என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, March 2, 2026

யோகி 145


 பிரம்மானந்தா மிகவும் கஷ்டப்பட்டுக் கைதட்டினார். “நல்ல சிந்தனை ரகுராமன். சரியான சிந்தனையும் கூட.”

 

அந்தப் பாராட்டிலும் ரகுராமன் புளங்காகிதம் அடைந்தது போல் தெரியவில்லை. பிரம்மானந்தாவுக்குத் தான் நினைத்தபடி அவரை சந்தோஷப்படுத்தவோ, வருத்தப்பட வைக்கவோ முடியாதது என்னவோ போலிருந்தது.   ஏற்கெனவே தன்னிறைவு பெற்ற ஆனந்த மனிதராய் அவர் இருப்பது ஆச்சரியமாகவும் இருந்தது. நிஜமாகவே அந்த ரகசியத்தை பிரம்மானந்தா அறிந்து கொள்ள விரும்பினார். ஏற்கெனவே கேட்க நினைத்து, கேட்டும் விட்டது தான் அது. ஆனால் தேவை இல்லாமல் கயிற்றுக் கட்டில், சொகுசு சோபா பற்றிப் பேசி விட்டோம் என்று தோன்ற அவர் கேட்டார். “நீங்கள் எப்போதும் ஆனந்தமாக இருக்க என்ன காரணம் ரகுராமன்?”

 

ஆசைகள் இல்லாமல் இருப்பது தான் காரணம்.”

 

எதற்காவது ஆசைப்பட்டு அதை நிறைவேற்றிக் கொள்வதில் அல்லவா ஆனந்தம் இருக்கிறது. ஆசைகள் இல்லாமல் இருப்பது எப்படி ஆனந்தமாகும்?”

 

ஒன்றுக்கு நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். அது நிறைவேறுகிறது அல்லது அதை அடைகிறீர்கள். நீங்கள் ஆனந்தமாக இருக்கிறீர்கள். ஆனால் அந்த ஆனந்தம் இருப்பது அடுத்த ஆசை வரும் வரையில் மட்டுமே அல்லவா?”

 

தோட்டக்காரன் ஞானி போல் பேச ஆரம்பித்தது பிரம்மானந்தாவுக்குப் பிடிக்கவில்லை. ஆசைகளுக்கு முடிவில்லை, ஆசைகள் தான் துன்பத்திற்குக் காரணம் என்ற வெற்று வேதாந்தப் பேச்சை மனிதனின் கையாலாகாத்தனம் என்று அவர் நினைத்தார். “ஆசைப்பட்டதைச் சாதித்தும், அடைந்தும் ஆனந்தம் அடைவது சரி தானே? அடுத்த ஆசை வரும் வரையில் தான் அது நீடிக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. அடுத்த ஆசையையும் நிறைவேற்றி மறுபடி அவன் ஆனந்தம் உணர்வதில் என்ன தவறு?”

 

ரகுராமன் அமைதியாகச் சொன்னார். “நீங்கள் ஒரு ஆசையை நிறைவேற்றி விட்டு அடுத்த ஆசை வரும் வரை சந்தோஷமாக இருக்கிறீர்கள் அல்லவா? கவனமாய் ஆராய்ந்தால் அது ஆசைகள் இல்லாத நிலையால் வரும் ஆனந்தம். இரண்டு ஆசைகளுக்கு இடையே இருக்கும் நிறைவு அது. சொல்லப் போனால் ஆசைகள் தான் அந்த ஆனந்தத்தையும், நிறைவையும் இல்லாமல் ஆக்குகின்றன. ஆசைகள் இல்லாமல் இருந்தால் ஆனந்தமும், நிறைவும், தானாக நீடிக்கும்.”

 

வார்த்தை ஜாலங்களில் இது வரை, தான் தான் கெட்டிக்காரர் என்று பிரம்மானந்தா நினைத்திருந்தார். இந்த ஆள் அவரை விடக் கெட்டிக்காரர் போல தர்க்க ரீதியாகப் பேசியது அவருக்குப் பிடிக்கவில்லை. நினைத்தது போல் தோட்டக்காரன் மந்தபுத்திக்காரன் அல்ல.

 

ஆசையில்லாமல் வெறுமையாக இருந்தால் அதில் எப்படி நிறைவு இருக்கும்? உலகத்தில் முன்னேற்றம் எப்படி இருக்கும்? நல்லது எப்படி நடக்கும்?” பிரம்மானந்தா கேட்டார்.

 

ரகுராமன் ஒரு குழந்தைக்குச் சொல்வது போல் பொறுமையாகவும், கனிவாகவும் சொன்னார். “எல்லாம் இறைவன் சித்தப்படி நடக்கிறது. எதை நம் மூலம் செய்ய வேண்டுமோ, அதை அவனே செய்ய வைத்துக் கொள்கிறான். ஆசையில்லாத நிலை வெறுமை அல்ல. திறமையைத் தரும் இறைவன் ஒருவனை வெறுமையாக இருக்க விடமாட்டான். இறைவனின் படைப்பில் வெறுமைகள் இல்லை. ஒருவனால் என்ன ஆக வேண்டும் என்று இறைவன் நினைக்கிறானோ அதற்கு வேண்டியதை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுப்பான். அதை இறைவனுடைய வேலை என்ற ஞானத்துடன் செய்பவனுக்குத் தனிப்பட்ட லாப நஷ்டங்கள் இல்லை. விளைவு எதுவானாலும் அது இறைவனைச் சேர்ந்தது. அதனால் அவன் அமைதி இழக்காமல் எதுவும் செய்ய முடியும். அந்த வேலையில் மனிதனுடையநான், என்னுடையஎன்ற சேர்க்கை சேரும் போது தான் பிரச்சினை உருவாகிறது. விளைவுகள் தனிப்பட்ட லாப நஷ்டங்கள் என்றாகி விடுகிறது. அதன் மூலம் சந்தோஷம், துக்கம் என்ற இரண்டு அலைகளும் அவன் வாழ்க்கையில் மாறி மாறி அடித்து அவனை அலைக்கழிக்க ஆரம்பித்து விடுகிறது. ஒரு வேலை இறைவனுடையது என்றிருக்கும் போது என்ன ஆகுமோ, எப்படி ஆகுமோ, எப்போது ஆகுமோ என்ற கவலைகள் வருவதில்லை. அதையெல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்று கவலையில்லாமல் இலகுவாகத் தன் பங்கைச் செய்து விட்டு மனிதன் அமைதியாய் இருக்க முடியும். ஆனால் அதுவே மனிதனின் தனிப்பட்ட ஆசையால் ஏற்படுத்திக் கொண்ட வேலையானால், முடியும் வரை கவலை, கோபம், பயம், விரக்தி, சந்தோஷம், துக்கம், விரக்தி, வெற்றி, தோல்வி என்று மாறி மாறி உணர்வது தவிர்க்க முடியாததாகிறது.  முடிந்த பின்பும் அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஒருவன் பாடுபட வேண்டியிருக்கிறது. மனிதன் தன்னுடையது என்ற அற்பதிருப்திக்காக படும் கஷ்டங்கள் ஏராளம். உண்மையில் எதுவும் அவனுடையது அல்ல. உலகம் ஒவ்வொரு கணமும் பல விதங்களில் அதைத் தெரிவித்துக் கொண்டு தானிருக்கிறது. ஆனால் அதை உணர்ந்து நடக்க முடியாமல் போவது தான் மாயையின் விளையாட்டு.”

 

ஒரு நிமிடம் அங்கே மயான அமைதி நிலவியது. தோட்டக்காரனிடம்தாழ்ந்த நிலையில் இருக்கிறாய், வெற்று ஆளாய் இருக்கிறாய்என்பதை நாசுக்காய் புரிய வைக்கப் போனது, அவர்உன்னுடையது என்ற அற்பத்திருப்திக்காக நிறைய கஷ்டப்படுகிறாய், இது மாயையின் விளையாட்டுஎன்று புரிய வைத்ததில் முடிந்து விட்டது. இப்படி வலியப் போய் தடி கொடுத்து அடி வாங்கியதை பிரம்மானந்தாவால் சகிக்க முடியவில்லை. மேலும், இந்த யோகாலயத்தில் இது வரை அவர் தான் அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்து இருக்கிறார். அவரே இந்த இடத்தில் ஒரு உபதேசம் கேட்கும் நிலைமை அவருக்கு இதுவரை வந்ததில்லை. இந்த முதல் அனுபவம் அவருக்குக் கசந்தது.   இந்தக் கசப்பை தொடர்ந்து நீட்டிக்கப் பிடிக்காமல் அவர் வறண்ட குரலில் சொன்னார். “உங்கள் கருத்துக்களை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.”

 

கூடுதலாக ரகுராமனிடம் பேசும் (கேட்கும்?) மனநிலையில் பிரம்மானந்தா இல்லை என்பது பாண்டியனுக்கு விளங்கி விட்டது. பாண்டியன் ரகுராமனைப் பார்த்து கைகூப்பினார். “நன்றி. கண்ணன் திரும்ப காரில் உங்களைக் கொண்டு போய் விடுவார்.”

 

ரகுராமன் மூவருக்கும் கைகூப்பி விட்டு எழுந்தார். ஷ்ரவனுக்கு அவருடைய மாறாத மலர்ந்த முகம் இராமாயணத்து ரகுராமனையே நினைவுபடுத்தியது. நீயே அரசன் என்று தசரதன் சொன்ன போதும், உன் தம்பியே அரசன் என்று கைகேயி சொன்ன போதும் ஸ்ரீராமனின் முக மலர்ச்சியில் மாற்றம் இருக்கவில்லையாம். சித்திரத்தில் வரைந்த செந்தாமரை போல அவன் முகம் இருந்தது என்று கவி சொன்னதாகப் படித்த நினைவு வந்தது. இவருக்கும், அழைத்து வந்த போதும் மகிழ்ச்சி, அனுப்பி வைக்கும் போதும் மகிழ்ச்சி!

 

ஷ்ரவன் பரவசத்துடன் எழுந்து நின்று அவரது காலைத் தொட்டு வணங்கினான்.   ரகுராமன் கனிவன்புடன் அவனைப் பார்த்து அவன் தலையை இரண்டு கைகளாலும் தொட்டு ஆசிர்வதித்தார். அந்தத் தொடுதலில் உடலெங்கும் மின் அதிர்வுகளை ஷ்ரவன் உணர்ந்தான்.

 

கண்ணனைப் பின் தொடர்ந்து ரகுராமன் செல்ல, பாண்டியன் பிரம்மானந்தாவின் உதவியாளனை அழைத்து தாழ்ந்த குரலில் சொன்னார். “அந்த ஆளோட காலடி மண்ணை எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வை

 

பிரம்மானந்தாவுக்கு ஷ்ரவனும், பாண்டியனும் சேர்ந்து ரகுராமன் யோகியே என்று முடிவு செய்து விட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 

பிரம்மானந்தாவின் கடுகடுத்த முகத்தைப் பார்த்த ஷ்ரவன் இவர் முன்னிலையில் அவர் காலைத் தொட்டு வணங்கியது இவருக்குப் பிடிக்கவில்லைஎன்று புரிந்து கொண்டான். உடனடியாக எழுந்து பிரம்மானந்தாவை  சாஷ்டாங்கமாய் வணங்கினான்.

 

அவரிடமிருந்து சிறப்பான பதில்களைப் பெறும்படியாக நீங்கள் கேட்ட கேள்விகள் அருமையிலும் அருமை யோகிஜி. ஒரு யோகியால் தான் இன்னொரு யோகியிடம் இப்படிக் கேட்டுப் பெற முடியும். நீங்கள் அறியாதது எதுவுமில்லை. ஆனால் அறியாதது போல் கேட்டு அவரைப் பேச வைத்தது ஜனகர் அஷ்டவக்கிரரைப் பேச வைத்தது போல் ஆகி விட்டது.”

 

இல்லாத ஒரு அர்த்தத்தை ஷ்ரவன் ஏற்படுத்திப் பாராட்டியதில்  பிரம்மானந்தா மனம் சிறு ஆறுதலைப் பெற்றது. அது உண்மையே என்றும், அதை அவன் சூட்சுமமாய் புரிந்து கொண்டு விட்டான் என்றும் காட்டிக் கொண்டபடி அவர் மெலிதாகப் புன்னகைத்தார். ஷ்ரவன் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான்.

 

அவன் போன பின் பாண்டியனும், பிரம்மானந்தாவும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். பாண்டியன் எதையோ தீவிரமாக யோசிப்பது தெரிந்தது. பிரம்மானந்தா கேட்டார். “என்ன யோசிக்கிறாய் பாண்டியன்?”

 

பாண்டியன் சொன்னார். “அந்த ஆள் சொன்னதைத் தான் யோசிச்சேன் யோகிஜி. ஒரு மனுஷன் தன் சொந்தக் காரியத்தை ஆர்வமாய் செய்யற மாதிரி கடவுளோட காரியத்தை எப்படி ஆர்வமாய் செய்ய முடியும் யோகிஜி?”


(தொடரும்)

என்.கணேசன்



Thursday, February 26, 2026

சதுரங்கம் 7

 

ருட்ட ஆரம்பிக்கும் நேரத்தில் அர்ஜுன் ஆபிசிலிருந்து வீட்டுக்குக் கிளம்பினான். வீட்டை நோக்கிச் செல்கையில் அவன் மனமெல்லாம் அவனுடைய தாத்தா வாசுதேவன் மீதிருந்தது. மாமனிதராக அவரை அனைவரும் சொல்கிறார்கள். அவர் இறந்து இருபத்திநான்கு வருடங்கள் ஆகி விட்டன. ஆனால் இப்போதும் அவர் அன்புடன் நினைக்கப்படுகிறார். கட்சிக்காரர்கள் அவரை நினைப்பதும், அவருக்கு விழா எடுப்பதும் பெரிய விஷயமல்ல. அவர்கள் அவர் பெயரை வைத்துத் தான் இன்றைக்கு பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். எனவே அவர்கள் நிச்சயம் அவரைப் பற்றிப் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள். ஆனால் அரசியல் சாராதவர்களும், பேரறிஞர்களும், அவரோடு பழகியிருந்த சாதாரண மனிதர்களும் கூட அவரை இன்றும் பெருமையாகத் தான் நினைவு கூர்கிறார்கள்.

 

இப்போதைய ஆளும் கட்சியான தமிழர் சமூக வளர்ச்சிக் கழகம் வாசுதேவன் ஆரம்பித்த கட்சி. அவர் கட்சி ஆட்சியைப் பிடித்த பின் மூன்றரை ஆண்டு அவர் தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அந்த மூன்றரை ஆண்டு காலமும் தமிழகத்தின் பொற்காலமாக இருந்தது. மக்களுக்கு நீண்ட காலம் நன்றாக உதவக்கூடிய திட்டங்களை வாசுதேவன் அமல்படுத்தினார். அவர் ஆட்சியில் ஊழல் இல்லாமல் அவர் பார்த்துக் கொண்டார். கட்சி ஆரம்பித்து கட்சி வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் செலவு செய்து தன் சொத்தையே முழுவதுமாக அவர் இழந்து விட்டாலும், ஆட்சிக்கு வந்த பின் அவர் முன்பு இழந்ததை சம்பாதிக்க முயலவில்லை. கடைசி வரை அப்பழுக்கற்ற நேர்மையான அரசியல் தலைவராகவும், மக்களின் முதல்வராகவுமே இருந்து அவர் காலமானார்.

 

அவருக்குப் பிறகு தமிழக அரசியல் களமே முற்றிலும் மாறியது. அவர் மரணமடைந்த பின் கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த தணிகாச்சலம் முதல்வரானார். அந்தக் காலக்கட்டத்தில் அர்ஜுனின் தந்தை ஞானமூர்த்தியோ, சித்தப்பா ராஜாராமோ நினைத்திருந்தால் அந்தக் கட்சியையும், முதல்வர் பதவியையும் எளிதாகக் கைப்பற்றியிருக்க முடியும். வாசுதேவனின் பிள்ளைகள் என்ற தகுதியே அன்று போதுமானதாக இருந்தது. ஆனால் அச்சமயத்தில் இருவருமே அதில் ஆர்வம் காட்டவில்லை. ஞானமூர்த்தி வக்கீல் தொழிலில் அப்போதே பிரபலமாக இருந்தார். ராஜாராமுக்கும் பதவி ஆசை இருக்கவில்லை.

 

அதனால் தணிகாச்சலம் கட்சியில் தன் செல்வாக்கை வேகமாக பலப்படுத்திக் கொண்டார், அடுத்த தேர்தலிலும் அவருடைய கட்சியே ஆட்சியைப் பிடித்தது. அதன் பின் மெள்ள அவர் தன் மகன் சரவணனை கட்சியில் பிரதானப்படுத்த ஆரம்பித்தார். கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில்  செல்வாக்காக இருந்த இளம் அமைச்சர் ரத்தினம் அதைக் கடுமையாக எதிர்த்தார். தணிகாச்சலத்தின் அந்த முயற்சியை அனுமதித்தால் காலமெல்லாம் தான் இரண்டாவது நபராகவே கட்சியிலும் அதிகாரத்திலும் இருக்க வேண்டி வரும் என்று சரியாக ரத்தினம் கணித்தார். அவர் எதிர்ப்பை தணிகாச்சலம் பொருட்படுத்தாமல் போகவே ரத்தினம் தமிழின முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்தார்.

 

அந்தச் சமயத்தில் தான் ராஜாராம் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அரசியலில் நுழைந்தார். அவர் ரத்தினத்தை ஆதரித்தார்.  ராஜாராமின் பேச்சுத் திறமையும், மக்களின் உணர்வுகளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடிந்த அவரது சாதுரியமும் தமிழக அரசியல் களத்தில் ரத்தினத்தின் செல்வாக்கை அதிகரித்தது. தணிகாச்சலம் செய்த ஊழல்கள் மக்களிடையே அவருக்கு இருந்த செல்வாக்கைக் குறைத்தது. அடுத்த தேர்தலில் ரத்தினம் முதல்வர் ஆனார். அப்போதும் ராஜாராம் பின்னணியில் இருந்தே அனைத்தையும் இயக்கினாரே ஒழிய கட்சியிலோ ஆட்சியிலோ எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதிகாரத்தை விரும்பாத வாசுதேவனின் இளைய மகனாக அவர் புகழ் மக்களிடம் மேலும் பரவியது.

 

அக்காலக்கட்டத்தில் அர்ஜுன் சிறுவனாக இருந்ததால் அரசியல் நிகழ்வுகளின் சூட்சுமமான பின்னணி காய் நகர்த்தல்கள் பற்றி அவனுக்குத் தெரிய வரவில்லை. அவன் வளர்ந்து பெரியவனான பின்னும் வெளிப்படையாக வரலாறான நிகழ்வுகள் மட்டுமே எல்லோரையும் போல் அவன் அறிய முடிந்தது. திரை மறைவில் நடந்தவை மூடுமந்திரமாகவே இருந்தன.

 

ராஜாராமின் தயவால் ரத்தினம் ஆட்சியைப் பிடித்து இரு முறை முதல்வரானார். ரத்தினத்தின் ஆட்சியிலும் ஊழலும் திறமையின்மையும் பிரதானமாகவே இருந்தது. அந்தச் சமயத்தில் தான் இரண்டு கட்சிகள் மீதும் கடும் அதிருப்தி அடைந்திருந்த ஞானமூர்த்தி மக்கள் நல்வாழ்வுக் கழகம் என்ற கட்சியைத் துவக்கினார்.  தந்தையைப் போலவே நேர்மையாளராக இருந்த அவர் அரசியலுக்கே தேவையான சிறிய சமரசங்களைக்கூடச் செய்து கொள்ளாதவராக இருந்தது, உடனடியாக செல்வாக்கு பெற அவருக்குப் பெரிய முட்டுக்கட்டையாக இருந்தது.   

 

அந்த சமயத்தில் இரண்டு முறை முதல்வராக முடிந்தது தன் தனித்திறமையால் என்று நம்ப ஆரம்பித்திருந்த ரத்தினம் ராஜாராமுக்கு முக்கியத்துவம் தருவதைக் குறைக்க ஆரம்பித்திருந்தார். அதனால் ராஜாராமும் ரத்தினத்திடம் அதிருப்தியடைய ஆரம்பித்து இருந்தார். அதனால் அவர் அண்ணன் கட்சிக்கு ஆதரவு தருவார் என்று அரசியல் நோக்கர்கள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம்பினார்கள். ஏனென்றால் அண்ணனும் தம்பியும் மிக நெருக்கமாக இருந்தார்கள். அவர்கள் இருவரையும் இராம லட்சுமணர்கள் என்று கூடப் பலரும் சொல்வதுண்டு.

 

ஆனால் அந்த சமயத்தில் தணிகாச்சலம் காலமாகி அந்தக் கட்சியைக் கைப்பற்றிய அவருடைய மகன் சரவணன் ராஜாராமிடம் பணிந்து வந்தார். யாரும் எதிர்பாராத விதமாக ராஜாராம் சரவணனை ஆதரிக்க ஆரம்பித்தார். ரத்தினத்தின் மீதிருந்த அதிருப்தி, தணிகாச்சலத்தின் மரணம், சரவணன் அனைவரிடமும் காட்டிய பணிவு, ராஜாராமின் ஆதரவு எல்லாமாகச் சேர்ந்து தமிழர் சமூக வளர்ச்சிக் கழகத்தை, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிபீடத்தில் அமர்த்தியது. ரத்தினத்தின் தமிழின முன்னேற்றக் கழகம் வெறும் 45 இடங்களில் மட்டுமே வென்றது. ஞானமூர்த்தியின் மக்கள் நல்வாழ்வுக்கழகம் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. ஞானமூர்த்தி போட்டியிட்ட தொகுதியில் மட்டும் ஓட்டெடுப்பில் அவர் இரண்டாமிடத்தில் இருந்தார். அவர் கட்சி பத்து தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் டெபாசிட் இழந்தாலும் சுமார் 50 தொகுதிகளில் மூன்றாமிடத்தில் இருந்தது. அதையே ஞானமூர்த்தி பெரிய வெற்றியாக எண்ணினார்.

 

ஆனால் அர்ஜுனுக்கு அப்பாவின் தோல்வி சகிக்க முடியாததாக இருந்தது. அவர் தன் நேர்மையிலும், கொள்கைப்பிடிப்பிலும் உறுதியாயிருக்காமல், ஓரளவு சமரசம் செய்து கொண்டிருந்தால் கூட குறைந்தது பத்து தொகுதியிலாவது அவர் கட்சி வெற்றியடைந்திருக்கும் என்று அவன் நினைத்தான். ஆனால் அவர் தன் நேர்மையையும், கொள்கையையும் இழப்பதைத் தான் தோல்வியாக நினைத்தார். அப்படி நினைப்பவரிடம் அவனால் தன் அபிப்பிராயத்தைச் சொல்ல முடியவில்லை.   அவருடைய மதிப்பீடுகளும், அளவுகோல்களும் இன்றைய அரசியல் களத்தில் மதிப்பில்லாதவை. அவற்றை வைத்துக் கொண்டு இன்றைய அரசியலில் யாரும் வென்று விட முடியும் என்ற நம்பிக்கை அவனுக்குச் சிறிதும் இல்லை. அதனால் தானோ என்னவோ அவனுக்கு அரசியல் கசந்தது.

 

அவன் சித்தப்பா ராஜாராமின் செல்லப் பிள்ளை. சென்ற தேர்தலுக்கு முன்பு வரை வாரம் ஒரு முறையாவது அவன் அவர் வீட்டுக்குச் சென்று வருவான். சில நாட்களில் அங்கேயே இரண்டு வேளைகளும் சாப்பிட்டு விட்டு இரவு நேரத்தில் அவன் வீடு திரும்புவதும் உண்டு. ஆனால் அவர் கடந்த தேர்தலில் ஞானமூர்த்தியை ஆதரிக்காமல் சரவணனை ஆதரித்ததை அர்ஜுனால் மன்னிக்க முடியவில்லை. இப்போதும் சித்தப்பா குறித்த பெருமை அவனுக்கு உண்டு. இப்போதும் அவன் வெளியாட்கள் யாரிடமும் பேசுகையில் அவரை விட்டுக் கொடுக்க மாட்டான். ஆனால் தனிப்பட்ட முறையில் அவனுக்கு அவர் மீது கோபமும் உண்டு. அவர் பல தடவை அவனிடம் அலைபேசியில் பேசிஏன் வீட்டுக்கே வருவதில்லைஎன்று கேட்டிருக்கிறார். அவன் ஒவ்வொரு முறையும் மழுப்பலாகத் தான் பதிலளித்திருக்கிறான்.

 

யோசித்துப் பார்த்தால் அவன் குடும்பத்திற்குள்ளேயே அவனுக்கு விடை தெரியாத புதிர்கள் பல இருக்கின்றன. முன்பு நடந்தவை பற்றி அவன் தந்தை ஞானமூர்த்தி அவனிடம் பேசியதில்லை. அதே போல சித்தப்பா ராஜாரமும் அவனிடம் பேசியதில்லை. பானுமதி சாதாரணமாகவே எதைப் பற்றியும் பேசாதவள். பாட்டி யசோதா பழைய நிகழ்வுகளின் நினைவில் அடிக்கடி மூழ்கியிருப்பவள் என்றாலும் அவற்றைப் பற்றிப் பேசுவது அபூர்வமே. இப்போது தாத்தாவைப் பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதும் சாக்கிலாவது குடும்பத்தினரிடம் பேச வேண்டும்,  கேள்விகள் கேட்க வேண்டும், பழைய உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். என்று அர்ஜுன் மனதில் உறுதியாக எண்ணிக் கொண்டான்.

(தொடரும்)

என்.கணேசன்



Wednesday, February 25, 2026

முந்தைய சிந்தனைகள் 134

 என் ‘தோல்வி என்பது இடைவேளை நூலில் இருந்து சில சிந்தனைகள்...












Monday, February 23, 2026

யோகி 144

 

ண்ணன் அந்தக் கிழவரை இரண்டு வீதிகளில் பின் தொடர்ந்தார். பைக்கை வைத்து விட்டு இரண்டு குண்டர்களுடன் அவர் அந்தக் கிழவரை தற்போது காரில் மெல்ல பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அந்தக் கிழவர் பின்னால் ஒரு கார் ஊர்ந்து வருவதை உணர்ந்தது போல் தெரியவில்லை. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் காரை நிறுத்தி விட்டு கண்ணனும் அந்த குண்டர்களும் இறங்கி அந்தக் கிழவரை இடைமறித்து நின்றார்கள்.

 

பொதுவாக இது போன்ற நேரங்களில் எல்லோரும் பயப்படுவது போல் அந்தக் கிழவர் பயப்படவில்லை. என்ன என்பது போல் அவர் பார்த்தார்.

 

கண்ணன் கேட்டார். “உங்க பெயரென்ன?”

 

ரகுராமன்.”

 

கண்ணன் சொன்னார். “எங்கள் தலைவர் உங்களைப் பார்த்துப் பேச வேண்டுமாம். நீங்கள் எங்களுடன் வர வேண்டும்.”

 

உத்தரவிடும் தொனியில் சொன்ன கண்ணனை அந்தக் கிழவர் அமைதியாகப் பார்த்தார். கண்ணன் சொன்னார். “திரும்பவும் உங்களை உங்கள் சேரியிலேயே கொண்டு வந்து விட்டு விடுவோம்.”

 

சரிஎன்று அந்தக் கிழவர் அமைதியாகச் சொன்னார். வந்த வேலை இவ்வளவு சுலபமாக முடியும் என்று கண்ணன் எதிர்பார்த்திருக்கவில்லை. நிஜமாகவே இந்த ஆள் புத்தி மந்தமான ஆள் தான் என்பது கண்ணனுக்கு உறுதியாகியது. கண்ணன் அவருக்குக் காரைக் கைகாட்டி விட்டு காரை நோக்கி நடக்க, அந்தக் கிழவர் அவரைப் பின் தொடர்ந்தார்.  பின் கதவைத் திறந்து கைகாட்டிய போது உள்ளே ஏறி அமர்ந்து கொண்டார். அவரது இரண்டு பக்கத்திலும் அந்தக் குண்டர்கள் உட்கார்ந்து கொண்டார்கள். இந்தக் குண்டர்களே தேவையிருக்கவில்லை என்று நினைத்த கண்ணன், காரைக் கிளப்புவதற்கு முன் பாண்டியனுக்குப் போன் செய்தார். “ஐயா, கிளம்பிட்டோம். அரை மணி நேரத்துல வந்து சேர்ந்துடுவோம்.”

 

ஷ்ரவன் அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு வெளியே வந்த போது பாண்டியனின் உதவியாளன் அவனுக்காக வெளியே காத்திருந்தான். “ஐயா உங்களைக் கூப்பிடுகிறார்.”

 

ஷ்ரவனுக்குத் திக்கென்றது. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் அவன் அந்த உதவியாளனைப் பின் தொடர்ந்தான். அந்த உதவியாளன் பாண்டியனின் இருப்பிடத்திற்கு அவனை அழைத்துப் போகாமல் பிரம்மானந்தாவின் இருப்பிடத்துக்கு அவனை அழைத்துப் போனது அவனை ஆச்சரியப்படுத்தியது. அவன் உள்ளே போன போது பாண்டியனும், பிரம்மானந்தாவும் அமர்ந்திருந்தார்கள். பிரம்மானந்தா ஏதோ பதற்றமான மனநிலையில் இருப்பது போல் ஷ்ரவனுக்குத் தோன்றியது.

 

ஷ்ரவன் அவரைப் பார்த்ததும் புளங்காகிதம் அடைந்து சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கி பணிவுடன் நின்றான். பிரம்மானந்தா எதிரில் இருந்த சோபாவைக் கைகாட்ட, ஷ்ரவன் பணிவு மாறாமல் அந்த சோபாவின் நுனியில் அமர்ந்தான்.

 

பாண்டியன் அவனிடம் சொன்னார். “ஷ்ரவனானந்தா நீங்கள் சொன்ன மாதிரியான ஒருவரை எங்கள் ஆட்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் அவர் வந்து விடுவார். அவர் நீங்கள் சொன்ன யோகி தானா என்பதை, நீங்கள் தான் உறுதி செய்ய வேண்டும்.”  

 

தலையசைத்த ஷ்ரவன் பரபரப்பை உணர்ந்தான். இவ்வளவு சீக்கிரமாக அவர்கள் அவரைக் கண்டுபிடித்ததுடன் யோகாலயத்திற்கும் அழைத்து வருவார்கள் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த யோகியை அழைத்து வருவதில் பாண்டியன் அளவுக்கு பிரம்மானந்தாவுக்கு எதிர்பார்ப்போ, உடன்பாடோ இல்லை என்பதும் அவர் முகபாவனையிலேயே தெரிந்தது.

 

சிறிது நேரத்தில் கண்ணன் அந்த யோகியை அழைத்து வந்தார்.  தும்பைப் பூவாய் நரைத்த தலைமுடி, தாடி, சாயம் போன சட்டை மற்றும் பழுப்பு நிற வேட்டியோடு தோற்றமளித்த அவருடைய கண்களில் எல்லையில்லாத கனிவும், சாந்தமும் தெரிந்தன. அவர் அங்கே வந்து நின்றவுடனேயே அவரிடமிருந்து வெளிப்பட்ட ஞான அலைகளை ஷ்ரவன் உணர்ந்தான். அவனையும் அறியாமல் அவன் எழுந்து நின்று கைகூப்பினான். பிரம்மானந்தாவிடம் நடித்தது போல் இங்கே நடிக்கத் தேவையிருக்கவில்லை.

 

கண்ணன் அவரை அறிமுகப்படுத்தினார். “யோகிஜி இவர் பெயர் ரகுராமன். சுந்தரவனம் நர்சரியில வேலை பண்றார்.”

 

ரகுராமன் மூவரையும் பார்த்து கைகூப்பினார். அவர் மூவரையும் சரிசமமாய் பார்த்து கைகூப்பியது பிரம்மானந்தாவின் முகத்தை கருக்க வைத்தது.  சரியான பட்டிக்காட்டான். யாரைப் பார்க்க வந்திருக்கிறோம் என்ற பிரக்ஞையும் இல்லாத ஜந்து.’ ஆனாலும் அவரும் அமர்ந்தவாறே கைகூப்ப, பாண்டியனும் அப்படியே செய்தார்.

 

பிரம்மானந்தா அங்கிருந்த இன்னொரு சோபாவில் அமரச் சொல்லி கைகாட்டினார். ரகுராமன் அந்த சொகுசு சோபாவில் அமர்ந்தார். அது போன்ற மிக மென்மையான சோபாவில் அவர் இதுவரை அமர்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்றாலும் அவர் ஷ்ரவனைப் போல் நுனியில் அமராமல் மிக நன்றாக, சௌகரியமாகவே  அமர்ந்து கொண்டார். அதுவும் பிரம்மானந்தாவுக்குப் பிடிக்கவில்லை. எப்பேர்ப்பட்டவரின் முன் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் என்ற மலைப்பு அந்தத் தோட்டக்காரனுக்குத் தெரியாதது பெரிய தவறாக அவருக்குத் தோன்றியது. நிஜமாகவே கிழவன் தன்னை ஒரு யோகியாக நினைத்துக் கொண்டிருக்கிறாரோ?

 

எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று பாண்டியன் யோசித்த வேளையில் பிரம்மானந்தா ரகுராமனிடம் கேட்டார். “என்னைத் தெரிகிறதா?”

 

அது இரட்டை அர்த்தத்தில் கேட்கப்பட்ட கேள்வி. “ஒரு காலத்தில் நாம் சந்தித்திருக்கிறோம். நினைவிருக்கிறதா?” என்பது ஒரு கேள்வி. “இப்போது நான் யார் என்று தெரிகிறதா?” என்பது இன்னொரு கேள்வி.

 

இரண்டு கேள்விகளுக்கும் பதில் தெரியாதது போல ரகுராமன் அவரைக் கூர்ந்து பார்த்து பதிலளிக்க நேரம் எடுத்துக் கொண்டது பிரம்மானந்தாவை அவமானப்படுத்துவது போல் இருந்தது. ’முன்பு பார்த்தது நினைவில்லா விட்டால் தொலைகிறது. இப்போது நான் உலகப்புகழ் பெற்றவன். தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்து விட்ட ஐந்து வயதுச் சிறுவனுக்குக் கூட என்னை அடையாளம் தெரியும். இந்தக் கிழவனுக்கு அதுவும் தெரியவில்லையா?’

 

ஷ்ரவன் பயபக்தி காட்டி ரகுராமனிடம் சொன்னான். “இவர் யோகி பிரம்மானந்தாஜி

 

அப்படியா என்பது போல் ரகுராமன் தலையசைத்தது பாண்டியனுக்கே வேடிக்கையாக இருந்தது. அந்த அறிமுகமும் பெரிய பிரமிப்பை ரகுராமனிடம் ஏற்படுத்தவில்லை.

 

இந்தப் புத்திமந்தக் கிழவனை இங்கே அழைத்து வந்ததே முட்டாள்த்தனம்என்று மனம் கடுத்த பிரம்மானந்தா நாசுக்காக இந்தக் கிழவனுக்கு அவர் நிலைமையை உணர்த்த வேண்டும் என்று தோன்றியது. அதனால் இது போன்ற சமயங்களில் வழக்கமாய் உதிர்க்கும் லேசான போலிச் சிரிப்பை உதிர்த்து விட்டு வஞ்சப்புகழ்ச்சி அணியில் பேச ஆரம்பித்தார்.

 

ரகுராமன், எங்களுக்குத் தெரிந்த சிலர் நீங்கள் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி இருப்பதையும், சாந்தமாய் இருப்பதையும், முகமலர்ச்சியோடு இருப்பதையும் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் தான் உங்களைப் பார்க்க வேண்டும் என்று பாண்டியன் சொன்னதற்கு நானும் சம்மதித்தேன்.”

 

ரகுராமன் தலையசைத்தார். அந்தப் பாராட்டில் அவர் முகமலர்ச்சி சிறிதும் கூடவில்லை. ஷ்ரவன் பாண்டியனைக் காண்பித்து மெல்லச் சொன்னான். “சார் தான் பாண்டியன். யோகாலயத்தின் மேனேஜராக இருக்கிறார்.”

 

ரகுராமன் தலையசைத்தார். பிரம்மானந்தா மனதில் எழுந்த எரிச்சலைக் காட்டிக் கொள்ளாமல் போலிப் புன்னகையுடன் சொன்னார். “உங்களால் எப்படி எல்லா நேரங்களிலும் முகமலர்ச்சியோடு இருக்க முடிகிறது என்று அறிய நாங்கள் ஆவலாக இருக்கிறோம்.”

 

அதை எப்படிச் சொல்வது என்று ரகுராமன் யோசித்தது போல் தெரிந்தது. பிரம்மானந்தா சொன்னார். “உதாரணத்துக்கு, இன்றைக்கு சாயங்காலம் நீங்கள் உங்கள் குடிசைக்கு வெளியே பழைய கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து கொண்டு இருந்தீர்கள். இப்போது யோகாலயத்தில் சொகுசு சோபாவில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்கள். இந்த இரண்டும் ஒன்றா? இல்லையே. அப்படி இருக்கையில் இரண்டும் ஒன்று தான் என்பது போல் எப்படி இருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?”

 

ஷ்ரவனுக்கு பிரம்மானந்தாவின் கேள்வி கேவலமாய்த் தெரிந்தது. எவ்வளவு நாசுக்காக அவர் ரகுராமனின் கீழான வசதி நிலையைச் சுட்டிக் காட்டுகிறார்?

 

ஆனால் ரகுராமன் அப்போதும் அந்தச் சிறுமையை உணர்ந்தவராகத் தெரியவில்லை. அவர் கனிவு குறையாமல் சொன்னார். “இரண்டும் ஒன்று தானே?”

 

பிரம்மானந்தாவுக்குக் கோபம் வந்து விட்டது. “எப்படி ஒன்று என்கிறீர்கள்?”

 

ரகுராமன் சொன்னார். ”சாயங்காலத்தில் என்னைக் கயிற்றுக் கட்டிலில் உட்கார வைத்ததும் இறைவன். இப்போது இந்த சொகுசு சோபாவில் உட்கார வைத்திருப்பதும் இறைவன். இரண்டையுமே இறைவன் தீர்மானித்து உட்கார வைத்த இடங்கள் என்றே நான் பார்க்கிறேன். எல்லாம் அறிந்த இறைவன் தீர்மானிப்பதில்  எப்படி தவறிருக்க முடியும்? எப்படி ஒன்றை நிறையாகவும், இன்னொன்றைக் குறையாகவும் நினைப்பது சரியாகும்?”

 

அவர் சொன்னதைக் கேட்டு ஷ்ரவனுக்கு மயிர்க்கூச்செறிந்தது. ஒரு யோகியின் கோணம் இப்படித் தான் இருக்குமோ? பிரம்மானந்தாவின் முகம் கருத்தது.  


(தொடரும்)

என்.கணேசன்