என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, August 13, 2026

சதுரங்கம் 31

 




ர்ஜுனுக்கு அப்பா அம்மாவின் திருமணப் புகைப்படங்கள் ஏன் பத்திரிக்கைகளில் வரவில்லை என்பதற்கும், ஏன் அம்மாவின் திருமணம் பற்றி அம்மாவின் கிராமத்தவர்கள் கூட அறியவில்லை என்பதற்கும் ஒருவழியாக விடை கிடைத்தது. தாத்தா மூத்த மகனின் திருமணத்தை இந்த அளவு எளிமையாய் நடத்தினதற்கு, அரைமனதாகத் திருமணத்திற்குச் சம்மதிக்க வேண்டி வந்ததும் காரணமாக இருந்திருக்குமோ? கோயிலிலேயே எளிமையாய்த் திருமணம் நடத்தியிருக்கட்டும், அவரைப் போன்ற ஒரு பிரபல பிரமுகர் குறைந்த பட்சமாக நெருங்கிய ஐம்பது பேரையாவது கூப்பிட்டிருக்க வேண்டாமோ?

 

அடுத்ததாக இன்னொரு சந்தர்ப்பத்தில் ஞானமூர்த்தி - பானுமதி திருமணத்தைப் பற்றிப் பேசியவர் முன்னாள் முதல்வரும், இன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ரத்தினம். தணிகாச்சலம் முதலமைச்சராக இருந்த சமயத்தில் அவருடைய ஒரே மகனும், இப்போதைய முதலமைச்சருமான சரவணனுடைய திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்தினார். அந்த ஆடம்பரத்தைக் கண்டிக்கும் வகையில் ரத்தினம் பேசியிருந்தார்.

 

மூச்சுக்கு ஒரு முறை தலைவர் பெயரைச் சொல்லும் தணிகாச்சலம், தலைவரின் எந்த  நல்ல உதாரணத்தையும் பின்பற்றுபவர் அல்ல என்பதற்கு இந்தத் திருமணமே சான்று. தலைவர் தன் மூத்த மகனின் திருமணத்தை குமரக்கோட்டம் கோவிலில் எத்தனை எளிமையாக நடத்தினார். வீட்டார் மட்டுமே பங்கு கொண்ட நிகழ்ச்சியாக அது இருந்தது. ஆனால் தணிகாச்சலமோ அம்பானி குடும்பத்திற்குப் போட்டி போட்டு தன் இல்லத் திருமணத்தை நடத்துகிறார். தலைவர் தம் மகனுக்கு ஒரு ஏழை கிராமத்துப் பொண்ணைத் திருமணம் செய்து வைத்தார். ஆனால் தணிகாச்சலமோ பெரிய செல்வந்தரின் மகளை மகனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்.”   

 

அவர் ஒருவர் தான் பானுமதி ஒரு ஏழை கிராமத்துப் பெண் என்ற ஒரு அடையாளத்தையாவது சொன்னார். ஆனால் வேறு யாருமே தலைவரின் மகன் திருமணம் செய்து கொண்ட பெண்ணைப் பற்றிச் சொல்லாததும், பேசாததும், எழுதாததும் தான் அர்ஜுனுக்கு ஆச்சரியமாக இருந்தது. திருமணமான சூட்டோடு அந்தச் செய்தி வெளியிடப்பட்டு இருந்தால் ஞானமூர்த்தியின் மனைவியைப் பற்றிய செய்திகளும் வெளியாகியிருக்குமோ என்னவோ? காலம் கழிந்த பின், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அந்த ஏழைப் பெண்ணைப் பற்றி என்ன சொல்வது என்று விட்டு விட்டார்களோ?

 

சித்தப்பாவின் திருமணப் புகைப்படங்களில் ஒன்றில் அப்பா அம்மா சித்தப்பா சித்தி பாட்டி என ஐந்து பேருமே இருந்தார்கள். அந்தப் புகைப்படத்தை அர்ஜுன் ஆராய்ந்தான். அம்மா வெறுமையுடன் வெறித்துப் பார்ப்பதும், பாட்டி சிறிது சோகத்தோடு இருப்பதும் தெரிந்தது. அப்பா எப்போதும் போல் தான் தெரிந்தார். சித்தப்பா, சித்தி முகங்களில் மகிழ்ச்சி தெரிந்தது.  அம்மா வெறுமையுடன் வெறித்துப் பார்ப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் பாட்டி ஏன் சோகமாய் இருக்கிறாள். தாத்தா இல்லாமல் போனதை நினைத்து வருத்தமா, இல்லை அந்தத் திருமணத்தில் அவளுக்கு விருப்பம் இருக்கவில்லையா?  இந்தக் குடும்ப விஷயங்கள் குழப்புகின்றனவே!

 

நித்யா வந்தவுடன் அவளிடம் சில வேலைகளை பானுமதி சொன்னாள். வழக்கமாக முகத்தில் சலிப்பையும், உதடுகளில் முணுமுணுப்பையும் காண்பிக்கும் நித்யா இன்று சரியென்று தலையசைத்ததோடு தாயை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள். ஒரு கணம் பானுமதிக்கு மனம் நிறைந்து போனது. “என்னடி பாசம் ரொம்பவும் பொங்கி வழியிதுஎன்று சொல்லி மகளைப் பார்த்தாள்.

 

நித்யா அவள் சொன்ன வேலைகளைச் செய்ய ஆரம்பித்தபடியே சொன்னாள். “எனக்கெல்லாம் எப்பவும் பாசம் பொங்கி வழிஞ்சுட்டு தான் இருக்கு. உனக்குத் தான் என் மேல அது இல்லை.”

 

உனக்கென்னடி நான் குறை வெச்சேன்.”

 

எப்ப பாரு வேலை குடுத்துகிட்டே இருக்கே. என் ஃப்ரண்ட் ஸ்னேஹாவோட அம்மா எல்லாம் அவ கிட்ட ஒரு வேலையும் சொல்றதில்லையாம்.”

 

அதெல்லாம் பொண்ணை உதவாக்கரையாக்கற வழி. நாளைக்கு கல்யாணம் ஆனா அவ என்னடி செய்வா? புருஷனுக்கு ஆக்கிப் போட வேண்டாமாடி?”

 

ஏன் அவளே ஆக்கிப் போடணும்?”

 

இதென்னடி கேள்வி? வேற யார் ஆக்கிப் போடணும்?”

 

அவனும் சமைக்க கத்துக்கணும். இப்ப எல்லாம் ரெண்டு பேரும் தானே வேலைக்குப் போறாங்க. அப்பறம் என்ன? ஒரு நாள் அவள் சமைச்சா இன்னொரு நாள் அவன் சமைக்கணும். இல்லைன்னா பாதி வேலையை அவள் செஞ்சா மீதியை அவன் செய்யணும். உன்னை மாதிரி ஆளால தான் ஆணாதிக்கமே இங்கே அதிகமாகுது. நீ ஏன் உன் மகனை இந்த மாதிரி வேலைக்கெல்லாம் கூப்பிடறதில்லை. அவனுக்கு ஒன்னும் சொல்லித் தராமல் வளர்த்திருக்கேன்னு நாளைக்கு உன் மருமகள் வந்து உன்னைத் திட்டப் போறா பாரு.”

 

பானுமதி புன்னகையுடன் சொன்னாள். “நாளைக்கு உன் புருஷனும் வந்து என்னைத் திட்டத்தான் போறான். “எப்படி பொண்ணை வளர்த்திருக்கீங்கன்னு.”

 

அப்படி மட்டும் அவன் திட்டட்டும். அவனை உண்டு இல்லைன்னு ஆக்கிடறேன் பாரு

 

பானுமதி வாய்விட்டுச் சிரித்தாள். அம்மா வாய்விட்டு சிரித்ததை நித்யா ஈரக்கண்களுடன் பார்த்தாள். அதை பானுமதி கவனிக்கவில்லை.  அவள் மனம் மகள் திருமணமாகிப் போனால் இந்த வீடு எப்படி இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தது. ஆனால் மகள் இல்லாமல் இந்த வீட்டை அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அன்பும், பாசமும், வாய்த்துடுக்கும், கலகலப்பும் கொண்ட நித்யாவால் தான் இந்த வீடு நிறைவாக இருக்கிறது. மகள் திருமணமாகிப் போனாலும் ஞானமூர்த்தி பெரிதாகப் பாதிக்கப்பட்டு விடமாட்டார். ஆனால் அர்ஜுன் தாங்க மாட்டான். அவன் அவள் மீது உயிரையே வைத்திருக்கிறான்.

 

சில சமயங்களில் அண்ணன் தங்கையின் நெருக்கம் பானுமதியைப் பயப்படுத்துவதுண்டு. வயதுக்கு வந்த ஒரு பெண், அண்ணனே ஆனாலும் மிக நெருங்கிப் பழகுவது சரியல்ல என்று அவள் நினைக்கிறாள். ஆனால் அதை அவள் வாய் விட்டுச் சொல்ல வழியில்லை. சொன்னால் நித்யா பத்ரகாளியாகி விடுவாள். அவளிடம் வாதம் செய்து ஜெயிக்க முடியாது. அதனால் தான் அண்ணன் தங்கை பேச்சு அதிகமாவது போல் தெரிந்தால் அவள் நித்யாவை அழைத்து ஏதாவது ஒரு வேலை தருகிறாள். அவள் குழந்தைகள் மீது அவளுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் ஒரு எல்லைக்குள் இருப்பதே அனைவருக்கும் நல்லது...

 

அர்ஜுன் இன்று அதிகாலை போனவன்  ஒரு மணி நேரத்திற்கு முன் தான் வந்தான். வந்தவுடன் அண்ணனும் தங்கையும் ஏதோ ரகசியம் பேசுவது தெரிந்தது. என்ன பேசுவார்களோ?

 

சோதாவின் அலைபேசி இசைத்தது. அதிகமாக அவளை அழைத்துப் பேசுபவர்கள் இரண்டே பேர் தான். ஒருவர் அவளுடைய தம்பி கேசவன். இன்னொருத்தி அவளுடைய அண்ணன் மகள். இப்போது அழைப்பது யார் என்று பார்த்தாள். கேசவன்.

 

ஹலோ

 

அக்கா, கேசவன் பேசறேன். எப்படி இருக்கே?”

 

”82 வயசுல எப்படிடா இருப்பேன்? உடம்புல தெம்பு இல்ல. மனசுலயும் பலம் இல்லை. எப்படியோ காலத்தை ஓட்டறேன்... நீ எப்படிடா இருக்கே?”

 

நீயாவது தேவலை. எனக்கு 74 லுலேயே ஏகப்பட்ட சிக்கல். நேத்து நம்ம குலதெய்வம் கோயிலுக்குப் போயிட்டு வந்தேன். அங்கே நம்ம கிராமத்து மாடசாமியப் பாத்தேன்... அவர் உன்னையெல்லாம் விசாரிச்சார்.... அப்ப அவர் ஒன்னு சொன்னார்.... ஆச்சரியமாயிருந்துச்சு. முந்தாநாள் யாரோ இன்சூரன்ஸ் ஏஜெண்டுன்னு சொல்லிகிட்டு கிராமத்துக்கு வந்தானாம். நம்ம கிராமத்து மகுடபதி எதோ இன்சூரன்ஸ் செஞ்சு வெச்சிருக்கார். அவருக்கு வர வேண்டிய பணம் இருக்குன்னு சொன்னானாம்....”

 

மகுடபதி இன்சூரன்ஸ்ங்கற வார்த்தையைக் கூடக் கேள்விப்பட்டிருக்க மாட்டானேடா..”

 

அதனால தான் எனக்கு ஆச்சரியமாய் இருந்துச்சு. மகுடபதி பொண்ணைப் பத்தியெல்லாம் விசாரிச்சானாம். மாடசாமிக்கு ஒன்னும் தெரிஞ்சிருக்கலை. அதனால தெரியாதுன்னுட்டாராம். “உங்களுக்கெதாவது தெரியுமா?”ன்னு என் கிட்ட கேட்டார். நான் தெரியாதுன்னு சொல்லிட்டு அந்த இன்சூரன்ஸ் ஆள் பார்க்க எப்படி இருந்தான்னு கேட்டேன். அவர் சொன்ன அடையாளத்தை எல்லாம் பார்த்தா, வந்தவன் உன் பேரன் மாதிரி தான் தெரியுது. அதை உன் காதுலயும் போட்டு வைக்கலாம்னு தான் போன் செஞ்சேன்...”

 

யசோதாவின் முகம் இருண்டது.


(தொடரும்)

என்.கணேசன்

 




Monday, August 10, 2026

ரட்சகன் 4

 


ப்சல்கான் அனுப்பிய தகவல் மூன்று நாட்கள் கழித்து, நான்கு ஆட்களைக் கடந்து, அவன் சார்ந்த இயக்கத் தலைவர் அகமது அன்சாரியை வந்தடைந்தது.  ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இரண்டு நாடுகளின் எல்லைப்பகுதியில் ஒரு மறைவிடத்தில் வசித்து வரும் அவர் முதலில் அந்தக் கடிதத்தைப் படித்தார். அந்தக் கடிதத்தில் இருக்கும் கையெழுத்து அப்சல்கானினுடையது அல்ல என்பதை அவர் நன்றாக அறிவார். ஆனாலும் அந்தத் தகவல் அனுப்பியவன் அப்சல்கான் என்பதில் அவருக்குச் சந்தேகம் இல்லை. இப்படி குறிப்பாகவும், சுருக்கமாகவும், ஒற்றை வரியில் ஆலோசனை சொல்வதில் அவனுடைய முத்திரை பலமாக இருக்கிறது.

 

அவருக்கும் தங்கள் இயக்கத்திற்குச் சம்பந்தமல்லாத எதைப் படிப்பதிலும் ஆர்வம் கிடையாது என்பதால் முழுவதுமாக அந்த வாரப் பத்திரிக்கையில் பதினாறாம் பக்கக் கட்டுரையை படிக்க அவர் முனையவில்லை. அந்தக் கட்டுரையை அவர் மேலோட்டமாகப் படித்தார். அதிலேயே அப்சல்கான் எதைச் சுட்டிக்காட்டுகிறான் என்பது அவருக்குப் புரிந்து விட்டது. படித்து முடித்த பின் அவர் நீண்ட நேரம் ஆலோசித்தார்..

 

காலம் நிறையவே மாறிவிட்டது.  ஒரு காலத்தில் அவர்களைப் பார்த்து அச்சப்பட்டவர்கள் இப்போது அந்த அச்சத்திலிருந்து விலகி விட்டார்கள். உலக நாடுகள் கிட்டத்தட்ட அனைத்துமே அவர்களுக்கு எதிராகத் திரும்பி விட்டன. அவர்களை அழிக்கவும், ஒடுக்கவும் உலகநாடுகள் கரங்களைக் கோர்த்துக் கொள்ள ஆரம்பித்து விட்டன. ஒரு காலத்தில் மென்மையான அணுகுமுறையைக் காட்டிய இந்தியா இன்று துணிந்து அடக்குமுறையைக் காட்டுகிறது.  ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் கூட அவர்களுடைய இயக்கத்தினர் இப்போது பாதுகாப்பாக இருக்க முடிவதில்லை.

 

இதை மாற்ற அவர்கள் ஏதாவது செய்தேயாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய இயக்கத்தின் உபதலைவன் இந்தியச் சிறை ஒன்றில் அடைபட்டுக் கிடப்பது இயக்கத்துக்கு அவமானம் தான். அவனைத் தூக்கிலிட்டால் அது நிரந்தர அவமானமாக இருந்து விடும். ஏதாவது செய்து அவனைக் காப்பாற்றினால் தான் அவர்களுக்குப் பணம் தந்து ஆதரிப்பவர்கள் தொடர்ந்து ஆதரிப்பார்கள். பணம் தந்து ஆதரிப்பவர்கள் அவர்கள் மீது நம்பிக்கையை இழந்து விட்டால் பின் அவர்கள் பணம் மற்றும் ஆயுத உதவி செய்வதும் படிப்படியாக நின்று விடும். அதனால் உருப்படியாக எதாவது செய்யாமலிருப்பது தற்கொலை செய்வதற்கு இணையானது. கண்டிப்பாக எதாவது செய்து அப்சல்கானை அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வைக்க வேண்டும். அது முடியாது என்பது தான் யதார்த்த நிலைமை.

 

முன்பெல்லாம் விமானம் கடத்துவது போன்ற நடவடிக்கைகள் அவர்களைப் போன்ற இயக்கங்களுக்கு பயணிகளை பணயக்கைதிகளாக்கி அரசாங்கத்திடம் பேரம் பேச உதவியாக இருந்தன. ஆனால் இப்போது விமானப் பயணத்தில் கெடுபிடிகள் அதிகமாகி விட்டன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு விட்டது. அரசியல் தலைவர்கள் போன்ற முக்கியஸ்தர்களைக் கடத்தவும் வாய்ப்பு சுத்தமாக இல்லை. அரசியல் தலைவர்கள் பலமடங்கு பாதுகாப்போடு இருக்கிறார்கள். ராஜேஷ்வர் போன்ற பெரும்பணக்காரர்களின் ஆதரவும் தயவும் ஆளும் கட்சிக்கும், அரசாங்கத்திற்கும் மிக முக்கியம். அதனால் அவர்களையோ அவர்கள் குடும்பத்தினரையோ கடத்தினால் அதன் மூலமும் அரசாங்கத்தைப் பணிய வைக்க முடியும். ஆனால் அவர்களோ அரசியல்வாதிகளை விட மூன்று மடங்கு பாதுகாப்பை தனியார் பாதுகாவலர் மூலம் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து ஒரு விதிவிலக்கு இருக்கிறது என்று தான் அப்சல்கான் சுட்டிக் காட்டி இருக்கிறான்.    

 

அப்சல்கானின் ஆலோசனையை எந்த அளவு செயல்படுத்த முடியும் என்பதையும், அது எந்த அளவு பலன் தரும் என்பதையும் அகமது அன்சாரியால் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. நிலைமையைத் தெளிவுபடுத்த முடிந்த ஒருவன் மும்பையில் பிரபல பத்திரிக்கையில் வேலை பார்க்கிறான். அவர்கள் இயக்கத்திற்கு பல முக்கியத் தகவல்களைத் தந்து கொண்டிருக்கும் நம்பிக்கைக்குரிய ஆள் அவன்.. அவனுக்கு அங்கேயுள்ள நிலைமை துல்லியமாகத் தெரியும். அவனை வரவழைத்துக் கேட்க அகமது அன்சாரி முடிவு செய்தார். இது போன்ற விஷயங்களை அலைபேசியிலேயே கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும் என்றாலும், இரண்டு காரணங்களுக்காக அவர் அதைத் தவிர்த்தார். முதலாவது, இது போன்ற பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்படலாம். பேசிய எண்கள் கண்காணிக்கப்படலாம். பேசும் இடங்கள் தெரிய வரலாம். இரண்டாவது, அலைபேசியில் பேசும் போது வார்த்தைகளும், தொனியும் மட்டுமே கேட்கக் கிடைக்கும். நேரில் பேசும் போது கண்கள், முகபாவனை, அசைவுகள் எல்லாம் கூட கூடுதலாகத் தகவல்கள் சொல்லும். ’வீடியோ கால்பயன்படுத்தினால் கூட அது நேரில் பார்த்துப் பேசுவதற்கு இணையாகாது என்பதால் அந்த ஆளை அகமது அன்சாரி அவனை நேரில் வரச் சொன்னார்.

 

அவனும் மறுநாள் நேரில் வந்தான். அப்சல்கானின் கடிதம் மற்றும் உமன்ஸ் வர்ல்டு கட்டுரை பற்றி அவனுக்குத் தெரிவித்த அகமது அன்சாரி அவனிடம் கேட்டார். “அப்சல்கானுடைய ஆலோசனை பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

 

அவன் வெளிப்படையாகச் சொன்னான். “அவர் துருப்புச்சீட்டாக நிர்ப்பயாவை நினைத்திருந்தால் அவர் சொல்லும் திட்டம் கைகூடப் போவதில்லை. ஏனென்றால் சொத்தையெல்லாம் துறந்து நிர்ப்பயா வந்திருந்தாலும் அவளுக்கு இருக்கும் பாதுகாப்பை ராஜேஷ்வர் திரும்பப் பெற்று விடவில்லை. வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் அவளை ரகசியமாய் ஒரு தனிப்படை காவல் காத்து வருகிறது. அதை மீறி அவளைக் கடத்துவது முடியாத காரியம். ”

 

இது அப்சல்கானுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்களுடைய திருமணம் முடிந்து சில காலம் கழித்து தான் அப்சல்கான் சிறை சென்றான். அதனால் அவன் நினைக்கும் அடுத்த துருப்புச் சீட்டாக நிர்ப்பயாவின் இரண்டு வயதுக் குழந்தை இருக்க வாய்ப்புண்டு..

 

அகமது அன்சாரி கேட்டார். “அந்தக் குழந்தை....”

 

அந்தக் குழந்தைக்கும் கூட அவர்களது பாதுகாப்பு இருக்கிறது. அந்தக் குழந்தையை ராஜேஷ்வர் குடும்பத்தினர் இதுவரைக்கும் வந்து பார்த்தது கூடக் கிடையாது. ஆனாலும் அந்தக் குழந்தை கடத்தப்படும் வாய்ப்பு இருப்பதை ராஜேஷ்வர் உணர்ந்தே இருக்கிறார். அதை அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது.”

 

அந்தக் குழந்தை பிறந்த பின்னும் ராஜேஷ்வர் குடும்பம் மகளுடன் வந்து ஒட்டிக் கொள்ளவில்லை என்று அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை படித்து விட்டு அப்சல்கான் என்ன நினைத்தானோ தெரியவில்லை. அந்தக் குழந்தைக்கும் கூட இப்படி கடும் பாதுகாப்பு இருப்பது அப்சல்கானுக்குத் தெரியுமா தெரியாதா என்று அகமது அன்சாரியால் யூகிக்க முடியவில்லை.

 

அடுத்து மிஞ்சியிருப்பது நிர்ப்பயாவின் கணவன் தான். அகமது அன்சாரி கேட்டார். “அப்சல்கான் சொல்லும் துருப்புச்சீட்டு நிர்ப்பயாவின் கணவன் யுவராஜாக இருந்தால்? அவன் பாதுகாப்புக்கும் ராஜேஷ்வரின் காவல் படை இருக்கிறதா?”

 

இல்லை. அதனால், அவன் ஐ.பி.எஸ் அதிகாரியானாலும், அவனைக் கடத்துவது கஷ்டமில்லை.  ஆனால் ராஜேஷ்வர் மருமகனாக அங்கீகரிக்காத ஆளைக் கடத்துவதன் மூலம் நாம் அவரிடம் எந்தக் காரியத்தையும் சாதித்துக் கொள்ள முடியாது.”

 

இதே அபிப்பிராயம் தான் அகமது அன்சாரிக்கும் இருந்தது. யுவராஜைக் கடத்துவது ஒருவிதத்தில் ராஜேஷ்வருக்கு உதவுவது போல் தான். அவருடைய மகள் வாழ்க்கையிலிருந்து அவனை விலக்கினால், அவளுக்கு அவர் விருப்பப்படி வேறு  ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர முடியும்.   அதனால் யுவராஜை அப்புறப்படுத்துவதை அவர் வரவேற்கவும் செய்யலாம்.

 

அப்சல்கான் யாரைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தச் சொல்கிறான் என்று நீ நினைக்கிறாய்? எது நமக்கு அனுகூலமாக இருக்கும்?””

 

அந்தக் குழந்தையையோ, யுவராஜையோ தான் பயன்படுத்த அவர்  நினைத்திருக்கலாம். ஆனால் அந்தக் குழந்தையைக் கடத்த வாய்ப்பில்லை. யுவராஜைக் கடத்தி பலனில்லை..”

 

அவன் சொல்வது உண்மை தான். அவர் அவனை அனுப்பி விட்டார். இனி என்ன முடிவெடுப்பது என்று அவர் ஆழமாக யோசித்தார். பலனில்லாத சாகசத்தால் அவமானம் நிச்சயம். அதே நேரத்தில் செயலற்று இருப்பதும் அவமானம் தான். எதைத் தேர்ந்தெடுப்பது? முயற்சி எடுக்கா விட்டால் வெற்றி சாத்தியமே அல்ல; நூறு சதவீதம் தோல்வி நிச்சயம். முயற்சி எடுத்தால் சிறிதளவாவது வெற்றிக்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் முட்டாள்த்தனமாக இருந்தாலும் கூட முயற்சி எடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் அவர்களுடைய இயக்கம் இருக்கிறது...


(தொடரும்)

என்.கணேசன்





 

Thursday, August 6, 2026

சதுரங்கம் 30

 


விமலுக்கு இனி அடுத்த வேலை எதிரியோடு தான். எதிரி என்று சொல்வது கூட ஒரு விதத்தில் தவறு தான். .டி.எம் மெஷின் என்றோ, அள்ளித் தர முடிந்தவன் என்றோ தான் சொல்ல வேண்டும். அவனிடம் பேசுவது தான் விமல் அடுத்த செய்ய வேண்டிய காரியம். ஆனால் இப்போது பேசுவது ஆபத்து. பேசினால் அவன் ரிஷிகேசத்திற்குச் சென்று சேர்வதற்குள் பிடிபட்டு விட வாய்ப்பு இருக்கிறது. அவன் பேசிய சிறிது நேரத்திற்குள் ராஜாசிங்கை போலீஸ் நெருங்கிவிடும். ராஜா சிங்கும், சோனா ஓட்டல் ஆட்களும் அவனை நினைவுபடுத்த முடிந்த காலம் கழிய வேண்டும். அவன் தோற்றத்தைச் சொல்லி போலீஸ் யாரையும் விசாரித்து எதையும் தெரிந்து கொள்ள முடிந்த காலம் கழிய வேண்டும். அதுவரை காத்திருப்பது தான் புத்திசாலித்தனம். இதில் அவசரப்படுவது மரணத்திற்கு அவசரப்படுவது போல் ஆகிவிடும். விமல் முடிந்த அளவு இந்த உலக சுகங்கள் அனைத்தையும் அனுபவித்து விடுமளவு ஆயுளோடு இருக்க ஆசைப்படுகிறான்.

 

இந்த அலைபேசி சரியாக வேலை செய்கிறதா என்று அவன் சோதித்துப் பார்க்க வேண்டும். தெரிந்த யாருக்கும் போன் செய்வதும் ஆபத்து. பிறகு யாருக்குப் போன் செய்வது என்று அவன் ஆலோசித்துக் கொண்டே நடந்த போது எதிரே ஒரு பிரம்மாண்டமான விளம்பரப்பலகை தென்பட்டது. “ரூ.1.10 கோடி முதல் 2.45 கோடி வரை பட்ஜெட்டில் அதிநவீன ஃப்ளாட்டுகள், ஜிம், டென்னிஸ் கோர்ட், ஸ்விம்மிங் பூல் வசதிகளுடன்…. இன்றே புக் செய்ய அழைக்கவும்….” என்று ஒரு அலைபேசி எண்ணைத் தந்திருந்தார்கள்.

 

விமல் புன்னகைத்தான். இந்த அலைபேசியில் முதல் அழைப்பாக, கோடிக்கு மேல் விலைமதிப்புள்ள ஒரு வியாபார விஷயத்தைப் பற்றிப் பேசுவது நல்ல சகுனமாக இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. அதிர்ஷ்டம் அவனுக்கு அனுகூலமாக இருந்தால் இனிமேல் எப்போதும் கோடி ரூபாய்க்குக் கீழ் பேசுகின்ற நிலைமையே அவனுக்கு வராது…. இந்த எண்ணத்துடன் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டான்.

 

நுனிநாக்கு ஆங்கிலத்தில் ஒருவர் பேசினார். அவரிடம் தன்னை நானாஜி தேஷ்முக் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தனக்கும் ஒரு ஃப்ளாட் தேவைப்படுவதாக அவன் சொன்னான். பணம் எத்தனை வெள்ளையிலேயே தந்தாக வேண்டும் என்று கேட்டான். ”நீங்கள் நேரில் வாருங்கள், பேசுவோம். அட்வான்ஸாக பத்து லட்சம் தந்தால் போதும்….” என்று பவ்யமாக பதில் வந்தது. அடுத்த வாரம் வருவதாகச் சொல்லி பேச்சை முடித்துக் கொண்டான். அலைபேசி வேலை செய்கிறது.  இப்போதைக்கு முதல் வேலை வெற்றிகரமாக முடிந்து விட்டது.

 

ர்ஜுன் வீட்டுக்கு வந்து ரகசியமாக நித்யாவிடம் தன்னுடைய அத்திவாக்கப் பயணத்தைப் பற்றிச் சொன்னான். மகுடபதிரங்கநாயகி தம்பதியரின் தற்கொலையைப் பற்றி அவன் சொன்ன போது அவள் முதலில் அதிர்ச்சி அடைந்தாள். பின் கண்கலங்கினாள். குரல் தழுதழுக்க அண்ணனிடம் சொன்னாள். “கேட்டுட்டு நமக்கே மனசு அதிருதே. அம்மா அந்த சமயத்துல எப்படியண்ணா அதைத் தாங்கி இருப்பாங்க?”

 

தங்கையை அர்ஜுன் மிகுந்த பாசத்துடன் பார்த்தான். அவளுடைய பேச்செல்லாம் சில சமயங்களில் அடாவடியாக இருக்குமே ஒழிய அவள் மனம் மிக மென்மையானது. யார் கஷ்டப்படுவதையும் அவள் தாங்க மாட்டாள். அதிலும், அவளுடைய அம்மா, அப்பா, அண்ணன் மூவருக்கும் சின்னதாக எதாவது கஷ்டம் வந்தாலும் அவளால் தாங்க முடியாது.

 

ஏன் அவங்க தற்கொலை பண்ணியிருப்பாங்கண்ணா?”

 

தெரியலை. நமக்குப் புரியாத நிறைய புதிர்கள் இதில் இன்னுமிருக்கு. நம்ம தாத்தாவோட பெரிய ஃபோட்டோ மாடசாமி வீட்டில் இருக்கு. தாத்தாவோட அரசியல் வாழ்க்கை பற்றியும் நிறைய பேசறார். நம்ம அப்பா, சித்தப்பா பற்றியும் பேசறார். ஆனா அவருக்கு அவரோட அபிமான அரசியல் தலைவரோட மனைவி மட்டுமல்ல, மூத்த மருமகளும் கூட அவரோட கிராமத்தைச் சேர்ந்தவங்கன்னு தெரியல.  தற்கொலை செஞ்சுட்டு இறந்து போன மகுடபதி அவரோட தலைவரோட சம்பந்தின்னு தெரியல…. தாத்தா வாசுதேவன் அவரோட மாமியார் வீட்டுக்குப் போயிட்டு இருந்த காலங்கள்ல, தாத்தா மகுடபதி அவரைச் சந்திக்கலைன்னு மாடசாமி சொல்றார். நான் முதல்ல நம்ம அப்பா, அம்மாவைச் சந்திச்சது அந்தக் கிராமத்துக்குப் போய்ட்டு வந்துகிட்டு இருந்த சமயத்துல இருக்கும்னு நினைச்சேன். ஆனால் அப்பா, சித்தப்பா எல்லாம் அங்கே அதிகமாய் போனதில்லைன்னு அவர் சொல்றார்…”

 

பார்த்துப் பிடிச்சுப் போறதுக்கு பல தடவை சந்திக்கணும்னு இல்லையே. ஒரே தடவைல கூடப் பிடிச்சுப் போலாமில்லையா?”

 

அது சரி தான். ஆனால் அப்படிப் பிடிச்சுப் போனா திரும்பவும் பார்க்கணும்னு அடிக்கடி போயிருப்பார் தானே. அது நடக்கலைங்கறேன்.”

 

நித்யா சிறிது யோசித்து விட்டுச் சொன்னாள். “எனக்கு ஒன்னு புரியலை அண்ணா. அந்தப் பெரியவர் மாடசாமிக்கு நம்ம அம்மா பெயர் கூட ஞாபகம் இல்லை. நம்ம அம்மா என்ன ஆனாங்கன்னு தெரியலை. தலைவரோட மூத்த மருமகள் தான் நம்ம அம்மான்னு தெரியலைங்கறது எல்லாம் எங்கேயோ இடிக்குதே அண்ணா. நம்ம அம்மா அப்பா கல்யாண காலத்தில் தாத்தா எதிர்க்கட்சித் தலைவர். எதிர்க்கட்சித் தலைவரோட முதல் மகன் கல்யாணம் நடக்கறது பத்திரிக்கைகள்ல ஃபோட்டோவோட வராமயா இருந்திருக்கும். கல்யாணத்துக்கு மாடசாமி போகலைன்னே வெச்சுக்குவோம்., பத்திரிக்கைகள்ல அம்மா ஃபோட்டோவைப் பார்த்தப்ப தெரியாமயா போயிருக்கும்.? பத்திரிக்கைகள்ல பார்த்து அந்தக்  கிராமவாசிகள்ல ஒருத்தர் கூடவா கண்டுபிடிக்காமல் இருந்திருப்பாங்க? கண்டுபிடிச்சிருந்தால் பேசியிருப்பாங்களே.”

 

அவள் சொல்வதும் சரி தான். அர்ஜுன் சொன்னான். “மற்ற கிராமவாசிகளை விடு. பாட்டியோட அண்ணா தம்பிகள் எல்லாம் அதே கிராமத்துல தான் அப்ப இருந்தாங்க? பாட்டியோட அப்பா மட்டும் தான் அப்ப இறந்திருந்தார்னு நினைக்கறேன். அவங்கள்ல்லாம் கல்யாணத்துக்கு வந்து போயிருப்பாங்க. அவங்களும் அதைப் பற்றிப் பேசாமயா இருந்திருப்பாங்க?”

 

இருவரும் பரபரப்புடன் இணையத்தில் பழைய பத்திரிக்கைக்குறிப்பு, அல்லது திருமணப்படங்கள் எதாவது இருக்கிறதா என்று தேடினார்கள். அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. நித்யாவை அம்மா எதோ வேலையாக அழைத்தாள்.

 

போகும் முன்நீ தேடிப் பாருண்ணா. கண்டுபிடிச்சுச் சொல்லு. தெரிஞ்சுக்காம நான் தூங்கப் போக மாட்டேன்….” என்று நித்யா சொல்லிவிட்டுப் போனாள்.

 

பழைய ஆட்கள் யாரிடமாவது கேட்கலாம் என்றால் அவனுடைய குடும்ப விஷயம் அவனுக்கே தெரியாமல் அவன் கேட்கிறான் என்று ஆகிவிடும். பாட்டியிடமும், ராஜாராமிடமும் கேட்பதிலும் அது தான் பிரச்சினை. அவனுடைய அப்பா, அம்மாவிடம் அவனால் நேரடியாகக் கேட்க முடியவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது போல் ஆகிவிடும். அவன் அதை விரும்பவில்லை.

 

இணையத்தில் தேடிய போது ராஜாராமின் திருமணப் புகைப்படங்கள் நிறைய கிடைத்தன. அப்போதைய முதல்வர் தணிகாச்சலம், அமைச்சர் ரத்தினம் (பின்னாள் முதல்வர்) அனைவரும் பங்கு பெற்றிருந்தார்கள். தந்தை இல்லாததால் அவர் ஸ்தானத்தில் நின்று ஞானமூர்த்தி தான் தம்பியின் திருமணத்தை நடத்தியிருந்தார். அக்காலத்தில் அப்பா, அம்மா, பாட்டி, சித்தப்பா, சித்தி எல்லாரும் எப்படி இருந்தார்கள் என்று ஆர்வத்துடன் அந்தப் புகைப்படங்களை அர்ஜுன் பார்த்தான்.

 

ராஜாராமின் திருமணப்படங்கள் பத்திரிக்கைகளில் கிடைத்தது போல ஏன் ஞானமூர்த்தி-பானுமதியின் திருமணப்படங்கள் கிடைக்கவில்லை என்ற கேள்விக்கு அன்றைய முதல்வர் தணிகாச்சலம் அன்று பேசியதில் அர்ஜுனுக்குப் பதில் கிடைத்தது.

 

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் தலைவர் உயிரோடு இல்லையே என்கிற வருத்தம் என் இதயத்தை அழுத்துகிறது. ஆனால் தலைவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தத் திருமண விழா இவ்வளவு சிறப்பாக நடந்திருக்க வழியில்லை என்பதையும் நான் சொல்லியாக வேண்டும். தலைவர் குடும்பத்தில் நடக்கும் இரண்டாவது திருமணம் இது. ஆனால் மூத்த மகன் திருமணத்தின் போது அவர் உயிரோடு இருந்தார். சொல்லப்போனால் அந்தத் திருமணத்தில் அவர்கள் குடும்பம் மட்டுமே இருந்தது. திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதில் தலைவருக்கு உடன்பாடில்லை. அந்தத் திருமணத்தை குமரக் கோட்டத்தில் மிக மிக எளிமையாக நடத்தி முடித்து விட்டு வந்த பின் தான் அவர் எங்களுக்கே தெரிவித்தார். நான் அதற்காகத் தலைவரிடம் நன்றாக சண்டை போட்டிருக்கிறேன். அவருடைய தம்பிகளான எங்களையாவது அழைத்திருக்க வேண்டாமா என்று அழாத குறையாகக் கேட்டிருக்கிறேன். திருமணத்திற்குச் செல்ல முடியாத நானும் மற்ற தலைவர்களும் பின்பு அவர் வீட்டுக்குப் போய் தான் மணமக்களை வாழ்த்திவிட்டு வந்தோம்….”    

 

(தொடரும்)

என்.கணேசன்