சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 29, 2024

யோகி 34

 

ரசுராமன் ஹைத்தி தீவில் சில ஆண்டுகள் தங்கி நிறைய கற்றார். சதானந்தனைப் போலவே அந்த வூடு குருவும் அவருக்கு நிறைய நுணுக்கங்களையும், சூட்சுமங்களையும் சொல்லித் தந்தார். எதெல்லாம் ஆபத்தானது, எதில் எல்லாம் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை அவர் மனதிலும் அறிவிலும் அழுத்தமாகவே பதிய வைத்தார். முக்கியமாய் நல்ல மனிதர்களுக்குத் தீங்கு ஏற்படுத்தும் எந்தச் செயலிலும் ஈடுபடுவது ஆபத்தானது என்பதைத் திரும்பத் திரும்பச் சொன்னார். அப்படிச் செய்தால் நல்ல மனிதர்கள் அப்போதைக்குப் பாதிக்கப்பட்டாலும், தங்கள் நன்மைகளின் காரணமாக சீக்கிரமாகவே அந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு விடுவார்கள் என்றும், ஆனால் அவர்களுக்குத் தீங்கு செய்ய முயன்றவர்கள் பலமடங்கு தீமைகளைத் தங்கள் வாழ்க்கையில் காத்திருந்தாவது அனுபவிக்க வேண்டிவரும் என்று அவர் சொன்னார்.

 

சதானந்தனும் பரசுராமனிடம்  கிட்டத்தட்ட இதையே வலியுறுத்திச் சொல்லி இருந்ததால், பரசுராமன் அதைத் தன் வாழ்க்கையில் வேத வாக்காக எடுத்துக் கொண்டார். வூடு குருவிடமிருந்து பிரிந்த போதும் அவருக்கு மிகவும் வருத்தமாகத் தான் இருந்தது.  அவர் கிளம்பும் போது வூடு குரு அவருக்கு ஆசி வழங்கிக் கடைசியாய் ஒரு அறிவுரை சொன்னார். “உன் நோக்கத்தின் படியே உன் செய்கைகள் இருக்க முடியும். உன் செய்கைகளின் படியே உனக்கு நல்லதும், கெட்டதும் அமைய முடியும். அதனால் உன் நோக்கத்தைத் தூய்மையாக வைத்துக் கொள். உன் நோக்கம் தவறாக இருந்தால், அதன் பின் எந்த சக்திகளும் உன்னைக் காப்பாற்ற முடியாது

 

ஹைத்தியிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வந்த பரசுராமன்  இந்தியாவில் முழுமையாக பாரம்பரிய முறையில் வூடு சடங்குகளைச் செய்ய முடியாது என்பதைப் புரிந்து வைத்திருந்தார். அதனால் சதானந்தனிடம் கற்றதையும், வூடு குருவிடமிருந்து கற்றதையும் வைத்து நிறைய பரிசோதனைகள் செய்து தானே ஒரு கலவை முறை உருவாக்கி அந்த மந்திர தந்திரங்களின் விற்பன்னர் ஆனார். அதிலும் ஒரு சக்தி வாய்ந்த மேல் நிலையை எட்ட, மேலும் சில ஆண்டுகள் அவருக்குத் தேவைப்பட்டது. ஒரு முறை அவரிடம் வந்தவர்கள் திரும்பத் திரும்ப வர ஆரம்பித்தார்கள். ஒரு முறை அவரை அழைத்தவர்கள் திரும்பத் திரும்ப அழைக்க ஆரம்பித்தார்கள். அவர் வாடிக்கையாளர்கள் அவரால் ஏற்படுத்த முடிந்த விளைவுகளில் பிரமிப்பும், பரம திருப்தியும் அடைந்தார்கள். அவர்கள் மூலம் வேறு பலரும் அவரை நாடி வர ஆரம்பித்தார்கள். தங்கள் பகுதிகளுக்கு அவரை அழைத்தார்கள்.

 

பரசுராமன் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சீக்கிரமே மிகவும் பிரபலமானார். சிலர் அவரை யோகி என்றழைத்தார்கள். சிலர் அவரை தெய்வாம்சம் கொண்டவராக நினைத்தார்கள். கோடிக் கணக்கில் அவர் காலடியில் பணத்தைக் கொட்டினார்கள். மகன் பொறுப்பில்லாமல் திரிகிறான் என்று முன்பு கவலைப்பட்ட பரசுராமனின் பெற்றோர் மகன் எட்டிய உயரத்தைப் பார்த்துப் பெருமைப் பட்டார்கள். அவர் தாயும் தந்தையும் சில மாத இடைவெளிகளில் இறந்து போனார்கள். பெற்றோரின் மறைவுக்குப் பின் பரசுராமன் அதிகம் வெளிநாட்டுப் பயணங்களிலேயே இருந்தார்.

 

அருணாச்சலம் தன் தாய்மாமன் மகன் படிப்படியாக முன்னேறியதையும், மந்திர தந்திரங்களில் செய்து காட்டிய வித்தைகளையும் பார்த்து அதிசயித்தவர். இப்போது பரசுராமன் அவரை அழைத்துப் பேசியவுடன் சைத்ரா, டாக்டர் வாசுதேவன் கொலைகள் விஷயமாக பரசுராமனிடம் பேசினால் என்ன என்று யோசித்தார். யோசிக்க, யோசிக்க, பரசுராமனுடனான நாளைய சந்திப்பு சுவாரசியமாக இருக்கும் என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது.

 

யோகாலயத்தில் தொடர்ந்த நாட்களில் பெரிதாகவோ, புதிதாகவோ எதையும் ஷ்ரவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. வகுப்புகள் பயனுள்ளதாய் இருந்தன. வகுப்புகளை நடத்தியவர்களும் சிறப்பான முறையிலேயே அனைத்தையும் சொல்லித் தந்தார்கள்.  ஸ்ரீகாந்த் வழக்கம் போலவே கண்காணிக்கப்பட்டான். அவன் எப்போதும் போலவே அது தெரியாமல் தனக்குத் தோன்றியபடியெல்லாம் இயல்பாக நடந்து கொண்டான். இந்த நாட்களில் பிரம்மானந்தர் யோகாலயத்துக்குள்ளேயே இருந்த போதிலும் அவர் ஷ்ரவன் பார்வையில் படவில்லை.

 

பொதுவாக வெளியார் வாகனங்கள் யோகாலயத்தின் உட்புறம் நுழைய அனுமதி இல்லை என்ற போதும் பிரபலமான முக்கியஸ்தர்களுக்கு விதிவிலக்கு இருந்ததை ஷ்ரவன் கவனிக்க முடிந்தது. ஒரு நாள் வகுப்பு இடைவேளையில் அவர்கள்க்ரீன் டீகுடித்துக் கொண்டு இருந்த போது ஒரு விலையுயர்ந்த கார் வெளி கேட்டைத் தாண்டி உள்ளே வருவதை ஜன்னல் வழியே அவன் பார்த்தான். ஸ்ரீகாந்த் அந்தக் கார் நம்பரைப் பார்த்தவுடனேயே ஒரு பிரபல முன்னணி நடிகரின் கார் அது என்பதைக் கண்டுபிடித்து ஷ்ரவனிடம் தெரிவித்தான்.

 

யோசித்த போது ஷ்ரவனுக்கு சைத்ரா கொலை வழக்கில் இருக்க முடிந்த இன்னொரு கோணமும் திடீரென்று புலப்பட்டது. ஒரு வேளை இப்படி வெளியே இருந்து வந்து போனவர்கள் யாராவது கூட அவள் கொலைக்குக் காரணமாக இருந்திருக்கலாமோ?

 

கடைசி நாளுக்கு முந்தைய இரவு நீண்ட நேரம் ஷ்ரவனுக்கு உறக்கம் வரவில்லை. ஸ்ரீகாந்தின் குறட்டையின் ஒலி அன்று கூடியது கூட அதற்குக் காரணமாய் இருக்கலாம் என்று நினைத்தபடியே ஷ்ரவன் படுக்கையிலிருந்து எழுந்தான். ஜன்னல் வழியே நிலவொளி உள்ளே படிந்தது மிக ரம்மியமாய் இருந்தது. ஷ்ரவன் ஜன்னலருகே சென்று நின்று கொண்டு நிலவையும், வெட்ட வெளியையும் ரசித்தான். ஜன்னலின் ஒரு ஓரப்பகுதியில் நின்று பார்த்தால் வெளி கேட் தெரியும். ஏதோ யோசனையுடன் ஷ்ரவன் அப்படி நின்று வெளிகேட்டைப் பார்த்தான். அப்போது ஒரு வெள்ளை நிற பென்ஸ் கார் உள்ளேயிருந்து வெளியே சென்று கொண்டிருந்தது. 

 

ஷ்ரவன் ஆர்வத்துடன் அந்தக் காரைக் கூர்ந்து கவனித்தான். அந்த பென்ஸ் காரின் கருப்புக் கண்ணாடிகள் மேலே ஏற்றப்பட்டு இருந்ததால் உள்ளே இருப்பது யார் என்று அவனால் பார்க்க முடியவில்லை. காரின் எண்ணைப் பார்த்தான். தற்போது நடப்பு சென்னை ரெஜிஸ்டிரேஷன் வரிசையில் இருந்தது. கேட்டைத் திறந்து நின்றிருந்த கூர்க்கா பயபக்தியுடன் சல்யூட் அடிப்பதை ஷ்ரவன் பார்க்க முடிந்தது. காருக்குள் இருந்தது பிரம்மானந்தா தானா, அல்லது வேறு யாராவதா என்று யோசித்தபடியே படுக்கையில் ஷ்ரவன் சாய்ந்தான். ஸ்ரீகாந்தின் குறட்டை ஒலி சற்று குறைய ஆரம்பித்ததால் அவனுக்குச் சீக்கிரமே உறக்கம் வந்தது.  

 

கடைசி நாள் காலை வகுப்புக்கு வந்த ஒரு துறவி பேசும் போது, இப்போது சொல்லித் தரும் பயிற்சிகளை எல்லாம் தொடர்ந்து 21 நாட்கள் செய்பவர்கள் அடுத்த நிலைப் பயிற்சிக்கு அடுத்த மாதம் வரலாம் என்றும், அதில் மிக ஆழமான நிறைய நுட்பங்கள் சொல்லித்தரப்படும் என்றும் சொன்னார்.

 

மதிய உணவின் போது ஷ்ரவன் ஸ்ரீகாந்திடம் ஷ்ரவன் கேட்டான். “நீ அடுத்த மாதம் அடுத்த பயிற்சிகள் படிக்க வருவாயா?”

 

ஸ்ரீகாந்த் சொன்னான். “ஐயோ, அதுலயும் வந்து பிரம்மானந்தா புராணம் கேட்க எனக்குப் பொறுமையில்லை ஷ்ரவன். பிரம்மானந்தா பாடம் எடுக்க வந்தாலாவது அந்த ஆளை எதாவது கேள்விகள் கேட்டு கலாய்க்கலாம். அந்த ஆள் அடுத்த வகுப்புகள் எடுக்கவும் வர மாட்டாராம். அதனால நான் கண்டிப்பாய் வர மாட்டேன். போரடிச்சுடும்.”

 

ஸ்ரீகாந்த் வராவிட்டால் யோகாலயத்து ஆட்கள் நிம்மதியடைவார்கள் என்று நினைத்த போது ஷ்ரவன் முகத்தில் புன்னகை அரும்பியது.

 

மதிய வகுப்பிற்கு ஸ்வாமினி கல்பனானந்தா வந்தாள். வயது சுமார் நாற்பத்தைந்திலிருந்து ஐம்பதிற்குள் இருக்கலாம் என்று ஷ்ரவன் யூகித்தான். கல்பனானந்தாவின் தோற்றத்தில் சாந்தமும், கம்பீரமும் தெரிந்தன.  அவள் பேசியதில் புத்திசாலித்தனம் இருந்தது. இத்தனை நாட்கள் வகுப்பில் சொல்லித் தந்த பயிற்சிகளைத் தொடந்து செய்ய வேண்டிய அவசியத்தை வார்த்தை ஜாலங்கள் இல்லாமல் எளிமையாகவும் தெளிவாகவும் அவள் விளக்கினாள். தியானம் செய்யத் தீர்மானித்த பின் அதைச் செயல்படுத்தும் விதங்களில் இருக்கும் சிக்கல்கள் என்ன, அவை ஏன் ஏற்படுகின்றன, அவற்றைத் தவிர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்பதை விளக்குகையில் அவள் சொன்ன குறிப்புகள் உபயோகமாக இருப்பதாக ஷ்ரவனுக்குத் தோன்றியது. ஸ்ரீகாந்த் கூட வழக்கமான இடைமறித்தல், சலிப்பு, கிண்டல் இல்லாமல் கூர்ந்து கவனித்துக் கேட்டான்.

 

பின் யோகாலயம் ஆன்மீக மார்க்கத்தில் ஆற்றும் பணிகள் என்ன, யோகாலயத்தின் சிறப்புகள் என்ன என்று முடிவுரையில் அவள் விளக்கி விட்டுச் சொன்னாள். “யாருக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் கேட்கலாம். நான் முடிந்தவரை உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.”


(தொடரும்)

என்.கணேசன்




Thursday, January 25, 2024

சாணக்கியன் 93

 

ந்திரகுப்தனின் தாய்மாமனும் ஓய்வு பெற்ற சிறைக் காப்பாளனைப் போலவே ராக்ஷசரிடம் வருவதில் பெரும் சங்கடத்தை உணர்ந்தார். என்ன தவறு செய்திருப்போம், எதனால் ராக்ஷசர் ஒரு சாதாரணக் குடிமகனான அவரை வரச் சொல்கிறார் என்ற கேள்விகளுடன் ராக்ஷசரின் எதிரே வந்து நின்று தலை தாழ்த்தி கைகூப்பி வணங்கினார்..

 

ராக்ஷசர் தன் வழக்கமான கண்டிப்பான பார்வை பார்த்து விட்டுஉமக்கு ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரை எவ்வளவு காலமாகத் தெரியும்?” என்று கேட்டார்.

 

சந்திரகுப்தனின் தாய்மாமனுக்கு ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் யாரென்று உடனே நினைவுக்கு வரவில்லை. “எனக்கு எந்த ஆச்சாரியரையும் தெரியாது பிரபு. நான் படிப்பறிவில்லாதவன்என்று அவர் யதார்த்தமாகப் பதில் சொன்னார்;.

 

அவர் கிண்டலாகப் பேசுவது போல் தோன்றினாலும் உண்மையில் யதார்த்தமாகத் தான் பேசுகிறார் என்பது புரிந்தாலும் ராக்ஷசர் தன் முகத்தில் கடுமையைக் கூட்டியபடி சொன்னார். “அவர் யாரென்று தெரியாமலா அவருடன் உங்கள் வீட்டுப் பிள்ளையைத் தட்சசீலத்திற்கு அனுப்பி வைத்தீர்கள்?”

 

அப்போது தான் சந்திரகுப்தனை அழைத்துச் சென்ற ஆசிரியரை ராக்ஷசர் கேட்கிறார் என்பது அந்த முதியவருக்குப் புரிந்தது. “ஓ அவரைக் கேட்கிறீர்களா? அவர் பெயர் எனக்கு சடாரென்று நினைவுக்கு வரவில்லை. அவர் என் மருமகனுக்குக் கல்வி கற்றுத் தருவதாகச் சொல்லி அவனை அழைத்துப் போவதற்கு முன்பு எங்களுக்கு அறிமுகமில்லாதவர். அதன் பின்னும் அவரை ஒரே ஒரு முறை தான் சந்தித்திருக்கிறேன்.”

 

அது எப்போது?”

 

அவர் என் மருமகனின் கல்வி முன்னேற்றம் பற்றிச் சொல்வதற்கு எங்கள் வீட்டுக்கு வந்த போது

 

நகைச்சுவையாகப் பேசும் நோக்கம் அவருக்கு இல்லா விட்டாலும் கூட அவர் பேசுவதே பிடிகொடுத்துப் பேசாத மாதிரி தான் இருக்கிறது என்று நினைத்த ராக்ஷசர்அது தான் எப்போது என்று கேட்டேன்என்று கடுமையாகக் கேட்க நினைத்தாலும் தெரிந்த விஷயத்தை இந்த ஆளிடம் கேட்க அதிக சக்தி விரயம் செய்ய விரும்பாமல் மற்றதைக் கேட்டுத் தெரிந்து கொள்ள எண்ணினார். ”உங்கள் வீட்டில் பிள்ளைகள் அனைவரும் கல்வி கற்றவர்களா?”

 

என் மகன் உட்பட நாங்கள் யாரும் கல்வி கற்றவர்கள் அல்ல பிரபு. ஆனால் என் மருமகனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆசிரியர் முன்பின் தெரியாதவராக இருந்தாலும் பெரிய மனதுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்

 

முன்பின் தெரியாத ஒருவருடன் உங்கள் மருமகனை எப்படி நீங்கள் அனுப்பினீர்கள்? தட்சசீலக் கல்விக்கூடத்தில் கற்பது சாதாரண விஷயமல்லவே, அப்படி இருக்கையில் அவ்வளவு தொலைவில் அவனை அனுப்பி வைத்துக் கற்பிக்கும் அளவு உங்களிடம் செல்வமிருக்கிறதா?”  

 

என் சகோதரி தெய்வ பக்தி மிக்கவள் பிரபு. திருமணமாகி சில வருடங்களிலேயே அவள் கணவனைப் பறி கொடுத்தாலும் அவள் கடவுள் நம்பிக்கையை இழந்து விடவில்லை. அதற்கு அருள் புரியும் விதமாக அவள் மகனுக்கு இந்த வாய்ப்பை இறைவன் அளித்தாரோ என்னவோ? அந்த ஆசிரியர் தானாகவே வந்து அவனுக்கு நல்ல அறிவிருக்கிறது. கல்வி கற்க வைத்தால் நல்ல எதிர்காலமும் அமையும் என்று சொல்லி எங்களிடம் எதையும் எதிர்பார்க்காமல், தானே கல்வி கற்க வைப்பதாக வாக்களித்து அவனை அழைத்துச் சென்றார்.”

 

ராக்ஷசரை விஷ்ணுகுப்தர் குழப்பினார். அவர் முன் பின் தெரியாத ஒரு ஏழைச் சிறுவனிடம் இவ்வளவு அன்பு ஏன் காட்ட வேண்டும்? ராக்ஷசர் முணுமுணுத்தார். “ஆச்சரியமாக இருக்கிறது

 

எங்களுக்கும் தான் பிரபு

 

ராக்ஷசர் தன்னையும் மீறி எழவிருந்த புன்னகையை ஆரம்பத்திலேயே அடக்கினார். “உங்கள் மருமகன் கடைசியாக எப்போது உங்களைக் காண வந்தான்?”

 

அவன் இது வரை ஒரு முறை கூட வரவில்லை பிரபு. தட்சசீலம் அருகில் இல்லையே.”

 

அவரது மருமகன் மூலமாக விஷ்ணுகுப்தரைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பில்லை என்பது புரிந்ததால் ராக்ஷசர் சுவாரசியம் இழந்தார். ஆனாலும் அவர் மனதில் முன்பு எழுந்த கேள்விக்குப் பதில் கிடைக்காமல் அந்த முதியவரை அனுப்ப அவருக்கு மனம் வரவில்லை. அவர் கேட்டார். “உங்கள் மருமகனை மட்டும் ஆச்சாரியர் தேர்ந்தெடுத்துத் தன்னுடன் அழைத்துச் செல்லக் காரணம் என்ன? அவனை ஆச்சாரியர் எப்போது எப்படி சந்தித்தார்

 

அவர் போகிற வழியில் அவன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான் பிரபு. அவன் சிறு வயதிலிருந்தே விளையாட்டுப் பிரியன். மாடு மேய்க்கும் போதும் மாடுகளை மரங்களில் கட்டி வைத்து விட்டு அவன் அரசன் போலவும், அவன் நண்பர்கள் பிரஜைகள் போலவும் பாவித்து விளையாடுவார்கள். சதா காலம் தன்னை அரசனாகப் பாவித்து விளையாடும் அவனை நானே பல முறை கண்டித்திருக்கிறேன். ஏழைகள் அதிகம் கனவு காணக்கூடாது. அது கண்டிப்பாக மனவருத்தத்திலேயே முடியும் என்று சொல்வேன். ஆனால் தந்தை இல்லாத பிள்ளை என்று என் தங்கை அவனைக் கண்டிப்பதே இல்லை.... அவன் அப்படி விளையாடிக் கொண்டிருந்த போது அவனைக் கண்ட அந்த ஆசிரியர் அவனுக்குச் சிறப்பான எதிர்காலம் இருப்பதாகச் சொல்லி அவனைக் கல்வி கற்க அழைத்துப் போனார். அவர் எதிர்பார்த்தபடியே அவன் நன்றாகக் கற்பதாகவும், பல கலைகளில் முதலாமிடத்தில் இருப்பதாகவும் சென்ற முறை வந்த போது சொன்னார். நானும் என் தங்கையும் சந்தோஷப்பட்டோம். அவர் மட்டும் அவனை அழைத்துச் சென்றிருக்கா விட்டால் அவன் என் மகனைப் போலவே மாடு மேய்த்துக் கொண்டிருப்பான்...”

 

எப்போதுமே தன்னை அரசனாகப் பாவித்து விளையாடும் ஒரு சிறுவனை விஷ்ணுகுப்தர் தன்னுடன் அழைத்துப் போயிருக்கிறார் என்ற தகவல் ராக்ஷசரை யோசிக்க வைத்தது. அவர் மெல்லக் கேட்டார். “உமது மருமகன் பெயர் என்ன?”

 

சந்திரகுப்தன் பிரபு

 

ராக்ஷசர் திடுக்கிட்டார். விஷ்ணுகுப்தர் தற்போது வாஹிக் பிரதேசத்தின் அரசனாக முடிசூட்டியிருப்பதும் சந்திரகுப்தன் என்ற இளைஞனைத் தான்.... இரண்டும் ஒருவன் தானா? இல்லை, ஒரே பெயரில் இருவர் இருக்கின்றார்களா? அவர் மெல்லக் கேட்டார். “தற்போது உங்கள் மருமகன் அரசனாகி விட்டானா?”

 

சந்திரகுப்தனின் மாமனுக்கு ராக்ஷசரும் விளையாட்டாகப் பேசியது வேடிக்கையாக இருந்தது. புன்னகையுடன் சொன்னார். “ஏழைகளின் கனவு என்று பலித்திருக்கிறது பிரபு? கற்றுத் தேர்ந்ததனால் அவன் அந்தக் கனவைத் தாண்டியிருப்பான். அவனும் ஒரு நாள் ஆசிரியனாகலாம். அதுவே எங்களைப் பொருத்த வரை மிக உயர்வு தான். ஆனால் அவன் வழக்கமான கல்வியில் மட்டுமல்லாமல் வாள் பயிற்சியிலும், போர்ப்பயிற்சியிலும் கூட வல்லவனாக இருப்பதாக அந்த ஆசிரியர் பெருமையுடன் சொன்னார்

 

அதைக் கேட்கையில் அரசன் சந்திரகுப்தன் இவர் மருமகன் தான் என்று அவரது உள்ளுணர்வு சொல்லியது. அது உண்மையானால் இவருக்கு அதை ஆச்சாரியர் தெரிவித்திருக்கவில்லை போலிருக்கிறது. ராக்ஷசர் அந்தத் தகவலால் உள்ளூரப் பரபரப்படைந்தாலும் அதை வெளியே காட்டவில்லை. மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை அரசனாக்கி ஆச்சாரியர் வெறும் ஆசிரியர் அல்ல தான் என்று தன்னை நிரூபித்து விட்டிருப்பதாக ராக்ஷசருக்குத் தோன்றியது. இப்போது யோசிக்கையில் விஷ்ணுகுப்தரின் சபதம் தனநந்தன் நினைப்பது போல பைத்தியக்காரத் தனமாகத் தோன்றவில்லை. மாடு மேய்ப்பவனை ஒரு தேசத்தின் அரசனாக்க முடிந்த அவருக்கு, மகதத்திலும் அதை அரங்கேற்ற முடியாதா என்ன? தர்க்க ரீதியாகச் சரியாகத் தோன்றினாலும் யோசிக்கையில் அது கசந்தது. ஏதோ ஒரு பகுதியும் மகதமும் ஒன்றாகி விட முடியாது என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்ட ராக்ஷசர் யோசனையுடன் சந்திரகுப்தனின் மாமனைப் பார்த்தார்.

 

ஒருவேளை இவர் மருமகன் தான் வாஹிக் பிரதேசத்தின் அரசன் என்றால் இவர் சகோதரி இங்கேயிருப்பது நல்லது. அவசியமானால் அந்தத் தாயை வைத்து சந்திரகுப்தனைக் கட்டுப்படுத்தலாம்

 

ராக்ஷசர் மெல்லச் சொன்னார். “தங்கள் சகோதரியிடமும் எனக்குச் சில கேள்விகள் கேட்க இருக்கின்றன

 

அவள் இப்போது இங்கு இல்லையே பிரபு. சென்ற பௌர்ணமியன்று அவளை அழைத்துப் போக சந்திரகுப்தன் பல்லக்கோடு ஆட்களை அனுப்பியிருந்தான். அவள் போய் விட்டாள். என்னையும் ஒரு முறை வந்து போக அவன் சொல்லியிருந்தான். ஆனால் நீண்ட பயணம் போய் வரும் நிலையில் என் உடல்நிலை இல்லை என்பதால் நான் போகவில்லை...”

 

ராக்ஷசருக்கு அந்தத் தகவல் ஏமாற்றத்தை அளித்தது. அவள் இங்கிருப்பது ஆபத்து என்று தான் முன்கூட்டியே சந்திரகுப்தன் அவளை அழைத்துச் சென்று விட்டானோ? இது அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு முன் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கூட இருக்கலாம். ஆனால் அவர்களால் எப்படி வலிமையான மகதத்தை எதிர்க்க முடியும், அவர்களால் என்ன தான் செய்ய முடியும் என்பது தான் அவருக்கு விளங்கவில்லை.

 

(தொடரும்)

என்.கணேசன்   




Monday, January 22, 2024

யோகி 33

 


ரசுராமன் சதானந்தனிடமிருந்து கற்றது அதிகம். போய் இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த மந்திர தந்திரச் சடங்குகளில் அவர் சதானந்தனுடைய உதவியாளனாக மாறினார். அவர் என்னவெல்லாம் செய்கிறார், எப்படி எல்லாம் செய்கிறார் என்பதை அருகிலிருந்து பார்த்தது பரசுராமனுக்கு மிக உதவியாக இருந்தது. அடுத்து மூன்று ஆண்டுகள் பரசுராமனையே சில பிரயோகங்களைச் செய்யச் சொல்லி, அவர் செய்ததில் அவரையறியாமல் இருந்த சிறு தவறுகளை அவர் திருத்தினார். நாளடைவில் பரசுராமனும் மந்திர தந்திரங்களில் ஓரளவு நல்ல தேர்ச்சி பெற்றார்.

 

ஆனாலும் கூட அந்த வேண்டுதல்களுக்காக பக்தர்கள் செலுத்திய காணிக்கையை அவர் பரசுராமனுக்குத் தந்ததில்லை. பரசுராமன் அதை பெரிதுபடுத்தியது இல்லை. காரணம் அவர் கற்றுத் தந்ததற்கும் பரசுராமன் எந்தக் கட்டணமும் தந்ததில்லை. அவர் பணம் எதுவும் தருவதில்லை என்பதற்காக பரசுராமன் தான் செய்யும் வேலைகளில் குறை இருக்கும்படி அலட்சியமாக இருந்ததுமில்லை.

 

பரசுராமன் சதானந்தனுடன் ஏழாண்டு காலம் இருந்தார். ஏழாண்டுகள் கழித்து ஒரு நாள் காலை சதானந்தன் அவரை அழைத்து ஒரு பணப்பையைத் தந்தார். அதில் பத்து லட்சம் ரூபாய் இருந்தது. 

 

பரசுராமன் குழப்பத்துடன் கேட்டார். “இது எதுக்கு?”

 

இங்கே என் கூட இருந்து நிறைய வேலை செஞ்சிருக்கே.. அதுக்கு நான் இதுவரை எதுவும் கொடுத்ததில்லை.”

 

சரி இப்ப எதுக்கு தர்றீங்க?”

 

நான் ரெண்டு அல்லது மூனு நாள்ல இறந்துடுவேன். அதனால தான் இப்பவே தர்றேன்

 

பரசுராமன் அதிர்ந்தார். சதானந்தனுக்கு அப்போது வயது அறுபத்தொன்று தான் ஆகியிருந்தது. அவர் பார்க்க ஆரோக்கியமாகவே தெரிந்தார். பரசுராமன் கண்கள் தானாகக் கலங்கின. ஆனால் சதானந்தன் அமைதியாகச் சொன்னார். “வருத்தப்பட எதுவுமில்லை. ஆரோக்கியமாய் இருக்கறப்பவே சாக முடியறது ஒரு விதத்துல பாக்கியம் தான். இனி நீ என்ன செய்யப் போறேன்னு தீர்மானிச்சுக்கோ. இங்கேயே இருந்து இந்த ஆசிரமத்த நடத்துறதுன்னாலும் நடத்தலாம். போயிடறதுன்னாலும் போயிடலாம்…”

 

பரசுராமனுக்கு அங்கே அவரில்லாமல் அவர் ஸ்தானத்தில் ஆசிரமம் நடத்த மனமிருக்கவில்லை. அவருக்கு வேறு சிலவற்றைக் கற்கும் ஆர்வம் சமீப காலமாக ஏற்பட்டிருந்தது. அதைக் கற்கச் செல்ல நினைத்தார். அவர் அதை சதானந்தனிடம் சொன்ன போது அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் தலை அசைத்தார்.

 

பின் கடைசியாக அவர் பரசுராமனுக்கு ஒரு அறிவுரை சொன்னார். “பணம் சம்பாதிக்கறது முக்கியம்னாலும் சக்திகளைப் பணத்துக்காக எப்பவுமே விற்காதே. ஒரு தர்மத்துக்கு உட்பட்டு நீ எப்பவும் நடந்துக்கற வரைக்கும் உன் சக்திகள் உன்னைக் காப்பாத்தும்.”       

 

அன்றே அவர் தன் வேலையாளுக்கும் ஒரு பெரிய தொகையைக் கொடுத்தார்.  மீதியுள்ள பணத்தைத் தர்ம காரியங்களுக்குத் தந்து விட்டார். இரண்டு நாட்கள் கழித்து அதிகாலையில் அவர் இறந்து போனார். பரிசோதித்த டாக்டர் மாரடைப்பைக் காரணமாகச் சொன்னார்.

 

பரசுராமன் அடுத்த நாளே அங்கிருந்து கிளம்பினார். சென்னை சென்று பெற்றோருடன் ஒரு மாதம் இருந்து விட்டு அடுத்து வூடு வித்தைகளைக் கற்க ஹைத்தி தீவுக்குக் கிளம்பினார்.

 

 

ரசுராமனின் ஹைத்தி அனுபவங்களும் அவருக்கு மிக சுவாரசியமாகவும், பல அமானுஷ்ய மந்திரவாத நுட்பங்களைக் கற்றுத் தருவனவாகவும் இருந்தன. ஆனால் இந்தியாவில் ஒரு நல்ல குரு மிகச் சுலபமாகக் கிடைத்தது போல ஹைத்தியில் அவருக்கு ஆரம்பத்திலேயே கிடைத்து விடவில்லை. சில போலிகளைத் தாண்டியே வூடு நுட்பங்களை ஆழமாய் அறிந்த ஒரு குருவை அவரால் கண்டுபிடிக்க முடிந்தது.

 

சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்பே பெனின் என்ற மேற்கு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து ஹைத்திக்கு குடியேறி இருந்த அந்த வயதான குருவுக்கு ஆங்கிலம் முழுவதுமாகப் புரிந்ததும், ஆங்கிலத்தில் அரைகுறையாகவாவது பேச முடிந்ததும் பரசுராமனுக்கு பேருதவியாய் இருந்தது. அந்த வூடு குரு ஆங்கிலத்தில் சொல்ல முடியாததை சைகையாலும், முகபாவனைகளாலும் அவருக்குத் தெரிவிக்க முடிந்தவராக இருந்தார்.  

 

உண்மையில் இரு வகை உலகங்கள் இருப்பதாக அந்த வயதான குரு சொன்னார். காண முடிந்த உலகம், காண முடியாத சூட்சும உலகம் என்ற இரு வகை உலகங்களில், இரண்டாவது வகை காண முடியாததாக இருந்த போதிலும், அந்த உலகம் காண முடிந்த உலகத்தைப் போலவே நிஜமானது என்று சொன்னார். இரண்டு உலகங்களும் எப்போதும் ஒன்றோடு ஒன்று பின்னி இணைந்தே இருக்கிறது, இணைந்தே இயங்குகிறது என்று சொன்னார். பொதுவாக மனிதன் இறந்த பின்னர் சூட்சும உலகிற்குள் பிரவேசிக்கிறான், அதை அறிகிறான் என்ற போதும், வாழும் போதே அவன் வூடு சடங்குகளின் மூலம் அந்த உலகைத் தொடர்பு கொள்ளலாம் என்று சொன்னார்.

 

சர்வ வல்லமையுள்ள இறைவனுக்கு அடுத்தபடியாக, சக்தி வாய்ந்த பல வூடு தேவதைகளும், அதற்கும் அடுத்தபடியாக இறந்தவர்களின் ஆவிகளும் அந்தச் சூட்சும உலகில் இருப்பதாகவும்  சொன்ன அவர் அவற்றை எப்படித் தொடர்பு கொள்வது என்று விளக்கமாகச் சொல்லிக் கொடுத்தார். முறைப்படியான வழிபாடுகள், சடங்குகள் மூலமாகத் தேவதைகளை அணுகினால் ஒரு மனிதன் அந்த மேலான உலகில் இருந்து எல்லா விதமான உதவிகளும் பெற முடியும் என்று சொன்ன அவர் விரிவான சடங்கு முறைகளும், ஆப்பிரிக்க மொழியில் மந்திரங்களும், பாடல்களும் சொல்லித் தந்தார். பரசுராமனுக்கு அந்தச் சடங்குகளைக் கற்றுக் கொள்வதில் பெரிதாய் சிரமம் தெரியவில்லை. அந்த வூடு குரு அவற்றின் சூட்சுமங்களை, பின்னணியில் உள்ள அர்த்தங்களோடு சொல்லிக் கொடுத்ததால் அவற்றைச் சுலபமாகப் புரிந்து கொள்ளவும், நினைவில் கொள்ளவும் முடிந்தது. ஆனால் அந்த ஆப்பிரிக்க மந்திரங்கள் கற்க அவர் நிறையவே சிரமப்பட்டார் என்றாலும் ஓரளவு சீக்கிரமாகவே கற்றுக் கொண்டார்.

 

தான் கற்றுக் கொண்டவைகளில் பரசுராமனுக்கு மிகவும் சுவாரசியமாகவும், பரபரப்பாகவும் இருந்தது, இறந்தோரது ஆவிகளையும், தேவதைகளையும் யார் மீதாவது வரவழைத்துக் கேள்விகள் கேட்பது தான். வழிபாடுகள், சடங்குகள், மந்திரங்கள் மூலமாக தேவதைகளையும், இறந்தோரது ஆவியையும் ஒரு குறிப்பிட்ட மனிதன் மீது வரவழைக்கும் வித்தையை அவர் அந்த வூடு குருவிடம் கற்றுக் கொண்டார்.

 

பெரும்பாலும் அந்த வூடு வழிபாட்டுச் சடங்குகளை வூடு ராணி எனப்படும் பெண்களே செய்வது அந்தக் காலத்தில் வழக்கமாய் இருந்தது. ஏனென்றால் அந்தச் சடங்குகளை ஆரம்பிப்பது பெரிதல்ல; ஆவிகள் பிரவேசமான பின் போகப் போக எல்லாம் கட்டுப்பாட்டை மீறிப் போவதுமுண்டு. அந்தச் சமயங்களில் பாண்டித்தியமும், நல்ல அனுபவமும் கொண்டவர்களாலேயே எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதனால் சடங்குகளை அறிந்திருந்தாலும், பயம் காரணமாக பலரும் தலைமை ஏற்று நடத்தத் துணிவதில்லை.  ஆனால் அவனுடைய வூடு குரு அதில் நிபுணர் மற்றும் வயதான அனுபவஸ்தர் என்பதால், அந்தச் சடங்குகளைச் சிறப்பாகவே நடத்தினார். பரசுராமனுக்கு உடனிருந்து அவற்றை எல்லாம் கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  

 

அப்படி ஒரு தேவதையோ, ஆவியோ ஒருவனை ஆக்கிரமிக்கும் போது அந்த மனிதன் தன்னுடைய இயல்பான அம்சங்களை இழந்து அந்த தேவதை அல்லது ஆவியின் அம்சங்களைப் பெற்று விடுவதை பரசுராமன் பார்த்து பல முறை வியந்திருக்கிறானர். சுமார் எழுபது வயதையும் தாண்டிய கிழவனை ஆக்கிரமித்திருப்பது இளைஞனின் ஆவியாகவோ, ஆக்ரோஷ சக்தியாகவோ இருக்குமானால் அந்த கிழவனின் உடல் முறுக்கேறி தோற்றத்திலும், குரலிலும், பேச்சிலும், செய்கைகளிலும் இளமையின் முறுக்கு தெளிவாகவே தெரியும். சாதாரணமாக அந்தக் கிழவருக்கு சாத்தியமாகவே இருக்காத செயல்களை எல்லாம் அந்த வேளையில் கிழவருக்கு சர்வ சாதாரணமாகச் செய்ய முடியும்.  வேகமாய் நடனமாடுவது, நீண்ட தூரங்களுக்குத் துள்ளிக் குதிப்பது எல்லாம் அந்த சக்தியால் ஆட்கொள்ளப்பட்டிருந்த காலத்தில் வெகு உடலில் குடியேறுவது கிழவரது ஆவியாக இருக்குமானால் எல்லாமே தலைகீழாகி விடும். நகர்வது கூட மிக நிதானமாக இருக்கும்.  சிறிது நேரத்திலேயே களைப்பு மேலிடும். மூச்சு வாங்கும். பேச்சு பலவீனமாக வரும். இதெல்லாம் நேரில் பார்க்கையில் பரசுராமனுக்குப் பிரமிப்பாக இருக்கும்.

 

இந்த நேரங்களில் தனக்கு என்ன நடக்கிறது என்பதோ, என்ன பேசினோம், என்ன கேட்டோம் என்பதோ ஆக்கிரமிக்கப்பட்ட ஆளுக்குத் தெரியாது. கடைசியில் மயங்கி விழும் அவனுக்கு விழிப்புணர்வு வரும் போது நினைவில் எல்லாமே வெறுமையாக இருக்கும். அவன் மீது குடியேறிய சக்தி வலிமையானதாக இருந்தால் அவன் மயங்கி விழும் போது அவன் உடலில் இருக்கும் இயல்பான சக்திகள் அனைத்தும் தீர்ந்து போயிருக்கும். அவன் விழிப்புணர்வு பெற்றும் பழைய நிலைக்குத் திரும்புவது சில மணி நேரங்கள் கழித்தே இருக்கும்.

 

தொடரும்

என்.கணேசன்


Thursday, January 18, 2024

சாணக்கியன் 92

துர்வேதிக்கு அந்த விஷயத்தை மன்னரிடம் தெரிவிக்கும் முதல் மனிதர் தானாக இருப்பதில் பெருமை தோன்றியது. இந்த முறை கிடைக்கும் பரிசு அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு அதிகரித்தது. அவர் பெருமை பொங்கச் சொன்னார். “நான் பயணம் செய்யும் இடங்களில் நடப்பதை அரைகுறையாகக் கேட்டு வருவதில்லை மன்னா. செல்லும் இடங்களில் எல்லாம் அங்குள்ளவர்களிடம் பேசி கேள்வி ஞானத்தால்  கூடுதல் அறிவைப் பெற்றுக் கொள்ளாமல் திரும்பி வருவது ஒரு பண்டிதனுக்கு அழகல்லவே. அந்த ஆசிரியர் பெயர் விஷ்ணுகுப்தராம். அவரை சாணக்கியர் என்றும் அவருக்கு நெருங்கியவர்கள் அழைக்கிறார்கள்....”

 

வாஹிக் பிரதேசத்தில் புரட்சி நடந்து யவனர்களிடமிருந்து ஆட்சி பறிபோனது குறித்த செய்தி தனநந்தனுக்குத் தெரியும். பறித்தது புரட்சிக்காரர்கள் என்பதற்கு மேல் தெரிந்து கொள்ள அவன் விரும்பியிருக்கவில்லை. மகதம் குறித்த தகவல்களே கூட ஓரளவுக்கு மேல் அறிந்து வைத்துக் கொள்ளுமளவு பொறுமை இல்லாத அவனுக்கு அதைத் தாண்டிய பகுதிகள் குறித்து அறிந்து கொள்ளும் அக்கறை இருக்கவில்லை. அவனையும், மகதத்தையும் பாதிக்காத விஷயங்களைச் சில சமயங்களில் சொல்ல ராக்ஷசர் முயற்சிப்பதுண்டு. அப்போதெல்லாம் கைகூப்பி அவன் சொல்வான். “ராக்ஷசரே. நீங்கள் அறிந்திருந்தால் அது நான் அறிந்திருப்பது போல. அதனால் தயவு செய்து எனக்கு விவரிக்கும் சிரமத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள்.”

 

இப்படி அனாவசியமானவை என்று பல தகவல்களைத் தவிர்க்கும் அவனுக்கு வாஹிக் பிரதேசத்தை வென்றது சாணக்கியர் என்ற பெயரோடு விஷ்ணுகுப்தர் என்ற பெயரும் சேர்ந்து சொல்லப்பட்டவுடன் பழைய நினைவுகள் வந்து அவன் முகம் கருத்தது. அவனுக்கு எதிராக சாணக்கின் மகன் சாணக்கியன் என்ற பெயரில் சபதமிட்டுச் சென்ற மனிதர்! மன்னரின் மலர்ந்த முகம் திடீரென்று கருத்தது ஏன் என்று புரியாமல் சதுர்வேதி திகைத்தார். ‘இவ்வளவு நேரம் மகிழ்ச்சியாகத் தானே கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு என்ன ஆயிற்று திடீரென்று? ஒருவேளை விஷ்ணுகுப்தர் என்ற ஆசிரியர் நான் கேள்விப்பட்டது போல் மகதவாசி இல்லையோ?’ என்ற வகையில் எண்ணங்கள் அவர் மனதில் ஓடின.

 

தனநந்தன் பாராட்டுபவர்களுக்குப் பரிசுகள் தருவதில் தாராளம் காட்டுபவன். ஆனால் அவன் அதிருப்தியான மனநிலையில் இருந்தாலோ அந்த தாராளம் காணாமல் போய் விடும். அவன் தன் சேவகனை சைகையால் அழைத்து ஏதோ  முணுமுணுத்தான். சேவகன் தலையசைத்து விட்டுச் செல்ல தனநந்தன் ராக்ஷசரைப் பார்த்தான்.

 

ராக்ஷசர் தனநந்தனின் பார்வையைப் படித்து அவன் விருப்பத்தைப் புரிந்து கொள்வதில் வல்லவர். அவர் சதுர்வேதியிடம் சொன்னார். “பண்டிதரே. தங்கள் வரவுக்கும், புண்ணியஸ்தலங்களின் தீர்த்தப் பிரசாதங்களைக் கொண்டு வந்து கொடுத்ததற்கும் நன்றி. தற்போது மன்னருடன்  அமைச்சர்கள் கலந்தாலோசிக்க வேண்டியிருக்கும் முக்கிய அவசரக்கூட்டம் ஒன்று நடைபெறவிருக்கிறது....”

 

சதுர்வேதி ஒன்றும் புரியாமல் தலையாட்டினார். மன்னரின் சேவகன் ஒரு தாம்பாளத்தில் கனிகள் பட்டு வஸ்திரம் எடுத்துக் கொண்டு வந்து நீட்டினான். சதுர்வேதி அதைப் பெற்றுக் கொண்டார். அதில் எப்போதும் பொற்காசுகளின் முடிச்சு ஒன்று இருக்கும். சில சமயங்களில் அந்த முடிச்சு சிறியதாகவும் சில சமயங்களில் பெரியதாகவும் இருக்கும். அந்த முடிச்சின் அளவு தனநந்தனின் மனம் குளிர்ந்த அளவைப் பொருத்ததாக இருக்கும். இன்று அவர் பாராட்டிய அளவுக்கு, பெரிய முடிச்சே இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்தத் தாம்பாளத்தில் பொற்காசுகளின் முடிச்சே இருக்காதது சதுர்வேதிக்கு ஏமாற்றத்தை அளித்தது. பிரச்சினை கடைசியாகச் சொன்ன மகதவாசியின் புரட்சி சாதனை தான் என்பது மட்டும் தான் அவருக்குப் புரிந்தது. மகத மன்னனைப் பாராட்டி வாழ்த்தியதோடு நிறுத்தியிருக்க வேண்டும், மகதவாசியின் வாழ்த்தைச் சேர்த்துக் கொண்டது தவறு என்பது அவருக்கு மெள்ளப் புரிந்தது. இப்போது சமாளித்து சரி செய்ய வழியில்லை. ராக்ஷசர் நாசுக்காகப் போய் வா என்று சொல்லி விட்டார். மன்னர் முகத்திலும் இனிமை இல்லை. வருத்தத்தோடு தாம்பாளத்தை வாங்கிக் கொண்டு மீண்டும் வாழ்த்தி விட்டுப் போனார்.

 

அவர் வெளியேறும் வரை காத்திருந்த தனநந்தன் பின் அறிவித்தான். “முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடக்கவிருப்பதால் அமைச்சர்கள் சேனாதிபதி தவிர மற்றவர்கள் கலையலாம்.”

 

சேவகர்கள், பணிப்பெண்கள், அதிகாரிகள் உட்பட அனைவரும் அங்கிருந்து செல்லும் வரை காத்திருந்து விட்டு தனநந்தன் ராக்ஷசரிடம் கோபத்துடன் கேட்டான். “மகதவாசி ஒருவர் சாதனை பற்றி பண்டிதர் சற்று முன் சொன்னாரே அந்த ஆள் யாரென்று தெரிகிறதா ராக்ஷசரே?”

 

ராக்ஷசர் சொன்னார். “சில நாட்களுக்கு முன்பு தான் அந்த ஆச்சாரியரின் அடையாளம் அறிந்தேன் அரசே

 

அந்த அந்தணன் தானே முடிசூடிக் கொண்டு விட்டானா?”

 

இல்லை அரசே. அவரது மாணவர்களில் ஒருவனை அரசனாக்கியிருக்கிறார்

 

தனநந்தன் வெறுப்பு மிகுதியில் சொன்னான். “எதிர்க்கிறவர்களை ஆரம்பத்திலேயே அடக்கி வைத்தால் பின் அவர்கள் எதிர்ப்பைக் காட்டவும், தங்கள் சாமர்த்தியத்தைக் காட்டவும் சந்தர்ப்பமிருக்காது. இரண்டு தடவை இதே அரசவையில் அந்த அந்தணனின் திமிர்ப் பேச்சை நாம் அனுமதித்ததன் விளைவு இன்று பெரிய ஆளாகி நம் சபையிலேயே சிலாகித்துப் பேசப்படுபவனாகி விட்டான்.”

 

ராக்ஷசர் அமைதியாகச் சொன்னார். “முதல் முறை அறிஞர்களின் சிறப்புக் கூட்டத்திற்காக அவர் விருந்தினராக வந்தார். இரண்டாவது முறை உதவி கேட்டு வந்தார். கேட்ட உதவி  பைத்தியக்காரத்தனமாய் இருந்ததால் நாம் உதவி செய்ய மறுத்து விட்டோம். விருந்தினராக வந்தவரையும், உதவி கேட்டு வந்தவரையும் தண்டிப்பது, அவர் புகழ்பெற்ற தட்சசீலக் கல்விக்கூடத்தின் ஆசிரியராகவும் இருக்கையில், அது தேவையில்லாத அவச்சொல்லுக்கு உங்களை ஆளாக்கி விட்டிருக்கும் அரசே.”

 

தனநந்தன் ஒன்றும் சொல்லா விட்டாலும் அவன் அதிருப்தியான மனநிலையிலேயே இருந்தான். தந்தையை அப்புறப்படுத்தியது போலவே, ஆணவத்துடன் சபதமிட்ட மகனையும் அப்புறப்படுத்த முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவன் எண்ணிக் கொண்டான்.

 

மன்னரின் முகத்தில் அதிருப்தியைக் கண்ட அமைச்சர் வரருசி, விஷ்ணுகுப்தரின் சபதம் தான் மன்னரை இத்தனை பாதிக்கிறதோ என்று நினைத்தவராகக் கேட்டார். “அந்தப் புரட்சிப்படைகள் மகதத்திற்கு எதிராக படையெடுத்து வரும் வாய்ப்பிருக்கிறதா?”

 

மகத சேனாதிபதி மெல்ல நகைத்தபடி சொன்னான். “வாஹிக் பிரதேசம் மகதத்தை ஒப்பிடுகையில் சிறு பகுதியே அமைச்சரே. படை வலிமையில் ஒப்பிட்டாலும் ஒரு பாறையை ஒரு மலையோடு ஒப்பிடுவது போலத் தான். அதனால் அவர்கள் படையெடுத்து வருவது தற்கொலை செய்து கொள்வது போலத் தான். அந்த அந்தணர் அங்கே சாதித்தாலும் நமக்கு ஒரு துரும்பு தான். ”

 

ராக்ஷசர் சொன்னார். “உண்மை தான். அங்கு அவர் கையாண்ட யுக்தியும் யவனர்களுக்கு எதிராகப் பலித்ததேயொழிய மற்ற இடங்களில் பலிக்க வழி இல்லை. மேலும் வாஹிக் பிரதேசம் நம் எல்லையிலும் இல்லை...”

 

தனநந்தன் தன் வலிமையோடு அந்த அந்தணரின் வலிமை ஒப்பிடப்படுவதே அவமானம் என்று நினைத்து காட்டமாகச் சொன்னான். “உங்கள் ஒப்பீடுகளே எனக்குக் கேவலமாகத் தோன்றுகிறது. ஒப்பீடு என்பது ஓரளவாவது சரிசமமானவர்களுடன் செய்வது தான் முறை. தூணைத் துரும்போடும் தூசியோடும் யாரும் ஒப்பிடுவதில்லை....”

 

ராக்ஷசர் துரும்பையும், தூசியையும் யாரும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என்று எண்ணினாலும் அதை வாய்விட்டுச் சொல்லவில்லை. துரும்பும் தூசியும் விழுவது கண்களில் என்றால் அவையும் பெரும் தொந்தரவே!

 

ஒருவேளை புரட்சிப் படையினர் விஷ்ணுகுப்தரின் பைத்தியக்காரத்தனமான சபதம் காரணமாக முட்டாள்தனமாய் மகதத்தை எதிர்க்க வந்தால் அவர்களைத் தோற்கடித்து துரத்தியடித்து நம் வலிமையைப் புரிய வைக்க வேண்டும் என்ற தனநந்தன் நாம் தயார் நிலைமையில் இருக்கிறோமாஎன்பதை அறிந்து கொள்ள விரும்பினான். படை நிலவரங்களை சேனாதிபதியும், அமைச்சர்களும் விவரமாகச் சொன்னதுடன் போரின் முடிவில் மகதம் என்றாலே புரட்சிப் படையினருக்குச் சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று உறுதியளித்தவுடன்  தனநந்தன் திருப்தியடைந்தான். சபை கலைந்தது.

 

ஆனால் இல்லத்திற்குச் சென்ற பின்பும் ராக்ஷசரால் கவலையில்லாமல் நிம்மதியாக இருக்க முடியவில்லை.  விஷ்ணுகுப்தரைப் பற்றி அவர் கேள்விப்படும் ஒவ்வொரு விஷயமும் ஒரு அசாதாரணமான மனிதரை அடையாளம் காட்டியதால் ராக்ஷசர் அவரிடம் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என உணர்ந்தார். நடந்த நிகழ்வுகளை எல்லாம் ஆரம்பத்திலிருந்தே அவர் யோசித்துப் பார்த்தார்.

 

ஆரம்பத்தில் அறிஞர்களின் சிறப்புக்கூட்டத்திற்கு விஷ்ணுகுப்தர் வந்ததிலிருந்து ஆரம்பித்தவருக்கு ஆச்சாரியர் ஆரம்பத்தில் நகருக்கு வெளிப்புறத்தில் வசித்து வந்த ஒரு ஏழைச் சிறுவனின் வீட்டுக்குப் போய் பேசியதும், பின் அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு சென்றதும் நினைவுக்கு வந்தது.....

 

உடனடியாகப் பழைய ஒற்றனை அவர் அழைத்துப் பேசி அந்தப் பழைய நிகழ்வை ஞாபகப்படுத்தி விட்டுக் கேட்டார். “அந்தச் சிறுவனின் குடும்பம் இப்போதும் அதே வீட்டில் வசிக்கிறதா?”

 

ஒற்றன் சொன்னான். “ஆம் பிரபு

 

அந்தக் குடும்பத்தின் தலைவனை உடனடியாக அழைத்து வா

 

(தொடரும்)

என்.கணேசன்