சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, January 14, 2020

மகாத்மாக்களும் மாற்றத்துணியாத கர்மவினை!


 
திரை விலக்கப்பட்ட ஐசிஸ் தேவதைநூல் எழுதப்பட்ட பிறகும் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் எழுத்துக்களில் அவர்மாஸ்டர்ஸ்என்றழைத்த மகாத்மாக்களின் பங்கு தொடர்ந்தது. இந்தியாவுக்கு வந்த பின்னரும் அந்த மகாத்மாக்கள் சிலரை கர்னல் ஓல்காட் நேரிலும் சந்தித்திருக்கிறார் என்பதால் அந்த மகாத்மாக்கள் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரை ஆட்கொண்டு ஆன்மிக தத்துவங்களை எழுதும் நேரங்களில் அவர்களது இருப்பை எழுத்துக்களின் மூலம் மட்டுமல்லாமல் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் தோரணை மற்றும் பாவனைகளில் கூட அவரால் அடையாளம் காண முடிந்தது.

ஒரு மகாத்மா நீண்ட தாடியும், முறுக்கிய பெரிய மீசையும் கொண்டவர். அவர் ஆழ்ந்த யோசனையில் இருக்கும் போது அவரையும் அறியாமல் அவர் மீசை நுனியைத் திருகிக் கொண்டிருப்பது வழக்கம். அதை அவரை நேரில் சந்திக்கையில் கர்னல் ஓல்காட் கவனித்திருக்கிறார். சில நேரங்களில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எழுதும் போது அவர் உதட்டின் நுனியில் கையை வைத்து இல்லாத மீசையைத் திருகிக் கொண்டிருப்பதைக் கவனித்து அந்த மகாத்மாவின் இருப்பை ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் உடலில் கர்னல் ஓல்காட் உணர்ந்திருக்கிறார். அதே போல் ஒரு மகாத்மா ஆங்கிலத்தை அதிகம் விரும்பாதவர். அவருக்கு பிரெஞ்சு மொழியில் தான் விருப்பம் அதிகம். எப்போதுமே கர்னல் ஓல்காட்டிடம் ஆங்கிலத்தில் மட்டுமே பேசும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அந்த மகாத்மாவால் ஆட்கொள்ளப்படும் போது பிரெஞ்சு மொழியில் மட்டுமே கர்னல் ஓல்காட்டிடம் பேசுவார்.

சில நேரங்களில் சில சம்பவங்களின் பிறகு அந்த மகாத்மாக்களின் இருப்பை அவர் உணர்ந்ததும் நடந்திருக்கிறது. ஒரு சுவாரசியமான சம்பவத்தைப் பார்ப்போம். ப்ளாவ்ட்ஸ்கீ அம்மையார் சிறிய விஷயங்களில் ஒரு ஒழுங்கான முறையைக் கடைப்பிடிப்பவர் அல்ல. அவர் அவ்வப்போது பேனா, பென்சில், ரப்பர், பேப்பர் கத்தி போன்ற சிறு பொருட்களை கர்னல் ஓல்காட்டிடம் வாங்கிப் பயன்படுத்திப் பிறகு திருப்பிக் கொடுக்க மறந்து விடுவார். கர்னல் ஓல்காட்டுக்கு அந்த ஒழுங்கீன முறை பல முறை எரிச்சல் மூட்டியதுண்டு. அவர் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரை அந்த விஷயத்தில் கடிந்து கொள்வதுமுண்டு. அம்மையார் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்.

ஒரு முறை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எழுத அவரிடம் ஒரு பென்சிலைக் கேட்டார். கர்னல் ஓல்காட் பென்சிலை எடுத்து அவரிடம் கொடுக்கும் போதேபயன்படுத்திய பிறகு மேசை டிராயரில் இதை போட்டுக் கொண்டு விடுவார். இனி இது நமக்குப் பயன்படுத்தத் திரும்பவும் கிடைக்கப் போவதில்லைஎன்று எண்ணினார். அதை வாய்விட்டு அவர் சொல்லாத போதும் எதிரே இருந்த ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் முகம் மாறியது. வாங்கிய பென்சிலை பேனா வைக்கும் அங்கிருந்த ஒரு தட்டில் வைத்துக் கையை அசைத்தார். அடுத்த கணம் அது போலப் பல பென்சில்கள் அந்தத் தட்டில் இருந்தன. ’இதில் எத்தனை வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்என்பது போல் இருந்தது அந்தச் செய்கை. அந்த அம்மையார் வாய் விட்டுக் கடிந்து கொண்டாலே பொருட்படுத்தாதவர், மனதில் நினைத்ததை எல்லாம் கண்டு கொண்டிருக்கவே மாட்டார் என்பதால் எதிரில் இருப்பது ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அல்ல என்று கர்னல் ஓல்காட்டுக்குப் புரிந்தது. ஏதோ ரோஷமுள்ள மகாத்மா போல் இருக்கிறது என்று எண்ணிய கர்னல் ஓல்காட்டுக்கு ஒரு மாதிரியாகி விட்டது..

சில சமயங்களில் சில எதிர்பார்க்காத செயல்களை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எப்படிச் செய்கிறார் என்பது கடைசி வரை கர்னல் ஓல்காட்டுக்குப் புதிராகவே இருந்தது. உதாரணத்திற்கு 1880 ஆம் ஆண்டு கர்னல் ஓல்காட்டும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் வாரணாசி சென்றிருந்தார்கள். அப்போது சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களை இருவரும் சந்தித்தார்கள். அப்போது சுவாமிஜியிடம் ஆன்மிகம் சம்பந்தமான கேள்வியை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஹிந்தி தேவநாகரி எழுத்துக்களில் ஒரு தாளில் எழுதிக் கேட்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கு ஹிந்தி எழுதவோ, படிக்கவோ தெரியாது. சுத்தமாகத் தெரியாத ஒரு மொழியில் சாதாரணமாக ஒரு வாக்கியத்தையே எழுத முடியாது என்கிற போது அவரால் எப்படி அறிவுபூர்வமான ஒரு ஆன்மிகக் கேள்வியை கேட்டு எழுத முடிந்தது என்பது கர்னல் ஓல்காட்டுக்குப் புரியவில்லை. சுவாமி தயானந்த சரஸ்வதி அதே தாளில் அந்தக் கேள்விக்குப் பதில் எழுதித் தந்தார். அந்தத் தாளை கர்னல் ஓல்காட் பத்திரப்படுத்தி வைத்தார். அதை மகாத்மாக்கள் எழுதித் தந்திருக்க வழியில்லை. ஏனென்றால் மகாத்மாக்கள் அறியாத ஆன்மிக ஞானம் இல்லை. அவர்கள் சுவாமி தயானந்த சரஸ்வதியிடம் எழுதிக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. பின் எப்படி ஏன் இந்த ஆச்சரிய நிகழ்வு நடைபெற்றது என்ற கேள்விக்குப் பதில் இல்லை.  

இந்தியாவில் கர்னல் ஓல்காட் தனிப்பட்ட முறையிலும் சில ஆன்மிகப் பெரியோர்களிடம் ஆழமான ஞானத்தைப் பெற்றார். சில நேரங்களில் அவர் அவர்களை நேரில் சந்தித்ததும் உண்டு. அருவமான நிலையில் உணர்ந்ததும் உண்டு. ஒரு தென்னிந்திய ஞானியை ஆசிரியருக்கெல்லாம் ஆசிரியர் என்று குறிப்பிடும் கர்னல் ஓல்காட் அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது பெற்ற அனுபவத்தை மிகவும் மேன்மையாகக் குறிப்பிடுகிறார். ஞானிகள் தங்கள் பேச்சில் முழுமையாக எதையும் கூறிவிடுவது அபூர்வம். சிலவற்றைக் குறிப்பாகச் சொல்லி மீதியை அவரவரே ஆத்மார்த்தமாக உணரச் செய்வதே பெரும்பாலும் நிகழ்கிறது. அப்படி ஒரு நாள் மாலை அந்தத் தென்னிந்திய ஞானியிடம் பேசிக் கொண்டிருக்கையில், தான் ஞானம் பெற்றதாக கர்னல் ஓல்காட் கூறுகிறார். ஒரு பிரம்மாண்டமான பிரபஞ்ச உண்மையை ஆத்மார்த்தமாக ஒருவர் உணரும் கணங்கள் அலாதியானவை. அது வரை மனதில் வைத்திருக்கும் எத்தனையோ நம்பிக்கைகள், அனுமானங்கள் தகர்ந்து, உண்மையான ஞானத்தை பிரத்தியட்சமாக உணரும் போது ஏற்படும் ஆனந்தத்தை வர்ணிக்க எந்த மொழியிலும் வார்த்தைகள் போதாது. அப்படிப்பட்ட ஒரு அனுபவம் பெற்று ஆன்மிக வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை அடைந்ததாக கர்னல் ஓல்காட் கூறுகிறார்.     

1883 ஆம் ஆண்டு ஒரு முறை ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் ஊட்டி சென்றிருந்தார்கள். அந்தச் சமயத்தில் புத்தமதம் சம்பந்தமாக அவர்களுடைய Therosophist பத்திரிக்கையில் வந்த கட்டுரையை ஒட்டி ஒரு வாசகர் கேட்டிருந்த ஒரு சிக்கலான கேள்விக்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டியிருந்தது. அந்தக் கேள்விக்கான பதில் சரியாக இருவருக்கும் தெரியவில்லை. ஆனாலும் அந்தக் கேள்விக்குப் பதிலை ஊட்டியின் அதிகாலைக் குளிரில் நடுங்கியபடி ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எழுத ஆரம்பித்தார். அந்தத் தென்னிந்திய ஞானி அருவமான நிலையில் இருந்து கொண்டு அந்தப் பதிலைச் சொல்லச் சொல்ல அவர் எழுதிக் கொண்டிருப்பது கர்னல் ஓல்காட்டிற்குப் பின்பு தான் தெரிந்தது. அதில் அவர்கள் இருவருமே அறியாத பழங்குடி மக்கள் பற்றிய குறிப்பு உட்பட பல புதிய விஷயங்கள் இருந்தன.

இந்த அளவு மகாத்மாக்களும் ஞானிகளும் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் உடலில் புகுந்து எழுதியும், வெளியிலிருந்து சொல்லியும் பிரமிப்பூட்டும் பல மெய்ஞான உண்மைகளை வெளிப்படுத்தினார்கள் என்ற போதும் அவருடைய தனிப்பட்ட எத்தனையோ பலவீனங்கள் மாறாமலேயே அவரிடம் தங்கியிருந்தன. கட்டுப்படுத்த முடியாத கோபம், சில சில்லறைக் குணங்கள், சில ஒழுங்கீனங்கள் எல்லாம் அவரிடம் திருத்தப்படாமலேயே இருந்ததை கர்னல் ஓல்காட் கவனித்து காரணம் புரியாமல் குழம்பியிருக்கிறார்.

அதற்கு வலிமையான காரணங்கள் இருந்தன. உலக நன்மைக்காக மகத்தான உண்மைகள் அவர் எழுதியதில் மகாத்மாக்கள், ஞானிகள் பங்கு இருந்ததே ஒழிய அவருடைய தனிப்பட்ட கர்மவினைகளை மாற்றுவதிலும் திருத்துவதிலும் வெளியிலிருந்து எதையும் திணிக்க அந்த மகாத்மாக்கள் முற்படவில்லை. அது எத்தனை பிறவிகளானாலும் ஒவ்வொரு தனிமனிதனும் தானாக உணர்ந்து, தெளிந்து, திருத்திக் கொண்டு முன்னேறி அடைய வேண்டிய விஷயம். வெளியில் இருந்து திணிக்கிற ஞானம் ஆழமாகவும், நிரந்தரமாகவும் இருப்பதில்லை. அதனால் இத்தனை அற்புதங்கள் செய்த போதும் தனிப்பட்ட கர்ம வினைகளில் குறுக்கிடாமல் மகாத்மாக்கள் விலகியே நின்றார்கள். எந்த ஒரு மாற்றத்திற்கும் வழிகள் ஞானிகளால் காட்டப்பட்டாலும் அந்த வழியில் செல்வதும், அகம் மாறுவதும் தனிமனிதனின் தனிப்பெரும் பொறுப்பே என்று இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது அல்லவா?

தொடரும்
என்.கணேசன்  
நன்றி தினத்தந்தி: 4.6.2019

முழுத்தொடரும் நூலாக வெளிவந்து விட்டது. 







2 comments:

  1. சங்கர நாராயணன்January 15, 2020 at 2:24 AM

    சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த நூலை வாங்கினேன். மிக அருமையான நூல். எளிய தமிழில் இது போன்ற சம்பவங்களை எழுதி நீங்கள் மிகப்பெரிய சேவை செய்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். நாளை உங்கள் எழுத்துகள் அனைத்தும் ஆவணங்களாய் மாறும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது மிக சுவாரஸ்யமாக செல்கிறது... சில சம்பவங்கள் அற்புதமாக உள்ளது...

    இறுதியில் இடம்பெற்ற கருத்தை படிக்கும் போது...
    "எதையும் அவனாக உணர்ந்து...அவனாக செய்தால் தான்...அது அவனுக்கு...
    இல்லையென்றால்,அது கற்பனையில் தான் நிற்கும்..." என்று தாங்கள் முன்பே கூறியிருந்தது நினைவுக்கு வருகிறது...

    ReplyDelete