என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, February 5, 2026

சதுரங்கம் 4


ர்ஜுனும், கீதாவும் நர்மதாவின் வீட்டருகில் நீண்ட நேரம் இருந்தார்கள். நர்மதாவின் தற்கொலை குறித்து தங்கள் பத்திரிக்கைகளில் பிரசுரிக்க குறிப்புகளையும், புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்கள். நர்மதா வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரித்ததில் முக்கியமாய்ச் சொல்லும்படியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. பணக்காரர்கள் அதிகமாக வசிக்கும் அந்தப் பகுதியில் யாரும் யாருடனும் அதிகம் பேசிக் கொள்வதும் இல்லை என்பது தெரிந்தது. நர்மதாவின் வேலைக்காரியை வீட்டிற்குள்ளே போலீஸார் விசாரித்துக் கொண்டு இருந்ததால் அவளிடம் பேச முடியவில்லை. வேலைக்காரியைப் பார்த்துப் பேச அவர்களுடன் மற்ற நிருபர்களும் காத்திருந்தார்கள்.

 

அர்ஜுன் கீதாவிடம் சொன்னான். “பசிக்குது. காலைல சாப்பிடல.”

 

ஏன்?”

 

டிபன் ரெடியாயிட்டிருந்துச்சு. நீ கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னவுடனே நான் உடனே கிளம்பி இங்கே வந்துட்டேன். நீ சாப்பிட்டியா?”

 

இல்லை. வீட்டுல டிபன் ரெடியாத் தான் இருந்துச்சு. ஆனா நான் சாப்பிடலை. எங்கம்மா கூட சண்டை.”

 

அர்ஜுன் புன்னகையுடன் கேட்டான். “ஏன்?”

 

எப்ப பார்த்தாலும் அட்வைஸோ அட்வைஸ். என் ரூமை நான் எப்படி வெச்சிருந்தா அவங்களுக்கென்ன? வயசுப் பொண்ணு இப்படி மோசமா வெச்சிருக்கறதான்னு ஒரே திட்டு

 

அர்ஜுனின் புன்னகை விரிந்தது. ”சரி வா. பக்கத்து ஓட்டல்ல சாப்பிட்டுட்டு வந்துடலாம்.”

 

இருவரும் ஓட்டலை நோக்கி நடக்க ஆரம்பிக்கையில் கீதா அவனைப் பார்த்து லேசாகப் புன்னகைத்து விட்டுச் சொன்னாள். “உன்னை மாதிரி பசங்களுக்கு பிரச்சனையே இல்லை. அம்மாக்களே எல்லா வேலைகளையும் பண்ணிடுவாங்க. பொண்ணுகளுக்குத் தான் அதைச் செய், இதைச் செய்யின்னு தொந்தரவு. உன் தங்கச்சியையும் உங்கம்மா அப்படி தான் திட்டுவாங்களா?”

 

நித்யா எங்கப்பா மாதிரி. இருக்கற இடமும், செய்யற வேலையும் எப்பவுமே ஒழுங்காவும், சுத்தமாவும் இருக்கும். அதனால அம்மாக்கு அந்த விஷயத்துல அவளைத் திட்ட வாய்ப்பே இல்லை.”

 

கீதா சொன்னாள். “உன் தங்கச்சி மாதிரி பொண்ணுங்க தான் என்னை மாதிரி பொண்ணுங்களுக்கு எதிரிகளே. ’அவளைப் பாரு. அவளும் உன்னை மாதிரி பொண்ணு தானே. அவ எவ்வளவு ஒழுங்கா சுத்தமா வெச்சிருக்கா பாரு. அவளப் பார்த்தாவது கத்துக்கோன்னு ஒரு ஸ்டேண்டர்ட் டயலாக் எப்பவும் வரும். அம்மா கிட்ட திட்டு வாங்காத பொண்ணு ஒருத்தி இருக்கான்னா அது ஆச்சரியம் தான்.”

 

அர்ஜுன் சொன்னான். “அவளும் திட்டு வாங்குவா. ஆனா அது வேற விஷயங்களுக்காய் இருக்கும்....”

 

ஓட்டலுக்குள் நுழைந்து அமர்ந்தார்கள். டிபன் ஆர்டர் செய்த பின் கீதா சொன்னாள். “ஆனா உன்னை உங்கம்மா எதுக்காகவும் அதிகமா திட்டமாட்டாங்க தானே.”

 

அர்ஜுன் தலையசைத்தான். ‘பேசினால் தானே திட்டுவதற்கு!’ கீதா சொன்னாள். “எல்லா வீட்டுலயும் பசங்களுக்கு நிறைய தனி சலுகைகள், அம்மா கிட்ட இருந்து செல்லம், எல்லாமே...”

 

அர்ஜுன் விரக்தியுடன் புன்னகைத்தான். வெளியே சொல்லிக் கொள்ளவும் முடியாத கஷ்டங்களின் கனம் அதிகம்...

 

சாப்பிடும் போது கீதா தன் தம்பிக்கு வீட்டில் அளிக்கப்படும் கூடுதல் சலுகைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். அர்ஜுனின் மன கனம் கூடிக்கொண்டே போய் ஒரு கட்டத்தில் சொன்னான். “கீதா, சும்மா புலம்பாம வேற எதாவது உருப்படியா பேசறியா

 

கீதா அவனைப் பரிதாபமாய் பார்த்துச் சொன்னாள். “ரொம்பப் புலம்பறேனா. எல்லாம் எங்கம்மா இன்னைக்குக் காலைலயே ஆரம்பிச்சு வெச்சது. சாரி அர்ஜுன். இனி பார். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் இருக்கப் போறேன்...”

 

அர்ஜுன் புன்னகைத்தான். அவள் நாளையும் புலம்பத் தான் போகிறாள். ஆனால் எதிர்க்கருத்து சொன்னாலே முகமும், மனமும் மாறி விடும் உலகில், எதிர்க்கருத்தாக இருந்தாலும், அது சரி என்று தோன்றினால் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும் இவள் குணம், பலரிடமும் இல்லாத அரிதான குணம். அவன் தங்கைக்கு அடுத்தபடியாக, பழக மிக சௌகரியமாக உணரும் பெண் இவள் தான். ஒளிவு மறைவு இல்லாமல், ஈகோ இல்லாமல் இருப்பதற்காகவே அவனுக்கு அவளை மிகவும் பிடிக்கும்.   

 

சாப்பிடுகையில் இருவரும் அவர்களுடைய பரஸ்பர நண்பர் ஒருவரது வீட்டில் நடந்த ஒரு சுவாரசிய நிகழ்வைப் பற்றிப் பேசினார்கள். அவர்கள் சாப்பிட்டு விட்டு மறுபடியும் நர்மதா வீட்டுக்கு வந்த போது நர்மதா வீட்டு வேலைக்காரி வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.

 

பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களின் நிருபர்கள் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். திடீரென்று முக்கியத்துவம் கிடைத்த புளங்காகிதத்தில் அவள் இருந்தது, பார்க்கையிலேயே தெரிந்தது. பலரும் அவளிடம் பல கேள்விகள் கேட்க அவள் விரிவாகப் பதில் சொன்னாள்.

 

என் பெயர் சாவித்திரிங்க. நான் நர்மதாம்மா கிட்ட நாலு வருஷமா வேலை பாக்கறேங்க.  என் கிட்டே ரொம்ப அன்பாய் இருப்பாங்க...”

 

இது பொய். எத்தனை வேலை செய்தாலும் நர்மதாவைத் திருப்திப்படுத்த முடியாது என்பது தான் சாவித்திரியின் அனுபவம். நர்மதா எதிலும் குற்றமும், குறையும் சொல்லிக் கொண்டே இருப்பாள், அடிக்கடி எரிந்து விழுவாள் என்பது தான் நிஜம். ஆனால் இறந்து போனவர்களைப் பற்றி கெட்டதாய் எதுவும் சொல்லக் கூடாது என்பது சாவித்திரியின் உறுதியான அபிப்பிராயம். ஏனென்றால் இறந்தவர்கள் தெய்வமாகி விடுகின்றார்கள் என்று அவள் தாய் அடிக்கடி சொல்வாள். அதனால் நர்மதாவின் தவறுகளைச் சொல்வது தெய்வக்குற்றம் ஆகி விடலாம்...

 

“... ரெண்டு நாளாவே நர்மதாம்மா ஒரு மாதிரியா தான் இருந்தாங்க. ஆனாலும் இப்படி முடிவெடுப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லைங்க...” சொல்லச் சொல்ல சாவித்திரியின் கண்கள் கலங்கின. அழுகை, கோபம், சிரிப்பு, சோகம் எல்லாமே நொடிப்பொழுதில் அவளுக்கு வந்து விடும். அவ்வப்போது உணரும் உணர்ச்சிகளே அந்தந்த சமயங்களில் பிரதானம் என்று நினைக்கும் பெரும்பாலான அடித்தள மக்களின் மனநிலையில் இருப்பவள் தான் அவளும். அதை அவளை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அர்ஜுன் புரிந்து கொண்டான். அவன் சாவித்திரியைப் போன்ற பலரைப் பார்த்திருக்கிறான். ஒரே மனநிலையில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணி வாழ்க்கையை அவர்கள் சிக்கலாக்கிக் கொள்வதில்லை.

 

அவளுக்குச் சொல்ல அதிகம் இருக்கவில்லை. வெளி கேட் மற்றும் உள்கதவின் சாவிகள் அவளிடமும், நர்மதாவிடமும் தான் இருக்கின்றன. சில சமயங்களில் நர்மதா வெளியூர் சென்றிருப்பாள். சில சமயங்களில் காலையில் மிகத் தாமதமாகத் தான் எழுந்திருப்பாள். அதனால் சாவித்திரி தன்னுடைய நேரத்தில் வந்து வீட்டைச் சுத்தம் செய்து விட்டுப் போக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இன்றும் அவள் வீட்டுக்குள் போனவுடன் நர்மதாவைப் பார்க்கவில்லை. வீட்டைப் பெருக்கிக் கொண்டே நர்மதாவின் அறைக்கும் வந்த போது தான் அவள் நர்மதா மின்விசிறியில் கயிறு கட்டி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறாள். பின் தான் போலீஸுக்குப் போன் செய்திருக்கிறாள்.

 

நர்மதாவின் நெருங்கிய உறவினர்கள், நட்புகள் பற்றி நிருபர்கள் கேட்டார்கள். சாவித்திரி அறிந்த வகையில் நர்மதாவின் தங்கை ஒருத்தி ஆஸ்திரேலியாவில் இருக்கிறாள் என்றும் வேறு உறவினர்கள் பற்றித் தனக்குத் தெரியாது என்றும் சொன்னாள். நட்பின் வகையில் நர்மதாவின் வீட்டுக்கு விமல் என்பவர் எப்போதாவது வருவார் என்றும் அவள் சொன்னாள்.

 

எல்லாம் சொல்லி முடித்து மைக், கேமிராக்கள் விலகிய போது சாவித்திரி ஆர்வத்துடன் ஒரு நிருபரிடம் கேட்டாள். ”டிவில எத்தனை மணிக்கு இதைக் காட்டுவீங்க?”

 

அந்த நிருபருடன் அர்ஜுனும் புன்னகைத்தான். அவன் பார்வை மேலோட்டமாய் அங்குள்ளவர்களைப் பார்த்தபடி உலாவி, திடீரென்று ஓரிடத்தில் நின்று தங்கியது. அந்த இடத்தில் இருந்த நபரை அர்ஜுன் கூர்ந்து கவனித்தான்.

 

சிறிது நேரத்தில் வீட்டுக்குள்ளிருந்து விசாரணை போலீஸ் அதிகாரி வர அவன் பார்வை அவர் பக்கம் நகர்ந்தது. வந்த போலீஸ் அதிகாரி நிருபர்களிடம் சொன்னார்.  வாழ்க்கை வெறுத்து விட்டது. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். இதற்கு யாரும் காரணமல்லஎன்று நர்மதா எழுதியிருப்பதாக நம்பும் ஒரு கடிதம் கிடைத்திருக்கிறது. வீட்டிலிருந்து எந்தப் பொருளும் காணாமல் போன மாதிரி தெரியவில்லை. அதனால் தற்கொலை என்று தான் இப்போதைக்கு நினைக்க வேண்டியிருக்கிறது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கிடைத்த பின் தான் எதையும் உறுதியாகச் சொல்ல் முடியும்.”

 

அர்ஜுன் கேட்டான். “சிசிடிவி கேமிரா ரெக்கார்டிங் எல்லாம் பார்த்தீங்களா சார்?”

 

அந்தக் கேள்வி அவரைத் தர்மசங்கடப்படுத்தியது போல் தெரிந்தது. அவர் அவசரமாய்ச் சொன்னார். “அதெல்லாம் இனிமே தான் நிதானமாய் பார்க்கணும். இப்போதைக்கு இவ்வளவு தான்.”

 

நிருபர்கள் கலைய ஆரம்பித்தார்கள். கீதாவிடம் அர்ஜுன் மெல்ல சொன்னான். ”இது தற்கொலை மாதிரி தெரியலை கீதா 

 

கீதா திகைத்தாள்.

 

(தொடரும்)

என்.கணேசன்



Monday, February 2, 2026

யோகி 141

 

குமரேசன் அன்று காலை வேலைக்கு வந்த போது துறவிகள் யாரும் வேலைக்கு வந்திருக்கவில்லை. அவர்கள் ஒன்பது மணிக்கு மேல் தான் வருவார்கள். அவனுக்குச் செய்ய வேண்டிய வேலையை ஒதுக்கிய கல்பனானந்தா அவனிடம் ஒரு பரபரப்பை உணர்ந்தாள். அவனுக்கு ஷ்ரவனிடம் பேச என்னவோ இருக்கிறது என்பது அவளுக்குப் புரிந்தது. அது சரி என்று நிரூபிப்பது போல் குமரேசன் துறவிகள் வரும் நேரம் நெருங்க நெருங்க அவ்வப்போது அவர்கள் வரும் திசையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

ஷ்ரவன் வேலைக்கு வந்தவுடனேயே அவனிடம் கல்பனானந்தா தாழ்ந்த குரலில் சொன்னாள். “மருதகாசிக்கு உங்களிடம் எதோ சொல்ல வேண்டி இருக்கிறது என்று நினைக்கிறேன் ஷ்ரவன். அவர் வேலையும், உங்கள் வேலையும் முடிகிற சமயத்தில் பக்கத்தில் வரும் படி உங்களுக்கு வேலையை ஒதுக்குகிறேன்

 

நன்றி சுவாமினிஎன்று சொல்லி ஷ்ரவன் நகர்ந்தான். ஷ்ரவன் வேலையை ஆரம்பித்தவுடனேயே அவனைத் தூரத்திலிருந்து பார்த்த குமரேசன், ஷ்ரவன் அவனைக் கவனித்த போது சோம்பல் முறித்து விட்டுத் தன் வேலையைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தான்.

 

சுற்றி வந்து கொண்டிருந்த மூன்று கண்காணிப்பாளர்களுக்கும் எந்த விதமான சந்தேகமும் வராதபடி அவர்கள் இருவரும் தங்கள் வேலையை சிரத்தையுடன் செய்து கொண்டிருந்தார்கள். இருவரும் இடையே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூட இல்லை.

 

கல்பனானந்தா சொன்னபடி ஷ்ரவன் சாப்பிடக் கிளம்பும் நேரத்திற்கு சற்று முன் இருவரும் அருகே வேலை செய்யும் படி நேர்ந்தது. சற்றுத் தொலைவில் இருந்த கண்காணிப்பாளனுக்குத் தெரியாதபடி, குமரேசன் குனிந்து வேலை செய்து கொண்டே தாழ்ந்த குரலில் சொன்னான். “சேலம் சந்திர மோகன் காணாமல் போன நான்கு நாள் கழிச்சு, இங்கே வேலை செய்துகிட்டிருக்கும் கலிப்பாக்கம் சுந்தரகுருங்கற ஆள் பேரில் தன்னோட சில நிலங்களை ரொம்ப கம்மி விலையில் விற்றிருக்கார்.

 

ஷ்ரவன் கேட்டான். “ரெஜிஸ்ட்ரர் ஆபிஸ்ல செக் பண்ணீங்களா?”

 

ஆமாம். ஆனால் அங்கே சந்திரமோகன் நேர்ல போகலை. யாரோ ஒரு பவர் ஆஃப் அட்டர்னி மூலம் இந்த விற்பனை நடந்திருக்கு.” சொல்லிவிட்டு குமரேசன் போய் விட்டான். இருவரும் பேசும் போது ஒரு முறை கூட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவுமில்லை.

 

சைத்ரா பார்த்த கொலை பற்றியும், பின் ஆனதைப் பற்றியும், ஷ்ரவன் இரண்டு நாட்களில் சிறிது சிறிதாக கல்பனானந்தாவிடமிருந்து அறிந்து கொண்டிருந்தான். எப்போதும் ஓரிரு நிமிடங்களுக்கு மேல் கல்பனானந்தா அவன் அருகில் இருக்கவில்லை. அப்படி இருந்ததும் அடிக்கடி நிகழவில்லை. மற்றவர்களை விட அவனிடம் அதிகம் பழகுவது போல் தெரியாமல் அவள் மிகக்கவனமாகப் பார்த்துக் கொண்டாள். 

 

கல்பனானந்தா சொன்னதையும், குமரேசன் சொல்வதையும் வைத்துப் பார்க்கையில், சைத்ரா பார்த்த கொலை சந்திரமோகனுடையதாய் இருந்திருக்குமோ என்ற சந்தேகம் மெல்ல ஷ்ரவனின் மனதில் எழுந்தது.

 

குமரேசன் வேலையை முடித்துக் கொண்டு கிளம்பினான்.  மதிய வெயில் மண்டையைப் பிளப்பது போல் கடுமையாக இருந்தது. ஏழை தோட்டத் தொழிலாளியாகப் போட்ட வேடத்திற்கு ஏற்ற மாதிரி சைக்கிளில் போவது இந்தக் கடும் வெயிலில் சித்திரவதை தான். இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலமாகச் சீக்கிரம் ஷ்ரவனின் துப்பறியும் வேலை முடிந்து விட்டால், பழையபடி வழக்கமான வேலையைப் பார்க்கலாம் என்று நினைத்தபடியே சென்று கொண்டிருக்கையில் எதிரில் அவனுடைய போலீஸ் நண்பன் ஒருவன் பைக்கில் வந்தான். கூர்ந்து பார்த்துக் கொண்டே வந்த அவன்நண்பா என்ன கோலம்டா இது…” என்று சத்தமாகச் சொல்லி பைக்கை குறுக்கே நிறுத்தினான்.

 

நண்பனைப் பார்த்துப் புன்னகைத்த குமரேசன் அவனிடம் பேசுவதற்கு முன், இயல்பான எச்சரிக்கையின் காரணமாய் சுற்றிலும் பார்த்த போது சில அடிகள் தள்ளி காரிலிருந்து கண்ணன் அவர்களையே பார்ப்பது தெரிந்தது. திடுக்கிட்ட குமரேசன் என்ன செய்வது என்று புரியாமல் ஒரு கணம் திகைத்தான். அவனுடைய நண்பன் சுந்தர் போலீஸ் சீருடையில் இருந்தது நிலைமையை மேலும் ஆபத்தாக்கியிருப்பது அவனுக்குப் புரிந்தது.

 

எல்லாம் காலம் செய்த கோலம் தான் நண்பாஎன்று குமரேசனும் சத்தமாய்ச் சொல்லி விட்டு பல்லைக் கடித்துக் கொண்டு தாழ்ந்த குரலில் சொன்னான். “டேய் நான் மாறு வேஷத்துல இருக்கேன். கொஞ்சம் அடக்கி வாசி. பக்கத்துல ஒருத்தன் கார்ல இருந்து பார்த்துகிட்டேயிருக்கான். திரும்பாதே. யதார்த்தமாய் எதாவது பேசு.”

 

சுந்தர் நிலைமையைப் புரிந்து கொண்டான்.என்னடா இந்த நேரத்துல இந்த வெயில்ல சைக்கிள்ல போயிட்டிருக்கே

 

யதார்த்தமாய் பேசச் சொன்னால் வில்லங்கமாய் பேசுகிறானே என்று எண்ணிய குமரேசன் சமாளித்தான். “உனக்கென்னடா போலீஸ் உத்தியோகம். வசதியாய் பைக்ல போறே. நான் தோட்டக்காரன். சைக்கிள் தான் கதி. நான் வெயில் நிழல் பார்க்க முடியுமா. இப்ப தான் வேலை முடிஞ்சு போறேன். வீட்டுல எல்லாம் சௌக்கியம் தானே?’

 

சௌக்கியம் நண்பா.” என்ற சுந்தர், தானும் நண்பன் காட்டிய வழியில் சமயோசிதமாய்ப் பேச முயற்சி செய்தான். “அதைச் சொல்லலைடா. வெயில் குறையற வரைக்கும் வெய்ட் பண்ணி கிளம்பியிருக்கலாமேன்னு தான் கேட்டேன்.”

 

ரெண்டு மணிக்கு தான் டூட்டி முடியுது. நான் என்னடா பண்றது?”

 

சுந்தருக்கு அதற்கு மேல் எப்படிப் பேச்சைக் கொண்டு போவது என்று தெரியவில்லை. “சரிடா. எனக்கும் ட்யூட்டிக்கு நேரமாச்சு. இன்னொரு நாள் பேசுவோம். சீக்கிரம் வீடு போய்ச் சேருஎன்று சொல்லி விட்டு பைக்கில் வேகமாகப் போனான்.

 

குமரேசன் கண்ணனைப் பார்த்ததாகக் காட்டிக் கொள்ளாமல் தானும் கிளம்பினான்.

 

கண்ணனும் காரைக் கிளப்பினார். அவர் அங்கிருந்த பெட்டிக் கடையில் பீடா வாங்கிக் கொண்டு காரில் ஏறிக் கிளம்புகிற நேரத்தில் தான் எதிரில் வந்து கொண்டு இருந்த மருதகாசியைக் கவனித்தார். மருதகாசி அவர் காருக்கருகே வருகையில் தான் ஒரு போலீஸ்காரன் மருதகாசியை இடைமறித்துநண்பா என்ன கோலம்டா இது…” என்று சொன்னது அவர் காதில் விழுந்தது.

 

மருதகாசி அவரைப் பார்த்து விட்டதையும் அவர் கவனித்தார். அதற்குப் பிறகு அவர்கள் பேசிக் கொண்டது இயல்பாய் இருப்பது போல் தோன்றினாலும் ஏதோ ஒன்று இடித்தது. அதாவது பின்பு பேசியது எதுவும், ஆரம்பத்தில் அந்த போலீஸ்காரன் சொன்னநண்பா என்ன கோலம்டா இது…”க்கு பொருந்துகிற மாதிரி அவருக்குத் தோன்றவில்லை.  வித்தியாசமான தோற்றத்தில் வந்தால் தானே இப்படிக் கேட்கத் தோன்றும்?   

 

அவர் யோகாலயத்துக்கு வந்து பாண்டியனிடம் விஷயத்தைச் சொன்ன போது பாண்டியன் யோசித்தார். ஒரு தோட்டக்காரனுக்கும், ஒரு போலீஸ்காரனுக்கும் இடையே நட்பு இருக்கக்கூடாது என்பதில்லை. இருவரும் அக்கம்பக்கத்தில் வசித்திருக்கலாம். அல்லது பள்ளியில் ஒன்றாய் படித்து பின் ஒருவன் படிப்பு வராமல் நின்று தோட்டக்காரனாய் ஆகியிருக்கலாம். ஆனாலும் அந்தப் பழைய நட்பு தொடர்ந்திருக்கலாம். எல்லாம் சரி தான். ஆனால் அந்தப் போலீஸ்காரன்என்ன கோலமிது?” என்றும்ஏன் இந்த வெயில் நேரத்தில் சைக்கிளில் போய்க் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டதும் அவருக்கும் இயல்பாய் படவில்லை. ஒருவேளை மருதகாசி போலீஸ் ஒற்றனோ?

 

கண்ணன் இன்னொரு விஷயத்தையும் நினைவு கூர்ந்தார். “ஒரு நாள் ஏதோ ஒரு சீட்டுல இருந்த போன் நம்பரையும் அவன் வெறிச்சு பார்த்துகிட்டு இருந்திருக்கான். அந்தப் போன் நம்பரை அடிச்சுப் பார்த்தப்போ, அப்படி ஒரு நம்பர் இல்லவே இல்லைன்னு தெரிஞ்சுது. ஆனாலும் இன்னைக்கு நடந்ததையும் வெச்சுப் பார்க்கறப்ப அவன் மேல சந்தேகம் வருது.”

 

அதைக் கேட்ட பிறகு பாண்டியன் அதிகம் யோசிக்கவில்லை. “அப்படின்னா அவனை உடனடியாய் வேலையிலிருந்து நிறுத்திடு கண்ணன். அவன் நல்லவனாவே இருந்துட்டு போகட்டும். சந்தேகத்தைக் கிளப்பற ஆள்கள் நமக்கு வேண்டவே வேண்டாம்என்று பாண்டியன் தீர்மானமாகச் சொன்னார்.


(தொடரும்)

என்.கணேசன்



Thursday, January 29, 2026

சதுரங்கம் 3

 

ர்ஜுனின் சிறப்புக் கட்டுரை ஒன்று அவன் நிருபராக வேலை செய்யும் விடிவெள்ளி பத்திரிக்கையில் அன்று வந்திருந்தது. ’சமூகத்தில் பெருகி வரும் மோசடிகளும், குற்றங்களும்என்ற தலைப்பில் அவன் ஒரு ஆழமான கட்டுரை எழுதியிருந்தான். முக்கியமாக பொதுமக்கள் அந்த மோசடிகள், குற்றங்களில் பாதிக்கப்படாமல் இருப்பது எப்படி என்பதை சிறப்பான வகையில் அலசி எழுதி இருந்தான். எத்தனை தான் எழுதியிருந்தாலும், ஒவ்வொரு முறையும் பத்திரிக்கையில் அவன் பெயரையும், புகைப்படத்தையும் பார்க்கையில் ஏற்படும் மகிழ்ச்சியே தனி தான்.

 

அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். அந்த மகிழ்ச்சியை யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவனுக்கு ஆவலாக இருந்தது. அம்மா பானுமதி தான் ஹாலில் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள். அவளிடம் சொல்வதும், சுவரிடம் சொல்வதும் ஒன்று தான். எந்தப் பாதிப்பும் இருக்காது. அப்பா ஞானமூர்த்தியை அவன் தேடினான். அவர் பூஜையறையில் தியானத்தில் இருப்பது தெரிந்தது. அரசியல் கட்சித் தலைவர்களில் தினமும் தியானம் செய்பவர் இவர் ஒருவராகத் தான் இருக்க முடியும். தியானம் என்றால் பெயருக்குப் போய் உட்கார்ந்து நேரத்தை நகர்த்தும் நபர் அல்ல அவர். பல நேரங்களில் சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவிற்கு அதில் மூழ்கி விடுவார்.  அர்ஜுனும் அவரைப் பார்த்து தியானம் செய்யும் முயற்சியில் ஒரு காலக்கட்டத்தில் ஈடுபட்டிருக்கிறான். சாதாரணமாக நினைவுக்கு வராத தேவையில்லாத நினைவுகள் எல்லாம் அந்த சமயங்களில் தான் ஒன்று திரண்டு படையெடுத்து வரும். சில நாட்களில் அவன் தியானத்திற்கு விடை கொடுத்து விட்டான். அவன் அதற்குச் சரிப்பட்டு வரமாட்டான்.

 

அப்பாவிடம் அந்த கட்டுரையைக் காண்பித்து அவருடைய கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. அவரிடமிருந்து எப்போதுமே விருப்பு வெறுப்பில்லாத, அலங்காரச் சொற்கள் சேர்க்காத உண்மையான கருத்துக்கள் வரும்.  வார்த்தைகளில் கடுமையோ, இகழ்ச்சியோ இருக்காதே ஒழிய, எதிர்மறைக்கருத்துக்களையும் நேரடியாகச் சொல்லத் தயங்காதவர் அவர். அதுவும் வீட்டில் மட்டுமல்ல, பொதுவெளியிலும் அவர் அப்படித் தான். எந்த அரசியல்வாதியும் செய்யத் துணியாத செயல் அது. அரசியலில் தோல்வி அடையவும், காணாமல் போகவும் அந்த ஒரு குணாதிசயம் போதும். அவர் வெற்றிகரமான அரசியல்வாதி அல்ல என்றாலும் இன்னமும் காணாமல் போகாமல் அரசியலில் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பது அவன் அடிக்கடி ஆச்சரியப்படும் விஷயம்.      

 

அடுத்ததாக அந்த வீட்டில் இருப்பவள் தங்கை நித்யா தான். இன்று அவள் கல்லூரிக்கு விடுமுறை நாள். அதனால் ஒன்பது மணியாகாமல் எழுந்திருக்க மாட்டாள். நேற்று நள்ளிரவு வரை அவள் படித்துக் கொண்டிருந்தாள் என்பதும் அவனுக்கு நினைவு வந்தது. அவளிடம் அந்தக் கட்டுரையைக் காட்டினால், பத்திரிக்கையில் அவளுடைய அண்ணனின் புகைப்படத்தையும், பெயரையும் பார்த்தே முகம் மலர்வாள். அடிக்கடி அண்ணனைக் கிண்டல் செய்பவளும், அவனிடம் சண்டை போடுபவளும் அவள் தான் என்றாலும் அவளைப் பொருத்த வரை அவள் அண்ணனைப் போல உலகத்தில் யாருமில்லை. தங்கையை நினைக்கையிலேயே அர்ஜுனின் முகம் மென்மையாகியது.

 

அவனுடைய அலைபேசி இசைத்தது. அழைத்தது அவனுடைய தோழி கீதா.  இன்னொரு பத்திரிக்கையில் நிருபராக இருப்பவள். ஏதாவது முக்கியமான பரபரப்பான செய்தி இருந்தால் ஒழிய அவள் இந்த நேரத்தில் அலைபேசியில் அழைத்துப் பேசுபவள் அல்ல. அர்ஜுன் பரபரப்புடன் அலைபேசியை எடுத்துப் பேசினான். முன்னாள் பிரபல நடிகை நர்மதா தற்கொலை செய்து கொண்டிருப்பதாக செய்தி வந்து கொண்டிருப்பதை கீதா தெரிவித்தாள்.

 

அர்ஜுன் அவசர அவசரமாக உடைமாற்றிக் கொண்டு கிளம்பினான்.  அவன் எப்போதும் அம்மாவிடம் சொல்லி விட்டுப் போவதில்லை. பானுமதி மகனிடம் கேட்டாள். “காலை டிபனுக்கு வருவாயா, வர மாட்டாயா?”

 

வெளியே சாப்பிட்டுக்கறேன்.” என்றான் அர்ஜுன்.

 

அவள் ஒன்றும் சொல்லவில்லை. தலையையாவது அசைத்தாளா, இல்லையா என்று அவன் பார்க்கவில்லை.  இந்தக் கேள்வியை அவள் கேட்டது கூட, அவனுக்கும் சேர்த்து சமைக்கலாமா வேண்டாமா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளத் தான். உண்மையான அக்கறையால் கேட்கப்பட்ட கேள்வி அல்ல அது. அவனுடைய நண்பர்களின் வீட்டில் எல்லாம் அவர்களுக்கு அவர்களுடைய அப்பாவுடன் தான் பிரச்சினை இருந்தது. அப்பாவுடன் தான் அவர்களுடைய பேச்சு வார்த்தை குறைவாக இருக்கும். கிட்டத்தட்ட எல்லோரும் அம்மாவின் செல்லங்கள் தான். இந்த வீட்டில் தான் எல்லாம் எதிர்மாறாக இருக்கிறது. அவனுக்குப் பலசமயங்களில் அவள் அவனைப் பெற்றவள் அல்லவோ என்ற சந்தேகம் வந்திருக்கின்றது. அவன் அப்பாவின் மூத்த தாரத்தின் குழந்தையாக இருக்கலாமோ என்று கூட நினைத்து இருக்கிறான். அப்படியெல்லாம் இல்லை, அவள் தான் அவனைப் பெற்றவள் என்று தெரிந்த பிறகும், அதில் ஏதாவது தில்லுமுல்லு இருக்குமோ என்று கூட அவன் சந்தேகப்பட்டிருக்கிறான். ஆனால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அவன் அவள் மகன் தான். ஏனென்றால் அவளுடைய முகச்சாயல் தான் அவனுக்கு இருந்தது. அவளுடைய கண்கள் போலவே அவனுடைய கண்களும் மிக அழகானவை.

 

இயல்பாகவே அவள் உணர்வுகளை அதிகமாய்க் காட்டாதவள். அவள் முகத்தில் வெறுமை தான் அதிகம் தெரியும். ஆனால். அவள் தன் கணவரிடமும், மகளிடமும் ஓரளவு உயிரோட்டத்துடன் பழகக்கூடியவள். நித்யாவை அவள் பார்க்கும் பார்வையில் பெருமிதம் தெரியும். ஞானமூர்த்தியைப் பார்க்கும் பார்வையில் பேரன்பு தெரியும். ஆனால் அர்ஜுனிடம் மட்டும் எப்போதும் வெறுமை தான்அதிலும் ஒரு சூட்சுமம் உண்டு. ஞானமூர்த்தி, நித்யா முன்னிலையில் அவள் கூடுமான வரை இயல்பாக அவனிடம் நடந்து கொள்வாள். அவர்கள் இருவரும் இல்லாத நேரங்களில் அவள் சம்பந்தமே இல்லாதவள் போல நடந்து கொள்வாள்.

 

என்றாவது ஒரு நாள் அவளிடம் வெளிப்படையாகஎன்னை ஏன் அம்மா நீ வெறுக்கிறாய்?” என்ற கேள்வியைக் கேட்டு விட வேண்டும் என்று அவன் துடித்திருக்கிறான். ஆனால் அப்படியே அவன் கேட்டாலும் அவள் வெளிப்படையாக உண்மையான காரணத்தைச் சொல்வாள் என்ற நம்பிக்கை அவனுக்கில்லை. கண்ணிமைக்காமல்அப்படியெல்லாம் இல்லையேஎன்று சொல்லிவிட முடிந்தவள் அவள்….

 

நடிகை நர்மதாவின் வீட்டை அவன் பைக்கில் சென்றடைந்த போது அங்கே நிறைய பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சிக்காரர்களும் இருந்தார்கள். அவர்கள் பலரும் அவனுக்கு நன்றாக அறிமுகமானவர்கள். சிலர் அவனைப் பார்த்துக் கையசைத்தார்கள். அவனும் கையசைத்தான். கீதா அவனைப் பார்த்தவுடன் புன்னகையோடு அருகே வந்தாள். “ஹாய் அர்ஜுன்.”

 

அவனும் அவளைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்தான். “ஹாய் கீதா.”

 

இன்னைக்கு உன்னோட கட்டுரை ஒன்னு உங்க பத்திரிக்கையோட நடுப்பக்கத்துல பிரசுரமாகியிருக்கு இல்லையா. நான் படிக்க ஆரம்பிச்சப்ப தான் இந்த தற்கொலைச் செய்தி கிடைச்சுது. உடனே கிளம்பிட்டதால படிக்க முடியல.”

 

அவனுடைய கட்டுரை இன்று பிரசுரமாகியிருப்பதை அவள் கவனித்திருக்கிறாள் என்பதே அவனை சந்தோஷப்படுத்தியது.

 

தலையசைத்தபடி கேட்டான். “உண்மையாகவே தற்கொலை தானா? இல்லை கொலையாக இருக்கவும் வாய்ப்பிருக்கா?”

 

சந்தேகம் ஒரு நிருபருக்கு கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டிய குணம். ஒரு திறமையான நிருபர் தோற்றங்களில் ஏமாந்து விடக்கூடாது. உண்மையே என்றாலும் ஆராயாமல் தெளிவடைந்து விடக்கூடாது. கீதா புன்னகைத்தாள். “தெரியல. ஆனா கதவோ, பூட்டோ உடைக்கப்படலை. வேலைக்காரி எப்பவும் வர்ற மாதிரி எட்டு மணிக்கு வந்திருக்கா. அவ கிட்ட ஒரு செட் வெளி கேட் சாவியும், வீட்டு சாவியும் இருக்கு அவ உள்ளே போய்ப் பார்த்தப்ப நர்மதா ஃபேன்ல கயிறு கட்டி தூக்குல தொங்கிகிட்டு இருந்திருக்கா.”

 

தற்கொலைக் கடிதம் ஏதாவது…?”

 

இருக்கு. ஆனா அது அவள் எழுதினது தானான்னு இன்னும் உறுதிப்படுத்தப்படலை. வீட்டுல இருக்கற அவளோட பொருள்கள் எல்லாம் அப்படியே இருக்குங்கற மாதிரி தான் தெரியுது. எதுவும் திருட்டுப் போனமாதிரி இதுவரைக்கும் தெரியல. எல்லாத் தகவல்களும் கிடைச்ச பிறகு தான் எதுவுமே சொல்ல முடியும்…”

 

அர்ஜுன் கல்லூரிக் காலத்தில் நர்மதாவின் விசிறியாக இருந்திருக்கிறான். அக்காலத்தில் அவள் நடித்த எல்லாத் திரைப்படங்களையும் பார்த்தே தீர்வான். ஆனால் கல்லூரிப்படிப்பு படித்து முடித்து அவன் அந்த வயதுப் பைத்தியக்காரத்தனங்களை எல்லாம் விட்டொழித்த போது நர்மதா மேல் இருந்த ஈர்ப்பும் சேர்ந்து விடைபெற்றது. பின் அவளை அவன் நினைத்துப் பார்ப்பது கூட இல்லை. ஆனாலும் இப்போது நர்மதா இறந்து விட்டாள் என்கிற போது அவள் குறித்து ஒருவித பச்சாதாபம் அவன் மனதில் தங்கியது.  காலம் தான் எத்தனை விசித்திரமானது. தன் போக்கில் எத்தனை மாற்றங்களை அனாயாசமாகச் செய்து விடுகிறது. ஒரு சமயத்தின் உச்சங்கள் இன்னொரு சமயத்தில் எப்படி துச்சங்களாகப் போய்விடுகிறார்கள்….’

(தொடரும்)

என்.கணேசன் 



Monday, January 26, 2026

யோகி 140

 

கால ஓட்டத்தில் பின்பு நடந்தவை எல்லாம் கல்பனானந்தாவின் வேதனையை அதிகப்படுத்தின. யோகாலயத்திற்கு வெளியே தினமும் நின்ற நிருபர்கள், வழக்கு எல்லாம் பாண்டியனையும், பிரம்மானந்தாவையும் எந்த வகையிலும் அசைக்கவில்லை என்பதை அவள் நேரடியாகவே பார்த்தாள். அவர்கள் எந்தப் பிரச்னையும் இல்லாதது போலவே நடந்து கொண்டார்கள். சைத்ரா எங்கே அடைக்கப்பட்டிருக்கிறாள் என்பது தெரியவில்லை. அவளை நினைக்கையில் எல்லாம் மனம் ரணமானது. உயிரோடு புதைக்கப்பட்ட நபர் யாரென்று தெரியவில்லை.

 

சைத்ராவின் அறையில் உடனிருந்த கவிதானந்தாவும், அபிநயானந்தாவும் கூடுதலாகக் கண்காணிக்கப்படுவதைப் பார்த்த போது தான் மொட்டைக்கடிதம் எழுதியது அவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் பாண்டியனுக்கு எழுந்திருப்பதைப் புரிய வைத்தது. அவர்கள் இருவரும் சைத்ராவுடன் ஒரே அறையில் வசித்ததால் அவர்கள் அவளிடம் கொலை பற்றிச் சொல்லியிருக்கலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். மேலும் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வேலைகளை வைத்து, யோகாலயத் தபால்களுடன் இந்த மொட்டைக்கடிதத் தபாலையும் சேர்த்து வைத்திருக்கும் வாய்ப்பும் அவர்களிருவருக்கும் இருப்பதாக பாண்டியன் எண்ணியதாகத் தெரிந்தது. அவர்கள் இருவர் அளவு அல்லா விட்டாலும், கல்பனானந்தாவையும் சந்தேகக்கண்ணோடு தான் பாண்டியன் பார்ப்பதாக அவள் உணர்ந்தாள். சைத்ரா அவளிடம் சொல்லியிருக்கும் வாய்ப்பும் இருப்பதாக அவர் எண்ணியிருக்கலாம். ஆனால் சைத்ரா, தான் பார்த்த கொலையை வேறு யாரிடமும் சொல்லி விடவில்லை என்று உறுதியாகச் சொல்லியிருப்பாள் என்றே கல்பனானந்தாவுக்குத் தோன்றியது. ஏனென்றால் கவிதானந்தா, அபிநயானந்தா, அவள் மூவருக்கும் எந்தப் பிரச்சினையும் அங்கு எழவில்லை.   ஆனால் யோகாலயாவில் காமிராக்களும், கண்காணிப்புகளும் அதிகரிக்க ஆரம்பித்தன. இப்படி ஒரு இடத்தில் இருக்க வேண்டி வந்ததில் கல்பனானந்தா சித்திரவதையை உணர்ந்தாள்.

 

சைத்ரா கோவிட்டில் இறந்தாள் என்ற செய்தி வெளியானதும், தொடர்ந்து அவளுடைய தந்தை தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளியானதும் கல்பனானந்தாவை தனியாக அறையில் அழ வைத்தன. இறைசக்தியும் கர்மா சித்தாந்தமும் கூட சில சமயங்களில் கேள்விக்குறியாயின. எல்லாவற்றுக்கும் மேலாக, எங்களை யாரும், எதுவும் அசைக்க முடியாது என்ற கர்வத்தில் அவர்கள் இருந்தது அவளைக் குமுற வைத்தது. காலம் போகப் போக, இனி யாரும் இவர்களை எதுவும் செய்ய முடியாது என்ற விரக்தியும் அவளுக்குள் எழுந்தது.

 

ஆனால் திடீரென்று ஒரு நாள் யோகாலயத்தில் அர்த்த ஜாம பூஜை ஒன்று நடந்தது. அங்கே எப்போதாவது பூஜையும், ஹோமங்களும் நடைபெறும் என்றாலும் அது இப்படி அர்த்த ஜாம பூஜையாக இருந்ததில்லை. அன்றைய பூஜையைச் செய்ய வந்திருந்தவரை பாண்டியனும், அப்போது அடிக்கடி வர ஆரம்பித்திருந்த டாக்டர் சுகுமாரனும் சேர்ந்து வரவேற்றது அவளை ஆச்சரியப் படுத்தியது. மறுநாளிலிருந்து பாண்டியன் கையில் தெரிந்த தாயத்து அவளைப் பேராச்சரியப்படுத்தியது. பெயரளவில் கூட, பிரம்மானந்தாவுக்காகவும் ஆன்மீக அடையாளங்கள் எதையும் அணிந்து கொள்ளாத பாண்டியன் கையில் தாயத்தா? இது நிஜமா, கனவா என்று கூட அவள் உறுதிப்படுத்திக் கொண்டாள். அதன் பிறகு தான் அவர்களிடம் பயமும், பதற்றமும் தெரிய ஆரம்பித்தன. கால தாமதமானாலும், கடவுளும், கர்மாவும் வேலை செய்வதை அவளால் பார்க்க முடிந்தது.  

 

ஷ்ரவன் அங்கு வகுப்புகளுக்கு வந்து புதிராக நடந்து கொண்டதும், அவன் மீது அவர்கள் அக்கறை காட்டி அவனைப் பேச வைக்க ஆர்வம் காட்டியதும் அவள் சற்றும் எதிர்பாராதது. அவன் சொன்னது எதிலும் அவளுக்கு முழு நம்பிக்கை வரவில்லை என்றாலும் அவர்கள் அதை நம்பினார்கள் என்பது தெரிந்தது. அதுவும் அவளை ஆச்சரியப்படுத்தியது. இங்கே என்னென்னவோ புதிதாய் நடக்க ஆரம்பித்திருக்கிறது என்பதும் புரிந்தது. இவர்களைப் பாதிக்கும் விஷயங்களில் தீர்வோ, கூடுதல் ஞானமோ தன்னிடம் இருப்பது போல் அவன் காட்டிக் கொள்கிறான் என்பதையும் அவள் யூகித்தாள். அவன் உத்தேசம் என்னவென்று ஆரம்பத்தில் அவளுக்குப் பிடிபடவில்லை. முதலில் இவர்களிடம் காசு பறிக்க தந்திரமாக அவன் செயல்படுகிறான் என்று கூட அவளுக்குத் தோன்றியது.


சைத்ராவுக்கும், அவளுக்கும் மட்டுமே தெரிந்த யோகி சமாச்சாரத்தை அவன் பேசியது அவளுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. அதை அவன் கண்டுபிடித்தது எதாவது விசேஷ சக்தி மூலமாகவே இருக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்தியது. முந்தைய அவளது சந்தேகங்களுக்கு இது பொருந்தவில்லை. அவன் அவர்களுக்கு எதிராகச் செயல்படுகிறான் என்று மட்டும் அவளுக்கு உறுதியாகியது. ஆனால் இன்னொரு பலி இங்கே தரப்பட வேண்டாம் என்று நினைத்து அவள் அவனை எச்சரிக்கவும் செய்தாள்.

 

பின் அவள் அவனை அதிகம் கவனிக்க ஆரம்பித்தாள். தோட்டக்காரன் மருதகாசிக்கும்  அவனுக்கும் இடையே எதோ சம்பந்தம் இருப்பது மெல்லப் புரிந்தது. அப்படியானால் இதில் இவன் ஒருவன் மட்டுமல்ல, தோட்டக்காரன் என்ற பெயரில் இவனுக்கு ஒரு கூட்டாளியும் இருக்கிறான் என்பதும் புரிந்தது. பின் தான் இவர்கள் போலீசாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. முதல்வர் தமிழகம் திரும்பி வந்ததும் சைத்ராவின் தாத்தா அவரிடம் போய்ப் பேசியிருக்கலாம், அதன் பின் நடக்கும் ரகசிய ஏற்பாடாக இது இருக்கலாம் என்ற உண்மையும் அவளுக்குப் பிடிபட்டது. 

 

ஷ்ரவனுக்கும், மருதகாசிக்கும் இடையே நடந்த துண்டுச் சீட்டுப் பரிமாற்றத்தின் பின் துண்டுச் சீட்டு கண்காணிப்பாளன் கையில் கிடைத்தும் கூட அவனோ, பாண்டியனோ எதுவும் கண்டுபிடித்து விட முடியாதது அவள் மனதில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவள் என்றோ நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்த நல்ல காரியம் தற்போது நடக்கிறது என்ற திருப்தி அவளுக்கு ஏற்பட்டது. ஆபத்தானாலும் ஆபத்தைச் சந்திக்க முடிந்த சாமர்த்தியசாலியாகவே ஷ்ரவனை அவள் எண்ணினாள். நீண்ட ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகு அவனை முழுவதுமாக நம்பலாம், முடிந்த விதங்களில் உதவலாம் என்ற முடிவுக்கு அவள் வந்தாள். 

 

ஸ்ரேயாவிடம் ஷ்ரவன் ஒப்படைத்த வேலை இரவு, பகலாக நடந்தாலும் முன்னேற்றம் ஆமை வேகத்திலேயே இருப்பது போல் அவளுக்குத் தோன்றியது. சொல்லப் போனால் அது முன்னேற்றம் தானா, ஏதாவது உபயோகமான தகவல் கிடைக்குமா என்ற சந்தேகம் கூட அவள் மனதில் எழ ஆரம்பித்தது.

 

சைத்ராவின் தந்தைக்கு வந்த மொட்டைக்கடிதம் நாளிலிருந்து ஒரு மாத காலம் முன்பிலிருந்து நடந்த கொடுக்கல், வாங்கல், பணபரிவர்த்தனை, கிரையம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவள் பார்த்துக் கொண்டிருந்த போது தான் CMS என்ற கோப்பு அவள் கவனத்தைக் கவர்ந்தது. உள்ளே சந்திர மோகன் என்பவரின் ஆதாரும், பான் கார்டும் பார்த்த போது அவள் மூளையில் ஒரு பொறி தட்டியது.  அந்தப் பெயரை ஷ்ரவன் சொல்லி இருந்ததாக நினைவு. உள்ளே விலாசத்தில் சேலம் என்பதைப் பார்த்தவுடனேயே அது உறுதியாகியது. CMS என்பது சந்திரமோகன், சேலம் என்பதன் பெயர்ச்சுருக்கமாக இருக்க வேண்டும்.  சைத்ராவின் தந்தைக்கு மொட்டைக்கடிதம் வருவதற்கு சுமார் ஒரு வார காலம் முன்பு காணாமல் போன மனிதர்யோகாலயம் செல்வதாகச் சொல்லி விட்டுக் கிளம்பியவர் பின் வீடு திரும்பவில்லை என்பது நினைவு வந்தது. பரபரப்புடன் அவர் காணாமல் போனதாகப் புகார் தரப்பட்ட விவரத்தை இணையத்தில் தேடினாள். ஒரே ஒரு பத்திரிக்கையில் தான் அது சின்ன செய்தியாக வந்திருந்தது.   அந்த தேதியைக் குறித்துக் கொண்ட அவள்    அந்தக் கோப்பில் இருக்கும் வரவு செலவுக்கணக்கைப் பார்த்தாள். சந்திரமோகன் காணாமல் போய் நான்கு தினங்கள் கழிந்த பிறகு, தன்னிடமிருந்த சில நிலங்களை யார் பெயருக்கோ விற்றியிருக்கிறார். அது யார் பெயருக்கு என்று ஸ்ரேயா பார்த்தாள். கலிப்பாக்கம் சுந்தரகுரு என்ற பெயருக்கு நிலங்கள் விற்கப்பட்டு இருந்தது. பெயர் வித்தியாசமாய்த் தோன்றவே இணையத்தில் அவள் அந்தப் பெயரைத் தேடினாள்.  முகநூலில் கலிப்பாக்கம் சுந்தரகுரு என்ற பெயரில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் யோகாலயத்தில் வேலை செய்வதாய் முகநூல் தெரிவித்தது.

 

ஸ்ரேயா பரபரப்புடன் ராகவனுக்குப் போன் செய்தாள்.


(தொடரும்)

என்.கணேசன்