என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, March 16, 2026

யோகி 147

 

தேவானந்தகிரி நீண்ட யோசனைக்குப் பின் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முடிவு செய்தார். அவர் இது போன்ற விஷயங்களைக் கண்டுபிடிக்கப் போலீஸுக்குப் போவதில்லை. அவருடையபிரஷ்னம்அவருக்குக் குற்றவாளியைக் காட்டிக் கொடுத்து விடும். அவர் காலில் காயமான நேரத்தை உத்தேசமாக மனதில் குறித்துக் கொண்ட அவர், அதை வைத்து சில கணக்குகளைப் போட்டார். பின் யோகாலயத்திலிருந்து பாண்டியன் அவரை அலைபேசியில் அழைத்து அங்கு வரச்சொல்லி வேண்டுகோள் விடுத்த நேரத்தை, அலைபேசியில் பார்த்து, குறித்துக் கொண்டார். பின் தன் ஐந்து வயதுப் பேத்தியை அவர் அழைத்தார். சோளிகள் நிறைந்திருந்த டப்பாவை அவளிடம் நீட்டி அதிலிருந்து ஒரு கைப்பிடி சோளிகள் எடுத்துத் தரச் சொன்னார். அவள் எடுத்த சோளிகளை மேசையில் வைக்கச் சொன்னார்.

 

அவளை அனுப்பி விட்டு, மேசையில் இருந்த சோளிகளை எண்ணியவர் சற்று முன் எடுத்த இரண்டு நேரக்குறிப்புக் கணக்குகளையும் எடுத்துக் கொண்டு மேலும் சில கணக்குகள் போட்டார். முடிவில் இதன் பின்னணியில் யோகாலயத்தின் எதிரி இருப்பதாய் பிரஷ்னம் தெரிவித்தது. இதுவரை நடந்ததை எல்லாம் யோசித்துப் பார்த்தார். யோகாலயத்திலிருந்து பாண்டியன் சொன்னதை எல்லாம் நினைவுபடுத்திப் பார்த்த போது அவர் சொல்லியிருந்த விசேஷ சக்திகள் கொண்ட புதிய துறவி தேவானந்தகிரியின் சந்தேகத்தைக் கிளப்பினான். அவனைப் பற்றி மேலும் தீவிரமாக அவர் யோசித்துக் கொண்டு இருந்த போது பல்லி சத்தமிட்டது.

 

சற்று தள்ளி விளையாடிக் கொண்டிருந்த அவரது ஐந்து வயதுப் பேத்தி, அதே நேரத்தில், ஒரு பெரிய வட்டத்தை சாக்பீசில் வரைந்து வெளிப்பக்கத்திலிருந்து வட்டத்திற்குள்ளே குதித்தாள். திகைத்த தேவானந்தகிரி கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைக் குறித்துக் கொண்டு பஞ்சாங்கத்தைப் பிரித்தார். சிறிது நேரத்தில் அவரது சந்தேகம் உறுதியாகிறது. அவரைச் செல்ல விடாமல் தடுத்த பின்னணியில் யோகாலயத்தின் எதிரி இருப்பது மட்டுமல்ல, அவன் தற்போது யோகாலயத்தின் உள்ளேயே இருக்கிறான்...

 

பரபரப்புடன் அவர் பாண்டியனிடம் இதைத் தெரிவிக்க அலைபேசியை எடுத்தார். அலைபேசி அவர் கையிலிருந்து நழுவியது. இதுவும் ஒரு சகுனம். அலைபேசியில் இதைத் தெரிவிப்பது உசிதம் அல்ல என்று சகுனம் சொல்கிறது.

 

சிறிது ஆலோசனைக்குப் பிறகு தேவானந்தகிரி பாண்டியனை அழைத்து, அன்று மாலை அங்கு கிளம்பி வர முடியாதபடி அவரது காலில் அடிபட்டிருப்பதைச் சொன்னார். பாண்டியனின் ஏமாற்றம் அவர் பேச்சில் வெளிப்படையாகத் தெரிந்தது.

 

தேவானந்தகிரி சொன்னார். “கவலைப்படாதீங்க. நான் நேர்ல வர முடியாட்டியும், உங்களுக்குத் தேவையான ஒன்றை என் ஆள் மூலம் நாளைக்கு அனுப்பறேன்.”

 

ந்த உரையாடல் பதிவைக் கேட்ட ராகவனுக்கும், குமரேசனுக்கும்,  தேவானந்தகிரி ஆள் மூலம் எதை நாளை அனுப்புகிறார் என்பதை யூகிக்க முடியவில்லை. ஏதாவது பூஜை செய்து அந்தப் பிரசாதத்தை ஆள் மூலம் அனுப்புவார் போலிருக்கிறது என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்கள். வரவிருக்கும் ஆபத்து அவர்களுக்குத் தெரியவில்லை.

 

தேவானந்தகிரி வர முடியாதது பாண்டியனுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் அவர் நாளை எதோ முக்கியமானதை அவருடைய ஆள் மூலம் அனுப்புவதாகச் சொன்னது சிறிது ஆறுதலாக இருந்தது. அந்த முக்கியமானது என்ன என்று அவர் கேட்ட போது தேவானந்தகிரிஒரே நாள் தானே பொறுங்கள்என்று சொல்லி விட்டார்.

 

ஒரு நாளில் எத்தனை மணிகள், நிமிடங்கள், வினாடிகள் இருக்கின்றன, அவற்றைக் கடப்பது எவ்வளவு கஷ்டம் என்பது, தேவையோடு காத்திருப்பவனுக்குத் தான் தெரியும். பாண்டியன் பெருமூச்சு விட்டார்.

 

அவருடைய அலைபேசி இசைத்தது. அழைத்தது சுகுமாரன்.

 

பாண்டியன் அலைபேசியை எடுத்துப் பேசினார். “சொல்லுங்க டாக்டர்

 

தேவானந்தகிரி எத்தனை மணிக்கு வர்றார்?”

 

அவர் காலில் அடிபட்டுடுச்சாம். அதனால அவர் இன்னைக்கு வரலை. நாளைக்கு ஆள் மூலமாய் எதோ முக்கியமானதை அனுப்பறாராம்.”

 

சுகுமாரன் சலித்துக் கொண்டார். “ஏன் நமக்குன்னே இப்படி நடக்குதுன்னு தெரியலை பாண்டியன். எல்லாத்துலயுமே ஒரு தடங்கல், பிரச்சினை. என்னால வீட்டுல நிம்மதியாய் இருக்க முடியலை...”

 

சுகுமாரனுக்குத் தற்போதைய பெரிய பிரச்சினைக்குக் காரணம் அவர் மனைவியின் தோழி. அவர் மனைவி அந்தத் தோழியைக் கண்மூடித்தனமாய் நம்புவது தான். ஒரு நாய்க்குத் தாயத்து கட்டுவதை அவர் மனைவியால் இப்போதும் ஜீரணிக்க முடியவில்லை. அவர் இதெல்லாம் யோகி பிரம்மானந்தாஜியின் ஆலோசனையின் படி தான் நடக்கிறது என்று சொன்னதை இரண்டு நாட்கள் முன்பு வரை எதிர்க்குரல் இல்லாமல் கேட்டு வந்த அவர் மனைவி இரண்டு நாள் முன்பு, “போகச் சொல்லுங்க உங்க யோகிஜிய. அவருக்கு ஒரு எழவும் தெரியாது. வெறும் பேச்சு மட்டும் தான்.” என்று சொல்லி விட்டாளாம்.

 

பாண்டியன் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கினார். நல்லவேளை சுகுமாரன் யோகிஜி இருக்கும் போது இதைச் சொல்லவில்லை. யோகிஜி கேட்டிருந்தால் நொந்து போயிருப்பார்.

 

இது இவளாய் பேசறதில்லை பாண்டியன். இவள் தலையில வேண்டாததை எல்லாம் ஏத்தறது இவ சிநேகிதி தான். நான் தேவானந்தகிரி வந்தா, அந்த சிநேகிதி கிட்ட இருந்து இவளைக் காப்பாத்த எதாவது பண்ண முடியுமான்னு கேட்கலாம்னு இருந்தேன்இப்ப அதுக்கும் வழியில்லாமல் போயிடுச்சு. நீங்க அந்த நிஜ யோகி வந்தப்ப என்னையும் கூப்பிட்டிருந்தால் அவர் கிட்டயாவது எதாவது ஆலோசனை கேட்டிருக்கலாம். நீங்கள் என்னைக் கூப்பிடாமயே அவர் கிட்ட பேசி அவரை அனுப்பிச்சிட்டீங்க.”

 

அந்த நிஜ யோகி முன்னால் இந்த யோகிஜி முள்ளில் அமர்ந்திருப்பது போல் அமைதியிழந்து இருந்ததை பாண்டியனால் அவரிடம் சொல்ல முடியவில்லை. அந்த யோகியிடம் மலர்ச்சி இருந்தது போலவே தெளிவும் இருந்ததாய் பாண்டியன் நினைத்தார். என்ன கேட்டிருந்தாலும் அந்த யோகி யோசிக்காமல் பதில் சொல்லியிருப்பார். ஆனால் அந்தப் பதில் புரியுமா, பிடிக்குமா என்பது தான் நிச்சயமில்லை. டாக்டர் சுகுமாரனும் இங்கு அந்தச் சமயத்தில் இருந்திருந்தால் சந்திப்பு மிக சுவாரசியமாக இருந்திருக்கும் என்று தோன்றியது

 

சரி பாண்டியன், நான் ராத்திரி சாப்பிட்டு விட்டு அங்கே வந்துடறேன்.”

 

தேவானந்தகிரி இன்னைக்கு வரலைன்னு சொன்னேனே. வரலைன்னா பூஜையும் இருக்காது. பின்ன எதுக்கு வர்றீங்க?”

 

ஷ்ரவனானந்தா மூலம் தெரிஞ்சுக்க தேவானந்தகிரி கொடுத்திருக்கிற முகூர்த்தங்கள்ல கடைசி முகூர்த்தம் இன்னைக்கு ராத்திரி இருக்கே. மறந்துட்டீங்களா?”

 

அப்போது தான் அது பாண்டியனுக்கு நினைவு வந்தது.  ஆமாம் மறந்துட்டேன்.”

 

நான் அவர் சொன்ன அன்னைக்கே வந்து என் டைரியில் குறிச்சு வெச்சுகிட்டேன்.”

 

பாண்டியனுக்குத் தங்கள் நிலையே வேடிக்கையாகத் தான் இருந்தது. ஒரு காலத்தில் தீவிர நாத்திகர்களாக இருந்த அவரும், சுகுமாரனும் மந்திரவாதம், செய்வினை போன்றவற்றை நம்ப ஆரம்பித்திருப்பது மட்டுமல்லாமல் டைரியில் முகூர்த்தங்களைக் குறித்து வைத்துக் கொண்டு தேவானந்தகிரி, ஷ்ரவனானந்தா போன்றவர்களுக்காகக் காத்திருக்க ஆரம்பித்து விட்டது காலத்தின் கோலம் அல்லவா?

 

பாண்டியன். இன்னொரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா? உங்க ஏரியால இன்ஸ்பெக்டராய் செல்வம்னு ஒருத்தன் இருந்தானே. அவனை அவன் மனைவி இன்னைக்கு எங்க ஆஸ்பத்திரி சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட  காட்டக்   கூட்டிகிட்டு வந்திருந்தாள். அவனோட பிரச்சினையைக் கேட்டால் ரொம்பவே வேடிக்கையாய் இருக்கு. யாருமே அவனைக் கொஞ்ச நேரம் தொடர்ந்து உற்றுப் பார்த்துகிட்டே இருக்கக்கூடாதாம். அப்படிப் பார்த்தா பயங்கரமாய் அவனுக்குக் கோபம் வந்துடுமாம். கெட்ட கெட்ட வார்த்தையால திட்ட ஆரம்பிச்சுடுவானாம். அவனுக்கு தூத்துக்குடிக்கு வேலை மாற்றலான பிறகு இப்படி ஆயிடுச்சுன்னு சொல்லி அவள் அழுதாள்…”

 

தேவானந்தகிரி வராமல் இருந்திருந்தால் தங்கள் நிலைமையும் அப்படித் தான் ஆகியிருந்திருக்குமோ என்று பாண்டியன் எண்ணிக் கொண்டார். இப்படியே விட்டிருந்தால் பைத்தியம் பிடித்திருக்கும் என்று தேவானந்தகிரி சொன்னது அவர் நினைவுக்கு வந்தது. ஆனால் அவர் செல்வத்தின் பிரச்சினைக்கும் சைத்ராவின் ஆவி பின்னணி இருப்பதை சுகுமாரனிடம் சொல்லவில்லை. சொல்லி பீதியை மேலும் கிளப்பி, கூடுதல் புலம்பல்களைக் கேட்கும் மனநிலையில் அவர் இல்லை


(தொடரும்)

என்.கணேசன்



Thursday, March 12, 2026

சதுரங்கம் 9


ர்ஜுன் அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை. ஒரு கணம் தங்கையை யோசனையுடன் பார்த்து விட்டு அவளுடைய அறையிலிருந்து வெளியே வந்து விட்டான். அம்மா அப்போதும் அங்கேயே தான் நின்று துணியை மடித்துக் கொண்டு இருந்தாள். தங்கை சொன்னது அவள் காதிலும் விழுந்திருக்க வேண்டும். ஆனால் அவள் மகன் பக்கம் திரும்பவில்லை.

 

அர்ஜுன் தனதறைக்கு வந்தான். தங்கை சொன்ன விஷயங்கள் அவனை மிகவும் யோசிக்க வைத்தன. அம்மாவைப் போல் அவனும் ஒரு தனி கூட்டுக்குள் இருக்கிறான் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. எந்த ஒரு விஷயத்தை அம்மாவின் தவறாக அவன் நினைத்துக் கொண்டிருக்கிறானோ அதே தவறு அவனிடமும் இருப்பதாக, நியாயமானவளாக அவன் நினைக்கும் அவன் தங்கையே சொல்கிறாள். அம்மாவும் தனிக்கூட்டுக்குள் இருப்பதை நித்யா தெரிந்து கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இத்தனைக்கும் அம்மா அவனிடம் ஒரு இடைவெளியில் இருப்பது போல் அவளிடம் என்றுமே இருந்ததில்லை. மகள் என்றுமே அவளுக்கு செல்லம் தான்.  அப்படியிருந்தும் நித்யா அம்மாவைச் சரியாக எடை போட்டு இருக்கிறாள். அது தான் கீதா அவனைக் காதலிக்கிறாள் என்ற நித்யாவின் கணிப்புக்கு அதிக கனம் தந்தது.  

 

வார்த்தைகள்ல சொல்றதுக்கு முன்னாடி மனசார உணர்ற விஷயம் அது. நீ உணரலைன்னு தெரிஞ்சதுக்கப்பறம் வார்த்தையால அவங்க எப்படி சொல்வாங்க?” என்ற வார்த்தைகள் அவன் காதில் ரீங்காரம் செய்தன.  அவன் மனம் கீதாவைப் பற்றிய நினைவுகளை அலசியது.

 

ஒரே தொழிலில் இருப்பதால் அடிக்கடி சந்தித்துக் கொண்டதில் ஆரம்பித்த நட்பு அவர்களுடையது. கீதா மிக நல்ல பெண். நேர்மையானவள். யோசித்துப் பார்த்தால், அழகானவளும் கூட. அடிக்கடிப் பார்த்தாலும், எத்தனையோ நிருபர்களை, புன்னகையுடனும், கைகாட்டலுடனும், ஹலோவுடனும் அவன் நிறுத்திக் கொண்டிருந்தாலும் கீதா மட்டும் அதை எல்லாம் தாண்டி அவன் வாழ்க்கையில் வந்திருந்தாள். இருவரும் தினமும் சந்திக்கா விட்டாலும், கடந்த இரண்டு வருடங்களாக தினமும் அலைபேசியில் பேசிக் கொள்ளாமல் இருந்ததில்லை. ஆனால் அவர்கள் இருவரும் அதிகமாகப் பேசிக் கொள்வதெல்லாம் அவர்களுடைய துறை சார்ந்த விஷயங்களைத் தான். அவளாவது தன் குடும்ப விஷயங்களை வெளிப்படையாக அவனிடம் சொல்லியிருக்கிறாள். ஆனால் அவன் தன் குடும்ப விஷயங்களை அவளிடம் வெளிப்படையாகப் பேசியதில்லை. ஒருவேளை அவர்கள் இருவரும் தினமும் பேசிக் கொள்கிறார்கள் என்பதை வைத்து அது காதலால் என்று நித்யா சந்தேகப்படுகிறாளோ? எதிர்பாலின நட்புக்குப் பல சமயங்களில் காதல் என்ற தவறான பெயர் சமூகத்தால் வைக்கப்பட்டு விடுவது உண்டு.  நித்யா அந்த வகை முட்டாள் அல்ல.

 

நித்யா தான் அவன் பிறந்த நாளுக்கு கீதாவை இங்கே அழைக்கச் சொன்னவள். அப்படி கீதா வந்த போது தான் நித்யா கீதாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறாள். அதற்கு முன்போ, பின்போ அவர்கள் இருவரும் பேசிக் கொண்டதில்லை. அந்த ஒரு சந்திப்பிலேயே நித்யா இந்த அனுமானத்திற்கு வந்திருக்கிறாள். அவன் மனம் கீதாவுடனான பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்தது. அவளுடன் பழகிய தருணங்கள் திரைப்படமாய் மனத்திரையில் வந்து போனது.  புதிதாகப் பார்ப்பது போல் அவன் பார்க்க ஆரம்பித்தான்.

 

ஒவ்வொரு முறையும் அவனைப் பார்க்கையில் அவள் கண்களில் தெரிந்த உற்சாகம், மற்றவர்களைத் தவிர்த்து அவனுடன் மட்டும் அவள் அதிகம் பழகியது எல்லாம் ஒரு நெருக்கமான நட்பின் அறிகுறிகளாகக் கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் பலருடன் ஒரே இடத்தில் இருக்கையில், அவன் மற்றவர்களுடன் உரையாடிக் கொண்டோ, வேறு எதையாவது கவனித்துக் கொண்டோ இருந்து விட்டுத் திடீரென்று திரும்பிப் பார்க்கையில் சில சமயங்களில் அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்ததை இப்போது அவன் நினைவுகூர்கிறான்.  அந்த சமயங்களில் என்ன?’ என்று அவன் புருவங்களை உயர்த்தி, பார்வையால் கேட்டிருக்கிறான். சில சமயங்களில் ஒன்றுமில்லைஎன்று சைகையால் சொல்லித் திரும்பியிருக்கிறாள். சில சமயங்களில்உன்னிடம் அவர் என்ன சொல்கிறார் என்று யோசித்தபடி பார்த்தேன்என்றும், சில சமயங்களில்நீ என்ன கவனிக்கிறாய் என்று பார்த்தேன்என்றும் பிறகு விளக்கியிருக்கிறாள்.

 

ஒரு பெண்ணின் பார்வையின் அர்த்தம் புரியாத அளவு அவன் அறிவுக்குறைபாடு உள்ளவன் அல்ல. ஒரு சிறு பார்வையிலேயே பலதையும் புரிந்து கொள்ளக்கூடிய அளவு சூட்சும அறிவு படைத்தவன் தான் அவன். அப்படி இருந்தும், அவளைப் புரிந்து கொள்ளாதது மட்டுமல்ல, ”என்ன?” என்று கேட்கும் அளவு அவன் மரமண்டையாக இருந்திருக்கிறான். இப்போது தங்கை தெரிவித்த போது கூட அவன் முதலில் அதை நம்ப மறுத்திருக்கிறான்.

 

ஒரு நோயாளியின் நோயை விருப்பு வெறுப்பில்லாமல் ஆராய்ச்சி செய்யும் மருத்துவர் போல, விலகி நின்று யோசிக்கையில் ஒன்று அவனுக்குப் புரிந்தது. அந்தக் காதலை அங்கீகரிப்பதில் அவன் ஆழ்மனம் அசௌகரியத்தை உணர்ந்திருக்கிறது.  அது ஏனென்று அவன் மேலும் யோசித்தான். மிக நெருக்கமாக யாரிடம் பழகுவதையும் அது தான் அவனைத் தடுத்திருக்கிறது. ஒரு எல்லையோடு அவனை நிறுத்தியிருக்கிறது. அதற்கு மேல் போவதில் அசௌகரியத்தை உணர்ந்திருக்கிறது.

 

ஆழமாக யோசித்த அந்தக் கணத்தில், காரிருளில் மின்னலாக ஒரு உண்மை அவனுக்குப் புலப்பட்டது. சிறு வயதிலிருந்தே அவன் தாயிடம் எதிர்பார்த்து கிடைக்காத அன்பு அவனை ஆழமாகக் காயப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு முறை அவன் நெருங்கிப் போன போதும் அவள் அவனிடமிருந்து விலகியே போய் இருக்கிறாள். யாரையும் மிக அதிகமாக நேசிப்பதும், நெருங்குவதும் காயப்படத்தான் என்ற அனுபவ பாடத்தை அவன் குழந்தைப்பருவத்திலேயே அவன் ஆழ்மனம் கற்றிருக்கிறது. அது தான் அவன் வளர்ந்த பின்னும், நட்பல்லாத காதல் என்பதை ஏற்க விடாமல் அவனைத் தடுத்திருக்கிறது. அவள் காட்டுவது நட்பு தான் என்று எண்ண வைத்து அவனை  நட்பிலேயே நிற்க வைத்திருக்கிறது. வேறொருத்தியாக இருந்திருந்தால் என்றோ விலகிப் போயிருப்பாள். ஆனால் பாவம் கீதா, விலக முடியாமல் அவனுக்கு சௌகரியமான நட்பிலேயே அவனுடன் இன்னும் பழகிக் கொண்டு இருக்கிறாள்.

 

அவன் மேலும் யோசித்தான். இப்போது அவன் மிகவும் நேசிக்கும் அவனுடைய தங்கை கூட அவளாக உரிமை எடுத்துக் கொண்டு அவனிடம் அன்பு காட்டி, அவனைப் பற்றி பெருமிதமாக எண்ணி, அவனுடன் சிறு சண்டைகள் போட்டு, அன்பைக் கொடுத்தும், அன்பை எதிர்பார்த்தும் அவனுடைய அரண்களை உடைத்து தான் உள்ளே நுழைந்திருக்கிறாள். நீ எனக்கு முக்கியம், நான் என்றைக்கும் உன்னைக் காயப்படுத்த மாட்டேன் என்று அவன் ஆழ்மனதிற்கு சிறிது சிறிதாக நம்பிக்கை ஊட்டி தான் அவள் அவனை நெருங்கியிருக்கிறாள்.

 

திடீரென்று அவனுக்கு ஏனோ அழத் தோன்றியது. அவன் சத்தமில்லாமல் அழுதான். அவனுடைய பலவீனத்திற்காகவும், அவனுடைய ஆழ்மன காயத்திற்காகவும் அவன் அழுதான். அதையெல்லாம் மீறி அவனை நேசிக்கும் அவன் தங்கையையும், அவனைக் காதலிக்கும் கீதாவையும் நன்றியுடன் நினைத்து அழுதான்.

 

அழுது சிறிது மனப்பாரம் குறைந்த போது நித்யா சொன்னது மறுபடி அவன் காதுகளில் ஒலித்தது. ”நீயும் சில சமயத்துல நம்ம அம்மா மாதிரியே நடந்துக்கறே. நீ உன்னோட தனி கூட்டுக்குள்ளே இருக்கே. அது தப்புண்ணா.” இன்னொரு சாத்தியக்கூறும் அவனுக்கு அந்தக் கணத்தில் புலப்பட்டது. அப்படியானால் அவன் நிலைமையில் தான் அம்மாவும் இருக்கிறாளோ? அவளும் ஆழ்மனதில் அவனைப் போலவே காயப்பட்டிருப்பாளோ? ஆழமாக அவன் யோசித்தான். அவளும் மகளையும், கணவரையும் தவிர வேறு யாருடனும் நெருக்கமாகப் பழகி அவன் பார்த்தது இல்லை. அவளுக்குத் தோழிகள் இல்லை. அவள் சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்தவள். அவளுக்கு உடன்பிறப்புகளோ, உறவினர்களோ யாருமில்லை. அனாதையான அவளும் அவனைப் போலவே சிறுவயதிலேயே எத்தனையோ காயப்பட்டிருக்கலாம். மேலும் காயப்படாமல் இருக்க அவளும் ஒரு கூட்டுக்குள் தஞ்சம் புகுந்திருக்கலாம்….

 

இந்தப் புதிய கோணத்தில் யோசிக்கும் போது அவனுக்கு அம்மா மீதிருக்கும் கோபம் குறைந்து பச்சாதாபம் பிறந்தது.

 

அர்ஜுன்ஞான மூர்த்தி அழைக்கும் சத்தம் கேட்டது. அவன் கட்டுரையை அவர் படித்து முடித்து விட்டார்.  அர்ஜுன் கண்களைத் துடைத்து கொண்டான். எழுந்து கண்ணாடியைப் பார்த்தான். அழுத சுவடு தெரியவில்லை. அவன் கட்டுரைக்கான தீர்ப்பு என்ன என்று அறிய ஆர்வத்துடன் சென்றான்.

 

(தொடரும்)

என்.கணேசன்



Monday, March 9, 2026

யோகி 146


 பாண்டியனின் யதார்த்தமான கேள்வியைக் கேட்டு பிரம்மானந்தா வாய்விட்டுச் சிரித்தார். அது வரை அவருக்கு இருந்த இறுக்கமான மனநிலை தளர்ந்தது.  நீ இதை அவர் கிட்டயே கேட்டு இருக்கணும் பாண்டியன்

 

கேட்கணும்னு நினைச்சேன். ஆனால் நீங்க அவரை அனுப்பற மனநிலையில இருந்தது தெரிஞ்சுது. அது மட்டுமில்லாமல் அந்த ஆளோட உலகமே வேற, நம்ம உலகமே வேற தானே யோகிஜி. அவருக்கு நம்ம உலகத்தைப் புரிஞ்சுக்க முடியாது, நமக்கு அவரோட உலகத்தைப் புரிஞ்சுக்க முடியாதுன்னு விட்டுட்டேன்.”

 

பாண்டியன் தன் உலகத்தில் அவரையும் சேர்த்துக் கொண்டது பிரம்மானந்தாவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. உண்மையே ஆனாலும் சிலவற்றைக் கேட்பது இனிமையாய் இல்லை. இன்று யார் முகத்தில் விழித்தோம், இப்படி வரிசையாகக் கேட்டுக் கொள்ள வேண்டி வருகிறதே  என்று அவர் யோசித்தார்.

 

பாண்டியன் தொடர்ந்து சொன்னார். “ஆனால் ஒரு விஷயத்தைப் பாராட்டணும் யோகிஜி. நாம அவரைத்  தோட்டக்காரனாய் பார்த்தாலும் சரி, யோகியாய் பார்த்தாலும் சரி, ரெண்டுமே அவரைப் பாதிக்கற மாதிரியில்லை. அந்த ஆளைப் பொருத்த வரைக்கும் எதுவும் இல்லாமயே அவர் திருப்தியாய், சந்தோஷமாய்த் தான் இருக்கார். நமக்கு நிறைய இருந்தும் அப்படி இருக்க முடியலை. சரி, முடியாததைப் பற்றி யோசிக்கறதுல அர்த்தமில்லை.  நாம அடுத்து ஆக வேண்டியதைப் பார்ப்போம் யோகிஜி. உடனடியாய் தேவானந்தகிரியைக் கூப்பிடுவோம். அந்தக் காலடி மண்ணை வெச்சு அவரால எதாவது செய்ய முடியுதான்னு பார்ப்போம். உடனடியாய் வர முடியாதுன்னா, அவருக்குப் பணத்தை ரெண்டு மடங்காகவோ, நாலு மடங்காகவோ கூடத் தரலாம்...”

 

சித்தானந்தா உடன் இருந்ததால் நிஜ யோகியைச் சந்தித்த விஷயத்தை ஷ்ரவன் முக்தானந்தாவிடம் அன்றிரவு சொல்லவில்லை. மறுநாள் காலை சித்தானந்தா குளிக்கச் சென்ற போது, ஷ்ரவன் அவசர அவசரமாக நிஜ யோகியின் நேற்றைய வருகையை முக்தானந்தாவிடம் சொன்னான். அவன் சொன்னதை அவர் சுவாரசியத்துடன் கேட்டுக் கொண்டார். முக்கியமாக, அந்த யோகி பேசியது அவரையும் மிகவும் கவர்ந்தது. நேரில் சந்திக்க முடியாத அந்த யோகியை எண்ணி அவர் கைகூப்பி நமஸ்கரித்தார்.

 

ஷ்ரவன்  கடைசியில் மனத்தாங்கலுடன் சொன்னான். “… நாங்கள் கூடுதலாக எதாவது கேள்வி கேட்டிருந்தால் அந்த யோகி விளக்கமாகப் பதில் சொல்லியிருப்பார். ஆனால் பிரம்மானந்தாவுக்கு அவர் பேசியது பிடிக்கவில்லை. அதனால் அனுப்பி விட்டார்.”

 

முக்தானந்தா சொன்னார். “நிஜத்திலிருந்து விலகி நிறைய தூரம் போய் விட்டவருக்கு, திரும்பவும் நிஜத்தைச் சந்திக்க நேர்வது கசப்பாய் தான் இருக்கும் ஷ்ரவன்.  ஆத்மாவை என்றோ அடகு வைத்து விட்ட அவருக்கு திரும்பவும் ஆத்மஞானத்தை ரசிக்க முடியுமா?”

 

சித்தானந்தா குளித்து விட்டு வெளியே வர அவர்கள் அமைதியானார்கள்.

 

ராகவன், பாண்டியனுக்கும், தேவானந்தகிரிக்கும் இடையேயான உரையாடலின் பதிவைக் கேட்டார். அவருடன் குமரேசனும் இருந்தான்.  உரையாடலில் தற்போது சென்னைக்கு வரும் நிலைமை இல்லை என்று தேவானந்தகிரி பலமுறை சொல்லியும் பாண்டியன் விடுவதாய் இல்லை. லட்சங்களை ஏற்றிக் கொண்டே போய் பத்து லட்சத்தில் வந்து பேரம் முடிந்தது. தேவானந்தகிரி கடைசியில் சம்மதித்தார். நாளை மறுநாள் மாலை விமானத்தில் வருவதாக அவர் வாக்களித்தார். பூஜைக்கு வேண்டிய பொருள்களின் பட்டியலை வாட்சப்பில் அனுப்புவதாகச் சொன்னார். அவர் வருவதற்கு முன் பொருள்களை வாங்கித் தயாராக வைக்கச் சொன்னார்.

 

அந்தப் பேச்சைக் கேட்ட ராகவனுக்கு பாண்டியன் பிறவி வியாபாரியாகத் தெரிந்தார். ’இல்லை’ ‘முடியாதுஎன்ற வார்த்தைகளை பாண்டியன் பொருட்படுத்தவே இல்லை. எதிர்தரப்பில் இருந்து அந்த வார்த்தைகள் வரும் போது, தரும் விலையை அதிகப்படுத்தினால் போதும் என்பது அவருடைய கணக்காகத் தெரிந்தது. பணம் யோகாலயத்து ஆட்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதும் இந்தப் பேச்சில் தெரிந்தது.

 

குமரேசன் சொன்னான். “என்ன ஆனாலும் சரி, ஷ்ரவன் அங்கிருக்கும் போது, தேவானந்தகிரி யோகாலயத்துக்கு வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

 

ராகவன் யோசித்தார். குமரேசனும் யோகாலயத்துக்குச் செல்ல முடியாமல் இருப்பது இப்போது பெரிய பிரதிகூலமாகத் தெரிந்தது. ஷ்ரவன் அங்கே தனியாக இருக்கிறான்... ஒரு ஆபத்து என்றால் அதைத் தெரிவிக்கவும் அவனுக்கு வழியில்லை. நிலைமை இப்படி இருக்கையில் தேவானந்தகிரி யோகாலயம் போனால் நிச்சயமாக அவர் ஷ்ரவன் யார் என்பதைக் கண்டுபிடித்து விடலாம். ஷ்ரவன் போன வேலை முடியாமல் கண்டுபிடிக்கப் பட்டால் அவனுடைய உயிருக்கு ஆபத்து மட்டுமில்லை. இதுவரை அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எல்லாம் வீணாகிவிடும்...

 

தேவானந்தகிரி அதிர்ஷ்டலட்சுமி அவர் மேல் தனிக்கருணை காட்டி விட்டதாய் உணர்ந்தார். யோகாலயம் போய் வருவதால் அவருடைய இரண்டு நாள் வேலைகள் தடைப்படும். ஏற்கெனவே அவர் ஒத்துக் கொண்டிருக்கும் அந்த இரண்டு நாள் வேலைகளுக்கு அவருக்கு அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் தான் கிடைத்திருக்கும். அந்த வேலைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து விட்டு யோகாலயம் போவதற்கு இப்போது பத்து லட்சம் கிடைத்து விட்டது. பாண்டியன் மொத்தப் பணத்தையும், முன்கூட்டியே அனுப்பியும் விட்டார். அதிகாலையில் எழுந்தவுடன் வந்த அந்த நினைவே இனிமையாக இருந்தது.   

 

அவர் இன்று மாலை கிளம்ப வேண்டும். போவதற்குள் இங்கே அவர் முடிக்க வேண்டிய வேலைகளும் நிறைய இருக்கின்றன. மடமடவென்று செய்தால் தான் மாலை நான்கு மணிக்குள் அனைத்து வேலைகளையும் முடிக்க முடியும். தேவானந்தகிரி காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வெளியே வந்த போதும் இருட்டாகவே இருந்தது. வெளியே காம்பவுண்ட் சுவரைச் சுற்றிலும் அவர் நிறைய பூச்செடிகள் நட்டிருந்தார். விடிவதற்கு முன்பே காலை பூஜைக்குப் பூக்களை அவர் முழுவதுமாக பறித்து விடுவது வழக்கம். விடியும் வரை காத்திருந்தால் அவர் பறிக்க வரும் போது எந்தச் செடியிலும் பூக்களே இருக்காது. வெளியாட்கள் பறித்துக் கொண்டு போய் விடுவார்கள். யாருக்கும் செடிகள் நடவோ, தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கவோ நாட்டம் கிடையாது. அடுத்தவன் நட்டிருந்தால் பூக்களைப் பறித்துக் கொண்டு போவதில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கெட்டிக்காரர்கள்.  

 

மனதில் அந்த பூத்திருடர்களைத் திட்டிக் கொண்டே தேவானந்தகிரி பூக்களைப் பறிக்க ஆரம்பித்தார். இரண்டே நிமிடங்களில் யாரோ ஒருவன் வந்து பைக்கை அவர் அருகே நிறுத்திக் கேட்டான். “ஐயா அபூபக்கர் ஹாஜியார் வீடு எது என்று சொல்ல முடியுமா?”

 

தேவானந்தகிரி அவன் பக்கம் திரும்பினார். ஹெல்மெட்டுடன் இருந்த அவன் முக அடையாளம் அவருக்குச் சரியாகத் தெரியவில்லை. அவன் தெரு மாறி வந்து விட்டான். அடுத்த தெருவில் தான் அபூபக்கர் ஹாஜியார் வீடு இருக்கிறது. அதை அவர் அவனிடம் சொல்ல, அவன் நன்றி தெரிவித்து விட்டு பைக்கைக் கிளப்பினான். அப்போது பைக் சற்று ஆட, அவன் சமாளித்து ஒரு காலை தரையில் ஊன்றினான். அப்போது அவன் தேவானந்தகிரியின் கட்டைப் பெருவிரலையும் சேர்த்து நன்றாக மிதித்து விட்டான். அவர் ஆவென்று அலற, அவன் கவனிக்கவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் ஐயாஎன்று சொல்லி விட்டுப் போனான்.

 

தேவானந்தகிரிக்கு வலி தாங்க முடியவில்லை. சற்று வெளிச்சத்துக்கு வந்து அவர் பார்த்த போது கட்டை விரலில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. “முட்டாள்பூட்ஸ் காலால் இப்படியா மிதிப்பது? பூட்ஸில் லாடம் போல் எதோ இரும்பும் சேர்த்து வைத்திருக்கிறான் போலிருக்கிறது….” என்று முணுமுணுத்தபடி வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கொண்டார். கட்டை விரலில் ஆரம்பித்த வலி கால் பூராவும் பரவுவது போலிருந்தது. பின் அவருக்கு கால் ஊன்றி நடக்க முடியாமல் போனது.   

 

சற்று நேரம் கழித்து தேவானந்தகிரி ஆஸ்பத்திரிக்குப் போன போது  டாக்டர் அது வெறும் பூட்ஸ் காலால் மிதிக்கப்பட்டதால் ஏற்பட்ட காயம் என்பதை நம்ப முடியாமல் பார்த்தார். காலுக்குக் கட்டுப் போட்ட அவர் காயம் குணமாக ஒரு வாரமாவது ஆகும் என்றும், அது வரை நடக்காமல் ஓய்வு எடுப்பது அவசியம் என்றும் சொன்னார். அதனால் தேவானந்தகிரி யோகாலயத்துக்குப் போக முடியாதென்று ஆகி விட்டது. பாண்டியன் பத்து லட்சம் பணம் அனுப்பியும், வாக்குக் கொடுத்தபடி இன்று போக முடியாதது அவருக்கு வருத்தமாக இருந்தது. சென்ற முறை அவர் கிளம்பத் தயாரான போது சகுனத் தடை இருந்தது. அப்போது அவர் அங்கு செல்வதற்கு முன்பு அவரைத் தற்காத்துக் கொண்டு தான் கிளம்ப வேண்டியிருந்தது. இந்த முறை இப்படி ஆகி விட்டது….    

 

திடீரென்று தேவானந்தகிரிக்கு எல்லாம் திட்டமிட்டு நடந்திருப்பது போல் தோன்றியது. சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள அவர் அபூபக்கர் ஹாஜியார் வீட்டுக்கு ஆளனுப்பி, இன்று அதிகாலை அவரைத் தேடி யாராவது பைக்கில் வீட்டுக்கு வந்தார்களா என்று கேட்டு வரச் சொன்னார். ஹாஜியார் அப்படி யாரும் வரவில்லையேஎன்று தெரிவித்தார். தேவானந்தகிரியின் சந்தேகம் ஊர்ஜிதம் ஆகியது.

 

(தொடரும்)

என்.கணேசன்

 



Thursday, March 5, 2026

சதுரங்கம் 8


ர்ஜுன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது வாசல் அருகிலேயே எதிர்ப்பட்ட தங்கை நித்யா, உதடுகள் மீது விரலை வைத்துசத்தமில்லாமல் வாஎன்று சைகை செய்து தெரிவித்தாள். அவன் பார்வையாலேயே என்ன என்று கேட்டபடி உள்ளே சென்ற போது ஞானமூர்த்தி ஹாலில் நாற்காலியில் அமர்ந்து மிகவும் ஆழ்ந்து பத்திரிக்கையைப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவர் படித்துக் கொண்டிருந்தது அன்றைய விடிவெள்ளி பத்திரிக்கை தான் என்பதைக் கவனித்த போது அர்ஜுனுக்குப் புரிந்தது. அவர் அவனுடைய கட்டுரையைத் தான் அப்படி ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்.

 

அவன் தனதறைக்குப் போன போது, பின்னாலேயே வந்த நித்யா தாழ்ந்த குரலில் அவனிடம் சொன்னாள். “நான் காலைலயே படிச்சுட்டேன். ரொம்ப நல்லா இருந்துச்சு.”

 

அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்றாலும் பெரியதாகப் பெருமிதம் இல்லை. அவளுக்கு அவளுடைய அண்ணன் செய்யும் எல்லாமே சிறப்பு தான். ஆனால் அவர்களுடைய தந்தை அவளைப் போல் அல்ல. அவர் சொன்னால் அது ஒரு நீதிபதியின் தீர்ப்பாகவே இருக்கும். விருப்பு வெறுப்பு இல்லாமல் உள்ளதை உள்ளபடி சொல்லும் நீதி தேவதையின் தீர்ப்பைப் போல் இருக்கும்..

 

உங்கப்பா அரசியலுக்குப் போனது நீதித்துறைக்கு மிகப்பெரிய நஷ்டம். நீதிபதியாய் போயிருந்தால் அவர் கண்டிப்பாக சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கலாம்.” என்று அவனிடம் பெரிய சட்ட வல்லுனர்கள் இருவர் சொல்லி இருக்கிறார்கள். ஞானமூர்த்தி நீதிபதியாகப் போயிருக்கா விட்டாலும் பல கருத்துக்களை ஒரு நீதிபதி போலவே சொல்லும் வழக்கம், இயல்பாகவே அவருக்கு இருக்கிறது.

 

எப்போடி படிக்க ஆரம்பிச்சார்?”

 

கால் மணி நேரம் ஆயிருக்கும். தீர்ப்பு வர குறைஞ்சது இனியும் முக்கால் மணி நேரமாவது ஆகும். ஏன்னா நீ எழுதியிருக்கிறது பெரிய கட்டுரை.”

 

அர்ஜுன் தங்கையும் தீர்ப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்குப் புன்னகை செய்தான்.

 

நித்யா கேட்டாள். “உன்னோட அபிமான நடிகை இறந்து போனது நிஜமாவே தற்கொலை தானா இல்லை கொலையா?”

 

வாலு. எப்பவோ அவ என் அபிமான நடிகையா இருந்தாள். அதையெல்லாம் நீ ஞாபகம் வெச்சிட்டு இப்ப சொல்றியா?”

 

நீ எனக்கிருக்கற ஒரே அண்ணன். நான் உன் சம்பந்தமான எதையும் எப்படி மறப்பேன்?”

 

அவள் சொன்னது அவன் கண்களை உடனடியாக ஈரமாக்கியது. தங்கைக்குத் தெரியாமல் இருக்க அவன் முகத்தை அந்தப் பக்கம் திருப்பி காலண்டரைப் பார்ப்பது போல் பாவனை செய்தான். ’இப்படிச் சொல்லவும், அன்பு செலுத்தவும் இவள் ஒருத்தியாவது என் வாழ்க்கையில் இருக்கிறாளே!”

 

ஆனால் அவன் திரும்பிய போது முகத்திலும் பேச்சிலும் அவன் உணர்ந்த உருக்கம் தெரியவில்லை. “ஆமா என்னைக்கோ அண்ணனோட அபிமான நடிகையாய் ஒருத்தி இருந்ததை ஞாபகம் வெச்சுச் சொல்றது உருப்படியான விஷயமா? அண்ணனைப் பத்தி வேறென்னடி தெரியும் உனக்கு?”

 

அண்ணனைப் பற்றி அண்ணனுக்கே தெரியாததும் கூடத் தெரியும்.” நித்யா அலட்டாமல் சொன்னாள்.

 

அண்ணனுக்கே தெரியாததா?” அர்ஜுன் ஆச்சரியத்துடன் கேட்டான்.

 

ஆமா

 

என்னடி அது?”

 

உன்னை ஒரு பொண்ணு காதலிக்கிறா. அது தெரியுமா உனக்கு?”

 

அர்ஜுன் திகைத்தான். “என்னடி சொல்றே? உன் சிநேகிதிகள்ல யாராவது என்னைக் காதலிக்கிறாங்களா? யாருடி அது? எத்தனை நாளா இது? இவ்வளவு நாளா ஏண்டி சொல்லலை?” என்று பரபரப்புடன் தங்கையிடம் அவன் கேட்டான்.

 

ஐயே மூஞ்சியப் பாரு. என் சிநேகிதி எவளும் உன்னைக் காதலிக்கலை.”

 

அர்ஜுன் திகைத்தான். “அப்பறம் வேற யாருடி உன் கிட்ட இதைச் சொன்னா?”

 

ஆமா என் கிட்ட தான் வந்து சொல்றாங்க. பெரிய ரிப்போர்ட்டராம். அறிவாளியாம். கட்டுரை எல்லாம் எழுதுவாராம். ஆனா அவரை ஒரு பொண்ணு காதலிக்கிறது மட்டும் அவருக்குத் தெரியாதாம். சரியான தத்தி அண்ணா நீ 

 

ஏய் என்னடி, இப்ப தான் ஒரு நிமிஷத்துக்கு முன்னால பாசமலர் தங்கச்சியாட்டம் என் கிட்ட பேசினே. இப்ப தத்திங்கற.”

 

அப்பறம் வேற என்ன உன்னைச் சொல்றது? உலகத்துல நடக்கறது எல்லாம் உனக்குத் தெரியிது. உன் வாழ்க்கைல நடக்கறதுல முக்கியமானதே உனக்குத் தெரிய மாட்டேங்குது.”

 

ஏய் சும்மா வளவளன்னு பேசாம சொல்லுடி. யாருடி அது? சீக்கிரம் சொல்லுடி. என் மண்டை வெடிச்சுடும்டி

 

நித்யா அண்ணனைக் குறும்பாகப் பார்த்தாள். அதிபுத்திசாலித்தனமும், வெகுளித்தனமும் கலந்த ஒரு கலவை அவளுடைய அண்ணன். “சொன்னா எனக்கு என்ன தருவே?”

 

என்னடி இப்படி லஞ்சம் கேட்கறே. ஞானமூர்த்தி பொண்ணுடி நீ.”

 

நித்யா சிரித்து விட்டாள். “அப்பா பேரைச் சொல்லியே கவுத்துட்டியே

 

தங்கையை மிக நெருங்கி தாழ்ந்த குரலில் கேட்டான். “யாருடி அது?”

 

ம்கீதாக்கா…. சாரி கீதா அண்ணி

 

அர்ஜுனுக்கு சப்பென்று ஆகி விட்டது. “லூஸாடி நீ. என்னோட நல்ல சிநேகிதியைப் போய் இப்படியெல்லாம் சொல்றியே. அவளுக்குத் தெரிஞ்சா அவ உன்னைப் பத்தி என்ன நினைப்பாள்?”

 

ம்அண்ணனுக்கு இல்லாத அறிவு தங்கச்சிக்காவது இருக்கேன்னு நினைப்பாள்.”

 

அர்ஜுனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ‘இந்த வாலு என்ன சொல்லுது. தெரிஞ்சு தான் பேசுதா. இல்லை, வயசுக் கோளாறுல கண்டதையும் கற்பனை பண்ணிப் பேசுதா

 

நித்யா போய் விட்டாள். அர்ஜுனுக்கு நித்யா ஏன் அப்படிச் சொன்னாள், எதை வைத்துச் சொன்னாள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் தலை வெடித்து விடும் போல இருந்தது. தங்கை பின்னாலேயே வெளியே வந்தவன் அவர்கள் பேச்சு கேட்டிருக்கக்கூடிய தொலைவிலேயே நின்று கொண்டு அம்மா துணிமணிகளை மடித்து வைப்பதைப் பார்த்து திடுக்கிட்டான். அம்மா எல்லாத்தையும் கேட்டிருப்பாளோ? அவனுக்கு வெட்கமாக இருந்தது.

 

ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் தங்கை நித்யாவின் அறையை அடைந்தான். நித்யா ஒரு பெரிய புத்தகத்தை எடுத்து படிப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தாள். அர்ஜுன் அவள் காதைத் திருகியபடி சொன்னான். “ஏய் வாலு. உனக்கென்ன நாளைக்கு பரிட்சையாடி? முழுசும் சொல்லாமல் அரைகுறையாய் பேசிட்டு வந்து புத்தகம் படிக்கற மாதிரி நடிக்கறாய்

 

புத்தகத்தை மூடி வைத்த நித்யா பெருமூச்சு விட்டாள். “ஒரு கோடி காட்டினா புரிஞ்சுக்க முடியாத ஆளெல்லாம் வாசுதேவன் குடும்பத்தோட ஒரே ஆண்  வாரிசுன்னு நினைக்கறப்ப ரொம்ப வேதனையாய் இருக்கு.”

 

என்னடி கோடி காண்பிக்கறது. ஒரு நல்ல சிநேகிதியை காதலின்னு சொல்றே. எதனால சொல்றே, எப்படிச் சொல்றேன்னு கேட்டா ஓடி வந்து இங்கே உட்கார்ந்து புத்தகம் படிக்கறே

 

திருவாளர் அர்ஜுன் அவர்களே. ஒரு பெண் காதலிக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே அவளுடன் வருடக்கணக்கில் பழகுவது தவறு. அதைத் தெரிந்து கொண்டு தங்கை சொல்லும் போது, உங்கள் மனதைக் கேள்வி கேட்டு அங்கே பதில் பெற்றுக் கொள்ளும் அடிப்படை அறிவு கூட இல்லாமல், தங்கையிடமே திரும்பத் திரும்ப அசட்டுத் தனமாகக் கேள்வி கேட்பது பெருந்தவறு. இப்படி தவறுக்கு மேல் தவறு செய்யும் உங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.”

 

அர்ஜுன் அவளை முறைத்தான். “ஏய் லூசு. நீ சொல்ற மாதிரி இருந்தா அவ கண்டிப்பா என் கிட்ட சொல்லியிருப்பா. முட்டாள்தனமான கற்பனைல யாரையும் தப்பா சொல்லக்கூடாதுடி

 

நித்யா சொன்னாள். “அண்ணா. பொண்ணுங்க பல விஷயங்களை லொட லொடன்னு மணிக்கணக்குல பேசுவாங்க. ஆனா ஒருசில குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் அவங்க சொல்லாமலேயே அவங்கள நேசிக்கறவங்க புரிஞ்சுக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. காதல் அதுல ஒன்னு. வார்த்தைகள்ல சொல்றதுக்கு முன்னாடி மனசார உணர்ற விஷயம் அது. நீ உணரலைன்னு தெரிஞ்சதுக்கப்பறம் வார்த்தையால அவங்க எப்படி உன் கிட்ட சொல்வாங்க? நீயும் சில சமயத்துல நம்ம அம்மா மாதிரியே நடந்துக்கறே. நீ உன்னோட தனி கூட்டுக்குள்ளே இருக்கே. அது தப்புண்ணா.”


(தொடரும்)

என்.கணேசன்