என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, March 9, 2026

யோகி 146


 பாண்டியனின் யதார்த்தமான கேள்வியைக் கேட்டு பிரம்மானந்தா வாய்விட்டுச் சிரித்தார். அது வரை அவருக்கு இருந்த இறுக்கமான மனநிலை தளர்ந்தது.  நீ இதை அவர் கிட்டயே கேட்டு இருக்கணும் பாண்டியன்

 

கேட்கணும்னு நினைச்சேன். ஆனால் நீங்க அவரை அனுப்பற மனநிலையில இருந்தது தெரிஞ்சுது. அது மட்டுமில்லாமல் அந்த ஆளோட உலகமே வேற, நம்ம உலகமே வேற தானே யோகிஜி. அவருக்கு நம்ம உலகத்தைப் புரிஞ்சுக்க முடியாது, நமக்கு அவரோட உலகத்தைப் புரிஞ்சுக்க முடியாதுன்னு விட்டுட்டேன்.”

 

பாண்டியன் தன் உலகத்தில் அவரையும் சேர்த்துக் கொண்டது பிரம்மானந்தாவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. உண்மையே ஆனாலும் சிலவற்றைக் கேட்பது இனிமையாய் இல்லை. இன்று யார் முகத்தில் விழித்தோம், இப்படி வரிசையாகக் கேட்டுக் கொள்ள வேண்டி வருகிறதே  என்று அவர் யோசித்தார்.

 

பாண்டியன் தொடர்ந்து சொன்னார். “ஆனால் ஒரு விஷயத்தைப் பாராட்டணும் யோகிஜி. நாம அவரைத்  தோட்டக்காரனாய் பார்த்தாலும் சரி, யோகியாய் பார்த்தாலும் சரி, ரெண்டுமே அவரைப் பாதிக்கற மாதிரியில்லை. அந்த ஆளைப் பொருத்த வரைக்கும் எதுவும் இல்லாமயே அவர் திருப்தியாய், சந்தோஷமாய்த் தான் இருக்கார். நமக்கு நிறைய இருந்தும் அப்படி இருக்க முடியலை. சரி, முடியாததைப் பற்றி யோசிக்கறதுல அர்த்தமில்லை.  நாம அடுத்து ஆக வேண்டியதைப் பார்ப்போம் யோகிஜி. உடனடியாய் தேவானந்தகிரியைக் கூப்பிடுவோம். அந்தக் காலடி மண்ணை வெச்சு அவரால எதாவது செய்ய முடியுதான்னு பார்ப்போம். உடனடியாய் வர முடியாதுன்னா, அவருக்குப் பணத்தை ரெண்டு மடங்காகவோ, நாலு மடங்காகவோ கூடத் தரலாம்...”

 

சித்தானந்தா உடன் இருந்ததால் நிஜ யோகியைச் சந்தித்த விஷயத்தை ஷ்ரவன் முக்தானந்தாவிடம் அன்றிரவு சொல்லவில்லை. மறுநாள் காலை சித்தானந்தா குளிக்கச் சென்ற போது, ஷ்ரவன் அவசர அவசரமாக நிஜ யோகியின் நேற்றைய வருகையை முக்தானந்தாவிடம் சொன்னான். அவன் சொன்னதை அவர் சுவாரசியத்துடன் கேட்டுக் கொண்டார். முக்கியமாக, அந்த யோகி பேசியது அவரையும் மிகவும் கவர்ந்தது. நேரில் சந்திக்க முடியாத அந்த யோகியை எண்ணி அவர் கைகூப்பி நமஸ்கரித்தார்.

 

ஷ்ரவன்  கடைசியில் மனத்தாங்கலுடன் சொன்னான். “… நாங்கள் கூடுதலாக எதாவது கேள்வி கேட்டிருந்தால் அந்த யோகி விளக்கமாகப் பதில் சொல்லியிருப்பார். ஆனால் பிரம்மானந்தாவுக்கு அவர் பேசியது பிடிக்கவில்லை. அதனால் அனுப்பி விட்டார்.”

 

முக்தானந்தா சொன்னார். “நிஜத்திலிருந்து விலகி நிறைய தூரம் போய் விட்டவருக்கு, திரும்பவும் நிஜத்தைச் சந்திக்க நேர்வது கசப்பாய் தான் இருக்கும் ஷ்ரவன்.  ஆத்மாவை என்றோ அடகு வைத்து விட்ட அவருக்கு திரும்பவும் ஆத்மஞானத்தை ரசிக்க முடியுமா?”

 

சித்தானந்தா குளித்து விட்டு வெளியே வர அவர்கள் அமைதியானார்கள்.

 

ராகவன், பாண்டியனுக்கும், தேவானந்தகிரிக்கும் இடையேயான உரையாடலின் பதிவைக் கேட்டார். அவருடன் குமரேசனும் இருந்தான்.  உரையாடலில் தற்போது சென்னைக்கு வரும் நிலைமை இல்லை என்று தேவானந்தகிரி பலமுறை சொல்லியும் பாண்டியன் விடுவதாய் இல்லை. லட்சங்களை ஏற்றிக் கொண்டே போய் பத்து லட்சத்தில் வந்து பேரம் முடிந்தது. தேவானந்தகிரி கடைசியில் சம்மதித்தார். நாளை மறுநாள் மாலை விமானத்தில் வருவதாக அவர் வாக்களித்தார். பூஜைக்கு வேண்டிய பொருள்களின் பட்டியலை வாட்சப்பில் அனுப்புவதாகச் சொன்னார். அவர் வருவதற்கு முன் பொருள்களை வாங்கித் தயாராக வைக்கச் சொன்னார்.

 

அந்தப் பேச்சைக் கேட்ட ராகவனுக்கு பாண்டியன் பிறவி வியாபாரியாகத் தெரிந்தார். ’இல்லை’ ‘முடியாதுஎன்ற வார்த்தைகளை பாண்டியன் பொருட்படுத்தவே இல்லை. எதிர்தரப்பில் இருந்து அந்த வார்த்தைகள் வரும் போது, தரும் விலையை அதிகப்படுத்தினால் போதும் என்பது அவருடைய கணக்காகத் தெரிந்தது. பணம் யோகாலயத்து ஆட்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதும் இந்தப் பேச்சில் தெரிந்தது.

 

குமரேசன் சொன்னான். “என்ன ஆனாலும் சரி, ஷ்ரவன் அங்கிருக்கும் போது, தேவானந்தகிரி யோகாலயத்துக்கு வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

 

ராகவன் யோசித்தார். குமரேசனும் யோகாலயத்துக்குச் செல்ல முடியாமல் இருப்பது இப்போது பெரிய பிரதிகூலமாகத் தெரிந்தது. ஷ்ரவன் அங்கே தனியாக இருக்கிறான்... ஒரு ஆபத்து என்றால் அதைத் தெரிவிக்கவும் அவனுக்கு வழியில்லை. நிலைமை இப்படி இருக்கையில் தேவானந்தகிரி யோகாலயம் போனால் நிச்சயமாக அவர் ஷ்ரவன் யார் என்பதைக் கண்டுபிடித்து விடலாம். ஷ்ரவன் போன வேலை முடியாமல் கண்டுபிடிக்கப் பட்டால் அவனுடைய உயிருக்கு ஆபத்து மட்டுமில்லை. இதுவரை அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எல்லாம் வீணாகிவிடும்...

 

தேவானந்தகிரி அதிர்ஷ்டலட்சுமி அவர் மேல் தனிக்கருணை காட்டி விட்டதாய் உணர்ந்தார். யோகாலயம் போய் வருவதால் அவருடைய இரண்டு நாள் வேலைகள் தடைப்படும். ஏற்கெனவே அவர் ஒத்துக் கொண்டிருக்கும் அந்த இரண்டு நாள் வேலைகளுக்கு அவருக்கு அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் தான் கிடைத்திருக்கும். அந்த வேலைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து விட்டு யோகாலயம் போவதற்கு இப்போது பத்து லட்சம் கிடைத்து விட்டது. பாண்டியன் மொத்தப் பணத்தையும், முன்கூட்டியே அனுப்பியும் விட்டார். அதிகாலையில் எழுந்தவுடன் வந்த அந்த நினைவே இனிமையாக இருந்தது.   

 

அவர் இன்று மாலை கிளம்ப வேண்டும். போவதற்குள் இங்கே அவர் முடிக்க வேண்டிய வேலைகளும் நிறைய இருக்கின்றன. மடமடவென்று செய்தால் தான் மாலை நான்கு மணிக்குள் அனைத்து வேலைகளையும் முடிக்க முடியும். தேவானந்தகிரி காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வெளியே வந்த போதும் இருட்டாகவே இருந்தது. வெளியே காம்பவுண்ட் சுவரைச் சுற்றிலும் அவர் நிறைய பூச்செடிகள் நட்டிருந்தார். விடிவதற்கு முன்பே காலை பூஜைக்குப் பூக்களை அவர் முழுவதுமாக பறித்து விடுவது வழக்கம். விடியும் வரை காத்திருந்தால் அவர் பறிக்க வரும் போது எந்தச் செடியிலும் பூக்களே இருக்காது. வெளியாட்கள் பறித்துக் கொண்டு போய் விடுவார்கள். யாருக்கும் செடிகள் நடவோ, தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கவோ நாட்டம் கிடையாது. அடுத்தவன் நட்டிருந்தால் பூக்களைப் பறித்துக் கொண்டு போவதில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கெட்டிக்காரர்கள்.  

 

மனதில் அந்த பூத்திருடர்களைத் திட்டிக் கொண்டே தேவானந்தகிரி பூக்களைப் பறிக்க ஆரம்பித்தார். இரண்டே நிமிடங்களில் யாரோ ஒருவன் வந்து பைக்கை அவர் அருகே நிறுத்திக் கேட்டான். “ஐயா அபூபக்கர் ஹாஜியார் வீடு எது என்று சொல்ல முடியுமா?”

 

தேவானந்தகிரி அவன் பக்கம் திரும்பினார். ஹெல்மெட்டுடன் இருந்த அவன் முக அடையாளம் அவருக்குச் சரியாகத் தெரியவில்லை. அவன் தெரு மாறி வந்து விட்டான். அடுத்த தெருவில் தான் அபூபக்கர் ஹாஜியார் வீடு இருக்கிறது. அதை அவர் அவனிடம் சொல்ல, அவன் நன்றி தெரிவித்து விட்டு பைக்கைக் கிளப்பினான். அப்போது பைக் சற்று ஆட, அவன் சமாளித்து ஒரு காலை தரையில் ஊன்றினான். அப்போது அவன் தேவானந்தகிரியின் கட்டைப் பெருவிரலையும் சேர்த்து நன்றாக மிதித்து விட்டான். அவர் ஆவென்று அலற, அவன் கவனிக்கவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் ஐயாஎன்று சொல்லி விட்டுப் போனான்.

 

தேவானந்தகிரிக்கு வலி தாங்க முடியவில்லை. சற்று வெளிச்சத்துக்கு வந்து அவர் பார்த்த போது கட்டை விரலில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. “முட்டாள்பூட்ஸ் காலால் இப்படியா மிதிப்பது? பூட்ஸில் லாடம் போல் எதோ இரும்பும் சேர்த்து வைத்திருக்கிறான் போலிருக்கிறது….” என்று முணுமுணுத்தபடி வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கொண்டார். கட்டை விரலில் ஆரம்பித்த வலி கால் பூராவும் பரவுவது போலிருந்தது. பின் அவருக்கு கால் ஊன்றி நடக்க முடியாமல் போனது.   

 

சற்று நேரம் கழித்து தேவானந்தகிரி ஆஸ்பத்திரிக்குப் போன போது  டாக்டர் அது வெறும் பூட்ஸ் காலால் மிதிக்கப்பட்டதால் ஏற்பட்ட காயம் என்பதை நம்ப முடியாமல் பார்த்தார். காலுக்குக் கட்டுப் போட்ட அவர் காயம் குணமாக ஒரு வாரமாவது ஆகும் என்றும், அது வரை நடக்காமல் ஓய்வு எடுப்பது அவசியம் என்றும் சொன்னார். அதனால் தேவானந்தகிரி யோகாலயத்துக்குப் போக முடியாதென்று ஆகி விட்டது. பாண்டியன் பத்து லட்சம் பணம் அனுப்பியும், வாக்குக் கொடுத்தபடி இன்று போக முடியாதது அவருக்கு வருத்தமாக இருந்தது. சென்ற முறை அவர் கிளம்பத் தயாரான போது சகுனத் தடை இருந்தது. அப்போது அவர் அங்கு செல்வதற்கு முன்பு அவரைத் தற்காத்துக் கொண்டு தான் கிளம்ப வேண்டியிருந்தது. இந்த முறை இப்படி ஆகி விட்டது….    

 

திடீரென்று தேவானந்தகிரிக்கு எல்லாம் திட்டமிட்டு நடந்திருப்பது போல் தோன்றியது. சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள அவர் அபூபக்கர் ஹாஜியார் வீட்டுக்கு ஆளனுப்பி, இன்று அதிகாலை அவரைத் தேடி யாராவது பைக்கில் வீட்டுக்கு வந்தார்களா என்று கேட்டு வரச் சொன்னார். ஹாஜியார் அப்படி யாரும் வரவில்லையேஎன்று தெரிவித்தார். தேவானந்தகிரியின் சந்தேகம் ஊர்ஜிதம் ஆகியது.

 

(தொடரும்)

என்.கணேசன்

 



Thursday, March 5, 2026

சதுரங்கம் 8


ர்ஜுன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது வாசல் அருகிலேயே எதிர்ப்பட்ட தங்கை நித்யா, உதடுகள் மீது விரலை வைத்துசத்தமில்லாமல் வாஎன்று சைகை செய்து தெரிவித்தாள். அவன் பார்வையாலேயே என்ன என்று கேட்டபடி உள்ளே சென்ற போது ஞானமூர்த்தி ஹாலில் நாற்காலியில் அமர்ந்து மிகவும் ஆழ்ந்து பத்திரிக்கையைப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவர் படித்துக் கொண்டிருந்தது அன்றைய விடிவெள்ளி பத்திரிக்கை தான் என்பதைக் கவனித்த போது அர்ஜுனுக்குப் புரிந்தது. அவர் அவனுடைய கட்டுரையைத் தான் அப்படி ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்.

 

அவன் தனதறைக்குப் போன போது, பின்னாலேயே வந்த நித்யா தாழ்ந்த குரலில் அவனிடம் சொன்னாள். “நான் காலைலயே படிச்சுட்டேன். ரொம்ப நல்லா இருந்துச்சு.”

 

அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்றாலும் பெரியதாகப் பெருமிதம் இல்லை. அவளுக்கு அவளுடைய அண்ணன் செய்யும் எல்லாமே சிறப்பு தான். ஆனால் அவர்களுடைய தந்தை அவளைப் போல் அல்ல. அவர் சொன்னால் அது ஒரு நீதிபதியின் தீர்ப்பாகவே இருக்கும். விருப்பு வெறுப்பு இல்லாமல் உள்ளதை உள்ளபடி சொல்லும் நீதி தேவதையின் தீர்ப்பைப் போல் இருக்கும்..

 

உங்கப்பா அரசியலுக்குப் போனது நீதித்துறைக்கு மிகப்பெரிய நஷ்டம். நீதிபதியாய் போயிருந்தால் அவர் கண்டிப்பாக சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கலாம்.” என்று அவனிடம் பெரிய சட்ட வல்லுனர்கள் இருவர் சொல்லி இருக்கிறார்கள். ஞானமூர்த்தி நீதிபதியாகப் போயிருக்கா விட்டாலும் பல கருத்துக்களை ஒரு நீதிபதி போலவே சொல்லும் வழக்கம், இயல்பாகவே அவருக்கு இருக்கிறது.

 

எப்போடி படிக்க ஆரம்பிச்சார்?”

 

கால் மணி நேரம் ஆயிருக்கும். தீர்ப்பு வர குறைஞ்சது இனியும் முக்கால் மணி நேரமாவது ஆகும். ஏன்னா நீ எழுதியிருக்கிறது பெரிய கட்டுரை.”

 

அர்ஜுன் தங்கையும் தீர்ப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்குப் புன்னகை செய்தான்.

 

நித்யா கேட்டாள். “உன்னோட அபிமான நடிகை இறந்து போனது நிஜமாவே தற்கொலை தானா இல்லை கொலையா?”

 

வாலு. எப்பவோ அவ என் அபிமான நடிகையா இருந்தாள். அதையெல்லாம் நீ ஞாபகம் வெச்சிட்டு இப்ப சொல்றியா?”

 

நீ எனக்கிருக்கற ஒரே அண்ணன். நான் உன் சம்பந்தமான எதையும் எப்படி மறப்பேன்?”

 

அவள் சொன்னது அவன் கண்களை உடனடியாக ஈரமாக்கியது. தங்கைக்குத் தெரியாமல் இருக்க அவன் முகத்தை அந்தப் பக்கம் திருப்பி காலண்டரைப் பார்ப்பது போல் பாவனை செய்தான். ’இப்படிச் சொல்லவும், அன்பு செலுத்தவும் இவள் ஒருத்தியாவது என் வாழ்க்கையில் இருக்கிறாளே!”

 

ஆனால் அவன் திரும்பிய போது முகத்திலும் பேச்சிலும் அவன் உணர்ந்த உருக்கம் தெரியவில்லை. “ஆமா என்னைக்கோ அண்ணனோட அபிமான நடிகையாய் ஒருத்தி இருந்ததை ஞாபகம் வெச்சுச் சொல்றது உருப்படியான விஷயமா? அண்ணனைப் பத்தி வேறென்னடி தெரியும் உனக்கு?”

 

அண்ணனைப் பற்றி அண்ணனுக்கே தெரியாததும் கூடத் தெரியும்.” நித்யா அலட்டாமல் சொன்னாள்.

 

அண்ணனுக்கே தெரியாததா?” அர்ஜுன் ஆச்சரியத்துடன் கேட்டான்.

 

ஆமா

 

என்னடி அது?”

 

உன்னை ஒரு பொண்ணு காதலிக்கிறா. அது தெரியுமா உனக்கு?”

 

அர்ஜுன் திகைத்தான். “என்னடி சொல்றே? உன் சிநேகிதிகள்ல யாராவது என்னைக் காதலிக்கிறாங்களா? யாருடி அது? எத்தனை நாளா இது? இவ்வளவு நாளா ஏண்டி சொல்லலை?” என்று பரபரப்புடன் தங்கையிடம் அவன் கேட்டான்.

 

ஐயே மூஞ்சியப் பாரு. என் சிநேகிதி எவளும் உன்னைக் காதலிக்கலை.”

 

அர்ஜுன் திகைத்தான். “அப்பறம் வேற யாருடி உன் கிட்ட இதைச் சொன்னா?”

 

ஆமா என் கிட்ட தான் வந்து சொல்றாங்க. பெரிய ரிப்போர்ட்டராம். அறிவாளியாம். கட்டுரை எல்லாம் எழுதுவாராம். ஆனா அவரை ஒரு பொண்ணு காதலிக்கிறது மட்டும் அவருக்குத் தெரியாதாம். சரியான தத்தி அண்ணா நீ 

 

ஏய் என்னடி, இப்ப தான் ஒரு நிமிஷத்துக்கு முன்னால பாசமலர் தங்கச்சியாட்டம் என் கிட்ட பேசினே. இப்ப தத்திங்கற.”

 

அப்பறம் வேற என்ன உன்னைச் சொல்றது? உலகத்துல நடக்கறது எல்லாம் உனக்குத் தெரியிது. உன் வாழ்க்கைல நடக்கறதுல முக்கியமானதே உனக்குத் தெரிய மாட்டேங்குது.”

 

ஏய் சும்மா வளவளன்னு பேசாம சொல்லுடி. யாருடி அது? சீக்கிரம் சொல்லுடி. என் மண்டை வெடிச்சுடும்டி

 

நித்யா அண்ணனைக் குறும்பாகப் பார்த்தாள். அதிபுத்திசாலித்தனமும், வெகுளித்தனமும் கலந்த ஒரு கலவை அவளுடைய அண்ணன். “சொன்னா எனக்கு என்ன தருவே?”

 

என்னடி இப்படி லஞ்சம் கேட்கறே. ஞானமூர்த்தி பொண்ணுடி நீ.”

 

நித்யா சிரித்து விட்டாள். “அப்பா பேரைச் சொல்லியே கவுத்துட்டியே

 

தங்கையை மிக நெருங்கி தாழ்ந்த குரலில் கேட்டான். “யாருடி அது?”

 

ம்கீதாக்கா…. சாரி கீதா அண்ணி

 

அர்ஜுனுக்கு சப்பென்று ஆகி விட்டது. “லூஸாடி நீ. என்னோட நல்ல சிநேகிதியைப் போய் இப்படியெல்லாம் சொல்றியே. அவளுக்குத் தெரிஞ்சா அவ உன்னைப் பத்தி என்ன நினைப்பாள்?”

 

ம்அண்ணனுக்கு இல்லாத அறிவு தங்கச்சிக்காவது இருக்கேன்னு நினைப்பாள்.”

 

அர்ஜுனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ‘இந்த வாலு என்ன சொல்லுது. தெரிஞ்சு தான் பேசுதா. இல்லை, வயசுக் கோளாறுல கண்டதையும் கற்பனை பண்ணிப் பேசுதா

 

நித்யா போய் விட்டாள். அர்ஜுனுக்கு நித்யா ஏன் அப்படிச் சொன்னாள், எதை வைத்துச் சொன்னாள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் தலை வெடித்து விடும் போல இருந்தது. தங்கை பின்னாலேயே வெளியே வந்தவன் அவர்கள் பேச்சு கேட்டிருக்கக்கூடிய தொலைவிலேயே நின்று கொண்டு அம்மா துணிமணிகளை மடித்து வைப்பதைப் பார்த்து திடுக்கிட்டான். அம்மா எல்லாத்தையும் கேட்டிருப்பாளோ? அவனுக்கு வெட்கமாக இருந்தது.

 

ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் தங்கை நித்யாவின் அறையை அடைந்தான். நித்யா ஒரு பெரிய புத்தகத்தை எடுத்து படிப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தாள். அர்ஜுன் அவள் காதைத் திருகியபடி சொன்னான். “ஏய் வாலு. உனக்கென்ன நாளைக்கு பரிட்சையாடி? முழுசும் சொல்லாமல் அரைகுறையாய் பேசிட்டு வந்து புத்தகம் படிக்கற மாதிரி நடிக்கறாய்

 

புத்தகத்தை மூடி வைத்த நித்யா பெருமூச்சு விட்டாள். “ஒரு கோடி காட்டினா புரிஞ்சுக்க முடியாத ஆளெல்லாம் வாசுதேவன் குடும்பத்தோட ஒரே ஆண்  வாரிசுன்னு நினைக்கறப்ப ரொம்ப வேதனையாய் இருக்கு.”

 

என்னடி கோடி காண்பிக்கறது. ஒரு நல்ல சிநேகிதியை காதலின்னு சொல்றே. எதனால சொல்றே, எப்படிச் சொல்றேன்னு கேட்டா ஓடி வந்து இங்கே உட்கார்ந்து புத்தகம் படிக்கறே

 

திருவாளர் அர்ஜுன் அவர்களே. ஒரு பெண் காதலிக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே அவளுடன் வருடக்கணக்கில் பழகுவது தவறு. அதைத் தெரிந்து கொண்டு தங்கை சொல்லும் போது, உங்கள் மனதைக் கேள்வி கேட்டு அங்கே பதில் பெற்றுக் கொள்ளும் அடிப்படை அறிவு கூட இல்லாமல், தங்கையிடமே திரும்பத் திரும்ப அசட்டுத் தனமாகக் கேள்வி கேட்பது பெருந்தவறு. இப்படி தவறுக்கு மேல் தவறு செய்யும் உங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.”

 

அர்ஜுன் அவளை முறைத்தான். “ஏய் லூசு. நீ சொல்ற மாதிரி இருந்தா அவ கண்டிப்பா என் கிட்ட சொல்லியிருப்பா. முட்டாள்தனமான கற்பனைல யாரையும் தப்பா சொல்லக்கூடாதுடி

 

நித்யா சொன்னாள். “அண்ணா. பொண்ணுங்க பல விஷயங்களை லொட லொடன்னு மணிக்கணக்குல பேசுவாங்க. ஆனா ஒருசில குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் அவங்க சொல்லாமலேயே அவங்கள நேசிக்கறவங்க புரிஞ்சுக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. காதல் அதுல ஒன்னு. வார்த்தைகள்ல சொல்றதுக்கு முன்னாடி மனசார உணர்ற விஷயம் அது. நீ உணரலைன்னு தெரிஞ்சதுக்கப்பறம் வார்த்தையால அவங்க எப்படி உன் கிட்ட சொல்வாங்க? நீயும் சில சமயத்துல நம்ம அம்மா மாதிரியே நடந்துக்கறே. நீ உன்னோட தனி கூட்டுக்குள்ளே இருக்கே. அது தப்புண்ணா.”


(தொடரும்)

என்.கணேசன்




Monday, March 2, 2026

யோகி 145


 பிரம்மானந்தா மிகவும் கஷ்டப்பட்டுக் கைதட்டினார். “நல்ல சிந்தனை ரகுராமன். சரியான சிந்தனையும் கூட.”

 

அந்தப் பாராட்டிலும் ரகுராமன் புளங்காகிதம் அடைந்தது போல் தெரியவில்லை. பிரம்மானந்தாவுக்குத் தான் நினைத்தபடி அவரை சந்தோஷப்படுத்தவோ, வருத்தப்பட வைக்கவோ முடியாதது என்னவோ போலிருந்தது.   ஏற்கெனவே தன்னிறைவு பெற்ற ஆனந்த மனிதராய் அவர் இருப்பது ஆச்சரியமாகவும் இருந்தது. நிஜமாகவே அந்த ரகசியத்தை பிரம்மானந்தா அறிந்து கொள்ள விரும்பினார். ஏற்கெனவே கேட்க நினைத்து, கேட்டும் விட்டது தான் அது. ஆனால் தேவை இல்லாமல் கயிற்றுக் கட்டில், சொகுசு சோபா பற்றிப் பேசி விட்டோம் என்று தோன்ற அவர் கேட்டார். “நீங்கள் எப்போதும் ஆனந்தமாக இருக்க என்ன காரணம் ரகுராமன்?”

 

ஆசைகள் இல்லாமல் இருப்பது தான் காரணம்.”

 

எதற்காவது ஆசைப்பட்டு அதை நிறைவேற்றிக் கொள்வதில் அல்லவா ஆனந்தம் இருக்கிறது. ஆசைகள் இல்லாமல் இருப்பது எப்படி ஆனந்தமாகும்?”

 

ஒன்றுக்கு நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். அது நிறைவேறுகிறது அல்லது அதை அடைகிறீர்கள். நீங்கள் ஆனந்தமாக இருக்கிறீர்கள். ஆனால் அந்த ஆனந்தம் இருப்பது அடுத்த ஆசை வரும் வரையில் மட்டுமே அல்லவா?”

 

தோட்டக்காரன் ஞானி போல் பேச ஆரம்பித்தது பிரம்மானந்தாவுக்குப் பிடிக்கவில்லை. ஆசைகளுக்கு முடிவில்லை, ஆசைகள் தான் துன்பத்திற்குக் காரணம் என்ற வெற்று வேதாந்தப் பேச்சை மனிதனின் கையாலாகாத்தனம் என்று அவர் நினைத்தார். “ஆசைப்பட்டதைச் சாதித்தும், அடைந்தும் ஆனந்தம் அடைவது சரி தானே? அடுத்த ஆசை வரும் வரையில் தான் அது நீடிக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. அடுத்த ஆசையையும் நிறைவேற்றி மறுபடி அவன் ஆனந்தம் உணர்வதில் என்ன தவறு?”

 

ரகுராமன் அமைதியாகச் சொன்னார். “நீங்கள் ஒரு ஆசையை நிறைவேற்றி விட்டு அடுத்த ஆசை வரும் வரை சந்தோஷமாக இருக்கிறீர்கள் அல்லவா? கவனமாய் ஆராய்ந்தால் அது ஆசைகள் இல்லாத நிலையால் வரும் ஆனந்தம். இரண்டு ஆசைகளுக்கு இடையே இருக்கும் நிறைவு அது. சொல்லப் போனால் ஆசைகள் தான் அந்த ஆனந்தத்தையும், நிறைவையும் இல்லாமல் ஆக்குகின்றன. ஆசைகள் இல்லாமல் இருந்தால் ஆனந்தமும், நிறைவும், தானாக நீடிக்கும்.”

 

வார்த்தை ஜாலங்களில் இது வரை, தான் தான் கெட்டிக்காரர் என்று பிரம்மானந்தா நினைத்திருந்தார். இந்த ஆள் அவரை விடக் கெட்டிக்காரர் போல தர்க்க ரீதியாகப் பேசியது அவருக்குப் பிடிக்கவில்லை. நினைத்தது போல் தோட்டக்காரன் மந்தபுத்திக்காரன் அல்ல.

 

ஆசையில்லாமல் வெறுமையாக இருந்தால் அதில் எப்படி நிறைவு இருக்கும்? உலகத்தில் முன்னேற்றம் எப்படி இருக்கும்? நல்லது எப்படி நடக்கும்?” பிரம்மானந்தா கேட்டார்.

 

ரகுராமன் ஒரு குழந்தைக்குச் சொல்வது போல் பொறுமையாகவும், கனிவாகவும் சொன்னார். “எல்லாம் இறைவன் சித்தப்படி நடக்கிறது. எதை நம் மூலம் செய்ய வேண்டுமோ, அதை அவனே செய்ய வைத்துக் கொள்கிறான். ஆசையில்லாத நிலை வெறுமை அல்ல. திறமையைத் தரும் இறைவன் ஒருவனை வெறுமையாக இருக்க விடமாட்டான். இறைவனின் படைப்பில் வெறுமைகள் இல்லை. ஒருவனால் என்ன ஆக வேண்டும் என்று இறைவன் நினைக்கிறானோ அதற்கு வேண்டியதை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுப்பான். அதை இறைவனுடைய வேலை என்ற ஞானத்துடன் செய்பவனுக்குத் தனிப்பட்ட லாப நஷ்டங்கள் இல்லை. விளைவு எதுவானாலும் அது இறைவனைச் சேர்ந்தது. அதனால் அவன் அமைதி இழக்காமல் எதுவும் செய்ய முடியும். அந்த வேலையில் மனிதனுடையநான், என்னுடையஎன்ற சேர்க்கை சேரும் போது தான் பிரச்சினை உருவாகிறது. விளைவுகள் தனிப்பட்ட லாப நஷ்டங்கள் என்றாகி விடுகிறது. அதன் மூலம் சந்தோஷம், துக்கம் என்ற இரண்டு அலைகளும் அவன் வாழ்க்கையில் மாறி மாறி அடித்து அவனை அலைக்கழிக்க ஆரம்பித்து விடுகிறது. ஒரு வேலை இறைவனுடையது என்றிருக்கும் போது என்ன ஆகுமோ, எப்படி ஆகுமோ, எப்போது ஆகுமோ என்ற கவலைகள் வருவதில்லை. அதையெல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்று கவலையில்லாமல் இலகுவாகத் தன் பங்கைச் செய்து விட்டு மனிதன் அமைதியாய் இருக்க முடியும். ஆனால் அதுவே மனிதனின் தனிப்பட்ட ஆசையால் ஏற்படுத்திக் கொண்ட வேலையானால், முடியும் வரை கவலை, கோபம், பயம், விரக்தி, சந்தோஷம், துக்கம், விரக்தி, வெற்றி, தோல்வி என்று மாறி மாறி உணர்வது தவிர்க்க முடியாததாகிறது.  முடிந்த பின்பும் அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஒருவன் பாடுபட வேண்டியிருக்கிறது. மனிதன் தன்னுடையது என்ற அற்பதிருப்திக்காக படும் கஷ்டங்கள் ஏராளம். உண்மையில் எதுவும் அவனுடையது அல்ல. உலகம் ஒவ்வொரு கணமும் பல விதங்களில் அதைத் தெரிவித்துக் கொண்டு தானிருக்கிறது. ஆனால் அதை உணர்ந்து நடக்க முடியாமல் போவது தான் மாயையின் விளையாட்டு.”

 

ஒரு நிமிடம் அங்கே மயான அமைதி நிலவியது. தோட்டக்காரனிடம்தாழ்ந்த நிலையில் இருக்கிறாய், வெற்று ஆளாய் இருக்கிறாய்என்பதை நாசுக்காய் புரிய வைக்கப் போனது, அவர்உன்னுடையது என்ற அற்பத்திருப்திக்காக நிறைய கஷ்டப்படுகிறாய், இது மாயையின் விளையாட்டுஎன்று புரிய வைத்ததில் முடிந்து விட்டது. இப்படி வலியப் போய் தடி கொடுத்து அடி வாங்கியதை பிரம்மானந்தாவால் சகிக்க முடியவில்லை. மேலும், இந்த யோகாலயத்தில் இது வரை அவர் தான் அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்து இருக்கிறார். அவரே இந்த இடத்தில் ஒரு உபதேசம் கேட்கும் நிலைமை அவருக்கு இதுவரை வந்ததில்லை. இந்த முதல் அனுபவம் அவருக்குக் கசந்தது.   இந்தக் கசப்பை தொடர்ந்து நீட்டிக்கப் பிடிக்காமல் அவர் வறண்ட குரலில் சொன்னார். “உங்கள் கருத்துக்களை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.”

 

கூடுதலாக ரகுராமனிடம் பேசும் (கேட்கும்?) மனநிலையில் பிரம்மானந்தா இல்லை என்பது பாண்டியனுக்கு விளங்கி விட்டது. பாண்டியன் ரகுராமனைப் பார்த்து கைகூப்பினார். “நன்றி. கண்ணன் திரும்ப காரில் உங்களைக் கொண்டு போய் விடுவார்.”

 

ரகுராமன் மூவருக்கும் கைகூப்பி விட்டு எழுந்தார். ஷ்ரவனுக்கு அவருடைய மாறாத மலர்ந்த முகம் இராமாயணத்து ரகுராமனையே நினைவுபடுத்தியது. நீயே அரசன் என்று தசரதன் சொன்ன போதும், உன் தம்பியே அரசன் என்று கைகேயி சொன்ன போதும் ஸ்ரீராமனின் முக மலர்ச்சியில் மாற்றம் இருக்கவில்லையாம். சித்திரத்தில் வரைந்த செந்தாமரை போல அவன் முகம் இருந்தது என்று கவி சொன்னதாகப் படித்த நினைவு வந்தது. இவருக்கும், அழைத்து வந்த போதும் மகிழ்ச்சி, அனுப்பி வைக்கும் போதும் மகிழ்ச்சி!

 

ஷ்ரவன் பரவசத்துடன் எழுந்து நின்று அவரது காலைத் தொட்டு வணங்கினான்.   ரகுராமன் கனிவன்புடன் அவனைப் பார்த்து அவன் தலையை இரண்டு கைகளாலும் தொட்டு ஆசிர்வதித்தார். அந்தத் தொடுதலில் உடலெங்கும் மின் அதிர்வுகளை ஷ்ரவன் உணர்ந்தான்.

 

கண்ணனைப் பின் தொடர்ந்து ரகுராமன் செல்ல, பாண்டியன் பிரம்மானந்தாவின் உதவியாளனை அழைத்து தாழ்ந்த குரலில் சொன்னார். “அந்த ஆளோட காலடி மண்ணை எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வை

 

பிரம்மானந்தாவுக்கு ஷ்ரவனும், பாண்டியனும் சேர்ந்து ரகுராமன் யோகியே என்று முடிவு செய்து விட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 

பிரம்மானந்தாவின் கடுகடுத்த முகத்தைப் பார்த்த ஷ்ரவன் இவர் முன்னிலையில் அவர் காலைத் தொட்டு வணங்கியது இவருக்குப் பிடிக்கவில்லைஎன்று புரிந்து கொண்டான். உடனடியாக எழுந்து பிரம்மானந்தாவை  சாஷ்டாங்கமாய் வணங்கினான்.

 

அவரிடமிருந்து சிறப்பான பதில்களைப் பெறும்படியாக நீங்கள் கேட்ட கேள்விகள் அருமையிலும் அருமை யோகிஜி. ஒரு யோகியால் தான் இன்னொரு யோகியிடம் இப்படிக் கேட்டுப் பெற முடியும். நீங்கள் அறியாதது எதுவுமில்லை. ஆனால் அறியாதது போல் கேட்டு அவரைப் பேச வைத்தது ஜனகர் அஷ்டவக்கிரரைப் பேச வைத்தது போல் ஆகி விட்டது.”

 

இல்லாத ஒரு அர்த்தத்தை ஷ்ரவன் ஏற்படுத்திப் பாராட்டியதில்  பிரம்மானந்தா மனம் சிறு ஆறுதலைப் பெற்றது. அது உண்மையே என்றும், அதை அவன் சூட்சுமமாய் புரிந்து கொண்டு விட்டான் என்றும் காட்டிக் கொண்டபடி அவர் மெலிதாகப் புன்னகைத்தார். ஷ்ரவன் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான்.

 

அவன் போன பின் பாண்டியனும், பிரம்மானந்தாவும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். பாண்டியன் எதையோ தீவிரமாக யோசிப்பது தெரிந்தது. பிரம்மானந்தா கேட்டார். “என்ன யோசிக்கிறாய் பாண்டியன்?”

 

பாண்டியன் சொன்னார். “அந்த ஆள் சொன்னதைத் தான் யோசிச்சேன் யோகிஜி. ஒரு மனுஷன் தன் சொந்தக் காரியத்தை ஆர்வமாய் செய்யற மாதிரி கடவுளோட காரியத்தை எப்படி ஆர்வமாய் செய்ய முடியும் யோகிஜி?”


(தொடரும்)

என்.கணேசன்