சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 30, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 44


மைத்ரேயனும் அவனுடைய பாதுகாவலனும் இப்போதும் சம்யே மடாலயத்தில் தான் இருக்கிறார்கள் என்கிற தகவலை மாராவிடம் தெரிவித்தவன் ஏதேனும் ஒரு உத்தரவை உடனடியாக மாராவிடம் இருந்து எதிர்பார்த்தான். ஆனால் மாராவிடமிருந்து உத்தரவு எதுவும் வரவில்லை. மாறாக ஒரு கேள்வி தான் வந்தது.

“இத்தனையும் நடந்த போது மைத்ரேயன் என்ன செய்து கொண்டிருந்தான்?

“தெரியவில்லை. அந்த சம்பவத்தைப் பற்றிக் கேட்ட போது அங்கிருந்தவர்கள் எல்லாரும் அந்தப் பாதுகாவலனையும் நம் ஆளையும் தான் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அந்த சிறுவனை யாரும் கவனிக்கவில்லை.

நீங்கள் அவனைப் பார்த்த போது அவன் எந்த மனநிலையில் இருந்தான்?

தெரியவில்லை. ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏதாவது விதத்தில் பாதிக்கப்பட்டவன் இப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். எதுவுமே நடக்கவில்லை என்பது போல் மைத்ரேயனால் இருக்க முடிந்தது இயல்பாக இல்லை. மாராவிற்குத் திபெத்தியக் கிழவரின் கோபம் நினைவுக்கு வந்தது. இந்த அசாத்திய அலட்சிய அமைதி தான் அவரை ஆத்திரமடையச் செய்திருந்தது. கோபம், வெறுப்பு, பயம், அதிர்ச்சி, ஏன் சிரிப்பு, ஏளனம் கூட கவனிக்கத்தக்க ஏதோ ஒன்று நடக்கிறது என்பதற்கான அங்கீகாரம் தான்.  சொல்லப் போனால் அலட்சியப்படுத்துவதாகக் காண்பித்துக் கொள்வதும் மறைமுக அங்கீகாரமே. ஆனால் நடப்பதை ஒரு பொருட்டாகவே நினைக்காமல், அதைக் காணக்கூட சுவாரசியம் காட்டாமல் வேடிக்கை பார்த்தால் என்ன அர்த்தம் என்பது தெளிவாகப் புரிந்தது. மாராவுக்கு கோபம் வந்தாலும் அதனுடன் புன்னகையும் சேர்ந்தே வந்தது. சிறுவனா அவன்?

அதன் பிறகு அந்தப் பாதுகாவலன் மைத்ரேயனிடம் எப்படி நடந்து கொண்டான்.மாரா கேட்டான்.

“அவன் கோப்பபட்டு மைத்ரேயனை ஏதோ திட்டியது போலத் தெரிந்தது. ஆனால் அந்தத் திட்டும் அந்தச் சிறுவனுக்குப் புரிந்தது போலத் தெரியவில்லை. அவன் தலையை மட்டும் ஆட்டினான்.....

அவன் சொல்லச் சொல்ல மாரா ஒரு கணம் அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்த்தான்.  பாவம் அந்தப் பாதுகாவலனுக்கும் மைத்ரேயனைக் கையாள்வது சுலபமாக இருக்க வாய்ப்பில்லை என்று கணித்தான்.

ஆனால் அந்த நேரத்திலிருந்து அந்தப் பாதுகாவலன் மைத்ரேயனைத் தன் கண்பார்வையிலேயே வைத்திருக்கிறான். இப்போது மூன்றாவது தளத்தின் வரிசையில் நிற்கிறார்கள்.... நாங்கள் என்ன செய்யட்டும்....

“முடிந்தால் அவன் உடனடியாக உங்களை நெருங்க முடியாத தூரத்தில் இருந்து கண்காணியுங்கள். முடியா விட்டால் அதுவும் வேண்டாம்..... நீங்கள் இதற்கு முன்னால் செய்து வந்ததைத் தொடர்ந்து செய்யுங்கள். உங்களைப் பாதுகாக்கவும் உங்களுக்கு உதவவும் வேறொரு ஆளை விரைவில் அனுப்புகிறேன்.மாரா அமைதியாகச் சொன்னான்.

“அப்படியானால் இவன்....

“அவனை அழைத்துப் போக வேறு ஆட்கள் வருவார்கள். கவலை வேண்டாம்... மாரா பேச்சை முடித்துக் கொண்டான்.

ஒன்றும் செய்யாமல் ஒதுங்கி நிற்கச் சொன்னதில் அவனுடன் பேசியவனுக்கு உடன்பாடில்லை என்பது மாராவுக்குத் தெளிவாகத் தெரிந்தது.  தங்கள் ஆள் இந்த நிலைமையில் இருக்கையில் அவனை அப்படி ஆக்கியவனை ஒன்றும் செய்யாமல் இருப்பது தங்கள் பக்கத்து பலவீனத்தைக் காட்டுவது போல் ஆகிவிடும் என்று அவர்கள் எண்ணுவது புரிந்தது. ஆனால் பின்வாங்குவது எல்லாம் பின்னடைவு அல்ல. பின்வாங்குவது பல சமயங்களில் பாய்வதற்கான ஆயத்தம். அதை எதிரிக்கு கூடிய சீக்கிரம் மாரா புரிய வைப்பான். நடந்து முடிந்த சம்பவமே தேவை இல்லாதது. எதிராளியின் பலம் பலவீனம் இரண்டையும் குறித்த தெளிவான அறிவு இல்லாமல் தன் பலம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு கர்வத்தோடு முட்டாள்தனமாக அவன் ஆள் இயங்கியதன் விளைவு. அவனை அனுமதித்ததில் தானும் அந்த முட்டாள்தனத்தில் பங்கெடுத்து விட்டோம் என்று மாரா மனதார ஒத்துக் கொண்டான். அவன் ஆளால் முடியும் அல்லது முடியாது என்ற இரண்டில் எது நேர்ந்தாலும் பரவாயில்லை என்ற கோணத்தில் தான் அவன் அனுமதித்தான். மைத்ரேயனின் பாதுகாவலன் திரும்பித் தாக்க முடியும் என்ற மூன்றாவது கோணத்தை அவன் நினைத்துப் பார்க்கவில்லை. ஏன் என்றால் அவனுடைய ஆள் தன் வாழ்நாளில் இது வரை எந்த எதிரியாலும் தாக்கப்பட்டதில்லை. அவ்வளவு வேகமானவன், திறமையானவன், நுணுக்கமானவன். இதில் எல்லாம் அவனை விட மேலான ஒருவனால் அவன் தாக்கப்படக்கூடும் என்பதை அவன் மட்டுமல்ல மாராவும் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.

ஆனால் எதுவுமே வீண் இல்லை. இதில் கூட நல்லது நடந்திருக்கிறது. மைத்ரேயனின் பாதுகாவலன் திறமை வெளிப்பட்டிருக்கிறது. அதை வைத்து அவன் யார் என்பதைக் கண்டுபிடித்து விடலாம். ஏனென்றால் இந்த அதிநுட்பத் திறமை கொண்டவர்கள் உலகில் அதிகம் இருந்து விட முடியாது.....

மாரா ஒரு ரகசிய எண்ணுக்குப் போன் செய்தான். எந்த அறிமுக வார்த்தைகளும் இல்லாமல், சம்யே மடாலயத்தில் அவனுடைய ஆள் அடைந்த நிலையைச் சுருக்கமாகத் தெரிவித்தான். பின் சொன்னான். “பெரிய மருத்துவமனையில் திறமை வாய்ந்த மருத்துவர் சகல நவீன உபகரணங்களும் உபயோகித்து மணிக்கணக்கில் அறுவை சிகிச்சை செய்தால் கூட அவன் ஒரு நொடியில் போட்ட முடிச்சைப் போடவோ, அவன் போட்டதைப் பிரிக்கவோ முடியாது. அப்படிப்பட்டவன் ஒரு அனாமதேயமாக இருக்க முடியாது. அவனைப் போல வேறு ஆள்களும் இருக்க முடியாது. அவன் யார் என்ன என்கிற தகவல் எனக்கு உடனடியாகத் தேவை


ம்யே மடாலயத்தின் தாரா தேவதை சிலை பேசுவதுண்டு என்று சிலர் பல்வேறு காலகட்டங்களில் தெரிவித்திருக்கிறார்கள். அதில் எது எவ்வளவு நிஜம், எவ்வளவு கற்பனை என்பதை சரியாக அறிந்தவர்கள் யாருமில்லை. ஒரு நிஜத்தை வைத்து எத்தனையோ கற்பனைக்கதைகள் புனையப்படுவது சகஜம் என்ற போதும் மைத்ரேயன் சொன்னதை அக்‌ஷயால் கற்பனையாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. காரணம் இது வரை அந்தச் சிறுவனிடம் அவன் பொய், பாசாங்கு, கற்பனை ஆகியவற்றை இம்மியளவும் பார்த்திருக்கவில்லை.

“என்ன பேசியது?மைத்ரேயனிடம் அவன் தாழ்ந்த குரலில் கேட்டான்.

“நான் உத்தேசித்திருக்கிற இடத்திற்குப் போக வேண்டாம், இப்போதைக்கு மடாலயத்தை விட்டு வெளியே போவது ஆபத்து என்று சொல்கிறதுமைத்ரேயனும் தாழ்ந்த குரலிலேயே தெரிவித்தான்.

அக்‌ஷய் திகைத்தான். மைத்ரேயனிடம் கேட்டான். “வேறென்ன சொல்லியது?

“வேறெதுவும் சொல்லவில்லை

“என்ன செய்யலாம்?அக்‌ஷய் கேட்டான்.

“நீங்கள் சொல்கிறபடி செய்யலாம்என்று அவன் சொன்னான். 

மற்றவர்களுடன் சேர்ந்து மேல் தளங்களுக்குப் போக ஆரம்பித்திருந்த அவர்கள் அதன் பிறகு பேசிக்கொள்ளவில்லை. அக்‌ஷய் அதி தீவிர சிந்தனையில் இருந்தான். ஆனால் மைத்ரேயன் எந்த யோசனையும் செய்தது போல் தெரியவில்லை. உன்னிடம் சொல்லியாகி விட்டது, இனி என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் பொறுப்பு உன்னுடையது என்பது போல் இருந்தான்.

ஐந்தாவது தளத்திற்கு அவர்கள் சென்ற போது அவர்களைத் தவிர ஏழெட்டு பேர் தான் இருந்தார்கள். எல்லோரும் ஒவ்வொரு இடத்தில் நின்று கொண்டு வெளியே தெரிந்த பேரழகுக் காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தார்கள். லேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது. அஸ்தமன சூரியன் தூரத்து மலை முகடுகளில் உறைந்திருக்கும் பனியை தங்கமாக்கிக் கொண்டிருந்தான். மைத்ரேயன் அந்தக் காட்சியில் லயித்திருந்தான்.

மிக அழகான காட்சியாக இருந்த போதும் அதை ரசிக்கும் மனநிலையில் அக்‌ஷய் இருக்கவில்லை. அடுத்தது என்ன என்கிற யோசனை தான் அவன் முன் விஸ்வரூபம் எடுத்து நின்றது. அந்தச் சிலையின் எச்சரிக்கையை அவன் அலட்சியம் செய்ய விரும்பவில்லை. இப்போதைக்கு இந்த ஐந்தாவது தளத்திலேயே ஒதுங்கிக் கொள்வது நல்லது என்று தோன்றியது. அதை மைத்ரேயனிடம் சொன்னான். மைத்ரேயன் அந்தக் காட்சியில் இருந்து கண் எடுக்காமல் தலையசைத்தான்.

மைத்ரேயன் இருக்கின்ற இடம் எதுவாக இருந்தாலும் பாக்கின்ற இடங்கள் ரம்மியமான, அழகான இடங்களாகவே இருப்பதை அக்‌ஷய் கவனித்தான். இருட்ட ஆரம்பித்து விட்டதால் அவர்கள் இருவரைத் தவிர மற்றவர்கள் இறங்க ஆரம்பித்தார்கள். இருட்டிய பிறகு அந்த அழகிய காட்சி மறைந்து விடுமே அப்போது என்ன செய்வான் இவன் என்று பார்ப்போம் என்று அக்‌ஷய் எண்ணினான்.

இருட்டி விட்டது. அப்போது மைத்ரேயன் பார்வை மின்ன ஆரம்பித்த நட்சத்திரங்களில் இருந்தது. இப்போது நன்றாகக் குளிரவும் ஆரம்பித்தது. மைத்ரேயனின் தாய் கொடுத்த சால்வையை அவன் மீது போர்த்திக் கொண்டே அக்‌ஷய் நினைத்தான். எல்லா சந்தர்ப்பங்களிலும் ரசிக்க உலகில் ஏதாவது இருந்து கொண்டே இருக்கிறது என்பதை இவன் உணர்த்துகிறானோ? 

அக்‌ஷய்க்கு அவன் வாயைக் கிளறத் தோன்றியது. “போக இடம் கூட இல்லாத இந்த நேரத்திலும் அது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இருக்க உன்னால் எப்படி முடிகிறது?

“நீங்கள் இருக்கையில் நான் கவலைப்பட என்ன இருக்கிறது?யோசிக்காமல் வந்தது பதில். அந்த பூரண நம்பிக்கையில் அக்‌ஷய் நெகிழ்ந்து போனான்.

“உனக்கு நான் இருக்கிறேன். அதனால் தைரியமாக இருக்கிறாய். எனக்கு?என்று அக்‌ஷய் விளையாட்டாய் கேட்டான்.

மைத்ரேயன் அவன் பக்கம் திரும்பினான். “நீங்கள் கடவுள் நம்பிக்கை இருப்பவர் என்று நினைத்தேன்

அக்‌ஷய் சிரித்து விட்டான். அதிகம் பேசாவிட்டாலும், பேசுவதில் பையன் சாமர்த்தியமாகத் தான் இருக்கிறான். அவனை இறுக்கி அணைத்துக் கொண்டான். நீ கடவுளை நம்புகிறாயா?என்று மெல்லக் கேட்டான்.

மைத்ரேயன் பதில் சொல்லவில்லை. இந்தக் கேள்விக்கு கௌதம புத்தரும் பதில் சொல்லி இருக்கவில்லை என்று அவன் படித்திருக்கிறான். இந்த அவதாரத்திலும் பதில் சொல்லும் அபிப்பிராயம் இல்லை போலத் தெரிகிறது... அந்தக் கேள்வியை மீண்டும் வற்புறுத்தி அக்‌ஷய் கேட்கவில்லை.

அவர்கள் இருவரும் ஒரு மறைவான இடத்தில் உட்கார்ந்து கொண்டார்கள். அந்த தளத்தில் கும்மிருட்டு நிலவியது. அவர்கள் அமர்ந்த இடத்திலிருந்தும் சாளரம் வழியாக ஆகாயத்தைப் பார்க்க முடிந்தது. நட்சத்திரங்களை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் மைத்ரேயன் அவன் மடியில் உறங்கிப் போனான். அவனையே பார்த்துக் கொண்டிருக்கையில் மனம் லேசாகியது.  அவனுக்கும் உறக்கம் கண்களை அழுத்தியது. ஆனால் அக்‌ஷயால் உறங்க முடியவில்லை. எந்நேரமும் யாரும் வரலாம்.....

அவன் எதிர்பார்த்தது போலவே நள்ளிரவில் யாரோ வரும் காலடி ஓசை மெலிதாகக் கேட்டது. கும்மிருட்டை ஊடுருவி விளக்கொளியும் தெரிய ஆரம்பித்தது. விளக்கை எடுத்துக் கொண்டு யாரோ வந்து கொண்டிருக்கிறார்கள். அக்‌ஷய் உஷாரானான். மெல்ல  மைத்ரேயனைத் தட்டி எழுப்பினான். மைத்ரேயன் எழுந்து என்ன என்பது போல அவனைப் பார்த்தான். அக்‌ஷய் உதட்டில் விரலை வைத்து சத்தமில்லாமல் இரு என்று சைகை செய்து விட்டு எழுந்து நின்றான்.

(தொடரும்)
என்.கணேசன்
  

Monday, April 27, 2015

தியான அலைகளில் யோக சக்தி!


21. மகாசக்தி மனிதர்கள்
 
மெரிக்காவில் இருந்து வெளிவரும் Probe-the unknown பத்திரிக்கை 1973 ஜூன் மாத இதழில் அட்டைப்படத்தில் சுவாமி ராமாவைப் போட்டு அவர் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் செய்து காட்டிய சில அற்புதங்களையும் அவர் பேட்டியையும் பிரசுரித்துள்ளது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

பத்திரிக்கையாளர்கள் அவர் தங்கியிருந்த ஓட்டலில் அவரைச் சந்திக்கச் சென்ற போது சுவாமி ராமா பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார். 1970 ஆம் ஆண்டு மென்னிங்கர் ஃபவுண்டேஷனில் அவர் செய்து காட்டிய அற்புதங்களால் அமெரிக்காவில் 1973 ஆம் ஆண்டு வாக்கில் அவர் பிரபலமாகி இருந்தார். ஆகவே பத்திரிக்கையாளர்களுக்கு அவர் செய்து காட்ட முடிந்த அற்புதங்களை நேரில் காண ஆர்வமாக இருந்தது.

ஒரு தியான நிலையில் ஆழ்ந்து தனது ஒரு காலில் இரத்த ஓட்டத்தைக் குறைத்து அந்தக் காலை மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு நிறத்திற்குக் கொண்டு வந்து மற்ற காலில் இயல்பான நிறத்தை இருக்க வைத்து பத்திரிக்கையாளர்களை வியக்க வைத்தார் சுவாமி ராமா. அடுத்ததாக இன்னொரு தியான நிலைக்குப் போய் மணிக்கட்டில் சில வினாடிகளில் ஒரேயடியாய் நாடித்துடிப்பை நிறுத்தியும் காட்டினார். இந்த இரண்டு இயற்கைக்கு மீறிய சக்திகளையும் கண்டு அமெரிக்க பத்திரிக்கையாளர்கள் அதிசயித்தார்கள்.

பிறகு ஒரு பெரிய டவலை எடுத்து பல மடிப்பாக மடித்து அவர் சுவாமி ராமா தன்  கண்களை மறைத்துக் கட்டச்சொன்னார். பத்திரிக்கையாளர்கள் அவர் சொன்னபடியே கட்டி அவர் பார்க்கவே முடியாது என்று உறுதிப்படுத்திக் கொண்டனர். பிறகு யாராவது ஒரு வாக்கியத்தை ஒரு தாளில் எழுதுங்கள் என்று சொல்ல ஒரு பத்திரிக்கையாளர் ஒரு வாக்கியத்தை எழுத, கண்கள் மூடப்பட்ட நிலையிலேயே அதை சிறிய மாறுதலோடு படித்துக் காட்டினார். அந்தச் சிறிய மாறுதலும் கூட தொலைவில் இருந்து பார்க்கும் போது அப்படித் தெரியும்படி எழுதியிருந்த விதமே என்பதைப் பின்னர் பத்திரிக்கையாளர்கள் பரிசோதித்துத் தெரிந்து கொண்டனர்.  

இங்கு வந்திருப்பவர்களில் யாராவது ஏதாவது புத்தகத்தை வைத்திருந்தார்களேயானால் அதையும் என்னால் திறக்காமலேயே படித்துக் காட்ட முடியும்என்று சுவாமி ராமா கூறிய போது வந்திருந்தவர்கள் யாரும் எந்தப் புத்தகத்தையும் கொண்டு வந்திருக்கவில்லை. முன்பே மென்னிங்கர் ஃபவுண்டேஷனில் அவர் செய்து காட்டிய அற்புதங்களைப் படித்திருந்ததும்,  கண் முன்னேயே அப்போது கண்ட மூன்று நிகழ்வுகளும் அவரை நம்ப அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. அவர்கள் அவருடைய யோகசக்தி எப்படி அற்புதங்களைச் செய்ய வல்லமை கொண்டதாக இருக்கிறது என்பதையும், அந்த யோகசக்தியை அடைவது எப்படி என்பதையும் அறிய ஆவலாய் இருந்தார்கள்.

“உண்மையில் எத்தனையோ சக்திகள் நம்முள்ளே புதைந்து கிடந்தாலும் மேற்பரப்பில் உள்ள சில்லறை சக்திகளை மட்டும் லேசாக சுரண்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்என்றார் சுவாமி ராமா. உண்மையான புதையல் ஆழத்தில் இருக்கிறது. தியானம் செய்வதன் மூலம் ஆழத்தில் இருக்கும் சக்திகளை ஒருவரால் அடையாளம் காணவும் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும் என்பது அவர் கருத்தாக இருந்தது. ஆனால் இயற்கைக்கு எதிராக அல்லாமல் இயற்கைக்கு இசைந்தபடி முயற்சித்தால் மட்டுமே அது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், எதிராக முயற்சிக்க முனைந்தால் அது அழிவுக்கு அடிகோலும் என்றும் அவர் கூறினார். 

கதோபநிஷத் குறித்து அவர் எழுதியுள்ள The Book of Wisdom என்ற நூலில் தியானம் செய்யும் முறைகளை படிப்படியாக விளக்கியுள்ளார். மனம், மூளை, மூச்சு விடுதல் மூன்றுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கமாகக் கூறும் அவர் மூச்சைக் கட்டுப்படுத்தினால் மூளையின் செயல்பாட்டிலும், மனதின் செயல்பட்டிலும் ஒருவர் ஆதிக்கம் செலுத்த முடியும் என்றார்.

எத்தனையோ விஷயங்களைத் தவறாகக் கற்றுக் கொண்டிருக்கிறோம். அதையே சரியென்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படித் தவறாக கற்றுக் கொண்டதை விட்டொழித்தால் ஒழிய யோகசக்திகளை ஒருவரால் சரியாகக் கற்றுக் கொள்வதும், பயன்படுத்துவதும் இயலாத காரியம் என்று கூறும் சுவாமி ராமா இதையெல்லாம் செய்ய தியானம் மிக அவசியம் என்று சொன்னார்.

தியானம் நன்றாகக் கைகூடும் போது ஒரு மனிதனின் மூளை ஆல்ஃபா என்கிற அலைகளில் இயங்குகிறது. தியானம் ஆழமாக ஆழமாக அவன் மூளை தீட்டா மற்றும் டெல்டா என்கிற அலைகளில் இயங்குகிறது. இந்த இரண்டும் ஆழ்ந்த உறக்கத்தில் மனிதன் இருக்கும் போதும் கூட மூளையில் வெளிப்படுகின்றன. மூளை இந்த அலைகளில் இருக்கும் போது தான் உடல் தன் ரிப்பேர் வேலைகளையும், புதுப்பித்தல் வேலைகளையும் செய்து கொள்கிறது. மிக ஆழமான தியானத்திலோ, உறக்கத்திலோ மனிதன் இருக்கையில் டெல்டா அலைகள் வெளிப்படுகிறது என்றாலும் இரண்டிற்கும் இடையே உள்ள மிக முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் ஆழமான உறக்கத்தில் இருக்கும் போது மனிதனுக்குத் தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாது. ஆனால் ஆழமான தியானத்தில் இருக்கையில் தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் மனிதனால் துல்லியமாக அறிய முடியும். அதனால் அந்த மிக ஆழமான தியான நிலையை (கிட்டத்தட்ட சமாதி நிலை என்றே சொல்லலாம்) உறக்கமில்லா உறக்கம் என்று சுவாமி ராமா குறிப்பிட்டார்.

இந்த உறக்கமில்லா உறக்க நிலையில் சுவாமி ராமா சுமார் 25 நிமிடங்கள் வேறொரு முறை ஆராய்ச்சிக்கூடத்திலேயே இருந்து காட்டி இருக்கிறார். மூளை அலைகளை அளக்கும் கருவி (EEG) டெல்டா அலைகளைப் பதிவு செய்து காட்டியுமிருக்கிறது. அந்த தியானத்தில் இருந்து மீண்டு வந்த பின்னர் அவரைச் சுற்றிலும் அந்த 25 நிமிட காலத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்று தெரிவித்து சுவாமி ராமா ஆராய்ச்சியாளர்களை அசத்தியுள்ளார்.

இது போன்ற டெல்டா அலைகள் மூளை வெளிப்படுத்தும் சமயங்களில் நாம் தகுந்த மனக்காட்சிகளுடன் கூடிய கட்டளைகளைப் பிறப்பித்து நம் உடல் நோய்களைக் குணப்படுத்திக் கொள்ள முடியும் என்று சுவாமி ராமா கூறினார். மனித உடல் ஆழமான உறக்கத்தில் தான் தன் ரிப்பேர் வேலைகளைச் செய்து கொள்கிறது என்பது மருத்துவ விஞ்ஞான உண்மை என்பதால் அவர் கூறும் இக்கருத்து அறிவு சார்ந்ததாகவே இருக்கிறது. இதை எல்லாம் பார்க்கும் போது மேற்போக்காக அல்லாமல் தியானம் ஆழமாக நிகழும் போது அதிசயங்களும் நிகழ்த்த முடியும் என்பதை சுவாமி ராமா மெய்ப்பித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

சுவாமி ராமா செய்து காட்டிய அற்புதங்கள் World book Science Annual, 1974, 1973 Encyclopedia Britannica Yearbook of Science,  மற்றும் Time-Life 1973 Nature Science Annual ஆகிய விஞ்ஞான பத்திரிக்கைகளிலும் பதிவாகி உள்ளது. 1996 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி வரை வாழ்ந்த சுவாமி ராமா Himalayan Institute of Yoga Science and Philosophy  என்ற  அமைப்பை அமெரிக்காவில் பெனிசில்வேனியாவில் நிறுவி அதன் கிளைகளை ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியாவிலும் ஏற்படுத்தியுள்ளார். மேலும் Himalayan Institute Hospital Trust என்ற தொண்டு நிறுவனத்தை இமயமலைப் பகுதியில் ஏற்படுத்தி 750 படுக்கைகள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனை, 400 மாணவர்கள் படிக்கக் கூடிய மருத்துவக்கல்லூரி, 300 பேர் படிக்கக்கூடிய நர்சிங் கல்லூரி, ஒரு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை ஹரித்வார், ரிஷிகேஷ், டேராடூன் பகுதிகளில் சுவாமி ராமா இந்தியாவில் துவக்கியுள்ளார்.

யோகசக்தியால் என்னவெல்லாம் செய்து காட்ட முடியும் என்பதை நிரூபித்த சுவாமி ராமா அதை வைத்து விளம்பரம் செய்து புகழ் தேடுவதை இகழ்வாக நினைத்தார். 1974க்குப் பிறகு அவர் கவனம் அதிகமாக தியானத்தை கற்பிப்பதிலும், ஆன்மிக கருத்துகளைப் பரப்புவதிலும், சமூக சேவை செய்வதிலும் தான் இருந்தது.

இனி இன்னொரு சுவாரசியமான யோகியைப் பார்ப்போமா?

-என்.கணேசன்
நன்றி தினத்தந்தி 6-2-2015

Thursday, April 23, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 43


 மைத்ரேயன் அளவு யாருமே சம்யே மடாலயத்தின் கோங்காங் மண்டபத்தில் நடந்த சம்பவத்தால் பாதிக்கப்படாமல் இருக்கவில்லை. சுற்றுலா வழிகாட்டி சொன்ன துர்த்தேவதைத் தாக்குதல் கோணம் பயணிகளை ஓரளவு பாதித்திருந்தது. அந்த ஆள் அப்படி விழுந்த விதத்தை விட அந்த முகத்தில் தெரிந்த பீதி சுற்றுலா வழிகாட்டியின் அனுமானத்தை ஊர்ஜிதப்படுத்தியது போல் இருந்தது. சுற்றுலா வழிகாட்டிக்கு அது திருப்தியாக இருந்தது. இனி வரும் நாட்களில் புதியதாக வரும் பயணிகளிடம் இதையும் அவன் சொல்லப் போகிறான். நேரடியாக அவன் முன்னாலேயே நடந்த அந்த நிகழ்ச்சிக்கு வேறு எந்த சுற்றுலா வழிகாட்டியும் சாட்சி இல்லை. சுவாரசியத்திற்குச் சிலதைக் கூட்டியும் சொல்லலாம் என்று அவன் எண்ணிக் கொண்டான். அந்த கழுத்து திருகியவனைப் புகைப்படம் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், அதையும் மற்றவர்களுக்குக் காட்டியிருக்கலாம் என்று திடீர் என்று நினைவு வந்து அப்படி செய்யாததற்காக தன்னையே நொந்து கொண்டான். ஆனால் அவனைப் புகைப்படம் எடுக்காமல் இருந்ததால் தன்னுயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான் என்ற உண்மையை அந்த சுற்றுலா வழிகாட்டி அறிந்திருக்கவில்லை.

இந்த மடாலயத்தில் தீய சக்திகளைக் கட்டிப் போட்டிருக்கும் இடத்தைப் பார்த்தோம். இந்த சக்திகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை நிரூபிக்கும் மாதிரியான ஒரு சம்பவத்தையும் பார்த்தோம். உங்களில் பலரும் பயந்தும் போயிருக்கிறீர்கள். ஆனால் பயம் தேவை இல்லை. காக்கும் சக்திகள் இன்னமும் உறைந்திருக்கும் இடமும் மூன்றாவது தளத்தில் இருக்கின்றது. அங்கே சென்று வணங்கினால் உங்கள் பயத்தைப் போக்கிக் கொள்ளலாம். அங்கே போகும் முன் இரண்டாம் தளத்தில் புத்தபிக்குகள் செய்யும் கலைப்பொருள்களைப் பார்த்து விட்டுப் போவோம் வாருங்கள்”  என்று கூறி விட்டு அவன் நடக்க பயணிகளும் பின் தொடர்ந்தார்கள். கூட்டத்தோடு அக்‌ஷயும் மைத்ரேயனை அழைத்துக் கொண்டு நடந்தான். பயணிகளுக்கு மத்தியில் செல்வதே பாதுகாப்பு என்று அவனுக்குத் தோன்றியது.

இரண்டாம் தளத்தில் சிறிது நேரம் இருந்தார்கள். அங்கு சில புத்த பிக்குகள் கலைவேலைபாட்டுப் பொருள்களைச் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் செய்வதைச் சிலர் ஆர்வமாகப் பார்த்தார்கள். அடுத்துச் செல்ல வேண்டி இருந்த மூன்றாவது தளத்திற்குப் போகப் பெரிய வரிசை இருந்தது.

இந்த மூன்றாவது தளத்தில் மட்டும் ஏன் கூட்டம் அதிகம் இருக்கிறது, பெரிய வரிசை இருக்கிறது என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். மூன்றாவது தளத்தில் தலாய் லாமாவின் தங்குமிடம் இருக்கிறது. அங்கு அவரது படுக்கை அறையில் இப்போதும் பத்மசாம்பவாவின் தலைமுடியும்,  நடைதடியும் இருக்கின்றன. தாரா தேவதையின் சிலை ஒன்றும் இருக்கிறது. அந்தச் சிலை சில நேரங்களில் பேசவும் செய்கிறது என்று சொல்கிறார்கள். அங்கு சாந்தரக்‌ஷிதாவின் மண்டை ஓடும் இருக்கிறது. இந்தப் புனிதச் சின்னங்களைத் தரிசிப்பதை ஒவ்வொரு திபெத்திய பௌத்தனும் பாக்கியமாகக் கருதுகிறான். தீய சக்திகளிடமிருந்தும் எதிரிகளிடமிருந்தும் காக்கும் சக்தி இந்தப் புனிதச் சின்னங்களுக்கு இருக்கிறது என்று நம்பி அங்கே பிரார்த்தித்துக் கொண்டு அவர்கள் அதிக நேரம் நிற்பது தான் இத்தனை கூட்டத்துக்குக் காரணம்என்று சொல்லி விட்டு வரிசையில் அவன் நிற்க அவன் பின் வந்தவர்கள் அனைவரும் நின்றார்கள்.

வரிசையில் மத்தியில் தனக்கு முன் மைத்ரேயனை நிற்க வைத்து விட்டு நின்ற அக்‌ஷய் முழு கவனத்துடன் இருந்தான். எந்த நேரத்திலும் எதிரிகளில் யாராவது வந்து விடலாம் என்று அவன் எதிர்பார்த்தான். தேவையில்லாமல் திடீர் என்று யாராவது அந்த நேரத்தில் வந்தால் அவர்களும் மாராவின் ஆளின் நிலைமையையே அடைய நேரிடும். ஆனால் மாராவின் முதல் ஆள் விழப்போன போது தாங்கிப் பிடித்ததாக சொன்ன கதையையே இன்னொரு முறை சொன்னால் அதில் நம்பகத்தன்மை இருக்காது என்பதால் தர்மசங்கடமான நிலையில் அக்‌ஷய் இருந்தான். ஆனால்  நல்ல வேளையாக யாரும் வரவில்லை. வரிசை மிக நிதானமாகவே ஊர்ந்தது.

வரிசையில் போய்க் கொண்டிருக்கையில் அக்‌ஷய் நினைத்தான். ‘எப்போதோ இறந்து போன புத்தமத குருமார்களின் தலைமுடியும், கைத்தடியும் மண்டை ஓடும் புனிதச்சின்னங்கள் என்றால் புத்தரின் மறு அவதாரம் என்று சொல்லப்படுகிற உயிரோடு உள்ள மைத்ரேயனை என்னவென்று சொல்வது? இந்த மைத்ரேயன் இவர்களுக்குக் கடவுளே அல்லவா? அந்தக் கடவுள் இப்போது அவனுக்கு முன் வரிசையில் சென்று கொண்டிருப்பது வேடிக்கையாக இருந்தது. அந்தக் கடவுளுக்கு வரிசையில் செல்வதில் எந்த சங்கோஜமும் இல்லை.... அக்‌ஷய் புன்னகைத்தான்.

தலாய் லாமாவின் படுக்கை அறையில் இரும்புக்கம்பிகளின் தடுப்பிற்குப் பின்னால் கண்ணாடிப் பேழையில் பத்மசாம்பவாவின் கைத்தடி, தலைமுடி, தாரா தேவதையின் சிலை மற்றும் சில பொருள்கள் இருந்தன. அக்‌ஷய் அங்கே ஒரு சக்தி மையத்தை உணர்ந்தான். ஏதோ பூர்வ ஜென்மத்தில் இருந்து தொடர்பு இருக்கிற சக்தி அது.... ஒரு கணம் அவனுக்கு சிலிர்த்தது. அவனை அறியாமல் கைகூப்பி வணங்கினான். அக்‌ஷய் மற்றவர்களைக் கவனித்தான். அவனைப் போலவே அந்த சுற்றுலா வழிகாட்டி உட்பட எல்லோருமே பிரார்த்தனை சைகைகளில் தான் இருந்தார்கள்- மைத்ரேயன் ஒருவனைத் தவிர. ஆனால் மைத்ரேயன் கூட பிரார்த்தனை செய்து கொண்டிருக்கா விட்டாலும் தாரா தேவதை சிலையைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டு சற்று வினோதமான முகபாவனையுடன் தான் நின்றிருந்தான்.

அக்‌ஷய் என்ன என்பது போல் அவன் தோளைத் தொட்டான். அவனை ஒரு கணம் பார்த்து விட்டுப் பதில் எதுவும் சொல்லாமல் மைத்ரேயன் மறுபடி அந்த தாரா சிலையைப் பார்த்தான். அக்‌ஷயும் அந்த தாரா சிலையைக் கூர்ந்து பார்த்தான். அவனுக்கு அந்தச்சிலை சாதாரண சிலை போலத் தான் தெரிந்தது. ஆனால் அந்தச் சிலையை மைத்ரேயன் சிலையைப் பார்ப்பது போலப் பார்க்கவில்லை. நேரடியாக ஒரு நபரைப் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தான்.  

மடாலய ஊழியர் ஒருவரின் குரல் கேட்டது. தயவு செய்து நகருங்கள். உங்களுக்குப் பின்னால் பல பேர் நிற்கிறார்கள். அவர்களும் இருட்டுவதற்குள் தரிசித்து விட்டு ஊர் திரும்ப வேண்டும்…”

அவர்கள் மெல்ல நகர ஆரம்பித்தார்கள். மைத்ரேயன் அந்தச் சிலையைப் பார்த்து லேசாகப் புன்னகைத்து விட்டு நகர்ந்தான். அக்‌ஷய் திகைப்புடன் அந்தச் சிலையைப் பார்த்து விட்டு மைத்ரேயனைத் தொடர்ந்தான். ஆனால் மற்றவர்கள் முன்னால் பேசுவது உசிதம் அல்ல என்று அவன் மௌனமாய் இருந்தான்.

சுற்றுலா வழிகாட்டி சொன்னான். “இனியும் மூன்று தளங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த தளங்களில் சிறப்பாகச் சொல்ல ஏதுமில்லை. ஆனால் ஒவ்வொரு தளத்தில் இருந்தும் சம்யே மடாலயத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளின் பிரம்மாண்டத்தை பல கோணங்களில் நீங்கள் பார்த்து மகிழலாம். நான் விடைபெறுகிறேன்.....

அவனுடன் வந்த பயணிகள் அவனுக்குப் பணம் கொடுத்தார்கள். அக்‌ஷயும் தந்தான். சுற்றுலா வழிகாட்டி நன்றி தெரிவித்து விட்டுப் போய் விட்டான். பயணிகளில் சிலர் களைத்துப் போய் அவனுடனேயே கிளம்பி விட்டார்கள். மற்றவர்கள் பிரிந்து ஓரிருவர் அல்லது மூவராய் மேல் தளங்களுக்கு நடக்க ஆரம்பித்தார்கள். அவர்களுடன் வேறு பயணிகளும் வர ஆரம்பித்தார்கள்.

அகஷய் எச்சரிக்கையுடன் மைத்ரேயனை அழைத்துக் கொண்டு மேல் தளத்திற்கு நடக்க ஆரம்பித்தான். போகும் போது தாழ்ந்த குரலில் கேட்டான். “ஏன் அந்தச் சிலையை அப்படிப் பார்த்தாய்?

அந்தச் சிலை பேசுகிறது

லாஸா விமான நிலையத்தில் தன் விமானத்திற்காக மாரா காத்துக் கொண்டிருந்தான். இப்போது பார்க்க செல்வந்தனாக நவநாகரீக உடைகளில் காட்சி அளித்த அவனை இமாலய மலைக்குகையில் இடுப்பில் கருப்பாடை மட்டும் அணிந்த நிலையில் பார்த்ததாகச் சொன்னால் அவனை நன்கு அறியாத  யாருக்குமே நம்பக் கஷ்டமாகத் தான் இருக்கும். அவன் கையில் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையைப் புரட்டிக் கொண்டிருந்தான். ஆனால் அவன் கவனம் மட்டும் அந்தப் பத்திரிக்கையில் இல்லை. சுற்றிலும் இருந்த சீன உளவுத் துறையினரின் நடவடிக்கைகளில் தான் அவன் கவனம் இருந்தது. அவன் சில நாட்களுக்கு முன் திபெத்தினுள் நுழைந்த போது இந்த அளவு அவர்கள் கெடுபிடி இருக்கவில்லை. இப்போது மைத்ரேயனையும் அந்தப் பாதுகாவலனையும் பிடிக்க லீ க்யாங்கின் ஆட்கள் மும்முரமாக இருப்பது தெரிந்தது.  மைத்ரேயனும் அந்தப் பாதுகாவலனும் அவனுடைய ஆளிடம் இருந்து சம்யே மடாலயத்தில் தப்பித்தாலும் கண்டிப்பாக விமானம் மூலமாக திபெத்திலிருந்து தப்பிக்க முடியாது.....

தன்னுடைய ஆளிடம் இருந்து இது வரை போன் எதுவும் வராதது மாராவுக்கு நெருடலாக இருந்தது. மைத்ரேயன் கதை முடிந்தது, அல்லது மைத்ரேயனைக் கொல்ல முடியவில்லை என்ற இரு தகவல்களில் ஒன்றைப் போன் செய்து சொல்வதில் ஏன் இவ்வளவு தாமதம்?

அவன் அலைபேசி இசைத்தது. அவனாகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணியவனாகப் அலைபேசியைக் கையில் எடுத்தவன் அலைபேசியில் தெரிந்த எண்ணைப் பார்த்து துணுக்குற்றான். இந்த எண்ணில் இருந்து அழைப்பு வருகிறது என்றால் வரும் தகவல் நல்ல தகவல் அல்ல!

பேசியவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. “பேசலாமாஎன்று மட்டும் கேட்டான். மாரா சொன்னான். “சொல்

“நம் ஆள் கழுத்து திருகி விழுந்து கிடக்கிறான். அவனைப் பரிசோதித்த அனுபவமிக்க பிக்கு அவனை நவீன மருத்துவத்தால் காப்பாற்ற முடியாது என்று சொல்கிறார்

என்ன ஆயிற்று?

“சரியாகத் தெரியவில்லை. இவன் மயங்கிக் கீழே விழப்போன போது மைத்ரேயனுடன் வந்தவன் இவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான் என்று அங்கிருந்தவர்கள் சொல்கிறார்கள். மற்றவர்களுடன் நின்று சிலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் இவன் விழப்போன போது ஓடிச்சென்று பிடித்திருக்கா விட்டால் இவன் எலும்பு முறிந்திருக்கும் என்று சொல்கிறார்கள். இவன் துணியிலேயே அவன் விஷ ஊசியையும் சொருகி விட்டிருக்கிறான்....

“அவன் முகத்தையும் கழுத்தையும் எனக்குப் புகைப்படம் எடுத்து உடனடியாக அனுப்பி வைஎன்று மாரன் சொல்ல இரண்டே நிமிடங்களில் இரண்டு புகைப்படங்கள் மாராவின் அலைபேசியில் வந்து சேர்ந்தன. அந்த முகத்தில் தெரிந்த பீதி, வலி இரண்டையும் மாரா இது வரை அந்த ஆளிடம் பார்த்ததில்லை. கழுத்துப் பகுதியை மாரா நன்றாக ஆராய்ந்தான். கழுத்துப் பகுதியின் மிக நுட்பமான நரம்பை மர்ம முடிச்சு போட்டு விட்டிருக்கிறான் மைத்ரேயனின் பாதுகாவலன். அந்தப் பயணிகள் நினைத்தது போல அவன் மயங்கி விழப் போன போது அந்தப் பாதுகாவலன் பிடித்துக் கொள்ளவில்லை. மாறாக தாக்கி விட்டு அவன் மயங்கி விடக்கூடாது என்பதில் அந்தப் பாதுகாவலன் கவனமாக இருந்திருக்கிறான். அந்த இடத்தின் வர்ம மையங்கள் ஒருவரைக் கோமாவில் ஆழ்த்தக்கூடியவை. அப்படி அவன் நினைவிழந்து விடக்கூடாது, அந்த வலியை உணர வேண்டும் என்று தான் இப்படிச் செய்திருக்கிறான். இதைக் கண்ணிமைக்கும் நேரத்தில் செய்து முடிப்பது என்பது மிக நல்ல தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சாத்தியமானதல்ல. மைத்ரேயனின் பாதுகாவலன் தன்னைக் கச்சிதமாகவே அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறான்....

“இது எங்கே நடந்தது?பயமுறுத்தும் அமைதியுடன் மாரா கேட்டான்.

தயக்கத்துடன் வந்தது பதில். “கோங்காங் மண்டபத்தில், நாங்கள் இப்போது பூஜைகள் நடத்திக் கொண்டிருக்கும் அந்தச் சிலையின் முன்னிலையில் தான்.....

அந்தத் தகவல் மாராவை ஓங்கி அறைந்தது.

“இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

“இந்த மடாலயத்திற்குள் தான் இருக்கிறார்கள்

(தொடரும்)
என்.கணேசன்

Monday, April 20, 2015

யோகியின் உடல் ஆதிக்க சக்திகள்!




20. மகாசக்தி மனிதர்கள்!

மென்னிங்கர் ஃபௌண்டேஷனில் தன் யோக சக்தியை விஞ்ஞானக் கருவிகளால் பரிசோதனை செய்ய அனுமதித்திருந்த யோகி சுவாமி ராமா யோக சக்தியால் இன்னும் எத்தனையோ செய்து காட்ட முடியும் என்று அந்த ஆராய்ச்சியாளர்களிடம் சொல்லி இருந்தார். அவற்றில் முக்கியமானவை


1) இதயத்துடிப்பை நிமிடத்திற்கு இருபது வரை குறைத்து உடனடியாக அதை நிமிடத்திற்கு 250 வரை அதிகப்படுத்துவது.


2) இதயத்துடிப்பை ஒரேயடியாக ஒரு நிமிடத்தில் இருந்து மூன்று நிமிடம் வரை நிறுத்தி வைப்பது


3) உடலில் செயற்கையாய் அங்கங்கே கட்டிகளை ஏற்படுத்துவது, அந்தக் கட்டிகளைக் கரைக்கவும் முடிவது


4) உடலில் எந்தப் பகுதியில் ஊசியைக் குத்தினாலும் இரத்தம் வெளி வராதபடி இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவது.



5) கண்களை மூடிக் கொண்டு படிக்க முடிவது, மூடிய புத்தகம் அல்லது உறையில் போட்டு மறைத்திருக்கும் கடிதத்தைத் தொட்டுப் படிக்க முடிவது. தூரத்தில் இருக்கும் பொருள்களை கண்களை மூடியே பார்க்க முடிவது


6) தொடாமல் பொருள்களை நகர்த்த முடிவது


7) பிராணசக்தியுடன் சூரிய சக்தியையும் இணைத்து அற்புதங்கள் செய்ய முடிவது.


இப்படி ஆராய்ச்சியாளர்களிடம் அவர் சொல்லி இருந்த போதிலும் பின்னர் அவரால் அந்த ஆராய்ச்சிகள் அனைத்தையும் செய்து காட்டும் விஞ்ஞான சூழ்நிலைகள் பல காரணங்களால் அமையவில்லை. ஆனால் அவர் இந்தியா திரும்பிப் போய் மறுபடி பல சொற்பொழிவுகள் ஆற்றவும், ஆன்மீகப் பணிகளுக்காகவும் அமெரிக்கா வந்த போது சில ஆராய்ச்சிகளை அவரால் செய்து காட்ட முடிந்தது. அவற்றையும் ”Beyond Biofeedback” நூலில் ஆராய்ச்சியாளர்கள் எல்மர் மற்றும் அலைஸ் க்ரீன் (Elmer & Alyce Green) குறிப்பிட்டார்கள். அந்த சுவாரசியமான ஆராய்ச்சிகளையும் பார்ப்போம்.


ஒரு முறை எல்மர் க்ரீன் சுவாமி ராமாவிடம் உடலில் ஏற்படும் கட்டிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது செயற்கையாய் உடலில் கட்டிகளை ஏற்படுத்தவும், அந்தக் கட்டிகளை கலைத்துக் கொள்ளவும் முடியும் என்று சுவாமி ராமா சொல்லி இருந்ததை அவர் நினைவு கூர்ந்தார். உடனே தன் உடலில் நான்கு வினாடிகளில் ஒரு இடத்தில் ஒரு பறவையின் முட்டையின் அளவில் ஒரு கட்டியை சுவாமி ராமா உருவாக்கிக் காட்டினார். எல்மர் அந்த கட்டியைக் கையால் தொட்டுப் பார்த்தார். கட்டி உறுதியாக இருந்தது.


அதே போல் வேறொரு இடத்திலும் வேறு வடிவத்தில் இன்னொரு கட்டியை சுவாமி ராமா உருவாக்கிக் காட்டினார். அவற்றை உருவாக்குவது யோகசக்தியால் என்றாலும் கூட அந்தக் கட்டிக்குள் என்ன இருக்கிறது என்பதை சுவாமி ராமாவால் சொல்லத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் அந்தக் கட்டிகளைக் கலைத்தும் காட்டினார்.


தன்னால் தொடாமல் பொருள்களை சுழல வைக்கவோ நகர்த்தவோ முடியும் என்று சொல்லி இருந்ததையும் சுவாமி ராமா செய்து காட்டினார். ஒரு பென்சிலைக் கயிறில் கட்டித் தொங்கவிட்டு அதை அருகில் உற்றுப் பார்த்து சில மந்திரங்களைச் சொல்லி சுழல விட்டார். ஆனால் எல்மர் க்ரீன் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தார். மூச்சுக் காற்றால் கூட அப்படி சுற்ற வைக்க முடியும் என்று சொன்னார். உடனே சுவாமி ராமா ஆராய்ச்சிகூட சூழ்நிலையிலும் கூட தன்னால் அப்படி செய்து காட்ட முடியும் என்று சொன்னார்.


உடனே வேறொரு சிறிய ஆராய்ச்சிகூடத்தில் ஆராய்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள். அந்தப் பரிசோதனையில் 14 அங்குல, 7 அங்குல அலுமினிய ஊசிகள் இங்கு காட்டியுள்ள படத்தில் உள்ள படி அளவுகள் குறிக்கப்பட்டிருந்த ஒரு வட்ட அமைப்பில் ஒரு மேசை மீது வைக்கப்பட்டிருந்தன.





ஐந்தடி தொலைவில் சுவரை ஒட்டி ஒரு கட்டிலில் ஸ்வாமி ராமா அமர்த்தப்பட்டிருந்தார். அவர் அந்த ஊசிகளை தன் மூச்சுக்காற்றால் எந்த விதத்திலும் அசைக்க முடியாதபடி ஒரு பிரத்தியேக முகமூடி இங்கு காட்டப்பட்டுள்ளது போல் அவருக்குத் தரப்பட்டது.


முகமூடி இல்லாமலும் கூட வெறும் மூச்சுக் காற்றால் ஐந்தடி தூரத்தில் இருந்த இந்த ஊசிகளைச் சுழல வைப்பது முடியாத காரியமே அல்லவா?


அந்த முகமூடியை அணிந்து கொண்டு சில மந்திரங்களை உச்சரித்து அந்த ஊசிகளை ஸ்வாமி ராமா பத்து பத்து டிகிரிகளாக அசைத்துக் காட்டினார். இந்த ஆராய்ச்சி ஆராய்ச்சிக்கூடத்தில் ஆறு பார்வையாளர்கள் முன் நடந்தது.


ஒரு முறை சுவாமி ராமா எல்மர் மற்றும் அலைஸ் க்ரீனுடன் மதிய உணவருந்திக் கொண்டிருக்கையில் பேட் நோரிஸ் (Pat Norris) என்ற அவர்களுக்குப் பரிச்சயமான பெண்மணி ஒருத்தி சுவாமி ராமாவை சந்திக்க ஆர்வம் கொண்டு போன் செய்திருந்தார். எல்மர் க்ரீன் சுவாமி ராமாவிடம் தங்கள் நண்பரான அந்த பெண்மணியைச் சந்திக்க முடியுமா என்று கேட்க சுவாமி ராமா உடனடியாக சம்மதம் தெரிவித்தார். சிறிது நேரத்தில் பேட் நோரிஸ் வந்து சேர்வதாகத் தெரிவித்தார்.


உணவருந்தி முடிந்ததும் சுவாமி ராமா ஒரு வெள்ளைத் தாளையும் ஒரு பென்சிலையும் தனக்குத் தரும்படி கேட்டுக் கொண்டார். எல்மர் க்ரீன் அவர் கேட்டுக்கொண்டபடியே வெள்ளைத் தாளையும், பென்சிலையும் அவருக்குத் தந்தார். சுவாமி ராமா அந்த வெள்ளைத் தாளில் என்னவோ எழுத ஆரம்பித்தார். எழுதி முடித்து அதை மேசையில் கவிழ்த்து வைத்தார்.


பேட் நோரிஸ் வந்தவுடன் அவரிடம் சுவாமி ராமா தன்னிடம் ஏதாவது கேள்வி கேட்கச் சொன்னார். திடீரென்று அவர் கேள்வி கேட்கச் சொன்னதால் திகைத்த பேட் நோரிஸ் அவர் மேலும் வற்புறுத்தவே “என் மகனைத் தனியார் பள்ளிக்குப் படிக்க அனுப்ப வேண்டுமா என்று கேட்டார்.


சுவாமி ராமா இன்னொரு கேள்வி கேட்கச் சொன்னார். பேட் நோரிஸ் “நான் பி.எச்.டி பட்டம் பெற கல்லூரிக்கு மீண்டும் செல்ல வேண்டுமா?” என்று கேட்டார். இப்படியே மீண்டும் ஒரு கேள்வி, மீண்டும் ஒரு கேள்வி என்று ஏழு கேள்விகளைக் கேட்கச் சொன்ன சுவாமி ராமா பேட் நோரிஸ் ஏழாவது கேள்வி கேட்டவுடன் தான் முன்பே எழுதி வைத்திருந்த தாளை எடுத்து அவரிடம் தந்தார்.


அந்தத் தாளில் சுவாமி ராமா ஏழு கேள்விகளுக்கு பதில் எழுதி இருந்தார். அவற்றில் ஐந்து கேள்விகளுக்கான பதில்கள் மிகத் துல்லியமாகவும், ஒரு கேள்விக்கான பதில் அந்தக் கேள்வி சம்பந்தப்பட்டதாகவும், ஒரு கேள்விக்கு பதில் சிறிதும் சம்பந்தமில்லாததாகவும் இருந்ததாக பேட் நோரிஸ் தெரிவித்தார்.


ஏழு கேள்விகளில் ஐந்து மட்டுமே மிகச்சரியாக இருப்பினும் கேள்விகள் கேட்கப்படும் முன்பே, என்ன கேள்விகள் கேட்கப்படும் என்பதை அறியாமலேயே, அவற்றிற்கு முன்கூட்டியே பதில் எழுதி வைக்க முடிவது பேராச்சரியமே அல்லவா?

”Beyond Biofeedback” நூலில் சுவாமி ராமா செய்ய முடியும் என்று சொன்ன சில ஆராய்ச்சிகளை தங்களால் செய்ய முடியாமல் போனதற்கு எல்மர் மற்றும் அலைஸ் க்ரீன் ஆராய்ச்சியாளர்கள் வருத்தம் தெரிவித்திருந்தார்கள்.


ஆனால் அவர்கள் அப்படி செய்ய முடியாமல் போன ஆராய்ச்சிகளில் இரண்டு வேறு சில யோகிகளால் செய்து காட்டப்பட்டிருப்பதை வாசகர்கள் நினைவுகூறலாம். குடா பக்ஸ் கண்களை மூடிக் கொண்டு படித்துக் காட்டியதும், சுவாமி விசுத்தானந்தர் சூரிய சக்தியைக் கொண்டு சில அற்புதங்களைச் செய்து காட்டியதும் முன்பே பார்த்திருக்கிறோமல்லவா?


இனி சுவாமி ராமா மற்றவர்கள் முன்னிலையில் செய்து காட்டிய சில அற்புதங்களைப் பார்ப்போமா?



-என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி 30.01.2015

Thursday, April 16, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 42


க்‌ஷய் கோங்காங் மண்டபத்தில் இருந்த ஒரு வினோத துர்த்தேவதை சிலை முன் மந்திரத்தால் கட்டுண்டவன் போல நின்று கொண்டிருந்தான். ஏதோ ஒரு சக்தி அவனை அந்த இடத்தில் சிலையாக்கி விட்டிருந்தது போல் இருந்தது. அந்த சிலையின் கண்கள், அவர்கள் ஜீப்பில் வந்த திபெத்தியக் கிழவர் கண்களைப் போலவே இருந்ததாக அக்‌ஷய்க்குத் தோன்றியது. அந்தக் கிழவரின் கண்களில் தெரிந்த அதே வன்மம் அந்தச் சிலையின் கண்களில் தெரிந்ததே அதற்குக் காரணமாக இருக்கலாம்.



அவனை விட்டு விலகி மைத்ரேயன் சில அடிகள் நகர்ந்ததை அக்‌ஷய் உணர்ந்தான். தானும் அவனுடனேயே நகர நினைத்தான். ஆனால் அந்தச் சிலை முன் இன்னொரு சிலையாக மாறி விட்டிருந்த அவனால் நகர முடியவில்லை. திடீரென்று யாரோ வேகமாக மைத்ரேயனை நெருங்குவதை அவனால் உணர முடிந்தது. அவனுடைய நாக மச்சத்தில் ஒரு சிலிர்ப்பும் வெப்பமும் ஒரே நேரத்தில் உருவானது. மைத்ரேயனின் உயிருக்கு ஆபத்து என்று எச்சரிக்கிறதோ அவன் உள்ளுணர்வு? அக்‌ஷய் சகல பலத்தையும் திரட்டி தன்னைக் கட்டிப் போட்டிருந்த ஒரு சக்தியை முறியடித்து விட்டு வேகமாக இயங்கினான்.



மாராவின் ஆள் அந்த நேரத்தில் மைத்ரேயனை நெருங்கி விட்டிருந்தான். அவன் கையில் அந்த விஷ ஊசி தயாராக வைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் மைத்ரேயனின் கதையை முடிப்பது கச்சிதமான முடிவு என்று அவன் ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தான். எந்த இடத்தில் தீயசக்திகள் கட்டிப் போடப்பட்டிருந்தனவோ அந்த இடத்தில் புத்தரின் மறு அவதாரம் முடிவது அந்த சக்திகளின் விடுதலை பெற்றதற்கு பலமான ஆதாரமாக இருக்கட்டும்.



அந்த எண்ணமே அவனுக்கு கிளர்ச்சி ஊட்டியது. அந்தக் கணத்தில் தான் அவனும் மைத்ரேயனின் பாதுகாவலன் திரும்புவதைக் கவனித்தான். அவன் தன்னை நெருங்குவதற்குள் மைத்ரேயன் உடலில் அந்த ஊசியைக் குத்தி விட வேண்டும் என்று எண்ணினான். அந்த எண்ணம் எழுந்து முடிவதற்குள் அந்தப் பாதுகாவலன் அவனருகில் இருந்து அவன் கழுத்தைத் தொட்டான். உயிரே போவது போல் ஒரு வலியை அவன் உணர்ந்தான். அது மட்டுமல்ல, அவன் தன் கழுத்தைத் திருப்ப முடியவில்லை. அப்படியே கீழே விழப்போன அவனை அக்‌ஷய் தாங்கிப் பிடித்துக் கொண்டான். அக்‌ஷயின் கை கவனமாக அந்த ஆளின் கையில் இருந்த விஷ ஊசியை அவனது ஆடையிலேயே சொருகி விட்டது.


புத்தபிக்கு உடையில் இருந்த அக்‌ஷய் பின் கனிவான குரலில் அன்பான அக்கறை தொனியில் கேட்டான். “என்ன ஆயிற்று. தலை சுற்றுகிறதா?”


இப்போது எல்லோரும் இருவரையும் சூழ்ந்து கொண்டார்கள். “என்ன ஆயிற்று?” என்று கூட்டத்திலிருந்து இரண்டு குரல்கள் ஏக காலத்தில் எழுந்தன.


“தெரியவில்லை. இவர் மயங்கி விழப் போவதைக் கவனித்து நான் வேகமாக வந்து தாங்கிப் பிடித்தேன்” என்று அக்‌ஷய் கனிவு சற்றும் குறையாத குரலில் சொல்ல மாராவின் ஆள் பெரும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தான். ஏதோ சொல்ல அவன் வாயைத் திறந்தான். தொண்டை தான் வலித்ததே ஒழிய வார்த்தைகள் வரவில்லை. யாரிவன், என்ன செய்தான்? என்ற கேள்வி மனதுக்குள் பிரம்மாண்டமாய் எழ அவன் கழுத்தைச் சரி செய்து கொள்ள கடுமையாக முயன்றான். தாங்க முடியாத வலி தான் அவனைப் பாடாய் படுத்தியது. அவனால் கழுத்தை இம்மியும் நகர்த்த முடியவில்லை. அவன் உடலையாவது நிமிர்த்தி அக்‌ஷய் பிடியிலிருந்து விடுபட்டுக் கொள்ள நினைத்தான். அதுவும் முடியாமல் போன போது தான் தன் நிலைமையின் பூதாகரத்தை அவன் உணர்ந்தான். கையில் இருந்த விஷ ஊசியை அவன் ஆடையில் அந்த பாதுகாவலன் சொருகி இருந்ததையும் விழியோரத்தில் அப்போது தான் கவனித்த அவன் மனதில் இது வரை அறிந்திராத அச்சம் விஸ்வரூபம் எடுத்து அவன் முகத்திலும் பிரதிபலிக்க ஆரம்பித்தது.


“அவரைக் கீழே படுக்க வையுங்கள்” கூட்டத்தில் யாரோ சொன்னார்கள். அக்‌ஷய் அவனை பத்திரமாக தரையில் படுக்க வைத்தான்.


“மருத்துவர் இந்த மடாலயத்தில் இருக்கிறாரா?” என்று சுற்றுலா வழிகாட்டியிடம் அக்‌ஷய் கேட்க சுற்றுலா வழிகாட்டி மற்றவர்களைத் தள்ளி விட்டு முன்னுக்கு வந்தான். அக்‌ஷய் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவன் மாராவின் ஆளின் முகத்தில் தெரிந்த பீதியைக் கவனித்து விட்டு கண்களைச் சுருக்கிக் கொண்டு அவனையே உற்றுப் பார்த்தான்.


”இவரை இந்த மண்டபத்தில் இருக்கும் ஏதோ துர்த்தேவதை தான் தாக்கி இருக்க வேண்டும்” என்று ஆழ்ந்த யோசனையுடன் அவன் சொன்ன போது அவர்களையும் அறியாமல் சில பயணிகள் இரண்டடி பின்வாங்கினார்கள்.


சுற்றுலா வழிகாட்டி மாராவின் ஆளையும் ஒரு காட்சிப் பொருளாக்கித் தன் கருத்தைத் தாழ்ந்த குரலில் சொன்னான். “இந்த மடாலயத்தில் துர்த்தேவதைகளின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்ற பேச்சு சில காலமாக அடிபடுகிறது. அது உண்மை என்பதையே இவர் நிலைமை காட்டுகிறது.... இவர் யார்? இவர் கூட யாராவது வந்திருக்கிறீர்களா?”


யாரும் எதுவும் சொல்லவில்லை. அக்‌ஷய் தான் மறுபடியும் கேட்டான். “மருத்துவர் யாராவது இந்த மடாலயத்தில் இருக்கிறார்களா?”


“மேலை நாட்டுப் படிப்பு படித்த மருத்துவர்கள் யாரும் இங்கில்லை. ஆனால் இந்த மடாலயத்தில் பழங்கால மருத்துவம் அறிந்த பிக்குகள் இருக்கிறார்கள்” என்று அவன் சொல்லச் சொல்ல மடாலய பிக்கு ஒருவர் அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து விட்டு வந்தார். ”என்ன ஆயிற்று?”



”இந்த மண்டபத்தில் இருந்த துர்த்தேவதை ஒன்று அவரைத் தாக்கி விட்டது போல இருக்கிறது.” சுற்றுலா வழிகாட்டி ஆணித்தரமாய் சொல்ல அந்த மடாலய பிக்கு “என்ன உளறுகிறீர்கள்?” என்று கேட்டார்.


“பின் இவருக்கு என்ன ஆயிற்று என்று நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம்” என்று சுற்றுலா வழிகாட்டி சவால் விட்டான்.


கழுத்து ஒரு பக்கமாக திருகி பீதியுடன் கண்களை மட்டும் நகர்த்த முடிந்த நிலையில் இருந்த அந்த ஆளை பிக்கு பார்த்தார். அவருக்கு உடனடியாக பதில் அளிக்க முடியவில்லை.


பின் மெல்ல சொன்னார். “இந்த ஆள் எங்கள் மடாலய ஊழியர் தான். எத்தனையோ தடவை இந்த மண்டபத்தில் வந்திருக்கிறார். அப்போதெல்லாம் ஒன்றும் ஆனதில்லை....” அவர் கையை உயர்த்தி சைகை செய்ய இரண்டு ஊழியர்கள் விரைந்து வந்தார்கள். மாராவின் ஆளை இருவரும் தூக்கிக் கொண்டு போனார்கள். அக்‌ஷயையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த மாராவின் ஆளின் கண்கள் மைத்ரேயனையும் தேடின. ஆனால் மைத்ரேயன் அவன் பார்வைக்கு அகப்படவில்லை.


மடாலய ஊழியர்கள் மாராவின் ஆளைத் தூக்கிக் கொண்டு அந்த மண்டபத்தில் இருந்து வெளியேறிய பின் தான் அக்‌ஷயும் மைத்ரேயனைத் தேடினான். சற்று தள்ளி இருந்த சாளரத்தின் வழியே மைத்ரேயன் எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். சில நிமிடங்களுக்கு முன் மரணம் அவனை அணுகவிருந்தது என்கிற உண்மை அவனுக்கு உறைத்திருக்குமா என்பது அக்‌ஷய்க்கு விளங்கவில்லை. அது உறைத்திருக்கா விட்டாலும் எவனோ ஒருவன் கழுத்து திருகி விழுந்தது ஏன் எப்படி என்பதை அறிந்து கொள்ளும் சாதாரண ஆர்வமாவது அவனிடம் எழுந்திருக்க வேண்டும். அதுவும் இல்லை. எந்த சூழ்நிலையிலும் எந்த பதட்டமும் இல்லாமல், எந்தக் கவலையும் இல்லாமல் ஏதோ ஒரு உலகில் அமைதியாய் சஞ்சரிக்க முடிந்த மைத்ரேயனைப் பார்க்கையில் ஒரு கணம் அக்‌ஷய்க்குப் பொறாமையாக இருந்தது. இந்த மனநிலை வாய்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது.


ஆனால் அந்த ஆசைப்படவும் அவனுக்கு அதிக நேர அவகாசம் இருக்கவில்லை. இந்த மடாலயத்தில் இந்தக் கொலையாளி தனியாக இருக்க வாய்ப்பில்லை என்ற உண்மை திடீரென்று உறைத்தது. கண்டிப்பாக இவனது கூட்டாளிகள் இருப்பார்கள். அப்படி இருந்தால் அவர்கள் இனி என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது....



அக்‌ஷய் கை தானாக மைத்ரேயனின் பிஞ்சுக் கையைப் பற்றியது. மைத்ரேயனின் பார்வை அவன் பக்கம் திரும்பியது. அக்‌ஷய் அவன் கையை இறுக்கமாகப் பிடித்தபடி தாழ்ந்த குரலில் சொன்னான். “என்னுடனேயே இரு”. மைத்ரேயன் தலையசைத்தான். தொடர்ந்து அக்‌ஷய் சற்று கடுமையாகச் சொன்னான். “சிறிது நேரத்திற்கு முன்னால் நீ என்னை விட்டுத் தனியாக தள்ளிப் போனாயே. அது போல எல்லாம் நீ இனிமேல் செய்யக் கூடாது”. அவன் கடுமையும் மைத்ரேயனைப் பாதித்தது போலத் தெரியவில்லை. மறுபடியும் தலையசைத்தான்.



அக்‌ஷயிற்கு அந்தச் சிறுவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவன் தாயின் கண்ணீரும் அந்த நேரமாகப் பார்த்து நினைவுக்கு வர அவன் தன் கடுமையான பேச்சுக்காக வருத்தப்பட்டான். ஓரிடத்தில் தொடர்ந்து நிற்க முடியாத இந்த விளையாட்டுப் பருவத்தில் இருக்கும் இந்தச் சிறுவனிடம் கோபித்துக் கொள்வது நியாயம் அல்ல என்று மனசாட்சி உறுத்த அக்‌ஷய் மெல்லிய குரலில் அன்பாகப் புரிய வைக்க முயன்றான். “இந்த முறை என்னால் உன்னைக் காப்பாற்ற முடிந்தது. எல்லா முறையும் அது முடியும் என்று சொல்ல முடியாதல்லவா? அதனால் தான் சொல்கிறேன்”



அவனுடைய எண்ண ஓட்டங்களைப் படித்தவன் போல் மைத்ரேயன் லேசாகப் புன்னகைத்து தலையசைத்தான். எண்ணங்களைக் கூடப் படிக்க முடிந்தவனைப் போய் விளையாட்டுப் பையன் என்று உருகுகிறோமே என்று எண்ணிய அக்‌ஷய் மைத்ரேயனை மறுபடியும் கடுமையாகப் பார்க்க முயன்று தோற்றுப் போய்ப் புன்னகைத்தான்.


தே நேரத்தில் சம்யே மடாலயத்தின் இன்னொரு பகுதியில் மருத்துவ ஞானம் உள்ள ஒரு முதிய பிக்கு கழுத்து திருகி கட்டை போல் விழுந்து கிடந்த மாராவின் ஆளைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அங்கு கூடியிருந்த மடாலய ஆட்கள் பதினான்கு பேரில் இருவர் மாராவின் மற்ற ஆட்கள். அவர்கள் மற்றவர்களோடு சேர்ந்து கொண்டு ஏதோ ஒரு ஆர்வத்தில் வேடிக்கை பார்ப்பவர்கள் போல நின்று கொண்டிருந்தார்கள். நடந்ததை எல்லாம் மாராவிடம் தெரிவிக்கும் பொறுப்பு இப்போது அவர்கள் தலையில் விழுந்திருக்கிறது. அப்படித் தெரிவிக்கும் போது தற்போதைய நிலவரத்தையும் சரியாகச் சொல்லும்படி மாரா நிர்ப்பந்திப்பான் என்பதால் முதிய பிக்கு என்ன சொல்லப் போகிறார் என்று அறிய படபடப்புடன் காத்திருந்தார்கள்.



(தொடரும்)


என்.கணேசன்

Monday, April 13, 2015

இதயம் நின்றும் இறக்காத யோகி!

19.மகாசக்தி மனிதர்கள்


சுவாமி ராமா இதயத்துடிப்பை சில நிமிடங்களுக்கு நிறுத்தக் கூட தன்னால் முடியும் என்றும் அதற்கு மூன்று நாட்கள் உபவாசம் உட்பட சில ஆயத்தங்கள் செய்ய வேண்டியிருக்கும் என்றும் கூறினார். ஆனால் அப்போதே அவர் உணவருந்திக் கொண்டு தான் இருந்தார். மேலும் இன்னும் ஒரு நாள் தான் ஆராய்ச்சிக்கு பாக்கி இருக்கிறது என்பதால் அது சாத்தியமாக இருக்கவில்லை. ஆனால் அவருடைய குரு ஆயத்தமே இல்லாமல் மூன்று வினாடிகளில் அதைச் செய்து காட்டுவார் என்று ஸ்வாமி ராமா சொன்னார்.


மூன்று வினாடிகளில் ஆயத்தமாகி நிமிடக்கணக்கில் இதயத்துடிப்பை நிறுத்தவல்ல அவருடைய குருவைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கேட்டதற்கு அவருடைய குரு பிரமிக்கத்தக்க சக்திகள் படைத்த யோகி என்றாலும் அவருக்கு பிரபலமாவதில் விருப்பமில்லை என்றும் அது ஆன்மீக வாழ்க்கைக்கு இடைஞ்சல் என்று கருதுபவர் என்றும் சொன்னார்.


பிறகு சுவாமி  ராமா உபவாசம் இருந்து ஆயத்தமாக சமயமில்லாததால் ஓரளவு இதயத்துடிப்பை மறுநாளே தன்னால் நிறுத்திக் காட்ட முடியும் என்றும் எத்தனை நேரம் நிறுத்திக் காட்டினால் அதை சாதனை என்று எடுத்துக் கொள்வீர்கள் என்றும் கேட்டார். ஆராய்ச்சியாளர்கள் பத்து வினாடிகள் நிறுத்திக் காட்டினால் போதும் அதுவே சாதனை தான் என்று சொன்னார்கள்.


மறுநாளே அந்த ஆராய்ச்சிக்கு தன்னை உட்படுத்திக் கொள்வதாக சுவாமி ராமா சொன்னார். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் தயங்கினார்கள். என்ன தான் யோகியானாலும் அவரே முழு ஆயத்தமாக இல்லை என்று சொல்கின்ற ஒரு நிலையில் அந்த ஆராய்ச்சி உயிருக்கே உலை வைக்கலாம் என்கிற பயம் அவர்களுக்கு இருந்தது. ஆனால் சுவாமி ராமா இந்த ஆராய்ச்சிக்கு முழு மனதாக ஒப்புக் கொள்வதாகவும், அதன் மூலம் உயிருக்கு ஆபத்து வருமானால் மென்னிங்கர் ஃபௌண்டேஷன் அதற்கு பொறுப்பு அல்ல என்றும் கையெழுத்திட்டுத் தருவதாக உறுதியளித்தார்.   


அதனால் மூன்றாவது நாள் ஆராய்ச்சிக்கு மென்னிங்கர் ஃபௌண்டேஷன் ஆயத்தமானது. இதயத்தையே சில வினாடிகளாவது நிறுத்திக் காட்டுவதாக சுவாமி ராமா சொன்னார் என்று கேள்விப்பட்டவுடனேயே மேலும் பல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பார்வையாளர்களாக அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களில் டாக்டர் ஃபெர்குசனும், டாக்டர் சார்ஜெண்டும் முக்கியமானவர்கள். அவர்கள் கண்காணிப்பறையில் அமர்ந்து கொண்டு நடப்பதை ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தார்கள்.


சுவாமி ராமா ஆராய்ச்சிக்கு முன்பு ஒரு கோரிக்கை வைத்தார். சரியான ஆயத்தம் இல்லாமல் இருப்பதால் ஆராய்ச்சியின் போது ஒரு கட்டத்தில் “போதும். அவ்வளவு தான்என்று சத்தமாகச் சொல்லுங்கள். நான் உடனே இயல்பு நிலைக்கு வந்து விடுகிறேன். ஏனென்றால் என்னை அறியாமல் தொடர்ந்து செய்து இதயத்தின் சூட்சும அலைகளை நான் பாழ்படுத்தி விட விரும்பவில்லை.


ஆராய்ச்சி ஆரம்பமானது. அந்த ஆராய்ச்சியில் 16.2 வினாடிகள் இதயத்தை நிறுத்தி ஆராய்ச்சியாளர்களைத் திகைக்க வைத்தார். பத்து வினாடிகளே பெரிய விஷயம் என்றவர்களுக்கு 16.2 வினாடிகள் இதயம் துடிக்காமல் இருந்தது அதிசயமாகவே தோன்றியது. அதுவும் 16.2 வது வினாடியில் போதும் அவ்வளவு தான்என்று சொல்லி ஆராய்ச்சியாளர்கள் தான் நிறுத்தினர். அந்த சொல்லைக் கேட்டவுடன் மூச்சு விட ஆரம்பித்த சுவாமி ராமா மிக விரைவில் இயல்பு நிலைக்கு வந்தார். அந்த EKG ரிகார்டிங் இதோ உங்கள் பார்வைக்கு-





இங்கு யோகியே ஆனாலும் இயல்பு நிலைக்கு மாறாகச் செல்லும் போது தகுந்த ஆயத்தங்கள் இல்லாமல் செல்லத் தயங்குவதும், அப்படியே ஆயத்தம் இல்லாமல் போகும் போதும் ஒரு எல்லையைத் தாண்டிப் போக முற்படுவதில்லை என்பதும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.


சுவாமி ராமா சொன்னதில் அந்த ஆராய்ச்சியாளர்களுக்கு பிடிபடாத ஒரு தகவல் இருந்தது. இதயத்தின் சூட்சும அலைகளைப் பாழ்படுத்தாமல் இருக்க விரும்புவதாக அவர் சொன்னது அவர்களுக்கு புரியவில்லை. அதைப் பற்றிக் கேட்ட போது இதயம் என்பது பெரிய சக்தி மையம். நீங்கள் பார்ப்பதும், ஆபரேஷன் செய்வதும் எல்லாம் அதன் அடர்த்தியான உருவமான உறுப்பையே. ஆனால் அதைச் சுற்றி உள்ள சூட்சும சக்திகள் அந்த உறுப்பை பாதிக்க வல்லவை. அவை பாழானால் அந்த உறுப்பே பாழாகி விடும்என்று சொன்னார்.

அவர் சொன்னது மருத்துவ ரீதியாக அவர்களுக்குப் புரியவில்லை. ஆனால் யோகிகள் உடலின் நுட்பமான, கண்ணுக்குத் தெரியாத சக்தி அலைகளையும் ஆராய்ந்து அவற்றைக் கட்டுப்படுத்தவும் அறிந்திருந்ததால் தான் அதிசயங்களை நிகழ்த்த முடிந்திருக்கிறது என்பதை உணர்ந்தார்கள். அந்த ஆராய்ச்சியாளர்கள் தங்கள் நூலில் அவர் அப்படி இதயத்துடிப்பை நிறுத்தும் நிலைக்குப் போனது மட்டுமல்ல மறுபடி பழைய நிலைக்கு மீண்டு வர முடிந்ததும் அதிசயமே என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஏனென்றால் சிலருக்கு சில நிலைகளுக்குப் போய் விட முடியும் ஆனால் திரும்பி வர முடியாது.


மேலும் அவர் இதயத்துடிப்புகளின் EKG ரிகார்டிங்கில் அந்த 16.2 வினாடிக்குப் பிந்தைய பதிவுகளும் சற்று அசாதாரணமாக இருப்பதாக அவர்களுக்குத் தோன்றியதால் அந்த முழுக் குறிப்புகளையும் இதய சம்பந்தமான ஆராய்ச்சிகளில் அவர்களை விட சில படிகள் முன்னேறி இருந்த கான்சாஸ் யூனிவர்சிட்டி மருத்துவ மையத்திற்கு (Kansas University Medical Center) அனுப்பி வைத்தார்கள். . அதை எல்லாம் ஆராய்ந்து விட்டு அதன் தலைவரான டாக்டர் மார்வின் டுன்னே ( Dr. Marvin Dunne) கேட்டார். “இந்த ஆள் அப்புறம் என்ன ஆனார்?இப்படி இதயத்துடிப்புகள் பதிவாகி உள்ள ஆள் பிழைக்கவே வழியில்லை என்பது தான் அவர் கருத்தாக இருந்ததால் தான் அப்படி கேட்டார். அங்கு கண்காணிப்பாளராக இருந்த டாக்டர் சார்ஜெண்ட் சொன்னார். “வயரை எல்லாம் கழற்றி விட்டு ஒரு சொற்பொழிவுக்குக் கிளம்பிப் போய் விட்டார்” . டாக்டர் மார்வின் டுன்னேக்கு அதை ஜீரணிக்க கஷ்டமாக இருந்தது.

அதன் பின்னர் நாள் கணக்கில் ஆராய்ச்சிகளுக்கு ஒத்துக் கொள்வதை சுவாமி ராமா தவிர்த்தார். முதல் முறை விஞ்ஞான ஆராய்ச்சிகள் எப்படி இருக்கின்றன என்பதை அறியவும், தன் சக்திகள் விஞ்ஞானக் கருவிகளில் எப்படி பதிவாகின்றன என்பதை அறியவும் இருந்த ஆர்வம் அந்த ஒன்றில் அறிந்து முடிந்த பின் அலுப்பு ஏற்பட்டது போலும். ஆனால் உடனடியான சவால்களை சந்திக்க அவர் என்றுமே மறுக்கவில்லை.

அவர் சிகாகோவில் ஒரு முறை உரையாற்றிக் கொண்டிருந்த போது உடலில் உள்ள 'சக்ரா'க்களைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். அந்த சக்ராக்களின்  சக்தியை அதிகப்படுத்த முடியும் என்றும் அப்போது அவை ஒளிர்வதை புறக் கண்ணால் கூடக் காண முடியும் என்றும் சுவாமி ராமா சொன்னார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் சந்தேகத்துடன் கேட்டார். "கண்ணால் காண முடியும் என்றால் அதைப் புகைப்படம் எடுக்கவும் முடியும் அல்லவா? நீங்கள் இப்போது செய்து காட்டினால் நான் என்னிடம் உள்ள பொலொராய்டு காமிராவில் இப்போதே புகைப்படம் எடுக்கிறேன். உங்களால் ஏதாவது ஒரு சக்ராவை ஒளிர வைக்க முடியுமா?"

அதற்கு சம்மதித்த ஸ்வாமி ராமா அங்கேயே தன் இதயச் சக்ராவிற்கு சக்தியை அனுப்பி அந்தச் சக்ராவை ஒளிரச் செய்தார். அப்போது அந்த மருத்துவர் அதைப் பல புகைப்படங்கள் எடுத்துப் பார்த்து பின் தான் சந்தேகம் தெளிந்தார். அந்தப் புகைப்படங்களில் ஒன்றை நீங்கள் இங்கே காணலாம்.



சக்ராக்கள் என்பது வெறும் கற்பனை மையங்கள் அல்ல, அவை உடலின் சக்தி மையங்களே என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்துவதாகச் சொல்லலாம்.


சுவாமி ராமா செய்து காட்டிய அற்புதங்கள் இன்னும் முடியவில்லை. அடுத்த வாரம் அவற்றைப் பார்ப்போமா?

-என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – 23.1.2015