என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, August 6, 2026

சதுரங்கம் 30

 


விமலுக்கு இனி அடுத்த வேலை எதிரியோடு தான். எதிரி என்று சொல்வது கூட ஒரு விதத்தில் தவறு தான். .டி.எம் மெஷின் என்றோ, அள்ளித் தர முடிந்தவன் என்றோ தான் சொல்ல வேண்டும். அவனிடம் பேசுவது தான் விமல் அடுத்த செய்ய வேண்டிய காரியம். ஆனால் இப்போது பேசுவது ஆபத்து. பேசினால் அவன் ரிஷிகேசத்திற்குச் சென்று சேர்வதற்குள் பிடிபட்டு விட வாய்ப்பு இருக்கிறது. அவன் பேசிய சிறிது நேரத்திற்குள் ராஜாசிங்கை போலீஸ் நெருங்கிவிடும். ராஜா சிங்கும், சோனா ஓட்டல் ஆட்களும் அவனை நினைவுபடுத்த முடிந்த காலம் கழிய வேண்டும். அவன் தோற்றத்தைச் சொல்லி போலீஸ் யாரையும் விசாரித்து எதையும் தெரிந்து கொள்ள முடிந்த காலம் கழிய வேண்டும். அதுவரை காத்திருப்பது தான் புத்திசாலித்தனம். இதில் அவசரப்படுவது மரணத்திற்கு அவசரப்படுவது போல் ஆகிவிடும். விமல் முடிந்த அளவு இந்த உலக சுகங்கள் அனைத்தையும் அனுபவித்து விடுமளவு ஆயுளோடு இருக்க ஆசைப்படுகிறான்.

 

இந்த அலைபேசி சரியாக வேலை செய்கிறதா என்று அவன் சோதித்துப் பார்க்க வேண்டும். தெரிந்த யாருக்கும் போன் செய்வதும் ஆபத்து. பிறகு யாருக்குப் போன் செய்வது என்று அவன் ஆலோசித்துக் கொண்டே நடந்த போது எதிரே ஒரு பிரம்மாண்டமான விளம்பரப்பலகை தென்பட்டது. “ரூ.1.10 கோடி முதல் 2.45 கோடி வரை பட்ஜெட்டில் அதிநவீன ஃப்ளாட்டுகள், ஜிம், டென்னிஸ் கோர்ட், ஸ்விம்மிங் பூல் வசதிகளுடன்…. இன்றே புக் செய்ய அழைக்கவும்….” என்று ஒரு அலைபேசி எண்ணைத் தந்திருந்தார்கள்.

 

விமல் புன்னகைத்தான். இந்த அலைபேசியில் முதல் அழைப்பாக, கோடிக்கு மேல் விலைமதிப்புள்ள ஒரு வியாபார விஷயத்தைப் பற்றிப் பேசுவது நல்ல சகுனமாக இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. அதிர்ஷ்டம் அவனுக்கு அனுகூலமாக இருந்தால் இனிமேல் எப்போதும் கோடி ரூபாய்க்குக் கீழ் பேசுகின்ற நிலைமையே அவனுக்கு வராது…. இந்த எண்ணத்துடன் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டான்.

 

நுனிநாக்கு ஆங்கிலத்தில் ஒருவர் பேசினார். அவரிடம் தன்னை நானாஜி தேஷ்முக் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தனக்கும் ஒரு ஃப்ளாட் தேவைப்படுவதாக அவன் சொன்னான். பணம் எத்தனை வெள்ளையிலேயே தந்தாக வேண்டும் என்று கேட்டான். ”நீங்கள் நேரில் வாருங்கள், பேசுவோம். அட்வான்ஸாக பத்து லட்சம் தந்தால் போதும்….” என்று பவ்யமாக பதில் வந்தது. அடுத்த வாரம் வருவதாகச் சொல்லி பேச்சை முடித்துக் கொண்டான். அலைபேசி வேலை செய்கிறது.  இப்போதைக்கு முதல் வேலை வெற்றிகரமாக முடிந்து விட்டது.

 

ர்ஜுன் வீட்டுக்கு வந்து ரகசியமாக நித்யாவிடம் தன்னுடைய அத்திவாக்கப் பயணத்தைப் பற்றிச் சொன்னான். மகுடபதிரங்கநாயகி தம்பதியரின் தற்கொலையைப் பற்றி அவன் சொன்ன போது அவள் முதலில் அதிர்ச்சி அடைந்தாள். பின் கண்கலங்கினாள். குரல் தழுதழுக்க அண்ணனிடம் சொன்னாள். “கேட்டுட்டு நமக்கே மனசு அதிருதே. அம்மா அந்த சமயத்துல எப்படியண்ணா அதைத் தாங்கி இருப்பாங்க?”

 

தங்கையை அர்ஜுன் மிகுந்த பாசத்துடன் பார்த்தான். அவளுடைய பேச்செல்லாம் சில சமயங்களில் அடாவடியாக இருக்குமே ஒழிய அவள் மனம் மிக மென்மையானது. யார் கஷ்டப்படுவதையும் அவள் தாங்க மாட்டாள். அதிலும், அவளுடைய அம்மா, அப்பா, அண்ணன் மூவருக்கும் சின்னதாக எதாவது கஷ்டம் வந்தாலும் அவளால் தாங்க முடியாது.

 

ஏன் அவங்க தற்கொலை பண்ணியிருப்பாங்கண்ணா?”

 

தெரியலை. நமக்குப் புரியாத நிறைய புதிர்கள் இதில் இன்னுமிருக்கு. நம்ம தாத்தாவோட பெரிய ஃபோட்டோ மாடசாமி வீட்டில் இருக்கு. தாத்தாவோட அரசியல் வாழ்க்கை பற்றியும் நிறைய பேசறார். நம்ம அப்பா, சித்தப்பா பற்றியும் பேசறார். ஆனா அவருக்கு அவரோட அபிமான அரசியல் தலைவரோட மனைவி மட்டுமல்ல, மூத்த மருமகளும் கூட அவரோட கிராமத்தைச் சேர்ந்தவங்கன்னு தெரியல.  தற்கொலை செஞ்சுட்டு இறந்து போன மகுடபதி அவரோட தலைவரோட சம்பந்தின்னு தெரியல…. தாத்தா வாசுதேவன் அவரோட மாமியார் வீட்டுக்குப் போயிட்டு இருந்த காலங்கள்ல, தாத்தா மகுடபதி அவரைச் சந்திக்கலைன்னு மாடசாமி சொல்றார். நான் முதல்ல நம்ம அப்பா, அம்மாவைச் சந்திச்சது அந்தக் கிராமத்துக்குப் போய்ட்டு வந்துகிட்டு இருந்த சமயத்துல இருக்கும்னு நினைச்சேன். ஆனால் அப்பா, சித்தப்பா எல்லாம் அங்கே அதிகமாய் போனதில்லைன்னு அவர் சொல்றார்…”

 

பார்த்துப் பிடிச்சுப் போறதுக்கு பல தடவை சந்திக்கணும்னு இல்லையே. ஒரே தடவைல கூடப் பிடிச்சுப் போலாமில்லையா?”

 

அது சரி தான். ஆனால் அப்படிப் பிடிச்சுப் போனா திரும்பவும் பார்க்கணும்னு அடிக்கடி போயிருப்பார் தானே. அது நடக்கலைங்கறேன்.”

 

நித்யா சிறிது யோசித்து விட்டுச் சொன்னாள். “எனக்கு ஒன்னு புரியலை அண்ணா. அந்தப் பெரியவர் மாடசாமிக்கு நம்ம அம்மா பெயர் கூட ஞாபகம் இல்லை. நம்ம அம்மா என்ன ஆனாங்கன்னு தெரியலை. தலைவரோட மூத்த மருமகள் தான் நம்ம அம்மான்னு தெரியலைங்கறது எல்லாம் எங்கேயோ இடிக்குதே அண்ணா. நம்ம அம்மா அப்பா கல்யாண காலத்தில் தாத்தா எதிர்க்கட்சித் தலைவர். எதிர்க்கட்சித் தலைவரோட முதல் மகன் கல்யாணம் நடக்கறது பத்திரிக்கைகள்ல ஃபோட்டோவோட வராமயா இருந்திருக்கும். கல்யாணத்துக்கு மாடசாமி போகலைன்னே வெச்சுக்குவோம்., பத்திரிக்கைகள்ல அம்மா ஃபோட்டோவைப் பார்த்தப்ப தெரியாமயா போயிருக்கும்.? பத்திரிக்கைகள்ல பார்த்து அந்தக்  கிராமவாசிகள்ல ஒருத்தர் கூடவா கண்டுபிடிக்காமல் இருந்திருப்பாங்க? கண்டுபிடிச்சிருந்தால் பேசியிருப்பாங்களே.”

 

அவள் சொல்வதும் சரி தான். அர்ஜுன் சொன்னான். “மற்ற கிராமவாசிகளை விடு. பாட்டியோட அண்ணா தம்பிகள் எல்லாம் அதே கிராமத்துல தான் அப்ப இருந்தாங்க? பாட்டியோட அப்பா மட்டும் தான் அப்ப இறந்திருந்தார்னு நினைக்கறேன். அவங்கள்ல்லாம் கல்யாணத்துக்கு வந்து போயிருப்பாங்க. அவங்களும் அதைப் பற்றிப் பேசாமயா இருந்திருப்பாங்க?”

 

இருவரும் பரபரப்புடன் இணையத்தில் பழைய பத்திரிக்கைக்குறிப்பு, அல்லது திருமணப்படங்கள் எதாவது இருக்கிறதா என்று தேடினார்கள். அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. நித்யாவை அம்மா எதோ வேலையாக அழைத்தாள்.

 

போகும் முன்நீ தேடிப் பாருண்ணா. கண்டுபிடிச்சுச் சொல்லு. தெரிஞ்சுக்காம நான் தூங்கப் போக மாட்டேன்….” என்று நித்யா சொல்லிவிட்டுப் போனாள்.

 

பழைய ஆட்கள் யாரிடமாவது கேட்கலாம் என்றால் அவனுடைய குடும்ப விஷயம் அவனுக்கே தெரியாமல் அவன் கேட்கிறான் என்று ஆகிவிடும். பாட்டியிடமும், ராஜாராமிடமும் கேட்பதிலும் அது தான் பிரச்சினை. அவனுடைய அப்பா, அம்மாவிடம் அவனால் நேரடியாகக் கேட்க முடியவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது போல் ஆகிவிடும். அவன் அதை விரும்பவில்லை.

 

இணையத்தில் தேடிய போது ராஜாராமின் திருமணப் புகைப்படங்கள் நிறைய கிடைத்தன. அப்போதைய முதல்வர் தணிகாச்சலம், அமைச்சர் ரத்தினம் (பின்னாள் முதல்வர்) அனைவரும் பங்கு பெற்றிருந்தார்கள். தந்தை இல்லாததால் அவர் ஸ்தானத்தில் நின்று ஞானமூர்த்தி தான் தம்பியின் திருமணத்தை நடத்தியிருந்தார். அக்காலத்தில் அப்பா, அம்மா, பாட்டி, சித்தப்பா, சித்தி எல்லாரும் எப்படி இருந்தார்கள் என்று ஆர்வத்துடன் அந்தப் புகைப்படங்களை அர்ஜுன் பார்த்தான்.

 

ராஜாராமின் திருமணப்படங்கள் பத்திரிக்கைகளில் கிடைத்தது போல ஏன் ஞானமூர்த்தி-பானுமதியின் திருமணப்படங்கள் கிடைக்கவில்லை என்ற கேள்விக்கு அன்றைய முதல்வர் தணிகாச்சலம் அன்று பேசியதில் அர்ஜுனுக்குப் பதில் கிடைத்தது.

 

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் தலைவர் உயிரோடு இல்லையே என்கிற வருத்தம் என் இதயத்தை அழுத்துகிறது. ஆனால் தலைவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தத் திருமண விழா இவ்வளவு சிறப்பாக நடந்திருக்க வழியில்லை என்பதையும் நான் சொல்லியாக வேண்டும். தலைவர் குடும்பத்தில் நடக்கும் இரண்டாவது திருமணம் இது. ஆனால் மூத்த மகன் திருமணத்தின் போது அவர் உயிரோடு இருந்தார். சொல்லப்போனால் அந்தத் திருமணத்தில் அவர்கள் குடும்பம் மட்டுமே இருந்தது. திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதில் தலைவருக்கு உடன்பாடில்லை. அந்தத் திருமணத்தை குமரக் கோட்டத்தில் மிக மிக எளிமையாக நடத்தி முடித்து விட்டு வந்த பின் தான் அவர் எங்களுக்கே தெரிவித்தார். நான் அதற்காகத் தலைவரிடம் நன்றாக சண்டை போட்டிருக்கிறேன். அவருடைய தம்பிகளான எங்களையாவது அழைத்திருக்க வேண்டாமா என்று அழாத குறையாகக் கேட்டிருக்கிறேன். திருமணத்திற்குச் செல்ல முடியாத நானும் மற்ற தலைவர்களும் பின்பு அவர் வீட்டுக்குப் போய் தான் மணமக்களை வாழ்த்திவிட்டு வந்தோம்….”    

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, August 3, 2026

ரட்சகன் 3


 

ரு வக்கீல் தன் கட்சிக்காரனைக் காப்பாற்றுகிறானோ இல்லையோ, முதலில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று நம்புபவர் காளிதாஸ். அதனால் அவர் பிரச்சினை இல்லாததும், அபத்தமானதும் போல் தோன்றும் அந்தச் சிறு கோரிக்கையை எப்படி நிறைவேற்றுவது என்று யோசித்தார். நேரடியாக அலைபேசியில் அழைத்து அப்சல்கான் சொன்னதை அவன் ஆளிடம் சொல்ல ஒரு நிமிடம் கூட ஆகாது. மேலோட்டமாகப் பார்த்தால்  ஒரு கட்டுரையைப் படிக்கச் சொன்னதைத் தெரிவிப்பதில் அவருக்கு எந்தப் பிரச்சினையும் சட்டப்படி வந்துவிட முடியாது.  ஆனால் பெரிய பிரச்சினை ஒன்று உருவானால் போலீசார் கண்டிப்பாக மேலோட்டமாகப் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ள மாட்டார்கள். அதுவும் இந்தியாவில் முதல் பணக்காரராகவும், ஆசியாவில் இரண்டாவது பணக்காரராகவும், உலக அளவில் எட்டாவது பணக்காரராகவும் இருக்கும் ராஜேஷ்வர் குடும்பம் சம்பந்தப்படும் விஷயம் எதுவும் மேலோட்டமாக பார்த்து கடந்து போகப்பட சாத்தியமேயில்லை. அரசாங்கம் அலறிக் கொண்டு போலீசாரை முடுக்கிவிடும் சாத்தியம் தானிருக்கிறது. போலீசார் உச்ச வேகத்தில் முழுமூச்சாக இறங்குகையில், காளிதாஸ் அழைத்துப் பேசிய ஒரு போன்கால் அவர்கள் கவனத்திற்கு வராமல் போக வாய்ப்பேயில்லை.

 

அதனால் என்ன செய்வது என்று காளிதாஸ் மூளையைக் கசக்கிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தார். உண்மையில் அப்சல்கானின் இயக்கத்தின் ஆட்கள் யாரையும் அவர் சந்தித்தது கிடையாது. அப்சல்கான்என் ஆள்என்று சொன்னது கூட அவன் சார்ந்திருக்கும் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் கிடையாது. காளிதாஸை சந்திக்க வந்தஅவன் ஆள்உண்மையில் ஒரு எடுபிடி அல்லது கூலிக்காரன். அவன் ஏதோ பொதுநல அமைப்பின் பெயரில் இயங்கி வரும் கைக்கூலி. லெட்டர்பேடில் மட்டுமே இயங்கும் அமைப்பு அது. அவ்வப்போது அறிக்கை விடுவதற்கும், இது போல் முக்கியஸ்தர்களுக்காக தூதுவனாக, தகவல் கொண்டு வருபவனாக மட்டுமே அவன் பயன்படுபவன்.

 

அப்சல்கானுக்காக வாதாட வேண்டும் என்ற கோரிக்கையோடும், பணத்தோடும் வந்து பேசிய அந்த ஆள் அவர் வீட்டுக்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் தான் வசிக்கிறான். ஆனால் அவனை நேரில் சந்திப்பதும், அலைபேசியில் அழைப்பதும் கூட ஆபத்து. அந்த ஆளின் அலைபேசி ஏற்கெனவே உளவுத் துறையால் கண்காணிக்கப்பட்டு கொண்டு கூட இருக்கலாம். என்ன செய்வது என்று யோசித்த காளிதாஸ் முடிவில் எளிமையான ஒரு தீர்வுக்கு வந்தார்.

 

ஒரு வெற்றுத் தாளை எடுத்து இடது கையில் எழுதினார்.

இந்த வார உமன்ஸ் வர்ல்டில் பதினாறாம் பக்கத்தில் உள்ள கட்டுரையைப் படிக்கவும்.

அப்சல்கான்

அந்த வெற்றுத் தாளை ஐந்து ரூபாய் தபால் உறையில் ஒட்டி உறையில் அந்த எடுபிடி ஆளின் விலாசத்தையும் இடது கையிலேயே எழுதி ஐந்து கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஒரு தபாலாபீசின் தபால் பெட்டியில் போட்டு விட்டு வந்தார். இந்தக் கடிதம் அந்த ஆளுக்கு நாளைக்குக் கிடைத்து விடும். என்னவோ செய்து தொலையட்டும். அவர் அப்சல்கான் சொன்னதை எழுத்து மூலமாகத் தெரிவித்து விட்டார். அவன் எவ்வளவு பணம் தந்தாலும் இதற்கு மேல் அவர் எதுவும் செய்வதற்கில்லை.

 

காளிதாஸ் அனுப்பிய அந்தத் தபால் விலாசதாரருக்கு மறுநாளே போய்ச் சேர்ந்தது. அனுப்புனர் விலாசம் இல்லாமல் வந்த அந்தத் தபாலை அந்த ஆள் சுவாரசியமில்லாமல் பார்த்தான். அதைப் பிரித்துப் படித்தவுடன் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. அந்தக் கடிதம் அப்சல்கான் அனுப்பியதாக இருக்கக்கூடும் என்று அவன் நம்பவில்லை. அவன் அறிந்த அப்சல்கான் பைத்தியக்காரத்தனமாக இதைப் போல் எழுதி அனுப்பக் கூடியவன் அல்ல. ஒரு பேரியக்கத்தின் துணைத்தலைவனான அப்சல்கான் அவனைப் போன்ற ஒரு கடைநிலைக் கூலிக்காரனை ஒரு கட்டுரை படிக்கச் சொல்லி வலியுறுத்துவானா? யாரோ அவன் பெயரில் விளையாடுகிறார்கள்....

 

ஆனால் விளையாட்டானாலும் அதையும் தெரிவிப்பது அவனுடைய கடமை. அதை எப்படிக் கையாள்வது என்று இயக்கம் முடிவு செய்து கொள்ளும்.. விளையாட்டானால் அதற்கு என்ன தண்டனை என்று யோசித்து தக்க தண்டனை கொடுக்கும் இயக்கம், அது எதாவது சங்கேத மொழியாக இருந்தால் அதையும் கண்டு கொண்டு அந்தத் தகவலைப் பயன்படுத்திக் கொள்ளும். அதைப் புரிந்து கொள்ள அவன் முயற்சிப்பது அனாவசியம். அவனுடைய சிற்றறிவுக்கு சூட்சுமங்கள் எட்டாது என்பதைத் தாண்டி, எதையும் அவனாகப் புரிந்து கொண்டு இயங்க அவனுக்கு அறிவுறுத்தல் இல்லை. அதனால் அவன் உமன்ஸ் வர்ல்டு என்ற பத்திரிக்கையை வாங்கவோ, அதில் பதினாறாம் பக்கத்தில் இருக்கும் கட்டுரையைப் படிக்கவோ துளியும் ஆர்வம் காட்டவில்லை.

 

அவன் அந்தக் கடிதத்தை அலைபேசியில் படம் எடுத்து வேறொரு நபருக்கு அனுப்பி வைத்தான். 

 

மென்ஸ் வர்ல்டு பத்திரிக்கையில் வந்த கட்டுரையைப் படித்து விட்டு யுவராஜைப் பலர் அழைத்து பாராட்டி விட்டார்கள். அவனுடைய சகோதரிகளும், அவன் மனைவி நிர்ப்பயாவுக்குப் பரிச்சயமான அவனுடைய நெருங்கிய நண்பர்களும் நிர்ப்பயாவையே அழைத்துப் பாராட்டினார்கள். நிர்ப்பயாவுடன் தனிப்பட்ட பரிச்சயம் இல்லாத அவன் நண்பர்கள் அவனை அழைத்துப் பாராட்டினார்கள். அத்தனை பேரும் பல வார்த்தைப் பிரயோகங்களில் தெரிவித்த ஒரே கருத்து – “நீ மிகவும் அதிர்ஷ்டக்காரன்

 

அது அவன் ஆத்மார்த்தமாகப் பல முறை உணர்ந்த விஷயம் தான். அவன் அதிர்ஷ்டக்காரனாக இல்லா விட்டால், இந்தியாவின் முதல் பணக்காரர் ராஜேஷ்வரின் மகளான நிர்ப்பயா அவனைக் காதலித்திருக்க மாட்டாள். அவளுக்கும் முன்பே அவள் மீது காதலை யுவராஜ் தீவிரமாக உணர்ந்திருந்தாலும் அதை அவளிடம் சொல்ல மிகவும் தயங்கினான். காரணம், அவளுடைய செல்வத்திற்காக அவன் அவளைக் காதலிக்கிறான் என்று அவள் நினைத்து விட அனைத்துக் காரணங்களும் இருக்கின்றன. அவனை அவள் மறுக்கவும் எத்தனையோ காரணங்கள் இருந்தன.

 

அவன் சொந்த வீடு கூட இல்லாத கீழ்மட்ட நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். கல்வியைத் தவிர வேறு எதையும் அவனுக்குத் தந்து விட முடியாத அவன் தந்தை ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக இருந்தார். தன்னுடைய மகள்களுக்கு எளிய முறையில் திருமணமும், மகனுக்கு ஒரு நல்ல கல்லூரியில் கல்வி கற்க வைக்கவும் மட்டுமே அவருக்கு முடிந்தது.  அந்த நல்ல கல்லூரி கூட நிர்ப்பயா போன்றவள் படிக்கும் உயர்வில் இருக்கவில்லை. என்றாலும் யுவராஜின் அதிர்ஷ்டம் அவளும் அந்தக் கல்லூரியில் படிக்க வந்தாள். யுவராஜோடு ஆரம்பத்தில் நட்புடன் பழகிய அவள் முடிவில் அவனைக் காதலிக்க ஆரம்பித்தாள்.

 

அவளுக்கு முன்பே அவன் அவளைக் காதலிக்க ஆரம்பித்திருந்தாலும் தவறாக அவள் அதை எடுத்துக் கொள்வாளோ என்று அவன் பயந்து தயங்கினாலும், அவளாகவே அவனிடம் தன் காதலைச் சொன்னாள். அவன் ஐ.பி.எஸ் முடிக்கும் வரை அவனுக்காகக் காத்திருந்த அவள், பின் பெற்றோர் மற்றும் சகோதரனின் கடும் எதிர்ப்பை மீறி, சொத்துக்களைத் துறந்து அவனைத் திருமணம் செய்து கொண்டாள்.

 

நாற்பத்திரண்டு ஆடம்பர அறைகள் கொண்ட அரண்மனை போன்ற வீட்டிலிருந்தவள், இரண்டு படுக்கையறை கொண்ட அரசாங்க வீட்டில் அவனுடன் மூன்று வருடங்களாக வசிக்கிறாள். அவர்களுக்குத் தற்போது நீலேஷ் என்ற இரண்டு வயது மகன் இருக்கிறான். அவளுடைய பெற்றோரும் சகோதரனும் இதுவரை அந்தக் குழந்தையைப் பார்க்கக் கூட வந்ததில்லை.  பிரசவத்தின் போது உதவியாக யுவராஜின் மூத்த சகோதரி தான் வந்தாள். ஒரு மாதம் கழிந்தபின் அவளையும், குழந்தையையும் பார்த்துக் கொண்டது அவனுடைய இளைய சகோதரி.

 

இந்த மூன்று ஆண்டுகளில் எந்த வசதிக் குறைவுக்காகவும் நிர்ப்பயா முகம் சுளித்ததோ, குறைப்பட்டுக் கொண்டதோ கிடையாது. ஆனால் அவளுக்காக அவன் பல முறை மனதினுள் தவித்திருக்கிறான். அவனால் முடிந்த வரை அவளுக்கு வசதிகள் செய்து தந்தாலும், அவளுடைய தந்தை ராஜேஸ்வர் அவளுக்குச் செய்ய முடிந்தது இமயமலை அளவு என்றால், அவனால் செய்ய முடிந்தது அவன் வீட்டுச் சுவர் அளவு தான்.

 

அவனுடைய நண்பர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருக்கும் சாதாரண நடுத்தர வர்க்கத்து மனைவிகளே கூட அதிருப்தியாளர்களாக இருப்பதை அவன் நண்பர்கள் புலம்பி அவன் பல முறை கேட்டிருக்கிறான். ஆனால் அவர்களை விட அதிகமாக பல கோடி மடங்கு அதிருப்தி அடையக் காரணமிருக்கும் அவன் மனைவி ஒரு முறை கூட அதிருப்தியைத் தெரிவிக்கவில்லை என்றால் எல்லோரும் சொல்வது போல் அவன் பேரதிர்ஷ்டக்காரனே அல்லவா?

 

பலரும் நிர்ப்பயாவைப் பேட்டி எடுக்க பல காலம் தொடர்ந்து முயன்ற போதும் அவள் இது வரை எல்லோருக்கும் மறுப்பையே தெரிவித்திருக்கிறாள். ஆனால் முதல் முறையாக அவள் பெரிதும் மதிக்கும் ஒரு பெண் எழுத்தாளர் அவளைப் பேட்டி எடுக்க ஆசையைத் தெரிவித்த போது மட்டும் அவளால் மறுக்க முடியவில்லை. விளைவு தான் உமன்ஸ் வர்ல்டில் வந்திருக்கும் இந்தப் பேட்டிக் கட்டுரை. அந்த எழுத்தாளர் மிகவும் கச்சிதமாக நிர்ப்பயாவின் அறிவையும், பண்பையும் அந்தக் கட்டுரையில் வெளிக்கொண்டு வந்திருப்பதாக யுவராஜ் நினைத்தான்.

 

ஆனால் அந்தக் கட்டுரையால் அவர்களுடைய வாழ்க்கையே தலைகீழாய் மாறப் போகிறது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.


(தொடரும்)

என்.கணேசன்


(ரட்சகன் நாவலை உடனே வாங்கிப் படிக்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.)

Thursday, July 30, 2026

சதுரங்கம் 29

 


ர்ஜுன் தன்னை சுதாரித்துக் கொள்ள சிறிது நேரம் தேவைப்பட்டது. “என்ன ஐயா சொல்றீங்க? அவங்க ரெண்டு பேரும் தற்கொலை செய்துகிட்டாங்களா?”

 

ஆமா தம்பி. என்ன காரணம்னு யாருக்கும் சரியா தெரியா தெரியலைன்னாலும் வறுமை தான் காரணம்னு தோணுது. ரெண்டு பேரும் தினக்கூலிக்குப் போய்கிட்டு இருந்தாங்க. இந்தக் கிராமத்துல வேலை இல்லைன்னா பக்கத்து கிராமத்துக்குப் போவாங்க. கஷ்ட ஜீவனம் தான் பாவம். ஆனா அந்தக் கஷ்டத்துலயும் மகுடபதி அடுத்தவங்க கிட்ட கையை நீட்டி நின்னவரில்லை. மானஸ்தன்...”

 

அம்மா தன் பெற்றோரைப் பற்றியோ இளமைக்காலம் பற்றியோ ஏன் பேசுவதைத் தவிர்த்தாள் என்பது இப்போது புரிந்தது. பெற்றோரை இழந்து நிர்க்கதியாக, அனாதையாக அவள் நின்றிருந்த போது எத்தனை வேதனையை அனுபவித்தாளோ? அம்மாவை நினைக்கையில் அவனுக்கு மனம் இளகியது.

 

மாடசாமிக்கு மகுடபதியின் உறவினர்கள் யாரையும் தெரிந்திருக்கவில்லை. மகுடபதியின் மகள் என்ன ஆனாள், இங்கிருந்து எங்கே போனாள் என்பதெல்லாம் தெரியவில்லை. பாவப்பட்ட நல்ல மனிதர்கள் என்பதைத் தவிர அவருக்குக் கூடுதலாக அவர்களைப் பற்றிச் சொல்ல எதுவுமிருக்கவில்லை. அதனால் அர்ஜுன் கிளம்பத் தீர்மானித்த போது தான் மாடசாமி வீட்டுச் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த வாசுதேவனின் புகைப்படத்தைப் பார்த்தான்.

 

தலைவர் படத்தை மாட்டியிருக்கீங்க. அவரோட ஆதரவாளரா நீங்க?”

 

மாடசாமி வாசுதேவனின் புகைப்படத்தை பெருமையாகப் பார்த்து விட்டு ஆமாம் என்று தலையாட்டினார்.  அவரைப் பல தடவை நேரில் பார்த்துப் பேசற பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு. இந்தக் கிராமத்துக்கு வந்ததால கிடைச்ச பாக்கியம் அது

 

அர்ஜுனுக்கு அவர் ஏனப்படி சொல்கிறார் என்று புரியவில்லை.  ஏன் ஐயா அப்படிச் சொல்றீங்க? வேற இடத்துல இருந்திருந்தா உங்களுக்கு அவரைப் பார்த்துப் பேச முடிஞ்சிருக்காதா?”

 

அதுக்கு நான் அவரிருக்கற இடத்திற்குப் போய் அல்லவா போயிருக்கணும். இங்கே அவர் அடிக்கடி வந்து போய்கிட்டு இருந்ததால, அவர் இங்கே வந்தப்ப எல்லாம் போய்ப் பார்த்து பேச முடிஞ்சதுன்னு சொல்ல வர்றேன்.”

 

இங்கே ஏன் அவர் வந்து போய்கிட்டு இருந்தார்?” அர்ஜுன் குழப்பத்தோடு கேட்டான்.

 

என்ன தம்பி உங்களுக்குத் தெரியாதா? அவர் இந்த கிராமத்துப் பொண்ணைத் தானே கட்டிகிட்டார்? யசோதாம்மாவோட தாய்வீடு இங்கே தான இருந்துச்சு?”

 

அர்ஜுனுக்கு இந்தத் தகவலும் அதிர்ச்சியைத் தந்தது. அம்மாவும், பாட்டியும் ஒரே ஊர்க்காரர்களா? அம்மாவின் திருமணத்திற்கு முன்பே அம்மாவைப் பாட்டிக்குத் தெரியுமா? 

 

மாடசாமி சொல்லிக் கொண்டே போனார். ”அவர் மாமனார் வீட்டுக்கு வர்றப்ப எல்லாம் நாங்க அங்கே போய் அவரைப் பார்க்காம இருக்க மாட்டோம். யார் போனாலும் எந்த பந்தாவும் இல்லாமல் பேசுவார். அவரை மாதிரி தங்கமான ஒரு நல்ல தலைவரை எல்லாம் இந்தக் காலத்துல பார்க்க முடியுமா தம்பி? இப்பத்து ஆளுக எல்லாம் தேர்தல் சமயத்துலன்னா தலையைக் காட்டுவானுங்க. கையெடுத்துக் கும்பிடுவானுங்க. மற்ற சமயத்துல எல்லாம் அவங்களை நெருங்கவாவது முடியுமா, சொல்லுங்க தம்பி

 

முடியாதுஎன்று அர்ஜுன் ஒத்துக் கொண்டான். சொந்த சொத்தைக் கூட மக்களுக்காக எந்த அரசியல்வாதி எப்போது செய்திருக்கிறார்? நாணயம், நேர்மையின் திருவுருவமாக இருக்கும் அவனுடைய அப்பா கூட அதைச் செய்ய மாட்டார்.

 

மாடசாமி சொன்னார். “சொல்லப் போனா தலைவரோட மாமனாரும், மச்சான்களும் தான் எங்களைக் கோவிச்சுக்குவாங்க. எங்க மாப்பிள்ளை கூட கொஞ்சம் நேரம் கூட எங்களைப் பேச விடமாட்டேங்கறீங்களேன்னு திட்டுவாங்க.”

 

அந்தக் குடும்பத்து ஆளுக யாராவது இப்பவும் இந்தக் கிராமத்துல இருக்காங்களா?”

 

இல்லை தம்பி. அந்தக் குடும்பம் இருபது வருஷத்துக்கு முன்னாடியே இங்கே இருக்கற சொத்தை எல்லாம் வித்துட்டு டவுன்ல போய் செட்டிலாயிட்டாங்க. யசோதாம்மாவோட தம்பி மட்டும் எப்பவாவது ஒரு தடவை இந்தக் கிராமத்துல இருக்கற அவங்க குலதெய்வம் கோயிலுக்கு, குடும்பத்தோட வந்துட்டு போவார். ”

 

ஒருவேளை அந்த வீட்டுக்கு அப்பா வந்து போன ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அம்மாவைப் பார்த்திருக்கலாம் என்று அர்ஜுனுக்குத் தோன்றியது.

 

தலைவரோட பசங்களும் இங்கே அடிக்கடி வந்துகிட்டிருந்தாங்களா ஐயா?”

 

சின்னப் பசங்களாய் இருந்தவரைக்கும் வந்துகிட்டு இருந்திருக்கலாம். நான் இங்கே வந்த பிறகு அவங்க இங்கே அதிகமாய் வந்து நான் பார்க்கலை தம்பி. தலைவர் இறந்ததுக்கப்பறம் யசோதாம்மா இங்கே வந்ததே கூடக் குறைவு தான். நான் யசோதாம்மாவை இங்கே கடைசியாய் பார்த்தது அவங்க அண்ணா காலமானப்ப. அது 22 வருஷங்களுக்கு முன்னாலே….”

 

அர்ஜுன் கேட்டான். “நீங்க போய் தலைவரைப் பார்த்துகிட்டு இருந்த காலத்துல உங்க மாதிரி மகுடபதியும் தலைவரைப் பார்க்க வந்ததுண்டா

 

மாடசாமி சிரித்தபடி சொன்னார். “இல்லை தம்பி. மகுடபதி மாதிரியான ஆள்க உலகம் ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே தான். அவங்க, அவங்க குடும்பம், உழைப்பு, ஊதியம்னு மட்டும் தான் அந்த உலகம் இருக்கும். ஒரு நாள் பிரச்சினை இல்லாமல் கடந்துச்சுன்னா அதுவே அவங்களுக்குப் பெரிய விஷயம். அதைத்தவிர வேறு எதுலையும் அவங்க ஈடுபடறதில்லை. கவனிக்கறதுமில்லை.”

 

அர்ஜுனுக்கு அம்மா ஏன் அப்படி இருக்கிறாள் என்று இப்போது புரிந்தது. அவள் வளர்ந்த விதமே அப்படித்தான். கூடுதலாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் அவள் கவிதைகளை எழுதி வைத்திருக்கிறாள் என்பதைத் தவிர வேறு வித்தியாசம் இல்லை. இப்போதும் அம்மாவுக்கு உலக நடப்புகள் தெரியாது, தெரிந்து கொள்ள விருப்பமும் கிடையாது.

 

மகுடபதியும் அவர் மனைவியும் இறந்துட்டதால இன்சூரன்ஸ் பணத்தை அவர் மகளுக்குத் தான் தரமுடியும். மகுடபதி மகள் பத்தி யாரைக் கேட்டால் தெரியும்?”

 

தெரியலையே தம்பி

 

கடைசியாக மாடசாமியை அர்ஜுன் கேட்டான். “உங்க தலைவரோட ரெண்டு மகன்களே அரசியல்ல எதிரும் புதிருமா இருக்காங்க. அதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க ஐயா?”

 

தலைவரோட மூத்த மகன் ஞானமூர்த்தி தான் அரசியல்ல இருக்காரு. சின்னவர் ராஜாராம், பின்னால இருந்து ஆளும் கட்சியை இயக்கறாருன்னு சொல்றாங்க. ஆனா அது பிரயோஜனம் இல்லையே தம்பி. தலைவரோட மகன் களத்துல நேரடியாய் இறங்கறதல்லவா பெருமை? அதுவும் அவர் அண்ணனை எதிர்த்து ஆதரிக்கிறது திருட்டுப்பசங்களை. அது நியாயமில்லையே

 

உங்க ஆதரவு யாருக்கு ஐயா?”

 

மூத்தவருக்குத் தான். அவர் எதையும் நியாயமாய், வெளிப்படையாய் செய்யறார். நேர்மையாய்ப் பேசறார். ஆனால் அது எந்த அளவுக்கு அவருக்குக் கைகொடுக்கும்னு தெரியல தம்பி.”

 

அர்ஜுன் மாடசாமிக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

 

விமல் ராஜா சிங் சொன்ன நேரத்திலேயே அவனுடைய கடைக்குச் சென்றான். கடைசி நேரத்தில் ராஜா சிங் கையை விரித்து விடுவானோ என்று விமலுக்குப் பயமாக இருந்தது. நேற்று இரவு நிம்மதியாகத் தூங்கி எழுந்த அவனுக்கு இன்று காலை வரை இருந்த நிம்மதி பிறகு விடைபெற்றுக் கொண்டது. கஷ்ட காலங்களில் ஒரு சமயத்தில் இருக்கும் தைரியம் இன்னொரு சமயத்தில் இருப்பதில்லை

 

அவன் சென்ற போது ராஜாசிங் கடையில் வேறு ஆட்களும் இருந்தார்கள். விமலைப் பார்த்த போது ராஜா சிங் முகத்தில் அவனை அறிந்திருக்கும் அறிகுறி கூட இல்லை. அதைப் பார்த்த விமலுக்குப் பக்கென்றது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் புதிய மொபைல் போன்களைப் பார்க்க ஆரம்பித்தான். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் செய்தான். அதற்குள் மற்ற வாடிக்கையாளர்கள் வந்த வேலையை முடித்துக் கொண்டு போய்விட்டார்கள்.

 

அவர்கள் சென்ற பின் ராஜாசிங் கல்லாவிலிருந்தபடியே விமலைப் பார்த்து, அருகே வரும்படி சைகை செய்தான். விமல் அருகே சென்றவுடன் ஒரு சிறிய தாளை அவனிடம் நீட்டினான். அதில் நானாஜி தேஷ்முக், 5, கோல்டன் ஸ்டார் அபார்ட்மெண்ட்ஸ், 298 பட்டேல் ரோடு, கரோல் பாக்,  டெல்லி 110005. என்ற முகவரி இருந்தது. அந்தப் பெயர், விலாசத்தில் தான் சிம் எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை விமல் புரிந்து கொண்டு தலையை ஆட்டினான்.

 

ராஜா சிங் கையை நீட்ட விமல் புதியதாகத் தேர்ந்தெடுத்து வைத்திருந்த மொபைலையும் கொடுத்தான். ராஜா சிங் இன்னொரு சிறிய தாளை எடுத்துரூ3000 + ரூ13580 = ரூ 16580/-”என்று எழுதினான்.

 

விமல் அந்தத் தொகையை எடுத்துக் கொடுத்தவுடன் அந்த புதிய மொபைலில் சிம்மை பொருத்தித் தந்தான். விமல் பரம திருப்தியுடன்ரொம்ப தேங்க்ஸ்என்றான். ராஜா சிங் முகத்தில் சிறு புன்னகைக் கீற்று தோன்றி மறைந்தது. விமல் வெளியே வந்தான்.


(தொடரும்)

என்.கணேசன்


ஆகஸ்ட் 4 வரை நடக்கும் ஒசூர் புத்தகத் திருவிழாவில் என்.கணேசனின் நாவல்கள் அரங்கு எண் 19,  20 மகேஸ்வரி புக் ஸ்டாலில் கிடைக்கும்.