சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 30, 2021

யாரோ ஒருவன்? 47


ந்த இளைஞனின் தந்தை அழுக்குப் படிந்த ஒரு தலைப்பாகையைக் கட்டியிருந்தார். ஒரு பழைய ஓட்டு வீட்டு வாசலில் ஒரு மரநாற்காலியில் அமர்ந்திருந்தார். காரில் வந்திறங்கிய மகனையும், புதியவனையும் உணர்ச்சியே இல்லாமல் கூர்மையாகப் பார்த்தார். ஆனால் அவராக எதையும் கேட்கவோ சொல்லவோ முனையவில்லை. அந்த இளைஞன் தந்தையிடம் ஜெய்ராமை ஆன்மீக எழுத்தாளராக அறிமுகம் செய்தான். ஜெய்ராம் இரு கைகளையும் கூப்பிய போது அவரும் தன் கைகளைக் கூப்பி வைத்தார்.

சார் நம்ம சுவாமிஜி முக்தானந்தா பத்தி ஒரு புஸ்தகம் எழுதப் போறாராம். அதற்காக சுவாமிஜியைத் தெரிஞ்ச, பழகின ஆள்கள் கிட்ட விவரங்கள் சேகரிக்கிறார்.”

மகன் சொன்னதை அவர் கேட்டுக் கொண்டாலும் முகத்தில் எந்தச் சலனமும் இப்போதும் இல்லை. கிழவனுக்குச் சரியாகக் காது கேட்பதில்லையோ என்ற சந்தேகம் ஜெய்ராமுக்கு வந்தது. கிழவனிடம் தாழ்ந்த குரலில் இளைஞன் சொன்னான். “இவருக்குப் புதிய விவரங்கள் அதிகமாகச் சொன்னால் ஆயிரம் ரூபாய் தர்றாராம். நம்ம போட்டோவை இவர் வெளியிடற புஸ்தகத்திலயும் போடறாராம்

கிழவரின் முகத்தில் வெளிச்சம் வந்தது, சோம்பலாகச் சரிந்து அமர்ந்திருந்தவர் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார். இளைஞன் வீட்டுக்குள்ளே போய் ஒரு பழைய பிளாஸ்டிக் நாற்காலி எடுத்துக் கொண்டு வந்து அவரெதிரே வைத்து ஜெய்ராமிடம்உட்காருங்க சார்என்றான்.

நாற்காலியில் உட்கார்ந்தபடி ஜெய்ராம்சுவாமி முக்தானந்தா கூட ரொம்ப வருஷமாய் இருந்திருக்கீங்க. அவரைப் பத்தியும், அவர் கூட இருந்த காலங்களில் உங்க அனுபவங்களையும் சொல்லுங்களேன்...”

கிழவரின் முகம் மென்மையாகிறது. லேசாகக் கனைத்து விட்டுச் சொல்ல ஆரம்பித்தார். ”அவர் ஒரு மகான். பணக்காரன், ஏழை, கொடுக்கிறவன், கொடுக்காதவன்கிற எந்த வித்தியாசமும் பார்க்க மாட்டார். யார் வந்தாலும் ஒரே மாதிரி நடத்துவார். அன்பாய் இருப்பார். அதிர்ந்து பேச மாட்டார்...”

கிழவர் அடுத்து இருபது நிமிடங்கள் பேசினார். ஆசிரமத் தலைவர் போல் கழுத்தறுக்காமல், ஆன்மீகம் பேசாமல், தத்துவார்ந்த விசாரங்களுக்குச் செல்லாமல் தன் நிலையிலிருந்து கவனித்த விஷயங்களைச் சுருக்கமாகவும், தேவைப்படும் இடங்களில் சற்று விரிவாகவும் அவருக்குச் சொல்லத் தெரிந்திருந்தது. சுவாமிஜி எப்படி ஒழுக்கசீலராக இருந்தார், எப்படி அன்பாகப் பழகினார் என்பதற்குச் சில உதாரணங்கள் சொன்னார். ஜெய்ராம் அங்கும் குறிப்பெடுப்பது போல் காட்டிக் கொண்டான்.

அவர் பணக்காரர்கள் கிட்ட லட்சக்கணக்கில் வசூல் செய்தார்னு சிலர் சொல்றாங்களே. அது எந்த அளவு உண்மை?”

கிழவர் புன்னகைத்தார். “பணக்காரன் கஷ்டமே பணம் போதலைங்கறது தான். அவனுக்கு அதிகமாய் பணம் வேணுங்கறதுக்கு கமிஷன் மாதிரி ஒரு நல்ல தொகை தர அவன் எப்பவுமே தயார் தான். இத்தனைன்னு கேட்கலைன்னா நாலு பழம், நாலு ஆப்பிள், ஆயிரம் ரூபாயை வச்சு கும்பிட்டுட்டு போயிடுவான். அதனால அந்த மாதிரி ஆள்கள் கிட்ட அவர் கேட்டு வாங்கினார். அந்தப் பணத்துல ஒரு பைசா கூட அவர் தனக்கு எடுத்துகிட்டதில்லை. ஆசிரமத்தோட டிரஸ்ட்ல எத்தனையோ  நல்ல காரியங்கள் நடக்குது. ஒரு தர்மாஸ்பத்திரி நடக்குது. முதியோர் இல்லம் ஒன்னு நடக்குது. எத்தனையோ ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி செய்யறாங்க. இதெல்லாம் அப்படி வாங்கின பணத்துல தான் நடக்குது...”

ஜெய்ராம் நாகராஜ் பற்றிக் கேள்வி கேட்க ஆரம்பிக்க நல்லதொரு ஆரம்பத்தைக் கிழவர் ஏற்படுத்திக் கொடுத்ததாய் நினைத்து மெல்லச் சொன்னான். “இப்போ அந்த நல்ல காரியத்தை மகராஜ் செய்யறார்னு நான் கேள்விப்பட்டேன்.”

உண்மை தான். எல்லா தர்ம காரியங்களும் இந்த ஒரு வருஷத்துல இன்னும் அமோகமாய் நடக்கிறதாய் கேள்விப்பட்டேன். மகராஜைப் பொருத்த வரை பணம் ஒரு பிரச்சினையே அல்ல. அவருக்கு எத்தனை வேணும்னாலும் உடனே கிடைக்கும்... மகாலட்சுமி அனுக்கிரகம் அது

எப்படிச் சொல்றீங்க?”

இப்ப அருள்வாக்கு சொல்றதுக்கு அஞ்சு லட்ச ரூபாய் வாங்கறார். அதை அவர் பத்து லட்சம்னு உயர்த்தினாலும் முகம் சுளிக்காமல் கொடுக்க எத்தனையோ பேர் தயாராய் இருக்காங்க. அதுமட்டுமல்ல யாரும் தரக்கூட வேண்டியதில்லை. அவர் நினைக்கிற பணம் தானாய் அவரைத் தேடி வரும். நாகங்கள் அவருக்குச் செய்திருக்கிற அனுக்கிரகம் அது....”

வேற சில பேரும் அவருக்கு நாகசக்தி இருக்கறதா சொன்னாங்க. ஆச்சரியமாயிருக்கு. அந்தச் சக்தி அவருக்கு எப்படிக் கிடைச்சுது?”

கிழவர் அதற்கு வார்த்தையால் பதில் சொல்லவில்லை. ஆகாயத்தைக் கைகாட்டினார். ஆகாயத்திலிருக்கும் இறைவன் தந்தது என்கிறாரா இல்லை ஆகாயத்திலிருக்கும் இறைவனே அறிவான் என்று சொல்கிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் ஒட்டு மொத்தத்தில் அதற்குப் பதில் இந்தக் கிழவருக்குத் தெரியாது என்பது தெரிந்து விட்டது.

அதனால் ஜெய்ராம் அடுத்த கேள்விக்கு நகர்ந்தான். “நீங்கள் ஆரம்பத்தில் அவரைப் பார்த்த நாளிலிருந்தே அவருக்கு நாகசக்தி இருந்ததா?”

கிழவர் ஆசிரமம் இருக்கும் திசையைச் சில வினாடிகள் பார்த்தார். சிலவற்றை நினைவுபடுத்திப் பார்க்கிறார் போல் ஜெய்ராமுக்குத் தோன்றியது. கிழவர் சொன்னார். “நாகராஜ் மகராஜ் பேருக்கேத்த மாதிரி நாகங்கள் கிட்ட ஆரம்பத்திலிருந்தே ரொம்ப பிரியமாய் இருப்பார். பாம்புன்னா எல்லாருமே நடுங்குவாங்க. ஆனால் அவருக்குப் பாம்புகள் எல்லாம் நண்பர்கள் மாதிரி. யாரையுமே பாம்பைக் கொல்ல விட மாட்டார்.  எத்தனை விஷமான பாம்பாய் இருந்தாலும் அதை லாவகமாய் கையில் எடுத்துக்குவார். பார்க்கிறவங்களுக்கு ஒரு அம்மா தன் குழந்தையை எடுக்கிற மாதிரி இருக்கும்.... அதைப் பார்த்திருக்கோம். ஆனால் அந்தப் பாம்புகள் விசேஷ சக்திகளை அவருக்குக் கொடுத்திருக்கறது எங்களுக்குத் தெரிஞ்சிருக்கலை...”

ஜெய்ராம் கேட்டான். “அந்தச் சக்திகள் அவருக்கு இருக்கிறது எப்ப தெரிஞ்சுது?”

சுவாமிஜி சமாதியடையறதுக்கு ஒரு மாசம் முன்னாடி. சுவாமிஜி பக்கத்துல இருக்கிற காட்டுக்குத் தவம் பண்ணப் போறப்ப மகராஜும் கூடப் போனார், திரும்பி வர்றப்ப சுவாமிஜி உடல் தளர்ந்திருந்துச்சு. அவர் கிட்ட அருள்வாக்கு கேட்க வந்தவங்களுக்கு அருள்வாக்கு சொல்லாம நாகராஜ் மகராஜ் கிட்ட கேட்கச் சொன்னார். அவங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். அவங்க யாருமே நாகராஜ் மகராஜ் பேசிக் கேட்டதில்லை. அதனால அவர் ஊமைன்னே பல பேரு நினைச்சிருந்தாங்க. அவரு பேசுவாராங்கங்கறதே அவங்களுக்கு ஆச்சரியம். முதல் தடவையா மகராஜும் அருள்வாக்கு கேட்க வந்த அந்த ஆளுகளுக்கு எதோ சொன்னார். அது அவங்களுக்குப் பலிச்சுடுச்சு போல. அதற்கப்பறம் ஜனங்க அவரையும் பிரத்தியேகமா தேடி வர ஆரம்பிச்சாங்க...”

கிழவர்அவங்க யாருமே நாகராஜ் மகராஜ் பேசிக் கேட்டதில்லை. அதனால அவர் ஊமைன்னே பல பேரு நினைச்சிருந்தாங்க.” என்று சொன்னது ஆசிரமத்திற்கு வந்து கொண்டிருந்த பக்தர்கள் தான் நாகராஜ் பேசிக் கேட்டதில்லை என்ற செய்தியைத் தெரிவித்ததால் கிழவர் நாகராஜ் பேசிக் கேட்டிருக்கிறார் என்று ஜெய்ராமுக்குத் தோன்றியது. “அப்படியானால் நீங்கள் மகராஜ் பேசி முன்பே கேட்டிருக்கிறீர்களா?” என்று அவன் கேட்டான்.

திடீரென்று கிழவர் மவுனமானார். எதிரே அமர்ந்திருப்பவன் சுவாமி  முக்தானந்தாவை விட அதிகமாக நாகராஜ் மேல் ஆர்வமாய் இருப்பது அவருக்குப் புரிய ஆரம்பித்தது. கூர்ந்து ஜெய்ராமையே ஒரு நிமிடம் பார்த்த அவர் தன் மகனிடம் எதையோ தாழ்ந்த குரலில் கேட்டார். அவன் தலை குனிந்து அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டு விட்டுஆயிரம்என்றான்.

அந்தப் பதிலை வைத்துஇவன் எத்தனை தருவதாகச் சொல்லியிருக்கிறான்?” என்று கிழவர் கேட்டிருக்க வேண்டும் என்பது ஜெய்ராமுக்குப் புரிந்தது.

கிழவர் ஜெய்ராம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல்நீங்க சுவாமிஜியைப் பத்தி புஸ்தகம் எழுதறீங்களா, இல்லை மகராஜ் பத்தி எழுதறீங்களா?” என்று கேட்டார்.

ஜெய்ராம் சமாளித்தான். “சுவாமிஜியைப் பத்தி தான் எழுதறேன். ஆனால் மகராஜும் சுவாமிஜியுடன் நிறைய காலம் இருந்ததால் அவரைப் பத்தியும் சேர்ந்து எழுதினா தான் பொருத்தமாயிருக்கும்னு நினைக்கிறேன். அவ்வளவு தான்....”

மகராஜைப் பத்திப் பேசறதுக்கு ரேட்டே வேற...” என்று கிழவர் கறாராய்ச் சொன்னார்.

இந்தக் கிராமத்துக் கிழவன் படுவிவரமாய் இருக்கிறானே என்று ஜெய்ராம் திகைத்தான்.
  
  
(தொடரும்)
என்.கணேசன்  


Saturday, August 28, 2021

பிறப்பிலிருந்தே மயக்கும் மாயை

கீதை காட்டும் பாதை 41

 <iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/jyIZx9aW-KI" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Thursday, August 26, 2021

இல்லுமினாட்டி 117



நேரடியாக மனதிலும் மூளையிலும் பதியும் கருத்துப் பரிமாற்றம் என்பது அனுபவமில்லாதவர்களுக்கு நம்பக் கஷ்டமான விஷயம் என்று புரிந்திருந்த க்ரிஷ் புன்னகையுடன் சொன்னான். “ஆரம்பத்தில் எனக்கும் அது அவ்வளவாகப் புரியவில்லை. வேற்றுக்கிரகவாசி நண்பன் என்னிடம் அது சாத்தியமாக என் உணர்வுநிலையின் உள்ளே நுழைய அவனை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அது கம்ப்யூட்டரில் புதிய சாஃப்ட்வேர் சேர்த்துக் கொள்வது போலத் தான் என்றான். அதற்கு என் மன அளவில் சிறிய எதிர்ப்பு இருந்தாலும் அது முடியாது என்றான்.... ஆரம்பத்தில் தயங்கி விட்டுப் பின் தான் அவனுக்கு நான் அனுமதி கொடுத்தேன். அதற்குப் பிறகு அவன் இந்த பூமியில் இருக்கிற வரை எப்போது வேண்டுமானாலும் எங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள முடிந்தது....”

அவர்கள் மூவரும் பிரமிப்புடன் அவனைப் பார்த்தார்கள். எர்னெஸ்டோ கேட்டார். “அப்படியானால் விஸ்வமும் அவன் கூட்டாளியும் கூட அப்படி ஆரம்பத்திலிருந்தே இணைந்திருப்பார்களோ?”

க்ரிஷ் சொன்னான். “நான் என் வேற்றுக்கிரகவாசி நண்பனுக்குத் தந்த அனுமதியை விஸ்வம் அந்தக் கூட்டாளிக்குத் தந்திருப்பான் என்று தோன்றவில்லை. அவனால் யாரையுமே அந்த அளவுக்கு நம்பவோ, நெருங்கவோ முடியும் என்று தோன்றவில்லை...”

இம்மானுவல் கேட்டான். “ஆரம்பத்தில் அப்படி இல்லாமல் இருக்கலாம். இதெல்லாம் நடந்து முடிந்து போன பிறகு?”

“இப்போது வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அப்படி இருந்தால் ஏன் அந்தக் கூட்டாளி அடிக்கடி ஒரு உருவம் எடுக்க வேண்டி வருகிறது?”

அதற்குப் பதில் அவர்களுக்குத் தெரியவில்லை. எர்னெஸ்டோ யோசனையுடன் சொன்னார். “நீ சொன்னது என்னை யோசிக்க வைக்கிறது. அப்படியானால் நம் மனதுக்குள் ஒருவர் புகுந்து நம்மை ஆக்கிரமிப்பது நாம் அனுமதி தந்தால் தான் முடியும் என்றல்லவா ஆகிறது....”

அக்‌ஷய் சொன்னான். “உண்மை. என் திபெத்திய குரு அடிக்கடி சொல்வார். நாம் மனதிற்குள் தவறான எண்ணங்களையும், ஆட்களையும் உள்ளே அனுமதிப்பதை நிறுத்தினாலே வாழ்க்கையின் முக்கால் வாசிப் பிரச்னைகளை வராமல் தவிர்த்து விடலாம் என்று சொல்வார்... நாம் நம் மனவாசலை அடைத்து வைப்பதில்லை. திறந்தே தான் வைத்திருக்கிறோம். அங்கே காவலுக்கும் நிற்பதில்லை. அதனால் எது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்கிற நிலைமையில் தான் வைத்திருக்கிறோம் என்பார் அவர்...”

எர்னெஸ்டோ அந்த வார்த்தைகளின் பின் இருக்கிற தீர்க்கதரிசனத்தை எண்ணி வியந்தார். பின் அவர் அக்‌ஷயையும், க்ரிஷையும் பார்த்துச் சொன்னார். “எனக்கு உங்கள் இரண்டு பேரையும் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. க்ரிஷ், உனக்கும் மாஸ்டர் போல் ஒரு குருவும், ஏலியன் நண்பன் ஒருவனும் இருக்கிறார்கள். அக்‌ஷய் உன் வாழ்க்கையிலும் ஒரு திபெத்திய குருவும், மைத்ரேயனும் இருந்திருக்கிறார்கள். இதெல்லாம் பெரிய பாக்கியம். எனக்கு உலக நாடுகளிம் தலைவர்கள், பிரபலமானவர்கள் எல்லாரும் நெருக்கம் தான் என்றாலும் என் தனிப்பட்ட வாழ்க்கையில் யாராலும் எந்த ஞானமும் பெற வழி இருக்கவில்லை....”

இம்மானுவல் நினைத்துக் கொண்டான். ’உலகமே இவரைப் பார்த்துப் பொறாமைப் படுகிற நிலைமையில் இருக்கும் போது இவர் இவர்கள் இருவரைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார். எல்லார் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது...’


சாலமன் போலி பாஸ்போர்ட் மற்றும் விசாவுக்கு ஏற்பாடு செய்து விட்டு ம்யூனிக் விமானநிலையத்திற்குப் போனார். அங்கே இருந்த அதிகாரிகள் அவரைப் பார்த்தவுடனேயே டேனியல் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்று சொன்னார்கள். முழு எச்சரிக்கையுடன் எல்லாப் பயணிகளையும் பரிசோதித்துத் தான் அனுப்புகிறோம் என்றும் டேனியல் ம்யூனிக் விமானநிலையம் வழியாக எங்கேயும் செல்லவில்லை என்பது உறுதி என்றும் சொன்னார்கள். அந்த அளவு டேனியல் அங்கே பிரபலமாகி இருந்தான் என்று சொல்வதை விட அந்த அளவு டேனியலை இல்லுமினாட்டி பிரபலமாக்கி இருக்கிறது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

சாலமன் அங்கு போன நோக்கத்தை அவர்களிடம் காட்டிக் கொள்ளாமல் தீவிரமாய் சிந்திப்பது போல நடித்தார். விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இல்லுமினாட்டி உளவுத்துறை மீது மிகுந்த மரியாதையும் பயமும் இருந்தது. மறைமுகமாகத் தங்களை அவர்களால் எதுவும் செய்ய முடியும் என்று  நம்பியதால் அவர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தாதபடி இருக்க நிறைய பாடுபட்டார்கள். க்ரிஷை அழைத்துப் போக வந்த இம்மானுவல் விமானம் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பே வந்து அவர்கள் ஏற்பாடுகள் பற்றி விசாரித்து விட்டுப் போயிருந்தான். சாலமனும் அது விஷயமாகத் தான் வந்திருக்கிறார் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்கள்.

சாலமன் யோசிப்பது போல் காட்டிக் கொண்டு அவர்களுடைய பாதுகாப்பு அதிகாரிகளின் அலுவல் அட்டவணையை வாங்கிப் பார்த்தார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையிலிருந்து அடுத்த ஞாயிறு வரை யார் யார் எந்தெந்த நேரங்களில் பரிசோதனை வேலையில் ஈடுபடவுள்ளார்கள் என்பது முன்கூட்டியே ஒதுக்கப்பட்டு விடும். அந்த அட்டவணையை மேலோட்டமாய் பார்ப்பது போல பார்த்துக் கொண்டே வந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டன் போகும் விமானத்தின் நேரத்தில் யார் பரிசோதனை அதிகாரி என்று பார்த்தார்.  மைக்கேல் விக்டர் என்று எழுதப்பட்டிருந்தது. பின் அரை மணி நேரம் பரிசோதனைகள் நடைபெறும் இடத்தில் நின்று கண்காணிப்பது போல் பாவனை காட்டி விட்டு சாலமன் அலுவலகம் வந்தார்.

அலுவலகம் வந்தவுடன் அந்த மைக்கேல் விக்டர் பற்றிய விவரங்களைத் தேடிப் படித்தார்.  மைக்கேல் விக்டர் வயது 52, சமீபத்தில் இரண்டாம் மனைவியை விவாகரத்தானவர், அவருக்கு இரண்டு மகள்கள், அவர் திறமையானவர், நேர்மையானவர்,   பதவி உயர்வுக்காகக் காத்திருப்பவர்,.... எல்லா விவரங்களையும் படித்து விட்டுக் கடைசியில் சாலமன் அவருடைய விலாசத்தைப் பார்த்தார்.

அடுத்த நாற்பதாவது நிமிடம் சாலமன் மைக்கேல் விக்டரின் வீட்டில் இருந்தார். இல்லுமினாட்டியின் உயர் அதிகாரி ஒருவர் தன் வீடு தேடி வந்தது மைக்கேல் விக்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. வரவேற்ற மைக்கேல் விக்டரிடம் சாலமன் ஒரு மாபெரும் ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளும் பீடிகையுடன் மிகவும் தாழ்ந்த குரலில் சொல்ல ஆரம்பித்தார்.

“ஒரு மிக முக்கியமான மிஷன், அமெரிக்க சி.ஐ.ஏ டைரக்டர் முதல் என் வரை ஆறே ஆறு பேருக்கு மட்டுமே தெரிந்த மிக ரகசியமான ஒரு மிஷன். அதைத் தெரிந்து கொள்ளூம் ஏழாவது ஆள் நீங்கள்....”

மைக்கேல் விக்டர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
சாலமன் சொன்னார். “ம்யூனிக் விமானநிலைய பரிசோதனை அதிகாரிகளில் மிகவும் நம்பிக்கைக்குரிய, திறமையும் இருக்கிற ஆள் என்று பார்த்த போது முதல் பெயராக உங்கள் பெயர் தான் வந்தது. அதனால் தான் உங்களைத் தேர்ந்தெடுத்தோம்....”

மைக்கேல் விக்டர் தனக்குக் கிடைத்திருக்கும் முக்கியத்துவத்தில் உச்சி குளிர்ந்தார். “நன்றி....”

“உங்களுக்குத் தெரியும் கடந்த சில நாட்களாக டேனியலை வலை வீசித் தேடுகிறோம். ஜெர்மனியில் எல்லா விமான நிலையங்களிலும் தீவிரமாகத் தான் தேடுகிறோம். ஆனால் அவன் அகப்படவில்லை. தேடிய ஆள் கிடைக்காததால் ஒரு நகலை உருவாக்கி ஒரு டாப் சீக்ரெட் மிஷனில் ஈடுபடத் தீர்மானித்திருக்கிறோம். சிஐஏ வேண்டுகோளின் பேரில் அந்த நகல் மனிதனை அமெரிக்கா அனுப்பி வைப்பதாக உள்ளோம்....”

மிகத் தாழ்ந்த குரலில் அவர் சொல்வதை எல்லாம் கேட்டுப் பரபரப்படைந்த மைக்கேல் விக்டர் சொன்னார். “சரி... இதில் நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்...”

“வரும் ஞாயிற்றுக் கிழமை அந்தப் போலி டேனியல் ஏதோ ஒரு பெயரில் ம்யூனிக்கிலிருந்து வாஷிங்டன் போகிறான். அவனைப் பரிசோதனை செய்வது போல் நடித்து அவன் வாஷிங்டன் விமானம் ஏற நீங்கள் உதவ வேண்டும். வாஷிங்டன் போனதும் சி.ஐ.ஏ டைரக்டர் மீதியைப் பார்த்துக் கொள்வார். அங்கே அவர்கள் அவனுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. திரும்ப இங்கேயே அவனை அனுப்புவார்களா, இல்லை அங்கேயே வைத்துக் கொள்வார்களா என்றெல்லாம் தெரியவில்லை.”

அமெரிக்க சிஐஏ டைரக்டர் நேரடியாக ஈடுபடும் ஒரு ரகசிய மிஷனில் அவருக்கும் ஒரு பங்கு கிடைத்திருப்பது மைக்கேல் விக்டருக்குப் பெருமையாக இருந்தது.

”நீங்கள் சொன்னபடி செய்கிறேன் சார்” என்று கம்பீரமாக மைக்கேல் விக்டர் சொன்னார்.

“இந்த விஷயம் உங்களைத் தவிர இங்கேயே கூட மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது. அது மிக முக்கியம். நாளை என்னையே விமானநிலையத்தில் பார்த்தால் என்னிடமே கூட இது விஷயமாய் நீங்கள் எதுவும் பேசக்கூடாது... அந்த அளவு இது விஷயமாக நீங்கள் மௌனம் காக்க வேண்டும்” என்றார் சாலமன்.

மைக்கேல் விக்டர் தலையசைத்தார். சாலமன் நிம்மதியடைந்தார். ம்யூனிக்கிலேயே இருக்கும் இம்மானுவல் இவருக்குப் பார்க்கக் கிடைத்தால் இவர் அவனிடம் ஏதாவது உளறி வைக்காமல் இருக்க இது உதவும் என்று நினைத்துக் கொண்டார்.

(தொடரும்)
என்.கணேசன்






Monday, August 23, 2021

யாரோ ஒருவன்? 46


ஜெய்ராம் சந்தேகத்துடன் கேட்டான். ”சுவாமி முக்தானந்தாஜியும் இப்படி ஒரு தரிசனத்திற்கு ஐந்து லட்சம் வாங்குவதுண்டா?”

ஆசிரமத்தலைவர் புன்னகையுடன் சொன்னார். “அவர் அப்படிக் கறாராய் வாங்கியதில்லை. அவர் தன் சக்திகளை ஆன்மீகத்திற்கும், தர்மத்திற்குமல்லாமல் வேறெதற்கும் பயன்படுத்தியதும் இல்லை. உண்மையான ஆன்மீகத்தை அறிய மனிதர்கள் அவ்வளவாக சிரமப்படுவதில்லை. பத்தோடு பதினொன்றாவது விஷயமாகவே அது இருக்கிறது. ஆனால் தனிப்பட்ட லாபங்கள், ஆக வேண்டிய வேலைகள் எல்லாம் மக்களுக்கு அதி முக்கியமானதாகவல்லவா இருக்கிறது. அதனால் அது போன்ற வாக்குகளும், ஆசிர்வாதங்களும் வேண்டுமென்பதற்காக அவர்கள் என்ன செய்யவும் தயாராக இருக்கிறார்கள். ஆன்மீக ஞானத்திற்காக வருபவர்களிடம் அவர் ஒரு பைசாவும் கேட்டதில்லை. ஆனால் தனிப்பட்ட லாபத்திற்காக வரும் பணக்காரர்களிடம் அவர் பெரிய தொகை ஒன்றை வாங்கி தர்மகாரியங்கள் தொடரச் செலவு செய்வார். ஆனால் அது அபூர்வம் தான். அவர் மவுன விரதம் இருப்பதும், காட்டுக்குள் தவத்திற்குப் போவதும் அடிக்கடி நடக்கும். அந்த மாதிரி நேரங்களில் யாரும் அவரைச் சந்தித்துப் பேச முடியாது. இருந்தாலும் கூட ஆன்மீகத்திற்காக அல்லாமல், சொந்தப் பிரச்னைகள் தீர தினமும் ஆட்கள் வந்துக் காத்துக் கிடப்பார்கள்...” சொல்லும் போது அவர் முகம் சுளித்தார்.

பின் தொடர்ந்தார். ”சுவாமி சமாதியடைந்த பிறகு மகராஜிடம் மக்கள் கேட்க ஆரம்பித்தார்கள். மகராஜ் சொன்னதெல்லாம் பலித்தது. பலருக்கும் பல வேலைகள் ஆக ஆரம்பித்தன. கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போனது. இப்போது இங்கேயே மகராஜ் இல்லாததால் கூட்டமில்லை. மகராஜ் இருந்தால் தூர தரிசனம் கிடைத்தாலும் அதுவே பெரிய பாக்கியமென்று வருகிறவர்கள் நிறைய பேர். சொல்லப்போனால் உங்களைப் போல் சுவாமிக்காகவும், ஆன்மீகத்திற்காகவும் வருபவர்கள் வெகு அபூர்வம். நீங்கள் வருவதற்கு முன் வந்து போன அமெரிக்கரும், சீக்கியரும் கூட மகராஜைப் பற்றி விசாரிக்கவும் அவரிடம் ஒரு அப்பாயின்மெண்ட் வாங்கவும் தான் வந்திருந்தார்கள்...”

ஜெய்ராம் கேட்டான். “மகராஜ் ஏன் சன்னியாசம் வாங்கிக் கொள்ளவில்லை?”

உலகவாழ்வில் அவருக்கு ஆக வேண்டிய காரியங்கள் இன்னும் சில இருக்கின்றன. அது முடியாமல் சன்னியாசம் வாங்குவது உடையளவிலேயே தான் இருக்கும். மனதளவில் இருக்காது. அதனால் தான் அவர் வாங்கவில்லை

என் நண்பர் மகராஜிடம் நாகசக்தி பரிபூரணமாய் குடிகொண்டிருக்கிறது என்று சொன்னார். அந்த நாகசக்தி மகராஜுக்கு எப்படிக் கிடைத்தது?”

நதிமூலம், ரிஷிமூலம் மட்டுமல்ல சக்தி மூலத்தையும் அடைந்தவர்கள் வெளியே சொல்வதில்லை...”

அந்தச் சக்தி அவருக்கு எப்போது கிடைத்தது என்றாவது சொல்ல முடியுமா?”

நீங்கள் சுவாமியைப் பற்றி நூல் எழுத வந்திருக்கிறீர்கள். அதனால் தயவுசெய்து அவரைப் பற்றியே கேளுங்கள். மகராஜைப் பற்றியே வருபவர்கள் அனைவரும் கேட்பது எனக்குச் சலிப்பை ஏற்படுத்துகிறது.” என்று சற்று கடுமையாகவே ஆசிரமத்தலைவர் கூறினார்.

இனி இவரிடமிருந்து நாகராஜ் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்காது என்று உறுதியாகத் தெரிந்து விட்டது. ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் ஜெய்ராம் சொன்னான். “மன்னிக்கவும். மகராஜைப் பற்றிக் கேள்விப்பட்டது ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டதால் தான் கேட்டேன்....”

அவர் ஒன்றும் சொல்லாமல் தலையசைத்தார். ஜெய்ராம் இன்னமும் நாகராஜைச் சந்தித்து முக்கியத் தகவல்கள் பெறத் தனக்கு வாய்ப்பு இருப்பதாக நம்பினான். நாகராஜ் குரு மீது மிகுந்த அன்பு வைத்திருந்ததாக அவன் கேள்விப்பட்டிருந்தான். அந்த அன்பின் காரணமாக குருவின் நூல் ஒன்றை எழுதும் ஆர்வமுள்ளவனுக்கு அவன் கண்டிப்பாக உதவக்கூடும் என்ற நப்பாசை மனதின் ஒரு மூலையில் இருந்தது. அதனால் தான் ஏற்ற வேடத்தை திறம்பட நடித்து விட்டுப் போகலாம் என்று அவனுக்குத் தோன்றியது.

அவன் அவரிடம் மிகுந்த பணிவுடன் கேட்டான். “சுவாமி முக்தானந்தாவின் உபதேசங்களில் மிக முக்கியமான அம்சம் என்று தயவுசெய்து விளக்க முடியுமா?”

ஆசிரமத் தலைவர் மறுபடி உற்சாகமானார். “அன்பே அவருடைய உபதேசங்களில் பிரதானம். மனிதன் தன்னையும் மற்றவர்களையும் நேசிப்பதே எல்லாப் பிரச்னைகளுக்குமான தீர்வு என்று அவர் எப்போதும் சொல்வார்.  அன்பில்லாத ஆன்மீகம் பொய் என்று கூடக் கூறுவார்.....”

அவர் சொல்லச் சொல்ல ஜெய்ராமின் பேனா காகிதங்களில் கிறுக்க ஆரம்பித்தது. ஜெய்ராம் மேலும் ஒரு மணி நேரம் அங்கிருந்தான். அவரிடம் சுவாமி முக்தானந்தாவைப் பற்றி மட்டும் பல கேள்விகள் கேட்டான். அவர் பொறுமையாகப் பதில் சொன்னார். கிளம்புகின்ற கணம் வரை ஒரு முறை கூட அவன் மறந்தும் நாகராஜ் பற்றிப் பேசவில்லை.    

கிளம்பும் போது மட்டும் அவன் தன் விசிட்டிங் கார்டை  அவரிடம் கொடுத்து விட்டுச் சொன்னான். “சுவாமிஜியுடன் மிக அதிக காலம் கூட இருந்தவர் என்பதால் எனக்கு மகராஜிடமும் சுவாமிஜி பற்றிக் கேட்டறிய வேண்டும் என்ற ஆவல் இன்னும் இருக்கிறது. அவர் உங்களிடம் பேசினால் தயவு செய்து என் கோரிக்கையை அவரிடம் தெரிவியுங்கள். ஒருவேளை அவர் சம்மதித்தால் என்னை இந்த எண்ணுக்கு அழையுங்கள். நன்றி.”

அவர் தலையசைத்தார். அவன் கிளம்பினான். திரும்பி வரும் வழியில் கிராமத்து ஆட்கள் சிலரிடம் பேச அவன் எண்ணியிருந்தான்.  அங்கேயே இருப்பவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும், அவர்கள் நிறைய கேள்விப்பட்டிருப்பார்கள் என்பதால் அந்தத் தகவல்கள் மிகவும் உபயோகமாய் இருக்கும்...

வழியில் பார்த்த ஒரு இளைஞன் அருகே காரை நிறுத்தி இறங்கித் தன்னை ஆன்மீக எழுத்தாளர் என்று ஜெய்ராம் அறிமுகப்படுத்திக் கொண்டான். சுவாமி முக்தானந்தா பற்றியும் அந்த ஆசிரமம் பற்றியும் ஒரு நூல் எழுதப் போவதாகவும்  அந்த ஆசிரமம் பற்றி நிறைய தகவல்கள் தெரிந்த யாராவது இருந்தால் அந்தத் தகவல்களுக்காகச் சன்மானம் வழங்கவும் தயாரென்றும் அவன் தெரிவித்தான். சன்மானம் என்றதும் அந்த இளைஞன் கண்கள் பிரகாசித்தன.

இளைஞன் சொன்னான். “என் தந்தை அந்த ஆசிரமம் ஆரம்பித்த காலத்தில் இருந்து போன வருஷம் பெரிய சுவாமிஜி சமாதியாகிற வரை அங்கே வேலை பார்த்தார். இப்போது வயதாகி விட்டதால் வேலைக்குப் போவதில்லை. அவருக்கு நிறைய தெரியும்

ஜெய்ராமுக்கு அது போன்ற ஒரு ஆள் பேசக்கிடைப்பது நல்ல வாய்ப்பாகத் தெரிந்தது. “அவரிடம் பேசலாமா?” என்று அந்த இளைஞனிடம் கேட்டான்.

எவ்வளவு ரூபாய் தருவீர்கள்?” அந்த இளைஞன் கேட்டான்.

ஜெய்ராம் கவனமாகச் சொன்னான். “அது எனக்குக் கிடைக்கும் தகவல்களைப் பொருத்தது. என் புத்தகத்திற்கு வேண்டியபடி சுவாரசியமான, வெளியாள்களுக்கு அதிகம் தெரியாத தகவல்களாய் இருந்தால் நல்ல தொகை தருவேன். இப்போது நான் ஆசிரமத்தலைவர் சுவாமிஜியிடம் பேசி விட்டு வந்திருக்கிறேன். அவர் சொன்ன தகவல்களாகவே இருந்தால் அதிகம் தர முடியாது.... உபயோகம் என்று தோன்றினால் ஆயிரம் ரூபாய் வரை தருவேன்....”

அந்த இளைஞனுக்கு ஆயிரம் ரூபாய் அதிகத் தொகையாய் தெரியவில்லை என்பது அவன் முகபாவத்திலிருந்தே தெரிந்தது.

ஜெய்ராம் சொன்னான். “நான் வெளியிடும் புத்தகத்தில் உங்கள் போட்டோவும், உங்கள் அப்பா போட்டோவும் கூடப் போடுவேன்...”

ஆயிரம் ரூபாய் தருவதுடன், தங்கள் போட்டோ ஒரு புத்தகத்திலும் வருவது ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே இருந்ததால் அந்த இளைஞன் சம்மதித்தான். “வாருங்கள் போவோம். ஒரு பர்லாங் தூரத்தில் தான் என் வீடு இருக்கிறது



(தொடரும்)
என்.கணேசன்

Thursday, August 19, 2021

இல்லுமினாட்டி 116



சாலமன் வெளியேறிய பின் ஒளிர்கின்ற மெழுகுவர்த்தியை அணைத்த விஸ்வம் சாலமனின் கார் கிளம்பிப் போகிற வரை காத்திருந்துவிட்டுப் பின் மேடைப் பகுதியின் ஒரு மூலையில் தெரிந்த சிறிய அசைவைப் பார்த்துவிட்டு ஜிப்ஸியைக் கேட்டான். “நீ என்ன நினைக்கிறாய்?”

ஜிப்ஸி அவன் எதிரில் வந்தமர்ந்தான். விஸ்வத்தின் இப்போதைய கண்கள் கூட இருட்டில் இருந்து கொண்டே அனைத்தையும் பார்க்கும் திறனைப் பெற்று விட்டது என்று வியப்புடன் ஜிப்ஸி நினைத்தான். அவன் சொன்னான். “முதல் பேச்சிலேயே நல்ல முன்னேற்றம் தான். இங்கிருந்து வாஷிங்டன் போய் வருவதற்குக் கூட ஏற்பாடு செய்து விட்டாய் சபாஷ்.”

விஸ்வம் அந்தப் பாராட்டைப் பெரிதுபடுத்தாமல் கேட்டான். “சாலமன் எர்னெஸ்டோவின் பங்களாவில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சொன்னாரே, அது முழுவதும் சரியா, இல்லை எதாவது முக்கிய விவரத்தை விட்டிருக்கிறாரா?”

ஜிப்ஸி சொன்னான். “சொன்னது முழுவதும் சரி தான். எதையும் விட்டுவிடவில்லை”

விஸ்வம் நிம்மதி அடைந்தான். ஒரு மனிதன் சின்னச் சின்ன விஷயங்களில் எல்லாம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான் என்பதை விஸ்வம் உறுதியாய் நம்பினான். சாலமன் அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒருசில விஷயங்களைச் சொல்லாமல் விட்டிருந்தால் கூட, அல்லது ஏதாவது சிலவற்றை மாற்றிச் சொல்லியிருந்தால் கூட, அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவன் முடிவு செய்திருப்பான்.

விஸ்வம் கேட்டான். “வாங் வே?”

அவர் சொன்னதிலும் பொய்யோ, சூழ்ச்சியோ இல்லைஎன்றான் ஜிப்ஸி. ”அவர் உன்னை விரும்புகிறாரோ இல்லையோ, எர்னெஸ்டோவை வெறுக்கிறார். அந்த ஆளை இல்லுமினாட்டியின் தலைமைப் பதவியிலிருந்து இறக்கி வைக்க சைத்தான் காலைப் பிடிக்க வேண்டியிருந்தாலும் அதைச் சந்தோஷமாகச் செய்வார்.... வாங் வே தான் இல்லுமினாட்டியின் வரலாற்றிலேயே தலைமைக்கு எதிராகத் தைரியமாய் இறங்கியிருக்கும் முதல் ஆள். அவரும் உன்னை மாதிரி ஒருவன் இருப்பதால் தான் தைரியம் பெற்று இறங்கியிருக்கிறார். கண்டுபிடிக்கப்பட்டால் அவரும் சாலமனும் இறப்பது உறுதி...”

விஸ்வம் புரிகிறது என்று தலையசைத்தான். நடப்பது எல்லாம்  சாதகமாகத் தான் இருக்கின்றன. விதி அவனுக்கு வேண்டியவர்களை எப்படியாவது அவனிடம் இழுத்து வந்து விடுகின்றது. முதலில் ஜிப்ஸி... இப்போது இவர்கள்...

ஜிப்ஸியைப் பொருத்த வரை அவன் யாரென்பதை விஸ்வம் ஓரளவு யூகித்து விட்டிருந்தான். ஆரம்பத்தில் அவன் சாதாரணமானவன் அல்ல அவனைவிடப் பல மடங்கு சக்தி வாய்ந்தவன் என்பதை விஸ்வம் புரிந்து கொண்டிருந்தான். ஆனால் அப்படிப்பட்ட ஒருவன் இந்த உலகத்தில் இருந்து, அவனை அறியாமல் விஸ்வம் இருந்திருப்பது சாத்தியமேயில்லை. சில யோகிகள், சித்தர்கள் வேண்டுமானால் அவனை விடச் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கலாம். அவர்களைப் பொதுக்கணக்கில் எடுக்க முடியாது. அவர்கள் இது மாதிரி வேலையில் எல்லாம் ஈடுபட மாட்டார்கள். அப்படி இருக்கையில் ஜிப்ஸி அவனை விடவும் சக்தி வாய்ந்தவனாய் இருந்து இப்படி அவனுக்கு உதவவும் முன் வந்திருக்கிறான் என்பதே விஸ்வத்தை நிறைய யோசிக்க வைத்தது. அதன் பிறகு அவன் கூர்மையாக ஜிப்ஸியைக் கவனித்து வந்தான்.

ஜிப்ஸியின் மற்றசில நடவடிக்கைகள் அவனைக் காட்டிக் கொடுத்து விட்டன. உதாரணத்திற்கு, ஜிப்ஸி என்றுமே அவனுடன் அமர்ந்து எதாவது சாப்பிட்டோ, குடித்தோ விஸ்வம் இது வரை பார்த்தது கிடையாது. விஸ்வத்துக்குச் சாப்பிட உணவும், நீரும் ஒரு நாளைக்கொரு முறை கொண்டு வந்து தருவான். அது எங்கிருந்து என்று அவன் சொன்னது கிடையாது. அவன் கார் எடுக்கும் சத்தமோ, நிறுத்தும் சத்தமோ இங்கு வந்ததிலிருந்து அவனுக்குக் கேட்டது கிடையாது. சொல்லப்போனால் இங்கே வந்த பின்பு அவன் காரையே விஸ்வம் பார்த்தது கிடையாது. ஒரு முறை விஸ்வம் கேட்ட போது சற்று தூரத்தில் ஓரிடத்தில் ஒளித்து வைத்திருப்பதாக ஜிப்ஸி சொன்னான்.

அதே போல் அவன் உறங்கியும் விஸ்வம் பார்த்தது கிடையாது. படுப்பதற்குத் தயாராவது போல் ஒரு விரிப்பு இருக்கும். அவன் படுத்தும் பார்த்திருக்கிறான். ஆனால் ஆழ்ந்த உறக்கத்திற்கு அவன் போய் இது வரைக்கும் விஸ்வம் பார்த்ததில்லை.   ஜிப்ஸி உட்கார்ந்தும், நின்றும், நடந்தும், படுத்தும் பார்த்திருந்தாலும் ஆழ்ந்த உறக்கத்தில் அவனைப் பார்க்க முடியாதது விஸ்வத்துக்கு விசித்திரமாகவே இருந்ததுஅதே போல் அவன் காலைக்கடன் கழிக்கப் போயோ சிறுநீர் கழிக்கப் போயோ கூட விஸ்வம் பார்த்ததில்லை. அதனாலேயே அவன் மனிதன் அல்ல என்பது விஸ்வத்துக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது

அக்ஷயின் புகைப்படம் ஒன்று வேண்டும் என்று விஸ்வம் கேட்ட போது ஒத்துக் கொண்ட ஜிப்ஸி ஏழு மணி நேரம் தான் அவன் பார்வையில் இல்லாமல் இருந்தான். அந்த ஏழு மணி நேரத்தில் அவன் காரில் அதிவேகமாகப் போனாலும் விமானநிலையம் போய் அக்ஷயைப் புகைப்படங்கள் எடுத்து விட்டுத் திரும்ப வந்திருக்கவே முடியாது. மனித முயற்சியாக இருந்தால் குறைந்த பட்சம் பன்னிரண்டு மணி நேரமாவது தேவைப்பட்டிருக்கும்.

ஆனால் விஸ்வம் ஜிப்ஸியின் உண்மை அடையாளத்தை யூகித்ததைக் காட்டிக் கொள்ளவில்லை. ஜிப்ஸி ஏதோ நாடகம் நடத்துகிறான். அவன் நட்பில் மட்டும் சந்தேகம் வராததால் நடத்தட்டும் இந்த நாடகத்தை என்று விஸ்வம் விட்டு விட்டான்.

ஜிப்ஸி சொன்னான். “ஒன்றை மட்டும் நினைவு வைத்துக் கொள். எர்னெஸ்டோவைக் கொன்றது நீ தான் என்ற சிறிய சந்தேகம் இல்லுமினாட்டி உறுப்பினர்களுக்கு வந்தால் கூடப் பின் நீ இல்லுமினாட்டியின் தலைவனாக ஆக முடியாது..”

விஸ்வம் அமைதியாகச் சொன்னான். “இல்லுமினாட்டியைப் பொருத்த வரை நான் ஜெர்மனியிலேயே அடைபட்டு இருப்பவன். வாங் வே, சாலமன் தவிர அவர்கள் யாருக்கும் நான் வாஷிங்டன் போவது தெரியப்போவதில்லை. அதனால் வாஷிங்டனில் கிழவர் இறந்தால் ஜெர்மனியில் இருக்கும் என்னை எப்படிக் காரணம் சொல்ல முடியும்?”

ஜிப்ஸி புன்னகைத்தான். இன்னும் வாஷிங்டனில் எர்னெஸ்டோவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியோ அவர் பயண நேரங்கள் பற்றியோ, தங்கும் இடங்கள் பற்றியோ விஸ்வத்துக்குத் தெரியவில்லை. ஆனால் அங்கு எர்னெஸ்டோவைக் கொல்வது உறுதி என்ற நம்பிக்கை மட்டும் அவனுக்கு இருக்கிறது…

விஸ்வம் அவனைக் கேட்டான். “உனக்கும் வாஷிங்டன் போக ஒரு டிக்கெட் செய்யச் சொல்லட்டுமா?”
                 
“வேண்டாம். நான் வந்து கொள்கிறேன்” என்று ஜிப்ஸி சொன்னான்.



ன் வேற்றுக்கிரகவாசி நண்பன் எப்போது வருவான்? அவன் வந்தால் தான் இந்தப் போட்டி சரியாக இருக்கும்என்று   எர்னெஸ்டோ சொன்னதற்கு க்ரிஷ் மெல்லிய சோகத்துடன் சொன்னான். “அவன் வந்தாலும் இந்தப் போட்டியில் நம் பக்கம் சேர்ந்து கொள்ள மாட்டான்…”
                  
எர்னெஸ்டோ ஆச்சரியத்துடன் கேட்டார். “ஏன்?”

“அவனிடம் ஒரு முறை எதிரியை நீயே அழித்து விடலாமே, இந்த உலகத்திற்கு உபகாரமாய் இருக்குமே என்று  நான் கேட்டிருக்கிறேன். அதற்கு அவன் மாட்டேன் என்று சொல்லி விட்டான். அவன் சொன்னான். “நான் அவனை அழித்து விட்டுப் போனால் அவனைப் போலவே சீக்கிரமே இன்னொருவன் உருவாகி விடுவான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் உன் உலகம் இருக்கிறது. அவனை அழித்து அந்தத் தீமைக்கான சூழ்நிலையையும் அழித்தால் மட்டுமே உன் உலகம் காப்பாற்றப்படும். அதை வெளியிலிருந்து யாரும் செய்வது தற்காலிகத் தீர்வாகுமே ஒழிய நிரந்தரத் தீர்வாகாது” என்றான். அதனால் அவன் இப்போது வந்தாலும் நமக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை…”

இம்மானுவல் கேட்டான். “உன் ஏலியன் நண்பன் இங்கே இன்னொரு ஏலியன் வந்திருப்பதையோ, அது எதிரிக்கு உதவுவதையோ பற்றி உன்னிடம்  சொல்லியிருக்கிறானா?”

“இல்லை” என்று சொன்ன க்ரிஷுக்கு அந்த இன்னொரு ஏலியன் பற்றி வேற்றுக்கிரகவாசி நண்பனுக்குத் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. ஏனென்றால் இவர்கள் அலைவரிசைகளை வைத்துக் கண்டுபிடித்திருப்பதைப் பார்த்தால் சில வருடங்களுக்கு முன்பே விஸ்வத்தின் கூட்டாளி இரண்டு தடவை வந்து சென்றிருக்கிறான். அப்படியிருந்தும் கூட  அதைப் பற்றி வேற்றுக்கிரகவாசி நண்பன் ஏன் சொல்லவில்லை என்று தெரியவில்லை...

அக்‌ஷய் க்ரிஷிடம் தன் சந்தேகத்தைக் கேட்டான். “உன் வேற்றுக்கிரகவாசி நண்பன் அப்படிச் சொன்னான், இப்படிச் சொன்னான் என்று சொல்கிறாயே உருவமே இல்லாமல் அவன் உன்னிடம் எப்படிச் சொன்னான்? அசரீரி போல் அவன் சொல்லும் சத்தம் மட்டும் கேட்குமா?”

க்ரிஷ் சிரித்தான். “இல்லை. அவன் என் உணர்வு நிலையில் புகுந்து கொள்ள அனுமதி தந்திருந்தேன். அதனால் காதால் கேட்டு மூளை அதை உள்வாங்கித் தெரிந்து கொள்வதெல்லாம் இல்லை. நேரடியாக நம் மனதிலும் மூளையிலும் அவன் சொல்வது பதிந்து விடும்...”


அவர்களுக்கு அவன் சொன்னது மிக வினோதமாக இருந்தது என்பது அவர்கள் மூவரின் முகபாவனையிலேயே தெரிந்தது. 


(தொடரும்)
என்.கணேசன்