சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 17, 2022

இல்லுமினாட்டி 146




ஜிப்ஸி மெல்ல அவன் இனத்தவர்களை விட பல மடங்கு அறிவிலும் சக்தியிலும் மிஞ்சிய சித்தர்கள், யோகிகள் என்ற வகையினர் இருப்பதைக் கண்டுபிடித்தான். அவர்கள்  மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் எல்லையில்லாத சக்தி படைத்தவர்களாக இருப்பது தெரிந்தது. அவர்களின் சக்தி மனித இனத்தை முழுவதுமாக அழிய விடாமல் மௌனமாக இயங்குவது அவனுக்குத் தெரிந்தது. அவர்கள் சக்திகளும், சக்தி அலைவீச்சுகளும் அவனுடைய ஆராய்ச்சிக்குச் சிக்கவில்லை.

இன்னொரு விஷயம் அவனுக்கு ஒரு புதிராகவே இருந்தது. மனிதர்களின் எண்ணங்கள், நம்பிக்கைகள், செயல்கள் மூன்றும் சேர்ந்தே விதியாக மாறுகின்றன என்று கணிதக்கோட்பாடு போல அவன் கணித்திருந்தான். அப்படியே குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் இப்படி முடிவார்கள் என்று அவனால் துல்லியமாகக் கணக்கிட முடிந்தது. ஆனால் அவனால் விஸ்வம் உட்பட சிலர் விதியின் முடிவைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.  அவர்கள் வாழ்க்கையில் சில குறுக்கீடுகள் இருக்கும், அதன் பின் திசை மாறும் என்றிருந்தால் அந்தக் குறுக்கீடு வரும் முன் விதியைத் தீர்மானிப்பது முடியாத காரியம் என்று பிற்பாடு மெல்லக் கண்டுபிடித்தான். விஸ்வத்தின் வாழ்க்கையில் குறுக்கீடு க்ரிஷ் வடிவில் வந்தது.

ஜிப்ஸி வருவதும் மனித இனம் அழியும் அபாயத்தில் இருப்பதும் கூட தென்னிந்தியாவில் ஒரு ரகசிய ஆன்மீக இயக்கத்தின் யோகிகள் பல காலம் முன்பே சொல்லிச் சென்றிருந்தது அவனைத் திகைப்பில் ஆழ்த்தியது. இந்த அளவு ஞானமுள்ளவர்கள் ஏன் மனித இனத்தை இப்படியே விட்டு வைத்திருக்கிறார்கள் என்ற கேள்விக்கு அவனுக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை.  அதைத் தொடர்ந்து இல்லுமினாட்டியிலும் ஆரகிள் இல்லுமினாட்டியை அழிக்கும் ஒரு சக்தி வரும் என்று சுமார் 125 வருடங்களுக்கு முன்பாகவே இந்தக் காலக் கட்டத்தைச் சொல்லியிருந்ததும் அவனைத் திகைக்க வைத்தது. அதன் பின் அவன் இங்கு அமானுஷ்ய சக்திகள் குறித்த சில அபார ஞானம் உலகில் அங்கங்கே சில பகுதிகளில் பழங்காலங்களில் இருந்ததைக் கண்டுபிடித்து அவற்றையும் தெரிந்து கொண்டு வியந்தான். அப்படி அறிந்து கொண்ட கலைகளில் ஒன்று தான் வூடு.

இந்த வகை ஞானங்கள் அவன் இனத்தில் இல்லை. ஒரு பக்கம் முட்டாள்தனமான தற்கொலைக்கொப்பான வாழ்க்கை முறை, இன்னொரு பக்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அசாதாரணமான ஞானம் இரண்டும் பெரிய முரண்பாடாக அவனுக்குத் தோன்றியது. அதற்கேற்ற மாதிரியே அவன் தேர்ந்தெடுத்திருந்த விஸ்வமும் அவன் வாழும் சமூகத்திற்குச் சம்பந்தமில்லாதபடி அதிக அறிவுடனும், அசாத்திய உறுதி, உழைப்புடனும் முன்னேறி வந்தான். அவனை அடுத்த கட்டமான இல்லுமினாட்டி பக்கம் மெல்ல ஜிப்ஸி நகர்த்தி விட்டு வந்தான். க்ரிஷ் குறுக்கிட்டு விஸ்வம் உயிரிழப்பதைத் தன் சக்தியால் உணர்ந்த ஜிப்ஸி அந்த நேரத்தில் வூடூ இசையை இசைத்து அவன் கற்றிருந்த கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை நினைவுபடுத்தினான். உடனே சில மைக்ரோ வினாடிகளில் அதை உணர்ந்த விஸ்வம் வேறு உடல் புகுந்தும் சாதித்துக் காட்டியது அவனுக்குப் பெருமையாக இருந்தது. மறுபடியும் புதிய எல்லைகளை அவன் தாண்டுவான், புதிய சாதனைகளைச் சாதிப்பான் என்று நம்பிக்கை பிறந்தது.

ஜிப்ஸி இந்தப் பூமியை விட்டுப் போக வேண்டிய காலம் நெருங்கி விட்டது. இந்த முறை அவன் பூமியில் தங்கியிருந்த காலம், வரும்போது அவன் திட்டமிட்டிருந்ததை விட அதிகமாகி விட்டது. வேறு ஒரு கிரகத்துக்குச் செல்லும் போது அதற்குத் தேவையான சக்திகளைச் சேர்த்துக் கொண்டு போக வேண்டியிருக்கிறது. அந்தச் சக்திகள் முடிவடைவதற்குள் திரும்பி சொந்தக் கிரகத்திற்குப் போய்ச் சேர்ந்து விட வேண்டியிருக்கிறது. அதனாலேயே அவன் தன் சக்திகளை இந்த முறை சிக்கனமாகச் செலவழிக்க வேண்டி இருக்கிறது. அவன் பயணித்து வந்த விண்கலத்தை அடர்ந்த அமேசான் காடுகளுக்குள் ஒளித்து விட்டு வந்திருக்கிறான். அங்கிருக்கும் வரை அது இந்தப் பூமியின் செயற்கைக்கோளுக்கு அகப்படாது. அவன் தேவையில்லாமல் அவன் விண்கலமும் அவன் சக்திகளும் பூமியின் விஞ்ஞானிகளால் அலசப்படுவதை அவன் விரும்பவில்லை. அதனாலேயே அவன் உருவங்கள் எடுக்கும் போதும், உருவங்களைக் கலைக்கும் போதும் அதை ஏதாவது கருவிகள் பதிவு செய்யாதபடி கவனமாக இருந்து கொள்கிறான். அந்த வெளிப்பாடுகளில் அவர்கள் நிறைய தெரிந்து கொள்ள முடியும்.

அவனுடைய தனிப்பட்ட சக்தியும், விண்கலத்தின் சக்தியும் அவன் நாளை கிளம்பிப் போனால் தான் அவனுடைய கிரகம் போய்ச் சேரப் போதுமானதாக இருக்கும். அவன் கிளம்ப இன்னும்  36 மணி நேரம் தான் இருக்கிறது. போவதற்கு முன் அவன் திட்டம் நிறைவேறியிருந்தால் மகிழ்ச்சியாகப் போயிருப்பான்.   இந்த முறை அமானுஷ்யன் வந்து கெடுத்து விட்டான். எர்னெஸ்டோ அவன் திட்டத்தைப் புதைத்தே விட்டார். ஆனாலும் இப்போது விஸ்வத்தைப் பார்த்தால் அவன் தன் சக்திகளை எல்லாம் திரும்பப் பெற்றுக் கொண்டிருப்பது போலத் தான் தோன்றுகிறது.

எர்னெஸ்டோ அவனுக்கு அனுப்பியிருக்கும் மெயிலைப் பார்த்தவுடன் அவன் கண்டிப்பாக கோபத்தின் உச்சத்திற்குத் தான் போவான். விஸ்வம் இல்லுமினாட்டியின் தலைவனாகவில்லை என்ற வருத்தம் சற்று முன் வரை அவனுக்கு இருந்தது. ஆனால் ஆத்திரமும் நிறைய சக்திகளும் சேர்ந்து பெற்றிருக்கும் விஸ்வம் இனி முடிந்தபடியெல்லாம் எதிரிகளை அழிக்க ஆரம்பிப்பான் என்பதில் சந்தேகமேயில்லை. அவன் போவதற்கு முன்பாவது சில அழிவுகளைப் பார்த்து விட்டால் ஆறுதலாக இருக்கும்...

மனித இனமே தன்னை அழித்துக் கொள்ளும் நிலைமையை ஏற்படுத்தித் தோற்ற பிறகு தன்னுடைய சக்திகளை உபயோகித்தே அழிவு வேலைகளைச் செய்து விட்டுக் கிளம்பலாம் என்று கூட ஜிப்ஸிக்குத் தோன்றியிருக்கிறது.  நியாயம், தர்மம் என்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவன் தான் அவன். ஆனால் க்ரிஷின் வேற்றுக்கிரகவாசி நண்பன் எப்போது வேண்டுமானாலும் இங்கே வரலாம். ஜிப்ஸி செய்திருக்கும் காரியத்தைப் பார்த்துக் கோப்பபட்டு அவனுடைய கிரகம் தேடி வந்தே தண்டிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. சக்திகளிலும் வலிமையிலும் அவன் ஜிப்ஸியை விடப் பலமடங்கு உயர்ந்தவன் என்பதால் ஜிப்ஸி அந்த ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராக இல்லை.

நினைவுகளிலிருந்து மீண்ட அவன் தன் கவனத்தை இல்லுமினாட்டியினர் இனி என்ன செய்யப் போகிறார்கள் என்பதை அறிவதற்காகத் திருப்பினான். அப்போது தான் க்ரிஷும், அமானுஷ்யனும் இங்கே காரில் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. இனி இரண்டு மணி நேரத்திற்குள் இங்கே வந்து விடுவார்கள். ஜிப்ஸி க்ரிஷ் அமானுஷ்யனுடன் வருவதில் பெரிய பிரச்சினையை உணர்ந்தான்.  உடனே விஸ்வத்தை எச்சரிக்கும் அவசியத்தையும் உணர்ந்தான். இது போன்ற சக்திகள் பெற்றுக் கொண்டிருக்கும் தியானத்தில் திடீரென்று குறுக்கிடுவது ஆபத்து... ஆனால் அவனைத் தியானத்திலிருந்து எழுப்பியும் ஆக வேண்டும். என்ன செய்வது என்று யோசித்து ஜிப்ஸி கிதார் எடுத்து வாசிக்க ஆரம்பித்தான். முதல் முதலில் விஸ்வத்தைச் சந்தித்த போது வாசித்த அதே இசைஇது அவனைத் தியானத்திலிருந்து மெல்ல லாவகமாக வெளியேற்றும்

விஸ்வம் மூன்றாவது நிமிடத்தில் தியானத்தின் நடுவே கிதார் இசையை உணர ஆரம்பித்தான். மெல்லக் கண்விழித்து அவன் மேலே வந்தான். ”என்ன நண்பா?” என்று கேட்டான்.

ஜிப்ஸி சொன்னான். “க்ரிஷும் அமானுஷ்யனும் இங்கே வந்து கொண்டு இருக்கிறார்கள்…”

விஸ்வம் திகைப்புடன் கேட்டான். “எதற்கு?”

உன்னிடம் ஏதோ பேச வேண்டும் என்று வருகிறான் போலிருக்கிறது

விஸ்வம் திகைப்பு மாறாமல் கேட்டான். “அவன் பைத்தியமா?”

அப்படி நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அப்படிப் பைத்தியமாகப் போய் தான் அவன் பல காரியங்களைச் சாதித்திருக்கிறான்.”

எர்னெஸ்டோ சமாதானம் பேச அவனை அனுப்பி இருக்கிறாரா?”

அப்போது தான் அவர் அனுப்பிய மின்னஞ்சலை அவன் இன்னும் படிக்கவில்லை என்பது ஜிப்ஸிக்கு நினைவு வந்தது. அவன் மெல்லச் சொன்னான். “எர்னெஸ்டோ சமாதானத்தை விரும்பவில்லை. போரைத் தான் அறிவித்திருக்கிறார். நீ அவரைக் கொல்ல முயற்சி செய்திருக்கிறாய் என்பதற்கு அவருக்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் உன்னை இல்லுமினாட்டி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறாராம். உன்னிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும் உறுப்பினர்களும் பதவி நீக்கம் செய்யப்படுவார்களாம்...”

அதன் பொருள் என்னவென்பதை மெல்லப் புரிந்து கொண்ட  விஸ்வம் தான் இத்தனை காலம் ஆசையாய்க் கற்பனையில் கட்டியிருந்த கோட்டைகள் எல்லாம் தவிடுபொடியானதை உணர்ந்தான். அதிகபட்சமாய் அவனைத் தீர்த்துக் கட்ட எர்னெஸ்டோ ஒரு படையையே அங்கே அனுப்பக்கூடும் என்று தான் அவன் எதிர்பார்த்தானே ஒழிய இதை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆத்திரம் சிறிது சிறிதாக அதிகரிக்க ஆரம்பித்தது.

ஜிப்ஸியால் அந்தக் கணத்தில் விஸ்வத்தின் சக்திகளை அளக்க முடிந்தது இந்த உடலில் அவன் பெற முடிந்த அதிகபட்ச சக்திகளை இப்போது அடைந்திருந்தான். இனி யாரையும் இவன் சமாளிப்பான் என்று எண்ணியபடியே ஜிப்ஸி விஸ்வத்தை எச்சரித்தான். “அவன் பேசி இல்லுமினாட்டியையே மாற்றியவன் என்பதால் உன்னையும் மாற்றி விட முடியும் என்று நினைக்கிறான்....நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”

முட்டாள்... முட்டாள்....” என்று முழு வெறுப்புடன் க்ரிஷை விஸ்வம் அழைத்தது ஜிப்ஸிக்கு இதமாக இருந்தது.

(தொடரும்)
என்.கணேசன்   

இந்த நாவல், சாணக்கியன் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.




3 comments:

  1. Super and thoughtful episode. Eagerly waiting for the meeting of giants.

    ReplyDelete
  2. சில உலக உண்மைகளை ஜிப்ஸியின் எண்ண ஓட்டங்களின் வழியாக உணர்த்தியது அருமை... விஸ்வம் சக்தி வேறு நிறைய பெற்றிருக்கிறான்....இனி என்ன நடக்குமோ...?

    ReplyDelete
  3. வாய்மையே வெல்லும்....

    ReplyDelete