என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, July 13, 2026

யோகி 164

 


ஷ்ரவனும், ஸ்ரேயாவும் தங்கள் திருமண அழைப்பிதழைத் தர யோகாலயம் போயிருந்தார்கள்.  அவர்கள் முதல் முதலில் சந்தித்த இடம் என்பதால் அது அவர்கள் மனதில் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு இடமாக இருந்தது.

 

யோகாலயம் இப்போது கல்பனானந்தா தலைமையில் நிறைய மாறியிருந்தது. அங்கே பழைய கெடுபிடிகள் இல்லை. பாண்டியனின் தடியர்கள் அனைவரும் போய்விட்டிருந்ததால் தீவிர கண்காணிப்பு இல்லை. அதற்கு அவசியமும் இருக்கவில்லை.

 

சைத்ரா வழக்கின் முக்கிய குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படா விட்டாலும், ஒவ்வொருவரையும் கடவுளோ, கர்மாவோ, ஏவல்சக்தியோ வேறு வேறு விதங்களில் தண்டித்திருப்பதை நினைத்து ஷ்ரவன் ஆச்சரியப்படுகிறான். செல்வம் இப்போதும் ஒரு மனநல மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் தான் இருக்கிறார். யாராவது அவரை உற்றுப் பார்த்தாலோ, அவர் முன் காவியுடையுடன் போனாலோ  அவர்கள் மேல் அவர் பாய்ந்து விடுகிறார். 

 

டாக்டர் சுகுமாரன் செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனையில் ஒரு தனியறையில் தான் இருக்கிறார். அந்த அறையில் டாமியும் இருக்கிறது. டாமிக்கு அந்த அறையில் இருக்கும் போது எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சுகுமாரனுக்கு அங்கும் தீராத வயிற்று வலிப் பிரச்சினையும், மண்டை ஓடு தெரியும் பிரச்சினையும் இருக்கிறது. அவருடைய இரண்டு கைகளிலும் நிறைய தாயத்துக்கள் இருக்கின்றன. அதை யாராவது கழற்றப் போனால் அவர் ஆக்ரோஷமாகி விடுகிறார்.  வாரம் இரண்டு முறை அவர் மனைவி வந்து அவரை ஜன்னல் வழியே பார்த்து விட்டு, சிகிச்சையளிக்கும் டாக்டரைப் பார்த்து பேசி விட்டுப் போகிறாள். உள்ளே போய் சுகுமாரனைப் பார்த்தால், அவள் தாயத்து வெட்டியது அவருக்கு நினைவுக்கு வந்து வருவதால் அவள் பாதுகாப்பாக இருக்க வேண்டி வருகிறது.

 

பாண்டியனின் தற்கொலை ஷ்ரவன் எதிர்பாராத ஒன்றாய் இருந்தது. அச்சுறுத்தல் ஏவல் சக்தியிடமிருந்து அல்லாமல் மனிதர்களிடமிருந்தாக இருந்தால் அவர் கண்டிப்பாக அனாயாசமாய் எதிர்கொண்டு சமாளித்திருப்பார் என்று ஷ்ரவனுக்குத் தோன்றியது.  அவர் உயிரோடிருந்திருந்தால் அவன் இப்படி யோகாலயத்தின் பக்கமே வந்திருக்க முடியாது என்பதையும் அவன் புன்னகையுடன் நினைத்துக் கொண்டான். கண்ணனும், பாண்டியனின் மற்ற தடியர்களும் எங்கே போய் சேர்ந்து கொண்டார்கள், தற்போது என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.

 

பிரம்மானந்தாவின் தற்போதைய நிலைமையும், ஷ்ரவன் சற்றும் எதிர்பார்த்து இருக்காதது தான். பாண்டியனின் மரணம் அவரை இப்படி பாதிக்கும் என்று அவன் கற்பனையில் கூட நினைக்கவில்லை. அவர் இப்போதும் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரால் பேசக்கூட முடிவதில்லை. அவரைப் பார்க்க அவருடைய பக்தர்கள் கூட்டமாக யோகாலயத்துக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் துறவிகள் அவருடைய உடல்நிலை நிலவரத்தைச் சொல்லி, அவருடைய சிறிய நூல் ஒன்றை ஆசிர்வாதமாகத் தந்து, அன்போடு திருப்பி அனுப்புகிறார்கள். பிரபலங்கள் உட்பட யாரும் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை. 

 

பாண்டியனின் இருப்பிடம் இப்போது கல்பனானந்தாவின் இருப்பிடமாக இருக்கிறது. ஷ்ரவனையும், ஸ்ரேயாவையும் அவள் அங்கு தான் வரவேற்றாள். திருமணத்திற்குக் கண்டிப்பாக வருவதாக அவள் சொன்னாள். அவள் தலைமையில் யோகாலயத்தில் உண்மையான ஆன்மீக செயல்பாடுகளும், தர்ம காரியங்களும் அதிகரித்திருப்பதாக ஷ்ரவன் கேள்விப்படுகிறான். முன்பெல்லாம் பெயரளவில் இருந்த நல்ல திட்டங்களை எல்லாம் உண்மையான அக்கறை உணர்வுடன் நிறைவேற்றி வருவதுடன், அவற்றின் வளர்ச்சியை அவள் நேரடியாகவே கண்காணித்து வருவதாக அனைவரும் சொன்னார்கள். அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பழைய சூழ்நிலையில் அத்தனை காலம் அவள் தாக்குப் பிடித்து நின்றதே பெரிய சாதனை தான். அதனால் தான் அவளிடம் யோகாலயத்தின் நிர்வாகப் பொறுப்பை பிரம்மானந்தா ஒப்படைத்தாரோ என்று  அவன் சில சமயங்களில் நினைப்பதுண்டு.

 

அவன் முக்தானந்தாவையும் சந்திக்க வேண்டும் என்று விரும்பியதால் கல்பனானந்தா ஆளனுப்பி அவரை அங்கே வரவழைத்தாள். அவர் ஷ்ரவனைப் பார்த்ததும் பேரானந்தப்பட்டார். கண்கள் ஈரமாக அவனையும் ஸ்ரேயாவையும் ஆசிர்வதித்தார். கல்பனானந்தா இப்போது கண்ணனின் தனியறையை அவருக்கு ஒதுக்கி இருந்தாள். அதனால் அவரால் இரவு நேரங்களில் யார் தூக்கமும் கெடுவதில்லை என்று சொல்லிப் புன்னகைத்தார்.

 

அவர்களை வழியனுப்ப இரண்டாவது கேட் வரை வந்த அவர், யோகாலயம் அவர் ஒரு காலத்தில் கனவு கண்டபடி மாறி வருவதாக ஷ்ரவனிடம் நிறைந்த மனதுடன் சொன்னார். “பாண்டியன் இறந்தவுடன் அடுத்ததாய் கண்ணன் தான் அந்த இடத்துக்கு வருவான் என்று பயந்தேன். ஆனால் எத்தனையோ முட்டாள்தனமான வேலைகளைச் செய்த பிரம்மானந்தா வாழ்க்கையில் செய்த ஒரு பெரிய நல்ல காரியம் கல்பனானந்தாவிடம் யோகாலயத்தை ஒப்படைத்தது தான். அதனாலேயே எனக்கு அவர் மேல் இருந்த பழைய கோபம் எல்லாம் போய் விட்டது ஷ்ரவன்.”

 

அவர் ஸ்ரேயாவிடம் சொன்னார். “ஷ்ரவனைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிற நீ மிகவும் அதிர்ஷ்டசாலிம்மா. நல்ல பையன்.” அவர் சொல்வது உண்மை என்று ஆமோதித்து அவள் புன்னகைத்தாள்.

 

ஷ்ரவன் ஆத்மார்த்தமாகச் சொன்னான். “இல்லை சுவாமிஜி. உண்மையில் நான் தான் அதிர்ஷ்டசாலி.”  காதலைக் கூட அதற்குரிய மென்மையுடன் சொல்லாமல், நீ என்னைக் காதலிக்கிறாயா என்று கூடக் கேட்காமல், அவனைக் காதலிப்பதில் இருக்கும் ஆபத்துகளையும் சொல்லி, ’திரும்பி நான் வரா விட்டால் எல்லாவற்றையும் மறந்து நீ வேறொருவனைத் திருமணம் செய்து கொண்டு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்என்பது வரை சேர்த்துச் சொல்லி அவன் காதலைத் தெரிவித்த போதும் அவள் மறுக்காமல் சம்மதித்தது அவனுக்கு இப்போது யோசித்தாலும் பிரமிப்பாகத் தான் இருக்கிறது. மேலும், ஸ்ரேயா அவனோடு மட்டுமல்லாமல், அவனுடைய பெற்றோருடனும் நெருக்கமாக இருப்பதும், அன்பு காட்டுவதும் அவன் அதிர்ஷ்டம் என்றே தோன்றியது.

 

ஸ்ரேயாவை அவன் வாழ்க்கையில் வரவழைத்ததும் அவனுடைய மந்திர ஜபமாக இருக்கலாம் என்று ஷ்ரவன் எண்ணினான். அதைச் செய்ய ஆரம்பித்த பின் தான் அவன் வாழ்க்கையில் அவள் வந்தாள்.  அதனால் இப்போதும் அவன் பரசுராமன் சொல்லிக் கொடுத்த உபதேச மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருக்கிறான். யோகாலயத்தில் இருக்கும் வரை தெரிந்த ஓநாய் இப்போது தெரிவதில்லை. அதற்குப் பதிலாக ஜபிக்கையில் தெய்வீக அலைகளை அவன் உணர்கிறான். கைப்பிடிக்கப் போகும் இந்த நல்ல பெண்ணை இறுதிவரையில் நான் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்று அவன் அந்த சமயத்தில் வேண்டிக் கொள்ள மறப்பதில்லை.  

 

பிரம்மானந்தாவிடம் கல்பனானந்தா அன்றைய யோகாலய முக்கிய நிகழ்வுகளைப் பற்றி உற்சாகத்துடன் சொல்லிக் கொண்டிருந்தாள். அவரால் பேச முடியாவிட்டாலும் அவள் தினமும் வந்து, அவர் அருகே அமர்ந்து, அன்று என்ன வேலைகள் எல்லாம் நடந்திருக்கின்றன என்பதைச் சொல்லத் தவறுவதில்லை. அவருக்கு பாண்டியனின் நினைவு வந்தது. பாண்டியனும் இப்படித்தான் வந்து சொல்வார். ஆனால் அவர் சொல்வது பணக்கணக்காக இருக்கும். கல்பனானந்தா சொல்வது ஆன்மீகம் மற்றும் தர்மக் கணக்குகளை. இருவரும் இருவேறு துருவங்கள். ஆனாலும் இருவரும் அவர் உண்மையாக நேசித்த மனிதர்கள். இருவரும் அவரை உண்மையாக நேசித்த மனிதர்கள்.

இவர்களை விட அதிகமாய் அவரை மதிப்பவர்களும், துதிப்பவர்களும், அவர் மீது பக்தி கொண்டவர்களும் நிறையவே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அவரை அறியாதவர்கள். அவர் போட்ட வேடத்தில் மயங்கியவர்கள். அவர்கள் கற்பனையாக நம்பும் ஒன்றை அவராக பாவிப்பவர்கள். ஆனால் அவர்களுக்கு எல்லா உண்மைகளும் தெரிந்தால் அன்பும், பக்தியும், மதிப்பும் இல்லாமல் போய் விடும். ஆனால் இவர்கள் இருவரோ அவரை உள்ளது உள்ளபடி அறிந்தவர்கள். அறிந்தும் நேசித்தவர்கள்.

 

இருவரில் ஒருவனை அவர் இழந்து விட்டார். வாழ்ந்த போது அவரை உறுதியாகத் தாங்கியவன் அவன். சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டதன் மூலமாக மரணத்தில் மட்டுமே ஏமாற்றியவன் அவன். அது மரண வேதனையாக வலித்து இப்போது மரத்துப் போய் விட்டது. பாண்டியனை இழந்ததும், அசைய முடியாமல் யோசிக்க மட்டுமே முடிவதும், சைத்ரா சொன்னது போல் அவருடைய கர்மாவாக இருக்கக்கூடும். அப்படியானால் தினமும் அன்பு குறையாமல் வந்து கவனித்துக் கொள்வதோடு, யோகாலயத்துக் கணக்குகளைச் சொல்லிக் கொண்டிருக்கும் இவள் என்றோ அவர் செய்த புண்ணிய கர்மாவாக இருக்கலாம்

 

யோசிக்க மட்டுமே முடிந்து, செயல்பட முடியாமல் இருக்கும் இந்த நிலைமையில் அவருக்கு அவ்வப்போது அந்த தோட்டக்கார யோகியின் நினைவு வருவதுண்டு. அப்போதெல்லாம் மனம் பாரமாகும். இனிக்கின்ற பொய்களில் தங்கி, கசக்கின்ற நிஜங்களைப் புறக்கணித்திருக்கக் கூடாது என்று தோன்றும். கண் கெட்ட பின்பு சூர்யநமஸ்காரம்

 

கல்பனானந்தா அவள் சொல்லிக் கொண்டிருப்பதில் அவர் கவனம் இல்லை என்பதையும், வேறென்னவோ சிந்தனைகளில் அவர் சஞ்சரிக்கிறார் என்பதையும் உணர்ந்து, சொல்வதை நிறுத்தி அன்போடு அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள். கயவனான அவளுடைய தந்தை அவளைக் கைவிட்ட போது அடைக்கலம் தந்த நல்ல மனிதராகவே இன்றும் அவள் அவரைப் பார்க்கிறாள். அன்றிலிருந்து எத்தனையோ தலைகீழ் மாற்றங்களை அவரிடம் அவள் கண்ட போதும், அவர் அவள் மீது காட்டிய அன்பில் மாற்றம் இருந்ததில்லை.

 

பாண்டியன் மரணத்திற்குப் பின் யோகாலயத்தின் பொறுப்பை அவளிடம் ஒப்படைப்பார் என்று அவள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒப்படைத்து இரண்டு நாட்களுக்குப் பின் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அந்த இரண்டு நாட்களில் கூட அவளை அழைத்து எந்த விளக்கமும் அவர் தரவில்லை. முடிவெடுத்த கணத்தில் அவருக்கு என்ன தோன்றியது என்று அவளுக்கு இதுவரை தெரியாது. ஆனால் சாதித்துக் காட்டுவேன் என்று உறுதியுடன், கற்பனை நம்பிக்கையுடன், காத்துக் கொண்டிருந்தவளுக்கு அவர் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவளுடைய எல்லாக் கனவுகளையும் நனவாக்க வல்லமை படைத்த யோகாலயத்தை அவள் கையில் ஒப்படைத்து இருக்கிறார். ஒரு காலத்தில் அவருடைய கனவாகவும் அது இருந்திருக்கிறது. பின் தான் அதைத் தொலைத்து விட்டார். பாண்டியனுக்குப் பின் யாரென்று முடிவு எடுக்கும் வேளையில் அது மறுபடியும் நினைவுக்கு வந்து தான் அவர் அவளிடம் யோகாலயத்தை ஒப்படைத்தாரோ என்று அவளுக்குச் சில சமயங்களில் தோன்றும். அதனால் தான் தினமும் அவள் அவரிடம் வந்து என்னவெல்லாம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்கிறாள். சில சமயங்களில் அவர் புன்னகைப்பார். சில சமயங்களில் ஈரக் கண்களுடன் அவளைப் பார்ப்பார். அதன் உண்மையான அர்த்தம் அவளுக்குப் புரியாது. ஆனால் அவள் சேவை தொடர்கிறது

 

சேதுமாதவன் ஷ்ரவனின் திருமண அழைப்பிதழைப் பார்த்துக் கொண்டிருந்தார். நேற்று தான் ஷ்ரவன் அதைத் தந்துவிட்டு கண்டிப்பாய் வந்து ஆசிர்வதிக்க வேண்டும் என்று சொல்லி விட்டுப் போனான். கண்டிப்பாய் போக வேண்டும். நல்ல மனமும், கூர்மையான அறிவும் உள்ள இளைஞன் அவன். சைத்ரா கொலை பற்றிய உண்மைகளை அவன் வந்திரா விட்டால் சாவதற்கு முன் அவர் அறிந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. அவன் வந்ததால், தவறு செய்தவர்கள் வேகமாக தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவன் அதில் தன் பங்கை விட பரசுராமனின் பங்கு அதிகம் என்று அடக்கமாகச் சொல்லியிருந்தான். பரசுராமனையும் அவர் நன்றியுடன் நினைத்துப் பார்த்தார்.

 

எல்லாவற்றிற்கும் முதல் காரணமான அருணாச்சலம் அவருக்குப் பேருதவி செய்திருக்கிறார். ”உன் உதவிக்கு நான் எப்படி வார்த்தைகளால் நன்றி சொல்வேன் அருணா? பதிலுக்கு என்னால் என்ன செய்ய முடியும்என்று சேதுமாதவன் உணர்ச்சிவசப்பட்டு சொன்ன போது, “வாரம் ஒரு முறையாவது வந்து பேசி விட்டுப் போஎன்று அருணாச்சலம் சொன்னார். இப்போதெல்லாம் சேதுமாதவன் தவறாமல் வாரம் ஒரு முறை போய்ப் பேசி விட்டுத் தான் வருகிறார்.

 

அமீர்பாயும், மைக்கேலும், குற்றவாளிகள் கடவுளால் தண்டிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைந்தார்கள். கடைசியிலாவது நண்பரின் நல்ல மனதிற்குக் கடவுள் உதவியிருக்கிறார் என்று அவர்களுக்கு மகிழ்ச்சி. சேதுமாதவனுக்கு மகனுடைய கடைசி ஆசையை நிறைவேற்றிய திருப்தியே ஒழிய இந்த தண்டனையில் பெரிதாக மகிழ்ச்சியில்லை. அவருடைய வருத்தமெல்லாம் ஏன் இது மாதிரியான தவறுகள் நடக்கின்றன என்பதில் தான் இருந்தது. யோசிக்கும் போது எல்லாத் தவறுகளும், அறியாமையாலும், பேராசையாலும் தான் நடக்கின்றன என்று தோன்றியது. அதைச் செய்தால் மகிழ்ச்சி, இது கிடைத்தால் மகிழ்ச்சி என்று தப்புக்கணக்கு போடுவதால் ஆரம்பிக்கின்ற தவறுகள்….

 

தன்னைக் கொன்றவர்களைப் பற்றிக் கூடச் சொல்லாமல், கீதையில் அவர் படித்த யோகியை நேரிலும் அவர் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டது போல் சைத்ராவின் ஆவி ரகுராமனைப் பார்க்கச் சொன்னது நினைவுக்கு வர அவர் மனம் லேசானது….  ஷ்ரவன் சொன்ன பிறகு அவர் அமீர்பாய், மைக்கேல் இருவரையும் அழைத்துக் கொண்டு ரகுராமனைப் பார்க்கச் சென்றார். அவர்கள் மூவருமே அந்த யோகியின் முன்னிலையில் அமைதியையும் அன்பையும் உணர்ந்தார்கள். ரகுராமன் அவர்களிடம் அதிகம் பேசவில்லை. ஆனால் அவருடன் பேச்சே தேவையிருக்கவில்லை. சாந்தமும், மலர்ச்சியும் குறையாத அவருடன் இருப்பதே அவர்களுக்குப் பேரானந்த அனுபவமாக இருந்தது.  எல்லாவற்றையும் இறைவன் தந்ததாய் ஏற்றுக் கொண்டு, செய்ய வேண்டியிருக்கும் ஒவ்வொன்றையும் இறைவன் செய்ய வைப்பதாய் பாவித்து வாழ்கின்ற வாழ்க்கையின் நிறைவை அவர்களால் நேரில் பார்க்க முடிந்தது.

 

இரண்டு வாரங்கள் கழித்து அவரை மீண்டும் ஒரு முறை பார்க்கத் தோன்றுகிறது என்று அமீர் பாய் சொன்னார். அதனால் மீண்டும் அவரைச் சந்திக்க அவர்கள் போன போது ரகுராமன் அங்கிருக்கவில்லை. மூன்று நாட்களுக்கு முன் அவர் போய் விட்டதாகச் சொன்னார்கள்.  அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

 

இப்போது சேதுமாதவனின் மனம் அந்த யோகியை நினைக்க ஆரம்பித்தது. இப்போது அந்த யோகி எங்கிருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் இறைவன் இருத்தியிருக்கும் இடமாக நினைத்து அவர் அங்கும் நிறைவாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அந்த யோகியைப் பார்த்ததிலிருந்து ஒரே ஒரு ஆசை தான் சேதுமாதவன் மனதில் இருந்து வருகிறது. அதன் பின் அதை அடிக்கடி அவர் நினைவுபடுத்திக் கொள்வது போல் இப்போதும் நினைவுபடுத்திக் கொள்கிறார். ’மீதமிருக்கும் வாழ்க்கையையாவது அப்படி வாழ வேண்டும்!’

 

முற்றும்.

என்.கணேசன்


(அடுத்த திங்கட்கிழமையிலிருந்து ரட்சகன் நாவல் வாரா வாரம் வெளியாகும். அமானுஷ்யனின் வரவுக்காகக் காத்திருங்கள்)




Friday, July 10, 2026

சதுரங்கம் 26

 


விமல் தன் கதை, வசனம் மற்றும் நடிப்புத் திறமையை ராஜா சிங்கிடம் காட்டத் தீர்மானித்து, சொன்னான். “ஜீ. நான் ராஜேஷோட ஃப்ரண்ட்

 

ராஜா சிங் அவனுடைய சிறப்பு வாடிக்கையாளர்களை மிக நன்றாக அறிவான். சட்டத்திற்கு புறம்பாக போலி சிம் வாங்க வருபவர்கள் நேரடியாகஎனக்கு போலி சிம் கார்டுவேண்டும் என்று ஒருபோதும் சொல்லி விடுவதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொல்லி விட்டுத் தான் சிம் வாங்குகிறார்கள். ராஜா சிங் தவறாக நினைத்துக் கொண்டு, இல்லை என்று கறாராக மறுத்து விட்டால் என்ன செய்வது என்று முன்னெச்சரிக்கையாக ஒரு கதையை அவனுக்குச் சொல்கிறார்கள். எவன் சொல்வதும் உண்மையல்ல என்பது அவனுக்குத் தெரியும். நாணயஸ்தனுக்கு போலி சிம் தேவையில்லை. அதனால்யார் ராஜேஷ்?” என்ற கேள்வியைக் கேட்டு அவன் விமலை தர்மசங்கடத்தில் ஆழ்த்தவில்லை. மேலே சொல் என்பது போல் அவன் விமலைப் பார்த்தான்.

 

விமல் சொன்னான். “ஆறு மாசத்துக்கு முன்னாடி என் ஃப்ரண்டு ராஜேஷ்க்கு நீங்க ஒரு புதிய சிம் கொடுத்து  உதவுனீங்க. எனக்கும் இப்போது ஒரு சிம் தேவைப்படுது. கந்து வட்டிக்கு கடன் வாங்கி அதைத் திருப்பிக் கட்ட முடியலை. அதனால நான் அவங்க கிட்ட இருந்து தப்பிச்சு வந்திருக்கேன். பழைய போன் நம்பரையே நான் உபயோகப்படுத்திகிட்டு இருந்தால் அவங்க என்னைக் கண்டுபிடிச்சுடுவாங்க. அதான் பிரச்சனை. ராஜேஷ் தான் உங்களை பத்தி என் கிட்ட சொன்னான். எனக்கு சிம் மட்டுமில்லாம புது மொபைலும் வேணும்...”

 

ராஜா சிங்குக்கு அவன் பேசிய ஹிந்தி, தமிழ்நாட்டுக்காரர்கள் பேசும் ஹிந்தி போல் தெரிந்தது. அவன் சொன்னது போல் கடன் வாங்கியவர்களிடமிருந்து அவன் தப்பித்து வருபவனாக இருக்கலாம்.  இல்லா விட்டால் சிட்டுக் கம்பெனி நடத்தி அனைவருக்கும் பட்டை நாமம் சாத்தி விட்டு தப்பி  ஓடி வந்தவனாகவும் இருக்கலாம்.  இல்லா விட்டால்  வேலை செய்யும் இடத்தில் பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவானவனாகவும் இருக்கலாம். அவனைப் பார்த்தால், அவன் நடிப்பை மீறி திருட்டுத்தனம் தெரிகிறது. இது போன்ற ஆள்களுக்கு சிம் ஏற்பாடு பண்ணித் தருவதில் அவனுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் ராஜா சிங் பயப்படுவது தீவிரவாதிகளுக்கு சிம் ஏற்பாடு பண்ணித் தருவதைத் தான். இப்போதெல்லாம் போலீஸ்காரர்கள் தீவிரவாதிகளுக்கு போலி பெயர் விலாசத்தில் சிம் தருவதை லேசாக விடுவதில்லை. எப்படியானாலும் கண்டுபிடித்து, வந்து விடுகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிப்பது பெரும்பாடாகி விடுகிறது. அதனால் தீவிரவாதி என்றால் ராஜா சிங் இப்போதெல்லாம் பின்வாங்கி விடுகிறான். ஆனால் ஏதோ ஒரு ராஜேஷின் பெயரைச் சொல்லி கொண்டு வரும் இந்த ஆள் திருடனாக இருக்கலாமே ஒழிய, கண்டிப்பாக தீவிரவாதி இல்லை. தீவிரவாதிகளின் சாமுத்திரிகா லட்சணங்களும், அவர்களுடைய நடிப்புகளும் வேறு வகை. அதனால் வெறும் மோசடிக்காரனான இவனுக்கு விற்பனை செய்வது பிரச்சினையாக மாற வழியில்லை...

 

ராஜா சிங் தாழ்ந்த குரலில் சொன்னான். “இப்போதெல்லாம் போலீஸ் கெடுபிடி அதிகம். அதனால் சரியான ரிக்கார்டுகள் இல்லாமல் சிம் விற்பனை செய்வதில்லை. மன்னியுங்கள்.”

 

விமல் சொன்னான். “நான் உங்களை நம்பித் தான் வந்திருக்கிறேன். அதனால் தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்.”

 

ராஜா சிங் யோசிப்பது போல் நடித்தான். விமல் அவனைப் பரிதாபமாகப் பார்த்தான். முடிவில் ராஜா சிங் சொன்னான். “சிம்முக்கு மட்டும் ஆறாயிரம் ரூபாய் ஆகும்.”

 

விமல் தயங்குவது போல் சிறிது நடித்தான். கோடிக்கணக்கில் வரவு வரவிருக்கையில் ஆயிரங்களில் செலவு செய்வது அவனுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனாலும் உடனடியாகச் சம்மதித்தால் அந்த ஆளுக்குச் சந்தேகம் ஏற்படவும் கூடும்... பிறகு தயக்கத்துடன் தலையசைத்தான்.

 

ராஜா சிங் சொன்னான். “மூவாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து விட்டுப் போங்கள். நாளைக்கு இதே நேரம் வந்தால் நான் உங்களுக்கு ஏற்பாடு செய்து தருகிறேன்.”

 

ரொம்ப நன்றிஎன்று சொன்ன விமல் மூவாயிரம் ரூபாய் தந்து விட்டுக் கிளம்பினான். அவன் கிளம்பிச் சென்றவுடனேயே ராஜா சிங் தன் அலைபேசி எடுத்து ஒருவனுக்கு போன் செய்தான். “இப்போ நம்ம கடையில இருந்து பைஜாமா குர்த்தா போட்டுகிட்டு போறான் பாரு.. அவனைக் கவனி.”

 

வந்தவன் தீவிரவாதி அல்ல என்று உறுதியாக நம்பினாலும், ராஜா சிங் தன் வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையைக் கைவிடவில்லை. என்ன தான் நம்பிக்கை இருந்தாலும் சோதித்துப் பார்ப்பது நல்லதென்று நினைத்தான். சில சமயங்களில் தீவிரவாதிகள் மிகப் பெரிய நடிகர்களாகவும் இருப்பதுண்டு. அல்லது போலீஸ்காரர்களே இப்படி ஆளை அனுப்பி விட்டு அவனுக்கு வலைவிரிப்பதுமுண்டு....

 

அவன் கடைக்கு நாலாவது கடையிலிருந்து வெளிப்பட்ட ஒரு இளைஞன் விமலைப் பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தான். நர்மதா கொலை செய்யப்பட்ட பின் விமல் தற்காப்பு எச்சரிக்கை காரணமாக யாராவது தன்னைப் பின் தொடர்கிறார்களா என்று கவனி.க்க ஆரம்பித்திருந்தான் என்பதால் உடனடியாக அந்த இளைஞன் பின் தொடர்வதைக் கவனித்தான். ராஜா சிங்கின் கடைக்குச் சென்று சேரும் வரை அவனை யாரும் பின் தொடரவில்லை. அது விமலுக்கு உறுதியாகத் தெரியும். இப்போது தான் அந்த இளைஞன் பின் தொடர ஆரம்பிப்பதால் இது ராஜா சிங்கின் ஆளாகத் தான் இருக்க வேண்டும் என்று அவன் யூகித்தான். பின் தொடர்பவன் போலீஸாகவோ எதிரியின் ஆளாகவோ இருந்தால் தான் பிரச்சினை….

 

விமல் கரோல் பாகிலேயே ஒரு நடுத்தர ஓட்டலில் முன்பே ஆன்லைனில் ஏற்பாடு செய்திருந்தான். அந்த ஓட்டலை அடைந்த அவன் பிறகு வேறெங்கும் செல்லவில்லை. தவறியும் அவனுக்குத் தெரிந்த யார் கண்ணிலாவது அவன் பட்டுவிட்டால் அது பெரிய பிரச்சினையாகி விடும்.

 

விமலைப் பின் தொடர்ந்தவன் ராஜா சிங்கிடம் போய்ச் சொன்னான். “அந்த ஆள் சோனா ஓட்டலில் தங்கியிருக்கிறான். முதலிலேயே ரூம் புக் செய்திருக்கான் போல இருக்கு. இங்கேயிருந்து நேரா ஓட்டலுக்குத் தான் போனான். வேற யாரும் அவனைப் பின் தொடரலை.   அவனும் யாரையும் சந்திக்கலை.”

 

அவன் போகிற வழியில் யார் கிட்டயாவது போன்ல பேசினானா?”

 

இல்லை.”

 

ராஜா சிங் திருப்தியடைந்தான். ஆள் பிரச்சினை இல்லாதவன் தான். அந்த ஆள் அவனுடைய சந்தேகத்தைக் கிளப்பியிருந்தால், நாளை அவன் வரும் போது சிம்முக்குப் பதிலாக அவன் தந்த முன்பணத்தை ராஜா சிங் திருப்பித் தந்திருப்பான். முயற்சி செய்ததாகவும், முடியவில்லை என்றும் சொல்லி இருப்பான்

 

நித்யா அர்ஜுனின் அறைக்குள் சத்தமில்லாமல் நுழைந்து அவனிடம்சத்தம் போடாதேஎன்று சைகை செய்தாள்.

 

அவன் புன்னகையுடன் மெல்லக் கேட்டான். “என்ன வாலு?”

 

நித்யா ஒரு பழைய எண்பது பக்க நோட்டுப் புத்தகத்தை எடுத்து அவனிடம் நீட்டி, பின் மெல்லிய குரலில் சொன்னாள்.  பரணை சுத்தம் செய்யப் போனப்போ, அம்மாவோட பழைய ட்ரங்குப் பெட்டியைத் திறந்து பாத்தேன். உள்ளே இது கிடைச்சுது…”

 

அர்ஜுன் ஆர்வத்துடன் அந்த நோட்டுப் புத்தகத்தைப் பிரித்தான். முதல் பக்கத்தில்பானுமதிஎன்று அழகான கொட்டை எழுத்துகளில் எழுதப்பட்டு இருந்தது. அதற்கடுத்த பக்கத்திலிருந்து அதே கையெழுத்தில் நிறைய திரைப் பாடல்கள் எழுதப்பட்டு இருந்தன.

 

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்…”

 

அடுத்த பக்கத்தில் இன்னொரு பாடல்...

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசி கொள்ளும்
அந்தி பொழுதில் வந்து விடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரை திருப்பி தந்து விடு

 

அடுத்த பக்கத்தில்  -

சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆ ஹா
சொல்லத்தான் நினைக்கிறேன்

காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
மண வீடு அவன் தனி வீடு
அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ
அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே ஆ ஹா…”

 

அடுத்தடுத்த பக்கங்களிலும் அந்த அழகான குண்டு கையெழுத்தில் திரைப் பாடல்களே இருந்தன. எல்லாமே காதல் பாடல்கள்


(தொடரும்)

என்.கணேசன்

Monday, July 6, 2026

யோகி 163

 


பிரம்மானந்தாவுக்கு அதலபாதாளத்தில் விழுந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு தான் இரண்டு நாட்களாக இருந்து வருகிறது. இன்னும் பாதாள அடித்தளத்தை எட்டி விடவில்லை. எட்டினால் சுக்கு நூறாக உடைந்து விடலாம். வீழ்ச்சியின் விளைவு இன்னது தான் என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கும் விதி கருணை காட்டவில்லை. பாண்டியனின் மரணத்தை ஜீரணிப்பது அவருக்கு எளிதாக இல்லை. எத்தனை பிரச்சினைகள் வந்தாலும், பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்காமல் உடனடியாக ஒரு தீர்வைக் குறுக்கு வழியில் வேகமாக எட்டுபவர் பாண்டியன். மலை போல் தோன்றிய எத்தனையோ பிரச்சினைகளை எல்லாம் அவர் பாண்டியனிடம் சொல்லிக் கவலைப்பட்டதுண்டு. சிலவற்றுக்கு உடனடியாகத் தீர்வு சொல்லும் பாண்டியன் சிலவற்றுக்குத் தீர்வைக் கண்டுபிடிக்க ஒரு நாள் எடுத்துக் கொள்வதுண்டு. ஆனாலும் பிரம்மானந்தாவுக்கு, திரும்பவும் அந்தப் பிரச்சினையை பாண்டியனிடம் சொல்ல வேண்டி வந்ததில்லை. காரணம், தீர்வு அவருக்குக் கிடைத்திருக்கும். அப்படிப்பட்ட பாண்டியன் தனக்குக் கடைசியாக வந்தப் பிரச்சினைக்குக் குறுக்குவழித் தீர்வாக தற்கொலையை நினைத்தது பிரம்மானந்தாவுக்கு ஜீரணிக்க முடியவில்லை. விஸ்வகீர்த்தியின் தாயத்து வேலை செய்யா விட்டால் இன்னொரு ஆளைக் கண்டுபிடிப்பதா கஷ்டம்? அப்படியும் சரியான ஆளைக் கண்டுபிடிக்க முடியா விட்டால் தேவானந்தகிரியையே சில நாட்களில் வரவழைத்து விட முடியுமே. பின் என்ன பிரச்சினை? கோழைகள் தற்கொலையைத் தீர்வாக நினைக்கலாம். ஆனால் பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தித்துப் போராட என்றுமே தயங்காத பாண்டியனுக்கு எப்படி தற்கொலையைத் தீர்வாகத் தேர்ந்தெடுக்க முடிந்தது? திரும்பத் திரும்ப அதே கேள்வி தான் அவரை சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது. அதல பாதாளத்தில் இன்னமும் போய்க் கொண்டே இருக்கிறார். பாண்டியன் இல்லாமல் எதையும் சமாளிக்க அவர் பழகவில்லை. அது பாண்டியனுக்கும் தெரியும். அது தெரிந்தும் ஏன் பாண்டியன்….

இரண்டு நாட்களாக அவரிடம் யார் யாரோ வந்து ஏதேதோ ஆறுதல் சொல்லி விட்டுப் போகிறார்கள். காதில் எதுவும் விழுந்த வார்த்தைகள் அவருடைய அறிவில் பதியவில்லை. எல்லாம் வெறும் சத்தங்களாகத் தான் இருக்கின்றன.

அவரிடம் வக்கீல் எதையோ மூன்றாவது முறையாகச் சொல்லிக் கொண்டிருப்பதும், ஆடிட்டர் அவரையே பார்த்துக் கொண்டிருப்பதும் பிரம்மானந்தாவின் கவனத்தை பலவந்தமாக எண்ணங்களின் உளைச்சலில் இருந்து வெளியே கொண்டு வந்தது. பிரம்மானந்தா சொன்னார். “மன்னிக்கணும். நீங்க சொன்னதை கவனிக்கலை. என்ன சொன்னீங்க?”

யோகாலயத்து நிர்வாகத்தை இவ்வளவு நாள் பாண்டியன் பார்த்துட்டு இருந்தார். அதை இனி யார் கிட்டே நீங்க ஒப்படைக்கப் போகிறீங்கன்னு உடனே தீர்மானிக்கறது நல்லதுன்னு சொன்னேன். அதிகாரபூர்வமாய் அதை நீங்க பதிவு பண்ணி வெச்சுட்டா உங்க பாரம் குறையும். இல்லாட்டி உங்க கிட்டயே ஒவ்வொன்னுக்கும் வருவாங்கஎல்லாத்தையும் நீங்களே பார்க்க வேண்டியிருக்கும்…” என்று வக்கீல் அழுத்தமாகச் சொன்னார். ஆடிட்டர் திவாகரனும் அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தார்.

கண்ணன் இதயம் படபடக்க இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு நாட்களாக அவர் பிரம்மானந்தாவை கவனித்து வருகிறார். யோகிஜி இனி அதிக நாள் தாக்குப் பிடிக்க மாட்டார் என்று கண்ணனுக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது. பிரம்மானந்தா பித்துப் பிடித்தது போல் அமர்ந்திருப்பதும், எதிலும் கவனம் செலுத்த முடியாமல் வெறித்த பார்வை பார்ப்பதும், சுற்றிலும் என்ன நடக்கிறது என்ற புரிதல் இல்லாமலிருப்பதும் கண்ணனுக்கு அபாயத்தின் அறிகுறிகளாகத் தோன்ற ஆரம்பித்தன. பாண்டியனைத் தொடர்ந்து இந்த முதியவரும் போய்ச் சேர்ந்து விடுவார் என்று கண்ணனின் உள்ளுணர்வு சொன்னது. இந்த நிலைமையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் பாண்டியனின் இடத்தை இங்கே அவர் பிடித்துக் கொள்ள நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று அவர் எண்ண ஆரம்பித்தார். பல்லாயிரம் கோடிகள் சொத்து மதிப்புள்ள யோகாலயத்தின் நிர்வாகம் கைக்குக் கிடைக்குமானால் அதன் பின் வேறொரு அதிர்ஷ்டம் தேவையே இல்லை. மீதமிருக்கும் வாழ்க்கை ராஜ வாழ்க்கையாகவே அமைந்து விடும். 

பிரம்மானந்தா இறந்து போய் விட்டால் என்ன ஆகும் என்று தெரியாது. சட்டம் ஒரு குழு அமைத்து அதிகாரத்தை சமமாகப் பிரித்து விட வாய்ப்பிருக்கிறது. பிரம்மானந்தா உயிரோடு இருக்கும் போதே யாரையாவது நியமித்து விட்டால் பின் அந்த நபருக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. பாண்டியனுக்கு அடுத்தபடியாக திறமையான ஆள் என்றால் அது தான் தான் என்பது கண்ணனின் கர்வம் கலக்காத அபிப்பிராயமாக இருந்தது. பாண்டியனின் வலது கரமாய் இருந்து கண்ணன் செயல்பட்டு வந்ததை பிரம்மானந்தா பார்த்தவர். அதனால் இந்த நியமனத்தில் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்த எண்ணிய கண்ணன் சற்று முன் வந்த ஆடிட்டர், வக்கீல் இருவரிடமும் பிரம்மானந்தாவின் கவலைக்கிடமான நிலைமையையும், யோகாலயம் நிர்வகிக்க தலைமை இல்லாமல் இருக்கும் குழப்பமான நிலைமையையும் நாசுக்காகத் தெரியப்படுத்தினார். 

திவாகரனுக்கும் வக்கீலுக்கும் பிரம்மானந்தாவின் நிலைமையைப் பற்றி கண்ணன் சொன்னது மிகச்சரியே என்று தோன்றியது. அவர்கள் இருவரும் பேசும் போது கூட பிரம்மானந்தா வேறு ஏதோ ஒரு உலகில் இருப்பது போல் தோன்றியது. அதனால் தான் பாண்டியனுக்கு அடுத்தபடியாக யார் என்று முடிவெடுக்கும்படி அவர்கள் பிரம்மானந்தாவை வற்புறுத்தினார்கள்.

கண்ணன் பிரம்மானந்தாவுக்கு சேவை செய்யும் சாக்கில் மிகுந்த பணிவுடன் அந்த அறையிலேயே இருந்தார். அடுத்தது யார் என்று யோசிக்கையில் முதலில் நினைவுக்கு வரும்படியாக பிரம்மானந்தாவின் பார்வை விழும் இடத்திலேயே முன்னாலேயே கைகட்டியபடி அவர் நின்றிருந்தார்.  

பிரம்மானந்தாவுக்கு இந்த நிர்வாக பாரம் என்றுமே பிடிக்காத சுமையாகத் தான் இருந்தது. இனி அந்தத் தலைவலியை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் சக்தி அவருக்கு இல்லை…. அவர் பார்வை எதிரேயிருந்த கண்ணன் மேலேயும் விழுந்தது. கண்ணன் ஆவலோடு காத்திருந்தார். சிறிது நேரம் கண்களை மூடி யோசித்த பிரம்மானந்தா பின் கண்களைத் திறந்து சொன்னார். “கல்பனானந்தாவை நியமிச்சுடலாம். திறமைசாலி. யோகாலயம் ஆரம்பிச்ச காலத்துல இருந்து இருக்கிறவள்….” 

கண்ணனின் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. இந்த ஆளுக்கு நல்ல காலத்துலயே மூளை வேலை செய்யாது. லூசுத்தனமாய் உளற மட்டும் தெரியும். அதையே தன்னோட புத்திசாலித்தனம்னு நினைச்சுக்கும். இப்ப மூளை வேலை செய்யறதே நின்னு போச்சு போலருக்கு. யோவ் நாங்க எல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் உன் வண்டவாளம் எல்லாம் எப்பவோ தண்டவாளம் ஏறியிருக்கும்யா…’ என்று கண்ணன் மனதுக்குள் புலம்பினார். பாண்டியனால் முடிந்தது, கல்பனானந்தாவால் முடியாது என்பதை வக்கீலோ, ஆடிட்டரோவாவது அந்தக் கிழவரிடம் சொன்னால் தேவலை என்று அவர் மனம் பரபரத்தது. அவர்கள் இருவரும் அப்படி எதுவும் சொல்லாமல் தலையசைத்தது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல் அவருக்கு இருந்தது. அதற்கு வேண்டிய சட்டபூர்வமான வேலைகளை உடனே செய்வதாய் உறுதி அளித்து விட்டு வக்கீலும், ஆடிட்டரும் சென்றார்கள்.

பெரிய அதிகாரம் எதுவும் இல்லாத போதே கல்பனானந்தா அவர்களை எல்லாம் மதித்து நடக்காதவள். இத்தனைக்கும் பாண்டியன் மிக வலிமையான ஒரு நிலையில் இருந்தவர். அவருக்கு ஓரளவாவது மரியாதை காட்டிய அவள், அவருடைய அடியாட்களான அவர்களிடம் அலட்சியமாகத் தான் நடந்து கொள்வாள். அதுவும் வாய்விட்டு புகார் சொல்கிறபடி இருக்காது. அப்படி நாசுக்காக அலட்சியப்படுத்தும் திறமை படைத்தவள் அவள். அப்படிப்பட்டவள் அதிகாரத்தில் அமர்ந்தால் பின் கேட்கவே வேண்டாம். மேலும் பாண்டியன் அவர்களுக்குத் தாராளமாய் பணம் தருவார். பல தவறான வேலைகளைச் செய்ய வைப்பதும் ஒரு காரணம் என்றாலும், அவர்கள் கையில் பணம் தாராளமாய் புழங்கியது. கல்பனானந்தா தலைமையில் அதற்கெல்லாம் வாய்ப்பேயில்லைகண்ணன் இனி யோகாலயத்தில் இருப்பதில் அர்த்தமில்லை என்று உணர்ந்தார். 

அடுத்த இரண்டு நாட்களில் கல்பனானந்தாவிடம் யோகாலயத்தின் நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அறிவிப்பு வெளியானவுடனேயே கண்ணனும், பாண்டியனின் மற்ற அடியாட்களும் யோகாலயத்திலிருந்து வெளியேறினார்கள். அதன் பின் இரண்டு நாட்கள் பிரம்மானந்தா நடைப்பிணம் போல் இருந்தார். மூன்றாவது நாள் பக்கவாதம் வந்து படுத்த படுத்த படுக்கையானார்.  தீவிர சிகிச்சை அவருக்குத் தரப்பட்டது என்றாலும் அவரைப் பழைய நிலைமைக்கு மருத்துவர்களால் கொண்டுவர முடியவில்லை. தன்னைக் குணப்படுத்திக் கொள்ளும் யோகசக்தி அவரிடம் இருந்தும், யோகாலயத்தில் நிகழ்ந்த தவறான நிகழ்வுகள் அவரை விரக்தி வைராக்கியத்தில் தள்ளி விட்டதென்றும், அதனால் அவர் குணப்படுத்திக்கொள்ள எந்த முயற்சிகளும் எடுக்காமல் விதி விட்ட வழி என்று இருக்கிறார் என்றும் அவருடைய தீவிர பக்தர்கள் சொன்னார்கள். பலரும் அது சரியாக இருக்கலாம் என்று அபிப்பிராயப்பட்டார்கள்   

(தொடரும்)

என்.கணேசன்