என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, July 20, 2026

ரட்சகன் 1


 

நானூறு ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு உள்ள திகார் சிறைச்சாலையில் அப்சல்கான் அடைக்கப்பட்டிருந்த பகுதி ஒதுக்குப்புறமாக இருந்தது. தண்டனை பெற்ற ஆபத்தான கைதிகளும், தீவிரவாதிகளும் மட்டுமே அப்பகுதியில் அடைக்கப்பட்டு இருந்தார்கள். அதனால் அங்கு பலத்த இரட்டிப்பு காவல் இருந்தது. அப்பகுதியில் இருந்த கைதிகள் தங்களுக்குள்ளேயே கூட ஒருவருக்கொருவர் சாதாரணமாகப் பேசிக் கொள்ளவும் அதிக வாய்ப்பிருக்கவில்லை. ஏனென்றால் பெரும்பாலானோர் தனித்தனியாகத் தான் அங்கே அடைக்கப்பட்டிருந்தார்கள். அதனால் அங்கிருக்கையில் கைதிகள் பேசுவதானால் காவலாளிகளிடம் மட்டுமே பேச முடியும். தனிமையும் மௌனமும் சேர்ந்திருக்கும் அந்த சிறைவாசம் கொடுமையானது என்பதால் பொதுவாக அந்தக் கைதிகள் வாய்ப்பு கிடைக்கையில் காவலாளிகளிடம் பேச்சு கொடுப்பது வழக்கம். ஆனால் அங்கு தற்போது சிறைப்பட்டிருக்கும் அப்சல்கான் வித்தியாசமானவனாக இருந்தான். அவன் அங்கு சிறைப்பட்டிருக்கும் இந்த இரண்டாண்டு காலத்தில், மற்ற கைதிகளிடம் மட்டுமல்லாமல் காவலாளிகளிடம் கூட ஒரு வார்த்தை பேசியதில்லை. அதற்கான அவசியத்தையும் அவன் உணர்ந்ததில்லை.

 

சிறையின் அந்தப் பகுதியில் இருக்கும் கைதிகள் தங்களைச் சந்திக்க வரும் ஆட்களிடம் பேசவும் மிக ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் அவர்களைச் சந்திக்க வருபவர்களுக்கும் கட்டுப்பாடுகளும், கெடுபிடிகளும் அதிகம் என்பதால் குடும்பத்தினரும், நண்பர்களும், உறவினர்களும் அவர்களைச் சந்திக்க வருவதும் குறைவாகவே இருக்கும். அப்சல்கானைச் சந்திக்க அப்படி குறைவாகக்கூட யாரும் வந்ததே இல்லை. குடும்பத்தினரும், உறவினர்களும் அவனைச் சந்திக்க விரும்பவில்லை. நண்பர்களையோ அவன் சந்திக்க விரும்பவில்லை. காரணம் அவனுடைய இயக்கத்திற்கு அப்பாற்பட்ட நட்புகள் அவனுக்கு இருக்கவில்லை. உளவுத்துறையின் கழுகுப் பார்வை எப்போதும் அவன் மீதிருப்பதால், அவன் இயக்கத்து நண்பர்கள் பிரச்சினைக்கு உள்ளாவதில் அவனுக்கு விருப்பமில்லை.

 

எப்போதாவது அவனைச் சந்திக்க வரும் அவனுடைய வக்கீலிடம் மட்டுமே அவன் பேசி காவலாளிகள் பார்த்திருக்கிறார்கள். அவன் மிகவும் தாழ்ந்த குரலில் தான் தன் வக்கீலிடம் பேசுவான். அவன் பேசுவது சற்று தள்ளி நிற்கும் காவலாளிக்கும் கூடக் கேட்காது. அந்த வக்கீலே கூட அவனை நோக்கி முன்னால் சாய்ந்து மிகவும் உன்னிப்பாகக் கேட்டு சிரமப்பட்டுத்தான் அவன் என்ன சொல்கிறான் என்பதைப் புரிந்து கொள்வதைக் காவலாளிகள் கவனித்திருக்கிறார்கள்.. அதனால் அங்கு யாருமே அவனுடைய குரலைச் சரியாகக் கேட்டதில்லை.

 

அப்சல்கான் வாய்ப்பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் தருபவன் அல்ல. அவனுக்கு செயல் மூலம் பேசத்தான் பிடிக்கும். இதுவரை அவன் அப்படித் தான் பேசியிருக்கிறான். மூன்று வருடங்களுக்கு முன் புதுடெல்லியில் ஒரு வணிக வளாகத்தில் அவன் வெடிகுண்டு வைத்து பதினைந்து பேர் மரணமடைந்தும், பதினெட்டு பேர் படுகாயமடைந்துமிருக்கிறார்கள். அந்த சமயத்தில் அவன் துரதிர்ஷ்டவசமாகப்  பிடிபட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மரண தண்டனை பெற்று திகார் சிறைக்கு வந்திருக்கிறான்.

 

இப்போதைக்கு அவனுக்கு இருக்கும் ஒரே குறிக்கோள் திகாரிலிருந்து தப்பிப்பது தான். ஆனால் அதற்கு அங்கே சிறிதும் வாய்ப்பிருக்கவில்லை. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த சார்லஸ் சோப்ராஜ் உட்பட சிலர் அங்கிருந்து தப்பித்துப் போயிருக்கிறார்கள். ஆனால் சார்லஸ் சோப்ராஜ் உட்பட அவர்கள் அனைவரும் சில நாட்களிலேயே பிடிபட்டுமிருக்கிறார்கள், ஒரே ஒரு கைதியைத் தவிர! தப்பித்துச் சென்று கடைசி வரை பிடிபடாத கைதி அப்சல்கானைப் போல் பயங்கரவாதி அல்ல. அந்தக் கைதி இன்னொரு கைதியுடன், ஒரு திருட்டுக் குற்றத்தில் சிறைப்படுத்தப்பட்டவன். அதனால் அவன் தீவிரக் கண்காணிப்பிலோ, பலத்த காவல் பகுதியிலோ இருக்கவில்லை. தன் சகாவுடன் சேர்ந்து தப்பித்துச் சென்ற அவன் சகா திரும்ப பிடிபட்டாலும் அவன் பிடிபடவில்லை . அந்த தப்பித்த கைதியின் அதிர்ஷ்டம் பின் எவருக்கும் அமையவில்லை. சிறைச்சாலைக் காவலை பின்னர் பல மடங்கு பலப்படுத்தி விட்டார்கள்ஆனாலும்முடியாதுஎன்று எதையும் நினைக்காத அவன் இதையும் முடியாது என்று எண்ணி நம்பிக்கை இல்லை. எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு வழி இருக்கும். அதைக் கண்டுபிடித்து செயல்படுத்துவது தான் வல்லவனின் சாமர்த்தியம்.

 

சிறைச்சாலை என்பது ஒரு தனி உலகம். அங்கு இருக்கும் சட்டதிட்டங்களும் வாழ்க்கை முறையும் வித்தியாசமானவை. கைதிகளில் விசாரணைக் கைதிகள் அடைக்கப்படும் பகுதியில் கெடுபிடிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் தண்டனை பெற்றவர்கள் அடைக்கப்படும் பகுதியில் கெடுபிடிகள் அதிகம். அந்தக் கைதிகளுக்கு வேலையும் அதிகம். திகார் சிறைச்சாலைக்குள் ஒரு தொழிற்சாலையும் இருப்பதால், தண்டனை பெற்ற கைதிகள் வழக்கமான வேலைகளையோ, தொழிற்சாலை வேலையையோ, சில சமயங்களில் இரண்டையும் சேர்த்தோ செய்ய வேண்டியிருக்கும். ஆனாலும் எழுத்து வடிவில் இருக்கும் சட்டதிட்டங்களின்படி பெரும்பாலும் சிறைச்சாலைகளில் எதுவும் நடப்பதில்லை. பணமும், அதிகார வர்க்கத்தின் ஆதரவும் இருந்தால் அங்கே ஒருவர் கூடுதல் வசதிகளுடன் வாழலாம்சிகரெட், கஞ்சா, உணவுப்பொருள்கள், மொபைல் போன்கள் முதலான அனைத்தும், பணம் தந்தால் அங்கே கிடைக்கும். அப்சல்கான் அப்படிப் பணம் தந்து தன் வசதிகளை அதிகப்படுத்திக் கொள்ளவில்லை. அவன் நினைத்திருந்தால் அதைச் செய்திருக்கலாம். ஏனென்றால் அவன் இருக்கும் இயக்கத்திற்கு பணம் ஒரு பிரச்சினையே அல்ல. ஆனாலும் தன்னுடைய மோசமான சிறை வாழ்க்கையை வசதியான சிறை வாழ்க்கையாக மாற்றிக் கொள்ள அவன் பணம் செலவு செய்யவில்லை.

 

அதற்குக் காரணம் அந்த மோசமான சிறை வாழ்க்கை அவனுக்கு ஒரு பொருட்டல்ல என்பதல்ல. அவன் இருக்கும் அந்த மோசமான சூழலையும், அவனுக்குத் தரப்படும் தரமற்ற உணவையும், அவன் மேல் சுமத்தப்படும் கடுமையான வேலைகளையும் அவன் மிகவும் வெறுத்தான்சிறையில் இருக்கும் ஒவ்வொரு கணமும் அவனுக்கு நரகமாகத் தான் நகர்கிறது. ஆனாலும் பணம் தந்து அந்த நரக வாழ்க்கையை சுலபமாக்காமல் அவன் சுமந்து கொண்டிருப்பது இந்த அரசாங்கத்தின் மீது ஏற்கெனவே இருக்கும் கடுமையான வெறுப்பை மேலும் அதிகரித்துக் கொள்ளத்தான்.

 

அன்பை விட சக்தி வாய்ந்தது எதுவுமில்லை என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அப்சல்கானுக்கு அதில் உடன்பாடில்லை. அன்பை விடவும் வெறுப்பு அதிக சக்தி வாய்ந்தது. பழிவாங்கும் உணர்வு ஊக்குவிப்பதைப் போல் வேறெதுவும் அவனை ஊக்குவிப்பதில்லைஒவ்வொரு வேதனையை உணரும் போதும், “இதற்கெல்லாம் சேர்த்து ஒரு நாள் நான் பதிலளிப்பேன்என்று அவன் மனதிற்குள் கறுவிக் கொள்வான். இந்த பழிவாங்கும் உணர்வும் வெறுப்பும் தான் அவன் மூளையைக் கூர்மையாக வைத்திருக்கிறது. அது தான் அவன் வாழும் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை, ஒரு குறிக்கோளை, ஏற்படுத்தித் தந்திருக்கிறது. பழி வாங்குவதற்கு, முதலில் இங்கிருந்து அவன் தப்பித்தாக வேண்டும். எப்படியாவது அவன் இங்கிருந்து தப்பிக்க  இப்போதைய இந்தக் கஷ்டங்கள் தான் உந்துகோலாக இருக்கப் போகின்றன. அதனாலேயே இந்தக் கஷ்டங்களை அவன் சகித்து வருகிறான்.  

 

காலம் அவனுக்கு ஆதரவாக இல்லை. ஆனால் அதை அவன் முடிந்த வரை நீட்டித்துக் கொண்டிருக்கிறான்.  உச்சநீதிமன்றத்திலும் அவனுக்கு தண்டனை குறைய வாய்ப்பில்லை என்று அவன் வக்கீல் அவனிடம் வெளிப்படையாகச் சொல்லி இருந்தார். இப்போதெல்லாம் குடியரசுத் தலைவரும் இது போன்ற விஷயங்களில் கருணை காட்டுவதில்லை. அதனால் வழக்கு வேகமாக முடிவது அவன் வாழ்க்கையை வேகமாக முடிப்பது போலத் தான்.   அதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தின் மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து அவன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் மேல்முறையீட்டு வழக்கை அவனும் அவனுடைய வக்கீலும் முடிந்த வரை தாமதப்படுத்தி ஆமை வேகத்தில் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் முடிவில்லாமல் அப்படி அவர்கள் வழக்கை நீட்டிக்க முடியாது. அதனால் தான் சில நாட்களாக அவன் மனம் அவசரத்தை உணர்ந்து வருகிறது.

 

அவன் தினமும் தவறாமல் செய்யும் காரியம் சிறையில் படிக்கக் கிடைக்கும் தினசரிப் பத்திரிக்கைகளை ஒரு வரி கூட விடாமல் படிப்பது தான். அவற்றில் இருக்கும் ஏதாவது ஒரு தகவல் அவன் இங்கிருந்து தப்பிப்பதற்கு உதவிகரமாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை அவன் இதுவரை இழக்கவில்லை. ஒவ்வொரு நாளும் பொறுமையாக அவன் அந்த நாளிதழ்களைப் படித்து வருகிறான். ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் நூலக அறைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வது வாடிக்கையாகி விட்டாலும் மறுநாளும் நம்பிக்கையோடு வருவது தடைப்படவில்லை.

 

இன்றும் அவன் அப்படித் தான் நம்பிக்கையோடு அந்த நூலக அறைக்குள் நுழைந்தான். அவன் படித்த செய்திகள் அனைத்தும் அவனுக்கு வழக்கமான ஏமாற்றத்தையே தந்தனநாளிதழ்களைப் படித்து முடித்து விட்டு அங்கே பரந்து கிடந்த மற்ற வார, மாத இதழ்களை மேலோட்டமாகப் பார்த்தான். அவற்றில் அவனால் சிறிதும் ரசிக்க முடியாத சினிமா மற்றும் குடும்பக் கட்டுரைகள் மட்டுமே இருக்கும். அதைப் படித்து காலத்தை வீணாக்கிக் கொள்ள அவன் விரும்பவில்லை. ஆனால் அங்கிருந்த வார இதழான உமன்ஸ் வர்ல்டில் இருந்த அட்டைப்படமும், அதன் தலைப்பும் ஒரு கணம் அவனை யோசிக்க வைத்தன. யோசனையுடன் அந்த வார இதழை எடுத்துப் புரட்டினான். அட்டைப்படம் சம்பந்தமான ஒரு குடும்பக் கட்டுரை உள்ளே இருந்தது. அவன் அதைப் படிக்க ஆரம்பித்தான். படித்து முடித்த பின் அவன் நம்பிக்கையுடன் நிமிர்ந்து உட்கார்ந்தான். திகார் சிறைக்கு வந்ததிலிருந்து ஒரு முறை கூடப் புன்னகைத்திராத அவன் முதல் முறையாகப் புன்னகைத்தான்.

 

திகாரிலிருந்து தப்பிக்கும் வழி அவனுக்குப் புலப்பட்டு விட்டது.


(தொடரும்)

என்.கணேசன்



Thursday, July 16, 2026

சதுரங்கம் 27

 


ர்ஜுன் தங்கையிடம் மெல்லக் கேட்டான். “இது அம்மா கையெழுத்து தானா?”

 

நித்யா உறுதியாகச் சொன்னாள். “அம்மா கையெழுத்து தான். அம்மா மளிகை சாமான்கள் லிஸ்ட் எழுதறதை நான் பார்த்திருக்கேனே

 

அம்மா இப்போதெல்லாம் மளிகை சாமான் லிஸ்ட் தவிர வேறெதுவும் எழுதுவதில்லை. வேறெதுவும் எழுத இப்போதெல்லாம் சந்தர்ப்பமும் அவளுக்கு இல்லை….. யோசிக்கையில் மனம் வலித்தது. எந்திரம் போல் இன்று வாழ்பவள் ஒரு காலத்தில் கவிதைகளை நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறாள். எப்போது அந்த ரசனைகளை எல்லாம் அவள் தொலைத்தாள், ஏன் தொலைத்தாள், எப்படித் தொலைத்தாள் என்றெல்லாம் அவன் யோசித்தான். அவனுக்கு பதில் கிடைக்கவில்லை. மனதில் எழுந்த சில கேள்விகளை வாய்விட்டுக் கேட்கவும் அவனுக்கு தைரியம் வரவில்லை. அவன் கேள்விகளை நித்யா எப்படிப் புரிந்து கொள்வாளோ தெரியவில்லை.

 

அவன் மெல்லக் கேட்டான். “நீ என்ன நினைக்கிறாய் நித்யா?”

 

நம்ம குடும்பத்தைப் பற்றியே நமக்குத் தெரியாதது நிறைய இருக்குண்ணா. அதை நீ தான் கண்டுபிடிக்கணும்.”

 

நானா?”

 

நீ தானே பத்திரிக்கை நிருபர். ஊர், உலகத்துல நடக்கிறதை எல்லாம் கண்டுபிடிச்சு எழுதற நீ உன் குடும்பத்தைப் பற்றியே சரியாய் தெரிஞ்சுக்காம இருக்கிறது சரியில்லையேண்ணா….”

 

அம்மா அவளை அழைப்பது கேட்டது. நித்யா போய் விட்டாள்.  அர்ஜுன் யோசிக்க ஆரம்பித்தான். அம்மாவைப் பற்றியும் அவளுடைய குடும்பத்தைப் பற்றியும் அவர்களுக்குத் தெரிந்தது கிட்டத்தட்ட பூஜ்ஜியம் தான். அம்மாவின் இளமைக் காலத்தைப் பற்றி ஒரு முறை நித்யா கேட்ட போது அம்மா கண்கலங்கியபடி தனதறைக்குப் போய்க் கதவைச் சாத்திக் கொண்டதற்குப் பிறகு, அந்த நிகழ்வை, அம்மா இல்லாத சமயத்தில், நித்யா அப்பாவிடமும் சொல்லியிருக்கிறாள். மிகச் சாதாரண கேள்விக்கும் அம்மா அப்படி ஏன் நடந்து கொண்டாள் என்று அப்பாவிடம் கேட்டிருக்கிறாள். நித்யா கேட்டதற்கு அப்பா மென்மையாகச் சொன்னார்.  எல்லார் வாழ்க்கையும் உன் வாழ்க்கை மாதிரி சந்தோஷமாய் இருக்கறதில்லை நித்யா. நினைவுபடுத்தினால் கூட வலிக்கிற கடந்த காலம் சிலருக்கு இருக்கு. அதுல உன் அம்மாவும் ஒருத்தி. அவ அதை மறந்துட்டு வாழ முயற்சி பண்றா. நாம அதுக்கு உதவணும்.”

 

என்ன ஆச்சுப்பா?”

 

வலிக்க வைக்கிற விஷயங்களைத் தெரிஞ்சு நீ என்ன செய்யப் போகிறாய் நித்யா. நல்ல விஷயங்களைப் பற்றி பேசுவோம்.”

 

இல்லைப்பா. எனக்கு அம்மா வழி தாத்தா பாட்டி பெயர் கூடத் தெரியாது. அவங்க எந்த ஊர்ன்னும் தெரியாது. இது விசித்திரமாய் இல்லையாப்பா?”.

 

அப்பா சொன்னார். “உன் தாத்தா பெயர் மகுடபதி. உன் பாட்டி பேர் ரங்கநாயகி. அவங்க வாழ்ந்த ஊர் காஞ்சிபுரம் பக்கத்தில் இருக்கிற அத்திவாக்கம்கிற குக்கிராமம். போதுமா? இனி நாம இதைப் பற்றி பேச வேண்டாம். அவளுக்கு வலிக்கிற விஷயங்கள் நமக்கும் வேண்டாம்.”

 

அதற்கு மேல் அந்த வீட்டில் அம்மாவின் பூர்வீகமும், கடந்த காலமும் பேசப்படவில்லை. அத்திவாக்கம் கிராமத்திலிருக்கும் பானுமதியை, ஞானமூர்த்தி எப்படி சந்தித்தார், எப்படி திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல்கள் எல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை. திருமண சமயத்தில் பானுமதியின் பெற்றோர் உயிரோடு இல்லை என்பது மட்டும் தெரியும்.

 

நித்யா சொன்னது போல அவனைப் போன்ற ஒரு பத்திரிக்கை நிருபர் மனம் வைத்தால் எதைத்தான் தெரிந்து கொள்ள முடியாது? அம்மாவைப் பற்றியும், அவளுடைய குடும்பப் பின்னணி பற்றியும் அவன் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பா என்றைக்கோ முற்றுப் புள்ளி வைத்து விட்ட விஷயம் அது என்பதால் அவரிடம் மீண்டும் அந்தப் பேச்சை எடுக்க முடியாது. சித்தப்பாவிடம் கேட்டால் கூட அந்த விவரங்களை அவன் பெற்றுக் கொள்ள முடியும். அவர் அப்பா போல் கறார் பேர்வழி அல்ல. ஆனால் அவன் தாயின் பூர்வீகத்தைப் பற்றி அவன் பெற்றோரிடமே பேசமுடியாமல் இருப்பதைக் காட்டும்படியாக, சித்தப்பாவிடம் கேட்பது சரியல்ல என்று தோன்றியது. மேலும் அவரும் சில விஷயங்களை மறைக்கிறார். தாத்தா அவனுடைய பெற்றோர் திருமணத்திற்கு உடனடியாகச் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதை அறிந்ததாக அவன் சொன்ன போதே அவர் அதிர்ச்சியுடன் பார்த்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. பிறகு அவர் அதைச் சமாளித்தார் என்றாலும் அந்தச் சின்ன விஷயத்துக்கு அவர் அதிர்ச்சி அடைந்திருக்கத் தேவையில்லை. படித்த மகனுக்கு எஸ்.எஸ்.எல்.சி வரை கூட படித்திருக்காத பெண் மனைவியாக வருவதில் தாத்தா தயக்கம் காட்டியது குற்றமென்று யாரும் சொல்ல முடியாது....

 

ஹாலில் சத்தமாகப் பாட்டு கேட்டது. “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்... நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்....”

 

நித்யாவின் கைங்கரியம் இது என்று அர்ஜுனுக்குப் புரிந்தது. அம்மாவின் எதிர்வினை எப்படி இருக்கிறது என்று சோதித்துப் பார்க்க அவள் விரும்புகிறாள்... அர்ஜுன் எழுந்து மெல்ல அறைக்கதவருகே நின்று கொண்டு ஹாலைப் பார்த்தான். நித்யா அம்மா நறுக்கச் சொல்லியிருந்த காய்கறிகளை நறுக்கிக் கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தாள். வேலை செய்யும் போது பாட்டு கேட்டுக் கொண்டே செய்வது அவள் வழக்கம். பெரும்பாலும் காதில் இயர்போன் வைத்துக் கொண்டு தான் பாடல்களைக் கேட்பாள். இன்று அவள் இயர்போன் உபயோகிக்கவில்லை. எஃப் எம் ரேடியோவில் அந்தக் குறிப்பிட்ட பாடல் வந்தவுடன் ஒலியை நன்றாகவே கூட்டியிருக்கிறாள் என்று அர்ஜுனுக்குப் புரிந்தது.

 

அம்மா சமையல் அறையிலிருந்து வேகமாக வந்து ரேடியோவை ஆஃப் செய்தாள். “இவ்வளவு சத்தமாவா பாட்டு கேட்பாங்க. எனக்கு தலைவலியே வந்துடுச்சு..” என்று நித்யாவைத் திட்டி விட்டு வேகமாகவே போய் விட்டாள். தலைவலிக்கும் அளவு சத்தமாக அந்தப் பாடல் ஒலிக்கவில்லை. நித்யா அர்ஜுனை அர்த்தமுள்ள பார்வை பார்த்தாள். ’அம்மாவுக்கு, அவள் ரசித்து எழுதி வைத்த பாடலையே இப்போது கேட்பதற்குத் தலைவலிக்கிறது.’

 

அர்ஜுன் திரும்ப வந்து கட்டிலில் சாய்ந்து கொண்டான். அம்மா விஷயத்தில் நிறைய புதிர்களும், முரண்களும், பதிலில்லா கேள்விகளும் இருக்கின்றன. அப்பா விரும்பி அவளைத் திருமணம் செய்து கொண்டார் என்றால், கண்டிப்பாக அது கட்டாயத் திருமணமாக இருக்க வழியில்லை. அதனால் ஒரு காலத்தில் காதல் பாடல் இனித்தது, இன்று கசக்கிறது என்று சொல்ல வழியில்லை. மேலும், அம்மாவும் அப்பாவும் நிறைய பேசிக் கொண்டிருக்கா விட்டாலும் வார்த்தைகளில்லாத அன்னியோன்னியம் அவர்களுக்கு இடையே இப்போதும் இருப்பதை அவன் பார்க்கிறான்.

 

இந்த வீட்டில் பானுமதியின் பெற்றோர் புகைப்படம் ஒன்று கூட இல்லை. வாசுதேவன்யசோதா புகைப்படம் ஹாலில் பெரிதாகத் தொங்கிக் கொண்டு இருக்கிறது. ஆனால் மகுடபதிரங்கநாயகி படம் ஒன்று கூட இல்லை. சுவரில் தொங்கா விட்டாலும் பழைய புகைப்பட ஆல்பத்திலாவது இருக்கிறதா என்றால் அதுவுமில்லை. சரி வறுமையில் இருந்த அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளக்கூட வசதியில்லாதவர்கள் என்று எடுத்துக் கொண்டாலும் கூட அவர்களைப் பற்றிய ஏதாவது பேச்சு பானுமதி வாயில் இருந்தாவது வரவேண்டும். பானுமதி ஒரு முறை கூட அவர்களைப் பற்றிப் பேசியதில்லை. அதுமட்டுமல்ல, பானுமதியின் உறவினர்கள் என்று சொல்லிக் கொண்டு யாரும் இந்த வீட்டுக்கு வந்ததாகவும் அர்ஜுனுக்கு நினைவில்லை.

 

அவனுடைய தொழிலில் ஒரு சின்னத் தும்பு கிடைத்தால் போதும் அதைப் பிடித்துக் கொண்டு மெல்ல மெல்ல மொத்தத்தையும் அறிந்து கொள்வது சர்வசாதாரணம். அவனுடைய தாய்வழி பாட்டி தாத்தா பெயர் தெரியும், ஊர் தெரியும். இது போதாதா மீதியையும் தெரிந்து கொள்வதற்கு?

 

காஞ்சிபுரம் பக்கத்தில் இருக்கிற அத்திவாக்கம் கிராமத்திற்குச் சென்று வருவதென்று அர்ஜுன் தீர்மானித்தான்.


(தொடரும்)

என்.கணேசன்



Monday, July 13, 2026

யோகி 164

 


ஷ்ரவனும், ஸ்ரேயாவும் தங்கள் திருமண அழைப்பிதழைத் தர யோகாலயம் போயிருந்தார்கள்.  அவர்கள் முதல் முதலில் சந்தித்த இடம் என்பதால் அது அவர்கள் மனதில் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு இடமாக இருந்தது.

 

யோகாலயம் இப்போது கல்பனானந்தா தலைமையில் நிறைய மாறியிருந்தது. அங்கே பழைய கெடுபிடிகள் இல்லை. பாண்டியனின் தடியர்கள் அனைவரும் போய்விட்டிருந்ததால் தீவிர கண்காணிப்பு இல்லை. அதற்கு அவசியமும் இருக்கவில்லை.

 

சைத்ரா வழக்கின் முக்கிய குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படா விட்டாலும், ஒவ்வொருவரையும் கடவுளோ, கர்மாவோ, ஏவல்சக்தியோ வேறு வேறு விதங்களில் தண்டித்திருப்பதை நினைத்து ஷ்ரவன் ஆச்சரியப்படுகிறான். செல்வம் இப்போதும் ஒரு மனநல மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் தான் இருக்கிறார். யாராவது அவரை உற்றுப் பார்த்தாலோ, அவர் முன் காவியுடையுடன் போனாலோ  அவர்கள் மேல் அவர் பாய்ந்து விடுகிறார். 

 

டாக்டர் சுகுமாரன் செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனையில் ஒரு தனியறையில் தான் இருக்கிறார். அந்த அறையில் டாமியும் இருக்கிறது. டாமிக்கு அந்த அறையில் இருக்கும் போது எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சுகுமாரனுக்கு அங்கும் தீராத வயிற்று வலிப் பிரச்சினையும், மண்டை ஓடு தெரியும் பிரச்சினையும் இருக்கிறது. அவருடைய இரண்டு கைகளிலும் நிறைய தாயத்துக்கள் இருக்கின்றன. அதை யாராவது கழற்றப் போனால் அவர் ஆக்ரோஷமாகி விடுகிறார்.  வாரம் இரண்டு முறை அவர் மனைவி வந்து அவரை ஜன்னல் வழியே பார்த்து விட்டு, சிகிச்சையளிக்கும் டாக்டரைப் பார்த்து பேசி விட்டுப் போகிறாள். உள்ளே போய் சுகுமாரனைப் பார்த்தால், அவள் தாயத்து வெட்டியது அவருக்கு நினைவுக்கு வந்து வருவதால் அவள் பாதுகாப்பாக இருக்க வேண்டி வருகிறது.

 

பாண்டியனின் தற்கொலை ஷ்ரவன் எதிர்பாராத ஒன்றாய் இருந்தது. அச்சுறுத்தல் ஏவல் சக்தியிடமிருந்து அல்லாமல் மனிதர்களிடமிருந்தாக இருந்தால் அவர் கண்டிப்பாக அனாயாசமாய் எதிர்கொண்டு சமாளித்திருப்பார் என்று ஷ்ரவனுக்குத் தோன்றியது.  அவர் உயிரோடிருந்திருந்தால் அவன் இப்படி யோகாலயத்தின் பக்கமே வந்திருக்க முடியாது என்பதையும் அவன் புன்னகையுடன் நினைத்துக் கொண்டான். கண்ணனும், பாண்டியனின் மற்ற தடியர்களும் எங்கே போய் சேர்ந்து கொண்டார்கள், தற்போது என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.

 

பிரம்மானந்தாவின் தற்போதைய நிலைமையும், ஷ்ரவன் சற்றும் எதிர்பார்த்து இருக்காதது தான். பாண்டியனின் மரணம் அவரை இப்படி பாதிக்கும் என்று அவன் கற்பனையில் கூட நினைக்கவில்லை. அவர் இப்போதும் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரால் பேசக்கூட முடிவதில்லை. அவரைப் பார்க்க அவருடைய பக்தர்கள் கூட்டமாக யோகாலயத்துக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் துறவிகள் அவருடைய உடல்நிலை நிலவரத்தைச் சொல்லி, அவருடைய சிறிய நூல் ஒன்றை ஆசிர்வாதமாகத் தந்து, அன்போடு திருப்பி அனுப்புகிறார்கள். பிரபலங்கள் உட்பட யாரும் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை. 

 

பாண்டியனின் இருப்பிடம் இப்போது கல்பனானந்தாவின் இருப்பிடமாக இருக்கிறது. ஷ்ரவனையும், ஸ்ரேயாவையும் அவள் அங்கு தான் வரவேற்றாள். திருமணத்திற்குக் கண்டிப்பாக வருவதாக அவள் சொன்னாள். அவள் தலைமையில் யோகாலயத்தில் உண்மையான ஆன்மீக செயல்பாடுகளும், தர்ம காரியங்களும் அதிகரித்திருப்பதாக ஷ்ரவன் கேள்விப்படுகிறான். முன்பெல்லாம் பெயரளவில் இருந்த நல்ல திட்டங்களை எல்லாம் உண்மையான அக்கறை உணர்வுடன் நிறைவேற்றி வருவதுடன், அவற்றின் வளர்ச்சியை அவள் நேரடியாகவே கண்காணித்து வருவதாக அனைவரும் சொன்னார்கள். அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பழைய சூழ்நிலையில் அத்தனை காலம் அவள் தாக்குப் பிடித்து நின்றதே பெரிய சாதனை தான். அதனால் தான் அவளிடம் யோகாலயத்தின் நிர்வாகப் பொறுப்பை பிரம்மானந்தா ஒப்படைத்தாரோ என்று  அவன் சில சமயங்களில் நினைப்பதுண்டு.

 

அவன் முக்தானந்தாவையும் சந்திக்க வேண்டும் என்று விரும்பியதால் கல்பனானந்தா ஆளனுப்பி அவரை அங்கே வரவழைத்தாள். அவர் ஷ்ரவனைப் பார்த்ததும் பேரானந்தப்பட்டார். கண்கள் ஈரமாக அவனையும் ஸ்ரேயாவையும் ஆசிர்வதித்தார். கல்பனானந்தா இப்போது கண்ணனின் தனியறையை அவருக்கு ஒதுக்கி இருந்தாள். அதனால் அவரால் இரவு நேரங்களில் யார் தூக்கமும் கெடுவதில்லை என்று சொல்லிப் புன்னகைத்தார்.

 

அவர்களை வழியனுப்ப இரண்டாவது கேட் வரை வந்த அவர், யோகாலயம் அவர் ஒரு காலத்தில் கனவு கண்டபடி மாறி வருவதாக ஷ்ரவனிடம் நிறைந்த மனதுடன் சொன்னார். “பாண்டியன் இறந்தவுடன் அடுத்ததாய் கண்ணன் தான் அந்த இடத்துக்கு வருவான் என்று பயந்தேன். ஆனால் எத்தனையோ முட்டாள்தனமான வேலைகளைச் செய்த பிரம்மானந்தா வாழ்க்கையில் செய்த ஒரு பெரிய நல்ல காரியம் கல்பனானந்தாவிடம் யோகாலயத்தை ஒப்படைத்தது தான். அதனாலேயே எனக்கு அவர் மேல் இருந்த பழைய கோபம் எல்லாம் போய் விட்டது ஷ்ரவன்.”

 

அவர் ஸ்ரேயாவிடம் சொன்னார். “ஷ்ரவனைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிற நீ மிகவும் அதிர்ஷ்டசாலிம்மா. நல்ல பையன்.” அவர் சொல்வது உண்மை என்று ஆமோதித்து அவள் புன்னகைத்தாள்.

 

ஷ்ரவன் ஆத்மார்த்தமாகச் சொன்னான். “இல்லை சுவாமிஜி. உண்மையில் நான் தான் அதிர்ஷ்டசாலி.”  காதலைக் கூட அதற்குரிய மென்மையுடன் சொல்லாமல், நீ என்னைக் காதலிக்கிறாயா என்று கூடக் கேட்காமல், அவனைக் காதலிப்பதில் இருக்கும் ஆபத்துகளையும் சொல்லி, ’திரும்பி நான் வரா விட்டால் எல்லாவற்றையும் மறந்து நீ வேறொருவனைத் திருமணம் செய்து கொண்டு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்என்பது வரை சேர்த்துச் சொல்லி அவன் காதலைத் தெரிவித்த போதும் அவள் மறுக்காமல் சம்மதித்தது அவனுக்கு இப்போது யோசித்தாலும் பிரமிப்பாகத் தான் இருக்கிறது. மேலும், ஸ்ரேயா அவனோடு மட்டுமல்லாமல், அவனுடைய பெற்றோருடனும் நெருக்கமாக இருப்பதும், அன்பு காட்டுவதும் அவன் அதிர்ஷ்டம் என்றே தோன்றியது.

 

ஸ்ரேயாவை அவன் வாழ்க்கையில் வரவழைத்ததும் அவனுடைய மந்திர ஜபமாக இருக்கலாம் என்று ஷ்ரவன் எண்ணினான். அதைச் செய்ய ஆரம்பித்த பின் தான் அவன் வாழ்க்கையில் அவள் வந்தாள்.  அதனால் இப்போதும் அவன் பரசுராமன் சொல்லிக் கொடுத்த உபதேச மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருக்கிறான். யோகாலயத்தில் இருக்கும் வரை தெரிந்த ஓநாய் இப்போது தெரிவதில்லை. அதற்குப் பதிலாக ஜபிக்கையில் தெய்வீக அலைகளை அவன் உணர்கிறான். கைப்பிடிக்கப் போகும் இந்த நல்ல பெண்ணை இறுதிவரையில் நான் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்று அவன் அந்த சமயத்தில் வேண்டிக் கொள்ள மறப்பதில்லை.  

 

பிரம்மானந்தாவிடம் கல்பனானந்தா அன்றைய யோகாலய முக்கிய நிகழ்வுகளைப் பற்றி உற்சாகத்துடன் சொல்லிக் கொண்டிருந்தாள். அவரால் பேச முடியாவிட்டாலும் அவள் தினமும் வந்து, அவர் அருகே அமர்ந்து, அன்று என்ன வேலைகள் எல்லாம் நடந்திருக்கின்றன என்பதைச் சொல்லத் தவறுவதில்லை. அவருக்கு பாண்டியனின் நினைவு வந்தது. பாண்டியனும் இப்படித்தான் வந்து சொல்வார். ஆனால் அவர் சொல்வது பணக்கணக்காக இருக்கும். கல்பனானந்தா சொல்வது ஆன்மீகம் மற்றும் தர்மக் கணக்குகளை. இருவரும் இருவேறு துருவங்கள். ஆனாலும் இருவரும் அவர் உண்மையாக நேசித்த மனிதர்கள். இருவரும் அவரை உண்மையாக நேசித்த மனிதர்கள்.

இவர்களை விட அதிகமாய் அவரை மதிப்பவர்களும், துதிப்பவர்களும், அவர் மீது பக்தி கொண்டவர்களும் நிறையவே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அவரை அறியாதவர்கள். அவர் போட்ட வேடத்தில் மயங்கியவர்கள். அவர்கள் கற்பனையாக நம்பும் ஒன்றை அவராக பாவிப்பவர்கள். ஆனால் அவர்களுக்கு எல்லா உண்மைகளும் தெரிந்தால் அன்பும், பக்தியும், மதிப்பும் இல்லாமல் போய் விடும். ஆனால் இவர்கள் இருவரோ அவரை உள்ளது உள்ளபடி அறிந்தவர்கள். அறிந்தும் நேசித்தவர்கள்.

 

இருவரில் ஒருவனை அவர் இழந்து விட்டார். வாழ்ந்த போது அவரை உறுதியாகத் தாங்கியவன் அவன். சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டதன் மூலமாக மரணத்தில் மட்டுமே ஏமாற்றியவன் அவன். அது மரண வேதனையாக வலித்து இப்போது மரத்துப் போய் விட்டது. பாண்டியனை இழந்ததும், அசைய முடியாமல் யோசிக்க மட்டுமே முடிவதும், சைத்ரா சொன்னது போல் அவருடைய கர்மாவாக இருக்கக்கூடும். அப்படியானால் தினமும் அன்பு குறையாமல் வந்து கவனித்துக் கொள்வதோடு, யோகாலயத்துக் கணக்குகளைச் சொல்லிக் கொண்டிருக்கும் இவள் என்றோ அவர் செய்த புண்ணிய கர்மாவாக இருக்கலாம்

 

யோசிக்க மட்டுமே முடிந்து, செயல்பட முடியாமல் இருக்கும் இந்த நிலைமையில் அவருக்கு அவ்வப்போது அந்த தோட்டக்கார யோகியின் நினைவு வருவதுண்டு. அப்போதெல்லாம் மனம் பாரமாகும். இனிக்கின்ற பொய்களில் தங்கி, கசக்கின்ற நிஜங்களைப் புறக்கணித்திருக்கக் கூடாது என்று தோன்றும். கண் கெட்ட பின்பு சூர்யநமஸ்காரம்

 

கல்பனானந்தா அவள் சொல்லிக் கொண்டிருப்பதில் அவர் கவனம் இல்லை என்பதையும், வேறென்னவோ சிந்தனைகளில் அவர் சஞ்சரிக்கிறார் என்பதையும் உணர்ந்து, சொல்வதை நிறுத்தி அன்போடு அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள். கயவனான அவளுடைய தந்தை அவளைக் கைவிட்ட போது அடைக்கலம் தந்த நல்ல மனிதராகவே இன்றும் அவள் அவரைப் பார்க்கிறாள். அன்றிலிருந்து எத்தனையோ தலைகீழ் மாற்றங்களை அவரிடம் அவள் கண்ட போதும், அவர் அவள் மீது காட்டிய அன்பில் மாற்றம் இருந்ததில்லை.

 

பாண்டியன் மரணத்திற்குப் பின் யோகாலயத்தின் பொறுப்பை அவளிடம் ஒப்படைப்பார் என்று அவள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒப்படைத்து இரண்டு நாட்களுக்குப் பின் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அந்த இரண்டு நாட்களில் கூட அவளை அழைத்து எந்த விளக்கமும் அவர் தரவில்லை. முடிவெடுத்த கணத்தில் அவருக்கு என்ன தோன்றியது என்று அவளுக்கு இதுவரை தெரியாது. ஆனால் சாதித்துக் காட்டுவேன் என்று உறுதியுடன், கற்பனை நம்பிக்கையுடன், காத்துக் கொண்டிருந்தவளுக்கு அவர் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவளுடைய எல்லாக் கனவுகளையும் நனவாக்க வல்லமை படைத்த யோகாலயத்தை அவள் கையில் ஒப்படைத்து இருக்கிறார். ஒரு காலத்தில் அவருடைய கனவாகவும் அது இருந்திருக்கிறது. பின் தான் அதைத் தொலைத்து விட்டார். பாண்டியனுக்குப் பின் யாரென்று முடிவு எடுக்கும் வேளையில் அது மறுபடியும் நினைவுக்கு வந்து தான் அவர் அவளிடம் யோகாலயத்தை ஒப்படைத்தாரோ என்று அவளுக்குச் சில சமயங்களில் தோன்றும். அதனால் தான் தினமும் அவள் அவரிடம் வந்து என்னவெல்லாம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்கிறாள். சில சமயங்களில் அவர் புன்னகைப்பார். சில சமயங்களில் ஈரக் கண்களுடன் அவளைப் பார்ப்பார். அதன் உண்மையான அர்த்தம் அவளுக்குப் புரியாது. ஆனால் அவள் சேவை தொடர்கிறது

 

சேதுமாதவன் ஷ்ரவனின் திருமண அழைப்பிதழைப் பார்த்துக் கொண்டிருந்தார். நேற்று தான் ஷ்ரவன் அதைத் தந்துவிட்டு கண்டிப்பாய் வந்து ஆசிர்வதிக்க வேண்டும் என்று சொல்லி விட்டுப் போனான். கண்டிப்பாய் போக வேண்டும். நல்ல மனமும், கூர்மையான அறிவும் உள்ள இளைஞன் அவன். சைத்ரா கொலை பற்றிய உண்மைகளை அவன் வந்திரா விட்டால் சாவதற்கு முன் அவர் அறிந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. அவன் வந்ததால், தவறு செய்தவர்கள் வேகமாக தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவன் அதில் தன் பங்கை விட பரசுராமனின் பங்கு அதிகம் என்று அடக்கமாகச் சொல்லியிருந்தான். பரசுராமனையும் அவர் நன்றியுடன் நினைத்துப் பார்த்தார்.

 

எல்லாவற்றிற்கும் முதல் காரணமான அருணாச்சலம் அவருக்குப் பேருதவி செய்திருக்கிறார். ”உன் உதவிக்கு நான் எப்படி வார்த்தைகளால் நன்றி சொல்வேன் அருணா? பதிலுக்கு என்னால் என்ன செய்ய முடியும்என்று சேதுமாதவன் உணர்ச்சிவசப்பட்டு சொன்ன போது, “வாரம் ஒரு முறையாவது வந்து பேசி விட்டுப் போஎன்று அருணாச்சலம் சொன்னார். இப்போதெல்லாம் சேதுமாதவன் தவறாமல் வாரம் ஒரு முறை போய்ப் பேசி விட்டுத் தான் வருகிறார்.

 

அமீர்பாயும், மைக்கேலும், குற்றவாளிகள் கடவுளால் தண்டிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைந்தார்கள். கடைசியிலாவது நண்பரின் நல்ல மனதிற்குக் கடவுள் உதவியிருக்கிறார் என்று அவர்களுக்கு மகிழ்ச்சி. சேதுமாதவனுக்கு மகனுடைய கடைசி ஆசையை நிறைவேற்றிய திருப்தியே ஒழிய இந்த தண்டனையில் பெரிதாக மகிழ்ச்சியில்லை. அவருடைய வருத்தமெல்லாம் ஏன் இது மாதிரியான தவறுகள் நடக்கின்றன என்பதில் தான் இருந்தது. யோசிக்கும் போது எல்லாத் தவறுகளும், அறியாமையாலும், பேராசையாலும் தான் நடக்கின்றன என்று தோன்றியது. அதைச் செய்தால் மகிழ்ச்சி, இது கிடைத்தால் மகிழ்ச்சி என்று தப்புக்கணக்கு போடுவதால் ஆரம்பிக்கின்ற தவறுகள்….

 

தன்னைக் கொன்றவர்களைப் பற்றிக் கூடச் சொல்லாமல், கீதையில் அவர் படித்த யோகியை நேரிலும் அவர் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டது போல் சைத்ராவின் ஆவி ரகுராமனைப் பார்க்கச் சொன்னது நினைவுக்கு வர அவர் மனம் லேசானது….  ஷ்ரவன் சொன்ன பிறகு அவர் அமீர்பாய், மைக்கேல் இருவரையும் அழைத்துக் கொண்டு ரகுராமனைப் பார்க்கச் சென்றார். அவர்கள் மூவருமே அந்த யோகியின் முன்னிலையில் அமைதியையும் அன்பையும் உணர்ந்தார்கள். ரகுராமன் அவர்களிடம் அதிகம் பேசவில்லை. ஆனால் அவருடன் பேச்சே தேவையிருக்கவில்லை. சாந்தமும், மலர்ச்சியும் குறையாத அவருடன் இருப்பதே அவர்களுக்குப் பேரானந்த அனுபவமாக இருந்தது.  எல்லாவற்றையும் இறைவன் தந்ததாய் ஏற்றுக் கொண்டு, செய்ய வேண்டியிருக்கும் ஒவ்வொன்றையும் இறைவன் செய்ய வைப்பதாய் பாவித்து வாழ்கின்ற வாழ்க்கையின் நிறைவை அவர்களால் நேரில் பார்க்க முடிந்தது.

 

இரண்டு வாரங்கள் கழித்து அவரை மீண்டும் ஒரு முறை பார்க்கத் தோன்றுகிறது என்று அமீர் பாய் சொன்னார். அதனால் மீண்டும் அவரைச் சந்திக்க அவர்கள் போன போது ரகுராமன் அங்கிருக்கவில்லை. மூன்று நாட்களுக்கு முன் அவர் போய் விட்டதாகச் சொன்னார்கள்.  அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

 

இப்போது சேதுமாதவனின் மனம் அந்த யோகியை நினைக்க ஆரம்பித்தது. இப்போது அந்த யோகி எங்கிருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் இறைவன் இருத்தியிருக்கும் இடமாக நினைத்து அவர் அங்கும் நிறைவாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அந்த யோகியைப் பார்த்ததிலிருந்து ஒரே ஒரு ஆசை தான் சேதுமாதவன் மனதில் இருந்து வருகிறது. அதன் பின் அதை அடிக்கடி அவர் நினைவுபடுத்திக் கொள்வது போல் இப்போதும் நினைவுபடுத்திக் கொள்கிறார். ’மீதமிருக்கும் வாழ்க்கையையாவது அப்படி வாழ வேண்டும்!’

 

முற்றும்.

என்.கணேசன்


(அடுத்த திங்கட்கிழமையிலிருந்து ரட்சகன் நாவல் வாரா வாரம் வெளியாகும். அமானுஷ்யனின் வரவுக்காகக் காத்திருங்கள்)