சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 30, 2020

சத்ரபதி 118


ந்த மாளிகையை விட்டுப் பணியாளுடன் வெளியே வந்த ஹீராஜி ஆக்ராவை விட்டுக் கிளம்பும் முன் சிவாஜியின் ஆணைப்படி ராம்சிங்கைச் சென்று சந்தித்தான். சிவாஜியைச் சிறைப்படுத்தியதைத் தடுக்க முடியாத வருத்தத்தில் நீண்ட நாட்களாக ராம்சிங் சிவாஜியைச் சென்று பார்க்கவில்லை. சக்கரவர்த்தியை எதிர்க்கவும் முடியாமல், சிவாஜியைக் காப்பாற்றும் வழியையும் அறியாமல் இருந்த ராம்சிங் அவ்வப்போது ஆட்கள் மூலமாக மட்டுமே சிவாஜியின் நலத்தை விசாரித்தபடி இருந்தான். சிவாஜியின் கடுமையான வயிற்று வலி பற்றிக் கேள்விப்பட்ட போது கூட  அவன் போலத்கானிடம் தான் விசாரித்தான். இரண்டு நாட்கள் முன்பு போலத்கான் சிவாஜி நலமடைந்தான் என்று தெரிவித்ததில் ராம்சிங் பெரும் நிம்மதி அடைந்திருந்தான்.

ஹீராஜியின் வரவு ராம்சிங்கை துணுக்குறச் செய்தது. சிவாஜிக்கு ஏதேனும் புதிதாகப் பிரச்னைகள் இருக்குமோ, மீண்டும் நோய்வாய்ப்பட்டிருப்பானோ, வேறேதும் அசம்பாவிதம் நேர்ந்திருக்குமோ என்றெல்லாம் அவன் சந்தேகப்பட்டான். இல்லாவிட்டால் சிவாஜி ஆளனுப்பி இருக்க மாட்டான் என்று அவனுக்குத் தோன்றியது.

“வாருங்கள் ஹீராஜி. அரசர் நலம் தானே?” என்று சந்தேகத்துடனும் கவலையுடனும் அவன் கேட்டான்.

ஹீராஜி புன்னகையுடன் சொன்னான். “அவர் நம்பும் இறைவன் அருளால் அவர் நலமாகவே இருப்பார் என்று நம்புகிறேன் இளவலே”

அந்தப் பதில் ராம்சிங்கைக் குழப்பியது. “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள். நீங்கள் மாளிகையிலிருந்து தானே வருகிறீர்கள்?”

“ஆம் இளவலே. மாளிகையிலிருந்து தான் வருகிறேன். ஆனால் அரசர் மாளிகையில் இல்லை”

ராம்சிங் பதறிப்போனான். சக்கரவர்த்தி மாளிகையிலிருந்தும் சிவாஜியை அப்புறப்படுத்தி விட்டாரோ என்று பயந்தவனாக, பதற்றம் குறையாமல்  கேட்டான். “பின் எங்கே இருக்கிறார் அரசர்? தயவு செய்து விரிவாகச் சொல்லுங்கள்”

ஹீராஜி சிவாஜி தப்பித்த கதையைச் சொன்னான். ராம்சிங்கின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி அளக்க முடியாததாக இருந்தது. கண்கள் லேசாகக் கலங்கச் சொன்னான். “என்னால் அரசருக்கு உதவ முடியா விட்டாலும் இறைவன் அவருக்கு உதவியிருக்கிறானே அது போதும். இறைவனின் கருணையே கருணை”

ராம்சிங்கின் மனநிலையை மிகச்சரியாக யூகிக்க முடிந்திருந்ததால் தான் சிவாஜி ஹீராஜியிடம் ராம்சிங்கைச் சந்தித்துத் தெரிவித்து விட்டுச் செல்வது தான் முறையாக இருக்கும் என்று சொல்லி இருந்தான். ராம்சிங்கின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. மெல்லக் கவலையுடன் சொன்னான். “சக்கரவர்த்திக்குத் தகவல் தெரியும் போது சும்மா இருக்க மாட்டார். சாம்ராஜ்ஜியம் எங்கும் தேடுதல் வேட்டை சீக்கிரமே ஆரம்பித்து விடும்…..”

ஹீராஜி சொன்னான். “இதுவரை அவரைக் காப்பாற்றிய இறைவன் இனியும் காப்பார் என்று நம்புவோம் இளவலே. நானும் இங்கிருந்து சீக்கிரமே கிளம்ப அனுமதியுங்கள். அதிக காலம் இந்த நகரத்தில் இருப்பது எனக்கும் ஆபத்து”

ராம்சிங் சொன்னான். “உடனே கிளம்புங்கள் ஹீராஜி. இங்கே உங்களை அனுப்பித் தகவல் தெரிவித்ததிலேயே அரசரின் பெருந்தன்மை தெரிகிறது. அவரைச் சந்தித்தால் அவருக்கு உதவ முடியாத துர்ப்பாக்கியத்திற்கு நான் இப்போதும் வருந்திக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவியுங்கள். முடிந்தால் என்னை மன்னிக்கச் சொல்லுங்கள்”


மாளிகையின் காவலர்கள் வழக்கப்படி மதிய நேரத்தில் ஒருமுறை உள்ளே சென்று பார்த்த போது சிவாஜியின் அறையில் யாரும் இல்லை. கட்டில் காலியாக இருந்தது. மாளிகையினுள் வேறெங்காவது சிவாஜி இருக்கிறானா என்ற சந்தேகத்தில் சென்று தேடியவர்கள் மாளிகையில் சிவாஜி மட்டுமல்லாமல் யாருமே இல்லை என்பதைக் கண்டுபிடித்தார்கள். அந்தத் தகவலை போலத்கானிடம் சென்று தெரிவித்த போது அவன் தலையில் பேரிடி விழுந்தது போல் உணர்ந்தான். வியர்த்து விறுவிறுத்து பதறிப் போய் ஓடி வந்து அவனும் மாளிகை எங்கும் தேடினான். காவலர்கள் சொன்னது போல் சிவாஜியும் இல்லை அவன் ஆட்களும் இல்லை.

சக்கரவர்த்தியிடம் ஓடோடிப் போய்த் தகவலைச் சொன்ன போது போலத்கான் அச்சத்தின் உச்சத்தில் இருந்தான். கிடைக்கின்ற தண்டனை என்னவாக இருக்கும் என்ற எண்ணமே இமயமாக அவன் மனதை அழுத்தியது.

ஔரங்கசீப் கண்களைச் சுருக்கிக் கொண்டு போலத்கானைப் பார்த்தான். அவன் முதல் சந்தேகம் போலத்கான் மீதே இருந்தது. இவனே அவன் தப்பிக்க வழி செய்திருப்பானோ என்ற சந்தேகத்துடன் பார்த்தான். போலத்கானுக்கு ஔரங்கசீப்பின் சந்தேகம் புரிய சிறிது நேரம் தேவைப்பட்டது. புரிந்தவுடன் நடுநடுங்கிப் போனான் அவன். அவனுக்குப் பேச வார்த்தைகள் வரவில்லை.

ஔரங்கசீப் கேட்டான். “அவன் எப்போது தப்பித்தான்?”

போலத்கான் அழாதகுறையாகச் சொன்னான். “தெரியவில்லை சக்கரவர்த்தி. தெரிந்திருந்தால் என் உயிரைப் பணயம் வைத்தாவது தடுத்திருப்பேனே”

ஔரங்கசீப் வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான். “கடைசியாக எப்போது அவனைப் பார்த்தாய்?”

போலத்கான் சொன்னான். “காலையில் அவர் உறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன் சக்கரவர்த்தி.”

ஔரங்கசீப் கேட்டான். “அதன் பின் அவன் எப்படித் தப்பித்தான்?”

போலத்கான் சொன்னான். “அது தான் விளங்கவில்லை சக்கரவர்த்தி. காவலர்கள் அனைவரையும் விசாரித்து விட்டேன். காவலில் எந்தத் தளர்வும் இருக்கவில்லை”

ஔரங்கசீப் கேட்டான். “அப்படியானால் சிவாஜி காற்றில் கரைந்திருப்பானோ?”

சக்கரவர்த்தியின் ஏளனமும் போலத்கானுக்கு சில கணங்கள் கழித்தே பிடிபட்டது. சிவாஜியைப் பலரும் மாயாவி என்றழைப்பதால் எந்த மாய வித்தையை அவன் பயன்படுத்தி இருப்பானோ தெரியவில்லை என்று உள்ளுக்குள் புலம்பினாலும் மௌனமாகச் சக்கரவர்த்தியைப் பார்த்தபடி பரிதாபமாக நின்றான்.

ஔரங்கசீப் கேட்டான். “காலையில் சிவாஜி படுத்திருந்ததைப் பார்த்தேன் என்றாயே. அவன் முகத்தைப் பார்த்தாயா, இல்லை படுக்கையில் யாரோ படுத்திருந்ததைப் பார்த்தாயா?”

“படுத்திருந்தது சிவாஜி தான் சக்கரவர்த்தி. அவரது முகத்தை நான் பார்க்கவில்லை என்றாலும் அவர் கையிலிருந்த முத்திரை மோதிரத்தை நன்றாகப் பார்த்தேன்”

“என்னுடைய முத்திரை மோதிரத்தை உன் விரலுக்குப் போட்டால் நீ சக்கரவர்த்தியாகி விடுவாயா போலத்கான்?”

ஔரங்கசீப்பின் கேள்விக்குப் பிறகு தான் காலையில் பார்த்தது சிவாஜியாக இல்லாமலும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் மெல்ல போலத்கானுக்கு வந்தது. அவன் திகைப்புடன் சக்கரவர்த்தியைப் பார்த்தான்.

ஔரங்கசீப் கேட்டான். “சிவாஜியின் முகத்தை நீ கடைசியாகப் பார்த்தது எப்போது?”

“நேற்று மதியம் சக்கரவர்த்தி. அவர் மதியம் வரை என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்….”

ஔரங்கசீப் சொன்னான். “அங்கிருந்து ஆரம்பித்துச் சொல். என்ன நடந்தது?”

போலத்கான் எல்லாவற்றையும் சொன்னான். அவன் முகத்தில் பதித்த விழிகளை ஔரங்கசீப் ஒரு கணம் கூட விலக்கவில்லை. முழுவதும் கேட்டுக் கொண்ட பிறகு ஔரங்கசீப் “நேற்று மதியம் காவல் இருந்த உன் காவலர்களில் சிறிதாவது அறிவிருப்பவன் எவனாவது ஒருவனை உடனே இங்கே வரவழை.” என்று கடுமையாகச் சொன்னான்.

போலத்கான் முதல் அடுக்குக் காவலில் இருந்த ஒருவனை உடனே வரவழைத்தான். அவனிடம் நேற்று மதியத்திலிருந்து நடந்ததை எல்லாம் முழுவதும் கேட்டறிந்த ஔரங்கசீப் உடனே கேட்டான். “அந்த ஐந்து கூடைகளைப் பரிசோதித்து தான் அனுப்பினோம் என்று சொன்னாயே. ஒவ்வொரு கூடையையும் பரிசோதித்தீர்களா, இல்லை ஏதோ ஒன்றை மட்டும் பரிசோதித்தீர்களா? பரிசோதித்ததும் எப்படிச் செய்தீர்கள்?”

அந்தக் காவலன் விவரித்தான். ஔரங்கசீப் போலத்கானையும் அந்தக் காவலனையும் கடும் சினத்தோடு பார்த்துச் சொன்னான். “முட்டாள்களே சிவாஜி அந்தக் கூடைகளில் முதலும் கடைசியும் தவிர்த்து நடுவில் இருந்தவற்றில் தான் ஒளிந்து கொண்டு தப்பித்திருக்கிறான். நேற்று மாலையே அவன் தப்பித்துப் போய் விட்டான்….”

ஔரங்கசீப்பை அவர்கள் பரிதாபமாகப் பார்த்தார்கள்.


ரங்கசீப் உடனடியாக அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அழைத்துப் பேசினான்.

“நேற்று மாலையில் சிவாஜி தப்பித்துச் சென்றுவிட்டான். எத்தனை தான் அவன் வேகமாகப் போனாலும் நம் சாம்ராஜ்ஜியத்தைக் கடக்க அவனுக்குச் சில மாதங்களாவது கண்டிப்பாகத் தேவைப்படும். நம் ராஜ்ஜியத்திலேயே பயணம் செய்து கொண்டிருப்பவனைப் பிடிக்க நாம் பெரிதாகச் சிரமப்பட வேண்டியதில்லை. ஒருசிலர் கண்களிலிருந்து சிவாஜி தப்ப முடியும். ஆனால் எல்லார் கண்ணிலும் இருந்து அவன் நிச்சயம் தப்ப முடியாது.  அவனைப் பிடித்து நம்மிடம் ஒப்படைப்பவர்களுக்கு அவர்கள் கனவிலும் நினைத்திராத அளவு தங்கமும், வெள்ளியும், செல்வமும், பூமியும் வெகுமதியாக அளிக்கப்படும் என்று உடனே அறிவியுங்கள். இந்தச் செய்தி நம் ராஜ்ஜியத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று எட்ட வேண்டும்.”

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, March 26, 2020

இல்லுமினாட்டி 42


விஸ்வம் நேரடியாகத் தேர்ந்தெடுத்து வேலை வாங்கிய ஆட்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவே. ஏனென்றால் அவனிடம் பாஸ் மார்க் வாங்குவது யாருக்கும் சுலபமில்லை. அசாதாரணத் திறமையும், உறுதியான நிலைப்பாடும் இல்லாத ஆட்களை அவன் மனிதர்களாக மதித்தது கூடக் கிடையாது. அவன் தேர்ந்தெடுத்த ஆட்கள் கூட ஒருவருக்கொருவர் தெரிந்து வைத்திருப்பதையும், பரிச்சயமாவதையும் அவன் அனுமதித்தது கிடையாது. அவனுடைய ஆள் ஒருவன் எதிரியிடம் மாட்டிக் கொண்டால் அந்த ஆள் மூலம் விஸ்வத்தின் மற்ற ஆட்களையும் எதிரி அறிந்து கொள்வது அவனுக்கு உடன்பாடானதல்ல. அவன் எல்லா ரகசியங்களையும் கச்சிதமாகக் கட்டிக் காப்பாற்ற இந்த எச்சரிக்கை உணர்வு இன்று வரையும் உதவி இருக்கிறது. இப்போது மனோகர் மாட்டிக் கொண்ட போதும் அவன் மூலம் பெரிய ரகசியங்கள் கசிய வாய்ப்பில்லை என்ற நம்பிக்கை அவனுக்கு உண்டு. மனோகர் மாட்டிக் கொண்டது அவனுக்கு அவமானமே தவிர ஆபத்தல்ல.

டேனியலின் உடலுக்குள் வந்த பிறகு, ஓரளவு பாதுகாப்பான இடத்திற்கும் வந்து சேர்ந்த பிறகு, புதிய உடலின் பலவீனங்களைப் பொருட்படுத்தாத அளவு ஆன பிறகு விஸ்வம் தெளிவாகச் சிந்திக்கும் மனநிலையை எட்டி இருக்கிறான்.  க்ரிஷின் பலவீனமானமாக அவன் குடும்பத்தை நினைத்து அதன் மூலம் அவனைத் தாக்க முடிவு செய்த பிறகு திட்டங்கள் பல யோசித்து முடிவில் அதில் ஒரு  அருமையான திட்டத்தை விஸ்வம் தேர்ந்தெடுத்தான். அதை நிறைவேற்றக் கச்சிதமான நபராக அவனால் ஒரே ஒருத்தியைத் தான் நினைக்க முடிந்தது. அவள் தான் சிந்து!

அவன் அவளைத் தேர்ந்தெடுத்தது கூட வழக்கமான முறையில் அல்ல. அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதே ஒரு சுவாரசியமான நிகழ்வு தான். அந்த நிகழ்வை விஸ்வம் நினைவுபடுத்திக் கொள்ளும் போதே அவன் முகத்தில் சிறிய புன்னகை அரும்பியது...

விஸ்வம் சிந்துவை முதல் முதலில் சந்தித்தது இரண்டு வருடங்களுக்கு முன், மும்பை விமான நிலையத்தில். அப்போது அவளுக்கு வயது 21 தான் முடிந்திருந்தது. மிக அழகான கல்லூரிப் பெண்ணாக இருந்தாள். அவளுக்கு நுனி நாக்கு ஆங்கிலப் புலமை இருப்பது அவள் அருகில் இருந்த ஒரு வயதான பெண்மணியுடன் பேசிக் கொண்டிருந்ததில் தெரிந்தது.  அன்று விஸ்வம் ஒரு பணக்கார மார்வாடி வியாபாரியின் வேடத்தில் இருந்தான். அவன் கழுத்தில் கனமான தங்கச் சங்கிலியும், விரல்களில் ஏழு மோதிரங்களும் அணிந்திருந்தான். அவனுடைய கனமான பர்ஸ் ஜிப்பா பாக்கெட்டில் புடைத்துக் கொண்டிருந்தது.

அவள் எண்ணங்களைப் படிக்காமல் இருந்திருந்தால். அவன் அன்று அவளை ஒரு பொருட்டாகவே நினைத்திருக்க மாட்டான் அருகிலுள்ள வயதான பெண்மணியிடம் இந்தியாவில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றிக் காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்த போதும் அவள் மனதில் அவன் பர்ஸைப் பற்றித் தான் தீவிரமாக நினைத்துக் கொண்டிருந்தாள்.   ’இந்த சேட்டின் பர்ஸை இன்று அடித்து விட வேண்டும்’ என்று அவள் தமிழில் எண்ணியதை அவனால் படிக்க முடிந்த போது அவன் திகைப்படைந்தான். யாரையும் தோற்றத்தை வைத்து எடை போட முடியாது என்றாலும், அவனே ஒரு வேடத்தில் தான் இருக்கிறான் என்றாலும் ஒரு திருட்டுப் பெண் என்று இம்மியும் யூகிக்க முடியாதபடி அவள் தோற்றத்திலும், பேச்சிலும் இருந்த கண்ணியம் அவனை அசர வைத்தது.

அவன் மெல்ல சூட்கேசுடன் எழுந்து பாத்ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவளும் அந்தப் பெண்மணியிடம் ஏதோ காரணம் சொல்லி விட்டு எழுந்து பின்னால் வந்தாள். எதிரில் வேறிரண்டு முதியவர்கள் பேசியபடி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களை விஸ்வம் கடக்கையில் அவளும் விஸ்வத்தைக் கடந்தாள். அடுத்த வினாடி விஸ்வத்தின் பர்ஸ் அவள் கையில் இருந்தது. அதற்கடுத்த வினாடி விஸ்வத்தின் இரும்புக்கரம் அவள் கையை பர்ஸோடு இறுக்கிப் பிடித்தது. அந்தக் கணத்தில் அவள் முகத்தில் பேரதிர்ச்சி விரிந்தது.  ’பாவி எப்படிக் கண்டுபிடித்தான்’ என்று மனதில் அவள் தமிழில் கூவியது தெரிந்தது.

ஆனால் அடுத்த கணம் அவள் சுதாரித்துக் கொண்டாள். “சார். உங்கள் பர்ஸை அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டீர்கள். இந்தாருங்கள்” என்று தூய ஹிந்தியில் அவள் அலட்டாமல் அன்பாகச் சொன்னாள்.  

அவர்கள் அருகே வந்திருந்த முதியவர்கள் நடந்தது எதையும் கவனித்திருக்கவில்லை. அவள் பேச்சையும், இருவர் பிடியிலும் இருந்த பர்ஸையும் பார்த்து இருவரில் ஒரு முதியவர் விஸ்வத்திடம் சொன்னார். “இந்தக் காலத்திலும் இப்படி நல்ல பெண்கள் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது”

விஸ்வத்தால் அந்தப் பெண்ணைச் சிலாகிக்காமல் இருக்க முடியவில்லை. இப்படியொரு அசாத்தியத் திறமையையும், துணிச்சலையும், சமயோசிதத்தையும் அவன் இது வரை எந்தப் பெண்ணிடமும் பார்த்ததில்லை.  அவனைத் தவிர யார் இருந்திருந்தாலும் அந்தப் பர்ஸை அவளிடம் கண்டிப்பாகப் பறி கொடுத்திருப்பார்கள். அவளைத் தவிர வேறு யாராக இருந்தாலும் பிடிபட்டவுடன் தப்பிக்க வழி தெரியாமல் திணறிப் போயிருப்பார்கள்.

விஸ்வம் நாடகத்தைத் தொடர்ந்தான். “நன்றி மகளே” என்று ஹிந்தியில் சொன்னபடி தன் பர்ஸை மீண்டும் பைஜாமா பாக்கெட்டில் நுழைத்து விட்டுச் சொன்னான். “வா மகளே. காபி வாங்கித் தருகிறேன்...”

அவள் மனதினுள் ’ஆளை விடுடா சாமி’ என்று முணுமுணுத்தது விஸ்வத்துக்குத் தெரிந்தது. ஆனால் ”பரவாயில்லை அங்கிள் வேண்டாம்” என்று சொல்லி விட்டு அவள் நகரப் பார்த்தாள்.   

விஸ்வம் அவள் கையை இறுக்கிப் பிடித்தபடி சொன்னான். “நன்றி தெரிவிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடு மகளே.”

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெரியவர்களில் மற்றொருவர் அவளிடம் அன்பாகச் சொன்னார். “நல்ல பெண்ணாக இருக்கிறாய். அவர் மனதைப் புண்படுத்தாமல் போய் காபி குடியம்மா.”

‘சனியன் விடமாட்டான் போலிருக்கிறதே’ என்று விஸ்வத்தைப் பார்த்து மனதில் சொல்லிக் கொண்டவள் அந்தப் பெரியவரைப் பார்த்து அன்பான புன்னகையை உதிர விட்டு ”சரி” என்றாள்.

அந்தப் பெரியவர்கள் கடந்து போய் விட்டார்கள். விஸ்வத்துடன் அவள் அலட்டாமல் அமைதியாக வந்தாள். இருவரும் ரெஸ்டாரண்டில் அமர்ந்தார்கள். விஸ்வம் தமிழில் அவளிடம் கேட்டான். “என்ன சாப்பிடுகிறாய்?”

அவள் ஒரு கணம் திகைத்து விட்டுச் சொன்னாள். “காபி

காபி ஆர்டர் செய்து விட்டு விஸ்வம் அவளைக் கேட்டான். “உன் பெயர் என்ன?”

அவள் அமைதியாகத் தன் உண்மையான பெயரையே சொன்னாள். “சிந்து”. பின் கேட்டாள். “உங்கள் பெயர்?”

அவன் அப்போது தரித்திருந்த வேடத்தின் பெயரையே சொன்னான். “விஸ்வாஸ்ஜி”

இப்போது நினைத்தாலும் அவளுடைய அசாத்தியத் துணிச்சலும், சமயோசித புத்தியும் அவனுக்குப் புன்னகை வர வைத்தன. க்ரிஷ் வீட்டில் நுழைந்து அலட்டாமல் எதையும் செய்ய அவளால் நிச்சயமாக முடியும்...

விஸ்வம் ஜிப்ஸியிடம் சொன்னான். “நான் இந்தியாவில் ஒருத்தியிடம் பேச வேண்டும்”

ஜிப்ஸி மெல்லச் சொன்னான். “பேசுவது பெரிதல்ல. அவள் மூலம் எதிரிகள் உன்னை இங்கே கண்டுபிடிக்க முடிந்தால் அது ஆபத்து அல்லவா?”

விஸ்வம் சொன்னான். “என் ஆட்கள் மூலமாக யாரும் என்னைக் கண்டுபிடித்து விட முடியாது. எல்லா விதங்களிலும் சோதித்துப் பார்க்காமல் யாரையும் நான் தேர்ந்தெடுத்ததில்லை... உன் போன் மூலமாக என்னைக் கண்டுபிடிக்கும்படி ஆகிவிடாதல்லவா?”

ஜிப்ஸி தன் போனை எடுத்து அவனிடம் கொடுத்தபடி சொன்னான். “இது பாதுகாப்பானது தான்”

விஸ்வம்  சிந்துவின் அலைபேசி எண்ணை அழுத்தினான். அவள் உடனே எடுத்துப் பேசி விடவில்லை. நாலைந்து முறை அடித்த பிறகு தான் எடுத்தாள். “ஹலோ”

விஸ்வம் சொன்னான். “சிந்து. நான் விஸ்வாஸ்ஜி பேசுகிறேன்”

அவள் மெல்லச் சொன்னாள். “இது ராங் நம்பர் என்று நினைக்கிறேன்”

அவள் அவனுடைய குரலின் மாற்றத்தை வைத்துத் தான் அப்படிப் பேசுகிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது. அவன் சொன்னான். “குரல் தான் மாறி இருக்கிறது. ஆள் மாறவில்லை சிந்து. மும்பையில் நீ பர்ஸ் எடுத்துக் கொடுத்த அதே விஸ்வாஸ்ஜி தான் பேசுகிறேன்.”

அவள் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். அவள் மௌனம் அவனை மேற்கொண்டு சொல் என்றதாய் அவன் உணர்ந்தான். அவன் சொன்னான். “புதிய வேலை. ஐந்து பேரைப் பற்றிய விவரங்களை நான் மெயிலில் அனுப்புகிறேன். நீ செய்ய வேண்டியதெல்லாம் இது தான்....”

(தொடரும்)
என்.கணேசன்

Wednesday, March 25, 2020

முந்தைய சிந்தனைகள் 56


சிந்திக்க சில விஷயங்கள்- என் நூல்களில் இருந்து...













என்.கணேசன்



Monday, March 23, 2020

சத்ரபதி 117


மாளிகையை விட்டு வெளியே வந்த பின்னும், கூடைகளைத் தூக்கிச் சென்ற பணியாளர்கள் மற்றவர்கள் சந்தேகத்தைத் தூண்டும்படியான அவசரத்தையோ, பதட்டத்தையோ காட்டவில்லை. வழக்கம் போல் அலுப்பு கலந்த நிதானத்துடன் சென்றார்கள். முதல் கூடை ஆக்ராவின் மசூதிக்கு முன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு கூடையைத் திறந்த பணியாளர்கள் ஏழை எளியவர்களுக்கு பழங்களையும் இனிப்புகளையும் வினியோகம் செய்ய ஆரம்பித்தார்கள். இரண்டாவது கூடை கடைவீதியில் திறக்கப்பட்டு அங்கேயே வினியோகம் ஆனது.

மற்ற கூடைகள் நகர எல்லைக்குக் கொண்டு செல்லப்பட்டன. நகரவீதிகள் இந்த பழம், இனிப்பு வினியோகங்களுக்குப் பழக்கப்பட்டிருந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை. சிவாஜியும் சாம்பாஜியும் இருந்த மூன்றாவது, நான்காவது கூடைகள் எல்லையைத் தாண்டிச் செல்ல ஐந்தாவது கூடை எல்லையிலேயே வைக்கப்பட்டது.  ஐந்தாவது கூடை அங்கேயே திறக்கப்பட்டது.

எல்லைப்பகுதியில் முன்பே மூன்று குதிரைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்தக் குதிரைகளை நேற்றே வணிகர் வேடத்தில் இருந்த சிவாஜியின் ஆள் வாங்கியிருந்தான். அவன் தான் அந்தக் குதிரைகளுடன் அங்கு நின்றிருந்தான். அவன் கையில் பெரிய போர்வைகள் இருந்தன. அப்பகுதியில் அதிக ஆள்நடமாட்டமில்லை. மதுராவை நோக்கிச் செல்லும் யாத்ரீகர்கள், வணிகர்கள் தான் அவ்வப்போது எல்லையைக் கடந்தார்கள். ஆட்கள் அதிகமாய் அந்தப் பாதையில் செல்லாத போது அவசர அவசரமாக அந்தக் கூடைகள் திறக்கப்பட்டன. கூடையிலிருந்து வெளிவந்த சிவாஜிக்கும், சாம்பாஜிக்கும் அந்தப் போர்வைகள் தரப்பட்டன. குதிரையேறிய அவர்கள் இருவரும் போர்வையால் தங்கள் தலையையும் முகத்தையும் சற்று மறைத்துக் கொண்டார்கள். அந்தக் குதிரைகளை அங்கே கொண்டு வந்து நிறுத்தியிருந்த சிவாஜியின் ஆளும் மூன்றாவது குதிரையில் ஏறிக் கொண்டான். மூன்று குதிரைகளும் அங்கிருந்து மதுரா நோக்கி காற்றாய் பறந்தன.

ஒன்றுமே நடக்காதது போல் அந்த இரண்டு கூடைகளையும் எடுத்துக் கொண்டு வந்து ஐந்தாம் கூடை அருகே வைத்த பணியாளர்கள் அதிலிருந்தவற்றையும் வினியோகிக்க ஆரம்பித்தார்கள்.

சிவாஜியைச் சிறைப்படுத்தி இருந்த மாளிகையின் காவலர்கள் வழக்கம் போல் இரவு நேரத்தில் ஒரு முறை சிவாஜி இருந்த அறைக்கு வந்து பார்த்தார்கள். சிவாஜியின் அறையில் சிவாஜியின் படுக்கையில் ஹீராஜி முழுவதுமாகப் போர்த்திக் கொண்டு சிவாஜியைப் போலவே படுத்துக் கொண்டிருந்தான். அவன் கை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. அந்தக் கைவிரலில் சிவாஜியின் முத்திரை மோதிரம் தெளிவாகத் தெரிந்தது. ஹீராஜியின் கால்மாட்டில் ஒரு பணியாள் அமர்ந்து ஹீராஜியின் கால்களை அமுக்கியபடி அமர்ந்திருந்தான்.

அந்தப் பணியாள் காவலர்களைப் பார்த்து ‘சத்தம் செய்யாதீர்கள்’ என்று சைகை காண்பித்தான். சிவாஜியின் உடல்நிலை பழையபடி மோசமாகி விட்டது போலிருக்கிறது என்று நினைத்தவர்களாய் அவர்கள் தலையசைத்து விட்டுச் சத்தமில்லாமல் நகர்ந்தார்கள்.

சிவாஜி மதுராவை அடைந்த போது இருட்ட ஆரம்பித்திருந்தது. மதுராவில் யமுனை நதிக்கரையில் சிவாஜியின் அதிகாரி ஒருவனின் உறவினர்கள் மூவர் சிவாஜிக்காகக் காத்திருந்தார்கள். அண்ணாஜி, காசிஜி, விஷால்ஜி என்ற பெயர்களுடைய அந்தணர்களான அந்த மூவரும் தங்களது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு நாவிதனையும் அழைத்து வந்திருந்தார்கள்.

அந்த நதிக்கரையில் பக்தர்கள் புனித நீராடும் பகுதிகள் தொலைவில் இருந்தன. சிவாஜிக்காக அவர்கள் காத்திருந்த இடத்தில் அவர்களைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. சிவாஜி சென்றிறங்கியதும் அவன் தலைமுடி, மீசை தாடி எல்லாம் வேகவேகமாகச் சவரம் செய்யப்பட்டது. யமுனை நதியில் குளித்தெழுந்த அவன் உடல் முழுவதும் சாம்பல் பூசிக் கொண்டு பைராகியாக அவதாரம் எடுத்தான். அக்காலத்தில் உடல் முழுவதும் சாம்பல் பூசிக் கொண்டு சிவனைத் துதித்துக் கொண்டே நாடு எங்கும் புண்ணியத் தலங்களுக்குப் போய்க்கொண்டிருக்கும் பைராகிகள் நாடெங்கும் பெருமளவில் இருந்ததால் அவர்களோடு ஒருவனாக உருமாறித் தன் ராஜ்ஜியம் செல்ல சிவாஜி முடிவெடுத்திருந்தான்.

சாம்பாஜியின் தலைமுடியும் சவரம் செய்யப்பட்டது. அவனும் தந்தையுடன் சேர்ந்து குளித்தான். சிவாஜி யமுனைக்கரையில் நின்று கொண்டு இறைவனை மனதார வணங்கினான்.  நதியில் மூழ்கிக் குளிக்கும் வாய்ப்பு கிடைத்த சாம்பாஜி மிக உற்சாகமானான். அவன் இருக்கின்ற நிலவரம் புரியாமல் நதியில் நீந்தி விளையாட ஆரம்பித்தான்.

ஒரு கணம் சிவாஜி சாம்பாஜியிடம் தன்னையே பார்த்தான். அவனுடைய இளமைப்பருவம் உயிர்ப்புடன் அவன் மனக்கண்ணில் வந்தது. ஒரு கணம் அவன் தாதாஜியாகவும், சாம்பாஜி அவனாகவும் தோன்றினார்கள். சிவாஜிக்கு அவன் ஆசிரியர் தாதாஜி கொண்டதேவ் நினைவுக்கு வந்தார். அவன் சிறுவனாக இருந்த நாட்களில் மூதா நதியில் அவர் குளித்து சந்தியாவந்தனம் செய்து கொண்டிருக்க அவன் நதி நீரில் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி நினைவுக்கு வந்தது. அவன் அவர் சொல்லிக் கொடுத்திருந்த மந்திரங்களை உச்சரித்தான். மனம் இது வரை இருந்த படபடப்பு மாறி அமைதியாகியது. அவனது இளமைக்காலமும், ஆசிரியரின் நினைவும் சேர்ந்து அவன் மனதை லேசாக்க ஓடுகின்ற யமுனையையே பார்த்தபடி சிவாஜி நீண்ட நேரம் நின்றான்.  



றுநாள் காலை போலத்கான் மாளிகைக்குள் நுழைந்த போது முந்தின தினத்தில் அவன் காவலர்கள் கண்ட காட்சியையே கண்டான். முத்திரை மோதிரம் வெளியே தெரியும்படி கைநீட்டிப் படுத்திருந்தது சிவாஜி அல்ல என்று அவனுக்கும் புலனாகவில்லை. ஹீராஜியின் காலை அமுக்கியபடி அமர்ந்திருந்த பணியாள் காவலர்களுக்குக் காட்டிய சைகையையே போலத்கானுக்கும் காட்டினான். சத்தமிட வேண்டாம் என்பது போல் பணிவு கலந்து அந்தப் பணியாள் உதட்டில் விரலை வைத்துச் சைகை காட்டியதை போலத்கான் தவறாக நினைக்கவில்லை. சிவாஜி நேற்றே களைப்பில் இருந்ததை அவன் கவனித்திருந்தான். சென்ற வாரம் போல் இப்போதும் சிவாஜி கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கிறானோ? இல்லாவிட்டால் இந்த நேரத்தில் சிவாஜி தூங்கிக் கொண்டிருக்க மாட்டான்.

போலத்கானுக்குப் பொழுது போகவில்லை. அவன் வெளியே வந்தமர்ந்து காவலர்களை விசாரித்தான். நேற்றிரவிலும் சிவாஜி படுத்தபடியே இருந்ததாக அவர்கள் சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் ஹீராஜியும், காலை அமுக்கிக் கொண்டிருந்த பணியாளும் வந்தார்கள். ஹீராஜி மிகுந்த மரியாதையுடன் “வணக்கம் காவல் தலைவரே” என்று சொன்னான்.

“வணக்கம் ஹீராஜி. அரசருக்கு என்ன ஆயிற்று?”

“பழையபடி வயிற்றுவலி ஆரம்பித்து விட்டது தலைவரே. நேற்றிரவெல்லாம் துடித்துப் போய் விட்டார். பழைய மருந்தையே கொடுத்தேன். அது மெல்ல வேலை செய்திருக்கிறது போலத் தெரிகிறது. அதிகாலையில் தான் மீண்டும் உறங்க ஆரம்பித்திருக்கிறார். அவர் உறக்கம் முழுமையாக இருந்தால் எழும் போது முற்றிலும் குணமாகி விடுவார் என்று தோன்றுகிறது. அதனால் அவரைத் தயவு செய்து யாரும் எழுப்பாதீர்கள்”

போலத்கான் சொன்னான். “கவலைப்படாதீர்கள். அரசர் உறக்கத்தைக் கலைக்க மாட்டோம். ஆழமான உறக்கம் வந்தாலே போதும் பாதி நோய் குணமாகி விடும்….”

“உண்மை தான் காவலர் தலைவரே. முந்தாநாள் தானதர்மங்கள் போதாமல் போனது அவருக்கு உறுத்தலாக இருக்கிறது. அதனால் தான் வயிற்று வலி திரும்பவும் வந்திருக்கிறதோ என்று சந்தேகப்படுகிறார்….”

போலத்கான் இடி இடிப்பதைப் போலச் சிரித்தான். “தானதர்மங்கள் செய்வது போதாமல் இருந்தால் வயிற்று வலி வருமானால் பாதிக்கும் மேல் நம் ஜனத்தொகை நிரந்தர வயிற்று வலியில் அல்லவா இருந்திருக்கும்”

ஹீராஜியும் சிரித்தான். “தாங்கள் சொல்வதும் சரி தான் காவலர் தலைவரே. எதற்கும் கோயிலில் அரசர் பெயரில் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்து விட்டு வருகிறேன். நான் வருவதற்கு முன் அவராக விழித்து எழுந்து வந்தால் அவரிடம் தெரிவியுங்கள்….”


போலத்கான் தலையசைத்தான். அவர்களும் வெளியேறினார்கள்.

(தொடரும்)
என்.கணேசன்

Friday, March 20, 2020

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?





டிசம்பர் 2019ல் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் (COVID-19) இன்று மற்ற உலக நாடுகளுக்கெல்லாம் பரவி உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு இன்னும் அதிகாரபூர்வமான மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலைமையில் ஊடகங்களில் பலரும் பலவிதமான பயமுறுத்தல்களையும், வைத்தியங்களையும் பரப்பி குழப்பங்களையும், பீதியையும் மக்களிடையே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு வந்தவண்ணம் இருக்கும் ஏராளமான தகவல்களில் எத்தனை உண்மை, எத்தனை பொய், எத்தனை அவசியம், எத்தனை அனாவசியம் என்று நமக்குக் குழப்பமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் சொல்லும் தகவல்களில் மிக முக்கியமான, அடிப்படையாய் அறிய வேண்டிய தகவல்களை மட்டும் எளிமையாகவும் சுருக்கமாகவும் உள்ளது உள்ளபடி பார்ப்போம்.


அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், களைப்பு, வறட்டு இருமல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல், தொண்டை வலி, பேதி ஆகியவை. இவை ஆரம்பமாகி அதிகரித்துக் கொண்டே செல்வது தான் கொரோனாவின் தனித்தன்மையாக இருக்கிறது. உடலுக்குள் நுழைந்த பின் இரண்டு வாரங்கள் வரை இருக்கும் இந்த வைரஸ் பொதுவாக ஐந்து நாட்களுக்கு மேல் தான் அதிகமாய் பாதிக்க ஆரம்பிக்கிறது.


குணமாகுமா?

பாதிக்கப்படுபவர்களில் ஐந்து அல்லது ஆறு பேரில் ஒருவர் தான் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலவரம் தற்போது இருக்கிறது. மிக வயதானவர்கள், நோயெதிர்ப்புசக்தி குறைவானவர்கள், முன்பே பல நோய் பிரச்சினைகளின் காரணமாகப் பலவீனமாக இருப்பவர்கள் தான் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது. மற்றவர்கள், அதாவது சுமார் 80 சதவீதம் பேர், இரண்டு வாரங்கள் கழித்து மெள்ள குணமடைய ஆரம்பிக்கிறார்கள்.

ஆண்டிபயாடிக் மருந்துகள் இந்த வைரஸிலிருந்து பாதுகாக்காது என்கிறார்கள். பலர் சொல்லும் இயற்கை மருத்துவமும் முழுவதுமாக உடனடியாகக் குணப்படுத்தும் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.


பரவுவது எப்படி?

முக்கியமாகவும், அதிகமாகவும் பரவுவது பாதிக்கப்பட்டவர்களின் இருமல் மற்றும் தும்மலாலும் தான். அந்தச் சமயங்களில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தெறிக்கும் நீர்த்திவலைகள் அடுத்தவர் கையில் படநேர்ந்து, அவர்கள் கையால் வாய், மூக்கு, கண்களைத் தொட்டு அந்த வகையில் அவர்கள் உடலுக்குள்ளும் அந்த வைரஸ் பிரவேசிக்கிறது. பின் பாதிக்கிறது. மற்ற வகையில் இந்த கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்கிறார்கள்.


பாதுகாத்துக் கொள்வது எப்படி?     

இந்த வைரஸ் நம் உடலுக்குள் நுழைய முடிவது நம் கைகள் மூலமாகத் தான் என்பதால் கைகளை அடிக்கடி நன்றாகச் சோப்பு போட்டுக் கழுவிக் கொள்வது முக்கியமாகக் கருதப்படுகிறது. ஆல்கஹால் கலந்த சானிடைசர்கள் வைரஸ்களை அழிக்க முடிந்தவை என்பதால் அவற்றைக் கைகளில் தடவியும் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

கைகளைக் கழுவாமல் வாய், மூக்கு, கண்களுக்குக் கொண்டு செல்லக்கூடாது.

இருமும் அல்லது தும்மும் மனிதர்களிடமிருந்து குறைந்தபட்சமாக நான்கடிகளாவது தள்ளி நிற்பது நல்லது. ஐந்தாறு அடிகள் தள்ளி நிற்பது நல்ல பாதுகாப்பு.

கைகுலுக்குவதைத் தவிருங்கள். அதற்குப் பதிலாகக் கைகூப்பி வணக்கம் தெரிவியுங்கள்.

இந்த வைரஸின் தாக்கம் தணியும் வரை பலர் கூடும் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது உத்தமம்.

எந்தெந்தப் பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதை அறிந்து அந்த இடங்களுக்குச் செல்வதையும் முடிந்த வரை தவிருங்கள்.



மாஸ்க்குகள் அவசியமா?


இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, பாதிக்கப்படுபவர்களுடன் நெருங்கியிருக்க வேண்டிய சூழலில் இருந்தாலோ (மருத்துவர்கள், நர்ஸ்கள், உடனிருக்கும் உறவினர்கள்) மாஸ்க்குகள் அணிவது அவசியம். அது நோய்க்கிருமிகளை மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க உதவும். மற்றவர்கள் அணிய வேண்டிய அவசியமில்லை.


இப்படிப் பரவாது

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து காற்றில் பரவாது. அவர்கள் இருந்த இடத்திற்குச் சிறிது நேரம் கழித்துச் செல்வதாலோ, அவர்கள் பயன்படுத்திய பொருள்களை உலர்ந்த நிலையில் பிறகு நாமும் பயன்படுத்துவதாலோ இந்த வைரஸ் தொற்றிக் கொள்ள வழியில்லை என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றாலும் கூட, பாதுகாப்பாகத் தொலைவில் இருக்கும் வரை பயப்பட வேண்டியதில்லை.

பயம் எதற்கு?

கொரோனா வைரஸ் பரவும் வேகம் தான் இப்போது அனைவரையும் பயப்பட வைக்கிறது. பாதிக்கப்படும் நபர்களில் இருபது சதவீதம் ஆட்கள் இறக்கவும் கூடும், மீதி ஆட்கள் மூலம் இந்த வைரஸ் அதிவேகமாகப் பரவவும் கூடும் என்கிற நிலைமை நம் நாட்டைப் போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்துவது இயல்பே. எனவே நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், அடுத்தவர்களுக்குப் பரப்பாமல் இருக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம்.


வந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

கொரோனா வைரஸ் பாதிப்பின் தன்மைகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். பின் நம்மைக் குணப்படுத்திக் கொள்ளும் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். அதோடு நம் மூலமாக அடுத்தவர்களுக்குப் பரவாதபடி நாம் தனிமையில் இருக்க வேண்டும். தவிர்க்க முடியாமல் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தாலும் எட்டி இருந்து எந்த வகையிலும் மற்றவர் பாதிக்கப்படாதபடி பார்த்துக் கொள்வது முக்கியம்.


முக்கியமாக இருமும் போதோ தும்மும் போதோ நீர்த்திவலைகள் தெறிக்காதபடி கைக்குட்டையால் மறைத்துக் கொள்வது மிக அவசியம்


பயணம் போவதோ, ஆட்கூட்டத்தில் சேர்வதோ கூடவே கூடாது. மிக நெருக்கமாக இருக்கையில் மற்றவர்களூக்கும் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

பாதிக்கப்படுபவர்கள் வெகுசிலராக இருக்கும் வரை தான் அரசாங்கமும் தனிமைப்படுத்தி குணப்படுத்த முடியும். ஆயிரக்கணக்கில் ஆகி விட்டால் அதற்கான வசதியும், இடமும் இங்கு கிடையாது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. எனவே பரவாமல் தடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.


சமூக விலகல் ஏன் முக்கியம்?

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபட்டவர்களுக்கு அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்க சுமார் ஐந்து நாட்கள் வரை ஆகலாம். ஆனால் தெரிய ஆரம்பிப்பதற்குள் ஒவ்வொருவரும் எத்தனையோ பேருக்குப் பரப்பிவிட வாய்ப்பிருக்கிறது. அந்த ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தெரிய ஆரம்பிப்பதற்குள் மற்றவர்களுக்குப் பரப்பிவிடவும் வாய்ப்பிருக்கிறது. இப்படி ஒருவரால் சில நாட்களில் பல்லாயிரம் பேர் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் நலமாய் இருப்பதாய் நினைப்பவர்களும் நிலைமை கட்டுக்குள் வரும் வரை வெளியே செல்வதைத் தவிர்த்து தங்கள் வீடுகளிலேயே இருந்து கொள்வது அவர்களுக்கும் பாதுகாப்பு, சமூகத்திற்கும் பாதுகாப்பு. 



இந்த வகையில் நாம் அனைவரும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருந்தால் அதிகமாக கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பில்லை. குறைந்த அளவில் பாதிக்கப்படுபவர்களும் நல்ல முறையில் சிகிச்சை பெற்று குணம் பெற்று விட முடியும்.

என்.கணேசன்


Thursday, March 19, 2020

இல்லுமினாட்டி 41


க்ஷயின் உள்ளுணர்வு அவனைத் தப்பித்துச் செல்லும்படி சொல்லக் காரணம் இருந்தது. க்ரிஷைத் தவிர அங்கே முன்பும், பின்பும் வந்தமர்ந்த புதியவர்கள் எட்டு பேரும் மிகக் குறுகிய காலத்தில் விரைந்து செயல்படக்கூடியவர்களும், கச்சிதமாகக் கொலை கூடச் செய்து விட்டு அலட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து மறைந்து விட முடிந்தவர்களுமான மனிதர்கள் என்பதை முதல் பார்வையிலேயே அக்ஷய் அனுமானித்தான். பொதுவான கைதேர்ந்த உளவாளிகள், காவல்துறையினர் வகையையும் மீறிய உயர் ரகப் பாதுகாவலர்கள் அல்லது கொலையாளிகள் வகையில் சேர்க்கக்கூடிய மனிதர்கள் அவர்கள் என்பதை அவனால் கணிக்க முடிந்தது. அவர்கள் அங்கே வர அவன் தான் காரணம் என்பது புரிந்தது.  இது போன்ற ஆபத்தான மனிதர்களுடன் எந்த விதத்திலும் சம்பந்தப்பட அவன்  விரும்பவில்லை. உள்ளுணர்வு எச்சரித்தவுடன் உடனடியாகத் தப்பிச் செல்ல அவன் முயலாததற்குக் காரணமாக அந்த எட்டு பேருடன் வந்திருந்த அந்த இளைஞன் இருந்தான்

அந்த இளைஞனை அவன் எங்கேயே பார்த்திருக்கிறான். அந்த முகம் நன்றாகப் பரிச்சயமான முகம்.... மூளையைக் கசக்கி யோசித்ததில் சில வினாடிகளில் பதில் வந்தது. முதலமைச்சரின் மகன். இளைய மகன். பெயர் க்ரிஷோ கிரிஷோ? அவன் ஜீனியஸ் என்றும், நல்ல பண்பாளன் என்றும் பத்திரிக்கைகளில் படித்திருந்ததாக நினைவு. தந்தையையும், சகோதரனையும் போல மீடியாக்களில் அடிக்கடி இடம் பெறும் ஆள் அல்ல. இவன் எதற்கு இந்த எட்டுப் பேருடன் இங்கே வந்தான் என்று அக்ஷய் யோசித்தான். முதலமைச்சரின் மகன் என்பதால் அவனுடைய பாதுகாவலுக்கு வர வேண்டிய அரசாங்கப் பாதுகாவலர் ஒருவர் கூட அந்த எட்டு பேரில் இல்லை. அது அக்ஷய்க்கு விசித்திரமாகப் பட்டது. யாரவர்கள்? அவனுடன் இங்கே ஏன் வந்திருக்கிறார்கள்?

இத்தனை அவன் யோசித்த போதும் அவனைக் கவனித்துக் கொண்டிருந்த க்ரிஷுக்கு அவன் அவர்களைப் பார்த்தது போல் கூடத் தெரியவில்லை. மாணவர்கள் பயிற்சியில் இருக்கும் குறைபாடுகளை அக்ஷய் அடிக்கடி சுட்டிக் காட்டித் திருத்தி சரியான ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த போது அவன் முழுக் கவனமும் மாணவர்கள் மேல் இருப்பது போல் தான் க்ரிஷுக்குத் தோன்றியது. மாணவர்களின் தவறைச் சுட்டிக் காட்டும் போது கூட அக்ஷய் சிறு முகச்சுளிப்பு கூட காட்டாததும், சிறிது கூட அமைதியிழக்காததும், ஏன், சலிப்பின் நிழல் கூட அந்த முகத்தில் படராதது க்ரிஷைப் பிரமிக்க வைத்தது.  அங்கே இருந்த வேறு சில பயிற்சியாளர்கள் கத்திக் கொண்டும், மாணவர்களைத் திட்டிக் கொண்டும் இருந்தார்கள். அக்ஷயின் குரல் கூட உயரவில்லை. எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது என்பது போலவோ, சம்பந்தம் இல்லாதவன் போலவோ பேரமைதியுடன் அவன் மைதானத்தில் இருந்ததை க்ரிஷ் கவனித்த போது அவனுக்கு அமானுஷ்யன் என்ற பெயர் பொருத்தமானதாகவே தோன்றியது.

க்ரிஷ் வைத்த கண் எடுக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்த அக்ஷய் அந்த எட்டு பேரில் ஐந்து ஆட்கள் மைதானத்தைத் தீவிரமாகக் கண்காணித்ததையும், மூன்று பேர் அப்படியே க்ரிஷைச் சுற்றிக் கண்காணித்ததையும் கவனித்தான்.  அவர்களில் இருவர் க்ரிஷை ஒருசில வினாடிகளில் எட்டும் தூரத்தில் தான் இருந்தார்கள்... அவர்கள் அனுமதி இல்லாமல் க்ரிஷை யாரும் நெருங்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தது.

முக்கால் மணி நேரத்தில் பயிற்சிகள் முடிந்தன. மாணவர்கள் தங்கள் பயிற்சியாளர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். அக்ஷயின் பொறுப்பில் இருந்த மாணவர்கள் அவனிடம் கை கொடுத்தும், கையாட்டியும் விடைபெற்றார்கள். அத்தனை முகங்களிலும் அன்பு கலந்த மரியாதையை க்ரிஷ் கவனித்தான். அந்த ஆத்மார்த்தம் மற்ற பயிற்சியாளர்களிடம் அவர்களது மாணவர்கள் காட்டவில்லை என்பதையும் க்ரிஷ் கவனித்தான். பயிற்சி மாணவர்களின் குடும்பத்தினரும், நண்பர்களும் அதிகமாக இருந்த பார்வையாளர் கூட்டமும் எழுந்து கலைய ஆரம்பித்தது.

க்ரிஷ் எழுந்து மைதான வாயிலருகே சென்று அக்ஷய்க்காகக் காத்திருந்தான். அக்ஷய் அவசரமில்லாமல், பதற்றமில்லாமல் நிதானமாக நடந்து வந்ததில் கூட ஒரு தாளலயம் இருந்தது போல் க்ரிஷுக்குத் தோன்றியது.   அவன் அருகே வந்த போது அவனை வழிமறித்து நின்று புன்னகையுடன் கைநீட்டி க்ரிஷ் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். “சார் நான் க்ரிஷ். உங்களைப் பார்க்கத் தான் சென்னையிலிருந்து வருகிறேன்...”

முதலமைச்சர் மகன், ஒரு எம் பி யின் தம்பி, அந்தப் பெருமைகளையோ, தன் அறிவு மற்றும் கல்வித் தகுதி பெருமையையோ சொல்லாமல் எளிமையாகத் தன் பெயரையும், ஊரையும் மட்டும் சொன்னது அவன் வித்தியாசமானவன் என்பதை உரக்கச் சொன்னது.

அக்ஷய் அமைதியாக அவன் கையைக் குலுக்கிச் சொன்னான். “நான் அக்ஷய். சொல்லுங்கள், என்ன விஷயம்?”


விஸ்வத்திடம் ஜிப்ஸி பாதாள அறையிலிருந்து மேலே வர ஏன் இவ்வளவு நேரம், இத்தனை நேரம் என்ன செய்து கொண்டிருந்தாய், என்ன பார்த்தாய் என்றெல்லாம் கேட்கவில்லை. விஸ்வமும் தான் கண்ட சுரங்கப்பாதை பற்றிச் சொல்லவில்லை. ஆனாலும் அவன் சுரங்கப்பாதை இருப்பதைக் கண்டுபிடித்திருப்பது ஜிப்ஸிக்குக் கண்டிப்பாகத் தெரியாமல் இருக்காது என்று விஸ்வம் நினைத்தான்.

ஜிப்ஸி அவனிடம் கேட்டான். “இனி என்ன செய்யப் போவதாய் உத்தேசம்?”

விஸ்வம் உடனே பதில் சொல்லவில்லை. அவனுடைய சக்திகளை மீட்டெடுப்பது தான் அவனுடைய முதல் உத்தேசம் என்றாலும் அதை ஜிப்ஸி கேட்கவில்லை என்பதை அறிவான். அது குறித்து அவனுக்கு எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. ஒளிந்து கொள்ள ஒரு தோதான இடமும் கிடைத்திருக்கிறது. அங்கே இப்போதைக்கு உடனடியாக எந்த ஆபத்தும் வரும் என்று தோன்றவில்லை. பழைய சக்திகளின் சூட்சுமங்களும், வழிமுறைகளும் இந்த மூளையிலும் அவன் பதித்து அறிந்து வைத்திருந்தாலும் இயல்பாகப் பிரயோகிக்க முடிகிற வரை அவனால் செயலற்று இருந்து விட முடியாது. இல்லுமினாட்டியும், க்ரிஷும் கண்டிப்பாகச் செயலற்றுச் சும்மா இருந்து விட மாட்டார்கள். தற்காப்பில் மட்டுமே விஸ்வம் இருந்து விட முடியாது. அவர்கள் அவனுக்கு எதிராக முழுமூச்சாக இறங்கி விடக்கூடாது. அதை அவன் அனுமதிக்க மாட்டான்.

இல்லுமினாட்டியைப் பொருத்த வரை தலையாய பிரச்சினை எர்னெஸ்டோ தான். ஆனால் அதிகார உச்சத்தில் இருக்கும் அவரை அவனால் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது. சக்திகளைத் திரட்டிக் கொண்ட பின்னரே அவரை அவனால் எதாவது செய்ய முடியும். க்ரிஷ் முதலமைச்சர் மகனாகவும் இல்லுமினாட்டியாகவும் மாறி இருப்பதால் அவனும் பாதுகாப்பாகவே இருக்கிறான். 

விஸ்வம் இப்போதைய சூழ்நிலையில் அவனால் செய்ய முடிந்தது என்னவெல்லாம் என்று  ஆழமாக யோசித்தான். கடைசியில் ஜிப்ஸியிடம் சொன்னான். “இல்லுமினாட்டியில் எர்னெஸ்டோவுக்கு எதிராகச் சிந்திக்க முடிந்தவர்கள், அடுத்த தலைவராக விரும்புபவர்கள் பற்றிய முழு விவரங்கள் நமக்கு வேண்டும் நண்பனே”

ஜிப்ஸி தலையசைத்தான். விஸ்வம் தன் பழைய உறுதியையும், தெளிவையும் ஓரளவு பெற்று விட்டது போலத் தான் அவனுக்குத் தோன்றியது. ”க்ரிஷ் விஷயத்தில் என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டான்.

இல்லுமினாட்டி பற்றியும் க்ரிஷ் பற்றியும் தான் அவன் யோசித்திருக்கிறான் என்பதை ஜிப்ஸி தெரிந்து வைத்திருக்கிறான், அதனால் தான் இல்லுமினாட்டி பற்றிச் சொல்லி முடித்ததும் க்ரிஷ் பற்றிக் கேட்கிறான் என்பதை விஸ்வம் மனதில் குறித்துக் கொண்டபடி  சொன்னான். “க்ரிஷின் மிகப்பெரிய பலம் அவனுடைய அறிவு. அவனுடைய மிகப்பெரிய பலவீனம் அவன் அன்பும், காதலும், குடும்பத்தின் மீது வைத்திருக்கும் பாசமும். அவன் பலத்தைக் குறைக்க வேண்டுமானால் நாம் அவன் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் அமைதியாகச் சிந்திக்க முடியாதபடி அவனுடைய பலவீனமான பகுதியில் தாக்க வேண்டும்...”

ஜிப்ஸி கேட்டான். “நீ யாரைச் சொல்கிறாய்? ஹரிணியையா, அவன் குடும்பத்து ஆட்களையா?”

ஹரிணியின் பெயரைக் கேட்டவுடன் விஸ்வம் ஒருவித கசப்புணர்வை உணர்ந்தான். அவளைக் கடத்திய பிறகும் அசராத அவள் அழுத்தத்தையும், அவள் மனோகரிடம் பேசிய திமிர்ப் பேச்சையும் அவனால் மறக்க முடியாது. அவளை க்ரிஷின் பலவீனமான பகுதியாக அவனால் நினைக்க முடியவில்லை. விஸ்வம் சொன்னான். “அவன் குடும்பத்தைச் சொல்கிறேன். முக்கியமாக அவன் நேசிக்கும் அண்ணன், அம்மா ...”

(தொடரும்)
என்.கணேசன்