என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, March 30, 2026

யோகி 149


ஷ்ரவன் தோட்ட வேலை செய்து கொண்டிருக்கையில் கண்ணன் வந்து அவனை பாண்டியன் வரச் சொன்னதாகத் தெரிவித்தார். அவர் அதைச் சொன்ன போது அவருடைய முகம் இறுகியிருந்தது. வழக்கமான நட்பு முகத்தில் தெரியவில்லை. பிடிபட்டு விட்டோம் என்பதை அந்தக் கணமே ஷ்ரவன் உணர்ந்தான். ஆபத்தில் மாட்டிக் கொள்வது அவனுக்குப் புதிதல்ல. அவனுடைய இதயத்துடிப்பு வேகம் எடுத்தது. ஆழமாக மூச்சு விட்டு அமைதிப்படுத்திக் கொண்டு அவன் புன்னகையுடன் அவருடன் கிளம்பினான். இப்போது அவனுக்கு வேண்டியதெல்லாம் யோசித்துச் செயல்பட முடிந்த அமைதி தான்...

 

செல்லும் போது கல்பனானந்தா எங்கே இருக்கிறாள் என்பதை ஷ்ரவன் பார்த்தான். அவள் தொலைவில் அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் அவளால் அவன் பிடிபட்டதை யூகிக்க முடியாது என்பதை அவன் புரிந்து வைத்திருந்தான். கண்ணனும், பாண்டியனின் ஆட்களும் அவனை அழைத்துக் கொண்டு போவது புதியதல்ல என்பதால் வழக்கம் போல் எதையோ கேட்கத் தான் அவனை அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்று அவள் நினைக்கத் தான் சாத்தியம் அதிகம்.

 

ஷ்ரவன் கண்ணனிடம் சொன்னான். “சுவாமிஜி. சுவாமினியிடம் சொல்லி விட்டு வரட்டுமா?”

 

கண்ணன் உணர்ச்சியே இல்லாத குரலில் சொன்னார். “தேவையில்லை. நான் சொல்லிக் கொள்கிறேன்.”

 

ஷ்ரவன் தலையசைத்து விட்டு நடந்தான். எதாவது சைகை காட்டி அவளிடம் அறிவிக்கலாம் என்றாலும் அது கண்ணனின் கூரிய பார்வைக்குத் தப்பாமல் போவது சாத்தியமில்லை. அது அவளையும் சேர்ந்து ஆபத்தில் மாட்டி விடுவது போலாகி விடும் என்பதால் அவன் அதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் அமைதியாக கண்ணனுடன் சென்றான்.   

 

பாண்டியன் ஷ்ரவன் அமைதியாக வருவதை ஜன்னல் வழியாகப் பார்த்தார். அவனைப் பார்க்கப் பார்க்க அவருக்குள் எரிமலை வெடித்தது. எவ்வளவு சுலபமாக எங்களை ஏமாற்றியிருக்கிறான் அவன்...

 

ஷ்ரவன் உள்ளே வந்து பழைய நட்புடன் கைகூப்பிவணக்கம் ஜிஎன்று சொல்ல பாண்டியன் பதில் வணக்கம் சொல்லாமல், புன்னகை கூடச் செய்யாமல் அவனைக் கூர்ந்து பார்த்தார்.

 

ஷ்ரவன் ஆச்சரியத்துடன் கேட்டான். “என்ன ஆச்சு ஜீ?”

 

பாண்டியன் ஏளனமாகச் சொன்னார். “நல்ல வேளை ஒன்றும் ஆகவில்லை. ஆவதற்குள்ளே எல்லாம் தெரிந்து விட்டது.”

 

ஷ்ரவன் திகைப்புடன் சொன்னான். “என்ன சொல்கிறீர்கள் ஜீ?”

 

பாண்டியன் சொன்னார். “உன் சாயம் வெளுத்து விட்டது.”

 

அவர் ஒருமையில் பேச ஆரம்பித்து விட்டதை ஷ்ரவன் கவனித்தான். அவன் அதிர்ச்சியைக் காட்டியபடி கேட்டான். “என்னைத் தேடி போலீஸ் வந்ததா?”

 

இப்போது அதிர்ந்தது பாண்டியனும், கண்ணனும் தான். பாண்டியன் கேட்டார். “போலீஸ் எதற்கு உன்னைத் தேடி வர வேண்டும்?”

 

அது என் எதிரிகள் திட்டமிட்டு என்னைச் சிக்க வைத்த சதிஜி. போலீஸ் சொல்வது எதுவும் உண்மையில்லை. தயவுசெய்து என்னை நம்புங்கள்.”

 

இது என்ன புதுக்கதை என்று பாண்டியனும் கண்ணனும் ஷ்ரவனைப் பார்த்தார்கள்.

 

இதில் போலீஸ் எங்கே வந்தது?”

 

நீங்கள் தானே சொன்னீர்கள் உன் சாயம் வெளுத்து விட்டது என்று. போலீஸ் சொல்லாமல் உங்களுக்கு எப்படித் தெரியும்?”

 

என்ன உளறுகிறாய்?’

 

நீங்கள் அந்த ஹைத்ராபாத் கேஸ் பற்றித் தானே பேசுகிறீர்கள் ஜீ?”

 

அந்தக் கேஸ் என்ன?”

 

அது போலீஸ் ஜோடித்த பொய் வழக்கு ஜீ. உண்மைக் குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் போன போது என்னைப் போல் ஒரு பாவப்பட்டவனை சிக்க வைப்பது அவர்களுக்குச் சுலபமாகப் போய் விட்டது.”

 

பாண்டியனுக்குத் தலை சுற்றுவது போலிருந்தது. நாம் எதையோ கேட்டால், இவன் எதையோ சொல்கிறான். என்ன தான் சொல்கிறான் என்று கேட்டுத் தெரிந்து கொள்ள அவர் நினைத்தாலும் அவனை அதுபற்றிப் பேச விட வேண்டாம் என்று பாண்டியனின் உள்ளுணர்வு அவரை எச்சரித்தது. அவன் குழப்பமான புதுக்கதை எதாவது சொல்லி அவரைத் திசை திருப்பி விடப் பார்ப்பதாக அவருக்குத் தோன்றியது.

 

பார். நான் சொன்னது அந்தக் கேஸ் பற்றி அல்ல.  நீ எங்களை ஏமாற்றிய கதையைச் சொன்னேன்.”

 

ஷ்ரவன் அநியாயமாய் குற்றம் சாட்டப்பட்ட கோபத்தோடு கேட்டான். “அபாண்டமாய் பழி சுமத்தாதீர்கள் ஜீ. நான் உங்களை ஏமாற்றினேனா? எப்போது? எப்படி?”

 

அவன் இதுவரை அப்படிக் கோபமாய் பேசியதில்லை. எப்போதும் பணிவும், மரியாதையும் மட்டுமே காட்டிவந்த அவன் நியாயவான் போல் கோபத்துடன் கேட்டது அவரை ஆச்சரியப்படுத்தியது.

 

நீ இங்கே துறவியாய் வந்தது, உன்னிடம் விசேஷ சக்திகள் இருப்பதாகக் கதைகள் சொன்னது இதையெல்லாம் தான் சொன்னேன்.”

 

ஷ்ரவன் கோபத்துடனேயே கேட்டான். “அதில் எனக்கென்ன லாபம்?”

 

அதை நீ தான் சொல்ல வேண்டும்

 

ஷ்ரவன் கோபம் குறையாமல் சொன்னான். “லாபம் இருந்தால் தானே நான் சொல்ல முடியும். புகார் சொல்லும் நீங்களே சொல்லுங்கள் எனக்கு என்ன லாபம்?”

 

குற்றம் செய்து மாட்டிக் கொண்டவர்களிடம் பயம், அதிர்ச்சி, உளறல், அழுகை, தப்பிக்க முயற்சி செய்தல் ஆகியவற்றைத் தான் பாண்டியன் இதுவரை பார்த்திருக்கிறார். கோபமும், எதிர்க்கேள்விகளும் அவர் இதுவரை பார்த்திராதது.

 

ஷ்ரவன் சொன்னான். “நான் துறவியாக வந்தேன். எல்லாப் பிரச்சினைகளில் இருந்தும் தப்பித்து யோகிஜி இருக்குமிடத்தில் மீதி வாழ்க்கையை அமைதியாகக் கழிக்கலாம் என்று வந்தேன்.  ஆனால் என்னிடம் இருக்கும் விசேஷ சக்திகளைப் பற்றி நானாக உங்களிடம் சொன்னது கிடையாது ஜீ. நன்றாக யோசித்துப் பாருங்கள். சுவாமி கண்ணனிடமும், சுவாமினி கல்பனானந்தாவிடமும் நான் என்னிடம் இருந்த விசேஷ சக்திகளைப் பற்றிச் சொன்னது கூட அவர்களாக என்னிடம் அதுபற்றிக் கேட்ட பிறகு தான். சுவாமிஜி கண்ணன் இங்கேயே இருக்கிறார். அவரிடம் கேளுங்கள். வேண்டுமானால் சுவாமினி கல்பனானந்தாவையும் அழைத்துக் கேட்டுப் பாருங்கள். என் அப்பா என்னை எச்சரித்து இருந்ததால் எனக்கு ஆரம்பத்திலிருந்தே அந்தச் சக்திகள் பிரச்சினையானவை என்ற சந்தேகம் எப்போதும் இருந்தது. அதனாலேயே பல காலம் நான் அதிலிருந்து விலகி இருந்தேன். ஆனால் ஒரு நண்பன் என்னை அதில் மறுபடியும் இழுத்து விட்டான். அதுவும் போலீஸ் கேஸ் ஆனதில் தான் முடிந்தது. வாழ்க்கையே வெறுத்துப் போய் யோகா, தியானம், துறவு என்று வாழ முடிவு செய்து தான் நான் இங்கே வந்தேன். இங்கேயும் யோகா வகுப்பு முதல் நிலை வகுப்புகளில் எனக்குப் பிரச்சினை இருக்கவில்லை. இரண்டாவது நிலை வகுப்புகளுக்கு வந்த போது தான் பிரச்சினை ஆரம்பமானது.  யோகாலயத்தில் உலாவிக் கொண்டிருக்கும் துஷ்ட சக்தி ஓநாய் ரூபத்தில் வந்து ஒரு காலை நேரத்தில் என்னைத் தாக்கியது. உடனே என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. உடம்பெல்லாம் மின்சாரம் தாக்கியது போல் இருந்தது. அப்போதே எச்சரிக்கை ஆகி நான் இங்கிருந்து போயிருக்க வேண்டும். சில நாட்கள் முன்பு பார்த்த ஓமன் படம் காரணமாக அந்த அனுபவம் வந்திருக்கிறது என்று நானே என்னைச் சமாதானம் செய்து கொண்டு விட்டது தான் என் தவறு.…”    

 

பாண்டியனும் கண்ணனும் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருவரும் ஒன்றும் பேசவில்லை. ஷ்ரவன் தொடர்ந்து சொன்னான். “எனக்கு சிறுவயதில் இருந்தே இந்த துஷ்டசக்திகள் கண்ணுக்குத் தெரிந்தாலும் ஓநாய் என் காட்சிக்கு வந்தது கிடையாது. பாம்பு, வவ்வால், ஆந்தை, கருப்புப் பூனை எல்லாம் தெரிந்திருக்கிறது. ஆனால் ஓநாய் இங்கு வரும் வரை தெரிந்தது கிடையாது. அதுவும் கண்களில் தீ கக்கும் ஓநாயை நான் கனவிலும் பார்த்தது கிடையாது. துஷ்டசக்திகளில் ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு நான் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் துறவு வாழ்க்கை வாழ வந்த போது என்னை அழைத்து அதில் கவனம் வைக்கவும், அதைப் பார்க்கும் சக்திகளை வளர்த்துக் கொள்ளவும் சொன்னது நீங்கள் தான் ஜீ. அதாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா, இல்லை அதுவும் உங்களுக்கு மறந்து விட்டதா? அப்போதும் கூட எனக்கு அதை வளர்த்துக் கொள்ள மனம் இருக்கவில்லை. கடைசியில் யோகிஜி அவர்களே சொன்ன பிறகு தான் நான் அதற்குச் சம்மதித்தேன். அப்படி நீங்களே என்னை அந்த துஷ்டசக்திகளின் பக்கம் தள்ளி விட்டு இப்போது அபாண்டமாய் பழி சுமத்துகிறீர்களே, என்ன நியாயம் ஜி? தயவு செய்து சொல்லுங்கள்.”


(தொடரும்)

என்.கணேசன்




Thursday, March 26, 2026

சதுரங்கம் 11

 

ர்ஜுனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பாட்டி யசோதா ஒரு நாள் கூட அவர்கள் வீட்டில் தங்கியதில்லை. அது அவனை நீண்ட காலமாகக் குழப்பியிருந்தது. இரண்டு பிள்ளைகளின் தாய் இளைய மகனுடனேயே தான் எப்போதும் இருப்பதும், தவறிக் கூட மூத்த மகன் வீட்டில் வந்து தங்காததும் அவனுக்கு இயல்பாகத் தெரியவில்லை. பாட்டி அபூர்வமாக அவர்கள் வீட்டிற்கு வந்தாலும் சில மணி நேரங்களில் கிளம்பி விடுவாள். ஒரு முறை சித்தப்பா, சித்தி இருவரும் சேர்ந்து வெளிநாட்டுப் பயணம் சென்றிருந்தார்கள்.  அப்போது கூட பாட்டி அவர்கள் வீட்டுக்கு வந்து தங்கவில்லை. ”எனக்கு இடம் மாறினால் தூக்கம் வருவதில்லைஎன்ற காரணம் சொல்லி இளைய மகன் வீட்டிலேயே தனியாக இருந்து விட்டாள். தினமும், அர்ஜுனோ, நித்யாவோ, ஞானமூர்த்தியோ தான் மாறி மாறி உணவு வகைகளை அங்கு கொண்டு போய் கொடுத்து விட்டு வந்து கொண்டிருந்தார்கள்.

 

அதற்குக் காரணம் அம்மா தான் என்று அர்ஜுன் சந்தேகப்பட்டிருந்தான். மாமியாருக்கும், மூத்த மருமகளுக்கும் இடையே எப்போதும் இணக்கமான உறவு இருந்ததில்லை. அவர்கள் இருவரும் ஒரு முறை கூட, நாலைந்து வார்த்தைகளுக்கு மேல் தங்களுக்குள் பேசிக் கொண்டு அவன் பார்த்ததில்லை. அதனால் தான் யசோதா மூத்த மகன் வீட்டுக்கு வந்து தங்குவதில்லையோ என்று அர்ஜுனுக்கு சந்தேகம் வந்திருந்தது. இப்போது தான் உண்மைக் காரணம் புரிகிறது.

 

ஆனால் ஞானமூர்த்தியும், ராஜாராமும் வெளிப்பார்வைக்காவது நெருங்கியே இருந்தார்கள். ஞானமூர்த்தி தன் பிறந்த நாள் அன்றும், வாசுதேவனின் நினைவு தினம் அன்றும் அவர்களது பூர்வீக வீட்டுக்குச் சென்று தாயின் ஆசி பெற்று வருவது வழக்கம். அப்படிச் செல்லும் போது அண்ணனும், தம்பியும் நிறைய நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். ராஜாராமும் தன் பிறந்த நாள் அன்று தவறாமல் வந்து அண்ணனிடம் ஆசி பெற்றுச் செல்வார். மற்றபடி அவரும் அண்ணன் வீட்டுக்கு வருவது மிகவும் குறைவு என்றாலும் சந்திக்கும் இடங்களில் இருவரும் நெருக்கமாகத் தான் தோன்றினார்கள்.   ஆனாலும் பின்னணியில் இருவரும் அந்த அளவு நெருக்கமில்லையோ என்று கூட இப்போது அர்ஜுனுக்குச் சந்தேகமாக இருக்கிறது. அந்த அளவு உண்மையிலேயே அண்ணனுடன் நெருக்கமாக இருந்திருந்தால் அரசியலில் அண்ணனுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை ராஜாராம் எடுத்திருக்க மாட்டார். ஆனாலும் அவரும் கூடவாசுதேவனுக்குப் பிறந்த ஒரே மகன் நான் தான். அண்ணன் ஞானமூர்த்தி வளர்ப்புப் பிள்ளை தான்என்று ஒருபோதும் வெளியாட்கள் யாரிடமும் சொன்னதில்லை. அதை யசோதாவும் கூட இதுவரை சொன்னதில்லை.

 

யோசிக்க யோசிக்க இவர்கள் உறவுகளில் வெளியே தெரியாத, சரியாகப் புரியாத நிறைய உள்விஷயங்கள் இருப்பதாக அர்ஜுனுக்குத் தோன்றியது. ஞானமூர்த்தி வெகுசீக்கிரம் தன் நெகிழ்வான மனநிலையிலிருந்து சீக்கிறம் மீண்டு பழைய அமைதிக்கு மாறினார். அவர் தன் அமைதியை இழப்பது மிக அபூர்வம். அந்த அபூர்வ தருணங்களில் கூட சீக்கிரமாக அமைதிக்குத் திரும்பி விடுவார். அது எப்போதுமே அர்ஜுனையும், நித்யாவையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது….

 

அர்ஜுன் அவரைப் பேட்டி எடுப்பதற்கான கேள்விகளைத் தயார்ப்படுத்திக் கொண்டு வரவில்லை என்பதால் தந்தையிடம் சொன்னான். “சரி அப்பா. நான் நாளைக்கு உங்களைப் பேட்டி எடுக்கட்டுமா? எத்தனை மணிக்கு?”

 

சாயங்காலத்துக்கு மேலே….. ஏழு மணிக்கு?” என்று அவரும் அந்த நேரம் அவனுக்கு சௌகரியப்படுமா என்பது போல் அவனைக் கேட்டார். அவன் சரியெனத் தலையசைத்தான்.

 

பானுமதி சமையலில் உதவி செய்ய நித்யாவை அழைக்க, நித்யா எழுந்து சென்றாள். அர்ஜுனும் தனதறைக்கு வந்தான். அறைக்கு வந்த பின் குடும்ப அரசியல் எல்லாம் பின்னணிக்குத் தள்ளப்பட்டு கீதா அவன் மனதை ஆட்கொள்ள ஆரம்பித்தாள்.  அவளைப் பற்றி யோசிக்க யோசிக்க, காதல் என்ற பெயர் சூட்டாமலேயே இப்போது வரை அவளைக் காதலித்துக் கொண்டு இருப்பது அவனுக்கு உறுதிப்பட்டது. அவளிடம் நாளை இது குறித்து மனம் விட்டுப் பேசி விட வேண்டும் என்று அவன் நினைத்தான்.

 

மறுநாள் அவன் எப்போதையும் விட அதிக நேரமாக கண்ணாடி முன் நின்று தன்னை அழகுபடுத்திக் கொண்டான். இதற்கு முன்பு வரை ஒரு நிமிடத்திற்கு அதிகமாக அவன் கண்ணாடி முன் நின்றதில்லை.

 

நித்யா வந்து அவன் கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள். “என்ன அலங்காரம் எல்லாம் பலமாயிருக்கு. நேற்று வரைக்கும் இப்படி நீ கண்ணாடி முன்னால நின்னதை நான் பார்க்கலயே

 

அர்ஜுன் சிறிது வெட்கப்பட்டான். நித்யா சொன்னாள். “ஐயோ என் அண்ணன் வெட்கமெல்லாம் படறான்.”

 

அர்ஜுன் அவள் காதைப் பிடித்து இழுத்தான். “அண்ணன் என்ன செய்யறான்னு பார்க்கறத தவிர உனக்கு வேற வேலையில்லையாடி. சரியான இம்சைடி நீ.”

 

அவன் கையை நன்றாக கிள்ளி விட்டு தன் காதை விடுவித்துக் கொண்ட நித்யா சொன்னாள். “நன்றி கெட்டவன் நீ. இந்த இம்சை இல்லாட்டி நீ ரொம்ப காலம் ஒத்தை ஆளாவே இருந்து கஷ்டப்பட்டிருப்பாய், ஞாபகம் வெச்சுக்கோ.”

 

அர்ஜுன் தங்கையை புன்னகை கலந்து முறைத்து விட்டுக் கிளம்பினான். அவனிடம் அவள் சொன்னாள். ”சாயங்காலம் வர்றப்ப பெரிய டெய்ரி மில்க் சாக்கலேட் வாங்கிட்டு வா. அண்ணி ஓக்கே சொன்னா அவள் சார்பாகவும் எனக்கு இன்னொரு சாக்கலேட் சேர்த்து வாங்கிட்டு வா. சரியா?”

 

அவள் கீதாவை அண்ணி என்று சொன்னது அவனை வெட்கமடைய வைத்தது. அவள் பக்கம் திரும்பாமல் அறையை விட்டு வெளியே வந்தான். அவள் அவன் முகத்தைப் பார்த்தால் அதற்கும் கிண்டல் செய்வாள்….

 

அண்ணன் திரும்பிப் பார்க்காமல் போன காரணம் நித்யாவைப் புன்னகைக்க வைத்தது. அண்ணனைப் பின் தொடர்ந்து வெளியே வந்தவள், ஹாலில் அமர்ந்து காய்கறி நறுக்கிக் கொண்டிருந்த பானுமதியிடம் சொன்னாள். “உன் மகன் இவ்வளவு அழகாய் ட்ரஸ் பண்ணிகிட்டு போறதை இது வரைக்கும் எப்பவாவது பார்த்திருக்கியா?”

 

பானுமதி சொன்னாள். “பொண்ணுன்னா கொஞ்சமாவது அடக்கம் வேணும்டி.”

 

அப்படின்னா ஆணுன்னா எப்படி வேணும்னாலும் இருந்துக்கலாமா? நம்ம வீட்டு நீதிபதி கிட்ட நியாயம் கேட்கலாமா?”

 

பானுமதியின் கட்டுப்பாட்டையும் மீறி புன்னகை பிறந்தது. ”உன் அண்ணன் சொன்ன மாதிரி நீ ஒரு சரியான இம்சை தான்டி.”

 

உண்மை எப்பவுமே கொஞ்சம் இம்சையா தான் இருக்கும்மா. என்ன பண்றது?”

 

பானுமதி மகளைச் செல்லமாய் முறைத்தாள். இத்தனை வயதானாலும் மகளைப் போல் யோசிக்கவோ, பேசவோ அவளுக்குத் தெரிவதில்லை. ஏதாவது சொன்னால், சொன்ன வேகத்திலேயே மறுக்க முடியாதபடி பதில் சொல்லும் வித்தை காலப்போக்கிலும் அவளுக்கு வந்து விடவில்லை. ஆனால் ஒரு விதத்தில் மகள் அவளைப் போல் இல்லாமல் இருப்பதில் அவளுக்கு சந்தோஷம் தான். கலகலப்பாய், புத்திசாலியாய், மகள் இருப்பதில் அவளுக்குப் பெருமை தான். அவளைப் போல் அவள் மகள் கஷ்டப்பட மாட்டாள். அது போதும் அவளுக்கு….

 

அந்த வீட்டில் கலகலப்பும் உயிர்ப்பும் இருப்பது அவள் மகளால் தான். அப்பா, அம்மா, அண்ணன் மூவரில் யாரையாவது வம்புக்கு இழுத்துப் பேசிக் கொண்டே இருப்பாள். மூவரில் ஞானமூர்த்தியை அவள் வம்புக்கு இழுப்பது குறைவு. நித்யாவிடம் அதிகமாய் சிக்கிக் கொள்வது அவளும், அர்ஜுனும் தான்.  நித்யா என்றைக்காவது வீட்டில் இல்லை என்றால் வீட்டில் பேரமைதி நிலவும். மூன்று பேரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். மூவருமே நித்யா வீட்டில் இல்லாததை ஒரு பெரிய குறையாய் உணர்வார்கள். நித்யா கல்லூரித் தோழிகளுடன் ஒரு முறை மூன்று நாட்கள் சுற்றுலா சென்றிருந்தாள்.  மூவருக்கும் அவள் எப்போது வருவாள் என்று ஆகிவிட்டது.  

 

பானுமதியிடம் அதிகமாய் சண்டை பிடிப்பவளும் அவள் தான். அதிகமாக அவள் சண்டை போடுவது அவளுடைய அண்ணனுக்காகத் தான்.  அண்ணனுக்கு அம்மா போதுமான அளவு அன்போ, முக்கியத்துவமோ தருவதில்லை என்பது தான் நித்யாவுடைய மறைமுகமான புகாராக இருந்திருக்கிறது. அதனாலேயே அம்மாவுக்குமாகச் சேர்த்து அண்ணன் மேல் தங்கை பாசத்தைப் பொழிகிறாளோ என்று கூட பானுமதிக்குத் தோன்றியிருக்கிறது. மகளிடம் எப்படி அவள் உண்மையைச் சொல்வாள்?




Monday, March 23, 2026

யோகி 148

 

ஷ்ரவனை அன்றிரவு பாண்டியன் இருப்பிடத்திற்கு வரும்படி கண்ணன் மாலையிலேயே சொல்லி விட்டுப் போனார். இதுவரையில் அவர்களுக்கே தெரிந்த விஷயங்களை வைத்துச் சொல்லி அவன் சமாளித்தாகி விட்டது. அவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதித்தாகி விட்டது. இன்று என்ன சொல்லப் போகிறான் என்பது அவனுக்கே நிச்சயமில்லை.

 

அன்றிரவு அங்கு அவன் போன போது டாக்டர் சுகுமாரனும் ஏற்கெனவே வந்திருந்தார். பாண்டியனோடு பேசிக் கொண்டிருந்த அவர் அவனை உற்சாகமாக வரவேற்றார். பாண்டியனும் அவனை நட்புடன் பார்த்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, முகூர்த்த நேரத்திற்கு சுமார் 20 நிமிடம் முன்பே ஷ்ரவன் கண்களை மூடி ஆரம்பித்தான்.

 

மனதார பிரார்த்தனை செய்து விட்டு ஷ்ரவன் மந்திர ஜபத்தைச் சொல்ல ஆரம்பித்து சிறிது நேரத்தில் மந்திரத்தோடு அவன் ஐக்கியமானான். அவன் முகத்தில் சாந்தி தெரிய ஆரம்பித்தது. அவர்கள் இருவரும் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அலாரம் அடித்து அவனை மந்திரத்தில் இருந்து பிரித்தது.

 

அவன் கண்களைத் திறக்கவில்லை. அவன் ஏதாவது வழி காட்டச் சொல்லி ஓநாயை எண்ணி வேண்டினான். ஆனால் அன்று ஓநாய் அவன் காட்சிக்குக் கிடைக்கவில்லை. இந்த மேலான சக்திகள் அவனைக் குழப்பின. எதிர்பாராத சமயங்களில் காணக் கிடைக்கின்றன. அவனுக்கு ஏதாவது வழிகாட்டுகின்றன. ஆனால் திடீரென்று வருவது போலவே திடீரென்று அவை வருவது நின்றும் போகின்றன. அதற்கான காரணங்கள் மனித அறிவுக்கு எட்டுவதில்லை.

 

என்ன சொல்வது என்று ஷ்ரவன் யோசித்தான். பாண்டியன் எப்போதும் அமர்ந்திருக்கும் அறையைத் தாண்டி ஒரு அறை இருக்கிறது. அந்த அறைக்கு பாண்டியனைத் தவிர யாரும் உள்ளே போவதில்லை. போவதென்றால் பாண்டியனின் மேசையில் ஏறி இறங்கித் தான் அந்த அறைக்கு ஒருவர் போக முடியும். அப்படி வழியை அடைத்து தான் பாண்டியனின் மேசை இருந்தது. மறுபக்கத்தில் இருப்பதால் பாண்டியன் அந்த அறைக்குத் தாராளமாகப் போக முடியும் என்றாலும், பாண்டியனே மற்றவர்கள் இருக்கையில் அதற்குள் போவதில்லை. அந்த அறைக்குள் என்ன இருக்கின்றது என்று ஷ்ரவனுக்குத் தெரியவில்லை. ஒரு முறை அவன் அவரைச் சந்திக்க அறைக்கு வந்த போது அவர் உள் அறையில் இருந்தார்.   அவருக்காக ஷ்ரவன் காத்திருந்த போது உள் அறையில் பீரோவைச் சாத்திப் பூட்டும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் பாண்டியன் வெளியே வந்தார். அது ஷ்ரவனுக்கு நினைவு வந்தது.

 

ஷ்ரவன் ஆபத்தான விளையாட்டு என்றாலும் உள்ளுணர்வால் உந்தப்பட்டு ஆரம்பித்தான். “ஓநாய் தெரிகிறது.... அது வாசலில் தான் இருக்கிறது....    அதன் கண்களில் தீ எரிகிறது.... அது என்னையே கோபத்தோடு பார்ப்பது போலிருக்கிறது...” ஷ்ரவன் கண்களை மூடிக் கொண்டே முகத்தைத் திருப்பிக் கொண்டான்..

 

இருவரும் படபடப்புடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் மெல்ல எழுந்து ஜன்னல் வழியே வெளியே பார்த்தார்.  ஓநாய் தெரியவில்லை. கையிலிருக்கும் தாயத்தைக் கழட்டினால் அது தெரிய வரலாம்.

 

சுகுமாரன் அவரிடம் சைகையால் கேட்டார். “ஓநாய் தெரிகிறதா?” பாண்டியன் இல்லையென்று தலையசைத்தார். இருவரும் ஷ்ரவனையே அதிக படபடப்புடன் பார்க்க ஆரம்பித்தார்கள்.

 

ஷ்ரவன் லேசான நடுக்கத்துடன் சொன்னான். “அது…. அது….. ஐயையோ அது பாய்ந்து உள்ளே வருகிறது…”

 

டாக்டர் சுகுமாரன் பாண்டியனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

 

ஷ்ரவன் தொடர்ந்து சொன்னான். “… உங்கள் மேசையின் மீது தாவுகிறதுஅப்படியே அங்கிருந்து குதித்து உங்கள் உள் அறைக்குப் போகிறது…. அங்கே பூட்டியிருக்கும் பீரோவுக்குள் ஊடுருவி உள்ளே போய் விட்டது…..”

 

பாண்டியனின் முகத்தில் திகைப்பு தெரிந்தது. அவருடைய உள் அறைக்கு ஷ்ரவன் வந்ததில்லை. டாக்டர் சுகுமாரனே கூட வந்ததில்லை. அதனால் அறைக்குள் என்ன இருக்கிறது என்பது கூட ஷ்ரவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

 

பாண்டியன் மெல்ல கேட்டார். “அப்புறம் என்ன தெரிகிறது?”

 

ஷ்ரவன் மிக உன்னிப்பாகப் பார்ப்பது போல் பார்த்து பின் ஏமாற்றத்தைக் காட்டிக் கொண்டு ஷ்ரவன் சொன்னான். “எல்லாம் மறைந்து விட்டது….. இப்போது எதுவுமே தெரியவில்லை…”

 

ஷ்ரவன் கண்விழித்தான். அவன் பார்வை சற்று திகிலோடு அந்த உள் அறை வாசலுக்குப் போனது. அதைக் கவனித்த சுகுமாரன் பாண்டியனின் உள் அறையைப் பீதியுடன் பார்த்தார். “உள்ளே போனதை வெளியே துரத்த என்ன வழி?”

 

ஷ்ரவன் மெல்ல சொன்னான். “அந்தக் காட்சி தெரிந்தபடியே ஆகியிருக்கும்கிறது நிச்சயமில்லை. அன்னைக்கு இந்த வாசல்ல குழி தோண்டற வேலையை ஓநாய் ஆரம்பிச்சதாய் நான் காட்சி பார்த்தேன். ஆனால் நேர்ல வந்தப்ப குழியெல்லாம் இருக்கலை. இந்தக் காட்சிகள்  வரப்போகிற நிகழ்வு எதையாவது சூட்சுமமாய் சொல்றதாய் இருக்கலாம்.”

 

பாண்டியன் யோசிக்க, சுகுமாரன் சொன்னார். “எதுக்கும் பீரோவுக்குள்ளே பார்த்துடறது நல்லது

 

ஷ்ரவன் பாண்டியனிடம் சொன்னான். “ஆமாம்ஜி. வேணும்னா போய்ப் பார்த்துக்கோங்க

 

பாண்டியன் மேசையில் ஏறி அமர்ந்து அந்தப் பக்கம் கால் வைத்துத் தாண்டினார். சுகுமாரன் சொன்னார். “நீங்கள் போய்ப் பார்த்தால் உங்களுக்கு என்ன தெரியப் போகுது? இது இருக்கே.” என்று தாயத்தைக் காட்டினார்.

 

ஷ்ரவன் அமைதியாய் இருந்தான். அவனையே அவர்கள் பார்க்கச் சொல்கிற வாய்ப்புக்காகத் தான் அவன் காத்திருந்தான். ஆனால் அதை அவர்களாகச் சொல்ல வேண்டும். அங்கு போய்ப் பார்க்க அவன் ஆர்வம் காட்டுவதாய் அவர்கள் நினைத்துவிடக்கூடாது. பாண்டியன் சற்றுத் தயங்கினார். தேவையில்லாமல் யாரையும் அவர் அந்த அறைக்குள் அனுமதிப்பதில்லை. யோசித்த போது ஒரு பீரோவை அவனுக்குத் திறந்து காண்பிப்பதால் எந்தப் பிரச்சினையும் வந்துவிடாது என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது.

 

பாண்டியன் ஷ்ரவனிடம் சொன்னார். “நீங்களே வந்து பாருங்களேன்.”

 

ஷ்ரவன் தயக்கத்தோடு மேசையைத் தாண்ட, டாக்டர் சுகுமாரனும் அப்படியே தாண்டினார். மூவரும் அந்த உள் அறைக்குள் நுழைந்தார்கள்.

 

அந்த உள் அறை பெரியதாக இருந்தது. அங்கு பெரிய காட்ரேஜ் பீரோக்கள் ஏழு இருந்தன. பாண்டியன் ஷ்ரவனிடம் கேட்டார். “எந்த பீரோவுக்குள்ளே போனதைப் பார்த்தீர்கள்?”

 

ஷ்ரவன் சும்மா ஒரு பீரோவைக் காட்டினான். “இதற்குள்ளே போனதைத் தான் நான் பார்த்தேன்ஜி

 

பாண்டியன் ஒரு பீரோவின் மேலே உள்ளே தள்ளி மறைவாய் வைத்திருந்த சாவிக் கொத்தை எடுத்து ஷ்ரவன் காட்டிய பீரோவைத் திறந்தார். உள்ளே எல்லா அடுக்குகளிலும் வீடு மற்றும் நிலப்பத்திரங்கள் போல் தெரிந்தவை அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

 

பாண்டியனும் சுகுமாரனும் அவனையே பார்ப்பதைக் கவனித்த ஷ்ரவன் சற்று நெருங்கிப் போய் பார்த்தான். அவை சொத்துப் பத்திரங்கள் தான் என்பது அவனுக்கு உறுதியானது. ஷ்ரவன் இத்தனை பத்திரங்களா என்று திகைத்தாலும் அதை முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. மற்ற பீரோக்களிலும் இப்படிப் பத்திரங்களே இருக்குமா, வேறு எதாவது இருக்குமா?

 

உள்ளே ஓநாய் தெரியவில்லைஎன்றான்.  உண்மையில் ஓநாய் உள்ளே இருக்கக்கூடிய அளவு காலி இடம் பீரோவில் இல்லை.  

 

பாண்டியன் அவனிடம் கேட்டார். “அப்படியானால் நீங்கள் பார்த்த காட்சிக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும் ஷ்ரவனானந்தா?”

 

ஷ்ரவன் சொன்னான். “இந்த பீரோவில் இருப்பவை சம்பந்தமான விஷயங்களில் எதாவது பிரச்சினை ஏற்படுத்த அது முயற்சி செய்யலாம் என்று நான் நினைக்கிறேன்…”

 

பாண்டியன் யோசனையுடன் தலையசைத்தார். அதற்கு மேல் அவர் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அந்த அறையிலிருந்து மூவரும் வெளியே வந்தார்கள்.

 

தேவானந்தகிரி அனுப்பிய ஆள் யோகாலயத்துக்கு மதியம் வந்து சேர்ந்தான். அவனுக்குத் திரும்பிச் செல்ல மாலையில் விமானத்தில் டிக்கட் முன்பதிவு ஆகியிருந்தது. அதனால் அவனுக்கு அங்கு அதிக நேரம் தங்கும் உத்தேசமில்லை. அப்படித் தங்க அவனுக்குக் காரணமும் இருக்கவில்லை. அவன் தெரிவிக்க வேண்டிய தகவல் சுருக்கமானது. அதற்கு ஐந்து நிமிடத்திற்கு மேல் அவசியமில்லை.

 

அவன் மனப்பாடம் செய்து வந்ததை பாண்டியனிடம் ஒப்பித்தான். “எதிரி உங்கள் யோகாலயத்தில் தான் இப்போது இருப்பதாக சுவாமிஜி சொல்லி அனுப்பியிருக்கிறார். அவர் வைத்துப் பார்த்த பிரஷ்னம் மூலம் அதை அறிந்திருக்கிறார். விசேஷ சக்திகள் உள்ளதாகச் சொல்லிக் கொண்டு உங்களிடம் வந்திருக்கும் துறவியே உங்கள் எதிரியாக இருக்க வேண்டும் என்று அவர் நம்புகிறார்.  இதை போனில் தெரிவிப்பது கூட ஆபத்து என்று  அவர் எண்ணியதால் தான், இதை நேரடியாகத் தெரிவிக்க என்னை இங்கே அனுப்பியிருக்கிறார்.”

 

பாண்டியன் தலையில் இடி விழுந்ததைப் போல் உணர்ந்தார்.

 

(தொடரும்)

என்.கணேசன்




Thursday, March 19, 2026

சதுரங்கம் 10


 ஞானமூர்த்தி தன் முன் வந்தமர்ந்த மகனைப் பெருமிதத்துடன் பார்த்தபடி சொன்னார். “ரொம்ப நல்லா எழுதியிருக்கே அர்ஜுன். சமீப காலமாய் சமூகத்தில் பெருகி வரும் மோசடிகளையும், குற்றங்களையும் விரிவாய் எழுதி, அதற்கான காரணங்கள் என்னென்னன்னு தெளிவாய் விவரிச்சிருக்கே. மக்களிடம் இருக்கும் பேராசை, வேகமாய் ஆதாயங்களைப் பெறத் துடிக்கும் அவசரம், நாட்டு நடப்புகளைக் கவனிக்கத் தவறுவது, மோசடிக்கான வாய்ப்புகள் பற்றிய அடிப்படை அறிவு இல்லாததுன்னு வரிசையாய் பட்டியல் போட்டு ரொம்ப அருமையாய்ச் சொல்லியிருக்கே. அதிலிருந்து எப்படி தற்காத்துக்கறதுன்னும் அதே ஆழத்துல சொல்லியிருக்கிறது விசேஷம். நிறைய பேர் பிரச்சினை என்னன்னு அழகாய் சுட்டிக்காட்டிடுவாங்க. ஆனால் தீர்வு என்னன்னு தெளிவாய்ச் சொல்ல மாட்டாங்க. அது பொத்தாம் பொதுவாய் இருக்கும்.  நீ அந்தத் தவறைச் செய்யல.”

 

அவர் மகனுக்காகக் கூட பொய்யான இதமளிக்கும் வார்த்தைகளைச் சொல்லக்கூடியவர் அல்ல என்பதால் அவர் சொன்னது அர்ஜுனுக்கு பரமதிருப்தியாக இருந்தது. அவர் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே நித்யாவும் அங்கு வந்தமர்ந்து கொண்டாள். அவள் முகத்திலும் பெருமிதம் தெரிந்தது.

 

பானுமதி சற்று தள்ளியிருந்தாலும் அவளும் கணவர் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள். நித்யா அங்கு சென்று அமர்ந்ததையும், அவள் முகத்தில் பெருமிதம் தெரிந்ததையும் கூட அவள் கவனித்தாள்.   சற்று முன் அண்ணனிடம்நீ அம்மா மாதிரியே தனியொரு கூட்டுக்குள்ளே இருக்கிறாய். அது தப்புண்ணாஎன்று தனிமையில் சுட்டிக் காட்டியிருந்தாலும் நித்யா வேறு யார் முன்பும் என்றைக்கும் அண்ணனை விட்டுக் கொடுத்ததில்லை. கணவர், மகன், மகள் மூவரும் நெருக்கமாக அமர்ந்து இருக்கும் அந்தக் காட்சியைப் பார்க்கையில் ஒரு ஆதர்ச குடும்பமாகவே பானுமதிக்குத் தெரிந்தது. அவள் தான் ஒரு அபசுரமாய், அன்னியமாய் அதில் ஒட்ட முடியாதவளாக, தள்ளியே இருக்கிறாள்...

 

அர்ஜுன் தந்தையிடம் கேட்டான். “இதுல எதையாவது சேர்த்திருக்கலாம்னு தோணுதாப்பா?”

 

ஞானமூர்த்தி ஒரு கணம் யோசித்து விட்டுச் சொன்னார். “பெரிய அளவுல மக்கள் ஏமாறுவதற்குக் காரணம் மற்ற ஏமாளிகளும் தான். இத்தனை பேர் இதைச் செய்யறாங்களே, ஆதரிக்கிறாங்களே, காரணமில்லாமலா அப்படிச் செய்வாங்கன்னு நினைக்கிற மனோபாவம் மக்களுக்கு அதிகம் உண்டு.  உதாரணத்துக்கு, அதிக வட்டி தர்றோம், பெரிய அளவுல ஆதாயம் தர்றோம்னு ஏமாத்தறதையே எடுத்துக்கோ. ஆரம்பத்துல அதுல முதலீடு செய்யாதவன் கூட கொஞ்ச காலம் கழிச்சு, தன்னைச் சுற்றிலும் நிறைய பேர் அதுல முதலீடு செய்யறதையும், அவங்க அதிக வட்டி வாங்கி அனுபவிக்கறதையும் பார்த்துட்டு மனம் மாறிடறான். தானும் அதில் முதலீடு செய்ய ஆரம்பிச்சடறான்.  ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ அதிக வட்டி கொடுத்துட்டு, நிறைய பேர் கிட்ட பணம் வாங்கிட்டு, திடீர்னு ஒரு நாள் தலைமறைவாகிடறது காலம் காலமாய் நடந்துட்டு தான் வருது. ஆனாலும் திரும்பத் திரும்ப மக்கள் ஏமாறுவதற்கு அவங்களோட ஆட்டுமந்தை புத்தியும் கூட ஒரு காரணம் தான்.  சீட்டுக் கம்பெனி உதாரணத்தை நீ சொல்லியிருக்கிற இடத்தில் இந்தக் காரணத்தையும் கூட சேர்த்திருக்கலாம்…”

 

நித்யாவும் அர்ஜுனும் தந்தையை வியப்புடன் பார்த்தார்கள். எதையும் வேகமாகவும் ஆழமாகவும் அலச முடிந்த அவருடைய பேரறிவு அவர்களை இப்படி அடிக்கடி வியப்பில் ஆழ்த்தும். அவர்கள் அவரை அப்படிப் பார்ப்பதையும் பானுமதி கவனித்தாள். தந்தையையாவது அவர்கள் அப்படிப் பார்க்க முடிகிறதே என்று அவள் நினைத்தாள். அவளைப் போல் அவளுடைய குழந்தைகள் முட்டாள்களாக இல்லை. அது அவளுக்குத் திருப்தியாக இருந்தது. அவளைப் போல் அவர்கள் ஆக வேண்டாம்.   

 

அர்ஜுன் சொன்னான். “அப்பா, தாத்தாவோட நூற்றாண்டு விழாவை ஒட்டி, அவரைப் பற்றி ஒரு சிறப்புக் கட்டுரை எங்க பத்திரிக்கைல எழுத தேவசகாயம் சார் சொல்லியிருக்கார். குடும்பத்து ஆளுங்க எல்லார் கிட்டயும் பேட்டி எடுத்தும் அதுல சேர்க்கச் சொல்லியிருக்கார். அதனால பேட்டி எடுக்கறத உங்க கிட்ட இருந்து ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அப்புறம் பாட்டி, சித்தப்பா, அம்மா கிட்ட பேட்டி எடுக்கலாம்னு இருக்கேன்…”

 

சொல்லி விட்டு அவன் தள்ளியிருந்த தாயைப் பார்த்தான். பானுமதி மெள்ள சமையலறைப் பக்கம் நகர்ந்தாள். நித்யா அண்ணன் அம்மாவைப் பார்த்ததையும், அம்மா சமையலறைக்குச் சென்று விட்டதையும் கவனித்தாள்.

 

தாத்தா இருக்கறப்ப சித்தப்பாக்குக் கல்யாணம் ஆகியிருந்துச்சாப்பா. ஆகியிருந்தா சித்தியையும் பேட்டி எடுக்கலாம்…” அர்ஜுன் சொன்னான்.

 

ஞானமூர்த்தி சொன்னார். “இல்லை. அவர் இறந்தப்பறம் ராஜாராம் தான் கல்யாணம் செய்துகிட்டான்.”

 

சரி. அப்படின்னா நீங்க நாலு பேர். உங்க கிட்டே எப்போ பேட்டியை ஆரம்பிக்கலாம்?”

 

எப்ப வேணும்னாலும் ஆரம்பிக்கலாம். அவரைப் பற்றிச் சொல்ல நான் தயார் செய்துக்கணும்னே இல்லை. மனசெல்லாம் அவர் இப்பவும் நிறைஞ்சு இருக்கார். அவர் சம்பந்தமான எதையும் என் வாழ்க்கைல நான் நினைவுபடுத்திக்கணும்னே இல்லை. மறந்தாத் தானே நினைவுபடுத்திக்கணும். என்னால எப்பவும் அவர் சம்பந்தமான எதையும் மறக்க முடியாது. ரொம்ப பெரிய மனுஷன்டா அவர். அவர் மாதிரி இன்னொரு ஆளை யாருமே பார்க்க முடியாதுடா.” சொல்லும் போதே ஞானமூர்த்தியின் குரல் தழுதழுத்தது.

 

அர்ஜுனுக்கு தந்தையைச் சீண்டிப் பார்க்கத் தோன்றியது. அவன் அவரிடம் புன்னகையுடன் கிண்டலாகச் சொன்னான். “ஆமா எல்லாருக்கும் அவங்கவங்க அப்பா உசத்தி தான். அவங்களால அவரை மாதிரி இன்னொரு ஆளைப் பார்க்க முடியாது தான்.” 

 

நித்யாவும் புன்னகைத்தாள். ஞானமூர்த்தியும் பிள்ளைகளுடன் சேர்ந்து கொண்டு புன்னகைத்தாலும் அவர் கண்கள் லேசாக ஈரமாகின. ஒரு கணம் மகனையே யோசனையுடன் பார்த்து விட்டுச் சொன்னார்.

 

உனக்கு ஒரு உண்மை தெரியுமா அர்ஜுன். உண்மையில் நான் அவர் பெற்ற மகன் இல்லை.”

 

அர்ஜுன், நித்யா இருவரும் அதிர்ச்சியுடன் தந்தையைப் பார்த்தார்கள்.

 

ஞானமூர்த்தி சொன்னார். “இப்ப நான் சொல்றது நமக்குள்ளேயே இருக்கட்டும். என்னைப் பெற்றவங்க அவரோட ஊரைச் சேர்ந்தவங்க. ஏதோ தூரத்து உறவும் கூட. என் ஐந்தாவது வயசுல நான் என்னைப் பெற்றவங்களை ஒரு விபத்துல இழந்துட்டேன். அனாதையா நிர்க்கதியா நின்ன என்னை அவர் கூட்டிகிட்டு வந்துட்டார். அனாதைப் பையனாவே அவர் என்னை வளர்த்து இருக்கலாம். வீட்டுல சில எடுபிடி வேலைகள் செய்ய வெச்சிருக்கலாம். அவருக்கு ராஜாராம் அப்ப தான் பிறந்திருந்தான். அதனால குழந்தைகள் இல்லைங்கற நிலைமையும் இல்லை. ஆனா அந்தப் பெரிய மனுஷன் என்னைத் தத்து எடுத்துகிட்டார்…..” சொல்லச் சொல்ல அவர் குரல் உடைந்தது.

 

ஒரு நிமிடம் மௌனமாக இருந்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஞானமூர்த்தி தொடர்ந்து சொன்னார். அந்த நாள்ல இருந்து அவர் நான் அவரோட தத்துப் பிள்ளைன்னு யார் கிட்டயும் சொன்னது கூட இல்லை. விஷயம் தெரிஞ்ச ஒருசிலரைக் கூட அதுபற்றி வெளியில் சொல்ல அவர் அனுமதிச்சதில்லை. அவரைப் பொருத்த வரைக்கும் அவருக்கு நான் தான் அவரோட மூத்த பிள்ளை. ராஜாராம் அவரோட ரெண்டாவது பிள்ளை. அப்படித் தான் அவர் நினைச்சார். அப்படித்தான் அவர் மத்தவங்க கிட்டயும் சொன்னார். அதனால உலகமும் எங்களை அப்படி தான் நினைச்சுகிட்டு இருக்கு. அவர் இறந்த பிறகும் அவருக்கு கொள்ளி கூட நான் தான் வெச்சேன்…. அப்படி அன்பு காட்டி வளர்க்க நான் அவருக்கு என்ன செஞ்சேன்னு எனக்குத் தெரியலை. எனக்கு என்னைப் பெத்தவங்க முகம் கூட ஞாபகம் இல்லை. என் அப்பா அவர் தான்….”

 

அவரையும் மீறி அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. அர்ஜுனும், நித்யாவும் கூடக் கண்கலங்கினார்கள். அர்ஜுனுக்கு இது வரை புரியாத சில விஷயங்கள் இப்போது தான் மெள்ளப் புரிய ஆரம்பித்தன.


 (தொடரும்)

என்.கணேசன்