என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, July 6, 2026

யோகி 163

 


பிரம்மானந்தாவுக்கு அதலபாதாளத்தில் விழுந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு தான் இரண்டு நாட்களாக இருந்து வருகிறது. இன்னும் பாதாள அடித்தளத்தை எட்டி விடவில்லை. எட்டினால் சுக்கு நூறாக உடைந்து விடலாம். வீழ்ச்சியின் விளைவு இன்னது தான் என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கும் விதி கருணை காட்டவில்லை. பாண்டியனின் மரணத்தை ஜீரணிப்பது அவருக்கு எளிதாக இல்லை. எத்தனை பிரச்சினைகள் வந்தாலும், பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்காமல் உடனடியாக ஒரு தீர்வைக் குறுக்கு வழியில் வேகமாக எட்டுபவர் பாண்டியன். மலை போல் தோன்றிய எத்தனையோ பிரச்சினைகளை எல்லாம் அவர் பாண்டியனிடம் சொல்லிக் கவலைப்பட்டதுண்டு. சிலவற்றுக்கு உடனடியாகத் தீர்வு சொல்லும் பாண்டியன் சிலவற்றுக்குத் தீர்வைக் கண்டுபிடிக்க ஒரு நாள் எடுத்துக் கொள்வதுண்டு. ஆனாலும் பிரம்மானந்தாவுக்கு, திரும்பவும் அந்தப் பிரச்சினையை பாண்டியனிடம் சொல்ல வேண்டி வந்ததில்லை. காரணம், தீர்வு அவருக்குக் கிடைத்திருக்கும். அப்படிப்பட்ட பாண்டியன் தனக்குக் கடைசியாக வந்தப் பிரச்சினைக்குக் குறுக்குவழித் தீர்வாக தற்கொலையை நினைத்தது பிரம்மானந்தாவுக்கு ஜீரணிக்க முடியவில்லை. விஸ்வகீர்த்தியின் தாயத்து வேலை செய்யா விட்டால் இன்னொரு ஆளைக் கண்டுபிடிப்பதா கஷ்டம்? அப்படியும் சரியான ஆளைக் கண்டுபிடிக்க முடியா விட்டால் தேவானந்தகிரியையே சில நாட்களில் வரவழைத்து விட முடியுமே. பின் என்ன பிரச்சினை? கோழைகள் தற்கொலையைத் தீர்வாக நினைக்கலாம். ஆனால் பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தித்துப் போராட என்றுமே தயங்காத பாண்டியனுக்கு எப்படி தற்கொலையைத் தீர்வாகத் தேர்ந்தெடுக்க முடிந்தது? திரும்பத் திரும்ப அதே கேள்வி தான் அவரை சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது. அதல பாதாளத்தில் இன்னமும் போய்க் கொண்டே இருக்கிறார். பாண்டியன் இல்லாமல் எதையும் சமாளிக்க அவர் பழகவில்லை. அது பாண்டியனுக்கும் தெரியும். அது தெரிந்தும் ஏன் பாண்டியன்….

இரண்டு நாட்களாக அவரிடம் யார் யாரோ வந்து ஏதேதோ ஆறுதல் சொல்லி விட்டுப் போகிறார்கள். காதில் எதுவும் விழுந்த வார்த்தைகள் அவருடைய அறிவில் பதியவில்லை. எல்லாம் வெறும் சத்தங்களாகத் தான் இருக்கின்றன.

அவரிடம் வக்கீல் எதையோ மூன்றாவது முறையாகச் சொல்லிக் கொண்டிருப்பதும், ஆடிட்டர் அவரையே பார்த்துக் கொண்டிருப்பதும் பிரம்மானந்தாவின் கவனத்தை பலவந்தமாக எண்ணங்களின் உளைச்சலில் இருந்து வெளியே கொண்டு வந்தது. பிரம்மானந்தா சொன்னார். “மன்னிக்கணும். நீங்க சொன்னதை கவனிக்கலை. என்ன சொன்னீங்க?”

யோகாலயத்து நிர்வாகத்தை இவ்வளவு நாள் பாண்டியன் பார்த்துட்டு இருந்தார். அதை இனி யார் கிட்டே நீங்க ஒப்படைக்கப் போகிறீங்கன்னு உடனே தீர்மானிக்கறது நல்லதுன்னு சொன்னேன். அதிகாரபூர்வமாய் அதை நீங்க பதிவு பண்ணி வெச்சுட்டா உங்க பாரம் குறையும். இல்லாட்டி உங்க கிட்டயே ஒவ்வொன்னுக்கும் வருவாங்கஎல்லாத்தையும் நீங்களே பார்க்க வேண்டியிருக்கும்…” என்று வக்கீல் அழுத்தமாகச் சொன்னார். ஆடிட்டர் திவாகரனும் அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தார்.

கண்ணன் இதயம் படபடக்க இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு நாட்களாக அவர் பிரம்மானந்தாவை கவனித்து வருகிறார். யோகிஜி இனி அதிக நாள் தாக்குப் பிடிக்க மாட்டார் என்று கண்ணனுக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது. பிரம்மானந்தா பித்துப் பிடித்தது போல் அமர்ந்திருப்பதும், எதிலும் கவனம் செலுத்த முடியாமல் வெறித்த பார்வை பார்ப்பதும், சுற்றிலும் என்ன நடக்கிறது என்ற புரிதல் இல்லாமலிருப்பதும் கண்ணனுக்கு அபாயத்தின் அறிகுறிகளாகத் தோன்ற ஆரம்பித்தன. பாண்டியனைத் தொடர்ந்து இந்த முதியவரும் போய்ச் சேர்ந்து விடுவார் என்று கண்ணனின் உள்ளுணர்வு சொன்னது. இந்த நிலைமையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் பாண்டியனின் இடத்தை இங்கே அவர் பிடித்துக் கொள்ள நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று அவர் எண்ண ஆரம்பித்தார். பல்லாயிரம் கோடிகள் சொத்து மதிப்புள்ள யோகாலயத்தின் நிர்வாகம் கைக்குக் கிடைக்குமானால் அதன் பின் வேறொரு அதிர்ஷ்டம் தேவையே இல்லை. மீதமிருக்கும் வாழ்க்கை ராஜ வாழ்க்கையாகவே அமைந்து விடும். 

பிரம்மானந்தா இறந்து போய் விட்டால் என்ன ஆகும் என்று தெரியாது. சட்டம் ஒரு குழு அமைத்து அதிகாரத்தை சமமாகப் பிரித்து விட வாய்ப்பிருக்கிறது. பிரம்மானந்தா உயிரோடு இருக்கும் போதே யாரையாவது நியமித்து விட்டால் பின் அந்த நபருக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. பாண்டியனுக்கு அடுத்தபடியாக திறமையான ஆள் என்றால் அது தான் தான் என்பது கண்ணனின் கர்வம் கலக்காத அபிப்பிராயமாக இருந்தது. பாண்டியனின் வலது கரமாய் இருந்து கண்ணன் செயல்பட்டு வந்ததை பிரம்மானந்தா பார்த்தவர். அதனால் இந்த நியமனத்தில் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்த எண்ணிய கண்ணன் சற்று முன் வந்த ஆடிட்டர், வக்கீல் இருவரிடமும் பிரம்மானந்தாவின் கவலைக்கிடமான நிலைமையையும், யோகாலயம் நிர்வகிக்க தலைமை இல்லாமல் இருக்கும் குழப்பமான நிலைமையையும் நாசுக்காகத் தெரியப்படுத்தினார். 

திவாகரனுக்கும் வக்கீலுக்கும் பிரம்மானந்தாவின் நிலைமையைப் பற்றி கண்ணன் சொன்னது மிகச்சரியே என்று தோன்றியது. அவர்கள் இருவரும் பேசும் போது கூட பிரம்மானந்தா வேறு ஏதோ ஒரு உலகில் இருப்பது போல் தோன்றியது. அதனால் தான் பாண்டியனுக்கு அடுத்தபடியாக யார் என்று முடிவெடுக்கும்படி அவர்கள் பிரம்மானந்தாவை வற்புறுத்தினார்கள்.

கண்ணன் பிரம்மானந்தாவுக்கு சேவை செய்யும் சாக்கில் மிகுந்த பணிவுடன் அந்த அறையிலேயே இருந்தார். அடுத்தது யார் என்று யோசிக்கையில் முதலில் நினைவுக்கு வரும்படியாக பிரம்மானந்தாவின் பார்வை விழும் இடத்திலேயே முன்னாலேயே கைகட்டியபடி அவர் நின்றிருந்தார்.  

பிரம்மானந்தாவுக்கு இந்த நிர்வாக பாரம் என்றுமே பிடிக்காத சுமையாகத் தான் இருந்தது. இனி அந்தத் தலைவலியை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் சக்தி அவருக்கு இல்லை…. அவர் பார்வை எதிரேயிருந்த கண்ணன் மேலேயும் விழுந்தது. கண்ணன் ஆவலோடு காத்திருந்தார். சிறிது நேரம் கண்களை மூடி யோசித்த பிரம்மானந்தா பின் கண்களைத் திறந்து சொன்னார். “கல்பனானந்தாவை நியமிச்சுடலாம். திறமைசாலி. யோகாலயம் ஆரம்பிச்ச காலத்துல இருந்து இருக்கிறவள்….” 

கண்ணனின் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. இந்த ஆளுக்கு நல்ல காலத்துலயே மூளை வேலை செய்யாது. லூசுத்தனமாய் உளற மட்டும் தெரியும். அதையே தன்னோட புத்திசாலித்தனம்னு நினைச்சுக்கும். இப்ப மூளை வேலை செய்யறதே நின்னு போச்சு போலருக்கு. யோவ் நாங்க எல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் உன் வண்டவாளம் எல்லாம் எப்பவோ தண்டவாளம் ஏறியிருக்கும்யா…’ என்று கண்ணன் மனதுக்குள் புலம்பினார். பாண்டியனால் முடிந்தது, கல்பனானந்தாவால் முடியாது என்பதை வக்கீலோ, ஆடிட்டரோவாவது அந்தக் கிழவரிடம் சொன்னால் தேவலை என்று அவர் மனம் பரபரத்தது. அவர்கள் இருவரும் அப்படி எதுவும் சொல்லாமல் தலையசைத்தது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல் அவருக்கு இருந்தது. அதற்கு வேண்டிய சட்டபூர்வமான வேலைகளை உடனே செய்வதாய் உறுதி அளித்து விட்டு வக்கீலும், ஆடிட்டரும் சென்றார்கள்.

பெரிய அதிகாரம் எதுவும் இல்லாத போதே கல்பனானந்தா அவர்களை எல்லாம் மதித்து நடக்காதவள். இத்தனைக்கும் பாண்டியன் மிக வலிமையான ஒரு நிலையில் இருந்தவர். அவருக்கு ஓரளவாவது மரியாதை காட்டிய அவள், அவருடைய அடியாட்களான அவர்களிடம் அலட்சியமாகத் தான் நடந்து கொள்வாள். அதுவும் வாய்விட்டு புகார் சொல்கிறபடி இருக்காது. அப்படி நாசுக்காக அலட்சியப்படுத்தும் திறமை படைத்தவள் அவள். அப்படிப்பட்டவள் அதிகாரத்தில் அமர்ந்தால் பின் கேட்கவே வேண்டாம். மேலும் பாண்டியன் அவர்களுக்குத் தாராளமாய் பணம் தருவார். பல தவறான வேலைகளைச் செய்ய வைப்பதும் ஒரு காரணம் என்றாலும், அவர்கள் கையில் பணம் தாராளமாய் புழங்கியது. கல்பனானந்தா தலைமையில் அதற்கெல்லாம் வாய்ப்பேயில்லைகண்ணன் இனி யோகாலயத்தில் இருப்பதில் அர்த்தமில்லை என்று உணர்ந்தார். 

அடுத்த இரண்டு நாட்களில் கல்பனானந்தாவிடம் யோகாலயத்தின் நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அறிவிப்பு வெளியானவுடனேயே கண்ணனும், பாண்டியனின் மற்ற அடியாட்களும் யோகாலயத்திலிருந்து வெளியேறினார்கள். அதன் பின் இரண்டு நாட்கள் பிரம்மானந்தா நடைப்பிணம் போல் இருந்தார். மூன்றாவது நாள் பக்கவாதம் வந்து படுத்த படுத்த படுக்கையானார்.  தீவிர சிகிச்சை அவருக்குத் தரப்பட்டது என்றாலும் அவரைப் பழைய நிலைமைக்கு மருத்துவர்களால் கொண்டுவர முடியவில்லை. தன்னைக் குணப்படுத்திக் கொள்ளும் யோகசக்தி அவரிடம் இருந்தும், யோகாலயத்தில் நிகழ்ந்த தவறான நிகழ்வுகள் அவரை விரக்தி வைராக்கியத்தில் தள்ளி விட்டதென்றும், அதனால் அவர் குணப்படுத்திக்கொள்ள எந்த முயற்சிகளும் எடுக்காமல் விதி விட்ட வழி என்று இருக்கிறார் என்றும் அவருடைய தீவிர பக்தர்கள் சொன்னார்கள். பலரும் அது சரியாக இருக்கலாம் என்று அபிப்பிராயப்பட்டார்கள்   

(தொடரும்)

என்.கணேசன்


Thursday, July 2, 2026

சதுரங்கம் 25

 


ர்ஜுனுக்கு இப்போதெல்லாம் கீதாவிடம் பேச நிறைய இருந்தது. நட்பாக இருந்த வரையில் இவ்வளவு பேச இருக்கவில்லை. முன்பெல்லாம் ஐந்து நிமிடங்கள் பேசிய விஷயத்தை இப்போதெல்லாம் அரைமணி நேரம் இருவரும் பேசுகிறார்கள். அப்படிப் பேசுவதில் ஒரு இன்பம். ஆனால் சில நேரங்களில் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசாமல் மௌனமாகவே இருவரும் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதும் உண்டு. அந்த மௌன நிலையிலேயே திருப்தியடைந்து அவர்கள் விடைபெற்றுக் கொள்வதும் உண்டு. விடைபெற்றுக் கொள்வதும் வார்த்தைகளில்லாமல் தலையசைப்பில் நடந்து விடுவது உண்டு.  அப்படி சேர்ந்து மௌனமாக இருப்பதும் இன்னொருவகை இன்பம் தான். அந்த இருவித இன்பங்களையும் இருவரும் சில நாட்களாகத் தொடர்ந்து உணர்ந்து வருகின்றார்கள்.

 

இன்றைய தினம் அவர்களுக்கு பேசும் நாளாக இருந்தது.  அவன் மனதை அழுத்திக் கொண்டிருந்த, அவன் இதுவரையில் யாரிடமும் வெளிப்படையாகச் சொல்ல முடிந்திருக்காத சில விஷயங்களை அவன் அவளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான். அவன் தாய் அவனிடமிருந்து எப்போதும் விலகியே இருப்பதையும், அதனால் அவன் பாதிக்கப்பட்டதையும் அவளிடம் சொன்னான். தாயைப் போலவே அவனும் தனியொரு கூட்டில் வாழ்வதாக, தங்கை சுட்டிக் காட்டியதைச் சொன்னான். அவள் சுட்டிக் காட்டிய பிறகு நிறைய யோசித்ததைச் சொன்னான். கீதாவிடம் உணர்ந்த காதலையும் கூட அங்கீகரிக்க முடியாத பாதிப்புக்கும் அது தான் காரணம் என்று பிறகு புரிந்து கொண்டதைச் சொன்னான். சிறு வயதில் அவனுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் போது மட்டுமே அம்மா அவனுடன் இருப்பாள் என்பதையும், அதனாலேயே அவள் நெருக்கத்திற்காக அவன் அடிக்கடி நோய்வாய்ப் பட்டதையும் சொன்னான்.  

 

அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த கீதா கண்கலங்கினாள். அவனுடைய பிறந்தநாளுக்கு அவன் வீட்டிற்கு அவள் சென்றிருந்த போது பானுமதி சரியாக அவளிடம் பேசியிருக்காதது நினைவுக்கு வந்தது. அந்த சமயத்தில் அவளுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை, அதனால் தான் அவள் சரியாகப் பேசவில்லை என்று நினைத்ததை அவளும் அவனிடம் மனம் விட்டுச் சொன்னாள்.

 

அர்ஜுன் வருத்தத்துடன் புன்னகைத்தான். “அக்கம் பக்கத்துல கூட அவங்க யார் கிட்டயும் நாலஞ்சு வார்த்தைகளுக்கு மேல பேசறதில்லை. அப்பா கிட்டயும் அவங்க அதிகமாய் பேசினதை நான் பார்த்ததில்லை. நித்யா ஒருத்தி கிட்ட தான் அவங்க ஒரு சராசரி தாய் பேசற அளவிலாவது பேசறாங்க. அதுவும் அந்த வாயாடி கிட்ட யாரும் பேசாமல் தப்பிச்சுட முடியாதுங்கறதுனாலன்னும் நான் நினைக்கிறேன்.   போன்ல எங்க மைதிலி சித்தி  கிட்ட ஓரளவு பேசுவாங்க. அவங்க ரெண்டு பேரும் பேசறது கூட எங்க பாட்டியைப் பற்றி தான் அதிகமாய் இருக்கிறதாய் நித்யா கண்டுபிடிச்சு சொல்லி இருக்கா...”.

 

கீதா சொன்னாள். “அதிகம் படிக்கலைங்கற தாழ்வு மனப்பான்மை கூட ஒரு காரணமாய் இருக்கலாம் அர்ஜுன்

 

வெளி ஆள்கள் கிட்ட பேசாமல் இருக்கறதுக்கு அதைக் காரணமாய் சொல்லலாம். ஆனா வீட்டுக்குள்ளேயே, அதுவும் பெத்த பிள்ளை கிட்டயே அப்படி இருக்கறதுக்கு அது காரணமாய் இருக்க முடியாதே கீதா.”  

 

பானுமதி ஏதோ மனப்பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறாள் என்று கீதாவுக்குத் தோன்றியது. அவள் சற்று யோசித்து விட்டுச் சொன்னாள். “எனக்கு என்ன தோணுதுன்னா, உங்கம்மா அழகா இருந்ததால உங்கப்பா அவங்களைக் கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்பட்டிருக்கலாம். அவங்களும் சம்மதிச்சிருக்கலாம். ஆனால் பிறகு உங்கம்மாவுக்கு உங்கப்பாவைக் கல்யாணம் செஞ்சுகிட்டதுல குற்றவுணர்ச்சி இருந்திருக்கும். அத்தனை பெரிய தலைவரோட மகன், நிறைய படிச்சவர், புத்திசாலியான அவருக்கு எட்டாம் க்ளாஸ் வரைக்கு மட்டுமே படிச்ச தான் பொருத்தம் இல்லாதவள்னு தோண ஆரம்பிச்சிருக்கலாம். உன் தாத்தாவும் உடனடியா கல்யாணத்திற்கு ஆதரவு தரலைன்னு வேற சொல்றே. அதுவும் அவங்க குற்றவுணர்ச்சியை அதிகப்படுத்தியிருக்கலாம். அதெல்லாம் சேர்ந்து அவங்களை இப்படி ஆக்கியிருக்கலாம்.

 

அர்ஜுன் சொன்னான். ”நீ சொல்ற மாதிரி ஆரம்பத்துல அவங்களுக்குக் குற்றவுணர்ச்சி இருந்திருக்கலாம். ஆனா அது இத்தனை காலமாகவா இருக்கும்?”

 

கீதா சொன்னாள். “எது எத்தனை காலம் நம்ம மனசை வதைச்சுகிட்டு இருக்கும்னு யாருக்குத் தெரியும் அர்ஜுன். சில பேருக்கு மன பாரத்தை சீக்கிரமே இறக்கி வைக்கவும், மறந்துடவும் முடியுது. பல பேருக்கு அது அவ்வளவு சுலபமாய் முடியறதில்லை….”    

 

விமல் டெல்லிக்கு பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கிறான். இப்போது அவன் துறவு உடையில் இல்லை.  டெல்லியிலிருக்கும் சில கோவில்களுக்குப் போய் விட்டு இரண்டு நாட்களில் வருவதாகச் சொல்லி விட்டு ஆசிரமத்தை விட்டுக் கிளம்பிய அவன் பஸ் ஸ்டேண்டில் உள்ள கழிவறையில் துறவு ஆடைகளைக் களைந்து விட்டு, பைஜாமா குர்த்தாவுக்கு மாறி விட்டான். சில நாட்களாக அவன் சவரம் செய்யவில்லை. ஒரு மூக்குக் கண்ணாடியை அணிந்து கொண்டிருக்கிறான். அவனைத் தெரிந்தவர்களுக்குக் கூட இப்போது அவனைப் பார்த்தால் உடனடியாக அடையாளம் தெரிவது சிரமம் தான்.

 

அவன் இப்போது ஒரு மிக ஆபத்தான வேலையில் இறங்குகிறான் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். திட்டத்தை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று அவன் இன்னமும் யோசிக்கவில்லை. கண்டிப்பாக இதை அவன் மட்டும் தனியாகச் செய்ய முடியாது என்பதையும் அவன் அறிவான்.  உதவிக்கு ஒன்றோ இரண்டோ ஆட்கள் அவனுக்கு இருப்பது அவசியம் என்பதையும் அவன் அறிவான். அதிலும் சிக்கல் நிறைய இருக்கின்றது.. அவனுக்குத் தெரிந்த ஆட்களை அவன் தொடர்பு கொண்டால் எதிரியின் ஆட்கள் கண்டுபிடித்துவிடக் கூடிய ஆபத்து உண்டு. புதிய ஆட்கள் யாரையாவது சேர்த்துக் கொள்ளலாம் என்றாலோ, புதிய ஆட்களை இது போன்ற விஷயங்களில் எப்படி நம்ப முடியும் என்ற கேள்வியும் இருக்கிறது. ஆனால் அதெல்லாம் இரண்டாம் கட்ட வேலையின் சிக்கல்கள். முதலில் அவனுக்கு ஒரு அலைபேசி வேண்டும். அது தான் அவனுக்கு முதல் கட்டத் தேவை. மற்றதை பின்பு யோசித்துக் கொள்ளலாம்..

 

டெல்லியில் கரோல் பாக் மார்க்கெட்டை அவன் அடைந்த போது மதியம் மூன்றரை மணி. அந்த நேரத்தில் அங்கு அதிக மக்கள் இருக்கவில்லை. ராஜா சிங்கின் மொபைல் கடையைக் கண்டுபிடிப்பது அவனுக்குக் கஷ்டமாக இருக்கவில்லை.

 

ராஜா சிங்கின் கடை சிறியது தான் என்றாலும் எல்லா நேரங்களிலும் அவன் கடையில் வாடிக்கையாளர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் என்று விமலிடம் அந்தத் துறவி சொல்லியிருந்தார். அவர் சொன்னது போல அந்த மதிய நேரத்திலும் அவன் கடையில் இரண்டு வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். விமல் தயக்கத்துடன் கடைக்குள் நுழைந்தான். தலைப்பாகையுடன் இருக்கும் ஆள் தான் ராஜா சிங் என்பதை விமல் யூகித்தான்.  கடையில் அவனுக்கு உதவியாளனாக ஒரு சிறுவன் இருந்தான்.  அவன் சுறுசுறுப்பாக வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போன்களைக் காட்டி அவற்றின் சிறப்புகளைச் சொல்லிக் கொண்டிருந்தான்.

 

கல்லாவில் அமர்ந்திருந்த ராஜா சிங்கின் கூரிய பார்வை விமல் மீது விழுந்தாலும் அவன் விமலிடம் என்ன வேண்டும்என்று கேட்கவில்லை. விமல் கண்ணாடி அலமாரிகளில் வைக்கப்பட்டு இருந்த புதிய மொபைல் போன்களை நிதானமாகப் பார்க்க ஆரம்பித்தான்.

 

மற்ற இரண்டு வாடிக்கையாளர்களும் சிறுவன் காட்டிய மொபைல் போன் ஒன்றை விலைகுறைத்துக் கொடுக்க முடியுமா என்று கேட்க, சிறுவன் அவர்களை ராஜா சிங்கிடம் அழைத்துக் கொண்டு போனான். ராஜா சிங் விலையில் அதிகபட்சமாய் ஐநூறு ரூபாய் குறைக்க முடியும் என்று சொல்ல அவர்களோ ஆயிரத்து முன்னூறு ரூபாய் குறைக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்கள். ராஜா சிங் அந்த அளவுக்கெல்லாம் விலையை குறைக்க முடியாது என்று சொல்ல அவர்கள் வாங்காமல் போய் விட்டார்கள்.

 

அவர்கள் சென்றவுடன் விமல் ராஜா சிங்கைத் தயக்கத்துடன் நெருங்கினான். ராஜா சிங்கின் அனுபவப் பார்வை விமலை சிறப்பு வாடிக்கையாளராக அடையாளம் காட்டியது. சிறப்பு வாடிக்கையாளர் என்று அவன் அழைப்பது போலிப் பெயர் மற்றும் விலாசத்தில் அவனிடம் புதிய சிம் வாங்க வருபவர்கள்.

 

ராஜா சிங்கின் பிரதான வருமானம் சிறப்பு வாடிக்கையாளர்கள் மூலம் தான் வருகிறது. அவர்கள் தான் இப்படி ஐநூறு ரூபாய்க்கும், ஆயிரம் ரூபாய்க்கும் பேரம் பேசாமல் அவன் கேட்கும் தொகையைக் கொடுத்து விட்டுப் போவார்கள். ஆனாலும் அவன் பெரிய வரவேற்பு எதையும் காட்டாமல் விமலை சுவாரசியமில்லாமல் பார்த்தான்.


(தொடரும்)

என்.கணேசன்



Monday, June 29, 2026

யோகி 162


 

பாண்டியனுக்கு விஸ்வகீர்த்தி மேலும் முழு நம்பிக்கை வரவில்லை. விஸ்வகீர்த்தி புகழ் பெற்றவராக இருந்தார். அவருக்கு நிறைய பக்தர்கள் இருந்தார்கள் என்பதெல்லாம் அவரைப் பெரிதாகக் கவரவில்லை. பிரம்மானந்தாவும் புகழ் பெற்றவர், அவருக்கும் லட்சக்கணக்கில் பக்தர்கள் இருக்கிறார்கள். இறைவனின் அவதாரம் என்றும் சொல்கிறார்கள். அதில் தான் அவர்கள் வியாபாரம் நடக்கிறது. ஆனால் ஒரு யோகியின் காலடி மண் தேவைப்பட்ட போது அவர்களே வேறிடத்தில் அல்லவா தேடவேண்டி வந்தது. பிரம்மானந்தா யோகியாய் சொல்லப்படுவது போல் விஸ்வகீர்த்தி மந்திரவாதியாய் சொல்லப்படுகிறாரோ என்ற சந்தேகம் பாண்டியனுக்கு வந்து தொலைத்தது.

 

விஸ்வகீர்த்தியிடம் அவர் அலைபேசியில் ஹிந்தியில் பேசிய போது பீடிகை எல்லாம் பெரிதாக இருந்தது. அவர் சொன்ன தொகை இரண்டு லட்சமாக இருந்தது. அவருக்கு மாகாளி அருள் இருப்பதாகவும், மாகாளி அவருக்கு அடிக்கடி காட்சி தருவாள் என்றும் அவர் சொன்னது பாண்டியனுக்கு அவர் மேல் இருந்த நம்பிக்கையைக் குறைத்தது. இன்னொரு பிரம்மானந்தாவை இங்கே வரவழைக்கிறோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது. கூடுதலாக விசாரித்ததில் சிலர் உயர்வாகவும், சிலர் குறைவாகவும் அபிப்பிராயம் சொன்னார்கள். இப்படி ஒரு நிலைமை வரும் என்று பாண்டியன் எதிர்பார்த்திருக்கவில்லை. தகுந்த ஆள் இருந்தால் அவர் கோடிக் கணக்கில் செலவு செய்யவும் தயாராக இருக்கிறார். பணம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால் தகுதி வாய்ந்த ஆட்கள் அரிதாகவும், போலிகள் மலிவாகவும் காணக்கிடைப்பது இக்காலத்தின் சாபக்கேடு என்று அவருக்குத் தோன்றியது.

 

வியாழக்கிழமை காலையில் விஸ்வகீர்த்தி தன் சீடர்கள் இருவருடன் யோகாலயம் வந்து சேர்ந்தார். விஸ்வகீர்த்தியைப் பார்த்தவுடன், பாண்டியனுக்கு தேவானந்தகிரி மேல் வந்த நம்பிக்கை அவர் மேல் வரவில்லை. விஸ்வகீர்த்தி தேவானந்தகிரி போல் அவராக எந்த விஷயத்தையும் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. “மகாகாளி ஏவல் சக்தி இங்கே பீடித்திருக்கிறது என்று சொல்கிறாள்என்று பொதுவாகச் சொல்ல, அதற்கே அந்தச் சீடர்கள் இருவரும் பெரியதொரு அருள்வாக்கு கிடைத்து விட்டது போல் வியப்புடன் பார்த்தார்கள். பாண்டியனாகவே ஏவல்சக்தியின் தொந்தரவுகளைச் சொன்னார். விஸ்வகீர்த்திக்குக் கண்டுபிடிக்கத் தெரியாவிட்டாலும், பிரச்சினை இதுவென்று தெளிவாகச் சொன்னால் அதற்கு பூஜை செய்து சரியாக மந்திரித்து தாயத்து கட்டி பிரச்சினை வராத மாதிரி பார்த்துக் கொண்டால் போதும் என்று அவருக்குத் தோன்றியது.

 

விஸ்வகீர்த்தி செய்த பூஜைகள் வேறு விதமாக இருந்தன. வரைந்த படங்களும் யந்திரங்களும் கூட வித்தியாசமாய் இருந்தன. அர்த்த ஜாமத்தில் பூஜை செய்து இனி ஒரு மண்டலம் முடியும் வரை பிரச்சினை இல்லை என்று அவர் உறுதியாகச் சொல்லி தாயத்தைக் கட்டினார். பழைய தாயத்தை கழற்றி விடலாம் என்று அவர் தைரியம் சொன்னாலும் பாண்டியன் பழைய தாயத்தைக் கழற்றவில்லை.

 

வெள்ளிக்கிழமை அதிகாலை விஸ்வகீர்த்தியும், அவருடைய சீடர்களும் போய் விட்டார்கள். பாண்டியனுக்கு அந்தத் தாயத்து தேவானந்தகிரியின் தாயத்து போலவே சக்தி வாய்ந்ததாய் இருக்கும் என்ற நம்பிக்கை பத்து சதவீதமே இருந்தது.  விஸ்வகீர்த்தியைப் பற்றி உயர்வாய்ச் சொன்ன பக்தர்கள் வாக்கு உண்மையாக இருக்கும் பட்சத்தில் மட்டும் அந்த அதிசயம் சம்பவிக்கலாம் என்று தோன்றியது.

 

ஆனால் பிரம்மானந்தா நம்பிக்கையோடு இருந்தார். நான்கைந்து பேர் பெயரைச் சொல்லி அந்தப் புத்திசாலிகள் எல்லாம் காரணமில்லாமல் விஸ்வகீர்த்தியைப் பாராட்டியிருக்க மாட்டார்கள் என்று சொன்னார். அதில் பாண்டியனுக்கு நம்பிக்கையில்லை. புத்திசாலிகளும், விருப்பு வெறுப்பு இல்லாமல் கூர்ந்து கவனித்து அலசினால் தான் எந்த உண்மையையும் புரிந்து கொள்ள முடியும். நம்பி விட்டுக் கவனித்தால், நல்லது மட்டுமே அவர்களுக்கும் தெரியும்.

 

தன் அளவு பாண்டியன் நம்பிக்கையோடு இருக்காதது பிரம்மானந்தாவுக்கு ஏமாற்றமாய் இருந்தது.    ஏன் பாண்டியன் சந்தேகப்படுகிறாய்?”

 

எல்லாத்துக்கும் தயாராய் இருக்கறது தான் சரி யோகிஜிஎன்று சொன்ன பாண்டியன் தனதறைக்குச் சென்று விட்டார். யோசிக்க அவருக்குத் தனிமை தேவைப்பட்டது. நிறைய யோசித்தார். நிறைய விஷயங்கள் நினைவுக்கு வந்தன. பலவற்றுடன், அவரால் இறந்தவர்கள் நினைவுக்கு வந்தார்கள். யார் வம்புக்கும் அவராகப் போனதில்லை. வம்புக்கு வந்தவர்களுக்கு அவர் தயவு தாட்சணியமும் காட்டியதில்லை. அது தவறென்று இப்போதும் தோன்றவில்லை.  சைத்ராவை மட்டும் தவிர்த்திருக்கலாம் என்று சில சமயங்களில் தோன்றியதுண்டு. இப்போதைய நிலைமைக்குக் கூட அவள் தான் மூலகாரணம் என்று அவர் உள்ளுணர்வு சொன்னது. “என்னை மாதிரி நீயும் மரணத்துக்குக் காத்துகிட்டிருக்கற நாள் வரும். அந்த நாள் ரொம்ப தூரத்துல இல்லை.” என்று அவள் ஆணித்தரமாய் சொன்ன போது அவர் ஏளனமாய் சிரித்தார். அறிவாளியான அவருக்கு, அவள் சொன்ன மாதிரி நடக்க வாய்ப்பிருப்பது போல அப்போது தெரியவில்லை.

 

ஆனால் வாழ்க்கை மிக விசித்திரமானது. அது சிறிதும் எதிர்பார்க்க முடியாத சூழல்களையும் கண நேரத்தில் உருவாக்கி விடக்கூடியது. அந்த சமயங்களில் ஒருவன் சேர்த்த செல்வமும், பெற்றிருக்கும் பேரறிவும்,  இருக்கின்ற உயர்ந்த நிலைமையும் கூட அவனுக்கு உதவாமல் போய் விடலாம். அதை இந்தக் கணத்தில் அவர் உணர்கிறார். அவரிடம் எல்லாம் இருக்கிறது. எதற்கும் குறைவில்லை. நள்ளிரவு வரை எதை வேண்டுமானாலும் செய்ய அவருக்கு அவகாசம் இருக்கிறது. ஆனாலும் அவரால் திருப்திகரமாய் ஒன்றும் செய்ய முடியவில்லை. உண்மை நிலவரம் என்னவென்று அவருக்கு, முந்தைய மண்டல காலம் முடியக்கூடிய இன்றைய நள்ளிரவில் தான் தெரியும். புதிய தாயத்து வேலை செய்யா விட்டாலும் தேவானந்தகிரியையே சில நாட்களில் வரவழைத்து விட முடியும் என்றாலும், அந்தச் சில நாட்களுக்குள் அவர் நிலைமை சரிசெய்ய முடியாத நிலைமைக்குப் போயிருக்கும். அவர் சுகுமாரன் நிலைமையையே உதாரணமாய் பார்த்திருக்கிறார்…. அப்படியொரு நிலைமை வந்தால் அவர் உயிர் வாழ விரும்பவில்லை.

 

அவர் இறந்து விட்டால் பிரம்மானந்தாவைத் தவிர அதிகமாய் வருத்தப்படுபவர்கள் யாருமில்லைஅதனால் பிரம்மானந்தாவிடம் போய் தன் முடிவைச் சொல்லி விடைபெற்று வர வேண்டும் என்று ஆரம்பத்தில் பாண்டியனுக்குத் தோன்றியது. ஆனால் பிரம்மானந்தா கசப்பான நிஜங்களை ஏற்றுக் கொள்ள முடிந்தவர் அல்ல. அதிகமாக கற்பனைகளில் வாழ்பவர் அவர். வருத்தமானாலும், புரிதலோடு விடைகொடுப்பதற்குப் பதிலாக, முடிவை மாற்றிக் கொள்ள வைக்க அவர் மன்றாடலாம். ஒருவேளை, நள்ளிரவு வரை உள்ள காலம், பாண்டியனின் கடைசி காலமாக இருந்தால் அதில் துக்கம், புலம்பல், வேதனையை பிரம்மானந்தாவுடன் இருந்து நிரப்பிக்கொள்ள பாண்டியன் விரும்பவில்லை.

 

திடீரென்று அந்த நிஜ யோகியின் நினைவு வந்தது. பணமோ, வாழ்க்கை சௌகரியங்களோ இல்லா விட்டாலும் ஒவ்வொரு கணமும் மலர்ச்சியோடும் நிறைவோடும் அந்தக் கிழவர் வாழ்வது நினைவுக்கு வந்தது. கணக்கெடுத்தால் அது போன்ற நிறைவான கணங்கள் தன் வாழ்க்கையில் எவ்வளவு இருக்கும் என்று நினைத்துப் பார்த்தார். பெரிதாக எதுவும் நினைவுக்கு வரவில்லை. வேறு யோசனைக்கு கவனத்தைத் திருப்புகையில் ஷ்ரவன் அவர் நினைவுக்கு வந்தான். அவரையே ஏமாற்றிய வெகுசிலரில் அவனும் ஒருவன்இன்னொரு நபர் இங்குள்ள கருப்பு ஆடு. அனேகமாக அந்தக் கருப்பு ஆடு கல்பனானந்தாவாக இருக்க வாய்ப்பு இருப்பதாகத் தோன்றியது. நள்ளிரவு தாண்டியும் உயிரோடிருந்தால் முதல் வேலையாக அவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். அப்படி உயிரோடிருக்கா விட்டால் அவர்களை இப்போது நினைப்பதே வீண் தான்.

 

பீரோவில் இருந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்து தன் இருக்கையில் அவர் அமர்ந்து கொண்டார். ஒரு காகிதத்தில் தற்கொலைக்கான காரணத்தை இப்படி எழுதினார். “என் நிர்வாகத்தின் கீழ் யோகாலயத்தில் தவறுகள் நடந்திருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குற்றவாளிகள் பிடிபட்டாலும், என் கவனக்குறைவின் காரணமாக யோகாலயத்திற்குக் கிடைத்திருக்கும் அவப்பெயர் என்னை வேதனைப் படுத்துகிறது. தவறுக்கு தார்மீகப் பொறுப்பேற்று நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இதற்கு வேறு யாரும் எந்த விதத்திலும் காரணமல்ல. யோகிஜியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” என்று எழுதிக் கையெழுத்திட்டார். இனி தேவையில்லாத விசாரணையோ, கேள்விகளோ, தேடலோ இங்கிருக்காது. காகிதத்தை மடித்து டைரியில் வெளியே தெரிகிற மாதிரி சொருகி வைத்து விட்டு, அவர் கடிகார முள்ளைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

 

பழைய தாயத்து அணிந்ததிலிருந்தான  மண்டல காலம் முடிந்த பிறகு அவர் ஜன்னல் வழியே பார்க்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் வாசலில் தீ உமிழும் கண்களுடன் ஓநாய் தெரிந்தது. புதிய தாயத்து வேலை செய்யவில்லை என்பது தெரிந்து விட்டது. அதற்கு மேல் அவர் யோசிக்கவில்லை. இனி தாமதிப்பதில் அர்த்தமில்லை. எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது.  துப்பாக்கியை எடுத்து நெற்றிப் பொட்டில் வைத்து சுட்டுக் கொண்டார்.


(தொடரும்)

என்.கணேசன்

Thursday, June 25, 2026

சதுரங்கம் 24


 

ராஜாராம் யாரந்தப் பெண் என்று கேட்டவுடன் யசோதாவின் முகம் உடனடியாக மலர்ந்தது. முந்தைய களைப்பு காணாமல் போனது. “என்னடா அர்ஜுன், அவன் சொல்றது சரி தானா? யாரந்த பொண்ணு?”

 

மைதிலியும் உள்ளேயிருந்து சமையல் வேலையை விட்டு விட்டு வெளியே வந்து விட்டாள். “அர்ஜுன்! நீ சொல்லவேயில்லை...”

 

அர்ஜுன் தன்னுடைய பாழாய்ப் போன வெட்கத்தை நொந்து கொண்டான். முதலில் அம்மா அப்பாவிடம் கீதாவைப் பற்றிச் சொல்லாமல் இவர்களிடம் சொல்வது சரியல்ல என்று அவனுக்குத் தோன்றியது. “இன்னும் எதுவும் முடிவாகலை. ஆன பிறகு சொல்றேன்.” என்றான்.

 

யசோதா சொன்னாள். “சீக்கிரம் முடிவு பண்ணுடா. முடிவான பிறகு நான் ஞானமூர்த்தி கிட்ட பேசறேன்.”

 

சரி பாட்டிஎன்ற அர்ஜுன், அவர்கள் மறுபடியும் அவனுடைய திருமணம் பற்றிப் பேச ஆரம்பிக்கும் முன் தன்னுடைய கட்டுரைக்கான பேட்டியைத் தொடர்ந்தான். எதிர்க்கட்சித் தலைவராக வாசுதேவன் இருந்த காலத்திலும், முதலமைச்சராக அவர் இருந்த காலத்திலும் நடந்த சுவாரசிய நிகழ்வுகளைப் பற்றி அவன் கேட்டான். ராஜாராம் நிறைய சுவாரசிய நிகழ்வுகளைச் சொன்னார். அவருடைய நினைவு சக்தி, வழக்கம் போல் அவனைப் பிரமிக்க வைத்தது. ஆட்களுடைய பெயர், தேதிகள், இடங்களின் பெயர்கள் ஆகியவற்றை அவர் மிகச்சரியாய் நினைவு வைத்திருந்தார். ஒரு நிகழ்வைப் பற்றி அவர் சொல்வாரேயானால் அந்த நிகழ்வின் போது யாரெல்லாம் இருந்தார்கள், என்ன சொன்னார்கள் என்பதையெல்லாம் கூட பல காலம் கழித்தும் சரியாக அவர் நினைவு கூர்வது அவனுக்குப் பேராச்சரியமாக இருந்தது. எல்லாமே அவருக்கு சரளமாக வந்தது. எதற்கும் அவர் திணறவோ, யோசிக்கவோ இல்லை.

 

இதற்கு முன்பு ஒரு முறை அவரிடம் அவன் ஆச்சரியமாகக் கேட்டிருக்கிறான். “எப்படி சித்தப்பா இவ்வளவு கச்சிதமாய் எல்லாத்தையும் ஞாபகம் வெச்சிருக்கீங்க.”

 

அதெல்லாம் பெரிய விஷயம் இல்லைடா. முதல்ல நமக்கு அதை ஞாபகம் வெச்சிக்கணும்னு அக்கறை வேணும். அப்புறமா தகவல்கள் ஒன்றோடு ஒன்றை மனசில் ஏதாவது வகையில் இணைச்சு வெச்சுக்கணும். அதன் பிறகு நாம எப்போ அந்த விஷயத்துல ஒரு பகுதியை எடுத்தாலும், தானாக மற்றதெல்லாம் நினைவுக்கு வந்துடும். அக்கறையும், மனசுல ஒழுங்குபடுத்தி இணைச்சு வெச்சுக்கறதும் இருந்தால், எதையும் ஞாபகப்படுத்திக்கறது ரொம்ப சுலபம்.” என்று அவர் சொல்லியிருக்கிறார்.

 

அவனும் அதைப் பின்பற்றி இருக்கிறான். அவரளவு கச்சிதமாக இல்லா விட்டாலும் அவனும் ஓரளவு நன்றாக நினைவுபடுத்திக் கொள்கிறான். அவனுடைய வேலையில் அது பெரிய உதவியாகவும் இருக்கிறது. ஆனால் அவர் ஈடுபாடு காட்டும் துறைகளும், விஷயங்களும் ஏராளம். அத்தனையிலும் அவர் நினைவு வைத்துக் கொள்வது பேராச்சரியம் தான்...

 

வாசுதேவன் முதல்வராக இருந்த காலத்தில் மூத்த அமைச்சராக இருந்த தணிகாச்சலம் தான், வாசுதேவனுக்குப் பின் முதல்வரானவர். அவர் இப்போதைய முதலமைச்சரின் தந்தை. அக்காலத்திலேயே இளைய அமைச்சராக இருந்த ரத்தினம் அடுத்து முதலமைச்சரானவர். அவர்களைப் பற்றியும் அர்ஜுன் ராஜாராமிடமும், யசோதாவிடமும் கருத்துகள் கேட்டான். இருவருக்கும் இருவர் மேலும் நல்லபிப்பிராயம் இல்லை. வாசுதேவனுக்கு இணையாகப் பேசக்கூட தணிகாச்சலமும், ரத்தினமும் தகுதியில்லாதவர்கள் என்றே யசோதாவும், ராஜாராமும் கருத்து தெரிவித்தார்கள். யசோதா தன் கருத்தைச் சொல்லும் போது இழிவான ஒன்றைப் பேசுவது போல முகத்தைச் சுளிக்கவும் செய்தாள். ஆனால் அப்படிப்பட்டவர்களை மாறி மாறி ராஜாராம் ஆதரித்து வந்தது ஏன் என்று அர்ஜுனுக்குப் புரியவில்லை. ராஜாராம் ஒரு முறை தனியாக விரிவாகப் பேசலாம் என்று சொல்லியிருந்தாரல்லவா, அப்போது பதில் கிடைக்கலாம் என்று அர்ஜுனுக்குத் தோன்றியது.

 

பேட்டியை முடித்துக் கொண்டபின் அர்ஜுன் ராஜாராமிடம் அவரது ஆக்ஸ்ஃபோர்டு பயணத்தைப் பற்றிக் கேட்டான். மிகச் சிறப்பாகவும், திருப்தியாகவும் இருந்தது என்று தெரிவித்த ராஜாராம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் என்பது ஒரு பரந்த வளாகத்தில் இருக்கும் பெரிய கட்டிட அமைப்பு கிடையாது என்ற சுவாரசியத் தகவலைச் சொன்னார். ஆக்ஸ்ஃபோர்டு என்பது சிறிய நகரம் என்றும் அந்த நகரத்திற்குள் பல கட்டிடங்களில் பல்கலைக்கழகத்தின் பல துறைகள் இருக்கின்றன என்றும் தெரிவித்தார். பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள், பேச்சரங்கங்கள், தங்கும் விடுதிகள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள் என்று நகரமெங்கும் அந்தப் பல்கலைக்கழகம் பரவியிருக்கிறது என்பதை ராஜாராம் விவரித்தது, அர்ஜுனுக்குப் புதிய தகவலாய் இருந்தது அவன் சுவாரசியமாய் அதைக் கேட்டுக் கொண்டான். அவர் அங்கு ஆற்றிய சொற்பொழிவு பற்றியும் கேட்டான். அவர் சொல்வதை அவன் கூர்ந்து உண்மையான ஆர்வத்துடன் கவனித்துக் கேட்பதை யசோதா அன்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘அவர் இருந்திருந்தால் இதையெல்லாம் எவ்வளவு பெருமிதத்தோடு பார்த்திருப்பார்!’         

 

மைதிலி வந்து சொன்னாள். “செவிக்குணவு போதும். கொஞ்சம் வயிற்றுக்கும் உணவு கொடுங்க. வாங்க.”

 

மைதிலியின் வெஜிடபிள் பிரியாணி வழக்கம் போல் மிகவும் ருசியாக இருந்தது. அர்ஜுன் நன்றாகச் சாப்பிட்டதில் மைதிலிக்குப் பரம திருப்தி. சாப்பிடும் போது மைதிலி நித்யா பற்றிக் கேட்டாள்.

 

அர்ஜுன் புன்னகையுடனும், பெருமிதத்துடனும் சொன்னான். ”ஊம் இருக்கா. சரியான வாய். பேசியெல்லாம் நாம ஜெயிக்க முடியாது.”

 

மைதிலி சொன்னாள். “அது நல்லதுடா. பொண்ணுங்களுக்கு அது முக்கியமா வேணும். அதில்லாம வாயில்லா பூச்சியா இருந்தால் கஷ்டம் தான்.”

 

ராஜாராம் சிரித்துக் கொண்டே சொன்னார். “ஆனா வாய் அதிகமா இருந்தா, புருஷனுக்கு வாழ்நாள் பூரா கஷ்டம் தான். அதையும் நாம ஒத்துக்கணும்.”

 

மைதிலி முறைக்க அர்ஜுன் சித்தப்பாவுடன் சிரிப்பில் கலந்து கொண்டான். 

 

சாப்பிட்டு முடிந்தவுடன் அர்ஜுன் யசோதாவிடம் சொன்னான். “பாட்டி, எனக்கு தாத்தா அறையைப் பார்க்கணும். கொஞ்சம் நேரம் அங்கே உட்கார்ந்து பழசு எதாவது ஞாபகம் வருதான்னு பார்க்கணும்.”

 

யசோதா கண்கலங்க சொன்னாள். “போடா. போய் உட்கார்ந்து பாரு. அங்கே தான் அதிகமாய் உன்னை மடியில வெச்சுகிட்டு விளையாடிகிட்டு இருப்பார். அவர் ஆத்மா எங்கே இருந்தாலும் உன் கிட்ட பேசும்….”

 

அர்ஜுன் வாசுதேவன் அறைக்குப் போனான். அங்கே அவருடைய ஆளுயர புகைப்படம் இருந்தது. கம்பீரமான தோற்றம். சாத்வீகமான முகம். அந்தப் புகைப்படத்தில் தெரிந்த அவர் கால்களைத் தொட்டு வணங்கி விட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். அறையில் அவர் உட்கார்ந்து வேலை பார்த்த மேசை, அவருடைய புத்தக அலமாரி, பீரோ, சோபா - எல்லாவற்றையும் சிறிது நேரம்   அர்ஜுன் பார்த்தான். எதுவும் அவனுக்கு அவரை நினைவுபடுத்தவில்லை. ஆனால் ஏனோ அங்கே அமர்ந்திருக்கையில் அவன் மனம் அமைதியாகியது.

 

ராஜாராம் அவன் அறியாமல் அறைக்கு வெளியேயிருந்து அவனையே பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றார். அவன் பின்புறம் தான் அவருக்குத் தெரிந்தது. அவனைப் பார்த்து விட்டு தந்தையின் புகைப்படத்தையும் ஒரு முறை பார்த்து விட்டு சத்தமில்லாமல் வந்து தாய்க்கு எதிரில் அமர்ந்து கொண்டார். ஆனால் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதைத் தவிர்த்தார்க:ள்.

 

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அர்ஜுன் பாட்டியிடம் சொன்னான். “எனக்கு தாத்தா கூட  இருந்த எதுவுமே நினைவுக்கு வரலை பாட்டி. ஆனா மனசு அமைதியாயிருக்கு. நீங்க சொன்ன மாதிரி தாத்தாவோட ஆத்மா என் ஆத்மா கிட்ட பேசி என்னை அமைதிப்படுத்தியிருக்குமோ?”

 

ஈரமான கண்களுடன் அர்ஜுனைப் பார்த்த யசோதா தலையசைத்தாள். அர்ஜுன் கிளம்புகையில் நித்யாவுக்கு என்று ஒரு டிபன் பாக்ஸில்வெஜிடபுள் பிரியாணியை மைதிலி கட்டிக் கொடுத்தாள்.

 

ராஜாராம் கேட்டார். “இனி எப்படா வர்றே?”

 

வர்றேன் சித்தப்பா.”

 

சீக்கிரமே வாடா. நான் அப்பவே சொன்ன மாதிரி உன் கிட்ட நான் நிறைய பேச வேண்டியிருக்கு.”

 

கண்டிப்பா வர்றேன் சித்தப்பா. பை பாட்டி.... பை சித்தி....”

 

மூவரும் அவனை வாசல் வரை சென்று வழியனுப்பினார்கள். அர்ஜுனுக்கு மனம் நிறைவாயிருந்தது. எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தனித்தனி வீடுகளில் இருந்தாலும் அவர்கள் குடும்பம் மிக அன்பானது என்று அவனுக்குத் தோன்றியது. 

 

(தொடரும்)

என்.கணேசன்