சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 30, 2020

இல்லுமினாட்டி 47



விஸ்வம் வஜ்ராசனத்தில் அமர்ந்தபடி பிராணாயாமப் பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தபடி ஜிப்ஸி அமர்ந்திருந்தான். அந்த பிராணாயாமப் பயிற்சிகளுக்கு டேனியலின் உடல் சுலபமாக ஒத்துழைக்கவில்லை என்பதை அவன் கவனித்தான். போதையிலேயே திளைத்து வலுவிழந்து போயிருந்த அந்த உடலுக்கு வஜ்ராசனமும் பிடிக்கவில்லை, அந்தப் பயிற்சிகளும் பிடிக்கவில்லை என்பது நிதர்சனமாகத் தெரிந்தது. ஆனால் அந்த உடலின் அதிருப்தியான முணுமுணுப்புகளை விஸ்வம் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. உயிர் டேனியலுடையதாக இருந்த போது தன் சுகங்களையும், சௌகரியங்களையும் தங்குதடை இல்லாமல் அனுபவித்து வந்திருந்த அந்த உடலுக்கு விஸ்வத்தின் இந்தக் கெடுபிடிகள் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பதற்குப் பல அறிகுறிகள் தெரிந்து கொண்டே இருந்தன. ஆனால் பள்ளிக்குப் போகப் பிடிக்காத பிள்ளையைத் தரதரவென்று தாய் இழுத்துக் கொண்டு போவதைப் போல், விஸ்வம் அந்த உடலைத் தன் வழிக்கு இழுத்துக் கொண்டிருந்தான். வேறு வழியில்லாமல் அந்த உடல் அவன் வழிக்கு வேண்டா வெறுப்பாக வந்து கொண்டிருந்தது...

சிந்துவுக்கு மெயிலில் தகவல்களை அனுப்பி விட்டு வேறிரண்டு பேருக்கு சுருக்கமான மெயில்களை அனுப்பி விட்டுஅமைதியாக வஜ்ராசனத்தில் அமர்ந்து பிராணாயாமப் பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்த விஸ்வத்தைப் பார்த்து ஜிப்ஸிக்கு வியக்காமல் இருக்க முடியவில்லை. உடம்பின் சௌகரியங்களே முழுமுதல் பிரதானம் என்று வாழ்கிற மனிதர்களின் நடுவில் இந்த அளவுக்கு ஒரு ஆளுமை படைத்த மனிதனைப் பார்க்க நேர்வது அபூர்வம் என்று நினைத்துக் கொண்டான். டேனியலுடையதாக இருந்த போது பொலிவிழந்து,  சக்திகளையும் இழந்து போயிருந்த உடல் இப்போது ஓரளவு தேறி வருவது இவனுடைய கடுமையான பயிற்சிகளால் தான் என்று எண்ணினான்.

இனி முடியவே முடியாதுஎன்ற நிலைக்கு வந்து முடிவில் அந்த உடல் பரிதாபமாக அலற ஆரம்பித்த பின் தான் விஸ்வம் வஜ்ராசனத்தைக் கலைத்து மெல்ல எழுந்தான்.

ஜிப்ஸி விஸ்வத்தைக் கேட்டான். “உடம்பு என்ன சொல்கிறது?”

“அது சொல்வதை நான் சட்டை செய்வதில்லை” என்று சொல்லிக் கொண்டே இரு கைகளையும் உயர்த்திச் சோம்பல் முறித்துக் கொண்டே முன்னங்கால் நுனியில் சில வினாடிகள் நின்ற விஸ்வத்திடம் ஜிப்ஸி கேட்டான். “அந்தப் பெண்ணால் உன் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்க முடியும் என்று நீ எப்படி நம்புகிறாய்?”

விஸ்வம் சொன்னான். “இந்தத் திட்டத்திற்கு அவளை விடப் பொருத்தமான ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. சின்னக் கூச்சமோ, தயக்கமோ கூட இல்லாமல் அவளால் எத்தனையோ வேலைகளைச் செய்ய முடியும்... அவள் அப்படிப்பட்டவள் என்று தோற்றத்தை வைத்து யாரும் ஊகிக்கவே முடியாது. மிகவும் கண்ணியமான பெண்ணாகவே வெளியே தெரிபவள் அவள். அழகும் அறிவும் அவளிடம் அதிகமாகவே இருக்கிறது. அவள் இது வரை எத்தனையோ குற்றங்களைச் செய்திருக்கிறாள். ஆனால் ஒரு முறை கூடப்பிடிபட்டதில்லை. எந்தப் போலீஸ் ஸ்டேஷனிலும் அவளைப் பற்றிய சந்தேகத் தகவல்கள் கூட இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அவளிடம் கொடுத்த வேலைகளை அவள் இது வரை சிறிது கூடச் சொதப்பியதில்லை.”


சிறையில் விஸ்வத்தின் சக்தியை மிக மெலிதாக உணர்ந்து அது விலகிய பிறகு மனோகரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அதன் பின் தினமும் அடிக்கடி மிக அமைதியாக இருந்து அந்தச் சக்தியை மறுபடியும் உணர முடிகிறதா என்று அவன் முயற்சி செய்து பார்த்தான். மறுபடி அந்தத் தொடர்பு  கிடைக்கவில்லை. முன்பு கிடைத்ததே நிஜமா பிரமையா என்று சந்தேகம் அவனை மெல்ல அரிக்க ஆரம்பித்தது.

அவனுடைய தவிப்பைக் கவனித்த சக கைதி ராஜேஷ் கரிசனத்துடன் கேட்டான். “என்ன ஆச்சு?”

மனோகர் எச்சரிக்கையுடன் தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு சற்று சோகமாகச் சொன்னான். “இங்கே இருக்க முடியவில்லை. இருக்கப் பிடிக்கவில்லை.”

ராஜேஷ் முகத்தில் அவனைப் புரிந்து கொண்ட மென்மை படர்ந்தது. ”உனக்கு இது முதல் அனுபவம் அல்லவா? அது தான் பிரச்னை. எனக்கு இது இரண்டாம் வீடு மாதிரி ஆகி விட்டது. அதனால் இங்கே கவலை இல்லாமல் என்னால் இருக்க முடிகிறது. போரடித்தால் கிளம்பி விடுவேன்...”

அவன் அலட்டாமல் ’ போரடித்தால் கிளம்பி விடுவேன்’ என்று சொன்னதைக் கேட்க மனோகருக்கு ஆச்சரியமாகவும், பொறாமையாகவும் இருந்தது. “அதெப்படி நினைக்கும் போது கிளம்ப முடியும்” என்று அவன் கேட்டு வைத்தான்.

ராஜேஷ் ரகசியமாக அவனிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். “சிறைச்சாலை சிலருக்குத் தான் நரகம். பிரச்சினை. ஆனால் கை நிறைய பணமும், முக்கியமான ஆட்களின் தொடர்பும் இருந்தால் இங்கே நம்மால் முடியாதது என்று எதுவும் கிடையாது. எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு. எல்லாருக்கும் ஒரு விலை உண்டு. அந்த விலையைக் கொடுக்க நாம் தயாராக இருக்கிற வரை இங்கிருந்து தப்பித்துப் போவது உட்பட எல்லாமே நம்மால் முடியும்”

இந்த விதி சிறைச்சாலைக்கு மட்டுமல்ல உலகின் பெரும்பாலான இடங்களுக்கும் பொருந்தும் என்பதை மனோகர் அறிவான். விஸ்வத்தின் பிரதிநிதியாக எத்தனையோ இடங்களில் அவன் அந்த விதியைச் செயல்படுத்தி வெற்றி கண்டவன். இப்போது விஸ்வம் இருக்கிறானா இல்லையா என்றே தெரியவில்லை. பணம் பல கோடிகளில் மனோகர் வசமே இருக்கிறது என்றாலும் அவன் பல வங்கிகளில் பிரித்து வைத்திருக்கிற பணத்தைப் பயன்படுத்த முடியாதபடி இந்தச் சிறையில் அவன் சிக்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய போதாத காலம் கமலக்கண்ணன் தற்போது முதலமைச்சராக இருக்கிறார். அவருக்கு மருமகளாக வரப்போகிற பெண்ணையே அவன் கடத்திச் சென்ற குற்றத்தில் சிறைப்பட்டிருக்கிறான்...

அவன் முகத்தில் படர்ந்த சோகத்தைக் கவனித்து விட்டு ராஜேஷ் இரக்கத்துடன் கேட்டான். “உனக்கு இங்கிருந்து தப்பித்துப் போக வேண்டுமா?”


வாங் வேயின் ரகசிய அலைபேசி இரு முறை அடித்து விட்டு அமைதியாகியது. அந்த அலைபேசியில் அழைக்கக்கூடிய நபர் இல்லுமினாட்டி உளவுத்துறையின் உபதலைவர் சாலமன் ஒருவர் தான் என்பதால் சாலமனுக்குத் தெரிவிக்க ஏதோ ஒரு முக்கிய தகவல் இருக்கிறது என்பது புரிந்தது.

வாங் வே பரபரப்புடன் சாலமனுக்குப் போன் செய்தார். “என்ன விஷயம்?”

சாலமனின் எச்சரிக்கையான மிக மெல்லிய குரல் ஒலித்தது. “தலைவன் நம் ஆளின் கூட்டாளியைப் பற்றி பல தகவல்களைச் சேகரித்து வைத்துக் கொண்டிருக்கிறான்.”

வாங் வே பரபரப்பு குறையாமல் கேட்டார். “என்ன தகவல்கள்?”

சாலமன் சொன்னார். “தெரியவில்லை. அதைச் சொல்லாமல் தவிர்க்கிறான்.”

“அப்படியானால் நம் ஆள் சீக்கிரம் உங்களிடம் சிக்கி விடுவானா?”

“அது நிச்சயமில்லை. அந்த அளவுக்கு நம்பிக்கையோடும் தலைவன் தென்படவில்லை. எதையும் வாய் விட்டுச் சொல்லவும் மாட்டேன்கிறான்”

“சொல்லா விட்டாலும் கூட அவன் அடுத்ததாக உங்கள் ஆட்களுக்கு என்ன உத்தரவிடுகிறான் என்பதை வைத்து யூகிக்கலாமே.”

”நாடு முழுவதும் எந்தப் பகுதியிலும் புதிய ஆட்களின் நடமாட்டம் தெரிந்தால் அதைத் தெரிவிக்க அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. உணவுப் பொருள்களோ, வேறு பொருள்களோ வாங்கிக் கொண்டு போக பழக்கமில்லாத புதிய ஆட்கள் வந்தால் தெரிவிக்கச் சொல்லி எல்லா டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மால்கள் எல்லாம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்...”

வாங் வே கேட்டார். “பொது மக்களிடமிருந்தோ, அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மால்களிடமிருந்தோ எந்தத் தகவலும் வரவில்லையா?”

“தினமும் நாலைந்து அழைப்புகளாவது வருகின்றன. ஆனால் போய்ப் பார்க்கையில் அதெல்லாம் நமக்கு வேண்டிய ஆளாக இல்லை. இந்த வலைவீச்சில் சில கிரிமினல்கள் கூட அகப்பட்டிருக்கிறார்கள். நம் ஆள் சிக்கவில்லை...”

வாங் வேக்குப் பிரமிப்பாக இருந்தது. சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “அப்படியானால் அந்தக் கூட்டாளி உள்நாட்டு ஆளாகத் தான் இருக்க வேண்டும். அவன் தன் வீட்டில் அல்லது தன் நண்பர்கள் வீட்டில் நம் ஆளோடு இப்போதிருக்க வாய்ப்பு இருக்கிறது.”

சாலமன் சொன்னார். “அப்படி ஒரு இடம் இருந்திருந்தால் அவர்கள் முன்பே அந்தக் காலி வீட்டில் ஒளிந்து கொண்டிருக்க மாட்டார்கள். நேராக ஆரம்பத்திலேயே அங்கே போயிருப்பார்கள்...”

அதுவும் சரியென்றே வாங் வேக்குத் தோன்றியது. கூட்டாளி பற்றி நிறைய தகவல்கள் கிடைத்தும் அவர்கள் இப்போது ஒளிந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க  முடியவில்லை என்றால் கிடைத்திருக்கும் தகவல்கள் உபயோகமில்லாத பழைய தகவல்களா?”

“எந்தத் தகவலும் எப்போதும் அலட்சியப்படுத்த முடிந்ததல்ல. எது எப்போது நமக்கு உபயோகப்படும் என்பது நமக்கே தெரியாது. தலைவனிடம் இருக்கும் தகவல்களில் ஏதோ ஒன்று சீக்கிரமே அவர்கள் இருக்குமிடத்தை அடையாளம் காட்ட உதவலாம்.”

வாங் வே அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். “அப்படி ஒருவேளை அவர்கள் ஒளிந்திருக்கும் இடம் நமக்குத் தெரிய வந்தால் மற்றவர்களுக்கு முன்னால் நாம் அவர்களைச் சந்தித்துப் பேசுவது முக்கியம்”

(தொடரும்)
என்.கணேசன்

Wednesday, April 29, 2020

முந்தைய சிந்தனைகள் 57

சில சிந்தனைகளைத் திரும்பிப் பார்ப்போமா?











என்.கணேசன்

Monday, April 27, 2020

சத்ரபதி 122


சிவாஜி காலந்தாழ்த்தாமல், அந்த அந்தணரை மேற்கொண்டு எந்த சிந்தனைக்கும் போக விடாமல் கேட்டான். ”ஐயா, தங்களைப் பார்த்தால் பல விஷயங்கள் அறிந்தவர் போலத் தெரிகிறது. எனக்கு ஒரே ஒரு தகவலைச் சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன். இந்தப் பகுதியில் ஒரு சுயம்பு லிங்கம் இருப்பதாகக் கேள்விப்பட்டேனே? அது எங்கே இருக்கிறது? அங்கு எப்படிச் செல்ல வேண்டும்?”

அந்த அந்தணர் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தபடியே கேட்டார். “சுயம்பு லிங்கமா? இந்தப் பகுதியிலா? நான் அறிந்து இல்லையே”

சிவாஜி சொன்னான். “அதன் அருகே ஒரு நீரோடையும் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். சிலர் மட்டுமே அறிவார்கள் என்று என்னிடம் ஒருவர் சொன்னார்…..”

சிலர் மட்டுமே அறிந்த அந்த விஷயத்தை அவர் அறியாதது அந்த அந்தணரைப் பாதித்து விட்டது. அவர் நீரோடை இருக்கின்ற இடங்களையும் சிவலிங்கங்கள் இருக்கின்ற இடங்களையும் பற்றி மூளையைக் கசக்கிக் கொண்டு யோசிக்க ஆரம்பிக்க, மற்ற பக்தர்கள் பல இடங்களில் உள்ள, தங்களுக்குத் தெரிந்த சுயம்பு லிங்கங்கள் பற்றி எல்லாம் சுவாரசியமாகச் சொல்ல ஆரம்பித்தார்கள். பேச்சு திசை மாறியது. அந்த அந்தணர் அவ்வப்போது அந்தப் பேச்சில் கவனம் செலுத்தினாலும்  சிவாஜி கேட்ட சுயம்பு லிங்கம் குறித்த சிந்தனைகளிலேயே அதிகம் தங்கினார்.

மெல்ல சிவாஜியும், கிருஷ்ணாஜி விஸ்வநாத்தும் விடைபெற்றார்கள்.

சிறிது தூரம் சென்ற பிறகு கிருஷ்ணாஜி விஸ்வநாத் சிவாஜியிடம் கேட்டார். “அந்த சுயம்பு லிங்கம் பற்றி உங்களிடம் சொன்னது யார்?”

சிவாஜி சொன்னான். “யாரும் சொல்லவில்லை. இருக்கின்ற ஒன்றின் இடத்தைக் கேட்டால் அந்த அந்தணர் பதில் சொல்லி விட்டு நம்மைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து விடும் ஆபத்து இருக்கிறது. இல்லாததைக் கேட்டால் தான் அவருக்கு யோசித்துத் தீராது. அதனால் தான் அவரிடம் ஒரு கற்பனை சுயம்பு லிங்கம் பற்றிக் கேட்டேன்….”

கிருஷ்ணாஜி விஸ்வநாத் வாய் விட்டுச் சிரித்தார். மனிதனுடைய மனம் போகின்ற போக்கை சிவாஜி மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருந்தது போல அவருக்குத் தோன்றியது. அவர்கள் பயணம் தொடர்ந்தது.


ரு நாள் தொடர்ந்து சிறு மழை பெய்து கொண்டிருந்தது. இரவு நேரத்தில் ஒரு கிராமத்தை இருவரும் அடைந்தார்கள். வெளியில் எங்கும் தங்க முடியாதபடி எல்லா இடங்களிலும் தரை அதிக ஈரத்தில் இருந்தது. அதனால் இருவரும் ஒரு வீட்டில் தங்க இடம் கேட்டார்கள்.

அந்த வீட்டுக்காரன் சிறிது யோசித்து விட்டுத் தான் பிறகு அவர்களைத் தங்க அனுமதித்தான். தயக்கத்துடன் அனுமதிக்கின்ற வீட்டில் தங்கித்தானாக வேண்டுமா என்கிற எண்ணம் இருவர் மனதிலும் எழுந்தாலும் வெளி நிலவரம் சிறிதும் சாதகமாக இல்லாததால் வேறு வழியில்லாமல் உள்ளே நுழைந்தார்கள். வீட்டில் வறுமை தாண்டவமாடியது. ஏழ்மையின் அடிமட்டத்தில் வீட்டவர்கள் இருந்தது தெரிந்தது. மிக மங்கலாக ஒரு விளக்கு மட்டும் வீட்டில் எரிந்து கொண்டிருந்தது.

அந்த வீட்டுக்காரன் அதிகம் பேசாதவனாக இருந்தான். அவன் மனைவியும், அவனுடைய இளைய சகோதரனும் கூட வந்தவர்களை வணங்கி விட்டு மௌனமாகவே இருந்தார்கள். ஆனால் அவன் வயதான தாய் அதிகம் பேசுபவளாக இருந்தாள். அவள் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எங்கு செல்கிறார்கள் என்று கேட்டாள்.

கிருஷ்ணாஜி விஸ்வநாத் சொன்னார். “நாங்கள் காசியிலிருந்து வருகிறோம் தாயே. தெற்கே ராமேஸ்வரம் வரை போக உத்தேசித்துள்ளோம்”

அவள் தலையசைத்தாள். சிவாஜி சொன்னான். “நாங்கள் தங்களுக்குத் தொந்தரவு தருகிறோம் என்பது புரிகிறது. ஆனால் வெளியில் தங்க முடியாதபடி மழை பெய்வதால் தான் உள்ளே தங்க அனுமதி கேட்டோம்.”

அந்த மூதாட்டி சொன்னாள். ”ஒரு தொந்தரவும் இல்லை பைராகியே. உங்களைப் போல் புனித யாத்திரை போகிற அளவு நாங்கள் புண்ணியம் செய்யவில்லை. அப்படி யாத்திரை செல்கின்ற புண்ணியாத்மாக்களான உங்களுக்கு ஒரு இரவு தங்க இடம் தருவதற்கு இறைவன் எங்களுக்கு வாய்ப்புத் தந்து இருக்கிறானே. அதற்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்”

அவள் சொன்னதற்கு வீட்டின் மற்றவர்களும் தலையாட்டியது ஓரளவு அங்கு தங்க வேண்டியிருப்பதன் தர்மசங்கடத்தைக் குறைத்தது. அந்தக் கிழவி பேசிக் கொண்டே போனதில் அந்த வீட்டுக்காரன் அவர்கள் தங்கத் தயக்கம் காட்டியதன் காரணம் வறுமையே என்பது புரிந்தது. அவனுக்குப் பிரச்னை அவர்கள் தங்குவதில் இருக்கவில்லை. தங்குபவர்களுக்கு உணவு அளித்து உபசரிக்க அவனுக்கு வசதியில்லை.  அது புரிந்தவுடன் சிவாஜியின் மனம் அவர்களுக்காக நெகிழ்ந்தது.

இரவு அவர்கள் சாப்பிட வீட்டுக்காரனின் மனைவி இரண்டிரண்டு ரொட்டிகள் கொண்டு வந்தாள். சிவாஜியும் கிருஷ்ணாஜி விஸ்வநாத்தும் மறுத்தார்கள். இங்கு வருவதற்கு சற்று முன் தான் பழங்கள் சாப்பிட்டதாகவும், இனி சாப்பிட வயிற்றில் இடமில்லை என்றும் பொய் சொன்னார்கள். ஆனாலும் வீட்டுக்காரன் அவர்கள் சாப்பிட வற்புறுத்தினான். மறுபடி அவர்கள் மறுக்கவே பின்பு தான் அந்த ரொட்டிகளை அந்தப் பெண்மணி எடுத்துக் கொண்டு போனாள். அந்த நான்கு ரொட்டிகளை ஒரு ஓரமாக அமர்ந்து வீட்டார்கள் நால்வரும் ஆளுக்கொரு ரொட்டியாகச் சாப்பிட்டார்கள். ஒருவேளை இவர்கள் இருவரும் சாப்பிட்டிருந்தால் அவர்கள் நால்வரும் பட்டினியாகவே படுத்திருப்பார்கள் என்பது புரிந்தவுடன் சிவாஜியும், கிருஷ்ணாஜியும் மனம் நெகிழ்ந்தார்கள்.

சாப்பிட்ட பின் பேசும் போது அந்த மூதாட்டி சில காலம் முன்பு வரை ஓரளவு வசதியாக அவர்கள் இருந்ததையும், பின்பு தான் நிலைமை மோசமானது என்றும் சொன்னாள். சிவாஜி ஆர்வத்துடன் அதற்குக் காரணம் கேட்டான்.

மூதாட்டி கோபத்துடன் சொன்னாள். “பக்கத்து ராஜ்ஜியத்து சிவாஜியால் தான் எங்கள் நிலைமை இப்படி ஆகி விட்டது”

சிவாஜிக்குத் தூக்கிவாரிப் போட்டது. “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள். சிவாஜி என்ன செய்தான்?”

மூதாட்டி சொன்னாள். “சிவாஜியை சக்கரவர்த்தி சிறைப்படுத்தி விட்டாராம். அதனால் அவனுடைய வீரர்கள் எல்லாம் வந்து எங்கள் பயிர்களை எல்லாம் அழித்து எங்கள் பசுக்கள், பொருள்களை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள்….”

சிவாஜியின் மனம் வேதனைப்பட்டது. அவனைச் சிறைப்படுத்தியதற்குப் பதிலடி தரும் விதமாக அவன் படையினர் முகலாயர்களின் பகுதிகளில் புகுந்து சேதம் விளைவித்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. ஆட்சியாளர்களின் எல்லாப் பிரச்னைகளிலும் அதிகம் பாதிக்கப்படுவது அடித்தளத்து குடிமக்களே என்று தாதாஜி கொண்டதேவ் அடிக்கடி சொல்வதன் அர்த்தம் இப்போது நேரடியாகவே அவனுக்கு விளங்கியது.

மூதாட்டி தொடர்ந்து சொன்னாள். “அந்த சிவாஜியை சக்கரவர்த்தி சரியாக தண்டித்திருக்க வேண்டும். அவர் அதைச் செய்வதற்கு முன் அவன் அங்கிருந்து தப்பித்து விட்டானாம்…”

சிவாஜி புன்னகையுடன் சொன்னான். “கவலைப்படாதீர்கள் தாயே. இழந்ததை எல்லாம் ஒருநாள் திரும்பப் பெறுவீர்கள்”

மூதாட்டி முகம் மென்மையாகியது. “உங்களைப் போன்ற பைராகிகளின் வாக்கு பலிக்கும் என்பார்கள். அப்படி ஒருவேளை ஆனால் ஓரளவாவது எங்கள் வாழ்க்கை சுலபமாகும்”

சிவாஜிக்கு அன்று உறக்கம் சரியாக வரவில்லை. இது போல் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கும், எந்தந்த விதமான துன்பங்களில் அவர்கள் உழன்று கொண்டிருப்பார்கள் என்ற சிந்தனைகளில் தங்கி வருந்தினான்.

மறுநாள் காலை மூதாட்டியும் அவளது மருமகளும் அவர்கள் கிளம்பும் முன் பரிமாற ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தார்கள். ரொட்டிகளை ஆறு இலைகளில் சரிசமமாக அவர்கள் பிரித்து வைப்பதைப் பார்த்து சிவாஜி மனம் நெகிழ்ந்தான். அடுத்த வேளைக்கு சாப்பிட எதுவும் இருக்கிறதோ இல்லையோ? அவனும், கிருஷ்ணாஜியும் ”உணவு வேண்டாம், கிளம்புகிறோம்” என்று சொன்னதை மூதாட்டி ஏற்றுக் கொள்ளவில்லை.

“நேற்றிரவும் சாப்பிடவில்லை. நீண்ட தூரம் போகிறவர்கள் காலையிலும் சாப்பிடாமல் கிளம்பினால் எப்படி?” என்று கட்டாயப்படுத்தி அவர்களைச் சாப்பிட வைத்தாள். அவர்கள் சாப்பிட்டு முடிக்கையில் உள்ளே தன்னுடைய இலையில் வைத்திருந்த ரொட்டிகளில் இரண்டு எடுத்துக் கொண்டு வந்து இருவருக்கும் ஒவ்வொன்றும் போட்டாள்.

உள்ளே அவள் இலையில் ஒரே ஒரு ரொட்டி இருப்பதைக் கவனித்த சிவாஜி நிஜமாகவே பதறினான். அந்த மூதாட்டி அன்புடன் சொன்னாள். “போகின்ற வழியில் அடுத்த உணவு எப்போது எங்கு கிடைக்குமோ? நன்றாகவே சாப்பிட்டு விட்டுப் போங்கள்”

சிவாஜியின் கண்கள் ஈரமாயின. இந்த தேசத்தின் உயிரும், உயர்வும் இங்கே அல்லவா இருக்கிறது என்று மனமுருகினான்.

அவர்கள் விடைபெற்றுக் கிளம்பிய போது மழை நின்றிருந்தது. சிவாஜியின் மனம் கனத்திருந்தது.

(தொடரும்)
என்.கணேசன்

Saturday, April 25, 2020

ஆழ்மனசக்தி இரகசியங்கள் - புதிய யூட்யூப் தொடர்



அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

ஆழ்மனசக்தி குறித்து இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். ஆழ்மனசக்தியின் சூட்சுமங்களையும், ஆழ்மனசக்தி அடையும் வழிகளையும் அவற்றில் தற்கால, பழங்கால ஆராய்ச்சிகளோடு விளக்கமாகத் தந்திருக்கிறேன். ஆனால் சில வாசகர்கள் மற்றும் ஆழ்மனசக்தியில் ஆர்வம் உள்ளவர்கள் அடிக்கடி என்னிடம் போன் செய்தும், மெயில் அனுப்பியும் இதன் சாராம்சங்களையும் வழிமுறைகளையும் பயிற்சி வகுப்புகள் எடுத்துக் கற்றுத் தர முடியுமா என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களுக்கு உதவும் வகையில் பாமரனும் பின்பற்றக் கூடிய வகையில் முக்கிய நிகழ்வுகள், சாராம்சங்கள், வழிமுறைகள் குறித்த பயிற்சிகள் ஆகியவற்றை ஆழ்மனசக்தி இரகசியங்கள் என்ற காணொளித் தொடர் மூலமாக ஆர்வமுள்ளவர்களுக்குத் தரும் முயற்சியை அடியேன் யூட்யூபில் எடுத்துள்ளேன். முடிந்த வரை வாரா வாரம் சனிக்கிழமை அன்று காலை அப்டேட் செய்கிறேன். ஆர்வமும் வாய்ப்பும் உள்ளவர்கள் இந்தத் தொடரைப் பயன்படுத்திக் கொள்ளவும். இதில் ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து அவர்களும் பயன்படுத்திக் கொள்ள உதவவும்.

அழ்மனசக்தி இரகசியங்கள் தொடரின் முதல் காணொளி இதோ -




என்.கணேசன்



Thursday, April 23, 2020

இல்லுமினாட்டி 46


க்ஷயிடம் க்ரிஷ் சொன்னான். “நீங்கள் விஸ்வத்தின் சக்திகளின் அளவைப் பார்த்து விட்டு அவனுக்கு இணையானவர் நீங்கள் அல்ல என்கிறீர்கள். இருக்கலாம். ஆனால் நீங்களும் சாதாரணமானவர் அல்ல என்று பலர் சொல்கிறார்கள். உங்களை அமானுஷ்யன் என்ற பெயரால் மட்டுமே அவர்கள் அழைக்கும் அளவில் தான் நீங்களும் உயர்ந்திருக்கிறீர்கள்...”

அக்ஷய்க்கு அவனுடைய மறுப்பை க்ரிஷ் உடனடியாக ஏற்றுக் கொள்ளாமல் பேசுவது தர்மசங்கடத்தைத் தந்தது. அவன் வருத்தம் கலந்த மெலிதான புன்னகையுடன் சொன்னான். “என்னை அப்படிக் கூப்பிடுபவர்கள் யாரும் விஸ்வத்தை அறியாதவர்கள். அவர்கள் அவனைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்தால் நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் கல்வியில் அவன் தங்கப்பதக்கம் பெற்ற பட்டதாரி என்று சொல்வார்கள்.”

க்ரிஷ் சொன்னான். “இருக்கலாம். ஆனால் அவனிடம் மிகப்பெரிய பலவீனம் இருக்கிறது. அது அதர்மம். அது தற்காலிகமாய் ஜெயிக்கலாம். ஆனால் கடைசியில் அவனை அழித்தே தீரும். அதில் சந்தேகமேயில்லை

உண்மை. ஆனால் அதர்மம் அழிவதற்கு முன்னால் நிறைய நல்லதையும் அழித்து விடுவதுண்டு என்பதே கசப்பான உண்மை. என் வாழ்க்கையில் அதை நான் நிறையவே பார்த்திருக்கிறேன். அப்படி நான் நேசித்த மனிதர்களை இழந்தும் இருக்கிறேன். தர்மம் கடைசியில் ஜெயித்தாலும் இடையில் இழந்த நல்ல விஷயங்களை மீட்டுக் கொடுப்பதில்லை, க்ரிஷ்

நம் வாழ்க்கையில் ஒவ்வொன்றும் வருவதற்கு ஒரு காலம் இருக்கிறது. அது நம்மை விட்டுப் போவதற்கும் ஒரு காலம் இருக்கிறது. அது அது அததன் காலத்தில் நடக்கிறது. அதனால் வரும் சுக துக்கங்கள் நம்மைப் பாதிப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதற்கும் தர்மம் அதர்மத்திற்கும் நாம் முடிச்சுப் போடுவது சரி என்று எனக்குத் தோன்றவில்லை.”

அக்ஷய் அவன் வாதத்திறமையை ரசித்தான். க்ரிஷ் சொன்னதில் இருந்த உண்மையையும் அவன் உணர்ந்தே இருந்தான். ஆனாலும் இப்போதைய வாழ்க்கையின் அமைதியை அவன் இழக்க விரும்பவில்லை.  அவன் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.

அவனுடைய மௌனத்தைப் படிக்க முடிந்தவனாக க்ரிஷ் தொடர்ந்து சொன்னான். ”நல்லவர்களான நாம் அமைதியையே விரும்புகிறோம். அதைப் பாதிக்கிற எதிலும் ஈடுபடுவதை நாம் விரும்புவதில்லை. ஆனால் தீமையை வளர விட்டால் நாம் என்றும் அமைதியுடன் வாழ முடியாது. தீமையை ஆதரிப்பது தான் ஆபத்து என்பதில்லை. எதிர்க்காமல் விலகி நிற்பதும் வளர்ப்பது போல் ஆபத்து தான். தனி மனிதர்களுக்கோ, அந்த இயக்கத்திற்கோ மட்டும் அந்த ஆபத்து என்பதில்லை. அந்த ஆபத்து மற்றவர்களுக்கும் வேகமாகப் பரவத்தான் செய்யும். அன்பான குடும்பத்துடன் அமைதியாக வாழ ஆசைப்படுவதாகச் சொன்னீர்கள். அந்த ஆசையே எனக்கும் இருக்கிறது. ஆனால் நாம் இன்று போராடி தீமையை அழிக்கா விட்டால் நாளைய நன்மையையும், அமைதியையும் கண்டிப்பாக இழந்து விடுவோம். நம் சந்ததியும் நிம்மதியாய் வாழ முடியாது. இதெல்லாம் உங்களுக்கு என்னை விட நன்றாகத் தெரியும். உங்கள் கடந்த காலத்தில் அந்தப் புரிதலோடு தான் தீய சக்திகளுடன் நிறைய போராடி இருக்கிறீர்கள். ஜெயித்தும் இருக்கிறீர்கள்”  

அக்‌ஷய் சொன்னான். “உண்மை. அன்று அந்தப் போராட்டத்திற்கு அர்த்தம் இருந்தது. என் அவசியமும் இருந்தது. ஆனால் விஸ்வத்தை எதிர்த்துப் போராட அந்தச் சக்தி வாய்ந்த இயக்கமே தாராளமாகப் போதும். அந்த இயக்கத்தை விட நான் எந்த விதத்திலும் பலசாலி அல்ல. பட்டாளங்களால் பாதுகாக்க முடிந்த மனிதர்களுக்குத் தனி மனித உதவி தேவையில்லை என்று தான் சொல்கிறேன்...”    

க்ரிஷ் அவன் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டு விட்டுச் சொன்னான். அந்த இயக்கம் இந்தக் காலக்கட்டத்தில் அழிவின் விளிம்புக்கு வரும் என்று ஆரகிள் சொல்லியிருப்பதை அவர்கள் திடமாக நம்புகிறார்கள். அதற்கு ஏற்ற மாதிரி விஸ்வத்தின் சாகசங்களும் இருக்கின்றன. வேற்றுக்கிரகவாசி சொன்னதும் ஒத்துப் போகிறது. பாதுகாப்புப் பட்டாளத்தால் அந்த இயக்கத் தலைவரைக் கண்டிப்பாகக் காப்பாற்ற முடியும் - எப்போதுமே அந்தப் பட்டாளத்தின் மத்தியில் அவர் இருக்க முடியுமானால். நடைமுறையில் அது அவருக்கு முடிகிற காரியம் அல்ல என்று அவர்கள் சொல்கிறார்கள். விஸ்வம் பழைய சக்தி பெற்று வந்தால் அவன் நினைத்ததை செய்து முடிக்க அவனுக்குச் சில வினாடிகள் போதும். அவன் இயங்க முடிந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க உங்களைத் தவிர வேறு யாரும் இருப்பதாக அவர்களுக்குத் தெரியவில்லை.  அதனால் தான் என்னை உங்களிடம் அனுப்பி அனுப்பியிருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு உதவுவதனால் இருக்கும் ஆபத்துகளை அவர்கள் அலட்சியம் செய்யவில்லை. அந்த இயக்கம் உங்கள் குடும்பத்திற்கு முழுப் பாதுகாப்பு தருவதாக உத்திரவாதம் தருவதாக வாக்களிக்கிறது. அவர்களுடைய பாதுகாவல் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதற்கு நானும் உத்திரவாதம் தருகிறேன். இப்போது நானே அந்த இயக்கத்தின் நான்கு பாதுகாப்பு வீரர்கள் பாதுகாவலில் தான் இங்கே வந்திருக்கிறேன். இது அரசு பாதுகாப்பை விட இரு மடங்கு அதிக பாதுகாப்பு என்பதை நான் உணர்கிறேன்...

அக்‌ஷய் தன் புன்னகையைக் கஷ்டப்பட்டு மறைத்தான். ’வாதங்களிலும், பல துறைகளிலும் அபார அறிவுத் திறமை இருக்கும் இந்த இளைஞன் சில விஷயங்களில் நிறையவே வெகுளியாகவும் இருக்கிறான். எட்டுப் பேரைப் பாதுகாவலுக்கு அனுப்பி இருப்பதை இல்லுமினாட்டி இயக்கம் இவனுக்கே தெரிவிக்கவில்லை. பாதியாகத் தான் சொல்லி அனுப்பி இருக்கிறது. இவனும் இப்போது வரை உண்மையை உணரவில்லை...”

க்ரிஷ் கேட்டான். “ஏன் சிரிக்கிறீர்கள்?”

அக்‌ஷய் திகைத்தான். அவன் சிரிப்பை வெளியே காண்பிக்கவில்லை என்பது நிச்சயம். ஆனாலும் மாஸ்டரின் மாணவன் உள்ளுணர்வால் உணர்ந்து விட்டிருக்கிறான். கவனிக்கும் விஷயங்களில் இவன் நுண்ணுணர்வு அபாரமாகவே இருக்கிறது. கவனிக்காத விஷயங்களில் தான் இவன் வெகுளியாக இருக்கிறான்...  

அக்‌ஷய் அவனுடன் சற்று நெருக்கத்தை உணர ஆரம்பித்ததால் உண்மையையே சொன்னான். “உன்னுடன் பாதுகாவலர் எட்டுப் பேர் வந்திருக்கிறார்கள். ஆனால் நீ நான்கு பேர் என்று சொல்கிறாயே அது தான் வேடிக்கையாக இருந்தது. ஆனால் எனக்குத் தோன்றியதை நான் வெளியே காட்டவில்லை. அப்படி இருந்தும் நீ கண்டுபிடித்து விட்டாய்”

க்ரிஷுக்குத் தன் பாதுகாவலுக்கு வந்த ஆட்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியாதது அவமானமாகத் தெரியவில்லை. இல்லுமினாட்டி அவனிடமே பொய் சொல்லியிருப்பது கோபத்தையும் ஏற்படுத்தவில்லை. அக்‌ஷய் சிரிப்பை மறைத்தும், தான் சரியாகக் கண்டுபிடித்து விட்டது பெருமையாகவும் இருக்கவில்லை. அவனுக்கு அவனுடன் வந்த பாதுகாவலர்களின் எண்ணிக்கையை அக்‌ஷய் சரியாகக் கண்டுபிடித்தது தான் ஆச்சரியமாக இருந்தது. க்ரிஷ் சொன்னான். ”உங்களை அமானுஷ்யன் என்று சொல்வது சரியாகத் தான் இருக்கிறது. உங்கள் கவனம் எல்லாம் அந்தப் பிள்ளைகள் மேலேயே இருந்தது போலத்தான் இருந்தது. அப்படி இருந்தும் கண்டுபிடித்து விட்டீர்கள்.”

க்ரிஷ் உணராத அவமானமும், கோபமும், பெருமிதமும் அக்‌ஷயின் கவனத்திலிருந்து தப்பவில்லை. அவன் மனதில் க்ரிஷ் பல மடங்கு உயர்ந்து போனான்.

க்ரிஷ் அக்‌ஷயிடம் கேட்டான். “நீங்கள் என்ன முடிவு செய்திருக்கிறீர்கள் என்று நான் அந்த இயக்கத்தினரிடம் சொல்லட்டும்”

அக்‌ஷய் சொன்னான். “எனக்கு யோசிக்க இரண்டு நாள் அவகாசம் வேண்டும், க்ரிஷ்”

ஒரேயடியாக மறுத்து விடாமல் அவன் யோசிக்க அவகாசம் கேட்டதே க்ரிஷுக்கு நல்ல விஷயமாகத் தோன்றியது. சரியென்றான்...


சிந்து அந்த ஐவர் பற்றிய விரிவான விவரங்களைப் படித்து முடித்த போது நள்ளிரவாகி இருந்தது. அந்த ஐவரையும் அவள் மிகநெருங்கிப் பழகி அறிந்தவள் போல் இப்போது உணர்ந்தாள். அந்த அளவு அவர்களை அவள் மனதில் கச்சிதமான சித்திரங்களாக விஸ்வம் எழுப்பி இருந்தான். அந்த ஐந்து பேரில் அவள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஆட்களாக இரண்டு பேரை அபாயக்குறி போட்டு விஸ்வம் எச்சரித்திருந்தான். ஒன்று க்ரிஷ். இரண்டாவது ஹரிணி. க்ரிஷ் குறித்த விவரங்களின் இறுதியில் “மிக எளிமையாகவும், நல்லவனாகவும் தோன்றினாலும் அபாயமானவன்” என்று விஸ்வம் எழுதியிருந்தான். ஹரிணி குறித்த விவரங்களின் இறுதியில் “துணிச்சல்காரி.   புத்திசாலி. இவளிடம் எச்சரிக்கை தேவை” என்று எழுதி இருந்தான்.

ஆரம்பத்தில் அவள் செய்ய வேண்டிய வேலைகளை விஸ்வம் தெளிவாகச் சொல்லி இருந்தாலும் முடிவில் என்ன செய்ய வேண்டும் என்று அவளிடம் சொல்லி இருக்கவில்லை. அதைப் பிற்பாடு தேவையான நேரத்தில் சொல்வதாகத் தெரிவித்திருந்தான். இந்த ஐந்து பேருமே விஸ்வத்தின் எதிரிகளாக இருக்க வாய்ப்பில்லை. ஐவரில் யார் விஸ்வத்தின் எதிரி என்று சிந்துவுக்குக் கணிக்க முடியவில்லை. பத்மாவதியைத் தவிர யார் வேண்டுமானாலும் விஸ்வத்தின் எதிரியாக இருக்கலாம் என்று தோன்றியது.

அவள் உள்மனம் ஏனோ இந்த வேலை வேண்டாம் என்று எச்சரித்தது. இது வரை இப்படி அவளுக்குத் தோன்றியதில்லை. அவள் அந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியபடி அடுத்து அது சம்பந்தமாக அவள் செய்ய வேண்டியவற்றை நிதானமாகப் பட்டியல் போட ஆரம்பித்தாள்.

(தொடரும்)
என்.கணேசன்