சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 1, 2023

சாணக்கியன் 59

 

லெக்ஸாண்டர் மகதத்தை நோக்கிச் செல்லாமல் தாயகம் செல்லத் தீர்மானித்து விட்டான் என்ற தகவல் வந்த பிறகு தாமதிக்காமல் சாணக்கியர் தீவிரமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக சாரங்கராவ் தலைமையில் சில மாணவர்கள் வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தார்கள். தட்சசீலத்தில் இருக்கும் மாணவர்கள் சந்திரகுப்தன் தலைமையில் சில நாட்களில் நள்ளிரவு நேரங்களில் சுறுசுறுப்பாக ரகசிய வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.  

அப்படி ஒரு நாள் சந்திரகுப்தனும் மாணவர்களும் தங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு நடுநிசி கழிந்து திரும்பி வந்த போது சாணக்கியர் தனது அறையில் இருக்கவில்லை. அது சந்திரகுப்தனுக்கு ஒரு நெருடலான சந்தேகத்தை ஏற்படுத்தியது. இரண்டு மூன்று நாட்களாக காந்தார ஒற்றர்கள் அவர்களுடைய கல்விக்கூடத்தின் அருகே அதிகமாக நடமாடுவதை அவன் கவனித்திருந்தான். அவனும் மற்ற மாணவர்களும் கவனித்து விட்டார்கள் என்று அறிந்து கொண்டதாலோ என்னவோ இன்று யாரையும் காணவில்லை. அதனால் தான் சந்திரகுப்தனும் மற்ற மாணவர்களும் இன்று வெளியே சென்று வேலைகளை முடித்துக் கொண்டு வந்தார்கள். இப்போது சாணக்கியர் அறையில் இல்லாமல் இருப்பதற்கும் அந்த ஒற்றர்களுக்கும் எதாவது சம்பந்தம் இருக்குமா என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது.

தலைமை ஆசிரியரிடம் விசாரிக்கலாம் என்றால் அவர் உறங்கிக் கொண்டிருந்தார்.  அவனுடன் திரும்பி வந்த மற்ற மாணவர்களும் உறங்கச் சென்று விட்டார்கள். ஆனால் அவனால் உறங்க முடியவில்லை. ஆச்சாரியருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருக்கலாமோ என்ற அச்சம் அவனை வதைத்தது.  அவன் வாசலுக்குச் சென்று அங்கே நின்று கொண்டு வலது பக்கம் போய்ப் பார்க்கலாமா, இடது பக்கம் போய்ப் பார்க்கலாமா என்று யோசித்த போது போர்வையைப் போர்த்திக் கொண்டு தூரத்தில் ஒரு உருவம் வந்து கொண்டிருப்பது நிலவொளியில் தெரிந்தது. முகம் தெரியாவிட்டாலும் அந்த நடை ஆச்சாரியருடையது தான்.  அவன் மனம் நிம்மதியடைந்தது.


ஏன் வெளியே நிற்கிறாய் சந்திரகுப்தா? ஏதாவது பிரச்சினையா?” சாணக்கியர் வாசலை நெருங்கியவுடன் கேட்டார்.

 

இல்லை ஆச்சாரியரே? உங்களைக் காணாததால் யோசனையுடன் பார்த்துக் கொண்டு நிற்கிறேன்என்றான் சந்திரகுப்தன்.

 

அவன் அக்கறையில் மனம் நெகிழ்ந்தாலும் சாணக்கியர் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. இருவரும் உள்ளே சென்றார்கள். அவர் அறையில் நுழைந்தவுடன் சந்திரகுப்தன் கேட்டான். “இவ்வேளையில் எங்கே சென்றிருந்தீர்கள் ஆச்சாரியரே

 

ஆம்பி குமாரனின் ஒற்றன் ஒருவன் நமக்கு வேண்டியவன். அவனிடம் அலெக்ஸாண்டரின் சமீபத்திய தகவல்கள் பெறப் போயிருந்தேன். இப்போது நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது சந்திரகுப்தா. மகதத்தை நோக்கிப் படையெடுப்பதைக் கைவிட்டுத் தாயகம் செல்லத் தீர்மானித்தாலும், அலெக்ஸாண்டர் வந்த வழியே திரும்பிப் போகாமல் வேறு வழியில் திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறான். அப்படிப் போகையிலும் போகிற பகுதியை எல்லாம் வென்று தன் சாம்ராஜ்ஜியத்தை இணைத்துக் கொண்டே போகிறான்.”  

 

சந்திரகுப்தன் புன்னகைத்தான். “அவன் இயல்பு அவ்வளவு சீக்கிரம் மாறாது என்பது நாம் எதிர்பார்த்தது தானே ஆச்சாரியரே. நாம் இப்படி நடக்க வாய்ப்பு அதிகம் என்று முன்பே பேசிக் கொண்டிருந்தோமல்லவா?”

 

சாணக்கியர் வருத்தத்துடன் சொன்னார். “உண்மை. ஆனால் நாம் எதிர்பார்க்காததும் நிறைய நடந்திருக்கிறது சந்திரகுப்தா.  அலெக்ஸாண்டர் வழியில் வென்று கொண்டே போன பகுதிகளில் முக்கியமானவை மாளவமும், ஷூத்ரகமும். அந்த இரண்டு குடியரசுகளும் வலிமையானவை என்றாலும் ஒற்றுமையானவை அல்ல. காந்தாரமும், கேகயமும் இருப்பது போல அடுத்தடுத்து இருந்தாலும் நட்புறவில் இல்லை. மாளவ வீரர்கள் அலெக்ஸாண்டரைத் தீவிரமாக எதிர்த்துப் போரிட்டார்கள். போரில் அலெக்ஸாண்டருக்கு நெஞ்சில் கத்தி பாய்ந்து இரத்தம் அளவுக்கதிகமாக வெளியேறி அவன் மயங்கி விழுந்து விட்டான். அவன் இறந்து விட்டான் என்றே நினைத்த யவன வீரர்கள் கோபம் அதிகமாகி வெறித்தனமாகப் போர் செய்தார்கள். அவர்களுக்காக தாயகம் திரும்பும் முடிவை மேற்கொண்ட அலெக்ஸாண்டர் மீது அவர்களுக்கு முன்பை விட இரட்டிப்பாக பக்தி பெருகி இருந்திருக்கும் என்று நான் அனுமானிக்கிறேன். கோபத்தில் அவர்கள் சில ஊர்களை எரித்திருக்கிறார்கள். பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என்று வித்தியாசம் பார்க்காமல் கண்டவர்களை எல்லாம் வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள். கொன்றிருக்கிறார்கள். எரித்திருக்கிறார்கள்….”

 

சந்திரகுப்தன் திகைப்புடன் சாணக்கியரைப் பார்த்தான். பெண்கள், குழந்தைகள், முதியவர்களைக் கொன்றிருப்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவனால் அந்த அநியாயத்தை ஜீரணிக்க முடியவில்லை.  

 

சாணக்கியர் வேதனையுடன் தொடர்ந்தார். “அலெக்ஸாண்டர் இறக்கவில்லை, இரத்தம் அதிகமாய் வெளியேறியதால் பலவீனமாக இருக்கிறான் என்பது தெரிய வந்த பிறகு தான் யவன வீரர்கள் அடங்கி இருக்கிறார்கள். அதற்குள் மாளவம் தோல்வி மட்டுமல்லாமல் பல பேரிழப்புகளையும் சந்தித்து விட்டது. மாளவத்திற்கு நேர்ந்திருக்கும் நிலைமையைப் பார்த்து ஷுத்ரகம் தானாக அவனுக்கு அடிபணிந்து விட்டது. அலெக்ஸாண்டர் காயமடைந்து விட்ட செய்தி கிடைத்தவுடன் அவனுடைய பிரதிநிதியாக இங்கே தங்கியிருக்கும் பிலிப் உடனே அலெக்ஸாண்டரைக் காண விரைந்திருக்கிறானாம்…”

 

சிறிது நேரம் கனத்த மௌனம் அங்கே நிலவியது. சாணக்கியர் தனது பிரியமான மாணவனிடம் சொன்னார். “அன்னியனை உள்ளே விட்டதற்கான பலனை எங்கேயெல்லாம் எப்படியெல்லாம் நம் மக்கள் அனுபவிக்க வேண்டி வருகிறது பார்த்தாயா சந்திரகுப்தா?”

 

சந்திரகுப்தன் வருத்தத்துடன் தலையசைத்தான். பின் மெல்லக் கேட்டான். “நேற்றும் அதற்கு முந்தைய நாளும் நம்மை காந்தார ஒற்றர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தது பற்றி விசாரித்தீர்களா ஆச்சாரியரே?”      

 

சாணக்கியர் மெள்ளப் புன்னகைத்தார். “காந்தார ஒற்றர்களுக்கு நம் நடவடிக்கைகள் குறித்து இப்போது தான் சந்தேகம் கிளம்பியிருக்கிறதாம். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது எந்த நேரத்திலும் ஆம்பி குமாரனுக்குத் தெரிய வரலாம் என்கிறான் நமது ஒற்றன்.”

 

சந்திரகுப்தன் கேட்டான். “இனி என்ன செய்வது ஆச்சாரியரே?”

 

லெக்ஸாண்டர் இப்போதும் உடலில் பலவீனத்தை உணர்ந்தான். ஓரளவு தேறி விட்ட பின் பயணத்தைத் தொடர்ந்து விட்டான் என்ற போதும் உடலில் பழைய வலு இல்லாமல் போனது அவனுக்குச் சங்கடமாக இருந்தது. அவனுடைய வீரர்கள் மகதத்திற்கு எதிராகப் போரிட மறுத்தவுடன் அவன் பலி பூஜைகள் நடத்தி போருக்குச் செல்வது குறித்து ஆலோசனை கேட்ட போது பாதகம் என்றே சகுனங்கள் தெரிவித்தன. பின்பு திரும்பிப் போகிற வழியில் உள்ள பகுதிகளை வெல்வதில் அவன் வீரர்கள் பழைய உற்சாகத்தையே காண்பித்தார்கள். தாயகம் போகப் போகிறோம் என்ற உற்சாகத்தில் ஆரம்பத்து சாகசங்களையே போரில் காட்டினார்கள். அதனால் மறுபடி எந்த விளக்கத்தையும் மேலான சக்திகளிடம் கேட்டறிய அவனும் முற்படவில்லை.  

 

சிறிய அஜாக்கிரதை காரணமாக மாளவத்தில் காயப்பட்ட பின்னர் யோசிக்கையில் எல்லாப் போர்களுக்குமே சேர்த்து தான் அந்த பலிபூஜை சகுனங்கள் ஆபத்தைச் சுட்டிக் காட்டியிருக்கின்றன என்பது அவனுக்குப் புரிந்தது. ஆனாலும் அதிலும் அவன் தோற்கவில்லை என்பது நிறைவாக இருந்தது. இந்தப் பாரத மண்ணில் அவன் வெற்றியாளனாகத் தான் திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறான்…. அவன் மீது யவன வீர்ர்கள் எவ்வளவு அன்பாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் மாளவத்தில் நடந்த நிகழ்வுகள் அவனுக்குத் தெளிவுபடுத்தியிருக்கின்றன. ஆனாலும் பாதியில் திரும்புகிறோம் என்ற வருத்தம் அவனுக்கு மனதின் ஒரு மூலையில் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. குறைந்த பட்சம் மகதத்தை வெற்றி பெற்ற பிறகு திரும்பியிருக்கலாம்….

 

திடீரென்று வித்தியாசமான ஓசை கேட்க ஆரம்பிக்கவே அலெக்ஸாண்டர் தன் சிந்தனைகளில் இருந்து மீண்டவனாக ஓசை கேட்ட இடம் நோக்கிப் பார்வையைத் திருப்பினான். சில அடிகள் தூரத்தில் ஏழு துறவிகள் அவர்களைப் பார்த்தபடியே குதித்துக் கொண்டிருந்தார்கள். இதுவும் ஒருவிதமான பிரார்த்தனையோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. ஆனால் பெரும்பாலான துறவிகள் தங்களுடைய உள் உலகத்தில் ஆழ்ந்திருப்பார்களே ஒழிய இப்படி அடுத்தவர்களைப் பார்த்தபடி குதிப்பது அவன் காணும் முதல் அனுபவம் தான்.  அலெக்ஸாண்டர் தன் மொழிபெயர்ப்பாளனான ஒனெஸ்க்ரீட்டஸிடம் சொன்னான். “ஏனப்படி குதிக்கிறார்கள் என்று கேள்

 

ஒனெஸ்க்ரீட்டஸ் ஒரு துறவியை அருகில் வருமாறு சைகை செய்தான். குதிப்பதை நிறுத்திய அந்தத் துறவி அவர்களை நெருங்கினார். மற்ற துறவிகள் பழையபடி குதித்துக் கொண்டே இருந்தார்கள்.


ஒனெஸ்க்ரீட்டஸ் அவரிடம் அப்படி குதிப்பதற்கான காரணம் கேட்டான். துறவி அவனைப் பார்க்காமல் அலெக்ஸாண்டரைப் பார்த்தபடி பதில் சொன்னார். “என்ன குதித்தாலும் காலடி படும் இடத்தில் மட்டுமே பூமி நம்மைத் தாங்குவதாக இருக்கிறது. அந்த இடம் மட்டுமே, அதுவும் அந்த நேரத்தில் மட்டுமே நமக்குப் பயன்படுவதாகவும் இருக்கிறது. இறந்தாலும் சில அடி பூமி மட்டுமே நம்மை அடக்கம் செய்வதற்கும் போதுமானதாக இருக்கிறது. இந்த உண்மை புரியாமல் பூமியின் அனைத்து இடங்களையும் உன்னுடையதாக ஆக்கிக் கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறாயே அலெக்ஸாண்டர். நீ சந்திக்கப் போகும் மரணத்தின் போது உனக்கு எத்தனை பூமி தேவைப்படும் என்று நினைக்கிறாய்?”

 

ஒனெஸ்க்ரீட்டஸ் மொழி பெயர்த்துச் சொன்ன போது அலெக்ஸாண்டர் கோபம் கொள்ளவில்லை. மகத்தான தத்துவங்களும், உண்மைகளும் அவனுக்கு எப்போதுமே புரியாமல் இருந்ததும் இல்லை, கோபமூட்டியதும் இல்லை.  ஆனால் அவை அவனை மாற்றியதுமில்லை. துறவியை வெறித்துப் பார்த்தபடி மெல்லத் தலையசைத்த அவன் அமைதியாகப் பயணத்தைத் தொடர்ந்தான். துறவிகள் குதிக்கும் ஓசை அவனுக்கு சிறிது தூரம் வரை கேட்டுக் கொண்டேயிருந்தது.

 

பாரதம் அவனுக்குக் கடைசியாகவும் பாடம் நடத்தி விட்டது...

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, May 29, 2023

யாரோ ஒருவன்? 140



பீம்சிங்குக்கு காளிங்க சுவாமி சொன்னது ஆச்சரியத்தைத் தந்தாலும் அவன் விளக்கம் எதுவும் கேட்காமல் ஜீப் டிரைவரிடம் தன்னை லக்ஷ்மண் ஜூலாவிற்கு அழைத்துப் போகச் சொன்னான்.

சிறிது நேரத்தில் ஜீப் லக்ஷ்மண் ஜூலாவை அடைந்தது. லக்ஷ்மண் ஜீலா ரிஷிகேசத்தின் எல்லையில் கங்கையின் இரு கரைகளுக்கு இடையே இருக்கும் நீண்ட தொங்கும் பாலம். சுற்றுலாப்பயணிகள் அதிகம் கண்டு ரசிக்கும் ஒரு இடம். அந்த நேரத்தில் அங்கே கூட்டம் அதிகமில்லை...

காளிங்க சுவாமி அவன் மனதினுள் சொன்னார். “நீ உன் பையிலிருந்து அந்த ரத்தினத்தை வைத்திருக்கும் மஞ்சள் துணியை எடுத்துக் கொள். பின் இறங்கி அந்தப் பாலத்தில் நடந்து போ..”

பீம்சிங் அவர் சொன்னது போலவே செய்தான். கிட்டத்தட்ட அந்தப் பாலத்தின் மையப்பகுதியை அவன் அடைந்த போது அவர் சொன்னார். “இங்கே நில்

அவன் நின்றான். “வலது பக்கம் திரும்பி கங்கையைப் பார்த்தபடி நில்அவன் அப்படியே செய்தான். “மஞ்சள் துணியிலிருந்து அந்த ரத்தினத்தைக் கையில் எடுத்துக் கொள்பீம்சிங் அப்படியே மஞ்சள் துணியிலிருந்து அந்த நாகரத்தினத்தைக் கையில் எடுத்துக் கொண்டான்.

முதலில் மனதில் உன் அனுமாரை வணங்கு. பின் காளியை வணங்கு.  பின் நாகதேவதையை வணங்கு. பின் கங்கையை வணங்கு….”

அப்படியே ஓவ்வொருவராக நினைத்து பீம்சிங் வணங்கினான். காளிங்கசுவாமி பின் சொன்னது அவனைத் திகைக்க வைத்தது. “அந்தக் கல்லை பலம் கொண்ட வரைக்கும் தூரத்தில் கங்கை நீரில் தூக்கி எறி

திகைத்த பீம்சிங் சிறிது தயங்கினான். “யோசிக்காதே பீம்சிங். அதன் பாதையில் இதுவரையில் தான் உன் பங்கு. அதன் அடுத்த பயணத்தை கங்கை பார்த்துக் கொள்வாள்… இனி இந்த விஷயத்தில் நாம் செய்ய முடிந்தது எதுவுமில்லை....”

பீம்சிங் திகைப்பு மாறாதவனாய் அந்த விசேஷ நாகரத்தினக்கல்லை பலம் கொண்ட வரை தூரமாக வீசி எறிந்தான். சூரிய வெளிச்சத்தில் அந்தக் கல் விசேஷமாக ஜொலித்தபடியே போய் தூரத்தில் கங்கை நீரில் மூழ்கியது.

பின் பக்கம் திரும்பி நின்று மாகாளியை வணங்கியபடி அந்த மஞ்சள் துணியை கங்கையில் போடு 

பீம்சிங் அப்படியே செய்தான். காளிங்க சுவாமி சொன்னார். “நீ இனி உன் வீட்டுக்குக்குப் போய்க் கொள். உனக்கு வர வேண்டிய மீதி ஏழு லட்சத்தை நான் உனக்கு அனுப்பி வைக்கிறேன்…”

அந்த விசேஷ நாகரத்தினத்தை கங்கையில் வீசியவுடனேயே பெருத்த நிம்மதி அடைந்திருந்த பீம்சிங் சொன்னான். “சுவாமிஜி. எனக்கு பணம் எதுவும் வேண்டாம். அந்த மூன்று லட்சத்தையும் கூட திருப்பித் தர நான் தயார்…. அஜீம் அகமது என்னைக் கேட்டால் நான் என்ன சொல்வது?”

காளிங்க சுவாமி சொன்னார். “சுவாமிஜி சொன்னபடி சேர்த்து விட்டேன் என்று சொல். அது போதும்.”

அவன் மனதிலிருந்து காளிங்க சுவாமி இருந்த சுவடில்லாமல் மறைந்து போனார். திரும்பி நடந்த போது பீம்சிங்குக்கு ஏனோ நிம்மதியாக இருந்தது.  ஆனால் ஒரு நிமிடம் கழித்து அவனுக்குத் தோன்றியது. “பைத்தியக்காரத் தனமாக எதை எதையோ நினைப்பதற்குப் பதிலாக ஐந்து கோடி ரூபாய் வேண்டும் என்று நினைத்திருந்தால் அந்தப் பணம் கிடைத்திருக்குமோ? அப்படிக் கிடைத்திருந்தால் மீதி வாழ்நாள் பூராவும் பணக்கஷ்டம் வராமல் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம்...”

அவன் அந்த ரத்தினக்கல்லை வீசி எறிந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தபடி ஒரு நிமிடம் நின்றிருந்து விட்டு மறுபடி நடக்க ஆரம்பித்தான். ‘அந்தப் பணம் வந்தவுடன் கூடவே என்னென்ன எண்ணமெல்லாம் வந்திருக்குமோ, என்னென்ன பாடுபட்டிருப்பேனோ யாருக்குத் தெரியும்? இன்றைக்குப் பைத்தியம் பிடிக்காமல் தப்பித்ததே அனுமாரின் கருணை தான்...”


ரேந்திரன் அஜீம் அகமதைக் கொல்வதற்காக ஏழு மறைவிடங்களில் குறி பார்த்துச் சுடக்கூடிய வல்லவர்களான இரண்டிரண்டு ஆட்களை நிறுத்தியிருந்தான். ஏழு இடங்களில் மூன்று வீட்டு மொட்டைமாடிகள், மூன்று பாதி கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டிடங்கள், ஒன்று ஒரு பெரிய குப்பைத் தொட்டி. நான்கு பைக்குகள், மூன்று கார்கள் எந்த நேரத்திலும் உடனடியாகப் பயன்படுத்தும் தயார் நிலையில் மறைவிடங்களில் இருந்தன. கார்களுக்குள்ளேயும், பைக்குகளுக்கு அருகிலேயும் ஆட்கள் தயாராக ஒளிந்திருந்தார்கள். அஜீம் அகமது அந்த வீட்டை விட்டுக் கிளம்பினால் ஐந்து கிலோமீட்டர் தூரத்தை அவன் கடப்பதற்குள் சுட்டுக் கொன்று விட வேண்டும் என்பது அவர்கள் இலக்காக இருந்தது. பிடித்துக் கைது செய்வதும், அவனை உயிரோடு வைத்திருப்பதும் தேவையில்லாமல் பிரச்னைகளை வளர்த்துக் கொள்வதாக இருக்கும் என்று ராவின் தலைவரும், மற்ற உயரதிகாரிகளும் எண்ணினார்கள்.   

அஜீம் அகமது தப்பிப்பதானால் அவர்கள் தகவலைக் கசிய விட்ட அன்றைய இரவே அதைச் செய்வான் என்பது நரேந்திரனின் அனுமானமாக இருந்தது. தகவல் தெரிந்த பின் அங்கிருந்து தப்பிக்க காலம் தாழ்த்துமளவு அஜீம் அகமது முட்டாள் அல்ல. எந்த நேரத்தைத் தேர்ந்தெடுப்பான் என்ற கேள்விக்கு அவன் பைக்கில் தப்பிப்பதானால் தொழிற்சாலையின் இரவு ஷிஃப்ட் துவங்கும் பத்து மணியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நரேந்திரன் முதலில் நினைத்தான். தொழிலாளியின் சீருடையில் அவன் இருந்தால் அந்த நூற்றுக் கணக்கானவர்களின் வாகனங்களோடு அவனும் கலந்து கொண்டால் தப்பிப்பது அஜீம் அகமதுக்குச் சுலபமாக இருக்கும். ஆனால் அப்படி வெளிப்படுவது அவன் சுடப்பட்டு சாவதற்கும் வழிவகுக்கும் என்று நினைக்க வாய்ப்பு இருப்பதால் அவன் திறந்தவெளியில் போகாமல் காரில் போவதையே புத்திசாலித்தனமாக நினைப்பான் என்று நரேந்திரனுக்குப் பிறகு தோன்றியது. அப்படிக் காரில் தப்பித்துப் போவதானால் தொழிற்சாலை ஷிஃப்ட் நேரங்கள் அவனுக்கு வேகமாகத் தப்பிக்கச் சாதகமாக இருக்காது என்பதால் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் அதிகாலை நான்கு மணிக்குள் அதிக வாகனப்போக்குவரத்து இல்லாத நேரம் சாதகமானது என்று அஜீம் அகமது நினைக்க வாய்ப்பிருக்கிறது என்று நரேந்திரன் கணக்குப் போட்டான்.

அப்படி அஜீம் அகமது தப்பிக்க அவனுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான அவன் ஆட்களில் மூன்று பேர்கள் அவனுக்கு உதவலாம் என்பதால் அந்த மூன்று பேரையும் அதிரகசியமாகக் கண்காணிக்க அவர்கள் வசிக்கும் இடங்களில் ஏற்பாட்டைச் செய்திருந்தான்.

அன்று மதியம் நடந்த ரகசியக் கூட்டத்தில் ”ஆபரேஷன் ஏஸ்கொயர்” என்று அவர்கள் பெயர் வைத்திருந்த திட்டத்தில் பங்கு பெறும் செயல்வீர்ர்களிடம் நரேந்திரன் அவனும், அன்வரும், ஜெய்தீப்பும், விக்டருமாகச் சேர்ந்து தீட்டியிருந்த திட்டத்தை விளக்கினான். திரையில் அந்தப் பகுதியின் பெரிய வரைபடத்தைக் காட்டி அஜீம் அகமது எந்தெந்த வழிகளில் போகும் வாய்ப்பு இருக்கிறது என்று முக்கிய ஐந்து வழித்தடங்களைக் காட்டிய நரேந்திரன் எந்தெந்த வழியில் போனால் எவரெவர் எங்கு எப்படித் தாக்க வேண்டும் என்று சொன்னான்.

திட்டத்தில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதில்களும் தரப்பட்டன. ஒரு இடத்தில் அவர்கள் திட்டத்தில் சிறு குறையிருப்பதை ஒரு செயல்வீரன் சுட்டிக் காட்டிய போது அவனைப் பாராட்டிய நரேந்திரன் உடனே அதற்குத் தேவையான மாற்றத்தையும் உடனடியாகச் செய்தான். எல்லோரும் எந்தச் சந்தேகமும் இல்லாதபடித் தெளிவடைந்த பிறகு அங்கிருந்து கலைந்தார்கள்.   


ஜீம் அகமது ஒரு முடிவுக்கு வந்தவுடன் உடனடியாக அவனுடைய ஆட்களுக்குப் போன் செய்து என்ன திட்டம் எந்த நேரம் என்று தெரிவித்தான். பின் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள ஆரம்பித்த அவனுக்கு மகேந்திரன் மகன்  அவன் நோய்டாவில் இருப்பதை அறிந்த பின் மும்முரமாக தேட ஆரம்பித்திருப்பான் என்று நினைக்கையில் எரிச்சலாக இருந்தது. “இவன் அடங்க மாட்டேன்கிறானே. காளிங்க சுவாமி எப்போது வேலையை ஆரம்பிப்பது, எப்போது இவன் அடங்குவது” என்று நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசித்த அவன் ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாக ஒரு எண்ணுக்குப் போன் செய்து “மகேந்திரன் பொண்டாட்டியை இன்னைக்கு சாயங்காலம் முடிச்சுடு” என்று சொன்னான். காளிங்க சுவாமி வேலையை ஆரம்பிக்க நேரமானாலும் பரவாயில்லை. இப்போதைக்கு மகேந்திரன் மகன் கவலையில்லாமல் அஜீம் அகமதுக்கு எதிரான வேலைகளைப் பார்க்க வேண்டாம்….

(தொடரும்)
என்.கணேசன்  

தற்போது விற்பனையில்







     

Thursday, May 25, 2023

சாணக்கியன் 58

லெக்ஸாண்டர் செய்த பலிபூஜையில் கிடைத்த சகுனங்களும் பிரச்னைகளையும், நஷ்டங்களையுமே காட்டின. அலெக்ஸாண்டர் மனம் நொந்து போனான். விதி, தெய்வங்கள், அவன் வீரர்கள் உட்பட ஓரணியில் இருந்து கொண்டு அவனை எதிர்க்கத் தீர்மானித்து விட்டது போல் அவனுக்குத் தோன்றியது. சகுனங்களும் சாதகமாக இல்லை என்றான பிறகு மகதம் நோக்கி முன்னேறுவதில் அவனுக்கு விருப்பம் இருக்கவில்லை. மேலான சக்திகள் எச்சரிக்கும் போது அனுசரித்துப் போவதே சரி என்று அவன் முடிவு செய்தான். ஆனால் அந்த முடிவு அவன் மனதில் காயத்தையும் ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தாமல் இருக்கவில்லை. அவனுக்குத் தன்னையே தேற்றிக் கொள்ள கூடுதல் காலம் தேவைப்பட்டது.

 

நீண்ட நாள் கனவைக் குழி தோண்டிப் புதைப்பது அவனைப் போன்ற ஒருவனுக்கு எளிதான விஷயமாக இருக்கவில்லை. அவன் வீரர்கள் மேற்கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்த இந்த இடத்தோடு அவன் சாம்ராஜ்ஜிய எல்லை முடிந்து போவதில் அவன் வேதனையை உணர்ந்தான். அரிஸ்டாட்டிலின் மாணவனான அவன் தன் எல்லைகளை அடுத்தவர்களோ விதியோ தீர்மானிக்க இதுவரை அனுமதித்தது கிடையாது. அவன் விதியை அவனே தான் தீர்மானிப்பான் என்பதில் மிக உறுதியாக இருந்தவன் அவன். அவன் உறுதியையும், அவன் தீவிரத்தையும் ஆரம்பத்தில் இருந்தே கவனித்திருந்த அரிஸ்டாட்டில் ஒரு கட்டத்தில் நிதானத்தையும், மிதவாதப் போக்கையும் அனுசரிக்க வேண்டிய கட்டாயத்தை அவனுக்கு வலியுறுத்திச் சொல்லியிருந்தார்.  

 

எல்லா நேரங்களிலும் தனிமனித தீர்மானங்களே நிறைவேறி விடுவதில்லை, அலெக்ஸாண்டர். பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியின் தீர்மானத்திற்கு ஒத்துப் போகும் தீர்மானங்களையே நம்மால் நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. அதற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற முடியாமல் தோல்விகளையே தழுவுகின்றன. அந்த சமயத்தில் நாம் பிரபஞ்சத்தின் தீர்மானத்தையே பணிவுடன் ஏற்றுக் கொள்ளும்படியாகி விடுகின்றது. அதனால் எதிலும் கண்மூடித்தனமான தீவிரம் நல்லதல்ல. அது நமக்கு வேதனையையே ஏற்படுத்தும்.”

 

ஆனால் அந்தக் காலத்தில் அந்தப் போதனையை தத்துவஞானி ஒருவரின் சமரசக் கொள்கையாக அலெக்ஸாண்டர் எடுத்துக் கொண்டிருந்தான். அவனைப் போன்ற மாவீரனுக்கு அந்தச் சாமானியர்களின் விதி பொருந்தாது என்று அவன் நினைத்திருந்தான்.  ஆனால் இப்போது நிஜம் புரிய வரும் போது கடுமையாகச் சுடுகின்றது.  பிரபஞ்சத்தின் கணக்கில் அவனும் சாமானியனாகி விட்டதை கசப்போடு அவன் உணர்கிறான். நிகழ்கால நிஜத்தை ஜீரணித்துக் கொள்ளவும் வருத்தத்தை விழுங்கிக் கொண்டு பழைய அலெக்ஸாண்டராக அனைவருக்கும் காட்டிக் கொள்ளவும் அவனுக்குச் சிறிது காலம் தேவைப்பட்டது.

 

பின் மறுபடி வீரர்களைக் கூட்ட செல்யூகஸுக்கு ஆணையிட்டான். அவனுடைய வீரர்கள் அவனுடைய தீர்மானத்தை அறிய மிகவும் ஆவலுடனும், படபடப்புடனும் இருந்தார்கள். அவர்கள் முன்பு வந்து நின்ற அலெக்ஸாண்டர் என்ன சொல்லப் போகிறான் என்பதை அவர்களால் அவன் முகபாவனையை வைத்துத் தீர்மானிக்க முடியவில்லை. சிறிது நேரம் அமைதியாக அவர்களைக் கூர்ந்து பார்த்தபடி நின்று விட்டு அலெக்ஸாண்டர் பேச ஆரம்பித்தான்.

 

எனதருமை வீரர்களே. ஒரு மகத்தான இலக்கோடு கிளம்பிய நாம் இத்தனை தூரம் வெற்றிகரமாக வந்து சேர்ந்திருக்கிறோம். நம் கால்பட்ட இடத்தை எல்லாம் நம்முடையதாக்கிக் கொண்டிருக்கிறோம். நம் பராக்கிரமப் பயணத்தைத் தொடர்வதில் உங்களுக்கு விருப்பமில்லை என்பதை நீங்கள் வெளிப்படையாகவே தெரிவித்தீர்கள். அதில் எனக்கு வருத்தம் தான் என்றாலும் உங்கள் உணர்வுகளில் என்னால் தவறு காண முடியவில்லை. என் முக்கியத்துவமும், உங்கள் முக்கியத்துவமும் வேறுபடுவது மாபெரும் குற்றம் என்று தோன்றவில்லை. நீங்கள் உடன் வரா விட்டாலும் நான் தொடர்ந்து செல்லவிருப்பதாக நான் சொல்லியிருந்தாலும் கூட சொன்னதைச் செயல்படுத்த என்னால் முடியவில்லை. சேர்ந்து கிளம்பியவர்கள் நாம். சேர்ந்து சாதித்தவர்கள் நாம். சேர்ந்தே இத்தனை ஆண்டு காலம் இருந்தவர்கள் நாம். இனி திரும்பிப் போவதானாலும் சேர்ந்தே போவோம் என்று உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு முடிவெடுத்திருக்கிறேன்…”

 

அவன் நிறுத்திய போது அவன் படைவீரர்கள் ஒரு கணம் தங்கள் காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் திகைத்துச் சிலையாக நின்று விட்டுப் பின் தங்களைச் சுதாரித்துக் கொண்டு கண்கலங்கியபடி அவனை வாழ்த்தி ஆரவாரம் செய்தார்கள்.

 

கொய்னஸ் உணர்ச்சிவசப்பட்டவனாக வேகமாக முன்னுக்கு வந்து மண்டியிட்டு கண்கள் கலங்க, குரல் உடையச் சொன்னான். “சக்கரவர்த்தி. உங்களைப் போன்ற உயர்ந்த மனிதருக்கே தன் வீரர்களுக்காக தன் நிலையில் இருந்து இறங்கி வந்து இந்த முடிவை எடுக்க முடியும். உலகின் பல பகுதிகளை வெற்றியடைந்தது உங்கள் வீரத்திற்கும், வலிமைக்கும் ஒரு சான்று என்றால், உங்கள் வீரர்களுக்காக உங்கள் மனதை மாற்றிக் கொள்ள முடிவெடுத்து எங்கள் அனைவர் இதயங்களையும் வெற்றி கொண்டது உங்கள் பண்புகளின் உயர்வுக்கு மகத்தான சான்று. உலகம் உள்ளவரை இந்த இரண்டுக்குமாக வரலாறு உங்களை உயர்த்தி நிச்சயம் பேசும். நன்றி சக்கரவர்த்திநன்றி….”

 

கண்ணீர் வழிந்தபடி மானசீகமாக கொய்னஸ் சொல்லி முடித்த போது அனைத்து வீரர்களும் மண்டியிட்டபடி, கண்கலங்க வாழ்த்தி கோஷமிட்டார்கள். அலெக்ஸாண்டர் கண்களும் ஈரமாயின. திடீரென்று அன்னியமாகி விட்டிருந்த அவன் வீரர்களை அவன் திரும்பவும் தன்னுடையதாக உணர்ந்தான்.  அந்த வாழ்த்துக் கோஷங்கள் அவன் மனதை நிறைத்தன. ஆனாலும் அவன் அறிவின் ஒரு பகுதி இதெல்லாம் வளைந்து கொடுத்து அவன் பெறும் வாழ்த்து என்பதைச் சுட்டிக்காட்டி அந்த மனநிறைவை முழுமையாக்காமல் தடுத்தது. அவன் இதழ்களில் விரிந்த புன்னகை சிறிய சோகத்தோடு சற்று குறைந்தது

 

ன்று இரவு கொய்னஸ் அலெக்ஸாண்டரைப் பற்றியே மைனிகாவிடம் அதிகம் பேசினான். எங்கள் சக்கரவர்த்திக்கு ஈடு இணை இல்லை என்று அவன் பெருமிதத்தோடு சொன்னான். நிர்வாக சம்பந்தமான விஷயங்களில் அலெக்ஸாண்டருக்குச் சில முடிவுகள் எடுக்க நான்கைந்து நாட்கள் ஆகுமென்றும், அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கிளம்புவார்கள் என்றும் தெரிந்தது. தான் வந்த காரியம் முடிந்து விட்ட பிறகு அங்கு கூடுதலாகத் தங்குவதில் விருப்பமில்லாத மைனிகா நாளையே தானும் கிளம்பவிருப்பதாகச் சொன்னாள். அவன்நாங்கள் கிளம்பும் வரை நீயும் இங்கேயே இருந்து விடேன்என்ற வகையில் கோரிக்கை எதையும் வைக்காமல் அதை உடனே ஏற்றுக் கொண்டான். அவளுக்குப் பரிசுகள் அளித்தான். இத்தனை நாள் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் நல்ல துணையாக அவள் இருந்ததற்கு நன்றி சொன்னான். அவன் மனதளவில் இப்போதே அவனது குடும்பத்தினரை எட்டி விட்டி விட்டது போல் அவளுக்குத் தோன்றியது.  பேசியபடி சீக்கிரமே அவன் நிம்மதியாக உறங்கி விட்டான். ஆனால் அவளுக்கு அன்றிரவு உறக்கம் சீக்கிரம் வரவில்லை.

 

வந்த வேலை விஷ்ணுகுப்தர் சொன்னபடி இவ்வளவு எளிதாக முடியும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. கொய்னஸைப் போலவே மற்ற யவன வீரர்களும் பெருமகிழ்ச்சியில் இருந்தார்கள். ஒவ்வொருவரிடமும் தங்கள் குடும்பத்தைக் காணப் போகிறோம், மறுபடி அவர்களுடன் இணையப் போகிறோம் என்ற உற்சாகம் பெருமளவில் தெரிந்தது. ஒரு குடும்பஸ்தராக இல்லாமல் ஒரு துறவியைப் போல் வாழ்வை நடத்தும் விஷ்ணுகுப்தர்  மனித மனதையும், குடும்ப பந்த பாசத்தின் வலிமையையும் இந்த அளவு மிக ஆழமாக அறிந்து வைத்திருந்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. கூடவே அப்படி ஒரு அன்பான குடும்ப வாழ்க்கை தன்னைப் போன்ற ஒரு தாசிக்கு விதிக்கப்படவில்லையே என்ற லேசான சோகமும் தலைதூக்கியது.

 

கொய்னஸுடனான உறவு ஆரம்பத்திலிருந்தே ஒரு குறுகிய காலத்திற்கானது என்று இருபக்கமுமே தெளிவு இருந்ததால் பிரிவது இருவரிடமும் எந்தப் பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தி விடவில்லை. அதனால் தான் அவன் தாங்கள் கிளம்பும் வரை இரு என்று கூட அவளிடம் கேட்டுக் கொள்ளவில்லை. பயணக்காலத்தின் நட்பு போல நல்ல நினைவுகளுடன் பிரியும் போக்கே கொய்னஸிடமும் தெரிந்தது. என்றாவது ஒரு நாள் அவன் அவளை நினைத்துப் பார்க்கக்கூடும். அந்த நினைவுகளால் சிறு புன்னகை அவன் உதடுகளில் மிளிரக்கூடும்.  அவ்வளவே. இந்த உறவில் சின்ஹரனுடனான இருந்த உறவின் பிரச்னைகளும் பாசாங்குகளும் இல்லை.  

 

சின்ஹரன் நினைவு அவள் மனதில் இருக்கும் சோகத்தைக் கூட்டியது. ஆரம்பத்தில் அவள் அவனைக் காதலிப்பது போல் நடிக்கத் தான் செய்தாள் என்றாலும் பிறகு அவனை அதிகமாக நேசிப்பதை அவளால் தவிர்க்க முடியவில்லை. அவன் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அவளை நேசித்தது மட்டும் உண்மையே. ஏமாற்றப்பட்டோம் என்றறிந்த நேரம் அவன் அதிகச் சித்திரவதையை மனதில் அனுபவித்திருப்பான்அவளைக் கண்டிப்பாக வெறுக்க ஆரம்பித்திருப்பான். ஒரு நல்லவனை வேதனைப்படுத்தியதிலும், அவன் வெறுப்பைச் சம்பாதித்திருப்பதிலும் இப்போதும் சிறு வருத்தம் அவளுக்கு இருக்கத் தான் செய்தது....

 

மெல்ல அவளுக்கும் உறக்கம் வந்தது.

 

(தொடரும்)

என்.கணேசன்

Monday, May 22, 2023

யாரோ ஒருவன்? 139


ஜீம் அகமது தன் உள்ளுணர்வை என்றுமே மதிப்பவன். அவன் என்றுமே கண் முன்னால் தெரியும் நிஜங்களை விட உள்ளுணர்வு வார்த்தைகள் இல்லாமல் உணர்த்தும் விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருபவன். அவனுடைய அந்த உள்ளுணர்வு எதோ ஒரு ஆபத்து நெருங்குகிறது என்று அவனைத் திரும்பத் திரும்ப எச்சரிக்க ஆரம்பித்திருக்கிறது. மேற்பார்வைக்கு எந்த ஆபத்தும் தெரியவில்லை. அவன் ஆட்களும் எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். பின் என்ன ஆபத்து?...

அவன் ஜனார்தன் த்ரிவேதிக்குப் போன் செய்தான். “பீம்சிங் வேலையை முடிச்சுட்டானா?”

ஜனார்தன் த்ரிவேதி உற்சாகத்துடன் சொன்னார். “முடிச்சுட்டானாம்.  காளிங்க சுவாமியோட சீடர்களுக்குப் போன் பண்ணி அரை மணி நேரத்துக்கு முன்னாடி தான் விஷயத்தைத் தெரிஞ்சுகிட்டேன். சுவாமிஜி அவனை அனுப்பிச்சதிலிருந்தே அவன் கூட அவரோட விசேஷ சக்தியால தொடர்புல இருந்துகிட்டிருப்பார்னு சீடன் சொன்னான். அதனால அந்த ரத்தினக்கல்லை எடுத்துகிட்டு நாகராஜ் வீட்டுல இருந்து பீம்சிங் கிளம்பிட்டான்கிறத சுவாமிஜி சந்தோஷமா அப்பவே சொல்லிட்டாராம். இப்ப காளிங்க சுவாமி காளி சிலை காலடியில உட்கார்ந்திருக்காராம். அவர் கடைசியா எதோ யுக்தியோ, வழியோ தெரியணும்னு பிடிவாதமா உட்கார்ந்திருக்கற மாதிரி தெரியுதுன்னு சீடன் சொன்னான். அதனால நீங்க எதைப் பத்தியும் கவலைப்பட வேண்டியதில்லை அஜிம்ஜீ. இனி அவர் ஆக வேண்டியதைப் பார்த்துக்குவார்.”

அஜீம் அகமது போனை வைத்த பிறகு நிறைய யோசித்தான். எல்லாம் திட்டமிட்டபடி தான் போய்க்கொண்டிருக்கிறது. அப்படியானால் ஆபத்து எந்த ரூபத்தில் வந்து கொண்டிருக்கிறது? அவன் செல்போன் இசைத்தது.  

பேசியது அவன் ஆள் தான். “பாஸ் ஒரு கெட்ட செய்தி. நீங்க நோய்டால எங்கேயோ ஒளிஞ்சிட்டிருக்கலாம்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான்ராவுக்குத் தகவல் கிடைச்சிருக்கறதா நமக்கு வழக்கமா உளவு சொல்றவன் தெரிவிச்சான்...”

அஜீம் அகமது கேட்டான். “அவன் ஆள் எப்படி?”

இது வரைக்கும் அவன் குடுத்த தகவல் எதுவுமே பொய்யா இருந்ததில்லை. அவன் சொன்ன தகவல்கள் எல்லாம் சரியா தான் இருந்துருக்கு. ரொம்ப காலமா நமக்கு உதவியாய் இருக்கான்.  ஒரு பொய்யான தகவல் சொல்லியிருந்தான்னா அடுத்த தகவல் எதுவும் தர்றதுக்கு அவனை நாம உயிரோட வெச்சிருக்க மாட்டோமே... ஆனா நாம இவ்வளவு எச்சரிக்கையா இருந்து எப்படி அவங்க தெரிஞ்சுகிட்டாங்கன்னு புரியலை....”

மகேந்திரன் மகனுக்கு ரா கடும் பாதுகாப்பு கொடுக்க ஆரம்பித்த போதே அஜீம் அகமது இதை எதிர்பார்த்தேயிருந்தான். சொல்லப் போனால் அவர்கள் அவன் நோய்டாவில் இருப்பதைத் தெரிந்து கொண்டதே தாமதம் தான். ஆபத்து நெருங்குவதாக உள்ளுணர்வு எச்சரித்தது இதைத் தானாக இருக்க வேண்டும். இந்தப் பகுதி தான் என்று அறிந்து கொண்டவர்கள் இந்த இடம் தான் என்று இரண்டு நாள்களில் தெரிந்து கொண்டு விடுவார்கள்.... இங்கிருந்து போவதற்கு அவன் வேறு இரண்டு இடங்களை ஏற்கெனவே தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறான். அதில் எந்த இடம் என்றும், எந்த நேரம் போவதென்றும், எப்படிப் போவதென்றும் அவன் உடனடியாக யோசிக்க ஆரம்பித்தான்.


காளிங்க சுவாமி இந்த முறை உக்கிரபூஜை எதுவும் செய்யப் போகவில்லை. பூஜைகளாலும், மந்திரங்களாலும் அணுகுகையில் மாகாளி அரைகுறையான பதில்களைத் தான் தருகிறாள். சில சமயங்களில் மௌனம் சாதித்து விடுகிறாள். தாயிடம் அடம் பிடித்துக் கேட்கும் பிள்ளையாகவே மாறி விடுவது நல்லது என்று அவருக்குத் தோன்றியது.

தாயே! எதற்காக நான் வாழ்நாளெல்லாம் காத்திருந்தேனோ அதை இன்னொருவனுக்கு அளித்தாய் என்று குறைபட்டுக் கொண்டதற்கு நீ அவனிடமும் அது சில நாட்கள் தான் இருக்கும் என்று ஆறுதல் சொன்னாய். அவன் மேல் நான் பொறாமை கொண்டதற்கு அது ஆறுதல் ஆனதே ஒழிய என்னிடம் அது வருமா, வந்தால் அது எனக்கு ஆபத்தாகி விடுமா, என்னிடம் எத்தனை நாட்கள் இருக்கும் என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. அவனிடமிருக்காதென்றால் என்னிடம் தான் இனி என்றும் இருக்கும் என்று நான் அனுமானித்தது தவறாக இருக்கலாமோ என்று நான் சந்தேகப்படும்படி நாகராஜ் குழப்பி விட்டான். நீ சொல் தாயே! சகல சக்திகளையும் தரும் அந்த விசேஷ நாகரத்தினத்தைப் பெற்றவுடனேயே அறிய வேண்டிய அத்தனையையும் அறிந்து விட்டிருக்கும் அவன் அதன் பாதையே ஆபத்தானது என்று சொல்கிறான். அதை வைத்திருப்பவன் எதையும் சாதிக்க முடியும் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் அது ஏற்கெனவே ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து வந்திருக்கிறது போல் தோன்றுகிறது. அதே சமயத்தில் அதை வைத்திருக்கையில் நினைப்பதெல்லாம் நடக்கவும் நடக்கிறது என்பதும் தெரிகிறது. இதெல்லாம் ஒன்றுக்கொன்று முரண் போலத் தான் தெரிகிறது. நாகராஜ் அவனிடமிருந்து அது போக வேண்டிய காலம் வந்து விட்டதென்றும், அவனுக்கு அதன் தேவை முடிந்து விட்டதென்றும் சொல்லி எந்த எதிர்ப்புமில்லாமல் அதைத் தந்து விட்டான். அது உண்மையில் ஒரு பொக்கிஷம் என்றால், அதை ஏன் அவன் எந்த வருத்தமுமில்லாமல் கொடுக்கிறான்? அது உன் அருளால் தான் எனக்குக் கிடைக்கவில்லை என்று சொல்கிறானே, அது உண்மையா? என்னிடம் வந்தால் என் சீடர்கள் கூட அபகரிக்கும் வாய்ப்பு இருப்பது போல பயமுறுத்துகிறானே அது சரி தானா? அந்த விசேஷ நாகரத்தினத்தில் என்னென்னமோ வில்லங்கம் இருக்கிறது போல் தெரிகிறதே. இனி நான் என்ன செய்வதென்று வழி காட்டு அன்னையே…. இது விஷயத்தில் எனக்கு ஒரு தெளிவை ஏற்படுத்து!”

தோன்றியதை எல்லாம் தாயிடம் கொட்டி விட்டுதெளிவு பிறந்த பிறகு தான் உன் காலடியை விட்டு நகர்வேன்என்று உறுதி பூண்டவராய் மாகாளியின் பதிலை உள்வாங்க காளிங்க சுவாமி மௌனமானார். காலம் நீண்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து காளி சிலை மேல் சரசரவென்று ஏறிய பாம்பு ஒன்று மெல்லச் சீறியது. அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை மாகாளி அவருக்குத் தெரிவித்து விட்டாள். அவர் கேட்ட கேள்விகளுக்கான பதில்களை அந்த வழிகாட்டலில் இருந்து அவர் தெரிந்து கொள்ள வேண்டுமாம். பக்தர்கள் சிந்திக்கவும் தயங்கும் சோம்பேறித்தனத்தை தெய்வம் ஊக்குவிப்பதில்லை…. காளிங்க சுவாமி பெருமூச்சு விட்டபடி புன்னகைத்தார்.


டேராடூன் விமான நிலையத்திலிருந்து பீம்சிங் ரிஷிகேசத்திற்கு ஜீப்பில் போய்க் கொண்டிருந்தான். அவனுக்குச் சீக்கிரத்திலேயே பைத்தியம் பிடித்து விடும் போலத் தோன்றியது. ஆனால் அப்படித் தோன்றுவதே அவனைப் பயமுறுத்துவது போலிருந்தது.  தயவு செய்து இனி இந்த மாதிரி எதையும் நினைக்காதே....” காளிங்க சுவாமி சொன்ன கணத்திலிருந்து அவன் மனம் பேயாட்டம் ஆடியது. மனம் என்னவெல்லாம் நினைத்து விடுமோ என்று அவனுக்குப் பயமாய் இருந்தது. நன்மைகள் எதையும் அவனுக்கு நினைக்கத் தோன்றவில்லை. விபத்திலிருந்து வியாதி வரை மனம் அதில் போவேன், இதில் போவேன் என்று இது வரை எண்ணாததை எல்லாம் எண்ணிப் பார்க்கும் முனைப்பில் இருந்தது. ஒரு கணம் சும்மா இருக்க முடியாத ஒரு குறும்புக்காரக் குழந்தையைத் தனியாகச் சமாளிக்க வேண்டியிருந்த பலவீனமான தாய் போல் அவன் உணர்ந்தான்.

இந்த நிலையிலிருந்து காளிங்க சுவாமி காப்பாற்றுவார் என்று அவன் எதிர்பார்த்தால் காளிங்க சுவாமி அந்த அறிவுரையைச் சொல்லி விட்டு மௌனமாகியிருந்தார்.  அவருக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. கடைசியில் பைத்தியம் பிடித்து விடும் போலத் தோன்றவே பயந்து போய் அனுமாரிடம் தான் பீம்சிங் அடைக்கலம் புகுந்தான்.  ஜெய் அனுமான், ஜெய் அனுமான்என்று இடைவிடாமல் முணுமுணுக்க ஆரம்பித்த பின் அவன் மனது வேறெந்த எண்ணமும் எழ வழியில்லாமல் சற்று அடங்கியது. அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவன் இத்தனை தடவை அனுமார் நாமத்தை ஜபித்ததில்லை. அனுமான் ஜெயந்தி அன்று மட்டும் 108 முறை சொல்வான். பக்தனாக இருந்த போதும் அவனுக்கு அதுவே பெரிய சாகசம் போலத் தோன்றும். இன்றோ அனுமார் நாம ஜபத்தில் 1008 ஐயும் எப்போதோ தாண்டி விட்டிருந்தான். நிறுத்தத் தான் வழி தெரியவில்லை.  

அவன் ஜீப் ரிஷிகேசத்தை நெருங்கிய போது மெல்ல அவன் காளிங்க சுவாமியின் இருப்பை மனதில் உணர்ந்தான். அவர் விழிகள் அவனைக் கருணையுடன் பார்த்தது போல் தெரிந்தது.

பீம்சிங் சொன்னான். “ரிஷிகேசம் வந்து விட்டேன் சுவாமி. இன்னும் சிறிது நேரத்தில் உங்கள் காளி கோயிலில் இருப்பேன்.”

சுவாமிஜியின் கட்டளை தெளிவாக மனதில் பதிவாகியது. “நீ இங்கே வர வேண்டாம். நேராக லக்‌ஷ்மண் ஜூலாவுக்குப் போ”

(தொடரும்)
என்.கணேசன்


தற்போது விற்பனையில் யாரோ ஒருவன்? இரண்டாம் பதிப்பும், மற்ற புதிய நாவல்களும், நூல்களும்