என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, June 4, 2026

சதுரங்கம் 21


 ர்ஜுன்  இருவர் முகமாற்றத்தையும் பார்த்து ஒரு கணம் திகைத்தான். அவன் சொன்னதில் இவர்கள் இருவரும் பாதிப்படைய என்ன காரணம் இருக்கக்கூடும் என்று அவன் மனம் ஆலோசித்தது.

 

இருவரில் வேகமாக பழைய மலர்ச்சிக்கு மாறியவர் ராஜாராம் தான். “ஏதாவது ஞாபகம் வந்துச்சாடா?”

 

ஒன்னும் வரலை சித்தப்பா. நினைவு தெரிஞ்ச பிறகு இங்கே வந்து விளையாடினது எல்லாம் ஞாபகம் இருக்கு. அதுக்கு முன்னாடி நடந்த எதுவும் ஞாபகம் வரலை.”

 

மூனு வயசுல நடந்தது எல்லாம் எப்படிடா ஞாபகம் வரும். யாருக்கும் அந்த வயசுல ரொம்ப பாதிக்கிற மாதிரி எதாவது நடந்திருந்தா தான் ஞாபகம் இருக்கும். இல்லாட்டி மனம் தானாக அதையெல்லாம் மறந்துடும்

 

நான் தாத்தா ஞாபகமாவது வருதான்னு யோசிச்சேன். அதுவும் வரலை

 

யசோதா குரல் கரகரக்கச் சொன்னாள். “அவர் எப்பவுமே உன்னைத் தூக்கி தூக்கி வெச்சுக்குவார். ராஜாராமைக் கூட அப்படி அவர் தூக்கிகிட்டதா எனக்கு ஞாபகம் இல்லை. கடைசியா ஆஸ்பத்திரிக்குப் போறதுக்கு முன்னாடி கூட உன்னைத் தூக்கி கொஞ்சம் நேரம் வெச்சிகிட்டு தான் போனார். அப்பவெல்லாம் அவருக்கு உடம்புக்கு ரொம்பவே முடியலை. ஆனாலும் உடனடியா கிளம்பாம உன்னை எடுத்து கொஞ்சிட்டு பிறகு தான் போனார்...”

 

ராஜாராமின் கண்களும் ஈரமாவதை அர்ஜுனால் கவனிக்க முடிந்தது. அந்த வீட்டில் வாசுதேவன் உயிரோடிருந்த கடைசி தருணங்களை அவர்கள் இருவரும் மனதில் திரும்பவும் ஒளிபரப்பிப் பார்க்கிறார்கள் என்று அர்ஜுனுக்குத் தோன்றியது.

 

அர்ஜுன் சொன்னான். “அம்மாவும் அதைச் சொன்னாங்க.”

 

இருவர் முகங்களும் உடனடியாக இறுகியதையும் அர்ஜுன் கவனித்தான். அம்மா பற்றிச் சொன்னவுடன் ஏன் இருவர் முகங்களும் இறுகுகின்றன?

 

இருவரில் ராஜாராம் தான் இப்போதும் முதலில் மீண்டார். பழையபடி அவர் முகம் மலர்ச்சிக்கு மாறியது. யசோதா ஹால் ஜன்னல் வழியே தெரிந்த மரத்தை வெறித்த பார்வை பார்த்தாள். மைதிலி கேட்டாள். “என்ன சாப்பிடறடா காபி, டீ,  ஜுஸ்

 

அதெதுவும் வேண்டாம் சித்தி. அதெல்லாம் சாப்பிட்டா நீங்க செஞ்சிருக்கற வெஜிடபிள் பிரியாணியைக் காலி செய்ய முடியாது.”

 

மைதிலி வாஞ்சையுடன் புன்னகைத்தாள். அவன் சாப்பிட வருகிறான் என்று சொன்னவுடனேயே அவனுக்குப் பிடித்த வெஜிடபிள் பிரியாணியைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள். அவனுக்கு அவள் செய்யும் வெஜிடபுள் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். அவள் கண்டிப்பாக அதைச் செய்திருப்பாள் என்று யூகித்து அவன் நிச்சயமாய்ச் சொன்னது அவளுக்குப் பிடித்திருந்தது. அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லாததால் அர்ஜுனையும், நித்யாவையும் தான் அவள் பிள்ளைகளாக நினைக்கிறாள்.   அவர்களும் அவளைத் தாயாகத் தான் பார்க்கிறார்கள்...

 

ராஜாராம் சொன்னார். “உன்னோட கட்டுரை விடிவெள்ளில படிச்சேண்டா. ரொம்ப நல்லா எழுதியிருந்தாய்.”

 

அவர் தன்னுடைய பல வேலைகளுக்கு நடுவில் அவனுடைய கட்டுரையைப் படித்திருந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “தேங்க்ஸ் சித்தப்பா

 

ராஜாராமின் செக்ரட்டரி தயக்கத்துடன் வந்து நின்றார். ராஜாராம் பார்வையாலேயே என்ன என்று கேட்க அவர் சொன்னார். “அமைச்சர் கதிரேசன் வந்திருக்கார்.”

 

அமைச்சர் கதிரேசன் மாநில நிதியமைச்சர். ராஜாராம் யோசனையுடன் சொன்னார். “நான் அப்பாயின்மெண்ட் எதுவும் தரலையே.”

 

இல்லை. அவர் கட்சி அலுவலகத்திற்கு வந்தாராம். வழியில் உங்களையும் பார்த்துட்டு போலாம்னு....”

 

நான் பிசியாய் இருக்கேன்னு சொல்லு. ரொம்ப முக்கியமான விஷயம்னா அப்புறமா ஃபோன்ல பேசச் சொல்லு.”

 

தலையசைத்த செகரட்டரி போய் அமைச்சர் கதிரேசனிடம் சொன்னார். “சார் பிசியாய் பேசிகிட்டு இருக்கார். ரொம்ப முக்கியமான விஷயம்னா அப்புறமா ஃபோன்ல பேசச் சொன்னார்.”

 

வரவேற்பறையில் அமர்ந்திருந்த கதிரேசன் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தாலும் அவர் ஒன்றும் சொல்லாமல் எழுந்தார். “சார் யார் கூட பேசிகிட்டிருக்கார்?”

 

அவங்க அண்ணா மகன் கூட பேசிகிட்டிருக்கார்.”

 

கதிரேசன் சிறிது நினைவுபடுத்திக் கொண்டு சொன்னார். “பத்திரிக்கை நிருபராய் இருக்காரே அந்தத் தம்பியா?”

 

ஆமாம். அவரே தான். தப்பாய் நினைக்க வேண்டாம். சார் அவரோட குடும்பத்தாரோட இருக்கறப்ப வேற யாரையும் சந்திக்க விரும்பறதில்லை..”

 

கதிரேசனுக்கு தமிழக அரசியல் களத்தின் மூத்த குடும்பமாகக் கருதப்படும்  வாசுதேவனின் குடும்பம் என்றும் புரியாத புதிராகவே இருந்திருக்கிறது. வாசுதேவனின் பிள்ளைகள் ஞானமூர்த்தியும், ராஜாராமும் அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் நேரில் சந்தித்துக் கொள்கையில் இருவரும் மிக ஒற்றுமையாய்த் தான் தோன்றுவார்கள். ராஜாராம் அண்ணனுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தாலும் பொதுவெளியில் அண்ணனுக்கு எதிராக ஒரு வார்த்தை பேசியதில்லை. அதே போல் ஞானமூர்த்தியும் தம்பிக்கு எதிராக எந்தக் கருத்தையும் சொன்னதில்லை. இப்போது இவரும் தம்பி பையனிடம் பேசுவதை ஐந்து நிமிடம் நிறுத்தி கதிரேசனைச் சந்திக்கத் தயாராக இல்லை..

 

விமல் அவனுடன் பேசிக் கொண்டிருந்த துறவி சிறிது நேரம் வாய்மூடக் காத்திருந்தான். அந்தத் துறவி தைத்திரீய உபநிடதம் பற்றி உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தார்.  அவர் பேசியதில் சத்தியமாக அவனுக்கு எதுவும் புரியவில்லை. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசியிருந்தாலே அவனுக்குப் புரிந்திருக்காது. அவரோ ஹிந்தியில் பேசினார். வாய்ப்பு கிடைத்தால் ஹிந்தி சினிமா அல்லது ஹிந்தி சீரியலிலும் நடிக்கும் ஆசை அவனுக்கு இருந்ததால் அவன் ஹிந்தியை நன்றாகப் பேசக் கற்றிருந்தான். அவனுக்கு ஹிந்தியில் சாதாரணப் பேச்சைப் பேசவும், பேசினால் புரிந்து கொள்ளவும் முடியவும். ஆனால் ஹிந்தியின் ஆன்மீகச் சொற்கள் அவனுக்குப் பழக்கமானவை அல்ல. மேலும் அவனுக்கும் ஆன்மீகத்திற்குமே இடைவெளி அதிகம். ஆன்மீகத்தில் இருப்பவர்களிலுமே கூட உபநிடதம் பற்றியெல்லாம் பேசும் ஆட்கள் மிகவும் குறைவு. பேசினால் கேட்பவர்களும் குறைவு என்பதால் தன்னிடம் பேசக் கிடைத்த விமலை அந்தத் துறவி லேசில் விடுவதாக இல்லை.

 

ஒரு சின்ன இடைவெளி கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ள விமல் ஆவலாக இருந்தான். அந்தத் துறவி புதுடெல்லிவாசி. இன்ஸ்பெக்டர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். அவர் பெயர் ராஜ்நாத். அவருடைய ஒரே மகன் குடும்பத்தோடு ஜெர்மனியில் இருக்கிறான். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடுடைய அவர், மனைவி காலமான பிறகு துறவியாகி, விமல் இருக்கும் ஆசிரமத்திற்கு சென்ற வருடம் வந்து சேர்ந்தவர். அவரிடம் அவனுக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது.

 

அவர் களைப்பில் சிறிது நிறுத்தி மூச்சு விட்ட போது அவன் சொன்னான். “சுவாமி. நீங்கள் சொல்வதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை.”

 

அவன் எல்லாவற்றையும் உண்மை என்று சொல்லி விட்டதால் எதைச் சொல்கிறீர்கள் என்று அவர் கேட்கவில்லை. விமல் அவர் அடுத்ததாய் எதையாவது பேச ஆரம்பிப்பதற்கு முன் அவசரமாய்ச் சொன்னான்.  நான் ஒரு சிக்கலில் இருக்கிறேன் சுவாமி

 

சொல்லுங்கள் சுவாமி என்ன சிக்கல்என்று ராஜ்நாத் ஆர்வமாகக் கேட்டார்.

 

விமல் சொன்னான். “நான் குடும்ப வாழ்க்கையில் விரக்தி வந்து துறவியாகி இங்கே வந்திருக்கிறேன். வரும் போது என்னுடைய மொபைல் போனை உடைத்து சிம்மையும் உடைத்து எறிந்து விட்டு வந்தேன். இனி குடும்பத்தில் யாருடனும் பேசவும் எனக்கு விருப்பமில்லை. அந்தப் போனில் நான் பேசினால் அவர்களுக்கு நான் இருக்கும் இடம் தெரிந்து விடும் என்று பயப்பட்டு தான் அதைச் செய்தேன். இப்போது எனக்கு ஒரு சிக்கல்

 

என்ன சிக்கல்?”

 

நான் என் சொத்தையும் பணத்தையும் ஒரு டிரஸ்டுக்கு எழுதிக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். அதை அவர்கள் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆலோசனையை அவ்வப்போது சொல்வதாகவும் தெரிவித்து விட்டு வந்திருக்கிறேன். இப்போது அவர்களிடம் பேச எனக்கு ஒரு போன் தேவைப்படுகிறது.”

 

அதனாலென்ன என் மொபைல் போனைத் தருகிறேன். நீங்கள் அதில் பேசிக் கொள்ளலாம்.”       

 

ஓரிரண்டு முறை பேசுவதானால் நான் உங்கள் மொபைல் போனில் பேசலாம். ஆனால் நான் தந்து விட்டு வந்திருப்பது சுமார் ஏழரை கோடி ரூபாய் என்பதால்  நான் தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனைகள் சொல்ல வேண்டி வரும். அதனால் எனக்கு நிரந்தரமாகவே ஒரு மொபைல் போன் தேவைப்படுகிறது...”

 

ராஜ்நாத்தின் முகத்தில் பிரமிப்பு தெரிந்தது. ஏழரை கோடி சொத்தை தர்மம் செய்து விட்டு வந்திருக்கும் புண்ணியாத்மாவாக அவர் அவனைப் பார்த்தார்.

 

விமல் தொடர்ந்து சொன்னான். “... எனக்கு ஒரு மொபைல் போனும் எண்ணும் வேண்டும். மொபைல் போனையாவது எந்தக் கடையிலாவது வாங்கிக் கொள்ளலாம். ஆனால் புதிய எண்ணை வாங்குவது தான் எப்படி என்று தெரியவில்லை. என் பெயர் விலாசம் தந்தால் என் குடும்பத்தினர் எதிர்காலத்தில் எப்படியாவது அதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. பெயர் விலாசம் தராமல் எப்படியாவது ஒரு மொபைல் சிம் பெற வழி இருக்கிறதா?”

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, June 1, 2026

யோகி 158

 

பாண்டியன் பிரம்மானந்தாவின் எண்ணத்தைப் புரிந்து கொண்டவர் போல் சொன்னார். அந்தத் திருட்டு அயோக்கியனைக் கொன்னது சரிதான் யோகிஜி. அது மத்தவங்களுக்கு ஒரு பாடமாய் இருக்கும். அதைச் செய்யலைன்னா நம்ம பினாமிகள் எல்லாரும் அவங்கவங்க கைவரிசையைக் காண்பிக்கப் பார்க்கலாம். ஆசை யாரை விட்டுது யோகிஜி. இப்போ உயிருக்குப் பயந்த எவனும் நம்மள ஏமாத்த பயப்படுவான். நாம எப்பவுமே அந்தப் பயத்துல அவங்க எல்லாரையும் வெச்சிருக்கறது முக்கியம். அந்த அயோக்கியனைக் கொன்னு இங்கேயே புதைச்சது தான் தப்பாய் போச்சு.  வேறெங்கேயாவது அதை நான் செஞ்சிருக்கணும். இல்லாட்டி நான் வேறெதாவது வழியில கொன்னிருக்கணும். அது தான் தவறு. இப்ப நாம தோண்டறதுக்கு கோர்ட்ல தடையுத்தரவு  வாங்கறதுல இருந்து நிறைய செய்யலாம். தோண்டறத தள்ளிப் போடலாம். ஆனால் அதை நிரந்தரமாய் தடுத்துட முடியாது யோகிஜி. இதுல குறைந்த பட்ச சேதாரத்தோட நாம தப்பிக்கணும்னா ஒரு பலியாடு கண்டிப்பாய் தேவை. அதுக்கு ஆள் ரெடியாய் இருக்கான்.”

 

யாரது?” பிரம்மானந்தா ஆவலுடன் கேட்டார்.

 

நம்ம சுந்தரகுரு. அவன் பேர்ல தான் சந்திரமோகனோட சொத்தை நாம மாத்தியிருக்கோம். அதனால அவனைச் சொன்னால் அது நம்பற மாதிரி இருக்கும். அவன் இருக்கற ஃப்ளாட்டை அவனுக்கு வாங்கித் தர்றதாவும், அவன் ஜெயில்ல இருக்கறப்ப அவன் குடும்ப செலவை ஏற்றுக்கறதாவும் சொல்லியிருக்கேன். அவன் சரின்னுட்டான். அவனுக்கு உதவினதாய் நம்ம ஆள்கள் ரெண்டு பேரையும் தயார்ப்படுத்திட்டேன். அவங்களுக்கு பத்து லட்சம் ரொக்கமும், அவங்க ஜெயில்ல இருந்து திரும்பி வர்ற வரைக்கும் குடும்ப செலவைக் கவனிச்சிக்கறதாவும் சொல்லி அவங்களும் ஒத்துகிட்டாங்க. அதனால இனி நீங்கள் முதல்வர் உத்தரவுல கையெழுத்து போடற வரைக்கும் காத்திருக்க வேண்டாம். நீங்களே தோண்ட முடிவு பண்ணினதா அறிக்கை விடுங்க. நீங்களே போலீஸைக் கூப்பிட்டுத் தோண்டச் சொல்லுங்க. பிணம் கிடைச்சவுடனே நீங்க அதை நம்ப முடியாத மாதிரியும், உங்களுக்கு ஒன்னும் தெரியாத மாதிரியும் நடிங்க. நானும் அப்படியே நடிக்கறேன். அவங்களை ரொம்ப நம்பி மோசம் போனதாய் சொல்லுவோம். அவங்களும் நமக்குத் தெரியாமல் எல்லாம் பண்ணினதாய் போலீஸ் கிட்ட வாக்குமூலம் தருவாங்க. சட்டத்துக்கு வேண்டியது குற்றவாளிகள். நாமளே தயார் செஞ்சு குடுத்துடுவோம்.”  

 

பிரம்மானந்தாவுக்கு பாண்டியனை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. பிரச்சினைகள் எழுந்தவுடனேயே அதற்கான தீர்வுகளையும் கண்டுபிடித்து செயல்படுவது எல்லாருக்கும் எளிதல்ல. சுந்தரகுருவையும், மற்ற இருவரையும் குற்றத்தை ஏற்றுக் கொள்ள பேரம் பேசி சம்மதம் வாங்கி இருப்பதும் பாண்டியனின் தனித்திறமை தான்.

 

பணமிருந்தா இந்த உலகத்துல எத்தனையோ செய்யலாம். ஏன்னா பணம் தேவைப்படறவங்க எல்லாத் துறையிலயும் நிறைய இருக்காங்க. அவங்களுக்குத் தேவைகளும் நிறைய இருக்கு. அதைப் பயன்படுத்திட்டு ஜெயில்ல கூட அவங்களை வசதியாய் இருக்க வைக்கலாம். பணத்தால தண்டனைக்காலத்தை குறைச்சுக்கவும் முடியும். ஏதாவது தலைவர் பிறந்த நாள்ல நன்னடத்தை காரணம் சொல்லி அவங்களை விடுதலை செய்ய வைக்கவும் முடியும். எத்தனையோ வழிகள் இருக்கு யோகிஜி. அதெல்லாத்தையும் கூட ஒரு கை பார்த்துட வேண்டியது தான்…”

 

பாண்டியனின் ஆட்கள் அவரிடம் ஏன் அத்தனை விசுவாசமாய் இருக்கிறார்கள் என்பது பிரம்மானந்தாவுக்குப் புரிந்தது. பணத்தைத் தூக்கி எறிந்து விடுவதோடு அவர் நின்று விடுவதில்லை. அவர்கள் கூடுமான அளவு சௌகரியமாக இருக்கவும் பாண்டியன் யோசிக்கிறார். சற்று முன் வரை இருந்த மன பாரம் பிரம்மானந்தாவுக்குப் பாதியாகக் குறைந்தது. இப்போதும் அதிகப்பிரசங்கிகள் சிலர் அவரைக் கிண்டல் அடிப்பார்கள். எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்துக்கு, யோகாலயத்திற்குள் நடக்கும் கொலையே தெரியவில்லை என்று விமர்சனம் செய்வார்கள். அது கொஞ்சம் அவமானம் தான். ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும்

 

டுத்த நாள் காலையிலிருந்து நடந்த நிகழ்வுகள் செய்தியாளர்களையும், ஊடகங்களையும் மிகுந்த பரபரப்பில் இருக்க வைத்தன. யோகாலயமே முக்கிய பேசுபொருளாக அமைந்தது. அதிகாலையில் பிரம்மானந்தா போலீஸாருக்கு விடுத்த வேண்டுகோள் வெளியானது. எந்த உண்மையையும் மறைக்கும் எண்ணம் தனக்கு இல்லவே இல்லை என்றும், அதை நிரூபிக்கும் வண்ணம் போலீஸாரிடம் உடனடியாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒலிப்பதிவில் குறிப்பிடப்பட்ட இடத்தில் தோண்டிப் பார்த்து உண்மையை அறிய வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

அதைப் படித்தவுடனேயே ஷ்ரவன் ராகவனிடம் சொன்னான். “இனி இதைத் தவிர்க்க முடியாதுன்னு தெரிஞ்சவுடனேயே ஒரு பலியாடை தயார் செய்துட்டாங்க போலருக்கு.”  

 

பிரம்மானந்தாவின் அறிக்கையைப் பலரும் சிலாகித்துப் பேசும்படி யோகாலயம் பார்த்துக் கொண்டது. மதியம் யோகாலயத்திற்குள் போலீஸ் படை மோப்ப நாயுடன் உள்ளே புகுந்தது. மோப்ப நாய் சந்திரமோகன் புதைக்கப்பட்டு இருந்த இடத்தில் நின்று குரைக்க ஆரம்பிக்க அங்கே போலீஸார் தோண்ட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் சந்திரமோகனின் அழுகிப் போன பிணத்தை வெளியே எடுத்தனர்.

 

அதன் பின்சுந்தரகுரு ஒப்புதல் வாக்குமூலம்வெளியாகியது. அவனிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு நிலத்தை விற்பனை செய்வதாக உறுதியளித்திருந்த சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சந்திரமோகன், பின் மறுத்து விட்டதாகவும், பின் மிரட்டி தான் அந்தச் சொத்தைத் தன் பெயருக்கு மாற்ற முடிந்ததாகவும், மாற்றிய பின்பும் அவர் ஏமாற்றிய கோபம் தணியாததால்  சந்திரமோகனைக் கொன்று விட்டதாகவும், சுந்தரகுரு ஒப்புக் கொண்டிருந்தான். இதை அவனும், அவனது இரண்டு நண்பர்களும் யோகாலயத்தில் வேறு யாருக்கும் தெரியாமல் செய்ததாகவும் அவன் வாக்குமூலம் தந்தான்.  இந்தக் கொலை பற்றி வைரலாக வலம் வரும் ஒலிப்பதிவு சொல்லும் மற்ற தகவல்கள் பொய்யானவை என்றும் அவன் கூறினான். அதை பாண்டியனும் போலீஸாரிடம் சொல்லி, வேண்டுமானால் யோகாலயத்தில் உள்ள அத்தனை பெண் துறவிகளின் குரல்களையும் பதிவு செய்து அவர் சொல்வது உண்மை என்பதைக் கண்டுபிடிக்கலாம் என்றும் அவர் உறுதியாகச் சொன்னதும் வெளியானது.

 

வெறும் ஒரு கொலையை மட்டும் ஒத்துக் கொண்டு, யோகாலயம் புத்திசாலித்தனமாய் மற்ற கொலைகளில் இருந்து கழன்று கொண்டதை ஷ்ரவன் கவனித்தான்.  யோகாலயத்திற்கு அழுத்தம் தர அவன் உருவாக்கிய வைரல் ஒலிப்பதிவில் உள்ள பலவீனத்தை பாண்டியன் சாமர்த்தியமாய் தங்களுக்குச் சாதகமாய் பயன்படுத்திக் கொண்டதையும் ஷ்ரவன் கவனித்தான்.

 

தொடர்ந்துயோகி பிரம்மானந்தா பேரதிர்ச்சி!” என்ற தலைப்பில் செய்திகள் வெளியாயின. பல ஆண்டுகளாக அவரிடம் வேலை செய்து வந்த இந்த ஊழியர்களை அவர் முழுவதுமாக நம்பி இருந்ததாகவும், அதனால் தான் இந்தக் கொலை சம்பந்தமாக முதலில் வந்த செய்திகளை அவர் மறுத்துச் சொன்னதாகவும் யோகி பிரம்மானந்தா ஆழ்ந்த வருத்தத்துடன் சொன்னதை ஷ்ரவன் தொலைக்காட்சியில் பார்த்தான். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். வெறும் வாயை மென்று கொண்டிருந்த எதிரிகளுக்கு அவலாய் இந்தச் செய்தி கிடைத்து விட்டது கசப்பாய் தான் இருக்கிறது என்றாலும், சத்திய வழியில் நடந்து கொண்ட நிறைவு எனக்கிருக்கிறது.” சொல்லச் சொல்ல அவர் குரல் உடைந்தது.

 

பெரிய ஜுவாலையாய் ஆரம்பித்த அக்னி சட்டென்று ஒன்றுமில்லாததாய் அணைந்தது. யோகாலயத்தின் வெளி கேட்டுக்கு முன்னிருந்த கூட்டம் கலைந்தது. யோகாலயத்தின் எதிரிகள் உண்மைக் கொலையாளிகள் தப்பித்து, பாவப்பட்ட ஊழியர்கள் தலையில் கொலைப்பழி விழுந்திருக்கிறது என்று விமர்சித்தாலும் அது பெரிதாக எடுபடவில்லை. சுந்தரகுரு பெயரில் சந்திரமோகனின் சொத்து மாறியிருந்த ஆவணங்கள் சுந்தரகுருவின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு ஆதரவாய் இருந்தது. அதனால் எதிரிகள் சர்வசக்தி உள்ளவராய் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பிரம்மானந்தாவுக்கு, சொந்த இடத்தில் நடந்த கொலை கூடத் தெரியாமல் போனது எப்படி என்ற கிண்டலோடு திருப்தி அடைய வேண்டியதாயிற்று. 

 

குற்றவாளிகள் எந்தச் சேதாரமும் இல்லாமல் தப்பித்துக் கொண்டது ஷ்ரவனுக்கு அதிருப்தி அளித்தது. அவன் எடுத்துக் கொண்ட எந்த வழக்கிலும் இதுவரையில் குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டதில்லை. முதல் முறையாக இப்போது இந்தக் குற்றவாளிகளிடம் தோற்று புதிய வரலாறு படைக்க விரும்பவில்லை. 

 

(தொடரும்)

என்.கணேசன்




Thursday, May 28, 2026

சதுரங்கம் 20

 

தன் பின் வாசுதேவனைப் பற்றிச் சொல்ல பானுமதிக்குச் சொல்ல அதிகம் இருக்கவில்லை. அர்ஜுனுக்கு அவளிடம் கேட்க வேறு கேள்விகள் மட்டுமே இருந்தன. அதைக் கேட்க வழியில்லை என்பதால் பேட்டியை முடித்துக் கொண்டான். அவள் ஏதோ பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்துப் போகிறவள் போல் சமையலறைக்கு விரைந்தாள்.

 

பெருமூச்சு விட்டபடி அர்ஜுனும் எழுந்தான். அலைபேசியைப் பார்த்த போது கீதா அவனுக்கு ஒரு யூட்யூப் இணைப்பை அனுப்பியிருந்தாள். ஆளும் கட்சியின் தீவிர ஆதரவு ஊடகத்தின் வீடியோ அது. ஒரு உளவியல் நிபுணர் தற்கொலை பற்றி பேசியிருந்த அந்த வீடியோவில் தற்கொலை திடீரென்று ஒருசில நிமிடங்களில் முடிவெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டும் விடலாம் என்பதை ஆதாரங்களுடன் சொல்லியிருந்தார். அவன் யூகம் சரி தான். ஆளும் கட்சிப் பிரமுகர் இதில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். கொலை அல்ல தற்கொலையே என்றாலும், தற்கொலைக்கு நர்மதா தூண்டப்பட்டிருக்க வேண்டும் என்ற அவன் சந்தேகம் ஊர்ஜிதமாகிறது.

 

அர்ஜுன் சித்தப்பா வீட்டுக்குக் கிளம்பினான். அது தான் தாத்தா வாழ்ந்த வீடு. அவன் பிறந்ததும் அந்த வீட்டில் தான்…. இன்று தாத்தாவின் அறைக்குப் போய்ப் பார்க்க வேண்டும். ஏதாவது பழைய நினைவுகள் வருகின்றனவா என்று பரிசோதிக்க வேண்டும்

 

விமலுக்கு ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகமாக நகர்ந்தது. ஆசிரமத்தில் அவனுக்கு மது அருந்த வழியில்லை. மது அருந்தாமல் அவன் கடந்த சில வருடங்களாக உறங்குவதில்லை. அதனால் அவனுக்கு நடுநிசி கழிந்து தான் உறக்கமே வருகிறது. அப்படி நேரங்கழித்து உறங்குவதால் காலையில் சீக்கிரம் விழித்தெழ முடிவதில்லை. நிலைமை இப்படி இருக்கையில் காலையில் ஆறு மணிக்குள் எழுந்து விட வேண்டும் என்ற ஆசிரமத்தின் கண்டிப்பான உத்தரவு அவனுக்கு உபத்திரவமாக இருந்தது. இங்கு பாதுகாப்பாக இருப்பது சரி தான். ஆனால் சப்பென்ற சைவ உணவு சாப்பிட்டு, தியானம் என்ற பெயரில் நகராமல் உட்கார்ந்து, பஜனை பாடி, ஆன்மிகம் பற்றி சொற்பொழிவுகள் கேட்டுக் கொண்டு, மது அருந்த முடியாமல், உறக்கம் வராமல், அதிகாலை எழும் இந்த தொடர் அவஸ்தைகள் தேவையா, இப்படியும் உயிர் பிழைக்க வேண்டுமா என்பது போன்ற கேள்விகள் நேற்றிரவிலிருந்து அவனுக்குள்ளே எழுந்த வண்ணம் இருக்கின்றன.

 

அவன் இப்படி ஒளிந்தும் பதுங்கியும் வாழ்ந்து கொண்டிருக்கையில், நர்மதாவைக் கொலை செய்தவன் அதிகாரமாகவும், அமோகமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அரசனைப் போல சில வருடங்களாக வாழ்ந்து கொண்டு இருந்த விமலோ இன்று அகதியைப் போல் வாழ வேண்டிய நிர்க்கதியில் இருக்கிறான். நினைக்க நினைக்க விமலுக்கு ரத்தம் கொதித்தது. ஏதாவது செய்ய வேண்டும். கொலைகாரனை அடையாளம் காட்ட முடிந்த வலுவான ஆதாரம் அவனிடம் இருக்கிறது. நர்மதா கேட்ட தொகைக்கு நூறு மடங்கு கேட்டாலும் கொலைகாரன் தன் பதவியையும், அதிகாரத்தையும் காப்பாற்றிக் கொள்ள, கொடுத்து தானாக வேண்டும்

 

தன் சூட்கேஸில் ஒளித்து வைத்திருக்கும் அந்தபென் ட்ரைவ்வை விமல் எடுத்துப் பார்த்தான். இதன் மதிப்பு இன்று பல கோடி. எத்தனை கோடிகள் என்று விமல் தான் நிர்ணயிக்க வேண்டும். அவன் சொல்வது தான் விலை. அந்தப் பணம் வந்து விட்டால் மீதியுள்ள வாழ்க்கையை பழையபடி அரசனைப் போல் அல்ல, ஒரு சக்கரவர்த்தி போலவே அவன் வாழ முடியும். திரைப்படங்களிலும், திரைத் தொடர்களிலும் சில்லறை வேடங்களுக்காக முன்பு போல் அலைய வேண்டியதில்லை. இப்போது போல அகதி வாழ்க்கையும் வாழ வேண்டியதில்லை.  

 

அதில் ஒரே ஒரு பிரச்சினை. கேட்கும் பணத்தை கொடுக்க வரும் சாக்கில்  அவனைக் கண்டுபிடித்து, கொன்று விடவும் கொலைகாரனால் முடியும். நர்மதாவைக் கொன்றவன் கண்டிப்பாக அவனை உயிரோடு விட்டு வைக்க மாட்டான். விமல் தனி மனிதன். கொலைகாரன் தனி மனிதன் அல்ல. அதிகாரத்தில் இருக்கும் அவனுக்கு ஆயிரம் கைகள்., ஆயிரம் ஆயுதங்கள்

 

ஆனாலும் விமல் எதாவது செய்து தானாக வேண்டும். இப்படி ஆசிரமத்தில் அவஸ்தைப்படுவதை விட, ஏதாவது செய்யும் முயற்சியில் செத்தாலும் அது உயர்வு தான். ஆனாலும் செய்வதைப் பொறுமையாகவும், தவறில்லாமலும் செய்ய வேண்டும். ஏனென்றால் சிறிய தவறு செய்தாலும் அது அவனுக்கு எமனாக மாறி விடலாம். என்ன செய்வது, எப்படிச் செய்வது விமல் ஆழமாக யோசிக்க ஆரம்பித்தான்.  

 

ர்ஜுன் தாத்தாவின் வீட்டின் முன் நின்று சில நிமிடங்கள் பார்த்தான். பெரிய வீடு அது. பல நிலபுலன்கள் வைத்திருந்த வாசுதேவன் அந்த வீட்டைத் தவிர மற்ற எல்லாச் சொத்துக்களையும் விற்று விட்டிருந்தார். அவன் பிறந்து நான்கு வருடங்கள் வளர்ந்த அந்த வீட்டைப் பார்க்கையில் குழந்தைப் பருவ நினைவுகள் எதாவது வருகின்றனவா என்று ஆழமாக யோசித்தான். அவன் பள்ளி செல்ல ஆரம்பித்த காலத்திலிருந்து அடிக்கடி அங்கே வந்து போய்க் கொண்டிருந்த நினைவுகள் தான் ஆரம்ப நினைவுகளாக  நினைவுக்கு வந்தன.

 

வெளி கேட் அருகே துப்பாக்கியுடன் இரண்டு போலீஸ்காரர்களும், ஒரு காவலாளியும் நின்றிருந்தார்கள். காவலாளி அர்ஜுனைப் பார்த்தவுடன் பயபக்தியுடன் சல்யூட் அடித்தான்.  புன்னகையுடன் அவனை நலம் விசாரித்து விட்டு, வணக்கம் தெரிவித்த போலீஸ்காரர்களுக்கு, பதில் வணக்கம் தெரிவித்து விட்டு,  அர்ஜுன் உள்ளே நுழைந்தான்.

 

ராஜாராம் அர்ஜுன் அந்த வீட்டின் முன் வந்து நின்ற கணத்திலிருந்தே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். வழக்கமாக உடனடியாக வீட்டிற்குள் நுழையும் அவன் இன்று ஏன் வித்தியாசமாக வெளியேயிருந்து வீட்டைப் பார்க்கிறான்? அவர் கருப்பு ஜன்னல் கண்ணாடி வழியாகப் பார்ப்பதை அவன் பார்க்க வழியில்லை.  அவன் அந்தக் கண்ணாடியைப் பார்த்தால் அவனுடைய பிரதிபிம்பம் தான் அவனுக்குத் தெரியும்.

 

காவலாளியிடம் பேசி விட்டு அவன் உள்ளே நுழைவதைப் பார்த்த பிறகு அவரும் ஹாலுக்கு வந்தார். சோபாவில் அமர்ந்திருந்த யசோதா லலிதா சஹஸ்ரநாமத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். மகன் வந்ததைப் பார்த்தவுடன் நிமிர்ந்து பார்த்தாள். ராஜாராம்அர்ஜுன் வர்றான்என்றார்.

 

லலிதா சஹஸ்ரநாமப் புத்தகத்தை யசோதா மடித்து வைத்தாள்.  உள்ளே வந்த அர்ஜுன்ஹாய் பாட்டிஎன்று முதலில் அவளுடைய கால்களைத் தொட்டு வணங்கினான். அவன் தலையைத் தொட்டு ஆசிர்வதித்த யசோதா அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

 

ஹாய் சித்தப்பாஎன்று ராஜாராமின் கால்களையும் தொட்டு அர்ஜுன் வணங்கினான். ஆசிகளை முணுமுணுத்த ராஜாராம் புன்னகையுடன் அர்ஜுனிடம் சொன்னார். “வாடா. எத்தனை நாளாச்சு. என் மேல இருக்கற கோபமெல்லாம் தீர்ந்துதாடா?”

 

கடந்த தேர்தலில் ஞானமூர்த்தியின் மக்கள் நல்வாழ்வுக் கழகம் கட்சியை ஆதரிக்காமல் தற்போதைய ஆளும் கட்சியான தமிழர் சமூக வளர்ச்சிக் கழகத்தை அவர் ஆதரித்ததால் அவன் கோபப்பட்டு இங்கு வருவதில்லை என்பதை அவர் புன்னகையுடன் சுட்டிக்காட்டினார். பொதுவாக இப்படி நேரடியாகச் சுட்டிக் காட்டும் போது எதிர்தரப்பில் அப்படியெல்லாம் இல்லை என்று மறுக்கும் பாணியில் தடுமாற்றத்தோடு தான் பதில் வரும். ஆனால் அர்ஜுன் அதற்கு விதிவிலக்காக இருந்தான்.

 

கோபமெல்லாம் முடியலை சித்தப்பா. எனக்கு இப்ப உங்க பேட்டி வேணும். அதுக்காகத் தான் வந்தேன்.”

 

ராஜாராமின் புன்னகை மேலும் விரிந்தது. சாதாரணமானவன் இல்லை இவன். உண்மையை நேரடியாகச் சொல்வதில் அவனுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அவர் வீட்டுக்கு ஒரு வேலை ஆக வேண்டுமென்று வந்து, அவருக்கு எதிரான கருத்தை எந்த விதத் தயக்கமும் இல்லாமல் அவனால் சொல்ல முடிவதற்கு அவர் மனதிற்குள்சபாஷ்போட்டு விட்டு தாயைப் பார்த்தார். அவளும் லேசாகப் புன்னகைத்தாள்.

 

சித்தி எங்கே?” என்று அர்ஜுன் கேட்க, உள்ளேயிருந்து மைதிலி வந்தாள். அவளையும் அவன் காலைத் தொட்டு வணங்க, அவள் மனதாரநல்லா இருடாஎன்று வாழ்த்தி விட்டுச் சொன்னாள். “என்னடா இங்கே வர உனக்கு இப்ப தான் வழி தெரிஞ்சுதா? வர்றப்ப நித்யாவையும் கூட்டிகிட்டு வந்திருக்கலாமே?”

 

அவளுடைய முதல் கேள்விக்குப் பதில் சொல்லும் சிரமத்தை அவன் எடுத்துக் கொள்ளவில்லை. “நித்யாக்கு காலேஜ் இருக்கு சித்திஎன்றான். 

 

ராஜாராம் கேட்டார். “உள்ளே வர்றதுக்கு முன்னாடி வெளியே கொஞ்சம் நேரம் நின்னு வீட்டையே பார்த்தாயே என்னடா காரணம்?”

 

நான் பிறந்து வளர்ந்த வீடு இது. குழந்தையாய் இருந்தப்ப நடந்தது எதாவது எனக்கு ஞாபகம் வருதான்னு யோசிச்சுப் பார்த்தேன் சித்தப்பாஎன்று அவன் சொன்னதைக் கேட்டு யசோதா, ராஜாராம் இருவர் முகங்களும் ஏக காலத்தில் களையிழந்தன.


(தொடரும்)

என்.கணேசன்