சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 29, 2017

இருவேறு உலகம் – 36


க்ரிஷ் தன் கம்ப்யூட்டரில் அல்லது அறையில் முக்கியமான இடத்தில் ரகசிய காமிரா ஏதாவது வைக்கப்பட்டிருக்குமோ என்று சந்தேகப்பட்டான். அப்படியில்லா விட்டால் அவன் படித்துக் கொண்டிருக்கும் நிகோலா டெஸ்லா பற்றி யாரோ ஒருவன் அறிந்திருக்க முடியாது. யோசித்துப் பார்த்த போது அறையில் நுழைந்து யாரும் ரகசியக் காமிரா வைத்து விட்டுப் போயிருக்க முடியாது என்று தோன்றியது. உதயின் அடியாட்கள் இரண்டு மூன்று பேராவது வீட்டின் வாசலிலேயே எப்போதும் இருந்து கொண்டிருப்பார்கள். அவர்களை மீறி யாரும் உள்ளே நுழைவது அவ்வளவு சுலபமல்ல. மேலும் தன் அறைக்கு வெளியாட்கள் வருவது அவனுக்குப் பிடிக்காது என்பதால் அந்த அடியாட்கள் உட்பட அவன் வீட்டார் யாரையுமே அப்படி அனுமதிக்க மாட்டார்கள்... வேவு பார்க்கும் காமிரா லாப்டாப்பில் இருக்க வாய்ப்பு இருக்கிறது. கல்லூரியில் அதை அவன் வகுப்பில் வைத்து விட்டு பேராசிரியர்களிடமோ, மற்றவர்களிடமோ சென்று நிறைய நேரம் பேசிக் கொண்டிருப்பதும் உண்டு. அந்த சமயத்தில் யாராவது இதைச் செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. உடனடியாக க்ரிஷ் லாப்டாப்பை அணைத்து விட்டான். பின் லாப்டாப்பை அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றிப் பார்த்தான். காமிரா இல்லை.  இணையத்தின் மூலமாக இப்படி வேவு பார்க்க முடியுமா என்று நிறைய விதங்களில் யோசித்து சோதித்தும் பார்த்தான்... அன்று பிறகு அவன் லாப்டாப்பை ஆன் செய்யவில்லை

மறுநாள் கல்லூரியில் வகுப்பில் தான் அவன் லாப்டாப்பைத் திறந்தான். திறந்த இரண்டாவது நிமிடம் லாப்டாப் ஸ்கிரீனில் வாசகம் மிளிர்ந்தது. “நேற்று நீ பயந்து விட்டாயா?

இதென்ன, காத்துக் கொண்டே இருந்தது போல் லாப்டாப் திறந்தவுடன் உடனடியாக இப்படி கேட்கிறானே என்று க்ரிஷ் சிறிது பொறுமை இழந்தான். “யார் நீங்கள்?என்று அந்த வாசகத்தின் கீழ் மறுபடி கேள்வி எழுப்பினான்.

“நேற்றே சொன்னேனே உன் நண்பன் என்றுஎன பதில் வந்தது.

“எனக்குப் பெயரில்லாத நண்பர்கள் கிடையாது. ரகசியமாய் இருக்கும் நண்பர்களைப் பிடிக்கவும் பிடிக்காதுஎன்று அழுத்தினான்.

அந்த சமயத்தில் வகுப்பில் ஒரு பேராசிரியர் நுழைய “சரி சரி உன் பேராசிரியர் வந்து விட்டார். மாலை பேசுவோம்என்று மிளிரிய வாசகங்கள் உடனே மறைந்தும் போயின.  பேராசிரியர் நுழைந்ததையும் உடனடியாகச் சொல்கிறானே... அதன் பின் அவனால் பேராசிரியர்கள் சொன்ன எதிலும்  கவனம் செலுத்த முடியவில்லை.

மாலை வீட்டுக்கு வந்த பின் நிறைய நேரம் லாப்டாப்பை அவன் திறக்கவில்லை. யோகி ராமசாரகா என்ற பெயரில் அழைக்கப்பட்ட வில்லியம் வாக்கர் அட்கின்சன்  எழுதியிருந்த ராஜயோகா புத்தகத்தில் ஆழ்ந்து போனான். அவர் எழுதியிருந்த கருத்துகளும், நிகோலா டெஸ்லா எழுதியிருந்த கருத்துகளும் எவ்வளவு ஒத்துப் போகின்றன என்று அடிக்கடி வியந்தான். மெய்ஞானமும், விஞ்ஞானமும் சந்திக்கும் இடங்கள் அவனுள் விவரிக்க முடியாத சிலிர்ப்பை ஏற்படுத்தின.

காலம் மறந்து அந்த நூலில் ஆழ்ந்திருந்த அவனை அம்மா வந்து தட்டினாள். ‘என்ன என்பது போல் அவன் நிமிர்ந்து பார்க்க பத்மாவதி நாற்காலியை இழுத்துப் போட்டு அவனருகில் உட்கார்ந்தாள். இனி சிறிது நேரம் அங்கிருக்காமல் அம்மா நகர மாட்டாள் என்பதைப் புரிந்து கொண்ட க்ரிஷ், காரணத்தை சுற்றும் முற்றும் தேடினான். சாயங்காலம் அவள் கொண்டு வந்து வைத்திருந்த காபியும், உப்புமாவும் அப்படியே இருந்தது தெரியவர அம்மாவைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தான். அம்மா எதையும் பொறுப்பாள், அவன் சாப்பிடாமல் இருந்தால் பொறுக்க மாட்டாள்..

“ஏண்டா இத்தனை படிக்கிறாய், பல பேருக்கு புத்தி சொல்றாய், நேரா நேரத்துக்குச் சாப்பிடணும்னு தெரியாதாடா? நீ படிச்ச புஸ்தகம் எதிலயும் அதைச் சொல்லலியா பத்மாவதி சலிப்பு கலந்த கோபத்துடன் கேட்டாள்.

“சாரிம்மா. ரொம்ப சுவாரசியமா இருந்தது. நேரம் போனதே தெரியல....

இது என்ன நாவலா?என்று பத்மாவதி கேட்டாள். அவளைப் பொருத்தவரை கதைப்புத்தகங்கள் மட்டுமே சுவாரசியமானவை. அவள் இப்போதும் தமிழ் நாவல்களை ரசித்துப் படிப்பாள். இப்போதெல்லாம் நாவல்கள் தமிழில் அதிகம் வருவதில்லை என்பதில் அவளுக்கு வருத்தம். பழைய நாவல்களையே மறுபடி மறுபடி படிப்பாள்.

இல்லை. இது ராஜ யோகா பத்தின புஸ்தகம்...என்றான் அவன்.

அவளுக்கு ராஜ யோகா என்றால் என்ன என்று தெரியாது. ஜோதிடர்கள் ராஜ யோகம் பற்றிச் சொல்வதைக் கேட்டிருக்கிறாள். அதனால் அது ஜோதிட சம்பந்த புத்தகமாக இருக்கலாம் என்று அனுமானித்தவள் அவனிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை. அந்த ஆறிய உப்புமாவை எடுத்து மகனுக்கு ஊட்டி விட ஆயத்தமானாள். அவள் ஊட்டிய ஒருவாய் உப்புமாவை விழுங்கிய க்ரிஷ் எச்சரிக்கையுடன் பின்னால் திரும்பி உதய் தெரிகிறானா என்று பார்த்தான். அம்மாவிடம் வாய்விட்டுச் சொன்னான். “சும்மா இரும்மா. அண்ணன் பார்த்தா சின்ன பாப்பா அப்படி இப்படின்னு இதை வெச்சே என்னை ஓட்டுவான்....

அடுத்த கவளத்தை எடுத்தபடியே பத்மாவதி சொன்னாள். “அவன் கிடக்கிறான் தடியன். அவனுக்கும் எத்தனை தடவை ஊட்டியிருக்கேன்....

அண்ணனுக்கும் அம்மா ஊட்டி விடுவதைக் கற்பனை செய்த போது க்ரிஷுக்கு வேடிக்கையாக இருந்தது. “அவன் ஒன்னும் சொல்ல மாட்டானா?

இளைய மகனுக்கு அடுத்த கவளத்தையும் ஊட்டி விட்ட பத்மாவதி சிரித்தபடியே ஒரு ரகசியத்தைப் போட்டுடைத்தாள். “கைகழுவ சோம்பல் பட்டுட்டு அவனே ஊட்டி விடச் சொல்வான்.... ஆனா அதுக்கும் முன்னாடி நீ எங்கயாவது தெரியறியான்னு பார்த்துக்குவான்.....

ஓ அவனுக்கும் அந்தப் பயம் இருக்குஎன்று எண்ணித் திருப்தியுடன் அவளது  அடுத்த கவள உப்புமாவையும் விழுங்கிய க்ரிஷ் “போதும்மா.... இனியும் இத சாப்டா ராத்திரி எதையும் சாப்ட முடியாது....என்று உறுதியாய் சொன்னான்.

அவன் குரலில் இருந்த உறுதி இனி சாப்பிட மாட்டான் என்பதை உணர்த்தியதால் பத்மாவதி அரை மனதோடு எழுந்தாள். “இவ்வளவு கம்மியா சாப்பிட்டா எப்டிடா? அதான் நோஞ்சானாவே இருக்கே. உன் அண்ணன் எப்படி கரெக்டா உடம்ப வச்சிருக்கான் பாரு. அப்படி இருக்கணும்....

“அவனைத் தான் நீ தடியன்னு சொல்றியேஎன்றபடி லாப்டாப்பை க்ரிஷ் திறந்தான்.

“அது சும்மா செல்லமா கூப்பிடறது....என்ற மென்மையாகச் சொன்ன பத்மாவதி, “கரெக்டா எட்டரை மணிக்கு டைனிங் டேபிளுக்கு நீ வந்துடணும். இல்லாட்டி இந்த ஜோசிய புஸ்தகத்தை எடுத்துட்டுப் போயிடுவேன்....என்று  மிரட்டி விட்டுப் போனாள்.  அம்மா இதை ஏன் ஜோசிய புஸ்தகம் என்று சொல்கிறாள் என யோசித்த கிரிஷுக்கு விளங்கிய போது புன்னகை வந்தது. “ஸோ ஸ்வீட்

தாய்ப்பாசத்துக்கு இணையானது எதுவுமேயில்லை, இல்லையா?என்ற கேள்வி அவன் லாப்டாப்பில் மின்னியது. அப்போது தான் க்ரிஷுக்கு அந்த வினோத தொடர்பு கொள்ளும் நபர் நினைவு வந்தது. உடனே திகைப்பும் ஏற்பட்டது. இது வரை இந்த லாப்டாப் மூலம் தான் அந்த நபர் எல்லாவற்றையும் அறிவதாக நினைத்திருந்தான். ஆனால் இப்போதைய நிகழ்வை இது வரை அணைக்கப்பட்டிருந்த லாப்டாப்பில் இருந்து  அந்த நபர் நடந்ததைப் பார்த்திருக்க வழியே இல்லை. இப்போது தான் அவன் லாப்டாப்பைத் திறந்திருப்பதால் அம்மா போவதை வேண்டுமானால் அந்த நபர் பார்த்திருக்கலாம். ஒருவேளை யூகத்தில் அப்படிக் கேட்டிருந்தால்.....? அந்த யூகத்தையும் தகர்க்கும்படியாக யோகி ராமசாரகா, நிகோலா டெஸ்லா ரெண்டு பேர் எண்ண அலைகளும் ஒத்துப் போகிறது. இல்லையா?என்ற வாசகம் லாப்டாப் திரையில் மின்னிய போது க்ரிஷ் அதிர்ந்தான். இன்று அவன் யோகி ராமசாரகாவின் புத்தகம் படித்ததை மட்டுமல்ல, அவன் மனதில் நினைத்ததையும் எப்படி அந்த ஆள் கண்டுபிடித்தான்.... இங்கு நடப்பதைப் பார்க்க முடிகிறது போல் மனதையும் படிக்க முடிகிறது….

நடப்பதை எல்லாம் பார்க்கும் போது அவனுக்கு “மேட்ரிக்ஸ்ஆங்கிலப்படம் நினைவுக்கு வந்தது. அதிலும் கதாநாயகன் நியோவை இப்படி கம்ப்யூட்டரில் தான் அந்த ரகசிய இயக்கம் தொடர்பு கொள்ளும். அந்தப் படம் பார்த்த பாதிப்பில் யாரோ அவனுடன் விளையாடுகிறார்களோ? தொழில் நுட்பம் அவனை வேவு பார்க்க உதவலாம். அவன் மனதையும் வேவு பார்க்க வைக்க முடியுமா என்ன?

அவன் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அடுத்த வாசகம் லாப்டாப் திரையில் வந்தது. “நான் எந்த ரகசிய இயக்க ஆளும் அல்ல. நான் நீ நினைக்கும் மேட்ரிக்ஸ் சினிமாவைப் பார்த்ததும் இல்லை.

திகைத்த க்ரிஷ் படபடக்கும் இதயத்துடன், லாப்டாப்பில் கேள்வியை அழுத்தினான். “அப்படியானால் யார் நீங்கள்?

“நேற்றே சொன்னேனே, உன் நண்பன்....

“எனக்கு இந்த விளையாட்டு சலிப்பாக இருக்கிறது. சரி, இதையாவது சொல்லுங்கள்- நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், என்ன நினைக்கிறேன் என்பதை எல்லாம் நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கிறீர்கள்?

நிகோலா டெஸ்லா அன்றைக்கே சொல்லி விட்டுப் போன அதே வழியில் தான்.... உன் அலைவரிசையை என்னால் படிக்க முடிகிறது....

க்ரிஷ் திகைத்தான். நிகோலா டெஸ்லாவின் அந்த வலிமையான வாக்கியம் நினைவுக்கு வந்தது.  பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறிய வேண்டுமானால் சக்தி, அலைவரிசை, அதிர்வுகள் மூலமாக சிந்தித்துப் பார்.

“நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள்?

“உன் வீட்டிலிருந்து 16000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறேன்.....

க்ரிஷுக்குத் தலைசுற்றியது நடந்து கொண்டிருப்பதெல்லாம் நிஜம் தானா இல்லை கனவா? 16000 கிலோமீட்டர் தொலைவில் இருந்து ஒருவன் இப்படித் தொடர்பு கொள்ள முடியுமா? அவனுக்கு நம்பக் கஷ்டமாக இருந்தது. எழுந்து நின்று சோம்பல் முறித்தான். திரும்ப வந்து நாற்காலியில் அமர்ந்தான். இப்போதும் அவன் லாப்டாப்பில் அதே பதில் மின்னிக் கொண்டிருந்தது. “16000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறேன்.....

நடப்பது கனவோ, கற்பனையோ அல்ல. நிஜம் தான்....

“சரி சொல்லுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?

“உன்னைச் சந்திக்க வேண்டும்

“எதற்கு சந்திக்க விரும்புகிறீர்கள்

“நேரில் சந்திக்கும் போது சொல்கிறேனே!

“சரி வீட்டுக்கு வாருங்கள்

“நீயே என்னைச் சந்திக்க வந்தால் நன்றாயிருக்கும்


உங்களைச் சந்திக்க என்னால் 16000 கிலோமீட்டர் எல்லாம் பயணம் செய்ய முடியாது


“தேவையில்லை. நான் நீ வர முடிந்த அளவு தூரத்திற்கே வருகிறேன். அங்கு வந்து சந்தித்தால் போதும்....

க்ரிஷ் யோசித்தான். அந்த நபரைச் சந்தித்து தன் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளாமல் போனால் நிம்மதியாக இருக்க முடியாது என்று அவனுக்கும் தோன்றியது. “சரி விலாசம் சொல்லுங்கள். நானே வருகிறேன்

அப்போது தான் அந்த மலையின் பெயர் க்ரிஷின் லாப்டாப்பில் வந்தது.

(தொடரும்)
என்.கணேசன்

Monday, June 26, 2017

வூடூ டாக்டரை நிறுத்திய வூடூ போலீஸ்காரர்!

  
ல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பார்கள். அது போல் வூடூ டாக்டர் பஸ்ஸார்ட்டை வூடூ வழியிலேயே எதிர்க்க முடிந்த ஒரு போலீஸ் அதிகாரி ஒருவர் 1926 ஆம் ஆண்டு அந்த ப்யூஃபோர்ட் நகருக்கே வந்து சேர்ந்தார். அவர் பெயர் ஜே எட் மக்டீர் (J. Ed McTeer). 22 வயதிலேயே போலீஸ் அதிகாரி ஆனதால் அவர் ’பாய் ஷெரீஃப்’ (Boy Sheriff) என்ற பெயரில் அழைக்கப்பட்டார். வயதாகி ரிடையரான காலத்திலும் அதே பெயர் அவருக்கு நிலைத்திருந்தது தான் வேடிக்கை.
அவர் வேலைக்கு வந்த போது போலீஸ் துறையிலேயே அதிகமாய் பேசப்பட்டவர் வூடூ பஸ்ஸார்ட் தான். மக்டீர் இளம் வயதிலேயே அமானுஷ்ய விஷயங்களில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அவருடைய பாட்டி ஆவிகளின் மீடியமாக இருந்தவர் என்று சொல்லப்படுகிறது. மக்டீரின் சிறுவயதில் அவரது தந்தையின் பண்ணையில் ஒரு ஆப்பிரிக்கத் தம்பதி பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் மூலம் வூடூ பற்றி அறிந்த அவர் இளமையிலேயே வூடூ குறித்த புத்தகங்களைப் படித்தும், வூடூ மக்களை சந்தித்தும் வூடூ குறித்த ஏராளமான தகவல்கள் அறிந்து வைத்திருந்தார்.

அவர் வேலைக்கு வந்த பிறகு பஸ்ஸார்டைப் பற்றி நிறையத் தகவல்கள் சேகரித்துக் கொண்டார். டாக்டர் பஸ்ஸார்டு தன்னிடம் கருப்புப் பூனையின் எலும்பு வைத்திருக்கிறார் என்று அவரே ஒத்துக் கொண்டிருந்ததை மக்டீர் அறிந்தார். சிலர் டாக்டர் பஸ்ஸார்ட் ஒரு சைத்தானின் கல்லை வைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் அந்தக் கல்லைக் கையில் வைத்துக் கொண்டு டாக்டர் பஸ்ஸார்ட் சைத்தானை சூனிய வேலைகளில் ஈடுபடுத்துகிறார் என்றும் சொன்னார்கள். சிலர் பாம்புகளை வைத்து டாக்டர் பஸ்ஸார்ட் பல வேலைகளைச் செய்வதாகச் சொன்னார்கள். ஆனால் பாம்புகளை வைத்து டாக்டர் பஸ்ஸார்டு நோய்களைத் தான் குணப்படுத்தி இருக்கிறார் என்று  மற்றவர்கள் சொன்னார்கள்.

அப்படி பாம்பினால் டாக்டர் பஸ்ஸார்ட் குணப்படுத்திய ஒருவர் மக்டீரிடம் தன் அனுபவத்தைச் சொன்னார். டாக்டர் பஸ்ஸார்ட் தான் உபயோகப்படுத்தும் பாம்புகளுக்குத் தனித்தனி பெயர்கள் வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். “நான் சென்றவுடன் என்னைப் படுத்துக் கொள்ளச் சொன்னார். பின் “ஷாம் இங்கே வா என்று ஏதோ ஆளை அழைப்பது போல டாக்டர் பஸ்ஸார்ட் அழைத்தார். நான் ஆளை எதிர்பார்த்தேன். ஆனால் வந்ததோ ஒரு பாம்பு. அது என் மேல் ஏறியது. பயத்தில் நான் நடுநடுங்கி விட்டேன். ஆனால் பஸ்ஸார்ட் பயப்படாதே. அது தீங்கு ஒன்றும் செய்யாது என்றார். அவர் சொன்னது போலவே என் மேல் ஊறி விட்டு இறங்கி விட்டது.அந்த நிகழ்வுக்குப் பின் அவரது நோய் நீங்கி விட்டது என்றும் அந்த நபர் சொன்னார்.  

எந்த வழிகளிலானாலும் நோய் தீர்க்க உதவுவதில் மக்டீருக்கும் பிரச்னை இல்லை. ஆனால் நோய் தீர்ப்பது போன்ற ஒன்றிரண்டு நல்ல வேலைகள் செய்தால் ஒன்பது வில்லங்கமான வேலைகள் டாக்டர் பஸ்ஸார்ட் செய்வதில் தான் மக்டீருக்கு உடன்பாடில்லை. அவருக்கும் வூடூ கலையில் ஞானம் இருந்ததால் அவரும் நல்ல காரணங்களுக்கு வூடூ சிகிச்சை செய்ய ஆரம்பித்தார். குறிப்பாக சூனியம் எடுப்பது மற்றும் நோய் தீர்ப்பது ஆகிய இரண்டுக்கும் சிகிச்சை பார்த்த மக்டீர் அதற்கு பணம் எதுவும் கூலியாக வாங்கிக் கொள்ளவில்லை. 

மற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு உள்ளூர டாக்டர் பஸ்ஸார்ட் மேல் பயம் இருந்தது. அவர் ஏதாவது சூனியம் செய்து விட்டால் பிரச்னையாகி விடுமே என்று பயந்த அவர்கள் ஒரு அளவுக்கு மேல் டாக்டர் பஸ்ஸார்ட் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. ஆனால் வூடூவில் ஓரளவு நன்றாகவே தேர்ச்சி பெற்றிருந்த மக்டீருக்கு அவர்கள் போல் பயமிருக்கவில்லை. அவர் டாக்டர் பஸ்ஸார்டை அழைத்து அவர் சட்ட விரோதமாக தொடர்ந்து நடந்து கொண்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று வெளிப்படையாகவே எச்சரித்தார்.

ஒரு முறை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்த போது நீதிமன்ற வளாகத்தில் பஸ்ஸார்ட் கழுகுகள் ஏராளமாக வந்து குவிந்தன. அதை பஸ்ஸார்டின் செயலாகவே மக்டீர் கருதினார். உடனே அவர் அந்த பஸ்ஸார்ட் கழுகுகளை சுட்டுத்தள்ள ஆரம்பித்தார். இது டாக்டர் பஸ்ஸார்டுக்கு அவர் அனுப்பிய எச்சரிக்கையாகவே எல்லோரும் பார்த்தார்கள்.

அதோடு நின்று விடாத மக்டீர் ஒரு வலுவான வழக்கில் டாக்டர் பஸ்ஸார்டை சிக்க வைக்க நல்ல சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு கைதி டாக்டர் பஸ்ஸார்டின் சட்டத்திற்குப் புறம்பான வேலைகளை அறிந்திருந்தான் என்பது தெரியவரவே மக்டீர் அவனைச் சந்தித்து டாக்டர் பஸ்ஸார்டிற்கு எதிராக சாட்சியம் அளிக்க வற்புறுத்தினார். அவன் பஸ்ஸார்டிற்கு எதிராக சாட்சியம் அளிக்க பயந்தான். ஆனால் மக்டீர் அவனை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தார்.   

அந்த வழக்கில் அந்தக் கைதி சாட்சி சொல்வதற்கு கூண்டில் ஏறிய போது அவன் உடலில் பல நூறு எறும்புகள் ஊர்ந்து கடிப்பது போல அவன் உணர்ந்தான். அவன் வேக வேகமாகத் தன்னையே அடித்துக் கொண்டான். பின் வாயில் நுரை தள்ள அங்கேயே மயங்கி விழுந்தான். அதோடு அந்த வழக்கு முடிவுக்கு வந்து விட்டது என்பதைச் சொல்லத் தேவையில்லை.   இந்த நிகழ்வு டாக்டர் பஸ்ஸார்ட் மேல் பலருக்கு இருந்த கிலியை அதிகப்படுத்தியது.

ஆனால் அதுவும் மக்டீரைப் பின்னடைய வைக்கவில்லை. அவர் டாக்டர் பஸ்ஸார்டை எப்படியாவது தண்டித்தே தீருவேன் என்று சூளுரைத்தார். சில நாட்களில் டாக்டர் பஸ்ஸார்டின் மகன்களில் ஒருவன் ஒரு கார் விபத்தில் சிக்கி இறந்து போனான். பலரும் அதில் மக்டீரின் சூனியம் இணைந்துள்ளது என்று அபிப்பிராயப்பட்டனர். அவர்கள் பேசுவதைக் கேள்விப்பட்டோ, அல்லது அவர்கள் சொன்னதில் உண்மை இருப்பதாகத் தானே கண்டறிந்தோ டாக்டர் பஸ்ஸார்ட் நேரில் வந்து மக்டீரைச் சந்தித்தார். தங்களுக்குள் நடக்கும் பனிப் போரை உடனே நிறுத்திக் கொள்ளலாம் என்று சொன்னார். மக்டீர் பஸ்ஸார்டிடம் “சட்ட விரோதமான எந்தச் செயலிலும் நீங்கள் ஈடுபடாத வரை என்னுடைய குறுக்கீடு எந்த விதத்திலும் உங்கள் விஷயத்தில் இருக்காது என்று கறாராகச் சொல்லி விட்டார். சற்று யோசித்து விட்டு டாக்டர் பஸ்ஸார்ட் ஒத்துக் கொண்டார்.

அன்றிலிருந்து நீதிமன்றங்களுக்கு டாக்டர் பஸ்ஸார்ட் வருவது போன்ற விஷயங்கள் நின்று போயின என்றாலும் மற்ற வகைகளில் சின்னச்சின்ன சட்ட விரோதச் செயல்களை அவர் ரகசியமாய் தொடரவே செய்தார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் ஆரோக்கியமான இளைஞர்கள் அனைவரையும் போருக்கு உட்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டது.  போருக்குப் போக விரும்பாத இளைஞர்கள் டாக்டர் பஸ்ஸார்டிடம் உதவி கேட்டுச் சென்றனர். அவரும் டாக்டர் பக் என்ற இன்னொரு டாக்டரும் சில விஷ மருந்துகளைத் தந்து உடல் பரிசோதனையின் போது அந்த இளைஞர்களின் இதயத்துடிப்புகள் அளவுக்கு அதிகமாக அடிக்கும்படி செய்தார்கள். இதய நோய் உள்ளதாக குறிக்கப்பட்டு அந்த இளைஞர்கள் போரில் கலந்து கொள்ளாமல் தப்பித்தார்கள். இந்த விஷயம் மக்டீருக்குத் தெரிய வர அவர் சாட்சியங்களை வலுவாக அமைத்து டாக்டர் பஸ்ஸார்டையும், டாக்டர் பக்கையும் வழக்கில் சிக்க வைத்தார்.

டாக்டர் பஸ்ஸார்ட் தன் தரப்பில் வாதாட ப்ராண்ட்லீ ஹார்வே என்ற பிரபல வக்கீலை நியமித்தார். அந்த வழக்கில் வெறும் முன்னூறு டாலர் அபராதம் செலுத்தி விட்டு வெளியே வந்தார். அந்த வக்கீலின் மகன் பின் தான் எழுதிய நூலில் டாக்டர் பஸ்ஸார்ட் தன் தந்தைக்கு அந்த வழக்கிற்கு ஐந்தாயிரம் டாலர் தந்ததாக நினைவு கூறுகிறார். அந்த வக்கீலை தன் வீட்டுப் பரணுக்கு அழைத்துப் போன பஸ்ஸார்ட் பழைய ட்ரங்குப் பெட்டியிலிருந்து அந்த ஐந்தாயிரம் ரூபாயை எடுத்துத் தந்ததாகவும், அந்த ட்ரங்குப் பெட்டியில் இன்னும் கட்டுக் கட்டாக டாலர்கள் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

அந்த வழக்கு முடிந்த சில மாதங்களில் 1947 ல் டாக்டர் பஸ்ஸார்ட் வயிற்றில் கேன்சர் வந்து காலமானார். அவருடைய கல்லறை எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. சிலர், பல வூடூ பயிற்சியாளர்கள் அவர் சவப்பெட்டியில் இருந்து அவர் உடலை வெளியே எடுத்து அவரது எலும்புகளை தங்கள் வூடூ பயிற்சிகளுக்கு எடுத்துச் சென்று விட்டதாகச் சொல்கிறார்கள். அது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. அவர் கல்லறை இருக்கும் இடம் சரியாகத் தெரிந்திருந்தால் வூடூ ராணி மேரி லாவியூவின் கல்லறை போல இன்று பிரபலமாகி இருக்கும் என்றே தோன்றுகிறது.

டாக்டர் பஸ்ஸார்டின் வாரிசுகள் அவர் பெயரை உபயோகித்து இன்றும் வூடூ சிகிச்சைகள் செய்து வருகிறார்கள். அவர்கள் பெயர்கள் வேறு வேறாக இருந்த போதும் சிகிச்சைக்காக டாக்டர் பஸ்ஸார்ட் என்ற பெயரையே பயன்படுத்தி வருகிறார்கள்.

பஸ்ஸார்டின் மரணத்திற்குப் பின் மக்டீர் மேல் பல குற்றவாளிகளுக்கு பயம் ஏற்பட்டது. மற்ற போலீஸ் அதிகாரிகள் எத்தனை துன்புறுத்தினாலும் உண்மையை வெளியே சொல்லாத அந்தக் குற்றவாளிகள் மக்டீர் விசாரணைக்கு வரும் போது மட்டும் எதையும் மறைக்காமல் உண்மையைக் கக்கினார்கள். ‘உண்மையை ஒளிக்காமல் சொல்லி விடுகிறோம். தயவுசெய்து பஸ்ஸார்டுக்குச் செய்ததை எங்களுக்குச் செய்து விடாதீர்கள் என்று பலரும் அரண்டு போய்ச் சொன்னதாக வேறொரு போலீஸ் அதிகாரி நினைவு கூர்ந்தார்.
 
மக்டீர் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் வூடூ சிகிச்சை செய்வதை மட்டும் நிறுத்தாமல் தொடர்ந்தார். தினமும் மூன்று மணி நேரம் அதற்காக ஒதுக்கினார்.  நீண்ட காலம் வாழ்ந்த அவர் 1976ல் Fifty Years as Lowcountry Witch Doctor என்ற நூலை எழுதினார். அதில் முக்கியமாக டாக்டர் பஸ்ஸார்ட் குறித்த பல தகவல்களை அவர் எழுதியுள்ளார்.

எட் மக்டீர் வழக்குகளையும் சிகிச்சைகளையும் கையாண்ட விதங்களை பேனார்ட் வுட்ஸ் (Baynard Woods) என்பவர் 2010ஆம் ஆண்டு    "Coffin Point: The Strange Cases of Ed McTeer, Witchdoctor Sheriff" என்ற நூலில் சுவாரசியமாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த நூலில் உள்ள நிகழ்வுகளை மையமாக வைத்து பிரபல நடிகர் வில் ஸ்மித்தின் தயாரிப்பு நிறுவனம் தொலைக்காட்சி சீரியல்கள் எடுக்கவிருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியாகி உள்ளது.  

-  என்.கணேசன்  
   நன்றி: தினத்தந்தி 9.5.2017 


Thursday, June 22, 2017

இருவேறு உலகம் – 35


வலுடன் அவரைப் பார்த்த மற்ற முகங்களைப் பார்த்து மாஸ்டர் புன்னகைத்தார். கனிவாகச் சொன்னார். “க்ரிஷ் நலமாக இருக்கிறான். சில நாட்கள் கழித்து வருவான். பயப்பட வேண்டியதில்லை

தடாலென்று அவர் காலில் கண்ணீருடன் விழுந்த பத்மாவதியைத் தொடர்ந்து கமலக்கண்ணன் நமஸ்கரித்தார். கமலக்கண்ணனுக்கு கொஞ்ச நஞ்சமிருந்த பயமும், சந்தேகமும் கூட விலகி மனம் மிக லேசானது. பத்மாவதியோ மகனின் செல்போனில் இருந்து வந்த தகவலிலேயே முழு சந்தேகமும் விலகியவளாக இருந்தாலும் அவ்வப்போது மூத்த மகன் கவலைப்படுவது போல் தெரிந்ததால்  சின்னதொரு பயத்தைப் பெற ஆரம்பித்திருந்தாள். மாஸ்டர் வாயால் வந்த வார்த்தைகள் கடவுளிடம் இருந்தே வந்த வார்த்தைகளாய் உணர்ந்து அவள் பயம் நீங்கி, கண்கலங்கி, மனம் நெகிழ்ந்து, வணங்கி எழுந்தவள் மூத்த மகனைப் பார்த்து ‘நீயும் அவர் காலில் விழுஎன்று பார்வையால் ஜாடை செய்தாள்.

உதயும் அவர் காலில் விழுந்து வணங்கினான். பத்மாவதி மாஸ்டரிடம் சொன்னாள். “நல்ல பொண்ணு அவனுக்கு அமையணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க சாமி

இளைய மகன் ஹரிணியைக் காதலிப்பது தெரிந்தவுடன், அவன் நலமாய் இருந்து சில நாட்களில் வருவான் என்பது உறுதியானவுடன், அந்தத் தாய் மனம் முதலில் மூத்த மகனுக்கு நல்ல பெண்ணாய் பார்த்து சீக்கிரம் திருமணம் முடித்து விட வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டது. மாஸ்டர் புன்னகையுடன் அவனை ஆசிர்வதித்தார்.

கமலக்கண்ணன் அவரிடம் பயபக்தியுடன் கேட்டார். “ க்ரிஷ் இப்ப எங்கே இருக்கான் சாமி

உதய் மாஸ்டரை பதற்றத்துடன் பார்த்தான். மாஸ்டர் அமைதியாகச் சொன்னார். “காட்டுப் பகுதியில் இருக்கிற மாதிரி தெரியுது.....””””””.

பத்மாவதி மூத்த மகனைப் பெருமையுடன் பார்த்து விட்டுச் சொன்னாள். “இவன் முதல்லயே சொன்னான், அவன் அப்படியே ஆராய்ச்சி செய்துட்டே எங்கயாவது போயிருப்பான்னு. அப்படியே தான் நடந்திருக்கு போலருக்கு. ஏதாவது மூலிகையை ஆராய்ச்சி செய்துகிட்டிருப்பான்....

மாஸ்டரின் தேஜஸையும், தீர்க்கமான பார்வையையும் கண்ட செந்தில்நாதனுக்கு அவரை ஒரு போலி சாமியார் போல் நினைக்க முடியவில்லை. ஆனால் கருப்பு கார் குறித்த தன் உள்ளுணர்வையும் அவரால் தவிர்க்க முடியவில்லை.  மாஸ்டரைக் கூர்ந்து பார்த்தபடி நெருங்கினார். “வணக்கம்

உடனே உதய் அவரை மாஸ்டருக்கு அறிமுகப்படுத்தினான். மாஸ்டர் புன்னகை மாறாமல் கேட்டுக் கொண்டு தலையசைத்தார்.

செந்தில்நாதன் பணிவாகக் கேட்பது போல் கேட்டார். “சுவாமிக்கு எந்த ஊர்?

மாஸ்டர் சொன்னார். “யாதும் ஊரே, யாவரும் கேளிர்

செந்தில்நாதன் அந்தப் புறநானூற்றுப் பாடல் வரியில் திருப்தியடைந்து விடவில்லை. “சென்னைக்கு எந்த ஊரில் இருந்து வந்தீங்க சுவாமி?

“காசியில் இருந்து வந்தேன்....

இந்த ஆள் வந்தது காசியிலிருந்தா, ராமேஸ்வரத்திலிருந்தா என்பதை எல்லாம் டிபார்ட்மெண்ட் மூலமாகக் கூட விசாரித்துக் கண்டுபிடித்து விடலாம் என்று எண்ணிய செந்தில்நாதன் வேறெதுவும் கேட்காமல் அவரைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னார். “சுவாமி. க்ரிஷ் காணாமல் போனது சம்பந்தமான விசாரணைல என்ன நியமிச்சிருக்காங்க. இப்ப க்ரிஷ் எங்கே இருக்கான்னு தெளிவா சொன்னீங்கன்னா நான் போய் அவரைக் கூட்டிகிட்டு வந்து இவங்க கிட்ட ஒப்படைச்சுட்டு கடமையை முடிச்சுக்குவேன்

அங்கிருந்த அத்தனை பேரும் மாஸ்டர் என்ன பதில் சொல்கிறார் என்று ஆர்வமாகப் பார்த்தார்கள்... 

மாஸ்டர் செந்தில்நாதனைப் பார்த்துப் புன்னகைத்தார். “இவங்க எல்லாம் என்னைப் பத்தி அதிகப்படியா உங்க கிட்ட சொல்லிட்டாங்க போல இருக்கு நண்பரே. அவன் இருக்கற விலாசம் எல்லாம் சொல்லி உங்களுக்கு உதவற அளவு எனக்கு சக்தி கிடையாது. ஏதோ சில காட்சிகள் தெரியும். அது கூட உள்ளுணர்வு எதோ கொஞ்சம் சரியாய் சொல்லும். அதை அடியேன் மத்தவங்களுக்குச் சொல்வேன். இப்ப காட்டுப் பகுதில அவன் நலமாய் இருக்கான்னு தெரிஞ்சுது. அதோட அவன் நலமாய் இங்கு வந்து சேர்வான்னு உள்ளுணர்வு சொல்லிச்சு. அந்த ரெண்டையும் சொல்லிட்டேன். அவ்வளவு தான்….”

செந்தில்நாதனுக்கு அவர் உண்மையைச் சொன்னது போல் தான் தோன்றியது. அதே சமயத்தில் அவர் எல்லா உண்மையையும் சொல்லி விடவில்லை என்பதும் புரிந்தது. முழு உண்மையையும் இந்த ஆள் வாயிலிருந்து வரவழைப்பது எப்படி என்று அவர் யோசித்தார். அதைப் படித்த மாஸ்டர் குறும்புப் புன்னகையுடன் அவருக்கு மட்டும் கேட்கும் படியாக “போலீஸ் புத்திஎன்று முணுமுணுத்தார்.

செந்தில்நாதன் திகைத்துப் போனார். அவர் மனைவி அடிக்கடி அவரிடம் பயன்படுத்தும் வார்த்தை தான் அது. அதில் ‘புத்திஎன்பதை ஒருவிதமாக அழுத்திச் சொல்வாள் அவள். அவளைப் போல் அதே விதத்தில் தான் மாஸ்டரும் அழுத்திச் சொன்னார். உதய் அதிகப்படுத்திச் சொல்லி விடவில்லை என்பதை இப்போது அவர் முழுவதுமாக நம்பினார். திகைப்பிலிருந்து மீண்டு அவர் அடுத்த கேள்வி கேட்க வாய் திறப்பதற்குள் மாஸ்டர் நகர்ந்து விட்டார். மாஸ்டரை மாணிக்கம் நெருங்கி விட்டார்.

எங்களுக்காக இவ்வளவு தூரம் வந்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி சுவாமி .... உட்காருங்கஎன்றார் மாணிக்கம். சுருக்கமாக மற்றவர்களிடம் சொன்னதை இந்த சுவாமி தன்னிடம் விரிவாகச் சொல்வாரா என்ற ஆசை லேசாக அவர் மனதில் இருந்தது. ஆனால் அப்படி எதுவும் சொல்லாத மாஸ்டர் சின்னப் புன்னகையுடன் அவரிடம் தலையசைத்து விட்டு, நான் கிளம்புகிறேன்என்று அனைவரையும் பார்த்துச் சொன்னார்.

அதைக் கேட்ட பத்மாவதி வழியில் நின்றிருந்த உதயைத் தள்ளி விலக்கி விட்டு, அவன் கோபப் பார்வையையும் பொருட்படுத்தாமல் மாஸ்டர் அருகே  வந்து அவரிடம் “பழமாவது சாப்பிட்டுட்டு போங்க சுவாமிஎன்று சொன்னாள்.

அவளுக்கு இப்படி ஒரு மகான் வீட்டுக்கு வந்து, அவர்களுக்கு நல்ல செய்தியும் தெரிவித்து விட்டு, ஒன்றும் சாப்பிடாமல் போவதில் வருத்தம். உபவாசம் என்றாலும் கூட பழம் எல்லாம் சாப்பிடலாம் என்று பலர் சொல்வதையும், கடைபிடிப்பதையும் அவள் பார்த்திருக்கிறாள்.

மாஸ்டர் சொன்னார். “உபவாசம் என்றால் என்னைப் பொருத்த வரை முழு உபவாசம் தான் அம்மா. தேர்ந்தெடுத்து சாப்பிடுவதை நான் உபவாசமாக நினைக்கிறதில்லை... கண்டிப்பா உங்க சின்ன மகன் வந்த பிறகு ஒரு நாள் வர்றேன்.... எனக்கும் அவர் கிட்ட பேசித் தெரிஞ்சுக்க நிறைய இருக்கு... அப்படி வர்றப்ப சாப்பிடறேன்...

பத்மாவதிக்குப் பூரிப்பு தாங்கவில்லை. அவள் மகனிடம் பேசித் தெரிந்து கொள்ள நிறைய இருப்பதாக இந்த மகானே சொல்கிறாரே.... கண்கள் சந்தோஷத்தில் ஈரமாயின. வார்த்தைகள் வராமல் அவரைப் பார்த்துக் கைகூப்பினாள்.

அவர் வெளியே போகும் போது அவசரமாக உதயும் கூடப் போனான்.   அவர் கார் ஏறி அமர்ந்தவுடன் அவரிடம் கவலையுடன் கேட்டான். “சுவாமி கவலைப்பட எதுவும் இல்லையில்லையா?”.  

அவர் அமைதியாகவும் உறுதியாகவும் சொன்னார். “இல்லை”.  நடப்பது நடந்தே தீரும் என்றால் கவலைப்பட என்ன இருக்கிறது என்ற அர்த்தத்தில் அவர் சொன்னது அவனுக்குப் புரியவில்லை, பாவம்! அவன் நிம்மதியடைந்தான்.

அவர் கார் கிளம்பி விட்டது.   அவர் மனம் சற்று முன் க்ரிஷ் அறையில் அறிந்து கொண்ட விஷயங்களை அசை போட்டது. எப்படிக் கச்சிதமாகத் திட்டமிட்டு எதிரி க்ரிஷைக் கையாண்டிருக்கிறான் என்பதை நினைக்கையில் எதிரியை அவரால் மெச்சாமல் இருக்க முடியவில்லை.

க்ரிஷிடம் எதிரி தொடர்பு கொண்ட முதல் கணத்திலிருந்து அவரால் அறிய முடிந்த காட்சிகள் மறுபடி அவர் மனதில் விரிந்தன....


க்ரிஷ் நிகோலா டெஸ்லா என்ற செர்பிய விஞ்ஞானியின் எழுத்துகளில் மூழ்கி இருந்தான். அந்தப் புத்தகத்தைப் படிக்கப் படிக்க அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது.     1856 ஆம் ஆண்டிலிருந்து 1943 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த அந்த விஞ்ஞானியின் கருத்துகள் அவருடைய காலத்தை மிஞ்சிய நிதர்சன உண்மைகளாய், இப்போதும் சத்தியமான வார்த்தைகளாய் இருந்தன. தன் காலத்தில் சரியாக கவனிக்கப்படாதவராய், பெரிய அங்கீகாரம் பெறாதவராய், ஒரு கிறுக்கராகக் கருதப்பட்டவராய் வாழ்ந்த அந்த விஞ்ஞானியின் ஒரு வாசகத்தை அவன் திரும்பத் திரும்பப் படித்தான்.


“If you want to find the secrets of the universe, think in terms of energy, frequency and vibration."


(பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறிய வேண்டுமானால் சக்தி, அலைவரிசை, அதிர்வுகள் மூலமாக சிந்தித்துப் பார்.)

சில வரிகளில் க்ரிஷ் மணிக்கணக்காகத் தங்குவது உண்டு. அப்படித்தான் அன்று மெய் மறந்து யோசித்துக் கொண்டிருந்தான்.  அதிலிருந்து மீண்ட போது தான் அவன் லேப் டாப் திரையில் ஏதோ வாசகம் மிளிர்ந்து கொண்டிருந்ததைக் கவனித்தான்.

“ஹலோ க்ரிஷ் சவுக்கியமா?

க்ரிஷ் திகைப்புடன் பார்த்தான். அவன் எப்போதுமே ‘சேட் (chat)ஐயும் மற்ற அறிவிப்புகளையும் தன் லாப்டாப்பில் அணைத்தே வைத்திருப்பவன்....

முதலில் எழுந்த சிந்தனை ஏதோ ‘ஹேக்கிங் நடந்து விட்டதோ என்ற சந்தேகம் தான்.... இந்த வாசகம் எத்தனை நேரமாய் மிளிர்ந்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் பதிலுக்குக் காத்துக் கொண்டிருப்பது போல் அது இன்னமும் மிளிர்ந்து கொண்டிருக்கிறது...

ஆழ்ந்த யோசனையுடன் பதில் கேள்வியை அழுத்தினான். “யார் நீங்கள்?

உன் நண்பன் என்ற பதில் உடனே ஒளிர்ந்தது.

பெயர் என்ன? மறு கேள்வியை க்ரிஷ் உடனே அழுத்தினான்.

பெயரில் என்ன இருக்கிறது? என்ற வாசகம் பதிலுக்கு ஒளிர்ந்தது.

பிடிகொடுக்காமல் பேசும் ஆட்கள் க்ரிஷுக்குப் பிடித்தமானவர்கள் அல்ல. உடனடியாக லாப்டாப்பை ஆஃப் செய்து விட்டுப் பின் என்ன நடந்திருக்கிறது என்பதை ஆராயத் தோன்றியது. ஆனால் ஏதோ ஒரு உள்ளுணர்வு அதைச் செய்யாமல் அவனைத் தடுத்தது.

வேறு எதுவும் எழுதாமல் மெள்ள  இந்த வாசகங்கள் இணையத்தில் எங்கிருந்து வருகின்றன என்று ஆராய்ந்தான். தெரியவில்லை. அவனுக்குத் தெரியவில்லை என்றால் வேறு எந்தக் கம்ப்யூட்டர் மற்றும் இணைய மேதைக்கும் தெரிய வாய்ப்பில்லை .....

திகைப்பு மாறாமல் லாப்டாப்பில் இருந்து விலகி தன் நாற்காலியில் சாய்ந்த க்ரிஷ் இனி என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று மறுபடியும் நிகோலா டெஸ்லாவின் எழுத்துகளைப் படிக்க ஆரம்பித்தான். எப்போதுமே இது போன்ற சுவாரசியமான எழுத்துகளில் ஆழ்ந்தால் மணிக்கணக்கில் தன்னை மறந்து போகும் க்ரிஷுக்கு இப்போது அது முடியவில்லை. அவனுக்கே புரியாத ஒரு சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போது முழுமனதை முன்பு போல அந்த எழுத்துகளில் திருப்ப முடியவில்லை. ஆனாலும் பாதி கவனம் அந்த புத்தகத்திலும் மீதி கவனம் லாப்டாப் திரையிலுமாக இருந்தது.

சுமார் இருபது நிமிடங்கள் கழித்துப் புதிய வாசகம் லாப்டாப் திரையில் மிளிர்ந்தது. 

“நிகோலா டெஸ்லா நிஜமாகவே க்ரேட் தான். இல்லையா?

க்ரிஷ் அதிர்ந்து போனான்.

(தொடரும்)
என்.கணேசன்

Monday, June 19, 2017

வூடூ டாக்டர் பஸ்ஸார்ட்

மெரிக்காவில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்த வூடூ மனிதர் டாக்டர் பஸ்ஸார்டு (Dr. Buzzard). அவர் இயற்பெயர் ஸ்டீபனி ராபின்சன் என்ற போதும் பஸ்ஸார்டு என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட ஒருவகைக் கழுகின் பெயரில் அழைக்கப்பட்டார். தென் கரோலினாவில் ப்யூஃபோர்ட் நகர  (Beaufort County) எல்லைக்குட்பட்ட செயிண்ட் ஹெலெனா தீவில் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பெயர் பலருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. சூனியம் வைப்பதிலும், சூனியம் எடுப்பதிலும் அவர் புகழ் அமெரிக்காவின் மற்ற மாகாணங்களிலும் பரவி இருந்தது.

அவர் பாட்டனாரோ, தகப்பனாரோ ஒரு அடிமையாக ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கா வந்ததாகவும், அவரிடமிருந்து டாக்டர் பஸ்ஸார்ட் வூடூவைக் கற்றுக் கொண்டதாகவும் சிலர் கூறுகிறார்கள். சிலர் அவர் இளைஞனாக இருக்கும் போது அவர் தலையில் ஒரு பறவை வந்து அமர்ந்து விட்டுப் போனதாகவும், அக்கணத்திலிருந்து அவர் வூடூ சக்திகளைப் பெற்றதாகவும் கூறுகிறார்கள். சூனியம் வைப்பது எடுப்பது தவிர இறந்த உறவினர்களின் ஆவிகளைத் தொடர்பு கொள்ளவும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறவும் கூட மக்கள் அவரிடம் அதிக அளவில் வந்தார்கள். நேரடியாக வந்தவர்களை விட பலமடங்கு அதிகமாய் அவரைத் தபாலில் அமெரிக்காவின் பல பகுதிகளில் இருந்து தொடர்பு கொண்டார்கள். தபாலிலேயே பணம், செக், மணி ஆர்டர் எல்லாம் அனுப்பினார்கள். எதில் எல்லாம் கையெழுத்து போட வேண்டி வருமோ அதை எல்லாம் கிழித்து எறிந்து விட்டு மற்றதை மட்டும் டாக்டர் பஸ்ஸார்ட் எடுத்துக் கொண்டார். ஏனென்றால் சூனியம் சட்டப்படி குற்றமாக அக்காலத்தில் கருதப்பட்டது. கையெழுத்து போட்டு ஒரு சாட்சியம் உண்டாக்கி கைதாக அவர் விரும்பவில்லை.

நல்ல உயரமான அவர் எப்போதும் கருப்பு ஆடைகளையும் ஊதா கண்ணாடியையும் அணிந்து கொண்டிருப்பார். ஊதா கண்ணாடி இல்லாமல் அவரைப் பார்ப்பது மிகவும் அபூர்வம். அவர் கண்களை மற்றவர்கள் நேராகப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர் அந்த ஊதா நிறக் கண்ணாடியை அணிந்து கொள்வதாக பலரும் நினைத்தார்கள். நீதிமன்ற வழக்கில் சாதகமாகத் தீர்ப்பு வேண்டுபவர்கள் அவரிடம் பெரிய தொகையைத் தந்து விட்டால் நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கையில் அவர் நீதிமன்றம் செல்வார். அங்கு அமர்ந்து ஏதோ ஒரு வூடூ வேரை மென்று கொண்டே அமர்ந்திருப்பார். அந்த நேரத்தில் எதிராளிகள் சரியாக வாதம் புரிய முடியாமல் போகுமென்றும், நீதிபதியும், ஜூரிகளும் அவருடைய வாடிக்கையாளருக்கு எதிராகத் தீர்ப்பு சொல்ல முடியாமல் போகும் என்றும் சொல்கிறார்கள். அல்லது குறைந்தபட்ச தண்டனை மட்டுமே கிடைக்கும் என்கிறார்கள். அதனால் பல நேரங்களில் அவர் நீதிமன்றத்திற்குள் நுழைந்தாலே ஒருவித இறுக்கமான சூழ்நிலை நிலவ ஆரம்பித்தது. சில நேரங்களில் வழக்கு நடக்கும் போது பெரும்திரளாக பஸ்ஸார்ட் கழுகுகள் நீதிமன்ற வளாகத்தில் வருவதுண்டு. அப்படி வந்தாலும் அது அவருடைய சக்தியால் தான் என்றும் தீர்ப்பு சாதகமாகவே இருக்கும் என்றும் மக்கள் நம்பினார்கள். அது உண்மையாகவே இருந்திருக்கிறது.

தொலைவில் இருந்து பணம் அனுப்பி உதவி கேட்கும் வாடிக்கையாளர்களின் பகுதி நீதிமன்றங்களுக்கு அவரால் செல்ல முடியாதல்லவா? அவர்களுக்கு அவர் மந்திரித்து மிக மென்மையான ஒரு பொடியை அனுப்பி வைப்பார். அந்தப் பொடியை நீதிமன்ற நாற்காலிகளிலும், மேசைகளிலும் ரகசியமாய் தூவி விட்டால் போதும். அந்த வழக்கு அவர்களுக்கு ஜெயம் தான். இது குறித்துப் பல புகார்கள் போனாலும் சரியான ஆதாரம் போலீசாருக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் சில சமயங்களில் அவரை அழைத்து அவர்கள் விசாரித்தது உண்டு. 

அப்படி ஒரு விசாரணையில் அவர் அதிகாரிகளிடம் தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும் ஆனால் தன்னிடம் விசேஷ சக்திகள் இருப்பதாகவும் சொன்னார். அவர் தன்னை ஒரு இரும்புப் பெட்டிக்குள் வைத்து சங்கிலிகள் வைத்துப் பூட்டினால் தன் சக்திகளைப் புரிய வைப்பேன் என்றும் அதிகாரிகளிடம் கூறினார். அதிகாரிகள் அவரைச் சந்தேகப் பார்வையுடன் பார்த்தனர். அப்படிச் செய்தால் இந்த ஆள் செத்து விட்டால் அது தேவையில்லாத பிரச்னை என்று அவர்களுக்குத் தோன்றியது. ஆனால் அந்த ஆளே அப்படிச் சொல்கிறாரே, செத்துத் தொலைந்தால் அந்த ஊருக்கே பெரிய பிரச்னை தீருமல்லவா, எல்லோருக்கும் நிம்மதியாக இருக்கும், அதனால் அதை யாரும் பெரிது படுத்த மாட்டார்கள் என்றெல்லாம் எண்ணியவர்களாக அவர்கள் ஒத்துக் கொண்டார்கள்.

சவப்பெட்டி போன்ற பெரிய இரும்புப் பெட்டி ஒரு சிறைக்குள் கொண்டு வரப்பட்டது. அவரை உள்ளே வைத்துப் பூட்டும் முன் அந்த அதிகாரி கடைசியாக ஒருமுறை டாக்டர் பஸ்ஸார்டிடம் கேட்டார். “நிச்சயமாகத் தானே சொல்கிறீர்கள். உங்கள் மீது என்ன தான் குற்றச்சாட்டுகள் என்னிடம் இருந்தாலும், விசாரணை இல்லாமல் உங்களை சாகடிக்க நான் விரும்பவில்லை

டாக்டர் பஸ்ஸார்ட் சொன்னார். “கவலைப் படாதீர்கள். இப்போது மணி என்ன?

கடிகாரத்தைப் பார்த்த அதிகாரி “பதினொன்றுஎன்றார்.

“நல்லது. மதிய சாப்பாட்டை ஒரு மணிக்கு என் குடும்பத்தோடு நான் உண்டு விடலாம்என்ற டாக்டர் பஸ்ஸார்ட் இரும்புப் பெட்டியில் படுத்துக் கொண்டார். என்ன தான் சூனியக்காரனாக இருந்தாலும் பலமாகப் பூட்டப்படும் இரும்புப் பெட்டியில் இருந்து தப்பிக்க முடியும் என்பதை அந்த அதிகாரிக்கு நம்பக் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் பெரிய பிரச்னை ஒன்று ஒழிந்தது என்று எண்ணியவராக அவர் பெட்டியை மூடிப் பூட்டினார். பெரிய இரும்புச் சங்கிலி கொண்டு பெட்டியை பலமுறை சுற்றி அந்த சங்கிலியின் இருமுனைகளையும் சேர்த்து பெரிய பூட்டை வைத்துப் பூட்டி விட்டுச் சாவியை தன்னிடமே பத்திரமாக வைத்துக் கொண்டார்.

அவரும் அவருடன் இருந்த மூன்று போலீஸ்காரர்களும் அந்த இரும்புப் பெட்டி இருந்த சிறையையும் மூடி அதையும் பூட்டி விட்டு சிறைச்சாலைக்கு எதிராக இருந்த ஒரு ஓட்டலில் சாப்பிடப் போனார்கள். அப்போதும் அவர்கள் பேச்சு டாக்டர் பஸ்ஸார்ட் பற்றியே இருந்தது. இரும்புப் பெட்டியில் பூட்டு, அதைச் சுற்றிய சங்கிலியில் பூட்டு, சிறை அறையில் பூட்டு என்று இத்தனை பூட்டுகளை உடைத்து ஒருவன் தப்பிக்க வழியே இல்லை என்று பேசிக் கொண்டனர். நிதானமாகச் சாப்பிட்டு விட்டு வரும் போது “அந்த ஆள் உடலெல்லாம் நீலமாகிச் செத்திருப்பார்என்று ஒரு போலீஸ்காரர் சொன்னார்.

அவர்கள் சிறிது நேரம் கழித்துச் சென்று அந்த இரும்புப் பெட்டியைத் திறந்த போது ஒரு கருப்புப் பூனை இரும்புப் பெட்டிக்குள் இருந்து தாவிக் குதித்து ஓடியது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். என்ன ஆனது எப்படி ஆனது என்பதை அவர்களால் கடைசி வரை அறிய முடியவில்லை.

இந்த சிறைச்சாலை நிகழ்வு டெர்ரன்ஸ் செப்கே (Terrance Zepke) என்பவர் எழுதிய Lowcountry Voodoo: Beginner's Guide to Tales, Spells and Boo Hags என்ற நூலிலும் நான்சி ரைன் (Nancy Rhyne) என்பவர் எழுதிய Tales Of The South Carolina Low Country என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாக்டர் பஸ்ஸார்ட் சூனியம் செய்ய பல வகை வேர்களையும், களிம்புகளையும், விலங்குகளையும், பாம்புகளையும் பயன்படுத்தி வந்தார் என்றாலும் கருப்புப் பூனையின் எலும்பினால் தான் பெரிய பெரிய காரியங்களைச் சாதித்துக் கொண்டார் என்ற கருத்து நிலவுகிறது. கருப்புப் பூனையின் எலும்பு பற்றி நாம் முன்பே குறிப்பிட்டிருக்கிறோம். கருப்புப் பூனையில் உடல் எலும்புகளில் வூடூ சக்தி பெற்ற எலும்பு எது, அந்த எலும்பைப் பெறுவது எப்படி என்பதில் மட்டும் பொதுவாக வூடூ புத்தகங்களில் குறிப்பிட்டிருப்பதற்கும், டாக்டர் பஸ்ஸார்ட் குறிப்பிட்டிருப்பதற்கும் சிறிய வித்தியாசம் இருக்கிறது. மிருகவதை எதிர்ப்புச் சட்டம் வந்து விட்ட இக்காலமாக இருந்தால் கைதாகி விட்டிருக்கக்கூடிய செயல்கள் இவரைப் போன்ற ஆட்களால், அக்காலத்தில் கருப்புப் பூனையின் எலும்புக்காகச் செய்யப்பட்டன. அதுகுறித்து பிற்கால பகுத்தறிவாளர்கள் கடுமையாக விமர்சித்தார்கள்.

இப்படி சக்தி வாய்ந்தவராக இருந்த டாக்டர் பஸ்ஸார்டை வீழ்த்தவென்று ஒரு வூடூ போலீஸ்காரர் வந்தது தான் விதியின் செயல். அந்த வூடூ போலீஸ் அதிகாரி பற்றியும், அவர் டாக்டர் பஸ்ஸார்டை எப்படி எதிர்கொண்டார் என்ற மிக சுவாரசியமான நிகழ்வுகளையும் அடுத்த வாரம் பார்ப்போம்.

- என்.கணேசன்

- நன்றி – தினத்தந்தி 2.5.2017