என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Showing posts with label இருவேறு உலகம். Show all posts
Showing posts with label இருவேறு உலகம். Show all posts

Thursday, May 18, 2023

என்னுடைய எட்டு நூல்கள் வெளியீடு!

 ன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

உங்களுடைய பேராதரவினால் என்.கணேசன் புக்ஸ் பதிப்பகத்தால் இரண்டு புதிய நாவல்களும், கீதை காட்டும் பாதையும், இரண்டு நாவல்கள் மற்றும் வேறு மூன்று நூல்களின் அடுத்த பதிப்புமாக மொத்தம் எட்டு நூல்கள் இன்று வெளியாகின்றன. விவரங்கள் இதோ- 


யோகி (ஆன்மீக த்ரில்லர்)


718 பக்கங்கள், 164 அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ.800/-  

(இந்த வலைப்பூவில் யாரோ ஒருவன் நாவல் முடிவடைந்த பின் வாரா வாரம் திங்கட்கிழமை வெளியாகும்.)

நாவல் பற்றிய குறிப்புகளுக்கு -

https://nganeshanbooks.blogspot.com/


மாயப் பொன்மான் (காதல் கதை)


216 பக்கங்கள் கொண்ட இந்த சிறிய நாவலின் விலை ரூ.250/-

(இது இந்த வலைப்பூவில் வெளியாகாது. நீங்கள் புத்தகம் வாங்கித் தான் படிக்க வேண்டியிருக்கும்.)

நாவல் பற்றிய குறிப்புகளுக்கு -

https://nganeshanbooks.blogspot.com/

கீதை காட்டும் பாதை

296 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.350/- 


யாரோ ஒருவன் (இரண்டாம் பதிப்பு) விலை ரூ.680



இருவேறு உலகம் (இரண்டாம் பதிப்பு) ரூ.750/-



ஆழ்மனதின் அற்புத சக்திகள் (ஒன்பதாம் பதிப்பு) ரூ.320/-


இங்கே நிம்மதி (இரண்டாம் பதிப்பு) ரூ.200/-



விதியை மாற்றும் ஆழ்மனசக்திகள் (இரண்டாம் பதிப்பு)  ரூ.250/-



நாவல் மற்றும் பற்றிய குறிப்புகளுக்கு 

https://nganeshanbooks.blogspot.com/


இந்த நூல்களை வாங்கிப் படிக்க விரும்பும் உள்நாட்டு வாசகர்கள் நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். ரூ.1000/-க்கு மேல் நூல்களை வாங்குபவர்களுக்கு தபால் செலவு தள்ளுபடி உண்டு. நூல்களின் விலையை மட்டும் அனுப்பினால் போதும். நூல்கள் குரியர் அல்லது ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi (Name Shubha)

Phonepe UPI ID: nganeshanbooks@ybl (Shubha)

வங்கிக் கணக்கு : N.Ganeshan Books

                                  DBS (Former LVB)  Kovaipudur Branch

                                  IFSC Code DBSS0IN0188

                                  A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

நாவலை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விலாசத்தை அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும். பணத்தை அனுப்பி வைத்தால் நாவல் அனுப்பி வைக்கப்படும்.


அமேசானில் ஆன்லைனிலும் இந்த நூல்களை வாங்கலாம். லிங்க் -

என்.கணேசன்

Monday, January 13, 2020

என் வாசகர்களின் குரல்!

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

நடந்து வரும் சென்னை புத்தகக் காட்சிக்கு வந்த என் வாசகர்கள் சிலரின் கருத்துகள் இந்த யூட்யூபில்....




நான் தொடர்ந்து எழுதக் காரணமாக இருப்பது என் அபிமான வாசகர்களால் தான் என்பது நிச்சயம். இந்த யூட்யூபில் பேசிய வாசகர்களுக்கும், என் வலைப்பூவிலும், மின்னஞ்சலிலும் கருத்துகள் தொடர்ந்து தெரிவிக்கும் வாசகர்களுக்கும், மவுனமாகவே என் நூல்களை வாங்கியும் மற்றவர்களுக்குப் பரிந்துரை செய்யும் வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

இந்த யூட்யூபை வெளியிட்ட சேனல் ஆர்ட் இந்தியாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!


அன்புடன்
என்.கணேசன்

Thursday, June 13, 2019

இருவேறு உலகம் – 140


க்ரிஷ் தன் பேச்சை முடித்த போது தான் அந்த இல்லுமினாட்டி சின்னம் ஒளிர்வதை நிறுத்தியது. மீண்டும் அரங்கில் இருள் பரவியது. கடைசியில் மின் விளக்குகளைப் போட்ட போது அத்தனை விளக்குகளும் சேர்ந்தும் அந்தச் சின்னம் ஏற்படுத்தியிருந்த ஒளி வெள்ளத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் போனதை அங்கிருந்தவர்கள் அனைவருமே கவனித்தார்கள். ஒரு நிமிடம் நீண்ட மௌனத்திற்குப் பின் கைதட்டல் அரங்கை அதிர வைத்தது. க்ரிஷ் கண் முன்னால் இருந்த குகைக்காட்சியும் மாஸ்டருடன் சேர்ந்து மறைந்தது. மறைவதற்கு முன் மாஸ்டர் தன் பிரிய சீடனைப் பார்த்து பேரன்போடு புன்னகைத்தார். க்ரிஷ் அவருக்கு மீண்டும் தலைவணங்கினான்.

எர்னெஸ்டோ தன் முன்னால் இருந்த மைக்கை எடுத்தார். “இளைஞனே, நீ இல்லுமினாட்டியில் இணைகிறாயா?”

இந்தக் கேள்வியில் க்ரிஷ் மட்டுமல்லாமல் மற்ற உறுப்பினர்களும் ஆச்சரியப்பட்டார்கள். க்ரிஷுக்குச் சிரிக்கத் தோன்றியது. “நானா, இல்லுமினாட்டியிலா?” மாட்டேன் என்பது போல அவன் தலையசைத்தான்.

எர்னெஸ்டோ சொன்னார். “இளைஞனே நீ இன்று சொன்ன வார்த்தைகளை இல்லுமினாட்டி என்றும் நினைவு வைத்திருக்கும். இந்தக் கணத்தில் எங்கள் இல்லுமினாட்டி தவசி அகஸ்டின் உன் மூலம் சொன்னதாக நாங்கள் உணரும் இந்த உயர்ந்த உணர்வுகள் நாளைக் காலை எத்தனை பேருக்கு எத்தனை சதவீதம் தங்கும் என்பதை உறுதியாக என்னால் கூற முடியாது. இன்னும் சில நாட்கள் போன பின் கண்டிப்பாக இதே உணர்வுகளை இதே அளவிலும் இதே உறுதியிலும் உறுப்பினர்கள் பின்பற்றுவார்கள் என்று கூற முடியாது. மனித இயல்பை நீண்ட காலம் கவனித்து வந்ததால் தான் இதை வருத்தத்துடன் கூறுகிறேன். இந்த உயர்ந்த உணர்வுகள் நீர்த்துப் போகாமல் இருக்க வேண்டுமென்றால் உன்னைப் போன்றவன் எங்களுடன் இணைந்து இருக்க வேண்டும்.”

அறிவும், நல்ல மனமும் சேர்ந்திருக்கும் மனிதர்களாலேயே எந்த ஒரு சமுதாயமும் மேம்பட்டிருக்கிறது. வளர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட மனிதர்கள் பொது நலனில் அக்கறை காட்டாத போது அழிந்திருக்கிறது.  நல்ல மனிதர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் போது எல்லாமே நாசமாகிப் போகிறது  என்று உன் ஏலியன் நண்பன் சொன்னதாய்ச் சொன்னாய். இல்லுமினாட்டி என்ற இந்த இயக்கம் உலக நிகழ்வுகளின் போக்கை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்த ஒரு இயக்கமாக இருக்கிறது. அதில் சேர வாய்ப்பு கிடைத்த போதும் நீ சேரத் தயங்கினால் அறிவுரை சொல்ல மட்டுமே நீ, அதைக் களத்தில் இறங்கி செய்து காட்டக் கிடைக்கும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறாய் என்றாகி விடாதா? உன் ஏலியன் நண்பனுக்கும், உன் மனசாட்சிக்கும் நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?”

க்ரிஷ் இதை எதிர்பார்க்கவில்லை. அவர் சொல்வதெல்லாம் உண்மை. ஆனால் அவன் சாதாரண அரசியலில் இறங்கக்கூடத் தயங்கியவன். உதய் ஒரு முறை கேட்டது நினைவுக்கு வந்தது. “வாய்கிழிய அரசியல்வாதிகளைப் பத்திப் பேசறியே. அரசியல்ல இறங்கி தான் பாரேன். அப்ப தெரியும் ஒரு அரசியல்வாதிக்கு எத்தனை கட்டாயங்கள் இருக்குன்னு…” மாநில அரசியலுக்கு வரக்கூடக் கூசிய அவனை உலக அரசியலுக்கு இவர் கூப்பிடுகிறார்…..  என்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்று எண்ணியபடி அவன் கை பிரமிடு-கண் சின்னத்தில் பட்ட போது. அது அவனைப் பேச வைத்தது போலத் தோன்றியது. அவன் சொன்னான். “இணைகிறேன்”. கடைசியாய் ஒரு முறை அந்தச் சின்னம் மிகப்பிரகாசமாய் ஒளிர்ந்து மங்கியது.

க்ரிஷுக்குத் தன் குரலையே நம்ப முடியவில்லை. கரகோஷம் மறுபடி இரட்டிப்பாகக் கேட்க ஒருவர் வேகமாக வந்து க்ரிஷின் கண்கட்டை அவிழ்த்தார். “இல்லுமினாட்டிக்கு வரவேற்கிறேன் இளைஞனே” என்று முதல் ஆளாக வந்து எர்னெஸ்டோ கைகுலுக்கினார். அவர் பின்னால் மற்றவர்களும் வாழ்த்திக் கைகுலுக்கிக் கொண்டிருக்கையில் ஒருவர் பரபரப்புடன் வந்து விஸ்வம் இறந்து விட்ட செய்தியைச் சொன்னார்.



விஸ்வத்தின் பிணம் ம்யூனிக் நகரின் மின்மயானத்தில் எரிக்கப்பட்ட போது அவனது ஒரே நண்பனாக க்ரிஷ் தான் முன்னால் நின்று கொண்டிருந்தான். நவீன்சந்திர ஷா உட்பட யாருமே இறந்து போயிருந்த மனிதன் குறித்த நல்ல நினைவுகளுடன் இருக்கவில்லை. அந்தச் சின்னம் க்ரிஷைத் தான் அடையாளம் காட்டுகிறது என்று புரிந்த பிறகு, அகஸ்டின் அவர் கையால் அந்தச் சின்னத்தை அவனிடம் கொடுத்தார் என்பதும், அவன் கனவுகளில் வந்த காட்சிகள் பற்றிச் சொன்னதும் எல்லாமே பொய் என்பது தெளிவாக அவர்களுக்குப் புரிந்து விட்டது. நவீன்சந்திர ஷா விஸ்வத்தை அறிமுகப்படுத்தியதற்காக எர்னெஸ்டோவிடம் வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். “அவன் இப்படி ஏமாற்றுப் பேர்வழியாக இருப்பான் என்று நான் நினைத்தே இருக்கவில்லை தலைவரே”


எர்னெஸ்டோ நவீன்சந்திர ஷாவின் தோளைத் தட்டிக் கொடுத்துச் சொன்னார். “அவன் நம்மோடு சேர்ந்திருக்கா விட்டால் க்ரிஷ் நமக்குக் கிடைத்திருக்க மாட்டான்….. நடந்ததெல்லாம் நன்மைக்கே”

மின்மயானத்தில் நின்றிருக்கையில் உண்மையாகவே க்ரிஷ் விஸ்வத்திற்காக வருத்தப்பட்டான். அவன் விஸ்வத்தை முதல் முதலில் நேரில் பார்ப்பதே பிணமாகத் தான். ஆனால் எத்தனையோ உயரங்களுக்குப் போய் ஜொலித்திருக்க வேண்டிய ஒரு மனிதனின் வாழ்க்கை இப்படி முடிந்ததில் அவனுக்குப் பெரும் வருத்தமே! “நண்பனே, நல்ல விளைவை விரும்புபவன் நல்ல வினைகளையே செய்ய வேண்டும். எத்தனை சாமர்த்தியம் சக்தி இருந்தாலும் வினையை விதைத்து தினையை அறுவடை செய்து விட முடியாது. அது மாற்ற முடியாத பிரபஞ்ச விதி! அடுத்த பிறவியாலாவது எல்லாம் வல்ல இறைவன் உனக்கு இந்தப் பிறவியில் இருந்த அக்னி, உழைப்போடு நல்ல மனதையும் சேர்ந்து கொடுத்து புதிய வாழ்க்கை ஆரம்பிக்கச் செய்யட்டும்” என்று மனமாரப் பிரார்த்தித்து நின்றான்.

எர்னெஸ்டோ அவனுக்குச் சற்றுப் பின்னால் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அரங்கத்தில் பேசும் போது நம் நண்பர் என்று சொல்லி நார் நாராகக் கிழித்தாலும் அந்த மனிதன் இறந்து விட்ட பிறகு மனமுருக அந்த ஆத்மாவுக்காகப் பிரார்த்தித்து நிற்கும் இந்த இளைஞனை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.  அவனிடம் இல்லுமினாட்டியில் இணையக் கேட்ட போதும் அவன் இணைய ஒத்துக் கொள்வான் என்று அவர் பெரிய நம்பிக்கை வைத்திருக்கவில்லை. ஆனால் அவன் ஒத்துக் கொண்டது அவருக்கு மகிழ்ச்சியையும், எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையையும் கொடுத்தது….. ஈரமான விழிகளுடன் திரும்பியவனைத் தட்டிக் கொடுத்து வெளியே அழைத்து வந்தார்.

’ஒரு இல்லுமினாட்டி தான் இல்லுமினாட்டி என்பதைத் தன் குடும்பத்திற்குக் கூடத் தெரியப்படுத்துவதில்லை. இல்லுமினாட்டியின் நடவடிக்கைகள் குறித்து மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை…’ என்ற மிக முக்கிய ரகசியப் பிரமாணம் உட்பட பல உறுதிமொழிகள் எடுத்து இல்லுமினாட்டியின் உறுப்பினராகக் கையெழுத்துப் போட்டு விட்டு வந்த போது க்ரிஷுக்கு கூட எல்லாமே அவனை மீறி நடப்பது போல மலைப்பாகவே இருந்தது.  அனைவரிடமும் விடை பெற்றுக் கிளம்பினான். வழியனுப்ப விமானநிலையத்திற்கு விஸ்வேஸ்வரய்யா வந்திருந்தார். அவருக்கு அவன் அங்கு வந்து அருமையாக பேசியதிலும், மற்றவர்கள் மனம் வென்றதிலும் இல்லுமினாட்டியில் இணைந்ததிலும் அளவுகடந்த மகிழ்ச்சி. அதை அவனிடம் மனமாரத் தெரிவித்தார்.

விமானம் ஏறுவதற்கு முன் க்ரிஷ் போன் செய்து உதயிடமும், ஹரிணியிடம் பேசினான். இருவரிடமும் எதிரி முடிந்தான், ஆபத்தும் முடிந்தது என்று தெரிவித்த போது இருவரின் வார்த்தைகள் வராத கண்ணீரையும் அவனால் உணர முடிந்தது. இருவரும் சந்தோஷம் தாங்காமல் திக்குமுக்காடியதையும் உணர்ந்தான். அவன் விழிகளும் ஈரமாயின.


க்ரிஷ் இல்லுமினாட்டி அரங்கத்தில் பேசிய பேச்சின் ஒளிநாடா, ஒலிநாடா, எழுத்துவடிவம், மூன்றும் அந்த பிரமிடு-கண் சின்னத்தோடு வாஷிங்டன் நகரத்தின் இரகசியக் காப்பறையில் சிகாகோ பழஞ்சுவடியோடு சேர்ந்து எர்னெஸ்டோ, வழுக்கைத் தலையர் இருவராலும் சேர்ந்து வைக்கப்பட்டன. அந்தப் பிரமிடு கண் சின்னம் தன் வேலை முடிந்து விட்டதாலோ ஏனோ அதன் பிறகு ஒளிரவில்லை. வெறும் நினைவுச் சின்னமாகத் தங்கி விட்டது.

திரும்பி வருகையில் வழுக்கைத் தலையர் கேட்டார். “க்ரிஷ் இல்லுமினாட்டியில் சோபிப்பான் என்று நினைக்கிறீர்களா? அவன் மிகவும் மென்மையானவனாகத் தோன்றுவதால் கேட்கிறேன்…”

எர்னெஸ்டோ புன்னகைத்தார். “இல்லுமினாட்டி போன்ற ஒரு பயமுறுத்தும் இயக்கம் பேச  அழைத்தவுடன் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் தனியாக, தைரியமாக, கண்களைக் கட்டிக் கூட்டிப் போனாலும் பரவாயில்லை என்று வருபவன் பலவீனமாகவா உங்களுக்குத் தோன்றுகிறான்?”

வழுக்கைத் தலையர் யோசித்துப் பார்த்துப் புன்னகைத்தார். இந்த அளவு தைரியம் சாதாரணமாக யாருக்கும் வராது என்று அவருக்கும் தோன்றியது.

எர்னெஸ்டோ சொன்னார். “அந்த மென்மைக்குப் பின்னால் அவன் மிகவும் அழுத்தமானவனும் கூட. நீங்கள் என் வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள். அவன் கண்டிப்பாக இல்லுமினாட்டியில் சரித்திரம் படைப்பான்……” சொல்லும் போது கையில் புனிதச் சின்னத்தோடு பூரண தேஜஸுடன் அரங்க மேடையில் க்ரிஷ் நின்ற காட்சி அவருக்கு நினைவு வந்தது. அந்தக் காட்சி அவர் மனதில் மட்டுமல்ல அரங்கத்தில் இருந்த இல்லுமினாட்டி உறுப்பினர்கள் அனைவர் மனதிலும் மறக்க முடியாத காட்சியாய் என்றென்றும் தங்கியிருக்கும் என்று அவர் நினைத்துக் கொண்டார்.


விமானத்தில் செல்கையில் ஜன்னல்வழியே தெரிந்த மேகங்களைப் பார்க்கும் போது க்ரிஷுக்கு வேற்றுக்கிரகவாசி நினைவு வந்தது. வேற்றுக்கிரகவாசி நடந்ததை எல்லாம் தெரிந்து கொண்டு என்ன சொல்வான் என்று புன்னகையோடு யோசித்தான். சில மாதங்களில் அவன் வரும் போது சொல்ல வேண்டியது மட்டுமல்ல கேட்க வேண்டியதும் க்ரிஷுக்கு நிறைய இருந்தது. நினைவு வர வர கேள்விகளை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

மெல்ல அவன் மனம் ஆக வேண்டியதை யோசிக்க ஆரம்பித்தது. விஸ்வத்தின் மரணம் உடனடி பேரபாயத்தைத் தீர்த்திருக்கிறதே ஒழிய மற்றபடி எல்லாம் இருக்கிறபடி தான் இருக்கிறது என்பதை அவன் நினைவுபடுத்திக் கொண்டான். இல்லுமினாட்டியில் கூட அனைவரிடமும் உடனடியாய் பெரிய மாற்றம் வந்து விடாது என்று அவன் அறிவான். ஆனால் சின்னச் சின்ன மாற்றங்கள் கண்டிப்பாக உண்டாகும். உண்டாகும் படி அவனும், அவனைப் போன்ற மனிதர்களும் பார்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து ஏற்படுத்திக் கொள்ளும் சின்ன மாற்றங்கள் பெரிய மாற்றங்களில் முடியும்…. இப்போதைய விதைகள் நாளைய தளிர்கள் எதிர்கால விருட்சங்கள்…..

ஜன்னலில் இருந்து பார்வையைத் திருப்பிய போது பக்கத்தில் அமர்ந்திருந்த இந்தியப்பயணி ஒருவர் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருந்த கட்டுரைத் தலைப்பு  க்ரிஷ் பார்வையில் பட்டது. “இல்லுமினாட்டி இருப்பது உண்மையா?”

அவன் பார்வை அந்தக் கட்டுரையில் சற்றுத் தங்கியதைக் கவனித்த அந்தப் பயணி அவனிடம் கேட்டார். “நீங்கள் இல்லுமினாட்டி இருப்பது உண்மை என்று நினைக்கிறீர்களா?”

கண்ணிமைக்காமல் க்ரிஷ் புன்னகையோடு சொன்னான். “நானே ஒரு இல்லுமினாட்டி தான்”

அவன் நகைச்சுவை உணர்வு அந்தப் பயணிக்கு மிகவும் பிடித்திருந்தது. வாய்விட்டுச் சிரித்தவர் “சரியாகப் பதில் சொல்லி விட்டீர்கள். தெரிந்தும் இந்த மாதிரிக் கட்டுரைகளைப் படிக்காமல் இருக்க முடிவதில்லை….. சுவாரசியமாய் இருப்பது தான் காரணம்” என்று சொல்லி பத்திரிக்கையை மூடி வைத்தார்.

க்ரிஷ் முகத்தில் புன்னகை விரிந்தது…..

முற்றும்

என்.கணேசன் 



இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV

Thursday, June 6, 2019

இருவேறு உலகம் – 139


விஸ்வம் குவித்து வீசிய சக்திகளை அந்தச் சின்னம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டதைப் போல விஸ்வம் உணர்ந்தான். ஏனோ அந்தக் குகையில் அகஸ்டின் அவனது இடுப்புக் கம்பளியைப் பிடித்துக் கொண்ட போது உணர்ந்ததை இப்போதும் உணர்ந்தான். கூடவே அவனுடைய சக்திகளை அவனிடமிருந்து உருவுவது போலவும் உணர ஆரம்பித்தான். அன்று அவன் அணிந்திருந்த கம்பளித் துணி மூலம், இன்று அவன் வீசியிருந்த சக்திகள் மூலம்….. தன் சக்திகள் இழுக்கப்படுவதை விஸ்வம் தடை செய்ய முயன்றான். அதற்கு அவன் நிறையவே போராட வேண்டி இருந்தது….. அவன் அனுப்பிய சக்திகள் அந்த சின்னத்தை மேலும் ஒளிர வைத்ததோடு பேசிக் கொண்டிருந்த க்ரிஷையும் சேர்ந்து பிரகாசிக்க வைத்தது. க்ரிஷ் ஒரு கணம் தேவதூதன் போலவும், கண்களைக் கட்டியிருந்த நீதி தேவதை போலவும் தெரிந்தான். அப்படித்தானே அவன் மற்றவர்களுக்கும் தெரிவான்!.. தன்னுடைய போராட்டத்தோடு விஸ்வம் இதையும் பார்த்துச் சகிக்க வேண்டியிருந்தது. ’க்ரிஷுடன் சேர்ந்து சதி செய்யாமல். சனியனே மங்கித் தான் தொலையேன்’ என்று அந்தச் சின்னத்தைப் பார்த்து மனதினுள் கூக்குரலிட்டான். அவனுக்குள் நிகழ்ந்து கொண்டிருந்த யுத்தத்தை அருகில் இருப்பவர்கள் உணர்ந்தது போலத் தெரியவில்லை. அவர்கள் க்ரிஷை பிரமிப்புடன் பார்த்தபடி அவன் பேச்சில் ஆழ்ந்திருந்தார்கள்.

க்ரிஷுடைய குரல் மிகவும் மென்மையாகியது. “நம் குறைகள் நாம் ஆராய்ந்து பார்த்தால் ஒழிய நமக்குத் தெரிவதில்லை. ஆனால் நம் பிரச்னை நாம் ஆராய்வதில்லை என்பது தான். ஆராய்ந்து அடுத்தவர் சொல்லி விட்டால் அவர்களை எதிரியாகப் பார்க்க ஆரம்பித்து விடுகிறோம். பல சமயங்களில் நம்மை விட்டு விலகி நிற்கவும், உயர்ந்து நிற்கவும் முடிந்தவர்களுக்கு நாமிருக்கும் நிலையைத் தெளிவாகப் பார்த்துத் தெரிவிக்க முடியும். அப்படித்தான் இந்த உலக நிலைமையை  என் வேற்றுக்கிரகவாசி நண்பன் சொன்னான். அவன் சொன்னது எல்லோருக்கும் பொதுவானது. என் மூலம் உங்களுக்கும், உங்கள் மூலம் மற்றவர்களுக்கும் சேர வேண்டியதாக அந்த சத்தியங்கள் இருக்கலாம். நாம் நல்ல முறையில் மாற வேண்டும், உயர வேண்டும், அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அக்கறையில் அவன் சொன்னதை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் சொன்னான்:…”

அறிவும், நல்ல மனமும் சேர்ந்திருக்கும் மனிதர்களாலேயே எந்த ஒரு சமுதாயமும் மேம்பட்டிருக்கிறது. வளர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட மனிதர்கள் இல்லாமல் போகும் போது, அப்படிப்பட்ட மனிதர்கள் இருந்தும் அவர்கள் பொது நலனில் அக்கறை காட்டாத போது அழிந்திருக்கிறது.  நல்ல மனிதர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் போது எல்லாமே நாசமாகிப் போகிறது...

“உண்மையான எதிரி ஒரு தனிமனிதன் அல்ல. உங்கள் சமூகத்தில் புறையோடியிருக்கும் சுயநலம், பேராசை, வெறுப்பு, அலட்சியம் எல்லாம் தான்.

தனிமனித மதிப்பீடுகள் தரம் குறையும் போது அவன் வாழும் சமுதாயத்தின் தரமும் குறைய ஆரம்பிக்கிறது. அப்போது தான் அழிவிற்கான விதைகள் விதைக்கப் படுகின்றன. பொதுநலம் மறக்கப்பட்டு, தன் உண்மையான நலமும் எதுவெனத் தெரியாமல் மனிதன் மயங்கும் சூழ்நிலை உருவாக ஆரம்பித்து, அந்தச் சூழ்நிலையில் தீமைகள் வேகமாக விளைய ஆரம்பிக்கின்றன. அப்போது தன் நிலைமைக்குத் தானே பொறுப்பேற்க மனிதன் மறக்கிறான். அடுத்தபடியாக உடனடிக் கிளர்ச்சிகளுக்காகவும் அற்ப சந்தோஷங்களுக்காகவும், நீண்டகால நன்மைகளையும், உயர்வுகளையும் மனிதன் அலட்சியம் செய்ய ஆரம்பித்து, தன்னை அழித்துக் கொள்ளத் தயாராகிறான். அவன் ஆறாவது அறிவைப் பயன்படுத்துவது குறைய ஆரம்பிக்கிறது. அழிவின் வேகம் அதிகரிக்கிறது…..

அந்தச் சின்னம் இப்போது வைரம் போல் ஜொலிக்க ஆரம்பித்தது. இருட்டில் இருந்த அரங்கம் அந்த ஜொலிப்பில் பௌர்ணமி நிலவொளியில் வெட்டவெளியில் இருப்பது போல ஒளி வெள்ளத்தில் மிதந்தது. எல்லோர் முகத்திலும் பிரமிப்பு தெரிய ஆரம்பித்தது. விஸ்வத்திற்கு வெளியே இதைப் பார்க்கச் சகிக்கவில்லை. உள்ளேயோ சக்திகள் உருவப்படாமல் தடை செய்யும் முயற்சி தோல்வியடைந்து அவன் படிப்படியாக பலம் இழந்து கொண்டிருந்தான். அவனை ஏதோ ஒரு சக்தி கட்டிப் போட்டது. அவனால் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. எத்தனையோ பேரை இப்படிக் கட்டுப்போட்டிருக்கிறான். அந்த அனுபவம் அவனுக்கே வந்து சேரும் என்பதை அவன் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.

அந்தச் சின்னத்தின் ஜொலிப்பில் க்ரிஷும் தேஜஸுடன் தெரிந்தான். ஒவ்வொருவரின் அந்தராத்மாவுடனும் பேசுவது போல் க்ரிஷ் மேலும் சொன்னான். என் வேற்றுக்கிரகவாசி நண்பன் அழிவின் போக்கைக் கணக்கு போல படிப்படியாக விளக்கியது  மகத்தான உண்மை. தனிமனிதர்களாக நீங்கள் உங்கள் பொறுப்பை உணர்வதோடு தலைவர்கள் என்ற நிலையில் தனிமனிதர்களை மாற்ற முடிந்த சாத்தியத்தை உணர வேண்டும்…..உலகத்தில் மிக உயர்ந்த உத்தமனும் சரி, மகா மோசமானவனும் சரி எக்காலத்திலும் பெரும்பாலும் மாறாதவர்களாகவே இருப்பார்கள். எந்த மோசமான சூழ்நிலையிலும் மிக மிக நல்லவன் கெட்டது செய்யத் துணிய மாட்டான். எத்தனை தான் நல்ல சூழல் இருந்தாலும் மகா மோசமானவன் நன்மைக்கு மாற மாட்டான். இந்த இரண்டு உச்சங்களும் தங்கள் நிலை மாறாதவை. இவர்கள் விஷயத்தில் யாரும் எதுவும் செய்யவும் முடியாது. ஆனால் இவர்களின் அளவு மிகக்குறைவு. ஓரிரண்டு சதவீதம் கூட இருக்க மாட்டார்கள். மற்ற எல்லாரும் இடைப்பட்டவர்களே. உங்களால் மாற்ற முடிந்தவர்களும், பெரும்பான்மை மனிதர்களும் இவர்களே….”

“இந்த இடைப்பட்டவர்கள் இரண்டு நிலைகளுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருப்பவர்கள். இவர்கள் ஒட்டு மொத்தமாய் தீய நிலைக்கு சரிவார்களேயானால் அந்த சமூகம் அழிவது நிச்சயம். அது தான் இப்போது நடக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த இடைப்பட்டவர்களை நல்ல தன்மைக்கு மாற்றும்படியான சூழல் இல்லை. அந்த நன்மை அலைகளை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். அந்த அலைகளை அதிகப்படுத்தவே இந்தியாவின் அந்த ஆன்மிக இயக்கமும், தன்னலமில்லா தவசிகளும், உங்கள் அகஸ்டினும் கூடத் தவமிருந்தார். நுண்ணுணர்வு கொண்டவர்கள் அந்த நல்ல அலைவரிசைகளை வாங்கி மாறுவார்கள், தங்கள் உதாரணங்களால் மற்றவர்களையும் மாற்றுவார்கள் என்பது தான் அவர்கள் நோக்கமாய் இருந்தது. இது முட்டாள்தனம் அல்ல. தொலைநோக்கு….”

“ஒருவன் தன் மன உலகில் உருவாக்குவதையே வெளியுலகில் காண்கிறான். உள் உலகில் உருவாக்குபவை மேற்போக்காகவும், வீரியம் இல்லாமலும் இருக்கும் போது வெளியுலகிலும் குழப்பமாகவே எல்லாம் உருவாகிறது. உள் உலகில் தெளிவாகவும் உறுதியாகவும் தொடர்ந்து நினைப்பதும் மதிப்பதும் உயர்வாகவே இருக்கையில் அதன்படியே அவனுக்கு வெளியுலக வாழ்க்கை அமைகின்றது. இந்த இருவேறு உலகங்களில் ஒன்று அவன் உருவாக்குவது. இன்னொன்று அவன் காண்பது. அந்த வகையில் இருவேறு உலகமும் ஒன்றே. வெளியே காண்பது பிடிக்காத போது அவன் உள்ளுக்குள் உருவாக்குவதை மாற்றிக் கொள்வது ஒன்றே வழி”

“இன்னொரு விதமாகச் சொன்னால் எதை மனிதன் அதிகமாகவும் அழுத்தமாகவும் நினைக்கிறானோ அதுவாகவே அவன் ஆகிறான் என்பது பிரபஞ்ச விதி. அதுவே அவனைத் தேடி வருகிறது. அதற்குரிய சூழல்களையே உருவாக்கியும் தருகிறது. ஆகவே எண்ணங்களிலும் நோக்கங்களிலும் இருக்கிறது எல்லாச் சூட்சுமமும். யோகிகள் தங்கள் ஞான அலைகளை பரவச் செய்து பலன் பெறத் தகுதியான அலைவரிசைகளில் இருப்பவர்களை உயர வைப்பது போல, ஆளுமை உள்ள மனிதர்களும் தங்கள் எண்ணங்களாலும், செய்கைகளாலும் எத்தனையோ நுட்பமான மாற்றங்களை உருவாக்கி விட முடியும். அந்த வகையில் தலைவர்கள் முடிந்த வரை உதாரண புருஷர்களாய் இருக்க வேண்டும். நன்மைக்கு மதிப்பும் மரியாதையும் தர வேண்டும். நன்மை போற்றப்படுகிறது, அதுவே கௌரவம், அதற்கே மதிப்பு என்ற நம்பிக்கையான சூழலை நாம் உருவாக்கினால் ஒழிய இந்த இடைப்பட்ட பெரும்பான்மையான மனிதர்களை நாம் நன்மையின் போக்கிற்கு மாற்றி விட முடியாது.”

“அப்படி மனிதர்களை மாற்றி அவர்களை மேலுக்கு உயர்த்தி அவர்களுக்குத் தலைமை தாங்குவது  தான் உண்மையில் தலைமைக்குப் பெருமை. முட்டாள்களையும், தற்குறிகளையும், கேடிகளையும், போக்கிரிகளையும், கொள்ளையர்களையும், தீவிரவாதிகளையும் சமாளித்து அதிலும் சுய சம்பாத்தியம் பார்ப்பதைத் தலைமை என்று பெருமையாகச் சொல்ல முடியுமா? இல்லுமினாட்டி எந்த மாதிரியான மனிதர்களுக்குத் தலைமை தாங்க நினைக்கிறது? எந்த விதமான தலைமையை அது பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியும்…. அறிவும் ஞானமும் படைத்த நீங்கள் யோசித்துப் பாருங்கள்.  நல்ல மனிதர்களைப் போற்றுங்கள். திறமைக்கு ஆதரவு கொடுங்கள். எது எல்லாம் உயர உதவுமோ அதை எல்லாம் சிலாகியுங்கள். உண்மைக்கு உரிய கவுரவம் கொடுங்கள். இந்த இடைப்பட்ட மனிதர்கள் கண்டிப்பாக நன்மையின் பக்கம் திரும்புவார்கள். உயர ஆரம்பிப்பார்கள்…. இதுவே உலகம் காப்பாற்றப்படும் வழி. அதைவிட்டு எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்று இன்றைய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் செய்வதைப் போல எல்லா இடங்களில் இருந்தும் சுருட்டிக் கொண்டே போனால் கடைசியில் எதுவும் மிஞ்சாது. இப்படி ஒருவன் சேர்த்ததை அவனுக்கு மேல் வலிமையானவன் பிடுங்கி, அவன் பிடுங்கியதை அதற்கு மேல் வலிமையானவன் பிடுங்கி வலிமை என்றாலே ஏமாற்றிப் பிடுங்குவது என்றாகி கடைசியில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு தான் சாக வேண்டும்…. அழிப்பதற்கு எந்தத் தனித்திறமையும் தேவையில்லை. பலவீனமானவர்களை ஏமாற்றியும், பயமுறுத்தியும் கொள்ளையடிப்பது பெருமையும் அல்ல.”

அசைய முடியாமல் கட்டப்பட்டவன் போல் இருந்த விஸ்வம் சக்திகள் இழந்ததாலோ என்னவோ அந்தச் சின்னத்தில் இருந்து வெளிப்பட்ட பேரொளி நெருப்பாய் சுடுவது போல் உணர்ந்தான்.   அவனுக்கு முன்னால் விரிந்த குகைக்காட்சியில் மாஸ்டர் விஸ்வத்தை இரக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய இரக்கம் அவனுக்கு நெருப்பை விட அதிகமாகச் சுட்டது. அவர் கண்களை மூடித் தியானத்தில் ஆழ ஆரம்பித்தார். அந்த நேரத்தில் தான் குகையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த அவனுடைய கம்பளித்துணியின் நுனி மெல்ல எரிய ஆரம்பித்திருந்ததை விஸ்வம் கவனித்தான். விஸ்வம் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போனான். அந்த எரியும் கம்பளி அவனையும் எரிப்பது போல் உணர ஆரம்பித்தான்.  சதாசிவ நம்பூதிரி சொன்ன விதை விருட்சமாகி காடாகி பெருக ஆரம்பிக்கையில் பிரம்மாண்ட விருட்சமாக இருந்த அவன் நெருப்பினால் எரிக்கப்பட்டு சாம்பலாகிக் கொண்டிருக்கிறான்…. உலகத்தின் விதி எழுதி அனைவரும் பார்க்க உச்சியில் நிற்க ஆசைப்பட்டவன் அருகிலிருந்த மனிதர்கள் கூட அறியாமல் செத்துக் கொண்டிருக்கிறான். கடைசியாக அவன் பார்வையில் பட்டது க்ரிஷ் கையில் ஜொலித்துக் கொண்டிருந்த அந்தச் சின்னம். கண்களை மூடிக் கொண்டான். அவனவனுக்குச் சேர வேண்டியதை அடுத்தவன் இடையே பிடுங்கிக் கொண்டாலும் கூட விதி பிடுங்கியவன் மூலமாகவே கூட சேர வேண்டியதைச் சேர வேண்டியவனிடம் சேர்த்தும் விடுகிறது என்பது அவன் கடைசி சிந்தனையாக இருந்தது.

க்ரிஷ் கடைசியாகச் சொன்ன வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே விஸ்வம் இறந்து போனான். “எல்லா மாற்றங்களும் உடனடியாக சாத்தியமாகி விடாது என்பது உண்மையே. ஆனால் அழிவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமானால் சின்னச் சின்ன மாற்றங்களை உடனே நாம் ஏற்படுத்த வேண்டும். நம் நண்பர் சொன்ன அக்னி நமக்குள் இருக்குமானால், அது தணியாமல் நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடிந்தால் பெரிய பெரிய மாற்றங்களும் சாத்தியமாகும். அவர் சொன்னது போலவே இலக்கு நோக்கித் தளர்வில்லாமல் போய்க் கொண்டிருந்தோமானால் எல்லா உயரங்களும் நமக்குச் சாத்தியமே”

விஸ்வம் முகத்தில் சோகம் கலந்த புன்னகை தங்கிப் போனது….

(அடுத்த வாரம் முடியும்)

என்.கணேசன்



Thursday, May 30, 2019

இருவேறு உலகம் – 138


விஸ்வம் கத்தியதும் அவன் இருந்த பகுதியில் ஒரு சிறு விளக்கும் எர்னெஸ்டோ முன்னால் இருந்த மெல்லிய விளக்கும் எரிந்தன. அவர் அவனை அமரும்படி சைகை செய்தார். பிறகு பேச உனக்கு வாய்ப்பு தரப்படும் என்றும் கையால் சைகை செய்தார். வேறு வழியில்லாமல் விஸ்வம் அமர்ந்தான். இரு விளக்குகளும் அணைந்தன.

க்ரிஷ் விஸ்வத்தின் கத்தலால் பாதிக்கப்படாமல் அப்படி ஒரு குரலே கேட்கவில்லை என்பது போல் தொடர்ந்தான்.  ”…. பிறகு அந்த அகஸ்டின் தவசியின் சமாதியில் ஒரு அதிசயம் நடந்தது. எங்கிருந்தோ ஒரு கருப்புப்பறவை அங்கே வந்தமர்ந்தது. சிறிது நேரம் இருந்து விட்டுப் போனது. அது போகும் போது ஒரு முக்கோணக் கல் நடுவில் கண் இருப்பதை விட்டுப் போனது. மாஸ்டர் ஆச்சரியப்பட்டு அதை எடுத்துக் கொண்டு போய் அந்தச் சிவன் சிலையில் பொருத்திப் பார்த்தார். அது பொருந்தியிருக்கிறது. மூட நம்பிக்கைகளுக்கு எதிராக இருக்கும் உங்களுக்கு இதை நம்பக் கஷ்டமாய் இருக்கலாம். ஆனால் யோகத்தின் உச்ச நிலையில் யோகிகள் சித்தர்கள் பல வடிவங்கள் எடுக்க முடிவது சகஜம் என்பதையும் அது எப்படி என்பதையும் நம் நண்பர் உண்மை பேசும் மனநிலையில் இருக்கும் போது கேட்டால் என்னைவிட நன்றாக அவர் சொல்லக்கூடும். ஏனென்றால் இது போன்ற சக்திகளில் அவர் அறியாதது எதுவுமிருக்க வழியில்லை. அப்படிப் பறவை வழியில் வந்தது அகஸ்டினே தானா, இல்லை வேறு எதாவது சித்தரா என்றெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் அந்த அற்புதம் நடந்திருக்கிறது…..” அவன் சொல்லி முடிக்கையில் நெற்றிக் கண் ஒளிர்ந்தது. அது அவன் சொன்னதை ஆமோதிப்பதாக இங்கு சில பைத்தியங்கள் நினைக்கக்கூடும் என்ற எண்ணம் விஸ்வத்தின் மனதை அரித்தது.

க்ரிஷ் சொன்னான். “அங்கே அந்த நெற்றிக்கண்ணைப் பொருத்தியவுடன் மாஸ்டர் சக்தி வீச்சை நிறையவே உணர்ந்ததால் அங்கேயே சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்திருக்கிறார். சக்தியின் உச்சமும், அமைதியின் உச்சமுமான நிலையை அடைந்திருக்கிறார். புதிய மனிதராக மாறியிருக்கிறார். அதன் பாதிப்பு அவருக்கு எந்த அளவு இருந்ததென்றால் ஒரே ஒரு முறை அங்கிருந்து வந்து எங்கள் எல்லோரிடம் இருந்தும் விடைபெற்றுத் திரும்பிப் போய் விட்டார். அந்தக் குகையில் இன்னொரு தவம் தொடர்ந்து வருகிறது.  அதே குகை, யோக நிலையில் அதே சிவன், அந்த நெற்றிக் கண்ணும், அந்தத் தவசியும் மட்டும் வேறு வேறு….. உலக நன்மைக்காக, அழிவில் இருந்து காப்பாற்றுவதற்காக நம் நண்பர் முட்டாள்தனம் என்று சொல்லும் தவம் அகஸ்டின் விட்ட இடத்திலிருந்து மறுபடி தொடர்ந்து கொண்டிருக்கிறது….”

விஸ்வத்துக்கு க்ரிஷின் யுக்தி இப்போது புரிந்தது. யாரையோ விஸ்வம் அலட்சியப்படுத்தினான், ஏமாற்றினான், கொன்றான் என்றால் இல்லுமினாட்டிக்கு அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் இல்லுமினாட்டியின் மதிப்பிற்குரிய ஒரு தவசியை அவன் அதன்  உறுப்பினராக இருந்து கொண்டு அவமதித்திருக்கிறான் என்றால்….? விஸ்வத்தை இறக்கி மாஸ்டரை அகஸ்டினுக்கு இணையாக உயர்த்தி க்ரிஷ் வார்த்தை ஜாலம் புரிகிறான்….. அவன் எண்ணத்தைப் படிக்க முடிந்தது போல அந்தக் குகையில் இருந்த மாஸ்டர் அவரைப் பார்த்துப் புன்னகைப்பதைப் பார்த்து விஸ்வம் ஆத்திரமடைந்தான்.

விஸ்வம் தனிமனிதர்களின் மனங்களையும், கூட்ட மனிதர்களின் மனங்களையும் ஆழமாய் அலசி ஆராய்ந்தவன்.  ஸ்டீபன் தாம்சனின் நூலைப் படித்ததோடு அல்லாமல் அவருடன் மணிக்கணக்கில் அதைப் பற்றி விவாதித்து அறிந்தவன். அந்த மனோதத்துவத்தை வைத்து தான் அவன் தன் உரையைத் தயாரித்திருந்தான். இல்லுமினாட்டியிடம் க்ரிஷ் பேசக்கூட எதுவுமே இல்லை என்னும் அளவுக்குக் கச்சிதமாக அவன் உரையும் அமைந்திருந்தது. ஆனால் க்ரிஷும் ஸ்டீபன் தாம்சன் படித்தவன். அவனும் எதிலும் ஆழமாய்ப் போக முடிந்தவன்….. இல்லுமினாட்டியைக் கவரும்படி எதுவுமே பேச விஷயமில்லாதவன் அகஸ்டின் என்ற ஒற்றைக் கிளையை வைத்து உயர எழும்பிக் கொண்டிருக்கிறான். இந்த முட்டாள்களும் சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்…. சதாசிவ நம்பூதிரியின் ஒரு விதைக்குள் எத்தனை மரம், எத்தனை காடுகள் உதாரணம் நினைவு வந்து தொலைத்தது…..

க்ரிஷ் தொடர்ந்தான். “நான் நம் நண்பர் சொன்ன ஒரு விஷயத்தை நூறு சதம் ஒத்துக் கொள்கிறேன். அவனவன் நலத்தை அவனவனே அதிகம் விரும்ப வேண்டும். அவனே அதற்கு அதிகம் உழைக்க வேண்டும். அது தான் சரி. ஆனால் அடுத்தவன் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்? உங்கள் குழந்தைகளை நினைப்பீர்களா, உங்கள் உயிருக்குயிரானவர்களை நினைப்பீர்களா? அவர்களுக்காக நீங்கள் எதுவும் செய்ய மாட்டீர்களா? அப்படியானால் அகஸ்டின் உங்கள் இயக்கத்துக்காக தவமிருந்ததை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? முட்டாள்தனமா? உங்களைச் சோம்பேறிகளாகக் குறைக்கும் முயற்சியா? உங்கள் மீது அக்கறையும் அன்பும் இருந்ததாலும், இந்த உயர்வு மேலும் மேலும் சிறக்க வேண்டும் என்று நினைத்ததாலும் அல்லவா அவர் இவ்வளவு காலம் தன்னுடைய வாழ்வை அதற்காக அர்ப்பணித்தார்?”

“நம் நண்பர் மனதில் அக்னியோடு பிறந்து ஒவ்வொன்றையும் கற்றதையும், மேலும் மேலும் உயர்ந்து வளர்ந்ததையும் சொன்னார். இந்த விஷயத்தில் அவரை இனி என் உதாரண புருஷனாக நான் வைத்துக் கொள்வேன். அந்த அக்னி, அந்த உழைப்பு, அந்தத் தீவிரம் எல்லாம் தான் எந்த வெற்றிக்கும் தாரக மந்திரம். ஆனால் எல்லா வளர்ச்சியிலும் நோக்கம் அல்லவா முக்கியம். நோக்கம் நன்றாக இருந்தால் அல்லவா எல்லா வளர்ச்சியும் பயன் அளிக்கும். வெறும் சக்திக்குவிப்பு உங்களுக்குப் பாதுகாப்பு தருமா? அணுகுண்டின் சக்தி எல்லையில்லாதது. அதைப் பார்த்து நாம் வியக்கலாம். அதன் சக்தியை ஒத்துக் கொள்ளலாம். ஆனால் அதைத் தலையணைக்கு அடியில் வைத்து நிம்மதியாக நீங்கள் உறங்க முடியுமா?”

“நம் நண்பர் தன் வாழ்நாள் கதையைச் சொன்னார். அருமையான வெற்றிக் கதை தான். ஆனால் அந்தக் கதையில் அவர் நன்றியோடிருந்த காட்சியும், நம்பிக்கைக்குப் பாத்திரமாய் இருந்த காட்சியும் இல்லவே இல்லையே. அவர் ஒரு குருவையாவது நினைவு வைத்து பூஜித்திருக்கிறாரா? யாரையாவது வழிகாட்டியாய் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறாரா? எல்லாம் நான்…. நான்….. நான்…… அது போகட்டும். அவரையே முழுவதுமாய் நம்பி தங்கள் கஜானாவையே ஒப்படைத்திருந்த ஒரு இயக்கத்தை வஞ்சித்து விட்டு உங்களிடம் வந்திருக்கிறார். அவரை நீங்கள் நம்பி ஏற்றிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு நிறுவனத்தை ஒருவன் ஏமாற்றி விட்டு வந்திருப்பது தெரிய வந்தால் வேறெந்த நிறுவனமும் அவனைச் சேர்த்துக் கொள்ளாது. அந்த சாதாரண அறிவை இல்லுமினாட்டி எப்படித் தவற விட்டது? அதில் திருடிய பணத்தில் பாதி வந்து சேர்ந்ததாலா? அந்த ஆன்மிக இயக்கத்தை ஏமாற்றியது போல் இல்லுமினாட்டியையும் ஏமாற்ற மாட்டார் என்பது எப்படி நிச்சயம்? ஏமாற்றிய பின் எத்தனையோ காரணம் சொல்லலாம். இந்தியாவின் ஆன்மிக இயக்கத்தை முட்டாள்தனம், சோம்பேறித்தனம் என்று சொன்னது போல உங்களையும் பதவி வெறியர்கள், அகங்காரிகள் என்றெல்லாம் கூட வேறொரு இயக்கத்தில் சொன்னால் அவர்களுக்கு எதிராக இல்லாத வரையில் அவர்களும் நம்பக்கூடும் அல்லவா?”

விஸ்வம் இந்தப் பேச்சு போகும் போக்கை வெறுத்தான். ஷேக்ஸ்பியரின் ஜுலியஸ் சீசர் நாடகத்தில் ப்ரூட்டஸின் பேச்சைப் பாராட்டிப் பாராட்டிப் பேசியே மார்க் ஆண்டனி கழுத்தறுப்பது போல் அல்லவா இவன் பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. அவன்  எத்தனை அழகாய் இவர்கள் மனதில் ஒரு பெரிய பிம்பத்தை உருவாக்கி விட்டிருந்தான். இவன் அதன் அஸ்திவாரத்தையே அல்லவா தகர்த்துக் கொண்டிருக்கிறான். இல்லுமினாட்டி மேடையில் அவர்களே முட்டாள்தனமாகவும், சுயநலமாகவும் அவனை நம்பிச் சேர்த்திருக்கிறார்கள் என்றல்லவா வெளிப்படையாகச் சொல்கிறான். இந்த இல்லுமினாட்டி மடையர்களும் மகுடி முன் பாம்பாக அல்லவா அதை மயங்கிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவன் க்ரிஷை வெறுத்தான். அகஸ்டினை வெறுத்தான். க்ரிஷ் தொடும் போதெல்லாம் மின்னும் அந்தச் சின்னத்தை வெறுத்தான். அது மின்னி மின்னிக் கழுத்தறுத்து விட்டது. இவன் பேச்சையாவது ஏதாவது விதத்தில் கடைசியில் மறுக்க முயற்சிக்கலாம். ஆனால் அவனைத் தேர்ந்தெடுக்கப்பட்டவனாக அடையாளம் காட்ட முற்பட்டிருக்கும் இந்த ஒளிரும் சின்னத்தை யோக சக்தியால் அணைத்து விட வேண்டும். அந்தச் சின்னத்திலிருந்து தான் அவனுக்குப் பேச விஷயங்கள் கிடைப்பது போல அவனுக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது. அந்தச் சின்னம் இருப்பதால் தான் அதன் மூலமாக மாஸ்டர் அங்கிருந்து இங்கு நடப்பதைத் தொலைக்காட்சி பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருக்கிறார். குறைந்தபட்சம் இனி மின்னாதபடியாகவாவது பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஆபத்து….. பிறகு அது ஒளிர நிறுத்தியதை மையமாக வைத்து விஸ்வம் பிறகு பேசலாம்……  விஸ்வம் தன் சக்திகளைக் குவிக்க ஆரம்பித்தான்.

க்ரிஷ் சொன்னான். “ஐந்து தீவிரவாத இயக்கங்களுக்குத் திருட்டுப்பணம் தந்து, அவர்களுக்குத் தகுந்த மாதிரி பேசி ஏமாற்றி என் பிடியில் வைத்திருக்கிறேன் என்று நம் நண்பர் பெருமை பேசினார். இப்போது  அது சாத்தியமாக இருக்கலாம். ஆனால் தீவிரவாதிகளின் தேவைகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகும். தொடந்து அவர்களைத் திருப்திப்படுத்த யாராலும் முடியாது. ஒரு தீவிரவாதக்கூட்டத்தையே தொடர்ந்து சமாளிக்க முடியாத நிலை வரும் என்ற யதார்த்த நிலை இருக்கையில் இவர் ஐந்து எதிரெதிர் இயக்கங்களை தொடர்ந்து திருப்திப்படுத்த முடியவே முடியாது.. தீவிரவாதிகளைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை வளர்த்த தலைவர்கள் காலப்போக்கில் அவர்களாலேயே செத்து மடிந்த வரலாறு வேண்டுமளவு இருக்கிறது. சம்பந்தப்படும் அனைவரையும் தீவிரவாதம் அழித்தே தீரும். பணம், அதிகாரம், சாமர்த்தியம் எல்லாம் எத்தனை இருந்தாலும் அது ஏற்படுத்த முடிந்த அழிவில் இருந்து தப்பிக்கப் போதவே போதாது. செய்து விட்டுத் தான் சொல்வேன் என்று பெருமை பேசிய நண்பர் சிந்தித்து விட்டுத் தான் செய்வேன் என்று சொல்லியிருந்தால் மெச்சியிருப்பேன்…. முட்டாள்தனத்தைச் செய்து விட்டுத் தெரிவிப்பது படுமுட்டாள்தனம்.”

விஸ்வத்துக்கு பேச்சு நாராசமாகக் காதில் விழுந்தது. இவனை இப்படிப் பேச விட்டு உட்கார்ந்து கேட்கும் நிலைமை வரும் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. விஸ்வத்தின் பேச்சை அரை மணி நேரம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு அதில் சொல்லியிருந்த ஒவ்வொன்றிலும் இருக்கும் ஓட்டைகளை இப்படி எடுத்துக் காட்டி காட்டி கிழித்து வீசுகிறானே. தலைவனாக உயர்ந்து கொண்டிருந்தவனை திருடனாகக் காட்டி இப்போது கோமாளி போலவும் காட்ட ஆரம்பித்து விட்டானே….. இந்த எண்ணங்கள் எல்லாம் அலைமோதி அவன் மனம் ஒருநிலையில் குவிய மறுத்தது. இத்தனை காலம் தேவையான நேரத்தில் நினைத்தபடியெல்லாம் ஒத்துழைத்த மனம் அவன் வாழ்வின் மிக முக்கிய தருணத்தில் க்ரிஷ் பேச்சால் நிலை குலைந்து குவிய மறுப்பதை அவனால் சகிக்க முடியவில்லை.

இது க்ரிஷ் தயாரித்துக் கொண்டு வந்த பேச்சாய் தோன்றவில்லை. ஏன் என்றால் விஸ்வம் என்ன பேசுவான் என்று பெரிதாய் அவன் யூகித்திருக்க வழியில்லை. இதை எல்லாம் அவனுக்கு எடுத்துத் தருவது அவன் தொடும் போதெல்லாம் மின்னும் அந்த பிரமிடு கண் சின்னமாகவே இருக்க வேண்டும் என்பது இப்போது அவனுக்கு உறுதியாகவே தெரிந்து விட்டது. எல்லாம் இந்தச் சின்னத்தின் சித்து வித்தை தான். இனி இந்தப் பேச்சு தொடரக்கூடாது. தீர்மானித்த விஸ்வம் சகலமும் மறந்து தீவிர உறுதியோடு மனதை ஒருமைப்படுத்தினான். தன் சகல சக்திகளையும் ஒருமுனைப்படுத்திக் குவித்தான். அந்தச் சின்னத்தைச் சுற்றி சக்தி வாய்ந்த ஒரு அரணை ஏற்படுத்தி அதன் எந்த சக்தியும் அந்த அரணைத் தாண்டிப் பரவாதபடி சிறைப்படுத்த  முடிவு செய்து, குவித்த சக்திகளை அந்த பிரமிடு நெற்றிக்கண் சின்னத்தில் விஸ்வம் பிரயோகித்தான்.

(தொடரும்)
என்.கணேசன்


Thursday, May 23, 2019

இருவேறு உலகம் – 137


விஸ்வம் லேசாகத் தலைவணங்கி விட்டு மேடையை விட்டு இறங்கினான். அந்த இல்லுமினாட்டிச் சின்னத்தை அவன் பேச்சு மேடையில் இருந்து எடுத்துக் கொள்ளாமல் வேண்டுமென்றே அதை அங்கேயே விட்டு வந்தான். உறுப்பினர்கள் கண் பார்வை க்ரிஷ் பேசி முடித்து கூட்டம் முடிவடையும் வரை அந்தச் சின்னத்தில் விழுந்தபடியே இருப்பது தனக்கு அனுகூலம் என்று விஸ்வம் நினைத்தான். க்ரிஷ் பேசப் பேச அந்தச் சின்னம் அவனுக்கு முன்னால் இருந்து கொண்டு விஸ்வத்திற்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கும்…. கைதட்டல் விஸ்வம் திரும்பவும் வந்து தன் இருக்கையில் அமரும் வரை தொடர்ந்தது. இருவர் வந்து க்ரிஷை மேடைக்கு அழைத்துச் சென்றார்கள். பேச்சு மேடை முன் அவனை நிறுத்தி அவன் கையைப் பிடித்து மைக்கை உணரவைத்து விட்டு ஒரு நிமிடம்  வேறெதாவது உதவி அவனுக்குத் தேவைப்படுமா என்று கவனித்துப் பார்த்து விட்டு மேடையிலிருந்து இறங்கினார்கள்.

க்ரிஷ் மனம் வெறுமையாக இருந்தது. என்ன பேசுவது என்ன சொல்வது என்று பலதை முன்பே நினைத்து வைத்திருந்தாலும் மேடையேறிய கணமே அந்த நினைவுகள் விடைபெற்றது போல வெறுமையே மிஞ்சியது. ஒரு நிமிடம் அவன் மௌனமாக நின்றான். விஸ்வத்துக்கு அவனைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. கண்களைக் கட்டி காந்தாரி போல பரிதாபமாய் நிற்கிற அவனுக்கு விஸ்வத்துக்கெதிராய் பேச எதுவுமே இருக்க வாய்ப்பில்லை என்று விஸ்வம் முன்பே கணித்திருந்தான். அதை மெய்ப்பிப்பது போலத் தான் க்ரிஷ் மௌனமாய் நின்று கொண்டிருக்கிறான். இந்தக் கேவலம் உனக்குத் தேவையா க்ரிஷ்? என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டான்.

க்ரிஷ் கை பேச்சு மேடையில் இருந்த நெற்றிக்கண் கல்லில் பட்டது. அது என்ன என்று தொட்டுப் பார்த்த போது அந்தச் சின்னத்தை சபைக்குக் காட்டிய விஸ்வம் அதை விட்டுப் போயிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான். க்ரிஷ் கை பட்டவுடனே அந்தச் சின்னம் ஒரு முறை ஒளிர்ந்து மறைந்தது. விஸ்வம் திகைத்தான். என்ன இது? அவன் தொட்டாலும் ஒளிர்கிறதே! க்ரிஷின்  கை அந்த நெற்றிக்கண் கல்லில் பட்டவுடனேயே க்ரிஷின் மூடிய கண்கள் முன் ஒரு காட்சி தெரிய ஆரம்பித்தது. பனிமலைக் குகையில் மாஸ்டர் தெரிந்தார். அவருக்குப் பின் சிவனுடைய முகச் சிற்பம் தெரிந்தது. சிவன் யோக நிலையில் இருந்தான். சிவனின் கண்களும், நெற்றிக்கண்ணும் பாதி மூடிய நிலையில் இருந்தன. மாஸ்டரைப் பார்த்ததும் க்ரிஷ் முகம் மலர்ந்தது. தலைதாழ்த்தி அவன் அவரை வணங்கினான். அவர் சாந்தமாய் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். கை உயர்த்தி அவனை ஆசிர்வதித்தார்

அந்தக் காட்சி க்ரிஷுக்கு அருகில் ஒரு திரையில் தெரிவது போல் தெரிய விஸ்வம் அதிர்ச்சி அடைந்தான். பக்கத்தில் இருப்பவர்களைப் பார்த்தான். நல்ல வேளையாக யாருக்கும் அந்தக் காட்சி தெரியவில்லை என்பதை உணர முடிந்தது. சற்று நிம்மதி அடைந்தாலும் அவனைப் பார்த்து மாஸ்டர் புன்னகைத்தது போலத் தோன்றியது எரிச்சலை ஏற்படுத்தியது. இந்த ஆள் யோகசக்திகளை அதிகரித்துக் கொண்டு விட்டான் போல் இருக்கிறது. அதனால் தான் அதை எனக்குக் காட்டுகிறான். ’முட்டாளே இந்தக் காட்சிகள் எல்லாம் எனக்குக் காட்டி ஒரு பிரயோஜனமும் இல்லை. எல்லாமே உன் கையை விட்டுப் போய் விட்டது…. ’ மனதிற்குள் சொல்லச் சொல்லத் தான் மாஸ்டருக்குப் பின்னால் தெரிந்த சிவன் சிலையில் நெற்றியில் முக்கோணத் துளை இல்லாமல் நெற்றிக்கண் பாதி மூடிய நிலையில் தெரிந்ததைக் கண்டு திகைத்தான். இந்த ஆள் அதற்குள் சரியாகப் பொருந்துகிற ஒரு நெற்றிக்கண்ணைப் பொருத்தி விட்டானோ? ’எல்லாம் சரி ஐயா உன் சிஷ்யன் இங்கே பேச வாய் வராமல் திண்டாடிக் கொண்டிருக்கிறானே உதவக்கூடாதா? இங்கே பார்த்துக் கொண்டிருப்பவர்கள் சிரிக்கப் போகிறார்கள்’ என்று ஏளனமாக மனதிற்குள் அவரிடம் கேட்டான்.

க்ரிஷ் மெல்ல அந்தச் சின்னத்தைக் கையில் எடுத்து  பேச ஆரம்பித்தான். “இது தான் எனக்கும் முன்னால் பேசிய நம் நண்பருக்குக் கிடைத்த எங்கள் சிவனின் நெற்றிக்கண்  உங்கள் புனிதச் சின்னம் பிரமிடுக்குள் கண் என்று நினைக்கிறேன். மதங்கள் நாடுகளைக் கடந்த ஞானம் ஒன்றாகவே இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு அருமையான உதாரணமாய் இருக்கிறது. இந்த ஞானம் நம்மைக் காக்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு இதையே சாட்சியாக வைத்து உங்களிடம் பேச விரும்புகிறேன்” என்று தலைதாழ்த்தி அந்தச் சின்னத்தை பேச்சு மேடையிலேயே வைத்தான். அவன் கையில் வைத்திருந்த வரை தொடர்ந்து அந்தச் சின்னத்தில் அந்தக் கண் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவன் கீழே வைத்தபின் தான் மங்கியது. விஸ்வம் அந்தச் சின்னத்தை அங்கு வைத்து விட்டு வந்ததன் முட்டாள்தனத்தை உணர்ந்தான். ’என்னிடம் இருக்கும் போது எப்போதாவது ஒரு முறை கண்சிமிட்டும் நேரம் மட்டுமே ஒளிர்ந்த இந்தச் சின்னம் இவன் தொடும் போதெல்லாம் மிளிர்கிறதே. இதை இந்த முட்டாள்கள் அவனையே இந்தச் சின்னம் அடையாளம் காட்டுவதாகக்கூட எடுத்துக் கொள்வார்களே…… ஆனால் இவன் ஏதோ மாயா ஜாலம் செய்கிறான். இல்லுமினாட்டி தவசி அகஸ்டின் கையால் வாங்கியது நான் தான் என்கிற வகையில் சமாளிக்க வேண்டும்…….’

க்ரிஷ் அமைதியாகத் தொடர்ந்தான். “இந்தியக்கடவுள் சிவனின் நெற்றிக்கண்ணாகவும், உங்கள் இல்லுமினாட்டியின் புனிதச் சின்னமாகவும் இருக்கும் இந்தச் சின்னம் இன்னொரு வகையில் இந்திய ஆன்மீக இயக்கத்தையும், உங்கள் இல்லுமினாட்டியையும் இணைக்கிறது. இணைப்பவர் உங்கள் தவசி அகஸ்டின்…. அந்த வரலாறை எனக்கும் முன்னால் பேசிய நம் நண்பர் அறிவார். அதைச் சொல்ல அவர் மறந்து விட்டிருக்கலாம். ஆனால் பாதி உண்மை நூறு பொய்களை விடப் பயங்கரமானது என்பதால் முழுவதுமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.”

விஸ்வம் ஆர்வமானான். ஆனால் அதே ஆர்வம் அருகில் இருந்த சிலருக்கும் ஏற்பட்டிருந்ததை இருட்டிலும் கவனிக்க முடிந்தது  சிறிது எரிச்சலைத் தந்தது. உண்மையில் அவன் பேச்சில் இவர்களுக்கு இவ்வளவு ஆர்வம் ஏற்படக் காரணம் அவன் தொடும் வரை அந்தச் சின்னம் எரிவது தான்….. ஏன் முட்டாள்களா நீங்கள் என்ன பள்ளிக் குழந்தைகளா? கல் ஒளிர்ந்தால் பரவசமாகி விடுகிறீர்கள். அது என்ன பெரிய விஷயமா? அப்படி எரிவதால் துரும்பளவாவது பிரயோஜனம் இருக்குமா? இல்லுமினாட்டி இந்த அளவு மலிவான ஆள்களை எல்லாமா வைத்திருக்கிறது என்று மனதுக்குள் பொரிந்து தள்ளினான். இன்று தன் இயல்பான அமைதியையும் பொறுமையையும் இழந்து விட்டிருப்பது புரிந்தது…… சரி இவன் என்ன சொல்லப் போகிறான் என்று பார்ப்போம் என்று கவனத்தை க்ரிஷ் பேச்சில் திருப்பினான்.

“கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன் உங்கள் இல்லுமினாட்டியின் அகஸ்டின் இந்தியா வந்து யோகக்கலை கற்றது சோம்பேறி இயக்கம் என்று நம் நண்பரால் வர்ணிக்கப்பட்ட அந்த ஆன்மிக மையத்திலாகத் தான் இருக்க வேண்டும்.....”

விஸ்வம் மனதுக்குள் அலறினான். “டேய் டேய் இது என்னடா புதுக்கதையாய் இருக்கு?” இவன் பேசி முடித்தவுடன் மறுப்பு தெரிவிக்கலாமா, இல்லை இப்போதே தெரிவிக்கலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கையில் க்ரிஷ் தொடர்ந்தான்.

”……. பின் அவர் உங்கள் இல்லுமினாட்டிக்காகத் தவமிருந்ததும் அதே சோம்பேறி வழியில் தான்….. அதன் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை பிறகு விளக்குகிறேன். முதலில் சம்பவங்களைச் சொல்கிறேன். அந்த இயக்கத்தில் உலகிற்கு ஒரு அழிவுகாலம் குறிப்பிட்ட சமயத்தில் வரும் என்றும் காப்பாற்ற ஒரு வழியையும் வழிவழியாக தலைவர் அடுத்த தலைவருக்குச் சொல்லிச் சென்றார்கள். அந்த வகையில் மாஸ்டரின் குரு மாஸ்டருக்கு ஒரு வரைபடத்தை விட்டுச் சென்றார். சற்றுமுன் பேசிய நம் நண்பர் அந்த வரைபடத்தை அறிந்து மாஸ்டருக்கு முன் நண்பர் அதை எடுத்துக் கொண்டு விட்டார். அவர் அந்த இயக்கத்திலிருந்து திருடிச் சென்றது பணம் மட்டுமல்ல அதற்குமுன்பே திருடியது இந்த வரைபடத்தை……”

விஸ்வம் எழுந்து நின்று விட்டான். பக்கத்து சீட்டில் இருந்த உறுப்பினர் அவன் கையைப் பிடித்து உட்கார வைத்தார். “கடைசியில் ஒட்டு மொத்தமாக மறுப்பு சொல்ல வாய்ப்பு கொடுப்பார்கள். அப்போது பேசுங்கள். இடைமறித்தால் உங்களுக்குத் தான் கெட்ட பெயர். அவன் சொல்வதாலேயே எதையும் நம்ப மாட்டார்கள். கவலைப்படாதீர்கள்”. விஸ்வம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு உட்கார்ந்தான். கூடவே இப்படி எவனோ ஒருவன் நம்மைக் கட்டுப்படுத்தும்படி ஆகி விட்டதே என்ற எண்ணமே அவனைக் கேவலப்படுத்தியது.

“அந்த வரைபடத்தில் ஒரு பனிமலை, மேலே திரிசூலம், அதற்கும் மேலே ஒரு பறவை இருந்தது. வேறு எந்தத் தகவலும் இல்லை. நம் நண்பர் அதைப் பார்த்து எதுவும் புரியாமல் விட்டு விட்டார். இது போன்ற ஒரு நிகழ்வு நடக்கலாம் என்று முன்பே யூகித்திருந்த குரு மாஸ்டருக்கு அந்த வரைபடத்தின் நகல் கிடைக்க வேறு வழியும் செய்திருந்தார். அந்த வழியில் அது அவருக்கும் கிடைத்தது. அவருக்கும் வரைபடம் சொல்வது புரியவில்லை. அந்த வரைபடம் காட்டிய பனிமலையில் குகை ஒன்றில் தான் அகஸ்டின் தவம் செய்து கொண்டிருந்தார். அந்தக் குகை மேல் ஒரு திரிசூலம் இருந்தது. அழிவுக்காலம் வரும் போது காப்பாற்றும் வழியாக உங்கள் அகஸ்டின் தவமிருந்த இடத்தை அந்த ஆன்மிக இயக்கம் காட்டியது. அகஸ்டின் தவமிருந்ததோ இல்லுமினாட்டியின் அழிவைக் காப்பாற்ற என்று நீங்கள் நினைப்பது நம் நண்பர் பேச்சில் இருந்து தெரிந்தது. இப்படி அந்த இயக்கம் உலக அழிவின் காலமாகச் சொன்னதும், ஆரகிள் உங்கள் இயக்க அழிவாகச் சொன்னதும் ஒரே காலமாக இருக்கிறது. அதே போல உங்கள் இயக்கத்தை அழிவில் இருந்து காக்க அகஸ்டின் எந்தக் குகைக்கு வந்து தவமிருந்தாரோ அந்தக் குகையை உலக அழிவில் இருந்து காப்பாற்ற உதவும் என்று அந்த இந்திய ஆன்மிக இயக்கம் சொல்லியிருக்கிறது…. இப்படி இரண்டு அழிவுகளுக்கான காலம் ஒன்றாகவும், தீர்வும் ஒன்றாகவும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது… .”

எர்னெஸ்டோ நிமிர்ந்து உட்கார்ந்தார். தன் அருகில் இருப்பவர்கள் க்ரிஷ் பேசுவதை மேலும் கூர்மையாகக் கவனிக்க ஆரம்பிப்பதை மட்டும் உணர்ந்த விஸ்வம்  எரிச்சலடைந்தான். க்ரிஷ் தொடர்ந்தான்.

“நம் நண்பருக்கு அந்த இடம் எப்படியோ தெரிந்து அங்கே என்ன இருக்கிறது என்று பார்க்கப் போன போது இல்லுமினாட்டி தவசி அகஸ்டின் தன் கையால் அந்தச் சின்னத்தைக் கொடுத்து விட்டு இறந்ததாகச் சொல்கிறார். அந்தச் சின்னத்தை வாங்கிக் கொண்ட நம் நண்பர் உங்கள் இல்லுமினாட்டி தவசியின் பிணத்தை மரியாதையுடன் புதைக்கக்கூடச் செய்யவில்லை. தனக்குக் கிடைத்த அந்தச் சின்னத்தோடு வந்து விட்டார். மறுநாள் மாஸ்டரும் அந்த இடம் அறிந்து போன போது தவசியின் பிணத்தைப் பார்த்து இருக்கிறார். அதை வணங்கி, குகைக்குப் பக்கத்திலேயே பனியில் கையால் குழி தோண்டிப் புதைத்திருக்கிறார். அப்படிச் செய்ததில் அவர் கைகளில் ஏற்பட்டிருந்த காயத்தை நானே பார்த்தேன். அப்படிப்பட்டவர் நம் நண்பரால் சோம்பேறி என்று வர்ணிக்கப்பட்ட மாஸ்டர்….”

விஸ்வம் க்ரிஷ் பேச்சு ஆபத்தாகப் போய்க் கொண்டிருப்பதை உணர்ந்தான். உடனே எழுந்து “பொய்” என்று கத்தினான்.

(தொடரும்)

என்.கணேசன்