சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, July 31, 2019

Monday, July 29, 2019

சத்ரபதி 83


ரண்மனையில் இருக்கும் காலங்களில் படை வீரர்களிடமிருந்து விலகியே இருக்கும் அரசனுக்கு போர்க்காலங்கள் அவர்களுடன் மிக நெருங்கிப் பழகும் அரிய வாய்ப்பை வழங்குகின்றன. அலி ஆதில்ஷா அந்த வாய்ப்பை சிவாஜிக்கு எதிராகத் தானே தலைமை தாங்கிச் சென்ற இந்தப் போர்க்காலத்தில் பெற்றான். மேலும் இந்தப் படையெடுப்பில் ஆரம்பத்திலேயே கிடைத்த வெற்றிகள் அவனையும் அவன் படைவீரர்களையும் உற்சாகப்படுத்தி விட்டிருந்தன. கிருஷ்ணா நதிக்கரையில் சிமுல்கி நகரத்தில் தங்கியிருந்த போது பெருமழைக்காலம் ஆனதால் அவனுக்கு பொழுது போகவும் வழியிருக்கவில்லை. அதனால் அவன் தன் படைவீரர்களுடனும், சிறுபடைத்தலைவர்களுடனும் நெருங்கிப் பழகினான். அவர்களுடன் பல விஷயங்களைப் பற்றிப் பேசினான். பீஜாப்பூர் அரண்மனையில் குறிப்பிட்ட சில ஆலோசகர்களிடம் மட்டுமே பேசி, சில ஆணித்தரமான அபிப்பிராயங்களில் இருந்த அவனுக்குப் பலதரப்புத் தகவல்களைப் பெற முடிந்தது. அலி ஆதில்ஷாவின் முக்கியப் படைத்தலைவர்களுக்கும், ஆலோசகர்களுக்கும் அரசனிடம் சில உண்மைகளைச் சொல்வதில் இருந்த தயக்கங்கள் அந்தப் படைவீரர்களுக்கு இருக்கவில்லை. அரசன் கேட்க விரும்புவதையே சொல்லும் அவசியமோ, உள்நோக்கங்களோ இல்லாததால் படைவீரர்களும், சிறுபடைத்தலைவர்களும் தங்கள் அபிப்பிராயங்களையும், தாங்கள் கண்டவற்றையும் ஒளிவுமறைவில்லாமல் அரசனிடம் தெரிவித்தனர். அந்தத் தகவல்கள் அவன் இது வரை வைத்திருந்த அபிப்பிராயங்களை நிறையவே மாற்றி விட்டன. அப்படி மாறிய அபிப்பிராயங்களில் இரண்டு மனிதர்களைப் பற்றிய அபிப்பிராயங்கள் மிக முக்கியமாக இருந்தன. அந்த இருவரில் முதலாமவன் சிவாஜி. இரண்டாமவன் சிதி ஜோஹர்.

அலி ஆதில்ஷாவிடம் பேசிய படைவீரர்கள் பலரும் சிவாஜியை போர்க்களத்தில் நேரில் கண்டவர்கள். சில மாவல் வீரர்கள் சிவாஜியை இளமைக்காலத்தில் இருந்து அறிந்தவர்கள். அவர்கள் சிவாஜியைப் பற்றிச் சொன்னதெல்லாம் உயர்வாகவும், பிரமிக்க வைப்பதாகவும் இருந்தன. சிவாஜியின் பலம் அவன் படையின் எண்ணிக்கையில் இல்லை; மாறாக நிலவரத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளும் அவனுடைய அசாத்திய அறிவுக் கூர்மையிலும், எல்லாவற்றையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும்  யுக்திகளிலும் இருப்பதை அலி ஆதில்ஷா புரிந்து கொண்டான். போர்க்களத்தில் அவன் சாதாரண தனிமனிதனாகத் தெரிவதில்லை என்றும், தளர்ச்சியே இல்லாத ஒரு சக்திப் பிரவாகமாக இயங்கினான் என்றும் அவர்கள் சொன்னார்கள். சாதகமான சூழ்நிலைகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் அவன் பாதகமான சூழ்நிலைகளையும் ஏதாவது செய்து சாதகமாக மாற்றிக் கொள்ளும் சாமர்த்தியம் படைத்தவன் என்றும் சொன்னார்கள். அவனுடைய வீரர்களும், நண்பர்களும் அவனுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதைக் காண முடிந்ததாகச் சொன்னார்கள். ஒரு சூழ்ச்சிக்காரன் பீஜாப்பூரை எதிர்த்து நின்று அதிர்ஷ்டத்தின் துணையோடு பல பகுதிகளைக் கைப்பற்றியும் வருகிறான் என்ற அளவிலேயே நினைத்திருந்த அலி ஆதில்ஷா சிவாஜியின் பல பரிமாணங்களையும் உணர்ந்து தன் அபிப்பிராயத்தைத் திருத்திக் கொண்டான். சிவாஜி நினைத்ததையும் விட ஆபத்தானவன்…

அதே போல, சிதி ஜோஹர் குறித்தும் படைவீரர்கள் சொன்னது அவன் சிவாஜியோடு சேர்ந்து கொண்டு துரோகம் செய்யவில்லை என்பதைத் தெளிவாக சுல்தானுக்கு உணர்த்தியது. திட்டமிட்டு உற்சாகமாக சிதி ஜோஹர் செயல்பட்டதும், பன்ஹாலா கோட்டையை முற்றுகை இட்ட போது கண்காணிப்பைத் தளர்த்தாமல் இயற்கை சீற்றங்களைப் பொருட்படுத்தாது முன்னால் நின்று போரிட்டதும் அவர்கள் மூலம் தெரிய வந்த போது சிதி ஜோஹரை வஞ்சகனாக எண்ணியது தவறு என்று அலி ஆதில்ஷா உணர்ந்தான். சிதி ஜோஹர் நல்லவன் தான்….

பெருமழைக்காலம் முடிய ஆரம்பிக்கும் வேளையில் கர்நாடகத்தின் சில பகுதிகளில் கிளர்ச்சிகள் ஆரம்பித்திருப்பதாக அலி ஆதில்ஷாவுக்குச் செய்தி வந்து சேர்ந்தது. சாதாரணமான சூழ்நிலைகளில் இது ஷாஹாஜியே சரிப்படுத்தி விட முடிந்த கிளர்ச்சிகளே. ஆனால் ஷாஹாஜி தன் மகன் சாம்பாஜியின் மரணத்திற்குப் பின் நிறையவே தளர்ந்து போயிருந்தார். பழைய வேகமும் ஆரோக்கியமும் அவரிடம் இருக்கவில்லை. அவர் கடைசி மகன் வெங்கோஜி தான் அப்பகுதி நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போதைய கிளர்ச்சிகள் அந்த நிர்வாகப் பகுதியின் எல்லையைத் தாண்டி தொலைவில் இருந்தன. ஷாஹாஜி அளவுக்கு வெங்கோஜி வெற்றிகரமாக அந்தத் தொலைதூரக் கிளர்ச்சிகளை அடக்க முடியும் என்று அலி ஆதில்ஷாவுக்குத் தோன்றவில்லை.

அதனால் அலி ஆதில்ஷா கர்நாடகக் கிளர்ச்சிகளை அடக்க சிதி ஜோஹரை அனுப்ப ஆணையிட்டான். சமீபத்தில்  அவனைப் பற்றி அறிந்த உண்மைகள் அலி ஆதில்ஷாவுக்கு சிதி ஜோஹர் மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டிருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிதி ஜோஹர் இப்போது பழைய விசுவாசத்தில் இருக்கவில்லை. மிக விசுவாசமாக நடந்து கொண்டிருந்த அவனைத் துரோகியாக அலி ஆதில்ஷா குற்றம் சாட்டியதில் ஆத்திரம் அடைந்திருந்த அவன் அலி ஆதில்ஷாவுக்கு எதிரியாகவே மாறிவிட்டிருந்தான்.  சுல்தானுக்குப் பாடம் புகட்ட இது நல்லதொரு வாய்ப்பு என்று எண்ணிய அவன் பீஜாப்பூர் படையோடு கிளர்ச்சி நடக்கும் இடத்துக்குச் சென்று அவர்களை அடக்குவதற்குப் பதிலாக அவர்களை இரகசியமாக ஊக்குவிக்க ஆரம்பித்தான். அதில் அலி ஆதில்ஷா இன்னொரு கசப்பான பாடத்தைக் கற்றான். ’நல்லவர்கள் என்றுமே நல்லவர்களாக இருந்து விடுவதில்லை. கோபத்தால் ஆட்கொள்ளப்படும் போது அவர்களில் பலர் மட்டரகமாகவும் மாறி விடுவதுண்டு…..’

இனி சிவாஜியைக் கவனிப்பதா, இல்லை கர்நாடகக் கிளர்ச்சியாளர்களைக் கவனிப்பதா என்று முடிவெடுக்க முடியாமல் அலி ஆதில்ஷா யோசித்துக் கொண்டிருக்கையில் காவல் வீரன் வந்து சொன்னான். “அரசே தங்களைக் காண வாடி மன்னரிடமிருந்து ஒரு வீரர் வந்திருக்கிறார்”

“உள்ளே அனுப்பு” என்ற ஆதில்ஷா மனதில் வாடி மன்னன் லக்காம் சாவந்த் என்ன தகவல் அனுப்பியிருப்பான் என்ற சிந்தனை மேலோங்கி நின்றது.

உள்ளே வந்த வாடி வீரன் அலி ஆதில்ஷாவை தரை வரை தாழ்ந்து வணங்கினான். அவன் வணங்கி நிமிர்ந்த போது அலி ஆதில்ஷா அவனைக் கூர்ந்து பார்த்து விட்டு வியப்புடன் கேட்டான். “என்ன வாடி மன்னரே. நீங்களே தூதனின் வேடத்தில் வந்திருக்கிறீர்கள்?”

வாடி மன்னன் லக்காம் சாவந்த் “ஆபத்தான காலங்களில் மிக ஜாக்கிரதையாகவும், ரகசியமாகவும் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது அரசே. யாரையும் நம்ப முடியாத நிலை. அது மட்டுமல்ல. பாதுகாப்பாக எங்கேயும் தங்க முடியாத நிலையும் கூட. உங்களிடம் அவசரமாய் பேச வேண்டியிருந்தது. ஆனால் நான் வருவது தெரிந்தாலும் ஆபத்து சூழக்கூடும் என்பதால் தங்களைச் சந்திக்க மாறு வேடத்தில் வர வேண்டியதாகப் போயிற்று”

அலி ஆதில்ஷா எதிரே இருந்த ஆசனத்தில் அமரக் கைகாட்டி விட்டு குழப்பத்துடன் கேட்டான். “புதிர் போடாமல் பேசுங்கள் வாடி மன்னரே. யாரைப் பார்த்து நீங்கள் இப்படி பயப்படுகிறீர்கள்?”

லக்காம் சாவந்த் சொன்னான். “அரசே அகண்ட பாரதத்தில் இப்போது அனைவரையும் பயமுறுத்தும் சக்தி இருவருக்குத் தான் இருக்கிறது. முதலாமவர் முகலாயச் சக்கரவர்த்தி ஔரங்கசீப். இறையருளால் அவர் தொலைவில் இருக்கிறார் என்பதால் இப்போது என்னைப் பயமுறுத்துபவர் அவரல்ல. இன்னொருவர் தான்”

“யார் அந்த இன்னொருவர்?” அலி ஆதில்ஷா குழப்பம் தீராமல் கேட்டான்.
“சிவாஜி” என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி விட்டு லக்காம் சாவந்த் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

ஔரங்கசீப்புக்கு இணையாக சிவாஜி உயர்த்தி பேசப்படுவதில் மனம் கசந்த அலி ஆதில்ஷா எதுவும் சொல்லாமல் கேள்விக்குறியோடு லக்காம் சாவந்தைப் பார்த்தான்.

லக்காம் சாவந்த் சொன்னான். “சிவாஜியின் நண்பன் பாஜி பசல்கர் எங்கள் படையுடன் போரிட்டு இறந்து போனதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்”

அலி ஆதில்ஷா அறிவேன் என்ற வகையில் தலையசைத்தான்.

லக்காம் சாவந்த் சொன்னான். “உங்களுக்கு எறிகுண்டுகள் வினியோகம் செய்த கிழக்கிந்தியக் கம்பெனி தொழிற்சாலை சூறையாடப்பட்டதும் அந்த அதிகாரிகள் சிறைப்படுத்தப்பட்டதும் கூட நீங்கள் அறிந்திருப்பீர்கள்”

அலி ஆதில்ஷா அதற்கும் தலையசைத்தான். லக்காம் சாவந்த் தொடர்ந்து கேட்டான். “உங்களுக்கு ஆதரவளித்த காரணத்திற்காகவும், பாஜி பசல்கரின் மரணத்திற்காகவும் என்னைக் கொன்று விட சிவாஜி துடித்துக் கொண்டிருக்கிறான் என்பதையும், என்னைத் தேடிக் கொண்டிருக்கிறான் என்பதையும் அறிவீர்களா அரசே”

அலி ஆதில்ஷா அதை அறியவில்லை என்ற வகையில் தலையசைத்தான்.

லக்காம் சாவந்த் விரக்தியுடன் சொன்னான். “அவன் கொல்லத்துடிப்பது என்னை என்பதால் நீங்கள் அறிய வேண்டிய அவசியமில்லை அரசே. ஆனால் அவரவர் உயிரில் அவரவர் அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது”

அலி ஆதில்ஷா வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவனாகச் சொன்னான். “வாடி மன்னரே. ஒரு அரசனுக்கு பயம் சோபை தருவதில்லை. சிவாஜி உங்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் எதிரி தான். அவனுக்கு எதிராகப் போராடி பல தோல்விகளை சந்தித்திருந்தாலும், சமீபத்தில் சில வெற்றிகளையும் கண்டவன் நான். அவனை ஒழித்துக்கட்டாமல் நான் ஓயப் போவதில்லை. பீஜாப்பூருக்குத் திரும்பி விடாமல் நான் இங்கு தங்கி இருப்பதே அந்த நோக்கத்திற்காகத் தான்….”

லாக்கம் சாவந்த் சொன்னான். “அரசே. உங்கள் நோக்கம் வெற்றி பெறட்டும். ஆனால் அதில் கால தாமதம் வேண்டாம். உடலில் விஷம் ஏறிக் கொண்டிருக்கையில் அதை முறிக்க உடனடி முயற்சிகள் எடுக்கா விட்டால் அது ஒருவனின் உயிரைப் பறித்து விடும். சிவாஜி அப்படி பரந்து விரிந்து கொண்டிருக்கும் விஷம் என்பதைத் தயவு செய்து நினைவில் வையுங்கள்…”

அலி ஆதில்ஷா கேட்டான். “இந்த அறிவுரை சொல்ல மட்டுமே நீங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள் என்று நான் நினைக்கவில்லை. வந்த காரணத்தைச் சொல்லுங்கள் வாடி மன்னரே”

லாக்கம் சாவந்த் சொன்னான். “சிவாஜியை மண்ணைக் கவ்வ வைக்கும் ஒரு அருமையான திட்டத்தோடு நான் வந்திருக்கிறேன் அரசே”


அலி ஆதில்ஷா நிமிர்ந்து உட்கார்ந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, July 25, 2019

இல்லுமினாட்டி 6


டேனியல் என்ற போதை மனிதனை அழைத்துப் போக மருத்துவமனைக்கு வெளியே யாரும் காத்துக் கொண்டிருக்க வழியே இல்லை. அவனுடைய நண்பர்களோ, வேண்டப்பட்டவர்களோ இருந்திருந்தால் அவர்கள் போதையில் மயங்கி விழுந்திருந்த அவனை போலீசார் தூக்கிக் கொண்டு போய் மருத்துவமனையில் போடும் வரை காத்திருந்திருக்க மாட்டார்கள். ஒருவேளை அவன் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட பின் அறிய நேர்ந்திருந்தால் உடனே மருத்துவமனைக்கே சென்று அவனைப் பார்த்திருப்பார்கள். தொலைக்காட்சியிலும், பத்திரிக்கைகளிலும் அறிவிப்பு வெளியிட்ட பிறகும் அவனைப் பார்க்கப் போகாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

அவன் மயங்கி சாகும் நிலையில் விழுந்து கிடந்த போதும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின் அறிவிப்புகள் வெளியிட்டபின்னும் அவனைப் பார்க்க வராதவர்கள், அவன் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அந்த  அதிகாலை 3.48 மணி நேரத்தில், கடுங்குளிரில் அவனுக்காகத் தயார்நிலையில் காத்திருந்திருப்பார்கள் என்பது நம்பக்கூடியதாக இல்லை.

ஜான் ஸ்மித் சொன்னார். “அவன் வெளியே போனவுடன் என்ன நடந்தது, ஏன் அதன் பிறகு யாரும் அவனைப் பார்க்க முடியவில்லை என்பது உடனே தெரிந்தாக வேண்டும். இது மிக முக்கியம்”

“ஆஸ்பத்திரிக்குப் பக்கத்துக் கட்டிடங்களில் கூட கண்காணிப்புக் காமிரா பொருத்தப்பட்டிருக்கின்றன. அதையெல்லாம் கூடப் பார்த்தால் என்ன நடந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது சிரமமல்ல சார்…”

“உடனே அதைச் செய்யுங்கள்”


றுநாள் காலை பத்தரை மணிக்கு அந்தப் போலீஸ் உயரதிகாரி ஜான் ஸ்மித் வீட்டுக்கு நேரடியாகவே வந்தார். அந்த மருத்துவமனைக்கு பக்கத்துக் கட்டிடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் காமிராக்களிலிருந்தும், தெருமுனைச் சந்திப்பில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் காமிராவிலிருந்தும் எடுத்த வீடியோக்களை இணைத்துக் கொண்டு வந்திருந்தார்.

மருத்துவமனை இருந்த தெருமுனைச் சந்திப்பில் இருந்த  வீடியோவில் அதிகாலை 3.30க்கு ஒரு கருப்பு நிறக்கார் அந்தத் தெருவில் நுழைந்தது தெரிந்தது. மருத்துவமனையிலிருந்து இரண்டு கட்டிடங்கள் தள்ளி எதிர்ப்புறம் நின்றது இன்னொரு வீடியோவில் தெரிந்தது. அப்போது மணி 3.31. அந்தக் காரிலிருந்து யாரும் இறங்கவில்லை. காரின் கதவுக் கண்ணாடிகள் கூட இறக்கப்படவில்லை. உள்ளே யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. 3.48 லிருந்து 3.49 வரை டேனியல் நிதானமாக நடந்து சென்று, கார்க்கதவைத் திறப்பதும் காரில் ஏறுவதும் இரண்டு கட்டிடங்களிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோக்களில் தெரிந்தன. கதவு திறக்கப்பட்டு மூடப்படுவதற்கு முன்னான சில வினாடிகளில் கூட காரின் உள்ளே இருப்பது யாரென்று தெரியவில்லை. 3.50க்கு கார் மருத்துவமனையைக் கடந்து சென்றது.

ஜான் ஸ்மித் திகைப்போடு வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுப் பின் மெல்லக் கேட்டார். “இந்த வீடியோக்களில் காரின் ரெஜிஸ்டர்டு நம்பர் தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்க ஏதாவது வழி இருக்கிறதா?”

அந்தப் போலீஸ் உயரதிகாரி சொன்னார். “அதைக் கண்டுபிடிப்பது பெரிய கஷ்டமான காரியமில்லை. சுற்று வட்டாரத்தில் இருக்கும் காமிராக்களில் ஏதாவது ஒன்றில் பார்க்க முடியலாம். ஆனால் காரோட்டி வந்திருக்கும் ஆளின் உத்தேசம் தன்னைப் பற்றிய ரகசியத்தைக் காப்பது என்றிருக்குமானால் போலி நம்பர் ப்ளேட்டை மாட்டிக் கொண்டு வந்திருக்க வாய்ப்புகள் அதிகம்…”  

ஜான் ஸ்மித் சிறிது நேரம் மௌனமாக யோசித்து விட்டுச் சொன்னார். ”டேனியல் ஃபிராங்பர்ட்டில் இருக்கும் அவன் நண்பர்களிடம் சென்றாலோ தொடர்பு கொண்டாலோ, வேறெங்கேயாவது தென்பட்டாலோ எனக்கு உடனடியாகத் தெரிவியுங்கள்.”

“அதற்கு நான் ஏற்பாடு செய்து விட்டுத் தான் வந்திருக்கிறேன் சார்”

“நன்றி. எனக்கு இன்னொரு உதவியும் தேவைப்படுகிறது….” என்று ஆரம்பித்தவர் மருத்துவமனையில் கேட்ட கிதார் இசையைப் பற்றிச் சொன்னார். அது ஆவியை வரவழைக்கும் இசையாக அந்த இசைப்பிரியர் சொன்னதை அவர் தெரிவிக்கவில்லை. அது தேவையில்லை என்று நினைத்தார். ”அந்த கிதார் இசையை வாசித்தது யார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் எல்லோரும் அதைக் கேட்டிருக்கிறார்கள். எனக்கேனோ அந்த கிதார் வாசித்த ஆளுக்கும் டேனியலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கலாம் என்று உள்ளுணர்வு சொல்கிறது. அதை அந்த ஆஸ்பத்திரியில் வாசித்த ஆள் யார் என்று  கண்டுபிடிக்க முடியுமா?”

“கண்டிப்பாக முயற்சி செய்கிறோம் சார்” என்ற அந்தப் போலீஸ் உயரதிகாரி வணக்கம் தெரிவித்து விட்டுக் கிளம்பினார்.

அவர் போன பிறகு ஜான் ஸ்மித் கண்களை மூடிக் கொண்டு யோசித்தார். நடந்திருப்பது எதுவும் இயல்பாகத் தெரியவில்லை. டேனியலை அழைத்துச் செல்ல யாரோ அந்த அகால நேரத்தில் வந்திருப்பது ஆச்சரியம் என்றால், அவன் வந்த சிறிது நேரத்தில் டேனியல் மருத்துவமனையை விட்டு வெளியேறியது அதைவிடப் பெரிய ஆச்சரியம். காரில் வந்திருந்தது ஒருவரா, பலரா என்று தெரியவில்லை. அவர்கள் அலைபேசியில் அவனை அழைத்திருக்க வழியில்லை. ஏனென்றால் டேனியலிடம் அலைபேசி உட்பட எதுவுமே இருக்கவில்லை. ஆனாலும் கார் வந்திருப்பது தெரிந்தது போல டேனியல் கிளம்பியிருக்கிறான். இது டேனியலின் இயல்புக்கோ நிலைமைக்கோ பொருத்தமாக இருப்பதாகத் தெரியவில்லை. டேனியலை அழைத்துச் செல்ல வந்த ஆளே அல்லது ஆட்களே கூட அந்தக் கிதார் வாசிப்புக்கும் காரணமாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது…. மேலும் அந்த மருத்துவமனையில் நடந்திருப்பது எல்லாவற்றிலும் நேற்றைய இல்லுமினாட்டிக் கூட்டத்தில் இறந்து போன அசாதாரணமான மனிதனின் அடையாளமே தெரிவது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. யோசிக்க யோசிக்க அந்தக் குளிரிலும் அவருக்கு வியர்த்தது. நடந்திருப்பதை இல்லுமினாட்டியின் தலைமைக்குத் தெரிவித்தே ஆக வேண்டும்…

இல்லுமினாட்டியின் தலைவர் எர்னெஸ்டோவின் உதவியாளருக்கு ஜான் ஸ்மித் போன் செய்தார். எர்னெஸ்டோவும், இல்லுமினாட்டியின் உபதலைவரும் வாஷிங்டன் போயிருப்பதாகவும், நாளை தான் இருவரும் திரும்பி வருவார்கள் என்றும் அந்த உதவியாளர் சொன்னார்.

எர்னெஸ்டோ வரும் வரை காத்திருப்பதைத் தவிர ஜான் ஸ்மித்துக்கு வேறு வழியில்லை….


றுநாள் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் எக்ஸைச் சேர்த்த போலீஸ்காரர்களில் ஒருவருக்குப் போன் செய்து விசாரித்தார். “அந்த எக்ஸ் பற்றி எதாவது தகவல் தெரிந்ததா?”

“அந்த எக்ஸின் பெயர் டேனியல் என்றும், ஃபிராங்பர்ட்டில் வசிப்பவன் என்றும் நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். அவன் ஒரு ஸ்பெஷலான ஆளாய் இருப்பான் போலத் தெரிகிறது. அவனைக் கண்டுபிடிக்க மேலிடத்தில் எங்கள் டிபார்ட்மெண்டையே முடுக்கி விட்டு இருக்கிறார்கள்….”

தலைமை மருத்துவருக்கு ஆச்சரியமாக இருந்தது. “ஏன் அவன் பெயரில் பெரிய கேஸ் ஏதாவது இருக்கிறதா என்ன?”

”எங்களுக்குத் தெரிந்த வரை அப்படித் தெரியவில்லை. சின்னக் கேஸ்கள் இருக்கலாம். ஆனால் அவனோடு பெரிய ஆள் யாராவது சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்….”

அவன் பெயர் தெரிந்த பிறகும் தலைமை மருத்துவருக்கு அந்தப் பெயர் அன்னியமாகவே பட்டது. அவர் மனம் இன்னும் அவனை எக்ஸாகவே நினைத்தது. இந்த எக்ஸ் விஷயத்தில் எல்லாமே குழப்பமாகவே இருக்கிறதே. அவன் எந்தப் பெரிய ஆளோடு சம்பந்தப்பட்டிருப்பான் என்று யோசித்தபடி இருந்த போது போலீஸ் உயரதிகாரி ஒருவர் மிடுக்குடன் மருத்துவமனைக்கு வந்தார். அவர் எல்லோரையும் கேட்ட கேள்விகள் முந்தாநாள் மருத்துவமனையில் கேட்ட கிதார் இசையைப் பற்றியதாக இருந்தன.

தலைமை மருத்துவரை அதுவும் ஆச்சரியப்படுத்தியது. அந்தக் கிதார் இசை அவரிடம் எழுப்பிய ஆர்வத்தை போலீஸாரிடமும்  ஏற்படுத்தி இருக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அப்படியானால் அதிலும் ஏதோ இருக்கிறது. ஏன் இந்த மருத்துவமனையில் என்னென்னவோ நடக்கிறது. எல்லாமே அமானுஷ்யமாக எல்லாம் நடக்கிறது…..  

அந்த உயர் போலீஸ் அதிகாரி ஒரு மணி நேரம் தான் அந்த மருத்துவமனையில் இருந்தார். அவர் தலைமை மருத்துவர் உட்பட பலரிடம் அந்த இசை கேட்ட விதம், இடம் பற்றி கேள்விகள் கேட்டார். அவர்கள் சொன்னதை எல்லாம் கூர்ந்து கவனித்துக் கேட்டுக் கொண்ட அவர் பிறகு போய் விட்டார்.




ந்தப் போலீஸ் உயரதிகாரி அடுத்த ஐந்தாவது நிமிடம் ஜான் ஸ்மித்துக்குப் போன் செய்து சொன்னார். “சார். உண்மையில் யாரும் அந்தக் கிதார் இசையை அந்த ஆஸ்பத்திரிக்குள் வாசித்த மாதிரி தெரியவில்லை. ரிகார்ட் செய்த இசையை யாரோ ஆஸ்பத்திரிக்குள் ஒலிக்க விட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. இப்போது சவுண்ட் டெக்னாலஜி நிறைய முன்னேறி இருக்கிறது. அது எங்கிருந்து கேட்கிறது என்று தெரியாதபடி மறைத்து ஒட்டு மொத்தமாகக் கேட்பது போல் ஒலிக்க வைக்க முடியும். அது அங்கே நடந்திருக்க வாய்ப்பு அதிகம்…”

ஜான் ஸ்மித் திகைத்தார். அப்படியானால் டேனியலை அழைத்துப் போக வந்தது மட்டுமல்லாமல் முந்தின நாளே வந்து அந்த மருத்துவ மனையில் திட்டமிட்டு நுழைந்து யாரோ அந்தக் கிதார் இசையை ஒலிக்கவும் விட்டிருக்கிறார்கள். யாரது?

(தொடரும்)
என்.கணேசன்

Wednesday, July 24, 2019

இழப்பில்லாத உயர்பெரும் நிலை!



னிதன் தன் வாழ்க்கையில் அமைதியையும் ஆனந்தத்தையுமே தேடுகிறான். அதற்கான முனைப்பிலேயே வாழ்நாள் முழுவதும் இருக்கிறான். அவன் தேடும் அமைதியும் ஆனந்தமும் ஓரளவிலாவது சில சமயங்களில் கிடைக்கவும் செய்கிறது. ஆனால் கிடைத்தது எத்தனை காலம் நீடிக்கிறது? நீர்க்குமிழியில் தெரியும் வர்ண ஜாலங்கள் எப்படி நீடித்து நிற்காதோ அப்படியே அவனுடைய மகிழ்ச்சியும் நீடித்து நிற்பதில்லை. கண நேரத்தில் தாறுமாறாக ஏதாவது நடந்து காணாமல் போகிறது. கிடைத்து இழப்பது கூடுதல் கொடுமை. மகிழ்ச்சி கிடைப்பதற்கு முன்பிருந்ததை விட அதிக துக்கத்தில் அவன் ஆழ்ந்து போக நேரிடுகிறது.

ஓரளவு மகிழ்ச்சி கிடைப்பதைத் தக்க வைப்பதே பெரும்பாடு என்கிற நிலையில் கிடந்து உழலும் மனிதனுக்கு பேரானந்தமும், பேரமைதியும் இருக்கும் ஒரு உன்னத நிலைமை கிடைக்க வழி இருக்கிறது என்றும் கிடைத்ததை அவன் பிறகு என்றென்றைக்கும் இழக்க வேண்டியதில்லை என்றும் பகவத் கீதை சொல்கிறது. அதற்கு என்ன வழி? பிறவிப் பெருங்கடலுக்குத் திரும்பி வரவேண்டியிருக்காதபடி இறைவனுடைய பரமபதத்தைச் சென்றடைவது தான்.

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:

எதை அடைந்த பிறகு மனிதர்கள் சம்சாரத்திற்குத் திரும்புவதில்லையோ, அந்த சுயப்பிரகாசமான பரமபதத்திற்கு சூரியன் ஒளிதருவதில்லை; சந்திரன் ஒளிதருவதில்லை; அக்னி தேவனும் ஒளிதருவதில்லை. அது என்னுடைய உயர்ந்த ஸ்தானமான பரமபதமாகும்.

அந்த உயர்ந்த நிலை தன்னிறைவானது. அதற்கு வெளியிலிருந்து எந்த உதவியும் தேவையில்லை. ஒளிமயமான அந்த இடத்திற்கு சூரியன் சந்திரன் அக்னி முதலானவர்கள் அவசியமில்லை. அந்தப் பாதுகாப்பான இடத்தைச் சென்றடைந்த பின் திரும்பி கீழ் இழுக்கப்படுவோம் என்ற பயமும் தேவையில்லை. 

சரி இந்தப் பிறவிப் பெருங்கடலைத் தாண்டி அந்த உயர்நிலையை எப்படி அடைவது? இப்போது மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய நிலை எப்படி இருக்கிறது? இந்த நிலையிலிருந்து அந்த உயர்நிலைக்கு எப்படிப் போய்ச் சேர்வது என்ற கேள்விகள் எழுகிறதல்லவா? அதற்கு அடுத்த சுலோகங்களில் ஸ்ரீகிருஷ்ணர் பதில் சொல்கிறார்:

இவ்வுடலில் என்றுமுள்ள ஜீவாத்மா எனது அம்சமே. அதுவே சரீரமாகிய பிரகிருதியில் உள்ள மனம் மற்றும் ஐந்து புலன்களை இங்குமங்கும் இழுத்துச் செல்கிறது.

காற்று மலர்களிலிருந்து வாசனையை எப்படி எடுத்துச் செல்கிறதோ அப்படியே உடலை ஆளும் ஜீவாத்மாவும் அந்த உடலில் இருந்து கிளம்பி இன்னொரு உடலை அடையும் போது மனதோடு கூடிய புலன்களை எடுத்துச் செல்கிறது.

அங்கு இந்த ஜீவாத்மா காது, கண், சருமம், நாக்கு, மூக்கு, மனம் சார்ந்து கொண்டு அவற்றின் உதவியுடன் தான் புலன்நுகர்ப் பொருள்களை அனுபவிக்கிறது.

உடலை விட்டுச் செல்லும் போதும், உடலில் இருக்கும் போதும், போகங்களை அனுபவிக்கும் போதும் இந்த ஜீவனை அறிவிலிகள் அறிவதில்லை. ஞானக்கண் பெற்றவர்கள் தான் அதைக் காண்பார்கள்.
யோகிகளும் முயற்சி செய்தே தம் உடலில் உறைந்திருக்கும் ஆத்மாவை அறிகிறார்கள். மனம் பக்குவமடையாத அஞ்ஞானிகளோ முயன்றாலும் கூட இந்த ஆத்மாவை அறிவதில்லை.

அழியும் உடலில் அழியாமல் குடிகொண்டிருப்பது ஜீவாத்மா. அது பரமாத்மாவின் ஒரு அம்சமே. அது புலன்களோடு, மனமும் சேர்ந்து அரங்கேற்றும் நாடகத்தில் தன்னை மறந்து பாத்திரதாரியாக இருக்கிறது. அதன் சுகதுக்கங்களை அனுபவிக்கிறது. ஒரு பிறவி முடிந்து இன்னொரு பிறவிக்குள் புகும் போதும் பழைய கணக்கை, பழைய நினைவுகளைச் சுமந்து கொண்டே போகிறது. மறுபடியும் புதிய உடலில், புதிய சூழலில் இன்னொரு நாடகத்தில் வேறொரு பாத்திரதாரியாக மாறுகிறது. இந்தப் புதிய புதிய உடல்களில் புதிய புதிய நாடகங்களில் வேடங்களைத் தானாகவே பாவித்து மதிமயங்கும் ஜீவாத்மா அழிவில்லாத பரமாத்மாவின் ஒரு அம்சமே தான் என்பதைப் பக்குவமடையாத வரை உணர்வதில்லை.

சொல்லப் போனால் அமைதியும் ஆனந்தமும் ஆத்மாவின் இயல்புநிலையே. அந்த ஈர்ப்பு தான் அவற்றை மறுபடி பெற்றுக் கொள்ள மனிதனைத் தூண்டுகிறது. அதை நிரந்தரமாக மீட்டெடுக்க அவனுக்கு ஒரே வழி தான் இருக்கிறது. அந்த இறைவனின் பரமபதமே. ஆனால் மனிதர்கள் அந்த ராஜபாட்டையை விட்டு விட்டு குறுக்கு வழிகளிலும் சந்து பொந்துகளிலும் போய் அடையப் பார்க்கிறார்கள்.

பரமாத்மாவின் அம்சமாகத் தன்னைச் சரியாக ஜீவாத்மா உணராத வரை மனம் பக்குவமடைவதில்லை. மனம் பக்குவமடையாத வரை ஐம்புலன்களால் கிடைக்கும் இன்பமே பெரிதென மயங்கிக் கிடக்கும். ஞானம் தன்னை அறிதலில் இருக்கிறது. தன்னை அறியும் போது என்ன செய்ய வேண்டும் என்ற புரிதல் நிகழ்கிறது. என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக அறிந்த பின் மனமும் ஒத்துழைக்க ஆரம்பித்து முறையான முயற்சிகள் சாத்தியமாகிறது. முறையான முயற்சிகளின் முடிவிலேயே பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடிகிறது.    

ஸ்ரீகிருஷ்ணர் சொல்லியிருப்பதில் இரண்டு மிக முக்கியமான தேவைகளாக இருக்கின்றன. ஒன்று தெளிவடைந்த மனம் இன்னொன்று முயற்சி. இரண்டில் ஒன்று இல்லா விட்டாலும் ஆத்மஞானமும், அதன் மூலம் கிடைக்கக்கூடிய நிலைத்த ஆனந்தமும் ஒருவன் அடைய முடியாது. இதற்கு எத்தனையோ நிகழ்கால உதாரணங்களை நாம் நம்மைச் சுற்றியே பார்க்கலாம்.

சிலர் நிறைய படித்திருப்பார்கள். நிறைய அறிந்திருப்பார்கள். உதாரணங்களுடன் பேருண்மைகளைச் சொல்லக்கூடிய அளவு அறிவு முன்னேற்றமும் இருக்கும். ஆனால் அவர்கள் நடந்து கொள்வதும், வாழும் முறையும் அவர்கள் அறிந்ததற்குப் பொருத்தமில்லாததாக இருக்கும். காரணம் அவர்களிடம் அறிந்ததை நடைமுறை வாழ்க்கைக்குக் கொண்டு வரும் முயற்சியிருக்காது. வேறு சிலர் ஒன்றன் பின் ஒன்றாகப் பல முயற்சிகளில் தீவிரமாக இருப்பார்கள். இன்று யோகா பயிற்சிக்குப் போவதாகச் சொல்வார்கள். இன்னொரு நாள் விபாசனா தியானம் செய்வதாகச் சொல்வார்கள். பிறிதொரு சமயம் ஏதோ ஒரு புதிய இயக்கத்தில் சேர்ந்திருப்பதாகச் சொல்வார்கள். மாறி மாறி ஏதாவது செய்து கொண்டே இருந்தாலும் கூட அவர்கள் முயற்சிகள் தோல்வியிலேயே  முடியும். காரணம் மனதில் தெளிவோ, பக்குவமோ இல்லாதிருப்பதாகத் தான் இருக்கும்.

பாதை நீளும்….

என்.கணேசன்