சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 31, 2022

யாரோ ஒருவன்? 110


னார்தன் த்ரிவேதிக்கு காளிங்க சுவாமி ஒரேயடியாக மறுத்து விடாமல், அபசகுனமாக பிரச்னை தீராது என்று சொல்லி விடாமல், வழி இருக்கிறது, அந்த ரத்தினக்கல்லைக் கொண்டு வந்து தந்தால் என்ன வேண்டுமோ செய்து தருகிறேன் என்று சொன்னது பெருத்த நிம்மதியைத் தந்தது. அது மட்டுமல்ல திருடப் போகிறவன் சாதாரணமாகப் போனால் அந்த ரத்தினத்தை நாகசக்தி உடைய நாகராஜ் மகராஜிடமிருந்து எடுத்து வந்து விட முடியாது என்பதனால் போகிறவனுக்கு சக்தி கவசம் போல எதோ ஒன்றை ஏற்படுத்தி அனுப்புகிறேன் என்று ஏற்றுக் கொண்டதும், அந்தக் காளி கோயிலுக்குப் போகிறவனை பாம்புகள் கடிக்காது என்று உத்திரவாதம் தந்து அதுவும் அவன் பயத்தைப் போக்காததைச் சொன்னவுடன் பாம்புகளே அங்கு இல்லாதபடி பார்த்துக் கொள்கிறேன் என்று மிகவும் பெருந்தன்மையாகச் சொன்னதும் தனக்கு வரப் போகும் நல்ல காலத்தின் அறிகுறியாகவே அவருக்கு மேலும் தோன்றியது.

நேற்று ஆஸ்பத்திரியிலிருந்து டாக்டர் அவருக்குப் போன் செய்து சஞ்சய் ஷர்மாவையும், மதன்லாலையும் டிஸ்சார்ஜ் செய்து ஆஸ்பத்திரியிலிருந்து கூட்டிக் கொண்டு போய் விடலாம் என்று சொன்னார். இனி வீட்டில் இருந்து கொண்டே வேளா வேளைக்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தால் போதும், நாள்போக்கில் உடல்நலம், மனநலம் இரண்டிலும் இருவரும் முன்னேற்றம் அடைவார்கள் என்று சொன்னார். ஆஸ்பத்திரியில் அவர்கள் மட்டுமல்லாமல்  அத்தனை பாதுகாவலர்களும் இருப்பதும் வெளியே அனாவசியமாகப் பலர் கவனத்தைக் கவர ஆரம்பித்திருக்கின்றது என்றும் அவர் சூசகமாகத் தெரிவித்தார்.

ஜனார்தன் த்ரிவேதி போனில் அஜீம் அகமதைக் கலந்தாலோசித்தார். “இனி ரெண்டு பேரையும் அவங்கவங்க வீட்டுக்கே அனுப்பி வெச்சுட்டா என்ன?” என்று அவர் கேட்டார்.

அஜீம் அகமது சொன்னான். “அடுத்த நாளே மகேந்திரன் மகன் அவங்க வீட்டு வாசலில் விசாரணைக்கு வந்து நிற்பான். அவன் தப்பு வெளியே தெரியாமல் இருக்க இத்தனை நாள் எங்கே போயிருந்தீங்க, ஏன் போயிருந்தீங்கன்னு கேட்டுட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி விசாரணையை விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்பான்...”

ஜனார்தன் த்ரிவேதி திகைத்தார். அந்தத் திமிர் பிடித்தவன் செய்தாலும் செய்வான். ”எங்க அரசியல்ல கூட நான் இந்த மாதிரி ஜகஜ்ஜாலக் கில்லாடியைப் பார்த்ததில்லை.... இத்தனைக்கும் இவன் இப்ப தான் வேலைலயே சேர்ந்திருக்கிறான்... அதுக்குள்ளே இத்தனை துணிச்சல், இத்தனை அராஜகம்....”

“அவன் சின்ன வயசுலே இருந்தே ஒரே ஒரு குறிக்கோளாட தான் வாழ்ந்திருக்கிறான். அப்படிப்பட்ட ஆள்க எப்பவுமே ஆபத்தானவங்க தான். ஏன்னா அவங்க இது வரைக்கும் வேறெதையுமே யோசிச்சதில்லை. குறிக்கோள் நிறைவேறுகிற வரைக்கும் வேறெதையும் யோசிக்கப் போறதுமில்லை...” அஜீம் அகமது இயற்கைக் கோட்பாடு ஒன்றை விளக்குவது போல் விளக்கினான்.

உலகத்தின் பல பகுதிகளிலும் எத்தனையோ வேலைகள் இருக்கக்கூடிய அஜீம் அகமது நரேந்திரனைப் பற்றி இத்தனை தீர்க்கமாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பது ஜனார்தன் த்ரிவேதிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் இது வரைக்கும் நரேந்திரனை அந்தப் பெயரில் அல்லாமல் மகேந்திரன் மகன் என்றே சொல்வது வேடிக்கையாக இருந்தது....

இருவரும் யோசித்து இப்போதைக்கு சஞ்சய் ஷர்மாவையும், மதன்லாலையும் ஒரு தனியிடத்தில் பாதுகாப்பாகத் தங்க வைப்பது என்று முடிவு செய்தார்கள்.


ஜீம் அகமது எப்போதுமே ஒரு இலக்கை எடுத்துக் கொண்டால் ஒரு திட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு இயங்குவதில்லை. எப்போதுமே இரண்டாவது திட்டத்தையும் கைவசம் வைத்துக் கொண்டு தானிருப்பான். முதல் திட்டம் நிறைவேறாமல் போனால் இரண்டாவது திட்டத்தை கால விரயம் இல்லாமல் உடனடியாக எடுத்துக் கொண்டு செயல்படுவான். அவனுடைய தொடர் வெற்றிகளுக்கு அது ஒரு முக்கிய காரணமாக இருந்தது.  இப்போதும் மகேந்திரன் மகனுக்குப் பாடம் புகட்ட அவன் இரண்டு திட்டங்களை வைத்திருக்கிறான். ஒன்று காளிங்க சுவாமி காட்டப்போகும் வழி. இன்னொன்று அவனுடைய தனி வழி.

இந்த முறை மதன்லாலையும், சஞ்சய் ஷர்மாவையும் கண்டுபிடித்துக் காப்பாற்றியது அவனுக்கு ஒரு சிறு வெற்றியாக இருந்தாலும் அதில் மகேந்திரன் மகனைச் சிக்க வைக்க முடியாமல் போனதும், மகேந்திரன் மகன் எந்தவிதமான பாதிப்புமில்லாமல் நடமாடிக் கொண்டிருப்பதும் அந்த வெற்றியைக் கொண்டாட முடியாதபடி உறுத்தலாக இருந்தது.

மகேந்திரன் மகன் எப்படி மதன்லால், சஞ்சயைக் கடத்திய சிக்கலில் இருந்து தப்பினான் என்று காளிங்க சுவாமி மூலம் தெரிந்த பின் அஜீம் அகமதுக்குத் தெளிவு பிறந்தது.  பிறகு நாகராஜ் மகராஜ் என்ற மனிதனைப் பற்றிய விரிவான தகவல்களையும் பெற்றுப் புரிந்து கொண்டான். நாகராஜ் மகராஜ் தன் சக்திகள் விஷயத்திலும் சரி அரசியல் செல்வாக்கிலும் சரி அசைக்க முடியாத உச்சத்தில் இருப்பதும் புரிந்தது. அதே போல் காளிங்க சுவாமியும் குறைந்தவர் அல்ல என்பதை அவன் நேரடியாகவே தெரிந்து வைத்திருக்கிறான். காளிங்க சுவாமி நாகராஜ் மகராஜிடமிருந்து ஒரு குறிப்பிட்ட ரத்தினத்தை எடுத்து வந்தால் பின் தன்னால் அவர்களுக்கு உதவ முடியும் என்று வாக்கு தந்திருக்கிறார். எப்படி எடுத்து வருவது என்பதற்கும் உதவி செய்தே ஆளை அனுப்புகிறார்.

அவர் இத்தனையும் இவர்களுக்காகத் தான் செய்கிறார் என்று அஜீம் அகமதால் ஜனார்தன் த்ரிவேதி போல் நம்ப முடியவில்லை. காளிங்க சுவாமிக்கு நாகராஜ் மகராஜ் எதிரியாக இருக்கலாம். அல்லது நாகராஜ் மகராஜிடம் இருக்கும் அந்த ரத்தினம் காளிங்க சுவாமிக்குத் தேவைப்பட்டும் இருக்கலாம். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல இவர்களுக்கு உதவுவது போல் அந்த சுவாமிஜி தன் காரியத்தையும் கூடச் சாதிக்க திட்டம் போட்டிருக்கலாம். ஆனால் வாக்கு தந்தால் கண்டிப்பாகச் செய்து தரக்கூடிய ஆள் தான் அவர் என்பதில் சந்தேகமில்லை. அதனால் ஒருவேளை பீம்சிங் அவர் சொன்னபடி போய் ரத்தினத்தை எடுத்துக் கொண்டு வந்தால் இவர்கள் வேலையும் ஆகும்.

அதே நேரத்தில் நாகராஜ் மகராஜிடமிருந்து பீம்சிங் அந்த ரத்தினத்தைக் கொண்டு வர முடியாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. இரண்டு சக்தி வாய்ந்த ஆட்களுக்கு இடையே வரும் யுத்தத்தில் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். அப்படி ஆனால் மகேந்திரன் மகனை அழிக்க காளிங்க சுவாமியின் உதவி கிடைக்க வழியில்லை. அந்த நிலை வந்தால் அஜீம் அகமதே தான் தனக்கு சவால் விட்டபடி வளர்ந்து வரும் மகேந்திரன் மகன் கதையை முடித்து விட வேண்டியிருக்கும். அப்போது ஜனார்தன் த்ரிவேதிக்கு என்ன ஆகிறது என்றோ, மதன்லால் சஞ்சய்க்கு என்ன ஆகிறது என்றோ யோசிக்கவும் அஜீம் அகமதுக்கு நேரமில்லை. எதிரியை அழித்து விட்டு, தான் யார் என்று நிரூபித்து விட்டு, இந்த நாட்டிலிருந்து அமைதியாக வெளியேறுவது தான் அவனுடைய திட்ட எண் இரண்டு.

முதல் திட்டம் முடியாமல் போனால் திட்ட எண் இரண்டு உடனடியாகச் செயல்படுத்தப்படும். திட்ட எண் இரண்டுக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் ரகசியமாக அஜீம் அகமது செய்ய ஆரம்பித்தான். இனி ஒரு வாரத்திற்குள் வந்த காரியம் முடிந்து இந்தியாவை விட்டு அவன் போய் விடுவான்...

     
பீம்சிங் ஒரு வேலையை ஏற்றுக் கொண்டபின் அதைச் சரிவர செய்யாமல் இருந்ததில்லை. முன்பணம் மூன்று லட்சம் அஜீம் அகமதிடம் பேசிய அன்றே அவன் வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்திருந்ததால் பிறகு எதையும் யோசிக்கவில்லை. பெரும்பாலும் முன்பணம் வந்து சேர்ந்தவுடனேயே அந்த வேலையை எப்படி செய்வது எப்போது செய்வது என்று அவன் திட்டம் தீட்ட ஆரம்பித்து விடுவான். ஆனால் இந்தப் புதிய வேலையில் எல்லாவற்றையும் காளிங்க சுவாமியே சொல்வார், அதே போல் செய்தால் போதும் என்று அவனுக்குச் சொல்லப்பட்டு இருந்ததால் அந்த வேலையும் அவனுக்கு இருக்கவில்லை.

காளிங்க சுவாமி சொன்னது போலவே வெள்ளிக்கிழமை ராகு காலம் ஆரம்பித்து பத்து நிமிடங்களில் அனுமாரைக் கும்பிட்டு விட்டுக் கிளம்பினான். டேராடூனுக்கு பன்னிரண்டரை மணிக்கு விமானம். அங்கிருந்து ஒரு மணி நேரத்திற்குள் அவன் கார் அல்லது ஜீப்பில் ரிஷிகேசம் போய் விடலாம். அதன் பிறகு அந்தக் காட்டுக்குள் அவன் சுமார் மூன்று மைல் நடந்து தான் அந்தக் காளி கோயிலை எட்ட வேண்டும். அங்கு பாம்பு ஒன்றைக் கூட அவன் பார்க்க வேண்டியிருக்காது என்று காளிங்க சுவாமி தந்திருக்கும் வாக்கையும் மீறி உள்ளூர ஒரு பயம் எட்டிப் பார்த்ததை அவனால் தடுக்க முடியவில்லை.

(தொடரும்)
என்.கணேசன்




Sunday, October 30, 2022

புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு தினத்தந்தியின் விமர்சனம்!

 தினத்தந்தியில் இன்று (30.10.2022) புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு விமர்சனம் இவ்வாறு வந்துள்ளது.






Thursday, October 27, 2022

சாணக்கியன் 28


லெக்ஸாண்டரின் கேள்விக்குப் புன்னகையுடன் சசிகுப்தன் பதில் சொன்னான். ”சக்கரவர்த்தி. அவன் அனுப்பிய தூதர் தங்களை வந்து சந்திக்கும் முன்பே தந்தை இறந்து விடுவார் என்று ஆம்பி குமாரன் உறுதியாக நம்பியிருக்கலாம். அவர் நோய்வாய்ப்பட்டு சாகும் தருவாயில் இருந்திருக்கலாம்.”

 

“ஒருவேளை அவர் இறக்கா விட்டால்?”

 

“அவரைக் கொல்வது என்று கூட ஆம்பி குமாரன் நினைத்திருக்கலாம். தானாக இறந்தால் சரி, இல்லா விட்டால் கிழவரைப் படுக்கையிலேயே கொன்று விட ஆம்பிகுமாரனுக்கு அதிக நேரம் தேவைப்படாது. இயற்கை மரணமோ, செயற்கை மரணமோ கண்டிப்பாகச் சம்பவிக்கும் என்று அவன் நிச்சயித்திருந்ததால் விரைவில் அடுத்து நடக்க வேண்டியதைப் பார்ப்போம் என்று முடிவு செய்திருக்கலாம். இளவரசனாக அவன் தங்களுக்குத் தகவல் அனுப்பியிருந்தால் அதற்குத் தாங்கள் அதிக முக்கியத்துவம் தர மாட்டீர்கள் என்று நினைத்திருக்கலாம்...”

 

அலெக்ஸாண்டருக்கு சசிகுப்தனின் பதில் சரியாகத் தான் தோன்றியது.  அவனுக்கு சசிகுப்தனைப் பிடித்திருந்தது. படை வலிமை பெரிதாக இல்லா விட்டாலும் பிழைக்கத் தெரிந்தவன். அவன் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தான். அது மட்டுமல்லாமல் அதை வைத்து முடிவெடுப்பதிலும் அவன் கெட்டிக்காரனாகத் தெரிந்தான். அதனால் தான் பாரசீக மன்னர் பக்கம் சாய்வதற்குப் பதிலாக அவன் அலெக்ஸாண்டர் பக்கம் சாய்ந்திருக்கிறான். இங்கு தங்க வைத்து அலெக்ஸாண்டரை உபசரிப்பதிலும் அவன் ஒரு குறையும் வைக்கவில்லை....

 

அலெக்ஸாண்டர்  கேட்டான். “ஆம்பி குமாரனை நீ சந்தித்திருக்கிறாயா? அவன் எப்படிப்பட்டவன் சசிகுப்தா?”

 

“நான்கைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு முறை தட்சசீலத்துக்குச் சென்றிருந்த போது ஆம்பி குமாரனை நான் சந்தித்திருக்கிறேன் சக்கரவர்த்தி. அவன் வீரன். அந்தச் சமயத்தில் அவனிடம் அறிவுகூர்மையையோ, மனப்பக்குவத்தையோ என்னால் பார்க்க முடிந்திருக்கவில்லை. தட்சசீலக் கல்விக்கூடம் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு சிறிது காலத்திற்கு மேல் அவனை வைத்திருக்க முடியாமல் அனுப்பி விட்டதாகக் கேள்வி. எது எப்படியோ அவன் அதிகம் படிக்கவில்லை காலம் அவனை இப்போது மாற்றியிருக்கலாம். அவன் தந்தையும், கேகய மன்னரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள் என்றாலும் அவனுக்கு அந்த அண்டை நாட்டுடன் நல்லுறவு இருக்கவில்லை. அவனாலேயே இரண்டு நாடுகளுக்கும் இடையே சின்னச் சின்னப் பிரச்னைகள் இருந்து வந்திருக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு கூட கேகய நாடு தட்சசீலத்திற்குப் படையை அனுப்பி ஆம்பிகுமாரனைக் கண்டித்திருக்கிறது என்பதை வணிகர்கள் மூலம் அறிந்தேன்.  அந்தச் சமயம் பார்த்து அவனுடைய சேனாதிபதி சின்ஹரன் என்பவன் ஒரு தாசியோடு நாட்டை விட்டு ஓடிப் போய் விட்டதாகவும் கேள்விப்பட்டேன்....”

 

அலெக்ஸாண்டர் கிட்டத்தட்ட இந்தத் தகவல்களை எல்லாம் பலரிடம் கேட்டு முன்கூட்டியே அறிந்திருந்தான்.  சசிகுப்தன் அத்தனையும் அறிந்திருந்தது அவன் மீது அலெக்ஸாண்டருக்கு இருக்கும் அபிப்பிராயத்தை மேலும் உயர்த்தியது.

 

”அப்படியானால் இன்னேரம் அவன் காந்தார அரசனாகியிருப்பான் என்று நீ நினைக்கிறாயா சசிகுப்தா”

 

“ஆம் சக்கரவர்த்தி. இன்னும் சில நாட்களில் நமக்குக் கண்டிப்பாக அந்தச் செய்தி கிடைக்கும் என்றும் நம்புகிறேன்...”

 

சசிகுப்தன்  சொன்னபடியே  மூன்றாவது நாள் காந்தார அரசர் இறந்து போன செய்தி அவர்களுக்கு வந்து சேர்ந்தது. சசிகுப்தனின் யூகப்படியே ஆம்பி குமாரன் தந்தை இறப்பதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் முன்னமேயே தன் தூதனை அனுப்பியிருக்க வேண்டும் என்பதையும் அவர்களால் கணக்கிட முடிந்தது.  ஆம்பி குமாரன் அரசனாவதற்கு முன்னமேயே தன்னிடம் நட்பு பாராட்ட ஆசைப்பட்டு விரைந்து தூதனுப்பியது அலெக்ஸாண்டருக்கு நல்ல சகுனமாகவே தோன்றியது.

 

இமயமலையின் தென்பகுதியில் செல்வச்செழிப்பு மிக்க பகுதிகள் நிறைய இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்த அலெக்ஸாண்டருக்கு ஆம்பி குமாரனின் அழைப்பு அந்தச் செல்வத்தை எடுத்துப் போக விடுத்த அழைப்பாகவே தோன்றியது. அந்தச் செல்வம் மட்டும் அந்தப் பகுதியை நோக்கி அவனை ஈர்க்கவில்லை. அந்தப் பகுதியில் நிறைய சக்தி வாய்ந்த துறவிகள் இருப்பதாகவும் அலெக்ஸாண்டர் கேள்விப்பட்டிருக்கிறான். அவர்களையும் சந்தித்துப் பேச அலெக்ஸாண்டர் ஆவலாக இருந்தான். அத்தனை சக்திகள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்தாமல் துறக்க முடிந்த அந்த மனவலிமை அவனை ஆச்சரியப்பட வைத்தது. புறச் செல்வத்தோடு அகச்செல்வத்தையும் அங்கிருந்து பெற்று எடுத்து வர வேண்டும்.......

 

அலெக்ஸாண்டர் தன் ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து விட்டு ஆம்பிகுமாரனுக்குத் தன் தூதன் மூலம் பதில் அனுப்பி வைத்தான். அதன்  மறுநாளே தன் படையோடு பாக்ட்ரியாவை விட்டுக் கிளம்பினான்.    

 

கதநாட்டின் பிரதம அமைச்சர் ராக்ஷசர் தன் முன் வந்து நின்ற ஒற்றனைக் கேள்விக்குறியுடன் பார்த்தார்.

 

“பல வருடங்களுக்கு முன் நம் அரசவையில் வந்து பேசி அரசரைக் கோபமூட்டிச் சென்ற தட்சசீல ஆசிரியர் விஷ்ணுகுப்தர் மறுபடியும் பாடலிபுத்திரம் வந்திருக்கிறார் பிரதம அமைச்சரே.”

 

ராக்‌ஷசர் ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரை மறந்தே போயிருந்தார். ஒற்றன் சொன்னவுடன் பழையவற்றை நினைவுபடுத்திக் கொண்ட அவர் நெற்றி சுருங்கியது. “எப்போது வந்தார்? எங்கே தங்கியிருக்கிறார்?”

 

“இன்று மாலையில் தான் வந்தார் பிரதம அமைச்சரே. வந்தவர் முன்பு தங்கிய அதே பயணியர் விடுதியில் தான் தங்கியிருக்கிறார். சிறிது நேரம் பயணியர் விடுதியில் ஓய்வு எடுத்துக் கொண்டார். பிறகு முன்பு ஒரு ஏழை வீட்டுக்குச் சென்று ஒரு சிறுவனை அழைத்துச் சென்றாரல்லவா, அந்தச் சிறுவனின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்”

 

ராக்‌ஷசர் கேட்டார். “அந்தச் சிறுவனும் உடன் இருக்கிறானா?”

 

“இல்லை பிரதம அமைச்சரே. அவர் தனியாகத் தான் வந்திருக்கிறார். இப்போது அவர் அந்த வீட்டுக்குச் சென்றிருப்பதும் தனியாகத் தான்”

 

“சரி. அவர் இந்த நகரை விட்டுச் செல்லும் வரை அவரைக் கண்காணித்துக் கொண்டிரு. அவர் நடவடிக்கைகளை எனக்குத் தெரிவித்துக் கொண்டிரு...”

 

நல்ல வேளையாக இப்போது அறிஞர்கள் கூட்டம் எதுவுமில்லை. ஒரு முறை அவமானப்பட்டுச் சென்றதால் அப்படி அறிஞர்கள் கூட்டம் நடைபெற்றாலும் அதில் விஷ்ணுகுப்தர் கலந்து கொள்ள மாட்டார் என்று தோன்றினாலும் அறிஞர்கள் கூட்டம் எதுவுமில்லை, அதனால் தனநந்தனும் விஷ்ணுகுப்தரும் சந்திக்கும் வாய்ப்பு எதுவுமில்லை என்றெல்லாம் கணக்கிட்டு ராக்‌ஷசர் கூடுதல் நிம்மதி அடைந்தார்.  மறுநாள் நடக்கப் போகும் நிகழ்வுகளை அறிய முடிந்திருந்தால் அந்த நிம்மதி காணாமல் போயிருக்கும். சில சமயங்களில் விதி முன்கூட்டியே சிலவற்றைத் தெரிவிக்காமல் கூடுதலாகச் சிறிது காலம்  மனிதர்கள் நிம்மதியாக இருக்க அனுமதிக்கிறது...

 

விஷ்ணுகுப்தர் மூராவிடமும், அவளுடைய தமையனிடமும் சந்திரகுப்தன் என்னவெல்லாம் கற்றுத் தேர்ந்திருக்கிறான் என்பதையும், அதில் எப்படியெல்லாம் முன்னேற்றம் கண்டிருக்கிறான் என்பதையும் விவரித்துச் சொல்லச் சொல்ல அவர்கள் முகங்களில் எல்லையில்லாத ஆனந்தம் தெரிந்தது. மூரா கண்கள் நன்றி மிகுதியில் கலங்கின. அவள் கைகூப்பியபடி சொன்னாள். ”இந்தக் கடனை நாங்கள் எப்போது தீர்ப்போம் என்று தெரியவில்லை ஆசிரியரே”

 

“அவனை என்னோடு நம்பிக்கையோடு அனுப்பி வைத்ததற்காக நானும் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் தாயே. எத்தனையோ பிள்ளைகளுக்கு நான் ஆசிரியராக இருந்திருக்கிறேன். ஆனால் சந்திரகுப்தனைப் போன்ற ஒரு மாணவன் எனக்கு இது வரை கிடைத்ததில்லை. எதிர்காலத்தில் இனி ஒருவன் கிடைப்பான் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை....” விஷ்ணுகுப்தர் ஆத்மார்த்தமாகச் சொன்னார்.

 

“பெருந்தன்மையுடன் பெரிய பெரிய வார்த்தைகளைச் சொல்கிறீர்கள் ஆசிரியரே. தங்களைச் சந்திக்காமல் இருந்திருந்தால் என் மகன் இப்போதும் மாடு மேய்த்துக் கொண்டிருப்பான். நீங்கள் சொல்கின்ற இத்தனை பெருமைகளையும் என் மகன் அடைந்திருக்க மாட்டான்.... “

 

விஷ்ணுகுப்தர் கனிவாகச் சொன்னார். “தகுதிகளைக் கொடுக்கும் இறைவன் அவற்றைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்காமல் இருப்பதில்லை தாயே.”

 

சந்திரகுப்தனின் தாய்மாமன் குரலடைக்கச் சொன்னார். “தகுதிகளைக் கண்டுபிடிக்கும் தகுதி கூட எங்களுக்கிருக்கவில்லை ஆசிரியரே. கனவிலும் நாங்கள் அவனுக்கு எண்ணியும் பார்த்திருக்காத உயர்வு இது...”

 

“ஐயா. உங்களிடம் நான் சொல்லியிருப்பது அவன் மூலதனமாக உருவாக்கி இருப்பதை மட்டும் தான். அந்த மூலதனத்தை வைத்து அவன் என்ன உயர்வெல்லாம் அடைகிறான் என்பது உங்களால் இப்போதும் கற்பனையாலும் யூகிக்க முடியாது என்பதை உறுதி கூறுகிறேன்...”

 

இருவருக்கும் நிஜமாகவே எதையும் கற்பனையாலும் எண்ணிப் பார்க்க முடியவில்லை. ஏதோ ஒரு வேலையாக பாடலிபுத்திரம் வந்திருப்பதாய் விஷ்ணுகுப்தர் சொல்லியிருந்தார்.

 

தாய்மாமன் கேட்டார். “தாங்கள் எத்தனை நாட்கள் இங்கிருப்பீர்கள் ஆசிரியரே”

 

“நாளை மாலைக்குள் கிளம்பி விடுவேன்”

 

மூரா கேட்டாள். “சந்திரகுப்தனை நான் எப்போது மறுபடியும் காண முடியும் ஆச்சாரியரே?”

 

“ஓரிரு வருடங்களில் காண முடியும் தாயே.... உங்கள் மகனிடம் நீங்கள் அனுப்பிய செய்தியாக என்ன சொல்லட்டும் தாயே”

 

“அவன் கற்ற கல்விக்கும், அவன் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கும் அவன் தாய் பெருமைப்படுகிறாள் என்று சொல்லுங்கள் ஆசிரியரே. அவன் வருகைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறாள் என்பதையும் சொல்லுங்கள்”

 

(தொடரும்)

என்.கணேசன்

 

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)


நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் ரிஜிஸ்டர் தபால் அல்லது குரியர் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம். 

உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

     

Monday, October 24, 2022

யாரோ ஒருவன்? 109


ரத் கல்யாணிடம் மறுபடியும் குழப்பத்துடன் கேட்டான். “நீ சொன்ன மாதிரி அவன் இங்கே குடி வந்த பிறகு தான் நமக்கு மொட்டைக் கடுதாசி வந்துருக்கு. ஆனா நாகராஜை நாம இதுக்கு முன்னாடி பார்த்தது கூட இல்லையே. அப்படியிருக்கறப்ப அவனுக்கு ஏன் நம்ம மேல பகை?”

அது தான் தெரியல. இன்னொன்னையும் நீ யோசிச்சுப் பாரு. அந்த ரா அதிகாரியும் அப்பறமா தான் வந்தான். அந்த ரா அதிகாரி அடிக்கடி போய் நாகராஜைப் பார்க்கவும் செய்யறான். அவனுக்கும் நாகராஜுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கற மாதிரி தெரியலை. ஆனாலும் அது நடக்குது. ஏன்?”

கல்யாண் கேட்ட போது அதுவும் சரத்துக்குச் சரியான சந்தேகமாகவே தோன்றியது. சிறிது யோசித்து விட்டு கவலையுடன் சொன்னான். “நிலைமை இப்படி இருக்கறப்ப ரஞ்சனி வேற ஞாயிற்றுக்கிழமை அவனைப் பார்த்து எதோ கேட்கப் போறா. அவன் என்ன சொல்வானோன்னு பயமா இருக்கு

கல்யாண் சரத்தைக் கேட்டான். “ரஞ்சனி அவன் கிட்ட என்ன கேட்கப் போறாள்னு உன் கிட்ட சொன்னாளா?”

சரத் சொன்னான். “இல்லை. தீபக் அந்தக் கேள்வியைக் கேட்டப்ப அதையெல்லாம் உன் கிட்ட சொல்ல மாட்டேன். அது என் தனிப்பட்ட விஷயம்னு சொல்லிட்டா. அதனால பிறகு நான் எதுவும் கேட்கப் போகலை. ஆனா நான் ஏற்கெனவே சந்தேகப்பட்ட மாதிரி அவ மாதவனைப் பத்தி தான் என்னவோ கேட்கப் போகிறாள்...”

முன்பு சொன்னதையே கல்யாண் திரும்பவும் சொன்னான். “ஒருவிதத்துல ரஞ்சனி அவனைச் சந்திக்கறது நல்லதுன்னு தான் நான் நினைக்கிறேன். அவ என்ன கேட்கிறா, அவ கேட்கறதுக்கு அவன் என்ன பதில் சொல்றான்ங்கறத வெச்சி நாம அவனைப் பத்தி ஒரு முடிவுக்கு வர முடியும்

கல்யாண் தன் தனிப்பட்ட நஷ்டங்களுக்குப் படும் கவலையில் நூறில் ஒரு பங்கு கூட இதற்குப் படவில்லை என்பதைக் கவனித்த சரத் தானும் சிறிது தைரியம் அடைந்தான்.

கல்யாண் சொன்னான். “ஞாயிற்றுக் கிழமை மதிய சாப்பாட்டுக்கு என் வீட்டுக்கே மூனு பேரும் வந்துடுங்க. மேகலா கூட சொல்லிகிட்டே இருக்கா ஒரு நாள் உங்க மூனு பேரையும் சாப்பிடக் கூப்பிடணும்னு. ரஞ்சனி சாப்பிட்டதுக்கு அப்புறமா நாகராஜ் கிட்டே கேட்கப் போகட்டும்

சரத் சம்மதித்தான். கல்யாண் அவனிடம் கேட்டான். “அவள் கேட்கறப்ப அவள் கூட யாராவது போகலாமா இல்லை தனியாகத்தான் அவள் போகணுமா?”

நாகராஜ் என்ன சொன்னான்னு தெரியல. ஆனா ரஞ்சனி தனியாகத் தான் போகிறதா சொன்னா

கல்யாண் தன் அடுத்த கட்ட நடவடிக்கையை ரஞ்சனி நாகராஜ் வீட்டுக்குப் போய், அங்கே அவன் என்ன சொல்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டபின் தீர்மானிப்பது என்று முடிவு செய்தான். பிரச்சினைகளைப் பார்த்து பயந்து கொண்டே இருப்பதை விட நேரடியாகவே சந்திப்பது தான் புத்திசாலித்தனமாக அவனுக்குத் தோன்றியது.

ரேந்திரன் அஜீம் அகமது இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தான். அஜீம் அகமது பற்றி ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு அவன் அறிந்து கொண்டிருந்ததால் சிறிய அலட்சியம் கூட அவனைப் பிடிக்கும் முயற்சியில் தோல்வியை ஏற்படுத்திவிடும் என்பதை அவன் நிச்சயமாய் அறிந்திருந்தான்.

அஜீம் அகமது அதிபுத்திசாலி மட்டுமல்ல, மிகவும் எச்சரிக்கை உணர்வுள்ளவனும் கூட. அவனுடைய புத்திசாலித்தனமே அவனை அதிக அலட்சியமில்லாதவனாக மாற்றி இருந்தது. அதே போல அவனுக்கு அசட்டுத்தனமான தைரியம் எல்லாம் கிடையாது. ’என்ன வருகிறது பார்த்து விடுகிறேன்என்ற நிலைப்பாட்டை அவன் என்றுமே எடுக்க மாட்டான். மிக மிகப் பாதுகாப்பான நிலைமையில் இருந்து கொண்டே தன் கூர்மையான அறிவால் காய்களை நகர்த்துவானேயொழிய முன்னணிக்கு வந்து யுத்தம் செய்பவனாக அவன் என்றுமே இருந்ததில்லை. சொல்லப் போனால் அவனுக்கு மறைமுகமாக ஆதரவு தருபவர்கள் ஆட்சியில் இல்லாத போதும் தற்போது அவன் இந்தியாவுக்கு வந்திருப்பதையே வழக்கத்துக்கு மாறாகச் செய்திருக்கும் ஒரு அபூர்வ தைரியமான நடவடிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நரேந்திரன் அஜீம் அகமதைக் கண்டுபிடிக்க மூன்று இளைஞர்களைத் தேர்ந்தெடுத்திருந்தான். அந்த மூன்று இளைஞர்களும் கூர்மையான அறிவு உடையவர்கள். மிக தைரியமானவர்கள். வேலையில் உற்சாகமுள்ளவர்கள். அந்த மூன்று குணங்களும் தற்போதைய முயற்சியில் மிக முக்கியமானவை என்பதால் தான் அவர்களை நரேந்திரன் தேர்ந்தெடுத்திருந்தான்.

நரேந்திரன் அவர்களை அழைத்து அஜீம் அகமது பற்றிய முக்கியக்குறிப்புகள் எல்லாம் சொல்லி அவன் பல வேடங்களில் இருக்கும் புகைப்படங்களைக் காட்டினான். அஜீம் அகமது எந்த வேடம் போட்டாலும் அந்த வேடத்திற்குரிய சூட்சும நடவடிக்கைகளைக் கூட  தத்ரூபமாகப் பிரதிபலித்து அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடக்கூடியவன் என்பதையும் சொன்னான். அடுத்ததாய் இங்கே அஜீம் அகமதின் ஸ்லீப்பர் செல்களாகச் செயல்படும் மூன்று பேருடைய புகைப்படங்களைக் காட்டினான்.

அஜீம் அகமது யாரையும் சீக்கிரத்தில் நம்பி விடுகிறவன் அல்ல. அவனுடைய இயக்க ஆள்களே கூட அவனை லேசில் நெருங்கி விட முடியாது. அவன் நம்பித் தெளிந்த ஆட்களை மட்டும் தான் அவன் தன்னை ஓரளவாவது நெருங்க விடுவான். இந்த ஸ்லீப்பர் செல்கள் மூன்று பேர் அப்படிப்பட்ட ஆள்கள். இவர்கள் பிடிபட்டாலும் கூட எத்தனை சித்திரவதை செய்தாலும் அவனைக் காட்டிக் கொடுக்காதவர்கள். இவர்கள் மூவரும் கூட அவனைப் போலவே மிக எச்சரிக்கையானவர்கள். இவர்களில் ஒருவனுக்குக் கூட, தான் கண்காணிக்கப்படுகிறோம் என்ற சந்தேகம் வந்தால் போதும் அஜீம் அகமது உடனே தானிருக்கும் இடத்தை மாற்றி விடுவான். இந்தியா விட்டுப் போனாலும் போய் விடுவான்….”

இந்த மூன்று பேரும் சில நாட்களாக புறநகர்ப்பகுதி நோய்டாவில் அதிகம் காணப்படுகிறார்கள். அதனால் அஜீம் அகமது அங்கே தான் எங்கேயோ ஒளிந்து கொன்ண்டிருக்கிறான் என்று சந்தேகப்படுகிறோம். ஆனால் இது வரை நாம் அந்த மூன்று பேரையும் பின் தொடரவில்லை. அவர்களை நாம் கண்காணிக்கிறோம் என்ற சந்தேகத்தை அவர்களுக்குச் சிறிதும் ஏற்படுத்தவில்லை. நோய்டாவில் நம் வழக்கமான பாணியில் கண்காணிக்க ஆட்களை ஏற்பாடு செய்தால் கண்டிப்பாக அஜீம் அகமதும், அவன் ஆட்களும் அவர்களை மோப்பம் பிடித்து விடுவார்கள். அதனால் நாம் வழக்கமான தெருவியாபாரிகள், பிச்சைக்காரர்கள் மாதிரியான வேடங்களில் ஆட்களை அந்தப் பகுதிக்கு அனுப்ப முடியாது…”

நரேந்திரன் நிறுத்திய போது மூவரும் அடுத்தது என்ன, தங்களுக்கு என்ன கட்டளை என்ற ஆவலும் எதிர்பார்ப்புமாகக் கலந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மூவரில் அன்வர் என்ற இளைஞன் அஜீம் அகமது போலவே எச்சரிக்கையானவன், போடும் வேடத்திற்கேற்ற கதாபாத்திரமாகவே மாறிவிடக்கூடியவன் என்பதால் அஜீம் அகமதைக் கண்டுபிடிக்க நோய்டா பகுதியில் உளவு பார்க்க நரேந்திரன் அவனையே தேர்ந்தெடுத்தான். மற்ற இருவரான ஜெய்தீப்பும், விக்டரும் கூட குறையில்லாமல் கச்சிதமாகவே இயங்கக்கூடியவர்கள் என்பதால் நோய்டாவிற்கு அந்தப் பக்க, இந்தப் பக்கப் பகுதிகளில் உளவு பார்க்க அவர்கள் இருவரையும் தேர்ந்தெடுத்திருந்தான்.
 
நரேந்திரன் தொடர்ந்து சொன்னான். நோய்டா பகுதியில் அதிகமானவர்கள் பயன்படுத்தக்கூடிய குரியர் கம்பெனியில் உங்கள் மூவருக்கும் வேலைக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். நோய்டா பகுதிக்கு அன்வர், அதற்கு இருபக்க பகுதிகளுக்கு ஜெய்தீப், விக்டரை நியமிக்கிறேன். நீங்கள் உண்மையாகவே குரியர் கம்பெனிக்கு வேலை செய்வதால் தபால்களை நிஜமாகவே பட்டுவாடா செய்வதால் உங்கள் மேல் அஜீம் அகமது ஆட்களுக்கு எந்தச் சந்தேகமும் வராது. நீங்கள் அஜீம் அகமதும், அவன் ஆட்களும் எங்காவது தெரிகிறார்களா என்று பாருங்கள். அவர்கள் உண்மையாகவே உங்களுக்குப் பார்க்கக் கிடைத்தாலும் கூர்ந்து பார்ப்பதாகக் காட்டிக் கொள்ளக்கூடாது. ஒரு நேரத்தில் ஒரு தடவைக்கு மேல் அவர்களைப் பார்க்கக்கூடாது. நீங்கள் குரியர் ஆட்கள் அல்ல உளவாளிகள் என்ற சந்தேகம் அவர்களுக்குச் சிறிதும் வந்து விடாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். இயல்பாக இருங்கள். முதல் பார்வையிலேயே அதிகம் கவனித்து விடுங்கள். அன்வர் முக்கியமாக உனக்குத் தான் அவனைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு அதிகம். அதனால் நீ தான் மற்றவர்களை விட அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்…”


அன்வரும், மற்ற இருவரும் தலையசைத்தார்கள்.

(தொடரும்)
என்.கணேசன்

யாரோ ஒருவன்? 108

(தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி போனஸாக அடுத்த அத்தியாயம் இன்று மாலையே அப்டேட் ஆகும்)

ஜீம் அகமது பீம்சிங்கை மிகத் தைரியமானவனாக எண்ணியிருந்தான். ஆனால் எந்த ஆபத்தான இடத்திற்கும் சென்று திருடும் துணிச்சலும் சாமர்த்தியமும் இருக்கும் பீம்சிங், பாம்புகள் கடிக்காது என்று சுவாமிஜி உத்திரவாதம் தந்தாலும் கூட அந்தக் காட்டுக் கோயிலில் பாம்புகள் மத்தியில் போக இந்த அளவு பயப்படுவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. சுவாமிஜி பீம்சிங்கைப் பற்றி அவன் எண்ணியவுடனேயே அவனே பொருத்தமான ஆள் என்று கூடச் சொல்லி இருந்ததால் இனி என்ன செய்வது என்ற முடிவை எடுக்க அவரிடமே கேட்கும்படி ஜனார்தன் த்ரிவேதிக்குப் போன் செய்து சொன்னான்.

ஜனார்தன் த்ரிவேதியின் மேனேஜர் காளிங்க சுவாமியின் சீடர்களுக்குப் போன் செய்ய ஆரம்பித்தான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பின் ஒரு சீடனைத் தொடர்பு கொள்ள முடிந்தது. அவன் சுவாமிஜியைக் கேட்டு விட்டுச் சொன்னான். “பீம்சிங் வரும் போது இந்தக் காளிக் கோயிலில் ஒரு பாம்பையும் பார்க்க முடியாது என்று சுவாமிஜி உறுதியளிக்கிறார். அப்படி அவன் தூரத்தில் பார்த்தால் கூட அவன் கோயிலுக்குள் நுழைய வேண்டியதில்லை என்று சுவாமிஜி சொல்கிறார்

ஜனார்தன் த்ரிவேதி ஆச்சரியப்பட்டார். அவருக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து அந்தக் காளிக் கோயில் பாம்புகளால் சூழப்படாமல் இருந்ததேயில்லை. அவர் மந்திரியாக இருந்த போது காட்டு இலாகா அதிகாரிகள் அந்தக் கோயிலின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவு வரை தள்ளியே இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் காளிங்க சுவாமி முதல் முறையாக அவருக்காக இப்படிச் செய்யச் சம்மதித்திருப்பது அவரது அருளாகவே தோன்றியது. போனிலேயே தன் நன்றிகளை அந்தச் சீடனிடம் உணர்ச்சிவசப்பட்டுச் சொன்ன அவர் சுவாமிஜி சொன்ன தகவலை அஜீம் அகமதிடம் தெரிவித்தார்.

அதைக் கேட்டு அஜீம் அகமதும் திருப்தி அடைந்தான். இதை விட சுவாமிஜி இறங்கி வர முடியாது என்று அவனுக்குத் தோன்றியது. சுவாமிஜி சொன்னதை பீம்சிங்கிடம் தெரிவித்த போது தனக்குத் தோன்றியதையும் கூட அவன் சொன்னான்.   

பீம்சிங் யோசித்து விட்டுச் சம்மதித்தான். ஆனால் அந்த வேலைக்கு அவன் பத்து லட்சம் ரூபாய் கேட்டான். முன்பணம் மூன்று லட்சமும் பொருளைத் தரும் போது ஏழு லட்சமும் தர வேண்டும் என்று சொன்னான்.

அஜீம் அகமது சம்மதித்தான். ஜனார்தன் த்ரிவேதிக்குப் பணம் ஒரு பிரச்னையே அல்ல!


ல்யாண் மிகவும் கவலையாக இருப்பதை சரத் காலையிலேயே கவனித்தான். எப்போதுமே சரியான நேரத்தில் ஆபிசுக்குள் நுழைபவன் இன்று தாமதமாகத் தான் வந்தான். வந்ததிலிருந்தே எல்லோரிடமும் எரிந்து விழுந்தான். ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்தது அங்கே ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பப்படவுள்ளதும், கம்பெனியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்த திறமை வாய்ந்த மூன்று பேர் ராஜினாமா செய்ததும் கம்பெனி நிலைமையைப் பரிதாபமாக ஆக்கி உள்ளது. அதனால் தான் கல்யாண் தளர்ந்து போயிருக்கிறான் என்பது சரத்துக்குப் புரிந்தது. கம்பெனி ஆரம்பித்த காலத்திலிருந்து போன மாதம் வரை கம்பெனி வளர்ச்சி ஏறுமுகமாகவும் வேகமாகவும் தான் இருந்தது. முதல் முறையாக வந்திருக்கும் இந்தப் பெரிய பின்னடைவு அவர்கள் சிறிதும் எதிர்பாராதது. எப்போதும் அமைதியிழக்காத கல்யாணையும் அமைதி இழக்க வைத்திருக்கிறது.

மதிய உணவை இருவரும் எப்போதும் சேர்ந்து தான் சாப்பிடுவார்கள். அந்த நேரத்தில் சரத் மெல்லச் சொன்னான். “எத்தனை பெரிய ஆள்களுக்கும் பிரச்சினையான காலம் இருக்கத்தான் செய்யுது. நாம இத்தனை காலம் அதை அனுபவிக்கலைங்கறதால நமக்கு இது ரொம்ப பெருசா தெரியுது. எல்லாம் சரியாயிடும் கல்யாண். “

இதுநாள் வரை கல்யாண் தான் சரத்துக்குத் தைரியமூட்டுபவனாக இருந்தான். முதல் முறையாக இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. கல்யாண் சூனியத்தைப் பார்த்தபடி தலையசைத்தான்.

அந்த நாகரத்தினக்கல் திரும்பக் கிடைக்கும் வரை எதுவும் சரியாகும் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லை. அப்பா சொன்னாரென்று அந்த விஷப்பரிட்சையில் அவன் இறங்காமல் இருந்திருக்கலாம். வேறு எவனாவது இப்படிச் செய்திருந்தால் பெரிய ஆள்களைப் பிடித்து மிரட்டி அதைத் திரும்ப வாங்கியிருக்கலாம். ஆனால் இப்போது நாகராஜ் அவனை விட அதிகார மையத்திற்கு அதிக நெருக்கமானவன். கல்யாணுக்கு மாநில அளவில் ஓரிருவரைத் தெரியும் என்றால் நாகராஜ் நாடு முழுதும் ஆட்களை அறிந்தவனாக இருக்கிறான். அவனுக்கு அடுத்தவர்கள் தயவு கூடத் தேவையில்லை. அடுத்தவர்களுக்குத் தான் அவன் தயவு தேவையாக இருக்கிறது. அதனால் மிரட்டும் வேலைக்குப் போனால் அவன் மறைமுகமாய்ச் சொன்னபடி உயிர்கூட மிஞ்சாது.  அதற்குப் பதிலாக தெரியாமல் தவறு செய்து விட்டோம் என்று அவனிடம் போய் கெஞ்சினால் அவன் அதைத் திரும்பக் கொடுப்பானா? அவனுக்கு அப்படிச் செய்வதற்கு சுயகௌரவம் இடம் தராது என்றாலும் சொன்னால் வேலாயுதம் போய் நாகராஜின் காலில் விழுவார். மன்னித்தேன் என்று சொல்லி அந்த நாகரத்தினக்கல்லைத் திரும்பத் தராதவரை அவன் காலை விட்டு அவர் எழுந்திருக்கவும் மாட்டார். அவ்வளவு வயதானவர் அவன் காலில் விழுவது நாகராஜுக்கும் தர்மசங்கடமாக இருக்கலாம்… அவன் திரும்ப அந்த நாகரத்தினத்தைத் தரவும் வாய்ப்பிருக்கிறது…

சரத்துக்கு நண்பனின் கவனம் வேறெங்கேயோ இருக்கிறது என்பது புரிந்தது. இப்போதிருக்கும் கம்பெனிப் பிரச்சினைகள் மூன்று நாட்களாகவே இருக்கின்றன. நேற்று மாலை வரை கூட கல்யாண் இவ்வளவு மனம் தளர்ந்து போயிருக்கவில்லை. இப்போது இப்படி இருக்கிறான் என்றால் கூடுதலாக எதாவது பிரச்சினை முளைத்திருக்கிறதோ?

சரத் மெல்லக் கேட்டான். “புதுசா எதாவது பிரச்சனையா?”

சரத்திடம் அந்த நாகரத்தினக்கல் காணாமல் போனதைத் தெரிவிக்கலாம் என்று கல்யாண் முடிவு செய்தான். ஏனென்றால் சரத் அந்த நாகரத்தினக்கல்லைப் பற்றி அறிவான். சொல்வது என்று முடிவது செய்த பிறகும் கல்யாண் நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. மற்றவர்களிடம் உண்மையைப் பகுதி பகுதியாக மட்டும் சொல்லும் பழக்கமிருப்பவர்களுக்கு இந்தச் சிக்கல் எப்போதும் உண்டு. யாரிடம் எதை மட்டும் சொல்லி இருக்கிறோம் என்று நினைவுபடுத்திக் கொண்டு அது சம்பந்தமானதை மட்டும் தான் மேற்கொண்டு சொல்ல வேண்டும். இவனிடம் நாகராஜிடம் இருக்கும் மற்ற நாகரத்தினக்கல்களைப் பற்றியோ, விசேஷ நாகரத்தினத்தைப் பற்றியோ, பாம்பாட்டியைப் பற்றியோ அவன் சொல்லி இருக்கவில்லை… மணி கோஷ்டியை வைத்து அந்த விசேஷ நாகரத்தினத்தைத் திருட முயற்சித்து அந்த முயற்சியில் தன் நாகரத்தினத்தை இழந்ததையும் அவனால் சொல்ல முடியாது…

அதை எல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டு கல்யாண் சொன்னான். ”என் கிட்ட இருந்த அந்த நாகரத்தினக்கல் காணாமல் போயிடுச்சு சரத். அது, எப்படின்னு தான் தெரியல.”

சரத் அதிர்ச்சியடைந்தான். “எப்ப இது நடந்துச்சு?”

கல்யாண் உண்மையைச் சொல்ல முடியாத நிலையில் இருந்ததால் இயல்பாகப் பாதிப் பொய்யும், பாதி உண்மையும் கலந்து சொன்னான். “அதுவும் தெரியலை. இந்தப் பிரச்சினகள் எல்லாம் வர ஆரம்பிச்சதால அப்பா நேத்து என் கிட்ட அந்த நாகரத்தினக்கல்லை எடுத்து பூஜை பண்ணி திரும்ப உள்ளே வை. சரியாயிடும்னு சொன்னார். சரின்னு எடுக்கப் போறேன். பீரோல இல்லை. வீடு பூராவும் தேடியும் பார்த்துட்டேன். எங்கேயும் இல்லை”

சரத் திகைப்புடன் நண்பனைப் பார்த்தான். “உன் வீட்டு வேலைக்காரி எதாவது…?”

“முதலாவது அவளுக்கு அதோட மதிப்பு தெரியாது. அதுமட்டுமில்லாம அவள் கைக்கு சாவி கிடைக்கவும் வாய்ப்பில்லை. எத்தனையோ தடவ மேகலா மறதில எங்கெங்கேயோ வெச்சிடற நகையை எல்லாம் கூட அந்த வேலைக்காரி எடுத்துக் குடுத்து ஜாக்கிரதையா இருங்கம்மான்னு உரிமையா திட்டக்கூடியவ. அதனால் அவ எடுத்திருக்க கண்டிப்பா வாய்ப்பில்லை.  எனக்கு சந்தேகம் பக்கத்து வீட்டுக்கார நாகராஜ் மேல தான்…”

”அவனுக்கு தான் ஏற்கெனவே எக்கச்சக்கமா காசிருக்கு. அவன் கிட்ட பணம் கொண்டு வந்து கொட்ட ஆள்களும் இருக்காங்க. அபூர்வ சக்திகளும் இருக்கு. அவன் எதுக்கு இதை எடுக்கப் போறான்?” சரத் குழப்பத்துடன் கேட்டான்.

’இவனுக்கு சமயத்துல மூளை நல்லாவே வேலை செய்யுது’ என்று மனதில் நினைத்துக் கொண்ட கல்யாண் மெல்லச் சொன்னான். “அவனுக்கு நம்ம மேலே எதோ பகை இருக்கற மாதிரி எனக்குத் தோணுது சரத். யோசிச்சுப் பார். அவன் என் பக்கத்து வீட்டுக்கு வந்த பிறகு தான் நமக்கு மொட்டைக் கடுதாசி வந்துச்சு… நினைவிருக்கா?”

(தொடரும்)
என்.கணேசன்



  

Thursday, October 20, 2022

சாணக்கியன் 27

 

லெக்ஸாண்டர் ஹிந்துகுஷ் மலைமுகடுகளைப் பார்த்தபடி மௌனமாக அமர்ந்திருந்தான். அவன் தற்போது பாக்ட்ரியா பகுதியில் இருக்கிறான். அப்பகுதியில் தலைவனாக இருந்த சசிகுப்தன் முன்பு பாரசீக மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு பாக்ட்ரியாவை ஆண்டு வந்தவன். போர் வரும் சமயங்களில் தன் படையுடன் சென்று பாரசீக மன்னருக்கு உதவுபவன். ஆனால் அலெக்ஸாண்டருடன் பாரசீக மன்னர் போரிட்ட போது மட்டும் சசிகுப்தன் பாரசீக மன்னருக்கு உதவுவதற்குப் பதிலாக அலெக்ஸாண்டருக்கு உதவி செய்து தன் பதவியைக் காப்பாற்றிக் கொண்டான். பாரதம் நோக்கிக் கிளம்பியிருக்கும் அலெக்ஸாண்டர் தன் படையுடன் அப்பகுதியில் சில நாட்கள் ஓய்வெடுக்கத் தீர்மானித்திருந்தான்.

 

இப்படித் தங்கியிருக்கும் சமயங்களில் அலெக்ஸாண்டர் பெரும்பாலும் தன் அடுத்த வெற்றிக்குத் தேவையானவற்றைத் திட்டமிடுவதும், ஆலோசிப்பதும் தான் வழக்கம். அந்தச் சமயங்களில் எப்போதும் அவனைச் சுற்றிப் படைத்தலைவர்கள், தகவல்கள் சொல்பவர்கள், ஒற்றர்கள் போன்றோர் இருந்து கொண்டேயிருப்பார்கள் என்றாலும்  அவன் அபூர்வமாகச் சில சமயங்களில் தனிமையை அதிகம் விரும்புவதுண்டு. அந்தச் சமயங்களில் அனாவசியமாக யாரும் வந்து பேசுவதை அவன் ரசிப்பதில்லை. அப்படிக் குறுக்கீடுகள் வருவதை அவன் தொந்தரவாகவே கருதுவான். அதனால் சரியான காரணம் இல்லாமல் அவன் தனிமையில் யாரும் குறுக்கிடுவதில்லை.

 

அந்தத் தனிமை நேரங்களில் அவன் மிக ஆழமானவன். போர் தந்திரங்களையும், உல்லாச விஷயங்களையும் தவிர்த்து விட்டுத் தத்துவார்த்தமான உண்மைகளை அவன் அதிகம் சிந்திக்கும் நேரமது. அரிஸ்டாட்டிலின் இணையற்ற மாணவனான அவன் அந்தச் சமயங்களில் மானிட வாழ்க்கையைப் பற்றியும் அறிவின் உச்ச விஷயங்களைப் பற்றியும் தான் சிந்தித்துக் கொண்டிருப்பான். உலகையே வென்று வரக் கிளம்பியிருக்கும் மாவீரனான அவன் சில சமயங்களில் இப்படி தத்துவார்த்த விஷயங்களைச் சிந்தித்துக் கொண்டு தனிமையில் அமர்ந்திருப்பது பலருக்கு ஆச்சரியமாக இருப்பதுண்டு. அவன் நன்றாகப் பேசும் மனநிலையில் இருக்கும் போது அவர்கள் அவனிடம் தங்கள் ஆச்சரியத்தை வாய்விட்டுச் சொல்வதும் உண்டு. அவர்களுடைய ஆச்சரியம் அவனை ஆச்சரியப்படுத்தும். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று அவனுக்குத் தோன்றும். எல்லைகளை மீறிப் புதிய புதிய தேசங்களை வெற்றிக் கொள்வது அவனுக்கு எந்த அளவு ஆனந்தத்தைத் தருகிறதோ அதே அளவு மானசீகமாகவும் எல்லைகளை மீறி யோசிக்க அவனுக்கு மிகவும் பிடிக்கும். புதிய உண்மைகளைக் கண்டுபிடிக்கவும் அதை வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ளவும் அவனுக்குப் பிடிக்கும். வெளியே அவன் வெல்லும் தேசங்கள் வெளிப்பார்வைக்குப் பெருமை என்றால் உள்ளே அவன் உணரும் உண்மைகள் உள்ளத்திற்குப் பேரானந்தம் தருபவை. அவன் ஆசிரியரான அரிஸ்டாட்டில் எத்தனையோ ஞான விதைகளை அவன் உள்ளத்தில் விதைத்திருக்கிறார். சில சமயங்களில் தனிமையில் அவற்றை யோசிக்கத் தோன்றும். மனித வாழ்க்கையின் விசித்திரங்களைப் பற்றி ஆராயத் தோன்றும். வெளிப்புற வெற்றிகளைப் போலவே உள்ளத்தின் வெற்றிகளும் முக்கியமானவையே. அதுவும் மகத்தான வீரமே. வெளிப்புற வெற்றிகளை மட்டும் பார்க்கவும் யோசிக்கவும் முடிவது பாதி வாழ்க்கை மட்டுமே வாழ்கிறவர்கள். அதனால் தான் அவன் முழு வாழ்க்கை வாழ முயற்சிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது....

 

அலெக்ஸாண்டர் சிந்தனை கலைந்து அவனருகே வந்து அமைதியாக நின்ற வீரனை மெல்லத் திரும்பிப் பார்த்தான். அவன் அப்படித் திரும்பிப் பார்க்காமல் இருந்திருந்தால் அந்த வீரன் போய் சிறிது நேரம் கழித்து வந்திருப்பான்.

 

வீரன் அவனை வணங்கி விட்டுச் சொன்னான். “தங்களைக் காண காந்தார அரசர் ஆம்பி குமாரனிடமிருந்து தூதர் ஒருவர் வந்திருக்கிறார், சக்கரவர்த்தி

 

அலெக்ஸாண்டர் ஒரு கணம் யோசித்து விட்டுச் சொன்னான். ”உள்ளே அனுப்பு. மொழிபெயர்ப்பாளனையும் வரச் சொல்.”

 

வீரன் சென்று காந்தார தூதரையும் மொழிபெயர்ப்பாளரையும் உள்ளே அனுப்பி வைத்தான்.

 

காந்தார தூதர் அலெக்ஸாண்டரை வணங்கி விட்டுச் சொன்னார். “வெற்றி மீது வெற்றி சேர்த்துக் கொண்டிருக்கும் சக்கரவர்த்திக்கு காந்தார அரசர் ஆம்பி குமாரர் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் அனுப்பியுள்ளார்.....”

 

மொழிபெயர்ப்பாளன் அதை மொழிபெயர்த்துச் சொன்னதும் அலெக்ஸாண்டர் குழப்பத்துடன் கேட்டான். “நான் கேள்விப்பட்ட வரையில் ஆம்பி குமாரன் காந்தார இளவரசர் அல்லவா? அவரை காந்தார அரசர் என்று நீங்கள் கூறக்காரணம் என்ன தூதரே?”

 

மொழிபெயர்ப்பாளன் அதை மொழிபெயர்த்துச் சொன்னதும் தூதர் சொன்னார். “முந்தைய அரசர் இறைவனடி சேர்ந்து விட்டதால் ஆம்பி குமாரர் தற்போது காந்தார அரசராக  இருக்கிறார் சக்கரவர்த்தி.”

 

அலெக்ஸாண்டர் இது வரை அந்தச் செய்தியை அறியவில்லை. எல்லாச் செய்திகளையும் உடனுக்குடன் அறிய விரும்பும் அலெக்ஸாண்டர் இந்தச் செய்தி இதுவரை தன்னை ஏன் எட்டவில்லை என்று யோசித்தபடியே ’மேற்கொண்டு சொல்’ என்று சைகை செய்தான்.

 

காந்தார தூதர் அலெக்ஸாண்டரின் பெருமையையும், காந்தாரத்தின் வலிமையையும் பற்றி மிக உயர்வாகச் சொல்ல ஆரம்பித்தார். அலெக்ஸாண்டர் முகம் எந்த உணர்ச்சியையும் காட்டா விட்டாலும் உள்ளூர அவன் சுவாரசியம் இழந்தான். இது போன்ற உயர்வு நவிற்சிகளைக் கேட்டு அவனுக்குச் சலித்து விட்டது. மொழி பெயர்ப்பாளனும் வாக்கியத்துக்கு வாக்கியம் மொழிபெயர்த்துச் சலித்தான். கடைசியில் ஆம்பி குமாரன் அனுப்பிய செய்தி இது தான். மாவீரனான அலெக்ஸாண்டருடன் வலிமையான காந்தாரத்தின் அரசனான ஆம்பி குமாரன் நட்பு பாராட்ட விரும்புகிறான். இருவருடைய நட்பினால் இரு பக்கமும் இலாபமடைய நிறைய இருக்கிறது. அது குறித்துப் பேச ஆம்பி குமாரன் அலெக்ஸாண்டரை ஒரு முறை சந்திக்க விரும்புகிறான்...

 

அலெக்ஸாண்டர் சுருக்கமாகச் சொன்னான். “மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தேன் என்று தங்கள் அரசரிடம் கூறுங்கள் தூதரே. நானும் ஆம்பி குமாரரைச் சந்திக்க விரும்புகிறேன். எங்கு எப்போது சந்திக்கலாம் என்பதை விரைவில் என் தூதர் மூலம் சொல்லி அனுப்புகிறேன் என்று அவரிடம் தெரிவியுங்கள்”

 

காந்தார தூதர் மீண்டும் பணிவுடன் வணங்கி நன்றி தெரிவித்து விட்டுச் சென்றார். அவர் சென்ற பிறகு சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்து விட்டு அலெக்ஸாண்டர் சசிகுப்தனை வரவழைத்தான்.

 

சசிகுப்தன் உடனே வந்தான். பணிவுடன் வணங்கி விட்டு நின்ற அவனிடம் அலெக்ஸாண்டர் கேட்டான். “காந்தார அரசர் இறந்ததும், ஆம்பி குமாரன் அரியணை ஏறியதும் நீ அறிவாயா சசிகுப்தா?”

 

“இல்லை சக்கரவர்த்தி. தங்களுக்கு இந்தச் செய்தியைத் தெரிவித்தது யார்?”

 

“ஆம்பி குமாரனிடமிருந்து வந்த ஒரு தூதன் தான் அதைச் சொன்னான்.”

 

“இருக்கலாம் சக்கரவர்த்தி. காந்தார அரசர் வயோதிகத்தின் காரணமாகச் சில காலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று காந்தாரத்திலிருந்து வருபவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்....”

 

“இது போன்ற ஆட்சி மாற்றச் செய்திகள் எனக்கு உடனுக்குடன் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் சசிகுப்தா. குறிப்பாக நான் போகவிருக்கிற பிரதேசங்களில் நடப்பவை எனக்கு முதலில் தெரிய வருவது முக்கியம். பல நேரங்களில் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பது நிலவரங்களை முன்கூட்டியே அறிந்திருப்பது தான்...”

 

இந்த ஒரு தகவல் அலெக்ஸாண்டரைப் பொருத்த வரை எதையும் நிர்ணயிக்கப் போகும் தகவல் அல்ல என்பதை சசிகுப்தன் அறிவான். அதை அப்படி அலெக்ஸாண்டரும் நினைக்கவில்லை என்பதையும் அவன் அறிவான். இப்போது அலெக்ஸாண்டர் அதிருப்தியடைந்திருப்பது முக்கியமோ இல்லையோ போகவிருக்கும் இடத்தில் நடந்த செய்தி எப்படி தனக்கு முதலில் கிடைக்கவில்லை என்பதால் தான் என்பதும் அவனுக்குப் புரிந்தது. மிகவும் கூர்மையான அறிவு படைத்த சசிகுப்தன் சில மனக்கணக்குகள் போட்டு என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்தவனாக மெல்லச் சொன்னான். ”காந்தாரத்திலிருந்து வரும் வணிகர்கள் கூட இதை நமக்குச் சொல்லவில்லை என்பதால் அவர்கள் அங்கிருந்து கிளம்பும் போதும் இதை அவர்களும் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது.”

 

அலெக்ஸாண்டர் சந்தேகத்துடன் கேட்டான். “நாட்டில் அரசர் இறப்பதும், இளவரசர் அரசராவதும் கூட எப்படி மக்களுக்குத் தெரியாமல் போகும் சசிகுப்தா?”

 

“நடக்கும் போது கண்டிப்பாகத் தெரிய வரும் சக்கரவர்த்தி. அவர்களுக்குத் தெரியவில்லை என்றால் நடக்கவில்லை என்று தான் அர்த்தம்”

 

“நீ சொல்வதைப் பார்த்தால் அரசர் இருக்கும் போதே இளவரசன் ஆம்பி குமாரன் தன்னை அரசனாகச் சொல்லிக் கொண்டு தூதரை அனுப்பியிருப்பது போல் அல்லவா தெரிகிறது. ஆம்பி குமாரன் அப்படி ஏன் செய்கிறான்?” அலெக்ஸாண்டர் திகைப்புடன் கேட்டான்.

 

(தொடரும்)

என்.கணேசன்

 



இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)


நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் ரிஜிஸ்டர் தபால் அல்லது குரியர் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம். 

உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.