சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 28, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-51





மனதை ஒருமுனைப்படுத்துங்கள்

நீங்கள் எஜமானர், உடலும், மனமும் உங்கள் கருவிகள் என்பதை உணர்ந்து அந்த எண்ணத்தை மனதில் வேரூன்றச் செய்வதன் முக்கியத்துவத்தைப் பார்த்தோம். அடுத்த கட்டமாக அந்தக் கருவிகளை உங்கள் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்த முடிவது தான் உங்கள் எஜமானத்துவத்திற்கு அத்தாட்சி என்பதை உணருங்கள்.

உடலை முறையாகப் பயன்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக முக்கியம். அது பழுதடைந்து விட்டால் மனதில் உடலைத் தவிர்த்து வேறு எந்த எண்ணமும் பலமாக எழ வாய்ப்பு குறைவு. உதாரணத்திற்கு கடுமையான தலைவலியோ, பல்வலியோ, வேறு பெரிய உபாதைகளோ இருக்கும் போது வேறு எதைப் பற்றியாவது சீரியசாக எண்ணி செயல்பட முடிகிறதா என்று பாருங்கள். அந்த உபாதைகள் சரியாகும் வரை அது முடியாது. எனவே உடல் பாதிக்கப்படும் போது மனமும் நாம் நினைத்தபடி இயங்க மறுக்கிறது என்பதால் இரண்டுமே நமக்கு எண்ணியபடி பயன்படாமல் போகின்றன. எனவே உடலை நமக்கு இடைஞ்சல் தராத அளவுக்காவது நல்லபடி வைத்துக் கொள்வது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோருக்கு மிக முக்கியம்.

அடுத்ததாக மனம். சூரிய ஒளியை லென்ஸ் மூலமாக காகிதத்தின் ஒரு புள்ளியில் குவிக்கும் போது அந்தக் காகிதம் பற்றி எரிவதை பெரும்போலோர் சிறு வயதில் செய்து பார்த்திருப்போம். மனம் என்னும் கருவி சக்தி வாய்ந்ததாக மாறுவது நாம் விரும்பும் விதத்தில் அதை ஒருமுனைப்படுத்தும் போது. மனம் அதற்குப் பிடித்த செயலில் ஒருமுனைப்படுவது பெரிய விஷயமல்ல. பிடித்த சினிமா பார்க்கும் போது, நாவல் படிக்கும் போது, இசையைக் கேட்கும் போது எல்லாம் மனம் தானாக ஒருமுனைப்படும். பிடித்த அந்தக் காரியம் முடிந்த பிறகு தான் மனம் வேறு விஷயத்திற்கு நகரும். அப்படி பிடித்த விஷயத்தில் தானாக ஒருமைப்பட முடிந்த மனத்தை நம் கட்டளைப்படி நாம் சொன்ன விஷயத்தில் ஒருமைப்படுத்த முடிவது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோர் பெற வேண்டிய அடுத்த பயிற்சி.

ஏதாவது ஒரு சாதாரண பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அது நீங்கள் தினம் பார்க்கக்கூடிய பொருளாக இருக்கட்டும். உதாரணத்திற்கு பென்சிலை எடுத்துக் கொள்வோம். இனி அடுத்த சில நிமிடங்களுக்கு பென்சிலைத் தவிர நீங்கள் வேறு எதையும் நினைக்காமல் பென்சிலைப் பற்றியே சிந்தியுங்கள். உங்கள் முழுக்கவனமும் அதிலேயே இருக்கட்டும். சில வினாடிகளுக்கு மேல் அதில் கவனத்தைக் குவிப்பது ஆரம்பத்தில் முடியாத செயல். மனம் பென்சிலில் கவனம் வைக்க என்ன இருக்கிறது என்று சொல்லி சுவாரசியமான மற்றவற்றிற்குச் செல்ல அலைபாயும். ஆனால் மனதை திரும்பவும் பென்சிலிற்கே கொண்டு வாருங்கள். அதன் உருவம், நிறம், அளவு, உபயோகங்கள், என்று மனம் பென்சிலை சார்ந்த, பென்சிலை மையமாகக் கொண்ட விஷயங்களை மட்டுமே சிந்தியுங்கள். சில வினாடிகளில் மனம் இதைப் பற்றி முழுவதும் நான் சிந்தித்து முடித்து விட்டாயிற்று. இனி சிந்திக்க வேறொன்றும் இல்லை என்று சொல்லும். ஆனாலும் விடாமல் பென்சிலுக்கு மனதைக் கொண்டு வாருங்கள். உங்கள் முழுக் கவனமும் பென்சிலைப் பற்றியதாக, பென்சிலிலிலேயே இருக்கட்டும். ஓரளவு மனம் ஒருமுனைப்பட ஆரம்பித்த பின் பயிற்சி நேரத்தை ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகக் கூட்டிக் கொண்டே வாருங்கள். புதிது புதிதாக பென்சிலைப் பற்றிய அதிக விவரங்களை அறிய ஆரம்பிப்பீர்கள்.

கவனிக்கும் திறனின் முக்கியத்துவத்துவம் அறிய ஒரு நிகழ்வைச் சொல்லலாம். தாவரம், விலங்கு முதலான உயிரின ஆராய்ச்சியாளரான லூயி அகாசிஸ் (Louis Agassiz) என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் அந்தத் துறையில் தலைசிறந்து விளங்கியவர். அவரிடம் கற்ற மாணவர்கள் கூர்ந்து கவனித்து அறிந்து கொள்வதிலும், நுண்ணிய அறிவிலும் வல்லவர்களாக இருந்தார்கள். ஒரு முறை அவரிடம் கற்க ஒரு புதிய மாணவன் வந்தான்.

அகாசிஸ் மீன் தொட்டியில் இருந்து ஒரு மீனை எடுத்து அந்த மாணவன் முன் வைத்து அதை மிக நுணுக்கமாகக் கவனித்து தன்னிடம் விளக்கமாகச் சொல்லச் சொல்லி விட்டு வெளியே போய் விட்டார். அந்த மாணவன் பல முறை பல விதமான மீன்களைப் பார்த்தவன். இந்த மீனோ மிக சாதாரணமான மீன். இதைக் கவனித்து விளக்கமாகச் சொல்ல என்ன இருக்கிறது என்று எண்ணினான். ஆனாலும் அவர் சொல்லியபடி அந்த மீனைக் கவனித்து குறிப்பெடுத்துக் கொண்டான். மீனின் கண்கள், வால் பகுதி, வாய், செதிள்கள், பக்கவாட்டில் துடுப்பு போன்ற பகுதி என்று எல்லாவற்றையும் கவனித்து எழுதினான். சிறிது நேரத்தில் எல்லாம் அறிந்தாகி விட்டதாக நினைத்து வெளியே வந்து அகாசிஸைத் தேடினான். அவரைக் காணவில்லை.

மறுபடி உள்ளே வந்தவன் பொழுது போகாமல் அந்த மீனை வரைய ஆரம்பித்தான். வரையும் போது அந்த மீன் குறித்து இதற்கு முன் கவனிக்காத சில அதிகப்படியான தகவல்களை அவன் அறிந்தான். அதையும் குறித்துக் கொண்டான். பல மணி நேரம் கழித்து வந்த அகாசிஸிடம் தன் குறிப்புகளைக் காட்டினான். அகாசிஸ் திருப்தியடையவில்லை. இன்னும் நன்றாகவும் நுணுக்கமாகவும் கவனிக்கச் சொல்லி விட்டுப் போனார். மாணவனுக்கு ஒரே ஏமாற்றம். இந்த ஆளிடம் வந்து மாட்டிக் கொண்டோமே என்று நொந்து கொண்டான். ஆனாலும் மேலும் நுணுக்கமாக அதைக் கவனிக்க ஆரம்பித்தான். இதற்கு முன் சாதாரணமாகத் தெரிந்த ஓரிரு விஷயங்கள் இப்போது மிக நுண்ணிய அளவில் வித்தியாசமாக இருக்கக் கண்டான். அவற்றைக் குறித்துக் கொண்டான். அந்த நாளின் இறுதியில் மறுபடி வந்த அகாசிஸிடம் அவற்றைக் காட்டினான். அப்போதும் அவர் திருப்தியடையவில்லை. அது போல் மூன்று நாட்கள் அவனை அந்த மீனைக் கவனிக்க வைத்தார். மூன்று நாட்களின் இறுதியில் அவன் மேலும் மேலும் கவனித்து அந்த மீனின் தனித்தன்மைகளாக பல பக்கங்கள் எழுதியிருந்தான்.

அந்த மாணவன் பிற்காலத்தில் சிறந்த உயிரியல் வல்லுனராகப் புகழ் பெற்ற போது கூறினான். ”நான் என் வாழ்க்கையில் கற்ற அந்த முதல் பாடம் தான் கற்ற எல்லாப் பாடங்களிலும் உயர்ந்ததென்று இப்போதும் நினைக்கிறேன். அதுவே பிற்காலத்தில் நான் அறிந்த அத்தனை அறிவுக்கும் காரணமாக இருந்தது. வேறு வகைகளில் யாரும் பெற முடியாத, பெற்ற பின் இழக்க முடியாத சிறந்த பாடமாக அதைச் சொல்லலாம்”.

பிரபல விஞ்ஞானியான ஐசக் நியூட்டனும் தான் அறிவியல் இரகசியங்களை அறிந்த விதமாக இதையே கூறுகிறார். “நான் அறிய வேண்டிய விஷயத்தைக் குறித்தே தினமும் என் கவனத்தில் வைத்திருப்பேன். சிறிது சிறிதாக உண்மைகள் விளங்கும். ஒரு நாள் எல்லாம் தெளிவாகத் தெரியும்.” இதையே மற்ற பெரும்பாலான விஞ்ஞானிகளும் அனுபவபூர்வமாகக் கூறுகிறார்கள்.


மனதை நாம் தேர்ந்தெடுக்கும் பொருளில் நூறு சதவீதம் கவனிக்க வைத்தல் தான் ஒருமுனைப்படுத்துதல். குரங்கு போல் தாவும் மனதைக் கடிவாளம் இட்டு இழுத்துப் பிடித்து, நமக்கு வேண்டியதில் ஒருமுனைப்படுத்துதல் மன உறுதியும், ஆர்வமும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். சுவாரசியமில்லாத பொருள்களிலும், சுவாரசியமில்லாத விஷயங்களிலும் தொடர்ந்து கவனத்தைக் குவிப்பதால் என்ன நன்மை விளைந்து விடும் என்று சந்தேகத்துடன் கேட்காதீர்கள். இந்தப் பயிற்சியில் நாம் எடுத்துக் கொள்ளும் பொருளோ, விஷயமோ முக்கியமல்ல. உடலின் பகுதிகளை உடற்பயிற்சி செய்து பலப்படுத்துவது போல மனதின் திறன்களைப் பலப்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமும், பயனும். மனம் நம் கருவியாக இருந்து நாம் விரும்பும் இடத்தில் குவிகிறது என்கிற அளவிற்கு பழக்கப்படுத்திக் கொண்டால் அது பல பெரும் சக்திகள் அடங்கிய பொக்கிஷத்தைத் திறக்க உதவும் சாவியாக மாறும்.

எனவே இந்தப் பயிற்சியைத் தவறாமல் செய்து பாருங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதில் மனதைக் குவிக்கும் நேரத்தை நாளுக்கு நாள் அதிகப்படுத்திக் கொண்டே செல்லுங்கள். ஆரம்பத்தில் போரடித்தாலும் நீங்கள் தொடர்ந்து செய்து ஒன்றைப் பற்றி புதிது புதிதாக போகப் போக அறியும் போது தானாக அதில் ஈடுபாடும், ஆர்வமும் பிறக்கும்.

அடுத்ததாக மிக முக்கியமான வேறொரு பயிற்சியைப் பார்ப்போம்.

மேலும் பயணிப்போம்....

(தொடரும்)
நன்றி: விகடன்

Monday, October 25, 2010

சோம்பல் ஒரு சோக காரணி





ஒருவன் வேலை தேடி ஒரு செல்வந்தரிடம் போனான். என்ன வேலையானாலும் செய்யத் தயார் என்றான். எவ்வளவு சம்பளமானாலும் சம்மதமே என்றான். அந்த செல்வந்தருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. இப்படியும் ஒருவன் வேலையாளாகக் கிடைப்பது என்பது அதிர்ஷ்டமே அல்லவா?

அவன் தொடர்ந்து சொன்னான். “ஆனால் எனக்கு இரண்டே இரண்டு நிபந்தனைகள் .....”

அவர் கேட்டார். “என்ன நிபந்தனைகள்?”

அவன் சொன்னான். “முதலாவது நிபந்தனை- எனக்கு சாப்பிட்டவுடனேயே சிறிது நேரம் உறங்க வேண்டும்”

அவர் சொன்னார். “அது ஒரு பிரச்னையல்ல. அடுத்த நிபந்தனை என்ன?”

அவன் சொன்னான். “உறக்கத்தில் இருந்து விழித்த உடனேயே சிறிதாவது சாப்பிட வேண்டும்”

அந்த செல்வந்தரிடம் ஆரம்பத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி கோபமாக மாறியது என்பதைச் சொல்லத் தேவையில்லை. உண்பதும் உறங்குவதுமே அவனுக்கு முழு நேர வேலை என்றால் அதற்கு சம்பளம் தர அவருக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது. அவனை அவர் அடித்து விரட்டினார்.

இது படிக்க ஒரு நகைச்சுவைக் கதை போல் தெரியலாம். ஆனால் நிறைய பேர் ஆசைப்படுவது இப்படித் தானிருக்கிறது. இந்த மனநிலை தான் சோம்பல். வாழ்க்கை சுமுகமாகப் போக வேண்டும், ஆனால் அது தங்கள் முயற்சியில்லாமல் நடந்தேற வேண்டும் என்று ஆசைப்படும் மனநிலை பலரிடம் இருக்கிறது. வார்த்தைகளில் சொல்லா விட்டாலும் எதிர்பார்ப்பு என்னவோ இப்படித்தான்.

சோம்பேறிகள் எந்த வித உழைப்பையும் மலைப்போடு பார்ப்பார்கள். கடுகளவு வேலையும் மலையளவாய் அவர்களுக்குத் தோன்றும். முயற்சி, வேலை என்றாலே ஒருவகை வெறுப்பை தங்கள் மனதில் வளர்த்து வைத்திருப்பார்கள். அப்படி வேறு வழியில்லாமல் வேலை செய்தே ஆக வேண்டும் என்று நிர்ப்பந்தம் வந்தால் அந்த வேலை தங்கள் வசதிக்கேற்ப இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அந்த வேலையும் குறைந்த அளவாக இருக்க வேண்டும் என்றும், வேலையில் எந்த சிரமங்களும் இருக்கக்கூடாது என்று எண்ணுவார்கள். வேலை செய்வது எப்படி என்பதை அறிவதற்குப் பதிலாக அந்த வேலையில் இருந்து தப்பிப்பது என்பதை அறிந்து வைத்திருப்பார்கள்.
முடிந்த வரை அடுத்தவர்கள் தயவில், அடுத்தவர்கள் உழைப்பில் வாழத் துடிக்கும் இவர்கள் சோம்பல் தங்கள் வாழ்வில் மிகப்பெரிய சோக காரணி என்பதை உணர மறந்து விடுகிறார்கள்.

ஜெரிமி டெய்லர் சொல்வார். “உயிர் வாழும் மனிதனைப் புதைப்பது போன்றது சோம்பல்”. செஸ்டர் ஃபீல்டு பிரபு கூறுவார். “முயற்சி செய்யாமல் முடங்கிக் கிடைக்கும் சோம்பலை நான் ஒரு விதத் தற்கொலையாகவே கருதுகிறேன்”. அவர்கள் சொல்வது போல சோம்பேறித்தனம் மரணமடைவதற்கு சமமானது. இறந்தவனால் ஒன்றும் செய்ய முடியாது. சோம்பேறியோ ஒன்றும் செய்ய மாட்டான். இந்த இயக்கமின்மையை வைத்துப் பார்க்கும் போது இருவரும் ஒன்று தானே. இறக்கும் வரை இயங்கவே பிறந்திருக்கிறோம். இயங்க மறுப்பது வாழ்க்கையையே மறுப்பது போலத் தான்.


ஆனால் மேலும் ஆராய்ந்து பார்த்தால் சோம்பேறி பிணத்தைக் காட்டிலும் மோசமானவன். பிணம் மற்றவரை உபத்திரவிப்பதில்லை. சோம்பேறியோ யாரையெல்லாம் சார்ந்து இருக்கிறானோ அவர்களுக்கெல்லாம் பெரும் பாரமாகவும் உபத்திரவமாக இருக்கிறான். பிணம் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காது. ஆனால் சோம்பேறிக்கோ அடுத்தவர்களிடம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது.

மனிதன் பயன்படுத்தாத எதுவும் வலிமை குன்றிப் போகிறது. உடலை உழைக்க வைக்காத போது உடல் வலிமை குறைந்து கொண்டே போய் உடல் நோய்வாய் படுகிறது. அறிவைப் பயன்படுத்தாத போதோ சிந்திக்கும் திறன் குறைந்து கொண்டே போய் புத்தி மந்தமாகி விடுகிறது. சோம்பேறி இந்த இரண்டையும் பயன்படுத்தாமல் ஆரோக்கியத்திலும், புத்தியிலும் தனக்கே கேடு விளைவித்துக் கொள்கிறான்.

உலகில் உழைப்பில்லாமல் எந்த நல்ல காரியமும் நடந்து விடுவதில்லை. நம்மைச் சுற்றிப் பாருங்கள். நாம் வசிக்கும் வீடு உழைப்பால் உருவாக்கப்பட்டது. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் உழைப்பால் உருவானவை. உழைப்பில்லாமல் உருவாவது களைகள் மட்டுமே. நல்ல செடிகளை நட்டு, நீருற்றி பேணிக்காக்க வேண்டி இருக்கிறது. அங்கு உழைப்பு தேவைப்படுகிறது.

சோம்பேறித்தனத்தால் நல்லது எதுவும் நடப்பதில்லை என்பது மட்டுமல்ல, ஏராளமான தீமைகளுக்கு சோம்பல் விளைநிலமாக இருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சோம்பேறியின் மூளை தீமைகளின் தொழிற்சாலை என்று சொல்வார்கள். அது உண்மையே. தேங்கிக் கிடக்கும் நீரில் நோய்க்கிருமிகளும், புழு பூச்சிகளும் உருவாவது போல இயக்கம் இல்லாத சோம்பேறியின் மூளையில் தீய சிந்தனைகள் தழைக்கின்றன. திருட்டு, கொள்ளை எல்லாம் உழைக்கத் தயங்கும் சோம்பேறித்தனத்தின் விளைவுகளே அல்லவா?

சோம்பலின் தீமைகளை திருவள்ளுவரும் அருமையாக விளக்குவார்.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். (616)

(முயற்சி செல்வத்தை உருவாக்கும். சோம்பலோ வறுமையை சேர்த்து விடும்)

603 ஆம் குறளில் “மடிமடிக் கொண்டொழுகும் பேதை” என்பார். ”அழிக்கும் இயல்புடையதாகிய சோம்பலை தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவிலி” என்பது இதற்குப் பொருள்.

அவர் சொல்வது போல சோம்பேறித்தனம் முட்டாள்தனமே ஆகும். உழைப்பு கடினமானது என்பது ஒரு தவறான அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்ட கருத்து ஆகும். உண்மையில் பார்த்தால் உழைப்பை விட சோம்பலே கடினமானது. உழைக்கும் போது உடலுக்கும் அறிவிற்கும் வேலை இருப்பதால் காலம் வேகமாக ஓடி விடும். முடிவில் செல்வமும் நன்மையும் விளைந்திருக்கும். ஆனால் சோம்பலில் காலம் நகர்வதே இல்லை என்று தோன்றும். முடிவில் வெறுமையும் துக்கமுமே மிஞ்சும்.

எனவே சோம்பலை உங்களிடம் இருந்து விலக்குங்கள். சோகத்தையும், அர்த்தமின்மையையும் சேர்த்து நீங்கள் உங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்குவதாக அது அமையும்.

-என்.கணேசன்

நன்றி: ஈழநேசன்

Wednesday, October 20, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-50





உயர் உணர்வு நிலைக்கு இரண்டாம் பயிற்சி-மனமும் நீங்களல்ல

பிரபஞ்ச சக்தியின் அங்கமாக உங்களை எண்ண முடிவது எல்லா சமயங்களிலும் உங்களுக்கு சாத்தியமாகா விட்டாலும் பயிற்சி செய்யும் அந்த சில நிமிடங்களிலாவது சாத்தியமாகிய பின், அது உண்மை என்று ஆழமாக உணர ஆரம்பித்த பின் மட்டுமே அடுத்த பயிற்சிக்குச் செல்ல வேண்டும். ஒரு வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின் மட்டுமே ஒரு மாணவன் அடுத்த வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவது போலத் தான் இதுவும். அடுத்த நிலைப் பாடங்களைப் புரிந்து கொள்ளவும், பயிற்சி செய்து தேறவும் முதல் நிலைப்பாடங்களைக் கற்று தேர்ச்சி பெற்றவருக்கே முடியும் என்பதை மறந்து விடக்கூடாது.

முதல் பயிற்சியில் நான் என்று எண்ணும் போது உடலையே நானாக எண்ணும் வழக்கத்தை விட்டொழிக்கப் பழக ஆரம்பித்திருப்பீர்கள். அடுத்ததாக நான் என்று சொல்லும் போது மனதை நினைக்கும் வழக்கத்தையும் விட்டொழிக்கும் சிந்தனைகள் மற்றும் பயிற்சிகளைப் பார்ப்போம்.

நம் கட்டுப்பாட்டில் இருக்கையில் மனம் ஒரு சிறந்த சேவகன். அதன் கட்டுப்பாட்டில் நாம் இருக்கையில் மனம் ஒரு மோசமான எஜமானன். ஒரு உடலைத் தேர்ந்தெடுத்து நாம் இங்கு வந்தது போலவே மனநிலையையும் நாமே தேர்ந்தெடுத்து உருவாக்கிக் கொள்கிறோம். அது நாம் உருவாக்கிக் கொள்வது தான் என்றாலும் அதையே நாம் என்று அடையாளம் காண ஆரம்பிக்கும் போது அதன் பிடியில் சிக்கிக் கொள்கிறோம். பின் அது நம்மை அலைக்கழிக்க ஆரம்பிக்கிறது.

இந்த இரண்டாவது பயிற்சிக்கு முன்பு அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். அமைதியாக இருக்கும் மனதில் வர ஆரம்பிக்கும் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் ஒரு பார்வையாளனாகக் காண ஆரம்பியுங்கள். கோபம், வெறுப்பு, ஆசை, ஏமாற்றம், பொறாமை என்று நூற்றுக் கணக்கில் எழும் உணர்ச்சிகளோடு கூடிய எண்ணங்களை ஒவ்வொன்றாக ஆராயுங்கள். அது எப்படி எழுந்தது, ஏன் எழுந்தது, என்ன தெரிவிக்கிறது என்றெல்லாம் ஒரு விஞ்ஞானி மைக்ராஸ்கோப்பில் ஆராய்ச்சி செய்வது போல செய்யுங்கள். சரியாக நீங்கள் அலசியிருந்தால் அதன் ஆரம்பத்தையும், காரணத்தையும், வளர்ச்சியையும், முடிவையும் கூட நீங்கள்
வெளியாளாக நின்று காண முடியும்.

ஒரு காலத்தில் உங்களிடம் இல்லாமல் இருந்து, பின் உருவாகி, சில சமயங்களில் உங்கள் மனநிலையில் பிரதான இடம் பிடித்து, ஆட்டுவித்து, பின் தணிந்து மடியும் அந்த உணர்ச்சிகளின் வரலாறை நீங்கள் பார்வையாளனாகப் பார்க்க முடியும். உங்களுடையது என்றால் அது என்றுமே உங்களிடம் இருந்திருக்கும். இடையே வந்து போவது என்றால் அது எப்படி உங்களுடையதாக முடியும். அதை எப்படி நீங்களாகவே உங்களால் அடையாளம் காண முடியும்?

எத்தனையோ எண்ணங்கள் ஒரு காலத்தில் மிக முக்கியமாக இருந்து இக்காலத்தில் நீங்கள் அலட்சியப்படுத்துவனவாக இருந்திருப்பதை நீங்கள் காண முடியும். இன்று முக்கியமாக இருப்பவைக்கும் நாளை அதே கதி நேரலாம். ஒரு காலத்தில் இது தான் நான் என்று நீங்கள் நினைத்ததெல்லாம் இன்று யாராவது சுட்டிக் காட்டினால் உங்களை தர்மசங்கடப்படுத்துவதாகக் கூட இருக்கலாம். நேற்றைய நான் வேறு, இன்றைய நான் வேறு என்பது எப்படி உண்மையாக முடியும்? இதெல்லாம் தத்துவமாகத் தோன்றலாம். ஆனால் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் மனம் என்பது கூட மாறிக் கொண்டே இருப்பது, அதனால் அதுவும் நீங்கள் இல்லை என்ற முடிவுக்கு நீங்கள் சுலபமாக வரலாம்.

அறிவுபூர்வமாக இதைப் புரிந்து கொள்ள முடிந்தாலும் அதை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்வது அவ்வளவு சுலபமல்ல. இதைத் தினமும் திரும்பத் திரும்ப சிந்தித்து உணர்ந்து உங்களுக்குள் மீண்டும் மீண்டும் பதிய வைக்க முயன்றால் ஒழிய அறிவுக்கு எட்டிய இந்த செய்தி அனுபவத்தில் வந்து உதவாது. எனவே இந்த உண்மையை உங்கள் மனதில் ஆழமாகச் சிந்தித்து பதிய வைத்துக் கொண்டு அடுத்த பயிற்சிக்குத் தயாராகுங்கள்.

1) முதல் பயிற்சியைப் போலவே இதற்கும் அமைதியாக ஓரிடத்தில் அமருங்கள்.

2) உங்களுக்கு ஏற்ற ஏதாவது ஒரு தியானத்தைச் செய்து முடியுங்கள்.

3) நீங்கள் எல்லையில்லாத பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கம் என்ற நினைவை முதல் பயிற்சியில் குறிப்பிட்டது போல உங்கள் மனதில் பிரதானப்படுத்துங்கள். அதை உணர்வு பூர்வமாக உணர முயற்சி செய்யுங்கள்.

4) இந்த உடலும், மனமும் உங்களது கருவிகள் என்பதை உறுதியாக உங்களுக்குள் பிரகடனப்படுத்துங்கள். ”நான் பிரம்மாண்டமான பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கம். நான் உடலல்ல. மனமும் அல்ல. நான் அந்த இரண்டையும் இயக்கும் எஜமான். நான் உடலையும், உள்ளத்தையும் சார்ந்தவன் அல்ல. அவற்றால் தீர்மானிக்கப்படுபவனும் அல்ல, இயக்கப்படுபவனும் அல்ல. அவற்றை தேவைப்படும் போது, தேவைப்படும் விதத்தில் நான் பயன்படுத்த வல்லவன்”. (வார்த்தைகள் இப்படியே இருக்க வேண்டும் என்பதில்லை. அவற்றின் மீது நீங்கள் சக்தி செலுத்தவும், இயக்கவும் வல்லவர் என்ற செய்தியைத் தெளிவாகச் சொல்லும்படியாக இருத்தலே அவசியம்)

5) மேலும் சொல்லிக் கொள்ளுங்கள். “உடலையும், உள்ளத்தையும் என் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நான் என்னுள்ளே என் இயல்பான எல்லையில்லாத சக்தியை உணர்கிறேன். எல்லையில்லாத அமைதியை உணர்கிறேன். இந்த மகாசக்தியும், பேரமைதியும் என் பிறப்புரிமை. உலக நடப்பின் தோற்றங்களில் நான் இவற்றை இழந்து விட மாட்டேன்”

இப்படி உங்களுக்குள் சொல்லிக் கொள்ளும் போது அது உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அவை நம்பிக்கையுடன் மிக உறுதியாக சொல்லப்பட வேண்டும். அப்போது தான் இந்தப் பயிற்சி முடிக்கையில் உங்களுக்குள் சக்தியையும், அமைதியையும் நன்றாகவே உங்களால் உணர முடியும். மேலோட்டமாக, எந்திரத்தனமாகச் சொல்லப்படுபவை எந்த தாக்கத்தையும் உங்களுக்குள் ஏற்படுத்தப் போவதில்லை.

இந்தப் பயிற்சியையும் விடாமல் பொறுமையாக தினமும் செய்யுங்கள். நீங்கள் ஆத்மார்த்தமாக தினமும் செய்தால் சில நாட்களில் உங்களிடம் மாற்றத்தை உணர ஆரம்பிப்பீர்கள். அத்தோடு திருப்திப்பட்டு பயிற்சியை நிறுத்தி விடாதீர்கள். மேலும் தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் அந்த மாற்றம் மேலும் மெருகு பெற்று நீடித்து உங்களிடம் தங்க ஆரம்பிக்கும்.

ஒருவன் உடலுக்கோ, மனதிற்கோ அடிமையாக இருந்து கொண்டு ஆழ்மன சக்திகளை தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர முடியாது. ஆளுமை சக்தி அடிமைத்தனத்திற்குக் கிடைத்து விடாது. அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீளவே இந்த இரண்டு பயிற்சிகளும் சொல்லப்பட்டுள்ளன. இந்த இரண்டு பயிற்சிகளையும் மட்டுமே தொடர்ந்து நம்பிக்கையோடு உணர்வு பூர்வமாகச் செய்தால் ஒருவன் வெற்றியாளனாகவும், அமைதி கொண்டவனாகவும் மாறுவது உறுதி.

ஆழ்மன சக்திகளை அடைய உதவும் அடுத்த கட்டத்திற்குப் போவோமா?

மேலும் ஆழமாகப் பயணிப்போம்....

(தொடரும்)

என்.கணேசன்
நன்றி: விகடன்

Friday, October 15, 2010

உங்களிடம் பணமா? பணத்திடம் நீங்களா?




”பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்” (751)

”ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருளை விட சிறப்புடைய பொருள் வேறு இல்லை” என்கிறார் திருவள்ளுவர். மதிக்கத் தகாதவரையும் மதிக்க வைக்கும் அளவு பணம் சக்தி படைத்திருப்பது திருவள்ளுவர் காலத்திலேயே இருந்திருக்கிறது. அறநெறி, வாய்மை, நற்குணங்கள் போன்றவற்றிற்கு பிரதான இடம் தந்து வந்த அந்தக் காலத்திலேயே பணத்திற்கு அந்த அளவு மதிப்பு என்றால் இந்தக் காலத்தில் அதன் மகத்துவத்தைச் சொல்ல வேண்டியதேயில்லை.

பணமும் அதிகாரத்தைப் போல ஒரு போதை வஸ்து என்றே சொல்ல வேண்டும். எங்கு போய் சேர்கிறதோ அங்கே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி அதற்கு உண்டு. அந்த மாற்றங்கள் நல்லதாக இருப்பதை விட மோசமானதாக இருப்பது தான் அதிகம். அதை உணர பணம் வந்து சேரும் முன் மற்றும் பணம் வந்து சேர்ந்த பின் என்ற இருநிலைகளையும் ஒப்பு நோக்கினால் போதும். நடை, உடை, பாவனை, பேச்சு எல்லாமே பெரும்பாலானோரிடம் மாறி விடுவதைக் காணலாம். சிலர் சட்டைப் பையில் சிறிது பணம் இருந்தால் போதும் நடையில் ஒரு துள்ளலும், பேச்சில் ஒரு பெரிய மனிதத் தனமும் கூடுதலாக சேர்வதை நாம் அடிக்கடி பார்க்கலாம். அந்தப் பணம் தீர்ந்து போனவுடன் அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார்கள்.

பணம் யாரையும் எப்படியும் மாற்ற வைக்கும் என்பதற்கு ஹிதோபதேசத்தில் ஒரு கதை உண்டு. சம்பகா என்ற ஊரில் சுத்திரகர்ணா என்கிற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் சாப்பிட்டு பிச்சை பாத்திரத்தில் மீதம் வைத்த உணவை அவருடைய வீட்டில் இருந்த எலி உண்ணும். அது அந்த உணவை உண்டு விட்டு சும்மா இருப்பதில்லை. துள்ளித் துள்ளி குதித்து சேட்டைகள் செய்து ஆட்டமாடும் பழக்கத்தையும் வைத்திருந்தது.

சுத்திரகர்ணா யாருடனாவது பேசும் போது அந்த எலி அவர் இருக்கும் இடத்திற்கு வந்து அதிகமாக சேட்டை செய்யும் என்பதால் அவர் அடுத்தவரிடம் பேசும் போது அது தன் அருகே வந்து குதிக்காமல் இருக்க வேண்டி அடிக்கடி ஒரு பிரம்பால் தரையைத் தட்டிக் கொண்டே இருப்பார்.

ஒரு முறை அவருடைய நண்பர் வினகர்ணா என்பவர் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போதும் சுத்திரகர்ணா பிரம்பால் தரையைத் தட்டிக் கொண்டே இருக்க அவர் அதற்குக் காரணம் கேட்டார்.

சுத்திரகர்ணா சொன்னார். “தவறாக நினைக்க வேண்டாம். இந்த எலி தினமும் நான் மீதம் வைத்த உணவைத் தின்று விட்டு என் முன்னேயே துள்ளிக் குதித்து சேட்டைகள் செய்கிறது. என்னை சரியாகப் பேசக் கூட விடுவதில்லை. அதை அடக்கத்தான் அவ்வப்போது இப்படி பிரம்பால் தரையைத் தட்டுகிறேன்.”

வினகர்ணா மிகவும் அறிவுக் கூர்மை வாய்ந்தவர். எதுவும் காரணம் இல்லாமல் நடப்பதில்லை என்பதை உணர்ந்தவர். அவர் அந்த எலி துள்ளிக் குதிக்கும் இடத்தை உற்றுப் பார்த்து விட்டு அந்த இடத்தை தோண்டிப் பார்க்கச் சொன்னார்.

சுத்திரகர்ணாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் நண்பர் வற்புறுத்தவே அப்படியே செய்தார். தோண்டிய போது அந்த இடத்தில் ஒரு புதையல் புதைத்து வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டார். அந்தப் புதையலுக்கு அருகில் ஒரு பொந்தை உருவாக்கி அந்த எலி அதில் வசித்து வந்திருக்கிறது. பெருமளவு செல்வத்தின் அருகே வசிப்பதால் தான் அந்த எலி அந்த ஆட்டம் ஆடுகிறது என்பதை வினகர்ணா விளக்கினார். செல்வத்தின் அருகே வசிக்கும் எலியே அந்த ஆட்டம் போடும் போது செல்வத்தைப் பெற்ற மனிதனிடம் ஏற்படும் மாற்றங்கள் பற்றி சொல்ல வேண்டியதேயில்லை.

ஆரம்பத்தில் இருந்தே பணத்தை அதிகமாகப் பெற்றிருப்பவர்களை விட சில திடீர் பணக்காரர்கள் பெரிதும் மாறுவதை நாம் அதிகம் மாறலாம். அடிமட்டத்தில் இருந்த நாட்களை அடியோடு மறந்து தங்களை முதன்மைப் படுத்துவதில் அவர்கள் காட்டுகிற ஆர்வம் அலாதியானது. புதிதாகக் கிடைத்த செல்வத்தினால் வாங்கிய பொருள்களை அவர்கள் மற்றவர்கள் பார்வைக்குக் காட்டுவதிலும், பழைய நாட்களின் நண்பர்கள் உறவுகளை விட்டு விலகி புதிய பணக்கார நண்பர்கள், உறவினர்களைத் தேடிப் போவதிலும் அவர்கள் மிகுந்த ஆவலாக இருப்பதையும் பார்க்கலாம்.

அப்படி மாற்றத்தை ஏற்படுத்த மிக முக்கிய காரணம் என்ன என்றால் பணத்திற்கு நமது சமூகத்தில் தரும் அபரிமிதமான இடம் என்றே சொல்ல வேண்டும். பணம் பத்தும் செய்வதையும், பாதாளம் வரை பாய்வதையும் கண்டு அதை மிக உயர்வாக நினைத்து பூஜிப்பதே காரணம்.


பணம் மிக முக்கியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் பணம் மட்டுமே முக்கியமானது என்பது முட்டாள்தனம். பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் மிக உயர்ந்தவர்கள், வெற்றியாளர்கள் என்று கொண்டாடுவதும், பணம் இல்லாதவர்கள் எல்லாம் தோல்வியாளர்கள், ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று அலட்சியப்படுத்துவதும் வடிகட்டிய முட்டாள்தனம். வாழ்ந்த காலத்தில் வறுமையிலேயே வாடிய காரல்மார்க்ஸ், பாரதியார் போன்ற எத்தனையோ சிந்தனையாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் எல்லாம் இன்றும் உலகத்தால் போற்றப்படுகிறார்கள். வரலாறு அவர்களை நினைவு வைத்திருக்கிறது. அதே நேரத்தில் அவர்கள் வாழ்ந்த காலத்தில் செல்வச்செழிப்பில் இருந்தவர்கள் எல்லாம் இருந்த சுவடு தெரியாமல் மறைந்து விட்டார்கள். இதில் யார் வெற்றியாளர்கள்?

எனவே பணத்திற்கு அதற்கு உரிய இடத்தை விட அதிகப்படியான இடம் தருவதும், அது இருக்கிறது என்ற காரணத்தால் தலைகால் புரியாமல் நடந்து கொள்வதும் நகைப்புக்குரியதே. ஓரிடத்தில் நில்லாது இடம் மாறிச் செல்லும் தன்மையினால் அது செல்வம் என்று செந்தமிழில் அழகாக அழைக்கப்படுகிறது.

இருப்பதை இழப்பதற்கும், இழந்ததைப் பெறுவதற்கும் அதிக காலம் தேவையில்லை. இந்த பேருண்மை தினந்தோறும் நம் முன்னால் பலர் அனுபவங்கள் மூலம் பறையறிவிக்கப் பட்டாலும் பலரும் உணரத் தவறி விடுகிறார்கள்.

ஒருவிதத்தில் பணமும், அதிகாரமும் ஒருவனை அடையாளம் காட்டும் அருமையான கருவிகள் என்றே சொல்ல வேண்டும். அவை சென்று சேரும் நபர்கள் நடந்து கொள்ளும் விதங்களிலேயே அவை அவர்களது உண்மையான தன்மைகள் இன்னதென்று தெளிவாகக் காட்டுகின்றன.

பணம் உங்கள் கையில் இருக்கிறதா, இல்லை பணத்தின் பிடியில் நீங்கள் இருக்கிறீர்களா என்பதைப் பொறுத்தே அதன் பயன்படும் தன்மை நிர்ணயிக்கப் படுகிறது. பணம் உங்கள் கையில் இருக்கும் போது, பணத்தின் எஜமானனாக நீங்கள் இருக்கும் போது அது உங்களுக்கும், உங்களைச் சார்ந்தவர்களுக்கும் மிக நல்ல முறையில் பயன்படும். உங்கள் மனிதத் தன்மையை நீங்கள் தக்க வைத்துக் கொண்டு அதை சிறந்த முறையில் பயன்படுத்தி அனுபவிப்பீர்கள். ஆனால் அதன் பிடியில் இருக்கும் போது, உங்கள் எஜமானனாக மாற அதை நீங்கள் அனுமதிக்கும் போது நீங்கள் அடிமையாகவும், கோமாளியாகவும் மாறி விடுவீர்கள். அது நல்ல விதத்தில் பயன்படாமல் உங்களைப் பாடாய் படுத்தும். உங்களை நிர்ணயிப்பதே அது தான் என்கிற ஒரு போலி சித்தாந்தத்தில் மூழ்கி போதையில் இருப்பவர்கள் நடந்து கொள்பவர்கள் போல நடந்து கொள்ள ஆரம்பித்து விடுவீர்கள். உங்கள் நடவடிக்கைகளின் வேடிக்கைத் தன்மை உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். நீங்கள் அதன் பிடியில் இருந்து ஒரு வேளை நீங்கி மீண்டால் எத்தனையோ நல்ல விஷயங்களையும், நல்ல தன்மைகளையும் இழந்து விட்டிருப்பது அப்போது புரியும்.

எனவே பணத்தை மதியுங்கள். அதற்கு உங்கள் வாழ்க்கையில் உரிய இடத்தைக் கொடுங்கள். அது உங்கள் நல்ல தன்மைகளை அழித்து விடாதபடி அதற்கு எஜமானனாக இருந்து முறைப்படி பயன்படுத்துங்கள். பணம் மேலும் வந்து சேரச் சேர அது உங்கள் எஜமானனாக மாற மட்டும் அனுமதிக்காதீர்கள்.

-என்.கணேசன்

நன்றி: ஈழநேசன்

Monday, October 11, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 49





உயர் உணர்வு நிலைக்கு முதல் பயிற்சி- அடையாளங்கள் நீங்களல்ல


அணுவைப் பிளந்து பார்த்த போது அறிவியல் பிரமித்துப் போனது. அணுவிற்குள் இடை விடாது இயங்கிக் கொண்டு இருந்த சக்திகளின் செயல்பாடுகள் விஞ்ஞானிகளை அசத்தின. அணுவின் சக்திகளுக்கே இப்படி என்றால் பிரபஞ்சத்தின் சக்திகளை ஒட்டு மொத்தமாக ஓரளவுக்காவது அறிவது மனிதனின் அதீத கற்பனைகளுக்கும் கூட எட்டாத பிரம்மாண்டம் என்றே சொல்ல வேண்டும்.

ராஜ யோகிகள் இந்த பிரம்மாண்டமான பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கமாகவே மனிதனைக் கண்டார்கள். அந்த சக்திக்கு எதிர்மாறாக இயங்காமல், அந்த சக்திகளுக்கு ஏற்ப ஒத்த விதத்தில் தன்னை ’ட்யூன்’ செய்து கொண்டால் அவன் பெறக்கூடிய சக்திகளும் எல்லை அற்றவை என்று உணர்ந்தார்கள். அந்த சக்திகளைப் பெற அவன் பிரபஞ்ச சக்தியின் அங்கமாகத் தன்னை உணர்வது மிக முக்கியம் என்பதையும் அவர்கள் உணர்ந்தார்கள். அரசனைப் போல அதிகாரங்களை அவன் அமல்படுத்தும் முன் தன்னை அரசன் என்பதை உணர்வது முக்கியம் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. இல்லா விட்டால் அது கற்பனையான கேலிக்கூத்தாகவே இருக்கும் என்று கருதினார்கள்.

தன் உடலையும், தொழிலையும், செல்வத்தையும், மற்றவர்களுடைய அபிப்பிராயங்களையும் வைத்தே தன்னை வரையறுத்துக் கொள்ளப் பழகி இருக்கும் மனிதன் தன் உண்மையான தன்மையை அறிய, உயர் உணர்வு நிலை பெறுவது அவசியம் என்று ராஜ யோகிகள் கருதினார்கள். அந்த உயர் உணர்வு நிலைக்குச் செல்ல முறையான பயிற்சிகளை ஏற்படுத்தினார்கள். அதில் முதல் பயிற்சியைப் பார்ப்போம்.

1) அமைதியாக ஆரவாரமற்ற ஓரிடத்தில் தனிமையில் அமருங்கள்.

2) இது வரை சொன்ன தியானங்களில் உங்களுக்கு நல்ல அனுபவத்தைத் தந்த ஒரு தியானத்தைச் செய்யுங்கள். முறையாகச் செய்து முடித்தால் உடலும் இளைப்பாறி இருக்கும், மனமும் அமைதி அடைந்திருக்கும்.

3) முதலில் உங்களை இந்த உடலுக்குள் குடியிருக்கும் பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கமாக உணருங்கள். இந்த உலகில் நீங்கள் மற்றவர்களால் அறியப்படும் பெயர், தோற்றம், கல்வி, தொழில், சமூக நிலை போன்ற அடையாளங்களால் அல்லாமல் உங்களை நினைத்துப் பாருங்கள். இது ஆரம்பத்தில் மிகவும் கடினமான ஒரு விஷயம் தான். நாம் நம்மைப் பற்றிய அந்த அடையாளங்களை நீக்கி விட்டால் நினைத்துப் பார்க்க எதுவுமில்லை என்பது போலவே தோன்றும். ஆனால் சிந்தனையை ஆழப்படுத்தினால் இந்த அடையாளங்கள் தற்காலிகமாக வந்தவை, மாறிக் கொண்டே இருப்பவை என்பதை உணர்வது சிரமமல்ல. திடீர் என்று உலகில் ஒரு நாள் தோன்றி, வாழ்க்கையில் இந்த அடையாளங்களைப் பெற்று, ஏதேதோ செய்து, திடீரென்று அழிந்து போகும் ஒரு தற்காலிக உயிரல்ல நீங்கள். தோன்றுவதற்கு முன், மறைந்ததற்குப் பின் என்ற இரண்டு பெரிய கேள்விக்குறிகளுக்கு மத்தியில் உள்ள பொருள் இல்லாத குழப்பம் அல்ல நீங்கள். மாறிக் கொண்டே இருக்கும் இந்த அடையாளங்களுக்கு நடுவே மாறாத ஒரு அற்புதமே நீங்கள். இந்த சிந்தனையை மனதில் மையமாக்குங்கள்.

4) இந்த உடல் என்ற கூட்டில் வசிக்கும் பிரபஞ்ச சக்தி நீங்கள் என்ற சிந்தனையை உங்களுக்குள் ஏற்படுத்தி அதை பலப்படுத்துங்கள். இந்த கூட்டை, வெளியுறையை பிரபஞ்ச சக்தியான நீங்கள் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நினையுங்கள். இந்த புதிய சிந்தனையும் உங்களுள் ஆழமாகப் பதியட்டும். உடல் என்ற கருவியை ஆரோக்கியமாகவும், சக்தி வாய்ந்ததாகவும் வைத்திருக்க உங்களால் முடியும் என்பதை நம்புங்கள்.

5) அடுத்ததாக உங்கள் உடலை விட்டு வெளியேறி உங்கள் உடலை நீங்கள் காண முடிவதாக நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் உடலைத் தெளிவாக நீங்கள் வெளியே இருந்து காண்பது போல் காணுங்கள். ஆரம்பத்தில் இது சுலபமாக இருக்காது. அதனால் சிலர் கண்ணாடி முன் அமர்ந்து கண்ணாடியில் தெரியும் தங்கள் பிம்பத்தை உண்மையான உடல் என்றும் தாங்கள் வெளியே இருந்து உடலைக் காண்பதாகவும் எண்ணிக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த பயிற்சியைப் பயன்படுத்தி அப்படிக் காண்பதில் தவறில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் கண்ணாடியின் உபயோகத்தைத் தவிர்த்தே இந்த பயிற்சியைச் செய்து தேற வேண்டும்.

6) இனி உங்கள் கவனத்தை உடலில் இருந்து முழுமையாக எடுத்து விடுங்கள். உடலில் இருந்து வெளியேறிய நீங்கள் உங்கள் உடலைப் பார்த்து பின் உங்கள் கவனத்தினை உண்மையான உங்கள் மீது திருப்பிக் கொள்வதாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த உண்மையான உங்கள் தன்மையினை நீங்கள் அமைதியாக, நிதானமாக, சிறிதும் சந்தேகம் இல்லாமல் கீழ்க்கண்டவாறு உணருங்கள்.

7) ”நான் பிரபஞ்ச சக்தியின் மையம். சூரியனை பூமி சுற்றுவது போல என் உலகம் என்னைச் சுற்றியே இயங்குகிறது. என்னுடைய சக்தி எல்லை இல்லாதது. உடல் எனக்கு கூடு தான். அது எனது தற்காலிக வசிப்பிடம் தான். நான் உடலில் அடங்கிக் கிடக்கும் அடிமையல்ல. அந்த உடல் இல்லாமலும் என்னால் இயங்க முடியும். நான் நிரந்தரமானவன்/ நிரந்தரமானவள். எனக்கு அழிவில்லை. எனக்குள் இருக்கும் எல்லை இல்லாத ஆழமான சக்தியை நான் முழுமையாக உணர்கிறேன். இந்த ஞானத்தால் என்னுள்ளே அமைதியைப் பரிபூரணமாக நான் உணர்கிறேன்”.

8) இந்த எண்ணத்தை உங்களுக்குள் வேர் விடச் செய்யுங்கள். வார்த்தைகள் முழுமையாக இப்படியே இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் உங்களைப் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருக்கிற உண்மை இந்த செய்தியாக இருக்க வேண்டும். இது உயர்வு நவிற்சி போல சிலருக்குத் தோன்றக்கூடும். ஆனால் ராஜ யோகிகள் நம்மை மட்டுப்படுத்திக் கொண்டு, நம்மைக் குறைவாக மதிப்பிட்டுக் கொண்டு நாம் எதையும், என்றும் சாதித்து விட முடியாது என்று தெளிவாக அறிந்திருந்தார்கள். இப்படி நினைப்பதால் நமக்கு கர்வம் வந்து விடாதா என்ற கேள்வியும் சிலருக்கு எழலாம். கர்வம் என்பது அடுத்தவர்களை மட்டமாக நினைத்து நம்மை உயர்வாக நினைக்கும் போது மட்டுமே எழக் கூடியது. நமக்குப் பொருந்தும் இந்த உண்மை அடுத்தவருக்கும் பொருந்தும் என்று அறிந்திருக்கும் போது, அடுத்தவரைக் குறைவாக எண்ண முடியாது. எனவே முறையாக உணரும் போது கர்வம் வர வாய்ப்பில்லை.

9) இது ஒருசில நாட்களில் தேர்ச்சி பெறக் கூடிய பயிற்சியல்ல. தாழ்வான உணர்வு நிலையில் இருந்தே வருடக்கணக்கில் பழகி விட்ட நமக்கு மேம்பட்ட உணர்வு நிலைக்குப் பழக்கப்பட பல நாட்கள் பயிற்சி தேவைப்படும். இதில் முன்னேற்றம் கூட சிறிது சிறிதாகத் தான் தெரியும். அதனால் பொறுமையாக இந்தப் பயிற்சியைச் செய்து வரவும்.

இனி அடுத்த பயிற்சிக்குப் பார்ப்போம்.

மேலும் ஆழமாகப் பயணிப்போம்.....

(தொடரும்)

என்கணேசன்
நன்றி: விகடன்

Wednesday, October 6, 2010

எங்கே ஆனந்தம்?


த்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?” என்று பாடினான் பாரதி. இப்படிப் பாடிய பாரதி செல்வச் செழிப்பில் வாழ்ந்தவனல்ல. வாழ்க்கையில் சிக்கல்களையும், பிரச்னைகளையும் பாராதவன் அல்ல. சொல்லப் போனால் அவன் வாழ்க்கையே பிரச்னைகளின் தொகுப்பு என்று சொல்லும்படி இருந்தது. ஆனாலும் பாரதி அழுது புலம்பி ஒரு வரி பாடியதில்லை. மாறாக எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று வியந்து மகிழ்கிறானே எப்படி? அவன் கண்ட ஆனந்தம், அவன் கண்ட இன்பம் எங்கிருந்தது? எப்படி வந்தது?

வீதியில் நின்று சற்று நேரம் வருவோர் போவோரைக் கவனியுங்கள். எத்தனை முகங்களில் ஆனந்தம் தெரிகிறது? விரையும் மனிதர்கள் முகத்தில் கரைக்க முடியாத கவலைகளும், சிந்தனைகளும் அல்லவா தெரிகிறது? இதில் பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் ஏதும் தெரிவதில்லையே. இருப்பவன், இல்லாதவன் என்ற இரண்டு வகை மனிதர்களும் ஆனந்தத்தைத் தேடி அலைவது போலல்லவா இருக்கிறது? எங்கே அந்த ஆனந்தம் கிடைக்கும்?

பதிலைத் தேடும் முன் முல்லா நஸ்ருதீன் கதை ஒன்றைப் பார்ப்போம். முல்லா நஸ்ருதீன் வெளிச்சமான இடத்தில் ஏதோ தேடிக் கொண்டு இருந்தார். அதைக் கண்ட அவர் நண்பர் ஒருவர் “என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்டு உதவ முன் வந்தார்.

”ஒரு தங்க நாணயம் கை தவறி விழுந்து விட்டது” என்றார் முல்லா.

நண்பரும் சிறிது நேரம் முல்லாவுடன் சேர்ந்து தேடினார். தங்க நாணயம் கிடைக்கவில்லை. நண்பர் முல்லாவைக் கேட்டார். “சரியாக நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இங்கே தான் நாணயத்தை நழுவ விட்டீர்களா?”

முல்லா சற்று தொலைவில் உள்ள இருட்டான இடத்தைக் காண்பித்து விட்டு “அங்கு தான் விழுந்தது?” என்று சொன்னார்.

நண்பருக்குக் கோபம் வந்து விட்டது. “அட முட்டாளே. அங்கே தொலைத்து விட்டு இங்கே வந்து தேடினால் அது எப்படிக் கிடைக்கும்?” என்று முல்லாவைத் திட்டினார்.

பதிலுக்கு முல்லாவும் நன்பரைக் கோபித்துக் கொண்டார். “நீ தான் முட்டாள். இருட்டான இடத்தில் தேடினால் எதாவது கிடைக்குமா? எதையும் வெளிச்சத்தில் தேடினால் தானே கிடைக்கும்? அதனால் தான் வெளிச்சத்தில் தேடுகிறேன்”

சிறிது நேரம் முல்லாவுடன் சேர்ந்து நாணயத்தைத் தேடியதை நினைத்து அந்த நண்பர் தலையில் அடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

முல்லாவின் முட்டாள்தனம் நமக்கு சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் ஆனந்தத்தைத் தேடும் நம் கதையும் அப்படித்தானல்லவா இருக்கிறது. மனதில் தொலைத்த ஆனந்தத்தை அதைத் தவிர மற்ற இடங்களில் தேடி என்ன பயன்? உலகத்தையே சுற்றி வந்து தேடினாலும் அந்த ஆனந்தம் நமக்கு கிடைக்குமா?

எது கிடைத்தால் நீ ஆனந்தமாய் இருப்பாய் என்று உங்கள் மனதைக் கேளுங்கள். இது கிடைத்தால் ஆனந்தமாய் இருப்பேன் என்று மனம் சொல்லும். அதை எப்பாடுபட்டாவது கொடுத்துப் பாருங்கள். மனம் இனியெல்லாம் சுகமே என்று ஆனந்தமாய் இருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள். மனம் ஓரிரு நாட்கள் மகிழ்ச்சியாய் இருக்கலாம். மூன்றாவது நாள் மனம் தானாக ஆனந்தத்தை இழக்கும். காரணம் மனதிற்கு புதுத் தேவை ஒன்று பிறந்திருக்கும். அது மட்டும் கிடைத்து விட்டால் ஆனந்தமாய் இருக்க முடியும் என்று மனம் சொல்லும்.

அது வேண்டும் இது வேண்டும் என்று இந்த மனக்குரங்கு பாடாய் படுத்த ஒவ்வொரு தேவையாகப் பூர்த்தி செய்யக் கிளம்பும் மனிதன் தொடுவானத்தைத் தொட்டு விட முடியும் என்கிற நினைப்பில் ஓடும் வேலையைத் தான் செய்கிறான். எத்தனை வேகத்தில் ஓடினாலும் தொடுவானம் தொலைவிலேயே நிற்பது போல ஆனந்தம் அடைய முடியாத இலக்காகவே இருக்கிறது.

மில்டன் என்ற ஆங்கில மகாகவி பாடுவான். “மனம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே சொர்க்கத்தை நரகமாகவும், நரகத்தை சொர்க்கமாகவும் மாற்றும் வல்லமை பெற்றது”. மனதிற்கு அந்த ரசாயன வித்தை தெரியும். ஆனந்தம் அடையவும் தெரியும். அழுது புலம்பவும் தெரியும். ஒரே விதமான சூழ்நிலையிலும் இந்த இரண்டில் எதையும் தேர்ந்தெடுக்கும் ரசாயன வித்தை தெரியும்.

அந்த ரசாயன வித்தை அறிந்ததால் தானே பாரதியால் வறுமையிலும், ஆங்கிலேயரின் அடக்குமுறைத் தாக்குதலிலும், சிறையிலும், பல பக்கங்களில் இருந்தும் வந்த பிரச்னைகளிலும் கூட எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாட முடிந்தது.

பின் ஏன் இந்த மனம் ஆனந்தமாய் இருக்க மறுக்கிறது? காரணம் அந்த மனதை சரியான படி வழிநடத்த நாம் மறந்து விடுவது தான். தவறான செய்திகளை மனதிற்குத் தந்து, தவறான நம்பிக்கைகளை மனதில் ஏற்படுத்தி மனம் சோகப்படும் போது அது நியாயம் தான் என்று நாம் நியாயப்படுத்தி மனதை தவறாகவே பழக்கப்படுத்தியிருக்கிறோம்.

ஊரைச் சுற்றினால் தான் ஆனந்தம், மதுவில் மூழ்கினால் தான் ஆனந்தம், பொருள்களை வாங்கிக் குவித்தால் தான் ஆனந்தம், அடுத்தவன் பொறாமைப்படும் படி வாழ்ந்தால் தான் ஆனந்தம், உன்னை மிஞ்ச ஆளில்லை என்று பலர் புகழ்ந்தால் தான் ஆனந்தம் என்றெல்லாம் தவறான கருத்துகளை மனதில் பதிய வைத்து விட்டால் பின் மனிதன் ஆனந்தமடைவது சாத்தியம் இல்லை.

பொய்யை அஸ்திவாரமாகக் கொண்டு எதை அடைந்தாலும் அது நிலைத்து நிற்காது. மேலே சொன்ன தவறான, பொய்யான அனுமானங்களைக் கொண்டு அடையும் மகிழ்ச்சிகளும் அதனாலேயே வந்த வேகத்தில் காணாமல் போகிறது.

பிரச்னையே இல்லாத வாழ்க்கை ஆனந்தமல்ல. பிரச்னையைத் தீர்க்க முடிவது தான் ஆனந்தம். தடங்கலே இல்லாத வாழ்க்கை ஆனந்தமல்ல. தடங்கலைத் தாண்டி முன்னேறுவது தான் ஆனந்தம். எதிலும் ஒரு நன்மையைப் பார்ப்பதும், எதிலும் ஒரு பாடத்தைப் படிப்பதும் ஆனந்தம் தரும்.

ஒரு விஷயத்தை எப்படியும் பார்க்கலாம். ரோஜாவில் முள் என்றும் பார்க்கலாம். முள்ளில் ரோஜா என்றும் பார்க்கலாம். பாதி தம்ளர் காலியாக இருக்கிறது என்றும் சொல்லலாம். பாதி தம்ளர் நிறைந்திருக்கிறது என்றும் சொல்லலாம். இந்த இரண்டு விதங்களில் எப்படிப் பார்த்தாலும், எப்படிச் சொன்னாலும் அது உண்மையே என்றாலும் நல்ல தன்மையை கோடிட்டுக் காணும் கலையை உங்கள் மனதிற்குக் கற்றுத் தந்தால் என்றும் எதிலும் ஆனந்தமே.

-என்.கணேசன்


Friday, October 1, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 48



உணர்வு நிலை மாற்றத்தின் அவசியம்

ஆழ்மன சக்திகளை அடைவதும், அதைப் பயன்படுத்துவதும் சாதாரண மேற்போக்கான உணர்வு நிலையில் எந்த மனிதனுக்கும் சாத்தியமல்ல. ஏனென்றால் ஆழ்மன சக்திகள் உயர்ந்த, ஆழமான உணர்வு நிலைகளில் இருப்பவை. அந்த உணர்வு நிலைகளிலேயே சாத்தியமானவை. எனவே ஆழ்மன சக்திகளை அடைய விரும்புபவர்கள் அந்த உயர் உணர்வு நிலைகளை அறிந்து, அந்த உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்வது அவசியம். எனவே தான் யோகிகளும், சித்தர்களும் உணர்வு நிலை மாற்றமே (Shift in consciousness level) ஆழ்மன சக்திகள் என்னும் ரகசியக் கருவூலத்திற்குக் கதவு என்று சொல்கிறார்கள். அதைத் திறந்து உள்ளே சென்றால் மட்டுமே அந்த பிரம்மாண்டத்தை அறிவது கூட சாத்தியம் என்று அவர்கள் சொல்கிறார்கள்..

அரவிந்தர் போன்ற யோகிகள் அந்த உயர் உணர்வு நிலைகளை மிக நுண்ணிய அளவில் சில வகைகளாகப் பிரித்து பெயரிட்டு ஒவ்வொரு உணர்வு நிலையினையும் விவரித்து அதில் சாத்தியமாகக் கூடியவற்றை விவரித்து இருக்கின்றனர். நம் தற்போதைய நோக்கத்திற்கு அந்தப் பெயர்கள், நிலைகள், செயல்பாடுகள் ஆகிய விளக்கங்கள் மிகவும் அவசியம் இல்லை என்பதால் ஒட்டு மொத்தமாகவே உயர் உணர்வு நிலை என்றே என்றே குறிப்பிட நினைக்கிறேன். அந்த உயர் உணர்வு நிலைக்கு சென்றால் பின் அதுவே ஆழப்பட்டு அதற்கு மேம்பட்ட நுண்ணிய நிலைகளை அடைவது நிச்சயம் என்பதால் அதற்கு பெயர்களிட்டு வாசகர்களை அதிகம் குழப்ப நான் விரும்பவில்லை. ஆனால் விருப்பம் உள்ளவர்கள் அரவிந்தர் இந்த உணர்வு நிலைகள் (States of Consciousness) குறித்து எழுதியதை புத்தகங்கள் மூலமாகவோ, இணையத்திலோ படித்து அறிந்து கொள்ளலாம்.

மேற்போக்கான உணர்வு நிலையில் நாம் யார் என்பது கூட நம் பெயர், தோற்றம், தொழில், செல்வநிலை, நாம் மேற்கொண்டிருக்கும் சித்தாந்தங்கள், நம்மை பற்றி அடுத்தவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே நாம் அறிகிறதாக இருக்கிறது. அவையெல்லாம் மாறும் போது அந்த ‘நாம்’ தானாக மாறி புதிய அவதாரம் எடுக்கிறது. இப்படி நாம் யார் என்பதும் ஆழமில்லாமல், மாறிக் கொண்டே இருப்பதாக இருக்கிறது. சில ‘நாம்’கள் நம்மை சந்தோஷப்பட வைக்கின்றன. சில ‘நாம்’கள் துக்கப்பட வைக்கின்றன. நாம் இதில் வாழ்நாள் முழுவதும் அலைக்கழிக்கப்படுகிறோம்.

மேலும் நம் தினசரி வாழ்க்கையில் சாதாரண உணர்வு நிலையில் வெளி உலகின் நிகழ்ச்சிகள் தரும் செய்திகளும், அது பற்றிய நம் எண்ணங்களுமே நம் மனதில் மேலோங்கி இருக்கின்றன. புதிய நிகழ்ச்சிகள் நடக்கும் வரை அவை நம்மிடம் தங்குகின்றன. புதிய நிகழ்வுகள் நடந்த பின் அவையே நம் மனதின் பிரதான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன. பழையன காணாமல் போகின்றன. இதில் ஆழமாக என்று எதுவும் இல்லை. பெரும்பாலான நேரங்களில் செயல்படும் மனிதர்களாக இருப்பதை விட வெளியுலகச் செயல்களால் பாதிக்கப்படும் மனிதர்களாக அல்லது உந்தப்படும் மனிதர்களாக நாம் வாழ்கிறோம். பெரும்பாலாக எல்லோரும் அப்படியே வாழ்வதால் நமக்கு அது இயல்பாகவே தோன்றுகிறது.

இப்படி மேற்போக்கான உணர்வு நிலைகளில் தன்னையே அறியாத காரணத்தினால் தெளிவின்மையும், வெளியிலிருந்தே முக்கியமாக இயக்கப்படுவதால் தனித்துவம் இன்மையும் இருக்கின்றன. இதனாலேயே மேற்போக்கான சாதாரண உணர்வுநிலை பலவீனமானதாக கருதப்படுகிறது. ஆழ்மன சக்தியை அடையத் தடை செய்யும் பண்புகளான அவசரம், அவநம்பிக்கை, அமைதியின்மை மூன்றும் இந்த பலவீனமான மேற்போக்கான உணர்வுநிலையின் வெளிப்பாடுகளே.

எனவே தான் “உன்னையே நீ அறிவாய்” என்ற புராதன காலத்திலேயே கிரேக்கம், இந்தியா, எகிப்து போன்ற நாடுகளின் சான்றோர்களால் அதிமுக்கியமான அறிவுரையாக வழங்கப்பட்டது. ஆன்மீகத்திற்கும் சரி, ஆழ்மன சக்திக்கும் சரி இந்த வாக்கியம் ஆரம்பப் பாடமாக இருக்கிறது. (இது மட்டுமல்ல, இனியும் தொடர்ந்து நாம் கற்கவிருக்கும் சில பாடங்களும், பயிற்சிகளும், ஆன்மீகத்திற்கும் ஆழ்மன சக்திகளுக்கும் ஒரே போலத் தான் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை இரண்டிற்குமான பாதை ஒன்றே. பின்பு தான் ஆழ்மன சக்திகள் அடைந்த கட்டத்தையும் தாண்டி ஆன்மீகத்தின் பாதை முன்னேறிச் செல்கிறது.)


தன்னை அறிய மனிதன் தன் உணர்வு நிலையின் ஆழத்திற்குச் செல்ல வேண்டி இருக்கின்றது. என்னை முதலில் கவனி என்று ஏகப்பட்ட விஷயங்கள் நம் கவனத்தைக் கவர முயற்சிக்கும் இந்த நவீனகாலத்தில், இருக்கின்ற 24 மணி நேரங்களே போதாமல் இருக்கின்றனவே என்று மனிதர்கள் புலம்பும் இந்தக் காலத்தில் தனியாக ஒரு சமயத்தை அதற்கென ஒதுக்குவது என்பது பெரும்பாலோருக்கு எளிதானதல்ல. ஆனால் உண்மையாகவே ஆழ்மன சக்திகள் பெறவும், தன்னை அறியவும் விரும்புபவர்கள் அதற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதும், சோம்பலின்றி அதற்குத் தேவையான பயிற்சிகளைச் செய்வதும் மிக மிக அவசியமே.

முன்பே குறிப்பிட்டது போல மேற்போக்கான சாதாரண உணர்வுநிலை நம் பெயர், தோற்றம், தொழில், செல்வநிலை, நாம் மேற்கொண்டிருக்கும் சித்தாந்தங்கள், நம்மை பற்றி அடுத்தவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அமைந்திருப்பதால் உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்ல, உணர்வு நிலை மாற்றம் (Shift in consciousness level) ஏற்பட, நம்முடைய இந்த பொய்யான அடையாளங்களை நாம் கைவிட வேண்டியிருக்கிறது. நாம் ஒவ்வொன்றையும் உணர ஐம்புலன்களையே பயன்படுத்தும் அந்த இயல்பான பழக்கத்தையும் விட்டு விடுதல் அவசியமாக இருக்கிறது.

இந்த ஐம்புலன்களின் துணையில்லாமல் காண, கேட்க, அறிய, அறிவிக்க முடிவது என்பது இத்தனை தகவல்கள் படித்த பின்பும் சிலருக்கு சிரமமாக இருக்கலாம். மரண விளிம்பு அனுபவங்கள், உடலை விட்டு வெளியேறிச் செல்லும் சமாச்சாரங்கள் எல்லாம் கட்டுக்கதைகளாகச் சிலருக்கு இன்னமும் தோன்றலாம். அவர்களுக்கு முன்னமே சொல்லி இருக்க வேண்டிய, ஆனால் சொல்லாமல் விட்டுப் போன, தினசரி வாழ்க்கையில் நடக்கிற இன்னொரு எளிய உதாரணத்தைச் சொல்கிறேன்.

எல்லோரும் உறங்கும் போது கனவு காண்கிறோம். கனவில் பல இடங்களுக்குச் செல்கிறோம், பலரிடம் பேசுகிறோம், பலதையும் காண்கிறோம், பலதையும் கேட்கிறோம். இல்லையா? ஐம்புலன்களும் ஒடுங்கி இளைப்பாறிக் கொண்டிருக்கும் அந்த வேளையில் கனவில் நம்மால் துல்லியமாக பார்க்க, பேச, கேட்க, அறிய, உணர முடிகிறதே, அது எதனால்? சிந்தித்துப் பாருங்கள்.

இனி உயர் உணர்வு நிலைக்குச் செல்ல ராஜ யோகிகள் சொல்லும் பயிற்சிகளைப் பார்ப்போம்.

மேலும் ஆழமாகப் பயணிப்போம்....


(தொடரும்)
நன்றி: விகடன்