சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 31, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 79


ரியாக 29 நிமிடம் 12 வினாடிகளில் மாராவுக்கு போனில் தகவல் வந்தது.

சார். வாங் சாவொ சம்யே மடாலயத்தில் வேவு பார்த்திருக்க நியமித்திருக்கும் ஆட்கள் இரண்டு பேர். இருவரும் லாஸா நகரைச் சேர்ந்தவர்கள். போலீஸில் தற்காலிக வேலை நியமனத்தில் இருக்கிறார்கள். இருவரும் நண்பர்கள்..... மற்ற இடங்களில் முக்கியமாக, ரோந்திலும், நேபாள எல்லை நட்பு நெடுஞ்சாலையிலும் நியமித்திருக்கும் ஒவ்வொரு குழுவிலும் வாங் சாவொவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒன்றிரண்டு ஆட்களாவது இருக்கிறார்கள். ஆனால் சம்யேவில் அப்படி நிறுத்த அவனுக்கு ஆள் மிஞ்சவில்லை போல் இருக்கிறது.....

மாரா நினைத்தான். அப்படியும் இருக்கலாம். கண்டுபிடிக்கப்பட்டு விட்டது தெரிந்து விட்டதால் இரவில் நடத்தும் ரகசிய வழிபாட்டுச் சடங்குகளை சில நாட்களாவது நிறுத்தி வைப்பார்கள் என்று கூட வாங் சாவொ கணக்குப் போட்டிருக்கலாம்.....

மாரா கேட்டான். அந்த இரண்டு பேரும் எப்படி?

“கண்டுபிடிக்கப்பட மாட்டோம் என்பது உறுதியாகத் தெரிந்தால் விலை போகிற ரகம் தான்.....

“அப்படியானால் விலை பேசி விடு. அவர்கள் நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை கோங்காங் மண்டப அருகில் இருக்கக்கூடாது. பணத்தையும் வாங்கிக் கொண்டு வாங் சாவொவுக்குத் தகவலும் தர நினைத்தால் குடும்பத்திற்குப் பிணம் கூடக் கிடைக்காது என்பதைப் புரிய வைத்து விடு

“சரி சார்

“எல்லாம் உறுதியானவுடன் எனக்குத் தெரிவி....

அவனையே பார்த்துக் கொண்டிருந்த முதியவருக்கு அவன் விரைவில் சம்யே மடாலயத்தில் இருந்த அவர்களது வேலையை முடிக்கத் துடிக்கிறான் என்பதை உணர முடிந்தது. மைத்ரேயன் கதையை சீக்கிரம் முடிக்க என்ன எல்லாம் ஆக வேண்டுமோ அதை எல்லாம் செய்து முடிக்காமல் இவன் ஓய மாட்டான்..... அவனிடம் வாய் விட்டுச் சொன்னார். “எனக்கு உன் வெற்றியைக் காணும் வரையாவது ஆயுள் கெட்டியாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை இருக்கிறது மாரா....

மாரா சொன்னான். “நீங்கள் அதைப் பார்க்காமல் சாக மாட்டீர்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பார்த்தால் குறைந்தது பத்து வருடங்களாவது வாழ்வீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படி இருக்கையில் அதிக பட்சமாய் பதினோரு மாதங்களுக்குள் நாம் அவனை வென்று காட்டுவதைப் பார்க்க இருக்க மாட்டீர்களா என்ன?

அவனுக்குத் தன் வெற்றியில் சின்னதொரு சந்தேகம் கூட இல்லை என்பதை முதியவர் கவனித்தார். அவனைப் பார்க்கையில் அவருக்கும் அதில் சந்தேகம் இருக்கவில்லை. இவன் அடைந்திருக்கும் உயரங்கள் என்னவெல்லாம் என்பதை அறியக் கூட மைத்ரேயனின் ஆயுள் போதாது..... ச்சே! அந்த மைத்ரேயன் பற்றியும் அமானுஷ்யன் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொண்டிருந்தால் இன்னும் கூடத் தைரியமாக இருக்கலாம்.

மாராவிடம் அவர் கேட்டார். “அமானுஷ்யனும், மைத்ரேயனும் எதற்கு அந்த மலைக்குப் போயிருக்கிறார்கள். ஒளிந்து கொள்ளவா, அங்கிருந்து தப்பித்து நேபாளத்திற்குள் நுழையவா? அந்த மலையைத் தாண்டினால் நேபாளம் தானே?

மாரா யோசனையுடன் சொன்னான். “அந்த மலையைத் தாண்டினால் நேபாள் எல்லை தான். என்றாலும் அது வரை அவர்களால் கண்டிப்பாகப் போக முடியாது. நான் நம் குகைக் கோயிலுக்குப் பல முறை போயிருக்கிறேன் என்றாலும் அதைத்தாண்டி அந்த மலை உச்சி வரை ஒரே முறை தான் போயிருக்கிறேன். மலை உச்சியில் இப்போது அதிகமாய் நீலக்கரடிகள் இருக்கும் என்பது மட்டுமல்லாமல் அந்த மலை உச்சியில் சிகரங்கள் கூர்மையான முட்கள் போல் இருப்பவை. எந்த உச்சியை அடைந்தாலும் அதன் மறுபக்கம் மிக ஆபத்தான, செங்குத்தான பள்ளத்தாக்கு தான்.  நீலக்கரடிகளைத் தாண்டி ஏதாவது உச்சியை அடைந்தாலும் அந்தப் பள்ளத்தாக்கில் அமானுஷ்யன் அல்ல வேறு யாருமே இறங்க முடியாது. அதனால் தான் திபெத்தின் அந்தப் பகுதியில் எந்தக் காவலையும் சீனா வைத்திருக்கவில்லை. அந்த மிக ஆழமான பள்ளத்தாக்கு தாண்டி இன்னொரு மலை ஆரம்பமாகிறது அது தான் நேபாள் எல்லை. அந்த மலை இது போல செங்குத்தானதல்ல. அந்த மலை உச்சியில் நேபாள நாட்டின் எல்லைக்காவல் பலமாக இருக்கிறது. அப்படி இருக்கையில் அமானுஷ்யன் அங்கு பயணித்திருப்பதன் உத்தேசம் என்ன என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. ஒருவேளை யாரும் அங்கு வந்து தேட மாட்டார்கள், அதனால் ஒளிந்து கொள்ள வசதி என்று அவன் நினைத்தான் என்றால் அவன் மீது வைத்திருக்கும் மதிப்பை நாம் குறைத்துக் கொள்ளத் தான் வேண்டும்....

வெளியே நன்றாகவே வெளிச்சமாகி விட்டிருந்தது. மாரா அவரிடம் விடை பெற்றுக் கிளம்பினான்.

அவன் காரில் பயணிக்கும் போது போனில் தகவல் வந்தது. சம்யே மடாலயத்தில் இருக்கும் இரண்டு கண்காணிப்பு போலீஸ்காரர்களையும் விலைக்கு வாங்கி விட்டாயிற்று என்றும் அவர்கள் காவலுக்கு உள்ள வரை அங்கு நடப்பதைக் கண்டு கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்யே மடாலயத்தில் இருக்கும் தன் ஆட்களுக்குப் போன் செய்து இரவு நேர ரகசிய வழிபாட்டைத் தொடரச் சொன்னவன் விளைவுகளை வேகமாக எட்ட வேண்டிய அவசரத்தையும் வலியுறுத்திச் சொன்னான்.

மறுபடி பயணத்தைத் தொடர்ந்த அவன் மனதில் அமானுஷ்யனின் திட்டம் பற்றிய யூகங்களே நிறைந்திருந்தன. எந்த யூகமும் அவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை. வாய் விட்டு முணுமுணுத்தான். “அமானுஷ்யா!. உன் மனதில் என்ன தான் திட்டம் இருக்கிறது?



லையில் மேலும் சிறிது தூரம் சென்ற பிறகு அக்‌ஷய் நின்று தன் பையில் இருந்து ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துத் திறந்தான். அதன் வாடை ஒரு மாதிரியாக இருந்தது. மைத்ரேயன் அது என்ன என்பது போல அக்‌ஷயைப் பார்த்தான்.

அக்‌ஷய் சொன்னான். “இது ஒரு செடி இலைகளின் சாறு. நீலக்கரடிகளுக்கு இதன் வாடை சிறிதும் ஆகாது. அதனால் இதைப் பூசிக் கொண்டால் நம்மை நீலக்கரடிகள் நெருங்காது....

ஒரு நீலக்கரடியின் நட்பைப் பெற்றுக் காட்டிய பிறகும் இந்த தற்காப்பு நடவடிக்கை தேவை தானா என்பது போல் மைத்ரேயன் பார்த்தான். அக்‌ஷய் நீலக்கரடிகள் விஷயத்தில் எந்த ஆபத்தையும் எதிர்கொள்ள விரும்பவில்லை. ஒரு நீலக்கரடி போல் எல்லாமே இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் என்ன இருக்கிறது. ஒரு நீலக்கரடி எதிர்த்து நின்றாலும் கூட அவன் ஏதோ செய்து அதை வென்று விடலாம் என்கிற நம்பிக்கை அவனிடம் இருக்கிறது. ஆனால் கும்பலாக நீலக்கரடிகள் வந்தால் - அவை மைத்ரேயனின் அன்புக்கு மசியாமல் போனால்- அவர்கள் இருவரும், இரண்டு ஆடுகளும் சில நிமிடங்கள் கூடத் தாக்குப்பிடிக்க முடியாது.

அவன் அமைதியாக மைத்ரேயனிடம் சொன்னான். “நீலக்கரடிகளைப் பரிசோதித்துப் பார்க்க நமக்கு நேரமில்லை மைத்ரேயா! தேவையில்லாமல் ஆபத்தில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை

மைத்ரேயன் முகத்தில் சின்னதாய் ஒரு சுளிப்போ, தயக்கமோ கூட வரவில்லை. அமைதியாகத் தலையசைத்தான்.

அக்‌ஷய் முதலில் மைத்ரேயனின் முகம், கைகாலுக்கு அதைப் பூசினான். நெடி மூக்கை அதிகமாகவே துளைத்தது. அப்போதும் அந்தச் சிறுவன் எந்த வெறுப்பையும் காட்டவில்லை. அக்‌ஷய்க்கு அதை நினைக்கையில் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

அக்‌ஷய் தானும் பூசிக் கொண்டான். ஆடுகளுக்கும் சிறிது பூச அக்‌ஷய் நினைத்தான். தப்பிக்கும் திட்டத்தில் அவற்றிற்கும் முக்கிய பங்கு உண்டு. அது வரை அவை உயிருடன் இருப்பது மிக அவசியம்.... ஆனால் அவன் அந்த சாறோடு நெருங்கிய போது ஆடுகள் ஓட்டமெடுத்து தூரப் போய் நின்று பார்த்தன. என்ன செய்வது என்று அக்‌ஷய் யோசித்த போது மைத்ரேயன் அவனிடம் இருந்து அந்த பிளாஸ்டிக் டப்பாவை வாங்கி அந்த ஆடுகளுக்கு புன்னகையுடன் சைகை காண்பித்தான். இரண்டும் வேண்டா வெறுப்பாக வர ஆரம்பித்தன. அக்‌ஷய் வியப்புடன் பார்த்தான்.

மைத்ரேயனை நெருங்கி வந்த ஆட்டுக்குட்டிகள் அவன் பூச வரும் போது விலகி ஓடி விளையாட்டு காட்டி கடைசியில் ஒத்துழைத்தன. அவன் இரண்டு ஆடுகளுக்கும் அந்த சாறைப் பூசினான். அவை இரண்டும் அவனை உரசிக் கொண்டே நின்றன.

மறுபடி மேலே ஏற ஆரம்பித்தார்கள். தூரத்தில் ஒரு நீலக்கரடி அவர்களைப் பார்த்தது. ஆனால் அவர்கள் நெருங்க நெருங்க அது ஓடிப்போனது. மறுபடி தூரத்தில் நின்று அவர்களைப் பார்த்தபடி நின்றது. மைத்ரேயன் கையசைத்தான். அது ஒருவிதமாய் உறுமியது. அது அன்று காலையில் அவன் அருகே வந்த நீலக்கரடி போலத் தான் தெரிந்தது. மைத்ரேயன் சாந்தமாக அந்த நீலக்கரடியைப் பார்த்தான். அது ஓடிப் போய் மறைந்தது.

அக்‌ஷய் அந்த மலையில் ஒரு இடத்தை அடைந்தவுடன் நின்றான். மைத்ரேயனையும் ஆடுகளையும் ஒரு பாறையில் மறைவாக நிறுத்தி விட்டுத் தன் பையில் இருந்து ஒரு பைனாகுலரை எடுத்து அதன் வழியே பார்த்தான். நேபாள எல்லை மலை தெளிவாகத் தெரிந்தது.   


சேகர் அன்று தன் மகனை நேரில் சந்தித்துப் பேசி விடுவது என்ற ஒரு தீர்மானத்திற்கு வந்திருந்தான். தானாடா விட்டாலும் சதை ஆடும் என்பார்கள். நீரடித்து நீர் விலகாது என்பார்கள். இந்தப் பழமொழிகள் எல்லாம் எந்த அளவு உண்மை என்பதை இன்று சோதித்துப் பார்த்து விடுவது என்று எண்ணினான். கர்னாடகாவில் குடகு மலையில் இருக்கும் வேலையும், எந்த நேரத்திலும் சஹானாவின் இரண்டாம் கணவன் திரும்பி வந்து விடலாம் என்கிற எண்ணமும் அவனை அந்த முடிவுக்கு அவசரப்படுத்தியது.

வருண் அன்று இருட்டிய பின் வெளியே கிளம்பியதைப் பார்த்தான். அவன் தெருக்கோடியில் இருக்கும் மளிகைக் கடைக்குத் தான் போகிறான் என்பது அவன் எடுத்துக் கொண்ட வழக்கமான மஞ்சள் நிற பெரிய பையைப் பார்த்தவுடன் தெரிந்தது.

இந்த இருட்டும், தனியாக மகன் கிடைப்பதும் தன் நோக்கத்திற்கு அனுகூலமாக இருக்கும் என்று கணக்குப் போட்ட சேகர் மகனைப் பின் தொடர்ந்து சென்றான். மகன் தெருக்கோடியை அடைந்து அந்தக்கடையில் பொருள்கள் வாங்கிக் கொண்டு திரும்பும் வரை பொறுமையாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மறைவில் நின்று கொண்டிருந்த அவன் மகன் அருகில் வந்ததும் மறைவில் இருந்து வெளியே வந்து அழைத்தான். “வருண்

(தொடரும்)
என்.கணேசன்  

வாசக அன்பர்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தீமைகள் நீங்கி நன்மைகள் பெருகும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு தங்களுக்கு அமையட்டும்!

என்.கணேசன்

Monday, December 28, 2015

அனைத்துமான ஆண்டவனை அணுகுவது எப்படி?


கீதை காட்டும் பாதை 39

காபாரதம் எழுதப்பட்ட காலம் யாக யக்ஞங்கள் மற்றும் வைதீக கர்மங்கள் அதிக முக்கியத்துவம் பெற்று சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வந்த காலம். அந்த வேள்விகளில் போடப்படும் மூலிகைகளும், நெய்யும், சொல்லப்படும் மந்திரங்களும், எரியும் அக்னியும் நானே என்று சொல்லி அந்த யாக யக்ஞங்களின் ஒவ்வொரு அம்சமும் தானே என்று அறிவிக்கிற ஸ்ரீகிருஷ்ணர்  தொடர்ந்து சொல்கிறார்.

இந்த உலகமனைத்தையும் தாங்குபவனும், கர்மங்களுக்குப் பயன் அளிப்பவனும், தந்தையும், தாயும், பாட்டனாரும், அறியத்தக்கவனும் புனிதமானவனும், ஓங்காரமும், ருக், சாம, யஜுர் வேதங்களும் நானே!

கதியும் நானே; தாங்குபவனும் நானே; ஆள்பவனும் நானே; சாட்சியும் நானே; இருப்பிடமும் நானே; அடைக்கலமும் நானே; நண்பனும் நானே; பிறப்பிடமும் நானே; ஒடுங்கும் இடமும் நானே; புகலிடமும் நானே; அழியாத விதையும் நானே!

அர்ஜுனா! வெயிலும் நானே; மழையும் நானே; அதை நிறுத்துபவனும், பொழிவிப்பவனும் நானே; சாகாமையும்  நானே; மரணமும் நானே; அழியாததும் நானே; அழியக்கூடியதும் நானே.

எந்த மகாசக்தியால் பிரபஞ்சம் முழுவதும் இயங்குகிறதோ, எந்த மகாசக்தி பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்திருக்கிறதோ அந்த மகாசக்தியை அறிவதை விட வேறு எதுவும் அறியத்தக்கதில்லை. வேறெதுவும் புனிதமானதில்லை. அந்த மகாசக்தியே மாபெரும் புகலிடம். அதுவே அனைத்துக்கும் சாட்சி. அந்த மகாசக்தியே நமக்கு மகத்தான நண்பன்.  எதையும் இயக்குவதும் அதுவே. இயங்காமல் தடுத்து நிறுத்துவதும் அதுவே. அழிந்ததும், அழிவதும் அதுவே. இதுவரை அழியாததும், இனிவரும் உலகங்களை சிருஷ்டிக்கும் அழியாத விதையும் அதுவே. அந்த மகாசக்தியையே நாம் கடவுள் என்கிறோம்.

அந்தக் கடவுளை நாம் எப்படி அணுகுகிறோம்? அந்தக் கடவுளிடம் நான் என்ன வேண்டுகிறோம். பதிலாக நாம் பெறுவதென்ன? அப்படிப் பெறுவது எத்தனை காலம் நீடிக்கிறது? இந்தக் கேள்விகள் மிக முக்கியமானவை. இதில் இருந்து கிடைக்கும் பதில்களே நம் வாழ்க்கையை செதுக்க முடிந்தவை.

எல்லாம் தரவல்ல கற்பக விருட்சமாக கடவுள் இருந்த போதும் நாம் வேண்டிப் பெறுபவை நிரந்தர மகிழ்ச்சியையோ, நிரந்தர நிம்மதியையோ தர வல்லவையாக பெரும்பாலும் இருப்பதில்லை. நம் பிரார்த்தனைகளும், நம் வேண்டுதல்களும் சொற்ப காலத்திற்கானதாகவே இருக்கின்றன. இந்த நன்மையைக் கொடு, இந்தத் தீமையை நீக்கு, இந்த சந்தோஷத்தைக் கொடு, இந்த துக்கத்தை நீக்கு என்று தனிப்பட்ட வேண்டுதல்களோடே நாம் கடவுளை அணுகுகிறோம். கடவுளிடம் கேட்டவை எதுவும் மறுக்கப்படுவதில்லை. அது நிறைவேறி முடிந்தவுடன் அடுத்த பிரார்த்தனை அல்லது வேண்டுதல் தயாராகி விடுகிறது. இதுவா புத்திசாலித்தனமான அணுகுமுறை?

சொர்க்கத்தையே வேண்டிப் பெற்றாலும் அங்கு கூட நிரந்தரமாய் தங்கி விட முடியாது என்பதை உணர்த்தும் வகையில் ஸ்ரீகிருஷ்ணர் மேலும் கூறுகிறார்.

மூன்று வேதங்களிலும் வர்ணிக்கப்பட்டுள்ள முறைகளின்படி, பயனை நல்கக்கூடிய கர்மங்களைச் செய்து, யாகத்தில் சோமபானத்தை அருந்தி, பாவங்கள் அகன்று தூயமை பெற்றவர்கள் என்னை யாகங்களால் உபாசித்து சுவர்க்கலோகம் அடைவதை வேண்டுகிறார்கள். அவர்கள் புண்ணியத்தின் பயனாக சுவர்க்கத்தை அடைந்து அங்கு திவ்யமான தேவ போகங்களை அனுபவிக்கிறார்கள்.

அவர்கள் விசாலமான சுவர்க்க லோகத்தை அனுபவித்து புண்ணியம் கரைந்து போன பிறகு மனித உலகுக்கே திரும்பி விடுகிறார்கள். ஆகவே வைதிக தர்மங்களைக் கடைபிடித்து கோரிக்கைகளை வேண்டுபவர்கள், ஜனன மரண சுழலைத் தான் அடைவார்கள்.

வேதங்கள் சொல்லி இருக்கும் வேள்விகளையே முறைப்படி செய்து சொர்க்கத்தையே அடைந்தாலும் செய்த புண்ணியங்கள் தீர்ந்த பின் இந்த உலகில் மீண்டும் பிறவி எடுக்க நேரிடும். இது தான் வேள்விகள் செய்து கூட நாம் பெறும் பலன்களின் நிலை என்றால் சாதாரண வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் மூலம் நாம் பெறுவது எந்த அளவில் இருக்க முடியும்.

சரி அப்படியானால் கஷ்ட நஷ்டங்கள் நம்மை பாடாய் படுத்துகையில் நாம் என்ன தான் செய்வது? நாம் மனிதர்கள் தானே, கஷ்ட நஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் நம்மால் இருக்க முடியுமா? அதைப் போக்க என்ன தான் செய்வது?

இதற்கு அடுத்த சுலோகத்தில் பகவான் பதில் அளிக்கிறார்.

வேறு எதிலும் நாட்டம் இல்லாமல், யார் என்னையே தியானித்து உபாசிக்கிறார்களோ அவர்களது யோக க்‌ஷேமத்தை நானே தாங்குகிறேன்.

இல்லாத நன்மையைப் பெறுவது யோகம். பெற்ற நன்மையை காத்துக் கொள்வது க்‌ஷேமம். நம் உண்மையான தேவைகளின் குறைபாடுகளை நீக்கி தேவையானவற்றைத் தந்தருளி, பெற்றிருக்கும் அவசிய நன்மைகளை இழந்து விடாமல் காத்தும் அருளி நம் யோக க்‌ஷேமங்களை இறைவன் பார்த்துக் கொள்வான் என்கிற உத்திரவாதம் இருக்கையில் அவனைச் சரணடைவதை விட வேறு என்ன தான் நமக்கு அதிகமாக உதவ முடியும்.

தாயையே பற்றிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு என்ன எல்லாம் தேவை என்பதை அறிந்து அத்தனையும் செய்து கொடுக்கும் தாய் போல பகவானையே பற்றிக் கொண்டிருக்கும் பக்தனின் அனைத்து தேவைகளையும் பகவான் பார்த்துக் கொள்வான். குழந்தை என்ன கேட்கிறது என்பதை விட குழந்தைக்கு எது நல்லது என்பதற்கு தாய் முக்கியத்துவம் தருவாள். அதற்கு எது எல்லாம் நன்மையோ அதை எல்லாம் குழந்தை கேட்காமலே செய்து தருவாள். அது போலவே பகவானும் தன்னை சரணடைந்த உண்மையான பக்தனுக்கு எதெல்லாம் நன்மையோ அதை எல்லாம் ஏற்படுத்தித் தருவான்.

எனவே இறைவனையே தியானி. அவனையே சரணாகதி அடைந்து விடு. அவனையே உபாசனை செய். அப்படிச் செய்தாயானால் தனித்தனியாகப் பல விஷயங்களுக்காக நீ பிச்சை கேட்க வேண்டியதில்லை. ஏன், எதையுமே அவனிடம் வேண்டிக் கேட்கத் தேவை இல்லை. உன்னுடைய யோக க்‌ஷேமங்களை அவன் பார்த்துக் கொள்வான்.

பாதை நீளும்....

என்.கணேசன்



Thursday, December 24, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 78


 ந்த ரகசியச் சடங்கை ஆரம்பிக்கலாம் என்று மாரா சமிக்ஞை செய்தான்.

முதியவர் மேசையில் இருந்த அந்த தடிமனான கயிறை எடுத்து அந்த நாற்காலியோடு அவனைக் கட்டிப் போட ஆரம்பித்தார். அவர் முடிச்சு போடுவதற்கு முன் அவன் சற்று அசைந்து பார்த்து விட்டு மேலும் இறுக்கமாகக் கட்டச் சொன்னான்.  அவன் சொன்னபடியே அவர் இறுக்கமாகக் கட்டிப்போட்டார். அவருடைய முதுமை அவர் உடல்பலத்தை அதிகமாகக் குறைத்து விடவில்லை என்பதை அவன் புன்னகையுடன் கவனித்தான். அவர் அந்தச் சிலையை எடுத்து மாராவின் மடியில் வைத்தார். அவன் கைகள் அந்தச் சிலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டன.

பின் அந்த பழங்கால ஓலைச்சுவடியைத் தன் கையில் எடுத்து வைத்துக் கொண்டு அந்த உள் அறை மின் விளக்குகளையும் அணைத்தார். கும்மிருட்டு அங்கு சூழ்ந்தது. அந்த ஓலைச்சுவடிகளை இறுக்கப்பிடித்தபடியே அவனுக்குப் பக்கத்து நாற்காலியைத் தட்டுத் தடுமாறி அடைந்து அதில் அமர்ந்தார்.

மாரா ஆழ்நிலைத் தியானத்தில் மூழ்க ஆரம்பித்தான். அவர் அவர்களது அந்தப் புனிதச் சுவடியை கையில் வைத்தபடியே பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்.

இருபது நிமிடங்களில் மெல்லிய நீல நிறத்தில் அந்தச் சிலை ஒளிர ஆரம்பித்து அதன் ஒளி அறையெல்லாம் பரவ ஆரம்பித்தது. பழைய தலைமையுடனான அவருடைய முந்தைய அனுபவங்களில் இது நிகழ மூன்று மணி நேரம் ஆகி இருந்திருக்கிறது. அவர் பிரமிப்புடன் அவனைப் பார்த்தார். மெல்ல அவனுள்ளும் அந்த நீல நிற ஒளி பரவ ஆரம்பித்தது...

இது முந்தைய தலைமைப் பொறுப்பில் இருந்தவரிடம் நிகழ்ந்திருக்கவில்லை. ஒப்பீடுகள் அவசியமில்லை, அதில் அர்த்தமுமில்லை என்ற போதும் அவரால் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. இன்றைய அனுபவம் வித்தியாசமாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அவரை ஆட்கொள்ள ஆரம்பித்தது. பிரமிப்புடன் அவர் பார்த்தார்.

அவன் சிறிது சிறிதாக அதிர ஆரம்பித்தான். அவன் அமர்ந்திருந்த நாற்காலியும் அதிர ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அவன் உடல் முழுவதும் மின்சாரத்தால் தாக்கப்பட்டது போல் துடிக்க ஆரம்பித்தது. மெல்ல மெல்ல அவன் உடல் முழுவதும் மாற ஆரம்பித்தது. முகம் கோரமாக மாற ஆரம்பித்தது. அவனது கை கால்கள் தடிக்க ஆரம்பித்தன. அவன் கைகள் அந்தத் தடிமனான கயிறை மீறி பிதுங்க ஆரம்பித்தன. அவன் நாற்காலி வேகமாக ஆட ஆரம்பித்தது. சில நிமிடங்கள் கழிந்த பின் பேரழகனும், கவர்ச்சிகரமானவனுமான ஒரு இளைஞன் தான் அவன் என்பதற்கு எந்த அறிகுறியும் அந்த உடலில் இல்லை. சென்ற மாதம் அமெரிக்காவின் பிரபலப் பத்திரிக்கை ஒன்று உலகின் மிக அழகான, கல்யாணம் ஆகாத, பணக்கார இளைஞர்களில் ஒருவனாக அவனை அறிவித்திருந்தது நினைவுக்கு வந்தது.

மனம் தற்போதைய இந்த சடங்கின் நோக்கத்தில் இருந்து விலகுவதை உணர்ந்த அவர் உடனடியாக எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். முதியவரின் கைப்பிடி அந்த ஓலைச்சுவடியில் தானாக இறுகியது. அவர் பிரார்த்தனையில் ஆழம் கூடியது.      

அவன் மிக ஆழமாக மூச்சுவிட ஆரம்பித்தான். சிறிது சிறிதாக அவன் அதிர்வது நின்று போனது. அவன் அமர்ந்திருந்த நாற்காலியின் ஆட்டமும் நின்று விட்டது. அவன் மூச்சும் இயல்பாக மாற ஆரம்பித்தது. ஆனால் பழைய தோற்றத்தின் சுவடே அந்த உடலில் இப்போது இல்லை. மாறாக அவன் கையிலிருந்த சிலையின் நகலாய் அவன் முகம் மாறி விட்டிருந்தது.

பழைய தலைமையுடனான அனுபவத்தில் அவரது முகம் கோரமாக ஆகி இருந்ததே ஒழிய இப்படி சிலையின் நகலாய் அவர் முகம் மாறி இருக்கவில்லை. மற்றபடி அதிர்வது, பின் அடங்குவது எல்லாம் கிட்டத்தட்ட இதே போலத் தான்..... மனதை திரும்ப நிகழ்காலத்திற்கு இழுத்து வந்த முதியவர் மண்டியிட்டு மாராவிடம் பிரசன்னமாகி இருந்த  கடவுள் மாராவை வணங்கினார்.

சிறிது நேர அசாதாரண அமைதிக்குப் பின்னால் எதற்காக என்னை வரவழைத்தீர்கள்?கேள்வி மெல்லிய கரகரத்த குரலில் எழுந்தது. அது அவர்களுடைய தலைவன் மாராவின் குரலே அல்ல. அது இரத்தத்தை உறைய வைக்கும் மிக அமானுஷ்யமான குரல். ஆனால் அதே குரலைத் தான் அவர் அதற்கு முந்தைய இரு சடங்குகளிலும் கேட்டிருந்தார்.

முதியவர் பயபக்தியுடன் சொன்னார். “மைத்ரேயன் விஷயத்தில் எங்களால் ஒரு தீர்மானத்தை எட்ட முடியவில்லை. அவன் இப்போது நம் குகைக்கோயில் மலையில் தான் இருக்கிறான். மாரா இப்போதே சென்று அவனை அழித்து விட எண்ணுகிறான். அது உசிதமா? இது விஷயத்தில் தங்கள் வழிகாட்டுதல் என்ன?

மைத்ரேயன்.....” குரல் கிறீச்சிட்டது. முதியவரின் நாடி நரம்பெல்லாம் நடுங்கியது. யாரும் ஒரு பெயர் உச்சரிப்பிலேயே அவ்வளவு வெறுப்பை வெளிப்படுத்த முடியுமா என்று முதியவர் வியந்தார். 

அந்தக் குரல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டது போல அடுத்த வார்த்தைகளை கிறீச்சிடாமல் மிக அழுத்தமாக நிறுத்தி நிறுத்திச் சொன்னது. “சம்யே மடாலயத்தில்..... நம் சக்தியை பலப்படுத்தி...... நிறுவுவதற்கு முன் ........... அவனை நெருங்க வேண்டாம்......

“இந்த சந்தர்ப்பம் விட்டால் இனி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று மாரா சந்தேகப்படுகிறான்.....

சில்லிட வைக்கும் ஒரு அமானுஷ்யமான சிரிப்பு எழுந்தது. “இனி பதினோரு மாதங்கள்..... மைத்ரேயனுக்கு ஆபத்துக் காலம் தான்........... அவன் எங்கும் பாதுகாப்பாக இருக்க முடியாது............. அவனை அழிக்க நினைக்கும் எவருக்கும்..... சந்தர்ப்பம் கிடைக்காமல் போகாது..... அந்தக்காலத்தை கோட்டை விட வேண்டாம்.....

முதியவருக்கு அந்த வார்த்தைகளைக் கேட்டு தெம்பு வந்தாலும் இன்னொரு சந்தேகம் கூடவே எழுந்தது. நாக அம்சம் கொண்ட ஒருவன் மைத்ரேயனை இந்த ஆபத்துக் காலத்தில் காக்க வருவான் என்று பத்மசாம்பவாவின் ஓலைச்சுவடி சொன்னபடி அமானுஷ்யன் வந்திருக்கிறானே. மைத்ரேயனை அழிக்க நினைப்பவர்களுக்கு எல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கும் என்றால் இந்தக் காலக்கட்டத்தில் அமானுஷ்யன் பங்கு என்னவாக இருக்கும்?  

அந்த சந்தேகத்தை முதியவர் வாய் விட்டே கேட்டார்.  அப்படியானால் அமானுஷ்யன்....?

உடனடியாக மாராவின் உடல் பலமாய் ஒரு முறை அதிர்ந்தது. மறு கணம் அந்தச் சிலையில் இருந்தும் மாராவின் உடலில் இருந்தும் அந்த மெல்லிய நீல ஒளி மங்க ஆரம்பித்த போது தான் முதியவருக்குத் தன் தவறு புரிந்தது.  அமானுஷ்யன் என்ற சொல் மாராவை சுயநிலைக்கு வரவழைக்கும் குறிச்சொல். அவருடைய கேள்வியில் அந்தக் குறிச்சொல் ஒரு பகுதியாக வந்திருக்கக்கூடாது..... அவருக்குள் குற்ற உணர்ச்சி பலமாக எழுந்தது. என்னவொரு முட்டாள்தனம் என்று தன்னையே திட்டிக் கொண்டார்.

அவன் உடல் முந்தைய அழகிய தோற்றத்தை எட்ட ஐந்து நிமிடம் தேவைப்பட்டது.  ஆனால் பழைய வலிமை அந்த உடலில் இருக்கவில்லை. அவன் உடலில் அனைத்து சக்திகளையும் அந்த சக்தி எடுத்துச் சென்று விட்டது போல் இருந்தது. கஷ்டப்பட்டு மாரா கண்களைத் திறந்து பார்த்து அவரைக் கேட்டான். “உடனடியாகச் செய்ய வேண்டியது எதாவது இருக்கிறதா?”. அவன் குரல் கூட பலவீனமாக இருந்தது. உடனடியாக இயங்க ஏதாவது உத்தரவு கிடைத்திருந்தால் அந்த பலவீனமான நேரத்தில் கூட அவன் கிளம்பி இருப்பான் என்பதில் அவருக்குச் சந்தேகம் இருக்கவில்லை.

அவர் எழுந்து அவன் கட்டுகளை அவிழ்த்தபடியே சொன்னார். “இல்லை

“அப்படியானால் நான் தூங்குகிறேன்....என்று சொன்னவன் அப்படியே நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டு உறங்க ஆரம்பித்தான். சில நிமிடங்களில் அவரும் தன்னை அறியாமல் கண்ணயர்ந்தார்.

நாற்காலி நகர்த்தப்படும் ஓசை கேட்டு அவர் கண்விழித்தார். அவன் தான். “நல்ல உறக்கமா?என்று கேட்டான். வெளியே விடிய ஆரம்பித்திருந்தது ஜன்னல் வழியே தெரிந்தது. அவர் புன்முறுவலுடன் தலையசைத்தார்.

அவன் சக்தி வாய்ந்த, சுறுசுறுப்பான பழைய மாராவாக மாறி இருந்தான். அவன் அவரை ஆர்வத்துடன் பார்த்தான். அவர் குற்ற உணர்ச்சியுடன் நடந்ததைச் சொன்னார். மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டே வந்தவன் முடிவில் ஏமாற்றம் அடைந்தது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் சீக்கிரமாகவே சுதாரித்துக் கொண்டவன் கலகலவென சிரிக்க ஆரம்பித்தான்.

அவர் வருத்தத்துடன் சொன்னார். “நான் மைத்ரேயனின் பாதுகாவலன் என்று சொல்லி இருக்க வேண்டும்....

“இல்லை உங்கள் மேல் தவறில்லை. நான் தான் வேறு குறிச்சொல்லை வைத்திருக்க வேண்டும். காண்டாமிருகம் என்று வைத்திருக்கலாம்..... அவன் நிஜமாகவே அமானுஷ்யன் தான். அவன் பெயர் கூட நமக்குப் பிரச்னையைத் தந்து விடுகிறது.....சிரித்துக் கொண்டே சொன்னான்.

அவன் விளையாட்டாய் எடுத்துக் கொண்டு சொன்னது அவர் குற்ற உணர்ச்சியைக் குறைத்தது.

அவன் மேலும் சொன்னான். “நமக்கு முக்கியமாய் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது இப்போது அங்கே போகலாமா என்பது தான். அதற்கு நமக்குப் பதில் கிடைத்து விட்டது. மைத்ரேயன் இனியும் பதினோரு மாதங்கள் பலவீனமானவன் தான், அவனை வீழ்த்த சந்தர்ப்பங்கள் கண்டிப்பாகக் கிடைக்கும் என்பதும் உறுதியாகத் தெரிந்து விட்டது. மற்றவை எல்லாம் அவ்வளவு முக்கியமல்ல.....

அவன் மனம் உடனடியாக அடுத்து நடக்க வேண்டியது என்ன என்று யோசிக்க ஆரம்பித்தது. சம்யே மடாலயத்தில் தங்கள் சக்தியைப் பலப்படுத்துவதற்கு முன் அவனை எதிர்கொள்வது உசிதம் அல்ல என்ற ஆணை சம்யே மடாலயத்தில் நடத்தி வந்த இரவு ரகசிய வழிபாட்டைத் தொடர்வதும், சீக்கிரமே அங்கு சாதிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை அவனுக்கு உணர்த்தியது. வாங் சாவொ மடாலயத்திற்குள் கண்காணிக்க ஏற்பாடு செய்திருக்கும் இவ்வேளையில் என்ன செய்வது என்று யோசித்தவன் உடனடியாக ஒரு எண்ணிற்குப் போன் செய்தான்.

“ஹலோஒரு தாழ்ந்த குரல் மிகவும் எச்சரிக்கையாக ஒலித்தது.

“சம்யே மடாலயத்தில் உள்ளே கண்காணிக்க வாங் சாவொ ஏற்பாடு செய்திருக்கும் ஆட்களைப் பற்றி எனக்கு உடனடியாகத் தெரிய வேண்டும். நாம் விசாரிப்பதும் அவர்களைக் கையாளப் போவதும் எந்தக் காரணத்தைக் கொண்டும் லீ க்யாங், வாங் சாவொ கவனத்தை எட்டக்கூடாது…..”

“அரை மணி நேரத்தில் உங்களைத் தொடர்பு கொள்கிறேன் சார்

(தொடரும்)
என்.கணேசன்   



Monday, December 21, 2015

பாபா காட்டும் மெய்ஞான வழி!


மகாசக்தி மனிதர்கள்-45  


மெய்ஞானம் அடைந்து விட்ட யோகியோ சித்தரோ தன்னை அறிவிக்கவோ, அறிமுகப்படுத்தவோ அவசியமில்லை. அவரை நேரில் சந்திப்பவர்கள் நுண்ணுணர்வு படைத்தவர்களாக இருந்தால் அவர்கள் சக்தி வாய்ந்த அலைகளை அவரிடமிருந்து உணர்வார்கள். ஷிரடி பாபாவை நேரில் சந்தித்த பல மனிதர்கள் அப்படி சக்தி வாய்ந்த அலைகளை உணர்ந்திருக்கிறார்கள். அளவில்லாத அமைதியையும், ஆனந்தத்தையும் அவர் பார்வை தங்கள் மீது பட்ட போது முழுமையாக அனுபவித்திருக்கிறார்கள். இதை நேரடியாக அனுபவித்த பக்தர்கள் பலர் அதை விரிவாகப் பதிவு செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

இறையனுபவம் என்கிற பேரானந்தம் எப்படி இருக்கும் என்பதைச் சிறிது நேரமாவது பக்தர்களை அனுபவிக்க வைத்து மெய்ஞான வழியில் நடக்க பாபா தூண்டி இருக்கிறார் என்றே இதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உலகியல் பிரச்னைகளோடு தன்னை நெருங்கியவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து பாபா அவர்களை முதலில் தன்னிடம் இழுத்துக் கொண்டாலும் அவர்களைப் பிற்காலத்தில் பக்குவப்பட வைத்து கடைசியில் அவர்களிடம் மெய்ஞானத்தையே பாபா வலியுறுத்தினார். அதற்கு மிக நல்ல உதாரணமாய் நானா சாஹேப் சந்தோர்க்கர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளையே கூறலாம்.

நானா சாஹேப் சந்தோர்க்கரின் மகள் பிரசவத்தை தன் அருளால் நல்லபடியாக பாபா நடத்தி வைத்ததை முன்பு பார்த்தோம். ஆனால் சில ஆண்டுகளில் அந்தக் குழந்தை இறந்து விட்டது. சிறிது காலத்தில் அவர் மகளின் கணவரும் இறந்து போனார். இது நானா சாஹேப் சந்தோர்க்கரைப் பெரும் துக்கத்தில் ஆழ்த்தியது. பாபா இருக்கையில் இப்படி நடந்து விட்டதே என்ற ஆதங்கமும் அவர் மனதில் நிறையவே இருந்தது.

இந்த சோக நிகழ்ச்சிகளுக்குப் பின் ஷிரடி வந்தவர் முகத்தை வாட்டமாக வைத்துக் கொண்டு பாபா முன்னால் அமர்ந்திருந்தார். “ஏன் வாட்டமாக இருக்கிறாய்? என்று பாபா கேட்டதற்கு அவர் பாபாவிடம் வெளிப்படையாகவே சொன்னார். “நீங்கள் அறியாதது ஒன்றுமில்லை பாபா. உங்கள் கருணையில் நாங்கள் இருக்கையில் என் பேரக்குழந்தையும் என் மகளின் கணவனும் இறந்து போயிருக்கிறார்கள்.

பாபா சொன்னார். “ஜனன மரணங்கள் அவரவர் கர்மவினைகளின்படி ஏற்படுபவை. அவை என் சக்தியில் அடங்குபவை அல்ல. இறைவனான பரமேஸ்வரனே கூட அதை ஒன்றும் செய்ய முடியாது. கடவுள் என்பதற்காக அவர் சூரிய சந்திரரை சில அடிகள் தள்ளி உதயமாகச் சொல்ல முடியுமா? அவர் அப்படிச் சொல்ல மாட்டார், அப்படிச் சொல்லவும் கூடாது. அப்படி அவர் செய்தால் அது குழப்பத்தையும் ஒழுங்கீனத்தையும் உண்டுபண்ணி விடும்

நானா சாஹேப் சந்தோர்க்கர் விடவில்லை. எத்தனையோ முறை பாபா அற்புதங்கள் நடத்தியதை அவர் நேரில் பார்த்தவராயிற்றே. “அப்படியானால் உனக்கு மகன் பிறப்பான் என்று ஒருவரிடம் சொல்கிறீர்கள். அவருக்கு மகன் பிறக்கிறான். உனக்கு வேலை கிடைக்கும் என்று ஒருவரிடம் சொல்கிறீர்கள். அவருக்கு வேலை கிடைக்கிறது. அதெல்லாம் மட்டும் எப்படி சாத்தியம்?என்று பாபாவிடம் கேட்டார்.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை என்னால் பார்க்க முடிந்ததால் நடக்கப் போவதை நான் சொல்கிறேன். அது அப்படியே நடக்கிறது. அதை எல்லாம் நீ என்னுடைய அற்புதங்களாக நினைத்து விட்டால் அது தவறு. என்று பாபா கூறினார். பாபாவின் இந்தக்கூற்று இது வரை நாம் பார்த்த நிகழ்வுகளுக்கு முரண்பாடான ஒன்றாய் வாசகர்களுக்குத் தோன்றலாம்.

பக்தர்களின் உலகியல் பிரச்னைகளைத் தீர்ப்பதிலேயே அவரைப் போன்ற ஒரு மகான் முழுமூச்சாக இருந்தால் அவர்களது ஆசாபாசங்களை அவர்கள் கடந்து மெய்ஞான மார்க்கத்தில் செல்ல ஆரம்பிப்பது சாத்தியமாகாது என்பதும் உண்மையே. ஆன்மிக அன்பர்கள் பந்தபாசங்களை குறைத்துக் கொண்டே போக வேண்டுமே ஒழிய அதை வளர்த்துக் கொண்டே போக உண்மையான குரு உதவி புரிய மாட்டார். மேலும் நடந்தே ஆக வேண்டும் என்று இறைவன் இயற்கையின் விதிப்படி தீர்மானித்திருந்த செயல்களை மாற்ற எந்த யோகியாலும் கூட முடியாது. மாற்ற முடிந்தவை, மாற்ற முடியாதவை என்று இருவகை முன்வினைப் பலன்கள் இருப்பதாகவே தோன்றுகிறது. முடிந்ததை மகான்கள் செய்கிறார்கள். முடியாததை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றே நாம் முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.

நானா சாஹேப் சந்தோர்க்கர் அதை உணர்ந்திருக்க வேண்டும். கடைசி வரை பாபாவின் பரம பக்தராகவே இருந்து மெய்ஞான வழியில் மேலும் முன்னேறி வாழ்ந்து மறைந்தார்.

பாபா மெய்ஞான வழியை உணர்த்திய வித்தியாசமான வேறொரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். கண்பத் ராவ் என்பவர் நானா சாஹேப் சந்தோர்க்கர் டெபுடி கலெக்டராக இருந்த போது அவருடன் காவலுக்கு ஷிரடிக்கு வந்த போலீஸ் கான்ஸ்டபிள். அவரை அனைவரும் தாஸ் கனு என்று அழைத்தார்கள். அவர் கிராமத்து நாடகங்களில் விரும்பி நடித்தும் வந்தார். அவரிடம் வேண்டாத பழக்கங்களும் நிறைய இருந்தன. சிறிதும் ஆன்மிக நாட்டம் இல்லாத அவர் ஆரம்பத்தில் பாபாவிடம் ஈர்க்கப்படவில்லை. நாளடைவில் சிறிது சிறிதாக பாபாவால் மாற்றப்பட்ட அவர் கடைசியில் ஆன்மிகப் பண்டிதராகப் பலராலும் கருதப்பட்டு தாஸ் கனு மகராஜ் என்று அழைக்கப்படும் அளவு உயர்ந்து விட்டார். 

தாஸ் கனு மகராஜுக்கு ஈசாவாஸ்ய உபநிஷத்திற்கு மராத்தியில் உரை எழுதும் ஆசை வந்தது. பதினெட்டே சுலோகங்கள் கொண்டதாக இருந்தாலும் ஈசாவாஸ்ய உபநிஷத்தை அனைத்து உபநிஷத்துகளின் சாராம்சமாகவே மகாத்மா காந்தி போன்றவர்கள் கருதினார்கள். அந்த அளவு மேன்மையும் ஆழமும் கொண்ட ஈசாவாஸ்ய உபநிஷத்தின் முதல் சுலோகத்தையே அவரால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதைப் புரிந்து கொள்ளாமல் அந்த உபநிஷத்திற்கு உரை எழுதினால் அது வெறுமையாகவே இருக்கும் என்பதை தாஸ் கனு மகராஜ் உணர்ந்தார். அதை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவுமாறு அவர் பாபாவிடம் வேண்டினார். 

பாபா சொன்னார். “இதில் என்ன கஷ்டம் இருக்கிறது. விலே பார்லேவில் இருக்கும் காகா தீக்‌ஷித்தின் பங்களாவுக்கு நீ போனால் கூலிக்காரப் பெண் மல்கர்ணி இதன் பொருளை உனக்கு உணர வைப்பாள்

உபநிஷத்தின் உண்மைப் பொருளைக் கூலிக்காரப் பெண்ணிடம் கற்றுக் கொள்வது என்பது வேடிக்கையாக மற்றவர்களுக்குப் படலாம். ஆனால் பாபா காரணமில்லாமல் எதையும் சொல்ல மாட்டார் என்பதை உணர்ந்திருந்த தாஸ் கனு மகராஜ் அவர் சொன்னபடியே சென்றார். அந்தப் பங்களாவில் தங்கி இருந்த போது அதிகாலையில் மல்கர்ணி என்ற அந்தப் பெண் ஆனந்தமாக பாடுவது காதில் விழுந்தது. ஒரு ஆரஞ்சு நிறப் பட்டுச்சேலையின் அழகையும், அதன் ஜரிகையையும், அதன் நேர்த்தியையும் பற்றி மல்கர்ணி அனுபவித்துப் பாடிக் கொண்டிருந்தாள். தாஸ் கனு மகராஜ் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். பட்டுச்சேலையைப் பற்றிப் பாடினாலும் மல்கர்ணி கந்தலைத் தான் உடுத்திக் கொண்டிருந்தாள்.  

தாஸ் கனு மகராஜுக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஒரு நண்பர் மூலமாக ஒரு புதிய சேலையை அவளுக்கு வாங்கிக் கொடுத்தார். மறு நாள் ஆனந்தமாக அதை உடுத்திக் கொண்டிருந்த மல்கர்ணி அதற்கும் மறு நாள் அதை வீசி எறிந்து விட்டு பழையபடி கந்தலை உடுத்திக் கொண்டு ஆரஞ்சு நிறப் பட்டுச்சேலையை வர்ணித்து ஆனந்தமாகப் பாட ஆரம்பித்து விட்டாள். அவருக்கு அப்போது தான் புரிந்தது. அந்தப் பெண்ணின் சந்தோஷம் அவள் உடுத்தும் வெளிப்புற ஆடைகளில் இல்லை. அவள் உள்மனதில் தான் இருக்கிறது.

ஈசாவாஸ்ய உபநிஷத்தின் முதல் சுலோகமே இந்த உலகம் ஈஸ்வரனின் மாயையால் சூழப்பட்டிருக்கிறது. அதனால் வெளியே இருப்பவற்றை வைத்துக் கொண்டு ஆனந்தம் அடைய முற்படாமல் அவற்றை ஒதுக்கி ஆனந்தம் அடையுங்கள்என்று சொல்வதாகவும் மல்கர்ணி அதற்கு உதாரணமாக இருப்பதாகவும் தாஸ் கனு மகராஜ் உணர்ந்தார். அதன் பின் நீரோடை போல அழகாக உணர்வு பூர்வமாக அந்த உபநிஷத்திற்கு அவர் உரை எழுதினார்.

இப்படி மெய்ஞான வழியையும் தன் வழியில் பாபா காட்டி பலரை ஞான மார்க்கத்தில் உயர்த்தி இருக்கிறார். ஒரு ஞானிக்கு மட்டுமே அல்லவா அது முடியும்!

இனி அடுத்த வாரம் வேறொரு மகாசக்தி மனிதரைப் பார்ப்போம்.

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 26.06.2015



Thursday, December 17, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 77


ன் வெண்தாடியை வருடிக் கொண்டே மாராவை அந்த முதியவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். “அவன் நம் குகைக்கோயிலைப் பார்த்த பின்னும் எந்த ஆர்வத்தையும் காட்டாமல் நகர்ந்து போனது உன்னை நிறையவே பாதித்து விட்டது போல் இருக்கிறது மாரா”


மாரா புன்னகை மாறாமல் சொன்னான். “உண்மை தான். எதிரியின் அலட்சியத்தை விட வேறெதுவும் ஒருவனை அதிகம் அவமானப்படுத்தி விட முடியாது....”


அவனால் உண்மையை ஒத்துக் கொள்ள முடிந்தது அவர் அவன் மேல் வைத்திருக்கும் மதிப்பை இன்னும் உயர்த்தியது. வலிமையானவர்களுக்கே தங்கள் பலவீனமான சமயங்களையும் ஒத்துக் கொள்ள முடியும்.


அவர் தொடர்ந்து சொன்னார். “அது தான் மைத்ரேயனை சந்தித்து இரண்டில் ஒன்று இப்போதே பார்த்து விட வேண்டும் என்று உன்னைத் தூண்டுகிறது. அந்த முடிவு உசிதமானதல்ல என்று உனக்கே தெரியும். அதனால் தான் என் அபிப்பிராயத்தையும் கேட்க வந்திருக்கிறாய். உசிதமானது என்று உனக்கு உறுதியாகத் தோன்றி இருந்தால் இன்னேரம் நீ மைத்ரேயனை சந்திக்கப் பாதி தூரம் சென்றிருப்பாய்”


அவன் அவர் சொன்னதை உடனடியாக ஆமோதிக்கவோ மறுக்கவோ செய்யாமல் “ஏன் உசிதமானதல்ல என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள்” என்றான்.


”அவமானப்படுத்த்ப்பட்டதாய் எண்ணி கோபத்தில் எடுக்கும் முடிவுகள் எப்போதுமே நம்மை கட்டுப்பாட்டை இழக்கவே செய்கின்றன மாரா. அது நீ அறியாததல்ல....”


“கோபம் கூட ஒரு மகாசக்தியே. அது எப்பேர்ப்பட்டவனையும் செயல்படத் தூண்டி விடும். கோபத்தில் எல்லோருமே தன்னிலையை இழந்து விடுவதில்லை. கோபத்தை புத்திசாலித்தனமாய் பயன்படுத்தி எதிரிகளை அழித்தவர்கள் இருக்கிறார்கள்.... ஏன் நானே அப்படி தன்னிலை இழக்காமல் இருப்பதால் தான் உடனே செயலில் இறங்கி விடாமல் உங்களைச் சந்திக்க இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்....”


அவருக்கு அது புரிந்தே இருந்தது. ஆனால் மைத்ரேயனைக் குறைவாக மதிப்பிட்டு செயல்படத்துணிவது புத்திசாலித்தனம் அல்ல என்று அவர் நினைத்தவராய் சொன்னார்.


”எதிரியின் பலம், பலவீனம் இரண்டையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல் சந்திப்பது புத்திசாலித்தனம் அல்ல. மைத்ரேயன் நம்மைப் பொருத்த வரையில் ஒரு மூடிய புத்தகமாகவே இருக்கிறான். அவனுடைய மந்தபுத்திக்காரத் தோற்றத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. சம்யே மடாலயத்தின் சுற்றுப்புறங்களில் முன்பு சுற்றிக் கொண்டிருந்தவன் ஒருமுறை கூட அதன் உட்புறத்தில் காலடி எடுத்து வைக்கவில்லை. அவனைக் காப்பாற்ற முடிந்த ஒருவன் வந்த பிறகு தான் அவன் அந்த ஆளையும் கூட்டிக் கொண்டு சம்யே மடாலயம் நுழைந்திருக்கிறான். நம்முடைய இரவு நேர வழிபாடுகள் ரகசியமாய் அங்கு சில காலமாய் நடந்து வருகிறது. நாம் சற்று அதிக சக்திகளை நம் வசமாக்கிக் கொள்ளும்படியான ஒரு சூழ்நிலை உருவாகும் போது உள்ளே நுழைந்ததும் அல்லாமல் அந்த சக்தி அலைகளை முழுமையாக இல்லா விட்டாலும் கூட ஓரளவு கலைத்தும் விட்டிருக்கிறான். அடுத்தபடியாக போக எத்தனையோ இடம் இருக்க சரியாக நம் குகைக்கோயில் இருக்கும் இடத்திற்கே இப்போது போயும் விட்டிருக்கிறான். அங்கும் நம் சக்தி மையத்தில் அவன் பார்வையின் தாக்கம் எந்த அளவில் இருக்கிறது என்பதை நாம் அங்கு சென்று தான் முழுமையாகக் கணிக்க முடியும்.....”


மாரா தலையசைத்தான். மைத்ரேயன் சில நாட்களுக்கு முன் சம்யே மடாலயம் போனதும், இப்போது அவர்களது குகைக் கோயில் மலைக்குப் போயிருப்பதும் மைத்ரேயனின் தீர்மானமாக இருந்திருக்க முடியாது என்பதை மாரா உணர்ந்தே இருந்தான். அதைத் தீர்மானித்திருப்பது மைத்ரேயனின் பாதுகாவலனாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் இவர் சொல்வது போல் அதன் விளைவுகள் தங்களுக்கு அனுகூலமாய் இல்லை என்பதை மாராவால் மறுக்க முடியவில்லை. சம்யே மடாலய நிகழ்வுகள் லீ க்யாங்கின் சந்தேகத்தைக் கிளப்பி பின் அந்த சந்தேகம் அதிகரித்து அதன் பலனாக அவர்கள் இயக்கம் அவன் கவனத்தை எட்டி விட்டது. கடைசியில் வாங் சாவொ அவர்களுடைய குகைக்கோயிலைத் தேடி வரும் அளவுக்குச் செய்து விட்டது. இப்போது அவன் குகைக்கோயில் இருக்கும் மலைக்குப் போனதன் விளைவுகள் எதாவது இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் ஒரு யதார்த்த உண்மை எல்லாவற்றையும் விட மேலாக நின்று அவனை அவசரப்படுத்துகிறது.


அதை அவன் வாய் விட்டே சொன்னான். “இப்போது மைத்ரேயன் எங்கிருக்கிறான் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அவன் ஒரு வேளை திபெத்தில் இருந்து தப்பித்துச் சென்று விட்டான் என்றால் பரந்த இந்தியாவில் அவனைக் கண்டுபிடிப்பது கஷ்டம். தும்பை விட்டு வாலைப் பிடிக்கப் பாடுபடுவது போல் ஆகி விடக் கூடாது. அவனைப் பின் தொடர்ந்தவனிடம் தப்பி விட்டுச் சென்றவன் அந்த மலைக்கே போய் என் கவனத்திற்கும் வந்திருப்பது நம் அதிர்ஷ்டம் என்றே எனக்குத் தோன்றுகிறது.... அதை உபயோகப்படுத்தாமல் விட்டு விடுவது முட்டாள்தனம் அல்லவா”?


அவன் சொல்வதில் இருக்கும் உண்மையையும் அவரால் அலட்சியப்படுத்த முடியவில்லை. அவரும் குழம்பினார். அசட்டுத் துணிச்சலாகவும் இருந்து விடக்கூடாது, அதே சமயம் அலட்சியமாகவும் போய் விடக்கூடாது என்கிற இந்த எதிர்மறை நிலைகளில் எந்த நிலையை மேற்கொள்வது என்பதை அவராலும் தீர்மானிக்க முடியவில்லை.


கடைசியில் மாரா சொன்னான். “நம் மகாசக்தியிடமே கேட்டு அதன்படியே நடப்பது நல்லது.....”

அவர் திகைப்புடன் கேட்டார். “எப்போது?”

“இப்போதே….”

“எங்கே?”

“இங்கேயே தான்”

முதியவர் திகைத்தார். அவர்கள் தெய்வமான மாராவை வரவழைத்து ஆலோசனை கேட்கும் அபூர்வ ரகசியச் சடங்கு ஒன்று அவர்கள் இயக்கத்தில் இருக்கிறது. அது அவர்களது குகைக் கோயிலிலோ, அவர்கள் கூடும் குறிப்பிட்ட இடங்களிலோ மட்டும் நடக்கும். இயக்கத்தின் தலைவனும், உள்வட்டத்து உறுப்பினர் ஒருவராவதும் அந்த சடங்கிற்குக் கண்டிப்பாக இருக்க வேண்டும். உள்வட்ட உறுப்பினர்கள் ஐந்து பேர் வரை கலந்து கொள்வது உண்டு. அந்த முதியவர் இதற்கு முன் இரு முறை தான் இந்த வகை ரகசிய சடங்குகளில் கலந்து கொண்டிருக்கிறார். இரண்டும் முந்தைய தலைவருடன் நடந்தவை. அந்த இரண்டாவது முறையில் தான் இந்த மாராவின் பிறப்பு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.


அந்த அளவு மிக முக்கியமான சடங்கு இது போன்ற ஒரு கலைப்பொருள் அங்காடியில் எப்படி நடக்க முடியும்? புத்தி சுவாதீனம் இல்லாதவன் போல இவன் பேசுகிறானே என்ற திகைப்போடு அவர் சொன்னார். “இது போன்ற இடத்தில் அந்த சடங்கு இது வரை நடந்ததில்லை மாரா”


அவன் அலட்டிக் கொள்ளாமல் சொன்னான். “நேற்றைய எல்லையை இன்று தாண்டாமல் இருந்தால் இன்று வாழ்வதற்கு என்ன அர்த்தம் இருக்கிறது?”


“எல்லையைத் தாண்டுவது மட்டுமே சாதனை அல்லவே மாரா. வேண்டிய விளைவையும் பெற்றால் மட்டுமே அல்லவா அது சாதனையாகிறது!”


அவன் சின்னச் சிரிப்புடன் கேட்டான். “என்னால் முடியாதென்றா சொல்கிறீர்கள்?”


அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. சடங்கு முறைகளைத் திடீரென்று தலைகீழாக மாற்றுவதில் அசௌகரியத்தை உணரும் தலைமுறையைச் சேர்ந்த அவர் சாதுரியமாகச் சொன்னார். “அப்படி சொல்லவில்லை. உன்னால் இந்த சடங்கில்லாமலேயே ஆழ்மன நிலைக்குச் சென்று எது சரியான முடிவு என்று கண்டுபிடிக்க முடியுமே என்று தான் நினைக்கிறேன்”


அவன் சொன்னான். “மைத்ரேயன் சம்பந்தமில்லாத எந்த விஷயத்தில் வேண்டுமானாலும் நான் அப்படி முடிவெடுக்க முடியும். ஆனால் அவன் விஷயத்தில் என் விருப்பு வெறுப்புகள் என் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தி விடுமோ என்று பயப்படுகிறேன்.”


அவரால் அவனைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவன் மேல் இருந்த மரியாதையும் கூடியது. “அப்படியானால் இங்கே வரும் போது அதற்கும் தயாராகவே வந்திருக்கிறாயா?”


”ஆமாம் ஏனென்றால் காலம் நம் வசமில்லை. நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு கணமும் இப்போது மிக முக்கியமானது....” மாரா அமைதியாகச் சொல்லி விட்டு வெளியே சென்றான். காரில் இருந்து ஒரு பழங்கால மரப்பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தான்.


அந்த ரகசியச் சடங்கு பல மணி நேரம் நீளக்கூடியது என்பதால் இன்று இரவு வீட்டுக்குச் செல்ல முடியாது என்பது அவருக்குப் புரிந்தது. மெல்ல எழுந்து மனைவிக்குப் போன் செய்து அன்றிரவு வீட்டுக்கு வர முடியாதென்றும் முக்கிய வேலை ஒன்று வந்து விட்டிருக்கிறது என்றும் தெரிவித்து விட்டு கடையின் வெளிக்கதவை பூட்டியே விட்டு, கடையின் பிரதான வெளியறை விளக்குகளை அணைத்து விட்டுத் திரும்ப உள்ளே வந்தார்.



மாரா அந்த உள் அறை மேசையை ஒரு துணியால் துடைத்து விட்டு அந்த மரப்பெட்டியை அந்த மேசை மேல் வைத்தான். ஒரு தங்கச்சாவியை எடுத்து மரப்பெட்டியைத் திறந்து அதன் உள்ளே இருந்து ஒரு கருப்புத்துணி, அவர்கள் வணங்கும் மாராவின் சிறிய சிலை, ஒரு பழங்கால ஓலைச்சுவடி, ஒரு மிகத்தடிமனான நீளமான கயிறு ஆகியவற்றை எடுத்து மேசையில் வைத்தான். அந்தச் சிலை மிகப் புராதனமானது. அவர்கள் குகைக்கோயில் சிலையின் சிறிய நகல் அது. எப்போதும் தலைமைப் பொறுப்பில் இருப்பவனிடமே இருக்கக்கூடியது. அந்தக் கருப்புத் துணி அந்தத் தலைவன் மட்டுமே புனிதச்சடங்குகளின் போது உடுக்கக்கூடியது.....


மாரா மண்டியிட்டு அந்த சிலையை வணங்கினான். முதியவரும் அவனுடன் சேர்ந்து மண்டியிட்டு வணங்கினார்.


பிறகு மாரா அருகில் இருந்த நாற்காலியை இழுத்து மேசைக்கு முன் இருத்தி விட்டு அதில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினான். சரியாக இரண்டரை நிமிடங்கள் கழித்துக் கேட்டான். “என்ன இங்கே சோக அலைகள்....”


”இன்று காலை என்னுடைய நீண்ட கால நண்பர் ஒருவர் இங்கு வந்திருந்தார். இங்கு தான் அமர்ந்து கொண்டு, விபத்தில் சமீபத்தில் பறிகொடுத்த தன் மகளின் நினைவுகளை என்னோடு பகிர்ந்து விட்டுப் போனார்.”


அதற்கு அவன் அதிக முக்கியத்துவம் தரவில்லை. கண்களை மெல்லத் திறந்து அவன் கேட்டான். “ஆரம்பிக்கலாமா?”


அவர் தலையசைத்தார். அவன் பின் மெல்ல எழுந்து தன் ஆடைகளைக் களைந்து அந்தக் கருப்புத் துணியை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டு மறுபடி அந்த நாற்காலியில் அமர்ந்தான். பின் அவரிடம் சொன்னான். “எனக்கு என்ன உத்தரவு வருகிறதோ அது முழுமையாகத் தெரிய வேண்டும். சின்ன வார்த்தை கூட விடுபட்டு விடக்கூடாது.....”


அவர் சரியென்று தலையசைத்து விட்டுக் கேட்டார். “உன்னைத் திரும்ப வரவழைக்க என்ன குறிச்சொல் சொல்லட்டும்?”


அவன் யோசித்து விட்டுப் புன்னகையுடன் சொன்னான். “அமானுஷ்யன்” அவரும் புன்னகைத்தார்.


(தொடரும்)


என்.கணேசன்

Monday, December 14, 2015

கர்ம வினைகளும் பாபாவின் கருணையும்!

மகாசக்தி மனிதர்கள்-44


வ்வொரு செயலுக்கும் அதற்கேற்ற விளைவுகள் இருக்கவே செய்கின்றன. கர்மவினைகளில் இருந்து யாரும் தப்பிக்க வழியே இல்லை.  மனிதப்பிறவியே முந்தைய கர்மவினைகளின் கணக்குத் தீர்க்கும் களமாக இருக்கிறது. முந்தைய தீவினைகளின் பலனாக வரும் துன்பங்களை அனுபவிக்கும் போது அதிலிருந்து தப்பிக்க ஒவ்வொருவரும் தேடாத வழிகள் இல்லை. கடவுள் மற்றும் தெய்வாம்சம் பொருந்தியவர்களின் கருணைக்குப் பாத்திரமானால் பழைய தீவினைப் பயன்களை ஓரளவாவது குறைத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் ஷிரடி பாபாவின் கருணை பல பக்தர்களுக்கு பேருதவி புரிந்திருக்கிறது. சில உண்மைச் சம்பவங்களைப் பார்ப்போம்.

டாக்டர் சிதம்பரம் பிள்ளை என்ற பக்தர் கினியா புழு நோயால் தாக்கப்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி இருந்தார். இன்றும் கினியா புழு நோய்க்குச் சரியான மருத்துவம் இல்லை என்று மருத்துவ ஏடுகள் சொல்கின்றன. அப்படி இருக்கையில் சுமார் நூறு வருடங்களுக்கும் முந்தைய காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்று கூற வேண்டியதில்லை. ஒரு தாங்க முடியாத கட்டத்தில் அவர் தன் நண்பர் மூலம் பாபாவிற்குச் சொல்லி அனுப்பினார். இந்தக் கஷ்டங்களை அடுத்து பத்து பிறவிகளுக்குப் பகிர்ந்தளிக்க பாபாவிடம் சொல். இந்த ஒரு பிறவியிலேயே இந்த வலி முழுவதையும் என்னால் அனுபவிக்க முடியவில்லை.

பாபா சொன்னார். “என்னது இன்னும் பத்து பிறவிகளா? பத்து பிறவிகளின் கர்மவினைகளையும் பத்து நாட்களில் இறுக்கி முடித்து விட முடியும் போது ஒரு பிறவியின் துன்பங்களைப் பத்து பிறவிகளுக்குப் பகிர்வதா? துவாரகமயியிக்கு வந்து காலை நீட்டி சில நாட்கள் உட்காரச் சொல். ஒரு காகம் வந்து கால்களில் உள்ள அந்தப் புண்களைத் தீண்டும். அதன் பின்னால் நோய் குணமாகும் என்று சொல்

சிதம்பரம் பிள்ளை உடனடியாக ஷிரடி வந்து பாபா கூறியபடி துவாரகமயியில் கால்களை நீட்டி அமர்ந்து கொண்டார். பாபாவின் சேவகனான அப்துல் என்பவன் சிலநாட்கள் கழித்து தற்செயலாக அவருடைய புண் இருக்கும் காலை நன்றாக மிதித்து விட்டான். அவர் புண்களில் இருந்த கினியாபுழுக்கள் அவன் கால்பட்டு நசுங்கி மடிந்தன. அப்போது உயிர் போவது போல் சிதம்பரம் பிள்ளை துடித்தார். பாபா அவரிடம் சொன்னார். “இனி ஒரு காகம் வந்து தீண்ட வேண்டியதில்லை. அப்துலே சென்ற பிறவியில் காகமாக இருந்தவன் தான். அதனால் இனி நீ உன் வீட்டுக்குப் போகலாம். உன் நோய் விரைவில் குணமாகி விடும்”  சிதம்பரம் பிள்ளை அவர் சொன்னபடி ஊர் திரும்பினார்.  பத்து நாட்களில் வியக்கத்தக்க வகையில் அவர் பூரண குணமானார்.

அதே போல பீமாஜி என்பவன் ஆஸ்துமா மற்றும் காச நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தான். அவனை ஒருவர் பாபாவிடம் அழைத்து வந்தார் சென்ற பிறவியில் திருடனாய் இருந்தவனை அழைத்து வந்து அவனைக் குணமாக்கும் பாரத்தை என் மேல் ஏன் சுமத்துகிறாய்”  என்று அவரிடம் சொல்ல பீமாஜி அதிர்ந்து போனான். அவன் பாபாவின் காலடியில் சாஷ்டாங்கமாய் விழுந்து கதறினான். “அனாத ரட்சகரே! ஆபத் பாந்தவரே! நீங்களும் என்னைக் கைவிட்டால் நான் எங்கே போவேன். எனக்கு கருணை காட்டி காப்பாற்றுங்கள்

மனம் இளகிய பாபா “கர்மவினைகளின் பலன்களை யாருமே ஒதுக்கி விட முடியாது. ஆனால் அவற்றைப் பெருமளவு குறைக்க முடியும். நீ சில நாட்கள் ஈர வராந்தாவில் வசித்து உன் கர்மவினைப் பலன்களைக் குறைத்துக் கொள்என்று கட்டளை இட்டார். பீமாஜியும் அது போலவே செய்தான். அப்படி சில நாட்கள் அந்த ஈர வராந்தாவில் வசிக்கையில் பீமாஜி இரண்டு கனவுகள் கண்டான். ஒரு கனவு அவன் சிறுவனாக இருப்பதாகவும் ஒரு ஆசிரியர் அவனைக் கடுமையாக அடித்து தண்டிப்பது போலவும் இருந்தது. இன்னொரு கனவு அவன் மார்பில் ஒரு பாறையை வைத்து யாரோ அழுத்தி உருட்டுவது போல இருந்தது. மரணபயத்தையும் தாங்க முடியாத வலியையும் அந்தக் கணங்களில் பீமாஜி உணர்ந்தான்.

அவனிடம் பாபா சொன்னார். “உன் முன் பிறவி தீவினைகளின் பலனை மிகச்சுருக்கி கனவுகளிலேயே அனுபவிக்க வைத்து முடித்து விட்டேன். இது நீ திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம். இனி நீ நேரான பாதையில் வாழ்வது முக்கியம்”. அவர் சொன்னது போலவே சில நாட்களில் பீமாஜி குணம் அடைந்து விட்டான். அதன் பின் அவன் வாழ்க்கை மிக நேர்மையானதாகவும் தர்மசிந்தனை நிறைந்ததாகவும் மாறி விட்டது. 

சில சமயங்களில் பாபாவின் பக்தர்களே அவரை ஏமாற்ற நினைப்பதுண்டு. காரணம் பணத்தாசை. பணத்தாசை வந்து விட்டால் பகவானையே ஏமாற்ற நினைக்கும் மனோ பாவம் மனிதர்களுக்கு வந்து விடும். பணத்தின் மகிமை அது. ஒரு பக்தர் அவரிடம் வருவதற்கு முன் தன்னிடம் இருந்த பணத்தைக் கூட வரும் நண்பர் கையில் தந்து விட்டார். பாபா தட்சிணை கேட்டால் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி விடலாம் என்று சொல்லி பணம் தராமல் தப்பிக்கலாம் என்று திட்டமிட்டு தான் அப்படி செய்தார். பாபாவை அவர் சந்தித்த போது பாபா சொன்னார். “தட்சிணை கொடு. உன்னுடன் வந்திருக்கும் நண்பரிடமிருந்து வாங்கிக் கொடுஅந்த பக்தருக்குத் தூக்கிவாரிப் போட்டது. அசடு வழிந்தபடி உடனே தன் நண்பரிடம் தந்து வைத்திருந்த தட்சிணைப் பணத்தை வாங்கி பாபாவிடம் தந்தார். 

ஒருசிலர் பாபாவிடம் தர மனதில் ஆரம்பித்தில் உத்தேசித்திருந்த பணத்தைத் தராமல் அதற்கும் குறைவான பணத்தைத் தருவதுண்டு. பாபா மிகச்சரியாக அவர்கள் எவ்வளவு குறைத்துத் தருகிறார்களோ அந்தத்  தொகையைக் கேட்டு வாங்குவார். அதே போல சிலர் தங்களைக் கஷ்டப்படுத்திக் கொண்டு மிக அதிகமாகத் தரும் தொகையையும், முன்பு உத்தேசித்ததை விட அதிகம் தரும் தொகையையும் அவர் திருப்பித் தருவதும் உண்டு.

பகதர்கள் தரும் பணம் முழுவதும் அவ்வப்போதே தர்ம காரியங்களுக்குப் பகிர்ந்து அளிக்கபடும் என்பதை முன்பே சொல்லி இருந்தோம். ஒரு சல்லிக் காசு கூட அவர் தன் தனிப்பட்ட செலவுக்கோ ஆடம்பரத்துக்கோ எடுத்துக் கொள்வதில்லை. அப்படி இருக்கையில் முழு மனதோடு தராத பணத்தை அவர் ஏன் பக்தர்களிடமிருந்து வாங்க வேண்டும் என்ற கேள்வி சிலர் மனதில் எழலாம். அதற்கும் ஒரு ஆழ்ந்த காரணம் இருக்கிறது.

ஒரு காரியம் ஆக வேண்டும் என்று வேண்டி அக்காரியம் நிறைவேறினால் இத்தனை பணம் தருகிறேன் என்று சில பகதர்கள் வேண்டிக் கொள்வதுண்டு. அப்படி அந்தக் காரியம் நிறைவேறி, நினைத்த பணத்தை அவர்கள் தராமல் போனால் நேர்த்திக்கடன் நிறைவேற்றாத கடன்காரர்களாகி அதன் மூலம் ஏற்படும் துன்பங்களுக்கு ஆளாவார்கள். அதைத் தவிர்க்கவும், உண்மையான தர்ம காரியங்களினால் அவர்களுக்கு ஏற்படும் புண்ணியத்தைக் கூட்டவுமே பாபா அப்படிச் செய்தார்.

இப்படி கர்மவினைகளின் கடுமையான பலன்களை வெகுவாகக் குறைத்து விட பாபா சிலருக்கு உதவி புரிந்தாலும் சில சந்தர்ப்பங்களில் மற்றவர் கர்மவழிப் பயணத்தில் இடையில் புகுவதைத் தவிர்த்தார். ஒரு மூதாட்டியின் ஒரே மகனைப் பாம்பு கடித்து விட்டது. அந்த மூதாட்டி அழுது கொண்டே தன் மகனைக் காப்பாற்ற பாபாவிடம் ஓடோடி வந்தார். பாபா கையால் திருநீறு வாங்கிப் போனால் மகனைக் காப்பாற்றி விட முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. ஆனால் பாபா அவருக்கு திருநீறு அளிக்கவில்லை. அந்த மூதாட்டியின் மகன் இறந்து போனான்.  

அருகே இருந்த அவருடைய பக்தர் காரணம் கேட்ட போது அந்த மூதாட்டியின் மகனின் கஷ்ட காலம் முடிவுக்கு வந்து விட்டது. இனி நல்லதொரு பிறவி எடுத்து நன்மைகள் பெறப் போகிறான்.  அதைத் தடுப்பது தர்மம் அல்லஎன்று பாபா கூறினார். இப்படி ஒரு யோகியின் சக்திகள் தர்மத்தை ஒட்டியே பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 19.06.2015