என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, August 3, 2026

ரட்சகன் 3


 

ரு வக்கீல் தன் கட்சிக்காரனைக் காப்பாற்றுகிறானோ இல்லையோ, முதலில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று நம்புபவர் காளிதாஸ். அதனால் அவர் பிரச்சினை இல்லாததும், அபத்தமானதும் போல் தோன்றும் அந்தச் சிறு கோரிக்கையை எப்படி நிறைவேற்றுவது என்று யோசித்தார். நேரடியாக அலைபேசியில் அழைத்து அப்சல்கான் சொன்னதை அவன் ஆளிடம் சொல்ல ஒரு நிமிடம் கூட ஆகாது. மேலோட்டமாகப் பார்த்தால்  ஒரு கட்டுரையைப் படிக்கச் சொன்னதைத் தெரிவிப்பதில் அவருக்கு எந்தப் பிரச்சினையும் சட்டப்படி வந்துவிட முடியாது.  ஆனால் பெரிய பிரச்சினை ஒன்று உருவானால் போலீசார் கண்டிப்பாக மேலோட்டமாகப் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ள மாட்டார்கள். அதுவும் இந்தியாவில் முதல் பணக்காரராகவும், ஆசியாவில் இரண்டாவது பணக்காரராகவும், உலக அளவில் எட்டாவது பணக்காரராகவும் இருக்கும் ராஜேஷ்வர் குடும்பம் சம்பந்தப்படும் விஷயம் எதுவும் மேலோட்டமாக பார்த்து கடந்து போகப்பட சாத்தியமேயில்லை. அரசாங்கம் அலறிக் கொண்டு போலீசாரை முடுக்கிவிடும் சாத்தியம் தானிருக்கிறது. போலீசார் உச்ச வேகத்தில் முழுமூச்சாக இறங்குகையில், காளிதாஸ் அழைத்துப் பேசிய ஒரு போன்கால் அவர்கள் கவனத்திற்கு வராமல் போக வாய்ப்பேயில்லை.

 

அதனால் என்ன செய்வது என்று காளிதாஸ் மூளையைக் கசக்கிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தார். உண்மையில் அப்சல்கானின் இயக்கத்தின் ஆட்கள் யாரையும் அவர் சந்தித்தது கிடையாது. அப்சல்கான்என் ஆள்என்று சொன்னது கூட அவன் சார்ந்திருக்கும் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் கிடையாது. காளிதாஸை சந்திக்க வந்தஅவன் ஆள்உண்மையில் ஒரு எடுபிடி அல்லது கூலிக்காரன். அவன் ஏதோ பொதுநல அமைப்பின் பெயரில் இயங்கி வரும் கைக்கூலி. லெட்டர்பேடில் மட்டுமே இயங்கும் அமைப்பு அது. அவ்வப்போது அறிக்கை விடுவதற்கும், இது போல் முக்கியஸ்தர்களுக்காக தூதுவனாக, தகவல் கொண்டு வருபவனாக மட்டுமே அவன் பயன்படுபவன்.

 

அப்சல்கானுக்காக வாதாட வேண்டும் என்ற கோரிக்கையோடும், பணத்தோடும் வந்து பேசிய அந்த ஆள் அவர் வீட்டுக்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் தான் வசிக்கிறான். ஆனால் அவனை நேரில் சந்திப்பதும், அலைபேசியில் அழைப்பதும் கூட ஆபத்து. அந்த ஆளின் அலைபேசி ஏற்கெனவே உளவுத் துறையால் கண்காணிக்கப்பட்டு கொண்டு கூட இருக்கலாம். என்ன செய்வது என்று யோசித்த காளிதாஸ் முடிவில் எளிமையான ஒரு தீர்வுக்கு வந்தார்.

 

ஒரு வெற்றுத் தாளை எடுத்து இடது கையில் எழுதினார்.

இந்த வார உமன்ஸ் வர்ல்டில் பதினாறாம் பக்கத்தில் உள்ள கட்டுரையைப் படிக்கவும்.

அப்சல்கான்

அந்த வெற்றுத் தாளை ஐந்து ரூபாய் தபால் உறையில் ஒட்டி உறையில் அந்த எடுபிடி ஆளின் விலாசத்தையும் இடது கையிலேயே எழுதி ஐந்து கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஒரு தபாலாபீசின் தபால் பெட்டியில் போட்டு விட்டு வந்தார். இந்தக் கடிதம் அந்த ஆளுக்கு நாளைக்குக் கிடைத்து விடும். என்னவோ செய்து தொலையட்டும். அவர் அப்சல்கான் சொன்னதை எழுத்து மூலமாகத் தெரிவித்து விட்டார். அவன் எவ்வளவு பணம் தந்தாலும் இதற்கு மேல் அவர் எதுவும் செய்வதற்கில்லை.

 

காளிதாஸ் அனுப்பிய அந்தத் தபால் விலாசதாரருக்கு மறுநாளே போய்ச் சேர்ந்தது. அனுப்புனர் விலாசம் இல்லாமல் வந்த அந்தத் தபாலை அந்த ஆள் சுவாரசியமில்லாமல் பார்த்தான். அதைப் பிரித்துப் படித்தவுடன் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. அந்தக் கடிதம் அப்சல்கான் அனுப்பியதாக இருக்கக்கூடும் என்று அவன் நம்பவில்லை. அவன் அறிந்த அப்சல்கான் பைத்தியக்காரத்தனமாக இதைப் போல் எழுதி அனுப்பக் கூடியவன் அல்ல. ஒரு பேரியக்கத்தின் துணைத்தலைவனான அப்சல்கான் அவனைப் போன்ற ஒரு கடைநிலைக் கூலிக்காரனை ஒரு கட்டுரை படிக்கச் சொல்லி வலியுறுத்துவானா? யாரோ அவன் பெயரில் விளையாடுகிறார்கள்....

 

ஆனால் விளையாட்டானாலும் அதையும் தெரிவிப்பது அவனுடைய கடமை. அதை எப்படிக் கையாள்வது என்று இயக்கம் முடிவு செய்து கொள்ளும்.. விளையாட்டானால் அதற்கு என்ன தண்டனை என்று யோசித்து தக்க தண்டனை கொடுக்கும் இயக்கம், அது எதாவது சங்கேத மொழியாக இருந்தால் அதையும் கண்டு கொண்டு அந்தத் தகவலைப் பயன்படுத்திக் கொள்ளும். அதைப் புரிந்து கொள்ள அவன் முயற்சிப்பது அனாவசியம். அவனுடைய சிற்றறிவுக்கு சூட்சுமங்கள் எட்டாது என்பதைத் தாண்டி, எதையும் அவனாகப் புரிந்து கொண்டு இயங்க அவனுக்கு அறிவுறுத்தல் இல்லை. அதனால் அவன் உமன்ஸ் வர்ல்டு என்ற பத்திரிக்கையை வாங்கவோ, அதில் பதினாறாம் பக்கத்தில் இருக்கும் கட்டுரையைப் படிக்கவோ துளியும் ஆர்வம் காட்டவில்லை.

 

அவன் அந்தக் கடிதத்தை அலைபேசியில் படம் எடுத்து வேறொரு நபருக்கு அனுப்பி வைத்தான். 

 

மென்ஸ் வர்ல்டு பத்திரிக்கையில் வந்த கட்டுரையைப் படித்து விட்டு யுவராஜைப் பலர் அழைத்து பாராட்டி விட்டார்கள். அவனுடைய சகோதரிகளும், அவன் மனைவி நிர்ப்பயாவுக்குப் பரிச்சயமான அவனுடைய நெருங்கிய நண்பர்களும் நிர்ப்பயாவையே அழைத்துப் பாராட்டினார்கள். நிர்ப்பயாவுடன் தனிப்பட்ட பரிச்சயம் இல்லாத அவன் நண்பர்கள் அவனை அழைத்துப் பாராட்டினார்கள். அத்தனை பேரும் பல வார்த்தைப் பிரயோகங்களில் தெரிவித்த ஒரே கருத்து – “நீ மிகவும் அதிர்ஷ்டக்காரன்

 

அது அவன் ஆத்மார்த்தமாகப் பல முறை உணர்ந்த விஷயம் தான். அவன் அதிர்ஷ்டக்காரனாக இல்லா விட்டால், இந்தியாவின் முதல் பணக்காரர் ராஜேஷ்வரின் மகளான நிர்ப்பயா அவனைக் காதலித்திருக்க மாட்டாள். அவளுக்கும் முன்பே அவள் மீது காதலை யுவராஜ் தீவிரமாக உணர்ந்திருந்தாலும் அதை அவளிடம் சொல்ல மிகவும் தயங்கினான். காரணம், அவளுடைய செல்வத்திற்காக அவன் அவளைக் காதலிக்கிறான் என்று அவள் நினைத்து விட அனைத்துக் காரணங்களும் இருக்கின்றன. அவனை அவள் மறுக்கவும் எத்தனையோ காரணங்கள் இருந்தன.

 

அவன் சொந்த வீடு கூட இல்லாத கீழ்மட்ட நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். கல்வியைத் தவிர வேறு எதையும் அவனுக்குத் தந்து விட முடியாத அவன் தந்தை ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக இருந்தார். தன்னுடைய மகள்களுக்கு எளிய முறையில் திருமணமும், மகனுக்கு ஒரு நல்ல கல்லூரியில் கல்வி கற்க வைக்கவும் மட்டுமே அவருக்கு முடிந்தது.  அந்த நல்ல கல்லூரி கூட நிர்ப்பயா போன்றவள் படிக்கும் உயர்வில் இருக்கவில்லை. என்றாலும் யுவராஜின் அதிர்ஷ்டம் அவளும் அந்தக் கல்லூரியில் படிக்க வந்தாள். யுவராஜோடு ஆரம்பத்தில் நட்புடன் பழகிய அவள் முடிவில் அவனைக் காதலிக்க ஆரம்பித்தாள்.

 

அவளுக்கு முன்பே அவன் அவளைக் காதலிக்க ஆரம்பித்திருந்தாலும் தவறாக அவள் அதை எடுத்துக் கொள்வாளோ என்று அவன் பயந்து தயங்கினாலும், அவளாகவே அவனிடம் தன் காதலைச் சொன்னாள். அவன் ஐ.பி.எஸ் முடிக்கும் வரை அவனுக்காகக் காத்திருந்த அவள், பின் பெற்றோர் மற்றும் சகோதரனின் கடும் எதிர்ப்பை மீறி, சொத்துக்களைத் துறந்து அவனைத் திருமணம் செய்து கொண்டாள்.

 

நாற்பத்திரண்டு ஆடம்பர அறைகள் கொண்ட அரண்மனை போன்ற வீட்டிலிருந்தவள், இரண்டு படுக்கையறை கொண்ட அரசாங்க வீட்டில் அவனுடன் மூன்று வருடங்களாக வசிக்கிறாள். அவர்களுக்குத் தற்போது நீலேஷ் என்ற இரண்டு வயது மகன் இருக்கிறான். அவளுடைய பெற்றோரும் சகோதரனும் இதுவரை அந்தக் குழந்தையைப் பார்க்கக் கூட வந்ததில்லை.  பிரசவத்தின் போது உதவியாக யுவராஜின் மூத்த சகோதரி தான் வந்தாள். ஒரு மாதம் கழிந்தபின் அவளையும், குழந்தையையும் பார்த்துக் கொண்டது அவனுடைய இளைய சகோதரி.

 

இந்த மூன்று ஆண்டுகளில் எந்த வசதிக் குறைவுக்காகவும் நிர்ப்பயா முகம் சுளித்ததோ, குறைப்பட்டுக் கொண்டதோ கிடையாது. ஆனால் அவளுக்காக அவன் பல முறை மனதினுள் தவித்திருக்கிறான். அவனால் முடிந்த வரை அவளுக்கு வசதிகள் செய்து தந்தாலும், அவளுடைய தந்தை ராஜேஸ்வர் அவளுக்குச் செய்ய முடிந்தது இமயமலை அளவு என்றால், அவனால் செய்ய முடிந்தது அவன் வீட்டுச் சுவர் அளவு தான்.

 

அவனுடைய நண்பர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருக்கும் சாதாரண நடுத்தர வர்க்கத்து மனைவிகளே கூட அதிருப்தியாளர்களாக இருப்பதை அவன் நண்பர்கள் புலம்பி அவன் பல முறை கேட்டிருக்கிறான். ஆனால் அவர்களை விட அதிகமாக பல கோடி மடங்கு அதிருப்தி அடையக் காரணமிருக்கும் அவன் மனைவி ஒரு முறை கூட அதிருப்தியைத் தெரிவிக்கவில்லை என்றால் எல்லோரும் சொல்வது போல் அவன் பேரதிர்ஷ்டக்காரனே அல்லவா?

 

பலரும் நிர்ப்பயாவைப் பேட்டி எடுக்க பல காலம் தொடர்ந்து முயன்ற போதும் அவள் இது வரை எல்லோருக்கும் மறுப்பையே தெரிவித்திருக்கிறாள். ஆனால் முதல் முறையாக அவள் பெரிதும் மதிக்கும் ஒரு பெண் எழுத்தாளர் அவளைப் பேட்டி எடுக்க ஆசையைத் தெரிவித்த போது மட்டும் அவளால் மறுக்க முடியவில்லை. விளைவு தான் உமன்ஸ் வர்ல்டில் வந்திருக்கும் இந்தப் பேட்டிக் கட்டுரை. அந்த எழுத்தாளர் மிகவும் கச்சிதமாக நிர்ப்பயாவின் அறிவையும், பண்பையும் அந்தக் கட்டுரையில் வெளிக்கொண்டு வந்திருப்பதாக யுவராஜ் நினைத்தான்.

 

ஆனால் அந்தக் கட்டுரையால் அவர்களுடைய வாழ்க்கையே தலைகீழாய் மாறப் போகிறது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.


(தொடரும்)

என்.கணேசன்


(ரட்சகன் நாவலை உடனே வாங்கிப் படிக்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.)

Thursday, July 30, 2026

சதுரங்கம் 29

 


ர்ஜுன் தன்னை சுதாரித்துக் கொள்ள சிறிது நேரம் தேவைப்பட்டது. “என்ன ஐயா சொல்றீங்க? அவங்க ரெண்டு பேரும் தற்கொலை செய்துகிட்டாங்களா?”

 

ஆமா தம்பி. என்ன காரணம்னு யாருக்கும் சரியா தெரியா தெரியலைன்னாலும் வறுமை தான் காரணம்னு தோணுது. ரெண்டு பேரும் தினக்கூலிக்குப் போய்கிட்டு இருந்தாங்க. இந்தக் கிராமத்துல வேலை இல்லைன்னா பக்கத்து கிராமத்துக்குப் போவாங்க. கஷ்ட ஜீவனம் தான் பாவம். ஆனா அந்தக் கஷ்டத்துலயும் மகுடபதி அடுத்தவங்க கிட்ட கையை நீட்டி நின்னவரில்லை. மானஸ்தன்...”

 

அம்மா தன் பெற்றோரைப் பற்றியோ இளமைக்காலம் பற்றியோ ஏன் பேசுவதைத் தவிர்த்தாள் என்பது இப்போது புரிந்தது. பெற்றோரை இழந்து நிர்க்கதியாக, அனாதையாக அவள் நின்றிருந்த போது எத்தனை வேதனையை அனுபவித்தாளோ? அம்மாவை நினைக்கையில் அவனுக்கு மனம் இளகியது.

 

மாடசாமிக்கு மகுடபதியின் உறவினர்கள் யாரையும் தெரிந்திருக்கவில்லை. மகுடபதியின் மகள் என்ன ஆனாள், இங்கிருந்து எங்கே போனாள் என்பதெல்லாம் தெரியவில்லை. பாவப்பட்ட நல்ல மனிதர்கள் என்பதைத் தவிர அவருக்குக் கூடுதலாக அவர்களைப் பற்றிச் சொல்ல எதுவுமிருக்கவில்லை. அதனால் அர்ஜுன் கிளம்பத் தீர்மானித்த போது தான் மாடசாமி வீட்டுச் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த வாசுதேவனின் புகைப்படத்தைப் பார்த்தான்.

 

தலைவர் படத்தை மாட்டியிருக்கீங்க. அவரோட ஆதரவாளரா நீங்க?”

 

மாடசாமி வாசுதேவனின் புகைப்படத்தை பெருமையாகப் பார்த்து விட்டு ஆமாம் என்று தலையாட்டினார்.  அவரைப் பல தடவை நேரில் பார்த்துப் பேசற பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு. இந்தக் கிராமத்துக்கு வந்ததால கிடைச்ச பாக்கியம் அது

 

அர்ஜுனுக்கு அவர் ஏனப்படி சொல்கிறார் என்று புரியவில்லை.  ஏன் ஐயா அப்படிச் சொல்றீங்க? வேற இடத்துல இருந்திருந்தா உங்களுக்கு அவரைப் பார்த்துப் பேச முடிஞ்சிருக்காதா?”

 

அதுக்கு நான் அவரிருக்கற இடத்திற்குப் போய் அல்லவா போயிருக்கணும். இங்கே அவர் அடிக்கடி வந்து போய்கிட்டு இருந்ததால, அவர் இங்கே வந்தப்ப எல்லாம் போய்ப் பார்த்து பேச முடிஞ்சதுன்னு சொல்ல வர்றேன்.”

 

இங்கே ஏன் அவர் வந்து போய்கிட்டு இருந்தார்?” அர்ஜுன் குழப்பத்தோடு கேட்டான்.

 

என்ன தம்பி உங்களுக்குத் தெரியாதா? அவர் இந்த கிராமத்துப் பொண்ணைத் தானே கட்டிகிட்டார்? யசோதாம்மாவோட தாய்வீடு இங்கே தான இருந்துச்சு?”

 

அர்ஜுனுக்கு இந்தத் தகவலும் அதிர்ச்சியைத் தந்தது. அம்மாவும், பாட்டியும் ஒரே ஊர்க்காரர்களா? அம்மாவின் திருமணத்திற்கு முன்பே அம்மாவைப் பாட்டிக்குத் தெரியுமா? 

 

மாடசாமி சொல்லிக் கொண்டே போனார். ”அவர் மாமனார் வீட்டுக்கு வர்றப்ப எல்லாம் நாங்க அங்கே போய் அவரைப் பார்க்காம இருக்க மாட்டோம். யார் போனாலும் எந்த பந்தாவும் இல்லாமல் பேசுவார். அவரை மாதிரி தங்கமான ஒரு நல்ல தலைவரை எல்லாம் இந்தக் காலத்துல பார்க்க முடியுமா தம்பி? இப்பத்து ஆளுக எல்லாம் தேர்தல் சமயத்துலன்னா தலையைக் காட்டுவானுங்க. கையெடுத்துக் கும்பிடுவானுங்க. மற்ற சமயத்துல எல்லாம் அவங்களை நெருங்கவாவது முடியுமா, சொல்லுங்க தம்பி

 

முடியாதுஎன்று அர்ஜுன் ஒத்துக் கொண்டான். சொந்த சொத்தைக் கூட மக்களுக்காக எந்த அரசியல்வாதி எப்போது செய்திருக்கிறார்? நாணயம், நேர்மையின் திருவுருவமாக இருக்கும் அவனுடைய அப்பா கூட அதைச் செய்ய மாட்டார்.

 

மாடசாமி சொன்னார். “சொல்லப் போனா தலைவரோட மாமனாரும், மச்சான்களும் தான் எங்களைக் கோவிச்சுக்குவாங்க. எங்க மாப்பிள்ளை கூட கொஞ்சம் நேரம் கூட எங்களைப் பேச விடமாட்டேங்கறீங்களேன்னு திட்டுவாங்க.”

 

அந்தக் குடும்பத்து ஆளுக யாராவது இப்பவும் இந்தக் கிராமத்துல இருக்காங்களா?”

 

இல்லை தம்பி. அந்தக் குடும்பம் இருபது வருஷத்துக்கு முன்னாடியே இங்கே இருக்கற சொத்தை எல்லாம் வித்துட்டு டவுன்ல போய் செட்டிலாயிட்டாங்க. யசோதாம்மாவோட தம்பி மட்டும் எப்பவாவது ஒரு தடவை இந்தக் கிராமத்துல இருக்கற அவங்க குலதெய்வம் கோயிலுக்கு, குடும்பத்தோட வந்துட்டு போவார். ”

 

ஒருவேளை அந்த வீட்டுக்கு அப்பா வந்து போன ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அம்மாவைப் பார்த்திருக்கலாம் என்று அர்ஜுனுக்குத் தோன்றியது.

 

தலைவரோட பசங்களும் இங்கே அடிக்கடி வந்துகிட்டிருந்தாங்களா ஐயா?”

 

சின்னப் பசங்களாய் இருந்தவரைக்கும் வந்துகிட்டு இருந்திருக்கலாம். நான் இங்கே வந்த பிறகு அவங்க இங்கே அதிகமாய் வந்து நான் பார்க்கலை தம்பி. தலைவர் இறந்ததுக்கப்பறம் யசோதாம்மா இங்கே வந்ததே கூடக் குறைவு தான். நான் யசோதாம்மாவை இங்கே கடைசியாய் பார்த்தது அவங்க அண்ணா காலமானப்ப. அது 22 வருஷங்களுக்கு முன்னாலே….”

 

அர்ஜுன் கேட்டான். “நீங்க போய் தலைவரைப் பார்த்துகிட்டு இருந்த காலத்துல உங்க மாதிரி மகுடபதியும் தலைவரைப் பார்க்க வந்ததுண்டா

 

மாடசாமி சிரித்தபடி சொன்னார். “இல்லை தம்பி. மகுடபதி மாதிரியான ஆள்க உலகம் ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே தான். அவங்க, அவங்க குடும்பம், உழைப்பு, ஊதியம்னு மட்டும் தான் அந்த உலகம் இருக்கும். ஒரு நாள் பிரச்சினை இல்லாமல் கடந்துச்சுன்னா அதுவே அவங்களுக்குப் பெரிய விஷயம். அதைத்தவிர வேறு எதுலையும் அவங்க ஈடுபடறதில்லை. கவனிக்கறதுமில்லை.”

 

அர்ஜுனுக்கு அம்மா ஏன் அப்படி இருக்கிறாள் என்று இப்போது புரிந்தது. அவள் வளர்ந்த விதமே அப்படித்தான். கூடுதலாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் அவள் கவிதைகளை எழுதி வைத்திருக்கிறாள் என்பதைத் தவிர வேறு வித்தியாசம் இல்லை. இப்போதும் அம்மாவுக்கு உலக நடப்புகள் தெரியாது, தெரிந்து கொள்ள விருப்பமும் கிடையாது.

 

மகுடபதியும் அவர் மனைவியும் இறந்துட்டதால இன்சூரன்ஸ் பணத்தை அவர் மகளுக்குத் தான் தரமுடியும். மகுடபதி மகள் பத்தி யாரைக் கேட்டால் தெரியும்?”

 

தெரியலையே தம்பி

 

கடைசியாக மாடசாமியை அர்ஜுன் கேட்டான். “உங்க தலைவரோட ரெண்டு மகன்களே அரசியல்ல எதிரும் புதிருமா இருக்காங்க. அதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க ஐயா?”

 

தலைவரோட மூத்த மகன் ஞானமூர்த்தி தான் அரசியல்ல இருக்காரு. சின்னவர் ராஜாராம், பின்னால இருந்து ஆளும் கட்சியை இயக்கறாருன்னு சொல்றாங்க. ஆனா அது பிரயோஜனம் இல்லையே தம்பி. தலைவரோட மகன் களத்துல நேரடியாய் இறங்கறதல்லவா பெருமை? அதுவும் அவர் அண்ணனை எதிர்த்து ஆதரிக்கிறது திருட்டுப்பசங்களை. அது நியாயமில்லையே

 

உங்க ஆதரவு யாருக்கு ஐயா?”

 

மூத்தவருக்குத் தான். அவர் எதையும் நியாயமாய், வெளிப்படையாய் செய்யறார். நேர்மையாய்ப் பேசறார். ஆனால் அது எந்த அளவுக்கு அவருக்குக் கைகொடுக்கும்னு தெரியல தம்பி.”

 

அர்ஜுன் மாடசாமிக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

 

விமல் ராஜா சிங் சொன்ன நேரத்திலேயே அவனுடைய கடைக்குச் சென்றான். கடைசி நேரத்தில் ராஜா சிங் கையை விரித்து விடுவானோ என்று விமலுக்குப் பயமாக இருந்தது. நேற்று இரவு நிம்மதியாகத் தூங்கி எழுந்த அவனுக்கு இன்று காலை வரை இருந்த நிம்மதி பிறகு விடைபெற்றுக் கொண்டது. கஷ்ட காலங்களில் ஒரு சமயத்தில் இருக்கும் தைரியம் இன்னொரு சமயத்தில் இருப்பதில்லை

 

அவன் சென்ற போது ராஜாசிங் கடையில் வேறு ஆட்களும் இருந்தார்கள். விமலைப் பார்த்த போது ராஜா சிங் முகத்தில் அவனை அறிந்திருக்கும் அறிகுறி கூட இல்லை. அதைப் பார்த்த விமலுக்குப் பக்கென்றது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் புதிய மொபைல் போன்களைப் பார்க்க ஆரம்பித்தான். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் செய்தான். அதற்குள் மற்ற வாடிக்கையாளர்கள் வந்த வேலையை முடித்துக் கொண்டு போய்விட்டார்கள்.

 

அவர்கள் சென்ற பின் ராஜாசிங் கல்லாவிலிருந்தபடியே விமலைப் பார்த்து, அருகே வரும்படி சைகை செய்தான். விமல் அருகே சென்றவுடன் ஒரு சிறிய தாளை அவனிடம் நீட்டினான். அதில் நானாஜி தேஷ்முக், 5, கோல்டன் ஸ்டார் அபார்ட்மெண்ட்ஸ், 298 பட்டேல் ரோடு, கரோல் பாக்,  டெல்லி 110005. என்ற முகவரி இருந்தது. அந்தப் பெயர், விலாசத்தில் தான் சிம் எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை விமல் புரிந்து கொண்டு தலையை ஆட்டினான்.

 

ராஜா சிங் கையை நீட்ட விமல் புதியதாகத் தேர்ந்தெடுத்து வைத்திருந்த மொபைலையும் கொடுத்தான். ராஜா சிங் இன்னொரு சிறிய தாளை எடுத்துரூ3000 + ரூ13580 = ரூ 16580/-”என்று எழுதினான்.

 

விமல் அந்தத் தொகையை எடுத்துக் கொடுத்தவுடன் அந்த புதிய மொபைலில் சிம்மை பொருத்தித் தந்தான். விமல் பரம திருப்தியுடன்ரொம்ப தேங்க்ஸ்என்றான். ராஜா சிங் முகத்தில் சிறு புன்னகைக் கீற்று தோன்றி மறைந்தது. விமல் வெளியே வந்தான்.


(தொடரும்)

என்.கணேசன்


ஆகஸ்ட் 4 வரை நடக்கும் ஒசூர் புத்தகத் திருவிழாவில் என்.கணேசனின் நாவல்கள் அரங்கு எண் 19,  20 மகேஸ்வரி புக் ஸ்டாலில் கிடைக்கும்.


Monday, July 27, 2026

ரட்சகன் 2

 


ப்சல்கானைக் கண்காணித்துக் கொண்டிருந்த காவலாளி தன் கண்களைச் சந்தேகித்தான். ’அப்சல்கான் புன்னகைக்கிறானா? நான் பார்த்தது சரிதானா?’

 

திகார் சிறையில் அப்சல்கானைப் போல் தினசரிகள் அனைத்தையும் முழுவதுமாகப் படிப்பவர்கள் குறைவு. அதிலும் அவனைப் போல் ஒரு செய்தி விடாமல் நீண்ட நேரம் படிப்பவர்கள் இல்லவே இல்லை என்று சொல்லி விடலாம். உலகின் அதிபயங்கரவாதிகளில் ஒருவன் என்று சொல்லப்படும் அவனைக் கண்கொத்திப்பாம்பாக கவனிக்கும்படி அவனைப் போன்ற காவலாளிகள் ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் அங்கு அந்தக் காவலாளி காவலில் இருக்கும் போதெல்லாம் அப்சல்கானை விடாது கண்காணித்துக் கொண்டு இருக்கிறான். இது வரை எல்லா நாட்களும் ஒன்று போலவே சுவாரசியமில்லாமலும், வித்தியாசமாக எதுவும் நடக்காமலும் தான் இருந்திருக்கின்றன. ஆனால் இன்று அப்சல்கான் அதிசயமாய் ஒரு வாரப்பத்திரிக்கையை எடுத்துப் படிக்கிறான். புன்னகைக்கிறான்….

 

அப்சல்கான் எழுந்து அந்தக் காவலாளி அருகே வந்தான். காவலாளி துப்பாக்கியை உபயோகிக்கத் தயார் நிலைக்கு உடனே மாறினான். அப்சல்கான் தெளிவான குரலில் சொன்னான். அடுத்த நிமிடம் அடுத்த அதிசயம் நடந்தது. “எனக்கு என் வக்கீலைப் பார்க்க வேண்டும்”. அந்தக் காவலாளி முதல் முறையாக அப்சல்கானின் குரலைக் கேட்கிறான்.

 

க்கீல் காளிதாஸை உச்சநீதிமன்ற வட்டாரத்தில் அறியாதவர்கள் யாருமில்லை. அவர் சட்ட மேதையோ, சட்ட நுணுக்கங்களைக் கரைத்துக் குடித்தவரோ அல்ல. ஆனாலும் அவர் ஏன் பிரபலம் என்றால், யாரும் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் வழக்குகளையும் அவர் கவலைப்படாமல் ஏற்றுக் கொள்வார். தீவிரவாதிகள், கொடூரமான கிரிமினல் குற்றங்களைச் செய்தவர்கள், பெருங்குற்றவாளிகள் என்று வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்தவர்கள் எல்லாம் அதிகமாக உச்சநீதிமன்றம் வரும் போது அவரைத் தான் நாடி வருவார்கள். பல வக்கீல்கள் போல அவர் பெயரைக் கெடுத்துக் கொள்ள விரும்பாமல் அந்த வழக்கை மறுக்க மாட்டார். அதே போல் வெற்றிக்கு வாய்ப்பே இல்லா விட்டாலும் ஒதுங்க மாட்டார். அதிகமாக பணத்தைத் தந்தால் அந்த வழக்குகளை ஏற்றுக் கொண்டு நடத்துவார். 

 

சட்ட நுணுக்க வல்லுனர் அவரல்ல என்றாலும் அவர் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை மிக நன்றாக அறிந்தவர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் பற்றியும் அவர் மிகத் துல்லியமாக அறிந்தவர். இது போன்ற வழக்குக்கு இந்த நீதிபதி இந்தத் தீர்ப்பு தான் வழங்குவார் என்று அவர் முன்கூட்டியே சொல்ல முடிந்தவர். உச்சநீதிமன்றத்தில் பணி புரியும் ஆட்களையும், அவர்களிடம் வேலை ஆக யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூட அவர் நன்றாக அறிந்தவர். வழக்குகளில் வெற்றி பெற்றுத் தரமுடியாத அளவு குற்றம் தெளிவாக இருந்தாலும் வழக்கை எப்படி முடிந்த வரை நீட்டிப்பது, தண்டனையை எப்படி தள்ளிப் போடுவது அல்லது குறைப்பது என்பதை அவர் கச்சிதமாக அறிவார்.  அவரது சில்லறைத்தனமான தந்திரங்களை உணரும் சில நேர்மையான நீதிபதிகள் அவரைக் கடுமையான வார்த்தைகளில் கண்டித்ததுண்டு. ஆனால் அவர் அதை எப்போதும் அவமானமாக எடுத்துக் கொண்டதில்லை. எதற்காக அவர் கண்டிக்கப்பட்டாரோ அதை அவர் கூச்சமோ தயக்கமோ இல்லாமல் தொடர்ந்து செய்வார். ஃபீஸ் விஷயத்தில் தான் அவர் மிகவும் கறாராக இருப்பாரே ஒழிய அவர் மற்ற அனைத்திலும் கண்டிப்போ, எதிர்ப்புகளோ, கவலையோ அற்ற மென்மையானவர் தான்.

 

திகார் சிறைச்சாலையிலிருந்துஅப்சல்கான் அவரைச் சந்திக்க விரும்புகிறான்என்ற செய்தி அவரை வந்தடைந்த போது அவர் ஆச்சரியப்பட்டார். அப்சல்கானுக்கு அவரிடம் பேசவோ, அவருக்கு அப்சல்கானிடம் பேசவோ எதுவுமிருப்பதாக அவர் நினைக்கவில்லை.  டெல்லி உயர்நீதிமன்றம் அவனுக்கு மரண தண்டனை விதித்து, பின் அவன் மேல் முறையீட்டுக்காக உச்சநீதிமன்றத்திற்கு வர அவரை அணுகிய போது தீர்ப்பு வேறு விதமாக வாய்ப்பில்லை என்று தெளிவாகச் சொல்லிய அவர், முடிந்த வரை உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பல வருடங்களுக்குத் தள்ளிப் போடலாம் என்ற உத்தரவாதம் மட்டுமே அவனுக்கு அளித்திருந்தார். அவனும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறான். அவர் அவனுக்கு வாக்களித்தபடி சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி வழக்கு வாய்தாக்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வருமாறு அவர் பார்த்துக் கொள்கிறார். இதற்கு மேல் பேசவோ செய்யவோ எதுவுமில்லை. அப்படி இருக்கையில் அவன் ஏன் அழைக்கிறான் என்று அவருக்குப் புரியவில்லை.

 

சூடு சொரணை அற்றவர் என்று சகாக்களால் கூறப்படும் காளிதாஸுக்கே அப்சல்கானைச் சந்தித்துப் பேசுவதில் சிறிது படபடப்பு இருந்தது. காரணம் அவனிடம் பேசுகையில் அவனுக்குள்ளே வெடிக்கக் காத்திருக்கும் ஒரு எரிமலையை அவர் அடிக்கடி உணர்வதுண்டு. அவன் சிறைச்சாலையில் இருக்கையில் அவரிடம் இதுவரை பேசிய வார்த்தைகளை விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால் அவன் பேசாத  வார்த்தைகள் அவரை எச்சரிக்கை செய்தன. அந்த வார்த்தைகளைக் கேட்க நேரிட்டு விடுமோ என்று பயமுறுத்தின. அப்படி ஏன் தோன்றுகின்றது என்று அவரால் குறிப்பாகச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் அந்த உணர்வு அவரிடம் எப்போதும் இருந்து வருகிறது.  இப்போது என்ன சொல்வானோ என்ற படபடப்புடன் தான் அவர் திகார் சிறைக்குச் சென்றார்.

 

அவனை அவர் சந்தித்த போது மரியாதை நிமித்தம்எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவன் அந்தக் கேள்வி பைத்தியக்காரத்தனமானது என்பது போல் பார்த்தானே ஒழிய பதில் சொல்லவில்லை. “இங்கே ஒருவன் எப்படி இருப்பான்?” என்ற பதில் கேள்வியை அவன் கேட்பது போல் அவனது மௌனம் இருந்தது. ’பின் என்ன தான் உன்னிடம் பேசுவதுஎன்று மனதுக்குள் அவனுடைய மௌனத்திற்குப் பதிலாக அவர் கேட்டுக் கொண்டார்.

 

அப்சல்கானுக்கு இரண்டடி தூரத்தில் ஒரு காவலன் நின்று கொண்டிருந்தான். அப்சல்கான் அவனை ஒரு வெறுப்புப் பார்வை பார்த்தான். தானாக அந்தக் காவலாளி மேலும் இரண்டடி தள்ளி நின்றான்.

 

அப்சல்கான் மெல்லிய குரலில் காளிதாஸிடம் சொன்னான். “என் ஆளிடம் ஒரு தகவல் சொல்ல வேண்டும்.”

 

காளிதாஸ் தன் முந்தைய அனுபவத்தால் காதுகளைக் கூர்மையாக்கித் தான் அந்த வார்த்தைகளைக் கேட்க முடிந்தது.

 

காளிதாஸால் அவன் குரலுக்கு இணையாக மெலிதாகப் பேசமுடியும் என்று தோன்றவில்லை. அவர் பேசுவது அந்தக் காவலாளி காதில் விழுந்தாலும், அதை வைத்து அவன் அப்சல்கானின் கேள்வியை யூகிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும், அதை அப்சல்கான் விரும்ப மாட்டான் என்பதையும் உணர்ந்த காளிதாஸ் பார்வையாலேயே அவனிடம் கேட்டார். “என்ன சொல்ல வேண்டும்?”

 

அப்சல்கான் சொன்னான். “இந்த வார உமன்ஸ் வர்ல்டில் பதினாறாம் பக்கக் கட்டுரையைப் படிக்கச் சொல்லுங்கள்.”

 

காளிதாஸ் திகைத்தார். ‘இது என்ன சிறுபிள்ளைத்தனம். இதற்கா என்னை இங்கே வரவழைத்தாய்?’ என்று கேட்க அவர் நாக்கு துடித்தாலும் அதை அவனிடம் வாய் விட்டுக் கேட்பது ஆபத்தானது என்று அவருடைய அறிவு எச்சரித்தது.

 

சரி வேறென்ன?’ என்று அவர் அவனிடம் பார்வையிலேயே கேட்டார். சிறு தலையசைப்பில் அவன்வேறொன்றுமில்லைஎன்று தெரிவித்து விட்டு எழுந்தான்.

 

வந்தமர்ந்து இரண்டே நிமிடங்களில் சந்திப்பு முடிந்து கிளம்பும் ஒரே வக்கீல் இந்த சிறைச்சாலை வரலாற்றில் நாமாகத் தான் இருக்கும் என்று எண்ணியபடி காளிதாஸும் புறப்பட்டார்.

 

காரில் தன் வீட்டுக்குச் செல்கையில் அப்சல்கானின் வித்தியாசமான கோரிக்கை காளிதாஸைக் குழப்பியது. வார்த்தைகளைக் கூட அளந்து பேசும் இவன் பைத்தியக்காரத்தனமான விஷயத்தைச் சொல்ல நம்மை அழைத்திருக்க வாய்ப்பில்லையே என்று எண்ணியபடி வந்த அவர் வழியில் தினசரிகள், வார மாத இதழ்கள் விற்கும் ஒரு கடையைப் பார்த்து காரை நிறுத்தி அந்த வார உமன்ஸ் வர்ல்டு வாங்கினார்.

 

வாங்கி அந்த வார இதழைப் பிரித்தபடி வந்து காரில் அமர்ந்த அவர் பதினாறாம் பக்கத்தில் என்ன இருக்கிறது என்று பார்த்தார். அவன் என்ன நோக்கத்தில் சொன்னான் என்பது உடனடியாக அவருக்குப் புரிந்தது. அதிர்ச்சியில் அவர் விரல்கள் லேசாக நடுங்குவது வார இதழ் நடுங்கியதைப் பார்த்த பிறகே அவருக்கு உறைத்தது. அற்ப சகவாசம் பிராண சங்கடம் என்ற பழமொழி அந்தச் சமயத்தில் அவருக்கு நினைவுக்கு வந்து தொலைத்தது.

 

வார இதழை பின் சீட்டில் வீசி விட்டு அவர் வேகமாகக் காரைக் கிளப்பினார்.


(தொடரும்)

என்.கணேசன்