சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 27, 2019

இல்லுமினாட்டி 2

லைமை மருத்துவர் நீ யார், உன் பெயர் என்ன என்று கேட்டதற்கு அந்தப் போதை மனிதன் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. சின்னதாய் புன்னகை அவன் உதடுகளில் வந்து மறைந்தது. ஏனோ அந்தப் புன்னகை அவர் ரத்தத்தை உறைய வைப்பது போல் வில்லத்தனமாய் இருந்தது. உடனே அவர் அப்படி உணர்வது அர்த்தமில்லாதது என்று நினைத்தார். உண்மையில் அவர் கேட்ட கேள்வி அவன் மூளையை எட்டியிருக்காது என்று அவருக்குத் தோன்றியது. இது போன்ற அதிகபட்ச காய்ச்சல் சமயத்தில் இப்படி நடப்பதுண்டு. ஏதோ ஒரு கற்பனைக் காட்சியில் நோயாளி சஞ்சரிப்பதுண்டு. அவன் கற்பனையில் என்ன பார்த்துப் புன்னகைக்கிறானோ என்று எண்ணியவராக அவர் மறுபடி அவனிடம் கேட்டார். “நான் கேட்டது புரிகிறதா? நீ யார்? உன் பெயர் என்ன?”

அவன் ஒன்றும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டான். களைத்திருக்கிறான் என்பதாகத் தலைமை மருத்துவர் புரிந்து கொண்டார். நினைவு திரும்பி அவன் பெயரைச் சொல்லும் வரை அவன் எக்ஸ் தான்… முதலில் அவன் காய்ச்சலைக் குறைக்க வேண்டும், பின் அவன் உடலில் சக்தியை அதிகரிக்க வேண்டும், பிறகு தான் அவனுக்குச் சரியாக நினைவு திரும்பும் வாய்ப்பு இருக்கிறது…. அதற்கான மருந்துகளை அவன் உடலில் ஏற்ற உதவி மருத்துவரிடம் உத்தரவிட்டு விட்டுத் தன் அறைக்கு அவர் திரும்பினார்.

மறுபடியும் தன் மேசையிலிருந்த எல்லா ஸ்கேன் ரிப்போர்ட்களையும் அவர் எடுத்துப் படித்தார். முன்பு அவர் அனுமானத்திற்கு வந்திருந்தபடியே ஒரு ரிப்போர்ட்டில் கூட அவன் உயிர்பிழைக்கும் வாய்ப்பின் தடயம் கூட இல்லை. இவன் பிழைத்துக் கொண்டால் மருத்துவ உலகில் ஒரு அதிசயம் நிகழ்த்தியவனாகக் கருதப்படுவான் என்று தோன்றியது. உடனே அவர் இண்டர்காமில் அழைத்து அவன் உடல்நிலை ஓரளவு இயல்புநிலைக்குத் திரும்பியவுடன் மறுபடியும் ஸ்கேன்கள் செய்யச் சொன்னார்.


அவர் பார்வை கண்ணாடி ஜன்னல் வழியே வீதிக்கு போனது. இப்போது விலை உயர்ந்த கார்கள் அந்தத் தெருக்கோடிக் கட்டிடத்திலிருந்து சாரை சாரையாக வெளியே வந்து கொண்டிருந்தன. அதைப் பார்த்தபடி சிறிது நின்று விட்டுப் பின் மற்ற நோயாளிகளைப் பார்க்க அவர் கிளம்பினார். திடீர் என்று கிதார் இசை நினைவுக்கு வந்தது. இப்போது அது கேட்கவில்லை. எப்போது நின்றது என்று தெரியவில்லை… என்னவோ எல்லாமே விசித்திரமாய் நடக்கின்றன என்று எண்ணியவர் அடுத்த ஒன்றரை மணி நேரம் எல்லா நோயாளிகளையும் பார்த்து விட்டு வரும் வரை மற்ற எல்லாவற்றையும் மறந்திருந்தார். கடைசியாக மறுபடியும் எக்ஸ் அறைக்குப் போனார்.

அவரைப் பார்த்தவுடன் அந்த உதவி மருத்துவர் சொன்னார். “ஒரு கட்டத்தில் 107 டிகிரி வரை ஏறிய காய்ச்சல் இப்போது தான் குறைய ஆரம்பித்திருக்கிறது. 103 டிகிரிக்கு வந்திருக்கிறது. ஆனால் ஒரு மணி நேரத்திற்கு முன் எடுத்த மூளையின் ஸ்கேன் ரிப்போர்ட்கள் குழப்புகின்றன டாக்டர். அசாதாரணமான அதிகப்படியான செயல்கள் மூளையில் தெரிகின்றன…..”

அவர் சொல்லிவிட்டு ஸ்கேன் படங்களைக் காட்டிய போது தலைமை மருத்துவர் திகைப்பின் எல்லைக்கே போனார். அவர் அறையில் இருந்த ரிப்போர்ட்டுகளுக்கு நேர்மாறாக உச்சக்கட்ட அளவில் மூளைச் செயல்பாடுகள் இருந்தன. அவர் சொன்னார். “ஸ்கேனிங் மெஷினில் ஏதாவது பிரச்னை இருக்குமோ?”

உதவி மருத்துவர் சொன்னார். “நானும் அதைத் தான் கேட்டேன். ஸ்கேன் ஆபரேட்டர் மெஷின் சரியாகத் தான் இருக்கிறது, இந்த எக்ஸ் சூப்பர் மேனாக இருக்கலாம். யார் கண்டது என்று கிண்டலாகச் சொல்கிறான்….”

எக்ஸ் விஷயத்தில் எங்கோ ஏதோ குழப்பும்படியான தவறுகள் அல்லது பிரமிக்கும்படியான அதிசயங்கள் நடந்திருப்பதாக தலைமை மருத்துவர் நினைத்தார். 107 டிகிரி வரை ஏறிய காய்ச்சலும், மூளையின் அளவுக்கதிகமான செயல்பாடுகளும், சாகக்கிடந்த அவன் உயிர் பிழைத்திருப்பதும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது தலைசுற்றியது. இவன் இயல்புநிலைக்குத் திரும்பி வாய்திறந்து பேசினால் தான் பல விஷயங்கள் புரியும் என்று அவருக்குத் தோன்றியது.

தலைமை மருத்துவர் எக்ஸ் அருகே சென்று பார்த்தார். இப்போது அவன் உடல் சீரடைந்து வருவதாகத் தோன்றியது. மூச்சு சீராக இருந்தது. அவர் உதவி மருத்துவரிடம் சொன்னார். “அவன் இரவு நன்றாக உறங்கி ஓய்வு எடுக்கட்டும். நாளை காலையில் அவனிடம் பேசுவோம்…..”

அவர் வீட்டுக்குக் கிளம்பி விட்டார். செல்வதற்கு முன் ரிசப்ஸனில் எக்ஸைக் கேட்டு யாராவது போன் செய்தார்களா என்று கேட்டார். இல்லை என்று பதில் வந்தது. அவன் வீட்டார், நெருங்கியவர்கள் யாரும் டிவியில் அவனைக் குறித்து வெளியிட்ட செய்தியைப் பார்க்கவில்லை போல் இருக்கிறது….


டுத்தநாள் அதிகாலையிலேயே அவருடைய அலைபேசி இசைத்து அவரை உறக்கத்திலிருந்து எழுப்பியது. அவர் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தார். காலை மணி 5.05. அலைபேசியை எடுத்துப் பார்த்தார். அழைப்பு மருத்துவமனையிலிருந்து தான் வருகிறது. பேசினார். “ஹலோ”

நர்ஸ் ஒருத்தி பேசினாள். “டாக்டர், அந்தப் போதை நோயாளி எக்ஸைக் காணோம்”

திகைத்த அவர் ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாமல் யோசித்தார். சில சமயங்களில் இது போன்ற ஆட்கள் மயக்கநிலையில் எழுந்து நடப்பதுண்டு. வேறெதாவது அறைக்குச் சென்று படுத்திருக்கும் வாய்ப்பும் இருக்கிறது என்று நினைத்தவராக அவர் கேட்டார். “ஆஸ்பத்திரியில் எல்லா இடங்களிலும் தேடினீர்களா?”

“எல்லா இடங்களிலும் பார்த்து விட்டோம் டாக்டர். இங்கு எங்கும் இல்லை”

எக்ஸ் ஏன் இப்படிப் படுத்துகிறான் என்று எண்ணியபடி அவர் சொன்னார். “போலீஸுக்கும் போன் செய்து தகவலைத் தெரிவித்து விடுங்கள். நான் அரை மணி நேரத்தில் வந்து விடுகிறேன்.”

அவர் மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்த சமயம் எக்ஸை அங்கு கொண்டு வந்த போலீஸார் இருவரும் வந்து சேர்ந்தார்கள். அவர்களிடம் நேற்றைய அதிசய நிகழ்வுகளை அவர் தெரிவித்தார். அவர்கள் இருவரும் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டார்கள். பின் எக்ஸை யார் கடைசியாக எப்போது பார்த்தார்கள் என்று விசாரித்தார்கள். உதவி மருத்துவர் இரவு 10.30க்கு காய்ச்சல் எந்த அளவு இருக்கிறது என்று பரிசோதித்ததாகவும் அப்போது 99 டிகிரிக்கு காய்ச்சல் இறங்கி இருந்ததாகவும் சொன்னார். நர்ஸ் ஒருத்தி நள்ளிரவு ஒன்றரை மணிக்கு அறைக்கு வந்த போது எக்ஸ் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததைப் பார்த்ததாகச் சொன்னாள்.

கடைசியில் ஒரு போலீஸ்காரர் சொன்னார். “அந்த நேரத்திற்குப் பிறகு சிசிடிவி காமிராவில் பார்த்தால் என்ன நடந்திருக்கிறது என்று தெரியும்.”

அறைகளில் சிசிடிவி காமிராக்கள் இல்லை என்றாலும் வராந்தாக்களில் அந்தக் காமிராக்கள் இருந்தன. அறையை விட்டு யார் வந்தாலும், அறைக்குள் யார் சென்றாலும் அந்தக் காமிராக்களில் கண்டிப்பாகப் பதிந்திருக்கும் என்பதால் பரபரப்புடன் அந்த அறைக்கு வெளியே இருந்த வராந்தாவில் இரவு ஒன்றரை மணிக்குப் பிறகு பதிவாகி இருந்த சிசிடிவி காமிரா பதிவுகளைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

காமிராப்பதிவுகள் காலி வராந்தாவையே அதிகம் காட்டியது. நீண்ட இடைவெளிகளில் ஒரு நோயாளியோ, அவர் உடனிருப்பவரோ, நர்ஸ்களோ வராந்தாவில் தெரிந்தார்கள். ஆனால் அவர்கள் வந்து போனது வேறு அறைகளிலிருந்து தான்… யாரும் எக்ஸ் அறையிலிருந்து வெளியே வரவோ, உள்ளே போகவோ இல்லை… திடீரென்று எக்ஸின் அறையிலிருந்து எக்ஸ் வெளியே எட்டிப் பார்ப்பது தெரிந்தது. உடனே அவர்கள் அந்தக் காமிராப்பதிவு காட்டிய நேரத்தைப் பார்த்தார்கள். காலை மணி 3.37.

வெளியே வராந்தாவில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவுடன் எக்ஸ் மெல்ல நடக்க ஆரம்பித்தான். அவன் வராந்தாவைத் தாண்டிய காட்சி முடிந்ததும் மற்ற தொடர்பகுதிகளின் காமிராப்பதிவுகளை அவர்கள் பார்த்தார்கள். அவன் ஒரே ஒரு பகுதியில் மட்டும் ஒரு நர்ஸ் வருவதைப் பார்த்து மறைந்து நின்றான். அவள் ஒரு அறைக்குள் நுழைந்தவுடன் வேகமாக அந்த அறையைக் கடந்தான். கடைசியில் மணி 3.48ல் அவன் மருத்துவமனையை விட்டு வெளியேறுவது தெரிந்தது.

ஒரு போலீஸ்காரர் சொன்னார். “கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு முன்பே ஆஸ்பத்திரியை விட்டுப் போய் விட்டான்….”

இன்னொரு போலீஸ்காரர் தலைமை மருத்துவரிடம் சொன்னார். ”அவன் பிழைக்க வழியே இல்லை என்றீர்கள். ஆனால் அவன் பிழைத்துக் கொண்டது மட்டுமல்ல ஒரே நாளில் உங்கள் ஆஸ்பத்திரியை விட்டு அவனாகவே நடந்து வெளியே போயிருக்கிறான்”

தலைமை மருத்துவர் சொன்னார். “நேற்றிலிருந்து அவன் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்துக் கொண்டே இருக்கிறான். இனி நான் அவன் சிகிச்சைக் கணக்கை எப்படி மூடுவது? அவன் செத்திருந்தாலாவது அனாமதேய போதை மனிதன், அனாதைப் பிணம் என்று எழுதி முடித்திருப்பேன்”

“கவலைப்படாதீர்கள். உயிர் போகிற அளவுக்கு போதை மருந்து சாப்பிட்ட ஆள் அந்தப் பழக்கத்திற்கு அடிமையானவன் என்பதால் கண்டிப்பாக சீக்கிரமே மறுபடி சாப்பிட்டு எங்கேயாவது விழுந்து கிடப்பான். அல்லது செத்தும் கிடக்கலாம். அப்போது பார்க்கலாம்…. அவன் இங்கே இருந்த சமயத்தில் வேறெதாவது வித்தியாசமாக நடந்திருக்கிறதா?...”

தலைமை மருத்துவர் சொன்னார். “யாரோ நிறைய நேரம் கிதார் வாசித்துக் கொண்டிருந்தார்கள். அது ஆஸ்பத்திரிக்குள்ளேயே வாசித்தது போல் தான் இருந்தது. அது யார் என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது எக்ஸுக்கும் சம்பந்தமில்லாத விஷயமாக இருக்கலாம். ஆனால் நாங்கள் எல்லோரும் காதால் கேட்டும், ஒருவராலும் அது எங்கிருந்து கேட்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது விசித்திரமாக இருந்தது….”


(தொடரும்)
என்.கணேசன்

Monday, June 24, 2019

சத்ரபதி 78


சிவாஜி ஆழ்ந்த சிந்தனையிலிருந்தான். வரப் போகும் பீஜாப்பூரின் பெரும்படையை எதிர்கொள்ள அவனிடம் தற்போது சிறுபடை மட்டுமே இருந்தது. ஆளும் பகுதிகள் விரிவடைய விரிவடைய எல்லா இடங்களிலும் படை இருப்பு தேவைப்படுவதால் ஓரிடத்தில் குவித்து விட முடியாத நிலையில் அவன் இருந்தான். அப்சல்கானை பிரதாப்கட் கோட்டைப் பகுதிக்கு வரவழைக்க முடிந்ததால், மலைக்காட்டுப்பகுதிகள் பீஜாப்பூர் படைக்குப் பழக்கமில்லாததால் வெற்றி சுலபமானது. ஆனால் இப்போதைய பன்ஹாலா கோட்டைப் பகுதியில் அந்த வசதிகள் இல்லை.....

நேதாஜி பால்கர் வந்து சொன்னான். “அரசே.. பீஜாப்பூர் படை ஒன்றரை நாளில் இங்கு வந்து சேர்ந்துவிடலாம் என்று தெரிகிறது. என்ன செய்யலாம்?”

சிவாஜி தன் திட்டத்தைச் சொன்னான். முதல் முறையாக அவன் திட்டம் வெற்றி பெறப் போவதில்லை என்பதை அவன் அப்போது அறியவில்லை. இந்த முறை ரஸ்டம் ஜமான் அருகில் வரும் வரைக் காத்திருந்து, பின் தீவிரமாகத் தாக்கி அவனை ஓடச் செய்தது போல் சிதி ஜோஹரைத் தாக்கி விரட்ட சிவாஜி முனையவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. சிதி ஜோஹரின் படை ரஸ்டம் ஜமானின் படையைப் போல் மும்மடங்கு பெரிதாக இருந்தது. இரண்டாவதாக சிதி ஜோஹர் ஆங்கிலேயர்களிடம் இருந்து பெற்ற கிரேனேடுகள் என்றழைக்கப்படும் எறிகுண்டுகளையும் நிறையக் கொண்டு வந்திருந்தான். இந்த எறிகுண்டுகள் சிவாஜியின் படைக்குப் புதியவை. கூடவே வழக்கம் போல பீரங்கிகளும் பீஜாப்பூர் படையோடு வந்திருந்தன.  மிகவும் கவனமாக சிதி ஜோஹர் பன்ஹாலா கோட்டையை நெருங்கி வந்து கொண்டிருந்தான்.

நேதாஜி பால்கர் சிறு படையுடன் முன்பே பன்ஹாலா கோட்டையை விட்டு வெளியேறி இருந்தான். அவன் மறைவிடத்தில் இருந்து கொண்டே தன்னைத் தாண்டி, கோட்டையை நோக்கிச் செல்லும் பீஜாப்பூர்ப் பெரும்படையைக் கவனித்துக் கொண்டிருந்தான். அப்சல்கானுடன் வந்த படையை விட இந்தப் படை பெரியது…. பன்ஹாலா கோட்டைக்குள் இருக்கும் படையும், இப்போது அவனுடன் இருக்கும் சிறுபடையும் சேர்ந்து போராடினால் கூட இவர்களை வெல்வது மிகவும் கஷ்டம் என்ற யதார்த்த நிலை அவனுக்குப் புரிந்தது….

சிதி ஜோஹர் படை பன்ஹாலா கோட்டையை நெருங்கி விட்டது. சிதி ஜோஹர் தன் படையினரிடம் அமைதியாகவும், ஆணித்தரமாகவும் சொன்னான். “சிவாஜி இந்தக் கோட்டையில் தான் இருக்கிறான். நம் தாக்குதலில் அவன் இந்தக் கோட்டையில் நிறைய காலம் தங்க முடியாது. தாக்குப்பிடிக்க முடியாத அவனோ, அவன் ஆட்களோ இந்தக் கோட்டையை விட்டு உயிரோடு தப்பிச் சென்று விடக்கூடாது. அதை நாம் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப் போவதில்லை”

பன்ஹாலா கோட்டையை முற்றுகையிட்ட சிதி ஜோஹர் எறிகுண்டுகளை வீசியும், இடையிடையே பீரங்கிக் குண்டுகளாலும் கோட்டையைத் தாக்க ஆரம்பித்தான். பன்ஹாலா கோட்டை மிக வலிமையானது. அதைக் கைப்பற்றிய பின்னால் சிவாஜி மேலும் அந்தக் கோட்டையை வலிமைப்படுத்தியிருந்தான். அதனால் அந்தத் தாக்குதலில் பன்ஹாலா கோட்டை அதிகமாகப் பாதிக்கப்படவில்லை என்ற போதும் எறிகுண்டுகள் சிவாஜியின் எதிர்பார்ப்புக்கும் அதிகமாக அங்கங்கே சேதத்தை உண்டுபண்ணிக் கொண்டிருந்தன. கோட்டைக்குள்ளே மறைந்திருந்து அவர்களும் பீஜாப்பூர் படையைத் தாக்கினார்கள். இரவு நேரங்களில் நேதாஜி பால்கர் தன் சிறுபடையுடன் வந்து திடீர்த் தாக்குதல்களை நடத்தி விட்டு மின்னல் வேகத்தில் மறைய ஆரம்பித்தான்.

ஆரம்பத்தில் பின்னால் இருந்த ஃபசல்கானின் படை நேதாஜி பால்கரின் படையைத் துரத்திக் கொண்டு சென்றது. ஆனால் சிதி ஜோஹர் ஒரு எல்லையைத் தாண்டித் துரத்திக் கொண்டு போக வேண்டாமென்று தடுத்தான். அப்படிப் பின் தொடர்ந்து போய் குறைந்த எண்ணிக்கையாகி அவர்களுடன் போராடுவது அவர்களது பெரும்படையைச் சிறிது சிறிதாக இழக்கும் வழி என்றும் அதைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் எச்சரித்துத் தடுத்து நிறுத்தினான். மாறாக ஃபசல்கானின் படையின் பிற்பகுதியினரை நேதாஜி பால்கரின் படைக்காகத் திரும்பி நின்று தாக்கத் தயார் நிலையில் நிறுத்தினான்.

“இந்த எல்லைக் கோட்டைத் தாண்டி எப்போதும் போகாதீர்கள். அவர்கள் வர என்னேரமும் காத்திருங்கள். இங்கிருந்தே வருபவர்களைத் தாக்குங்கள். அவர்கள் மீது எறிகுண்டுகள் எறியுங்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் வரும் போதும் அவர்கள் பக்கம் பலத்த உயிர்ச்சேதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்….”

இரவு நேரங்களில் ஒரு பிரிவுப்படையினர் முழு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டார்கள். பன்ஹாலா கோட்டையில் இருந்து ஒருவனும் வெளியே செல்லவோ, வெளியிலிருந்து யாரும் உள்ளே செல்லவோ அவர்கள் அனுமதிக்கவில்லை. சிவாஜி இந்தக் காவல் படையின் கண்காணிப்பு நாளா வட்டத்தில் தளரும் என்று எதிர்பார்த்தான். ஆனால் ஆரம்பத்தில் இருந்த அதே உத்வேகம் தொடர்ந்து இருக்கும்படி சிதி ஜோஹர் பார்த்துக் கொண்டான். நேதாஜி பால்கரும் அவன் படை தாக்க வரும் போதெல்லாம் அவர்கள் வரும் திசையையே நோக்கிக் காத்திருந்து தாக்கத் தயாராக இருந்து திருப்பித் தாக்கும் பீஜாப்பூர்ப்படையை அந்த எல்லையிலிருந்து தாண்ட வைக்க முடியாமல் திணறினான். வரும் போதெல்லாம் அவன் தன் படைவீரர்களை இழந்து கொண்டே போகும் நிலைமை ஏற்பட்டது.

சிவாஜி பெரிதும் எதிர்பார்த்த பருவ மழை பெய்ய ஆரம்பித்தது. இயற்கையின் சீற்றத்தில் பீஜாப்பூர் படை தளர்ந்து போகும், வேறு வழி இல்லாமல் திரும்பிப் போகும் என்று சிவாஜி எதிர்பார்த்தது நடக்கவில்லை. சிதி ஜோஹர் மழைக்காலத்திலும் அனைவருக்கும் முன்னால் நின்று நனைந்து கொண்டே போரிட்டான், காவல் நின்றான், வீரர்களை உற்சாகப்படுத்தினான். படைவீரர்கள் தங்கள் தலைவனே உறுதியாகவும், முன் மாதிரியாகவும் தங்களுடன் சேர்ந்து முன்னிலையில் நிற்பதைப் பார்த்து உற்சாகம் அடைந்தார்கள்.

கோட்டைக்குள் மறைந்திருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிவாஜியால் சிதி ஜோஹரை மெச்சாமல் இருக்க முடியவில்லை. திறமையும், புத்திசாலித்தனமான அணுகுமுறையும் எங்கிருந்தாலும் அதை ரசிக்க முடிந்த பிறவித் தலைவனான அவனுக்கு சிதி ஜோஹரைப் பார்க்கையில் இதுவல்லவா ஆளுமை என்று தோன்றியது. முதல் நாள் இருந்த கண்காணிப்பையே இந்தப் பெருமழையிலும் கூட இரவு நேரத்தில் கூடத் தளராமல் சிதி ஜோஹர் பார்த்துக் கொண்டதையும் அவன் வியந்தான்.

காலம் நகர்ந்தது. முற்றுகை தொடர்ந்தது. போர்த் தாக்குதல் நடைபெற்ற வண்ணம் இருந்தது. கோட்டை எறிகுண்டுகளாலும், பீரங்கித் தாக்குதல்களாலும் சில இடங்களில் பலவீனமடைய ஆரம்பித்தது.  பன்ஹாலா கோட்டையில் இருந்து வெளியே தப்பித்துச் செல்ல சிவாஜி அனுப்பிய சில வீரர்கள் உடனடியாகத் தாக்கிக் கொல்லப்பட்டார்கள். வெளியிலிருந்து எந்தச் செய்தியும் உள்ளே வர வழியில்லை, வெளியே இருப்பவர்களுக்குத் தகவல் அனுப்பவும் வழியில்லை,  பீஜாப்பூர் படையின் உற்சாகமோ, வலிமையோ குன்றவில்லை என்ற நிலைமை தொடர்வதைக் கண்ட சிவாஜி இது ஆபத்தான நிலைமை என்பதை உணர ஆரம்பித்தான். ஒரு தலைவன் ஓரிடத்தில் தனிமைப்படுத்தப்படுவதும், அவனிடமிருந்து ஆணைகள் பெறவோ, ஆலோசனைகள் பெறவோ வழியில்லாமல் அவனது ஆளுமைக்கு உட்பட்ட மற்ற பகுதியினர் நீண்ட காலம் இருப்பது அஸ்திவாரத்தையே பலவீனப்படுத்தி விடும் என்று உணர்ந்திருந்த சிவாஜி இந்த நிலைமையை நீடிக்க விடக்கூடாது என்று முடிவு செய்தான்.

மறுநாளே பன்ஹாலா கோட்டையிலிருது வெள்ளைக் கொடி ஏந்திக் கொண்டு கோட்டைக் கதவைத் திறந்து கொண்டு  சிவாஜியின் தூதன் ஒருவன் வெளியே வந்தான். சிதி ஜோஹரிடம் வந்து அந்தத் தூதன் சிவாஜியின் மடலைத் தந்தான்.

சிதி ஜோஹர் ஆர்வத்துடன் மடலைப் படித்தான்.

”பீஜாப்பூர் படைத்தலைவருக்கு சிவாஜியின் வணக்கங்கள்.

பன்ஹாலா கோட்டையை நான் முன்பிருந்ததை விட வலிமைப்படுத்தி இருக்கிறேன். உங்கள் முற்றுகையை இனியும் பல மாதங்கள் தாங்கும் அளவு தேவையான அனைத்தையும் தங்கள் படையெடுப்பை முன்பே அறிந்து நான் சேர்த்தும் வைத்திருக்கிறேன்.

தாங்களும் விடாமுயற்சியோடு மழையிலும், வெயிலிலும் தாக்குப்பிடித்து நிற்பதை ஒரு தலைவன் என்ற முறையில் நான் பாராட்டுகிறேன். ஆனால் மழையிலும் வெயிலிலும் நின்று இப்போதே சலித்திருக்கும் வீரர்கள் இனி எத்தனை நாட்கள் தாக்குப் பிடிப்பார்கள் என்ற கேள்வி தங்கள் மனதிலும் எழுந்திருக்கும். ஏனென்றால் எத்தனை நாட்கள் இப்படி இங்கே அடைந்தே கிடப்பது என்ற கேள்வி என் மனதில் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. மனைவி, பிள்ளை, தாய் குடும்பம் என்ற யோசனைகள் அதிகமாக என் மனதில் எழ ஆரம்பித்திருக்கின்றன. உங்கள் மனதிலும், உங்கள் படைத்தலைவர்கள் மனதிலும், வீரர்கள் மனதிலும் கூட அந்த எண்ணங்களும், மாதக்கணக்கில் நீண்டிருக்கும் இந்த முற்றுகையில் சலிப்பு தோன்ற ஆரம்பித்திருக்கும் என்று எண்ணுகிறேன்.  அதில் தவறில்லை. ஏனென்றால் நாம் மனிதர்கள்.

வீரம் என்பது சிந்திக்க மறுப்பது என்றாகி விடலாகாதல்லவா? அதனால் இரு பக்கமும் மாதக்கணக்கில் தாக்குப்பிடித்துச் சலித்திருக்கும் இந்தத் தருணத்தில் இந்த பன்ஹாலா கோட்டையைத் தங்களிடம் ஒப்படைத்து விட நான் உத்தேசித்து இருக்கிறேன். இது குறித்து தாங்கள் விரிவாகப் பேச அழைத்தால் பேச்சு வார்த்தைக்கு வரத் தயாராக இருக்கிறேன்.

இப்படிக்கு
சிவாஜி”

சிதி ஜோஹர் ஃபசல்கானுடனும், மற்ற படைத்தலைவர்களுடனும் கலந்தாலோசித்தான். மற்ற படைத்தலைவர்களில் அதிகமான ஆட்கள் “கோட்டையை அவன் ஒப்படைக்கத் தயாராக இருந்தால் பேசிப்பார்ப்பதில் தவறில்லை” என்றார்கள்.

ஃபசல்கான் சொன்னான். “இப்படித்தான் என் தந்தையிடமும் சொல்லிப் பேச்சு வார்த்தைக்கு சிவாஜி அழைத்தான். நம்பிப் போன அவரைக் கொன்றான். அவனை நம்ப முடியாது”

சிதி ஜோஹர் யோசித்தான்.


(தொடரும்)
என்.கணேசன்

Sunday, June 23, 2019

கர்மா, குழந்தை வளர்ப்பு, குடும்ப நிம்மதி!

இப்போதெல்லாம் கர்மா என்ற வார்த்தையை அதிகம் கேட்க நேரிடுகிறது. அது எப்படி உருவாகிறது, பின் விதியாக மாறுகிறது என்ற சிறிய அலசல் இந்தக் காணொளி. இதில் குடும்பத்தில், குழந்தை வளர்ப்பில் நாம் செய்யக்கூடிய தவறுகள் எவை?, செய்ய வேண்டியவை எவை? எதில் அதிகம் தங்குகிறோம், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? நிம்மதியை அதிகமாக எப்படித் தொலைக்கிறோம், நன்மை தரும் போக்கில் நம் வாழ்க்கையை அமைப்பது எப்படி ? என்ற கேள்விகளுக்குச் சுருக்கமாகப் பதில் தரும் வகையில் அமைந்த பேச்சு...




என்.கணேசன்

Friday, June 21, 2019

வெற்றிக்கும் உயர்வுக்கும் வழிகாட்டும் வீரசிவாஜி!

இந்திய மன்னர்களில் நான் அதிகம் ரசித்துப் படித்தது சத்ரபதி சிவாஜியைத் தான். சிறுவயதிலிருந்து சிவாஜியைப் பற்றி அதிக நூல்களைப் படித்து ரசித்ததால் தான் பின் “சத்ரபதி” நாவல் எழுதத் தூண்டப்பட்டேன். அதற்காக மறுபடியும் பல நூல்கள், வரலாற்றுக் குறிப்புகள் படிக்க வேண்டி வந்தது. அப்போது சிவாஜி மேல் இருந்த ஈர்ப்பும், மதிப்பும் பன்மடங்கு உயர்ந்தது.

சமீபத்தில் சிவாஜியைப் பற்றிப் பேச ’சேனல் ஆர்ட் இந்தியா’ என்னைக் கேட்டுக் கொண்ட போது சிவாஜியிடம் இருந்து ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டிய குணாதிசயங்களையும், சிவாஜியின் உயர்வையும் பற்றிப் பேசினேன்.

அதன் காணொளி இதோ...




என்.கணேசன்

இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


Thursday, June 20, 2019

இல்லுமினாட்டி 1

”அன்பு வாசகர்களே,

வணக்கம். இல்லுமினாட்டி நாவல் இருவேறு உலகத்தின் இரண்டாம் பாகமாக இருந்த போதிலும் தனி நாவலாகப் படித்தாலும் முக்கியமானவை எதுவும் விடுபட்டு விடாமல் புரிந்து கொள்ளும்படியாக எழுதப்பட்டிருப்பதால் சில பகுதிகளில் பழைய நிகழ்வுகள் சுருக்கமாக சொல்லப்பட்டிருக்கின்றன. அதனால் இருவேறு உலகத்தைப் படித்தவர்களுக்கு அது திரும்பவும் சொல்லப்படுவது போல் தோன்றக்கூடும். அதன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அந்தப் பகுதிகளைக் கடக்கவும்.

பல தீவிர வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அமானுஷ்யன் அக்‌ஷய் முக்கியக் கதாபாத்திரமாக இல்லுமினாட்டியில் வருகிறான் என்ற மகிழ்ச்சியான செய்தியை அந்த வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி புதிய நாவலுக்குப் போகலாம், வாருங்கள்!

அன்புடன்

என்.கணேசன்


வன் பெயர் என்னவென்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அளவுக்கு அதிகமாய் போதை மருந்தை உட்கொண்டு ம்யூனிக் நகரத்  தெரு ஒன்றில் விழுந்து கிடந்த அவனை அந்த அரசு மருத்துவமனையில் இன்று காலை தான் போலீசார் சேர்த்திருந்தார்கள். அவனை அடையாளம் காட்டக்கூடிய ஆவணம் எதுவும் அவனிடம் இருக்கவில்லை. ஆறடி உயரமும், ஒடிசலான உடல்வாகும் கொண்டிருந்த அவன் முகவாய்க்கட்டையில் ஒரு ஆழமான கீறல் இருந்ததுஅந்த மருத்துவமனையின் மருத்துவர் குழு அவன் ஆசியாவைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்றும், அவன் வயது முப்பதுக்குள் இருக்கும் என்று கணித்திருந்தது. நீண்ட கால போதைப் பழக்கத்தினால் முன்பே கெட்டிருந்த அவன் உடல்நிலை கடைசியாக உட்கொண்ட அதிக போதை மருந்தால், மருத்துவமனையில் சேர்த்த போதே, அபாயக்கட்டத்தில் தான் இருந்தது.
  
அவனைப் பரிசோதித்த தலைமை மருத்துவர் அவனைச் சேர்த்த போலீசாரிடம் காலையிலேயே சொல்லியிருந்தார். “இவன் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை. இவன் குடும்பத்தைக் கண்டுபிடிக்க முடிந்தால் தெரிவித்து விடுங்கள்….”

“இவன் இந்த நகரத்தைச் சேர்ந்தவன் போலத் தெரியவில்லை. எங்கிருந்தோ இங்கு வந்திருக்கலாம்…..  இவன் புகைப்படத்தைப் பத்திரிக்கைகளுக்கும் டிவி சேனல்களுக்கும் அனுப்பி இவன் இங்கிருப்பதைத் தெரிவிக்கிறோம்” என்று சொன்னார்கள்.

அவர்கள் சொன்னபடியே இப்போது மாலை நாலரை மணிச் செய்தியில் அவன் படம் டிவியில் காட்டப்படுவதை தலைமை மருத்துவர் பார்த்தார். மருத்துவமனையின் விலாசத்தையும், தொலைபேசி எண்களையும் கூடவே தெரிவித்திருந்தார்கள். இதைப் பார்த்து விட்டு யாராவது இங்கு வரலாம். அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்தபடியே தலைமை மருத்துவர் கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே பார்த்தார்.

அவரது அறை இரண்டாவது மாடியில் இருந்ததால் தெரு முழுவதும் தெளிவாகத் தெரிந்தது. தெருக்கோடியில் ஒரு பெரிய கட்டிடத்தின் முன்பு ஒரு கருப்புக்கார் அப்போது தான் வந்து நின்றது. ஆஜானுபாகுவாக ஒருவன் இறங்கியதும், அவனைத் தொடர்ந்து கண்கள் கருப்புத்துணியால் கட்டப்பட்ட ஒரு இளைஞன் இறங்கினான். அவனைத் தொடர்ந்து இன்னொரு ஆஜானுபாகுவான ஆள் இறங்கினான். அவர் கூர்ந்து பார்ப்பதற்கு முன்பே அவர்கள் மூவரும் அந்தக் கட்டிடத்திற்குள் போய் விட்டார்கள்.

தலைமை மருத்துவருக்கு அந்தத் தெருக்கோடிக் கட்டிடமே ஏதோ ரகசியங்களும், ஆபத்தும் நிறைந்த இடமாகத் தோன்றியது. இன்று பிற்பகல் சுமார் மூன்று மணி அளவில் மிக விலை உயர்ந்த கார்கள் வரிசை வரிசையாக அங்கு வந்து சேர்ந்ததை அவர் கவனிக்க நேர்ந்தது. கார்களில் இருந்து இறங்கி உள்ளே சென்ற அனைவரும் செல்வந்தர்களாகவும், அதிகாரங்கள் படைத்தவர்களாகவும் தோன்றியிருந்தார்கள்….. இப்போது கண்களைக் கட்டி யாரையோ அழைத்துக் கொண்டு போகிறார்கள். அங்கு என்ன நடக்கிறது, நடத்துபவர்கள் யார் என்பதெல்லாம் தெரியவில்லை….

அவர் சிந்தனைகளைக் கலைத்தபடி நர்ஸ் ஒருத்தி அந்த அனாமதேய போதை மனிதனின் ஸ்கேன் ரிப்போர்ட்களை அவர் மேசையில் வைத்து விட்டுப் போனாள். தலைமை மருத்துவர் ஒருவித சலிப்புடன் வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் அந்தப் பெயர் தெரியாத போதை மனிதன் சாகப்போகிறான் என்றாலும் அவனுடைய எல்லா ரிப்போர்ட்களையும் ஃபைல் செய்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் அவை தேவைப்படலாம். உறவினர்கள் யாராவது வழக்கு போடும் வாய்ப்பும் இருக்கிறது. இறந்தும் அந்த மனிதன் பிரச்னையாகலாம்…..

அவர் அவனுடைய எல்லா ஸ்கேன் ரிப்போர்ட்களையும் பிரித்துப் பார்த்தார். அவன் பெயர் தெரியாததால் அந்த எல்லா ரிப்போர்ட்களிலும் பெயர் மிஸ்டர் எக்ஸ் என்றே இருந்தது. தலைமை மருத்துவர் முகத்தில் சின்னதாய் புன்னகை அரும்பியது. அவர் அந்த ரிப்போர்ட்களைப் படிக்க ஆரம்பித்தார். அந்த பரிசோதனைக் குறிப்புகள் எல்லாமே அவர் முன்பே எண்ணியிருந்தபடி மிக மோசமாகவே இருந்தன. அந்த ஆள் மரணத்தை நெருங்கி விட்டான். இனி அதிகபட்சம் ஓரிரு மணி நேரங்கள் தான் அவன் உயிரோடிருக்கும் வாய்ப்பிருக்கிறது…. அவன் இறந்த பின்னும் யாரும் உறவினர்கள் வரா விட்டால் அவன் பிணத்தை என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டும். அதில் நிறைய சட்டச்சிக்கல்கள் இருக்கின்றன. எல்லாம் விதிமுறைகளின்படி தான் கவனமாகச் செய்தாக வேண்டும்…..

தலைமை மருத்துவர் அந்தப் போதை மனிதனின் உடல்நிலை குறித்த ரிப்போர்ட்களை எல்லாம் தொகுத்து ஒரு சுருக்கமான அறிக்கை ஒன்றைத் தயார் செய்ய ஆரம்பித்தார். அவன் இறந்தவுடன் அவனைக் காலையில் சேர்த்து விட்டுப் போன போலீஸ்காரர்களுக்குப் போன் செய்து வரவழைத்து அவர்களிடம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துப் பேச வேண்டும்….

திடீரென்று எங்கிருந்தோ கிதார் இசை லேசாகக் கேட்க ஆரம்பித்தது. அந்தக் கிதார் இசை இனிமையாக இருந்த அதே நேரத்தில் சற்று அமானுஷ்யமாகவும் இருந்தது போல அவர் உணர்ந்தார். சில நிமிடங்களில் நர்ஸ் ஒருத்தி வேகமாக அவர் அறைக்குள் வந்து சொன்னாள். “டாக்டர் அந்தப் போதை மனிதன் எக்ஸ் கிட்டத்தட்ட இறந்து விட்டான் போல இருந்தது. அவனுடைய இதயத்துடிப்பு எல்லாம் குறைந்து கொண்டே வந்தது. ஆனால் திடீர் என்று இப்போது அவனுக்கு ஜன்னி வந்தது போல் உடம்பெல்லாம் நடுங்குகிறது…..”

சிலருக்கு மரணத்திற்கு முன்பு அப்படி ஆவது உண்டு என்பதால் தலைமை மருத்துவர் ஆச்சரியப்படவில்லை. அவன் அருகில் யார் இருக்கிறார்கள் என்று அவளிடம் விசாரித்தார். அவள் உதவி மருத்துவர் ஒருவரின் பெயரைச் சொன்னவுடன் அவர் திருப்தியடைந்தார். இப்போது அந்தக் கிதார் இசை தான் அவரைக் குழப்பியது.

“எங்கிருந்து இந்த கிதார் இசை கேட்கிறது?” என்று அவர் நர்ஸைக் கேட்டார். அவள் கண்களை மூடிக் கவனமாக அந்த இசை வரும் இடத்தை யூகிக்க முயன்றாள். முயற்சி செய்தும் அவளுக்கு முடிவாகச் சொல்ல முடியவில்லை. பக்கத்தில் தான் யாரோ வாசிப்பது போல அவளுக்குத் தோன்றியது. ஆனால் அந்த ‘பக்கத்தை’ உறுதியாக அவளால் சுட்டிக் காட்ட முடியவில்லை…. “சரியாகத் தெரியவில்லை” என்று தயக்கத்துடன் சொல்லி விட்டுப் பிறகு அதற்கு அதிக முக்கியத்துவம் எதுவும் தராமல் அவள் போய் விட்டாள்.

தலைமை மருத்துவர் எழுந்து போய் கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். வெளியே பார்வைக்குப் படுவது போல் யாரும் கிதார் வாசித்துக் கொண்டிருக்கவில்லை. ஏனோ அவர் தெருக்கோடியில் இருந்த அந்தப் பெரிய கட்டிடத்தைப் பார்த்தார். அங்கும் கட்டிடத்திற்கு வெளியே யாரும் தெரியவில்லை. கண்களை மூடி அவரும் கிதார் இசை வரும் இடத்தை அறிய முயன்றார். இந்த மருத்துவமனைக்குள்ளேயே தான் அந்த இசை கேட்பது போல் இருந்தது.

‘இந்த இசை எங்கிருந்து கேட்டால் நமக்கென்ன’ என்பது போல தோள்களைக் குலுக்கிக் கொண்டு அவர் மறுபடியும் அந்த அறிக்கை தயாரிக்கும் வேலையைத் தொடர்ந்தார். கால் மணி நேரத்திற்குப் பின் எக்ஸ் அருகே இருந்த அந்த உதவி மருத்துவரே வந்தார். ”அவன் பிழைத்துக் கொள்வான் போலிருக்கிறது டாக்டர். அவன் உடல்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்திருக்கிறது…..”

தலைமை மருத்துவர் திகைப்புடன் அவரைப் பார்த்தார். அவர் முன்னால் இருக்கும் ரிப்போர்ட்கள் எதிலும் அவன் பிழைத்துக் கொள்வதற்கான அறிகுறிகள் ஒரு சதவீதம் கூட இருக்கவில்லை….. அவர் குழப்பத்துடன் மெல்ல எழுந்தார். கிதார் இசை இப்போதும் கேட்டுக் கொண்டு தானிருந்தது.

இருவரும் சேர்ந்து மிஸ்டர் எக்ஸ் இருக்கும் பகுதியை நோக்கிச் செல்கையில் தலைமை மருத்துவர் அந்த உதவி மருத்துவரிடம் கேட்டார். “கிதார் இசை எங்கேயிருந்து கேட்கிறது?”

உதவி மருத்துவர் சொன்னார். “இந்த ஆஸ்பத்திரியிலேயே யாரோ வாசிக்கிற மாதிரி தான் தெரிகிறது…. எங்கேயிருந்து என்று சரியாகத் தெரியவில்லை…”

அடுத்த சில நிமிடங்களில் தலைமை மருத்துவர் அந்தக் கிதார் இசை உட்பட அனைத்தையும் மறந்து போனார். மிஸ்டர் எக்ஸின் உடலில் தெரிய ஆரம்பித்த மாற்றங்கள் இது வரை அவர் படித்திருந்த மருத்துவத்தைக் கேலி செய்வது போல் இருந்தன. அவர் போன போது அவன் உடலின் வெப்பம் அபாயக்கட்டத்தையும் மீறி அதிகமாக இருந்தது. உடல் அனலாய் கொதித்தது. தர்மாமீட்டர் 106 டிகிரி ஃபாரன்ஹீட் காட்டியது. ஆனால் அதனால் அவன் உடல் எந்தப் பெரிய பாதிப்புக்கும் ஆளாகவில்லை. மிகக்குறைவாக இருந்த இதயத்துடிப்பு சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டு வந்தது. தலைமை மருத்துவருக்கு அவன் உடலில் அசாதாரணமாக என்னென்னவோ நடந்து கொண்டிருப்பது போல் தோன்றியது. ஆனால் எதுவுமே அவன் வாழ்க்கையை முடிக்கிற விதமாய்த் தெரியவில்லை….

திடீரென்று அவன் கண் விழித்தான். அவன் கண்கள் அமைதியாக அவர்களைப் பார்த்தன.

தலைமை மருத்துவர் குனிந்து அவனிடம் கேட்டார். “நீ யார்? உன் பெயர் என்ன?”

(தொடரும்)
என்.கணேசன்


இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


Wednesday, June 19, 2019

விதியை வெல்லுமா ஜோதிடம்?

எல்லாமே முன்கூட்டியே எழுதியிருக்கிறது, அதன்படி தான் நடக்கும் என்றால் ஜாதகம் பார்ப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது?  பார்த்து என்ன பயன்? என்ற நியாயமான கேள்வி பலரிடமிருந்தும் வருவதுண்டு. சிலர் பரிகாரம் என்று ஏதேதோ சொல்கிறார்களே அதன்படியெல்லாம் செய்தால் எல்லாப் பிரச்சினைகளும் சரியாகி விடுமா என்ற உண்மையான சந்தேகமும் பலருக்கு வருவதுண்டு. இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக ’சேனல் ஆர்ட் இந்தியா’வுக்கு நான் தந்த பேட்டி...



என்.கணேசன்

Monday, June 17, 2019

சத்ரபதி 77


ரங்கசீப் எதிர்பார்த்தபடியே சும்மா இருந்து விட முடியாத அலி ஆதில்ஷா சிவாஜியை அடக்க வழியைத் தேடிக் கொண்டிருந்த போது சிவாஜி நான்கு சிறிய கோட்டைகளையும், பெரிய வலிமையான கோட்டைகளான பன்ஹாலா கோட்டையையும், கேல்னா கோட்டையையும் சிவாஜி கைப்பற்றி முடித்திருந்தான். மொத்தமாக ஆறு கோட்டைகளை இழந்த செய்தி கிடைத்தவுடன் அலி ஆதில்ஷா  நிம்மதியையும் தூக்கத்தையும் இழந்தான். கடைசியில் ரஸ்டம் ஜமான் என்ற அனுபவம் வாய்ந்த தளபதியை சிவாஜியை வெல்ல அனுப்பி வைத்தான். ரஸ்டம் ஜமான் பன்ஹலா கோட்டையின் அருகே வரும் வரை அமைதி காத்த சிவாஜி ரஸ்டம் ஜமான் படையுடன் நெருங்கியதும் தீவிரமாகத் தாக்கித் துரத்தியடித்தான். பீஜாப்பூர் நகர எல்லை வரை ரஸ்டம் ஜமானைப் பின் தொடர்ந்து வந்து வரும் வழியில் கிடைத்த செல்வத்தை எல்லாம் சிவாஜி எடுத்துக் கொண்டு போனது அலி ஆதில்ஷாவுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல வேதனைக்குள்ளாக்கியது.

அடுத்தது யாரை அனுப்ப என்று அவன் யோசித்த போது அப்சல்கானின் மூத்த மகன் ஃபசல்கான் சிவாஜியைப் பழிவாங்கத் துடிப்பதாகச் சொன்னான். ஆனால் அவனும் பீஜாப்பூர் படைக்குத் தனியாகத் தலைமை தாங்கிப் போக விரும்பவில்லை. சிவாஜியைச் சமாளிக்கத் தன் ஒருவன் தலைமை மட்டும் போதாது என்று அவன் நினைத்தான். அனுபவம் வாய்ந்த மாவீரர்களுடன் சேர்ந்து இருமுனை அல்லது மும்முனைத் தாக்குதல் நடத்தினால் தான் சிவாஜியை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது என்று அவன் சொன்னான்.

அலி ஆதில்ஷா தன் ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தினான். அலி ஆதில்ஷாவின் மூத்த ஆலோசகர் ஒருவர் ஃபசல்கான் சொல்வது சரியே என்று தெரிவித்தார். “அரசே. அரைகுறை முயற்சிகள் தோல்வியிலேயே முடியும். அடிக்கடி தோல்வியுறுவது படையின் மனோபலத்தைச் சிதைத்து விடும். அதனால் ஃபசல்கான் சொன்னபடியே இரண்டு மூன்று அணிகளாகப் பல பக்கங்களிலிருந்தும் தாக்குதல் நடத்துவதே புத்திசாலித்தனம்”

அலி ஆதில்ஷா கேட்டான். “ஃபசல்கான் அல்லாமல் வேறு யாரை இதில் சேர்க்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

“சிவாஜியைச் சமாளிக்க வீரமும், பலமும் மட்டுமே போதுமானதல்ல என்பதை அப்சல்கானை அனுப்பிய அனுபவத்திலேயே நாம் அறிந்து கொண்டோம். சிவாஜியைச் சமாளிக்க அவனைப் போலவே அதிசாமர்த்தியமும், மனவலிமை படைத்தவனும் தான் நம் படைக்குத் தலைமை தாங்கத் தேவை. அதையெல்லாம் பார்க்கையில் சிதி ஜோஹர் என் நினைவுக்கு வருகிறான்…..”

சிதி ஜோஹர் பெயரைக் கேட்டதும் அலி ஆதில்ஷாவின் நெற்றி சுருங்கியது. சிதி ஜோஹர் பீஜாப்பூர் ராஜ்ஜியத்திற்குட்பட்ட கர்னூல் பகுதியின் தலைவன். சில காலமாக அவன் ஒத்துழைப்பு போதவில்லை என்று அலி ஆதில்ஷா எண்ணி அவனுடன் பிணக்கம் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட குறுநில மன்னனைப் போல் சிதி ஜோஹர் இயங்க ஆரம்பித்திருந்தது அவனுக்குப் பிடிக்கவில்லை.

மூத்த ஆலோசகர் ஆதில்ஷாவிடம் சொன்னார். ”மன்னா. அறிவும், ஆற்றலும் கொண்டவன் எப்போதும் அனுசரணையும் கொண்டவனாக இருப்பதில்லை. இப்போதைக்கு சிவாஜி என்ற நம் மிகப்பெரிய எதிரியைச் சமாளிக்க சிதி ஜோஹர் போன்றவனே சரியானவன். நீங்கள் அவனை அழைத்து இந்தப் பொறுப்பை ஒப்படைத்தால் அவனும் தன் ஆற்றலை நிரூபிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம் எனச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வான். இங்கிருக்கும் மற்றவர்கள் சிவாஜியை எதிர்க்கப் பயப்படுகிறார்கள். அவர்களுக்கு அந்தத் திறனும் இல்லை என்பதே உண்மை.”

அலி ஆதில்ஷா சிறிது தயங்கி விட்டுப் பிறகு சம்மதித்தான். சிவாஜியை யாராவது அடக்கினால் சரி என்ற மனநிலையே அவனிடம் அப்போது இருந்தது.


கேல்னா கோட்டையைக் கைப்பற்றிய பிறகு அதற்கு விஷால்கட் என்று சிவாஜி பெயரிட்டிருந்தான். விசாலமான கோட்டை என்ற பொருளில் அந்தப் பெயர் வைக்கப்பட்டிருந்தது.  சமீபத்தில் அவன் கைப்பற்றிய பன்ஹாலா மற்றும் விஷால்கட் கோட்டைகளில் தான் சிவாஜி மாறி மாறித் தங்கி வருகிறான். அந்தக் கோட்டைகளில் இருந்தபடி பீஜாப்பூர் ராஜ்ஜியத்தின் பல பகுதிகளை அவனால் கைப்பற்ற முடியும். அந்த அளவு வசதியான இடத்தில் தான் சில மைல்கள் தொலைவிலேயே அந்தக் கோட்டைகள் இரண்டும் அமைந்திருந்தன. பன்ஹாலா கோட்டையில் அவன் தங்கியிருக்கும் போது தான் சிதி ஜோஹர், ஃபசல்கான் இருவர் தலைமைகளில் இரண்டு அணிகள் படையெடுத்து வருவதாக சிவாஜிக்குத் தகவல் வந்தது.

தகவல் கொண்டு வந்த ஒற்றன் சொன்னான். “இந்த முறை படைபலமும் பெரிதாக இருக்கிறது மன்னா”

சிவாஜி அப்சல்கான் கிளம்பிய செய்தி கேட்டு அதிர்ந்த அளவு இந்தச் செய்தி கேட்டு அதிரவில்லை. ஆனால் ஒற்றன் அவனை எச்சரித்தான். “சிதி ஜோஹர் மாவீரன் மட்டுமல்ல அரசே. எடுத்த காரியத்தை முடிக்காமல் விடாத பிடிவாதமும், விடாமுயற்சியும் கொண்டவன்.”

சிவாஜி யோசனையுடன் அந்த ஒற்றனைப் பார்த்தான். சிதி ஜோஹர் மாவீரன் என்பதைத் தவிர அவனைப் பற்றி சிவாஜி அதிகம் அறிந்திருக்கவில்லை. அவன் ஒற்றர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே சொல்லி வரும் அறிவுரை “பாதகமான அம்சங்களை என்னிடம் தெரிவிக்கத் தயங்காதீர்கள்” என்பது தான். சாதகமான அம்சங்களை ஒரு தலைவன் அறிந்திருப்பதை விடப் பாதகமான அம்சங்களை ஒரு தலைவன் அறிந்திருப்பது மிக முக்கியம் என்று சிவாஜி நினைத்தான். தோல்விக்கான விதைகளைக் கண்டுபிடிப்பதும், வளர்வதற்கு முன்பே அழிப்பதும் அத்தியாவசியம் என்று நினைப்பவன் அவன். சிதி ஜோஹர் பற்றி ஒற்றன் தெரிவித்த அந்தக் கருத்தை அவன் அலட்சியப்படுத்தவில்லை. ஆனாலும் போதுமான அளவு முக்கியத்துவம் தரவும் தவறினான்….


சிதி ஜோஹர் உற்சாகமாகத் தான் பீஜாப்பூரை விட்டுக் கிளம்பி இருந்தான். தற்போதைய சுல்தான் அலி ஆதில்ஷாவுடனான அவன் உறவு சுமுகமாக இல்லை என்றாலும் அலி ஆதில்ஷா அவனை அழைத்து இந்தப் பொறுப்பைக் கொடுத்து இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் மிக உயர்ந்த பதவியையும், சில கோட்டைகளையும், பொன்னும், மணியும், செல்வமும் தந்து கௌரவிப்பதாக உறுதியும் அளித்தது அவனை உற்சாகத்தில் ஆழ்த்தியிருந்தது. குறுகிய நிலப்பகுதியில் ஆண்டு கொண்டிருந்தவனை ராஜ்ஜியத்தின் கதாநாயகனாக உயர்த்தி விட்ட அலி ஆதில்ஷா மீது அவனுக்கு முன்னம் இருந்த பிணக்கு தீர்ந்தது. சிவாஜியைப் பிடித்து வரவோ, சாகடிக்கவோ முடியா விட்டால் குறைந்த பட்சம் பன்ஹாலா கோட்டையையாவது மீட்டுக் கொடுக்கும்படி அலி ஆதில்ஷா சிதி ஜோஹரிடம் கேட்டுக் கொள்ள சிதி ஜோஹர் சம்மதித்தான்.

சிதி ஜோஹர் புத்திசாலி. மாவீரன். கடும் உழைப்பாளி. நல்ல தலைவன். அவன் எப்போதும் களத்தில் இருந்து பணியாற்ற சலிக்காதவன். இந்த முயற்சியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று எண்ணியவன் கிளம்புவதற்கு முன்பே ஃபசல்கானிடம் சிவாஜியைப் பற்றிய கூடுதல் விவரங்களைக் கேட்டறிந்து கொண்டான்.

“உங்கள் திட்டம் என்ன தலைவரே?” என்று ஃபசல்கான் கேட்டான்.

“பல்ஹானா கோட்டையை நாம் முற்றுகையிடப் போகிறோம். அங்கு தான் சிவாஜி தற்போது இருப்பதாக ஒற்றர்கள் மூலம் செய்தி கிடைத்திருக்கிறது. முன்னால் என் படைப்பிரிவு போகட்டும். பின்னால் உன் படைப்பிரிவு இருக்கட்டும். என்ன ஆனாலும் சரி. நாம் சிவாஜியைத் தப்ப விடக்கூடாது.” சிதி ஜோஹர் சொன்னான்.

ஃபசல்கான் கேட்டான். “ஒருவேளை சிவாஜி அங்கில்லா விட்டால்? அவன் விஷால்கட் கோட்டையிலும் சில சமயங்களில் தங்குவதாக எனக்குத் தகவல் கிடைத்திருக்கிறது”

சிதி ஜோஹர் சொன்னான். “என் ஒற்றன் சிவாஜி பன்ஹாலா கோட்டையில் தான் தற்போது தங்கியிருப்பதாகத் தெரிவித்தான். ஒருவேளை சிவாஜி பன்ஹாலா கோட்டையிலிருந்து விஷால்கட்டிற்கு நாம் போவதற்குள் இடம் பெயர்ந்தாலும் ஒற்றர்கள் மூலம் செய்தி கிடைக்கும். அப்படி நேர்ந்தால் பின் அதற்குத் தகுந்தாற்போல் நம் திட்டத்தை மாற்றிக் கொள்வோம்.”


ஃபசல்கான் தலையசைத்தான். அவன் சில நாட்களாகப் பழகும் சிதி ஜோஹரிடம் அவன் கண்ட சிறந்த பண்பு சிதி ஜோஹரிடம் எந்த நேரத்திலும் என்ன செய்வது என்ற தெளிவு உறுதியாக இருந்தது தான். முடிவெடுக்கும் வரை நிறைய யோசிக்கும் அவன் முடிவெடுத்த பின் மாறாமல் ஒரே நிலையில் செயல்பட முடிந்தவனாகவே இருந்தான். ஃபசல்கானுக்கு இவன் ஜெயிப்பான் என்று தோன்றியது. தந்தையைக் கொன்ற சிவாஜியைப் பழிவாங்க இவன் கண்டிப்பாக உதவுவான் என்று நம்பிக்கை பிறந்தது.


(தொடரும்)
என்.கணேசன்

Thursday, June 13, 2019

இருவேறு உலகம் – 140


க்ரிஷ் தன் பேச்சை முடித்த போது தான் அந்த இல்லுமினாட்டி சின்னம் ஒளிர்வதை நிறுத்தியது. மீண்டும் அரங்கில் இருள் பரவியது. கடைசியில் மின் விளக்குகளைப் போட்ட போது அத்தனை விளக்குகளும் சேர்ந்தும் அந்தச் சின்னம் ஏற்படுத்தியிருந்த ஒளி வெள்ளத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் போனதை அங்கிருந்தவர்கள் அனைவருமே கவனித்தார்கள். ஒரு நிமிடம் நீண்ட மௌனத்திற்குப் பின் கைதட்டல் அரங்கை அதிர வைத்தது. க்ரிஷ் கண் முன்னால் இருந்த குகைக்காட்சியும் மாஸ்டருடன் சேர்ந்து மறைந்தது. மறைவதற்கு முன் மாஸ்டர் தன் பிரிய சீடனைப் பார்த்து பேரன்போடு புன்னகைத்தார். க்ரிஷ் அவருக்கு மீண்டும் தலைவணங்கினான்.

எர்னெஸ்டோ தன் முன்னால் இருந்த மைக்கை எடுத்தார். “இளைஞனே, நீ இல்லுமினாட்டியில் இணைகிறாயா?”

இந்தக் கேள்வியில் க்ரிஷ் மட்டுமல்லாமல் மற்ற உறுப்பினர்களும் ஆச்சரியப்பட்டார்கள். க்ரிஷுக்குச் சிரிக்கத் தோன்றியது. “நானா, இல்லுமினாட்டியிலா?” மாட்டேன் என்பது போல அவன் தலையசைத்தான்.

எர்னெஸ்டோ சொன்னார். “இளைஞனே நீ இன்று சொன்ன வார்த்தைகளை இல்லுமினாட்டி என்றும் நினைவு வைத்திருக்கும். இந்தக் கணத்தில் எங்கள் இல்லுமினாட்டி தவசி அகஸ்டின் உன் மூலம் சொன்னதாக நாங்கள் உணரும் இந்த உயர்ந்த உணர்வுகள் நாளைக் காலை எத்தனை பேருக்கு எத்தனை சதவீதம் தங்கும் என்பதை உறுதியாக என்னால் கூற முடியாது. இன்னும் சில நாட்கள் போன பின் கண்டிப்பாக இதே உணர்வுகளை இதே அளவிலும் இதே உறுதியிலும் உறுப்பினர்கள் பின்பற்றுவார்கள் என்று கூற முடியாது. மனித இயல்பை நீண்ட காலம் கவனித்து வந்ததால் தான் இதை வருத்தத்துடன் கூறுகிறேன். இந்த உயர்ந்த உணர்வுகள் நீர்த்துப் போகாமல் இருக்க வேண்டுமென்றால் உன்னைப் போன்றவன் எங்களுடன் இணைந்து இருக்க வேண்டும்.”

அறிவும், நல்ல மனமும் சேர்ந்திருக்கும் மனிதர்களாலேயே எந்த ஒரு சமுதாயமும் மேம்பட்டிருக்கிறது. வளர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட மனிதர்கள் பொது நலனில் அக்கறை காட்டாத போது அழிந்திருக்கிறது.  நல்ல மனிதர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் போது எல்லாமே நாசமாகிப் போகிறது  என்று உன் ஏலியன் நண்பன் சொன்னதாய்ச் சொன்னாய். இல்லுமினாட்டி என்ற இந்த இயக்கம் உலக நிகழ்வுகளின் போக்கை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்த ஒரு இயக்கமாக இருக்கிறது. அதில் சேர வாய்ப்பு கிடைத்த போதும் நீ சேரத் தயங்கினால் அறிவுரை சொல்ல மட்டுமே நீ, அதைக் களத்தில் இறங்கி செய்து காட்டக் கிடைக்கும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறாய் என்றாகி விடாதா? உன் ஏலியன் நண்பனுக்கும், உன் மனசாட்சிக்கும் நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?”

க்ரிஷ் இதை எதிர்பார்க்கவில்லை. அவர் சொல்வதெல்லாம் உண்மை. ஆனால் அவன் சாதாரண அரசியலில் இறங்கக்கூடத் தயங்கியவன். உதய் ஒரு முறை கேட்டது நினைவுக்கு வந்தது. “வாய்கிழிய அரசியல்வாதிகளைப் பத்திப் பேசறியே. அரசியல்ல இறங்கி தான் பாரேன். அப்ப தெரியும் ஒரு அரசியல்வாதிக்கு எத்தனை கட்டாயங்கள் இருக்குன்னு…” மாநில அரசியலுக்கு வரக்கூடக் கூசிய அவனை உலக அரசியலுக்கு இவர் கூப்பிடுகிறார்…..  என்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்று எண்ணியபடி அவன் கை பிரமிடு-கண் சின்னத்தில் பட்ட போது. அது அவனைப் பேச வைத்தது போலத் தோன்றியது. அவன் சொன்னான். “இணைகிறேன்”. கடைசியாய் ஒரு முறை அந்தச் சின்னம் மிகப்பிரகாசமாய் ஒளிர்ந்து மங்கியது.

க்ரிஷுக்குத் தன் குரலையே நம்ப முடியவில்லை. கரகோஷம் மறுபடி இரட்டிப்பாகக் கேட்க ஒருவர் வேகமாக வந்து க்ரிஷின் கண்கட்டை அவிழ்த்தார். “இல்லுமினாட்டிக்கு வரவேற்கிறேன் இளைஞனே” என்று முதல் ஆளாக வந்து எர்னெஸ்டோ கைகுலுக்கினார். அவர் பின்னால் மற்றவர்களும் வாழ்த்திக் கைகுலுக்கிக் கொண்டிருக்கையில் ஒருவர் பரபரப்புடன் வந்து விஸ்வம் இறந்து விட்ட செய்தியைச் சொன்னார்.



விஸ்வத்தின் பிணம் ம்யூனிக் நகரின் மின்மயானத்தில் எரிக்கப்பட்ட போது அவனது ஒரே நண்பனாக க்ரிஷ் தான் முன்னால் நின்று கொண்டிருந்தான். நவீன்சந்திர ஷா உட்பட யாருமே இறந்து போயிருந்த மனிதன் குறித்த நல்ல நினைவுகளுடன் இருக்கவில்லை. அந்தச் சின்னம் க்ரிஷைத் தான் அடையாளம் காட்டுகிறது என்று புரிந்த பிறகு, அகஸ்டின் அவர் கையால் அந்தச் சின்னத்தை அவனிடம் கொடுத்தார் என்பதும், அவன் கனவுகளில் வந்த காட்சிகள் பற்றிச் சொன்னதும் எல்லாமே பொய் என்பது தெளிவாக அவர்களுக்குப் புரிந்து விட்டது. நவீன்சந்திர ஷா விஸ்வத்தை அறிமுகப்படுத்தியதற்காக எர்னெஸ்டோவிடம் வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். “அவன் இப்படி ஏமாற்றுப் பேர்வழியாக இருப்பான் என்று நான் நினைத்தே இருக்கவில்லை தலைவரே”


எர்னெஸ்டோ நவீன்சந்திர ஷாவின் தோளைத் தட்டிக் கொடுத்துச் சொன்னார். “அவன் நம்மோடு சேர்ந்திருக்கா விட்டால் க்ரிஷ் நமக்குக் கிடைத்திருக்க மாட்டான்….. நடந்ததெல்லாம் நன்மைக்கே”

மின்மயானத்தில் நின்றிருக்கையில் உண்மையாகவே க்ரிஷ் விஸ்வத்திற்காக வருத்தப்பட்டான். அவன் விஸ்வத்தை முதல் முதலில் நேரில் பார்ப்பதே பிணமாகத் தான். ஆனால் எத்தனையோ உயரங்களுக்குப் போய் ஜொலித்திருக்க வேண்டிய ஒரு மனிதனின் வாழ்க்கை இப்படி முடிந்ததில் அவனுக்குப் பெரும் வருத்தமே! “நண்பனே, நல்ல விளைவை விரும்புபவன் நல்ல வினைகளையே செய்ய வேண்டும். எத்தனை சாமர்த்தியம் சக்தி இருந்தாலும் வினையை விதைத்து தினையை அறுவடை செய்து விட முடியாது. அது மாற்ற முடியாத பிரபஞ்ச விதி! அடுத்த பிறவியாலாவது எல்லாம் வல்ல இறைவன் உனக்கு இந்தப் பிறவியில் இருந்த அக்னி, உழைப்போடு நல்ல மனதையும் சேர்ந்து கொடுத்து புதிய வாழ்க்கை ஆரம்பிக்கச் செய்யட்டும்” என்று மனமாரப் பிரார்த்தித்து நின்றான்.

எர்னெஸ்டோ அவனுக்குச் சற்றுப் பின்னால் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அரங்கத்தில் பேசும் போது நம் நண்பர் என்று சொல்லி நார் நாராகக் கிழித்தாலும் அந்த மனிதன் இறந்து விட்ட பிறகு மனமுருக அந்த ஆத்மாவுக்காகப் பிரார்த்தித்து நிற்கும் இந்த இளைஞனை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.  அவனிடம் இல்லுமினாட்டியில் இணையக் கேட்ட போதும் அவன் இணைய ஒத்துக் கொள்வான் என்று அவர் பெரிய நம்பிக்கை வைத்திருக்கவில்லை. ஆனால் அவன் ஒத்துக் கொண்டது அவருக்கு மகிழ்ச்சியையும், எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையையும் கொடுத்தது….. ஈரமான விழிகளுடன் திரும்பியவனைத் தட்டிக் கொடுத்து வெளியே அழைத்து வந்தார்.

’ஒரு இல்லுமினாட்டி தான் இல்லுமினாட்டி என்பதைத் தன் குடும்பத்திற்குக் கூடத் தெரியப்படுத்துவதில்லை. இல்லுமினாட்டியின் நடவடிக்கைகள் குறித்து மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை…’ என்ற மிக முக்கிய ரகசியப் பிரமாணம் உட்பட பல உறுதிமொழிகள் எடுத்து இல்லுமினாட்டியின் உறுப்பினராகக் கையெழுத்துப் போட்டு விட்டு வந்த போது க்ரிஷுக்கு கூட எல்லாமே அவனை மீறி நடப்பது போல மலைப்பாகவே இருந்தது.  அனைவரிடமும் விடை பெற்றுக் கிளம்பினான். வழியனுப்ப விமானநிலையத்திற்கு விஸ்வேஸ்வரய்யா வந்திருந்தார். அவருக்கு அவன் அங்கு வந்து அருமையாக பேசியதிலும், மற்றவர்கள் மனம் வென்றதிலும் இல்லுமினாட்டியில் இணைந்ததிலும் அளவுகடந்த மகிழ்ச்சி. அதை அவனிடம் மனமாரத் தெரிவித்தார்.

விமானம் ஏறுவதற்கு முன் க்ரிஷ் போன் செய்து உதயிடமும், ஹரிணியிடம் பேசினான். இருவரிடமும் எதிரி முடிந்தான், ஆபத்தும் முடிந்தது என்று தெரிவித்த போது இருவரின் வார்த்தைகள் வராத கண்ணீரையும் அவனால் உணர முடிந்தது. இருவரும் சந்தோஷம் தாங்காமல் திக்குமுக்காடியதையும் உணர்ந்தான். அவன் விழிகளும் ஈரமாயின.


க்ரிஷ் இல்லுமினாட்டி அரங்கத்தில் பேசிய பேச்சின் ஒளிநாடா, ஒலிநாடா, எழுத்துவடிவம், மூன்றும் அந்த பிரமிடு-கண் சின்னத்தோடு வாஷிங்டன் நகரத்தின் இரகசியக் காப்பறையில் சிகாகோ பழஞ்சுவடியோடு சேர்ந்து எர்னெஸ்டோ, வழுக்கைத் தலையர் இருவராலும் சேர்ந்து வைக்கப்பட்டன. அந்தப் பிரமிடு கண் சின்னம் தன் வேலை முடிந்து விட்டதாலோ ஏனோ அதன் பிறகு ஒளிரவில்லை. வெறும் நினைவுச் சின்னமாகத் தங்கி விட்டது.

திரும்பி வருகையில் வழுக்கைத் தலையர் கேட்டார். “க்ரிஷ் இல்லுமினாட்டியில் சோபிப்பான் என்று நினைக்கிறீர்களா? அவன் மிகவும் மென்மையானவனாகத் தோன்றுவதால் கேட்கிறேன்…”

எர்னெஸ்டோ புன்னகைத்தார். “இல்லுமினாட்டி போன்ற ஒரு பயமுறுத்தும் இயக்கம் பேச  அழைத்தவுடன் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் தனியாக, தைரியமாக, கண்களைக் கட்டிக் கூட்டிப் போனாலும் பரவாயில்லை என்று வருபவன் பலவீனமாகவா உங்களுக்குத் தோன்றுகிறான்?”

வழுக்கைத் தலையர் யோசித்துப் பார்த்துப் புன்னகைத்தார். இந்த அளவு தைரியம் சாதாரணமாக யாருக்கும் வராது என்று அவருக்கும் தோன்றியது.

எர்னெஸ்டோ சொன்னார். “அந்த மென்மைக்குப் பின்னால் அவன் மிகவும் அழுத்தமானவனும் கூட. நீங்கள் என் வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள். அவன் கண்டிப்பாக இல்லுமினாட்டியில் சரித்திரம் படைப்பான்……” சொல்லும் போது கையில் புனிதச் சின்னத்தோடு பூரண தேஜஸுடன் அரங்க மேடையில் க்ரிஷ் நின்ற காட்சி அவருக்கு நினைவு வந்தது. அந்தக் காட்சி அவர் மனதில் மட்டுமல்ல அரங்கத்தில் இருந்த இல்லுமினாட்டி உறுப்பினர்கள் அனைவர் மனதிலும் மறக்க முடியாத காட்சியாய் என்றென்றும் தங்கியிருக்கும் என்று அவர் நினைத்துக் கொண்டார்.


விமானத்தில் செல்கையில் ஜன்னல்வழியே தெரிந்த மேகங்களைப் பார்க்கும் போது க்ரிஷுக்கு வேற்றுக்கிரகவாசி நினைவு வந்தது. வேற்றுக்கிரகவாசி நடந்ததை எல்லாம் தெரிந்து கொண்டு என்ன சொல்வான் என்று புன்னகையோடு யோசித்தான். சில மாதங்களில் அவன் வரும் போது சொல்ல வேண்டியது மட்டுமல்ல கேட்க வேண்டியதும் க்ரிஷுக்கு நிறைய இருந்தது. நினைவு வர வர கேள்விகளை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

மெல்ல அவன் மனம் ஆக வேண்டியதை யோசிக்க ஆரம்பித்தது. விஸ்வத்தின் மரணம் உடனடி பேரபாயத்தைத் தீர்த்திருக்கிறதே ஒழிய மற்றபடி எல்லாம் இருக்கிறபடி தான் இருக்கிறது என்பதை அவன் நினைவுபடுத்திக் கொண்டான். இல்லுமினாட்டியில் கூட அனைவரிடமும் உடனடியாய் பெரிய மாற்றம் வந்து விடாது என்று அவன் அறிவான். ஆனால் சின்னச் சின்ன மாற்றங்கள் கண்டிப்பாக உண்டாகும். உண்டாகும் படி அவனும், அவனைப் போன்ற மனிதர்களும் பார்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து ஏற்படுத்திக் கொள்ளும் சின்ன மாற்றங்கள் பெரிய மாற்றங்களில் முடியும்…. இப்போதைய விதைகள் நாளைய தளிர்கள் எதிர்கால விருட்சங்கள்…..

ஜன்னலில் இருந்து பார்வையைத் திருப்பிய போது பக்கத்தில் அமர்ந்திருந்த இந்தியப்பயணி ஒருவர் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருந்த கட்டுரைத் தலைப்பு  க்ரிஷ் பார்வையில் பட்டது. “இல்லுமினாட்டி இருப்பது உண்மையா?”

அவன் பார்வை அந்தக் கட்டுரையில் சற்றுத் தங்கியதைக் கவனித்த அந்தப் பயணி அவனிடம் கேட்டார். “நீங்கள் இல்லுமினாட்டி இருப்பது உண்மை என்று நினைக்கிறீர்களா?”

கண்ணிமைக்காமல் க்ரிஷ் புன்னகையோடு சொன்னான். “நானே ஒரு இல்லுமினாட்டி தான்”

அவன் நகைச்சுவை உணர்வு அந்தப் பயணிக்கு மிகவும் பிடித்திருந்தது. வாய்விட்டுச் சிரித்தவர் “சரியாகப் பதில் சொல்லி விட்டீர்கள். தெரிந்தும் இந்த மாதிரிக் கட்டுரைகளைப் படிக்காமல் இருக்க முடிவதில்லை….. சுவாரசியமாய் இருப்பது தான் காரணம்” என்று சொல்லி பத்திரிக்கையை மூடி வைத்தார்.

க்ரிஷ் முகத்தில் புன்னகை விரிந்தது…..

முற்றும்

என்.கணேசன் 



இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV