சைத்ரா யோகி என்ற சொல்லுக்கு இலக்கணமாக பிரம்மானந்தாவை மட்டுமே அது வரை எண்ணி இருந்தவள். அதனால் கல்பனானந்தாவின் இந்த அறிவிப்பு அவளைத் திகைப்பில் ஆழ்த்தியது. பார்க்க சாந்தஸ்வரூபியாக இருந்த அந்தப் பெரியவர் பல சக்திகளைக் கொண்டவர் போல் தெரியவில்லை..
நர்சரி உரிமையாளர் அங்கே வேலை செய்யும் ஒரு இளைஞனைக் காட்டிச் சொன்னார். “அவன் வீட்டு பக்கத்துல ஒரு குடிசையில் தான் அவர் குடியிருக்கார்…”
அந்த இளைஞன் திரும்பி அவர்களைப் பார்த்தான். அவன் அங்கே சில வருடங்களாக
வேலை செய்வதால் கல்பனானந்தாவை நன்றாக அறிவான். அவர்கள் அந்தக்
கிழவரைப் பற்றித் தான் பேசுகிறார்கள் என்று உணர்ந்த அவன் அவரைப் பார்த்தான்.
அவன் முகமும் மலர்ந்தது.
அவன் அவர்களை நெருங்கி வந்து சொன்னான். “இந்தக் காலத்துல இந்த மாதிரி
ஒரு நல்ல மனுஷனை பார்க்க முடியாது சுவாமினி. போன வாரம் ஒரு பணக்கார பெரியவர் இங்கே வந்து
இவரை ரொம்ப பிடிச்சு போய் இவருக்கு பத்தாயிர ரூபாய் குடுத்துட்டு போனார். இவர் வாங்கல. அவருக்கு என்ன தோணிச்சோ இவர் காலடில பத்தாயிர ரூபாயை வெச்சுட்டு போயிட்டார்.
நானும் “பெருசு. வர்ற லட்சுமியை
ஏன் வேண்டாங்கற. எடுத்து வெச்சுக்கோ”ன்னு
சொன்னேன். சரின்னு எடுத்து வெச்சுகிட்டார். குடிசைலயும் அந்தப் பணத்தை மேலாகத்
தான் வெச்சிருக்கார். இவர் பக்கத்து வீட்டுக்காரன் திருடன்.
அவன் அதைப் பார்த்துட்டு அந்தப் பணத்தைத் திருடிகிட்டான். நான் அதைக் கண்டுபிடிச்சு இந்தப் பெருசு கிட்ட சொன்னால், இவர் என்ன சொன்னாரு தெரியுமா? “இவனுக்குக் கிடைக்கறதுக்காகவே
கடவுள் அந்தப் பணத்தை என் கிட்ட கொடுத்து வெச்சார் போலருக்கு. நல்லது”ன்னு சொல்லிட்டார். அப்பறமா
அவன் கிட்ட அத பத்தி இவர் கேக்கக்கூட இல்லை. ஐநூறு ரூபாய்க்கு
அடிச்சுகிட்டு சாகிற இந்தக்
காலத்துல இப்படியொரு மனுஷன்…”
அவரையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கல்பனானந்தா அவர்கள்
இருவரிடமும் மெல்லக் கேட்டாள்.
“இந்த ஒரு மாதத்தில் அவர் எப்போதாவது கவலையோ, கோபமோ,
வருத்தமோ பட்டு பார்த்திருக்கிறீர்களா?”
நர்சரி உரிமையாளரும்,
அந்த இளைஞனும் அவளைத் திகைப்புடன் பார்த்தார்கள். அவள் கேட்ட பின் தான் அதைப் பற்றி யோசித்தார்கள் என்பதும் அவர்களைப் பார்க்கையிலேயே
தெரிந்தது. பின் உண்மையான ஆச்சரியத்தோடு சொன்னார்கள்.
“இல்லை.”
அந்தப் பதிலை கல்பனானந்தா அறிந்திருந்தாள். அவளை ஆச்சரியப்படுத்தியது
அவர்கள் அந்தக் கேள்வியை எதிர்கொண்ட விதம் தான். எல்லோரும் ஒரு
மனிதனின் சம்பாத்தியத்தைப் பார்க்கிறார்கள், சாதனையைப் பார்க்கிறார்கள்,
சொத்தைப் பார்க்கிறார்கள், அந்தஸ்தைப் பார்க்கிறார்கள்.
ஆனால் யாருமே ஒரு மனிதன் எவ்வளவு சந்தோஷமாகவும் நிறைவாகவும் இருக்கிறான்
என்று யோசித்துப் பார்ப்பதில்லை. அது கணக்கெடுக்க முடியாது என்ற
காரணத்தாலா, இல்லை, அது ஒரு பொருட்டே அல்ல என்ற அலட்சியத்தாலா? உண்மையில் ஒரு கணமும் இழக்காத
அமைதி, ஒரு யோகியால் மட்டுமே முடிந்த ஆன்மீக உச்ச நிலை.
அதைப் பற்றி எத்தனையோ படித்திருந்தாலும், கேட்டிருந்தாலும்
ஒரு உதாரண மனிதரைப் பார்க்க முடிந்த பிரமிப்பு கல்பனானந்தாவிடம் தெரிந்தது.
கல்பனானந்தா மெல்ல ரகுராமனை நோக்கி நடந்தாள். சைத்ராவும் அவளைப் பின்
தொடர்ந்தாள். அவர் முன்னே நின்று கல்பனானந்தா கைகூப்பினாள்.
சைத்ராவும் கைகூப்பினாள்.
தன் முன் கைகூப்பி நிற்கிற இரண்டு பெண் துறவிகளையும் அவர் நிமிர்ந்து
பார்த்தார். மிகுந்த பணிவுடன் அவரும் கைகூப்பினார். “இந்தச் செடிகளில்
எதாவது உங்களுக்கு வேண்டுமா?” என்று அவர் கேட்டார்.
“உங்களிடம் இருக்கும் அமைதியையும், ஆனந்தத்தையும் கொஞ்சம்
தர முடியுமா?” கல்பனானந்தா பாதி விளையாட்டாகவும், பாதி நிஜமாகவும் கேட்டாள். கேட்கையில் அவள் கண்கள் ஏனோ
கலங்கின. அவள் அவ்வளவு சீக்கிரம் உணர்ச்சிவசப்படுபவள் அல்ல.
ஆனால் அந்தக் கணத்தில் அந்த யோகியிடம் அப்படிக் கேட்கையில் உள்ளிருந்து
ஏதோ ஒரு கதறல் எழுந்து கண்ணீராக வெளிப்படுவதை, அவளால் தவிர்க்க
முடியவில்லை.
அவர் மிகவும் கனிவாகச் சொன்னார். ”அது உங்களுக்குள்ளேயே இருக்கிறது.
அதை நீங்களே கண்டெடுத்துக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதை அடுத்தவர்கள் தர முடியாது. அதை வெளியே எத்தனை பிறவிகளில்
தேடினாலும், எங்கேயும், யாரிடமிருந்தும்
உங்களுக்குக் கிடைக்காது.”
கல்பனானந்தா பேச வார்த்தைகள் வராமல் அவர் கால்களைத் தொட்டு வணங்கி
நிமிர்ந்தாள். அவர்களை அழைத்து வந்த டிரைவர் பாண்டியனின் ஆள். எங்கேயும்
அதிகம் பேசிக் கொண்டு இருக்க அவர்களுக்கு அனுமதியில்லை. மீறினால்
இப்படி அபூர்வமாக வெளியே வரவும் அடுத்த முறை வாய்ப்பு கிடைக்காது. அதனால் கூடுதலாகச் சிறிது நேரம் அங்கிருக்க மனம் ஆசைப்பட்டாலும், அவள் மேலும் தாமதிக்காமல், வாங்கிய செடிகளுடன்,
அங்கிருந்து கிளம்பினாள்.
சைத்ராவும் அவர் முன்னிலையில் பேரமைதியை உணர்ந்தாள். அவளும் கல்பனானந்தாவைப் போலவே அவர் கால்களைத்
தொட்டுக் கும்பிட்டாள். அவர் அவளையும் கனிவுடன் பார்த்து கைகளை உயர்த்தி ஆசிர்வதித்தார்.
நர்சரி உரிமையாளரும்,
அந்த இளைஞனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கிழவரிடம் சிலர் மட்டும் அதிகமாக எதையோ உணர்ந்து வணங்குவது அவர்களுக்கு
ஆச்சரியமாக இருந்தது. அதுவும், இப்படி துறவிகளே
கூட வணங்குவது பேராச்சரியமாகத் தானிருந்தது.
அறைக்குத் திரும்பி வந்த பின் சைத்ரா தன் சந்தேகத்தைக் கேட்டாள். “சுவாமினி. அவரை நீங்கள் யோகி என்று எப்படிச் சொன்னீர்கள்? அவரிடம்
பெரிய சக்தி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே?”
கல்பனானந்தா சொன்னாள்.
“எல்லாவற்றையும் விடப் பெரிய மகாசக்தி எப்போதும் சச்சிதானந்த நிலையில்
இருப்பது தான் சைத்ரானந்தா. உலகம்
ஒவ்வொரு கணமும் பல விதங்களில் நம்மைச் சோதித்துக் கொண்டிருக்கையில், எல்லா சமயங்களிலும் மன அமைதியையும்,
ஆனந்தத்தையும் தக்க வைத்துக் கொள்வது யோகிக்கு மட்டுமே சாத்தியம்.
ஞானிகள் பல நேரங்களில் தக்க வைத்துக் கொண்டு சில நேரங்களில் தொலைப்பார்கள்.
நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு அதன் உண்மையான அறிமுகமே இருப்பதில்லை.
அவரைப் போன்ற யோகிகளிடம் பார்த்து தான் அதன் அடையாளமே தெரிந்து கொள்ள
வேண்டியிருக்கிறது…”
“என்னைச் சாதாரணம் என்பதை நான் ஒத்துக் கொள்வேன். ஆனால்
நீங்கள் சாதாரணம் அல்ல சுவாமினி” என்று சைத்ரா சொன்னாள்.
கல்பனானந்தா அவள் சொன்னதில் அன்பை மட்டும் பார்த்து மௌனமாக இருந்தாள்.
சைத்ரா திடீரென்று உணர்ச்சி பொங்கச் சொன்னாள். “என் தாத்தா அந்த யோகியைப்
பார்த்தால் கண்டிப்பாக மிக மிக சந்தோஷப்படுவார் சுவாமினி.”
கல்பனானந்தா புன்னகைத்தாள். நியாயமாக, துறவிகளுக்கு
உறவுகள் கிடையாது என்பதை அவள் நினைவுறுத்த வேண்டும். ஆனால் அந்த
வெகுளிப் பெண்ணிடம் அவள் சொல்ல முற்படவில்லை.
சைத்ரா சொன்னாள்.
“என் தாத்தாவும் வித்தியாசமானவர். உங்களுக்கு ஒன்று
தெரியுமா சுவாமினி. முதல்வர் அருணாச்சலம் என் தாத்தாவின் மிக
நெருங்கிய நண்பராம். இரண்டு பேரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரிப்படிப்பு
வரைக்கும் ஒன்றாகப் படித்தவர்களாம். ஆனாலும் தாத்தா அவர் முதல்வரான
பிறகு அவரைப் பார்க்கக் கூடப் போனதில்லை. இது கூட என் அப்பா சொல்லித்
தான் எனக்குத் தெரியும். தாத்தாவிடம் கேட்டால் “சும்மா போய் அப்படியெல்லாம் தொந்தரவு செய்யக்கூடாது” என்கிறார். எப்படி இருக்கிறது? என் தாத்தா சன்னியாசம் வாங்கவில்லையே ஒழிய அவர் கிட்டத்தட்ட
அப்படித் தான்.”
சைத்ரா காதல் விஷயத்தில் தோல்வி அடைந்தாலும், குடும்பத்தினர்
விஷயத்தில் அதிர்ஷ்டசாலியாக இருந்திருக்கிறாள் என்று கல்பனானந்தாவுக்குத் தோன்றியது.
சைத்ராவுக்கு நிஜ யோகியை கல்பனானந்தா
அடையாளம் காட்டியும், பிரம்மானந்தாவையும் அவள் யோகியென்றே நம்பினாள். நவீன காலத்தில்
பிரம்மானந்தா போன்றோரால் தான் நிறைய ஆட்களிடம் ஆத்மஞானத்தைக் கொண்டு போக முடியும் என்று
நம்பினாள். காலத்திற்கேற்ப சில மாற்றங்கள் பிரம்மானந்தா செய்து கொண்டிருக்கிறார்
என்று நினைப்பதையும் அவள் கல்பனானந்தாவுக்குத் தெரிவித்தாள். பிரம்மானந்தா
மேல் சைத்ரா வைத்திருந்த அபார நம்பிக்கை அவளுடைய உயிரையே ஒரு நாள் பறித்து விடும் என்பதை
கல்பனானந்தா நினைத்துக்கூட பார்க்கவில்லை...


No comments:
Post a Comment