சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 31, 2022

இல்லுமினாட்டி 148



விஸ்வம் என்ன செய்வதென்று யோசித்தான். க்ரிஷின் பேச்சை விடக் காதில் நாராசமாக விழுவது இப்போதைக்கு அவனுக்கு வேறொன்றுமிருக்க முடியாது. அவனுடைய உபதேசம் கேட்டு விஸ்வம் மாறப் போவதுமில்லை.  ஆனாலும் இந்த முட்டாள் க்ரிஷ் எதோ சொல்ல ஆசைப்படுகிறான்.  கேட்க முடியாது என்றால் அவன் இங்கிருந்து போகவும் மாட்டான். அமானுஷ்யனும் கூடவே இங்கிருப்பான். இருவரும் சாக வேண்டியவர்களே. ஆனால் அதற்கு அவன் முயற்சி செய்ய இது உகந்த நேரமல்ல.

அமானுஷ்யன் விஸ்வத்தை விஸ்வத்தின் வேகத்திலேயே நெருங்க முடிந்தவன், செயல்பட முடிந்தவன் என்று காட்டியும் விட்டான். அவன் நினைத்திருந்தால் அவன் நிபுணனாக இருந்த வர்மக்கலை முடிச்சைப் போட்டு விஸ்வத்தைக் கோமாவிலும் ஆழ்த்தி இருக்க முடியும். தகராறுக்கு நின்றால் அடுத்த முறை அதைச் செய்யத் தயங்க மாட்டான். இத்தனை சக்திகள் பெற்று, செய்ய வேண்டிய வேலைகள் எத்தனையோ இருக்க கோமாவில் ஆழும் ஆபத்தில் சிக்குவது முட்டாள்தனம். அமானுஷ்யனின் சக்திகளை முழுவதுமாக அறிந்தாகி விட்டது. அதற்குத் தேவையானபடி பிற்காலத்தில் தயாராக்கிக் கொண்டு பின் அவனை வீழ்த்தலாம். பேசியே கொல்லும் இந்த எதிரி க்ரிஷையும் இப்போது கொல்வதை விட அவன் குடும்பத்தினரைக் கொன்ற பின் அந்த வேதனையை அனுபவிக்க வைத்த பிறகு கொல்வது தான் அவனுக்குச் சரியான தண்டனை. அதனால் இப்போதைக்கு இந்த முட்டாள் க்ரிஷ் பேச்சைக் கேட்டுத் தொலைப்போம் என்று விஸ்வம் முடிவெடுத்தான்.   

“சரி என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லி விட்டுப் போய்த் தொலை” என்று சொன்ன விஸ்வம் இந்த முட்டாளின் பேச்சைக் கடைசியாக ஒரு முறை சகிக்கத் தயாரானான். ஜிப்ஸி விதி வலிது என்று நினைத்தான்.

க்ரிஷ் ஆரம்பித்தான். “நான் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஏன் அந்த முட்டாள்தனம் செய்கிறார்கள் என்று நிறைய யோசித்திருக்கிறேன். காரணம் என் பள்ளிக்காலத்தில் வித்யாதர் என்ற நண்பன் இருந்தான். அவன் குரலைப் போன்ற இனிமையானதொரு குரலை நான் இன்று வரை கேட்டதில்லை. ஜேசுதாஸ், பி பி ஸ்ரீனிவாஸ் இருவர் குரலையும் கலந்தது மாதிரியான குரல். அற்புதமாகப் பிசிறில்லாமல் பாடுவான். ஒரு காலத்தில் இசையுலகில் அவன் சக்கரவர்த்தியாக வருவான் என்று உறுதியாக நினைத்தேன். ஆனால் அவன் துரதிர்ஷ்டவசமாக போதைப் பழக்கத்தில் சிக்கி மாற்றிக் கொள்ள முடியாமல் கடைசியில் தற்கொலை செய்து கொண்டான். சிகரம் தொட வேண்டிய குரல் வளமும், திறமையும் உள்ளவனைப் போதை இப்படிச் சீரழித்து விட்டதே என்று அவன் இறந்த நாள் முழுவதும் நான் அழுது கொண்டே இருந்தேன். நான் கடவுளிடம் பல நாள் கேட்டிருக்கிறேன். “இப்படியொரு குரல்வளத்தையும், திறமையையும் கொடுத்து அதைச் சிதைக்கிற ஒரு பழக்கத்தையும் ஏன் ஏற்படுத்திக் கொடுத்தாய் கடவுளே”. கடவுள் வழக்கம் போல பதில் சொல்லவில்லை. ஆனால் என் வேற்றுக்கிரகவாசி நண்பன் சில மாதங்களுக்கு முன்பு பதில் சொன்னான். “ஒருவன் என்ன ஆக வேண்டும் என்று அவனே தீர்மானிக்க வேண்டும் க்ரிஷ். உன் வித்யாதருக்கு இசை என்ற வரமும் இருந்தது. போதை என்ற சாபமும் கிடைத்தது. இந்த இரண்டில் ஒன்றைத் தான் வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலைமை வந்த போது அவன் போதையைத் தேர்ந்தெடுத்தான். இசை அவனுக்கு முடிந்தது.” அந்தப் பதில் என்னை நிறைய யோசிக்க வைத்தது நண்பா. இசையை ஒதுக்கி வைத்து அவனால் போதையை எப்படித் தேர்ந்தெடுக்க முடிந்தது என்று எனக்குப் புரியவில்லை. அந்த இசையைப் பிடித்துக் கொண்டு போதையை அல்லவா அவன் மறந்தும் மறுத்துமிருக்கவேண்டும்?”

”அதற்குப் பிறகு நான்  நிறைய அது சம்பந்தமான மனோதத்துவ நூல்களைப் படித்து அந்த அடிமைப்பட்ட மனநிலையை ஆராய்ந்து பார்த்திருக்கிறேன். அந்த மனிதர்கள் அந்தப் பழக்கத்தின் இறுதி விளைவு வரை என்றுமே சிந்திப்பதில்லை என்று தெரிந்தது. இப்போதைய சந்தோஷம் முக்கியம் அனுபவித்து விடு என்று மட்டும் சொல்லி அதில் திரும்பத் திரும்ப ஈடுபடுத்துகிறது. நாளைய வீழ்ச்சியை அது மறைத்து விடுகிறது. போதை மனிதனும் இதனால் ஒன்றும் பெரிதாக வந்துவிடப்போவதில்லை என்ற பொய்யான நம்பிக்கையில் தொடர்ந்து ஈடுபடுகிறான். ஒரு நாள் விளைவு பூதாகரமாக வருகிறது. அப்போது அதைத் தடுக்க வழியில்லாமல் மடிந்து போகிறான். ஆரம்பத்திலேயே இப்படியே போனால் எதில் கொண்டு போய் முடியும் என்று அவன் கடைசி வரை யோசித்திருந்தால் அந்த விபரீதப் பழக்கத்தை கஷ்டப்பட்டாவது நிறுத்தியிருக்கலாம்...”

இவன் எதற்கு இதைச் சொல்கிறான் என்பது விஸ்வத்துக்கு விளங்கவில்லை. ஆனால் தர்மம், நியாயம், அன்பு, பொதுநலம் என்று சொல்லிச் சித்திரவதை செய்யாதது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. க்ரிஷ் சொன்னதை அவனும் முழுமையாக மனதிற்குள் ஆமோதித்தான். அவனுக்கு நோக்குவர்மம் சொல்லிக் கொடுத்த இமயமலை சாதுவும் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர். சிறுவயதிலேயே நோக்குவர்மத்தில் தேர்ச்சி பெற்று விட்டிருந்த அவர் போதைப்பழக்கம் வந்த பின் வேறு எந்த உச்சத்தையும் அடையவில்லை என்பது நினைவுக்கு வந்தது. பின் தேர்ச்சி பெற்ற கலையைத் தக்க வைத்துக்கொள்ளவே அவர் நிறைய பாடுபட்டதைப் பக்கத்திலிருந்து விஸ்வம் பார்த்திருக்கிறான். இப்போதுள்ள இந்த உடலின் சொந்தக்காரன் எவ்வளவு மோசமாக தன்னை வருத்திக் கொண்டு இறந்தான் என்ற கதையை இந்த உடல் மூலம் அவன் அறிந்திருக்கிறான். உயர்வைத் தேர்ந்தெடுப்பவன் தாழ்வை விலக்க வேண்டும் என்பதில் அவனுக்கும் இரு கருத்தில்லை.  


க்ரிஷ் தொடர்ந்தான். “எதிலும் ஆழமாக ஈடுபடுபவன் தன் பழக்க வழக்கங்களின் விளைவுகளை, போக்கின் விளைவுகளைக் கடைசி வரை யோசித்துப் பார்க்க வேண்டும். அந்த முடிவுநிலை அவனுக்கு உயர்வு தானா, நிறைவு தானா, பெருமைப்படும் நிலை தானா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அது உயர்வாக இருந்தால் தொடர வேண்டும், வீழ்ச்சியாக இருந்தால் உடனடியாக அதிலிருந்து விடுபட்டுக் கொள்ள வேண்டும். அது தானே உண்மையான அறிவு நண்பா?”

அவன் சொன்ன விஷயம் சரியாக இருந்தாலும் அவன் பதிலை எதிர்பார்த்தது விஸ்வத்துக்குப் பிடிக்கவில்லை. எதற்கோ வலை விரிக்கிறான் என்று தோன்றியது. ஆனாலும் சீக்கிரம் முடித்துத் தொலையட்டும் என்று நினைத்தவனாக விஸ்வம் “ஆமாம்” என்றான்.

“நீ உன்னுடைய இப்போதைய இலக்கையும் போக்கையும் முடிவு வரை யோசித்துப் பார்த்திருக்கிறாயா நண்பா?” க்ரிஷ் கேட்டான்.

இனி இவனிடம் பதில் சொல்வது ஆபத்து என்று எண்ணிய விஸ்வம் இறுக்கமான முகத்துடன் மௌனமாக நின்றான்.

சில வினாடிகள் பதிலை எதிர்பார்த்து விட்டு க்ரிஷ் தொடர்ந்தான். “இறுதி நிலைக்கு நீ சிந்திக்க அதிகம் சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை நண்பா. எர்னெஸ்டோவைப் பார், போதும். ஏனென்றால் நீ ஆசைப்படும் ஒரு பதவியில்  இருபத்தைந்து வருடங்களாக முடிசூடா மன்னராக இருக்கும் அவருக்கு பிதோவனின் இசை சலிக்கவில்லை, ஆனால் அந்தப் பதவி சலித்து விட்டது என்று அவர் சொல்கிறார். ஒருவர் சலிப்புடன் சுமந்து வரும் பதவிக்கா நீ உன் இளமைக்காலத்திலிருந்து தயாராகி வருகிறாய்? இல்லுமினாட்டியின் பழைய தலைவர்களை எத்தனை பேர் நினைவு வைத்திருக்கிறார்கள். இவரையும் உலகம் எத்தனை காலம் நினைவில் வைத்திருக்கும். இனிமேல் வரப்போகிறவர்களுக்கும் அதல்லவா நிலைமை?”

விஸ்வம் இந்தப் பேச்சின் போக்கை ரசிக்கவில்லை. அவன் சொன்னான். “தலைமைப்பதவியை வைத்துக் கொண்டு ஒருவன் என்னவெல்லாம் சாதிக்க முடிகிறது என்பது தான் ஒரு தலைவனை மற்ற தலைவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது க்ரிஷ். நான் அந்தப் பதவியில் இருந்திருந்தால் உலகத்தின் விதியை மிக வலிமையாய் எழுதியிருப்பேன். பதவி சலித்துப் போவது சாதனைகளை நிறுத்தும் போது தான். நான் கடைசி மூச்சு வரை சாதனைகளை நிறுத்தியிருக்க மாட்டேன்...”

க்ரிஷ் வருத்தத்துடன் புன்னகைத்தான். “இப்போதைய போக்கே உன்னிடம் தொடருமானால் வேகமாக நிறைய செய்வாய். ஆனால் அது சாதனையாக இருக்காது. உன்நான்என்ற கர்வத்துக்குத் தீனி போடும் காரியங்களைத் தான் நீ செய்திருப்பாய்பேரழிவுகளை வேகமாகவே கொண்டு வந்திருப்பாய். நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான். இந்தப் பேரழிவுகளைக் கொண்டு வர நீ வேண்டுமா? எந்த ஒரு முட்டாளும் கூட யோசிக்காமல் செய்து முடிக்கலாமே. போதை இப்போதைய சந்தோஷத்தைச் சொல்வது போல் நீயும் இப்போதைய வெற்றியில் பெருமை கொள்கிறாய். முடிவில் என்ன சாதிக்கப்போகிறாய்?  மனதில் தணியாத அக்னியோடு ஆரம்பித்தவன் நீ. ஒரு இலக்கை எடுத்துக் கொண்ட பின் அதை அடையாமல் இருந்தவன் அல்ல நீ. இலக்கை அடையும் வரை நீ இளைப்பாறியதில்லை, அரைகுறைகளில் நீ திருப்தி அடைந்ததில்லை. உதவாத விஷயங்களில் நீ உலாவப் போனதில்லை. ஒவ்வொன்றாக எத்தனையோ அமானுஷ்ய சக்திகளைப் பெற்ற நீ கடைசியாகச் சாதிக்கப் போவது எல்லாவற்றையும் வேகமாக அழிப்பது தானா? அழிப்பதற்கு இத்தனை சிரமங்கள், உழைப்பு வேண்டுமா? எதையும் உருவாக்கி வளர்ப்பதற்கல்லவா இத்தனையும் வேண்டும்!”

மெல்ல அந்தச் சர்ச்சில் இருந்த ஓவியங்களில் மறைந்திருந்த இல்லுமினாட்டி சின்னம் மின்ன ஆரம்பித்தது. அத்தனை ஓவியங்களில் இருந்தும் பிரமிடுக்குள் இருந்த கண் பார்ப்பது போலவே அனைவரும் உணர்ந்தார்கள். இருள் மண்டிக் கிடந்த சர்ச்சில் மெலிதான ஒளி பரவ ஆரம்பித்தது.

(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.





Monday, March 28, 2022

யாரோ ஒருவன்? 78



த்தியமங்கலம் நோக்கி மறுபடி ஒருமுறை பயணித்துக் கொண்டிருந்த நரேந்திரன் மனம் கனத்திருந்தது. மதன்லாலிடமிருந்து நேற்றிரவு கறந்த உண்மைகள் ஏற்படுத்தியிருந்த ஆத்திரமும், அதிர்ச்சியும் இன்னமும் அவனுக்குக் குறையவில்லைக்யான்சந்த் எல்லா உண்மைகளையும் கக்கி விட்டான் என்று நம்ப வைத்ததால் மட்டுமே வேறு வழியில்லாமல் மதன்லால் உண்மையைச் சொல்லி ஒரு புதிரை விடுவித்தான். ஆனால் அதிலிருந்து எழுந்த இன்னொரு கேள்விக்குப் பதில் அவனிடமும் இருக்கவில்லை. அது அந்த தமிழ்நாட்டு இளைஞர்களுக்குத் தான் தெரியும் என்றும், அதை விசாரித்துத் தெரிந்து கொள்ளும் சிரமத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவன் சொன்னது உண்மையாகத் தானிருக்க வேண்டும் என்பதை நரேந்திரன் ஊகித்தான்.   

ஆனால் எல்லாமே க்யான்சந்த் தவறு என்றும் வேலைப்பளு காரணமாகவும், விடையில்லாக் கேள்விகள் காரணமாகவும் தான் அந்த வழக்கை அப்படி முடித்துக் கொண்டதாக மதன்லால் சொன்னதை நரேந்திரன் ஒரு சதவீதமும் நம்பவில்லை. க்யான்சந்த் போன்ற ஆட்கள் எந்த அளவு போவார்கள், மதன்லால் போன்ற ஆட்கள் எதுவரை போவார்கள் என்ற வித்தியாசத்தை அறிய முடியாத அளவு நரேந்திரன் முட்டாளல்ல.

மதன்லால் சொன்னதை வைத்து தந்தையின் மரணம் எப்படி நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிந்த நரேந்திரனுக்கு மதன்லாலைச் சித்திரவதை செய்து சிறிது சிறிதாகச் சாகடித்தால் என்ன என்று தான் ஆரம்பத்தில் தோன்றியது.  அது கண்டிப்பாக அநீதியாக இருக்காது என்றாலும் கூட அவன் எதிரிகள் அளவுக்குக் கீழிறங்க அவன் மனதின் ஒரு பகுதி ஒத்துக் கொள்ளவில்லை. மதன்லால், சஞ்சய் இருவரை அவன் கடத்தி சிறைப்படுத்தியதே சட்டப்படியான குற்றம் என்றாலும் உண்மையை அறிய அவனுக்கு வேறு நேர்வழியில்லை என்ற ஒரு ஏற்க முடிந்த காரணம் இருந்தது. ஆனால் கொல்வது என்பது அவன் வேலையில் சேர்ந்தபோது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கும், அவன் வளர்ந்த வளர்ப்பிற்கும் ஏற்றதாக இப்போதும் இல்லை. கெட்டவர்களைத் தண்டிக்கக்கூட அவர்கள் அளவுக்கு கீழிறங்க ஏனோ நல்லவர்களின் மனசாட்சி இடம் தருவதில்லை. நல்லவர்களின் பிரச்சினையே இது தான் போலிருக்கிறது….

சத்தியமங்கலத்தில் நாதமுனியின் வீடு நடுத்தர வர்க்கத்தின் சாதாரண வசதிகள் கொண்ட வீடாக இருந்தது. நரேந்திரன் தன்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட போது மிக மரியாதையாக அவனை வரவேற்றார்.

உட்காருங்க சார். நீங்க வந்து பேசிட்டுப் போனதாய் பரந்தாமன் சொன்னார். மறுபடியும் உங்கள மாதிரி பெரிய இடத்துல விசாரிக்க ஆரம்பிச்சதுல ரொம்ப சந்தோஷம். எனக்கு ஆரம்பத்துல இருந்தே மாதவன் மரணத்துல சந்தேகமிருந்துச்சு. ஆனா யார் கிட்ட என்னன்னு சொல்றது? ஏழை சொல் அம்பலம் ஏறுமா? பரந்தாமன் அலமேலு மாதிரி ஒரு தங்கமான தம்பதியைப் பார்க்கறது இந்தக் கலிகாலத்துல ரொம்பவே கஷ்டம். அவங்களுக்கு இப்படி ஒரு சோதனையை அந்தப் பகவான் குடுத்திருக்க வேண்டாம்…. ஆமா…. எதாவது கண்டுபிடிச்சீகளா?

நரேந்திரன் முறுவலித்தான். “விசாரிச்சுகிட்டு தான் இருக்கோம்…. கண்டிப்பா உண்மையைக் கண்டுபிடிச்சுடுவோம்நீங்க அவங்க குடும்பத்தோட ரொம்பவும் நெருக்கமானவர்னு கேள்விப்பட்டேன். மாதவன் இங்கே அடிக்கடி வர்றதுண்டுன்னும், சிலசமயம் அவனோட அவன் நண்பர்கள் கூட இங்கே வர்றதுண்டுன்னும் கேள்விப்பட்டேன்…. உங்களுக்கு நாகராஜ்ங்கற பேர்ல யாராவது அவனுக்கு நண்பன் இருந்ததா நினைவிருக்கா?”

இல்லை…. அவர் முதல்ல அப்படியொருத்தன் வந்ததா சொன்னப்பவே நான் சந்தேகப்பட்டேன். வேற எதோ உத்தேசத்துல நண்பன்னு சொல்லிட்டு ஒருத்தன் வந்துட்டு போனதா நினைச்சேன். ஆனா அவர் அக்கவுண்ட்டுக்கு பதிமூனு லட்சத்து சொச்சம் அனுப்பிச்சிருக்கான்னு கேள்விப்பட்டவுடன என்ன நினைக்கிறதுன்னே தெரியல. யாரோ ஒரு நல்ல ஆத்மா அவங்களுக்கு எதாவது உபகாரம் செய்யணும்னு நினைச்சி செஞ்சிருக்கலாம்னு தோணுச்சு.”

அவன் கார் பின்சீட்ல நாகப்பாம்பைப் பார்த்ததா அவங்க சொன்னாங்களா?”

சொன்னாக…. என்னால நம்ப முடியல…. அவ்வளவு உறுதியா சொன்னதால நம்பாம இருக்கவும் முடியல. அந்த நாகராஜ் ஒரு புதிரா தான் தெரியறான்நான் பாம்புகள் சம்பந்தமா நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினவன்…. ஆனா எனக்கே பாம்பை நேர்ல பார்த்தா நடுக்கமா தான் இருக்கும். அப்படி இருக்கறப்ப அதை கார் பின்சீட்ல வெச்சுகிட்டு ஒருத்தன் பிரயாணம் பண்ணுவானா…. ஒன்னுமே புரியலை….”

மாதவனோட நண்பர்கள்ல கல்யாண், ரஞ்சனி, சரத் இங்கே அதிகம் வந்திருக்காங்களா?”

சரத் ரஞ்சனி இங்கே வந்ததேயில்லை. சில தடவையாவது வந்தவன் கல்யாண்னு ஒருத்தன்…. அவன் இப்ப பெரிய பணக்காரன்…. கோயமுத்தூர்ல இப்ப இருக்கான்அவனுக்கும் மாதவன் மாதிரியே பாம்புகள் மேல ஆர்வம்குறிப்பா நாகரத்தினம் பத்தின விஷயங்கள்ல ரெண்டு பேரும் ஆர்வமா என்கிட்ட பேசிகிட்டிருப்பாககல்யாணோட அப்பா கூட ரெண்டு நாள் முன்னாடி இங்கே வந்திருந்தாரு…”

நரேந்திரன் ஆச்சரியத்துடன் கேட்டான். “அவர் இங்கே அடிக்கடி வர்றதுண்டா?”

இல்லை…. சொல்லப் போனா அவர் நேத்து தான் முதல் முறையா வந்தார்…”

என்ன விஷயமாய் அவர் உங்களைப் பார்க்க வந்தார்?”

ஏதோ வேலையாய் இந்த ஊருக்கு வந்தவர் அப்படியே என்னைப் பார்த்துட்டு போலாம்னு நினைச்சு வந்ததாய் சொன்னார்…. வந்தவர் விசேஷ நாகரத்தினம் பத்தி ஆர்வமா கேட்டுத் தெரிஞ்சுகிட்டு போனார்…”

நரேந்திரனுக்குப் பாம்பாட்டி சொன்ன விவரங்களும் நினைவுக்கு வர கல்யாணின் தந்தை கண்காணிக்கப்படவும், விசாரிக்கப்படவும் வேண்டிய ஆளாகத் தோன்றினார். பாம்பாட்டியிடம் கேட்ட விவரங்களை உடனடியாக விசாரித்துத் தெரிந்து கொள்ள கிழவர் இங்கு வரை வந்திருக்கிறாரே

நரேந்திரன் சந்தேகத்தோடு கேட்டான். “நாகரத்தினம்னு நிஜமாவே ஒன்னு இருக்குங்கறதுக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லைன்னு சொல்றாங்களேஅப்படி இருக்கிறதா காண்பிச்சுக்கறதும் கூட ஏமாத்து வேலைன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன்…. எங்க டெல்லிக்கு பக்கத்துல ஒரு ஏமாத்துப் பேர்வழி ஒரு செத்த நாகப்பாம்பு தலைல ஏதோ ஒரு கண்ணாடிக்கல்லை உள்ளே வெச்சு தைச்சு பிறகு அதை நிஜ நாகரத்தினம்னு சொல்லி வெளியே எடுத்து வித்து பல லட்சம் மோசடி பண்ணிட்டதா பத்து வருஷங்களுக்கு முன்னாடி பேப்பர்ல படிச்சதா ஞாபகம்…”

நாதமுனி மறுக்கவில்லை… “வாஸ்தவம் தான். அந்த மாதிரி நிறைய நடக்குது. ஒரு நிஜம் இருந்ததுன்னா அதை வெச்சே ஓராயிரம் போலிகள் இந்தக் கலிகாலத்துல உருவாயிடுது. இப்படி ஓராயிரம் போலிகள் இருக்கறதாலயே அந்த நிஜமான ஒன்னு இல்லைன்னு சொல்றது சரியாயிடாதே…. நாகரத்தினம் சாதாரணமா ஒருத்தனுக்கு கிடைச்சுடாது….

நரேந்திரனுக்கு இப்போதும் அவர் சொன்னதை நம்ப முடியவில்லை. அவன் அவரை சந்தேகத்தோடு பார்த்தான். அவர் விரிவாக சொல்ல ஆரம்பித்தார். ”அந்தக் காலத்துலயே பெரிய பெரிய ஆள்கள் எல்லாம் விவரிச்சிருக்கிற விஷயமிது. வராஹமிஹிரர் பிருஹத் சம்ஹிதைல சில விசேஷ பாம்புகளின் தலையில் ஒரு ரத்தினம் இருக்கிறதா சொல்றார். அது வண்டு, மயிலின் கழுத்து நிறம் போல பளபளக்கும்னும்  ஒரு விளக்கின் தீ ஜ்வாலை போல ஒளியை உமிழும்னும்  அது விலை மதிக்க முடியாததுன்னும் சொல்றார். நாகரத்தினத்தை அணியும் மன்னனுக்கு விஷத்தினாலோ நோய்களினாலோ ஆபத்து வராது. அவனது நாட்டில் இந்திரன் மழை பொழிந்து வளம் குவிப்பான். இந்த நாகரத்தினத்தின் மகத்தான சக்தியால் எதிரிகளை நிர்மூலம் செய்வான்னும் சொல்றார்…. அவர் மட்டுமில்ல காளிதாசன், கம்பன் கூட சொல்லியிருக்கிற விஷயம் இது. நம்ம சங்க இலக்கியப்பாடல்கள்லயும் சீவகசிந்தாமணி, பதினென்கீழ்கணக்கு நூல்கள்ல எல்லாமும் இதைச் சொல்லியிருக்காக…”

அகநானூறுல கூட ரெண்டு இடங்கள்ல இந்த விஷயம் வருதுஒன்னு
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்” 

இன்னொரு இடத்துல இப்படி ஒரு பாட்டு இருக்கு….
உருமுச் சிவந்து எறிந்த உரன் அழிபாம்பின்
திருமணி விளக்கிண் பெறுகுவை

இந்த  விஷயம் மற்ற நாடுகளுக்கும் பரவி ஷேக்ஸ்பியர் கூடAs You Like It’ நாடகத்துல சொல்றார்“Sweet are the uses of adversity, Which like the toad, ugly and venomous, Wears yet a precious jewel in his head”

என்ன, பாம்புங்கறதுக்குப் பதிலா தவளைன்னு மாத்தி சொல்லிட்டார். இப்படி இத்தனை பேருமா இல்லாத ஒன்னைப் பத்தி சொல்லிருப்பாக…”

நரேந்திரனுக்குத் தலைசுற்றுவது போலிருந்தது.




(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும், சாணக்கியன் உட்பட அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.




Thursday, March 24, 2022

இல்லுமினாட்டி 147



க்ரிஷும், அக்ஷயும் அந்த சர்ச்சை நோக்கிக் காரில் சென்று கொண்டிருந்தார்கள். அக்ஷயை ஆபத்தில் ஈடுபடுத்துகிறோம் என்ற குற்ற உணர்ச்சி க்ரிஷுக்கு இருந்து கொண்டே இருந்தது. தனக்கு என்னவானாலும் சரி அக்ஷய் ஆபத்தில்லாமல் திரும்ப வேண்டும் என்று அவன் பிரார்த்தித்து விட்டு தான் கிளம்பியிருக்கிறான். மாஸ்டரையும் மானசீகமாக வணங்கி விட்டுத் தான் கிளம்பியிருந்தான். அவர் கனிவுடன் அவனைப் பார்த்ததை உணர்ந்தான். அவர் ஆசி இருக்கிறது. இனி அக்ஷய்க்கு எந்த ஆபத்தும் இல்லாமல் வேறு என்ன ஆகிறதோ ஆகட்டும் என்று க்ரிஷுக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது.  

அக்ஷய் சொன்னான். “நீ எப்போதுமே என் அருகில் தான் இருக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரு அடி தூரத்தை விட அதிக இடைவெளி விட்டு நகர்ந்து விடக்கூடாது.”

காரோட்டிய படியே க்ரிஷ் தலையசைத்து விட்டு மெல்ல ஒரு வேண்டுகோள் விடுத்தான். “எனக்கு ஒரே ஒரு வாக்கு கொடுப்பீர்களா?”

என்ன?”

எனக்கு ஏதாவது ஆகி விட்டால் தயவு செய்து நீங்கள் தப்பித்து விட வேண்டும். உங்களுக்கு ஏதாவது ஆனால் என் ஆத்மா சாந்தியடையாது.”

மறுக்க வாய் திறந்த அக்ஷய் அவன் முகத்தில் தெரிந்த குற்றவுணர்ச்சியைப் பார்த்து வாயை மூடிக் கொண்டு தலையசைத்தான். அவன் மரணத்தையும் ஏற்றுக் கொண்டு அங்கே போய் என்ன சாதிக்கப் போகிறான் என்று அக்ஷய்க்கு விளங்கவில்லை. அவன் தலையசைத்தவுடன் க்ரிஷ் நிம்மதி அடைந்தது தெரிந்தது. அவன் முகத்தில் தெளிவும் அமைதியும் தெரிய ஆரம்பித்தன. ஏனோ அந்தக் கணத்தில் அவன் மைத்ரேயனை அக்ஷய்க்கு நினைவுபடுத்தினான்.

கார் சர்ச்சை அடைந்த போது இருட்ட ஆரம்பித்திருந்தது. காரிலிருந்து இருவரும் இறங்கினார்கள். அக்ஷய் க்ரிஷிடம் மறுபடி நினைவுபடுத்தினான். “நான் சொன்னது நினைவிருக்கட்டும். என் அருகிலேயே தான் நீ இருக்க வேண்டும்.”


விஸ்வம் இப்போது தனக்குள் எல்லையில்லாத சக்தியை உணர்ந்திருந்தான். அந்தச் சுவடி சொல்லியிருந்தது போல் அவன் தியானத்தில் அமர்ந்திருந்த போது பிரமிடுக்குள் இருந்த அந்தப் பெருவிழி அவனுக்குள் ஏராளமான சக்திகளைப் பாய்ச்சிக் கொண்டிருப்பதை உணர்ந்தான். முன்பு போல் அந்தப் பெருவிழி அவனை ஏமாற்றி விடவில்லை. ஆனால் இப்போது உணர்ந்த சக்திகளும் கூட இந்த உடல் ஏற்றுக்கொள்ள முடிந்த அளவு அதிகமே ஒழிய அவன் முந்தைய உடலில் இருந்த சக்திகளுக்கு இணையல்ல. ஆனாலும் இந்த அளவையே இவ்வளவு சீக்கிரம் அடைய முடியும் என்று அவன் எண்ணியிருக்கவில்லை.

ஜிப்ஸியின் கிதார் இசை கேட்டு எழுந்த போது விஸ்வம் அடைந்திருந்த சக்திகளால் உற்சாகத்தின் உச்சியில் இருந்தான், ஆனால் ஜிப்ஸி சொன்ன செய்தி  அத்தனை உற்சாகத்தையும் வடிய வைத்து  அவனுக்குள் ஆத்திரத்தை நிரப்பி இருந்தது.

தூரத்தில் க்ரிஷும், அக்ஷயும் வருவதை விஸ்வம் மறைந்து நின்று பார்த்தான். அவர்களை நேரில் பார்க்கும் போது ஆத்திரம் இன்னும் அதிகமாகியது.  இப்படி நேரில் வர க்ரிஷுக்குத் தைரியம் தந்தது அக்ஷய் கூட இருப்பது தான் என்று நினைத்த விஸ்வம் தன் சக்திகளைக் குவித்து அக்ஷயின் மனதை ஆக்கிரமித்தான். இது வரை அவன் ஆக்கிரமித்திருந்தவர்கள் எல்லாம் திடீரென்று சிறைப்பட்டது போல உணர்ந்து ஸ்தம்பித்து அசைய முடியாமல் நின்று விடுவார்கள்.

அக்ஷய் விஸ்வத்தின் சக்தி தன்னை ஆக்கிரமிப்பதை உணர்ந்தான். கட்டப்பட்டது போல் உணர்ந்தாலும் சிரமத்துடன் அவனால் தொடர்ந்து நடக்க முடிந்தது. அந்தச் சிரமமும் அவனுக்குத் தான் தெரிந்ததே ஒழிய பார்ப்பவர்களுக்கு வெளியே தெரியவில்லை.  அதே நடை, அதே வேகம், அதே அமைதி….

விஸ்வம் திகைத்தான். முதல் முறையாகத் தன் உடலில் இந்த அளவு கட்டுப்பாடுள்ள இன்னொரு மனிதனை அவன் பார்க்கிறான். அமானுஷ்யன் என்ற பெயர் வெறுமனே வைக்கப்பட்டதல்ல என்பது அவனுக்குப் புரிந்தது. ஆக்கிரமித்திருந்த அமானுஷ்யனை அவன் ஆராய்ந்தான். தெளிவான மனம் விரைவான அறிவு உடலில் முழுக் கட்டுப்பாடு என்ற மூன்றையும் அக்ஷயிடம் விஸ்வம் பார்த்தான். அபூர்வ சக்திகள் அதிகம் பெற்றிருக்காதவன் என்றாலும் கூட, இந்த மூன்றுமே சேர்ந்திருக்கும் ஒருவனைச் சமாளிப்பது சுலபமல்ல என்று புரிந்தது.

சர்ச்சின் உள்ளே இருள் மண்டியிருந்தது. ஆனாலும் இருவரும் வாசலைத் தாண்டி உள்ளே சென்றார்கள். அவர்கள் உள்ளே ஐந்தடிகள் வைத்தபின் விஸ்வம் சொன்னான். “அங்கேயே நில்லுங்கள். இனி ஒரு அடி எடுத்து வைத்தால் உங்கள் உயிர் உங்கள் உடலில் தங்காது

க்ரிஷும் அக்ஷயும் சேர்ந்தே நின்றார்கள். க்ரிஷுக்கு உள்ளே சுத்தமாக எதுவும் தெரியவில்லை. ஆனால் அக்ஷயும் இருட்டுக்குப் பழக்கமாயிருந்தவன், இருட்டில் காணவும், இயங்கவும் முடிந்தவன் என்பதால் விஸ்வம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்ததுடன் இருட்டிலேயே அவனை எடைபோடவும் செய்தான்.

விஸ்வத்துக்கு இது இரண்டாவது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்டான். “நீ எதற்கு வந்தாய் க்ரிஷ்?”

உன்னிடம் நான் சிறிது பேச வேண்டும்என்றான் க்ரிஷ்

நீ ஒரு முட்டாள் க்ரிஷ்ஏளனமாக விஸ்வம் சொன்னான்.

உண்மை. அதை நானே பல முறை உணர்ந்திருக்கிறேன் நண்பனே

விஸ்வம் திகைத்தான். இந்தப் பதிலை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் நண்பனே என்று சொன்னதை அவனால் ரசிக்க முடியவில்லை. இப்படி நண்பன் என்று சொல்லியே அவனை க்ரிஷ் இல்லுமினாட்டி கூட்டத்தில் கவிழ்த்ததை அவன் மறக்க முடியாது. “உன்னிடம் நான் பேச விரும்பவில்லை க்ரிஷ். நீ இங்கிருந்து போகலாம்....”

நான் சொல்ல வந்ததைச் சொல்லாமல் போக முடியாது நண்பனே

அவன் மறுத்ததும், மறுபடி நண்பன் என்று அழைத்ததும் ஆத்திரத்தை அதிகப்படுத்த விஸ்வம் சொன்னான். ‘இனி ஒரு நிமிடத்திற்குள் நீ இங்கிருந்து போகா விட்டால் பின் நீ உயிரோடு போக முடியாது க்ரிஷ்

நீ ஏன் என் பேச்சைக் கேட்பதற்குப் பயப்படுகிறாய் நண்பா?” என்று க்ரிஷ் கேட்டான்.

அதற்கு மேல் விஸ்வத்துக்குத் தாங்க முடியவில்லை. மின்னல் வேகத்தில் அவன் க்ரிஷ் மேல் பாய்ந்தான்.  அடுத்த வினாடி அவன் க்ரிஷ் முன்னால் இருந்தான். க்ரிஷைக் கழுத்தை நெறிக்கக் கைகளை உயர்த்தினான். அதற்கடுத்த வினாடி அக்ஷயால் பலமாகத் தள்ளப்பட்டு சர்ச்சின் பிரார்த்தனை பெஞ்சில் விழுந்து எழுந்தான். இது அவனுக்கு மூன்றாவது உச்சக்கட்ட அதிர்ச்சியாக அமைந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் போக முடிந்த அவனை இருட்டில் தெளிவாக அக்ஷய் பார்த்ததுடன் அதே வேகத்தில் வலிமையாகத் தள்ளிவிட முடிந்ததை  அவனால் சகிக்க முடியவில்லை. அப்படித் தள்ளி விடுவதற்குப் பதிலாக அக்ஷய்க்கு நுணுக்கமாகத் தெரிந்த கழுத்து நரம்பில் வர்மக்கலை முடிச்சைப் போட்டிருந்தால் இன்னேரம் அவன் அசைய முடியாமல் கீழே விழுந்து கிடக்க நேர்ந்திருக்கும் என்பதை  உணர்ந்தபடியே விஸ்வம் அவமானத்துடன் மெல்ல எழுந்தான். வாழ்க்கையில் முதல் முறையாக ஒருவன் அவனை அடித்து வீழ்த்தியிருக்கிறான்…. கோமாவில் வீழ்த்த முடிந்தும் அவன் அதைச் செய்யாமல் காட்டிய கருணை விஸ்வத்தைச் சுட்டது.

ஆத்திரத்துடன் விஸ்வம் சொன்னான். “அக்ஷய். உனக்கும் எனக்கும் இடையே எந்தப் பகையும் இல்லை.  உன்னிடம் என் சக்திகளை விரயமாக்க நான் விரும்பவில்லை. அவனை அழைத்துக் கொண்டு போய் விடு. இல்லா விட்டால் நீயும் உயிரோடு போக முடியாது. இது நிச்சயம்

அக்ஷய் அமைதியாகச் சொன்னான். “அவன் சொல்வதைச் சொல்ல நீ அனுமதித்தால் பிறகு நானும் அவனும் இரண்டு பேருமே சேர்ந்து வெளியே போய் விடுவோம்.”

அது வரை மறைந்திருந்து கவனித்துக் கொண்டு மட்டுமே இருந்த ஜிப்ஸி கூவினான். “க்ரிஷை நீ பேச அனுமதிக்காதே. அவன் பேச்சே ஆபத்து.”

க்ரிஷுக்குச் சத்தங்கள் கேட்டதே ஒழிய என்ன நடக்கிறது என்றே சரியாகத் தெரியவில்லை.  அவன் முன் நிழல் பாய்ந்தது போல் ஒரு உருவம் வந்ததும் அடுத்த வினாடி மரப் பெஞ்சில் தடாலென்று எதோ விழுந்த சத்தமும் கேட்டதே தவிர அக்ஷய் விஸ்வத்தைத் தள்ளி விட்டிருந்தது கூட அவனுக்கு அருகில் இருந்தும் தெரிந்திருக்கவில்லை.   இப்போது இன்னொருவன் கூவி பேச அனுமதிக்க வேண்டாம் என்று சொல்வது மட்டும் கேட்கிறது. இந்த ஆளும் அவன் பார்வைக்குப் பவில்லை. ஜிப்ஸி அக்ஷய் பார்வையிலும் அகப்படாமல் மறைவாகவே இருந்தான்.

அக்ஷய் அமைதியாகக் கேட்டான். “உன் கூட்டாளியைப் போலவே நீயும் க்ரிஷ் பேசுவதைக் கேட்கப் பயப்படுகிறாயா விஸ்வம்?”

(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.




Monday, March 21, 2022

யாரோ ஒருவன்? 77


பாம்பாட்டி நரேந்திரன் விசாரித்த போது ஒரே ஒரு விஷயத்தைத் தவிர எல்லாவற்றையும் சொல்லி விட்டான். அவன் சொல்லாமல் விட்ட விஷயம் நாகராஜ் கடைசியாக அவனுக்குச் சொன்ன அறிவுரை. “உன்கிட்ட இன்னும் கொஞ்சம் திருட்டுத்தனமும், ஏமாத்தற புத்தியும் இருக்கு. அதை விட்டுடுடறப்ப உன்னைப் பிடிச்சிருக்கற எல்லா பீடையும் கூட விலகிடும்என்று நாகராஜ் சொன்னதற்குப் பதிலாகநீ நல்லவனாகவே வாழ்ந்துட்டு வா. உன்னைப் பிடிச்சிருக்கிற எல்லா பீடையும் கூட விலகிடும்என்று அறிவுரை சொன்னதாகச் சொன்னான்.

அவன் சொன்ன விஷயங்கள் நரேந்திரனைத் திகைக்க வைத்தன. கற்பனை வளத்தில் அம்புலிமாமா கதைகளை மிஞ்சியபடி இருந்தது பாம்பாட்டி சொன்ன விசேஷ நாகரத்தினம் பற்றிய தகவல். அவன் திகைப்பும், சந்தேகமும் அவன் முகத்தில் பிரதிபலித்திருக்க வேண்டும். பாம்பாட்டி சொன்னான். “படிச்சவங்களுக்கு இதெல்லாம் நம்பக் கஷ்டம் தான் சார்

நரேந்திரன் சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் அவனையே கூர்ந்து பார்த்தான். பிறகு கேட்டான். “நீ நாகராஜை இதுக்கு முன்னால் பார்த்ததே கிடையாதா?”

இல்லை சார். ஆனா கேள்விப்பட்டிருக்கேன்...”

என்னவெல்லாம் கேள்விப்பட்டிருக்கே?”

மகராஜ் நாகசக்தி இருக்கிறவர் கடந்த காலம் எதிர் காலம் ரெண்டையும் சொல்லக்கூடியவர், அவரைச் சந்திக்கறதே கஷ்டம்னெல்லாம் கேள்விப்பட்டிருக்கேன்

ஆனா அந்த வீட்டில் தான் அவர் இருக்கார்னு தெரிஞ்சது அந்தப் பக்கத்து வீட்டுக் கிழவர் சொல்லித் தானா?”

ஆமா சார்

அந்தக் கிழவர் உன் கிட்ட வலிய வந்து பேசினது எதுக்குன்னு நினைக்கிறாய்?”

தெரியலை சார். ஆனா அந்த ஆள் நல்ல ஆளில்லைன்னு உள்மனசு சொல்லுச்சு

நாகராஜ் மகராஜைப் பத்தி உன் உள்மனசு என்ன சொல்லுது

அவர் நல்லவர்னு தான் தோணுதுங்க சார்

நரேந்திரன் மனித மனதின் விசித்திரத்தை எண்ணி வியந்தான். கேள்விகள் கேட்டு பணம் கொடுத்த கிழவரை அவன் நல்ல ஆளில்லை என்று சொல்கிறான்எதுவும் தராமல் அறிவுரை மட்டும் தந்த நாகராஜை நல்லவர் என்று சொல்கிறான்....

மீண்டும் அழைத்தால் வரவேண்டும் என்றும், அவன் அழைத்து விசாரித்ததை யாரிடமும் சொல்லக் கூடாதென்றும் கண்டிப்புடன் சொல்லி பாம்பாட்டியை அனுப்பி விட்டு நரேந்திரன் யோசித்தான். இந்த நாகசக்தி, நாகரத்தினம் குறித்து நாதமுனியிடம் கேட்க வேண்டும் என்று முன்பே நினைத்திருந்தது இப்போது அவசியமாகவே தோன்றியது. க்யான் சந்த் பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. க்யான் சந்தும் இல்லாத நிலையில் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள மதன்லாலை நெருக்குவதைத் தவிர வேறு வழியில்லை. சாதாரணமாக வாய் திறக்க மாட்டான் என்றாலும் அவனைப் பேச வைக்க வேண்டியிருக்கிறது....


ஜீம் அகமதுக்கு க்யான் சந்தைக் கடத்திய செய்தியும், கடத்தி வைத்திருக்கும் இடம் பற்றிய விவரமும் வந்து சேர்ந்தன. க்யான் சந்த் போன்ற ஒரு துரும்பைக் கடத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை என்றாலும் கூட நரேந்திரனுக்குநாங்களும் இருக்கிறோம்என்று காட்டும் நோக்கத்துடன் தான் அவன் கடத்த உத்தரவிட்டிருந்தான். அந்த ரா அதிகாரி எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்டால் கூட அஜீம் அகமதின் நிழலைக்கூட நெருங்க முடியாது என்பது நிச்சயம். அந்த அளவு தொலைவில் பாதுகாப்பாக இருந்தாலும் கூட சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு தன்னிஷ்டத்துக்கு நடந்து கொள்ளும் அந்த ரா அதிகாரியை அஜீம் அகமதால் அலட்சியப்படுத்த முடியவில்லை. அவனை அடக்கி வைக்க வேண்டும், முடிந்தால் அவன் அப்பனை அனுப்பிய இடத்திற்கே அனுப்பி வைக்க வேண்டும் என்று அஜீம் அகமதுக்குத் தோன்றியது  அதையும் மற்றவர்கள் மூலம் அல்லாமல் தானே நேரில் போய் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக எழுந்ததால் இந்தியா செல்வதென்று அஜீம் அகமது முடிவு செய்தான்.  



ன்று மதியம் கிடைக்க வேண்டிய வறண்ட சப்பாத்தி மதன்லாலுக்கு மட்டும் கிடைக்கவில்லை. சஞ்சய் ஷர்மாவுக்கு மட்டும் சப்பாத்தி, சப்ஜி தட்டைத் தள்ளி விட்டு வந்த தடியன் மதன்லாலிடம்க்யான் சந்தும் இப்ப எங்க கஸ்டடியில தான் இருக்கான். அவன் எல்லா உண்மையும் கக்கிட்டான்என்று மட்டும் சொல்லி விட்டுப் போனான்.

மதன்லால் அதிர்ந்து போனான். ஆரம்பத்தில் சந்தேகப்பட்டாலும், அவனையே கடத்த முடிந்தவர்களுக்கு க்யான் சந்தைப் பேச வைப்பது முடியாத காரியமல்ல என்று தோன்றியது. க்யான் சந்துக்குப் பேராசை இருக்கும் அளவுக்கு மனோதைரியம் போதாது... இப்படியெல்லாம் நடக்கும் என்பதை முன்பே எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று மதன்லால் தன்னையே நொந்து கொண்டான்.... க்யான் சந்தை நரேந்திரன் பேச வைப்பதற்கு முன் அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் விட்டது முட்டாள்தனம்...

க்யான் சந்த் உண்மையைக் கக்கி விட்டான் என்பதைக் காரணம் காட்டி, நாயும் சாப்பிடாத வறண்ட ஒரு சப்பாத்தியைத் தர மறுத்து விட்டுப் போன தடியன் மீது ஆத்திரமாய் அவனுக்கு வந்தது. அதையும் விட அதிக ஆத்திரம் அந்த வறண்ட சப்பாத்திக்காக ஏங்கிக் கிடக்கும் அவன் வயிற்றின் மீது வந்தது. என்ன பிழைப்பு இது?

சாயங்காலம் இரண்டு பழைய இரும்பு பக்கெட்கள் நிறைய ஐஸ்கட்டிகள் கொண்டு வந்து அவனுடைய அறையில் தடியன் வைத்தான்.

இந்த ஐஸ்கட்டிகளைக் காண்பித்து பயமுறுத்தி சஞ்சயிடம் உண்மைகளை வாங்கிய கதையை அறிந்திருந்தாலும் அதைக் காண்பித்துக் கொள்ளாமல் மதன்லால் கேட்டான். “என்ன இது?”

அரை மணி நேரத்துல சார் உன் கிட்ட பேசுவாரு. நீ உண்மைய சொல்லாட்டி இதுல உனக்கு அபிசேகம் செய்யச் சொல்லியிருக்காரு

மதன்லால் தடியனிடம் அலட்சியம் காட்டிச் சொன்னான். “அவனே எல்லாம் சொன்னதுக்கப்பறம் என் கிட்ட கேட்க என்ன இருக்கு?”

நீ சொல்றதும், அவன் சொன்னதும் பொருந்துதான்னு பார்க்கத் தான். ரெண்டு பேர்ல யாராவது மாத்தி சொல்லியிருந்தாலும், எதையாவது சொல்லாம விட்டிருந்தாலும் சார் அவங்கள நல்லா கவனிச்சுக்க சொல்லிருக்காரு..”

மதன்லால் கேட்டான். “க்யான்சந்தை எங்க புடிச்சு வெச்சிருக்கீங்க...?”

தடியன் எகத்தாள தொனியில் சொன்னான். ”அதெல்லாம் அவன் கிட்டயே ஒரு நாள் நீ கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்...”

மதன்லால் மிகுந்த ஆர்வத்தோடு கேட்டான். “எப்போ?”

நரகத்துல ரெண்டு பேரும் சந்திக்கறப்பஎன்று சொல்லி விட்டு தடியன் போய் விட்டான்.

இரண்டு நிமிடங்கள் கழித்து சஞ்சய் குரல் மெலிதாய் கேட்டது. “என்னண்ணா அவன் இப்படி சொல்லிட்டு போறான். உங்க ரெண்டு பேரையும் தீர்த்துக் கட்டறதா அவனுக முடிவு பண்ணிட்டானுக போல இருக்கே அண்ணா?”

காதுகளில் நாராசமாக விழுந்த வார்த்தைகளை அலட்சியப்படுத்த முடியாமல் தவித்தாலும் மதன்லால் தன் தவிப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் வீரனைப் போல் பேசினான். “மதன்லால் எத்தனையோ பார்த்தவன். இதற்கெல்லாம் அசந்துட மாட்டான்...”

அசராம இருக்கறதை விட சாகாம இருக்கிறது முக்கியம்ணா...” என்று சஞ்சய் அக்கறையோடு சொன்னது மதன்லாலின் அடிவயிற்றைக் கலக்கியது. கேட்கையில் எரிச்சலாக இருந்தாலும் அந்த வார்த்தைகளில் இருந்த உண்மையை அவன் உணர்ந்தே இருந்தான். இப்படி சிறைபிடிக்கும் அளவுக்குத் துணிந்த நரேந்திரன், ஆளை முடித்துக் கட்டவும் தயங்க மாட்டான் என்பதில் சந்தேகம் தேவையில்லை. தப்பித்துப் போகும் வரையாவது உயிரோடு இருக்க வேண்டியது முக்கியம்.... இரும்பு பக்கெட்களிலிருந்து வீசிய குளிர் தூரத்திலிருக்கும் போதே வாட்டியதுஅதை உடம்பில் கொட்டினாலோ ஜன்னி வருவது நிச்சயம். பிறகு காலை வரை தாக்குப் பிடிப்பது கூடக் கஷ்டம் தான். ஆனால் உண்மையைச் சொன்னாலோ நரேந்திரன் பதிவு செய்து வைத்துக் கொண்டு அதை அவனுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆபத்து இருக்கிறதுமதன்லால் ஆழ்ந்து யோசித்தான். உண்மையை க்யான்சந்த் சொல்லி விட்ட பிறகு க்யான்சந்த் சம்பந்தப்பட்ட உண்மையை மறைப்பதில் அர்த்தமில்லை. ஆனால் க்யான்சந்த் சம்பந்தப்படாத விஷயங்களைச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை.

அந்த உண்மையைக் கூட அவன் தன் மேல் தவறில்லாதபடி சொல்லிக் கொள்ளலாம். க்யான்சந்த் அப்படிச் சொல்லவில்லையே என்று நரேந்திரன் சொன்னால் க்யான்சந்த் தனக்குச் சாதகமாகச் சொல்லியிருக்கிறான், நான் சொல்வது தான் உண்மை என்று சாதிக்கலாம்… ’என்னுடைய ஒரே தவறு அந்த வழக்கைத் தீவிரமாக விசாரிக்காமல் அவர்கள் சொன்ன தகவலை ஏற்றுக் கொண்டு ஃபைலை மூடி விட்டேன் என்பது தான். அதுவும் அப்போதிருந்த வேலைப்பளு காரணமாகச் செய்தது என்று சொல்லி விடலாம்அவன் வாழ்நாளெல்லாம் உண்மைகளை தனக்கேற்ற மாதிரி திரித்து குற்றப்பத்திரிக்கைகளைத் தயாரித்தவன் என்பதால் அனுபவ குறுக்கு புத்தியால் வந்த இந்த யோசனை சரியாகத் தான் இருப்பதாகத் தோன்றியது. ’நரேந்திரன் சந்தேகப்பட்டாலும் கூட, கண்டிப்பாக இதில் எந்த ஓட்டையும் கண்டுபிடிக்க முடியாது…’




(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும், சாணக்கியன் உட்பட அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.