சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 27, 2012

பரம(ன்) ரகசியம் – 24





பரம(ன்) ரகசியம் – 24

ன்று கம்பெனியில் முக்கியமான மீட்டிங் ஒன்று இருந்ததால் பரமேஸ்வரனும், விஸ்வநாதனும் இரவு எட்டு மணிக்கு மேல் தான் வந்தார்கள். மகேஷும் தாமதமாகவே வந்தான். அவர்கள் வருவதற்கு முன்பே பயணக் களைப்பில் ஈஸ்வர் உறங்கி விட்டான். தந்தையின் அறையில் அவனுக்கு மிக ஆழ்ந்த தூக்கம் வந்து விட்டிருந்தது. மறு நாள் காலை அவர்கள் போகும் வரை அவன் எழுந்திருக்கவில்லை. அவன் கண் விழித்த போது ஆனந்தவல்லி அவனையே பார்த்தபடி அருகே அமர்ந்திருந்தாள். தூங்குகின்ற போது கொள்ளுப்பேரன் அவள் கண்களுக்கு மிக அழகாகத் தெரிந்தான். அவள் முகத்தில் ஒரு தனிக்கனிவு தெரிந்தது.

கண்விழித்த ஈஸ்வருக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறித்தான். அவன் தந்தைக்கும் அவன் தூங்குவதைப் பார்க்கப் பிடிக்கும். அவன் ஒரு குழந்தை போல் தூங்குவதாக அவர் சொல்வார்.... ஆனால் இந்தக் கிழவியும் ஏன் இப்படிப் பார்க்கிறாள் என்று நினைத்தவனாக அவன் கேட்டான். “என்ன?

ஆனந்தவல்லி சொன்னாள். என்ன இன்னமும் எழுந்திருக்கலையான்னு  பார்க்க வந்தேன். தூங்கிட்டு இருந்தாய். அப்படியே நானும் இங்கே உக்காந்துட்டேன்.

அவன் எழுந்து போய் தன் காலைக்கடன்களை முடித்து விட்டு வரும் வரை ஆனந்தவல்லி அங்கேயே அமர்ந்திருந்தாள். அவன் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

அவள் சொன்னாள்.உனக்கு தொந்தரவாய் இருந்தாய் போயிடறேன்...

“தொந்தரவெல்லாம் இல்லை. நானே உங்க கிட்ட பேச வரணும்னு இருந்தேன்.

“எதைப் பத்தி?

“அந்த சிவலிங்கத்தைப் பத்தி...

ஆனந்தவல்லி முகம் இறுகியது. சிறிது நேரம் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கேட்டாள். “அப்படின்னா நீ இங்கே வந்தது அந்த சிவலிங்கம் பத்தி தெரிஞ்சுக்கத் தானா?

ஆமா பின்ன இங்கே எனக்கு வேறென்ன இருக்கு?

“ஏண்டா இங்கே நாங்க எல்லாம் இல்லையா?

நீங்க எல்லாம் இருக்கீங்க. ஆனா நீங்க இருக்கற மாதிரி இது வரைக்கும் நீங்க காமிச்சுக்கவே இல்லையே

வார்த்தைகளின் கூர்மைக்குத் தகுந்தது போல் அவன் முகத்திலும் கடுமை தெரிந்தது. ஆனந்தவல்லி கேட்டாள். “ஏண்டா நீ தகராறு பண்றதுக்குன்னே வந்திருக்கயா?

அந்த நேரத்தில் மருமகன் எழுந்து விட்டானா என்று பார்க்க வந்த மீனாட்சி உள்ளே நுழையாமல் அப்படியே நின்று அவர்கள் பேசுவதைக் கேட்டாள். அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்வது அவளுக்குச் சுவாரசியமாக இருந்தது.

ஈஸ்வர் சொன்னான். “உண்மையை சொன்னா தகராறா? இந்த வீட்டு ஹால்ல ஜோடி ஜோடியா பெருசா படங்களை மாட்டி இருக்கீங்களே. எங்கப்பா அம்மா படம் இருக்கா? என் படம் இருக்கா?

ஆனந்தவல்லி அசந்து விடவில்லை. அந்த அறையில் இருந்த படங்களையும், பதக்கங்களையும் கோப்பைகளையும்  காட்டிக் கேட்டாள். ஏண்டா இதெல்லாம் யார் படம்? இதெல்லாம் யார் வாங்கின மெடல்...?

“இதெல்லாம் எங்க அத்தை பத்திரமா வச்சிருக்கறது. நான் ஹால்ல சொல்றேன். நாலு பேர் பார்க்கிற இடத்தில் இருக்கா?

ஹால்ல இருக்கற படங்கள் எதையும் நான் வைக்கலை. நீ வேணும்னா உங்கப்பா அம்மா போட்டோவைக் கொண்டு போய் மாட்டிக்கோ. உன் தாத்தா கிட்ட இருக்கற கோபத்தை நீ ஏண்டா என் கிட்ட காமிக்கிறாய்?”

அந்த ஆள் இப்படி இருக்கிறதுக்கு நீங்க தான் காரணம்...

“ஏண்டா நீ இப்படி இருக்கறதுக்கு உங்கப்பன் காரணமா? அவன் ஒரு வார்த்தை பெரியவங்களை எதிர்த்துப் பேசினதில்லையேடா? உங்கப்பன் சாதுவா இருந்ததுக்கு அவங்கப்பன் காரணமா? பிள்ளைங்க எப்படி இருக்காங்கங்கறதுக்கு பெத்தவங்க தான் காரணம்னு சொன்னா, நீயும், உங்கப்பனுமே பெத்தவங்க மாதிரி இல்லையேடா. நீ ஏதோ பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கேன்னு சொன்னாங்க. படிக்காதவன் மாதிரி அல்ல பேசறே

ஈஸ்வர் தன்னையும் மீறி புன்னகைத்தான். கிழவியின் பேச்சு சாமர்த்தியம் அவனுக்குப் பிடித்திருந்தது. சிறிய வயதிலிருந்தே அவனிடம் சரிசமமாக வாக்குவாதம் செய்து சண்டை போடுபவர்கள் யாரும் இருக்கவில்லை. பெற்றோர் இருவரும் அமைதியானவர்கள் என்பதாலும், அவனுக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை என்பதாலும் சின்னச் சின்ன சண்டைகள் போடுவதில் உள்ள சந்தோஷம் குடும்பத்தில் அவனுக்குக் கிடைத்ததில்லை. அப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஆனந்தவல்லி அவனுக்குத் தரவே அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தான். அவன் தொடர்ந்தான். “நான் கோவப் படறப்ப எல்லாம் எங்கப்பா புத்தி சொல்லுவாரு. அந்த மாதிரி நீங்க உங்க மகனுக்கு புத்தி சொல்லி இருக்கீங்களா?

ஆனந்தவல்லியும் மனதிற்குள் பேரன் பேச்சுத் திறமையை ரசித்தாலும் வெளியே காண்பித்துக் கொள்ளாமல் சொன்னாள். உங்கப்பனைப் பத்தி அவன் இது வரைக்கும் யார் கிட்டயும் பேசினதே இல்லையேடா. யாராவது பேசினாலும் அந்த இடத்தை விட்டுப் போயிடுவான். உங்கத்தை கிட்ட கூட அவன் பேசினதில்லை. வேணும்னா அவ கிட்ட கேட்டுப்பாரு. அவன் எதிர்பாராம விழுந்த அடிடா அது. அவனால அதை இன்னைக்கு வரைக்கு தாங்க முடிஞ்சதில்லை...

ஒருத்தன் காதல் கல்யாணம் பண்ணிக்கறது தப்பா?

“உன்னை மாதிரி உங்கப்பன் இருந்திருந்தா பரமேஸ்வரன் பிள்ளை கிட்ட எதையும் எதிர்பார்த்திருக்க மாட்டாண்டா. அப்பா கிழிச்ச கோடு தாண்டாத பிள்ளையாவே காலம் பூரா வளர்ந்தவண்டா உங்கப்பன். போடற டிரஸ் தேர்ந்தெடுக்கறது அப்பா, பைக் தேர்ந்தெடுக்கறது அப்பா, கார் தேர்ந்தெடுக்கறது அப்பா. அவங்கப்பனும் தேர்ந்தெடுக்கறதுன்னா சும்மா இல்லை... இருக்கறதுலயே எது உசத்தியோ அது தான் பையனுக்கு கிடைக்கணும்னு அப்படி பார்த்து பார்த்து தேர்ந்தெடுப்பான்... அப்பவே சொல்வேன் “இப்படி குழந்தைகளை ஓவரா தலையில தூக்கி வச்சு ஆடறது நல்லதில்லைடான்னு. கேட்டால் தானே. உங்கப்பன் கல்யாணம் பண்ணிட்டு போனவுடனே இவன் பாதி செத்தே போயிட்டான்னு தான் சொல்லணும். அதுக்கப்பறம் மகனைப் பத்தி யார் கிட்டயும் பேசறதை நிறுத்திட்டான்...

கிழவி தன் மகனுக்காக பரிந்து பேசினதில் இருந்த உண்மையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் உன்னை மாதிரி உங்கப்பன் இருந்திருந்தான்னு சொன்னீங்களே எந்த அர்த்தத்துல?என்று பொய்யான கோபத்தைக் காட்டி அவன் கேட்டான்.

ஆனந்தவல்லியிடமும் எதிர்த்து சரிசமமாய் சண்டை போடுபவர்கள் இது வரை யாரும் இருந்ததில்லை. தந்தை, கணவன், பசுபதி மூவரும் பெரிதாய் கோபம் கூட காட்ட மாட்டார்கள். கோபப்படும் பரமேஸ்வரன் கூட அதைத் தாயிடம் வார்த்தைகளில் காண்பிக்க மாட்டார். அதனால் அவனிடம் இப்படிப் பேசுவதில் அவளுக்கும் உள்ளூர ஒரு திருப்தி இருந்தது. “உன்னை மாதிரி எடக்கு முடக்கா எப்பவாவது பேசி இருந்தான்னு தான்?

“நான் எப்ப எடக்கு முடக்கா பேசினேன்?

“ஒரு சேரிப் பொண்ணை கட்டிகிட்டு நாலஞ்சு பெத்துகிட்டு இந்த வீடெல்லாம் சுத்தி விளையாட விடுவேன்னு சொன்னியே அதென்ன?

“ஏன் சேரிப் பொண்ணை கட்டிக்கிறதுல என்ன தப்பு?

“தப்பே இல்லை. ஏன் நீ பிச்சைக்காரியைக் கூட கட்டிக்கலாம்.ஆனந்தவல்லி எகத்தாளமாய் சொன்னாள்.

ஈஸ்வர் சிரிக்காமல் இருக்க கடும் முயற்சிகள் செய்து ஜெயித்தான். “அதுசரி இது வரைக்கும் நாம தான் எல்லாத்தையும் மகனுக்காக தேர்ந்தெடுத்தோம்... முதல் தடவையா அவனா ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்திருக்கிறான், அதை மதிக்கணும்னு உங்க மகனுக்குத் தோணலை. வாழ்க்கை பூரா சேர்ந்திருக்கிற மனைவியைத் தேர்ந்தெடுக்கற உரிமையைக் கூட தன் மகனுக்கு உங்கள் மகன் தரலை. அந்தக் கோபத்துல சாகற வரைக்கும் அவன் கிட்ட பேசக்கூட இல்லை... அது உங்களுக்கு தப்பாய் படலை பார்த்தீங்களா? நீங்களே உங்க மூத்த பிள்ளை மேல கோவிச்சுகிட்டு ஐம்பது வருஷத்துக்கு மேல பேசாம தானே இருந்தீங்க? எல்லாம் ஒரே ரகம் தான் போல இருக்கு?

ஆனந்தவல்லிக்கு சுருக்கென்றது. ஈஸ்வரை முறைத்தாள். ஏண்டா, அவன் வீட்டுக்கு வரலைன்னா பெத்தவ நான் சாகற வரைக்கும் உண்ணாவிரதம் இருப்பேன்னு இருக்கேன் கொஞ்சம் கூட அசைஞ்சு குடுக்காம கண்டுக்காமல் அவன் இருக்கான். இந்த காலத்துல அரசியல்வாதிகளே நிஜமான உண்ணாவிரதம்னா பேச்சு வார்த்தைக்காவது வந்து போறாங்க. அவன் அது கூட செய்யலை. கோவம் வராதா?

நீங்க சாகலையில்ல. அப்புறம் என்ன?ஈஸ்வரன் கிண்டலடித்தான்.

ஆனந்தவல்லி முறைத்தாள்.

ஈஸ்வர் சொன்னான். “அவருக்குத் தெரிஞ்சிருக்கும் நீங்க சாக மாட்டீங்கன்னு. அதனால தான் கண்டுக்கலை போல இருக்கு.

ஆனந்தவல்லி முகத்தில் வேதனை தெரிந்தது. “அவன் செத்ததுக்கப்புறமும் நான் இருப்பேன்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கும்... சாப்பாடு பெருசுல்ல, ஆடம்பரம் பெருசுல்ல, பணம் பெருசுல்லன்னு சன்னியாசி மாதிரி என் குழந்தை இருக்கிறப்ப எப்படி எனக்கு இருந்துச்சு தெரியுமா? இனி இந்த உலகத்துல யாரையுமே அளவுக்கு அதிகமா நேசிக்கக் கூடாதுன்னு நான் அப்பவே தீர்மானிச்சுட்டேன்.... இந்தப் பாசமும் வேண்டாம். அதுல இருந்து வர்ற துக்கமும் வேண்டாம்னு விலகியே இருக்கப் பழகிட்டேன்

தன் பேரக் குழந்தைகளிடம் கூட அவள் சற்று தொலைவிலேயே இருந்ததற்குக் காரணம் இப்போது இதைக் கேட்டுக் கொண்டு நின்ற மீனாட்சிக்கு விளங்கியது. ஈஸ்வரும் மனம் இளகினாலும் காட்டிக் கொள்ளாமல் சொன்னான். நேசிக்காத மனுஷங்களுக்கு உண்மையான சந்தோஷத்தையும் உணர முடியாதுசுவரில் இருந்த பரமேஸ்வரன், சங்கர், மீனாட்சி புகைப்படத்தைக் காட்டி சொன்னான்.பாருங்க இந்த மாதிரி சந்தோஷத்தை உணர்ந்திருக்கீங்களா?

ஆனந்தவல்லி அந்தப் புகைப்படத்தைப் பார்த்தபடியே சொன்னாள். “இப்படி சந்தோஷமா இருந்த என் மகன் பின்னாடி எப்படி துக்கப்பட்டான்னு நான் பார்த்திருக்கேன்

ஈஸ்வர் சொன்னான். “இந்த சந்தோஷத்தோட நினைவுகளை கடைசி வரை தக்க வச்சுகிட்ட என் அப்பாவை நான் பார்த்திருக்கேன். அந்த பழைய நாட்களைப் பத்தி பேசறப்ப எல்லாம் மறுபடி மறுபடி அந்த நாட்கள்ல வாழ்ந்துட்டு இருந்தார் அவர்....

அதைக் கேட்டு மீனாட்சி ஈரமான கண்களைத் துடைத்துக் கொண்டாள். அண்ணன் மறுபடி மறுபடி அந்த நினைவுகளில் வாழ்ந்தான் என்பதை அவன் மகன் வாயால் கேட்ட போது நெகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் ஆனந்தவல்லி அப்படி நெகிழ்ச்சியடையவில்லை. “ஆனால் அந்த நினைவுகள் அப்பாவுக்காக காதலை தியாகம் செய்யற அளவுக்கு பலமா இல்லைஎன்றாள்.

ஈஸ்வருக்கு நிஜமாகவே கோபம் வந்தது. “ஆமா நீங்க எல்லாம் என்ன நினைக்கிறீங்க? நீங்க நேசிக்கிறீங்கங்கற காரணத்திற்காகவே அடுத்தவங்க உங்க அடிமையாகணுமா? அந்த ஆள் என்னடான்னா நான் வேணுமா அந்தப் பொண்ணு வேணுமான்னு கேட்கிறார். நீங்க என்னன்னா உங்க பையன் கிட்ட அந்த சிவலிங்கத்தை விடறியா நான் உண்ணா விரதம் இருந்து சாகவான்னு கேட்கிறீங்க. அன்பை ஏன் வியாபாரமாக்கிறீங்க?

சுர் என்று அவனுக்கு எழும்பிய கோபத்தைப் பார்த்த ஆனந்தவல்லி அவனுக்கு அவன் அப்பாவை யாராவது எதாவது தப்பாய் சொன்னால் ரத்தம் கொதிக்கிறது என்று புரிந்து கொண்டாள்.  ஏண்டா எங்க ரெண்டு பேரையும் விமரிசனம் செய்யத் தான் நீ அமெரிக்காவுல இருந்து வந்தியா?

“இல்லை அந்த சிவலிங்கத்துக்காக தான் வந்தேன்....நல்ல வேளையா ஞாபகப்படுத்தினீங்க. சரி கொஞ்சம் சீரியஸா பேசலாமா? எனக்கு அந்த சிவலிங்கம் பத்தி முழுசும் தெரியணும். உங்களுக்குத் தெரிஞ்சதை எல்லாம் சொல்றீங்களா?என்றவன் ஒரு வெள்ளைத் தாளையும் பேனாவையும் எடுத்துக் கொண்டான். அவன் முகத்தில் இருந்த கோபம் சுத்தமாய் காணாமல் போனது. படுக்கையில் இருந்து எழுந்து வந்து ஒரு நாற்காலியை அவள் அருகே நகர்த்திப் போட்டு உட்கார்ந்தான்.

ஒரு நொடியில் நேர்மாறாக மாறிய அமைதியான ஈஸ்வர் முகத்தையே லேசான சோகத்துடன் ஆனந்தவல்லி பார்த்தாள்.  பின் மிகுந்த பாசத்துடன் அவன் தோளில் கை வைத்து சொன்னாள். “ஈஸ்வர் வேண்டாண்டா. பசுபதி ஏன் உன் கிட்ட தெரிவிக்கச் சொன்னான்னு எனக்கு தெரியாது. ஆனாலும் நீயும் அது பின்னாடியே போயிடுவியோன்னு எனக்கு பயமா இருக்குடா. இந்த குடும்பத்துல ஒருத்தன் அதுக்கு பூஜை பண்ணி உசிரை விட்டது போதும். இனி இந்த குடும்பத்துல யாரும் பலியாகிறதை பார்க்கற சக்தி எனக்கு இல்லைடா.

மனிதர்களை எடை போடுவதில் என்றுமே ஈஸ்வர் தவறியதில்லை. நடிக்கத் தெரியாத, நடிக்கும் அவசியத்தையும் லட்சியம் செய்யாதவள் ஆனந்தவல்லி என்பதை அவன் முன்பே கணித்திருந்தான். அப்படிப்பட்ட ஆனந்தவல்லியின் முகத்தில் தெரிந்த வேதனையும், பேசிய பேச்சும் ஆத்மார்த்தமாய் வந்தவை என்பது புரிந்த போது அவன் மிகவும் நெகிழ்ந்து போனான். தோளில் அவள் வைத்த கைகளை எடுத்துத் தன் இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு பரிவுடன் சொன்னான். “நீங்க அனாவசியமா பயப்படறீங்க. அப்படி எல்லாம் ஆகாது. இன்னொரு விஷயத்தை நீங்க மறந்துட்டீங்க. உங்க மூத்த பிள்ளையை பலி வாங்கினது அந்த சிவலிங்கம் இல்லை. மரணத் துடிப்புல கூட அவரோட பத்மாசனம் விலகலைன்னு கேள்விப்பட்டேன்.  தன் உடம்புல அத்தனை கட்டுப்பாடு வச்சிருந்த அவர் நினைச்சிருந்தா அந்த கொலைகாரனை சுலபமா தடுத்திருக்க முடிஞ்சிருக்கும். அவர் எந்தக் காரணத்தாலயோ அதை செய்யலை. ஒரு வேளை மரண காலம் இதுன்னு அவர் உணர்ந்திருக்கலாம். அதனால அதுக்கு இசைஞ்சு கொடுத்திருக்கலாம். அவர் உங்களைக் கூப்பிட்டு பேசினது, உங்க ரெண்டாவது பிள்ளை கிட்ட பேசினது எல்லாம் வச்சி பார்த்தா முதல்லயே அவர் தன் காலம் முடியப்போறதுன்னு உணர்ந்த மாதிரி தான் தெரியுது....

ஆனந்தவல்லி அவன் பரிவான பேச்சில் உருகிப் போனாள். அவள் மூத்த பிள்ளை குறித்து கவலைப்பட்ட சமயங்களில் எல்லாம் எத்தனையோ முறை அவள் கணவர் அவளை இதே பரிவுடன் அவள் துக்கத்தைக் குறைக்க முயன்றிருக்கிறார். அப்போதெல்லாம் அவள் அவரை எல்லாம் உங்களால் தான்என்கிற விதத்தில் மிகக் கடுமையாகத் திட்டியும் இருக்கிறாள். ஒருமுறை கூட அவர் அவளைக் கோபித்துக் கொண்டதில்லை. அவர் மரணத்திற்குப் பிறகு அதைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவள் மிகவும் பச்சாதாபப்பட்டிருக்கிறாள். இன்று அவர் தோற்றத்தில் இருக்கும் கொள்ளுப் பேரன் அவனுடைய வழக்கமான எடக்கு முடக்குத் தனத்தை விட்டு விட்டு அதே பரிவுடன் பேசிய போது மறுபடி அவனிடம் அவரையே கண்டாள். லேசாகக் கண் கலங்கினாள்.  

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சியும் நெகிழ்ந்து போனாள். சற்று முன் வரை மிகவும் காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்த இருவரும் மிகவும் பாசமாக மாறியது அவளுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. தானாடா விட்டாலும் சதையாடும்னு சொல்வாங்க. அது உண்மை தான். அப்பா கிட்டயும் இவன் இப்படியே மாறிட்டா போதும் கடவுளேஎன்று அவள் வேண்டிக் கொண்டாள்.

ஈஸ்வர் தொடர்ந்து சொன்னான். “நான் உங்க மூத்த பிள்ளை சொன்னார்ங்கறதுக்காக அந்த சிவலிங்கத்தைப் பத்தி கேட்கலை. எனக்கு வேற சில ஆராய்ச்சிகளுக்காக அதைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப காலமா ஆர்வம் இருக்கு. எங்கப்பா கிட்ட நான் நிறையவே அது பத்தி விசாரிச்சிருக்கேன். இது பத்தி உங்க கிட்டயும் உங்க ரெண்டாவது பிள்ளை கிட்டயும் நிறைய தகவல் கிடைக்கும்னு நம்பறேன். அதனால தான் கேட்கறேன். சொல்லுங்க ப்ளீஸ்

ஆனந்தவல்லி திடீரென்று கோபித்துக் கொண்டாள். “என்னடா ஆரம்பத்துல இருந்தே பார்த்துகிட்டிருக்கேன், நீங்க, உங்க மூத்த பிள்ளை, ரெண்டாவது பிள்ளைன்னே சொல்லிகிட்டிருக்கே? நீ பாட்டின்னு கூப்பிட்டு கேட்கலைன்னா நான் வாயே திறக்க மாட்டேன். என்ன ஆனாலும் சரி

மிக உறுதியாகச் சொல்லி விட்டு நாற்காலியில் அவள் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். பரமேஸ்வரன் மேல் இருந்த கோபம் ஈஸ்வருக்கு ஆனந்தவல்லியிடம் இருக்கவில்லை. சொல்லப்போனால் இங்கு வரும் வரை அவளைப் பற்றி அதிகம் அவன் நினைத்தது கூட இல்லை. இங்கே அவளிடம் பேசப் பேச அவளை அவனுக்குப் பிடித்தும் விட்டிருந்தது.ஆனாலும் அவ்வளவு சீக்கிரம் அவளை பாட்டி என்று கூப்பிட வேண்டுமா என்று அவன் எண்ணினான்.

அந்த நேரமாகப் பார்த்து அவனுக்குள்ளே ஏதோ ஒரு உணர்வு அவளிடம் உள்ள தகவல்களில் ஒன்று மிக முக்கியமாக இருக்கும் என்று அவனுக்கு ஆணித்தரமாகச் சொன்னது. அந்த உணர்வு எப்போதும் அவனுக்கு ஏற்படும் உள்ளுணர்வு போல இருக்கவில்லை. அதில் ஏதோ ஒரு பெரிய வித்தியாசத்தை அவன் உணர்ந்தான். ஏதோ வெளிசக்தி, டெலிபதியாக அவனுக்கு சொல்வது போல் இருந்தது. ஆழ்மனம் மற்றும் அதீத சக்திகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் அவனுக்கு அது தெளிவாகப் புரிந்த போது ஒரேயடியாக வியர்த்தது.....

(தொடரும்)
என்.கணேசன்



Monday, December 24, 2012

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 5


பசித்தவன் எதையும் தின்பான். பகைத்தவன் எதையும் சொல்வான்.


 ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி

கடுங்காற்று மழை கூட்டும். கடும் சினேகம் பகை கூட்டும்.

வீட்டு வாசலில் காவேரி, முழுக மாட்டாளாம் மூதேவி.

குண்டு பட்டு சாகாதவன் வண்டு கடித்துச் செத்தானாம்

பண்ணிய பாவத்தைப் பட்டுத் தான் தொலைக்க வேண்டும்.

காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.

தலைக்குத் தலை அம்பலம். உலைக்கு அரிசி இல்லை.

நீரிலும் நனைய மாட்டான். நெருப்பிலும் வேக மாட்டான்.

அசை போட்டுத் தின்பது மாடு; அசையாமல் தின்பது வீடு.

ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச் சொன்னால் நொண்டிக்குப் கோபம்.

அஞ்சு காசுக்குக் குதிரையும் வேணும். அது ஆற்றைக் கடந்து பாயவும் வேணும்.

அறுவடைக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

மேய்த்தால் கழுதை மேய்ப்பேன். இல்லா விட்டால் பரதேசி ஆவேன்.

அன்ன நடை நடக்கப் போய் தன்னடையும் கெட்டுப் போச்சு.

குதிரை செத்ததும் இல்லாமல் குழி தோண்ட மூணு பணம்.

-      
  -   தொகுப்பு: என்.கணேசன்


Thursday, December 20, 2012

பரம(ன்) ரகசியம் – 23



ஸ்வர் வீட்டில் இருந்து ஒவ்வொரு காராக வெளியே செல்வதை ஜன்னல் வழியே பார்த்தான். பரமேஸ்வரன், விஸ்வநாதன், மகேஷ் எல்லோரும் அவரவர் வேலைக்குச் சென்று விட்டார்கள். மகேஷ் மட்டும் போகும் முன் சாயங்காலம் பார்க்கலாம்என்று சொல்லி விட்டுப் போனான். அவன் வந்து போன வேகம் அவன் மீனாட்சி அனுப்பி தான் வந்து சொல்லி விட்டுப் போகிறான் என்பதை ஈஸ்வருக்கு தெளிவாகவே விளக்கியது. மீனாட்சி சமையலறையில் வேலையாக இருந்தாள். ஈஸ்வர் வந்ததால் அதிகாலையில் படிக்காமல் விட்ட தினப்பத்திரிக்கையை ஆனந்தவல்லி தனதறையில் படித்துக் கொண்டிருந்தாள்.

எனவே ஈஸ்வருக்கு தேவையான தனிமை கிடைத்தது. சிவலிங்கம் விஷயமாக இனி என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்கு விளங்கவில்லை. அது அவனை இந்தியா வரத்தூண்டியது. வந்தான். இங்கு வந்த பின்னும் அது அந்தரத்தில் நிற்பது போல ஒரு காட்சி தெரிந்தது, குடும்ப உணர்ச்சிப் போராட்டங்களில் என்னை மறந்து விடாதே என்று சொல்வது போல இருந்தது. அதனால் அடுத்ததாக என்ன செய்வது என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான். அவனுக்கு அந்த சிவலிங்கம் பற்றி தெரிந்ததெல்லாம் அவன் அப்பா சொன்னது தான். அவர் சொன்ன விஷயங்களும் அவன் பிறப்பதற்கு முந்தையவை. பசுபதி பற்றியும், சிவலிங்கம் பற்றியும் முழுவதும் தெரிந்து கொள்ள மீனாட்சி, பரமேஸ்வரன், ஆனந்தவல்லியுடன் அது பற்றிப் பேச வேண்டும் என்று நினைத்து அதை ஒரு தாளில் குறித்துக் கொண்டான். அமெரிக்கா திரும்பும் முன் அவன் தந்தையின் மிக நெருங்கிய நண்பர் தென்னரசையும் சந்திக்க வேண்டும் என்று வரும் முன்பே நினைத்திருந்தான். அதையும் குறித்துக் கொண்டான்.

இந்தப் பழக்கம் அப்பாவிடம் இருந்து அவனுக்கு வந்தது. ஒவ்வொரு நாளும் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு தாளில் சுருக்கமாக எழுதி வைத்துக் கொள்ளும் பழக்கம் அவருக்கு இருந்தது. அந்தத் துண்டுக் காகிதம் இரவு தூங்குவதற்கு முன் தான் குப்பைக் கூடைக்குப் போகும்... அப்பா நினைவு வந்ததும் மறுபடியும் அவன் பார்வை அவர் பரமேஸ்வரனுடனும், மீனாட்சியுடனும் இருந்த புகைப்படத்திற்குச் சென்றது... அந்தப் படத்தின் வழியாக அந்தக் காலத்திற்கே சென்று அவர்கள் மனநிலையை அறிய ஆசைப்பட்டான்....

மீனாட்சி தன் சமையலறை வேலைகளை அவசர அவசரமாக முடித்து விட்டு அவன் அறைக்குள் நுழைந்த போதும் அவன் அந்தப் புகைப்படத்தையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அந்த ஃபோட்டோ ரொம்ப நல்லா வந்திருக்கு இல்லைமீனாட்சி மருமகனைக் கேட்டாள்.

“ஆமா. எப்ப எடுத்தது?

“நானும் அண்ணாவும் காலேஜ் படிக்கறப்ப எடுத்தது. அன்னைக்கு எங்கப்பா பிறந்த நாள்....

ஈஸ்வர் ஒன்றும் சொல்லவில்லை. ‘எங்கப்பாஎன்ற வார்த்தையை அத்தையும் அவனுடைய அப்பாவைப் போலத் தான் உச்சரிப்பதாக அவனுக்குத் தோன்றியது. சொல்லும் போதே ஒரு அன்பான அழுத்தம் அதில் இருந்தது. வயதான பின்னும் இந்த அளவு நேசிக்கிற குழந்தைகளைப் பெற மனிதர் கொடுத்து வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டான்....

“என்னவோ எழுதிகிட்டிருக்கிற மாதிரி இருக்கு?மீனாட்சி கேட்டாள்.

“எனக்கு உங்க பெரியப்பா பத்தியும் அந்த சிவலிங்கம் பத்தியும் நிறைய தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. அதுக்கு யார் கிட்ட எல்லாம் பேசணும்னு குறிச்சு வச்சுகிட்டிருந்தேன்....அதுல உங்க பேரும் இருக்கு. நீங்க அவரைப் பார்க்க அடிக்கடி போவீங்களா?....

“நான் ரெண்டு மூணு வருஷத்துக்கு ஒரு தடவை தான் போவேன்....

“ஏன்?

பெரியப்பா பெரும்பாலும் தியானத்திலையோ, பூஜையிலையோ இருப்பார். அவர் கிட்ட பேச அதிகம் இருக்காது. சில சமயம் அவர் வாயையே திறக்க மாட்டார். லேசா புன்சிரிப்பு மட்டும் தான் அவர் கிட்ட இருந்து வரும். அதனால எப்பவாவது தான் போவேன்....

அவர் உங்க கல்யாணத்துக்கு எல்லாம் வந்திருக்காரா?

“இல்லை. அவங்கப்பா இறந்ததுக்கு வந்துட்டு போனவர் வேற எதுக்கும் வந்ததில்லை.. எங்கம்மா இறந்ததுக்கு கூட அவர் வரலையாம்

“ஏன்?

“அவர் மனசளவுல துறவி மாதிரி தான். காவி உடுத்திக்கலை. அவ்வளவு தான்... அவரை மாசா மாசம் போய் பார்த்துகிட்டிருந்தது அப்பா ஒருத்தர் தான்....

“உங்கப்பா கிட்ட அவர் நல்லா பேசுவாரா?

பெரும்பாலும் இவர் தான் பேசுவார். அவர் கேட்டுகிட்டிருப்பார். ஆனா எங்கப்பாவுக்கு அண்ணான்னா ரொம்ப பாசம்... மரியாதை...

மனைவி இறந்த போது கூட வராத, அதிகம் பேசாத, அண்ணனை கடைசி வரை மாதா மாதம் சென்று பார்த்த பரமேஸ்வரனின் பாசம் மிகவும் ஆழமானது தான் என்று ஈஸ்வருக்குத் தோன்றியது. அது மட்டுமல்ல அண்ணன் சொன்னார் என்பதற்காக பேரன் முகத்தில் அடித்தது போல் பேசிய பிறகும் அவர் மீண்டும் போன் செய்து பேசியதையும் அவன் நினைத்துப் பார்த்தான்....

எங்க அப்பா இங்கே இருந்த வரைக்கும் உங்க பாட்டி அங்கே போவதில்லைன்னு சொல்லிகிட்டிருந்தார்... அப்புறமா அவங்க போக ஆரம்பிச்சாங்களா?

இல்லை... சாகறதுக்கு ஒரு மாசம் முன்னால் அதிசயமா பெரியப்பாவே அவங்களைப் பார்க்கணும்னு அப்பா கிட்ட சொல்லி அனுப்பிச்சார். அதனால பாட்டி ஒரு தடவை போய் மகனைப் பார்த்துட்டு வந்தாங்க....

பெற்ற மகன் மீது கோபித்துக் கொண்டு கிட்டத்தட்ட 58 வருஷங்கள் போய் பார்க்காமலேயே இருந்த ஆனந்தவல்லி அவனை ஆச்சரியப்படுத்தினாள். இந்தக் கோபம், வீம்பு, வறட்டு கௌரவம் தான் பரமேஸ்வரனுக்கும் வந்திருக்கிறது. என்ன மனுசங்க!...

மாமா மகேஷ் எல்லாம் போவாங்களா?

இவர் மொத்தமா போனதே மூணு தடவை தான் இருக்கும். மகேஷ் சின்ன வயசுல அதிகம் போனதில்லை. பெரியவனான பிறகு எங்கப்பா கட்டாயத்துக்கு வருஷத்துக்கு ரெண்டு தடவையாவது போவான். ஏதாவது குடுத்துட்டு வரச்சொன்னா குடுத்துட்டு வருவான்... தோட்டத்துல இருந்து எதாவது கொண்டு வரச் சொன்னா கொண்டு வருவான். சந்தோஷமா போக மாட்டான். சலிச்சுகிட்டே போவான். அவனுக்கு அவர் பார்த்தாலும் பேசறது இல்லைன்னு குறை…  அவர் பேசறதே கம்மிடா ஆனா அவசியமா இருந்தா கண்டிப்பா பேசுவார்னு சொன்னா புரிஞ்சுக்க மாட்டேன்கிறான்...

அவசியம் இருந்தான்னு சொன்னா?

“மகேஷ் என் வயித்துல இருக்கறப்ப டாக்டர் பிரசவத்துல பிரச்சினை இருந்தாலும் இருக்கலாம்னு சொல்லி இருந்தார். அந்த சமயத்துல ஒரு நாள் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். நான் ஒன்னும் சொல்லாமலேயே அவர் சொன்னார். கவலைப்படாதே, சுகப்பிரசவம் ஆகும்னார். அவர் சொன்ன மாதிரியே சுகப்பிரசவம் தான் ஆச்சு. டாக்டரே ஆச்சரியப்பட்டார். பெரியப்பாவுக்கு சில அபூர்வ சக்திகள் எல்லாம் இருந்துச்சு. மனசுல இருக்கறதை சொல்லாமலேயே புரிஞ்சுகிட்டு அதுக்கு பதிலும் அவராவே சொல்வார். ஆனால் முக்கியமான விஷயமா அவர் மனசுக்கு தோணணும்...

அந்த சிவலிங்கம் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க அத்தை? அப்பா ஒரு தடவை சின்னதா இருக்கறப்ப அவர் ஃப்ரண்ட் தென்னரசோட அந்த தோட்ட வீட்டுக்கு விளையாடப் போனதாகவும் விளையாடிட்டு தண்ணீர் குடிக்க வீட்டுக்குள்ளே போனப்ப அந்த சிவலிங்கம் ஜொலிச்சுகிட்டு இருந்துச்சுன்னும் என் கிட்ட சொல்லி இருக்கார்... உங்களுக்கு அந்த மாதிரி அனுபவம் இருக்கா?

மீனாட்சி சொன்னாள். “எனக்கு அந்த மாதிரி எந்த அனுபவமும் இல்லை ஈஸ்வர்.... அண்ணா வந்து சொன்னப்ப எங்கப்பாவும், பாட்டியும் வேறெதோ பார்த்துட்டு வந்து பசங்க பேசறாங்கன்னு நினைச்சாங்க. எனக்கும் அப்படி பார்க்க ஆசையாய் இருந்து நான் போறப்ப எல்லாம் அதிக நேரம் அதைக் கவனிச்சிருக்கேன்... அதுல எந்த மாற்றமும் என் கண்ணுக்குத் தெரியல...

அப்பாவும் அதற்குப் பின்னால் பல முறை தொடர்ந்து போய் சிவலிங்கத்தைப் பார்த்தும் அந்த ஜொலிப்பு பின் தென்படவேயில்லை என்று ஒரு சிறிய ஏமாற்றத்துடன் சொன்னதை ஈஸ்வர் நினைவு கூர்ந்தான். அந்த சிவலிங்கம் ஜொலித்த போதே அவர் தன் பெரியப்பாவிடம் போய் பரபரப்புடன் சொன்னாராம்... பெரியப்பா சிவலிங்கம் ஜொலிச்சதை நானும் தென்னரசுவும் பார்த்தோம். பசுபதி ஒன்றுமே சொல்லாமல் புன்னகைத்தாராம்.. பின் எப்போதும் அது ஜொலிப்பதைப் பார்க்க முடியாத ஏமாற்றத்தை அவரிடம் தெரிவித்த போதும் பசுபதி வெறுமனே புன்னகைத்தாராம்.. இரண்டு சமயங்களிலும் ‘அது ஒரு பெரிய விஷயமில்லைஎன்பது போல் அவர் புன்னகை இருந்த்தாக சங்கர் மகனிடம் சொல்லி இருந்தார்....

ஆனால் பசுபதி நினைத்தது போல மற்றவர்கள் நினைக்கவில்லை போல் இருக்கிறது. அதனால் தான் அவரைக் கொன்று அந்த சிவலிங்கத்தைத் திருடிக் கொண்டு போயிருக்கிறார்கள் என்று ஈஸ்வருக்குத் தோன்றியது...

ஞ்சாவூர், தேனி பயணம் முடித்து விட்டு வந்த அந்த மனிதன் தமிழ் ஆராய்ச்சியாளர் எழுதித் தந்ததையும் ஓலைச்சுவடியையும் குருஜி கையில் ஒப்படைத்தான். குருஜி அவன் எதிர்பார்த்தது போல அந்த ஓலைச்சுவடியில் உள்ளதை விளக்கும் உரையைப் படிக்க அவசரப்படவில்லை.  மாறாக இரண்டு இடங்களிலும் நடந்ததை ஒன்று விடாமல் சொல்லச் சொல்லி கேட்டார். தமிழாராய்ச்சி வல்லுனர் ட்யூப் லைட் விவகாரத்தையும், கதவு தட்டல் விவகாரத்தையும் சொன்னதைச் சொன்ன போது அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. ஆனால் அது பற்றி அவர் கருத்து எதுவும் சொல்லப் போகவில்லை.

ஆனால் ஜோதிடர் தம்பி சொன்னதைக் கேட்கும் போது மட்டும் குருஜி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். சில இடங்களில் சொன்னதை மறுபடி சொல்லச் சொல்லி கேட்டார். எல்லாம் கேட்டு முடித்த பின் அவர் சிந்தனை மேலும் பலப்பட்டது.

என்ன குருஜி யோசிக்கிறீங்க?

இந்த ஓலைச்சுவடியை மற்ற ஓலைச்சுவடிகளோடு அந்த ஜோதிடர் கொடுத்தது எனக்கு இயல்பாய் படலை. அதுவும் அந்த சிவலிங்கம் பத்தின அத்தனை விவரங்கள் தெரிஞ்சு, தெரிஞ்ச விஷயங்களைப் பத்தி உன் கிட்ட மூச்சு கூட விடாத அந்த ஜோதிடர் மத்த ஓலைச்சுவடிகளோடு இந்த ஓலைச்சுவடியையும் அப்படியே எடுத்துக் கொடுத்துட்டார்ங்கறதை நம்ப கஷ்டமாய் இருக்கு...

அதான் அந்த குருநாதர் கிட்ட அந்த ஜோதிடர் இந்த ஓலைச்சுவடிய என்ன பண்றதுன்னு கேட்டப்ப அவர் மத்த ஓலைச்சுவடிகளை என்ன செய்யறியோ அதே மாதிரி இதையும் செஞ்சுடுன்னு சொன்னதா அவர் தம்பி சொன்னானே.. இந்த ஓலைச்சுவடியைப் படிச்சா சாதாரணமானவனுக்கு என்ன புரியப் போகுதுன்னு கூட அவங்க நினைச்சிருக்கலாம்....

இருக்கலாம் என்பது போல குருஜி லேசாய் தலையசைத்தாலும் அவர் மனதில் இருந்த நெருடல் குறையவில்லை. மூவர் குழு, மாயன் கேலண்டர், பழையதெல்லாம் அழிஞ்சு போய் புதிதாய் நிறைய மாற்றம் வரும்.. அதை உலகம் சந்திக்கும், சிவலிங்கமும் மாற்றத்தை சந்திக்கும் போன்ற தகவல்கள் அவர் மூளைக்கு நிறைய வேலைகளைத் தந்தன. ஆனால் அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அவசரமாகக் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயத்தைப் பற்றிப் பேசினார்.

“நீ உடனடியா அந்த சரவணனுக்குப் போன் செய். நீ கிளம்பி வந்த பிறகு அந்த ஜோதிடர் யார் கிட்டயாவது போன்ல பேசினாரா, யாராவது அவரை வந்து பார்த்தாங்களா, இல்லை அவர் யாரையாவது போய் பார்த்தாரான்னு கேளு...

அந்த மனிதன் யோசித்தபடியே உடனடியாகப் போன் செய்தான்.

“ஹலோ சரவணன். நான் தான் பேசறேன். உங்கண்ணா நான் வந்ததுக்கப்புறம் யார் கிட்டயாவது போன்ல பேசினாரா?

“நான் உங்க கிட்ட பேசிகிட்டிருந்தப்ப அவர் பேசியிருந்தால் எனக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனா நான் வந்ததுக்கப்பறம் அவர் பேசலை சார்... ஆனா என்னவோ நாள் முழுக்க ரொம்ப யோசனையா இருந்தாரு

அவரை வேற யாராவது வந்து பார்த்தாங்களா, இல்லை அவர் யாரையாவது போய் பார்த்தாரா?

அவரை யாரும் வந்து பார்க்கலை. ஆனா அவர் தான் திடீர்னு இன்னைக்கு காலைல எழுந்திருச்சு வெளியூர் போயிருக்காருங்க சார்...

எங்கே போயிருக்கார்?

மகளைப் பார்க்க கும்பகோணம் போறதா சொல்லிட்டு போனார் சார்

முதல்லயே போகிறதா சொல்லிகிட்டிருந்தாரா?

“இல்லைங்க சார். திடீர்னு தான் போயிருக்கார்

“சரவணன் எதுக்கும் அவர் அங்கே தான் போயிருக்காரான்னு கேட்டு சொல்ல முடியுமா?...”.

“ரெண்டே நிமிஷத்துல கேட்டு சொல்றேன் சார்என்று சொன்ன சரவணன் இரண்டாவது நிமிடத்தில் போன் செய்தார். “சார்...நான் அவர் பொண்ணுக்கு போன் செஞ்சு கேட்டேன்... அவர் அங்கே போகலையாம்

வேற எங்கே போயிருப்பார் சரவணன்?

தெரியலையே சார். அவர் வேறெங்கயும் போகக் கூடிய ஆளில்லை சார். எனக்கு ஒன்னும் புரியலை....

சரவணன், முடிஞ்சா அவர் எங்கே போனார்னு கண்டுபிடிச்சு சொல்றீங்களா? சொன்னீங்கன்னா நேத்து கொடுத்ததை விட ரெண்டு மடங்கு பணத்தை உங்க அக்கவுண்டுக்கு அனுப்பி வைக்கிறேன். ஆனா அவருக்கு சந்தேகம் வராத மாதிரி அதைச் செய்யுங்க

போனை வைத்து விட்டு அந்த மனிதன் குருஜியைப் பார்த்தான்.
குருஜி சொன்னார். “அந்த ஜோதிடர் யாரைப் போய் பார்க்கிறார்னு தெரிஞ்சா அது மூலமா நாம நிறைய விஷயம் புரிஞ்சுக்கலாம்னு நினைக்கிறேன்

(தொடரும்)
என்.கணேசன்

  

Thursday, December 13, 2012

பரம(ன்) ரகசியம் – 22




ந்த மனிதன் ஜோதிடரின் தம்பியை ஆலோசனையுடன் பார்த்தான். பின் என்ன எல்லாம் தெரியும்?என்று சந்தேகத்துடன் கேட்டான்.

ஜோதிடரின் தம்பி சிறிது தயங்கி விட்டுச் சொன்னான். “நீங்க அண்ணா கிட்ட பேசறப்ப ஏதாவது தகவல் சொன்னா நல்ல விலை தர்றதா சொன்னீங்க

அந்த சிவலிங்கம் சம்பந்தமான வேறெதாவது ஓலைச்சுவடி இருந்தா அதுக்கு நல்ல விலை தர்றதா சொன்னேன்... உங்க கிட்ட அப்படி எதுவும் ஓலைச்சுவடி இருக்கா?

ஜோதிடர் தம்பி முகத்தில் இருந்த உற்சாகம் உடனடியாக வழிந்தது. என் கிட்ட ஓலைச்சுவடி எதுவும் இல்லை. ஆனா அந்த ஒளிரும் சிவலிங்கம் பத்தி என் அண்ணாவும், அவரோட குருநாதரும் பேசிகிட்ட நிறைய விஷயங்கள் தெரியும்.... நீங்க பணம் தர்றதா இருந்தா சொல்றேன்

உங்க பேர் என்ன?

“என் பேர் சரவணன்.

“சரவணன் நீங்க சொல்ற விஷயம் எங்களுக்கு புதுசாகவும், பயன்படற மாதிரியாகவும் இருந்தால் பணம் தர்றேன். முதல்ல எந்த மாதிரி தகவல் உங்க கிட்ட இருக்குன்னு சொல்லுங்க. பணம் தரக்கூடியதா இல்லையான்னு நான் சொல்றேன்....

சரவணன் எதைச் சொன்னால் பணம் கிடைக்கும் என்று யோசித்தான். தன்னிடம் உள்ள தகவல்கள் பணம் சம்பாதிக்கக் கூடியவையா இல்லையா என்பதை அவனால் ஊகிக்க முடியவில்லை. சிறிது யோசித்தான்.

அவன் யோசிப்பதைப் பார்த்த அந்த மனிதன் கேட்டான். “அந்த சிவலிங்கம் இப்ப எங்கே இருக்குன்னு அவங்க பேசிகிட்டதுண்டா? அந்த சிவலிங்கத்தோட தன்மைகளைப் பத்தி அவங்க பேசிகிட்டதுண்டா? எந்த விதத்துல உங்க அண்ணாவோட குருநாதரும் அந்த சிவலிங்கமும் சம்பந்தப்படறாங்கன்னாவது சொல்ல முடியுமா?

“உங்க மூணாவது கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியும்

அடுத்த ஐந்தாம் நிமிடம் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பூங்கா ஒன்றின் சிமெண்ட் பெஞ்சில் இருவரும் அமர்ந்திருந்தார்கள். அந்த மனிதன் சரவணனிடம் சொன்னான். “சரி சொல்லுங்க

சொல்வதை எல்லாம் கேட்டு விட்டு இவன் காசு தராமல் போய் விட்டால் என்ன செய்வது என்று சரவணன் யோசித்தான். அதைப் புரிந்து கொண்ட அந்த மனிதன் ஒரு ஆயிர ரூபாய் நோட்டை எடுத்து சரவணனின் சட்டைப் பையில் திணித்தான்.நீங்க உங்களுக்கு தெரிஞ்சதை எல்லாம் ஆரம்பத்தில் இருந்து சொல்லுங்க.... அந்த தகவல்கள் எனக்கு உபயோகப்பட்டுதுன்னா இன்னும் தர்றேன்......

சரவணன் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பித்தான். எங்கண்ணாவோட குருநாதர் சாகறதுக்கு சில மாசம் முன்னாடி தன் கிட்ட இருக்கற சில ஓலைகளை எல்லாம் அண்ணா கிட்ட கொண்டு வந்து தந்தார். அதுல ஒண்ணு தான் உங்க கிட்ட கிடைச்ச ஓலை. மத்த எல்லா ஓலைச்சுவடிகளும் ஜோதிட சம்பந்தமானவை. அந்த ஓலையைப் படிச்சு அண்ணா ஆச்சரியத்தோட அதெல்லாம் உண்மையான்னு கேட்டார். ஆமான்னு குருநாதர் சொன்னார். அண்ணா அந்த சிவலிங்கத்தை நீங்க பார்த்திருக்கீங்களான்னு கேட்டதுக்கு அவர் பார்த்திருக்கேன்னு சொன்னார். ஆனா அந்த சிவலிங்கம் எங்கே இருக்குன்னு அண்ணா கேட்டப்ப அவர் பதில் சொல்லலை.  அவர் சொல்ல வேண்டான்னு தீர்மானிச்சுட்டா அவர் வாயில இருந்து அப்புறம் எதுவும் வராது. அதனால் அண்ணா அந்த சிவலிங்கம் பத்தின ஓலை உங்க கைக்கு எப்படி வந்ததுன்னு கேட்டார். அதற்கு அவரோட குருநாதர் தந்ததுன்னு சொன்ன  குருநாதர் அப்போதைக்கு எதையும் சொல்லலைன்னாலும் இன்னொரு நாள் சிவலிங்கம் பத்தி பேசறப்ப ஒரு முக்கியமான தகவல் சொன்னார். அதையும் ரொம்ப ரகசியமா சொன்னார்.....

சரவணன்  ஒரு கணம் நிறுத்தி அந்த மனிதனைப் பார்த்து பெருமையாகப் புன்னகைத்தபடி சொன்னான். “பகவான் கிருபைல எனக்கு காது நல்ல கூர்மை. அதனால தான் அவர் சொன்னதை என்னால கேட்க முடிஞ்சுது

அவன் காது கூர்மை அந்த மனிதனை வியக்க வைக்கவில்லை. “அவர் என்ன சொன்னார்?என்ற கேள்வியை வறண்ட குரலில் அவன் கேட்டான்.

சரவணன் அந்த குருநாதரைப் போலவே குரலைக் குறைத்துக் கொண்டு சொன்னான். “அந்த சிவலிங்கத்தை பாதுகாத்து பராமரிக்க மூணு மார்க்கத்துல மூணு பேர் இருக்காங்களாம். அதுல ஒருத்தர் தான் சிவலிங்கத்துக்கு பூஜை செய்யறதுன்னாலும் சில விசேஷ நாள்கள்ல மூணு பேரும் சேர்ந்து சிவலிங்கத்தை வணங்குவாங்களாம். அந்த மூணு பேர்ல அண்ணாவோட குருநாதரும் ஒருத்தராம்...அந்த சிவலிங்கம் சம்பந்தமான ஓலை சிவலிங்கம் முதலாம் ராஜாதிராஜன் காலத்துல எழுதப்பட்டதாம்... சிவலிங்கத்தோட தன்மைகளையும் அந்த ஓலை விரிவாய் சொன்னதால அந்த மூணு பேர்ல ஒருத்தர் கைல ஒரு புனித ரெகார்டாய் அந்த காலம் முதல் இருந்து வந்துச்சாம்... அவருக்கும் முதல்ல அவரோட குருநாதரும் அதை வச்சிருந்தாராம்....

பசுபதியின் தாய் கேள்விப்பட்டது இந்த மூவர் குழுவையாக இருக்குமோ என்று அந்த மனிதனுக்கு சந்தேகம் வந்தது. சரவணனை அவன் இடைமறித்துக் கேட்டான். “மூணு மார்க்கத்துல மூணு பேருன்னா என்ன அர்த்தம்?

சரவணன் விழித்தான். பின் தயக்கத்துடன் உண்மையைச் சொன்னான். “எனக்கு காது கூர்மையா இருக்கற அளவுக்கு அறிவு கூர்மை பத்தாது. அவர் சொன்னதை அப்படியே சொன்னேனே ஒழிய எனக்கும் அது புரியலை...

பரவாயில்லை.... அவர் உங்கண்ணாவுக்கு அந்த ஓலைச்சுவடியை தந்ததால இப்ப இருக்கற மூவர்ல உங்க அண்ணனும் ஒண்ணுன்னு எடுத்துக்கலாமா?

அப்படியில்லை போல இருக்கு. எங்கண்ணா கேட்டார். சிவலிங்கத்தைப் பராமரிக்கற மூணு பேர்ல ஒரு ஆளுக்குப் போக வேண்டிய அந்த ஓலையை என் கிட்ட கொடுத்திருக்கீங்களே, ஏன்”.  அதுக்கு குருநாதர் சொன்னார். “இந்த தடவை எதுவும் நேர் வழியில் நடக்க வாய்ப்பில்லை... அடுத்த ஆளை நான் நேரில் சந்திக்க வாய்ப்பில்லை. அதனால் உன் கிட்டயே இருக்கட்டும்”. அண்ணா தனக்கும் வயசாயிட்டதால இந்த ஓலைச்சுவடியை இனி என்ன செய்யறதுன்னு கேட்டதுக்கு மற்ற ஓலைச்சுவடிகளை என்ன செய்யறியோ அதோட சேர்த்து இதையும் அப்படியே செய்னு சொல்லிட்டார். தஞ்சாவூர் பலகலைக்கழகத்துல தமிழாராய்ச்சிக்கு பழைய ஓலைகள் இருந்தால் தந்து உதவணும்னு அறிவிப்பு வந்தவுடனே எங்கண்ணா எல்லாத்தையும் கொடுக்கறப்ப இதையும் தந்துட்டார்...

அந்த மனிதன் சரவணனைக் கூர்மையாகப் பார்த்துக் கேட்டான். “இந்த சிவலிங்கம் பத்தி அவங்க சொன்னதைக் கவனமா கேட்டு ஞாபகம் வைச்சுக்க உங்களுக்கு எப்படித் தோணுச்சு... உங்கண்ணாவோட குருநாதர் இறந்தே ஆறு வருஷம் ஆச்சுன்னு உங்கண்ணா சொன்னாரே

அந்த சிவலிங்கத்தோட சக்தி எல்லை இல்லாதது. அதை வச்சு வணங்கறவன் அடையற சக்தியும் எல்லை இல்லாததுன்னு குருநாதர் ஒரு தடவை அண்ணன் கிட்ட சொன்னார். அதனாலேயே அதுல எனக்கு ஆவல் அதிகமா இருந்துச்சு. அதனாலேயே அதைப் பத்தி அவங்க பேசினா காது தானா கூர்மையாயிச்சு.

தன் சட்டைப் பையில் இருந்து சில ஆயிரம் ரூபாய் தாள்களை எடுத்து கையில் வைத்துக் கொண்டு அதில் இரண்டு தாள்களை சரவணனுக்கு நீட்டினான் அந்த மனிதன். சரவணன் முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடியது. அதை எடுத்து தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்ட அவன் அந்த மனிதன் கையில் வைத்திருந்த ரூபாய்களை ஏக்கத்துடன் பார்த்தான்.

அந்த மனிதன் சரவணனைக் கேட்டான். “வேறெதாவது தகவல் நினைவு இருக்கா?

சரவணன் அந்த ரூபாய்களைப் பார்த்தபடியே மூளையை கசக்கிக் கொண்டான். பின் மெல்ல சொன்னான். “அவங்க அந்த சிவலிங்கத்தைப் பத்தி பேசினப்பவே இந்த வருஷம் 2012ஐ பத்தியும் பேசினாங்க. குருநாதர் மாயன் கேலண்டர் ஐயாயிரத்து சொச்ச வருஷங்கள் முடியற வருஷம் இது.. ரொம்ப முக்கியமான கட்டம்னு எல்லாம் சொன்னார்...

அந்த மனிதன் சரவணனைக் கேட்டான். “உலகம் அழியறதைப் பத்தி பேசினாங்களோ?

உலகம் அழியாது, ஆனா மாற்றங்கள் நிறைய வரும்... பழையதெல்லாம் அழிஞ்சு போய் புதிதாய் நிறைய மாற்றம் வரும்.. அதை உலகம் சந்திக்கும்னு சொன்னார்....

நல்லா யோசிச்சு சொல்லுங்க... சிவலிங்கத்தைப் பத்தி பேசினப்ப ஏன் இந்த மாற்றங்களைப் பத்தி அவங்க பேசினாங்க

சரவணன் யோசித்து விட்டு சொன்னான். “ஏன்னு சரியா சொல்ல முடியலை. ஆனா ஜோதிடத்தைப் பத்தியும் பேசினாங்க... கிரகங்களைப் பத்தி பேசினாங்க... 2012, 2013 வருஷங்கள் முக்கியமானதா இருக்கும்னு குருநாதர் சொன்னார்.... சிவலிங்கமும் மாற்றத்தை சந்திக்கும்கிற மாதிரி அவர் பேசினார்

அந்த மனிதன் சிறிது நேரம் சிலை போல அமர்ந்திருந்தான். சிவலிங்கம் மாற்றத்தை சந்திக்கும் என்று தோராயமாக அந்த குருநாதர் சொல்லி விட்டுப் போயிருந்தது அவனுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. பின் இன்னொரு ஆயிரத்தை சரவணனிடம் நீட்ட சரவணன் வாயெல்லாம் பல்லாக அதை வாங்கிக் கொண்டான்.

அந்த மனிதன் கேட்டான். “இந்த சிவலிங்கம் பத்தின ஓலைச்சுவடி வேற எதுவும் இல்லைங்கறது உறுதியா தெரியுமா?

அப்படி எதுவும் இருக்கற மாதிரி தெரியலை.

“அந்த குருநாதருக்கு வேற யாராவது சிஷ்யர்கள் இருக்காங்களா?

அந்த ஆள் ஒரு நாடோடி. சதா சஞ்சாரத்துலயே இருப்பார். எப்பவாவது தான் வருவார். போகிற இடங்கள்ல யாராவது சிஷ்யர்கள் இருக்காங்களான்னு தெரியலை...

உங்களுக்குத் தெரியாமல் உங்கள் அண்ணனுக்கு மட்டும் அந்த குருநாதர் ரகசியமா இந்த சிவலிங்கம் பத்தி சொல்லி இருக்க வாய்ப்பு இருக்கா?

“அவங்க எதையும் ரகசியமா பேசிக்கற வழக்கம் இருந்ததில்லை... ஆனா குருநாதர் சாகறதுக்கு ஒரு வாரம் முன்னால் என்னை ஓசில என் நண்பன் ஒருத்தன் கொடைக்கானல் கூட்டிகிட்டுப் போனான். நான் ஒரு வாரம் இருக்கலை. அப்படிப் போனப்ப அவர் எதாவது அண்ணன் கிட்ட சொல்லி இருக்கலாம்..

“அப்படி சொல்லி இருந்தா உங்கண்ணா அதை யார் கிட்டயாவது சொல்லி இருப்பாரா?

அவர் சொல்லக்கூடிய ஆளில்லை. அவர் ஒரே தம்பி நான் தான். எனக்கு குடும்பம் குட்டி இல்லை... அவர் கூடவே தான் ஒண்டி இருக்கேன். என் கிட்டயே அளந்து தான் பேசுவார்.

“உங்கண்ணாவுக்கு குழந்தைகள்?

“மகள் கும்பகோணத்துல இருக்கா. மகன் கனடாவுல இருக்கான். அவங்க கிட்ட கூட அவர் குடும்ப விஷயங்கள் மட்டும் தான் பேசுவார். இந்த சிவலிங்கம் பத்தி அவர் யார் கிட்டயும் பேசி நான் பார்த்ததில்லை. அவர் கிட்டயும் உங்களைத் தவிர யாரும் சிவலிங்கம் பத்தி பேசினதில்லை...

“உங்களுக்கு அந்த சிவலிங்கம் மேல ஆர்வம் இருந்ததுன்னு சொன்னீங்களே, அதைப் பார்க்கவோ, அதிகமா தெரிஞ்சுக்கவோ தனிப்பட்ட முறையில் முயற்சி செய்திருக்கீங்களா?

ஒரே ஒரு தடவை குருநாதர் கிட்ட நேரடியா கேட்டிருக்கேன். அந்த சிவலிங்கத்தை ஒரு தடவை தரிசிக்கணும்னு ஆசைன்னு சொல்லி இருக்கேன். எடுத்த எடுப்புல அந்த ஆள் பார்க்காமல் இருக்கறது தான் உனக்கு நல்லதுன்னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டார். அதுக்கு என்ன அர்த்தமோ எனக்கு விளங்கலை. ஆனா அந்த ஆள் என்னைப் பார்த்த பார்வைல அது நல்ல அர்த்தமா இருக்க வாய்ப்பில்லை...

எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அந்த மனிதன் எழுந்தான். இனியொரு ஆயிரம் ரூபாயையும், ஒரு துண்டு சீட்டில் தன் மொபைல் எண்ணையும் அவனிடம் தந்து விட்டு சொன்னான். “எப்பவாவது கூடுதல் தகவல் எதாவது கிடைச்சா எனக்கு போன் செய்யுங்க. உங்களை நான் ஸ்பெஷலா கவனிச்சுக்கறேன்

“கண்டிப்பா  செய்யறேன் சார் என்று சரவணன் நன்றியுடன் சொன்னான். மொத்தத்தில் ஐந்தாயிரம் ரூபாயை அரை மணி நேரத்தில் சம்பாதித்த திருப்தி அவனுக்கு இருந்தது. அவனைப் பொருத்த வரை அது பெரிய தொகை...!

அந்த மனிதன் விடை பெற்றான். பயணத்தைத் தொடர்ந்த போது மனதில் மட்டும் சரவணன் சொன்ன விஷயங்களே திரும்பத் திரும்ப வந்தன. அந்த சிவலிங்கத்தின் பராமரிப்பு மூவர், அவர்கள் மூன்று மார்க்கத்தை சேர்ந்தவர்கள், அந்த சிவலிங்கத்தை வைத்து வணங்குபவன் பெறும் சக்தி எல்லையில்லாதது, மாயன் கேலண்டர், சிவலிங்கமும் இந்தக் காலக்கட்டத்தில் மாற்றம் பெறும்..... இந்த தடவை எதுவும் நேர் வழியில் நடக்க வாய்ப்பில்லை...

யோசித்துப் பார்க்கையில் அவனுக்குத் தலை சுற்றுவது போல இருந்தது.

(தொடரும்)
என்.கணேசன்