சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 31, 2013

பரம(ன்) ரகசியம் – 29



ந்த உறையில் இருந்து ஈஸ்வர் எடுத்த தாள் ஏதோ ஒரு பழைய ஆங்கிலப் புத்தகத்தில் இருந்து கிழித்ததாக இருந்தது. அதில் ஒருசிறிய பத்தியையும், அடுத்த பெரிய பத்தியையும் பக்கவாட்டில் யாரோ கோடிட்டிருந்தார்கள். ஈஸ்வர் பரபரப்புடன் படிக்க ஆரம்பித்தான்.

“இந்தியாவின் சக்தி வாய்ந்த சிவலிங்கங்கள் பற்றி மிக விரிவாகப் பார்த்து விட்டோம். அந்த சிவலிங்கங்கள் கால காலமாய் பக்தர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. பழமை வாய்ந்த அந்த சிவலிங்கங்களைத் தரிசித்த பின், இமயமலையிலிருந்து கன்யாகுமரி வரை பரந்து கிடக்கும் பாரதம் எத்தனை சக்தி மையங்களைத் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்கிறது என்று என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. தரிசிக்க முடிந்த நானும் எத்தனை பாக்கியவான் என்று பெருமிதம் அடையாமல் இருக்க முடியவில்லை.

ஆனாலும் என் மனதில் சிறியதொரு ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. நான் காண ஆசைப்பட்ட இரண்டு சிவலிங்கங்களைக் காணும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. இரண்டும் சித்தர்கள் சம்பந்தப்பட்டது. இந்தியாவின் உண்மையான சித்தர்கள் இன்றைய போலி சாமியார்கள் மற்றும் தங்களையே சித்தர்கள் என்று சுய அறிமுகம் செய்து கொள்ளும் ஆசாமிகள் போல நம் கண்ணில் தென்படுவதில்லை. ஏதாவது ஒரு காரணம் இருந்தால் ஒழிய, அவர்களே காணப்பட வேண்டும் என்று எண்ணினால் ஒழிய எப்போதும் மறைவாகவே இருப்பார்கள். சில சமயங்களில் வேறு சாதாரண ஆட்கள் போல பார்வைக்குத் தென்படுவதுண்டு. சரி சித்தர்களை விட்டு விட்டு சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறேன். சித்தர்கள் உருவாக்கியதாகச் சொல்லப்பட்ட இரண்டு சிவலிங்கங்களை எவ்வளவோ முயன்றும் என்னால் பார்க்க முடியவில்லை. முதலாவது இமயமலையில் சித்தர்கள் வைத்து பூஜிப்பதாய் சொல்லப்பட்ட நவபாஷாண லிங்கம். எத்தகைய கொடிய வியாதி இருந்தாலும் அந்த நவபாஷாண லிங்கத்தைப் பூஜிப்பவர்கள் அந்த வியாதியிலிருந்து விடுதலை பெற்று விடுவார்கள் என்று சொன்னார்கள். ஏதோ ஒரு குகையில் இருப்பதாக அடையாளம் சொன்னார்கள். அவர்கள் சொன்ன இடத்திற்குப் போய்ப் பார்த்தால் அப்படி ஒரு குகையே இல்லை. இன்னொரு சிவலிங்கம் தமிழகத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்ட ஒரு விசேஷ மானஸலிங்கம். மானஸலிங்கம் என்ற பெயரில் வேறு சில சிவலிங்கங்கள் இருந்தாலும் இது அவற்றைப் போல அல்ல. சித்தர்களால் உருவாக்கப்பட்டு ரகசியமாய் பூஜிக்கப்பட்டு வந்த இந்த சிவலிங்கம் பொதுவான ஆகம விதிக்களின் படி உருவாக்கப்பட்டதோ, பூஜிக்கப்பட்டதோ அல்ல என்கிறார்கள். ரகசிய சூட்சும வித்தைகள் பலவற்றிலும் தேர்ச்சி அடைந்திருந்த சித்தர்கள் தங்கள் சக்திகளை எல்லாம் ஆவாகனம் செய்து உருவாக்கி இருந்த அந்த சிவலிங்கத்தின் சக்தி எல்லை இல்லாதது என்கிறார்கள். அதை வைத்து ஒரு கோயில் கட்ட முதலாம் ராஜேந்திரச் சோழனின் மகன் ஆசைப்பட்டு அதைத் தர சித்தர்களை வற்புறுத்த அவன் விரைவிலேயே ஒரு போரில் மாண்டு போனதாகச் சொல்கிறார்கள். பல நூறு வருடங்களாக சித்தர்களிடமும், சித்தர்கள் தேர்ந்தெடுக்கும் ஆட்களிடமும் இருந்து வரும் அந்த சிவலிங்கம் பிரமிக்கத் தக்க சக்திகளை அளிக்கக் கூடியது என்று சொல்கிறார்கள். அந்த விசேஷ மானஸ லிங்கத்தை சித்தர்களிடமிருந்து தங்கள் வசம் எடுத்துக் கொள்ள ஒருசிலர் செய்த முயற்சிகளும் மரணத்திலோ, பைத்தியம் பிடிப்பதிலோ தான் முடிந்தன என்றும் சொல்கிறார்கள்.  திடீர் என்று சில வினாடிகள் ஒளிரக் கூடியதாகசவும் சொல்லப்படும் அந்த சிவலிங்கத்தை ஒருமுறை தரிசிக்கவும் நான் ஆசைப்பட்டேன். ஆனால் அது தற்போது இருக்கும் இடத்தை என்னால் அறிய முடியவில்லை. நவபாஷாண லிங்கமும், விசேஷ மானஸ லிங்கமும் நிஜமாகவே இருக்கின்றனவா இல்லை சிலரின் கட்டுக்கதையா என்று இன்று வரை எனக்கு புரியவே இல்லை

ஈஸ்வர் அதை இரண்டு முறை படித்தான். முதல் முறை அவசர அவசரமாகவும் இரண்டாவது முறை நிதானமாகவும் படித்தான். அந்தப் புத்தகத்தாளின் மேலே ஆன்மிக பாரதம் என்று எழுதி இருந்தது அந்தப் புத்தகப் பெயராக இருக்க வேண்டும் என்று அனுமானித்தான். கீழே நீலகண்ட சாஸ்திரி என்று எழுதியவர் பெயரும் இருந்தது. பக்க எண் 178 என்று இருந்தது. தாளின் பின்புறம் ஒரு சிவலிங்கத்தை மூன்று சித்தர்கள் பூஜிப்பது போல படம் வரையப் பட்டிருந்தது. அந்தப் படம் இருந்திரா விட்டால் அந்தப் பக்கத்தில் என்ன எழுதியிருந்தது என்று தெரிந்திருக்கும்....

அந்த விசேஷ மானஸ லிங்கம் தான் பசுபதி பூஜித்து வந்தது என்பதில் இப்போது ஈஸ்வருக்கு சந்தேகமே இல்லை. அதைப் பார்க்காமலேயே கேள்விப்பட்டதில் இருந்து நீலகண்ட சாஸ்திரி என்பவர் எத்தனையோ வருடங்களுக்கு முன் தன் புத்தகத்தில் எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் இருந்து குறிப்பிட்ட அந்தப் பக்கத்தை மட்டும் கிழித்து அந்த சிவலிங்கத்தின் புகைப்படத்தின் பின் ஃபிரேமிற்குள் வைத்தது அவனுடைய கொள்ளுத் தாத்தாவாகத் தான் இருக்க வேண்டும். எந்த நோக்கத்தில் வைத்தார் என்று சரியாக அவனால் யூகிக்க முடியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று வைத்தாரா, இல்லை ஒரு நாள் இது தேவைப்படலாம் என்று வைத்தாரா, இல்லை வேறு காரணம் இருக்குமா என்று தெரியவில்லை.

அந்த சிவலிங்கத்தைத் திருட நினைத்தவர்கள் இறந்திருக்கிறார்கள், பைத்தியமாகி இருக்கிறார்கள் என்றெல்லாம் சொன்னதும் வெறும் கற்பனை அல்ல என்பது இப்போது நடந்த முயற்சியில் பிணமாகிக் கிடந்த ஒருவனை நினைக்கும் போது தெரிகிறது. ஆனாலும் அதையும் மீறி சிவலிங்கம் களவு போயிருப்பது ஈஸ்வரை நிறைய யோசிக்க வைத்தது. திருடிய சிவலிங்கம் இப்போது எங்கே இருக்கிறது. திருட்டில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் என்ன ஆனார்கள்?

ஏண்டா தூங்கிட்டியா?ஆனந்தவல்லியின் சத்தம் கேட்ட்து.

“இதோ வந்துட்டேன் பாட்டிஎன்று ஈஸ்வர் சத்தமாகச் சொன்னான்.

அவன் வாயால் கூப்பிடும் போது பாட்டி என்கிற சொல் எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று நினைத்தவளாக ஆனந்தவல்லி புன்னகை செய்தாள்.

அந்த சிவலிங்கத்தின் புகைப்படத்தைத் திரும்பவும் அந்த ஃபிரேமிற்குள் வைத்து பழைய நிலைமையிலேயே வைத்து விட்டு, அந்தத் தாளை மடித்துத் தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு ஈஸ்வர் பெட்டியை மூடி வைத்து விட்டுக் கீழே இறங்கினான்.

“எல்லாம் பார்த்தியாடா?ஆனந்தவல்லி கேட்டாள்.

“ம்

“அந்தப் பெட்டில இருக்கிற பட்டு வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம் எல்லாம் அவர் கடைசியா போட்டுகிட்டிருந்தது. அவர் அதைப் போட்டுகிட்டு சபைல நடந்தா அத்தனை பேரும் எழுந்திருச்சு நிப்பாங்கஆனந்தவல்லி பெருமையாகச் சொன்னாள்.

கேள்விப்பட்டேன். உங்களைத் தவிர எல்லாரும் அவரை மரியாதையா தான் நடத்தினாங்கன்னு சொன்னாங்க”  அவன் குறும்பாகச் சொல்ல ஆனந்தவல்லி பக்கத்தில் தடி எதாவது இருக்கிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். அவன் சிரித்துக் கொண்டே அங்கிருந்து ஓடினான். ஆனந்தவல்லி தன் கணவரின் படத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். உங்க கொள்ளுப் பேரனைப் பார்த்தீங்களா? பார்க்க உங்க மாதிரின்னாலும் கோபத்திலயும் பிடிவாதத்துலயும் என்னை மாதிரி....

ஈஸ்வர் தனதறைக்குள் நுழைந்தவுடன் பின்னாலேயே மகேஷ் நுழைந்தான். அவன் ஈஸ்வர் கையில் வேறெதாவது வைத்திருக்கிறானா என்று பார்த்தான்.  பின் மெல்லக் கேட்டான். “கிழவி கிட்ட இருந்து ஏதாவது துப்பு கிடைச்சுதா?

ஈஸ்வர் கேட்டான். “எது சம்பந்தமா?

மகேஷுக்கு திடீர் என்று என்ன சொல்வது என்று தெரியவில்லை. பின் சொன்னான். “அந்த சிவலிங்கம் சம்பந்தமாவோ, பெரிய தாத்தா இறந்தது சம்பந்தமாவோ தான்...

ஈஸ்வர் சொன்னான். “அந்த சிவலிங்கத்தோட போட்டோ மட்டும் தான் அங்கே இருந்துச்சு. போட்டோ வச்சுகிட்டு என்ன செய்ய? நீ அந்த சிவலிங்கத்தைப் பார்த்திருக்கிறியில்ல... நீ அந்த சிவலிங்கத்தைப் பத்தி என்ன நினைக்கிறாய்?

“அது சாதாரண சிவலிங்கம் மாதிரி தான் இருந்துச்சு... ஏன் நீயும் அது சக்தி வாய்ந்த சிவலிங்கம்னு நம்பறியா?

“ஆமா.... அப்படி இல்லாட்டி அதைப் போய் யாராவது கடத்துவாங்களா? அதுவும் ஒரு கொலைய செஞ்சுட்டு

மகேஷ் ஒன்றுமே சொல்லாமல் அவனையே பார்த்தான். பின் சொன்னான். “அதுக்கு ரொம்ப சக்தி இருக்கறதா ஆரம்பத்துல சொன்னது உன் அப்பா தானாம். அது மின்னுது அப்படி இப்படின்னு எல்லாம் சொல்லி பெருசு பண்ணிட்டார்.

உள்ளே எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டவனாய் ஈஸ்வர் சொன்னான். ஆனா அவர் சொன்னதை அப்ப யாரும் பெரிசுபடுத்தல. அப்ப எதுவும் நடந்துடவுமில்லை. கிட்டத்தட்ட 40 வருஷம் கழிச்சு கொலை நடக்குது, சிலை கடத்தப்பட்டிருக்குன்னா வேற யாரோ கூட அதே மாதிரி வித்தியாசமா எதாவது பார்த்திருக்கலாம்னு தோணுது. அதுவும் சமீப காலத்துல பார்த்திருக்கலாம்...

மகேஷ் சற்று தயங்கி விட்டுச் சொன்னான். “இருக்கலாம். கிழவிக்கு ஏதாவது தெரியுமா?

“பெருசா எதுவும் தெரிஞ்ச மாதிரி இல்ல. இன்னும் உன் தாத்தா கிட்ட தான் இன்னைக்கு ராத்திரி பேசணும். அவர் தான் அடிக்கடி தோட்ட வீட்டுக்குப் போனவர்....

அதற்கு மகேஷ் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அன்றிரவு ஈஸ்வர் பரமேஸ்வரனைப் பார்த்துப் பேசிய போது அவனும் அருகில் கண்கொத்திப் பாம்பு போல் கவனித்துக் கொண்டிருந்தான். மீனாட்சியும், ஆனந்தவல்லியும் கூட அங்கிருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் அவனும் பரமேஸ்வரனும் எப்படி பேசிக் கொள்கிறார்கள் என்று பார்க்க ஆசை. இருவருக்கும் இடையே சுமுகமான அன்பு வந்து விடாதா என்ற நப்பாசை. இருவருக்குமிடையே சண்டை ஏதாவது வந்து விடக்கூடாதே என்ற பயம்...

ஆனால் ஈஸ்வர் பரமேஸ்வரனிடம் பனிப்பார்வை காட்டவில்லை. கோபம் காட்டவில்லை. குத்தல் பேசவில்லை. அது பரமேஸ்வரனுக்குப் பெரிய ஆசுவாசத்தைத் தந்தது. ஆனால் அதே நேரத்தில் அவன் அவரைத் தாத்தா என்று அழைக்கவும் இல்லை. ஒரு பேட்டியாளனாகத் தான் அவரிடம் அவன் கேள்விகள் கேட்டான். பார்த்தசாரதிக்கும் இவனுக்கும் இடையே பெரிய வித்தியாசத்தை அவரால் பார்க்க முடியாதது ஒரு உறுத்தலாக இருந்தது.

ஈஸ்வர் கேட்ட கேள்விகளில் பெரும்பாலானவை பார்த்தசாரதியும் மற்ற போலீஸ்காரர்களும் கேட்ட கேள்வியாக இருந்தது. ஒருசில கேள்விகள் மட்டும் வித்தியாசமாகக் கேட்டான்...

நீங்க போறப்ப எல்லாம் உங்கண்ணா சிவலிங்கம் பக்கத்துல தான் இருந்தாரா. இல்லை வெளியவும் இருந்தாரா?

“அண்ணா பெரும்பாலும் ஹால்ல தான் இருப்பார். ஏதோ சில நேரங்கள்ல மட்டும் சிவலிங்கம் பக்கத்துலயோ, இல்லை தோட்டத்துல ஏதாவது வேலை செஞ்சுகிட்டோ இருப்பார்

“சிவலிங்கம் பக்கத்துல இருந்தப்ப என்ன செஞ்சுகிட்டிருந்தார். தியானம் மாதிரி ஏதாவது செய்துட்டு இருப்பாரா, இல்லை ஸ்தோத்திரம் ஏதாவது படிச்சிகிட்டு இருப்பாரா, இல்லை அபிஷேக பூஜை மாதிரி ஏதாவது செஞ்சுகிட்டிருப்பாரா?

பரமேஸ்வரன் யோசித்தபடி சொன்னார். சிவலிங்கம் பக்கத்துல இருக்கறப்ப அவர் பெரும்பாலும் தியானத்துல தான் இருப்பார். என்னைப் பார்த்த பிறகு வெளியே வருவார். அபூர்வமா ரெண்டு மூணு தடவை நான் அங்கு போனது தெரியாமல் கூட அவர் தியானத்திலேயே இருந்ததும் உண்டு....

“அப்ப நீங்க என்ன செய்வீங்க?

“அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் அவரைப் பார்த்துட்டே உட்கார்ந்திருந்து விட்டு வந்துடுவேன்

“தியானத்துல இருந்து அவரை எழுப்ப மாட்டீங்களா?

“இல்லை. அண்ணா தியானத்துல இருக்கற விதமே ரொம்ப அழகாயிருக்கும். சின்னக் குழந்தையோட ஆழமான தூக்கம் மாதிரி. அவன் வேற ஏதோ ஒரு லோகத்துல இருக்கற மாதிரி... அவரைப் பார்த்துட்டே இருந்தா நாமளும் அந்த அமைதியை உணர்ந்துடலாம்... நல்ல அனுபவம் அது...

நீங்க போனது கூட தெரியாமல் தியானத்துல இருக்கறது உங்களுக்கு வருத்தமாவோ, கோபமாவோ இருக்காதா?

“சேச்சே அப்படி எல்லாம் இருக்காது. எங்கண்ணா ஸ்படிகம் மாதிரி. மனசு அவ்வளவு சுத்தம். யாரையும் குறைச்சு நினைக்கவோ, அவமதிக்கவோ அவரால முடியாது....சொல்லும் போது அவர் குரல் கரகரத்தது.

“உங்க கிட்ட பேசிகிட்டிருக்கறப்ப அவர் எதைப்பத்தி பேசுவார்...

“அவரா எதைப் பத்தியும் பேசினதா எனக்கு ஞாபகம் இல்லை. அவரா பேசினது கடைசி ரெண்டு சந்திப்புல தான். ஒரு தடவை அம்மாவைக் கூட்டிகிட்டு வரச் சொன்னார். இன்னொரு தடவை தான் சிவலிங்கம் பத்தியும் உன்னைப் பத்தியும் சொன்னார். நான் அதைப் பத்தி தான் உன் கிட்ட ஏற்கெனவே சொல்லி இருக்கேனே

“நீங்க அவர் கிட்ட எதைப் பத்தி பேசுவீங்க?

“என் மனசுல எது பாரமா இருந்தாலும் அது பத்தி சொல்லுவேன். வியாபாரத்துல பிரச்சினை இருந்தால் அதைப் பத்தி சொல்லுவேன். உடம்புக்கு முடியலைன்னா அதைப் பத்தி சொல்லுவேன். எதைப் பத்தி சொன்னாலும் கவனமா பொறுமையா அவர் கேட்டுக்குவார். பதிலுக்கு “சரியாயிடும் கவலைப்படாதேங்கிற மாதிரி சொல்வார். அவர் கிட்ட பேசிட்டு வெளியே வர்றப்ப மனசுல பாரம் குறைஞ்சிருக்கும். அவர் கிட்ட சொன்ன பிரச்சினைகள் தானா கொஞ்ச நாள்ல சரியாயிருக்கும். அந்த சக்தி எங்கண்ணா கிட்ட இருந்துச்சு....

சொல்லும் போது பரமேஸ்வரன் குரலில் பெருமிதம் தொனித்தது. ஆனந்தவல்லி அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அந்த சக்தி உங்க அண்ணா கிட்ட இருந்துச்சா. இல்லை அந்த சிவலிங்கத்து கிட்ட இருந்துச்சா? அந்த சிவலிங்கமும் அங்கே இருந்துச்சு இல்லையா அதனால கேட்டேன்

“நான் அது எங்கண்ணானாலன்னு தான் நினைக்கிறேன்உறுதியாகச் சொன்னார் பரமேஸ்வரன்.

‘அண்ணன் மேல இருக்கற இந்த பாசத்துல கால் வாசி கூட உங்களுக்கு உங்க மகன் மேல இல்லையே ஐயான்னு கேட்க வேண்டும் போல் ஈஸ்வருக்குத் தோன்றினாலும் அவன் கேட்கவில்லை. முகத்தில் அந்த எண்ணத்திற்கான அறிகுறியையும் காட்டவில்லை.

“நீங்க அந்த சிவலிங்கத்துக்குப் பக்கத்துல போயிருக்கீங்களா?

“இல்லை

“அதுல இருந்து ஏதாவது வித்தியாசமான சக்தியை எப்பவாவது கவனிச்சிருக்கீங்களா?

“இல்லை

“ஏதாவது வெளிச்சம் மாதிரி?

“இல்லை

“உங்க அண்ணா எப்பவாவது ஸ்தோத்திரம் அல்லது தேவார திருவாசகம்  எல்லாம் சிவலிங்கத்துக்காகப் படிப்பாரா?

“படிச்சதை நான் பார்த்தது இல்லை

“நீங்கள் எப்பவும் சாயங்கால வேளையில் தானே போவீங்க. ஒருவேளை காலையில அந்த அதையெல்லாம் படிப்பாரோ?

யோசித்து விட்டு பரமேஸ்வரன் சொன்னார். “எங்கண்ணா அந்த மாதிரி எதுவுமே எப்பவுமே படிக்கிற ரகம் அல்ல?

“அப்படின்னா அவரோட பூஜை ரூமில் இருந்த தேவார திருவாசக ஸ்தோத்திர புஸ்தகம் எல்லாம் யார் படிக்கறதுக்காக வச்சிருந்தார்?

பரமேஸ்வரனுக்கும் அந்தக் கேள்வி அப்போது தான் உறைத்தது. அவருக்கு அதற்கான பதில் தெரியவில்லை.

ஒருவேளை வெளியில் இருந்து எப்போதாவது வரும் யாராவது ஒருவருக்காக இருக்குமோ?ஈஸ்வர் அவரைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

பரமேஸ்வரன் உட்பட அனைவரும் அவனைத் திகைப்புடன் பார்த்தார்கள்.

(தொடரும்)

-          என்.கணேசன் 

பரம(ன்) இரகசியம் நாவல் அச்சில் வெளி வந்தும் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. 2016 ஜூன் மாதம் இரண்டாம் பதிப்பும் வெளியாகி விற்பனையில் சாதனை புரிந்து வருகிறது. இந்த நாவலை புத்தக வடிவில் கையில் வைத்து படித்து மகிழ விரும்புவோர் 9600123146 எண்ணில் அல்லது blakholemedia@gmail.com என்ற மின் அஞ்சலில் பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள். - என்.கணேசன்   


                                                                                                          
  

Monday, January 28, 2013

அட ஆமாயில்ல! – 8



பறவைகளைப் போல் மனிதனால் காற்றில் பறக்க முடியும். மீனைப் போல் தண்ணீரில் நீந்த முடியும். ஆனால் அவன் இவ்வுலகில் மனிதனைப் போல நடக்க மட்டும் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை.
-          டாக்டர் ராதாகிருஷ்ணன்


நீங்கள் எவ்வளவு புயல்களை சமாளித்தீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள உலகம் ஆர்வம் காட்டப் போவதில்லை. கப்பலைப் பத்திரமாக துறைமுகத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தீர்களா என்பதைத் தான் உலகம் அறிய விரும்புகிறது.
                -வில்லியம் மெக்ஃபி


கெட்ட வழிகளில் கிடைக்கும் லாபமானது நஷ்டத்துக்குச் சமமானது.
-          நார்மன் வின்செண்ட் பீல்


நீங்கள் புதிதாகத் தெரிந்து கொள்வதை என்று நிறுத்த ஆரம்பிக்கின்றீர்களோ அன்றே உங்கள் வயோதிக காலம் ஆரம்பித்து விடுகிறது.
                   -ஹெர்பர்ட் காஸன்


ஒரு உபதேசம் கேட்க ஆறு மைல் தூரம் செல்வது எளிது. ஆனால் வீடு திரும்பிய பின் அது பற்றி கால் மணி நேரம் சிந்திப்பது கஷ்டம்.
-          பிலிப் ஹென்றி


நெருக்கமான பழக்கம் வெறுப்பை உண்டாக்கா விட்டாலும் இருக்கிற மதிப்பின் கூர்மையை மழுக்கி விடும்.
-          ஹாஸ்லிட்


கண்ணியமான மனிதனே இல்லை என்று எவன் சொல்கிறானோ அவன் அயோக்கியன்.
-          பெர்க்லி


இருவர் விவாதம் செய்கையில் ஒருவருக்குக் கோபம் வருமானால் விவாதத்தைத் தொடராமல் நிறுத்துபவன் அறிவாளி.
                  -புளுடார்க்


ஒரு மனிதனிடம் யோக்கியதை எந்த அளவு அதிகமாயிருக்கிறதோ அந்த அளவு அவன் ஒரு ஞானி போல் நடிக்க மாட்டான்.
-          லவேட்டர்.


பணக்காரர்களே சந்தோஷத்தைக் காணாமல் பரிதாபமாக வாழ்கையில் ஒவ்வொருவனையும் பணக்காரனாக மாற்ற முயற்சிப்பதில் என்ன பயன்?
-          பெர்ட்ராண்டு ரஸ்ஸல்


தொகுப்பு: என்.கணேசன்  


Thursday, January 24, 2013

பரம(ன்) ரகசியம் – 28




குருஜி அந்த வேத பாடசாலைக்கு விஜயம் செய்வதென்று கடைசியில் முடிவெடுத்தார். தன் உதவியாளனிடம் நாலைந்து நாட்களுக்கு கொடுத்திருந்த அப்பாயின்மெண்ட்கள் அனைத்தையும் ரத்து செய்யச் சொன்னார்.

“நாளைக்கு மத்திய அமைச்சர் ஸ்ரீவத்சாவை சந்திக்க ஒப்புக் கொண்டிருக்கிறோம். நாளை மறு நாள் கவர்னரின் தம்பி....என்று அவன் சொல்லச் சொல்ல அவர் இடை மறித்துச் சொன்னார்.

அவசர வேலையா வெளியூர் போயிட்டார். அடுத்த முறை பார்க்கலாம்னு சொல்லிடு

உதவியாளன் தலையாட்டி விட்டுச் சென்ற பிறகு அந்த மனிதன் அவரிடம் கேட்டான். என்ன செய்யறதாய் இருக்கீங்க?

முதல்ல கணபதி கிட்ட பேசி அந்த பூ சமாச்சாரத்தைத் தெரிஞ்சுக்கணும். நாலைஞ்சு நாள் வேதபாடசாலையிலேயே தங்கறதா முடிவு செஞ்சுட்டேன்..

சிவலிங்கத்தின் கூடவேவாஎன்று கேட்க நினைத்த அந்த மனிதன் மாற்றிக் கேட்டான். “கணபதி கூடவேவா?

இல்லை. நான் வழக்கமாய் தங்கற இடத்துல தான். ரெண்டு நாள் தயார்ப்படுத்திக்க வேண்டி இருக்கு. அதுக்குப் பிறகு சிவலிங்கத்து கூட ஒரு நாள் தங்க நினைச்சிருக்கேன்..”.  அவர் அவன் கேட்க நினைத்த கேள்விக்கே பதில் சொன்னார்.

ஒவ்வொரு வருடமும் அந்த வேதபாடசாலையில் குருஜி பத்து நாட்கள் தங்குவதுண்டு. அங்கே அவருக்கென்று தனியாக ஒரு வீடு இருக்கிறது. அவரைத் தவிர வேறு யாரும் அங்கே தங்க அவர் அனுமதித்தது கிடையாது. அங்கே தங்கும் நாட்களில் உயர் வகுப்புகளுக்கு அவர் பாடம் சொல்லித் தருவார். சிறப்புரைகள் ஆற்றுவார். அவர் மற்ற இடங்களில் பேசுவதைக் காட்டிலும் அங்கு பேசுவது த்த்துவ ரீதியாக மேலும் சிறப்பாக இருக்கும் என்பதால் அந்த சிறப்புரைகள் கேட்க நாட்டின் பல பாகங்களில் இருந்தும் அறிஞர்கள் வந்து கூடுவதுண்டு.  

ஆனால் இந்த முறை அங்கு அவர் செல்வது ரகசியமாக வைக்கப்படும் என்பதில் அந்த மனிதனுக்கு சந்தேகமில்லை. அவர் சிவலிங்கத்தைப் பார்க்கும் முன் எப்படி தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்கிறார் என்பதை அறிய அவனுக்கு ஆவலாக இருந்தது. ஆனால் சில விஷயங்களை எத்தனை நெருக்கமானவர்களிடமும் அவர் சொல்வதில்லை என்பதை அவன் நன்றாகவே அறிந்திருந்ததால் அதைக் கேட்கவில்லை.

குருஜி மறுநாள் அதிகாலையில் வேதபாடசாலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

குருஜியின் இயற்பெயர் ராமகிருஷ்ணன். கும்பகோணத்தைச் சேர்ந்த வேத விற்பன்னர்களின் பரம்பரையில் பெற்றோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர். அவருக்குச் சிறு வயதிலிருந்தே அறிவு தாகம் அதிகமாக இருந்தது. எல்லாவற்றையும் அவர் மிக ஆழமாகத் தெரிந்து கொள்ள விரும்பினார். அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவருடைய தந்தையார் அவரை சிறு வயதிலேயே ஒரு நாள் நூலகத்திற்குக் கொண்டு போய் விட்டார். நீ கேட்கறதுக்கெல்லாம் இதுல ஏதாவது ஒரு புஸ்தகத்துல பதில் இருக்கும். படிச்சுக்கோ

அன்றிலிருந்து அந்த நூலகம் அவருக்கு இன்னொரு வீடு போல ஆகியது.  சிறிது நேரம் கிடைத்தாலும் அங்கு போய் புத்தகங்களில் மூழ்கி விடுவார். எல்லாத் துறைகளிலும் அவருக்கு நிறைய ஆர்வம் இருந்த போதும் ஆன்மிகம், தத்துவம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் அவருக்கு மேலும் அதிக ஆர்வம் இருந்தது.

படிப்பில் முதல் மாணவனாக ஆரம்பம் முதலே இருந்த அவர் பட்டப்படிப்பு முடிந்த பிறகு மேற்கொண்டு கல்லூரிகளில் படிக்க விரும்பாமல் ஆன்மிக அறிவை நேரடியாகக் கற்க காசி, ஹரித்வார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் இருந்த யோகிகளையும், குருமார்களையும் நாடிச் சென்றார். பல குருமார்களுக்கு இவரே சொல்லித் தர வேண்டி இருந்தது. ஆனாலும் ஒருசில உண்மையான குருமார்களும், யோகிகளும் அவருக்குக் கிடைத்தார்கள். தேனீ பல்வேறு மலர்களிலிருந்து தேன் சேகரித்துக் கொள்வது போல அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியதை எல்லாம் அவர் கற்றுக் கொண்டார்.

எதைக் கற்றுக் கொள்ளும் போதும் அவருக்குச் சோர்வு இருந்ததில்லை. அலுப்பு இருந்ததில்லை. பல குருமார்கள் அவரைத் தங்களிடத்திலேயே இருத்திக் கொள்ள ஆசைப்பட்டார்கள். தங்கள் ஆசிரமங்களில் தங்களுக்கு அடுத்தபடியாக அவரை நியமிக்க விரும்பினார்கள். ஆனால் அவர் எங்கேயும் தங்கி விடவில்லை.

ஒரு குரு அவரிடம் கேட்டார். “ஏன் இங்கிருந்து போக எண்ணுகிறாய்?

“ஒரு வகுப்பு படித்து தேர்ந்தவன்  பின் அங்கேயே தொடர்ந்து இருப்பது வீண் அல்லவா?என்றார்.

கடைசியாக சுமார் ஏழாண்டுகள் ரிஷிகேசத்திலும் அதைச் சுற்றி உள்ள இமயமலைப் பிரதேசங்களிலும் அவர் கற்றுக் கொண்ட வித்தைகளும், பெற்ற அறிவும் சாதாரணமாக இருக்கவில்லை. தியானத்திலும் அபூர்வசக்திகளிலும் அவர் அடைந்த நிலைகள் அவருடைய சகாக்கள் பலருக்கு கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது.

நாற்பத்தைந்தாவது வயதில் திரும்பி வந்தவர் பத்திரிக்கைகளில் எழுதவும், பொதுக் கூட்டங்களில் பேசவும் ஆரம்பித்த பின் பிரபலமாக ஆரம்பித்தார். அப்போது கிடைத்த குருஜி பட்டம் அவருக்கு நிரந்தரமாகத் தங்கி விட்டது. இந்தியாவில் பிரபலமாகிய அவர் சிறிது சிறிதாக வெளிநாடுகளிலும் பிரபலமாக ஆரம்பித்தார். பின் அவர் போகாத நாடில்லை, அவரை அறியாத ஆன்மிகவாதிகள் இல்லை என்ற நிலை வந்து விட்டது.

துறவியாக அவர் தன்னை எப்போதும் காட்டிக் கொண்டதில்லை. துறவியாக அவர் வாழவும் இல்லை. அவ்வப்போது சில பெண்கள் அவர் வாழ்க்கையில் இருந்தாலும் அவர் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம், பிள்ளைகள், குடும்பம் எல்லாம் சிறைகள் என்று அவர் நினைத்தார். குருஜி அளவுக்கு ஆன்மிக நூல்கள் எழுதியவர் இல்லை என்று  பெயரெடுத்தார். அவருக்குத் தெரியாத விஷயங்கள் இல்லை என்று அவரிடம் வந்தவர்கள் வியந்தனர். ஒரு முறை அவரிடம் வந்து பேசியவர்கள் திரும்பத் திரும்ப அவரிடம் வர விரும்பினர்.

எல்லா மதங்களைப் பற்றியும் ஆழமாக அவர் அறிந்திருந்தார். அந்த மத நூல்களை எல்லாம் கரைத்துக் குடித்திருந்தார். அனாயாசமாக அவற்றில் இருந்து மேற்கோள்கள் எடுத்துக் காட்டினார். மணிக்கணக்கில் அவரால் பெரும் தத்துவங்களைப் பேசவும் முடியும். மணிக்கணக்கில் மௌனமாக தியானத்தில் அமர்ந்திருக்கவும் முடியும். அவரிடம் வாதிட வந்தவர்கள் எப்போதும் வென்றதில்லை. அவர் பேச விரும்பாத நேரங்களில் ஒரு வார்த்தையை அவரிடம் இருந்து பிடுங்க முடிந்தவர்களும் இல்லை.

ஆன்மிக உலகில் முடிசூடா மன்னர் போல திகழ்ந்த அவர் தனிப்பட்ட வாழ்வில் புதிராக இருந்தார். அவர் தன் ஐம்பதாவது வயதுக்குப் பின் எந்தக் கோயிலுக்கும் சென்றதில்லை. அவர் வீட்டில் எந்த இறைவனின் திருவுருவப் படமும் இருக்கவில்லை. எல்லா மதக் கடவுள்களைப் பற்றியும் மணிக்கணக்கில் விளக்க முடிந்த அவர் எந்தக் கடவுளையும் வணங்கியதில்லை. தன் தனிப்பட்ட கடவுள் மற்றும் மத நம்பிக்கைகள் பற்றி அவர் யாரிடமும் விளக்கியதோ, விவாதித்ததோ இல்லை. ஆர்வக் கோளாறுடன் அது பற்றிக் கேட்டவர்களுக்கு அவர் அது தன் தனிப்பட்ட விஷயம் என்று சொல்லி முற்றுப் புள்ளி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்....

குருஜி வேதபாடசாலைக்கு வந்திருக்கிறார் என்றும் அவனை சந்திக்க விரும்புகிறார் என்றும் கேள்விப்பட்டவுடன் கணபதிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. எங்கே இருக்கிறார்?

தகவல் தெரிவித்தவன் அவனை அழைத்துக் கொண்டு போய் வீட்டைக் காண்பித்து வெளியே நின்று கொண்டு கணபதியை உள்ளே போகச் சொன்னான்.  வேதபாடசாலையின் இன்னொரு ஒதுக்குப் புறத்தில் இருந்த அந்த வீடு சிறியதாக இருந்தாலும் பிரத்தியேக அழகுடன் இருந்தது. அந்த வீட்டின் உள்ளே நுழையக் கூடிய பாக்கியம் வெகுசிலருக்கே வாய்க்கும் என்பதும் அந்த வெகுசிலரில் தானும் ஒருவன் என்பதும் அறியாத கணபதி உள்ளே போய் அவர் காலில் விழுந்து சாஷ்டாங்கமாக வணங்கினான்.

எப்படி இருக்காய் கணபதி?

உங்க தயவுல நல்லா இருக்கேன் குருஜி

உனக்கு இங்கே சௌகரியத்துக்கு எதுவும் குறைவில்லையே?

“அப்படிச் சொன்னா நாக்கு வெந்துடும் குருஜி

குருஜி அவனை புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் எதைக் கேட்டாலும் வாங்கித் தரும் படி அவர் அங்கிருந்தவர்களிடம் சொல்லி இருந்தாலும் அவன் எதையுமே கேட்கவில்லை என்பதுடன் கொடுத்த சாதாரண சௌகரியங்களை கூட மறுத்து விட்டான் என்று அவர்கள் அவரிடம் தெரிவித்திருந்தார்கள். காலையில் இட்லி, மதியமும், இரவும் எளிமையான சாப்பாடு மட்டுமே கேட்டான் என்றும் படுக்கக் கொடுத்த மெத்தையைக் கூட மறுத்து விட்டு பாயும் தலையணையும் போதும் என்று சொல்லி வாங்கிக் கொண்டதாக அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

மெத்தை கூட வேண்டாம்னு சொல்லிட்டதா பசங்க சொன்னாங்க. ஏன் கணபதி?

“குருஜி நான் இங்கே இருக்கப் போறதோ சில நாள் தான். இங்கே ரொம்ப சௌகரியத்தைப் பழகிட்டா அப்பறம் எங்க வீட்டுக்குப் போன பிறகு எனக்கு கஷ்டமாயிடும். மெத்தை இல்லாட்டி தூக்கம் வராது. எது கடைசி வரைக்கும் கிடைக்குமோ அது போதும் குருஜி

கள்ளங்கபடம் இல்லாமல் கணபதி சொன்னதை புன்னகையோடு அவர் கேட்டுக் கொண்டார். அந்த சிவலிங்கம் போலவே இவனும் அபூர்வமானவனே, ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியவனே என்று அவருக்குத் தோன்றியது.    

“பூஜை எல்லாம் எப்படி போய்கிட்டிருக்கு கணபதி?

எனக்குத் தெரிஞ்ச அளவுல செஞ்சுகிட்டிருக்கேன். நீங்க அங்க வந்து நான் செய்யறதுல இருக்கற தப்புகளை சொன்னா நான் திருத்திக்குவேன் குருஜி

“அந்த சிவனுக்கே புகார் எதுவும் இல்லைன்னா நான் வந்து திருத்த என்ன இருக்கு கணபதி?

புகார் இருக்கா இல்லையான்னு அவரைக் கேட்டாத் தான் தெரியும். ஏதோ கொஞ்ச நாளைக்கு தானே, அது வரைக்கும் இவனை அனுசரிச்சுப் போலாம்னு கூட சிவன் நினைச்சிருக்கலாம்என்று சொல்லிய கணபதி வாய் விட்டு சிரித்தான்.  

அவன் சிரித்ததை ரசித்தபடியே குருஜி அடுத்ததாக இயல்பாகக் கேட்பது போல் கேட்டார். “பூஜைக்கு வேண்டிய பூ, வில்வம், துளசி எல்லாம் உனக்கு தாராளமா கிடைக்குதில்லையா கணபதி

தாராளமா கிடைக்குது குருஜி. நான் இங்கே இருந்து போகிறப்ப எங்க பிள்ளையாருக்கும் கொஞ்சம் எடுத்துகிட்டு போகட்டுமா குருஜிகணபதி ஆர்வத்துடன் கேட்டான்.

எவ்வளவு வேணுமோ அவ்வளவு எடுத்துட்டு போ கணபதிஎன்றவர் தான் எதிர்பார்த்த தகவல் அவனிடம் இருந்து வராததால் தொடர்ந்து சொன்னார். “சில சமயம் வடநாட்டுல மலைப்பகுதில கிடைக்கற பூவும் யாராவது கொண்டு வந்து தர்றதுண்டு. பார்க்க அழகா வித்தியாசமா இருக்கும்

கணபதி உற்சாகத்துடன் சொன்னான். ஆமா. நேத்து கூட அந்த பூ கிடைச்சுது. உங்களுக்கு நல்லா பழக்கமானவர் தான் கொண்டு வந்து தந்தார்

குருஜி சாதாரணமாய் திகைப்படைபவர் அல்ல என்றாலும் அவன் சொன்னதைக் கேட்டு திகைத்தே போனார். எனக்கு பழக்கமானவரா. யாரது?

பேரைக் கேட்கறதுக்குள்ளே மாயமாயிட்டார். எங்கே போனார்னு தெரியலை

அவரை எங்கே பார்த்தாய், பார்க்க எப்படி இருந்தார், எனக்கு நல்லா பழக்கமானவர்னு எதை வச்சு சொல்றே கணபதி.

கணபதி விளக்கமாகச் சொன்னான். அவர் சொன்னதாக அவன் சொன்ன உங்க குருஜியைத் தெரியும்... பல வருஷங்களுக்கு முன்னால் பழக்கம்வாசகத்தை இன்னொரு தடவை சொல்லச் சொல்லி அவர் கேட்டார். எதையும் இரண்டாவது முறை அவர் கேட்டதாக சரித்திரமே இல்லை. முதல் தடவையே பல சந்தர்ப்பங்களில் அவருக்கு அதிகம். பாதியிலேயே சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ளக் கூடியவர் அவர். ஆனால் இன்று முதல் தடவையாக அவர் அப்படிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவன் எல்லாம் சொல்லி முடித்த போது அவர் சிலை போல அமர்ந்திருந்தார்.  

அவர் யாருன்னு தெரியுமா குருஜி?கணபதி கேட்டான்.

அவன் சொன்ன அடையாளங்களும், அந்த வாசகமும் அவர் ரிஷிகேசத்தில் இருந்த நாட்களில் அறிந்த ஒரு வித்தியாசமான சித்தரை அவருக்கு நினைவுபடுத்தின. அந்த சித்தர் அவருக்குக் குருவாக சில வருடங்கள் இருந்திருக்கிறார்... அந்த சித்தர் இன்னமும் இருப்பார் என்று அவர் எண்ணியிருக்கவில்லை....

அவன் அவருடைய பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து குருஜி சொன்னார். “நீ சொல்ற அடையாளங்கள் இருக்கற ஒரு சித்தரை எனக்கு பல வருஷங்களுக்கு முன்னாடி தெரியும். ஆனால் நீ சொல்ற ஆளும், நான் நினைக்கிற ஆளும் ஒன்னு தானான்னு எனக்குத் தெரியலை கணபதி....

தான் பார்த்த மனிதர் ஒரு சித்தராக இருக்க முடியுமா என்று யோசித்த கணபதிக்கு விடை கிடைக்கவில்லை. அவன் குருஜியைக் கேட்டான். “நீங்க சொல்ற சித்தரோட பேர் என்ன குருஜி

மிகத் தாழ்ந்த குரலில் குருஜி சொன்னார். “அவருக்குப் பேர் இல்லை...

பெயர் இல்லாத மனிதர்களும் இருப்பார்களா என்று திகைத்தான் கணபதி.

குருஜி சகஜ நிலைக்கு வந்து அவனிடம் சொன்னார். “சரி கணபதி நீ போய் உன் வேலையைப் பார்..

“நீங்க எப்ப குருஜி அங்கே வர்றீங்க?

ரெண்டு நாள் வேற வேலை இருக்கு கணபதி. அதை முடிச்சுட்டு வர்றேன்.. எனக்கு நீ இன்னொரு உதவி செய்யணும் கணபதி

“என்ன குருஜி இப்படி உதவிங்கற பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு. என்ன செய்யணும் சொல்லுங்க?”

“அடுத்த தடவை அந்த சித்தரைப் பார்த்தால் நான் அவரைப் பார்க்க ஆசைப்படறேன்னு சொல்லு. எந்த நாளானாலும் சரி. எந்த நேரமானாலும் சரி.....”



அவனை அனுப்பி விட்டு கண்களை மூடி யோசித்தபடி மணிக்கணக்கில் குருஜி அமர்ந்திருந்தார்.  அவர் பாதையும் அவர் குருவின் பாதையும் குறுக்கிடும் காலம் ஒன்று வரும் என்று அவர் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.. ஆனாலும் அந்தக் காலம் வந்திருக்கிறது.... 

(தொடரும்)

-என்.கணேசன்







Monday, January 21, 2013

முடிந்தவுடன் நிறுத்து!



கீதை காட்டும் பாதை  22

முடிந்தவுடன் நிறுத்து!


கீதையின் ஆறாவது அத்தியாயமான தியான யோகத்தை ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு தொடங்குகிறார்.

எவனொருவன் கர்ம பலனில் பற்றில்லாமல், செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்கிறானோ அவனே துறவி. அவனே யோகி. அக்கினியைப் பற்ற வைக்காததாலோ கர்மங்களைத் துறந்ததாலோ ஒருவன் துறவியாக மாட்டான்.

துறவு என்று எதனைச் சொல்கிறார்களோ அதுவே யோகமென்று அறி. கர்மபலன் பற்றிய எண்ணத்தைத் துறக்காதவன் யோகி ஆக மாட்டான்.

யோகமாகிய சிகரத்தைத் தாண்ட விரும்புபவனுக்கு கர்மம் ஒரு சாதனமாகக் கூறப்படுகிறது. அந்த சிகரத்தை அடைந்த பின் அவனுக்கு மன அமைதியே சாதனமாகும்.

புலன்களிலும் கர்மங்களிலும் பற்றில்லாமல் எல்லா கோட்பாடுகளையும் துறந்தவனே யோக நிலையைச் சேர்ந்தவன் என்று கூறப்படுகிறான்.

தன் கடமையைச் செய்வதைக் காட்டிலும் துறவறம் போவது மேல் என்று ஆரம்பத்தில் நினைத்தவன் அர்ஜுனன். அது அவனுடைய தனிப்பட்ட குணாதிசயம் அல்ல. நம்மில் பெரும்பாலானோருக்கும் ஒருசில நேரங்களில் அந்த எண்ணம் வராமல் இருப்பதில்லை. வாழ்க்கையின் பிரச்சினைகள் நம்மால் சமாளிக்க முடியாததாகப் போகும் போது இந்த வாழ்க்கையில் இருந்தே ஒதுங்கி துறவியாகப் போவது நல்லதல்லவா என்ற எண்ணம் தோன்றுகிறது.

ஆனால் ஓடி ஒளிவது துறவல்ல. வேலை செய்யாமலேயே இருப்பதும் துறவல்ல. துறவு என்பது செய்ய வேண்டியதை, பலனில் பற்றில்லாமல்-அதே நேரத்தில் அலட்சியமும் இல்லாமல், முறையாகச் செய்து பிறகு அதை முற்றிலும் மறந்து அமைதியடைவது தான். அப்படி அமைதியடையா விட்டால் செயலும் உபயோக நிலையைக் கடந்து நம்மைப் பிணைத்து வைக்கும் சங்கிலியாகி விடும்.

சிலர் காரியம் முடிந்த பின்னரும் அடங்க மாட்டார்கள். அந்தக் காரியத்தின் மீது இருக்கும் ஈடுபாட்டை அவர்களால் விட முடியாது. அது கர்மம் ஆகாது. கடமையும் ஆகாது. ஒன்றை விட முடியாத பலவீனமே ஆகும். தேவை இருக்கும் வரை தான் செயலுக்கு மகத்துவம் உண்டு. அவசியமும் உண்டு. தேவை முடிந்த பின்னும் ஒன்றை செய்து கொண்டே இருக்கத் தூண்டுதல் நம்முள் எழுமானால் அதைப் பைத்தியக்காரத்தனம் என்று நாம் அடையாளம் காண வேண்டும். அதைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் சிகரத்தை அடையும் வரை நடக்க வேண்டிய செயல் அவசியம். அதற்குப் பின் தேவை அமைதியே என்கிறார். அதற்கு மேலும் நடந்தால் அதல பாதாளத்தில் தான் விழ வேண்டி இருக்கும்.

எத்தனையோ செயல்வீரர்கள் இந்த உண்மையை உணரத் தவறி விடுகிறார்கள். முடிவுக்குப் பின்னும் முன்னேறுதல் முன்னேற்றம் அல்ல. அது அழிவுக்கான வழி என்பதை மறந்து விடுகிறார்கள். இதைத் தான் திருவள்ளுவரும் அழகாகக் கூறுகிறார்.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதிஆகி விடும்.
(மரத்தின் உச்சியில் ஏறி நின்றவர் மேலும் ஏற முயலக் கூடாது. அவ்வாறு முயன்றால் கீழே விழுந்து உயிர் துறக்க நேரிடும்).

புலன்களின் மீது வைக்கும் பற்று ஒருவனை எந்த நிலைக்குக் கொண்டு வரும் என்பதை ஏற்கெனவே வேண்டிய அளவு விளக்கி விட்டோம். கர்மபலனில் பற்று வைப்பதும் கவலையில் தான் முடியும் என்பதையும் நாம் பார்த்து விட்டோம். இங்கு ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாகச் சொல்லும் கோட்பாடுகள் மீது வைக்கும் பற்றைப் பார்ப்போம்.

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோட்பாட்டை நம்புகிறோம். அது தான் சரி என்று நினைக்கிறோம். அது தான் சரியாக இருக்குமேயானால் மற்றவை எல்லாம் தவறாகத்தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் நம்மில் வலுப்பெறுகிறது. அதன் பிறகு அது எவ்வளவு தான் உயர்ந்த கோட்பாடாக இருந்தாலும் அது நன்மையை விடத் தீமையே அதிகம் விளைவிக்கிறது.

இன்றைய காலத்தில் மதங்கள் தீமை ஆவதும் இந்த விதத்தில் தான். ஒரு இறைத் தூதுவர் தான் உணர்ந்த பேருண்மைகளால் உலகமும் பலனடைய வேண்டும் என்ற என்ற உன்னதமான நோக்கத்தில் அவற்றைச் சொல்லி விட்டுப் போகிறார். அந்தப் பேருண்மைகளும் பின்பற்றுபவர்களுக்குப் பலன் அளிக்கவே செய்கிறது அது அவர்கள் பற்று வைக்கும் கோட்பாடுகளாக மாறும் வரை.

பற்று என்று ஒன்று எதன் மீது வந்து விட்டாலும் அது நம் சிந்திக்கும் சக்திக்கு ஒரு திரையைப் போட்டு விடுகிறது. பின் நாம் எதைக் காண விரும்புகிறோமோ அதையே காண்கிறோம். எதைக் காண விரும்பவில்லையோ அதைக் காண்பதில்லை. உண்மை பின்னுக்குத் தள்ளப்பட்டு பற்று முன்னுக்குப் பிரதானமாக மாறி விடுகிறது.

கோட்பாடுகள் மீது வைக்கும் பற்றும் அப்படித் தான். நாம் நினைப்பதே சரி, நாம் நம்புவதே உண்மை என்று எண்ண ஆரம்பிக்கும் போது மாறாக நினைக்கும் அடுத்தவர் நினைப்பது தவறு, பொய் என்று தோன்ற ஆரம்பிக்கும். பின் அடுத்தவர்களே பொய்யர்கள், தவறானவர்கள் என்று தோன்ற ஆரம்பிக்கும். பின் நம் கோட்பாடுகளை நிலைநாட்டவும், காப்பாற்றவும், போராடவும் தோன்றும். அதன் பின் நடப்பதெல்லாம் அனர்த்தங்களே. இன்று மதங்கள் பெயரில் நடக்கும் கலவரங்கள் எல்லாம் இப்படி ஆரம்பிப்பவையே.

இதுவும் ஒரு வகையில் சிகரம் தாண்டியும் போகும் முயற்சி தான். ஒரு கோட்பாடு பின்பற்றப்பட்டு அது உங்களுக்கு நல்ல உயர்வைத் தரலாம். அதை நான்கு பேருக்குப் பயன்படலாம் என்று எண்ணி நீங்கள் தேவைப்படுபவர்களுக்குச் சொல்லியும் தரலாம். அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அது பயனடையும் வழி. அமைதியின் வழி. அதற்கு மேல் போய் அந்தக் கோட்பாட்டில் பற்று வைத்து அதன் காவலனாக மாறி விடுவதோ அடுத்தவர் மீது அதைத் திணிக்க முயல்வதோ மேன்மையான யோக நிலைக்கு ஏற்றதல்ல. அது அமைதிக்கும் உகந்ததல்ல.

எனவே தான் ஒரு செயலை முடிந்தவுடன் நிறுத்தச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

பாதை நீளும்..

-         என்.கணேசன்.



Thursday, January 17, 2013

பரம(ன்) ரகசியம் – 27




குருஜி மீண்டும் பேச முடிந்த போது அவர் குரல் மிகவும் தாழ்ந்திருந்தது. “அந்த சிடியை ஆரம்பத்தில் இருந்து போடுஎன்றார். கணபதி-சிவலிங்கம் சம்பந்தப்பட்ட எந்தத் தகவலையும் தவற விடக்கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார்.

அந்த மனிதன் அவர் சொன்னபடியே செய்தான். குருஜி திரையில் ஓடிய காட்சிகளைக் கூர்ந்து பார்க்க ஆரம்பித்தார்....

ணபதி இந்த சில நாட்களில் அந்த சிவலிங்கத்திற்கு ஒரு நண்பனாகி விட்டிருந்தான். அதைப் பார்த்த முதல் கணத்தில் ஒரு இனம் புரியாத சிலிர்ப்பையும், பின் ஒரு ஈர்ப்பையும் சிவலிங்கத்திடம் உணர்ந்திருந்த அவன் பின் அதை நேசிக்க ஆரம்பித்திருந்தான். மிகவும் சக்தி வாய்ந்த சிவலிங்கம் என்று குருஜி சொல்லி  இருந்ததால் ஏற்பட்டிருந்த ஒரு பயம் கலந்த பக்தி இங்கு வந்த பின் பயம் போய் அன்பு கலந்த பக்தியாக மாறி விட்டிருந்தது. அதனை நெருங்கும் போதெல்லாம், அதன் அருகில் இருக்கும் போதெல்லாம் ஒரு பேரமைதியையும், பேரன்பையும் அவன் உணர ஆரம்பித்தான்.

அந்த வேதபாடசாலையில் அவனிடம் அதிகம் யாரும் பேசவில்லை. சிவலிங்கம் வைக்கப்பட்டிருந்த கட்டிடம் ஒரு 18 ஏக்கரில் ஒரு ஒதுக்குப் புறத்தில் இருந்தது மட்டுமல்ல வேதபாடசாலையில் படிக்கும் மாணவர்களும் சொல்லித் தரும் ஆசிரியர்களும் அந்தப்பகுதிக்கு வரத் தடை செய்யப் பட்டிருந்தது. அந்தப் பகுதிக்கு ஏழெட்டு பேர் மட்டுமே வர அனுமதி இருந்தது. அவர்களும் கணபதியிடம் அதிகம் பேசவில்லை. வேளா வேளைக்கு அவனுக்கு நல்ல சுவையான உணவு கொண்டு வந்து தந்தனர். அவனுக்கு பூஜை சாமான்கள் ஏதாவது வேண்டி இருந்தால் வாங்கிக் கொண்டு வந்து தந்தனர். வேறெது தேவைப்பட்டாலும் கேட்கச் சொன்னார்கள். அவனுக்கு எதுவும் தேவைப்படவில்லை.

அந்த வேதபாடசாலையில் சுற்றிலும் நிறைய பூச்செடிகளும், துளசிச் செடிகளும், வில்வமரங்களும் இருந்தன. தினமும் அதிகாலையிலும் மாலையிலும் சென்று பூஜைக்காகத் தானே சென்று பூக்கள், துளசி, வில்வ இலைகள் எல்லாம் கணபதி பறித்துக் கொண்டு வருவான். அப்போது பல மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்படுவார்கள். அடிக்கடி பார்த்துப் பரிச்சயமானதால் அவர்கள் அவனைப் பார்த்து புன்னகைப்பதுண்டு. அதோடு சரி. அவர்களாக அவனிடம் பேச முற்படவில்லை. அவர்கள் எல்லாம் மெத்தப் படித்தவர்கள், அறிவாளிகள் என்றும் தனக்கு அதிகம் எதுவும் தெரியாது என்றும் அவனுக்கு அபிப்பிராயம் இருந்ததாலும் யாரிடமும் அதிகம் பேச வேண்டாம் என்று குருஜி முன்பே சொல்லி இருந்ததாலும் அவனுக்கும் அவர்களிடம் பேசத் தயக்கமாக இருந்தது. எனவே அவன் தனியனாகவே அங்கும் இருந்தான்.

சில சமயங்களில் பகலில் மரங்களின் நிழலில் அமர்ந்து கொண்டு வகுப்பறைகளில் படிக்கும் மாணவர்களின் வேத கோஷத்தைக் கேட்கும் போது அவனுக்குப் புல்லரிக்கும். அர்த்தங்கள் புரியா விட்டாலும் அந்த இசையோடு கூடிய ஸ்பஷ்டமான உச்சரிப்புகள் அவனை ஏதோ ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்வது போல் இருக்கும். மனம் மிக லேசாக அமைதியாக அமர்ந்திருந்து விட்டு வருவான். சிவலிங்கத்தை வணங்கி விட்டு அதன் முன் அதே அமைதியுடன் சிறிது நேரம் உட்கார்வான்.

அமைதி நெடு நேரம் நீடிக்காது. அவனுக்குப் பேச வேண்டும் என்று தோன்றி விடும். அவன் பூஜை செய்து கொண்டிருந்த பிள்ளையாரிடமும் கூட அவன் பூஜை செய்ததை விடப் பேசிய நேரம் அதிகம். இங்கும் அவனால் பேசாமல் இருக்க முடியவில்லை. வெளியாட்கள் யாருமே அவனுக்குப் பேசக் கிடைக்காததால் அவன் போய்ச் சேர்ந்த இரண்டாவது நாளே பேச ஆரம்பித்து விட்டான். மனம் விட்டு அவன் பேசிய போது பிள்ளையாரைப் போலவே இந்த சிவலிங்கமும் கவனமாகக் கேட்பது போல உணர்ந்தான். ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொன்றைப் பேசினான்....

“பிள்ளையாரோட அப்பனே நான் வாங்கற ஐநூறு ரூபாய்க்கு பொருத்தமா பூஜை செய்யறேனான்னு தெரியலை.. ஏதாவது குறையிருந்தால் மன்னிச்சிக்கோ. இங்கே படிக்கற பசங்க எல்லாம் எவ்வளவு அழகாய் வேதம் படிக்கிறாங்க. கேட்கறதுக்கே இனிமையாய் இருக்கு... அவங்கள்ள ஒருத்தர் வந்து உனக்குப் பூஜை செஞ்சா கூட என்னை விட நல்லாவே செய்வாங்கங்கறதுல எனக்கு சந்தேகமே இல்லை... ஏதோ குருஜி என் மேல இரக்கப்பட்டு இந்த வேலையை எனக்குத் தந்திருக்கார்னு நினைக்கறேன். உன் பிள்ளையோட நண்பன் நான்... நானும் உன் பிள்ளை மாதிரி தான் பொறுத்துக்கோ....

அந்த சுப்புணி உன் பிள்ளைக்கு எப்படி பூஜை செய்யறானோ தெரியலை. அவன் என்னை விட மோசம். ஏனோ தானோன்னு செய்வான். வாங்கற எழுபது ரூபாய்ல இருக்கற அக்கறை பூஜைல இல்லை.. இங்கே வர்றதுக்கு முந்தின நாள் அவன் கிட்ட அரை மணி நேரமாவது பிள்ளையாருக்கு ஒழுங்கா பூஜை செய்டா, நான் வர்ற வரைக்கும் நல்லா பார்த்துக்கோடான்னு சொல்லி இருப்பேன். எகத்தாளமா என்னைப் பார்த்துட்டு சிரிக்கிறான் அவன். என்ன சொல்றது? பிறகு சொல்றான். “உலகத்துலயே கடவுளைப் பத்தியே கவலைப்படற ஒரே ஆளு நீ தான்”. எப்படி இருக்கு?.....

கடன் நிறைய இருக்கு கடவுளே. அதைத் தீர்க்க வேண்டி இருக்கு. கல்யாணமாகாத அக்கா ரெண்டு பேர் இருக்காங்க.... அம்மாவுக்கு சாகறதுக்குள்ளே அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து தந்துடணும்னு ஆசை... கவலைப்படாதே அம்மா நான் இருக்கேன்னு தைரியம் சொல்லிப் பார்த்துட்டேன். அம்மா “நீயே குழந்தை மாதிரி.. உன்னைப் பார்த்துக்கறதுக்கே வேறொரு ஆள் வேணும்னு சொல்றா. என்னைப் பார்த்துக்க பிள்ளையார் இருக்கார்னு சொன்னேன். கேட்டுட்டு ஏனோ கண்கலங்கறா. எனக்காகவும் அம்மா நிறைய கவலைப்படறா. இங்கே வரக் கிளம்பினப்ப கூட அவளுக்குப் பயம் தான். “ஏண்டா பூஜை செய்ய ஐநூறு ரூபாய் தர்றதுங்கறது நிஜம் தானா... எதுவும் ஏமாத்திட மாட்டாங்களே...ன்னு கேட்கறா. நான் “ஏமாத்த எங்கிட்டே என்னம்மா இருக்குன்னு கேட்டேன். “எங்கயாவது ஆஸ்பத்திரில அட்மிட் செஞ்சுட்டு கிட்னி ஏதாவது எடுத்துடப் போறாங்கன்னு சொல்லி பயப்படறா...

சொல்லி விட்டு கலகலவென சிரித்தான் கணபதி. கண்களில் நீர் தளும்பும் வரை சிரித்து விட்டு சொன்னான். “ஏழைகளுக்கு தான் பயப்படவும், கவலைப்படவும் எத்தனை விஷயங்க இருக்கு கடவுளே...! அம்மா குருஜி சாதாரண ஆள் இல்லை.... அவர் நினைச்சா ஒருநாள்ல பல கோடி ரூபாய் அவர் காலடில கொட்ட எத்தனையோ பேர் இருக்காங்க.... இந்தக் கணபதி கிட்ட கிட்னி திருடற நிலைமை அவருக்கு இல்லை.... கடவுள் கண்ணைத் திறந்துட்டான்னு சந்தோஷப்படறதை விட்டுட்டு ஏம்மா பயப்படறேன்னு சொன்னேன். அப்படியும் அவளுக்கு பயம் முழுசா போகலை. “உன்னை வெள்ளந்தியாவே வளர்த்துட்டேண்டா. உனக்கு உலகம் இன்னும் சரியா தெரியலைன்னு சொல்லி வருத்தப்பட்டா. நான் சொன்னேன். “எனக்கு உலகம் சரியா தெரியாம இருக்கலாம். ஆனா கடவுளை நல்லா தெரியும்மா. அவர் கை விட மாட்டாரும்மான்னு சொல்லி சமாதானப்படுத்தினேன். சரி தானே கடவுளே...

தினமும் கடவுளிடம் பேச அவனுக்கு ஏதாவது விஷயம் இருந்தது. பூஜை செய்யும் நேரங்களில் சிரத்தையுடனும் பக்தியுடனும் பூஜை செய்தான். மற்ற நேரங்களில் ஸ்தோத்திரம் படித்தான். பேசினான். வெளியே அமர்ந்து வேத கோஷங்கள் கேட்டான். அங்கு வந்து போன ஆட்கள் எல்லாம் மிகவும் எட்ட நின்றே அந்த சிவலிங்கத்தைப் பயத்துடன் பார்ப்பதைக் கவனிக்க நேர்ந்த போது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒருவனிடம் அவன் வாய் விட்டு சொல்லியே விட்டான். “பயப்படாதீங்க. சாமி கிட்ட போய் யாராவது பயப்படுவாங்களா? உங்க அம்மா அப்பா மாதிரி தான் சாமியும்

அந்த ஆள் கணபதியை ஒரு மாதிரி பார்த்தான். அதற்கப்புறம் அவன் வரவே இல்லை. அதன் பின் மற்றவர்களிடம் அவன் எதுவும் சொல்லப் போகவில்லை.

ஒரு நாள் மாலையில் பூக்கள் பறித்து விட்டு ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் கணபதி உட்கார்ந்தான். வெகு தூரத்தில் பாடசாலை மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான்.  சிறிது நேரத்தில் நான்கு அடிகள் தள்ளி இருந்த இன்னொரு சிமெண்ட் பெஞ்சில் யாரோ வந்து அமர்வது போலிருக்கத் திரும்பிப் பார்த்தான்.

வந்து உட்கார்ந்தவர் முதியவராகத் தெரிந்தால் இன்ன வயது தான் என்று ஊகிக்க முடியாத தோற்றத்தில் இருந்தார். காவி வேட்டி கட்டி இருந்தார். தோளில் ஒரு காவித் துண்டு இருந்தது. நீண்ட தாடி வைத்திருந்தார். அவன் இது வரை அவரை அங்கு பார்த்ததில்லை.

அவரும் அவனைத் திரும்பிப் பார்த்தார். அவரது கண்களின் தீட்சண்யம் அவனை ஒரு கணம் கண்களை மூடிக் கொள்ள வைத்தது. கண்கள் தீப்பிழம்பாய் ஜொலிப்பது போல் இருந்தது. அவன் மறுபடியும் கண்களைத் திறந்து பார்த்த போது அவர் சாதாரணமாகவே தெரிந்தார். அவர் கண்களில் ஒருவித கூர்மை இன்னமும் தெரிந்தாலும் அக்னி காணாமல் போயிருந்தது. கணபதி ஏதோ ஒரு பிரமை தான் அப்படிக் காண வைத்ததோ என்று சந்தேகப்பட்டான்.

அவன் அவரைப் பார்த்து சினேகத்துடன் புன்னகைத்தான். அவர் லேசாகத் தலை அசைத்தார். அப்போது தான் அவர் கையில் இருந்த ப்ளாஸ்டிக் பையில் நிறைந்திருந்த அந்த அபூர்வப் பூக்களைப் பார்த்தான். அவன் முதல் முதலில் அந்த சிவலிங்கத்தின் மீது பார்த்த பூக்கள் அவை. அவற்றை வட நாட்டுக்காரர் ஒருவர் கொண்டு வந்து தந்ததாக அவனை அழைத்து வந்தவன் சொன்னது நினைவுக்கு வந்தது.

கணபதி உற்சாகத்துடன் எழுந்து வந்து அவர் அருகில் அமர்ந்தான். “ஓ... நீங்க தானா அந்த வட நாட்டுக்காரர்என்று கேட்க அவர் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தார்.

அவன் புன்னகையுடன் சொன்னான். “இந்தப் பூக்களை வைத்து சொன்னேன். இந்த மாதிரி பூக்கள் இங்கே கிடைக்கிறதில்லை. நீங்க வடநாட்டில இருந்து வர்றீங்களோ? நீங்க உங்க சாமிக்கு கொண்டு வந்திருக்கீங்க போல இருக்கு. எங்க சிவனுக்கும் கொஞ்சம் தர்றீங்களா? பதிலுக்கு இந்தப் பூக்கள்ல கொஞ்சம் எடுத்துக்குங்க

அவர் முகத்தில் சிறிதாய் ஒரு புன்னகைக் கீற்று வந்து போனது. அவர் தலை அசைத்தார். அவன் ஒரு கை நிறைய அவர் பையிலிருந்து அந்தப் பூக்களை எடுத்து விட்டு இன்னொரு கை நிறைய தன்னிடமிருந்த பூக்கூடையில் இருந்த பூக்களை எடுத்து மாற்றிப் போட்டுக் கொண்டான். அவர் பையில் பூக்கள் சிறிது குறைந்திருப்பது போலத் தோன்றவே தன் பூக்கூடையில் இருந்து மறுபடி இரண்டு பூக்களை எடுத்து அவர் ப்ளாஸ்டிக் பையில் போட்டான். பின் திருப்தியுடன் நிமிர்ந்த போது அவர் அவனையே ஒரு சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.  

அவர் அவனைக் கேட்டார். “அந்த சிவலிங்கத்துக்குப் புதுசா பூஜை செய்ய வந்திருக்கிறது நீ தானா?

அவருக்கு அந்த சிவலிங்கத்தைப் பற்றியும் அதற்குப் பூஜை செய்ய அவன் வந்திருப்பது பற்றியும் தெரிந்திருந்ததால் அவர் குருஜியின் ஆளாக இருக்க வேண்டும் என்று கணபதி நினைத்துக் கொண்டான். ஆமாம்என்றான்.

பூஜை எல்லாம் சரியாய் செய்கிறாயா?

தெரியலை. எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு செய்யறேன்

பூஜை செய்யறதை விட அதிகமாய் பேச்சு சத்தம் தான் கேட்குது

கணபதிக்கு திகைப்பாய் இருந்தது. அவன் பேசிக் கொண்டிருக்கும் நேரமாய் பார்த்து அவர் அந்தப் பக்கம் வந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அந்த அளவுக்கா சத்தமாய் பேசுகிறோம் என்று நினைத்த போது வெட்கம் பிடுங்கித் தின்றது.  

வெட்கம் மாறாமல் சொன்னான். “எனக்கு நான் பூஜை செய்யற பிள்ளையார் கிட்டப் பேசிப் பேசிப் பழக்கமாயிடுச்சு. அதான் அப்படி....

அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவனாகத் தொடர்ந்து சொன்னான். “எனக்கும் இங்கே படிக்கிற பசங்க மாதிரி ஸ்பஷ்டமாய் ஸ்தோத்திரங்கள் சொல்லணும்னு ரொம்ப ஆசை. ஆனா நான் அதிகம் படிச்சதில்லை... சம்ஸ்கிருத சுலோகங்களைத் தமிழ்ல எழுதிப் படிக்கலாம்னா உச்சரிப்பு கொஞ்சம் மாறினாலும் அர்த்தம் முழுசா மாறிடும்னு சொல்றாங்க. அதனால பயமாய் இருக்கு...

உச்சரிப்பை விட பாவனை முக்கியம். சொல்ற மனநிலை முக்கியம். அது சரியா இல்லாட்டி உச்சரிப்பு சரியாய் இருந்தாலும் பிரயோஜனம் இல்லை...

“அப்படித் தான் குருஜியும் சொன்னார்... நீங்க குருஜிக்கு ரொம்ப வேண்டப்பட்டவரா?

அந்தக் கேள்விக்கு அந்த முதியவர் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. தூரத்து வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுச் சொன்னார். ம்ம்ம்.... உங்க குருஜியைத் தெரியும்... பல வருஷங்களுக்கு முன்னால் பழக்கம். அவ்வளவு தான்

அப்புறமா அவரைப் பார்க்கலையா?

இல்லை என்பது போல் அவர் தலையசைத்தார். கணபதிக்குப் புரிந்தது. குருஜியைப் பார்க்கப் பல முறை போய் காத்திருந்து அவரும் பலரைப் போல குருஜியைப் பார்க்க முடியாமல் போயிருக்க வேண்டும்.  எல்லாவற்றிற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்...

உனக்கு குருஜின்னா ரொம்பப் பிடிக்குமா?அவர் கேட்டார்.

பிடிக்கும். அவர் எங்கேயாவது ஃப்ரீயா பேசறார்னு தெரிஞ்சா நான் முதல் ஆளா போய் நிப்பேன்... அவர் பேசறது பெரிய பெரிய விஷயங்களாய் தான் இருக்கும். அதனால முக்கால் வாசி எனக்குப் புரியாது. ஆனாலும் கேட்டுகிட்டிருக்கப்ப மனசு லேசாயிடும். கடவுளே என்னோட மரமண்டையில இதுல கொஞ்சமாவது ஏறாதான்னு ஏக்கமாய் இருக்கும்...  ஒரு தடவை இசையும் இறைவனும்கிற தலைப்புல அவர் பேசினதுல கொஞ்சம் புரிஞ்சுது. கடவுளை நெருங்க எல்லாத்தையும் விட இசை வேகமாய் உதவும்னு சொன்னார். நானும் போய் பிள்ளையார் கிட்ட பாட்டாய் பாடினேன். அன்னைக்குக் கனவுல பிள்ளையார் வந்து “கணபதி, பாட்டு மட்டும் வேண்டாம்னு சொன்னார். அதுக்கு முன்னாடியும் பிள்ளையார் என் கனவுல வந்ததில்லை. அப்புறமும் என் கனவுல அவர் வந்ததில்லை.  அப்படின்னா என் பாட்டு எப்படி இருந்திருக்கும்னு நீங்களே புரிஞ்சுக்கலாம்....

சொல்லி விட்டு கணபதி குலுங்கக் குலுங்க சிரித்தான். அவர் அவன் சிரிப்பதையே புன்முறுவலுடன் பார்த்தார்....

இருட்ட ஆரம்பித்தது. அதைக் கவனித்த கணபதி அவசரமாக எழுந்தான். “ஐயோ பூஜை செய்ய நேரமாயிடுச்சு. நான் கிளம்பறேன். நீங்களும் வர்றீங்களா?

“இல்லை நீ போப்பா. எனக்கும் போக நேரமாயிடுச்சு...

கிளம்பும் முன் கேட்டான். “நீங்க இங்கே அடிக்கடி வருவீங்களா?

“எப்பவாவது தான் வருவேன்....

அந்த சமயத்தில் அவன் பூக்கூடையில் இருந்து ஒரு பூ கீழே விழ அதை எடுத்தபடியே அவன் கேட்டான். “குருஜியைப் பார்த்தால் உங்களைப் பத்தி சொல்றேன். யாருன்னு சொல்லட்டும்...

பதில் எதுவும் அவரிடமிருந்து வரவில்லை. அவன் நிமிர்ந்து பார்த்தான். அவர் எதிரில் இல்லை. சுற்றும் முற்றும் பார்த்தான். அவர் எங்குமே தென்படவில்லை.

திகைப்புடன் ஒரு நிமிடம் நின்று பார்த்து விட்டு கணபதி நகர்ந்தான்.

(தொடரும்)

-        -  என்.கணேசன்