறை கூட அவள் பார்த்திராத தந்தையை ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆசை எள்ளளவும் அவள் மனதில் இருந்ததில்லை. எனவே கதவு ஓரமாக நின்றிருந்த அந்த மனிதர் தன் தந்தையாகத் தான் இருக்க வேண்டும் என்று தெரிந்தும் ஏறெடுத்தும் பார்க்காது கதவை நேராகப் பார்த்த படி காவேரி கம்பீரமாக வெளியேறினாள்.

-என்.கணேசன்


நன்றி: பதிவுகள்.காம்

Thursday, December 13, 2007

படித்ததில் பிடித்தது - Ambani Wisdom

சிந்தனையாளனாக இருந்து சாதிப்பது பற்றிச் சொல்வது வேறு. சாதித்து விட்டு சாதனை பற்றிச் சொல்வது வேறு. இரண்டாமவரை நாம் சந்தேகிக்க வேண்டியதில்லை. நடைமுறைக்கு ஒத்து வருமா என்று தர்க்கவாதம் செய்ய வேண்டியதில்லை. திருபாய் அம்பானியைப் போல் அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையை ஆரம்பித்து உலகப் பணக்காரர்களில் ஒருவராய் வாழ்ந்து சாதித்த ஒருவரின் அனுபவ மொழிகளைப் படிப்பது மட்டுமல்ல பின்பற்றவும் முடிந்தால் வெற்றிகள் தானாக நம்மைத் தேடி வராதா என்ன?

-என்.கணேசன்

Dhirubhai Ambani Quotes -

True entrepreneurship comes only from risk-taking.


Pursue your goal, even in the face of difficulties. Convert difficulties into
opportunities. Keep your morale high, in spite of setbacks. At the end you
are bound to succeed.


My advice to young entrepreneurs is not to accept defeat in the face of
odds. Challenge negative forces with hope, self-confidence and
conviction. I believe that ambition and initiative will ultimately triumph.
The success of the young entrepreneur will be the key to India's
transformation in the new millennium.


The secret of Reliance's success was to have ambition and to know the
minds of men.


Growth has no limit at Reliance. I keep revising my vision. Only when
you dream it you can do it.


The problem with Indians is that we have lost the habit of thinking big!


We must always go for the best. Do not compromise on quality. Reject if it
is not the best -- not only the best in India, but globally.


If India wants to be a great nation, we must have courage to trust. This is
my sincere belief.


All we have to do is to break the shackles that chain the energies of our
people, and India's economy will record a quantum leap and move into a
new, higher orbit of growth, competitiveness and productivity.


For those who dare to dream, there is a whole world to win!


I am deaf to the word 'NO.'


I give least importance to being Number one. I consider myself to be
fortunate in this position and would like to contribute to nation building
in some way.


Does making money excite me? No, but I have to make money for my
shareholders. What excites me is achievement, doing something difficult.
In this room extraordinary things must happen.


Think big, think fast, think ahead. Ideas are no one's monopoly.


Our dreams have to be bigger. Our ambitions higher. Our commitment
deeper. And our efforts greater. This is my dream for Reliance and for
India.


I consider myself a pathfinder. I have been excavating the jungle and
making the road for others to walk. I like to be the first in everything I do.




Give the youth a proper environment. Motivate them. Extend them the
support they need. Each one of them has infinite source of energy. They
will deliver.


You do not require an invitation to make profits.


If you work with determination and with perfection, success will follow.


Between my past, the present and the future, there is one common factor:
Relationship and Trust. This is the foundation of our growth.


We bet on people.


Meeting the deadlines is not good enough, beating the deadlines is my
expectation.


Don't give up, courage is my conviction.


We cannot change our rulers, but we can change the way they rule us.


As A G Krishnamurthy, founder of Mudra Communications, writes in his
book, Dhirubhaism, about some of the Reliance founder's doctrines:


Roll up your sleeves and help. You and your team share the same
DNA.


Be a safety net for your team.


Always be the silent benefactor. Don't tom-tom about how you helped
someone.


Dream big, but dream with your eyes open.


Leave the professional alone!


Change your orbit, constantly!


Money is not a product by itself, it is a by-product, so don't chase it.

Tuesday, December 11, 2007

உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள்


அம்மா பெயரை ஏன் ஒருவர் பெயருக்கு முன் இனிஷியலாகப் போட்டுக் கொள்ளக் கூடாது என்று கேட்பது உண்மையில் நவீன கால சிந்தனையல்ல. M.குமரன், s/o மஹாலக்ஷ்மி என்று போட்டுக் கொள்வதும் கூட இன்றையப் புரட்சி அல்ல. உபநிடத காலத்திலேயே சிந்தித்த சிந்தனை தான் அது. அப்படித் தன் தாயின் பெயரை தன் பெயரோடு இணைத்த ஒரு பெரிய ரிஷியைப் பற்றி சாண்டோக்கிய உபநிடதம் சொல்லி இருக்கிறது.

சத்யகாமன் என்னும் சிறுவன் ஜாபாலா என்னும் பெண்மணியின் மகன். அவனுக்குத் தன் தந்தை யார் என்று தெரியாது. குருகுலத்திற்குச் சென்று கல்வி கற்கும் வயது வந்தவுடன் அவன் தன் தாயிடம் தன் தந்தை பற்றியும் கேட்கிறான். (அந்தக் காலத்தில் கல்வி கற்க விரும்புவோர் தன் தந்தை பெயரையும் தன் பூர்வீகத்தையும் சொல்லியே குருகுலத்தில் கற்க அனுமதி பெற முடியும்.)

சத்யகாமனின் தாய் அவன் தந்தை யாரென்று தெரியாது என்ற உண்மையைத் தன் மகனிடம் ஒப்புக் கொள்கிறாள். தான் அவனைக் கருத்தரித்த காலத்தில் பலர் இல்லங்களில் பணி புரிந்ததாகவும் அப்போது பலருடன் நெருக்கமாக இருக்க நேர்ந்தது என்றும் ஒத்துக் கொள்கிறாள்.

சத்யகாமன் அந்தத் தகவலைத் தாயிடம் இருந்து பெற்றுக் கொண்டு கௌதமர் என்ற ரிஷி நடத்தும் குருகுலத்திற்குச் செல்கிறான். அக்காலத்தில் கல்வி அறிவு பெற வேண்டுபவர் தன்னுடன் காய்ந்த விறகை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். ஞான அக்னியால் தீண்டப்படாத விறகாய் நான் இருக்கிறேன். என்னில் ஞான அக்னியை ஏற்படுத்துங்கள் என்று 'சிம்பாலிக்'காக சொல்வது போன்ற முறை அது.

கையில் காய்ந்த விறகுடன் வந்த புதிய சிறுவனைப் பார்த்தவுடன் கௌதமர் அவன் கல்வி கற்க வந்திருக்கிறான் என்று அறிந்து கொண்டு வழக்கமான கேள்வியைக் கேட்கிறார். "குழந்தாய் உன் பெயர் என்ன? உன் தந்தை யார்? உன் பூர்வீகம் என்ன?"

இந்த சூழ்நிலையை சற்று அந்தக் காலக் கட்டத்திற்குச் சென்று பார்த்தால் அந்தச் சிறுவனின் தர்மசங்கடமான நிலையை நுணுக்கமாக உணர முடியும். தன் முன்பு வேத விற்பன்னராகிய குரு, அவருக்கு முன் அமர்ந்து தான் என்ன சொல்லப் போகிறோம் என்று ஆவலாக உள்ள மற்ற சிறுவர்கள், இவர்களுக்கு முன்னால் தன் தந்தை பெயர் தெரியாது என்று சொல்ல வேண்டிய அவலநிலை இருப்பினும் சத்யகாமன் தயங்காமல் உண்மையை எடுத்துரைக்கிறான்.

"குருவே. என் பெயர் சத்யகாமன். என் தாய் தாய் பெயர் ஜாபாலா. என் தந்தை யார் என்று தனக்குத் தெரியாது என்று என் தாய் கூறுகிறார். எனவே எனக்கு என் பூர்வீகம் தெரியாது"

மற்ற சிறுவர்கள் ஏளனமாய் சிரிக்க கௌதம ரிஷி அவனை மரியாதையுடன் பார்த்தார். அக்காலத்தில் பிராமணன் என்பது பிறப்பால் மட்டுமே தீர்மானிக்கப்படும் ஒரு பட்டமாக இருக்கவில்லை. உண்மையும், ஞானமும், வேறுபல நற்குணங்களுமே பிராமணன் என்று ஒருவனை ஏற்றுக் கொள்ளத் தேவையானவைகளாக இருந்தன. "இத்தனை பேர் மத்தியில் உண்மையை சிறிதும் மறைக்காமல் திரிக்காமல் உள்ளதை உள்ளபடியே தைரியமாகச் சொல்ல முடிந்த நீ பிராமணனே என்று நான் கருதுகிறேன், சத்யகாமா. உண்மையை உன்னிடம் மறைக்காது சொன்ன உன் தாயையும் நான் பாராட்டுகிறேன். இனி இது போன்ற சந்தர்ப்பங்களில் உன் தந்தை பெயருக்குப் பதிலாக உன் தாய் பெயரைச் சேர்த்துச் சொல். இன்றிலிருந்து நீ சத்யகாம ஜாபாலா என்ற பெயரால் இந்த உலகில் அறியப்படுவாய்"

சத்யகாம ஜாபாலா கௌதம ரிஷியிடம் கற்றுப் பேரும் புகழும் அடைந்து பெரிய ஞானியாக விளங்கினார் என்று உபநிடதங்கள் சொல்கின்றன.

இப்படி அந்தக் காலத்திலேயே இது போன்ற ஒரு புரட்சிகரமான சிந்தனை ஏற்கப்பட்டு இருந்தது. மேலும் உண்மைக்கு அந்தக் காலத்தில் தரப்பட்ட மரியாதையையும் எண்ணிப் பாருங்கள். உலகமெல்லாம் புகழ்பெற்று பாரதம் ஒரு காலத்தில் திகழ்ந்ததற்குக் காரணம் நம் மக்களிடம் இருந்த இது போன்ற உயர்ந்த சிந்தனைகளே என்றால் அது மிகையாகாது அல்லவா?

- என்.கணேசன்

Friday, December 7, 2007

உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்?

சுயமுன்னேற்றக் கட்டுரை

ரால்·ப் பார்லெட் (Ralph Parelette) என்பவர் பிரபல அமெரிக்கப் பேச்சாளர். ஒரு முறை அவர் 'விதி' பற்றிப் பேச ஒரு கண்ணாடி ஜாடியுடன் மேடைக்கு வந்தார்.

அந்த ஜாடியில் சிறிய பீன்ஸ் விதைகளும் பெரிய வாதுமைக் கொட்டைகளும் (Walmuts) இருந்தன. ஜாடியை ஒரு முறை நன்றாகக் குலுக்கி விட்டு அங்கிருந்தவர்களுக்கு அதைக் காண்பித்தார். அளவில் பெரிய வாதுமைக் கொட்டைகள் ஜாடியின் மேல்புறத்திலும், சிறிய பீன்ஸ் விதைகள் அடிப்பகுதியிலும் இருந்தன.

"நண்பர்களே!இந்தப் பீன்ஸ் விதைகளில் ஒன்று என்னிடம் உதவி கேட்கின்றது. அதற்கும் வாதுமைக் கொட்டைகளுக்கு இணையாக மேலே தங்க ஆசையாம், நான் அதற்கு உதவப் போகிறேன். உங்கள் முன்னிலையிலேயே அந்த சிறிய பீன்ஸை மேலே வைக்கிறேன் பாருங்கள். ஆஹா, இப்போது பீன்ஸ் விதைக்குத் தான் எத்தனை சந்தோஷம்"

அவர் மறுபடி ஜாடியை நன்றாகக் குலுக்கினார். "அடடா, குலுக்கலில் பீன்ஸ் விதை தன் பழைய இடத்திற்கே போய் விட்டதே! அந்த பீன்ஸ் விதைக்கு மிகவும் வருத்தம். சமத்துவம் என்பது இல்லையே என்று அங்கலாய்ப்பு. அது மறுபடி என்னிடம் வேண்டிக் கொள்கிறது. தான் மேலே போய்த் தங்கா விட்டாலும் பரவாயில்லை. வாதுமைக் கொட்டை தனக்குச் சமமாகக் கீழே தங்க வேண்டும் என்கிறது"

"சரி, அதையும் செய்வோமே. பாருங்கள். உங்கள் முன்னிலையில் வாதுமைக் கொட்டை ஒன்றை எடுத்து பீன்ஸ்களுக்கு அடியில் வைக்கிறேன். சரி தானே!"

அவர் மறுபடி ஜாடியை நன்றாகக் குலுக்கினார். முன்பு போலவே அந்த வாதுமைக் கொட்டை மேலே வந்து விட்டது. பீன்ஸ் அடியில் தங்கி விட்டது.

"நண்பர்களே இது இயற்கையின் நியதி. அளவில் சிறியவை கீழும், அளவில் பெரியவை மேலும் எப்போதும் தங்கும். பீன்ஸ் மேலே வர வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, அது அளவில் பெரிதாக வளர்வது தான். அதை விட்டு நாம் எத்தனை தான் உதவினாலும் காலத்தின் குலுக்கலில் எல்லாமே தங்களுக்கு உரிய இடத்திலேயே தங்க நேரிடும்."

"நண்பர்களே பீன்ஸ¤க்கும் வாதுமைக் கொட்டைக்கும் தங்களின் ஆசைப்படி தங்களை மாற்றிக் கொள்ள முடியாது. ஆனால் மனிதர்களைப் பொறுத்தவரை நாம் அப்படிக் கையாலாகாதவர்கள் அல்ல. கடவுள் நம்மை அப்படிப் படைக்கவில்லை. நாம் உயர வேண்டுமானால் வளர வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அப்படி முயற்சி எடுப்பதன் மூலமாகவோ, முயற்சி எடுக்க மறுப்பதன் மூலமாகவோ நாமே நம் விதியைத் தீர்மானித்துக் கொள்கிறோம்" என்று கூறி முடித்தார்.

இது ஒரு மிக அழகான உவமை. ரால்·ப் பார்லெட்டின் பீன்ஸைப் போல் தான் நம்மில் பலரும் இருக்கிறோம். யாராவது ஏதாவது செய்து எப்படியாவது நம்மை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு போய் விடக் காத்து இருக்கிறோம்.

அப்படி வெறுமனே காத்துக் கிடக்கிற காலத்தில் பாதியைச் சரியாக, புத்திசாலித்தனமாக, முழுமனதோடு பயன்படுத்தினால் போதும், அந்த நிலைக்குத் தேவையான சகல தகுதிகளையும் நம் முயற்சியால் நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். யார் தயவும் இன்றி நம் இலக்குகளை நாமே சென்றடைய முடியும். மாறாக நல்ல நேரத்திற்காகவோ, அடுத்தவர் உதவிக்காகவோ, அதிர்ஷ்டத்திற்காகவோ காத்துக் கிடப்பவர்கள் இருக்குமிடத்திலேயே இருக்க வேண்டி வரும். அது தான் விதி.

எனவே அறிவையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். காலத்திற்கேற்ப திறமையாக, விரைவாகச் செயல்படுங்கள். உங்கள் அறிவும் திறமையும் அதிகப்பட அதிகப்பட உங்கள் இலக்கிற்கான வழிகள் தாமாகவே தெளிவாகப் புலப்படத் துவங்கும். சரியான சந்தர்ப்பங்கள் தானாக உங்களைத் தேடி வர ஆரம்பிக்கும். இதுவே இயற்கையின் நியதி.

-என்.கணேசன்

Saturday, December 1, 2007

படித்ததில் பிடித்தது-Nothing is Random

எல்லாமே அர்த்தத்துடனும், நுட்பத்துடனும் இம்மியும் பிசகாது இந்த உலகில் நடக்கிறது என்று சொல்லும் இந்தக் கட்டுரையை சமீபத்தில் இணையதளத்தில் நான் படித்தேன். மூன்று முறை ஒவ்வொரு வரியாக நிதானமாகப் படித்தேன். கட்டுரை என்னை நிறைய சிந்திக்க வைத்தது. மேலோட்டமாய் இல்லாமல் நீங்களும் நிதானமாகப் படித்துப் பாருங்களேன்.

Nothing is Random

Nothing is random, nor will anything ever be, whether a long string of perfectly blue days that begin and end in golden dimness, the most seemingly chaotic political acts, the rise of a great city, the crystalline structure of a gem that has never seen the light, the distributions of fortune, what time the milkman gets up, the position of the electron, or the occurrence of one astonishingly frigid winter after another.

Even electrons, supposedly the paragons of unpredictability, are tame and obsequious little creatures that rush around at the speed of light, going precisely where they are supposed to go. They make faint whistling sounds that when apprehended in varying combinations are as pleasant as the wind flying through a forest, and they do exactly as they are told. Of this, one can be certain.

And yet there is a wonderful anarchy, in that the milkman chooses when to arise, the rat picks the tunnel into which he will dive when the subway comes rushing down the track from Borough Hall, and the snowflake will fall as it will. How can this be? If nothing is random, and everything is predetermined, how can there be free will? The answer to that is simple.

Nothing is predetermined; it is determined, or was determined, or will be determined. No matter, it all happened at once, in less than an instant, and time was invented because we cannot comprehend in one glance the enormous and detailed canvas that we have been given - so we track it, in linear fashion, piece by piece. Time, however, can be easily overcome; not by chasing light, but by standing back far enough to see it all at once.

The universe is still and complete. Everything that ever was, is; everything that ever will be, is - and so on, in all possible combinations. Though in perceiving it we imagine that it is in motion, and unfinished, it is quite finished and quite astonishingly beautiful.

In the end, or rather, as things really are, any event, no matter how small, is intimately and sensibly tied to all others. All rivers run full to the sea; those who are apart are brought together; the lost ones are redeemed; the dead come back to life; the perfectly blue days that have begun and ended in golden dimness continue, immobile and accessible; and, when all is perceived in such a way as to obviate time, justice becomes apparent not as something that will be, but as something that is.

Mark Helprin