சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 31, 2023

யோகி 7

 

கிருஷ்ணமூர்த்தி தன்னை விதி தனியாகத் தேர்ந்தெடுத்து சோதிப்பதாக உணர்ந்தார். சைத்ராவுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து தான் என்ன, அவள் தற்போது எந்த நிலைமையில் இருக்கிறாள் என்பது தெரியாமல் கழியும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு யுகமாக அவருக்குத் தோன்றியது. கொரோனா தொற்று எப்போது தீரும், நிலைமை எப்போது சகஜத்திற்கு மாறும் என்று யாருக்குமே தெரியவில்லை. தினமும் பல கருத்துகளும், பல யூகங்களும் சொல்லப்பட்டன. கொரோனா தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே வந்தது. ஓரிரண்டு நாட்கள் முன்பு வரை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தவர்கள், திடீரென்று கொரோனாவால் தாக்கப்பட்டு உயிரிழந்த செய்திகள் வந்து கொண்டிருந்தன. அனைவரும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தார்கள். அமீர் பாயும் மைக்கேலும் அதே வீதியில் வசித்தாலும் கூட, அவர்களும் கூட சேதுமாதவனுடைய வீட்டுக்கு வரவில்லை. இந்த ஊரடங்கு  ஒரு விதத்தில் ஊடகங்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளிலிருந்து கிருஷ்ணமூர்த்திக்கும் சேதுமாதவனுக்கும் தற்காலிக விடுதலை வாங்கித் தந்தது என்றாலும் நீதிமன்றத்தில் இருந்த அவர்கள் மனு கிணற்றில் போட்ட கல் போல் அப்படியே இருந்தது.

 

அமீர் பாய் தன் வீட்டில் அடைந்து கிடந்தாலும் தன்னால் முடிந்த துப்பறியும் வேலைகள் எல்லாம் செய்தார்.  அவருடைய உறவினர் மூலமாக இன்ஸ்பெக்டர் செல்வத்துடன் பணிபுரியும் போலீஸ்காரர்களை விசாரித்தார். அவருடைய உறவினருக்கு அந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் ஏட்டு மிகவும் பரிச்சயமானவர். கிருஷ்ணமூர்த்தி புகார் செய்துவிட்டுப் போனவுடன் இன்ஸ்பெக்டர் செல்வம் யோகாலயம் போனது உண்மை தான் என்று தெரிவித்த ஏட்டுக்கு, யோகாலயத்தில் என்ன நடந்தது என்று தெரிந்திருக்கவில்லை. ஆனால் யோகாலயத்திலிருந்து மாதா மாதம் ஒரு தொகை இன்ஸ்பெக்டர் செல்வத்துக்கு வந்து சேர்கிறது என்பதை அவர் ரகசியமாகத் தெரிவித்தார். அதற்கு மேல் யூகங்கள் செய்வதற்கு அவசியம் இருக்கவில்லை.

 

சேதுமாதவன் குடும்பத்திற்கு இறைவன் இப்படி ஒரு கஷ்டத்தைத் தந்திருக்கக்  கூடாதுஎன்று அமீர் பாய் ஆத்மார்த்தமாக வருந்தினார்.

 

சேதுமாதவன் எப்போதும் தன்னால் முடிந்த உதவிகளை அடுத்தவர்களுக்குச் செய்யத் தயங்கியதில்லை. அமீர் பாயின் மளிகைக் கடையில் தான் சேதுமாதவன் மளிகை சாமான்கள் வாங்குவார். சேதுமாதவன் மத்திய அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்று சென்னையில் வசிக்கத் திரும்பி வந்த காலத்திலிருந்து  அப்படித் தான் இருவருக்கும் ஆரம்பத்தில் பரிச்சயம்.. அமீர் பாய் சேது மாதவனை விட பத்து வருடங்கள் இளையவர். மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் கொண்ட குடும்பத்தின் தலைவர். சேதுமாதவன் பொருள்கள் வாங்க அமீர் பாயின் கடைக்கு வந்தால், அவருடன் சிறிது நேரம் பேசி விட்டுப் போவார்.

 

அப்படி இருந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் அமீர் பாய் மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அச்சமயத்தில் மகன்களில் ஒருவன் கல்லூரியிலும், இன்னொருவன் பள்ளியிலும் படித்துக் கொண்டிருந்தார்கள். அவருடைய இதய அறுவைச் சிகிச்சைக்குப் பெரியதொரு தொகை தேவைப்பட்டது. அந்த அளவு சேமிப்பு அவர்களிடம் இருக்கவில்லை. இருக்கும் நகை எல்லாம் விற்றும், சிகிச்சைக்கு வேண்டிய தொகையில் பாதி கூடத் தேறவில்லை.   நெருங்கிய உறவினர்களில் சிலர் உதவ முடிந்த செல்வ நிலையில் இருந்த போதும் உதவ முன்வரவில்லை. பணத்தைத் திரட்ட வேறு வழியில்லாமல் மளிகைக்கடையை விற்று விட அமீர் பாயின் மனைவி முடிவு செய்தாள்.

 

மளிகைக் கடையை விற்க பேரம் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் தான் சேதுமாதவன் நிலவரத்தை அறிந்து, அமீர்பாய் வீட்டுக்குப் போய்  கவலையுடன் கேட்டார். “மளிகைக் கடையை வித்துட்டா, பாய் நலமாய் திரும்பி வந்தால் அப்புறம் ஜீவனத்துக்கு என்ன வழி?” 

 

அமீர் பாயின் மனைவி கண்கலங்கியபடி சொன்னாள். “எங்களுக்கு அவரைக் காப்பாத்த வேற வழியே இல்லைங்க.”

 

உங்களுக்கு எவ்வளவு பணம் போதாம இருக்கு

 

மூனு லட்சம்…”

 

நான் தர்றேன். மளிகைக் கடையை விக்காதீங்க.”

 

அமீர் பாயின் குடும்பமே திகைத்து கண்கலங்கியது. சொல்லி இரண்டு மணி நேரத்தில் சேதுமாதவன் பணத்தைக் கொண்டு வந்து அமீர் பாயின் மனைவி கையில் தரும் வரை அவர்களுக்கு அதை நம்ப முடியவில்லை. அப்படித் தந்த போதும், அந்தப் பணத்தைத் திருப்பித் தருவது பற்றிய பேச்சு எதுவும் அவர் பேசவில்லை. அமீர் பாயின் மனைவி அது பற்றிப் பேச ஆரம்பித்த போது கூட அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாங்க. முதல்ல, பாய் பிழைச்சு நல்லபடியா வரட்டும்.” என்று சொல்லி விட்டு சேதுமாதவன் போய் விட்டார். 

 

அந்தச் சமயத்தில் மைக்கேலும், சேதுமாதவனும் மட்டுமே நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அவரிடம் கூட சேதுமாதவன் தான் செய்திருக்கும் இந்த உதவியைப் பற்றிச் சொல்லவில்லை. வேறொருவர் மூலமாகத்  தகவல் அறிந்து மைக்கேல் திகைத்தார். ஏனென்றால் அக்காலக்கட்டத்தில் அது பெரிய தொகையே.  இத்தனை பெரிய தொகையை இவர் எந்த தைரியத்தில் அந்தக் குடும்பத்திற்குத் தருகிறார்?’

 

ஆனால் ஐந்து பிள்ளைகள் உள்ள அந்தக் குடும்பத்தலைவன் உயிரோடு நலமாகத் திரும்பி வரவேண்டும், இனி ஆக வேண்டிய காரியங்கள் அந்தக் குடும்பத்தில் நிறைய இருக்கின்றன என்று மட்டுமே சேதுமாதவன் நினைக்கிறார் என்பது அவரிடம் பேசும் போது மைக்கேலுக்குத் தெரிந்தது.

 

அமீர் பாய் அறுவை சிகிச்சை முடிந்து நலமான பிறகு தான் மனைவி மூலம் அனைத்தையும் அறிந்தார். நெருங்கிய உறவுகளும் கைவிட்ட நிலையில், பேச்சளவு மட்டுமே பரிச்சயம் உள்ள சேதுமாதவன் காட்டிய கருணை அவரை உருக்கியது. அவர் மனைவி கண்கலங்கியபடி சேதுமாதவன் அன்று கேட்ட அந்த வார்த்தைகளைச் சொன்னாள். மளிகைக் கடையை வித்துட்டா, பாய் நலமாய் திரும்பி வந்தால் அப்புறம் ஜீவனத்துக்கு என்ன வழின்னு கேட்டார் அவர். 

 

இந்தக் காலத்தில் யார் இப்படி இன்னொரு குடும்பத்தின் எதிர்காலத்தை யோசித்துப் பார்க்கிறார்கள்? அல்லாவே அனுப்பி வந்தவர் போல சேதுமாதவன் அவருக்குத் தோன்றினார். நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்த சேதுமாதவனிடம் அமீர் பாய் கண்கலங்கி கைகூப்பி நன்றி சொல்ல முற்பட்ட போது சேதுமாதவன் லேசான கூச்சத்துடன் சொன்னார். “என்னால முடிஞ்சதை தான் செஞ்சேன். மனுஷனுக்கு மனுஷன் முடிஞ்சதக் கூட செய்யலேன்னா எப்படி?”

 

அதற்குப் பின் அதுபற்றி அவர் பேச விடவில்லை. நலமாகி வந்து சிறிது சிறிதாக மூன்று லட்சம் ரூபாயைத் திருப்பித் தந்து விட்டாலும் அமீர் பாய் நிரந்தரமாய் அந்த நல்ல மனிதனுக்குக் கடன்பட்டிருப்பதாகவே உணர்ந்தார். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவருடைய குடும்பத்திற்காகவும், அவர்களது எதிர்கால ஜீவனத்திற்காகவும் அக்கறையுடன் கவலைப்பட்ட அந்த நல்ல மனிதரைத் தன் சகோதரனுக்கும் மேலாக மதித்தார். அதன் பின் தான் அவர்களுடைய நட்பு ஆழமானது.

 

நெருக்கமான பின் கிருஷ்ணமூர்த்தியும், தந்தையைப் போலவே மிக நல்ல மனிதர் என்பதை அமீர் பாயால் உணர முடிந்தது. அதிகம் யாருடனும் நெருக்கமாகப் பழகும் மனிதராக கிருஷ்ணமூர்த்தி இருக்காவிட்டாலும், பல ஏழை நோயாளிகளுக்கு பணம் எதுவும் வாங்காமல் இலவச சிகிச்சை செய்வது போன்ற தர்ம காரியங்கள் நிறைய செய்வதை அவர் கண்டார்.

 

அதிகம் படிக்காதவர்களுடன் மைக்கேல் நெருங்கிப் பழகுபவரல்ல. ஆனால் அமீர் பாய் சேதுமாதவனிடம் நெருக்கமான பிறகு, அவருடைய நல்ல மனதால் கவரப்பட்டு, மைக்கேலும் அவருக்கு நெருக்கமானார். அமீர் பாய்க்கு படிப்பறிவு அதிகம் இல்லா விட்டாலும், உலக ஞானமும், தைரியமாய் செயல்படும் தன்மையும் இருப்பது மைக்கேலையும் கவர்ந்தது. அதன் பின் மூவரும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்தார்கள்.

 

அமீர் பாய்க்கு இத்தனை நல்ல மனிதர்களான சேதுமாதவனுக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் இப்படிப்பட்ட சோதனை வந்திருப்பது மிக வருத்தத்தை ஏற்படுத்தியதால் தினமும் ஐந்து முறை தொழும் போதும் அல்லாவிடம் அந்தக் குடும்பத்திற்காக வேண்டிக் கொண்டார். 

 

காலம் மெள்ள உருண்டது. அமெரிக்காவில் முதலமைச்சர் அருணாச்சலத்துக்கு வெற்றிகரமாகச் சிகிச்சை முடிந்தாலும், கோவிட் நிலைமை காரணமாக ஒரு மாதம் கழிந்து தான் திரும்பி வருவார் என்ற செய்தி வந்தது.

 

மைக்கேல் நீதித்துறையில் மேலிடத்தில் இருக்கும் தன்னுடைய நெருங்கிய உறவினர் மூலமாக சைத்ராவின் ஆள் கொணர்வு மனுவைத் துரிதப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டார். நீதிமன்றங்கள் செயல்படத் துவங்கியவுடனேயே   அந்த வழக்கு முன்னுரிமை தந்து எடுத்துக் கொள்ளப்படும் என்று அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.

 

அதே போல நீதிமன்றங்கள் பழையபடி இயங்க ஆரம்பித்தவுடனேயே அந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நீதிபதி, சைத்ராவை நீதிமன்றத்தில் ஆஜராக்க வேண்டும் என்று யோகாலயத்துக்கு ஆணையிட்டார்.


(தொடரும்)

என்.கணேசன்



Thursday, July 27, 2023

சாணக்கியன் 67

 

பிலிப்பிடம் பேசி விட்டு வந்த பின் புருஷோத்தமன் நீண்ட நேரம் மன ஆத்திரம் ஆறாமல் தவித்தார். அலெக்ஸாண்டர் சக்கரவர்த்தி. அதனால் அவனுக்கு புருஷோத்தமனை அரசனாகவே நடத்தத் தெரிந்திருந்தது.  ஆனால் பிலிப் அலெக்ஸாண்டரின் சேவகன். அதனால் அவனுக்கு புருஷோத்தமனைச் சேவகனாகவே நடத்த முடிகிறது. அலெக்ஸாண்டர் அதிகாரம் செலுத்தினாலும் அதில் தலைமைப்பண்பு இயல்பாக இருந்ததால். அதில் புருஷோத்தமன் மனம் புண்படவில்லை. அதிகாரத்தை இரவல் வாங்கிய பிலிப்புக்கு தலைமைப்பண்பு இயல்பாய் இல்லாததால் அவன் கடுமையாக நடந்து கொண்டு தலைமைப் பண்பை ஸ்தாபிக்க வேண்டி இருந்தது. அது புருஷோத்தமனைக் காயப்படுத்தியது.

 

இந்திரதத் கூடுமான வரை அவருக்கு ஆறுதல் சொன்னாலும் அவர் ஆத்திரம் அடங்கவில்லை. சிறிது நேரத்தில் அவர் ஆத்திரம் பிலிப்பிடமிருந்து ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் மீது இடம் பெயர்ந்தது. “நம் நாட்டில் மக்களிடம் தெரிகிற வித்தியாசமான நடவடிக்கைகளுக்கும் காரணம் உன் நண்பர் விஷ்ணுகுப்தர் தான் என்று பிலிப் சொல்கிறான். இது உனக்கு முன்பே தெரியுமா?”

 

“நிச்சயமாக இல்லை அரசே”

 

”தட்சசீலத்து ஆச்சாரியர் இங்கு இப்படி ரகசிய வேலைகளில் ஈடுபடுவது தன் நண்பன் கேகய நாட்டு அமைச்சர் என்ற தைரியத்தால் தானோ?”    

 

”விஷ்ணுவுக்குத் தைரியம் தர யாருடைய பதவியும், தயவும் தேவையில்லை அரசே. அறிவும் தைரியமும் இயல்பாகவே நிறைய என் நண்பனுக்கு இருக்கிறது”

 

“அதை வைத்து என் மண்ணில் அந்த ஆள் தேவையில்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நான் ரசிக்கவில்லை இந்திரதத்.”  

 

இந்திரதத் மெல்லக் கேட்டார். “இதை நம் மண் என்று நாம் பிலிப் முன்னால் சத்தமாகச் சொல்ல முடியுமா அரசே?”

 

புருஷோத்தமன் ஒரு கணம் பேச்சிழந்து தன் அமைச்சரைப் பார்த்தார். மறுபடி பேசிய போது அவர் குரலில் விவரிக்க முடியாத வலி தெரிந்தது. “என்னை நீயும் ஏளனம் செய்வது என்று முடிவெடுத்து விட்டாயா இந்திரதத்?”

 

“என்னை மன்னியுங்கள் அரசே. உண்மையில் நம்மை நம் விதி தான் ஏளனம் செய்கிறது. நான் உண்மை நிலவரத்தை நினைவுபடுத்தினேன் அவ்வளவு தான். பிலிப் சொல்வதைப் பார்த்தால் வித்தியாசமான சூழ்நிலைகள் கேகயத்தில் மட்டும் உருவாகவில்லை. யவனர் வென்ற எல்லாப் பகுதிகளிலும் உருவாகிக் கொண்டு தானிருக்கிறது. அதன் பின்னணியில் விஷ்ணுகுப்தர் இருக்கிறார் என்ற சந்தேகமும் பிலிப் சொன்ன பிறகுதான் எனக்கே தெரிகிறது. எல்லா இடங்களிலும் இந்திரதத் அமைச்சராக இல்லை. அதனால் இந்திரதத் இருக்கும் தைரியத்தில் விஷ்ணுகுப்தர் எதையும் செய்து கொண்டிருக்கவில்லை என்பது நிச்சயம்.”

 

புருஷோத்தமன் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்து விட்டுச் சொன்னார். “ஒரு சாதாரண ஆசிரியனால் தான் வசிக்கும் இடம் மட்டுமல்லாமல் பல பகுதிகளில் என்னென்னவோ செய்ய முடிகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை இந்திரதத். உன்னால் நம்ப முடிகிறதா?”  

 

இந்திரதத் புருஷோத்தமன் சிறிதும் எதிர்பார்க்காத பதிலைச் சொன்னார். “நம்ப முடிகிறது அரசே”

 

புருஷோத்தமன் திகைப்புடன் பார்க்க இந்திரதத் சொன்னார். “ஏனென்றால் விஷ்ணுகுப்தன் சாதாரண ஆசிரியன் அல்ல அரசே....”

 

“அலெக்ஸாண்டரின் வலிமைக்கு முன் பர்வதேஸ்வரன் என்று பாராட்டப்படும் நானும் என் பெரும்படையும் கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அப்படி இருக்கையில் உன் நண்பன் எத்தனை அசாதாரணமானவனாக இருந்தாலும் கூட, சிலரைத் தன் பின்னால் சேர்த்துக் கொண்டால் கூட, அலெக்ஸாண்டர் ஒடுக்க நினைத்தால் எதிர்த்து என்ன செய்து விட முடியும்?”

 

“எத்தனை யோசித்தாலும் எனக்கும் அது பிடிபடவில்லை அரசே. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்”

 

புருஷோத்தமன் உறுதியாகச் சொன்னார். “கேகய மண்ணில் என்ன நடக்க வேண்டும் என்பதை உன் நண்பன் தீர்மானிப்பதை நாம் அனுமதிக்க முடியாது. இங்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதை நாம் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதற்கு உங்கள் நட்பு தடையாக இருக்கக்கூடாது”

 

பிலிப்புக்கு புருஷோத்தமன் மீதும், இந்திரதத் மீதும் பலத்த சந்தேகம் ஏற்படத் துவங்கியது. ஆம்பி குமாரன் ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் இந்திரதத்தின் நண்பர் என்று அவனிடம் முன்பே கூறியிருந்தான். ஆனால் அவர் ஏதோ சதிவலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று அவன் சொன்ன பிறகு இருவரும் விஷ்ணுகுப்தரை அறிந்திருப்பது போலவே காட்டிக் கொள்ளவில்லை.  அந்தப் பெயரைச் சொன்னவுடன் புருஷோத்தமன் இந்திரதத்தைப் பார்த்த பார்வை அவரும் அவர்களிருவருக்கிடையே இருக்கும் நட்பை அறிந்திருப்பதைக் காட்டிக் கொடுத்து விட்டது. ஆனால் அவரும் கூட வாய் திறந்து அது குறித்து ஒன்றும் சொல்லாதது விஷ்ணுகுப்தரின் சதியில் இவர்களிருவருக்கும் கூடப் பங்கிருக்குமோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவது போலிருந்தது.

 

ஆம்பி குமாரன் அறிவாளியல்ல என்றாலும் துரோகியும் அல்ல. ஏனென்றால் அவன் தானாகவே அலெக்ஸாண்டரிடம் ஆரம்பத்திலேயே நட்புக்கரம் நீட்டியவன். ஆனால் புருஷோத்தமன் அப்படியல்ல. ஆரம்பத்தில் அலெக்ஸாண்டரை எதிர்த்து, பிறகு போரிட்டு, போரில் தோற்ற பின் வேறு வழியில்லாமல் நட்புக் கரம் நீட்டியவர். இப்போதும் தன் படைகளை கேகயத்துக்குத் திருப்பிக் கொண்டு வரத் துடிக்கிறார். அதையெல்லாம் யோசிக்கும் போது அலெக்ஸாண்டரும் இங்கில்லை என்ற சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறாரோ என்ற சந்தேகம் பிலிப் மனதில் தோன்ற ஆரம்பித்தது.

 

அவனது காவலன் வந்து சொன்னான். “தட்சசீலத்திலிருந்து க்ளைடக்ஸ் தங்களைக் காண வந்திருக்கிறார் பிரபு”

 

க்ளைடக்ஸ் அவனால் தட்சசீலத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் யவன சேனாதிபதி. அவனைத் தான் யவன வீரர்களின் கொலை பற்றி விசாரித்து வர பிலிப் ஆணை பிறப்பித்திருந்தான். “உள்ளே அனுப்பு”

 

சிறிது நேரத்தில் க்ளைடக்ஸ் அவன் முன் வணங்கி நின்றான். அவனை அமரச்  சொன்ன பிலிப் உடனே விஷயத்திற்கு வந்தான். “குற்றவாளிகள் யார் என்பது தெரிந்ததா?”

 

“இல்லை பிரபு. நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களை அழைத்துக் கொண்டு நான் தட்சசீலத்தை அடுத்திருக்கும் வனப்பகுதிக்குப் போய் விசாரித்தேன். ஆனால்  கொள்ளையர் பற்றி எந்தத் துப்பும் கிடைக்கவில்லை….”

 

“காட்டில் வசிக்கும் துறவிகளும், சாதுக்களும் என்ன சொல்கிறார்கள்”

 

“அவர்களிடம் கேள்வி கேட்டால் அவர்கள் ஆகாயத்தை நோக்கிக் கை காண்பிக்கிறார்கள். அதன் பொருள், ஆகாயத்தில் இருக்கும் ஆண்டவனுக்குத் தான் தெரியும் என்பதா எல்லாம் அவன் செயல் என்பதா என்று தெரியவில்லை. நாங்கள் காட்டை சல்லடையாக சலித்துத் தேடிப் பார்த்து விட்டோம். கொள்ளையர்கள் யாரும் அங்கு இல்லை. கொள்ளையடித்தவுடன் அங்கிருந்து அவர்கள் இடம் பெயர்ந்திருக்க வேண்டும்…”

 

பிலிப்பின் முகத்தில் அதிருப்தி தெளிவாகத் தெரிந்தது. ”ஏன் மற்ற வீரர்கள் அல்லாமல் வெறும் யவன வீரர்கள் அனுப்பப்பட்டார்கள் என்று விசாரித்தாயா?”

 

“பல அரசர்கள் கட்டிய கப்பத் தொகை அதிகமாக இருப்பதால் வசூலித்த அதிகாரி நம்பகமான நம் வீரர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறார். இது வரை இதுபோன்ற வழிப்பறிகள் நம் வீரர்களிடம் நடந்திருக்காததால், இப்படியெல்லாம் செய்ய யாரும் துணிய மாட்டார்கள் என்று நினைத்ததால் அவர் அப்படி அனுப்பியிருக்கிறார்…“

 

“இனி இது போல் செய்யாமல் செல்வத்தை அனுப்புவதாக இருந்தால் அதிக வீரர்களின் பாதுகாப்பில் அனுப்பவும், நம் வீரர்கள் மட்டுமல்லாமல் இங்குள்ள வீரர்களையும் சேர்த்து அனுப்பவும் சக்கரவர்த்தி பெயரால் ஆணையிட்டு அனைவருக்கும் தகவல் அனுப்ப ஏற்பாடு செய்”

 

“உத்தரவு பிரபு.” என்று சொன்ன அவன் முகத்தில் லேசாக ஒருவித பயம் தோன்றி மறைந்ததை பிலிப் கவனித்தான். அது என்ன என்று கேட்க நினைத்தும் அவன் கேட்கவில்லை. கேட்டறிந்து தன் பயத்தை அதிகப்படுத்திக் கொள்ள அவன் விரும்பவில்லை.

 

ஆம்பி குமாரன் ஆயுதக்கிடங்கில் கொள்ளை அடித்தவர்களைக் கண்டுபிடித்து விட்டானா?”

 

“இல்லை பிரபு. ஆனால் அவருக்கு முடிந்த வகையில் விசாரித்துக் கொண்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. இப்போது ஆயுதக்கிடங்கில் எப்போதும் பலத்த காவல் இருக்கிறது…”

 

“ஆம்பி குமாரனின் பிரச்சினையே ஓரிரு விஷயங்களுக்கு மேல் யோசிக்க முடியாதது தான். இன்னொரு இடத்தில் இன்னொரு பிரச்சினை உருவாகும் வரை இனி ஆயுதக்கிடங்கின் பக்கம் மட்டுமே அவன் பார்வை இருக்கும். முன் கூட்டியே யோசிப்பதும், அதற்குத் தயாராக இருப்பதும் அவனால் முடிந்தவை அல்ல. வேறெதாவது முக்கியச் செய்தி இருக்கிறதா க்ளைக்டஸ்

 

“ஆச்சார்ய விஷ்ணுகுப்தர் தட்சசீலம் திரும்பி வந்திருக்கிறார்”   

 

(தொடரும்)

என்.கணேசன்

 


  

Monday, July 24, 2023

யோகி 6

 

ல விதங்களில் யோசித்தும் அவர்களுக்கு திருப்திகரமான வழி எதுவும் புலப்படப்படவில்லை. கடைசியில் கிருஷ்ணமூர்த்திக்கு தன் நோயாளிகளில் ஒருவர் பிரபல வக்கீலாக இருப்பது நினைவுக்கு வந்தது. உடனே அவரைத் தொடர்பு கொண்டார்.  அந்த வக்கீல் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ஹேபியஸ் கார்பஸ் என்று சொல்லப்படும் ஆள் கொணர்வு மனு பற்றிச் சொன்னார். நீதிமன்றத்தை அணுகி இந்த மனுவைத் தாக்கல் செய்யலாம் என்றும், நீதிமன்றம் உத்தரவிட்டால், யோகாலயா சைத்ராவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தே தீர வேண்டும் என்றும் அவர் விளக்கிச் சொன்னார். உடனே கிருஷ்ணமூர்த்தி அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார்.

 

நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனு தாக்கல் செய்தபின் அந்த வழக்கு அவர்களுடைய தனிப்பட்ட விஷயமாக இருக்கவில்லை. பல பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் அது குறித்து கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரிக்க, படையெடுத்து வர ஆரம்பித்தன. ஆரம்பத்தில் அது ஒரு சாமானியனின் பிரச்சினையை நாடு முழுவதும் கொண்டு போய் நீதி கேட்கும் செயலாகத் தான் அவர்களுக்குத் தோன்றியது. அதை நல்ல விஷயமாகவும், வரவேற்கத் தக்கதாகவும் தான் அவர்கள் எண்ணினார்கள். ஆனால் போகப் போக ஊடகங்களின் இன்னொரு முகமும் அவர்களுக்குப் பரிச்சயமாக ஆரம்பித்தது.  

 

கிருஷ்ணமூர்த்தியிடமும், சேதுமாதவனிடமும் கேட்டு அறிந்தவற்றையும், பேட்டி எடுத்ததையும் சில பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் உள்ளபடியே வெளியிடவில்லை. சிலவற்றை வெட்டியும், சிலவற்றைச் சேர்த்தும், சின்னச் சின்னத் திருத்தங்கள் செய்து மாற்றியும் வெளியிட்டார்கள். சொல்லிய சில உண்மைகள் மறைக்கப்பட்டும், சொல்லாத சில விஷயங்கள் திணிக்கப்பட்டும் வெளியானதைப் படிக்கையிலும், பார்க்கையிலும் கிருஷ்ணமூர்த்தியும், சேதுமாதவனும் அதிர்ந்து போனார்கள்.  

 

அவர்களுடைய தனிப்பட்ட துக்கமும், பிரச்சினையும், பத்திரிக்கைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் வியாபாரமாக இருப்பதை அவர்கள் மெள்ளப் புரிந்து கொண்டார்கள். உண்மைகளுக்குச் சுவை சேர்த்து, நிறம் மாற்றி தலைப்புச் செய்திகள் வந்தன. தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடந்தன. சிலர் யோகாலயத்துக்கு எதிரான செய்திகளை மிக ஆர்வமாக வெளியிட்டார்கள். சிலர் யோகாலயத்துக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டார்கள். எதுவும் கூட்டாமல், குறைக்காமல், உள்ளதை உள்ளபடி நேர்மையாகச் சொன்னதாய் பெரும்பாலும் இருக்கவில்லை. அப்படி நேர்மையாக இருக்கும் ஊடகங்கள் மிக அபூர்வமாகவே இருந்தன. கிருஷ்ணமூர்த்திக்கும், சேதுமாதவனுக்கும் பைத்தியமே பிடித்துவிடும் போல் இருந்தது.

 

இந்த வழக்கை மதத்திற்கு எதிரான வழக்காகச் சிலர் எடுத்துக் கொண்டார்கள். ஒருவர் கிருஷ்ணமூர்த்தியிடம் நேரடியாக வந்து சொன்னார். “நாமளே நம்ம மத அமைப்பு மேல கேஸ் போடலாமா? இதைத்தானே வேற மதத்துக்காரங்க எதிர்பார்க்கிறாங்க. அதனால் தானே அவங்க இதைப் பத்தி ஆர்வமா அதிகம் பேசறாங்க? வெறும் வாயை மெல்லறவனுக்கு அவல் கொடுத்த மாதிரி ஆயிடுச்சே

 

கிருஷ்ணமூர்த்திக்குக் கோபம் வந்து விட்டது. அந்த ஆளின் சட்டைப் பையிலிருந்து அவருடைய கைபேசியை எடுத்து தன் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டார். அந்த ஆள் அதிர்ச்சியுடன் கேட்டார். “என்னங்க செய்றீங்க?”

 

பாருங்க. நீங்களும் நானும் ஒரே மதம் தானே. என் மேல புகார் எதுவும் சொல்லாம வீடு போய்ச் சேருங்களேன் பார்ப்போம்....”

 

அந்த ஆளுக்குத் தன் கைபேசியைத் திரும்பப் பெறும் வரை இருப்பு கொள்ளவில்லை. அவரிடம் அவருடைய கைபேசியைத் திருப்பித் தந்து விட்டு கிருஷ்ணமூர்த்தி சொன்னார். “பத்தாயிரம் ரூபாய் போனை திருப்பி வாங்கறதுக்குள்ளே இப்படித் தவிச்சுப் போறீங்க:ளே. நான் என் மகள் உயிருக்காக எவ்வளவு தவிப்பேன்? யோசிச்சுப் பாருங்க. இந்தப் பிரச்சினைல மதம் எங்கே வந்துச்சு? அவனவன் இழப்பும், தவிப்பும் அவனவனுக்குத் தான் தெரியும். சும்மா லூஸுத்தனமாய் பேசாம போய்ட்டு வாங்க

 

அந்த ஆள் ஓட்டமும், நடையுமாய் அங்கிருந்து போனார்.

 

ஆனால் அந்த ஆள் சொன்னது போல வேறு மத ஆதிக்கம் அதிகம் இருக்கும் ஊடகங்களே இந்த விஷயத்தை மிகைப்படுத்திப் பேசியதையும் கூட அவர்களால் பார்க்க முடிந்தது. அவர்களிடம் பேட்டி எடுக்க வந்தவர்களில் சிலரை பெயரை வைத்து அவர்களுடைய மத அடையாளத்தைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. பொதுவான பெயர்களை வைத்துக் கொண்டிருந்த அவர்கள் யோகாலயம் குறித்து புகாராய்ச் சொல்ல முடிந்தவற்றை எல்லாம் துருவித் துருவி கேட்டார்கள். அவர்கள் வேற்று மத ஆட்களாக இருந்தது வேறுசிலரால் பின்னர் சுட்டிக் காட்டப்பட்டது.

 

அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அறிந்து பொங்கி எழுந்து வந்தவராகத் தன்னைக் காட்டிக் கொண்ட ஒருவர் நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு முடிவில்உங்கள் மதத்தில் இது போன்றவர்களின் ஆதிக்கம் தான் அதிகமிருக்கிறது. எங்கள் மதத்தில் இணைந்து விடுங்கள். உங்களுடன் சேர்ந்து போராட எங்கள் அகில இந்திய அமைப்புகள் அத்தனையும் தயாராக இருக்கின்றனஎன்றார்.

 

ஏன்யா எல்லா பிரச்சனையிலும் புகுந்தும் உன் மதத்தைப் பரப்பித் தான் ஆகணுமா? போய் வேற இடம் பாருய்யாஎன்று கிருஷ்ணமூர்த்தி அந்த ஆளையும் விரட்டி விட்டார்.    

 

ஏன் இந்தத் தனிப்பட்ட விஷயம் மதம் என்னும் கோணத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது என்று புரியாமல் கிருஷ்ணமூர்த்தியும், சேதுமாதவனும் திகைத்தார்கள். அவர்களுடைய மனக்கசப்பும், வேதனையும் கூடியது.   இத்தனை வருட காலங்களில் அவர்கள் எதையும் மதம் என்கிற கோணத்தில் பார்த்ததே இல்லை. இதுவரை மைக்கேலையும், அமீர் பாயையும் சேதுமாதவனால் அன்னியர்களாக நினைக்க முடிந்ததில்லை. இன்றைய அவருடைய துக்கத்தில் அவர்கள் பங்கு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது சோதனை வருகையில் அவரும் கவலைப்பட்டிருக்கிறார்.  

 

நாட்கள் போகப் போக ஊடகங்களின் போக்கும், மத வியாபாரிகளின் போக்கும் அவர்களுக்குச் சித்திரவதையாகவே மாற ஆரம்பித்தது. வியாபார தந்திரங்களுடன் அவர்களைப் பேட்டி எடுக்க வந்தவர்களை நாகரிகமாகத் தவிர்க்க அவர்களால் முடியவில்லை. அச்சமயத்தில் மகன்களிடம் மளிகைக்கடை வியாபாரத்தை ஒப்படைத்து விட்டு அமீர் பாய் அவர்கள் வீட்டில் வந்து அமர்ந்து கொண்டு, நெறியற்ற. ஊடக ஆட்களைத் துரத்தும் வேலையைச் சிறப்பாகச் செய்தார்.

 

ஒருநாள் மைக்கேல் நாணயம், நேர்மை, மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்ளும் ஊடகங்களைப் பற்றி நீண்ட நேரம் பேசி வருத்தப்பட்டார். எப்படி சிலவற்றை பெரிதாக்குகிறார்கள், எப்படி சிலவற்றைக் கண்டுகொள்ளாமல் போகிறார்கள், எப்படி சில சமயங்களில் இரட்டை வேடம் போடுகிறார்கள் என்பதை புள்ளி விவரங்கள், உதாரணங்களுடன் பேராசிரியருக்கே உரித்தான வகையில் விளக்கினார்.

 

அமீர் பாய் வெறுப்புடன் ஒரே வார்த்தையில் சொன்னார். “சைத்தான்கள்.”

 

ஆனால் யோகாலயத்திடமிருந்து ஒரு பதில் பெற ஊடகங்களே அவசியமாகவும் இருந்தன. கிருஷ்ணமூர்த்தி எடுத்த நடவடிக்கைகளுக்கு யோகாலயத்திலிருந்து ஆரம்பத்தில் எந்த எதிர்வினையும் இருக்கவில்லை. அதற்கு அவசியமே இல்லை என்பது போலவே அவர்கள் அமைதி காத்தார்கள். ஆனால் போகப் போக அவர்கள் தொடர்ந்து அமைதி காக்க ஊடகங்கள் அனுமதிக்கவில்லை. யோகாலயத்துக்கு வெளியே தினமும் பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சி நிருபர்களும் கூட்டமாகக் குவிய  ஆரம்பித்தார்கள்.

 

ஒருநாள் யோகாலயத்தின் மூத்த துறவி ஒருவர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் அலட்டிக் கொள்ளாத அமைதியுடன் சொன்னார். “கடுகை மலை ஆக்கும் முயற்சி தான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது.  எனக்கு இங்கே நடப்பதை எல்லாம் பார்க்கையில்தேநீர்க் கோப்பையில் புயல்உருவாக்க முயற்சி செய்யும் உவமானம் தான் நினைவுக்கு வருகிறது. பொழுது போகாத ஒரு ஆள் ஒரு துண்டுச் சீட்டில் ஏதோ ஒரு அபத்தத்தை எழுதிப் போட்டு இருக்கிறார். அதைப் படித்து விட்டு இன்னொருவர் தன் மகளுக்கு ஆபத்து என்று பயந்து போயிருக்கிறார். அவர் புகார் கொடுத்து ஒரு போலீஸ் அதிகாரி நேரடியாகவே எங்கள் ஆசிரமத்துக்கு வந்து சம்பந்தப்பட்ட அந்தத் துறவியிடமே விசாரித்தும் இருக்கிறார். அந்தத் துறவி தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லியும் இருக்கிறார்இதற்கு மேல் இதில் சொல்ல என்ன இருக்கிறது?”

 

ஒரு நிருபர் புத்திசாலித்தனமாகக் கேட்டார். ”அந்தத் துறவி அந்தப் போலீஸ் அதிகாரியிடம் சொன்னதை, தன் அப்பாவிடமே ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கலாமே? கடுகு கடுகாகவே போயிருந்திருக்குமே?”

 

அந்தத் துறவி சொன்னார். “அதைத் தான் நாங்களும் ஆரம்பத்திலேயே சொன்னோம். ஆனால் அந்தத் துறவி தனக்காக ஆசிரமம் விதிகளைத் தளர்த்துவதை விரும்பவில்லை. அவரே மறுத்து விட்ட பிறகு அவரை வற்புறுத்துவதற்கு ஆசிரமமும் விரும்பவில்லை. இப்போது இது வழக்காக நீதிமன்றத்திற்குப் போய் விட்டது. அதனால் நீதிமன்றத்தின் கட்டளைப்படி நடந்து கொள்வோம் என்பதைத் தவிர இது குறித்து கூடுதலாகச் சொல்ல எதுவுமில்லை. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா என்ற கொடிய நோய் இந்தியாவிலும் அங்கங்கே தலைகாட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் நாம் அனைவரும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் தயவு செய்து இப்படி பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிருங்கள்.”

 

அந்தத் துறவி சொன்னது போலவே கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக ஆரம்பித்தது. ஊரடங்கு உத்தரவு சீக்கிரம் பிறப்பிக்கப்பட்டது. அதிஅத்தியாவசியங்களைத் தவிர மற்ற அனைத்தும் நிறுத்தப்பட்டன. 

 

முக்கியமாக, நீதிமன்றங்களும் மூடப்பட்டன.


(தொடரும்)

என்.கணேசன்




Thursday, July 20, 2023

சாணக்கியன் 66

 

பிலிப் கேகய நாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும் அவன் மனமெல்லாம் சமீப காலமாய் நிலவும் ஒரு விசித்திர சூழ்நிலையையே அலசிக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு சதியாலோசனை பின்னப்படுவது போல அவன் உள்மனம் உணர்ந்தது. ஆனால் இன்னமும் பயப்படுவது போல் எங்கும் எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் நடக்கக்கூடிய ஒரு சூழ்நிலை அனைத்து இடங்களிலும் நிலவுவதை அவனால் மறுக்க முடியவில்லை. அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் எல்லாப் பகுதிகளிலும் மக்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். ஏதோ பேசிக் கொள்கிறார்கள். மக்கள் நடமாட்டம் எல்லாப் பகுதிகளிலும் அதிகரித்திருக்கிறது.  மக்கள் பலரும் வெளியூர்ப் பயணங்களையும் அதிகம் மேற்கொள்கிறார்கள். மேலோட்டமாகப் பார்க்கையில் அதில் சந்தேகம் கொள்வதற்கு எதுவுமில்லை தான். ஆனால் சிறிது காலத்திற்கு முன்பு இப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. எல்லோரும் அமைதியாக அவரவர் வீடுகளிலும், ஊர்களிலும் அடங்கியிருந்தார்கள்.

 

பெரும்பாலான இடங்களில் இந்த மாற்றங்கள் எல்லாம் ஏற்படத் துவங்குவதற்கு முன்பு தட்சசீல மாணவர்களின் வருகை இருந்திருக்கிறது. அது தற்செயல் என்று பிலிப்புக்குத் தோன்றவில்லை. ஓரிரு இடங்களில் நிகழ்வது தற்செயலாக இருக்கலாம். எல்லா இடங்களிலும் ஒரே போன்ற சூழல் பின் உருவாகிறது என்பது தற்செயலாக இருக்க முடியாது. ஆம்பி குமாரனிடம் முழுவதுமாக அவன் தன் எண்ணங்களைப் பகிரவில்லை. அறிவு குறைவானவர்களிடம் அவர்கள் அறிவுக்கு அதிகமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஒரு பயனும் இருக்கப் போவதில்லை. ஆனால் திரும்பத் திரும்ப அவன் அந்த மாணவர்களையும், அந்த மாணவர்களின் பிரச்சினைக்குரிய ஆசிரியரையும் கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் வைக்க வேண்டும் என்று ஆம்பி குமாரனிடம் சொல்லியிருக்கிறான். சொன்ன போது எல்லாம்கவலையே வேண்டாம். ஆச்சாரியர் தட்சசீலம் திரும்பட்டும். அவர் இனி எப்போதும் எங்கும் பிரச்சினை செய்யாதபடி பார்த்துக் கொள்கிறேன்என்று ஆம்பி குமாரன் உறுதியளித்திருக்கிறான்.

 

அந்த ஆச்சாரியர் மகா புத்திசாலி என்றும் பிரச்சினையானவர் என்றும் ஆம்பி குமாரனே பிலிப்பிடம் சொல்லி இருக்கிறான். அப்படிப்பட்ட ஆளை ஆம்பி குமாரனைப் போன்ற குறையறிவு படைத்தவன் எப்படி கட்டுப்படுத்த முடியும் என்பது பிலிப்புக்கு விளங்கவில்லை. அவனும் அதை விளக்கவில்லை. தட்சசீல கல்விக்கூட மாணவர்களைக் கண்டுபிடிக்க முடிந்தது போல அவர்களது ஆசிரியரை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் போல அல்லாமல் அந்த ஆள் தன் அடையாளத்தை வெளிக்காட்டாமல் பயணம் செய்து கொண்டிருப்பார் போல் தோன்றியது. இந்த தேசத்தில் யாத்திரீகர்கள் எப்போதும் எப்பகுதியிலும் அதிகம் என்பதால் அவர்களில் ஒருவராக அவர் பயணம் செய்தால் கண்டுபிடிப்பது எளிதல்ல. அவரை அறிந்த ஒற்றர் யாராவது பார்வையில் அவர் பட்டால் தான் உண்டு. அவர் தன் தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் அறிந்தவரும் கண்டுபிடிப்பது கஷ்டம்....

 

இதை எல்லாம் யோசிக்கையில் சத்ரப் ஆக அலெக்ஸாண்டரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சியை முழுவதுமாக பிலிப்பால் உணர முடியவில்லை…. பின்னால் வேகமாக வந்து கொண்டிருக்கும் ஒரு குதிரையின் காலடியோசை அவர்கள் குதிரைகளின் காலடியோசைக்குப் பொருத்தமில்லாமல் ஒலிப்பது கேட்டவுடன் பிலிப் தன் குதிரையை நிறுத்தி, கையை உயர்த்தி தன்னுடன் பயணிக்கும் வீரர்களையும் நிறுத்தச் சொன்னான். அவர்கள் குதிரைகள் நின்ற பின்பும் பின்னால் வந்து கொண்டிருக்கும் குதிரையின் காலடிச் சத்தம் அதே அதிக வேகத்தில் நெருங்கிக் கொண்டிருந்தது. 

 

திரும்பிப் பார்த்தபடி அவர்கள் நிற்க சிறிது நேரத்தில் அவர்கள் ஒற்றன் தெரிந்தான். பிலிப்பின் அருகில் வந்து நின்று வணங்கிய ஒற்றன் கொண்டு வந்திருக்கும் தகவல் நல்லதாக இருக்க வாய்ப்பில்லை என்று பிலிப்புக்குத் தோன்றியது. அவன் நினைத்தது போல் அவனை வணங்கி விட்டு ஒற்றன் தெரிவித்தான். ”தட்சசீல வனப்பகுதியில் நம் வீரர்கள் பன்னிரண்டு பேர் பயணம் செய்து கொண்டிருக்கையில் வழிப்பறிக் கொள்ளையர்களால் கொல்லப் பட்டிருக்கிறார்கள் பிரபு. அவர்கள் தங்களிடம் தர எடுத்து வந்திருந்த பல பகுதிகளின் கப்பத் தொகையுடன் அவர்களுடைய குதிரைகள், ஆயுதங்கள், எல்லாமே கொள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன. அவர்களைத் தேடிச் சென்ற நம் வீரர்கள் அவர்கள் சடலங்களைக் கண்டு தட்சசீலத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்….”

 

பிலிப்புக்கு ஏனோ இது கொள்ளையர்களின் செயலாகத் தெரியவில்லை. கொள்ளையர் பெரும்பாலும் செல்வந்தர்கள், வணிகர்களை வழிமறித்துக் கொள்ளையடிப்பார்களேயொழிய இப்படி வீரர்களிடமே கொள்ளையடித்துக் கொலையும் செய்ய மாட்டார்கள். அவன் எதிர்பார்த்திருக்கும் பிரச்சினைகளுக்கு இது முன்னோடியோ?

 

ஒற்றன் தொடர்ந்து சொன்னான். “ஆம்பி குமாரர் என்ன செய்ய வேண்டும் என்று உங்களைக் கேட்கச் சொன்னார்.”

 

ஆம்பி குமாரன் சில நேரங்களில் காந்தார அரசனாகச் செயல்படுகிறான். பிரச்சினையான நேரங்களிலும், யவனர்கள் மட்டும் சம்பந்தப்பட்டிருக்கும் விஷயங்களிலும்நீ என்ன சொல்கிறாயோ செய்கிறேன்என்ற வகையில் நடந்து கொள்கிறான்…. பிலிப் ஒற்றனிடம் தன் ஆணையைப் பிறப்பித்து விட்டு மறுபடியும் பயணத்தைத் தொடர்ந்தான். அவன் மனம் ஏனோ சஞ்சலமாக இருந்தது.  

 

புருஷோத்தமன் தன் முன் வந்து நின்ற இந்திரதத்தைக் கேள்விக்குறியுடன் பார்த்தார்.

 

இந்திரதத் சொன்னார். “பிலிப்பை விருந்தினர் மாளிகையில் இருத்தியிருக்கிறேன். அவனை நான் வரவேற்றது போதவில்லை என்றும் நீங்கள் நேரில் வந்து வரவேற்காதது அதிருப்தியை அளித்திருக்கிறது என்றும் தோன்றுகிறது.”

 

புருஷோத்தமன் சொன்னார். “அலெக்ஸாண்டர் வந்திருந்தால் நான் நேரில் சென்று வரவேற்றிருப்பேன். பிலிப் அலெக்ஸாண்டருக்குக் கிடைக்கும் மரியாதையை எதிர்பார்ப்பது தவறல்லவா இந்திரதத்

 

சத்ரப் ஆக அலெக்ஸாண்டரால் நியமிக்கப்பட்ட பிறகு அவன் தன்னை அலெக்ஸாண்டராகவே பாவிக்க ஆரம்பித்து விட்டது போல் தெரிகிறது அரசே. தங்களை உடனே பார்த்துப் பேச வேண்டும் என்று சொன்னான்.”

 

புருஷோத்தமன் வேண்டாவெறுப்புடன் பிலிப்பைச் சந்திக்கக் கிளம்பினார்.

 

பிலிப்பின் தோரணை இந்திரதத் சொன்னது போல் நிறைய மாறித்தான் இருந்தது. அலெக்ஸாண்டர் இருந்த போது இருக்கும் இடம் தெரியாதபடி இருந்தவன் இப்போது சர்வ வல்லமையுள்ளவனாகக் காட்டிக் கொண்டான். தனக்குக் கீழ்நிலையில் உள்ள ஒருவனுக்கு, பெருந்தன்மையின் காரணமாக மரியாதை தருவது போல் காட்டிக் கொண்டு அவருக்கு மரியாதை செய்த அவன் அவர் இருக்கையில் அமர்ந்தவுடன் கேட்டான். “கேகயத்தில் நிலைமை எப்படி இருக்கிறது புருஷோத்தமரே?”

 

புருஷோத்தமன் சொன்னார். “எல்லாம் சிறப்பாக இருக்கிறது. சொல்லப் போனால் மக்களிடம் புதிய ஒரு எழுச்சியைப் பார்க்க முடிகிறது.”

 

அந்த எழுச்சி நாம் இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தும் அளவு போய் விடாதல்லவா புருஷோத்தமரே?”

 

புருஷோத்தமன் திகைப்புடன் கேட்டார். “ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?”

 

இல்லை. பல இடங்களில் இந்த எழுச்சி தெரிவதால் தான் சந்தேகத்துடன் கேட்டேன். அலெக்ஸாண்டர் என்னை இங்குள்ள பகுதிகளின் சத்ரப் ஆக நியமித்திருப்பதால் என்னால் ஆபத்தின் அறிகுறிகளை அலட்சியப்படுத்த முடியவில்லை

 

புருஷோத்தமன் சொன்னார். “ஆபத்தின் அறிகுறிகள் என்று நீங்கள் நினைத்தால் கவனமாக இருப்பது அவசியம் பிலிப். விரிவாகச் சொன்னால் நலமாக இருக்கும்

 

பிலிப் தட்சசீல மாணவர்கள் பற்றியும் அவர்களுடைய பிரச்சினைக்குரிய ஆசிரியர் பற்றியும் தற்போது நிலவும் விசித்திர சூழ்நிலை பற்றியும் சொன்னான். கேட்டுக் கொண்டிருந்த புருஷோத்தமன் இந்திரதத்தைப் பார்த்தார். இந்திரதத் தன் நண்பரைப் பற்றிக் கேள்விப்படுவது போல் காட்டிக் கொள்ளவில்லை. ”எல்லாம் புதிராக இருக்கிறதுஎன்று பொதுவாகச் சொன்னார்.

 

புருஷோத்தமன் சொன்னார். “நிலைமை அப்படி இருக்கிறது என்றால் பல இடங்களில் இருக்கிற எங்கள் படைகளை இங்கு திருப்பி அனுப்புவது நல்லது பிலிப். எல்லாவற்றையும் முழுக்கட்டுப்பாட்டில் வைக்க அது உதவும்

 

அப்படியானால் மற்ற பகுதிகளின் கதி?” என்று பிலிப் கேட்டான். “புருஷோத்தமரே. எங்கள் படை உங்கள் படை என்ற சிந்தனையே தவறு. எல்லாமே அலெக்ஸாண்டரின் படைகளே. அவரால் அவர் விரும்பிய இடங்களில் நிறுத்தப்பட்டவையே. இங்காவது நீங்கள் இருக்கிறீர்கள். பல இடங்களில் வலிமையான தலைமை கூட இல்லை. அங்கெல்லாம் படைகளின் வலிமை கூடுதலாகத் தேவைப்படுகிறது. அலெக்ஸாண்டருடன் படைகளின் ஒரு பெரிய பகுதி சென்ற பிறகு மீதமிருப்பதைத் தான் பிரித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது….”

 

புருஷோத்தமனின் முகம் இறுகியது. கேகயப்படை என்று நீ உரிமை கொண்டாடக்கூட முடியாது என்கிறான் இவன். எல்லாமே அலெக்ஸாண்டர் படை என்கிறான். இப்படியொரு நிலைமைக்கு வந்து சேர்ந்திருக்கிறோமே என மனம் வெதும்பியது.

 

இந்திரதத் சொன்னார். “இங்கிருக்கும் நிலவரத்தை இங்கிருந்த படைவீரர்களால் எளிதாகக் கட்டுப்படுத்த முடியும் என்று அரசர் சொல்கிறார். புதியவர்களுக்கு அது சுலபமாக இருக்காது. மேலும் குறைவான படையை வைத்துக் கொண்டு கடுமையான சூழலைச் சமாளிக்க முடியாது அல்லவா?”

 

இது இங்கு மட்டுமல்ல அமைச்சரே. எல்லா இடங்களிலும் இது தான் நிலைமை.  உதாரணத்திற்கு காந்தாரத்திலும் அங்கிருந்த படையில் பாதி தான் இப்போது அங்கிருக்கிறது. அது தவிர்க்க முடியாதது. இருக்கும் படைகளை வைத்துக் கொண்டு சிறப்பாகச் சமாளிப்பது எப்படி என்பது பற்றி தான் நாம் யோசிக்க வேண்டும்

 

(தொடரும்)

என்.கணேசன்