சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 29, 2018

சத்ரபதி – 5


குழந்தை சிவாஜியால் ஜீஜாபாய் எத்தனையோ கவலைகளை மறந்தாள் என்றால் எத்தனையோ கவலைகள் அடையவும் செய்தாள். கணவன், மூத்த மகன், தாய், தாய்வீடு என மனம் கவலையடையும் போதெல்லாம் குழந்தை சிவாஜியைக் கொஞ்சி, அவனுடன் விளையாடி ஜீஜாபாய் பெரும் ஆசுவாசத்தை உணர்ந்தாள். ஆனால் சிவாஜி வளர வளர அவனுக்கு வரவிருக்கும் ஆபத்துகளை எண்ணி அவள் கவலையும் பட்டாள். அதற்குக் காரணமாக இருந்தது அகமதுநகர் அரசியலும், அதன் குழப்பத்தில் அவள் கணவன் ஷாஹாஜி ஆடிய ஆடுபுலி ஆட்டமும் தான்.

ஒரு அரசன் முட்டாளாகவும், சிந்திக்காமல் அவசர முடிவுகளை எடுப்பவனாகவும் இருந்தால் அவன் அழிவதோடு அவனைச் சேர்ந்தவர்களையும் சேர்த்தே அழிப்பான் என்பதற்கு அகமது நகர் சுல்தான் முர்தசா இரண்டாம் நிஜாம் ஷா சரியான உதாரணமாக இருந்தான். அவன் தன்னுடைய பிரச்சினைகளுக்குக் காரணங்களை தன்னிடத்தில் தேடியதில்லை. பிரச்சினைகளின் காரணங்கள் தன்னிடம் இருக்கலாமோ என்று சந்தேகப்பட்டதும் இல்லை. அவற்றை அவன் அடுத்தவர்களிடமே பார்த்தான். அவர்களே காரணம் என்று உறுதியாக நம்பினான். அவர்களைப் பகைத்துக் கொண்டான். இது ஆரம்பத்திலிருந்தே அவனுடைய வழக்கமாக இருந்தது. லாக்கோஜி ஜாதவ்ராவைக் கொன்று யாதவர்களைப் பகைத்துக் கொண்ட அவன் தன் முதல் அமைச்சரான ஃபதேகான் மீதும் சந்தேகம் கொண்டு அவனைச் சிறையிலடைத்தான். அந்தப் பதவியில் தக்ரீப்கான் என்பவனை நியமித்தான். ஃபதேகானைப் போலவே தக்ரீப்கானும் திறமையற்றவனாக இருந்தான். அதனால் அவன் மீது கோபப்பட்டு அவனிடமிருந்து முதலமைச்சர் பதவியைப் பறித்து ஃபதேகானை சிறையிலிருந்து விடுவித்து அவனிடமே திரும்பக் கொடுத்தான். தக்ரீப்கான் கோபித்துக் கொண்டு போய் முகலாயப் படையில் சேர்ந்து கொண்டான். முதலமைச்சராகத் திரும்ப ஆக்கப்பட்ட போதும் ஃபதேகானும் தன்னைச் சிறையிலடைத்த சுல்தானை மன்னிக்கவில்லை. மனதில் பகையைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தவன் சுல்தானுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்ற வதந்தியைப் பரப்பினான். சுல்தான் முர்தசா இரண்டாம் நிஜாம் ஷாவின் நடவடிக்கைகளும் அப்படியே இருந்ததால் யாரும் அந்த வதந்தியைச் சந்தேகிக்கவில்லை. சுல்தானை அரண்மனையிலேயே காவலில் வைத்த ஃபதேகான் ஒரு நாள் ரகசியமாக சுல்தானின் கழுத்தை நெறித்துக் கொல்லவும் செய்தான். பத்து வயது இளவரசனை அரியணையில் பெயருக்கு அமர்த்தி தானே அரசாட்சி செய்ய ஆரம்பித்தான். அதிகாரம் அவன் கைக்குப் போவதை ரசிக்காத பிரபுக்கள் கலகம் செய்ய ஆரம்பித்தனர். அவர்களில் இருபத்தைந்து பேர் கொல்லப்பட்டனர்.  

இந்தக் குழப்ப நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஷாஹாஜி தீர்மானித்தார். கணிசமான படையைத் திரட்டிக் கொண்டு, பீஜப்பூர் சுல்தானிடம் நட்பு வைத்துக் கொண்டு கூட்டு சேர்ந்து அகமதுநகருக்குச் சொந்தமான சில கோட்டைகளைக் கைப்பற்றினார்.  ஷாஹாஜி பீஜப்பூர் சுல்தான் கூட்டணி ஒருபுறம், பிரபுக்களின் கலகங்கள் ஒருபுறம் வலுவடைய ஃபதேகான் நிலைமை மோசமாவதை உணர்ந்து முகலாயப் பேரரசர் ஷாஜஹானிடம் சரணடையத் தீர்மானித்து பேச்சு வார்த்தைகளை ரகசியமாய் நடத்த ஆரம்பித்தான்.

இந்தத் தகவல் கிடைத்த போது ஜீஜாபாய் ஆபத்தை உணர்ந்தாள். ஷாஹாஜியை அடக்க விரும்புபவர்கள் சிவாஜியையும் அவளையும் சிறைப்பிடிக்கலாம்….. அவள் தன்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவள் மகனுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது….. மகனுக்குக் கதைகள் சொல்லி, அவனுடன் விளையாடி, அவன் மழலையை ரசித்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும், அதே நேரத்தில் அகமதுநகர் அரசியல் நிலவரங்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தாள்.

மகனுக்குக் கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது சிலசமயம் யாராவது அகமதுநகர் நிகழ்வுகள் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்தால் கதையை நிறுத்தி அதைக் கவனிப்பது உண்டு. சுவாரசியமாகக் கதை கேட்டுக் கொண்டே அவள் மடியில் அமர்ந்திருக்கும் சிவாஜி அவள் இடையில் நிறுத்தும் போது சிணுங்கி மழலையில் “சொல் அம்மா….. ஏன் நிறுத்தி விட்டாய்…… உனக்கு கதை மறந்து விட்டதா?” என்று கேட்பான். ஜீஜாபாய் புன்னகையுடன் கதையைத் தொடர்வாள்.

அவள் சொல்கின்ற கதைகள் பெரும்பாலும் இராமாயணமும், மகாபாரதமுமாகவே இருக்கும். அந்தக் கதைகளை உணர்ச்சி பூர்வமாக அவள் சொல்வாள். கதைகளில் முழுவதுமாகவே மூழ்கி சிவாஜி கேட்பான். இராமன் காட்டுக்குப் போய் கஷ்டப்படுவதைக் கேட்டு கண்கலங்குவான். இலங்கையில் அனுமன் வாலுக்குத் தீ வைக்க, அந்தத் தீயால் அனுமன் இலங்கையில் பல இடங்களுக்குத் தீ வைத்ததைக் கேட்டு குதூகலமாய் சிரிப்பான். இராம இராவண யுத்தத்தை ஜீஜாபாய் விவரிக்கையில் மெய்மறந்து கேட்பான்…. அதே போல் மகாபாரதக் கதைகளிலும் பாண்டவர்களின் வனவாசம் அவன் கண்ணீரை வரவழைக்கும். திரௌபதியின் துகிலிருக்கும் காட்சியில் கிருஷ்ணரின் அருளால் சேலை இழுக்க இழுக்க வந்து கொண்டிருந்ததைக் கேட்கையில் பிரமிப்பு அவன் கண்களில் தெரியும். பீமன் துச்சாதனனையும், துரியோதனனையும் கொல்லும் காட்சிகளை அவள் சொல்லும் போது அவன் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும். நல்லவர்களால் கெட்டவர்கள் வதைக்கப்படும் காட்சிகளை மட்டும் “இன்னொரு தடவை சொல் அம்மா” என்று சிவாஜி ஆனந்தமாய்க் கேட்பான். அவள் மறுபடி சொல்வாள்….

மகன் உறங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் அவனையே பார்த்து ரசித்தபடியும், கவலைப்பட்டபடியும் ஜீஜாபாய் விழித்திருந்த நேரங்கள் அதிகம். அவனுடன் உறங்கிக் கொண்டிருக்கும் நேரங்களில் கூட, சிறிய வித்தியாசமான சத்தங்கள் கேட்டாலும் மனம் பதைத்து எழுந்து விடுவாள். அவள் குழந்தையை யாராவது தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள் என்ற பயம் நாட்கள் போகப் போக அதிகரித்ததே ஒழிய குறையவில்லை.

இப்படி அவளுக்குப் பயம் வளர்ந்த காலக்கட்டத்தில் தான் பெரியதொரு முகலாயப் படை அகமது நகர் நோக்கி வருகிறது என்றும் ஃபதேகானின் பேரம் படிந்தது என்றும் ஒற்றர்கள் மூலம் தகவல் ஜீஜாபாய்க்கு வந்து சேர்ந்தது. அகமதுநகர் அழிவது உறுதி. அந்த அழிவில் பங்கு போட்டுக் கொள்ள வருபவர்களை முகலாயப் படை சகிக்காது என்பதும் நிச்சயம். ஷாஹாஜி இந்தச் சூழ்நிலையில் தானாகக் கண்டிப்பாகப் பின்வாங்குபவர் அல்ல. அதனால் அவரைப் பின்வாங்க வைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை முகலாயர்கள் கண்டிப்பாகச் செய்வார்கள். ஷாஹாஜியின் இரண்டாம் மனைவியும் மூத்த மகன் சாம்பாஜியும் பீஜாப்பூரில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். எட்டும் தூரத்தில் இருப்பது ஜீஜாபாயும், சிவாஜியும் தான். அதனால் இன்றில்லா விட்டாலும் நாளை இருவரையும் எதிரிகள் நிச்சயம் நெருங்கத் தான் செய்வார்கள். இந்த அனுமானத்திற்கு வந்திருந்த ஜீஜாபாய் தன் மகன் பாதுகாப்புக்கு ஆழமாக சிந்திக்க ஆரம்பித்தாள்.

சிவாஜியைப் பாதுகாக்க ஷாஹாஜியின் நம்பிக்கைக்குரிய ஆட்களிடம் அவனை ஒப்படைக்கலாம். ஆனால் ஒற்றர்கள் மூலம் முகலாயர்களும் அந்த ஆட்களையும், அவர்கள் சரித்திரங்களையும் அறிய முடியும் என்பதால் எளிதாக அந்த ஆட்களோடு சிவாஜியையும் முகலாயர்கள் சிறைப்பிடித்து விட முடியும். ஒற்றர்கள் அறியும் அளவுக்குப் பிரபலமாய் இருக்காத ஒரு ஆள் வேண்டும், அவன் பூரண நம்பிக்கைக்குரியவனாய் இருக்க வேண்டும், சிவாஜியைப் பத்திரமாகவும் ரகசியமாகவும் பாதுகாக்க முடிந்த ஆளாகவும் இருக்க வேண்டும். தன்னுடன் இருக்கும் கூட்டத்தில் அப்படி ஒரு மனிதனைத் தேடிக் கடைசியில் ஜீஜாபாய் சத்யஜித்தைக் கண்டுபிடித்தாள்.

சத்யஜித் அதிகம் பேசாத அமைதியான இளைஞன். முரட்டுத்தனமான, கட்டுமஸ்தான உருவம் கொண்டவன் என்றாலும் அவன் அன்பான மனிதனாகவும் தெரிந்தான். அவன் சிவாஜியைப் பார்க்கும் போதெல்லாம் அவன் விழிகளில் தெரிந்த மென்மையும், அன்பும் சிவாஜி மேல் அவனுக்கு ஏற்பட்டிருந்த ஒரு பிரத்தியேக அன்பை ஜீஜாபாய்க்கு அடையாளம் காட்டியது. அவனைப் பற்றி ரகசியமாய் மற்றவர்களிடம் விசாரித்தாள். சகாயாத்திரி மலைத்தொடரில் பிறந்து வளர்ந்தவன். வீரமானவன். நம்பகமானவன் என்பது தெரிந்தது. தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தவும் தயங்கும் அளவு கூச்சமானவனாக அவன் இருந்திரா விட்டால் இன்னேரம் ஏதாவது ஒரு படையில் பெரிய பதவியில் இருந்திருக்கலாம் என்று சொன்னார்கள். ஜீஜாபாய்க்கு அவன் பொருத்தமானவனாகத் தெரிந்தான்.

ஜீஜாபாய் அவனிடம் தன் மகனைப் பார்த்துக் கொள்ளும் வேலையை அவ்வப்போது தந்து மறைந்திருந்து அவன் எப்படிப் பார்த்துக் கொள்கிறான் என்பதைக் கூர்ந்து கவனித்தாள். அவன் சிவாஜி மேல் பாசத்தை அதிகமாய் பொழிந்தான். அவனிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்ததில் அவனுக்கு சிவாஜியைப் போலவே தோற்றத்தில் ஒரு குழந்தை இருந்ததும், அந்தக் குழந்தையும், அதன் தாயும் ஒரு விபத்தில் இறந்து போனதும் தெரிய வந்தது. பின் மறுமணம் செய்து கொள்ளாதது ஏன் என்று ஜீஜாபாய் கேட்ட போது மனைவியையும், குழந்தையையும் மறக்க முடியவில்லை என்றும் அவனுக்கு குடும்பம் என்ற ஒன்று விதிக்கப்படவில்லை போலிருக்கிறது என்றும் அவன் மெல்லிய சோகத்தோடு சொன்னான். ஜீஜாபாய் தன் மகன் பாதுகாப்புக்கு இவனே தகுந்த ஆள் என்று தீர்மானம் செய்தாள். அன்றிலிருந்து சிவாஜியை அவனுடன் அதிகம் இருக்க விட்டாள். அவனுக்குக் குழந்தையைக் கொஞ்சவோ, அவனுடன் விளையாடவோ அதிகம் தெரியவில்லை. ஆனால் குழந்தை சிவாஜி என்ன சொன்னாலும் சிறிதும் சங்கடமில்லாமல் செய்து அவனை மகிழ்விக்கத் தெரிந்திருந்தது. ’என்னை விட்டு என் குழந்தை இவனுடன் இருந்தாலும் குழந்தையை அழாமல் பார்த்துக் கொள்வான்’ என்று ஜீஜாபாய் எண்ணிக் கொண்டாள்.

இந்த நேரத்தில் முகலாயப்படை அகமதுநகர அரியணையில் இருந்த சிறுவனைக் கைது செய்து குவாலியர் கோட்டையில் அடைத்த செய்தியும் தன் கட்டுப்பாட்டில் இருந்த எல்லாவற்றையும் முகலாயர்களிடம் ஒப்படைத்து விட்டு,  வருடா வருடம் ஒரு குறிப்பிட்ட தொகை தனக்குக் கிடைக்கும்படி ஃபதேகான் முகலாயப்பேரரசரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டான் என்ற செய்தியும் ஜீஜாபாய்க்கு வந்து சேர்ந்தது. அன்றே ஷிவ்னேரியிலிருந்து கிளம்பி பைசாபூர் கோட்டைக்குச் சென்று விடும்படி ஷாஹாஜியின் ரகசிய ஓலையும் ஜீஜாபாய்க்கு வந்து சேர்ந்தது.

ஆபத்து நெருங்குவதை ஜீஜாபாய் தன் அடிமனதில் உணர்ந்தாள். ஆனால் எதையும் மறுக்கவோ, வேறுவிதமாய் தீர்மானிக்கவோ அவளுக்குச் சுதந்திரம் இல்லை. வேறுவழியில்லாமல் ஷிவாய் தேவி கோயிலிற்கு மகனுடன் சென்று மனமுருக வேண்டிக் கொண்டு அன்றிரவே ஜீஜாபாய் ஷிவ்னேரியிலிருந்து கிளம்பினாள்.

(தொடரும்)
என்.கணேசன் 

Thursday, January 25, 2018

இருவேறு உலகம் – 67

 
மாணிக்கத்திடம் மனோகர் வார்த்தைகளை வீணடிக்கவில்லை. “உங்க மாமா பேரம் இன்னும் முடியல. அவர் சில கோடிகளை மிச்சம் பண்ணப் பாக்கறார். இன்னும் தாமதமானா கடைசில எதுவுமே மிஞ்சாதுன்னு சொல்லி வைங்க. இன்னும் அரைநாள்ல பேரம் முடியாட்டி ராஜதுரை இறந்தாலும் நீங்க முதலமைச்சராக முடியாம போயிடும்….”

வார்த்தைகள் இடிகளாக விழ அதிகமாக அமைதியிழக்காத மாணிக்கம் பதறிப்போனார். “நான் இப்பவே பேசறேன்…… சார்”

அவன் பதில் எதுவும் சொல்லாமல் இணைப்பைத் துண்டித்து விட்டான். அந்த ஏ. சி வராந்தாவிலும் சில வினாடிகளில் உடல் முழுவதும் வியர்த்து விட மாணிக்கம் தன் அமைதியைத் திரும்பவும் வரவழைக்க சிறிது சிரமப்பட்டார். சங்கரமணிக்கு வரவு எத்தனை இருந்தாலும் செலவு செய்ய மனம் வரவே வராது. குறைந்தபட்ச செலவிலேயே எல்லா வேலைகளையும் முடித்துக் கொள்ள முயலும் புத்தியை அவரால் மாற்றிக் கொள்ள முடிந்ததில்லை.

மாமனை மனதில் திட்டிக் கொண்டே எழுந்த மாணிக்கம் சற்று தள்ளிப் போய் ஆளில்லாத இடத்தில் நின்று கொண்டு மாமனுக்குப் போன் செய்து மனோகரின் தகவலை அப்படியே சொன்னார். “…. மாமா கோடிகளை மிச்சம் பண்ணப் போய் என் அரசியல் வாழ்க்கைய முடிச்சுடாதீங்க”

சங்கரமணி கஞ்சனே ஒழிய முட்டாள் அல்ல. “ரெண்டு மணி நேரத்துல வியாபாரம் முடிஞ்சுடும்னு சொல்லிடு” என்று ரத்தினச்சுருக்கமாய் சொன்னார். மாணிக்கத்துக்குப் போன உயிர் திரும்பி வந்தது.

திரும்பவும் பழைய இடத்துக்கு அவர் வந்த போது க்ரிஷ் கேட்டான். “என்ன அங்கிள், உடம்பு சரியில்லையா?”

மாணிக்கம் சமாளித்தார். “அண்ணனுக்கு இப்படியானவுடனே நானும், உங்கப்பாவும் பதட்டமா தான் இருக்கோம்”

க்ரிஷ் மெலிதாய் ஒரு புன்னகை பூத்து விட்டு நகர்ந்தான். சொந்தக் காரியம் அல்லாமல் வேறெதற்கும் பதட்டப்படாதவர் இவர் என்பதை அவன் அறிவான். அண்ணன் அருகில் போய் அவன் அமர்ந்து கொண்டான். உதய் மொபைல் போனில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்க க்ரிஷ் அங்கிருக்கும் சூழ்நிலையைக் கவனித்துக் கொண்டிருந்தான். அங்கு இருந்த அமைச்சர்களில் அவன் தந்தையைத் தவிர வேறு யாரும் உண்மையான கவலையில் இல்லை. ஒருவேளை ராஜதுரை சாதாரண மனிதராய் இருந்திருந்தால் இங்கே கூடியிருக்கும் கூட்டத்தில் நேசிக்கும் ஆட்கள் கூடுதலாய் இருந்திருக்கலாம்.

ராஜதுரை மிக நல்ல மனிதர். அவன் விமர்சனத்திற்குப் பின்பு கூட அவர் அவன் மீது கோபித்துக் கொண்டதில்லை. கமலக்கண்ணன் தான் அவனைத் திட்டித் தீர்த்தாரேயொழிய  ராஜதுரையோ தவறாக எதுவும் அவன் செய்து விடவில்லை என்பது போலத் தான் நடந்து கொண்டார். அவன் காணாமல் போன போது கூட அவனுக்காக அவர் தனிப்பட்ட அக்கறை காட்டினதாக கமலக்கண்ணன் சொல்லியிருந்தார். அப்படிப்பட்டவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது அவனுக்கும் மனக்கஷ்டமாக இருந்தது. அவர் நலமடைந்தால் அவரிடம் அவன் நேரடியாக நன்றி சொல்ல வேண்டும்…..

திடீரென்று உடுக்கை சத்தம் கேட்டது. திகைத்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். யாரிடமும் எந்த மாற்றமும் தெரியவில்லை. அருகில் அமர்ந்திருந்த உதய் கூட மொபைல் போனில் இருந்த பார்வையைத் திருப்பவில்லை. அப்போது தான் அந்த உடுக்கைச் சத்தம் அவனுக்கு மட்டும் தான் கேட்கிறது என்பது புரிந்தது.  இதயத்துடிப்பு வேகமானது. கூர்ந்து கவனித்த போது உடுக்கை சத்தம் மங்களகரமாக இல்லை. மயான உடுக்கைச் சத்தமாகத் தோன்றியது. தீவிர சிகிச்சைப் பிரிவின் உள்ளே இருந்தவரின் மரணத்தை அறிவிக்கும் சத்தமாகத் தோன்றியது. அவன் அதிர்ந்து போனான். அவன் அண்ணனின் தொடையை அழுத்தினான்.

உதய் தம்பியைப் பார்த்தான். “என்னடா?”

க்ரிஷ் தாழ்ந்த குரலில் சொன்னான். “அவர் செத்துட்டார்டா”

உதய் தம்பியை அதிர்ச்சியுடன் பார்த்தான். “என்னடா சொல்றே?”

க்ரிஷ் பதிலேதும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டான். சற்று தூரத்தில் அமர்ந்திருந்த மாணிக்கம் க்ரிஷையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் முகமாற்றத்தின் காரணமும், உதயின் அதிர்ச்சியின் காரணமும் அவருக்குப் புரியவில்லை. அவர் அலைபேசி அடித்தது. மனோகர்!. வேகமாக போனை எடுத்துப் பேசினார். “ஹலோ”

“ராஜதுரை இறந்துட்டார் முதலமைச்சரே” என்று ஒற்றை வாக்கியத்தில் அவன் பேச்சை முடித்துக் கொண்டான். அவன் சொன்ன செய்தி மனதில் சரியாகப் பதிய சில வினாடிகள் தேவைப்பட்டன. முழுவதுமாய் பதிந்த போது சங்கரமணியின் போன்கால் வந்தது. “இப்ப தான்  நமக்குத் தேவையான ஆள்கள் கூட பேரம் முடிஞ்சுது. அவனுக்குப் போன் செஞ்சு இதைச் சொல்லிடு”

மாணிக்கம் பேச்சிழந்து சிலையாகச் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பேரம் முடிந்த செய்தியைச் சங்கரமணி சொல்வதற்கு முன்பே மனோகருக்குத் தெரிந்திருக்கிறது. அவன் அன்றே சொன்னது போல பேரம் முடிந்தவுடனேயே ராஜதுரை கதையை முடித்து விட்டான். ஆனால் அவன் அதைச் சொல்வதற்கு முன்பே க்ரிஷ் அதைத் தெரிந்து கொண்டு விட்டு தான் அதிர்ச்சியடைந்து முகம் மாறியிருக்கிறான். எல்லாம் சில வினாடிகளுக்கு முன் தான் நடந்து முடிந்தது என்றாலும் சங்கரமணி சொன்னதற்குச் சில வினாடிகள் முன்பே மனோகர் பேரம் முடிந்ததை அறிந்ததும், மனோகர் தெரிவிப்பதற்குச் சில வினாடிகள் முன்பே க்ரிஷ் ராஜதுரையின் மரணத்தை அறிந்ததும், வெற்றியடைந்த சந்தோஷத்தை மீறி அவரைத் தலைசுற்ற வைத்தது. என்ன நடக்கிறது?


டியாட்களும் தங்கள் தரப்பு எம்.எல்.ஏக்களும் வந்து எல்லாத் தகவல்களையும் சொன்ன போது உதய் ஆத்திரப்பட்டான். சோகமே வடிவாக அமர்ந்திருந்த தந்தையிடம் வந்து சொன்னான். “உங்க நண்பர் மாணிக்கம் ஆஸ்பத்திரில சோகமா உட்கார்ந்துட்டே மாமாவை அனுப்பி எம்.எல்.ஏக்களை விலை பேசி தன் பக்கம் இழுத்திருக்கார்.  அவரை முதல் அமைச்சராக்க அவங்க சம்மதிச்சிருக்காங்க….”

கமலக்கண்ணன் திகைப்புடன் மகனைப் பார்த்தார். ஆனால் கேள்விப்பட்ட செய்தி ராஜதுரை மரணத்தை விட அதிகமாக அவரை பாதித்து விடவில்லை. விரக்தியுடன் சொன்னார். “அண்ணனே போயிட்டாரு. அதுக்கப்பறம் என்ன ஆனா என்னடா. இந்த மந்திரி பதவியே வேணும்னாலும் அவங்க எடுத்துக்கட்டும்”

உதய் ஆத்திரம் அதிகமாகியது. தந்தையிடம் காட்டமாகச் சொன்னான். “உங்க சின்ன மகனுக்கு அந்த புத்தி எங்க இருந்து வந்ததுன்னு பல தடவை யோசிச்சிருக்கேன். இப்ப புரியுது, எல்லாம் உங்க கிட்ட இருந்து தான்….”

பத்மாவதி மூத்த மகனை அதட்டினாள். “அவரே மனசொடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கார். இந்த நேரத்துல என்னடா அரசியலும் குத்தல் பேச்சும்…..”

தற்போதைய அரசியல் நிலவரமும், அதன் முக்கியத்துவமும் தெரியாமல் பேசும் தாயை முறைத்து மெல்ல முணுமுணுத்தான். “அருமையான கூட்டணி”

“என்னடா சொல்றே. சத்தமா சொல்லு” என்ற பத்மாவதிக்கு அவன் பதில் சொல்லும் முன் அவர்கள் வீட்டு முன் மாணிக்கத்தின் கார் வந்து நின்றது. அவன் வாயை மூடிக் கொண்டான். மாணிக்கம் எதுவுமே தவறாக நடந்து விடவில்லை என்பது போலவே உள்ளே வந்தார். கமலக்கண்ணன் அருகே வந்தமர்ந்தவர் “கண்ணா நாம உடைஞ்சு போய் உட்காரதுல அர்த்தமில்ல. எல்லாரும் ஒரு நாள் போய்த்தான் ஆகணும். நடக்க வேண்டியதைப் பார்த்தாகணும்….”

கமலக்கண்ணன் வெறித்த பார்வை பார்த்தார். மாணிக்கம் தொடர்ந்து சாதாரண விஷயம் போல் சொன்னார். “நம்ம எம் எல் ஏக்கள் எல்லாம் வந்து என்னை முதலமைச்சராகணும்னு கட்டாயப்படுத்தறாங்க. நான் எதுக்கும் உன்னையும் ஒரு வார்த்தை கேட்காமல் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்…..”

உதய் மனதிற்குள் கோபமான வார்த்தைகளில் வெடித்தான்.

கமலக்கண்ணன் சொன்னார். “நான் என்ன சொல்றதுக்கு இருக்கு. தாராளமா ஒத்துக்கோ”

மாணிக்கம் முகத்தில் நிம்மதி வெளிப்படையாகத் தெரிந்தது. “அண்ணனுக்கு நீ வலதுகையா இருந்தே. எனக்கும் அப்படியே இருக்கணும். உன் ஆதரவு இருக்கற நம்பிக்கைல தான் ஒத்துக்கப் போறேன்”

கமலக்கண்ணன் தலையசைத்தார். மாணிக்கம் எழுந்து உதய் அருகே வந்தார். “டெல்லில நம்ம கட்சியை நீ தான் வழக்கம் போல வளர்த்தணும் உதய். பாராளுமன்றத்தைப் பொறுத்த வரை நான் உன்னைத் தான் நம்பி இருக்கேன்”

உதய் பேசினால் பச்சையாக எதாவது சொல்லி விடுவோம் என்று பயந்து தலையசைத்தான்.

மாணிக்கம் பத்மாவதியிடமும், க்ரிஷிடமும் தலையசைத்து விட்டு வேகமாகப் போய் விட்டார்.

நடப்பது அரசியல் ஆட்டம் என்றாலும் காய்களை நகர்த்துவது எதிரி தான் என்பதை க்ரிஷால் உணர முடிந்தது. எல்லாம் எதற்காக என்பது தெளிவாகப் புரியா விட்டாலும் நல்லதற்காக இல்லை என்பது மட்டும் விளங்கியது.

(தொடரும்)
என்.கணேசன்

Wednesday, January 24, 2018

Monday, January 22, 2018

சத்ரபதி – 4



ரு ஆத்மார்த்தமான பிரார்த்தனையின் முடிவில் ஆரம்பித்த பிரசவ வேதனையை ஜீஜாபாய், ஷிவாய் தேவி தனக்கு அருள் பாலித்ததன் அடையாளமாகவே உணர்ந்தாள். அவளுக்கு மெய் சிலிர்த்தது. அந்தச் சன்னிதியில் தேவி அப்படியே ஆகட்டும் என்றே சொல்லி விட்டது போல் உணர்ந்த அந்தக் கணத்திலிருந்து சில மணி நேரங்களில் குழந்தை பிறந்தது வரை அவள் மனம் பிரசவ வேதனையை மீறி பிரார்த்தனையிலேயே தங்கியது. தாதிமார்களும், ஸ்ரீனிவாசராவ் மனைவியும் அவளுடைய பிரசவத்தைப் பார்த்துக் கொண்டார்கள். அவள் மனமோ “மகன்….. வீரமும் உயர்குணங்களும் கொண்டவன்….. பேரரசன்…” என்ற வார்த்தைகளும், பிரார்த்தனையுமாகவே நிறைந்திருந்தது. குழந்தை பிறந்து “மகன் பிறந்திருக்கிறான்” என்று ஸ்ரீனிவாசராவின் மனைவி மகிழ்ச்சியுடன் தெரிவித்த போது ஜீஜாபாய் எல்லையில்லாத மகிழ்ச்சியை உணர்ந்தாள். பிரார்த்தனையின் முதல் பகுதியை ஷிவாய் தேவி நிறைவேற்றி விட்டாள். இனி மற்றவையும் நடந்தே தீரும்…… என் மகன் ஷிவாய் தேவியின் பூரண அருள் பெற்றவன்..…. ”சிவாஜி” அந்தக் கணத்தில் தீர்மானித்த பெயரை ஜீஜாபாய் சத்தமாக உச்சரித்தாள்.

ஷிவ்னேரிக் கோட்டை விழாக்கோலம் பூண்டது. ஷாஹாஜியின் வீரர்களும், லாக்கோஜிராவ் விட்டுச் சென்ற வீரர்களும், ஷிவ்னேரி மக்களும் சிவாஜியின் பிறப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். மகிழ்ச்சிச் செய்தியை ஷாஹாஜிக்குத் தெரிவிக்க ஒரு வீரன் குதிரையில் பறந்தான்.


காலம் வேகமாக நகர்ந்தது. குழந்தை சிவாஜியின் வரவில் ஜீஜாபாய் அனைத்துக் கவலைகளும் மறந்தாள். குழந்தையுடன் விளையாடினாள். அவனிடம் மனம் விட்டுப் பேசினாள். பிரார்த்தனை செய்யும் போதும் அவனை மடியில் வைத்துக் கொண்டு அவன் பிஞ்சுக் கைகளைத் தன் கைகளோடு இணைத்துக் கூப்பிப் பிரார்த்தித்தாள். எல்லா மந்திரங்களையும் அவள் சொல்லும் போது தாலாட்டு போல கேட்டுக் கொண்டே குழந்தை தூங்கிப் போவதும் உண்டு. அந்தக் குழந்தை அதிகம் கேட்ட சத்தம் தாயின் மந்திரங்களும் பிரார்த்தனைகளுமாய் இருந்தது.

சில நாட்களில் பீஜாப்பூரில் ஷாஹாஜி துகாபாய் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட செய்தி ஜீஜாபாய்க்கு வந்து சேர்ந்தது. பல தாரத் திருமணம் அக்காலத்தில் புதிதல்ல என்றாலும் ஜீஜாபாய்க்கு அதை ஜீரணிக்கக் கஷ்டமாய் இருந்தது. அவள் தந்தை அவள் தாயைத் தவிர இன்னொரு திருமணம் செய்து கொண்டதில்லை. அதே போல ஷாஹாஜியின் தந்தை மாலோஜிக்கும் ஒரே மனைவி தான். இத்தனைக்கும் திருமணமாகிப் பல வருடங்கள் மாலோஜியின் மனைவி கருத்தரிக்கவில்லை. மாலோஜி கோயில்கள், புண்ணிய தீர்த்த நீராடல்கள், தான தர்மங்கள், மகான்களின் சமாதிகள் என்று பல வழிகளைத் தேடினாரேயொழியத் தன் வாழ்வில் இன்னொரு பெண்ணைத் தேடிக் கொள்ளவில்லை. கடைசியில் தான் ஷாஹாஜி பிறந்தார் என்பதையும் அவள் அறிவாள்…. ஜீஜாபாய் சோகமாய் தன் குழந்தையிடம் சொன்னாள். “இனி எனக்கு நீ, உனக்கு நான் என்று ஆகி விட்டது மகனே. உன் தந்தைக்கு இன்னொரு மனைவி கிடைத்து விட்டாள். உன் அண்ணனுக்கு இன்னொரு தாய் கிடைத்து விட்டாள்…..”

சில காலம் கழித்து அடுத்த சோகச் செய்தி ஜீஜாபாயை வந்தடைந்தது. அவள் தந்தை லாக்கோஜி ஜாதவ்ராவும், அவள் சகோதரனும் தவ்லதாபாத் கோட்டையில் கொல்லப் பட்டார்கள் என்ற செய்தியை ஸ்ரீனிவாசராவ் தான் அவளுக்குச் சொன்னார். “அகமதுநகர் தற்போதைய சுல்தான் முர்தசா இரண்டாம் நிஜாம் ஷா ஏதோ பேச்சு வார்த்தைக்கு உங்கள் தந்தையாரையும் சகோதரரையும் கூப்பிட்டிருக்கிறார்….. அவர்களும் நம்பிப் போயிருக்கிறார்கள்….. பேசிக் கொண்டிருக்கையில் திடீர் என்று எழுந்து சுல்தான் போய் விட்டாராம். பலர் சேர்ந்து இரண்டு பேரையும் வாள்களால் தாக்கி இருக்கிறார்கள். கூடுமானவரை அவர்கள் இரண்டு பேரும் வீரமாகப் போராடியிருக்கிறார்கள். பலரைக் கொன்றும் காயப்படுத்தியுமிருக்கிறார்கள். ஆனால் கடைசியில்…….”


ஜீஜாபாய்க்குக் கடைசியாக இதே இடத்தில் தந்தையுடன் இருந்த தருணங்கள் நினைவுக்கு வந்தன. கடைசியில் உன் கையால் தண்ணீர் கொடு என்று கேட்டு வாங்கிக் குடித்து விட்டுப் போனது நினைவுக்கு வந்தது. அவருடன் பேசிய பேச்சுக்கள் நினைவுக்கு வந்தன. கண்கள் கண்ணீரால் குளமாயின. “என் தாய்…?”

“அவர் இதைக் கேள்விப்பட்டவுடனேயே சிறுபடையுடன் சிந்துகேத் அரண்மனையிலிருந்து தப்பிப் போய் விட்டார் என்ற செய்தி கிடைத்திருக்கிறது….”

ஸ்ரீனிவாசராவ் போய் விட்டார். ஜீஜாபாய் தன் குழந்தையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள். தந்தையும், சகோதரனும் போர்க்களத்தில் இறந்திருந்தால் அவள் வேதனைப்பட்டிருக்க மாட்டாள். ஒவ்வொரு வீரனும், அவனது குடும்பமும் அதைப் பெருமையாகவே நினைப்பார்கள். ஆனால் வஞ்சகம், அதுவும் ஒரு அரசனாலேயே கோழைத்தனமாக இழைக்கப்படும் போது, மன்னிக்க முடியாததாகி விடுகிறது. அவள் மனம் தன் தாய் எப்படி இதைத் தாங்குவாள் என்றும் இப்போது எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்றும் கவலையில் மூழ்கியது!


ரு நாள் இரவு ஷாஹாஜி ரகசியமாய் மாறுவேடத்தில் ஷிவ்னேரி கோட்டைக்கு வந்தார். எந்த வேடத்திலும் கணவனை அடையாளம் கண்டுபிடிக்க முடிந்த ஜீஜாபாய் ஒரு வார்த்தையும் பேசாமல் தங்கள் குழந்தையை அவரிடம் நீட்டினாள். பெருமிதத்தோடு குழந்தையை வாங்கி முத்தமிட்டு ஷாஹாஜி ஆராய்ந்ததை ஜீஜாபாய் பார்த்துக் கொண்டிருந்தாள். மகனைக் கவனித்ததில் பத்தில் ஒரு மடங்கு கூட அவர் மனைவியைக் கவனிக்கவில்லை. எப்படி இருக்கிறாய் என்று கேட்கவில்லை……

ஜீஜாபாய் கேட்டாள். “சாம்பாஜி எப்படியிருக்கிறான்?”          

மகனைக் கொஞ்சிக் கொண்டே ஷாஹாஜி சொன்னார். “நலமாயிருக்கிறான். துகாபாய் அவனைப் பாசமாய் பார்த்துக் கொள்கிறாள்”

அவர் மகனோடு, தன் இரண்டாம் மனைவியைப் பற்றியும் சொல்லியாகிவிட்டது….! ஜீஜாபாய் பெருமூச்சு விட்டாள்.

மகன் உறங்க ஆரம்பித்தபிறகு தான் அவனை அவர் அவளிடம் தந்தார். அவனைத் தொட்டிலில் வைத்து விட்டு அவள் வந்த பிறகு அவளிடம் சொன்னார். “சிறிது காலம் பொறுத்துக் கொள். அகமதுநகரிலும், பீஜாப்பூரிலும் அரசியல் குழப்பமாகவே இருக்கிறது. நம் நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் வழிகளை யோசித்துக் கொண்டிருக்கிறேன். எப்படியும் சில மாதங்களில் எல்லாம் சரியாகி விடும்…….”

”என்ன ஆனாலும் சரி, எவ்வளவு லாபகரமாக இருந்தாலும் சரி, என் தந்தையையும், சகோதரனையும் வஞ்சகமாகக் கொன்றவனுடன் மட்டும் எந்த சம்பந்தமும், ஒப்பந்தமும் வேண்டாம்…..”  தீர்மானமாகச் சொன்ன ஜீஜாபாயைச் சிறு வியப்போடு ஷாஹாஜி பார்த்தார். அவள் தன் பிறந்த வீட்டாரைப் பற்றி அவரிடம் பல ஆண்டுகளாகப் பேசியதில்லை. அவரும் அவளிடம் அவர்களைப் பற்றிப் பேசியதில்லை. முதல் முறையாக அவள் அவரிடம் பேசுகிறாள்…..

கணவனின் பார்வையை நேராகவே ஜீஜாபாய் சந்தித்தாள். ஷாஹாஜி மெல்லச் சொன்னார். “நானும் அப்படி முன்பே தீர்மானித்தாகி விட்டது. இப்போது இருக்கும் சுல்தான் முந்தைய சுல்தானின் கால்தூசுக்கும் சமம் ஆகாதவன். அரசனுக்கு வேண்டிய தகுதிகள் எதுவும் இல்லாதவன். எப்போது என்ன செய்வான் என்பதை எதை வைத்தும் தீர்மானிக்க முடியாதவனிடம் வைக்கும் எந்த சம்பந்தமும் அபாயத்திலேயே முடியும் என்பதை நானும் அறிவேன்…..”

இருவரும் சிறிது நேரம் மௌனமாய் இருந்தார்கள். பிறகு ஷாஹாஜி மனைவிக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஒரு தகவலைச் சொன்னார். “உன் தாயார் முகலாயப் பேரரசருக்குக் கடிதம் அனுப்பி இருப்பதாகத் தெரிகிறது. உன் தந்தையின் அனைத்து அதிகாரங்களையும், அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளையும் உன் சித்தப்பாவுக்கு மாற்றித்தர அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறாராம்! அதிகாரத்திற்காக உடன்பிறந்தவர்களின் உயிரையும் எடுக்கும் இந்தக் காலத்தில் கணவரின் தம்பிக்கு மாற்றித்தர அவர் கேட்டது பேரரசருக்குப் பேராச்சரியமாய் இருந்ததாம். அந்த வியப்பை அவர் அரசவையிலேயே அனைவருடனும் பகிர்ந்து கொண்டதாய் தகவல் வந்திருக்கிறது. அதனால் உன் தாயார் விருப்பப்படியே அங்கிருந்து ஆணை வரும் என்று தெரிகிறது. பேரரசரின் ஆணை வந்த பிறகு அதை மீற இந்த சுல்தானுக்குத் தைரியம் வராது…..”

சதிகாரனிடம் மல்லுக்கு நிற்காமல் அமைதியாக அவனுக்கும் மேல் இருப்பவனிடம் தாயார் போன விதம் ஜீஜாபாயைப் பெருமை கொள்ள வைத்தது. அவளுடைய சித்தப்பாவும் அண்ணியைத் தாய் ஸ்தானத்தில் வைத்துப் பூஜிப்பவர். மகன் இறந்தான், மகள் உறவு அறுந்து விட்டது என்றாலும் தாயிற்கு மற்ற உறவு உறுதுணையாக இருப்பது பெரும் ஆசுவாசமாக ஜீஜாபாய்க்கு இருந்தது. உறவுகளிடம் என்றும் எச்சரிக்கையுடனும், சந்தேகத்துடனும் இருக்கும் முகலாயச் சக்கரவர்த்திக்கு இது போன்ற ஆத்மார்த்த உறவுகள் ஆச்சரியப்படுத்துவது சகஜமே என்று நினைத்துக் கொண்டாள்.
                                      
தம்பதிக்கிடையே மறுபடி மௌனம் தொடர்ந்தது. இம்முறை அது நீளவும் செய்தது.

கடைசியில் “நம் பிள்ளையைப் பத்திரமாய் பார்த்துக் கொள் ஜீஜா….” என்று சொல்லி விட்டுக் கிளம்பிய ஷாஹாஜி தங்கக்காசுகள் நிறைந்த ஒரு பட்டுத்துணிப்பையை ஜீஜாபாயிடம் தந்து விட்டுப் போனார்.

அவர் போய் நீண்ட நேரம் ஜீஜாபாய் உறங்கவில்லை. பல சிந்தனைகளின் முடிவில் ’இந்த அரசியல் சிக்கல்கள் சீக்கிரமாகத் தீர்ந்து ஒரு பாதுகாப்பான சூழலில் என் மகன் வளர வேண்டும்’ என்று அவள் ஆசைப்பட்டாள். விதி வேறொன்றை விதித்து விட்டிருக்கிறது என்பதை அவள் அப்போது அறியவில்லை!.

(தொடரும்)

என்.கணேசன்

Thursday, January 18, 2018

இருவேறு உலகம் – 66


மாஸ்டர் தொடர்ந்து சொன்னார். “எதிரியை க்ரிஷ் மூலமாகத் தான் கையாள வேண்டும் என்கிற நிலைமையில் இருக்கும் போது க்ரிஷ் என்னிடம் சில ரகசியக்கலைகள் கற்க வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டான். பலவிதங்களில் அதை நான் தவிர்க்கப் பார்த்தேன். அவனாகப் பின் வாங்குவானா என்று பார்த்தேன். ஆனால் அவன் நான் வெளிப்படையாக மாட்டேன் என்று சரியான காரணத்தோடு சொன்னால் தான் அதை ஏற்றுக் கொள்ளும் உறுதியோடு இருந்தான். நான் என்ன சொல்லி மறுப்பேன்? என் குருவைக் கொன்றவன் ஆள் அவன் என்றா? அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? அப்படி இருந்தாலும் அதில் அவன் பங்கு என்ன இருக்கிறது?”

“எந்தத் தகுதியும் வெளிப்படையாகத் தெரியாத, தான் தோன்றியாய் சுற்றிக் கொண்டிருந்த என்னிடம் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்து என்னைக் கட்டாயப்படுத்திக் கூட்டிக் கொண்டு வந்து எனக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்த குருவின் சிஷ்யன் நான். எல்லாத் தகுதியும் இருந்து, அறிவில் குறையில்லாத, குணத்திலும் எந்தக் களங்கமும் இல்லாத ஒருவன் தானாக வந்து கற்றுக் கொடுங்கள் என்று கேட்கும் போது மறுப்பது என்ன நியாயம்? அது நான் கற்ற கல்விக்கும், குருவுக்கும் நான் செய்கிற மரியாதையாகுமா? என் குருவின் ஆத்மா என்னை மன்னிக்குமா? இந்த இயக்கத்தின் தலைவனாக நான் யோசிப்பதற்கு முன் மனிதனாக, நான் கற்ற ஞானத்தின் நியாயத்தின்படி நான் யோசிக்க வேண்டியிருந்தது.”

“எனக்கு அவனை சிஷ்யனாக ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. எதிரியின் ஆளாய் அவன் இருந்தாலும் கூட அவன் சிந்தனையில், அவன் அறிவில் நம் தர்மத்தையும், ஞானத்தையும் கூட நிறுத்தி வைப்பது என் தர்மம் என்று எனக்குத் தோன்றியது. ஏற்றுக் கொண்டேன். என் தனிமனித தர்மம் இந்த இயக்கத்தின் தலைவன் என்கிற தர்மத்திற்கு எதிராகி விட்டது என்று நீங்கள் நினைத்தால் நான் எந்தத் தயக்கமும் இல்லாமல் இந்தத் தலைமைப் பதவியை விட்டு இறங்கத் தயாராக இருக்கிறேன்.”

மாஸ்டர் பேசி விட்டு அமர்ந்து விட்டார். ஒரு நிமிடம் அங்கு மயான அமைதி நிலவியது. மர்ம மனிதன் அங்கிருந்தவர்களைப் பார்த்தான். இது வரை கோபம் தெரிந்த முகங்களில் குழப்பம் தெரிந்தது. மறைமுகமாய் அவனாகத் திட்டமிட்டுத் தூண்டி விட்ட கோபம் இப்படி குழப்பத்தின் மட்டத்திற்குச் சரிந்தது அவனுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. யாராவது எழுந்து “தனிமனித தர்மம் அது இது என்று எப்போது இயக்கத் தலைவனாக உன்னால் செயல்பட முடியவில்லையோ, அப்போது நீ பதவி விலகுவது தான் சரி” என்ற வார்த்தைகளை ஆணித்தரமாகச் சொன்னால் கண்டிப்பாக இவர்கள் திரும்பவும் பழைய நிலைக்கு மாறுவார்கள் என்று உறுதியாக நினைத்தான்….

ஒரு முதிய பெண்மணி பேச எழுந்து நின்றார். அவர் உயர்நீதிமன்றம் ஒன்றில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். பெயர் கிருஷ்ணவேணி.  ”மாஸ்டர் தனிமனித தர்மமே மற்ற எல்லாத் தர்மங்களுக்கும் முன்னோடியான தர்மம். அந்த வகையில் நீங்கள் எடுத்த முடிவு தான் சரி. நீங்கள் சொல்வதைப் பார்க்கையில் 16000 கிலோமீட்டர்கள் தொலைவுக்குச் சில நிமிடங்களில் க்ரிஷை எடுத்துக் கொண்டு போகும் அளவு சக்தி படைத்தவன் நம் எதிரி என்று தெரிகிறது. அப்படிப்பட்ட சக்தி படைத்தவன் க்ரிஷுக்குச் சொல்லிக் கொடுக்க முடியாத எந்தப் பெரிய சக்திக்கலை பற்றியும் நீங்கள் சொல்லிக் கொடுத்து விட முடியாது.  அப்படி இருக்கையில் க்ரிஷை ரகசியக் கலை கற்க உங்களிடம் வரவழைத்தது அவன் இயல்பான நல்ல கர்மாவாக இருக்கலாம், இல்லை உலக நன்மைக்காக நம்மை போன்ற மனிதர்கள் செய்து வரும் பிரார்த்தனையாக இருக்கலாம். அதனால் க்ரிஷ் உங்களிடம் வந்ததும், அவனை நீங்கள் சிஷ்யனாக ஒத்துக் கொண்டதும் நன்மைக்கே. நாம் எதிர்பார்ப்பது போல ஒருவேளை க்ரிஷை எதிரி தீமைக்காகப் பயன்படுத்தும் நிலை வருமானால் அதற்கு இசையாத ஒரு மன உறுதியை நீங்கள் சொல்லித்தரும் ரகசியக் கலைகளோடு கலந்திருக்கும் ஞானம் க்ரிஷுக்கு தரலாம். அதனால் நல்லதே நடந்திருக்கிறது. தலைமைப் பதவியை விட்டு விலகும் எண்ணத்தைத் தயவு செய்து கைவிடுங்கள்”

உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் என்பதால் பல கோணங்களில் இருந்து பார்த்து முடிவுக்கு வரும் திறமையும் அதைச் சரியாக வார்த்தைப்படுத்திச் சொல்ல முடிந்த திறமையும் இயல்பாகவே பெற்றிருந்த கிருஷ்ணவேணி பேசி விட்டு அமர்ந்த போது குழப்ப முகங்களில் தெளிவு தெரிய ஆரம்பித்தது. பலரும் தலையாட்டினார்கள். ’கெடுத்தாளே கிழவி’ என்று மர்ம மனிதன் மனதிற்குள் பொங்கினான்.

மாஸ்டர் எழுந்து நின்று அந்த மூதாட்டியைத் தலைதாழ்த்தி வணங்கினார்.


மாணிக்கத்திற்கு நடப்பதெல்லாம் கனவு போல் இருந்தது. ராஜதுரை புகழ்பெற்ற மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். அதற்கு வெளியே மாணிக்கம், கமலக்கண்ணன், வேறு சில அமைச்சர்கள் அமர்ந்திருந்தார்கள். மாணிக்கம் முகத்தை சோகமாக வைத்திருந்தார். கமலக்கண்ணன் நிஜமாகவே சோகமாய் இருந்தார். நேற்று முழுவதும் அழுது கொண்டிருந்தவர் இன்று டாக்டர்கள் “ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டார்” என்று சொன்ன பிறகு தான் ஆறுதல் அடைந்தார். இப்போது விசாரிக்க வருபவர்களிடம் எல்லாம் “அண்ணன் குணமாயிடுவார்” என்று நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டிருக்கிறார்…..

மாணிக்கத்திற்கு மனோகர் எப்படி இதை சாதித்தான் என்று விளங்கவில்லை. நேற்று அதிகாலை ராஜதுரைக்கு மாரடைப்பு என்ற செய்தி வரும் வரை இப்படி நடக்கும் என்கிற முழு நம்பிக்கையும் அவருக்கு வந்து விட்டிருக்கவில்லை. ஆனால் அந்தச் செய்தியைக் கேட்ட பின்பு அவன் இதைப் போல் மற்றதையும் நடத்திக் காட்டுவான் என்ற நம்பிக்கை வந்து விட்டது. நேற்று முன்தினம் வந்து பேசிவிட்டுப் போன அவன் பிறகு தொடர்பு கொள்வான் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவன் தொடர்பு கொள்ளவில்லை. அதிகமாய் பேசுவதில் அவனுக்கு ஈடுபாடு இல்லை என்பதும், செயலாலேயே பேசுபவன் அவன் என்பதும் நன்றாகப் புரிந்தது. இப்படிப்பட்டவன் ஆபத்தானவன் என்ற போதும் அவனைப் பகைத்துக் கொள்ளாத வரையில் நமக்குப் பிரச்னை இல்லை என்று அவர் ஆறுதல் அடைந்தார். அவன் சொன்னது போலவே சங்கரமணி எம் எல் ஏக்களிடம் இப்போது பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்….

திடீரென்று கமலக்கண்ணன் அவரிடம் சொன்னார். “எதுக்கும் நம்ம மாஸ்டர் சுவாமி கிட்ட கொஞ்சம் பேசிப்பாரேன் மாணிக்கம். அவர் நம்ம அண்ணனை ஒரு தடவை வந்து பார்த்தால் அண்ணன் இன்னும் சீக்கிரமா குணமாயிடுவாருன்னு தோணுது”

மாஸ்டரின் பெயரைக் கேட்டவுடனேயே மாணிக்கத்துக்கு உள்ளுக்குள் பகிர் என்றது. அந்த ஆளைப் போய் பார்ப்பதா? ஆனால் தன் எண்ணத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் போன் செய்வது போல் நடித்து விட்டு “லைன் கிடைக்க மாட்டேங்குது கண்ணன்” என்றார்.

பத்து நிமிடம் கழித்து கமலக்கண்ணன் மறுபடி சொன்னார். “இப்ப செஞ்சு பாரேன்….” என்றார். நல்ல வேளையாக உதய் அந்த சமயமாக அங்கு வந்தான். அவன் ”மாஸ்டர் அசிஸ்டெண்ட் நம்பர் என் கிட்டயே இருக்கு. நான் பேசறேன்” என்று சொல்லி சற்று தள்ளிப் போய் போன் செய்தான். மாணிக்கத்திற்கு திக் திக் என்றிருந்தது. ‘இவன் கூப்பிட்டு அந்த ஆள் வந்து விடுவாரோ. அப்படி வந்தால் அந்த நேரமாகப் பார்த்து எங்காவது போய் விட வேண்டியது தான். அண்ணனுக்காக ஏதாவது கோயிலுக்குப் போவதாகச்  சொன்னால் நம்புகிற மாதிரி இருக்கும்…’

உதய் போனில் பேசி விட்டு வந்தான். “மாஸ்டரும் சுரேஷும் ஹரித்வார்ல இருக்காங்க. வர ரெண்டு நாளாவது ஆகுமாம்”

மாணிக்கம் தன் மனதிலிருந்து பெரிய பாரம் இறங்கியது போல் உணர்ந்தார்.

உதய் “க்ரிஷும் என் கூடவே வந்தானே, எங்கே காணோம்” என்று சொன்னபடியே தம்பியைப் பார்வையால் தேடினான்.

க்ரிஷ் வந்திருக்கிறான் என்றதும் மாணிக்கத்தின் மனதில் இனம் புரியாத சின்ன பயம் படர ஆரம்பித்தது. மாஸ்டரிடம் அவன் ஏதோ கற்றுக் கொள்ளப் போகிறான் என்ற தகவல் கேள்விப்பட்டதிலிருந்தே அவர் அடி மனதில் உணர ஆரம்பித்திருந்த பயம் அது. நினைத்தவுடன் பெரிய பாதுகாப்பு வளையத்தில் இருக்கிற முதலமைச்சரையே இந்த நிலைமைக்குக் கொண்டு வர முடிந்தவன் கூட க்ரிஷைக் கொல்ல முயன்று அது தோல்வியில் முடிந்தது என்ற நினைவும் அடிக்கடி வந்து போக ஆரம்பித்திருந்தது. அவனைப் பார்த்து அவர் மன அமைதி இழந்த அந்த நேரத்தில் மனோகரின் அலைபேசி அழைப்பு அவருக்கு வந்தது.

(தொடரும்)
என்.கணேசன்








Wednesday, January 17, 2018

மூவுலகங்களுக்கும் பயணிக்க முடிந்த ஷாமன்!

அமானுஷ்ய ஆன்மிகம் - 25  

ஷாமன்கள் தேர்ந்தெடுக்கும் விதங்களையும், ஒரு ஷாமனிடம் அவன் சார்ந்திருக்கும் சமூகம் எதிர்பார்க்கும் விஷயங்களையும் பார்த்தோம். அவன் எப்படி அறிவுக்கப்பாற்பட்ட அமானுஷ்ய ரகசியங்களை அறிந்து கொள்கிறான், அவன் அனுபவங்கள் எப்படிப்பட்டவை என்ற சுவாரசியமான  தகவல்களை இனி பார்ப்போம்.

ஷாமனிஸத்தில் மூன்று உலகங்கள் இருப்பதாகக் கருதப்படுகின்றன. அவை மேல் உலகம், நடு உலகம், கீழ் உலகம் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு ஷாமன் தன் ஆத்மபலத்தால் அந்த மூன்று உலகங்களிலும் பயணிக்கவும், அறிய வேண்டிய அரிய தகவல்களை அந்த உலகங்களில் இருந்து அறிய முடிந்த ஒருவனாகக் கருதப்படுகிறான்.

ஷாமனிஸத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் நடு உலகம் என்று அழைக்கப்படுகிறது. இதில் நாம் காண முடிந்த சக்திகளோடு காண முடியாத சக்திகளும் நிறைய இருப்பதாக ஷாமனிஸம் கருதுகிறது. வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் ஆவிகள் மட்டும் அல்லாமல் இறந்த பிறகும் பல காரணங்களால் இந்த உலகத்தை விட்டுப் பிரியாமல் இங்கேயே உலாவிக் கொண்டிருக்கும் ஆவிகள் ஷாமன் அறியவும், தொடர்பு கொள்ளவும் வேண்டிய முக்கிய சக்திகளாய் கருதப்படுகின்றன. அந்த ஆவிகளில் நல்ல ஆவிகள், அறிவுமிக்க ஆவிகள் இருப்பது போலவே தீய ஆவிகள், குரூரமான ஆவிகள், பொறாமை பிடித்த ஆவிகள், ஏமாற்றிச் சிக்க வைக்கும் ஆவிகள் கூட இருக்கின்றன என நம்புகிறார்கள். நல்ல ஆவிகளிடம் தொடர்பு கொள்ள முடிந்த ஷாமன், முடிந்த வரை தீய ஆவிகளிடம் இருந்து மிகவும் கவனமாக விலகியே இருக்க வேண்டும். அந்தத் தீய ஆவிகள் ஒருவரைத் தடம் மாற வைக்கவும், பிரச்னைகளுக்கு உள்ளாக்கவும் வல்லவை. அவற்றின் பிடியில் சிக்கிக் கஷ்டப்படுவோரை ஷாமன் காப்பாற்ற வேண்டும். நல்ல ஆவிகளிடம் இருந்து மனிதர்களுக்கு உதவும் அறிவுரைகளையும், தகவல்களையும் ஷாமன் கேட்டுப் பெற வேண்டும். பெரும்பாலும் வேட்டைக்கான விலங்குகள் இருக்கும் இடங்களையும், யுத்தம் மூண்டால் ஜெயிக்க உதவும் விஷயங்களையும், வானிலை பருவ மாற்றங்கள் குறித்த தகவல்களையும் ஒரு ஷாமன் இந்த ஆவிகளிடமிருந்து பெற்றுத் தருகிறான்.

கீழ் உலகம் தாவரங்கள் மற்றும் மிருகங்களின் ஆவிகள் உலகமாகக் கருதப்படுகிறது. இந்தக் கீழ் உலகத்தில் இப்போது உலகில் இருக்கும் விலங்கினங்கள் அல்லாமல் எப்போதோ அழிந்து விட்ட விலங்கு மற்றும் தாவர இனங்களின் ஆவிகள் கூட ஷாமனால் தொடர்பு கொள்ள முடிந்தவையாக இருக்கின்றன. மரப்பொந்துகள், குகைகள், பதுங்கு குழிகள், பாதாளங்கள், சுரங்கப் பாதைகள் ஆகியவை குறித்த ஞானம் கீழ் உலகம் மூலமாக ஒருவர் அறிய முடிந்ததாகக் கருதப்படுகிறது. நோய்களைத் தீர்க்கும் தாவரங்கள், மூலிகைகள், விலங்கினங்களின் எச்சங்கள் மற்றும் பாகங்கள் குறித்த ரகசியங்களை ஒரு ஷாமன் கீழ் உலகத்தில் இருந்து தான் அறிந்து சொல்கிறான். அது மட்டுமல்லாமல் புதையல்கள் மற்றும் பொக்கிஷங்கள் குறித்த தகவல்களும் கீழ் உலகத்தில் இருந்து பெற முடிந்தவையே.  

மனித வாழ்க்கையை வழி நடத்த முடிந்த மேலான தெய்வீக சக்திகள், எதிர்காலம் குறித்த தகவல்களை அறிவிக்க முடிந்த சக்திகள் எல்லாம் மேல் உலகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஷாமனிஸம் கருதுகிறது. ஆகாயம், வானவில் இரண்டும் மேல் உலகத்தின் தகவல்களையும், ஞானத்தையும் அளிப்பதாக இருப்பதால் ஒரு ஷாமன் அவற்றைப் படிக்க முடிந்தவனாக இருக்க வேண்டும். பெரும்பாலும் மேல் உலக ஞானம் பெற விரும்புகையில் ஷாமன் மர உச்சி, மலை உச்சி, பாறையின் உச்சி போன்ற உயரமான இடங்களில் இருந்தபடியே தியானநிலைக்குச் செல்கிறான்.

இந்த மூன்று உலக சக்திகளும் மனித வாழ்க்கையில் குறுக்கிட முடிந்தவை. பல சமயங்களில் அந்தக் குறுக்கீட்டால் மனிதன் தடுமாறி, மீள முடியாமல் கஷ்டப்படுகிறான். அந்த நேரங்களில் கஷ்டம் அல்லது பிரச்னைக்கான காரணத்தையும், அதற்கான தீர்வையும் சம்பந்தப்பட்ட மேல், நடு அல்லது கீழ் உலகின் சக்திகளிடமிருந்து ஒரு ஷாமன் அறிந்து சொல்ல வேண்டியிருக்கிறது. அதற்காக அவன் உணர்வு நுட்ப நிலைகளில் அந்தந்த உலகங்களுக்குப் பயணிக்க வேண்டி இருக்கிறது. அப்படிப்பட்ட ஒவ்வொரு பயணத்திலும் ஒரு விதத்தில் ஷாமன் இறந்து பிறப்பதாக ஷாமனிஸம் கருதுகிறது.

வேறொரு உலகிற்குப் போவதும், அதற்கு வேண்டிய சூட்சும நுட்ப நிலையைப் பெறுவதும் ஒரு ஷாமனுக்கு எவ்வளவு முக்கியமோ அதே போல், சென்ற நோக்கம் நிறைவேறிய பிறகு பழைய நிலைக்குத் திரும்புவதும் மிக முக்கியம். சில சமயங்களில் அப்படி வேறு உலகிற்குப் பயணிக்க முடிந்த ஷாமன் மறுபடியும் தன் பழைய உலகத்திற்குத் திரும்பாமல் சிக்கி மரணம் அடையும் அபாயமும் நேர்வதுண்டு. அதனாலேயே ஷாமன் ஒவ்வொரு முறை போய் வருவதும் இறந்து மறுபடி பிறப்பதைப் போலவே கருதப்படுகிறது.  

ஷாமனிஸ சித்தாந்தப்படி மனிதக் கண்களால் காண முடிந்த சக்திகளையும்,  காண முடியாத சக்திகளையும் ஒரு ஷாமன் முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தவனாக இருக்கிறான். அவற்றில் எல்லா சக்திகளும் நல்லவையாக இருந்து விடுவதில்லை. அவற்றில் எதிர்மறை சக்திகளும் உண்டு. அந்த சக்திகளில் அவன் தன்னை இழந்து விடக்கூடாது. அப்படி இழந்து விட்டால் அவன் பழைய நிலைக்குத் திரும்ப முடியாது.  அதனாலேயே ஒரு உண்மையான ஷாமன் உறுதியான மனம் கொண்டவனாகவும், முழுக்கட்டுப்பாடு உடையவனாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

உதாரணத்திற்கு கீழ் உலக சக்திகளிடமிருந்து ஏதாவது அறிய வேண்டி இருக்கையில் ஒரு ஷாமன் ஒரு விலங்கின் சக்தி நிலைக்கே சென்று அதுவாகவே சக்தி நிலையில் மாறி விடுகிறான். அதே போல் இன்னொரு வகை விஷய ஞானம் பெற அவன் பறவையின் சக்தி நிலையை அடைந்து அதுவாகவே மாறி விடுகிறான். அப்படிப் பயணித்த ஷாமன் அறிய வேண்டியதை அடைந்து தன் பழைய நிலைக்குத் திரும்ப அந்த சக்தி நிலையை மிஞ்சிய ஒரு உயர்நிலை சக்தியை அடிப்படையிலேயே பெற்று இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் தற்காலிகமாய் அடைந்த விலங்கு அல்லது பறவையின் சக்தியிலிருந்து விடுபட்டு திரும்பத் தன் சுயநிலைக்கு வர முடியும். இல்லா விட்டால் அந்த விலங்கு அல்லது பறவையின் சக்தி நிலையிலேயே சிக்கிக் கொண்டு விட நேரிடும்.

ஷாமனிஸ ஆராய்ச்சியாளர் ஒருவர் இது குறித்து விளக்குகையில் கூறுகிறார். “ஷாமனிஸம் நம்புவது போல உண்மையாகவே ஒரு ஷாமன் தன் மனித உடலை விட்டு விட்டு உணர்வுநிலைகளில் வேறு வேறு உயிர்ச்சக்தி நிலைகளுக்குப் பயணித்து திரும்ப வர முடிவது உண்மையாக இருந்தால் அது அவன் மனம், உடல், ஆன்மா மூன்றுமே மிகவும் வலிமையாக இருக்கும் பட்சத்திலேயே சாத்தியப்படும். மூன்றில் ஒன்று பலவீனமாக இருந்தாலும் அது திரும்ப வர முடியாத ஆபத்திலேயே முடியும்.”

அதனாலேயே ஒரு வலிமையான சக்தி நிலையில் இருந்தே ஒரு ஷாமன் தன் பயணத்தை ஒவ்வொரு முறையும் துவங்குகிறான். மூவுலகங்களைப் போல நான்கு திசைகளும் கூட அவனுக்கு மிக முக்கியமானவையே. அவனது இந்த சக்திப் பயணச்சடங்குகளை ஆரம்பிக்கும் இடம் முதலில் சுத்தப்படுத்தப்பட்டு அதன் நான்கு பக்கங்களும் பூஜிக்கப்படுகின்றன. பின்னர் அவன் அந்த இடத்தின் மையப்பகுதியிலிருந்தே சடங்கை ஆரம்பிக்கிறான். அந்த மையப்பகுதி நாலாபக்கங்களையும் சமமாகக் கட்டுப்படுத்த முடிந்த வலிமையான இடமாகக் கருதப்படுகிறது.

ஒரு ஷாமன் அப்படித் தன் அமானுஷ்யப் பயணத்தை மேற்கொண்டு அமானுஷ்ய சக்திகளைத் தொடர்பு கொள்ள முடிவது ஒரு உயர்தியான நிலையின் போது என்று முன்பே குறிப்பிட்டிருந்தோம். அந்த உயர் தியான நிலை எந்தவொரு ஷாமனுக்கும் கூட எல்லா சமயங்களிலும் சுலபமாக அடைய முடிந்த நிலை அல்ல. அந்த நிலையை அடைய அவன் என்ன எல்லாம் செய்கிறான், எப்படி அந்த நிலைகளை அடைகிறான் என்பதை விளக்கும் சுவாரசியமான சடங்குமுறைகளை இனி பார்ப்போம்….

அமானுஷ்யம் தொடரும்….

என்.கணேசன்

நன்றி : தினத்தந்தி 25.08.2017

Sunday, January 14, 2018

சத்ரபதி – 3


ஸ்ரீனிவாசராவின் வாக்கு சாதுரியத்தை லாக்கோஜி ஜாதவ்ராவ் ரசிக்கா விட்டாலும், தன் கர்ப்பிணி மகளுக்கு அடைக்கலம் தந்ததில் அந்தத் தந்தை தவறு காண முடியவில்லை.  அவர் யோசனையில் மூழ்கி நின்ற சமயத்தில் ஸ்ரீனிவாசராவ் சொன்னார். “வெளியிலேயே தங்களை நிறுத்திப் பேசிக்கொண்டிருக்கும் இந்த அடியவனை நீங்கள் மன்னிக்க வேண்டும் பிரபு. என் கோட்டைக்குள் வந்து என்னைப் பெருமைப்படுத்த வேண்டுமாய் பணிவுடன் தங்களை வேண்டிக் கொள்கிறேன்….”

லாக்கோஜி ஜாதவ்ராவ் சந்தேகத்தோடு ஸ்ரீனிவாசராவைப் பார்த்தபடியே கேட்டார். “இதையே அல்லவா நீ என் எதிரியிடமும் சொல்லியிருப்பாய்?”

“சத்தியமாய் இல்லை பிரபு! சிந்துகேத் அரசருக்கு இணையாக நான் அவரது மருமகனையும் நான் எப்படி நினைக்க முடியும். யாரோ என்னைப் பற்றித் தவறான அபிப்பிராயங்களைத் தங்கள் மனதில் ஏற்படுத்தியிருப்பது என் மனதை வேதனைக்குள்ளாக்குகிறது…”

ஸ்ரீனிவாசராவின் மனவேதனையைச் சட்டை செய்யாத லாக்கோஜி ஜாதவ்ராவ் ஷாஹாஜியைப் பின்தொடர்ந்து போய்ச் சிறைபிடிப்பது சாத்தியமா என்று யோசிக்க ஆரம்பித்தார். ”எதிரி எங்கே போவதாக உன்னிடம் தெரிவித்தான் ஸ்ரீனிவாசராவ்?”

“தன் பயணம் குறித்து அவர் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை பிரபு. ஆனால் இங்கு வரும் போது இருந்த வேகத்தை விட, இங்கிருந்து செல்லும் போது வேகம் கூடியிருந்ததை நான் கண்டேன். வந்ததே விரைவாகத் தான் என்றாலும் வரும் போது தங்கள் கர்ப்பிணி மகளும் கூட இருந்ததால் அவர் நலமும், சிசுவின் நலமும் கருதி வேகத்தைக் கட்டுப்படுத்தியே வர வேண்டியிருந்தது. போகும் போது அந்தப் பிரச்சினை இல்லாததால் அதிகபட்ச வேகத்துடனேயே போனார்கள். அதனால் தொலை தூரம் இன்னேரம் போயிருப்பார்கள் என்பது மட்டும் உறுதி”


இனி எத்தனை வேகமாகப் போனாலும் கூட ஷாஹாஜியைப் பிடிக்க முடியாது என்ற யதார்த்த நிலை ஸ்ரீனிவாசராவின் கருத்து மூலமாகவும் ஊர்ஜிதமாகவே லாக்கோஜி ஜாதவ்ராவ் ஷாஹாஜியைப் பின் தொடர்ந்து போகும் எண்ணத்தைக் கைவிட்டார்.  திரும்பத் திரும்ப உங்கள் கர்ப்பிணி மகள் என்று ஸ்ரீனிவாசராவ் சொன்னது மகளை ஒரு முறை பார்க்கும் ஆவலை உண்டு பண்ணியது. ஷாஹாஜி அவளுடனிருந்திருந்தால் மகளைப் பார்க்க லாக்கோஜி ஜாதவ்ராவ் சென்றிருக்க மாட்டார். ஷாஹாஜியும் அதை அனுமதித்திருக்க மாட்டார். தனியாக மகள் இருக்கையில் அவளைப் பார்க்காமல் திரும்பினால் அவர் மனைவி மால்சாபாய் வருத்தப்படுவாள்.


“பிரபு, உள்ளே வந்து என் குடிலில் உணவருந்தி இளைப்பாற வேண்டுகிறேன்” என்று ஸ்ரீனிவாசராவ் மறுபடி சொன்ன போது லாக்கோஜி “ஜீஜாபாய் எங்கேயிருக்கிறாள்?” என்று கேட்டார்.

படையினரை வெளியிலேயே நிற்க வைத்து விட்டு லாக்கோஜி ஜாதவ்ராவ் ஸ்ரீனிவாசராவ் வழிகாட்ட மகளைப் பார்க்கச் சென்றார். ஜீஜாபாய் தங்கியிருந்த சிறு மாளிகையைக் காட்டி விட்டு வெளியிலிருந்தே ஸ்ரீனிவாசராவ் விடைபெற்றுக் கொள்ள லாக்கோஜி ஜாதவ்ராவ் உள்ளே நுழைந்தார்.

தந்தையைப் பார்த்தவுடன் சிலையாய் சமைந்த ஜீஜாபாய் ஒரு கணம் ஒரு மகளாய் கண்மலர்ந்து மறு கணத்தில் ஒரு எதிரியின் மனைவியாய் முகம் இறுகினாள். ”சிந்துகேத் அரசர் தன் எதிரியின் மனைவியைச் சிறைப்பிடிக்க வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்…”

மகளின் ஆரம்பக் கண்மலர்ச்சியையும், பிந்தைய இறுக்கத்தையும் கண்டு, அடுத்து வந்த கர்ணகடூரமான வார்த்தைகளையும் கேட்க நேரிட்ட லாக்கோஜி ஜாதவ்ராவ் வருத்தத்துடன் ”சிந்துகேத் அரசர் தன் மகளைப் பார்க்க வந்திருக்கிறார் ஜீஜா” என்றார்.

”அவருக்கு இப்படி ஒரு மகள் இருப்பது இப்போது நினைவு வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது….”

“பிள்ளைகள் பெற்றவர்களை மறக்கும் காலம் ஒன்று அவர்களது திருமணத்திற்குப் பிறகு வருகிறது மகளே. ஆனால் பெற்றவர்கள் மனம் பிள்ளைகளின் நினைவை எக்காலத்திலும் இழப்பதில்லை….”

ஜீஜாபாயின் கண்கள் ஈரமாயின. சில நாழிகைகளுக்கு முன் அவளைப் பிரிந்து போன மகன் சாம்பாஜி நினைவுக்கு வந்தான். ஒவ்வொரு கணமும் அவன் நினைவில் அவள் மனம் துடித்துக் கொண்டிருக்கிறது. அவள் அவளுடைய தாயைப் பிரிந்து பல காலமாகி விட்டது. மகளை ஒரு மகாராணியாக ஆக்கிப் பார்க்க ஆசைப்பட்ட அவள் தாய் சாதாரணமாகக் கூட அவளைப் பார்க்க முடியாதபடி காலம் சதி செய்து விட்டது……

“தாயார் எப்படி இருக்கிறார்கள் தந்தையே?” ஜீஜாபாய் குரல் கரகரக்கக் கேட்டாள்.

“உன்னை நினைத்து அவள் கண்ணீர் சிந்தாத நாளில்லை மகளே” என்று சொன்னபோது லாக்கோஜி ஜாதவராவின் முகம் வேதனையைக் காட்டியது.

“தாய் ஆன பின் பெண் கண்ணீரிலிருந்து தப்பிப்பதில்லை தந்தையே” என்று ஜீஜாபாய் சாளரத்தின் வழியே தெரிந்த நட்சத்திரங்களைப் பார்த்தபடி சொன்னாள். தந்தைக்கும் மகளுக்கும் இடையே கனத்த மௌனம் சிறிது நேரம் நிலவியது. கர்ப்பிணியான மகள் தனியாய் நிர்க்கதியாய் இந்தக் கோட்டைக்குள் அடுத்தவர் தயவில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த அந்தத் தந்தையின் மனம் பெரும்வேதனையில் கனத்தது. சிந்துகேத் அரண்மனையில் இளவரசியாய் வலம் வந்தவள், எத்தனையோ கனவுகளுடன் உலாவியவள், பெற்றோரின் கண்ணாய், கண்மணியாய் இருந்தவள்,…. மஹூலிக் கோட்டையில் கணவனுடன் பாதுகாப்பாய் இருந்த அவள் இன்று இப்படி இருப்பதற்கு அவரே முக்கிய காரணம். அரசியல் நீதியில் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று உறுதியாகவே இப்போதும் நினைக்கிறார். ஆனால் ஒரு தந்தையாகக் குற்ற உணர்ச்சியை அவருக்குத் தவிர்க்க முடியவில்லை….  
   
மகளிடம் அவர் பாசத்துடன் கேட்டார். “என்னுடன் சிந்துகேத் வருகிறாயா ஜீஜா?”

ஜீஜாபாயின் ஈரக்கண்கள் இப்போது அனலைக் கக்கின. தந்தையை எரித்துவிடுவது போல் பார்த்தாள்.


லாக்கோஜி ஜாதவ்ராவ் சொன்னார். “பிரசவத்திற்கு ஒரு பெண் தாய்வீட்டுக்கு வருவது தவறல்லவே ஜீஜா. அது முறையும் உன் உரிமையும் தானே? அதனால் அல்லவா நான் உன்னை அழைக்கிறேன்….”

“இந்த அழைப்பை நீங்கள் என் கணவரிடம் விடுக்க வேண்டும் தந்தையே. அவர் அனுமதி இல்லாமல் அங்கே நான் வருவதற்கில்லை” கறாராக ஜீஜாபாய் சொன்னாள்.

லாக்கோஜி ஜாதவ்ராவ் பேச்சு மருமகன் பக்கம் திரும்புவதை விரும்பவில்லை. பேசுவது அவர் மகள் அல்ல. ஷாஹாஜியின் மனைவி. திருமணத்திற்குப் பின் ஒரு பெண்ணிற்கு மற்றெல்லா உறவுகளின் நெருக்கங்களும் மாற்றம் பெற்று விடுகின்றன… இதுவே அவள் நிலை. ஆனால் அவர் மருமகனிடம் என்றுமே சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை. ஷாஹாஜியும் இறங்கி வரப் போவதில்லை. வெறுமனே பேசி என்ன பயன்?

அங்கே நிற்பது மனவேதனையை ஆழப்படுத்துவதாக லாக்கோஜி ஜாதவ்ராவ் உணர ஆரம்பித்தார். ”நான் கிளம்புகிறேன் மகளே…..”

“மன்னிக்கவும் தந்தையே. தங்களை அமரச் சொல்லவில்லை. உணவருந்தவும் வைக்கவில்லை. தாங்கள் எனக்குக் கற்றுத்தந்ததும், என் புகுந்த வீட்டார் எனக்குக் கற்றுத்தந்ததும் இதுவல்ல. உணர்ச்சிகளின் அலைக்கழிப்பில் விருந்தோம்பல் தர்மம் விடுபட்டு விட்டது. அமருங்கள். சாப்பிட, இருப்பதைக் கொண்டு வருகிறேன்…..”

“நேரமில்லை மகளே. உன் கையால் தண்ணீர் மட்டும் கொடு. போதும்”

ஜீஜாபாய் ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். தண்ணீரைக் குடித்து விட்டு மகள் தலையில் கை வைத்து ஆசிகள் வழங்கிய லாக்கோஜி ஜாதவ்ராவ் விடைபெற்றார். வாசலைத் தாண்டிய போது அவருக்குக் கால் தடுக்கியது. மனம் பதைத்து ஜீஜாபாய் ஓடி வந்து கேட்டாள். “என்ன ஆயிற்று தந்தையே?”

லாக்கோஜி ஜாதவ்ராவ் மகளைக் கனிவுடன் பார்த்தார். “ஒன்றும் ஆகிவிடவில்லை மகளே.  கிளம்புகிறேன்.” லாக்கோஜி ஜாதவ்ராவ் சென்று விட்டார்.   திரும்பிப் பார்க்காமல் செல்லும் தந்தையைப் பார்த்துக் கொண்டே ஜீஜாபாய் நின்றாள். அவர் அவள் பாதுகாப்புக்காக 500 குதிரை வீரர்களை இருத்தி விட்டுப் போனதாகப் பிறகு தகவல் கிடைத்தது. திரும்பிப் பார்க்காத நேரத்தில் ’என் மகளுக்கு நான் என்ன செய்வது?’ என்று சிந்தித்துக் கொண்டே போயிருக்கிறார்…!

அன்றிரவு ஜீஜாபாயால் உறங்க முடியவில்லை. மகன், கணவன், தாய் தந்தை, சிந்துகேத் அரண்மனை என்று மனம் உலாப் போயிற்று. கடைசியில் வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பற்றி நினைத்தாள். அது பெண்ணாக மட்டும் இருக்கக்கூடாது என்று மனமுருக இறைவனை வேண்டிக் கொண்டாள். ஆண்குழந்தை உயர்வு, பெண் குழந்தை தாழ்வு என்ற பிற்போக்கு சிந்தனைகள் உடையவள் அல்ல அவள். பெண் குழந்தைகளுக்குப் பெரிதாய் சுதந்திரம் இல்லாத காலக்கட்டத்தில் பெண் குழந்தையைப் பெற அவள் விரும்பவில்லை. அவள் தாயும், அவளும் சிந்தும் கண்ணீர் போதும். அடுத்த தலைமுறைக்கு இந்தக் கண்ணீர் தொடர வேண்டாம்…. அதுமட்டுமல்ல. தாய் வீட்டாரிடம் கணவன் வீட்டாரை விட்டுக் கொடுக்காமல், கணவன் வீட்டாரிடம் தாய் வீட்டாரை விட்டுக் கொடுக்காமல் ஒரு பெண்  வாழ வேண்டியிருக்கிறது. இதில் இருபக்கமுமே அவள் கவனம் தங்கள் பக்கமில்லை, அந்தப்பக்கம் தான்  என்று நினைப்பது மேலும் கொடுமை. போதும்… எல்லாம் அவளோடு நிற்கட்டும். அவளுக்கொரு பெண் குழந்தை வேண்டாம்…..


மறுநாள் ஷிவ்னேரியில் உள்ள ஷிவாய் தேவி கோயிலுக்குப் போய் தேவியை மனமுருகப் பிரார்த்தித்தாள். “தேவி எனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும். அவன் வீரபுருஷனாய் இருக்க வேண்டும். குணத்திலும் மிக உயர்வாய் இருக்க வேண்டும். என் தந்தையும் கணவனும் வீரர்கள் தான் என்றாலும் அவர்கள் வேறு அரசர்களிடம் சேவகம் புரியும் நிலையில் தான் இருக்கிறார்கள். தாழ்ந்த நிலை எங்களோடு முடியட்டும். என் மகன் அந்த நிலையில் வாழக்கூடாது. அவன் அரசனாக வேண்டும். பேரரசனாக வேண்டும். இந்த தேசமே தலை வணங்கும் நிலைக்கு உயர வேண்டும். தாயே அவனுக்கு அருள் புரிவாயாக!”

வணங்கி எழுந்த ஜீஜாபாய் பிரசவ வலியை உணர ஆரம்பித்தாள்.

(தொடரும்)

என்.கணேசன்