என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, December 15, 2022

சாணக்கியன் 35

 

ம்பி குமாரன் கண்களுக்கு அலெக்ஸாண்டர் தேவலோகத்திலிருந்து வந்தவன் போலத் தோன்றினான். தொலைவில் குதிரைகளில் வந்து கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் யார் அலெக்ஸாண்டர் என்ற சந்தேகம் எழவே காரணமிருக்கவில்லை.  நட்சத்திரங்களுக்கு நடுவே நிலவைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இல்லாதது போலவே இதுவும் சிரமம் இல்லாததாக ஆம்பி குமாரனுக்குத் தோன்றியது. குறை ஏதேனும் சொல்லித்தானாக வேண்டும் என்றால் உயரம் மட்டும் சற்று குறைவு என்று சொல்லலாம். வித்தியாசமான இறகுகள் பதித்த அவனது நீண்ட தலைக்கவசம் அந்தக் குறையையும் சரிசெய்து விட்டது….

 

தொலைவில் வந்து கொண்டிருந்தவர்கள் திடீரென்று தொடராமல் அப்படியே நின்று விட, ஆம்பி குமாரன் திகைத்தான். ’என்ன ஆயிற்று அவர்களுக்கு? ஏன் அங்கேயே நின்று விட்டார்கள்?’ என்று அவன் கவலையுடன் யோசித்துக் கொண்டிருக்கையில், அலெக்ஸாண்டர் மட்டும் குதிரையில் முன்னுக்கு வந்தான்.

 

ஆம்பி குமாரன் இனி இங்கேயே நிற்பது சரியல்ல என்று தீர்மானித்து தானும் தன் குதிரையேறி முன்னுக்கு விரைந்தான்.  இருவரும் நெருங்கிவிட்டபின் ஒருவரை ஒருவர் பார்த்தபடி சில கணங்கள் நின்றார்கள். அலெக்ஸாண்டரின் கூரிய பார்வை ஆழமாக ஆம்பி குமாரனைப் பார்த்தது. ஆம்பி குமாரன் ஒருவித அசௌகரியத்தை உணர்ந்தான். பிறகு அலெக்ஸாண்டர் அவனைப் பார்த்து நட்புடன் புன்னகைத்த பின் தான் ஆம்பி குமாரன் நிம்மதியை உணர்ந்தான்.

 

அலெக்ஸாண்டர் என்னவோ சொன்னான். அவன் சொன்னது என்ன என்று தெரியாமல் ஆம்பி குமாரன் விழிக்க, அலெக்ஸாண்டர் பின்னால் திரும்பாமலேயே கையை மட்டும் உயர்த்தி தன் ஆட்களுக்குச் சைகை செய்தான். உடனே அலெக்ஸாண்டருடன் வந்திருந்த சசிகுப்தன் தன் குதிரையுடன் வேகமாக வந்து சேர்ந்தான்.

 

அவனைப் பார்த்தவுடன் ஆம்பி குமாரன் சற்று நிம்மதியடைந்தான். இந்தக் கூட்டத்தில் முன்பே அறிந்தவன் ஒருவன் இருப்பது இந்தப் புதிய நட்பைச் சுலபமாக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. சசிகுப்தன் ஆம்பி குமாரனைப் பார்த்து வணக்கம் தெரிவித்தான். அவன் வந்தவுடன் அலெக்ஸாண்டர் முன்பு சொன்னதையே திரும்பவும் சொன்னான். சசிகுப்தன் உடனே அதை மொழி பெயர்த்தான். “சக்கரவர்த்தி சொல்கிறார். “நீ அழைத்தபடி வந்து விட்டேன் நண்பனே

 

முதல் வாக்கியத்திலேயே நண்பனே என்று அலெக்ஸாண்டர் அவனை அழைத்தது ஆம்பி குமாரனுக்கு மிகப்பெரிய பாக்கியம் என்று தோன்றியது. உணர்ச்சிப் பெருக்கில் பேச வார்த்தைகள் வராமல் ஒரு கணம் நின்ற ஆம்பி குமாரன் பின் தன்னைச் சுதாரித்துக் கொண்டு சொன்னான். “என் அழைப்பை ஏற்று இங்கு வந்து என்னை கௌரவித்திருக்கிறாய் நண்பா. நன்றி

 

சசிகுப்தன் அதை மொழி பெயர்த்துச் சொன்னவுடன் அலெக்ஸாண்டர் குதிரையில் இருந்து கீழிறங்க ஆம்பி குமாரனும் குதிரையிலிருந்து கீழே இறங்கினான். இருவரும் நட்புடன் ஆரத்தழுவிக் கொண்டார்கள்.

 

அலெக்ஸாண்டர் சொன்னான். “போரில் அல்லாமல் நட்பில் இணைவது என்றுமே இனிமையானது. அதனால் நட்பைத் தேர்ந்தெடுத்ததற்கு நானும் உனக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் நண்பனே

 

சசிகுப்தன் அதை மொழிபெயர்த்துச் சொன்னதும் ஒரு கணம் ஆம்பி குமாரன் துணுக்குற்றான்.நீ நட்பைத் தேர்ந்தெடுத்திரா விட்டால் நான் போரில் உன்னை வென்றிருக்க வேண்டியிருக்கும் என்று சொல்கிறானா இவன்?’

 

மெல்ல சுதாரித்துக் கொண்டு ஆம்பி குமாரன் சொன்னான். “போரிட்டே ஆக வேண்டிய கட்டாயம் ஒரு நாட்டுக்கு நீரும் உணவும் மறுக்கப்படும் போது தான் ஏற்படுகிறது நண்பனே. மற்றபடி புத்திசாலிகளுக்குள் போருக்கு அவசியம் என்ன இருக்கிறது? செல்வம் தான் உன் தேவை என்றால் அது என்னிடம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. நண்பனான உன்னுடன் அதைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை

 

அலெக்ஸாண்டர் ஆம்பி குமாரனின் வார்த்தைகளில் பெருந்திருப்தி அடைந்தான். ”நட்புடன் நீ காட்டும் இந்தப் பெருந்தன்மையை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன் நண்பா. இந்தப் பெருந்தன்மை கண்டிப்பாக ஒருதலைப்பட்சமாக இருக்காது என்பதை மட்டும் நான் வாக்களிக்கிறேன்

 

அலெக்ஸாண்டரின் வார்த்தைகளைக் கேட்டவுடன் ஆம்பி குமாரனும் திருப்தியும் நிம்மதியுமடைந்தான். சற்று முன் துணுக்குற்றது அவசியமில்லாதது என்பதை அலெக்ஸாண்டரின் இந்த வார்த்தைகள் உறுதிப்படுத்தி விட்டன.

 

அடுத்து உடன் வந்தவர்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுதல், பரஸ்பரம் பரிசுப் பொருள்கள் பரிமாறிக் கொள்ளுதல், அறுசுவை உணவு, இளைப்பாறுதல், நடனத்தை இசையுடன் ரசித்தல் ஆகியவை தொடர்ந்தன. ஆம்பி குமாரன் அவர்களுக்கு எதிலும் எந்தக் குறையும் வைக்கவில்லை. அலெக்ஸாண்டரும் பரமதிருப்தி அடைந்தான்.

அலெக்ஸாண்டரின் படையினர் தங்குவதற்கு ஏற்கெனவே அங்கு ஆம்பி குமாரன் சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தான். அவர்களை அங்கே தங்கவைத்து அலெக்ஸாண்டரையும், அவனோடு வந்திருக்கும் அவன் தளபதிகள், சசிகுப்தன் முதலான முக்கியஸ்தர்களை அழைத்துக் கொண்டு ஆம்பிகுமாரன் தட்சசீலம் நோக்கிப் புறப்பட்டான். 

 

அலெக்ஸாண்டரை அழைத்துக் கொண்டு ஆம்பிகுமாரன் தட்சசீலம் நெருங்கி விட்டான் என்ற செய்தி  நகருக்குள் வேகமாகப் பரவியது. அந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட பின் கல்விக்கூடத்தில் சந்திரகுப்தனுக்கும் அவன் நண்பர்களுக்கும் இருப்பு கொள்ளவில்லை. அவர்கள் வாசலுக்கு வந்து அலெக்ஸாண்டரைப் பார்க்கக் காத்திருந்தார்கள். அவர்கள் அவனைப் பற்றி எத்தனையோ கேள்விப்பட்டிருக்கிறார்கள். அவன் பார்க்க எப்படி இருப்பான் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாக அவர்களிடம் இருந்தது.

 

ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் இப்போது இங்கு இருந்திருந்தால் அவர்களோடு இதே ஆர்வத்துடன் இங்கே காத்துக் கொண்டிருப்பாரா என்ற கேள்வியை சந்திரகுப்தன் தனக்குள் கேட்டுக் கொண்டான்.  அலெக்ஸாண்டரை ஆம்பி குமாரன் வரவேற்று அழைத்துக் கொண்டு வருவது அவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அவனை நேரில் பார்த்து மதிப்பிட அவரும் விரும்பியிருப்பார் என்று தோன்றியது. பாரதத்தை ஆக்கிரமிக்க நினைக்கும் அன்னியர்கள் யாராக இருந்தாலும் அந்த நபரை ஆச்சாரியர் எதிரியாகத் தான் பார்ப்பார். அதனால் எதிரியை நேரில் பார்த்து மதிப்பிடும் சந்தர்ப்பத்தை அவர் கண்டிப்பாகத் தவற விட்டிருக்க மாட்டார்

 

அலெக்ஸாண்டரைப் பார்த்தோம் என்று சொன்னால் அவனிடம் என்ன பார்த்தீர்கள், என்ன உணர்ந்தீர்கள், என்ன கணித்தீர்கள், உடனிருந்தவர்கள் யார் யார் என்றெல்லாம் ஆச்சாரியர் கண்டிப்பாகக் கேட்பார். அதனால் அவரிடம் சொல்ல வேண்டும் என்ற சிந்தனையுடனேயே பார்த்தால் கூடுதலாகப் பார்ப்போம்என்று சந்திரகுப்தன் சொல்ல சாரங்கராவ் தலையை ஆட்டினான்.

 

விஜயன் விளையாட்டாகச் சொன்னான். “ஆச்சாரியருக்குப் பதில் சொல்லிக் கஷ்டப்படுவதை விட அலெக்ஸாண்டருடனேயே போய் விடுவது நல்லது என்று தோன்றுகிறது. அவன் கண்டிப்பாகக் கேள்விகள் கேட்டு நம்மைச் சித்திரவதை செய்ய மாட்டான்.”

 

எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் அனைவர் பார்வையும் கூர்மையாகியது. வாத்தியங்கள் இசைத்தபடி வந்த ஆட்கள் முதலில் தெரிந்தார்கள் அவர்களைத் தொடர்ந்து குதிரைகளில் காந்தார வீரர்கள் வருவது தெரிந்தது. வீரர்களையும் தொடர்ந்து ஆம்பி குமாரன் தெரிந்தான். அவனுக்குப் பின்னால் அலெக்ஸாண்டர் தெரிந்தான். அவனைப் பார்த்தவுடனேயே அவனைப் பற்றிக் கேள்விப்பட்டதாக ஆச்சாரியர் சொன்னவை எல்லாம் சந்திரகுப்தனுக்கு நினைவு வந்தது.   அலெக்ஸாண்டர் நெருங்க நெருங்க சந்திரகுப்தன் அவனை ஆர்வத்துடன் கூர்ந்து பார்த்தான்.

 

அலெக்ஸாண்டர் இருபக்கமும் கூர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தான். இருமருங்கிலும் கைகூப்பியபடி நின்றிருந்த மக்களும் புதிய யவன அரசனை வேடிக்கை பார்த்தனர். அனைவரும் கைகூப்பி நிற்க ஓரிடத்தில் சில இளைஞர்கள் மட்டும் கைகூப்பாமல் நிற்பது அவர்களை அலெக்ஸாண்டருக்கு வித்தியாசப்படுத்திக் காட்டியது. ஆனால் அந்த இளைஞர்களில் சிலர் அவனை மிகவும் கூர்மையாகப் பார்த்த விதம் அலெக்ஸாண்டருக்கு வேடிக்கையாக இருந்தது. அதிலும் ஒரு இளைஞன் அவன் பார்வையால் அலெக்ஸாண்டரின் மனதில் என்ன இருக்கிறது என்று அறிய முற்படுவது போல் அலெக்ஸாண்டருக்குத் தோன்ற அலெக்ஸாண்டரும் அந்த இளைஞனைக் கூர்மையாகப் பார்த்தான். இருவர்  பார்வைகளும் கூர்மையாகச் சந்தித்துக் கொண்டன.

 

ஆம்பி குமாரன் தட்சசீலக் கல்விக்கூட மாணவர்களின் வணங்காத கைகளையும், அலட்சிய தோரணையையும் கண்டு கோபம் கொண்டாலும் அதை வெளியே காட்டிக் கொள்ள முடியவில்லை. ‘இந்தக் கால இளைஞர்களுக்கு மரியாதையே தெரிவதில்லை. மாணவர்களும் ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரைப் போலவே இருக்கிறார்கள்.’ என்று மனதில் கடுகடுத்தான். அவர்களை அலட்சியப்படுத்தி ’இது தான் புகழ்பெற்ற தட்சசீல கல்விக்கூடம்’ என்று அலெக்ஸாண்டரிடம் சொல்ல ஒரு கணம் நினைத்தான். ஆனால் அலெக்ஸாண்டர் கல்வியறிவில் சிறந்தவன் என்று கேள்விப்பட்டிருந்ததால் அவன் ஆர்வத்துடன் ஆம்பிகுமாரனும் இங்கே தான் படித்தானா, எவ்வளவு படித்தான் என்றெல்லாம் கேட்க ஆரம்பித்து பேச்சு கல்வி பக்கம் நகர்ந்தால் அது தேவையில்லாத மனக்கசப்பு என்று எண்ணியவனாக அவன் மௌனமாக கல்விக்கூடத்தைக் கடந்தான்.   

 

அலெக்ஸாண்டரும் தன்னைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்த சந்திரகுப்தனைப் பார்த்து மிக மெல்லியதாய் புன்முறுவல் பூத்தபடி அவனைக் கடந்தான். அந்த இளைஞனும் அவனைப் போலவே துடிப்பானவனாகத் தோன்றினான். அவர்களுக்குள் இந்த ஒரு ஒற்றுமை மட்டுமல்ல பாரதத்தில் அவர்கள் இருவருடைய எதிர்காலத்தையும் ஒரே மனிதர் தான் தீர்மானிக்கப் போகிறார் என்ற இன்னொரு ஒற்றுமையும் இருக்கிறது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.

 

(தொடரும்)

என்.கணேசன்  




Monday, December 12, 2022

யாரோ ஒருவன்? 116


ன்வர் தன் சந்தேகத்தை நரேந்திரனிடம் தெரிவித்து அந்த வீட்டின் அமைப்பையும் விவரித்த போது நரேந்திரனுக்கு அன்வரின் சந்தேகம் சரியாக இருக்கலாம் என்று தோன்றினாலும் வேறு சில சாத்தியக்கூறுகளுக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூடத் தோன்றியது.

அவன் அன்வரிடம் சொன்னான். “நீ சொல்வதைப் பார்க்கும் போது அந்த வீட்டில் மறைக்க ஏதோ இருக்கின்றது அல்லது காப்பாற்ற ஏதோ இருக்கின்றது என்பது நமக்கு நிச்சயமாகத் தெரிகிறது. இல்லா விட்டால் அந்தக் கூர்க்காவின் நடவடிக்கைகள் அந்த விதத்தில் இருக்காது. ஆனால் மறைக்கவோ காப்பாற்றவோ முயற்சி செய்வது அஜீம் அகமதுக்காகத் தான் இருக்க வேண்டுமென்றில்லை. உள்ளேயிருக்கும் வேறு யாராவது உள்ளூர் குற்றவாளிக்காகக்கூட இருக்கலாம். இல்லையென்றால் ஏதாவது கடத்தல் பொருள்களோ, போதைப் பொருள்களோ கூட உள்ளே இருக்கலாம்.”

அன்வர் அந்தக் கோணங்களில் சிந்தித்திருக்கவில்லை. அவன் மெல்லச் சொன்னான். “இருக்கலாம் சார். எனக்கு அந்த வீடு ஒரு தொழிற்சாலைக்கு எதிரில் இருப்பது தான் அஜீம் அகமது இருப்பதற்கு எதிரான அம்சமாகப் பட்டது. இதை யோசித்திருக்கவில்லை.”

நரேந்திரன் புன்னகையுடன் சொன்னான். “அந்தத் தொழிற்சாலை கூடப் பாதகமான அம்சமில்லை. தினமும் மூன்று சமயங்களில் இருபதிருபது நிமிடங்கள் கூட்டமும், நெரிசலுமாக இருக்கும். அதாவது மொத்தத்தில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம். அது எப்போதும் உள்ளேயே இருப்பவனுக்கு  ஒரு பெரிய தொந்திரவாக இருக்காது. சொல்லப்போனால் அவன் யாரும் பின் தொடராமல் அந்த வீட்டிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அந்த சந்தடி நேரத்தை அவன் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒன்றே ஒன்று - அவனும் அந்த தொழிலாளிகளின் சீருடையையே தயாராக வைத்திருந்தால் போதும். ஒருவேளை அஜீம் அகமது நீ சந்தேகப்படுவது போல அந்த வீட்டுக்குள்ளேயே இருந்தால் கண்டிப்பாக அந்தச் சீருடையைத் தனக்காகத் தயார்ப்படுத்தி வைத்திருப்பான்.”

அன்வருக்கு நரேந்திரனின் புத்திக்கூர்மை வெகுவாகக் கவர்ந்தது. “இருக்கலாம் சார்என்றான். பின் ஒரு வரைபடத்தை நரேந்திரன் முன் வைத்தான். அது அந்த வீடு இருக்கும் பகுதியின் வரைபடம். “அவனுக்கு இங்கே இன்னொரு சாதகமான அம்சம் என்னவென்றால் காசியாபாத், டெல்லி போகும் தேசிய நெடுஞ்சாலை அரை கிலோமீட்டர் தூரத்திலேயே இருக்கிறது. அவன் தப்பித்துப் போக அது வசதி. அதே மாதிரி அந்த வீட்டுக்குப் பின்னால் வீடுகள் எதுவும் இல்லை. அது காலி மனையிடம் தான். அவன் இரவோடிரவாகத் தப்பிக்க வேண்டுமென்றால் அவன் பின்பக்கமாகக்கூடத் தப்பிக்கலாம்.”

நரேந்திரனுக்கு அன்வரின் அறிவுக்கூர்மை பிடித்திருந்தது. அன்வர் சொன்னது போல் அதெல்லாம் அஜீம் அகமதுக்குச் சாதகமான அம்சங்கள் தான்.   

நரேந்திரன் சொன்னான். “நீ சொல்வது சரிதான். எதற்கும் துபாயிலிருக்கும் அந்த வீட்டுச் சொந்தக்காரன் பற்றி விசாரி.”

விசாரித்து விட்டேன் சார். அவன் மும்பை ஐஐடியில் படித்தவன். துபாயில் ஒரு ஐ.டி கம்பெனியில் பெரிய பொறுப்பில் இருக்கிறான். மூன்று வருஷங்களுக்கு முன்னால் காதல் கல்யாணம் ஆகி ஒரு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவன் மீது இது வரை எந்த வழக்கும் இல்லை. புகார்களும் எதுவும் இல்லை...”

நரேந்திரன் புன்னகைத்தபடி சொன்னான். “சபாஷ். வேறு வகைகளிலும் நாம் விசாரிக்கலாம். நீ இனி அந்த வீட்டைக் கவனிப்பதோ, அந்த தொழிற்சாலை வாட்ச்மேனிடம் அதிகம் பேசுவதோ வேண்டாம். அந்தக் கூர்க்காவுக்கு உன் மீது ஏதாவது சின்ன சந்தேகம் வந்திருந்தாலும் அது தீர்ந்து போகட்டும். ஏனென்றால் அஜீம் அகமது எப்போதுமே மிக எச்சரிக்கையாக இருப்பவன். ஒரு இடத்திற்குப் பதுங்கப் போகும் போதே இன்னொரு இடத்தையும் தயார் செய்து விட்டு தான் போவான். சந்தேகப்படுகிறார்கள், கண்டுபிடிக்கப்பட்டு விட்டோம் என்ற சிறிய சந்தேகம் அவனுக்கு வந்தாலும் உடனடியாக அவன் இடம் மாறி விடுவான். பிறகு அந்த இடத்தைக் கண்டுபிடிக்க நாம் சிரமப்பட வேண்டியிருக்கும். தேடல் வேட்டையை மறுபடி ஆரம்பிக்க வேண்டியிருக்கும்....”
 
பீம்சிங் சனிக்கிழமை இரவே விமானத்தில் கோயமுத்தூர் போய்ச் சேர்ந்து விட்டான். அவனுக்கு தன்னுள் ஏதோ ஒரு சக்தி கூடியிருப்பதை இப்போது ஒவ்வொரு கணமும் உணர முடிகிறது. அது அவனுக்குத் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கூட்டியிருந்தது. ஆனால் அவனுக்கு மிக அசௌகரியமாக இருந்த விஷயம் காளிங்க சுவாமியின் சக்தி வாய்ந்த கண்கள் இப்போதும் அவனுள்ளே இருந்து அவன் பார்ப்பதையும் அவன் உணர்வதையும் கவனித்துக் கொண்டிருப்பது போல உணர்ந்தது தான். காளி கோயிலை விட்டு வெளியே வருகையில் உணர்ந்ததை அவன் கோயமுத்தூர் போய்ச் சேர்ந்த போதும் உணர்கிறான். அவரிடமிருக்கும் சக்தி ஒன்றை அவனிடம் ஒட்ட வைத்து விட்டு அதன் மூலம் அவரும் அவன் போகுமிடமெல்லாம் நடப்பதைப் பார்த்துக் கொண்டு இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.   மந்திரக்கவசம் என்று அவர் குறிப்பிட்டது அவருடைய சக்தியைத் தானா என்ற சந்தேகமும் அவனுக்கு வந்தது.

கோயமுத்தூரில் ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு அருகில் இருக்கும் ஒரு நட்த்திர ஓட்டலில் பீம்சிங் தங்கினான். இரவு பத்தரை மணிக்கு அவன் ஓட்டல் அறையிலிருந்து கிளம்பினான். நாகராஜ் வசிக்கும் வீடு ஓட்டலில் இருந்து பத்து நிமிட நடை தூரத்தில் தான் இருக்கிறது. பீம்சிங் நிதானமாக நடக்க ஆரம்பித்தான். எந்த இடத்தில் வேலைக்குப் போகிறோமோ அந்த இடத்தின் சந்து பொந்துகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவன் படித்திருந்த ஆரம்ப பாடம். அப்படி அறிந்து கொண்டால் தான் ஒரு ஆபத்தான சூழ்நிலை உருவானால் அதில் உள்ள சாதகமான அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதே போல் பாதகமான அம்சங்களைத் தவிர்க்க முடியும். அவன் அமைதியாகவும் கவனமாகவும் பார்த்துக் கொண்டே அந்த வீதிகளில் சுற்றினான்.

இரவு சரியாக பதினொன்றரை மணிக்கு அவன் நாகராஜ் வீட்டின் எதிர்ப்புறம் வந்து நின்றான். நின்று அந்த வீட்டையும், அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் அங்கிருக்கும் சூழலையும் மிக உன்னிப்பாக அவன் கவனிக்க ஆரம்பித்தான். வீட்டிற்குள் திருடுவது எப்படி என்பதை காளிங்க சுவாமி மிகவும் தெளிவாக விளக்கி இருந்தாலும் வெளிச்சூழ்நிலைகளை அவனே தான் கவனித்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ நேரங்களில் வீட்டுக்குள் உள்ள சூழ்நிலைகள் சாதகமாக இருந்தாலும் வெளியே உள்ள சூழ்நிலைகள் சரியாக இல்லா விட்டால் பிரச்சினைகள் வந்து தோல்விகள் ஏற்படலாம். ரோந்து போகும் போலீஸ் கூட ஒருவனைச் சிக்க வைத்து விடலாம். பக்கத்து வீட்டுக் காரர்கள் கூடத் திருடனைப் பிடித்துக் கொடுத்து விடலாம்.  சமயங்களில் வழிப்போக்கர்கள் கூட ஆபத்தாகலாம். எதிர்பாராத விஷயங்கள், சூழ்நிலைகள், நபர்கள் என்று எத்தனையோ வர வாய்ப்பிருக்கிறது என்றாலும்  எதிர்பார்க்க வேண்டிய விஷயங்களை ஒருவன் கவனித்து தயார்ப்படுத்திக் கொண்டே ஆக வேண்டும். அதனால் தான் முந்தைய நாளே அதே நேரத்தில் வந்து அதே சூழலில் இருந்து பார்த்து தன்னை மறுநாளுக்கு மானசீகமாய்த் தயார்ப்படுத்திக் கொண்ட பின்னரே பீம்சிங் அங்கிருந்து சரியாக ஒரு மணிக்கு நகர்ந்தான்.

பீம்சிங் வந்த கணத்திலிருந்து ஜன்னல் வழியாக அவனையே கவனித்தபடி நின்றிருந்த நாகராஜ் பிறகு அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். நாளைக்கு எல்லா விதங்களிலும் அவனுக்கு அக்னிப் பரிட்சை தான். என்ன ஆகும் என்று அவனுக்கும் நிச்சயமாகத் தெரிந்திருக்கவில்லை. எத்தனை தான் சக்திகள் படைத்தாலும் இறைவன் அவ்வப்போது நடக்கவிருப்பதைத் திரையிட்டு மறைத்துக் கொள்கிற போது அதையும் மீறிப் பார்க்க யாராலும் முடிவதில்லை! அதில் அவனோ காளிங்க சுவாமியோ விதிவிலக்கல்ல….

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, December 8, 2022

சாணக்கியன் 34

 


ன்று காலையிலிருந்தே காந்தார வீரர்களின் நடமாட்டம் தட்சசீல தெருக்களில் அதிகமாக இருந்தது. இடையிடையே குதிரைகள் யானைகள் மீதமர்ந்தும் கூட வீரர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். கல்விக்கூட வாயிலில் நின்று கொண்டு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த சாரங்கராவ் சந்திரகுப்தனிடம் கேட்டான். “காந்தாரம் போருக்குத் தயாராகிறதா என்ன? வீரர்கள் இப்படி வரிசையாகப் போய்க் கொண்டேயிருக்கிறார்களே...”

 

அவன் கேட்டதில் தவறில்லை. வீரர்கள் எல்லோரும் சீருடையில் இருந்தார்கள். ஆயுதங்களை ஏந்திய வண்ணம் தான் சென்று கொண்டிருந்தார்கள். சந்திரகுப்தன் யோசனையுடன் சொன்னான். “போருக்குப் போவது என்றால் போகும் வீரர்கள் போகும் விதத்திலேயே அது தெரிந்து விடும்.  வழக்கமான பயிற்சிகளுக்கோ, பயணத்திற்கோ போவது போல் தான் தெரிகிறது.”

 

விஜயன் சொன்னான். “போய் விசாரித்தால் தெரிந்துவிடப் போகிறது”. சொன்னதோடு நிற்காமல் வேகமாக அவனும் தெருவில் நடக்க ஆரம்பித்தான்.  இயல்பாகவே நட்புடனும், நகைச்சுவையாகவும் பேசக்கூடிய அவன் சென்று சில வீரர்களிடம் பேச்சுக் கொடுத்து விஷயங்களைத் தெரிந்து கொண்டு விட்டு இரண்டு நாழிகை கழித்து வந்து சேர்ந்தான்.

 

எல்லைப்பகுதியில் யாரையோ வரவேற்க ஆம்பிகுமாரன் படையைத் திரட்டிக் கொண்டு போகிறானாம். அது யாரென்று வீரர்களுக்கும் தெரியவில்லை.”

 

விஜயன் சொன்னவுடன் சந்திரகுப்தன் யோசிக்காமல் சொன்னான். “அலெக்ஸாண்டரைத் தான் ஆம்பி குமாரன் வரவேற்கப் போகிறான் என்று நான் நினைக்கிறேன்.”

 

சாரங்கராவ் சந்திரகுப்தனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி கேட்டான். “எதை வைத்து அவ்வளவு நிச்சயமாக நீ சொல்கிறாய் நண்பா?”

 

ஆம்பி குமாரன் படையோடு சென்று வரவேற்கும்படியான நண்பர்கள் நமக்குத் தெரிந்து யாரும் இல்லை. அக்கம் பக்கத்திலும் அவ்வளவு பெரிய நண்பர்களை அவன் சம்பாதித்து வைத்துக் கொண்டதில்லை. அதனால் புதிய நண்பனான அலெக்ஸாண்டரை வரவேற்கத் தான் போகிறான் என்று நினைக்கிறேன். அசத்தும்படியான மரியாதை செலுத்தி அவனைத் திருப்திப்படுத்தவும், அவனிடம் நல்ல பெயர் வாங்கவும் தான் இதைச் செய்கிறான் என்று தோன்றுகிறது

 

சரியான முடிவுகளைக் குறைவான நேரத்தில் சந்திரகுப்தன் எப்படி எட்டுகிறான் என்று சாரங்கராவ் வியந்தான். ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரைக் கவனித்தே வாழ்ந்து வருவதன் விளைவாக இருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது.

 

ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் இன்னும் வந்து சேரவில்லை.  அவர் இல்லாதது சந்திரகுப்தனுக்குப் பெரும் குறையாகவே இருந்தது. இத்தனை காலம் அவன் அவரைப் பிரிந்து இருந்ததே இல்லை. தாயையும், தாய்மாமனையும் பிரிந்து இருந்த ஆரம்பக் காலக்கட்டத்தில் கூட இந்த அளவு ஆழத்தில் பிரிவை சந்திரகுப்தன் உணர்ந்ததில்லை. ஆனால் இப்போதோ  ஆச்சாரியரைப் பிரிந்து இருப்பது சந்திரகுப்தனுக்கு  மிக முக்கியமான எதையோ இழந்திருப்பது போலத் தோன்றுகிறது. குழந்தையாக இருந்த போதே தந்தையை இழந்திருந்த அவன் மனதில் விஷ்ணுகுப்தர் ஆச்சாரியராக மட்டுமல்ல ஒரு தந்தையாகவும் கூட இருந்தார். அவன் அந்தப் பிரிவில் சோகமாக அமர்ந்திருக்கும் சமயங்களில் அவன் நண்பர்கள் அவனைக் கிண்டல் செய்வார்கள். அதிகமாக அவனைக் கிண்டல் செய்வது விஜயன் தான். ஆச்சாரியர் இல்லாமல் இருப்பது அவனுக்குத் தான் பெரும் சுதந்திரமாக இருந்தது. விஷ்ணுகுப்தர் அளவுக்கு மற்ற ஆசிரியர்கள் கேள்விகள் கேட்டு அவனைத் துன்புறுத்துவதில்லை.

 

ஆம்பிகுமாரன் அலெக்ஸாண்டரைப் படையுடன் வரவேற்கப் போவது தெரிந்தால் ஆச்சாரியர் என்ன நினைப்பார் என்று சந்திரகுப்தன் யோசித்துப் பார்த்தான்.  ஒரு போக்கின் ஆரம்பத்தைத் துல்லியமாகக் கணக்கெடுத்த பின், விளைவுகளில் அவர் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. ஆம்பிகுமாரன் நட்புக்கரம் நீட்டி தூதனுப்பிய போதே அவன் போக்கு அவருக்குப் புரிந்து விட்டிருக்கும் என்பதால் பெரிதாக கவலைப்பட்டிருக்க மாட்டார்…… அவர் கவலை எல்லாம் தனநந்தன் அவர் வேண்டுகோளுக்கு எப்படிப் பதில் கொடுக்கிறான் என்பதில் தான் இருக்கும். தனநந்தன் ஆச்சாரியருக்கு நல்ல பதில் தருவானா, படையுடன் கிளம்பியிருப்பானா?

 

அவர்கள் பயிற்சிக்குச் செல்லும் போது ஆம்பிகுமாரன் படையுடன் அலெக்ஸாண்டரை வரவேற்கப் போவதை சின்ஹரனிடமும் தெரிவித்தார்கள். இந்தச் சமயத்தில் காந்தாரத்தின் சேனாதிபதியாக இல்லாமல் இருப்பது பாக்கியமாகவே அவனுக்குத் தோன்றியது. இல்லாவிட்டால் ஆம்பி குமாரனின் முட்டாள்தனங்களுக்குத் தலையாட்டிச் சம்மதிக்க வேண்டி இருந்திருக்கும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற திருப்திகரமான மனநிலை அவனிடம் இப்போது குடிகொள்ள ஆரம்பித்திருக்கிறது. முக்கியமாக சந்திரகுப்தனைப் போன்ற ஒரு வீரனுக்குப் பயிற்சிகள் அளிப்பது அவனுக்குப் பெருமையாக இருந்தது. சொல்லிக் கொடுப்பதை வேகமாகப் புரிந்து கொண்டு அதில் தேர்ச்சியடையும் வரை சந்திரகுப்தன் இளைப்பாறுவதில்லை. ஆச்சாரியரின் பிரியமான இந்த மாணவன் ஒரு காலத்தில் உச்சத்தைத் தொடுவான் என்பதில் சின்ஹரனுக்குச் சந்தேகம் இல்லை. பயிற்றுவிப்பதன் மூலம் அவனும் சந்திரகுப்தனுக்கு ஆசிரியனாக இருப்பது அவனுக்கு மனநிறைவைத் தந்தது. ஒரு காலத்தில் கடமை தவறியிருந்ததால் ஏற்பட்ட மனசாட்சி உறுத்தலுக்கு மருந்து தடவுவது போல் அவன் இந்தப் பயிற்சிகள் தரும் போது உணர்ந்தான். சந்திரகுப்தனைப் போலவே வேறு சில துடிப்பான மாணவர்களும் நல்ல முன்னேற்றத்தைக் காட்டினார்கள். அவர்களுடன் இருக்கையில் அவன் காலத்தை மறந்து இருப்பான்.

 

இரவு நேரங்களில் மட்டும் தனிமை அவனைக் கொல்லும். சில சமயங்களில் மைனிகாவின் நினைவு வரும் போது மனதின் ரணங்கள் புதுப்பிக்கப்படும். ஆழமாக நேசித்தவர்களால் ஏமாற்றப்படுவது யாருக்கும் சகிக்க முடிந்ததல்லவே! ”எப்படி உன்னால் முடிந்தது? எப்படி உனக்கு மனம் வந்தது?” என்று அவனால் திரும்பத் திரும்ப மானசீகமாக அவளைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. இத்தனை தூரம் ஏமாற்றிய பிறகும் அவளுக்குச் சொல்ல ஏதாவது சரியான காரணமிருக்கும் என்று அவன் உள்மனம் நம்புவது பைத்தியக்காரத்தனம் என்றாலும் அதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

 

ட்சசீல எல்லையிலிருந்து சிறிது தூரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய முகாம் ஒன்றை ஆம்பி குமாரன் அமைத்திருந்தான். மாவீரன் அலெக்ஸாண்டரை அங்கேயே வரவேற்று உபசரிக்க சகல ஏற்பாடுகளையும் அவன் செய்திருந்தான். முதல் சந்திப்பிலேயே அவன் உபசரிப்பில் மாவீரன் அலெக்ஸாண்டர் திக்குமுக்காடிப் போக வேண்டும்! அந்த மாவீரன் எத்தனையோ அரசர்களைச் சந்தித்திருக்கக்கூடும். எத்தனையோ செல்வச் செழிப்பையும் கண்டிருக்கக்கூடும். ஆனால் அவன் தற்போது சந்திக்கவிருக்கும் காந்தார அரசனைப் போன்ற ஒருவனைச் சந்தித்திருக்கவில்லை என்பதை உணர வேண்டும். இந்த அளவு யாரும் உபசரிக்கவில்லை என்று நினைக்க வேண்டும். காந்தார அரசனைக் கண்டு அவன் பிரமிக்க வேண்டும். அதற்காகவே விலைமதிக்க முடியாத ரத்தினக் கற்களைக் கோர்த்த தலைப்பாகையும், பட்டாடைகளையும் அவன் அணிந்திருந்தான். அவன் தோற்றத்தைக் கண்டு அவனுடைய படைத்தலைவர்களும், அதிகாரிகளும் பாராட்டினார்கள்.

 

விரல் விட்டு எண்ணக்கூடிய படைத்தலைவர்கள், அதிகாரிகள் தவிர மற்றவர்கள் எல்லாம் புதியவர்களே. அவர்கள் அவன் தந்தை காலத்து ஆட்கள் அல்ல. புதியவர்களுக்குப் பாராட்டிப் பிழைக்கும் வழி தெளிவாகத் தெரிந்திருந்தது. அவன் நீக்காமல் வைத்திருந்த பழையவர்களும் அனுசரணையானவர்களே. அதனால் தான் அவன் அவர்களை நீக்காமல் இருந்தான்.  

 

இன்று சூரியாஸ்தமனத்திற்குள் அலெக்ஸாண்டர் வந்து விடுவான். ஆம்பி குமாரன் வரவேற்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டான். ஒரு பக்கம் யானைகள், ஒரு பக்கம் குதிரைகள், ஒரு பக்கம் காலாட்படை வீரர்கள் என நேர்த்தியாக அணிவகுத்து நின்றிருந்தார்கள். ஒரு பக்கம் நடன மங்கைகள் நின்றிருக்க, இன்னொரு பக்கம் மங்கல வாத்தியங்களோடு வாசிப்பவர்கள் நின்றிருந்தார்கள். அலெக்ஸாண்டருக்குப் பரிசளிக்க முத்துமாலைகளும், வேறு பரிசுப் பொருள்களும் முகாமிற்குள் தனியாக வைக்கப்பட்டிருந்தன.

 

ஆம்பி குமாரன் தட்சசீலத்தின் அரச விருந்தினர் மாளிகையையும் புதுப்பித்து அலங்கரித்து வைத்திருந்தான். அலெக்ஸாண்டர் தங்க அங்கே ஒரு குறையும் இருக்காது. அவனோடு வரும் முக்கியஸ்தர்கள் தங்கவும் அதற்குத் தக்க அறைகள் இருந்தன. அவன் தந்தை இருந்த வரையில் அந்த அறைகளில் அவரிடம் நட்பு பாராட்டிய அரசர்கள் சிலரும், அறிஞர்கள் பலரும் வந்து தங்கி இருக்கிறார்கள். யாரும் இளையவர்கள் அல்ல. எல்லாரும் கிழங்கள்…. எல்லாரும் கிட்டத்தட்ட அவர் வயது ஆட்களே. ஆம்பி குமாரனுக்கு இப்போதெல்லாம் அது போன்ற கிழங்களிடம் பொறுமை இருப்பதில்லை. அவர்கள் பேச்சு செய்கைகள் எல்லாம் அவன் தந்தையையே நினைவுபடுத்துவது போல் இருப்பது காரணமாக இருக்கலாம். நல்லவேளையாக அலெக்ஸாண்டர் அவன் வயதினனாக இருக்கிறான்….

 

மெல்ல தொலைவிலிருந்து குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்க ஆரம்பித்தது. அலெக்ஸாண்டர் நெருங்கி விட்டான். ஆம்பி குமாரன் மங்கல வாத்தியங்களை இசைப்பவர்களை நோக்கி கையசைத்தான். அவர்கள் இசைக்க ஆரம்பிக்க ஆம்பி குமாரன் அலெக்ஸாண்டரை வரவேற்கத் தயாரானான். அவன் இதயத்துடிப்புகள் வேகமெடுத்தன

 

(தொடரும்)

என்.கணேசன்  


      

Monday, December 5, 2022

யாரோ ஒருவன்? 115


டெல்லியை அடுத்த நோய்டா பகுதியில் தொழிற்சாலைகள் அதிகம். வெளியூர்களிலிருந்து அந்தத் தொழிற்சாலைகளில் வேலைக்கு வருபவர்கள் தினமும் தங்கள் ஊருக்குப் போய் வருவது சிரமமானதால் அந்தப் பகுதியிலேயே சிறிய ஃப்ளாட்களை வாடகைக்கு எடுத்து நாலைந்து பேர் சேர்ந்து தங்கும் ஏற்பாட்டைச் செய்து கொண்டார்கள். வேலைக்குச் செல்லும் ஆண்கள் மட்டும் தங்கும் அந்த ஃப்ளாட்கள் எல்லாம் சுத்தமானதாக இருக்காது. அந்தத் தொழிலாளிகளுக்கு சுத்தமாக வைத்துக் கொள்ள நேரமும் இருக்காது. அடிப்படை வசதிகள் மட்டுமே அந்த ஃப்ளாட்களில் இருக்கும். அந்த வகை ஃப்ளாட்கள் தான் அந்தப் பகுதியில் மிக அதிகம். மற்ற சுத்தமான  பெரிய ஃப்ளாட்கள் உயர் அதிகாரிகள், நிர்வாகிகள் தங்கும்படியானதாயிருக்கும். அவை எண்ணிக்கையில் குறைவு. மற்றபடி தனிப்பட்ட வீடுகள் மிகவும் குறைவு. அதிலும் வசதியான வீடுகள், அதிகம் யாரும் வராமல் தனிமையாக இருக்கும் வீடுகள் மிக மிகக் குறைவு.

அதனால் அன்வருக்கு நரேந்திரன் சொன்ன அந்த மாதிரியான தனியான வீடுகளைத் தேர்ந்தெடுப்பதில் சிரமம் அதிகமிருக்கவில்லை. ஒட்டு மொத்தத்தில் பத்து வீடுகள் மட்டுமே அப்படி இருந்தன. அந்தப் பத்து வீடுகளில் ஒன்றில் ரிப்பேர் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. வேலைக்காரர்கள் வருவதும் போவதுமாக இருந்ததால் அதைத் தன் லிஸ்டில் இருந்து அன்வர் எடுத்து விட்டான். இன்னொரு வீட்டில் ஒரு மார்வாடி குடும்பம் திடீரென்று ஒரு நாள் இரண்டு பெரிய கார்களில் வந்து சேர்ந்தது. பெரியவர்கள், குழந்தைகள் எனக் கூச்சலும் சத்தமுமாய் அந்தப் பகுதியே கலகலக்க அந்த வீட்டிலும் கண்டிப்பாக அஜீம் அகமது இருக்க வழியில்லை என்று நினைத்தான்...

இப்படி ஒவ்வொன்றாக ஒவ்வொரு நாளிலும் கழித்துக் கொண்டே வந்து ஒரு வாரத்தில் அஜீம் அகமது இருக்கலாம் என்று சந்தேகப்படும்படியான வீடுகள் மூன்று தான் மிஞ்சின. அதிலும் ஒன்றில் அவனுக்கு அஜீம் அகமது தங்கியிருக்கும்படியான வாய்ப்புகள் அதிகம் தெரிந்தன.  அந்த வீட்டுக்கு வெளியே இருந்த கூர்க்கா அந்த வீட்டைக் கடக்கும் ஒவ்வொரு மனிதனையும் மிகவும் கூர்ந்து பார்ப்பவனாக இருந்தான். பொதுவாக இப்படிக் காவலிருக்கும் கூர்க்காக்கள் உட்கார்ந்தும் நின்றும் சலித்துப் போய் வேடிக்கை பார்ப்பவர்களாகத் தான் இருப்பார்கள். அவர்களும் கூர்ந்து பார்ப்பார்கள் என்றாலும் அவர்களின் பார்வைக்கூர்மை பொழுது போகாமல் புதிதாய் வந்திருப்பவர்களை வேடிக்கை பார்க்கும் கூர்மையாக இருக்குமே ஒழிய சந்தேகத்துடன் பார்க்கும் கூர்மையாக கண்டிப்பாக இருக்காது. ஆனால் இந்த கூர்க்கா அந்த வீட்டைப் பார்ப்பவர்களையும், கடப்பவர்களையும் ஒற்றர்களாக இருக்குமோ என்று பார்ப்பது போல் இருந்தது. அந்த வீடு அழகாகவும், பூந்தோட்டம், புல்வெளியெல்லாம் கொண்டதாகவும் இருந்தது.  ஒருவர் கூட உள்ளிருந்து வெளியே வந்தோ, வெளியே இருந்து உள்ளே போயோ அன்வர் இந்த ஒரு வாரத்தில் பார்க்கவில்லை.

ஒரே ஒரு எதிர்மாறான அம்சம் என்னவென்றால் எதிரிலேயே ஒரு தொழிற்சாலை இருந்தது.  தொழிற்சாலையில் மூன்று ஷிஃப்டில் வேலைகள் செய்தார்கள். ஒவ்வொரு ஷிஃப்டிலும் சுமார் ஐநூறு ஆட்கள் வேலை செய்வார்கள்.  காலை ஆறு மணி, மதியம் இரண்டு மணி, இரவு பத்து மணி ஆகிய மூன்று நேரங்களிலும் சுமார் இருபது நிமிடங்கள் ஐநூறு ஆட்கள் உள்ளே வருவது ஐநூறு ஆட்கள் வெளியேறுவது என்று கூட்டம் அதிகமாக இருக்கும்.  மற்ற நேரங்களில் அங்கே அதிகப் போக்குவரத்தோ ஆள் நடமாட்டமோ இருக்காது. ஏனென்றால் தெருவின் ஒரு பக்கம் தொழிற்சாலை இருக்க மறுபக்கம் இரண்டு வீடுகள், அடுத்து ஐந்து வீட்டு மனைகள், கடைசியாக அன்வர் சந்தேகப்படும் அந்த வீடு இருந்தது. ஆட்கள் இருப்பதும் அந்த முதலிரண்டு வீடுகளாகவே தெரிந்தன.  

அன்வருக்கு தினந்தோறும் அந்தத் தொழிற்சாலைக்குத் தர குரியர் தபால் ஏதாவது இருக்கும். அதே போல் மாலையில் அந்தத் தொழிற்சாலையில் இருந்து எடுத்துப் போவதற்கும் குரியர் தபால் இருக்கும். காலை மணி பதினொன்றிலிருந்து மதியம் பன்னிரண்டரை வரை ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு வேளையில் அவன் அங்கு வருவான். ஒவ்வொரு முறையும் எதிர் வீட்டில் இருக்கும் அந்தக் கூர்க்கா அவனையே கூர்மையாகப் பார்ப்பான். அன்ர் அந்த வீட்டைக் கூர்ந்து பார்ப்பதைத் தவிர்த்து சாதாரணமாக நகர்ந்து போவான். ஒரே ஒரு சமயத்தில் போனில் பேசுவது போல அங்கே நின்று குரியர் ஆட்கள் பேசிக் கொள்ளும் விஷயங்களைப் பேசியபடி வெற்றிடத்தைப் பார்க்கும் பாவனையில் குறிப்பில்லாமல் அந்த வீட்டைப் பார்த்தான். அப்போது அது வரை அமர்ந்திருந்த கூர்க்கா பதற்றத்துடன் மெல்ல எழுந்ததைக் கவனித்தான். “சரிடா. இன்னும் நிறைய டெலிவரி பண்றதுக்கு இருக்கு. ராத்திரி பேசறேன். வை” என்று இயல்பாகப் பேசியபடி நகர்ந்தான். பின் எப்போதும் அவன் அப்படி போன் பேசவில்லை.

மாலை நேரங்களில் அன்வர் ஐந்தரையிலிருந்து ஏழு மணி வரை வேறு வேறு நேரங்களில் குரியர் தபால் எடுக்க வருபவன் போல வருவான்.  எந்த ஒரு சமயத்திலும் அந்த வீட்டில் யாரும் பார்க்கக் கிடைக்கவில்லை. வீட்டில் ஆள் இருப்பது போலவே தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் கூர்க்காவின் பார்வை அவன் அங்கிருந்து நகரும் வரை அவன் மேலேயே இருப்பதை உணர்ந்திருக்கிறான்.

ஒரு முறை கூட அந்தக் கூர்க்கா வேறு யாருடனாவது பேசிக் கொண்டிருந்து அவன் பார்க்கவில்லை.  போனில் கூட அவன் பேசிக் கொண்டிருந்ததில்லை. இது இயல்பாகத் தெரியவில்லை. அவன் கூர்க்கா வேடத்திலிருக்கும் அஜீம் அகமதின் பாதுகாவலன்களில் ஒருவனாக இருக்கும் என்று தோன்றியது.

அதை உறுதிப்படுத்திக் கொள்ள அன்வர் இருட்ட ஆரம்பித்திருக்கும் நேரத்தில் குரியர் வாங்க அந்தத் தொழிற்சாலைக்குப்  போன போது தொழிற்சாலை வாட்ச்மேனிடம் மெல்லக் கேட்டான். “ஏன் அண்ணேஉங்களுக்கு இந்த வேலை போரடிக்கலையா?”

அதையெல்லாம் பார்த்தா வயிறு நிறையுமா தம்பிஎன்று அந்த வயதான வாட்ச்மேன் சொன்னார்.

அன்வர் எதிர்வீட்டில் இருக்கும் கூர்க்காவை மறைத்து நின்றபடி மெல்லக் கேட்டான். ”ஏதோ பேச்சுத் துணைக்கு உங்களுக்கு எதிர் பங்களா கூர்க்கா இருக்கார். அவரும் இல்லைன்னா உங்களுக்கு ரொம்பவே போர் தான்….”

இது போன்ற சமயங்களில் யாரைப் பற்றிப் பேசுகிறோமோ அவர்களை நோக்கிப் பார்வை போவது இயற்கை. அப்படி அந்தக் கூர்க்காவை இந்த வாட்ச்மேன் பார்த்து விட்டால் அவனைப் பற்றித் தான் பேசுகிறார்கள் என்பது அவனுக்குத் தெரிந்து விடும். அன்வர் மீது சந்தேகம் ஏற்பட்டு விடும். அதனால் தான் அவன் மறைத்து நின்றான்.

வாட்ச்மேன் அவன் யூகித்தது போலவே எதிர்ப்பக்கம் பார்க்க முற்பட்டு, அவன் மறைத்து நின்றிருந்ததால் பிறகு அவன் முகம் பார்த்து சொன்னார். “அவன் ஒரு முசுடு தம்பி. கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் அங்கே வேலைக்கு வந்தான். வந்த நாள்லயே அவன் கிட்ட பேச்சுக் கொடுக்கப் போனேன். அவன் சரியா பேசலைஅதுல இருந்து நானும் அந்த ஆள்கிட்ட பேசப் போறதில்லை…”

அந்த வீட்ல ஆள்களும் யாரும் இல்லை போலத் தெரியுது. ஆளே இல்லாத வீட்டைக் காவல் காக்கற நிலைமை வந்துடுச்சேன்னு கடுப்புல இருப்பான் போலருக்கு”

அப்படித்தான் தோணுது தம்பி. எப்பவாவது ஒரு தடவை ஒன்னு ரெண்டு பேர் அங்கே வந்து போறானுக. வீட்டு சொந்தக்காரன் துபாய்ல இருக்கான். துபாய் காசை செலவு பண்ண வழி தெரியல போலருக்கு. இந்த முசுடைச் சும்மா காவலுக்கு வெச்சுருக்கான்.”

அன்வருக்கு அந்த எதிர்வீடு அஜீம் அகமது வசித்து வரும் வீடாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்தது. போகும் போது அவன் அந்த வீட்டுப் பக்கம் திரும்பவில்லை. குரியர் கவர்கள் சரியாக இருக்கிறதா என்று கவனமாகச் சரிபார்ப்பவன் போல் எண்ணிப் பார்த்து விட்டு போனான்.

தொழிற்சாலை வாட்ச்மேனோடு பேசியபடி நின்ற குரியர் ஆளைச் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கூர்க்கா அந்த ஆள் இந்தப் பக்கம் திரும்பாமல் குரியர் கவர்களை எண்ணியபடி போனதால் அந்த வாட்ச்மேனுடன் இந்த வீட்டைப் பற்றிப் பேசியிருந்திருக்க வழியில்லை என்று புரிந்து கொண்டான். ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசி விட்டுப் போகும் போது அந்தப் பக்கம் பார்வையையும் திருப்புவது மனித சுபாவம். பார்வையில் இருந்து மறையும் வரையும் கூட அந்த ஆள் திரும்பிப் பார்க்கவில்லை. கூர்க்கா நிம்மதியடைந்தான்.
      


(தொடரும்)
என்.கணேசன்