என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, June 11, 2026

சதுரங்கம் 22


 விமல் கேட்டதற்கு ராஜ்நாத் புன்னகையுடன் பதில் சொன்னார். “சுவாமி. இந்தக் காலத்தில் பணம் இருந்தால் போதும், ஆத்ம ஞானத்தைத் தவிர எல்லாம் கிடைக்க வழி இருக்கிறது, ஆத்ம ஞானம் ஒன்றை மட்டும் தான் பணம் கொடுத்து யாரும் பெற முடிவதில்லை. அதனால் தான் பணம் இருந்தும், வசதிகள் பல இருந்தும், எல்லாவற்றையும் விட்டு விட்டு நான் இங்கே வந்திருக்கிறேன்.”

 

விமலுக்கு ஆத்ம ஞானம் தேவையிருக்கவில்லை. ஆத்ம ஞானத்திற்காக உப்பு சப்பில்லாத வாழ்க்கை வாழவும் அவன் தயாராக இல்லை. அந்தத் துறவி எதைத் தேடி இங்கு வந்து சேர்ந்தார் என்று தெரிந்து கொள்ளும் அக்கறையும் அவனுக்கு இல்லை. அதனால் மனதிற்குள் விமல் சலித்துக் கொண்டான். ’ஏன்யா நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல், கேட்காத கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி என்னைச் சித்திரவதை செய்கிறாய்?’

 

ஆனால் அவன் சொன்ன வார்த்தைகள் வேறாக இருந்தன. “உண்மை சுவாமி. நானும் ஏழரை கோடி ரூபாயை விட்டு இங்கே வந்திருப்பது அதற்காகத் தான். என்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் புதிய எண் சிம் வாங்க பணம் செலவு செய்ய வேண்டுமென்றாலும் நான் தயார் தான்.”

 

டெல்லி கரோல் பாக் மார்க்கெட்டில் ராஜா சிங் என்ற ஒருவன் ஒரு மொபைல் கடை வைத்து இருக்கிறான். அவன் புதிய சிம்களையும் விற்கிறான். வேறு பெயர் விலாசத்தில் வாங்க வேண்டும் என்றால் அவனே போலி டாக்குமெண்ட்கள் தயார் செய்து புதிய சிம் தருகிறான். அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை ஐந்தாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தான். இப்போது எவ்வளவு வாங்குகிறான் என்று தெரியவில்லை....”

 

விமல் அத்தகவலை மனதில் குறித்துக் கொண்டான். பின் சொன்னான். “நல்லது. இப்போதைக்கு எனக்குத் தேவையிருக்காது. ஏனென்றால் இங்கே வருவதற்கு முன் தான் அந்த ட்ரஸ்டீயிடம் எல்லாவற்றையும் நான் சொல்லி விட்டு வந்திருக்கிறேன். ஆறு மாதங்கள் கழித்து தான் எனக்கு அடுத்தது பேச வேண்டியிருக்கும். அதனால் அதற்கு முன் நான் வாங்கிக் கொள்கிறேன். மற்றபடி வேறு யாரிடமும் எனக்குப் பேச எதுவுமில்லை.”

 

ராஜ்நாத் தலையசைத்தார். அவனுக்குப் புதிய மொபைலும் சிம்மும் அவசரமாகத் தேவை என்பதால் சீக்கிரமாக வாங்கப் போகிறான் என்றாலும் அது அந்தத் துறவிக்கு அது தெரிய வேண்டாம் என்று விமல் நினைத்தான். நாளை ஏதாவது ஒரு பிரச்சினை ஆனால், அவன் புதிய சிம்மை ராஜா சிங்கிடமிருந்து வாங்கியதை இந்தத் துறவி நினவுகூர்வது அவனுக்கு ஆபத்தாக முடியலாம்...

 

ர்ஜுனிடம் யசோதாவும், ராஜாராமும் மாறி மாறி வாசுதேவனைக் குறித்த நினைவுகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

 

யசோதா சொன்னாள். “ஒரு காலத்துல இந்த வீட்டுல சாப்பிட கட்சிக்காரங்க குறைஞ்சது பத்து பேராவது இருப்பாங்க. நான் உன் தாத்தா கிட்ட கறாரா சொல்லிட்டேன். “உங்களுக்கும் ரெண்டு பசங்களுக்கும் வேணும்னா நான் சமைச்சுப் போடுவேன். கட்சிக்காரங்களுக்கும் சேர்த்து சமைக்கணும்னா நீங்க சமையலுக்குத் தனியா ஆளைப் போட்டுக்கோங்கன்னு. அப்பறமா தான் சமையலுக்கு ஒரு ஆளை வேலைக்குச் சேர்த்துகிட்டார் அவர். அதுவும் நாம என்ன சாப்பிடறோமோ அதைத் தான் தொண்டர்களுக்கும் போடணும்னு சொல்வார். அவங்க கூட சேர்ந்து தான் சாப்பிடுவார்…”

 

ராஜாராம் புன்னகையுடன் சொன்னார். “இந்த காலத்துல எல்லாம் தலைவர்கள் ஒரு போட்டோஷுட்டுக்காக வேணும்னா தொண்டர்களோட சேர்ந்து சாப்பிடுவாங்க. சரியாய் சொன்னா சாப்பிடறது மாதிரி நடிப்பாங்க. காமிரா நகர்ந்தவுடனே அவங்களும் நகர்ந்துடுவாங்க…”

 

அர்ஜுன் புன்னகைத்தான். இன்று அவருடைய செல்லப்பிள்ளையாக வலம் வரும் முதலமைச்சர் சரவணனும் அப்படித்தான். சமபந்தி போஜனங்கள் எல்லாம் புகைப்படங்களுக்காகத் தான். சென்ற வாரம் அரசுப் பள்ளிக்கூடம் ஒன்றின் ஒரு நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் சேர்ந்து அமர்ந்து ஒரே ஒரு வாய் மட்டும் சாப்பிட்டு விட்டு சரவணன் புகைப்படம் எடுத்து முடித்தவுடன் எழுந்து போனதைப் பற்றி அர்ஜுன் கேள்விப்பட்டிருக்கிறான்.  இதை எல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கிற போது தினமும் தொண்டர்களுடன் சேர்ந்து சாப்பிட்ட தாத்தா வாசுதேவன் உண்மையான தலைவன் மட்டுமல்ல, மாமனிதனும் கூட என்று அர்ஜுன் எண்ணிக் கொண்டான்.

 

ஞானமூர்த்தியும் வெளியூர்களுக்குச் செல்லும் போது தொண்டர்களுடன் சேர்ந்து தான் சாப்பிடுவார். அவரும் இயல்பாகவே ஏற்ற தாழ்வுகள் பார்ப்பவர் அல்ல. ஆனால் தன் தந்தையைப் பற்றி இத்தனை உயர்வாகப் பேசும் ராஜாராம் அப்படி சாப்பிடக்கூடியவர் அல்ல. அவர் ஒரு கட்சித் தலைவர் அல்ல என்பதைக் காரணமாக அவர் சொல்லலாம். யோசித்துப் பார்த்தால், ராஜாராம் எந்தப் பதவியும் வகிக்காமலேயே, பதவிக்கு உரிய பிரச்சினைகளச் சந்திக்காமலேயே, பதவிக்குக் கிடைக்கும் அத்தனை பலன்களையும், கௌரவத்தையும் அனுபவித்து வருகிறார். வெளியே நிற்கும் இரண்டு போலீஸ்காரர்களின் காவல் கூட அப்படித்தான்.

 

எந்தக் கட்சியிலும், எந்தப் பொறுப்பிலும் இல்லாத அவரை அச்சுறுத்தி யாரோ ஒரு மொட்டைக்கடிதம் அனுப்பிய பின், அவருடைய பாதுகாப்புக்காக முதலமைச்சர் நிறுத்தியிருக்கும் போலீஸ் காவல் அது. ஆளும் கட்சிக்காரர் ஒருவரையே அப்படி ஒரு மொட்டைக்கடிதம் எழுதி அனுப்ப வைத்திருப்பார்கள் என்று நிருபர்கள் பேசிக் கொண்டது அர்ஜுன் காதிலும் விழுந்திருக்கிறது.

 

ராஜாராமின் பார்வை சூட்சுமமானது. “என்னடா யோசிக்கிறாய்?”

 

அர்ஜுன் கண்ணிமைக்காமல் சொன்னான். “தாத்தா எப்படிப்பட்ட உயர்ந்த மனுஷன்னு ஆச்சரியமாய் யோசிக்கிறேன் சித்தப்பா”.

 

யசோதா வறண்ட குரலில் சொன்னாள். “என்ன உயர்ந்த மனுஷன்? பிழைக்கத் தெரியாத மனுஷனாவே கடைசி வரைக்கும் வாழ்ந்துட்டு போயிட்டார்.”

 

ராஜாராம் சிரித்துக் கொண்டே சொன்னார். “டேய் இது. பாட்டி பேரன் கிட்ட தனிப்பட்ட முறையில் சொல்லும் கருத்து. இதையெல்லாம் பத்திரிக்கைல எழுதிடாதே.”   

 

அர்ஜுனும் சிரித்தான். “கவலைப்படாதீங்க சித்தப்பா. நீங்க என்ன சொன்னாலும் சென்சார் பண்ணி தான் பத்திரிக்கைல எழுதுவேன். ஒரு விதத்துல பார்த்தா உயர்ந்த மனுஷன்கிறதே பிழைக்கத் தெரியாத மனுஷனைத் தானே

 

அதைக் கேட்டு ராஜாராமும் சிரித்தார். ஆனால் யசோதா சிரிக்கவோ, பதில் கருத்து சொல்லவோ இல்லை. அவள் தன் கணவனைப் பற்றிய நினைவுகளில் தங்கி இருப்பதாக அர்ஜுனுக்குத் தோன்றியது.  என்ன யோசிக்கிறாள்?

 

இன்றைய தமிழக அரசியலில் ராஜாமாதா அவள். முதலமைச்சர் உட்பட எல்லா அமைச்சர்களும், வாசுதேவனின் நினைவு நாளில் மட்டுமல்ல, அவரவர் பிறந்த நாளில் அங்கு வந்து அவளிடம் ஆசி வாங்கிக் கொள்வது, தவறாமல் சடங்கு போல் நடக்கிறது.  அப்படி வணங்குவது புகைப்படமும் எடுத்துக் கொள்ளப்பட்டு பத்திரிக்கைகளுக்கும், ஊடகங்களுக்கும் அனுப்பப்படும். அவரவர் தாயையாவது அப்படி அவர்கள் வணங்குவார்களா என்பது சந்தேகமே. அடுத்ததாய் ராஜாராமிடம் ஆசி வாங்குவார்கள். இத்தனை பெருமையும் அவளுக்கு வாசுதேவனின் மனைவி என்ற வகையில் தான் கிடைக்கின்றது. அதைப்பற்றி அவள் நினைக்கிறாளோ?

 

அர்ஜுன் அவளிடம் விளையாட்டாய் கேட்டான். “பாட்டி நீங்க தாத்தா கிட்ட சண்டை போடுவீங்களா?”

 

யசோதா தன்னையும் மீறிப் புன்னகைத்தாள். “அது தினமும் நடக்கும். ஆனா என்ன, ஒரு பிரயோஜனமும் இருக்காது. என்ன சொன்னாலும் ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுடுவார். சொல்றது ஒரு நிமிஷமும் உள்ளே தங்காது.”

 

உள்ளேயிருந்து மைதிலியின் குரல் கேட்டது. “இப்ப புரியுது. உங்க மகனுக்கு யார் கிட்ட இருந்து அந்த புத்தி வந்துருக்குன்னு.”  

 

ராஜாராம் புன்னகைத்தபடி அர்ஜுனைப் பார்த்து புருவங்களை உயர்த்தினார்.  யசோதா சமையலறையைப் பார்த்தபடி சொன்னாள். “இவன் எத்தனையோ பரவாயில்லை. நானும் பார்க்கறேனில்ல, நீ சொன்னதை பாதியாவது கேட்டுக்கறான். இவங்கப்பா சுத்த மோசம். நாயா கத்தினாலும் எல்லாம் முடிஞ்சதுக்கப்பறம் சில சமயம், என்னவோ சத்தம் கேட்டுச்சேங்கற மாதிரி, யோசனையோட பார்ப்பார். அப்பவெல்லாம் அவர் கழுத்தை நெறிக்கலாமான்னு தோணும்.”

 

அர்ஜுன் சிரித்தபடி கேட்டான். “ஆனால் நீங்க அப்படி செஞ்சிடலயே பாட்டி?”

 

யசோதாவும் சிரித்தபடி சொன்னாள். “இல்லை. அந்தக் காலத்துல எத்தனை பேசினாலும் இந்தக் காலம் மாதிரி நாங்க அடாவடியாய் போனதில்லை.”

 

ராஜாராம் சிரித்துக் கொண்டே சொன்னார். “ஆனாலும் அப்பா உன்னை எதிர்த்து பேசி நான் கேட்டதேயில்லையேம்மா?”

 

நான் பேசினதை அவர் காது கொடுத்து கேட்டிருந்தா தானடா திருப்பி எதாவது பதிலுக்குச் சொல்ல முடியும்? கேட்டே இருக்கலைன்னா?”

 

அர்ஜுன் ராஜாராமிடம் கேட்டான். “நீங்களும் தாத்தா கூட சண்டை போட்டிருக்கீங்களா சித்தப்பா?”

 

அந்த ஒரு கேள்வியில் ராஜாராமின் புன்னகை அப்படியே உறைந்தது.


(தொடரும்)

என்.கணேசன்




Monday, June 8, 2026

யோகி 159

 

ஷ்ரவனின் தனிப்பட்ட வாழ்க்கை சந்தோஷமும், நிறைவும் கொண்டதாகவே இருந்தது. ஸ்ரேயா அவன் ஆபத்தில்லாமல் யோகாலயத்திலிருந்து தப்பி வந்ததில் நிம்மதியடைந்தாள். அவன் அவள் மீது நம்பிக்கை வைத்துக் கொடுத்த வேலையை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க முடிந்ததில் அவளுக்குத் திருப்தி இருந்தது. அவள் அதைக் கண்டுபிடித்துக் கொடுத்ததை வைத்து தான், புதைக்கப்பட்டது சந்திரமோகனாகத் தானிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்ததாய் அவன் அவளைப் பாராட்டிச் சொன்ன போது அவளுக்கு சர்வதேச விருது கிடைத்தது போலிருந்தது. அவளுடைய சந்தோஷத்தைப் பார்த்து அவனுக்குச் சந்தோஷமாய் இருந்தது. அவனுடைய பெற்றோர் அவளுடைய பெற்றோரிடம் பேச ஆரம்பித்து விட்டார்கள். திருமண நிச்சயம் செய்ய இரண்டு வாரம் கழித்து ஒரு நல்ல நாளும் குறித்து விட்டார்கள்.

 

ஷ்ரவன் சேதுமாதவனுடன் அலைபேசியில் பேசினான். அவரிடம் அவன் கண்டுபிடித்த உண்மைகளைச் சொன்னான். கிருஷ்ணசாமியையும், அவரையும் எதாவது செய்து விடுவோம் என்று பயமுறுத்தி தான் அவர்கள் நீதிமன்றத்தில் சைத்ராவைத் தங்களுக்கு ஆதரவாகப் பேச வைத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்ன போது சேதுமாதவன் கண்கலங்கினார். என்ன நடந்திருக்கிறது என்று தெரியாமல் இருந்ததே அவருக்கு ஒரு வகையில் சித்திரவதையாக இருந்தது. இப்போது ஷ்ரவனின் உதவியால் அது தெளிவாகி விட்டது. குற்றவாளிகளை எதுவும் செய்ய முடியாவிட்டாலும் அவன் பாதுகாப்பாகத் தப்பித்து வந்தது அவருக்குச் சந்தோஷமாக இருந்தது. அந்த நல்ல இளைஞனுக்கு அங்கு ஏதாவது ஆபத்து வந்திருந்தால் அவரால் தாங்கியிருக்க முடியாது. அவருக்கு அந்த யோகியைப் பற்றி அவன் சொன்னதெல்லாம் பிரமிப்பாக இருந்தது. அந்த யோகி சொன்ன வார்த்தைகள் அவரை மெய் சிலிர்க்க வைத்தன. அவர் சீக்கிரத்தில் ஒரு நாள் அந்த யோகியைப் போய்ச் சந்திப்பதாகச் சொன்னார்.

 

உண்மைக் குற்றவாளிகள் எந்த தண்டனையும் இல்லாமல் பாதுகாப்பாய் இருப்பது அவனுக்கு உறுத்திக் கொண்டு தான் இருக்கிறது என்பதை ஷ்ரவன் சொன்ன போது அவர் அமைதியாகச் சொன்னார். “தெய்வம் நின்று கொல்லும், ஷ்ரவன். யாரும் அவரவர் கர்மாவில் இருந்து தப்ப முடியாது. உன்னால முடிஞ்சதை எல்லாம் நீ செஞ்சிருக்காய். அந்த யோகி சொன்ன மாதிரி மீதி எல்லாம் கடவுள் தீர்மானம்.”

 

ஷ்ரவன் ஒரு நாள் பரசுராமனுடன் அலைபேசியில் பேசினான். அவன் வெற்றிகரமாக உண்மைகளைக் கண்டுபிடித்து யோகாலயத்திலிருந்து தப்பி வந்ததை அவரும் பாராட்டினார். அவருடைய மந்திரோபதேசத்தை அவன் முறையாகப் பயன்படுத்திக் கொண்ட விதம் அவரைக் கவர்ந்தது. உபதேசங்கள் சுலபம். ஆனால் விடாமல் தொடர்ந்து முயற்சி செய்வது சிலருக்கே சாத்தியப்படும்... உண்மைக் குற்றவாளிகள் பாதுகாப்பாக இருப்பதில் அவன் உணர்ந்த அதிருப்தியை ஷ்ரவன் அவரிடமும் சொன்ன போது அவரும் கர்மா தன் வேலையைச் செய்யும் என்றார்.

 

அவன் சொன்னான். “இருக்கலாம் சுவாமிஜி. ஆனால் குற்றவாளிகள் பாதுகாப்பாய் இருக்கறதைப் பார்க்கறப்ப எனக்கு என் வேலை  பாதி மட்டும் தான் முடிஞ்ச மாதிரி தோணுது.”

 

பரசுராமன் சொன்னார். “அப்படின்னா உன் திருப்திக்காக, நீ இது வரை பயன்படுத்தின மந்திர ஜபத்தை விடாமல் தொடர்ந்து செய். இத்தனை செஞ்ச அது மீதியையும் பார்த்துக்கும்….”

 

ஷ்ரவன் அவர் சொன்னபடியே தினமும் அந்த மந்திர ஜபத்தைத் தொடர்ந்து செய்தான். செய்த நாட்களில் முன்பு போலவே அவனால் அந்த மந்திரத்துடன் ஒன்றுபட முடிந்தது.  அதுவே அவனுக்கு ஒரு நல்ல அறிகுறியாகத் தோன்றியது. அந்த யோகி சொன்னதும் அவன் நினைவுக்கு வந்தது. எல்லாம் இறைவன் சித்தப்படி நடக்கிறது. எதை நம் மூலம் செய்ய வேண்டுமோ, அதை அவனே செய்ய வைத்துக் கொள்கிறான்.” யோகி சொன்னபடி இறைவன் பார்த்துக் கொள்வானோ, இல்லை சேதுமாதவனும், பரசுராமனும் நம்பும்படி கர்மா பார்த்துக் கொள்ளுமோ, முடிந்ததை எல்லாம் செய்து கொண்டிருப்பதோடு அவன் பொறுப்பு முடிகிறது. கடவுளோ, கர்மாவோ பலன் தரும் வரை அவன் காத்திருக்கத் தான் வேண்டும்அவன் மனம் சற்று அமைதி அடைந்தது. 

 

டாக்டர் சுகுமாரனின் மனைவியிடம் அவளுடைய நெருங்கிய தோழி அலைபேசியில் சொல்லிக் கொண்டிருந்தாள். ”நான் சொன்னப்போ நீ நம்பலை இப்ப என்னாச்சு பார்த்தாயா? அந்த பிரம்மானந்தாவுக்கு யோகாலயத்துக்கு உள்ளேயே அவரைச் சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியலை. இந்த லட்சணத்துல அவர் பேசறது மட்டும் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி. அவரே அப்படின்னா அவர் சிபாரிசு பண்ற மந்திரவாதி எப்படியிருப்பார்? யோசிச்சு பார். நாய்க்கு தாயத்து கட்டற ரகத்துல தான் இருப்பார். உன் கணவர் அந்த தாயத்தை இப்பவாவது கழட்டி விட்டாரா இல்லையா?”

 

நல்ல வேளையாக அந்த நேரத்தில் டாக்டர் சுகுமாரன் வீட்டில் இருக்கவில்லை. அவர் இருந்திருந்தால் உடனே அருகில் வந்து நின்று அவர்கள் பேச்சிற்கு காது கொடுப்பார். பிரளயமே அங்கு வந்திருக்கும். அதனாலேயே அவள் தன் தோழியிடம், அவர் ஆஸ்பத்திரி போயிருக்கும் நேரமாகப் பார்த்துப் பேசச் சொல்லியிருக்கிறாள்.  இப்போது அவளல் மனம் விட்டுப் பேச முடிந்தது.

 

அதையேன் கேட்கறே? இவரும் கழட்ட மாட்டேங்கறார். டாமியோட தாயத்தையும் கழட்ட மாட்டேங்கறார். கழட்டச் சொன்னா சாமி வந்தவர் மாதிரி ஆடறார்.”

 

அது அவராய் ஆடறதில்ல. அந்த தாயத்து அப்படி ஆட வைக்குதாம். அப்படித் தான் எங்க சுவாமிஜி சொல்றார். நாய்க்கும் தாயத்து கட்டியிருக்குன்னு சொன்னவுடனே அவர் விழுந்து விழுந்து சிரிக்கிறார்என்று சொல்லி தோழி தானும் சிரித்தாள்.

 

சுகுமாரன் மனைவிக்கு அவமானமாக இருந்தது. ”என்ன பண்றது. ஒரு காலத்துல நாத்திகனாய் இருந்த ஆளா இதுன்னு எனக்கு ஆச்சரியமாய் இருக்கு. இதுக்கெல்லாம் எப்ப விடிவுகாலம் வருமோ தெரியலை.”

 

இருண்ட காலமும், விடிவு காலமும் அவங்கவங்களாய் ஏற்படுத்திக்கறது தான்.  அவர் தூங்கிட்டு இருக்கறப்ப தாயத்தை வெட்டி விட்டுடு. அதே மாதிரி அந்த நாயோட தாயத்தையும் கழட்டி விட்டுடு. எல்லாம் சரியாயிடும். விடிவுகாலம் தானாய் பிறந்துடும்.”

 

இவர் இந்த வீட்டுல ஏதோ ஆவி உலாவிகிட்டு இருக்கு. தாயத்தை எடுத்தா அது தாக்க ஆரம்பிச்சுடும்னு சொல்றாரே?”

 

அப்படி ஆவி உலாவிகிட்டு இருந்தா அது ஏன் உன்னை எதுவும் செய்யாமல் இருக்கு. நீ என்ன அந்த ஆவிக்கு ஃப்ரண்டா? அப்படியும் ஏதாவது பிரச்சினை இருக்கற மாதிரியிருந்தால், மந்திரிச்ச தகடு ஒன்னை உன் வீட்டு வாசல்ல புதைச்சு வெச்சுட்டால் ஆவிகள் நெருங்கவே நெருங்காதுன்னு எங்க சுவாமிஜி சொல்றார். வேணும்னா அவரே மந்திரிச்ச தகட்டை புதைச்சுக் குடுப்பார்.”

 

இவர் பயப்படறாரே!”

 

பயம் போகணும்னா ஒன்னும் ஆகாதுங்கற நம்பிக்கை வேணும். அந்த நம்பிக்கை வரணும்னா தாயத்தைக் கழட்டணும். தாயத்தைக் கழட்டினாலும் ஒரு தொந்தரவும் இல்லைங்கறது உறுதியாயிட்டா, ‘அட தேவையில்லாமல் பயந்துட்டோம்கிறது அவருக்குப் புரியும். அது தான் ஒரே வழி

 

அந்த ஒரே வழியை அன்று சாதித்து விட வேண்டும் என்று சுகுமாரனின் மனைவி மனதில் உறுதியெடுத்துக் கொண்டாள்.

 

அன்றிரவு களைப்புடன் வந்த சுகுமாரன் சீக்கிரமே உறங்கி விட்டார். அவர் ஆழ்ந்த உறக்கத்துக்குப் போகும் வரை காத்திருந்த அவள், பின் மெல்ல அந்த தாயத்தை கத்திரியால் வெட்டி விட்டாள். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அவர் தொடர்ந்து உறங்குவதைப் பார்த்து அவள் மெல்ல முணுமுணுத்தாள். “இவ்வளவு தான் மனுஷா. சொன்னால் புரிஞ்சுக்கணும்.”

 

பின் மெல்ல வீட்டின் பின்புறம் போனாள். டாமி அவளைப் பார்த்து எழுந்து நின்று வாலாட்டியது. கட்டியிருந்த டாமியை அவிழ்த்து விட்டவள் அதன் கழுத்தில் இருந்த தாயத்தையும் மெல்ல வெட்டி விட்டாள்.  பின் அவள் சென்று உறங்கி விட்டாள்.

 

நள்ளிரவில் டாமி ஆக்ரோஷமாகக் குரைக்க ஆரம்பித்தது. அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் கண்விழிக்கவில்லை. சுகுமாரன் தான் கண்விழித்து எழுந்து போனார். டாமி தோட்டத்தில் எதையோ பார்த்து குரைப்பது தெரிந்தது. “என்னடா பழைய ஞாபகமா?” என்று புன்னகையுடன் கேட்டார். அவர் பார்வை டாமியின் கழுத்தில் நிலைத்தது. அதன் கழுத்தில் தாயத்து இல்லை. அவர் திகைப்புடன் அது பார்த்துக் குரைக்கும் இடத்தைப் பார்த்தார்.   ஒரு மண்டை ஓடு அந்தரத்தில் தெரிந்தது. பீதியுடன் அவர் தன் கையைத் தடவினார். அங்கேயும் தாயத்து இல்லை. இரண்டு தாயத்துகளையும் களைந்தவள் அவர் மனைவி தான் என்பது அவருக்குத் தெரிந்து விட்டது. அவர் கடுங்கோபத்துடன் வீட்டுக்குள் பாய்ந்து ஓடினார். அப்போது தான் டாமி குரைக்கும் சத்தம் கேட்டு அவர் மனைவி எழுந்திருந்தாள். “அடிப்பாவிஎன்று சத்தமிட்டபடி அவர் ஓடி வருவதைப் பார்த்தவுடன் அவளுக்கு ஆபத்து விளங்கி விட்டது. அவள் ஓடி குளியலறைக்குச் சென்று கதவைத் தாளிட்டு தன்னைக் காப்பாற்றிக் கொண்டாள்.

 

குளியலறைக் கதவைப் பலமாகத் தட்டியபடியே அவர் திரும்பிப் பார்த்தார். அவர் முகத்துக்கு எதிரே அந்த மண்டை ஓடு அந்தரத்தில் நின்றிருந்தது. வேகமாக அவர் வெளியே ஓடினார்  


(தொடரும்)

என்.கணேசன்





Thursday, June 4, 2026

சதுரங்கம் 21


 ர்ஜுன்  இருவர் முகமாற்றத்தையும் பார்த்து ஒரு கணம் திகைத்தான். அவன் சொன்னதில் இவர்கள் இருவரும் பாதிப்படைய என்ன காரணம் இருக்கக்கூடும் என்று அவன் மனம் ஆலோசித்தது.

 

இருவரில் வேகமாக பழைய மலர்ச்சிக்கு மாறியவர் ராஜாராம் தான். “ஏதாவது ஞாபகம் வந்துச்சாடா?”

 

ஒன்னும் வரலை சித்தப்பா. நினைவு தெரிஞ்ச பிறகு இங்கே வந்து விளையாடினது எல்லாம் ஞாபகம் இருக்கு. அதுக்கு முன்னாடி நடந்த எதுவும் ஞாபகம் வரலை.”

 

மூனு வயசுல நடந்தது எல்லாம் எப்படிடா ஞாபகம் வரும். யாருக்கும் அந்த வயசுல ரொம்ப பாதிக்கிற மாதிரி எதாவது நடந்திருந்தா தான் ஞாபகம் இருக்கும். இல்லாட்டி மனம் தானாக அதையெல்லாம் மறந்துடும்

 

நான் தாத்தா ஞாபகமாவது வருதான்னு யோசிச்சேன். அதுவும் வரலை

 

யசோதா குரல் கரகரக்கச் சொன்னாள். “அவர் எப்பவுமே உன்னைத் தூக்கி தூக்கி வெச்சுக்குவார். ராஜாராமைக் கூட அப்படி அவர் தூக்கிகிட்டதா எனக்கு ஞாபகம் இல்லை. கடைசியா ஆஸ்பத்திரிக்குப் போறதுக்கு முன்னாடி கூட உன்னைத் தூக்கி கொஞ்சம் நேரம் வெச்சிகிட்டு தான் போனார். அப்பவெல்லாம் அவருக்கு உடம்புக்கு ரொம்பவே முடியலை. ஆனாலும் உடனடியா கிளம்பாம உன்னை எடுத்து கொஞ்சிட்டு பிறகு தான் போனார்...”

 

ராஜாராமின் கண்களும் ஈரமாவதை அர்ஜுனால் கவனிக்க முடிந்தது. அந்த வீட்டில் வாசுதேவன் உயிரோடிருந்த கடைசி தருணங்களை அவர்கள் இருவரும் மனதில் திரும்பவும் ஒளிபரப்பிப் பார்க்கிறார்கள் என்று அர்ஜுனுக்குத் தோன்றியது.

 

அர்ஜுன் சொன்னான். “அம்மாவும் அதைச் சொன்னாங்க.”

 

இருவர் முகங்களும் உடனடியாக இறுகியதையும் அர்ஜுன் கவனித்தான். அம்மா பற்றிச் சொன்னவுடன் ஏன் இருவர் முகங்களும் இறுகுகின்றன?

 

இருவரில் ராஜாராம் தான் இப்போதும் முதலில் மீண்டார். பழையபடி அவர் முகம் மலர்ச்சிக்கு மாறியது. யசோதா ஹால் ஜன்னல் வழியே தெரிந்த மரத்தை வெறித்த பார்வை பார்த்தாள். மைதிலி கேட்டாள். “என்ன சாப்பிடறடா காபி, டீ,  ஜுஸ்

 

அதெதுவும் வேண்டாம் சித்தி. அதெல்லாம் சாப்பிட்டா நீங்க செஞ்சிருக்கற வெஜிடபிள் பிரியாணியைக் காலி செய்ய முடியாது.”

 

மைதிலி வாஞ்சையுடன் புன்னகைத்தாள். அவன் சாப்பிட வருகிறான் என்று சொன்னவுடனேயே அவனுக்குப் பிடித்த வெஜிடபிள் பிரியாணியைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள். அவனுக்கு அவள் செய்யும் வெஜிடபுள் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். அவள் கண்டிப்பாக அதைச் செய்திருப்பாள் என்று யூகித்து அவன் நிச்சயமாய்ச் சொன்னது அவளுக்குப் பிடித்திருந்தது. அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லாததால் அர்ஜுனையும், நித்யாவையும் தான் அவள் பிள்ளைகளாக நினைக்கிறாள்.   அவர்களும் அவளைத் தாயாகத் தான் பார்க்கிறார்கள்...

 

ராஜாராம் சொன்னார். “உன்னோட கட்டுரை விடிவெள்ளில படிச்சேண்டா. ரொம்ப நல்லா எழுதியிருந்தாய்.”

 

அவர் தன்னுடைய பல வேலைகளுக்கு நடுவில் அவனுடைய கட்டுரையைப் படித்திருந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “தேங்க்ஸ் சித்தப்பா

 

ராஜாராமின் செக்ரட்டரி தயக்கத்துடன் வந்து நின்றார். ராஜாராம் பார்வையாலேயே என்ன என்று கேட்க அவர் சொன்னார். “அமைச்சர் கதிரேசன் வந்திருக்கார்.”

 

அமைச்சர் கதிரேசன் மாநில நிதியமைச்சர். ராஜாராம் யோசனையுடன் சொன்னார். “நான் அப்பாயின்மெண்ட் எதுவும் தரலையே.”

 

இல்லை. அவர் கட்சி அலுவலகத்திற்கு வந்தாராம். வழியில் உங்களையும் பார்த்துட்டு போலாம்னு....”

 

நான் பிசியாய் இருக்கேன்னு சொல்லு. ரொம்ப முக்கியமான விஷயம்னா அப்புறமா ஃபோன்ல பேசச் சொல்லு.”

 

தலையசைத்த செகரட்டரி போய் அமைச்சர் கதிரேசனிடம் சொன்னார். “சார் பிசியாய் பேசிகிட்டு இருக்கார். ரொம்ப முக்கியமான விஷயம்னா அப்புறமா ஃபோன்ல பேசச் சொன்னார்.”

 

வரவேற்பறையில் அமர்ந்திருந்த கதிரேசன் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தாலும் அவர் ஒன்றும் சொல்லாமல் எழுந்தார். “சார் யார் கூட பேசிகிட்டிருக்கார்?”

 

அவங்க அண்ணா மகன் கூட பேசிகிட்டிருக்கார்.”

 

கதிரேசன் சிறிது நினைவுபடுத்திக் கொண்டு சொன்னார். “பத்திரிக்கை நிருபராய் இருக்காரே அந்தத் தம்பியா?”

 

ஆமாம். அவரே தான். தப்பாய் நினைக்க வேண்டாம். சார் அவரோட குடும்பத்தாரோட இருக்கறப்ப வேற யாரையும் சந்திக்க விரும்பறதில்லை..”

 

கதிரேசனுக்கு தமிழக அரசியல் களத்தின் மூத்த குடும்பமாகக் கருதப்படும்  வாசுதேவனின் குடும்பம் என்றும் புரியாத புதிராகவே இருந்திருக்கிறது. வாசுதேவனின் பிள்ளைகள் ஞானமூர்த்தியும், ராஜாராமும் அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் நேரில் சந்தித்துக் கொள்கையில் இருவரும் மிக ஒற்றுமையாய்த் தான் தோன்றுவார்கள். ராஜாராம் அண்ணனுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தாலும் பொதுவெளியில் அண்ணனுக்கு எதிராக ஒரு வார்த்தை பேசியதில்லை. அதே போல் ஞானமூர்த்தியும் தம்பிக்கு எதிராக எந்தக் கருத்தையும் சொன்னதில்லை. இப்போது இவரும் தம்பி பையனிடம் பேசுவதை ஐந்து நிமிடம் நிறுத்தி கதிரேசனைச் சந்திக்கத் தயாராக இல்லை..

 

விமல் அவனுடன் பேசிக் கொண்டிருந்த துறவி சிறிது நேரம் வாய்மூடக் காத்திருந்தான். அந்தத் துறவி தைத்திரீய உபநிடதம் பற்றி உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தார்.  அவர் பேசியதில் சத்தியமாக அவனுக்கு எதுவும் புரியவில்லை. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசியிருந்தாலே அவனுக்குப் புரிந்திருக்காது. அவரோ ஹிந்தியில் பேசினார். வாய்ப்பு கிடைத்தால் ஹிந்தி சினிமா அல்லது ஹிந்தி சீரியலிலும் நடிக்கும் ஆசை அவனுக்கு இருந்ததால் அவன் ஹிந்தியை நன்றாகப் பேசக் கற்றிருந்தான். அவனுக்கு ஹிந்தியில் சாதாரணப் பேச்சைப் பேசவும், பேசினால் புரிந்து கொள்ளவும் முடியவும். ஆனால் ஹிந்தியின் ஆன்மீகச் சொற்கள் அவனுக்குப் பழக்கமானவை அல்ல. மேலும் அவனுக்கும் ஆன்மீகத்திற்குமே இடைவெளி அதிகம். ஆன்மீகத்தில் இருப்பவர்களிலுமே கூட உபநிடதம் பற்றியெல்லாம் பேசும் ஆட்கள் மிகவும் குறைவு. பேசினால் கேட்பவர்களும் குறைவு என்பதால் தன்னிடம் பேசக் கிடைத்த விமலை அந்தத் துறவி லேசில் விடுவதாக இல்லை.

 

ஒரு சின்ன இடைவெளி கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ள விமல் ஆவலாக இருந்தான். அந்தத் துறவி புதுடெல்லிவாசி. இன்ஸ்பெக்டர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். அவர் பெயர் ராஜ்நாத். அவருடைய ஒரே மகன் குடும்பத்தோடு ஜெர்மனியில் இருக்கிறான். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடுடைய அவர், மனைவி காலமான பிறகு துறவியாகி, விமல் இருக்கும் ஆசிரமத்திற்கு சென்ற வருடம் வந்து சேர்ந்தவர். அவரிடம் அவனுக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது.

 

அவர் களைப்பில் சிறிது நிறுத்தி மூச்சு விட்ட போது அவன் சொன்னான். “சுவாமி. நீங்கள் சொல்வதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை.”

 

அவன் எல்லாவற்றையும் உண்மை என்று சொல்லி விட்டதால் எதைச் சொல்கிறீர்கள் என்று அவர் கேட்கவில்லை. விமல் அவர் அடுத்ததாய் எதையாவது பேச ஆரம்பிப்பதற்கு முன் அவசரமாய்ச் சொன்னான்.  நான் ஒரு சிக்கலில் இருக்கிறேன் சுவாமி

 

சொல்லுங்கள் சுவாமி என்ன சிக்கல்என்று ராஜ்நாத் ஆர்வமாகக் கேட்டார்.

 

விமல் சொன்னான். “நான் குடும்ப வாழ்க்கையில் விரக்தி வந்து துறவியாகி இங்கே வந்திருக்கிறேன். வரும் போது என்னுடைய மொபைல் போனை உடைத்து சிம்மையும் உடைத்து எறிந்து விட்டு வந்தேன். இனி குடும்பத்தில் யாருடனும் பேசவும் எனக்கு விருப்பமில்லை. அந்தப் போனில் நான் பேசினால் அவர்களுக்கு நான் இருக்கும் இடம் தெரிந்து விடும் என்று பயப்பட்டு தான் அதைச் செய்தேன். இப்போது எனக்கு ஒரு சிக்கல்

 

என்ன சிக்கல்?”

 

நான் என் சொத்தையும் பணத்தையும் ஒரு டிரஸ்டுக்கு எழுதிக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். அதை அவர்கள் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆலோசனையை அவ்வப்போது சொல்வதாகவும் தெரிவித்து விட்டு வந்திருக்கிறேன். இப்போது அவர்களிடம் பேச எனக்கு ஒரு போன் தேவைப்படுகிறது.”

 

அதனாலென்ன என் மொபைல் போனைத் தருகிறேன். நீங்கள் அதில் பேசிக் கொள்ளலாம்.”       

 

ஓரிரண்டு முறை பேசுவதானால் நான் உங்கள் மொபைல் போனில் பேசலாம். ஆனால் நான் தந்து விட்டு வந்திருப்பது சுமார் ஏழரை கோடி ரூபாய் என்பதால்  நான் தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனைகள் சொல்ல வேண்டி வரும். அதனால் எனக்கு நிரந்தரமாகவே ஒரு மொபைல் போன் தேவைப்படுகிறது...”

 

ராஜ்நாத்தின் முகத்தில் பிரமிப்பு தெரிந்தது. ஏழரை கோடி சொத்தை தர்மம் செய்து விட்டு வந்திருக்கும் புண்ணியாத்மாவாக அவர் அவனைப் பார்த்தார்.

 

விமல் தொடர்ந்து சொன்னான். “... எனக்கு ஒரு மொபைல் போனும் எண்ணும் வேண்டும். மொபைல் போனையாவது எந்தக் கடையிலாவது வாங்கிக் கொள்ளலாம். ஆனால் புதிய எண்ணை வாங்குவது தான் எப்படி என்று தெரியவில்லை. என் பெயர் விலாசம் தந்தால் என் குடும்பத்தினர் எதிர்காலத்தில் எப்படியாவது அதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. பெயர் விலாசம் தராமல் எப்படியாவது ஒரு மொபைல் சிம் பெற வழி இருக்கிறதா?”

 

(தொடரும்)

என்.கணேசன்