என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, May 4, 2026

யோகி 154

 

யோகாலயத்தின் வெளி கேட் காவலாளி வரிசையாக வந்த இரண்டு போலீஸ் ஜீப்களைப் பார்த்ததும் எந்த எதிர்ப்புமில்லாமல் உள்ளே அனுப்பி விட்டான். ஆனால் இரண்டாவது கேட் காவலாளி இரண்டு ஜீப்களில் வந்த போலீஸ்காரர்களைப் பார்த்து அசரவில்லை. அவன் கண்ணனுக்குப் போன் செய்து இரண்டு போலீஸ் ஜீப்கள் வந்திருக்கின்றன என்று தெரிவித்தான். பாண்டியன் மதிய உணவை முடித்து விட்டு அப்போது தான் களைப்பாற உறங்கியிருந்தார் என்பதால் கண்ணன் அவரை எழுப்பவில்லை. தானே இரண்டாவது கேட் அருகே போனார்.

 

அவர் பார்வை முதலில் போலீஸ் ஜீப்களின் எண்களைப் பார்த்தது. முன்னால் இருந்த ஜீப் தமிழ்நாடு ரெஜிஸ்டிரேஷன் எண். பின்னால் இருந்தது தெலுங்கானா ரெஜிஸ்டிரேஷன் எண். முன்னால் இருந்த ஜீப்பில் அசிஸ்டெண்ட் கமிஷனர் இருந்தார். அவரை கண்ணன் நன்றாக அறிவார். ஆனால் யோகாலயத்துக்கு அசிஸ்டெண்ட் கமிஷனர் பெரிய ஆள் அல்ல. அவருடன் வேறிரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருந்தார்கள். அவர்கள் தெரிந்தவர்கள் அல்ல.

 

கண்ணன் அமைதியாக அசிஸ்டெண்ட் கமிஷனரிடம் கேட்டார். “என்ன விஷயம் சார்?”

 

அசிஸ்டெண்ட் கமிஷனர் பின்னால் இருக்கும் ஜீப்பைக் கைகாட்டி சொன்னார். “அவர்கள் ஹைத்ராபாதிலிருந்து வந்திருக்கிறார்கள். அங்கே நடந்த ஒரு கொலையைச் செய்த குற்றவாளி இங்கே துறவியாக ஒளிந்து கொண்டிருக்கிறான் என்ற தகவல் அவர்களுக்கு வந்திருக்கிறது. அதனால் அவனைக் கைது செய்து அழைத்துக் கொண்டு போக அவர்கள் வந்திருக்கிறார்கள்.”

 

குற்றவாளியின் பெயர் என்ன சார்?”

 

அவனுக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. ஷ்ரவன், சரவணன், BM”

 

“BM ?” கண்ணன் குரலில் ஆச்சரியம் காட்டினார்.

 

“Black Magician என்பதற்கு சுருக்கமாம்

 

கண்ணன் யோசித்தார். இது அவராக முடிவெடுக்கும் விஷயமல்ல.இனி பாண்டியனை எழுப்பித் தானாக வேண்டும். “தயவு செய்து கொஞ்சம் பொறுங்கள் சார்என்று சொல்லி விட்டு பாண்டியனை எழுப்ப விரைந்தார்.

 

பாண்டியன் கண்ணன் எழுப்பிச் சொன்னதைக் கேட்டு திகைத்தார். நேற்று தான் ஷ்ரவன்ஹைத்ராபாத் கேஸ்பற்றிச் சொன்னான். இன்று அவனைக் கைது செய்ய போலீஸ் வந்து நிற்கிறது. அவருடைய கைதியை போலீஸ் கைது செய்து கொண்டு போவதில் அவருக்குச் சம்மதமில்லை. அவனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அவருடைய எதிரியாக அவன் இருக்கலாம் என்ற சந்தேகம் கூட இருக்கிறது. அப்படி அவன் அவர்களுடைய எதிரி என்பது உண்மையானால் அவனைச் சித்திரவதை செய்யவும், கொல்லவும் அவருக்குத் தான் முதல் உரிமை உண்டு. அவருக்குத் தொந்தரவு கொடுத்து விட்டு ஒருவன் அவரிடமிருந்து அதற்கான கூலியைப் பெற்றுக் கொள்ளாமல் போவதில் அவருக்குச் சம்மதமில்லை. ஆனால் போலீஸ்காரர்கள் வருவது முன்கூட்டியே தெரிந்திருந்தால் ரிக்கார்டுகளை அதற்குத் தகுந்த மாதிரி மாற்றியிருக்கலாம்.  இப்போது எதற்கும் நேரமில்லை. வேண்டுமானால் சிறிது நேரம் கேட்டுப் பார்க்கலாம். நாளை வரச் சொல்லலாம். அதற்குள் அவர்களுடைய முறைப்படி அவனை விசாரித்து உண்மை என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

 

பாண்டியன் போலீஸாரை உள்ளே அனுப்பச் சொன்னார். அசிஸ்டெண்ட் கமிஷனரும், ஹைத்ராபாத் போலீஸ் அதிகாரிகள் இருவரும் மட்டும் உள்ளே வந்தார்கள். பாண்டியன் மிகுந்த மரியாதையுடன் அவர்களை வரவேற்றார். பிரம்மானந்தா தற்போது அங்கு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. அவருடைய பேச்சுக்கு பிரத்தியேக மரியாதை இருந்திருக்கும். துரதிர்ஷ்டவசமாக அவர் தற்போது வெளியே போயிருக்கிறார்

 

அசிஸ்டெண்ட் கமிஷனர் பாண்டியனிடம்ஹைத்ராபாத் கேஸ்பற்றிச் சொன்னார்.  ஷ்ரவனும், அவனுடைய நண்பன் ஒருவனும் சேர்ந்து அமெரிக்க இளைஞன் ஒருவனுக்கு பில்லி சூனியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தி அவனோடு பழகி கடைசியில் அவனைக் கொன்று விட்டார்கள் என்றார். இதுவரை காணாமல் போனதாக நினைத்து வந்த அந்த அமெரிக்க இளைஞனின் பிணம் நேற்று இரவு தான் போலீஸுக்குக் கிடைத்தது என்றும், ஷ்ரவனின் நண்பன் தந்த வாக்குமூலத்தின் படி ஹைத்ராபாத் போலீஸார் ஷ்ரவனைக் கைது செய்ய இங்கே வந்திருக்கிறார்கள் என்றும் சொன்னார்.

 

நாளை வர முடியுமா சார். யோகிஜி இங்கே இல்லை. அவர் அனுமதி இல்லாமல்…”

 

அசிஸ்டெண்ட் கமிஷனர் பொறுமையிழந்து சொன்னார். “கொலைகாரன் என்று தெரிந்த பின் யோகிஜி அந்தக் கொலைகாரனை கண்டிப்பாக இங்கே துறவியாக வைத்துக் கொள்ள மாட்டார். இது நம் மாநில வழக்காக இருந்தால் நாங்கள் எதாவது சலுகை காட்டலாம். ஆனால்  தெலுங்கானா போலீஸை அப்படியெல்லாம் நாம் காக்க வைக்க முடியாது.”

 

பாண்டியன் யோசனையுடன் கண்ணனைக் கேட்டார். “ஷ்ரவனானந்தா என்ற பெயரில் இங்கிருந்த துறவி இங்கேயே இருக்கிறாரா, இல்லை இவர்கள் வரலாம் என்று தெரிந்து தப்பித்து விட்டாரா?”

 

ஹைத்ராபாத் போலீஸ் அதிகாரி உடனே சொன்னார். “அவன் தப்பித்துப் போகவில்லை. ஏனென்றால் எங்கள் ஆட்கள் சில நாட்களாகவே அவனுக்காக உங்கள் யோகாலயாவைக் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நீங்கள் அவனை அழைக்கிறீர்களா இல்லை நாங்களே உள்ளே போய் தேடட்டுமா?”

 

அப்படியானால் இதுவரை அவர்களை வேவு பார்த்துக் கொண்டு இருந்தது தெலுங்கானா போலீஸாரா? அந்த பைத்தியக்கார ஷ்ரவனுக்காகத் தான் அவர்கள் வேவு பார்த்தார்களா? சை…. இது தெரியாமல் எத்தனை அமைதியிழந்தோம்.’ ஷ்ரவனை அவர்கள் தேடிக் கண்டுபிடிக்க முடியாது என்றாலும் அவர்களைத் தேட அனுமதிப்பது ஆபத்தானது என்பது பாண்டியனுக்குப் புரிந்தது. ஷ்ரவனைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக அவர்கள் பிரச்சினைக்குரிய வேறு விஷயங்களை இங்கே கண்டுபிடிக்கலாம். அது தேவையில்லாத பெரிய சிக்கலை உருவாக்கி விடும்.

 

இன்னொரு ஹைத்ராபாத் போலீஸ் அதிகாரி சொன்னார். ”கொல்லப்பட்டது அமெரிக்கர் என்பதால் அமெரிக்க தூதரகம் எங்களை மணிக்கொரு முறை விசாரித்துக் கொண்டு இருக்கிறது. எந்த நேரத்திலும் பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வரலாம்…”

 

அதற்கு மேல் பாண்டியன் யோசிக்கவில்லை.  கண்ணனிடம் சொன்னார். “அழைத்து வாருங்கள்.”

 

பாதாள அறையின் மேல் கதவு திறக்கப்படும் சத்தம் ஷ்ரவனுக்குக் கேட்டது. கண்ணனும் அவரைத் தொடர்ந்து இரண்டு குண்டர்களும் வந்தார்கள்.

 

ஷ்ரவன் மலர்ந்த முகத்துடன் கண்ணனைக் கைகூப்பி வணங்கினான். ”வணக்கம் சுவாமிஜி

 

கண்ணன் சொன்னார். “உன்னைத் தேடி ஹைத்ராபாத் போலீஸ் வந்திருக்கிறது.”

 

ஷ்ரவன் முகத்தில் பீதியைக் காட்டினான்.சுவாமிஜி நான் ஏற்கெனவே உங்களிடம் சொன்னபடி அதில் நான் நிரபராதி. வேண்டுமென்றே என்னை அதில் சிக்க வைத்திருக்கிறார்கள்…”

 

கண்ணன் சலிப்புடன் சொன்னார். “அதை அங்கே சொல்லிக்கோ. இப்ப இங்கே இருந்து கிளம்பு...”

 

ஷ்ரவன் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டான். அவன் கண்களை கருப்புத் துணியால் இறுக்கிக் கட்டிக்கொண்டு மேலே அழைத்து வந்தார்கள். பாண்டியனின் மாடியிலிருந்து இறங்கும் போது அந்தக் கருப்புத் துணியைக் கழற்றி விட்டார்கள்.

 

கண்ணன் அவனுடைய காதுகளில் சொன்னார். “இங்கே நடந்த, நடக்கிற எதைப் பத்தியாவது நீ வெளியே பேசிகிட்டுத் திரிஞ்சால் கொன்னுடுவோம். ஜாக்கிரதை

 

ஷ்ரவன் அவரைத் திகிலுடன் பார்த்து விட்டுச் சொன்னான். “என் சொந்தக் கதையே சோகக் கதையாய் இருக்கிறது சுவாமிஜி. நான் அடுத்தவர்கள் கதையை ஏன் பேசப் போகிறேன்.”

 

இவன் பேசினாலும் யார் நம்பப்போகிறார்கள்?’ என்று ஏளனமாக கண்ணன் நினைத்துக் கொண்டார். இரண்டு தடியர்களும் மாடிப்படியோடு நின்று விட கண்ணன் மட்டும் ஷ்ரவனை அழைத்துக் கொண்டு போய் விட்டார்.

 

ஷ்ரவனைப் பார்த்ததும் ஹைத்ராபாத் போலீஸார் எழுந்தார்கள். ஷ்ரவனின் கைகளில் விலங்கை மாட்டினார்கள். பின் பாண்டியனிடம் நன்றி சொல்லி விட்டுக் கிளம்பினார்கள். ஷ்ரவனை பாண்டியன் பார்த்தார். நேற்று அவர் அவனை சிறைப்பிடித்த போது அவன் காட்டிய அமைதி அவனிடம் இப்போது காணாமல் போயிருந்தது. அவனுடைய முகமே களையிழந்து விட்டிருந்தது. 

 

பாண்டியனின் இருப்பிடத்தை விட்டு வெளியே போகும் போது, ஷ்ரவன் அவன் முகத்தை யாரும் பார்த்து விடக்கூடாது என்று தலையை நன்றாகக் கவிழ்த்துக் கொண்டே வெளியேறினான். ஜீப்பில் அமர்ந்த பின்னும் அவன் தலையை நிமிர்த்தவில்லை. அவனது இருபக்கமும் அமர்ந்து கொண்ட ஹைத்ராபாத் போலீஸ்காரர்கள் அவனை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள, இரண்டு ஜீப்களும் கிளம்பின.

 

அந்த இரண்டு ஜீப்களும் யோகாலயத்திலிருந்து வெளியேறிய அதே நேரத்தில்  பிரம்மானந்தாவின் கார் உள்ளே நுழைந்தது. போலீஸ் ஜீப்கள் யோகாலயத்திற்கு வந்து போவதைப் பார்த்து துணுக்குற்ற அவர் உள்ளே காரிலிருந்து இறங்கியவுடன், அங்கே நின்றிருந்த பாண்டியனைக் கேட்டார். ”என்ன ஆச்சு?”

 

அந்த ஷ்ரவனைப் பிடிச்சுட்டு போறாங்க. அவன் நம்மளை விடப் பெரிய பிரச்சனைக்காரனா இருந்திருக்கான், யோகிஜி


(தொடரும்)

என்.கணேசன்




Thursday, April 30, 2026

சதுரங்கம் 16


ர்ஜுன் அப்பாவிடம் கேட்க நினைத்த கேள்விகளை யோசித்து தன் மடிக்கணினியில் குறித்துக் கொண்டிருந்த போது நித்யா அவன் அறைக்குள் மெல்ல எட்டிப் பார்த்தாள். தங்கையைக் கவனித்த அர்ஜுன் கேட்டான். “என்ன வாலு?”

 

எங்கே டெய்ரி மில்க் சாக்லேட்?”

 

அர்ஜுன் புன்னகையுடன் தங்கையிடம் இரண்டு டெய்ரி மில்க் சாக்கலேட்களை நீட்டினான்.

 

அதை மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டுதேங்க்ஸ்சொன்ன நித்யா உடனடியாக அண்ணனிடம் கேட்டாள். ”மிஸ்டர் ஸ்மார்ட். நீங்க ஏன் சில விஷயங்கள்ல மட்டும் தத்தியா இருக்கீங்க?”

 

என்னடி புகழ்ந்துகிட்டே திட்டறே?”

 

நான் சொன்னதை அப்படியே போய் அண்ணி கிட்ட சொல்லுற ஆளைத் திட்டாம என்ன செய்யறது?”

 

தங்கை கீதாவை அண்ணி என்றழைக்க ஆரம்பித்ததை உள்ளூர ரசித்த அர்ஜுன் ஆச்சரியத்துடன் தங்கையிடம் கேட்டான். “நான் அப்படியே அவ கிட்ட சொன்னேன்னு உன் கிட்ட யார் சொன்னா?”

 

நீ சொல்லியிருக்காட்டி அண்ணி ஏன் எனக்கு தேங்க்ஸ் மெசேஜ் அனுப்பறாங்க?”

 

அர்ஜுன் அசடு வழியச் சொன்னான். “இதுக்கு தான் நான் உன் போன் நம்பரை அவ கேட்டப்ப அவளுக்குத் தரத் தயங்கினேன்…. சரி சொன்னதுல என்னடி தப்பு?”

 

அடிப்படையான விஷயங்களைக் கூட தங்கை சொல்லி தான் தெரியுதுன்னு அவங்க உன்னை மட்டமா நினைக்க மாட்டாங்களா?”

 

அறிவுக்கொழுந்து தங்கையே. நடிக்கறதும், மறைக்கறதும் காதல்ல மட்டுமல்ல எந்த உண்மையான உறவு, நட்புலயும் இருக்கக்கூடாது. உண்மையை மறைக்கற எதுவும் எப்படி உண்மையான காதலாவோ, நெருக்கமான உறவாவோ, மேலான நட்பாவோ இருக்க முடியும்? நீ சொல்ற மாதிரி மிஸ்டர் ஸ்மார்ட் சில விஷயங்கள்ல தத்திங்கறதையும் அவளுக்குத் தெரிவிக்கறது தான் நியாயம்.”

 

ஆஹா நீதிமான் ஞானமூர்த்தியின் நேர்மையான மகனே. உம் சத்தியத்தை நாம் மெச்சுகிறோம். அதை விட அதிகமாக, தத்தி என்பதையும் பொருட்படுத்தாது உம்மைத் தொடர்ந்து காதலிக்கும் அண்ணியாரின் பெருந்தன்மையைக் கூடுதலாக மெச்சுகிறோம். வாழ்க நீவீர் இருவரும் பல்லாண்டு.”

 

ஏய் வாலு. நான் இன்னும் கேள்விகளையே சரியாய் தயார் செய்யலை. 6.40 ஆயிடுச்சு. இன்னும் இருபது நிமிஷம் தான் இருக்கு. லேட்டாய் போனா நீதிமான் பேட்டியைத் தள்ளுபடி பண்ணிடுவாரு. அப்புறமா வந்து வசனம் பேசிகிட்டு இரு. இப்ப இடத்தைக் காலி பண்ணு

 

சொன்னபடி இரண்டு டெய்ரி மில்க் சாக்லேட் கொண்டு வந்து கொடுத்ததால் உம் வேண்டுகோளை ஏற்றுக் கொள்கிறோம். ஏழு மணிக்கு பேட்டியின் பார்வையாளராக வந்து தங்கள் பேட்டியை மதிப்பிடுவோம். வாழ்த்துக்கள்என்று சொல்லி ஆர்வமாக டெய்ரி மில்க் சாக்லேட்டின் மேற்காகிதத்தைப் பிரித்தபடி செல்லும் தங்கையைப் பேரன்புடன் பார்த்து விட்டு அர்ஜுன் தன் வேலையைத் தொடர்ந்தான்.

 

6.55க்கு அவன் கேள்விகளை எழுதி முடித்திருந்தாலும் அவனுக்கு அவற்றில் முழுத்திருப்தி ஏற்பட்டிருக்கவில்லை. வெளியாட்களைப் பேட்டி எடுப்பதாக இருந்தால் அவை கச்சிதமானவை தான். ஆனால் தாத்தாவைப் பற்றி அப்பாவிடம் அவன் கேட்கும் கேள்விகளாக அவற்றைப் பார்க்கையில் ஒரு அன்னியத்தன்மை அவற்றில் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. லேப்டாப்போடு அவன் ஹாலுக்கு வந்த போது அவன் தங்கை ஏற்கெனவே வந்து அமர்ந்திருந்தாள். அவள் இதழோரத்தில் டெய்ரி மில்க் சாக்லேட் துகள் ஒட்டி இருந்தது.

 

பேச்சு தான் பெரிய மனுஷி மாதிரி. ஒழுங்கா ஒரு டெய்ரி மில்க் சாப்பிடத் தெரிய மாட்டேங்குது. குழந்தை மாதிரி உதட்டுல எல்லாம் சாக்லேட் ஒட்டிகிட்டு இருக்குஎன்று தங்கையை அர்ஜுன் கிண்டல் செய்தான்.

 

எங்கே என்று அவள் அவனிடம் சைகையால் கேட்க தன் உதட்டில் அந்த இடத்தைத் தொட்டு அர்ஜுன் காட்டினான். உடனடியாக அந்த சாக்லேட் துகளை விரலால் எடுத்து வாய்க்குள் தள்ளி விட்டு அண்ணனைப் பார்த்து நித்யா புன்னகைத்தாள்.

 

தங்கையின் குழந்தைத்தனத்தை ரசித்தபடியே அர்ஜுன் சோபாவில் அமர்ந்து மணியைப் பார்த்தான். மணி 6.58. ஞானமூர்த்தி அடுத்த வினாடி அவருடைய அறையிலிருந்து வெளிப்பட்டார்.

 

என்னடா உன் தங்கச்சி எதையோ சாப்பிட்டுட்டு இருக்கற மாதிரி தெரியுது

 

குழந்தை டெய்ரி மில்க் சாக்லேட் சாப்பிடுதுப்பாஎன்று சொன்ன அண்ணனை நித்யா முறைத்தாள்.

 

என்னடா நீ வாங்கிக் கொடுத்தாயா? என்ன ஸ்பெஷல்?”

 

அர்ஜுன் தடுமாற, அவன் தடுமாற்றத்தை ரசித்தபடியே நித்யா சொன்னாள். “தங்களுக்கு தக்க சமயத்தில் தெரிவிக்கப்படும் மை லார்ட்

 

அர்ஜுன் தன்னைத் தர்மசங்கடத்திலிருந்து காப்பாற்றிய தங்கையை நன்றியுடன் பார்க்க, ஞானமூர்த்தி புன்னகையுடன் கடிகாரத்தைப் பார்த்தார். மணி 7.00. “சரி ஆரம்பிக்கலாமாடா?” ஏழு மணியான பிறகு பேட்டியைத் தான் ஆரம்பிக்க வேண்டும், மற்ற கேள்விகளுக்கு அந்த நேரத்தில் இடமில்லை.

 

அர்ஜுன் சொன்னான். “அப்பா, நான் கேள்விகளை தயார் செய்துட்டு வந்திருக்கேன். ஆனா எல்லாமே வெளியாட்கள் கேட்கற மாதிரி இருக்கு. என் தாத்தாவைப் பற்றி நான் எழுதற சிறப்புக்கட்டுரையோட ஒரு நெருக்கம் இதுல விடுபடற மாதிரி இருக்கு. அதனால ஒருசில கேள்விகளை மட்டும் நான் கேட்கறேன். மற்றபடி நீங்க தாத்தாவைப் பற்றிய சுவாரசியமான, முக்கியமான தகவல்களைச் சொல்லுங்க. அதை வெச்சு நான் எழுதிக்கறேன்…”

 

ஞானமூர்த்தி தலையசைத்தார்.  அர்ஜுன் கேட்டான். “தாத்தாவை பெரிய தலைவராய் இந்த உலகத்திற்குத் தெரியும். ஆனால் குடும்பத்தார் பார்வைல அவர் எப்படி இருந்தார்னு நான் எழுதறது பொருத்தமாய் இருக்கும்னு தோணுது. உங்க அப்பாவைப் பற்றி சொல்லுங்கப்பா. ஒரு தலைவராய் நீங்க அவரை எப்படிப் பார்க்கறீங்கன்னும் சொல்லுங்க.”

 

பானுமதி சமையலறையிலிருந்து வெளிப்பட்டு சுவரில் சாய்ந்து நிற்பதைக் கவனித்த நித்யா தாயிடம் அங்கு வந்து அமருமாறு சைகை செய்தாள். பானுமதிஉள்ளே வேலையிருக்கிறதுஎன்று பதிலுக்கு சைகை செய்தாள்.

 

ஞானமூர்த்தி சொன்னார். “எங்கப்பா மாதிரி ஒரு நல்ல உயர்ந்த மனிதரைப் பார்க்கறது ரொம்ப கஷ்டம் அர்ஜுன். பொதுவாய் அரசியல் தலைவர்களோட நல்ல குணங்களை எல்லாம் அவங்க கட்சிக் காரங்க பல மடங்காய் உயர்த்திச் சொல்வாங்க. எதிர்க்கட்சிக்காரங்க அவர்களோட கெட்ட குணங்களை எல்லாம் தவறாமல் சுட்டிக்காட்டுவாங்க.  ஆனால் எங்கப்பாவோட நல்ல குணங்கள் முழுசும் அவங்க கட்சிக்காரங்களுக்குக் கூடத் தெரியாது. அதே மாதிரி எதிர்க்கட்சிக்காரங்களும் அவரோட அரசியல் கொள்கைகள்ல சில குறைபாடுகளைக் கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சாங்களே ஒழிய தனி மனுஷரா அவர் கிட்ட யாரும் எந்தக் கெட்டதையும் கண்டுபிடிச்சு சொல்ல முடிஞ்சதில்லை. இப்படி இந்தியால ஒரு அரசியல் தலைவர் இது வரைக்கும் இருந்ததில்லை அர்ஜுன். இந்த அளவு ஒரு நல்ல மனுஷரை இனியும் யாரும் பார்க்க முடியும்னு தோணலை.”

 

பொதுவாய் பெரிய அரசியல் தலைவராய் இருக்கறவர்கள் சரியான குடும்பத் தலைவராகவும் இருக்கிறது அபூர்வம். பொது வாழ்க்கைக்கு அவர்கள் தரும் கவனம், நேரம் எல்லாம் குடும்பத்திற்குத் தர முடியாமல் போகுதுன்னு ஒரு குற்றச்சாட்டு எப்பவும் இருந்து வருது. உங்க அப்பா, குடும்பத்தலைவராய் எப்படி இருந்தார்?”

 

கட்சிக்கும் நாட்டுக்கும் ஒதுக்கின நேரத்தையும், கவனத்தையும் அவரால் எங்களுக்குத் தர முடியலைங்கறது உண்மை தான். எங்க கிட்டே வெட்டிக்கதை பேச அவருக்கு நேரம் இருக்கலை. ஆனால் நாங்களாய் அவரை ஏதாவது ஒரு விஷயமாய் நெருங்கறப்ப, அவர் அதைக் கேட்க முடியாத அளவுக்கு பிஸியான ஆளாய் அவர் தன்னைக் காட்டிக்கலை. எல்லா வேலைகளையும் ஒதுக்கிட்டு நாங்க சொல்றதைக் காது கொடுத்து கேட்கற ஆளாய் தான் எப்பவுமே இருந்தார். அம்மா, நான், ராஜாராம் மூனு பேரும் அந்த விஷயத்துல அவரைக் குறை சொல்ல முடியாது. நாங்க சொல்றதை பொறுமையாய் கேட்பார், என்ன செய்யணுமோ செய்வார்…. சொல்லப் போனால் அவர் கடைசி காலத்தில் அதிகமாய் நேரம் ஒதுக்கினது உனக்குத் தான். பேரன் பிறந்ததுல அவருக்கு ரொம்ப சந்தோஷம். வீட்டுல இருக்கற நேரங்கள்ல எப்பவுமே உன்னைத் தூக்கிகிட்டு தான் இருப்பார்.”

 

அர்ஜுனுக்கு அந்தத் தகவல் பெருத்த சந்தோஷத்தைத் தந்தது. அம்மா பட்டென்று சமையலறைக்குச் சென்றது யதேச்சையாகவா, இல்லை அப்பா சொன்ன தகவலைக் கேட்டா என்று அவனுக்குத் தெரியவில்லை.


(தொடரும்)

என்.கணேசன்




Monday, April 27, 2026

யோகி 153


ஷ்ரவன் கண்விழித்த நேரம் என்னவென்று அவனுக்குத் தெரியவில்லை. பாதாள அறையில் கடிகாரம் இல்லை. சூரிய வெளிச்சத்தை வைத்துக் கண்டுபிடிக்க அங்கே ஜன்னலும் இல்லை. ஆனால் நீண்ட நேரம் உறங்கியிருக்கிறான் என்பது அவனுக்கு உடல் உணர்ந்த புத்துணர்ச்சியால் புரிந்தது. மனம் பேரமைதியுடன் இருந்தது. எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறது என்று தோன்றியது. அந்த யோகியைச் சந்தித்ததும் அப்படித் தான் என்று எண்ணினான். அவரைச் சந்திக்கும் போது கேட்டதும், உணர்ந்ததும் ஒரு பாக்கியம் என்றால், அதை அவன் தன் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி உணர்ந்த வாழ்க்கைப் பாடம் பெரும் பாக்கியம் தான். இந்த இக்கட்டான நிலைமை வரா விட்டால் அவன் அவர் சொன்னதைத் தன் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி யோசித்திருக்க மாட்டான். இரண்டாவதான இந்தப் பெரும் பாக்கியத்தை இழந்திருப்பான். கடவுள் இது போன்ற கஷ்டங்களையும், பிரச்சினைகளையும் மனிதனின் வாழ்க்கையில் அனுப்புவது இதற்குத் தானோ? படித்தும், கேட்டும் தெரிந்து கொண்டதை வாழ்க்கையில் பயன்படுத்திப் பார் என்று வாய்ப்பு அளிக்கிறானோ? அதை நாம் தான் புரிந்து கொள்ளத் தவறுகிறோமோ?

 

கழிவறைக்குப் போய் கை, கால், முகம் அலம்பிக் கொண்டு வந்து ஷ்ரவன் மந்திரஜபத்தை மறுபடி ஆரம்பித்தான். 1008 முறை அவன் சொல்லி முடித்த போது ஓநாய் அவனுக்குக் காட்சியளித்தது. ஷ்ரவன் புன்னகையுடன் மனதில் சொன்னான். “இப்போது நான் தெளிவு பெற்று விட்டேன். நீ கண்ணுக்குக் காட்சி அளித்தால் மட்டுமே என்னோடு இருக்கிறாய் என்று அர்த்தமல்ல என்பதை நான் புரிந்து கொண்டு விட்டேன். நீ காட்சி அளித்தாலும், அளிக்கா விட்டாலும் என்னோடு இருக்கிறாய். இது வரை எனக்கு நீயே வழிகாட்டி இருக்கிறாய். எனக்குத் தெரிந்த காட்சிகளும் நீ காட்டியது. காட்சிகள் தெரியா விட்டாலும் நீ தான் என் மூலம் எல்லாவற்றையும் நடத்தியிருக்கிறாய். நன்றி நண்பனே.”  

 

ஓநாய் ஒரு கணம் அவனை அன்புடன் பார்த்தது போலிருந்தது. பின் மறைந்து விட்டது. இதுவரை நடந்ததை எல்லாம் ஷ்ரவனின் மனம் ஒழுங்குபடுத்திப் பார்த்தது. நேற்று அவன் கற்பனையில் அந்த ஓநாய் பீரோவுக்குள் நுழைந்ததைச் சொன்னது வரை யோசித்துப் பார்த்தான். அது அவனாகக் கற்பனை செய்தது தான் என்றாலும், அந்தக் கற்பனையைச் செய்ய வைத்ததும் அந்தச் சக்தி தானோ என்ற எண்ணம் மெல்ல எழுந்தது. அந்தப் பீரோவில் உள்ள சொத்துப் பத்திரங்களை அவன் பார்க்க வேண்டும் என்று தான் அப்படிச் செய்ய வைத்ததோ?  ஆரம்பத்தில் வரவுசெலவுக் கணக்கு பற்றிச் சொன்னது, இப்போது சொத்துப் பத்திரம் பற்றிச் சொல்கிறது. ஸ்ரேயா சந்திரமோகனின் சொத்து பவர் ஆஃப் அட்டர்னி மூலம் அவர் காணாமல் போன பின் கிரயமாகி இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறாள்.

 

எல்லாவற்றையும் வைத்து யோசித்துப் பார்க்கையில் சந்திரமோகன் இவர்களுடைய பினாமியாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அதன் பின் அவர்களுக்குள் ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம். இவர்கள் கொடுத்ததைத் திருப்பித்தர சந்திரமோகன் மறுத்திருக்கலாம். அல்லது தன் பெயரில் இருப்பதை அவர் விற்று அனுபவிக்க நினைத்திருக்கலாம். அதனால் அவர் தீர்த்துக்கட்டப்பட்டிருக்கலாம்.  அதற்கு முன் மிரட்டி, அந்த நிலங்களைக் குறைந்த விலைக்கு விற்க வைத்திருக்கலாம்அவர் கொல்லப்பட்டதைத் தான் சைத்ரா பார்த்திருக்க வேண்டும். யோசிக்கையில் எல்லாம் கோர்வையாக வந்தது. 

 

ல்பனானந்தா மறுநாள் காலையிலும் ஷ்ரவன் வேலைக்கு வராததைக் கவனித்த போது தான் அவனுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட ஆரம்பித்தாள். காலை சுமார் எட்டு மணிக்கு பாண்டியன் காரில் வெளியே போவது தெரிந்தது. அவளுடைய சந்தேகம் உறுதிப்பட்டது. பாண்டியன் இல்லாமல் ஷ்ரவன் அங்கிருக்க, சாதாரணமாய் வாய்ப்பே இல்லை. அவர்கள் அவனைச் சிறைப்பிடித்து வைத்திருக்க வேண்டும்

 

வெளிப்பார்வைக்கு கல்பனானந்தா அமைதியாகவே இருந்தாலும் அவள் உள்ளூர பதற்றத்தை உணர்ந்தாள். ஷ்ரவன் அவளுக்குச் சொல்லியிருப்பதெல்லாம் நினைவுக்கு வந்தது.  தனதறைக்குப் போய் அவன் எழுதித்தந்த மின்னஞ்சல் முகவரிகளை அவள் முதலில் மனப்பாடம் செய்தாள்.

 

அலுவலகம் ஒன்பது மணிக்கு மேல் தான் திறக்கப்படும். அங்குள்ள கம்ப்யூட்டர்களில் தான் அவள் அந்த ரகசியத் தகவலை அனுப்ப முடியும். அவள் தினந்தோறும் இல்லா விட்டாலும் வாரத்திற்கு மூன்று முறையாவது சென்று, யோகாலயத்திற்கு வந்திருக்கும் பொது மின்னஞ்சல்களில் சிலவற்றுக்குப் பதில் அனுப்புவது வழக்கம். பிரம்மானந்தா தனக்கு வரும் தனிப்பட்ட  மின்னஞ்சல்களையும், பெரிய இடங்களில் இருந்து வரும் மின்னஞ்சல்களையும் படித்து அவரே பதில் அனுப்பி விடுவார். ஆனால் சாமானியர்களின் மின்னஞ்சல்கள் அவருக்குப் பதில் அளிக்கக் கசப்பானவை. எல்லாவற்றையும் புறக்கணிப்பதோ விமர்சனத்துக்கு உள்ளாகி விடும் என்பதால், அவற்றில் தேர்ந்தெடுத்துச் சிலவற்றிற்காவது தகுந்த பதில் அனுப்புவது கல்பனானந்தாவின் வேலை.

 

கல்பனானந்தா அலுவலகத்திற்குப் போன போது உள்ளூர பெரும் பதற்றத்தை மறுபடியும் உணர்ந்தாள். மின்னஞ்சல்களில் தேடிய போது ஷ்ரவன் சொன்ன இரண்டு மின்னஞ்சல்களும் கிடைத்தன. இரண்டில் ஒன்றுக்கு ஏற்கெனவேஆசிர்வாதம்என்று பதில் அளிக்கப்பட்டு இருந்தது. அதனால் அதற்கு அவள் மீண்டும் பதில் அளிக்க வழியில்லை.

 

ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆன்மிக மையம் என்ற பெயரில் இருந்து அனுப்பப் பட்டிருந்த இன்னொரு மின்னஞ்சலைப் படித்தாள்.

 

தவத்திரு யோகி பிரம்மானந்தா அவர்களுக்கு,

ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆன்மிக மையத்தின் மெய்யன்பர்கள் சார்பில் அனந்த கோடி நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். நம் நாட்டில் ஆன்மிகத்தைப் பரப்புவதற்காக திருவண்ணாமலையை அடுத்த போதமங்கலம் கிராமத்தில் ஸ்தாபிக்கப்பட்டது எங்கள் அமைப்பு. பல ஆன்மிகப் பெரியவர்கள் இங்கு வந்து அழிவில்லாத நம் சனாதன தர்மம் குறித்து சொற்பொழிவாற்றி இருக்கிறார்கள். தாங்களும் தயைகூர்ந்து இவ்வருடத்தில் தங்களுக்கு வசதிப்படும் ஒரு நாளில் இங்கு வந்து யோகாவின் மேன்மையை இங்குள்ள பக்தர்களுக்கும் தந்தருள வேண்டும் என்றும் தங்கள் நூல்களையும், உரைகளையும் எங்களுக்கு அனுப்பித் தரவேண்டும் என்றும் பாதம் தொழுது நாங்கள் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.   

இப்படிக்கு

கனகசபாபதி

 

இதற்கு எழுதும் பதிலைத் தான் அவள் ஷ்ரவன் சொன்ன சங்கேத பாஷையில் எழுத வேண்டும். சாதாரணமாக எழுதுவதானால் பத்து பக்கங்கள் கூட சிரமம் இல்லாமல் எழுதி விடலாம் போல் இருந்தது. க்ஷேமமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம் என்று ஆபத்தை அறிவித்து விட்டு அடுத்தபடியாக இரண்டு வார்த்தைகள் அடித்து விட்டு மூன்றாவது வார்த்தையை எடுத்துக் கொண்டு அவர்கள் படிக்கும்படி அவள் அனுப்பும் தகவல் அமைய வேண்டும். ஆனால் யோகாலயத்தில் யாராவது சந்தேகம் வந்து முழுவதுமாகப் படித்தாலும் அர்த்தமில்லாதபடி இருந்து விடக்கூடாது. கல்பனானந்தா கஷ்டப்பட்டு ஒரு பதில் அஞ்சல் எழுதினாள்.

    

க்ஷேமமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்.

யோகாவின் உயர்வினைக் கண்டுபிடித்து, இறையடியார்கள் உயர்த்தியும் விட்டார்கள். முடிந்ததை பரப்பி, அதனால் சமூகத்தை உயர்த்த உடனடியாக யோகிஜியின் காணொளிகளை அனுப்பி உள்ளோம். சேமித்து வைக்கவும். அனைவருக்கும் பயன்படும்.

யோகாலயம்

 

அத்துடன் பிரம்மானந்தாவின் யூட்யூப் வீடியோக்கள் நான்கை இணைத்து அனுப்பி விட்டு அனுப்பிய பிரிவில் இருக்கிறதா என்று அவள் உறுதிப்படுத்திக் கொண்டு அங்கிருந்து கிளம்பிய போது அவள் இதயம் சம்மட்டி அடிகளை அடிக்க ஆரம்பித்திருந்தது.

 

ராகவன் அந்த ரகசிய மின்னஞ்சல் முகவரிக்கு வந்திருந்த தகவலைப் படித்தார்.

க்ஷேமமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்.(நான் ஆபத்தில் இருக்கிறேன்.)

யோகாவின் உயர்வினைக் கண்டுபிடித்து, இறையடியார்கள் உயர்த்தியும் விட்டார்கள். முடிந்ததை பரப்பி, அதனால் சமூகத்தை உயர்த்த உடனடியாக யோகிஜியின் காணொளிகளை அனுப்பி உள்ளோம். சேமித்து வைக்கவும். அனைவருக்கும் பயன்படும்.

 

ராகவன் மின்னல் வேகத்தில் இயங்கினார். ஏற்கெனவே தயார்ப்படுத்தி வைத்திருந்த அவர்களுடைய ஆட்கள் ஐந்து பேருக்கு அவர் அவசரமாகப் போன் செய்தார். அவர்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை வேகம் எடுத்தது.


(தொடரும்)

என்.கணேசன்




Thursday, April 23, 2026

சதுரங்கம் 15


விமல் ரிஷிகேசத்தில் இருக்கிறான். ரிஷிகேசத்தில் துறவிகள் அதிகம். எங்கு பார்த்தாலும் காவி நிற ஆடையணிந்தவர்கள் தான் அதிகம் தென்படுகிறார்கள். விமலும் காவியுடையில் ஒரு ஆசிரமத்தில் தங்கி இருக்கிறான். அவன் ஆன்மீகத்தில் சிறிதும் நாட்டமில்லாதவன். அவனுக்கு இப்படி ஒரு ஆசிரமத்தில் தங்கி வாழ்வது சிறை வாழ்க்கையைப் போல் கொடுமை தான். அதிலும் அவனுடைய காவியுடையைப் பார்த்து விட்டு, உடனிருக்கும் ஆட்கள் அவனிடம் ஆன்மீக விஷயங்களை ஆட்கள் மணிக்கணக்கில் பேச ஆரம்பிப்பது சித்திரவதை தான். ஆனால் உயிருடன் பதுங்கி இருக்க இதைப் போன்ற ஒரு இடம் பாதுகாப்பானது என்று அவனே தேர்ந்தெடுத்து இருப்பதால் இதையெல்லாம் அவன் தாங்கித்தானாக வேண்டியிருக்கிறது.

 

தனிமையில் இருக்கையில் அவன் ஆர்வமாக தமிழ்நாட்டுச் செய்திகளை இணையத்தில் படித்துக் கொண்டிருக்கிறான். அதிலும் நர்மதாவின் கொலை பற்றிப் புதிய தகவல் ஏதாவது இருக்கின்றதா என்று அடிக்கடி பார்க்கிறான். கொலையாளி என்று எவனாவது பிடிபட்டாலோ, இல்லை தற்கொலை என்று வழக்கு முடித்து வைக்கப்பட்டாலோ அவன் நிம்மதியாக தமிழகம் திரும்பலாம்.  ஆனால் இரண்டுமில்லாத சூழல் தான் அங்கு நிலவுகிறது.

 

பத்திரிக்கைகளும், சமூக வலைத்தளங்களும் அடுத்த பரபரப்பான நிகழ்வு வரும் வரை இந்த விஷயத்தை வைத்துத் தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்பதால் எந்த முடிவுக்கும் மக்களை வர விடாமல், குழப்பமான பல முரண்பட்ட தகவல்களை மாறி மாறித் தந்து கொண்டிருக்கின்றன.  தற்கொலை தான் என்று ஒரு கோஷ்டியும், கொலை தான் என்று ஒரு கோஷ்டியும் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தன.

 

பூட்டிய வீட்டுக்குள் மரணம் நிகழ்ந்திருக்கின்றது, பூட்டு உடைக்கப்பட்டதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்பதே தற்கொலை கோஷ்டியின் முக்கிய வாதமாக இருந்தது. வீட்டிலிருந்து எதுவும் திருட்டுப் போனதாகத் தெரியவில்லை, விலையுயர்ந்த பொருள்களும் அப்படியே தான் இருக்கின்றன என்பது அவர்களுடைய அடுத்த வாதம். நர்மதாவின் தங்கை கள்ளச்சாவியைப் பற்றி சரியான சந்தேகத்தை எழுப்பி இருந்தாலும், கூடவே விமலைப் பிடித்து விசாரிக்கிறபடி விசாரித்தால் உண்மை தெரியும் என்று சொன்னது அவன் வயிற்றைக் கலக்கியது. எல்லாம் அவனுடைய நேரம்! வீட்டின் கள்ளச்சாவி கொலைகாரனிடம் இருக்கிறது என்பதையும், வீட்டிலுள்ள விலையுயர்ந்த பொருள்களின் மொத்த மதிப்பு குற்றவாளிக்குப் பிச்சைக்காசு என்பதையும் விமல் போலீசில் பிடிபட்டாலும் சத்தமாகச் சொல்ல முடியாது.

 

அந்தப் பிச்சைக் காசிலும் சிறிது தான் விமல் நர்மதாவைக் கேட்கச் சொன்னான். அது கூட ஆற்றில் இருந்து ஒரு சொம்பு தண்ணீர் எடுப்பது போலத் தான். அது அவளுடைய உயிரைப் பறிக்கும் என்பது தெரிந்திருந்தால் அவன் அப்படிச் சொல்லியிருக்க மாட்டான். ஏனென்றால் அவள் தான் அவனுடைய ஏ.டி.எம் மெஷின். அவளை இழப்பது அவனுக்கு வாழ்வாதாரத்தையே இழப்பது போல் தான். அவன் கணக்கு தவறி விட்டதால். அவன் வாழ்வாதாரத்தை இழந்தது மட்டுமல்ல, உயிருக்கே ஆபத்தான நிலையில் இருக்கிறான். பணம் கேட்கச் சொன்னவன் அவன் தான் என்ற சிறிய சந்தேகம் எதிர்தரப்பிற்கு வந்தால் கூட, அவன் கண்டுபிடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவன் பிணம் கங்கையில் மிதக்கும் வாய்ப்பு உண்டு.

 

நர்மதா கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்று சந்தேகப்படும் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் அவனைத் தான் முதலில் சந்தேகிக்கிறார்கள். அவன் தலைமறைவானது அவர்கள் சந்தேகத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது. ஒரு பத்திரிக்கை அவள் கடைசியாக அழைத்துப் பேசியது அவனிடம் தான் என்பதை கொட்டை எழுத்தில் தனிச்செய்தியாக வெளியிட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவள் இறந்த பின்னும் அவளை அலைபேசியில் அழைத்திருக்கும் நபரும் அவன் தான் என்பதையும் சொல்லியிருந்தது. முந்தைய நாள் பேசியதில் அவர்களுக்குள் சண்டை வந்திருக்கலாம் என்றும், அவன் கொன்று விட்டு, அவன் மீது பழி விழாமல் இருக்க, விஷயம் தெரியாதவனைப் போல், அவன் காலையிலும் அவளை அலைபேசியில் அழைத்திருக்கக் கூடும் என்றும் தன் யூகத்தை எழுதியிருந்தது. விமலுக்கு அதைப் படிக்கும் போதே மனம் பதைத்தது.  பாவிகள் எப்படி மனசாட்சி இல்லாமல் தங்கள் இஷ்டத்திற்கு எழுதுகிறார்கள்?

 

விடிவெள்ளி என்ற பத்திரிக்கை நர்மதா இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு ஒரு நகைக்கடையில் நகை வாங்கியதைக் குறிப்பிட்டு, தற்கொலை செய்து கொள்ளப் போகிறவள் நகை வாங்குவாளா என்ற கேள்வியையும் எழுப்பி இருந்தது. அதற்குப் பதில் சொல்லும் வகையில் ஒரு ஊடகம் ஒரு உளவியல் நிபுணரைப் பேட்டி எடுத்து வெளியிட்டது.

 

அதில் அதே கேள்வி அந்த உளவியல் நிபுணரிடம் கேட்கப்பட்டிருந்தது. “சமீபத்தில் நடிகை நர்மதா தற்கொலை செய்துகிட்ட செய்தியை நீங்களும் கேள்விப்பட்டிருப்பீங்க. அவங்க தற்கொலைக்கு இரண்டு நாள் முன்னாடி நகைக்கடையில் நகை வாங்கியிருக்காங்க. அது ஒரு முரண்பாடாய் இருக்குன்னு சில பத்திரிக்கைச் செய்திகள் வந்திருப்பதையும் பார்த்திருப்பீங்க. இதில் உளவியல் நிபுணரான உங்கள் கருத்து என்ன?”

 

அந்த உளவியல் நிபுணர் பதிலளித்திருந்தார்.  தற்கொலைங்கறதே பல சமயங்கள்ல திடீர்னு எடுக்கற முடிவு தான். திடீர்னு அவங்க ஒரு கணத்தில் ஆழமாய் உணர்கிற மன அழுத்தமும், விரக்தியும்  தற்கொலைக்கு அவங்கள தூண்டறதாயிருக்கும். அந்த ஒரு நிமிஷத்துல அவங்க அதைச் செயல்படுத்தாமல் கடந்துட்டா தற்கொலை செஞ்சுக்காமல் தப்பிக்கும் வாய்ப்பு உண்டு. அதனால தற்கொலை செய்துகிட்டவங்க ரெண்டு நாள் முன்னாடி சந்தோஷமா இருந்தாங்க, முந்தின நாள் சிரிச்சாங்கன்னு எல்லாம் சொல்றதுல அர்த்தமில்லை.”

 

தொடரும் விசாரணை குறித்த செய்திகளில் அவனைப் பற்றி வந்த செய்திகளை அவன் கவனமாகப் படித்தான். அவன் நடித்த தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றி எழுதியிருந்தார்கள். அவனுக்கும் நர்மதாவுக்கும் இடையே இருந்த நெருக்கத்தைப் பற்றி எழுதியிருந்தார்கள். இப்போது அவனுக்கு நடிக்கும் வாய்ப்புகள் இல்லை என்றும் எழுதியிருந்தார்கள். அவன் அவளிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்திருக்கலாம் என்றும், அவள் மறுத்து இருக்கலாம் என்றும், அதனால் அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டு இருக்கலாம் என்றும்…. அவன் அதற்கு மேல் படிக்கவில்லை. பழியை அவன் மேல் போட்டாலும் அதை நம்ப மக்கள் மனதைத் தயார் செய்து விட்டார்கள். மொத்தத்தில் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல் தான் அவனுடைய பரிதாபகரமான நிலைமை….

 

அவனுக்குத் தெரிந்து இதுவரைக்கும் யாரும் அவனைப் பின் தொடர்ந்து வரவில்லை. இப்போது வரை அவன் கண்காணிக்கப்படவும் இல்லை.  அவன் ஊரிலிருந்து கிளம்பும் போதே அலைபேசியில் இருந்துசிம்மைக் கழற்றி சாக்கடையில் வீசி விட்டு வந்திருக்கிறான். தெரிந்த யாரையுமே அவன் இது வரை அழைத்துப் பேசவில்லை. இனி பேசப்போவதுமில்லை. அவன் வங்கிக் கணக்கில் இரண்டு லட்சத்து சொச்ச ரூபாய் இருக்கிறது. அதை அவன் எடுப்பது அவன் இருப்பிடத்தை அவர்களுக்குக் காட்டிக் கொடுத்து விடும் என்பதால் அதையும் அவன் எடுக்கப் போவதில்லை. ரொக்கமாக அவனிடம் ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய் இருக்கின்றது. இந்த ஆசிரமத்தில் பத்தாயிரம் கட்டி விட்டால் ஒரு வருடத்திற்குத் தங்கிக் கொள்ளலாம். உணவு இலவசம் தான் என்பதால் அவனுக்கு வேறு செலவு எதுவுமில்லை.  

 

ஒரே பிரச்சினை என்ன என்றால், அவன் அசைவப்பிரியன். ஆசிரமத்திலோ சைவ உணவு  தான் சாப்பிடக் கிடைக்கிறது. அதுவும் புளி, காரம் எதுவுமில்லாமல் மிகவும் சப்பென்று தான் இருக்கிறது. இதையே தொடர்ந்து சாப்பிட்டால் நாக்கு செத்து விடும். ஆங்கில கூச்சல் இசையும், நடனமும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். இங்கோ பஜனை பாட வேண்டியிருக்கிறது. பக்தி சொற்பொழிவுகள் கேட்க வேண்டியிருக்கிறது. அத்தனையும் அவன் பொறுத்துக் கொண்டு அங்கே இருக்கிறான். காரணம் அவன் உயிரோடு இருக்க ஆசைப்படுகிறான்.

 

தமிழ்நாட்டுச் செய்திகளை மடிக்கணினியில் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு தொலைக்காட்சியில் ஒரு பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பேட்டி எடுக்கப்படும் நபரைப் பார்த்தவுடன் விமலின் இரத்தம் கொதித்தது. அந்த ஆள் தான் நர்மதாவின் கொலைக்குக் காரணமானவன்.

 

பார்ப்பவர்களுக்கு அவன் மிக அமைதியாகவும், நாகரிகமாகவும், உத்தமனாகவும் தெரிந்தான். கொலைகாரச் சுவடு அவனிடம் சிறிதும் தெரியவில்லை. யாருமே அவனிடம் நர்மதாவைப் பற்றிக் கேள்வி கூடக் கேட்டு விடமுடியாது. அப்படிக் கேட்பதே அபத்தமாக அனைவருக்கும் தோன்றும். அப்படியே கேட்டாலும், ’யாரிடம் போய், யாரைப் பற்றிக் கேட்கிறாய்என்று மக்கள் பாய்வார்கள். மிக வலிமையான, பாதுகாப்பான இடத்தில் இருக்கும் அந்த நபர் காமிராவைப் பார்த்துப் புன்னகைத்தான். விமலுக்கு அந்த நபர் அவனையே பார்த்துப் புன்னகைப்பது போலிருக்க,  இரத்தம் உறைந்தது.  


(தொடரும்)

என்.கணேசன்