சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 27, 2012

பரம(ன்) ரகசியம்-11




ரமேஸ்வரன் மகளிடம் கேட்டார். அவன் சார்னு சொன்னது என்னைத்தானே?

“....இல்லை.... உங்க மருமகனைத் தான்... அப்படி சொன்னான்

மீனாட்சிக்கு பொய் இயல்பாக வராது. மகளைக் கண்ணாடி போல படிக்க முடிந்த பரமேஸ்வரனுக்கு ஈஸ்வர் அவரைத் தான் சார் என்று சொல்லி இருக்கிறான் என்பதில் சந்தேகமே இல்லை. நேற்று பிறந்த சுண்டக்காய் என்ன திமிராய் பேசுகிறான் என்று நினைத்தவராக அடுத்ததாக கோபத்திற்கான காரணத்தை மகளிடம் கண்டுபிடித்தார்.

“இந்த வீடு அவனோட கொள்ளுத் தாத்தா கட்டினது, அவனுக்கு அதில உரிமை இருக்குன்னு சொல்ல வேண்டிய அவசியம் உனக்கு என்ன இருக்கு?

மீனாட்சி தானும் பொய்யாய் கோபப்பட்டாள். “ஆமா சொன்னேன். அது உண்மை தானே. உங்க கிட்ட அவனும் என்னமோ கோபமா இருக்கான். அதனால இங்கே வந்து தங்க யோசிக்கிறான். நீங்க தானே அவனுக்கு போன் செஞ்சு பேசி பெரியப்பா சொன்னதைச் சொன்னீங்க. அதக் கேட்டுகிட்டு அவன் உங்களுக்காக இங்கே வந்து ஓட்டல்ல தங்கணுமா? நல்லா இருக்கே நியாயம்.

“தாத்தாவை தாத்தான்னு கூப்பிடாம அவன் சார்னு கூப்பிடறான். நானே அவனுக்குத் தாத்தா இல்லைன்னா எங்கப்பா எப்படி அவனுக்குக் கொள்ளுத்தாத்தா ஆவார்?

அவனோட அப்பா   உங்களுக்கு மகன் இல்லைன்னு நீங்க சொன்னதை வசதியா மறந்துடுங்க

பரமேஸ்வரன் மகளை முறைத்தார். இந்த நேரமாகப் பார்த்து ஆனந்தவல்லி அறைக்குள் நுழைந்தாள்.

“எப்பப் பாரு அப்பனும், மகளும் கொஞ்சிக்குவீங்க, இன்னைக்கென்ன அதிசயமா ரெண்டு பேருக்குள்ளே சண்டை?. அவளுக்கு எப்போதுமே பரமேஸ்வரன் தன் குழந்தைகளைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுவது பிடித்ததில்லை. எதிலும் ஒரு அளவு வேண்டும் என்று நினைப்பவள் அவள்.

இவளோட அண்ணன் மகன் இந்தியா வர்றானாம். அவனை இங்கேயே வந்து தங்கு, இது உன் கொள்ளுத் தாத்தா கட்டினது, உனக்கு உரிமை இருக்குன்னு சொல்லித் தர்றா இவ

மீனாட்சி சொன்னாள். “அவன் இவர் சொல்லி வர்றான். அவன் இங்கே வந்து தங்கறதுல என்ன தப்பு

“அவனாவே இங்கே வந்திருந்தா தப்பே இல்லை. அவன் லார்டு கவர்னராட்டம் ஓட்டல்ல தங்கறேன்னு சொல்லி, நீ வேண்டாம் உன் கொள்ளுத்தாத்தா வீடு இது, உங்க தாத்தாவுக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லைங்கற மாதிரி சொல்லி அவனை இங்க வர சம்மதிக்க வச்ச பாரு அது தான் தப்பு

ஆனந்தவல்லி சொன்னாள். “அந்தப் பையன் திமிர் பிடிச்ச பையன்கிற மாதிரி தான் பேச்சுல தெரியுது.... அன்னைக்கும் அவன் உன் அப்பன் கிட்ட அப்படி தான் பேசினான்

மீனாட்சி அடுத்த அஸ்திரத்தை விட்டாள். “அவன் இங்கே தங்காமல் ஓட்டல்ல தங்கினா நமக்குத் தான் அவமானம். அவன் பார்க்க வேற எங்க தாத்தா மாதிரியே இருக்கான்... இருங்க என்னோட லாப்டாப்புல அவனோட ஃபோட்டோ இருக்கு. கொண்டு வந்து காண்பிக்கிறேன்.

பார்க்க தன் கணவன் மாதிரி இருப்பதாகக் கேட்டவுடன் ஆனந்தவல்லிக்கு ஒரு புதிய ஆர்வம் பிறந்தது. அவள் பேத்தியிடம் சொன்னாள். “பார்க்க மட்டும் தான் அப்படி போல இருக்கு. உங்க தாத்தாவுக்கு எப்பவுமே திமிரு இருந்ததில்லை....

“அது ஓவ்வொண்ணு ஒவ்வொருத்தர் கிட்ட இருந்து வரும்...என்று சொல்லி விட்டு மீனாட்சி லாப்டாப் எடுத்து வர நகர்ந்தாள்.

அவள் போன பிறகு ஆனந்தவல்லி மகனிடம் கேட்டாள். “அப்படின்னா திமிரு யார் கிட்ட இருந்து அவனுக்கு வந்திருக்குன்னு உன் மகள் சொல்றா. என்னைச் சொல்றாளா, உன்னைச் சொல்றாளா?

பரமேஸ்வரன் லேசாய் புன்னகைத்தார். அவருக்கு ஈஸ்வர் மேல் கோபம் இருந்த போதும் அதையும் மீறி அவன் இந்தியா வருவதில் ஒருவித திருப்தி இருந்தது. அவர் பேசினதுக்கு ஏதோ ஒரு மரியாதை இருக்கிறது. ஆனால் அவர் மீது இருக்கும் கோபத்தை ஒவ்வொரு முறையும் அவன் சுட்டிக்காண்பிக்காமல் இல்லை. இந்த வீடு கூட அவருடையதாய் இருந்திருந்தால் அவன் வந்து தங்கியிருக்க மாட்டான் என்பது உறுத்தலாக இருந்தது. அதை நினைக்கையில் அவர் புன்னகை வந்த வேகத்தில் மறைந்தது.  

மீனாட்சி லாப்டாப்புடன் வந்தாள். ஈஸ்வரின் படம் ஒன்றை அதில் அவர்களுக்குக் காண்பித்தாள். பரமேஸ்வரன் பேச்சிழந்து போனார். அவருடைய தந்தையின் மறு அச்சாக அவர் பேரன் இருந்தான். பசுபதி சொன்னது நினைவுக்கு வந்தது. “இருக்கிற மண் எதுவானாலும் விதை நம் வம்சத்தோடதுடா. தோற்றம் முதற்கொண்டு அவர் சொன்னதை நிரூபித்தது.

கண்களை சுருக்கிக் கொண்டு பார்த்த ஆனந்தவல்லியும் ஆச்சரியப்பட்டு தான் போனாள். “என் ரூம்ல டேபிள் மேல என்னோட கண்ணாடி இருக்கும் கொஞ்சம் கொண்டு வாடி

மீனாட்சி பாட்டிக்கு மூக்குக் கண்ணாடி கொண்டு வந்து தந்தாள். ஆனந்தவல்லி கண்ணாடியைப் போட்டுக் கொண்டு தன் கொள்ளுப்பேரனை ஆராய்ந்தாள். எப்போதுமே கடுகடுவென்றோ, இறுக்கமாகவோ இருக்கும் அவள் முகத்தில் அபூர்வமாக ஒரு மென்மை படர்ந்ததை மீனாட்சி கவனித்தாள்.

“ஏண்டி இது ஒன்னு தான் இருக்கா, வேறயும் இருக்கா?

“நிறைய இருக்கு பாட்டி. சிலதுல அண்ணாவும் அண்ணியும் கூட இருக்காங்க.. சிலது தனியா இருக்கு

மீனாட்சி வேண்டுமென்றே அவளுடைய அண்ணன், அண்ணியுடன் ஈஸ்வர் இருந்த படங்களை ஆரம்பத்தில் அவர்களுக்குக் காண்பித்தாள். பரமேஸ்வரன் தன் மகனின் புகைப்படங்களைக் கூட அவன் இங்கிருந்து போன பிறகு பார்த்ததில்லை. அவர் மகன் அந்தப் படங்களில் அவரையே பார்த்தான். அவருடைய ஒரே மகன், அவருடைய உயிருக்கு உயிராய் இருந்தவன், புன்னகையைத் தவிர முகத்தில் எந்த கடுமையான உணர்ச்சிகளையும் காட்டாதவன் இப்போதும் அதே புன்னகையுடன் அவரைப் பார்த்தான்.... அவருக்கு இரண்டு புகைப்படங்களுக்கு மேல் மகனுடைய புகைப்படங்களைப் பார்க்க முடியவில்லை.

“எனக்கு முக்கியமாய் ஒரு போன் கால் செய்ய வேண்டி இருக்கு. மறந்தே போய்ட்டேன்...என்று அவர் எழுந்து சொன்ன போது அவர் குரல் கரகரத்தது. அவர் ஜன்னலோரத்திற்கு நகர்ந்து பெரிய அவசரமில்லாத ஒரு விஷயத்துக்கு யாரையோ கூப்பிட்டு பேச ஆரம்பித்தார்.

ஆனந்தவல்லிக்குத் தன் பேரனைப் பார்த்து அப்படி எந்த உணர்ச்சியும் பெரிதாக ஏற்பட்டு விடவில்லை. ஆனால் ஒவ்வொரு புகைப்படத்திலும் அவளுடைய கணவனின் மறு அச்சு போல் இருந்த கொள்ளுப்பேரன் ஈஸ்வரை மட்டும் உன்னிப்பாகப் பார்த்தாள். அவள் பார்த்து முடித்து மீனாட்சி லாப்டாப்பை மூடிய போது பரமேஸ்வரனும் தன் பேச்சை முடித்திருந்தார்.

அந்தப் பையன் பேர் என்ன? ஆனந்தவல்லி கேட்டாள். அவள் குரலிலும் என்றுமில்லாத மென்மையும் ஆர்வமும் தெரிந்தது.

“ஈஸ்வர்மீனாட்சி சொன்னாள்.

மகனைப் பார்த்து ஆனந்தவல்லி சொன்னாள். ஓ.. உன் பேர் தான் அவனுக்கு உன் மகன் வச்சிருக்கானோ”.

பரமேஸ்வரன் ஒன்றுமே சொல்லவில்லை.

“எப்ப வர்றானாம்? ஆனந்தவல்லி பேத்தியைக் கேட்டாள்.

“வர்ற புதன்கிழமைமீனாட்சி சொன்னாள்.

“ஏன், அதுக்கு முன்னாடி எந்த ஃபிளைட்லயும் டிக்கெட் கிடைக்கலையோ?


குருஜியின் வீட்டு ஹாலில் அவருடைய தரிசனத்திற்காகக் காத்திருந்தவர்கள் பதினெட்டு பேர். அவர்களில் இரண்டு தொழிலதிபர்கள், ஒரு சினிமா டைரக்டர், ஒரு விஞ்ஞானி, ஒரு பிரபல கதாகாலட்சேபக்காரர்,  ஒரு எம்.எல்.ஏயும் அடக்கம். அவர்களுடன் சேர்ந்து காத்துக் கொண்டு இருந்த கணபதிக்கு வயது 21 என்றாலும் உயரம் ஐந்தடி கூட இல்லை. குடுமி வைத்துக் கொண்டிருந்தான். பழைய வேட்டியைக் கச்சை கட்டிக் கொண்டிருந்த அவன் மேல் உடம்பில் ஒரு அழுக்குத் துண்டு மட்டும் இருந்தது. அவனை அவர் வரச் சொன்னதாக குருஜியின் வேலையாட்களில் ஒருவன் காலையில் தான் வந்து சொல்லி விட்டுப் போனான். பக்கத்து கிராமத்தில் ஒரு சிறிய வினாயகர் கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகராக இருந்த அவனுக்கு குருஜி மேல் மிகுந்த பக்தியும், மரியாதையும் உண்டு. அத்தனை பெரிய மனிதர் அவனை ஒரு பொருட்டாக நினைத்தது மட்டுமல்லாமல் அன்பாகவும், மரியாதையாகவும் கூடப் பழகுவார்.

சென்ற வருடம் ஒரு பொது நிகழ்ச்சியில் தான் அவரை அவன் முதல் முதலாக சந்தித்தான். கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த அவனை மேடையில் உட்கார்ந்திருந்த அவர் சிறிது நேரம் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு நிகழ்ச்சி முடிந்தவுடன் தன்னை வந்து பார்க்கும்படி ஒருவரிடம் சொல்லி அனுப்பினார். கணபதிக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. நடிகர்கள், அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள் போன்றவர்கள் எல்லாம் அவர் தரிசனத்திற்காகக் காத்துக் கிடக்கிறார்கள் என்று பத்திரிக்கைகளில் பல முறை படித்திருக்கிறான். அப்படிப்பட்டவர் அவனைப் போன்றவனை அழைத்துப் பேச முன்வந்தது ஆச்சரியமாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் அந்த ஹாலில் ஒரு அறையில் அவரைச் சந்தித்தான். அவனைப் பற்றி அவர் விசாரித்தார். ஏன் அவனை மட்டும் தேர்ந்தெடுத்து விசாரித்தார் என்பது கணபதிக்கு இன்று வரை விளங்கவில்லை. ஆள் மாறி அழைத்து விட்டார் என்று தான் ஆரம்பத்தில் நினைத்தான்.

ஒரு ஏழை பிராமண அர்ச்சகர் குடும்பத்தவனான அவனுக்குத் தன்னைப் பற்றி சொல்ல பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. திருமணமாகாத இரண்டு அக்காள்கள், ஒரு விதவைத் தாய், ஒரு கிராமத்து சிறிய பிள்ளையார் கோயிலில் மிக சொற்ப வருமானம் தரும் அர்ச்சகர் வேலை இது மட்டுமே தான் அவனுக்கு சொல்ல இருந்த தகவல்கள். இத்தனையும் சொல்லி விட்ட பிறகு நான் வேறொரு ஆள் என்று நினைத்து உன்னை அழைத்து விட்டேன் என்று சொல்லி அவர் அனுப்பி விடுவார் என்று தான் அவன் நினைத்தான். ஆனால் அவர் அப்படி அனுப்பி விடவில்லை. அவனைப் பற்றி ஒரு புத்தகமே எழுதப் போகிறவர் போல அவனைப் பற்றி சர்வமும் விசாரித்தார். அவன் படித்த வேதபாடங்கள் பற்றி, அவன் சொல்லும் மந்திரங்கள் பற்றி, அவன் பூஜிக்கும் வினாயகர் பற்றி, பல விஷயங்களைச் சொல்லி அதைப் பற்றி என்னவெல்லாம் அவன் நினைக்கிறான் என்பது பற்றி எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அறிவிலும் அவன் அவருக்கு சமமானவன் அல்ல, அந்தஸ்திலும் அவன் அவருக்கு சமமானவன் அல்ல, பெயர் புகழிலும் அவனிற்கு எத்தனை ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்தில் இருப்பவர் அவர். அப்படிப்பட்டவர் மிக அன்போடு அவனை அழைத்துப் பேசியதும், அவனைப் பற்றிக் கேட்டதும் அவனுக்குக் கண்களில் நீரை வரவழைத்து விட்டது.

கடைசியில் அவன் கேட்டான். “ஐயா, என்னை மாதிரி ஒரு சாதாரணமானவனை எதுக்கு இவ்வளவு அன்பா விசாரிக்கறீங்கன்னு தெரியலையே?

அவன் கேள்விக்கு அவர் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. பிறகு புன்னகையுடன் சொன்னார். “எனக்கு நீ சாதாரணமானவன்னு தோணலை. அது தான்....

கணபதிக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குப் பிறகு அவர் தரிசனத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன் ஒரு முறை வந்தான். ஆனால் அன்று அவரை சந்தித்துப் பேச முடியவில்லை. நிறைய கூட்டம் இருந்தது. நான்கு பேரை மட்டும் கூப்பிட்டு பேசிய அவர் அத்துடன் நிறுத்திக் கொள்ள மற்றவர்கள் எல்லாம் ஏமாற்றத்தோடு திரும்பிப் போக வேண்டி வந்தது.

இன்று அவராகவே கூப்பிட்டு அனுப்பியது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. முதலில் எம்.எல்.ஏவை அழைத்து ஐந்தே நிமிடங்களில் பேசி அனுப்பி விட்ட குருஜி இரண்டாவதாக அவனைத் தான் அழைத்தார். அத்தனை பிரபலங்கள் காத்திருக்கையில் குருஜி தன்னைக் கூப்பிட்டனுப்பியது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

சென்று அவரைப் பயபக்தியுடன் தரையில் விழுந்து வணங்கினான். மிக நெருங்கிய நண்பனை விசாரிப்பது போல அவர் அவனைத் தட்டிக் கொடுத்து விசாரித்தார். “எப்படி இருக்கே கணபதி?

ஏதோ இருக்கேன் குருஜி.

“உன்னோட பிள்ளையார் எப்படி இருக்கார்?.குருஜி புன்னகையுடன் கேட்டார்.

அவரும் போரடிச்சுப் போய் உட்கார்ந்திருக்கார்என்று சொல்லி விட்டு களங்கமில்லாமல் கலகலவென்று சிரித்தான் கணபதி. “என்னை மாதிரியே அவரையும் அதிகமா யாரும் கண்டுக்கறதில்லை குருஜி. எங்கெங்கேயோ தூரமா எல்லாம் போய் பெரிய கோயில்கள்ல சாமி கும்பிடற மனுஷங்க பக்கத்துல இருக்கிற சின்னக் கோயிலுக்கு வர யோசிக்கிறாங்க. வழக்கமா வர்ற நாலஞ்சு பேர் தான் தினம் வர்றாங்க. அவரைப் பார்க்க கூட்டம் வரணும்னா பிள்ளையார் சதுர்த்தி வரணும்.

குருஜி புன்னகையுடன் சொன்னார். “சாமியே கூட பெரிய கோயில்ல இருந்தால் தான் மரியாதை. இல்லையா?

“அப்படித்தான் உலகம் இருக்குது குருஜி

சிறிது நேரம் அவன் குடும்பத்தைப் பற்றி விசாரித்த அவர் பிறகு விஷயத்துக்கு வந்தார். “கணபதி. சில நாள் உன் பிள்ளையாருக்குப் பூஜை செய்ய வேற ஆளை ஏற்பாடு செய்து விட்டு வேற ஒரு இடத்துக்குப் பூஜை செய்யப் போக முடியுமா?

கணபதி யோசனையுடன் சொன்னான். “என் ஒன்னு விட்ட தம்பி சுப்புணி வேலை இல்லாமல் சும்மா தான் இருக்கான். ஆனா அவனை பிள்ளையாருக்கு பூஜை செய்ய கூப்பிட்டா தினமும் எழுபது ரூபாய் கேட்கிறான்... போன வாரம் என் தாய் மாமன் மகன் கல்யாணத்துக்கு நான் போக வேண்டி இருந்தது. வேற வழியில்லாம தந்தேன்....

“அது ஒரு பிரச்சினை இல்லை. அவனுக்கு தினமும் எழுபது தரவும், உனக்கு தினமும் பூஜை செய்ய ஐநூறு ரூபாய் தரவும் ஒரு கோயில் நிர்வாகம் தயாரா இருக்கு. போகிறாயா?

அவனுக்கு தினமும் ஐநூறு, அதுவும் சுப்புணிக்கும் எழுபது அவர்களே தந்து விடுகிறார்கள் என்பது கேட்டு கணபதி ஒரு கணம் கண்களை ஆச்சரியத்துடன் விரித்தான். “எந்த சாமிக்கு பூஜை? எத்தனை நாளைக்கு?

“உன் பிள்ளையாரோட அப்பாவுக்கு சிவலிங்கத்துக்கு. பதினஞ்சு இருபது நாளுக்கு மட்டும் தான்”.

“எந்தக் கோயில்ல குருஜி?

குருஜி ஒரு கதையைக் கச்சிதமாகச் சொல்லத் தயாரானார்.

(தொடரும்)

- என்.கணேசன்

Monday, September 24, 2012

வளமான வாழ்விற்கு வழிகள் பத்து!



முதுமை என்றாலே தள்ளாத வயது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளும் வழக்கம் பலரிடம் இருக்கிறது. முதுமையோடு முடியாமையை இணைத்தே அவர்கள் பார்க்கிறார்கள். முதுமை என்றால் உடல் ஆரோக்கியம் இல்லாமல் இருப்பதும் மன அமைதி இல்லாமல் இருப்பதும் தவிர்க்க முடியாதவை என்று எண்ணுகிறார்கள். ஆனால் நூறாவது பிறந்த நாளை சென்ற வருடம் அக்டோபர் நான்காம் தேதி கண்டு நூற்றி ஒன்றாவது பிறந்த நாளை அடுத்த மாதம் கொண்டாட இருக்கும் ஒரு ஜப்பானிய டாக்டர் இன்றும் தன் மருத்துவத் தொழிலைச் செய்து கொண்டு இருக்கிறார், இப்போதும் புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார், உலக நாடுகளுக்குப் பயணித்து சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறார் என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா?

அந்த டாக்டரின் பெயர் டாக்டர் ஷிகிகி ஹினோஹரோ (Dr. Shigeaki Hinohara). இவர் தன் எழுபத்தைந்தாம் வயதிற்கு மேல் 150 நூல்களை வெளியிட்டுள்ளார். அந்த நூல்களில் நீண்ட காலம் வாழ்வதும், நன்றாக வாழ்வதும்’ (Living Long, Living Good) மிகவும் பிரபலமானது. இது பன்னிரண்டு லட்சத்திற்கும் மேலான பிரதிகள் விற்பனையாகி இருக்கிறது. இவர் 75 வயதிற்கும் மேற்பட்ட வயதானவர்களுக்காக “புதிய முதியோர் இயக்கம் (New Old People's Movement) என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். இதன் மூலமாக அவர் மக்களை நீண்ட காலம் நலமாய் வாழ உற்சாகப்படுத்தி வருகிறார்.

மனித உடலில் கிட்டத்தட்ட 36000 வித்தியாசமான ஜீன்கள் இருப்பதாகவும் அந்த ஜீன்களை மனிதர்கள் பயன்படுத்தத் தவறி விடுகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார். புதிய புதிய துறைகளில் புதிய புதிய முயற்சிகள் மேற்கொண்டு உடலையும் மனதையும் முதியவர்கள் இளமையாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ளலாம் என்கிறார் அவர். அது புதிய கலையானாலும் சரி, புதிய விளையாட்டானாலும் சரி புதியவற்றில் உற்சாகமாக ஈடுபடுவதே உடல், மன நலத்திற்கு பேருதவி செய்யும் என்கிறார்.

நூறாண்டு காலத்தையும் தாண்டி வெற்றிகரமாக வாழ்ந்து வரும் அவர் வளமான, நலமான, நீண்ட வாழ்வுக்கு பத்து வழிகளைச் சொல்கிறார். அவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

1) உற்சாகம் முக்கியம்
உண்பதும், உறங்குவதும் முக்கியமே என்றாலும் அவற்றை விட அதிக முக்கியம் உற்சாகமாக இருப்பது. குழந்தைகள் உற்சாகமாக விளையாடும் போது சாப்பாடு, உறக்கம் மறந்து போய் விளையாடுவது போல அதே உற்சாகத்தை வாழ்க்கையில் உருவாக்கிக் கொண்டால் கண்டிப்பாக நம்முள் ஒரு பெரும் சக்தியை உணர்வோம் என்கிறார் அவர்.

2) எடை கூடாதீர்கள்
உங்கள் எடை கூடிக் கொண்டே போகாமல் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வையுங்கள் என்கிறார் அவர். சரியான சத்தான உணவுகளை அளவாக உட்கொள்வதும் வயிற்றுக்கு அதிக வேலை கொடுக்காமல் இருப்பதும் சுறுசுறுப்புக்கும் உடல்நலத்திற்கும் வழி வகுக்கும் என்கிறார்.

3) திட்டமிடுங்கள் 
திட்டமிட்டு வாழுங்கள். அதன்படி இயங்குங்கள். தினமும் நல்ல விஷயங்களில் ஈடுபாடுடன் இருந்தால், எதிர்பார்க்க ஏதாவது ஒன்று எப்போதும் இருப்பதுடன் உற்சாகமும் இருக்கும், மனமும் இளமையாக இருக்கும் என்கிறார் அவர்.

4) எதையும் அனுபவித்து செய்யுங்கள்
எதைச் செய்கிறோமோ, அதில் முழு மனதுடன் ஈடுபட்டு அனுபவித்து செய்தோமானால் ஓய்வு பெறும் எண்ணமே எழாது. அறுபது வயது வரை குடும்பத்திற்காக உழைக்கிறவர்கள், அதற்குப் பின் சமூகத்திற்காகவும், மனிதகுலத்திற்காகவும் தங்களை அர்ப்பணித்து விட வேண்டும். அதையும் அனுபவித்து செய்தோமானால் நாம் நாலு பேருக்கு உபகாரமாக இருக்கிறோம் என்ற திருப்தியில் தனியொரு சக்தியையும் நிறைவையும் நாம் உணர்வோம் என்கிறார்.

5) பெற்றதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
எத்தனையோ கற்கிறோம் என்றாலும் அதனை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொண்டு உதவும் போது அவர்கள் வாழ்க்கையுடன் சேர்ந்து நம் வாழ்க்கையும் சிறப்புற அமைகிறது என்கிறார். அப்படிப் பகிர்ந்து கொள்ளும் போது நம் அறிவையும் புதுப்பித்துக் கொள்கிறோம் அல்லவா?

6) இயற்கைக்கு வாய்ப்பளியுங்கள்
எல்லா வியாதிகளுக்கும் விஞ்ஞான மருத்துவ உதவியையே நாடாதீர்கள் என்கிறார் இந்த மருத்துவர். விஞ்ஞான மருத்துவத்தில் எல்லைகள் என்றுமே உண்டு என்கிறார் அவர். இயற்கை அழகுடன் இயைந்து வாழ்தல், செல்லப் பிராணிகளுடன் மகிழ்தல், இசையில் ஆழ்தல், போன்றவை உடலோடு மனத்தையும் குணப்படுத்துவன. அதை மருத்துவரும் பரிந்துரைக்க முடியாது, விஞ்ஞான மருந்துகளும் தந்து விட முடியாது என்கிறார்.

7) நடங்கள், படியேறுங்கள்
உடலுக்கு வேலை கொடுத்து உங்கள் தசைகளை வலுவாக வைத்துக் கொள்ள முடிந்த வரை நடப்பது, லிப்டில் போவதற்கு பதிலாக படியேறிச் செல்வது போன்ற சிறிய சிறிய வேலைகளில் பெரிய பலன் உடலுக்குக் கிடைப்பதாக அவர் சொல்கிறார்.

8) பணம், பொருள்களில் மிதமாக இருங்கள்
உண்மையான சந்தோஷத்தை பணத்தாலோ, சேர்த்து வைக்கும் சொத்துகளாலோ நாம் அடைந்து விட முடியாது என்பதால் அவற்றில் ஒரு அளவான, மிதமான மனோபாவம் இருப்பது நல்லது என்கிறார். அவை முக்கியம் என்பதை மறுக்காத அவர் அவற்றை விட திருப்தி அதிக முக்கியம் என்கிறார்.

9) எதிர்பாராதவற்றையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
கோடுபோட்டது போல் போவது வாழ்க்கை அல்ல. எத்தனையோ சந்தர்ப்பங்களில் நாம் எதிர்பாராதவையே அதிகம் நடக்கின்றன. அவை எல்லாமே மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் இருப்பதில்லை என்றாலும் அவர்றிலும் ஒரு படிப்பினையைப் பெறுவதும் நம் முன்னேற்றத்திற்காக ஏதாவது விதத்தில் பயன்படுத்திக் கொள்வதும் நம்மை உயர்த்துவதோடு பக்குவப்படுத்தவும் செய்யும் என்கிறார்.

10) எட்ட முடியாத உயரத்தைக் குறிக்கோளாக்குங்கள்
சாதாரணமாக எட்ட முடியாத உயரத்தை குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள். அதை நோக்கிப் பயணிக்கும் போது தான் நம்மிடம் உள்ள கூடுதல் திறமைகளை நம்மால் அறிந்து கொள்ள முடியும். நல்ல ரோல் மாடல் ஒருவரையும் வைத்துக் கொள்வது நமக்கு ஊக்கசக்தியாக அமையும் என்று அவர் கூறுகிறார்.

அறுபது வயதில் வாழ்க்கை முடிந்து விடுவதாகவும் பின் சாகும் வரை எப்படியோ வாழ வேண்டும் என்பதாகவும் நினைப்பவர்கள் பலர் இருக்க, நூறிலும் ஒரு வாழ்க்கை முடிந்து விடுவதில்லை, அதன் உற்சாகமும் குறைந்து விடுவதில்லை என்கிறார் டாக்டர் ஷிகிகி ஹினோஹரோ. அப்படிச் சொல்பவர் அதை சாதித்தும் காட்டியவர் என்பதால் அவரிடம் இருந்து இவற்றைக் கற்றுக் கொண்டு முடிந்த வரை பின்பற்றினால் நாமும் முதுமையிலும் தளர்ந்து விட மாட்டோம் என்பது நிச்சயம்!.

- என்.கணேசன்

Thursday, September 20, 2012

பரம(ன்) ரகசியம்! – 10





ரமேஸ்வரன் மனதில் அன்று ஏனோ ஈஸ்வர் நினைவுகளே திரும்பத் திரும்ப வந்து அலைக்கழித்தன.

நீங்க தப்பான ஆளுக்கு போன் பண்ணியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.... என்று வார்த்தைகளால் அறைந்தவனிடம் அவர் திரும்பவும் பேச ஒரே ஒரு காரணம் அவர் அண்ணன் மேல் வைத்திருந்த அன்பும், அளவுகடந்த மரியாதையும் தான். அப்படி அவர் மறுபடி பேசிய போது நல்ல வேளையாக அவனும் பேசினாலும் கூட, கடைசியில் “வேறொண்ணும் இல்லையே?என்று கேட்டு விட்டு முடிவாக அவருக்கு பதில் ஏதும் சொல்லாமல் பேச்சை நிறுத்தியது அவருக்குப் பிடிக்கவில்லை. பசுபதி சொல்லச் சொன்னதற்கு அவன் என்ன நினைக்கிறான், அதற்கு அவன் பதில் என்ன என்பது பற்றி அவன் ஒன்றுமே சொல்லாதது கோபத்தைக் கிளப்பியது....

அவரிடம் முகத்தில் அடித்தது போலப் பேச யாருக்கும் இது வரை தைரியம் வந்ததில்லை. அவர் மகன் சங்கர் ஒரு தடவை கூட அவர் பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியதில்லை. ஆனால் அவனுடைய மகன் நாக்கில் சவுக்கு வைத்திருக்கிறான்... ஈஸ்வரின் பேச்சு அவர் மகனின் நினைவுகளை மறுபடி முழுவதுமாக எழுப்பியது. ஒரு ஆறாத வடுவை அவர் பேரன் மறுபடி ஆழமாகக் கீறி ரணமாக்கி இருந்தான்.....

பரமேஸ்வரனின் மனைவி இறந்த போது அவர் மகன் சங்கருக்கு வயது ஐந்து, மகள் மீனாட்சிக்கு வயது மூன்று. அவர் தன் குழந்தைகளை உயிருக்கு உயிராக நேசித்தார். மறுமணம் செய்து கொண்டால் அவருடைய இரண்டாம் மனைவி அந்தக் குழந்தைகளை நன்றாகப் பார்த்துக் கொள்வாள் என்ற உத்திரவாதம் இல்லாததால் அவர் மறுமணம் கூட செய்து கொள்ளவில்லை.

அவர் தாய் ஆனந்தவல்லியின் உலகம் நான்கு பேர்கள் மட்டுமே கொண்டது. அவள் தந்தை, அவள் கணவன், அவளுடைய இரண்டு மகன்கள். அந்த உலகில் அவளுடைய பேரக் குழந்தைகளுக்குக் கூட இடம் இருக்கவில்லை. அவள் நினைத்திருந்தால் அந்த தாயில்லாத குழந்தைகளை பாசத்துடன் வளர்க்க முன்வந்திருக்கலாம். ஆனால் அவள் அந்தக் குழந்தைகளைத் தன்னிடம் அண்ட விட்டது கூட இல்லை.

பரமேஸ்வரன் தன் தாயிடம் ஜாடை மாடையாகச் சொல்லிப் பார்த்தார். ஆனந்தவல்லி தாட்சணியம் இல்லாமல் அவரிடம் சொன்னாள். “நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ. இல்லாட்டி நல்ல ஆளா பார்த்து அவங்களைப் பாத்துக்க வேலைக்கு வை. எனக்கு இனிமே இந்தக் குழந்தைகளைப் பார்க்கற வேலையெல்லாம் முடியாது

பரமேஸ்வரன் தாயிடம் மிகுந்த பாசமுடையவர் என்றாலும் அவளுடைய அந்த வார்த்தைகளை அவரால் இன்று வரை மன்னிக்க முடியவில்லை. பேரக் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது வேலையா? எத்தனையோ குடும்பங்களில் தங்கள் பிள்ளைகளிடம் பாசம் இல்லாதவர்கள் கூட பேரக்குழந்தைகளிடம் மிகப்பாசமாக இருப்பதை அவர் பார்த்திருக்கிறார். ஆனால் ஆனந்தவல்லியை என்றுமே யாரும் சாதாரண பட்டியலில் சேர்க்க முடியாது.

அவர் அன்றிலிருந்து என் குழந்தைகளைத் தாயில்லாத குறை தெரியாத மாதிரி வளர்த்துவேன், அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வேன் என்று மனதிற்குள் வைராக்கியமாய் நினைத்துக் கொண்டார். அப்படியே வளர்த்தும் காட்டினார். சமையலுக்கும், மற்ற வேலைகளுக்கும் ஆள் இருந்தால் கூட அவர் குழந்தைகள் பொருத்த வேலைகள் எதையும் வேறு யாரிடமும் விடவில்லை. காலையில் சீக்கிரம் எழுந்து குழந்தைகளை எழுப்பி குளிப்பாட்டி, டிரஸ் செய்து, சாப்பிட வைத்து, ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றுகிற வரை அவர் தான் செய்வார். மகள் மீனாட்சிக்குத் தலைவாருவதும் அவர் தான். அவர்களாகத் தங்களைக் கவனித்துக் கொள்ளும் வயது வரை சாயங்காலம் ஸ்கூல் பஸ் வரும் போது அவரும் வீட்டில் இருப்பார். எத்தனை பெரிய வியாபார விஷயமானாலும் அவருக்கு அவர் குழந்தைகளுக்கு அடுத்தபடி தான்.

கோடிக்கணக்கான வியாபார ஒப்பந்தங்களைக் கையெழுத்துப் போடும் போது கிடைக்காத சந்தோஷம் அவருக்கு அவரைப் பார்த்தவுடன் ‘அப்பாஎன்று கூப்பிட்டபடி ஓடிவரும் அவருடைய குழந்தைகளைப் பார்க்கும் போது கிடைத்தது. அந்தக் குழந்தைகளும் அவர் மேல் உயிரையே வைத்திருந்தனர். அவர்கள் இருவரும் இயல்பாகவே மென்மையானவர்களாகவும், நல்லவர்களாகவும் இருந்தனர்.  அவர் மகன் படிப்பிலும் மிகவும் சூட்டிகையாக இருந்தான். என்றுமே வகுப்பில் முதலிடத்தை அவன் நழுவ விட்டதில்லை. மீனாட்சி படிப்பில் சுமாராக இருந்தாள். அந்தக் குழந்தைகள் எதையாவது பார்த்து விரும்புகிறார்கள் என்று தெரிந்தால் போதும் அது தேவையா இல்லையா என்று நினைக்கும் சிரமத்தைக் கூட பரமேஸ்வரன் மேற்கொண்டதில்லை. அந்தப் பொருள் உடனடியாக வீட்டுக்கு வந்து விடும். அவர்களில் யாருக்காவது உடல்நிலை சரியில்லா விட்டால் அவர் வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டார். அவர்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு எல்லாம் கூட்டிக் கொண்டு போவார்.  அவர்களும் அப்பாவுக்கு மனம் வருத்தமாகும் என்று தெரிந்த எதையும் செய்யாமல் தவிர்த்தார்கள். ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்ட அப்பாவும், இரண்டு பிள்ளைகளும் சேர்ந்து ஒரு சொர்க்கத்தில் இருந்தார்கள். நண்பர்களைப் போல இருந்தார்கள். மற்றவர்கள் பொறாமைப்படும் அளவு அன்னியோன்னியமாய் இருந்தார்கள்.

சங்கர் எஸ்.எஸ்.எல்.சியில் மாநிலத்தில் முதலிடம் வந்தான். பத்திரிக்கைக் காரர்கள் வீடு தேடி வந்த போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இத்தனை நாள் அவருக்குக் கிடைத்த கௌரவம் பணத்தின் மூலம் கிடைத்தது. ஆனால் முதல் முறையாக மகன் மூலமாக ஒரு புதிய கௌரவம் கிடைத்தது என்று உச்சி குளிர்ந்தார். அதன் பிறகு நிறைய பரிசுகள் வாங்கினான். நண்பர்கள் அவரிடம் சொன்னார்கள். “அதிர்ஷ்டம் செய்த மனிதனய்யா நீஎன்றார்கள். அவர் எல்லாவற்றையும் விட அதிகமாக மகனே பெரிய சொத்து என்று நினைத்தார். படிப்பில் மட்டுமல்ல குணத்தில் கூட ஒருவரும் அவனைக் குறை சொல்ல முடியாத அளவு ஒரு உதாரணமாக அவன் இருந்தான். அவனுக்கு என்ன வேண்டுமோ அதை அவரே பார்த்து பார்த்து செய்தார். எட்டு வயதில் சைக்கிளாகட்டும், பதினாறு வயதில் பைக்காகட்டும், இருபத்தியொரு வயதில் காராகட்டும் எல்லாமே இருப்பதிலேயே மிகச் சிறந்தது, விலையுயர்ந்தது என்கிறபடியாகத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொடுத்தார்.

ஆனால் அவர் மகன் மனைவியை மட்டும் தானாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டான். அவன் தன்னுடன் படித்த ஒரு பெண்ணைக் காதலிப்பதாகச் சொன்ன போது அந்தப் பெண் ஒரு நடுத்தரக் குடும்பத்தவள், அதுவும் தெலுங்குக்காரி என்று தெரிந்த போது அவரால் அனுமதிக்க முடியவில்லை. அவருடைய அருமை மகனுக்கு ஒரு ராஜகுமாரி போன்ற பெண்ணைக் கல்யாணம் செய்து வைத்துப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். என்றுமே அப்பாவிற்குப் பிடிக்காது என்று லேசான குறிப்பு கிடைத்தால் உடனே அதை விட்டு விடக் கூடிய அவர் மகன் இதில் மட்டும் பிடிவாதமாக இருந்தான்.

கடைசியில் பரமேஸ்வரன் சொன்னார். “சங்கர். இதுல நான் கண்டிப்பா மனசு மாற மாட்டேன். நானா அவளான்னு நீ தீர்மானிச்சுக்கோ.சொல்லி விட்டு ஆபிசிற்குப் போய் விட்டார். இதைக் கேட்டதற்குப் பின் மகன் கண்டிப்பாக அந்தப் பெண்ணை விட்டு விலகி விடுவான் என்று நூறு சதவீதம் அவர் நம்பினார். அவர் அருமை மகன், அவரை அந்த அளவு நேசிக்கும் மகன் இந்த உலகில் யாரிற்காகவும் அவரை விட்டுக் கொடுக்க மாட்டான் என்பதில் அவருக்கு சந்தேகமே இருக்கவில்லை.

ஆனால் சாயங்காலம் அவர் வீட்டுக்கு வந்த போது அவனுடைய திருமணம் ரிஜிஸ்டர் ஆபிசில் முடிந்து விட்டது என்ற செய்தி காத்திருந்தது. தன் காலின் கீழ் இருந்த நிலமே ஆட்டம் கண்டு விட்டது போலவும், பேரிடி தலையில் விழுந்தது போலவும் அவர் உணர்ந்தார். அவருக்கு கேட்டதை உடனடியாக நம்பவே முடியவில்லை. சொன்னது மகள் மீனாட்சியாக இல்லாமல் இருந்திருந்தால் சிறிதும் நம்பியிருக்க மாட்டார். உண்மை சிறிது சிறிதாக உறைத்த போது உள்ளே உருவான ஒரு பிரளயம் அவரை உயிரோடு சிதைத்துப் போட்டது.

பரமேஸ்வரன் மகளிடம் சொன்னார். “மீனாட்சி. இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் என் மூஞ்சில முழிக்க வேண்டாம்னு உங்க அண்ணன் கிட்ட சொல்லிடு

மீனாட்சி அண்ணனுக்கு சாதகமாக அவரிடம் பேச முற்பட்ட போது இறுகிய குரலில் கேட்டார். “மீனாட்சி உனக்கு அப்பா வேணுமா வேண்டாமா

“என்னப்பா இப்படி கேட்கறீங்க.? நீங்க எனக்கு வேணும்ப்பா

“அப்படின்னா அவனைப் பத்தி இன்னொரு தடவை நீ என் கிட்ட பேசக் கூடாது

அவள் அவரை மிகுந்த துக்கத்துடன் பார்த்தாள். ஆனால் அவர் முகத்தில் தெரிந்த நூறு சதவீத உறுதியை அவளால் உணர முடிந்தது. அதற்குப் பிறகு அவள் என்றுமே அவனைப் பற்றி அவரிடம் பேசியதில்லை. அவர் மகனை அவர் பார்த்ததும் இல்லை.

மனத்தின் ரணம் குறைய காலம் நிறைய தேவைப்பட்டது.  ஆனால் மகள் மீனாட்சியின் அன்பில் அவரால் தாக்குப் பிடிக்க முடிந்தது. மகனை இழந்த அவர் மகளையாவது தக்க வைத்துக் கொள்ளப் பார்த்தார். வீட்டோடு இருக்கும் படியான நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து அவளுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். மாப்பிள்ளை விஸ்வநாதன் சங்கருடன் கல்லூரியில் படித்தவன் தான். நல்ல குடும்பம். நல்ல புத்திசாலி. பண வசதியில் மட்டுமே அவர்களுக்குக் குறைந்தவன். பார்க்க லட்சணமாய் இருந்தான். மீனாட்சிக்கும் பிடித்திருக்கவே அவர் அவளுக்கு அவனைத் திருமணம் செய்து வைத்து வீட்டோடு வைத்துக் கொண்டார். அவருடைய கம்பெனியில் ஒரு பெரிய நிர்வாகப் பொறுப்பை அவனுக்குத் தந்தார்.

விஸ்வநாதன் ஏதோ பேச்சு வாக்கில் அவரிடம் சங்கர் பற்றி ஒரு முறை சொன்ன போது அவனிடமும் சொன்னார். எனக்கு சில விஷயங்களைத் திரும்பத் திரும்ப சொல்றது பிடிக்காது. அதனால ஒரே தடவை சொல்றதை புரிஞ்சுக்கோங்க மாப்பிள்ளை. அவனைப் பத்தி எப்பவுமே என் கிட்ட பேசிடாதீங்க

அதற்கப்புறம் அவர் மாப்பிள்ளையும் அவரிடம் சங்கர் பற்றி பேசினதில்லை. மகள் மீனாட்சி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மகேஷ் என்ற அந்தப் பேரப்பிள்ளை அவருடைய செல்லமாக ஆரம்பித்தான். சிறிது சிறிதாக அவர் மனக்காயம் ஆற ஆரம்பித்தது. காலம் ஓடிய ஓட்டத்தில் சிறிது சிறிதாக பழைய அமைதி திரும்ப ஆரம்பித்தது. எல்லாம் ஈஸ்வர் என்ற அந்தப் பையனிடம் அவர் பேசிய வரை....

என்னப்பா, தனியா உட்கார்ந்து என்ன யோசிச்சுகிட்டிருக்கீங்க?

மீனாட்சி அவர் அறைக்குள் நுழைந்தாள். மகளைப் பார்த்த போது எப்போதும் போல மனம் மென்மையாகியது. அதனாலேயே மகன் நினைவு மேலும் வலித்தது. நெருக்கமான யாரிடமாவது சொல்லி மனதில் உள்ளதை இறக்கி வைக்க வேண்டும் என்றும் இல்லா விட்டால் தாங்காது என்றும் தோன்றவே முதல் முறையாக அவராகவே அவளிடம் ஈஸ்வர் பற்றிய பேச்சை எடுத்தார்.

“உன் அண்ணன் பையன் கிட்ட நான் ரெண்டு நாளுக்கு முன்னாடி பேசினேன்.

மீனாட்சி கண்கள் விரியத் தந்தையைப் பார்த்தாள். அவள் ஒரேயடியாக சந்தோஷப்பட்டு விட வேண்டியதில்லை என்று எண்ணிய பரமேஸ்வரன் மெல்ல பசுபதி கடைசியாகச் சொன்னதையும், அதனால் அவருக்கு சங்கரின் மகனிடம் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதையும், அவன் முகத்தில் அடித்தது போல பேசியதையும் மகளிடம் சொன்னார்.

ஈஸ்வரின் ஆரம்பப் பேச்சைக் கேட்டு லேசாக மீனாட்சிக்குப் புன்னகை அரும்பினாலும் தந்தையின் முகத்தில் தெரிந்த அவமானத்தைக் கவனித்த போது அந்தப் புன்னகை அரும்பிலேயே கருகியது. அவள் முகமும் வாடியதைக் கவனித்த பரமேஸ்வரன் நினைத்தார். “இவள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நான் என்றைக்கோ செத்திருப்பேன்....

அவன் சொன்னதைப் பெரிசா நினைக்காதீங்கப்பா. அவன் நல்ல பையன் தான். ஆனா கோவத்தில மட்டும் உங்க மாதிரியும், பாட்டி மாதிரியும்னு அண்ணா சொல்வான்....

அவரையும் அவர் அம்மாவையும் மாதிரி என்றதை அவரால் ரசிக்க முடியவில்லை. “நீ அந்தப் பையன் கிட்ட பேசியிருக்கியா?

அண்ணா கிட்ட தான் அதிகம் பேசுவேன்.... அவன் கிட்ட, எப்படி இருக்கே? நல்லா இருக்கியான்னு மட்டும் தான் பேசி இருக்கேன். போன்ல அதுக்கு மேல பேச விஷயமும் இல்லை... அவனைப் பார்த்ததும் இல்லை. அண்ணா இறந்த பிறகு ரெண்டே தடவை தான் பேசி இருக்கேன்..

பரமேஸ்வரன் கேட்டார். “நீ மட்டும் தான் பேசுவாயா, இல்லை மாப்பிள்ளை, மகேஷ் எல்லாருமே பேசுவாங்களா?

“இல்லை அவங்க பேச மாட்டாங்க......என்று வருத்தம் தொனிக்க மீனாட்சி சொன்னாள். பரமேஸ்வரனுக்கு அந்தத் தகவல் சிறிது திருப்தியை அளித்தது.

அந்த நேரமாய் பார்த்து அவள் செல் போன் அடிக்க அவள் அதை அழுத்திப் பேசினாள். “ஹலோ..

“ஹலோ அத்தை நான் ஈஸ்வர் பேசறேன்

மீனாட்சி அவளையும் அறியாமல் சந்தோஷமாய் சொன்னாள். “ஈஸ்வர். நிஜமாவே உனக்கு நூறு ஆயுசு. இப்ப தான் உன்னைப் பத்தி பேசிகிட்டிருந்தேன்...

யார் கிட்ட?

பரமேஸ்வரன் முறைப்புடன் தலையசைக்கவே மீனாட்சி பொய் சொன்னாள். “மகேஷ் கிட்ட தான். அண்ணி எப்படியிருக்காங்க?

“அம்மா நல்லாயிருக்காங்க. மாமாவும் மகேஷும் எப்படியிருக்காங்க?

சௌக்கியம் தான். சொல்லுப்பா என்ன விஷயம்?

“உங்க ஊர்ல தங்கற மாதிரி நல்ல ஓட்டல் எது?

“எதுக்கு கேட்கறே?

“நான் இந்தியா வர்றேன். அதனால தான்

மீனாட்சியின் மனதில் சந்தோஷ கங்கை கரை புரண்டு ஓடியது. இன்று தந்தை
அவராகவே பேரதிசயமாக ஈஸ்வர் பற்றிய பேச்சை எடுத்ததும், சரியாக அதே நேரத்தில் அதிசயமாக அவன் வருவதாகப் போன் செய்ததும் நல்ல சகுனமாகத் தோன்றியது. தாத்தா-பேரனாவது சேர ஒரு பொன்னான சந்தர்ப்பம் வர வேண்டும் என்று விரும்பிய அவள் மூளை மின்னல் வேகத்தில் வேலை செய்தது. அவரை நேரில் பார்த்துக் கொண்டு தைரியமாக சிலதை எல்லாம் சொல்ல முடியாது என்று எண்ணி பரமேஸ்வரனிற்கு முதுகைக் காண்பித்து திரும்பியபடி மருமகனிடம் சொன்னாள். 

“இங்க வீடு இருக்கறப்ப நீ எதுக்கு ஓட்டல்ல தங்கறே?

“என்னவோ உங்க வீட்டுக்குக் கூப்பிடற மாதிரி கூப்பிடறீங்க?

“நான் என் வீட்டுக்குக் கூப்பிடலை. உன்னோட வீட்டுக்குக் கூப்பிடறேன். இது உன் தாத்தா கட்டின வீடு கூட இல்லை.... உன் கொள்ளுத்தாத்தா கட்டின வீடு. நீ உரிமையோட வரலாம்

“ஓ அப்படியா. அப்ப சரி. அடுத்த புதன் கிழமை வர்றேன். சார் கிட்ட சொல்லி வையுங்க?

“எந்த சார் கிட்ட சொல்லி வைக்கிறது?

“உங்க அப்பா கிட்ட தான்.. சரி அத்தை வேறொரு கால் வருது. நான் அப்புறமா பேசறேன்.

அவன் போனை வைத்து விட்டான்.

மீனாட்சி எச்சிலை விழுங்கியவளாக பரமேஸ்வரனை சமாளிக்கும் உபாயங்கள் அத்தனையையும் யோசித்தபடி மெல்ல அவர் பக்கம் திரும்பினாள்.

பரமேஸ்வரன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க மகளைப் பார்த்து கொண்டிருந்தார்.

(தொடரும்)

- என்.கணேசன்


Monday, September 17, 2012

காரியம் பெரிது, வீரியமல்ல!




ண்டிட் மதன் மோகன் மாளவியா காசி இந்து பல்கலைக்கழகம் துவங்க அரும்பாடுபட்டுக் கொண்டிருந்த நேரமது. ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிப்பது சாதாரண விஷயமல்லவே. நன்கொடை வேண்டி பல அரசர்கள், செல்வந்தர்கள், சமூக ஆர்வலர்களை சலிக்காமல் சென்று சந்தித்து அவர் நன்கொடை வேண்டினார். அப்படித்தான் அவர் ஹைதராபாத் நிஜாமிடமும் சென்றார்.

ஹைதராபாத் நிஜாம் இயல்பிலேயே தர்மவான் அல்ல. அதிலும் ஒரு இந்து பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க அவரிடம் மாளவியா நன்கொடை கேட்டதை சிறிதும் நிஜாம் ரசிக்கவில்லை. மாறாக அவருக்குக் கடும்கோபம் தான் வந்தது. தன் காலில் இருந்த செருப்பைக் கழற்றி மாளவியா மீது வீசினார். மாளவியா சிறிதும் அமைதி இழக்காமல் நிஜாமிற்கு நன்றி கூறி அந்த ஒற்றைச் செருப்பை எடுத்துக் கொண்டு வெளியேறினார். செருப்பைக் கூட விடாமல் எடுத்துக் கொண்டு மாளவியா வெளியேறியவுடன் நிஜாமிற்கு சந்தேகம் வந்தது. தன் சிப்பாய்களை அவரைப் பின் தொடரச் சொல்லி அவர் என்ன செய்கிறார் என்று பார்க்கச் சொன்னார்.

மதன் மோகன் மாளவியா அந்த ஒற்றைச் செருப்புடன் முச்சந்தியில் நின்று, “இது மகாராஜாவின் செருப்பு. இதை ஏலம் விடப் போகிறேன்என்று அறிவித்தார். கூடிய மக்கள் முதலில் அவர் நகைச்சுவையாக ஏதோ செய்கிறார் என்று நினைத்தாலும் அந்த வேலைப்பாடுடைய செருப்பைப் பார்த்தவுடன் அது மகாராஜாவுடையது தான் என்பதைத் தெரிந்து கொண்டார்கள். ஏலத்தில் உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள். மிகக் குறைந்த விலையில் ஆரம்பித்த ஏலம் சிறிது சிறிதாக சூடுபிடிக்க ஆரம்பித்தது.

சிப்பாய்களில் ஒருவன் அவசர அவசரமாக நிஜாமிடம் போய் தகவலைச் சொன்னான். நிஜாமிற்கு தர்மசிந்தனை இல்லா விட்டாலும் சுயகௌரவம் நிறையவே இருந்தது. என்ன விலைக்கு அந்த செருப்பு ஏலம் போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்க சிப்பாய் தான் கிளம்பிய போது இருந்த நிலவரத்தைச் சொன்னான். அது போன்ற குறைந்த விலைக்கு அந்தச் செருப்பு ஏலம் போய் வாங்கப்பட்டால் அது தன் நிலைக்கு மகா கேவலம் என்று நினைத்தார் அவர். அதை நல்ல அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் வாங்கி வரச் சொல்லி பெரிய தொகையைக் கொடுத்தனுப்பினார். அந்தப் பெரிய தொகையில் அந்த ஒற்றைச் செருப்பு நிஜாமாலேயே சிப்பாய் மூலம் வாங்கப்பட்டது.

மதன் மோகன் மாளவியா அந்த ஏலத்தொகையை ஹைதராபாத் நிஜாமின் நன்கொடையாக காசி இந்து பல்கலைக்கழக நிதியில் சேர்த்துக் கொண்டார்.
(1916 ஆம் ஆண்டு காசி இந்து பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.)

மாளவியாவின் இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் செருப்பு மேலே விழுவதைக் கௌரவக் குறைவாக நினைத்திருப்பார். கோபப்பட்டிருப்பார். தான் கேவலப்பட்டு விட்டதாக நினைத்திருப்பார். இந்திய அரசியலில் ஒரு முக்கியமான இடத்தை அக்காலத்தில் பெற்றிருந்த மாளவியா அப்படி நினைத்திருந்தால் அது நியாயமாகவே இருந்திருக்கும். ஆனால் ஒரு நல்ல பொதுக் காரியத்திற்காகச் சென்ற இடத்தில் காரியம் தான் பெரிது, வீரியம் பெரிதல்ல என்கிற மனப்பக்குவம் மாளவியாவிற்கு இருந்திருக்கிறது. அதே நேரத்தில் நடந்ததை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனமும் அவருக்கு இருந்ததால் நல்லபடியாகவே அதை சாதகமாக்கிக் கொண்டு விட்டார்.

பெரிய காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு மதன்மோகன் மாளவியாவின் மனப்பக்குவமும், சமயோசிதமும் மிக முக்கியமாக இருக்க வேண்டும். அப்போது தான் அந்தக் காரியம் வெற்றிகரமாகவும், சிறப்பாகவும், சீக்கிரமாக முடியும். காரியத்தில் கண்ணாய் இருப்பதை விட்டு விட்டு சிறிய சிறிய சுமுகமல்லாத சூழ்நிலைகளையும், பின்னடைவுகளையும்  பெரிதுபடுத்தும் தன்மை இருந்தால் கோபமும், விரக்தியும் தான் மிஞ்சும்.

தங்களை முன்னிறுத்தாமல் காரியத்தை முன்னிறுத்தும் மனிதர்களே கடைசியில் பெரும் சாதனைகளை செய்து முடிக்கிறார்கள். சாதனையாளர்களாகத் தாங்களும் சிறப்பு பெறுகிறார்கள். எதிர்மாறாக காரியத்தையும் விடத் தங்களை முன்னிலைப் படுத்தும் மனிதர்களால் காரியமும் நடப்பதில்லை, வெற்றியாளர்களாகப் பிரகாசிக்கவும் முடிவதில்லை.

- என்.கணேசன்

  

Thursday, September 13, 2012

பரம(ன்) ரகசியம்! – 9



ஸ்வர் விர்ஜினியா பல்கலைக்கழக அதீதமன (Parapsychology)ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்தான். அமெரிக்காவில் அதீத மன ஆராய்ச்சிகள் பல பல்கலைக் கழகங்களில் நடைபெற்றாலும் இரண்டே இரண்டு பல்கலைக்கழகங்களில் தான் இதற்கென்று தனியாக பெரிய ஆராய்ச்சிக்கூடங்கள் இருக்கின்றன. ஒன்று விர்ஜினியா பல்கலைக்கழகம், இன்னொன்று அரிசோனா பல்கலைக்கழகம். சிறிய வயதில் இருந்தே ஆழ்மனசக்திகளில் ஆர்வம் இருந்த அவன் இரண்டு பல்கலைக்கழகங்களில் ஒன்றில் எப்படியாவது சேர்ந்து விட வேண்டும் என்று உறுதியுடன் இருந்தான். அவனுக்கு விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் சரியான வாய்ப்பு கிடைத்தது.  அங்கு அதீத மனம் மற்றும் புலனாற்றல் ஆராய்ச்சிகள் விஞ்ஞான முறைப்படி நடக்க வசதிகளும், வரவேற்பும் நிறையவே அவனுக்கு இருந்தது. அதை அவன் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டான்.
அவன் தற்போது ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சி சுமார் ஆறு மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. டெலிபதி பற்றிய ஆராய்ச்சி அது. அது பற்றி ஏராளமான ஆராய்ச்சிகள் முன்பே நடந்திருந்தாலும் டெலிபதியின் மூலம் அதிகபட்சமாக அனுப்ப முடிந்த தகவல்களைப் பற்றியும், அதற்கு உதவும் மனநிலைகள் பற்றியும் விரிவான ஆராய்ச்சி செய்ய அவன் முனைந்திருந்தான். ஒரு மனதில் இருந்து இன்னொரு மனதிற்கு வார்த்தைகளோ, காட்சிகளோ இல்லாமல் தகவல்கள் அனுப்பும் இந்த ஆராய்ச்சிக்குத் தகுதி இருக்கக்கூடிய ஆட்கள் என்று இருவரைத் தேர்ந்தெடுத்திருந்தான். ஒருவர் சீனர். அவருக்கு அறுபத்தைந்து வயதிருக்கும். மகன் அமெரிக்காவில் ஒரு பெரிய வேலை கிடைத்து செட்டில் ஆகி விட்டதால் அவரும் சீனாவில் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பு இங்கே வந்திருந்தார். ஆங்கிலம் அவருக்கு அரை குறையாய் தான் வரும் என்ற போதிலும் ஆழ்மன சக்தி ஆராய்ச்சிக்குப் பொருத்தமான சில விசேஷத் தன்மைகள் அவருக்கு இருந்தன. இன்னொரு நபர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த முப்பது வயது கருப்புப் பெண். விர்ஜினியா பல்கலைக்கழகத்திற்கு நாற்பது மைல் தொலைவில் உள்ள ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸில் பணி புரியும் அந்தப் பெண் அமெரிக்காவில் இருபது வருடங்களாக வாழ்கிறாள். அவளுக்கும் ஆழ்மன சக்தி ஆராய்ச்சிக்குப் பொருத்தமான சில விசேஷத் தன்மைகள் இருந்தன. அத்துடன் அவள் நன்றாக வரையும் திறமையும் பெற்றிருந்தாள்.
ஆராய்ச்சியின் போது சீனர் ஒரு அறையிலும், ஆப்பிரிக்கப் பெண் இன்னொரு அறையிலும் அமர்த்தப்படுவார்கள். அவர்கள் அறைகளுக்குள் நுழைந்த பிறகு சீனருக்கு அனுப்ப வேண்டிய செய்தி சொல்லப்படும். அது வரையில் அவருக்கு என்ன செய்தி அனுப்பப்போகிறோம் என்று தெரியாது. அந்த செய்தியை ஆப்பிரிக்கப் பெண் வரைந்தோ, எழுதியோ காட்ட வேண்டும்.
ஒவ்வொரு ஆராய்ச்சியின் போதும் இருவரையும் அந்த அறைகளில் இருந்த வீடியோ காமிரா மூலம் வீடியோ எடுத்து அந்தப் பதிவுகள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டன. வெளியே இருந்து கொண்டு அவர்களை ஈஸ்வர் கண்காணித்துக் கொண்டே இருப்பான். ஆராய்ச்சி முடிந்து அவர்கள் வெளியே வந்த பின் தனித்தனியாக ஆராய்ச்சி சமயத்தில் அவர்கள் உணர்வுநிலைகள் எப்படி இருந்தன என்றும் எதையாவது வித்தியாசமாக உணர்ந்தார்களா என்றும் கேட்டு ஈஸ்வர் அதையும் பதிவு செய்து விடுவான். சீனரிடம் அந்த ஆப்பிரிக்கப் பெண்ணின் அன்றைய மனநிலையை உணர முடிந்ததா என்றும், ஆப்பிரிக்கப் பெண்மணியிடம் அந்த சீனரின் அன்றைய மனநிலையை உணர முடிந்ததா என்றும் கேட்டு அதையும் பதிவு செய்வான். ஒவ்வொரு ஆராய்ச்சியின் முடிவும் அந்த இரண்டு நபர்களுக்கும் தெரிவிக்கப்பட்டதில்லை. சரியாக இருந்ததா, இல்லையா என்பதற்கு அவர்களுக்கு எந்த குறிப்பும் தரப்படவில்லை. அப்படி அவர்கள் அறிந்து கொள்வது அடுத்த ஆராய்ச்சிகளைப் பாதிக்கும் என்பதால் அதை அவன் தவிர்த்தான். அந்த இருவரும் ஒருவரை ஒருவர் ஆராய்ச்சிசாலையில் மட்டும் பார்த்து அறிவார்களே ஒழிய அவர்களுக்கு இடையில் வேறு எந்த விதமான தொடர்பும் இருக்கவில்லை. ஆராய்ச்சியின் முடிவிலும் சீனர் சென்று ஒரு மணி நேரம் கழித்து தான் ஆப்பிரிக்கப் பெண் செல்வாள். அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசியே ஆக வேண்டும் என்று விரும்பினால் ஒழிய வெளியே சந்திக்க சாத்தியங்கள் குறைவு. அப்படி விரும்பி சந்திக்க அவர்களுக்குள் எந்தக் காரணமும் இருக்கவில்லை.
இது வரை ஏழு பரிசோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. முதல் பரிசோதனையில் பிரமிடுகளின் படத்தைக் கொடுத்து அதை அனுப்ப ஈஸ்வர் சொன்னான். ஆப்பிரிக்கப் பெண் மலைகளை வரைந்திருந்தாள். கிட்டத்தட்ட தோற்றத்தில் ஒன்றாகவே இருந்ததால் அவன் அதை ஆரம்பநிலைக்கு வெற்றியாகவே நினைத்தான். இரண்டாவது நான்காவது பரிசோதனைகளில் அவன் அனுப்பச் சொன்ன தகவல்களை அவள் சரியாக வரையவில்லை. இரண்டாவது பரிசோதனையின் போது ஆப்பிரிக்கப் பெண் கணவனிடம் சண்டையிட்டு வந்திருந்தாள். நான்காவது பரிசோதனையின் போது அவள் மகன் சின்ன விபத்தில் காயப்பட்டிருந்தான். ஆனால் அந்த பரிசோதனைகளில் சீனர் அவளது மனநிலையை கோபம், கவலை என்று சரியாகக் கணித்திருந்ததால் அவைகளையும் ஈஸ்வர் வெற்றிகரமான பரிசோதனைகளாகவே நினைத்தான்.  நான்காவது பரிசோதனையில் வானில் பறந்து கொண்டிருக்கும் ஆகாய விமானத்தின் படத்தைக் கொடுத்து அதைத் தெரிவிக்க ஈஸ்வர் சொன்னான். ஆப்பிரிக்கப் பெண் பறவை பறப்பதாக வரைந்திருந்தாள். ஐந்தாவது ஆறாவது ஆராய்ச்சிகளில் இரண்டிரண்டு பொருள்கள் தகவல்கள் அனுப்பப்பட்டன. அவை இரண்டும் சில சின்னச் சின்ன வித்தியாசங்களுடன் ஓரளவு தெளிவாக வரையப்பட்டன. இந்த ஆராய்ச்சிகளில் ஐம்பது சதவீதத்திற்கும் மேல் இருப்பதே பெரிய விஷயம் என்பதால் ஈஸ்வருக்கு இந்த ஜோடியின் வெற்றி சதவீதம் மிகத் திருப்தியாக இருந்தது. ஆறு சோதனைகளில் நான்கு ஆராய்ச்சிக் கூடங்களில் நடந்தன. நான்காவதும் ஆறாவதும் ஆராய்ச்சிகள் கிட்டத்தட்ட நூறு மைல் இடைவெளியில் இருவரையும் வைத்து நடத்தப்பட்டன. இந்த ஆராய்ச்சிகளில் இடைவெளிகள் ஒரு பொருட்டே அல்ல என்பதும் தெளிவாக நிரூபணம் ஆகியது. அடுத்த அறையும் ஒன்று தான் அடுத்த நகரமும் ஒன்று தான்.
அந்த சீனர் ஆறு ஆராய்ச்சிகளில் ஐந்தில் அவளுடைய மனநிலையை சரியாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த ஆப்பிரிக்கப் பெண் ஆறில் ஒரே ஒரு முறை அவர் மனநிலையை வருத்தம் என்று குறிப்பிட்டாள். மற்ற நாட்கள் எல்லாம் அவளுக்கு குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இருக்கவில்லை. வருத்தம் என்று குறிப்பிட்ட பரிசோதனைக்குப் பிறகு சீனரிடம் பேசிய போது அவருக்கு தன் நாட்டையும் நட்பு, உறவுகளையும் விட்டு அமெரிக்கா வந்ததில் வருத்தம் இருப்பதாகவும், அன்று அதை அதிகம் உணர்ந்ததாகவும் சொன்னார்.
“என் மகன் ஓரளவு நன்றாக சம்பாதித்த பிறகு நாம் சீனாவுக்கே போய் விடலாம், அது வரை பொறுங்கள் என்கிறான். ஆனால் ‘ஓரளவு நன்றாக சம்பாதிப்பது’ என்றால் என்ன தொகை என்று எனக்கு விளங்கவில்லை. நான் சாவதற்குள் அந்த அளவு சம்பாதித்து முடிப்பானா என்றும் தெரியவில்லை”.
இந்த ஏழாவது ஆராய்ச்சியில் கடற்கரை மணலில் இரண்டு சிறுவர்கள் கோபுரம் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை ஈஸ்வர் சீனரிடம் கொடுத்து அனுப்பச் சொல்லி இருந்தான்.
வெளியே இருந்து அவர்கள் இருவரையும் முன்னால் இருந்த கம்ப்யூட்டர் ஸ்கிரினில் பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வருக்கு அந்த சீனர் ஒருவித அசௌகரியத்தை உணர்ந்தது போலத் தெரிந்தது. முந்தைய ஆறு ஆராய்ச்சிகளிலும் அவர் அலட்டிக் கொள்ளாமல் மிக அமைதியாக இருந்தவர். ஈஸ்வர் அந்த ஆப்பிரிக்கப் பெண்ணைக் கவனித்தான். அவள் இரண்டாம், நான்காம் ஆராய்ச்சிகளில் தொந்திரவான மனநிலையில் இருந்தவள் என்றாலும் மற்ற ஆராய்ச்சிகளில் அப்படி இருக்கவில்லை. இந்த முறை மிக உற்சாகமாகத் தெரிந்தாள். அவள் முழு கவனத்துடன் வரைந்து கொண்டிருந்தாள். எப்போதும் அடிக்கடி ரப்பரைப் பயன்படுத்தி அழித்து சில மாற்றங்கள் செய்பவள் இன்று ரப்பரையே உபயோகிக்காதது அதிசயமாக இருந்தது. ஈஸ்வர் சீனரின் அசௌகரியத்திற்கும் ஆப்பிரிக்கப் பெண்ணின் உற்சாகத்துடன் கூடிய முழு கவனத்திற்கும் இடையே பெரியதொரு முரண்பாட்டை உணர்ந்தான். ஏதோ ஒன்று சரியில்லை....
சீனர் வெளியே வந்த பின் ஈஸ்வர் அவரிடம் கேட்டான். “நீங்கள் ஏதோ அசௌகரியம் உணர்ந்தது போல எனக்குத் தோன்றியது. என்ன விஷயம்?
சீனர் ஒரு நிமிடம் யோசித்து விட்டுச் சொன்னார். “என் தகவல் சரியாகப் போகாதது போல தோன்றியது... வேறு யாரோ வாங்குகிற மாதிரி அல்லது இடைமறிக்கிற மாதிரி தோன்றியது....எனக்கு விளக்கத் தெரியவில்லை..
ஈஸ்வர் அவரிடம் கேட்டான். “இன்றைக்கு பர்சனலாய் ஏதாவது பாதிப்பில் உங்கள் மனம் இருந்ததா?  
“இல்லை. சொல்லப் போனால் இன்றைக்கு இங்கே வரும் முன் செய்த தியானத்தில் வழக்கத்தை விட அதிகமாய் நான் அமைதியை உணர்ந்தேன்
“உங்கள் தகவலை வாங்கியது போலத் தோன்றியவர் பற்றியோ அவர் மனநிலை பற்றியோ ஊகிக்க முடிந்ததா?
“சக்தி....பெரிய சக்தி... மனிதரா இல்லை வேறெதாவதா எனக்குத் தெரியவில்லை..புதிய அனுபவமாக இருக்கிறது...
அவன் அதற்கு மேல் அவரை எதுவும் கேட்கவில்லை. அனுப்பி விட்டான். இது போன்ற அனுபவம் அந்த சீனருக்கு மட்டுமல்ல அவனுக்கும் புதிது தான்.  அவனுடைய உதவியாளர் அந்த ஆப்பிரிக்கப் பெண் வரைந்த படத்தை ஒரு வெள்ளை உறையில் போட்டுக் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனார். ஈஸ்வர் உறையில் இருந்த படத்தை வெளியே எடுத்தான். அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஒரு கணம் இதயத்துடிப்பு நின்று போனது. குப்பென்று வியர்த்தது. இத்தனையையும் ஏற்படுத்தியது அந்தப் படத்தில் அவன் பார்த்த சிவலிங்கம் தான். சிவலிங்கம் மிக தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது. அந்த சிவலிங்கம் அந்தரத்தில் இருப்பது போல வரையப்பட்டிருந்தது. ஈஸ்வருக்குத் தன்னை சுதாரித்துக் கொள்ள சிறிது நேரம் தேவைப்பட்டது.
சில நிமிடங்கள் கழித்து உதவியாளரிடம் அந்தப் பெண்ணைத் தன்னிடம் அனுப்பச் சொன்னான். ஆப்பிரிக்கப் பெண் வந்தாள்.
மிக இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டு ஈஸ்வர் அவளிடம் கேட்டான். “இது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?
ஏதோ சிற்பக்கலைப் பொருள் மாதிரி இருக்கிறது”.
அவளுக்கு சிவலிங்கம் பற்றி எதுவும் தெரியாதது அவனுக்கு ஆச்சரியம் தரவில்லை. ஆப்பிரிக்கா-அமெரிக்கா வார்ப்பான அவள் பொது அறிவில் பூஜ்ஜியம் தான்.
“இந்த முறை உங்கள் அனுபவம் எப்படி இருந்தது. ஏதாவது வித்தியாசமாக உணர்ந்தீர்களா?
அவள் சொன்னாள். “எப்போதும் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் எனக்கு உணர முடியும். ஆனால் இந்தத் தடவை அப்படி இல்லை.... என் கண் முன்னாலேயே இந்தக் கலைப்பொருள் தெளிவாகத் தெரிந்தது. நான் என் மனதைக் குவித்து கவனிக்க வேண்டி இருக்கவில்லை...
ஈஸ்வர் அவளிடம் கேட்டான். “இந்தக் கலைப் பொருள் தரையில் இல்லாமல் அந்தரத்தில் இருப்பது போலத் தான் தெரிந்ததா?
ஆமாம்.... அது மட்டுமல்ல அது லேசாக நகர்கிற மாதிரியும் தெரிந்தது....
ஈஸ்வர் தன் திகைப்பைக் காண்பிக்காமல் இருக்க மறுபடி சிறிது முயற்சி செய்ய வேண்டி இருந்ததுஅவன் சொன்னான். இந்த தடவை முழு கவனத்துடன் நீங்கள் இருந்த மாதிரித் தெரிந்தது. எப்போதுமே அதிகமாக ரப்பரைப் பயன்படுத்தும் நீங்கள் இந்த முறை ஒரு தடவை கூட ரப்பரே பயன்படுத்தவேயில்லை.....
அவள் சற்று வியப்பு கலந்த குரலில் சொன்னாள். “எப்போதும் நான் உணர்கிற தகவலில் தெளிவு அதிகமாக அதிகமாக முதலில் வரைந்ததில் சிலதை விட்டு விட்டது புரியும். அதனால் தான் அதை சரி செய்ய ரப்பர் தேவைப்படும். ஆனால் இன்றைக்கு கண் முன்னால் இருப்பது போலத் தெளிவாக இருந்ததால் தேவையே படவில்லை..
“அனுப்பிய அவர் மனநிலை பற்றி ஏதாவது உங்களால் உணர முடிந்ததா?
அவள் சிறிது யோசித்து விட்டுச் சொன்னாள். “இல்லை... ஆனால் எனக்கு தான் வித்தியாசமாய் இருந்தது. ஒரு பிரம்மாண்டமான சக்திக்கு முன்னால் நான் இருக்கிற மாதிரி.... நான் இதற்கு முன்னால் ஒரே ஒரு தடவை தான் அப்படி உணர்ந்திருக்கிறேன். நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு நின்ற  போது....  
அவள் போன பிறகு நிறைய நேரம் ஈஸ்வர் தனிமையில் அமர்ந்திருந்தான். இந்த ஆராய்ச்சியில் அவன் அனுப்பச் சொன்ன செய்தி அந்த சீனர் மூலம் ஆப்பிரிக்கப் பெண்ணிற்குப் போய் சேரவில்லை. அதற்குப் பதிலாக யாரோ அல்லது ஏதோ அந்த ஆப்பிரிக்கப் பெண் மூலம் அனுப்பிய செய்தி அவனுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
கண்களை மூடிக் கொண்டு நிறைய நேரம் யோசித்தவன் கடைசியில் இந்தியா செல்வது என்று முடிவெடுத்தான்.

(தொடரும்)
 - என்.கணேசன்