சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 29, 2013

பரம(ன்) ரகசியம் – 59



விஷாலிக்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை. எந்த மனிதரைத் தாத்தா என்று அழைக்கக் கூட ஈஸ்வர் மறுத்திருந்தானோ அவர் மடியில் அவன் படுத்துக் கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தது அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர்கள் இருவர் கூடவே மீனாட்சியும் ஆனந்தவல்லியும் மிக ஒட்டி அமர்ந்திருந்த விதம் ஒரு அன்பான குடும்பத்தின் அழகான தருணமாகத் தோன்றியது. தாங்கள் வந்து அந்த அழகைக் குலைத்து விட்டோமோ என்று கூட விஷாலி நினைத்தாள்.

பரமேஸ்வரனுக்கு மாரடைப்பு வந்ததைத் தெரிவிக்கையில் மகேஷ் அழுதபடியே அவளிடம் சொல்லி இருந்தான். “ஈஸ்வர் வந்த வேலையை முடிச்சுட்டான் விஷாலி. எங்க தாத்தாவை அவன் கொன்னுட்டான்.... அவர் உயிருக்குப் போராடிகிட்டு இருக்கார் விஷாலி....

ஆனால் மறுநாள் அவர்களுக்குக் கிடைத்த செய்தி வேறாக இருந்தது. பரமேஸ்வரன் பிழைத்து விட்டார் என்று தெரிந்தது மட்டுமல்லாமல் பரமேஸ்வரனின் அண்ணா கனவில் வந்து அவரைக் காப்பாற்றி விட்டார் என்று சொல்லப்பட்டது. தென்னரசு பரமேஸ்வரனை உடனே பார்த்து விட்டு வரத் தீர்மானித்தார். மீனாட்சியிடம் பேசிய போது அவர் ஓய்வில் இருக்கிறார், சதா உறங்குகிறார் என்று சொன்னாள். அதனால் தென்னரசு பரமேஸ்வரனைப் பார்ப்பதை இரண்டு நாள் தள்ளிப் போட்டார்.    

பரமேஸ்வரன் தென்னரசுவிடம் நெருங்கிப் பழகுபவர் அல்ல. தென்னரசுவைப் பார்க்கும் போதெல்லாம் பரமேஸ்வரனுக்கு மகன் சங்கர் நினைவு வருவதை தவிர்க்க முடியாதது காரணமாக இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு தென்னரசுவும் பரமேஸ்வரனிடம் இருந்து சற்றுத் தொலைவாகவே இருந்தார். ஆனாலும் இது போன்ற உயிருக்கு ஆபத்து வந்து பின் பிழைக்கும் சந்தர்ப்பங்களில் போய் சந்தித்து நலம் விசாரிப்பது தான் முறை என்று தென்னரசு மகளிடம் சொல்லி அவளையும் அழைத்து வந்தார்.

பரமேஸ்வரனைப் பார்ப்பதைக் காட்டிலும் ஈஸ்வரைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை நழுவ விட விஷாலிக்கு மனம் இல்லை. அதனால் தான் தந்தையுடன் அவள் கிளம்பினாள். ஆனால் இங்கு வந்தவுடனேயோ, வந்திருக்கவே வேண்டாமோ என்று அவளுக்குத் தோன்ற ஆரம்பித்தது. அவளைப் பார்த்தவுடனேயே ஈஸ்வர் முகம் இறுகியது மட்டுமல்ல பின் அவள் ஒருத்தி அங்கு வந்திருப்பதாக உணர்ந்ததாகவே அவன் காட்டிக் கொள்ளவில்லை. தென்னரசுவை முகம் மலர வரவேற்றவன் அவரிடமே பேசிக் கொண்டிருந்தான். மகன் சம்பந்தமான பாரத்தை இறக்கி வைத்திருந்த  பரமேஸ்வரனும் தென்னரசுவிடம் அன்பாகப் பேசிக் கொண்டிருந்தார்.  

விஷாலி பரமேஸ்வரனிடம் ஒருசில வார்த்தைகளில் நலம் விசாரித்து விட்டுப் பின்பு மீனாட்சியுடன் பேச ஆரம்பித்தாள். என்றுமில்லாத அதிசயமாக ஆனந்தவல்லியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டது விஷாலிக்கு மிக ஆச்சரியமாக இருந்தது.

சிறு வயதில் இருந்து அவர்கள் வீட்டுக்கு வந்து போகும் விஷாலியிடம் ஒரு முறை கூட ஆனந்தவல்லி பேசியதாக விஷாலிக்கு நினைவில்லை. சற்று தொலைவில் இருந்தே கண்களைச் சுருக்கி கழுகுப் பார்வை பார்க்கும் ஆனந்தவல்லி விஷாலியை ஒரு பொருட்டாக மதித்ததில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஈஸ்வர் வந்த பிறகு நிறையவே மாறி இருந்த ஆனந்தவல்லி ஈஸ்வருக்காகவே விஷாலி விஷயத்திலும் மாறினாள்.

ஈஸ்வர் சில நாட்களுக்கு முன் திடீரென்று மிக சந்தோஷமாக மாறியதும், பாடல்கள் முணுமுணுக்க ஆரம்பத்ததும் அவன் காதல் வசப்பட்டிருந்ததை அவளுக்கு உறுதிப்படுத்தியது. அந்த சமயத்தில் அவன் தென்னரசு வீட்டுக்கு மட்டுமே போய் வந்திருந்தபடியால் அவன் மனதைக் கவர்ந்த பெண் விஷாலியாகவே இருக்க்க் கூடும் என்ற சந்தேகமும் அவளுக்கு ஏற்பட்டு இருந்தது. ஈஸ்வர் இந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்து இருந்து அவள் கருத்துக்கு மரியாதை இருந்திருக்கும் பட்சத்தில் அவள் விஷாலியை ஏற்றுக் கொண்டிருப்பது சந்தேகமே. அந்தஸ்தில் உள்ள ஏற்ற தாழ்வை அவள் காரணம் காட்டி மறுத்திருப்பாள். ஆனால் அமெரிக்காவில் வளர்ந்து பெரிதானவன், குடும்ப அந்தஸ்திற்கு அரைக்காசு மரியாதை கூட கொடுக்க நினைக்காதவன், தன் மனைவியைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அந்தக் குடும்பத்திற்குக் கொடுக்கும் எண்ணம் சிறிதும் இல்லாதவன் ஒரு வெள்ளைக் காரியையோ, சீனாக்காரியையோ, ஆப்பிரிக்காக்காரியையோ கல்யாணம் செய்து கொண்டாலும் ஆச்சரியமில்லை என்கிற இந்த நிலையில் ஆனந்தவல்லிக்கு பெண் யாரானாலும் இந்த நாட்டுப் பெண்ணாக இருந்தால் நல்லது என்று இறங்கி வருகிற எண்ணத்தைக் கொண்டு வந்து விட்டது.

காதலிக்க ஆரம்பித்து இரண்டே நாளில் ஈஸ்வர் முகம் வாடி, அவன் பாட்டும் காணாமல் போய் விட்டது அவளுக்கு ஏமாற்றத்தையே தந்தது. இந்தக் காலத்துப் பசங்களுக்குக் காதலிக்கவும் அதிக நாள் தேவைப்படுவதில்லை, அதிலிருந்து விலகி விடவும் அதிக நாள் தேவைப்படுவதில்லைஎன்று மனதில் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு ஒரு திருமணம் ஆகி அவன் குழந்தையைப் பார்த்து விட்டுக் கண்ணை மூடினால் தேவலை என்று ஆசைப்பட ஆரம்பித்திருந்த அவள் வேறு வழியில்லாமல் ஏமாற்றத்தை சகித்துக் கொண்டாள்.

ஆனால் இன்று விஷாலியைப் பார்த்தவுடன் ஈஸ்வர் தன்னை அறியாமல் ஒரு கணம் முகம் மலர்ந்ததைக் கவனித்த போது இன்னமும் அவன் மனதில் காதல் இருக்கிறது என்பதும், அவன் காதலிக்கும் பெண் விஷாலி தான் என்பதும் அவளுக்கு உறுதியாகி விட்டது. உடனடியாக அவன் முகம் இறுகியதை அவள் பெரிதுபடுத்தவில்லை. தன்னை அறியாமல் ஏற்படும் உணர்வு தான் நிஜம் என்பதில் அவளுக்கு சந்தேகமே இல்லை. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வெளியே அவன் காட்டுகிற பாசாங்கை அவள் நம்பவில்லை.

தூரத்தில் இருந்தே எப்போதும் பார்த்த அந்தப் பெண்ணைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொள்ள முடிவெடுத்த ஆனந்தவல்லி மீனாட்சி, விஷாலி இருவரும் பேசும் போது இடையிடையே கலந்து கொண்டாள். பின் ஒரேயடியாக மீனாட்சியை பேச்சில் இருந்து வெட்டிவிட முடிவெடுத்தாள். “ஏண்டி, வந்திருக்கறவங்களுக்கு சாப்பிட ஏதாவது தர்றதில்லையா?

மீனாட்சி உடனடியாக எழுந்து விட்டாள். “ஒன்னும் வேண்டாம் ஆண்ட்டிஎன்று சொல்லித் தானும் எழுந்த விஷாலியைக் கையமர்த்தி பக்கத்தில் உட்கார வைத்து விட்டு பேத்தியை அங்கிருந்து அனுப்பி விட்ட ஆனந்தவல்லி விஷாலியிடம் தாழ்ந்த குரலில் கேட்க ஆரம்பித்த கேள்விகள் கொஞ்ச நஞ்சமல்ல. விஷாலியைப் பற்றி ஒரு புத்தகமே எழுதுகிற அளவு அவள் தகவல்கள் சேகரித்து விட்டாள். விஷாலி பதில் சொல்லியே சலித்துப் போனாள். இந்தப் பாட்டிக்கு என்ன திடீர் என்று என் மேல் இவ்வளவு ஆர்வம்?

சற்று தள்ளி அமர்ந்து பரமேஸ்வரன், தென்னரசுவுடன் பேசிக் கொண்டிருந்தாலும் ஈஸ்வர் கவனம் அடிக்கடி விஷாலி பக்கம் திரும்பிக் கொண்டு இருந்தது. வெளிப்பார்வைக்கு விஷாலியைக் கண்டு கொள்ளாமல் இருந்தாலும் உண்மையாகவே அவனால் அப்படி இருக்க முடியவில்லை. அதை யோசிக்கும் போது அவனுக்குத் தன் மீதே வெறுப்பாக இருந்தது. ‘என்னை இவள் இந்த அளவு பாதிக்க நான் அனுமதி கொடுத்திருக்கிறேனே’.

ஆனந்தவல்லி அவளிடம் சும்மா ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தது அவனுக்குப் பிடிக்கவில்லை. காரணம் என் கொள்ளுப் பாட்டி அவளிடம் ஏன் இந்த அளவு நெருங்கிப் பேச வேண்டும் என்பதா, இல்லை விஷாலியை ஏன் இந்தப் பாட்டி இந்த அளவு பேசிக் கழுத்தறுக்கிறாள் என்பதா என்று அவனால் கணிக்க முடியவில்லை.

ஈஸ்வர் பார்வை விஷாலிக்குத் தெரியாதபடி அடிக்கடி அங்கே வருவதையும் அவன் தன்னை அறியாமல் முகம் சுளிப்பதையும் ஆனந்தவல்லி பேச்சின் நடுவே கவனிக்கத் தவறவில்லை. அதே போல் விஷாலியும் இடையிடையே ஈஸ்வரைப் பார்த்த விதம் சந்தேகத்திற்கிடமில்லாமல் அவள் காதலையும் வெளிப்படுத்தியது.

ஆனந்தவல்லி பரம திருப்தி அடைந்தாள். விஷாலியிடம் பேசியதில் அவள் பத்தரை மாற்றுத் தங்கம் என்பதை ஆனந்தவல்லியால் எடை போட முடிந்தது. நல்ல இளகிய மனம், உபகார சிந்தனை, புத்திசாலித்தனம் என்று பல மார்க்குகள் போட்ட அவள் தன் கொள்ளுப் பேரனுக்கு இவளை விட நல்ல பெண் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தாள். பிறகு தான் கேள்வி கேட்பதை நிறுத்தினாள்.

அவள் கேள்வி கேட்பதில் ஒரு சின்ன இடைவெளி விட்டதும் விஷாலி எழுந்து “ஆண்ட்டி வர ஏன் இவ்வளவு நேரம்? என்ன தான் செய்யறாங்க என்று கேட்டுக் கொண்டே மீனாட்சியைப் பார்க்க அங்கிருந்து வேகமாகத் தப்பித்தாள்.

விஷாலி போன பின் ஈஸ்வர் எழுந்து ஆனந்தவல்லி அருகே வந்தான். “அவ கிட்ட என்ன அப்படி விடாமல் பேச்சு?

ஆனந்தவல்லி அவனைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே கேட்டாள். “ஏண்டா உனக்கு அவ கிட்ட ஏதாவது பேச இருந்துச்சா?

“சேச்சே... அப்படி எல்லாம் இல்லை. தொண தொணன்னு பேசிகிட்டே இருந்தீங்களேன்னு கேட்டேன்என்று ஈஸ்வர் அலட்சிய தொனியில் சொன்னான்.

ஆனந்தவல்லி புன்னகைத்தாள். அவள் மனதில் நினைத்துக் கொண்டாள். நீ பெரிய சைக்காலஜிஸ்டா இருக்கலாம். ஆனா நான் உனக்கு மூணு தலைமுறை மூத்தவள்டா. அந்தக் காலத்துலயே நான் உன் கொள்ளுத் தாத்தாவைக் காதலிச்சுக் கல்யாணம் செய்துகிட்டவள். என் கிட்டயே இந்த நடிப்பா’.

ஈஸ்வருக்கு அவள் புன்னகை உள்ளர்த்தம் உள்ளதாகத் தெரிந்தது. அந்த நேரமாகப் பார்த்து பரமேஸ்வரன் அவனை அருகே அழைக்கவே, இந்த விவகாரமான பாட்டியிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று அவன் நகர்ந்தான்.

“என்ன தாத்தா?

“அப்புறம் என்னோட பழைய ஸ்கேன் ரிப்போர்ட்டுகள் எல்லாம் ஆஸ்பத்திரிக் காரங்களுக்குக் கிடைச்சுதா?

அந்தக் கேள்விக்குப் பதிலை பரமேஸ்வரனை விட அதிகமான ஆர்வத்துடன் தென்னரசு எதிர்பார்ப்பதாக ஈஸ்வருக்குத் தோன்றியது.

“கிடைக்கலை தாத்தா. அந்த டாக்டர் நானே அதை வேணும்னே எடுத்து மறைச்சிட்டேன்னு நினைச்ச மாதிரி கூட இருந்தது. ஆனால் அது எப்படி மாயமாச்சுன்னு எனக்கு இப்பவும் விளங்கலை

தென்னரசு மெல்ல கேட்டார். “ஒரு ஆராய்ச்சியாளனாய் உன்னோட யூகத்தை சொல்லேன். என்ன நடந்திருக்கும்...?

ஈஸ்வர் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “பெரிய தாத்தாவும் ஒரு சித்தர் மாதிரி தான்னு இப்ப எனக்கு அதிகம் தோண ஆரம்பிக்குது. சித்தர்கள் எப்பவுமே விளம்பரத்தை விரும்பாதவங்க. அவர் இருந்தப்ப எந்த சக்தியையும் வெளிப்படுத்தாதவர். அந்தப் பழைய ஸ்கேன் ரிப்போர்ட்டும், புது ஸ்கேன் ரிப்போர்ட்டும் இருந்திருந்தா அது ரெகார்டாய் இருந்திருக்கும். செய்தியாய் இருந்திருக்கும். அவர் வாழ்ந்த தோட்ட வீட்டைக் கும்பிட ஒரு கூட்டம் கிளம்பி இருக்கும்.... வாழும் போது இருக்கிற இடம் தெரியாமல் இருந்த அவர் இறந்த பிறகும் அதிகமாய் பேசப்படறதை விரும்பலை போல இருக்கு... பழைய ஸ்கேன் ரிப்போர்ட் கிடைக்காத வரை நாமளும் டாக்டரும் சொல்றதை யாரும் பெரிசா எடுத்துக்க மாட்டாங்க. அதனால தான் அது கிடைக்கலைன்னு நினைக்கிறேன். சித்தர்களால முடியாதது என்ன இருக்க முடியும் அங்கிள்...

தென்னரசு மெள்ளத் தலையாட்டினார். அவரையும் மீறி அவர் முகத்தில் கிலி தோன்றி மறைந்தது.

ந்த ஆராய்ச்சி நடக்க இருக்கும் கட்டிடம் 23 ஏக்கர் நிலத்தின் மையப்பகுதியில் அமைந்திருந்தது. அந்த நிலத்தை மூன்று வருடங்களுக்கு முன் இந்தியப் பெரும் பணக்காரரான பாபுஜி வாங்கி இருந்தார்.  அந்த நிலத்தைச் சுற்றி மிக உயர்ந்த காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. வெளியே கேட்டில் இருந்து பார்த்தால் அது வெறும் தோட்டமாகவே தெரியுமே ஒழிய உள்ளே ஒரு பெரிய கட்டிடம் இருப்பது தெரிய வாய்ப்பே இல்லை. அதற்கேற்றபடி பெரிய மரங்கள் அந்தக் கட்டிடத்தை மறைத்துக் கொண்டு இருந்தன.

கேட்டில் இரண்டு திடகாத்திரமான கூர்க்காக்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஜான்சனைப் பார்த்தவுடன் கேட்டைத் திறந்து விட்டார்கள். அவர்கள் கார் உள்ளே நுழைந்தது. பின்னாலேயே இன்னொரு கார் உள்நுழைய ஜான்சன் திகைப்புடன் வருவது யார் என்று பார்த்தார். பாபுஜி!

ஜான்சன் குருஜியைப் பார்த்தார். குருஜிக்கு பாபுஜியின் வரவு ஆச்சரியமாக இருந்தது போல் தெரியவிலை. முதலிலேயே பாபுஜி வரப் போவதை அவர் அறிந்திருந்தார் போல இருந்தது.  ஜான்சனுக்கு பாபுஜியின் வரவு ஒருவித அசௌகரியத்தை உண்டு பண்ணியது. மும்பையில் பாபுஜியையும், முகம் தெரியாத அவரது கூட்டாளிகளையும் சந்தித்ததில் இருந்தே சொல்லத் தெரியாத அபாயத்தை அவர் உணர்ந்து வந்தார்....!

ஆனால் காரில் இருந்து இறங்கிய பாபுஜி நீண்ட நாள் நண்பரைப் போல வந்து ஜான்சனை அணைத்துக் கொண்டார். “ஜான்சன் எப்படி இருக்கீங்க?

ஜான்சனுக்கு அதே நட்பைக் காட்ட முடியவில்லை. பலவந்தமாக முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு நலமாக இருப்பதாகச் சொன்னார்.

குருஜியின் காலைத் தொட்டு வணங்கிய பாபுஜி அவரிடமும் நலம் விசாரித்தார். பின் ஆர்வத்துடன் குருஜியை பாபுஜி கேட்டார். “எல்லாம் சரியாய் தானே குருஜி போய்கிட்டிருக்கு?

குருஜி தலையசைத்தார். பாபுஜி பொங்கும் ஆர்வத்துடன் சொன்னார். “எனக்கு இங்கே செய்திருக்கிற முன்னேற்பாடுகளை எல்லாம் பார்க்கிற வரை இருப்பு கொள்ள மாட்டேன் என்கிறது. அதனால் தான் வந்தேன்....

தொடர்ந்து இன்னும் என்னென்னவோ கேட்கப் போன பாபுஜி ‘நிறுத்துஎன்பது போல குருஜி கை காட்டினார். பாபுஜி பேச வந்ததைப் பேசாமல் நிறுத்தி கேள்விக்குறியுடன் குருஜியைப் பார்த்தார்.

குருஜி அமைதியாகச் சொன்னார். பாபுஜி நீ என்ன கேட்கணுமோ உள்ளே போய் விட்டு திரும்பி வந்த பிறகு அப்புறமா கேள். இப்ப நாம் முக்கியமான ஒரு இடத்துக்குப் போகிறோம்கிறதை ஞாபகம் வச்சுக்கோ. இது விசேஷ மானஸ லிங்கத்திற்காக தயாராய் இருக்கிற இடம். இங்கே அமைதியான சூழ்நிலையை எந்த விதத்திலும் நாம் கலைச்சுடக் கூடாது.....

ஆசிரியரால் கண்டிக்கப்பட்ட மாணவனைப் போல பாபுஜி தலையாட்டினார்.

“உள்ளே முடிஞ்ச வரைக்கும் குறைவாய் பேசு. உள்ளே எந்த விதத்திலும் சத்தம் அதிகம் செய்யக் கூடாது. உள்ளே ஆராய்ச்சிக்கு நாம் அழைத்து வந்திருக்கிறவர்கள் தொடர்ந்து தியானம் செய்து ஆராய்ச்சிக்குத் தேவையான ரொம்ப சென்சிடிவான நிலையில் இருப்பார்கள். அதிகமாய் வர்ற சத்தங்கள் நாராசமாய் அவர்கள் காதில் விழும். அவர்கள் மன அமைதி பாதிக்கப்பட்டால் நம் ஆராய்ச்சிகளும் பாதிக்கப்படும்... சில சமயங்களில் அவர்கள் மறுபடி பழைய நிலைக்கு வருகிற வரைக்கும் ஆராய்ச்சிகளை ஒத்திப் போட வேண்டி இருக்கும்

பாபுஜி ஆராய்ச்சிகள் ஒத்திப் போடப்படுவதை சிறிதும் விரும்பவில்லை. வாய் மேல் விரலை வைத்துக் காட்டி இனி பேசுவதில்லை என்று குருஜியிடம் சைகை மூலம் தெரிவித்தார். ஜான்சனுக்கு குருஜியின் ஆளுமைத் திறனை வியக்காமல் இருக்க முடியவில்லை. எத்தனை பெரிய ஆளானாலும் சரி குருஜி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் வல்லவர் தான் என்று நினைத்துக் கொண்டார்.

குருஜி பாபுஜியிடம் சொன்ன வார்த்தைகள் வெறுமனே சொல்லப்பட்டதல்ல. இந்த இடத்தில் ஆராய்ச்சிக்கான சரியான சூழ்நிலையில் சின்னக் குறை வந்தாலும் அதைச் சரிப்படுத்தும் வரை ஆராய்ச்சியைத் தொடர்வது முடியாத காரியம். காரணம் இது சாதாரண ஆராய்ச்சி அல்ல. இது வரை உலகத்தில் எங்குமே யாருமே செய்திராத மிகப் பெரிய ஆராய்ச்சி. இதற்கு முன்னேற்பாடுகள் செய்யவே ஜான்சன் நிறைய உழைத்திருக்கிறார். ஒவ்வொரு ஏற்பாட்டையும் அவர் குருஜியிடம் தெரிவித்து அவரது ஒப்புதலை வாங்கி இருக்கிறார். அவரது பெரும்பாலான ஏற்பாடுகளில் குருஜி குறை காணவில்லை என்றாலும் சில ஏற்பாடுகளில் என்னென்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று சொல்லி மாற்றி இருக்கிறார். அதற்கான காரணங்களை எல்லாம் குருஜி விளக்கிய போதெல்லாம் ஜான்சனுக்கு குருஜியைப் பார்த்து பிரமிக்கத் தோன்றி இருக்கிறது. இவர் அறிவுக்கு எட்டாத விஷயமே இல்லையா என்று அவர் வியந்திருக்கிறார்.

அது ஒரு தியான மண்டபம். உள்ளே நுழைந்த போதே மிக மெல்லிய ஸ்ருதியில் “ஓம்என்ற  ஓங்காரம் ஒலித்துக் கொண்டிருப்பது கேட்டது. அந்தத் தியான மண்டபமே அதைச் சொல்வது போல... அந்தத் தியான மண்டபமே அந்த ஒலியில் மூழ்கித் திளைப்பது போல.... பாபுஜி மிகப் பெரியதொரு அமைதி தன்னையும் ஆட்கொள்வதை உணர்ந்தார்....

சில மாதங்களுக்கு முன் தான் அந்தத் தியான மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.  அப்போது பாபுஜி இங்கு வந்து இருக்கிறார். இன்று அதன் கட்டிட அமைப்பிலும் தோற்றத்திலும் எந்த மாறுதலும் இல்லை.... என்றாலும் அது அன்று அவர் பார்த்த கட்டிடமாக இல்லை.... வேறு ஏதோ ஒரு உலகத்திற்கு வந்திருப்பது வந்திருப்பது போன்ற உணர்வு பாபுஜிக்கு ஏற்பட்டது.

(தொடரும்)

-          என்.கணேசன்

Monday, August 26, 2013

எது சிறந்தது – இல்லறமா, துறவறமா?




அறிவார்ந்த ஆன்மிகம் - 16

ல்லறம் சிறந்ததா, துறவறம் சிறந்ததா என்ற கேள்வி பலர் மனதிலும் எழுவதுண்டு. இது ஆண்டாண்டு காலமாகக் கேட்கப்படும் கேள்வியும் கூட.

மேற்போக்காகப் பார்க்கையில் பலருக்கும் துறவறம் தான் இறைவனுக்கு நெருக்கமானது, அது தான் வணங்கத்தக்க நிலை, அதுவே ஆன்மிக வழி என்றெல்லாம் தோன்றலாம். அதனாலேயே அதையே சிறந்ததாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் உண்மை அது தானா என்பதை மகாபாரதத்தில் ஒரு அற்புதமான கிளைக்கதை மூலமாகப் பார்க்கலாம்.

கௌசிகன் என்ற அந்தணன் பிரம்மச்சரியத்துடன் கூடிய துறவு வாழ்க்கையை வாழ்ந்து வந்தான். ஒரு நாள் ஒரு மரத்தடியில் அமர்ந்து அவன் வேதம் ஓதிக் கொண்டிருந்த போது மரத்தின் மீது அமர்ந்திருந்த கொக்கு ஒன்று அவன் மீது எச்சம் இட்டது. கௌசிகன் கோபமடைந்து அந்தக் கொக்கைப் பார்க்க அந்தப் பார்வையிலேயே இறந்து அப்படியே கீழே விழுந்தது. முறைப்படி வாழும் துறவு வாழ்க்கைக்கு அத்தனை சக்தி இருக்கிறது.

கோபத்தால் தான் எண்ணிய எண்ணம் இப்படி கொக்குக்கு எமனாக முடிந்ததில் வருத்தமடைந்த கௌசிகன் வழக்கம் போல் பிட்சைக்குப் புறப்பட்டான். 

ஒரு வீட்டின் முன் பிட்சைக்காக கௌசிகன் நின்ற போது அந்த வீட்டுப் பெண்மணி பாத்திரங்கள் கழுவிக் கொண்டு இருந்தாள். அந்த வேலையை முடித்து விட்டு அவள் தனக்குப் பிட்சை இடுவாள் என்று கௌசிகன் காத்துக் கொண்டிருக்கையில்  அந்தப் பெண்மணியின் கணவன் வேலை முடித்துக் கொண்டு சாப்பாட்டிற்கு வந்தான். அந்தப் பெண்மணி கௌசிகனைக் கவனிக்காமல் கணவனுக்கு ஆகாரம் தந்து உபசரிக்க ஆரம்பித்தாள். கணவன் சாப்பிட்டு முடித்த பின்பு தான் கௌசிகனுக்கு பிட்சை எடுத்துக் கொண்டு வந்தாள்.

கோபத்தில் நெருப்பென ஜொலித்த கௌசிகன் தன்னை அலட்சியப் படுத்தியதற்கு அவளைக் கோபித்துக் கொண்டான். அவள் அமைதியாகச் சொன்னாள். “ஐயா, கணவனுக்குப் பணிவிடை செய்து கொண்டு இருந்த பெண்ணை உங்கள் கோபம் எதுவும் செய்து விட முடியாது. நான் கொக்கல்ல

கௌசிகனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. சிறுது நேரத்திற்கு முன் வேறிடத்தில் நடந்த கொக்கு சம்பவம் இவளுக்கு எப்படித் தெரிந்தது என்று வியந்தான்.

அந்தப் பெண்மணி சொன்னாள். “ஐயா உமக்கு தர்மத்தின் ரகசியம் தெரியவில்லை. மனிதனுக்குக் கோபம் உடம்பின் உள்ளே இருக்கும் பெரும் பகையாகும். எனது குற்றத்தை மன்னித்து நீங்கள் மிதிலைக்குச் சென்று தர்மவியாதனிடம் உபதேசம் பெறுவீராக

வியப்படைந்து கோபம் தணிந்த கௌசிகன் அவளை ஆசிர்வதித்து விட்டு தர்மவியாதனைத் தேடி மிதிலைக்குச் சென்றான். தனக்கு உபதேசிக்கத் தகுந்தவராகச் சொல்லப்பட்ட தர்மவியாதன் ஒரு முனிவராக, ஆசிரமத்தில் வசிப்பவராக இருப்பார் என்ற எண்ணத்தில் மிதிலையை அடைந்த கௌசிகன் தர்மவியான் வசிப்பிடம் பற்றி அங்கிருந்த மக்களிடம் விசாரிக்க மக்கள் ஒரு கசாப்புக்காரனிடம் கௌசிகனை அழைத்துப் போய் விட்டனர்.

“இவர் தான் தர்மவியாதன்என்று அவர்கள் சொல்ல கௌசிகனுக்கு சிறிது நேரம் ஒன்றும் புரியவில்லை. போயும் போயும் ஒரு கசாப்புக்கடைக்காரனா தனக்கு உபதேசிக்கத் தக்கவன் என்று சற்று தள்ளியே முகம் சுளித்து நின்றான்.

தர்மவியாதன் என்ற அந்தக் கசாப்புக்கடைக்காரன் அவனை அன்புடன் வணங்கி வரவேற்றான். “ஐயா வாருங்கள். தங்களை அந்தப் பதிவிரதைப் பெண்மணி இங்கு அனுப்பினாளா?என்று கேட்டான்.

இவனுக்கு எப்படி அந்தப் பதிவிரதை அனுப்பியது தெரியும் என்று கௌசிகன் வியந்தான். தர்மவியாதன் தனது வீட்டிற்கு முதலில் கௌசிகனை அழைத்துச் சென்றான். தர்மவியாதன் அங்கு தன் வயதான நோய்வாய்ப்பட்டிருந்த  பெற்றோருக்கு அன்புடனும், பொறுமையுடனும் பணிவிடை செய்வதைக் கௌசிகன் பார்த்தான். பிறகு தர்மவியாதன் தன் கசாப்புக்கடைக்கு கௌசிகனை அழைத்துச் சென்றான். அங்கும் தர்மவியாதன் மிக நேர்மையாகவும் நேர்த்தியாகவும் தன் தொழிலைச் செய்வதைக் கண்டான். பெரியவர், அறிந்தவர் அவன் கடைக்கு மாமிசம் வாங்க வந்த போதும், சிறியவர், அறியாதவர் அவன் கடைக்கு வந்த போதும் தர்மவியாதனின் தராசு ஒரே போல் மிகச்சரியாக இருந்து அவன் விற்பனை செய்வதைக் கண்டான்.

அங்கேயே தங்கி தர்மவியாதனிடம் மனித வாழ்க்கையைப் பற்றியும், தொழில் தர்மத்தைப் பற்றியும், மனிதனின் கடமைகள் பற்றியும் உபதேசம் பெற்ற கௌசிகன் மறுபடி ஊர் திரும்பிய போது மாறி விட்டிருந்தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

இந்த மகாபாரதக் கதையில் பிரம்மச்சரிய விரதம் உட்பட துறவு நிலைக்கு வேண்டிய பல அறநெறிகள்படி வாழ்ந்ததால் தான் கௌசிகனுக்குப் பார்வையாலேயே கொக்கை அழிக்கும் சக்தி வந்திருந்தது. ஆனால் அவனுக்கு அந்த துறவுக்கு நிலைக்குத் தேவையான பொறுமை என்ற குணம் இருக்கவில்லை. அதனால் தான் கொக்கின் இயற்கையான செயலுக்கு முன்னதாகக் கோபம் பின்னதாக பச்சாதாபம் வந்தது.

அதே போல அந்த இல்லத்தரசி தன் கடமைகளைச் செய்து முடிக்கும் வரை காத்திருக்கும் பொறுமை அவனிடத்தில் இருக்கவில்லை. அங்கும் கோபம் வந்ததால் தான் அந்தப் பெண்மணியிடமும், தர்மவியாதனிடமும் உபதேசம் கேட்டுப் பெற வேண்டிய நிலை வந்தது. அந்தப் பெண்மணியும் சரி, தர்மவியாதனும் சரி அவர்களுக்கு வகுக்கப்பட்ட கடமைகளை செவ்வனே செய்து வாழ்ந்து வந்ததால் தூரத்தில் நடந்த நிகழ்வுகளை அறியும் அளவுக்கு சக்தி பெற்றிருந்தார்கள் என்றும், கௌசிகனுக்கே உபதேசம் செய்யும் தகுதி பெற்றிருந்தார்கள் என்றும் மகாபாரதம் சுட்டிக் காட்டுகிறது.  

அறம் என்பதை விதித்தன செய்தல்,  விலக்கியன ஒழிதல் என்று சுருக்கமாகவும், எளிமையாகவும் விளக்கினார் பரிமேலழகர் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்தல் வேண்டும். எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்யாமல் இருக்க வேண்டும். அப்படி இருப்பது தான் அறநிலை.  இல்லறமோ, துறவறமோ இரண்டும் சிறப்பே. ஒருவர் அததற்கு விதிக்கப்பட்ட நெறிப்படி வாழ்கிறார்களா என்பது தான் அடிப்படைக் கேள்வி.  இல்லறமோ, துறவறமோ அதில் அறம் இல்லா விட்டால், உண்மை இல்லா விட்டால் அது நடிப்பே, அது குறைபாடே என்பதால், அதை எந்த விதத்திலும் சிறப்பாகக் கருத முடியாது.

அவரவர்க்கு விதிக்கப்பட்ட நெறிகளின் படி வாழ்ந்தால் இல்லறமும் நல்லறமே, துறவறமும் சிறந்ததே. இல்லறத்தில் அவரவர் கடமைகளைத் தட்டிக் கழிக்காமல் நேர்த்தியாகச் செய்து அன்புடன் வாழ்ந்தால் அது மிகச் சிறந்ததே. துறவறத்திலும் போலித்தனம் இன்றி, வெளிப்பார்வைக்கு மட்டுமல்லாமல் உண்மையாகவே துறவு மனப்பான்மையுடன் அருளுடன் வாழ்ந்தால் அதுவும் மிகச் சிறந்ததே.

இரண்டிலும் ஒன்று உயர்வு இன்னொன்று தாழ்வு என்பது தவறான அபிப்பிராயங்களே. இரண்டில் ஒவ்வொருவரின் தன்மைக்கும், சக்திக்கும், தகுதிக்கும் எது முடிகிறது என்பது தான் கேள்வி. முடிந்ததில் முழுமையாக நிற்க முடிந்தால் அதுவே ஒருவருக்கு உயர்வும் சிறப்பும்.  சரி தானே?

-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 25-06-2013


Thursday, August 22, 2013

பரம(ன்) ரகசியம் – 58



ரமேஸ்வரன் துக்கம் பல வருடங்கள் சேர்த்து வைத்தது என்பதால் அவர் அழுகை அவ்வளவு சீக்கிரம் ஓயவில்லை. அழுகை ஓய்ந்த பின்னும் அவருக்கு ஈஸ்வர் மீது ஒரு ஆற்றாமை தங்கி இருந்தது. அதை அவனிடம் சொன்னார்.

“நீ இங்கே வந்த பிறகு நான் நிறைய தடவை உன்னையும் உங்கப்பாவையும் ஒப்பிட்டுப் பார்த்திருக்கேன் ஈஸ்வர். அவன் இடத்தில் நீ இருந்திருந்தால் அவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போயிருக்க மாட்டாய் என்று எனக்கு தோன்றியிருக்கு. நீ என் கிட்ட சண்டை போட்டிருப்பாய். நான் ஏன் எனக்குப் பிடிச்ச பொண்ணைக் கல்யாணம் செய்துக்க கூடாதுன்னு கேட்டு என் கிட்ட மல்லுக்கு நின்னிருப்பாய். எனக்கு ஏத்துக்கறது சுலபமாயிருக்கும்.... உங்கப்பா மாதிரி நான் சொன்னதை வேத வாக்காய் நினைச்சு ஒரேயடியாய் என்னை விட்டு விலகி இருக்க மாட்டாய். அப்படி அவன் நின்னிருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்னு நான் அடிக்கடி நினைச்சிருக்கேன்.... ஆனால் நீயும் இப்ப என் கிட்ட பழசைப் பத்தி எதுவுமே கேட்காமலேயே அமெரிக்காவுக்குக் கிளம்பிப் போறதை என்னாலே தாங்க முடியலைடா. நீயும் உன் அப்பா மாதிரியே என்னைத் தண்டிக்க தீர்மானிச்சிட்டியாடா

சொல்லும் போது அவர் குரலில் தாங்க முடியாத வேதனை இருந்தது. தந்தை கேட்ட தொனியிலேயே அந்த வேதனையைப் புரிந்து கொள்ள முடிந்த மீனாட்சி இன்னொரு தடவை கண்கலங்கினாள். இதற்கு முன்பும் அவர் அவனிடம் உருக்கமாகப் பேசின போதெல்லாம் அவருக்கு இணையாகக் கண்கலங்கிய அவள் இப்போதும் கண்கலங்கி தன் புடவைத்தலைப்பு என்று எண்ணி ஆனந்தவல்லியின் புடவைத்தலைப்பை இழுத்து கண்களைத் துடைக்க ஆனந்தவல்லி பேத்தியை முறைத்தாள்.

தாத்தாவின் கேள்வி ஈஸ்வரை என்னவோ செய்தது. தாத்தாவை இறுக்கி அணைத்துக் கொண்டு ஈஸ்வர் மென்மையாகச் சொன்னான். “உங்களைத் தண்டிக்கறதுக்காக நான் அமெரிக்கா போகலை தாத்தா. உங்களுக்கு மாரடைப்பு வந்தப்ப நான் நிஜமாவே பயந்துட்டேன். எனக்கு பெரிசா குற்ற உணர்ச்சி இருந்துச்சு. அப்பா செத்துப் போனதுக்கப்புறம் அவர் போட்டோ கிட்ட மனசு விட்டு எல்லாத்தையும் பேசுவேன்... முக்கியமான எதையுமே அவர் கிட்ட சொன்னாத் தான் எனக்கு நிம்மதி. ஆனா உங்களுக்கு மாரடைப்பு வந்து நீங்க பிழைக்கற வரைக்கும் என்னால அவர் கிட்ட பேச முடியல. அவர் போட்டோவை நேரடியா பார்க்கிற தைரியம் கூட இருக்கலை. நல்ல வேளையாய் ஏதோ உங்க அண்ணா தயவுல நீங்க பிழைச்சுட்டீங்க. இன்னொரு தடவை நான் ஏதாவது பேசி உங்களை அது பாதிக்கறதை நான் விரும்பல தாத்தா. இங்கே இருந்தா சிலதைப் பேசாம இருந்துட முடியும்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கல. அதான்.....

பேரனிடம் பரமேஸ்வரன் மனதார சொன்னார். “நீ கோவிச்சுகிட்டு பிரிஞ்சு போகறதைத் தவிர மத்த எல்லாத்தையும் தாங்கிக்கற சக்தி எனக்கு இருக்கு ஈஸ்வர். நீ என்ன பேசறதாய் இருந்தாலும் பேசு…. கேட்க நினைக்கிறதைக் கேளு... திட்ட நினைச்சா திட்டிடு.. பரவாயில்லை....

ஒவ்வொரு நாளும் மகனிடம் கால் மணி நேரமாவது பேசா விட்டால் தூக்கம் வராத மனிதரிடம், மகனைப் பிரிந்த பின்னும் மகன் புகைப்படங்களைப் பார்த்தும், உபயோகித்த பொருட்களைத் தொட்டுப் பார்த்தும், இரண்டாம் வகுப்பில் படிக்கையில் நோட்டுப் புத்தகத்தில் இருந்து கிழித்த காகிதத்தில் எழுதிய I love you daddy வார்த்தைகளைப் படித்தும் மட்டுமே தூங்க மனிதரிடம் இனி கேட்கவோ, திட்டவோ என்ன இருக்கிறது என்று ஈஸ்வர் நினைத்தான். என்ன வேண்டுமானாலும் செய்து கொள், என்னை விட்டுப் போக மட்டும் செய்யாதே என்று சொல்லும் தாத்தாவை அவன் மனம் நெகிழ பாசத்துடன் பார்த்தான்.

உணர்ச்சிவசப்பட்டு மனதில் உள்ளதை எல்லாம் பேரனிடம் கொட்டி முடித்த பரமேஸ்வரன் கண்களை களைப்புடன் மூடினார்.

அதைக் கவனித்த ஈஸ்வர் தாத்தாவிடம் கனிவுடன் சொன்னான். “தாத்தா. இப்ப எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்லை... நான் சீக்கிரமா அமெரிக்கா போகப்போறதில்லை. சரியா.  நீங்க தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நாம நாளைக்குப் பேசலாம்...

பெரிய பாரத்தை இறக்கி வைத்துக் களைத்திருந்த பரமேஸ்வரன் தலை அசைத்தார். ஈஸ்வருடன் ஆனந்தவல்லியும், மீனாட்சியும் கிளம்பினார்கள். மூவர் மனமும் லேசாகி இருந்தது. பேசிக் கொள்ளும் மனநிலையில் மூவருமே இருக்காததால் எதுவும் பேசாமல் தங்கள் அறைகளுக்கு உறங்கப் போனார்கள்.

அறைக்குச் சென்றவுடன் ஈஸ்வர் அம்மாவிற்குப் போன் செய்தான். கனகதுர்கா கேட்டாள். “எங்கடா போயிட்டே! நாலு தடவை போன் பண்ணிட்டேன். நீ எடுக்கவே இல்லை

“சார்ஜ் இருந்திருக்கலை அம்மா. என்ன விஷயம்மா?

உன் தாத்தா இன்னிக்கு காலைல என் கிட்ட போன்ல பேசினார்டா...” என்று ஆரம்பித்தவள் பரமேஸ்வரன் பேசியதை எல்லாம் மகனிடம் நெகிழ்ச்சியோடு சொன்னாள். ஆரம்பத்திலிருந்தே மருமகளை வெறுத்து வந்த பரமேஸ்வரனுக்கு அவளிடம் மன்னிப்பு கேட்பது சுலபமாக இருந்திருக்காது என்பதை ஈஸ்வரால் புரிந்து கொள்ள முடிந்தது. அதுவும் சாதாரணமாய் மன்னிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தி விட்டிருக்காமல் “நான் எத்தனை தேடி இருந்தாலும் என் மகனுக்கு உன்னை மாதிரி ஒரு நல்ல பொண்ணைக் கண்டு பிடிச்சுக் கொடுத்திருக்க முடியும்னு தோணலம்மா....என்று ஒத்துக் கொண்டது ஆத்மார்த்தமான ஒப்புதலாக அவனுக்குத் தோன்றியது.  ஈஸ்வர் மாதிரி ஒரு பேரனை எனக்குப் பெத்துக் கொடுத்திருக்கிற உனக்கு நான் கைமாறா நான் என்ன செய்ய முடியும்னு எனக்குத் தெரியலம்மாஎன்று சொன்னது அவனை அவர் எவ்வளவு தூரம் நேசித்திருக்கிறார் என்று வியக்க வைத்தது. அவர் மேல் அவனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச வருத்தமும் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்பதை அறிந்த பின் கரைந்து போனது. இன்று அவர் தன்னிடம் பேசியதை எல்லாம் அவன் அம்மாவிடம் கண்கலங்க சொன்னான்.

அம்மாவிடமும் பேசிய பின் அன்று அவன் உறங்கிய உறக்கம் நிம்மதியானதாக இருந்தது.

காலையில் எழுந்தவுடன் பரமேஸ்வரன் பேரனைப் பார்க்க மகன் அறைக்கு வந்தார். சுமார் 27 வருடங்கள் கழித்து அவர் தன் மகன் அறைக்குள் நுழைகிறார்! ஈஸ்வர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, பேரனையே பாசத்துடன் பார்த்து சிறிது நேரம் நின்ற பரமேஸ்வரன் பின் மெள்ள பார்வையைத் திருப்பினார். மகனின் புகைப்படங்களைப் பார்த்தார். மெல்ல மகன் புகைப்படத்தைத் தடவினார். அப்பாவை மன்னிச்சுடுடாஎன்று மானசீகமாக மகனிடம் சொன்னார். மகன் படத்திலிருந்து அவரைப் பாசத்தோடு பார்த்தது போல் இருந்தது. அவர் கண்கள் ஈரமாயின.

அடுத்ததாக மகன் வாங்கி வைத்திருந்த பதக்கங்களையும், கோப்பைகளையும் பார்த்தார். மீனாட்சி எல்லாவற்றையும் பளபளவென்று வைத்திருந்தாள். எல்லாவற்றையும் துடைத்து வைக்கவே ஒவ்வொரு முறையும் நிறைய நேரம் அவளுக்குத் தேவைப்படும். ஆனாலும் இந்த 27 வருடங்கள் அதைச் செய்ய அவள் சலிப்படைந்தது இல்லை. மெள்ள அந்தக் கோப்பைகளைத் தடவிப் பார்த்தார். எப்படிப்பட்ட மகனைப் பெற்றிருந்தும் அவனைத் தக்க வைத்துக் கொள்ள எனக்கு கொடுப்பினை இருக்கவில்லையே’!

அப்பாமீனாட்சி அவரை மெல்ல அழைத்தாள். அவளுக்கு அண்ணன் அறையில் அப்பாவைப் பார்த்ததில் சந்தோஷம்.

மகளைப் பார்த்ததும் பரமேஸ்வரன் சொன்னார். “உன்னை உன் அண்ணன் கிட்ட இருந்து பிரிச்சுட்டேன்னு அப்பா மேல் உனக்கும் வருத்தம் இருக்காம்மா. என்னை மன்னிச்சுடும்மா

தான் நேசிப்பவர்கள் மீது எப்போதும் எந்தக் குறையும் காண முடியாத மீனாட்சி துக்கம் தொண்டையை அடைக்கச் சொன்னாள். “நீங்க என் கிட்ட எல்லாம் மன்னிப்பு கேட்கக் கூடாதுப்பா.

‘எப்படிப்பட்ட ரத்தினங்களைக் குழந்தைகளாகப் பெற்றிருக்கிறேன்என்று நினைக்கையில் பரமேஸ்வரன் மனம் லேசாகியது. மகளைப் பெருமிதத்துடன்  பார்த்து அவர் ஏதோ சொல்ல வாயைத் திறக்கையில் ஆனந்தவல்லி வந்து தாழ்ந்த குரலில் திட்டினாள். அப்பனும் மகளும் ஏன் இங்கே வந்து அவன் தூக்கத்தைக் கெடுக்கறீங்க. வெளியே போய் பேசிக்கறது தானே

அவர்களைத் திட்டி விட்டு ஆனந்தவல்லி ஈஸ்வர் உறக்கம் கலைந்து விட்டதா என்று உற்றுப் பார்த்து விட்டு இல்லை என்று தெரிந்தவுடன் திருப்தி அடைந்தாள். பரமேஸ்வரனும், மீனாட்சியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு வெளியேற ஆனந்தவல்லியும் பின் தொடர்ந்தாள்.

ன்று நாள் முழுவதும் பரமேஸ்வரனுக்கும், ஈஸ்வருக்கும் பேசிக் கொள்ள  நிறைய இருந்தது. தந்தையின் இளமைக் காலத்தை தாத்தாவிடமிருந்து அறிந்து கொள்ள ஈஸ்வர் ஆசைப்பட்டான். மகனின் பிந்தைய வாழ்க்கையைப் பேரன் மூலமாக விவரமாக அறிந்து கொள்ள பரமேஸ்வரன் ஆசைப்பட்டார். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்த மீனாட்சி இடையிடையே பேச்சில் தானும் கலந்து கொண்டாள்.

அவர்களுடனேயே இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தவல்லிக்கு கடந்த காலம் திரும்பி வந்தது போல் ஒரு பிரமை ஏற்பட்டது. பரமேஸ்வரன், சங்கர், மீனாட்சி என்ற மூவரின் உலகம் தனிப்பட்டது. அதில் மற்றவர்களை எல்லாம் மறந்து மூவரும் அந்தக் காலத்தில் லயித்திருப்பார்கள். சில அடிகள் தள்ளியே நின்று ஆனந்தவல்லி அக்காலத்தில் வெறித்துப் பார்ப்பாள். பல சமயங்கள் அவள் இருப்பதைக் கூட அவர்கள் மூவரும் கவனித்திருக்க மாட்டார்கள். இன்று சங்கருக்குப் பதில் அவன் மகன் ஈஸ்வர் சேர்ந்திருக்கிறான். அதே பழைய அன்னியோன்னியம், அதே பாசம் நிலவியது. ஒரே வித்தியாசம் ஆனந்தவல்லி தள்ளி நின்று வெறித்துப் பார்க்காமல் கூடவே அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

பரமேஸ்வரன் பேரனைக் கேட்டார். “நீ உங்கப்பா கிட்ட சண்டை போட்டிருக்கியா?

ஈஸ்வர் சிரித்துக் கொண்டே சொன்னான். “எங்கப்பா கூட யாருமே சண்டை போட முடியாது. அதற்கு வழியே விட மாட்டார். ஓரளவாவது அவரைப் பொறுமை இழக்க வைக்கணும்னா நான் உங்களைப் பத்திப் பேசுவேன். உங்களைப் பத்தித் தப்பாய் பேசினா ஆள் மூட் அவுட் ஆயிடுவார்...

பரமேஸ்வரன் கண்களில் நீர் திரை போட்டது. பேரனிடம் பெருந்துக்கத்தோடு கேட்டார். அவ்வளவு தூரம் என்னை நேசிச்சவன் ஏன் ஈஸ்வர் என்னைத் திரும்பவும் சந்திக்க ஒரு தடவை கூட முயற்சி செய்யலை. நீ அவனைக் கேட்டிருக்கியா, இதைப் பத்தி

ஈஸ்வர் சொன்னான். “கேட்டிருக்கேன்.  உங்களைத் திரும்ப ஒரு தடவை சந்திச்சா கடைசியா  நீங்க கேட்டீங்களாமே ‘நான் வேணுமா அந்தப் பொண்ணு வேணுமான்னு முடிவு பண்ணிக்கோன்னு. அதுக்கு எந்த மாதிரி பதில் சொல்லி சமாளிக்கறதுன்னு அவருக்குப் புரியலை. அதை நேரடியா சொல்லாட்டியும் அதை என்னால் யூகிக்க முடிஞ்சுது...

தான் அப்படிச் சொல்லி மகனை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளி இருக்க வேண்டாம் என்று இப்போது பரமேஸ்வரனிற்குத் தோன்றியது. மனம் கனமாகியது.   

ஆனால் அப்போது ஈஸ்வர் ஏதோ நினைத்து குறும்பாய் புன்னகைக்க பரமேஸ்வரன் கேட்டார். “எதுக்கு சிரிக்கறே?

“அதுக்கு நான் அவர் கிட்ட ஒரு வழி சொல்லி இருந்தேன். அதை நினைக்கிறப்ப சிரிப்பு வந்தது

“என்ன வழி?

“வேண்டாம் தாத்தா. சொன்னா கோவிச்சுக்குவீங்க

“கோவிச்சுக்க மாட்டேன். சொல்லு

ஈஸ்வர் குறும்பாய் புன்னகைத்துக் கொண்டே சொன்னான். “அப்பா கிட்ட சொன்னேன். ‘நீங்க உங்கப்பா கிட்ட கேளுங்க... அட மரமண்டை அப்பா, காதலையும் பாசத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லுறீங்களே. உங்க  கிட்ட வலது கண் வேணுமா, இடது கண் வேணுமான்னு கேட்டா ஏதாவது ஒண்ணை தேர்ந்தெடுத்து மற்றதை உங்களால பிடுங்கி எறிய முடியுமான்னுகேளுங்கன்னு சொன்னேன்...

பேரன் கேட்கச் சொன்னதில் இருந்த அழகான அர்த்தத்தை பரமேஸ்வரன் ரசித்தாலும் மரமண்டை அப்பா என்ற வார்த்தைக்காக போலிக் கோபத்துடன் பேரனைப் பார்த்தார். மீனாட்சி மெல்லப் புன்னகைக்க ஆனந்தவல்லி கொள்ளுப் பேரனின் புத்திசாலித்தனத்தையும், குறும்பையும் ஒருசேர ரசித்தாள்.

ஈஸ்வர் தொடர்ந்து சொன்னான். இப்போது அவன் குரலில் குறும்பு போய் உணர்ச்சி நிரம்பி இருந்தது. “அவருக்கு உங்கள் கோபம் பத்தி பெரிசா பயம் இருக்கலை தாத்தா. ஆனால் உங்க மனசில் வலியைப் பார்க்கிற தைரியம் தான் அவருக்குக் கடைசி வரை வரலை...

பரமேஸ்வரன் பேரனைக் கட்டியணைத்துக் கொண்டு கண்கலங்கினார். வறட்டு கௌரவம் பார்த்து வாழ்க்கையை ரணமாக்கிக் கொண்டு வாழ்ந்திருக்கிறோமே என்ற சுய பச்சாதாபம் அவரை அரித்தெடுத்தது.

தாத்தாவின் மனநிலையைப் புரிந்து கொண்ட ஈஸ்வர் பேச்சை மாற்றினான். “தாத்தா, எனக்கு பாட்டியைப் பத்தி சொல்லுங்களேன்

ஆனந்தவல்லி கேட்டாள். “ஏண்டா என்னைப் பத்தி அவன் கிட்ட கேட்கறே?

“நான் உங்களைப் பத்திக் கேட்கலை. எங்க பாட்டியைப் பத்திக் கேட்டேன்.

“அப்ப நான் யார்டா பக்கத்து வீட்டுப் பாட்டியாடா?

“ஐயோ நான் எங்கப்பாவோட அம்மாவைப் பத்திக் கேட்டேன். நீங்க என்னோட கொள்ளுப்பாட்டி தானேஎன்ற ஈஸ்வர் குறும்பாகச் சேர்த்துச் சொன்னான். “கொஞ்சம் லொள்ளுப் பாட்டியும் கூட

பரமேஸ்வரனின் துக்க மனநிலை மாறி மனம் சற்று லேசாகியது. அவரும் மீனாட்சியும் சிரிக்க ஆனந்தவல்லி சற்று எட்டி பேரனின் காதைப் பிடித்துத் திருகினாள். ஏண்டா உனக்கு என்னைப் பார்த்தா லொள்ளுப் பாட்டி மாதிரியா தெரியுது

சிரிப்பலை அங்கு பலமாய் எழுந்தது.

பிறகு பரமேஸ்வரன் பேரன் கேள்விக்குப் பதிலாய் மனைவியை நினைவு கூர்ந்தார்.  பாட்டி உன் அத்தை மாதிரியே இருப்பா. வெகுளித்தனம், நல்ல மனசு எல்லாம் கூட இவ மாதிரியே தான். நல்லா பாடுவா....

சொல்வதில் ஒரு சுகம். கேட்பதில் ஒரு சுகம். அந்த இரண்டு சுகங்களையும் அங்கே காண முடிந்தது.  பரமேஸ்வரன் சொல்லச் சொல்ல இடையிடையே மீனாட்சியும், ஈஸ்வரும் கேள்விகள் கேட்க கடந்த கால நிகழ்ச்சிகள் தத்ரூப நிகழ்வுகளாக அவரவர் மனதில் காணப்பட்டன. பேச்சு பரமேஸ்வரனின் தந்தை பக்கம் நகர்ந்தது. ஈஸ்வரைப் போலவே தோற்றத்தில் இருக்கும் அவரின் குணாதிசயங்களைப் பற்றிப் பேச்சு வந்த போது ஆனந்தவல்லி மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டாள். கணவனைப் பற்றிப் பேசும் போதெல்லாம அவளை அறியாமல் ஒரு மென்மை அவளைத் தொற்றிக் கொண்டது.

அதைப் பார்க்கும் போது சில பந்தங்களின் தாக்கம் எத்தனை காலமானாலும் குறைவதில்லை என்று ஈஸ்வருக்குத் தோன்றியது. கணவனை இழந்து ஐம்பது வருடங்களுக்கும் மேலாகி விட்டிருந்தாலும் அவர் மேல் இருந்த நேசத்தை அவள் பேச்சில் இப்போதும் அவனால் கவனிக்க முடிந்தது.

ஈஸ்வர் ஆனந்தவல்லிக்கு எட்டாத தூரத்தில் நகர்ந்து கொண்டு தாத்தாவிடம் சொன்னான். “தாத்தா, நான் கேள்விப்பட்ட வரையில் உங்கப்பா இருந்தவரை உங்கம்மா அவரைக் கரிச்சுக் கொட்டிகிட்டு இருந்தாங்கன்னு அல்லவா சொன்னாங்க

பரமேஸ்வரன் தாயைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சொன்னார். “ஆமா. அண்ணா அந்த சிவலிங்கம் பின்னாடி போக அப்பா தான் காரணம்னு எப்பவுமே அவருக்குத் திட்டு தான்

“அப்ப இவங்க சித்திரவதை தாங்காம தான் அவர் சீக்கிரமே போய் சேர்ந்துட்டார்னு சொல்லுங்கஎன்று ஈஸ்வர் சொல்ல ஆனந்தவல்லி சுற்றிலும் பார்த்து விட்டு அங்கிருந்த ஒரு வாரப்பத்திரிக்கையை எடுத்து அவன் மேல் வீசினாள்.

மீண்டும் சிரிப்பலை எழுந்தது. இத்தனை நாட்கள் வரை அந்த வீட்டில் இந்த மாதிரி ஒரு உயிர்ப்புள்ள சந்தோஷம் இருந்ததில்லை. சங்கர், மீனாட்சி, பரமேஸ்வரன் வட்டத்திலும் அளவு கடந்த பாசம் இருந்ததே ஒழிய இந்தக் கிண்டல், சீண்டல் எல்லாம் இருந்ததில்லை. 

நான்கு தலைமுறைகள் மனிதர்கள் சேர்ந்து இப்படி அன்பாகவும், பாசமாகவும், கிண்டலாகவும், விவாதம் செய்து கொண்டும் இருக்கும் ஒரு அற்புத பந்தம் உருவாக ஈஸ்வர் தான் காரணம் என்பதை பரமேஸ்வரன் உணர்ந்தார். பேசிக் கொண்டே இருந்த அவர்கள் சிறிது சிறிதாக நெருங்கி உட்கார ஆரம்பித்து கடைசியில் ஈஸ்வர் தாத்தாவின் மடியில் படுத்துக் கொண்டான். பரமேஸ்வரன் பாசத்துடன் பேரன் தலையைக் கோதி விட ஆனந்தவல்லி நிறைந்த மனதுடன் மகனையும் கொள்ளுப் பேரனையும் பார்த்தாள். மீனாட்சி தந்தையை ஒட்டினாற்போல் உட்கர்ந்து கொண்டாள்.   

அந்த நேரத்தில் தென்னரசுவும், விஷாலியும் பரமேஸ்வரனின் உடல் நலம் விசாரிக்க அங்கு வந்தார்கள். விஷாலியைப் பார்த்தவுடன் ஓரிரு வினாடிகள் தானாக ஈஸ்வரின் முகம் மலர்ந்து பின் இறுகியது. மெள்ள தாத்தாவின் மடியில் இருந்து எழுந்தான். ஈஸ்வரின் முகத்தில் வந்து போன மாற்றங்களைக் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்த ஆனந்தவல்லி இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடிந்த பெண் யார் என்று திரும்பிப் பார்த்தாள்.

ஜான்சன் குருஜியை அழைத்துப் போக வந்திருந்தார். சிவலிங்கத்தை மாற்றும் இடத்தில் ஆராய்ச்சிக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் தன் மேற்பார்வையிலேயே ஜான்சன் சிறப்பாக முடித்திருந்தார். குருஜி அதைப் பார்வையிட கிளம்பிக் கொண்டிருந்தார். குருஜிக்கு மிகவும் பரபரப்பாக இருந்தது. இந்த உலக வரலாற்றை அவர் கண்டிப்பாக மாற்றி எழுதப் போகிறார். இது அதற்கான அழகான ஆரம்பம்  என்பதில் அவருக்கு சந்தேகம் இல்லை.

“உன் ஆள்கள் எல்லாம் ஆராய்ச்சிக்குத் தயார் நிலையில் தானே இருக்கிறார்கள்?குருஜி ஜான்சனைக் கேட்டார்.

அவர்கள் அதிகமாய் ஆல்ஃபா அலைகளிலேயே இருக்கிறார்கள் குருஜி.ஜான்சன் சொன்னார்.

“நீ வரவழைத்திருக்கிற உபகரணங்கள் எல்லாம் வேலை செய்கிற தயார்நிலையில் தானே இருக்கின்றன

“ஆமாம் குருஜி

அதற்கு மேல் குருஜி கேள்வி எதுவும் கேட்கவில்லை. திருப்தி அடைந்தவராக ஜான்சனுடன் கிளம்பினார்.

ஆனால் ஜான்சன் மனதில் கணபதி தயார்நிலையில் இருப்பானா என்ற கேள்வி ஒன்று எழுந்தது. கேட்டார்.


குருஜி புன்னகையுடன் சொன்னார். “நீ தேர்ந்தெடுத்திருக்கிற ஆட்கள் எல்லாம் தங்களைத் தயார்படுத்திக்கணும் ஜான்சன். ஆனால் கணபதி எப்பவுமே தயார்நிலையில் தான் இருப்பான்

(தொடரும்)

-          என்.கணேசன்

-           

Monday, August 19, 2013

இறை வழிபாட்டு முறைகள்


அறிவார்ந்த ஆன்மிகம்-15

றைவனை வழிபட நம் முன்னோர்கள் ஒன்பது வழிமுறைகளைச் சொல்லி இருக்கிறார்கள். இவற்றில் அவரவர் இயல்புக்கு ஏற்றாற் போல் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்து வழிபடலாம். இவை தான் அந்த ஒன்பது வழிபாட்டு முறைகள் -

ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்ம நிவேதனம்

1.       ச்ரவணம் கேட்டல்:  இறைவனுடைய புகழைக் கேட்டு பின் அவன் வசமாதலை முதலில் சொல்கிறார்கள். இதற்கு சொந்தமாகத் தெரிந்து வைத்திருக்க அவசியம் இல்லை. கற்றிலன் ஆயினும் கேட்க என்றும் செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்றும் சொல்கிறார் திருவள்ளுவர். அதனால் அறிந்தவர் சொல்வதைக் கேட்பதே போதும். ஆனாலும் கேட்பது என்பது மிக எளிமையாகத் தோன்றினாலும் கேட்கும் மனமும், பொறுமையும் எல்லாருக்கும் வந்து விடுவதில்லை என்றாலும் நல்லதைக் கேட்க முயல வேண்டும்.

பிரகலாதன் தாயின் கருவில் இருக்கும் போதே நாரதர் சொன்ன இறைவனின் பெருமைகளைக் கேட்டு உள்வாங்கிக் கொணடதை நாம் அறிவோம். எத்தனை துன்பங்கள் வந்த போதும் அவரை அந்த நாராயண மந்திரத்தைப் பலமாகப் பற்றிக் கொள்ள வைத்ததும்  இறைவனை அவதாரம் எடுக்க வைத்துக் காப்பாற்றியதும் அந்தக் கேட்டல் தான் என்பதால் அதன் முக்கியவத்தை வேறெதுவும் சொல்லி மேலும் விளக்க வேண்டியதில்லை.  

2.       கீர்த்தனம் – பாடுதல்: இறைவனைப் பாடி வழிபடுதல் அடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இசையால் இறைவனை ஈர்த்தே அவன் திருவடிகளை அடைந்தவர்கள் நம் நாட்டில் அநேகம் பேர் இருந்திருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களில் என்றும் முதலிடம் பெறக்கூடியவர் தியாகையர். இசையாலேயே இறைவனிடம் பேசிக் கொண்டிருந்தவர் அவர். இன்றும் கச்சேரிகளில் பேசிக் கொண்டிருக்கிறார். கர்னாடக சங்கீதம் உள்ளளவும் பேசிக் கொண்டிருப்பார் என்று சொல்லக் கூடிய அளவுக்கு உளமாறப் பாடியே இறைவனைத் தன்னிடம் இழுத்தவர். அந்த இசையாலே நாமும் இறையருளைப் பெறப் பாடி வைத்து விட்டுப் போனவர் அவர்.

தென்னிந்தியாவில் தியாகையர் என்றால் வட இந்தியாவில் அஷ்டபதிஎன்ர கிரந்தத்தைப் பாடிய ஜெயதேவரைச் சொல்லலாம். இவரது கீத கோவிந்தம் இசையில் கண்ண பரமாத்மாவே சொக்கிப் போனார் என்கிறார்கள். பக்தியுடன் சேர்ந்த இசைக்கு அந்த மகாசக்தி உண்டு. அதனாலேயே பாடும் பணியில் பணித்தருள்வாய்”  என்று வேண்டுகிறார் குமரகுருபர சுவாமிகள்.

3. ஸ்மரணம் – நினைத்தல்: இறைவனை வழிபட மூன்றாவது முறை அவனை நினைத்தல். மிகச் சுலபமாகத் தோன்றினாலும் இது மிகவும் கஷ்டமான முறை தான். நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினை என்றும் சிவன் தாளினை என்று பாடி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு காரியம் செய்து கொண்டிருக்கும் போதும் மனதின் உள்ளே இறைவனை நினைத்துக் கொண்டிருப்பது ஒரு மேலான நிலை. ஆனால் சில வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து இறைவனை நினைக்க முடிவது பிரம்மப் பிரயத்தனமே. அது வரை பதுங்கி இருந்த ஓராயிரம் சிந்தனைகள் இறைவனை நினைக்க ஆரம்பித்தவுடன் அதைப் புறந்தள்ளி விட்டு நம் மனதை ஆட்கொள்ள ஆரம்பிக்கின்றன. இறைவனை விட்டு நீண்ட நேரம் சஞ்சரித்து விட்டோம் என்று நாம் புரிந்து கொள்வதே சற்றுத் தாமதமாகத் தான். ஆனால் மனதைக் கட்டுப்படுத்தி இடைவிடாது இறைவனை நினைப்பது நிச்சயமாக மேலான வழிமுறை என்பதில் சந்தேகமில்லை.

4.       பாதஸேவனம் - திருவடி தொழல்: இறைவனுடைய திருவடிகளைத் தொழுவது நான்காவது வழிமுறை. ஆழ்வார்களும், நாயன்மார்களும் இறைவனது திருவடிகளை விடாமல் பற்றிக் கொண்டு தொழுதவர்கள்.

திருவள்ளுவர் கூட மிக அழகாகச் சொல்கிறார்.
“அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தாற்க்கல்லால்
பிறவாழி நீத்தல் அரிது.

அறக்கடலாக விளங்கும் இறைவனின் திருவடிகளை வணங்குபவர்களைத் தவிர மற்றவர்களால் பொருள், இன்பம் ஆகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது என்கிறார் திருவள்ளுவர். கடந்து போக வேண்டிய கடல்களில் மூழ்கி விடாமல் காப்பது இந்த திருவடி தொழுதல்.

5.       அர்ச்சனம் – பூஜித்தல்: இறைவனைப் பக்தியுடன் பூஜித்தல் அடுத்த வழிபாட்டு முறை. இப்படித் தான் பூஜை செய்ய வேண்டும் என்று வழிமுறைகள் இருந்தாலும் எப்படி பூஜித்தாலும் பக்தியுடன் பூஜித்தால் இறைவன் மனமுவந்து ஏற்றுக் கொள்வான் என்கிறார்கள் நம் பெரியோர்கள்.

மனமுவந்து பூஜிப்பவர்கள் பூஜிக்கும் முறைகளில் தவறு இருந்தாலும் அந்தத் தவறுகளை அலட்சியப்படுத்தி அவர்களுடைய அன்பில் இறைவன் நெகிழ்கிறார் என்பதற்கு கண்ணப்ப நாயனாரும், சபரியும் சிறந்த உதாரணங்கள்.

6.       வந்தனம் – வணங்குதல்:  இறைவனை வணங்குதல் அடுத்த வழிமுறை. பொதுவாகப் படிப்பவர்களுக்குப் பூஜித்தல், திருவடி தொழல், வணங்குதல் என்ற இந்த மூன்று வழிபாட்டு முறைகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் தெரியாது. மிக நுண்ணிய வித்தியாசமே இருக்கிறது. இங்கு தலை வணங்குதல் என்று பொருள் கொள்வது சற்று பொருத்தமாக இருக்கும்.

திருவடி தொழுவதிலும் பூஜித்தலிலும் பக்தி முக்கியமாக பங்கு வகிக்கிறது. இதிலோ “நான்என்ற அகங்காரம் களைந்து மேலான இறைவனைத் தலைவணங்குவது பிரதானமாகிறது. எல்லாம் நீ என்ற பணிவு இங்கு பிரதானமாகிறது. “நான்என்பதை விட்டால் ஒழிய இறைவன் அருள் நமக்குக் கிடைக்க வழியே இல்லை என்பதால் இது முக்கியமாகிறது.

7.       தாஸ்யம் – தொண்டு: அடுத்த வழிபாட்டு முறை தொண்டு. இறைவனுக்கும், இறைவன் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் தொண்டு செய்வது இறைவனருள் பெற அடுத்த வழி. தன்னலம் இல்லாமல், புகழுக்காகவோ இலாபத்திற்காகவோ அல்லாமல் தாசராகத் தொண்டு புரிவதும் வழிபாடாகவே கருதப்படுகிறது.

தன்னலமற்ற தொண்டுக்குச் சிறந்த உதாரணமாக திருநாவுக்கரசரையும் அன்னை தெரசாவையும் சொல்லலாம். முதுமையிலும் கோயில்கள் தோறும் சென்று தொண்டுகள் செய்தவர் திருநாவுக்கரசர். அன்னை தெரசா கல்கத்தா வீதிகளில் விழுந்து கிடந்த குஷ்ட நோயாளிகளிடம் கர்த்தரைக் கண்டு அவர்களுக்கு சேவை செய்து மகிழ்ந்தார். இறைவனை மகிழ்விக்க இது போன்ற சேவைகளை விட உயர்வானது எது இருக்க முடியும்?


8.       சக்யம் – சிநேகம்: இறைவனை சினேகத்துடன் பார்க்க முடிவது இந்திய ஆன்மிகத்தின் தனிச்சிறப்புத் தன்மை என்றே சொல்லலாம். சினேகமும், காதலும் இறைவனிடத்தில் ஏற்படுவது ஒருவித வழிபாடாகவே கருதப்படுகிறது. ஆண்டாளும், ராதையும் நல்ல உதாரணங்கள்.

அதே போல கண்ணனைத் தாயாக, தந்தையாக, தோழனாக, குழந்தையாக, காதலனாக, காதலியாகக் கருத முடிந்த பாரதியையும் உதாரணமாகச் சொல்லலாம். இப்படி எல்லாமாக இறைவனைக் கண்டு சினேகித்தால் இறைவனால் அதை அலட்சியப்படுத்தி விட முடியுமா என்ன! அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே  என்று வள்ளலார் பாடினார். இறைவன் என்ற மலை நம் அன்பெனும் பிடியில் அகப்படும் அதிசயம் கற்பனை அல்ல நிஜம் தான்.


9.       ஆத்ம நிவேதனம் – ஒப்படைத்தல்: கடைசி வழிபாட்டு முறை உடல், பொருள் ஆவி அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணமாக்குவது. இது மகான்களுக்கே முடிகிற காரியம் என்றாலும் ஆன்ம நிவேதனம் ஆன்மிகத்தின் உச்ச நிலையாகக் கருதப்படுகிறது. தத்துவ வேதாந்த சாரமாகக் கூடச் சொல்லப்படுகிறது இந்த உயர்வு நிலை.

இறைவனை அடையவும், அவன் பேரருளைப் பெறவும் இந்த ஒன்பது பாதைகளும் உதவும். அவரவர் இயல்புக்கு ஏற்ப வழியைத் தேர்ந்தெடுத்து பயணிக்கலாம். அந்த சுதந்திரம் நமக்கு உண்டு. பிடித்த பாதையில் பயணியுங்கள். வாழ்த்துக்கள்!

-          என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் -18-06-2013