சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, December 29, 2009

கைகேயி இராமன்



கைகேயியிற்கும் இராமனுக்கும் இடையே உள்ள பந்தம் ஆழமானது. கோசலையிடம் அவன் வளரவில்லை. அவன் கைகேயிடமே வளர்ந்தவன். இராமனுக்கு முடிசூட்ட தீர்மானம் ஆனவுடனேயே எல்லோரையும் விட அதிகமாய் மகிழ்ந்தவள் கைகேயி. இராமனைப் போன்ற மகன் இருக்கையில் எனக்கு என்ன குறை என்று பெருமிதப்பட்டவள் அவள். கூனி தன் சதிவலையைப் பின்ன ஆரம்பித்த போது அவள் பட்ட கோபம் சிறிதல்ல. கடுமையான வார்த்தைகளால் கைகேயி அவளை ஏசுகிறாள்.

"எனக்கு நன்மை செய்பவளும் அல்ல நீ, என் மகன் பரதனுக்கு நன்மை செய்பவளும் அல்ல நீ. தர்மப்படி பார்த்தால் உனக்கே நீ நன்மை செய்பவள் அல்ல" (இராமனைப் போன்ற ஒரு உயரிய குணம் படைத்த ஒருவனுக்குக் கெடுதல் நினைப்பதால் நீ பெரிய பாவத்தை சம்பாதிப்பதால் உனக்கே நீ கெடுதல் செய்து கொள்கிறாய் என்று மறைமுகமாய் சொல்கிறாள்) என்றெல்லாம் கைகேயி கூனியை ஏசுகிறாள்

(எனக்கு நல்லையும் அல்லை நீ! என் மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லை நீ! தருமமே நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லை! வந்(து) ஊழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை; மதியிலா மனத்தோய்!).


இராமனைப் பற்றி கெடுதலாகச் சொல்வது அவன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் இவளிடம் எடுபடாது என்று அறிந்த கூனி 'கோசலைக்கு அதிகாரம் கூடும், நீயும் உன் மகனும் ஓரம் கட்டப்படுவீர்கள்' என்ற வாதத்தை திறம்பட கைகேயி முன் வைக்கிறாள். கடைசியில் கைகேயி மனம் மாறுகிறது. தசரதனிடம் பரதன் நாடாள வேண்டும் என்றும், இராமன் 14 வருடங்கள் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்றும் வரம் கேட்கிறாள்.

தசரதன் துக்கப் பெருங்கடலில் மூழ்குகிறான். "என் கண்களைக் கேள். என் உயிரைக் கேள், இந்த நாட்டையே எடுத்துக் கொள். உன் மகன் ஆளட்டும். இரண்டாவது வரத்தை மட்டும் திரும்ப வாங்கிக் கொள். இராமனை இங்கேயே இருக்க விடு" என்று கதறுகிறான்.

('கண்ணே வேண்டும் எனினும் ஈயக்கடவேன்; என்
உள்நேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ?
பெண்ணே! வண்மைக் கேகயன் மானே! பெறுவாயேல்
மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற' என்றான்


'நின்மகன் ஆள்வான்; நீ இனிது ஆள்வாய்; நிலம் எல்லாம்
உன் வயம் ஆமே! ஆளுதி தந்தேன்; உரை குன்றேன்;
என் மகன், என் கண், என் உயிர் எல்லா உயிர்கட்கும்
நன்மகன் இந்த நாடிறவாமை நய' என்றான்.)


கைகேயி மனம் இரங்கவில்லை. இராமனுக்கு சொல்லி அனுப்புகிறாள். இராமன் கைகேயி மாளிகையை நோக்கிச் செல்வதைப் பார்த்த அயோத்தி மக்கள் சொல்வது கைகேயி-இராமன் பந்தத்தை அழகாய் விளக்குகிறது. "இராமன் தாயிடம் வளர்ந்தவனல்ல. அவனை வளர்க்கும் பாக்கியத்தை தவமிருந்து கைகேயியே பெற்றிருக்கிறாள். அப்படிப்பட்டவளுக்கு அயோத்தி மன்னனாக இராமன் முடிசூடுவதில் இருக்கும் பேரானந்தத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது" என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்

(தாய்கையில் வளர்ந்திலன்; வளர்த்தது தவத்தால்
கேகயன் மடந்தை; கிளர்ஞாலம் இவன் ஆள
ஈகையில் உவந்தவள், இயற்கை இதென்றால்
தோகை அவள் பேருவகை சொல்லல் அரிது என்பார்.)


இராமனைக் கண்டு அந்தக் கொடிய கட்டளையைச் சொல்ல தசரதன் நாக்கு எழவில்லை. கைகேயியே அந்தக் கட்டளையை மன்னன் சொன்னதாகச் சொல்கிறாள். அந்த இடத்தில் இராமன் கைகேயியிடம் முகமலர்ச்சி (இராமனின் முகம் வரைந்த செந்தாமரை போல் மாறாமல் இருந்ததென்று கூறுகிறார் கம்பர்) குறையாமல் சொல்கின்ற சொற்கள் மிக அழகானவை. "மன்னன் சொல்லா விட்டால் என்ன நீங்கள் சொன்னால் நான் மறுக்கவா போகிறேன். என் தம்பிக்குக் கிடைத்த செல்வம் எனக்கே கிடைத்தது போல் அல்லவா? நான் இப்போதே போகிறேன். விடை கொடுங்கள்"

(மன்னவன் பணி அன்றாகில் நும்பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ
என் இனி உறுதி அப்பால்; இப்பணி தலை மேல் கொண்டேன்
மின் ஒளிர்க் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்)

தசரதன் மூர்ச்சையாகி மயங்கி விழுகிறான். பின் "நீ என் மனைவியும் அல்ல. பரதன் என் மகனுமல்ல" என்று தசரதன் மனம் வெறுத்து கைகேயியை ஒதுக்குகிறான். கைகேயியிடம் ஒளிவு மறைவு கிடையாது. குலகுரு வசிட்டர் தசரதனுக்கு என்ன ஆயிற்று என்று கேட்ட போதும் சரி, பின் பரதன் வந்து கேட்ட போதும் சரி தன் வரங்களைப் பற்றியும் அதனால் தசரதனுக்கு ஏற்பட்ட நிலையையும் ஒளிக்காமல் அப்படியே சொல்கிறாள். அவர்கள் இருவரிடமும் வசவுகளையும் வாங்கிக் கொள்கிறாள். பரதன் கோபப்பட்டு "நீ என் தாயே அல்ல" என்று சொல்லி விட்டுப் போன பின் கைகேயி இராமாயணத்தில் பேச்சிழக்கிறாள். பின் அவள் இராமாயணத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசியதாய் தகவல் இல்லை.

எந்த மகனுக்காக அவள் அரசபதவியை வரமாக வாங்கினாளோ அந்த மகன் தன் அண்ணனின் செருப்பைக் கொண்டு வந்து சிம்மாசனத்தில் வைத்து ஒரு துறவியைப் போல் வாழ ஆரம்பித்த போது அவள் மனம் துடித்திருக்க வேண்டும். தன் வரங்கள் தனக்கு சாபமாக மாறியதை உணர்ந்து மீளாத்துயரில் ஆழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அதை நம் கற்பனைக்கே விட்டு விடுகிறார்கள் வால்மீகியும், கம்பனும். இராமனைக் காண காட்டுக்கு மற்றவர்கள் போன போது அவளும் கோசலையுடனும், சுமத்திரையுடனும் சென்றாள் என்று மட்டும் அவர்கள் சொல்கிறார்கள். அந்த ஒரு செய்கையில் தன் தவறை உணர்ந்து விட்டதாக அவள் அறிவிக்கிறாள் என்றே சொல்ல வேண்டும்.

இராமன் அயோத்தியில் காட்டிய அதே பாசத்தை காட்டிலும் காட்டுகிறான். தாயர் மூவரையும் ஒரு போலவே தொழுது எழுகிறான். அவன் மனதில் கைகேயியிடம் சிறிதும் வருத்தமில்லை. அவன் அவள் மீது வைத்திருக்கும் பாசத்தில் சிறிதும் குறைவில்லை. கடைசியில் வானுலகில் இருந்து இராமனைக் காண வரும் தசரதனிடம் கேட்கும் வரம் ஒப்புயர்வில்லாதது.

தசரதன் எப்போது கைகேயியைத் தன் மனைவியல்ல, பரதன் மகனுமல்ல என்று துறந்து விட்டானோ அப்போது முதல் இராமன் கைகேயியைத் தாய் என்று அழைப்பது தந்தை சொல்லை மீறிய செயலாகும். ஆனால் இராமன் கைகேயி மீது வைத்துள்ள பாசம் அளப்பரியது. அவளுடைய ஒரு செய்கையை வைத்து அவள் முன்பெல்லாம் காட்டிய பாசத்தை மறக்க அவன் தயாரில்லை. அதனால் தசரதனிடம் "தீயவள் என்று நீங்கள் துறந்த என் தெய்வத்தையும், அவள் மகனையும் மீண்டும் என் தாயும், தம்பியுமாக அனுமதி வேண்டும்" என்று அனுமதி கேட்கிறான். அப்போது கூட அவளைத் தாயென்று அவனால் அழைக்க முடியவில்லை. குறைத்துச் சொல்லவோ மனம் ஒப்பவில்லை. எனவே தாயான கைகேயியை 'தெய்வம்' என்று உயர்த்துகிற பண்பைக் கவனியுங்கள்.

(தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம் தருகெனத் தாழ்ந்தான்.)


அதைக் கேட்டு உலகமே அவனைத் தொழுதது என்கிறார் கம்பர். ஆக இராமன் கடைசி வரை கைகேயி இராமனாக இருந்தான் என்பதற்கு வேறென்ன சாட்சி வேண்டும்?

-என்.கணேசன்


நன்றி: ஈழநேசன்

Friday, December 25, 2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-15


ஆவியுலகைத் தொடர்பு கொள்ள முடிந்த மனிதர்கள் அந்தக் காலத்தில் மட்டுமல்ல இந்தக் காலத்திலும் உலகெங்கும் கணிசமாக இருக்கின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன. சமீபத்தில் ஆழ்மன சக்திகளைப் பற்றி நிலாச்சாரல் இணைய இதழின் ஆசிரியரும், எழுத்தாளருமான நிலா (நிர்மலா) அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது அவரே ஆவிகளைத் தொடர்பு கொள்ள முடிந்த ஒரு 'மீடியம்' என்று சொன்ன போது எனக்கு வியப்பாக இருந்தது. இங்கிலாந்தில் பொறியாளராகப் பணியாற்றி வரும் அவரிடம் அவரது அனுபவங்களைக் கேட்டேன்.


ஒரு முறை இங்கிலாந்தில் ஒரு 'மீடியம்' மூலமாக தன் இறந்து போன மாமியாரைத் தொடர்பு கொள்ள முடிந்தது அவருடைய ஆவியுலக முதல் அனுபவம் என்று சொன்னார். அதில் அவருக்கு கிடைத்த தகவல்கள் நம்பிக்கை ஏற்படுத்துவனவாக இருக்கவே அவருக்கு அது போன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகரித்தது. அந்த ஆர்வமும், ஈடுபாடும் விரைவிலேயே அவரையும் ஒரு 'மீடியமா'க்கியது. எதிர்பாராத விதங்களில் ஆவிகள் தங்களுக்கு நெருங்கியவர்களுக்குத் தகவல்கள் தெரிவிப்பது மட்டுமல்லாமல் உதவவும் செய்கின்றன, சில அற்புதங்களையும் நிகழ்த்துகின்றன என்பதற்கு சில சுவாரசியமான நிகழ்ச்சிகளை அவர் உதாரணமாகக் கூறினார். அதில் ஒன்று -


"ஒரு சமயம் எனது தோழியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது இறந்து போன அவளது மாமியார் அவளது வயிற்றைத் தொட்டு வலி போன்ற உணர்ச்சியைக் காட்டினார். அவளிடம் வயிற்றில் வலி இருக்கிறதா என நான் கேட்டபோது அவள் ஆச்சர்யத்துடன் ஒப்புக் கொண்டாள். பின் அவளை நிறைமாத கர்ப்பிணியாக என்னால் காணமுடிந்தது. அவளிடம் அதைக் கூறியபோது, கருப்பையில் கட்டிகள் இருப்பதால் கருவுறுவது சாத்தியமல்ல என மருத்துவர்கள் கூறியதை வருத்தத்துடன் கூறினாள். ஆனால் அவளது மாமியார் அவள் வயிற்றிலிருந்து எதையோ அப்புறப்படுத்தி மீண்டும் அவள் நிறைமாத கர்ப்பிணியாகத் தோன்றும் காட்சியை எனக்குக் காட்டினார். சில வாரங்களில் அவள் மருத்துவ பரிசோதனைக்குச் சென்றபோது அவளது கருப்பையில் கட்டிகள் இல்லாதது கண்டு மருத்துவர்கள் ஆச்சர்யம் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் கருவுறுவதற்கான சாத்தியக் கூறுகளில்லை என்றே கூறி இருக்கிறார்கள். ஆனால் சில மாதங்களிலேயே அவள் கருவுற்றாள். அந்தக் குழந்தைக்கு இப்போது மூன்று வயதாகிறது. அவள் தன் தாயின் கருப்பையில் உருவாவதற்கு முன்பே எனக்குப் பரிச்சயமானதால் எங்களுக்குள் ஒரு விசேஷப் பிணைப்புண்டு.

கருப்பையில் இருந்த கட்டிகள் மறைந்ததற்கும், கருவுறுதலே சாத்தியம் இல்லை என்ற பெண் கருவுற்றதற்கும் மருத்துவர்களிடம் விஞ்ஞான ரீதியான பதில்கள் இல்லை என்பதனை இங்கு நாம் கவனிக்க வேண்டும்.


ஆவியுலகில் இருந்து தகவல்கள் பெற முடிந்தது அதிசயம் என்றால் அவற்றை அவர்களுடைய குரலிலேயே கேட்க முடிவது பேரதிசயம் அல்லவா? அதையும் கேட்க வைத்தார் லெஸ்லி ·ப்ளிண்ட் (1911-1994) என்ற ஆங்கிலேயர். வின்ஸ்டன் சர்ச்சில், பெர்னார்ட் ஷா, மகாத்மா காந்தி போன்ற பிரபலங்கள் உட்பட பலருடைய ஆவிகள் அவரவர் குரலில் பேசக் கேட்ட போது பலரும் அதிசயித்தனர்.


அவரை ஆழ்மன ஆராய்ச்சிக் கழகம் போன்ற அமைப்புகளும், சண்டே எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகளும் தனிமனித ஆராய்ச்சியாளர்களும் பல வழிகளில் ஆராய்ந்தார்கள். லெஸ்லி ·ப்ளிண்ட் இருட்டான அறைகளில் நிகழ்ச்சிகளை நடத்தினார். அவர் குரலின் மூலம் ஆவிகள் பேசுவதில்லை. அவர் தலைக்கு மேல் இருட்டில் இருந்து பேசுகின்றன என்று அவர் தெரிவித்தார். மற்றவர்கள் போல் அவர் அரை மயக்க நிலைக்கும் செல்லவில்லை.


இதில் ஏதாவது தில்லுமுல்லு உள்ளதா என்றறிய ஆராய்ச்சியாளர்கள் அவர் வாயை துணி வைத்து உறுதியாகக் கட்டிப்போட்டார்கள். அதோடு சிலர் அவரை நாற்காலியோடு கட்டி அவர் நகரவோ, குனியவோ முடியாதபடி பார்த்துக் கொண்டார்கள். ஒரு ஆராய்ச்சியாளர் அவ தொண்டையில் ஒரு கருவியை வைத்து அதில் சின்ன அதிர்வு வந்தாலும் தெரியும்படி பார்த்துக் கொண்டார். இன்னொருவர் இன்னும் ஒருபடி மேலே போய் இளஞ்சிவப்பு திரவத்தை அவர் வாயில் ஊற்றி பின் வாயில் ப்ளாஸ்திரி போட்டு கட்டிப் பார்த்தார். எல்லாம் முடிந்த பிறகு அதே அளவு இளஞ்சிவப்பு நீரை உமிழ்ந்து அந்த ஆராய்ச்சியாளரை லெஸ்லி ·ப்ளிண்ட் திருப்திப்படுத்தினார். இத்தனைக்குப் பின்னும் ஆவிகள் வித விதமான குரல்களில் தங்கள் தகவல்களையும், கருத்துகளையும் சொன்னதை பார்வையாளர்கள் கேட்டனர். இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 1955 முதல் 1970 வரை 500 நிகழ்வுகளை டேப்பில் பதிவு செய்து வைத்திருக்கின்றனர்.


அந்த குரல்களில் ஒருசில குரல்கள் உயிரோடிருக்கும் போது கேட்ட குரல்களோடு ஒத்துப் போகவில்லை என்று ஒருசில விமரிசனங்கள் இருந்தாலும் பெரும்பாலான குரல்களும், சொன்ன செய்திகளும் இறந்து போன மனிதர்களின் குரல்களுக்கும், தன்மைகளுக்கும் ஒத்துப் போனதாக ஆராய்ச்சியாளர்களும், சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்களும் கருதுகின்றனர். உதாரணத்திற்கு ·ப்ளிண்ட் மூலமாக ஜார்ஜ் பெர்னார்ட் ஷா பேசக் கேட்ட அவருடைய நண்பர், கேட்ட குரலும் சொன்ன விதமும் பெர்னார்ட் ஷாவினுடையதாகவே இருந்தது என்று ஒத்துக் கொண்டார்.

லெஸ்லி ·ப்லிண்டின் மறைவுக்குப் பின் ஒரு பிரபல பத்திரிக்கையாளரான அலெக்சாண்டர் வாக்கர் சொன்னார். "நான் ஒரு முறை அவருடைய நிகழ்ச்சி ஒன்றிற்கு சந்தேகத்தோடு சென்றிருக்கிறேன். அப்போது எனக்கு மிகவும் நெருங்கிய ஒருவரின் தந்தையின் ஆவி ·ப்ளிண்ட் மூலமாக என்னிடம் பேசியது. நான் அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய பல கேள்விகள் கேட்டேன். சொன்ன குரலும், சொன்ன விஷயங்களும் சரியாகவே இருந்தன என்பதை நான் ஒத்துக் கொண்டு தானாக வேண்டும்"

கற்பனைக்கும் எட்டாத அதிசய நிகழ்வுகள் அல்லவா இவை!

மேலும் பயணிப்போம்.....

(தொடரும்)

நன்றி: விகடன்

Monday, December 21, 2009

மாற்றங்கள் உருவாக்கும் வாய்ப்புகள்


வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் இடையே எத்தனையோ வேறுபாடுகள் இருக்கின்றன என்றாலும் ஒரு வேறுபாடு மிகவும் பிரதானமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அது என்னவென்றால் வெற்றியாளர்கள் மாற்றங்கள் நிகழும் போது அதற்குத் தகுந்தாற் போல் உடனடியாக மாறி அந்த மாற்றங்களுடன் வரும் வாய்ப்புகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தோல்வியாளர்களோ நிகழும் மாற்றங்களைக் கண்டு முகம் சுளிக்கிறார்கள். மனம் வருந்துகிறார்கள். புலம்புகிறார்கள். எனவே அந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவும், மாற்றங்களுடன் வரும் வாய்ப்புகளைக் கண்டு கொள்ளவும், பயன்படுத்தவும் தவறி விடுகிறார்கள்.

உலகில் மாறுதல் ஒன்றே மாறாத நியதி என்று சொல்வார்கள். மாறுதல் உலகம் இயங்குவதன் அறிகுறி. உலகம் இயங்கிக் கொண்டு இருக்கும் வரை மாறுதலும் இருந்து கொண்டே இருக்கும். உலகம் யாருடைய தனிப்பட்ட கருத்தின்படியும் இயங்குவதில்லை. அவர்கள் கருத்தைப் பொருட்படுத்துவதுமில்லை. அது பிடிக்காதவர்கள் உலகில் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள்.

மாறுகின்ற காலத்தில் மாறுகின்ற தேவைகளுக்கேற்ப தங்கள் வழி முறைகளை மாற்றிக் கொண்டு செயல்படும் மனிதர்கள் மட்டுமே வெற்றியடைகிறார்கள். நேற்றைய தேவைகளுக்கேற்ப உங்களது இன்றைய செயல்பாடுகள் இருந்தால் எப்படி வெற்றி கிடைக்கும்?

அல்கெமிஸ்ட் என்ற பிரபல நாவலில் இதற்கு ஒரு அழகான உதாரணத்தைக் காணலாம். ஒரு சிறிய மலை மேல் அழகான கண்ணாடிப் பொருள்க¨ள் விற்கும் கடை ஒன்று இருந்தது. ஒரு காலத்தில் மிக நன்றாக வியாபாரம் நடந்த கடையில் காலம் செல்லச் செல்ல வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டது. மலை அடிவாரத்திலேயே நிறைய கடைகள் வந்து விட யாரும் கண்ணாடிப் பொருட்களை வாங்க அந்த மலைக்கு மேல் வருவதை நிறுத்தினர். அந்த கடைக்காரருக்கோ அந்த வியாபாரம் தவிர வேறு வியாபாரமும் தெரியாததால் வேறு வழியில்லாமல் அதையே நடத்திக் கொண்டு வந்தார்.

சாண்டியாகோ என்ற இளைஞன் அவர் கடையில் வேலைக்குச் சேர்ந்தான். சம்பளம் மிகக் குறைவாகவே தந்த கடைக்காரர் நடக்கும் விற்பனையில் அதிக கமிஷன் தருவதாகச் சொன்னார். வியாபாரமே இல்லாததால் கமிஷன் எங்கே தரப் போகிறோம் என்ற எண்ணம் அவருக்கு. இரண்டே நாளில் உண்மை நிலவரத்தை சாண்டியாகோ உணர்ந்தான். வேறு கடைகளே இல்லாத காலத்தில் செய்த வியாபார முறையையே இப்போதும் கடைக்காரர் பின்பற்றுகிறார் என்று புரிந்தது. அவன் அவரிடம் கடைக்கு வெளியே ஒரு ஷோ கேஸ் வைத்து அழகான புதிய பொருட்களைப் பார்வைக்கு வைத்தால் கீழே செல்பவர்களில் சிலரை அது ஈர்க்கக்கூடும் என்று சொன்னான். கடைக்காரருக்கு பெரிய ஆர்வம் இல்லா விட்டாலும் அப்படியே செய்தார். புதியவர்கள் பலரும் வர ஆரம்பிக்க விற்பனையும் அதிகரித்தது.

ஒரு நாள் மலையேறிய ஒருவர் குடிக்க நல்ல தேநீர் கடை கூட இல்லை என்று அங்கலாய்த்தது சாண்டியாகோ காதில் விழுந்தது. அவன் கடைக்காரரிடம் சொன்னான். "நாம் தேநீரும் தயாரித்து நம்முடைய அழகான கண்ணாடிக் கோப்பைகளில் தந்தால் தேநீரும் விற்கலாம். பலரும் வீடுகளிலும் அது போல் குடிக்க கண்ணாடிக் கோப்பைகளை வாங்கிக் கொண்டு போவார்கள்" என்றான். அவருக்கு அதிலும் பெரிய பலன் கிடைக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் சம்மதித்தார்.

அவன் சொன்னபடியே பலரும் வந்து தேநீர் குடித்து அது போன்ற அழகான கோப்பைகளை வாங்கிக் கொண்டு போனார்கள். நாளடைவில் அந்தக் கடை பிரபலமாகி வியாபாரமும் அதிகரித்து மேலும் இரண்டு பேரை வேலைக்கு எடுத்துக் கொண்டு கூட்டத்தை சமாளிக்க வேண்டி இருந்தது. சாண்டியாகோ வந்திராவிட்டால், காலத்தின் மாறுதல்களுக்கு ஏற்ப புதிய வழிகளைப் பின்பற்றியிரா விட்டால் அந்தக் கடையை அவர் விரைவில் மூடி விட வேண்டி இருந்திருக்கும்.

மாறுதல் இயற்கை என்றாலும் அது ஏற்படுத்தும் புதிய சூழல் நமக்குப் பிடிபடாமலும், புரியாமலும், சிறிது அசௌகரியமாகவும் இருப்பது இயல்பே. ஆனால் மாறுதல் ஏற்படும் போது இது வரை கிடைத்திராத வாய்ப்புகளும் கிடைக்கும் என்ற ஞானத்தோடு மாறுதல்களை எதிர்கொள்வதே அறிவு.

சில சமயங்கள் மாறுதல்கள் நம் வாழ்க்கையின் அஸ்திவாரத்தையே அசைப்பனவாகவும் இருப்பது உண்மையே. இருப்பவை அனைத்தையும் இழக்க நேர்வது போன்ற மாறுதல்கள் பூதாகாரமாக இருக்கலாம். ஆனால் கவலையில் ஆழ்வதும், விதியை நொந்து கொள்வதும் அதற்குத் தீர்வாகாது. மாறுதல்கள் உணர்த்தும் பாடங்களைப் படித்து, தரும் வாய்ப்புக¨ளை முறையாகப் பயன்படுத்தி மீண்டு வருவதே வெற்றி. சிலவற்றை இழந்தால் ஒழிய நம் பார்வை வேறுபக்கம் திரும்பாது என்பதற்காகவே கூட விதி நம்மை சிலவற்றை இழக்க வைக்கலாம். ஒருவிதத்தில் அது நமக்கு அனுகூலமே ஒழிய நஷ்டமல்ல.

சொய்சீரோ ஹோண்டா என்ற இளைஞர் படிக்கும் காலத்திலேயே கார்களுக்குப் பயன்படுத்தும் புதிய பிஸ்டன் ஒன்றை உருவாக்கி அதை டயோட்டா கார் கம்பெனிக்கு அனுப்பினார். அந்த வகை பிஸ்டனைப் பயன்படுத்தினால் பல விதங்களில் காரோட்டம் மேம்பாடடையும் என்று அவர்களுக்குத் தெரிவித்தார். அது தங்களுடைய தேவைகளைப் பூரணமாகப் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவித்து டயோட்டா கம்பெனியினர் திருப்பி அனுப்பி விட்டனர். மீண்டும் இரண்டு வருடங்கள் கழித்து அந்தப் பிஸ்டனை மேம்படுத்தி வடிவமைத்து அதை டயோட்டாவுக்கு மறுபடி அனுப்ப அந்தப் புதிய பிஸ்டனை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதைத் தயாரித்துத் தரும் உரிமை ஹோண்டாவுக்கு அளிக்கப்பட்டது.

ஹோண்டா தன்னிடம் இருப்பவை அனைத்தையும் முதலீடாகப் போட்டு பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைக் கட்டத் தொடங்கினார். தொழிற்சாலை கட்டும் பணி முடியும் தருவாயில் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு தொழிற்சாலை தரைமட்டமாகியது. ஹோண்டா தன் மனைவியின் நகைகளை விற்று, நண்பர்களிடம் கடனை வாங்கி மீண்டும் தொழிற்சாலை கட்டத்துவங்கினார். துரதிர்ஷ்டவசமாக அந்தக் கட்டிடம் முடிவடையும் நேரம் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது. எதிரிகளின் விமானத் தாக்குதலால் அந்தக் கட்டிடமும் தவிடுபொடியானது.

இதையெல்லாம் மாற்றம் என்று சொல்வதை விட நாசம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும் என்றாலும் ஹோண்டா விதியை நொந்து கொண்டு முடங்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் கடுமையான பெட்ரோல் மற்றும் கேஸ் தட்டுப்பாடு ஜப்பானைத் தாக்கியது. கார்களை இயக்க முடியாமல் பலரும் அவதியுற்றனர். ஹோண்டாவும் எங்கும் காரை எடுத்துச் செல்ல முடியாமல் தத்தளித்தார். வேறு வழி இல்லாமல் தன் சைக்கிளுக்கு மோட்டார் ஒன்றைப் பொருத்திக் கொண்டு வீட்டுக்குப் பொருட்கள் வாங்கச் சென்றார். அதைப் பார்த்த அக்கம்பக்கத்து வீட்டாரெல்லாம் தங்களுக்கும் அது போன்ற ஒரு மோட்டார் பொருத்திய சைக்கிள் செய்து தருமாறு கேட்க ஆரம்பித்தனர். ஹோண்டா செய்து தர ஆரம்பித்தார். சீக்கிரமே அவரிடமிருந்த மோட்டார்கள் எல்லாம் தீர்ந்து போயின.

தன் முயற்சிகளில் சிறிதும் தளராத விக்கிரமாதித்தன் போல் ஹோண்டா மீண்டும் ஒரு தொழிற்சாலை கட்ட எண்ணினார். இந்த முறை பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்சாலை அல்ல, தன் புதிய கண்டுபிடிப்பான மோட்டார் பைக் தயாரிக்கும் தொழிற்சாலையாக. ஆனால் இருப்பதையெல்லாம் முன்பே இரு முறை தொழிற்சாலை கட்டித் தொலைத்திருந்த அவருக்கு முதலீடு செய்யப் பணம் இருக்கவில்லை. சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவெடுத்தார்.

ஜப்பான் முழுவதும் இருந்த 18000 சைக்கிள் கடைக்காரர்களுக்கு தன் புதிய கண்டுபிடிப்பைப் பற்றிக் கடிதம் எழுதினார். அன்றைய சூழ்நிலையில் மிகவும் சுலபமாக விலை போகும் பைக்கைத் தயாரிக்க அவர்களால் முடிந்த அளவு முதலீடு செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம் என்று அவர் விவரித்தார். 18000 கடைக்காரர்களில் சுமார் 5000 பேர் முதலீடு செய்ய முன் வந்தனர். அவருடைய கனவுத் தொழிற்சாலை உருவாகியது.

முதலில் அவர்கள் தயாரித்த மோட்டார் பைக் பெருமளவில் விலை போகவில்லை. காரணம் அதன் எடையும், பெரிய வடிவமும். எனவே ஹோண்டா அந்த இரண்டையும் சரி செய்து சில மாற்றங்களுடன் புதிய மோட்டார் பைக்கை உருவாக்கினார். அது உடனடியாக வெற்றி பெற்றது. பின் வெற்றி அவரை நிழலாகப் பின் தொடர்ந்தது. கார்களையும் உருவாக்க ஆரம்பித்தார். இன்று ஹோண்டா கார்ப்பரேஷன் உலகப் புகழ் பெற்ற பெரிய நிறுவனமாக இருப்பது அனைவருக்கும் தெரியும்.

மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பதை ஆழமாக உணர்ந்திருங்கள். வழக்கம் என்கிற சுகமான சங்கிலி புதியன வரும் போது அதிருப்தி கொள்ளக் கூடும். ஆனாலும் வழக்கமான வாழ்க்கையில் சிறைப்பட்டு இருந்து விடாதீர்கள். மேற்போக்காகப் பார்க்கையில் பிரச்னைகள் போலத் தோன்றினாலும் எல்லா மாற்றங்களும் தங்களுடன் வாய்ப்புகளையும் சேர்த்தே அழைத்து வருகின்றன. வரும் மாற்றங்கள் நம் அபிப்பிராயங்களுக்கேற்ப மாறிவிடுவதில்லை. மாற்றங்கள் காலடி மண்ணையே அசைக்கிறதாகக் கூட சில நேரங்களில் இருக்கலாம். செயலிழந்து மட்டும் போய் விடாதீர்கள். அது கண்டிப்பாய் தோல்வி என்னும் புதைகுழியில் உங்களை ஆழ்த்தி விடும். எனவே பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ உங்கள் அபிப்பிராயங்களை ஒதுக்கி விட்டு வாய்ப்புகளைக் கவனியுங்கள். எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தியுங்கள். நம்பிக்கையுடனும் உறுதியுடனும் செயல்படுங்கள். கண்டிப்பாக வெற்றிவாகை சூடுவீர்கள்.

-என்.கணேசன்

நன்றி: விகடன்

Wednesday, December 16, 2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-14



ஆழ்மனதின் அற்புத சக்திகள்-14

டி.டி.ஹோமைப் போலவே லியொனாரா பைப்பர் (1859-1950) என்பவருக்கும் எட்டு வயதில் ஆழ்மன சக்தியின் முதல் அனுபவம் ஒரு மரணச்செய்தி மூலமாகவே ஏற்பட்டது. 'அத்தை சாரா இறக்கவில்லை. இன்னும் உங்களுடன் தான் இருக்கிறாள்' என்ற செய்தி செவிப்பறையை அறைந்து தெரிவிப்பது போலிருக்க லியொனாரா பைப்பர் ஓடிச்சென்று தாயிடம் அதைத் தெரிவித்தார். மகளின் பைத்தியக்காரத்தனமான கற்பனை என்று கருதிய அந்தத் தாய் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மறுநாள் அந்த அத்தை சாரா இறந்து போன செய்தி அவர்களுக்குக் கிடைத்தது. இறந்த நேரம் லியொனாரா பைப்பர் காதில் அறைந்த செய்தியின் அதே நேரம் தான். அதன் பிறகு பதினான்கு வருடங்கள் அது போன்ற அனுபவங்கள் லியொனாரா பைப்பருக்கு ஏற்படவில்லை. மீண்டும் ஏற்பட்ட ஒரு அனுபவம் அவர் வாழ்வையே மாற்றி அமைத்தது.

கடுமையான வயிற்று வலியால் அவதியுற்ற லியொனாரா பைப்பர் அதைக் குணப்படுத்த டாக்டர் ஜே ஆர் காக் என்பவரிடம் சென்றார். அந்த டாக்டர் குருடர். தன் கையை நோயாளியின் தலையில் வைத்து நோயைக் குணமாக்கக் கூடியவர். அவரிடம் இரண்டாவது முறை சென்ற போது அவர் லியொனாராவின் தலையில் கையை வைத்தவுடன் திடீரென்று தன் முன் ஒரு ஒளிவெள்ளத்தையும் அந்த ஒளிவெள்ளத்தில் பல்வேறு முகங்களையும் லியொனாரா கண்டார். அதன் பின் கிட்டத்தட்ட அரை மயக்க நிலையை அடைந்த அவர் சுயநினைவில்லாமல் எழுந்து ஒரு காகிதத்தை எடுத்து ஒரு கடிதத்தை எழுதி அதை அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவரிடம் சென்று தந்து மறுபடி தான் முன்பு அமர்ந்திருந்த இடத்திலேயே வந்தமர்ந்தார்.

அவர் அந்தக் கடிதத்தைத் தந்தது கேம்ப்ரிட்ஜைச் சேர்ந்த நீதிபதி ·ப்ராஸ்ட் என்பவரிடம். அந்தக் கடிதம் அவரது இறந்து போன மகன் எழுதுவது போல எழுதப்பட்டது. லியொனாராவுக்கு அந்த நீதிபதியைப் பற்றியோ, அவரது இறந்து போன மகனைப் பற்றியோ தகவல்கள் ஏதும் தெரியாததாலும், கடிதத்தின் தன்மையாலும் அந்தக் கடிதம் தன் மகனுடைய ஆவியாலேயே எழுதப்பட்டது என்று அந்த நீதிபதி நம்பினார். மயக்க நிலையிலிருந்து மீண்ட லியொனாராவுக்கு தான் செய்தது எதுவும் நினைவிருக்கவில்லை.

இந்த செய்தி காட்டுத்தீயாகப் பரவியது. பலரும் தங்களுக்கு நெருங்கிய அன்பான இறந்து போனவர்களிடம் இருந்து செய்திகளைப் பெற லியொனாரா பைப்பரை மொய்க்க ஆரம்பித்தார்கள். அப்படி லியொனாராவைத் தேடி வந்தவர்களில் ஒருவர் அமெரிக்க மனோதத்துவ மேதை வில்லியம் ஜேம்ஸின் மாமியார். அவருக்கு லியொனோராவின் மூலமாகக் கிடைத்த தகவல்கள் நம்பிக்கை தரும் வண்ணம் இருக்கவே அவர் தன் மருமகன் வில்லியம் ஜேம்ஸிற்குக் கடிதம் எழுதினார். மாமியாரிடம் பணம் பறிக்க யாரோ ஒரு பெண் ஏமாற்றுவதாக எண்ணிய வில்லியம் ஜேம்ஸ் அந்தப் பெண்ணைக் கையும் களவுமாகப் பிடிக்க எண்ணி தானும் நேரில் வந்தார். மிகக் கவனமாகக் கண்காணித்தும் ஏமாற்று வேலைகள் எதையும் வில்லியம் ஜேம்ஸால் கண்டுபிடிக்க முடியவில்லை.

லியொனாரா பைப்பர் ஒவ்வொரு காலக் கட்டத்தில் ஒவ்வொரு ஆவியின் ஆதிக்கத்தில் இருந்ததாகக் கூறினார். அந்த ஆவி சம்பந்தப்பட்ட மற்ற ஆவிகளுடன் தொடர்பு கொண்டு தேவையான தகவல்கள் சொல்வதாகச் சொன்னார். அவர் சொல்வதற்கேற்றாற் போல் அந்தந்தக் கட்டங்களில் அவர் ஆவியின் ஆதிக்கத்தில் இருக்கையில் பேசும் பேச்சுகளின் குரல்கள் வித்தியாசப்பட்டன.

வில்லியம் ஜேம்ஸ் இதைப் பற்றி ஆழ்மன சக்திகளின் ஆராய்ச்சிக் கழகத்திற்குத் தெரியப்படுத்தினார். அந்த ஆராய்ச்சிக் கழகத்தின் டாக்டர் ரிச்சர்டு ஹோட்சன் என்ற ஆராய்ச்சியாளர் பல போலிகளை போலிகள் என்று நிரூபித்த பெருமையுடையவர். எதையும் உடனடியாக நம்ப மறுத்த அவர் லியொனாரா பைப்பரை ஆராய்ச்சி செய்ய வந்தார்.

ரிச்சர்டு ஹோட்சன் துப்பறியும் நிபுணர்களை எல்லா சமயங்களிலும் லியொனாரா பைப்பரைப் பின் தொடரச் செய்தார். யாரிடமாவது பேசித் தகவல்கள் தெரிந்து கொள்கிறாரா என்று கண்காணித்தார். அவராகவே லியொனாராவிற்கு அறிமுகமே இல்லாத நபர்களை வரவழைத்து லியொனாரா பைப்பர் முன் அமர வைத்து அவர்களுக்கு வேண்டிய இறந்த மனிதர்கள் சம்பந்தமாகக் கேட்க வைத்தார். எல்லா விவரங்களும் திருப்தி தருபவையாக இருந்தன. 1888 இறுதியில் ஹோட்சனுடன் டாக்டர் ஜேம்ஸ் ஹிஸ்லாப் என்பவரும் சேர்ந்து கொண்டார். அவர் லியொனாரா பைப்பர் 'மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டரா'ல் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தாலும் லியொனாராவிற்கு முன்பின் தெரியாத இறந்தவர்களின் தகவல்கள் எல்லாம் எப்படித் தெரிகின்றன என்பதை அவரால் அறிவியல் பூர்வமாகச் சொல்ல முடியவில்லை.

ரிச்சர்டு ஹோட்சனும், ஹிஸ்லாப்பும் மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய லியொனாராவை இங்கிலாந்துக்கு அழைத்தார்கள். லியொனாரா சம்மதித்தார். இங்கிலாந்தில் அவர் ஆழ்மன ஆராய்ச்சிக் கழகத் தலைவர் எ·ப்.டபுல்யூ.எச்.மயர்ஸ் வீட்டில் தங்கினார். மயர்ஸ் லியொனாரா வருவதற்கு முன் வீட்டில் அனைத்து வேலைக்காரர்கலையும் நீக்கி புதிய வேலைக்காரர்களை நியமித்தார். எனவே லியொனாரா வேலைக்காரர்கள் மூலம் எதையும் தெரிந்து கொள்ளுதல் சாத்தியமிருக்கவில்லை. மயர்ஸ் லியொனாராவுக்கு உதவ ஏற்பாடு செய்த வேலைக்காரி ஒரு கிராமத்திலிருந்து தருவிக்கப்பட்டார். அவர் வீட்டை விட்டு செல்லும் இடங்களுக்கெல்லாம் ஆராய்ச்சிக் கழகத்தின் நபர் ஒருவரும் கண்காணிக்க கூடவே சென்றார்.

மயர்ஸ் மற்றும் சர் ஆலிவர் லாட்ஜ் கண்காணிப்பில் நவம்பர் 1889 முதல் பிப்ரவரி 1890 வரை லியொனாரா 88 முறை முன்பின் தெரியாத நபர்களின் குடும்பத்தில் இறந்தவர்களிடம் இருந்து தகவல்கள் பெற்றுத் தந்தார். லியொனாராவிற்கு வந்தவர்களை சில சமயங்களில் தவறான பெயரில் அறிமுகப்படுத்தியதும் உண்டு. சில சமயங்களில் லியொனாரா அரை மயக்க நிலைக்குச் சென்ற பிறகு சிலரை திடீரென்று அழைத்து வந்ததும் உண்டு. ஆனால் லியொனாரா பைப்பர் தருவித்துத் தந்த தகவல்கள் சம்பந்தப்பட்டவர்களின் உண்மையான தகவல்களாகவே இருந்தன. மயர்ஸ¤ம், ஆலிவர் ஸ்காட்டும் 1890 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் எந்த விதத்திலும் லியொனாரா பைப்பர் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டிருக்க சாத்தியமே இல்லை என்றும் அவர் நாணயமும், நம்பகத் தன்மையும் சந்தேகத்திற்கப்பால் பட்டது என்பதையும் தெரிவித்தார்.

மீண்டும் அமெரிக்கா திரும்பிய லியொனாரா பைப்பர் 1909ல் மீண்டும் ஆராய்ச்சிகளுக்காக இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டார். 1915ல் சர் ஆலிவர் ஸ்காட் இறந்து விடப்போவதாகத் தனக்கு ஆவியுலகில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக லியொனாரா தெரிவித்தார். அதன் படியே ஸ்காட் இறந்து போனார். பின் தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்த லியொனாரா இது போன்ற நிகழ்ச்சிகளைத் தருவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டார்.

பல ஆராய்ச்சியாளர்கள் கண்காணிப்பில் எந்த வித தயக்கமும் இன்றி இது போன்ற பல அதிசயங்களை செய்து காட்டிய லியொனாரா பைப்பர் இன்றும் ஒரு அற்புதப் பெண்மணியாகவே ஆழ்மன ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறார். ஆவியுலகைப் பற்றி நம்பிக்கை இல்லாத ஆராய்ச்சியாளர்கள் பலரும் கூட அவர் சொன்ன தகவல்களின் உண்மை தன்மையை உணர்ந்த போது பிரமித்துப் போனார்கள்.

மேலும் பயணிப்போம்......

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி: விகடன்

Friday, December 11, 2009

ஒழுக்கம் அவசியமா?


ழுக்கம் என்ற சொல்லே பல இளைஞர்களுக்கு கசப்பான சொல்லாகத் தெரிகிறது. வாழ்க்கையை வாழத் துடிக்கும் வயதில் வாழ்ந்து முடித்த கிழடுகள் தங்களுக்குப் போடும் அனாவசியக் கடிவாளமாக பல இளைஞர்கள் நினைக்கிறார்கள். வாழ்வது ஒரு முறை அதில் அத்தனை அனுபவங்களையும் சுகித்து விட வேண்டாமா என்று நினைக்கிறார்கள். உண்மையில் வள்ளுவர் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை ஒழுக்கத்திற்கு தேவைக்கும் அதிகமாக முக்கியத்துவம் தந்து விடுகிறோமா? விடைக்கு ஒரு கதை...

கதிர் ஒரு கட்டிளங்காளை. மிகவும் ஒழுக்கமானவன். எல்லா விஷயங்களிலும் கட்டுப்பாடுடையவன். தன் உடலை உடற்பயிற்சிகளாலும், யோகாசனங்களாலும் நன்கு பாதுகாக்கிறவன். அவன் ஒரு முறை தங்கள் யோகா வகுப்பினர் நடத்தும் ஒரு சொற்பொழிவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க ஒரு புகழ்பெற்ற மருத்துவரைக் காணச் சென்றான். அந்த மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவரைக் காண அவன் காத்திருந்தான்.

அப்போது அந்த மருத்துவமனைக்கு தள்ளாத வயதுடைய முதியவர் ஒருவர் நுழையக் கண்டான். அந்த வயதிலும் அந்த முதியவர் கைத்தடி எதுவும் இல்லாமல் மருத்துவமனைக்கு தனியாக வந்தது அவனுக்கு வியப்பை அளித்தது. அவர் அவனருகே அமர்ந்தார். மருத்துவரைப் பார்க்க நேரம் அதிகமானதால் பொழுதைப் போக்க இருவரும் பேசிக்கொண்டார்கள்.

அந்த முதியவர் அவனிடம் ஒரு கட்டத்தில் கேட்டார். "நீ புகை பிடிப்பதுண்டா?"

கதிர் பெருமையாகச் சொன்னான். "இல்லை"

அவர் சொன்னார். "நான் தினமும் மூன்று பேக்கட் சிகரெட்டுகள் புகைப்பேன். பன்னிரண்டாம் வயதில் ஆரம்பித்த பழக்கம் அது. நீ மது குடிப்பதுண்டா?"

கதிர் சொன்னான். "இல்லை"

அவர் பெருமையாகச் சொன்னார். "நான் பதினாறாம் வயது முதல் மது குடிக்கிறேன். தற்போது தினந்தோறும் இரண்டு முறை இரண்டு புட்டி மதுவைக் காலையிலும், இரவிலும் குடிப்பேன்."

கதிருக்கு வியப்பாக இருந்தது.

முதியவர் மிகவும் ரகசியமாகக் கேட்டார். "உனக்கு பெண்களுடன் அனுபவம் எப்படி?"

கதிர் சொன்னான். "எனக்கு இன்னும் திருமணமாகவில்லை....."

முதியவர் புன்னகையுடன் சொன்னார். "நானும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் பதினெட்டாம் வயது முதல் கணக்கில்லாத பெண்களுடன் உல்லாசமாக இருந்திருக்கிறேன்....."

முதியவருடன் பேசிக் கொண்டே போனதில் அவருக்கு இல்லாத தீயபழக்கங்கள் இல்லை என்று கதிருக்குத் தெரிந்தது. முதியவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் முழுமையாக அனுபவித்து விட வேண்டும் என்ற வெறியுடன் இருப்பவராகத் தெரிந்தார். எதிலும் எப்போதும் கட்டுப்பாடில்லாமல் அனுபவித்து இத்தனை வருடங்கள் வாழ்ந்த அவர் அவனை ஆச்சரியப்படுத்தினார். ஒவ்வொன்றிலும் கட்டுப்பாடோடு வாழ்ந்ததன் மூலம் நிறைய இழந்து விட்டோமா என்று கூட கதிருக்குத் தோன்ற ஆரம்பித்தது.

"இப்போது எதற்காக மருத்துவரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?" என்று கதிர் கேட்டான்.

சில நாட்களாக மூச்சுத் திணறல், நரம்புத்தளர்ச்சி, பலவீனம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதியவர் கூறினார். இந்த வயதில் இது பெரிய விஷயமல்ல என்று நினைத்த கதிர் ஆவலுடன் அவர் வயதைக் கேட்டான்.

அவர் சொன்னார். "27"

இவ்வளவு நேரம் தன்னுடன் பேசிக் கொண்டிருந்தவர் முதியவரே அல்ல, இளைஞர் தான் என்று தெரிந்த கதிர் அதிர்ச்சி அடைந்தான். இது தான் ஒழுக்கமில்லாத வாழ்க்கையின் முடிவு.

திருவள்ளுவர் ஒழுக்கத்தின் அவசியத்தை ரத்தினச் சுருக்கமாக பல குறள்களில் கூறியுள்ளார். அவற்றுள் சில-

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
(ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதால் அந்த ஒழுக்கம் உயிரையும் விடச் சிறந்ததாகப் போற்றப்படும்)

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பைத் தரும்.
(நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும். தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைத் தரும்)

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அ·தே துணை.
(ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும். பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெரிந்தாலும் உண்மையில் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக நிற்கும்)

இந்தக் குறள்களின் கருத்துகளுக்கு எத்தனையோ உயிருள்ள உதாரணங்களை இன்றும் நம்மால் பார்க்க முடியும். எத்தனையோ அறிவாளிகள், புத்திசாலிகள் கூட ஒழுக்கம் என்ற ஒரு விஷயத்தில் தவறி விட்டு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்க்கையையே கோட்டை விட்டு நிற்பதை நம்மால் காண முடியும். அவர்களை விடக் குறைந்த அறிவிருந்தாலும், குறைந்த கல்வியே பெற்றிருந்தாலும் ஒழுக்கமாக இருப்பவர்கள் எத்தனையோ நிம்மதியாகவும், நிறைவாகவும் வாழ்வதையும் நாம் காணலாம்.

ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருப்பது ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் முடிவில் அது பெரிய பாதுகாப்பு வளையமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதே போல் ஒழுக்கமின்மை ஆரம்பத்தில் கிளர்ச்சிகளைத் தரலாம். கடைசியில் அது எத்தனையோ பிரச்னைகளுக்கு வேராக நின்று துன்புறுத்தும் என்பதிலும் சந்தேகமில்லை.

ஒழுக்கமான வாழ்க்கை ஏதோ உப்புசப்பில்லாத வாழ்க்கை என்பது போல் சிலர் உருவகப்படுத்தி விடுகிறார்கள். அதில் சிறிதும் உண்மை இல்லை. ஒழுக்கமான வாழ்க்கையில் உண்மையான ஆனந்தத்திற்குக் குறைவில்லை. நல்ல வழியிலேயே இங்கு ஆனந்தம் ஏராளமாக இருக்கிறது. நல்ல இசையிலும், நல்ல புத்தகத்திலும், நல்ல வாழ்க்கைத் துணையிலும் கிடைக்காத ஆனந்தமா புகையிலும், மதுவிலும், தவறான உடலுறவிலும் கிடைத்து விடப்போகிறது? அழகான இயற்கைக் காட்சிகளிலும், மழலைகளின் பேச்சுகளிலும் கிடைக்காத மகிழ்ச்சியா போதையில் கிடைத்து விடப்போகிறது?

மேலும் நல்ல வழிகளில் கிடைக்கும் ஆனந்தம் முடிவில் மனிதனை உயர்த்தி விடுகிறது. தீய வழிகளில் கிடைக்கும் கிளர்ச்சிகள் கடைசியில் மனிதனின் தரத்தை தாழ்த்தி விடுகிறது. இன்னொரு உண்மை என்னவென்றால் ஒழுக்கமாக வாழ்பவன் தான் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தாரையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் கூட நிறைவாக இருக்க விடுகிறான். அதே சமயம் ஒழுக்கமில்லாதவன் தன் குடும்பத்தினருக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும், தீராத மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறான்.

நம்மையும் உயர்த்தி, நம்மைச் சார்ந்தவர்களையும் நிம்மதியாக இருக்க விடும் ஒழுக்கம் மேன்மையா? இல்லை நம்மை சீரழித்து, நம்மைச் சேர்ந்தவர்களைத் துயரத்தில் ஆழ்த்தும் ஒழுக்கமில்லாத வாழ்க்கை தேவையா?

சிந்தித்துப் பார்த்து பதில் சொல்லுங்கள். ஒழுக்கம் அவசியமா? இல்லையா?

- என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

Monday, December 7, 2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-13


டேனியல் டங்க்ளஸ் ஹோம் (1833-1886) ஆவிகளுடன் சம்பந்தப்படுத்தி பேசப்பட்டவர்களில் மிகப் பிரபலமானவர். ஸ்காட்லாண்டில் பிறந்த அவர் தாயாரின் சகோதரி மேரி குக் என்பவரால் வளர்க்கப்பட்டார். சிறு வயதிலேயே பெரியம்மாவுடன் அமெரிக்கா சென்ற ஹோமிற்கு இளமையிலேயே நெருங்கியவர்களின் இறப்பு ஆவி ரூபத்தில் அடிக்கடி தெரிய வந்தது. இந்தக் காலத்தைப் போல 19 ஆம் நூற்றாண்டில் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாததால் சில இறப்புகள் அவரால் உடனடியாக அறியப்பட்டு சில நாட்கள் கழித்து கடிதம் வந்த பின்பே உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

அவருடைய 17ஆம் வயதில் தாய் "டேன், 12 மணி" என்று சொன்னதாய் காட்சி கண்டார். பெரும்பாலும் அவருக்கு ஏற்படும் காட்சிகள் இறந்தவர்கள் சம்பந்தப் பட்டதாகவே இருப்பதால் தாய் மரணமடைந்து விட்டார் என்று உணர்ந்தார் ஹோம். பின்பு தாயார் அந்தக் குறிப்பிட்ட நாளில் 12 மணிக்கு காலமானார் என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது. தாயாரின் மரணத்திற்குப் பிறகு அந்த வீட்டில் சத்தமாகத் தட்டுவது, தட்டு முட்டுச் சாமான்கள் எல்லாம் அங்குமிங்குமாக இடம் பெயர்வதெல்லாம் நிகழத் துவங்க அவரது பெரியம்மா பயந்தார். சிலர் சைத்தான் ஹோமை ஆக்கிரமித்துள்ளது என்று கருதினார்கள். ஒரு முறை ஒரு டேபிள் தானாக நகர ஆரம்பிக்க ஹோமின் பெரியம்மா பையிளை அதன் மீது வைத்தார். அப்போதும் அது நிற்காமல் போகவே தன் முழு எடையையும் அதன் மேல் போட்டு தடுத்துப் பார்த்தார். ஆனாலும் டேபிள் நகர்வது நிற்கவில்லை. தன் வீட்டுக்குள் சைத்தானின் சேட்டைகளை அறிமுகப்படுத்தி விட்டதாகக் கூறி அந்த அம்மையார் ஹோமை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.

ஆனாலும் அவரையும் அவரது சக்திகளையும் நம்பிய நண்பர்கள் அவருக்கு உதவினார்கள். ஆவிகளுடன் தொடர்பு கொண்டு தகவல்கள் சொல்ல ஆரம்பித்தார். அவருடைய இளம் வயதிலேயே நியூயார்க் மாகாணத்தின் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜான் எட்மண்ட்ஸ், பெனிசில்வேனியா பலகலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ராபர்ட் ஹாரே போன்றவர்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

தனக்கு கிடைத்த ஆவிகளுடன் தொடர்பு கொள்ள முடிந்த அபூர்வ சக்திகள் இறைவனால் அளிக்கப்பட்டது என்று நம்பிய ஹோம் தன் சேவைகளுக்கு யாரிடமும் பணம் வசூலிக்கவில்லை. ஆனால் அவர் பெரிய செல்வந்தர்கள் தாங்களாகத் தந்த பரிசுகளையும், பண உதவிகளையும் மறுக்கவில்லை. அரசர்களும், பெரும் செல்வந்தர்களும், பிரபலங்களும் அவரை ஆதரித்தனர்.

1868ல் அட்லாண்டிக் கேபிள் கம்பெனி என்ற பிரபல நிறுவனத்தின் தலைமை பொறியியல் வல்லுனர் க்ராம்வெல் வார்லெ என்பவருடனும், பின்னர் லண்டன் வாதக்கலை சமூக நிறுவனத்துடனும் சேர்ந்து ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் சுமார் ஐம்பதை ஹோம் நடத்தினார். லண்டன் சமூக நிறுவனத்தினருடனான நிகழ்ச்சிகளில் சுமார் முப்பது பேர் கலந்து கொண்டனர். அவர்கள் 1871ல் சமர்ப்பித்த அறிக்கையில் சத்தங்கள், அதிர்வுகள், யாரும் தொடாமலேயே பொருள்களின் அசைவுகள், கண்ணுக்குத் தெரியாத இசைக்கருவிகளில் இருந்து இசை, பரிச்சயமில்லாத சில முகங்கள், சில கைகள் ஆகியவற்றை கண்டதாகவும்/ கேட்டதாகவும் கூறினார்கள்.

ஹோமைப் பற்றிப் படித்து ஆர்வம் கொண்ட விஞ்ஞானி சர் வில்லியம் க்ரூக்ஸ் என்பவர் தானும் ஹோமை வைத்து ஆராய்ச்சிகள் நடத்தினார். அவருடன் லண்டனின் ராயல் சொசைட்டியின் இன்னொரு விஞ்ஞானி சர் வில்லியம் ஹக்கின்ஸ் உட்பட எட்டு கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர். ஒரு ஆராய்ச்சியில் ஒரு மரப்பலகையின் எடையை ஹோம் தொடாமலேயே கூட்டிக் குறைத்துக் காண்பித்தார்.

இன்னொரு ஆராய்ச்சியில் ஒரு பிரத்தியேக கூண்டு ஒன்றைத் தயாரித்து அதில் ஒரு இசைக்கருவியைத் தலைகீழாக வைத்து இசைக்கருவியின் பின்புறத்தை மட்டும் ஹோமால் ஒரு கையால் தொட முடிகிறாற் போல் அந்தக் கூண்டை ஹோம் அமர்ந்திருந்த மேசையினடியில் தள்ளி வைத்தார்கள். ஹோமின் மறு கையை மேசையின் மேல் வைக்கச் சொன்னார்கள். (விளக்கப்படம் இங்கு தரப்பட்டுள்ளது).
ஹோம் தொட முடியாத அந்த இசைக்கருவியின் ஆணிப்பட்டையில் இருந்து வித விதமாக இசை கிளம்பியதைக் கண்டு அனைவரும் வியந்தனர். ஒரு சந்தர்ப்பத்தில் ஹோம் அந்த இசைக்கருவியை எடுத்து அருகில் இருந்தவர் கையில் தந்த பின்னரும் கூட, யார் கைகளும் இசைக்கருவி மீது இல்லாத போதும் கூட இசை நிற்கவில்லை.

இது போன்ற நிகழ்ச்சிகளில் பலரும் வித்தியாசமான விளக்கொளிகளைக் கண்டனர். தட்டப்படும் ஓசையைக் கேட்டனர். மணிக்கட்டு வரையே தெரியக் கூடிய கைகளை மட்டும் கண்டனர். கூடியிருந்தவர்களுடன் அந்தக் கைகள் கை குலுக்கியும், மேசை நாற்காலிகளை நகர்த்தியும், இறந்தவர்களிடம் இருந்து செய்திகளை அங்கு வைக்கப்பட்டிருந்த எழுத்தட்டைகளை சேர்த்து வைத்துக் காட்டியும் அங்குள்ளவர்களை பிரமிக்க வைத்தன. ஹோம் இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் போது தன் கைகளையும் கால்களையும் அங்குள்ளவர்களைப் பிடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வார். தான் ரகசியமாக எதையும் இயக்குவதில்லை என்பதைப் புரிய வைக்க அப்படிச் செய்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

1852 முதல் ஹோம் செய்து காட்டிய இன்னொரு அற்புதம் அந்தரத்தில் நிற்பது. க்ரூக்ஸ் உட்பட பலர் அதைக் கண்டுள்ளார்கள். ஹோம் தரையிலிருந்து சுமார் ஆறு அங்குலங்கள் அந்தரத்தில் உயர ஆரம்பித்து பத்து வினாடிகள் அந்தரத்திலேயே நின்று மறுபடி தரைக்கு வந்ததைக் கண்ட ·ப்ராங்க் பொட்மோர் என்பவர் சாட்சிகளுடன் பதிவு செய்துள்ளார். பல சமயங்களில் பல அடிகள் மேலே அந்தரத்தில் நின்று காண்பிக்க இதில் ஏதோ ஏமாற்று வேலை இருக்கிறது என்று சந்தேகப்பட்ட ஒரு பத்திரிகை இது போன்ற ஏமாற்று வேலைகளை அம்பலப்படுத்துவதில் சமர்த்தரான எ·ப். எல். பர் என்ற நிருபரை அனுப்பியது.

அமெரிக்காவில் கனெக்டிகட்டில் வார்ட் சேனே என்ற செல்வந்தரின் வீட்டில் ஹோம் நிகழ்ச்சி ஒன்றில் பர் கலந்து கொண்டார். குறை காணப் போனவர் உண்மையாகவே அசந்து போனார். அந்தப் பத்திரிகையாளர் எழுதினார். "ஹோமின் கையை நான் பிடித்திருந்தேன். திடீரென்று ஹோம் தரையிலிருந்து ஒரு அடி தூரம் மேலே அந்தரத்தில் நின்றார். நான் அவருடைய காலையும் தொட்டுப் பார்த்தேன். மறுபடி கீழே வந்த அவர் அடுத்த முறை இன்னும் மேலே அந்தரத்தில் நின்றார். மூன்றாவது முறையோ அந்த அறையின் விட்டத்தைத் தொட்டுக் கொண்டு அந்தரத்தில் நின்றார். என்னைப் போல் அங்கு கூடியிருந்த அனைவரும் அதிசயித்து நின்றோம்...."

1868 டிசம்பரில் லார்ட் அடாரே, லார்ட் லிண்ட்சே, கேப்டன் வின்னே என்ற மூன்று பிரபலங்கள் முன்னிலையில் லார்ட் அடாரேயின் மாளிகையில் மூன்றாவது மாடியில் ஒரு அரை ஜன்னல் வழியாக அந்தரத்தில் வெளியே சென்று மறு அறையின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்தார். அந்த செய்தி பல பேரை பிரமிக்க வைத்தது என்றால் பலரை கடுமையாக விமரிசிக்க வைத்தது. அந்த மூன்று நபர்களும் சமூகத்தில் பெரிய மனிதர்கள், ஹோமிற்கு கள்ள சாட்சி சொல்ல வேண்டிய அவசியம் இல்லாதவர்கள் என்றாலும் அவர்களை ஹிப்னாடிசம் செய்து ஹோம் இதை நம்ப வைத்திருக்கலாம் என்று சிலர் விமரிசித்தார்கள்.

அதை கேப்டன் வின்னே உறுதியாக மறுத்தார். 'என்னை அறிந்தவர்கள் யாரும் என்னை அப்படி வேறொருவர் ஹிப்னாடிசம் செய்து நம்பவைக்க முடியும் என்று கூற மாட்டார்கள். அப்படியெல்லாம் ஏமாறக் கூடியவன் அல்ல நான்" என்றார். மேலும் ஹோம் நல்ல ஆரோக்கியமானவராக இருக்கவில்லை. காசநோயால் பாதிக்கப்பட்ட அவர் மிக பலவீனமாக இருந்தார். மூன்றாவது மாடியில், அதுவும் டிசம்பர் குளிரில் சர்க்கஸ் செய்து காட்டுவது போல் தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அளவு செய்து காட்டக் கூடிய சக்தியெல்லாம் அவரிடம் இருக்கவில்லை என்பதும் உண்மை.

இந்த அற்புதங்களுக்கெல்லாம் காரணமாக ஹோம் என்ன சொல்கிறார்? ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் சக்தி கொண்ட அவர் இந்த நிகழ்வுகளுக்கு தான் காரணமல்ல என்கிறார். "இதெல்லாம் நட்பான ஆவிகள் மூலமே சாத்தியமாகிறது. ஆனால் அவை எல்லாம் என் முழுக் கட்டுப்பாட்டில் இல்லை..."

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மேலும் பயணிப்போம்....

(தொடரும்)
- என்.கணேசன்
நன்றி: விகடன்

Wednesday, December 2, 2009

கருத்துகள் எல்லாம் தீர்ப்புகள் அல்ல


பெரும்பாலான மனிதர்கள் எதனுடைய மதிப்பையும் அடுத்தவர்களுடைய கருத்துகளை வைத்தே எடை போடுகிறார்கள். பலரும் ஒரு சாதாரண விஷயத்தை ஒஹோ என்று புகழ்ந்தால் அது உன்னதமாகத் தெரிகிறது. ஒரு உயர்ந்த விஷயத்தையும் பலரும் பரிகசித்தால் அது செல்லாக் காசாகி விடுகிறது. ஆனால் உண்மையான மதிப்பை பெரும்பாலானோரின் கருத்துகளை வைத்து எடை போடுவது சரியானதாக இருக்காது. ஏனென்றால் எல்லோரும் ஆழமாக அறிந்தே ஒன்றைப் பற்றிக் கருத்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. பெரும்பாலான மனிதர்கள் தங்கள் அறிவிற்கேற்பவே கருத்து கொள்கிறார்களே ஒழிய உண்மையான தன்மையின் அடிப்படையில் அல்ல. அவரவர் மனநிலை, அறிவு, அனுபவம், விருப்பு வெறுப்புகளை ஒட்டியே விமரிசனங்கள் எழுகின்றன. சிலர் அந்த சிரமத்தைக் கூட மேற்கொள்வதில்லை. அவர்கள் மதிப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே அவர்களுடைய கருத்தாகியும் விடுகின்றது.

நோர்மா ஜீன் பேக்கர் என்ற இளம்பெண் மாடலாகும் கனவுடன் ஒரு மாடலிங் கம்பெனிக்குச் சென்று வாய்ப்பு கேட்டார். அங்கே அவளை "நீயா, மாடலா?" என்று பரிகசித்தார்கள். "ஏதாவது குமாஸ்தா வேலைக்குச் செல். இல்லா விட்டால் திருமணம் செய்து கொண்டு வீட்டைக் கவனி" என்று அறிவுரையும் செய்து அனுப்பினார்கள். அவர்கள் கருத்தைத் தீர்ப்பாக எடுத்துக் கொண்டு தன் கனவை கலைத்து விட்டிருந்தால் ஹாலிவுட் உலகத்திற்கு "மர்லின் மன்றோ" என்ற அற்புதக் கதாநாயகி கிடைத்திருக்க மாட்டார். இன்றும் பேசப்படும் சிறப்பை இழந்திருப்பார்.

தமிழ்நாட்டில் அந்தக் காலத்தில் ஸ்ரீதர் ஒரு மிகப் பெரிய இயக்குனர். அப்படிப்பட்டவரிடம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு ஒரு தமிழ்ப்பெண் சென்றார். ஸ்ரீதர் "இந்த முகம் காமிராவுக்குப் பொருத்தமல்ல" என்று சொல்லி அனுப்பி விட்டார். அந்தப் பெண் தான் ஹிந்தித் திரையுலகில் கனவுக் கன்னியாக பல ஆண்டுகள் கோலோச்சிய ஹேமா மாலினி. "இவ்வளவு பெரிய இயக்குனர் சொல்லி விட்டாரே. உண்மையில் எனக்கு திரையுலக முகம் இல்லை" என்று திரும்பி இருந்தால் ஹேமா மாலினி அடையாளம் காணப்படாமலேயே போயிருப்பார்.

"மிகவும் மந்த புத்திக்காரன். அறிவு கூர்மை போதாது" என்று ஆசிரியர்களால் கருதப்பட்ட ஒரு இளைஞர் அதை ஏற்றுக் கொண்டு தன் திறமைகளில் நம்பிக்கை இழந்து பின்வாங்கி இருந்தால் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியாக உலகம் கருதும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை உலகம் இழந்திருக்கும்.

விமான இயந்திரவியல் படிக்க விண்ணப்பித்து பன்னிரண்டு பேர் டேராடூனில் நேர்முகத் தேர்வுக்குச் சென்றார்கள். அந்தப் பன்னிரண்டு பேர்களில் ஒருவர் மட்டும் தகுதியில்லை என்று நீக்கப்பட்டார். அவர் தான் டாக்டர் அப்துல் கலாம். விமான இயந்திரவியலுக்குத் தகுதியில்லை என்று நீக்கப்பட்டவர் பின்னாளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இயக்குனர் பதவி வகுத்து பல சாதனைகள் புரிந்தது விந்தையல்லவா?

பள்ளிக்கூட கூடைப்பந்தாட்டக் குழுவில் விளையாடத் தகுதியில்லாதவர் அன்று மறுதலிக்கப்பட்ட ஒருவர் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற கூடைப் பந்தாட்ட வீரராகப் புகழ்பெற்றார். அவர் தான் மைக்கேல் ஜோர்டான். பள்ளிக்கூட அளவிலேயே அவர் சோர்ந்து ஆடுவதை விட்டிருந்தால் வாழ்ந்த சுவடு தெரியாமல் அவர் போயிருப்பார்.

"ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தக் கூடத் திராணியற்றவள்" என்று கேவலமாக ஒரு கன்னியாஸ்திரீயைப் பார்த்து பெரிய மதகுரு சொன்னார். தன் இயக்கத்திற்காக லொரெட்டோ கன்னிமடத்தைத் துறக்க அனுமதி கேட்ட போது தான் இந்த வார்த்தைகளை அவர் கேட்க வேண்டி வந்தது. இதற்குக் கூடத் திராணியில்லாத நீ ஒரு இயக்கத்தையா வழிநடத்தப் போகிறாய் என்கிற ரீதியில் பேசப்பட்ட கன்னியாஸ்திரீ வேறு யாரும் அல்ல கல்கத்தா வீதிகளில் பெரும் சேவை புரிந்த, நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா தான்.

ஒரு செய்தித்தாளில் "கார்ட்டூனிஸ்டா"கத் தன் வேலையை ஆரம்பித்த இளைஞருக்கு வேலை சில நாட்களிலேயே போய் விட்டது. அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் சொன்ன காரணம் "உனக்குக் கற்பனைத் திறமையே இல்லை" அந்த இளைஞர் யார் தெரியுமா? கார்ட்டூன் உலகின் மேதை வால்ட் டிஸ்னி. அவர் உருவாக்கிய டிஸ்னிலேண்ட் என்ற பரவச உலகம் பல நாடுகளில் இன்றும் கற்பனைத் திறனின் சிகரமாகக் கருதப்படுகிறது.

இப்படி உதாரணங்களால் நூற்றுக்கணக்கான பக்கங்களை ஆதாரத்தோடு நிரப்ப முடியும் என்றாலும் செய்தி இது தான் - மற்றவர்களுடைய மோசமான கருத்துக்களை தீர்ப்புகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள். மனம் சோர்ந்து விடாதீர்கள். உங்களுக்குள் இருக்கும் உற்சாகத் தீயை அணைந்து விட அனுமதிக்காதீர்கள். அப்படி அணைய விடும் போது தான் அவர்கள் கருத்து தீர்ப்பாகிறது. எதில் உங்களுக்கு அளவிட முடியாத ஆர்வம் இருக்கிறதோ, அதற்காக உழைக்கவும் நீங்கள் தயாரோ அதில் நீங்கள் தாக்குப்பிடித்தால் போதும், நிச்சயமாக வெற்றியடைவீர்கள்.

- என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

Friday, November 27, 2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 12

ஜிம்மி கார்ட்டர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது அமெரிக்க விமானம் ஒன்று ஆப்பிரிக்கா பகுதிக்கு சென்று பின் காணாமல் போயிற்று. ஆப்பிரிக்கக் காடுகளில் எங்கோ விபத்தில் சிக்கி இருக்க வேண்டும் என்று ஊகித்தாலும் அமெரிக்க உளவு விண்வெளிக்கலங்கள் ஆன மட்டும் முயன்றும் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அமெரிக்க உளவுத்துறை (CIA)யின் தலைவராக இருந்த
ஸ்டான்ஸ்·பீல்ட் டர்னர் தொலைநோக்கு சக்தி படைத்த ஒரு அபூர்வப் பெண்மணியை அணுகினார். அந்தப் பெண்மணி தன் அபூர்வசக்தி மூலம் விமானம் இருக்கும் இடத்தின் அட்சரேகை, தீர்க்கரேகையைச் சொன்னார். விண்வெளிக்கலத்தின் காமிராக்களை அந்த இடத்தில் மையப்படுத்தி கூர்ந்து பார்த்த போது அந்த விபத்துக்குள்ளாகி இருந்த விமானத்தைக் கண்டு பிடித்தனர்.

இந்தத் தகவலை ஜிம்மி கார்ட்டர் அட்லாண்டாவில் உள்ள ஒரு கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த போது வெளியிட்டார். ஸ்டான்ஸ்·பீல்ட் டர்னரும் பின்னர் செய்தியாளர்கள் கேட்ட போது அதை ஒத்துக் கொண்டார். ஜிம்மி கார்ட்டர் வெளிப்படையாகச் சொல்லும் வரை இது போன்ற அதீத மனசக்திகளைப் பற்றி மேல் மட்டத் தலைவர்களோ, அதிகாரிகளோ இது பற்றி வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும் ரஷ்யாவைப் போலவே அமெரிக்காவும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டியது.

உண்மையில் 1981 முதல் 1995 வரை அமெரிக்க அரசாங்கம் மனோசக்திகளைப் பரிசீலிக்க ஐந்து விஞ்ஞான ஆராய்ச்சிக் குழுக்களை நியமித்தது. அந்த ஐந்து அறிக்கைகளுமே முழுமையாக இல்லா விட்டாலும் பல கேஸ்களில் அசாதாரண நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டியிருக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒத்துக் கொண்டன. மனித மனம் மற்ற மனித மனங்களுடனும், ஜடப்பொருள்களுடனும் கூட ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கருதுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் பெரும்பாலான விஞ்ஞானிகள் விவரிக்க முடியாத அந்த விளைவுகளால் நம்பிக்கை கொள்ள மறுக்கிறார்கள் என்றும் தெரிவித்தனர்.

அதிகமாய் விளம்பரம் செய்யாத, அடக்கி வாசித்த ஸ்டான்·போர்டு ஆராய்ச்சிக் கழகத்தை (SRI) அமெரிக்க உளவுத் துறையான CIA மனோசக்தி ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்க ராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் எட் தாம்ஸன் என்பவர் சில வருடங்களுக்கு முன் இங்கிலாந்து தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் SRIயின் சில ஆராய்ச்சிகள் தன்னை மிகவும் கவர்ந்தது என்றும் ஞான திருஷ்டி எனப்படும் தொலை நோக்குப் பரிசோதனைகள் செய்யத் தான் முடிவெடுத்ததாகக் கூறுகிறார்.

SRI யின் ஆரம்பகால (ஜூன் 1972) ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட அபூர்வசக்தி மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர் நியூயார்க்கைச் சேர்ந்த கலைஞர் இங்கோ ஸ்வான் என்பவர். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு ஸ்டான்·போர்டு ஆராய்ச்சிக் கூடத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் வரவழைத்தனர். அவர் வருவதற்கு முன் ஒரு புதிய வகை மேக்னட்டோமீட்டர் ஒன்றை ஆராய்ச்சிக்கூடத்தின் தரைக்கும் கீழே உள்ள ரகசிய இடத்தில் அனுமினியப் பெட்டியில் செம்பு மற்றும் வேறொரு உலோகத்தால் கவசமாக நன்றாக மறைத்து வைத்தனர். அந்த மேக்னட்டோமீட்டரின் செயல்பாடுகளை ஸ்வானுக்குத் தெரியாமல் கண்காணிக்க மறைவாக வேறு ஒரு ஏற்பாடும் செய்திருந்தார்கள்.

ஆனால் இங்கோ ஸ்வான் வந்தவுடனேயே அந்த மேக்னட்டோமீட்டர் தாறுமாறாக செயல்பட ஆரம்பித்தது. ஸ்வான் தரையின் அடியில் ஏதோ ஒரு கருவியை உணர்வதாகக் கூறினார். அந்தப் புதிய கருவியின் வடிவம் இன்னும் வெளியுலகிற்குப் பிரசுரமாகாதது என்றாலும் ஸ்வான் ஏறத்தாழ சரியாகவே அந்தக்கருவியினை வர்ணித்தார்.

அதைக் கேள்விப்பட்ட அமெரிக்க உளவுத்துறையினர் இருவர் SRI க்கு வந்து சில சிறிய பரிசோதனைகளை ஸ்வானிடம் செய்தனர். அவர்கள் ஒரு பெட்டியில் மறைத்து வைத்திருந்த சிறு பொருள்களைக் கண்டு பிடிக்கச் சொன்னார். ஸ்வான் பெரும்பாலானவற்றைச் சரியாகச் சொன்னார். ஒரு பெட்டியைக் காண்பித்தவுடன் "வெளிர் காவி நிறத்தில் இலை வடிவமுள்ள பொருள் உள்ளது. அது அசைவது போலத் தெரிகிறது". அந்தப் பெட்டியில் இருந்தது அவர் கூறிய எல்லா அமசங்களும் நிறைந்த ஒரு அந்துப் பூச்சி.

SRI ஸ்வானைப் போலவே வேறு சிலரையும் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தியது. சிலருக்கு உண்மையான பெயர்களைத் தவிர்த்து எழுத்துடன் எண்ணை இணைத்து அடையாளப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டன. அப்படிப்பட்டவர்கள் V1 என்பவர் வெகு தொலைவில் இருந்த குறியிலக்குகளை கிட்டத்தட்ட மிகச்சரியாகவே வரைந்தார். அந்தப் படங்களும், குறியிலக்குகளும் இங்கே காட்டப்பட்டுள்ளன.


சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் டிஸ்கவரி சேனலிலும் மனதின் சக்திகள் பற்றிய ஆதாரபூர்வ நிகழ்ச்சிகள் பற்றி சில நாட்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. அப்போது அமெரிக்க உளவுத் துறை ஒரு அதீத சக்தி படைத்த நபரைக் கொண்டு ரஷ்ய அணு ஆயுத உற்பத்திக் கிடங்கு ஒன்றின் படத்தை வரைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இப்போது போல விண்வெளிக் கலங்கள் வசதி இல்லாத காலக் கட்டத்தில், ரஷ்யாவுடன் பனிப்போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் செய்யப்பட்ட இந்த முயற்சியில் அந்த நபர் வரைந்த படம் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேலாகவே பொருந்தி வந்ததாக அந்த நிகழ்ச்சியாளர் கூறினார். பனிப்போர் முடிவடைந்து பின் நேரடியாக அந்த கிடங்கைப் படம் எடுத்து ஒப்பு நோக்கிய போது அதிகாரிகள் அசந்து போனதாக நிகழ்ச்சியாளர் கூறினார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அபூர்வ சக்தி மனிதர் பெயரை வெளியிட மறுத்த நிகழ்ச்சியாளர்கள் அவர் பெயரை எக்ஸ் என்றே அழைத்தார்கள். சில நாட்களுக்கு தினமும் அவரை ஒரு குறிப்பிட்ட ராணுவ ரகசிய அறைக்கு அழைத்து வந்து உட்கார வைத்து அதை வரைந்ததாகச் சொன்னார்கள்.

இப்படி விஞ்ஞான வளர்ச்சியில் சிகரத்தையே எட்டியிருந்த வல்லரசு நாடான அமெரிக்கா கூட, முக்கியமாய் CIA போன்ற உளவுத்துறை கூட ஆராய்ந்து ஆழ்மனதின் அற்புத சக்திகளைப் பயன்படுத்தியுள்ளது என்னும் போது அதன் பெருமையையும், உண்மையையும் உணர முடிகிறதல்லவா?

மேலும் பயணிப்போம்....

(தொடரும்)

என்.கனேசன்

நன்றி: விகடன்

Monday, November 23, 2009

மனதில் சுமப்பது குப்பைகளையா?



பாரதியார் குள்ளச் சாமி என்ற ஒரு சித்தரை அறிந்திருந்தார். அவர் மீது மிகவும் மதிப்பும் கொண்டிருந்தார். ஒரு முறை குள்ளச்சாமி பழங்கந்தைகளும், குப்பைகளும் கொண்ட அழுக்கு மூட்டை ஒன்றை முதுகில் சுமந்தபடி வருவதைக் கண்ட பாரதியாருக்கு என்னவோ போல் ஆகி விட்டது. சித்தராகக் கொண்டாடியவரை இப்படி பழங்குப்பை சுமக்கும் பைத்தியக்காரராகக் காணும்படியாகி விட்டதே என்று பாரதியாருக்கு ஒரே வருத்தம்.

"ஐயா ஏனிந்த கோலம். உங்கள் செய்கை பைத்தியக்காராரரின் செயல் போலல்லவா இருக்கிறது" என்று கேட்டார் பாரதி.

"நான் குப்பைகளை வெளியே சுமந்து கொண்டிருக்கிறேன். நீ உள்ளே சுமந்து கொண்டிருக்கிறாய்" என்று புன்னகையுடன் சொன்ன குள்ளச்சாமி பாரதியாரைச் சிந்திக்க வைத்து விட்டு சென்று விட்டார்.

பாரதியாரின் பாடல் இதோ-

மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்து கொண்டென் எதிரே வந்தான்.
சற்றுநகை புரிந்தவன் பால் கேட்கலானேன்:
"தம்பிரானே இந்தத் தகைமை என்னே?
முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றோ?
மூட்டை சுமந்திடுவதென்னே? மொழிவாய்" என்றேன்.

புன்னகைபூத் தாரினும் புகலுகின்றான்;
''புறததேநான் சுமக்கின்றேன்; அகத்தி னுள்ளே
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ"
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்.
மன்னவன்சொற் பொருளினையான் கண்டு கொண்டேன்;
மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே
இன்னலுற்று மாந்தரெல்லாம் மடிவார் வீணே,
இருதயத்தில் விடுதலையை இசைத்தால் வேண்டும்.

குள்ளச்சாமியின் பதில் பாரதியாரை மட்டுமல்ல நம்மையும் சிந்திக்க வைக்கக்கூடிய உண்மை. வெளியே குப்பைகளை சுமப்பவரைக் கண்டால் பைத்தியக்காரர் என்று ஏளனம் செய்யும் நாம் அதை விட மோசமானதும் பழமையானதுமாய் எத்தனை குப்பைகளை நம் மனதில் சுமந்து கொண்டிருக்கிறோம்? புறத்தை சுத்தமாய், அழகாய் வைத்திருக்கும் நம்மில் எத்தனை பேர் அகத்தை சுத்தமாய், அழகாய் வைத்திருக்கிறோம்?

மனதின் உள்ளே இருக்கும் பழைய நினைவுகளில் எத்தனை நினைவுகள் இனிமையானவை? எத்தனை நினைவுகள் பயனுள்ளவை? இந்தக் கணக்கை ஒவ்வொருவரும் எடுத்துப்பார்த்தால் நன்மையானவையும், பயனுள்ளவையும் நம் மனதில் மிகச் சொற்பமானதாகவே இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பெரும்பாலான மனிதர்கள் தங்கள் வாழ்வில் நிகழும் நன்மைகளையும், பெற்ற நல்லவற்றையும் நீரில் எழுதி வைக்கிறார்கள். நேர்ந்த தீங்குகளையும், இழந்தவற்றையும், தொலைத்தவற்றையும் கல்லில் எழுதி வைத்துப் பாதுகாக்கிறார்கள். அங்கலாய்க்கிறார்கள். அந்தப் பயன்படாத, நிம்மதியைக் குலைக்கும் நினைவுகள் பழங்குப்பைகளே. குப்பைக் கூளங்கள் மிகுதியாக இருக்கும் இடங்கள் நோய்களின் உற்பத்தி ஸ்தானங்கள். எத்தனையோ மனநோய்களின் உற்பத்திக்காரணங்கள் இது போன்ற பழங்குப்பைகள் தான்.

குள்ளச்சாமி சுட்டிக் காட்டிய உண்மை உறைக்க பாரதியார் இது போன்ற குப்பைகள் சுமப்பது முட்டாள்தனம் என்று அழகாய் பாடியுள்ளார்.

சென்றதினி மீளாது;மூடரே,நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளையாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும்.

மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா, அந்தோ!
மேதையில்லா மானுடரே!

கடந்த காலத்தின் இனிமைகளை கல்லில் செதுங்குங்கள். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களில் இருந்து பாடங்கள் கற்று பாடங்களை மட்டும் நினைவு வைத்துக்கொண்டு கசப்பான அனுபவங்களை குப்பைகளாய் எண்ணி அகற்றி விடுங்கள். குப்பைகளை சுமப்பதில் அர்த்தம் இல்லை. மேலும் நடந்து முடிந்த, மாற்ற முடியாத விஷயங்களை மனதில் எண்ணி உருகும் போது நிகழ்கால நல்ல விஷயங்களை அனுபவிக்கத் தவறி விடுகிறோம். இது இரட்டை நஷ்டமே அல்லவா?

நம் நிம்மதியைக் குலைப்பது நம் பழைய தவறான செயல்கள் என்றால் இனி அப்படி செய்யக் கூடாது என்று உறுதியாக தீர்மானிப்பதைத் தவிர அதுகுறித்து நம்மால் செய்ய முடிவது வேறொன்றுமில்லை. நம்மை அலைக்கழிக்க வைப்பது அடுத்தவர் செயல்கள் என்றால் இனி அது போன்ற செயல்கள் நம்மை பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து அதற்கேற்ப நம்மைத் தற்காத்துக் கொள்வதே நாம் செய்ய வேண்டிய அறிவார்ந்த செயல். அதை விட்டு அப்படியாகி விட்டதே என்று எண்ணி எண்ணி வருந்தியபடியே இருப்பது முட்டாள்தனமே.

பாரதியின் "இன்று புதிதாய் பிறந்தோம்" என்ற வரியை தாரக மந்திரமாய் எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையில் ஒவ்வொரு நாளும் நம் வாழ்வின் புதிய பக்கமே. எழுதி முடித்த பக்கங்களைத் திருத்தும் சக்தி நமக்கில்லை என்றாலும் புதிதாய் எழுதப்போகும் பக்கங்களை எப்படி நிரப்புகிறோம் என்பது நம் கையிலேயே அல்லவா இருக்கிறது? அந்த சுதந்திரத்தை முறையாக நாம் பயன்படுத்திக் கொண்டால் இனிவரும் நாளெல்லாம் இனிய நாளே!

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

Friday, November 20, 2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-11


ஸ்வாமி ராமாவைப் போலவே ஜேக் ஷ்வார்ஸ் என்ற ஹாலந்துக்காரரும் தன் உடலில் பல விந்தைகள் செய்து காட்டக் கூடியவராக இருந்தார். ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் ஆணிகளின் படுக்கையில் படுப்பது, கூரிய வாள்களின் மேல் நடனமாடுவது, ஆணிகளையும், ஊசிகளையும் உடலில் துளைத்துக் கொண்டு பின் காயங்களை ஆற வைத்துக் காட்டுவது போன்ற செயல்களைக் காட்டி வந்த அவர் இரு முறை இரண்டாம் உலகப் போரில் நாசிகளிடம் சிக்கி சித்திரவதைகளுக்கு ஆளானார். இரண்டாம் முறை சிக்கிய பின் மற்ற இரண்டு கைதிகளுடன் சுவரின் கீழ் சுரங்கத்தைத் தோண்டி ஒரு மாத காலத்திற்குள் தப்பி விட்டார். பின் இங்கிலாந்து ராணுவத்தில் சேர்ந்து பணி புரிந்த அவர் பின்னர் அமெரிக்காவில் குடியேறினார்.

ஜேக் ஷ்வார்ஸ் 1958ல் மனித உடலின் மீது மனதிற்குள்ள சக்தியை வெளிப்படுத்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் அலெத்தியா உடல்-உள்ளம் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார். ஸ்வாமி ராமாவை ஆராய்ச்சி செய்த மென்னிங்கர் நிறுவனம் அவரையும் ஆராய்ச்சி செய்தது. பெரிய ஊசி ஒன்றை எடுத்து அவர் தனது கையில் குத்திக் கொண்ட பின்னரும் இரத்தம் அவர் உடலிலிருந்து கசியாததைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் திகைத்தனர். ஒரு ஆராய்ச்சியாளர் "இரத்தத்தைக் கசிய வையுங்கள் பார்க்கலாம்" என்று சொல்ல அடுத்த கணம் ஷ்வார்ஸ் அந்த ஊசியைக் குத்திய இடத்திலிருந்து இரத்தத்தை கசிய விட்டார். ஆராய்ச்சியாளர்கள் பெருகி வரும் இரத்தத்தை நிறுத்தச் சொன்னார்கள். அவர் அடுத்த கணமே அந்த இரத்தக் கசிவை நிறுத்திக் காட்டினார்.



சாதாரண ஊசிகள் அல்லாமல் துருப்பிடித்த ஊசிகள் மற்றும் ஆணிகளாலும் தன் உடலை ஷ்வார்ஸ் துளைத்துக் காண்பித்தார். ஆனால் அவர் உடலில் எந்த பாதிப்பும் இல்லை. எரியும் சிகரெட்டுகளை உடலில் அழுத்திக் காண்பித்தார். சிவந்த, கருகிய காயங்கள் தெரிந்தனவே ஒழிய அவற்றாலும் அவர் உடலில் எந்தப் பாதிப்பும் இல்லை. ஊசிகள், சிகரெட்டுகளால் ஏற்பட்ட காயங்கள் உடனடியாக ஆறின. எப்படிப்பட்ட வடுக்களானாலும் 24 மணி நேரம் முதல் 48 மணிகளுக்குள் உடலிலிருந்து மறைந்தன. வருடக்கணக்கில் இது போன்ற செயல்களில் ஈடுபட்ட ஷ்வார்ஸின் தோல் எந்த வடுவுமில்லாமல் குழந்தையின் தோலைப் போல் மொழு மொழுவென்று இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இத்தனை அற்புதங்கள் புரிந்த ஷ்வார்ஸ் அதைத் தன்னால் மட்டுமே முடிந்த பெருஞ்சாதனையாகக் கருதவில்லை. மூளை அலைகளில் ஒரு குறிப்பிட்ட அலையை ஏற்படுத்திக் கொண்ட பின்னர் என்ன கட்டளையிட்டாலும் உடல் அதை ஏற்றுக் கொள்ளும் என்றார். சரியான பயிற்சியால் இதை யாராலும் செய்ய முடியும் என்றார். சில மூச்சுப் பயிற்சிகளாலும், தியானத்தாலும் மூளையில் அந்த அலைகளை ஏற்படுத்த முடியும் என்று கூறினார். 2000 ஆம் ஆண்டு இறந்த ஜேக் ஷ்வார்ஸின் அலெத்தியா உடல்-உள்ளம் நிறுவனம் இன்றும் செயல்பட்டு வருகிறது.

இதே போல் சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு உடலைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த நரசிங்கஸ்வாமி என்ற யோகியைப் பற்றி பால் ப்ரண்டன் என்ற தத்துவ ஞானி தன் "ரகசிய இந்தியாவில் ஒரு தேடல்" என்ற நூலில் குறிப்படுகிறார். சர் சி வி இராமன் உட்படப் பல விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் முன்னிலையில் கல்கத்தாவில் ப்ரசிடென்ஸி கல்லூரி இயற்பியல் அரங்கத்தில் நரசிங்கஸ்வாமி செய்து காட்டிய அற்புதத்தை டாக்டர் பாண்ட்யோபாத்யாயா என்பவர் மூலம் கேள்விப்பட்டதாக அவர் சொன்னார். விஞ்ஞானிகள், மருத்துவர்கள் அடங்கிய குழு நரசிங்கஸ்வாமிக்கு கந்தக அமிலம், கார்பாலிக் அமிலம், பொட்டாசியம் சயனைடு மூன்றும் கலந்த கலவையை ஒரு பாட்டிலில் தர அவர் அதை அவர்கள் முன்னிலையில் குடித்தார். இதில் ஒன்றே கொடிய விஷம். மூன்றும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? பிறகு கண்ணாடியைப் பொடி செய்து தந்தனர். அவர் அதையும் விழுங்கினார். என்ன தான் செய்து காட்டுவேன் என்று நரசிங்கஸ்வாமி சொல்லியிருந்தாலும் இந்த மூன்றைக் குடித்து அவருக்கு ஏற்படப் போகும் உயிராபத்திற்கு உதவ மருத்துவர் குழு தயாராகவே இருந்தது. ஆனால் நரசிங்கஸ்வாமி எந்த வித பாதிப்பும் இல்லாமல் சகஜமாகவே இருந்திருக்கிறார். மருத்துவக் குழுவினரின் உதவி தேவையிருக்கவில்லை.

அவர் முன்னால் இருந்த குழுவினர் எந்த விதத்திலும் ஏமாந்து விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தனர். மூன்று மணி நேரமாகியும் பாதிக்கப்படாமல் இருந்த நரசிங்கஸ்வாமி ஏதாவது கண்கட்டு வித்தை செய்து அந்த அமிலக்கலவையைக் குடிக்கவில்லையோ என்ற சந்தேகத்தில் அவர் வயிற்றுக்குள் இருந்தவற்றை பம்ப் செய்து வெளியே எடுத்து மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தனர். அதில் அத்தனை விஷங்களும் இன்னமும் இருந்தன. மறு நாள் அவர் மல பரிசோதனை கூட செய்து பார்த்திருக்கின்றனர். கண்ணாடித் துகள்கள் அவற்றில் இன்னமும் இருந்திருக்கின்றன.

தன் உடல் மீது இப்படியொரு கட்டுப்பாட்டை ஒருவரால் வைத்துக் கொள்ள முடியும் என்பதை அதுவரை
கண்டிராத அந்தக் குழுவினர் "எப்படி இந்தக் கொடிய விஷங்கள் உங்கள் உடலைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்கிறீர்கள்?" என்று நரசிங்கஸ்வாமியைக் கேட்ட போது அவர் சொன்னாராம். "நான் உடனடியாக யோக நித்திரைக்குப் போய் என் மனதை ஒருமைப்படுத்தி இந்த விஷங்களுக்கு எதிர்ப்பு சக்தியை என் உடலில் உருவாக்கி விடுவேன்.."

(இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட பால் ப்ரண்டன் நரசிங்கஸ்வாமியை சந்திக்க முயன்றார். ஆனால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தன் யோக சக்தியை வெளிப்படுத்திக் காட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எப்போதும் பயணத்தில் இருந்த அவரை பால் ப்ரண்டனால் சந்திக்க முடியவில்லை.

பால் ப்ரண்டன் 1932ஆம் ஆண்டு நரசிங்கஸ்வாமியின் மரணத்தை பத்திரிக்கைகளில் பார்க்க நேர்ந்தது. ரங்கூனில் நரசிங்கஸ்வாமி இப்படி ஒரு நிகழ்ச்சியில் செய்து காட்டி முடித்த பிறகு பல பத்திரிக்கையாளர்கள், அவரைப் பார்க்க வந்தவர்கள் எல்லோருமாய் அவரை சூழ்ந்து கொள்ள அவரால் உடனடியாக யோக நித்திரைக்குச் செல்ல முடியாததால் விஷ முறிவுக்கான சக்தியை உடலில் ஏற்படுத்திக் கொள்ள அவரால் முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக அதனால் அவர் உடனடியாக அங்கேயே அவர் இறந்து போனார்.)

மனித மனம் தன் உடலில் இவ்வளவு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள முடியும் என்றால், இத்தனை சாதனகளை உடலில் புரிய முடியும் என்றால் புற்றீசல் போல் பலப்பல நோய்கள் கிளம்பி வரும் இக்காலத்தில் நாம் பெரும்பாலான நோய்களின் தீர்வாக மனதை ஏன் முறையாகப் பயன்படுத்தக் கூடாது?

சிந்தியுங்கள். மேலும் பயணிப்போம்...

(தொடரும்)

-என்.கணேசன்

நன்றி: விகடன்

Monday, November 16, 2009

வெற்றிக்குணங்கள் 13




ஒரு துறையில் வெற்றியடைந்து சாதனையாளராக உலகால் அடையாளம் காணப்படுவது சிறப்பு என்றால் பலதரப்பட்ட துறைகளில் பல சாதனைகள் புரிந்து சரித்திரம் படைக்க முடிவது சிறப்பின் சிகரமே. அப்படிப்பட்ட சிகரங்கள் சரித்திரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு அபூர்வமே. ஏனென்றால் ஒரு துறையில் சாதனை புரியவே ஒரு வாழ்க்கை ஆயுள் போதாதென்று பலரும் எண்ணுகையில் அந்தக் குறுகிய வாழ்க்கையில் பல துறைகளில் சாதனைகள் புரிந்திட ஒருவரால் முடிகிறது என்றால் அது கவனிக்கப்பட வேண்டிய வாழ்க்கை அல்லவா? அது எப்படி சாத்தியமாயிற்று என்றறிய ஆர்வம் காட்டுதல் வெற்றியடையத் துடிக்கும் அனைவருக்குமே இயல்பல்லவா?

எழுத்தாளர், விஞ்ஞானி, அரசியல் வல்லுனர், கல்வியாளர், பத்திரிக்கையாளர், இசைக்கலைஞர், தத்துவஞானி, நாட்டின் உயர்பதவிகள் பலவற்றை அலங்கரித்தவர் என்றெல்லாம் ஒரே மனிதரைப் பற்றி சொல்ல முடியும் என்றால் அது பிரமிக்க வைக்கும் செய்தியே. ஏனென்றால் இவற்றில் சில ஒன்றுக்கு ஒன்று சிறிதும் சம்பந்தப்படாத, அல்லது நேர்மறையான துறைகளே. அவர் சாதனை புரிந்த துறைகளாக வேறு சிலவற்றின் பெயர்களைக் கூடக் கூறலாம். இத்தனை அடைமொழிகளுக்கும் பொருந்தக் கூடிய ஒரு மனிதராக உலகம் ஒரே ஒருவரைத் தவிர வேறொருவரை இதுவரை கண்டதில்லை. அவர் தான் பெஞ்சமின் ·ப்ராங்க்ளின்.

அவர் - அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதிக் கையெழுத்திட்ட ஐவரில் ஒருவர், அமெரிக்காவை உருவாக்கியவர்களில் ஒருவர், இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர், மின்சாரம் குறித்த பல ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர், அர்மோனிகா என்ற ஒருவகைக் கண்ணாடியைக் கண்டுபிடித்தவர், பெனிசில்வேனியா பல்கலைக்கழகம் அமையக் காரணமாய் இருந்தவர், வயலின் மற்றும் கிடார் கலைஞர், சிறந்த செஸ் ஆட்டக்காரர், நிறைய விஷயங்களைப் பற்றி நிறைய எழுதியவர் - இப்படி இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம். ஒரு வாழ்க்கையில் இத்தனை முத்திரைகள் பதிக்க முடிந்தவர் தன் வாழ்க்கையில் மிக நல்ல மனிதர் என்றும் அறிந்தவர்களால் கருதப்பட்டார். இதை விடப் பெரிய வெற்றி வாழ்க்கை இருக்க முடியுமா?

அப்படிப்பட்ட வெற்றி வாழ்க்கை வாழ்ந்த மனிதர் தான் பின்பற்ற வேண்டிய பண்புகளாகப் பதின்மூன்று குணங்களை தன் இளமையிலேயே குறித்துக் கொண்டு வாழ முயற்சித்ததாகக் கூறினார். அவை-

1) மிதத்தன்மை : உண்பதிலும், அருந்துவதிலும் மிதத்தன்மை முக்கியம். ஊக்கத்தைக் கெடுக்கும் அளவு உண்ணாதே. வெறி கொள்ளும் அளவு குடிக்காதே.

2) நாவடக்கம் : பிறருக்கோ, உனக்கோ நலம்புரியும் சொற்களை அன்றி வேறு சொற்க¨ளைப் பேசாதே. வெறும் நேரம் போக்கும் பேச்சில் எப்போதும் கலந்து கொள்ளாதே.

3) ஒழுங்குமுறை : உன் பொருள்கள் ஒவ்வொன்றையும் உரிய இடத்தில் வைக்கப் பழகு. உன் தொழிலின் ஒவ்வொரு பகுதிக்கும் உரிய ஒரு காலத்தை ஒதுக்கி வை.

4) உறுதியுடைமை : செய்ய வேண்டியவற்றைச் செய்ய உறுதி கொள். உறுதி கொண்டவற்றைத் தவறாது செய்.

5) சிக்கனம் : உனக்கோ, பிறருக்கோ நன்மை செய்வதற்காக அல்லாமல் வேறெதற்காகவும் பணத்தை செலவழிக்காதே. அதாவது, வீண் செலவு செய்யாதே.

6) முறையான உழைப்பு : காலத்தை சிறிதும் இழக்காதே. எப்போதும் பயனுள்ள எதையாவது செய்து கொண்டிரு. தேவையற்ற செயல்கள் யாவையும் ஒழித்து விடு.

7) வாய்மை : பிறரைப் புண்படுத்தும் சூழ்ச்சி செய்யாதே. இரண்டகமில்லாமலும், நேர்மையுடனும் சிந்தனை செய். பேசும் போதும் அப்படியே பேசு.

8) நேர்மை : தீங்கு செய்து அதன்மூலம் யாருக்கும் தீமை உண்டாக்காதே. அது போல கடமைகளை செய்யாமல் விட்டும் அடுத்தவருக்கு தீங்கு செய்யாதே.

9) நடுநிலையுணர்வு : எதிலும் அதீதத் தன்மையை விலக்கு. உனக்கு இழைத்த தீங்குகளுக்காகக் கூட நீ அடுத்தவரிடம் சினம் கொள்ளாதிரு.

10) துப்புரவு : உடல், உடை, இருக்குமிடம் ஆகியவற்றில் எத்தகைய துப்புரவுக் கேட்டுக்கும் இடம் அளிக்காதே.

11) மன அமைதி : சின்னச் சின்ன விஷயங்களுக்காகவோ, தவிர்க்க முடியாத மற்றும் தற்செயலாய் நிகழும் நிகழ்ச்சிகளுக்காகவோ மன அமைதி இழக்காதே.

12) ஒழுக்கமுடைமை : அயர்வு அல்லது பலவீனம் அடையும் அளவுக்கோ, உன்னுடைய மற்றும் அடுத்தவருடடைய அமைதிக்கோ, புகழுக்கோ கேடு உண்டாக்கும் அளவுக்கோ இன்பம் நுகராதே.

13) பணிவுடைமை : இயேசுநாதரையும், சாக்ரடீசையும் பின்பற்று.

பெஞ்சமின் ·ப்ராங்க்ளின் இந்த பண்புகளைத் தன் வாழ்க்கையில் இளமையில் இருந்தே பின்பற்றத் துவங்கியது தான் தன் வெற்றிகளுக்கும் மன அமைதிக்கும் காரணம் என்று கருதினார். எல்லா நேரங்களிலும் இதைப் பின்பற்றியதில் வெற்றி பெற முடிந்ததில்லை என்பதை ஒத்துக் கொள்ளும் அந்தப் பேரறிஞர் ஆனாலும் திரும்பத் திரும்ப இவற்றைத் தன் வாழ்க்கையில் பின்பற்ற முயன்றதாகவும் சிறிது சிறிதாக பின்பற்றுவதில் வெற்றி பெற முடிந்ததாகவும் கூறுகிறார்.

அவர் வாழ்வில் எளிய வாழ்க்கையே இந்தப் பண்புகளுக்கு அஸ்திவாரமாக இருந்தது என்றும் சொல்லலாம். தன் சுய சரிதத்தில் ஓரிடத்தில் கூறுகிறார். "நான் எளிய வாழ்க்கையையே முக்கியமாக எடுத்துக் கொண்டேன். ஏனென்றால் நல்லறிவையும் மூளைத் தெளிவையும் தரத் தக்க பண்பு அதுவே. வாழ்க்கையில் இடைவிடாது குறுக்கிடும் மாயக்கவர்ச்சிகளை எதிர்த்து நிற்கவும், பழைய பழக்கங்களின் ஓய்வொழிவில்லாத ஈர்ப்பாற்றலைத் தடுத்து சமாளிக்கவும் தளராத விழிப்புணர்வு தேவை. மூளைத் தெளிவும் அமைதியும் இல்லா விட்டால் இந்தத் தளரா விழிப்புணர்வு ஏற்படாது"

பல துறைகளில் வெற்றி பெறுவதில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட மனநிலையிலும் ஒரு நிறைவை அவர் காண இந்த 13 பண்புகளும் அவருக்கு உதவியிருக்கின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகமிருக்க முடியாது. ஏனென்றால் இந்தப் பதின்மூன்றில் எந்த நல்ல பண்பும் விட்டுப் போகவில்லை. ஒரு மாபெரும் வெற்றியாளர் பின்பற்றி வெற்றி பெற்ற பண்புகளை நாமும் ஏன் பின்பற்றி வெற்றி பெறக் கூடாது?

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

Wednesday, November 11, 2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-10

ஸ்பூன், இரும்புக்கம்பி, சாவி போன்ற பொருள்களை சிலர் தங்கள் மனோசக்தியால் வளைத்துக் காண்பித்தார்கள் என்றால் ஸ்வாமி ராமா என்ற இந்திய யோகி தன் உடலிலேயே பல அற்புதங்களை செய்து காட்டக் கூடியவராக இருந்தார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட அமெரிக்க மனோதத்துவ ஆராய்ச்சி நிறுவனமான மென்னிங்கர் ·பௌண்டேஷன் 1969 இறுதியில் அவரைத் தொடர்பு கொண்டு அவரை ஆராய்ச்சி செய்ய அனுமதி கேட்ட போது அவர் ஒத்துக் கொண்டார். 1970 ஆம் ஆண்டு மார்ச் 28 முதல் 30 வரை மூன்று நாட்கள் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவரை டாக்டர் டேனியல் ·பெர்குசன், எல்மர் மற்றும் அலைஸ் க்ரீன் ஆகியோர் பரிசோதனைகள் செய்தனர்.


முதல் நாள் அவரிடம் என்னென்ன அபூர்வ செயல்கள் செயல்கள் செய்து காண்பிக்கப் போகிறார் என்று கேட்டுக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் அதனைக் கண்காணிக்கத் தேவையான நவீன கருவிகளைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டார்கள். அவர்கள் சோதனைக்கான நிபந்தனைகளையும் அவரிடம் சொல்லி விளக்கினர். ஸ்வாமி ராமா அது வரை எந்த பரிசோதனையிலும் ஈடுபடுத்தப்பட்டவரல்ல. அவருக்கும் தன் சக்திகளை அந்த அதிநவீன கருவிகளைக் கொண்டு பரிசோதித்துக் கொள்வதில் ஆர்வம் இருந்தது.

ஸ்வாமி ராமா இரண்டாவது நாள் தன் வலது கையின் வலது பக்கத்திற்கும், இடது பக்கத்திற்கும் இடையே உடலின் வெப்பநிலையை மாற்றிக் காட்டுவதாகக் கூறினார். அவர் குறிப்பிட்ட இடங்களில் அவரது வலது உள்ளங்கையில் உடல் வெப்பத்தை அளக்கும் நவீன கருவிகள் தனித் தனியாகப் பொருத்தப்பட்டன. பரிசோதனை முடியும் வரை அந்தக் கையை எந்தக் காரணத்தைக் கொண்டும் அசைக்கக் கூடாதென அந்த ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள். அவர்கள் அவர் கையை அசைக்காமல் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டார்கள்.

ஆரம்பத்தில் வலது கையின் வலது பக்க, இடது பக்க வெப்ப நிலைகள் ஒரே அளவில் (90 டிகிரி F) இருந்தன. பின் அவர் ஒரு பக்க வெப்ப நிலையை 89 டிகிரிக்கும், மறுபக்க வெப்ப நிலையை 91 டிகிரிக்கும் மாற்றினார். ஒரே கையில் இரு பக்கங்களுக்கு இடையில் 2 டிகிரி வித்தியாசம் இருந்தது. மூன்று நிமிடங்கள் கழித்து ஒரு பக்க வெப்பநிலை 88 டிகிரிக்கும், இன்னொரு பக்க வெப்பநிலை 95 டிகிரிக்கும் மாறியது. இரண்டாவது அளவீட்டில் இரு பக்கங்களுக்கும் இடையே 7 டிகிரி இருந்தது. அப்படியே படிப்படியாக அந்த வித்தியாசத்தை 9 டிகிரிக்கும், கடைசியாக 11 டிகிரிக்கும் உயர்த்திக் காட்டினார். இது அந்த ஆராய்ச்சியாளர்களை அதிசயிக்க வைத்தது. மருத்துவ ரீதியாக ஒரு கையில் வேறு வேறு வெப்பநிலை இருப்பது சாத்தியமில்லை. அப்படி இருக்கையில் அந்தக் கையை அசைக்கக்கூட செய்யாமல் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கும் இடையே 11 டிகிரி வித்தியாசத்தை அவர் ஏற்படுத்தியது அற்புதமாகவே அவர்களுக்குத் தோன்றியது.

அடுத்ததாக ஸ்வாமி ராமா தன் இதயத்துடிப்பையும் ஏற்றி இறக்கிக் காட்டினார். இதயத் துடிப்பை அதிகரித்துக் காட்டியதைப் பெரிய விஷயமாக ஆராய்ச்சியாளர்கள் நினைக்கவில்லை. ஆனால் இதயத்துடிப்பை தாங்கள் சொல்கிற சமயத்தில் குறைத்துக் காட்ட முடியுமா என்று ஆராய்ச்சியாளர்கள் கேட்ட போது ஸ்வாமி ராமா சம்மதித்தார். அவர்கள் சொன்ன சமயத்தில், ஒரு நிமிடத்திற்கு 21 இதயத்துடிப்புகள் குறைத்து வியப்பூட்டினார்.

பின்னர் உணவருந்துகையில் பேசுகையில் இதயத்துடிப்பை சில நிமிடங்களுக்கு நிறுத்தக் கூட தன்னால் முடியும் என்றும் ஆனால் அதற்கு மூன்று நாட்கள் உபவாசம் இருந்து ஆயத்தமாக வேண்டும் என்றும் ஸ்வாமி ராமா சொன்னார். ஆனால் அவருடைய குருகா ஆயத்தமே இல்லாமல் மூன்று வினாடிகளில் செய்து காட்டுவார் என்று ஸ்வாமி ராமா சொன்னார். (அவருடைய குருவைப் பற்றிக் கேட்டதற்கு அவருடைய குரு பிரமிக்கத்தக்க சக்திகள் படைத்த யோகி என்றாலும் அவருக்கு பிரபலமாவதில் விருப்பமில்லை என்றும் அது ஆன்மீக வாழ்க்கைக்கு இடைஞ்சல் என்று கருதுபவர் என்றும் சொன்னார்). உபவாசம் இருந்து செய்து ஆயத்தமாக சமயமில்லாததால் ஓரளவு இதயத்துடிப்பைத் தன்னால் நிறுத்திக் காட்ட முடியும் என்றும் எத்தனை நேரம் நிறுத்திக் காட்டினால் அதை சாதனை என்று எடுத்துக் கொள்வீர்கள் என்றும் கேட்க ஆராய்ச்சியாளர்கள் பத்து வினாடிகள் நிறுத்திக் காட்டினால் போதும் என்று சொன்னார்கள். மறுநாள் ஸ்வாமி ராமா 16.2 வினாடிகள் தன் இதயத்துடிப்பை நிறுத்திக் காட்டினார்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியானவுடன் ஸ்வாமி ராமா அமெரிக்காவில் மிகவும் பிரபலமானார். எனவே மீண்டும் 1970ஆம் ஆண்டு இறுதியில் உரையாற்றவும், பரிசோதனைகளுக்காகவும் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டார். ஒரு பரிசோதனையில் 14 அங்குல, 7 அங்குல அலுமினிய ஊசிகள் இங்கு காட்டியுள்ள படத்தில் உள்ள படி அளவுகள் குறித்த ஒரு வட்ட அமைப்பில் வைக்கப்பட்டிருந்தன. சற்று தொலைவில் ஸ்வாமி ராமா அமர்த்தப்பட்டிருந்தார். அவர் அந்த ஊசிகளை தன் மூச்சுக்காற்றால் எந்த விதத்திலும் அசைக்க முடியாதபடி ஒரு பிரத்தியேக முகமூடி (அதுவும் இங்கு காட்டப்பட்டுள்ளது) அவருக்குத் தரப்பட்டு இருந்தது. அதை அணிந்து கொண்டு சில மந்திரங்களை உச்சரித்து அந்த ஊசிகளை ஸ்வாமி ராமா அசைத்துக் காட்டினார்.

சிகாகோவில் ஒரு முறை உரையாற்றிக் கொண்டிருந்த போது உடலில் உள்ள 'சக்ரா'க்களைப் பற்றியும் அந்த சக்ராக்களுக்கு சக்தியை அதிகப்படுத்த முடியும் என்றும் அப்போது அவை ஒளிர்வதைக் கண்ணால் கூடக் காண முடியும் என்றும் ஸ்வாமி ராமா சொன்னார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் சந்தேகத்துடன் கேட்டார். "கண்ணால் காண முடியும் என்றால் அதைப் புகைப்படம் எடுக்கவும் முடியும் அல்லவா? நீங்கள் இப்போது செய்து காட்டினால் நான் பொலொராய்டு காமிராவில் புகைப்படம் எடுக்கிறேன். முடியுமா?"

அதற்கு சம்மதித்த ஸ்வாமி ராமா அங்கேயே தன் இதயச் சக்ராவிற்கு சக்தியை அனுப்பி அந்தச் சக்ராவை ஒளிரச் செய்தார். அப்போது அந்த மருத்துவர் அதைப் பல புகைப்படங்கள் எடுத்துப் பார்த்து பின் தான் சந்தேகம் தெளிந்தார். அந்தப் புகைப்படங்களில் ஒன்றை நீங்கள் இங்கே காணலாம்.

இந்த ஆராய்ச்சிகளில் முதல் மூன்றும் பரிசோதனைக் கூடத்தில் பல பார்வையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் செய்யப்பட்டவை. கடைசி அற்புத நிகழ்ச்சி பொதுக் கூட்டம் ஒன்றில் எல்லோர் முன்னிலும் நிகழ்த்திக் காட்டப்பட்டது. ஆழ் மனதின் சக்திகள் செய்து காட்ட முடிந்த அற்புதங்கள் தான் எத்தனை!

மேலும் பயணிப்போம்...

(தொடரும்)
- என்.கணேசன்
நன்றி: விகடன்

Friday, November 6, 2009

ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு


ன்னுடைய மரணச் செய்தியைப் பத்திரிக்கையில் படிக்கும் பாக்கியம் பெரும்பாலானோருக்குக் கிடைப்பதில்லை. ஆனால் சுவீடன் நாட்டைச் சேர்ந்த, டைனமைட்டைக் கண்டுபிடித்த, ஆல்ப்ரட் நோபல் என்பவருக்கு 1888ல் அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு பிரெஞ்சுப் பத்திரிக்கை "மரணத்தின் வர்த்தகன் மரணம்" என்று பெரிய எழுத்தில் தலைப்புச் செய்தியாக தவறாக அவரது மரணச் செய்தியை வெளியிட்டது. அந்தச் செய்தியை முழுவதும் ஆல்ப்ரட் நோபல் படித்துப் பார்த்தார்.

"மனிதர்களை விரைவாகக் கொன்று குவிக்கும் வழிகளைக் கண்டு பிடித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த டாக்டர் ஆல்ப்ரட் நோபல் நேற்று காலமானார்" என்பது தான் அந்தச் செய்தியின் முக்கியக் கருவாக இருந்தது. ஆல்ப்ரட் நோபலை அந்தச் செய்தி மிகவும் பாதித்தது. "நான் இறந்த பின் உலகம் என்னை இப்படியா நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்?" என்ற ஒரு கேள்வி அவர் மனதில் பிரதானமாக எழுந்தது. அவர் மனம் தன் வாழ்க்கையை ஒரு கணம் திரும்பிப் பார்த்தது.

அவருடைய தந்தை இம்மானுவல் நோபலும் மிகச் சிறந்த அறிவாளி. இப்போது நாம் உபயோகிக்கும் 'ப்ளைவுட்'டைக் கண்டுபிடித்தது இம்மானுவல் நோபல் தான் என்று சொல்கிறார்கள். அத்தகைய தந்தைக்குப் பிறந்த ஆப்ல்ரட் நோபல் தந்தையைக் காட்டிலும் பலமடங்கு அறிவு படைத்தவராக விளங்கினார். பதினேழு வயதிற்குள் ஐந்து மொழிகளில் (ஆங்கிலம், ப்ரெஞ்சு, ரஷிய, ஜெர்மன், சுவீடிஸ்) நல்ல புலமை பெற்றிருந்தார். (பிற்காலத்தில் இத்தாலிய மொழியையும் படித்தார்) வேதியியல், பௌதிகம் இரண்டிலும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த அவருக்கு ஆங்கில இலக்கியத்திலும் நல்ல புலமை இருந்தது. மகனின் இலக்கிய தாகம் அவருடைய தந்தைக்கு அவ்வளவாக ரசிக்காததால் வேதியியல் பொறியாளராக மேற்படிப்பு படிக்க வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்.

ஒரு பல்கலைகழகத்தில் அவருடன் படித்த இத்தாலிய மாணவர் அஸ்கேனியோ சொப்ரேரோ கண்டுபிடித்த நைட்ரோக்ளிசரின் என்ற வெடிமருந்து திரவம் ஆல்ப்ரட் நோபலை மிகவும் ஈர்த்தது. தன் அறிவுத் திறமையை நன்றாக வளர்த்துக் கொண்டு தாயகம் திரும்பிய பிறகு ஆல்ப்ரட் நோபல் வெடிமருந்துகளைத் தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஒரு முறை அவருடைய தொழிற்சாலை வெடித்துச் சிதறியதில் அவருடைய இளைய சகோதரர் உட்பட பலர் மரணமடைந்தனர். ஆனாலும் அவருடைய ஆர்வம் அந்தத் துறையில் குறையவில்லை. பின்னர் அவர் டைனமட்டைக் கண்டுபிடித்தார். அதன் பிறகு வெற்றியும், செல்வமும் அவரிடம் பெருக ஆரம்பித்தன.

இத்தனை சாதனைகள், வெற்றிகளுக்குப் பின்னால் தன் மரணத்திற்குப் பிறகு "மரணத்தின் வர்த்தகன்" என்று தானா தன்னை உலகம் நினைவுகூர வேண்டும் என்ற கேள்வி அவரை நிறையவே நெருடியது. குறுகிய காலமே அவருக்குக் காரியதரிசியாக இருந்த பெர்தா வோன் சட்னர் என்பவரும் அவர் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் கருதினார்கள். பலர் அந்த ஆஸ்திரியப் பெண்மணியை அவருடைய காதலி என்று கூறினாலும் அந்தப் பெண்மணி அவரைப் பிரிந்து வேறு ஒருவரை விரைவிலேயே மணந்து கொண்டாள். ஆனாலும் அவர்களுடைய நட்பு கடிதப் போக்குவரத்து மூலம் அவருடைய மரணகாலம் வரை நீடித்தது. அந்தப் பெண்மணியும் அமைதியின் முக்கியத்துவத்தையும், போரின் கொடுமைகளையும் குறித்து அவரிடம் உறுதியாக சொல்பவராக இருந்தார். அந்தப் பெண்மணி எழுதிய "ஆயுதங்களைக் கைவிடுங்கள்" என்ற புத்தகம் அந்தக் காலத்தில் மிகவும் புகழ்பெற்றது.

அந்தக் கேள்வியும், அந்தத் தோழியின் நட்பும் வாழ்க்கையில் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய ஆல்ப்ரட் நோபலைத் தூண்டியது. உலகம் தன்னை ஆக்கபூர்வமான விஷயங்களுக்காகவே நினைவு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதுவரை சேர்த்த சொத்துகளை உலக நன்மைக்குப் பயன்படும் மனிதர்களுக்கும், நிறுவனங்களுக்கும் அளிக்கும் நோபல் பரிசுகளாக வருடாவருடம் அளிக்கப் பயன்படுத்துமாறு உயிலை எழுதினார். 1896ஆம் ஆண்டு ஆல்ப்ரட் நோபல் காலமானார். ஆரம்பத்தில் வேதியியல், பௌதிகம், மருத்துவம், இலக்கியம் என்ற நான்கு பிரிவுகளுக்கு மட்டுமே நோபல் பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் அமைதிக்காகவும் வழங்க முடிவு செய்யப்பட்டது. கடைசியாக பொருளாதாரமும் நோபல் பரிசிற்கான துறையாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.

1901 முதல் ஆரம்பமான நோபல் பரிசுகள் இன்றும் உலகத்தின் மிகப்பெரிய பரிசாகக் கருதப்படுகின்றன. (ஆல்ப்ரட் நோபலின் தோழியும், அமைதிக்காக வாழ்நாள் முழுவதும் குரல்கொடுத்தவருமான பெர்தா வோன் சட்னர் 1905 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றது ஒரு சுவாரசியமான விஷயம்.) உலகம் ஆல்ப்ரட் நோபலை அவர் நினைத்தபடியே இன்று நல்ல விஷயத்திற்காகவே நினைவு வைத்திருக்கிறது.

ஒரு மனிதரை ஒரு கேள்வி அழியாப் புகழ் பெற வைத்ததென்றால் அந்தக் கேள்வி மிக உன்னதமானது தானே. இந்தக் கேள்வியை நாமும் கேட்டுக் கொண்டாலென்ன? உலகம் நம்மை நம் மறைவிற்குப் பின்னும் எப்படி நினைவு வைத்திருக்க வேண்டும்? இருந்த சுவடே தெரியாமல் போய் விடும்படி நாம் அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்துவிட வேண்டாம். தவறான விதத்தில் நினைவுபடுத்திக் கொள்ளும் மனிதனாகவும் இருந்து மடிந்து விட வேண்டாம். நன்மையின் சின்னமாய் நாம் பலர் நினைவில் தங்கிவிடும் படியான நற்செயல்கள் நிறைந்த வாழ்க்கை வாழ முயற்சிப்போமா?

- என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

Monday, November 2, 2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-9

நினா குலாகினா தொடாமலேயே பொருட்களை அசைத்தாரென்றால் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யூரி கெல்லர் ஸ்பூன்களை மடக்குதல், பல காலமாக ஓடாமல் இருந்த வாட்ச்களை ஓட வைத்தல் போன்ற செயல்களைச் செய்து பிரபலமானார்.


1973 நவம்பர் மாதத்தில் BBC ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யூரி கெல்லர் தன்னிடம் உள்ள அந்த அபூர்வ சக்திகளை அந்த நிகழ்ச்சியில் விளக்க ஆரம்பித்தார். அந்த நிகழ்ச்சி இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து முழுவதும் ஒலிபரப்பானது. அந்த நிகழ்ச்சியை நடத்தும் ஜிம்மி யங் ஷோ மிகவும் பிரபலமானவர் என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டு இருந்தனர்.

ஜிம்மி யங் ஷோ ஒரு தடிமனான சாவியை யூரி கெல்லருக்குத் தந்து அதை மடக்கிக் காண்பிக்கச் சொன்னார். அந்த சாவியை லேசாகத் தொட்ட யூரி கெல்லர் தன் மனதை ஒருங்கிணைத்து குவித்து அந்த சாவியை மடக்க முயற்சி செய்தார். யூரி கெல்லர் எல்லா சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்ல முடியாது. அவரால் முடியாமல் போன சந்தர்ப்பங்களும் உண்டு.

அப்போது அந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருக்கும் நேயர்களையும் வீட்டில் உள்ள ஸ்பூன்கள், அல்லது பல காலம் ஓடாமல் இருந்த கடிகாரங்களை எடுத்து தங்கள் முன் ஒரு மேசையில் வைத்து தங்கள் மனங்களைக் குவித்து ஸ்பூன்களானால் அவை மடங்கும் படியும், ஓடாத கடிகாரங்களானால் அவை ஓடும் படியும் செய்ய உறுதியாக நினைக்கச் சொன்னார், யூரி கெல்லர்.

சிறிது நேரம் ஸ்டூடியோவில் ஜிம்மி யங் ஷோவின் சாவி மடங்கவில்லை. யூரி கெல்லர் கையை அதிலிருந்து எடுத்த பின் அந்த சாவி சிறிது சிறிதாக மடங்க ஆரம்பித்தது. பரபரப்படைந்த ஜிம்மி "ஸ்பூன் மடங்க ஆரம்பிக்கிறது. மடங்கிக் கொண்டே வருகிறது.... என்னால் நம்ப முடியவில்லை" உற்சாகத்தில் கத்த ஆரம்பிக்க அது பல்லாயிரக்கணக்கான வீடுகளில் எதிரொலித்தது.

அடுத்த சில நிமிடங்களில் பிபிசி ரேடியோ ஸ்டூடியோவில் தொடர்ச்சியாக போன்கால்கள் வர ஆரம்பித்தன. அந்த ஸ்டூடியோவின் ஸ்விட்ச் போர்டு கிறிஸ்துமஸ் மரம் போல போன் கால்களால் மின்ன ஆரம்பித்ததாக அங்கு பணிபுரிபவர் சொன்னார். பலருடைய வீடுகளிலும் ஸ்பூன்கள், கத்திகள், ஆணிகள் எல்லாம் மடங்க ஆரம்பித்ததாகப் பலரும் பரபரப்பாகப் போன் செய்து சொல்ல ஆரம்பித்தார்கள். நூற்றுக் கணக்கான நேயர்களின் இந்த அற்புத அனுபவங்கள் மறுநாள் பத்திரிக்கைகளில் படங்களுடன் தலைப்புச் செய்தியாயின.

நான்கு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் டெக்சாஸ் நகர ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இது போன்ற அற்புதங்களை யூரி கெல்லர் செய்து காட்டிய போது அந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டு இருந்த டெக்சாஸ் அட்டர்னி ஜெனெரல் அலுவலகத்தில் பணிபுரியும் மூன்று பெண்மணிகள் விளையாட்டாக தாங்களும் அப்படி முயற்சிக்கலாம் என்று முயன்ற போது ஒரு ஸ்பூன் 45 டிகிரிக்கு மடங்கியதாகவும், ஒரு சாவி பாதியாய் உடைந்ததாகவும் தெரிகிறது. அந்த அட்டர்னி ஜெனரல் ஆச்சரியப்பட்டு அதை எழுத்து மூலமாகவே யூரி கெல்லருக்கு அறிவித்ததாகத் தெரிகிறது.

அதை நினைவில் கொண்டு தான் பிபிசி ரேடியோவில் நேயர்களையும் அப்படிச் செய்து பார்க்கச் சொன்னதாக யூரி கெல்லர் பின்பு தெரிவித்தார். அதிலும் ஆச்சரியமான விஷயம் என்ன என்றால் இங்கிலாந்தில் பிபிசியில் நடந்தது போல டெக்சாஸில் நடந்தது நேரடி ஒலிபரப்பல்ல. டேப் செய்து பின்னர் ஒலிபரப்பிய நிகழ்ச்சி அது.

யூரி கெல்லரின் சாதனைகளில் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் சரிசமமாக ஆராய்ச்சியாளர்களிடம் இருந்திருக்கின்றன. சில விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இது அவருடைய ஆழ்மன சக்தியே என்று கூறினார்கள். சில விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் அவரது நம்பகத்தன்மையை சந்தேகித்தனர். அதற்கேற்றாற் போல் அவரால் பல இடங்களில் அதை செய்து காட்ட முடியாமலும் போயிருக்கிறது. இது மேஜிக் வித்தை தான் ஆழ்மன சக்தி அல்ல என்று ஜேம்ஸ் ரேண்டி போன்ற நிபுணர்கள் அடித்து சொன்னார்கள். எது எப்படியோ யூரி கெல்லர் 1971 முதல் 1977 வரை ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்பட்டு பேசப்பட்டது போல பின்னாளில் பேசப்படவில்லை. (சமீபத்தில் மைக்கேல் ஜேக்சனின் மறைவுக்குப் பின் அவருடைய நண்பராக மைக்கேல் ஜாக்சன் பற்றிய தகவல்கள் சொல்லி பத்திரிக்கைகளில் பேசப்பட்டார்).

ஒருவேளை நாம் யூரி கெல்லர் விஷயத்தை சந்தேகத்தின் அடிப்படையில் ஒதுக்கினாலும் அந்த டெக்சாஸ் நகர அட்டர்னி ஜெனரல் அலுவலக ஊழியர்களான மூன்று பெண்மணிகளை அப்படி ஒதுக்க முடியாதல்லவா? அவர்களுக்கும் அதை உறுதி செய்த அட்டர்னி ஜெனரலுக்கும் பொய் பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? பிபிசி நிகழ்ச்சியைத் தொடர்ந்து பலர் வீடுகளில் நடந்த அந்த அற்புதங்களிலும் ஒரு சிலவற்றை வேண்டுமானால் கற்பனையாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டாலும் பெரும்பாலானவையும் அப்படியே இருக்க சாத்தியமில்லை என்றே பத்திரிக்கை செய்திகளைப் படிக்கையில் தோன்றுகிறது. யூரி கெல்லரால் அத்தனை பேருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அப்படி நிஜமான விளைவாக மாறியிருக்க வேண்டும் என்றே முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.

அந்த நிகழ்ச்சிகளின் தாக்கமாகவே மேட்ரிக்ஸ் திரைப்படத்தில் ஒரு சிறுவன் ஒரு ஸ்பூனை பார்வையாலேயே வளைக்கும் காட்சியைக் காண்பித்திருக்கிறார்கள்.


பிரபல ஆங்கில நாவலாசிரியரும், சினிமா தயாரிப்பாளர், டைரக்டருமான மைக்கேல் க்ரிஸ்டன் தன் "ட்ராவல்ஸ்" என்ற நூலில் "ஸ்பூன்களை மடக்கும் விருந்து நிகழ்ச்சி" ஒன்றில் தனக்கு நேரடியாக ஏற்பட்ட அனுபவம் ஒன்றை விவரித்திருக்கிறார். "என்னாலும் ஸ்பூனை மடக்க முடிந்ததை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். அந்த ஸ்பூனைத் தொட்டுப் பார்த்த போது அது அது ப்ளாஸ்டிக்கைப் போல மெத்தெனவும் லேசான உஷ்ணநிலையிலும் இருந்தது. அதை மடக்க விரல்நுனியால் லேசாகத் தொடுவதே போதுமானதாக இருந்தது. எந்த பலத்தையும் பிரயோகிக்கத் தேவையிருக்கவில்லை. வேறு சில ஸ்பூன்களையும், ·போர்க்குகளையும் சிரமமேயில்லாமல் வளைத்த பிறகு எனக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டது. சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்தேன்".

"எட்டு, ஒன்பது வயது சிறுவர்கள் எல்லாம் பெரிய இரும்புத் துண்டுகளை விளையாட்டாக வளைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். யூரி கெல்லர் உண்மையாகச் செய்து காட்டினாரா, இல்லை ஜேம்ஸ் ரேண்டி சொல்வது போல மேஜிக் வித்தை தானா அது என்பது எனக்குத் தெரியாது. நான் செய்து பார்த்ததிலும், என்னைச் சுற்றிலும் சில சிறுவர்கள் செய்து கொண்டிருப்பதிலும் பொய் புரட்டு கிடையாது என்பது மட்டும் நான் அறிவேன்".

"இதில் நான் வித்தியாசமாகக் கவனித்தது ஒன்றே ஒன்று தான். இது போன்ற சக்திகள் வேலை செய்ய ஆரம்பிப்பது நாம் கவனத்தைக் குவிப்பதை விட ஆரம்பித்து வேறிடத்திற்குக் கவனத்தை செலுத்த ஆரம்பிக்கும் போது தான். மிகவும் மன ஒருமைப்பாடுடன் கவனத்தைக் குவித்து பார்ப்பதற்குப் பலன் கிடைப்பது பிறகு அந்தக் கவனத்தை வேறிடத்திற்குத் திருப்பும் போது தான்".

"இதன் பின்னால் இருக்கும் தத்துவம் எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. யாரும் இதைச் செய்ய முடியும் என்பது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிந்தது"

எழுத்துலகிலும், திரையுலகிலும், புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்து 2008ல் மறைந்த மைக்கேல் க்ரிஸ்டன் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தவர். அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பட்டதாரியும் கூட. அவர் ஒரு முறை சந்தித்த அந்த அனுபவத்தைப் பற்றி அதிகம் விவரிக்கப் போகவில்லை. இது அவருடைய துறையும் அல்ல. அவருக்கு இதுபற்றி பொய் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. அவசியமுமில்ல. ஆனால் அவர் தான் மட்டுமல்லாமல் சிறுவர்களும் செய்ய முடிந்ததாகச் சொன்ன அந்த அற்புதச் செயலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மேலும் பயணிப்போம்.....

-என்.கணேசன்

(தொடரும்)
நன்றி:விகடன்

Wednesday, October 28, 2009

ஜென் வாழ்க்கையின் சூட்சுமம்

டோக்குசான் என்ற ஜென் துறவி மூலிகைகளை பறிப்பதற்காக மலைச்சாரல் ஒன்றில் சென்று கொண்டு இருந்தார். ஓரிடத்தில் ஒரு குன்றின் மீது சிறிய குடிசை இருப்பதைக் கண்டார். சுற்றிலும் நிறைய தூரத்திற்கு எந்த வீடும் இல்லை. அது போன்ற ஏகாந்தத்தில் குடிசை இருக்க வேண்டுமென்றால் அதில் வசிப்பது ஒரு துறவியாகத் தான் இருக்க வேண்டும் என்றெண்ணிய டோக்குசான் அந்தக் குடிசையின் கதவைத் தட்டினார். கதவைத் திறந்ததோ ஒரு மூதாட்டி.

அந்த ஜென் துறவியைப் பார்த்தவுடன் மூதாட்டி பக்தியுடன் தலை தாழ்த்தி வணக்கம் தெரிவித்து வரவேற்றாள். அவருக்கு முகமலர்ச்சியோடு வரவேற்ற அவளைக் கண்டு வியப்பு. "அம்மா நீங்கள் இந்த மலையில் இந்த ஏகாந்தத்தில் என்ன செய்கிறீர்கள்" என்று கேட்டார்.

"ஐயா நான் இங்கு தனியாகத் தான் வசிக்கிறேன். இங்கு யாரும் வருவதில்லை. இங்கு காய்கறிகள் வளர்த்து அருகே உள்ள கிராமங்களுக்குக் கொண்டு சென்று விற்கிறேன்" என்றாள் அந்த மூதாட்டி. விளையும் காய்கறிகளைப் பற்றி மகிழ்ச்சியுடன் அவருக்கு விவரித்தாள். மலைச்சாரலில் விளையும் அந்தக் காய்கறிகள் சத்தானவை என்றும் அந்தக் கிராம மக்களுக்கு அந்த சத்தான காய்கறிகளை விற்பதில் தனக்கு ஒரு நிறைவிருக்கிறது என்றும் தெரிவித்தாள். அவருக்கும் அந்தக் காய்கறிகளைக் கொண்டு தான் சமைத்திருந்த எளிய உணவை அளித்து உபசரித்தாள். தன் வீட்டுக்கு வந்த அபூர்வமான அந்த விருந்தாளியைக் கண்டு அவளுக்கு பெருத்த மகிழ்ச்சி.

அந்த மகிழ்ச்சியையும், அன்பையும் கவனித்த டோக்குசான் உணவருந்தியபடியே கேட்டார். "வேலை இல்லாத போது நீங்கள் எப்படிப் பொழுதைப் போக்குகிறீர்கள்?"


"நான் சுவர்க் கோழிகளின் ஓசையையும், மழை, காற்றின் இசையையும், இரவில் நிலவழகையும் ரசித்து மகிழ்வேன். பொழுது தானாகப் போகிறது" என்றாள் அந்த மூதாட்டி.

அந்த மூதாட்டியின் பதில் டோக்குசானை மனதினுள் பாராட்ட வைத்தது. அவர் மௌனமாகத் தலையாட்டினார்.

"ஐயா நான் படிப்பறிவில்லாதவள். ஆன்மிக ஞானம் அறியாதவள். எனக்கு புத்தரின் அறிவுரைகளைப் போதிப்பீர்களா?" என்று மூதாட்டி மிகுந்த அடக்கத்துடன் கேட்டாள்.

"தனக்கு சமமானவர்களுக்கு ஒரு மனிதன் போதிப்பதில்லை. மேலும் ஜென்னில் வாழ்கின்ற மனிதனுக்கு வேறெந்த போதனையும் தேவையில்லை" என்ற டோக்குசான் அந்தப் பெண்மணியைத் தலை தாழ்த்தி வணங்கி விட்டு விடைபெற்றார்.

இன்றெல்லாம் வேலை என்பதே ஒரு கடுஞ்சொல் என்பது போல் ஆகிவிட்டது. சலிப்புடனும், அலுப்புடனும் அணுகும் சமாச்சாரமாகி விட்டது. அதுவும் அந்த மூதாட்டியைப் போல் வயோதிகத்தை எட்டும் போது வேலை பெருஞ்சுமையாகவே தோன்றி விடுகிறது. ஆனால் அந்த மூதாட்டி தன் வேலையை மகிழ்ச்சியாகச் செய்வதுடன் மீதியுள்ள பொழுதையும் நிறைவாகக் கழிக்க முடிந்ததை அந்த ஜென் துறவி கவனித்தார். பொழுதைப் போக்க உலகம் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கையில், நூறாயிரம் கேளிக்கைகளைத் தேடி ஈடுபட்டும் திருப்தியடையாமல் திணறிக் கொண்டிருக்கையில் சுவர்க்கோழிகளின் ஓசையயும், காற்றும், மழையும் உருவாக்கும் இசையையும், நிலவழகையும் ரசித்தபடி வாழும் அந்த மூதாட்டியின் ரசனையைப் பார்த்து ஜென் துறவி வியந்தார். இதுவல்லவா ஜென்னின் வாழ்க்கை முறை என்று நினைத்ததால் தான் டோக்குசான் "ஜென்னில் வாழ்கின்ற மனிதனுக்கு வேறெந்த போதனையும் தேவையில்லை" என்றார்.

ஜென்னில் இருக்கின்ற இடமோ, செய்கின்ற தொழிலோ முக்கியமில்லை. படித்து முடித்த புத்தகங்களின் எண்ணிக்கையோ, சேர்த்து வைத்திருக்கிற செல்வத்தின் அளவோ ஒரு அடையாளமில்லை. வாழ்கின்ற முறையில் தான் எல்லா சூட்சுமமும் இருக்கின்றது. ஜென் நிகழ்காலத்தில் முழுமையாக இருக்கச் சொல்கிறது. இருப்பவற்றை முழுமையாக ரசிக்கச் சொல்கிறது. கிடைத்தவற்றிற்கு நன்றியுடன் இருக்கச் சொல்கிறது. ஜென்னில் ஒப்பீடுகள் இல்லை. ஒப்பீடுகள் இல்லாத போது துக்கங்களும் இல்லை.

நிகழ்காலத்தில் முழுமையாக வாழும் போது செய்கின்ற செயல்களில் தானாக மெருகு கூடி விடுகிறது. மனதில் தானாக நிறைவு ஏற்பட்டு வருகிறது. சின்னச் சின்ன விஷயங்களையும் ரசித்து வாழ முடிகிறது. ஜென்னில் தேநீர் அருந்துவதே ஒரு தியானத்தைப் போல செய்யப்படுகிறது. அந்த நேரத்தில் தேனீரை மிகவும் ரசித்து, ருசித்து, நன்றியுடன், மகிழ்ச்சியுடன், நிதானமாக அருந்த வேண்டும் என்று வலியுறுத்தப் படுகிறது.

இன்றைய வாழ்க்கை முறையின் அவசர ஓட்டத்தில் சின்னச் சின்ன விஷயங்களை ரசிக்க முடியாத சிக்கல்கள் நிறையவே இருக்கின்றன. தேவைகள் அதிகப்பட அதிகப்பட அதற்காகத் தர வேண்டிய விலையும் அதிகப்படுகிறது. அதுவும் விரைவாக அந்தத் தேவைகள் பூர்த்தியடைய வேண்டும் என்ற வெறியும் இருந்து விட்டால் பின் வேறெதற்கும் வாழ்க்கையில் நேரமோ, மனமோ இருப்பதில்லை. அதில் உண்மையில் பலியாவது இது போன்ற சின்னச் சின்ன ரசனைகளும் சந்தோஷங்களும் தான்.

இலக்குகள் மிக முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அந்த இலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தில் ஒவ்வொரு கணமும் வாழப்பட வேண்டுமேயொழிய ஓட்டப்படக் கூடாது. எல்லாம் இயந்திரகதியில் இருந்துவிடக்கூடாது. இலக்குகளைப் போலவே அவற்றை நோக்கிச் செல்லும் பயணத்தின் தரமும் முக்கியமே. முழுமனதோடும், ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும் செய்ய வேண்டிய செயல்களைச் செய்தோமானால் விரைவாகவும் தரமாகவும் சிறப்பாகவும் எதையும் செய்து முடிக்கவும் முடியும். இதையே ஜென் வலியுறுத்துகிறது.

மேலும் ஜென் எளிய வாழ்க்கையையும், நிறைவான மனநிலையையும் மிக முக்கியமாகக் கருதுகிறது. ஜென்னிற்கு கூர்மையான அறிவு முக்கியமில்லை. பக்குவப்பட்ட மனம் முக்கியம். அந்த மூதாட்டிக்கு ஜென் என்றால் என்ன என்று தெரியாமலேயே ஜென் வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாள். அதனால் அதை விளக்க வேண்டிய போதனைகளுக்கு அவசியமிருக்கவில்லை. வாழ்க்கைக்காகவே போதனைகளே அல்லாமல் போதனைகளைக் கற்பதற்காக வாழ்க்கை அல்ல.

சுவர்க்கோழிகளின் ஓசையையும், காற்றையும், மழையையும், நிலவையும் யாரும் என்றும் அந்த மூதாட்டியிடமிருந்து பறித்து விட முடியாது. நம்மிடமிருந்து யாரும், எப்போதும் அபகரிக்க முடியாதவற்றின் மூலம் நம்மால் மகிழ்ச்சியடைய முடிந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிறைவும் என்றும் குறைவதில்லை அல்லவா? இதுவே ஜென் சொல்லும் மகிழ்வான வாழ்க்கையின் மிக முக்கியமான சூட்சுமம்.

-என்.கணேசன்

நன்றி: ஈழநேசன்