என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, June 22, 2026

யோகி 161

ஷ்ரவன் சொன்னதைக் கேட்டு தேவானந்தகிரி சற்று தைரியம் அடைந்தார். கத்த முற்படாமல், அவன் என்ன சொல்கிறான் என்பதைக் கேட்க அவர் தீர்மானித்தார். ஷ்ரவன் சுருக்கமாக சைத்ரா கொலை வழக்கைப் பற்றிச் சொன்னான். வாசுதேவன் கொலை, கிருஷ்ணசாமி தற்கொலை பற்றி எல்லாம் சொல்லி விட்டு விசாரணைக்கு அவனை அரசு நியமித்ததாய் சொன்னான். விசாரணையில் முதல்வரின் பங்கை அவன் சொல்லவில்லை. அதே போல் பரசுராமன் பெயரைச் சொல்லாமல் அவனுக்குத் தெரிந்த ஒரு சுவாமிஜி மாந்திரீகத்தில் பூஜை செய்து ஏவல் சக்திகளை ஏவி விட்டதைச் சொன்னான். அதன் பின் அவன் அங்கு துறவியாய் சென்று கண்டுபிடித்ததையும், அந்தக் கொலையைக் கூட அவர்கள் அடியாட்களின் மேல் போட்டு தப்பித்து, குற்றவாளிகள் பாதுகாப்பாய் இருப்பதையும் சுருக்கமாகச் சொன்னான்.

 

முடிவில் ஷ்ரவன் சொன்னான். “ஏவல்சக்தி அனுப்பி எனக்கு உதவி செஞ்ச சுவாமிஜி நல்லவங்க பாதிக்கக்கூடாதுங்கறதுல மட்டுமில்லாமல். கெட்டவங்களும் செஞ்ச தவறுக்குத் தகுந்த தண்டனையை மீறி அனுபவிச்சுடக் கூடாதுங்கறதுலயும் ரொம்ப கவனமாய் இருந்தார் சுவாமிஜி. தப்பான கர்மா தன் கணக்குல வந்துடக்கூடாதுன்னு சொல்வார். இப்ப இந்தக் கொலைகாரங்க லட்சக் கணக்குல தர்றாங்கன்னு அவங்களுக்குப் பாதுகாப்பு தர்ற வேலைகளைச் செய்ய நீங்க போறீங்க. உங்க பேங்க் அக்கவுண்ட்ல வர்ற பணத்தை மட்டும் பாக்கறீங்க. உங்க கர்மா அக்கவுண்ட்ல சேர்றதைப் பத்தி நீங்க ஏன் சுவாமிஜி யோசிக்க மாட்டேங்கறீங்க? நீங்க காப்பாத்தற ஆள்கள் இனியும் எத்தனையோ தப்புகளைச் செய்வாங்க. இதுவரைக்கும் நீங்க செஞ்சதை, அவங்க தப்பானவங்கன்னு தெரியாமல் செஞ்சதாய் எடுத்துக்கலாம். ஆனால் அயோக்கியங்க, கொலைகாரங்க, படுபாவிங்கன்னு தெரிஞ்சதுக்கப்பறமா கூட நீங்க அவங்களுக்கு உதவினா உங்க பாவக்கணக்குல அதெல்லாம் வரவு ஆயிடாதா?”

 

அவன் சொல்லச் சொல்ல தேவானந்தகிரியின் பேத்தி நொண்டி விளையாடிக் கொண்டே அவர்களைக் கடந்து போனாள். ஷ்ரவன் சொன்னான். “நீங்க குடும்பஸ்தர். இவங்களுக்கெல்லாம் பணத்தோட சேர்ந்து பாவத்தையும் சேர்த்து வைக்கிற மாதிரி ஆயிடாதா? எங்க சுவாமிஜி மாதிரி நீங்களும் நிறைய தெரிஞ்சவர். உண்மையெல்லாம் உங்க கிட்ட சொல்லிட்டேன். இனி முடிவு எடுக்கறது உங்க கைல. நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி இனி எங்க பக்கத்துல இருந்து சின்ன அசௌகரியம் கூட உங்களுக்கு வராது.”

 

தேவானந்தகிரி சிலை போல் அமர்ந்திருந்தார். ஷ்ரவன் பரசுராமனின் பெயரைச் சொல்லா விட்டாலும் அவனுக்கு உதவியது பரசுராமன் தான் என்பதில் அவருக்குச் சந்தேகம் இல்லை. யோகாலயத்தில் செய்த பூஜைகளின் போதே அந்த அளவு ஏவல்சக்தியை பரசுராமனைத் தவிர வேறு யாரும் செய்திருக்க முடியாது என்று அவர் அறிந்திருந்தார். ஷ்ரவன் சொன்ன குற்றங்கள் அவரை அதிர வைத்தன. மூன்று கொலைகளைச் செய்த பின்னும் குற்றவுணர்ச்சி சிறிதும் இல்லாமல், திமிர் அடங்காமல். அலட்சியமாய்  இருந்த குற்றவாளிகள் பக்கம் இது  வரை நின்றதே அவரைக் கூச வைத்தது. இந்த இளைஞன் சொல்வது போல இதுவரை செய்தது அறியாமையால் என்ற கணக்கில் சேர்த்தலாம். ஆனால் இனியும் அவர்களுக்கு உதவுவது இவன் சொல்வது போல பாவக்கணக்கிலேயே அல்லவா சேரும்? குடும்பத்திற்குப் பணத்தைச் சேர்த்து வைத்துப் போகா விட்டாலும் பாவத்தைச் சேர்த்து வைத்து விட்டுப் போவது, குடும்பத்திற்குச் செய்யும் துரோகம் என்ற உண்மையும் அவரைச் சுட்டது.

 

அவர் பரிதாபமாகச் சொன்னார்.  யோகாலயம் பத்தின புகார்கள் வந்து அங்கே முன்னாடி கூட்டம் கூடினப்ப நானே விலகணும்னு முடிவு பண்ணியிருந்தேன். அப்பறம் அவங்களே தோண்டிப் பார்க்கச் சொன்ன பிறகு அது எனக்கு நியாயமான அணுகுமுறையாய் தோணுச்சு. ஆள்கள் கைதானவுடனே, வேலைக்காரங்க செய்யற தப்புக்கு அவங்க எப்படி பொறுப்பாவாங்கன்னு நினைச்சுட்டேன். நான் அவங்க கிட்ட பணம் வாங்கியாச்சு. வர்ற வியாழக்கிழமை வர்றதாய் வாக்கும் கொடுத்துட்டேன். இனி போகலைன்னா அந்த அயோக்கியங்க என்னை சும்மா விடுவாங்கன்னு எனக்குத் தோணலை…. என்னை என்ன பண்ணச் சொல்றீங்க?”

 

ஷ்ரவன் சொன்னான்.

 

பாண்டியன் ஷ்ரவன் யாரென்பதைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தார். அவனைக் கைது செய்ய வந்த ஹைத்ராபாத் போலீஸாரின் புகைப்படங்களை தெலுங்கானா போலீஸில் உள்ள, பிரம்மானந்தாவின் பக்தர் ஒருவருக்கு அனுப்பி அவர்கள் பெயர்களைக் கேட்டார். இவர்கள் எங்கள் போலீஸ் அதிகாரிகளே இல்லை என்ற பதில் உடனடியாக வந்தது. அசிஸ்டெண்ட் கமிஷனருக்கு அத்தகவலை பாண்டியன் அனுப்பி வைத்தார். அசிஸ்டெண்ட் கமிஷனர் அதிர்ச்சியை வெளிப்படுத்தி, உடனடியாக விசாரணைக்கு ஏற்பாடு செய்வதாய்ச் சொன்னார். போலீஸையே அவர்கள் ஏமாற்றியிருப்பது அவருக்குப் பொறுக்கவில்லை என்பதைத் தெரிவித்த அவர், யோகாலயாவும் ஒரு மோசடி புகார் மனு தந்தால் விசாரணைக்கு இன்னும் அழுத்தம் கிடைக்கும் என்றும் சொன்னார்.

 

அதை சனிக்கிழமை அனுப்பி வைப்பதாக பாண்டியன் அவருக்கு உறுதியளித்தார். வெள்ளியோடு அவர் தாயத்தின் சக்தி முடிகிறது. முன்னெச்சரிக்கையாக ஒரு நாள் முன்பே மாற்று தாயத்துக்கு அவர் ஏற்பாடு செய்து விட்டார். வியாழன் அன்று தேவானந்தகிரி வருகிறார். வியாழன் இரவே பூஜை முடிந்து தாயத்தும் போட்டுக் கொண்டால் பின் நிம்மதியாக அடுத்த மண்டலம் முடியும் வரை அவர் செயல்படலாம். அதற்குள் ஷ்ரவனையும், அவர்களுடைய முக்கிய எதிரியையும் பற்றி எல்லாவற்றையும் கண்டுபிடித்து தண்டித்து அழித்து விட்டால் பின் பழையபடி நிம்மதியாக இருக்கலாம். அதனால் பூஜை முடிந்து தேவானந்தகிரி திரும்பப் போகும் வரை மற்ற வேலைகளை நிறுத்தி வைக்க பாண்டியன் தீர்மானித்திருந்தார். சுகுமாரனின் நிலைமை அவரை மிகவும் பயமுறுத்தி விட்டது.

 

நேற்று சுகுமாரனைப் பார்க்க அவர் சென்றிருந்தார். சுகுமாரன் இரண்டு நிமிடங்கள் அவரிடம் இயல்பாய் பேசினார். ஆனால் மூன்றாவது நிமிடம் மண்டை ஓட்டு பீதி சுகுமாரனை ஆட்கொண்டது. இடையிடையே வயிற்று வலியாலும் அவர் துடித்தார். குடிகாரன் கல்லெடுத்து எறிந்த காயங்கள் ஆறி விட்டன. ஆனால் பீதியும், வயிற்று வலியும் அவரைச் சித்திரவதை செய்வதை பாண்டியன் நேரடியாகப் பார்க்க முடிந்தது. அந்த ஒரு நிலைமை தனக்கு வருவதை அவரால் கற்பனை செய்து கூடப் பார்க்கப் பிடிக்கவில்லை.

 

செவ்வாய்க்கிழமை அன்று பாண்டியன் தேவானந்தகிரிக்குப் போன் செய்தார். அலைபேசியை தேவானந்தகிரியின் சீடன் ஒருவன் தான் எடுத்தான். “சுவாமிஜி ஆஸ்பத்திரியில் இருக்கார். காலைல தான் போய் சேர்ந்தார்.” என்றான்.

 

என்ன ஆச்சு?” பாண்டியன் சந்தேகத்தோடு கேட்டார்.

 

வலது கால் கட்டை விரல்ல கொஞ்ச நாளுக்கு முன்னாடி காயமாயிருந்துச்சு. குணமாயிட்டு வந்துகிட்டும் இருந்துச்சு. நேத்து ராத்திரியில் இருந்து அவருக்கு வலி ஜாஸ்தியாயிடுச்சு

 

அவன் சொன்னதில் பாண்டியன் அதிருப்தி அடைந்தார். உடனடியாக கண்ணனையும், கூட இரண்டு தடியர்களையும் காசர்கோடு அனுப்பி வைத்தார். ”உண்மையான்னு பாருங்க. பொய்யின்னா பேசாம அந்த ஆளைத் தூக்கிட்டு வந்துடுங்க.”

 

உடனடியாக விமானத்தில் சென்ற அவர்கள் காசர்கோடு போய் அவரை அழைத்தார்கள்.  ஆள் ஆஸ்பத்திரியில் தான் இருக்கார். அந்தக் காயம் செப்டிக் ஆயிருக்காம். விரலே எடுக்க வேண்டிய நிலைமைன்னு டாக்டர் சொல்றாங்களாம். பெருசா மாவுக்கட்டு போட்டுருக்காங்க.”

 

நீங்க அவர் கிட்ட பேசினீங்களா?”

 

பேசினோம். அவர் வருத்தம் தெரிவிச்சார். பத்து லட்சத்தை திருப்பி அனுப்பறாராம்.”

 

சொன்னது போல் பத்து லட்சம் ரூபாய் பாண்டியனுக்குத் திரும்பி வந்தது. பாண்டியன் நிலைமை பூதாகரமாய் வளர்வதை உணர்ந்து உடனடியாக பிரம்மானந்தாவிடம் பேசினார். நிலைமையைச் சொன்னார். “தேவானந்தகிரி மாதிரி வேற யாரையாவது நாம கண்டுபிடிச்சு சீக்கிரம் வரவழைக்கணும் யோகிஜி.

 

தேவானந்தகிரிக்கு இணையாக இன்னொரு மாந்திரீக விற்பன்னரை அவர்களால் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை விட மேலான நிலையில் இருக்கும் பரசுராமன்நமக்கு ஆகாத நபர்என்று பிரம்மானந்தா சொன்னாலும் அவரை வரவழைக்க பாண்டியன் தயாராய் இருந்தார். விஷயமுள்ளவன், வெற்றுவேட்டு இந்த இரண்டு ரகம் தான் அவர் கணக்கில் இருக்கிறார்கள். விஷயமுள்ளவனுக்கு எத்தனை தரவும் அவர் தயார். விஷயமுள்ளவனை அவர் ஆகாத நபராய்நினைப்பதில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாய் வெளிநாட்டில் இருக்கும் பரசுராமன் இந்தியா திரும்பி வரவே இரண்டு மாதங்கள் ஆகும் என்ற தகவல் கிடைத்தது.

 

பிரம்மானந்தா தனக்கு நெருக்கமான ஆட்கள் அனைவரிடமும் விசாரித்து முடிவில் இரண்டு மந்திரவாதிகளைஇருப்பவர்களில் பரவாயில்லைஎன்ற ரகமாகக் கண்டுபிடித்தார். ஒருவர் நாகப்பட்டிணத்து ஆசாமி. இன்னொருவர் ஹரித்வாரில் இருப்பவர்.  இருவரில் யார் மேல் என்று மறுபடியும் பலரிடமும் விசாரித்து ஹரித்வாரில் இருக்கும் மந்திரவாதி விஸ்வகீர்த்தி என்பவரை அவர்கள்  தேர்ந்தெடுத்தார்கள்.   


(தொடரும்)

என்.கணேசன்

 

புதிய நாவல் ச(க்)தி!



Thursday, June 18, 2026

சதுரங்கம் 23


 ர்ஜுன் தன்னுடைய விளையாட்டான கேள்வி ராஜாராமை இந்த அளவு பாதிக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. ’சித்தப்பா ஏன் இப்படி சிலை போல் சமைந்து என்னைப் பார்க்கிறார்என்று நினைத்தவனாக அவன் பாட்டியைப் பார்த்தான். யசோதா மகனை வேதனையுடன் பார்ப்பது தெரிந்தது.

 

ராஜாராம் சில வினாடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டு புன்னகையைத் தொடர்ந்தார். ஆனால் அந்தப் புன்னகையில் உயிர் இல்லை. “நானும் சண்டை போடுவேன்னாலும் அம்மா அளவுக்கெல்லாம் இல்லை. குடும்பம்னா அது எல்லாம் சகஜம் தானடா?” என்று ராஜாராம் கேட்டாலும் இன்னமும் அவன் கேள்வியின் பாதிப்பிலிருந்து அவர் மீளவில்லை என்பதை அர்ஜுனால் கவனிக்க முடிந்தது.

 

அர்ஜுன் கேட்டான். “அப்பாவும் தாத்தா கூட சண்டை போடுவாரா?”

 

அண்ணா அவரோட சண்டை போட்டதேயில்லை. அவனும் எத்தனையோ எதிர்க்கருத்துகளை வெளிப்படையா சொல்வான்னாலும் அது நியாயமான, மறுக்க முடியாத வாதமாய் இருக்கும். அதனால அவன் என்ன சொன்னாலும் அப்பா ஏற்றுக்கற மாதிரி தான் இருக்கும்.”

 

ஆனா அப்பா, அம்மாவைக் கல்யாணம் பண்ணிக்கறதா சொன்னப்ப தாத்தா உடனே சம்மதிக்கலைன்னு கேள்விப்பட்டேன்.”

 

திடீரென்று அங்கே மயான அமைதி நிலவியது. ராஜாராம் முந்தைய கேள்வியிலிருந்தாவது சீக்கிரம் மீண்டு செயற்கையாகவாவது புன்னகைத்தார். இப்போதோ அவர் ஒரு கணம் தன் தாயைப் பார்த்து விட்டு அவனையே வெறித்துப் பார்த்தார். அர்ஜுன் திகைத்தான். என்ன ஆயிற்று இவருக்கு?

 

அவன் திரும்பி யசோதாவைப் பார்த்தான். யசோதாவும் அவரைப் போலவே அவனை வெறித்துப் பார்த்தாள். ஏன் பாட்டியும் அப்படியே பார்க்கிறாள்?

 

ராஜாராம் புன்னகைக்கவும் மறந்து போய், அவனைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டார். ”உனக்கு யார் அதைச் சொன்னது?”

 

அப்பா தான்

 

ராஜாராம் அவனை நம்பாதது போல் பார்த்தார். அர்ஜுன் சொன்னான். “நான் அப்பா கிட்டவக்கீலுக்குப் படிச்ச நீங்க எட்டாம் கிளாஸ் மட்டுமே படிச்ச அம்மாவைக் கல்யாணம் செஞ்சுக்க தாத்தா எப்படி சம்மதிச்சார்?’னு கேட்டேன்.  அதுக்கு அவர்அப்பா ஆரம்பத்துல தயங்கினார். பிறகு தான் சம்மதிச்சார்னு சொன்னார்.”

 

ராஜாராம் தலையசைத்தார். பின் மெள்ள அவர் பழைய நிலைக்கு வருவது தெரிந்தது. ஆனால் யசோதா பழைய நிலைக்குத் திரும்பவில்லை.  

 

அர்ஜுனுக்குத் திகைப்பாக இருந்தது. பத்திரிக்கை, ஊடக உலகில் ராஜாராமுக்குஎதற்கும் அசராதவர்என்ற பட்டம் உண்டு. பதில் சொல்லவே முடியாது என்று நிருபர்கள் நம்பி அவரைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் கேள்விகளைக் கேட்டாலும் கூட, சிறிதும் அமைதியிழக்காமல், புன்னகை குறையாமல் பதில் தந்து நிருபர்களைத் திகைக்க வைப்பவர் அவர். அதை அவனும் எத்தனையோ பேட்டிகளில் பார்த்திருக்கிறான். எப்படி இதற்குப் பதில் அளிக்கப் போகிறார் என்று அவன் நினைக்கும் கேள்விகளுக்கும் கூட அதிகம் யோசிக்காமல் அசர வைக்கும் பதில்களைச் சொல்லி நகர்பவர் அவர். அப்படிப்பட்டவர் இன்றைக்கு சாதாரணமான பேச்சுக்குக் கூட ஏன் இப்படி அமைதியிழக்கிறார், அதிர்ச்சியடைகிறார்?

 

அர்ஜுன் வெளிப்படையாகவே கேட்டான். “ஏன் சித்தப்பா நான் சொன்னதற்கு கொஞ்சம் முன்னாடி அப்படி பார்த்தீங்க?”

 

ராஜாராம் பழைய ராஜாராம் ஆக மாறினார். புன்னகையுடன் அவர் சொன்னார். “இல்லைடா. அண்ணாவும் அப்பாவும் எவ்வளவு பாசமாய் இருந்தாங்கன்னு எங்களுக்குத் தான் தெரியும். அப்படி இருக்கிறப்ப அண்ணாவுக்கு எதிராய் அப்பா இருந்தார்ங்கற மாதிரி ஒரு கருத்தை யார் கிளப்பினாங்கன்னு தான் எனக்கு அதிர்ச்சியாய் இருந்துச்சு. நீ எந்த சூழ்நிலைல இந்த கருத்து வந்துச்சுன்னும், அண்ணனே சொன்னார்ன்னும் சொன்னவுடன தான் எனக்கு மனசு சமாதானமாச்சு.”

 

அவர் சொன்னது ஏற்கக்கூடியதாகத் தான் இருந்தது. ஆனால் யசோதா தான் இயல்பாய் இல்லை. களைப்புடன் கண்களை மூடிக் கொண்டு அவள் அமர்ந்திருந்தாள்.

 

அர்ஜுன் கேட்டான்.  அப்பா, நீங்க, பாட்டி மூனு பேருமே சொன்னாலும் கூடக் கேட்காமல் தாத்தா தன் சொத்தையெல்லாம் விற்று கட்சிக்கும், மக்களுக்கும் செலவு செய்ததாய் அப்பா சொன்னார். சுதந்திர இந்தியாவில் இதுவரைக்கும் எந்த அரசியல் தலைவரும் அப்படி செய்ததாய் வரலாறு இல்லை. அதை நீங்களும், பாட்டியும் எப்படிப் பார்க்கறீங்க?”

 

ராஜாராம் சொன்னார். ‘டேய் இப்ப சொல்றது எல்லாமே குடும்பத்துக்குள்ளே பேசிக்கறது. இந்தக் கேள்விக்கெல்லாம் பிரசுரத்துக்கு என்ன பதில்னு அப்பறமா சொல்றேன் சரியா? நான் அப்பவும் அதை முட்டாள்தனம்னு தான் நினைச்சேன். இப்பவும் அதை முட்டாள்தனமாய் தான் பார்க்கறேன்.”

 

அர்ஜுன் யசோதாவைப் பார்த்தான். யசோதா சொன்னாள். “மனுஷன் ஒவ்வொன்னையும் விற்ற பிறகு தான் எங்களுக்கு விஷயமே தெரிய வரும். நான் கொஞ்சம் காரமாய் தான் பேசுவேன். ஆனால் அதெல்லாம் உன் தாத்தாவுக்கு கொஞ்சமும் உறைக்காது. தோல் ரொம்ப கெட்டி.”

 

ராஜாராம் சொன்னார். “அதான் சொன்னேனே. அண்ணா அபிப்பிராயத்தில் அவருக்கு அதிக மதிப்பு இருந்துச்சு. ஆனாலும் அண்ணா சொல்லியும் அவர் கேட்கலை. அப்பவெல்லாம் அவர்நாலு பேருக்கு உதவறதை விட நாம அதை சொத்தா வச்சிருக்கறதுல என்ன பிரயோஜனம்னு கேட்பார்.”

 

யசோதா சொன்னாள். “இந்த வீடு ஒன்னு மிஞ்சுச்சுன்னா அதுக்கு ஒரே காரணம் இதையும் வித்துட்டா நாங்க போய் குடியிருக்க வேறொரு வீடு இல்லைங்கறது தான். அதனால தான் இந்த வீடு கைவிட்டுப் போகாம தப்பிச்சுது. நான் அடிச்சுக்குவேன். இருக்கற சொத்தையெல்லாம் இப்படி வித்துத் தொலைக்கிறீங்களேன்னு. அப்பவெல்லாம் சொல்வார். “எனக்கு என்னோட ரெண்டு பசங்களும் தான் பெரிய சொத்துடி. அது போதும் வேற சொத்து எனக்கு என்ன வேணும்…” சொல்லச் சொல்ல யசோதாவின் குரல் தழுதழுத்தது.

 

அந்த கடைசி வார்த்தைகளைக் கேட்டு ராஜாராமும் கண்கலங்கினார். அதை அவர்களுக்குக் காட்டாமலிருக்க அந்தப் பக்கம் திரும்பி ஜன்னல் வழியே தெரியும் செடிகொடிகளைப் பார்த்தார்.

 

வாசுதேவனுடைய செயல்கள் அவர்களுக்குப் பிடித்திருக்கா விட்டாலும், அந்தச் செயல்களின் பின்னால் இருக்கும் அவருடைய பெரிய மனதை அவர்கள் மனநெகிழ்ச்சியுடன் நினைத்துப் பார்க்கிறார்கள் என்பதை  அர்ஜுன் கவனித்தான்.  அவனுக்கும் தாத்தாவை நினைக்கப் பெருமையாக இருந்தது. பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இறந்தபின் தகுதியில்லா விட்டாலும் அவர்களுடைய கட்சிக்காரர்களால் பெருமைப்படுத்தப் படுகிறார்கள். பல அயோக்கியத்தனங்களைச் செய்திருந்தாலும் புனிதர்களாக்கப் படுகிறார்கள். இன்றைக்கு இந்தத் தேசம் கொண்டாடும் தலைவர்களில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் வெகு சாதாரண மனிதர்களே. அப்படி இருக்கையில் தாத்தா uண்மையிலேயே வித்தியாசப்பட்டு உயர்ந்து நிற்கிறார் என்று தோன்றியது.

 

அவன் திடீரென்று கேட்டான். “தாத்தா பெரிய சொத்தாய் நினைக்கும் அவரோட பிள்ளைகள் அரசியலில் எதிரும் புதிருமாய் இன்றைக்கு இருப்பதை, அவர் உயிரோடு இருந்திருந்தால் எப்படிப் பார்த்திருப்பார்? யார் பக்கம் அவர் இருந்திருப்பார்?

 

ராஜாராம் புன்னகையுடன் சொன்னார். “சந்தேகத்துக்கு இடமில்லாமல் எங்கப்பா அண்ணாவை ஆதரிச்சிருப்பார்.”

 

அதைச் சிறிதும் தயக்கமில்லாமல் சொல்ல முடிந்த சித்தப்பாவின் நேர்மையை அர்ஜுன் மனதிற்குள் பாராட்டினான். அவன் அவரிடம் கேட்டான். “பின் ஏன் சித்தப்பா நீங்க உங்க அண்ணாவை எதிர்த்து அரசியல் செய்யறீங்க?”

 

ராஜாராம் சொன்னார். “எனக்கு எங்கப்பா செஞ்ச அரசியலிலும் உடன்பாடு இல்லை. இப்போ அண்ணா செய்யற அரசியலிலும் உடன்பாடு இல்லை. அது ஏன்னு ஒரு நாள் நாம ரெண்டு பேரும் தனியா பேசுவோம் அர்ஜுன். நான் அதை விளக்கிச் சொன்னால் தான் நீ அதைப் புரிஞ்சுக்க முடியும். என் மேல உனக்கு இருக்கற கோபம் குறையும். இப்ப உன் தாத்தா பற்றி மட்டும் பேச்சை வெச்சுப்போம். உன் பாட்டிக்கும் அரசியல் பற்றி பேசறது இப்ப எல்லாம் ரொம்பக் கசப்பாய் இருக்கு.”

 

‘’ஆமாடா. நிருபராய் நீ கேட்டதெல்லாம் போதும். வீட்டு பேரப்பிள்ளையாய் பேசு. பாட்டிக்கு வயசாயிட்டே போகுது. கொள்ளுப் பேரனோ, பேத்தியோ பார்த்துட்டு கண்ணை மூடணும்னு ஆசையா இருக்கு. அதற்கு சீக்கிரத்துல எதாவது வாய்ப்பு இருக்காடா?”

 

அர்ஜுன் முகத்தில் மெலிதாய் வெட்கம் தோன்றி மறைய ராஜாராம் அதைக் கவனித்து உடனடியாகக் கேட்டார். “யாருடா அந்தப் பொண்ணு?”

 

(தொடரும்)

என்.கணேசன்






Monday, June 15, 2026

யோகி 160

டாக்டரும் டாமியும் சேர்ந்து வீட்டுக்குள்ளிருந்து வெளியே ஓடி வருவதைப் பார்த்த கூர்க்கா அவசர அவசரமாக வெளிக் கதவைத் திறந்து வைத்தான். எப்போதும் கார் ஏறி ஓடித் தப்பிக்கும் டாக்டர் இன்று காரில் ஏறவும் மறந்தார். தெருவில் ஒரு கூலித் தொழிலாளி நன்றாகக் குடித்து விட்டு அப்போது தான் தள்ளாடி நடந்து வந்து அவர் வீட்டருகே நெருங்கியிருந்தான். வெளியே வந்த டாமி அந்தக் குடிகாரன் மீது பாய அவன் தடுமாறிக் கீழே விழுந்தான். சமாளித்து எழுந்து ஓடிய அவன் சில அடி தூரத்தில் கற்கள் குவிக்கப்பட்டு இருப்பதைப் பார்த்தான். ஆயுதம் கண்டவுடன் அவனுக்கு வீரமும் வந்தது. கற்களை எடுத்து சரமாரியாக நாய் மீது அவன் வீச ஆரம்பித்தான். அடிபட்ட நாயை விட அதிக ஆக்ரோஷத்தில் சுகுமாரன் அவனை நோக்கிப் பாய்ந்து வர அவன் கற்களை அவர் மீதும் எறிய ஆரம்பித்தான். கூர்க்காவும், மற்றவர்களும் சேர்ந்து குடிகாரனைக் கட்டுப்படுத்துவதற்குள் சுகுமாரனும், நாயும் படுகாயப்பட்டிருந்தனர்.  

 

ழக்கத்திற்கு மாறாக அதிகாலையிலேயே அறை வாசலில் வந்து கண்ணன் நின்றது முக்கியத் தகவலைச் சொல்ல என்பது பாண்டியனுக்குப் புரிந்தது. பாண்டியன் பார்வையாலேயே கேட்டார். ’என்ன?’

 

கண்ணன் சொன்னார். “டாக்டர் சுகுமாரன் படுகாயப்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அந்த நாய்க்கும் படுகாயமாம்.”

 

என்ன ஆச்சாம்?”

 

நடுராத்திரில யாரோ குடிகாரன் அவங்க ரெண்டு பேர் மேலயும் கல்லெடுத்து சரமாரியாய் எறிஞ்சிருக்கான். அந்த நேரத்துல இவர் ஏன் வெளியே போனார்னு தெரியலைஆஸ்பத்திரில அவருக்கு தூக்க மருந்து கொடுத்து தூங்க வெச்சு தான் சமாளிச்சுகிட்டு வர்றாங்க. முழிப்பாய்டுச்சுன்னாமண்டை ஓடு…. மண்டை ஓடுன்னு அவர் கத்தறாராம்.”

 

பாண்டியன் திகைப்புடன் கண்ணனைப் பார்க்க, கண்ணன் சொன்னார். “டாக்டரோட மனைவி அவரோட தாயத்தையும், நாயோட தாயத்தையும் வெட்டி விட்டுருக்காங்க போலருக்குடாக்டருக்குக் காயம் பலமாய் பட்டுருக்குன்னு சொன்னாலும் பெரிய பிரச்சினையாய் இருக்கிறது மனப்பிராந்தி தானாம். பைத்தியமே பிடிச்சுடுச்சுன்னு டாக்டர்கள் அவங்களுக்குள்ளே பேசிக்கறாங்களாம்.”

 

பாண்டியன் அதிர்ந்தார். இன்னும் சில நாட்களில் ஒரு மண்டல காலம் முடியப் போகிறது. அவர் அணிந்திருக்கும் தாயத்தின் சக்தியும் காலாவதியாகப் போகிறது. திரும்பவும் பூஜை செய்து தாயத்து கட்டிக் கொண்டால் ஒழிய அவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது. தேவானந்தகிரியோ அன்று அலைபேசியில் அழைத்த போது எடுக்கவில்லை. பத்து லட்சம் ரூபாய் அவர் முன்பணமாகவே கொடுத்திருக்கிறார். முன்பணம் வாங்கிக் கொண்ட அந்த மனிதர் யோகாலயத்தைப் பற்றி மோசமான செய்திகள் வர ஆரம்பித்தவுடன் தொடர்பினை வெட்டிக் கொள்ள நினைத்தது அயோக்கியத்தனம். ஆனால் அவரை வாய்விட்டுத் திட்டி மிரட்டுவது உசிதம் அல்ல. பாண்டியனுக்குக் காரியம் ஆக வேண்டும். அதனால் ஆரம்பத்தில் அமைதியாகப் பேசிப் பார்க்க வேண்டும். அதன் பின் தான் மிரட்டல், அடிதடி, அச்சுறுத்தல், கடத்தல் எல்லாமே

 

பாண்டியன் தேவானந்தகிரியை அலைபேசியில் அழைத்தார். இந்த முறை தேவானந்தகிரி அலைபேசியை எடுத்துப் பேசினார். யோகாலயத்திற்கு எதிரான செய்திகள் நின்று, இப்போது பிரச்சினை இல்லை என்பதைப் புரிந்து கொண்ட பிறகு, எடுத்துப் பேசுகிறார் என்பதை பாண்டியன் அனுமானித்தார். மனதிற்குள் எழுந்த ஆத்திரத்தை அவர் வெளியே காட்டிக் கொள்ளாமல் பேசினார். “என்ன சுவாமிஜி நான் நாலைந்து நாள் முன்னால பல தடவை கூப்பிட்டேன். உங்க கிட்டே பேச முடியலையே

 

என்னோட மொபைல் ரிப்பேர் ஆகியிருந்துச்சு. நேத்து தான் சரியாச்சுஎன்று தேவானந்தகிரி சொன்னது எத்தனை உண்மை என்று பாண்டியனுக்குத் தெரியவில்லை. ஆனால் உண்மை என்று நம்புவது போல் நடித்து ஒன்றுமே ஆகிவிடவில்லை என்பது போல் தான் இதைத் தொடர வேண்டியிருந்ததால் பாண்டியன் இயல்பாய் பழைய நட்புடனேயே பேசினார். “அன்னைக்கு நீங்க உங்க ஆளை அனுப்பினது நல்லதாய்ப் போச்சு சுவாமிஜி. உங்கள் ஆள் வர்ற வரைக்கும் நாங்க அந்தப் பையனை ரொம்பவே நம்பியிருந்தோம். அப்புறம் உஷாராயிட்டோம். ஆனால் ஏற்கெனவே அவன் ஹைத்ராபாத்ல ஒரு கேஸ்ல சிக்கியிருந்தான். அதனால அங்கேயிருந்து வந்த போலீஸ் அவனைக் கூட்டிகிட்டு போய்ட்டாங்க

 

தேவானந்தகிரி அதிர்ச்சியடைந்தார். பாண்டியன் ஒரு மண்டல காலம் முடிவடையப் போவதைச் சொன்னார். முடியும் நாளுக்கு ஓரிரு நாட்கள் முன்னதாகவே அடுத்த பூஜை செய்து புதிய தாயத்து அணிந்து கொள்வது உசிதமென்று நினைப்பதாகச் சொன்னார்.

 

தேவானந்தகிரி தயக்கத்துடன் சொன்னார். “நல்லது தான். ஆனால் போன தடவை மாதிரி யாராவது ஏதாவது செய்துட வாய்ப்பிருக்கு.”

 

நீங்கள் வர்ற நாளைச் சொல்லுங்க சுவாமிஜி. நான் ஒரு நாள் முன்னதாகவே உங்க பாதுகாப்புக்கு என் ஆள்களை அனுப்பி வைக்கிறேன். உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அவங்க உங்களைக் கூட்டிகிட்டு வந்துடுவாங்க.”

 

தேவானந்தகிரி திருப்தியுடன் சம்மதித்தார். பாண்டியன் டாக்டர் சுகுமாரனின் நிலைமையைச் சொல்வதை வேண்டுமென்றே தவிர்த்திருந்தார்.  முன்பே சற்று தயக்கம் காட்டும் தேவானந்தகிரி, சுகுமாரன் நிலைமையைக் கேட்டு பயந்து போய் பின்வாங்கினால் அது பிரச்சினையாகி விடும் என்று பாண்டியன் நினைத்தார். தேவானந்தகிரி இங்கே வரும் நாளில், சுகுமாரனை இங்கே கூட்டிக் கொண்டு வரும் நிலைமை இருந்தால் கூட்டிக் கொண்டு வருவது, இல்லா விட்டால் அவர் விதி அவ்வளவு தான் என்று விட்டு விடுவது என்று அவர் முடிவு செய்திருந்தார்.  அதற்கு மேல் எதுவும் செய்வதற்கில்லை.

 

ஷ்ரவன் தேவானந்தகிரி-பாண்டியன் பேசிக் கொண்டதைக் கேட்டான். சைத்ரா வழக்கில் இரண்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு விட்டார்கள். செல்வம் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். டாக்டர் சுகுமாரனுடைய நிலைமையும் தீவிரமாகிக் கொண்டு தான் இருந்தது. காயங்களின் கடுமையை விட அவர் காணும் காட்சிகள் கூடுதல் கொடுமையாக இருந்தன. மண்டை ஓட்டையும், காவித் துணி எரிவதையும் பார்த்து பார்த்து அவர் திகிலடைகிறார். தொடர்ந்து தாயத்து கேட்பதால் இரண்டு கைகளிலும் இரண்டிரண்டு தாயத்துகள் கட்டியிருக்கிறார்கள். அவருடைய மனைவி ஆஸ்பத்திரி டாக்டர்களிடம்உங்கள் எம். டியின் பைத்தியத்தை முழுவதுமாய் குணப்படுத்திய பிறகு வீட்டுக்கு அனுப்பினால் போதும். அதுவரை நீங்களாச்சு, அவராச்சுஎன்று நிர்த்தாட்சணியமாய்க் கூறிவிட்டாளாம். ஆஸ்பத்திரியில் நர்ஸ்களும், அட்டெண்டர்களும் அவரை நெருங்கவே பயப்படுகிறார்களாம். எனவே சுகுமாரனுடைய நிலைமையும் தீவிரத்தை எட்டும்படியாகவே இருக்கின்றது.

 

தேவானந்தகிரி பூஜை செய்து தாயத்து கட்டினால் 48 நாட்கள், 48 நாட்கள் என்று தொடர்ந்து பாண்டியன் மட்டும் பாதுகாப்பாக இருக்கும் நிலைமை தொடரும். தாயத்து கழன்ற பின் சுகுமாரனின் நிலைமையைப் பார்த்த ஷ்ரவனுக்கு, இந்தப் பூஜை தொடர முடியாமல் போவது பாண்டியனுக்குக் கிடைக்க முடிந்த சரியான தண்டனை என்று தோன்ற ஆரம்பித்தது. தேவானந்தகிரியோ லட்சங்களுக்கு விலை போய்க் கொண்டிருக்கிறார். ஷ்ரவன் யோசித்து, முடிவில் தேவானந்தகிரியை நேரில் சந்திப்பது என்று முடிவு செய்தான்.

 

தேவானந்தகிரி தன் எதிரே வந்து வணங்கி நின்ற வாட்ட சாட்டமான இளைஞனை, புதிய வாடிக்கையாளர் என்று நினைத்து வரவேற்றார். ஒரு நாளில் மூன்று ப்ரஷ்னம், ஒரு பெரிய பூஜைக்கு மேல் அதிகம் செய்வதில்லை என்றும், அதெல்லாம் இரண்டு மாதங்களுக்கு அனைத்து நாட்களிலும் முன்பதிவு ஆகியிருக்கிறது என்றும் சொன்னார்.

 

ஷ்ரவன் சொன்னான். “நான் ப்ரஷ்னம், பூஜைக்காக வரவில்லை சுவாமிஜி. உங்களிடம் மன்னிப்பு கேட்பதற்காக வந்தேன்.”

 

தேவானந்தகிரி அவன் எதற்கு மன்னிப்பு கேட்கிறான் என்று புரியாமல் திகைப்புடன் அவனைப் பார்த்தார். ஷ்ரவன் சொன்னான். “சில நாள்களுக்கு முன்னால் உங்கள் வலது கால் கட்டைவிரலில் ஆன காயம் நான் அனுப்பிய ஆளால் ஆனது. அதற்காகத் தான் மன்னிப்பு கேட்க வந்தேன்.”

 

தேவானந்தகிரியின் முகத்தில் பயம் தெரிந்தது. சத்தம் போட்டு யாரையாவது உதவிக்கு வரவழைக்கலாமா என்று அவர் யோசிப்பது தெரிய ஷ்ரவன் சொன்னான். “காலை மிதிச்ச சின்ன தப்புக்கே மன்னிப்பு கேட்க வந்தவன், பெரிய தப்பை எல்லாம் செய்ய மாட்டான் சுவாமிஜி. நீங்க பெரிய மனசு பண்ணி நான் சொன்னதை எல்லாம் கேட்கணும். அப்புறம் நீங்க என்ன முடிவு வேணும்னாலும் செய்துக்கலாம். எங்க பக்கத்துல இருந்து இனி எந்த சின்ன பிரச்சினையும் உங்களுக்கு வராது…”


(தொடரும்)

என்.கணேசன்







Thursday, June 11, 2026

சதுரங்கம் 22


 விமல் கேட்டதற்கு ராஜ்நாத் புன்னகையுடன் பதில் சொன்னார். “சுவாமி. இந்தக் காலத்தில் பணம் இருந்தால் போதும், ஆத்ம ஞானத்தைத் தவிர எல்லாம் கிடைக்க வழி இருக்கிறது, ஆத்ம ஞானம் ஒன்றை மட்டும் தான் பணம் கொடுத்து யாரும் பெற முடிவதில்லை. அதனால் தான் பணம் இருந்தும், வசதிகள் பல இருந்தும், எல்லாவற்றையும் விட்டு விட்டு நான் இங்கே வந்திருக்கிறேன்.”

 

விமலுக்கு ஆத்ம ஞானம் தேவையிருக்கவில்லை. ஆத்ம ஞானத்திற்காக உப்பு சப்பில்லாத வாழ்க்கை வாழவும் அவன் தயாராக இல்லை. அந்தத் துறவி எதைத் தேடி இங்கு வந்து சேர்ந்தார் என்று தெரிந்து கொள்ளும் அக்கறையும் அவனுக்கு இல்லை. அதனால் மனதிற்குள் விமல் சலித்துக் கொண்டான். ’ஏன்யா நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல், கேட்காத கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி என்னைச் சித்திரவதை செய்கிறாய்?’

 

ஆனால் அவன் சொன்ன வார்த்தைகள் வேறாக இருந்தன. “உண்மை சுவாமி. நானும் ஏழரை கோடி ரூபாயை விட்டு இங்கே வந்திருப்பது அதற்காகத் தான். என்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் புதிய எண் சிம் வாங்க பணம் செலவு செய்ய வேண்டுமென்றாலும் நான் தயார் தான்.”

 

டெல்லி கரோல் பாக் மார்க்கெட்டில் ராஜா சிங் என்ற ஒருவன் ஒரு மொபைல் கடை வைத்து இருக்கிறான். அவன் புதிய சிம்களையும் விற்கிறான். வேறு பெயர் விலாசத்தில் வாங்க வேண்டும் என்றால் அவனே போலி டாக்குமெண்ட்கள் தயார் செய்து புதிய சிம் தருகிறான். அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை ஐந்தாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தான். இப்போது எவ்வளவு வாங்குகிறான் என்று தெரியவில்லை....”

 

விமல் அத்தகவலை மனதில் குறித்துக் கொண்டான். பின் சொன்னான். “நல்லது. இப்போதைக்கு எனக்குத் தேவையிருக்காது. ஏனென்றால் இங்கே வருவதற்கு முன் தான் அந்த ட்ரஸ்டீயிடம் எல்லாவற்றையும் நான் சொல்லி விட்டு வந்திருக்கிறேன். ஆறு மாதங்கள் கழித்து தான் எனக்கு அடுத்தது பேச வேண்டியிருக்கும். அதனால் அதற்கு முன் நான் வாங்கிக் கொள்கிறேன். மற்றபடி வேறு யாரிடமும் எனக்குப் பேச எதுவுமில்லை.”

 

ராஜ்நாத் தலையசைத்தார். அவனுக்குப் புதிய மொபைலும் சிம்மும் அவசரமாகத் தேவை என்பதால் சீக்கிரமாக வாங்கப் போகிறான் என்றாலும் அது அந்தத் துறவிக்கு அது தெரிய வேண்டாம் என்று விமல் நினைத்தான். நாளை ஏதாவது ஒரு பிரச்சினை ஆனால், அவன் புதிய சிம்மை ராஜா சிங்கிடமிருந்து வாங்கியதை இந்தத் துறவி நினவுகூர்வது அவனுக்கு ஆபத்தாக முடியலாம்...

 

ர்ஜுனிடம் யசோதாவும், ராஜாராமும் மாறி மாறி வாசுதேவனைக் குறித்த நினைவுகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

 

யசோதா சொன்னாள். “ஒரு காலத்துல இந்த வீட்டுல சாப்பிட கட்சிக்காரங்க குறைஞ்சது பத்து பேராவது இருப்பாங்க. நான் உன் தாத்தா கிட்ட கறாரா சொல்லிட்டேன். “உங்களுக்கும் ரெண்டு பசங்களுக்கும் வேணும்னா நான் சமைச்சுப் போடுவேன். கட்சிக்காரங்களுக்கும் சேர்த்து சமைக்கணும்னா நீங்க சமையலுக்குத் தனியா ஆளைப் போட்டுக்கோங்கன்னு. அப்பறமா தான் சமையலுக்கு ஒரு ஆளை வேலைக்குச் சேர்த்துகிட்டார் அவர். அதுவும் நாம என்ன சாப்பிடறோமோ அதைத் தான் தொண்டர்களுக்கும் போடணும்னு சொல்வார். அவங்க கூட சேர்ந்து தான் சாப்பிடுவார்…”

 

ராஜாராம் புன்னகையுடன் சொன்னார். “இந்த காலத்துல எல்லாம் தலைவர்கள் ஒரு போட்டோஷுட்டுக்காக வேணும்னா தொண்டர்களோட சேர்ந்து சாப்பிடுவாங்க. சரியாய் சொன்னா சாப்பிடறது மாதிரி நடிப்பாங்க. காமிரா நகர்ந்தவுடனே அவங்களும் நகர்ந்துடுவாங்க…”

 

அர்ஜுன் புன்னகைத்தான். இன்று அவருடைய செல்லப்பிள்ளையாக வலம் வரும் முதலமைச்சர் சரவணனும் அப்படித்தான். சமபந்தி போஜனங்கள் எல்லாம் புகைப்படங்களுக்காகத் தான். சென்ற வாரம் அரசுப் பள்ளிக்கூடம் ஒன்றின் ஒரு நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் சேர்ந்து அமர்ந்து ஒரே ஒரு வாய் மட்டும் சாப்பிட்டு விட்டு சரவணன் புகைப்படம் எடுத்து முடித்தவுடன் எழுந்து போனதைப் பற்றி அர்ஜுன் கேள்விப்பட்டிருக்கிறான்.  இதை எல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கிற போது தினமும் தொண்டர்களுடன் சேர்ந்து சாப்பிட்ட தாத்தா வாசுதேவன் உண்மையான தலைவன் மட்டுமல்ல, மாமனிதனும் கூட என்று அர்ஜுன் எண்ணிக் கொண்டான்.

 

ஞானமூர்த்தியும் வெளியூர்களுக்குச் செல்லும் போது தொண்டர்களுடன் சேர்ந்து தான் சாப்பிடுவார். அவரும் இயல்பாகவே ஏற்ற தாழ்வுகள் பார்ப்பவர் அல்ல. ஆனால் தன் தந்தையைப் பற்றி இத்தனை உயர்வாகப் பேசும் ராஜாராம் அப்படி சாப்பிடக்கூடியவர் அல்ல. அவர் ஒரு கட்சித் தலைவர் அல்ல என்பதைக் காரணமாக அவர் சொல்லலாம். யோசித்துப் பார்த்தால், ராஜாராம் எந்தப் பதவியும் வகிக்காமலேயே, பதவிக்கு உரிய பிரச்சினைகளச் சந்திக்காமலேயே, பதவிக்குக் கிடைக்கும் அத்தனை பலன்களையும், கௌரவத்தையும் அனுபவித்து வருகிறார். வெளியே நிற்கும் இரண்டு போலீஸ்காரர்களின் காவல் கூட அப்படித்தான்.

 

எந்தக் கட்சியிலும், எந்தப் பொறுப்பிலும் இல்லாத அவரை அச்சுறுத்தி யாரோ ஒரு மொட்டைக்கடிதம் அனுப்பிய பின், அவருடைய பாதுகாப்புக்காக முதலமைச்சர் நிறுத்தியிருக்கும் போலீஸ் காவல் அது. ஆளும் கட்சிக்காரர் ஒருவரையே அப்படி ஒரு மொட்டைக்கடிதம் எழுதி அனுப்ப வைத்திருப்பார்கள் என்று நிருபர்கள் பேசிக் கொண்டது அர்ஜுன் காதிலும் விழுந்திருக்கிறது.

 

ராஜாராமின் பார்வை சூட்சுமமானது. “என்னடா யோசிக்கிறாய்?”

 

அர்ஜுன் கண்ணிமைக்காமல் சொன்னான். “தாத்தா எப்படிப்பட்ட உயர்ந்த மனுஷன்னு ஆச்சரியமாய் யோசிக்கிறேன் சித்தப்பா”.

 

யசோதா வறண்ட குரலில் சொன்னாள். “என்ன உயர்ந்த மனுஷன்? பிழைக்கத் தெரியாத மனுஷனாவே கடைசி வரைக்கும் வாழ்ந்துட்டு போயிட்டார்.”

 

ராஜாராம் சிரித்துக் கொண்டே சொன்னார். “டேய் இது. பாட்டி பேரன் கிட்ட தனிப்பட்ட முறையில் சொல்லும் கருத்து. இதையெல்லாம் பத்திரிக்கைல எழுதிடாதே.”   

 

அர்ஜுனும் சிரித்தான். “கவலைப்படாதீங்க சித்தப்பா. நீங்க என்ன சொன்னாலும் சென்சார் பண்ணி தான் பத்திரிக்கைல எழுதுவேன். ஒரு விதத்துல பார்த்தா உயர்ந்த மனுஷன்கிறதே பிழைக்கத் தெரியாத மனுஷனைத் தானே

 

அதைக் கேட்டு ராஜாராமும் சிரித்தார். ஆனால் யசோதா சிரிக்கவோ, பதில் கருத்து சொல்லவோ இல்லை. அவள் தன் கணவனைப் பற்றிய நினைவுகளில் தங்கி இருப்பதாக அர்ஜுனுக்குத் தோன்றியது.  என்ன யோசிக்கிறாள்?

 

இன்றைய தமிழக அரசியலில் ராஜாமாதா அவள். முதலமைச்சர் உட்பட எல்லா அமைச்சர்களும், வாசுதேவனின் நினைவு நாளில் மட்டுமல்ல, அவரவர் பிறந்த நாளில் அங்கு வந்து அவளிடம் ஆசி வாங்கிக் கொள்வது, தவறாமல் சடங்கு போல் நடக்கிறது.  அப்படி வணங்குவது புகைப்படமும் எடுத்துக் கொள்ளப்பட்டு பத்திரிக்கைகளுக்கும், ஊடகங்களுக்கும் அனுப்பப்படும். அவரவர் தாயையாவது அப்படி அவர்கள் வணங்குவார்களா என்பது சந்தேகமே. அடுத்ததாய் ராஜாராமிடம் ஆசி வாங்குவார்கள். இத்தனை பெருமையும் அவளுக்கு வாசுதேவனின் மனைவி என்ற வகையில் தான் கிடைக்கின்றது. அதைப்பற்றி அவள் நினைக்கிறாளோ?

 

அர்ஜுன் அவளிடம் விளையாட்டாய் கேட்டான். “பாட்டி நீங்க தாத்தா கிட்ட சண்டை போடுவீங்களா?”

 

யசோதா தன்னையும் மீறிப் புன்னகைத்தாள். “அது தினமும் நடக்கும். ஆனா என்ன, ஒரு பிரயோஜனமும் இருக்காது. என்ன சொன்னாலும் ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுடுவார். சொல்றது ஒரு நிமிஷமும் உள்ளே தங்காது.”

 

உள்ளேயிருந்து மைதிலியின் குரல் கேட்டது. “இப்ப புரியுது. உங்க மகனுக்கு யார் கிட்ட இருந்து அந்த புத்தி வந்துருக்குன்னு.”  

 

ராஜாராம் புன்னகைத்தபடி அர்ஜுனைப் பார்த்து புருவங்களை உயர்த்தினார்.  யசோதா சமையலறையைப் பார்த்தபடி சொன்னாள். “இவன் எத்தனையோ பரவாயில்லை. நானும் பார்க்கறேனில்ல, நீ சொன்னதை பாதியாவது கேட்டுக்கறான். இவங்கப்பா சுத்த மோசம். நாயா கத்தினாலும் எல்லாம் முடிஞ்சதுக்கப்பறம் சில சமயம், என்னவோ சத்தம் கேட்டுச்சேங்கற மாதிரி, யோசனையோட பார்ப்பார். அப்பவெல்லாம் அவர் கழுத்தை நெறிக்கலாமான்னு தோணும்.”

 

அர்ஜுன் சிரித்தபடி கேட்டான். “ஆனால் நீங்க அப்படி செஞ்சிடலயே பாட்டி?”

 

யசோதாவும் சிரித்தபடி சொன்னாள். “இல்லை. அந்தக் காலத்துல எத்தனை பேசினாலும் இந்தக் காலம் மாதிரி நாங்க அடாவடியாய் போனதில்லை.”

 

ராஜாராம் சிரித்துக் கொண்டே சொன்னார். “ஆனாலும் அப்பா உன்னை எதிர்த்து பேசி நான் கேட்டதேயில்லையேம்மா?”

 

நான் பேசினதை அவர் காது கொடுத்து கேட்டிருந்தா தானடா திருப்பி எதாவது பதிலுக்குச் சொல்ல முடியும்? கேட்டே இருக்கலைன்னா?”

 

அர்ஜுன் ராஜாராமிடம் கேட்டான். “நீங்களும் தாத்தா கூட சண்டை போட்டிருக்கீங்களா சித்தப்பா?”

 

அந்த ஒரு கேள்வியில் ராஜாராமின் புன்னகை அப்படியே உறைந்தது.


(தொடரும்)

என்.கணேசன்