என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, May 21, 2026

சதுரங்கம் 19


பானுமதிக்குப் படபடப்பு அதிகமாகியது. ஆனால் இது வரை அவள் தன் எண்ணங்களை மகனிடம் வெளிக்காட்டியதில்லை. அந்த அளவுக்கு அதிக நேரம் அவள் அவனிடம் பேசிக்கொண்டு நின்றதுமில்லை. இப்போது நழுவிச் செல்ல வழியில்லை

 

அர்ஜுனுக்கு அவளுடைய வெறுமைக்கும், அலட்சிய பாவனைக்கும் பின்னால் பதற்றமும் பயமும் இருப்பதை முதல் முறையாகப் பார்க்க முடிந்தது, அவன் சொன்னான். “அம்மா நீ இப்படி யார் கிட்டயும் பேசாமல், பழகாமல், தனிக்கூட்டுக்குள்ளே இருந்து எனக்கு ஒரு பேட்டி கொடுக்கறதுக்கே பயப்படறது உனக்கே வினோதமா இல்லையா? நீ என்னையும் அப்படியே வளர்த்துட்டேன்னு இந்த வாலு கூடக் கிண்டல் பண்றா. நான் மாற ஆரம்பிச்சுட்டேன். நீயும் மாறணும்.”

 

பானுமதி சொன்னாள். “அப்படியெல்லாம் ஒரேயடியாய் மாறிட முடியாது. இனி கொஞ்சம் கொஞ்சமாய் மாறுறேன். இப்ப ஆளை விடு

 

மாற ஆசைப்படறவன் உடனடியா மாறணும். அதுக்கு அப்பவே எதாவது சின்னதாகவாவது செய்யணும். அதை நாளைக்குன்னு ஒதுக்கி வைக்கிறவன் என்னைக்குமே மாறப் போறதில்லை.”

 

ஆஹா தத்துவம் தத்துவம்என்று முணுமுணுத்த நித்யாவை அர்ஜுன் குனிந்து லேசாகக் கொட்டினாலும் அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்த நேர்பார்வையை அவன் திருப்பவில்லை.  

 

பானுமதி அவனை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்து அடுப்பைக் கவனித்துக் கொண்டே சொன்னாள். “சரி தாத்தாவைப் பற்றி மட்டும் தான் கேட்கணும். வேறெந்த கேள்வியையும் கேட்கக்கூடாது.”

 

அந்த ஒரு கணத்தில் அர்ஜுனுக்கு ஒரு தெளிவு கிடைத்தது. அவளிடம் வேறு கேள்விகள் யாராவது கேட்டு விடுவார்கள் என்று பயந்து தான் அவள் யாருடனும் பழகுவதில்லையோ? நெருங்கிப் பழகினால் அவளிடம் அவளுடைய பழைய வாழ்க்கையைப் பற்றி யாராவது ஏதாவது கேட்டுவிடக்கூடும் என்று தான் அவள் பயப்படுகிறாளோ? நித்யா ஒரு முறை அப்படிக் கேட்டு அவள் கண்கலங்கி தன் அறைக்குப் போய் கதவைத் தாளிட்டுக் கொண்டதும் நினைவுக்கு வந்தது. ’அம்மா நீ அப்படி என்ன கனத்தைச் சுமக்கிறாய்?’

 

அர்ஜுன் அமைதியாகச் சொன்னான். “சரி

 

பானுமதி சற்று நிம்மதி அடைந்தது போலிருந்தது.  சரிஎன்று அவளும் சொன்னாள்.

 

எப்போ பேட்டி எடுக்கலாம்? நாளைக்கு காலைல பத்து மணிக்கு?”

 

சரிஎன்றாள் பானுமதி. தலையசைத்து விட்டு அர்ஜுன் நகர்ந்தான்.

 

பானுமதி நிம்மதிப் பெருமூச்சு விட்டதைப் பார்த்த நித்யா சொன்னாள். “எதோ விசாரணை அதிகாரி வந்துட்டு போன மாதிரி பெருமூச்சு விடறே நீ.”

 

பானுமதி மகளிடம் எரிந்து விழுந்தாள். “பேச்சுல இருக்கற வேகம் வேலைல இல்லை. தேங்காய் துருவக் கொடுத்து எத்தனை நேரம் ஆச்சு. இன்னும் ஒரு மூடி கூட துருவி முடியலை

 

காலையில் ஞானமூர்த்தி கட்சி வேலையாக வெளியூருக்குச் சீக்கிரமே சென்று விட்டார். நித்யாவும் கல்லூரிக்குப் போய் விட்டாள். பொதுவாக இப்படி அர்ஜுனும், பானுமதியும் தனியாக இருக்கிற சமயங்களில் எல்லாம் அதிக பட்சமாய் ஓரிரண்டு வாக்கியங்களுக்கு மேல் இருவரும் இது வரையில் பேசிக் கொண்டதில்லை. முதல் முறையாக இன்று பேட்டி எடுப்பதற்காக அவன் அவளுடன் கூடுதலாகப் பேசப் போகிறான்.

 

ஞானமூர்த்தியும் நித்யாவும் போனதிலிருந்தே பானுமதி வெளித்தோற்றத்தில் அமைதியாகத் தெரிந்தாலும் அவள் உள்ளூர ஒருவித பதற்றத்தில் இருப்பதை அர்ஜுன் கவனித்தான். பத்து மணிக்கு ஹாலுக்கு அவன் வந்த போது, கஷ்டமான பரிட்சை ஒன்றின் கேள்வித்தாளுக்காகப் பயத்துடன் காத்துக் கொண்டிருக்கும் மாணவனைப் போல் அவள் காணப்பட்டாள். எத்தனை முறை அவள் அவனை வெறுப்பதாக நினைத்திருக்கிறான், எத்தனை முறை அவள் அவனை லட்சியம் செய்வதில்லை என்று ஆத்திரம் அடைந்திருக்கிறான். அவளுக்கு அவன் மீது அக்கறை இல்லை என்று நினைத்திருக்கிறான்…. அப்படி அவன் நினைப்பதற்கு முகாந்திரமும் இருந்திருக்கிறது. நித்யாவையும், ஞானமூர்த்தியையும் அவள் பார்த்த அன்பான பார்வை அவன் மீது அதே வகையில் விழுந்ததாய் அவனுக்கு நினைவில்லை. ஆனால் அவள் ஏதோ ஒரு வகையில் ஆழ்மனதில் காயப்பட்டவள் என்ற வகையில் அவளைப் புரிந்து கொண்ட பின், இப்போது அவளை அந்த நிலைமையில் பார்க்கும் போது அவன் மனம் உருகுகிறது.

 

அவன் முதல் கேள்வியைக் கேட்டான். “தாத்தா மாமனாராய் உன் கிட்ட எப்படி நடந்துப்பார்ம்மா?”

 

பானுமதி சிறிது யோசித்தாள். பின் கண்கள் ஈரமாக, சொன்னாள். “ஒரு அப்பா மகள் கிட்ட எப்படி நடந்துப்பாரோ அப்படித் தான் என் கிட்ட நடந்துகிட்டார். ஒரு நாள் கூட அவர் என் கிட்ட கோபப்பட்டதில்லை. என்னைத் திட்டியதில்லை.”

 

ஞானமூர்த்தி அவளைத் திருமணம் செய்து கொள்வதில் வாசுதேவன் ஆரம்பத்தில் சற்று தயக்கம் காட்டியிருந்த போதும், திருமணத்திற்குப் பிறகு அவளை மனதார மருமகளாக ஏற்றுக் கொண்டார் என்பது அர்ஜுனுக்குப் புரிந்தது.

 

அவன் கேட்டான். “அவர் உங்களுக்கு ஏற்கெனவே உறவா?”

 

இல்லைஎன்று உடனடியாகச் சொன்ன பானுமதியின் பார்வை தாழ்ந்தது. தரையைப் பார்த்துக் கொண்டிருந்த அவள் முகத்தில் வாட்டம் தெரிந்தது. என்ன நினைக்கிறாள் என்பதை அவனால் யூகிக்க முடியவில்லை.

 

அதிகமாய் எதைப் பற்றி அவர் உங்க கிட்ட பேசுவார்?”

 

பானுமதி முகத்தில் இருந்த வாட்டம் கூடியது போல் இருந்தது. அவள் குரல் கரகரத்தது. “அவர் அதிகமாய் என் கிட்ட பேசினது உன்னைப் பற்றி தான். வேறென்ன என் கிட்ட அவர் பேச முடியும்? பேசினாலும் எனக்கு என்ன புரியும்?”      

 

சிறந்த தமிழறிஞரான வாசுதேவன் கம்ப இராமாயணத்தையும், சிலப்பதிகாரத்தையும் கரைத்துக் குடித்தவர் என்று பலரும் பிரமிப்போடு சொல்வதை அர்ஜுன் கேட்டிருக்கிறான். அரசியல் தலைவரான அவர் அவளிடம் அரசியலோ, இலக்கியமோ பேசினால் அவளுக்குப் புரியாது என்கிறாளா, இல்லை அவள் சொன்னதற்கு வேறு எதாவது உள்ளர்த்தம் உள்ளதா என்று அவனுக்குத் தெரியவில்லை.

 

என்னைப் பற்றி என்ன பேசுவார்?”

 

பானுமதி முகத்தில் திடீரென்று வெறுமை பரவியது. அவன் மட்டுமே இருக்கையில் அவள் காட்டும் அதே வெறுமை பாவனை… ”நீ செஞ்ச குறும்பு, நீ பேசின பேச்சு, நீ என்ன சாப்பிட்டாய்ங்கற கேள்வி இப்படி தான்….”

 

ஏன் அவன் சம்பந்தப்படுவதில் மட்டும் அவளை வெறுமை தொற்றிக் கொள்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை.  ஆரம்பத்திலிருந்தே இப்படியே தான் நடக்கிறது. அவன் பிறந்த காலத்தைப் பற்றிப் பேசும் போதே அவளிடம் தோன்ற ஆரம்பித்து விட்ட எதிர்வினை இது என்று அவனுக்குத் தோன்றியது. அதனால் தான் அந்தக் காலத்தைப் பற்றி அவள் நினைவுபடுத்திக் கொள்ளும் போதும் அதே உணர்வு அவளிடம் வெளிப்படுகிறது.

 

திடீரென்று அவளிடம் அதற்கெல்லாம் காரணம் கேட்க வேண்டும், கேட்டு எல்லாவற்றையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவனுக்குத் தோன்றியது. ஆனால் அந்தக் கேள்விகள் அவளைக் காயப்படுத்தும் என்று அவனுடைய உள்ளுணர்வு சொன்னது. அதை அவன் விரும்பவில்லை. மேலும், அவன் தாத்தாவைப் பற்றி மட்டும் தான் கேள்விகள் கேட்பேன் என்று வாக்களித்திருக்கிறான்

 

என்னை தாத்தா ரொம்ப நேசிச்சாராம்மா?”

 

ஆமா. அவர் இறந்த வருஷத்துல அதிகமா அவர் உன்னை மடிலயே வெச்சிருப்பாரு. நீயும் அவர் கூடவே தான் இருப்பாய். தூங்கறப்ப மட்டும் தான் நீ எங்க கிட்ட வருவாய்.”

 

அப்படி அவனோடு நெருக்கமாக இருந்த தாத்தாவின் நினைவு ஏன் சிறிதும் இப்போது இல்லை என்று அர்ஜுன் யோசித்தான். பதில் தெரியவில்லை.

 

பானுமதி தொடர்ந்து சொன்னாள். “… கடைசியா ஆஸ்பத்திரிக்குப் போறப்ப கூட உன்னை விட்டுட்டு போக அவருக்கு மனசிருக்கலை. உடம்புக்கு ரொம்ப முடியாத நிலைமைல கூட அஞ்சு நிமிஷம் உன்னை மடில வெச்சிகிட்டு இருந்துட்டு தான் அவர் கிளம்பினார்….”

 

அப்புறம்?”

 

அப்புறமா அவர் உயிரோட திரும்பி வரவேயில்லை…” சொல்லச் சொல்ல பானுமதியின் கண்களிலிருந்து நீர் வழிந்தது.

 

அர்ஜுன் கேட்டான். “நான் அவரைச் சீக்கிரமா மறந்துட்டேனாம்மா?”

 

இல்லை. கிட்டத்தட்ட ரெண்டு மாசம்தாத்தா எங்கே, தாத்தா வேணும்னு நீ தினமும் கேட்டுகிட்டு தான் இருந்தாய். தினமும் தாத்தா அறைக்குப் போய் அவரை நீ தேடுவாய். நாங்களும் என்னென்னவோ சொல்லி உன்னைச் சமாதானப்படுத்த கஷ்டப்பட்டோம் அப்புறமா தான் நீ அவரை மறக்க ஆரம்பிச்சே.”


(தொடரும்)

என்.கணேசன்

 


Tuesday, May 19, 2026

யோகி 156

 


யோகாலயத்தில் இருந்து வெளியே போகிறவர்களும், வெளியே இருந்து உள்ளே வருபவர்களும் அந்தக் கூட்டத்தினரைத் தாண்ட பெரிதும் சிரமப்பட்டார்கள் தாண்டுவதற்குள் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி வந்தது. கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த யோகாலயத்து தடியர்களால் முடியவில்லை. ஒவ்வொரு மணி நேரமும் கூட்டம் கூடிக் கொண்டே போனது.

 

பாண்டியன் பிரம்மானந்தாவிடம் சொன்னார். “சமாளிக்க முடியலை. நமக்கு போலீஸ் உதவி வேண்டியிருக்கு யோகிஜி. நீங்க முதல்வர் கிட்ட பேசறது நல்லது.”

 

பிரம்மானந்தா முதல்வரிடம் பேசினார். “சார். யாரோ பொழுது போகாமல் மொட்டையாய் ஒரு கற்பனைக் கொலை பற்றி பேசி அதை வைரல் ஆக்கி இருக்காங்க. இப்படி ஒன்னு வராதான்னு எதிர்பார்த்துகிட்டு இருந்த வேலை வெட்டி இல்லாத கூட்டம் எங்க வாசல்ல கூடி நிக்கிறாங்க. எங்களால போக, வர முடியலை. போலீஸை அனுப்பிச்சா நல்லா இருக்கும்.”

 

அருணாச்சலம் சொன்னார். “உடனே அனுப்பறேன் யோகிஜி. நீங்க எதுக்கும் ஒரு சரியான பதிலைச் சொல்லி, அது அர்த்தமில்லாத குற்றச்சாட்டுன்னு புரிய வையுங்க. ஏன் தேவையில்லாமல் பிரச்சினையை வளர்த்துக்கணும்.”

 

பிரம்மானந்தா சரியென்றார். யோகாலயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு உடனே வந்தது. ஆனால் கூட்டத்தினரை அப்புறப்படுத்த முடியவில்லை. முடிந்த வரை போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்யாத அளவு அங்கிருப்பவர்களைக் கட்டுப்படுத்த மட்டுமே முடிந்தது.

 

யோகாலயம் ஒரு அறிக்கையை உடனடியாக வெளியிட்டது. வைரலாகி இருக்கும் அந்த ஒலிப்பதிவு அவர்களுடைய துறவியுடையது அல்ல என்றும் யாரோ ஒரு விஷமி அவர்களுக்கு எதிராக உருவாக்கிய அவப்பிரசாரம் என்றும், அதில் கூறப்படுவது போல எந்தக் கொலையும் நிகழவில்லை என்பதால் அடிப்படையில்லாத குற்றச்சாட்டு அது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.  நீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்பட்ட ஒரு பழைய வழக்கையும் இந்த மொட்டைக் குற்றச்சாட்டில் இணைத்துப் பேசி, கோவிட் மரணத்தையும் கொலைக்குற்றமாக்குவது கொடுமையான விஷமப் பிரசாரம் என்றும் அதில் சொல்லப்பட்டது.

 

உடனடியாக அடுத்த ஒலிப்பதிவு வைரலாக வலம் வர ஆரம்பித்தது. அதில் உண்மை விளம்பி என்ற பெயரில் ஒரு ஆண் பேசியிருந்தார். “யோகாலயம் வழக்கம் போல் இந்தக் கொலையையும் மூடி மறைக்கப் பார்க்கிறது. யோகாலயத்தில் புதைக்கப்பட்ட நபர் சேலத்தைச் சேர்ந்த சந்திரமோகன் என்ற தொழிலதிபர். அவர் யோகாலயம் செல்வதாய்ச் சொல்லிக் கிளம்பி சென்னைக்குச் சென்றவர் திரும்பி வரவில்லை. இந்தப் புகார் இப்போதும் சேலம் போலீஸ் நிலையத்தில் இருக்கிறது. அந்தப் பெண் துறவி சொன்ன இடத்தில் தோண்டிப் பார்த்தால் உண்மை தெரிய வரும். அங்கு சந்திரமோகனின் பிணமும் கிடைக்கும். வெறும் அறிக்கை விடாமல், அந்த இடத்தைத் தோண்டிக் காட்டி தாங்கள் குற்றமற்றவர்கள் என்று யோகாலயம் நிரூபிக்க முன் வர வேண்டும்.”  

 

யோகாலயத்திற்கு எதிரான ஊடகங்களும், பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் அறிக்கை வேண்டாம். தோண்டிக் காட்டுஎன்று ஏகோபித்த குரலில் சொல்ல ஆரம்பித்தன. யோகாலயம் இதை ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள் மற்றும் மாற்று மதவாதிகளின் ஆதாரமற்ற புகார் என்று சொல்லி திசை திருப்பப் பார்த்தது. யோகாலயத்திற்கு ஆதரவான ஊடகங்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் எல்லாம் முடிந்த வரை அப்படியே பிரசாரம் செய்தன.  ஆனால் நடுநிலையாளர்கள்தோண்டிக் காட்டி தங்கள் பக்கத்து உண்மையை யோகாலயம் நிரூபிக்கலாமே. அந்த ஒரு செயலில் எல்லா விமர்சனமும் நின்று போகுமேஎன்று சொன்னது யாருக்கும் மறுக்க முடியாததாய் இருந்தது. இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் களத்தில் இறங்கின. “ஆளும் கட்சி கொலைகாரர்களுக்கு ஆதரவு காட்டுவது ஏன்? அந்த ஒலிப்பதிவில் சொல்லப்பட்ட இடத்தைத் தோண்டிப் பார்க்க ஆணை இடாதது ஏன்? அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் இந்தக் குற்றத்தில் பங்கு இருக்கிறது என்பதாலா?” என்று எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பின. பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் நூற்றுக் கணக்கில் புகார்கள் போகத் துவங்கின. ஒரு சிலர் அந்த ஒலிப்பதிவில் சொல்லியிருக்கும் இடம் மட்டும் அல்லாமல் மற்ற இடங்களையும் தோண்டிப் பார்த்தால் இது போல் பல கொலைகள் தெரிய வரலாம் என்று பேச ஆரம்பித்தார்கள்.

 

பாண்டியனும், பிரம்மானந்தாவும் அதிர்ந்து போனார்கள். சைத்ராவுக்குக் கூட புதைக்கப்பட்ட நபர் யாரென்று தெரிந்திருக்கவில்லை. இங்குள்ள துறவிகள் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புமில்லை. இதில் சம்பந்தப்பட்ட பாண்டியனின் ஆட்கள் அவரால் பரிசோதிக்கப்பட்டு சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள். அவர்களுக்குத் தாராளமாகப் பணம் தந்து அவர் திருப்தியாக வைத்துக் கொண்டு இருக்கிறார். அதனால் இது அவர் ஆட்கள் மூலமாய் கசிந்த தகவல் அல்ல 

 

பிரம்மானந்தா அன்றிரவு இருப்பு கொள்ளாமல் தவித்தார். யோகாலயத்துக்கு வெளியே உள்ள கூட்டம் இரவிலும் முழுவதுமாகக் கலைந்து செல்வதில்லை. மூன்றில் ஒரு பங்கு ஆட்கள் இரவிலும் அங்கேயே தங்கி இருக்கிறார்கள். யோகாலயத்திற்குள்ளே யாராவது உள்ளே வருவதைப் பார்த்தாலும், உள்ளேயிருந்து யாராவது வெளியே செல்வதைப் பார்த்தாலும் சூழ்ந்து கொள்கிறார்கள், கேள்வி கேட்கிறார்கள், கோஷம் எழுப்புகிறார்கள். வெளியே இருக்கும் போலீஸாரும் ஓரளவுக்கு மேல் நாங்களும் என்ன செய்ய முடியும்?’ என்று சொல்லி அவர்களை அடித்துத் துரத்தாமல் இருக்கிறார்கள்....

 

முதல்வரின் தனி அலைபேசியிலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. “யோகிஜி. நிலைமை என் கையையும் மீறிப் போய்கிட்டிருக்கு. பொதுமக்கள் கிட்ட இருந்தும், மீடியா கிட்ட இருந்தும் எனக்கு பிரஷர் அதிகமாய் வருது. சட்டசபைக் கூட்டம் ரெண்டு நாள்ல தொடங்கப் போகுது. நான் உடனே எதுவும் செய்யாட்டி எதிர்க்கட்சிக்காரங்களை என்னால சமாளிக்க முடியாது. நாளைக்கு அந்த ஒலிப்பதிவுல சொல்லப்பட்டு இருக்கற இடத்தைத் தோண்டிப் பார்க்க நான் அனுமதி தரப் போறேன். பொய்ப்புகார் தானே. கவலைப்படாதீங்க. தோண்டி, ஒன்னும் கிடைக்கலன்னா அத்தனை வாயையும் அடைச்சுடலாம்.” முதல்வர் அவருடைய அபிப்பிராயத்திற்காகக் காத்திருக்காமல் பேச்சை முடித்துக் கொண்டார்.

 

பிரம்மானந்தா தன்னைச் சுற்றிலும் இருந்த பத்திரிக்கைகளைப் பார்த்தார். எல்லாப் பத்திரிக்கைகளிலும் முதல்பக்கச் செய்தி இதுவாகவே இருந்தது. ஆச்சரியக்குறிகள், கேள்விக்குறிகள், போட்டு நடந்தது, நடக்காதது, கற்பனை எல்லாம் சேர்த்து என்னென்னவோ எழுதியிருந்தார்கள். இதற்கு முன்பெல்லாம் அவர் அவற்றை ஏளனமாய் பார்ப்பார். ‘யார் என்னை என்ன செய்து விட முடியும்? நானிருக்கும் உயரம் என்ன தெரியுமா? நீங்கள் அத்தனை பேர் சேர்ந்து ஒருவர் மேல் ஒருவர் ஏறி நின்றாலும் தொட முடியாத உயரம்என்ற எண்ணம் அவர் மனதில் ஓடும். ஆனால் இப்போதோ அவர்கள் அத்தனை பேரும் ஏறி நிற்கிறபடி மண்ணோடு மண்ணாக அவர் அமிழ்ந்து விட்டார்.

 

ஒரு பத்திரிக்கையில் சைத்ராவின் புகைப்படம் வெளியாகி இருந்தது. அதிலிருந்த சைத்ரா அவரைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது. அவர் பார்வையைத் திருப்பிக் கொண்டார். இப்போது பேசப்படும் கொலையைப் பற்றி அவள் அவரிடம் தெரிவிக்க வந்த காட்சி இப்போதும் மனதில் பசுமையாக இருக்கிறது. அவருக்குத் தெரியாமல் யோகாலயத்தில் கொலை நடந்திருக்கிறது என்று பரபரப்புடனும், ஆதங்கத்துடனும் சொன்னாள் அந்த முட்டாள் பெண். அவர் அப்போதே பாண்டியனை வரவழைத்தார் அவள் சொன்ன புகாரைச் சொன்னார். பாண்டியன் சிரித்தார். அவரும் சேர்ந்து சிரித்தார். இருவரும் சேர்ந்து சிரிக்கையில் தான் அவளுக்கு எல்லாம் புரிந்தது. முதலில் நம்ப முடியாமல் அதிர்ந்த அவள் பின் அவரைக் கேவலமாகப் பார்த்தாள்.

 

பாண்டியனின் ஆட்கள் அவளை பாதாள அறைக்கு அழைத்துச் செல்வதற்கு முன் அவள் சொன்னாள். “ஒரு நாள் உங்கள் கர்மாவும் உங்களைப் பார்த்துச்  சிரிக்கும்.”

 

அவள் சொன்ன நாள் வரும் என்று அவர் நம்பவில்லை. கர்மா என்பதே மனிதர்களைப் பயமுறுத்தி ஒழுக்கத்தில் இருக்க வைக்க ஆன்மீகவாதிகள் கண்டுபிடித்த வெற்று வார்த்தை என்று தான் அவர் நினைத்திருந்தார். புத்திசாலி எதிலும் மாட்ட வேண்டியதில்லை, சட்டத்தின் ஓட்டைகளில் சிரமம் இல்லாமல் தப்பிக்கலாம் என்பதற்கு அவருக்கு முன் உதாரணங்களும் நிறையவே இருந்திருக்கின்றன. ஆனால் அவள் சொன்ன நாள் இருந்திருப்பது மட்டுமல்லாமல் இவ்வளவு சீக்கிரமாக வந்து சேர்ந்தும் விட்டது கர்மாவில் ஓட்டைகள் இல்லை போலிருக்கிறது. அவரால் நழுவ முடியவில்லை.


(தொடரும்)

என்.கணேசன்



Thursday, May 14, 2026

சதுரங்கம் 18


ர்ஜுன் ஞானமூர்த்தியைக் கேட்டான். “அரசியல்ல நீங்க அவருக்கு ஆலோசனை சொல்லறதுண்டா?”

 

ஞானமூர்த்தி சொன்னார். “சில சமயங்கள்ல சொல்றதுண்டு. அது நானுன்னு இல்லை. அம்மாவும், ராஜாராமும் கூட சொல்றதுண்டு. சிலதை அவர் கேட்பார். சிலதைக் கேட்க மாட்டார்.”

 

எந்த மாதிரி விஷயங்களைக் கேட்க மாட்டார்?”

 

ஞானமூர்த்தி புன்னகையுடன் சொன்னார். “அவர் கட்சிக்காகவும், மக்களுக்காகவும் தன்னோட சொத்தையெல்லாம் விற்று உதவினார். அது அவரோட நல்ல மனசைக் காட்டுதுன்னாலும், ஒரு தலைவராய் அவர் அதைச் செய்யறது சரியல்லன்னு நாங்க மூனு பேருமே அவர் கிட்ட சொல்வோம். அப்படி அவர் சொந்தக் காசைக் கொடுக்கிறது ஒரு நிரந்தரத் தீர்வு ஆக முடியாதுன்னு நான் எப்பவுமே அவர் கிட்ட வாதாடுவேன். அப்படி நம் சொந்தப் பணத்தைக் கொடுத்து எத்தனை பேருக்கு உதவ முடியும்? நல்ல தலைவராய் இருந்து மக்கள் வரிப்பணம் மக்களுக்கு முழுசாய், சரியாய் போய்ச் சேர என்ன செய்யணுமோ அதைச் செய்தாலே போதும், மக்கள் பெருவாரியாய் பலன் அடைவாங்கன்னு நான் சொல்வேன். அதை அவர் மறுக்கலை. எதிர்க்கட்சித் தலைவராகவும், முதலமைச்சராகவும் அந்த மாதிரி நல்ல திட்டங்கள் வெளிவர கடுமையாய் உழைச்சிருக்கார். ஆனால் அது கூடவே தன் காசைச் செலவு செய்யறதையும் அவர் நிறுத்தலைபட்ஜெட்டுல எல்லா நல்லதுக்கும் நிதி ஒதுக்க முடியாது. சிலராவது நான் தர்ற காசால பலன் அடையட்டுமேன்னு சொல்லித் தன் பணத்தையும் வாரிக் கொடுத்தார்.”

 

அர்ஜுனுக்கு அதைக் கேட்கையில் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. தாத்தா வாசுதேவனை குடும்பத்தினர் பார்வையில் வித்தியாசமாகப் பார்க்க முடிவது அர்ஜுனுக்கு சுவாரசியமாகவும் இருந்தது. தமிழகம் போற்றும் அந்தப் பெருந்தலைவரை இப்போது தான் எலும்பும் சதையும் கொண்ட மனிதராக அர்ஜுனால் உணர முடிந்தது.

 

அடுத்ததாக, முதல்வராக வாசுதேவன் ஆற்றிய மகத்தான பணிகளைப் பற்றியும், அந்த நாட்களில் அவர் எடுத்த முக்கிய முடிவுகளின் பின்னணி விவரங்களையும் அர்ஜுன் கேட்க ஆரம்பித்தான். பல விஷயங்களை அவர் தெளிவாக விளக்கினார். 

 

நீண்ட நேரக் கேள்வி பதில்களுக்குப் பின், அந்தப் பேட்டியைப் பிரசுரிக்கத் தரும் முன் தன்னிடம் காட்டும்படி ஞானமூர்த்தி சொன்னார். சரியென்று சொல்லி விட்டுத் தனதறைக்குத் திரும்பிய அர்ஜுனைப் பின் தொடர்ந்து வந்த நித்யா சொன்னாள். “நீதிமான் கூடக் காதல்ல எவ்வளவு விவரமாய் இருந்திருக்கார் பார்த்தியா?”

 

அர்ஜுன் சொன்னான். “அவர் அம்மாவைக் காதலிச்சதா சொல்லவே இல்லையே. பிடிச்சுருந்ததால கல்யாணம் செய்துக்கறதுல உறுதியாய் இருந்ததாய் தானே சொன்னார்...”

 

ஆமா, அவர் மகன் கிட்ட காதலைப் பற்றி இதைவிட எப்படி விளக்கமாய்ச் சொல்ல முடியும். வயசுக்கேற்ற மாதிரி கொஞ்சம் யோசி.”

 

பானுமதி நித்யாவை அழைப்பது கேட்டது. “அம்மா மற்றதை எல்லாம் மறந்தாலும் எனக்கு வேலை சொல்றதை மட்டும் மறக்கறதேயில்லை. அடுத்த ஜென்மத்துலயாவது ஆம்பிளையா பிறக்கணும். வீட்டு வேலைல இருந்து தப்பிச்சுக்கலாம்.” என்று சலித்துக் கொண்டே செல்லும் தங்கையைப் புன்னகையுடன் பார்த்தான் அர்ஜுன்.

 

அப்பா அம்மாவைத் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததைக் காதல் என்று எடுத்துக் கொள்ள அவனால் முடியவில்லை. அவர்கள் இருவரின் இயல்புமே காதல் உணர்வுக்கு ஒத்து வரக்கூடியதாக அவனுக்குத் தோன்றவில்லை. ஒருவேளை, இளமைக் காலத்தில் அவர்கள் இருவரும் வேறு மாதிரி இருந்திருக்கக்கூடுமோ?  இருக்கலாம்.

 

அப்பாவாவது எப்போதாவது தன் இளமைக்கால நிகழ்வுகளை அவனுடனும், நித்யாவுடனும் பகிர்ந்து கொள்வதுண்டு. ஆனால் அம்மா எப்போதும் தன் பழைய நினைவுகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டதில்லை. எதையுமே துருவிக் கேட்காமல் திருப்தி அடையாத நித்யா ஒருமுறை அம்மாவிடம் அதைக் கேட்கப் போய் கண்கலங்கிய அம்மா பதில் சொல்லாமல் அறைக்குப் போய் கதவைத் தாளிட்டுக் கொண்டது இப்போதும் அர்ஜுனுக்கு நினைவிருக்கிறது.  சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்த அம்மா இளமையில் நிறைய கஷ்டப்பட்டிருக்க வேண்டும் என்றும், இளமைக்கால நிகழ்வுகளைக் கேட்பது அவளுடைய மனக்காயங்களைப் புதுப்பிப்பதாக இருக்கிறது என்றும் புரிந்து கொண்ட நித்யாவும் அதற்குப் பின் மறந்தும் அது பற்றி அம்மாவிடம் எதுவும் கேட்பதோ, பேசுவதோ இல்லை. அதனால் அம்மாவின் திருமணத்திற்கு முந்தைய வரலாறு அவர்கள் இருவரும் அறியாதது. அப்பாவும் அம்மாவும் எப்படி சந்தித்துக் கொண்டார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. அப்பாவும் அது பற்றிப் பேசினது கிடையாது.

 

அர்ஜுனுக்கு அம்மாவைப் பற்றி நினைக்கையில் இப்போது இரக்கம் தோன்றியது. அவள் பெற்றோரை இழந்து எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறாளோ? அதே இரக்கம் தான் அப்பாவுக்கும் வந்திருக்க வேண்டும் என்று அர்ஜுன் எண்ணிக் கொண்டான். கிட்டத்தட்ட அவருடைய நிலைமையும் அப்படித் தான் இருந்தது. ஆனால் அவருக்கு வாசுதேவன் என்ற தங்கமான வளர்ப்புத் தந்தை கிடைத்தார். அதன் மூலம் அன்பும், பாசமும் கிடைத்தன. நன்றாகக் கல்வி கற்க முடிந்தது. படிப்படியாக வாழ்வில் முன்னேற முடிந்தது.

 

ஆனால் அம்மாவின் விதி அப்படி இருந்திருக்கவில்லை. எட்டாம் வகுப்போடு கல்வி நின்று போய் பின் என்னென்னவெல்லாம் கஷ்டப்பட்டாளோ?  அந்த மனச்சுமையின் காரணமாகத் தான் அவள் இப்போதும் யாருடனும் அதிகம் நெருங்கிப்பழக முடியாதவளாக இருக்கிறாள் என்பதை அவனால் இப்போது புரிந்து கொள்ள முடிந்தது. சிறு வயதின் காயங்களின் வலியை அவனும் நன்றாக அறிவான். அம்மா அவளுடைய காயங்களின் காரணமாக விலகி வாழ்ந்து அவனையும் நிறைய காயப்படுத்தியிருக்கிறாள்.

 

அவனுக்கு நினவு தெரிந்த நாளிலிருந்து அவள் அவனுக்கு நெருக்கமாக இருந்தது அவன் நோய்வாய்ப்பட்டிருந்த காலங்களில் மட்டுமே. அவன் நோய் தீர்ந்து குணமாகும் வரை அவனுடனேயே இருக்கும் அவள், அவன் நலமடைய ஆரம்பித்த பின் பழையபடி விலகி விடுவாள். அதனாலேயே அவன் சிறுவயதில் அடிக்கடி நோய்வாய்ப்படுவதை, வளர்ந்த பிறகு உணர்ந்திருக்கிறான்.  ஒரு உளவியல் புத்தகத்தில் விவரித்திருந்த ஒரு உதாரணம் கிட்டத்தட்ட அவனுடைய உதாரணம் போலவே இருந்திருக்கிறது. பெற்றோரின் கவனம் நோய்வாய்ப்படும் காலங்களில் மட்டுமே கிடைக்கின்றது என்ற நிலைமையில் இருக்கும் இளம்பெண் ஒருத்தி அடிக்கடி நோய்வாய்ப்படுவது பற்றி அந்த நூலில் சொல்லப்பட்டு இருந்தது. தானும் அது போல் தான் நோய்வாய்ப்படுகிறோம் என்பதை உணர்ந்து அர்ஜுன் பின் மாறியிருக்கிறான். அவனுக்கு ஒரு புத்தகம் உதவியிருக்கிறது. ஆனால் கல்வியறிவு இல்லாத அம்மாவுக்கு அது போன்ற உதவி கிடைக்க வாய்ப்பில்லை. மனம் விட்டுப் பேசி அறிந்தவர்களிடமிருந்து உதவி பெறும் நிலைமையிலும் அவள் இல்லை. இதை எல்லாம் நினைத்து அவன் தான் மாறியது போலவே அம்மாவையும் மாற்ற வேண்டும் என்று உறுதியாக நினைத்துக் கொண்டான்.

 

சில சமயங்களில் முக்கியமான நபர்களிடம் தகவலுக்காகவோ, பேட்டிக்காகவோ போகும் போது எளிதில் அவர்களை நிருபர்கள் அணுகி விட முடியாது. ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படாமல், சளைக்காமல் முயன்று தான் அவன் வெற்றி பெற்றிருக்கிறான். அம்மாவிடம் மட்டும் ஏன் அதே முயற்சியை எடுக்காமல் அவளைப் போலவே ஒதுங்கினோம் என்று அவன் இப்போது யோசிக்கிறான்

 

அவன் உடனே எழுந்து அமைதியாக சமையலறைக்குப் போனான். அம்மாவும், நித்யாவும் வேலை செய்து கொண்டிருந்தார்கள். பானுமதிஎன்ன?” என்பது போல மகனைப் பார்த்தாள்.

 

அர்ஜுன் அவள் கண்களை நேராகப் பார்த்து சொன்னான். “தாத்தா பற்றி நான் உன் கிட்டயும் பேட்டி எடுக்கணும்மா.”

 

பானுமதி தடுமாறினாள். அவன் இப்படி அவளிடம் கண்களைப் பார்த்துப் பேசியதில்லை.  அவளும் அவனிடம் அப்படிச் செய்யாததால், அவனும் சிறுவயதிலிருந்தே அதைத் தவிர்த்து வந்தான். முதல் முறையாக அவன் அப்படிப் பார்த்ததே அவளுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் அதை எல்லாம் மறைத்துக் கொண்டு வழக்கமாய் அவனிடம் காட்டும் வெறுமையைக் காட்டிச் சொன்னாள். எனக்கு பேட்டியெல்லாம் தரத் தெரியாது.”

 

பேசத் தெரியுமில்லை? கேட்டதுக்குப் பதில் சொல்லு போதும்..” அவன் அமைதியாகச் சொல்ல நித்யா அவனைசபாஷ்என்பது போல் பார்த்தாள்.

 

பானுமதி மகன் பிடிவாதமாகச் சொன்னதை ரசிக்கவில்லை. அண்ணனின் பேச்சை ரசித்து, பார்வையாலேயே ஊக்குவிக்கும் மகளை அவள் முறைத்தாள். நித்யா அதைக் கண்டுகொள்ளவில்லை.

 

அதுவும் எனக்கு சரியா சொல்லத் தெரியாது. எனக்கு படிப்பறிவு கிடையாதுடா.” என்று பானுமதி படபடப்பாகச் சொன்னாள். மகன் சரிசமமாய் உறுதியோடு நின்று பேசிய போது அவளால் அமைதியையோ, வெறுமையையோ காட்ட முடியவில்லை.

 

அர்ஜுன் கேட்டான்.  உன் பிள்ளை கிட்ட பேச படிப்பறிவு என்னத்துக்கு?”


(தொடரும்)

என்.கணேசன்

 

Monday, May 11, 2026

யோகி 155

 ஷ்ரவன் சொன்னதை எல்லாம் சுவாரசியத்துடன் அருணாச்சலமும், ராகவனும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். கடைசியில் ஷ்ரவன் சொன்னான். “பரசுராமன் ஜி மாந்திரீகத்தால் அந்த ஏவல் சக்தியை அனுப்பாமல் இருந்திருந்தால் அவர்களை லேசாகக்கூட நம்மால் அசைத்திருக்க முடியாது. அவர் அப்படி ஆரம்பிச்சு வெச்சு எனக்கு மந்திரோபதேசம் செய்து தந்ததால, அதே வழியில என்னால போய் அவங்கள நெருங்கவும், உண்மைகளைத் தெரிஞ்சுக்கவும் முடிஞ்சது.”

 

அருணாச்சலம் நன்றியுடன் பரசுராமனை நினைத்துப் புன்னகைத்தார். ஷ்ரவன் அந்த நிஜ யோகியைப் பற்றிச் சொன்னதும் அவரை நிறைய யோசிக்க வைத்தது. எல்லா அற்புதங்களிலும் மிகப்பெரிய அற்புதம் எல்லா நேரங்களிலும் குறை காணாமல் நிறைவாக வாழ முடிவது தான் என்று தோன்றியது. சேரியில் கயிற்றுக் கட்டிலிலும், யோகாலயத்தில் சொகுசு சோபாவிலும் ஒரே மனநிலையில், பாதிக்கப்படாமல் உட்கார முடிந்த அந்த யோகி அவரைப் பிரமிக்க வைத்தார். அந்த யோகியைத் தோட்டக்காரனாகப் பார்க்கும் இந்த உலகம் ஒரு மோசக்காரனை யோகியாய் பார்க்கிறது, நம்புகிறது. வேடிக்கையாக இருந்தாலும் இதில் ஒரு உண்மை தெளிவாகத் தெரிந்தது. ’நடிப்பவனை உயர்த்தியும், நடிக்காதவனைச் சாதாரணமாகவும் பார்ப்பது தான் உலகத்தின் இயல்பு.’

 

அருணாச்சலம் ஷ்ரவனிடம் கேட்டார். “இனி என்ன செய்யலாம் என்று நினைக்கிறாய் ஷ்ரவன்?”

 

ஷ்ரவன் சொன்னான். “சைத்ராவைக் கொன்றதற்கு நம்மிடம் சாட்சிகள் இல்லை. அவர்கள் கோவிட்டை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு தப்பித்து விட்டார்கள். ஆனால் சந்திரமோகனைக் கொன்றதற்கு அவர்களைத் தண்டிக்க முடியும். பிணம் இன்னும் யோகாலயத்தில் தான் இருக்கிறது. எங்கே புதைத்து வைத்திருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.”

 

ராகவன் கேட்டார். “அது சந்திரமோகனுடையது என்பது நம் அனுமானம் தானே ஷ்ரவன். அது வேறு யாருடையதாகவும் இருக்கலாம் அல்லவா?”

 

அவர்கள் வாரத்திற்கு இரண்டு கொலைகள் செய்பவர்களாக இல்லாத வரையில், அங்கு கொன்று புதைக்கப்பட்டது சந்திரமோகனாகத் தான் இருக்க வேண்டும்.” என்று சொன்ன ஷ்ரவன் அருணாச்சலத்திடம் சொன்னான். “அவர்களைப் பகைத்துக் கொள்ளாமல் இந்தக் கொலையை விசாரிக்க நீங்களாக எந்த ஏற்பாடும் செய்ய முடியாது. ஆனால் இந்தக் கொலை பற்றிய விவரம் சமூக வலைத்தளங்களில் வைரலானால், விசாரணை நடத்த வேண்டிய கட்டாயத்திலிருந்து நீங்கள் தப்பிக்கவும் முடியாது இல்லையா சார். அவர்களும் உங்களைத் தவறு சொல்ல முடியாது.”

 

அருணாச்சலம் புன்னகைத்தார். இந்த இளைஞன் எல்லாவற்றையும் நன்றாக யோசித்து வைத்திருக்கிறான்.

 

அடுத்த சில மணி நேரங்களில்யோகாலயத்தில் கொலைஎன்ற ஒரு ஆடியோ’ (ஒலிபதிவு) சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக ஆரம்பித்தது. அந்த ஒலிப்பதிவில் நடுங்கிக் கொண்டே ஒரு உணர்ச்சிகரமாய் ஒரு பெண் பேசியிருந்தாள்.

 

நான் யோகாலயத்தில் துறவியாக இருக்கும் ஒரு பெண். இப்போது என் உயிருக்கு இங்கே ஆபத்து உருவாகியிருக்கிறது. இந்த ஆடியோ உங்கள் எல்லாரையும் வந்து சேரும் போது நான் கொல்லப்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் நான் இறந்தாலும், ஒரு உண்மையை உலகம் அறிய வேண்டும் என்ற ஆவலில் என் மனசாட்சியில் இது வரை உறுத்திக் கொண்டிருந்ததை நான் இப்போது இறக்கி வைக்கிறேன். சில மாதங்களுக்கு முன் யோகாலயத்தின் பின்பகுதி கடைசியில், வெளிநாட்டுத் துறவிகள் வசிக்கும் பகுதிக்கு எதிரில் உள்ள காலி இடத்தில், ஒருவர்  உயிரோடு புதைக்கப்பட்டார். அதை நானும், சைத்ரானந்தா என்ற இன்னொரு பெண் துறவியும் பார்த்து விட்டோம். சைத்ரானந்தா பார்த்து விட்டதைக் கண்டு பிடித்த கொலைகாரர்கள் அவரை அடைத்து வைத்து சித்திரவதை செய்தார்கள். அவரைக் காப்பாற்ற நான் அவருடைய தந்தைக்குஉங்கள் மகள் உயிருக்கு ஆபத்து. காப்பாற்றுங்கள்என்று ரகசியமாக ஒரு மொட்டைக்கடிதம் எழுதிப் போட்டேன். ஆனால் உண்மையை வெளியே சொன்னால் சைத்ரானந்தாவுடைய தந்தை மற்றும் தாத்தாவை கொன்று விடுவோம் என்று அவரை மிரட்டி குடும்பத்தாரைச் சந்திக்கவும் விடாமல் தடுத்து விட்டார்கள். கோவிட் வந்த சமயம் கோவிட்டால் இறந்து போனதாகச் சொல்லி, அவரைக் கொன்றும் விட்டார்கள். யோகாலயாவில் நடந்த அந்தக் கொலையை நானும் பார்த்திருப்பது இப்போது அவர்களுக்குத் தெரிந்து விட்டது. நான் என்னேரமும் கொல்லப்படும் அபாயம் உள்ளது. தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள். ஒருவேளை நான் கொல்லப்பட்டிருந்தால் குற்றவாளிகளைத் தண்டியுங்கள். இல்லா விட்டால் கொல்லப்பட்ட எங்களுடைய ஆத்மாக்கள் சாந்தியடையாது.”

 

நடந்த கொலைகளைச் செய்தது யார் என்று அறியும் ஆர்வம் சமூகத்தில் பலரிடமும் இருந்தாலும், நடக்கப் போகும் கொலையைத் தவிர்த்து காப்பாற்றும் துடிப்பு கிட்டத்தட்ட எல்லோரிடமும் ஏற்பட்டு விடுவது இயற்கை. இதைக் கணக்கிட்டு தான் ஷ்ரவன் பழைய கொலைகளைத் தெரிவிப்பதோடு நின்று விடாமல், கொலையைப் பார்த்தவள் கொல்லப்படவிருக்கிறாள் என்ற ரீதியில் அந்த ஒலிப்பதிவை வைரல் ஆக்கினான். அவன் எதிர்பார்த்தது போல, குரல் நடுங்கி உயிருக்குப் பயந்து பேசிய பெண்ணைக் காப்பாற்றும் துடிப்பு இளகிய மனம் படைத்த பலருக்கும் ஏற்பட்டது. பலரும் அதை மீண்டும் பரப்பினார்கள். அபிப்பிராயங்கள் சொன்னார்கள். சமூக வலைத்தளங்களில் அந்த ஒலிப்பதிவு பேசப்பட்டது. பலரும் பழைய சைத்ரானந்தா வழக்கை நினைவு கூர்ந்து மீண்டும் பேச ஆரம்பித்தார்கள்.

 

யோகாலயத்தின் முன்னால், ஊடகங்கள் குவிய ஆரம்பித்தன. “கொல்லாதே, கொல்லாதே பெண் துறவிகளைக் கொல்லாதேஎன்று பெண்ணுரிமை அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் கூடி கோஷம் எழுப்பினார்கள். பத்திரிக்கைக் காரர்கள், தொலைக்காட்சிகள், ஊடகங்கள், அரசியல் கட்சிக்காரர்கள், சீர்திருத்தவாதிகள், பொழுது போகாதவர்கள் என யோகாலயத்தின் முன் எல்லோரும் குவிய ஆரம்பித்தார்கள்.

 

சைத்ரா விஷயத்தில் அலட்டிக் கொள்ளாமல் இருந்த யோகாலயத்தால் இப்போதும் அப்படி இருக்க முடியவில்லை. சாதாரணமாக எதற்கும் அசராத பாண்டியன் தற்போது நடப்பதில் அதிர்ந்து போனார். பிரம்மானந்தா திகைப்புடன் பாண்டியனைக் கேட்டார். “அந்த ஆடியோல பேசியிருக்கறது யார்?”

 

நம்ம துறவிகள் யாரோட குரலும் இல்லை யோகிஜிஎன்றார் பாண்டியன்.

 

பிரம்மானந்தா குழப்பத்தோடு பாண்டியனைப் பார்த்தார். பாண்டியன் சொன்னார். “யாரோ திட்டமிட்டு இதைச் செய்யறாங்க யோகிஜி. யார்னு சரியாய் தெரியலை.”

 

இன்னும் எவனும் பணம் கேட்டு வரலையா?” பிரம்மானந்தா கேட்டார்.

 

பாண்டியன் சொன்னார். “இல்லை. அப்படி பணம் கேட்கறவனாய் இருந்தால் இது வைரல் ஆகியிருக்காது யோகிஜி. நமக்கு மட்டும் அனுப்பிபணம் கொடு, இல்லாட்டி வைரல் ஆக்கிடுவேன்னு சொல்லியிருப்பாங்க. இதுல பணம் உத்தேசம் மாதிரி தெரியலை. இது வைரல் ஆகணும்னே யாரோ திட்டம் போட்டு செஞ்சிருக்காங்க.”

 

சைத்ரா கோவிட்டில் இறந்த போது, இரண்டு ஊடகங்கள் சந்தேகப்பட்டுநாங்கள் இதைப் பெரிதுபடுத்துவோம். வேண்டாம் என்றால் பணம் கொடுங்கள்என்று வந்தார்கள். அவர்கள் பெரிதுபடுத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைமை இருந்த போதும், தேவையில்லாமல் மீண்டும் அது அதிகம் பேசப்பட வேண்டாம் என்று பாண்டியன் பணம் கொடுத்திருந்தார்.  சமூக, மத ஊடகங்கள் மகா உத்தமர்கள் போல் பொது வாழ்வில் நடித்தாலும் பெரும்பாலானவர்களுக்கு பணம் சம்பாதிப்பது தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது. உண்மைக்காக உயிரையும் கொடுப்பதாய் சொல்லிக் கொள்பவர்கள் பலரும் பணத்துக்காக எதையும் தருவார்களே ஒழிய உண்மைக்காக எதுவும் செய்ய சிரமப்பட மாட்டார்கள். தாங்களும் அப்படியே என்பதால் பாண்டியனுக்கு அதில் புகார் எதுவும் இல்லை. நேர்மை, உண்மை, நியாயத்துக்காகப் பாடுபடும் பைத்தியக்காரர்கள் தான் அவருக்கு பிரச்சினையாய் தெரிந்தார்கள். அந்தப் பைத்தியக்காரர்கள், அவர்களும் வாழ மாட்டார்கள், அடுத்தவனையும் வாழ மாட்டார்கள். அப்படி ஒரு பைத்தியம் தான் இப்போது இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறது. அந்தப் பைத்தியத்திற்கு அந்த கொலைத் தகவல் எப்படி சரியாகத் தெரிந்திருக்கிறது என்பது தான் இப்போதைய பெரிய கேள்வி. யோசித்த போது இங்கு இருக்கும் கருப்பு ஆடு மறுபடி காயை நகர்த்தி இருக்கிறது என்பது அவருக்குப் புரிந்தது.   

 

 (தொடரும்)

என்.கணேசன்