சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, November 30, 2022

முந்தைய சிந்தனைகள் 88

 சிந்திக்கச் சில உண்மைகள் என்னுடைய நூல்களிலிருந்து...












Monday, November 28, 2022

யாரோ ஒருவன்? 114


ன்வரும் அவன் சகாக்களும் குரியர் கம்பெனியில் வேலைக்குச் சென்று இரண்டு நாட்களாகி விட்டிருந்தன. எந்த சந்தேகப்படும் இடத்தையும் ஒரு நேரத்தில் ஒரு முறைக்கு மேல் உற்றுப் பார்ப்பதை அவர்கள் தவிர்த்ததால் இந்த இரண்டு நாட்களில் அவர்கள் நிச்சயமாகச் சந்தேகப்படும் இடங்களைக் கண்டுபிடித்திருக்கவில்லைஇது போன்ற உளவு வேலைகளில் அவசரப்படுவது கண்டிப்பாக தவறுகள் செய்வதில் முடியும் என்பதால் நரேந்திரனும் அவர்களை அவசரப்படுத்தவில்லை.

நரேந்திரன் அவர்களிடம் சொன்னான். “அஜீம் அகமது ஆரம்பத்தில் ஏழ்மையில் இருந்தவன் தான் என்றாலும் இப்போது செல்வச்செழிப்பில் தான் வாழ்கிறான். அவன் இப்போதெல்லாம் வசதிக்குறைவான வீடுகளிலும், சூழ்நிலைகளிலும் வாழ விரும்புவதில்லை என்று சொல்கிறார்கள். மேலும் இப்போது அவன் தனிமை விரும்பி. கும்பலான இடங்களை முடிந்த அளவு தவிர்ப்பவன். அதனால் மற்ற வீடுகளை விட்டுத் தள்ளியிருக்கும் பங்களாக்கள்வசதியான வீடுகளை அதிகம் பாருங்கள். ஆட்கள் போக்குவரத்து அதிகமிருக்காத வீடுகளைப் பாருங்கள். அவன் சம்பந்தப்பட்டிருக்கும் இயக்கத்திற்கு ஈரானில் பிரச்சினை அதிகமாகி வருகிறது என்று சொல்கிறார்கள். அங்கே நெருக்கடி அதிகமாவதால் அதைச் சமாளிக்க அவன் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவை விட்டுப் போகலாம் என்று எதிர்பார்க்கிறேன். இங்கே வந்ததற்கு எதையும் செய்யாமல் போக அவனுக்கு மனம் வராது. அவன் எதாவது செய்வதற்குள் நாம் அவனை எதாவது செய்தாக வேண்டும்...”

அவர்களுக்கு நிலவரம் புரிந்து சுறுசுறுப்பானார்கள்.


ரா தலைவர் நரேந்திரனுக்குத் தெரியாமல் இரவு நேரத்தில் ஒரு விசேஷக் கூட்டத்தை ரா தலைமைச் செயலகத்தில் கூட்டியிருந்தார். உயர் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

“.... இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்னால் நம் அமைப்பில் உயர் அதிகாரியாக இருந்த மகேந்திரன் திடீரென்று தலைமறைவான போது ஆரம்பத்தில் அவர் அஜீம் அகமதைப் பிடிக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார், அதனால் தான் தலைமறைவாகச் செயல்படுகிறார் என்று நினைத்தோம். ஆனால் பிறகு அஜீம் அகமது வெளிநாட்டில் திடகாத்திரமாக இருக்கிறான் என்பது தெரிந்த போது தான் அவருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நம் அமைப்புக்கு வந்தது. அப்போதைய தலைவர் அவரைத் தேட எடுத்துக் கொண்ட முயற்சிகள் நமக்குப் பலன் அளிக்கவில்லை. காரணம் மகேந்திரனுக்கு உதவி அதிகாரியாக இருந்த சஞ்சய் ஷர்மா என்ற துரோகி என்று பிறகு தெரிந்த போது அப்போதைய தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொந்தளித்தார். ஆனால் சஞ்சய் ஷர்மாவின் மாமா ஜனார்தன் த்ரிவேதி அப்போது மத்திய மந்திரியாக இருந்தார், அவர் கட்சி தான் அப்போது ஆட்சியில் இருந்தது. அதனால் மேற்கொண்டு விசாரணை எதுவும் நடக்காமல் அப்போதைய அரசு பார்த்துக் கொண்டது. சஞ்சய் ஷர்மாவை ராஜினாமா செய்ய வைக்க மட்டுமே அப்போதைய தலைவரால் முடிந்தது. அதுவும் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கொடுத்து மிரட்டிய பிறகு தான் முடிந்தது.”

மகேந்திரன் இறந்திருக்க வேண்டும் என்று அப்போதே சந்தேகப்பட்டோம். ஆனால் அதற்கான தடயம், ஆதாரம் எதுவுமே கிடைக்காததால் அப்படியே கிடப்பில் போடப்பட்ட வழக்காக அது இருந்து விட்டது. ஒரு இராணுவ வீரன் தன் கடமைக்காலத்தில் இறந்து போனால் அவன் பிணத்தின் மீது தேசியக்கொடி வைக்கப்படுகிறது, அவன் வணங்கப்படுகிறான், கௌரவப்படுத்தப்படுகிறான். ஆனால் நம் போன்ற ரகசிய உளவு அமைப்புகளில் வேலை செய்யும் போது ஒருவன் இறந்து போனால் அது நாம் வெளிப்படுத்த முடியாத தனிப்பட்ட மரணமாகவே போய் விடுகிறது. ஒரு சர்வதேசத் தீவிரவாதி அரசியல்வாதிகளின் துணையோடு நம் உயர் அதிகாரியைக் கொன்று இங்கிருந்து தப்பித்துப் போயும் நம்மால் எதுவும் செய்ய முடியாத கையாலாகாத நிலைமை. அது குறித்து விசாரிக்க விடாமல் அரசியல் நெருக்கடியும் இருந்து கிடப்பில் போட்ட அந்த வழக்கை விசாரிக்க மகேந்திரனின் மகனே நம் அமைப்பில் வந்து சேர்ந்த போது எனக்குள்ளே எழுந்த ஒரு குற்ற உணர்ச்சியை என்னால் தாங்க முடியவில்லை நண்பர்களே.”

நம் அதிகாரி கொல்லப்பட்டிருகிறார் என்று நம்மால் யூகிக்க முடிந்தும், கொன்றவன் யாராக இருப்பான் என்று தெரிந்திருந்தும், உதவி செய்திருக்கக் கூடியவர்களை நமக்கு அடையாளம் தெரிந்தும் நாம் மேற்கொண்டு செய்யத் தவறி விட்ட வேலையை அவர் மகன் நரேந்திரன் கஷ்டப்பட்டு ஐபிஎஸ் படித்துத் தேர்வாகி, ரா அதிகாரியாக வரவும் பாடுபட்டு தேர்வாகி, தந்தையின் வழக்கைத் திரும்ப விசாரிக்க பிரதமரிடம் அனுமதி பெற்றும் என் முன்னால் வந்து நின்ற போது, நாம் செய்யத் தவற விட்ட வேலையை அந்த இளைஞனே வந்து செய்யும்படி விட்டு வைத்திருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி என்னை ஆட்கொண்டது. அவனுக்கு ஆட்சி மாற்றம் மிக சாதகமான அம்சமாக இருந்தது என்பதை மறுக்க முடியாவிட்டாலும், அவன் வந்திரா விட்டால் ஞாபகமாக இந்த வழக்கை நாம் யாரும் கண்டிப்பாக மீட்டு எடுத்திருக்க மாட்டோம் என்பதையும் என்னால் மறுக்க முடியவில்லை

நரேந்திரன் வழக்கமான சட்டபூர்வமான விசாரணையில் எதையும் நாம் கண்டுபிடித்து விட முடியாது என்பதைப் புரிந்துகொண்டு தன் வழியில் எல்லாவற்றையும் விசாரிப்பது என்று முடிவு செய்த போது நான் அதிகாரபூர்வமாக உனக்கு அனுமதி என்னாலும் வழங்க முடியாது, இதில் ஏதாவது பிரச்சினைகள் வந்தால் அதை நீயே சந்திக்க வேண்டி இருக்கும், ரா உனக்கு எந்த வகையிலும் உதவ முடியாது என்ற உண்மையையும் சொன்னேன். அதற்கும் சம்மதித்து அவன் வழியில் அதைக் கையாண்டான். உண்மைகளைத் தெரிந்து கொண்டான். சட்டத்தின் பிடியில் சிக்கியிருக்க வேண்டிய அவனைக் காப்பாற்ற இறைவனே ஒருவனை அனுப்பி அதிலும் அவன் நம் உதவியில்லாமலேயே தப்பித்துக் கொண்டான். நரேந்திரனின் வேகம் அஜீம் அகமதுவை மறுபடி இந்தியாவுக்கு வரவழைத்திருக்கிறது. இப்போது அஜீம் அகமது இந்தியாவில் இருக்கிறான்...”

நமக்கு அஜீம் அகமதை நன்றாகத் தெரியும். தனக்குச் சவால் விடுபவர்களை அவன் ரசிப்பதில்லை. அவர்களை அப்புறப்படுத்துவதில் வல்லவன் அவன். மகேந்திரனை அப்படியே செய்தவன். அவனுடைய வழக்கமான பாணியில் அவன் அடுத்ததாகச் செய்ய கண்டிப்பாக முயற்சி செய்யப்போவது நரேந்திரனை அப்புறப்படுத்துவதைத் தான். நண்பர்களே. நாம் நரேந்திரனின் தந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. அவரைக் கொன்றவர்களைப் பழி வாங்க முடியவில்லை. அந்த வேலையை நரேந்திரனே ஏற்றுக் கொண்டு தன்னால் முடிந்ததை எல்லாம் செய்து வருகிறான். இதுவரை நாம் அவனுக்கு எந்த வகையிலும் உதவவில்லை. ஆனால் இப்போதும் நாம் அவனுக்கு உதவவில்லை என்றால் நம்மையே நாம் மன்னிக்க முடியாது. நரேந்திரன் அஜீம் அகமதுவைப் பழி வாங்கும் முயற்சியில் செத்தாலும் பரவாயில்லை என்ற தீர்க்கமான முடிவுடன் தான் இருக்கிறான்.  அஜீம் அகமதுவின் இப்போதைய முழு இலக்கும் நரேந்திரனாகத் தான் இருப்பான். நரேந்திரன் தன்னை நெருங்கும் முன் அவனைக் கொன்றுவிட வேண்டும் என்ற வெறியோடு தான் இருப்பான். அறிவுக்கூர்மையில் அவனை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. முடிந்தால் நரேந்திரனை நெருங்கும் அவனைக் கொல்ல நாம் திட்டமிட வேண்டும். ஒருவேளை அவனைக் கொல்வது நம்மால் முடியாமல் போனாலும் நாம் நரேந்திரனின் பாதுகாப்புக்கு சிறு குறையும் இல்லாத முழு முயற்சிகளும் எல்லா விதங்களிலும் எடுக்க வேண்டும். இது அவன் தந்தைக்கு நாம் செய்திருக்க வேண்டிய ஒரு கடமை. அன்று அரசியல் சூழல் காரணமாகத் தவற விட்டு விட்டோம். இன்று மகனையாவது நாம் காப்பாற்ற வேண்டும். அவனைக் காப்பாற்றத் தவறினால் ரா தனது கௌரவத்தையும் காப்பாற்றத் தவறுவது போல் ஆகி விடும். எனவே இந்தக் கடமையை எப்படிச் செய்யப் போகிறோம் என்பதற்கு உங்களிடமிருந்து தெளிவான திட்டங்களை இப்போது நான் எதிர்பார்க்கிறேன்….”

அவரது உணர்வுபூர்வமான பேச்சு அங்கிருப்பவர்கள் ஒவ்வொருவரையும் மிகவும் பாதித்திருப்பது அவர்கள் முகங்களைப் பார்க்கையில் தெரிந்தது….

இரண்டு மணி நேரம் கழித்து கூட்டம் முடிவடையும் போது என்ன செய்வதென்ற முடிவை அவர்கள் தெளிவாக எட்டியிருந்தார்கள்.

    
(தொடரும்)
என்.கணேசன்
    



Thursday, November 24, 2022

சாணக்கியன் 32

 

நீண்ட யோசனைக்குப் பின் மன்னரிடம் விஷ்ணுகுப்தர் யாரென்ற உண்மையைத் தெரிவிப்பதே நல்லது என்ற முடிவுக்கு ராக்ஷசர் வந்தார். மன்னரை எதிர்த்து சபதமிட்டிருக்கிற விஷ்ணுகுப்தர் சாணக்கின் மகன் என்ற உண்மை மன்னருக்குத் தெரிந்திருப்பது எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு உதவும் என்று அவருக்குத் தோன்றியது.

 

மறுநாள் ராக்ஷசர் தனநந்தனிடம் விஷ்ணுகுப்தரைப் பற்றிய உண்மையைத் தெரிவித்த போது தனநந்தன் சிறிது அதிர்ச்சியடைந்தான். “அந்த அந்தணன் அதைச் சொன்ன போது கூட பைத்தியம் எதோ உளறுகிறது என்று தான் நான் நினைத்தேன் ராக்ஷசரே. உண்மையிலேயே அது சாணக்கின் மகன் தான் என்பது நிச்சயமாக எனக்குத் தெரிந்திருந்தால், அந்த ஆளை முறைப்படி நடத்தியிருக்கலாம்.” சொல்லும் போது அவன் கண்களில் அளவு கடந்த வெறுப்பு மேலோங்கி நின்றதை ராக்ஷசர் கவனித்தார்.

 

தனநந்தன் சிறிது நேரம் கடந்தகால நினைவுகளில் சஞ்சரித்தான். மனக்கண்ணில் சாணக்கைப் பார்த்தபடியே அவன் ராக்ஷசரிடம் சொன்னான். ”சாணக்கும் எனக்கு அக்காலத்தில் என் காலணிக்குள் சிக்கிக் கொண்ட சிறுகல்லாகவே இருந்தான் ராக்ஷசரே. மன்னர் என்ற மரியாதையை என்னிடம் என்றுமே காட்டியதில்லை. முச்சந்தியில் நின்று எனக்கு எதிராக முழக்கங்கள் இட்ட முட்டாள் அவன். அவன் சொல்வதைக் கேட்கவென்று மக்கள் கூட்டம் எப்போதும் இருந்தது. ஆனால் அவன் சிறைப்பட்ட போது சிதறிய அந்தக்கூட்டம் பின் எப்போதும் பாடலிபுத்திரத்தில் ஒன்றுகூடவில்லை...”

 

ராக்ஷசர் ஒன்றும் சொல்லவில்லை. மன்னரின் நினைவுகள் சஞ்சரிக்கும் காலத்தில் பிரதம அமைச்சராக இருந்த ஷக்தார் கூட சாணக் மீது அபிமானம் கொண்டவராக இருந்தார் என்று ராக்ஷசர் கேள்விப்பட்டிருக்கிறார். தனநந்தன் புரட்சிக்காரரான சாணக்கின் வாயடைத்ததைப் போலவே ஷக்தாரையும் ஒதுக்கி வைத்த சரித்திரத்தையும் கேள்விப்பட்டிருக்கிறார். விஷ்ணுகுப்தருக்கு விதி அனுகூலமாக இருந்திருக்கிறது. இல்லாவிட்டால் பாரதத்திற்காக கவலைப்படவும் அவருக்கு உயிர் இருந்திருக்காது. அவர் குறித்து அதிகப்பிரசங்கி, பைத்தியக்காரர் என்ற அபிப்பிராயங்கள் மட்டுமே மன்னரிடம் இருந்ததால் விஷ்ணுகுப்தர் பேச்சினால் ஏற்பட்ட கோபம் மன்னரைத் தீவிர நடவடிக்கை எடுக்கத் தூண்டாமல் அவரை வெளியேற்றுவதோடு நிறுத்தி விட்டது.

 

தனநந்தன்  சொன்னான். “எனக்கு ஒரு விஷயம் பெரும் ஆச்சரியத்தைத் தருகிறது ராக்ஷசரே. ஏன் சிலரால் தங்கள் வேலைகளை மட்டும் பார்த்துக் கொண்டு ஒழுங்காக இருக்க முடிவதில்லை? சாணக்கும் பெரிய பண்டிதன். அமைதியாக மாணவர்களுக்கும், ஞானத்தை விரும்புபவர்களுக்கும் பாடம் நடத்திக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் அந்த வேலையைச் செய்யாமல் என்னை எதிர்த்து கலவரப்பேச்சுகள் பேசி அழிந்து போனான். அவன் மகனும் தன் வேலையை விட்டு விட்டு எனக்கு அறிவுரை சொல்ல ஒரு முறை வந்தான். இப்போது என்னைப் படையைத் திரட்டிக் கொண்டு வடக்கே வரச் சொல்கிறான். இவன் பேசும் பாரதம் எங்கிருக்கிறது? அதற்கு இவன் என்ன பிரதிநிதியா? அதற்கு நான் உதவ வேண்டும் என்று இவன் எதிர்பார்ப்பதே பைத்தியக்காரத்தனம் இல்லையா? இது என்ன இவர்களது பரம்பரை வியாதியா? இதில் வேடிக்கை என்னவென்றால் என் ராஜ்ஜியத்திலிருந்து என்னையே புறந்தள்ளுவேன் என்று சபதம் வேறு போடுகிறான்... இது பைத்தியம் முற்றி விட்டதன் அறிகுறியே அல்லவா?.” சொல்லி விட்டு தனநந்தன் வாய் விட்டுச் சிரித்தான்.

 

ராக்‌ஷசரால் சிரிக்க முடியவில்லை. ஏதோ ஒரு ஆபத்தை இப்போதும் ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரிடம் அவர் உணர்ந்தார். காவலர்களால் தூக்கப்படும் வரை இருந்த விஷ்ணுகுப்தர் வேறு. காவலர்களால் தூக்கப்பட்ட பின் மாறிய விஷ்ணுகுப்தரே வேறு. முன்பிருந்த வேதனை, துக்கம், பணிவு எல்லாம் போய் கோபம், அகங்காரம், அசாத்திய அமைதிக்கு மாறியதுடன் பெயரைக் கூட விஷ்ணுகுப்தர் என்று சொல்லாமல் சாணக்கின் மகன் சாணக்கியன் என்று சொன்னது ஏதோ ஒரு புதிய அவதாரம் எடுத்தது போலக் காட்டியது வெறும் மனப்பிரமை என்று அவரால் ஒதுக்க முடியவில்லை. ஆனால் மகத மன்னரை ராஜ்ஜியத்திலிருந்தே வெளியேற்றுவேன் என்று சொன்னது தனநந்தன் சொன்னது போல பைத்தியம் முற்றியதன் அறிகுறியாகவே எடுத்துக் கொள்ளத் தோன்றியது.

 

“என்ன யோசிக்கிறீர்கள் ராக்‌ஷசரே?”

 

’அந்த மனிதரிடம் இருக்கும் ஏதோ ஒன்று என்னை யோசிக்க வைக்கிறது மன்னா’ என்று மனதில் சொன்ன ராக்‌ஷசர் அந்த மனப்பிரமையை வாய்விட்டுச் சொல்வது அனாவசியம் மட்டுமல்ல முட்டாள்தனமும் கூட என்று உணர்ந்ததால் விஷ்ணுகுப்தரைப் பற்றிய எண்ணங்களை ஒதுக்கி விட்டு அவர் கொண்டு வந்த தகவலை மையமாக வைத்து இனி செய்ய வேண்டியது என்ன என்பதைப் பேச ஆரம்பித்தார்.

 

“ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் கொண்டு வந்த தகவல்கள் இரண்டு மன்னா. யவன மாவீரன் அலெக்ஸாண்டர் படையோடு பரதக்கண்டம் நோக்கிக் கிளம்பி வருவது ஒன்று.  ஆம்பிகுமாரன் அலெக்ஸாண்டரோடு நட்பு பாராட்டப் போகிறான் என்பது இன்னொன்று. இரண்டு தகவல்களில் முதலாவது நாமும் நம் ஒற்றர்கள் மூலம் அறிந்தது தான். இரண்டாவது தகவல் இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் ஆச்சாரியர் சொல்லும் தகவல் சரியாகத் தான் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. தட்சசீலத்தில் அவர் வசிப்பதால் காந்தாரத் தலைநகரில் நடக்கும் விஷயங்கள் அவருக்கு முதலில் தெரியும் வாய்ப்பு இருக்கிறது. ஆம்பிகுமாரன் குணாதிசயங்களும் அதற்குத் தகுந்தபடி தான் முதலிலிருந்தே இருக்கின்றன.

 

தனநந்தன் யோசனையுடன் கேட்டான். “அலெக்ஸாண்டரின் படை வலிமை குறித்து நமக்கு என்ன தகவல் கிடைத்திருக்கிறது ராக்‌ஷசரே”

 

ராக்‌ஷசர் பெருமையுடன் சொன்னார். “மகதப்படை வலிமையில் ஐந்தில் ஒரு பங்கு தான் இருக்கும் அரசே”

 

தனநந்தன் சந்தேகத்துடன் கேட்டான். “அந்த அளவு படை வலிமையை வைத்துக் கொண்டு அவன் இவ்வளவு தூரம் எப்படி வென்று வந்திருக்கிறான் ராக்‌ஷசரே”

 

“அவன் போர் யுக்திகளில் சிறந்தவன் என்று சொல்கிறார்கள் அரசே. மேலும் அவன் இது வரை நம் படை போன்ற வலிமையான படையைச் சந்திக்கவில்லை. அதனால் தான் விஷ்ணுகுப்தர் நாம் சென்றால் அலெக்ஸாண்டரை வென்று விடலாம் என்று சொல்கிறார். நம் ராஜ்ஜிய எல்லைகளை விஸ்தரித்துக் கொள்ள இது அருமையான சந்தர்ப்பம் என்று சொல்கிறார். இதில் அவர் கணிப்பு அறிவுபூர்வமாகவே இருக்கிறது. ஆனால் இது நாம் அறியாத ஒன்றல்ல. இதை அறிந்தும் நாம் அதைச் செய்யக் கிளம்பாமல் இருக்கிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. அதை அவரிடம் நாம் சொல்லவில்லை. அவருக்கு அதைத் தெரிவிக்கும் அவசியமும் நமக்கில்லை. அவர் சாஸ்திரங்கள் படித்த அளவு தந்திரங்கள் அறிந்தவர் அல்ல என்பதால் நம் காரணத்தை அவர் அறிய வழியில்லை....”

 

ராக்‌ஷசர் பிரதம அமைச்சர் ஆன பிறகு தனநந்தன் நிர்வாக விஷயங்களிலோ, இது போன்ற அரசியல் தீர்மானங்கள் எடுப்பதிலோ அதிக சிரமம் எடுத்து சிந்திப்பதில்லை. அறிவுகூர்மை வாய்ந்த அவர் அந்த விஷயங்களை மிகவும் சிறப்பாகவே கவனித்து வந்தார். அவராக அவனிடம் அதை விளக்க முன்வந்தாலும் அவன் பாதி கவனத்துடன் தான் கேட்பான். அவனுடைய கேளிக்கைகளிலும், ஆடம்பரங்களிலும் ஒரு குறையுமில்லாமல் இருக்க செல்வம் அவனுக்கு அத்தியாவசியம் என்பதால் தனநந்தன் தன் பெயருக்கேற்றபடி கஜானாவை நிரப்புவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்தான். முக்கிய முடிவெடுக்கும் தருணங்களில் மட்டும் அவர் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதையும், அது ஏன் என்பதையும் சொல்வார். அவன் அதற்குத் தலையசைப்பான்.

 

இப்போதும் அலெக்ஸாண்டர் விஷயத்தில் அவனுடைய பிரதம அமைச்சர் எதோ தீர்மானித்து வைத்திருக்கிறார் என்பது அவனுக்குத் திருப்தியாக இருந்தது. அவன் அவரைக் கேள்விக்குறியுடன் பார்க்க ராக்‌ஷசர் விளக்கினார். “விஷ்ணுகுப்தர் சொல்கிறபடி நாமாக அவர் சொல்கிற பாரத எல்லை வரை போவதென்றாலும் இடையில் உள்ள பகுதிகள் நம் தலைமையில் ஒன்று சேர்வது இயலாததே. அப்படி ஒன்று சேர்ந்தாலும் கூட அவர்களைப் பிறகு ஆளவோ, நம் ராஜ்ஜியத்துடன் இணைக்கவோ அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள். அலெக்ஸாண்டரைத் துரத்தியடித்து விட்டுத் திரும்பும் போது அவர்களைப் பழைய சுதந்திரத்தோடு விட்டு விட்டுத் தான் நாம் வர வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். நாம் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அவர்களுடன் நாம் சண்டையிடவும் வேண்டியிருக்கலாம். ஏற்கெனவே அலெக்சாண்டர் ஆம்பிகுமாரனுடன் சண்டையிட்டு களைத்திருக்கும் நமக்கு இந்த இடைப்பட்டவர்களையும் போரில் வெல்ல முடிந்தாலும் போரின் இழப்புகள் மேலும் நமக்கு கூடும்.

 

தனநந்தன் கேட்டான். “அலெக்ஸாண்டரும் ஆம்பிகுமாரனும் அவர்களை எல்லாம்  வென்று விட்டு நம்மை நெருங்கினால்?”

 

“பல தொடர் போர்களில் வென்று விட்டு களைத்து வரும் அலெக்ஸாண்டர் ஆம்பிகுமாரன் படைகளை அவர்களை விடப் பலமடங்கு வலிமையான நம் படை வெல்வது எளிது தான். மேலும் நாம் அவர்களைத் துரத்திக் கொண்டே காந்தாரம் வரை கூடப் போகலாம். இடைப்பட்டவர்கள் ஏற்கெனவே வெல்லப்பட்டவர்கள். போரிட்டு வலிமை குன்றியவர்களாக இருப்பார்கள். அவர்களை நம்முடன் இணைப்பது எளிது. அவர்களுக்கும் அலெக்ஸாண்டரையும் ஆம்பிகுமாரனையும் விட நாம் தேவலை என்ற எண்ணம் இருக்கும். நம்முடன் இணைந்து கொள்ள ஒத்துக் கொள்வார்கள். விஷ்ணுகுப்தர் சொன்னது போல அத்தனை பகுதிகளையும் இணைத்து நம் ராஜ்ஜியம் விஸ்தீரணமடையப் போவது உண்மை தான். ஆனால் அது அவர் எதிர்பார்ப்பது போல் இப்போதல்ல. அது அலெக்ஸாண்டர் நம்மை நெருங்கிய பிறகு தான் நடக்கப் போகிறது”

 

தனநந்தனுக்கு அவர் கணக்கு அருமையான தந்திரமாகத் தோன்றியது. அவன் தன் பிரதம அமைச்சரைப் பெருமிதத்துடன் பார்த்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்

Monday, November 21, 2022

யாரோ ஒருவன்? 113


காளிங்க சுவாமி பீம்சிங்கின் அறிவுபூர்வமான சந்தேகத்தைக் கேட்டு விட்டுப் புன்னகைத்தார்.  அது பற்கள் தெரியாத புன்னகையாக இருந்தது. அவர் சொன்னார்.   ”ஒருவன் எத்தனை சக்தி படைத்தவனாக இருந்தாலும் அவனை மீறிய சக்திகளின் ஆணைக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும். இந்த மந்திரக்கவசத்தை அவனால் உடைக்க முடியாது. அதனால் அவன் உன்னை அழிக்க முடியாது. அதுமட்டுமல்ல அந்த ரத்தினக்கல் அவனை விட்டு விலக வேண்டிய காலம் நெருங்கிவிட்டதென்று மாகாளி சொல்லி இருக்கிறாள். அவள் வாக்கு பொய்க்காது. என் பூஜையால் பஞ்சமி திதியில், அதாவது ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45லில் இருந்து மூன்று நாழிகை நேரம் அவன் சக்திகள் அனைத்தும் இல்லாமல் போகும். அதனால் நீ அந்த நேரத்தில் அந்த பெரிய ரத்தினக்கல்லை அவனிடமிருந்து எடுப்பதை அவனால் தடுக்க முடியாது. அவனால் கை கால்களைக்கூட அசைக்க முடியாது. அதனால் அதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டியதில்லை…” 

பீம்சிங் கேட்டான். “மூன்று நாழிகை என்றால் எவ்வளவு மணி நேரம்?”

காளிங்க சுவாமி சொன்னார். ”ஒரு நாழிகை என்பது 24 நிமிஷம். மூன்று நாழிகை என்பது 72 நிமிஷம். மூன்று உனக்கு அதிர்ஷ்ட எண்ணும் தானே?”

அவனைப் பற்றி அவர் அறியாத விஷயம் எதுவும் இருக்க முடியாதென்று பீம்சிங்குக்குத் தோன்றியது. அதனால் ஆச்சரியப்படுவதை நிறுத்திக் கொள்வது தான் சரி என்று நினைத்தவனாய் இரவு 11.45 மணியிலிருந்து 72 நிமிடம் என்றால் 12.57 மணி வரை என்று கணக்கிட்டு மனதில் இருத்திக் கொண்டபடி அடுத்த சந்தேகம் கேட்டான்.  ஒருவேளை நாம் முயற்சி செய்யப் போவது முன்பே தெரிந்து அந்த ரத்தினத்தை அவர் வேறெங்காவது ஒளித்து வைத்து விட்டால் என்ன செய்வது?”

காளிங்க சுவாமி சொன்னார்.  அந்த ரத்தினத்தை அப்படியெல்லாம் அவன் எங்கேயாவது ஒளித்து வைக்கவெல்லாம் முடியாது. அதை வைத்திருக்க சில விதிமுறைகள் எல்லாம் உண்டு. அதை வைத்திருக்க ஒரு பவித்திரமான இடத்தை உருவாக்கி அந்த இடத்தில் தான் வைக்க வேண்டும். அந்தப் பவித்திரமான இடத்தை உருவாக்க அவன் 21 நாட்கள் விசேஷ பூஜை செய்திருக்க வேண்டும். அதனால் அவன் திடீரென்று அதை வேறு இடத்தில் மாற்றி வைக்க முடியாது…”

பீம்சிங்குக்கு இந்த விஷயங்கள் குழப்பமாக இருந்தன. அதற்கு மேல் என்ன கேட்பது என்று அவன் யோசித்த போது அவர் சொன்னார். “நீயும் அந்த ரத்தினக்கல்லை எடுத்து எங்கேயாவது வைத்துக் கொண்டு வந்து விட முடியாது. இந்த் மஞ்சள் துணியில் வைத்துக் கட்டி தான் எடுத்து வர முடியும்

அவர் ஒரு மஞ்சள் துணியை அவனிடம் காட்டி விட்டு அதை ஒரு கருப்புப் பையில் போட்டு அவனிடம் தந்தார். அந்த விசேஷ நாகரத்தினம் அவருக்குத் தான் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று நம்பி அவர் அதை வைக்க 21 நாட்கள் பிரத்தியேக பூஜை செய்து எடுத்துவைத்திருந்த துணி தான் அது.

அதை அவன் வாங்கிக் கொண்ட பின் அவர் சொன்னார். “இந்தக் கணத்திலிருந்து அந்த ரத்தினக்கல்லை நீ என்னிடம் இதனுடன் ஒப்படைக்கும் வரை நீ மது அருந்தக் கூடாது. புகைபிடிக்கக்கூடாது. யாருடனும் உடல் உறவில் ஈடுபடக்கூடாது. சுத்தமில்லாத கையால் இதையோ அந்த ரத்தினத்தையோ தொடக்கூடாது. மொத்தத்தில் நீ வணங்கும் தெய்வ விக்கிரகம் உன் கையில் இருக்கும் போது நீ எப்படி இருப்பாயோ அப்படி இருக்க வேண்டும். இந்த மஞ்சள் துணி உனக்கு அந்த அளவு பவித்திரமானதாக இருக்க வேண்டும்.”

அவன் தலையசைத்தான். பின் கேட்டான். “அங்கே நாகராஜ் தனியாகத் தான் இருப்பாரா, அவருடன் வேறு யாராவது இருப்பார்களா? காவலுக்கு யாரையாவது அவர் வைத்திருக்க மாட்டாரா? அவர்கள் என்னைத் தடுக்க மாட்டார்களா?”

காளிங்க சுவாமி சொன்னார். “நாகராஜுடன் ஒரே ஒரு ஆள் தான் இருப்பான். உனக்கு நான் போட்டிருக்கும் மந்திரக் கவசம் அவனை உறங்க வைத்து விடும். நீ அந்த வீட்டை நெருங்கும் போதே அவன் ஆழ்ந்து உறங்கி விடுவான். அதனால் அந்தக் கவலையும் வேண்டாம்...”

அப்படியானால் போனவுடன் அந்த ரத்தினக்கல் எங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்று கண்டுபிடிப்பது ஒன்று தான் கொஞ்சம் சிரமமான வேலையாக இருக்கும் போல பீம்சிங்குக்குத் தோன்றியது.

அதுவும் உனக்குக் கஷ்டமாக இருக்காது. ஆனால் அந்த வீட்டுக்குள் நுழைந்த கணம் முதல் அந்த ரத்தினக்கல்லை எடுத்துக் கொண்டு நீ வெளியே வரும் வரை நான் சொல்வதை, சொன்னபடியே பின்பற்ற வேண்டும். அதில் சின்னத் தவறு கூட வரக்கூடாது...” என்று சொன்ன காளிங்க சுவாமி அவனிடம் நிறுத்தி நிதானமாகச் சொல்ல ஆரம்பித்தார்.  

சொல்லிக் கொண்டே வந்தவர் இடையில் “அந்த இடத்தில் அந்தப் பெரிய ரத்தினக்கல்லுடன் நான் சற்று முன் காட்டினது போல் சிறிய மூன்று ரத்தினக்கல்களும் இருக்கும்...” என்று சொன்ன போது குறுக்கிட்டு பீம்சிங் கேட்டான். “அந்தக் கல்களையும் சேர்த்து எடுத்து வர வேண்டுமா?”

“அந்தச் சின்ன ரத்தினக்கல்களை நீ எடுத்து வர வேண்டாம். அவை அவனுடையவை. நமக்கு வேண்டியதில்லை” என்று உறுதியாகச் சொன்னார்.  

அடுத்தவர் பொருள் அவருக்கு வேண்டியதில்லை. அதில் அவருக்கு ஆசையும் இல்லை. விசேஷ நாகரத்தினம் அருகதையாலும், செய்திருக்கும் பூஜைகளாலும் அவருக்கு வந்து சேர வேண்டியது. அதனால் அது மட்டும் போதும் என்று மனதில் உறுதியாகச் சொல்லிக் கொண்ட காளிங்க சுவாமி தொடர்ந்து அந்தக் கல்லை எப்படி எடுக்க வேண்டும் என்பதிலிருந்து  ஆரம்பித்துச் சொன்னார்.

அவன் மிகவும் கவனமாக அவர் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டான். அவர் சொன்னதை மறுபடி அவரிடம் சொல்லச் சொல்லி பீம்சிங்கிடம் அவர் கட்டளையிட்டார். அவன் அப்படியே திரும்பச் சொன்ன பிறகு திருப்தி அடைந்து சொன்னார். “சரி இந்தக் கருப்புப் பையை காளியின் பாதத்தில் வைத்து விட்டு நீ போய் உடை மாற்றிக் கொண்டு வா. பின் மறுபடி இந்தப் பையைக் காளியின் பாதத்தில் இருந்து எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் போ.”  

அவன் அவர் சொன்னபடியே காளியின் பாதத்தில் அந்தக் கருப்புப் பையை வைத்து விட்டு உடைகளை மாற்றிக் கொண்டு வந்து மறுபடி அந்த கருப்புப் பையை காளியின் பாதத்திலிருந்து எடுத்துக் கொண்டு காளியையும், காளிங்க சுவாமியையும் சாஷ்டாங்கமாக  விழுந்து வணங்கி விட்டுக் கிளம்பினான்.

அப்போது நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது. அவன் போகும் போது காளிங்க சுவாமியின் பார்வை அவனுடனேயே வருவது போன்றதொரு உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. காளி கோயிலிலிருந்து வெகு தூரம் அவன் தாண்டி வந்தும் அந்த உணர்வு போகாதது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்போது வழியில் ஓரிரு பாம்புகளும் தென்பட்டன. அவன் வருவதைக் கண்டு அவை வேகமாக வழிவிட்டு பக்கவாட்டில் செல்வதை பீம்சிங் திருப்தியுடன் பார்த்தான். இப்போது குரங்குகள் கூட அவனை நெருங்கவில்லை. தூரத்திலிருந்தே பயத்துடன் அவனைப் பார்த்தன.

காளிங்க சுவாமியின் மந்திரக் கவசம் இந்த வேலை முடிந்த பிறகு கூடத் தொடர்ந்து இருந்தால் நன்றாக இருக்கும் என்று பீம்சிங் புன்னகையோடு நினைத்துக் கொண்டான்.


ஜீம் அகமது கையில் நரேந்திரன் வசிக்கும் அபார்ட்மெண்ட்ஸின் வரைபடம் இருந்தது. 32 ப்ளாட்கள் இருக்கும் அந்த அபார்ட்மெண்ட்ஸில் வசிக்கும் நபர்கள் பற்றிய முழு விவரங்களும் கூடவே இருந்தன. குடும்பத் தலைவனுக்கு என்ன உத்தியோகம், எங்கே வேலை, குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள், அந்த ப்ளாட்களில் வேலைக்கு வருபவர்கள் யார் யார், எங்கிருந்து வருகிறார்கள் என்ற அனைத்து விவரங்களையும் அஜீம் அகமது பொறுமையாகப் படித்தான். அடுத்தபடியாக நரேந்திரன் தன் ப்ளாட்டிலிருந்து எப்போதும் எந்த நேரத்தில் கிளம்புவான். அவன் ஆபிஸ் போய் வரும் வழி எந்த வழி, போகும் போதோ, வரும் போதோ வழியில் எங்காவது அவன் நிற்பதுண்டா, எங்காவது செல்வதுண்டா என்ற விவரங்கள் தனியாக இருந்தன. அஜீம் அகமது அதையும் பொறுமையாகவும், கவனமாகவும் படித்தான். ஒரு வேளை காளிங்க சுவாமி வழித் திட்டம் நிறைவேறா விட்டால் நரேந்திரனை எப்படி தீர்த்துக் கட்டுவது என்று இந்தத் தகவல்களை வைத்துக் கொண்டு சிந்திக்க ஆரம்பித்தான்.

(தொடரும்)
என்.கணேசன்


Thursday, November 17, 2022

சாணக்கியன் 31

 

ற்றன் பாடலிபுத்திர ஆசிரியர் கோபாலனை அறிவான். அதனால் உள்ளூர் நபரைக் கண்காணிக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைத்தவனாக வேகமாக சாணக்கியரைப் பின் தொடர்ந்து போனான். நகர வாயிற்கதவைத் தாண்டி அவர் வெளியேறுவதைப் பார்த்து விட்டு ராக்ஷசர் மாளிகைக்குச் சென்றான். அவரிடம் அவன் கண்ட விவரங்களைச் சொன்னான்.

 

ஒற்றன் சொன்ன விஷயங்கள் தட்சசீல ஆச்சாரியரை மேலும் விசித்திர மனிதராக ராக்ஷசருக்கு அடையாளம் காட்டின. வெளியே வீசப்பட்ட மனிதர் இந்த அளவு அமைதியாக தரை மண்ணை நெற்றியில் பூசிக் கொண்டு, வித்தியாசமாக எதுவும் நடக்கவில்லை என்பது போல நடந்து கொண்டதும், பின் நகரை விட்டு வெளியேறியதும் அவருக்கு விசித்திரமாகவே தோன்றியது.  தட்சசீல ஆச்சாரியர் பாடலிபுத்திர ஆசிரியர் ஒருவரைப் பார்த்து விட்டு வேகமாகப் போனதும், அந்த ஆசிரியரும் முன்கூட்டியே அறிந்தவர் போல ஆச்சாரியர் போவதைக் கூர்ந்து பார்த்ததும் இருவரும் முன்பே அறிமுகமானவர்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்தவே உடனடியாக அந்த உள்ளூர் ஆசிரியரை அழைத்து வர காவலர்களை அனுப்பினார்.

 

பிரதம அமைச்சர் ராக்ஷசர் தங்களைச் சந்திக்க விரும்புகிறார்என்று காவலர்கள் வந்து சொன்ன போது கோபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை. மகதத்தில் மன்னருக்கு அடுத்தபடியான சக்தி வாய்ந்த மனிதரான ராக்ஷசர் அவரைச் சந்திக்க விரும்புவது நன்மையின் அறிகுறியாகவும் தெரியவில்லை. இந்தச் சாதாரண ஆசிரியனைச் சந்திக்க ராக்ஷசருக்கு என்ன காரணம் இருக்கும் என்று பதற்றத்துடன் யோசித்தபடியே கோபாலன் உடனே கிளம்பிப் போனார்.  

 

ராக்ஷசர் தன் முன் வந்து நின்ற ஆசிரியரை ஒரு குற்றவாளியை ஆராய்ந்து பார்ப்பது போல் கூர்ந்து பார்த்தார்.  கோபாலனின் தர்மசங்கட நெளியலை அவர் லட்சியம் செய்யவில்லை. பின் மெல்லக் கேட்டார். “தட்சசீல ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரை உங்களுக்கு எப்படித் தெரியும்?”

 

கோபாலன் திகைத்துப் போனார். ஒரு கணத்தில் எல்லாம் பிடிபடுவது போல் இருந்தது. இன்று பயணியர் விடுதியிலிருந்து குதிரையில் வேகமாகப் போன நபர் அவர் சந்தேகப்பட்டது போலவே நண்பன் விஷ்ணுவாகவே இருந்திருக்க வேண்டும். விஷ்ணு அவரைப் பார்த்ததாக அவருக்குத் தோன்றியது பிரமையல்ல. பார்த்து விட்டும் பார்க்காதது போல் விஷ்ணுகுப்தர் போகிறார் என்றால் கண்டிப்பாக எதாவது காரணம் இருக்க வேண்டும்.  அந்த சமயத்தில் யாராவது கண்காணித்துக் கொண்டிருந்திருக்கலாம். சந்திப்பது பிரச்னை ஆகலாம் என்று தவிர்த்திருக்கலாம்.  மேலும் யோசித்த போது குதிரையில் அமர்ந்தபடி ஒருவன் அவரையே பார்த்துக் கொண்டிருந்ததும் நினைவுக்கு வந்தது. அவன் மகத ஒற்றனாக இருந்திருக்கக்கூடும்.      

 

விஷ்ணுகுப்தரைத் தெரியாது என்று சொன்னால் என்ன என்று ஒரு கணம் கோபாலனுக்குத் தோன்றினாலும் அது ஆபத்து என்று உடனே புரிந்தது. ராக்ஷசர் விஷ்ணுகுப்தரைத் தெரியுமா என்று கேட்கவில்லை. எப்படித் தெரியும் என்று தான் கேட்கிறார். ஆக தெரியாது என்று சொன்னால் தான் ஆபத்து என்று உணர்ந்தவராக கோபாலன் மெல்லச் சொன்னார். “நாங்கள் இருவரும் ஒரே குருகுலத்தில் படித்தவர்கள்

 

ராக்ஷசர் பார்வையில் கூர்மை கூடியது. ”ந்த குருகுலத்தில்?”

 

”பாடலிபுத்திர குருகுலத்தில் தான்”

 

ராக்‌ஷசர் உள்ளுக்குள் திகைத்தாலும் வெளிப்பார்வைக்குத் தன் திகைப்பைச் சிறிதும் காட்டிக் கொள்ளவில்லை. அடுத்த கேள்வியை அமைதியாகக் கேட்டார். “அவர் தந்தை யார்?”

 

“சாணக்”

 

அப்படியானால் சபதமிட்ட போது சாணக்கின் மகன் என்று விஷ்ணுகுப்தர் சொன்னது பைத்தியம் முற்றி அல்ல.... ராக்‌ஷசர் சிறிது நேரம் பேச்சிழந்தார். சாணக் சிறைப்பிடிக்கப்பட்ட சிறிது காலத்தில் அவர் மனைவி இறந்து, சிறுவனான மகன் ஊரை விட்டுச் சென்று விட்ட கதையை அவரும் கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால் அந்த மகன் தான் ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் என்ற உண்மை இப்போது தான் தெரிகிறது.... யோசித்துப் பார்த்தால் விஷ்ணுகுப்தர் யாராகவே இருந்தாலும் தனியொரு மனிதனை எண்ணி பயப்படக் காரணம் இல்லை. ஆனால் இனம் தெரியாத ஏதோ ஒன்று ராக்‌ஷசருக்கு அடையாளம் தெரியாத ஒரு நெருடலை ஏற்படுத்த ஆரம்பித்தது. அந்த மனிதரின் அறிவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார். அறிவோடு கூடிய அமைதியைக் கண்கூடாகவே பார்த்திருக்கிறார். ஆழத்திலிருந்து வெளிப்பட்ட வெறுப்பையும் கோபத்தையும் கூடப் பார்த்திருக்கிறார். தனி ஒரு மனிதனின் அறிவு, அமைதி, வெறுப்பு, கோபம் எல்லாம் மிக வலிமையான ராஜ்ஜியமான மகதத்தையும். தனந்ந்தனையும் இம்மியளவும் பாதிக்க வாய்ப்பே இல்லை….. இருந்தாலும்…..

 

ராக்‌ஷசர் எண்ண ஓட்டத்தை நிறுத்திக் கொண்டு கேட்டார். “நீங்களும் விஷ்ணுகுப்தரும் நெருங்கிய நண்பர்களா?”

 

கோபாலன் இந்தக் கேள்வியில் ஆபத்தை உணர்ந்தார்.  சென்ற முறை இங்கு விஷ்ணுகுப்தர் வந்திருந்த போது மறுநாள் அரசவையில் நடந்த அறிஞர்களின் சிறப்புக் கூட்டத்திற்குச் செல்லவிருப்பதாகச் சொன்னதும், கோபாலன் மறுநாளே வெளியூர் சென்றுவிட்ட போதிலும், அவருடைய சக ஆசிரியர் ஒருவர் மூலமாக அந்தச் சிறப்புக் கூட்டத்தில் நடந்ததை அறிந்ததும் நினைவுக்கு வந்தது. பாடலிபுத்திரத்தில் தனநந்தனை மனதார மதிப்பவர்களும், நேசிப்பவர்களும் அரிதிலும் அரிது. அதனால் விஷ்ணுகுப்தர் கோபாலனின் நண்பர் என்பதை அறியாமல் அந்த சக ஆசிரியர் தட்சசீலத்தில் இருந்து வந்த விஷ்ணுகுப்தர் என்ற ஆசிரியர் தனநந்தனிடம் ‘காரமாக’ப் பேசியதை வரிக்கு வரி சொல்லி குதூகலப்பட்டது இப்போதும் கோபாலனுக்கு நினைவு இருக்கிறது. இந்த முறை வந்து விஷ்ணு என்ன செய்து விட்டுப் போயிருக்கிறானோ தெரியவில்லை. பிரதம அமைச்சரின் இறுக்கமான முகத்தைப் பார்த்தால் அது நல்லதாக இருக்கவும் வாய்ப்பில்லை. அதனால் தான் நண்பனை பார்த்தும்,  பேசி நட்பை வெளிப்படுத்தி நண்பனுக்குப் பிரச்னை ஏற்படுத்த வேண்டாம் என்று எண்ணிப் போயிருக்க வேண்டும் என்பது கோபாலனுக்கு உறுதியாகியது. அதனால் கோபாலன் தயக்கத்துடன் சொன்னார். “சிறு வயதில் நண்பர்கள்”

 

ராட்ஷசர் உடனே கேட்டார். “அப்படியானால் இப்போது நீங்கள் இருவரும் நண்பர்கள் இல்லையா?”    

 

கோபாலன் சொன்னார். “சிறுவயதில் இங்கிருந்து விஷ்ணு போன பிறகு எங்களுக்குள் இருந்த தொடர்பு போய் விட்டது.”

 

ராட்ஷசர் அதை முழுவதும் நம்ப முடியாதவர் போல கோபாலனைப் பார்த்தார். கோபாலன் இதற்குள் என்ன சொல்வது என்று மனதில் தயார்ப்படுத்திக் கொண்டிருந்ததால் தொடர்ந்து சொன்னார். ”சுமார் பத்து வருடங்களுக்கு முன் பாடலிபுத்திரத்தில் மறுபடியும் பார்த்தேன். முதலில் அடையாளம் தெரியவில்லை. அவரும் என்னைத் தெரிந்தது போலக் காட்டிக் கொள்ளவில்லை. நானாக சந்தேகம் கொண்டு கேட்டேன். பிறகு தான் மெல்ல ஒப்புக் கொண்டார். தட்சசீலத்தில் ஆசிரியராக இருப்பதாகவும், அறிஞர்களின் சிறப்புக் கூட்டத்திற்கு வந்திருப்பதாகவும் சொன்னார். வீட்டிற்கு அழைத்தும் அவர் வரவில்லை. புகழ்பெற்ற தட்சசீல கல்விக்கூடத்தில் பிரபலமான ஆசிரியராக இருப்பதால் என்னைப் போன்ற சிறியவனிடம் நட்பு பாராட்டுவதோ, அடியவன் வீட்டுக்கு வருவதோ அவருக்குப் பிடிக்கவில்லை என்று புரிந்து கொண்டேன். அந்த முறை இங்கிருந்து போகும் போது கூடச் சொல்லிக் கொண்டு போகவில்லை. இப்போதும் சற்று முன் பயணியர் விடுதி முன்னால் அவரைப் போன்ற தோற்றமுள்ள ஒருவர் குதிரையேறிப் போவதைப் பார்த்தேன். ஆனால் அவரா என்று தெரியவில்லை. அவராக இல்லாமலும் இருக்கலாம். சென்ற முறையும் நானாகப் பேசியதால் தான் அவர் பேசினார். இந்த முறை அவர் என்னைப் பார்த்தது போல் இருந்தது. ஆனாலும் நின்று பேசிவிட்டுப் போகவில்லை. அதனால் நெருங்கிய நண்பர்கள் என்று எங்களைச் சொல்வதற்கில்லை.”

 

ராக்‌ஷசருக்கு கோபாலன் சொல்வதில் எதையும் பொய் என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. சென்ற முறையும் அரசவை நிகழ்ச்சிக்குப் பிறகு சிறிது நேரத்திலிருந்து விஷ்ணுகுப்தரை ஒற்றன் பின் தொடர்ந்து போயிருக்கிறான். அப்போதும் அவர் இந்த ஆளைச் சந்தித்துப் பேசியதை ஒற்றன் பார்க்கவில்லை. இந்த முறையும் விஷ்ணுகுப்தர் பாடலிபுத்திரம் நுழைந்த கணத்திலிருந்து ஒற்றன் அவரைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். இப்போதும் அது நிகழவில்லை. விஷ்ணுகுப்தர் கோபாலனைப் பார்த்தது போலிருந்தது, ஆனால் பேசாமல் வேகமாகப் போய் விட்டார் என்பதை ஒற்றனும் சொல்லியிருக்கிறான்.... அதனால் இவர் சொல்வதெல்லாம் சரிதானாக இருக்க வேண்டும்... இந்த ஆளை அழைத்துப் பேசியதில் விஷ்ணுகுப்தர் பாடலிபுத்திரத்திற்குப் புதியவர் அல்ல என்பதும், சாணக்கின் மகன் என்பதும் உறுதியாகத் தெரிந்து விட்டது.

 

ராக்‌ஷசர் கோபாலனிடம் சொன்னார். ”நீங்கள் போகலாம்”

 

கோபாலன் தயக்கத்துடன் கேட்டார். “நீங்கள் விஷ்ணுகுப்தரைப் பற்றி ஏன் விசாரித்தீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா பிரதம அமைச்சரே?”

 

ராக்‌ஷசர் கடுத்த முகத்துடன் சொன்னார். “அது அரசாங்க காரியம். சொல்வதற்கில்லை”

 

கோபாலன் அதற்கு மேல் எதுவும் பேசாமல்  ராக்‌ஷசரை வணங்கி விட்டு வெளியேறினார்.  அவர் சென்ற பிறகு ராக்‌ஷசர் கண்களை மூடி யோசித்தார்.  ‘மன்னர் தனநந்தனிடம் இதைத் தெரிவிப்பதா வேண்டாமா?”

 

(தொடரும்)

என்.கணேசன்