சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 28, 2019

இருவேறு உலகம் – 129


மாஸ்டர் பத்மாவதி பக்தியுடன் பரிமாறியதை ரசித்து சாப்பிட்டார். சாப்பிடும் போது மணீஷ் மரணம் உட்பட பல விஷயங்களை அவர்கள் பேசினார்கள். பேச்சோடு பேச்சாக இனி இமயமலைக்கே நிரந்தரமாய் சென்று விடும் தன் முடிவையும் மாஸ்டர் தெரிவித்தார். க்ரிஷிடம்
முகம் வெளிக்காட்டாத வாட்டத்தை உதய் உணர்ந்தான். மற்றவர்களும் வருத்தப்பட்டார்கள். கமலக்கண்ணன் க்ரிஷ், ஹரிணி இருவரையும் காட்டிக் கேட்டார். “இவங்க கல்யாணத்துக்கு நீங்க வருவீங்க இல்லையா?”

என் ஆசிர்வாதம் வரும்என்று சுருக்கமாய் மாஸ்டர் சொன்னார்.

சாப்பிட்ட பிறகு தனியாக ஹரிணி மாஸ்டரிடம் பேசினாள். மாஸ்டர் ஒரேயடியாக க்ரிஷை விட்டுப் போவது அவளுக்குக் கவலையைத் தந்தது. இப்போது க்ரிஷ் மனதையும் நேரத்தையும் முழுவதுமாக எடுத்துக் கொண்டிருக்கிற பிரச்னையை க்ரிஷ் தனியே சந்திக்க முடியுமா என்று கவலையோடு அவள் கேட்டாள். அவனால் முடியும் என்று அவர் உறுதியாகச் சொன்னார்.

மாஸ்டர் திரும்பத் திரும்ப கேட்கறேன்னு நீங்க தப்பா நினைக்கக்கூடாது. சில நேரங்கள்ல க்ரிஷோட தியானம், தனிமையில் யோசனை எல்லாம் என்னைப் பயமுறுத்துது. நான் அவனோட ஈடுபாடுல, கடமைகள்ல குறுகிட விரும்பல. ஆனா அதே சமயத்துல அவனை அதுல ஒரேயடியா இழந்துடவும் விரும்பலை….. மணிக்கணக்குல, நாள்கணக்குலன்னு இப்ப எல்லாம் அவன் மூழ்கிப் போயிடறப்ப ரொம்ப பயமா இருக்கு மாஸ்டர்….. எனக்குன்னு அவன் வாழ்க்கைல ஒரு இடம் இருக்குமில்லையா…. அவனை நான் இழந்துட மாட்டேனில்ல?” கேட்கும் போது அவள் கண்களில் ஈரம் தெரிந்தது. எத்தனை தான் புரிதலுடன் அவனுக்குத் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி இருந்தாலும் சில நேரங்களில் அவள் மனம் இப்படிப் பயமுறுத்தத் தான் செய்தது.

மாஸ்டர் அன்போடு சொன்னார். “என்கிட்ட அபூர்வ சக்திகளைப் படிக்க வர்றப்ப கூட அதுக்குக் காதல் தடையா இருக்குமான்னு க்ரிஷ் கேட்டான் ஹரிணி. ஒருவேளை நான் தடையாயிருக்கும்னு சொல்லியிருந்தா அவன் அந்த சக்திகளே வேண்டாம்னு விலகற மனநிலையில் இருந்தான். அந்த அளவுக்கு உன்னை உயிருக்குயிரா அவன் நேசிக்கிறான். அவன் மனசுல உன் இடத்தை வேற யாரும், வேற எதுவும் எடுத்துக்க முடியாது பயப்படாதே. இப்ப அவன் நேரத்தை அதிமுக்கியமான விஷயங்கள் எடுத்துகிட்டிருக்குங்கறது உண்மை தான். அது அவன் உதற முடியாத கடமைங்கறத ஞாபகம் வச்சுக்கோ. உதாரணத்துக்கு உன் அம்மாவுக்கோ, அவன் அம்மாவுக்கோ உடம்பு முடியாம சீரியஸா இருக்குன்னு வச்சுக்கோ. எல்லாத்தையும் விட அதிகமா ஆஸ்பத்திரில நீ நேரம் செலவழிச்சா அவன் அதை நீ அவனுக்குக் காட்டற அலட்சியமா நினைக்க மாட்டான். அதே மாதிரி அவன் ஆஸ்பத்திரில அதிக நேரம் செலவழிச்சா அது உன்னை அலட்சியப் படுத்தற மாதிரின்னு நீ நினைக்க மாட்டாய். இல்லையா. இது அது மாதிரி தான்னு நெனச்சுக்கோ. அதை விடக் கோடி மடங்கு முக்கியமான ஒரு கடமைல அவன் தனியா போராடிகிட்டு இருக்கான். அது முடிஞ்சவுடனே அவன் உன் க்ரிஷா கண்டிப்பா திரும்புவான்.”

மாஸ்டர் வார்த்தைகளில் அவள் மனம் தைரியப்பட்டது. கண்கலங்க அவள் தலையசைத்தாள். சிறிது நேரம் அங்கிருந்து விட்டு மாஸ்டர் எல்லோரிடமும் விடைபெற்றார். பத்மாவதி கடைசியாக அவரிடம் ஒருமுறை மனமுருக வேண்டினாள். “உதய்க்கு ஒரு நல்ல பொண்ணு மனைவியா வரணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க சுவாமிபுன்னகையுடன் உதய்க்கு அப்படியே ஆசி வழங்கி விட்டு  க்ரிஷிடம் விடைபெறும் போது மட்டும் அவருக்கும் கண்கலங்கியது. அவனும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினான்….. அவர் போய் விட்டார்.


மாணிக்கம் தன் மகனின் அறையில் அமர்ந்திருந்தார். அவர் கையில் மகன் கடைசியாக எழுதியஎன்னை மன்னித்து விடுங்கள் அப்பாகடிதம் இருந்தது. ஒரு அன்பு மகன் தந்தையிடம் ஒரேயடியாக விடைபெற்றுக் கொள்ளும் விதமா இது என்று அவர் மனம் கதறியது. அவன் அறை நிறைய அடுக்கி வைத்திருந்த மெடல்களும், கேடயங்களும் பார்க்கும் போது மனம் ரணமானது. எப்படி வெற்றி பெற்றுக் கொண்டு முன்னேறி வந்தவன் ஒரு பெண் தனக்கில்லை என்றானவுடன் பின்னடைந்ததை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்படிப் பின்னடைய ஆரம்பித்தவனை சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் மேலும் அழுத்திக் கொன்று விட்டன….. அவருக்கு எல்லாமாய் அவன் ஒருவன் தான் இருந்தான். அவனும் இப்போது போய் விட்டான். இப்போது மிஞ்சி இருப்பதெல்லாம் வெறுமையே

சங்கரமணி தன் இரண்டாம் மகளின் குழந்தைகளை மணீஷுக்கு மாற்றாக இருக்க வைக்க முயன்று தோற்றுப் போனார். மாணிக்கம் அவர்களிடம் முகம் பார்த்தும் பேசவில்லை. இரண்டு நாள் இருந்து பார்த்து விட்டு அவர்கள் போய் விட்டார்கள். எதற்கும் அசையாத, அமைதியிழக்காத மன உறுதி படைத்தவனாக மருமகனை எப்போதும் நினைத்துப் பெருமைப்படும் சங்கரமணி மருமகன் நடைப்பிணமான விதத்தை கவலையோடு கவனித்தார். இப்போது மணீஷின் அறையில் மணிக்கணக்கில் உட்கார்ந்து இருக்கும் மாணிக்கத்தை எப்படி பழைய மாணிக்கமாக மாற்றுவது என்று கவலையோடு யோசித்தபடி உள்ளே நுழைந்தார்.

மாணிக்கம் சீஃப் செக்ரட்டரி போன் செஞ்சார். கையெழுத்து போட வேண்டிய முக்கியமான ஃபைல்கள் நிறைய இருக்காம்…..”

ம்

பாரு, மணீஷ் எனக்கும் பேரன் தான். அவன் போனது எனக்கும் பாதி உசுரு போன மாதிரி தான். பழுத்த கிழம் நான் குத்துக்கல்லா இன்னும் இருக்கேன். வாழ வேண்டிய வயசுல அவன் போனது எனக்கும் தாங்க முடியல தான். ஆனா எவ்வளவு அதிகாரம் இருந்தாலும் எமன் கிட்ட டீல் போடற வசதி யாருக்கும் இல்லையே

மாணிக்கம் மௌனமாகவே அமர்ந்திருந்தார். சங்கரமணி சொன்னார். “இப்பவே கமலக்கண்ணன் கை ஓங்கியிருக்கு. நீ இதுல இருந்து மீள மாட்டேன்னு நம்ம எம் எல் ஏக்களே பேச ஆரம்பிச்சிருக்காங்க. இப்ப நாம சுதாரிக்கலைன்னா கமலக்கண்ணன், உதய் கை ஓங்கிடும்.”

பரவாயில்ல. நானே ராஜினாமா செய்யணும்னு தான் முடிவு செய்திருக்கேன்”     

மாணிக்கத்தின் வார்த்தைகள் அவரைக் கத்தியாக வெட்டின. என்னடா, பிள்ளை செத்ததுல உனக்கு புத்தி பேதலிச்சுப் போச்சா? நாம எந்த நிலைமைல இருக்கோம் தெரியுமா உனக்கு?”

யாருக்காக எல்லாத்துக்கும் ஆசைப்பட்டேனோ அவனே போயிட்டான். இனி இதுக்கு மேல ஆகறதுக்கு என்ன இருக்கு மாமா?”

என்னடா சொல்றே?” சங்கரமணி குரல் நடுங்கக் கேட்டார்.   

போதும் மாமா…. எல்லாமே போதும்”  மிக உறுதியாகச் சொன்னார் மாணிக்கம்.


வாஷிங்டனில் நவீன்சந்திர ஷா விஸ்வத்தை அவன் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்து சந்தித்தான். அறையின் மேசையில் விஸ்வம் வைத்திருந்த முக்கோணத்திற்குள் நெற்றிக்கண் சில நிமிடங்களிலேயே அவன் பார்வையில் விழுந்தது. “இது எங்கே வாங்கினாய்?”

“வாங்கினதல்ல. கிடைச்சது” என்று சாதாரணமாக விஸ்வம் சொன்னான்.

அதைக் கையில் எடுத்துப் பார்த்தபடியே நவீன்சந்திர ஷா கேட்டான். “எங்கே கிடைச்சது?”

“இமயமலையில….” என்று அதொன்றும் பெரிய விஷயமல்ல என்பது போல் விஸ்வம் சொன்னான்.

“எப்படிக் கிடைச்சது? விவரமாய் சொல்லேன்”

“இந்த ஒருவாரமாய் எனக்கு இமயமலைல ஒரு குகைக்குள்ளே இந்தச் சின்னம் மின்னுகிற மாதிரி கனவு தினமும் வருது. அந்த மலைப்பகுதியோ ரொம்ப தத்ரூபமாய் மனசுல பதிஞ்சுது. எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் இமயமலைக்கு அடிக்கடிப் போறவர். அவர் கிட்ட மனசுல பதிஞ்ச வர்ணனைகளைச் சொல்லி அப்படி ஒரு இடம் இருக்கான்னு கேட்டேன். அவர் இருக்குன்னு ஆச்சரியத்தோட சொன்னார். உடனே கிளம்பிட்டேன்…” என்று ஆரம்பித்த விஸ்வம் மற்ற விவரங்களை உண்மையாகவே சொன்னான். அந்தத் தவசி அவன் கம்பளியைப் பிடித்துக் கொண்டதையும், அவன் சக்தியை உருவுவது போல உணர்ந்ததையும் மட்டும் சொல்லாமல் தவிர்த்தவன் கடைசியில் அந்தத் தவசியே சிவன் நெற்றியில் இருந்து அந்தச் சின்னத்தை எடுத்து அவன் கையில் கொடுத்து விட்டு உயிர் விட்டார் என்று முடித்தான்.

நவீன்சந்திர ஷா திகைப்புடன் எல்லாவற்றையும் கேட்டு விட்டுச் சொன்னான். “நூறு வருஷங்களுக்கு முன்னாடி ஒரு இல்லுமினாட்டி ஜெர்மனில இருந்து இமயமலைக்குத் தவம் செய்யப் போனதா பலரும் சொல்லி இருக்காங்க. அவர் திரும்பி வராததால் அவர் அங்கேயே சமாதி அடைஞ்சிருக்கலாம்னு பேசிகிட்டாங்க. இப்ப நீ சொல்றதைப் பார்த்தா அவர் அந்த இல்லுமினாட்டியாகத் தான்  இருக்கணும்…..”


விஸ்வத்துக்கு இந்தத் தகவல் கூடுதல் அதிர்ஷ்டத் தகவலாகத் தோன்றியது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் வெகுளியாய் சொன்னான். “அந்தச் சிலையில் இருக்கும் வரை இது சிவனின் நெற்றிக் கண் மாதிரி தான் இருந்துச்சு. நீ சொன்னதுக்கப்பறம் தான் இது இல்லுமினாட்டியின் சின்னமும் தானேன்னு புரியுது. இது என் கைல கிடைச்சதுக்கு என்ன அர்த்தம்னு தான் தெரியல.”


நவீன்சந்திர ஷா உடனே பரபரப்புடனும் உற்சாகத்துடனும் சொன்னான். “நீ தான் இல்லுமினாட்டியின் தேர்ந்தெடுக்கவன். அது தான் ஆரம்பத்துலயும் உன் கனவுல தெரிவிச்சிருக்கு. இப்பவும் இந்தச் சின்னம் உன் கனவுல வந்து அந்த இல்லுமினாட்டி தவசி மூலமாவே உன் கைல கிடைச்சிருக்கு…. விஸ்வம் உனக்காகத் தான் இல்லுமினாட்டி காத்திருக்கு”


தான் கேட்க ஆசைப்பட்ட வார்த்தைகளை நவீன்சந்திர ஷா வாயாலேயே சொல்ல வைத்த திருப்தியுடன் விஸ்வம் முகத்தில் ஆச்சரியத்தைக் காட்டினான். இனி இந்தத் தகவல் எல்லா இல்லுமினாட்டி உறுப்பினர்களுக்கும் போய்ச் சேரும்படி இவன் பார்த்துக் கொள்வான்…..

மறுபடி அந்தச் சின்னம் ஒளிர்ந்து மங்கிய போது நவீன்சந்திர ஷா கண்கள் விரிந்தன. விஸ்வம் தன்னையும் மீறிப் புன்னகைத்தான்.

(தொடரும்)
என்.கணேசன் 

Wednesday, March 27, 2019

பிரச்சினைகளுக்கு முடிவு தான் என்ன?


 றத்தாழ மனிதனின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம் அறியாமையாகவே இருக்கிறது. அறியாமையால் அவன் ஏற்படுத்திக் கொள்ளும் நம்பிக்கைகள், அனுமானங்கள், முடிவுகள் எல்லாமாகச் சேர்ந்து அவன் வாழ்க்கையைப் பிரச்சினைகளின் தொகுப்பாக ஆக்கி விடுகின்றன.அவன் தனித்தனியாக அந்தப் பிரச்சினைகளைத் தீர்வு காண முனைகிறான். ஒன்றை முடிப்பதற்குள் பத்து பிரச்சினைகள் முளைத்து விடுகின்றன. இதற்கு முடிவு தான் என்ன? பிரச்சினைகளின் மூல காரணமான அறியாமையில் இருந்து விடுபடுவது தான். வேரை அழித்தால் கிளைகள், இலைகள் எல்லாம் தானாக அழிந்து விடுவது போல அவன் அறியாமையில் இருந்து விடுபட்டால் ஒட்டு மொத்தமாக அவன் பிரச்சினைகளின் தாக்கத்தில் இருந்து விடுபடுகிறான். இதை வலியுறுத்தும் விதமாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:

செயல்களை நடத்துபவை குணங்களே. அவற்றைக் காட்டிலும் வேறொரு கர்த்தா இல்லை என்று எவனொருவன் காண்கிறானோ, குணங்களைக் காட்டிலும் தான் வேறு என்பதை எவன் அறிகிறானோ அவன் என் நிலையை அடைகிறான்.

உடலிலிருந்து உண்டான இந்த மூன்று குணங்களையும் கடந்து, பிறப்பு, இறப்பு, மூப்பு, துக்கம் என்பவைகளிலிருந்து விடுபட்டு அமிர்த நிலையை அடைகிறான்.

செயல்கள் குணங்களின் விளைவுகளாகவே இருக்கின்றன. மனிதனுடைய எல்லாச் செயல்களும் அந்தந்த நேரத்தில் அவனுக்கு எந்தக் குணம் மேலோங்கி இருக்கிறதோ அந்தந்த குணத்திற்கேற்ப இருக்கிறது. சாத்வீக குணத்தில் தெளிவாக இருக்கையில் நிதானமாகவும், யோசித்தும் எதையும் முறைப்படியே செய்கிறான். ரஜோ குணம் அதைச் செய், இதைச் செய் என்று அவனைப் பல வேலைகள் செய்ய வைக்கிறது. அந்தச் செயல்களைச் சிந்தித்துச் செய்யக்கூட அவனை அனுமதிப்பதில்லை. இப்போது செய்யா விட்டால் அது பேரிழப்பு அல்லது முட்டாள்தனம் என்று பயமுறுத்தி அவனை விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவசரமாக வேலை செய்ய வைக்கிறது. தமோ குணம் மேலோங்கி இருக்கையில் செய்ய வேண்டியதைக் கூட அவன் செய்யத் தவறுகிறான். நாளை செய்யலாம் என்றும், அடுத்தவன் செய்யட்டும் என்றும் அவன் இருந்து விடுகிறான்.

செயல் செய்வது மனிதனாக இருந்தால் அவன் செயல்கள் ஒரே மாதிரியாக இருக்கும். முக்குணங்கள் அவனை ஆட்சி செய்து தங்கள் குணங்களின் படி அவனை ஆட வைப்பதால் செயல்கள் செய்வது குணங்களாகவே இருக்கின்றன. அதை உணரும் போது மனிதன் அந்தக் குணங்களையும் கடந்து இருக்கும் தன் இயல்பான ஆத்மாவை அறிந்து கொண்டு அமைதியடைகிறான். அந்த அமைதியும் நிறைவுமல்லவா இறைவனின்  இயல்பு நிலை.  அந்த நிலையை அடைந்து விட்டவன் பிறப்பு, இறப்பில் சிக்குவதில்லை. அதனால் மூப்பும் இல்லை. துக்கமும் இல்லை.

முக்குணங்களின் எல்லையில்லாத செயல்களுக்கும், அவற்றின் விளைவுகளுக்கும் சிக்காமல் தப்பிக்கும் மனிதனை எப்படி அறிவது, அவன் நடவடிக்கைகள் எப்படி இருக்கும், அவன் எப்படி அந்தக் குணங்களைக் கடந்து கடைத்தேறுவான் என்று அறியும் ஆசையில் அர்ஜுனன் கேட்கிறான்.

ப்ரபோ! ஒருவன் இந்த முக்குணங்களையும் கடந்தவன் என்று எந்த அடையாளத்தைக் கொண்டு அறிவது? அவன் எத்தகைய நடவடிக்கைகளைக் கொண்டிருப்பான்? எப்படி முக்குணங்களையும் கடப்பான்?


பகவான் அதற்குப் பதில் கூறுகிறார்.

பாண்டவனே! மனத்தெளிவு, செயலூக்கம், மதிமயக்கம் உண்டாகும் போது எவனொருவன் அவற்றை வெறுப்பதில்லையோ, அவை நீங்கும் போது அவற்றைத் திரும்பவும் பெற விரும்புவதில்லையோ

அக்கறை இல்லாதவன் போல் அமர்ந்திருந்து, குணங்களே இயங்குகின்றன என்று உணர்ந்து எவனொருவன் அந்தக் குணங்களால் நிலைகுலைவதில்லையோ,

எவன் தன் நிலையில் நிலைத்து நின்று இன்ப துன்பங்களைச் சமமாகப் பாவிக்கிறானோ, மண்ணையும், கல்லையும், பொன்னையும் சமமாக மதிக்கிறானோ, பிடித்தது பிடிக்காதது இரண்டையும் ஒன்றாகக் கருதுவானோ, இகழ்ச்சியையும், புகழ்ச்சியையும் சமமாக நினைப்பானோ,

மானம் அவமானம் இரண்டையும் சமமாக எண்ணுவானோ, நண்பனையும், எதிரியையும் சமமாக நடத்துவானோ, செயல்களைச் செய்பவன் நான் என்ற எண்ணத்தை எவன் விட்டவனோ, அவனே குணாதீனன் (குணங்களைக் கடந்தவன்) என்று கூறப்படுவான்.

பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருபவன் அந்தப் பிரச்சினைகளில் இருந்து சுலபமாக விடுபடுவதில்லை. ஏனென்றால் அவன் அந்தப் பிரச்சினைகள் குறித்த அதீத எண்ணங்கள் காரணமாக அவற்றுடன் தன்னை இணைத்து இறுக்கிக் கட்டிக் கொண்டு விடுகிறான். மானசீகமாக அவன் அந்தத் தளையைத் தளர்த்தி விலக்கிக் கொண்டால் மட்டுமே அவன் அதிலிருந்து விடுபட முடியும். பிரச்சினைகள் குறித்த விருப்பு வெறுப்புகளைக் குறைப்பதன் மூலமாகவே அவை குறித்த  தீவிர எண்ணங்களை அவன் தவிர்க்க முடியும்.

ஸ்ரீகிருஷ்ணர் இங்கே குறிப்பிடும் மனத்தெளிவு, செயலூக்கம், மதிமயக்கம் மூன்றுமே சதவ, ரஜோ, தமோ குணங்களின் முறைப்படியான விளைவுகள். அவை வரும் போதும் சரி, அவை விலகும் போதும் சரி அவை குறித்த விருப்பு வெறுப்புகள் நமக்கு அதிகம் இருக்குமானால் நம் மீது அந்த முக்குணங்களின் ஆதிக்கம் அதிகமாகி விடும். அவை குறித்து அக்கறை இல்லாமல், விலகி நிற்கும் ஆத்மாவாக நாம் எல்லாவற்றையும் பார்த்தோமானால் அந்தக் குணங்களின் ஆதிக்கம் தளர்ந்து, அவை நம்மைப் பாதிப்பதும் நின்று போகும்.

அதைத் தொடர்ந்து, குணங்களைக் கடந்தவனான குணாதீனனின் இயல்புகளை ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார். கீதையின் ஆரம்பத்தில் ஸ்திதப்ரக்ஞனில் ஆரம்பித்துப் பல பெயர்களில் அவர் விளக்கிய அதே குணாதிசயங்கள் இங்கும் அவரால் சொல்லப்படுகின்றன. எல்லாவற்றையும் சமமாக நினைக்கும் சமநோக்கு நிலை இங்கும் வலியுறுத்தப்படுகிறது. கூடவேசெயல்களைச் செய்பவன் நான்என்ற எண்ணத்தையும் அகற்றும்படி பகவான் அறிவுறுத்துகிறார்.

உலகில் எத்தனையோ செயல்கள் நடக்கின்றன. அவை எத்தனையோ விளைவுகளில் முடிகின்றன. ஆனால் அவை எதிலும் தனி மனிதனுக்குப் பெரிய அக்கறை இல்லை. ஆனால் அவன் செய்கின்ற செயல்களிலும் அதன் விளைவுகளிலும் அவனுக்கு ஆயிரம் மடங்கு அக்கறை. எல்லாம் சிறப்பாக நடக்க வேண்டும், சிறப்பாக இருக்க வேண்டும், பலரும் பாராட்ட வேண்டும், மதிக்க வேண்டும் முதலான பலப்பல எண்ணங்கள் அவனை ஆக்கிரமிக்கின்றன. அதனால் எத்தனையோ மன உளைச்சல்கள், எத்தனையோ துன்பங்கள்... எல்லாம் நினைக்கின்றபடியே முடிகிற வரை அவன் அந்தச் செயல்களோடு கட்டுண்டவன் ஆகிறான். பிரச்சினை இங்கு அந்தச் செயல்கள் அல்ல. அந்தச் செயல்களைச் செய்யும்நான்தான் பிரச்சினை. எல்லாவற்றையும் நடத்துவது இறைவனே, நான் வெறும் கருவியே, இதன் இலாப நஷ்டங்கள் என்னைச் சேர்ந்தவை அல்ல என்ற பிரக்ஞை மனிதனுக்குள் மேலோங்கி நிற்குமானால் மனிதன் மனப்பாரம் நீங்கியவனாகி விடுவான். எனவே அந்தநானில்இருந்து விடுபட்டால் மனிதன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் கூட விடுபட்டிருக்கும் குணாதீனன் ஆகிறான் என்று கூறும் இந்தக் கருத்துடன் கீதையின் பதினான்காம் அத்தியாயமான குணத்ரய விபாக யோகம் முடிகிறது.

பாதை நீளும்....
என்.கணேசன்