சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 29, 2021

யாரோ ஒருவன்? 61


ரேந்திரனுக்கு பரந்தாமனும், அலமேலும் சொன்னதெல்லாமே விசித்திரமாக இருந்தது. நாகராஜ் என்ற பெயரில் வந்து போனவன் செயல் எதுவும் இயல்பாயில்லை. ஏதோ ஒரு மர்மம் அவனைச் சூழ்ந்திருக்கிறது...

நரேந்திரன் கேட்டான். “அவன் உங்க மகன் சூட்கேஸில் இருந்த எதாவது பொருளை எடுத்திருக்க வாய்ப்பிருக்கா?”

பரந்தாமன் உறுதியாகச் சொன்னார். “இல்லை சார். நான் பார்த்துட்டே இருந்தேனே. அவன் கவனமா எதையோ தேடினதையும் பார்த்தேன். அவன் தேடினது கிடைக்காமல் ஏதோ யோசனையோட தான் அவன் இறங்கினான்... இறங்கறப்ப வருத்தத்தோட சொன்னான். “எதுவுமே நம்ம கிட்ட எத்தனை காலம் இருக்கணுமோ அத்தனை காலம் தான் இருக்கும். அதுக்கு மேல ஒரு வினாடி கூட எதையும் நாம வெச்சுக்க முடியாது…”   

நரேந்திரன் யோசித்தான். சூட்கேஸில் அவன் தேடியது கிடைக்கவில்லை என்றான பிறகு நாகராஜ் கிளம்பியிருக்கிறான். அலமேலு வற்புறுத்தியதால் சாப்பிட்டு விட்டுப் போயிருக்கிறான். அவன் சாப்பிடும் போது அவசரம் காட்டவில்லை. அரைகுறையாய் சாப்பிட்டுப் போகவில்லை. திருப்தியாகச் சாப்பிட்டுத் தான் போயிருக்கிறான்... ஒரு பொருளை எடுக்கும் நோக்கத்தில் மட்டுமே வந்திருப்பவன் சாவகாசமாகச் சாப்பிட்டுப் போயிருக்க மாட்டான். போய் இத்தனை பெரிய தொகை அனுப்பியும் இருக்க மாட்டான்...

பரந்தாமன் சொன்னார். “உங்க மாதிரியே தான் என் நண்பர் நாதமுனியும் நாங்க பார்த்தது பாம்பு தானான்னும், நாகராஜ் எதாவது அந்தப் பெட்டில இருந்து எடுத்திருப்பானோன்னும் சந்தேகப்பட்டார். அவர் அவன் போய் கொஞ்ச நேரத்துல வந்திருந்தார். அவரிடமும் உங்க கிட்ட சொன்னதையே தான் சொன்னோம்...”

நரேந்திரன் நாதமுனியைப் பற்றி விசாரித்தான். அவரைப் பற்றிய விவரங்களை பரந்தாமன் சொன்னார். பாம்புகளைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி டாக்டரேட் பட்டம் வாங்கியவர் அவர் என்ற தகவலை சுவாரசியத்துடன் நரேந்திரன் கேட்டுக் கொண்டான். எதற்குமிருக்கட்டும் என்று அவர் விலாசத்தை அவரிடமிருந்து வாங்கிக் கொண்ட நரேந்திரன் பரந்தாமனின் வங்கிக் கணக்கு விவரங்களையும் குறித்துக் கொண்டான். அதன் மூலம் அந்தப் பணம் அனுப்பியிருக்கும் ஆளின் விவரங்களைப் பெறுவது சுலபம் தான். நரேந்திரன் கிளம்பத் தயாரான போது அலமேலு கேட்டாள். “என்ன சாப்பிடறீங்க? காபி, டீ...?”

அவள் கேட்டது சம்பிரதாயமான விசாரிப்பாக இருக்கவில்லை. ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் போனால் சந்தோஷம் என்று நினைக்கிற அன்பின் விசாரிப்பாகவே இருந்ததால் நரேந்திரன் சொன்னான். “காபி கொடுங்கம்மா. அரை தம்ளர் போதும்...”

அவள் அன்பாகத் தலையசைத்து விட்டு சமையலறைக்குப் போனது அவனுக்குத் தாயை நினைவூட்டியது. வாழ்க்கையில் நிறைய சோதிக்கப்பட்ட பின்பும் மற்றவர்களிடம் அன்பு குறையாமல் இருப்பதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும். அது இந்த முதிய தம்பதியருக்கு இருக்கின்றது என்று நினைத்துக் கொண்டான்.

அவள் காபி கலக்கப் போன பிறகு பரந்தாமன் அவனிடம் கேட்டார். “ஏன் இத்தனை வருஷம் கழிச்சு இந்த விபத்து பத்தி விசாரிக்க வந்திருக்கீங்க?”

நரேந்திரன் சொன்னான். “அந்த விபத்து திட்டமிட்டு நடந்திருக்கலாம்கிற சந்தேகம் இருக்கு... வேற யாரையோ இலக்கு வச்சி வெச்ச குண்டுல உங்க மகன் பலியாய் இருக்கலாம்கிற சந்தேகமும் இருக்கறதால தான் இந்த விசாரணை...”

பரந்தாமன் சோகமாகத் தலையசைத்தார். அந்தத் தந்தையின் துக்கத்தைப் பார்க்க நரேந்திரனுக்குக் கஷ்டமாக இருந்தது. ஐந்து நிமிடங்களில் அலமேலு தந்த அருமையான காபியை ரசித்துக் குடித்து விட்டு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

பரந்தாமனின் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பியவனைக் கண்டுபிடிக்க நரேந்திரனுக்கு அதிக நேரமாகவில்லை. ஒரு மணி நேரத்தில் பணம் அனுப்பியவன் வங்கி விவரங்கள், பெயர் விலாசம் எல்லாம் தெரிய வந்தன. நரேந்திரன் சந்தேகப்பட்டது போல அனுப்பியவன் பெயர் வேறாக இருக்கவில்லை. நாகராஜ் என்பதாகத் தான் இருந்தது. விலாசம் தேவ்நாத்பூர் என்ற வட இந்தியக் கிராமத்தில் இருந்த சுவாமி முக்தானந்தா ஆசிரம விலாசமாக இருந்தது. அந்த ஆசிரமம் பல இடங்களில் பல தர்மஸ்தாபனங்களை நடத்திவரும் ஆசிரமம்... நரேந்திரன் நாகராஜ் குறித்த முழுவிவரங்களையும் உடனடியாக அனுப்பி வைக்கும்படி தன் ஆளிடம் கேட்டுக் கொண்டான்.


னார்தன் த்ரிவேதிக்கு அஜீம் அகமது தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை. அவரிடமிருந்து அவர் நரேந்திரனுடன் பேசிய பேச்சின் ஒலிநாடாவை அஜீம் அகமதின் ஆள் வாங்கிக் கொண்டு போய் இரண்டு நாட்கள் ஆகி விட்டன. அவன் என்ன நினைக்கிறான் என்றோ, என்ன திட்டமிடுகிறான் என்றோ தெரிவிக்கும் சிரமத்தை அவன் என்றுமே எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் அவன் கவனத்திற்கு வந்து விட்ட ஒன்றைப் பற்றி அவர் கவலைப்பட வேண்டியதில்லை என்பது அவர் அனுபவம். இருந்தாலும் கூட அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை....

அதைக் கவனித்த அவருடைய மேனேஜர் சொன்னான். “ஐயா எதற்கும் நீங்கள் காளிங்க சுவாமியைப் போய் பார்க்கலாமே. அவர் சஞ்சய் எங்கேன்னு சொல்லிடுவாரே...”

இத்தனை நாட்கள் காளிங்க சுவாமியை எப்படி மறந்தோம் என்று ஜனார்தன் த்ரிவேதி தன்னையே கடிந்து கொண்டார். காளிங்க சுவாமி ரிஷிகேசத்திலிருந்து சுமார் முப்பது மைல் தொலைவில் உள்ள ஒரு காட்டு காளி கோவிலில் வசிக்கும் ஒரு மந்திரவாதி. காளிங்க சுவாமி சாதாரணமாக யாரும் பார்க்க முடிந்த நபரல்ல. மிக வித்தியாசமான அமானுஷ்யமான மனிதர் அவர்.  பாம்புகளுக்கு மத்தியில் வாழ்பவர் அவர். அவர் வசிக்கும் காட்டு காளி கோயிலில் பலவிதமான பாம்புகள் எப்போதும் ஊர்ந்து கொண்டிருக்கும்.  காளி சிலை முன் இருக்கும் ஒரு எண்ணெய் விளக்கின் ஒளி தவிர வேறெந்த ஒளியும் அந்தக் கோயிலுக்குள் இருக்காது. அடர்ந்த காட்டுப்பகுதியில் அந்தக் கோயில் இருப்பதால் பகல் நேரங்களிலும் வெளியே லேசாய் வெளிச்சம் தெரியுமே தவிர கோயிலின் உள்ளே எப்போதும் இருட்டு தான் இருக்கும். அவர் நல்ல வெளிச்சமான இடங்களுக்குச் சென்று யாரும் பார்த்ததில்லை. அதே போல கருப்பு உடை தவிர வேறு நிற உடைகள் அவர் அணிந்தும் யாரும் பார்த்தது கிடையாது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை இரவு நேரத்தில் மட்டும் தான் அவர் அந்தக் காட்டுக் கோயிலிலிருந்து வெளியே வந்து ரிஷிகேசத்திற்குச் செல்வார்.  கங்கையில் குளித்து கரையில் சில மந்திரச் சடங்குகளை நள்ளிரவின் இருட்டிலேயே செய்து விட்டு விடிவதற்கு முன் தன்னுடைய இருப்பிடமான காளி கோயிலுக்குத் திரும்பி விடுவார். கோயிலில் அவருடன் இரண்டு சீடர்கள் மட்டுமிருப்பார்கள்.  

வனத்துறை சட்டங்கள் கடுமையாக்கப்பட்ட காலத்தில் அவரை அந்தக் காட்டுப் பகுதியிலிருந்து வெளியேற்ற வனத்துறை அதிகாரிகள் முயன்றார்கள். ஆனால் அவர்கள் அந்த உத்தேசத்தோடு கோயிலை நெருங்க முடியவில்லை. பல நூறு பாம்புகள் கோயிலைச் சுற்றிப் படைவகுத்து நின்றன. ஜனார்தன் த்ரிவேதி போன்ற பல அரசியல் தலைவர்கள் காளிங்க சுவாமியின் பக்தர்களாக இருந்ததால் அதிகாரிகள் அதற்கும் மேலான தீவிர முயற்சிகள் பின்பு எடுக்கப்படவில்லை.

காளிங்க சுவாமி தன் பக்தர்களைச் சந்திப்பது அமாவாசை நள்ளிரவில் கங்கைக் கரையில் அவர் மந்திரச் சடங்குகளை முடித்த பின்னர் தான். அதிகபட்சமாக அதிகாலை நான்கு வரை தான் அவர் பக்தர்களைச் சந்திப்பார். குறி கேட்கும் பக்தர்களிடம் எதையும் உள்ளது உள்ளபடி தயவு தாட்சணியம் பார்க்காமல் சொல்லி விடுவார். மற்ற நாட்களில் யாரும் அவரை அந்தக் காட்டுக் கோயிலுக்குச் சென்று சந்திக்க முடியாது. முயன்றால் பாம்புகள் தான் அவர்களைக் கோயிலுக்கு வெளியே வரவேற்கும். முயன்ற பலரும் அப்படிப் பாம்புகளைப் பார்த்து அலறியடித்துக் கொண்டு ஓடிவந்திருப்பதால் இப்போதெல்லாம் யாரும் அப்படி மற்ற நாட்களில் சந்திக்க முயல்வதில்லை.

காளிங்க சுவாமி ஜனார்தன் த்ரிவேதி பதவி அதிகார உச்சங்களுக்குச் செல்லும் முன்பே அதை முன்கூட்டியே கணித்துச் சொன்னவர். பதவியும் அதிகாரமும் பறிபோகும் என்பதையும் ஒன்றரை வருடத்துக்கு முன்பே கணித்துச் சொன்னவர்அதிகார உச்சத்தில் இருக்கும் போது ஒன்றரை வருடத்தில் அதிலிருந்து இறங்க வேண்டியிருக்கும் என்பதை சகித்துக் கொள்வது யாருக்கும் சுலபமல்லஜனார்தன் த்ரிவேதிக்கும் அந்தச் செய்தி காய்ச்சிய ஈயமாகக் காதில் விழுந்தது


“அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று ஜனார்தன் த்ரிவேதி அப்போது கேட்டார். எத்தனை வேண்டுமானாலும் அவரால் செலவு செய்து பரிகார பூஜைகள் செய்ய முடியும்.

“நீ எது செய்தாலும் பிரயோஜனமில்லை” என்று காளிங்க சுவாமி முடிவாகச் சொல்லி விட்டார்.

ஆனாலும் மனம் தளராத ஜனார்தன் த்ரிவேதி எத்தனையோ ஜோதிடர்கள், சுவாமிஜிகளைச் சந்தித்து அவர்கள் சொன்ன பரிகார பூஜைகள் எல்லாம் செய்து பார்த்தார். காளிங்க சுவாமி சொன்னது போல் எதுவும் பலனளிக்கவில்லை. அரசியலிலும், அதிகாரத்திலும் இறங்குமுகத்தை அவர் பார்க்க நேர்ந்தது. அதன்பிறகு அவர் காளிங்க சுவாமியைச் சந்திக்கவில்லை.


(தொடரும்)
என்.கணேசன்


Thursday, November 25, 2021

இல்லுமினாட்டி 130



சாலமனின் தற்கொலைக்குப் பின் பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் இம்மானுவல்  குழம்பினான். அவர் மட்டும் தான் விஸ்வத்திடம் விலை போயிருப்பார் என்று அவனால் நம்ப முடியவில்லை.  அவர் தானாக இது போன்ற முடிவை எடுத்திருப்பார் என்று தோன்றவில்லை. யாரோ சிலர் அல்லது ஒருவருடன் சேர்ந்து இந்தச் சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்பதே அவன் அனுமானமாக இருந்தது. ஆனால் அவர் எந்தத் தடயத்தையும் விட்டுப் போயிருக்கவில்லை. அவர் அலைபேசி அழைப்புகளைப் பார்த்தாகி விட்டது. அவர் அழைத்த அழைப்புகள், அவருக்கு வந்த அழைப்புகள் ஏராளமாக இருந்தன. அவருடைய தொழில் அப்படி. அவற்றில் யாரும் அழைக்கக்கூடாதவர்கள், சந்தேகத்திற்குரியவர்கள் என்று உடனே தட்டுப்படவில்லை. மின்னஞ்சல்கள், வீடு, டைரி எல்லாம் பார்த்தாகி விட்டது. எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

எர்னெஸ்டோவிடம் அவன் சொன்னான். “மிக நல்ல மனிதர். ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று தெரியவில்லை”

எர்னெஸ்டோ கடுமையான தொனியில் சொன்னார். “மிக நல்ல மனிதர்கள் எந்தச் சூழ்நிலையிலும் சதி வேலையில் ஈடுபட மாட்டார்கள். அவனுக்குக் கூட்டாளிகள் யார் இருக்கிறார்கள் என்பதை உடனடியாகக் கண்டுபிடி. இது போன்ற களைகளை உடனடியாகப் பிடுங்கி எறியா விட்டால் பெருகி விடுவார்கள்...”

”ஆழமாக விசாரிக்க ஒரு குழு அமைத்திருக்கிறேன். சீக்கிரமே ஒரு விடையுடன் வருவார்கள்... வாஷிங்டனில் நம் மூத்த உறுப்பினர் கர்னீலியஸ் உறக்கத்திலேயே மாரடைப்பால் காலமாகி விட்டார் என்ற செய்தி வந்திருக்கிறது...”

எர்னெஸ்டோவுக்கு கர்னீலியஸ் மீது மிக உயர்ந்த அபிப்பிராயம் இருந்தது. எல்லாரிடமும் இனிமையாகப் பழகக்கூடிய கண்ணியமான மனிதர். இல்லுமினாட்டியின் உபதலைவர் தற்போது ஆப்பிரிக்காவில் இருக்கிறார். தலைமைக்குழு உறுப்பினர்கள் யாரையாவது இறுதி மரியாதை செலுத்த அனுப்ப வேண்டும் என்று நினைத்த அவர் உதவியாளரை அழைத்து விஷயத்தைச் சொல்லி, கர்னீலியஸுக்கு இறுதி மரியாதை செலுத்த வாங் வே போகட்டும் என்று சொன்னார்.


ன்னும் இரண்டு மணி நேரத்தில் விஸ்வம் கிளம்ப வேண்டும். இந்தப் பயணம் அவனுக்கு மிக முக்கியமான பயணம். வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாக இது அமையப் போகிறது. அவன் இறைவனை நம்புபவன் அல்ல. அதனால் பிரார்த்தித்துக் கிளம்ப அவன் நினைக்கவில்லை. ஆனால் பாதாள அறையில் தியானத்தில் அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி உறுதியாக்கிக் கொண்டு கிளம்ப நினைத்தான்.

ஒரு காலத்தில் ஐந்து நிமிடம் பத்மாசனத்தில் அமரப் படாதபாடு பட்ட டேனியலின் உடல் இப்போதெல்லாம் அப்படி அமர எந்த அசௌகரியத்தையும் உணர்வதில்லை. தியானத்திற்கு அமர்ந்தவுடனேயே மனமும் ஓடுகாலியாக இருக்காமல் அமைதியாய் சீக்கிரமே தியானத்திற்கு இசைந்தது. எப்போதும் அவன் கதேயின் கவிதை இருக்கும் சுவரைப் பார்த்தபடி தான் தியானத்தில் அமர்வான். கண்களை மூடினாலும் அந்தக் கவிதையின் கடைசி ஐந்து வரிகளை அவன் மனக்கண்ணால் பார்க்க முடியும். அந்த வரிகள் நெருப்பின் கனலால் மின்னுவது போல மின்னும். அவன்  அதைப் பார்த்தபடியே உள்மன உலகங்களின் சக்தி அலைவரிசையில் இணைவான். அன்றும் அது நடந்தது. காலம் அவன் தியானத்தைக் கலைக்காமல் வேகமாய் ஓடியது. திடீரென்று பெரிய பிரமிடு நெற்றிக் கண் சின்னம் அவன் எதிரில் மின்னியது. கதேயின் கவிதைக்கு நேர் எதிரில் இருந்த சுவரில் பெரிதாக வரையப்பட்டிருக்கும் சின்னத்தை அவன் எப்போதும் லட்சியம் செய்வதில்லை. காரணம் அந்தச் சின்னம் அவன் கையிலும் மின்னி, க்ரிஷின் கையில் அதிகமாக மின்னிச் செய்த சதியை அவன் என்றுமே மறக்க முடியாது. அதனால் தான் அந்த அறையில் முதல் நாளிலேயே அந்தக் கண்ணில் அமானுஷ்ய சக்தி வீச்சை உணர்ந்தும் கூட அலட்சியப்படுத்தியதுடன் அதே பாவனையை இன்று வரை கடைப்பிடித்தும் வருகிறான். இன்று அதிசயமாய் அது அவன் மனத்திரையில் மின்னும் போதும் அலட்சியப்படுத்தி மனதைத் திருப்ப யத்தனிக்கையில் தான் ‘பெருவிழியில் பெரும் சக்தி  பெறுவான்’ என்ற அந்தச் சுவடி வாசகம் அவன் நினைவுக்கு வந்தது. அந்தப் பெருவிழி இது தானா?

ஜிப்ஸி மேலேயிருந்து குரல் கொடுத்தான். “விஸ்வம் கிளம்பலாமா?”

கண்களைத் திறந்த விஸ்வம் மெல்லத் திரும்பி எதிர்ச் சுவரைப் பார்த்தான். சுவரில் வரையப்பட்டு இருந்த பெரிய பிரமிடுக்குள் இருந்த பெரிய கண் இப்போதும் அவனை வசீகரமாய்ப் பார்த்தது. அந்த வசீகரத்தில் அவன் சிந்திக்கும் திறனை இழந்து விடவில்லை.  இல்லுமினாட்டியின் ‘அனைத்தும் பார்க்கும் விழி’ அவனை இன்னொரு முறை ஏமாற்ற முயல்கிறதா என்ற சந்தேகம் வந்தது. இப்போது எதையும் சோதித்துப் பார்க்க அவனுக்கு அவகாசம் இல்லை. வாஷிங்டனிலிருந்து வந்த பிறகு தான் சோதித்துப் பார்க்க வேண்டும். விஸ்வம் திரும்பி கதேயின் கவிதையைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுக் கிளம்பினான்.

ம்யூனிக் விமானநிலையம் போகும் வழிநெடுக இருவரும் பேசிக் கொள்ளவில்லை. விமான நிலையத்திலும் ஜிப்ஸி உள்ளே வரவில்லை. விஸ்வத்திடம் சொன்னான். “இங்கே எதுவும் பிரச்னை இருக்காது என்று நினைக்கிறேன். அப்படி ஏதாவது பிரச்னை இருந்தால் ஓடி வா. தப்பித்து விடலாம். விமானம் கிளம்பாமல் நான் இங்கிருந்து போக மாட்டேன். வாஷிங்டனில் சந்திப்போம்…”

விஸ்வம் தலையசைத்து விட்டுக் காரிலிருந்து இறங்கினான்.  கருப்புக் கண்ணாடி அணிந்த இந்த குறுந்தாடி மனிதன் தான் வலைவீசித் தேடப்படும் டேனியல் என்று மேலோட்டமான பார்வையில் யாரும் சொல்ல முடியாதபடி மாறியிருந்த விஸ்வம் அமைதியாக உள்ளே நுழைந்தான். அரை மணி நேரம் கழித்து மைக்கேல் விக்டரால் அவன் சோதிக்கப்பட்ட போது மைக்கேல் விக்டர் மெலிதாகப் புன்னகைத்தான். விஸ்வமும் அதே அளவில் சிறிய புன்னகையை உதிர்த்தான்.

“இனிய பயணத்திற்கு வாழ்த்துக்கள்” என்று சொல்லி வாழ்த்தி மைக்கேல் விக்டர் அனுப்ப அவன் கையை உறுதியாகக் குலுக்கி நன்றி தெரிவித்து விட்டு அமைதி மாறாமல் விஸ்வம் நடந்தான். ஆனாலும் விமானம் கிளம்பும் வரை சின்னதாய் ஒரு குறுகுறுப்பு அவனுக்குள் இருந்தது. விமானம் பறக்க ஆரம்பித்தவுடன் மனம் நிம்மதியடைந்தது. சீட்டின் எதிரில் இருந்த டிவியில் தமிழகச் செய்திகளைப் பார்த்தான்.

ஒரு தொலைக்காட்சியில் கமலக்கண்ணன் பேசிக் கொண்டிருந்தார். ”உதய்க்குக் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சையளித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம். வெளிநாட்டுப் பயணத்தைப் பாதியில் முடித்துக் கொண்டு திரும்பியுள்ள என் இளைய மகன் க்ரிஷ், உதய் நலமடைய எங்கள் வீட்டில் சிறப்புத் தியானம் ஒன்றில் ஈடுபட்டிருக்கிறான். இனி எல்லாம் இறைவன் கையில் என்று தான் சொல்ல வேண்டும்…”

தொலைக்காட்சி அடுத்ததாக மருத்துவமனையையும், ஆம்புலன்ஸில் இருந்து ஸ்ட்ரெச்சரில் உதயை இறக்கி உள்ளே எடுத்துக் கொண்டு போவதையும், அடுத்தபடியாக  பத்மாவதி மருமகள்கள் சகிதம் காரிலிருந்து இறங்கி கண்ணீருடன் மருத்துவமனைக்குள் நுழைவதையும் நூறாவது முறையாகக் காண்பித்தது.   விஸ்வம் திருப்தியுடன் தொலைக்காட்சியை அணைத்தான்.

க்ரிஷ் இந்தியா போய் சிறப்புத் தியானத்தில் ஈடுபட்டு எந்தப் பலனும் இல்லை என்பது அவனுக்குத் தெரியும்.  காரணம் அந்த விஷம் அப்படிப்பட்டது.

இந்த விஷ ஆராய்ச்சியில் அவன் பதினோரு மாதங்கள் தீவிரமாக இறங்கியிருக்கிறான். காட்டுவாசிகளுடனும், பல ஆராய்ச்சியாளர்களுடனும் ஒரு நாளில் பத்தொன்பது மணி நேரங்கள் கழித்திருக்கிறான். அவர்களிடமிருந்து நிறைய கற்றிருக்கிறான். ஒவ்வொரு விஷமும் மனித உடலில் எந்த விளைவை எப்போது ஏற்படுத்தும் என்பதெல்லாம் அவனுக்கு அத்துப்படி. சாதாரணமாகப் போஸ்ட் மார்ட்டத்தில் எந்த மாதிரியாய் தெரியும் என்பதையும் அவன் அறிவான். உதய்க்குக் கொடுத்திருக்கும் விஷம் ஏழு நாட்களில் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. அவனுடைய சங்கேத பாஷையில் அதன் பெயர் விட்டமின் வி7. சமீபத்தில் கர்னீலியஸுக்குத் தந்தது விட்டமின் வி ஜீரோ. அதைச் சாப்பிட்ட பின் அதிகபட்சமாய் நாற்பத்தைந்து நிமிடங்கள் தான் ஒருவன் வாழ முடியும். உதய்க்குக் கொடுத்திருக்கும் விஷம் கல்லீரல் சிறுநீரகப் பிரச்னையாய் வெளியே தெரியும். கர்னீலியஸுக்குக் கொடுத்திருந்த விஷம் மாரடைப்பாய் வெளியே தெரியும். கர்னீலியஸ் கதை முடிந்து விட்டது. உதய் மற்றும் எர்னெஸ்டோவின் கதை முடியப் போகிறது. அவன் வாழ்க்கை புதிதாய் ஆரம்பமாகப் போகிறது….

(தொடரும்)
என்.கணேசன்   


Wednesday, November 24, 2021

முந்தைய சிந்தனைகள் 73

 சிறிது சிந்தித்துப் பார்ப்போமே!


என் நூல்களில் இருந்து சில சிந்தனைகள்...











என்.கணேசன்


Monday, November 22, 2021

யாரோ ஒருவன்? 60


மாதவனின் பெற்றோர் இப்போதும் உயிரோடிருப்பதும், அவர்கள் இத்தனை வருடங்கள் கழிந்த பின்னும் பழைய விலாசத்திலேயே சத்தியமங்கலத்தில் குடியிருப்பதும் நரேந்திரனின் தென்னிந்திய ஆரம்ப வேலையைச் சுலபமாக்கியது. கல்யாணுக்கும், சரத்துக்கும் கடிதங்கள் அனுப்பியது போல மாதவனின் பெற்றோருக்குக் கடிதம் அனுப்பாமல் அவர்கள் வீட்டுக்குக் காலை பத்தரை மணியளவில் நரேந்திரன் சென்றான்.

வாசலில் சாணி தெளித்து அழகானதொரு கோலம் போடப்பட்டிருந்தது. கேட்டுக்கு சுமார் இருபதடி தாண்டி உள்ளே வீடு இருந்தது. வீட்டுக்கு வெளியே இருந்த கயிற்றுக்கட்டிலில் தமிழ் தினசரிப்பத்திரிக்கை ஒழுங்காக மடித்து வைக்கப்பட்டிருந்தது.

நரேந்திரன் கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டு பரந்தாமன் வெளியே வந்தார். “யார் வேணும்?”

பரந்தாமன்என்று நரேந்திரன் மரியாதையுடன் சொன்னான்.

நான் தான் அது. நீங்க...?”

நான் நரேந்திரன். உளவுத்துறையிலிருந்து வர்றேன்என்று சொன்ன நரேந்திரன் தன்னுடைய விசிட்டிங் கார்டை அவரிடம் நீட்டினான்.

விசிட்டிங் கார்டை வாங்கி பரந்தாமன் கண்களைச் சுருக்கிப் படித்தார். நரேந்திரன் ஐபிஎஸ் என்றிருந்ததைப் படித்தவுடன் மிக மரியாதையாகவாங்க சார்என்று வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போனார். மண்டையைப் பிளக்கும் வெயில் அந்தக் காலை நேரத்திலேயே இல்லாமல் இருந்திருந்தால் வெளியே கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருப்பது வசதியாக இருந்திருக்கும் என்று நரேந்திரன் நினைத்தான்.

உள்ளே வீடு பழைய கால முறையில் இருந்தது. சுமார் 25 அல்லது 30 வருடங்கள் முந்தைய காலத்தில் காலடி எடுத்து வைத்த உணர்வை நரேந்திரன் அந்தக் கணத்தில் உணர்ந்தான். காரணம் அவர்கள் மகன் மறைந்த பிறகு அவர்கள் அந்த வீட்டில் எதையும் மாற்றவில்லை என்பதாக இருக்கலாம். அவர்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டு தான் அவன் வந்திருக்கிறான். ஏழ்மையான வாழ்க்கை வாழும் அவர்கள் மீது அவனுக்கு இங்கு வருவதற்கு முன்பே பச்சாதாபம் ஏற்பட்டிருந்தது. அவன் தந்தையை இழந்து இத்தனை காலம் கஷ்டப்பட்டது போல அவர்கள் மகனையிழந்து ஒரு சோக வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று நினைத்திருந்தான். இப்போது நேரில் பார்க்கையில் அவன் இரக்கம் மேலும் கூடியது.

யாரு...?” என்று கேட்டபடி மாதவனின் தாய் அலமேலு சமையலறையிலிருந்து வெளியே வந்தாள்.

முழுவதுமாய் நரைத்த கூந்தலும், நெற்றி நிறைய பெரிய குங்குமப் பொட்டுமாய் வந்த கிழவி முகத்தில் அளவில்லாத சாந்தம் தெரிந்தது.   

பரந்தாமன் சொன்னார். “சார் உளவுத்துறை அதிகாரி...”

சரியென்று தலையாட்டிய அலமேலு அந்தப் பதவிக்கு அவரளவுக்கு முக்கியத்துவம் தரவில்லை. அவளைப் பொருத்தவரை அவர்களைத் தேடி வருபவர்கள் எல்லாரும் விருந்தினர்கள் தான்.

சந்தோஷம் உட்காருங்கஎன்று அங்கிருந்த பிரம்பு நாற்காலியைக் காட்டி விட்டு வேகமாகப் போய் ஒரு செம்பு தண்ணீரும் ஒரு தம்ளரும்  கொண்டு வந்து அவன் முன்னால் இருந்த டீப்பாயில் வைத்தாள்.

பரந்தாமனுக்கு அந்த ஐபிஎஸ் அதிகாரி முன்னால் உட்கார்வது மரியாதையாக இருக்காது என்று தோன்றியதால் நின்றபடியே இருந்தார். நரேந்திரனுக்கு அந்த முதியோரை ஏனோ மிகவும் பிடித்துப் போனது. எளிமையும் அன்பும், மரியாதையும்  நிறைந்த நல்ல மனிதர்கள்...

நீங்க உட்காருங்க.” என்று நரேந்திரன் சொன்னான். பின் பரந்தாமன் தயங்கியபடி அங்கிருந்த இன்னொரு நாற்காலியில் அமர்ந்தார். அலமேலு தன் கணவன் அருகில் வந்து நின்று கொண்டாள்.

நரேந்திரன் மென்மையாக ஆரம்பித்தான். “நான் உங்க மகன் மாதவனோட மரணம் சம்பந்தமாய் சில விவரங்களைத் தெரிஞ்சுக்க வந்திருக்கேன்...”

பரந்தாமன், அலமேலு இருவர் முகத்திலும் படர்ந்த சோகம் நரேந்திரனை என்னவோ செய்தது.

பரந்தாமன் மெல்லச் சொன்னார். ”கேளுங்க சார்
அவரோட மரணம் மணாலில ஏதோ வெடிகுண்டு விபத்தால நிகழ்ந்ததில்லையா. அது சம்பந்தமா உங்களுக்கு நினைவிருக்கிற எல்லா விவரங்களையும் சொன்னால் நல்லாயிருக்கும்...”

இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன் மாதவன் தன் நண்பர்கள் சரத் மற்றும் கல்யாணுடன் மணாலிக்குச் சுற்றுலா சென்றதையும், அங்கே ஒரு வெடிகுண்டு விபத்தில் சிக்கி அவன் உடல் கருகி மரணமடைந்ததையும் வருத்தத்துடன் பரந்தாமன் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல அலமேலு புடவைத்தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

அந்த விபத்தின் முழு விவரங்கள் அவருக்குத் தெரியவில்லையா, தெரிந்தும் அதை விவரிக்கும் மனநிலையில்லாமல் சுருக்கமாகச் சொல்கிறாரா என்பதை நரேந்திரனால் ஊகிக்க முடியவில்லை. ஆனால் அதை மறுபடி அவர் வாயால் சொல்ல வைத்து துக்கத்தை அதிகப்படுத்த அவன் விரும்பவில்லை. அதெல்லாம் அவன் மிக நன்றாக அறிந்த தகவல்கள் தான். அவன் அறிய வந்தது மாதவனின் நண்பர்கள் குறித்த தகவல்களை.

மாதவனுக்கு நண்பர்கள் யார் யார்?”

நிறைய பேர் இருந்தாங்க. அதுல ரஞ்சனி, சரத், கல்யாண் மூனு பேருமே அவனுக்கு நெருக்கமான நண்பர்கள்

அவங்க அந்த விபத்துக்கு அப்பறமும் இங்கே வர்றதுண்டா?”

இல்லை. அந்தப் பொண்ணு ரஞ்சனி மட்டும் கல்யாணத்துக்குக் கூப்பிட வந்தா. மத்தவங்க பிறகு வரலை…. வந்து எங்க துக்கத்தை அதிகப்படுத்த வேண்டாம்னு நினைச்சிருக்கலாம்எல்லாருக்கும் அவங்கவங்க வேலையே அதிகம்…. அவங்க யாரும் இங்க இல்லை. அதுவும் காரணம். அவங்க பிறகு கோயமுத்தூர் போயிட்டாங்க

நரேந்திரனுக்கு சரத், கல்யாண் இருவரும் மாதவனுடன் மணாலிக்குப் போனவர்கள் என்பதால் அவர்கள் இருவர் பற்றியும் முன்பே தெரிந்திருந்தது. நாளை அவர்களை கோயமுத்தூரில் விசாரிக்கவும் போகிறான். ரஞ்சனி பற்றி அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதனால் கேட்டான். “ரஞ்சனி இப்ப எங்கே இருக்காங்க?”

கோயமுத்தூர்ல தான். ரஞ்சனி கல்யாணம் செய்துகிட்டது சரத்தைத் தான்.” பரந்தாமன் சொன்னார்.

அந்தத் தகவலைப் பற்றி சிறிது யோசித்து விட்டு நரேந்திரன் கேட்டான். மாதவனுக்கு எதிரிகள் இருந்தாங்களா?”

அந்தக் கேள்வியே தவறானது என்ற முகபாவனை இருவரிடமும் தெரிந்தது. “இல்லைஎன்று இருவரும் ஒருமித்துச் சொன்னார்கள்.

அலமேலு குரல் கரகரக்க கூடுதலாகச் சொன்னாள். “கலகலன்னு பேசுவான். எல்லாருக்கும் முடிஞ்ச உபகாரம் செய்வான். பெருந்தன்மையா இருப்பான். அதனால எல்லாருக்கும் அவனை ரொம்ப பிடிக்கும்.”    

நரேந்திரன் நிறைய கேள்விகள் கேட்டான். அவர்கள் குடும்பத்தைப் பற்றி, மாதவனின் நண்பர்களின் குடும்பங்களைப் பற்றி, அந்த நண்பர்களுக்கு இடையே இருந்த அன்னியோன்னியம் பற்றி, கல்லூரி வாழ்க்கையைப் பற்றி, அவர்கள் வேலையைப் பற்றி.... எல்லாக் கேள்விகளுக்கும் பரந்தாமனும், அலமேலுவும் மாறி மாறி பதில் சொன்னார்கள். அவர்கள் இருவரும் யாரைப் பற்றியும் மோசமான எந்தக் கருத்தையும் சொல்லவில்லை என்பதை நரேந்திரன் கவனிக்கத் தவறவில்லை.

நரேந்திரன் கேட்டான். “இப்பவும் உங்களைத் தொடர்பு கொள்கிற அவன் நண்பர்கள் வேற யாராவது இருக்காங்களா?”

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் முன் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பின் பரந்தாமன் சொன்னார். “சில நாள்களுக்கு முன்னாடி மாதவனோட ஒரு நண்பன் வந்தான். அவனை எங்களுக்குத் தான் ஞாபகப்படுத்திக்க முடியல...”

அந்த நண்பனின் வரவு பற்றி அவர்கள் இருவரும் மாறி மாறி தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனது நரேந்திரனுக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. வந்தவன் கண்டிப்பாக மாதவனின் நண்பனாக இருந்திருக்க முடியாது என்பது தெளிவாகவே அவனுக்குத் தெரிந்தது. அவன் மாதவனின் சூட்கேஸில் எதையோ தேடி வந்திருக்கிறான். அதை வெளிப்படையாகச் சொல்லாமல் நடித்திருக்கிறான் என்பதில் சந்தேகமே இல்லை. இத்தனை வருடங்கள் கழித்து ஷிரடி பாபாவின் விக்கிரகத்துக்காக யாருமே வர முடியும் என்று தோன்றவில்லை. வந்தவன் கண்ணாடியைக் கழட்டாதது அவர்கள் முழுமையாக அவனை வேறு ஆளாக அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காகவே இருக்க வேண்டும்.

ஆனால் பரந்தாமன் தொடர்ந்து அந்த நண்பன் அவர் கணக்கில் 13,45,690 ரூபாய் அனுப்பி வைத்திருந்த தகவல் சொன்னது அவனைத் திகைக்க வைத்தது.

பரந்தாமன் சொன்னார். “13456.90 அனுப்பறதுக்கு பதிலா அவன் மாறி 13,45,690 அனுப்பிச்சிட்டானோங்கற சந்தேகம் இருந்துச்சு. அப்படி மாறியிருந்தா கண்டிப்பா திரும்பக்கேட்டு அவனோ, அந்த பாங்க் காரங்களோ வருவாங்கன்னு என் நண்பர் நாதமுனி சொன்னார். ஆனா அது நடக்கல. பணம் என் கிட்டயே தான் இருக்கு.”

நரேந்திரன் மூளை பல யூகங்களை விரைவாக யோசிக்க ஆரம்பித்த வேளையில் அலமேலு கடைசியாக அவர்கள் பார்த்த பாம்பு விஷயத்தையும் சொன்னாள். நரேந்திரன் விட்டலாச்சாரியா படக்காட்சியைப் பற்றி அவர்கள் சொல்வது போல அவர்களை வினோதமாகப் பார்த்தான்.


(தொடரும்)
என்.கணேசன்


Thursday, November 18, 2021

இல்லுமினாட்டி 129



ந்த கன்னியாஸ்திரி புத்தகங்கள் நிறைந்த பையைத் தூக்கிக் கொண்டு போக சிரமப்பட்டாள். கர்னீலியஸ் இரக்கப்பட்டு அதை வெளியே வரை எடுத்து வரட்டுமா என்று கேட்டார். வயதான அவரிடம் அவள் உதவி கேட்கத் தயங்குவது போல் காட்டிக் கொண்டாள். பின் இன்னொரு காலிப் பையை எடுத்து அதில் பாதி புத்தகங்களைப் போட்டுக் கொண்டாள். “இந்த இரண்டு பைகளில் சுமப்பது சுலபம்” என்று சொல்லி வெளியே செல்லக் கிளம்பினாள். ஆனால் அவள் அப்படி இரண்டு பைகளில் பிடித்துக் கொண்டு நடந்த போதும் சிறிது தடுமாறியதை கர்னீலியஸ் கவனித்தார்.  

“ஒரு பையை என்னிடம் கொடுங்கள்” என்றார் அவர். அவள் சிறிது யோசித்து “உங்களுக்கு ஏன் சிரமம். வெளியே கார் வரை தானே. கொண்டு போய்க் கொள்கிறேன்” என்றாள். ஆனால் அவர் கட்டாயப்படுத்தவே தயக்கத்துடன் ஒரு பையை அவர் கையில் தந்தாள். இருவரும் வெளியே சென்ற பிறகு அறையில் ஒளிந்து கொண்டிருந்த இளைஞன் மின்னல் வேகத்தில் அறையிலிருந்து வெளியே வந்து சமையலறைக்கு விரைந்தான். சமையலறையில்  ஸ்டவ்வில் ஒரு பாத்திரம் மூடப்பட்டு இருந்தது. அவருடைய இரவு ஆகாரமே ஒரு பெரிய தம்ளரில் பாலும் ஒரு ஆப்பிளும் தான் என்று சொல்லி இருந்தார்கள்.  அவன் கையில் வைத்திருந்த ஒரு சிறிய பாட்டிலின் மூடியைத் திறந்து அந்தப் பால் பாத்திரத்தில் கவிழ்த்தான். நிறமற்ற திரவ வடிவில் இருந்த கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் பாலுடன் கலந்தது. பின் அவன் மறுபடி வேகமாகப் போய் அந்த அறையிலேயே ஒளிந்து கொண்டான்.

வெளியே நின்றிருந்த காரில் அந்தக் கன்னியாஸ்திரி ஏறிக் கொண்டாள்.  அந்தப் புத்தகப்பையை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டு பல முறை நன்றி சொன்னாள். பின் அவள் கிளம்பிப் போனாள். அவள் வேறு வீடுகளுக்கு நூல்கள் வாங்கச் செல்லாதது கர்னீலியஸை யோசிக்க வைத்தது. அவரிடம் புத்தகங்கள் நிறைய இருக்கின்றன என்று யாராவது சொல்லியிருக்கக்கூடும், அதனால் தான் அவள் இந்தப் பகுதியில் அவர் வீட்டுக்கு மட்டும் வந்திருக்க வேண்டும் என்று அவரே நினைத்துக் கொண்டபடி வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டுக்குள் அவருக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

அவர் அறைக்குப் பக்கத்து அறைக்கு அவர் அதிகம் போவதில்லை. விருந்தாளிகள் யாராவது எப்போதாவது வந்தால் மட்டும் அதில் தங்குவார்கள். அந்தச் சமயங்களில் தான் அவரும் அங்கு போவார். மற்ற சமயங்களில் எல்லாம் வீடு சுத்தம் செய்யும் பெண்மணி மட்டும் சில நாட்களுக்கு ஒரு முறை வந்து தூசு தட்டிச் சுத்தம் செய்து விட்டுப் போவாள்.

கர்னீலியஸ் வீட்டின் கதவைத் தாளிட்டுக் கொண்டு தனதறைக்குப் போனார். இப்போது கொடுக்க வேண்டித் தேடிய நூல்களில் அவர் படிக்க வேண்டிய ஒரு நாள் கடைசி அலமாரியின் ஒரு மூலையிலிருந்தது தட்டுப்பட்டிருந்தது. அதை எடுத்து அவர் படிக்க உட்கார்ந்தார். ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை. உறக்கம் வருவது போலிருந்தது. எழுந்து சமைலறைக்குச் சென்று பாலை ஒரு பெரிய தம்ளரில் ஊற்றினார். ஃபிரிட்ஜைத் திறந்து ஒரு ஆப்பிளை எடுத்து அதைக் கத்தியால் நறுக்கிச் சாப்பிட்டார். பின் தம்ளரிலிருந்த பாலைக் குடித்தார்.  பின் தனதறைக்குப் போய் படுக்கையில் சாய்ந்தார். அரை மணி நேரம் கழித்து நெஞ்சை ஏதோ அழுத்துவது போல் இருந்தது. மூச்சு விட சிரமமாயிருந்தது. டாக்டரை அழைத்தால் தேவலை என்று தோன்றியது. ஆனால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை…

பக்கத்து அறையில் பதுங்கியிருந்த இளைஞன் தன் கைக்கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அரை மணி நேரத்தில் ஆரம்பித்து நாற்பத்தைந்து நிமிடத்திற்குள் கிழவர் இறந்து விடுவார்…. அவர் மூச்சிறைக்கும் சத்தம் நன்றாகவே அவனுக்கும் கேட்க ஆரம்பித்தது. அவன் அமைதியாக இருந்தான். நாற்பத்தியிரண்டு நிமிடத்தில் சத்தம் குறைய ஆரம்பித்து, நாற்பத்தி நாலாம் நிமிடம் அடங்கியது. ஆனாலும் அவன் தானிருந்த இடத்தை விட்டு எழவில்லை.  நாற்பத்தியேழாவது நிமிடம் மெல்ல எழுந்து அவர் அறையை எட்டிப் பார்த்தான். கர்னீலியஸ் அசையாமல் படுத்திருப்பது போலத் தெரிந்தது. நாளை டாக்டர் வந்து பார்த்து அவர் உறக்கத்திலேயே மாரடைப்பில் காலமாகி விட்டதாய்ச் சொல்வார்… அவன் ஊற்றிய விஷம் போஸ்ட் மார்ட்டம் செய்தால் கூட கண்டுபிடிக்கப்படாது. அந்த விஷத்தை அவர்கள் விட்டமின் ஜீரோ என்று சொல்வார்கள். அது இறப்பை ஏற்படுத்துமேயொழிய இறப்பின் காரணமாகத் தெரியாது.

அந்த இளைஞன் மெல்லக் கையுறைகளை அணிந்தபடியே அவர் அறைக்குள் நுழைந்து அவருடைய அலைபேசியை எடுத்து அதில் சாலமன் மற்றும் வாங் வே அழைத்திருந்த தகவல்களை எல்லாம் அழித்தான்.  இனி டெலிபோன் கம்பெனியிடம் தொடர்பு கொண்டு, வந்த போன்கால்கள், அழைத்த போன்கால்கள் பற்றிய விவரங்கள் வாங்கினால் ஒழிய அந்த விவரங்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது. மாரடைப்பில் இறந்து போன முதியவர் பேசிய போன்கால் விவரங்களை இல்லுமினாட்டி உட்பட யாரும் வாங்கிப் பார்க்கப் போவதில்லை.  வெறும் இந்தப் போனை மட்டுமே சோதித்துப் பார்த்தால் அந்தத் தகவல்கள் கிடைக்கப் போவதில்லை.

அந்த அலைபேசியை அவர் வைத்திருந்த இடத்திலேயே வைத்து விட்டு அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். மேசையின் மீது டைரி இருந்தது. மெல்ல அந்த டைரியை எடுத்துப் பார்த்தான். அவர் டைரியில் சில நாட்களை மட்டும் குறித்திருந்தார். அவர் கலந்து கொள்ள வேண்டிய கூட்டங்களின் தினங்கள் குறிக்கப்பட்டிருந்தன. அவர் நண்பர் ஒருவரின் திருமண நாள் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று ஒரு நாளைக் குறித்திருந்தார்.   வரும் வியாழன் நடக்கவிருக்கும் இல்லுமினாட்டி கூட்டம் பற்றியும் குறித்து வைத்திருந்தார். ”மீட்டிங் 11.00 மணி” என்று குறித்திருந்தார். அதற்குப் பிந்தைய பக்கங்கள் காலியாகவே இருந்தன. வாங் வே, சாலமன் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறாரா என்று பார்ப்பதற்காக டைரியைத் திறந்து பார்த்தவன் அவர்களைப் பற்றி மட்டுமல்லாமல் வேறு யாரிடம் இருந்த தொடர்பு பற்றியும் எழுதியிருக்கவில்லை என்பதால் திருப்தி அடைந்து அதே இடத்தில் வைத்தான்.

அந்த டைரியின் கடைசி பக்கத்தில் கர்னீலியஸ் எழுதியிருந்த அந்த ரகசிய ஆவணக் குறிப்பை அந்த இளைஞன் பார்க்கத் தவறியிருந்தான். முதல் முறை நினைவு கூர்ந்து கிடைத்த விஷயத்தை எழுத டைரியை எடுத்த கர்னீலியஸ் அவசரத்தில் டைரியின் கடைசி காலிப்பக்கத்தில் அதை எழுத ஆரம்பித்திருந்தார். அடுத்த முறை தொடரும் போது எழுத அந்தக் கடைசி காலிப்பக்கம் சுலபம் என்று அந்தச் சமயத்தில் அவருக்குத் தோன்றியிருந்தது. அவர் அப்படி கடைசி பக்கத்தில் இந்தத் தகவலை எழுதியிருக்கக்கூடும் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

அடுத்தபடியாக அவன் சிசிடிவி காமிராவில் அன்று பதிவாகியிருந்த அனைத்தையும் அழித்து விட்டு அதை அணைத்து வைத்தான். அவர் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டால் ஒழிய அவர்கள் அந்தக் காமிராப் பதிவுகளைப் பார்க்கப் போவதில்லை என்றாலும் கூட அவன் தேவையில்லாமல் எந்தத் தடயத்தையும் விட்டுப் போக விரும்பவில்லை. கடைசியாக சமையலறைக்குப் போய் அந்தப் பால் பாத்திரத்தில் பால் மீதி வைத்திருக்கிறாரா என்று அவன் பார்த்தான். சுமார் அரை தம்ளர் அளவு பால் மீதமிருந்தது. அதைக் கொட்டிக் காலி செய்து பின் பாத்திரத்தைக் கழுவியும் வைத்தான். உடலின் உள்ளே போன பிறகு அது தன் இருப்பை மறைக்குமே ஒழிய பாலிலேயே இருக்கும் போது சோதனையிட்டால் காட்டிக் கொடுத்து விடும். அவர்கள் யாரும் அதைச் சோதனையிடும் வாய்ப்பில்லை என்ற போதும் அப்படிச் செய்தாலும் கண்டுபிடிக்கும் வாய்ப்பிருக்கா வண்ணம் இருக்க வேண்டுமென அவன் நினைத்தான்.

அவருடைய வீட்டுக் கதவு மூடினால் தானாகப் பூட்டிக் கொள்ளக்கூடியது. பிறகு சாவி போட்டுத் திறந்தால் தான் அதைத் திறக்க முடியும். அதுவும் கதவைத் தாளிட்டுக் கொண்டு உறங்கிய அவர் உறக்கத்திலேயே இறந்து போனதாக மற்றவர்கள் நினைக்க உதவும். அவன் அறியாமல் விட்டுப் போன அந்த டைரியின் கடைசி பக்கம் தவிர வேறு எதுவுமே அந்த இரகசிய ஆவணத்தையோ, அது சம்பந்தமாய் அவரைப் பார்க்க வந்த ஆட்களையோ காட்டிக் கொடுப்பதாயில்லை.

இல்லுமினாட்டி அந்த வங்கி லாக்கரை எடுத்து அந்த இரகசிய ஆவணத்தையே எடுத்துப் பார்த்தாலும் கூட அதில் பழங்காலக் கலப்பு மொழியில் இரகசிய சங்கேத முடிச்சுப் போட்டு எழுதி இருப்பதை அறிஞர்கள் உதவியில்லாமல் என்னவென்று அறியக்கூட வாய்ப்பில்லை. அதற்கும் பல மாதங்களாகும். அதற்குள் இங்கே எல்லாம் முடிந்துவிடும்...

(தொடரும்)
என்.கணேசன்