என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, March 5, 2026

சதுரங்கம் 8


ர்ஜுன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது வாசல் அருகிலேயே எதிர்ப்பட்ட தங்கை நித்யா, உதடுகள் மீது விரலை வைத்துசத்தமில்லாமல் வாஎன்று சைகை செய்து தெரிவித்தாள். அவன் பார்வையாலேயே என்ன என்று கேட்டபடி உள்ளே சென்ற போது ஞானமூர்த்தி ஹாலில் நாற்காலியில் அமர்ந்து மிகவும் ஆழ்ந்து பத்திரிக்கையைப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவர் படித்துக் கொண்டிருந்தது அன்றைய விடிவெள்ளி பத்திரிக்கை தான் என்பதைக் கவனித்த போது அர்ஜுனுக்குப் புரிந்தது. அவர் அவனுடைய கட்டுரையைத் தான் அப்படி ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்.

 

அவன் தனதறைக்குப் போன போது, பின்னாலேயே வந்த நித்யா தாழ்ந்த குரலில் அவனிடம் சொன்னாள். “நான் காலைலயே படிச்சுட்டேன். ரொம்ப நல்லா இருந்துச்சு.”

 

அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்றாலும் பெரியதாகப் பெருமிதம் இல்லை. அவளுக்கு அவளுடைய அண்ணன் செய்யும் எல்லாமே சிறப்பு தான். ஆனால் அவர்களுடைய தந்தை அவளைப் போல் அல்ல. அவர் சொன்னால் அது ஒரு நீதிபதியின் தீர்ப்பாகவே இருக்கும். விருப்பு வெறுப்பு இல்லாமல் உள்ளதை உள்ளபடி சொல்லும் நீதி தேவதையின் தீர்ப்பைப் போல் இருக்கும்..

 

உங்கப்பா அரசியலுக்குப் போனது நீதித்துறைக்கு மிகப்பெரிய நஷ்டம். நீதிபதியாய் போயிருந்தால் அவர் கண்டிப்பாக சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கலாம்.” என்று அவனிடம் பெரிய சட்ட வல்லுனர்கள் இருவர் சொல்லி இருக்கிறார்கள். ஞானமூர்த்தி நீதிபதியாகப் போயிருக்கா விட்டாலும் பல கருத்துக்களை ஒரு நீதிபதி போலவே சொல்லும் வழக்கம், இயல்பாகவே அவருக்கு இருக்கிறது.

 

எப்போடி படிக்க ஆரம்பிச்சார்?”

 

கால் மணி நேரம் ஆயிருக்கும். தீர்ப்பு வர குறைஞ்சது இனியும் முக்கால் மணி நேரமாவது ஆகும். ஏன்னா நீ எழுதியிருக்கிறது பெரிய கட்டுரை.”

 

அர்ஜுன் தங்கையும் தீர்ப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்குப் புன்னகை செய்தான்.

 

நித்யா கேட்டாள். “உன்னோட அபிமான நடிகை இறந்து போனது நிஜமாவே தற்கொலை தானா இல்லை கொலையா?”

 

வாலு. எப்பவோ அவ என் அபிமான நடிகையா இருந்தாள். அதையெல்லாம் நீ ஞாபகம் வெச்சிட்டு இப்ப சொல்றியா?”

 

நீ எனக்கிருக்கற ஒரே அண்ணன். நான் உன் சம்பந்தமான எதையும் எப்படி மறப்பேன்?”

 

அவள் சொன்னது அவன் கண்களை உடனடியாக ஈரமாக்கியது. தங்கைக்குத் தெரியாமல் இருக்க அவன் முகத்தை அந்தப் பக்கம் திருப்பி காலண்டரைப் பார்ப்பது போல் பாவனை செய்தான். ’இப்படிச் சொல்லவும், அன்பு செலுத்தவும் இவள் ஒருத்தியாவது என் வாழ்க்கையில் இருக்கிறாளே!”

 

ஆனால் அவன் திரும்பிய போது முகத்திலும் பேச்சிலும் அவன் உணர்ந்த உருக்கம் தெரியவில்லை. “ஆமா என்னைக்கோ அண்ணனோட அபிமான நடிகையாய் ஒருத்தி இருந்ததை ஞாபகம் வெச்சுச் சொல்றது உருப்படியான விஷயமா? அண்ணனைப் பத்தி வேறென்னடி தெரியும் உனக்கு?”

 

அண்ணனைப் பற்றி அண்ணனுக்கே தெரியாததும் கூடத் தெரியும்.” நித்யா அலட்டாமல் சொன்னாள்.

 

அண்ணனுக்கே தெரியாததா?” அர்ஜுன் ஆச்சரியத்துடன் கேட்டான்.

 

ஆமா

 

என்னடி அது?”

 

உன்னை ஒரு பொண்ணு காதலிக்கிறா. அது தெரியுமா உனக்கு?”

 

அர்ஜுன் திகைத்தான். “என்னடி சொல்றே? உன் சிநேகிதிகள்ல யாராவது என்னைக் காதலிக்கிறாங்களா? யாருடி அது? எத்தனை நாளா இது? இவ்வளவு நாளா ஏண்டி சொல்லலை?” என்று பரபரப்புடன் தங்கையிடம் அவன் கேட்டான்.

 

ஐயே மூஞ்சியப் பாரு. என் சிநேகிதி எவளும் உன்னைக் காதலிக்கலை.”

 

அர்ஜுன் திகைத்தான். “அப்பறம் வேற யாருடி உன் கிட்ட இதைச் சொன்னா?”

 

ஆமா என் கிட்ட தான் வந்து சொல்றாங்க. பெரிய ரிப்போர்ட்டராம். அறிவாளியாம். கட்டுரை எல்லாம் எழுதுவாராம். ஆனா அவரை ஒரு பொண்ணு காதலிக்கிறது மட்டும் அவருக்குத் தெரியாதாம். சரியான தத்தி அண்ணா நீ 

 

ஏய் என்னடி, இப்ப தான் ஒரு நிமிஷத்துக்கு முன்னால பாசமலர் தங்கச்சியாட்டம் என் கிட்ட பேசினே. இப்ப தத்திங்கற.”

 

அப்பறம் வேற என்ன உன்னைச் சொல்றது? உலகத்துல நடக்கறது எல்லாம் உனக்குத் தெரியிது. உன் வாழ்க்கைல நடக்கறதுல முக்கியமானதே உனக்குத் தெரிய மாட்டேங்குது.”

 

ஏய் சும்மா வளவளன்னு பேசாம சொல்லுடி. யாருடி அது? சீக்கிரம் சொல்லுடி. என் மண்டை வெடிச்சுடும்டி

 

நித்யா அண்ணனைக் குறும்பாகப் பார்த்தாள். அதிபுத்திசாலித்தனமும், வெகுளித்தனமும் கலந்த ஒரு கலவை அவளுடைய அண்ணன். “சொன்னா எனக்கு என்ன தருவே?”

 

என்னடி இப்படி லஞ்சம் கேட்கறே. ஞானமூர்த்தி பொண்ணுடி நீ.”

 

நித்யா சிரித்து விட்டாள். “அப்பா பேரைச் சொல்லியே கவுத்துட்டியே

 

தங்கையை மிக நெருங்கி தாழ்ந்த குரலில் கேட்டான். “யாருடி அது?”

 

ம்கீதாக்கா…. சாரி கீதா அண்ணி

 

அர்ஜுனுக்கு சப்பென்று ஆகி விட்டது. “லூஸாடி நீ. என்னோட நல்ல சிநேகிதியைப் போய் இப்படியெல்லாம் சொல்றியே. அவளுக்குத் தெரிஞ்சா அவ உன்னைப் பத்தி என்ன நினைப்பாள்?”

 

ம்அண்ணனுக்கு இல்லாத அறிவு தங்கச்சிக்காவது இருக்கேன்னு நினைப்பாள்.”

 

அர்ஜுனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ‘இந்த வாலு என்ன சொல்லுது. தெரிஞ்சு தான் பேசுதா. இல்லை, வயசுக் கோளாறுல கண்டதையும் கற்பனை பண்ணிப் பேசுதா

 

நித்யா போய் விட்டாள். அர்ஜுனுக்கு நித்யா ஏன் அப்படிச் சொன்னாள், எதை வைத்துச் சொன்னாள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் தலை வெடித்து விடும் போல இருந்தது. தங்கை பின்னாலேயே வெளியே வந்தவன் அவர்கள் பேச்சு கேட்டிருக்கக்கூடிய தொலைவிலேயே நின்று கொண்டு அம்மா துணிமணிகளை மடித்து வைப்பதைப் பார்த்து திடுக்கிட்டான். அம்மா எல்லாத்தையும் கேட்டிருப்பாளோ? அவனுக்கு வெட்கமாக இருந்தது.

 

ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் தங்கை நித்யாவின் அறையை அடைந்தான். நித்யா ஒரு பெரிய புத்தகத்தை எடுத்து படிப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தாள். அர்ஜுன் அவள் காதைத் திருகியபடி சொன்னான். “ஏய் வாலு. உனக்கென்ன நாளைக்கு பரிட்சையாடி? முழுசும் சொல்லாமல் அரைகுறையாய் பேசிட்டு வந்து புத்தகம் படிக்கற மாதிரி நடிக்கறாய்

 

புத்தகத்தை மூடி வைத்த நித்யா பெருமூச்சு விட்டாள். “ஒரு கோடி காட்டினா புரிஞ்சுக்க முடியாத ஆளெல்லாம் வாசுதேவன் குடும்பத்தோட ஒரே ஆண்  வாரிசுன்னு நினைக்கறப்ப ரொம்ப வேதனையாய் இருக்கு.”

 

என்னடி கோடி காண்பிக்கறது. ஒரு நல்ல சிநேகிதியை காதலின்னு சொல்றே. எதனால சொல்றே, எப்படிச் சொல்றேன்னு கேட்டா ஓடி வந்து இங்கே உட்கார்ந்து புத்தகம் படிக்கறே

 

திருவாளர் அர்ஜுன் அவர்களே. ஒரு பெண் காதலிக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே அவளுடன் வருடக்கணக்கில் பழகுவது தவறு. அதைத் தெரிந்து கொண்டு தங்கை சொல்லும் போது, உங்கள் மனதைக் கேள்வி கேட்டு அங்கே பதில் பெற்றுக் கொள்ளும் அடிப்படை அறிவு கூட இல்லாமல், தங்கையிடமே திரும்பத் திரும்ப அசட்டுத் தனமாகக் கேள்வி கேட்பது பெருந்தவறு. இப்படி தவறுக்கு மேல் தவறு செய்யும் உங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.”

 

அர்ஜுன் அவளை முறைத்தான். “ஏய் லூசு. நீ சொல்ற மாதிரி இருந்தா அவ கண்டிப்பா என் கிட்ட சொல்லியிருப்பா. முட்டாள்தனமான கற்பனைல யாரையும் தப்பா சொல்லக்கூடாதுடி

 

நித்யா சொன்னாள். “அண்ணா. பொண்ணுங்க பல விஷயங்களை லொட லொடன்னு மணிக்கணக்குல பேசுவாங்க. ஆனா ஒருசில குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் அவங்க சொல்லாமலேயே அவங்கள நேசிக்கறவங்க புரிஞ்சுக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. காதல் அதுல ஒன்னு. வார்த்தைகள்ல சொல்றதுக்கு முன்னாடி மனசார உணர்ற விஷயம் அது. நீ உணரலைன்னு தெரிஞ்சதுக்கப்பறம் வார்த்தையால அவங்க எப்படி உன் கிட்ட சொல்வாங்க? நீயும் சில சமயத்துல நம்ம அம்மா மாதிரியே நடந்துக்கறே. நீ உன்னோட தனி கூட்டுக்குள்ளே இருக்கே. அது தப்புண்ணா.”


(தொடரும்)

என்.கணேசன்




Monday, March 2, 2026

யோகி 145


 பிரம்மானந்தா மிகவும் கஷ்டப்பட்டுக் கைதட்டினார். “நல்ல சிந்தனை ரகுராமன். சரியான சிந்தனையும் கூட.”

 

அந்தப் பாராட்டிலும் ரகுராமன் புளங்காகிதம் அடைந்தது போல் தெரியவில்லை. பிரம்மானந்தாவுக்குத் தான் நினைத்தபடி அவரை சந்தோஷப்படுத்தவோ, வருத்தப்பட வைக்கவோ முடியாதது என்னவோ போலிருந்தது.   ஏற்கெனவே தன்னிறைவு பெற்ற ஆனந்த மனிதராய் அவர் இருப்பது ஆச்சரியமாகவும் இருந்தது. நிஜமாகவே அந்த ரகசியத்தை பிரம்மானந்தா அறிந்து கொள்ள விரும்பினார். ஏற்கெனவே கேட்க நினைத்து, கேட்டும் விட்டது தான் அது. ஆனால் தேவை இல்லாமல் கயிற்றுக் கட்டில், சொகுசு சோபா பற்றிப் பேசி விட்டோம் என்று தோன்ற அவர் கேட்டார். “நீங்கள் எப்போதும் ஆனந்தமாக இருக்க என்ன காரணம் ரகுராமன்?”

 

ஆசைகள் இல்லாமல் இருப்பது தான் காரணம்.”

 

எதற்காவது ஆசைப்பட்டு அதை நிறைவேற்றிக் கொள்வதில் அல்லவா ஆனந்தம் இருக்கிறது. ஆசைகள் இல்லாமல் இருப்பது எப்படி ஆனந்தமாகும்?”

 

ஒன்றுக்கு நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். அது நிறைவேறுகிறது அல்லது அதை அடைகிறீர்கள். நீங்கள் ஆனந்தமாக இருக்கிறீர்கள். ஆனால் அந்த ஆனந்தம் இருப்பது அடுத்த ஆசை வரும் வரையில் மட்டுமே அல்லவா?”

 

தோட்டக்காரன் ஞானி போல் பேச ஆரம்பித்தது பிரம்மானந்தாவுக்குப் பிடிக்கவில்லை. ஆசைகளுக்கு முடிவில்லை, ஆசைகள் தான் துன்பத்திற்குக் காரணம் என்ற வெற்று வேதாந்தப் பேச்சை மனிதனின் கையாலாகாத்தனம் என்று அவர் நினைத்தார். “ஆசைப்பட்டதைச் சாதித்தும், அடைந்தும் ஆனந்தம் அடைவது சரி தானே? அடுத்த ஆசை வரும் வரையில் தான் அது நீடிக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. அடுத்த ஆசையையும் நிறைவேற்றி மறுபடி அவன் ஆனந்தம் உணர்வதில் என்ன தவறு?”

 

ரகுராமன் அமைதியாகச் சொன்னார். “நீங்கள் ஒரு ஆசையை நிறைவேற்றி விட்டு அடுத்த ஆசை வரும் வரை சந்தோஷமாக இருக்கிறீர்கள் அல்லவா? கவனமாய் ஆராய்ந்தால் அது ஆசைகள் இல்லாத நிலையால் வரும் ஆனந்தம். இரண்டு ஆசைகளுக்கு இடையே இருக்கும் நிறைவு அது. சொல்லப் போனால் ஆசைகள் தான் அந்த ஆனந்தத்தையும், நிறைவையும் இல்லாமல் ஆக்குகின்றன. ஆசைகள் இல்லாமல் இருந்தால் ஆனந்தமும், நிறைவும், தானாக நீடிக்கும்.”

 

வார்த்தை ஜாலங்களில் இது வரை, தான் தான் கெட்டிக்காரர் என்று பிரம்மானந்தா நினைத்திருந்தார். இந்த ஆள் அவரை விடக் கெட்டிக்காரர் போல தர்க்க ரீதியாகப் பேசியது அவருக்குப் பிடிக்கவில்லை. நினைத்தது போல் தோட்டக்காரன் மந்தபுத்திக்காரன் அல்ல.

 

ஆசையில்லாமல் வெறுமையாக இருந்தால் அதில் எப்படி நிறைவு இருக்கும்? உலகத்தில் முன்னேற்றம் எப்படி இருக்கும்? நல்லது எப்படி நடக்கும்?” பிரம்மானந்தா கேட்டார்.

 

ரகுராமன் ஒரு குழந்தைக்குச் சொல்வது போல் பொறுமையாகவும், கனிவாகவும் சொன்னார். “எல்லாம் இறைவன் சித்தப்படி நடக்கிறது. எதை நம் மூலம் செய்ய வேண்டுமோ, அதை அவனே செய்ய வைத்துக் கொள்கிறான். ஆசையில்லாத நிலை வெறுமை அல்ல. திறமையைத் தரும் இறைவன் ஒருவனை வெறுமையாக இருக்க விடமாட்டான். இறைவனின் படைப்பில் வெறுமைகள் இல்லை. ஒருவனால் என்ன ஆக வேண்டும் என்று இறைவன் நினைக்கிறானோ அதற்கு வேண்டியதை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுப்பான். அதை இறைவனுடைய வேலை என்ற ஞானத்துடன் செய்பவனுக்குத் தனிப்பட்ட லாப நஷ்டங்கள் இல்லை. விளைவு எதுவானாலும் அது இறைவனைச் சேர்ந்தது. அதனால் அவன் அமைதி இழக்காமல் எதுவும் செய்ய முடியும். அந்த வேலையில் மனிதனுடையநான், என்னுடையஎன்ற சேர்க்கை சேரும் போது தான் பிரச்சினை உருவாகிறது. விளைவுகள் தனிப்பட்ட லாப நஷ்டங்கள் என்றாகி விடுகிறது. அதன் மூலம் சந்தோஷம், துக்கம் என்ற இரண்டு அலைகளும் அவன் வாழ்க்கையில் மாறி மாறி அடித்து அவனை அலைக்கழிக்க ஆரம்பித்து விடுகிறது. ஒரு வேலை இறைவனுடையது என்றிருக்கும் போது என்ன ஆகுமோ, எப்படி ஆகுமோ, எப்போது ஆகுமோ என்ற கவலைகள் வருவதில்லை. அதையெல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்று கவலையில்லாமல் இலகுவாகத் தன் பங்கைச் செய்து விட்டு மனிதன் அமைதியாய் இருக்க முடியும். ஆனால் அதுவே மனிதனின் தனிப்பட்ட ஆசையால் ஏற்படுத்திக் கொண்ட வேலையானால், முடியும் வரை கவலை, கோபம், பயம், விரக்தி, சந்தோஷம், துக்கம், விரக்தி, வெற்றி, தோல்வி என்று மாறி மாறி உணர்வது தவிர்க்க முடியாததாகிறது.  முடிந்த பின்பும் அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஒருவன் பாடுபட வேண்டியிருக்கிறது. மனிதன் தன்னுடையது என்ற அற்பதிருப்திக்காக படும் கஷ்டங்கள் ஏராளம். உண்மையில் எதுவும் அவனுடையது அல்ல. உலகம் ஒவ்வொரு கணமும் பல விதங்களில் அதைத் தெரிவித்துக் கொண்டு தானிருக்கிறது. ஆனால் அதை உணர்ந்து நடக்க முடியாமல் போவது தான் மாயையின் விளையாட்டு.”

 

ஒரு நிமிடம் அங்கே மயான அமைதி நிலவியது. தோட்டக்காரனிடம்தாழ்ந்த நிலையில் இருக்கிறாய், வெற்று ஆளாய் இருக்கிறாய்என்பதை நாசுக்காய் புரிய வைக்கப் போனது, அவர்உன்னுடையது என்ற அற்பத்திருப்திக்காக நிறைய கஷ்டப்படுகிறாய், இது மாயையின் விளையாட்டுஎன்று புரிய வைத்ததில் முடிந்து விட்டது. இப்படி வலியப் போய் தடி கொடுத்து அடி வாங்கியதை பிரம்மானந்தாவால் சகிக்க முடியவில்லை. மேலும், இந்த யோகாலயத்தில் இது வரை அவர் தான் அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்து இருக்கிறார். அவரே இந்த இடத்தில் ஒரு உபதேசம் கேட்கும் நிலைமை அவருக்கு இதுவரை வந்ததில்லை. இந்த முதல் அனுபவம் அவருக்குக் கசந்தது.   இந்தக் கசப்பை தொடர்ந்து நீட்டிக்கப் பிடிக்காமல் அவர் வறண்ட குரலில் சொன்னார். “உங்கள் கருத்துக்களை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.”

 

கூடுதலாக ரகுராமனிடம் பேசும் (கேட்கும்?) மனநிலையில் பிரம்மானந்தா இல்லை என்பது பாண்டியனுக்கு விளங்கி விட்டது. பாண்டியன் ரகுராமனைப் பார்த்து கைகூப்பினார். “நன்றி. கண்ணன் திரும்ப காரில் உங்களைக் கொண்டு போய் விடுவார்.”

 

ரகுராமன் மூவருக்கும் கைகூப்பி விட்டு எழுந்தார். ஷ்ரவனுக்கு அவருடைய மாறாத மலர்ந்த முகம் இராமாயணத்து ரகுராமனையே நினைவுபடுத்தியது. நீயே அரசன் என்று தசரதன் சொன்ன போதும், உன் தம்பியே அரசன் என்று கைகேயி சொன்ன போதும் ஸ்ரீராமனின் முக மலர்ச்சியில் மாற்றம் இருக்கவில்லையாம். சித்திரத்தில் வரைந்த செந்தாமரை போல அவன் முகம் இருந்தது என்று கவி சொன்னதாகப் படித்த நினைவு வந்தது. இவருக்கும், அழைத்து வந்த போதும் மகிழ்ச்சி, அனுப்பி வைக்கும் போதும் மகிழ்ச்சி!

 

ஷ்ரவன் பரவசத்துடன் எழுந்து நின்று அவரது காலைத் தொட்டு வணங்கினான்.   ரகுராமன் கனிவன்புடன் அவனைப் பார்த்து அவன் தலையை இரண்டு கைகளாலும் தொட்டு ஆசிர்வதித்தார். அந்தத் தொடுதலில் உடலெங்கும் மின் அதிர்வுகளை ஷ்ரவன் உணர்ந்தான்.

 

கண்ணனைப் பின் தொடர்ந்து ரகுராமன் செல்ல, பாண்டியன் பிரம்மானந்தாவின் உதவியாளனை அழைத்து தாழ்ந்த குரலில் சொன்னார். “அந்த ஆளோட காலடி மண்ணை எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வை

 

பிரம்மானந்தாவுக்கு ஷ்ரவனும், பாண்டியனும் சேர்ந்து ரகுராமன் யோகியே என்று முடிவு செய்து விட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 

பிரம்மானந்தாவின் கடுகடுத்த முகத்தைப் பார்த்த ஷ்ரவன் இவர் முன்னிலையில் அவர் காலைத் தொட்டு வணங்கியது இவருக்குப் பிடிக்கவில்லைஎன்று புரிந்து கொண்டான். உடனடியாக எழுந்து பிரம்மானந்தாவை  சாஷ்டாங்கமாய் வணங்கினான்.

 

அவரிடமிருந்து சிறப்பான பதில்களைப் பெறும்படியாக நீங்கள் கேட்ட கேள்விகள் அருமையிலும் அருமை யோகிஜி. ஒரு யோகியால் தான் இன்னொரு யோகியிடம் இப்படிக் கேட்டுப் பெற முடியும். நீங்கள் அறியாதது எதுவுமில்லை. ஆனால் அறியாதது போல் கேட்டு அவரைப் பேச வைத்தது ஜனகர் அஷ்டவக்கிரரைப் பேச வைத்தது போல் ஆகி விட்டது.”

 

இல்லாத ஒரு அர்த்தத்தை ஷ்ரவன் ஏற்படுத்திப் பாராட்டியதில்  பிரம்மானந்தா மனம் சிறு ஆறுதலைப் பெற்றது. அது உண்மையே என்றும், அதை அவன் சூட்சுமமாய் புரிந்து கொண்டு விட்டான் என்றும் காட்டிக் கொண்டபடி அவர் மெலிதாகப் புன்னகைத்தார். ஷ்ரவன் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான்.

 

அவன் போன பின் பாண்டியனும், பிரம்மானந்தாவும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். பாண்டியன் எதையோ தீவிரமாக யோசிப்பது தெரிந்தது. பிரம்மானந்தா கேட்டார். “என்ன யோசிக்கிறாய் பாண்டியன்?”

 

பாண்டியன் சொன்னார். “அந்த ஆள் சொன்னதைத் தான் யோசிச்சேன் யோகிஜி. ஒரு மனுஷன் தன் சொந்தக் காரியத்தை ஆர்வமாய் செய்யற மாதிரி கடவுளோட காரியத்தை எப்படி ஆர்வமாய் செய்ய முடியும் யோகிஜி?”


(தொடரும்)

என்.கணேசன்



Thursday, February 26, 2026

சதுரங்கம் 7

 

ருட்ட ஆரம்பிக்கும் நேரத்தில் அர்ஜுன் ஆபிசிலிருந்து வீட்டுக்குக் கிளம்பினான். வீட்டை நோக்கிச் செல்கையில் அவன் மனமெல்லாம் அவனுடைய தாத்தா வாசுதேவன் மீதிருந்தது. மாமனிதராக அவரை அனைவரும் சொல்கிறார்கள். அவர் இறந்து இருபத்திநான்கு வருடங்கள் ஆகி விட்டன. ஆனால் இப்போதும் அவர் அன்புடன் நினைக்கப்படுகிறார். கட்சிக்காரர்கள் அவரை நினைப்பதும், அவருக்கு விழா எடுப்பதும் பெரிய விஷயமல்ல. அவர்கள் அவர் பெயரை வைத்துத் தான் இன்றைக்கு பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். எனவே அவர்கள் நிச்சயம் அவரைப் பற்றிப் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள். ஆனால் அரசியல் சாராதவர்களும், பேரறிஞர்களும், அவரோடு பழகியிருந்த சாதாரண மனிதர்களும் கூட அவரை இன்றும் பெருமையாகத் தான் நினைவு கூர்கிறார்கள்.

 

இப்போதைய ஆளும் கட்சியான தமிழர் சமூக வளர்ச்சிக் கழகம் வாசுதேவன் ஆரம்பித்த கட்சி. அவர் கட்சி ஆட்சியைப் பிடித்த பின் மூன்றரை ஆண்டு அவர் தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அந்த மூன்றரை ஆண்டு காலமும் தமிழகத்தின் பொற்காலமாக இருந்தது. மக்களுக்கு நீண்ட காலம் நன்றாக உதவக்கூடிய திட்டங்களை வாசுதேவன் அமல்படுத்தினார். அவர் ஆட்சியில் ஊழல் இல்லாமல் அவர் பார்த்துக் கொண்டார். கட்சி ஆரம்பித்து கட்சி வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் செலவு செய்து தன் சொத்தையே முழுவதுமாக அவர் இழந்து விட்டாலும், ஆட்சிக்கு வந்த பின் அவர் முன்பு இழந்ததை சம்பாதிக்க முயலவில்லை. கடைசி வரை அப்பழுக்கற்ற நேர்மையான அரசியல் தலைவராகவும், மக்களின் முதல்வராகவுமே இருந்து அவர் காலமானார்.

 

அவருக்குப் பிறகு தமிழக அரசியல் களமே முற்றிலும் மாறியது. அவர் மரணமடைந்த பின் கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த தணிகாச்சலம் முதல்வரானார். அந்தக் காலக்கட்டத்தில் அர்ஜுனின் தந்தை ஞானமூர்த்தியோ, சித்தப்பா ராஜாராமோ நினைத்திருந்தால் அந்தக் கட்சியையும், முதல்வர் பதவியையும் எளிதாகக் கைப்பற்றியிருக்க முடியும். வாசுதேவனின் பிள்ளைகள் என்ற தகுதியே அன்று போதுமானதாக இருந்தது. ஆனால் அச்சமயத்தில் இருவருமே அதில் ஆர்வம் காட்டவில்லை. ஞானமூர்த்தி வக்கீல் தொழிலில் அப்போதே பிரபலமாக இருந்தார். ராஜாராமுக்கும் பதவி ஆசை இருக்கவில்லை.

 

அதனால் தணிகாச்சலம் கட்சியில் தன் செல்வாக்கை வேகமாக பலப்படுத்திக் கொண்டார், அடுத்த தேர்தலிலும் அவருடைய கட்சியே ஆட்சியைப் பிடித்தது. அதன் பின் மெள்ள அவர் தன் மகன் சரவணனை கட்சியில் பிரதானப்படுத்த ஆரம்பித்தார். கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில்  செல்வாக்காக இருந்த இளம் அமைச்சர் ரத்தினம் அதைக் கடுமையாக எதிர்த்தார். தணிகாச்சலத்தின் அந்த முயற்சியை அனுமதித்தால் காலமெல்லாம் தான் இரண்டாவது நபராகவே கட்சியிலும் அதிகாரத்திலும் இருக்க வேண்டி வரும் என்று சரியாக ரத்தினம் கணித்தார். அவர் எதிர்ப்பை தணிகாச்சலம் பொருட்படுத்தாமல் போகவே ரத்தினம் தமிழின முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்தார்.

 

அந்தச் சமயத்தில் தான் ராஜாராம் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அரசியலில் நுழைந்தார். அவர் ரத்தினத்தை ஆதரித்தார்.  ராஜாராமின் பேச்சுத் திறமையும், மக்களின் உணர்வுகளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடிந்த அவரது சாதுரியமும் தமிழக அரசியல் களத்தில் ரத்தினத்தின் செல்வாக்கை அதிகரித்தது. தணிகாச்சலம் செய்த ஊழல்கள் மக்களிடையே அவருக்கு இருந்த செல்வாக்கைக் குறைத்தது. அடுத்த தேர்தலில் ரத்தினம் முதல்வர் ஆனார். அப்போதும் ராஜாராம் பின்னணியில் இருந்தே அனைத்தையும் இயக்கினாரே ஒழிய கட்சியிலோ ஆட்சியிலோ எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதிகாரத்தை விரும்பாத வாசுதேவனின் இளைய மகனாக அவர் புகழ் மக்களிடம் மேலும் பரவியது.

 

அக்காலக்கட்டத்தில் அர்ஜுன் சிறுவனாக இருந்ததால் அரசியல் நிகழ்வுகளின் சூட்சுமமான பின்னணி காய் நகர்த்தல்கள் பற்றி அவனுக்குத் தெரிய வரவில்லை. அவன் வளர்ந்து பெரியவனான பின்னும் வெளிப்படையாக வரலாறான நிகழ்வுகள் மட்டுமே எல்லோரையும் போல் அவன் அறிய முடிந்தது. திரை மறைவில் நடந்தவை மூடுமந்திரமாகவே இருந்தன.

 

ராஜாராமின் தயவால் ரத்தினம் ஆட்சியைப் பிடித்து இரு முறை முதல்வரானார். ரத்தினத்தின் ஆட்சியிலும் ஊழலும் திறமையின்மையும் பிரதானமாகவே இருந்தது. அந்தச் சமயத்தில் தான் இரண்டு கட்சிகள் மீதும் கடும் அதிருப்தி அடைந்திருந்த ஞானமூர்த்தி மக்கள் நல்வாழ்வுக் கழகம் என்ற கட்சியைத் துவக்கினார்.  தந்தையைப் போலவே நேர்மையாளராக இருந்த அவர் அரசியலுக்கே தேவையான சிறிய சமரசங்களைக்கூடச் செய்து கொள்ளாதவராக இருந்தது, உடனடியாக செல்வாக்கு பெற அவருக்குப் பெரிய முட்டுக்கட்டையாக இருந்தது.   

 

அந்த சமயத்தில் இரண்டு முறை முதல்வராக முடிந்தது தன் தனித்திறமையால் என்று நம்ப ஆரம்பித்திருந்த ரத்தினம் ராஜாராமுக்கு முக்கியத்துவம் தருவதைக் குறைக்க ஆரம்பித்திருந்தார். அதனால் ராஜாராமும் ரத்தினத்திடம் அதிருப்தியடைய ஆரம்பித்து இருந்தார். அதனால் அவர் அண்ணன் கட்சிக்கு ஆதரவு தருவார் என்று அரசியல் நோக்கர்கள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம்பினார்கள். ஏனென்றால் அண்ணனும் தம்பியும் மிக நெருக்கமாக இருந்தார்கள். அவர்கள் இருவரையும் இராம லட்சுமணர்கள் என்று கூடப் பலரும் சொல்வதுண்டு.

 

ஆனால் அந்த சமயத்தில் தணிகாச்சலம் காலமாகி அந்தக் கட்சியைக் கைப்பற்றிய அவருடைய மகன் சரவணன் ராஜாராமிடம் பணிந்து வந்தார். யாரும் எதிர்பாராத விதமாக ராஜாராம் சரவணனை ஆதரிக்க ஆரம்பித்தார். ரத்தினத்தின் மீதிருந்த அதிருப்தி, தணிகாச்சலத்தின் மரணம், சரவணன் அனைவரிடமும் காட்டிய பணிவு, ராஜாராமின் ஆதரவு எல்லாமாகச் சேர்ந்து தமிழர் சமூக வளர்ச்சிக் கழகத்தை, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிபீடத்தில் அமர்த்தியது. ரத்தினத்தின் தமிழின முன்னேற்றக் கழகம் வெறும் 45 இடங்களில் மட்டுமே வென்றது. ஞானமூர்த்தியின் மக்கள் நல்வாழ்வுக்கழகம் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. ஞானமூர்த்தி போட்டியிட்ட தொகுதியில் மட்டும் ஓட்டெடுப்பில் அவர் இரண்டாமிடத்தில் இருந்தார். அவர் கட்சி பத்து தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் டெபாசிட் இழந்தாலும் சுமார் 50 தொகுதிகளில் மூன்றாமிடத்தில் இருந்தது. அதையே ஞானமூர்த்தி பெரிய வெற்றியாக எண்ணினார்.

 

ஆனால் அர்ஜுனுக்கு அப்பாவின் தோல்வி சகிக்க முடியாததாக இருந்தது. அவர் தன் நேர்மையிலும், கொள்கைப்பிடிப்பிலும் உறுதியாயிருக்காமல், ஓரளவு சமரசம் செய்து கொண்டிருந்தால் கூட குறைந்தது பத்து தொகுதியிலாவது அவர் கட்சி வெற்றியடைந்திருக்கும் என்று அவன் நினைத்தான். ஆனால் அவர் தன் நேர்மையையும், கொள்கையையும் இழப்பதைத் தான் தோல்வியாக நினைத்தார். அப்படி நினைப்பவரிடம் அவனால் தன் அபிப்பிராயத்தைச் சொல்ல முடியவில்லை.   அவருடைய மதிப்பீடுகளும், அளவுகோல்களும் இன்றைய அரசியல் களத்தில் மதிப்பில்லாதவை. அவற்றை வைத்துக் கொண்டு இன்றைய அரசியலில் யாரும் வென்று விட முடியும் என்ற நம்பிக்கை அவனுக்குச் சிறிதும் இல்லை. அதனால் தானோ என்னவோ அவனுக்கு அரசியல் கசந்தது.

 

அவன் சித்தப்பா ராஜாராமின் செல்லப் பிள்ளை. சென்ற தேர்தலுக்கு முன்பு வரை வாரம் ஒரு முறையாவது அவன் அவர் வீட்டுக்குச் சென்று வருவான். சில நாட்களில் அங்கேயே இரண்டு வேளைகளும் சாப்பிட்டு விட்டு இரவு நேரத்தில் அவன் வீடு திரும்புவதும் உண்டு. ஆனால் அவர் கடந்த தேர்தலில் ஞானமூர்த்தியை ஆதரிக்காமல் சரவணனை ஆதரித்ததை அர்ஜுனால் மன்னிக்க முடியவில்லை. இப்போதும் சித்தப்பா குறித்த பெருமை அவனுக்கு உண்டு. இப்போதும் அவன் வெளியாட்கள் யாரிடமும் பேசுகையில் அவரை விட்டுக் கொடுக்க மாட்டான். ஆனால் தனிப்பட்ட முறையில் அவனுக்கு அவர் மீது கோபமும் உண்டு. அவர் பல தடவை அவனிடம் அலைபேசியில் பேசிஏன் வீட்டுக்கே வருவதில்லைஎன்று கேட்டிருக்கிறார். அவன் ஒவ்வொரு முறையும் மழுப்பலாகத் தான் பதிலளித்திருக்கிறான்.

 

யோசித்துப் பார்த்தால் அவன் குடும்பத்திற்குள்ளேயே அவனுக்கு விடை தெரியாத புதிர்கள் பல இருக்கின்றன. முன்பு நடந்தவை பற்றி அவன் தந்தை ஞானமூர்த்தி அவனிடம் பேசியதில்லை. அதே போல சித்தப்பா ராஜாரமும் அவனிடம் பேசியதில்லை. பானுமதி சாதாரணமாகவே எதைப் பற்றியும் பேசாதவள். பாட்டி யசோதா பழைய நிகழ்வுகளின் நினைவில் அடிக்கடி மூழ்கியிருப்பவள் என்றாலும் அவற்றைப் பற்றிப் பேசுவது அபூர்வமே. இப்போது தாத்தாவைப் பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதும் சாக்கிலாவது குடும்பத்தினரிடம் பேச வேண்டும்,  கேள்விகள் கேட்க வேண்டும், பழைய உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். என்று அர்ஜுன் மனதில் உறுதியாக எண்ணிக் கொண்டான்.

(தொடரும்)

என்.கணேசன்