அர்ஜுன் ராஜாராம் சொன்னதில் மனம் நெகிழ்ந்தான். இன்றைக்கு
அவர் இருக்கும் உயரத்திற்கு அவர் அவனை லட்சியம் செய்ய வேண்டியதில்லை. உண்மையில்
அவன் அவருக்கு யாருமல்ல. அவனுடைய தந்தை ஞானமூர்த்தி அவருக்கு உடன்பிறந்த சகோதரரும்
அல்ல.. ஆனாலும் அவர் வாய் நிறைய ஞானமூர்த்தியை எங்கண்ணா என்று தான்
சொல்கிறார். ”எங்கப்பாவுக்கு மகனாய் இருக்கற எல்லாத் தகுதியும், என்னை
விட அண்ணாவுக்குத் தான் அதிகமாயிருக்கு” என்கிறார். அவனை வாசுதேவன் குடும்பத்தின் ஒரே வாரிசு என்றும் அவன் கோபித்துக் கொண்டால்
தாங்க முடியாது என்றும் சொல்கிறார். வாசுதேவனின் மகன் தான் அல்ல
என்று ஞானமூர்த்தி தான் தெரிவித்திருக்கிறாரேயொழிய இப்போதும் ராஜாராமின் வாயில் இருந்து
அந்த வாசகம் வரவேயில்லை. இன்றைய அரசியல் நிலவரத்திலும்,
மக்களின் முட்டாள்த்தனத்திலும் மனம் வெறுத்துப் போய் அவர் வழியில் அவரும்
விவரமாக, தன் தனிப்பட்ட இலாபத்தைப் பார்த்துக் கொள்வதை ஒரு சாமானியனின்
பார்வையில் யாரும் பெரிய தவறாகச் சொல்ல முடியாது…
அர்ஜுன் உணர்ச்சிவசப்பட்டு சொன்னான். ”நான் உங்க பிள்ளை சித்தப்பா.
என் கோபத்தை எல்லாம் ஒரு பொருட்டா ஏன் நினைக்கறீங்க சித்தப்பா.
என்னால உங்க மேல எத்தனை காலம் கோபமாய் இருக்க முடியும்? இருந்த
கோபமும் உண்மையான கோபம் இல்லை சித்தப்பா? அப்படி உண்மையான
கோபமாய் இருந்திருந்தால் எனக்கு என்ன வேலை ஆக வேண்டியிருந்தாலும் நான் உங்களைத் தேடி
வந்திருக்க மாட்டேன்…”
அவன் சொன்னதைக் கேட்டு அவர் கண்கள்
ஈரமாயின. அவர் பாசத்துடன் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். “தேங்க்ஸ்டா. இனி என்
கிட்ட உனக்கு ஏதாவது கேட்கறதுக்கு இருக்கா?”
அப்படி அவர் கேட்டு விட்டாரேயொழிய, வில்லங்கமான
கேள்விகளைக் கேட்டு விடுவானோ என்று அவருக்கு படபடப்பாகத் தான் இருந்தது.
ஆனால் அவன் சொன்னான். “ஒன்னும்
இல்லை சித்தப்பா. தேங்க்ஸ்”
அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. அவர் இந்த
அளவு மனம் விட்டுப் பேசியும் அவன் அதே போல் மனம் விட்டுப் பேசிவிடவில்லை. அவராக எதையாவது பேசி அவனை இருத்திக் கொள்ளாவிட்டால் அவன்
கிளம்பி விடுவான் என்று தோன்றியது. ”இந்த நேரத்துல கடல்பக்கத்துல
இருந்து நல்லா காற்று வரும். அங்கே உட்கார்ந்துக்கலாமா” என்று அவர்
ஹாலின் பின்கண்ணாடிக் கதவைக் காட்டினார். அர்ஜுன் தலையசைத்தான்.
கண்ணாடிக் கதவைத் திறந்த போது அவர்
சொன்னது போலவே சில்லென்று காற்று வீசியது. பின் பகுதியில்
இருந்த நாற்காலிகளை இழுத்துப் போட்டு இருவரும் அமர்ந்து கொண்டனர்.
ராஜாராம் கேட்டார். “அண்ணா இப்பவும்
தியானம் செய்யறானா?”
அர்ஜுன் புன்னகைத்தான். “உள்ளூரில்
இருக்கறப்ப தினமும் செய்யறார்.”
ராஜாராமும் புன்னகைத்தார். பின் கடலைப்
பார்த்துக் கொண்டே மிக நெகிழ்ந்த குரலில் சொன்னார். ”கடவுள்
குற்றங்குறையில்லாத ஒரு நிறைமனிதனைப் படைக்க ஆசைப்பட்டு அண்ணாவைப் படைச்சாரோன்னு நான்
சில சமயங்கள்ல ஆச்சரியப்பட்டதுண்டு.... ஆனால் இந்தக் காலத்துக்கும்
இந்த சமூகத்துக்கும் அவனைக் கொண்டாடற தகுதி இல்லை அர்ஜுன். ஒரு காலத்துல
மார்கஸ் அரேலியஸ்ங்கற ரோமானியச் சக்கரவர்த்தி இருந்தார். வரலாற்றில்
ஒரு தத்துவஞானி வெற்றிகரமாய் அரசாண்டதற்கு அவர் ஒருத்தர் தான் உதாரணம். அவர் தான்
கடைசி உதாரணமாயும் இருப்பார்னு நான் நினைக்கிறேன்.... நம்ம இதிகாசத்தில்
ஜனகனையும் சொல்றாங்கன்னாலும் ஜனகன் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஆள் அல்ல…. அண்ணா இப்பவும் வருஷத்துக்கு ஒரு தடவை இமயமலை பக்கம் போறானா?”
“போறார்
சித்தப்பா”
“அங்கே போகிறப்ப
யாரோ ஒரு சித்தரையோ, மகானையோ அண்ணா சந்திக்கிறது உனக்குத் தெரியுமா அர்ஜுன்?”
அர்ஜுனுக்கு அது புதிய தகவல். “இல்லையே
சித்தப்பா யார் அவர்?” என்று அவன் ஆர்வத்தோடு கேட்டான்.
“அது யார்னு
எனக்கும் தெரியலை. ஆனா அவரைச் சந்திச்ச பிறகு தான் அண்ணா தினமும் தியானம் செய்ய
ஆரம்பிச்சான். அது மட்டும்
தெரியும்.... முதல் தடவை அங்கே போய்ட்டு வந்த பிறகு அண்ணா ஒரு வாரம் யார்
கிட்டயும் ஒன்னு ரெண்டு வார்த்தைக்கு மேல பேசலை. கோர்ட்டுக்குப்
போகலை. சொல்லப் போனா ரூமை விட்டுக் கூட வெளியே வரலை...”
அந்தத் தகவல் அர்ஜுனுக்கு ஆச்சரியத்தைத்
தந்தது. “அது எப்போ சித்தப்பா?”
“அப்போ உனக்கு ரெண்டு வயசு இருக்கும். அண்ணாவோட மாற்றத்தைப் பாத்து அப்பாவுக்கே பயம் வந்துடுச்சு. அவர் கேட்டும் அண்ணா சரியாய் பதில் சொல்லலை. ஒரு வாரம் கழிச்சு தான் இயல்புநிலைக்கு வந்தான். நான் அவன் கிட்ட “என்ன ஆச்சுண்ணா போன வாரம்னு கேட்டேன்.” அவன் ஒன்னுமில்லைன்னு தலையை மட்டும் ஆட்டினான். அவன் ஒரு விஷயத்தைச் சொல்லக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டா, கடவுளே வந்தாலும் அவனைச் சொல்ல வைக்க முடியாது.... ஆனா அதுக்கப்பறம் அவன் வருஷா வருஷம் இமயமலைக்குப் போய்ட்டு வருவான். பிறகு எப்பவும் அப்படிப் பேசாம இருந்ததில்லை....”
அதைச் சொல்லச் சொல்ல எதோ ஒரு முக்கியத்
தகவல் நினைவுக்கு வந்தது போல் ராஜாராமின் முகம் மாறியது. அவர் யோசனையுடன்
நிமிர்ந்து உட்கார்ந்தார். நினைவுக்கு வந்த அந்தத் தகவல் அவரை அசௌகரியப்படுத்தியது போல்
அர்ஜுனுக்குத் தோன்றியது. அவன் அவரைக் கேட்டான். “என்ன சித்தப்பா?’
“அந்த மாதிரி
ஒரு தடவை போயிட்டு வந்த பிறகு தான் அண்ணா அரசியலுக்கு வர முடிவு செஞ்சான். அவன் இமயமலைக்குப்
போனதுக்கும், அரசியலுக்கு வந்ததுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கான்னு எனக்கு
நிச்சயமாய் சொல்லத் தெரியலை. ஆனால் ஒன்னு, அவன் அப்படி ஒரு
தடவை அங்கே போய்ட்டு வந்த அடுத்த நாள் தான் அரசியலுக்கு வர்றதை அறிவிச்சான். அது இப்போ
நினைவுக்கு வருது..”
அப்படி நினைவுக்கு வந்தது அவரை ஏன்
அசௌகரியப்படுத்துகிறது என்று அர்ஜுனுக்குப் புரியவில்லை. “அதனால?”
ராஜாராம் மெல்லச் சொன்னார். “அண்ணா அரசியலுக்கு வந்தது கூட அந்த ரகசிய மகான்
சொல்லித் தானோ என்னவோன்னு நினைக்கத் தோணுது.”
“அவர் அப்படி ஒரு ரகசிய மகானைச் சந்திச்சார்ங்கறது உங்களுக்கு எப்படித் தெரிய
வந்தது சித்தப்பா?”
“முதல் தடவை போனப்போ இந்த மாதிரி வருஷா வருஷம் போகிற திட்டமெல்லாம் அண்ணாவுக்கு
இருக்கலை. அண்ணாவும் அவனோட நண்பர்கள் நாலஞ்சு பேரும் சும்மா டூர்
போகிற மாதிரி போனாங்க. வந்த பிறகு ஒரு வாரம் அண்ணா யார் கிட்டயும்
எதுவும் பேசாதது பார்த்து அப்பாவும் பயந்துட்டார். அதனால நான்
அண்ணா கூடப் போன நண்பர்களைப் பார்த்து பேசினேன். அவங்க அங்கே
ஒரு நாள் ட்ரெக்கிங் போறப்ப ஒரு இடத்துல உக்காந்து ரெஸ்ட் எடுத்துகிட்டு இருந்தாங்களாம்.
அப்போ அண்ணா மட்டும் தனியா கொஞ்சம் தூரம் போய்ட்டு வர்றேன்னு போனானாம்.
போய் ரொம்ப நேரம் திரும்பி வரலைன்னவுடனே அந்த நண்பர்களும் பயந்துட்டாங்க.
அவங்கள்ல ரெண்டு பேர் அண்ணாவைத் தேடிட்டுப் போயிருக்காங்க. அப்ப தான் ஒரு பாறைல உட்கார்ந்துகிட்டு அண்ணா யார் கூடவோ ரொம்ப சீரியஸாய் பேசிகிட்டு
இருக்கறதைப் பார்த்திருக்காங்க. அவங்களுக்கு அண்ணாவைப் பார்த்தவுடனே
நிம்மதியாயிருக்கு. ஆனா ஆச்சரியம் என்னன்னா அவங்க ரெண்டு பேர்
பார்த்த ஆள் அவங்க பக்கத்துல போறப்ப காணலையாம். அண்ணா மட்டும்
தான் பாறைல இருந்து இறங்கி வந்தானாம். “யாருடா அவரு”ன்னு கேட்டிருக்காங்க. “ஒரு மகான்”னு மட்டும் அண்ணா சொல்லியிருக்கான். “எங்கேடா அவரு?”ன்னு கேட்டிருக்காங்க. “அவர் அந்தப் பக்கம் இறங்கிப்
போயிட்டார்”னு அண்ணா சொன்னானாம். அந்த ரெண்டு
நண்பர்கள்ல ஒருத்தன் மெல்லப் போய் பாறைக்கு அந்தப் பக்கத்தை எட்டிப் பார்த்திருக்கான்.
பார்த்தா அந்தப் பக்கம் ஒன்னுமே இல்லையாம். அங்கேயிருந்து
லேசா வழுக்கினா கூட பள்ளத்தாக்குல விழுந்து சாகத்தான் வேண்டியிருக்குமாம். அந்த நண்பனுக்குப் பகீர்னு ஆயிருக்கு. திரும்பி வர்றப்ப
அவங்க கிட்டயும் அண்ணா அதிகமாய் பேசலையாம். ராத்திரி தூங்கலையாம்.
அவங்க முழிச்சுப் பார்க்கறப்ப எல்லாம் அண்ணா உட்கார்ந்து எதோ யோசனையாய்
இருந்தானாம். அது சென்னை திரும்பி வர்ற வரைக்கும் தொடர்ந்திருக்கு.”
அர்ஜுனுக்கும் அதைக் கேட்டு ஆர்வம்
அதிகமானது. அவன் கேட்டான். “அவங்க பார்த்த அந்த
மகான் எப்படி இருந்தாராம் சித்தப்பா?”
”நானும்
அதே கேள்வியை அவங்க கிட்ட கேட்டேன். ஆனா அவங்க சொன்ன
பதில் என்னை ஆச்சரியப்படுத்துச்சு. அந்த ஆள் பாக்க
நம்மள மாதிரி தான் இருந்தாராம். பைஜாமா பேண்ட்டும், ஜிப்பா
ஷர்ட்டும் போட்டுகிட்டு, கிராப்புத் தலையும், ஷேவ் செஞ்ச
முகமுமாய் டிப்டாப்பாய் தெரிஞ்சாராம். பார்த்தால் யாரும்
மகானுன்னு சொல்லத் தோணாது, ஆனா மகானைத் தவிர யாராலும் அந்த இடத்துல மாயமாக முடியாதுன்னு
சொல்றாங்க.”
(தொடரும்)
என்.கணேசன்




