சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, December 25, 2007

படகு புகட்டிய பாடம்


(கோபத்தைக் களைவது எப்படி?)

லின் சீ (Lin Chi) என்ற பிரபல ஜென் துறவிக்குச் சிறு வயதில் இருந்தே படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு. அவரிடம் ஒரு சிறு படகு இருந்தது. அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் இருப்பார். பல சமயங்களில் கண்களை மூடித் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான்.

ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது.

தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. யாரோ அஜாக்கிரதையாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார். பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது.

"என் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத் தான் நான் ஞானம் பெற்றேன். அந்தப் படகு எனக்கு குருவாக இருந்தது. இப்போதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ, மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது" என்று எனக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்வது எனக்குச் சுலபமாகி விட்டது" என்று அவர் பிற்காலத்தில் எப்போதும் கூறுவார்.

ஜென் தத்துவங்கள் ரத்தினச் சுருக்கமானவை; கருத்தாழம் மிக்கவை. இந்தக் காலிப் படகின் பாடமும் நன்றாகச் சிந்தித்தால் நமக்கு விளங்கும்.

பொதுவாக நாம் நமக்கு ஏற்படும் கோபத்தை இரண்டு விதங்களில் கையாள்கிறோம். ஒன்று, காரணமாகத் தோன்றும் மனிதர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறோம். அல்லது கோபத்தை அடக்கிக் கொண்டு விழுங்கிக் கொள்கிறோம்.

பிறர் மீது கோபித்து, அனல் கக்கி ஓயும் போது பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை. குற்ற உணர்வு, பச்சாதாபம், தேவை இருந்திருக்கவில்லை என்கிற மறுபரிசீலனை என்று பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்படுகிறோம். இது ஒரு புறமிருக்க இதன் விளைவாக அந்தப்பக்கமும் கோபமும், வெறுப்பும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தால் விளைவுகள் விபரீதமே.

ஏற்படும் கோபத்தை அடக்கி நமக்குள்ளே விழுங்கிக் கொண்டாலும் கோபம் மறைவதில்லை. உள்ளே சேர்த்து வைத்த கோபம் என்றாவது எப்போதாவது வெளிப்பட்டே தீரும். அது இயற்கை.

அது நம் கோபத்திற்குக் காரணமான நபர் மீதிருக்கலாம். அல்லது பாவப்பட்ட வேறு யார் மீதாகவோ இருக்கலாம். விழுங்கியது வெளிப்படவே செய்யும். நமக்குள்ளே தங்கி இருந்ததன் வாடகையாக அல்சர் முதலான நோய்களைத் தந்து விட்டே கோபம் நம்மை விட்டு அகலும்.

ஆக இந்த இரு வழி முறைகளும் நம்மைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்கின்றன. பின் என்ன செய்வது என்ற கேள்விக்குப் பதில் தான் காலிப்படகுப் பாடம்.

கோபமே அவசியமில்லை, கோபத்திற்கு யாரும் காரணமில்லை என்று உணர்ந்து அந்தக் கணத்திலேயே தெளிவடைவது தான் கோபத்திற்கு மருந்து.

ஒரு நண்பர் வந்து நம்மைக் கிண்டல் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலும் நாம் சிரித்து பதிலுக்கு நாமும் ஏதாவது கிண்டலாக சொல்வோம். ஆனால் ஒரு நாள் நாம் பல பிரச்னைகளால் மனநிலை சரியில்லாமல் இருந்தால் அன்று அந்த நண்பரின் கிண்டல் நம்முள் ஒரு எரிமலையையே ஏற்படுத்தக்கூடும். அவரது வார்த்தைகளுக்கு அந்த நேரம் ஒரு தனி அர்த்தம் தெரியும். மனம் வீணாகப் புண்படும். கடுகடுப்புக்கு முகமும், கடுஞ்சொற்களுக்கு நாக்கும் தயாராகும்.

இந்தச் சிறிய தினசரி அனுபவம் ஒரு பேருண்மைஅயை வெளிப்படுத்துவதை நாம் சிந்தித்தால் உணரலாம். அடுத்தவரது சொற்களோ, செயல்களோ மட்டுமே கோபத்திற்குக் காரணம் என்றால் அவற்றை எப்போதும் கோபமாகத் தான் எதிர்கொள்வோம். ஆனால் உண்மையில் கோபமும், கோபமின்மையும் நம் மனப்பான்மையையும், மனநிலையையும் பொறுத்தே அமைவதை நம் தினசரி வாழ்விலேயே பார்க்கிறோம்.

வறண்ட கிணற்றில் விடப்படும் வாளி வெற்று வாளியாகவே திரும்பும். நீருள்ள கிணற்றில் விடப்படும் வாளியே நீருடன் திரும்பும். உள்ளே உள்ளதை மட்டுமே வாளியால் வெளியே கொண்டு வர முடியும். வாளியால் நீரை உருவாக்க முடியாது.

அடுத்தவர்கள் வாளியைப் போன்றவர்கள். அவர்களது சொற்களும் செயல்களும் நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே இருப்பதைத் தான். அது கோபமாகட்டும், வெறுப்பாகட்டும், அன்பாகட்டும், நல்லதாகட்டும், தீயதாகட்டும்.

அவர்கள் நம்மில் வெளிக் கொணர்வது நாம் நம் ஆழ்மனதில் சேர்த்து வைத்திருப்பதையே. அந்த விதத்தில் அவர்கள் நமக்கு உதவியே செய்கிறார்கள். நமக்குள் என்ன உள்ளது என்பதை அவர்கள் நமக்கு உனர்த்துகிறார்கள்.

கம்ப்யூட்டர்கள் பதிவு செய்யப்பட்ட ப்ரோகிராம்கள்படி இயங்குகின்றன. அதுபோல நாமும் நம் ஆழ்மனதில் பதிவு செய்து கொண்டுள்ள ப்ரோகிராம்கள் படியே உந்தப்பட்டு செயல்படுகிறோம். அதில் எத்தனையோ பதிவுகள் தவறனவை என்பதை உணராமலேயே பலரும் வாழ்ந்து முடித்து விடுகிறோம்.

இதெல்லாம் கோபப்படத் தக்கவை, சொற்களாலோ, செயல்களாலோ தகுந்த பதிலடி தரத் தக்கவை என எத்தனையோ விஷயங்களை நாம் ஆழ்மனதில் பதிவு செய்து வைத்து இருக்கிறோம். அதன்படி அப்போதைய சூழ்நிலையையும், மனநிலையையும் பொறுத்து சிந்திக்காமல் பேசி விடுகிறோம் அல்லது செயல்பட்டு விடுகிறோம்.

எனவே ஒவ்வொன்றையும் நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம், நமது பதில் நடவடிக்கைகள் எப்படி அமைகின்றன என்பது நம்மைப் பொறுத்தே இருக்கிரது. காரணமாகத் தெரியும் மற்றவர்கள் முன்பு குறிப்பிட்டது போல் காலிப்படகுகள் அல்லது வாளிகளே.

இந்த உண்மையை நம் ஆழ்மனதில் பதிய வைத்து தவறாக மற்றவர்களைக் காரணம் காணும் ப்ரோகிராம்களைத் திருத்திக் கொள்வது மிகவும் நல்லது.

கோபம் தற்காலிகமாய் பைத்தியம் பிடிப்பது போன்றது என்பார்கள். கோபப்படுவது அதை அடையாளம் காட்டுவதற்குச் சமம். ஆராய்ந்து அறியாமல், கோபத்தைக் காட்டாமல் அடக்குவது என்பது உண்மையில் கோபத்தை ஒத்திப் போடுதலே.

எனவே இரண்டையும் தவிர்த்து விட்டு அமைதியாகவும் தெளிவாகவும் சூழ்நிலையைக் கையாளுங்கள். ஒருவர் கோபமூட்ட முனைகையில் அவரது செய்கை முக்கியமல்ல, அதை நீங்கள் எப்படி எதிர் கொள்கிறீர்கள் என்பது தான் முக்கியம் என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.

பல நேரங்களில் மௌனமே உத்தமம். புன்னகையே சிறந்த பதில். வார்த்தைகளில் பதில் அவசியம் என நீங்கள் உணரும் போது சற்றும் கோபம் கலக்காமல் அமைதியாய் தெளிவாய் பதில் அளியுங்கள். உங்கள் அமைதியைக் குலைக்கும் அதிகாரத்தை நீங்களாக மற்றவர்களுக்குத் தந்தால் ஒழிய அவர்கள் அதைப் பெற முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்.

அரிஸ்டாடில் சொன்னது போல் "கோபப்பட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றில் ஒன்றும் சரியானதாக இருக்காது" என்பதை உணர்ந்திருங்கள். கோபம் பிறக்கும் அக்கணமே அதன் அவசியமின்மையை உணர்ந்து, அழித்து, அமைதி காக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

- என்.கணேசன்

Wednesday, December 19, 2007

கௌரவம்!




"பார்த்தா பிச்சைக்காரி மாதிரித் தெரியுது. ஆனா நீங்க தான் வரச் சொன்னதா அந்தப் பொண்ணு சொல்லுது. பேரு காவேரியாம். வாட்ச்மேன் என்ன செய்யறதுன்னு கேட்கறான்"

வேலைக்காரி சொன்னவுடன் அமிர்தம் எதுவும் புரியாமல் விழித்தாள். "நான் ஏன் பிச்சைக்காரியை வரச் சொல்றேன்.." என்றபடி யோசித்தவளுக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை.

"நீங்க எழுதினதா ஒரு லெட்டரையும் கையில் வச்சிருக்காளாம்"

லெட்டர் என்றதும் அமிர்தத்தின் மூளையில் ஒரு பொறி தட்டியது. வீடு முழுவதும் ஏ.சி.யாக இருந்தாலும் அமிர்தத்திற்கு திடீரென வியர்த்தது. இதயம் படபடவென அடித்துக் கொண்டது. "வரச்சொல்லு" என்றாள்.

வேலைக்காரி திகைத்துப் போனாள். இப்படிப் பட்ட மனிதர்கள் அவளுக்குத் தெரிந்த வரை இந்த பங்களாவின் மெயின் கேட்டைத் தாண்டி இது வரை உள்ளே நுழைந்ததில்லை. தன் திகைப்பை மறைத்துக் கொண்டு அந்தப் பெண்ணை அழைத்து வரப் போனாள்.

அவள் அழைத்து வரும் வரை அமிர்தத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. மேற்கொண்டு சாப்பிடவும் பிடிக்கவில்லை. அந்தப் பெண் சிறு குழந்தையாக இருந்த போது பார்த்திருக்கிறாள். இப்போது அவள் எப்படி இருப்பாள் என்று பல உருவங்களை மனதில் ஏற்ப்படுத்திப் பார்த்தவளுக்கு நிஜமாகவே பார்க்கப் போகிறோம் என்ற போது பரபரப்பாய் இருந்தது.

அந்தப் பெண் தயக்கத்துடன் வந்தாள். ஏழ்மை தனது முத்திரையை அவள் மீது குத்தியிருந்தது. அமிர்தம் அவளைக் கூர்ந்து பார்த்தாள். கலைந்த தலைமுடி, ஆங்காங்கே கிழிசல் தைக்கப்பட்ட வெளிறிப் போன சேலை, முகத்தில் லேசாய் கலவரம், கையில் ஒரு பெரிய பழைய துணிப்பை...

காவேரி மௌனமாகக் கை கூப்பினாள்.

அமிர்தத்தின் வயிற்றை என்னவோ செய்தது. சமாளித்துக் கொண்டு வரவேற்றாள். "வாம்மா உட்கார்"

அந்தப் பெண் உட்காராமல் அவளையே பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றாள். இருவருக்கும் என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இந்தப் பெண்ணின் தாயார் இவளை வயிற்றில் சுமந்து கொண்டு இதே பங்களாவிற்கு வந்தது இன்னமும் அமிர்தத்திற்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர்களது கம்பெனியின் வெளியூர் கிளையில் அப்போது அவள் வேலை செய்து கொண்டிருந்தாள். மிகவும் அழகாக இருந்தாள். அன்று அமிர்தத்தின் மாமனார் தான் அவளிடம் கறாராகப் பேசினார். "அவன் பலாத்காரம் செஞ்சான், கல்யாணம் செஞ்சுக்கறேன்னு சொன்னான்னு சொல்லிப் பிரயோஜனம் இல்லை. இதோ இங்க நிக்கறாளே இவ தான் அவன் சம்சாரம். பேர் அமிர்தம். ஒரு ஆளுக்கு உசிரோட ஒரு சம்சாரம் தான் இருக்க முடியும். அதுக்கு மேல இருக்கிறவங்களுக்கு இந்த சமூகத்தில் பேர் வேற. என்கிட்ட சொன்னதை ஊரெல்லாம் சொல்லிகிட்டு திரிஞ்சேன்னு தெரிஞ்சா என் கம்பெனில பணம் கையாடல் பண்ணிட்டேன்னு உள்ளே தள்ளிடுவேன். இனி இந்தப் பக்கமோ என் கம்பெனிப் பக்கமோ வராம என் கண்ணில் படாம தப்பிச்சுக்கோ".

போவதற்கு முன்னால் அவள் முகத்தில் தெரிந்த வலி அமிர்தத்தை பல நாள் தூங்க விடவில்லை. விசாரித்ததில் அந்தப் பெண் ஒரு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள் என்றும் அவர்கள் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் தான் ஆகிறதென்றும் ந்¢ஜமாகவே ஒரு அப்பாவி என்றும் தெரிந்தது. கணவனுடன் இரண்டு நாள் பேசாதிருந்தாள். அந்தப் பெண்ணின் அப்பாவித்தனத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிறு குற்றவுணர்வு கூட இல்லாமல் இருந்த தன் கணவனுடன் வாழப் பிடிக்காமல் மூன்றாவது நாள் தாய் வீட்டுக்குப் போய் விட்டாள். தாய்வீட்டாரோ அவளது இரு குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கச் சொல்லித் திருப்பி அனுப்பினார்கள். அந்தக் காலச் சமூக நிர்ப்பந்தங்கள் அவளைக் கட்டிப் போடவே, இயலாமையுடன் கூனிக்குறுகிப் புகுந்த வீட்டுக்குத் திரும்பி வந்தாள். கனவில் எல்லாம் அந்தப் பெண் வந்து அவள் குடும்பத்தார்களையும் அவள் குழந்தைகளையும் சபித்தாள். சில நாட்கள் கழித்து அந்தப் பெண் ஒரு பெண் குழந்தையைப் பிரசவித்ததும் அவள் சுமார் நூறு மைல் தள்ளி ஒரு ஊரில் இருப்பதும் அமிர்தத்திற்குத் தெரிய வந்தது. வீட்டார் யாருக்கும் தெரியாமல் அவளை ஒரு முறை பார்த்து விட்டு வந்தாள். கையோடு சிறிது பணத்தையும் கொண்டு போயிருந்தாள். முதலில் அந்தப் பெண் அதை வாங்க மறுத்தாள்.

"உனக்காக இல்லம்மா. இந்தக் குழந்தைக்காக இதை வாங்கிக்கோ. இது என்ன பாவம் செய்தது சொல்லு. என்னால வேறெந்த உதவியும் செய்ய முடியாது. நான் மாசா மாசம் என்னால் முடிஞ்சதை அனுப்பறேன். இந்தக் குழந்தையை நல்லாப் படிக்க வை. இது என் புருசன் செஞ்சதுக்குப் பரிகாரம் காட்டியும் அவள் படிப்புக்கும் அடிப்படை வசதிக்கும் உபயோகமாயிருக்கும். எனக்கும் ரெண்டு குழந்தைகள் இருக்கு. அதுக நல்லா வரணும்னு பிரார்த்தனை இருக்கு. அது பலிக்கணும்னா உன் குழந்தைக்கு நான் ஏதாவது செய்யணும்னு என் மனசாட்சி சொல்லுது. வாங்கிக்கம்மா"

கடைசியில் அவள் அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டாள். அன்று முதல் எந்த மாதமும் பணம் அனுப்ப அமிர்தம் தவறியதேயில்லை. வருடா வருடம் அனுப்பும் தொகையையும் அதிகப்படுத்தி வந்தாள். ஆரம்பத்தில் விஷயம் தெரிய வந்த போது கணவனும் வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் அமிர்தம் மிக உறுதியாக இருந்ததால் மறுபடி அந்தப் பெண்ணையும் குழந்தையையும் போய் சந்திக்கக் கூடாது என்ற ஒரு கட்டுப்பாடோடு நிறுத்திக் கொண்டார்கள். அப்படி அவள் போனாள் என்று தெரிந்தால் பணம் அனுப்பக் கூட விட மாட்டோம் என்று பயமுறுத்தினார்கள். ஆனால் அந்தப் பெண்ணைப் பற்றி அமிர்தத்துக்குத் தகவல் தரும் நபர் உடனடியாக வேலையிலிருந்து நிறுத்தப் பட்டார். கிட்டத் தட்ட இருபது வருடங்கள் கழித்து இந்த மாத மணியார்டர் மட்டும் விலாசதாரர் இறந்து விட்டார் என்ற தகவலுடன் திரும்ப வந்தது. கணவனிடம் தகவலைத் தெரிவித்தாள்.

வேண்டா வெறுப்பாக அவர் கேட்டார். "இதை என்கிட்ட ஏன் சொல்றே"

""அம்மாவும் செத்துட்டா. ஒரு வயசுப் பொண்ணு அனாதரவா தனியா எப்படி இருக்க முடியும்"

"அதுக்கு என்ன செய்யணும்னு சொல்றே"

"அந்தப் பொண்ணுக்கு இனியாவது நாம ஆதரவு தரணும். நான் வரச் சொல்லப் போறேன்"

கணவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. "நீ என்னை நாலு பேர் முன்னாடி அவமானப் படுத்தாம விடமாட்டே"

"அவமானம் நம்ம கீழ்த்தரமான நடத்தையில் இருக்கு. அது வெளிய தெரிகிற போது புதிதாய் வர்றதல்ல. இது உங்கள மாதிரி ஆளுகளுக்குப் புரியாது"

தொடர்ந்த வாக்குவாதத்தின் முடிவில் அந்தப் பெண் வந்த பின் ஓரிரு வாரங்களில் ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் சேர்த்து விடுவது என்றும் பிறகு ஒரு நல்ல வாழ்க்கை அமைய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் முடிவாகியது.

"ந்¢யாயமா நாம போய் கூட்டிட்டு வரணும்"

அவர் பார்வையாலேயே அவளைச் சுட்டெரித்தார். "பெரிய நியாய தேவதை. லெட்டர் போடு போதும்"

இனி அதிகம் பேசினால் வேதாளம் பழையபடி முருங்கை மரம் ஏறினால் என்ன செய்வது என்று அவளுக்குப் பயம் வந்தது. இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே அதிகம் என்று நினைத்தவளாய் அமிர்தம் உடனடியாக அந்தப் பெண்ணிற்குக் கடிதம் எழுதினாள். எழுதி ஒரு வாரம் கழித்து அந்தப் பெண் வந்திருக்கிறாள்.

"ஏம்மா நிற்கிறாய். உட்கார்"

அவள் மிகுந்த தயக்கத்தோடு சோபாவில் உட்கார்ந்தாள். அந்தப் பங்களாவும், அங்கு தெரிந்த செல்வச் செழிப்பும் அவளுக்கு பிரமிப்பை உண்டாக்கியிருந்ததாய்த் தோன்றியது. தோற்றத்தில் தன் தாயைப் போலவே இருந்தாலும், தாயிடம் காணப் படாத ஒரு உறுதி மகளிடம் தென்படுவதாக அமிர்தத்திற்குத் தோன்றியது. மெள்ள அமிர்தம் பேச்சுக் கொடுத்தாள்.


"காவேரி நீ என்னம்மா படிச்சிருக்கே"

"ஒன்பதாவது வரைக்கும் படிச்சிருக்கேன். அம்மா பக்கவாதம் வந்து படுத்தப்புறம் மேல படிக்கலைங்க"

அவள் தாய் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது உண்மையில் அமிர்தத்திற்குத் தெரிந்திருக்கவில்லை. "எனக்கு ஒரு கடிதம் போட்டிருக்கலாமே. என்னால முடிஞ்ச உதவியைச் செஞ்சிருப்பேனே. படிப்பை நிறுத்தியிருக்க வேண்டாமே" அமிர்தத்தின் முகத்திலும் பேச்சிலும் நிஜமாகவே ஆதங்கம் தெரிந்தது. தனது மகனும் மகளும் நன்றாகப் படித்து பெரிய நிலையில் மேலை நாடுகளில் இருக்க, இந்தப் பெண் படிக்க முடியாமல் நின்றது அவளுக்கு மிக வருத்தமாக இருந்தது.

காவேரி பதில் சொல்லாமல் அமிர்தத்தையே ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

"என்னம்மா என்னை அப்படிப் பார்க்கறே"

உடனடியாகத் தன் பார்வையை விலக்கிக் கொண்டவள் தானும் பதிலுக்குக் கேட்டாள். "உங்க குழந்தைக என்ன படிச்சிருக்காங்க"

தயக்கத்துடன் அமிர்தம் சொன்னாள் "ரெண்டு பேரும் இஞ்சீனியரா அமெரிக்கால இருக்காங்க"

கேட்டு காவேரி சந்தோஷப் பட்ட மாதிரி தெரிந்தது. "எப்பவாவது வருவாங்களா?"

"வருஷத்துக்கு ஒரு தடவை வருவாங்க. போன மாசம் தான் வந்துட்டுப் போனாங்க" என்ற அமிர்தம் அப்போது தான் அவள் ஒரு பையைத் தவிர வேறு எதுவும் கொண்டு வராததைக் கவனித்து கேட்டாள். "வெறும் இந்தப் பையோட வந்திருக்கியே. உன்னோட பாக்கி சாமான் எல்லாம் எங்கே?"

ஒரு கணம் தயங்கி விட்டுச் சொன்னாள். "கொண்டு வரலைங்க".

"ஏம்மா, நான் விவரமா எழுதியிருந்தேனே"

"இல்லைங்க எனக்குத் திரும்பப் போகணும்"

அமிர்தம் திகைத்துப் போய்க் கேட்டாள். "எங்கே போறே?"

"எங்க ஊருக்குத்தான். எனக்கு அங்க ஒரு ஸ்கூல்ல ஆயா வேலை கிடைச்சிருக்கு. இப்பப் போனா ராத்திரிக்குள்ள போய் சேர்ந்து நாளைக்கு வேலைக்குப் போயிக்கலாம். லீவு எடுக்க முடியாது."

அமிர்தம் மறுப்பு சொல்ல வாயைத் திறந்தாள். அவளைப் பேச விடாமல், "ஒரு நிமிஷம்..." என்று சொல்லி விட்டு ஒரு ஓரமாக வைத்திருந்த துணிப்பையை எடுத்தாள்.

"நீங்க கண்டிப்பா தப்பா நினைக்கக் கூடாது. இதைத் திரும்பத் தரலைன்னா எனக்கு சமாதானம் கிடைக்காது. நீங்க மறுப்புச் சொல்லாம வாங்கிக்கணும்"

"என்ன இது..." என்ற படி பையைத் திறந்த அமிர்தம் திகைத்துப் போனாள். உள்ளே கட்டு கட்டாகப் பணம். "எனக்கு ஓண்ணும் புரியலை"

"இது நீங்க இது வரை எங்களுக்கு அனுப்பிச்ச பணம். இதிலிருந்து ஒரு பைசா கூட நாங்க எடுக்கலை. காரணம் அனுப்பினது நீங்கன்னாலும் இது உங்க கணவரோட பணம். அந்த ஆளோட பணத்தை எடுத்துக்க மனசு ஒத்துக்கல. எங்கள வேண்டாத ஆளை எங்களுக்கும் வேண்டாம். அவரோட காசு வேண்டாம். எத்தனையோ நாள் பட்டினி கிடந்துருக்கோம். மருந்துக்குக் காசு இல்லாம கஷ்டப் பட்டிருக்கோம். ஆனாலும் இதிலிருந்து பணம் எடுத்து உசிரோட இருக்க மனசு பிரியப்படல"

காவேரியின் வார்த்தைகளில் ஒரு பெருமிதம் இருந்தது. வந்த போதிருந்த பலவீனமான குரல் போய் இப்போது குரல் கணீரென்றிருந்தது.

"ந்£ங்க கேக்கலாம் ஏன் இந்தக் காசை அன்னைக்கே திருப்பி அனுப்பிச்சிருக்க வேண்டியது தானேன்னு. பணம் திருப்பி அனுப்புனா உங்க மனசு சங்கடப்படும்னு அம்மா நினைச்சாங்க. அவங்களத் தேடி வந்து பணத்தக் குடுத்து ஒரு பச்சக் குழந்தை கஷ்டப் படாம வளரணும்னு நினைச்ச உங்க மனசு வருத்தப்படக் கூடாதுன்னு அம்மா என்னைக்கும் சொல்லுவாங்க..." சொல்லச் சொல்ல அவளுக்குத் தொண்டையை அடைத்தது.

சுதாரித்துக் கொண்டு தொடர்ந்தாள். "இதை சேத்து வச்சு ஏதாவது அனாதை இல்லத்துக்குக் குடுத்துறலாம்னு அம்மா நினைச்சாங்க. பெருசான பெறகு நான் ஒத்துக்கல. யாரு பணத்த யாரு தர்மம் செய்யறது? செய்ய என்ன உரிமையிருக்குன்னு எனக்குத் தோணிச்சு. அதனால இதைத் திரும்பத் தரணும்னு நான் பிடிவாதமாய் இருந்தேன். அம்மா இதை திரும்ப உங்களுக்குத் தர்றது உங்கள அவமானப்படுத்தற மாதிரின்னு சொல்லி அப்ப தடுத்துட்டாங்க. ஆனா எனக்கு அப்படித் தோணல. அதான் அவங்க செத்துப் போனவுடனே இதைக் கொண்டாந்துட்டேன். நீங்க என்னப் புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன்"

"இந்தப் பணத்தில் உனக்கு உரிமை இருக்கும்மா. இது இனாம் அல்ல. இந்தப் பணத்துல மட்டுமல்ல. இந்த வீட்டுலயும் என் குழந்தைகளுக்கு இருக்கும் உரிமை உனக்கும் இருக்கு"

" நீங்க என்ன இன்னும் சரியாப் புரிஞ்சுக்கலன்னு தோணுது. நான் பொறக்கக் காரணமா இருந்ததால மட்டும் அந்த ஆள் எனக்கு அப்பான்னு ஆயிடாது. எடுத்துப் பாராட்டி சீராட்டாத ஒரு மனுசனை, ஒரு தடவை வந்து பார்க்கணும்னு கூடத் தோணாத அந்த ஆளை அப்பாங்கறதோ, அவர் காசுக்கு உரிமை கொண்டாடறதோ எனக்கு அருவருப்பா இருக்கு"

அமிர்தம் மிகுந்த வருத்தத்துடன் சொன்னாள் "நீ சொல்றது எனக்குப் புரியுதும்மா. ஆனா இத்தனை நாள் நான் கொஞ்சமாவது நிம்மதியா இருந்திருந்தேன்னா அதுக்குக் காரணம் உங்க வாழ்க்கையை நான் கொஞ்சமாவது பண ரீதியிலாவது சுலபமாக்கி இருக்கிறேன்னு நினைச்சுத் தான். ஆனா இத்தனை நாள் இப்படிக் கஷ்டப்பட்டுட்டீங்களேம்மா"

"அந்தக் கஷ்டத்துலேயும் இந்தக் காசைத் தொடாம வச்சிருக்கோம்கிற பெருமை இருந்துச்சும்மா" என்ற காவேரி லேசான மனத்துடன் தொடர்ந்தாள் " உங்கள ஒரு தடவை பார்க்கணும்னு எனக்குப் பல தடவை தோணியிருக்கு. ஒவ்வொரு மாசமும் மறக்காம பணம் அனுப்புன உங்க நல்ல மனசுக்கு நானும் அம்மாவும் ரொம்பவே கடன் பட்டிருக்கோம். பொதுவா இந்த இரக்கம் எல்லாம் நாளாக நாளாக கம்மியாய் கடைசில காணாமப் போயிடும். ஆனா உங்க மனசுல மட்டும் இன்னைக்கு வரைக்கும் இந்த மனிதாபிமானம் குறையல. உங்கள என்னைக்கும் மறக்க மாட்டேன்."

அமிர்தம் வாயடைத்துப் போய் நின்றாள். இந்தப் பெண்ணிற்கு இது வரை உதவவில்லை, இனியும் உதவ இவள் அனுமதிக்க மாட்டாள் என்ற உண்மை உறைத்ததால் அவள் மனம் கனத்தது.

அவளது களங்கமில்லாத மனதில் தோன்றியது அவள் முகத்திலும் பிரதிபலித்திருக்க வேண்டும். அவளது எண்ணத்தைப் புரிந்து கொண்டவளாய் காவேரி மனம் நெகிழ்ந்து போய் சொன்னாள். "நீங்க என்னைப் பத்திக் கவலைப்படாதீங்கம்மா. இவ்வளவு நாள் அம்மா மருந்துக்கே நான் சம்பாதிச்சதெல்லாம் செலவானதால தான் கொஞ்சம் சிரமப் பட்டுட்டேன். இனி அந்த செலவில்லாததால் என் சம்பாத்தியம் எனக்குத் தாராளமாப் போதும். நான் கிளம்பறேம்மா"

பணப் பையை டைனிங் டேபிள் மீது வைத்து விட்டு காவேரி திரும்பும் போது அறை வாயிலருகே முகம் சிறுத்து சிலையாக ஒரு மனிதர் நின்றிருந்தார். அவர் அவர்களிருவரையும் ஏதோ வேற்றுக் கிரக மனிதர்களைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறந்ததிலிருந்து ஒரு முறை கூட அவள் பார்த்திராத தந்தையை ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆசை எள்ளளவும் அவள் மனதில் இருந்ததில்லை. எனவே கதவு ஓரமாக நின்றிருந்த அந்த மனிதர் தன் தந்தையாகத் தான் இருக்க வேண்டும் என்று தெரிந்தும் ஏறெடுத்தும் பார்க்காது கதவை நேராகப் பார்த்த படி காவேரி கம்பீரமாக வெளியேறினாள்.

-என்.கணேசன்


நன்றி: பதிவுகள்.காம்

Thursday, December 13, 2007

படித்ததில் பிடித்தது - Ambani Wisdom

சிந்தனையாளனாக இருந்து சாதிப்பது பற்றிச் சொல்வது வேறு. சாதித்து விட்டு சாதனை பற்றிச் சொல்வது வேறு. இரண்டாமவரை நாம் சந்தேகிக்க வேண்டியதில்லை. நடைமுறைக்கு ஒத்து வருமா என்று தர்க்கவாதம் செய்ய வேண்டியதில்லை. திருபாய் அம்பானியைப் போல் அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையை ஆரம்பித்து உலகப் பணக்காரர்களில் ஒருவராய் வாழ்ந்து சாதித்த ஒருவரின் அனுபவ மொழிகளைப் படிப்பது மட்டுமல்ல பின்பற்றவும் முடிந்தால் வெற்றிகள் தானாக நம்மைத் தேடி வராதா என்ன?

-என்.கணேசன்

Dhirubhai Ambani Quotes -

True entrepreneurship comes only from risk-taking.


Pursue your goal, even in the face of difficulties. Convert difficulties into
opportunities. Keep your morale high, in spite of setbacks. At the end you
are bound to succeed.


My advice to young entrepreneurs is not to accept defeat in the face of
odds. Challenge negative forces with hope, self-confidence and
conviction. I believe that ambition and initiative will ultimately triumph.
The success of the young entrepreneur will be the key to India's
transformation in the new millennium.


The secret of Reliance's success was to have ambition and to know the
minds of men.


Growth has no limit at Reliance. I keep revising my vision. Only when
you dream it you can do it.


The problem with Indians is that we have lost the habit of thinking big!


We must always go for the best. Do not compromise on quality. Reject if it
is not the best -- not only the best in India, but globally.


If India wants to be a great nation, we must have courage to trust. This is
my sincere belief.


All we have to do is to break the shackles that chain the energies of our
people, and India's economy will record a quantum leap and move into a
new, higher orbit of growth, competitiveness and productivity.


For those who dare to dream, there is a whole world to win!


I am deaf to the word 'NO.'


I give least importance to being Number one. I consider myself to be
fortunate in this position and would like to contribute to nation building
in some way.


Does making money excite me? No, but I have to make money for my
shareholders. What excites me is achievement, doing something difficult.
In this room extraordinary things must happen.


Think big, think fast, think ahead. Ideas are no one's monopoly.


Our dreams have to be bigger. Our ambitions higher. Our commitment
deeper. And our efforts greater. This is my dream for Reliance and for
India.


I consider myself a pathfinder. I have been excavating the jungle and
making the road for others to walk. I like to be the first in everything I do.




Give the youth a proper environment. Motivate them. Extend them the
support they need. Each one of them has infinite source of energy. They
will deliver.


You do not require an invitation to make profits.


If you work with determination and with perfection, success will follow.


Between my past, the present and the future, there is one common factor:
Relationship and Trust. This is the foundation of our growth.


We bet on people.


Meeting the deadlines is not good enough, beating the deadlines is my
expectation.


Don't give up, courage is my conviction.


We cannot change our rulers, but we can change the way they rule us.


As A G Krishnamurthy, founder of Mudra Communications, writes in his
book, Dhirubhaism, about some of the Reliance founder's doctrines:


Roll up your sleeves and help. You and your team share the same
DNA.


Be a safety net for your team.


Always be the silent benefactor. Don't tom-tom about how you helped
someone.


Dream big, but dream with your eyes open.


Leave the professional alone!


Change your orbit, constantly!


Money is not a product by itself, it is a by-product, so don't chase it.

Tuesday, December 11, 2007

உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள்


அம்மா பெயரை ஏன் ஒருவர் பெயருக்கு முன் இனிஷியலாகப் போட்டுக் கொள்ளக் கூடாது என்று கேட்பது உண்மையில் நவீன கால சிந்தனையல்ல. M.குமரன், s/o மஹாலக்ஷ்மி என்று போட்டுக் கொள்வதும் கூட இன்றையப் புரட்சி அல்ல. உபநிடத காலத்திலேயே சிந்தித்த சிந்தனை தான் அது. அப்படித் தன் தாயின் பெயரை தன் பெயரோடு இணைத்த ஒரு பெரிய ரிஷியைப் பற்றி சாண்டோக்கிய உபநிடதம் சொல்லி இருக்கிறது.

சத்யகாமன் என்னும் சிறுவன் ஜாபாலா என்னும் பெண்மணியின் மகன். அவனுக்குத் தன் தந்தை யார் என்று தெரியாது. குருகுலத்திற்குச் சென்று கல்வி கற்கும் வயது வந்தவுடன் அவன் தன் தாயிடம் தன் தந்தை பற்றியும் கேட்கிறான். (அந்தக் காலத்தில் கல்வி கற்க விரும்புவோர் தன் தந்தை பெயரையும் தன் பூர்வீகத்தையும் சொல்லியே குருகுலத்தில் கற்க அனுமதி பெற முடியும்.)

சத்யகாமனின் தாய் அவன் தந்தை யாரென்று தெரியாது என்ற உண்மையைத் தன் மகனிடம் ஒப்புக் கொள்கிறாள். தான் அவனைக் கருத்தரித்த காலத்தில் பலர் இல்லங்களில் பணி புரிந்ததாகவும் அப்போது பலருடன் நெருக்கமாக இருக்க நேர்ந்தது என்றும் ஒத்துக் கொள்கிறாள்.

சத்யகாமன் அந்தத் தகவலைத் தாயிடம் இருந்து பெற்றுக் கொண்டு கௌதமர் என்ற ரிஷி நடத்தும் குருகுலத்திற்குச் செல்கிறான். அக்காலத்தில் கல்வி அறிவு பெற வேண்டுபவர் தன்னுடன் காய்ந்த விறகை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். ஞான அக்னியால் தீண்டப்படாத விறகாய் நான் இருக்கிறேன். என்னில் ஞான அக்னியை ஏற்படுத்துங்கள் என்று 'சிம்பாலிக்'காக சொல்வது போன்ற முறை அது.

கையில் காய்ந்த விறகுடன் வந்த புதிய சிறுவனைப் பார்த்தவுடன் கௌதமர் அவன் கல்வி கற்க வந்திருக்கிறான் என்று அறிந்து கொண்டு வழக்கமான கேள்வியைக் கேட்கிறார். "குழந்தாய் உன் பெயர் என்ன? உன் தந்தை யார்? உன் பூர்வீகம் என்ன?"

இந்த சூழ்நிலையை சற்று அந்தக் காலக் கட்டத்திற்குச் சென்று பார்த்தால் அந்தச் சிறுவனின் தர்மசங்கடமான நிலையை நுணுக்கமாக உணர முடியும். தன் முன்பு வேத விற்பன்னராகிய குரு, அவருக்கு முன் அமர்ந்து தான் என்ன சொல்லப் போகிறோம் என்று ஆவலாக உள்ள மற்ற சிறுவர்கள், இவர்களுக்கு முன்னால் தன் தந்தை பெயர் தெரியாது என்று சொல்ல வேண்டிய அவலநிலை இருப்பினும் சத்யகாமன் தயங்காமல் உண்மையை எடுத்துரைக்கிறான்.

"குருவே. என் பெயர் சத்யகாமன். என் தாய் தாய் பெயர் ஜாபாலா. என் தந்தை யார் என்று தனக்குத் தெரியாது என்று என் தாய் கூறுகிறார். எனவே எனக்கு என் பூர்வீகம் தெரியாது"

மற்ற சிறுவர்கள் ஏளனமாய் சிரிக்க கௌதம ரிஷி அவனை மரியாதையுடன் பார்த்தார். அக்காலத்தில் பிராமணன் என்பது பிறப்பால் மட்டுமே தீர்மானிக்கப்படும் ஒரு பட்டமாக இருக்கவில்லை. உண்மையும், ஞானமும், வேறுபல நற்குணங்களுமே பிராமணன் என்று ஒருவனை ஏற்றுக் கொள்ளத் தேவையானவைகளாக இருந்தன. "இத்தனை பேர் மத்தியில் உண்மையை சிறிதும் மறைக்காமல் திரிக்காமல் உள்ளதை உள்ளபடியே தைரியமாகச் சொல்ல முடிந்த நீ பிராமணனே என்று நான் கருதுகிறேன், சத்யகாமா. உண்மையை உன்னிடம் மறைக்காது சொன்ன உன் தாயையும் நான் பாராட்டுகிறேன். இனி இது போன்ற சந்தர்ப்பங்களில் உன் தந்தை பெயருக்குப் பதிலாக உன் தாய் பெயரைச் சேர்த்துச் சொல். இன்றிலிருந்து நீ சத்யகாம ஜாபாலா என்ற பெயரால் இந்த உலகில் அறியப்படுவாய்"

சத்யகாம ஜாபாலா கௌதம ரிஷியிடம் கற்றுப் பேரும் புகழும் அடைந்து பெரிய ஞானியாக விளங்கினார் என்று உபநிடதங்கள் சொல்கின்றன.

இப்படி அந்தக் காலத்திலேயே இது போன்ற ஒரு புரட்சிகரமான சிந்தனை ஏற்கப்பட்டு இருந்தது. மேலும் உண்மைக்கு அந்தக் காலத்தில் தரப்பட்ட மரியாதையையும் எண்ணிப் பாருங்கள். உலகமெல்லாம் புகழ்பெற்று பாரதம் ஒரு காலத்தில் திகழ்ந்ததற்குக் காரணம் நம் மக்களிடம் இருந்த இது போன்ற உயர்ந்த சிந்தனைகளே என்றால் அது மிகையாகாது அல்லவா?

- என்.கணேசன்

Friday, December 7, 2007

உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்?

சுயமுன்னேற்றக் கட்டுரை

ரால்·ப் பார்லெட் (Ralph Parelette) என்பவர் பிரபல அமெரிக்கப் பேச்சாளர். ஒரு முறை அவர் 'விதி' பற்றிப் பேச ஒரு கண்ணாடி ஜாடியுடன் மேடைக்கு வந்தார்.

அந்த ஜாடியில் சிறிய பீன்ஸ் விதைகளும் பெரிய வாதுமைக் கொட்டைகளும் (Walmuts) இருந்தன. ஜாடியை ஒரு முறை நன்றாகக் குலுக்கி விட்டு அங்கிருந்தவர்களுக்கு அதைக் காண்பித்தார். அளவில் பெரிய வாதுமைக் கொட்டைகள் ஜாடியின் மேல்புறத்திலும், சிறிய பீன்ஸ் விதைகள் அடிப்பகுதியிலும் இருந்தன.

"நண்பர்களே!இந்தப் பீன்ஸ் விதைகளில் ஒன்று என்னிடம் உதவி கேட்கின்றது. அதற்கும் வாதுமைக் கொட்டைகளுக்கு இணையாக மேலே தங்க ஆசையாம், நான் அதற்கு உதவப் போகிறேன். உங்கள் முன்னிலையிலேயே அந்த சிறிய பீன்ஸை மேலே வைக்கிறேன் பாருங்கள். ஆஹா, இப்போது பீன்ஸ் விதைக்குத் தான் எத்தனை சந்தோஷம்"

அவர் மறுபடி ஜாடியை நன்றாகக் குலுக்கினார். "அடடா, குலுக்கலில் பீன்ஸ் விதை தன் பழைய இடத்திற்கே போய் விட்டதே! அந்த பீன்ஸ் விதைக்கு மிகவும் வருத்தம். சமத்துவம் என்பது இல்லையே என்று அங்கலாய்ப்பு. அது மறுபடி என்னிடம் வேண்டிக் கொள்கிறது. தான் மேலே போய்த் தங்கா விட்டாலும் பரவாயில்லை. வாதுமைக் கொட்டை தனக்குச் சமமாகக் கீழே தங்க வேண்டும் என்கிறது"

"சரி, அதையும் செய்வோமே. பாருங்கள். உங்கள் முன்னிலையில் வாதுமைக் கொட்டை ஒன்றை எடுத்து பீன்ஸ்களுக்கு அடியில் வைக்கிறேன். சரி தானே!"

அவர் மறுபடி ஜாடியை நன்றாகக் குலுக்கினார். முன்பு போலவே அந்த வாதுமைக் கொட்டை மேலே வந்து விட்டது. பீன்ஸ் அடியில் தங்கி விட்டது.

"நண்பர்களே இது இயற்கையின் நியதி. அளவில் சிறியவை கீழும், அளவில் பெரியவை மேலும் எப்போதும் தங்கும். பீன்ஸ் மேலே வர வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, அது அளவில் பெரிதாக வளர்வது தான். அதை விட்டு நாம் எத்தனை தான் உதவினாலும் காலத்தின் குலுக்கலில் எல்லாமே தங்களுக்கு உரிய இடத்திலேயே தங்க நேரிடும்."

"நண்பர்களே பீன்ஸ¤க்கும் வாதுமைக் கொட்டைக்கும் தங்களின் ஆசைப்படி தங்களை மாற்றிக் கொள்ள முடியாது. ஆனால் மனிதர்களைப் பொறுத்தவரை நாம் அப்படிக் கையாலாகாதவர்கள் அல்ல. கடவுள் நம்மை அப்படிப் படைக்கவில்லை. நாம் உயர வேண்டுமானால் வளர வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அப்படி முயற்சி எடுப்பதன் மூலமாகவோ, முயற்சி எடுக்க மறுப்பதன் மூலமாகவோ நாமே நம் விதியைத் தீர்மானித்துக் கொள்கிறோம்" என்று கூறி முடித்தார்.

இது ஒரு மிக அழகான உவமை. ரால்·ப் பார்லெட்டின் பீன்ஸைப் போல் தான் நம்மில் பலரும் இருக்கிறோம். யாராவது ஏதாவது செய்து எப்படியாவது நம்மை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு போய் விடக் காத்து இருக்கிறோம்.

அப்படி வெறுமனே காத்துக் கிடக்கிற காலத்தில் பாதியைச் சரியாக, புத்திசாலித்தனமாக, முழுமனதோடு பயன்படுத்தினால் போதும், அந்த நிலைக்குத் தேவையான சகல தகுதிகளையும் நம் முயற்சியால் நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். யார் தயவும் இன்றி நம் இலக்குகளை நாமே சென்றடைய முடியும். மாறாக நல்ல நேரத்திற்காகவோ, அடுத்தவர் உதவிக்காகவோ, அதிர்ஷ்டத்திற்காகவோ காத்துக் கிடப்பவர்கள் இருக்குமிடத்திலேயே இருக்க வேண்டி வரும். அது தான் விதி.

எனவே அறிவையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். காலத்திற்கேற்ப திறமையாக, விரைவாகச் செயல்படுங்கள். உங்கள் அறிவும் திறமையும் அதிகப்பட அதிகப்பட உங்கள் இலக்கிற்கான வழிகள் தாமாகவே தெளிவாகப் புலப்படத் துவங்கும். சரியான சந்தர்ப்பங்கள் தானாக உங்களைத் தேடி வர ஆரம்பிக்கும். இதுவே இயற்கையின் நியதி.

-என்.கணேசன்

Saturday, December 1, 2007

படித்ததில் பிடித்தது-Nothing is Random

எல்லாமே அர்த்தத்துடனும், நுட்பத்துடனும் இம்மியும் பிசகாது இந்த உலகில் நடக்கிறது என்று சொல்லும் இந்தக் கட்டுரையை சமீபத்தில் இணையதளத்தில் நான் படித்தேன். மூன்று முறை ஒவ்வொரு வரியாக நிதானமாகப் படித்தேன். கட்டுரை என்னை நிறைய சிந்திக்க வைத்தது. மேலோட்டமாய் இல்லாமல் நீங்களும் நிதானமாகப் படித்துப் பாருங்களேன்.

Nothing is Random

Nothing is random, nor will anything ever be, whether a long string of perfectly blue days that begin and end in golden dimness, the most seemingly chaotic political acts, the rise of a great city, the crystalline structure of a gem that has never seen the light, the distributions of fortune, what time the milkman gets up, the position of the electron, or the occurrence of one astonishingly frigid winter after another.

Even electrons, supposedly the paragons of unpredictability, are tame and obsequious little creatures that rush around at the speed of light, going precisely where they are supposed to go. They make faint whistling sounds that when apprehended in varying combinations are as pleasant as the wind flying through a forest, and they do exactly as they are told. Of this, one can be certain.

And yet there is a wonderful anarchy, in that the milkman chooses when to arise, the rat picks the tunnel into which he will dive when the subway comes rushing down the track from Borough Hall, and the snowflake will fall as it will. How can this be? If nothing is random, and everything is predetermined, how can there be free will? The answer to that is simple.

Nothing is predetermined; it is determined, or was determined, or will be determined. No matter, it all happened at once, in less than an instant, and time was invented because we cannot comprehend in one glance the enormous and detailed canvas that we have been given - so we track it, in linear fashion, piece by piece. Time, however, can be easily overcome; not by chasing light, but by standing back far enough to see it all at once.

The universe is still and complete. Everything that ever was, is; everything that ever will be, is - and so on, in all possible combinations. Though in perceiving it we imagine that it is in motion, and unfinished, it is quite finished and quite astonishingly beautiful.

In the end, or rather, as things really are, any event, no matter how small, is intimately and sensibly tied to all others. All rivers run full to the sea; those who are apart are brought together; the lost ones are redeemed; the dead come back to life; the perfectly blue days that have begun and ended in golden dimness continue, immobile and accessible; and, when all is perceived in such a way as to obviate time, justice becomes apparent not as something that will be, but as something that is.

Mark Helprin

Wednesday, November 28, 2007

ஒரு நிமிடம் நிதானியுங்கள்

விவகாரமான சூழ்நிலைகளில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அவை பிரச்சினைகளாக வெடிப்பதும், சுமுகமாக முடிவதும் இருக்கிறது என்பதை விளக்க அரவிந்தாஸ்ரமத்து அன்னை கூறிய ஒரு அறிவுரை என்னை மிகவும் கவர்ந்தது. சொற்கள் மிகச்சரியாக நினைவில்லை என்றாலும் அதன் சாராம்சம் இது தான். "நாம் நம் வாழ்வில் பெரும்பாலும் ஒவ்வொன்றிற்கும் react செய்கிறோம். நம் மன அமைதியைக் குலைக்கும் வகையில் ஏதோ ஒன்று நடக்கிறது அல்லது யாராவது எதையாவது சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சிறிதும் தாமதியாமல் உடனடியாக அதற்குப் பதிலடி தருகிறோம் அல்லது ஏதாவது செயல் புரிந்து விடுகிறோம். (இதனை அன்னை reaction என்கிறார்). அப்படி react செய்வதற்குப் பதிலாக ஒரு நிமிடம் சிந்தித்து தகுந்த சொல்லோ செயலோ எது என்று தீர்மானித்து அதைச் செய்தால் அது சிறப்பாக இருக்கும். (இதை அன்னை response என்கிறார்). இப்படி செய்வதன் மூலம் எத்தனையோ எதிர்மறையான விளைவுகளை நாம் தவிர்க்க முடியும்"

பல சமயங்களில் நம் பதில் நடவடிக்கைகள் நம்மை அறியாமல் நடந்து விடுகின்றன. மற்றவர்கள் சொல்லோ செயலோ நம்மை சிறிதும் யோசிக்க விடுவதில்லை. நம்மையும் மீறி நம் ஆழ்மனதில் பதிந்துள்ள குணாதிசயங்களுக்கு ஏற்ப நடந்து கொள்கிறோம். இதில் உண்மையாக கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் நம் பதில் நடவடிக்கையை மற்றவர் சொல்லும், செயலும் நம் ஆழ்மனமும் தீர்மானித்து விடுகின்றன. யாரோ ஆட்டுவிக்க நாம் அதற்கேற்ப ஆடுகின்றோம்.

இதற்குப் பதிலாக ஒரு கணம் தாமதித்து எப்படி இதை எதிர்கொள்வது நல்லது என்று யோசித்து தக்க விதத்தில் சிந்தனா பூர்வமாக நம் பதில் நடவடிக்கை அமைந்தால் நாம் எத்தனையோ பிரச்சினைகளை தவிர்க்க முடியும். பல நல்ல ஆதாயங்களையும் பெற முடியும். யோசிக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. ஒரு நிமிடம் தாமதிப்பது போதும். எத்தனையோ தவறான வார்த்தைகளை சொல்லாமலும், தவறான செயல்களை செய்யாமலும் தவிர்க்க அந்தக் குறுகிய இடைவெளி போதும்.

ஒரு actionக்கும் reactionக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளியைப் புகுத்த கற்றுக் கொள்ளுங்கள். அந்த இடைவெளியே ஆறாவது அறிவு. நாம் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதன்படி நடப்பதே உண்மையான அறிவு. மற்றவர் இயக்க நாம் இயங்கினால் அது அடிமைத்தனம்.

யாராவது வம்புச் சண்டைக்கு உங்களை இழுக்க எண்ணி "முட்டாள்" என்று அழைத்தால் சீறுவதற்குப் பதிலாக புன்னகையுடன் "உண்மை தான்" என்று சொல்லிப் பாருங்கள். (உண்மையில் நாம் எல்லோரும் ஒருசில சமயங்களில் அந்தப் பட்டப் பெயர் பெற உகந்தவரே.) ஒரு புத்திசாலியால் தான் அப்படி முழுக் கட்டுபாட்டுடன் respond செய்ய முடியும். அப்படிச் சொல்வதன் மூலம் தேவையில்லாத சச்சரவுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

இதைச் சொல்வது சுலபம். ஆனால் கடைப்பிடிப்பது கஷ்டமே. ஏனென்றால் மற்றவர் வார்த்தைகளுக்கோ செயல்களுக்கோ உடனடியாக இயங்கிப் பழக்கப்பட்ட நமக்கு ஒரு புதிய வித்தியாசமான அணுகுமுறையை நம்மிடம் கொண்டு வருவதற்கு சற்று பயிற்சி வேண்டும். சிந்திக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அந்த நேரத்தில் ஏற்படுத்திக் கொள்வதற்கே பிரம்மப்பிரயத்தனம் வேண்டும். நமது ஆழ்மனம் பழைய அணுகுமுறைக்கே பழகிப் போனது. ஆழ்மனதில் நேர்மாறான அணுகுமுறையைப் பதிய வைக்க ஒரு வழியை மனவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

பெரும்பாலும் எந்த மாதிரி சந்தப்பங்களில் நீங்கள் நிதானம் இழக்கிறீர்கள் என்று முதலில் பட்டியல் இடுங்கள். அதில் நாம் அதிகமாக கட்டுப்பாடில்லாமல் react செய்யும் ஒரு சந்தர்ப்பத்தை முதலில் தேர்வு செய்யுங்கள். அப்படிச் செய்த சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றை நினைவுபடுத்தி மனத்திரையில் மற்றவர் சொன்னதோ செய்ததோ வரை தத்ரூபமாக ஓட விடுங்கள். நீங்கள் react செய்த விதத்தை மட்டும் காட்சி மாற்றம் செய்யுங்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக நிதானமாக அதற்கு நடந்து கொள்வதாகக் கற்பனை செய்து கொண்டு காட்சியை முடியுங்கள்.

நீங்கள் அமைதியாக இருக்கும் தருணங்களில் தினமும் ஓரிரு முறை இப்படி கற்பனைக் காட்சி காணுங்கள். ஆழ்மனம் மெள்ள மெள்ள அந்தக் கற்பனையைப் பதிவு செய்து கொள்ளும். உங்களிடம் உறுதி இருந்து இந்தப் பயிற்சியை நீங்கள் தொடர்ந்து செய்தால் திடீரென்று அது போன்ற ஒரு சம்பவம் நடக்கும் போது ஆச்சரியப்படும்படி நீங்கள் கற்பனை செய்தது போல உண்மையிலேயே 'respond' செய்வதை நீங்கள் காண முடியும். இதை நான் என் வாழ்வில் செய்து வெற்றி கண்டுள்ளேன். எனவே இந்த முறையின் வெற்றிக்கு என்னால் உத்திரவாதம் தர முடியும்.

ஒன்றில் நல்ல முறையில் வெற்றி கண்டு அதுவே இயல்பாக நமக்குப் பழகி விட்ட பின்பு அடுத்த ஒரு சவாலை நாம் சந்திக்க முயலலாம். இப்படி நாம் பக்குவத்துடன், அறிவுபூர்வமாகவும் இயங்கக் கற்றுக் கொண்டால் எத்தனையோ பிரச்சினைகளைத் தவிர்த்து ஏராளமான நன்மைகளை அடைய முடியும். நீங்களும் முயன்று பாருங்களேன்.

- என்.கணேசன்

Sunday, November 25, 2007

ஆனால் என்பது ஆபத்தானது


"ஆனால்" என்ற சொல் அதற்கு முன்னால் சொல்லப்பட்டதை எல்லாம் அர்த்தம் இல்லாததாக்கி விடுகிறது. உதாரணத்திற்கு நாம் அன்றாடம் சொல்லக் கூடிய சில-

"நான் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது மிக முக்கியம். ஆனால் இப்படி அதிகாலையில் குளிராக இருப்பதால்........" (இன்று உடற்பயிற்சி செய்யப் போவதில்லை என்று பொருள் காண்க).

"கோபப்படுவது நல்லதில்லை தான். ஆனால் இப்படியெல்லாம் நடந்து கொண்டால் கோபப்படாமல் இருப்பதெப்படி?" (கோபப்படுவது நல்லதில்லை என்பது வெறும் சம்பிரதாயத்திற்காக சொல்லப்பட்டிருக்கிறது).

"செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால் நேரமே கிடைக்கிறதில்லை" (அதனால் நான் ஒன்றுமே செய்வதில்லை).

இதில் எல்லாம் ஆனால் என்று சொல்வதற்கு முன்னால் சொன்ன அத்தனை நல்ல விஷயங்களும் நடைமுறைக்கு வராத வெறும் வெற்று வார்த்தைகளாகி விட்டது என்பது தெளிவாகத் தெரிகிற உண்மை.

சீதோஷ்ண நிலை சரியாக இருந்திருந்தால் உடற்பயிற்சி செய்திருப்பேன், எல்லோரும் ஒழுங்காக நடந்து கொண்டால் கோபமே பட மாட்டேன், நாளுக்கு 24 மணி நேரத்திற்கு மேல் இருந்தால் எதையும் செய்து முடிப்பேன் என்பதெல்லாம் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் பொய்கள். நம் சோம்பேறித்தனத்தையும், கட்டுப்பாடற்ற மனதையும் மறைக்கும் ஆயுதம் தான் இந்த "ஆனால்".

இந்த 'ஆனால்" நம்மை சமாதானப் படுத்திக் கொள்ள உதவலாம். ஏமாற்றிக் கொள்ள உதவலாம். ஆனால் இந்த 'ஆனால்' நம்மை என்றும் பின் தங்கியே இருக்க வைக்கும். சாதிக்காத சப்பைக்கட்டு மனிதர்களாகவே நம்மை இருத்தி விடும்.

நீங்கள் சொல்லத் துவங்கும் 'ஆனாலி'ல் வலுவான காரணங்கள் கூட இருக்கக்கூடும். ஆனால் எல்லாமே சாதகமாக இருக்கும் போது சாதிப்பதில் சிறப்பென்ன இருக்கிறது? தடைகளையும் சாதகமில்லாத சூழ்நிலைகளையும் மீறி மன உறுதியுடன் சாதிப்பதில் அல்லவா மகத்துவம் இருக்கிறது.

எனவே "ஆனால்" என்ற சொல்லை உபயோகப்படுத்தும் போதெல்லாம் எச்சரிக்கையுடன் இருங்கள். அந்த சொல்லைக் குறைவாகப் பயன்படுத்துங்கள். சொல்லும் போது உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்கிறீர்களா என்று சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அடுத்தவர்களை நம்ப வைக்க முயல இந்த 'ஆனால்'ஐப் பயன்படுத்தி உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

- என்.கணேசன்

Thursday, November 22, 2007

வரையப்படாத கடவுள்

சிறுகதை

"என்னால முடியும்னு நிஜமாவே நினைக்கிறீங்களா"- நூறாவது முறையாக சின்னசாமி கேட்டான்.

"கண்டிப்பா முடியும்" அஸ்வின் பழைய பதிலையே சிறிதும் பொறுமை இழக்காது சொன்னான். இந்த சாருக்கு உண்மையில் பைத்தியம் தான் பிடித்து விட்டதோ என்ற சின்னசாமியின் சந்தேகம் மேலும் வலுத்தது.

"சாப்பாட்டை டைனிங் டேபிளில் வெச்சிருக்கேன். நேத்து மாதிரி மறந்துடாதீங்க. வரட்டுமா"

அவன் போய் விட்டான். சின்னசாமிக்கு நடப்பதெல்லாம் கனவு போலவே இன்னமும் தோன்றியது. அந்த பிளாட்பார ஏழை ஓவியன் இந்த சொகுசு பங்களாவுக்கு வந்து ராஜ வாழ்க்கை வாழ ஆரம்பித்து சரியாக பதினான்கு நாட்கள் ஆகி விட்டது. நாளை மாலை அவன் திரும்பத் தனது சேரிக்கே போய் விடுவான். பழையபடி தரித்திரம், குடிசை, பிளாட்பாரம் என்று வாழ்க்கை சுழல ஆரம்பித்து விடும். இந்தப் பதினைந்து நாட்களையும், அஸ்வினையும் ஒரு பொக்கிஷமாக தனது மனதின் ஒரு மூலையில் வைத்து என்றுமே பாதுகாப்பான். எல்லாமே ஒரு வெள்ளிக் கிழமை அஸ்வின் அவனைப் பார்த்ததில் இருந்து ஆரம்பித்தது...

அன்று துர்க்கை பேரழகுடன் அந்தப் பிளாட்பாரத்தில் பிரத்தியட்சமாகிக் கொண்டிருந்தாள். இந்த உலகையே மறந்து தன் படைப்பிலேயே லயித்துப் போயிருந்த அந்தத் தெருவோர ஓவியனை அஸ்வின் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கால்களை ஊனமாக்கிய கடவுள் அத்ற்குப் பிராயச்சித்தமாக கைகளுக்கு ஓவியக்கலையைத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டானோ என்று அஸ்வினுக்குத் தோன்றியது. அனாயாசமாக வரைந்து முடித்த பின்பு தான் அமர்ந்திருந்த சக்கரங்கள் பொருத்திய பலகையை ஓரமாக நகர்த்தி சுவரில் சாய்ந்து கொண்டான் அந்தப் படைப்பாளி. பலரும் நாணயங்களை வீசி விட்டுச் சென்றார்கள். அஸ்வின் மட்டும் உன்னிப்பாக துர்க்கையையே பார்த்துக் கொண்டிருந்தான். பல நிமிடங்கள் கழிந்த பின்பு பாராட்டினான். "நல்லா வரைஞ்சிருக்கீங்க".

நிறைய நேரம் நின்று கவனிப்பதும், அவனையும் ஒரு பொருட்டாக நினைத்துப் பாராட்டுவதும் அந்தக் கலைஞனுக்குப் புதிய அனுபவம். அவனுக்குத் தெரிந்து மேல் மட்ட மனிதர்கள் காசிலாவது தாராளமாக இருப்பதுண்டு. ஆனால் அவனைப் போன்ற ஒரு பரம தரித்திரனை ஒருவன் கவனித்து, மதித்து மனதாரப் பாராட்டுவது அதிசயமாயிருந்ததது.

"என் பெயர் அஸ்வின். உங்க பெயர்..."

"சின்னசாமிங்க"

அஸ்வின் நிறைய நேரம் நின்று சின்னசாமியுடன் பேசினான். அவனைப்பற்றிய தகவல்கள் எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டான். சின்னசாமிக்கு உறவு என்று தற்போது யாருமில்லை என்பதையும், சிறு வயதில் போலியோவால் இப்படி ஆகி விட்டது என்பதையும் கேட்டு இரக்கம் காண்பித்து அவனைப் புண்படுத்தவில்லை. சேரியில் வசிக்கும் அவனிடம் சரிசமமாகப் பேசி விட்டு நாளை அவன் எங்கு வரைவான் என்பதையும் தெரிந்து கொண்டு போனான்.

மறு நாள் மாலையும் அஸ்வின் சின்னசாமியைத் தேடி வந்தான். காரைத் தெருவின் எதிர்புறம் நிறுத்தி விட்டு வந்து அவன் வரைந்திருந்த சிவனை நிறைய ரசித்தான். "சிலர் வரையறதில் அழகு இருக்கும், உயிர் இருக்காது. நீங்க வரையறதில் ரெண்டும் இருக்கு."

"அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க, சார். ஏதோ வரைவேன். அவ்வளவு தான்"

அஸ்வின் புன்னகைத்தான். "நீங்க கேன்வாசில் எல்லாம் வரைவீங்களா?"

"அப்படீன்னா..."

"துணியில், பெரிய வெள்ளைப் பேப்பரில் எல்லாம் வரைவீங்களா"

"பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்றீங்க. அதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். நானே வயத்துப் பொழப்புக்கு வரையறவன். அதெல்லாம் எனக்கு வராதுங்க"

அவனது வார்த்தைகளில் இருந்த யதார்த்த உண்மை அஸ்வினுக்கு உறைத்தது. ஓவியங்களைப் பற்றி சிறிது பேசிக்கொண்டிருந்து விட்டுக் கிளம்பும் முன் மறு நாள் எங்கு வரைவான் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்பினான். தான் வரைவதைப் பார்ப்பதற்காகவே அவன் வருவது சின்னசாமிக்கு பெருமையாக இருந்தது. 'நான் நிஜமாவே அவ்வளவு நல்லா வறையறேனா".

மறுநாள் அஸ்வின் வருவான் என்றே வழக்கத்தை விட அதிக சிரத்தை எடுத்துக் கொண்டு வரைந்தான். மனதில் இதுவரை இல்லாத உற்சாகம் இருந்தது. அதைக் கெடுக்கும் விதமாக சில இளைஞர்கள் குடித்து விட்டு தள்ளாடியபடி வந்தார்கள்.

"மாம்ஸ். இது ராமர் படமா, க்ரிஷ்ணர் படமா"

"எவனாயிருந்தா எனக்கென்னடா"

"எனக்கும் ஒண்ணும் இல்லை. சும்மா கேட்டேன். ஏம்ப்பா, உன் பேரென்ன?"

"சின்னசாமிங்க"

"ஓ. ஸ்மால் காட்"

"என்ன சொன்னீங்க"

"உன் பேரை இங்கிலீஷில் சொன்னேன். வரையற படம் மட்டுமல்ல வரையற ஆளும் சாமிதாம்ப்போய்"

"இனி எத்தனை காலத்துக்கு இந்த சாமி படமே வரைவீங்கப்பா. ஒரு அழகான பொண்ணு படம் வரையேன்"

"அதுவும் நிர்வாணமா வரைஞ்சா நோட்டு மழையா கொட்ட நாங்க ரெடி. நீ ரெடியா"

"நீங்க எல்லாம் படிச்சவங்க தானா. இவ்வளவு மட்டமா பேசறீங்களே"

"உன் உயரத்துக்குத் தகுந்த மாதிரி தான் பேசினோம்." என்ற ஒருவன் அவனது கலர் சாக்பீசுகளைத் தள்ளி விட்டான்.

"நீயே பிச்சைக்காரன். பெரிய மனுசன் மாதிரி ஏண்டா பேசறே" என்று இன்னொருவன் சாயங்கள் இருந்த கிண்ணங்களைத் தட்டி விட்டான்.

சின்னசாமிக்கு இரத்தம் கொதித்தது. ".....ப்பசங்களா" என்று கத்த மாணவர்கள் மூர்க்கமாய் தாக்க ஆரம்பித்தார்கள். தெருவில் ஆள் நடமாட்டமே இல்லாதிருந்தது அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. அவன் மயங்கி விழுந்தவுடன் ஓடி விட்டார்கள். இந்த சமயம் அந்தப் பக்கம் வந்த ஒருவன் அசுர வேகத்தில் ஓவியத்தின் மேல் இருந்த காசுகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தான்.
எதிர்பாராது கிடைத்த திடீர் சந்தர்ப்பங்களை உடனடியாக முதலாக்கிக் கொள்ளும் மனிதர்கள் என்றுமே இருக்கிறார்கள்.

அஸ்வின் அங்கு வந்த போது சின்னசாமியை ஒரு நாய் மட்டும் விசாரித்துக் கொண்டிருந்தது. பதைத்துப் போய் "சின்னசாமி...... சின்னசாமி" என்று அழைத்தான். சின்னசாமி அசையவில்லை. தூரத்தில் நின்றிருந்த ஆட்டோவில் உறங்கிக் கொண்டிருந்த ஆட்டோக்காரனை உதவிக்கு அழைத்து சின்னசாமியைத் தூக்கித் தன் காரில் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தான்.

சின்னசாமி கண் விழித்த போது அஸ்வின் அருகில் இருந்தான். "எப்படி இருக்கு சின்னசாமி"

"பரவாயில்லைங்க"

"என்ன ஆச்சு"

சின்னசாமி சொன்னான்.

"கொஞ்சமும் மனிதாபிமானமில்லாமல் சிலர் இப்படிக் காட்டுமிராண்டித்தனமாய் நடந்துக்கறாங்களே" அஸ்வின் அங்கலாய்த்தான்.

"சில பசங்களுக்கு ஜாலியாய் இருக்கிறதுக்கும் அடுத்தவங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறதுக்கும் வித்தியாசம் தெரியாதுங்க. இதெல்லாம் எனக்குப் பழக்கமானது தான். பொதுவா கோபப்பட மாட்டேங்க. ஆனா சில சமயம் என்னையும் மீறி கோபம் வந்துடுதுங்க. நானும் மனுசன் தானே"

அவன் வார்த்தைகள் அஸ்வினின் மனதைத் தொட்டன. "போலிசுக்குப் புகார் தரணும் சின்னசாமி"

"ஐயோ அதெல்லாம் வேண்டாம் சார். அவங்க உபத்திரவம் இன்னும் அதிகமாகும். வந்து வரைஞ்சது மேலே தண்ணி கொட்டுவான். போலிசுக்குக் காசு கொடுத்து ட்ராபிக்குக்கு இடைஞ்சல்னு விரட்ட வைப்பான். இப்படி ஏழைக்குத் தொந்தரவு தர அவங்களுக்கு எத்தனையோ வழி இருக்குங்க. எதிர்த்து நின்னா என் பொழப்பு நடக்காது. மழைக்காலம் வரதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் சம்பாதிச்சா தான் அப்புறம் ரெண்டு மூணு மாசம் என் வயத்தை நிரப்ப முடியும்".

"சரி விடுங்க. டாக்டர் பெரிசா எதுவுமில்லை, இன்னைக்கே வீட்டுக்குப் போகலாம்னு சொல்லிட்டார். இங்கிருந்து போகறதுக்கு முன்னாடி உங்க கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்"

"சொல்லுங்க சார்"

" உங்க கிட்ட பிரமாதமான திறமை இருக்கு. அது பிளாட்பாரத்தோட நின்னுடக்கூடாது. இன்னும் பதினைந்து நாளில் இந்த ஊரில் ஒரு பெரிய ஓவியப் போட்டி நடக்கப் போகுது. இது ஒரு அகில இந்தியப் போட்டி. இதுல நீங்க கலந்துக்கப் போறீங்க. என்ன சொல்றீங்க"

"சார். நீங்க நல்லவங்க. ஆனா நீங்க நினைக்கிற அளவு திறமை எல்லாம் எனக்கு கிடையாது. இந்தப் போட்டி ஒரு ப்ளாட்பாரத்தில் நடக்கிற சாக்பீசுல வரையற போட்டியில்ல. எனக்கு பிரஷ் பிடிக்கக் கூடத் தெரியாது".

"அதையும் வேற சில நுணுக்கங்களையும் நான் சொல்லித்தர்றேன். பதினைந்து நாளில் நீங்க எல்லாமே கத்துக்க முடியும்"

"சார் நீங்க தப்பா நினைக்கக்கூடாது. உங்களுக்குப் பைத்தியம் இல்லையே"

அஸ்வின் வாய் விட்டுச் சிரித்தான். "பைத்தியம் தான். கலைப் பைத்தியம். திறமை எங்க வீணாப் போனாலும் தாங்க முடியாத பைத்தியம். சரின்னு சொல்லுங்க சின்னசாமி. என் கூட என் வீட்டுக்கு வந்துடுங்க. எண்ணி பதினைந்து நாள் இருங்க. இந்தப் பதினைந்து நாளில் நீங்க எவ்வளவு சம்பாதிப்பீங்களோ அதை நான் தர்றேன். சரியா"

"என்ன மனிதனிவன் " என்று சின்னசாமி வியந்தான். ஏளனம், அவமானம், சில சமயங்களில் இரக்கம் இதை மட்டுமே மற்றவர்கள் அவனுக்குத் தந்திருக்கிறார்கள். இப்படி ஒரு முக்கியத்துவமும், அன்பும் இது வரை யாருமே அவனுக்குத் தந்ததில்லை. என்னென்னவோ சொல்லிப் பார்த்தான். அஸ்வின் அதற்கெல்லாம் மசியவில்லை. அவனுக்கு எல்லாமே கனவில் நடப்பது போல இருந்தது. கடைசியில் சரியென்றான்.

அஸ்வின் ஒரு பெரிய கம்பெனியில் கம்ப்யூட்டர் இஞ்சீனியர் என்றும் திருமணமாகவில்லை என்றும் பெற்றோர் இருவரும் உயர்ந்த அரசாங்கப் பதவிகளில் பெங்களூரில் இருக்கிறார்கள் என்றும் சின்னசாமி தெரிந்து கொண்டான். அவன் வீட்டுக்குள் நுழையவே சின்னசாமி சங்கடப்பட்டான். சேரிக்கே பொருத்தமான தன் உருவம் இந்தப் பணக்கார வீட்டில் சிறிதும் பொருத்தமில்லாமல் இருப்பதாக அவனுக்குப் பட்டது. தயக்கத்துடன் நுழைந்தான்.

அன்றே அஸ்வின் ஏகப்பட்ட உபகரணங்களை அவனுக்கு அறிமுகப்படுத்தினான். உபயோகப்படுத்தும் முறைகளை மிகவும் பொறுமையோடு சொல்லிக் கொடுத்தான். சிறிது நேரத்தில் சின்னசாமி ஒரு குழந்தையின் உற்சாகதோடும் பிரமிப்போடும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஆரம்பித்தான்.

"சார் நீங்களும் வரைவீங்களா"

"ம்.வரைவேன்" என்று சுருக்கமாகச் சொல்லி அஸ்வின் பேச்சை மாற்றினான்.

மூன்று நாட்கள் லீவு போட்டு அவனுடனேயே இருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தான். அவனுக்கு உணவு, உடை எல்லாம் கொடுத்தான். தொடர்ந்த நாட்களில் சின்னசாமி நேரம், காலம் எல்லாவற்றையும் மறந்தான். வரையும் போது எத்தனையோ முறை அஸ்வின் வந்து நின்று பார்ப்பான். பல சமயங்களில் அவன் வந்தது, நின்றது, போனது எதுவுமே சின்னசாமிக்குத் தெரிந்ததில்லை. பல சமயம் வைத்த காபி, சாப்பாடு எல்லாம் வைத்த இடத்திலேயே இருக்கும். அஸ்வின் பல முறை நினைவு படுத்த வேண்டி இருக்கும். லீவு முடிந்து கம்பெனிக்குப் போக ஆரம்பித்த பின்னும் சின்னசாமிக்கு மதியம் சாப்பிடத் தேவையானவற்றைத் தயார் செய்து வைத்து விட்டுப் போவான். ஆரம்பத்தில் சின்னசாமிக்கு அது மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. "சார் இதெல்லாம் வேண்டாங்க" என்று சொல்லிப் பார்த்தான். "இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. வரையறதைத் தவிர வேற எல்லாத்தையும் நீங்க மறந்துடுங்க சின்னசாமி" என்று வாயடைத்தான். அவன் சொன்னது போலவே சின்னசாமி எல்லாவற்றையும் மறந்து தான் வரைந்து கொண்டிருந்தான். போட்டிக்கு முந்தைய நாளான இன்று தான் மனம் ஏனோ பழையதை அசை போடுகிறது.

அன்று மாலை அஸ்வின் வந்தவுடன் சின்னசாமி கேட்டான். "இப்ப இதில் நான் நல்லா வரையறேனா சார்"

"ஜமாய்க்கிறீங்க. முதல் பரிசு எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சமும் ஒரு கப்பும். போட்டியில் ஒரே ஒரு முக்கியமான விஷயம். அதில் மட்டும் நீங்க தேர்ந்தெடுக்கிறது சிறப்பாய் இருந்தால் பரிசு நிச்சயம்."

"என்ன சார் அது"

"ஒரு தலைப்பு தருவாங்க. அதற்குப் பொருத்தமான ஓவியத்தை நீங்க உங்க கற்பனையில் தேர்ந்தெடுக்கணும். அதுக்கு மட்டும் நான் உங்களைத் தயார் செய்ய முடியாது".

சின்னசாமியின் உற்சாகமெல்லாம் வடிந்து போனது. "சார் அதெல்லாம் என் தலைக்கு எட்டுங்களா"

"எல்லாம் எட்டும். எத்தனை அனுபவங்கள் எத்தனை காட்சிகள் நீங்கள் பார்த்திருப்பீங்க. அதில் எதாவது அந்தத் தலைப்புக்குப் பொருந்தும். அதை வரைஞ்சிடுங்க" என்று சின்னசாமிக்கு தைரியம் சொன்னாலும் அந்த விஷயத்தில் அஸ்வினுக்கே சந்தேகம் இருந்தது. இதை வரை என்றால் சின்னசாமி சிறப்பாய் வரைவது நிச்சயம். ஆனால் பெரும்பாலும் வித்தியாசமான தலைப்புகளே தரப்படும். சென்ற வருடம் டில்லியில் போட்டி நடந்த போது "சாரி ஜஹாங் சே அச்சா" என்ற தலைப்பு தந்து எல்லா இந்திய மொழிகளிலும் தலைப்பை மொழிபெயர்த்தும் கொடுத்தார்கள். இப்படி கவிதைத் தலைப்பாய் தந்தால் அதற்குப் பொருத்தமாய் சின்னசாமிக்கு வரைவதைத் தேர்ந்தெடுக்க முடியுமா என்று தான் யோசனையாய் இருந்தது.

போட்டி நாள் அன்று இரண்டு செட் உபகரணங்களை எடுத்து வைப்பதைக் கண்ட சின்னசாமி "எதுக்குங்க ரெண்டு செட்"

"எனக்கும் உங்களுக்கும்" என்று அஸ்வின் புன்னகையோடு சொன்னான்.

தனக்குச் சொல்லிக்கொடுக்கும் அளவு ஞானம் உள்ளவன், இந்தக் கலையில் இவ்வளவு ஆர்வம் உள்ளவன் போட்டியில் கலந்து கொள்வான் என்று தனக்கு உறைக்காதது ஏன் என்று சின்னசாமி தன்னையே கேட்டுக் கொண்டான். ஆனால் தனக்குப் போட்டியாக தானே ஒருவனை வலுக்கட்டாயமாக உருவாக்குவானா என்பது தான் ஆச்சரியமாக இருந்தது.

போட்டி நடக்கும் இடத்தில் காரிலிருந்து அவர்கள் இறங்கிய போது பல பத்திரிக்கை மற்றும் டிவி நிருபர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். "தொடர்ந்து மூன்று வருடங்கள் முதல் பரிசு வாங்கியிருக்கிறீர்கள். இந்த தடவையும் வாங்கிடுவீங்களா" என்று ஒரு நிருபர் அஸ்வினைக் கேட்ட போது, "இந்த தடவை போட்டி கடுமையாக இருக்கும்னு எதிர்பார்க்கிறேன்" என்று அவன் சொல்லி சின்னசாமியைப் பார்த்து லேசாகக் கண்ணடித்தான்.

சின்னசாமிக்கு நாக்கு வரண்டது. அஸ்வின் இவ்வளவு பிரபலமான ஓவியன் என்று இப்போது தான் தெரிகிறது. அங்கு கிட்டத்தட்ட நூறு போட்டியாளர்கள் வந்திருந்தார்கள். ஓவியர்கள் தங்களது ஓவியங்களை முன்பே அனுப்பி அவற்றின் தரத்தை ஒரு குழு ஆராய்ந்து பார்த்து தான் போட்டியில் கலந்து கொள்ளவே அனுமதி கிடைக்கும் என்றும் அஸ்வின் மிகவும் சிபாரிசு செய்து தான் தனக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருக்கிறார்கள் என்றும் அவர்களில் சிலர் பேசும் போது சின்னசாமிக்குத் தெரிந்தது. பெரும்பாலோரின் நாகரிக உடையும் நுனி நாக்கு ஆங்கிலமும் பத்திரிக்கை டிவி கேமராக்களும் கண்டு சின்னசாமி பயந்து போனான். எல்லாமே அன்னியமாகவும் தன் தரத்திற்கு எட்டாத தூரத்தில் இருப்பதாகவும் அவனுக்குப் பட்டதால் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று தோன்றியது. அஸ்வின் அவனருகே வந்த போது "என்னங்க என்னை இப்படி மாட்ட விட்டுட்டீங்களே. எனக்கு இதெல்லாம் வேண்டாங்க. நான் போயிடறேன்" என்றான்.

"போட்டி முடிஞ்சாப் போயிட வேண்டியது தான். அது வரைக்கும் எந்தப்பேச்சும் கூடாது. சொல்றதை கவனமாய் கேளுங்க. அவங்க ஒரு தலைப்பு தருவாங்க. அதைத் தமிழிலேயும் சொல்வாங்க. நல்லா யோசிச்சு அதை வைத்து உங்களுக்கு என்ன வரையணும்னு தோணுதோ அதை வரையிங்க.சரியா. எத்தனை கடவுள்களை வரைஞ்சிருப்பீங்க. அத்தனை கடவுள்களும் உங்களுக்குக் கண்டிப்பாய் உதவி செய்வாங்க". பதிலுக்குக் காத்திராமல் தனது இடத்திற்குப் போய் விட்டான்.

சின்னசாமிக்கு வரைய செளகரியமாக எல்லா ஏற்பாடுகளும் தனியாக செய்திருந்தார்கள். அவன் மனதில் மட்டும் நம்பிக்கையோ உற்சாகமோ இல்லை. தனக்கு எதாவது பரிசு கிடைக்கும் என்று அவன் சிறிதும் நம்பவில்லை. "கடவுளே அந்த சாரின் நல்ல மனசுக்கு இந்த தடவையும் அவருக்கே முதல் பரிசு கிடைக்கணும்" என்று வேண்டிக்கொண்டான்.

தலைப்பை அறிவித்தார்கள். "நெஞ்சு பொறுக்குதிலையே". இந்த முறை பாரதியின் கவிதை வரி.

சின்னசாமி யோசித்தான். எல்லாரும் தலைப்பைக் கேட்டவுடன் வரைய ஆரம்பித்து விட்டார்கள். "எத்தனை அனுபவங்கள், காட்சிகள் உங்கள் வாழ்க்கையில் பார்த்திருப்பீங்க. அதில் ஏதாவது தலைப்புக்குப் பொருந்தும். அதை வரையுங்க" என்று அஸ்வின் சொல்லி இருந்தது நினைவில் வந்தது. அவனுக்கு நெஞ்சு பொறுக்காத அனுபவம் சமிபத்தில் அடி பட்டது தான். அஸ்வின் தன்னை எந்த நிலையில் கண்டான் என்று சொல்லி இருந்தான். "பார்க்க மனசுக்குப் பொறுக்கலே" என்ற அவனது வார்த்தையும் நினைவுக்கு வர அந்தக்காட்சியையே வரைய தீர்மானம் செய்தான். எதாவது ஒன்றை வரைந்து அங்கிருந்து போனால் போதும் என்று தோன்றவே அத்ற்கு மேல் யோசிக்கவில்லை.

வரைய ஆரம்பித்த பின் வழக்கம் போல் எல்லாவற்றையும் மறந்தான். அவன் மனக்கண்ணில் அந்தக் காட்சி விரிய திரைச்சீலையில் அந்தக் காட்சி உயிர் பெற ஆரம்பித்தது. மற்றவர்களை விட முன்பாகவே வரைந்து முடித்தும் விட்டான். எல்லோருடைய ஓவியங்களையும் ஒருவர் வந்து வாங்கிக் கொண்டு போனார். பரிசை சிறிது நேரத்தில் அங்கேயே அறிவிப்பார்களாம்.

அஸ்வின் ஆர்வத்துடன் வந்து கேட்டான். "என்ன வரைஞ்சீங்க?". சின்னசாமி சொன்னான்.

"நான் ஒரு குழந்தைத் தொழிலாளியை வரைஞ்சேன்" என்ற அஸ்வின் ஒரு கணம் யோசித்து விட்டுச் சொன்னான் "நான் மட்டுமல்ல எல்லாரும் மத்தவங்களையோ வேற காட்சிகளையோ வரைஞ்சிருப்பாங்க. அதில் எங்க திறமை மட்டும் இருக்கும். உங்க ஓவியத்தில் நீங்களே இருக்கீங்க, உங்க சொந்த அனுபவமே இருக்கு. உங்க திறமையைப் பத்தி சொல்ல வேண்டியதில்லை. பரிசு கண்டிப்பாய் கிடைக்கும். வாழ்த்துக்கள்"

"சார், எனக்காக இவ்வளவு செய்யறீங்க. இதுக்கு நான் எத்தனை ஜென்மம் எடுத்து கடன் தீர்க்கப் போறேன்னு தெரியல"

"பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க சின்னசாமி. உங்க திறமை உங்களுக்குத் தெரியாது. அது ஒரு பிளாட்பாரத்தில் ஆரம்பிச்சு அங்கேயே முடிஞ்சுடக் கூடாது. அது மேடை ஏறணும். நீங்க நிறைய வரையணும். நான் ரசிச்ச மாதிரி உலகமே ரசிக்கணும்..."

பரிசை அறிவிக்கப் போகிறார்கள் என்று அறிவித்தார்கள். அரங்கில் பேரமைதி நிலவியது.

"முதல் பரிசு சின்னசாமிக்கு....."

சின்னசாமி அதிர்ச்சியில் பிரமை பிடித்தவன் போல் இருந்தான். இது கனவா நனவா என்று ஒன்றும் புரியவில்லை. அவனைக் கேமராக்கள் படம் பிடிக்க ஆரம்பித்தன. அஸ்வின் முகத்தில் மகிழ்ச்சி எல்லையில்லாமல் விரிந்தது. சின்னசாமிக்கு ஒரு வேளை தன் தாய் உயிரோடு இருந்திருந்தால் இப்படி சந்தோஷப் பட்டிருக்கலாம் என்று தோன்றியது.

முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தை தேர்வுக் குழுவின் தலைவர் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார் "...ஒரு உடல் ஊனமுற்ற கலைஞன் யாரும் கேட்பாரற்று நிராதரவாய் தன் ஓவியத்தின் மீதே விழுந்து கிடக்கும் இந்த நிலை நிஜமாகவே தலைப்புக்குப் பொருத்தமாக இருந்ததாலும், ஓவியம் உயிரோட்டத்துடன் தத்ரூபத்துடன் இருந்ததாலும் ..." சின்னசாமிக்கு அவர் பேசியது என்ன என்றே தெரியவில்லை.

இரண்டாம் பரிசு அஸ்வினுக்கும் மூன்றாம் பரிசு ஒரு பஞ்சாபிக்கும் கிடைத்தது.

நிருபர்களுடன் கேமராக்களும் மைக்குகளும் சின்னசாமியை நெருங்கின. "உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்"

"என்னப் பத்தி சொல்ல ஒண்ணும் இல்லைங்க. நான் பிளாட்பாரத்தில் சாக்பீசையும், சாயத்தையும் வெச்சு வரைஞ்சிட்டிருந்த ஒரு சாதாரணமான ஆளுங்க".

"சமூக ஓவியங்கள் எல்லாம் முன்பு வரைந்ததுண்டா"

"இல்லைங்க. கடவுள் படம் தான் வரைஞ்சிருக்கேன். அதுக்கு தான் காசு விழும். ஒரு கடவுள் படம் தவிர எல்லாக் கடவுள் படமும் வரைஞ்சிருக்கேங்க."

"எந்தக் கடவுளை படம் வரைந்ததில்லை" ஒரு நிருபர் ஆர்வத்துடன் கேட்டார்.

"அந்தக் கடவுளைத் தாங்க" என்று அஸ்வினைக் காட்டிக் கண் கலங்கிய சின்னசாமிக்கு மேற்கொண்டு பேச முடியவில்லை.
____________________________________________________________________________________________________

என்.கணேசன்

Monday, November 19, 2007

கர்ம யோகம்-செயல் திறன் மேம்பாட்டுக் கலை

பலனுக்காகத் தானே பாடுபடுகிறோம், ஒரு செயலைச் செய்ய முற்படுகிறோம். ஆனால் பலனையே எதிர்பாராது வேலை செய் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறாரே இது முரண்பாடாக இருக்கிறதே என்று பலரும் கர்மயோகத்தைக் குறை கூறுவது உண்டு. கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே என்று ரத்தினச் சுருக்கமாக கர்மயோகத்தைச் சொல்லும் போது இப்படித் தோன்றுவது தவறும் அல்ல. ஆனால் சற்று ஆழமாகப் பார்த்தால் ஸ்ரீகிருஷ்ணரின் கர்மயோகம் முரண்பாடில்லாதது என்பதையும் அது ஒரு அருமையான செயல் மேம்பாட்டுத் தத்துவம் என்பதையும் நாம் உணர முடியும்.

செயலிலேயே விளைவும் இருக்கிறது, எனவே விளைவைப் பற்றிய கவலையோ, சந்தேகமோ தேவையில்லை என்பதையே பகவான் கூறுகிறார். ஒரு பென்சிலை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு நான் கீழே போடத் தயாராக இருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அதனைக் கைவிடுவதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க மட்டுமே எனக்கு சுதந்திரம் உண்டு. கைவிட்டு விட்டால் அந்த செயலிலேயே அது கீழே விழும் என்ற இயற்கை விதியாகிய பலன் இருக்கிறது. அதை விட்ட பின் கீழே விழுமா என்ற சந்தேகமும்,
கீழே விழுந்து விட்டதே என்ற வருத்தமும் ஏற்பட்டால் அது முட்டாள்தனமே.

ஒரு ஊருக்குப் போகிற பாதையை வழிகாட்டிப் பலகை பார்த்து அந்தப் பாதையில் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் நடக்க ஆரம்பித்தபின் ஊரின் தூரம் ஒவ்வொரு அடியாகக் குறைந்து கொண்டே வருகிறது இயற்கையே. நடக்கும் வேகத்திற்கேற்ப சீக்கிரமாகவோ, தாமதமாகவோ நாம் போய் சேர்வது உறுதி. ஊருக்குப் போய் சேர்வோமா என்ற சந்தேகமோ, பரபரப்போ தேவையில்லை.

எதை எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்து அதற்கேற்ற பலன் சரியான காலத்தில் தானாக வரும் என்பதால் பலனைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்கிறார் பரமாத்மா.

இதை சுவாமி சின்மயானந்தர் அழகாகச் சொல்வார். "In fact, the reward of an action, when we understand it properly, is not anything different from the action itself. An action in the PRESENT, when conditioned by a FUTURE time, appears as the fruit of action. In fact, the action ends or fulfils itself as reaction or fruit in future."

பலனில் பற்று வைப்பது என்பது தேவையில்லாத கனவுகளையும், கவலைகளையும், பயங்களையும், பரபரப்புகளையும் தூண்டி விடக் கூடியது. அது நிச்சயமாக நமது செயல் திறத்துக்கு குறுக்கீடுகளை ஏற்படுத்தும். சீரான மனநிலையில் சிந்தித்து தேவையானவற்றை சிறப்பாகச் செய்ய பற்று நம்மை அனுமதிப்பதில்லை. பல சமயங்களில் தலைக்கனம் ஏற்படுத்தி தொடர்ந்து செய்யும் காரியங்களில் அலட்சியத்தை ஏற்படுத்தி விடக் கூடியது. எனவே தான் பற்று இன்றி செயல்கள் புரிய கர்மயோகம் அறிவுறுத்துகிறது.

பலனில் பற்று என்பது வேறு வகைகளிலும் நம் செயல் திறனைக் குறைக்கிறது. உதாரணத்திற்கு ஒரு நல்ல செயல் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதனைப் பலரும் பாராட்டக் கூடும். நீங்கள் கைதட்டல் பெறக்கூடும். ஆனால் அடுத்து இதே போன்று இன்னொரு செயலை அருமையாகச் செய்யும் போது பாராட்டோ, கைதட்டல்களோ குறைந்து போனால் அது உங்களை வெகுவாக பாதிக்கும். அதன் விளைவு அடுத்த செயல்களிலும் தொடரும்; நமது செயல்திறன் குறையும்.

நம் திறமைக்கும் தனித்துவத்துக்கும் பாராட்டுகள் வாங்கியது போய் பாராட்டுக்கும் கைதட்டல்களுக்கும் வேண்டி நம் செயல்களையும் தனித்துவத்தையும் மாற்றிக் கொண்டு சோரம் போக வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாக நேரிடும். இதை இன்றைய காலகட்டத்தில் நாம் நிறையவே காண முடியும்.

உங்கள் திறமைகள் பலன் தராமல் இருக்கப் போவதில்லை. பூத்துக் குலுங்கும் மலர்கள் வண்டுக்கு சீட்டு எழுதி அனுப்பத் தேவையில்லை. ரமண மகரிஷி போன்ற ஞானிகள் சீடர்களையும் பக்தர்களையும் தேடிப் போனதில்லை. என்ன சொன்னால் பிரபலமாவோம் என்று கவலைப் பட்டதில்லை. ஏன் ஆரம்பத்தில் அதிகமாக ரமண மகரிஷி வாய் திறந்து கூடப் பேசியதில்லை. ஆனால் அவரிடம் இருந்த ஆன்மீக சக்தி காந்தமாக உலகை அவர் பக்கம் ஈர்த்தது.

கர்மயோகம் குறிக்கோளில்லாமல் இருக்கச் சொல்லவில்லை. அர்த்தமில்லாமல் செயல் புரியச் சொல்லவில்லை. செய்யும் செயலை விட்டேற்றியாகச் செய்யச் சொல்லவில்லை. சிறப்பாகச் செய்து முடித்த ஆத்மதிருப்தியை இழந்து விடச் சொல்லவில்லை. செயலில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை இழந்து விடச் சொல்லவில்லை.

மாறாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கச் சொல்கிறது. நம்மை செய்யும் செயலில் முழுமையாக ஈடுபடச் சொல்கிறது. செயலில் கீழ், மேல் என்ற பாகுபாடுகள் இல்லை என்று சொல்கிறது. பலன், புகழ், கவலை, பயம் என்று நமது சக்திகளை வீணடிக்காமல் செய்யும் செயலில் கண்ணாயிருக்கச் சொல்கிறது. அப்படி முழுமையாகச் செய்த செயல்கள் என்றும் சிறக்காமல் போனதில்லை. காலத்தை வென்று நிற்கும் அத்தனை அற்புத சாதனைகளும் அப்படி செய்யப்பட்டவையே.

எனவே செயலையும் செயல்முறையயும் சிந்தித்துத் தேர்ந்தெடுங்கள். உற்சாகமாகச் செய்யுங்கள். செயலைச் செய்யும் போது உயிரோட்டத்துடன் இருங்கள். உங்கள் செயல் சிறப்பாக அமையும். பலனைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உங்கள் செயலிலேயே பலனை விதைத்து விட்டீர்கள். தக்க காலத்தில் பலன் வந்தே தீரும். அது இயற்கையின் விதி. இதுவே கர்மயோகம்.

(மேலும் ஸ்ரீகிருஷ்ணர் கர்மயோகம் பற்றி விவரித்ததோடல்லாமல் மகாபாரதத்தில் அதை வாழ்ந்து காட்டியிருக்கிறார். பரம்பொருள் தேரோட்டியாக பணி புரிவதா என்று பின் வாங்கவில்லை. தேரோட்டி என்பது யுத்தம் ஆரம்பிக்கும் போது தயார் நிலையில் இருக்கும் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு வேலையைத் தொடங்குவது அல்ல. அதிகாலை எழுந்து குதிரையைக் குளிப்பாட்டி அதனுடன் அன்பான உறவை சாரதி வைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் யுத்தகளத்தில் குதிரை சொன்னபடி இயங்கும் என்பது நிச்சயமில்லை. ஸ்ரீகிருஷ்ணர் குதிரைகளைக் குளிப்பாட்டும் அழகை வியாசர் மிக அழகாக மகாபாரதத்தில் விவரிக்கிறார்.

அதுமட்டுமல்ல தேரில் இருந்து போரிடும் வீரன் தேர் எந்தப் பக்கம் போக வேண்டும் என்பதை தன் காலால் தேரோட்டியின் தோளில் அழுத்தி சமிக்ஞை செய்வான். அதன்படி தான் சாரதி தேரை ஓட்ட வேண்டும். அப்படி அர்ஜுனனின் கால்மிதிகளை பதினெட்டு நாள் வாங்கிக்கொண்டு சாரதியாக இருந்திருக்கும் பகவான் கர்மயோகத்தை சொல்லால் மட்டுமல்ல செயலாலும் விளக்கி இருக்கிறார்.)


-என்.கணேசன்

Friday, November 16, 2007

இவரல்லவோ மனிதர்!


தமிழில் ஒரு பழமொழி உண்டு. "அரை படி அரிசியில் அன்னதானம்; விடிகிற வரையில் மேளதாளம்". ஒரு சிறு சாதனையையோ, நல்ல காரியத்தையோ செய்து விட்டால் போதும் கூரை மேல் நின்று பறை சாற்றுகிற பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் சத்தமில்லாமல் பலவற்றை சாதித்து அடக்கமாக இருக்கும் மகத்தான மனிதர்களும் உள்ளனர்.

சாதனை என்ற சொல்லுக்கு உண்மையில் ஒரு மனிதரைக் காட்டச் சொன்னால் தாமஸ் ஆல்வா எடிசனை விடப் பொருத்தமானவரைக் காட்ட முடியாது. அவரது கண்டுபிடிப்புகள் ஆயிரத்திற்கும் மேல். வேறெந்த விஞ்ஞானியும் அந்த எண்ணிக்கையில் பாதி கூட வந்ததாகத் தகவல் இல்லை. அவர் செய்த சாதனைகளையும் விட அவருடைய மனப்பக்குவம் பெரியது என்றே சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு சில
நிகழ்வுகள்.....

அக்காலத்தில் மின்சாரத்தை சேமித்து வைக்கும்பேட்டரிகள் மிகக் கனமாகவும், எளிதில் உடைவதாகவும் இருந்தன. எடை குறைந்த உறுதியான பேட்டரியைக் கண்டு பிடிக்க முயன்றார் எடிசன்.

ஆராய்ச்சிகள் சுமார் ஒன்பது ஆண்டுகள் நடந்தன. சுமார் 8000க்கும் மேற்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. "எடிசனின் பேட்டரி கனவு முயற்சிகள் தோல்வி" என்று பத்திரிக்கைகள் திரும்பத் திரும்ப எழுதி வந்தன.

ஆனால் எடிசன் மனம் தளரவில்லை. "நாம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்யத் தயாராக இருந்தால், இயற்கையும் தன் ரகசியங்களை வெளிப்படுத்த மறுக்கப் போவதில்லை" என்று அவர் அடிக்கடி கூறுவார்.

ஒரு முறை ஒரு நிருபர் அவரிடம் கேட்டார். "தங்களுடைய 8000 ஆராய்ச்சிகளும் வீண் தானே?"

எடிசன் சொன்னார். "இல்லை. இந்த 8000 விதங்களில் எனது பேட்டரியை உருவாக்க முடியாது என்பதை நான் கண்டு பிடித்திருக்கிறேன். ஒரு வேளை நான் அந்த பேட்டரியை உருவாக்க முடியா விட்டாலும், எனக்குப் பின் வரும் விஞ்ஞானிகள் இந்த 8000 விதங்களைத் தவிர்த்து வேறு புதிய முறைகளில் தங்களது ஆராய்ச்சியைத் தொடரலாமே"

தன் முயற்சியின் பலன் தங்கள் பிள்ளைகளைத் தவிர வேறு எவருக்காவது போய் சேர்ந்தால் வயிறு எரிந்து சாகும் மனிதர்கள் மத்தியில் இவருக்கு எப்படிப்பட்ட பரந்த மனம் பாருங்கள்!

மேலும் 2000 முயற்சிகளுக்கும் பிறகு அவரே அந்த பேட்டரியை (nickel-iron-alkaline storage battery) கண்டு பிடித்தார்.

அக்காலத்தில் தாம் வசித்து வந்த நியூயார்க் நகரின் வீடுகளிலும், வீதிகளிலும் மின்சார விளக்குகள் ஒளிவீச வேண்டும் என்பது எடிசனின் ஆசை. ஆனால் கேஸ் மற்றும் எண்ணெய் விளக்குகளை மட்டும் உபயோகப்படுத்திக் கொண்டு இருந்த காலத்தில் அவரது ஆசை நிறைவேறும் என்று அவரைத் தவிர யாரும் நம்பவில்லை. விஞ்ஞானிகள் எடிசனுக்கு எதிராகத் தங்கள் கருத்துகள் மூன்றை ஆணித் தரமாகக் கூறினர்.

ஒன்று, மின்சாரத்தைப் பல இடங்களுக்கு வினியோகிக்க முடியாது. இரண்டு, அப்படியே முடிந்தாலும் ஒவ்வொருவரும் எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கணிக்க முடியாது. மூன்று, மின்சார விளக்கு கேஸ் லைட் போல மலிவானதல்ல. அக்காலக் கட்டத்தில் அறிவியல் அந்த அளவே வளர்ந்து இருந்ததால் அவர்கள் கூறியதில் உண்மை இருந்தது.

வழிகள் இல்லா விட்டால் அவை உருவாக்கப்பட வேண்டும் என்பது எடிசனின் சித்தாந்தம். அவர் தன் ஆராய்ச்சிக்கு உதவும் ஒவ்வொரு புத்தகத்தையும், கட்டுரையையும் விடாமல் படித்தார். 200 நோட்டுப் புத்தகங்களில் 40000 பக்கங்களுக்கும் மேற்பட்ட பக்கங்களில் தம் கருத்துக்களையும் வரைபடங்களையும் பதித்து ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

முடிவில் அவரது கனவு நனவானது. உலகிலேயே மின் விளக்குகளால் ஒளி பெற்ற நகரம் என்ற பெருமையை நியூயார்க் நகரம் பெற்றது.

பத்திரிக்கையாளர்களும், சக விஞ்ஞானிகளும் அவரைப் பாராட்ட ஓடோடிச் சென்ற போது அவர் தமது ஆராய்ச்சிக்கூடத்தில் வேறொரு ஆராய்ச்சியை ஆரம்பித்திருந்தார். அவரது மகத்தான ஆராய்ச்சி வெற்றி பற்றிக் கேட்ட போது அவர் சொன்னார்: "நேற்றைய கண்டுபிடிப்புகள் பற்றிப் பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை"

ஒரு சாதனை செய்து விட்டால் அதிலேயே மகிழ்ந்து திளைத்து மயங்கும் மனிதர்கள் மத்தியில், உலக சாதனை புரிந்த போதும் அதை நேற்றைய கண்டுபிடிப்பு என்று இயல்பாகக் கூறி அடுத்த சாதனை படைக்கக் கிளம்பிய இவர் அற்புத மனிதரேயல்லவா?

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும் செய்ததைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் பழக்கம் இல்லாததால் தான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டிபிடிப்புகளுக்கான நேரம் அவரிடம் இருந்தது.

இளைஞர்களே, சோதனைகளைக் கடந்தே சாதனைகள் வரும். எடிசனின் "வெற்றியில் 1% அறிவு, 99% உழைப்பு" என்கிற வாசகம் பிரசித்தமானது"

அந்த ஒரு சதவீதத்தை இறைவன் நம் அனைவருக்கும் அளித்துள்ளான். அத்துடன் 99 சதவீத உழைப்பைச் சேர்த்தால் எவரும் எடிசனைப் போல சாதனைகள் படைக்கலாம்.

-என்.கணேசன்

Tuesday, November 13, 2007

படித்ததில் பிடித்தது- WHAT IS MATURITY?



இன்றைய உலகில் அறிவுக்குப் பஞ்சமில்லை. பக்குவத்தைத் தான் அதிகம் பார்க்க முடிவதில்லை. பக்குவம் என்பதென்ன என்ற கேள்விக்கு அருமையான பதிலை சமீபத்தில் படித்தேன். இப்படி நாமும் பக்குவமாக இருக்க முயற்சி செய்யலாமே!

-என்.கணேசன்.

What is Maturity?
(from Courage to Change: One Day At a Time in Al-Anon, page 63)

Knowing myself.

Asking for help when I need it and acting on my own when I don't.

Admitting when I'm wrong and making amends.

Accepting love from others, even if I'm having a tough time loving myself.

Recognizing that I always have choices, and taking responsibility for the ones I make.

Seeing that life is a blessing.

Having an opinion without insisting that others share it.

Forgiving myself and others.

Recognizing my shortcomings and my strengths.

Having the courage to live one day at a time.

Acknowledging that my needs are my responsibility.

Caring for people without having to take care of them.

Accepting that I'll never be finished -- I'll always be a work-in-progress.

Saturday, November 10, 2007

வாழ்க்கையில் ஒரு சவால்

சிலர் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் பிறப்பதே அதற்காகத் தான் என்று நம்புகிறார்கள். சிலரோ வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் அது தான் அர்த்தமுள்ள வாழ்க்கை என்று சிந்திக்கிறார்கள். இதில் எது சரி என்ற கேள்விக்கு சரியான விடையை அவரவர் மனநிலைக்குத் தகுந்தபடி நாம் எடுத்துக் கொள்கிறோம்.

இந்தக் கேள்விக்கு அழகான பதில் ஒன்று சமீபத்தில் நான் படித்த நாவலில் எனக்குக் கிடைத்தது. அந்த நாவல் Paulo Coelho எழுதிய The Alchemist.

அந்த நாவலில் கதாநாயகன் தன் பிரயாணத்தின் வழியில் உள்ள ஒரு ஊரில் ஒரு சித்தரைப் போன்ற மனிதரைச் சந்திக்கிறான். அந்த மனிதர் ஒரு டீ ஸ்பூனை அவனிடம் கொடுத்து அதில் இரண்டு சொட்டு எண்ணையையும் ஊற்றி அந்த எண்ணெய் சிந்தி விடாதபடி அந்த ஸ்பூனை எடுத்துக் கொண்டு ஊரைச் சுற்றி வரச் சொன்னார். கதாநாயகன் அப்படியே கவனமாக அந்த ஸ்பூனுடன் சென்று ஊரைச் சுற்றி வருகிறான்.

அவர் அந்த ஸ்பூனில் எண்ணெய் அப்படியே இருப்பதைப் பார்த்து விட்டு அவனிடம் ஊரில் உள்ள அழகான சில இடங்களின் பேரைச் சொல்லி அதையெல்லாம் ரசித்துப் பார்த்தாயா என்று கேட்கிறார். கதாநாயகன் தன்னால் அதையெல்லாம் சரியாகப் பார்க்க முடியவில்லை என்றும் தன் கவனமெல்லாம் எண்ணெய் சிந்தி விடாமல் இருக்க வேண்டும் என்பதிலேயே இருந்தது என்றும் சொல்கிறான்.

அந்த மனிதர் திரும்பவும் அந்த ஸ்பூனுடன் சென்று அந்த இடங்களை எல்லாம் நன்றாகக் கண்டு களித்து வரச் சொல்கிறார். அவனும் சென்று அவர் சொன்ன இடங்களை எல்லாம் நன்றாக ரசித்து விட்டு வருகிறான். உற்சாகமாகத் தான் கண்டு களித்த இடங்களின் அழகை வர்ணிக்கிறான்.

அதையெல்லாம் கேட்டு விட்டு அந்தப் பெரியவர் அமைதியாகக் கேட்கிறார். "சரி நான் கொடுத்த எண்ணெய் எங்கே?"

அப்போது தான் அந்த ஸ்பூனில் எண்ணெய் இல்லாததை அவன் கவனிக்கிறான்.

அந்த மனிதர் அந்தக் கதாநாயகனுக்குச் சொல்லும் அறிவுரை பொருள் பொதிந்தது.

"Well, there is only one piece of advice I can give you," said the wisest of wise men. "The secret of happiness is to see all the marvels of the world, and never to forget the drops of oil on the spoon".

அந்த மனிதர் அந்த நாவலின் கதாநாயகனை அனுப்பியது போல் தான் கடவுளும் நமக்கு ஏதாவது ஒரு குறிக்கோள் என்ற எண்ணெயைக் கொடுத்து வாழ்க்கையை நன்றாக அனுபவித்தும் வர இந்த உலகத்திற்கு நம்மை அனுப்பியிருக்கிறார். இந்த இரண்டில் ஒன்று நிறைவேறா விட்டாலும் நாம் உண்மையான சந்தோஷத்தையும் நிறைவையும் இந்த வாழ்க்கையில் பெற முடியாது. நல்லபடியாக வாழ்க்கையை ரசித்து வாழ்வோம். அதே நேரத்தில் அர்த்தமுள்ள குறிக்கோளில் இருந்து நமது கவனம் எந்தக் கணத்திலும் சிதறி விடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வோம்.

இனியொரு வாழ்க்கை நமக்கு இருக்குமா, இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று நமக்கு நிச்சயமில்லை. ஆகவே கிடைத்த இந்த வாழ்க்கையில் அர்த்தத்தையும், ஆனந்தத்தையும் இழந்து விடாமல் பார்த்துக் கொள்வோம்.

- என்.கணேசன்.

Wednesday, November 7, 2007

மனிதன் மாறவில்லை


"யார் வேணும்?"

"சுசீலாங்கறது...."

"நான் தான். நீங்க...?"

திவாகர் ஒரு கணம் தயங்கி விட்டுச் சொன்னான். "என்னை உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. உங்க கணவர் சோமநாதன் என்னை இங்கே அனுப்பினார்"

கணவரின் பெயரைக் கேட்டவுடன் அந்தம்மாள் முகம் இறுகியது. கண்களில் தீப்பந்தங்கள் எரிந்தன. எல்லாம் ஒரு கணம் தான். மறு கணம் முக இறுக்கம் தளர்ந்து இயல்பான நிலைக்கு வந்தாள். ஆனாலும் வாசற்படியை விட்டு நகர்ந்து அவனை உள்ளே அழைக்கவில்லை. அவனை ஊடுருவிப் பார்த்தபடி கேட்டாள். "உங்களுக்கு அவர் எப்படிப் பழக்கமானார்?"

"கோயமுத்தூரில் ஒரு ஆஸ்பத்திரியில் அவர் இருக்கார். என் சினேகிதன் ஒருவனைப் பார்க்க அங்கே போனப்ப பக்கத்து பெட்டில் இருந்த அவர் பழக்கமானார்."

"சரி சொல்லுங்க, என்ன விஷயம்?"

கண்கள் கலங்க அந்தக் கிழவர் சொல்லியிருந்தார். "எனக்கு டாக்டர் இன்னும் கொங்சம் காலம் தான் கெடு கொடுத்திருக்கார்னு அவளுக்கு நீ தெரிவிக்கணும். நடந்ததுக்கெல்லாம் நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லணும். அவளையும் குழந்தைகளையும் என்னை ஒரு தடவை வந்து பார்க்கச் சொல்லுப்பா. நீ என் மகன் மாதிரி. எனக்காக இந்த ஒரு உபகாரம் செய்யிப்பா"

அவர் சொல்லச் சொன்னதை சொல்லி அதற்காக தான் ஈரோடு வந்ததைத் தெரிவித்தான். சுசீலாம்மாவின் முகத்தில் அதிர்ச்சியோ, துக்கமோ, இரக்கமோ தெரியவில்லை. ஆனால் வாசற்படியில் இருந்து நகர்ந்தாள். "உள்ளே வாங்க"

திவாகர் உள்ளே போனான். வீடு சிறியதாக இருந்தாலும் சுத்தமாக இருந்தது.

"உட்காருங்க"

இருந்த இரண்டு நாற்காலிகளில் ஒன்றில் திவாகர் உட்கார்ந்தான்.

"என்ன சாப்பிடறீங்க?"

"எதுவும் வேண்டாங்க. இப்ப தான் சாப்பிட்டு விட்டு வந்தேன்"

இன்னொரு நாற்காலியில் அவளும் அமர்ந்தாள். அமைதியாக அவனையே பார்த்தபடி இருந்தாள்.

அவனே பேசினான். "இப்ப அவர் ரொம்பவே கஷ்டப்படறாருங்க. மத்தவங்க உதவியில்லாம அவரால் இருக்க முடியாதுங்க. என் சினேகிதனும் நேத்து டிஸ்சார்ஜ் ஆயிட்டான். அதனால ஆஸ்பத்திரியில் அவர் கூட துணைக்கு இப்ப என் மனைவியைத் தான் விட்டுட்டு வந்திருக்கேன். பாவங்க அவர்"

அவள் ஒரு கணம் நிதானித்து அமைதியாக அழுத்தம் திருத்தமாக சொன்னாள். "நீங்க அவர் அறுவடை செய்யறப்ப பார்க்கிறீங்க தம்பி. அதனால் அப்படி சொல்றீங்க. அவர் விதைக்கறப்ப நீங்க பார்த்ததில்லை. அதிருக்கட்டும். நடந்ததுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டதா சொன்னாரே, நடந்தது என்னன்னு உங்க கிட்ட சொன்னாரா?"

"ரொம்ப நாளுக்கு முன்னால் உங்களையும் உங்க குழந்தைகளையும் விட்டு ஓடிப் போயிட்டதாய் சொன்னார்"

அவள் முகத்தில் ஒரு ஏளனப் புன்னகை தவழ்ந்தது. "இந்த மாதிரி ஆள்களோட புத்திசாலித்தனமே தங்களோட தப்பை ரொம்பவும் பொதுவாய் சொல்றது தான். கேட்கறவங்களுக்கும் என்ன இவ்வளவு தானே, மன்னிச்சு விட்டுடக் கூடாதான்னு தோணும். ஒரு பத்திரிக்கையில் மணமகள் தேவைங்கற விளம்பரம் பார்த்து ஆன கல்யாணம் என்னோடது தம்பி. ஏதோ பெரிய உத்தியோகத்தில் இருப்பதாய் பொய் சொல்லி அந்த ஆள் என்னையும் எங்கப்பாவையும் ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டார். பிறகு தான் உண்மை தெரிஞ்சது. எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் பிறக்கிற வரை கூட இருந்தார். இருந்த வரைக்கும் சில நாள் வேலைக்குப் போவார். பல நாள் வீட்டில் சும்மா இருந்து பொழுதைப் போக்குவார். ஆனால் எங்கப்பா வேலையில் இருந்ததால் அவர் சம்பளத்தில் எங்கள் குடும்பம் நடந்தது..."

சொல்லும் போது அந்தம்மாள் அந்த நாட்களுக்கே போய் விட்ட மாதிரி திவாகருக்குத் தோன்றியது. அவள் முகத்தில் துக்கம் தேங்கி நின்றது.

"ஒரு நாள் அப்பாவும் ரிடையர் ஆனார். அவருக்கு சொந்த வீடு வாங்கணும்னு ரொம்ப நாளாய் ஒரு கனவு தம்பி. ஒரு வீட்டைப் பார்த்து பேசியும் முடிச்சுட்டார். கிரயம் செய்யறதுக்கு முந்தின நாள் ரிடையர் ஆகிக் கிடைச்ச பணம், இது வரை சேர்த்து வெச்ச பணம் எல்லாத்தையும் பேங்கிலிருந்து எடுத்து வீட்டில் வெச்சிருந்தார். அன்னைக்கு ராத்திரி அந்த ஆள் எனக்கும் எங்கப்பாவுக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துட்டு என் நகைகள், அப்பாவோட பணம் எல்லாத்தையும் எடுத்துட்டு ஓடிட்டார். போறப்ப என் காது, மூக்கு, கழுத்திலிருந்த நகைகளை மட்டுமல்ல என் தங்கத் தாலிக் கொடியைக் கூட விட்டு வைக்கலை"

பரம சாதுவாய் ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருக்கும் அந்த முதியவர் இந்தக் காரியம் செய்தார் என்பதை நம்பவே அவனுக்குக் கஷ்டமாய் இருந்தது. "அப்ப உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்னு எனக்குப் புரியுதும்மா. ஆனாலும் அவர் சாகக் கிடக்கிற இந்த நேரத்தில் நீங்க பெரிய மனசு பண்ணி மறந்து மன்னிக்கணும்மா"

அவள் ஆக்ரோஷத்தோடு சொன்னாள். "அவர் போனதைத் தொடர்ந்து என் வாழ்க்கை சுலபமாய் இருந்திருந்தால் மன்னிக்கலாம். மறக்கலாம். ஆனா அப்படி இருக்கலியே தம்பி. பணமும், மருமகனும் போன அதிர்ச்சியில் என் அப்பா மாரடைப்பால காலமாய்ட்டார். ரெண்டு குழந்தைகளோட நான் நடுத்தெருவில் நின்னேன் தம்பி. அப்பத் தான் நரகம்கிற நாலெழுத்து வார்த்தையோட நிஜ அர்த்தம் எனக்குப் புரிஞ்சது தம்பி. நிராதரவாய் நின்ன என்னைப் பார்த்து, கூடப் படுக்க வர்றியான்னு கூப்பிட்ட அயோக்கியன்களும் இருந்தாங்க. இப்ப அதை நினைச்சாலும் எனக்கு வயிறு பத்தி எரியுது தம்பி. என்னை இப்படியொரு நிலையில் நிக்க வச்சுட்டு எங்க பணத்தில் எங்கேயோ ஜாலியாய் இருந்த ஆளை என்னால் மன்னிக்க முடியும்னு நினைக்கிறீங்களா தம்பி?"

திவாகர் தர்ம சங்கடத்தோடு நெளிந்தான். அவள் அந்த அறையின் மூலையில் இருந்த தையல் மெஷினைக் காண்பித்து தொடர்ந்து சொன்னாள். "எங்களைப் பார்த்து பரிதாபப்பட்டு ஒரு புண்ணியவான் இந்த மெஷினை வாங்கிக் கொடுத்து ஒரு கம்பெனியில் தைக்க ஆர்டரும் வாங்கிக் கொடுத்தார் தம்பி. ஒவ்வொரு நாளும் பன்னிரெண்டு மணி நேரம் இந்த மெஷினில் தைப்பேன். புது வருஷம் தீபாவளின்னா இன்னும் நேரம் கூடும். இப்படி ஒரு வருஷம், ரெண்டு வருஷம் இல்லை தம்பி பதினைந்து வருஷங்கள் உழைச்சேன். அதோட விளைவு இன்னைக்கும் தீராத முதுகு வலியால் அவஸ்தைப் படறேன். பையன் படிச்சு ஒரு சுமாரான வேலையில் இருக்கான். பெண்ணை ஒரு கௌரவமான இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்திருக்கேன். இப்பவும் அந்த ஆளை ஒரு கிரிமினலாய்த் தான் என் குழந்தைகள் நினைக்கிறாங்க"

திவாகர் ஒரு கணம் அந்தம்மாளின் அன்றைய நிலையை எண்ணிப் பார்த்தான். அந்த நிலையில் மன உறுதி இல்லாத வேறு நபர் இருந்திருந்தால் நிலைமை சீரழிந்து போயிருக்கும் என்பதில் அவனுக்கு சந்தேகம் இருக்கவில்லை.

அவள் தொடர்ந்தாள். "சம்பந்தமே இல்லாத ஒரு வயதான மனிதனின் கடைசி ஆசையை நிறைவேற்றணும்னு நல்ல மனசோட இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க தம்பி. அதனால தான் உங்களை உள்ளே உட்கார வச்சுப் பேசறேன் உங்களை மாதிரி நல்ல மனசிருக்கிற நாலு பேராலத்தான் இன்னைக்கு நாங்க கௌரவமாக இருக்கோம். யாரோ எக்கேடோ கெட்டுப் போகட்டும்னு இல்லாம இரக்கப்பட்டு எங்களுக்கு உதவி செஞ்ச அந்த சில நல்ல மனுஷங்களுக்கு நாங்க எப்பவுமே கடமைப்பட்டிருக்கோம். ஆனா ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடக்கிற அந்த ஆளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை."

அவள் குரலில் தெரிந்த உறுதியைக் கண்டு அவன் எழுந்து நின்றான். "நான் அவர் கிட்ட என்ன சொல்லட்டும்?"

"அவரை மன்னிச்சு அவர் செஞ்சதெல்லாம் மன்னிக்கக் கூடிய தப்புன்னு அங்கீகரிக்க நாங்க தயாராயில்லைன்னு சொல்லுங்க. சௌகரியப் படறப்ப தப்பு செய்யறதும், தேவைப் படறப்ப திருந்தறதும் வடிகட்டின சுயநலம்னு சொல்லுங்க. பழைய தமிழ் சினிமா வில்லனாட்டம் கடைசி காட்சியில் திருந்தறதை, இப்ப சினிமாவில் கூட யாரும் ரசிக்கறதில்லைன்னு சொல்லுங்க தம்பி". ஆவேசமாகவும் ஆணித்தரமாகவும் வந்தது பதில்.

கடைசி வரை கணவனை 'அந்த ஆள்' என்றே அவள் அழைத்ததையும் ஒரு முறை கூட அவர் உடம்புக்கு என்ன நோய் என்று கேட்காததையும் அவன் கவனிக்கத் தவறவில்லை. அந்தம்மாள் சொன்ன எல்லாவற்றிலும் நியாயம் இருந்தது, உண்மை இருந்தது. இத்தனையையும் சமாளித்து அவள் தாக்குப் பிடித்து சாதித்து இருக்கும் விதத்தையும் அவன் மனதாரப் பாராட்டினான். ஆனாலும் மரணப் படுக்கையில் இருக்கும் மனிதனின் பழைய கணக்கைப் புரட்டிப் பார்க்காமல் உடனே பார்க்க அவள் கிளம்பி இருந்தால் இன்னும் உயர்வாக இருந்திருக்கும் என்று அவன் மனதுக்குப் பட்டது. அங்கிருந்து அவன் கிளம்பும் போது போன காரியம் தோல்வி என்று அவருக்குத் தெரிவிப்பதெப்படி, அவர் அதை எப்படித் தாங்குவார் என்றெல்லாம் யோசிக்க யோசிக்க அவன் மனதில் கனம் கூடியது.

கோயமுத்தூர் போய் சேர்ந்து அவன் ஆஸ்பத்திரியை அடைந்த போது அவன் மனைவி அவருக்கு ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்துக்கொண்டிருந்தாள். "போன ஜென்மத்தில் நீ எனக்கு மகளாய் இருந்திருப்பாய்னு தோணுதம்மா." என்று சொன்னது அவன் காதில் விழுந்தது.

அவனைப் பார்த்தவுடன் தன் குடும்பத்தினர் யாராவது அவன் பின்னால் இருக்கிறார்களா என்று கிழவர் எட்டிப் பார்த்தார். பின்பு ஆர்வத்துடன் அவனைக் கேட்டார். "சுசீலாவையும் என் மகனையும் பார்த்தாயா? என்ன சொன்னாங்க?"

திவாகர் சுசீலாம்மாள் சொன்னதை விவரிக்கப் போகாமல், அவர்கள் மன்னிக்கவோ, மறக்கவோ தயாரில்லை என்பதை மட்டும் ரத்தினச் சுருக்கமாகச் சொன்னான். அவர் முகம் கறுத்தது.

"அந்த சனியனுக நல்லாயிருக்காதுகப்பா. நான் தப்பே செய்யலைன்னு சொல்லலை. ஆனா அதுக்குத் தான் நான் மன்னிப்பு கேட்கிறேனே. வேறொன்னுமில்லையப்பா. அவளை விட்டுட்டு வர்றப்ப அவள் நகைகளைக் கொஞ்சம் எடுத்துட்டு வந்துட்டேன். அவள் அதை இன்னும் மறக்கத் தயாரில்லை. கட்டின புருஷனை விட அவளுக்கு நகைகள் தான் பெருசாயிடுச்சு."

திவாகர் அதிர்ந்து போனான். அவனுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்ல. இது திருந்தி தன் செய்கைகளுக்காக வருந்தும் ஒரு மனிதனின் பேச்சாக இல்லையே.

"அவள் உன்னை சரியாக நடத்தி இருக்க மாட்டாள். அது உன் முகம் பார்த்தாலே தெரியிது. அவள் சார்பில் நான் உன் கிட்டே மன்னிப்பு கேட்டுக்கறேன். எனக்கு மட்டும் என்னைக் கடைசி காலத்தில் பார்க்க நாதி இருந்திருந்தா அந்த நாயிங்க கிட்டே உன்னை அனுப்பிச்சிருக்க மாட்டேன்." என்றவர் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு பழுப்பேறிய காகிதத்தை எடுத்தார். "அந்த மூதேவி என்னைக் கை விட்டுட்டா. இந்த விலாசத்தில் இருக்கிற ஸ்ரீதேவியாவது என் மேல் கருணை காட்டறாளான்னு பார்ப்போம். இவள் என் இளைய தாரம். பழசையெல்லாம் மற்ந்துட்டு உடனடியாய் என்னை வந்து பார்க்கச் சொல்லு. அந்த மூதேவி கிட்ட போனதைப் பத்தி இவ கிட்டே மூச்சு விட்டுடாதே. நீ என் மகன் மாதிரி. இத்தனை உதவி செஞ்ச நீ இதையும் எனக்காக செய்யப்பா. ஏழேழு ஜென்மத்துக்கும் உன் உதவியை நான் மறக்க மாட்டேன்...." சொல்லும் போது கிழவரின் குரல் தழுதழுத்தது.

திவாகருக்கு அவரைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது. அவர் சட்டைப் பையில் இன்னும் எத்தனை தேவியரின் விலாசங்கள் இருக்குமோ, அவனுக்குத் தெரியவில்லை. உண்மையில் அவருக்கு மன்னிப்போ, பாசமுள்ள குடும்பத்தினரோ தேவையில்லை. அவருக்கு வேண்டியதெல்லாம், இந்தக் கடைசி காலத்தில் அவரைப் பார்த்துக் கொள்ள சில ஆட்கள். மன்னிப்பு, திருந்துவது எல்லாம் அதற்கான யுக்திகள் தான். நினைத்தவுடன் வரும் கண்ணீரும், 'மகன் மாதிரி', 'மகள் மாதிரி' என்ற வார்த்தைகளும் அவனைப் போல் இளகிய உள்ளம் படைத்தவர்களுக்கு அவர் போடும் தூண்டில்கள். சாகப் போகிறவர்கள் எல்லாம் நிஜமாய் திருந்தத் துடிப்பவர்கள் என்றும், கஷ்டப்படுகிறவர்கள் எல்லாம் இரக்கப்படத் தகுந்தவர்கள் என்றும் இது நாள் வரை யதார்த்தமாக நம்பி வந்த அவன் சுலபமாய் அந்தத் தூண்டிலில் சிக்கி விட்டான்.

இது போன்ற மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை இன்னமும் அவனால் ஜீரணிக்க முடியவில்லை, இந்த மனிதனுக்காக ஆபிசிற்கு இரண்டு நாள் லீவு போட்டு, குழந்தைகளைப் பக்கத்து வீட்டுக்காரர்களின் பாதுகாப்பில் விட்டு, சேவை செய்ய மனைவியை ஆஸ்பத்திரியில் உட்கார வைத்து, வெளியூர் சென்று விலாசம் தேடி அலைந்து கண்டு பிடித்து அங்கும் 'இந்த ஆளி'ற்காகப் பரிந்து பேசிய தன்னைப் போல் ஒரு பைத்தியக்காரன் இந்த உலகில் இருக்க முடியுமா என்று திவாகர் யோசித்தான். கடைசிக் காட்சியில் கூடத் திருந்தாத இந்த வில்லனிடம் பேசக் கூட அவனுக்குப் பிடிக்கவில்லை. மௌனமாக அந்தக் காகிதத்தை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.

"சரோஜா, ஒரு நிமிஷம் வா" என்று மனைவியை வெளியே அழைத்து வந்து "வா வீட்டுக்குப் போகலாம்" என்றான்.

"ஐயோ அந்தப் பெரியவர் தனியாக..." என்று அவள் ஏதோ சொல்லப் போனாள்.

"இனி அந்த ஆளைப் பத்தி ஏதாவது பேசினா நான் கொலைகாரனாய் மாறிடுவேன்" என்று ஒரே வாக்கியத்தில் அவள் வாயை அடைத்தான். தெருவிற்கு வந்ததும் முதல் வேலையாக அந்தப் பழுப்பு நிற விலாசக் காகிதத்தை சுக்கு நூறாகக் கிழித்தான். அந்தக் காகிதத் துகள்களை காற்றில் பறக்க விட்டு விட்டு வேகமாய் வீடு நோக்கி நடக்கும் கணவனைப் புரிந்து கொள்ள முடியாமல் திகைப்புடன் சரோஜா அவனைப் பின் தொடர்ந்தாள்.

-என்.கணேசன்

Monday, November 5, 2007

அவசரம் தேவையா? (2)

சிலர் நேரமே இல்லை, அதனால் தான் அவசரப்படுகிறோம் என்று கூறலாம். அவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தை எப்படியெல்லாம், எதிலெல்லாம் செலவழிக்கிறார்கள் என்று பட்டியலிட்டுப் பார்த்தால் ஒரு கணிசமான பகுதி உபயோகமில்லாத, தேவையில்லாத செயல்களில் வீணாகி இருப்பதை அறியலாம்.

தேவையில்லாத செயல்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தினால் தேவையானதைச் செய்ய நிறைய நேரம் மிஞ்சும். அவசரப்பட வேண்டிய அவசியமே இருக்காது.

டாக்டர் காப்மேயர் ஒரு நூலில் அழகாகக் கூறினார். "சாதனை புரிந்தவர்கள் கடிகாரத்தோடு போராடவில்லை. மாறாக அந்தக் கால மணல் கடிகாரத்தில் ஒவ்வொரு மணல் துணுக்காக விழுவது போல அவசரமில்லாமல் ஒரு நேரத்தில் ஒரு செயல் என நிதானமாக வாழ்ந்தார்கள்".

அந்தக் காலத்து மணல் கடிகாரத்தில் இரண்டு பரந்த பாகங்களுக்கு நடுவே மணல் துகள்கள் ஒவ்வொன்றாக மட்டுமே போக முடிந்த அளவுக்கு மிகக் குறுகலான இடைப்பகுதி இருக்கும். மேலே எத்தனை மணல் துகள்கள் இருந்தாலும் அந்த இடைப்பகுதி ஒவ்வொரு மணல் துகளை மட்டுமே கீழே அனுப்பும். இந்த உதாரணத்தை நாமும் நம் மனதில் நிறுத்திப் பதட்டமோ, தடங்கலோ இல்லாமல் அவசரமோ சோம்பலோ படாமல் செய்ய வேண்டிய செயல்களை முறைப்படுத்தி ஒவ்வொன்றாய்ச் செய்வது நலம்.

ஆனால் நமக்கிருக்கும் அவசரத்தில் பல சந்தர்ப்பங்களில் ஒரே சமயத்தில் பல செயல்களைச் செய்ய முற்படுகிறோம். அவ்வாறு செய்ய முனையும் போது எந்த ஒரு செயலுக்கும் நம்மால் முழுக்கவனம் செலுத்த முடிவதில்லை. ஆகவே செயல்கள் பெரும்பாலும் அரை குறையாகவே முடிகின்றன. எந்த ஒரு காரியத்தையும் முழுக்கவனத்தோடு செய்யும் போது தான் அது நேர்த்தியான சிறப்படைகிறது. விரைவாகவும் செய்ய முடிகிறது. அந்த செயலை நாம் மறுபடி சரி செய்ய வேண்டி வராது. செய்த வேலைக்காக வருந்த வேண்டி இருக்காது. எல்லா பெருஞ்சாதனையாளர்களும் ஒரு நேரத்தில் ஒரு செயல் என்று நிதானமாகவும், தெளிவாகவும், கவனமாகவும் செயல்பட்டதால் தான் அவர்களால் அதிகமான சாதனைகளைத் திறம்பட செய்ய முடிந்தது.

முன்கூட்டியே திட்டமிடுங்கள். மறுநாள் முக்கியமான பரீட்சையோ, நேர்முகத் தேர்வோ, பிரயாணமோ இருந்தால் தேவையானவற்றை முன் தினமே தயார் செய்யுங்கள். கடைசி நேரத்தில் பரபரக்க வேண்டிய அவசியம் இருக்காது. தினமும் அதிகாலையில் எழுவது ஒரு அருமையான பழக்கம். அது முடியாதவர்கள் தான் தினசரி வாழ்க்கையை அவசர ஓட்டத்தில் ஆரம்பிக்கிறார்கள். அந்த ஓட்டம் இரவு வரை தொடர்வதும் அந்த ஆரம்பப்பிசகால் தான்.

ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய முக்கியமான செயல்களின் பட்டியலை முன் கூட்டியே எழுதி வையுங்கள். ஒவ்வொரு செயலையும் கவனமாக, சீராகச் செய்யுங்கள். மணல் கடிகார உதாரணத்தை மனதில் என்றும் வைத்திருங்கள். ஒரு நேரத்தில் ஒரு செயல் என்று சீரான வேகத்தில் செயல்படுங்கள். வீட்டை விட்டு வெளியே புறப்படுவதற்கு முன் தேவையானவற்றை எடுத்துக் கொண்டீர்களா என்று கவனியுங்கள். இப்படிக் கவனமாகவும், ஒழுங்காகவும் முன் யோசனையுடனும் செயல்பட்டால், இந்தக் கம்ப்யூட்டர் யுகத்திலும் அலட்டிக் கொள்ளாமல் நிறைய சாதிக்கலாம்.

ஒரு விதை செடி ஆக, பூ காய் ஆக, காய் கனி ஆக, முட்டை குஞ்சு ஆக, கரு குழந்தை ஆக என இயற்கையில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலம் தேவைப்படுகிறது. அந்தக் காலம் முடியும் வரை அந்தப் பலனை விரும்புபவர்கள் காத்திருந்தே ஆக வேண்டும். அது போல நாம் செய்ய வேண்டியவற்றை எல்லாம் முறையாக, குறையில்லாமல் செய்து விட்டால் பின்பு நாம் செய்ய வேண்டியதெல்லாம் பொறுமையாக நம்பிக்கையோடு காத்திருப்பது தான். இதில் குறுக்கு வழி இல்லை.அப்படி உள்ளதாக எண்ணி அவசரப்பட்டு ஏதேதோ செய்யப் போனால் நாம் உருவாக்கியதை நாமே சிதைப்பது போலத் தான். விரும்புவது கிடைக்காமலே போய் விடும்.

கீரை விதைப்பவன் பலனைச் சில நாட்களில் அடையலாம். ஆனால் தென்னை விதைப்பவன் அதிக நாட்கள் காத்திருக்க வேண்டும். லட்சியத்தின் அளவு பெரிதாகப் பெரிதாக நாம் உழைக்க வேண்டிய காலமும், காத்திருக்க வேண்டிய காலமும் அதிகம் தான்.

ஆகவே நோய்களைத் தவிர்க்க வேண்டுமானால், நிறைய சாதிக்க வேண்டுமானால் அவசரத்திற்கு உடனடியாக விடை தந்து விட்டு வாழ்க்கையை நிதானமாக வாழ்வோம்.

-என். கணேசன்

Thursday, November 1, 2007

அவசரம் தேவையா? (1)

ன்று நாம் ஓர் ஏவுகணையின் வேகத்தில் வாழ்கிறோம். அதிகமாகி விட்ட தேவைகள், சந்திக்க வேண்டிய போட்டிகள், எளிதில் வெற்றி பெறத் துடிக்கும் வெறி எல்லாம் சேர்த்து நம்மை வேகமாக ஓடத் துரத்துகின்றன.

அசுர வேகத்தில் இயங்கா விட்டால் இந்த சமூகத்தில் நாம் தாக்குப் பிடிக்கவே முடியாது என்று நமக்குத் தோன்றுகிறது. ஆனால் இந்த அவசர வாழ்க்கை முறைக்கு ஈடாக நம் ஆரோக்கியத்தையும்மன அமைதியையும் இழப்பதை நாம் ஏனோ உணர மறந்து விடுகிறோம்.

இரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி, ஜீரணக் கோளாறு, இதய நோய்கள் என அவசர வாழ்க்கை முறை தரும் நோய்களை இன்றைய மருத்துவ ஆராய்ச்சிகள் பட்டியல் இடுகின்றன. காரணம், ஒவ்வொரு அவசர சூழ்நிலையில் நாம் இயங்கும் போதும் நமது நரம்பு மண்டலமும், முக்கியமான பல உள் உறுப்புகளும் முடுக்கி விடப்படுகின்றன. அவை வழக்கத்தை விட விரைவாக இயங்குகின்றன.

மிக முக்கியமான அவசரக் கட்டத்தில் இப்படி இயங்க வேண்டியவை, தினமும் தொடர்ந்து எல்லாச் சமயங்களிலும் இயங்க வேண்டி இருப்பதால் சீக்கிரமே பழுதடைந்து விடுகின்றன. நோய்களை நாமே சீக்கிரம் வரவழைத்துக் கொள்கின்றோம்.

டாக்டர் மெயர் ·ப்ரைமேன் மற்றும் டாக்டர் ரே ரோசன்மேன் என்ற இரண்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மாரடைப்பிற்கான காரணங்களைப் பல வருடங்கள் ஆராய்ந்தார்கள். மிகத் துரிதமாக வாழ்க்கையை வாழத் துடிப்பவர்களும், குறுகிய காலத்தில் லாபத்தையும் வெற்றியையும் அடைய விரைபவர்களுமே அதிகமாக மாரடைப்பை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என முடிவில் கண்டு பிடித்துள்ளனர். அவர்கள், "தவறான உணவு முறைகளும், சிகரெட்டுகளும் குண்டுகள் என்றால், அவசர வாழ்க்கை முறையே துப்பாக்கியாக இருக்கிறது" என்கிறார்கள்.

வாழ்க்கையில் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, நமக்கு மிக நெருங்கியவர்களின் உணர்வுகளையோ, மானசீகத் தேவைகளையோ புரிந்து கொள்ளவும் நேரமில்லாமல் போய் விடுகிறது. நம்மைச் சுற்றி உள்ள சின்னச் சின்ன அழகுகளையும், நல்ல விஷயங்களையும் ரசிக்கத் தவறுகிறோம். ருசித்துச் சாப்பிடுவதற்குப் பதிலாக விழுங்கி விரைகிறோம். குழந்தைகளைப் பெறுகிறோம். அவர்களின் குறும்புகளின் குறும்புகலையும், மழலையும் ரசிக்க நமக்கு நேரம் இருப்பதில்லை. வீட்டை அழகான பொருள்களால் நிரப்ப முடிந்தாலும் அவற்றை நின்று ரசிக்க முடிவதில்லை. வீட்டில் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவது என்பது பெரும்பாலும் இல்லை.

சில நிமிடங்கள் கிடைத்தாலும் அதை டி.வி. திருடி விடுகிறது. பொருளையும், பணத்தையும் சேர்க்கும் அவசரத்தில் நாம் வாழ்க்கையைக் கோட்டை விட்டு விடுகிறோம்.

நம் முன்னோர்களை விட எல்லா வித வசதிகளிலும் முன்னேறி உள்ள நாம் அவர்களை விடச் சந்தோஷமான நிறைவான வாழ்க்கை வாழ்கிறோமா என யோசித்தால் இல்லை என்பது தெரியும். இந்த அவசர வாழ்க்கைக்கு நாம் தரும் விலை மிக மிக அதிகம்.

நாம் கிட்டத்தட்ட இயந்திரங்களாக மாறி வருகிறோம். ஆனால் இயந்திரம் கூடத் தன் சக்திக்கேற்ற வேகத்தில் மட்டுமே இயங்குகிறது. மற்ற இயந்திரங்களை முந்திக் கொள்ளவோ, ஜெயிக்கவோ இயங்குவதில்லை. நாம் வெற்றி பெறப் பாடுபடுவதற்கும், மற்றவர்களைத் தோற்கடிக்கப் பாடுபடுவதற்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இரண்டாவதில் நம் சக்திகள் அனைத்தும் விரயமாகி மன அமைதியும் கெடுகிறது.

இந்த அவசரம் நம் இரத்தத்தில் ஊறிப் போய் சாதாரண தவிர்க்க முடியாத இடங்களில் கூட
நம்மால் அமைதியாக இருக்க முடிவதில்லை. சிக்னல்களில் ஓரிரு நிமிடங்கள் காக்க வேண்டி இருந்தால் நம்முள் பலரும் தவித்துப் போகிறோம். திருப்பதியில் தெய்வ தரிசனமானாலும் சரி, ரயில்நிலையத்தில் முன் பதிவுக்கானாலும் சரி, நீண்ட வரிசைகளில் நிற்க நேரிட்டால் முன்னால் நிற்பவரின் கால்களைப் பல முறை மிதித்துப் பலரும் முன்னேறத் துடிக்கிறோம். வேலையே இல்லா விட்டாலும் சிலரால் சும்மா இருக்க முடிவதில்லை. கால்களையாவது ஆட்டிக் கொண்டிருப்பார்கள்.

அதிவேகம் சுறுசுறுப்பல்ல. உண்மையில் அது சக்தி விரயம். அவசர புத்தி பின் புத்தி. அவசரத்தில் மனிதன் அதிகமாகப் பதட்டமடைகிறான், குழப்பமடைகிறான். அதனால் தவறுகள் பல செய்து அவற்றைச் சரி செய்ய ஒரே வேலையைப் பல முறை செய்ய நேரிடுகிறது.

(இது குறித்து மேலும் சொல்வேன். - என்.கணேசன்)

Monday, October 29, 2007

தினமும் ஒரு டெபாசிட்




ஒரு தேவதை உங்கள் முன் தோன்றி, "தினமும் உன் கணக்கில் ரூ.86400/- டெபாசிட் செய்கிறேன். அதில் நீ அன்றைய தினமே எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்தலாம். அந்த நாள் முடிவடையும் போது நீ பயன்படுத்தாமல் மிஞ்சிய தொகையை நானே திரும்பவும் எடுத்துக் கொள்வேன். பயன்படுத்த முடிந்தது உனக்கு, மிஞ்சியது எனக்கு" என்று சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

தினமும் அதில் ஒரு ரூபாயையாவது நீங்கள் மிஞ்ச விடுவீர்களா? முழுப்பணத்தையும் எப்படிச் செலவழிப்பது என்று திட்டமிட்டுச் செலவு செய்ய மாட்டீர்களா?

உண்மையிலேயே அப்படி ஒரு தேவதை அப்படி ஒரு வரத்தை உங்களுக்கு அளித்துள்ளது. அது தான் கால தேவதை. அது பணத்தை விட விலை மதிப்புள்ள 86400 வினாடிகளை உங்களுக்கு ஒரு நாளில் செலவழிக்கத் தருகிறது. அதில் நீங்கள் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள்?

ஒரு நாளில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று முன் கூட்டியே திட்டமிட்டால் கால விரயத்தை முழுவதும் தடுக்க முடியும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நமக்கென்று செய்யத் திட்டமிட்ட வேலை இருந்தால் வீண்பேச்சு, வேடிக்கை பார்த்தல், அடுத்தவர்கள் விஷயத்தில் அனாவசியமாக மூக்கை நுழைத்தல் போன்றவற்றில் நாம் ஈடுபட மாட்டோம்.

இவை யாவும் இலக்கில்லாத வாழ்க்கையின் இயற்கையான குணாதிசயங்கள். திட்டமிட்டுச் செயல்படும் போது தெளிவாக இருக்கிறோம். அனாவசியங்களைத் தவிர்க்கிறோம். அதன் மூலம் காலத்தைப் பயனுள்ளதாகக் கழிக்கிறோம்.

ஒவ்வொரு பொருளையும் பயன்படுத்திய பின் அதற்கு உரிய அதே இடத்தில் முறையாக வைக்கப் பழகினால் கால விரயத்தை வெகுவாகக் குறைக்கலாம். இப்பழக்கம் இல்லாதவர்களது காலம் தேடுதலிலேயே பெருமளவு வீணாகிறது. தேடும் நேரம் அதிகரிக்க அதிகரிக்கக் கோபம் அதிகமாகி, சுற்றி உள்ளவர்கள்
மீதெல்லாம் எரிந்து விழுபவர்கள் பலரைத் தினமும் பார்க்கலாம். எனவே உபயோகித்தவுடன் பொருள்களைக் கவனமாக அவற்றிற்குரிய இடத்தில் சிறிய பழக்கம் மூலம் காலத்தை பெருமளவு சேமிக்க முயலுங்கள்.

சமீபத்தில் ஒரு மருத்துவரிடம் ஆலோசனைக்காகச் சென்று இருந்தேன். அங்கு நல்ல கூட்டம். அங்கு வந்த ஒரு பெரியவர், மருத்துவரைச் சந்திக்க அரைமணி நேரமாவது ஆகும் என அறிந்ததும் அமைதியாக உட்கார்ந்து பையிலிருந்து ஒரு இன்லாண்டு லெட்டரை எடுத்து எழுத ஆரம்பித்து விட்டார். எல்லோரும் அடுத்தவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த அந்த நேரத்தில் அந்த நேரத்தில் தன் மற்றொரு காரியத்தை முடித்துக் கொண்ட அந்தப் பெரியவர் செயல் என்னை மிகவும் கவர்ந்தது. இப்படிக் காத்திருக்கும் காலங்களில் நாமும் கூட பயனுள்ள எதையாவது செய்யத் தயாராக இருக்கலாமே!

காலத்தை முறையாக, திறம்படப் பயன்படுத்த விரும்புபவர்கள் முதலில் டிவி முன் அமரும் நேரத்தைக் குறைப்பது நல்லது. இன்றைய காலத்தில் நம் நேரத்தை டிவி போல வேறு எதுவும் திருடிக் கொள்வதில்லை. பிடிக்கிறதோ இல்லையோ அதன் முன் அமர்ந்து நம் காலத்தை வீணடிக்கிறோம். நமக்குப் பிடித்த பயனுள்ள ஓரிரு நிகழ்ச்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவை முடிந்தவுடன் டிவியை அணைத்து விடுவது
நல்லது.

ஒவ்வொரு நாள் இரவும் உங்களது அன்றைய செயல்களைச் சற்று ஆராய்ந்து பாருங்கள். காலதேவதையின் 'டெபாசிட்' எப்படியெல்லாம் செலவாகி இருக்கிறது என்று கணக்கிடுங்கள். எப்படிச் செயல்பட்டிருந்தால் காலம் இன்னும் சிறப்பாகப் பயன்பட்டிருக்கும் என்று சிந்தியுங்கள். மறுநாள் அது போலவே இன்னும் சிறப்பாகவே காலத்தைப் பயன்படுத்திச் செயல்படுவேன் என்று மனதில் உறுதி பூணுங்கள்.

எல்லாவற்றைற்கும் மேலாக ஒரு செயலைச் செய்யும் போது உங்கள் முழுக்கவனத்தையும் அதில் வையுங்கள். இதனால் அச்செயலை விரைவாகவும் சிறப்பாகவும் செய்யும் ஆற்றலை நீங்கள் பெறுவீர்கள்.

காலதேவதை கருணை உள்ளது. ஒரு நாள் அந்த 'டெபாசிட்'டை நீங்கள் வீணாக்கினீர்கள் என்பதற்காக மறுநாள் உங்களுக்கு அதைத் தராமல் இருப்பதில்லை. பெருந்தன்மையுடன் உங்களுக்குத் தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறது. அதை முழுமையாகப் பயன்படுத்தி முன்னேறுங்கள்.

-என்.கணேசன்

Friday, October 26, 2007

அவள் வரலாமா?

சிறுகதை


துறவு என்ற சொல்லுக்கு முழுப் பொருளாக வாழ்ந்து வரும் மஹாஸ்வாமிகள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். ஊருக்கு வந்திருந்த அந்தப் புனிதர் இன்று ஒரு நாள் மட்டும் தான் அங்கிருப்பார் என்று கேள்விப்பட்ட பக்த கோடிகள் அவரது தரிசனத்திற்காக வெளியே காத்திருந்தார்கள். அந்த சமயத்தில் தான் அவளும் அங்கு வந்தாள். குனிந்த தலை நிமிராமல் வந்தவள் ஒதுக்குப்புறமாய் ஒரு மூலையில் உட்கார்ந்தாள். அது வரை பேரமைதியோடு இருந்த கூட்டத்தில் முணுமுணுப்புகள் ஆரம்பித்தன.

"இவள் எல்லாம் இங்கே வரலாமா?"

"என்ன தைரியம் பாரேன்"

"இந்த இடத்தையாவது சனியன் விட்டு வைக்கக் கூடாதா?"

"கலி முத்திடுச்சு. அதுக்கான அறிகுறி தான் இதெல்லாம்"

கூனிக் குறுகி உட்கார்ந்திருந்த அவள் காதுகளில் இந்த விமரிசனங்கள் விழாமல் இல்லை. தான் இந்த ஏச்சுகளுக்குப் பொருத்தமானவள் என்பதிலும் அவளுக்கு உடன்பாடு உண்டு. ஆனால் அந்த மகானைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருந்ததால் அவரைத் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும் என்ற பேராவலில் வந்திருக்கிறாள். அதுவரை தன்னை யாரும் அங்கிருந்து அப்புறப்படுத்தி விடக் கூடாதென சகல தெய்வங்களையும் வேண்டிக்கொண்டிருந்தாள்.

மஹாஸ்வாமிகளின் நிழல் என்று எல்லோராலும் கருதப்படும் சந்தானம் கூட்டத்தில் எழுந்த சலசலப்பைக் கவனித்தார். இது வரை அமைதி காத்த பக்தர்கள் மத்தியில் திடீரென எழுந்த இந்த சலசலப்பு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டதன் அறிகுறியென அவருக்குப் பட்டது. கூட்டத்தினரை அவர் கேள்விக்குறியோடு பார்க்க, ஒருவர் அவரருகே வந்து அவளைக் கை காட்டி விளக்கினார்.

"சிவ சிவா" சந்தானம் தன் காதுகளைப் பொத்திக் கொண்டார். 'மஹாஸ்வாமிகளின் சன்னிதானத்தில் ஒரு விபசாரியா, இது என்ன சோதனை?' அவளை எரித்து விடுவது போல் பார்த்தார். ஆனால் அவளோ குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.

சந்தானத்தைப் பொருத்த வரை தெய்வம் கூட மஹாஸ்வாமிகளுக்கு அடுத்தபடி தான். எத்தனையோ போலிகளுக்கு மத்தியில் எந்த மாசும் தன்னை நெருங்க முடியாத நெருப்பாக வாழ்ந்து வரும் மஹாஸ்வாமிகள் முன் இது போன்ற அசுத்தங்கள் வருவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அவளை எப்படி வெளியே அனுப்புவது என்று அவர் யோசித்து முடிவுக்கு வரும் முன் மஹாஸ்வாமிகள் தியானம் முடிந்து வெளி ஹாலிற்கு வந்து விட்டார். பக்தர்கள் எழுந்து வரிசையானார்கள். அவளும் எழுந்து அந்த வரிசையின் கடைசியில் நின்றாள். சந்தானம் தீயில் நிற்பது போல் துடித்தார். எப்படியாவது அவளை உடனடியாக அனுப்பி விட வேண்டும் என்று தீர்மானித்து அவர் முதலடி எடுத்து வைத்த போது மஹாஸ்வாமிகள் தன் பார்வையாலேயே தடுத்து நிறுத்தினார். சந்தானம் வேறு வழியில்லாமல் தவித்தபடி நின்றார்.

பக்தர்கள் ஒவ்வொருவரும் அந்த மகானிடம் ஓரிரு வார்த்தைகள் பேசி, வணங்கி, பிரசாதம் வாங்கிக் கொண்டு நகர்ந்தார்கள். ஆனாலும் வெளியேறாமல் சிலர் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தார்கள். எதையும் தன் ஞான திருஷ்டியால் அறியும் சக்தி படைத்த அந்த மகான் அவளிடம் என்ன சொல்லப் போகிறார் என்றறிய அவர்களுக்கு ஆவல்.

கடைசியில் அவளும் மஹாஸ்வாமிகள் முன்பு வந்து நின்றாள். வந்ததில் இருந்து தலையை நிமிர்த்தாதவள் முதல் முறையாக தலையை நிமிர்த்தி அவரைப் பார்த்தாள். அவளைப் பற்றி அறியாதது ஒன்றுமில்லை என்று அவரது கண்கள் சொல்லின. ஆனாலும் அந்தக் கண்களில் கருணை சிறிதும் குறைந்திருக்கவில்லை. மற்றவர்களைப் போல வாய்விட்டுப் பேச அவளிடம் வார்த்தைகள் இருக்கவில்லை. கனத்த மனதுடன் அவர் முன் மண்டியிட்டு அழுதாள். ஓரிரு நிமிடங்கள் கழித்து தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்தாள். அவர் கையிலிருந்து பிரசாதம் வாங்கிக் கொண்டு வேகமாய் அங்கிருந்து வெளியேறினாள்.

வேடிக்கை பார்த்தவர்களுக்கு மிகவும் சப்பென்றாகி விட்டது. " அவர் ஞானி. அவருக்கு எந்த வித்தியாசமுமில்லை. ஆனால் இவள் இந்தப் பாவத்தையும் சேர்த்து எந்த கங்கையில் கழுவுவாளோ" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டு கலைந்தார்கள்.

எல்லோரும் போகும் வரை காத்திருந்த சந்தானம் பின்பு மிகவும் வருத்தத்துடன் ஆரம்பித்தார். "ஸ்வாமி அவள்..."

"தெரியும் சந்தானம்"

"நீங்க மட்டும் தடுக்காமல் இருந்திருந்தால் நான் அவளை அப்போதே அனுப்பியிருப்பேன்"

"அறியாமையால் தவறும் பாவமும் செய்வது, அதன் பலன்களை அனுபவிப்பது, தன் செயல்களுக்காக வருந்துவது, பின்பு திருந்துவது என்று இந்த நான்கு கட்டங்களும் ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் உண்டு சந்தானம். இதில் நீயும் நானும் கூட விதிவிலக்கல்ல. தவறுகளின் அளவுகளில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தவறோ பாவமோ செய்யாத அந்தத் தனிப்பெரும் குணம் பரம்பொருள் ஒருவனுக்கே உண்டு. அந்தப் பரம்பொருள் கூட மனித அவதாரம் எடுத்த போது ஒரு சில தவறுகள் செய்து விட்டதாய் இதிகாசங்கள் சொல்கின்றன. அப்படி இருக்கும் போது சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம், சந்தானம்"

ஆனாலும் சந்தானத்திற்கு சமாதானம் ஆகவில்லை. "அவள் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும் ஸ்வாமி. அவள் இங்கே வந்து இந்த இடத்தின் புனிதத்தை ஏன் கெடுக்க வேண்டும்"

மஹாஸ்வாமிகள் புன்னகைத்தார். "உனக்கு இங்கு வந்த மற்றவர்களின் சரித்திரம் தெரியாததால் நீ அவளை மட்டும் ஒருமைப்படுத்துகிறாய். இவளை விட அதிகம் பாவம் செய்தவர்களும் இங்கு வந்திருந்தார்கள். அவர்கள் எப்படியே இருந்தாலும் இங்கு அவர்களை இன்று வரவழைத்த ஆன்மீக சக்தி என்றாவது ஒரு நாள் எல்லாவற்றையும் உணர வைக்கும். திருத்தும். அதற்காக பிரார்த்திப்பதும், ஆசி வழங்குவதும் மட்டுமே நம் கடமை. விமரிசிப்பதும், தீர்ப்பு சொல்லவும் நாம் யார்?"

ஒப்புக்குத் தலையாட்டினாலும் சந்தானத்தின் மனதில் அவள் அங்கு வந்த விஷயம் நெருடலாகவே இருந்தது.

மறுநாள் காலை ஸ்வாமிகளை வழியனுப்ப நிறைய பக்தர்கள் வந்திருந்தனர். காரில் ஏறப் போன மஹாஸ்வாமிகளின் விழிகள் ஒரு கணம் ஓரிடத்தில் நிலைத்து நின்றன. சந்தானம் தன் பார்வையையும் அங்கு திருப்பினார். தலையை மொட்டை அடித்துக் கொண்டு, உடலில் சிறு ஆபரணமும் இல்லாமல், தூய வெள்ளை சேலையால் முக்காடு போட்டுக் கொண்டு ஒருத்தி நின்றிருந்தாள். உற்றுப் பார்த்த பின்பு தான் தெரிந்தது-அவள் நேற்று வந்தவள். இன்று அவள் தலை நிமிர்ந்திருந்தது. முகத்தில் அமைதியும் உறுதியும் தெரிந்தது. கை கூப்பி வணங்கி நின்றாள்.

"நேற்று வந்தவர்களில் யாரும் இவ்வளவு சீக்கிரம் மாறவில்லை, சந்தானம்" என்று புன்னகையுடன் சொல்லிய மஹாஸ்வாமிகள் கையை உயர்த்தி எல்லோருக்கும் ஆசிகள் வழங்கி விட்டு காரில் ஏறினார். கண்கள் கலங்க தன் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி அவளிருந்த திக்கை நோக்கிக் கூப்பி விட்டு காரில் ஏறிய சந்தானம் "என்னை மன்னிச்சுடும்மா" என்று முணுமுணுத்தது மஹாஸ்வாமிகளுக்கு மட்டும் கேட்டது.

________________________________________________________________________

என்.கணேசன்