ஒரு வக்கீல் தன் கட்சிக்காரனைக் காப்பாற்றுகிறானோ இல்லையோ, முதலில்
தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று நம்புபவர் காளிதாஸ். அதனால்
அவர் பிரச்சினை இல்லாததும், அபத்தமானதும் போல் தோன்றும் அந்தச் சிறு கோரிக்கையை எப்படி
நிறைவேற்றுவது என்று யோசித்தார். நேரடியாக அலைபேசியில் அழைத்து அப்சல்கான் சொன்னதை அவன் ஆளிடம்
சொல்ல ஒரு நிமிடம் கூட ஆகாது. மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு கட்டுரையைப் படிக்கச் சொன்னதைத் தெரிவிப்பதில் அவருக்கு
எந்தப் பிரச்சினையும் சட்டப்படி வந்துவிட முடியாது. ஆனால் பெரிய பிரச்சினை ஒன்று உருவானால் போலீசார் கண்டிப்பாக
மேலோட்டமாகப் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ள மாட்டார்கள். அதுவும்
இந்தியாவில் முதல் பணக்காரராகவும், ஆசியாவில் இரண்டாவது
பணக்காரராகவும், உலக அளவில் எட்டாவது பணக்காரராகவும் இருக்கும் ராஜேஷ்வர்
குடும்பம் சம்பந்தப்படும் விஷயம் எதுவும் மேலோட்டமாக பார்த்து கடந்து போகப்பட சாத்தியமேயில்லை. அரசாங்கம்
அலறிக் கொண்டு போலீசாரை முடுக்கிவிடும் சாத்தியம் தானிருக்கிறது. போலீசார்
உச்ச வேகத்தில் முழுமூச்சாக இறங்குகையில், காளிதாஸ்
அழைத்துப் பேசிய ஒரு போன்கால் அவர்கள் கவனத்திற்கு வராமல் போக வாய்ப்பேயில்லை.
அதனால் என்ன செய்வது என்று காளிதாஸ்
மூளையைக் கசக்கிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தார். உண்மையில்
அப்சல்கானின் இயக்கத்தின் ஆட்கள் யாரையும் அவர் சந்தித்தது கிடையாது. அப்சல்கான் ‘என் ஆள்’ என்று சொன்னது
கூட அவன் சார்ந்திருக்கும் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் கிடையாது. காளிதாஸை
சந்திக்க வந்த ‘அவன் ஆள்’ உண்மையில் ஒரு எடுபிடி
அல்லது கூலிக்காரன். அவன் ஏதோ பொதுநல அமைப்பின் பெயரில் இயங்கி வரும் கைக்கூலி. லெட்டர்பேடில்
மட்டுமே இயங்கும் அமைப்பு அது. அவ்வப்போது அறிக்கை விடுவதற்கும், இது போல்
முக்கியஸ்தர்களுக்காக தூதுவனாக, தகவல் கொண்டு வருபவனாக மட்டுமே அவன் பயன்படுபவன்.
அப்சல்கானுக்காக வாதாட வேண்டும் என்ற
கோரிக்கையோடும், பணத்தோடும் வந்து பேசிய அந்த ஆள் அவர் வீட்டுக்கு இரண்டு
கிலோமீட்டர் தூரத்தில் தான் வசிக்கிறான். ஆனால் அவனை நேரில்
சந்திப்பதும், அலைபேசியில் அழைப்பதும் கூட ஆபத்து. அந்த ஆளின்
அலைபேசி ஏற்கெனவே உளவுத் துறையால் கண்காணிக்கப்பட்டு கொண்டு கூட இருக்கலாம். என்ன செய்வது
என்று யோசித்த காளிதாஸ் முடிவில் எளிமையான ஒரு தீர்வுக்கு வந்தார்.
ஒரு வெற்றுத் தாளை எடுத்து இடது கையில்
எழுதினார்.
”இந்த வார
உமன்ஸ் வர்ல்டில் பதினாறாம் பக்கத்தில் உள்ள கட்டுரையைப் படிக்கவும்.
அப்சல்கான்”
அந்த வெற்றுத் தாளை ஐந்து ரூபாய் தபால்
உறையில் ஒட்டி உறையில் அந்த எடுபிடி ஆளின் விலாசத்தையும் இடது கையிலேயே எழுதி ஐந்து
கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஒரு தபாலாபீசின் தபால் பெட்டியில் போட்டு விட்டு வந்தார். இந்தக்
கடிதம் அந்த ஆளுக்கு நாளைக்குக் கிடைத்து விடும். என்னவோ
செய்து தொலையட்டும். அவர் அப்சல்கான் சொன்னதை எழுத்து மூலமாகத் தெரிவித்து விட்டார். அவன் எவ்வளவு
பணம் தந்தாலும் இதற்கு மேல் அவர் எதுவும் செய்வதற்கில்லை.
காளிதாஸ் அனுப்பிய அந்தத் தபால் விலாசதாரருக்கு மறுநாளே போய்ச்
சேர்ந்தது. அனுப்புனர் விலாசம் இல்லாமல் வந்த அந்தத் தபாலை அந்த ஆள்
சுவாரசியமில்லாமல் பார்த்தான். அதைப் பிரித்துப் படித்தவுடன் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. அந்தக்
கடிதம் அப்சல்கான் அனுப்பியதாக இருக்கக்கூடும் என்று அவன் நம்பவில்லை. அவன் அறிந்த
அப்சல்கான் பைத்தியக்காரத்தனமாக இதைப் போல் எழுதி அனுப்பக் கூடியவன் அல்ல. ஒரு பேரியக்கத்தின்
துணைத்தலைவனான அப்சல்கான் அவனைப் போன்ற ஒரு கடைநிலைக் கூலிக்காரனை ஒரு கட்டுரை படிக்கச்
சொல்லி வலியுறுத்துவானா? யாரோ அவன் பெயரில் விளையாடுகிறார்கள்....
ஆனால் விளையாட்டானாலும் அதையும் தெரிவிப்பது
அவனுடைய கடமை. அதை எப்படிக் கையாள்வது என்று இயக்கம் முடிவு செய்து கொள்ளும்.. விளையாட்டானால்
அதற்கு என்ன தண்டனை என்று யோசித்து தக்க தண்டனை கொடுக்கும் இயக்கம், அது எதாவது
சங்கேத மொழியாக இருந்தால் அதையும் கண்டு கொண்டு அந்தத் தகவலைப் பயன்படுத்திக் கொள்ளும். அதைப் புரிந்து
கொள்ள அவன் முயற்சிப்பது அனாவசியம். அவனுடைய சிற்றறிவுக்கு
சூட்சுமங்கள் எட்டாது என்பதைத் தாண்டி, எதையும் அவனாகப்
புரிந்து கொண்டு இயங்க அவனுக்கு அறிவுறுத்தல் இல்லை. அதனால்
அவன் உமன்ஸ் வர்ல்டு என்ற பத்திரிக்கையை வாங்கவோ, அதில் பதினாறாம்
பக்கத்தில் இருக்கும் கட்டுரையைப் படிக்கவோ துளியும் ஆர்வம் காட்டவில்லை.
அவன் அந்தக் கடிதத்தை அலைபேசியில் படம்
எடுத்து வேறொரு நபருக்கு அனுப்பி வைத்தான்.
உமென்ஸ் வர்ல்டு பத்திரிக்கையில் வந்த கட்டுரையைப் படித்து
விட்டு யுவராஜைப் பலர் அழைத்து பாராட்டி விட்டார்கள். அவனுடைய
சகோதரிகளும், அவன் மனைவி நிர்ப்பயாவுக்குப் பரிச்சயமான அவனுடைய நெருங்கிய
நண்பர்களும் நிர்ப்பயாவையே அழைத்துப் பாராட்டினார்கள். நிர்ப்பயாவுடன்
தனிப்பட்ட பரிச்சயம் இல்லாத அவன் நண்பர்கள் அவனை அழைத்துப் பாராட்டினார்கள். அத்தனை
பேரும் பல வார்த்தைப் பிரயோகங்களில் தெரிவித்த ஒரே கருத்து –
“நீ மிகவும் அதிர்ஷ்டக்காரன்”
அது அவன் ஆத்மார்த்தமாகப் பல முறை உணர்ந்த
விஷயம் தான். அவன் அதிர்ஷ்டக்காரனாக இல்லா விட்டால், இந்தியாவின்
முதல் பணக்காரர் ராஜேஷ்வரின் மகளான நிர்ப்பயா அவனைக் காதலித்திருக்க மாட்டாள். அவளுக்கும்
முன்பே அவள் மீது காதலை யுவராஜ் தீவிரமாக உணர்ந்திருந்தாலும் அதை அவளிடம் சொல்ல மிகவும்
தயங்கினான். காரணம், அவளுடைய செல்வத்திற்காக அவன் அவளைக் காதலிக்கிறான் என்று
அவள் நினைத்து விட அனைத்துக் காரணங்களும் இருக்கின்றன. அவனை அவள்
மறுக்கவும் எத்தனையோ காரணங்கள் இருந்தன.
அவன் சொந்த வீடு கூட இல்லாத கீழ்மட்ட
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். கல்வியைத் தவிர வேறு எதையும் அவனுக்குத் தந்து விட முடியாத
அவன் தந்தை ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக இருந்தார். தன்னுடைய
மகள்களுக்கு எளிய முறையில் திருமணமும், மகனுக்கு ஒரு நல்ல
கல்லூரியில் கல்வி கற்க வைக்கவும் மட்டுமே அவருக்கு முடிந்தது. அந்த நல்ல கல்லூரி கூட நிர்ப்பயா போன்றவள் படிக்கும் உயர்வில்
இருக்கவில்லை. என்றாலும் யுவராஜின் அதிர்ஷ்டம் அவளும் அந்தக் கல்லூரியில்
படிக்க வந்தாள். யுவராஜோடு ஆரம்பத்தில் நட்புடன் பழகிய அவள் முடிவில் அவனைக்
காதலிக்க ஆரம்பித்தாள்.
அவளுக்கு முன்பே அவன் அவளைக் காதலிக்க
ஆரம்பித்திருந்தாலும் தவறாக அவள் அதை எடுத்துக் கொள்வாளோ என்று அவன் பயந்து தயங்கினாலும், அவளாகவே
அவனிடம் தன் காதலைச் சொன்னாள். அவன் ஐ.பி.எஸ் முடிக்கும் வரை அவனுக்காகக் காத்திருந்த அவள், பின் பெற்றோர்
மற்றும் சகோதரனின் கடும் எதிர்ப்பை மீறி, சொத்துக்களைத் துறந்து
அவனைத் திருமணம் செய்து கொண்டாள்.
நாற்பத்திரண்டு ஆடம்பர அறைகள் கொண்ட
அரண்மனை போன்ற வீட்டிலிருந்தவள், இரண்டு படுக்கையறை கொண்ட அரசாங்க வீட்டில் அவனுடன் மூன்று
வருடங்களாக வசிக்கிறாள். அவர்களுக்குத் தற்போது நீலேஷ் என்ற இரண்டு வயது மகன் இருக்கிறான். அவளுடைய
பெற்றோரும் சகோதரனும் இதுவரை அந்தக் குழந்தையைப் பார்க்கக் கூட வந்ததில்லை. பிரசவத்தின் போது உதவியாக யுவராஜின் மூத்த சகோதரி தான் வந்தாள். ஒரு மாதம்
கழிந்தபின் அவளையும், குழந்தையையும் பார்த்துக் கொண்டது அவனுடைய இளைய சகோதரி.
இந்த மூன்று ஆண்டுகளில் எந்த வசதிக்
குறைவுக்காகவும் நிர்ப்பயா முகம் சுளித்ததோ, குறைப்பட்டுக்
கொண்டதோ கிடையாது. ஆனால் அவளுக்காக அவன் பல முறை மனதினுள் தவித்திருக்கிறான். அவனால்
முடிந்த வரை அவளுக்கு வசதிகள் செய்து தந்தாலும், அவளுடைய
தந்தை ராஜேஸ்வர் அவளுக்குச் செய்ய முடிந்தது இமயமலை அளவு என்றால், அவனால்
செய்ய முடிந்தது அவன் வீட்டுச் சுவர் அளவு தான்.
அவனுடைய நண்பர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருக்கும்
சாதாரண நடுத்தர வர்க்கத்து மனைவிகளே கூட அதிருப்தியாளர்களாக இருப்பதை அவன் நண்பர்கள்
புலம்பி அவன் பல முறை கேட்டிருக்கிறான். ஆனால் அவர்களை விட
அதிகமாக பல கோடி மடங்கு அதிருப்தி அடையக் காரணமிருக்கும் அவன் மனைவி ஒரு முறை கூட அதிருப்தியைத்
தெரிவிக்கவில்லை என்றால் எல்லோரும் சொல்வது போல் அவன் பேரதிர்ஷ்டக்காரனே அல்லவா?
பலரும் நிர்ப்பயாவைப் பேட்டி எடுக்க
பல காலம் தொடர்ந்து முயன்ற போதும் அவள் இது வரை எல்லோருக்கும் மறுப்பையே தெரிவித்திருக்கிறாள். ஆனால் முதல்
முறையாக அவள் பெரிதும் மதிக்கும் ஒரு பெண் எழுத்தாளர் அவளைப் பேட்டி எடுக்க ஆசையைத்
தெரிவித்த போது மட்டும் அவளால் மறுக்க முடியவில்லை. விளைவு
தான் உமன்ஸ் வர்ல்டில் வந்திருக்கும் இந்தப் பேட்டிக் கட்டுரை. அந்த எழுத்தாளர்
மிகவும் கச்சிதமாக நிர்ப்பயாவின் அறிவையும், பண்பையும்
அந்தக் கட்டுரையில் வெளிக்கொண்டு வந்திருப்பதாக யுவராஜ் நினைத்தான்.
ஆனால் அந்தக் கட்டுரையால் அவர்களுடைய
வாழ்க்கையே தலைகீழாய் மாறப் போகிறது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
(தொடரும்)
என்.கணேசன்
(ரட்சகன் நாவலை உடனே வாங்கிப் படிக்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.)




