என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, May 22, 2025

சாணக்கியன் 162

 

த்ரசால் சுதானுவைச் சந்தித்த போது பரபரப்புடன் கேட்டான். “என்ன ஆயிற்று இளவரசே?”

 

சுதானு புன்னகையுடன் சொன்னான். “எல்லாம் நம் திட்டப்படியே நடந்தேறி விட்டது சேனாதிபதி. சுகேஷ் என்ற தடையை நான் என் வழியிலிருந்து வெற்றிகரமாக நீக்கி விட்டேன்.”

 

பத்ரசால் நிம்மதியை உணர்ந்தான். கார்த்திகேயன் சுதானுவுக்காகப் போட்டிருந்த திட்டத்தில் சிறிய குளறுபடி நிகழ்ந்திருந்தாலும் மற்ற எல்லா திட்டங்களும், முயற்சிகளும் வியர்த்தமாகியிருக்கும்.... பத்ரசால் அடுத்த பிரச்சினையாக தனநந்தனை நினைத்திருந்தான். மூத்த மகன் மரணத்தை தனநந்தன் எப்படி எடுத்துக் கொள்வான், எப்படி எதிர்வினையாற்றுவான் என்று தெரியவில்லை. என்ன தான் கார்த்திகேயன் சுகேஷின் மரணத்தை, அரண்மனையில் ஊடுருவிய எதிரிகள் செய்த சதிவேலை என்று ஆக்கி விடலாம் என்று சொல்லியிருந்தாலும் தனநந்தன் அதைத் தீர விசாரிக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்வானா என்ற சந்தேகம் அவனுக்கு இருந்தது.

 

ஆனால் கார்த்திகேயன் தன் கச்சிதமான திட்டத்தை அவர்களிடம் சொல்லியிருந்தான். “கடைசியில் கண்டிப்பாக அரண்மனையில் ஓரிரு வீர்ர்களின் பிணங்கள் விழுந்து கிடக்கும். அவற்றில் ஒரு பிணத்தைக் காட்டி ‘இவன் தான் எதிரிகளின் சதியில் எப்படியோ கூட்டு சேர்ந்திருக்கிறான். இவன் சுகேஷைக் கொன்று விட்டு வரும் போது இவனை நாங்கள் தீர்த்துக்கட்டி விட்டோம். சதிகாரர்களின் அடுத்த திட்டம் மன்னரைக் கொல்வதாக இருந்தது. அந்தத் திட்டம் நிறைவேறாதபடி மன்னரைப் பாதுகாத்து விட்டோம்.” என்று சொல்லி விடலாம். மன்னரையும், அவரது பாதுகாவலர்களையும் வெளியே விடாதபடி வெளியில் காவல் இருந்ததைக் கூட அந்தக் காரணம் காட்டியே நம் புத்திசாலித்தனமான செயலாகச் சித்தரித்து விடலாம்.”

 

சுதானு அங்கு என்ன நடந்தது என்பதை விவரித்து விட்டு ராக்‌ஷசரை பத்ரசால் எப்படி சமாளித்தான் என்று கேட்டான். பத்ரசால் சொன்னான். “கார்த்திகேயன் சொன்னபடி நம் சில ஆட்களை அவர் வீட்டு முன் குதிரைகளில் அங்குமிங்கும் போகும்படியும், சில ஆட்களை ஓடும்படியும் சொல்லி விட்டு அந்த சத்தங்கள் கேட்டு அவர் வெளியே வருவதற்குள் போய் விட்டேன்...” அங்கு என்ன சொன்னான் என்பதை விவரித்து விட்டுச் சொன்னான். “அங்கேயும் பலத்த காவலை ஏற்படுத்தி விட்டு வந்திருக்கிறேன். அவர் வெளியே வந்தாலும் அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதால் வெளியே விட அனுமதி இல்லை என்று சொல்லச் சொல்லியிருக்கிறேன். அதனால் இப்போதைக்கு அவரிடமிருந்தும் பிரச்னை எதுவும் வர வாய்ப்பில்லை.... கார்த்திகேயன் எங்கே?”

 

சுதானு சொன்னான். “அவருக்காகத் தான் நானும் காத்திருக்கிறேன். இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டுப் போனார். இன்னும் வரக் காணோம்.”

 

அந்த சமயத்தில் இரவுப் பறவை ஒன்றின் கூக்குரல் சற்று வித்தியாசமாகக் கேட்டது.  அது இரவுப் பறவையின் கூக்குரல் அல்ல, ‘இனி உள்ளே நுழையலாம். அதற்கு வேண்டிய வேலைகளை நாங்கள் செய்து முடித்து விட்டோம்’ என்று சின்ஹரன் சாணக்கியருக்கும், சந்திரகுப்தனுக்கு அறிவித்த அறிவிப்பு என்று அறியாத சுதானுவும், பத்ரசாலும் கார்த்திகேயனுக்காகக் காத்திருந்தார்கள். சிறிது நேரத்தில் அரண்மனைக்கு வெளியிலேயும் சலசலப்புகள் கேட்க ஆரம்பிக்கவே பத்ரசால் எழுந்தான். “என்ன என்று நான் பார்த்து விட்டு வருகிறேன்.”

 

பத்ரசால் வெளியே வந்து பார்த்த போது ஒரு வீரன் குதிரையில் விரைந்து வந்து கொண்டிருந்தான். தூரத்தில் சில வீரர்கள் சண்டையிட்டுக் கொண்டு இருப்பதும் தெரிந்தது.

 

குதிரையில் விரைந்து வந்த வீரன் இறங்கி வணங்கி மூச்சிறைக்கச் சொன்னான். “சேனாதிபதி எதிரிகளின் படை உள்ளே நுழைந்து விட்டது.”

 

பத்ரசாலுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. “என்ன உளறுகிறாய்?” என்றான்.

 

“உளறவில்லை சேனாதிபதி.... உள்ளேயிருந்து சில வீரர்கள் நம் காவல் வீரர்கள் மீது பாய்ந்து தாக்கிச் சாய்த்து விட்டு கதவுகளைத் திறந்து விட்டார்கள்.”

 

பத்ரசால் திகைத்தான். மேலும் கேட்க நிறைய கேள்விகள் இருந்தாலும் இப்போது ஒவ்வொரு கணமும் மிக முக்கியமானது என்பதால் “நம் படையினரை உடனடியாக வரச் சொல். அவசரம் என்று நான் சொன்னதாகச் சொல். அருகில் செல்லும் போதே கூக்குரலிட்டுக் கொண்டு போ. அவர்களில் சிலராவது விழித்துக் கொண்டு என்ன என்று கேட்க வருவார்கள். கால தாமதத்தை ஓரளவு தவிர்க்கலாம்.”     

 

“உத்தரவு சேனாதிபதி” என்று சொல்லி விட்டு மீண்டும் குதிரை ஏறிய வீரன் பறந்தான். பத்ரசால் குதிரையேறி முன்னோக்கி விரைந்தான். அங்கே சில மகத வீரர்கள் முடிந்த வரை எதிரி வீரர்களுடன் போராடிக் கொண்டிருந்தார்கள். முடிந்த வரை சில வீரர்கள் பிரதான வாயிற்கதவை மூட முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களால் அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாதென்பதை பத்ரசால் உணர்ந்தான். நகரக் காவல் தலைவன் உக்கிரமாக இரண்டு வீரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். பத்ரசால் வாளை உருவியபடி பாய்ந்து சென்று அந்த இரண்டு வீரர்களையும் வெட்டிச் சாய்த்து விட்டு அவசரமாக நகரக் காவல் தலைவனிடம் கேட்டான். “எப்படி ஆரம்பித்தது?”

 

நகரக் காவல் தலைவன் மூச்சு வாங்க சொன்னான். “முற்றுகை ஆரம்பித்து நாம் பிரதானக் கதவைச் சாத்துவதற்கு முன்பே இங்கே வந்து சேர்ந்திருந்த வணிகர்களில் பலர் எதிரியின் வீரர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் வந்து தாக்க ஆரம்பித்த பின் தான் அந்த உண்மை விளங்கியது சேனாதிபதி. அது மட்டுமல்ல நேற்று முதல் உங்களுடன் இருந்த வணிகர் தான் அவர்களுக்குத் தலைமை தாங்கி தாக்குதல் நடத்தினார். பின் வினோதமாய் ஒரு பறவை போல் கூக்குரலிட்டு வாயிற்கதவைத் திறந்து விட்டவர் அவர் தான்....”

 

பத்ரசால் அதிர்ச்சியில் உறைந்து போனான். அவனால் உண்மையை ஜீரணிக்க முடியவில்லை. சாவகாசமாக யோசித்துப் பார்க்க நேரமும் இல்லை. எதிரே அவன் வீரர்கள் பிரதான வாயிற்கதவருகே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவன் படை வீரர்கள் செய்தி கிடைத்து வரும் வரையாவது அவன் அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். அந்த முடிவெடுத்து அவன் அங்கு செல்வதற்கு முன் நகரக் காவல் தலைவனிடம் கேட்டான். “அந்த நயவஞ்சக வணிகன் தற்போது எங்கே?”

 

“அவர் அரண்மனைப் பக்கம் சென்றதைப் பார்த்தேன் சேனாதிபதி”

 

பத்ரசால் மனம் மாபெரும் குற்றவுணர்ச்சியால் நிறைந்தது. அவனுக்குப் பிரச்னை நிதிப்பற்றாக்குறை.  அது தனநந்தனின் கஞ்சத்தனத்தால் வந்தது என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். அதனால் அவன் தன் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள இந்தக் குறுக்கு வழியைத் தேடிக் கொண்டானேயொழிய அது அவன் தாயகத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. மகதம் எதிரிகளிடம் வீழும் என்றும், அதற்கு அவன் காரணமாக இருப்பான் என்றும் நிச்சயமாகச் சிறிதும் எதிர்பார்த்ததுமில்லை. தனநந்தனை விட நிச்சயம் சுதானு சிறந்த அரசனாக இருப்பான் என்று அவன் இப்போதும் நம்பினான். சுகேஷை விட எல்லா விதங்களிலும் சுதானு சிறந்த அரசனாக இருப்பான் என்பதில் அவனுக்குச் சந்தேகமேயில்லை. அதற்கு உதவுவதில் தவறில்லை என்ற எண்ணமே சமீப கால நடவடிக்கைகளில் எந்தக் குற்றவுணர்ச்சியுமில்லாமல் அவனை ஈடுபட வைத்திருக்கின்றது. ஆனால் நடப்பதெல்லாம் வேறாக இருக்கிறது.

 

இங்கே வாயிற்கதவைத் திறந்து விட்டு கார்த்திகேயன் என்ற சாமர்த்தியமான வஞ்சகன் அரண்மனைப் பக்கம் போயிருக்கிறான் என்றால் அங்கே சுதானுவின் உயிருக்கும், தனநந்தன் உயிருக்கும் ஆபத்து காத்துக் கொண்டு இருக்கிறது என்று தான் அர்த்தம். அவர்களைக் காப்பாற்ற வேண்டிய அவனே அவர்கள் உயிருக்கு உலை வைத்தது போல் ஆகி விட்டது. பத்ரசாலுக்குத் தன் மீதே கோபமும் வெறுப்பும் ஏற்பட்டது.

 

எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு இப்போது என்ன செய்வது என்று ஒரு கணம் யோசித்தான். உள்ளே நுழையவிருக்கும் பெரும்படையைத் தடுப்பதும் முக்கியம். தனநந்தன் மற்றும் சுதானு இருவரின் உயிரையும் காப்பதும் முக்கியம். இந்த இறுதி வேளையில் அவனால் பெரிதாக எதையும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் அவனால் முடிந்த வரை ஏதாவது செய்யா விட்டால் அவனையே அவனால் மன்னிக்க முடியாது....

 

இப்போதைக்கு மிக முக்கியம் எதிரிப்படை முழுவதுமாக உள்ளே வந்து விடாமல் தடுத்து நிறுத்துவது என்று அவனுக்குத் தோன்றியது. அவன் வேகமாகப் பாய்ந்து முன்னேறிச் செல்ல, அவன் வருவதைக் கண்டதும் வாயிற்கதவருகே போராடிக் கொண்டிருந்த அவன் வீரர்கள் உற்சாகமடைந்தார்கள்.  

 

(தொடரும்)

என்.கணேசன் 



என்.கணேசனின் நூல்கள் வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, May 19, 2025

யோகி 103


 த்சங்கம் முடிந்து திரும்பி வருகையிலும் முக்தானந்தா வேகமாக முன்னால் போய் விட்டார். சத்சங்கத்தில் அவர் அவனைத் திரும்பிப் பார்த்ததை சித்தானந்தாவும் கவனித்திருந்ததால் ஷ்ரவன் அவரிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். “சுவாமி முக்தானந்தா ஒரு புதிராய் எனக்குத் தோன்றுகிறார். என்னை அடிக்கடி கூர்ந்து பார்க்கிறார். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.”

 

சித்தானந்தா சொன்னார்.  அது தான் எனக்கும் ஆச்சரியமாய் இருக்கிறது. பொதுவாக யாராவது அவர் எதிரே போய் நின்றாலும் கூட அவ்வளவாகக் கவனிக்க மாட்டார்.”

 

அறைக்கு வந்து ஷ்ரவன் தியானம் செய்து முடித்த போதும் முக்தானந்தா அவனையே பார்த்துக் கொண்டு இருப்பதைக் கவனித்த ஷ்ரவன் புன்னகையுடன் அவரிடம் நேரடியாகவே கேட்டு விட்டான். “ஏன் சுவாமிஜி என்னையே பார்க்கிறீர்கள்? நான் தியானம் செய்வது சரியில்லையா?”

 

முக்தானந்தா சொன்னார். “நீ செய்யும் தியானம் யோகாலயத்தில் சொல்லிக் கொடுத்த தியானம் போல் தெரியவில்லையே

 

ஷ்ரவன் அவருடைய கவனிக்கும் திறனை வியந்தான். அவன் மந்திர ஜெபம் தான் இப்போதும் செய்து முடித்திருக்கிறான். அவர்கள் செய்யும் தியானம் செய்யாமல் வேறெதையோ செய்கிறான் என்பதைப் பார்வையிலேயே கண்டுபிடித்து விட்டாரே!

 

ஷ்ரவன் புன்னகையுடன் சொன்னான். “உண்மை தான் சுவாமிஜி. நான் வேறொரு தியானம் தான் செய்தேன். போய்ச் சேரும் இலக்கு தானே முக்கியம் சுவாமிஜி, வழிகள் வேறு வேறாக இருந்தால் என்ன? நான் முன்கூட்டியே அந்த தியானம் செய்து பழக்கப்பட்டதால் அதில் என்னால் சீக்கிரமாய் லயிக்க முடிகிறது.”

 

முக்தானந்தாவும் அபூர்வமாய் புன்னகைத்தார். நல்ல வேளையாக இருவரும் அது என்ன தியானம், எப்படிச் செய்வது என்று அவர்கள் இருவரும் ஷ்ரவனைக் கேட்கவில்லை.

 

அன்றிரவும் நடுநிசியில் முக்தானந்தா பேசும் சத்தம் கேட்டு ஷ்ரவனுக்கு விழிப்பு வந்தது. முக்தானந்தா தாழ்ந்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார். “எல்லாம் நாடகம். எல்லாம் நாடகம்.” 

 

அவன் நாடகமாடுவதைச் சொல்கிறாரா? இன்றும் அதிர்ச்சியாக இருந்தது என்றாலும் நேற்றைய அளவுக்கு இல்லை. ஓரளவு பழகி விட்டது. உலகமே நாடகமேடை, நடப்பதெல்லாம் நாடகம் என்ற வகையில் அவர் தத்துவம் பேசியிருக்கவும் வாய்ப்புண்டு. அவன் கண்களை நன்றாகவே திறந்து அவரைப் பார்த்தான். அவர் நேற்று போல் அவனைப் பார்க்கும் நிலையில் தான் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்புறமிருந்து நிலவொளி வீசியதால் அவர் முக பாவனை அரையிருட்டில் அவனுக்குச் சரியாகத் தெரியவில்லை. அவன் கண்விழித்துப் பார்ப்பது அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும் அவர் அவனிடம் எதாவது சொல்லவோ, கேட்கவோ முற்படாமல் கட்டிலில் சாய்ந்து கொண்டு வெளிப்பக்கம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

 

வேடிக்கையான மனிதர் என்று எண்ணியபடி ஷ்ரவன் மறுபடியும் உறங்கி விட்டான். காலையில் அவன் எழுந்த போது சித்தானந்தா குளியலறையில் இருந்தார். முக்தானந்தா அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

 

ஷ்ரவன் அவரிடம் நட்பு கலந்த உரிமையுடன் கேட்டான். “ஏன் சுவாமிஜி அடிக்கடி என்னையே பார்க்கிறீர்கள்? மற்றவர்கள் உங்கள் எதிரிலேயே வந்தாலும் கூட நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ள மாட்டீர்கள் என்று சுவாமி சித்தானந்தா சொன்னார்.”

 

முக்தானந்தா சொன்னார். “நீ எனக்கு வித்தியாசமாய் தெரிகிறாய். அதனால் தான் உன்னைப் பார்க்கிறேன். உன்னை புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். மற்றவர்கள் எல்லாரும் ஆட்டு மந்தைகள். ஒன்றைப் பார்த்துப் புரிந்து கொண்டால் போதும். எல்லாவற்றையும் புரிந்து கொண்டது போலத்தான். அதனால் அவர்களைப் பார்க்கவும் சலிப்பாய் இருக்கிறது.”

 

அவர் பேசும் மனநிலையில் இருக்கிறார் என்பதால் நேற்றும், அதற்கு முந்தைய நாளும் அவர் சொன்ன வாக்கியங்களுக்கு என்ன அர்த்தம் என்று அவன் கேட்க நினைத்தான். ஆனால் அதற்குள் குளியலறையில் இருந்து சித்தானந்தா வெளியே வந்து விட்டார். அதனால் அந்தக் கேள்வியைக் கேட்பதை ஷ்ரவன் தவிர்த்தான்.

 

அன்று காலை உணவுக்குப் பின் ஷ்ரவன் தோட்ட வேலைக்குப் போன போது தூரத்தில் குமரேசன் தெரிந்தான். தோட்ட வேலையிலும் கூட ஆண் துறவிகள் ஒரு பக்கம், பெண் துறவிகள் ஒரு பக்கம் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். குமரேசன் பெண் துறவிகள் வேலை பார்க்கும் பகுதியில் இருந்தான். தொலைவிலிருந்து இருவரும் பார்த்துக் கொண்டாலும் அவர்கள் இருவருமே அன்னியர்கள் போலவே இருந்தார்கள். தோட்ட வேலையே அவனுக்கு ஒதுக்கப்பட்டாலும் குமரேசனிடம் நெருங்கிப் பேசும் வாய்ப்பு அதிகமில்லை என்பது ஷ்ரவனுக்குப் புரிந்தது. ஒவ்வொரு பகுதியிலும் கண்காணிப்பாளன் ஒருவனாவது இருந்தான்.  யாராவது இருவர் பேசிக் கொள்வது தெரிந்தால் அவன் உடனடியாக அவர்களருகே சென்று விடுவதை ஷ்ரவன் கவனித்தான்.

 

கல்பனானந்தா ஷ்ரவனைப் பார்த்து நட்புடன் புன்னகைத்து அவன் செய்ய வேண்டிய வேலையை அவனுக்குத் தெரிவித்து விட்டுச் சென்று விட்டாள். அவள் முற்பகல், பிற்பகல் இரண்டு வேளைகளிலும், வேலை ஆரம்பிக்கும் சமயத்திலும், வேலை முடியும் சமயத்திலும் மட்டுமே இருப்பதை ஷ்ரவன் கவனித்தான். மற்ற சமயங்களில் அவளுக்கு என்ன பிரத்தியேக வேலை ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது தெரியவில்லை.

 

ஷ்ரவன் எங்கேயெல்லாம் வேலை செய்கிறானோ அந்த இடத்திலிருந்து கண்ணுக்கு எட்டிய தூரம் தெரிவதை எல்லாம் மிகவும் சூட்சுமமாகக் கவனித்து மனதில் குறித்துக் கொண்டான். உடன் இருக்கும் ஆட்களையும் கூர்ந்து கவனித்து யாரெல்லாம் யோகாலயத்தின் ஒற்றராக இருக்கக்கூடும் என்பதையும் கணித்து அந்த வகை ஆட்களிடம் சர்வ ஜாக்கிரதையாக நடந்து கொண்டான்.

 

ஆனால் எதுவுமே சைத்ரா வழக்குக்கு உதவுவது போல் இல்லை. சைத்ரா எந்த அறையில் தங்கி இருந்தாள், அவளுடன் தங்கியிருந்த துறவிகள் யார், இங்கு அவள் எப்படி ஆபத்தில் சிக்கினாள், அவளைக் காப்பாற்றும் உத்தேசத்தில் மொட்டைக் கடிதம் எழுதியது யார் என்றெல்லாம் கண்டுபிடிக்க எந்தவொரு வழியும் தெரியவில்லை. ஆண் துறவியாய் இருக்கும் அவன் அந்தப் பெண் துறவிகள் வசிக்கும் கட்டிடத்திற்குப் போகக்கூட முடியாது என்ற நிலைமையில் தான் இருக்கிறான். ஏதாவது ஒரு சின்னத் துப்பு கிடைத்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு சிறிதாவது முன்னேறலாம். ஆனால் அந்தச் சின்னத் துப்பும் அவனுக்கு அகப்படுவது போல் தெரியவில்லை...

 

டாக்டர் சுகுமாரனின் மனைவி இரவு கூர்க்கா மூலம், அவள் ஊரில் இல்லாத போது நடந்தது அனைத்தையும் அறிந்து கொண்டாள். கூர்க்கா சுகுமாரனை திருநீறோடும், சிலுவையோடும் பார்த்தது பற்றிச் சொன்ன போது அவளால் நம்பவே முடியவில்லை. ஆனால் மயான காளியின் படத்தை வாங்கும் அளவு முன்னேறி, டாமிக்குத் தாயத்து கட்டுமளவு நிலைமை முற்றியதை யோசித்துப் பார்க்கையில் அவளால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவளுக்கு அவர் தாயத்து கட்டிக் கொண்டதையாவது ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் டாமிக்குத் தாயத்து கட்டியது அபத்தத்திலும், அபத்தமாக அவள் அறிவுக்கே பட்டது. டாமியின் கழுத்திலிருந்து அதைக் கழட்டினால் கொலை விழும் என்று ஆக்ரோஷமாய் அவர் கத்தியது அவருக்குச் சித்தம் கலங்கி விட்டதை உறுதிப்படுத்தியது.

 

அவள் தன்னுடைய மிக நெருங்கிய தோழியிடம், இந்த விஷயங்களைச் சுருக்கமாகச் சொல்லி அழுத போது, அந்த தோழி, அவருக்கு ஆகாத யாரோ அவருக்குச் செய்வினை செய்திருக்கலாம் என்று சொல்லி மேலும் பயமுறுத்தினாள். அந்தச் செய்வினையே கூட அந்தத் தாயத்தில் இருக்கவும் கூடும் என்று அவள் தன் அனுமானத்தையும் சொன்னாள். அதனால் தான் அந்தத் தாயத்தை நாயிடமிருந்து கூட எடுக்க விடாமல் அவர் ஆக்ரோஷமாய் கத்துகிறார் என்று தோழி சுட்டிக் காட்டினாள். கத்துவது அவர் அல்ல, அவரைப் பீடித்திருக்கும் செய்வினை, அவரை விட்டு விலக மறுப்பதன் அறிகுறியே அது என்றும் சொன்னாள்.

 

அந்தத் தோழிக்குத் தெரியாதது எதுவுமில்லை என்ற அபிப்பிராயம் சுகுமாரனின் மனைவிக்கு உண்டு. தோழி சொன்னதெல்லாம், தற்போது நடந்து கொண்டிருப்பவைக்கு ஒத்தும் போவதால் இதற்கு என்ன தீர்வு என்று அவள் கேட்க, தோழி அவளுக்குத் தெரிந்த மந்திரவாதி ஒருவர் பெயரைச் சொன்னாள்.

 

டாக்டர் சுகுமாரனின் மனைவிஅந்த மந்திரவாதி எங்கேயிருக்கார்? கூப்பிட்டால் உடனடியாய் வருவாரா?” என்று ஆவலுடன் கேட்ட நேரத்தில் தான், தற்செயலாக டாக்டர் சுகுமாரன் அங்கே வந்தார்.

 

மனைவி கேட்ட கேள்விகள் காய்ச்சிய ஈயமாய் சுகுமாரனின் காதுகளில் விழுந்தன. ‘வரும் சோதனைகளுக்கு ஒரு அளவு இல்லையா?’

 

(தொடரும்)

என்.கணேசன்




என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்!

Thursday, May 15, 2025

சாணக்கியன் 161

 

ராக்ஷசரும் வெளியே கேட்ட சலசலப்புகளால் உறக்கம் கலைந்தார். அவர் தன் அறையை விட்டு வெளியே வந்த போது தான் அவரது காவலன் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டிருந்தான். கதவு திறக்கப்பட்ட போது வெளியே சேனாதிபதி பத்ரசால் நின்று கொண்டிருந்தான்.

 

பத்ரசால் அவரைப் பார்த்ததும் சற்று பதற்றத்துடன் சொன்னான். ”பிரபு. தலைநகருக்குள் எதிரியின் வீரர்கள் சிலர் எப்படியோ ஊடுருவியிருக்கிறார்கள். சிலரைச் சிறைப்படுத்தியிருக்கிறோம். சிலர் இன்னும் பிடிபடவில்லை. அதனால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. யார் வந்தாலும் கதவைத் திறந்து உள்ளே அனுமதிக்க வேண்டாம். நீங்களும் வெளியே வர வேண்டாம்.”

 

அவர் அவன் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு வேறு கேள்விகள் கேட்பதற்குள் பத்ரசால் அவரது காவலனிடம் சொன்னான். “சீக்கிரம் கதவை சாத்தி தாளிட்டுக் கொள். நானோ இளவரசர் சுதானுவோ வந்தால் ஒழிய கதவைத் திறக்க வேண்டாம்.”

 

காவலனும் கேள்விப்பட்ட தகவல்களால் அதிர்ச்சி அடைந்திருந்ததால் வேகமாகக் கதவைச் சாத்திக் கொள்ள ராக்ஷசரின் கேள்விகளும் அடைபட்டன.

 

   

லைகேது பர்வதராஜனிடம் கேட்டான். “தந்தையே இன்னமும் ஏன் ஆச்சாரியரும், சந்திரகுப்தனும் நம்மைச் சந்தித்துப் பேச வராமல் இருக்கிறார்கள்? அவர்கள் உத்தேசம் என்னவென்று நமக்குத் தெரியவில்லையே”

 

பர்வதராஜன் சொன்னான். “ஆச்சாரியரும், சந்திரகுப்தனும் நம்மை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பது மட்டுமல்லாமல் அதை வெளிக்காட்டாமல் இருக்கும் சிரத்தையையும் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். சிறைப்பட்டிருப்பது பாடலிபுத்திரம் மட்டுமல்ல மகனே. நாமும் தான். நம்முடன் இருக்கும் நம் படையினரும் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் போது நம்மால் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.”

 

மலைகேது கவலையுடன் கேட்டான். “இனி என்ன செய்வது தந்தையே?”

 

பர்வதராஜன் சொன்னான். “அவர்கள் வராவிட்டால் என்ன, நாம் போய் அவர்களைச் சந்திப்போம். இதில் கௌரவம் பார்க்க ஒன்றுமில்லை மகனே. காரியமாக வேண்டியவர்கள் கௌரவம் பார்ப்பது சரியல்ல. இரவில் செல்வோம். பகலில் சென்று, உங்களால் எங்கள் ரகசியம் வெளிப்பட்டு விட்டது என்று அவர்கள் நம்மைக் குற்றம் சாட்ட வேண்டாம்.”

 

அவன் சொன்னது போலவே இரவானதும் அவர்கள் இருவரும் சாணக்கியர் தங்கியிருந்த சிறு கூடாரத்திற்குச் சென்றார்கள். சாணக்கியர் எதோ படித்துக் கொண்டிருந்தார். அவர்களைப் பார்த்தவுடன் புன்னகையுடன் வரவேற்றார். “உங்கள் தகுதிக்கேற்ப ஆசனங்கள் வைத்து வரவேற்கும் வசதியில்லாததால் தான் நான் வரச் சொல்லவில்லை. இந்தத் துணிவிரிப்பில் அமர்ந்து இந்த வசதிக்குறைவைப் பொறுக்க வேண்டும் பர்வதராஜனே”

 

பர்வதராஜன் அவர் காலைத் தொட்டு வணங்கி விட்டு “காரியமாக வேண்டி நீங்கள் இந்த வசதிக்குறைவான இடத்தில் தங்கியிருக்கும் போது அற்ப சமயம் இந்த வசதிக்குறைவில் நாங்கள் இருப்பது ஒரு விஷயமேயில்லை ஆச்சாரியரே,” என்று சொல்லியபடி கஷ்டப்பட்டு அந்தத் துணிவிரிப்பில் அமர்ந்தான். மலைகேது அங்கு அமர்வதை ஒரு தண்டனையாகவே நினைத்தாலும் தந்தையைப் பின்பற்றி தானும் அமர்ந்தான்.

 

“இங்கு நீங்கள் வந்து இரண்டு நாட்களாகின்றன. நாம் இன்னும் எந்தத் தாக்குதலையும் ஆரம்பிக்காமல் இருக்கின்றோம். இருவரும் வேடத்தையும் கலைக்காமல் இருக்கிறீர்கள். நாம் இன்னும் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் ஆச்சாரியரே?”

 

சாணக்கியர் சொன்னார். “நாம் இங்கே செயலற்று இருப்பது போல் தோன்றினாலும் நம் ஆட்கள் பாடலிபுத்திர நகருக்குள்ளே சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் பர்வதராஜனே. அவர்கள் வேலை முடிந்தவுடன் நமக்கு ரகசிய சமிக்ஞை தருவார்கள். பின் நாம் இயங்குவோம்”

 

பர்வதராஜன் இனி சுற்றி வளைத்துப் பேசுவதில் அர்த்தமில்லை என்று நினைத்தவனாகச் சொன்னான்.ஆச்சாரியரே. உங்களிடம் நான் பெருமதிப்பு வைத்திருக்கிறேன். ஆனால் தங்கள் ரகசிய திட்டங்கள் என்னைச் சலிப்பில் ஆழ்த்துகின்றன. நான் மதிக்கும் மனிதர்களிடம் எதையும் மறைத்துப் பேசும் பழக்கமற்றவன் என்பதனால் தான் உண்மையை மறைக்காமல் சொல்கிறேன்.”

 

”வெற்றியடைய விரும்பும் மனிதன் தன் காரியம் முடியும் வரை எதிலும் சலித்துப் போகக்கூடாது பர்வதராஜனே. உண்மையில் நாம் வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறோம். இந்தச் சமயத்தில் பொறுமையிழக்கக்கூடாது. எந்த நேரத்திலும் செயல்படத் தயாரான உற்சாக மனநிலையில் இருக்க வேண்டும்”   

 

“என்ன நடக்கிறதென்றே தெரியாமல் இருக்கையில், எந்த நம்பிக்கையில் செயல்படத் தயாரான உற்சாக மனநிலையில் இருப்பது ஆச்சாரியரே.”

 

“அஸ்தமித்திருக்கும் சூரியன் நாளை மறுபடி கிழக்கில் உதிக்கும் என்று எந்த நம்பிக்கையில் இருக்கிறாய் பர்வதராஜனே. சூரியன் போகின்ற வழி உனக்குத் தெரியுமா? சூரியனை இயக்கும் சக்தியின் போக்கு உனக்குத் தெரியுமா? எதுவுமே தெரியாமல் நாளை விடியும், சூரியன் கிழக்கில் உதிக்கும் என்று எந்த நம்பிக்கையுடன் உறங்குகிறாய்?”

 

பர்வதராஜன் பெருமூச்சு விட்டான். இன்னும் ஏதாவது சொல்லி அவரிடமிருந்து கூடுதல் தத்துவங்கள் கேட்கும் மனநிலையில் அவனில்லை…


சின்ஹரன் மிக ரகசியமாய் ஜீவசித்தியைச் சந்தித்தான். “எல்லாரும் தயாரல்லவா?”

 

ஜீவசித்தி சொன்னான். “தயாராகவே இருக்கிறார்கள். அங்கே என்ன நிலைமை?”

 

“தனநந்தனும் ராக்‌ஷசரும் நம் திட்டங்களுக்கு இடைஞ்சல் செய்ய முடியாதபடியான ஏற்பாடுகள் செய்து விட்டோம். இனி வேகமாக நாம் செயல்பட வேண்டும். நகரத்தின் பிரதான வாயிலில் நம் காவலர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்?”

 

மூன்று பேர் இருக்கிறார்கள். ஆனால் வெளியே முற்றுகை உள்ளதால் வாயிற்காவலை கூடுதல் காவல் வீரர்களை நிறுத்தி பலப்படுத்தி இருக்கிறார்கள் என்றாலும் அவர்களைச் சமாளிக்க, தயாராக மறைந்திருக்கும் நம் மற்ற வீரர்கள் போதும். வெளியிலிருந்து நம் படை உள்ளே நுழைவதைத் தடுக்க உறக்கத்திலிருக்கும் மகதப்படைகள் விரைந்து வந்துவிடக் கூடாது. அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.”

 

“உறங்கிக் கொண்டிருக்கும் மகதப்படையினர் அவ்வளவு வேகமாக வந்து விட மாட்டார்கள். நம் படைகளும் உறங்கிக் கொண்டிருப்பதாக அவர்கள் எண்ணிக் கொண்டிருப்பதால் அவர்கள் நம் படை உள்ளே நுழையும் என்று சிறிதும் எதிர்பார்ப்பில் இல்லை. அறிந்து அவர்கள் கிளம்பி வருவதற்குள் எல்லாம் முடிந்து விடும்.”

 

“பத்ரசால்?”

 

“அவன் நம் படைகளை எதிர்த்துப் போராடுவதில் தீவிரமாகவே இருப்பான். அவன் என் உண்மை அடையாளத்தைத் தெரிந்து கொள்ளாத வரை அவனை நம் விருப்பத்திற்குத் திசை திருப்பலாம். ஆனால் உண்மையை அவன் தெரிந்து கொண்டால் அவனைச் சமாளிப்பது கஷ்டம் தான்...”

 

”அவனிடமும் சுதானுவிடமும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் நண்பரே. இருவரும் ஆபத்தானவர்கள்”

 

“ஆபத்தான வேலையில் ஈடுபடும் போது ஆபத்தானவர்களைத் தவிர்க்க நமக்கு வழியில்லை நண்பரே. ஆச்சாரியரும் சந்திரகுப்தனும் உள்ளே நுழைந்து விட்டால் பின் நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. அது வரை கவனமாகவே இருக்க வேண்டும். இருப்போம்”

 

 

(தொடரும்)

என்.கணேசன்  







Wednesday, May 14, 2025

முந்தைய சிந்தனைகள் 125

 என் நூல்களில் இருந்து சில சிந்தனை அட்டைகள்...












Monday, May 12, 2025

யோகி 102


சேதுமாதவன் வீட்டுக்கு ஒரு பெரிய காரில், சுமார் ஐம்பது வயது மதிக்கத் தக்க ஒரு நபர் வந்திறங்கினார். காரில்போலீஸ்என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. கம்பீரமான தோற்றமும், மிடுக்கான நடையும் கொண்ட அந்த நபர் சேதுமாதவனிடம் தன்னை குற்றவியல் சிறப்புப் பிரிவு டி.எஸ்.பி குணசேகரன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவருடைய அடையாள அட்டையையும் காட்டினார். சேதுமாதவன் வணக்கம் தெரிவித்து, அவரை அமரச் சொன்னார்.

 

நாற்காலியில் அமர்ந்த குணசேகரன் கேட்டார். “நீங்க தான் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியா?”

 

இல்லை. அது என் மகன். இப்ப அவன் உயிரோட இல்லை. சில மாசங்களுக்கு முன்னாடி தற்கொலை பண்ணிகிட்டான்.” என்று சேதுமாதவன் சொன்னார்.

 

குணசேகரன் முகத்தில் அதிர்ச்சியும், இரக்கமும் கலந்து தெரிந்தன. பின் மெல்லச் சொன்னார். “க்ரைம் ப்ராஞ்ச் ஸ்பெஷல் விங்ல ஒவ்வொரு வருஷமும், போலீஸ் ஸ்டேஷன்கள்ல கொடுக்கப்பட்ட கேஸஸ்ல சிலதை எடுத்து அதெல்லாம் சரியாய் விசாரிக்கப்பட்டிருக்கான்னு இன்ஸ்பெக்ஷன் பண்றது வழக்கம். அந்த வகைல டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தன் மகள் சைத்ரா உயிருக்கு ஆபத்துன்னு சந்தேகப்பட்டு கொடுத்த புகாரும் தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கு. அதனால அதை விசாரிக்க தான் நான் வந்திருக்கேன்.”

 

சேதுமாதவன் வறண்ட குரலில் சொன்னார். “கிருஷ்ணமூர்த்தியும் உயிரோட இல்லை. சைத்ராவும் உயிரோட இல்லை.”

 

குணசேகரன் ஒரு குறிப்பேடும் பேனாவும் எடுத்துக் கொண்டே கேட்டார். “என்ன ஆச்சு?”

 

சேதுமாதவன் சொன்னார். “கோர்ட்ல ஹேபியஸ் கார்பஸ் கேஸ் போட்டோம். சைத்ராவை அவங்க கோர்ட்டுக்கு கூட்டிகிட்டு வந்தாங்க. தனக்கு ஆபத்து எதுவும் இல்லைன்னு அவள் கோர்ட்டில் சொன்னாள். அதோட அந்தக் கேஸ் முடிஞ்சுடுச்சு. கொஞ்ச நாள் கழிச்சு கோவிட்ல அவள் இறந்துட்டாள். அந்த துக்கம் தாங்க முடியாமல் கிருஷ்ணமூர்த்தியும் இறந்துட்டான்.”

 

குணசேகரன் தன் குறிப்பேட்டில் எதையோ எழுதிக் கொண்டே கேட்டார். “உங்கள் பேத்தி மரணத்தில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா?”

 

இல்லை

 

குணசேகரன் சொன்னார். “ஏதாவது கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் நீங்கள் என் கிட்ட தாராளமாய் சொல்லலாம். நாங்க மேல்மட்டத்துல ரகசியமாய் மறுவிசாரணை செய்ய முடியும். சந்தேகம் ஏதாவது வந்து தனிப்பட்ட முறையில உண்மையைக் கண்டுபிடிக்க நீங்கள் தனியார் யாரையாவது ஏற்பாடு செய்திருந்தாலும் அதை மறைக்காமல் சொல்லணும். அப்படி ஏதாவது இருந்து நீங்கள் சொல்லலைன்னா அது, போலீஸ் கிட்ட உண்மையை மறைக்கற மாதிரியாயிடும். சட்டப்படி அது குற்றம்.”

 

சேதுமாதவன் விரக்தியாகச் சொன்னார். “வழக்கு, விசாரணைக்கெல்லாம் ஏற்பாடு செய்ய எனக்கு மனசு, பணம், காலம் மூனுமே இல்லை. எனக்கும் சாவு வந்து அவங்க கூட நானும் போய்ச் சேர்ந்துக்கணும்கிற ஒரு ஆசை மட்டும் தான் இப்ப இருக்கு.”

 

குணசேசகரன் முகத்தில் இரக்கத்தைக் காட்டி விட்டுச் சொன்னார். “உங்களுக்குப் பதிலாய், உங்கள் சார்பாய், வேற யாராவது அது சம்பந்தமான முயற்சி எடுத்துகிட்டு இருக்காங்களா?”

 

என்னைத் தவிர வேற யாருமே இங்க இல்லையே

 

குணசேகரன் யோசனையுடன் சில வினாடிகள் மௌனமாய் இருந்துவிட்டுக் கேட்டார். ”உங்களுக்கு அந்த வழக்கு சம்பந்தமாய் ஏதாவது சந்தேகம் இருக்கா?”

 

இல்லை.”

 

குணசேகரன் சொன்னார். “அப்படின்னா, அந்த வழக்கு விசாரணை சம்பந்தமாய் உங்களுக்கு யார் மேலயும், புகாரோ, சந்தேகமோ இல்லைன்னும் மறு விசாரணைக்கு அவசியம் இல்லைன்னும் நான் எழுதிக்கலாமா?”

 

தாராளமாய் எழுதிக்கலாம்.”

 

குணசேகரன் வணக்கம் தெரிவித்து விட்டுக் கிளம்பினார். அவர் கார் ஏறிக் கிளம்புகையில் சேதுமாதவன் அந்தக் காரின் எண்ணை மனதில் குறித்துக் கொண்டார். பின் வீட்டுக்குள் வந்தமர்ந்து முதல் வேலையாக ஷ்ரவன் கொடுத்திருந்த அலைபேசி எண்ணுக்குப் போன் செய்தார்.

 

நான்கைந்து முறை அடித்த பிறகு போன் எடுக்கப்பட்டது. மறுபக்கத்திலிருந்து எந்தச் சத்தமும் இல்லை. மறுபக்கத்திலிருந்து பதில் எதுவும் வராது என்று ஷ்ரவன் முன்பே சொல்லி இருந்ததால் சேதுமாதவன் நேரடியாக விஷயத்தை விரிவாகச் சொல்லி, அந்தப் போலீஸ் வாகனத்தின் எண்ணையும் சொல்லி வைத்து விட்டார்.

 

வந்து விசாரித்த காரணம் தெரியா விட்டாலும், வந்து போன ஆள் போலி என்பதில் அவருக்குச் சந்தேகம் இல்லை.

 

பாண்டியனிடம் கண்ணன், தங்கள் ஆள் சேதுமாதவனிடம் போய்ப் பேசி விட்டு வந்த பேச்சின் ஒலிப்பதிவைத் தந்தார். அதை முழுவதுமாகக் கேட்டு விட்டு பாண்டியன் சொன்னார். “கிழவன் அழுத்தக்காரனாய் இருப்பான் போலருக்கு

 

அப்படி இல்லாட்டி மகன், பேத்தி இறந்ததுக்கப்பறமும் கிழவன் உயிரோட இருக்க முடியுமா?” கண்ணன் சொன்னார்.

 

ஆமென்று தலையசைத்த பாண்டியன் கேட்டார். “நம்ம யோகாலயத்தை வேவு பார்க்கறது யார்னு ஏதாவது துப்புக் கிடைச்சுதா?”

 

இல்லை. அவங்க போலீஸ், சிபிஐ, பெரிய துப்பறியும் நிறுவனம் இதில் ஏதாவது ஒன்றாய் இருக்கலாம். அவங்க வேவு பார்க்கும் விதத்துல அந்த அளவு புத்திசாலித்தனம் தெரியுது

 

அந்தத் தகவல் பாண்டியனை யோசிக்க வைத்தது. அவர் சொன்னார். “ஆனால் அந்தக் கிழவன் மேல நாம சந்தேகப்படறதுலயும் அர்த்தமில்லை. இந்த அளவு செல்வாக்கு உள்ள ஆளாய் அவன் இருந்திருந்தால் அவன் ஆரம்பத்துல பேத்தி, மகன் இருக்கறப்பவே பயன்படுத்தியிருக்கலாமே?”

 

கண்ணன் சொன்னார். “அது தான் குழப்பமாயிருக்கு.”

 

பாண்டியன் பற்களைக் கடித்துக் கொண்டு சொன்னார். “வேவு பார்க்கறதுல எவனாவது ஒருத்தன் நம்ம கைல கிடைச்சாலும் போதும். கண்டுபிடிச்சுடலாம்

 

கண்ணன் சொன்னார். “எல்லாருக்கும் தெரியற மாதிரி பிடிக்கறதா இருந்தா எப்படியாவது பிடிச்சிரலாம். ஆனால் இப்ப ரோட்டுல போறவன் வர்றவன் கைல எல்லாம் மொபைல் ஃபோன் இருக்கு. என்ன நடந்தாலும் வீடியோ எடுத்து சோஷியல் மீடியால போட்டு விட்டுடறான்க. அதனால தான் ரொம்ப யோசிக்க வேண்டியதாயிருக்கு. இதுவே யோகாலயத்துக்கு உள்ளேன்னு சொன்னால் நாம் யோசிக்கவே வேண்டியதில்லை.”

 

ன்று மாலை ஷ்ரவன் தோட்ட வேலை முடிந்து வந்த பின், மூவரும் சத்சங்கத்திற்குக் கிளம்பினார்கள். ஒரே சமயத்தில் செல்வதால், பக்கத்து அறைகளிலிருந்து வரும் துறவிகளும் சற்று முன்னும் பின்னும் அவர்களுடன் வந்தாலும் துறவிகளுக்கு இடையே புன்னகையைத் தவிரக் கூடுதலாக பேச்சுகள் இருக்கவில்லை. சித்தானந்தாவே கூட அறைக்குள்ளே அவனுடன் இயல்பாகப் பேசினாலும் அறைக்கு வெளியே அவனுடன் அதிகம் பேசுவதைத் தவிர்த்தார். பேசினால் அழைத்துக் கண்டிப்பார்களோ என்னவோ என்ற சந்தேகம் ஷ்ரவனுக்கு வந்தது.

 

அன்றைய சத்சங்கத்தில் துறவி யாரும் பேசுவதற்குப் பதிலாக பிரம்மானந்தா ஐ ஐ டி டில்லியில் பேசிய பேச்சு ஒன்றை ஒளிபரப்பினார்கள். தலைப்புயோகாவும், தியானமும் நவீன காலத்திற்கு எந்த அளவு உதவும்?”. அதுகுறித்து, யோக சூத்திரங்களிலும், மற்ற நூல்களிலும் சொல்லப்பட்டவற்றை அதில் அழகாகப் பேசியிருந்தார் பிரம்மானந்தா. ஆனால் வழக்கமாகவே தன் பராக்கிரமங்களையும், அசாதாரண சக்திகளையும் கூச்சமில்லாமல் பறைசாற்றும் பிரம்மானந்தா அந்தக் காணொலியில் தன் கற்பனையைப் பறக்க விட்டிருந்தார்.

 

நான் கோரக்கரால் அழைக்கப்பட்டு சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கத்தின் அருளால் நனைக்கப்பட்ட அந்த சம்பவத்திற்குப் பின், நான் தியானம் செய்யும் நாட்களில் எல்லாம் என்னைப் பார்த்தவர்களுடைய கண்கள் கூசும். அவர்கள் என்னை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கண்களைத் தாழ்த்திக் கொள்வார்கள். அந்த அளவு என்னுடைய யோகசக்தி என்னை ஒளிமயமாக்கி இருந்தது. இது எனக்கே தர்மசங்கடத்தைத் தந்தது. அதனால் நான் என் இறைவன் சுந்தர மகாலிங்கத்தை வேண்டி என் யோகசக்தியின் வீச்சை குறைத்துக் கொண்டேன். என் முழு யோகசக்தியின் வீச்சு முன்பு போலவே இன்றும் தெரியுமானால் என் எதிரே நீங்கள் இத்தனை பேர் உட்கார்ந்திருக்க முடியாது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் யோகசக்தியின் வலிமை எல்லையில்லாதது. அந்த யோகசக்தியை மட்டும் நீங்கள் பெற்று விட்டால் எதிலும் உங்களுக்கு உங்கள் கற்பனை தான் எல்லையாக இருக்க முடியும்...” 

 

இந்தக் காணொளியை ஷ்ரவன் இதுவரை பார்த்திருக்கவில்லை. இது அவர் சில நாட்களுக்கு முன் பேசியதாக இருக்க வேண்டும். ஷ்ரவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான். அதை உணர்ந்தவர் போல் அவனுக்கு இரண்டு வரிசை முன்பாக அமர்ந்திருந்த முக்தானந்தா திடீரென்று அவனைத் திரும்பிப் பார்த்தார்.  அவன் பிரம்மானந்தாவின் காணொளியில் மூழ்கியிருப்பது போல் காண்பித்துக் கொண்டான். அவர் மறுபடி திரும்பிக் கொண்டார்.

 

சாதாரணமாக எதையும் அதிகமாய் லட்சியம் செய்பவராகத் தோன்றாத அவர், பிரம்மானந்தரின் அந்தப் பேச்சை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்று பார்த்தது போல் தான் அவனுக்குத் தோன்றியது. புதிராய் மட்டுமல்லாமல், வில்லங்கமாகவும் இருக்கிறாரே என்று ஷ்ரவன் மனதில் எண்ணிக் கொண்டான்.

 

(தொடரும்)

என்.கணேசன்