என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, February 19, 2026

சதுரங்கம் 6

 

ர்ஜுன் தன் பத்திரிக்கைத் துறை நண்பர்களைத் தொடர்பு கொண்டு, நர்மதா குறித்து பல தகவல்களைப் பெற்றான். அதில் ஒன்று, நர்மதா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நகைக் கடைக்குச் சென்று வைரக் கம்மல் வாங்கினாளாம். அந்தப் பத்திரிக்கை நண்பர் அந்தப் புகைப்படத்தையும் அனுப்பியிருந்தார். அதில் நர்மதா அந்த வைரக் கம்மலைப் போட்டு கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். நகைக்கடைக்காரர் சிசிடிவி கேமிராப் பதிவிலிருந்து அந்தப் புகைப்படத்தை எடுத்து அந்த நண்பருக்கு அனுப்ப, அதை அந்த நண்பர் அர்ஜுனுக்கு அனுப்பியிருக்கிறார். வாழ்க்கை வெறுத்துப் போய் விரக்தியில் இருப்பவள் வைரக்கம்மல் வாங்குவாளா? அந்தப் புகைப்படத்தில் அவளிடம் விரக்தியின் லேசான அறிகுறி கூட தெரியவில்லை.

 

நர்மதாவுக்கு எந்த விதமான பணப் பற்றாக்குறை இருந்தது போலவும் தெரியவில்லை. அவள் இறப்பதற்கு முந்தைய நாள் வரை வாங்கிய பொருள்கள் எல்லாமும் கூட வாழத்துடிக்கும் நபரின் தேவைகளையே அடையாளம் காட்டின.

 

சுமார் மாலை ஐந்து மணியளவில், அதையெல்லாம் அவன் பணிபுரியும் விடிவெள்ளி பத்திரிக்கையின் ஆசிரியரும் நிறுவனருமான தேவசகாயத்திடம் அவன் சொல்லிக் கொண்டிருந்த போது தான் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வெளியானது. உடனே அவர்கள் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் நகலை வரவழைத்துப் படித்தார்கள். நர்மதா இறந்த நேரம் இரவு பன்னிரண்டிலிருந்து ஒன்றரை மணிக்குள் இருக்கலாம் என்று அது தெரிவித்தது. தூக்கில் தொங்கியதால் கழுத்தில் ஏற்பட்ட காயத்தைத் தவிர அவள் உடலில் வேறு பலத்த காயங்கள் எதுவும் இல்லை என்றும் அவளது வலது கட்டை விரல் நுனியில் லேசான ஒரு சிறு கீறல் காயம் மட்டும் இருக்கிறது என்றும் அதில் சொல்லப்பட்டு இருந்தது. அந்தக் காயம் கத்தி அல்லது கூரான பொருள் ஒன்றில் அவளுடைய விரல் பட்டதால் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

 

அந்தச் சிறு காயம் பற்றிப் படித்தவுடன் அர்ஜுன் புன்னகைத்தான்.

 

தேவசகாயம் அவனிடம் கேட்டார். ”ஏன் சிரிக்கிறாய் அர்ஜுன்?”

 

அர்ஜுன் சொன்னான். “அவள் எழுதினதாய் சொல்ற தற்கொலைக் கடிதத்துல இருக்கற கையெழுத்து முழுசா பொருந்தாமல் போயிருக்கலாம். அதற்குக் காரணம் அந்தக் காயம்னு சொல்வாங்க பாருங்க

 

அவன் சொன்னது போலவே தான் நடந்தது. சிறிது நேரத்தில் வந்த கையெழுத்து நிபுணர்களின் அறிக்கையில்அந்தக் கடிதத்தில் உள்ள கையெழுத்து, அவளிடம் இருந்த டைரிகள், மற்ற எழுத்து ஆவணங்களுடன் பொதுவாக ஒத்துப் போனாலும் முற்றிலும் பொருந்துவதாகச் சொல்ல முடியவில்லை. காரணம் அவளுடைய கட்டைவிரல் காயமாகக் கூட இருக்கலாம்.” என்று சொல்லப்பட்டிருந்தது.

 

தேவசகாயம் ஆச்சரியப்பட்டார். அவர் இதற்கு முன்பும் அவனுடைய யூகங்கள் பெரும்பாலும் ஊர்ஜிதமாவது குறித்து பிரமித்திருக்கிறார். உண்மையில் அவன் இந்தப் பத்திரிக்கைக்கு ஒரு மிகப்பெரிய சொத்து தான். அவனுக்கென்று தீவிர வாசகர்கள் இருக்கிறார்கள். இது போன்ற புலனாய்வுக் கட்டுரைகளானாலும், வேறு முக்கிய விஷயங்களை அலசும் ஆழமான கட்டுரைகளானாலும் அவன் எழுதும் பாணி தனித்தன்மையானது, அறிவுபூர்வமானது. மேலும் ஒரு விஷயத்தைப் பற்றி அவன் எழுதினான்றால் அவன் எழுதியதிலேயே அவ்விஷயத்தைப் பற்றிய முக்கியமான தகவல்கள் அனைத்தையும் வாசகர்கள் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும். அதைச் சில அறிஞர்களும், மற்ற பத்திரிக்கையாளர்களும் கூட அவரிடம் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்கள்.

 

அவனது அறிவுக்கூர்மையில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அவனுடைய குடும்பத்தில் பரம்பரையாக அனைவரிடமும் பேரறிவு இருந்திருக்கிறது. அவனுடைய தாத்தா வாசுதேவன் சிறந்த அரசியல்வாதி மட்டுமல்ல, சிறந்த தமிழறிஞரும் கூட. அவர் கம்ப இராமாயணத்தையும், சிலப்பதிகாரத்தையும் தங்கு தடையில்லாமல் மனப்பாடமாக மேடைகளில் பேசக்கூடியவர். அவன் தந்தை ஞானமூர்த்தியும் மிகச்சிறந்த அரசியல்வாதி, நேர்மைக்குப் பெயர் போனவர் என்பது மட்டுமல்லாமல் பிரபலமான வழக்கறிஞரும் கூட. சட்ட நுணுக்கங்களை அவர் பேச ஆரம்பித்தால் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளே கூர்ந்து கவனிப்பார்கள் என்று விவரமறிந்தவர்கள் சொல்ல தேவசகாயம் கேட்டிருக்கிறார்.  அர்ஜுனுடைய சித்தப்பா ராஜாராம் இந்த நாட்டின் மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவராகக் கருதப்படுபவர்.  தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மடை திறந்த வெள்ளம் போல் அறிவார்ந்த கருத்துகளைச் சொல்லக்கூடியவர். உலகமெங்கும் அவர் பேச்சுக்கள் பிரபலம். தற்போது கூட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்ற அவர் சென்றிருக்கிறார்.  இப்படிப்பட்ட குடும்பத்தின் ஒரே ஆண்வாரிசுக்கு அபார அறிவு இருப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல.   

 

தேவசகாயம் கேட்டார். “உன் சித்தப்பாவோட ஆக்ஸ்ஃபோர்டு பேச்சு எப்போ?”

 

அர்ஜுன் பெருமிதத்துடன் சொன்னான். “நேற்று சார்.”

 

அவர் எப்போ திரும்பி வர்றார்?

 

இன்னைக்கு அங்கேயிருந்து கிளம்பறார். நாளைக்கு வந்துடுவார்

 

அடுத்த வாரம் உன் தாத்தாவோட நூற்றாண்டு விழாவை தமிழ்நாட்டுல எல்லாக் கட்சிகளும் கொண்டாடப் போறாங்க. அதனால ஒரு சிறப்புக் கட்டுரையை உன் கிட்டே இருந்து எதிர்பார்க்கிறேன் அர்ஜுன். அதை நீ எழுதினா தான் சரியாகவும் இருக்கும், சிறப்பாகவும் இருக்கும். உங்க குடும்பத்து ஆட்கள் ஒவ்வொருத்தரும் அவரை எப்படி ஞாபகப்படுத்திக்கிறாங்கன்னு தனித்தனியா பேட்டி எடுத்தும் போடணும்.”

 

அர்ஜுன் சம்மதித்துத் தலையசைத்தான்.

 

உனக்கு அவரை ஞாபகம் இருக்கா அர்ஜுன்?”

 

சரியா ஞாபகம் இல்லை சார். அவர் இறந்தப்ப எனக்கு மூனு வயசு. அவர் கூட நான் இருக்கற ஃபோட்டோக்கள் இருக்கு. ஆனா அதையெல்லாம் பார்க்கறப்ப கூட எனக்கு எதுவும் ஞாபகம் வரமாட்டேங்குது..”

 

உண்மையில் அர்ஜுனுக்கு தாத்தாவுடனான எந்த நிகழ்வும் நினைவில் தங்காமல் இருந்தது வருத்தமாகத் தான் இருந்தது. இத்தனைக்கும் அவன் சிறுவயதில் தாத்தாவுடன் தான் அதிகம் இருப்பான் என்று அப்பா சொல்வார். ஆனாலும் எல்லோரும் மாமனிதனாகப் போற்றும் அவர் குறித்த நினைவுகள் எதுவுமே அவனிடம் இல்லை.

 

தேவசகாயம் சொன்னது போல எல்லாக் கட்சிகளும் உரிமையுடன் கொண்டாடும் ஒரு தலைவர் இப்போது அவன் தாத்தா வாசுதேவன் தான். ஆகவே மூன்று கட்சிகளும் கொண்டாடும் இந்த நூற்றாண்டு விழா சுவாரசியமாகத் தான் இருக்கப் போகிறது.

 

தேவசகாயம் கேட்டார். “நீ ஏன் அரசியலுக்குப் போகலை அர்ஜுன்?”

 

பலரும் அவனிடம் கேட்கும் கேள்வி தான் இது. அவன் சொன்னான். “ஆரம்பத்திலிருந்தே எனக்கு அரசியல்ல பெரிய ஈடுபாடு வரலை.”

 

அவர் புன்னகைத்தார். நல்ல வேளையாக எல்லோரும் கேட்கும் அடுத்த கேள்வியை அவர் கேட்கவில்லை. பெரும்பாலானோர் அவனிடம் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். “ஏன் அப்படி? உங்கப்பா கட்சியிலயோ, உங்க சித்தப்பா ஆதரிக்கும் ஆளும் கட்சியிலயோவாவது சேர்ந்துக்கலாமே.”

 

பிடிக்கவில்லைஎன்று சொன்ன பிறகு காரணம் கேட்பதும், அனாவசியமாய் அதையே செய்ய ஆலோசனை சொல்வதும் அதிகப்பிரசங்கித்தனம் அல்லவா? அப்படிப்பட்ட அதிகப்பிரசங்கிகள் சமூகத்தில் நிறைய இருக்கிறார்கள்.... அது சம்பந்தமான யோசனைகளை நிறுத்தி விட்டு அர்ஜுன் நர்மதா விஷயத்துக்கு மறுபடி வந்தான்.

 

சார் நர்மதா கடந்த ரெண்டு வருஷமாய் நடிக்கிறதில்லை, நமக்குத் தெரிந்த வகையில் அவளுக்கு இப்போ வேறெந்த சம்பாத்தியமும் இல்லை. ஆனாலும் அவ கிட்ட பணப்புழக்கம் நல்லாவே இருந்திருக்கு. அந்தப் பணம் யார் கிட்ட இருந்து அவளுக்கு வந்துகிட்டு இருந்துச்சுன்னு தெரிஞ்சா, அவளோட மரணத்துக்கு யார் காரணம்கிறதும் நமக்குத் தெரிஞ்சுடும்னு நினைக்கிறேன்.”

 

தேவசகாயம் அவன் நினைப்பது சரியென்று தலையசைத்து விட்டுத் தன் சந்தேகத்தைக் கேட்டார். “அவளோட காதலன் விமல் அவளுக்கு பணம் தந்திருக்கலாமோ?”

 

அவனே ஒரு அன்னக்காவடி சார். முதல்லயாவது ஏதோ ஒன்னு ரெண்டு சீரியல்கள்ல நடிச்சுகிட்டு இருந்தான். இப்ப அதுவுமில்லைன்னு கேள்விப்பட்டேன். அதனால அவனுக்கே  நர்மதா தான் பணம் கொடுத்து உதவற நிலைமை தான் சமீப காலமாய் இருந்திருக்கு. இப்ப அவனும் தலைமறைவாயிட்டான். அவனைக் கண்டுபிடிச்சாலும் எதாவது துப்பு கிடைக்க வாய்ப்புண்டு.”


(தொடரும்)

என்.கணேசன்




Monday, February 16, 2026

யோகி 143

 

றுநாள் காலை வாய்ப்பு கிடைக்கையில் ஷ்ரவன் கல்பனானந்தாவிடம் சொன்னான். “நூலகத்தில் உங்களைச் சந்திக்க வர வேண்டும். எப்போது வந்தால் கூட்டம் அதிகம் இருக்காது?”

 

இரவு உணவு நேரத்துக்கு முன் வந்தால் யாரும் இருக்க மாட்டார்கள். நானும் வேறு யாராவது துறவியும் மட்டும் தான் இருப்போம். ஆனால் அங்கே கண்காணிக்கும் ஆட்கள் இல்லா விட்டாலும் காமிராக்கள் அதிகம்.”

 

அது பரவாயில்லை. நான் உங்களிடம் சொன்ன இரண்டு மெயில் ஐடிகள் தரவேண்டியிருக்கிறது. நான் ஏதாவது நூலுக்கு நடுவில் வைத்து விடுகிறேன். நீங்கள் பிறகு எடுத்துக் கொள்ளுங்கள்.”

 

அப்படி நூலுக்குள் வைப்பதையும் காமிரா பதிவு செய்துவிட வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்க நினைத்த கல்பனானந்தா, பின் அது அனாவசியம் என்று விட்டு விட்டாள். அவன் எல்லாவற்றிலும் மிகவும் கவனமாய் தான் இருக்கிறான்.  அது அவனுடைய இரத்தத்தில் ஊறியே இருக்கிறது. அவள் சொன்ன நேரத்தில் இன்னொரு அனுகூலம் இருக்கிறது.  அது நூலகத்தை மூடும் நேரம். அவன் மின்னஞ்சல் முகவரி வைத்த புத்தகத்தை வேறு யாராவது எடுத்துக் கொண்டு விட வாய்ப்பில்லை

 

கல்பனானந்தா லேசாகத் தலையசைத்தாள்.

 

பாண்டியனின் ஆட்கள் முழு வீச்சுடன் யோகியைத் தேட ஆரம்பித்தார்கள். யோகி என்றதும் யோகாலயாவில் இருக்கிறார் என்று அவர்களிடமே சொன்னவர்கள் அதிகம். இந்தச் சிக்கலால் கண்ணன் யோகி என்ற வார்த்தையைத் தவிர்ப்பது நல்லது என்று சீக்கிரமாகவே முடிவெடுத்தார். சாந்த சொரூபியான, மிக அமைதியான தோட்டக்காரக் கிழவர் என்று சொல்லி ஆட்களிடம் தேடச் சொன்னார்.  சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் தோட்டங்கள் வைத்திருப்பவர்களிடம் விசாரித்த போது இரண்டு பேர் ஒரு நர்சரித் தோட்டத்தில் அப்படிப்பட்ட ஒரு கிழவர் சில மாதங்களாக வேலை செய்து வருகிறார் என்று சொன்னார்கள். வேறொரு பகுதியிலிருக்கும் ஒரு நபரும் அப்படியே சொன்னார். பெரும்பாலும் அவர்கள் தேடும் நபர் அவராகவே இருக்க வேண்டும் என்று கண்ணனுக்குத் தோன்றியது.

 

அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டது மாலை நேரமாக இருந்தது. நர்சரி மாலை ஐந்தரைக்கே மூடப்படுவதால் அந்தக் கிழவர் வசிக்கும் பகுதிக்கே சென்று பார்க்க கண்ணன் முடிவு செய்தார். விசாரித்த போது,  அந்தக் கிழவர் சேரிப் பகுதியில் ஒரு குடிசையில் வசிப்பவர் என்பது தெரிந்தது. நல்ல வேளையாக அந்தக் குடிசைக்கு எதிரில் இருசக்கர வாகனங்களைப் பழுது பார்க்கும்வர்க்ஷாப்ஒன்று இருந்தது. கண்ணன் ஒரு பழைய பைக்கை எடுத்துக் கொண்டு அங்கே போனார். அங்கு ஏற்கெனவே இரண்டு வண்டிகள் பழுதுபார்க்க இருந்தன.

 

கண்ணன் பைக்கில் இருக்கும் குறைகளைச் சொல்லி விட்டு, “அவசரமே இல்லை. அந்த இரண்டு வண்டிகளை முடித்து விட்டு இதைப் பாருங்கள் போதும். நான் காத்திருக்கிறேன்என்று சொல்லி விட்டார்.

 

வருபவர்கள் எல்லாம் அவசரப்படும் இக்காலத்தில் அவசரமேயில்லை என்று சொல்லிக் காத்திருக்கச் சம்மதித்த அந்தத் துறவியை கடைக்காரர் வியந்து பார்த்தார். ‘என்ன இருந்தாலும், பெரிய மனுஷன், பெரிய மனுஷன் தான்’. கண்ணன் அங்கிருந்த ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்டார்.

 

அங்கு அமர்ந்திருந்த இரண்டு மணி நேரத்தில் எதிர்க் குடிசைக்கு வெளியே ஒரு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த கிழவரை முழுமையாக கண்ணனால் ஆராய முடிந்தது.

 

இரண்டு மணி நேரம் கழித்து அவர் பாண்டியனை அலைபேசியில் அழைத்தார். அவர் அழைத்த போது பாண்டியன் பிரம்மானந்தாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.

 

கண்ணன் சொன்னார். “ஐயா, அந்த தோட்டக்காரக் கிழவரைக் கண்டுபிடிச்சுட்டோம்.”

 

பாண்டியன் முகம் மலர, பிரம்மானந்தாவும் கேட்கட்டும் என்றுஸ்பீக்கரை ஆன்செய்தார். ”விவரமாய் சொல்லு

 

கண்ணன் சொல்வது பிரம்மானந்தாவுக்கும் கேட்டது. “ஒரு நர்சரி தோட்டத்துல வேலை பண்றார். பக்கத்து ஏரியால ஒரு குடிசைல இருக்கார். பக்கத்துல எல்லார் கிட்டயும் விசாரிச்சேன். அந்த ஆள் பாவம், ரொம்ப சாது, எப்பவும் சாந்தமாய், அமைதியாய் இருப்பார்னு சொல்றாங்க. கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்த அந்த ஆளை ரெண்டு மணி நேரம் நானும் கவனிச்சேன். நான் கவனிச்சப்பவும் அப்படித் தான் இருந்தார். கஞ்சா அடிச்சவங்க சுத்தி என்ன நடந்தாலும் கண்டுக்காமல் அவங்க உலகத்துல மயங்கிப் போய் இருப்பானுக இல்லையா, அந்த மாதிரி தான் இந்த ஆள் கஞ்சா சாப்பிடாமலேயே இருக்கார். சுத்தியும் நடக்கறது எல்லாம் அந்த ஆளுக்குப் புரியுதா, இல்லையான்னும் சந்தேகமாய் இருக்கு…”

 

அந்தக் கடைசி வாக்கியம் கேட்டவுடன் பிரம்மானந்தாவுக்கு மூளையில் மின்னல் வெட்டியது போல் இருந்தது. கண்ணன் அந்தக் கிழவரைக் கச்சிதமாகக் கணித்து விட்டதாய் தோன்றியது. என்ன நிலைமையில் இருக்கிறோம் என்று புரியாமல் ஏதோ ஒரு கற்பனை உலகில் சஞ்சரிக்கிற பித்தராகத் தான் அவருக்கும் அந்தக் கிழவரைக் கணிக்கத் தோன்றியது.  அந்தப் பித்தரை சிவசங்கரன் யோகியாகப் பார்த்தது தான் வேடிக்கையிலும் வேடிக்கை...

 

பிரம்மானந்தா சொன்னார். “கண்ணன் சரியாத் தான் சொல்றான்.”

 

பாண்டியன் கண்ணனிடம் கேட்டார். “அந்த ஆளை இங்கே கூட்டிகிட்டு வர முடியுமா?”

 

கண்ணன் யோசித்து விட்டுச் சொன்னார். “அந்த ஆள் ராத்திரி நேரத்துல வாக்கிங் போகிறதுண்டாம். அப்ப வேணும்னா கேட்டுப் பார்க்கலாம். வர மாட்டேன்னா குண்டு கட்டாய் தூக்கிப் போட்டுகிட்டும் வரலாம்...”

 

அப்படியே செய். அந்த ஆளோட கிளம்பி வர்றப்ப எனக்கு போன் பண்ணு.”

 

பிரம்மானந்தாவுக்கு அந்தக் கிழவரை இங்கே அழைத்து வருவது பிடிக்கவில்லை. ஆனால் வேண்டாம் என்று பாண்டியனிடம் சொல்வதற்கு அவரிடம் சரியான காரணங்கள் இல்லை.

 

ரவு உணவுக்குச் செல்வதற்கு சற்று முன் ஷ்ரவன் நூலகத்துக்குக் கிளம்பினான். நூலகத்தில் கல்பனானந்தாவும், வேறொரு பெண் துறவியும் அங்கு இருந்தார்கள். வேறு யாரும் இல்லை. சற்று நேரத்தில் நூலகம் மூடப்படும் என்பதால் அந்தப் பெண் துறவி மேசையில் இருந்த புத்தகங்களை எடுத்து அலமாரிகளில் அந்தந்தப் பகுதிகளில் அடுக்கிக் கொண்டிருந்தார்.

 

ஷ்ரவன் கல்பனானந்தாவிடம் சொன்னான். “தாமதமாக வந்ததற்கு மன்னிக்க வேண்டும் சுவாமினி. இரவு நேரங்களில் சில சமயம் உறக்கம் சரியாக வருவதில்லை. அதனால் படிக்க ஏதாவது புத்தகம் எடுத்துக் கொண்டு போகலாம் என்று வந்தேன்.”

 

கல்பனானந்தா புன்னகையுடன் சொன்னாள். “தாமதமாகி விடவில்லை ஷ்ரவனானந்தா. நூலகத்தை மூட இன்னும் 15 நிமிடங்கள் இருக்கின்றன.  அதற்குள் ஒரு நூலை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.” சொல்லி விட்டு ஒரு அலமாரியை நோக்கி கை காட்டினாள்.

 

அது கடைசி அலமாரி. அந்தக் கடைசி அலமாரியின் ஒரு பகுதி கண்காணிப்பு காமிராவுக்கு தென்படும் கோணத்தில் இருந்தாலும், அதன் மறுகோடி அந்த அளவு தெளிவாகத் தெரிய வாய்ப்பில்லை என்பதை கணப்பொழுதில் ஷ்ரவன் கண்டுபிடித்து விட்டான். அப்பகுதியில் விளக்கு வெளிச்சமும் சற்றுக் குறைவாகத் தான் இருந்தது.

 

நன்றி சுவாமினி.” என்று சொல்லி விட்டுப் போய்ப் புத்தகங்களை அவன் பார்க்க ஆரம்பித்தான். புத்தகங்களை அடுக்கும் பெண் துறவி எதிர்ப்புறம் இருந்த அலமாரிகளில் கடைசி அலமாரிப் பக்கம் இருந்தாள். அவள் அவனைப் பார்க்கும் வாய்ப்பு இல்லை. புத்தகங்களைப் பார்த்துக்கொண்டே இரண்டாம் வரிசையில் கடைக்கோடியில் இருந்த புத்தகத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்த ஷ்ரவன் கைக்குட்டையை எடுத்து முகம் துடைக்கும் சாக்கில் கைக்குட்டையோடு மின்னஞ்சல் முகவரிச் சீட்டையும் எடுத்தான். அந்தச் சீட்டு பல மடங்காய் மடிக்கப்பட்டு இருந்ததால் தெளிவாகத் தெரிய வாய்ப்பேயில்லை. பிரித்திருந்த புத்தகத்தில் மின்னல் வேகத்தில் வைத்து புத்தகத்தை மூடி அலமாரியில் வைத்துக் கொண்டே முகத்தையும் துடைத்துக் கொண்டான். பின் அதன் அருகே இருந்த புத்தகத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்து அதில் கவரப்பட்டவனாகக் காட்டிக் கொண்டு புன்னகையுடன் கல்பனானந்தாவிடம் வந்தான்.

 

புத்தகத்தை அவனிடம் நீட்டியபடி முணுமுணுத்தான். ”கடைசி அலமாரி இரண்டாவது வரிசை கடைசி புத்தகம்

 

கல்பனானந்தா காதில் விழுந்தது போலவே காட்டிக் கொள்ளவில்லை. அவன் எடுத்த புத்தகத்தை வாங்கி கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொண்டு அந்தப் புத்தகத்தை அவனிடம் நீட்டினாள். புன்னகையுடன் பெற்றுக் கொண்டு ஷ்ரவன் கிளம்பினான்.

 

கல்பனானந்தா எழுந்து விளக்குகளை அணைத்துக் கொண்டே போனாள். ஷ்ரவன் புத்தகத்தை எடுத்த இடம் இருட்டாகியது. இருட்டில் இரண்டாவது வரிசையில் கடைசிப் புத்தகத்தை எடுத்துப் பிரித்தாள். துண்டுச் சீட்டு கிடைத்தது. அதை எடுத்து உள்ளாடையில் மறைத்துக் கொண்டாள். அவளும் அந்தப் பெண் துறவியும் நூலகத்தைப் பூட்டிக் கொண்டு கிளம்பினார்கள்.


(தொடரும்)

என்.கணேசன்



Thursday, February 12, 2026

சதுரங்கம் 5

 

கீதா அர்ஜுனின் அறிவுக்கூர்மையையும், ஒரு சூழ்நிலையில் பலரும் கவனிக்கத் தவறும் சூட்சுமங்களைக் கவனிக்க முடிந்த அவனது பிரத்தியேகத் திறமையையும் நன்றாக அறிவாள். அவள் திகைப்புடன் கேட்டாள். “எப்படி சொல்கிறாய் அர்ஜுன்?”

 

அர்ஜுன் தாழ்ந்த குரலில் சொன்னான். “ஆளுங்கட்சியின் சோஷியல் மீடியா ஐ.டி விங் ஆள்கள்ல முக்கியமானவன் இங்கே வந்திருக்கான் பார்த்தியா?”

 

அவளும் அந்த ஆளைப் பார்த்திருந்தாள். அவன் பெயர் ப்ரேம். ஆனால் அவள் அவன் வந்ததற்கு அதிக முக்கியத்துவம் தந்திருக்கவில்லை. “அதனாலென்ன?”

 

அவன் சாதாரணமாய் ஆளுங்கட்சிக்கு சம்பந்தமில்லாத எந்த இடத்திற்கும் வராதவன். அவன் இங்கே வந்திருக்கான்னா, ஆளும் கட்சிக்கு இதுல எதோ சம்பந்தம் இருக்குன்னு அர்த்தம்

 

சரி. அதனால…?”

 

இது தற்கொலையாய் இருந்தா இவங்க முக்கிய ஆள் யாராவது அதைத் தூண்டியிருக்கலாம். இல்லாட்டி இது கொலையாய் இருக்கலாம். அதுக்கு ஆளுங்கட்சி ஆள் எவனாவது காரணமாய் இருக்கலாம்.”

 

எப்படி சொல்றே?”

 

அதெல்லாம் கேட்காதே. அது அப்படித்தான்அந்தப் போலீஸ் அதிகாரியும் பொய் சொல்றார். அவர் கண்டிப்பாய் இந்த வீட்டு சிசிடிவி கேமரா ரெக்கார்டிங்கைப் பார்த்திருக்கிறார். ஆனால் அதுல எதோ பிரச்சனை இருக்கு போல. அதனால தான் அதை ஒத்துக்க மாட்டேங்கறார்.”

 

கீதா புன்னகைத்தாள். இப்போதாவது ப்ரேம் இங்கே வந்திருப்பதும், போலீஸ் அதிகாரி சிசிடிவி பதிவுகளைப் பார்க்கவில்லை என்று பொய் சொல்லியிருப்பதும் அர்ஜுனுடைய இந்த யூகத்திற்குக் காரணம் என்று சொல்லலாம். ஆனால் ஒரு படியிலிருந்து ஐந்தாவது படிக்குத் தாவுவது போன்ற யூக வேலையையும் அர்ஜுன் அவ்வப்போது செய்வான். ஒரு நிகழ்விலிருந்து, தன் உள்ளுணர்வால் நாலைந்து படி தாண்டிய ஒரு முடிவுக்கு அவன் உடனடியாகப் போய் விடுவான். ஏன், எப்படி என்று கேட்டால் சில சமயங்களில் அவன் அதை ஒரு கணிதக் கோட்பாட்டை விவரிப்பது போல படிப்படியாய் விவரிப்பான். ஆனால் சில சமயங்களில் அதை அவனுக்கே விவரிக்கத் தெரியாது. ”அது அப்படித்தான்என்பான். ஆனால் அவன் சொல்வது சரி தான் என்பதை, தொடரும் சம்பவங்கள் பின்னொரு நாள் நிரூபிக்கும்.

 

அவன் அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு பைக்கில் அங்கிருந்து பத்திரிக்கை ஆபிசிற்கு விரைந்தான். அவன் போவதையே பார்த்துக் கொண்டு இருந்த கீதா பெருமூச்சு விட்டாள். இது போன்ற விஷயங்களில் எல்லாம் அதிபுத்திசாலியாக இருந்து எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் அவன் அவளுடைய காதலை மட்டும் புரிந்து கொள்ளாதவனாக இருக்கிறான். மூன்று வருடங்களாக அவர்கள் இருவரும் நெருங்கிப் பழகி வருகிறார்கள். பழக ஆரம்பித்து ஆறே மாதங்களில் அவள் அவனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். ஆனால் அவனைப் பொருத்த வரை அவள் ஒரு நல்ல தோழி தான். காதலை அவளாக அவனுக்குத் தெரிவிக்கவில்லை. ஆனால் காதல் மறைக்கும் விஷயமும் அல்லவே. உள்ளுணர்வால் பெரிய பெரிய ரகசியங்களைக் கண்டுபிடிக்க முடிந்த அவன், அவள் மனதில் இருப்பதை எப்படிக் கண்டுபிடிக்காமல் இருக்கிறான் என்பது அவள் ஆச்சரியப்படும் இன்னொரு விஷயம்.

 

மேலும் இந்த மூன்றாண்டுப் பழக்கத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு தான் முதல் முறையாக அவளை அவன் தன் வீட்டுக்கு அழைத்திருக்கிறான். அன்று அவனுடைய பிறந்தநாள். அழைக்கும் போதே அவன் தங்கை நித்யாஉன் நண்பர்களைக் கண்டிப்பாக அழைத்துத் தான் ஆக வேண்டும்என்று வற்புறுத்தியதாகவும், அதனால் அழைப்பதாகவும் சொன்னான். அவளுக்கு சப்பென்று போய் விட்டது.

 

அன்று அந்தப் பிறந்த நாள் விழாவில் அவளும், அவனுடைய ஆபிஸ் நண்பன் ஒருவனும் தான் வெளியாட்கள். அர்ஜுனுடைய அப்பாவும், தங்கையும் அவளுடன் மிக அன்பாகப் பழகினார்கள். ஆனால் அவனுடைய அம்மா அவள் வரவை அவ்வளவாக விரும்பாதது போல் கீதாவுக்குத் தோன்றியது. சொல்லும்படியாக வெளிப்பார்வைக்குக் காரணங்கள் தெரியவில்லை. ஆனால் அர்ஜுனின் தந்தை, தங்கை இருவரிடம் தெரிந்த  அன்பு அவன் தாயிடம் இருக்கவில்லை. யோசித்துப் பார்த்தால் அர்ஜுனின் அம்மா, அர்ஜுனின் ஆபிஸ் நண்பனுடன் கூட நன்றாகப் பேசியதாய் கீதாவுக்கு நினைவில்லை. 

 

ஒருவேளை அர்ஜுனின் அம்மா அவர்கள் வீட்டு அந்தஸ்துக்கு அவன் நண்பர்கள் சமமில்லாதவர்கள் என நினைக்கிறாளோ என்று கூட கீதாவுக்குச் சந்தேகமாக இருந்தது. ஏனென்றால் அர்ஜுனுடைய குடும்பம், தமிழகத்தின் நீண்ட கால அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பம். அவனுடைய தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகியாவும், சுதந்திரத்திற்குப் பின் எதிர்க்கட்சித் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் இருந்தவர். அவனுடைய அப்பா இன்று ஒரு அரசியல் கட்சித் தலைவர் மட்டுமல்ல மிகச் சிறந்த வக்கீலும் கூட. அவனுடைய சித்தப்பா தமிழக அரசியலில்கிங் மேக்கர்என்று அழைக்கப் படுபவர். இப்போதைய முதலமைச்சரும், இதற்கு முந்தைய முதலமைச்சரும் அவர் தயவால் முதலமைச்சரானவர்கள் தான்.

 

அர்ஜுன் அவள் வீட்டுக்கும் ஒரே ஒரு தடவை தான் வந்திருக்கிறான். அதுவும் அவள் பல முறை கட்டாயப்படுத்திய பிறகு ஒரு நாள்.  அவளுடைய வீட்டில் அவள் அம்மாவும், அப்பாவும், தம்பியும் அவன் வரவில் பெரிதாக மகிழ்ச்சியடைந்தார்கள். அவனும் அவர்களுடன் அன்பாகப் பேசினான். அம்மா அவன் போனவுடன் ரகசியமாய் கீதாவைக் கேட்டாள். “அவனைக் காதலிக்கிறாயா நீ?”

 

அப்படியெல்லாம் இல்லைம்மா. அவன் எனக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட் மட்டும் தான்என்று சொன்ன போது அவள் மனம் வலித்தது. அவன் அப்படித் தான் அவளை நினைக்கிறான் என்கிற போது அவளும் அப்படித் தானே சொல்ல முடியும். ஒருவேளை அவன் வேறு யாரையாவது காதலிக்கிறானோ என்னவோ? அதனால் தான் அவள் உணர்வுகள் அவனை எட்டவில்லையோ?

 

அவள் ஸ்கூட்டியைக் கிளப்பிய போது அவள் மனதில் கனம் கூடியிருந்தது.

 

ப்ரேம் நிருபர்கள் அனைவரும் கலைந்து சென்ற பிறகு அந்த விசாரணை போலீஸ் அதிகாரியிடம் சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினான். அவன் நர்மதா பற்றி நிறைய தகவல்கள் சேர்த்திருக்கிறான். அதில் உள்ள சில தகவல்களை மட்டும் அவன் பயன்படுத்திக் கொள்ளப் போகிறான். நர்மதா வாழ்க்கையில் ஏன் விரக்தி அடைந்தாள், விரக்தியில் அவள் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறியது என்பதை மக்கள் கூடிய சீக்கிரம் அறியப் போகிறார்கள். பலரும் அவளுக்காகப் பரிதாபப்படப் போகிறார்கள்.  வழக்கமாக அவன் அரசியலுக்காக பயன்படுத்தும் அனைத்தையும் இதற்குப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதில் ஐந்து சதவீதம் பயன்படுத்துவதே போதும். அடுத்து ஒரு சுவாரசியமான அல்லது வேதனையான நிகழ்வு வரும் வரை தான் நர்மதாவைப் பற்றி மக்கள் நினைக்கப் போகிறார்கள். அந்த வகையில் நர்மதா சீக்கிரமே மறக்கப்படவிருப்பவள் தான். அது வரை அவள் தினசரிப் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் தினசரி வந்து கொண்டு இருப்பாள்.

 

நர்மதாவின் காதலன் விமல் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. அவன் உயிருக்குப் பயந்து எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறான் போலத் தெரிகிறது. அவன் இப்படி தலைமறைவாகவே இருப்பது தான் அவனுக்கும் நல்லது. அவன் பொதுவெளிக்கு வந்து தேவையில்லாத விஷயங்களைப் பேசினால் அவள் தற்கொலைக்கே அவன் தான் காரணம் என்று கூட பலரையும் நம்ப வைத்து விடலாம்.

 

எல்லாம் தெளிவாக இருந்தாலும் ப்ரேமுக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் தெரியவில்லை. இப்படியெல்லாம் செய்வது யாரைக் காப்பாற்ற என்பது மட்டும் அவனுக்குத் தெரியவில்லை.  மேலிடத்திற்கு மிகவும் வேண்டப்பட்ட யாரோ ஒரு முக்கியஸ்தராக அந்த நபர் இருக்க வேண்டும். அந்த நபர் யாராக இருக்கலாம் என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவனுக்குத் தெரிவது மட்டுமல்ல, அவன் அனுமானிக்க முயல்கிறான் என்பது மேலிடத்திற்குத் தெரிந்தாலும் அது ஆபத்து தான். நர்மதா போய்ச் சேர்ந்த இடத்திற்கு வேகமாகப் போய்ச் சேர விருப்பமில்லாததால் அந்த முக்கியஸ்தர் பற்றிய சிந்தனையை அவன் அதற்கு மேல் வளர்த்தவில்லை.


(தொடரும்)

என்.கணேசன்



Wednesday, February 11, 2026

முந்தைய சிந்தனைகள் 133

 என்பிரசாதம் நூலில் இருந்து சில சிந்தனைத் துளிகள்...