என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, May 14, 2026

சதுரங்கம் 18


ர்ஜுன் ஞானமூர்த்தியைக் கேட்டான். “அரசியல்ல நீங்க அவருக்கு ஆலோசனை சொல்லறதுண்டா?”

 

ஞானமூர்த்தி சொன்னார். “சில சமயங்கள்ல சொல்றதுண்டு. அது நானுன்னு இல்லை. அம்மாவும், ராஜாராமும் கூட சொல்றதுண்டு. சிலதை அவர் கேட்பார். சிலதைக் கேட்க மாட்டார்.”

 

எந்த மாதிரி விஷயங்களைக் கேட்க மாட்டார்?”

 

ஞானமூர்த்தி புன்னகையுடன் சொன்னார். “அவர் கட்சிக்காகவும், மக்களுக்காகவும் தன்னோட சொத்தையெல்லாம் விற்று உதவினார். அது அவரோட நல்ல மனசைக் காட்டுதுன்னாலும், ஒரு தலைவராய் அவர் அதைச் செய்யறது சரியல்லன்னு நாங்க மூனு பேருமே அவர் கிட்ட சொல்வோம். அப்படி அவர் சொந்தக் காசைக் கொடுக்கிறது ஒரு நிரந்தரத் தீர்வு ஆக முடியாதுன்னு நான் எப்பவுமே அவர் கிட்ட வாதாடுவேன். அப்படி நம் சொந்தப் பணத்தைக் கொடுத்து எத்தனை பேருக்கு உதவ முடியும்? நல்ல தலைவராய் இருந்து மக்கள் வரிப்பணம் மக்களுக்கு முழுசாய், சரியாய் போய்ச் சேர என்ன செய்யணுமோ அதைச் செய்தாலே போதும், மக்கள் பெருவாரியாய் பலன் அடைவாங்கன்னு நான் சொல்வேன். அதை அவர் மறுக்கலை. எதிர்க்கட்சித் தலைவராகவும், முதலமைச்சராகவும் அந்த மாதிரி நல்ல திட்டங்கள் வெளிவர கடுமையாய் உழைச்சிருக்கார். ஆனால் அது கூடவே தன் காசைச் செலவு செய்யறதையும் அவர் நிறுத்தலைபட்ஜெட்டுல எல்லா நல்லதுக்கும் நிதி ஒதுக்க முடியாது. சிலராவது நான் தர்ற காசால பலன் அடையட்டுமேன்னு சொல்லித் தன் பணத்தையும் வாரிக் கொடுத்தார்.”

 

அர்ஜுனுக்கு அதைக் கேட்கையில் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. தாத்தா வாசுதேவனை குடும்பத்தினர் பார்வையில் வித்தியாசமாகப் பார்க்க முடிவது அர்ஜுனுக்கு சுவாரசியமாகவும் இருந்தது. தமிழகம் போற்றும் அந்தப் பெருந்தலைவரை இப்போது தான் எலும்பும் சதையும் கொண்ட மனிதராக அர்ஜுனால் உணர முடிந்தது.

 

அடுத்ததாக, முதல்வராக வாசுதேவன் ஆற்றிய மகத்தான பணிகளைப் பற்றியும், அந்த நாட்களில் அவர் எடுத்த முக்கிய முடிவுகளின் பின்னணி விவரங்களையும் அர்ஜுன் கேட்க ஆரம்பித்தான். பல விஷயங்களை அவர் தெளிவாக விளக்கினார். 

 

நீண்ட நேரக் கேள்வி பதில்களுக்குப் பின், அந்தப் பேட்டியைப் பிரசுரிக்கத் தரும் முன் தன்னிடம் காட்டும்படி ஞானமூர்த்தி சொன்னார். சரியென்று சொல்லி விட்டுத் தனதறைக்குத் திரும்பிய அர்ஜுனைப் பின் தொடர்ந்து வந்த நித்யா சொன்னாள். “நீதிமான் கூடக் காதல்ல எவ்வளவு விவரமாய் இருந்திருக்கார் பார்த்தியா?”

 

அர்ஜுன் சொன்னான். “அவர் அம்மாவைக் காதலிச்சதா சொல்லவே இல்லையே. பிடிச்சுருந்ததால கல்யாணம் செய்துக்கறதுல உறுதியாய் இருந்ததாய் தானே சொன்னார்...”

 

ஆமா, அவர் மகன் கிட்ட காதலைப் பற்றி இதைவிட எப்படி விளக்கமாய்ச் சொல்ல முடியும். வயசுக்கேற்ற மாதிரி கொஞ்சம் யோசி.”

 

பானுமதி நித்யாவை அழைப்பது கேட்டது. “அம்மா மற்றதை எல்லாம் மறந்தாலும் எனக்கு வேலை சொல்றதை மட்டும் மறக்கறதேயில்லை. அடுத்த ஜென்மத்துலயாவது ஆம்பிளையா பிறக்கணும். வீட்டு வேலைல இருந்து தப்பிச்சுக்கலாம்.” என்று சலித்துக் கொண்டே செல்லும் தங்கையைப் புன்னகையுடன் பார்த்தான் அர்ஜுன்.

 

அப்பா அம்மாவைத் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததைக் காதல் என்று எடுத்துக் கொள்ள அவனால் முடியவில்லை. அவர்கள் இருவரின் இயல்புமே காதல் உணர்வுக்கு ஒத்து வரக்கூடியதாக அவனுக்குத் தோன்றவில்லை. ஒருவேளை, இளமைக் காலத்தில் அவர்கள் இருவரும் வேறு மாதிரி இருந்திருக்கக்கூடுமோ?  இருக்கலாம்.

 

அப்பாவாவது எப்போதாவது தன் இளமைக்கால நிகழ்வுகளை அவனுடனும், நித்யாவுடனும் பகிர்ந்து கொள்வதுண்டு. ஆனால் அம்மா எப்போதும் தன் பழைய நினைவுகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டதில்லை. எதையுமே துருவிக் கேட்காமல் திருப்தி அடையாத நித்யா ஒருமுறை அம்மாவிடம் அதைக் கேட்கப் போய் கண்கலங்கிய அம்மா பதில் சொல்லாமல் அறைக்குப் போய் கதவைத் தாளிட்டுக் கொண்டது இப்போதும் அர்ஜுனுக்கு நினைவிருக்கிறது.  சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்த அம்மா இளமையில் நிறைய கஷ்டப்பட்டிருக்க வேண்டும் என்றும், இளமைக்கால நிகழ்வுகளைக் கேட்பது அவளுடைய மனக்காயங்களைப் புதுப்பிப்பதாக இருக்கிறது என்றும் புரிந்து கொண்ட நித்யாவும் அதற்குப் பின் மறந்தும் அது பற்றி அம்மாவிடம் எதுவும் கேட்பதோ, பேசுவதோ இல்லை. அதனால் அம்மாவின் திருமணத்திற்கு முந்தைய வரலாறு அவர்கள் இருவரும் அறியாதது. அப்பாவும் அம்மாவும் எப்படி சந்தித்துக் கொண்டார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. அப்பாவும் அது பற்றிப் பேசினது கிடையாது.

 

அர்ஜுனுக்கு அம்மாவைப் பற்றி நினைக்கையில் இப்போது இரக்கம் தோன்றியது. அவள் பெற்றோரை இழந்து எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறாளோ? அதே இரக்கம் தான் அப்பாவுக்கும் வந்திருக்க வேண்டும் என்று அர்ஜுன் எண்ணிக் கொண்டான். கிட்டத்தட்ட அவருடைய நிலைமையும் அப்படித் தான் இருந்தது. ஆனால் அவருக்கு வாசுதேவன் என்ற தங்கமான வளர்ப்புத் தந்தை கிடைத்தார். அதன் மூலம் அன்பும், பாசமும் கிடைத்தன. நன்றாகக் கல்வி கற்க முடிந்தது. படிப்படியாக வாழ்வில் முன்னேற முடிந்தது.

 

ஆனால் அம்மாவின் விதி அப்படி இருந்திருக்கவில்லை. எட்டாம் வகுப்போடு கல்வி நின்று போய் பின் என்னென்னவெல்லாம் கஷ்டப்பட்டாளோ?  அந்த மனச்சுமையின் காரணமாகத் தான் அவள் இப்போதும் யாருடனும் அதிகம் நெருங்கிப்பழக முடியாதவளாக இருக்கிறாள் என்பதை அவனால் இப்போது புரிந்து கொள்ள முடிந்தது. சிறு வயதின் காயங்களின் வலியை அவனும் நன்றாக அறிவான். அம்மா அவளுடைய காயங்களின் காரணமாக விலகி வாழ்ந்து அவனையும் நிறைய காயப்படுத்தியிருக்கிறாள்.

 

அவனுக்கு நினவு தெரிந்த நாளிலிருந்து அவள் அவனுக்கு நெருக்கமாக இருந்தது அவன் நோய்வாய்ப்பட்டிருந்த காலங்களில் மட்டுமே. அவன் நோய் தீர்ந்து குணமாகும் வரை அவனுடனேயே இருக்கும் அவள், அவன் நலமடைய ஆரம்பித்த பின் பழையபடி விலகி விடுவாள். அதனாலேயே அவன் சிறுவயதில் அடிக்கடி நோய்வாய்ப்படுவதை, வளர்ந்த பிறகு உணர்ந்திருக்கிறான்.  ஒரு உளவியல் புத்தகத்தில் விவரித்திருந்த ஒரு உதாரணம் கிட்டத்தட்ட அவனுடைய உதாரணம் போலவே இருந்திருக்கிறது. பெற்றோரின் கவனம் நோய்வாய்ப்படும் காலங்களில் மட்டுமே கிடைக்கின்றது என்ற நிலைமையில் இருக்கும் இளம்பெண் ஒருத்தி அடிக்கடி நோய்வாய்ப்படுவது பற்றி அந்த நூலில் சொல்லப்பட்டு இருந்தது. தானும் அது போல் தான் நோய்வாய்ப்படுகிறோம் என்பதை உணர்ந்து அர்ஜுன் பின் மாறியிருக்கிறான். அவனுக்கு ஒரு புத்தகம் உதவியிருக்கிறது. ஆனால் கல்வியறிவு இல்லாத அம்மாவுக்கு அது போன்ற உதவி கிடைக்க வாய்ப்பில்லை. மனம் விட்டுப் பேசி அறிந்தவர்களிடமிருந்து உதவி பெறும் நிலைமையிலும் அவள் இல்லை. இதை எல்லாம் நினைத்து அவன் தான் மாறியது போலவே அம்மாவையும் மாற்ற வேண்டும் என்று உறுதியாக நினைத்துக் கொண்டான்.

 

சில சமயங்களில் முக்கியமான நபர்களிடம் தகவலுக்காகவோ, பேட்டிக்காகவோ போகும் போது எளிதில் அவர்களை நிருபர்கள் அணுகி விட முடியாது. ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படாமல், சளைக்காமல் முயன்று தான் அவன் வெற்றி பெற்றிருக்கிறான். அம்மாவிடம் மட்டும் ஏன் அதே முயற்சியை எடுக்காமல் அவளைப் போலவே ஒதுங்கினோம் என்று அவன் இப்போது யோசிக்கிறான்

 

அவன் உடனே எழுந்து அமைதியாக சமையலறைக்குப் போனான். அம்மாவும், நித்யாவும் வேலை செய்து கொண்டிருந்தார்கள். பானுமதிஎன்ன?” என்பது போல மகனைப் பார்த்தாள்.

 

அர்ஜுன் அவள் கண்களை நேராகப் பார்த்து சொன்னான். “தாத்தா பற்றி நான் உன் கிட்டயும் பேட்டி எடுக்கணும்மா.”

 

பானுமதி தடுமாறினாள். அவன் இப்படி அவளிடம் கண்களைப் பார்த்துப் பேசியதில்லை.  அவளும் அவனிடம் அப்படிச் செய்யாததால், அவனும் சிறுவயதிலிருந்தே அதைத் தவிர்த்து வந்தான். முதல் முறையாக அவன் அப்படிப் பார்த்ததே அவளுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் அதை எல்லாம் மறைத்துக் கொண்டு வழக்கமாய் அவனிடம் காட்டும் வெறுமையைக் காட்டிச் சொன்னாள். எனக்கு பேட்டியெல்லாம் தரத் தெரியாது.”

 

பேசத் தெரியுமில்லை? கேட்டதுக்குப் பதில் சொல்லு போதும்..” அவன் அமைதியாகச் சொல்ல நித்யா அவனைசபாஷ்என்பது போல் பார்த்தாள்.

 

பானுமதி மகன் பிடிவாதமாகச் சொன்னதை ரசிக்கவில்லை. அண்ணனின் பேச்சை ரசித்து, பார்வையாலேயே ஊக்குவிக்கும் மகளை அவள் முறைத்தாள். நித்யா அதைக் கண்டுகொள்ளவில்லை.

 

அதுவும் எனக்கு சரியா சொல்லத் தெரியாது. எனக்கு படிப்பறிவு கிடையாதுடா.” என்று பானுமதி படபடப்பாகச் சொன்னாள். மகன் சரிசமமாய் உறுதியோடு நின்று பேசிய போது அவளால் அமைதியையோ, வெறுமையையோ காட்ட முடியவில்லை.

 

அர்ஜுன் கேட்டான்.  உன் பிள்ளை கிட்ட பேச படிப்பறிவு என்னத்துக்கு?”


(தொடரும்)

என்.கணேசன்

 

Monday, May 11, 2026

யோகி 155

 ஷ்ரவன் சொன்னதை எல்லாம் சுவாரசியத்துடன் அருணாச்சலமும், ராகவனும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். கடைசியில் ஷ்ரவன் சொன்னான். “பரசுராமன் ஜி மாந்திரீகத்தால் அந்த ஏவல் சக்தியை அனுப்பாமல் இருந்திருந்தால் அவர்களை லேசாகக்கூட நம்மால் அசைத்திருக்க முடியாது. அவர் அப்படி ஆரம்பிச்சு வெச்சு எனக்கு மந்திரோபதேசம் செய்து தந்ததால, அதே வழியில என்னால போய் அவங்கள நெருங்கவும், உண்மைகளைத் தெரிஞ்சுக்கவும் முடிஞ்சது.”

 

அருணாச்சலம் நன்றியுடன் பரசுராமனை நினைத்துப் புன்னகைத்தார். ஷ்ரவன் அந்த நிஜ யோகியைப் பற்றிச் சொன்னதும் அவரை நிறைய யோசிக்க வைத்தது. எல்லா அற்புதங்களிலும் மிகப்பெரிய அற்புதம் எல்லா நேரங்களிலும் குறை காணாமல் நிறைவாக வாழ முடிவது தான் என்று தோன்றியது. சேரியில் கயிற்றுக் கட்டிலிலும், யோகாலயத்தில் சொகுசு சோபாவிலும் ஒரே மனநிலையில், பாதிக்கப்படாமல் உட்கார முடிந்த அந்த யோகி அவரைப் பிரமிக்க வைத்தார். அந்த யோகியைத் தோட்டக்காரனாகப் பார்க்கும் இந்த உலகம் ஒரு மோசக்காரனை யோகியாய் பார்க்கிறது, நம்புகிறது. வேடிக்கையாக இருந்தாலும் இதில் ஒரு உண்மை தெளிவாகத் தெரிந்தது. ’நடிப்பவனை உயர்த்தியும், நடிக்காதவனைச் சாதாரணமாகவும் பார்ப்பது தான் உலகத்தின் இயல்பு.’

 

அருணாச்சலம் ஷ்ரவனிடம் கேட்டார். “இனி என்ன செய்யலாம் என்று நினைக்கிறாய் ஷ்ரவன்?”

 

ஷ்ரவன் சொன்னான். “சைத்ராவைக் கொன்றதற்கு நம்மிடம் சாட்சிகள் இல்லை. அவர்கள் கோவிட்டை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு தப்பித்து விட்டார்கள். ஆனால் சந்திரமோகனைக் கொன்றதற்கு அவர்களைத் தண்டிக்க முடியும். பிணம் இன்னும் யோகாலயத்தில் தான் இருக்கிறது. எங்கே புதைத்து வைத்திருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.”

 

ராகவன் கேட்டார். “அது சந்திரமோகனுடையது என்பது நம் அனுமானம் தானே ஷ்ரவன். அது வேறு யாருடையதாகவும் இருக்கலாம் அல்லவா?”

 

அவர்கள் வாரத்திற்கு இரண்டு கொலைகள் செய்பவர்களாக இல்லாத வரையில், அங்கு கொன்று புதைக்கப்பட்டது சந்திரமோகனாகத் தான் இருக்க வேண்டும்.” என்று சொன்ன ஷ்ரவன் அருணாச்சலத்திடம் சொன்னான். “அவர்களைப் பகைத்துக் கொள்ளாமல் இந்தக் கொலையை விசாரிக்க நீங்களாக எந்த ஏற்பாடும் செய்ய முடியாது. ஆனால் இந்தக் கொலை பற்றிய விவரம் சமூக வலைத்தளங்களில் வைரலானால், விசாரணை நடத்த வேண்டிய கட்டாயத்திலிருந்து நீங்கள் தப்பிக்கவும் முடியாது இல்லையா சார். அவர்களும் உங்களைத் தவறு சொல்ல முடியாது.”

 

அருணாச்சலம் புன்னகைத்தார். இந்த இளைஞன் எல்லாவற்றையும் நன்றாக யோசித்து வைத்திருக்கிறான்.

 

அடுத்த சில மணி நேரங்களில்யோகாலயத்தில் கொலைஎன்ற ஒரு ஆடியோ’ (ஒலிபதிவு) சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக ஆரம்பித்தது. அந்த ஒலிப்பதிவில் நடுங்கிக் கொண்டே ஒரு உணர்ச்சிகரமாய் ஒரு பெண் பேசியிருந்தாள்.

 

நான் யோகாலயத்தில் துறவியாக இருக்கும் ஒரு பெண். இப்போது என் உயிருக்கு இங்கே ஆபத்து உருவாகியிருக்கிறது. இந்த ஆடியோ உங்கள் எல்லாரையும் வந்து சேரும் போது நான் கொல்லப்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் நான் இறந்தாலும், ஒரு உண்மையை உலகம் அறிய வேண்டும் என்ற ஆவலில் என் மனசாட்சியில் இது வரை உறுத்திக் கொண்டிருந்ததை நான் இப்போது இறக்கி வைக்கிறேன். சில மாதங்களுக்கு முன் யோகாலயத்தின் பின்பகுதி கடைசியில், வெளிநாட்டுத் துறவிகள் வசிக்கும் பகுதிக்கு எதிரில் உள்ள காலி இடத்தில், ஒருவர்  உயிரோடு புதைக்கப்பட்டார். அதை நானும், சைத்ரானந்தா என்ற இன்னொரு பெண் துறவியும் பார்த்து விட்டோம். சைத்ரானந்தா பார்த்து விட்டதைக் கண்டு பிடித்த கொலைகாரர்கள் அவரை அடைத்து வைத்து சித்திரவதை செய்தார்கள். அவரைக் காப்பாற்ற நான் அவருடைய தந்தைக்குஉங்கள் மகள் உயிருக்கு ஆபத்து. காப்பாற்றுங்கள்என்று ரகசியமாக ஒரு மொட்டைக்கடிதம் எழுதிப் போட்டேன். ஆனால் உண்மையை வெளியே சொன்னால் சைத்ரானந்தாவுடைய தந்தை மற்றும் தாத்தாவை கொன்று விடுவோம் என்று அவரை மிரட்டி குடும்பத்தாரைச் சந்திக்கவும் விடாமல் தடுத்து விட்டார்கள். கோவிட் வந்த சமயம் கோவிட்டால் இறந்து போனதாகச் சொல்லி, அவரைக் கொன்றும் விட்டார்கள். யோகாலயாவில் நடந்த அந்தக் கொலையை நானும் பார்த்திருப்பது இப்போது அவர்களுக்குத் தெரிந்து விட்டது. நான் என்னேரமும் கொல்லப்படும் அபாயம் உள்ளது. தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள். ஒருவேளை நான் கொல்லப்பட்டிருந்தால் குற்றவாளிகளைத் தண்டியுங்கள். இல்லா விட்டால் கொல்லப்பட்ட எங்களுடைய ஆத்மாக்கள் சாந்தியடையாது.”

 

நடந்த கொலைகளைச் செய்தது யார் என்று அறியும் ஆர்வம் சமூகத்தில் பலரிடமும் இருந்தாலும், நடக்கப் போகும் கொலையைத் தவிர்த்து காப்பாற்றும் துடிப்பு கிட்டத்தட்ட எல்லோரிடமும் ஏற்பட்டு விடுவது இயற்கை. இதைக் கணக்கிட்டு தான் ஷ்ரவன் பழைய கொலைகளைத் தெரிவிப்பதோடு நின்று விடாமல், கொலையைப் பார்த்தவள் கொல்லப்படவிருக்கிறாள் என்ற ரீதியில் அந்த ஒலிப்பதிவை வைரல் ஆக்கினான். அவன் எதிர்பார்த்தது போல, குரல் நடுங்கி உயிருக்குப் பயந்து பேசிய பெண்ணைக் காப்பாற்றும் துடிப்பு இளகிய மனம் படைத்த பலருக்கும் ஏற்பட்டது. பலரும் அதை மீண்டும் பரப்பினார்கள். அபிப்பிராயங்கள் சொன்னார்கள். சமூக வலைத்தளங்களில் அந்த ஒலிப்பதிவு பேசப்பட்டது. பலரும் பழைய சைத்ரானந்தா வழக்கை நினைவு கூர்ந்து மீண்டும் பேச ஆரம்பித்தார்கள்.

 

யோகாலயத்தின் முன்னால், ஊடகங்கள் குவிய ஆரம்பித்தன. “கொல்லாதே, கொல்லாதே பெண் துறவிகளைக் கொல்லாதேஎன்று பெண்ணுரிமை அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் கூடி கோஷம் எழுப்பினார்கள். பத்திரிக்கைக் காரர்கள், தொலைக்காட்சிகள், ஊடகங்கள், அரசியல் கட்சிக்காரர்கள், சீர்திருத்தவாதிகள், பொழுது போகாதவர்கள் என யோகாலயத்தின் முன் எல்லோரும் குவிய ஆரம்பித்தார்கள்.

 

சைத்ரா விஷயத்தில் அலட்டிக் கொள்ளாமல் இருந்த யோகாலயத்தால் இப்போதும் அப்படி இருக்க முடியவில்லை. சாதாரணமாக எதற்கும் அசராத பாண்டியன் தற்போது நடப்பதில் அதிர்ந்து போனார். பிரம்மானந்தா திகைப்புடன் பாண்டியனைக் கேட்டார். “அந்த ஆடியோல பேசியிருக்கறது யார்?”

 

நம்ம துறவிகள் யாரோட குரலும் இல்லை யோகிஜிஎன்றார் பாண்டியன்.

 

பிரம்மானந்தா குழப்பத்தோடு பாண்டியனைப் பார்த்தார். பாண்டியன் சொன்னார். “யாரோ திட்டமிட்டு இதைச் செய்யறாங்க யோகிஜி. யார்னு சரியாய் தெரியலை.”

 

இன்னும் எவனும் பணம் கேட்டு வரலையா?” பிரம்மானந்தா கேட்டார்.

 

பாண்டியன் சொன்னார். “இல்லை. அப்படி பணம் கேட்கறவனாய் இருந்தால் இது வைரல் ஆகியிருக்காது யோகிஜி. நமக்கு மட்டும் அனுப்பிபணம் கொடு, இல்லாட்டி வைரல் ஆக்கிடுவேன்னு சொல்லியிருப்பாங்க. இதுல பணம் உத்தேசம் மாதிரி தெரியலை. இது வைரல் ஆகணும்னே யாரோ திட்டம் போட்டு செஞ்சிருக்காங்க.”

 

சைத்ரா கோவிட்டில் இறந்த போது, இரண்டு ஊடகங்கள் சந்தேகப்பட்டுநாங்கள் இதைப் பெரிதுபடுத்துவோம். வேண்டாம் என்றால் பணம் கொடுங்கள்என்று வந்தார்கள். அவர்கள் பெரிதுபடுத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைமை இருந்த போதும், தேவையில்லாமல் மீண்டும் அது அதிகம் பேசப்பட வேண்டாம் என்று பாண்டியன் பணம் கொடுத்திருந்தார்.  சமூக, மத ஊடகங்கள் மகா உத்தமர்கள் போல் பொது வாழ்வில் நடித்தாலும் பெரும்பாலானவர்களுக்கு பணம் சம்பாதிப்பது தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது. உண்மைக்காக உயிரையும் கொடுப்பதாய் சொல்லிக் கொள்பவர்கள் பலரும் பணத்துக்காக எதையும் தருவார்களே ஒழிய உண்மைக்காக எதுவும் செய்ய சிரமப்பட மாட்டார்கள். தாங்களும் அப்படியே என்பதால் பாண்டியனுக்கு அதில் புகார் எதுவும் இல்லை. நேர்மை, உண்மை, நியாயத்துக்காகப் பாடுபடும் பைத்தியக்காரர்கள் தான் அவருக்கு பிரச்சினையாய் தெரிந்தார்கள். அந்தப் பைத்தியக்காரர்கள், அவர்களும் வாழ மாட்டார்கள், அடுத்தவனையும் வாழ மாட்டார்கள். அப்படி ஒரு பைத்தியம் தான் இப்போது இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறது. அந்தப் பைத்தியத்திற்கு அந்த கொலைத் தகவல் எப்படி சரியாகத் தெரிந்திருக்கிறது என்பது தான் இப்போதைய பெரிய கேள்வி. யோசித்த போது இங்கு இருக்கும் கருப்பு ஆடு மறுபடி காயை நகர்த்தி இருக்கிறது என்பது அவருக்குப் புரிந்தது.   

 

 (தொடரும்)

என்.கணேசன்

Thursday, May 7, 2026

சதுரங்கம் 17


 ர்ஜுன் பல காலமாக அவனைக் குழப்பிக் கொண்டிருந்த ஒரு கேள்வியைக் கேட்டான். “பொதுவாய் அரசியல் தலைவர்களோட பிள்ளைகளும் அரசியலுக்கு வர்றது இப்ப எல்லாம் சர்வ சாதாரணமாய் இருக்கு. ஆனா தாத்தா இருக்கற வரைக்கும் பிள்ளைங்க நீங்க ரெண்டு பேரும் ஏன் அரசியலுக்கு வரலை அப்பா?”

 

எங்க ரெண்டு பேருக்கும் அரசியல்ல அவ்வளவா ஈடுபாடு அந்தச் சமயத்துல இருக்கல அர்ஜுன். நான் வக்கீல் தொழிலில் பிசியா இருந்தேன். ராஜாராமும் மற்ற விஷயங்கள்ல தான் ஆர்வம் அதிகம் காட்டினான்.”

 

ஆனா இப்ப நீங்க ரெண்டு பேரும் அரசியல்ல இருக்கீங்க. நீங்க நேர்முகமாகவும், அவர் மறைமுகமாகவும் அரசியல்ல இருக்கீங்க. தாத்தா இறந்த காலத்துலயே நீங்க அரசியலுக்கு வந்திருந்தா கண்டிப்பா உங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் சுலபமா முதல்வராயிருந்திருக்கலாம்.”

 

வாஸ்தவம் தான். ஆனால் அது பின் வழியா அரசியலுக்கு நுழைஞ்ச மாதிரியா தான் இருந்திருக்கும்.  எங்களோட தனித்துவத்தை நாங்க நிலைநாட்டியிருக்க முடியாது. இப்போ நாங்க ரெண்டு பேரும் எங்க விருப்பப்படி இருக்கிறோம்.”

 

பானுமதி திரும்பவும் வந்து சுவரில் சாய்ந்து நிற்பதை அர்ஜுன் பார்த்தான். அவன் ஒரு கணம் தான் அவளைப் பார்த்தான் என்றாலும், அந்த ஒரு கணத்தில் அவள் கண்களில் ஈரம் தெரிந்ததை நன்றாகவே அவன் பார்த்தான். இனியொரு முறை அவளை அவன் பார்த்தால் அவள் மறுபடி உள்ளே போய் விடுவாள் என்று அவனுடைய உள்மனம் எச்சரித்தது. அதனால் அவளைப் பார்ப்பதை அவன் தவிர்த்தான். ஆனாலும் அவனைப் பற்றிய பேச்சு வந்த பின் தான் அவள் சமையலறைக்கு வேகமாய்ப் போனாள், அவனைப் பற்றிய பேச்சு முடிந்த பின் வெளியே வருகிறாள் என்பதை அவனால் லேசாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் விஷயத்திலும், அவனைப் பற்றிய பேச்சு வரும் போதும் அவள் புதிராகத் தான் நடந்து கொள்கிறாள். அது ஏன்?

 

அர்ஜுன் லேப்டாப்பைப் பார்த்து விட்டு அடுத்த கேள்வியைக் கேட்டான். “எல்லா மனிதர்களுக்கும் பலம் பலவீனம் உண்டு இல்லையாப்பா. ஆனா உங்கப்பாவைப் பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் பலங்களாகவே இருந்திருக்கு. யாருமே அவரோட பலவீனங்களைப் பற்றிப் பேசறதில்லை. அவரோட பலவீனங்கள் என்னவாய் இருந்துச்சுப்பா?”

 

நித்யா நிமிர்ந்து உட்கார்ந்தாள். இந்தக் கேள்விக்குப் பதில் அறிய அவளுக்கும் ஆர்வமாய் இருந்தது. ஞானமூர்த்தி தயங்காமல் சொன்னார். “அவரோட பலவீனம் கூட அவரோட நல்ல தன்மையின் ஒரு பகுதியாய் இருந்துச்சு. அவர் தன்னை மாதிரியே எல்லாரையும் நினைச்சார். சூதுவாது தெரியாதவராய் இருந்தார். அவர் கூடவே இருந்தவர்களை கண்மூடித்தனமாய் அவர் நம்பினார். அவருக்கு அவங்கெல்லாம் தப்பு செய்ய முடியும்னே தோணியிருக்கல. ஒரு தலைவருக்கு அது மிகப்பெரிய பலவீனம் தான்.”

 

அதைச் சொல்லும் போது அவர் குரலில் வருத்தம் தெரிந்தாலும் அவருடைய வருத்தம், அவர் சொல்ல நினைத்த உண்மையைச் சொல்ல விடாமல் தவிர்த்து விடவில்லை என்பதை அர்ஜுன் கவனித்தான். அது அவருடைய தனிப்பெரும் குணம். எதிலுமே பொய்யால் நிலையான நன்மைகள் கிடைக்க வழியில்லை என்று ஆழமாக நம்புபவர் அவர். கசந்தாலும் உண்மையே யாரையும் காப்பாற்றக்கூடியது என்பது அவருடைய ஆணித்தரமான கருத்து. சில சமயங்களில் கசப்பான உண்மைகளைச் சொல்வதால் யாரும், எதுவும் மாறிவிடப் போவது கிடையாது என்று நினைப்பாரானால் மௌனமாகவாவது இருந்து விடுவாரே ஒழிய, இதமான பொய்யைச் சொல்ல அவர் முற்பட்டதில்லை. ஒரு அரசியல்வாதிக்கு இது மிகப்பெரிய பலவீனமே. ஆனாலும் அவர் இதை மாற்றிக் கொண்டதில்லை.

 

உங்கப்பா உங்களையும், சித்தப்பாவையும் அரசியலுக்குக் கொண்டு வரணும்னு நினைச்சதுண்டா அப்பா.?”

 

இல்லை. நாங்களாக விருப்பப்பட்டு அரசியலுக்கு வந்திருந்தால் அவர் தடுத்திருக்கவும் மாட்டார்.”

 

நீங்க ரெண்டு பேரும் தேர்ந்தெடுத்த துறைகள் பற்றி அவரோட அபிப்பிராயம் என்னவா இருந்துச்சு?”

 

அவர் அதைப் பெருமையா தான் நினைச்சார். என்னோட வக்கீல் ப்ராக்டிஸ் வெற்றிகரமா போய்ட்டு இருந்ததுலயும், ராஜாராமோட கட்டுரைகள் வெளிநாட்டுப் பத்திரிக்கைகள்ல எல்லாம் பிரசுரமாயிட்டு இருந்ததுலயும் அவருக்கு ரொம்ப சந்தோஷம். அமெரிக்கால நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைல ராஜாராமோட கட்டுரை முதல் தடவையா வந்தப்ப அவர் பட்ட சந்தோஷம் கொஞ்சநஞ்சமல்ல.   அவனோட ஆங்கிலம் எளிமையாய் இருக்காது. அதனால அவருக்கு அந்தக் கட்டுரை சரியாய்ப் புரியலை. அதனால அவனை அதைத் தமிழ்ல மொழிபெயர்த்து எழுதச் சொல்லி அதைப் படிச்சார். ஒரு வாரத்துக்கு அவரைப் பார்க்க வர்றவன் போறவன் கிட்ட எல்லாம் அதைக் காண்பிச்சு, “இது என் மகன் ராஜாராம் எழுதினது. நியூயார்க் டைம்ஸ்லயே பிரசுரம் பண்ணியிருக்காங்க. எனக்குப் புரியலடா. தமிழ்ல எழுதிக்கொடுன்னு சொன்னேன். எனக்காக தமிழ்ல மொழிபெயர்த்துக் குடுத்தான்.”னு பெருமையா சொல்லிகிட்டு இருந்தார்இப்ப அவர் இருந்திருந்தால் அவன் ஆக்ஸ்ஃபோர்டுல எல்லாம் போய் பேசறதுக்கும் அவர் ரொம்ப பெருமைப்பட்டுருப்பார்…”

 

தம்பியைப் பற்றிச் சொல்வதில் அவருக்கும் பெருமிதம் இருந்ததை அர்ஜுன் கவனித்தான். அவருடைய தந்தையின் ஸ்தானத்தில் இருந்து தந்தைக்குமாய் சேர்த்து அவர் பெருமைப்படுவது போல் அவனுக்குத் தோன்றியது. அரசியலில் அவருக்கு எதிராக தம்பி செயல்பட்டாலும் அவர்கள் இருவருடைய உறவை அது பாதித்து விடவில்லை என்பதை அர்ஜுன் கவனித்து இருக்கிறான். அவன் கோபப்பட்டது போல அவர் கோபம் கொள்ளவில்லை.

 

அர்ஜுன் கேட்டான். “இப்ப உங்கப்பா உயிரோட இருந்து நீங்களும் அவரும் எதிரெதிர் அரசியலில் ஈடுபடுவதைப் பார்த்தால் அவர் என்ன நினைச்சிருப்பார்னு நீங்க நினைக்கறீங்க?”

 

அவரால அதை ஜீரணம் செய்யறது கஷ்டமாய் தான் இருந்திருக்கும்.”

 

அவர் அதைப் பற்றிக் கூடுதல் கருத்து சொல்வார் என்று அர்ஜுன் எதிர்பார்த்தான். ஆனால் ஞானமூர்த்தி அந்தச் சுருக்கமான கருத்தோடு நிறுத்திக் கொண்டார். கூடுதலாகச் சொல்வது கசப்பான கருத்துக்களாக இருக்குமோ?

 

நீண்ட காலமாக அவனைக் குடைந்து கொண்டிருந்த கேள்வியை அவன் கேட்டான். “அவர் பெரிய அரசியல் தலைவர். நீங்கள் அப்பவே பெரிய வக்கீலாக இருந்தீங்க. அப்படி இருக்கறப்ப எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படிச்சிருந்த அம்மாவை நீங்க கல்யாணம் செஞ்சுக்க அவர் எப்படி ஒத்துகிட்டார். அம்மாவோட குடும்ப பின்னணியும் உங்க குடும்பப் பின்னணிக்கு சரிசமமாய் இருக்கலையில்ல?”

 

அவன் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே பானுமதி சட்டென்று சமையலறைக்குச் செல்வதை அவன் கவனித்தான். நித்யா அதைக் கவனிப்பதையும் அவன் பார்த்தான். ஏழைப் பெண்ணான பானுமதியை ஞானமூர்த்தி தான் விரும்பித் திருமணம் செய்து கொண்டதாக முன்பு ஒரு முறை அவர் பிள்ளைகளிடம் சொல்லியிருக்கிறார். ஞானமூர்த்தி-பானுமதி திருமண சமயத்தில் பானுமதியின் பெற்றோரும் உயிரோடு இல்லை என்றும் அர்ஜுனும், நித்யாவும் கேள்விப்பட்டிருக்கிறார்கள். படிப்பிலும், அந்தஸ்திலும் இணையாக இல்லா விட்டாலும் பானுமதி மிக அழகானவள். அதற்காக அவர் அவளை விரும்பித் திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும் என்று அர்ஜுன் நினைத்துக் கொண்டிருந்தான். ஞானமூர்த்தி அவள் அழகைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாலும், வாசுதேவன் அந்தத் திருமணத்தை எப்படி ஏற்றுக் கொண்டார் என்று அறிய அர்ஜுன் ஆசைப்பட்டான்.

 

ஞானமூர்த்தி பதில் சொல்ல சில வினாடிகள் எடுத்துக் கொண்டார். பின் சுருக்கமாகச் சொன்னார். “கொஞ்சம் தயங்கினார். பிறகு நான் உறுதியாய் இருந்ததைப் பார்த்து அவர் ஒத்துகிட்டார்

 

அந்தத் திருமணத்தில் ஆரம்பத்தில் வாசுதேவனுக்குத் தயக்கம் இருந்திருக்கிறது என்பது அர்ஜுனுக்குப் புரிந்தது. அவன் அருகில் அமர்ந்திருந்த நித்யா அண்ணனுக்கு மட்டும் கேட்கும்படியாக முணுமுணுத்தாள். “அப்பா சட்டத்துல மட்டுமல்ல, மத்த விஷயத்துலயும் ஸ்ட்ராங்காத் தான் இருந்திருக்கார் கவனிச்சியா? இதை கத்துக்கோ.”

 

அர்ஜுன் கஷ்டப்பட்டு புன்னகையை மறைத்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, May 4, 2026

யோகி 154

 

யோகாலயத்தின் வெளி கேட் காவலாளி வரிசையாக வந்த இரண்டு போலீஸ் ஜீப்களைப் பார்த்ததும் எந்த எதிர்ப்புமில்லாமல் உள்ளே அனுப்பி விட்டான். ஆனால் இரண்டாவது கேட் காவலாளி இரண்டு ஜீப்களில் வந்த போலீஸ்காரர்களைப் பார்த்து அசரவில்லை. அவன் கண்ணனுக்குப் போன் செய்து இரண்டு போலீஸ் ஜீப்கள் வந்திருக்கின்றன என்று தெரிவித்தான். பாண்டியன் மதிய உணவை முடித்து விட்டு அப்போது தான் களைப்பாற உறங்கியிருந்தார் என்பதால் கண்ணன் அவரை எழுப்பவில்லை. தானே இரண்டாவது கேட் அருகே போனார்.

 

அவர் பார்வை முதலில் போலீஸ் ஜீப்களின் எண்களைப் பார்த்தது. முன்னால் இருந்த ஜீப் தமிழ்நாடு ரெஜிஸ்டிரேஷன் எண். பின்னால் இருந்தது தெலுங்கானா ரெஜிஸ்டிரேஷன் எண். முன்னால் இருந்த ஜீப்பில் அசிஸ்டெண்ட் கமிஷனர் இருந்தார். அவரை கண்ணன் நன்றாக அறிவார். ஆனால் யோகாலயத்துக்கு அசிஸ்டெண்ட் கமிஷனர் பெரிய ஆள் அல்ல. அவருடன் வேறிரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருந்தார்கள். அவர்கள் தெரிந்தவர்கள் அல்ல.

 

கண்ணன் அமைதியாக அசிஸ்டெண்ட் கமிஷனரிடம் கேட்டார். “என்ன விஷயம் சார்?”

 

அசிஸ்டெண்ட் கமிஷனர் பின்னால் இருக்கும் ஜீப்பைக் கைகாட்டி சொன்னார். “அவர்கள் ஹைத்ராபாதிலிருந்து வந்திருக்கிறார்கள். அங்கே நடந்த ஒரு கொலையைச் செய்த குற்றவாளி இங்கே துறவியாக ஒளிந்து கொண்டிருக்கிறான் என்ற தகவல் அவர்களுக்கு வந்திருக்கிறது. அதனால் அவனைக் கைது செய்து அழைத்துக் கொண்டு போக அவர்கள் வந்திருக்கிறார்கள்.”

 

குற்றவாளியின் பெயர் என்ன சார்?”

 

அவனுக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. ஷ்ரவன், சரவணன், BM”

 

“BM ?” கண்ணன் குரலில் ஆச்சரியம் காட்டினார்.

 

“Black Magician என்பதற்கு சுருக்கமாம்

 

கண்ணன் யோசித்தார். இது அவராக முடிவெடுக்கும் விஷயமல்ல.இனி பாண்டியனை எழுப்பித் தானாக வேண்டும். “தயவு செய்து கொஞ்சம் பொறுங்கள் சார்என்று சொல்லி விட்டு பாண்டியனை எழுப்ப விரைந்தார்.

 

பாண்டியன் கண்ணன் எழுப்பிச் சொன்னதைக் கேட்டு திகைத்தார். நேற்று தான் ஷ்ரவன்ஹைத்ராபாத் கேஸ்பற்றிச் சொன்னான். இன்று அவனைக் கைது செய்ய போலீஸ் வந்து நிற்கிறது. அவருடைய கைதியை போலீஸ் கைது செய்து கொண்டு போவதில் அவருக்குச் சம்மதமில்லை. அவனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அவருடைய எதிரியாக அவன் இருக்கலாம் என்ற சந்தேகம் கூட இருக்கிறது. அப்படி அவன் அவர்களுடைய எதிரி என்பது உண்மையானால் அவனைச் சித்திரவதை செய்யவும், கொல்லவும் அவருக்குத் தான் முதல் உரிமை உண்டு. அவருக்குத் தொந்தரவு கொடுத்து விட்டு ஒருவன் அவரிடமிருந்து அதற்கான கூலியைப் பெற்றுக் கொள்ளாமல் போவதில் அவருக்குச் சம்மதமில்லை. ஆனால் போலீஸ்காரர்கள் வருவது முன்கூட்டியே தெரிந்திருந்தால் ரிக்கார்டுகளை அதற்குத் தகுந்த மாதிரி மாற்றியிருக்கலாம்.  இப்போது எதற்கும் நேரமில்லை. வேண்டுமானால் சிறிது நேரம் கேட்டுப் பார்க்கலாம். நாளை வரச் சொல்லலாம். அதற்குள் அவர்களுடைய முறைப்படி அவனை விசாரித்து உண்மை என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

 

பாண்டியன் போலீஸாரை உள்ளே அனுப்பச் சொன்னார். அசிஸ்டெண்ட் கமிஷனரும், ஹைத்ராபாத் போலீஸ் அதிகாரிகள் இருவரும் மட்டும் உள்ளே வந்தார்கள். பாண்டியன் மிகுந்த மரியாதையுடன் அவர்களை வரவேற்றார். பிரம்மானந்தா தற்போது அங்கு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. அவருடைய பேச்சுக்கு பிரத்தியேக மரியாதை இருந்திருக்கும். துரதிர்ஷ்டவசமாக அவர் தற்போது வெளியே போயிருக்கிறார்

 

அசிஸ்டெண்ட் கமிஷனர் பாண்டியனிடம்ஹைத்ராபாத் கேஸ்பற்றிச் சொன்னார்.  ஷ்ரவனும், அவனுடைய நண்பன் ஒருவனும் சேர்ந்து அமெரிக்க இளைஞன் ஒருவனுக்கு பில்லி சூனியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தி அவனோடு பழகி கடைசியில் அவனைக் கொன்று விட்டார்கள் என்றார். இதுவரை காணாமல் போனதாக நினைத்து வந்த அந்த அமெரிக்க இளைஞனின் பிணம் நேற்று இரவு தான் போலீஸுக்குக் கிடைத்தது என்றும், ஷ்ரவனின் நண்பன் தந்த வாக்குமூலத்தின் படி ஹைத்ராபாத் போலீஸார் ஷ்ரவனைக் கைது செய்ய இங்கே வந்திருக்கிறார்கள் என்றும் சொன்னார்.

 

நாளை வர முடியுமா சார். யோகிஜி இங்கே இல்லை. அவர் அனுமதி இல்லாமல்…”

 

அசிஸ்டெண்ட் கமிஷனர் பொறுமையிழந்து சொன்னார். “கொலைகாரன் என்று தெரிந்த பின் யோகிஜி அந்தக் கொலைகாரனை கண்டிப்பாக இங்கே துறவியாக வைத்துக் கொள்ள மாட்டார். இது நம் மாநில வழக்காக இருந்தால் நாங்கள் எதாவது சலுகை காட்டலாம். ஆனால்  தெலுங்கானா போலீஸை அப்படியெல்லாம் நாம் காக்க வைக்க முடியாது.”

 

பாண்டியன் யோசனையுடன் கண்ணனைக் கேட்டார். “ஷ்ரவனானந்தா என்ற பெயரில் இங்கிருந்த துறவி இங்கேயே இருக்கிறாரா, இல்லை இவர்கள் வரலாம் என்று தெரிந்து தப்பித்து விட்டாரா?”

 

ஹைத்ராபாத் போலீஸ் அதிகாரி உடனே சொன்னார். “அவன் தப்பித்துப் போகவில்லை. ஏனென்றால் எங்கள் ஆட்கள் சில நாட்களாகவே அவனுக்காக உங்கள் யோகாலயாவைக் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நீங்கள் அவனை அழைக்கிறீர்களா இல்லை நாங்களே உள்ளே போய் தேடட்டுமா?”

 

அப்படியானால் இதுவரை அவர்களை வேவு பார்த்துக் கொண்டு இருந்தது தெலுங்கானா போலீஸாரா? அந்த பைத்தியக்கார ஷ்ரவனுக்காகத் தான் அவர்கள் வேவு பார்த்தார்களா? சை…. இது தெரியாமல் எத்தனை அமைதியிழந்தோம்.’ ஷ்ரவனை அவர்கள் தேடிக் கண்டுபிடிக்க முடியாது என்றாலும் அவர்களைத் தேட அனுமதிப்பது ஆபத்தானது என்பது பாண்டியனுக்குப் புரிந்தது. ஷ்ரவனைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக அவர்கள் பிரச்சினைக்குரிய வேறு விஷயங்களை இங்கே கண்டுபிடிக்கலாம். அது தேவையில்லாத பெரிய சிக்கலை உருவாக்கி விடும்.

 

இன்னொரு ஹைத்ராபாத் போலீஸ் அதிகாரி சொன்னார். ”கொல்லப்பட்டது அமெரிக்கர் என்பதால் அமெரிக்க தூதரகம் எங்களை மணிக்கொரு முறை விசாரித்துக் கொண்டு இருக்கிறது. எந்த நேரத்திலும் பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வரலாம்…”

 

அதற்கு மேல் பாண்டியன் யோசிக்கவில்லை.  கண்ணனிடம் சொன்னார். “அழைத்து வாருங்கள்.”

 

பாதாள அறையின் மேல் கதவு திறக்கப்படும் சத்தம் ஷ்ரவனுக்குக் கேட்டது. கண்ணனும் அவரைத் தொடர்ந்து இரண்டு குண்டர்களும் வந்தார்கள்.

 

ஷ்ரவன் மலர்ந்த முகத்துடன் கண்ணனைக் கைகூப்பி வணங்கினான். ”வணக்கம் சுவாமிஜி

 

கண்ணன் சொன்னார். “உன்னைத் தேடி ஹைத்ராபாத் போலீஸ் வந்திருக்கிறது.”

 

ஷ்ரவன் முகத்தில் பீதியைக் காட்டினான்.சுவாமிஜி நான் ஏற்கெனவே உங்களிடம் சொன்னபடி அதில் நான் நிரபராதி. வேண்டுமென்றே என்னை அதில் சிக்க வைத்திருக்கிறார்கள்…”

 

கண்ணன் சலிப்புடன் சொன்னார். “அதை அங்கே சொல்லிக்கோ. இப்ப இங்கே இருந்து கிளம்பு...”

 

ஷ்ரவன் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டான். அவன் கண்களை கருப்புத் துணியால் இறுக்கிக் கட்டிக்கொண்டு மேலே அழைத்து வந்தார்கள். பாண்டியனின் மாடியிலிருந்து இறங்கும் போது அந்தக் கருப்புத் துணியைக் கழற்றி விட்டார்கள்.

 

கண்ணன் அவனுடைய காதுகளில் சொன்னார். “இங்கே நடந்த, நடக்கிற எதைப் பத்தியாவது நீ வெளியே பேசிகிட்டுத் திரிஞ்சால் கொன்னுடுவோம். ஜாக்கிரதை

 

ஷ்ரவன் அவரைத் திகிலுடன் பார்த்து விட்டுச் சொன்னான். “என் சொந்தக் கதையே சோகக் கதையாய் இருக்கிறது சுவாமிஜி. நான் அடுத்தவர்கள் கதையை ஏன் பேசப் போகிறேன்.”

 

இவன் பேசினாலும் யார் நம்பப்போகிறார்கள்?’ என்று ஏளனமாக கண்ணன் நினைத்துக் கொண்டார். இரண்டு தடியர்களும் மாடிப்படியோடு நின்று விட கண்ணன் மட்டும் ஷ்ரவனை அழைத்துக் கொண்டு போய் விட்டார்.

 

ஷ்ரவனைப் பார்த்ததும் ஹைத்ராபாத் போலீஸார் எழுந்தார்கள். ஷ்ரவனின் கைகளில் விலங்கை மாட்டினார்கள். பின் பாண்டியனிடம் நன்றி சொல்லி விட்டுக் கிளம்பினார்கள். ஷ்ரவனை பாண்டியன் பார்த்தார். நேற்று அவர் அவனை சிறைப்பிடித்த போது அவன் காட்டிய அமைதி அவனிடம் இப்போது காணாமல் போயிருந்தது. அவனுடைய முகமே களையிழந்து விட்டிருந்தது. 

 

பாண்டியனின் இருப்பிடத்தை விட்டு வெளியே போகும் போது, ஷ்ரவன் அவன் முகத்தை யாரும் பார்த்து விடக்கூடாது என்று தலையை நன்றாகக் கவிழ்த்துக் கொண்டே வெளியேறினான். ஜீப்பில் அமர்ந்த பின்னும் அவன் தலையை நிமிர்த்தவில்லை. அவனது இருபக்கமும் அமர்ந்து கொண்ட ஹைத்ராபாத் போலீஸ்காரர்கள் அவனை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள, இரண்டு ஜீப்களும் கிளம்பின.

 

அந்த இரண்டு ஜீப்களும் யோகாலயத்திலிருந்து வெளியேறிய அதே நேரத்தில்  பிரம்மானந்தாவின் கார் உள்ளே நுழைந்தது. போலீஸ் ஜீப்கள் யோகாலயத்திற்கு வந்து போவதைப் பார்த்து துணுக்குற்ற அவர் உள்ளே காரிலிருந்து இறங்கியவுடன், அங்கே நின்றிருந்த பாண்டியனைக் கேட்டார். ”என்ன ஆச்சு?”

 

அந்த ஷ்ரவனைப் பிடிச்சுட்டு போறாங்க. அவன் நம்மளை விடப் பெரிய பிரச்சனைக்காரனா இருந்திருக்கான், யோகிஜி


(தொடரும்)

என்.கணேசன்