சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 16, 2021

இல்லுமினாட்டி 120




க்ரிஷ் இனியும் இல்லுமினாட்டியிடம் சிந்து பற்றிய உண்மைகளை மறைப்பது நியாயமில்லை என்பதை உணர்ந்தான். இனி அவன் சென்னையில் நடத்தவிருக்கும் நாடகம் அவர்கள் பார்வைக்கு வராமல் போகாது என்பதோடு அவன் சந்தேகப்படும் உண்மையையும் இல்லுமினாட்டியின் உறுப்பினராக அவன் அவர்களிடம் இப்போதும் சொல்லாமல் இருக்க முடியாது.  

மறுநாள் காலை எர்னெஸ்டோ வீட்டில் அவர்கள் நால்வரும் சந்தித்துக் கொண்ட போது க்ரிஷ் ஆரம்பித்தான். “நான் ஒரு உண்மையை உங்களிடம் சொல்லாமல் விட்டதற்கு உங்களிடம் முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அந்த உண்மையைச் சொல்லாததற்கும் சரியான காரணம் இருந்தது. என் அண்ணன் உதயைக் காதலிக்கும் சிந்து உண்மையில் விஸ்வத்தால் அனுப்பப்பட்டவள்...”

இம்மானுவல் க்ரிஷை முறைத்துப் பார்த்தான். எர்னெஸ்டோ கடுமையாகப் பார்த்தார். அக்‌ஷய் ஆச்சரியத்துடன் பார்த்தான். க்ரிஷ் சுருக்கமாக நடந்ததை எல்லாம் சொன்னான். “... அவளைப் பற்றி உங்களிடம் சொல்லி நீங்கள் அவளை விசாரிக்க முடிவு செய்தால் இதுவும் இன்னொரு மனோகர் விஷயமாக முடிந்து விடும். அவள் சிக்கியது தெரிந்தால் விஸ்வம் தன் திட்டத்தைக் கைவிட்டுவிடப் போவதில்லை. அவளைத் தீர்த்துக்கட்டி இன்னொரு ஆளை வேறொரு விதமாகத் தயார் செய்வான். இதைக் கண்டுபிடிக்க முடிந்தது போல் அதையும் கண்டுபிடிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் அவளை என் கண்காணிப்பில் வைத்திருந்தேன். சில தியானப்பயிற்சிகள் செய்து அவள் மனதை மாற்றும் அலைவரிசைகளையும் முடிந்த வரை அனுப்பி வைத்தேன்..... அவளை மாற்றியது என் குருவின் அருளா, என் முயற்சிகளா, அவள் விதியே தானா என்று தெரியவில்லை. ஆனால் மாறியிருக்கிறாள். நேற்று விஸ்வம் போன் செய்ததை அவள் எனக்குத் தெரிவித்திருக்கிறாள்....”

இம்மானுவல் கோபத்துடன் கேட்டான். “க்ரிஷ் நீயும் உன் குடும்பமும் எத்தனை பெரிய ஆபத்தில் மாட்டியிருக்க முடியும் என்பதை உணர்கிறாயா?”

எர்னென்ஸ்டோ கேட்டார். “க்ரிஷ். நீ இல்லுமினாட்டியில் சேரும் போது செய்திருந்த உறுதிமொழிகள் எல்லாம் ஞாபகம் இருக்கிறதா? நீ செய்திருப்பது  எங்கள் விதிகளில் பெரிய குற்றம். தெரியுமா?”

க்ரிஷ் சொன்னான். “தவறு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் என் உள்ளுணர்வு என்னை வழி நடத்துவதாக நான் உணரும் போது அதனால் இது வரை எந்த ஆபத்தும் வந்ததில்லை. மாறாக அந்த வழியே போகும் போது நன்மையே தான் நடந்திருக்கிறது. இப்போது கூட விஸ்வத்தின் மிகப் பெரிய திட்டம்  அதனால் தான் தெரிந்திருக்கிறது.”

இம்மானுவல் சொன்னான். “அவளை அனுமதிக்காமலேயே இருந்திருந்தால் அந்த மிகப்பெரிய திட்டம் நடந்தே இருக்காது....”

“நான் மிகப்பெரிய திட்டம் என்று சொன்னது உதயையோ என் தாயையோ அவன் கொல்ல நினைத்த திட்டத்தை அல்ல. அவன் நம் தலைவரைக் கொல்ல நினைத்திருக்கும் திட்டத்தை...”

எர்னெஸ்டோவும், அக்‌ஷயும் க்ரிஷைக் கூர்மையாகப் பார்க்க இம்மானுவல் திகைப்புடன் கேட்டான். “என்ன சொல்கிறாய்?”

“விஸ்வம் தலைவரை, புதன், வியாழன் இந்த இரண்டு நாட்களில் எப்படியோ கொல்லத் திட்டமிட்டு இருக்கிறான் என்று நினைக்கிறேன். அந்தச் சமயத்தில் நான் இல்லுமினாட்டி விவகாரங்கள் எதிலும் ஈடுபட்டு விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் என்னை இந்தியா அனுப்ப, என் அண்ணன் அல்லது அம்மாவைக் கொல்லும் இந்தத் திட்டத்தைப் போட்டிருக்கிறான். என்னைப் பழிதீர்க்க அவர்களைக் கொல்வது மட்டும் அவன்  உத்தேசமாய் இருந்தால் அதை உடனடியாகச் செய்திருப்பான். எந்த நேரமும் செய்திருக்கலாம். இத்தனை சிரமம் எடுத்துக் கொண்டு இந்த மாதிரி சிந்துவை என் வீட்டுக்கு எங்கள் எல்லோருடனும் நெருக்கமாகப் பழக வைத்து, “நான் சொல்கிற நாளில் சொல்கிறபடி செய்” என்று தயாராக இருக்க வைத்திருக்க மாட்டான்....”

மூவரும் மௌனமாக யோசித்தார்கள். அவன் சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்று எர்னெஸ்டோவும், இம்மானுவலும் நினைத்த போது அக்‌ஷய் குழப்பத்தோடு கேட்டான்.  “நீ இங்கே இருந்தால் என்ன செய்வாய் என்று அவன் பயப்படுகிறான்?”

இம்மானுவல் புன்னகையுடன் சொன்னான். “அது விஸ்வத்துக்கே  தெரிந்திருக்க வழியில்லை. பயம் மட்டும் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் சென்ற முறை இல்லுமினாட்டி கூட்டத்திலும் க்ரிஷ் வந்து எதையும் மாற்ற முடியும் என்று நாங்கள் உட்பட யாருமே நினைத்திருக்கவில்லை. ஆனாலும் க்ரிஷ் வந்து எல்லாவற்றையும் மாற்றி விட்டான். அதனால் இந்த முறை விஷப்பரிட்சையில் இறங்க வேண்டாம் என்று நினைத்திருக்கலாம்....”

எர்னெஸ்டோ க்ரிஷிடம் கேட்டார். “நீ ஏன் புதன் வியாழன் என்று இரண்டு நாட்களை மட்டும் சொல்கிறாய்?”

“உள்ளுணர்வு சொல்லும் யூகம் தான். செவ்வாய் இரவுக்குள் அந்த விஷத்தை உணவில் சேர்க்க வேண்டும் என்பதை அவன் குறிப்பாகச் சொல்லி இருக்கிறான். மயக்கமாக சில மணி நேரங்களாகும் என்றும் சொல்லியிருக்கிறான். அப்படியானால் புதன் காலைக்குள் எனக்குத் தகவல் வரும். நான் உடனே கிளம்பி விடுவேன். ஆக அதற்குப் பின் நான் இந்தியாவில் இருப்பது நல்லது என்று அவன் நினைக்கிறான். மரணம் வர ஒரு வாரம் ஆகும் என்றால் அது வரை நான் கண்டிப்பாக அங்கேயே தான் இருப்பேன். அதற்குள் அவன் தன் வேலைகளை முடித்து விடலாம் என்று நினைத்து இருக்கலாம். அவன் நான் இருக்க வேண்டாம் என்று நினைக்கும் புதன் கிழமை காலையோ நீங்கள் வாஷிங்டனில் இருப்பீர்கள். உங்களைக் கொல்வது ம்யூனிக் பங்களாவில் சாத்தியமில்லை என்று அவன் நினைத்திருக்கிறான். அதனால் தான் இங்கே அவன் முயற்சி எதுவும் எடுக்கவில்லை. அந்தப் புதன் காலையிலிருந்து நீங்கள் திரும்பவும் ம்யூனிக்கில் இங்கே வந்து சேரும் வரை ஏதாவது செய்ய அவனுக்கு வாய்ப்புகள் அதிகம் என்று நான் நினைக்கிறேன்...”  

அக்‌ஷய் சொன்னான். “நீ சொல்வதைப் பார்த்தால் முக்கியமாக வாஷிங்டனில் அவனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக எண்ணுகிறான் என்றாகிறது. அவன் கோணத்திலிருந்து அவன் எண்ணுவது தவறில்லை...”

இம்மானுவல் அக்‌ஷயைப் பார்த்தான். நேற்று தான் அவனிடம் விஸ்வம் வாஷிங்டன் போக வாய்ப்பே இல்லை என்று சொல்லியிருந்தான். இப்போது இந்த யூகம் சரியாக இருந்தால் விஸ்வம் வாஷிங்டன் போக அல்லது முன்கூட்டியே போயிருக்க வாய்ப்பு இருக்கிறது. அவன் அதிர்ந்து போனான்.

அக்‌ஷய் இம்மானுவலிடம் கேட்டான். “தலைவர் வாஷிங்டனில் நடக்கும் அந்த விழாவுக்குப் போவார் என்று யாருக்கெல்லாம் தெரியும்?”

“இல்லுமினாட்டி உறுப்பினர்களுக்கும் எங்கள் உளவுத்துறைக்கும் மட்டும் தான் தெரியும்.”

அக்‌ஷய் கேட்டான். “அப்படியானால் அவனுக்குத் தகவல் போயிருப்பது உங்கள் உறுப்பினர் யாராவது மூலமாகவோ, உளவுத்துறை ஆட்கள் யாராவது மூலமாகவோ என்று எடுத்துக் கொள்ளலாமா?”

இம்மானுவல் அதிர்ச்சியுடன், தர்மசங்கடமும் அடைந்து சொன்னான். “அவன் கூட்டாளி எதையும் அறிய முடிந்தவன் என்பதால் அவன் மூலமாகக்கூட விஸ்வம்  அறிந்திருக்கலாம்”

திடீரென்று எர்னெஸ்டோ வாய்விட்டுச் சிரித்தார். மூவரும் அவரைத் திகைப்புடன் பார்த்தார்கள். அவர் க்ரிஷிடம் சொன்னார். “இதையெல்லாம் பார்த்தால் ஒரு வேடிக்கையான உண்மை என்னைச் சிரிக்க வைக்கிறது. விஸ்வத்துக்கு இல்லுமினாட்டி மீதோ, இல்லுமினாட்டியின் பாதுகாப்பு வீர்ர்கள் மீதோ பயமில்லை. பாதுகாவலாக இருக்கும் அமானுஷ்யன் மீதும் பயமில்லை. அவர்கள் எல்லாரும் இருந்தாலும் கவலைப்படாதவன் அவன் வேலை எல்லாம் முடிகிற வரை நீ இடையே போய் காரியத்தைக் கெடுக்காமல் இருந்தால் சரி என்று நினைக்கிறான் என்று புரிகிறது.  நீ நிஜமாகவே சரித்திரம் படைத்து விட்டாய் க்ரிஷ். யாருக்கும் பயப்படாத உன் நண்பன் இப்போது உனக்கு மட்டும் தான் பயப்படுகிறான். ஏனென்றால் உன்னை மட்டும் தான் அவனால் அனுமானிக்க முடியவில்லை போலிருக்கிறது....”

அவர் சொன்னதிலிருந்த உண்மையின் வேடிக்கையை மூவரும் உணர்ந்தாலும் அவரை வியப்புடன் பார்த்தார்கள். விஸ்வம் போன்ற ஒரு ஆபத்தான மனிதன் அவரைக் கொல்லத் திட்டமிட்டிருப்பது அவரைப் பாதிக்கவில்லை என்பதும் அவரால் இப்படி வாய்விட்டுச் சிரிக்க முடிகிறது என்பதும் அவர் மனதின் உறுதியை அவர்களுக்குக் காட்டியது.... இதுவல்லவா தலைமைப் பண்பு என்று வியக்க வைத்தது.



(தொடரும்)
என்.கணேசன்


7 comments:

  1. Very eager to know Viswam's Washington Plan and How Akshay and Krish are going to save Ernesto.

    ReplyDelete
  2. எங்கள் hero அக்‌ஷ்ய்-தான்.

    ReplyDelete
    Replies
    1. Same sir, *AKSHAY* is our hero, krish irandaam ulagam la venaa hero vaa irunthukkatum..

      Delete
  3. Wowwww,,, krish super ah guess panninaan, Washington la akshay thaan protect ah iruppaar nu nenachen, but athuku munnadiye krish kandu pudichathu semma,,


    And

    Positive role aiyum, negative role aiyum equal ah balance panna ungalaala thaan mudiyum ganesan sir...

    ReplyDelete
  4. கிரிஷ் அணி உண்மையை கண்டுபிடித்து விட்டது... இனி பாதுகாப்பாக இருக்க அவர்கள் எடுக்கும் முடிவு என்ன?

    ReplyDelete