சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, June 29, 2011

நேரெதிர் கோணங்கள்


கீதை காட்டும் பாதை 9

நேரெதிர் கோணங்கள்


நிலைத்த மதியுடையவனை விவரிக்கையில் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு அருமையான உதாரணத்தைச் சொல்லி சாதாரணமான மனிதர்களில் இருந்து எப்படி நிலைத்த மதியுடையவன் வித்தியாசப்படுகிறான் என்பதை விளக்குகிறார்.

“சாதாரணமான ஜீவன்களுக்கு இரவாக இருக்கையில் புலன்களை அடக்கிய மனிதன் விழித்துக் கொண்டிருக்கிறான். மற்ற எல்லா ஜீவன்களும் விழித்துக் கொண்டிருக்கையில் அவன் உறங்குகின்றான்”

நிலைத்த மதியுடையவனும், ஆசைகளில் அலை மோதும் சாதாரண மதி உடையவனும் விழித்திருக்கும் நேரங்களும், உறங்குகின்ற நேரங்களும் நேர் எதிரானவை. சாதாரணமான மனிதன் உறங்குகையில் தான் கவலைகள், லாப நஷ்டங்கள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை மறந்திருக்கிறான். ஆனால் நிலைத்த மதியுடைய ஞானியோ விழித்திருக்கையிலேயே அவற்றில் எல்லாம் விடுபட்டு அமைதியாக இருக்கிறான். உலக விஷயங்கள், ஆசாபாசங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலோ மற்றவர்கள் விழித்திருக்க அவன் நிம்மதியாக உறங்குகின்றான்.

சாதாரண மனிதன் முக்கியமாக நினைக்கும் விஷயங்கள் எல்லாம் நிலைத்த அறிவையுடையவனுக்கு முக்கியமில்லாததாகத் தோன்றும். அதே போல நிலைத்த அறிவுடையவன் முக்கியம் என்று நினைக்கும் விஷயங்கள் சாதாரண மனிதர்களுக்கு முக்கியமில்லாததாகத் தோன்றும். சாதாரணமான மனிதனுக்கு பணம், பதவி, அதிகாரம், புகழ் எல்லாம் தான் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகவும், வெற்றியாகவும் தோன்றும். அதன் பின்னால் ஓடி ஓடிக் களைத்தாலும், அதனால் எத்தனை பாடு பட்டாலும், அவன் தன் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வதில்லை. மாறாக அவனது ஓட்டமும், அவற்றின் மேல் உள்ள ஆசையும் அதிகரித்துக் கொண்டே தான் போகின்றன. உறக்கத்தில் மட்டுமே அவன் அதையெல்லாம் மறந்திருக்கிறான். சில சமயங்களில் உறங்கக் கூட மறக்கிறான். அவனது ஆசைகளினால் ஏற்படும் கவலையின் தாக்கத்தில் அவன் உறங்கக் கூட முடியாமல் தவிக்கிறான்.

மாறாக நிலைத்த மதியுடையவனுக்கு பணம், பதவி, புகழ், அதிகாரம் ஆகியவை துக்கத்திற்கான தூண்டில்கள் என்றும், என்னேரமும் எப்படியும் மாறக்கூடியவை என்றும் தெளிவாகத் தெரிவதனால் அந்தத் தூண்டில்களில் சிக்காமல் விலகி இருக்கிறான். அவன் முக்கியம் என்று உணரும் ஆத்ம சிந்தனைகளும், தர்ம நியாயங்களும் சாதாரண மனிதனுக்கு வெற்றுப் பேச்சுகளாகவும் யதார்த்த வாழ்க்கைக்கு பயனில்லாததாகவும் தோன்றுகின்றன. இப்படி இருவரும் உலகையும், வாழ்க்கையையும் அணுகும் கோணங்கள் நேர் எதிர் கோணங்களாக இருக்கின்றன.

சாதாரணமான மனிதன் புறத்தோற்றத்திற்கு மிக அதிக முக்கியத்துவம் தருகிறான். அடுத்தவர் கண்ணில் அழகாகவும், சிறப்பாகவும், செழிப்பாகவும், பாராட்டுக்குரியவனாகவும் தெரிய ஆசைப்படுகிறான். அவன் வாழ்க்கையின் சகல முயற்சிகளும், உழைப்புகளும் அந்த நோக்கத்திற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. பிரபலமாக இருந்தால், பலர் பொறாமைப்படுகிற மாதிரி இருந்தால் அதுவே வெற்றி என்று நினைக்கிறான். எத்தனை குறைபாடுகள் தன்னிடம் இருந்தாலும் அவை மற்றவர்களுக்குத் தெரியாத வரை அவன் அதுகுறித்து கவலை கொள்வதில்லை. ஆக அவன் கவனம் புறத்திலேயே இருக்கிறது. அகமோ ஒழுங்குமுறை இல்லாமல் இருக்கிறது. அகத்திற்கும், புறத்திற்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாக அதிகமாக அவன் அமைதியின்மையும், துக்கமும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.


ஆனால் நிலைத்த மதியுடையவன் புறத்தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவன் தன் வெற்றியை அடுத்தவர்கள் அபிப்பிராயத்தில் பார்ப்பதில்லை. எப்படித் தெரிகிறோம் என்பதைக் காட்டிலும் எப்படி இருக்கிறோம் என்பது மிக முக்கியம் என்று நினைக்கிறான். அவன் மகத்தான செயல்களை செயல்களைச் செய்வதில் நிறைவடைகிறான். அந்த செயல்களை எத்தனை பேர் கவனிக்கிறார்கள், அறிந்திருக்கிறார்கள் என்பது குறித்து அவன் கவலை கொள்வதில்லை. அவன் அகத்தூய்மையில் அதிக கவனம் வைக்கிறான். அடிக்கடி தன் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறான். அவனுடைய அகத்திற்கும், புறத்திற்கும் இடையே இடைவெளி இருப்பதில்லை. எனவே நடிக்க வேண்டிய அவசியம் அவனுக்கு இருப்பதில்லை. உள்ளொன்று புறமொன்று இல்லாததால், அடுத்தவருக்குத் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியத்தையும் அவன் உணராததால் அமைதியும் நிறைவும் இயற்கையாகவே அவனுக்கு அமைந்து விடுகின்றன.

ஸ்ரீகிருஷ்ணர் இன்னொரு அழகான உதாரணத்தையும் கூறுகின்றார்.

“நதிகளிலிருந்து எப்போதும் தண்ணீர் கடலில் விழுந்த வண்ணமிருந்தாலும் அது நிரம்பி வழிவதில்லை.அது போல எல்லா ஆசைகளும் யாரிடத்தில் அடங்கி விடுகின்றனவோ அவன் சாந்தியடைகிறான். ஆசைகளில் ஆசை வைப்பவன் மனச்சாந்தி அடைவதேயில்லை”

இதை எட்வின் ஆர்னால்டு அருமையாக விளக்குகிறார். “ஆன்மா மாகாசமுத்திரத்தைப் போன்றது. எல்லா பிரதேசங்களில் இருந்தும் தினந்தோறும் வெள்ளத் தண்ணீர் வந்து விழுகின்றது. ஆனால் அதன் காரணமாக சமுத்திரம் ஒருபோதும் ததும்பி வழிவதில்லை. அதன் தண்ணீர் கரையைத் தாண்டிச் செல்வதில்லை. நதிகளிலிருந்து ஏராளமான தண்ணீர் வந்து விழுந்தும் கூட சமுத்திரம் பொங்குவதில்லை. குற்றம் குறையற்ற நிறை மனிதனும் அப்படித்தான். அவன் ஆன்மாவாகிய கடலில் புலன்களின் உலகத்திலிருந்து மாயையாகிய நதிகள் வந்து விழுகின்றன. எனினும் அவன் நிலை குலைவதில்லை.”

நிலைகுலைய சந்தர்ப்பங்களே இல்லாத போது அமைதியுடன் இருப்பது பெரிய விஷயமில்லை. அதற்குப் பெரிய தகுதியும் வேண்டியதில்லை. ஆனால் பல இடங்களில் இருந்தும் அலைக்கழிக்க ஆயிரம் சந்தர்ப்பங்கள் வரும் போது தன்னிலை குலையாமலிருப்பது தான் உண்மையான ஞானம். அது அத்தனை சுலபமில்லை என்பதை நாம் நம் அனுபவங்களில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.

உபாசனா போன்ற தியான வகுப்புகளுக்குச் சென்று அங்கு பத்து நாட்கள் தொடர்ந்து செய்து வந்தவர்கள் அந்த பத்து நாட்களில் தங்களில் பெரிய நல்ல மாற்றத்தைக் காண்பார்கள். ரம்மியமான இயற்கை சூழல் உள்ள இடம், தியானத்திற்கேற்ற சுற்றுப்புறம், காலையில் இருந்து இரவு வரை நல்லோர் சத்சங்கம், ஆன்மிக சொற்பொழிவுகள், நல்ல புத்தகங்கள் போன்ற அனைத்துமே ஒரு பெரிய மாற்றத்தை அந்த பத்து நாட்களில் அடைவது இனி வரப் போகும் நாட்கள் எல்லாம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற உறுதியை அவர்களிட்ம் ஏற்படுத்தி இருக்கும். ஆனால் வழக்கமான வாழ்க்கை சூழலுக்குத் திரும்பியவுடன் அந்த பத்து நாட்கள் மாற்றம் காணாமல் போய் விடுவதை அனுபவஸ்தர்கள் அறிவார்கள். யதார்த்த உரசல்களில் மேலோட்டமாய் அடைந்த அமைதி தேய்ந்து காணாமல் போய் விடுவதில் ஆச்சரியம் இல்லை.

சமுத்திரம் நதி நீரையும், வெள்ள நீரையும் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியாதோ அது போல நாமும் புலன்கள் அனுப்பும் தகவல்களையும், தானாக வந்து சேரும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் மறுத்து விலக முடியாது. வந்து சேர்வது அவற்றின் இயல்பு. அவற்றில் நம் அமைதியை இழந்து விடாமல் இருக்கும் ஆழமான ஞானத்தைப் பெற்று உறுதியாக நிற்கும் வித்தையை நாம் கற்றுக் கொள்ள வேண்டுமே ஒழிய அந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளே வேண்டாம் என்று சொல்வது வாழ்க்கையையே புறக்கணிப்பது போலத் தான். நம் காலுக்கு செருப்பு போட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய கல்லும் முள்ளும் இல்லாத பாதைகளே வேண்டும் என்று ஆசைப்படுவது அறிவீனம்.

அகம் மாறும் போது புறம் தானாக மாறி விடுகிறது. நிலைத்த மதி உடையவன் பெரும்பாலானோரைப் பின்பற்றி பந்தயக்குதிரையாய் ஓடி மற்றவர்களை ஜெயிக்க முற்படுவதில்லை. தன்னை ஜெயித்து, தன்னுடைய அறியாமையை ஜெயித்து தெளிவு பெறுகிறான். என்னைப் பாதிக்கிற எந்த சபலத்தையும், சூழ்நிலைகளையும் அனுப்பாதீர்கள் என்று அவன் இறைவனிடம் விண்ணப்பம் செய்வதில்லை. வருவதைத் தெளிவுடன் சந்தித்து பாதிக்கப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்கிறான். வருகின்றவற்றை உள்ளே இருந்து ஏதோ ஒன்று வரவேற்றால் அல்லவா அவை உள்ளே நுழையும். வரவேற்பில்லை என்றால் வருபவை தானாக விலகி விடுமல்லவா? எனவே அவன் உலகை மாற்ற முயற்சிப்பதில்லை. அது முடியாத காரியம் என்பதை அவன் அறிவான். மாறாக தன்னை மாற்றிக் கொண்டால் உலகம் தானாக மாறி விடும் என்பதையும் அவன் அறிவான். இப்படித் தான் நிலைத்த மதியுடையவன் நிறையவே சாதிக்கிறான். அதே நேரத்தில் தன் அமைதி நிலை மாறாமல் இருக்கிறான்.

இத்துடன் சாங்கிய யோகம் நிறைவு பெறுகிறது. அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சாங்கிய யோகத்தில் மேலோட்டமாய் சொன்ன கர்மயோகத்தை விரிவாகவே விளக்க முற்படுகிறார். இனி மூன்றாவது அத்தியாயமான கர்மயோகத்தில் பயணிப்போம்.

பாதை நீளும்.....

என்.கணேசன்

நன்றி: விகடன்

Friday, June 24, 2011

படித்ததில் பிடித்தது - ”நிம்மதி சூழ்க!”



நெருங்கிய உறவுகளையும், நேசிக்கின்ற மனிதர்களையும் காலனிடம் பறி கொடுத்து நிற்கின்ற தருணங்கள் மிகவும் துக்ககரமானவை. அதிலும் அந்த மனிதர்களின் முகத்தை கடைசியாய் பார்த்து விட்டுத் திரும்புகையில் ‘இனி நாம் காணப் போவதில்லையே’ என்ற யதார்த்தம் உறைக்கையில் இதயம் இயல்பாகவே இமயமென கனப்பதுண்டு. சமீபத்தில் அது போன்ற ஒரு அனுபவத்தை உடுமலை எரிவாயு மயானத்தில் சந்திக்க நேரிட்டது. அப்போது அங்குள்ள சுவரில் பதித்திருந்த ‘நிம்மதி சூழ்க!’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதி இருந்த கவிதையைப் படிக்க நேர்ந்தது. பிணத்தை மயானத் தீயில் தள்ளி விட்டு பின் வாங்குகையில் அந்த கவிதையை அங்கு ஒலிபரப்பவும் செய்தார்கள். சென்றிருந்த அனைவரும் அங்கு அமர்ந்து ஐந்தாறு நிமிடங்கள் ஒலித்த அந்தக் கவிதையைக் கேட்டு விழிகள் ஈரமானோம். அந்த நேரத்திற்குப் பொருத்தமான மிக அற்புதமான கவிதை அது. நம் உணர்வுகளைப் பிரதிபலித்து, இதயத்தைத் தடவிக் கொடுத்து லேசாக்கிய அந்தக் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. அந்தக் கவிதையை நீங்களும் படித்து ரசியுங்களேன்.

- என்.கணேசன்



நிம்மதி சூழ்க!


ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!


ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

- கவிஞர் வைரமுத்து

Monday, June 20, 2011

பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை!



பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3

பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை!


அந்த குரு அவரிடம் சொன்னார். "நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு வாழ்வது போல் அவர்களும் வாழ்கிறார்கள் மகனே. இங்கு இறைவன் படைத்த அனைத்து உயிர்களின் சரித்திரமும் பதிவாகியுள்ளது. மனித இனத்தின் மறைந்து போன ஆரம்ப கால வம்சாவழியினரின் செயல்கள் எல்லாம் கூட இங்கு பதிவாகியுள்ளது. அட்லாண்டிஸ்* நகரம் கற்பனையல்ல. அந்த நகரம் அழிந்ததும் அந்நகர மக்கள் இறைவனை மறந்து வெறுப்பு, தீமைகளின் வழி சென்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் தான். சுயநலமும், ஆன்மீகக் குருட்டுத்தனமும் தான் அட்லாண்டிஸைக் கடலுக்குள் மூழ்க வைத்தது. இறைவன் அன்பு மயமானவன். ஆனால் அவன் ஏற்படுத்திய விதிகளின் படியே உலகம் இயங்குகிறது. அந்த விதிகளின்படி செய்த தவறுகளுக்கான தண்டனையிலிருந்து யாரும் தப்பி விட முடியாது. இங்கிருந்து செல்லும் போது இந்த செய்தியை மனிதகுலத்திற்கு எடுத்துக் கொண்டு போ மானிடனே"

(*அட்லாண்டிஸ் நகரம் குறித்து இந்த இடத்தில் நாம் தெரிந்து கொள்வது நல்லது. சகல சுபிட்சங்களுடனும் அட்லாண்டிஸ் என்ற தீவு நகரம் சுமார் 11000 ஆண்டுகளுக்கும் முன்னால் இருந்ததாக கிரேக்க ஞானி ப்ளேட்டோ கி.மு.360ல் கூறினார். மிக சக்தி வாய்ந்த மனிதர்கள் வசித்த அந்தத் தீவில் எந்த இயற்கை வளத்திற்கும் குறைவிருக்கவில்லை. மனிதர்கள் அனைவரும் மிக அறிவாளிகளாகவும், குணசீலர்களாகவும் இருந்தனர். அவர்கள் வணிகம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் வரை நீண்டதென்றும் அவர்கள் அந்தக் கண்டங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் காலம் செல்லச் செல்ல அவர்கள் தங்கள் பண்புகளிலிருந்தும், அறிவார்ந்த செயல்களிலிருந்தும் விலகிச் செல்ல ஆரம்பித்த பின் அவர்களுடைய சிறப்பு குறைய ஆரம்பித்தது. சுயநலம், பேராசை, பொறாமை என்ற வழிகளில் அவர்களின் தவறுகள் மிக அதிகமாகிய போது அந்தத் தீவு கடலில் மூழ்கி அழிந்தது என்று சொல்கிறார்கள். பலரும் கற்பனை என்றும் கதை என்றும் நினைத்த அட்லாண்டிஸ் உண்மையில் இருந்தது என்று சொல்லும் ஆராய்ச்சியாளர்களும் இருக்கிறார்கள். அதையே அந்தக் குருவும் இங்கே சொல்கிறார்.)

"இங்கே வரும் எல்லா மனிதர்களுக்கும் இந்த இரகசியங்கள் விளக்கப்படுவதில்லை. ஆனால் உன் ஆர்வமும், விளக்கினால் புரிந்து கொள்ளப்படும் பக்குவமும் உனக்கு இருப்பதால் மட்டுமே உனக்கு இந்த இரகசியங்கள் விளக்கப்படுகின்றன"

பால் ப்ரண்டன் அடுத்த கணம் புவியீர்ப்பு விசை முழுவதும் தனக்கு அற்றுப் போவதை உணர்ந்தார். முழுவதுமாய் காற்றில் மிதப்பது போல இருந்தது.

"உன்னை ஒரு ரகசிய ஞான கருவூலத்திற்கு அழைத்துப் போகப் போகிறேன்...."

அப்படிச் சொன்னவுடன் பால் ப்ரண்டன் ஆர்வம் அதிகப்பட்டது. உடனடியாக அந்த இடத்திற்குச் செல்ல விரும்பினார் அவர். அந்தக் குருவின் ஆவி அதைப் படித்தது போல இருந்தது. "எல்லாவற்றிற்கும் ஒரு காலம் இருக்கிறது மகனே அவசரப்படாதே. வா என்னுடன்" என்றார் அந்த குரு.

அடுத்த கணம் பால் ப்ரண்டன் ஏதோ கோமாவில் இருப்பவர் போல தன் பெரும்பாலான உணர்வுகள் ஸ்தம்பித்தது போல் உணர்ந்தார். அடுத்ததாக அவர் நினைவு திரும்பிய போது அவர் வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

பால் ப்ரண்டன் சென்றடைந்த பாதை மங்கலாய் ஒளிபடர்ந்ததாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்த போது விளக்கையோ, சன்னல்களையோ அவர் காணவில்லை. பின் எங்கிருந்து ஒளி வருகிறது என்பதை அவரால் ஊகிக்க முடியவில்லை.

தன்னைப் பின் தொடர்ந்து வரும்படி அந்த மதகுருவின் ஆவி அவரிடம் சொன்னது. அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் "பின்னால் மட்டும் திரும்பிப் பார்க்காதே. தலையைத் திருப்பாதே" என்றும் அவருக்குக் கட்டளையிட்டது. பால் ப்ரண்டனுக்கு அது பிரமிடுக்குள் உள்ள ரகசியப்பாதை என்று தோன்றியது. கீழ்நோக்கிச் சென்ற அந்தப் பாதையின் முடிவில் தூரத்தில் ஏதோ கோயில் போன்ற அமைப்புடைய வாயில் இருந்தது. அவர் பிரமிடுக்குள் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்திருந்தாலும் இந்தப் பாதையையும் தூரத்தில் தெரிந்த அந்தக் கோயில் வாசல் போன்ற ஒரு அமைப்பையும் அவர் பார்த்ததாக அவருக்கு நினைவில்லை. இந்த ரகசியப்பாதை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றறியும் ஆவல் அவருக்கு அதிகமாயிற்று. அந்த மதகுரு ஆவி சொன்னதைப் பொருட்படுத்தாமல் பின்னால் அவர் திரும்பிப் பார்த்தார். அந்த நீண்ட பாதையின் இறுதியில் நுழைவாயில் எதுவும் இருக்கவில்லை. ஏதோ ஒரு நுழைவிடம் போல் தெரிந்த இடம் சதுரமான கற்களால் மூடப்பட்டிருந்தது.

ஆனால் திரும்பிப் பார்த்ததன் தண்டனையாகவோ என்னவோ பால் ப்ரண்டனை ஏதோ ஒரு பெரும் சக்தி பின்னுக்கு இழுத்தது. அடுத்த கணம் அவர் உடல் கிடந்திருந்த அந்த ஆரம்ப இடத்திற்கே வந்து சேர்ந்தார். பால் ப்ரண்டன் திரும்பிப் பார்க்காதிருந்திருந்தால் அவர் ரகசிய ஞானக் கருவூலத்திற்கு சென்று காணும் பாக்கியம் கிடைத்திருக்கலாம். ஆனால் திரும்பிப் பார்த்த ஒரு தவறு அவரை அந்த வாய்ப்பை இழக்க வைத்தது.

தனது உடலைப் பார்த்தபடி இருந்த அவரை பெருத்த ஏமாற்றம் ஆட்கொண்டது. அந்த மதகுருவின் மெல்லிய குரல் அவருக்குத் தெளிவாகக் கேட்டது. "மகனே ரகசியப்பாதையின் வாசலை நீ காண்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. உன் மனதில் உள்ள ரகசிய ஞானக் கருவூலத்திற்கு உன்னை அழைத்துச் செல்லக் கூடிய ரகசியப்பாதையை நீ காண்பதே முக்கியம். இந்தப் பிரமிடின் ரகசியம் உன் ஆத்மாவின் ரகசியமே. உன் ஆத்மாவில் எல்லா ரகசியங்களும் புதைந்துள்ளன. பிரமிடு சொல்வதெல்லாம் மனிதனை தனக்குள்ளே கவனத்தைச் செலுத்தச் சொல்வது தான். அவன் இதுவரை அறிந்திராத அவனுக்குள் உள்ள மையப்புள்ளியில் அவன் ஆத்மரகசியத்தை அறிவதன் மூலம் அனைத்து ஞானத்தையும் பெறவே மனைதனைப் பிரமிடு வலியுறுத்துகிறது. போய் வருகிறேன்"

ஏதோ ஒரு சக்தி பால் ப்ரண்டனை அவருடைய உடலுக்குள் பலமாக ஈர்க்க அவர் மறுபடியும் தன் உடலுக்குள் நுழைந்தார். மரத்துப் போயிருந்த உடலை சிறிது சிறிதாக உணர ஆரம்பித்தார். இருள் சூழ்ந்திருந்த பிரமிடின் அந்த அறைக்குள் தனியாக அவர் இருப்பதைக் கண்டார். மதகுருவின் ஆவியைக் காண முடியவில்லை. இருட்டிலும் தெளிவாகப் பார்க்க முடிந்த நிலையும் போயிற்று.

அதிர்ச்சியில் இருந்து மீண்ட அவர் டார்ச்சைத் தேடி எடுத்து போட்டுப் பார்த்த போது எல்லாம் அவர் முன்பு விட்டுப் போயிருந்த நிலையிலேயே இருந்தன. கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தார். மணி சரியாக பன்னிரண்டு. பொழுது புலரும் வரை தன் அனுபவங்களைக் குறித்து பால் ப்ரண்டன் சிந்தித்தபடி இருந்தார். பொழுது புலர்ந்து போலீஸ்காரர் வந்து அவரை அழைத்துக் கொண்டு போய் வெளியே விட்டார்.

மதகுரு கடைசியில் பால் ப்ரண்டனிடம் சொன்ன அறிவுரை நம் நாட்டில் உபநிஷத்துக்கள் சொல்லும் அறிவுரையே என்பது நம் ஆன்மீக நூல்களைப் படித்தவர்களுக்கு விளங்கும்.

(தொடரும்)

- என்.கணேசன்
நன்றி: கோவை இமேஜஸ்

Wednesday, June 15, 2011

உடலைப் பிரிந்து ஒரு பயணம்




பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-2

உடலைப் பிரிந்து ஒரு பயணம்


ஒரு கட்டத்தில் அந்த சக்திகளின் பலம் உச்சத்திற்கு சென்றதாய் பால் ப்ரண்டனுக்குத் தோன்றியது. ஆனாலும் ஒரு அசாதாரண மனபலத்துடன் பால் ப்ரண்டன் தாக்குப்பிடித்தார். திடீரென்று அந்த துஷ்ட சக்திகளின் போக்குவரத்து நின்று போயிற்று. அவை எல்லாம் மாயமாக மறைந்து போயின. அங்கு ஒரு வித மயான அமைதி நிலவியது. பால் ப்ரண்டனுக்கு சிறிது நேரம் கழித்தே காரணம் விளங்கியது.

இரு புதிய உருவங்களின் அருகாமையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். மிகவும் அமைதியான தெய்வீக சக்தி உடையவையாய் அவை இருந்தன. துஷ்ட சக்திகளைப் போன்ற தெளிவில்லாத நிழல்களாகவோ, அலைகளாகவோ இல்லாமல் அந்த இரண்டு உருவங்களும் ஓரளவு தெளிவாகத் தெரிந்தன. பழங்கால எகிப்திய குருமார்கள் போலத் தெரிந்த அவர்களிடத்தில் விவரிக்க முடியாத தூய்மையை அவர் உணர்ந்தார். அவர்களைச் சுற்றி ஒரு ஒளிவெள்ளத்தை பால் ப்ரண்டன் கண்டார்.

வந்தவர்கள் இருவரும் பால் ப்ரண்டன் அருகில் வந்து சிலைகளைப் போல் நின்றனர். இருவரும் தங்கள் கைக¨ள் மார்பிலே கட்டிக் கொண்டு நின்று பால் ப்ரண்டனை ஊடுருவிப் பார்த்தார்கள். அடுத்ததாக முதலில் மிக அருகில் நின்றவர் உதடுகள் அசைவது தெரிந்தது. ஆனால் வார்த்தைகள் ஒலியாக வெளிவரவில்லை என்று புரிந்தாலும் பேசுவது தெளிவாக பால் ப்ரண்டன் மூளையை எட்டியது.

"ஏனிங்கு வந்தாய்? அபூர்வ சக்திகளைப் பெற வந்தாயா? மானிடர்களின் வழியில் கிடைப்பது போதவில்லையா?"

அந்த வார்த்தைகள் எண்ணங்களாக தன் மூளையில் பதியவில்லை என்பதையும், அவருடைய குரலாய் தான் மூளையில் பதிகிறது என்பதையும் புரிந்த பால் ப்ரண்டனுக்கு அது எப்படி என்பது தான் தெரியவில்லை. பால் ப்ரண்டன் சொன்னார். "போதவில்லை"

"திரும்பிப் போய் விடு. இங்கு ரகசியங்களைத் தேடி வந்தவர்கள் பைத்தியம் பிடித்துப் போயிருக்கிறார்கள்"

"நான் தேடி வந்ததை அறியாமல் போக முடியாது"

"எங்களை நெருங்கியவர்கள் சொந்த பந்தங்களை இழந்து தனியராகப் போயிருக்கிறார்கள். அது உனக்கு சம்மதமா?"

"எனக்குத் தெரியவில்லை" என்பதை உண்மையில் பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். ஆனாலும் திரும்பிப் போக முனையவில்லை.

"சரி அப்படியே ஆகட்டும். நீ தேர்ந்தெடுத்த செயலிற்கான பலனை நீயே அனுபவித்தாக வேண்டும்" என்ற அந்த முதல் உருவம் அங்கிருந்து உடனடியாக மறைந்தது. அடுத்த உருவம் பால் ப்ரண்டனை நெருங்கியது. இரண்டாவது உருவத்தின் முகம் மிக மிக வயதானதாக இருந்தது. எவ்வளவு வயதிருக்கும் என்பதை பால் ப்ரண்டனால் அனுமானிக்க முடியவில்லை.

இரண்டாவது உருவத்திடம் இருந்தும் வார்த்தைகள் குரலுடன் பால் பரண்டன் மூளையில் பதிந்தன. "மகனே. இரகசிய சக்திகளின் தலைவர்கள் தங்கள் கைகளில் உன்னை எடுத்துக் கொண்டு விட்டார்கள். நீ ஞான மண்டபத்திற்கு தற்போது அழைத்து செல்லப்படவிருக்கிறாய். நீ அமர்ந்திருக்கும் இந்தக் கல்லில் காலை நீட்டி மல்லாக்கப் படுத்துக் கொள்..."

பால் ப்ரண்டனுக்கு அதன்படி நடப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அப்படியே படுத்துக் கொண்டார். ஆனால் அதன் பின் நடந்ததென்ன என்று பால் ப்ரண்டனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை.

ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் "நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு" என்ற எண்ணம் வந்து போயிற்று.

உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.

அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது.

அந்த உடலிலிருந்து ஏதோ மங்கலான வெளிர் ஒளி கிளம்பி பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஆவி நிலை வந்திருப்பதை அவர் கண்டார். அது என்ன என்பதை பால் ப்ரண்டனால் சொல்ல முடியவில்லை. சுற்றிலும் உள்ள சுவர்களில் கூட மெல்லிய நிலவொளியாய் அது பிரதிபலிக்கக் கண்டார். உடலில்லாமல் உணர்வுகள் மட்டுமாய் ஒரு மிதவை நிலையில் பால் ப்ரண்டன் இருந்தார். பழங்கால எகிப்தியர்கள் மனிதனின் ஆன்மாவை பறவை வடிவத்தில் பல கல்வெட்டுகளில் வரைந்திருப்பதன் பொருள் உயரத்தில் இருக்கும் போது புரிகிறது போல இருந்தது.

உடலை விட்டுப் பிரிந்திருந்த அந்த நேரத்தில் எடையில்லாத மிகவும் லேசானதொரு நிலையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். தன் உடலைப் பார்க்கையில் பெரியதொரு உண்மை அவருக்குப் புலப்பட்டது. "இது தான் மரண நிலை. உடலை விட்டுப் பிரியும் போது உண்மையாக நான் சாவதில்லை. உடலை விட்டுப் பிரிந்தும் நான் இருக்க முடியும் என்ற உண்மை நிரூபணம் ஆகி விட்டதால் நான் நம்புகிறேன்." அதே நேரத்தில் "இந்த உடலையா நான் "நான்" என எண்ணி இருந்தேன்?" என்ற திகைப்பும் அவருள் எழுந்தது.

புவியீர்ப்பு விசை பாதி அவரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, பாதி அந்தரத்தில் மிதப்பது போலிருக்க அந்த நிலையில் அவருக்கு ஆத்மஞானம் கிடைத்தது. "அர்த்தமில்லாத இந்த சதைக் குவியல் நான் அல்ல உண்மையில் இந்த உடல் என்னை இத்தனை காலம் சிறை வைத்திருந்தது" என்ற எண்ணம் அவருக்கு பலப்பட்டது. அப்போது உடன் இருந்த அந்த முதிய குரு அவருடைய எண்ணத்தைப் படித்தது போல சொன்னார். "உண்மையே. மிகப் பெரிய பாடத்தை நீ கற்றாய் மகனே. ஆத்மா அழிவில்லாதது!"

அந்த நேரத்தில் பால் ப்ரண்டன் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்து போன அரைகுறையாய் நினைவிருந்த ஒரு பெண்ணின் முகத்தையும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த அவர் நண்பர் ஒருவர் முகத்தையும் ஒரு விபத்தில் அகால மரணமடைந்த ஒரு குழந்தையின் புன்னகை தவழும் முகத்தையும் அண்ட வெளியில் பார்த்தார். அந்த மூன்று முகங்களும் அவரைப் பார்த்தன, பேசின. மிகக் குறுகிய காலமே அவரிடம் பேசிய அந்த முகங்கள் உருகி மறைந்தன.


(தொடரும்)

-என்.கணேசன்
நன்றி: கோவை இமேஜஸ்

Saturday, June 11, 2011

நள்ளிரவில் பிரமிடுக்குள்....



பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-1

நள்ளிரவில் பிரமிடுக்குள்....


எகிப்தும் இந்தியாவைப் போன்றே இன்னொரு சித்தர்கள் தேசம் என்றால் அது மிகையாகாது. இந்தியாவைப் போன்றே மிகப்பழமையான நாகரிகம் வாய்ந்த எகிப்து ஆன்மீகத் தேடல்களிலும் சிறந்தே விளங்கியது. இன்றும் ஸ்பிங்க்ஸ¤ம், பிரமிடுகளும் எத்தனையோ ஆன்மீக ரகசியங்களைத் தங்களுள் மறைத்து வைத்திருக்கின்றன என்பது பலருடைய ஆழ்ந்த நம்பிக்கை.

அதுவே பால் ப்ரண்டனை அங்கும் ஈர்த்தது. பால் ப்ரண்டன் இன்னொரு தேடலை எகிப்தில் தொடர்ந்தார்.

எகிப்தில் பிரமிடுகளைக் காக்கும் காவல் தெய்வமாகக் கருதப்படும் ஸ்பிங்க்ஸ் மனிதத்தலையும், சிங்கத்தின் உடலையும் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு. அது எப்போது கட்டப்பட்டது என்பதை இன்றும் யாராலும் சரியாக ஊகிக்க முடியவில்லை. கிறிஸ்து பிறப்பதற்கும் முன் சுமார் 2500 ஆண்டுகளிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்பிற்குள் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் அனுமானிக்கிறார்கள். மிகப்பழமை வாய்ந்த அந்த ஸ்பிங்க்ஸ் தேவதை மனிதனின் நுண்ணறிவையும், சிங்கத்தின் தேகபலத்தையும் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. அது ஏழு முறை பாலைவன மணலால் புதையுண்டது என்றும் ஏழு முறை அந்த மணல் விலகி மீண்டது என்றும் சொல்லப்படுகிறது

பால் ப்ரண்டன் ஸ்பிங்க்ஸ் மற்றும் பெரிய பிரமிடு இரண்டிலிருந்தும் ஞானச் செய்தி பெற வேண்டும் என்று விரும்பினார். ஸ்பிங்க்ஸ் முன் பாலைவன மணலில் ஒரு நாளிரவு முழுவதும் தனியாக அமர்ந்து தியானம் செய்த பால் ப்ரண்டன் கடைசியில் அதிகாலை நேரத்தில் ஸ்பிங்க்ஸிடமிருந்து ஒரு செய்தி கிடைத்ததாகக் கூறுகிறார். "நீ உருவாகி அழியும் சதைகளால் ஆன உருவமல்ல மனிதனே. நீ அழிவில்லாத ஆத்மா! உன்னுடைய இதயத்தில் அது நீ கண்டடையக் காத்திருக்கிறது, இந்தப் பாலைவன மண்ணில் நான் காத்திருப்பதைப் போல். அதனால் உன்னையே நீ அறிவாய்..."

அடுத்ததாக உலக அதிசயங்களில் ஒன்றான பெரிய பிரமிடின் உள்ளே ஒரு நாள் இரவைக் கழிக்க எண்ணினார் பால் ப்ரண்டன். இங்கே பிரமிடுகளைப் பற்றி சில தகவல்களை அறிந்து கொள்வது நல்லது. பெரிய பிரமிடு ஒவ்வொரு புறமும் 756 அடி நீளமும், 450 அடி உயரமும் கொண்டது. சுமார் இரண்டரை டன் எடையுள்ள கற்கள் 23,00,000 பயன்படுத்தி கட்டப்பட்ட பிரம்மாண்டமான அமைப்பு அது. சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்தது. அக்காலத்தில் பிரம்மாண்டமான அமைப்புகளை அளக்க சரியான அளவுகோல் இல்லை என்றாலும் எவ்வளவு கச்சிதமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்றால் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கு இடையே உள்ள வித்தியாசம் எட்டு அங்குலங்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. இது இன்றைக்கும் கட்டிட வல்லுனர்களை வியக்க வைக்கிறது.

பிரமிடுகளில் அரசர்கள், அரசிகளின் சவங்களை, ஏராளமான செல்வங்களுடன் புதைத்து வைத்திருந்ததால் பிற்காலத்தில் பலரும் உள்ளே நுழைந்து அந்த செல்வங்களை சூறையாடிச் செல்ல ஆரம்பித்தனர். எகிப்துக்குப் படையெடுத்தவர்கள், உள் நாட்டவர்கள் என பல்லாண்டுகள் வந்து கொள்ளையடித்துச் சென்ற பின் மிஞ்சியது விலை போகாத சவங்களும், சில பொருள்களும், எடுத்துச் செல்ல முடியாத பிரமிடுகளின் கட்டிடங்கள் மட்டுமே. ஆனால் பிரமிடுகளில் இருந்து கொள்ளையடித்துச் செல்ல முடியாத ஆன்மீக ரகசியங்கள் இன்னும் ஏராளமாக அவற்றில் உள்ளன என்பது உலகப் பெரியோரின் கருத்து. எனவே தான் பால் ப்ரண்டன் பெரிய பிரமிடினுள்ளே ஒரு நாள் இரவைக் கழித்து அந்த ரகசியங்களை அறிய விரும்பினார்

பெரிய பிரமிடு அரசாங்கத்தின் சொத்தாக இருந்ததால், நுழைவுக் கட்டணம் செலுத்தி சென்று பார்த்து வரும் உரிமை பார்வையாளர்களுக்கு இருந்தாலும் அங்கு ஒரு இரவு முழுவதும் தங்க வேண்டுமானால் அரசாங்க உத்தரவு வேண்டும் என்று அவருக்குச் சொல்லப்பட்டது. எனவே அரசாங்கத்தின் பழங்காலக் கலைப் பொருள் காப்பகத்தில் சென்று தன் விருப்பத்தை அவர் தெரிவித்தார். அந்த அதிகாரி நிலவுக்குச் செல்ல பால் ப்ரண்டன் ஆசைப்பட்டது போல் அவரைத் திகைப்போடு பார்த்தார். பின் அவரை ஒரு மனநோயாளியைப் பார்ப்பது போல் பார்த்து சொன்னார். "நான் இது வரை இது போன்ற கோரிக்கையைக் கேட்டதில்லை. ஆனால் இதற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் என் கையில் இல்லை. உயர் அதிகாரியைப் பாருங்கள்"

அந்த உயர் அதிகாரி "அனுமதிக்க முடியாது" என்று உறுதியாகச் சொன்னார். அவருடைய பணிக்காலத்தில் இது போன்ற ஒரு கோரிக்கை வந்ததோ, அனுமதிக்கப்பட்டதோ இல்லை என்றார். பால் ப்ரண்டன் தன் கோரிக்கையில் விடாப்படியாக நிற்க அவர் "இரவு வேளையில் தங்குவது போலீசார் அதிகாரத்தில் தான் வருகிறது. அவர்களைப் போய்ப் பாருங்கள்" என்றார்.

போலீசாரும் இந்த வினோத கோரிக்கையை ஏற்க முடியாமல் தங்கள் தலைமை அதிகாரியிடம் அனுப்ப அவரும் திகைத்து முடிவெடுக்க ஒரு நாள் தேவை என்றும் மறுநாள் வந்து பார்க்கும் படியும் சொன்னார். மறுநாள் அவர் மறுபடியும் பழங்கால கலைப் பொருள் காப்பகத்தையே அணுகச் சொன்னார். கடைசியில் கெய்ரோ நகர ஜென்ரல் கமாண்டண்டைச் சென்று பால் ப்ரண்டன் தன் கோரிக்கையைச் சொல்ல அவர் பிரமிடுகளைக் காக்கும் போலீஸ் உயர் அதிகாரிக்கு அனுமதி வழங்குமாறு எழுதி அனுப்பினார்.

அந்தப் போலீஸ் அதிகாரி "நாங்கள் தினமும் மாலையில் பிரமிடின் நுழைவாயிலைப் பூட்டி வருகிறோம். நீங்கள் உள்ளே செல்ல வேண்டுமென்றால் மறுநாள் காலை வரை உள்ளேயே இருக்க வேண்டி வரும். சுமார் 12 மணி நேரம் உள்ளே இருக்க ஒத்துக் கொள்கிறீர்களா?"

பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். மறுநாள் மாலை பால் ப்ரண்டன் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு பிரமிடினுள் நுழைந்தார். ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர் ஒருவர் அவர் உள்ளே சென்றவுடன் நுழைவாயிலைப் பூட்டிக் கொண்டு வெளியே பூட்டிக் கொள்ள தன்னந்தனியனாய் பால் ப்ரண்டன் தன் பயணத்தைத் தொடங்கினார். அந்தப் பிரமிடுக்குள் பல பாதாளச் சுரங்கங்கள் இருந்தன. சில மிகவும் குறுகலாய் இருந்தன. சில இடங்களில் அவர் தவழ்ந்து போக வேண்டி இருந்தது. உள்ளே சில இடங்களில் வௌவால்களும், எலிகளும் அவருக்குத் துணையாய் இருந்தன. வேறொருவராக இருந்திருந்தால் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்து வெளியேற நினைத்திருப்பார். ஆனால் பால் ப்ரண்டன் மனம் தளராமல் அரசனுடைய உடலை வைத்துள்ள பிரபலமான சேம்பரை அடைந்தார்.

அங்கு சென்ற அவர் அங்கு சென்றதும் தான் கொண்டு வந்திருந்த தொப்பி, தேனீர் நிறைந்த ·ப்ளாஸ்க், தண்ணீர், நோட்டுப்புத்தகம், பேனா எல்லாவற்றையும் கீழே வைத்து விட்டு சம்மணமிட்டு அமர்ந்து தன் டார்ச் லைட்டை அணைத்து விட்டார். உடனே இருள் சூழ்ந்தது. மயான அமைதி அங்கு நிலவியது. நேரம் செல்லச் செல்ல குளிர் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாது அமைதியாகக் காத்திருந்தார். நேரம் செல்லச் செல்ல ஏதோ அமானுஷ்ய சக்திகள் தன்னைச் சுற்றி உலவுவதை அவரால் உணர முடிந்தது. அவர் அந்த இருட்டில் விழிப்புணர்வோடு சூட்சுமமாகக் கவனித்த போது அது கற்பனையல்ல நிஜம் என்பதை அவரால் உணர முடிந்தது. பயத்தில் அவர் உடல் மேலும் சில்லிட்டது.

பிரமிடின் உள்ளே தனிமையில் நள்ளிரவின் கும்மிருட்டில் அமர்ந்திருந்த பால் ப்ரண்டனுக்கு ஏதோ சக்திகளின் நடமாட்டம் இருப்பதை உணர முடிந்தது. சில நாட்கள் விரதமும் தியானமும் இருந்து அவன் தன் புலன்களை கூர்மைப்படுத்தி இருந்ததால் அந்த சக்திகள் துஷ்ட சக்திகள் என்பதையும் அவரால் மிகத் தெளிவாக உணர முடிந்தது.

இப்போது அவர் தனிமையில் இல்லை, உடன் துஷ்ட சக்திகளும் உள்ளன என்பதை உணர்ந்த போது அவர் பிரமிடுக்குள்ளே போகப் போவதாகச் சொன்ன போது ஒரு இளம் அரபு நண்பன் எச்சரித்தது நினைவுக்கு வந்தது. "அங்கு ஒவ்வொரு அங்குலமும் தீய சக்திகளாலும் ஆவிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அவை ஒன்றல்ல இரண்டல்ல ஒரு பட்டாளமே இருப்பதால் இந்த விஷப் பரிட்சைக்கு நீங்கள் போகாமல் இருப்பது நல்லது..."

சிறிது நேரத்தில் அவரால் அந்த துஷ்ட சக்திகளின் மாய உருவங்கள் கூட அலைகளாய், நிழலாய் தென்படத் துவங்கியது. ஓரிரு உருவங்கள் அவர் முகத்தின் வெகு அருகில் வந்து அவரை உசுப்புவது போல் தோன்றியது. பால் ப்ரண்டன் இரவின் தனிமைக்குப் பெரிதும் பழக்கப்பட்டவர் என்றாலும் இந்த அனுபவம் அவர் இரத்தத்தை உறைய வைத்தது. அந்த சக்திகள் அவரை உட்கார்ந்த இடத்தை விட்டு எழுப்புவதற்கு முயற்சிப்பதாக அவருக்குத் தோன்றியது. ஒரு கட்டத்தில் பக்கத்தில் வைத்திருந்த டார்ச் விளக்கைப் போட்டு அந்த சக்திகளை விரட்டுவது நல்லது என்று தோன்றினாலும் பிரமிடுகளின் உள்ளே என்ன தான் இரவில் நிகழ்கின்றது என்பதை அறியும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்ற எண்ணம் அவரை அவ்வாறு செய்யாமல் தடுத்தது.

(தொடரும்)

-என்.கணேசன்
நன்றி: கோவை இமேஜஸ்

Tuesday, June 7, 2011

மகான்கள் கண்ட மனம்




உலகில் மிக மிக சிரமமான செயல் எது என்றால் அது மனதைக் கட்டுப்படுத்துவது தான். மனதைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக மனதால் கட்டுப்பட்டு அது போன போக்கில் போவது தான் பெரும்பாலான மனிதர்களுக்கு சுலபமாக இருக்கிறது. அதுவே இயல்பாகவும் இருக்கிறது. ஆனால் உண்மையான ஆன்மீகத்தின் அடித்தளமே மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது தான். எனவே உண்மையான மகான்கள் எல்லாம் இறை நிலை அடையும் முன் மனதுடன் பெரும் போராட்டங்களையே நடத்தி உள்ளார்கள் என்று சொல்லலாம். அப்போது அவர்கள் மனதை எப்படியெல்லாம் கண்டார்கள், வர்ணித்தார்கள் என்பதைத் தமிழ் இலக்கியங்களில் பார்ப்போமா?

தாயுமானவர்:

இவர் அளவுக்கு மனதை ஏசியவர்கள் இருக்க முடியுமா என்று சந்தேகப்படும் அளவுக்கு மனதை இவர் ஏசியுள்ளார். சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது என்று பாடிய இவர் அந்த சிந்தையை வெல்லும் முன் அது அவரைப் பாடாய் படுத்திய போதெல்லாம் கடுமையாக விமரிசிக்கத் தவறவில்லை. இதோ சில உதாரணங்கள்-


இரும்பு நேர் நெஞ்சக் கள்வன் – (இரும்பு போல் கடினமாக இருக்கும் திருட்டு மனம்)

ஆயிரம் சொன்னாலும் அறியாத வன்னெஞ்சம் (எவ்வளவு சொன்னாலும் உண்மையை அறியாத கடுமையான நெஞ்சம்)

வஞ்சனை அழுக்காறாதி வைத்திடும் பாண்டமான நெஞ்சு (வஞ்சனை, பொறாமை முதலானவற்றை வைத்திருக்கும் பாத்திரமான நெஞ்சம்)


இரும்போ கல்லோ மரமோ எனும் நெஞ்சம் (இரும்பா கல்லா மரமா என்று தீர்மானிக்க முடியாத நெஞ்சம்)

என்னெஞ்சம் ஐயா தீயுண்டிருந்த மெழுகலவோ (தீயின்வாய்பட்ட மெழுகாய் இருக்கும் நெஞ்சம்))

உள்ளம் கனலில் வைத்த பாகோ மெழுகோ (உள்ளம் தீயில் வைத்த பாகா, மெழுகா?)

தெளியாது சுழலும் சிந்தை (தெளிந்திடாமல் சுழன்று கொண்டே இருக்கும் மனம்)

வெந்து வெடிக்கின்ற சிந்தை (வெந்து ஆத்திரத்தில் வெடிக்கின்ற மனம்)

தீதெல்லாம் ஒன்றாய் வன்மை செறிந்திருட்படலம் போர்த்த பாதகச் சிந்தை
(எல்லாத்தீமையும் ஒன்று சேர்ந்து கடுமையான இருட்படலத்தை போர்த்திக் கொண்டிருக்கும் பாதகமான மனம்)

பாதரசமாய் மனது சஞ்சலப்படுதலால் (பாதரசம் அடிக்கடி மாறக்கூடியது. அப்படி சஞ்சலப்படும் மனம்)

ஆசையெனும் பெருங்காற்றூடிலவம் பஞ்செனவும் மனமது அலையும் (ஆசை என்ற பெருங்காற்றில் இலவம் பஞ்சு சிக்கினால் எப்படி அந்தப் பஞ்சு காற்றில் எல்லா இடங்களுக்கும் அலைபாயுமோ அப்படி அலைபாயும் மனம்)

வன்னெஞ்சோ, இரங்காத மர நெஞ்சோ
இரும்பு நெஞ்சோ, வைரமான கன்னெஞ்சோ
அலது மண்ணாங்கட்டி நெஞ்சோ எனது நெஞ்சம்
(கடுமையான நெஞ்சமோ, இரக்கமே இல்லாத மர நெஞ்சமோ, இரும்பாய் இறுகிய நெஞ்சமோ, வைரம் போன்ற கல் நெஞ்சமோ, அல்லது மண்ணாங்கட்டி போல் உறுதியே இல்லாத நெஞ்சமோ எனது நெஞ்சம் என்று கேட்கிறார். இதில் ஒவ்வொன்றாகவும் மனம் ஒவ்வொரு சமயங்களில் இருக்கிறதல்லவா?)

பாழ் நெஞ்சே பொன்னைப் புவியை மடப்பூவையரை மெய்யெனவே (பொன், உலகம், பெண் ஆகியவற்றை மெய் என நினைத்து அதன் பின்னோடும் பாழாய் போன நெஞ்சமே)

இப்படியெல்லாம் பாடாய் படுத்தும் மனதை ஒரு பொருட்டாய் நினைக்க மாட்டேன் என்று மிகவும் உறுதியாக ஓரிடத்தில் கூறுகிறார்:
நெஞ்சே உனையொரு காசாய் மதியேன் நான்

இன்னொரு இடத்தில் அலைகள் இல்லாத நீர்நிலை போல தெளிவான மனத்தை அடைவேனோ என்று சலித்துக் கொள்கிறார்.
திரையிலா நீர் போல் சித்தம் தெளிவனோ

மனமோ அலைகிறது. அதன் பின்னே உறுதியில்லாது மனிதனும் அலைந்தால் அதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா? இதை நேரடியாக இன்னொரு இடத்தில் மனதிடமே கேட்கிறார்.
மனமே நம் போல உண்டோ சுத்த மூடர்


வள்ளலார்:

வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் பெயரைக் கேட்கும் போதெல்லாம் அவருடைய பிரார்த்தனை நமக்கு நினைவிற்கு வராமல் போகாது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று பாடிய மகான் அவர். மனம் அந்த அளவுக்குத் தூய்மையாகவும் நடிப்பில்லாததாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த அவரும் மனதை சில இடங்களில் பாடுகிறார்.

சும்மா அலையுமென் வேட நெஞ்சம் (வேட்டையாட காட்டுக்குச் சென்ற வேடன் ஓரிடத்திலேயே நிலைத்து நிற்க மாட்டான். அதே போல் அலையும் என் நெஞ்சம்)

மனத்தாசையொரு கடலோ! (கடலளவு ஆசையை உள்ளடக்கிய மனம்)

வாயொருபாற் பேச மனமொருபாற் செல்ல (வாயொரு ஒரு விஷயம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் கூட மனமோ அதில் நிலைக்காமல் வேறொரு பக்கம் சஞ்சரிக்கிறது)


திருவருட்பா:

திருவருட்பாவிலும் ஆன்மிக முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் மனம் கடுமையாக சாடப்படுகிறது.

மாயையென்னும் நிறையாறு சூழும் துரும்பாய் சுழலுமென்னெஞ்சு (மாயை என்னும் நிறைந்த ஆற்றில் துரும்பாய் சிக்கி சுழல்கின்ற என் நெஞ்சம்)

வஞ்ச நெஞ்சம் கல்மலையோ, இரும்போ, செம்மரமோ
பாறைக்கல்லோ முருட்டுக்கட்டையோ

கன்னெஞ்சமோ கட்டை வன்னெஞ்சமோ எட்டிக்காய் நெஞ்சமோ
என்னெஞ்ச என்னெஞ்சமோ

(தாயுமானவர் வர்ணித்தது போலவே இந்த இரண்டு பாடல் வரிகளிலும் வர்ணனை ஒத்துப் போகிறது. இரண்டாவதிலோ எட்டிக்காய் போல கசக்கும் நெஞ்சம் என்பதனையும் சேர்த்து இந்த நெஞ்சம் என்ன நெஞ்சமோ என்று சலித்தும் கொள்கிறார்)

கணிகை போலெனைக் கலக்கிற்றுள்ளம் (விலைமகள் மயக்குவது போல மனம் மயக்கிக் கலக்கியது)


சிந்தை மயங்கித் திரிகின்ற நாயேனை (மனம் மயங்கி ஒரு இலக்கும் இல்லாமல் திரிகின்ற நாய் போல இருக்கிறேன்)

மனமான ஒரு சிறுவன் மதியான குருவையும் மதித்திடான் (பக்குவம் இல்லாத மனமான சிறு பிள்ளை அனைத்தும் அறிந்த அறிவாகிய குருவை மதித்திட மாட்டான்.)

விகாரமெனும் பேய்க்கு நெஞ்சம் பறி கொடுத்து நிற்கின்றேன் (மன விகாரம் என்ற பேய்க்கு நெஞ்சை பறிகொடுத்து விட்டு நிற்கின்றேன். அதாவது அது ஆட்டிய படியெல்லாம் ஆடிக்கொண்டிருக்கிறேன்)

நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் (ஓரிடத்தில் நிலைத்து நிற்காத நெஞ்சமும் பொல்லாத மாயையும் சேர்ந்து என்னைப் பாடாய்படுத்துகிறது.

கல்நெஞ்சமே மான் போல் குதித்துக் கொண்டாடேல் (கல் நெஞ்சமே மான் போல் தாவிக் குதித்து அங்குமிங்கும் ஓடிக் கொண்டாட வேண்டாம்)


திருநாவுக்கரசர்:

திருநாவுக்கரசர் மனதுடன் போராடியதை விட அதைத் தூய்மைப்படுத்தி இறைவனை அங்கு இருத்தி கொண்டாட முனைவதில் அதிக கவனம் கொள்கிறார். துவக்கத்தில் ’குறிக்கோளிலாது கெட்டேன்’ என்று சுய ஆராய்ச்சியில் காண்கிறார். மனதில் குறிக்கோள் உறுதியாக இருக்கின்ற போது தடுமாற்றம் இல்லையல்லவா?

கரப்புறு சிந்தை காண்டற்கரியவன் (வஞ்சனை நிறைந்த மனதால் இறைவன் அறிய முடியாதவன்)

மனத்தினுள் விளக்கொன்றேற்றி உன்னுவார் உள்ளத்துள்ளார் (மனதினில் ஞான விளக்கை ஏற்றி ஆழமாக எண்ணுபவர்கள் நெஞ்சத்தில் இறைவன் கண்டிப்பாக இருக்கிறான்)

நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் (இறைவனே என் நெஞ்சத்தை உனக்கே இடமாகக் கொடுத்து விட்டேன்)

எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே! (இறைவனை தன்னுள் இருத்திய பிறகு மனதிடம் வியந்து கேட்கிறார். என்ன பெருந்தவம் செய்தாய் என் நெஞ்சமே-இறைவனை இருத்திக் கொள்வதற்கு)

இப்படி மனம் ஆன்மீகத்திற்கு இடையூறாக இருக்கும் போது மகான்களால் கடுமையாக விமரிசிக்கப்படுகிறது. மனம் அலைவதை நிறுத்தி இறைவனில் நிலைத்து அமைதியும் ஆனந்தமும் அடையும் போது பாராட்டவும் படுகிறது.இறைவனை எட்டவும் மனம் மிக அவசியம் என்பதையும் மகான்கள் மறுத்து விடவில்லை. திருமந்திரம் ”சிந்தை தெளிந்தார் சிவமாயினார்களே” என்று சொல்வது போல மனம் தெளிவடையும் போது மனிதன் தெய்வமேயாக முடிகிறது என்பதும் அவர்கள் அறிவாக இருக்கிறது.

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

Friday, June 3, 2011

படித்ததில் பிடித்தது –அழகான வாழ்க்கைக்கான வழிகள்



பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கை ஏராளமான கனவுகளுடன் ஆரம்பித்து புலம்பல்களுடன் முடிவடைகிறது. வாழ்க்கை என்ன என்பது தெரிவதற்குள்ளேயே வாழ்க்கை முடிந்தும் விடுகிறது. அதுவே யதார்த்தம் என்று கூட நாம் நம்ப ஆரம்பித்து விடுகிறோம். ஆனால் கனவுகள் கானலாகப் போக வேண்டியதில்லை, வாழ்க்கை புலம்பலாக முடிவடைய வேண்டியதில்லை, வாழ்க்கை கனவிற்கும் எட்டாத அளவு அழகானதாகலாம் – கனவுகள் ஆத்மார்த்தமானதாகவும் இறைவனின் துணையுண்டு என்ற நம்பிக்கையும் இருந்தால் என்று விளக்குகிறார் கிறிஸ்டியன் டி.லார்சன் தன் ”ரோஜாக்களின் பாதை” என்ற நூலில். தெளிவையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் இந்த விளக்கத்தை நீங்களும் படித்து மகிழுங்களேன்!

- என்.கணேசன்

PATHS TO A BEAUTIFUL LIFE


We have believed for a long time, and with good reason, that life could be everything that we have hoped for; even as fair and wonderful as what we have seen when thinking was deep and clear; and we now feel that such a life is a definite possibility.

We are learning to expand our concepts of truth and of life as a whole; and so we are able to discern the way. Then, as we proceed, we discover, to our amazement, that life in the real is so large and so immensely rich that we will need eternity to live it all. This discovery is inspiring to a high degree. But what are the methods and the principles that we should apply so that we may continue to go forward upon this remarkable road? That is what we all are eager to know.

First, recognize the great truth that you have the ability to live your own life exactly as you may desire to live. You are the real master of your own existence and you, yourself, may determine how beautiful that existence is to be.

Your life is in your own hands. You may live as you wish. You may secure from life whatever you desire, because there is no limit to life, and no limit to your capacity to live. The elements of life can be modified, changed, developed and perfected to comply with your own supreme demand; the increase of life can be realized in the exact measure of your largest need; you are in living touch with Infinite life, and there is neither limit nor end to the source of your supply.

To live in the constant recognition of this great truth, is to rise continually into higher and higher degrees of that mastery of life that gives you the power to live your life according to your most perfect ideals. To reach the goal that every ascending mind has in view, this truth, therefore, must ever be recognized and applied. It is one of those principles that you shall always require, no matter how high you may rise in the scale of divine being.

You invariably receive what you desire, no more, no less. You get what you wish for if the power within that wish is as strong as you can make it.

The fact that you can have an ideal, proves that you have the power to secure it. The fact that you can formulate and appreciate a desire for something larger and better, proves that you can fulfill that desire. The great essential is to desire with the whole heart; that is, to give your desires all the life and power that you can possibly arouse from the depths of invincible being.

The true desire and the true prayer are synonymous. The true prayer is invariably some immensely strong desire expressed when your human mind feels the sublime touch of the Infinite mind; and the true desire must be in perfect touch with Infinite life in order to be filled with the invincible power of that life.

To cause every wish to come true, you must express all the power of mind and soul through every wish; but you cannot give expression to all the power within you until you awaken your spiritual nature, and you cannot awaken your spiritual nature until you begin to live with the Infinite. The largeness and immensity of the supreme spiritual life within you comes forth only as consciousness is spiritualized, and you gain spiritual consciousness by living and thinking constantly in the lofty state where you actually feel that God is closer than breathing, nearer than hands and feet.

We cannot desire too much, and when we desire with all the life and power that is within us, our desires shall positively be fulfilled. The wish must be whole-hearted, not half-hearted; it must contain all the power we have, not simply the limited actions - shallow thinking; and it must contain soul, not simply emotion, but that deep, spiritual feeling that touches the very spirit of limitless life and power.

Have faith in God, have faith in humanity, have faith in yourself, have faith in everything; and have faith in faith. When you have confidence in yourself you arouse everything that is stronger, greater and superior in yourself. In consequence, the more confidence you have in yourself, the more you will attain and accomplish. But the power of self-confidence is but an atom in comparison with the marvelous power of faith.

Faith takes mind and soul into the greater realms of life. It goes out upon the boundless, and awakens those interior spiritual forces that have the power to do anything. This is why all things become possible when you have faith.

It is the nature of faith to break bounds; to transcend limitations, and take life, thought and action into the universal. It is the nature of faith to unite the lesser with the greater, to unite your individual mind with the mind of God. Therefore, you shall always require faith; however far you may go into the greater, the superior and the boundless today, faith will take you farther still to-morrow. And that is your purpose; to realize your largest and dearest desires in the present, and then press on to the realization of other and far greater desires in the future.

Depend upon the superior spiritual self within for results, and give this greater Essence the credit for everything you accomplish. When you depend upon the personal self, you place yourself in touch only with the lesser forces on the surface; you therefore will accomplish but little; but when you depend upon the supreme spiritual self, you place yourself in touch with the greater powers within, and results will be greater in proportion.

When you give credit to the personal self, you ignore the interior spiritual self; you thereby fail to secure that greater wisdom and power that the spiritual self alone can supply. Instead of being led by that inner light that knows, you are led by the confusion of outer thought; you are turned away from the path that leads to truth, freedom and the perfect life, and your mistakes are many. Instead of being taken into the current of that invincible life that can carry you through to your very highest goal, you remain in the hands of mere physical energy, that energy that can do nothing more than simply keep your body alive.

Whenever you accomplish something worth while, and give the praise to your own outer personal self, you immediately lose your hold on those powers through which those results were gained; in consequence, failure will begin, and you will have to retrace all your former steps to again gain possession of that power that can do whatever you may wish to have done.

To constantly depend upon the greater self, to constantly expect the desired results from the greater self, and to always give credit to the greater self, is to constantly draw upon the limitless wisdom and power of the greater self – the supreme spiritual self within you. You thereby become larger and stronger in all the elements of your being, rising ever in the scale, gaining ground perpetually, and passing from victory to victory. What you desire you will receive because higher power is working through you, and as you ascend in the scale, there is nothing that you will not attain and accomplish.

The principal cause of failure among those who are trying to live in harmony with real truth, may be found in the general tendency to think of the outer person as the power that does things on the visible plane. But it is the interior spiritual person that gives the power, though the outer person is required to apply it. And the more thought we give to the interior person, the more life and power we bring forth from within.

The interior person is the true self, created in the image and likeness of God; it is therefore evident that when you begin to live with the life and the power of the interior person, the expression of real greatness and real spirituality will begin. And from that moment you will not be limited to the power of the personal self; instead you will fill the personal self with that divine power from on high that is limitless, inexhaustible and invincible.

Live for a great purpose, and hold the central idea of that purpose constantly before mind. Do not live for the mere sake of prolonging existence; live for something that magnifies, on the largest possible scale, all the elements of existence. To live for a great purpose is to live a great life, and the greater your life, the greater the good that you will receive from life. The ruling desire of every living soul is to have life, and have it more abundantly; therefore, to fulfill that desire we must continue perpetually to live for that which produces more life. No matter how rich we may become in the real, spiritual life, here is a principle that we must ever remember and apply.

Do not work for yourself; work for the great idea that stands at the apex of your greatest purpose. The greater the idea for which you work, the greater will be your work; and it is he who does the greatest work that does the most for everybody, himself included. When your work is great you become a great power for good among thousands, and at the same time you do more for yourself than you could possibly do in any other manner.

When you begin to live and work for a great purpose, you get into the current of great forces, great minds and great souls. You gain from every source; -all the powerful lives in the world will work with you; you become a living part of that movement in the world that determines the greater destiny of humanity; you become one of the chief elements upon which will depend the future of countless generations yet to be; you become one of the chosen of the Most High.

To live for a great purpose is to live in the world of great ideas, and great ideas awaken great thoughts. You are as you think. Great thoughts produce great minds; from great minds proceed great works, and great works constitute the building material with which the kingdom upon earth is to be constructed.

When you begin to live for a great and good purpose, you place in action that law that causes all things to work together for good. Henceforth, nothing is in vain; every person, thing or event that comes into your world will add to the welfare, the richness and the beauty of that world. All things become ministers of the life that is real life, you have been giving your best everywhere, and you are receiving the best from every source in return.

To live for that which is high, lofty and sublime, is to walk with God; the love, the life, the power and the wisdom of the Infinite will ever be with you, and to have such companions is to be blessed indeed. Every moment will give you the peace that passes understanding, every hour will be filled with the joy everlasting, and every day will be as a thousand years in celestial kingdoms on high.

-From "Pathway of Roses"by Christian D. Larson