சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 30, 2021

இல்லுமினாட்டி 122



சாலமன் சொன்னபடியே சனிக்கிழமை மதியமே எர்னெஸ்டோவின் கடந்த இரண்டு வாஷிங்டன் பயணத்தில் நடந்ததை எல்லாம் விவரமாக விஸ்வத்துக்கு அனுப்பி இருந்தார். எர்னெஸ்டோ எந்தெந்த நேரத்தில் யார் யாரைச் சந்தித்தார், எங்கெல்லாம் போனார், என்னவெல்லாம் சாப்பிட்டார், எந்த நேரத்தில் தூங்கினார், எழுந்தார் என்ற எல்லா விவரங்களும் அவர் அனுப்பியதில் இருந்தன. அவன் அதையெல்லாம் அவர் செய்து கொண்டிருப்பதை மனக்கண்ணில் தெளிவாகப் பார்க்கும் அளவுக்கு ஆழமாகப் படித்தான்.  ஜிப்ஸி அவன் அந்த விவரங்களில் மூழ்கிப் போனதைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் விஸ்வத்திடம் எந்தக் கேள்வியும் கேட்கவோ, அவனுக்கு ஏதாவது ஆலோசனை கூறவோ அவன் முற்படவில்லை. விஸ்வமும் அந்த விஷயமாக அவனிடம் எந்த உதவியும் கேட்கவில்லை. பல யோசனைகளில் மூழ்கிப் பலவிதமாகத் திட்டங்கள் போட்டு அவற்றில் எதை நிறைவேற்றுவது என்று முடிவெடுக்க வேண்டிய கட்டம் வந்த போது மட்டும் அவன் ஜிப்ஸியிடம் கேட்டான்.

“எர்னெஸ்டோ அவர் பங்களாவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் நான் எப்படியாவது அந்த ஆளை நெருங்கி விடுகிறேன் என்று வைத்துக் கொள் நண்பா. என் வேகத்தில் நான் அவரை நெருங்கும் முன் அக்‌ஷய் தடுக்க வழியிருக்கிறதா?”

இப்போது சேர்த்திருக்கும் நரம்பு மண்டல சக்தியை வைத்து விஸ்வம் அக்‌ஷய் மனதையும் அறிவையும் ஊடுருவி அவனையும், அவன் சக்திகளையும் அளவெடுக்க முடியும், இப்போது அவன் ஜிப்ஸியிடம் கேட்ட கேள்விக்கு அவனே பதில் கண்டுபிடித்து விடவும் முடியும் ஆனால் அதில் அவன் இப்போது சேமித்திருக்கும் சக்தியின் ஒரு கணிசமான அளவை இழக்க வேண்டி வரும். அவனுடைய முந்தைய உடல் என்றால் அது அவனுக்குப் பெரிய விஷயமல்ல. மாஸ்டரைப் போன்ற ஆள்களிடமே தேவைப்படும் நேரத்தில் ஊடுருவி அறிய வேண்டியதை அறிந்தவன் அவன். அதைச் செய்யலாம் என்று நினைத்து தான் அக்‌ஷயின் மீது கவனத்தைக் குவிக்க அவன் புகைப்படத்தைக் கூட ஜிப்ஸி மூலம் தருவித்திருந்தான். ஆனால் அக்‌ஷயைப் போன்ற கூடுதல் சக்தியிருக்கும் ஒரு ஆளை அறிய அவன் அதிகமாக சக்தியை விரயம் செய்ய வேண்டியிருக்கும் என்பதால் அதைத் தவிர்த்து ஜிப்ஸியிடம் அந்தக் கேள்வியைக் கேட்டான்.

ஜிப்ஸி சொன்னான். “இருக்கிறது. அது மட்டுமல்ல உன் நரம்புகளைச் சுண்டி விசேஷ முடிச்சுகள் போட்டு உன்னைக் கோமா நிலைக்குப் போக வைக்க முடிந்த அளவு வேகமும், திறமையும் கூட அவனிடம் இருக்கிறது”

ஏற்கெனவே போதையால் முழு நரம்பு மண்டலமும் பலவீனப்பட்டிருக்கும் இந்த உடலில் இப்போது தான் எல்லாவற்றையும் ஓரளவு பலப்படுத்தி வரும் விஸ்வம் அப்படி ஒரு விஷப் பரிட்சையில் இறங்க விரும்பவில்லை. அக்‌ஷய் இருக்கையில் எர்னெஸ்டோவை அவன் நெருங்க விரும்பவில்லை. க்ரிஷை அப்புறப்படுத்தியது போல அக்‌ஷயையும் அப்புறப்படுத்தினால் என்ன என்று தோன்றியது.

உடனே அவன் சாலமனுக்குப் போன் செய்தான். “நண்பரே. எனக்கு அக்‌ஷயின் இந்திய விலாசம் வேண்டும்.”

சாலமன் தர்மசங்கடப்பட்டார். இது வரை எத்தனையோ செய்தாகி விட்டது. இது வரை சொன்ன தகவல்கள் பற்றி வெளியே தகவல் தெரிந்தாலே ஆபத்து. இதில் அக்‌ஷயின் விலாசம் வேறு கேட்கிறான். அக்‌ஷயின் விலாசம் வெளியே தெரிந்தால் கண்டிப்பாக இல்லுமினாட்டியின் உளவுத் துறை மூலமாகத் தான் வெளியாயிருக்கிறது என்பது இம்மானுவலுக்குப் புரிய அதிக நேரமாகாது. அந்த ஒரு சந்தேகம் வந்தால் அதை யார் வெளிப்படுத்தியிருக்கக்கூடும் என்றும் சீக்கிரமே இம்மானுவல் கண்டுபிடித்து விடுவான். அவர் கூடுதலாக இங்கே தங்கியிருப்பதே அவன் மனதில் இன்னேரம் சந்தேகத்தைக் கண்டிப்பாக ஏற்படுத்தியிருக்கும்…

சாலமன் சொன்னார். “இது வெளியானால் என் மேல் கண்டிப்பாக இம்மானுவலுக்குச் சந்தேகம் வரும் சார். ஏனென்றால் உளவுத்துறை தவிர இல்லுமினாட்டி உறுப்பினர்கள் யாருக்கும் கூட அமானுஷ்யன் பற்றித் தெரியாது… நான் இருக்க வேண்டிய காலம் கழிந்து கூட எதோ ஒரு காரணம் சொல்லி இங்கே இருந்து கொண்டு வருகிறேன்….”

விஸ்வம் சொன்னான். “எனக்குப் புரிகிறது நண்பரே. ஆனால் அவன் இருக்கும் வரை கிழவரை நான் நெருங்குவது கஷ்டம் என்று தோன்றுகிறது. இந்த ஒரு உதவியை மட்டும் செய்யுங்கள். இனி கண்டிப்பாக உங்களிடம் வேறு உதவி கேட்க மாட்டேன். நீங்கள் உளவுத்துறை தலைவன் ஆன பிறகு இல்லுமினாட்டியின் தலைவராகத் தான் நான் அடுத்த உதவியைக் கேட்பேன்”

அந்த வார்த்தைகள் இனித்தன. எல்லாம் தலைக்கு மேல் போய் விட்டது, இனி ஜாண் என்ன முழமென்ன என்று சாலமன் நினைத்தார். அக்‌ஷயை இது வரை தேடி வந்த தலிபான் கூட்டம் இப்போது தானாக அவன் இருக்குமிடத்தை  எப்படியோ கண்டுபிடித்து விட்டது என்று கூட நினைக்க வைக்கலாம். இத்தனை உதவிகள் இவனுக்குச் செய்து இது ஒன்றைச் செய்யாமல் விட்டால், இவனால் கிழவனைக் கொல்ல முடியாமல் போனால் அது தான் பேராபத்து…. மெல்ல அக்‌ஷயின் இந்திய விலாசத்தையும் அவர் அனுப்பி வைத்தார்.  இனியும் இங்கிருப்பது ஆபத்து என்று நினைத்தவராக இம்மானுவலைத் தொடர்பு கொண்டு அலுவல்கள் சம்பந்தமாக ஐந்து நிமிடங்கள் பேசி விட்டு இப்போது வாஷிங்டன் செல்லக் கிளம்பிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.

இம்மானுவல் சொன்னான். “நீங்கள் வாஷிங்டன் போக வேண்டாம். நான் எப்படியும் போகிறேன் அல்லவா, அங்கேயுள்ள வேலைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். ஈரானில் ஒரு முக்கிய வேலை இருக்கிறது….”

இம்மானுவல் ஈரான் வேலையை விவரித்தான். முடிவில் சரியென்று சொன்ன சாலமனுக்குப் புரிந்து விட்டது. உறுதியாகத் தெரியா விட்டாலும் இம்மானுவலுக்கு அவர் மேல் சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது…. எர்னெஸ்டோ வாஷிங்டனில் இருக்கும் நேரத்தில் சாலமன் அங்கே இருப்பதை இம்மானுவல் விரும்பவில்லை. இனி சந்தேகம் விலகாமல் முக்கிய இடங்களில் அவர் இருப்பதை அவன் கண்டிப்பாகத் தவிர்ப்பான். இந்த விஷயத்தில் அவர் அவன் மேல் குற்றம் காணவில்லை. அவன் இடத்தில் அவர் இருந்தால் அவரும் இதைத் தான் செய்திருப்பார். ஆனால் அவனுக்கு எப்படிச் சந்தேகம் வந்தது என்பது அவருக்குத் தெரியவில்லை. அவர் கூடுதலாக இங்கேயே இருந்தார் என்பது மட்டுமே சந்தேகத்திற்குக் காரணமாக இருந்து விட முடியாது. சில நேரங்களில் அது எங்கும் நடப்பது தான். சந்தேகப்பட கூடுதலாக அவனுக்கு ஏதோ கிடைத்திருக்கிறது. அது என்னவாக இருக்கும்?

  
க்‌ஷயின் இந்திய விலாசம் கிடைத்தவுடனேயே விஸ்வம் ஜிப்ஸியிடம் அலைபேசியைக் கேட்டு வாங்கினான். அவன் சாலமன் தந்திருந்த அலைபேசியில் சாலமனையும், வாங் வேயையும் தவிர வேறு யாரையும் அழைப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தான். ஜிப்ஸியின் அலைபேசி பாதுகாப்பானது….

தலிபான் தலைவனின் ரகசிய அலைபேசி எண் அவனிடம் இருந்தது. அவன் பலமுறை அவனுடன் தொடர்பில் இருந்திருக்கிறான். அவனுக்குப் பணம் அனுப்பி உதவியும் புரிந்திருக்கிறான். அவன் பண உதவி செய்திருக்கும் தீவிரவாத அமைப்புகளில் தலிபானும் ஒன்று. பழைய உடலில் இருந்து அவன் பேசியிருந்தால் அவன் குரலை வைத்தே அந்த தலிபான் தலைவன் அவனை அடையாளம் கண்டிருப்பான். அந்த அளவு ஒரு காலத்தில் தொடர்பில் இருந்தவன் அவன். இந்த முறை விஸ்வத்தின் குரல் மாறியிருப்பதால் புதிய குரலில் பழைய ஆளாகப் பேசுவதும், புரிய வைப்பதும் மிகவும் கஷ்டம். அதனால் அவன் விஸ்வத்தின் ஆளாகப் பேசுவது என்று தீர்மானித்தான்.

தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்ததால் தலிபான் தலைவன் மிகவும் எச்சரிக்கையுடனும் சந்தேகத்துடனும்ஹலோ” என்றான்.

விஸ்வம் சொன்னான். “அமானுஷ்யன் என்ற ஆளை நீங்கள் பல காலமாகத் தேடிக் கொண்டிருந்தீர்கள் அல்லவா? அவன் இருக்குமிடம் தெரிந்து விட்டது. உங்கள் இந்திய நண்பர் விஸ்வாஸ்ஜீ தான் கண்டுபிடித்தார். அவன் இப்போது வெளிநாட்டில் இருக்கிறான். அவன் குடும்பம் தான் இந்த விலாசத்தில் இருக்கிறது. நீங்கள் குடும்பத்தார் மூலமாக அவனை அங்கே வரவழைத்துவிட முடியும்…. அவர் அவன் விலாசத்தை உங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார். குறித்துக் கொள்ளுங்கள்….”

(தொடரும்)
என்,கணேசன்   



Wednesday, September 29, 2021

மேன்மையான இதயமும், மேலான சக்திகளும்!

 

ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள்28  

 

ண்மையாக ஒருவன் ஆன்மிகப்பயணத்தில் ஈடுபடும் போது அவன் போக வேண்டிய வழிகளையும், அடைய வேண்டிய நிலைகளையும் அவன் மன ஆர்வமும், இறைசக்தியும் சேர்ந்து முடிவெடுக்கின்றன. அவனுக்கு மேற்போக்கான எண்ணங்களும், ஆர்வமும் இருக்குமானால் அவன் அடைகின்ற முன்னேற்றமும் மேற்போக்காகவே இருக்கும். அதற்கான இறை ஆசிர்வாதமும் அந்த அளவிலேயே இருக்கும். அவனுடைய நோக்கமும், மன உறுதியும் மிக உயர்ந்த அளவில் இருக்குமானால் அதற்கான இறை சக்தி ஆசிர்வாதமும் உன்னதமாகவே இருக்கும். கர்னல் ஓல்காட்டின் ஆன்மிக ஆர்வமும், சேவை மனப்பான்மையும் அவரை இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் பயணிக்க வைத்து அங்கேயும் சில அனுபவங்களைத் தந்தன.

 

கர்னல் ஓல்காட் இலங்கைக்குப் போயிருந்த வேளையில் இலங்கையில் புத்தமதத்தின் ஒரு பிரிவு நிறைய மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருந்தது. அந்த மாற்றத்திற்கான தேவையை உணர ஆரம்பித்தவர்கள் பழைய, தேக்கமான ஆன்மிக முறைகளிலிருந்து, உணர்வுபூர்வமான, அறிவுபூர்வமான முன்னேற்றங்களுக்குப் போக முயன்று கொண்டிருந்தார்கள். கர்னல் ஓல்காட் எந்த மத நம்பிக்கையிலும் தங்கி அந்த முறையே சிறந்தது என்று நம்புபவர் அல்ல. அவர் புத்த மத நூல்களில் ஆர்வம் காட்டிப் படித்தறிந்து அவற்றின் சாராம்சத்தை ஒரு நூலாக வெளியிடுவது என்று முடிவெடுத்தார். அதற்கு அங்கே பலர் ஆதரவு தெரிவித்தனர். ஒரு அமெரிக்கர், தியோசபிகல் சொசைட்டி என்ற புதியதொரு அமைப்பை அமெரிக்காவிலும், இந்தியாவிலும் உருவாக்கியவர் நம்முடைய மதத்தைக் குறித்தும் ஆர்வம் காட்டுகிறாரே அதற்கு நாம் கண்டிப்பாக அவருக்கு ஆதரவு காட்ட வேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள். அவர்கள் கர்னல் ஓல்காட் இலங்கையில் பல இடங்களில் பேச ஏற்பாடு செய்து அதற்குக் கட்டணம் வசூலித்து அந்த வசூல் தொகையை புத்தக அச்சடிப்புக்கு என ஒதுக்கி வைத்தார்கள். கர்னல் ஓல்காட்டின் பேச்சுகள் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலும் நன்றாக ஆகி எளிமையான, பல ஆழமான விஷயங்கள் அடங்கிய ஒரு நூல் இலங்கையில் வெளியானது. அது பலரும் பாராட்டும் நூலாக அமைந்தது.

 

அடுத்ததாக கர்னல் ஓல்காட் சிறையிலிருக்கும் குற்றவாளிகளைத் திருத்தி நல்வழிப்படுத்தி அவர்களை ஆன்மிகத்திற்குத் திருப்பும் நல்லதொரு முயற்சியில் ஈடுபட்டார். அதற்கு நிறைய பணம் தேவைப்பட்டது. அதற்குச் சாதாரண பொதுமக்களிடம் அவரவர் சக்திக்குத் தகுந்தாற்போல் நன்கொடை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்கள். அதற்கு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் அவர்களுடைய சமூகக் குற்றவாளிகளை நல்வழிப்படுத்து என்ற உயர்ந்த நோக்கத்தைச் சொல்லி, பணம் வசூலித்தார்கள்.

 

அப்போது ஒரு ஏழை மூதாட்டி வீட்டுக்குள் சென்று ஒரு ரூபாய் எடுத்து வந்து நன்கொடை அளித்தார். ஆடைகள் நைந்திருந்தன. ஆங்காங்கே கிழிசல்கள் தைக்கப்பட்டிருந்தன. அவர் கண்ணீர் மல்க சொன்னார். “இத்தனை குறைவான தொகை தருகிறேன் என்று தயவுசெய்து தவறாக நினைத்து விடாதீர்கள். நான் மாவரைத்து சம்பாதித்து வருகிறேன். என் கணவர் நோய்வாப்பட்டு படுத்த படுக்கையாய் இருக்கிறார். இந்த ஒரு ரூபாய் எனக்குப் புதிய ஆடை வாங்க நான் சிறுகச் சிறுகச் சேமித்தது. எனக்கு ஆடை வாங்குவதை விட சமூக இளம் குற்றவாளிகளைத் திருத்தும் பணி உயர்வானது. அதில் நான் பங்களிக்க விரும்புகிறேன். இனி ஒரு ஆறு மாதம் பணம் சேமித்து பிறகு எனக்கு ஒரு ஆடை வாங்கிக் கொள்கிறேன்

 

கர்னல் ஓல்காட் நெகிழ்ந்து போனார். அந்த ஒரு ரூபாய் பல லட்ச ரூபாயைக் காட்டிலும் மதிப்பு வாய்ந்தது என்று அவர் நினைத்து அங்கேயே ஒரு துணியை விரித்து அதில் அந்த மூதாட்டியின் ஒரு ரூபாயைப் போட்டு விட்டுச் சொன்னார். “இந்த ஒரு ரூபாயை இத்தனை வறுமைக்கு நடுவில் தந்த இந்த மூதாட்டியின் கர்மா மிக உயர்ந்தது. இதற்கு எதுவும் ஈடு இணை இல்லை. இது போன்ற மேலான இதயங்களாலேயே உலகம் சிறக்க முடியும். இந்த ஏழைத்தாயின் மிக உயர்ந்த கர்மாவுக்கு உங்களால் முடிந்த நன்கொடை தாருங்கள். நான் நிதி கேட்டு வந்திருக்கும் நோக்கம் மிக உயர்ந்தது தான் என்றாலும் இந்தத் தாயிற்கு நம்மால் உதவ முடிவது அதற்கு இணையான உயர்ந்த செயல் என்று நான் கருதுகிறேன்

 

உடனடியாக அந்தத் துணியில் பலர் தங்களால் முடிந்த நாணயங்களைப் போட்டார்கள். முப்பது ரூபாய் ஐந்து நிமிடத்தில் சேர்ந்து விட்டது. சம்பவம் நடந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி என்பதால் அந்த முப்பது ரூபாயும் சிறிய தொகை அல்ல என்றே சொல்ல வேண்டும். அந்த ஏழை மூதாட்டியிடம் அந்த முப்பது ரூபாயை வழங்கிய போது புதையலே கிடைத்தது போல அவர் உணர்ந்து நன்றியுடன் கண்ணீர் விட்டார். நல்ல கர்மாக்களுக்கு நல்ல பலன்களே விளையும் என்றாலும் மனிதர்கள் தங்கள் முயற்சிகளால் அதற்கு மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்று நினைத்த கர்னல் ஓல்காட் ஒரு பல்கலைக்கழகத்தில் பேசச் சென்ற போது அந்த மூதாட்டியை வரவழைத்து மேலும் ஒரு நல்ல தொகையைத் தந்து கௌரவித்தார்.  

 

இந்தியா திரும்பிய கர்னல் ஓல்காட் இந்தச் சம்பவத்தை ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் சொன்னார். கடுமையான வறுமையிலும் தர்மசிந்தனை குறையாமல் இருப்பது மானுடத்தின் மேன்மை எக்காலத்திலும் அழிந்து விடுவதில்லை என்பதற்கான உதாரணமாக இருக்கிறது என்று அம்மையார் சொன்னார்.

 

மறுபடியும் இந்தியாவில் அவர்களது ஆன்மிகப்பணிகள் தொடர்ந்தன. அவர்களிடம் வேலையாளாகவும், தியோசபிகல் சொசைட்டியில் மிகுந்த ஆர்வம் உள்ளவனாகவும் தாமோதர் என்ற இளைஞன் இருந்தான். ஒரு நாள் அவன் நிறைய தபால்களைக் கொண்டு வந்தான். அந்தத் தபால்களில்  நான்கு மகாத்மாக்களின் கடிதங்களாக இருந்தன. வேறு வேறு விலாசங்களில் இருந்து அவை வந்திருந்தன. அந்தத் தபாலாபீஸ்களின் முத்திரைகளும் அவற்றில் இருந்தன.

 

அப்போது அவர்களுடன் ஸ்மித் என்ற பேராசிரியர் இருந்தார். அவரிடம் கர்னல் ஓல்காட் இதற்கு முன் இந்தத் தபால்களில் கூட நிறைய அற்புதங்கள் நடந்திருக்கின்றன என்பதை விவரித்தார். இவற்றில் மகாத்மாக்களும் இடையிடையே தங்களுடைய கருத்துகளைச் சேர்த்து விடுவதுண்டு என்றும் சொன்னார். அவர் சொன்னதெல்லாம் அந்தப் பேராசிரியரை பெருவியப்பில் ஆழ்த்தியது. எழுதி ஒட்டப்பட்டு தபாலில் அனுப்பிய பின்பு அந்தத் தபால்களில் எப்படி மகாத்மாக்கள் எழுத முடியும் என்று திகைப்புடன் கேட்டார். “அது எங்களுக்குத் தெரியாது. ஆனால் எத்தனையோ முறை அப்படிச் சில தபால்களில் மகாத்மாக்களின் கட்டளையையும், செய்திகளையும் பெற்றிருக்கிறோம்என்று கர்னல் ஓல்காட் சொன்னார்.

 

அந்தப் பேராசிரியர் நம்ப முடியாமல் எல்லாத் தபால்களையும் வாங்கிப் பார்த்தார். எல்லாத் தபால்களும் சரியாக ஒட்டப்பட்டிருந்தன. வேறு வேறு இடங்களிலிருந்து அவை வந்திருந்தன. அந்தந்த தபால் ஆபிஸ்களின் முத்திரைகளும் இருந்தன.

 

பேராசிரியர் ஸ்மித் கேட்டார். “இந்தத் தபால்களில் எதிலாவது மகாத்மாக்களின் கட்டளை இருக்க வாய்ப்பிருக்கிறதா?”

 

கர்னல் ஓல்காட் சொன்னார். “இருக்கலாம்

 

எதிலிருக்கிறது என்று பிரிக்காமலேயே தெரியுமா? பிரித்தால் தான் தெரியுமா?” என்று பேராசிரியர் கேட்டார்.

 

கர்னல் ஓல்காட் வேண்டுமென்றேஎனக்குப் பிரித்துப் படித்தால் தான் தெரியும். ஆனால் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்குப் பிரிக்காமலேயே தெரியும் வாய்ப்பிருக்கிறதுஎன்று சொன்னார்.

 

அதைக் கேட்ட பின் பேராசிரியர் ஸ்மித் சும்மா இருக்க முடியாமல் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் அதைக் கண்டுபிடித்துச் சொல்லுமாறு நச்சரித்தார்.

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கடைசியில் ஒத்துக் கொண்டு எல்லா தபால்களையும் பார்த்து அவற்றில் இரண்டு தபால்களில் மகாத்மாக்களின் செய்திகள் இருக்கின்றன என்றார். அதோடு நிற்காமல் அந்த இரண்டு தபால்களையும் தன் நெற்றியில் சிறிது நேரம் வைத்துக் கொண்டிருந்து விட்டு அவற்றில் என்ன எழுதப்பட்டிருக்கின்றன என்பதையும் சொன்னார்.

 

பேராசிரியர் ஸ்மித் பரபரப்புடன் அந்த இரண்டு தபால்களைப் பிரித்துப் பார்த்தார். அந்த இரண்டு தபால்களிலும் மகாத்மாக்களின் செய்திகள் இருந்தன என்பது மட்டுமல்ல அதிலிருந்த தகவல்களும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொன்னதாகவே இருந்தன என்பது தான் பேராச்சரியம்!

 

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி