என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, February 12, 2026

சதுரங்கம் 5

 

கீதா அர்ஜுனின் அறிவுக்கூர்மையையும், ஒரு சூழ்நிலையில் பலரும் கவனிக்கத் தவறும் சூட்சுமங்களைக் கவனிக்க முடிந்த அவனது பிரத்தியேகத் திறமையையும் நன்றாக அறிவாள். அவள் திகைப்புடன் கேட்டாள். “எப்படி சொல்கிறாய் அர்ஜுன்?”

 

அர்ஜுன் தாழ்ந்த குரலில் சொன்னான். “ஆளுங்கட்சியின் சோஷியல் மீடியா ஐ.டி விங் ஆள்கள்ல முக்கியமானவன் இங்கே வந்திருக்கான் பார்த்தியா?”

 

அவளும் அந்த ஆளைப் பார்த்திருந்தாள். அவன் பெயர் ப்ரேம். ஆனால் அவள் அவன் வந்ததற்கு அதிக முக்கியத்துவம் தந்திருக்கவில்லை. “அதனாலென்ன?”

 

அவன் சாதாரணமாய் ஆளுங்கட்சிக்கு சம்பந்தமில்லாத எந்த இடத்திற்கும் வராதவன். அவன் இங்கே வந்திருக்கான்னா, ஆளும் கட்சிக்கு இதுல எதோ சம்பந்தம் இருக்குன்னு அர்த்தம்

 

சரி. அதனால…?”

 

இது தற்கொலையாய் இருந்தா இவங்க முக்கிய ஆள் யாராவது அதைத் தூண்டியிருக்கலாம். இல்லாட்டி இது கொலையாய் இருக்கலாம். அதுக்கு ஆளுங்கட்சி ஆள் எவனாவது காரணமாய் இருக்கலாம்.”

 

எப்படி சொல்றே?”

 

அதெல்லாம் கேட்காதே. அது அப்படித்தான்அந்தப் போலீஸ் அதிகாரியும் பொய் சொல்றார். அவர் கண்டிப்பாய் இந்த வீட்டு சிசிடிவி கேமரா ரெக்கார்டிங்கைப் பார்த்திருக்கிறார். ஆனால் அதுல எதோ பிரச்சனை இருக்கு போல. அதனால தான் அதை ஒத்துக்க மாட்டேங்கறார்.”

 

கீதா புன்னகைத்தாள். இப்போதாவது ப்ரேம் இங்கே வந்திருப்பதும், போலீஸ் அதிகாரி சிசிடிவி பதிவுகளைப் பார்க்கவில்லை என்று பொய் சொல்லியிருப்பதும் அர்ஜுனுடைய இந்த யூகத்திற்குக் காரணம் என்று சொல்லலாம். ஆனால் ஒரு படியிலிருந்து ஐந்தாவது படிக்குத் தாவுவது போன்ற யூக வேலையையும் அர்ஜுன் அவ்வப்போது செய்வான். ஒரு நிகழ்விலிருந்து, தன் உள்ளுணர்வால் நாலைந்து படி தாண்டிய ஒரு முடிவுக்கு அவன் உடனடியாகப் போய் விடுவான். ஏன், எப்படி என்று கேட்டால் சில சமயங்களில் அவன் அதை ஒரு கணிதக் கோட்பாட்டை விவரிப்பது போல படிப்படியாய் விவரிப்பான். ஆனால் சில சமயங்களில் அதை அவனுக்கே விவரிக்கத் தெரியாது. ”அது அப்படித்தான்என்பான். ஆனால் அவன் சொல்வது சரி தான் என்பதை, தொடரும் சம்பவங்கள் பின்னொரு நாள் நிரூபிக்கும்.

 

அவன் அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு பைக்கில் அங்கிருந்து பத்திரிக்கை ஆபிசிற்கு விரைந்தான். அவன் போவதையே பார்த்துக் கொண்டு இருந்த கீதா பெருமூச்சு விட்டாள். இது போன்ற விஷயங்களில் எல்லாம் அதிபுத்திசாலியாக இருந்து எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் அவன் அவளுடைய காதலை மட்டும் புரிந்து கொள்ளாதவனாக இருக்கிறான். மூன்று வருடங்களாக அவர்கள் இருவரும் நெருங்கிப் பழகி வருகிறார்கள். பழக ஆரம்பித்து ஆறே மாதங்களில் அவள் அவனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். ஆனால் அவனைப் பொருத்த வரை அவள் ஒரு நல்ல தோழி தான். காதலை அவளாக அவனுக்குத் தெரிவிக்கவில்லை. ஆனால் காதல் மறைக்கும் விஷயமும் அல்லவே. உள்ளுணர்வால் பெரிய பெரிய ரகசியங்களைக் கண்டுபிடிக்க முடிந்த அவன், அவள் மனதில் இருப்பதை எப்படிக் கண்டுபிடிக்காமல் இருக்கிறான் என்பது அவள் ஆச்சரியப்படும் இன்னொரு விஷயம்.

 

மேலும் இந்த மூன்றாண்டுப் பழக்கத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு தான் முதல் முறையாக அவளை அவன் தன் வீட்டுக்கு அழைத்திருக்கிறான். அன்று அவனுடைய பிறந்தநாள். அழைக்கும் போதே அவன் தங்கை நித்யாஉன் நண்பர்களைக் கண்டிப்பாக அழைத்துத் தான் ஆக வேண்டும்என்று வற்புறுத்தியதாகவும், அதனால் அழைப்பதாகவும் சொன்னான். அவளுக்கு சப்பென்று போய் விட்டது.

 

அன்று அந்தப் பிறந்த நாள் விழாவில் அவளும், அவனுடைய ஆபிஸ் நண்பன் ஒருவனும் தான் வெளியாட்கள். அர்ஜுனுடைய அப்பாவும், தங்கையும் அவளுடன் மிக அன்பாகப் பழகினார்கள். ஆனால் அவனுடைய அம்மா அவள் வரவை அவ்வளவாக விரும்பாதது போல் கீதாவுக்குத் தோன்றியது. சொல்லும்படியாக வெளிப்பார்வைக்குக் காரணங்கள் தெரியவில்லை. ஆனால் அர்ஜுனின் தந்தை, தங்கை இருவரிடம் தெரிந்த  அன்பு அவன் தாயிடம் இருக்கவில்லை. யோசித்துப் பார்த்தால் அர்ஜுனின் அம்மா, அர்ஜுனின் ஆபிஸ் நண்பனுடன் கூட நன்றாகப் பேசியதாய் கீதாவுக்கு நினைவில்லை. 

 

ஒருவேளை அர்ஜுனின் அம்மா அவர்கள் வீட்டு அந்தஸ்துக்கு அவன் நண்பர்கள் சமமில்லாதவர்கள் என நினைக்கிறாளோ என்று கூட கீதாவுக்குச் சந்தேகமாக இருந்தது. ஏனென்றால் அர்ஜுனுடைய குடும்பம், தமிழகத்தின் நீண்ட கால அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பம். அவனுடைய தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகியாவும், சுதந்திரத்திற்குப் பின் எதிர்க்கட்சித் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் இருந்தவர். அவனுடைய அப்பா இன்று ஒரு அரசியல் கட்சித் தலைவர் மட்டுமல்ல மிகச் சிறந்த வக்கீலும் கூட. அவனுடைய சித்தப்பா தமிழக அரசியலில்கிங் மேக்கர்என்று அழைக்கப் படுபவர். இப்போதைய முதலமைச்சரும், இதற்கு முந்தைய முதலமைச்சரும் அவர் தயவால் முதலமைச்சரானவர்கள் தான்.

 

அர்ஜுன் அவள் வீட்டுக்கும் ஒரே ஒரு தடவை தான் வந்திருக்கிறான். அதுவும் அவள் பல முறை கட்டாயப்படுத்திய பிறகு ஒரு நாள்.  அவளுடைய வீட்டில் அவள் அம்மாவும், அப்பாவும், தம்பியும் அவன் வரவில் பெரிதாக மகிழ்ச்சியடைந்தார்கள். அவனும் அவர்களுடன் அன்பாகப் பேசினான். அம்மா அவன் போனவுடன் ரகசியமாய் கீதாவைக் கேட்டாள். “அவனைக் காதலிக்கிறாயா நீ?”

 

அப்படியெல்லாம் இல்லைம்மா. அவன் எனக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட் மட்டும் தான்என்று சொன்ன போது அவள் மனம் வலித்தது. அவன் அப்படித் தான் அவளை நினைக்கிறான் என்கிற போது அவளும் அப்படித் தானே சொல்ல முடியும். ஒருவேளை அவன் வேறு யாரையாவது காதலிக்கிறானோ என்னவோ? அதனால் தான் அவள் உணர்வுகள் அவனை எட்டவில்லையோ?

 

அவள் ஸ்கூட்டியைக் கிளப்பிய போது அவள் மனதில் கனம் கூடியிருந்தது.

 

ப்ரேம் நிருபர்கள் அனைவரும் கலைந்து சென்ற பிறகு அந்த விசாரணை போலீஸ் அதிகாரியிடம் சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினான். அவன் நர்மதா பற்றி நிறைய தகவல்கள் சேர்த்திருக்கிறான். அதில் உள்ள சில தகவல்களை மட்டும் அவன் பயன்படுத்திக் கொள்ளப் போகிறான். நர்மதா வாழ்க்கையில் ஏன் விரக்தி அடைந்தாள், விரக்தியில் அவள் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறியது என்பதை மக்கள் கூடிய சீக்கிரம் அறியப் போகிறார்கள். பலரும் அவளுக்காகப் பரிதாபப்படப் போகிறார்கள்.  வழக்கமாக அவன் அரசியலுக்காக பயன்படுத்தும் அனைத்தையும் இதற்குப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதில் ஐந்து சதவீதம் பயன்படுத்துவதே போதும். அடுத்து ஒரு சுவாரசியமான அல்லது வேதனையான நிகழ்வு வரும் வரை தான் நர்மதாவைப் பற்றி மக்கள் நினைக்கப் போகிறார்கள். அந்த வகையில் நர்மதா சீக்கிரமே மறக்கப்படவிருப்பவள் தான். அது வரை அவள் தினசரிப் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் தினசரி வந்து கொண்டு இருப்பாள்.

 

நர்மதாவின் காதலன் விமல் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. அவன் உயிருக்குப் பயந்து எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறான் போலத் தெரிகிறது. அவன் இப்படி தலைமறைவாகவே இருப்பது தான் அவனுக்கும் நல்லது. அவன் பொதுவெளிக்கு வந்து தேவையில்லாத விஷயங்களைப் பேசினால் அவள் தற்கொலைக்கே அவன் தான் காரணம் என்று கூட பலரையும் நம்ப வைத்து விடலாம்.

 

எல்லாம் தெளிவாக இருந்தாலும் ப்ரேமுக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் தெரியவில்லை. இப்படியெல்லாம் செய்வது யாரைக் காப்பாற்ற என்பது மட்டும் அவனுக்குத் தெரியவில்லை.  மேலிடத்திற்கு மிகவும் வேண்டப்பட்ட யாரோ ஒரு முக்கியஸ்தராக அந்த நபர் இருக்க வேண்டும். அந்த நபர் யாராக இருக்கலாம் என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவனுக்குத் தெரிவது மட்டுமல்ல, அவன் அனுமானிக்க முயல்கிறான் என்பது மேலிடத்திற்குத் தெரிந்தாலும் அது ஆபத்து தான். நர்மதா போய்ச் சேர்ந்த இடத்திற்கு வேகமாகப் போய்ச் சேர விருப்பமில்லாததால் அந்த முக்கியஸ்தர் பற்றிய சிந்தனையை அவன் அதற்கு மேல் வளர்த்தவில்லை.


(தொடரும்)

என்.கணேசன்



Wednesday, February 11, 2026

முந்தைய சிந்தனைகள் 133

 என்பிரசாதம் நூலில் இருந்து சில சிந்தனைத் துளிகள்...












Monday, February 9, 2026

யோகி 142

 

றுநாள் காலை குமரேசன் யோகாலயத்துக்குப் போன போது வெளி கேட்டைத் தாண்டியவுடனே கண்ணனால் நிறுத்தப்பட்டான். “இன்னைல இருந்து நீ வேலைக்கு வர வேண்டாம் மருதகாசி

 

குமரேசன் அதிர்ச்சியடைந்தான். காரணம் அவனுக்குத் தெரியாதது போல் சோகமாகக் கேட்டான். “ஏன் ஜீ?”

 

அதற்கு காரணம் சொல்வது அவசியமில்லை என்பது போல் கண்ணன் வாய் திறக்கவில்லை.  குமரேசன் வேலை போனாலும் அவன் கண்டுபிடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தான். அவனைப் போல் ஒரு தோட்டக்காரன் திடீரென்று நிறுத்தப்பட்டால் எப்படி நடந்து கொள்வானோ, அப்படியே நடந்து கொள்ளத் தீர்மானித்தான். தலையைச் சொறிந்தான். “திடீர்னு நிறுத்தினா நான் எப்படி சமாளிக்கறதுஜீ. நான் புள்ளை குட்டிக்காரன். என் குடும்பம் என் வருமானத்தை நம்பி தான் இருக்கு…”

 

கண்ணன் சொன்னார். “15 நாள் சம்பளம் சேர்த்து தரச் சொல்றேன். வாங்கிட்டு போ.”

 

ஓரளவு மனசமாதானம் அடைந்தவன் போல் குமரேசன் காட்டிக் கொண்டான்.  

 

வழக்கம் போல் தோட்டக்காரர்களுக்கு வேலை ஒதுக்க ஆறு மணிக்குச் சென்ற கல்பனானந்தா மருதகாசி மட்டும் வந்திருக்காததைக் கவனித்தாள். யோசனையுடன் அவள் முன்பக்கம் பார்த்த போது முதல் கேட் அருகிலேயே மருதகாசியும் கண்ணனும் பேசிக் கொண்டிருப்பதை அவள் பார்க்க முடிந்தது. உடனே அவள் பிரச்சினையை உணர்ந்தாள். அவள் பயப்பட்டது போலவே மருதகாசி சைக்கிளுடன் வெளியேறுவது தெரிந்தது. கண்ணன் மட்டும் இரண்டாம் கேட்டைத் தாண்டி வந்தார். கல்பனானந்தாவிடம் அவர் சொன்னார். “மருதகாசியை வேலைல இருந்து நிறுத்திட்டோம். அவன் ஆள் சரியில்லை…”

 

கல்பனானந்தா அந்தத் தகவலால் பாதிக்கப்பட்டது போல் காட்டிக் கொள்ளவில்லை. சரி தான் என்பது போல் அவள் தலையசைத்தாள். ஆனால் ஷ்ரவனிடம் அத்தகவலைத் தெரிவிக்கும் வரை அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. மருதகாசி எதனால் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டான் என்பது அவளுக்குத் தெரியவில்லை. அவர்கள் ஷ்ரவனையும் சந்தேகப்பட்டு இருப்பார்களோ என்ற கவலை அவளுக்கு அதிகம் இருந்தது.  

 

ஷ்ரவன் வேலைக்கு வந்த போது தாழ்ந்த குரலில் அவனிடம் அத்தகவலைத் தெரிவித்தாள். அவனும் அதிர்ந்து போனான். அவனுக்கும் அவளுடைய சந்தேகமே ஏற்பட்டது. பிடிபட்டு விட்டோமோ?

 

ஷ்ரவன் அவளிடம் மெல்ல சொன்னான். “நான் உங்க கிட்ட பேசணும் சுவாமினி.”

 

வேறொரு துறவி அவர்களை நெருங்குவதைப் பார்த்த கல்பனானந்தாஅப்புறம்என்று முணுமுணுத்தாள்.

 

ஷ்ரவன் நகர்ந்தான். வேலை செய்து கொண்டிருக்கையில் கண்காணிப்பவர்களைக் கவனித்தான். அவர்கள் அவனை அதிகமாகக் கண்காணிப்பதைப் போல் தோன்றவில்லை. அவன் மீது சந்தேகம் வந்திருந்தால் கண்காணிப்பு அதிகரித்திருக்க வேண்டும். கூடுதல் சந்தேகம் வந்திருந்தால் இன்னேரம் அவன் இங்கே வேலை செய்து கொண்டிருக்கக் கூட முடியாது. எல்லாம் யோசிக்கையில் குமரேசன் வெளியே நடந்த எதிலோ தான் மாட்டியிருக்க வேண்டும் என்பதை ஷ்ரவன் புரிந்து கொண்டான். அவனை இவர்கள் பின் தொடர்ந்து போய் எதையாவது கண்டுபிடித்திருக்கலாம், அல்லது சந்தேகப்பட்டிருக்கலாம்ஷ்ரவனின் மனம் சிறிது அமைதியடைந்தது. ஆனால் எந்த நேரத்திலும் அவனும் மாட்டிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. இது வரை குமரேசன் அவனைப் பார்க்க முடியாவிட்டால் அவன் மூலமாக ராகவனுக்கு ஷ்ரவன் மாட்டிக் கொண்ட்து தெரிய வரும் வாய்ப்பு இருந்தது. குமரேசன் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டதால் அந்த வாய்ப்பும் இல்லை. ஷ்ரவன் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.   

 

நாளை பெங்களூரில் ஒரு நிகழ்ச்சியில் பேச பிரம்மானந்தாவுக்கு அழைப்பு வந்திருப்பதால், அவர் பேசுவதற்கு குறிப்புகள் எடுத்துத் தரும் வேலை கல்பனானந்தாவுக்கு வந்து சேர்ந்தது. அதனால் அவளுக்கு மதியத்திற்கு முன் ஷ்ரவனிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மாலை தான் எல்லோருடைய வேலையையும் மேற்பார்வை பார்த்துக் கொண்டு அவனிடமும் அவள் வந்தாள்.     

 

ஷ்ரவன் வேலை பார்த்துக் கொண்டே சொன்னான். “சுவாமினி. இனி எந்த நேரத்திலும் என்னையும் அவர்கள் கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி ஒரு வேளை அவர்கள் கண்டுபிடித்தால் நான் வேலைக்கு வராதது மூலம் உங்களுக்குத் தெரிய வரும். அப்படி நான் வேலைக்கு வராவிட்டால் ஒரேயொரு மெயிலை நீங்கள் அனுப்ப வேண்டும்.”

 

கல்பனானந்தா முகத்தில் தெரிந்த கலவரத்தை ஷ்ரவன் பக்கவாட்டில் கவனித்தான். ”பயப்படாதீர்கள் சுவாமினி. நீங்கள் புதிதாய் மெயில் அனுப்பப்போவதில்லை. ஏற்கெனவே வந்திருக்கும் மெயிலுக்கு பதில் அனுப்பப்போகிறீர்கள் அவ்வளவு தான். நீங்கள் அனுப்பும் மெயிலைப் படித்தாலும் அவர்களுக்குச் சந்தேகம் வராது. எப்படி அனுப்புவது என்று சொல்கிறேன். ’க்ஷேமமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்என்று ஆரம்பியுங்கள். அதற்குநான் ஆபத்தில் இருக்கிறேன்என்று அர்த்தம். அதைத் தொடர்ந்து நீங்கள் எழுதும் வாக்கியங்களில் முதல் இரண்டு வார்த்தைகள் அடித்து விட்டு மூன்றாவது வார்த்தையை மட்டும் தான் எங்கள் ஆட்கள் தேர்ந்தெடுத்துப் படிப்பார்கள். மீதி நாளை சொல்கிறேன்.”

 

கல்பனானந்தா அப்போது தான் ஒரு கண்காணிப்பாளன் நெருங்கி வருவதைப் பார்த்தாள். அந்தப் பக்கம் திரும்பாமலேயே அவன் நெருங்கி வருவதை ஷ்ரவன் எப்படிக் கண்டுபிடித்தான் என்பது அவளுக்கு விளங்கவில்லை. இவனிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது.

 

ஒவ்வொரு முறை கண்காணிப்பாளன் வரும் போதும் அவள் நகர்வது அவனுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தலாம் என்று தோன்ற கல்பனானந்தா அன்று நகராமல் அங்கேயே நின்றபடி ஷ்ரவனிடம் சொன்னான். “ஷ்ரவனானந்தா. இந்த வகைச் செடிகள் இன்னும் உயரமாகப் போகக்கூடியவை. இவற்றை உள்ளேயும், வெளிப்புறம் வேலிப்பகுதியில் சற்று குட்டையான செடிகளையும் நட்டால் வெளியேயிருந்து பார்க்கும் போது இரண்டையும் பார்த்து ரசிக்க முடியும், என்ன சொல்கிறீர்கள்?”

 

அதுவும் சரி தான் சுவாமினி. அப்படியே செய்கிறேன்.” ஷ்ரவன் சொன்னான்.

 

கல்பனானந்தா அவசரமில்லாமல் நகர்ந்தாள். கண்காணிப்பாளனுக்கு அவள் பக்கத்துத் தோட்டத்தில் வேறொரு துறவியுடன் பேசுவது கேட்க ஆரம்பித்தது.  எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று சிறிது நேரம் கேட்டு விட்டு அவன் நகர்ந்தான்.

 

ஷ்ரவன் வேலை முடிந்து அறைக்குத் திரும்பும் போது கண்ணன் வழியில் கிடைத்தார். அவர் அவனைப் பார்த்து நட்புடன் புன்னகைத்த போது அவன் கண்டுபிடிக்கப்படாதது மேலும் உறுதியாகியது. ஆனால் இந்தப் பாதுகாப்பான நிலை எத்தனை நாட்களோ?

 

மாலை சத்சங்கத்துக்கு முன் நூலகத்தில் இருந்து நூல் ஒன்றைப் படிக்க எடுத்து வருவதாக சித்தானந்தா சென்றபோது தான் ஷ்ரவனுக்கு நாளை நூலகத்தில் கல்பனானந்தாவைச் சந்திப்பது நல்லது என்று தோன்றியது. அவன் அவசர அவசரமாக ஒரு துண்டுச் சீட்டில், ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆன்மிக மையம், லீலாவதி என்ற பெயர்களில் உருவாக்கி வைத்திருந்த மின்னஞ்சல் முகவரிகளை எழுதினான்.

 

முக்தானந்தா அவன் புதிதாய் எதையோ செய்யவிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாலும் அவராக எதுவும் கேட்கவில்லை. ஷ்ரவன் அவரிடம் குமரேசன் மேல் சந்தேகம் கொண்டு அவர்கள் வேலையிலிருந்து நிறுத்தி விட்டதைத் தெரிவித்தான். புன்முறுவலுடன் அவனையும் அவர்கள் கண்டுபிடித்து விடும் வாய்ப்பும் இருக்கின்றது என்று அவன் சொன்ன போது அவர் வேதனையுடன் சொன்னார். “இந்த விஷப்பரிட்சை வேண்டாம் ஷ்ரவன். நீ திரும்பிப் போய்விடு. இறந்தவர்கள் திரும்பி வரப்போவதில்லை.”

 

ஷ்ரவன் சொன்னான். “யாராவது இவர்களை நிறுத்தித் தான் ஆக வேண்டும் சுவாமிஜி. சைத்ராவையோ, டாக்டர் வாசுதேவனையோ, இங்கே புதைக்கப்பட்டவனையோ திரும்பிவர வைக்க முடியாது தான். ஆனால் இவர்களைப் போல இன்னும் எத்தனையோ பேர் பலியாவதை என்னால் தடுக்க முடியும். தடுக்க வேண்டும். பயந்து, அடங்கி, அனுசரித்துப் போகிறவர்களால் எந்த மாற்றமும் நடந்து விடாது சுவாமிஜி. தவறை எதிர்த்து தைரியமாக நிற்கிறவர்களால் தான் எந்த நல்ல மாற்றமும் நடக்க முடியும்.”

 

அவருக்கு அவன் சொல்வது முற்றிலும் உண்மை என்று புரிந்தது. ஆனால் வாழ வேண்டிய இந்த நல்ல இளைஞன், இவர்களிடம் பலியாவதில் அவருக்கு வருத்தம் இருக்கிறது. அவர் ஒரு தந்தையின் பாசத்தோடு, வேதனையோடு அவனைப் பார்த்த போது அவன் புன்னகையுடன் சொன்னான். “எல்லா ஆபத்துகளுக்கும் நான் தயாராகத் தான் வந்திருக்கிறேன் சுவாமிஜி.   ஒவ்வொன்றிலிருந்தும் தப்பிக்க முன்கூட்டியே ஒரு வழி ஏற்படுத்திக் கொண்டு தான் வந்திருக்கிறேன். அதனால் அவ்வளவு சுலபமாக இவர்கள் என்னைக் கொன்றுவிட முடியாது. அதையும் மீறி நான் பலியாக வாய்ப்பு இருக்கிறது என்பதை நான் தெரிந்தே வைத்திருக்கிறேன். அப்படி ஒருவேளை நான் இறந்தாலும் இவர்கள் அவ்வளவு சுலபமாக தப்பித்து விட முடியாது. அதுமட்டும் உறுதி.”

 

அவன் சொன்ன தைரிய வார்த்தைகளால் அவர் சிறிது தைரியம் அடைந்தார் என்றாலும் கடைசியாக அவன் சொன்னது அவரைக் கஷ்டப்படுத்தியது. அடுத்த பிறவியில் அவர் சம்சார வாழ்க்கையில் ஈடுபடுபட்டால் இவனைப் போன்ற ஒரு மகன் வேண்டும் என்று ஆசைப்பட்டபடி அவனை அன்புடன் பார்த்தார். பின் குரல் கரகரக்கச் சொன்னார். “என் பிரார்த்தனை எப்போதும் உன்னுடன் இருக்கும் ஷ்ரவன்.”


(தொடரும்)

என்.கணேசன்



Thursday, February 5, 2026

சதுரங்கம் 4


ர்ஜுனும், கீதாவும் நர்மதாவின் வீட்டருகில் நீண்ட நேரம் இருந்தார்கள். நர்மதாவின் தற்கொலை குறித்து தங்கள் பத்திரிக்கைகளில் பிரசுரிக்க குறிப்புகளையும், புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்கள். நர்மதா வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரித்ததில் முக்கியமாய்ச் சொல்லும்படியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. பணக்காரர்கள் அதிகமாக வசிக்கும் அந்தப் பகுதியில் யாரும் யாருடனும் அதிகம் பேசிக் கொள்வதும் இல்லை என்பது தெரிந்தது. நர்மதாவின் வேலைக்காரியை வீட்டிற்குள்ளே போலீஸார் விசாரித்துக் கொண்டு இருந்ததால் அவளிடம் பேச முடியவில்லை. வேலைக்காரியைப் பார்த்துப் பேச அவர்களுடன் மற்ற நிருபர்களும் காத்திருந்தார்கள்.

 

அர்ஜுன் கீதாவிடம் சொன்னான். “பசிக்குது. காலைல சாப்பிடல.”

 

ஏன்?”

 

டிபன் ரெடியாயிட்டிருந்துச்சு. நீ கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னவுடனே நான் உடனே கிளம்பி இங்கே வந்துட்டேன். நீ சாப்பிட்டியா?”

 

இல்லை. வீட்டுல டிபன் ரெடியாத் தான் இருந்துச்சு. ஆனா நான் சாப்பிடலை. எங்கம்மா கூட சண்டை.”

 

அர்ஜுன் புன்னகையுடன் கேட்டான். “ஏன்?”

 

எப்ப பார்த்தாலும் அட்வைஸோ அட்வைஸ். என் ரூமை நான் எப்படி வெச்சிருந்தா அவங்களுக்கென்ன? வயசுப் பொண்ணு இப்படி மோசமா வெச்சிருக்கறதான்னு ஒரே திட்டு

 

அர்ஜுனின் புன்னகை விரிந்தது. ”சரி வா. பக்கத்து ஓட்டல்ல சாப்பிட்டுட்டு வந்துடலாம்.”

 

இருவரும் ஓட்டலை நோக்கி நடக்க ஆரம்பிக்கையில் கீதா அவனைப் பார்த்து லேசாகப் புன்னகைத்து விட்டுச் சொன்னாள். “உன்னை மாதிரி பசங்களுக்கு பிரச்சனையே இல்லை. அம்மாக்களே எல்லா வேலைகளையும் பண்ணிடுவாங்க. பொண்ணுகளுக்குத் தான் அதைச் செய், இதைச் செய்யின்னு தொந்தரவு. உன் தங்கச்சியையும் உங்கம்மா அப்படி தான் திட்டுவாங்களா?”

 

நித்யா எங்கப்பா மாதிரி. இருக்கற இடமும், செய்யற வேலையும் எப்பவுமே ஒழுங்காவும், சுத்தமாவும் இருக்கும். அதனால அம்மாக்கு அந்த விஷயத்துல அவளைத் திட்ட வாய்ப்பே இல்லை.”

 

கீதா சொன்னாள். “உன் தங்கச்சி மாதிரி பொண்ணுங்க தான் என்னை மாதிரி பொண்ணுங்களுக்கு எதிரிகளே. ’அவளைப் பாரு. அவளும் உன்னை மாதிரி பொண்ணு தானே. அவ எவ்வளவு ஒழுங்கா சுத்தமா வெச்சிருக்கா பாரு. அவளப் பார்த்தாவது கத்துக்கோன்னு ஒரு ஸ்டேண்டர்ட் டயலாக் எப்பவும் வரும். அம்மா கிட்ட திட்டு வாங்காத பொண்ணு ஒருத்தி இருக்கான்னா அது ஆச்சரியம் தான்.”

 

அர்ஜுன் சொன்னான். “அவளும் திட்டு வாங்குவா. ஆனா அது வேற விஷயங்களுக்காய் இருக்கும்....”

 

ஓட்டலுக்குள் நுழைந்து அமர்ந்தார்கள். டிபன் ஆர்டர் செய்த பின் கீதா சொன்னாள். “ஆனா உன்னை உங்கம்மா எதுக்காகவும் அதிகமா திட்டமாட்டாங்க தானே.”

 

அர்ஜுன் தலையசைத்தான். ‘பேசினால் தானே திட்டுவதற்கு!’ கீதா சொன்னாள். “எல்லா வீட்டுலயும் பசங்களுக்கு நிறைய தனி சலுகைகள், அம்மா கிட்ட இருந்து செல்லம், எல்லாமே...”

 

அர்ஜுன் விரக்தியுடன் புன்னகைத்தான். வெளியே சொல்லிக் கொள்ளவும் முடியாத கஷ்டங்களின் கனம் அதிகம்...

 

சாப்பிடும் போது கீதா தன் தம்பிக்கு வீட்டில் அளிக்கப்படும் கூடுதல் சலுகைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். அர்ஜுனின் மன கனம் கூடிக்கொண்டே போய் ஒரு கட்டத்தில் சொன்னான். “கீதா, சும்மா புலம்பாம வேற எதாவது உருப்படியா பேசறியா

 

கீதா அவனைப் பரிதாபமாய் பார்த்துச் சொன்னாள். “ரொம்பப் புலம்பறேனா. எல்லாம் எங்கம்மா இன்னைக்குக் காலைலயே ஆரம்பிச்சு வெச்சது. சாரி அர்ஜுன். இனி பார். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் இருக்கப் போறேன்...”

 

அர்ஜுன் புன்னகைத்தான். அவள் நாளையும் புலம்பத் தான் போகிறாள். ஆனால் எதிர்க்கருத்து சொன்னாலே முகமும், மனமும் மாறி விடும் உலகில், எதிர்க்கருத்தாக இருந்தாலும், அது சரி என்று தோன்றினால் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும் இவள் குணம், பலரிடமும் இல்லாத அரிதான குணம். அவன் தங்கைக்கு அடுத்தபடியாக, பழக மிக சௌகரியமாக உணரும் பெண் இவள் தான். ஒளிவு மறைவு இல்லாமல், ஈகோ இல்லாமல் இருப்பதற்காகவே அவனுக்கு அவளை மிகவும் பிடிக்கும்.   

 

சாப்பிடுகையில் இருவரும் அவர்களுடைய பரஸ்பர நண்பர் ஒருவரது வீட்டில் நடந்த ஒரு சுவாரசிய நிகழ்வைப் பற்றிப் பேசினார்கள். அவர்கள் சாப்பிட்டு விட்டு மறுபடியும் நர்மதா வீட்டுக்கு வந்த போது நர்மதா வீட்டு வேலைக்காரி வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.

 

பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களின் நிருபர்கள் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். திடீரென்று முக்கியத்துவம் கிடைத்த புளங்காகிதத்தில் அவள் இருந்தது, பார்க்கையிலேயே தெரிந்தது. பலரும் அவளிடம் பல கேள்விகள் கேட்க அவள் விரிவாகப் பதில் சொன்னாள்.

 

என் பெயர் சாவித்திரிங்க. நான் நர்மதாம்மா கிட்ட நாலு வருஷமா வேலை பாக்கறேங்க.  என் கிட்டே ரொம்ப அன்பாய் இருப்பாங்க...”

 

இது பொய். எத்தனை வேலை செய்தாலும் நர்மதாவைத் திருப்திப்படுத்த முடியாது என்பது தான் சாவித்திரியின் அனுபவம். நர்மதா எதிலும் குற்றமும், குறையும் சொல்லிக் கொண்டே இருப்பாள், அடிக்கடி எரிந்து விழுவாள் என்பது தான் நிஜம். ஆனால் இறந்து போனவர்களைப் பற்றி கெட்டதாய் எதுவும் சொல்லக் கூடாது என்பது சாவித்திரியின் உறுதியான அபிப்பிராயம். ஏனென்றால் இறந்தவர்கள் தெய்வமாகி விடுகின்றார்கள் என்று அவள் தாய் அடிக்கடி சொல்வாள். அதனால் நர்மதாவின் தவறுகளைச் சொல்வது தெய்வக்குற்றம் ஆகி விடலாம்...

 

“... ரெண்டு நாளாவே நர்மதாம்மா ஒரு மாதிரியா தான் இருந்தாங்க. ஆனாலும் இப்படி முடிவெடுப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லைங்க...” சொல்லச் சொல்ல சாவித்திரியின் கண்கள் கலங்கின. அழுகை, கோபம், சிரிப்பு, சோகம் எல்லாமே நொடிப்பொழுதில் அவளுக்கு வந்து விடும். அவ்வப்போது உணரும் உணர்ச்சிகளே அந்தந்த சமயங்களில் பிரதானம் என்று நினைக்கும் பெரும்பாலான அடித்தள மக்களின் மனநிலையில் இருப்பவள் தான் அவளும். அதை அவளை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அர்ஜுன் புரிந்து கொண்டான். அவன் சாவித்திரியைப் போன்ற பலரைப் பார்த்திருக்கிறான். ஒரே மனநிலையில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணி வாழ்க்கையை அவர்கள் சிக்கலாக்கிக் கொள்வதில்லை.

 

அவளுக்குச் சொல்ல அதிகம் இருக்கவில்லை. வெளி கேட் மற்றும் உள்கதவின் சாவிகள் அவளிடமும், நர்மதாவிடமும் தான் இருக்கின்றன. சில சமயங்களில் நர்மதா வெளியூர் சென்றிருப்பாள். சில சமயங்களில் காலையில் மிகத் தாமதமாகத் தான் எழுந்திருப்பாள். அதனால் சாவித்திரி தன்னுடைய நேரத்தில் வந்து வீட்டைச் சுத்தம் செய்து விட்டுப் போக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இன்றும் அவள் வீட்டுக்குள் போனவுடன் நர்மதாவைப் பார்க்கவில்லை. வீட்டைப் பெருக்கிக் கொண்டே நர்மதாவின் அறைக்கும் வந்த போது தான் அவள் நர்மதா மின்விசிறியில் கயிறு கட்டி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறாள். பின் தான் போலீஸுக்குப் போன் செய்திருக்கிறாள்.

 

நர்மதாவின் நெருங்கிய உறவினர்கள், நட்புகள் பற்றி நிருபர்கள் கேட்டார்கள். சாவித்திரி அறிந்த வகையில் நர்மதாவின் தங்கை ஒருத்தி ஆஸ்திரேலியாவில் இருக்கிறாள் என்றும் வேறு உறவினர்கள் பற்றித் தனக்குத் தெரியாது என்றும் சொன்னாள். நட்பின் வகையில் நர்மதாவின் வீட்டுக்கு விமல் என்பவர் எப்போதாவது வருவார் என்றும் அவள் சொன்னாள்.

 

எல்லாம் சொல்லி முடித்து மைக், கேமிராக்கள் விலகிய போது சாவித்திரி ஆர்வத்துடன் ஒரு நிருபரிடம் கேட்டாள். ”டிவில எத்தனை மணிக்கு இதைக் காட்டுவீங்க?”

 

அந்த நிருபருடன் அர்ஜுனும் புன்னகைத்தான். அவன் பார்வை மேலோட்டமாய் அங்குள்ளவர்களைப் பார்த்தபடி உலாவி, திடீரென்று ஓரிடத்தில் நின்று தங்கியது. அந்த இடத்தில் இருந்த நபரை அர்ஜுன் கூர்ந்து கவனித்தான்.

 

சிறிது நேரத்தில் வீட்டுக்குள்ளிருந்து விசாரணை போலீஸ் அதிகாரி வர அவன் பார்வை அவர் பக்கம் நகர்ந்தது. வந்த போலீஸ் அதிகாரி நிருபர்களிடம் சொன்னார்.  வாழ்க்கை வெறுத்து விட்டது. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். இதற்கு யாரும் காரணமல்லஎன்று நர்மதா எழுதியிருப்பதாக நம்பும் ஒரு கடிதம் கிடைத்திருக்கிறது. வீட்டிலிருந்து எந்தப் பொருளும் காணாமல் போன மாதிரி தெரியவில்லை. அதனால் தற்கொலை என்று தான் இப்போதைக்கு நினைக்க வேண்டியிருக்கிறது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கிடைத்த பின் தான் எதையும் உறுதியாகச் சொல்ல் முடியும்.”

 

அர்ஜுன் கேட்டான். “சிசிடிவி கேமிரா ரெக்கார்டிங் எல்லாம் பார்த்தீங்களா சார்?”

 

அந்தக் கேள்வி அவரைத் தர்மசங்கடப்படுத்தியது போல் தெரிந்தது. அவர் அவசரமாய்ச் சொன்னார். “அதெல்லாம் இனிமே தான் நிதானமாய் பார்க்கணும். இப்போதைக்கு இவ்வளவு தான்.”

 

நிருபர்கள் கலைய ஆரம்பித்தார்கள். கீதாவிடம் அர்ஜுன் மெல்ல சொன்னான். ”இது தற்கொலை மாதிரி தெரியலை கீதா 

 

கீதா திகைத்தாள்.

 

(தொடரும்)

என்.கணேசன்