சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 28, 2022

சாணக்கியன் 15

 

கேகய தூதர் நடுத்தர வயதைக் கடந்தவர். அனுபவசாலி. இது போன்ற பல கடுமையான பார்வைகளைப் பார்த்துப் பழகியவர். எனவே ஆம்பி குமாரனின் பார்வையால் கடுகளவும் பாதிக்கப்படாமல் அவனையே பார்த்து நின்றிருந்தார். ஆம்பி குமாரனுக்கு அந்தப் பார்வை அவனுடைய ஆசிரியர் விஷ்ணுகுப்தரை நினைவுபடுத்தியது. அவரும் இப்படித் தான் பொருட்படுத்தாத பார்வை பார்த்து வெறுப்பேற்றுவார். இந்தத் தூதரும் அவரிடம் பயிற்சி எடுத்தவரோ? கேகய தூதரின் பார்வையில்நீ என்னை அரசரிடம் அனுப்புகிறாயா இல்லை நான் திரும்பிப் போகட்டுமா?” என்ற தோரணை தெரிந்தது. அவர் கொண்டு வந்திருக்கும் செய்தி என்ன என்பதை அவனால் யூகிக்க முடிந்ததால் மேற்கொண்டு அந்தப் பார்வையைப் பார்த்துக் கொண்டிருக்கப் பிடிக்காமல்யாரங்கேஎன்று குரல் எழுப்பினான்.

அவன் குரல் கேட்டு உள்ளே வந்த வீரனிடம்இவரை மன்னரிடம் அழைத்துப் போஎன்று சொன்னான். கேகய தூதர் அவனை தலை தாழ்த்தி வணங்கிவிட்டு அந்த வீரனின் பின்னால் போனார்.


காந்தார அரசர் தோற்றத்தில் முதுமை மிக அழுத்தமாகத் தெரிந்தது. வணங்கி நின்ற தூதரிடம் அவர்வாருங்கள் கேகய தூதரே. அமருங்கள். என் நண்பரான கேகய மன்னர் நலம் தானா?”

 அமருங்கள் என்ற உபசார வார்த்தையைக் கேட்டு அமர்ந்து விடாத கேகய தூதர் மிகுந்த மரியாதையுடன் சொன்னார். “கேகய மன்னர் பூரண நலம் தான் காந்தார அரசே.”

 என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறீர்கள் தூதரே

 கேகய தூதர் மடை திறந்த வெள்ளம் போல் சொல்ல ஆரம்பித்தார்.  கேகய நாடு காந்தாரத்துடன் பல காலமாகவே நல்ல நட்புடன் தான் இருந்து வருகிறது காந்தார அரசே, தங்கள் மீது எங்கள் மன்னர் வைத்திருக்கும் மரியாதையும் நட்பும் காரணமாக இனியும் அப்படியே இருநாடுகளின் நட்பு தொடர வேண்டும் என்றும் எங்கள் மன்னர் விரும்புகிறார். ஆனால் அந்த விருப்பம் காந்தார நாட்டிற்கு இல்லாமல் இருப்பது அவரை வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது.....”.

 காந்தார அரசர் முகத்தில் குழப்பம் தெரிந்தது. ”காந்தாரமும் அதையே தான் விரும்புகிறது. அப்படி இருக்கையில் தவறான கருத்து கேகய மன்னர் மனதில் எழக் காரணம் என்ன?”

 இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு முறையும், சில நாட்களுக்கு முன்பு ஒரு முறையும்  தங்கள் படைகள் எங்கள் எல்லைகளில் அத்து மீறி நுழைந்து அங்கே பலத்த சேதத்தை ஏற்படுத்தி அங்குள்ள பசுமாடுகளை ஓட்டிக் கொண்டு போயிருக்கின்றன அரசே. அது நட்பு நாடு செய்யக்கூடிய காரியம் அல்ல...”

 காந்தார அரசர் திகைப்புடன் கேகய தூதரைப் பார்த்தபடி சொன்னார். “எங்கள் நாட்டில் என்ன குறைவென்று நாங்கள் இந்த ஈனச் செயலில் ஈடுபட வேண்டும்?”

 அது எங்கள் மன்னர் உங்களிடம் கேட்க விரும்பும் கேள்வி அரசே. நீங்கள் தான் பதில் அளிக்க வேண்டும். எதற்கும் தக்க பதிலடி தர முடியாத நிலையில் கேகய நாடு இல்லை என்பதைத் தாங்களும் அறிவீர்கள் அரசே. தங்களிடம் நட்பு பாராட்டி வரும் ஒரே காரணத்தால் தான் எங்கள் மன்னர் முன்பு நடந்ததைப் பொறுத்துக் கொண்டார். ஆனால் அந்தப் பொறுமையைத் தங்கள் நாடு பலவீனமாக எடுத்துக் கொண்டு சில நாட்களுக்கு முன் மீண்டும் அதே வேலையில் தங்கள் படைகள் செய்திருப்பதை எங்கள் மன்னர் விரும்பவில்லை. எங்கள் எல்லைகளைக் காக்கும் பொறுப்பும், சக்தியும் எங்களுக்கு உண்டு. முறையாகப் போர் அறிவித்தால் எந்தப் படையையும் சந்திக்கும் ஆற்றலும் எங்களுக்குண்டு. அப்படி வீரத்துடன் போரிடாமல் கொள்ளையர் போல் தங்கள் சிறுபடைகள் நடந்து கொண்டிருப்பதை எங்கள் மன்னர் வன்மையாகக் கண்டிக்கிறார்....”

 காந்தார அரசர் கேகய தூதர் சொன்ன தகவலை ஜீரணிக்கச் சிறிது நேரம் எடுத்துக் கொண்டார். அவர் முகத்தில் வருத்தமும், அவமான உணர்வும் வெளிப்படையாகவே தெரிந்தன. இந்தச் செயல்கள் நடந்திருக்கின்றன என்றால் அதன் பின்னணியில் அவர் மகன் தான் இருக்கிறான் என்பது மெள்ள விளங்க அவர் வருத்தத்துடன் சொன்னார். ”உண்மையில் இந்த இரண்டு நிகழ்வுகளும் நான் அறிந்து நடக்கவில்லை. தவறு எப்படி நடந்தது என்று விசாரிக்கிறேன். எங்கிருந்து பசுமாடுகள் அகற்றப்பட்டனவோ அங்கேயே அவை மீண்டும் வந்து சேரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடந்த செயல்களுக்கு மனமார்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கேகய மன்னரிடம் சென்று தெரிவியுங்கள் தூதரே. இனி இப்படி நடக்காது என்பதற்கு உத்திரவாதமும் தருகிறேன்...”   

 ”நன்றி அரசரே....”

 தலைவணங்கி விட்டு கேகய தூதர் போன பிறகு காந்தார அரசர் தன் அமைச்சரையும், சேனாதிபதியையும், ஆம்பிகுமாரனையும் வரவழைத்து கேகய தூதன் சொன்ன செய்தியைத் தெரிவித்தார். அமைச்சர் சேனாதிபதி சின்ஹரன் இருவர் முகபாவனையிலிருந்தும் அவர்கள் இருவரும் எல்லையில் நடந்த சம்பவங்களை அறிந்திருந்தார்கள் என்பதும், அதில் அவர்களுக்கு உடன்பாடு இருக்கவில்லை என்பதும் காந்தார அரசருக்குத் தெளிவாகத் தெரிந்தது.  

 “மாவீரர்களாகப் பெயரெடுத்தவர்கள் மாடுபிடி திருடர்களாகப் பெயர் வாங்குவது கேவலமில்லையா சேனாதிபதி” காந்தார அரசர் சின்ஹரனைக் கோபத்துடன் கேட்டார்.

 சின்ஹரன் ஆம்பி குமாரனைப் பார்த்தான். அவனுக்கு சிறுபிள்ளைத்தனமான இந்தச் செயல்களில் ஆரம்பத்திலேயே விருப்பம் இருக்கவில்லை. அவன் அதை அந்தச் சமயங்களிலேயே எதிர்த்திருந்தான். ஆனால் ஆம்பி குமாரன் சிறு படைத்தலைவர்களைத் தேர்ந்தெடுத்து தன் அதிகாரத்திலேயே அவர்களை இந்தச் செயலில் ஈடுபடுத்தியிருந்தான் என்பதால் இதற்கு அவனே பதில் சொல்வது தான் முறையாக இருக்கும் என்று சின்ஹரன் நினைத்தான்.

 ஆம்பி குமாரன் தந்தையிடம் அலட்சியமான குரலில் சொன்னான். “தனி மனிதர்கள் செய்தால் கேவலமாகும் விஷயங்கள் நாடே செய்யும் போது கேவலமாவதில்லை தந்தையே. நான் அங்கிருந்து படையை எதிர்பார்த்தேன். ஆனால் கேகய மன்னன் தூதனை அனுப்பி இருக்கிறான்....”

 காந்தார அரசர் மகனைக் கடுங்கோபத்துடன் பார்த்தார். ”சில செயல்கள் யார் செய்தாலும் கேவலம் தான் மகனே. வீர பரம்பரையில் பிறந்தவர்கள் நினைக்கவும் கூசும் விஷயத்தைச் செய்ததுடன் நல்லெண்ணம் காரணமாக படையை அனுப்பாமல் தூதனை அனுப்பிய கேகய மன்னனை கேலியும் செய்கிறாய். உன் முட்டாள்தனத்திற்கு எல்லையே இல்லையா? உன் இந்தச் செயலுக்கு நீ என்ன காரணம் கூறுகிறாய்?”

 ஆம்பி குமாரன் அமைச்சர், சேனாதிபதி முன்னிலையில் தந்தை பேசிய வார்த்தைகளால் கடுமையாகக் கோபமடைந்தான்.  உங்களைப் போல் வேதாந்தம் பேசுமளவுக்கு எனக்கு வயதாகி விடவில்லை தந்தையே. நாட்டை விரிவாக்குவது தான் வீரம். கேகய நாட்டுடன் போரிட்டு வென்று காந்தாரத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நாமாகப் போருக்குச் செல்ல நீங்கள் அனுமதி தர மறுப்பீர்கள் என்று தான் அவர்களுக்குக் கோபமூட்ட இப்படிச் செய்தேன். கேகய நாட்டுப் படைக்கு நம் நாட்டுப் படை எந்த விதத்திலும் சளைத்ததல்ல தந்தையே. நம் நாட்டின்  எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே போவதல்லவா வீரம்? அதைச் செய்ய மறுப்பதல்லவா கோழைத்தனம்?

 ”மகனே. வீரம் விவேகத்துடன் சேராமல் செயல்படுமானால் முட்டாள்தனமாகி விடும். கேகய அரசனும் மாவீரன். அவன் படையும் மிகப் பெரிய படை தான். சம பலத்தில் படைகள் போரிடுமானால் வெற்றி எந்தப் பக்கம் இருக்கும் என்பதை யாராலும் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில், இருப்பதைத் தொலைக்கவும் வாய்ப்பு நிறைய உண்டு. அண்டை அயலாருடன் அமைதியாக நலமாக இருக்கிறோம். அதை ஏன் குலைக்க முயல்கிறாய்?”

“வெறுமனே உண்டு, உறங்கி உயிர் வாழப் பிடிக்கவில்லை தந்தையே. இருப்பதைக் காத்துக் கொள்வதே பெரிய விஷயம் என்று நினைப்பது கோழைத்தனம் என்று நினைக்கிறேன். உங்கள் முதுமை உங்களை வீரத்துடன் முயற்சிகள் எடுக்க விடாமல் தடுக்கிறது என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்”

”மகனே முதுமை அனுபவங்களால் அடைந்த பாடங்களையும் தன்னிடம் வைத்திருக்கிறது என்பதை நீ புரிந்து கொள். நீ சிறுவன் அல்ல. நாளை அரியணையில் அமரப் போகிறவன். குலத்துக்கே அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டு அதற்கெல்லாம் வீரம் என்று பெயர் வைத்து உன்னை நீ ஏமாற்றிக் கொள்ளாதே.  நடந்தது நடந்து விட்டது. தவற்றை உணர்ந்து அதைத் திருத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.. கவர்ந்த பசுமாடுகளை அந்தந்த எல்லைப் பகுதிகளிலேயே ஒப்படைப்பதாக நான் கேகய மன்னனுக்கு வாக்களித்திருக்கிறேன். உடனே அதைச் செய்ய ஏற்பாடு செய்.”

ஆம்பி குமாரன் கொதித்துப் போய் எழுந்து நின்றான். “என் உடலில் உயிர் இருக்கிற வரை நான் சம்மதிக்க மாட்டேன் தந்தையே”

சொன்னவன் மறுபேச்சுக்காகக் காத்திராமல் அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.

 (தொடரும்)

என்.கணேசன்


இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்

அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும். 

Monday, July 25, 2022

யாரோ ஒருவன்? 95



ப்படியெல்லாம் நடக்க முடியும், நடந்திருக்கிறது என்று வேறு யாராவது நரேந்திரனிடம் சொல்லியிருந்தால் ஹேரி பாட்டர் கதை போல் அல்லது அம்புலிமாமா கதை போல் தான் அவனால் எடுத்துக் கொண்டிருக்க முடியும். நாகராஜ்எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். கவலைப்படாமல் போஎன்று சொன்ன போது கோயமுத்தூரில் உட்கார்ந்து கொண்டு இவனால் டெல்லியில் நடப்பதை எப்படித் தீர்மானிக்க முடியும், கட்டுப்படுத்த முடியும் என்ற சந்தேகம் அவனுக்கு வராமல் இல்லை.  ஆனால் பாதி அற்புதத்தை நாகராஜ் நடத்திக் காட்டி விட்டான். தாமோதரும் தன் பங்குக்கு அவநம்பிக்கையைத் தெரிவித்து விட்டு தான் ஃபேக்டரிக்குப் போனான். மதன்லாலும், சஞ்சய் ஷர்மாவும் சாவது ஒன்று தான் எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு என்றும் அவர்கள் உயிரோடு இருக்கையிலேயே அவர்களின் இரும்புச் சங்கிலியை அவிழ்த்து விட்டு வருவது தற்கொலைக்கு சமானம் என்றும் சொன்னான். நரேந்திரன் வற்புறுத்திச் சொன்னதற்குப் பின் தான் அவன் அரைமனதோடு போனான். போய் விட்டு வந்தவன் மதன்லாலும், சஞ்சய் ஷர்மாவும் பாம்பு கடித்து மயக்க நிலையில் இருப்பதை ஆச்சரியத்தோடு சொன்னான். ஆனால் அவர்கள் சாகாமல் உயிர் தப்பி நடந்ததை எல்லாம் பேசவும் செய்தால் என்ன செய்வது என்று கேட்ட கேள்விக்கு நரேந்திரனிடமும் பதில் இல்லை.

கோயமுத்தூரில் இருந்து கொண்டே அவர்களை பாம்பு கடித்து மயக்கமடையச் செய்ய முடிந்த நாகராஜுக்கு முடியாதது வேறு என்ன இருக்க முடியும் என்று கேட்டுக் கொண்டே அவன் சிறிது நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொண்டிருந்தான்.  ஆட்கள் யாரும் அந்த ஃபேக்டரிக்குள் பாம்புகளுடன் உள்ளே நுழையவில்லை என்பதை அவன் உறுதியாக அறிவான். பின் எப்படி இந்த அற்புதம் நிகழ்த்தப்பட்டது என்று தெரியவில்லை.  

இரவு மதன்லாலும், சஞ்சயும்  மீட்கப்பட்ட விதமும், அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதும் கூட அவனுக்கு  ஒற்றர்கள் மூலம் தெரிய வந்தது. இன்று மாலைக்குள் சுய நினைவுக்கு வருவார்கள் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்ற தகவலும் அவனுக்குக் கிடைத்தது. இனி அவன் எதுவும் செய்வதற்கில்லை. இத்தனை பார்த்துக் கொண்ட நாகராஜ் மீதத்தையும் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் தான் அவன் இருக்கிறான்.    

கோயமுத்தூரிலிருந்து கிளம்ப அவன் தயாராகி விட்டான். டெல்லியில் அவனுக்கு ஆக வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன.  போவதற்கு முன் அவன் கல்யாணையும் சரத்தையும் இன்னொரு முறை சந்தித்துச் சில கேள்விகள் வேண்டியிருக்கிறது


னார்தன் த்ரிவேதி ஃபேக்டரி முதலாளி மகனிடம் அனுப்பிய ஆள் அவருக்குப் போன் செய்து சொன்னான். “ஐயா அந்த ஆள் அந்த பூட்டின ஃபேக்டரிக்கு உள்ளே ஆள் இருந்த சமாச்சாரமே தெரியாதுன்னு ஒரேயடியாய் சாதிக்கிறார். நேத்து காலைல தான் யாரோ போன் பண்ணி ஃபேக்டரி கேட்ல பூட்டு இல்லைன்னு சொன்னதா சொல்றார். உடனடியா போலீஸ்லயும் புகார் குடுத்திருக்கறாராம். உள்ளே என்னவெல்லாம் திருட்டுப் போயிருக்குன்னு இனிமே தான் தெரியும்னு சொல்றார்.  உள்ளே இருந்தது யார் என்னன்னு என்னை குடைஞ்சு கேட்டார். உள்ளே திருட்டுப் போயிருக்கலாம்னு வேற அந்த ஆள் சந்தேகப்படறதால எதுக்கு வில்லங்கம்னு நான் சொல்லப் போகல. உங்கள கேட்டு சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்

நல்லது. சஞ்சய் மதன்லால் ரெண்டு பேரு கிட்டயும் பேசிட்டு தேவைப்பட்டா அப்பறம் அந்த ஆள் கிட்ட மறுபடியும் பேசலாம். அந்த ஆள் கிட்ட பேசறப்ப அந்த ஆள் நடிக்கற மாதிரி தோணிச்சா. உண்மைய சொல்ற மாதிரி தோணுச்சா

உண்மைய சொல்ற மாதிரி தான் தோணுச்சுங்கய்யா. யார் அடைக்கப்பட்டு வெச்சிருக்காங்கங்கற  தகவல சொன்னா உடனே போய் போலீஸுக்குச் சொல்ல தான் அவர் துடிக்கிறார். வேணும்னு செய்யற ஆளாயிருந்திருந்தா அமுக்கமா அப்படியே விடத்தான பாத்திருப்பார். பேச்சோட பேச்சா நரேந்திரன் இதுல சம்பந்தப்பட்டிருக்கறது தெரியுமான்னு கேட்டேன். அதுக்கு அவர் என்ன சொல்றார்ங்கறத வெச்சு நரேந்திரனை அவருக்குத் தெரியுமான்னு தீர்மானிக்கலான்னு நினைச்சேன். ஆனா அவர் தம்பி பேரும் நரேந்திரனாம். அவர் உடனே தம்பி மேல சந்தேகப்பட்டுட்டார். ’சொத்து தகராறுல தான் ஃபேக்டரிய இழுத்து மூடினோம். அப்படியிருக்கறப்ப அவன் உள்ளே ஆள்கள ரகசியமா வெச்சிருந்தான்னா கண்டிப்பா மெஷினரி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா திருடி வித்துத் தின்னுருப்பான்னு சொல்லி பொங்கிட்டார். என் முன்னாலயே தம்பிக்குப் போன் போடப் போனார். நான் ஆள விட்டா போதும்னு ஓடி வந்துட்டேன்….”

ஜனார்தன் த்ரிவேதி யோசித்து விட்டுக் கேட்டார்அவன் போலீஸ்ல உண்மையாகவே புகார் செஞ்சிருக்கானா, இல்லை நம்ம கிட்ட அப்படிச் சொல்றானான்னு விசாரிச்சியா

இல்லங்க ஐயா. இதோ அரை மணி நேரத்துல விசாரிச்சு சொல்றேன்என்றவன் சொன்னபடி அரை மணி நேரத்தில் விசாரித்தும் சொன்னான். “அவர் சொன்னது சரிதான்யா. போலீஸ்ல நேத்து காலைலயே புகார் குடுத்திருக்கார்.”

சிறிது நேரத்தில் ஜனார்தன் த்ரிவேதியின் ஆளொருவன் ஆஸ்பத்திரியிலிருந்து போன் செய்தான். “ஐயா ரெண்டு பேரும் சுயநினைவுக்கு வந்துட்டாங்க ஐயா

நல்லது. நான் உடனடியா அங்கே வர்றேன். நான் அவங்கள பாத்து பேசற வரைக்கும் அவங்க ரெண்டு பேரையும் யாரும் சந்திக்கவோ, பேசவோ அனுமதிக்க வேண்டாம்னு சொல்லி வைஎன்று சொன்ன ஜனார்தன் த்ரிவேதி உடனடியாகக் கிளம்பினார்.  உண்மையை முழுவதுமாக அறிந்த பின் அவர்கள் வாக்குமூலத்தை தங்களுக்குச் சாதகமாக எப்படி எந்த வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி வெளிவிட வேண்டும் என்பதை அவர் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.


பிரச்னைகள் வர ஆரம்பித்தால் அவை தனியாக இடைவெளி விட்டு ஒவ்வொன்றாக வருவதில்லை. வரிசையாக இடைவெளியில்லாமல் வர ஆரம்பிக்கின்றன. சில சமயங்களில் ஏக காலத்தில் பல பக்கங்களிலிருந்தும் ஒரேயடியாக வந்து சேர்கின்றன.  கல்யாண் அந்த உண்மையை முதல் முறையாக உணர்ந்தான். அவனுடைய கம்பெனியில் மிகத் திறமையாகவும், நேர்மையாகவும் வேலை செய்த மூன்று பேர் நேற்று தான் ராஜினாமா செய்தார்கள். மூவருமாகச் சேர்ந்து தனித் தொழில் செய்யத் தீர்மானித்திருப்பதாகச் சொன்னார்கள். அவர்கள் மூவரும் கம்பெனி நிர்வாகத்திற்கு அச்சாணி போன்றவர்கள் என்பதால் கல்யாண் சம்பளத்தை உயர்த்தி, வேறு சலுகைகளும் செய்து தருவதாகச் சொல்லி அவர்களை மனம் மாற்றப் பார்த்தான். அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. அவர்கள் தங்கள் முடிவில் மிகவும் உறுதியாக இருந்தார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு அவர்கள் ஏற்றுமதி செய்த பல கோடி மதிப்புள்ள பொருள்களை தரம் சரியில்லை என்று ஏற்க மறுப்பதாகச் சிறிது நேரத்திற்கு முன்பு தான் தகவல் வந்தது. க்வாலிட்டி கண்ட்ரோல் என்ற தரக் கட்டுப்பாடு இது போன்ற வெளிநாட்டு ஏற்றுமதிகளில் மிக முக்கியமானது என்பதால் தர பரிசோதனை செய்யாமல் அவர்கள் எப்போதும் ஏற்றுமதி செய்வதில்லை. ஒருவருக்கு இருவராக எல்லாம் சரியாக உள்ளது என்று உறுதி செய்த பின்னரே அனுப்புவார்கள். அதையும் மீறி எப்படி எங்கே இந்த முறை தவறு நடந்திருக்கிறது என்றே புரியவில்லை. இப்படி அவர்கள் கம்பெனியில் நடப்பது இதுவே முதல் முறை.  அவர்களிடம் இனிமேல் தான் பேசிப் பார்க்க வேண்டும்.

இதில் அவன் மிகுந்த மன உளைச்சலில் மூழ்கி இருந்த போது தான் நரேந்திரன் போனில் பேசினான். இன்று மாலை ஏழு மணிக்கு வருவதாகவும், மிக முக்கியமான சில கேள்விகள் மட்டும் கேட்க வேண்டியிருக்கிறது என்றும் அதற்கு அரை மணி நேரத்திற்கு மேல் தேவைப்படாது என்றும் சொன்னான்.

ஐந்து நிமிடங்களில் சரத் அவன் அறைக்குள் நுழைந்த போது நரேந்திரன் சரத்திடமும் பேசியிருக்கிறான் என்பது புரிந்தது. சரத் கவலையோடு கேட்டான். “திரும்ப என்ன கேட்க வர்றான்?”

கல்யாண் சலிப்போடு சொன்னான். “யாருக்குத் தெரியும். என்ன கேட்டாலும் நாம பழைய விஷயங்களை ஒரே மாதிரி தான் சொல்லப்போகிறோம். ஏதாவது மாத்தி சொன்னா தானே பிரச்சனை…”

மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து சொல்ல வேண்டிய விஷயங்களைக் கோர்வையாக மறுபடி ஒருமுறை சொல்லித் தந்து சரத்துக்கு நினைவுபடுத்தினான்.

(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.



Thursday, July 21, 2022

சாணக்கியன் 14

 


விஷ்ணுகுப்தர் அந்தத் தகவலை சந்திரகுப்தன் அறிந்து வைத்திருந்ததில் திருப்தி அடைந்தார்.  அவருடைய மாணவன் இப்போதெல்லாம் எந்த முக்கியத் தகவலையும் அறிந்து வைத்திராமல் இருப்பதில்லை. அவர் அவனிடம் கேட்டார். “அந்த மாவீரனின் பெயர் என்ன? அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன்?”

 

அவன் பெயர் அலெக்சாண்டர் என்று சொன்னார்கள். எனக்குத் தகவல் தந்த இருவர் அவன் நாட்டின் பெயரை இருவிதமாக உச்சரித்தார்கள். அதனால் சரியான பெயர் தெரியவில்லை ஆச்சாரியரே. ஆனால் பாரசீகத்தை வெற்றி கொண்ட அவன் தன் நாட்டுக்குத் திரும்பிச் செல்வதாக இல்லை என்றே தோன்றுகிறது. நம் பாரதத்தைப் பற்றி விவரமறிந்தவர்களிடம் அவன் விசாரித்துக் கொண்டிருப்பதாக நான் கேள்விப்பட்டேன்....”

 

விஷ்ணுகுப்தர் ஆழ்ந்த யோசனையுடன் சொன்னார். “அலெக்சாண்டர் நம் பாரதம் நோக்கி வராமலிருந்தால் தான் அது ஆச்சரியம்.. நம் பாரதத்தின் செல்வமும் செழிப்பும் அவனைக் காந்தமாக ஈர்க்கவே செய்யும். அப்படி அவன் இங்கு வர முடிவு செய்தால் படையோடு வந்து சேர சில மாதங்கள் தான் ஆகும்.... இது போன்ற ஒரு சூழ்நிலையில் பாரதத்தின் தலைவாசலில் இருக்கும் காந்தாரம் அவன் படையை எதிர்கொண்டு எல்லாவற்றையும் தீர்மானிக்கிற முக்கியத்துவம் பெறுகிறது. அந்த முக்கியத்துவத்தை உணர்ந்து நடக்கிற நிலைமையில் காந்தாரம் இல்லை என்பது நம் துரதிர்ஷ்டமாக இருக்கிறது....”

 

விஜயன் உடனே அவரைக் கேட்டான். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ஆச்சாரியரே?”

 

சந்திரகுப்தனுக்கு இணையாக அவரிடம் கேள்விகள் கேட்பவன் அவன் தான். சந்திரகுப்தன் எல்லாவற்றையும் அறிந்து கொள்வதற்காக அவரிடம் கேள்விகள் கேட்பான் என்றால் விஜயன் ஆச்சாரியர் அடுத்தடுத்து அவர்களிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்டு விடாமலிருக்கும் பொருட்டு கேள்விகள் கேட்பான். சில சமயங்களில் அவனுடைய யுக்தி அவரிடம் பலிக்காது. அவர் அவன் கேள்விகளுக்கு மிகச் சுருக்கமான பதில்களை அளித்து விட்டு அதை வைத்தே அவனிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்பார். சில சமயங்களில் தன் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கிற விஷயங்களை அந்தக் கேள்விகள் ஈர்க்கையில் அவர் நீண்ட பதில் சொல்லத் துவங்குவதுமுண்டு.  

 

இன்று அப்படியான சந்தர்ப்பமாக இருந்தது. விஷ்ணுகுப்தர் சொன்னார். ”காந்தார அரசர் நல்லவர், திறமையான நிர்வாகி என்றாலும் அவருடைய முதுமை அவரைப் பலவீனப்படுத்தி விட்டிருக்கிறது. அவருடைய முதுமையைக் காரணம் காட்டி அவரிடமிருந்து சில நிர்வாகச் சுமைகளை ஏற்றுக் கொள்ள முன் வந்திருக்கும் ஆம்பி குமாரன் அறிவோ, நல்ல பண்புகளோ இல்லாதவனாக இருக்கிறான். விஜயனே கூட மாடுதிருடன் என்று விமர்சனம் செய்யும் அளவுக்குக் கீழிறங்கி கேகய நாட்டுடன் போர் புரியும் சந்தர்ப்பத்திற்காகத் துடிப்புடன் காத்துக் கொண்டிருக்கிறான். ஒற்றர்கள் யாரும் உண்மை நிலவரத்தை மன்னரிடம் தெரிவிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதை நான் கேள்விப்படுகிறேன். இப்படியே போனால் காந்தாரத்திற்கும், கேகய நாட்டுக்கும் இடையே போர் மூள்வது உறுதி. அலெக்சாண்டர் பாரதத்தை நெருங்கும் போது இவர்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அவனுக்கு அது சாதகமாக அல்லவா போய் விடும்?.... சரி விஜயா, சந்திரகுப்தன் ஒற்றர்கள் வணிகர்கள் வேடத்தில் நடமாடுகிறார்கள் என்று சொல்கிறானே அது எந்த நாட்டு ஒற்றர்கள் என்று நீ நினைக்கிறாய்?”

 

சாரங்கராவும், சந்திரகுப்தனும் கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்கிக் கொள்ள விஜயன் ஆச்சாரியரிடம் இந்த முறையும் தன்னுடைய யுக்தி பலிக்கவில்லையே என்று வருந்தியவனாக, யோசித்து விட்டுச் சொன்னான். “தற்போதைய சூழ்நிலையை யோசித்தால் அது கேகய நாட்டு ஒற்றர்களாக இருக்கவே வாய்ப்பு அதிகமாக எனக்குத் தோன்றுகிறது ஆச்சாரியரே

 

சபாஷ் விஜயா, சரியாக அனுமானித்திருக்கிறாய். உனக்கு நல்ல அறிவிருக்கிறது. ஆனால் நிர்ப்பந்தப்படுத்தினால் ஒழிய நீ உன் அறிவைப் பயன்படுத்த மறுக்கிறாய் என்பது தான் வருத்தமாக இருக்கிறது…”

 

விஜயன் ஆச்சாரியரின் அறிவிருக்கிறது என்ற வார்த்தைக்குப் புளங்காகிதமும்,  அறிவைப் பயன்படுத்த மறுக்கிறாய் என்றதற்குச் சிறு வருத்தத்தையும் கலந்து உணர்ந்தவனாய் தலையசைக்க சாரங்கராவும், இன்னொரு நண்பனும் அவன் முகபாவனையைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்து விட்டார்கள்.  

 

காந்தார இளவரசன் ஆம்பி குமாரன் தன் எதிரே அமர்ந்து காலமறியாமல் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் ஜோதிடரைப் பொறுமை இழந்து பார்த்துக் கொண்டிருந்தான்.  இந்த ஜோதிடர் என்றில்லை எல்லோருமே காலம் அறிந்து விரைவாக செயல்படுவதில்லை என்பது தான் அவனுடைய சமீபத்திய அதிருப்தியாக இருக்கிறது. எல்லோருமே மந்தமாகச் செயல்பட்டு அவனுடைய பொறுமையைச் சோதிக்கிறார்கள்….

 

ஜோதிடர் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னார். “தங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது இளவரசரே…”

 

ஆம்பி குமாரன் சொன்னான். “நாளை என்பதும் எதிர்காலம் தான். அடுத்த மாதம், அடுத்த வருடம் என்பதும் எதிர்காலம் தான். பத்து வருடம் கழித்து என்பதும் எதிர்காலம் தான். தாங்கள் எந்த எதிர்காலத்தைச் சொல்கிறீர்கள் ஜோதிடரே?”

 

“வருடக்கணக்கில் தாங்கள் போக வேண்டியதில்லை இளவரசே. ஆறு மாதங்களில் தங்களுக்கு இராஜ யோகத்தைத் தரும் ராகுவின் தசை ஆரம்பமாகிறது. அதன் பின் வெற்றி மீது வெற்றி உங்களை வந்தடையும்..”

 

வருடங்கள் காத்திருக்க வேண்டியதில்லை ஆறு மாதங்கள் தான் என்று ஜோதிடர் மிகக்குறைந்த காலம் போலச் சொன்னாலும் அதுவே கூட ஆம்பி குமாரனுக்கு அதிக காலம் போலத் தோன்றியது. அவன் கேட்டான். “தந்தையின் ஜாதகத்தையும் நிறைய நேரம் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அவர் ஜாதகம் என்ன சொல்கிறது?”

 

ஜோதிடர் குரலில் வருத்தத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னார். ”அவர் முடிவு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது இளவரசே. சில பிராயச்சித்தங்கள் செய்தால் அதைத் தள்ளிப் போடலாம்….”

 

அவனுடைய தற்போதைய பொறுமையின்மைக்கு மிக முக்கிய காரணமே அவர் உயிரோடு இருப்பது தான் என்பதால் ஆம்பி குமாரன் அவரது முடிவு காலத்தைத் துரிதப்படுத்த ஏதாவது பூஜைகள், பிராயச்சித்தங்கள் செய்யத் தயாராக இருந்தானேயொழிய அதைத் தள்ளிப் போட ஒரு துரும்பையும் நகர்த்த விரும்பவில்லை. அவன் அலட்சியமாகச் சொன்னான். ”எதையும் அனுபவிக்க உடல் ஒத்துழைக்க மறுக்க ஆரம்பித்த பின் மரணத்தைத் தள்ளிப் போடுவதில் அர்த்தம் என்ன இருக்கிறது ஜோதிடரே? முக்தி அடைவதல்லவா நிம்மதி?”

 

ஜோதிடர் அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தலையை மட்டும் அசைத்தார். ’இவனைப் போன்ற மகனைப் பெற்ற அரசருக்கு மரணம் நிச்சயம் விடுதலையாகத் தான் இருக்கும்’ என்ற எண்ணம் அவருக்குள் எழுந்தது. உயிருடனிருப்பதே உடல் சுகங்களை அனுபவிப்பதற்காகத் தான் என்று நம்பும் இவன் இந்த நாட்டின் அரசனாக அரியணையில் அமர்வது காந்தாரத்தின் துரதிர்ஷ்டம் தான் என்று அவருக்குத் தோன்றியது.

 

அந்தச் சமயத்தில் காவலாளி வந்து ஆம்பி குமாரனிடம் சொன்னான். “இளவரசே. கேகய நாட்டிலிருந்து தூதர் ஒருவர் வந்திருக்கிறார். அவர் அரசரைப் பார்க்க வேண்டுமாம்?

 

“அழைத்து வா அவரை” என்று சொன்ன ஆம்பி குமாரன் அவசரமாகச் சில பொற்காசுகளை எடுத்து ஜோதிடரிடம் தந்து அனுப்பி வைத்தான். ஜோதிடர் வெளியே செல்ல கேகய நாட்டு தூதர் உள்ளே நுழைந்தார்.

 

“அமருங்கள் தூதரே! என்ன செய்தி?” என்று ஆம்பி குமாரன் கேட்டான்.

 

கேகய நாட்டு தூதர் அவன் காட்டிய இருக்கையில் அமரவில்லை. அவர் அவன் கேட்ட கேள்விக்குப் பதிலும் அளிக்கவில்லை. அவருடைய பார்வை அங்குமிங்கும் எதையோ தேடுவது போல் இருந்தது. ஆம்பி குமாரன் கேட்டான். “என்ன தேடுகிறீர்கள் தூதரே”

 

“காந்தார அரசரைத் தேடுகிறேன் இளவரசே” என்றார் கேகய தூதர்.

 

“அரசர் இங்கு இல்லை”

 

“நான் செய்தி கொண்டு வந்திருப்பது காந்தார அரசருக்குத் தான் இளவரசே”

 

“அரசர் மூப்பு காரணமாக நிர்வாகப் பணிகளையும் அயல் நாடுகளுடனான தொடர்பு விஷயங்களையும் என்னிடம் தான் ஒப்படைத்திருக்கிறார் தூதரே. அதனால் அவை சம்பந்தமான விஷயங்களைக் கேட்பதும், முடிவெடுப்பதும் என் பொறுப்பிலேயே இருக்கின்றன. எனவே செய்தியை என்னிடமே நீங்கள் தெரிவிக்கலாம்”

 

“இளவரசே. உங்களிடம் காந்தார அரசர் ஒப்படைத்திருக்கும் பொறுப்புகளை நான் அறியேன். கேகய மன்னர் காந்தார அரசருக்குத் தான் செய்தி அனுப்பியுள்ளார். அதனால் நான் அவரிடமே அதைத் தெரிவிக்க வேண்டியவனாக இருக்கிறேன்.  அது முடியா விட்டால் “செய்தியை காந்தார அரசரிடம் தெரிவிக்க முடியவில்லை” என்று திரும்ப கேகய மன்னரிடம் சென்று சொல்ல வேண்டியிருக்கும்…” தூதர் மிக அமைதியாகச் சொன்னார்.

 

ஆம்பி குமாரன் தன்னை விட அதிக முக்கியத்துவம் யார் பெறுவதையும் என்றுமே ரசித்ததில்லை. அரியணையில் அமர ஆயத்தமாகி விட்ட இந்த மனநிலையிலோ அது அவனைக் கோபமூட்டவே செய்தது. அவன் கேகய தூதரைக் கடுமையான பார்வை பார்த்தான்.

 

 (தொடரும்)

என்.கணேசன்


இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.