சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 27, 2013

பரம(ன்) ரகசியம் – 50



ஸ்வர் மனதில் குருஜி ஏற்படுத்திய சந்தேகங்கள் மறு நாள் பார்த்தசாரதியை அவன் தோட்ட வீட்டில் சந்திக்கும் வரை நீடித்துக் கொண்டு இருந்தன. எனவே அவன் பார்த்தசாரதியை சந்தித்த போது கேட்டான். “நீங்கள் குருஜி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பார்த்தசாரதி கேட்டார். “ஏன் கேட்கறீங்க?

நேற்று நான் வேதபாடசாலைக்குப் போயிருந்தேன். அப்போது அவரையும் நான் சந்தித்துப் பேசினேன்...

பார்த்தசாரதி சொன்னார். “அவர் மாதிரி ஒரு ஆளைப் பார்க்கிறது கஷ்டம். நம் நாட்டிற்கே அவர் ஒரு பெரிய வரப்பிரசாதம். ஆன்மிகம் என்கிற போர்வையில் எத்தனையோ ஏமாற்று வேலைகள் நடக்கிற இந்த காலத்தில் நான் கடவுள் என்று சொல்லிக் கொள்ளாமல், தன்னை முற்றும் துறந்த சாமியாராகக் கூடக் காட்டிக் கொள்ளாமல் அவர் செய்து வருகிற ஆன்மிக சேவை சாதாரணமானதல்ல. பேசுவது, எழுதுவது மட்டுமல்லாமல் ஆன்மிக ஞானத்தை நாடு முழுவதும் பரப்ப அவர் எத்தனையோ அமைப்புகள் நடத்துகிறார்....

ஈஸ்வர் அவரையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் பார்க்கும் விதத்தில் இருந்து பார்த்தசாரதிக்கு சந்தேகம் வந்தது. “நான் சொன்னதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையோ?

ஈஸ்வர் மெல்ல சொன்னான். “நானும் அவரை மனதில் பெரிய உயரத்தில் தான் நிறுத்தி இருந்தேன். அவர் எழுதிய புத்தகங்கள் படித்திருக்கிறேன். பேசியதை நிறைய கேட்டிருக்கிறேன். அவர் ஆன்மிக ஞானம், சேவைகள் பற்றி எனக்கும் மிக நல்ல அபிப்பிராயம் தான் இருக்கிறது. ஆனால் நேற்று அவரை சந்தித்துப் பேசியதில் இருந்து ஏனோ ஒரு உள்ளுணர்வு அவருக்கும் இந்த சிவலிங்க விவகாரத்திற்கும் சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது

பார்த்தசாரதி இது என்ன முட்டாள்தனமான அபிப்பிராயம் என்பதைப் போல ஈஸ்வரைப் பார்த்தார். இவனுக்கு என்ன சொல்லிப் புரிய வைப்பது என்று யோசித்து பிறகு சொன்னார். “ஈஸ்வர் பணம், புகழ், அதிகாரம், அங்கீகாரம் இதில் எதுவுமே அவருக்குக் குறைவில்லை. இன்று அவர் ஒரு வார்த்தை சொன்னால் கோடி கோடியாய் பணம் கொண்டு வந்து கொட்ட எத்தனையோ கோடீசுவரர்கள் தயாராக இருக்கிறார்கள். பிரதமர், ஜனாதிபதி, மந்திரிகள்  முதற்கொண்டு அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டுப் போவதைப் பெருமையாக நினைக்கிறார்கள். வெளிநாட்டு பிரபலங்கள் கூட அவரை வந்து பார்த்து விட்டுப் போவதை பாக்கியமாக நினைக்கிறார்கள். அவருக்கு எதிலும் குறையில்லை. அவர் மறைமுகமாக ஏதாவது மோசமான வழியில் போபவராக இருந்தால் எங்கள் போலீஸ் டிபார்ட்மெண்டுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இது வரை சின்ன வதந்தி கூட அவரைப் பற்றி மோசமாக வந்ததில்லை. அப்படி இருக்கையில் அவர் போய் இந்த திருட்டு, கொலையில் எல்லாம் ஈடுபடுவார் என்று நினைப்பதே அபத்தம்....

ஈஸ்வருக்கு அவர் வாதத்தில் குறை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆழ்ந்து யோசித்தபடியே அவன் தலையசைத்தான். ஆனால் அறிவுக்கு எட்டிய அந்த வாதம் அவன் உள்ளுணர்வை சிறிதும் மாற்றவில்லை.

பார்த்தசாரதிக்கு ஈஸ்வரின் அறிவுகூர்மையில் சந்தேகம் இருக்கவில்லை. குருஜியைத் தவிர அவன் யாரைப் பற்றிச் சொல்லி இருந்தாலும் அவர் அப்படியே தீவிர ஆலோசனைக்கு எடுத்துக் கொண்டிருப்பார். ஆனால் அவன் குருஜியைச் சந்தேகத்துடன் சொன்னது அவரை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியது. அவர் வாழ்நாள் முழுவதும் பக்தியுடன் பார்த்த மனிதர் என்பது மட்டுமல்லாமல் இது வரை குருஜியைப் பற்றி யாரிடம் இருந்தும் தவறாக அவர் கேள்விப்பட்டிருக்கவில்லை. முதன் முதலாக ஈஸ்வர் வாயில் இருந்து வந்த இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து அவன் நான் சந்தேகப்பட்டது தவறுஎன்று சொல்லிக் கேட்டால் தான் மனம் சமாதானம் அடையும் என்று தோன்றியது. “நீங்கள் சந்தேகப்படக் காரணம் என்ன?என்று கேட்டார்.

ஈஸ்வர் சிறிது தயக்கம் காட்டி விட்டு குருஜியுடனான தன் சந்திப்பைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான். அவர் பேசியதையும், தான் பேசியதையும் சொன்னானே ஒழிய தன் சந்தேகத்தைப் பற்றி ஆரம்பத்தில் அவன் எதுவும் சொல்லவில்லை. கேட்ட பார்த்தசாரதிக்கு எல்லாம் இயல்பானதாகத் தோன்றியது. இதில் சந்தேகப்பட என்ன இருக்கிறது. சிவலிங்கம் பற்றி அவர் பேசினது எதுவும் அவரை சந்தேகப்பட வைக்கும் படி இல்லையே ஈஸ்வர்

ஈஸ்வர் தன் சந்தேகங்களை ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பித்தான். சார். முதல் முதலில் என்னை சந்தேகப்பட வைத்தது கண்கள் தீ மாதிரி ஜொலிக்கிற சித்தர் யாரையாவது பார்த்திருக்கிறீர்களா?என்ற என் கேள்விக்கு அவர் காட்டிய ரியாக்‌ஷன்... இல்லை ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று சொன்ன பதில் பொய் என்பதில் எனக்கு இப்போதும் சந்தேகமில்லை. அப்புறமாக சிவலிங்கம் பற்றி பேசிய போதெல்லாம் அவர் முகத்தில் தெரிந்த உணர்ச்சிப் பிரவாகம் சம்பந்தப்படாத ஆளுக்கு வர வாய்ப்பே இல்லை... சார் மனோதத்துவத்தின் மிக முக்கிய விதி ஒன்று இருக்கிறது. அது என்ன தெரியுமா? ஒரு மனிதன் வார்த்தைகளில் பொய் சொல்லலாம். ஆனால் அந்தப் பொய்யிற்கு அவன் உணர்ச்சிகள் ஒத்துழைப்பது அபூர்வம். அந்த உணர்ச்சிகள் வேறு விதமாய் உண்மையைப் பேச முடிந்தவை. மனோதத்துவம் நன்றாகத் தெரிந்தவன், பேசும் வார்த்தைகளுடன் காட்டப்படும் உணர்ச்சிகள் ஒத்துப் போகிறதா என்று பார்த்து தான் எதையும் உறுதி செய்வான்....

பார்த்தசாரதி ஈஸ்வரையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஈஸ்வர் தொடர்ந்தான்.

குருஜியின் அப்பாயின்மெண்ட் கிடைப்பதே குதிரைக் கொம்பு என்பது போல் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவராக யாரையாவது பார்க்க ஆர்வம் காட்டியதை நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

யோசித்து விட்டு பார்த்தசாரதி சொன்னார். “இல்லை

“வேதபாடசாலைக்கு நான் வருவதாகச் சொன்னவுடன் குருஜி இருக்கிறார், விருப்பம் இருந்தால் சந்திக்கலாம் என்று அவர்களாகவே சொன்னார்கள். அவர் வேதபாடசாலையில் தங்கினால் முடிவில் அவரை ஒரு சொற்பொழிவில் தான் யாரும் பார்க்க முடியும் என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் யாரையும் அங்கே சந்தித்ததே இல்லையாம். அவர் சொல்லாமல் வேதபாடசாலை நிர்வாகிகள் அதற்கு ஏற்பாடு செய்திருக்கவே வாய்ப்பில்லை. நான் அங்கு போய் இறங்குவதற்கு முன் அந்த மண்ணைத் தொட்டு வணங்கினேன். அவர் அதைத் தற்செயலாகப் பார்த்தது போல் சொல்லிக் காரணம் கேட்டார். நான் கிளம்பி வரும் போதும் என்னையே ஜன்னல் வழியாக அவர் பார்த்துக் கொண்டிருந்தார். நான் திரும்பிப் பார்த்த போது சடாரென்று விலகி விட்டார். பொதுவாக நம்மிடம் பேசி விட்டுப் போபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தோமானால் அவர்கள் திரும்பினால் என்ன செய்வோம். கை காட்டுவோம், புன்னகை செய்வோம், இது போல ஏதாவது ஒரு செய்கை தான் செய்வோம். திடீரென்று விலகுவது ஒருவருக்குத் தெரியாமல் பார்க்க நினைப்பவர்கள் செய்யும் காரியம் தான். நான் உள்ளே நுழையும் போதும் பார்த்து, கிளம்பும் போதும் பார்த்துக் கொண்டிருந்தது அதை மறைக்க அவர் முயலாமல் இருந்திருந்தால் இயல்பாக இருந்திருக்கும். ஆனால் மறைத்தது இயல்பாய் இல்லை....

பார்த்தசாரதி அந்தக் காட்சிகளை மனக்கண்ணில் பார்த்து ஈஸ்வரின் வார்த்தைகளை அதனுடன் சேர்த்து புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தார்.

“நான்  ஆராய்ச்சியாளன் என்று அவரிடம் சொல்லவே இல்லை. அவராகவே என்னை ஆராய்ச்சியாளன் என்று தெரிந்து வைத்திருந்து பேசினார். அதே போல் சித்தர்கள் பூஜித்த சிவலிங்கம் என்றும் என்ன நோக்கத்திற்கு சக்திகளை ஆவாகனம் செய்து வைத்தார்களோ தெரியவில்லை என்று நான் சொன்ன போது அதை முதல் முதலில் கேட்பவர்கள் என்ன சித்தர்கள் பூஜித்த சிவலிங்கமா, சக்திகளை ஆவாகனம் செய்தார்களாஎன்றெல்லாம் கண்டிப்பாகக் கேட்காமல் இருக்க மாட்டார்கள். ஆனால் அதை அவர் செய்யவில்லை.....

பார்த்தசாரதி சொன்னார். “சிவலிங்கம் பற்றின இந்த விவரங்களை அவரிடம் சொன்னது நான் தான். இந்தக் கேஸில் அவர் அபிப்பிராயம் என்ன என்று கேட்க நான் போயிருந்தேன். அப்போது இதைச் சொல்லி அதோடு உங்களைப் பற்றியும் சொல்லி இருந்தேன் என்று நினைக்கிறேன் ஈஸ்வர்...

அப்படியானால் அவர் புதிதாகக் கேட்பது போல் ஏன் கேட்க வேண்டும் சார்?

“அது சில பேரின் சுபாவம் ஈஸ்வர். ஒருவர் சொன்னதை இன்னொருவரிடம் சொல்லாமல் புதிதாய் கேட்கிற மாதிரி கேட்டு அவர் சொன்னதற்கும் இதற்கும் ஒத்து வருகிறதா என்று பார்ப்பார்கள்.

நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் குருஜி என்னிடம் சிவலிங்கம் ப்ரோகிராம் பற்றி பேசின பேச்சுகள் எதுவும் சம்பந்தமில்லாத, வெறுமனே தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிற ஒரு மனிதர் பேசின பேச்சாய் எனக்குத் தோன்றவில்லை சார். நான் அவர் தான் சிவலிங்கத்தைத் திருடவும், என் பெரிய தாத்தாவைக் கொல்லவும் ஏற்பாடு செய்தார் என்று சொல்லவில்லை. அந்த அளவு நினைக்க என்னாலும் முடியவில்லை. ஆனால் அவர் ஏதாவது விதத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார், அதனால் தான் என்னை சந்தித்தார், பேசினார், நான் என்ன நினைக்கிறேன் என்பதிலும், எனக்கு என்னவெல்லாம் அது பற்றித் தெரியும் என்பதிலும் ஆர்வம் காட்டினார் என்று எனக்கு உள்ளுணர்வு சொல்கிறது சார்

பார்த்தசாரதிக்கு அவன் சொல்வதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. அலட்சியப்படுத்தவும் முடியவில்லை.... மதில் மேல் பூனையாய் மனம் முடிவெடுக்க முடியாமல் தடுமாறியது. நாளை சந்தித்து மீண்டும் பேசலாம் என்று சொல்லி ஈஸ்வரை அனுப்பி விட்டு நிறைய நேரம் அவர் யோசித்தார். ஈஸ்வர் சந்தேகம் உண்மையாக இருக்காது தான்.... ஆனால் ஒருவேளை உண்மையாக இருந்து விட்டால் என்ற கேள்வி மெல்ல எழுந்தது. மூளை தீவிரமாய் வேலை செய்ய ஆரம்பித்தது.

இந்த வழக்கை அவர் எடுத்துக் கொண்டதற்குப் பின் அவர் அலுவலகத்தில்  மேல் மட்ட சிபாரிசினால் ஒருவன் சேர்ந்திருந்தான். அவனுக்கு ஏதோ இட சௌகரியங்கள் இருப்பதாகச் சொல்லி இருந்தார்கள். சீர்காழி கோயில் விவரமும், நூலகத்தில் ஆன்மிக பாரதம் புத்தக விவரமும் அவன் மூலமாகவே வெளியே கசிந்திருக்க வேண்டும் என்று சந்தேகம் அவருக்கு வர ஆரம்பித்திருந்தது.

இப்போது ஈஸ்வரும் வந்து இந்த சந்தேகப் புயலைக் கிளப்பி விட்ட பிறகு உள்ளுணர்வு உந்த அவர் போலீஸ் மேல் மட்டத்தில் உள்ள தன் நெருங்கிய நண்பர் ஒருவருக்குப் போன் செய்து அவர் அலுவலகத்தில் வந்து சேர்ந்தவன் யார் சிபாரிசில் வந்திருக்கிறான் என்று ரகசியமாய் விசாரித்துச் சொல்லச் சொன்னார்.

அரை மணி நேரத்தில் பதில் வந்தது. “சிபாரிசு செய்தது கவர்னர் ஆபிஸ். அங்கு அந்த சிபாரிசிற்கு வேண்டுகோள் விடுத்தது குருஜி

தகவல் பார்த்தசாரதி தலையில் இடியாய் இறங்கியது.

விஷாலியின் செல் போனிற்கு ஒரு வெளிநாட்டில் இருந்து அழைப்பு வந்த போது அதை எண் மூலம் புரிந்து கொண்ட அவள் ஆச்சரியத்துடன் பேசினாள். “ஹலோ. விஷாலி பேசறேன்.

மேடம் அமெரிக்காவில் இருந்து பாலாஜி பேசறேன். ஈஸ்வரின் ஃப்ரண்ட்

ஈஸ்வர் பெயரைக் கேட்டவுடனேயே அவளை அறியாமல் அவளுக்குச் சிலிர்த்தது. நண்பன் மூலமாக சமாதானம் பேசுகிறானோ?

அமைதியாகச் சொன்னாள். “சொல்லுங்கள்

“நீங்கள் வரைந்த “இருவேறு உலகங்கள்ஓவியம் விலைக்கு வாங்க ஆசைப்படுகிறேன். என்ன விலை சொல்கிறீர்கள்?

விஷாலி இதை எதிர்பார்த்திருக்கவில்லை. ஈஸ்வர் ஓவியங்களில் ஈடுபாடு உள்ள அவன் நண்பன் பாலாஜி என்பவனைப் பற்றிச் சொல்லி இருந்தது நினைவுக்கு வந்தது....

விஷாலி வேண்டுமென்றே அதிக விலை சொன்னாள். “இருபதாயிரம் எதிர்பார்க்கிறேன்”.  இது வரை அதிகபட்சமாக அவள் ஓவியம் பத்தாயிரம் வரை தான் விலை போயிருக்கிறது.

“ஓகே மேடம். உங்கள் அக்கவுண்ட் டீடெய்ல்ஸ் சொல்லுகிறீர்களா?

விஷாலி திகைத்தாள். “நீங்கள் அந்த ஓவியம் பார்த்தது கூட இல்லையே

“ஈஸ்வர் ஒன்றைப் பார்த்து பெஸ்ட் என்றால் அதற்குப் பிறகு நான் பார்க்கத் தேவை இல்லை மேடம். அது பெஸ்டாகத் தான் இருக்க வேண்டும்.  அவன் அதில் எக்ஸ்பர்ட்

விஷாலிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அப்படியானால் மகேஷ் ஈஸ்வருக்கு ஓவியங்களில் ஈடுபாடு சுத்தமாக இல்லை என்றும் அவளை வலையில் வீழ்த்த ஈடுபாடு இருப்பதாகப் பொய் சொன்னான் என்றும் சொன்னது...?

எந்திரத்தனமாக தன் அக்கவுண்ட் விவரங்களை அவள் சொன்னாள்.

பாலாஜி சொன்னான். “தேங்க் யூ. நான் இப்போதே இருபதாயிரம் ரூபாய் உங்கள் அக்கவுண்டிற்கு அனுப்புகிறேன். நீங்கள் என் அட்ரஸ் நோட் செய்து கொள்கிறீர்களா.....

அவன் சொல்ல சொல்ல அவள் குறித்துக் கொண்டாள். மனம் மட்டும் கொந்தளிக்க ஆரம்பித்திருந்தது.

அவன் எப்படி அனுப்ப வேண்டும் என்று விவரமாகச் சொல்லி விட்டுத் தொடர்ந்தான். “நான் ஈஸ்வரையே உங்களிடம் வாங்கி அனுப்பச் சொன்னேன். அவன் தான் உங்களிடமே நேரடியாக என்னையே பேசச் சொன்னான். உங்கள் மற்ற ஓவியங்கள் பற்றியும் சொன்னான். உங்கள் ஓவியங்களின் போட்டோக்களை அனுப்ப முடியுமா? என்னிடம் நிறைய கலெக்‌ஷன் இருக்கிறது. உங்களுக்கு இண்ட்ரஸ்ட் இருந்தால் சொல்லுங்கள். நானும் அனுப்பி வைக்கிறேன்.....

அவன் வார்த்தைகளில் உற்சாகம் இருந்தது. அவனிடம் யார் வரைந்த  ஓவியங்கள் எல்லாம் இருக்கின்றன என்று மனக்கொந்தளிப்பின் நடுவே கேட்ட போது அவன் சொன்ன பெயர்கள் எல்லாம் அவளைப் பிரமிக்க வைத்தன. அத்தனை புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களுக்கு இணையாக அவள் ஓவியத்தையும் அவன் வாங்குகிறான், அதுவும் பார்க்காமலேயே, தன் நண்பன் ஈஸ்வரின் மதிப்பீட்டில் முழு நம்பிக்கையும் வைத்து .....

அவனிடம் பேசி முடித்து விட்டு அவள் தலையை இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டாள். ஓவியங்களில் ஈடுபாடு உள்ளவன் போல் ஈஸ்வர் நடிக்கவில்லை. உண்மையில் அவனுக்கு ஈடுபாடு இருந்திருக்கிறது. அவள் அவனைப் புழுவை நடத்தியது போல் நடத்தினாலும் அவள் ஓவியத்தைப் பற்றிய நல்ல வார்த்தைகளை அவன் தன் நண்பனிடம் சொல்லத் தயங்கவில்லை....

ஒருவேளை மகேஷ் ஈஸ்வரைப் பற்றிச் சொன்ன மற்ற விஷயங்களும் பொய்யாக இருந்தால்.....? அவளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை...

கோபம் கொண்டவுடன் அவனுடன் உடனடியாகப் பேசத் தோன்றியதைப் போலவே அவளுக்கு இப்போதும் உடனடியாகப் பேசத் தோன்றியது. பேசினாள்.

ஈஸ்வர் குரல் கேட்டது. “ஹலோ

அவன் குரல் அவளை என்னவோ செய்தது. முழு தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு பேசினாள். “நான் ......விஷாலி ...பேசறேன்

அவன் ஒன்றும் சொல்லவில்லை.

அவளாகவே சொன்னாள். “உங்கள் ஃப்ரண்ட் பாலாஜி பேசினார். என் இருவேறு உலகங்கள்”  ஓவியம் பற்றி நீங்கள் சொன்னதால் விலைக்கு வாங்கறதாக சொன்னார். விலை கூட அவர் பேரம் பேசலை....

அப்போதும் அவன் ஒன்றும் பேசவில்லை.

அவள் அவன் ஏதாவது சொல்வான் என்று காத்து விட்டுச் சொன்னாள். “தேங்க்ஸ்

ஈஸ்வர் சொன்னான். “நான் உங்களுக்காக அதை அவன் கிட்ட சொல்லலை. அவனுக்காக தான் சொன்னேன். சிறப்பான ஒரு ஓவியம் ஒன்று பார்த்து விட்டு அவனிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை.....

அவன் ஒருமையில் அழைக்காமல் பன்மையில் அவளை அழைத்தது அவன் பழைய நெருக்கத்தில் இருந்து தூர விலகி விட்டதைத் தெரிவித்தது. அவன் சொன்ன விஷயத்தின் பெருந்தன்மையையும் அவளால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. அவள் மனம் கனமாக ஆரம்பித்தது. அவனிடம் எத்தனையோ சொல்ல நினைத்தாள். அதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. சொன்னாலும் அவன் அதைக் கேட்டுக் கொள்வானா என்றும் தெரியவில்லை.

எல்லாவற்றிற்குமாகச் சேர்ந்து அவள் சொன்னாள். “சாரி...

அவன் அலட்டிக் கொள்ளாமல் சொன்னான். “சரி”. 

போனை வைத்து விட்டான்.

விஷாலிக்கு கண்கள் குளமாயின. அவன் அவளை மன்னிக்கத் தயாராக இல்லை. என்றென்றைக்கும் அவன் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மன்னிக்க மாட்டான். அன்பாலயத்தில் பரமேஸ்வரனை அப்பாவின் அப்பா என்று அவன் சொன்னதும் தாத்தா என்று சொல்லுங்கள் என்று கணபதி சொன்ன பிறகு கூட அப்படிச் சொல்லாததும் அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது....

அவன் வெறுப்பவர்களின் பட்டியலில் தானும் சேர்ந்து விட்டோம் என்ற எண்ணம் ஏற்பட்ட போது அவள் உடைந்து போனாள்.....

(தொடரும்)

-என்.கணேசன்

  

Monday, June 24, 2013

சத்சங்கம் ஏன் முக்கியம்?



அறிவார்ந்த ஆன்மிகம் - 9


மஸ்கிருதத்தில் சத்என்றால் உண்மை என்று பொருள். ‘சங்கம்என்றால்  கூடும் இடம் என்று பொருள்.  சத்சங்கம் என்றால் உண்மை இணையும் இடம் என்று பொருள் ஆகிறது. நம் முன்னோர்கள் பொதுவாக குருவுடன் இருத்தல், ஒழுக்கத்திலும் ஞானத்திலும் மேன்மையானவர்களுடன் இருத்தல் ஆகியவற்றை சத்சங்கம் என்று சொன்னார்கள். அவர்களுடன் சேர்ந்திருப்பது, அவர்களுடன் பேசுவது, அவர்கள் பேச்சைக் கேட்பது எல்லாம் சத்சங்கமாகக் கருதப்படுகிறது.

ஆதிசங்கரர் தன் பஜகோவிந்தத்தில் கூறுகிறார்.
சத்சங்கத்வே நிர்சங்கத்வம்
நிர்சங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சலத்துவம்
நிச்சலத்வே ஜீவன் முக்தி.

இதன் பொருள்: மேலான ஞானமுடைய பெரியோர்களிடம் இணைந்தால் இணைவுகள் அற்ற தனிமை கிடைக்கும். தனிமையில் சிந்தித்திருக்கும் போது பந்த பாசங்கள் என்னும் பற்றுகள் விலகும். பற்றுகள் விலகினால் தூய்மையானவன் ஆவாய். தூய்மையானவனாகிய பின்னர் ஜீவன் முக்தி ஏற்படும்.

ஜீவன் முக்தி அடைய முதல் படியாக இருப்பது சத்சங்கம் என்று ஆதிசங்கரர் சொல்கிறார். மேலான ஞானமுள்ள பெரியோரிடம் பழகும் போது சிந்திக்க நல்ல உயர்வான விஷயங்கள் நிறைய கிடைக்கும். அவை விதைகளைப் போன்றவை. அவை வேர் விட வேர் விட சிந்தித்துத் தெளிவடைய நிறைய இருக்கும். இதயத்தின் ஆழத்தில் இருந்து எழும் கேள்விகளுக்குப் பதிலை மனிதன் தனிமையிலேயே தேடிப் பெற வேண்டி இருக்கிறது. காரணம், பெரியோர்களிடத்திலே இருந்து கிடைக்கும் தகவல்களே ஆனாலும் கூட, கிடைக்கும் தகவல்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில நேரங்களில் ஒன்றுக்கு ஒன்று முரண் போலக் கூடத் தோன்றலாம். அவற்றில் உண்மை எது என அறிய மனிதன் தனிமையில் தனக்குள்ளேயே சென்று விடையைத் தேட வேண்டி இருக்கும். அப்படி கிடைக்கும் பதில் உண்மையை அவனுக்குப் பல பரிமாணங்களில் விளக்கும். அப்படி விளங்கிய பின் அவன் அடையும் தெளிவு, தானாக பற்றுக்களை அகற்றி அவன் அகத்தைத் தூய்மைப் படுத்தும். அகம் எல்லா மாசுகளையும் களைந்து பரிசுத்தமானால் ஜீவன் முக்தி உடனடியாகக் கிடைத்து விடும். இப்படி சத்சங்கம் ஒரு சங்கிலித் தொடர் போல (சத்சங்கம்-தனிமை, சிந்தனை-பற்று விலகல்-தூய்மை-ஜீவன் முக்தி) ஜீவன் முக்தி வரை ஒருவரை அழைத்துச் செல்ல வல்லது என்கிறார் ஆதிசங்கரர்.

பகவத் கீதைக்கு இணையானதாகச் சொல்லப்படும் யோக வாசிஷ்டம் கூட சத்சங்கம் குறித்து மேன்மையாகச் சொல்கிறது. அதில் இராமனுக்கு வசிஷ்டர் உபதேசம் செய்கிறார்.

நல்லோர் சேர்க்கையால் நல்லது எது கெட்டது எது என்று பகுத்தறியும் ஞானம் ஏற்படும். இதனால் எல்லா செல்வத்தையும் அடைய முடியும்.

சத்சங்கம் எல்லா ஆபத்துக்களையும் விலக்க வல்லது. நமது ஆன்ம வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கும் அறியாமையை விலக்கும் வலிமை சத்சங்கத்திற்கு மட்டுமே உண்டு.

அறியாமையை அழிப்பதும், உலகைப் புரிந்து கொள்ள உதவுவதும், மனதின் வியாதிகளைப் போக்க உதவுவதும் இந்த சத்சங்கமே.

மழைக்குப் பின் எப்படி பூக்கள் மாசுகள் நீங்கி தங்கள் இயற்கை அழகுடன் பிரகாசிக்குமோ அப்படியே சத்சங்கத்தினால் நமது அறிவு பிரகாசிக்கும்.

எப்படிப்பட்ட துன்பங்கள் ஏற்பட்டாலும், பிரச்சினைகள் ஏற்பட்டாலும் கூட ஒருவன் சத்சங்கத்தைக் கைவிடுதல் கூடாது.

சத்சங்கம் நல்ல வழியைக் காட்டும். நமக்கு உள்ளே உள்ள இருட்டை சூரிய ஒளி போல நீக்கும். எனவே நல்ல அறிவுடையவன் சத்சங்கத்தை விட்டு நீங்க மாட்டான்.

மன அமைதி, எதையும் ஆய்ந்து அறிதல், சத்சங்கம் இம்மூன்றுமே ஒருவனுக்கு மகிழ்ச்சி தருவன. இவற்றின் துணை இருந்தால் பிறவிப் பெருங்கடலைத் துன்பமின்றிக் கடத்தல் எளிதாகும்

இப்படி வசிஷ்டரும் நல்லது-கெட்டது பகுத்தறியும் சக்தி, அறியாமையை விலக்கும் சக்தி, அக இருட்டைப் போக்கும் சக்தி, பிறவிப் பெருங்கடலைத் துன்பமின்றிக் கடக்கும் சக்தி போன்ற முக்கிய சக்திகள் சத்சங்கத்தால் ஒருவனுக்குக் கிடைக்கும் என்கிறார்.

ஆன்மிக உன்னதங்களை அடைய மட்டுமல்ல லௌகீக மேன்மைகளையும், வெற்றிகளையும் அடைவதில் கூட சத்சங்கத்திற்கு மிக முக்கியப் பங்கு உண்டு. 

நிலத்தியல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு என்கிறார் திருவள்ளுவர்.

(பொருள்: நிலத்தின் தன்மையால் நீரின் தன்மை மாறி அந்த நிலத்தின் தன்மையை நீர் பெற்று விடும். அது போல மனிதனுக்கு அறிவானது தாம் சேர்ந்திருப்பவர்களின் தன்மைக்கேற்ப மாறி விடும்).

இதற்கான எத்தனையோ உதாரணங்களை நம்மைச் சுற்றிலும் நாம் பார்க்கலாம். யாரிடம் நெருங்கிப் பழகுகிறோமோ அவர்களின் தன்மைகளில் சிலதாவது நம்மைத் தொற்றிக் கொள்ளவே செய்கின்றன. அப்படித் தொற்றிக் கொள்பவை சிறிது சிறிதாக நம்முள் வேரூன்றவே செய்கின்றன. பின் அவையும் நம்மில் ஒரு பகுதியாகவே விடுகிறது.

இந்த உண்மை மற்றவர்களை விட அதிகமாக இளைஞர்களுக்குப் பொருந்தும். இளமையைக் கற்பூரப் பருவமாக உவமை சொல்வார் கவியரசு கன்ணதாசன். எதுவும் சீக்கிரம் பற்றிக் கொள்ளும் பருவம் அது.  எத்தனையோ இளைஞர்கள் வழிமாறி சீரழிவதற்கு அவர்களுடைய சேர்க்கைகளே காரணம் என்பதைப் பல இடங்களில் பார்க்கிறோம். சிந்திக்காமல் எதையும் ஏற்றுக் கொள்ளும் பருவம் அது என்பதால் இளமைப் பருவத்தில் சத்சங்கத்தின் பங்கு மிக வலிமையானது.   

அதனால் தான் அக்காலத்தில் குருகுலவாசம் என்ற வழக்கம் இருந்தது. கல்வி பயிலும் காலம் முடியும் வரை குருகுலத்திலேயே குழந்தைகள் இருக்கும் முறை இருந்தது. குருவின் கண்பார்வையிலேயே முழு நேரமும் இருப்பதால் தடம் மாறும் வாய்ப்புகள் கிடையாது. சூழ்நிலை முழுவதும் கல்வி, மேன்மையான விஷயங்கள் என்னும் வகையிலேயே இருக்கும். இது சத்சங்கத்தின் முக்கியவத்தை நம் முன்னோர் நன்றாக அறிந்திருந்ததால் கடைபிடிக்கப்பட்ட முறையாகவே தோன்றுகிறது.

இளமைக்கு சத்சங்கம் மிக முக்கியம் என்றாலும் மற்ற வயதினர்க்கும் அதன் பயனைக் குறைத்து எண்ணி விட முடியாது. மேலோருடன் பழகும் போது உயர்ந்த சிந்தனைகளில் நம் மனப்போக்கு இருப்பதையும், கீழோருடன் பழகும் போது அதற்கு எதிர்மாறான விதத்தில் நம் மனப் போக்கு இருப்பதையும் நாம் எப்போதும் காண முடியும். சிலர் சேர்க்கை நமக்கு ஊக்கம் தருவதாக இருக்கும். சிலர் சேர்க்கையோ மனக்கிலேசத்தைத் தருவதாகவே இருக்கும்.

உறவுகள் இறைவன் தந்தவை. அவற்றை நாம் மாற்ற முடியாது. ஆனால் யாருடன் அதிகம் பழகுகிறோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். அந்த சுதந்திரம் நமக்கு இருக்கிறது. எனவே சத்சங்கம் நல்ல முறையில் ஏற்படுத்திக் கொள்வது மிக முக்கியம்.  

சென்று காணவும், பழகவும் தகுந்த மேலோர் இல்லை என்றால் நல்ல உயவான கருத்துக்களைச் சொல்லும் புத்தகங்களைப் படிக்கலாம். அதுவும் ஒருவகை சத்சங்கமே. அவையும் மேலான மனநிலைக்கு அழைத்துச் செல்லவும், சிந்திக்கத் தூண்டவும் வல்லமை படைத்தவை.  எனவே லௌகீகம், ஆன்மிகம் என்ற இருவேறு பாதைகளிலும் முன்னேறிச் செல்ல நல்ல சத்சங்கத்தை நாடுவோமாக!

-என்.கணேசன்   


நன்றி: தினத்தந்தி ஆன்மிகம் 7-5-2013 

Friday, June 21, 2013

துக்ளக்கில் ’ஆழ்மனதின் அற்புத சக்திகள்’ விமர்சனம்


அன்பு வாசகர்களே,
இந்த வார (26-06-2013) துக்ளக்கில் “ஆழ்மனதின் அற்புத சக்திகள்” நூல் குறித்து கீழ்கண்ட விமரிசனம் வந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் 
என்.கணேசன்
புத்தக விமர்சனம்: ஆழ்மனதின் அற்புத சக்திகள் 
ஆசிரியர்: என்.கணேசன்
வெளியீடு: ப்ளாக்ஹோல் மீடியா பப்ளிகேசன்ஸ் லிமிடெட், சென்னை-83 செல்:9600123146
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மகத்தான ஆழ்மனசக்தி உண்டு. முறையான பயிற்சிகளின் மூலம் அத்தகைய சக்தி கைவரப்பெற்று பல அற்புதங்களை நிகழ்த்தியவர்களைச் சித்தர்கள், மகான்கள் என்று அழைக்கிறோம். வெளிநாடுகளிலும் இத்தகையவர்கள் உண்டு.
இவர்கள் புரியும் அற்புதங்கள் சில சமயம் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்றாது. ஆனால் அவை உண்மை. அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை என்றார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அந்த வகையைச் சார்ந்ததுதான் இந்த அற்புதங்கள். ஆழ்மன சக்தியில் ஓரளவு பரிச்சயம் பெற்றுள்ள இந்நூலாசிரியர், இது குறித்த பல்வேறு தகவல்களை இந்நூலில் தொகுத்துள்ளார்.
1960களில் அமெரிக்காவில் வாழ்ந்த ஜோசப் டிலூயிஸ் என்பவர், அங்கு நடந்த பல விபத்துக்களை முன்கூட்டியே அறிவித்த நிகழ்ச்சிகள். அற்புதங்களை நம்பாத ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலினையே வியக்க வைத்த வாசிலிவ் என்பவரின் ஆழ்மன சக்திகள்.
ஆவியுலகத் தகவல்கள், மறுபிறவிநினைவுகள், ஆழ்மன சக்திகளைப் பெறுவதற்கான வழிமுறைகள், ஆல்ஃபா அலைகள், யோகா, தியானம் பற்றிய குறிப்புகளும் பயிற்சிகளும், நோய் தீர்க்கும் ஆழ்மன சக்திகள்.
உடலை விட்டு ஆத்மா எப்படி வெளியேறுகிறது, மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பன போன்ற ஆய்வுகள், பிரபஞ்ச சக்திகளுடன் தொடர்பு கொள்ள முடியுமா என்பது போன்ற பல விஷயங்களை 60 கட்டுரைகளின் மூலம் ஆசிரியர் இந்நூலில் விளக்கியுள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் திகிலும் திகைப்புமாக இருக்கிறது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 26/6/2013.

Thursday, June 20, 2013

பரம(ன்) ரகசியம் – 49




தயன் குருஜியைக் கேட்டார். “உங்கள் ஆராய்ச்சிகளை எங்கே நடத்தப் போவதாக உத்தேசம்

“அதற்காகத் தனியிடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம். அங்கே எல்லா நவீன விஞ்ஞான உபகரணங்களும் பொருத்தி இருக்கிறோம். சிவலிங்கத்தை வைக்கும் அறையில் தகுந்த ஆட்கள் மூலம் பூஜைகள், ஹோமங்கள், ஜபங்கள், பாராயணம் எல்லாம் செய்து தெய்வீக அலைகள் நிறைந்திருக்கும்படி செய்திருக்கிறோம். சிவலிங்கத்தை அங்கே கொண்டு போய் வைக்க ஒரு நல்ல முகூர்த்தம் பார்த்து வைத்திருக்கிறேன்....

உதயன் சொன்னார். “அந்த சிவலிங்கத்தை அங்கே வைப்பதற்கு முன் அந்தக் கட்டிடத்திற்கு வெளியே நாலா பக்கத்தில் இருந்தும் சிறிது சிறிது மண்ணை எடுத்து அனுப்பு. நம் குருவோ, அவர் சக்தியோ அந்த எல்லைகளைக் கடந்து உள்ளே போய் விடாதபடி நான் அரண் ஒன்றை அமைத்துத் தருகிறேன். ஆனால் அந்த அரண் 21 நாட்கள் தான் வலிமையோடு இருக்கும். அதற்கு மேல் நான் ஒன்றும் செய்ய முடியாது….”

குருஜி நிம்மதிப் பெருமூச்சு விட்டு நன்றியுடன் சொன்னார். “அது போதும் உதயா.

உதயன் எப்போதுமே முடிந்ததை மட்டும் தான் செய்ய ஒத்துக் கொள்வார். சிவலிங்க ஆராய்ச்சியில் நேரடியாகப் பங்கு கொள்ள முடியாது என்று ஆரம்பத்திலேயே மறுத்து விட்டதைப் போல, செய்ய முடியாததை முடியாதுஎன்று வாய் விட்டுச் சொல்லி ஒதுங்கி விடும் நல்ல பழக்கம் உதயனிடம் இருந்தது.  அதனால் உதயன் ஒன்றைச் செய்ய ஒத்துக் கொண்டால் அது பற்றி யாரும் மேற்கொண்டு கவலைப்பட அவசியமில்லை. குருஜிக்கு பாதி ஜெயித்து விட்டது போல் ஒரு பிரமை...!

“அந்த சிவலிங்கத்திற்கு நித்திய பூஜை செய்ய கணபதியையே இப்போதைக்கு வைத்துக் கொள்கிறாயா என்ன?குருஜியின் தலைக்கு மேல் வெற்றிடத்தைப் பார்த்தபடியே உதயன் கேட்டார். கேட்டவர் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“ஆமாம்என்ற குருஜி ஏன் சிரிக்கிறாய்என்று நண்பனைக் கேட்டார்.

சீடை மேல் இருக்கும் ஆசை, சிவலிங்கத்தின் மேல் இருக்கும் பக்தியை முந்திக் கொண்டதற்கு அவன் வருத்தப்படுவதைப் பார்த்தேன். இன்னமும் இந்த உலகத்தில் இப்படி பரிசுத்தமாய் ஒருவனால் இருக்க முடிகிறது என்பதே ஆச்சரியமாகத் தான் இருக்கிறது

இன்னமும் ரகசியக் காமிரா சீடை சமாச்சாரத்தைப் பிடித்த படத்தை பார்த்திராத குருஜி நண்பனிடம் அந்தக் காட்சியை விளக்கச் சொல்லிக் கேட்டுப் புன்னகைத்தார். குருஜிக்கு முதலில் கணபதியை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தும் எண்ணம் பெரிதாக இருக்கவில்லை. ஆனால் இப்போது அவனையும் பயன்படுத்தினால் என்ன என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. அவனுக்கும் அந்தச் சிவலிங்கத்திற்கும் நல்ல இணக்கம் இருக்கிறது....

குருஜி நண்பனிடம் கேட்டார். “உதயா எங்கள் ஆராய்ச்சிகள் எப்படி இருக்கும் என்று நினைக்கிறாய்?

வெற்றி பெறும் அல்லது வெற்றி பெறாது என்பதைச் சொல்லாமல் உதயன் சொன்னார். “சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்

உதயன் சுவாரசியத்தோடு நிறுத்திக் கொண்டது குருஜிக்கு சற்று ஏமாற்றமாகத் தான் இருந்தது. குருஜி சொன்னார். ஜான்சன் இது போன்ற ஆராய்ச்சிகளில் தலைசிறந்த நிபுணர்களில் ஒருவர்.... உலகப் புகழ் பெற்றவர்.. அனுபவம் உள்ளவர்....

உதயன் இடைமறித்தார். அவருக்கு அறிவும் அனுபவமும் இருக்கலாம். ஆனால் அவர் இந்த மண்ணைச் சேர்ந்தவர் இல்லை. சித்தர்களையோ, சிவலிங்கத்தையோ மானசீகமாய் உணரக் கூடிய சக்தி இருக்கிறதா என்பது யோசிக்க வேண்டிய விஷயம்... ஜான்சனுக்குப் பதிலாக ஈஸ்வர் ஆராய்ச்சியில் இறங்குவதாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஜான்சனுக்கு இருக்கும் அறிவு, அனுபவம் இவனுக்கும் இருக்கிறது. அதோடு சேர்ந்து அவன் உடம்பில் இந்த தேசத்தின் ரத்தம் ஓடுகிறது.... பிறந்து வளர்ந்தது அன்னிய தேசம் ஆனாலும்  குணத்தில் இவன் இந்தியன் தான். அதனால் தான் சிவலிங்கத்தை இவனிடம் ஒப்படைக்க பசுபதி சொல்லி இருக்கிறார்...

குருஜிக்கு அவன் வேதபாடசாலை மண்ணைத் தொட்டு வணங்கியது நினைவுக்கு வந்தது. ஈஸ்வர் எதிரணியில் இருப்பதை அவராலும் ரசிக்க முடியவில்லை தான். ஆனால் என்ன செய்வது....!

குருஜி பெருமூச்சு விட்டார். உதயன் நண்பனைக் கேட்டார். “ராமா, நீ இதில் ஈடுபடுவதென்று முழு மனதோடு தானே தீர்மானித்திருக்கிறாய். மாற்றம் எதுவும் இல்லையே

இனி மாற்ற முடியாது உதயா. புலி மீது சவாரியை நான் ஆரம்பித்து விட்டேன். இனி இடையில் இறங்க முடியாது.....குருஜி தன் நிலையை வெளிப்படையாகச் சொன்னார்.

உதயன் நண்பனை மிகுந்த அன்புடன் பார்த்துச் சொன்னார். நான் வாக்குறுதி தந்தது போல் நம் குரு உன் ஆராய்ச்சிகளையோ, சிவலிங்கத்தையோ நெருங்காமல் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் அதோடு பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று நினைத்து விடாதே. நீ ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும் ராமா. புலி மேல் சவாரி சௌகரியமாக இருக்காது...

அது தெரிந்தே தான் நான் இதில் இறங்கி இருக்கிறேன் ராமா.. சுலபமானதில் ஜெயிப்பதில் என்ன பெருமை இருக்கிறது?

தன் நண்பன் பாபுஜி, மற்றும் மற்ற ஆறு வெளிநாட்டு ஆட்கள் பற்றித் தானாகச் சொல்வாரா என்று பொறுத்திருந்து பார்த்த உதயன் இனி அது அவர் வாயிலிருந்து வரப் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டார். என்ன தான் நண்பனானாலும் தேவைக்கு மேல் ஏன் தெரிவிக்க வேண்டும் என்று குருஜி நினைத்தது அவருக்கு வருத்தம் ஏற்படுத்தவில்லை. அந்தக் காலத்தில் இருந்தே சில விஷயங்களில் ரகசியமாக இருப்பது குருஜிக்கு இயல்பாக இருந்திருக்கிறது....

ஆனாலும் உதயன் தன் நண்பனை மிகவும் நேசித்தார். இந்த இமயமலையில் ஒன்றாகச் சேர்ந்து சுற்றிய நாட்கள், தேடிய தேடல்கள் எல்லாம் சுலபத்தில் மறக்கக் கூடியவை அல்ல. அவர் நேசித்த ஆட்கள் வேறு யாரும் இப்போது உயிரோடு இல்லை. நண்பன் செய்வது சரியா தப்பா என்று அவர் கவலைப் படவில்லை. அவர் நீதிபதி அல்ல, நண்பர்.... ஒரு நண்பனால் நேசிக்க மட்டுமே முடியும்....

உதயன் குருஜியிடம் ஆராய்ச்சி நடத்த இருக்கும் இடம், சிவலிங்கம் கொண்டு போய் பிரதிஷ்டை செய்யும் நாள், நேரம், ஆராய்ச்சிகள் ஆரம்பிக்கப் போகும் நாள், நேரம் பற்றிய விவரம் எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.  என்ன செய்ய வேண்டும், எப்படி எப்போது செய்ய வேண்டும் என்றெல்லாம் யோசித்து முடிவு செய்து கொண்டு விட்டு கடைசியில் உதயன் எழுந்து தன் நண்பனை அணைத்துக் கொண்டார். “ராமா, இனியொரு தடவை நாம் இருவரும் சந்திப்போமா என்பது நிச்சயமில்லை.... இது நம் கடைசி சந்திப்பாகக் கூட இருக்கலாம்.  இன்றாவது உன்னைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி...

குருஜிக்கு கண்கள் லேசாகக் கலங்கின. கடைசி சந்திப்பாகக் கூட இருக்கலாம் என்று நண்பன் சொன்னது அவர் மனதை என்னவோ செய்தது. அணைத்துக் கொண்ட நண்பனிடம் எத்தனையோ சொல்ல நினைத்தாலும் அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை....

சில நிமிடங்கள் கழித்து நண்பர்கள் பிரிந்தார்கள்.


பார்த்தசாரதி தென்னரசு வீட்டை சொன்ன நேரத்திற்குக் கால் மணி நேரம் முன்னதாகவே போய் சேர்ந்தார். விஷாலியை ஏதோ ஒரு வேலை கொடுத்து முன்பே அனுப்பி விட்டிருந்ததால் வீட்டில் தென்னரசு தனியாகத் தான் இருந்தார். பார்த்தசாரதியை மிகுந்த மரியாதையோடு தென்னரசு வரவேற்றார். தென்னரசுவின் உத்தியோகம் மற்றும் குடும்பம் பற்றி முதலில் விசாரித்துத் தெரிந்து கொண்ட பார்த்தசாரதி பரமேஸ்வரனின் குடும்பத்திற்கும், தென்னரசுவிற்கும் இடையே எப்படி தொடர்பு என்ற கேள்வியுடன் ஆரம்பித்தார்.

தென்னரசு சொன்னார். “பரமேஸ்வரனோட மகன் சங்கரும் நானும் சின்ன வயதில் இருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். நெருங்கிய நண்பர்கள். கல்லூரி வரை ஒன்றாகவே படித்தோம். பரமேஸ்வரன் மகள் மீனாட்சி கணவன் விஸ்வநாதனும் கல்லூரியில் எங்களுடன் படித்த நண்பன்...

சின்ன வயதில் பரமேஸ்வரன் வீட்டுக்கு அடிக்கடி போவீர்களா?

போவேன். சங்கரும் என் வீட்டுக்கு வருவான். ஆனால் நான் அவர்கள் வீட்டுக்குப் போனது தான் அதிகம். காரணம் அவன் வீடு பெரிசு. விளையாட நிறைய இடம் இருக்கும்....

சங்கரைப் பற்றி சொல்லுங்களேன்...

“ரொம்ப நல்லவன்... பணமும், அறிவும் எக்கச்சக்கமாய் இருந்தும் அடக்கமாகவும், நல்லவனாகவும் இருக்க முடிவது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் அவன் இருந்தான். ஒரு தடவை கூட அவன் வேறு மாதிரியாக இருந்ததை நான் பார்க்கலை...

அந்த வீட்டில் மற்றவர்கள் உங்களிடம் எப்படி இருப்பார்கள்?

சங்கர் இங்கே இருந்த வரை பரமேஸ்வரன் என்னிடமும் பிரியமாய் இருப்பார். சங்கரோட பாட்டி ஆனந்தவல்லி அப்படி இருக்க மாட்டாங்க. நான் ஒரு சாதாரண குடும்பத்துப் பையன்கிறது தான் அதற்கு காரணம்னு நினைக்கிறேன்... அவங்க பார்க்கிறதே நாலு அடி தள்ளி நிற்க வைக்கும்.....

பார்த்தசாரதிக்கு அவர் சொல்ல வந்தது புரிந்தது. கிழவி அந்தக் காலத்தில் இருந்தே அப்படித்தானா?

பார்த்தசாரதி கேட்டார். “மீனாட்சி?

மீனாட்சியும் நல்ல மாதிரி... கர்வம் சுத்தமாய் கிடையாது

சங்கர் இருந்த வரை பரமேஸ்வரன் உங்க கிட்ட பிரியமாய் இருந்தார்னு சொன்னீங்க. சங்கர் போனதுக்கப்புறம்?

என் கிட்ட பேசறதையும், பழகறதையும் அவர் கூடுமான வரை தவிர்த்தார். என்னைப் பார்க்கறப்ப எல்லாம் அவருக்கு மகன் ஞாபகம் வந்திருக்கலாம்... அதனால நானும் அவர் வீட்டுக்குப் போகிறதை அதிகமாய் தவிர்த்து விட்டேன். மீனாட்சி கணவன் விஸ்வநாதன் கூட என் நண்பன் தான்னாலும் கூட நான் அங்கே போகிறது இப்பவெல்லாம் அபூர்வமே...

சங்கர் அமெரிக்கா போனதுக்கப்புறமும் உங்க கூட தொடர்பில் இருந்தாரா?

ஆமாம்.. மாசத்துல ஒரு தடவையாவது பேசிக்காமல் இருக்க மாட்டோம்...

அவர் மகன் ஈஸ்வர் கிட்டயும் பேசுவீங்களா?

“அதிகமாய் இல்லை. ஒன்னு ரெண்டு வார்த்தை பேசுவோம்....

“இந்தியா வந்ததற்குப் பிறகு ஈஸ்வரைச் சந்திச்சீங்களா?

“ஆமா. ஈஸ்வர் ஒரு தடவை இங்கே வீட்டுக்கு வந்திருந்தான்....

“சங்கரோட பெரியப்பா பசுபதியை நீங்கள் சந்திச்சிருக்கீங்களா....?

தென்னரசு கூடுமான வரை அமைதியாய் பதில் சொல்ல முயன்று அதில் வெற்றியும் கண்டார். சின்னவனாய் இருக்கிறப்ப அவர் இருக்கிற தோட்ட வீட்டுக்கு சங்கரோட சேர்ந்து போயிருக்கேன்.... அப்ப பார்த்தது....

உங்க கிட்ட அவர் பேசி இருக்காரா?

“அவர் சங்கர் கிட்டயே அதிகமாய் பேசி நான் பார்த்ததில்லை... எப்பவுமே அவர் ஒரு தனி உலகத்தில் இருக்கிற மாதிரி இருக்கும்....

“சங்கரும், நீங்களும் தோட்ட வீட்டுக்குப் போய் என்ன செய்வீங்க?

“தோட்டத்தில் விளையாடுவோம். மாமரம், நெல்லிக்காய் மரமெல்லாம் அங்கே இருக்கு. மாங்காய், நெல்லிக்காய் எல்லாம் பறிச்சு சாப்பிடுவோம்..

“தோட்டத்தில் மட்டும் விளையாடுவீங்களா. இல்லை வீட்டுக்குள்ளேயும் போய் விளையாடுவீங்களா?

சிறு தயக்கத்திற்குப் பின் தென்னரசு சொன்னார். “வீட்டுக்குள்ளேயும் போய் விளையாடுவோம்....

பசுபதி எதுவும் சொல்ல மாட்டாரா?

“அவர் தியானத்தில் உட்கார்ந்து விட்டால் அங்கே என்ன நடந்தாலும் அவர் தியானத்தில் இருந்து கலைய மாட்டார். தியானத்தில் இல்லாமல் இருந்தாலும் அவர் எங்களை வேடிக்கை பார்ப்பாரே ஒழிய திட்டியதோ, வெளியே போய் விளையாடுங்கள் என்று சொன்னதோ கிடையாது...

“விளையாடும் போது அந்த சிவலிங்கம் இருந்த பூஜை அறைக்குள்ளேயும் போவீங்களா?

அதுக்குள்ளே மட்டும் நுழைய மாட்டோம்....

“ஏன்?

“சங்கர் அங்கே மட்டும் போக வேண்டாம்டா. எங்கப்பாவே போக மாட்டார்.னு  ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறான். அதனால் அந்த பூஜை அறை தவிர மற்ற இடங்களில் விளையாடுவோம்....

எதையுமே ஏன் எதற்குன்னு கேட்காமல் ஏத்துக்கறது பொதுவாய் அந்த வயசுல இல்லாத பழக்கம் தானே. நீங்கள் ஏன் எதற்குன்னு சங்கர் கிட்ட கேட்டதில்லையா?
                            
அந்தக் காலத்துல பெரியவங்க காரணம் பெரும்பாலும் சொல்ல மாட்டாங்க. கேள்வி கேட்டா அதிகப்பிரசங்கித் தனம், எதிர்த்துப் பேசறதுன்னு அர்த்தம் எடுத்துகிட்டுத் திட்டுவாங்க. அதனால சங்கரும் கேட்டதில்லை. புரிஞ்சுகிட்டு சங்கர் கிட்ட நானும் கேட்டதில்லை...

சங்கரும் நீங்களும் ஒரு தடவை சிவலிங்கம் ஜொலிக்கிறதைப் பார்த்ததாய் கேள்விப்பட்டேன். அதைப் பத்தி சொல்லுங்களேன்....

“ஒரு நாள் மதிய நேரம் தோட்டத்தில் விளையாடிக் களைச்சுப் போய் தண்ணீர் குடிக்க வீட்டுக்குள்ளே நானும் சங்கரும் நுழைஞ்சோம். திடீர்னு மின்னல் வெளிச்சம் அந்த சிவலிங்கத்து மேலே விழுந்தது மாதிரி இருந்தது. ரெண்டு பேருக்கும் எங்கள் கண்ணையே நம்ப முடியலை. நான் அவன் கிட்ட கேட்டேன்.  டேய் நீ அந்த வெளிச்சத்தைப் பார்த்தியா?அவன் சொன்னான். “ஆமாடா. நீயும் பார்த்தியா?”  சங்கரோட பெரியப்பா சிவலிங்கம் முன்னால் தியானத்துல உட்கார்ந்திருந்தார். அவர் கிட்டே பிறகு நாங்கள் பார்த்ததைச் சொன்னோம். அவர் ஒன்னும் சொல்லலை... ஆனால் அதையே சங்கர் பரமேஸ்வரன் கிட்ட சொல்லி திட்டு வாங்கிகிட்டான்.... எல்லாம் எங்கள் கற்பனைன்னு அவர் நினைச்சுகிட்டார்.

அதற்குப் பிறகு எப்பவாவது சிவலிங்கம் ஜொலிக்கிறதை நீங்கள் பார்த்தது உண்டா?

“இல்லைசற்று வேகமாகவே தென்னரசு சொன்னது போல் பார்த்தசாரதிக்குத் தோன்றியது.

“உங்களுக்குப் பொழுது போக்கு என்ன?

“நிறைய புத்தகங்கள் படிப்பேன்.

“அதிகம் என்ன மாதிரி புத்தகம் படிப்பீங்க?

தமிழ் இலக்கியம் படிப்பேன். கம்பன், பாரதி, புறநானூறு எல்லாம் படிப்பேன்

ஆன்மிக புத்தகம் படிக்கிறதுண்டா?

“இல்லை...

“புத்தகம் வாங்கிப் படிப்பீங்களா?

“இல்லை. ரெண்டு நூலகங்கள்ல இருந்து புத்தகம் எடுத்துப் படிப்பேன். ஒன்று எங்கள் கல்லூரி நூலகம். இன்னொன்று தனியார் நூலகம்....

பார்த்தசாரதி நூலகத்தின் விலாசம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவர் போன அதே நூலகம் தான். இதில் தென்னரசு எதையும் மறைக்கவில்லை. 

“சிவலிங்கம் திருட்டுப் போகக் காரணம் அது ஜொலிக்கறதாக இருக்குமோ. ஜொலிப்பதைப் பார்த்து விட்டு ஏதோ அதில் வித்தியாசமாய் இருக்கிறது என்று நினைச்சு செய்ததாய் இருக்குமோ?

தெரியலை

“நீங்கள் அந்த சிவலிங்கம் ஜொலிக்கிறதைப் பத்தி வேற யார் கிட்டேயாவது சொல்லி இருக்கீங்களா?

“சின்ன வயதில் ரெண்டு மூணு நண்பர்கள் கிட்ட நானும் சங்கரும் சேர்ந்தே சொல்லி இருக்கிறோம். அவங்க நம்பலை. அதற்குப் பிறகு நாங்கள் அதுபத்தி யார் கிட்டேயும் சொன்னதில்லை....

அதுபத்தி நீங்க ரெண்டு பேரும் அடிக்கடி பேசிகிட்டது உண்டா?

“சில நேரங்களில் பேசி இருக்கிறோம்.

சமீப காலமாக யார் கிட்டயாவது இதைப் பத்தி சொல்லி இருக்கீங்களா?

“இல்லை

“அந்தத் தோட்ட வீட்டுக்குப் பிறகு எப்போதாவது போய் இருக்கிறீர்களா?

“இல்லை

“நீலகண்ட சாஸ்திரி எழுதின ஆன்மிக பாரதம்கிற புத்தகம் படிச்சிருக்கீங்களா?

“இல்லைவேகமாய் வந்தது பதில்.

பார்த்தசாரதிக்குப் பதில் கிடைத்து விட்டது. நன்றி சொல்லி விட்டு அவர் கிளம்பி விட்டார்.

தென்னரசு நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருந்தார். பார்த்தசாரதி எவ்வளவு தூரம் அவர் சொன்னதை நம்பினார் என்பது தெரியவில்லை.... பார்த்தசாரதி சந்தேகப்பட்டால் கூட தென்னரசுவை எதிலும் சம்பந்தப்படுத்த ஆதாரம் எதுவும் இல்லை என்பதை தென்னரசு நன்றாக அறிவார்.
  
அமைதியாக அமர்ந்திருக்கையில் பார்த்தசாரதியின் ஒரு கேள்வி மீண்டும் நினைவில் வந்தது. அதற்குப் பிறகு எப்பவாவது சிவலிங்கம் ஜொலிக்கிறதை நீங்கள் பார்த்தது உண்டா?

வேறு யாருமே கண்டிராத அந்த இரண்டாவது காட்சி, சங்கரிடம் கூட பகிர்ந்திராத அந்தக் காட்சி அவர் மனத்திரையில் மீண்டும் ஒரு முறை வந்து போனது. இப்போது நினைத்தாலும் அவருக்கு மயிர்க்கூச்செறிகிறது.....

அந்தக் காட்சியைக் கண்ட பிறகு அவரால் என்றுமே அந்த சிவலிங்கத்தை மறக்க முடிந்ததில்லை!...

(தொடரும்)
-          என்.கணேசன்