என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, April 27, 2026

யோகி 153


ஷ்ரவன் கண்விழித்த நேரம் என்னவென்று அவனுக்குத் தெரியவில்லை. பாதாள அறையில் கடிகாரம் இல்லை. சூரிய வெளிச்சத்தை வைத்துக் கண்டுபிடிக்க அங்கே ஜன்னலும் இல்லை. ஆனால் நீண்ட நேரம் உறங்கியிருக்கிறான் என்பது அவனுக்கு உடல் உணர்ந்த புத்துணர்ச்சியால் புரிந்தது. மனம் பேரமைதியுடன் இருந்தது. எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறது என்று தோன்றியது. அந்த யோகியைச் சந்தித்ததும் அப்படித் தான் என்று எண்ணினான். அவரைச் சந்திக்கும் போது கேட்டதும், உணர்ந்ததும் ஒரு பாக்கியம் என்றால், அதை அவன் தன் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி உணர்ந்த வாழ்க்கைப் பாடம் பெரும் பாக்கியம் தான். இந்த இக்கட்டான நிலைமை வரா விட்டால் அவன் அவர் சொன்னதைத் தன் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி யோசித்திருக்க மாட்டான். இரண்டாவதான இந்தப் பெரும் பாக்கியத்தை இழந்திருப்பான். கடவுள் இது போன்ற கஷ்டங்களையும், பிரச்சினைகளையும் மனிதனின் வாழ்க்கையில் அனுப்புவது இதற்குத் தானோ? படித்தும், கேட்டும் தெரிந்து கொண்டதை வாழ்க்கையில் பயன்படுத்திப் பார் என்று வாய்ப்பு அளிக்கிறானோ? அதை நாம் தான் புரிந்து கொள்ளத் தவறுகிறோமோ?

 

கழிவறைக்குப் போய் கை, கால், முகம் அலம்பிக் கொண்டு வந்து ஷ்ரவன் மந்திரஜபத்தை மறுபடி ஆரம்பித்தான். 1008 முறை அவன் சொல்லி முடித்த போது ஓநாய் அவனுக்குக் காட்சியளித்தது. ஷ்ரவன் புன்னகையுடன் மனதில் சொன்னான். “இப்போது நான் தெளிவு பெற்று விட்டேன். நீ கண்ணுக்குக் காட்சி அளித்தால் மட்டுமே என்னோடு இருக்கிறாய் என்று அர்த்தமல்ல என்பதை நான் புரிந்து கொண்டு விட்டேன். நீ காட்சி அளித்தாலும், அளிக்கா விட்டாலும் என்னோடு இருக்கிறாய். இது வரை எனக்கு நீயே வழிகாட்டி இருக்கிறாய். எனக்குத் தெரிந்த காட்சிகளும் நீ காட்டியது. காட்சிகள் தெரியா விட்டாலும் நீ தான் என் மூலம் எல்லாவற்றையும் நடத்தியிருக்கிறாய். நன்றி நண்பனே.”  

 

ஓநாய் ஒரு கணம் அவனை அன்புடன் பார்த்தது போலிருந்தது. பின் மறைந்து விட்டது. இதுவரை நடந்ததை எல்லாம் ஷ்ரவனின் மனம் ஒழுங்குபடுத்திப் பார்த்தது. நேற்று அவன் கற்பனையில் அந்த ஓநாய் பீரோவுக்குள் நுழைந்ததைச் சொன்னது வரை யோசித்துப் பார்த்தான். அது அவனாகக் கற்பனை செய்தது தான் என்றாலும், அந்தக் கற்பனையைச் செய்ய வைத்ததும் அந்தச் சக்தி தானோ என்ற எண்ணம் மெல்ல எழுந்தது. அந்தப் பீரோவில் உள்ள சொத்துப் பத்திரங்களை அவன் பார்க்க வேண்டும் என்று தான் அப்படிச் செய்ய வைத்ததோ?  ஆரம்பத்தில் வரவுசெலவுக் கணக்கு பற்றிச் சொன்னது, இப்போது சொத்துப் பத்திரம் பற்றிச் சொல்கிறது. ஸ்ரேயா சந்திரமோகனின் சொத்து பவர் ஆஃப் அட்டர்னி மூலம் அவர் காணாமல் போன பின் கிரயமாகி இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறாள்.

 

எல்லாவற்றையும் வைத்து யோசித்துப் பார்க்கையில் சந்திரமோகன் இவர்களுடைய பினாமியாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அதன் பின் அவர்களுக்குள் ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம். இவர்கள் கொடுத்ததைத் திருப்பித்தர சந்திரமோகன் மறுத்திருக்கலாம். அல்லது தன் பெயரில் இருப்பதை அவர் விற்று அனுபவிக்க நினைத்திருக்கலாம். அதனால் அவர் தீர்த்துக்கட்டப்பட்டிருக்கலாம்.  அதற்கு முன் மிரட்டி, அந்த நிலங்களைக் குறைந்த விலைக்கு விற்க வைத்திருக்கலாம்அவர் கொல்லப்பட்டதைத் தான் சைத்ரா பார்த்திருக்க வேண்டும். யோசிக்கையில் எல்லாம் கோர்வையாக வந்தது. 

 

ல்பனானந்தா மறுநாள் காலையிலும் ஷ்ரவன் வேலைக்கு வராததைக் கவனித்த போது தான் அவனுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட ஆரம்பித்தாள். காலை சுமார் எட்டு மணிக்கு பாண்டியன் காரில் வெளியே போவது தெரிந்தது. அவளுடைய சந்தேகம் உறுதிப்பட்டது. பாண்டியன் இல்லாமல் ஷ்ரவன் அங்கிருக்க, சாதாரணமாய் வாய்ப்பே இல்லை. அவர்கள் அவனைச் சிறைப்பிடித்து வைத்திருக்க வேண்டும்

 

வெளிப்பார்வைக்கு கல்பனானந்தா அமைதியாகவே இருந்தாலும் அவள் உள்ளூர பதற்றத்தை உணர்ந்தாள். ஷ்ரவன் அவளுக்குச் சொல்லியிருப்பதெல்லாம் நினைவுக்கு வந்தது.  தனதறைக்குப் போய் அவன் எழுதித்தந்த மின்னஞ்சல் முகவரிகளை அவள் முதலில் மனப்பாடம் செய்தாள்.

 

அலுவலகம் ஒன்பது மணிக்கு மேல் தான் திறக்கப்படும். அங்குள்ள கம்ப்யூட்டர்களில் தான் அவள் அந்த ரகசியத் தகவலை அனுப்ப முடியும். அவள் தினந்தோறும் இல்லா விட்டாலும் வாரத்திற்கு மூன்று முறையாவது சென்று, யோகாலயத்திற்கு வந்திருக்கும் பொது மின்னஞ்சல்களில் சிலவற்றுக்குப் பதில் அனுப்புவது வழக்கம். பிரம்மானந்தா தனக்கு வரும் தனிப்பட்ட  மின்னஞ்சல்களையும், பெரிய இடங்களில் இருந்து வரும் மின்னஞ்சல்களையும் படித்து அவரே பதில் அனுப்பி விடுவார். ஆனால் சாமானியர்களின் மின்னஞ்சல்கள் அவருக்குப் பதில் அளிக்கக் கசப்பானவை. எல்லாவற்றையும் புறக்கணிப்பதோ விமர்சனத்துக்கு உள்ளாகி விடும் என்பதால், அவற்றில் தேர்ந்தெடுத்துச் சிலவற்றிற்காவது தகுந்த பதில் அனுப்புவது கல்பனானந்தாவின் வேலை.

 

கல்பனானந்தா அலுவலகத்திற்குப் போன போது உள்ளூர பெரும் பதற்றத்தை மறுபடியும் உணர்ந்தாள். மின்னஞ்சல்களில் தேடிய போது ஷ்ரவன் சொன்ன இரண்டு மின்னஞ்சல்களும் கிடைத்தன. இரண்டில் ஒன்றுக்கு ஏற்கெனவேஆசிர்வாதம்என்று பதில் அளிக்கப்பட்டு இருந்தது. அதனால் அதற்கு அவள் மீண்டும் பதில் அளிக்க வழியில்லை.

 

ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆன்மிக மையம் என்ற பெயரில் இருந்து அனுப்பப் பட்டிருந்த இன்னொரு மின்னஞ்சலைப் படித்தாள்.

 

தவத்திரு யோகி பிரம்மானந்தா அவர்களுக்கு,

ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆன்மிக மையத்தின் மெய்யன்பர்கள் சார்பில் அனந்த கோடி நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். நம் நாட்டில் ஆன்மிகத்தைப் பரப்புவதற்காக திருவண்ணாமலையை அடுத்த போதமங்கலம் கிராமத்தில் ஸ்தாபிக்கப்பட்டது எங்கள் அமைப்பு. பல ஆன்மிகப் பெரியவர்கள் இங்கு வந்து அழிவில்லாத நம் சனாதன தர்மம் குறித்து சொற்பொழிவாற்றி இருக்கிறார்கள். தாங்களும் தயைகூர்ந்து இவ்வருடத்தில் தங்களுக்கு வசதிப்படும் ஒரு நாளில் இங்கு வந்து யோகாவின் மேன்மையை இங்குள்ள பக்தர்களுக்கும் தந்தருள வேண்டும் என்றும் தங்கள் நூல்களையும், உரைகளையும் எங்களுக்கு அனுப்பித் தரவேண்டும் என்றும் பாதம் தொழுது நாங்கள் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.   

இப்படிக்கு

கனகசபாபதி

 

இதற்கு எழுதும் பதிலைத் தான் அவள் ஷ்ரவன் சொன்ன சங்கேத பாஷையில் எழுத வேண்டும். சாதாரணமாக எழுதுவதானால் பத்து பக்கங்கள் கூட சிரமம் இல்லாமல் எழுதி விடலாம் போல் இருந்தது. க்ஷேமமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம் என்று ஆபத்தை அறிவித்து விட்டு அடுத்தபடியாக இரண்டு வார்த்தைகள் அடித்து விட்டு மூன்றாவது வார்த்தையை எடுத்துக் கொண்டு அவர்கள் படிக்கும்படி அவள் அனுப்பும் தகவல் அமைய வேண்டும். ஆனால் யோகாலயத்தில் யாராவது சந்தேகம் வந்து முழுவதுமாகப் படித்தாலும் அர்த்தமில்லாதபடி இருந்து விடக்கூடாது. கல்பனானந்தா கஷ்டப்பட்டு ஒரு பதில் அஞ்சல் எழுதினாள்.

    

க்ஷேமமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்.

யோகாவின் உயர்வினைக் கண்டுபிடித்து, இறையடியார்கள் உயர்த்தியும் விட்டார்கள். முடிந்ததை பரப்பி, அதனால் சமூகத்தை உயர்த்த உடனடியாக யோகிஜியின் காணொளிகளை அனுப்பி உள்ளோம். சேமித்து வைக்கவும். அனைவருக்கும் பயன்படும்.

யோகாலயம்

 

அத்துடன் பிரம்மானந்தாவின் யூட்யூப் வீடியோக்கள் நான்கை இணைத்து அனுப்பி விட்டு அனுப்பிய பிரிவில் இருக்கிறதா என்று அவள் உறுதிப்படுத்திக் கொண்டு அங்கிருந்து கிளம்பிய போது அவள் இதயம் சம்மட்டி அடிகளை அடிக்க ஆரம்பித்திருந்தது.

 

ராகவன் அந்த ரகசிய மின்னஞ்சல் முகவரிக்கு வந்திருந்த தகவலைப் படித்தார்.

க்ஷேமமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்.(நான் ஆபத்தில் இருக்கிறேன்.)

யோகாவின் உயர்வினைக் கண்டுபிடித்து, இறையடியார்கள் உயர்த்தியும் விட்டார்கள். முடிந்ததை பரப்பி, அதனால் சமூகத்தை உயர்த்த உடனடியாக யோகிஜியின் காணொளிகளை அனுப்பி உள்ளோம். சேமித்து வைக்கவும். அனைவருக்கும் பயன்படும்.

 

ராகவன் மின்னல் வேகத்தில் இயங்கினார். ஏற்கெனவே தயார்ப்படுத்தி வைத்திருந்த அவர்களுடைய ஆட்கள் ஐந்து பேருக்கு அவர் அவசரமாகப் போன் செய்தார். அவர்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை வேகம் எடுத்தது.


(தொடரும்)

என்.கணேசன்




Thursday, April 23, 2026

சதுரங்கம் 15


விமல் ரிஷிகேசத்தில் இருக்கிறான். ரிஷிகேசத்தில் துறவிகள் அதிகம். எங்கு பார்த்தாலும் காவி நிற ஆடையணிந்தவர்கள் தான் அதிகம் தென்படுகிறார்கள். விமலும் காவியுடையில் ஒரு ஆசிரமத்தில் தங்கி இருக்கிறான். அவன் ஆன்மீகத்தில் சிறிதும் நாட்டமில்லாதவன். அவனுக்கு இப்படி ஒரு ஆசிரமத்தில் தங்கி வாழ்வது சிறை வாழ்க்கையைப் போல் கொடுமை தான். அதிலும் அவனுடைய காவியுடையைப் பார்த்து விட்டு, உடனிருக்கும் ஆட்கள் அவனிடம் ஆன்மீக விஷயங்களை ஆட்கள் மணிக்கணக்கில் பேச ஆரம்பிப்பது சித்திரவதை தான். ஆனால் உயிருடன் பதுங்கி இருக்க இதைப் போன்ற ஒரு இடம் பாதுகாப்பானது என்று அவனே தேர்ந்தெடுத்து இருப்பதால் இதையெல்லாம் அவன் தாங்கித்தானாக வேண்டியிருக்கிறது.

 

தனிமையில் இருக்கையில் அவன் ஆர்வமாக தமிழ்நாட்டுச் செய்திகளை இணையத்தில் படித்துக் கொண்டிருக்கிறான். அதிலும் நர்மதாவின் கொலை பற்றிப் புதிய தகவல் ஏதாவது இருக்கின்றதா என்று அடிக்கடி பார்க்கிறான். கொலையாளி என்று எவனாவது பிடிபட்டாலோ, இல்லை தற்கொலை என்று வழக்கு முடித்து வைக்கப்பட்டாலோ அவன் நிம்மதியாக தமிழகம் திரும்பலாம்.  ஆனால் இரண்டுமில்லாத சூழல் தான் அங்கு நிலவுகிறது.

 

பத்திரிக்கைகளும், சமூக வலைத்தளங்களும் அடுத்த பரபரப்பான நிகழ்வு வரும் வரை இந்த விஷயத்தை வைத்துத் தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்பதால் எந்த முடிவுக்கும் மக்களை வர விடாமல், குழப்பமான பல முரண்பட்ட தகவல்களை மாறி மாறித் தந்து கொண்டிருக்கின்றன.  தற்கொலை தான் என்று ஒரு கோஷ்டியும், கொலை தான் என்று ஒரு கோஷ்டியும் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தன.

 

பூட்டிய வீட்டுக்குள் மரணம் நிகழ்ந்திருக்கின்றது, பூட்டு உடைக்கப்பட்டதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்பதே தற்கொலை கோஷ்டியின் முக்கிய வாதமாக இருந்தது. வீட்டிலிருந்து எதுவும் திருட்டுப் போனதாகத் தெரியவில்லை, விலையுயர்ந்த பொருள்களும் அப்படியே தான் இருக்கின்றன என்பது அவர்களுடைய அடுத்த வாதம். நர்மதாவின் தங்கை கள்ளச்சாவியைப் பற்றி சரியான சந்தேகத்தை எழுப்பி இருந்தாலும், கூடவே விமலைப் பிடித்து விசாரிக்கிறபடி விசாரித்தால் உண்மை தெரியும் என்று சொன்னது அவன் வயிற்றைக் கலக்கியது. எல்லாம் அவனுடைய நேரம்! வீட்டின் கள்ளச்சாவி கொலைகாரனிடம் இருக்கிறது என்பதையும், வீட்டிலுள்ள விலையுயர்ந்த பொருள்களின் மொத்த மதிப்பு குற்றவாளிக்குப் பிச்சைக்காசு என்பதையும் விமல் போலீசில் பிடிபட்டாலும் சத்தமாகச் சொல்ல முடியாது.

 

அந்தப் பிச்சைக் காசிலும் சிறிது தான் விமல் நர்மதாவைக் கேட்கச் சொன்னான். அது கூட ஆற்றில் இருந்து ஒரு சொம்பு தண்ணீர் எடுப்பது போலத் தான். அது அவளுடைய உயிரைப் பறிக்கும் என்பது தெரிந்திருந்தால் அவன் அப்படிச் சொல்லியிருக்க மாட்டான். ஏனென்றால் அவள் தான் அவனுடைய ஏ.டி.எம் மெஷின். அவளை இழப்பது அவனுக்கு வாழ்வாதாரத்தையே இழப்பது போல் தான். அவன் கணக்கு தவறி விட்டதால். அவன் வாழ்வாதாரத்தை இழந்தது மட்டுமல்ல, உயிருக்கே ஆபத்தான நிலையில் இருக்கிறான். பணம் கேட்கச் சொன்னவன் அவன் தான் என்ற சிறிய சந்தேகம் எதிர்தரப்பிற்கு வந்தால் கூட, அவன் கண்டுபிடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவன் பிணம் கங்கையில் மிதக்கும் வாய்ப்பு உண்டு.

 

நர்மதா கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்று சந்தேகப்படும் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் அவனைத் தான் முதலில் சந்தேகிக்கிறார்கள். அவன் தலைமறைவானது அவர்கள் சந்தேகத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது. ஒரு பத்திரிக்கை அவள் கடைசியாக அழைத்துப் பேசியது அவனிடம் தான் என்பதை கொட்டை எழுத்தில் தனிச்செய்தியாக வெளியிட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவள் இறந்த பின்னும் அவளை அலைபேசியில் அழைத்திருக்கும் நபரும் அவன் தான் என்பதையும் சொல்லியிருந்தது. முந்தைய நாள் பேசியதில் அவர்களுக்குள் சண்டை வந்திருக்கலாம் என்றும், அவன் கொன்று விட்டு, அவன் மீது பழி விழாமல் இருக்க, விஷயம் தெரியாதவனைப் போல், அவன் காலையிலும் அவளை அலைபேசியில் அழைத்திருக்கக் கூடும் என்றும் தன் யூகத்தை எழுதியிருந்தது. விமலுக்கு அதைப் படிக்கும் போதே மனம் பதைத்தது.  பாவிகள் எப்படி மனசாட்சி இல்லாமல் தங்கள் இஷ்டத்திற்கு எழுதுகிறார்கள்?

 

விடிவெள்ளி என்ற பத்திரிக்கை நர்மதா இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு ஒரு நகைக்கடையில் நகை வாங்கியதைக் குறிப்பிட்டு, தற்கொலை செய்து கொள்ளப் போகிறவள் நகை வாங்குவாளா என்ற கேள்வியையும் எழுப்பி இருந்தது. அதற்குப் பதில் சொல்லும் வகையில் ஒரு ஊடகம் ஒரு உளவியல் நிபுணரைப் பேட்டி எடுத்து வெளியிட்டது.

 

அதில் அதே கேள்வி அந்த உளவியல் நிபுணரிடம் கேட்கப்பட்டிருந்தது. “சமீபத்தில் நடிகை நர்மதா தற்கொலை செய்துகிட்ட செய்தியை நீங்களும் கேள்விப்பட்டிருப்பீங்க. அவங்க தற்கொலைக்கு இரண்டு நாள் முன்னாடி நகைக்கடையில் நகை வாங்கியிருக்காங்க. அது ஒரு முரண்பாடாய் இருக்குன்னு சில பத்திரிக்கைச் செய்திகள் வந்திருப்பதையும் பார்த்திருப்பீங்க. இதில் உளவியல் நிபுணரான உங்கள் கருத்து என்ன?”

 

அந்த உளவியல் நிபுணர் பதிலளித்திருந்தார்.  தற்கொலைங்கறதே பல சமயங்கள்ல திடீர்னு எடுக்கற முடிவு தான். திடீர்னு அவங்க ஒரு கணத்தில் ஆழமாய் உணர்கிற மன அழுத்தமும், விரக்தியும்  தற்கொலைக்கு அவங்கள தூண்டறதாயிருக்கும். அந்த ஒரு நிமிஷத்துல அவங்க அதைச் செயல்படுத்தாமல் கடந்துட்டா தற்கொலை செஞ்சுக்காமல் தப்பிக்கும் வாய்ப்பு உண்டு. அதனால தற்கொலை செய்துகிட்டவங்க ரெண்டு நாள் முன்னாடி சந்தோஷமா இருந்தாங்க, முந்தின நாள் சிரிச்சாங்கன்னு எல்லாம் சொல்றதுல அர்த்தமில்லை.”

 

தொடரும் விசாரணை குறித்த செய்திகளில் அவனைப் பற்றி வந்த செய்திகளை அவன் கவனமாகப் படித்தான். அவன் நடித்த தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றி எழுதியிருந்தார்கள். அவனுக்கும் நர்மதாவுக்கும் இடையே இருந்த நெருக்கத்தைப் பற்றி எழுதியிருந்தார்கள். இப்போது அவனுக்கு நடிக்கும் வாய்ப்புகள் இல்லை என்றும் எழுதியிருந்தார்கள். அவன் அவளிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்திருக்கலாம் என்றும், அவள் மறுத்து இருக்கலாம் என்றும், அதனால் அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டு இருக்கலாம் என்றும்…. அவன் அதற்கு மேல் படிக்கவில்லை. பழியை அவன் மேல் போட்டாலும் அதை நம்ப மக்கள் மனதைத் தயார் செய்து விட்டார்கள். மொத்தத்தில் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல் தான் அவனுடைய பரிதாபகரமான நிலைமை….

 

அவனுக்குத் தெரிந்து இதுவரைக்கும் யாரும் அவனைப் பின் தொடர்ந்து வரவில்லை. இப்போது வரை அவன் கண்காணிக்கப்படவும் இல்லை.  அவன் ஊரிலிருந்து கிளம்பும் போதே அலைபேசியில் இருந்துசிம்மைக் கழற்றி சாக்கடையில் வீசி விட்டு வந்திருக்கிறான். தெரிந்த யாரையுமே அவன் இது வரை அழைத்துப் பேசவில்லை. இனி பேசப்போவதுமில்லை. அவன் வங்கிக் கணக்கில் இரண்டு லட்சத்து சொச்ச ரூபாய் இருக்கிறது. அதை அவன் எடுப்பது அவன் இருப்பிடத்தை அவர்களுக்குக் காட்டிக் கொடுத்து விடும் என்பதால் அதையும் அவன் எடுக்கப் போவதில்லை. ரொக்கமாக அவனிடம் ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய் இருக்கின்றது. இந்த ஆசிரமத்தில் பத்தாயிரம் கட்டி விட்டால் ஒரு வருடத்திற்குத் தங்கிக் கொள்ளலாம். உணவு இலவசம் தான் என்பதால் அவனுக்கு வேறு செலவு எதுவுமில்லை.  

 

ஒரே பிரச்சினை என்ன என்றால், அவன் அசைவப்பிரியன். ஆசிரமத்திலோ சைவ உணவு  தான் சாப்பிடக் கிடைக்கிறது. அதுவும் புளி, காரம் எதுவுமில்லாமல் மிகவும் சப்பென்று தான் இருக்கிறது. இதையே தொடர்ந்து சாப்பிட்டால் நாக்கு செத்து விடும். ஆங்கில கூச்சல் இசையும், நடனமும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். இங்கோ பஜனை பாட வேண்டியிருக்கிறது. பக்தி சொற்பொழிவுகள் கேட்க வேண்டியிருக்கிறது. அத்தனையும் அவன் பொறுத்துக் கொண்டு அங்கே இருக்கிறான். காரணம் அவன் உயிரோடு இருக்க ஆசைப்படுகிறான்.

 

தமிழ்நாட்டுச் செய்திகளை மடிக்கணினியில் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு தொலைக்காட்சியில் ஒரு பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பேட்டி எடுக்கப்படும் நபரைப் பார்த்தவுடன் விமலின் இரத்தம் கொதித்தது. அந்த ஆள் தான் நர்மதாவின் கொலைக்குக் காரணமானவன்.

 

பார்ப்பவர்களுக்கு அவன் மிக அமைதியாகவும், நாகரிகமாகவும், உத்தமனாகவும் தெரிந்தான். கொலைகாரச் சுவடு அவனிடம் சிறிதும் தெரியவில்லை. யாருமே அவனிடம் நர்மதாவைப் பற்றிக் கேள்வி கூடக் கேட்டு விடமுடியாது. அப்படிக் கேட்பதே அபத்தமாக அனைவருக்கும் தோன்றும். அப்படியே கேட்டாலும், ’யாரிடம் போய், யாரைப் பற்றிக் கேட்கிறாய்என்று மக்கள் பாய்வார்கள். மிக வலிமையான, பாதுகாப்பான இடத்தில் இருக்கும் அந்த நபர் காமிராவைப் பார்த்துப் புன்னகைத்தான். விமலுக்கு அந்த நபர் அவனையே பார்த்துப் புன்னகைப்பது போலிருக்க,  இரத்தம் உறைந்தது.  


(தொடரும்)

என்.கணேசன்





Monday, April 20, 2026

யோகி 152


 ல்பனானந்தா ஷ்ரவன் மாலை வேலை நேரம் முடியும் வரை திரும்பி வராததைக் கவனித்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஷ்ரவன் பாண்டியனுக்கு இப்போது மிக நெருக்கமாக இருப்பதால் அவருடனே பேசிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள். ஷ்ரவன் அறைக்குத் திரும்பி வராததை சித்தானந்தாவும் அப்படியே எடுத்துக் கொண்டார்.

 

முக்தானந்தாவும் ஆரம்பத்தில் அப்படியே நினைத்தாலும் நேரம் செல்லச் செல்ல ஷ்ரவனுக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற பயம் அவரை ஆட்கொள்ள ஆரம்பித்தது. சத்சங்கம், தியான நேரம் முடிந்து இரவு உணவு நேரத்திலும் அவன் வராமல் போனது அவருடைய பயத்தை அதிகரித்தது.

 

இரவு உணவு உண்டு விட்டு வந்தவர் இருப்பு கொள்ளாமல் வெளியே நடக்க ஆரம்பித்தார். சில துறவிகள் இரவு நடைப்பயிற்சி செய்வதுண்டு. அதனால் அவர் நடப்பது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. பெண் துறவிகள் இரவு உணவுக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். அவர்களோடு கல்பனானந்தாவும் வருவது தெரிந்தது. அவளிடம் அவர் பேசி பல வருடங்களாகிறது. இதுவரை அதற்கு அவசியம் இருக்கவில்லை. ஆனால் இப்போதைக்கு அவருக்கு அடுத்தபடியாக அவனுக்கு ஆதரவாக இருப்பவள் அவள் தான். அதனால் அவளுக்குத் தெரிவிக்கத் தோன்றியது

 

கல்பனானந்தா தன்னை நோக்கி முக்தானந்தா வருவதைப் பார்த்து ஆச்சரியப் பட்டாள். மற்ற பெண் துறவிகளை முன்னால் போக விட்டு அவள் மெல்ல பின் தங்கினாள். முக்தானந்தா யாரிடமும் பேசாதவர் என்பதால் அவர் யாரிடம் பேசினாலும் அந்தத் தகவல் பாண்டியனை எட்டாமல் இருக்காது. அவர் இப்போது ஷ்ரவனின் அறையிலிருப்பவர் என்பதால் அவர் யாரிடமாவது பேசுவது இப்போது சந்தேகக்கண்ணோடு தான் பார்க்கப்படும் என்பதை அவர் அறிவார்.  

 

கல்பனானந்தா அருகில் வருகையில் கைக்குட்டையைக் கீழே நழுவ விட்ட அவர் அதைக் குனிந்து எடுக்கும் போது சொன்னார். “ஷ்ரவன் மதியம் போனவன் இன்னும் வரலை. பயமாய் இருக்கு.”

 

கல்பனானந்தா அவரைக் கடந்து போனாள். அவளுக்கு அவர் சொன்னது கேட்டிருக்கும் என்று அவர் நம்பினார். அவளால் எதாவது செய்ய முடியும் என்று நம்பினார். பலவீனமான நேரங்களில் நம்பிக்கையே பெரும் ஆசுவாசமாய் இருக்கிறது.

 

அறைக்கு அவர் வந்த போது சித்தானந்தா சொன்னார். “ஷ்ரவனானந்தாவை இன்னும் காணோம். இன்று அவர் மேனேஜருடனேயே தங்கி விட்டார் போல் இருக்கிறது.”

 

இருக்கலாம்என்று சொன்ன அவர் ஷ்ரவனுக்காகப் பிரார்த்திக்க ஆரம்பித்தார்.

 

கல்பனானந்தாவுக்கு முக்தானந்தா சொன்னது காதில் விழுந்தது. இப்போதெல்லாம் ஷ்ரவன் கூடுதலாக பாண்டியனிடம் நெருக்கமாக இருப்பதால் அவன் அங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்று மீண்டும் எண்ணினாள். வேறு விதமாக எண்ணக் காரணம் இருக்கவில்லை. ஷ்ரவன் மீது அவர்கள் சந்தேகப்படும் விதமாக யோகாலயத்தில் எதுவும் நடக்கவில்லை. ஆனால் முக்தானந்தாவிடம் அவளால் அதை விவரித்துச் சொல்ல முடியவில்லை.  அவருக்கு அவன் மீது இருந்த அன்பையும், அக்கறையையும் எண்ணி அவள் புன்னகைத்தாள்.

 

ஷ்ரவன் பாதாள சிறையில் அன்றிரவைக் கழித்தான். அவனுக்கு இரண்டு தடியர்கள் இரவு உணவையும் ஒரு தடிமனான புத்தகத்தையும் தந்து விட்டுப் போனார்கள். உணவு தர ஒருவன் போதும். ஆனாலும் இருவரை அவர்கள் அனுப்புவது அவர்களுடைய எச்சரிக்கை உணர்வை அவனுக்குத் தெரிவித்தது. ஒருவன் மட்டும் வந்தால் அவனை ஷ்ரவன் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள் என்பது புரிந்தது. அப்படி அவன் தாக்கினாலும் கூட அங்கிருந்து அவனால் தப்பிக்க முடியாது. பாண்டியனின் கட்டிடத்தைத் தாண்டும் முன் அவன் பிடிபட்டு விடுவது நிச்சயம். ஆனாலும், என்ன தான் அவன் பிரச்சினை இல்லாதவன் போல் தோன்றினாலும் கூட, அவர்கள் எச்சரிக்கையாய் தான் இருக்கிறார்கள். அவன் கேட்டபடி புத்தகத்தை அனுப்பியிருப்பது அவனுக்கான சிறப்பு அனுமதியாய் தான் தோன்றியது. என்ன புத்தகம் அது என்று பார்த்தான். ‘யோகி பிரம்மானந்தாவின் சொற்பொழிவுகள்’.

 

அவனை அவர்கள் பார்த்துக் கொண்டேயிருப்பார்கள் என்ற நினைவு வர அவன் அந்தப் புத்தகத்தை நெஞ்சோடு அணைத்து பிரார்த்திப்பது போல் காட்டிக் கொண்டான்.  இங்கிருந்து தப்பிக்கும் வரை அவர்களுக்கு அவன் மீது சிறிய சந்தேகமும் வந்துவிடக் கூடாது. தப்பிக்கும் வரை உயிரோடு இருக்க வேண்டுமே! அமைதியாக அந்த உணவைச் சாப்பிட்டு அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாய் பத்து நிமிடம் நடந்தான். பின் அமர்ந்து அந்தப் புத்தகத்தில் இரண்டு பக்கங்களைப் படித்து விட்டு அதைப் பற்றிச் சிந்திப்பது போல் அவன் கட்டிலில் கண்களை மூடி அமர்ந்து கொண்டான்.

 

ஆனால் அவன் மனம் உண்மையில் அவர்கள் உணவு கொண்டு வரும் வரை செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தது. அவன் மந்திர ஜபம் ஜபிக்க ஆரம்பித்தான். ஆபத்து காலத்தில் இது உன்னைக் காக்கும் என்று பரசுராமன் சொன்ன வார்த்தைகள் அவன் காதுகளில் ரீங்காரம் இட்டன. அதை அவன் ஆழ்மனம் நம்பவும் செய்தது. இது போன்ற சந்தர்ப்பங்களில் அந்த ஓநாயை அவன் மனக்காட்சியில் எதிர்பார்ப்பது வழக்கமாகி விட்டது.  ஆனால் அன்றும் அவன் எதிர்பார்த்தாலும் அந்த ஓநாய் அவன் மனக்காட்சியில் வரவில்லை. கஷ்ட காலத்தில் நீயும் வருவதில்லை பார்த்தாயா என்று புன்னகைத்துக் கொண்டே அவன் குற்றம் சாட்டினான். அப்போதும் ஓநாய் காட்சியளிக்கவில்லை.

 

அவனைக் கண்காணிப்பு காமிரா மூலமாகப் பார்த்துக் கொண்டேயிருந்த பாண்டியனுக்கு அவனுடைய புன்னகை ஆச்சரியப்படுத்தியது. இவன் பைத்தியமா? மாட்டிக் கொண்டு இப்படி பாதாள சிறையில் இருக்கும் போது யாருக்காவது புன்னகை வருமா?  இத்தனை வருடங்களில் எத்தனையோ பேரை அந்தப் பாதாள சிறையில் அடைத்து வைத்து அவர் கவனித்திருக்கிறார். அழுகை, வேதனை, கவலை, கதறல், புலம்பல், சோகம் என்ற வகை உணர்ச்சிகள் தான் வெளிப்படுமே ஒழிய இவனைப் போல் யாரும் புன்னகைத்தது கிடையாது.

 

ஓநாய் காட்சியளிக்காததை ஒரு குறையாக எண்ணி புகார் சொல்வது தவறு என்று ஷ்ரவனுக்குத் திடீரென்று புலப்பட்டது. நமக்கும் மேலான சக்தி நம்மைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், அவ்வப்போது அது காட்சியளிக்க வேண்டும் என்றும், அடிக்கடி, நானிருக்கிறேன், கவலைப்படாதே என்று தைரியப்படுத்த வேண்டுமென்றும் எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம் அல்லவா என்று தோன்றியது. அது காட்சியளித்தால் தான் அது உடன் இருக்கிறது என்று அர்த்தமா? அதன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை உண்மையானது என்றால், காட்சியளிக்கிறதோ, இல்லையோ அது உடனிருந்து காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது என்ற புரிதல், சிறிது கால அனுபவத்திலேயே ஒருவனுக்கு வந்து விட வேண்டாமா?

 

அந்த யோகி சொன்ன வார்த்தைகள் அவனுக்கு நினைவுக்கு வந்தன. “எல்லாம் இறைவன் சித்தப்படி நடக்கிறது. எதை நம் மூலம் செய்ய வேண்டுமோ, அதை அவனே செய்ய வைத்துக் கொள்கிறான். .... ஒருவனால் என்ன ஆக வேண்டும் என்று இறைவன் நினைக்கிறானோ அதற்கு வேண்டியதை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுப்பான்…. ஒரு வேலை இறைவனுடையது என்றிருக்கும் போது என்ன ஆகுமோ, எப்படி ஆகுமோ, எப்போது ஆகுமோ என்ற கவலைகள் வருவதில்லை. அதையெல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்று கவலையில்லாமல் இலகுவாகத் தன் பங்கைச் செய்து விட்டு மனிதன் அமைதியாய் இருக்க முடியும்…..”

 

அந்த யோகி சொன்னது போல் யோசித்தால், இந்த வேலையில் அவனை ஈடுபடுத்தியவனும் அந்த இறைவன், இப்போது இந்த ஆபத்தான நிலையில் சிக்க வைத்து இருப்பதும் இறைவன். யோகி சொன்னது போல், எல்லாம் அறிந்த இறைவனின் தீர்மானத்தில் குற்றம் காண அவன் யார்? இறைவன் தந்த அந்த வேலையை அவன் ஆத்மார்த்தமாய் சிறப்பாய் கவனமாய் செய்வதோடு அவன் பொறுப்பு முடிந்தது. இத்தனை தூரம் அழைத்து வந்த சக்தி இனியும் அவனை அழைத்துப் போகும். நடக்க வேண்டியதை அது பார்த்துக் கொள்ளூம்.

 

அவன் மனம் அமைதியடைந்து, மெள்ள மெள்ள அந்த மந்திர ஜபத்தில் லயிக்க ஆரம்பித்தது. சிறிது சிறிதாக மந்திரம் மட்டுமே அந்த இடமெல்லாம் வியாபிக்க ஆரம்பித்தது. அவன் மறைந்து போனான். இதற்கு முன்னும் கிட்டத்தட்ட இந்த லயிப்புக்கு அவன் வந்திருந்தாலும் அவனுடையநான்முற்றிலும் மறைந்து போனது இதுவே முதல் முறை. அப்படியே கட்டிலில் சாய்ந்தவனை ஆழமான நிம்மதியான உறக்கம் தழுவிக் கொண்டது.  

 

அவனைப் பார்த்துக் கொண்டேயிருந்த பாண்டியன் திகைத்தார். இத்தனை வருட அனுபவத்தில், அந்தப் பாதாள அறையில், தலையணை, படுக்கை இல்லாமல் இப்படி ஆழ்ந்த உறக்கம் உறங்க முடிந்தவனை அவர் பார்த்ததில்லை.  நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் அவன் கைதியா? உறங்க முடியாமல் விழித்துக் கொண்டு இருக்கும் அவர் கைதியா?


(தொடரும்)

என்.கணேசன்




Thursday, April 16, 2026

சதுரங்கம் 14


 நித்யாவுக்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து வாட்சப் தகவல் வந்தது. “தேங்க்ஸ் நித்யாகீதா


புன்னகையுடன் கீதாவின் எண்ணை அலைபேசியில் சேமித்து வைத்துக் கொண்ட அவளுக்கு, பின் தான் கீதா நன்றி தெரிவித்தது எதற்காக  இருக்கும் என்பது உறைத்தது. காதலைத் தெரிவிக்கச் சென்ற அண்ணன், தங்கை சொன்னதையுமா சேர்த்துச் சொல்வான்! “ஐயே என்னம்மா உன் மகன் மத்த விஷயத்துல எல்லாம் அபார அறிவாளியா இருந்தாலும் காதல் விஷயத்துல இப்படி தத்தியா இருக்கான்.”

 

நித்யாவுக்கு அம்மாவின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளைப் படிக்க முடியவில்லை. ஏதோ உடல் உபாதையால் கஷ்டப்படுவது போல் பானுமதி முகத்தில் வேதனை ரேகைகள் தோன்றி மறைந்தன. அம்மா நித்யாவை பல நேரங்களில் ஆச்சரியப்படுத்தியிருக்கிறாள். அம்மா இன்னது தான் நினைக்கிறாள் என்பதையோ, அம்மாவிடம் பேசும் விஷயங்களில் எந்த விஷயங்கள் அம்மாவைப் பாதிக்கின்றன என்பதையோ நித்யாவால் இன்னமும் யூகிக்க முடிவதில்லை. இப்போது மகனுடைய காதல் விஷயம் பற்றிப் பேசினால் அம்மாவின் முகம் ஏனிப்படி மாறுகிறது என்று அவளுக்குத் தெரியவில்லை.

 

வெல்கம் அண்ணிநித்யாஎன்று குறும்பாக கீதாவுக்கு மறுமொழி அனுப்பி விட்டு அம்மாவிடம் கேட்டாள். “நீ உன் மருமகள் பற்றி என்ன நினைக்கிறே?”

 

யார் என் மருமகள்?” பானுமதி கேட்டாள்.

 

உண்மையாவே உனக்குத் தெரியலையா,. இல்லை தெரியாத மாதிரி என் கிட்ட நீ நடிக்கிறியா?”

 

எனக்கு உங்க மாதிரி அறிவில்லைடி. அதனால தெரியாம தான் கேட்கறேன்.”

 

அண்ணா அவனோட பிறந்த நாளுக்கு ஒரு பொண்ணை வரச் சொல்லி இருந்தானே. அந்தப் பொண்ணு தான். பெயர் கீதா.”

 

அவ கிட்ட நான் எங்கேடி பேசினேன். நீ தான அவ கிட்ட பேசிகிட்டு இருந்தே?”

 

அது தான் உன் பிரச்சனையே. யார் கிட்டயும் நீ பேசறதில்லை. வீட்லயே கூட அதிகமா என் கிட்ட மட்டும் தான் பேசறே, அதுவும் நான் அடிக்கடி வம்பிழுக்கறதால தான் நீ என் கிட்டேயும் பேசறே.”

 

நல்ல வேளை வம்பிழுக்கிறாய்னு ஒத்துகிட்டே.”

 

அப்பறம் என்ன. வீடுன்னா கலகலன்னு இருக்கணும். கொஞ்சம் சுவாரசியமான பேச்சு, கொஞ்சம் சண்டை, கொஞ்சம் வம்பு, கொஞ்சம் சிரிப்புன்னு எல்லாம் கலந்து இருக்கணும்.”

 

அதுக்கெல்லாம் நீ ஒருத்தியே போதும்.”

 

அப்படி பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது. எத்தனை காலம் எல்லாப் பொறுப்பையும் நான் ஒருத்தியே சுமக்கிறது? நான் கல்யாணமாகி வேறொரு வீட்டுக்குப் போகப்போகிறவ. ஞாபகம் இருக்கட்டும்.”

 

பானுமதி மகளின் பேச்சை ரசித்து, பொய்க்கோபத்துடன் முறைத்து விட்டு சமையலறைக்குச் சென்றாள். அவள் போன பின் தான் கீதா பற்றிய அபிப்பிராயம் கேட்டதற்கு அம்மா பதிலளிக்கவில்லை என்ற நினைவு நித்யாவுக்கு வந்தது. நினைக்குமளவுக்கு அம்மா வெகுளி இல்லையோ? வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படித் தப்பிக்கிறாளோ? ஆனால் பின்னாலேயே தொடர்ந்து சமையலறைக்குச் சென்றால் அம்மா ஏதாவது வேலை கொடுத்து விடும் அபாயம் இருக்கிறது என்பதால் அங்கே போய் அதே கேள்வியைக் கேட்பதை நித்யா தவிர்த்தாள்.

 

யோசித்தால், உண்மையில் அம்மா ஒரு தீவு போலத் தான். குடும்பத்தினர் தவிர அவளுக்கென்று நெருக்கமானவர்கள் கிடையாது. தாய்வீட்டுப் பக்கம் எந்த உறவும் கிடையாது. அவளுடைய பெற்றோர் எப்போதோ காலமாகி விட்டார்கள். வேறு உறவினர்களும் அவளுக்குக் கிடையாது. அவளுக்குச் சினேகிதிகளும் கிடையாது. அக்கம் பக்கத்தில் கூட அவள் யாரிடமும் நாலைந்து வார்த்தைகளுக்கு மேல் பேசுவது கிடையாதுவீட்டிலேயே கூட நித்யா தான் அதிகமாக அவளுடன் பேசுபவள். ஞானமூர்த்தியுடனும், அர்ஜுனுடனும் பேசுவது அளவாகத் தான். அடுத்தபடியாக பானுமதியுடன் அதிகம் பேசுபவள் ராஜாராமின் மனைவி மைதிலி. அவளும் நேரில் வந்து அதிகமாகப் பேசுபவள் அல்ல என்றாலும் அலைபேசியில் அழைத்து நன்றாகப் பேசுவாள். ஓரகத்திகள் இருவரும் அதிகமாகப் பேசிக் கொள்வதும் மாமியார் யசோதாவைப் பற்றித் தான் என்பதையும் நித்யா கண்டுபிடித்திருக்கிறாள். இரண்டு மருமகள்களுக்கும் மாமியார் யசோதாவைப் பிடிக்காதுநித்யா புன்னகைத்தாள். குடும்ப அரசியல்… 

 

ராஜாராமின் அந்தரங்க அலைபேசி இசைத்தது. குடும்பத்தினரும், அவருக்கு மிக முக்கியமானவர்களும் மட்டுமே அந்த எண்ணில் அழைப்பார்கள். அந்த அலைபேசி இசைத்தால் மட்டுமே அவர் உடனடியாக எடுத்துப் பேசுவார். மற்ற பொது அலைபேசி இசைத்தால் அவர் மனமிருந்தால் பேசுவார். இல்லா விட்டால் பேசமாட்டார். அழைத்தது யார் என்றறியும் சிரமத்தையும் அவர் அதிகமாக எடுத்துக் கொள்வதில்லை. அந்த அலைபேசியை கையில் எடுக்கும் போது ஒட்டுமொத்தமாகப் பார்த்துக் கொள்வார். அவ்வளவு தான். தேவை இருப்பவர் மறுபடி அழைத்துப் பேச வேண்டும். அடுத்த முறையும், அழைத்துப் பேசுபவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவர் பதிலளிக்கக்கூடும். ஆனால் அதுவும் நிச்சயமில்லை. தமிழக அரசியலை, பின்னாலிருந்து இயக்கும் பிதாமகரிடம் காரியம் ஆக வேண்டியவர்கள் பலர் இருக்கிறார்கள். அனைவரையும் உடனுக்குடன் கவனிப்பது அவருக்கு முடிந்த காரியமல்ல.

 

அழைப்பது யாரென்று ராஜாராம் பார்த்தார். அர்ஜுன். அலைபேசியை எடுத்துப் பேசினார். “ஹலோ

 

சித்தப்பா எப்ப வந்தீங்க?”

 

ரெண்டு மணி நேரம் ஆச்சுடா. என்னடா அதிசயமா போன் செஞ்சிருக்கே. என்ன விஷயம்?”

 

சித்தப்பா. எங்க பத்திரிக்கைல தாத்தாவோட நூற்றாண்டு சம்பந்தமா சிறப்புக் கட்டுரை எழுதச் சொல்லியிருக்காங்க. முக்கியமா குடும்பத்தினர் எல்லாரையும் பேட்டி எடுத்து  அவர் சம்பந்தமான சுவாரசியமான விஷயங்களை எல்லாம் எடுத்து எழுதச் சொல்லியிருக்காங்க. உங்க கிட்டயும், பாட்டி கிட்டயும் பேட்டி எடுக்கணும். எப்ப வரட்டும்?”

 

அண்ணா கிட்ட பேட்டி எடுத்திட்டியாடா?”

 

இல்லை. இன்னைக்கு ஏழு மணிக்கு.”

 

ஞானமூர்த்தியின் நேரம் தவறாமை பிரசித்தமானது. அவரும் அதைக் கடைப்பிடிப்பார். அவரிடம் பழகுபவர்களிடமும் அதை எதிர்பார்ப்பார். சொன்ன நேரத்தில் வராதவர்களைப் பொறுத்துக் கொள்ள மாட்டார். எத்தனை பெரிய மனிதர்களானாலும், நெருங்கியவர்களானாலும் அவரிடம் அதற்கு விதிவிலக்கை எதிர்பார்க்க முடியாது. அதனால் அர்ஜுன் ஏழு மணிக்கு என்று நேரத்தோடு சொன்னதைக் கேட்டு ராஜாராம் புன்னகைத்தார்.

 

சரி. நாளைக்கு வர்றியாடா? மத்தியானம் சாப்பாட்டுக்கே வாயேன்.”

 

சரி சித்தப்பா. உங்க ஆக்ஸ்ஃபோர்டு பயணம் எல்லாம் எப்படி இருந்துச்சு சித்தப்பா

 

சிறப்பா இருந்ததுடா.”

 

பாட்டி சித்தி எல்லாம் சௌக்கியம் தானே சித்தப்பா?”

 

சௌக்கியம் தான்

 

சரி அப்ப நான் காலைல பதினோரு மணிக்கு வந்தா சரியா இருக்குமா சித்தப்பா?”

 

சரியாயிருக்கும் வாடா?”

 

சரி சித்தப்பா. நாளைக்கு பார்ப்போம்.”

 

மகன் அலைபேசியைக் கீழே வைத்தவுடன் யசோதா கேட்டாள். ”யாரு அர்ஜுனா?”

 

ஆமாம்மா

 

என்னவாம்?”

 

அப்பா பத்தின ஒரு சிறப்புக் கட்டுரையை அவன் கிட்ட எழுதச் சொல்லியிருக்காங்களாம். அதுக்கு உன் கிட்டயும், என் கிட்டயும் பேட்டி எடுக்கணுமாம். நாளைக்கு வரச் சொல்லியிருக்கேன்.”

 

யசோதா மௌனமாகத் தலையசைத்தபடி மகனைத் தீர்க்கமான பார்வை பார்த்தாள். ராஜாராமும் தாயைப் பார்த்தார். தாயும் பிள்ளையும் பார்வையிலேயே பேசிக் கொண்டது போல், அதைப் பார்த்துக் கொண்டிருந்த மைதிலிக்குத் தோன்றியது. இந்தக் குடும்பத்தில் பல ரகசியங்கள் இருப்பது போலவும், அது அவளுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது போலவும் அவளுக்குப் பல முறை தோன்றியிருக்கிறது. இருவருமே ரகசியங்களைக் காப்பதில் கில்லாடிகள். அழுத்தக்காரர்கள்.

 

தமிழகமே போற்றும் அவளுடைய மாமனார் வாசுதேவனின் மூத்த பிள்ளை என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கிற ஞானமூர்த்தி, உண்மையில் அவருடைய வளர்ப்புப் பிள்ளை என்ற உண்மையே அவளுக்குத் திருமணம் ஆகிப் பல ஆண்டுகள் கழித்துத் தான் தெரிய வந்தது. அதையும் கூட, அழுத்தக்காரியான மாமியார் மூத்த பிள்ளை வீட்டிலும் சிறிது காலம் இருந்து விட்டு வரலாமே என்று அவள் ராஜாராமைப் பல காலம் நச்சரித்த பின் தான் ராஜாராம் அந்த உண்மையைச் சொல்லி மனைவியின் வாயை அடைத்தார்.

 

அது போல வேறு ரகசியங்களும் இந்தக் குடும்பத்தில் இருப்பதாக அவளுக்குத் தோன்றியிருக்கிறது. ஆனால் யசோதா, ராஜாராம், ஞானமூர்த்தி மூவருமே அழுத்தக்காரர்கள். அவர்களிடமிருந்து யாரும் அந்த ரகசியங்களைத் தெரிந்து கொள்ள வழியில்லை…! 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, April 13, 2026

யோகி 151


டியர்கள் இறுக்கப் பிடித்துக் கொண்ட போதும், கண்ணன் கருப்புத் துணியால் கண்களைக் கட்டிய போதும் ஷ்ரவன் திமிறாமல் அமைதியாக இருந்தது பாண்டியனுக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக இது போன்ற சமயங்களில் எதிர்த்து எதையும் சாதிக்கப் போவதில்லை என்றாலும், முடிந்த அளவில் எதிர்ப்பை வெளிக்காட்டுவது தான் மனித இயல்பு. அவன் நிஜமாகவே ஒரு புதிர் தான் என்று பாண்டியனுக்குத் தோன்றியது.

 

ஷ்ரவன் அமைதியாகச் சொன்னான். “நான் உங்களைத் தப்பு சொல்ல மாட்டேன் ஜி. உங்கள் நிலைமை எனக்குப் புரிகிறது. நீங்கள் உங்கள் மந்திரவாதியை நம்புகிறீர்கள். அதனால் நான் சொல்வதை நம்ப உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது. பரவாயில்லை. உண்மை எப்படியானாலும் வெளிவந்து தானே ஆக வேண்டும். உங்கள் மந்திரவாதி இங்கே நேரில் வந்து, முறையாக அவர் சோதித்துப் பார்க்கும் போது நான் சொல்வது உண்மையென்று உங்களுக்கு விளங்கும். நானும் அதற்குள் என்னால் முடிந்த முயற்சிகளைச் செய்து பார்க்கிறேன். என்னிடம் இயல்பாக இருக்கும் அந்தச் சக்திகளை முழுவதுமாக உபயோகித்து உங்கள் எதிரியைப் பற்றி முழுவிவரங்களையும், அவன் எங்கே இருக்கிறான் என்பதையும் தெரிந்து கொண்டு உங்களுக்குத் தெரிவிக்க முயற்சிக்கறேன்.”

 

பாண்டியன் சொன்னார். “நல்லது”. எதிர்ப்பில்லாமல் அவனைப் பிடித்து அடைக்க முடியும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவன் சொல்வதைப் பார்த்தால் தேவானந்தகிரி கணிப்பில் எப்படியோ தவறு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தான் பாண்டியனுக்குத் தோன்றியது. இருந்தாலும் உண்மை வெளிப்படும் வரை அவன் வெளியே போக முடியாமல் இருப்பது தான் நல்லது.

 

பாண்டியன் தலையசைக்க ஷ்ரவனை கண்ணனும், அந்தத் தடியர்களும் அழைத்துக் கொண்டு போனார்கள்.  ஷ்ரவன் அவனை அவர்கள் வெளியே அழைத்துப் போனால் கல்பனானந்தா பார்க்கும் வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்த்தான். கண்களைக் கட்டி அழைத்துப் போவதால் அவன் பிடிபட்டு விட்டதை அவள் அறிந்து கொள்வாள் என்று எண்ணினான். ஆனால் அவர்கள் பாண்டியன் இருப்பிடத்தின் மாடிப்பகுதிக்கு அழைத்துப் போய் பின் பகுதியில் இறங்கி ஒரு பாதாள அறைக்கு அவனை அழைத்துப் போனார்கள். இடையில் ஏதோ ஒரு ரகசியக் கதவு இருக்கலாம் என்று ஷ்ரவன் யூகித்தான். இல்லா விட்டால் அவன் கண்களைக் கட்ட அவசியம் இருக்கவில்லை

 

பாதாள அறைக்குப் போனவுடன் அவனுடைய கண்கட்டை கண்ணன் அவிழ்த்து விட்டார். பாதாள அறை பெரிதாக இருந்தது. அங்கே ஒரு பக்கச் சுவரில் நிறைய இரும்புக் கொக்கிகள், வளையங்கள் இருந்தன. இரும்புச் சங்கிலிகள், கயிறுகள் எல்லாமும் இருந்தன. வழக்கமாய் அவர்கள் சிறைப்பிடிக்கும் ஆட்களை அங்கே தான் அடைத்து வைப்பார்கள் போல் இருந்தது. சுமார் பத்து ஆட்களை அவர்கள் அங்கே கட்டி வைக்கலாம். இரண்டு கட்டில்கள், இரண்டு மர பெஞ்சுகள், நான்கு பிளாஸ்டிக் நாற்காலிகள், இரண்டு மின்விசிறிகள் இருந்தன.  அறையின் வலது கோடியில் கழிப்பறை ஒன்று இருந்தது.

 

கண்ணன் ஷ்ரவனிடம் உணர்ச்சியே இல்லாத குரலில் சொன்னார். ”உன் மீது எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகம் இன்னும் உறுதிப்பட்டு விடவில்லை என்பதால் உன்னை நாங்கள் இங்கே கட்டிப் போட விரும்பவில்லை. இங்கே கண்காணிப்பு காமிராக்கள் இருக்கின்றன. நீ என்ன செய்தாலும் அது எங்களுக்குத் தெரியும். உன்னை நாங்கள் கண்காணித்துக் கொண்டே இருப்போம். ஏதாவது கலாட்டா செய்தாலோ, தப்பிக்க முயற்சி செய்தாலோ உடனடியாக வந்து உன்னைக் கட்டிப்போட்டு விடுவோம். அதனால் பிரச்சினை எதுவும் செய்யாமல் அமைதியாக இருப்பது உனக்குத் தான் நல்லது. நீ எங்கள் எதிரி அல்ல என்றால், நீ சொன்னது போல் உன் விசேஷ சக்தியால் எங்கள் எதிரியைக் கண்டுபிடித்துச் சொல். உடனடியாய் உன்னை விடுவிக்கிறோம். இல்லை, நீ தான் எங்கள் எதிரி என்று எங்களுக்கு உறுதியானால் நீ இனி வெளியுலகத்தைப் பார்க்கவே முடியாது.”

 

ஷ்ரவன் கண்ணனிடம் கேட்டான். “எனக்கு ஒரே ஒரு உதவி செய்ய முடியுமா?”

 

என்ன?”

 

நான் கண்டிப்பாக உங்கள் எதிரியைக் கண்டுபிடித்துக் கொடுப்பேன். அதற்கு அதிகபட்சமாய் எனக்கு இரண்டு நாள்களுக்கு மேல் தேவைப்படாது. ஆனால் என்னால் என்னேரமும் அதையே செய்து கொண்டு இருக்க முடியாது. இடையே நான் மனதைத் திருப்ப எனக்கு சில புத்தகங்கள் படிக்கத் தர முடியுமா? புத்தகங்கள் எதுவானாலும் சரி…”

 

கேட்டுச் சொல்கிறேன்.”

 

அவரும் அந்தத் தடியர்களும் அறை மூலையில் இருந்த படிகள் ஏறிப் போய் மேலே இருந்த கதவைத் தாளிடும் சத்தம் கேட்டது.

 

பிரம்மானந்தாவுக்கு அன்றைய காலைப் பொழுது இனிதாக இருக்கவில்லை. தியானத்தின் பயன்கள் குறித்த ஒரு சொற்பொழிவை அவர் ஒரு பெரிய அரங்கத்தில் நிகழ்த்தச் சென்றிருந்தார். இதற்கு அவருக்கு கல்பனானந்தாவின் குறிப்புகள் கூடத் தேவையிருக்கவில்லை. பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன. பேசிப் பேசிப் பலதும் அவருக்கு மனப்பாடமே ஆகியிருந்ததால் அவர் சீரான நீர்வீழ்ச்சி போல் அழகாகப் பேசியும் இருந்தார். சுமார் ஆயிரத்தைத் தாண்டிய எண்ணிக்கையில் ஆட்கள் வந்திருந்தார்கள். அவர் பேச்சை முடித்த போது கைத்தட்டலால் அந்த அரங்கமே அதிர்ந்தது. அவருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தாலும் அதை அவர் வெளியே காட்டவில்லை. இதெல்லாம் எனக்கு சர்வசகஜம் என்பது போல் அவர் காட்டிக் கொண்டார்.

 

அதன் பின் பார்வையாளர்கள் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டது. அப்போது தான் ஒரு பெண் அதிகப்பிரசங்கித்தனமாய், “உங்கள் குரு பத்மநாப நம்பூதிரி பற்றிச் சொல்லுங்களேன்என்று சொன்னாள். ’போடி லூசுஎன்று மனதில் வசை பாடி அலட்சியமாய் அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டு அவர் அந்தப் பக்கம் திரும்பிய போது அவரைக் காப்பாற்றுவது போல் அடுத்த கேள்வியை ஒரு முதியவர் கேட்டார். “தியானங்களில் சிறந்த தியானம் எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் யோகிஜி?”

 

பிரம்மானந்தா அதற்கு விரிவான பதில் சொல்ல ஆரம்பித்தார். சற்று முன் அவருக்குப் பிடிக்காத கேள்வி கேட்ட பெண் சிறிது நேரம் நின்று பார்த்து விட்டு உட்கார்ந்து விட்டாள். ஆனாலும் அப்போது அவர் இழந்த மன அமைதி யோகாலயம் திரும்பி வரும் வரைக்கும் அவருக்குத் திரும்பக் கிடைக்கவில்லை. இந்தக் கூட்டத்தில் யாராவது ஒரு கிறுக்கன் அல்லது கிறுக்கி அந்தப் பெண் கேட்டதை வீடியோ எடுத்து, “ஒரு கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் யோகி பிரம்மானந்தா திணறல்என்று யூட்யூபில் போட்டு விட வாய்ப்பு இருக்கிறது. அதிகப்பிரசங்கிகள் ஓரிருவர் அல்ல ஏராளம் பேர் இருக்கிறார்கள்.

 

அவர் பத்மநாப நம்பூதிரியை வெற்றிகரமாய் இருட்டடிப்பு செய்து பல வருடங்கள் முடிந்து விட்டன. பத்மநாப நம்பூதிரியும் சாகும் வரை அவரைத் தொந்தரவு செய்யவில்லை. யோகம், தியானம் இரண்டையும் அதிகபட்ச ஆட்களிடம் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர, தன் பெயரை எல்லா இடங்களிலும் ஸ்தாபிதம் செய்யும் உத்தேசம் பத்மநாப நம்பூதிரிக்கு இருக்கவில்லை.  அது பிரம்மானந்தாவுக்கு வசதியாகப் போய் விட்டது. அவர் கோரக்கரையும், பதஞ்சலியையும், சுந்தரமகாலிங்கத்தையும் தவிர வேறு யாரையும் தன் குருவாக இப்பொதெல்லாம் சொல்வதில்லை. அப்படி இருக்கையில் இது போன்ற அதிகப்பிரசங்கிகள் அவ்வப்போது கொசுக்களாய் வந்து தொந்தரவு செய்கிறார்கள். அவர் அத்தனை நன்றாகப் பேசியதைப் பற்றி எல்லாம் பேசாமல், அந்தப் பெண்ணின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் நழுவியதை மட்டுமே பிரதானப்படுத்தி இன்னொரு ஒரு கொசு அவரைக் கேலி, கிண்டல் செய்யும் வாய்ப்பு உண்டு

 

பாண்டியன் அவரைச் சந்திக்க வந்த போது அவர் முகம் கடுத்திருப்பதைக் கவனித்தார். எத்தனை தான் எதையும் பொருட்படுத்தாத மனிதராய் பிரம்மானந்தா வெளியிடங்களில் நடித்தாலும், யோகாலயம் வந்தவுடன் அதை எண்ணிக் குமுறுவது அடிக்கடி நடப்பது தான்.    

 

தேவானந்தகிரி அனுப்பிய செய்தியை பாண்டியன் பிரம்மானந்தாவிடம் சுருக்கமாகச் சொன்னார். பிரம்மானந்தா அதிர்ந்து போனார். கொசுக்கள் மறக்கப்பட்டார்கள். ஷ்ரவன் என்ற கொரில்லா பிரதானமானான். அவர் படபடப்புடன் கேட்டார். ”நீ என்ன நினைக்கிறாய் பாண்டியன்?”

 

என்ன நினைப்பது என்றே தெரியவில்லை யோகிஜி. அவன் சொல்வதும் சரியாகத் தான் தெரிகிறது. அவர் எச்சரித்ததையும் என்னால் அலட்சியப்படுத்த முடியவில்லை. அதனால் முன்னெச்சரிக்கையாக நான் அவனைச் சிறைப்படுத்தி விட்டேன்.” என்ற அவர், நடந்ததையெல்லாம் பிரம்மானந்தாவிடம் சொன்னார்.   பின் முடிவில் சொன்னார். “இரண்டு நாளில் எதிரியைக் கண்டுபிடித்துச் சொல்வதாய் அவன் சொல்லியிருக்கிறான். பார்ப்போம். அவனுக்கு உயிர் பிழைக்கும் யோகம் இருந்தால் சொல்லட்டும்.”

 

(தொடரும்)

என்.கணேசன்