என் ‘தோல்வி என்பது இடைவேளை நூலில் இருந்து சில சிந்தனைகள்...
என்.கணேசன்
தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Wednesday, February 25, 2026
Monday, February 23, 2026
யோகி 144
கண்ணன் அந்தக் கிழவரை இரண்டு வீதிகளில் பின் தொடர்ந்தார். பைக்கை
வைத்து விட்டு இரண்டு குண்டர்களுடன் அவர் அந்தக் கிழவரை தற்போது காரில் மெல்ல பின்
தொடர்ந்து கொண்டிருக்கிறார். அந்தக் கிழவர் பின்னால் ஒரு கார் ஊர்ந்து வருவதை உணர்ந்தது
போல் தெரியவில்லை. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் காரை நிறுத்தி விட்டு
கண்ணனும் அந்த குண்டர்களும் இறங்கி அந்தக் கிழவரை இடைமறித்து நின்றார்கள்.
பொதுவாக இது போன்ற நேரங்களில் எல்லோரும்
பயப்படுவது போல் அந்தக் கிழவர் பயப்படவில்லை. என்ன என்பது
போல் அவர் பார்த்தார்.
கண்ணன் கேட்டார். “உங்க பெயரென்ன?”
“ரகுராமன்.”
கண்ணன் சொன்னார். “எங்கள்
தலைவர் உங்களைப் பார்த்துப் பேச வேண்டுமாம். நீங்கள்
எங்களுடன் வர வேண்டும்.”
உத்தரவிடும் தொனியில் சொன்ன கண்ணனை
அந்தக் கிழவர் அமைதியாகப் பார்த்தார். கண்ணன் சொன்னார். “திரும்பவும்
உங்களை உங்கள் சேரியிலேயே கொண்டு வந்து விட்டு விடுவோம்.”
“சரி” என்று அந்தக்
கிழவர் அமைதியாகச் சொன்னார். வந்த வேலை இவ்வளவு சுலபமாக முடியும் என்று கண்ணன் எதிர்பார்த்திருக்கவில்லை. நிஜமாகவே
இந்த ஆள் புத்தி மந்தமான ஆள் தான் என்பது கண்ணனுக்கு உறுதியாகியது. கண்ணன்
அவருக்குக் காரைக் கைகாட்டி விட்டு காரை நோக்கி நடக்க, அந்தக்
கிழவர் அவரைப் பின் தொடர்ந்தார். பின் கதவைத்
திறந்து கைகாட்டிய போது உள்ளே ஏறி அமர்ந்து கொண்டார். அவரது இரண்டு
பக்கத்திலும் அந்தக் குண்டர்கள் உட்கார்ந்து கொண்டார்கள். இந்தக்
குண்டர்களே தேவையிருக்கவில்லை என்று நினைத்த கண்ணன், காரைக்
கிளப்புவதற்கு முன் பாண்டியனுக்குப் போன் செய்தார். “ஐயா, கிளம்பிட்டோம். அரை மணி
நேரத்துல வந்து சேர்ந்துடுவோம்.”
ஷ்ரவன் அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு வெளியே வந்த போது
பாண்டியனின் உதவியாளன் அவனுக்காக வெளியே காத்திருந்தான். “ஐயா உங்களைக்
கூப்பிடுகிறார்.”
ஷ்ரவனுக்குத் திக்கென்றது. ஆனால் வெளியே
காட்டிக் கொள்ளாமல் அவன் அந்த உதவியாளனைப் பின் தொடர்ந்தான். அந்த உதவியாளன்
பாண்டியனின் இருப்பிடத்திற்கு அவனை அழைத்துப் போகாமல் பிரம்மானந்தாவின் இருப்பிடத்துக்கு
அவனை அழைத்துப் போனது அவனை ஆச்சரியப்படுத்தியது. அவன் உள்ளே
போன போது பாண்டியனும், பிரம்மானந்தாவும் அமர்ந்திருந்தார்கள். பிரம்மானந்தா
ஏதோ பதற்றமான மனநிலையில் இருப்பது போல் ஷ்ரவனுக்குத் தோன்றியது.
ஷ்ரவன் அவரைப் பார்த்ததும் புளங்காகிதம்
அடைந்து சாஷ்டாங்கமாய்
விழுந்து வணங்கி பணிவுடன் நின்றான்.
பிரம்மானந்தா எதிரில் இருந்த சோபாவைக் கைகாட்ட, ஷ்ரவன் பணிவு மாறாமல் அந்த சோபாவின் நுனியில் அமர்ந்தான்.
பாண்டியன் அவனிடம் சொன்னார். “ஷ்ரவனானந்தா நீங்கள் சொன்ன மாதிரியான ஒருவரை
எங்கள் ஆட்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில்
அவர் வந்து விடுவார். அவர் நீங்கள் சொன்ன யோகி தானா என்பதை,
நீங்கள் தான் உறுதி செய்ய வேண்டும்.”
தலையசைத்த ஷ்ரவன் பரபரப்பை உணர்ந்தான். இவ்வளவு
சீக்கிரமாக அவர்கள் அவரைக் கண்டுபிடித்ததுடன் யோகாலயத்திற்கும் அழைத்து வருவார்கள்
என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த யோகியை அழைத்து
வருவதில் பாண்டியன் அளவுக்கு பிரம்மானந்தாவுக்கு எதிர்பார்ப்போ, உடன்பாடோ
இல்லை என்பதும் அவர் முகபாவனையிலேயே தெரிந்தது.
சிறிது நேரத்தில் கண்ணன் அந்த யோகியை
அழைத்து வந்தார். தும்பைப்
பூவாய் நரைத்த தலைமுடி, தாடி, சாயம் போன சட்டை மற்றும் பழுப்பு நிற வேட்டியோடு தோற்றமளித்த
அவருடைய கண்களில் எல்லையில்லாத கனிவும், சாந்தமும் தெரிந்தன. அவர் அங்கே
வந்து நின்றவுடனேயே அவரிடமிருந்து வெளிப்பட்ட ஞான அலைகளை ஷ்ரவன் உணர்ந்தான். அவனையும்
அறியாமல் அவன் எழுந்து நின்று கைகூப்பினான். பிரம்மானந்தாவிடம்
நடித்தது போல் இங்கே நடிக்கத் தேவையிருக்கவில்லை.
கண்ணன் அவரை அறிமுகப்படுத்தினார். “யோகிஜி
இவர் பெயர் ரகுராமன். சுந்தரவனம் நர்சரியில வேலை பண்றார்.”
ரகுராமன் மூவரையும் பார்த்து கைகூப்பினார். அவர் மூவரையும்
சரிசமமாய் பார்த்து கைகூப்பியது பிரம்மானந்தாவின் முகத்தை கருக்க வைத்தது. ’சரியான பட்டிக்காட்டான். யாரைப்
பார்க்க வந்திருக்கிறோம் என்ற பிரக்ஞையும் இல்லாத ஜந்து.’ ஆனாலும்
அவரும் அமர்ந்தவாறே கைகூப்ப, பாண்டியனும் அப்படியே செய்தார்.
பிரம்மானந்தா அங்கிருந்த இன்னொரு சோபாவில்
அமரச் சொல்லி கைகாட்டினார். ரகுராமன் அந்த சொகுசு சோபாவில் அமர்ந்தார். அது போன்ற
மிக மென்மையான சோபாவில் அவர் இதுவரை அமர்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்றாலும் அவர் ஷ்ரவனைப்
போல் நுனியில் அமராமல் மிக நன்றாக, சௌகரியமாகவே அமர்ந்து கொண்டார். அதுவும்
பிரம்மானந்தாவுக்குப் பிடிக்கவில்லை. எப்பேர்ப்பட்டவரின்
முன் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் என்ற மலைப்பு அந்தத் தோட்டக்காரனுக்குத் தெரியாதது
பெரிய தவறாக அவருக்குத் தோன்றியது. நிஜமாகவே கிழவன்
தன்னை ஒரு யோகியாக நினைத்துக் கொண்டிருக்கிறாரோ?
எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று பாண்டியன்
யோசித்த வேளையில் பிரம்மானந்தா ரகுராமனிடம் கேட்டார். “என்னைத்
தெரிகிறதா?”
அது இரட்டை அர்த்தத்தில் கேட்கப்பட்ட
கேள்வி. “ஒரு காலத்தில் நாம் சந்தித்திருக்கிறோம். நினைவிருக்கிறதா?” என்பது
ஒரு கேள்வி. “இப்போது நான் யார் என்று தெரிகிறதா?” என்பது
இன்னொரு கேள்வி.
இரண்டு கேள்விகளுக்கும் பதில் தெரியாதது
போல ரகுராமன் அவரைக் கூர்ந்து பார்த்து பதிலளிக்க நேரம் எடுத்துக் கொண்டது பிரம்மானந்தாவை
அவமானப்படுத்துவது போல் இருந்தது. ’முன்பு பார்த்தது நினைவில்லா விட்டால் தொலைகிறது. இப்போது
நான் உலகப்புகழ் பெற்றவன். தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்து விட்ட ஐந்து வயதுச் சிறுவனுக்குக்
கூட என்னை அடையாளம் தெரியும். இந்தக் கிழவனுக்கு அதுவும் தெரியவில்லையா?’
ஷ்ரவன் பயபக்தி காட்டி ரகுராமனிடம்
சொன்னான். “இவர் யோகி பிரம்மானந்தாஜி”
அப்படியா என்பது போல் ரகுராமன் தலையசைத்தது
பாண்டியனுக்கே வேடிக்கையாக இருந்தது. அந்த அறிமுகமும்
பெரிய பிரமிப்பை ரகுராமனிடம் ஏற்படுத்தவில்லை.
‘இந்தப்
புத்திமந்தக் கிழவனை இங்கே அழைத்து வந்ததே முட்டாள்த்தனம்’ என்று மனம்
கடுத்த பிரம்மானந்தா நாசுக்காக இந்தக் கிழவனுக்கு அவர் நிலைமையை உணர்த்த வேண்டும் என்று
தோன்றியது. அதனால் இது போன்ற சமயங்களில் வழக்கமாய் உதிர்க்கும் லேசான
போலிச் சிரிப்பை உதிர்த்து விட்டு வஞ்சப்புகழ்ச்சி அணியில் பேச ஆரம்பித்தார்.
“ரகுராமன், எங்களுக்குத்
தெரிந்த சிலர் நீங்கள் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி இருப்பதையும், சாந்தமாய்
இருப்பதையும், முகமலர்ச்சியோடு இருப்பதையும் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்கள். அதனால்
தான் உங்களைப் பார்க்க வேண்டும் என்று பாண்டியன் சொன்னதற்கு நானும் சம்மதித்தேன்.”
ரகுராமன் தலையசைத்தார். அந்தப்
பாராட்டில் அவர் முகமலர்ச்சி சிறிதும் கூடவில்லை. ஷ்ரவன்
பாண்டியனைக் காண்பித்து மெல்லச் சொன்னான். “சார் தான்
பாண்டியன். யோகாலயத்தின் மேனேஜராக இருக்கிறார்.”
ரகுராமன் தலையசைத்தார். பிரம்மானந்தா
மனதில் எழுந்த எரிச்சலைக் காட்டிக் கொள்ளாமல் போலிப் புன்னகையுடன் சொன்னார். “உங்களால்
எப்படி எல்லா நேரங்களிலும் முகமலர்ச்சியோடு இருக்க முடிகிறது என்று அறிய நாங்கள் ஆவலாக
இருக்கிறோம்.”
அதை எப்படிச் சொல்வது என்று ரகுராமன்
யோசித்தது போல் தெரிந்தது. பிரம்மானந்தா சொன்னார். “உதாரணத்துக்கு, இன்றைக்கு
சாயங்காலம் நீங்கள் உங்கள் குடிசைக்கு வெளியே பழைய கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து
கொண்டு இருந்தீர்கள். இப்போது யோகாலயத்தில் சொகுசு சோபாவில் உட்கார்ந்து கொண்டு
இருக்கிறீர்கள். இந்த இரண்டும் ஒன்றா? இல்லையே. அப்படி
இருக்கையில் இரண்டும் ஒன்று தான் என்பது போல் எப்படி இருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?”
ஷ்ரவனுக்கு பிரம்மானந்தாவின் கேள்வி
கேவலமாய்த் தெரிந்தது. எவ்வளவு நாசுக்காக அவர் ரகுராமனின் கீழான வசதி நிலையைச் சுட்டிக்
காட்டுகிறார்?
ஆனால் ரகுராமன் அப்போதும் அந்தச் சிறுமையை
உணர்ந்தவராகத் தெரியவில்லை. அவர் கனிவு குறையாமல் சொன்னார். “இரண்டும்
ஒன்று தானே?”
பிரம்மானந்தாவுக்குக் கோபம் வந்து விட்டது. “எப்படி
ஒன்று என்கிறீர்கள்?”
ரகுராமன் சொன்னார். ”சாயங்காலத்தில்
என்னைக் கயிற்றுக் கட்டிலில் உட்கார வைத்ததும் இறைவன். இப்போது
இந்த சொகுசு சோபாவில் உட்கார வைத்திருப்பதும் இறைவன். இரண்டையுமே
இறைவன் தீர்மானித்து உட்கார வைத்த இடங்கள் என்றே நான் பார்க்கிறேன். எல்லாம்
அறிந்த இறைவன் தீர்மானிப்பதில் எப்படி தவறிருக்க
முடியும்? எப்படி ஒன்றை நிறையாகவும், இன்னொன்றைக்
குறையாகவும் நினைப்பது சரியாகும்?”
அவர் சொன்னதைக் கேட்டு ஷ்ரவனுக்கு மயிர்க்கூச்செறிந்தது. ஒரு யோகியின்
கோணம் இப்படித் தான் இருக்குமோ? பிரம்மானந்தாவின் முகம் கருத்தது.
(தொடரும்)
என்.கணேசன்
Thursday, February 19, 2026
சதுரங்கம் 6
அர்ஜுன் தன் பத்திரிக்கைத் துறை நண்பர்களைத் தொடர்பு கொண்டு, நர்மதா குறித்து பல தகவல்களைப் பெற்றான். அதில் ஒன்று, நர்மதா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நகைக் கடைக்குச் சென்று வைரக் கம்மல் வாங்கினாளாம். அந்தப் பத்திரிக்கை நண்பர் அந்தப் புகைப்படத்தையும் அனுப்பியிருந்தார். அதில் நர்மதா அந்த வைரக் கம்மலைப் போட்டு கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். நகைக்கடைக்காரர் சிசிடிவி கேமிராப் பதிவிலிருந்து அந்தப் புகைப்படத்தை எடுத்து அந்த நண்பருக்கு அனுப்ப, அதை அந்த நண்பர் அர்ஜுனுக்கு அனுப்பியிருக்கிறார். வாழ்க்கை வெறுத்துப் போய் விரக்தியில் இருப்பவள் வைரக்கம்மல் வாங்குவாளா? அந்தப் புகைப்படத்தில் அவளிடம் விரக்தியின் லேசான அறிகுறி கூட தெரியவில்லை.
நர்மதாவுக்கு எந்த விதமான பணப் பற்றாக்குறை இருந்தது போலவும்
தெரியவில்லை. அவள் இறப்பதற்கு முந்தைய நாள் வரை வாங்கிய பொருள்கள் எல்லாமும் கூட வாழத்துடிக்கும்
நபரின் தேவைகளையே அடையாளம் காட்டின.
சுமார் மாலை ஐந்து மணியளவில், அதையெல்லாம் அவன் பணிபுரியும் விடிவெள்ளி பத்திரிக்கையின்
ஆசிரியரும் நிறுவனருமான தேவசகாயத்திடம்
அவன் சொல்லிக் கொண்டிருந்த போது தான் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வெளியானது. உடனே அவர்கள் போஸ்ட் மார்ட்டம்
ரிப்போர்ட் நகலை வரவழைத்துப் படித்தார்கள். நர்மதா இறந்த நேரம்
இரவு பன்னிரண்டிலிருந்து ஒன்றரை மணிக்குள் இருக்கலாம் என்று அது தெரிவித்தது.
தூக்கில் தொங்கியதால் கழுத்தில் ஏற்பட்ட காயத்தைத் தவிர அவள் உடலில்
வேறு பலத்த காயங்கள் எதுவும் இல்லை என்றும் அவளது வலது கட்டை விரல் நுனியில் லேசான
ஒரு சிறு கீறல்
காயம் மட்டும் இருக்கிறது என்றும் அதில் சொல்லப்பட்டு இருந்தது. அந்தக் காயம் கத்தி அல்லது
கூரான பொருள் ஒன்றில் அவளுடைய விரல் பட்டதால் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள்
தெரிவித்திருந்தனர்.
அந்தச் சிறு காயம் பற்றிப் படித்தவுடன் அர்ஜுன் புன்னகைத்தான்.
தேவசகாயம் அவனிடம் கேட்டார். ”ஏன் சிரிக்கிறாய்
அர்ஜுன்?”
அர்ஜுன் சொன்னான். “அவள் எழுதினதாய்
சொல்ற தற்கொலைக் கடிதத்துல இருக்கற கையெழுத்து முழுசா பொருந்தாமல் போயிருக்கலாம். அதற்குக்
காரணம் அந்தக் காயம்னு சொல்வாங்க பாருங்க”
அவன் சொன்னது போலவே தான் நடந்தது. சிறிது
நேரத்தில் வந்த கையெழுத்து நிபுணர்களின் அறிக்கையில் “அந்தக்
கடிதத்தில் உள்ள கையெழுத்து, அவளிடம் இருந்த டைரிகள், மற்ற எழுத்து
ஆவணங்களுடன் பொதுவாக ஒத்துப் போனாலும் முற்றிலும் பொருந்துவதாகச் சொல்ல முடியவில்லை. காரணம்
அவளுடைய கட்டைவிரல் காயமாகக் கூட இருக்கலாம்.” என்று சொல்லப்பட்டிருந்தது.
தேவசகாயம் ஆச்சரியப்பட்டார். அவர் இதற்கு
முன்பும் அவனுடைய யூகங்கள் பெரும்பாலும் ஊர்ஜிதமாவது குறித்து பிரமித்திருக்கிறார். உண்மையில்
அவன் இந்தப் பத்திரிக்கைக்கு ஒரு மிகப்பெரிய சொத்து தான். அவனுக்கென்று
தீவிர வாசகர்கள் இருக்கிறார்கள். இது போன்ற புலனாய்வுக் கட்டுரைகளானாலும், வேறு முக்கிய
விஷயங்களை அலசும் ஆழமான கட்டுரைகளானாலும் அவன் எழுதும் பாணி தனித்தன்மையானது, அறிவுபூர்வமானது. மேலும்
ஒரு விஷயத்தைப் பற்றி அவன் எழுதினான்றால் அவன் எழுதியதிலேயே அவ்விஷயத்தைப் பற்றிய முக்கியமான
தகவல்கள் அனைத்தையும் வாசகர்கள் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும். அதைச் சில
அறிஞர்களும், மற்ற பத்திரிக்கையாளர்களும் கூட அவரிடம் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்கள்.
அவனது அறிவுக்கூர்மையில் ஆச்சரியப்பட
ஒன்றுமில்லை. அவனுடைய குடும்பத்தில் பரம்பரையாக அனைவரிடமும் பேரறிவு இருந்திருக்கிறது. அவனுடைய
தாத்தா வாசுதேவன் சிறந்த அரசியல்வாதி மட்டுமல்ல, சிறந்த
தமிழறிஞரும் கூட. அவர் கம்ப இராமாயணத்தையும், சிலப்பதிகாரத்தையும்
தங்கு தடையில்லாமல் மனப்பாடமாக மேடைகளில் பேசக்கூடியவர். அவன் தந்தை
ஞானமூர்த்தியும் மிகச்சிறந்த அரசியல்வாதி, நேர்மைக்குப்
பெயர் போனவர் என்பது மட்டுமல்லாமல் பிரபலமான வழக்கறிஞரும் கூட. சட்ட நுணுக்கங்களை
அவர் பேச ஆரம்பித்தால் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளே
கூர்ந்து கவனிப்பார்கள் என்று விவரமறிந்தவர்கள் சொல்ல தேவசகாயம் கேட்டிருக்கிறார். அர்ஜுனுடைய சித்தப்பா ராஜாராம் இந்த நாட்டின் மிகச்சிறந்த
அறிவாளிகளில் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்
மற்றும் ஆங்கிலத்தில் மடை திறந்த வெள்ளம் போல் அறிவார்ந்த கருத்துகளைச் சொல்லக்கூடியவர். உலகமெங்கும் அவர் பேச்சுக்கள்
பிரபலம். தற்போது கூட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்ற
அவர் சென்றிருக்கிறார். இப்படிப்பட்ட குடும்பத்தின் ஒரே ஆண்வாரிசுக்கு அபார அறிவு இருப்பது ஒன்றும்
பெரிய விஷயமல்ல.
தேவசகாயம் கேட்டார். “உன் சித்தப்பாவோட
ஆக்ஸ்ஃபோர்டு பேச்சு எப்போ?”
அர்ஜுன் பெருமிதத்துடன் சொன்னான். “நேற்று
சார்.”
“அவர் எப்போ
திரும்பி வர்றார்?
“இன்னைக்கு
அங்கேயிருந்து கிளம்பறார். நாளைக்கு வந்துடுவார்”
“அடுத்த
வாரம் உன் தாத்தாவோட நூற்றாண்டு விழாவை தமிழ்நாட்டுல எல்லாக் கட்சிகளும் கொண்டாடப்
போறாங்க. அதனால ஒரு சிறப்புக் கட்டுரையை உன் கிட்டே இருந்து எதிர்பார்க்கிறேன்
அர்ஜுன். அதை நீ எழுதினா தான் சரியாகவும் இருக்கும், சிறப்பாகவும்
இருக்கும். உங்க குடும்பத்து ஆட்கள் ஒவ்வொருத்தரும் அவரை எப்படி ஞாபகப்படுத்திக்கிறாங்கன்னு
தனித்தனியா பேட்டி எடுத்தும் போடணும்.”
அர்ஜுன் சம்மதித்துத் தலையசைத்தான்.
“உனக்கு அவரை ஞாபகம் இருக்கா அர்ஜுன்?”
“சரியா ஞாபகம் இல்லை சார். அவர் இறந்தப்ப எனக்கு மூனு
வயசு. அவர் கூட நான் இருக்கற ஃபோட்டோக்கள் இருக்கு. ஆனா அதையெல்லாம் பார்க்கறப்ப கூட எனக்கு எதுவும் ஞாபகம் வரமாட்டேங்குது..”
உண்மையில் அர்ஜுனுக்கு தாத்தாவுடனான எந்த நிகழ்வும் நினைவில்
தங்காமல் இருந்தது வருத்தமாகத் தான் இருந்தது. இத்தனைக்கும் அவன் சிறுவயதில் தாத்தாவுடன் தான்
அதிகம் இருப்பான் என்று அப்பா சொல்வார். ஆனாலும் எல்லோரும் மாமனிதனாகப்
போற்றும் அவர் குறித்த நினைவுகள் எதுவுமே அவனிடம் இல்லை.
தேவசகாயம் சொன்னது போல எல்லாக் கட்சிகளும் உரிமையுடன் கொண்டாடும்
ஒரு தலைவர் இப்போது அவன் தாத்தா வாசுதேவன் தான். ஆகவே மூன்று கட்சிகளும் கொண்டாடும் இந்த நூற்றாண்டு
விழா சுவாரசியமாகத் தான் இருக்கப் போகிறது.
தேவசகாயம் கேட்டார்.
“நீ ஏன் அரசியலுக்குப் போகலை அர்ஜுன்?”
பலரும் அவனிடம் கேட்கும் கேள்வி தான் இது. அவன் சொன்னான்.
“ஆரம்பத்திலிருந்தே எனக்கு அரசியல்ல பெரிய ஈடுபாடு வரலை.”
அவர் புன்னகைத்தார். நல்ல வேளையாக
எல்லோரும் கேட்கும் அடுத்த கேள்வியை அவர் கேட்கவில்லை. பெரும்பாலானோர்
அவனிடம் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். “ஏன் அப்படி? உங்கப்பா
கட்சியிலயோ, உங்க சித்தப்பா ஆதரிக்கும் ஆளும் கட்சியிலயோவாவது சேர்ந்துக்கலாமே.”
”பிடிக்கவில்லை” என்று சொன்ன
பிறகு காரணம் கேட்பதும், அனாவசியமாய் அதையே செய்ய ஆலோசனை சொல்வதும் அதிகப்பிரசங்கித்தனம்
அல்லவா? அப்படிப்பட்ட அதிகப்பிரசங்கிகள் சமூகத்தில் நிறைய இருக்கிறார்கள்....
அது சம்பந்தமான யோசனைகளை நிறுத்தி விட்டு அர்ஜுன் நர்மதா விஷயத்துக்கு மறுபடி
வந்தான்.
“சார் நர்மதா
கடந்த ரெண்டு வருஷமாய் நடிக்கிறதில்லை, நமக்குத் தெரிந்த
வகையில் அவளுக்கு இப்போ வேறெந்த சம்பாத்தியமும் இல்லை. ஆனாலும்
அவ கிட்ட பணப்புழக்கம் நல்லாவே இருந்திருக்கு. அந்தப்
பணம் யார் கிட்ட இருந்து அவளுக்கு வந்துகிட்டு இருந்துச்சுன்னு தெரிஞ்சா, அவளோட மரணத்துக்கு
யார் காரணம்கிறதும் நமக்குத் தெரிஞ்சுடும்னு நினைக்கிறேன்.”
தேவசகாயம் அவன் நினைப்பது சரியென்று
தலையசைத்து விட்டுத் தன் சந்தேகத்தைக் கேட்டார். “அவளோட காதலன்
விமல் அவளுக்கு பணம் தந்திருக்கலாமோ?”
“அவனே ஒரு
அன்னக்காவடி சார். முதல்லயாவது ஏதோ ஒன்னு ரெண்டு சீரியல்கள்ல நடிச்சுகிட்டு
இருந்தான். இப்ப அதுவுமில்லைன்னு கேள்விப்பட்டேன். அதனால அவனுக்கே நர்மதா தான் பணம் கொடுத்து உதவற நிலைமை தான் சமீப காலமாய்
இருந்திருக்கு. இப்ப அவனும் தலைமறைவாயிட்டான். அவனைக்
கண்டுபிடிச்சாலும் எதாவது துப்பு கிடைக்க வாய்ப்புண்டு.”
(தொடரும்)
என்.கணேசன்
Monday, February 16, 2026
யோகி 143
மறுநாள் காலை வாய்ப்பு கிடைக்கையில்
ஷ்ரவன் கல்பனானந்தாவிடம் சொன்னான்.
“நூலகத்தில் உங்களைச் சந்திக்க வர வேண்டும். எப்போது
வந்தால் கூட்டம் அதிகம் இருக்காது?”
“இரவு உணவு நேரத்துக்கு முன் வந்தால் யாரும் இருக்க மாட்டார்கள். நானும் வேறு யாராவது துறவியும் மட்டும் தான் இருப்போம். ஆனால் அங்கே கண்காணிக்கும் ஆட்கள் இல்லா விட்டாலும் காமிராக்கள் அதிகம்.”
“அது பரவாயில்லை. நான் உங்களிடம் சொன்ன இரண்டு மெயில்
ஐடிகள் தரவேண்டியிருக்கிறது. நான் ஏதாவது நூலுக்கு நடுவில் வைத்து
விடுகிறேன். நீங்கள் பிறகு எடுத்துக் கொள்ளுங்கள்.”
அப்படி நூலுக்குள் வைப்பதையும் காமிரா பதிவு செய்துவிட வாய்ப்பு
இருக்கிறது என்று எச்சரிக்க நினைத்த கல்பனானந்தா, பின் அது அனாவசியம் என்று விட்டு விட்டாள்.
அவன் எல்லாவற்றிலும் மிகவும் கவனமாய் தான் இருக்கிறான். அது அவனுடைய இரத்தத்தில் ஊறியே இருக்கிறது.
அவள் சொன்ன நேரத்தில் இன்னொரு அனுகூலம் இருக்கிறது. அது
நூலகத்தை மூடும் நேரம். அவன் மின்னஞ்சல் முகவரி வைத்த புத்தகத்தை வேறு யாராவது எடுத்துக் கொண்டு விட
வாய்ப்பில்லை…
கல்பனானந்தா லேசாகத் தலையசைத்தாள்.
பாண்டியனின் ஆட்கள் முழு வீச்சுடன் யோகியைத் தேட ஆரம்பித்தார்கள். யோகி என்றதும் யோகாலயாவில்
இருக்கிறார் என்று அவர்களிடமே சொன்னவர்கள் அதிகம். இந்தச் சிக்கலால்
கண்ணன் யோகி என்ற வார்த்தையைத் தவிர்ப்பது நல்லது என்று சீக்கிரமாகவே முடிவெடுத்தார்.
சாந்த சொரூபியான, மிக அமைதியான தோட்டக்காரக் கிழவர்
என்று சொல்லி ஆட்களிடம் தேடச் சொன்னார். சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் தோட்டங்கள்
வைத்திருப்பவர்களிடம் விசாரித்த போது இரண்டு பேர் ஒரு நர்சரித் தோட்டத்தில் அப்படிப்பட்ட
ஒரு கிழவர் சில மாதங்களாக வேலை செய்து வருகிறார் என்று சொன்னார்கள். வேறொரு பகுதியிலிருக்கும் ஒரு நபரும் அப்படியே சொன்னார். பெரும்பாலும் அவர்கள் தேடும் நபர் அவராகவே இருக்க வேண்டும் என்று கண்ணனுக்குத்
தோன்றியது.
அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டது மாலை நேரமாக இருந்தது. நர்சரி மாலை ஐந்தரைக்கே
மூடப்படுவதால் அந்தக் கிழவர் வசிக்கும் பகுதிக்கே சென்று பார்க்க கண்ணன் முடிவு செய்தார்.
விசாரித்த போது, அந்தக் கிழவர் சேரிப் பகுதியில் ஒரு குடிசையில் வசிப்பவர் என்பது தெரிந்தது.
நல்ல வேளையாக அந்தக் குடிசைக்கு எதிரில் இருசக்கர வாகனங்களைப் பழுது
பார்க்கும் ’வர்க்ஷாப்’ ஒன்று இருந்தது. கண்ணன் ஒரு பழைய பைக்கை எடுத்துக் கொண்டு
அங்கே போனார். அங்கு ஏற்கெனவே இரண்டு வண்டிகள் பழுதுபார்க்க இருந்தன.
கண்ணன் பைக்கில் இருக்கும் குறைகளைச் சொல்லி விட்டு, “அவசரமே இல்லை. அந்த இரண்டு வண்டிகளை முடித்து விட்டு இதைப் பாருங்கள் போதும். நான் காத்திருக்கிறேன்” என்று சொல்லி விட்டார்.
வருபவர்கள் எல்லாம் அவசரப்படும் இக்காலத்தில் அவசரமேயில்லை என்று
சொல்லிக் காத்திருக்கச் சம்மதித்த அந்தத் துறவியை கடைக்காரர் வியந்து பார்த்தார். ‘என்ன இருந்தாலும்,
பெரிய மனுஷன், பெரிய மனுஷன் தான்’. கண்ணன் அங்கிருந்த ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்டார்.
அங்கு அமர்ந்திருந்த இரண்டு மணி நேரத்தில்
எதிர்க் குடிசைக்கு
வெளியே ஒரு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த கிழவரை முழுமையாக கண்ணனால் ஆராய முடிந்தது.
இரண்டு மணி நேரம் கழித்து அவர் பாண்டியனை அலைபேசியில் அழைத்தார். அவர் அழைத்த போது பாண்டியன்
பிரம்மானந்தாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.
கண்ணன் சொன்னார்.
“ஐயா, அந்த தோட்டக்காரக் கிழவரைக் கண்டுபிடிச்சுட்டோம்.”
பாண்டியன் முகம் மலர,
பிரம்மானந்தாவும் கேட்கட்டும் என்று ’ஸ்பீக்கரை
ஆன்’ செய்தார். ”விவரமாய் சொல்லு”
கண்ணன் சொல்வது பிரம்மானந்தாவுக்கும் கேட்டது. “ஒரு நர்சரி தோட்டத்துல
வேலை பண்றார். பக்கத்து ஏரியால ஒரு குடிசைல இருக்கார்.
பக்கத்துல எல்லார் கிட்டயும் விசாரிச்சேன். அந்த
ஆள் பாவம், ரொம்ப சாது, எப்பவும் சாந்தமாய்,
அமைதியாய் இருப்பார்னு சொல்றாங்க. கயிற்றுக் கட்டிலில்
உட்கார்ந்திருந்த அந்த ஆளை ரெண்டு மணி நேரம் நானும் கவனிச்சேன். நான் கவனிச்சப்பவும் அப்படித் தான் இருந்தார். கஞ்சா
அடிச்சவங்க சுத்தி என்ன நடந்தாலும் கண்டுக்காமல் அவங்க உலகத்துல மயங்கிப் போய் இருப்பானுக
இல்லையா, அந்த மாதிரி தான் இந்த ஆள் கஞ்சா சாப்பிடாமலேயே இருக்கார்.
சுத்தியும் நடக்கறது எல்லாம் அந்த ஆளுக்குப் புரியுதா, இல்லையான்னும் சந்தேகமாய் இருக்கு…”
அந்தக் கடைசி வாக்கியம் கேட்டவுடன் பிரம்மானந்தாவுக்கு மூளையில்
மின்னல் வெட்டியது போல் இருந்தது.
கண்ணன் அந்தக் கிழவரைக் கச்சிதமாகக் கணித்து விட்டதாய் தோன்றியது.
என்ன நிலைமையில் இருக்கிறோம் என்று புரியாமல் ஏதோ ஒரு கற்பனை உலகில்
சஞ்சரிக்கிற பித்தராகத் தான் அவருக்கும் அந்தக் கிழவரைக் கணிக்கத் தோன்றியது. அந்தப் பித்தரை சிவசங்கரன் யோகியாகப் பார்த்தது தான் வேடிக்கையிலும்
வேடிக்கை...
பிரம்மானந்தா சொன்னார். “கண்ணன்
சரியாத் தான் சொல்றான்.”
பாண்டியன் கண்ணனிடம் கேட்டார். “அந்த ஆளை
இங்கே கூட்டிகிட்டு வர முடியுமா?”
கண்ணன் யோசித்து விட்டுச் சொன்னார். “அந்த ஆள்
ராத்திரி நேரத்துல வாக்கிங் போகிறதுண்டாம். அப்ப வேணும்னா
கேட்டுப் பார்க்கலாம். வர மாட்டேன்னா குண்டு கட்டாய் தூக்கிப் போட்டுகிட்டும் வரலாம்...”
“அப்படியே
செய். அந்த ஆளோட கிளம்பி வர்றப்ப எனக்கு போன் பண்ணு.”
பிரம்மானந்தாவுக்கு அந்தக் கிழவரை இங்கே
அழைத்து வருவது பிடிக்கவில்லை. ஆனால் வேண்டாம் என்று பாண்டியனிடம் சொல்வதற்கு அவரிடம் சரியான
காரணங்கள் இல்லை.
இரவு உணவுக்குச் செல்வதற்கு சற்று முன் ஷ்ரவன் நூலகத்துக்குக்
கிளம்பினான். நூலகத்தில் கல்பனானந்தாவும், வேறொரு
பெண் துறவியும் அங்கு இருந்தார்கள். வேறு யாரும் இல்லை. சற்று நேரத்தில்
நூலகம் மூடப்படும் என்பதால் அந்தப் பெண் துறவி மேசையில் இருந்த புத்தகங்களை எடுத்து
அலமாரிகளில் அந்தந்தப் பகுதிகளில் அடுக்கிக் கொண்டிருந்தார்.
ஷ்ரவன் கல்பனானந்தாவிடம் சொன்னான். “தாமதமாக
வந்ததற்கு மன்னிக்க வேண்டும் சுவாமினி. இரவு நேரங்களில்
சில சமயம் உறக்கம் சரியாக வருவதில்லை. அதனால் படிக்க ஏதாவது
புத்தகம் எடுத்துக் கொண்டு போகலாம் என்று வந்தேன்.”
கல்பனானந்தா புன்னகையுடன் சொன்னாள். “தாமதமாகி
விடவில்லை ஷ்ரவனானந்தா. நூலகத்தை மூட இன்னும் 15 நிமிடங்கள்
இருக்கின்றன. அதற்குள்
ஒரு நூலை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.” சொல்லி விட்டு ஒரு
அலமாரியை நோக்கி கை காட்டினாள்.
அது கடைசி அலமாரி. அந்தக்
கடைசி அலமாரியின் ஒரு பகுதி கண்காணிப்பு காமிராவுக்கு தென்படும் கோணத்தில் இருந்தாலும், அதன் மறுகோடி
அந்த அளவு தெளிவாகத் தெரிய வாய்ப்பில்லை என்பதை கணப்பொழுதில் ஷ்ரவன் கண்டுபிடித்து
விட்டான். அப்பகுதியில் விளக்கு வெளிச்சமும் சற்றுக் குறைவாகத் தான்
இருந்தது.
“நன்றி சுவாமினி.” என்று சொல்லி
விட்டுப் போய்ப் புத்தகங்களை அவன் பார்க்க ஆரம்பித்தான். புத்தகங்களை
அடுக்கும் பெண் துறவி எதிர்ப்புறம் இருந்த அலமாரிகளில் கடைசி அலமாரிப் பக்கம் இருந்தாள். அவள் அவனைப்
பார்க்கும் வாய்ப்பு இல்லை. புத்தகங்களைப் பார்த்துக்கொண்டே இரண்டாம் வரிசையில் கடைக்கோடியில்
இருந்த புத்தகத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்த ஷ்ரவன் கைக்குட்டையை எடுத்து முகம்
துடைக்கும் சாக்கில் கைக்குட்டையோடு மின்னஞ்சல் முகவரிச் சீட்டையும் எடுத்தான். அந்தச்
சீட்டு பல மடங்காய் மடிக்கப்பட்டு இருந்ததால் தெளிவாகத் தெரிய வாய்ப்பேயில்லை. பிரித்திருந்த
புத்தகத்தில் மின்னல் வேகத்தில் வைத்து புத்தகத்தை மூடி அலமாரியில் வைத்துக் கொண்டே
முகத்தையும் துடைத்துக் கொண்டான். பின் அதன் அருகே இருந்த புத்தகத்தை எடுத்துப் பிரித்துப்
பார்த்து அதில் கவரப்பட்டவனாகக் காட்டிக் கொண்டு புன்னகையுடன் கல்பனானந்தாவிடம் வந்தான்.
புத்தகத்தை அவனிடம் நீட்டியபடி முணுமுணுத்தான். ”கடைசி அலமாரி
இரண்டாவது வரிசை கடைசி புத்தகம்”
கல்பனானந்தா காதில் விழுந்தது போலவே
காட்டிக் கொள்ளவில்லை. அவன் எடுத்த புத்தகத்தை வாங்கி கம்ப்யூட்டரில் பதிவு செய்து
கொண்டு அந்தப் புத்தகத்தை அவனிடம் நீட்டினாள். புன்னகையுடன்
பெற்றுக் கொண்டு ஷ்ரவன் கிளம்பினான்.
கல்பனானந்தா எழுந்து விளக்குகளை அணைத்துக்
கொண்டே போனாள். ஷ்ரவன் புத்தகத்தை எடுத்த இடம் இருட்டாகியது. இருட்டில்
இரண்டாவது வரிசையில் கடைசிப் புத்தகத்தை எடுத்துப் பிரித்தாள். துண்டுச்
சீட்டு கிடைத்தது. அதை எடுத்து உள்ளாடையில் மறைத்துக் கொண்டாள். அவளும்
அந்தப் பெண் துறவியும் நூலகத்தைப் பூட்டிக் கொண்டு கிளம்பினார்கள்.
(தொடரும்)
என்.கணேசன்











.jpg)



