சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Sunday, February 28, 2021

தவறுகளுக்குப் பின்னணிக் கதைகள் இருக்கலாம்!

மற்றவர்களின் தவறுகளுக்குப் பின்னால் மனவலிகளும், சூழ்நிலைகளும் காரணமாக இருக்கக்கூடும் என்பதை விளக்கும் காணொளி.

Saturday, February 27, 2021

அறிந்தும் நாம் ஏன் தவறான வழிகளில் போகிறோம்?

கீதை காட்டும் பாதை?

நம் நிரந்தர எதிரி எது? அதை அழிக்கும் வழி என்ன?

Thursday, February 25, 2021

இல்லுமினாட்டி 91



சிந்துவின் நோக்கத்தை க்ரிஷ் அறிந்து விட்டான் என்பதையும், ஏதோ காரணத்தால் அவளை ஒன்றும் செய்யாமல் இருக்கிறான் என்பதையும், சிந்துவின் மனதை இப்போதும் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருக்கிறான் என்பதையும் விஸ்வம் அறிந்து விட்டால் என்ன ஆகும் என்று யோசித்த போது சிந்து அடிவயிற்றிலிருந்து அச்சத்தை உணர்ந்தாள். அடுத்ததாக க்ரிஷை அவன் என்ன செய்வான் என்பது தெரியா விட்டாலும் அவளை என்ன செய்வான் என்பது சிந்துவுக்குத் தெரிந்தே இருந்தது. இனி அவள் மூலம் க்ரிஷுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்றும், இனி அவளால் எந்தப் பயனும் இல்லை என்றும் அவனுக்கு உறுதியாகத் தெரியுமானால் உடனடியாக அவளைக் கொன்று விட அவன் தயங்க மாட்டான்.  இது தெளிவாகத் தெரிந்த பின் அவளால் உறங்க முடியவில்லை. அவள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டாள். இந்த இரண்டு மனோசக்தி மனிதர்களுக்கு இடையில் இப்படி வசமாக மாட்டிக் கொண்டோமே என்று அவள் மனம் புலம்பியது.


இப்படியொரு இக்கட்டான நிலையைச் சரிசெய்ய எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அவளுக்கே அவள் மேல் கோபத்தை வரவழைத்தது. ஏதாவது செய்தேயாக வேண்டும் என்கிற அவசரத்தை அவள் தீவிரமாக உணர்ந்தாள். என்ன செய்வது, எப்படிச் செய்வது என்பதைத் தீர்மானிக்கும் முன் தன் பக்கம் இருக்கும் சாதக, பாதகங்களைத் தெளிவாக அறிந்திருப்பது நல்லது என்று நினைத்த அவள் ஒரு வெள்ளைத் தாளையும், ஒரு பேனாவையும் எடுத்துக் கொண்டாள்.

தாளில் சாதகம் என்று எழுதி அடிக்கோடிட்டாள். பின் கீழே எழுத ஆரம்பித்தாள்.


·    உதய் என்னை ஆழமாகக் காதலிப்பது.

·   என்ன ஆனாலும் சரி என்னையே கல்யாணம் செய்வதாய் சத்தியம் செய்திருப்பது.  
    
·  பத்மாவதியும் என்னை மருமகளாகவே நினைக்க ஆரம்பித்திருப்பது.

· என் மேல் அவர்கள் கண்டுபிடிக்கிற மாதிரி எந்தப் போலீஸ் ரிகார்டும் இல்லை.

·  விஸ்வத்தின் ஆள் நான் என்று கண்டுபிடிக்கவும் அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை.

· அதனால் கடைசி வரை எந்தக் குற்றச்சாட்டு வந்தாலும் அரசியல்வாதிகள் போல “பொய், பொய், பொய்” என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

தாளில் பின்பக்கத்தில் பாதகம் என்று எழுதி அடிக்கோடிட்டு எழுத ஆரம்பித்தாள்.

· க்ரிஷ் மீது அவன் குடும்பத்தாருக்கு இருக்கும் அன்பும், நம்பிக்கையும் என்னால் கூட மாற்ற முடியாதது.

· விஸ்வத்தைப் போலவே க்ரிஷும் சில அபூர்வ சக்திகளை வைத்திருப்பது. அதற்கு உதாரணம் என்னைக் கண்டுபிடித்தது.

·      ஒருவேளை க்ரிஷ் என்னைக் குற்றவாளியாகச் சொன்னால் அவன் தந்தை அவன் பக்கம் தான் நிற்பார். அவர்  ஆரம்பத்தில் இருந்தே என்னிடம் ஒரு இடைவெளி விட்டே தான் பழகுகிறார். முதலமைச்சர் பதவியில் இருக்கும் அவர் என்னை என்ன வேண்டுமானாலும் செய்ய முடிந்தவராக இருக்கிறார்.

·   க்ரிஷ் என்னைக் குற்றவாளியாகச் சொன்னால் உதய் தம்பியை வெறுத்து என் பக்கம் வந்து விட மாட்டான். பெரும்பாலும் இருபக்கமும் விடமுடியாதபடி தான் இருப்பான்.

·     அப்படி ஒரு நிலை வந்தால் பத்மாவதி எனக்காக வருத்தப்படலாம். ஆனால் சின்ன மகனை எதிர்க்கும் நிலையைக் கண்டிப்பாக எடுக்க மாட்டாள்.

·  கண்டிப்பாக இங்கிருந்து தப்பித்துப் போக முடிகிற வாய்ப்பு இல்லவே இல்லை.


இரண்டு பக்கத்திலும் எழுதியதை ஒரு முறை படித்துப் பார்த்து விட்டு சிந்து யோசித்தாள். குழப்பத்தில் ஸ்தம்பித்து விடுவதைப் போல முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியாது என்று அவளுக்குத் தோன்றியது. ஏதாவது செய்தாக வேண்டும். என்ன செய்வது? முதலில் க்ரிஷ் மனதில் என்ன உள்ளது, என்ன கண்டுபிடித்து வைத்திருக்கிறான் என்பது உறுதியாகத் தெரிய வேண்டும். வெறும் அனுமானங்கள் இதுபோன்ற வாழ்வா சாவா என்கிற சூழ்நிலையில் உதவாது. துணிச்சலாக க்ரிஷை எதிர்கொள்ள வேண்டும்... அது அவளைப் பற்றிய உண்மையை அவன் சொல்லி விடுவதில் கூட முடியலாம். ஆனால் அவன் கடவுள் அல்ல. அவன் சொன்னது எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை என்பதைக் கேட்பவர்கள் மனதில் பதித்து விட முடியும். அது பொய் என்று அவள் தைரியமாக மறுக்க முடியும். பல முறை பொய் என்று சொன்னால் எப்படிப்பட்டவனுக்கும் அப்படித் தானிருக்குமோ என்ற சந்தேகம் வரும்.

இந்த முடிவு எடுத்தவுடன் மனம் சற்று அமைதியடைந்தது. இதை எப்படிச் செயல்படுத்துவது என்று யோசித்து அவள் ஒரு முடிவுக்கு உடனடியாக வந்தாள். உதயை வைத்துக் கொண்டே அவள் க்ரிஷை எதிர்கொள்வது என்று முடிவெடுத்தாள். க்ரிஷ் அவளை எதிர்த்து அப்புறப்படுத்தாதற்குக் காரணம் உதய் அவள் மீது வைத்திருந்த காதலாக இருக்குமானால் அவன் உதயை அருகில் வைத்துக் கொண்டு சொல்லத் தயங்குவான். அப்படி இல்லாமல் அவன் தன் எந்த சந்தேகத்தைச் சொன்னாலும் சரி. நிலைமை என்ன என்று தெரியாமல் குழப்பத்துடன் இருப்பதை விடத் தெளிவாய் புரிந்து கொள்வதே நல்லது.

அவள் அதன் பின் நிம்மதியாக உறங்கினாள். மறுநாள் அதிகாலையிலேயே வழக்கம் போல் உதய் அவளுக்குப் போன் செய்த போது பேச்சினிடையே  கேட்டாள். “உங்கள் தம்பி என்னைப் பற்றி என்ன சொன்னார்?”

உதய் குழப்பத்துடன் கேட்டான். “ஒன்றும் சொல்லவில்லை. ஏன் அப்படிக் கேட்கிறாய்?”

சிந்து சொன்னாள். “அவர் எதோ என்னைப் பற்றிப் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கிறார் என்று நேற்று சொன்னீர்களே. பின் நீங்கள் என்ன இருந்தாலும் உங்களிடம் சொல்லக்கூடச் சொன்னீர்களே. அதனால் தான் அவர் உங்களிடம் தனியாக என்னைப் பற்றிக் கண்டுபிடித்ததை எதாவது சொன்னாரா என்று கேட்டேன்”

உதய் சிரித்தான். “அதைச் சொல்கிறாயா? அவனாக எதையும் சொல்லவில்லை. நானும் அவனிடம் எதையும் கேட்கவில்லை”

சிந்து சொன்னாள். “எனக்கு அதைத் தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்கிறது. அவர் மாதிரி புத்திசாலி என்னைப் பற்றி எனக்கே தெரியாத எதாவது ஒன்றைக் கூடக் கண்டுபிடித்திருக்கலாம். நான் எப்போதுமே பத்திரிக்கைகளில் வரும் சைக்காலஜி க்விஸ் எல்லாம் படித்து பதில் குறித்துக் கொண்டு என்னைப் பற்றி கணிப்பு என்ன சொல்கிறது என்று படிப்பேன்... அதனால் தான் அவர் என்ன கணித்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்...”

உதய் சொன்னான். “நீயே வந்து அவனிடம் கேள்...”

சிந்து குரலில் முழு ஆர்வத்தைக் காட்டிச் சொன்னாள். “அப்படியானால் நான் இன்றைக்கு சாயங்காலமே வரட்டுமா?

உதய் சந்தோஷமாகச் சொன்னான். “சரி வா?”

சிந்து சொன்னாள். “ஆனால் நான் அவரிடம் கேட்க வருகிறேன் என்பதை அவரிடம் சொல்லி விடாதீர்கள். திடீரென்று வந்து கேட்டால் தான் அவருக்கு யோசிக்க நேரம் இருக்காது. அப்போது தான் அவர் உள்ளதை உள்ளபடியே சொல்வார்” உதய் சம்மதித்தான்.


ர்னீலியஸின் மனம் அன்று சலனங்கள் அதிகமில்லாமல் இருந்தது. அது அபூர்வமாகத் தான் அமையும் என்பதால் அப்படி உணர்ந்தவுடன் அந்தப் பயிற்சியை ஆரம்பித்தார்.  சிறிது நேரத்தில் அந்த ரகசிய ஆவணத்தை முதல் முதலில் படித்த கணத்திற்கே போனார். அந்த ஆவணத்தைக் கையில் பிடித்த உணர்வை இப்போதும் தத்ரூபமாக அவரால் உணர முடிந்தது. பிரித்துப் பார்க்கிறார்.... அவருக்கு வேண்டியிருந்த அந்த பக்கத்திற்கு வந்தார். வாசகங்களை அவரால் தெளிவாகவும், தங்குதடையில்லாமலும் படிக்க முடிந்தது....

முன்கூட்டிக் கணக்கிட்டு, காலம் நிர்ணயித்து ஓருடல் விட்டு மறு உடல் போவது யாம் அறிந்ததே, பல முறை கண்டதே! ஓருடல் நஷ்டப்பட்டு அழியும் போது வெளியேறி மறு உடல் கண்டு சேர்ந்து நிரந்தரமாய்த் தங்கும்  புதிய முயற்சி அரங்கேறும் போது ஆபத்துக் காலம் உச்சம் சென்றதென்று அறிக. இது நீங்கள் அறியாது நடக்க வழியில்லை. நடந்த பின் அறிவது உறுதி. மறு உடல் கண்ட மனிதன் மறைய உதவி கிடைக்கும். நீங்கள் தொழுத இடம் போய்ச் சேரும். உங்கள் மகாகவி ஒருவன் அற்புதக் கவிதை ஒன்றை எழுதிய அவ்விடம் இரு தளம்  கொண்டது.....”

(தொடரும்)
என்.கணேசன்

Monday, February 22, 2021

யாரோ ஒருவன்? 20


ஞ்சய் ஷர்மா நரேந்திரன் இன்னொரு முறை நேரில் வராவிட்டாலும் அவனைப் போனிலாவது தொடர்பு கொண்டுஅன்றைக்கு என்ன சொல்ல வந்தாய்?” என்று கேட்பான் என்று எதிர்பார்த்தான். ஆனால் நரேந்திரனுக்கு அதை அறிய ஆவல் எதுவும் இருக்கும் அறிகுறியே தெரியவில்லை.  டெல்லி குளிரில் வெறும் தரையில், அதுவும் இந்த அழுக்கு சிமெண்ட் தரையில், படுத்து ஒரு வேளைக்கு ஒரு சப்பாத்தி சாப்பிட்டு உயிர் பிழைக்கும் அவலம் என்றைக்கு முடியும் என்று தெரியவில்லை. அவன் குளித்துப் பல நாட்கள் ஆகி விட்டது. உடை மாற்றவுமில்லை. அதைப் பற்றி அவர்கள் கவலைப்பட்ட மாதிரியே தெரியவில்லை. அவரவர் தேவைகளுக்கு அவரவரே கவலைப்பட வேண்டும் என்று நினைத்த சஞ்சய், ஒரு நாள் காலை சப்பாத்தியோடு தடியன் வந்த போது சொன்னான். “எனக்கு குளிக்க வேண்டும்.”

பாத்ரூமில் தான் தண்ணீர் இருக்கிறதே குளித்துக் கொள்என்றான் தடியன்.

இந்தக் குளிரில் பச்சைத் தண்ணீரில் எப்படிக் குளிக்க முடியும்?” என்று சஞ்சய் கோபமாகக் கேட்டான்.

சரி. அப்படியானால் குளிக்காதேஎன்றான் தடியன்.

சஞ்சய் ஷர்மா கோபம் பொங்க அழாத குறையாகக் கேட்டான். “நீங்கள் எல்லாம் மனுஷங்க தானா?”

தடியன் சொன்னான். “காசுக்கு விலை போன நாய் நீ மனுஷனாடா முதல்ல அதை யோசி. நான் மனுஷனல்ல. ஆனா சார் மனுஷனாய் இருக்கறதால தான் நீ உயிரோடு இருக்கிறாய் நாயேஉன்னால என் அப்பா மட்டும் கொல்லப்பட்டிருந்தால் நான் இன்னேரம் உன் தோலை உரித்து உப்புக்கண்டம் போட்டு அணு அணுவாய் சித்திரவதை பண்ணி ரசிச்சுருப்பேன். அவருக்கு மூன்றரை வயசாய் இருக்கறப்ப அவங்கப்பா வீட்டை விட்டுப் போனார். போனவர் இருக்காரா செத்தாரான்னு தெரியாமல் சித்திரவதை அனுபவிச்சும் கூட எல்லாத்துக்கும் காரணமாய் இருக்கற உன்னை இந்த மட்டுக்குமாவது அவரானதால வெச்சிருக்கார்.  அவர் இடத்துல நானாயிருந்திருந்தா உன் குடும்பம் உன்னைப் பாத்தாலும் அடையாளம் தெரியாத அளவு உன்னை இன்னேரம் மாத்தி இருந்திருப்பேன்...”

தடியன் போய் விட்டான். சஞ்சய்க்கு ஆத்திரம் வந்ததே ஒழிய மனசாட்சி என்ற பெயரில் எதுவும் உறுத்தவில்லை. மனசாட்சி ஒரு மனிதனிடம் சிறிதளவாவது நன்மை இருந்தால் மட்டுமே தன் இருப்பைக் காட்டும். நல்லது எல்லாவற்றையும் என்றோ இழந்திருந்த சஞ்சய், வெளியே போன பின் இந்தத் தடியனைத் தேடிப்பிடித்தாவது ஆசை தீர சித்திரவதை செய்து ஆத்திரத்தை ஆற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

இந்தத் தடியன் பேசுவதைப் பார்த்தால் நரேந்திரன் மீது இவன் மிக நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறான். சார் சார் என்று மிக மரியாதையுடனும், அன்புடனும் பேசுகிறான். அப்படியானால் இவன் நரேந்திரனின் விசுவாச ஊழியனாக இருக்க வேண்டும். அப்படியானால் இதில்ராபங்கு எதுவும் இல்லை போலிருக்கிறது. நரேந்திரன் தனிப்பட்ட முறையில் தான் சட்டத்தையையும், சஞ்சயையும் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறான். பாவி இந்தச் சின்ன வயதிலேயே இவ்வளவு அழுத்தமும், தைரியமுமா


நரேந்திரன் இங்கே நேரில் வருவதைத் தவிர்த்தால் மாமனுக்கு இந்த இடத்தைக் கண்டுபிடிப்பது சுலபமல்ல. ஆனால் தீவிரவாதிகள் மனம் வைத்தால் அவனைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று நம்பினான். அஜீம் அகமதை அவன் நேரில் பார்த்தது இல்லையே ஒழிய அவன் ஆட்கள் அவனை வானில் இருந்து வந்தவன் போல உயரத்தில் வைத்திருந்தார்கள். அவனால் ஆகாதது இல்லை, அவன் அறிவுக்கூர்மைக்கு நிகரானவர்கள் யாருமில்லை என்றெல்லாம் பயபக்தியுடன் சொல்வதை சஞ்சய் கேட்டிருக்கிறான். அந்த அஜீம் அகமது மனது வைத்தால் அலட்டிக் கொள்ளாமல் நரேந்திரனை அவன் அப்பனை அனுப்பிய இடத்துக்கே அனுப்பி தந்தையோடு சேர்த்து வைப்பான். தயவு செய்து யாராவது சீக்கிரம் இந்த நரேந்திரனைப் பற்றி அஜீம் அகமது காதில் போட்டு வைத்தால் தேவலை...

க்கத்து வீட்டில் அடுத்த இரண்டு நாள் இரவுகளில் எந்தச் சத்தமும் ஒளியும் இல்லை. அந்த வீட்டில் இப்போது ஒரு உதவியாளன் வந்து சேர்ந்திருந்தான். அவன் பெயர் சுதர்ஷன் என்பது நாகராஜ் அவனை அழைத்த போது தெரிந்தது.  சுதர்ஷனுக்கு வயது சுமார் நாற்பது இருக்கும் போலத் தெரிந்தது. அவன் வந்த பிறகு அந்த வீட்டில் சில மாற்றங்கள் தெரிந்தன. சுதர்ஷன் வாசல் கூட்டிக் கோலம் போட ஒரு பாட்டியை வேலைக்கு அமர்த்தி இருந்தான். ஆனால் அந்தப் பாட்டியை வீட்டுக்குள் கூட்டித் துடைப்பது உட்பட எந்த வேலைக்கும் அவர்கள் சேர்த்துக் கொள்ளவில்லை.

வீட்டுக்குள்ளே பாம்புகளும், பல ரகசியங்களும் இருப்பதால் தான் வெளியாள் யாரையும் அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கிறார்கள் என்று கல்யாணும் வேலாயுதமும் நினைத்தார்கள்வேலாயுதம் சுதர்ஷனிடமாவது பேச்சுக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தார். பொதுவாகவே அவர் வேலைக்காரர்களிடம் பேசுவதை அவர்களுக்குத் தரும் பெரிய கவுரமாகவே நினைத்தார். அதை உறுதிப்படுத்துகிற மாதிரி அவர் பேசப் போனால் அவர்களும் நடந்து கொண்டு மரியாதையுடன் பேசுவார்கள். அப்படியே சுதர்ஷனும் நினைப்பான் என்று எண்ணினார் அவர்.

ஆனால் நடை உடை பாவனைகளில் நாகராஜை விடப் பல விதங்களில் மேம்பட்டிருந்த சுதர்ஷன் பேசும் விஷயத்தில் அவன் முதலாளியே எத்தனையோ தேவலை என்று நினைக்கும்படி நடந்து கொண்டான். அவன் பார்த்தால் புன்னகை செய்து விட்டு பேச்சுக் கொடுக்கலாம் என்று எண்ணிய வேலாயுதம், அவன் வெளியே தென்படும் நேரங்களில் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்ஆனால் அவன் தப்பித்தவறி கூட அவர் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.

மாலை நாகராஜும், அவனும் சேர்ந்து ரேஸ்கோர்ஸில் நடக்கப் போனார்கள். இருவரும் வேகமாக நடந்தார்கள்பேசிக் கொண்டே அவர்கள் நடக்கும் போது நாகராஜ் முதலாளி, சுதர்ஷன் தொழிலாளி போலத் தெரியவில்லை. நண்பர்களைப் போலவே பேசிக் கொண்டு போனார்கள்.

இரண்டு நாட்களில் ஒரு நாள் காலை பதினோரு மணிக்கு ஒரு ராணுவ அதிகாரி வந்து போனார். இன்னொரு நாள் வேறொரு சுவாமிஜி வந்தார். இருவரும் வந்த போது அவர்களை வரவேற்கவும், போகும் போது அவர்களை வழியனுப்பவும் சுதர்ஷன் வெளியே வந்தான். அவர்கள் போனவுடனே ஒரு கணம் கூடத் தாமதிக்காமல் உள்ளே போய் விட்டான். மற்ற சமயங்களில் போன் பேச மட்டும் வெளியே வருவான். அந்த அழைப்புகள் எல்லாம் நாகராஜிடம் அப்பாயின்மெண்ட் கேட்டு வந்தவை என்பது அவன் ஹிந்தியிலும், தமிழிலும், கன்னடத்திலும், தெலுங்கிலும்  சொல்லும் பதில்களிலேயே தெரிந்தது.

“ஐந்து மாதங்களில் இல்லையே. கேன்சல் ஆகும் வாய்ப்பும் குறைவு சார். பார்க்கிறேன். இருந்தால் சொல்கிறேன்....”

ஜனவரி ஐந்தாம் தேதிக்கு மேல் தான்.... சாரி சார்.... அதுவே ஓக்கேயா..... சரி அட்வான்ஸ் ஒரு லட்சம் அனுப்பி வையுங்கள். இல்லையில்லை. ஒருத்தருக்கு மட்டும் தான் அனுமதி. சரி. சந்தோஷம்....”

வேலாயுதம் இது போன்ற பேச்சுக்களைக் கேட்டு மனம் புழுங்கினார். அவருக்கு மட்டும் இது போல் ஒரு அமைப்பிருந்தால் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் முப்பது ஆட்களைப் பார்த்து விடுவார். இவனைப் போல ஐந்து லட்சமெல்லாம் அவருக்கு வேண்டாம்; ஒரு லட்சம் போதும். ஆளுக்கு அரை மணி என்றாலும் பதினைந்து மணி நேரம் தான் அதற்கு ஆகும். ஆளுக்கொரு லட்சம் கொடுத்தாலும் ஒரு நாளுக்கு முப்பது லட்சம். ஒரு மாதத்துக்கு ஒன்பது கோடி. வருடத்துக்கு 108 கோடி.... ஐயோ ஐயோ... மூலதனப் பிரச்சினை இல்லை, தொழிலாளர் பிரச்சினை இல்லை,  மார்க்கெட் பிரச்சினைகள் இல்லை....

இரண்டு நாளும் இரவு மகன் வந்தவுடன் அன்று நடந்ததை அவர் ஒப்பித்தார். கிட்டத்தட்ட அவர் சிந்தனைகள் தான் கல்யாணுக்கும் என்றாலும் அவன் அவரைப் போல அங்கலாய்க்கவோ, புலம்பவோ இல்லை. ஆனால் பக்கத்து வீட்டுக்காரனிடம் எப்படியாவது நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், அதற்கென்ன வழி என்று யோசித்துக் கொண்டுதானிருந்தான்

இரண்டு இரவுகளில் பக்கத்து வீட்டைக் கண்காணித்து எந்தப் புதிய நிகழ்வும் நடக்காததால் மூன்றாம் நாள் இரவு அவன் கண்காணிப்புக்குப் போகவில்லை. தன் அறையில் உறங்கியிருந்த அவனை இரவு பதினொன்றரைக்கு வேலாயுதம் போனில் பரபரப்புடன் மூச்சு வாங்க அழைத்தார். “கல்யாண் சீக்கிரம் கீழே வா...”




(தொடரும்)
என்.கணேசன்


Sunday, February 21, 2021

வெற்றியில் எச்சரிக்கையாயிருங்கள்!

தோல்வியை விட ஒரு மனிதன் வெற்றியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏன் தெரியுமா?

Thursday, February 18, 2021

இல்லுமினாட்டி 90

ர்னெஸ்டோ பிதோவன் இசையையும், ஒயினையும் மறந்து அன்றிரவு அக்ஷயின் திபெத் அனுபவங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவன் எப்படி காற்றின் வேகத்தில் நகரக் கற்றுக் கொண்டான் என்பதை விளக்கும் போது அதிகாலை மூன்று மணிக்கு இமாலயக் குளிரில் எழுந்து செய்த பயிற்சிகளைச் சொன்னான். ஒரு நாளுக்கு மூன்று மணி நேரம் தியானம் செய்ததையும், ஏழு மணி நேரம் பயிற்சிகள் செய்ததையும் சொன்னான். மாதக்கணக்கில் இப்படித் தொடர்ந்து செய்து அவன் மனமும், உடலும் இணைந்து அந்த வித்தையில் தேர்ச்சி பெற்றதைச் சொன்னான். தினமும் பத்து மணி நேரம் பல மாதங்கள் தொடர்ந்து அவன் பயிற்சி செய்ததைக் கேட்ட போது மகத்தான விஷயங்கள் சுலபமாகக் கிடைத்து விடுவதில்லை என்று மனதிற்குள் அவர் சொல்லிக் கொண்டார்

அவர் அவனிடம் கேட்டார். “எங்கே போனாலும் ஒருசில வினாடிகளில் நீ நிறைய விஷயங்களைக் கவனிக்கும் சக்தி படைத்தவன் என்று உன்னைப் பற்றிச் சொன்னார்கள். அது எப்படி சாத்தியமாகிறது?”

அக்ஷய் சொன்னான். “அதற்கும் என் குரு தான் காரணம். ஏதாவது பயிற்சிகள் செய்ய சில சமயங்களில் வெளியிடங்களுக்கு என்னை அனுப்புவார். நான் திரும்பி வந்தவுடன் என்னிடம் அந்தப் பயிற்சிகளுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத பத்து கேள்விகளாவது கேட்பார். நீ வருகிற வழியில் எத்தனை ஆடுகள் பார்த்தாய்,  நீ தியானம் செய்த இடத்தில் உன் எதிரில் எத்தனை பைன் மரங்கள் இருந்தன, நீ நடந்து வந்த போது உன்னைக் கடந்து போன மனிதர்கள் எத்தனை என்கிற மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்பார். ஆரம்பத்தில் எனக்குப் பத்தில் இரண்டு கேள்விகளுக்குக் கூடப் பதில் தெரியாது. சின்னச் சின்ன விஷயங்களையும் கவனிப்பது முக்கியம் என்று என் குரு அடிக்கடி சொல்வார் ….”

எர்னெஸ்டோவுக்கு ஒரு கணம் அவன் மீது பொறாமையாக இருந்தது. எப்படிப்பட்ட அனுபவங்கள் நிறைந்த வாழ்க்கை அவன் வாழ்ந்திருக்கிறான்!

அக்ஷய் பழைய நினைவுகளில் புன்னகை பூத்தவனாகச் சொன்னான். ”நான் அவர் இந்தக் கேள்வி கேட்கலாம், அந்தக் கேள்வி கேட்கலாம் என்று எதிர்பார்த்து அதையெல்லாம் கவனித்துக் கொண்டு வந்து பதில் சொல்லத் தயாராயிருப்பேன். ஆனால் அதைத் தெரிந்து வைத்தவர் போல அதை மட்டும் கேட்க மாட்டார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு நான் யோசித்து தான் பதில் சொல்ல வேண்டியதாயிருக்கும்அவர் எப்போதும் சொல்வார். “வாழ்க்கையில் எதிர்பார்ப்பதை விட அதிகமாக எதிர்பார்க்காதது தான் நடக்கும். அதற்கு நாம் எப்போதுமே தயாராக இருக்க வேண்டும்.” என்பார்…”  
எர்னெஸ்டோ அந்த குருவின் தீர்க்கதரிசனத்தையும், அதைத் தன் சீடனுக்கு அவர் சொல்லிக் கொடுத்த விதத்தையும் வியந்தார். மேலும் சிறிது நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். பின் எர்னெஸ்டோவுக்குக் கண் இமைகள் தானாக மூட ஆரம்பித்தன. இருவரும் உறங்க ஆயத்தமானார்கள்.

ந்த நேரத்திலும் விஸ்வம் உறங்காமல் தியானத்தில் இருந்தான். அவன் இப்போதெல்லாம் பாதாள அறையில் தான் அமர்ந்து தியானம் செய்கிறான். அவன் மனம் டேனியலின் உடலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் இப்போது முழுமையாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தது. சில நாட்களுக்கு முன் காட்டிய எதிர்ப்பை அந்த உடல் இப்போதெல்லாம் காட்டுவதில்லை...

அவனையே பார்த்தபடி ஜிப்ஸி அமர்ந்திருந்தான். விஸ்வம் அவனை எப்போதுமே ஆச்சரியப்படுத்தத் தவறுவதில்லை.  விஸ்வத்துடனான முதல் சந்திப்பு ஜிப்ஸிக்கு இப்போதும் பசுமையாக நினைவிருந்தது. எந்தக் குறிக்கோளும் இல்லாமல், இலக்குமில்லாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்து கொண்டிருந்தவன் பின் எப்படி நேரெதிராக மாறி விட்டான்! ஜிப்ஸி எதிர்பார்த்ததற்கும் மேலாக ஒவ்வொரு கட்டத்திலும் விஸ்வத்தின் முன்னேற்றம் இருந்தது. தொடுவானம் நோக்கி விரையும் எரிநட்சத்திரம் போல இலக்குகளை நோக்கிய அவன் பயணம் இருந்தது. இல்லுமினாட்டியில் சேர்ந்து அங்கும் அவர்களிடம் அவன் பிரமிப்பையே ஏற்படுத்தினான். க்ரிஷ் இல்லுமினாட்டியில் பேச வரும் வரை எல்லாமே பிசிறில்லாமல் தான் போனது. அதன் பின் அங்கே நடந்ததை ஜிப்ஸியும் எதிர்பார்த்திருக்கவில்லை.

கடைசியில் அவனாலும் விஸ்வத்தைக் காப்பாற்ற முடியாமல் போன போது எல்லாம் முடிந்து விடவில்லை என்று தெரிவிக்கும் விதமாக வூடு சடங்கில் ஆவியை உடலில் வரவழைக்கும் இசையை அவன் மீட்டி அந்த இசையை விஸ்வத்தைச் சேரும் அலைவரிசையில் அனுப்பியும் வைத்தான். அந்த இசை ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு உடலிலிருந்து உயிர் போய்க் கொண்டிருப்பதைச் சூசகமாகத் தெரிவிக்கவும் செய்தான்.  விஸ்வம் வாழ்ந்த காலத்தில் செய்த சாதனைகள் எல்லாம் வேறு ரகம். உயிர் போய்க் கொண்டிருக்கும் போது அவன் கற்ற வித்தைகளோடு இன்னொரு உடலுக்கு வந்து சேர்வது வேறு ரகம். உயிரோடிருக்கையில் விஸ்வம் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தவன் தான். ஆனால் அது அவன் முழுமையாகத் தயார்நிலையில் இருந்து திட்டமிட்டுச் சாதித்தது. ஒரு உடல் அழியும் நிலையில் இருக்கையில் அதிலிருந்து வெளியேறி இன்னொரு உடலை நிரந்தரமாக அடைவது வேறு ரகம் மட்டுமல்ல. சக்திகளைத் துல்லியமாக வசப்படுத்தி வைத்திருந்த ஒருவனுக்குத் தயார்நிலையிலும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடிந்த உச்ச ரகம். கூடுவிட்டுப் பாயும் வழி இருக்கிறது, உடலும் இருக்கிறது என்று தெரிவித்ததை, பழைய உடலை இழந்து கொண்டிருந்த இக்கட்டான நிலையில் இருந்த  விஸ்வம் பயன்படுத்திச் சாதித்தது இதுவரை யாரும் சாதிக்காத சாதனை தான்....

ஜிப்ஸி அவன் சாதனையையும், அதைத் தொடர்ந்து இந்தக் கணம் வரை அவன் எடுத்துக் கொண்டிருக்கும் தளராத முயற்சியையும் வியந்தபடி எழுந்து பாதாள அறையிலிருந்து மேலே சென்றான்’இவன் கண்டிப்பாக வெல்வான். இவனோடு சேர்ந்து நானும் வெல்வேன்’ என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. 

சில நிமிடங்கள் கழித்து விஸ்வம் கண் திறந்தான். அந்தப் பாதாள அறையில் இருள் மண்டிக் கிடந்தது. என்றாலும் எதிர் சுவரில் இருந்த கதேயின் கவிதை மட்டும் மெலிதாக மிளிர்ந்தபடி இருந்தது. அந்தக் கடைசி வரிகளை மறுபடியும் படித்தான்.

"Choose well; your choice is
"Brief and yet endless; "Here eyes do regard you
"In eternity's stillness; "Here is all fullness,
"Ye have to reward you, "Work, and despair not."


அந்த வார்த்தைகளில் எல்லையில்லாத சக்தி இருந்தது. அது அவனுடைய அந்தராத்மாவைத் தொட்டுப் புத்துணர்ச்சியை எழுப்பியது. அவன் ஆழமாக நம்பினான். தனக்குள்ளே அந்தக் கணமே சத்தியமும் செய்து கொண்டான். “நான் கண்டிப்பாக வெல்வேன். நிச்சயமாகத் தோற்க மாட்டேன் 



ம்மானுவல் அக்ஷய் வந்ததிலிருந்து எர்னெஸ்டோவின் பாதுகாப்பு பற்றிய கவலையை விட்டொழித்திருந்தான். எர்னெஸ்டோவுக்கு அக்ஷயை விடச் சிறந்த மெய்க்காப்பாளனை உலகத்தில் கண்டிப்பாக அவனால் தேடிக் கண்டுபிடித்திருக்க முடியாது.  அந்த விஷயத்தில் நிம்மதியைடைந்திருந்த அவன் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த விட்டான். அவனுக்கு இப்போதும் சிந்து பற்றிய சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. நேரடியாகச் சொல்லா விட்டாலும் எல்லாத் தகவல்களையும் அவன் க்ரிஷுக்குத் தந்திருக்கிறான். க்ரிஷ் அதை அலட்சியம் செய்திருக்க மாட்டான். ஆனால் சிந்து பற்றிய எந்தப் புகாரும், சந்தேகமும் க்ரிஷிடமிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் சிந்து விஸ்வத்தின் ஆளாக இருக்க வாய்ப்பில்லை. அதனால் அந்த நம்பர் தெரியாத இண்டர்நேஷனல் காலும் விஸ்வம் செய்ததாக இருக்க வாய்ப்பில்லை என்று அவள் பற்றிய கவலையையும் இம்மானுவல் விட்டொழித்தான்.

அவன் இப்போது முழுக்கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிற ஆள் விஸ்வத்தின் கூட்டாளி தான். அவனைப் பற்றி இம்மானுவல் இதுவரை சேகரித்திருக்கும் தகவல்கள் எல்லாம் ஓரளவு திருப்திகரமாகவே இருந்தன. இன்னும் சில தகவல்கள் மட்டும் வர பாக்கி இருந்தன. மூன்று நாட்களுக்குள் அவையும் கிடைத்து விடும். அப்படிக் கிடைத்து விட்டால் ஒரு தீர்மானத்திற்கு வர அவன் க்ரிஷை ஜெர்மனிக்கு வரவழைப்பது என்று முடிவு செய்தான். க்ரிஷ் வந்தால் விஸ்வத்தின் கூட்டாளி பற்றித் தெளிவு பிறந்து விடும்!

(தொடரும்)
என்.கணேசன்