என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, February 9, 2026

யோகி 142

 

றுநாள் காலை குமரேசன் யோகாலயத்துக்குப் போன போது வெளி கேட்டைத் தாண்டியவுடனே கண்ணனால் நிறுத்தப்பட்டான். “இன்னைல இருந்து நீ வேலைக்கு வர வேண்டாம் மருதகாசி

 

குமரேசன் அதிர்ச்சியடைந்தான். காரணம் அவனுக்குத் தெரியாதது போல் சோகமாகக் கேட்டான். “ஏன் ஜீ?”

 

அதற்கு காரணம் சொல்வது அவசியமில்லை என்பது போல் கண்ணன் வாய் திறக்கவில்லை.  குமரேசன் வேலை போனாலும் அவன் கண்டுபிடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தான். அவனைப் போல் ஒரு தோட்டக்காரன் திடீரென்று நிறுத்தப்பட்டால் எப்படி நடந்து கொள்வானோ, அப்படியே நடந்து கொள்ளத் தீர்மானித்தான். தலையைச் சொறிந்தான். “திடீர்னு நிறுத்தினா நான் எப்படி சமாளிக்கறதுஜீ. நான் புள்ளை குட்டிக்காரன். என் குடும்பம் என் வருமானத்தை நம்பி தான் இருக்கு…”

 

கண்ணன் சொன்னார். “15 நாள் சம்பளம் சேர்த்து தரச் சொல்றேன். வாங்கிட்டு போ.”

 

ஓரளவு மனசமாதானம் அடைந்தவன் போல் குமரேசன் காட்டிக் கொண்டான்.  

 

வழக்கம் போல் தோட்டக்காரர்களுக்கு வேலை ஒதுக்க ஆறு மணிக்குச் சென்ற கல்பனானந்தா மருதகாசி மட்டும் வந்திருக்காததைக் கவனித்தாள். யோசனையுடன் அவள் முன்பக்கம் பார்த்த போது முதல் கேட் அருகிலேயே மருதகாசியும் கண்ணனும் பேசிக் கொண்டிருப்பதை அவள் பார்க்க முடிந்தது. உடனே அவள் பிரச்சினையை உணர்ந்தாள். அவள் பயப்பட்டது போலவே மருதகாசி சைக்கிளுடன் வெளியேறுவது தெரிந்தது. கண்ணன் மட்டும் இரண்டாம் கேட்டைத் தாண்டி வந்தார். கல்பனானந்தாவிடம் அவர் சொன்னார். “மருதகாசியை வேலைல இருந்து நிறுத்திட்டோம். அவன் ஆள் சரியில்லை…”

 

கல்பனானந்தா அந்தத் தகவலால் பாதிக்கப்பட்டது போல் காட்டிக் கொள்ளவில்லை. சரி தான் என்பது போல் அவள் தலையசைத்தாள். ஆனால் ஷ்ரவனிடம் அத்தகவலைத் தெரிவிக்கும் வரை அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. மருதகாசி எதனால் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டான் என்பது அவளுக்குத் தெரியவில்லை. அவர்கள் ஷ்ரவனையும் சந்தேகப்பட்டு இருப்பார்களோ என்ற கவலை அவளுக்கு அதிகம் இருந்தது.  

 

ஷ்ரவன் வேலைக்கு வந்த போது தாழ்ந்த குரலில் அவனிடம் அத்தகவலைத் தெரிவித்தாள். அவனும் அதிர்ந்து போனான். அவனுக்கும் அவளுடைய சந்தேகமே ஏற்பட்டது. பிடிபட்டு விட்டோமோ?

 

ஷ்ரவன் அவளிடம் மெல்ல சொன்னான். “நான் உங்க கிட்ட பேசணும் சுவாமினி.”

 

வேறொரு துறவி அவர்களை நெருங்குவதைப் பார்த்த கல்பனானந்தாஅப்புறம்என்று முணுமுணுத்தாள்.

 

ஷ்ரவன் நகர்ந்தான். வேலை செய்து கொண்டிருக்கையில் கண்காணிப்பவர்களைக் கவனித்தான். அவர்கள் அவனை அதிகமாகக் கண்காணிப்பதைப் போல் தோன்றவில்லை. அவன் மீது சந்தேகம் வந்திருந்தால் கண்காணிப்பு அதிகரித்திருக்க வேண்டும். கூடுதல் சந்தேகம் வந்திருந்தால் இன்னேரம் அவன் இங்கே வேலை செய்து கொண்டிருக்கக் கூட முடியாது. எல்லாம் யோசிக்கையில் குமரேசன் வெளியே நடந்த எதிலோ தான் மாட்டியிருக்க வேண்டும் என்பதை ஷ்ரவன் புரிந்து கொண்டான். அவனை இவர்கள் பின் தொடர்ந்து போய் எதையாவது கண்டுபிடித்திருக்கலாம், அல்லது சந்தேகப்பட்டிருக்கலாம்ஷ்ரவனின் மனம் சிறிது அமைதியடைந்தது. ஆனால் எந்த நேரத்திலும் அவனும் மாட்டிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. இது வரை குமரேசன் அவனைப் பார்க்க முடியாவிட்டால் அவன் மூலமாக ராகவனுக்கு ஷ்ரவன் மாட்டிக் கொண்ட்து தெரிய வரும் வாய்ப்பு இருந்தது. குமரேசன் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டதால் அந்த வாய்ப்பும் இல்லை. ஷ்ரவன் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.   

 

நாளை பெங்களூரில் ஒரு நிகழ்ச்சியில் பேச பிரம்மானந்தாவுக்கு அழைப்பு வந்திருப்பதால், அவர் பேசுவதற்கு குறிப்புகள் எடுத்துத் தரும் வேலை கல்பனானந்தாவுக்கு வந்து சேர்ந்தது. அதனால் அவளுக்கு மதியத்திற்கு முன் ஷ்ரவனிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மாலை தான் எல்லோருடைய வேலையையும் மேற்பார்வை பார்த்துக் கொண்டு அவனிடமும் அவள் வந்தாள்.     

 

ஷ்ரவன் வேலை பார்த்துக் கொண்டே சொன்னான். “சுவாமினி. இனி எந்த நேரத்திலும் என்னையும் அவர்கள் கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி ஒரு வேளை அவர்கள் கண்டுபிடித்தால் நான் வேலைக்கு வராதது மூலம் உங்களுக்குத் தெரிய வரும். அப்படி நான் வேலைக்கு வராவிட்டால் ஒரேயொரு மெயிலை நீங்கள் அனுப்ப வேண்டும்.”

 

கல்பனானந்தா முகத்தில் தெரிந்த கலவரத்தை ஷ்ரவன் பக்கவாட்டில் கவனித்தான். ”பயப்படாதீர்கள் சுவாமினி. நீங்கள் புதிதாய் மெயில் அனுப்பப்போவதில்லை. ஏற்கெனவே வந்திருக்கும் மெயிலுக்கு பதில் அனுப்பப்போகிறீர்கள் அவ்வளவு தான். நீங்கள் அனுப்பும் மெயிலைப் படித்தாலும் அவர்களுக்குச் சந்தேகம் வராது. எப்படி அனுப்புவது என்று சொல்கிறேன். ’க்ஷேமமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்என்று ஆரம்பியுங்கள். அதற்குநான் ஆபத்தில் இருக்கிறேன்என்று அர்த்தம். அதைத் தொடர்ந்து நீங்கள் எழுதும் வாக்கியங்களில் முதல் இரண்டு வார்த்தைகள் அடித்து விட்டு மூன்றாவது வார்த்தையை மட்டும் தான் எங்கள் ஆட்கள் தேர்ந்தெடுத்துப் படிப்பார்கள். மீதி நாளை சொல்கிறேன்.”

 

கல்பனானந்தா அப்போது தான் ஒரு கண்காணிப்பாளன் நெருங்கி வருவதைப் பார்த்தாள். அந்தப் பக்கம் திரும்பாமலேயே அவன் நெருங்கி வருவதை ஷ்ரவன் எப்படிக் கண்டுபிடித்தான் என்பது அவளுக்கு விளங்கவில்லை. இவனிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது.

 

ஒவ்வொரு முறை கண்காணிப்பாளன் வரும் போதும் அவள் நகர்வது அவனுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தலாம் என்று தோன்ற கல்பனானந்தா அன்று நகராமல் அங்கேயே நின்றபடி ஷ்ரவனிடம் சொன்னான். “ஷ்ரவனானந்தா. இந்த வகைச் செடிகள் இன்னும் உயரமாகப் போகக்கூடியவை. இவற்றை உள்ளேயும், வெளிப்புறம் வேலிப்பகுதியில் சற்று குட்டையான செடிகளையும் நட்டால் வெளியேயிருந்து பார்க்கும் போது இரண்டையும் பார்த்து ரசிக்க முடியும், என்ன சொல்கிறீர்கள்?”

 

அதுவும் சரி தான் சுவாமினி. அப்படியே செய்கிறேன்.” ஷ்ரவன் சொன்னான்.

 

கல்பனானந்தா அவசரமில்லாமல் நகர்ந்தாள். கண்காணிப்பாளனுக்கு அவள் பக்கத்துத் தோட்டத்தில் வேறொரு துறவியுடன் பேசுவது கேட்க ஆரம்பித்தது.  எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று சிறிது நேரம் கேட்டு விட்டு அவன் நகர்ந்தான்.

 

ஷ்ரவன் வேலை முடிந்து அறைக்குத் திரும்பும் போது கண்ணன் வழியில் கிடைத்தார். அவர் அவனைப் பார்த்து நட்புடன் புன்னகைத்த போது அவன் கண்டுபிடிக்கப்படாதது மேலும் உறுதியாகியது. ஆனால் இந்தப் பாதுகாப்பான நிலை எத்தனை நாட்களோ?

 

மாலை சத்சங்கத்துக்கு முன் நூலகத்தில் இருந்து நூல் ஒன்றைப் படிக்க எடுத்து வருவதாக சித்தானந்தா சென்றபோது தான் ஷ்ரவனுக்கு நாளை நூலகத்தில் கல்பனானந்தாவைச் சந்திப்பது நல்லது என்று தோன்றியது. அவன் அவசர அவசரமாக ஒரு துண்டுச் சீட்டில், ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆன்மிக மையம், லீலாவதி என்ற பெயர்களில் உருவாக்கி வைத்திருந்த மின்னஞ்சல் முகவரிகளை எழுதினான்.

 

முக்தானந்தா அவன் புதிதாய் எதையோ செய்யவிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாலும் அவராக எதுவும் கேட்கவில்லை. ஷ்ரவன் அவரிடம் குமரேசன் மேல் சந்தேகம் கொண்டு அவர்கள் வேலையிலிருந்து நிறுத்தி விட்டதைத் தெரிவித்தான். புன்முறுவலுடன் அவனையும் அவர்கள் கண்டுபிடித்து விடும் வாய்ப்பும் இருக்கின்றது என்று அவன் சொன்ன போது அவர் வேதனையுடன் சொன்னார். “இந்த விஷப்பரிட்சை வேண்டாம் ஷ்ரவன். நீ திரும்பிப் போய்விடு. இறந்தவர்கள் திரும்பி வரப்போவதில்லை.”

 

ஷ்ரவன் சொன்னான். “யாராவது இவர்களை நிறுத்தித் தான் ஆக வேண்டும் சுவாமிஜி. சைத்ராவையோ, டாக்டர் வாசுதேவனையோ, இங்கே புதைக்கப்பட்டவனையோ திரும்பிவர வைக்க முடியாது தான். ஆனால் இவர்களைப் போல இன்னும் எத்தனையோ பேர் பலியாவதை என்னால் தடுக்க முடியும். தடுக்க வேண்டும். பயந்து, அடங்கி, அனுசரித்துப் போகிறவர்களால் எந்த மாற்றமும் நடந்து விடாது சுவாமிஜி. தவறை எதிர்த்து தைரியமாக நிற்கிறவர்களால் தான் எந்த நல்ல மாற்றமும் நடக்க முடியும்.”

 

அவருக்கு அவன் சொல்வது முற்றிலும் உண்மை என்று புரிந்தது. ஆனால் வாழ வேண்டிய இந்த நல்ல இளைஞன், இவர்களிடம் பலியாவதில் அவருக்கு வருத்தம் இருக்கிறது. அவர் ஒரு தந்தையின் பாசத்தோடு, வேதனையோடு அவனைப் பார்த்த போது அவன் புன்னகையுடன் சொன்னான். “எல்லா ஆபத்துகளுக்கும் நான் தயாராகத் தான் வந்திருக்கிறேன் சுவாமிஜி.   ஒவ்வொன்றிலிருந்தும் தப்பிக்க முன்கூட்டியே ஒரு வழி ஏற்படுத்திக் கொண்டு தான் வந்திருக்கிறேன். அதனால் அவ்வளவு சுலபமாக இவர்கள் என்னைக் கொன்றுவிட முடியாது. அதையும் மீறி நான் பலியாக வாய்ப்பு இருக்கிறது என்பதை நான் தெரிந்தே வைத்திருக்கிறேன். அப்படி ஒருவேளை நான் இறந்தாலும் இவர்கள் அவ்வளவு சுலபமாக தப்பித்து விட முடியாது. அதுமட்டும் உறுதி.”

 

அவன் சொன்ன தைரிய வார்த்தைகளால் அவர் சிறிது தைரியம் அடைந்தார் என்றாலும் கடைசியாக அவன் சொன்னது அவரைக் கஷ்டப்படுத்தியது. அடுத்த பிறவியில் அவர் சம்சார வாழ்க்கையில் ஈடுபடுபட்டால் இவனைப் போன்ற ஒரு மகன் வேண்டும் என்று ஆசைப்பட்டபடி அவனை அன்புடன் பார்த்தார். பின் குரல் கரகரக்கச் சொன்னார். “என் பிரார்த்தனை எப்போதும் உன்னுடன் இருக்கும் ஷ்ரவன்.”


(தொடரும்)

என்.கணேசன்



Thursday, February 5, 2026

சதுரங்கம் 4


ர்ஜுனும், கீதாவும் நர்மதாவின் வீட்டருகில் நீண்ட நேரம் இருந்தார்கள். நர்மதாவின் தற்கொலை குறித்து தங்கள் பத்திரிக்கைகளில் பிரசுரிக்க குறிப்புகளையும், புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்கள். நர்மதா வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரித்ததில் முக்கியமாய்ச் சொல்லும்படியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. பணக்காரர்கள் அதிகமாக வசிக்கும் அந்தப் பகுதியில் யாரும் யாருடனும் அதிகம் பேசிக் கொள்வதும் இல்லை என்பது தெரிந்தது. நர்மதாவின் வேலைக்காரியை வீட்டிற்குள்ளே போலீஸார் விசாரித்துக் கொண்டு இருந்ததால் அவளிடம் பேச முடியவில்லை. வேலைக்காரியைப் பார்த்துப் பேச அவர்களுடன் மற்ற நிருபர்களும் காத்திருந்தார்கள்.

 

அர்ஜுன் கீதாவிடம் சொன்னான். “பசிக்குது. காலைல சாப்பிடல.”

 

ஏன்?”

 

டிபன் ரெடியாயிட்டிருந்துச்சு. நீ கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னவுடனே நான் உடனே கிளம்பி இங்கே வந்துட்டேன். நீ சாப்பிட்டியா?”

 

இல்லை. வீட்டுல டிபன் ரெடியாத் தான் இருந்துச்சு. ஆனா நான் சாப்பிடலை. எங்கம்மா கூட சண்டை.”

 

அர்ஜுன் புன்னகையுடன் கேட்டான். “ஏன்?”

 

எப்ப பார்த்தாலும் அட்வைஸோ அட்வைஸ். என் ரூமை நான் எப்படி வெச்சிருந்தா அவங்களுக்கென்ன? வயசுப் பொண்ணு இப்படி மோசமா வெச்சிருக்கறதான்னு ஒரே திட்டு

 

அர்ஜுனின் புன்னகை விரிந்தது. ”சரி வா. பக்கத்து ஓட்டல்ல சாப்பிட்டுட்டு வந்துடலாம்.”

 

இருவரும் ஓட்டலை நோக்கி நடக்க ஆரம்பிக்கையில் கீதா அவனைப் பார்த்து லேசாகப் புன்னகைத்து விட்டுச் சொன்னாள். “உன்னை மாதிரி பசங்களுக்கு பிரச்சனையே இல்லை. அம்மாக்களே எல்லா வேலைகளையும் பண்ணிடுவாங்க. பொண்ணுகளுக்குத் தான் அதைச் செய், இதைச் செய்யின்னு தொந்தரவு. உன் தங்கச்சியையும் உங்கம்மா அப்படி தான் திட்டுவாங்களா?”

 

நித்யா எங்கப்பா மாதிரி. இருக்கற இடமும், செய்யற வேலையும் எப்பவுமே ஒழுங்காவும், சுத்தமாவும் இருக்கும். அதனால அம்மாக்கு அந்த விஷயத்துல அவளைத் திட்ட வாய்ப்பே இல்லை.”

 

கீதா சொன்னாள். “உன் தங்கச்சி மாதிரி பொண்ணுங்க தான் என்னை மாதிரி பொண்ணுங்களுக்கு எதிரிகளே. ’அவளைப் பாரு. அவளும் உன்னை மாதிரி பொண்ணு தானே. அவ எவ்வளவு ஒழுங்கா சுத்தமா வெச்சிருக்கா பாரு. அவளப் பார்த்தாவது கத்துக்கோன்னு ஒரு ஸ்டேண்டர்ட் டயலாக் எப்பவும் வரும். அம்மா கிட்ட திட்டு வாங்காத பொண்ணு ஒருத்தி இருக்கான்னா அது ஆச்சரியம் தான்.”

 

அர்ஜுன் சொன்னான். “அவளும் திட்டு வாங்குவா. ஆனா அது வேற விஷயங்களுக்காய் இருக்கும்....”

 

ஓட்டலுக்குள் நுழைந்து அமர்ந்தார்கள். டிபன் ஆர்டர் செய்த பின் கீதா சொன்னாள். “ஆனா உன்னை உங்கம்மா எதுக்காகவும் அதிகமா திட்டமாட்டாங்க தானே.”

 

அர்ஜுன் தலையசைத்தான். ‘பேசினால் தானே திட்டுவதற்கு!’ கீதா சொன்னாள். “எல்லா வீட்டுலயும் பசங்களுக்கு நிறைய தனி சலுகைகள், அம்மா கிட்ட இருந்து செல்லம், எல்லாமே...”

 

அர்ஜுன் விரக்தியுடன் புன்னகைத்தான். வெளியே சொல்லிக் கொள்ளவும் முடியாத கஷ்டங்களின் கனம் அதிகம்...

 

சாப்பிடும் போது கீதா தன் தம்பிக்கு வீட்டில் அளிக்கப்படும் கூடுதல் சலுகைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். அர்ஜுனின் மன கனம் கூடிக்கொண்டே போய் ஒரு கட்டத்தில் சொன்னான். “கீதா, சும்மா புலம்பாம வேற எதாவது உருப்படியா பேசறியா

 

கீதா அவனைப் பரிதாபமாய் பார்த்துச் சொன்னாள். “ரொம்பப் புலம்பறேனா. எல்லாம் எங்கம்மா இன்னைக்குக் காலைலயே ஆரம்பிச்சு வெச்சது. சாரி அர்ஜுன். இனி பார். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் இருக்கப் போறேன்...”

 

அர்ஜுன் புன்னகைத்தான். அவள் நாளையும் புலம்பத் தான் போகிறாள். ஆனால் எதிர்க்கருத்து சொன்னாலே முகமும், மனமும் மாறி விடும் உலகில், எதிர்க்கருத்தாக இருந்தாலும், அது சரி என்று தோன்றினால் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும் இவள் குணம், பலரிடமும் இல்லாத அரிதான குணம். அவன் தங்கைக்கு அடுத்தபடியாக, பழக மிக சௌகரியமாக உணரும் பெண் இவள் தான். ஒளிவு மறைவு இல்லாமல், ஈகோ இல்லாமல் இருப்பதற்காகவே அவனுக்கு அவளை மிகவும் பிடிக்கும்.   

 

சாப்பிடுகையில் இருவரும் அவர்களுடைய பரஸ்பர நண்பர் ஒருவரது வீட்டில் நடந்த ஒரு சுவாரசிய நிகழ்வைப் பற்றிப் பேசினார்கள். அவர்கள் சாப்பிட்டு விட்டு மறுபடியும் நர்மதா வீட்டுக்கு வந்த போது நர்மதா வீட்டு வேலைக்காரி வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.

 

பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களின் நிருபர்கள் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். திடீரென்று முக்கியத்துவம் கிடைத்த புளங்காகிதத்தில் அவள் இருந்தது, பார்க்கையிலேயே தெரிந்தது. பலரும் அவளிடம் பல கேள்விகள் கேட்க அவள் விரிவாகப் பதில் சொன்னாள்.

 

என் பெயர் சாவித்திரிங்க. நான் நர்மதாம்மா கிட்ட நாலு வருஷமா வேலை பாக்கறேங்க.  என் கிட்டே ரொம்ப அன்பாய் இருப்பாங்க...”

 

இது பொய். எத்தனை வேலை செய்தாலும் நர்மதாவைத் திருப்திப்படுத்த முடியாது என்பது தான் சாவித்திரியின் அனுபவம். நர்மதா எதிலும் குற்றமும், குறையும் சொல்லிக் கொண்டே இருப்பாள், அடிக்கடி எரிந்து விழுவாள் என்பது தான் நிஜம். ஆனால் இறந்து போனவர்களைப் பற்றி கெட்டதாய் எதுவும் சொல்லக் கூடாது என்பது சாவித்திரியின் உறுதியான அபிப்பிராயம். ஏனென்றால் இறந்தவர்கள் தெய்வமாகி விடுகின்றார்கள் என்று அவள் தாய் அடிக்கடி சொல்வாள். அதனால் நர்மதாவின் தவறுகளைச் சொல்வது தெய்வக்குற்றம் ஆகி விடலாம்...

 

“... ரெண்டு நாளாவே நர்மதாம்மா ஒரு மாதிரியா தான் இருந்தாங்க. ஆனாலும் இப்படி முடிவெடுப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லைங்க...” சொல்லச் சொல்ல சாவித்திரியின் கண்கள் கலங்கின. அழுகை, கோபம், சிரிப்பு, சோகம் எல்லாமே நொடிப்பொழுதில் அவளுக்கு வந்து விடும். அவ்வப்போது உணரும் உணர்ச்சிகளே அந்தந்த சமயங்களில் பிரதானம் என்று நினைக்கும் பெரும்பாலான அடித்தள மக்களின் மனநிலையில் இருப்பவள் தான் அவளும். அதை அவளை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அர்ஜுன் புரிந்து கொண்டான். அவன் சாவித்திரியைப் போன்ற பலரைப் பார்த்திருக்கிறான். ஒரே மனநிலையில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணி வாழ்க்கையை அவர்கள் சிக்கலாக்கிக் கொள்வதில்லை.

 

அவளுக்குச் சொல்ல அதிகம் இருக்கவில்லை. வெளி கேட் மற்றும் உள்கதவின் சாவிகள் அவளிடமும், நர்மதாவிடமும் தான் இருக்கின்றன. சில சமயங்களில் நர்மதா வெளியூர் சென்றிருப்பாள். சில சமயங்களில் காலையில் மிகத் தாமதமாகத் தான் எழுந்திருப்பாள். அதனால் சாவித்திரி தன்னுடைய நேரத்தில் வந்து வீட்டைச் சுத்தம் செய்து விட்டுப் போக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இன்றும் அவள் வீட்டுக்குள் போனவுடன் நர்மதாவைப் பார்க்கவில்லை. வீட்டைப் பெருக்கிக் கொண்டே நர்மதாவின் அறைக்கும் வந்த போது தான் அவள் நர்மதா மின்விசிறியில் கயிறு கட்டி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறாள். பின் தான் போலீஸுக்குப் போன் செய்திருக்கிறாள்.

 

நர்மதாவின் நெருங்கிய உறவினர்கள், நட்புகள் பற்றி நிருபர்கள் கேட்டார்கள். சாவித்திரி அறிந்த வகையில் நர்மதாவின் தங்கை ஒருத்தி ஆஸ்திரேலியாவில் இருக்கிறாள் என்றும் வேறு உறவினர்கள் பற்றித் தனக்குத் தெரியாது என்றும் சொன்னாள். நட்பின் வகையில் நர்மதாவின் வீட்டுக்கு விமல் என்பவர் எப்போதாவது வருவார் என்றும் அவள் சொன்னாள்.

 

எல்லாம் சொல்லி முடித்து மைக், கேமிராக்கள் விலகிய போது சாவித்திரி ஆர்வத்துடன் ஒரு நிருபரிடம் கேட்டாள். ”டிவில எத்தனை மணிக்கு இதைக் காட்டுவீங்க?”

 

அந்த நிருபருடன் அர்ஜுனும் புன்னகைத்தான். அவன் பார்வை மேலோட்டமாய் அங்குள்ளவர்களைப் பார்த்தபடி உலாவி, திடீரென்று ஓரிடத்தில் நின்று தங்கியது. அந்த இடத்தில் இருந்த நபரை அர்ஜுன் கூர்ந்து கவனித்தான்.

 

சிறிது நேரத்தில் வீட்டுக்குள்ளிருந்து விசாரணை போலீஸ் அதிகாரி வர அவன் பார்வை அவர் பக்கம் நகர்ந்தது. வந்த போலீஸ் அதிகாரி நிருபர்களிடம் சொன்னார்.  வாழ்க்கை வெறுத்து விட்டது. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். இதற்கு யாரும் காரணமல்லஎன்று நர்மதா எழுதியிருப்பதாக நம்பும் ஒரு கடிதம் கிடைத்திருக்கிறது. வீட்டிலிருந்து எந்தப் பொருளும் காணாமல் போன மாதிரி தெரியவில்லை. அதனால் தற்கொலை என்று தான் இப்போதைக்கு நினைக்க வேண்டியிருக்கிறது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கிடைத்த பின் தான் எதையும் உறுதியாகச் சொல்ல் முடியும்.”

 

அர்ஜுன் கேட்டான். “சிசிடிவி கேமிரா ரெக்கார்டிங் எல்லாம் பார்த்தீங்களா சார்?”

 

அந்தக் கேள்வி அவரைத் தர்மசங்கடப்படுத்தியது போல் தெரிந்தது. அவர் அவசரமாய்ச் சொன்னார். “அதெல்லாம் இனிமே தான் நிதானமாய் பார்க்கணும். இப்போதைக்கு இவ்வளவு தான்.”

 

நிருபர்கள் கலைய ஆரம்பித்தார்கள். கீதாவிடம் அர்ஜுன் மெல்ல சொன்னான். ”இது தற்கொலை மாதிரி தெரியலை கீதா 

 

கீதா திகைத்தாள்.

 

(தொடரும்)

என்.கணேசன்



Monday, February 2, 2026

யோகி 141

 

குமரேசன் அன்று காலை வேலைக்கு வந்த போது துறவிகள் யாரும் வேலைக்கு வந்திருக்கவில்லை. அவர்கள் ஒன்பது மணிக்கு மேல் தான் வருவார்கள். அவனுக்குச் செய்ய வேண்டிய வேலையை ஒதுக்கிய கல்பனானந்தா அவனிடம் ஒரு பரபரப்பை உணர்ந்தாள். அவனுக்கு ஷ்ரவனிடம் பேச என்னவோ இருக்கிறது என்பது அவளுக்குப் புரிந்தது. அது சரி என்று நிரூபிப்பது போல் குமரேசன் துறவிகள் வரும் நேரம் நெருங்க நெருங்க அவ்வப்போது அவர்கள் வரும் திசையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

ஷ்ரவன் வேலைக்கு வந்தவுடனேயே அவனிடம் கல்பனானந்தா தாழ்ந்த குரலில் சொன்னாள். “மருதகாசிக்கு உங்களிடம் எதோ சொல்ல வேண்டி இருக்கிறது என்று நினைக்கிறேன் ஷ்ரவன். அவர் வேலையும், உங்கள் வேலையும் முடிகிற சமயத்தில் பக்கத்தில் வரும் படி உங்களுக்கு வேலையை ஒதுக்குகிறேன்

 

நன்றி சுவாமினிஎன்று சொல்லி ஷ்ரவன் நகர்ந்தான். ஷ்ரவன் வேலையை ஆரம்பித்தவுடனேயே அவனைத் தூரத்திலிருந்து பார்த்த குமரேசன், ஷ்ரவன் அவனைக் கவனித்த போது சோம்பல் முறித்து விட்டுத் தன் வேலையைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தான்.

 

சுற்றி வந்து கொண்டிருந்த மூன்று கண்காணிப்பாளர்களுக்கும் எந்த விதமான சந்தேகமும் வராதபடி அவர்கள் இருவரும் தங்கள் வேலையை சிரத்தையுடன் செய்து கொண்டிருந்தார்கள். இருவரும் இடையே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூட இல்லை.

 

கல்பனானந்தா சொன்னபடி ஷ்ரவன் சாப்பிடக் கிளம்பும் நேரத்திற்கு சற்று முன் இருவரும் அருகே வேலை செய்யும் படி நேர்ந்தது. சற்றுத் தொலைவில் இருந்த கண்காணிப்பாளனுக்குத் தெரியாதபடி, குமரேசன் குனிந்து வேலை செய்து கொண்டே தாழ்ந்த குரலில் சொன்னான். “சேலம் சந்திர மோகன் காணாமல் போன நான்கு நாள் கழிச்சு, இங்கே வேலை செய்துகிட்டிருக்கும் கலிப்பாக்கம் சுந்தரகுருங்கற ஆள் பேரில் தன்னோட சில நிலங்களை ரொம்ப கம்மி விலையில் விற்றிருக்கார்.

 

ஷ்ரவன் கேட்டான். “ரெஜிஸ்ட்ரர் ஆபிஸ்ல செக் பண்ணீங்களா?”

 

ஆமாம். ஆனால் அங்கே சந்திரமோகன் நேர்ல போகலை. யாரோ ஒரு பவர் ஆஃப் அட்டர்னி மூலம் இந்த விற்பனை நடந்திருக்கு.” சொல்லிவிட்டு குமரேசன் போய் விட்டான். இருவரும் பேசும் போது ஒரு முறை கூட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவுமில்லை.

 

சைத்ரா பார்த்த கொலை பற்றியும், பின் ஆனதைப் பற்றியும், ஷ்ரவன் இரண்டு நாட்களில் சிறிது சிறிதாக கல்பனானந்தாவிடமிருந்து அறிந்து கொண்டிருந்தான். எப்போதும் ஓரிரு நிமிடங்களுக்கு மேல் கல்பனானந்தா அவன் அருகில் இருக்கவில்லை. அப்படி இருந்ததும் அடிக்கடி நிகழவில்லை. மற்றவர்களை விட அவனிடம் அதிகம் பழகுவது போல் தெரியாமல் அவள் மிகக்கவனமாகப் பார்த்துக் கொண்டாள். 

 

கல்பனானந்தா சொன்னதையும், குமரேசன் சொல்வதையும் வைத்துப் பார்க்கையில், சைத்ரா பார்த்த கொலை சந்திரமோகனுடையதாய் இருந்திருக்குமோ என்ற சந்தேகம் மெல்ல ஷ்ரவனின் மனதில் எழுந்தது.

 

குமரேசன் வேலையை முடித்துக் கொண்டு கிளம்பினான்.  மதிய வெயில் மண்டையைப் பிளப்பது போல் கடுமையாக இருந்தது. ஏழை தோட்டத் தொழிலாளியாகப் போட்ட வேடத்திற்கு ஏற்ற மாதிரி சைக்கிளில் போவது இந்தக் கடும் வெயிலில் சித்திரவதை தான். இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலமாகச் சீக்கிரம் ஷ்ரவனின் துப்பறியும் வேலை முடிந்து விட்டால், பழையபடி வழக்கமான வேலையைப் பார்க்கலாம் என்று நினைத்தபடியே சென்று கொண்டிருக்கையில் எதிரில் அவனுடைய போலீஸ் நண்பன் ஒருவன் பைக்கில் வந்தான். கூர்ந்து பார்த்துக் கொண்டே வந்த அவன்நண்பா என்ன கோலம்டா இது…” என்று சத்தமாகச் சொல்லி பைக்கை குறுக்கே நிறுத்தினான்.

 

நண்பனைப் பார்த்துப் புன்னகைத்த குமரேசன் அவனிடம் பேசுவதற்கு முன், இயல்பான எச்சரிக்கையின் காரணமாய் சுற்றிலும் பார்த்த போது சில அடிகள் தள்ளி காரிலிருந்து கண்ணன் அவர்களையே பார்ப்பது தெரிந்தது. திடுக்கிட்ட குமரேசன் என்ன செய்வது என்று புரியாமல் ஒரு கணம் திகைத்தான். அவனுடைய நண்பன் சுந்தர் போலீஸ் சீருடையில் இருந்தது நிலைமையை மேலும் ஆபத்தாக்கியிருப்பது அவனுக்குப் புரிந்தது.

 

எல்லாம் காலம் செய்த கோலம் தான் நண்பாஎன்று குமரேசனும் சத்தமாய்ச் சொல்லி விட்டு பல்லைக் கடித்துக் கொண்டு தாழ்ந்த குரலில் சொன்னான். “டேய் நான் மாறு வேஷத்துல இருக்கேன். கொஞ்சம் அடக்கி வாசி. பக்கத்துல ஒருத்தன் கார்ல இருந்து பார்த்துகிட்டேயிருக்கான். திரும்பாதே. யதார்த்தமாய் எதாவது பேசு.”

 

சுந்தர் நிலைமையைப் புரிந்து கொண்டான்.என்னடா இந்த நேரத்துல இந்த வெயில்ல சைக்கிள்ல போயிட்டிருக்கே

 

யதார்த்தமாய் பேசச் சொன்னால் வில்லங்கமாய் பேசுகிறானே என்று எண்ணிய குமரேசன் சமாளித்தான். “உனக்கென்னடா போலீஸ் உத்தியோகம். வசதியாய் பைக்ல போறே. நான் தோட்டக்காரன். சைக்கிள் தான் கதி. நான் வெயில் நிழல் பார்க்க முடியுமா. இப்ப தான் வேலை முடிஞ்சு போறேன். வீட்டுல எல்லாம் சௌக்கியம் தானே?’

 

சௌக்கியம் நண்பா.” என்ற சுந்தர், தானும் நண்பன் காட்டிய வழியில் சமயோசிதமாய்ப் பேச முயற்சி செய்தான். “அதைச் சொல்லலைடா. வெயில் குறையற வரைக்கும் வெய்ட் பண்ணி கிளம்பியிருக்கலாமேன்னு தான் கேட்டேன்.”

 

ரெண்டு மணிக்கு தான் டூட்டி முடியுது. நான் என்னடா பண்றது?”

 

சுந்தருக்கு அதற்கு மேல் எப்படிப் பேச்சைக் கொண்டு போவது என்று தெரியவில்லை. “சரிடா. எனக்கும் ட்யூட்டிக்கு நேரமாச்சு. இன்னொரு நாள் பேசுவோம். சீக்கிரம் வீடு போய்ச் சேருஎன்று சொல்லி விட்டு பைக்கில் வேகமாகப் போனான்.

 

குமரேசன் கண்ணனைப் பார்த்ததாகக் காட்டிக் கொள்ளாமல் தானும் கிளம்பினான்.

 

கண்ணனும் காரைக் கிளப்பினார். அவர் அங்கிருந்த பெட்டிக் கடையில் பீடா வாங்கிக் கொண்டு காரில் ஏறிக் கிளம்புகிற நேரத்தில் தான் எதிரில் வந்து கொண்டு இருந்த மருதகாசியைக் கவனித்தார். மருதகாசி அவர் காருக்கருகே வருகையில் தான் ஒரு போலீஸ்காரன் மருதகாசியை இடைமறித்துநண்பா என்ன கோலம்டா இது…” என்று சொன்னது அவர் காதில் விழுந்தது.

 

மருதகாசி அவரைப் பார்த்து விட்டதையும் அவர் கவனித்தார். அதற்குப் பிறகு அவர்கள் பேசிக் கொண்டது இயல்பாய் இருப்பது போல் தோன்றினாலும் ஏதோ ஒன்று இடித்தது. அதாவது பின்பு பேசியது எதுவும், ஆரம்பத்தில் அந்த போலீஸ்காரன் சொன்னநண்பா என்ன கோலம்டா இது…”க்கு பொருந்துகிற மாதிரி அவருக்குத் தோன்றவில்லை.  வித்தியாசமான தோற்றத்தில் வந்தால் தானே இப்படிக் கேட்கத் தோன்றும்?   

 

அவர் யோகாலயத்துக்கு வந்து பாண்டியனிடம் விஷயத்தைச் சொன்ன போது பாண்டியன் யோசித்தார். ஒரு தோட்டக்காரனுக்கும், ஒரு போலீஸ்காரனுக்கும் இடையே நட்பு இருக்கக்கூடாது என்பதில்லை. இருவரும் அக்கம்பக்கத்தில் வசித்திருக்கலாம். அல்லது பள்ளியில் ஒன்றாய் படித்து பின் ஒருவன் படிப்பு வராமல் நின்று தோட்டக்காரனாய் ஆகியிருக்கலாம். ஆனாலும் அந்தப் பழைய நட்பு தொடர்ந்திருக்கலாம். எல்லாம் சரி தான். ஆனால் அந்தப் போலீஸ்காரன்என்ன கோலமிது?” என்றும்ஏன் இந்த வெயில் நேரத்தில் சைக்கிளில் போய்க் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டதும் அவருக்கும் இயல்பாய் படவில்லை. ஒருவேளை மருதகாசி போலீஸ் ஒற்றனோ?

 

கண்ணன் இன்னொரு விஷயத்தையும் நினைவு கூர்ந்தார். “ஒரு நாள் ஏதோ ஒரு சீட்டுல இருந்த போன் நம்பரையும் அவன் வெறிச்சு பார்த்துகிட்டு இருந்திருக்கான். அந்தப் போன் நம்பரை அடிச்சுப் பார்த்தப்போ, அப்படி ஒரு நம்பர் இல்லவே இல்லைன்னு தெரிஞ்சுது. ஆனாலும் இன்னைக்கு நடந்ததையும் வெச்சுப் பார்க்கறப்ப அவன் மேல சந்தேகம் வருது.”

 

அதைக் கேட்ட பிறகு பாண்டியன் அதிகம் யோசிக்கவில்லை. “அப்படின்னா அவனை உடனடியாய் வேலையிலிருந்து நிறுத்திடு கண்ணன். அவன் நல்லவனாவே இருந்துட்டு போகட்டும். சந்தேகத்தைக் கிளப்பற ஆள்கள் நமக்கு வேண்டவே வேண்டாம்என்று பாண்டியன் தீர்மானமாகச் சொன்னார்.


(தொடரும்)

என்.கணேசன்



Thursday, January 29, 2026

சதுரங்கம் 3

 

ர்ஜுனின் சிறப்புக் கட்டுரை ஒன்று அவன் நிருபராக வேலை செய்யும் விடிவெள்ளி பத்திரிக்கையில் அன்று வந்திருந்தது. ’சமூகத்தில் பெருகி வரும் மோசடிகளும், குற்றங்களும்என்ற தலைப்பில் அவன் ஒரு ஆழமான கட்டுரை எழுதியிருந்தான். முக்கியமாக பொதுமக்கள் அந்த மோசடிகள், குற்றங்களில் பாதிக்கப்படாமல் இருப்பது எப்படி என்பதை சிறப்பான வகையில் அலசி எழுதி இருந்தான். எத்தனை தான் எழுதியிருந்தாலும், ஒவ்வொரு முறையும் பத்திரிக்கையில் அவன் பெயரையும், புகைப்படத்தையும் பார்க்கையில் ஏற்படும் மகிழ்ச்சியே தனி தான்.

 

அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். அந்த மகிழ்ச்சியை யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவனுக்கு ஆவலாக இருந்தது. அம்மா பானுமதி தான் ஹாலில் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள். அவளிடம் சொல்வதும், சுவரிடம் சொல்வதும் ஒன்று தான். எந்தப் பாதிப்பும் இருக்காது. அப்பா ஞானமூர்த்தியை அவன் தேடினான். அவர் பூஜையறையில் தியானத்தில் இருப்பது தெரிந்தது. அரசியல் கட்சித் தலைவர்களில் தினமும் தியானம் செய்பவர் இவர் ஒருவராகத் தான் இருக்க முடியும். தியானம் என்றால் பெயருக்குப் போய் உட்கார்ந்து நேரத்தை நகர்த்தும் நபர் அல்ல அவர். பல நேரங்களில் சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவிற்கு அதில் மூழ்கி விடுவார்.  அர்ஜுனும் அவரைப் பார்த்து தியானம் செய்யும் முயற்சியில் ஒரு காலக்கட்டத்தில் ஈடுபட்டிருக்கிறான். சாதாரணமாக நினைவுக்கு வராத தேவையில்லாத நினைவுகள் எல்லாம் அந்த சமயங்களில் தான் ஒன்று திரண்டு படையெடுத்து வரும். சில நாட்களில் அவன் தியானத்திற்கு விடை கொடுத்து விட்டான். அவன் அதற்குச் சரிப்பட்டு வரமாட்டான்.

 

அப்பாவிடம் அந்த கட்டுரையைக் காண்பித்து அவருடைய கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. அவரிடமிருந்து எப்போதுமே விருப்பு வெறுப்பில்லாத, அலங்காரச் சொற்கள் சேர்க்காத உண்மையான கருத்துக்கள் வரும்.  வார்த்தைகளில் கடுமையோ, இகழ்ச்சியோ இருக்காதே ஒழிய, எதிர்மறைக்கருத்துக்களையும் நேரடியாகச் சொல்லத் தயங்காதவர் அவர். அதுவும் வீட்டில் மட்டுமல்ல, பொதுவெளியிலும் அவர் அப்படித் தான். எந்த அரசியல்வாதியும் செய்யத் துணியாத செயல் அது. அரசியலில் தோல்வி அடையவும், காணாமல் போகவும் அந்த ஒரு குணாதிசயம் போதும். அவர் வெற்றிகரமான அரசியல்வாதி அல்ல என்றாலும் இன்னமும் காணாமல் போகாமல் அரசியலில் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பது அவன் அடிக்கடி ஆச்சரியப்படும் விஷயம்.      

 

அடுத்ததாக அந்த வீட்டில் இருப்பவள் தங்கை நித்யா தான். இன்று அவள் கல்லூரிக்கு விடுமுறை நாள். அதனால் ஒன்பது மணியாகாமல் எழுந்திருக்க மாட்டாள். நேற்று நள்ளிரவு வரை அவள் படித்துக் கொண்டிருந்தாள் என்பதும் அவனுக்கு நினைவு வந்தது. அவளிடம் அந்தக் கட்டுரையைக் காட்டினால், பத்திரிக்கையில் அவளுடைய அண்ணனின் புகைப்படத்தையும், பெயரையும் பார்த்தே முகம் மலர்வாள். அடிக்கடி அண்ணனைக் கிண்டல் செய்பவளும், அவனிடம் சண்டை போடுபவளும் அவள் தான் என்றாலும் அவளைப் பொருத்த வரை அவள் அண்ணனைப் போல உலகத்தில் யாருமில்லை. தங்கையை நினைக்கையிலேயே அர்ஜுனின் முகம் மென்மையாகியது.

 

அவனுடைய அலைபேசி இசைத்தது. அழைத்தது அவனுடைய தோழி கீதா.  இன்னொரு பத்திரிக்கையில் நிருபராக இருப்பவள். ஏதாவது முக்கியமான பரபரப்பான செய்தி இருந்தால் ஒழிய அவள் இந்த நேரத்தில் அலைபேசியில் அழைத்துப் பேசுபவள் அல்ல. அர்ஜுன் பரபரப்புடன் அலைபேசியை எடுத்துப் பேசினான். முன்னாள் பிரபல நடிகை நர்மதா தற்கொலை செய்து கொண்டிருப்பதாக செய்தி வந்து கொண்டிருப்பதை கீதா தெரிவித்தாள்.

 

அர்ஜுன் அவசர அவசரமாக உடைமாற்றிக் கொண்டு கிளம்பினான்.  அவன் எப்போதும் அம்மாவிடம் சொல்லி விட்டுப் போவதில்லை. பானுமதி மகனிடம் கேட்டாள். “காலை டிபனுக்கு வருவாயா, வர மாட்டாயா?”

 

வெளியே சாப்பிட்டுக்கறேன்.” என்றான் அர்ஜுன்.

 

அவள் ஒன்றும் சொல்லவில்லை. தலையையாவது அசைத்தாளா, இல்லையா என்று அவன் பார்க்கவில்லை.  இந்தக் கேள்வியை அவள் கேட்டது கூட, அவனுக்கும் சேர்த்து சமைக்கலாமா வேண்டாமா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளத் தான். உண்மையான அக்கறையால் கேட்கப்பட்ட கேள்வி அல்ல அது. அவனுடைய நண்பர்களின் வீட்டில் எல்லாம் அவர்களுக்கு அவர்களுடைய அப்பாவுடன் தான் பிரச்சினை இருந்தது. அப்பாவுடன் தான் அவர்களுடைய பேச்சு வார்த்தை குறைவாக இருக்கும். கிட்டத்தட்ட எல்லோரும் அம்மாவின் செல்லங்கள் தான். இந்த வீட்டில் தான் எல்லாம் எதிர்மாறாக இருக்கிறது. அவனுக்குப் பலசமயங்களில் அவள் அவனைப் பெற்றவள் அல்லவோ என்ற சந்தேகம் வந்திருக்கின்றது. அவன் அப்பாவின் மூத்த தாரத்தின் குழந்தையாக இருக்கலாமோ என்று கூட நினைத்து இருக்கிறான். அப்படியெல்லாம் இல்லை, அவள் தான் அவனைப் பெற்றவள் என்று தெரிந்த பிறகும், அதில் ஏதாவது தில்லுமுல்லு இருக்குமோ என்று கூட அவன் சந்தேகப்பட்டிருக்கிறான். ஆனால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அவன் அவள் மகன் தான். ஏனென்றால் அவளுடைய முகச்சாயல் தான் அவனுக்கு இருந்தது. அவளுடைய கண்கள் போலவே அவனுடைய கண்களும் மிக அழகானவை.

 

இயல்பாகவே அவள் உணர்வுகளை அதிகமாய்க் காட்டாதவள். அவள் முகத்தில் வெறுமை தான் அதிகம் தெரியும். ஆனால். அவள் தன் கணவரிடமும், மகளிடமும் ஓரளவு உயிரோட்டத்துடன் பழகக்கூடியவள். நித்யாவை அவள் பார்க்கும் பார்வையில் பெருமிதம் தெரியும். ஞானமூர்த்தியைப் பார்க்கும் பார்வையில் பேரன்பு தெரியும். ஆனால் அர்ஜுனிடம் மட்டும் எப்போதும் வெறுமை தான்அதிலும் ஒரு சூட்சுமம் உண்டு. ஞானமூர்த்தி, நித்யா முன்னிலையில் அவள் கூடுமான வரை இயல்பாக அவனிடம் நடந்து கொள்வாள். அவர்கள் இருவரும் இல்லாத நேரங்களில் அவள் சம்பந்தமே இல்லாதவள் போல நடந்து கொள்வாள்.

 

என்றாவது ஒரு நாள் அவளிடம் வெளிப்படையாகஎன்னை ஏன் அம்மா நீ வெறுக்கிறாய்?” என்ற கேள்வியைக் கேட்டு விட வேண்டும் என்று அவன் துடித்திருக்கிறான். ஆனால் அப்படியே அவன் கேட்டாலும் அவள் வெளிப்படையாக உண்மையான காரணத்தைச் சொல்வாள் என்ற நம்பிக்கை அவனுக்கில்லை. கண்ணிமைக்காமல்அப்படியெல்லாம் இல்லையேஎன்று சொல்லிவிட முடிந்தவள் அவள்….

 

நடிகை நர்மதாவின் வீட்டை அவன் பைக்கில் சென்றடைந்த போது அங்கே நிறைய பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சிக்காரர்களும் இருந்தார்கள். அவர்கள் பலரும் அவனுக்கு நன்றாக அறிமுகமானவர்கள். சிலர் அவனைப் பார்த்துக் கையசைத்தார்கள். அவனும் கையசைத்தான். கீதா அவனைப் பார்த்தவுடன் புன்னகையோடு அருகே வந்தாள். “ஹாய் அர்ஜுன்.”

 

அவனும் அவளைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்தான். “ஹாய் கீதா.”

 

இன்னைக்கு உன்னோட கட்டுரை ஒன்னு உங்க பத்திரிக்கையோட நடுப்பக்கத்துல பிரசுரமாகியிருக்கு இல்லையா. நான் படிக்க ஆரம்பிச்சப்ப தான் இந்த தற்கொலைச் செய்தி கிடைச்சுது. உடனே கிளம்பிட்டதால படிக்க முடியல.”

 

அவனுடைய கட்டுரை இன்று பிரசுரமாகியிருப்பதை அவள் கவனித்திருக்கிறாள் என்பதே அவனை சந்தோஷப்படுத்தியது.

 

தலையசைத்தபடி கேட்டான். “உண்மையாகவே தற்கொலை தானா? இல்லை கொலையாக இருக்கவும் வாய்ப்பிருக்கா?”

 

சந்தேகம் ஒரு நிருபருக்கு கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டிய குணம். ஒரு திறமையான நிருபர் தோற்றங்களில் ஏமாந்து விடக்கூடாது. உண்மையே என்றாலும் ஆராயாமல் தெளிவடைந்து விடக்கூடாது. கீதா புன்னகைத்தாள். “தெரியல. ஆனா கதவோ, பூட்டோ உடைக்கப்படலை. வேலைக்காரி எப்பவும் வர்ற மாதிரி எட்டு மணிக்கு வந்திருக்கா. அவ கிட்ட ஒரு செட் வெளி கேட் சாவியும், வீட்டு சாவியும் இருக்கு அவ உள்ளே போய்ப் பார்த்தப்ப நர்மதா ஃபேன்ல கயிறு கட்டி தூக்குல தொங்கிகிட்டு இருந்திருக்கா.”

 

தற்கொலைக் கடிதம் ஏதாவது…?”

 

இருக்கு. ஆனா அது அவள் எழுதினது தானான்னு இன்னும் உறுதிப்படுத்தப்படலை. வீட்டுல இருக்கற அவளோட பொருள்கள் எல்லாம் அப்படியே இருக்குங்கற மாதிரி தான் தெரியுது. எதுவும் திருட்டுப் போனமாதிரி இதுவரைக்கும் தெரியல. எல்லாத் தகவல்களும் கிடைச்ச பிறகு தான் எதுவுமே சொல்ல முடியும்…”

 

அர்ஜுன் கல்லூரிக் காலத்தில் நர்மதாவின் விசிறியாக இருந்திருக்கிறான். அக்காலத்தில் அவள் நடித்த எல்லாத் திரைப்படங்களையும் பார்த்தே தீர்வான். ஆனால் கல்லூரிப்படிப்பு படித்து முடித்து அவன் அந்த வயதுப் பைத்தியக்காரத்தனங்களை எல்லாம் விட்டொழித்த போது நர்மதா மேல் இருந்த ஈர்ப்பும் சேர்ந்து விடைபெற்றது. பின் அவளை அவன் நினைத்துப் பார்ப்பது கூட இல்லை. ஆனாலும் இப்போது நர்மதா இறந்து விட்டாள் என்கிற போது அவள் குறித்து ஒருவித பச்சாதாபம் அவன் மனதில் தங்கியது.  காலம் தான் எத்தனை விசித்திரமானது. தன் போக்கில் எத்தனை மாற்றங்களை அனாயாசமாகச் செய்து விடுகிறது. ஒரு சமயத்தின் உச்சங்கள் இன்னொரு சமயத்தில் எப்படி துச்சங்களாகப் போய்விடுகிறார்கள்….’

(தொடரும்)

என்.கணேசன்