என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, September 19, 2022

யாரோ ஒருவன்? 103



ஜீம் அகமது ரிஷிகேசத்துக்கு இரண்டு பாதுகாப்பாளர்களோடு இரவு பத்தரை மணிக்கு காரில் வந்து சேர்ந்தான். காளிங்க சுவாமி வழக்கமாக வரும் கங்கைக்கரைப் பகுதியை அவர்கள் மூன்று பேரும் அடைந்த போது ஏற்கெனவே சுவாமியின் பக்தர்கள் சுமார் நூறு பேர் அங்கே காத்திருந்தார்கள். இன்னும் காளிங்க சுவாமி வந்திருக்கவில்லை. குளிர் மிகவும் கடுமையாக இருந்தது. அங்கே யாருக்கும் உட்கார நாற்காலியோ, மற்ற வசதிகளோ இல்லை. ஜனார்தன் த்ரிவேதி கூட ஒரு துண்டைக் கீழே விரித்து அதன் மேல் அமர்ந்திருந்தார். அவரை அந்த இருட்டில் கண்டுபிடிக்க அஜீம் அகமதுக்குச் சிறிது நேரம் தேவைப்பட்டது. அவர் அருகே அவர் ஆட்கள் இருவர் உட்கார்ந்திருந்தார்கள். பக்தர்கள் யாரும் மிக நெருக்கமாகவோ, வரிசையாகவோ அமர்ந்திருக்கவில்லை.

அஜீம் அகமது நேற்றே இரண்டு ஆட்களை இந்த இடத்தைக் கண்காணிக்க அனுப்பி வைத்திருந்தான். இன்று ஜனார்தன் த்ரிவேதியைப் பின் தொடர்ந்து வர வேறு இரண்டு ஆட்களை அனுப்பி வைத்திருந்தான். இரு தரப்பும் அவன் அங்கே வந்து சேர்ந்தவுடனே போன் செய்து சொன்னார்கள். ”ரகசியக் கண்காணிப்பு இங்கேயோ, ஜனார்தன் த்ரிவேதியைத் தொடர்ந்தோ இல்லை”.

கண்காணிப்புக்கு இனி அவசியமில்லை என்று மகேந்திரன் மகன்  நினைத்து விட்டான் போலிருக்கிறது என்று அஜீம் அகமது திருப்தி அடைந்து.  ஜனார்தன் த்ரிவேதிக்குப் போன் செய்தான். அவருடைய போன் மூன்று முறை அடித்த பின் இணைப்பைத் துண்டித்தான். ஜனார்தன் த்ரிவேதியின் அருகே அமர்ந்திருந்த அவரது ஆட்கள் மெல்ல எழுந்து போனார்கள். ஜனார்தன் த்ரிவேதியின் அருகே இடம் காலியானவுடன் அஜீம் அகமது இங்கே இடம் காலியானதைப் பார்த்துப் போய் அமரும் ஆள் போல அங்கே போய் அமர்ந்தான். அவனுடைய ஆறு ஆட்களும், ஜனார்தன் த்ரிவேதியின் இரண்டு ஆட்களும் அவர்களைப் பார்க்க முடிந்த தூரங்களில் உட்கார்ந்து கொண்டார்கள். உதவி தேவைப்பட்டால் அவர்கள் மின்னல் வேகத்தில் இருவரையும் நெருங்கி விடுவார்கள்.

ஜனார்தன் த்ரிவேதி அவனைப் பார்த்தவுடன் ஆனந்தப்பட்டாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முடியாமல் தவித்தார்.  அஜீம் அகமது மிக மிக எச்சரிக்கையாக இருப்பவன். அவனுடன் இருப்பவர்கள் அந்த எச்சரிக்கையைக் கடைப்பிடிக்காதவர்களாக இருந்தால் அவன் அங்கிருந்து போய் விடுவான். அவனுக்கு முட்டாள்களுடன் பழகப் பொறுமை கிடையாது. அதனால் ஜனார்தன் த்ரிவேதி இருவரும் தனித்தனி காரியங்களுக்கு வந்திருக்கும் தனி மனிதர்கள் என்றே அந்தப் பொது இடத்தில் காட்டிக் கொள்ளும் கட்டாயத்தில் இருந்தார். அப்படி காளிங்க சுவாமியைச் சந்திப்பதற்காகக் காத்திருக்கும் போது இரு தனி பக்தர்கள் பொழுது போவதற்காகப் பேசிக் கொள்வது போன்ற தோற்றத்தை காட்டிக் கொண்டவாறு பேசிக் கொண்டார்கள்.

சிறிது நேரத்தில் காளிங்க சுவாமியும் அவருடைய இரு சீடர்களும் ஒரு ஜீப்பில் வந்து சேர்ந்தார்கள். இருட்டில் நிழலாகத் தான் மூவரும் தெரிந்தார்கள். காளிங்க சுவாமி மிக ஒல்லியாகத் தான் இருந்தார். ஜீப்பிலிருந்து இறங்கியவர்  கங்கைக் கரையை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தார். அது அவருடைய வயதுக்கு மீறிய வேகமாக இருப்பதாக அஜீம் அகமது நினைத்தான். அவருடைய வேகத்துக்கு ஈடுகட்ட இளைஞர்களாக இருந்தாலும் அவருடைய சீடர்கள் சிரமப்பட்டார்கள்.    

காளிங்க சுவாமி விறுவிறுவென்று கங்கையில் இறங்கினார். இன்று அவர் வாழ்க்கையின் மிக முக்கியமான நாள். ஒவ்வொரு அமாவாசையிலும் அவருடைய பக்தர்கள் தான் அவரைத் தரிசித்துப் பேசும் பரபரப்பில் இருப்பார்கள். முதல் முறையாக அவர் ஒருவனைப் பார்த்துப் பேசும் பரபரப்பில் இருந்தார். அவரிடம் விசேஷ நாகரத்தினத்தை ஒப்படைக்க முடிந்த மனிதனை மாகாளி இன்று இங்கு வரவழைத்திருக்கிறாள். அவன் தன் வேலைக்காகத் தான் இங்கே வந்திருப்பதாக நினைத்திருக்கிறான். அவனுக்கு உதவப் போகும் முயற்சியில் அவனும் அவருக்கு உதவப்போகிறான். வந்திருப்பவன் அதை அறிய மாட்டான். அது அவன் அறியவும் தேவையில்லை. இந்தப் பரஸ்பர உதவி ஒரு பக்கத்து உதவியாகவே அவனும், அவனை அழைத்து வந்திருக்கும் அந்த அரசியல்வாதியும் நினைப்பது தான் நல்லது. தாங்களும் உதவுகிறோம் என்று தெரிந்தால், அந்த உதவி என்ன என்று தெரிந்தால், அவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்வார்கள். அதன் பிறகு அவர்களுக்கு எந்த உதவியும் எங்கிருந்தும் எப்போதும் தேவைப்படாது…

காளிங்க சுவாமி மனதை எண்ணங்களிலிருந்து திருப்பினார். “கங்கையே. உனக்கு நமஸ்காரம்….”

அஜீம் அகமது அவரையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். கங்கையில் தலைமுழுகி தலை மேல் கைகளை உயர்த்தி சிறிது நேரம் சிலை போல் அவர் நின்றிருந்தார். ஜனார்தன் த்ரிவேதி அவனிடம் முணுமுணுத்தார். “அவர் ஒத்தைக்கால்ல நிக்கறார்… கால்கள் தண்ணிக்குள்ளே இருக்கறதால நமக்குத் தெரியறதில்லை…”

அஜீம் அகமது ஆச்சரியப்பட்டான். இந்த வயதில், இந்தக் குளிரில், இந்த நதியில் இப்படி நிற்க வேண்டும் என்றால் உடல் மீது அவருக்கு எத்தனை கட்டுப்பாடு இருக்க வேண்டும்!

காளிங்க சுவாமி கரைக்கு வந்தார். அடுத்த அரை மணி நேரம் அவர் சீடர்கள் இருவரும் ஒரு பெரிய கருப்புத் துணியை எடுத்து அவர் செய்யும் சடங்குகள் மற்றவர்கள் யாரும் பார்க்காதபடி மறைத்துப் பிடித்துக் கொண்டார்கள்.

அஜீம் அகமது கேட்டான். “இந்த இருட்டில் பெரிதாக என்ன தெரிந்து விடப் போகிறதென்று இப்படி மறைக்கிறார்கள்?”

ஜனார்தன் த்ரிவேதி சொன்னார். “அவர் செய்யும் சடங்கு ரகசியமானது. பார்க்கறவங்க பார்வை கூட சூட்சுமமான இடைஞ்சல்கள் செய்யும்னு தான் இப்படிச் செய்யறதா ஒருதடவை சுவாமிஜி சொன்னார். அது எப்படின்னு எனக்குப் புரியலை. ஆனா ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் பண்றாங்க”

“சரி இது முடிஞ்சு எப்படி எல்லாரும் அவரைப் போய் பார்ப்பாங்க?”

“அவர் சடங்குகள் எல்லாம் முடிஞ்சு ஒவ்வொருத்தர் பேராய் சொல்ல சீடன் அந்தப் பேரைச் சத்தம் போட்டு சொல்வான். கூப்பிட்டவங்க போகணும்”

“எப்படி வந்திருக்கறவங்க பேர் எல்லாம் அவருக்குத் தெரியும்?”

“அது தான் அவரோட சக்தி”

“நாம் என்ன கேட்கப் போகிறோம்கிறதை அவங்க கிட்ட சொல்லிருக்கீங்களா?”

“இல்லை.”

இரவு ஒரு மணிக்கு அவருடைய சீடர்கள் கருப்புப் போர்வையை விலக்கிக் கொண்டார்கள். அடுத்ததாக பக்தர்கள் அழைக்கப்பட்டார்கள். ”பாரஸ்மல், காயத்ரி பாய், பரசுராம ரெட்டி, குல்விந்தர் சிங், அகல்யா, ஜாய் தாமஸ்….” என்று ஒவ்வொரு பெயராக அழைக்கப்பட ஒவ்வொருவரும் தனியாகவோ, இன்னொருவருடன் சேர்ந்தோ எழுந்து போனார்கள். ஒவ்வொருவருக்கும் ஓரிரண்டு நிமிடங்களில் சொல்வதைச் சொல்லி விட்டு வேகமாக அனுப்பி வைத்த காளிங்க சுவாமி கடைசியாகத் தான் ஜனார்தன் த்ரிவேதியை அழைத்தார். அப்போது மணி மூன்று. அவர்களுடைய ஆட்களைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை.

ஜனார்தன் த்ரிவேதியும் அஜீம் அகமதும் எழுந்து போனார்கள். ஜனார்தன் த்ரிவேதி காளிங்க சுவாமியை சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்க அஜீம் அகமது அவரைப் பார்த்து கைகூப்பினான். காளிங்க சுவாமி அவர்களை எதிரில் உள்ள மரப்பலகைகளில் உட்காரச் சொன்னார்.

இருவரும் அந்த மரப்பலகைகளில் அமர்ந்தார்கள். காளிங்க சுவாமி கண்களை மூடிக் கொண்டு எதையோ பார்த்துச் சொல்வது போலச் சொன்னார். ”உங்க ஆட்கள் பாம்புகள் கடிச்சு விஷமேறி ஆஸ்பத்திரியில் பைத்தியமாய் இருக்கிறார்கள்”

ஜனார்தன் த்ரிவேதி கைகூப்பியபடியிருந்து சொன்னார். “உண்மை தான் சுவாமி”

“கடத்தின ரா அதிகாரி தெற்கில் தூரத்தில் இருக்கிறான்.”

அஜீம் அகமது திகைப்புடன் காளிங்க சுவாமியைப் பார்த்தான். ஜனார்தன் த்ரிவேதி சொன்னார். “ஆமாம் சுவாமி”

காளிங்க சுவாமி கண்களைத் திறந்து ஜனார்தன் த்ரிவேதியைப் பார்த்துச் சொன்னார். “நீ உன் ஆட்களின் பைத்தியம் தெளிய வேண்டும் என்று வந்திருக்கிறாய்”

“ஆமாம் சுவாமி”

காளிங்க சுவாமி அஜீம் அகமதைப் பார்த்துச் சொன்னார். “காட்டிலே மட்டுமே இருக்கும் பாம்புகள் நகரப்பகுதியில் இருக்கும் அந்த ஃபேக்டரிக்குள் எப்படி வந்தது? யார் கொண்டு வந்து கடிக்க வைத்தார்கள்? ரா அதிகாரி எங்கேயோ இருந்து கொண்டு எப்படி இதைச் சாதித்தான்? இதற்கெல்லாம் பதில் தேடி நீ வந்திருக்கிறாய்?”

அஜீம் அகமது ஆச்சரியத்தின் உச்சத்திற்கே போனான். அவன் வந்த நோக்கத்தை அவர் தோராயமாய் சொல்லாமல் அவன் தனக்குள் பல முறை எப்படி கேட்டுக் கொண்டானோ அப்படியே அந்த கேள்விகளை வார்த்தைக்கு வார்த்தை சொன்னது அவனைத் திகைக்க வைத்தது

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, September 15, 2022

சாணக்கியன் 22

 

விஷ்ணுகுப்தரின் பேச்சு சின்ஹரனின் துக்கத்தைக் குறைத்து விடவில்லை. அவன் மிகுந்த விரக்தியுடன் சொன்னான். “இனி பிராயச்சித்தம் செய்ய என்ன இருக்கிறது ஆச்சாரியரே. என்னால் என் தாய்நாட்டுக்குத் தீராத களங்கம் ஏற்பட்டு விட்டது. இனி நான் என்ன செய்தாலும் அந்தக் களங்கம் மாறாதே. மேலும் நான் உயிரோடிருந்து என் தாய்நாட்டுக்காக எந்தச் சேவையும் செய்ய ஆம்பிகுமாரன் அனுமதிக்க மாட்டான். அவனை நான் நன்றாக அறிவேன். முதலாவதாக நான் உயிரோடு தட்சசீலத்திலேயே இருப்பதை அவன் அறிந்தால் என்னைக் கொன்று விட்டு தான் மறுவேலை பார்ப்பான்.  அவன் கையால் சாவதை விட என் கையாலேயே நான் இறப்பது கௌரவமானது என்று நான் கருதுகிறேன் ஆச்சாரியரே. தயவு செய்து இங்கிருந்து சென்று விடுங்கள். இந்தக் குற்றவாளியைச் சாக அனுமதியுங்கள்”

 

விஷ்ணுகுப்தர் உறுதியாகச் சொன்னார். “உன் தாய்நாட்டுக்கு நீ சேவை செய்வதற்கு ஆம்பிகுமாரனின் அனுமதி தேவையில்லை சின்ஹரன். சொல்லப் போனால் யாரும் தங்கள் தாய்நாட்டுக்குச் சேவை செய்ய யாருடைய அனுமதியும், உதவியும் தேவையில்லை. ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் நிலைகளில், முடிந்த விதங்களில் தாய்நாட்டுக்கு எத்தனையோ செய்ய முடியும். நீ உயிரோடு இருப்பது ஆம்பிகுமாரனுக்குத் தெரிய வேண்டியதில்லை. உன் கையால் சாவது கௌரவமாக இருக்கும் என்று நீ சொன்னாய். ஒரு வீரனுக்குப் போர்க்களத்தில் இறப்பது தான் கௌரவமாக இருக்குமே ஒழிய தற்கொலை கௌரவமாக இருக்காது. அது எந்தக் களங்கத்தையும் போக்கி விடாது. உன் தாய்நாட்டுக்கு உன்னால் செய்ய முடிந்ததும், நீ செய்ய வேண்டியதும் நிறைய இருக்கின்றது சின்ஹரன். நீ அதைச் செய்யத் தயாரா?”

 

அவர் குரலில் இருந்த உறுதியும் தெளிவும் சின்ஹரனை யோசிக்க வைத்தது.

 

ம்பிகுமாரன் இரண்டு நாட்களாக யாரிடமும் பேசவில்லை. அவன் அந்தப்புரத்திற்குப் போகவில்லை. அவன் தனிமையில் ஆழ்ந்த ஆலோசனையில் இருந்தான். கேகயப் படையின் ஆக்கிரமிப்பால் அவன் உணர்ந்த அவமான உணர்வு இப்போதும் குறைய மறுத்தது. அவர்கள் போட்ட பிச்சையால் அவன் வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற உணர்வை கேகய அமைச்சன் இந்திரதத் ஏற்படுத்தி விட்டுப் போனது தாங்க முடியாத பாரமாக அவன் இதயத்தை அழுத்தியது.

 

அவன் தந்தையின் வார்த்தைகள் இப்போதும் அவன் செவிகளை அறைகின்றன. “எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எனக்கு வாக்களித்த நீ என்ன பார்த்துக் கொண்டாய் ஆம்பி குமாரா.” தந்தைக்கு அவன் பதில் அளிக்கவில்லை என்றாலும் அவன் மனசாட்சிக்கும், வீரத்திற்கும், தன்மானத்திற்கும் அவன் பதில் அளிக்க முடியாமல் தவித்தான். அவன் ஒற்றர்களை கேகய நாட்டின் எப்பகுதிகளை எப்படித் தாக்கலாம் என்று அறியத் தான் முழுவதுமாகப் பயன்படுத்தியிருந்தான். தந்தை வழியின்படியே அவர்கள் பணிபுரிய அவன் அனுமதித்திருந்தால் கண்டிப்பாக நிலைமை இந்த அளவு மோசமாகியிருக்காது. யாராவது ஒரு ஒற்றனாவது இந்தத் தாக்குதலை மோப்பம் பிடித்து வந்து சொல்லியிருப்பான். தயார்நிலையில் இருந்து எளிதாக கேகயப்படையை சமாளித்திருக்கலாம். ஆனால் காலம் கடந்து யோசித்துப் பயனில்லை….

 

அவன் தட்சசீல கல்விக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவனுக்கு ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரின் போதனைகள் வேம்பாகக் கசக்கும் என்றாலும் அவருடைய சொற்கள் என்றும் வலிமையானவை, அர்த்தமுள்ளவை என்பதில் அவனுக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது. அவர் அவனைப் பார்க்கும் பார்வை, தோரணை எல்லாம் கோபமூட்டுவதாக இருக்கும் என்பதால் அவனும் அரைகுறையாய் தான் கவனம் செலுத்துவான் என்றாலும் அவனுக்கு அவர் ஒரு முறை சொல்லியிருந்தது மனதின் ஒரு மூலையில் இப்போதும் நினைவு இருக்கிறது.அடுத்தவர் அனுபவங்களில் இருந்து முன்கூட்டியே பாடம் கற்றுக் கொள்பவன் அறிவாளி. தன்னுடைய அனுபவங்களில் கஷ்டப்பட்டுப் பாடம் கற்றுக் கொள்பவன் சாதாரண மனிதன். தன்னுடைய அனுபவங்களில் இருந்தும் பாடம் கற்றுக் கொள்ள முடியாதவன் முட்டாள். அவன் எதிரிகளுக்கு என்றும் எளிதானவன். அவன் அழிவது நிச்சயம்…”

 

அறிவாளியாக இருக்கும் வாய்ப்பை ஆம்பி குமாரன் நழுவ விட்டு விட்டான். சாதாரண மனிதனாகவாவது அவன் இருக்க வேண்டும். ஏனென்றால் முட்டாளாக அழிவதற்கு அவனுக்கு விருப்பமில்லை. ஆம்பி குமாரன் ஆழமாக யோசித்துத் தன் தவறு சிற்றின்பங்களில் அதிகம் கழித்தது தான் என்று நினைத்தான். அது தான் அவனது கவனத்தை உரிய இடங்களில் செலுத்தத் தவற வைத்து விட்டது. அவனை மட்டுமல்ல அவனுடைய சேனாதிபதி சின்ஹரனையும் கூடத் தவற வைத்து விட்டது. அந்த ஒரு தவறு இல்லாமலிருந்தால் சின்ஹரனாவது உடனடியாக எதாவது பராக்கிரமம் காட்டி இருந்திருப்பான். சின்ஹரனை நினைக்கையில் அவனுக்கு ஆத்திரம் வந்தாலும் கூட அவனைப் போலவே தானும் தவறிழைத்திருக்கிறோம் என்ற உண்மையை அவனுக்கு மறுக்க முடியவில்லை. நேற்று தான் அவனுக்கு சின்ஹரனை மைனிகா கொன்று விட்டோ, மயக்க மருந்து கொடுத்து மயக்கத்தில் ஆழ்த்தி விட்டோ சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் மனதில் எழுந்தது. ஆம்பி குமாரன் உடனடியாக தன் வீரர்களை அனுப்பி மைனிகாவின் வீட்டைச் சோதனையிடச் சொன்னான். போய் வந்த வீரர்கள் ஒரு கட்டிலைத் தவிர மைனிகாவின் வீட்டில் வேறு எதுவும் இருக்கவில்லை என்றும் சின்ஹரனோ அவன் பிணமோ வீட்டுக்குள் இல்லை என்றும் சொன்னார்கள். காமாந்தகன் மைனிகாவுடனேயே தட்சசீலத்தை விட்டு வெளியேறியிருக்க வேண்டும்….


ஆம்பி குமாரன் பெருமூச்சு விட்டான். நடந்தது எதையும் அவன் மாற்ற முடியாது. ஆனால் இனியொரு முறை இது போல் நடக்க அவன் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டான். இனியொரு முறை அலட்சியத்திற்கு அவன் இடம் தர மாட்டான். அவன் தந்தை எந்த நேரத்திலும் உயிர்விட வாய்ப்பிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்குப் பின் மனிதர் மிகவும் நொந்து போய் விட்டார். தளர்ச்சி மிக அதிகமாக அவரிடம் தெரிகிறது. அரசர் தன் வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்று அரண்மனை வைத்தியர் அவனிடம் ரகசியமாகச் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்.  மிக விரைவில் அரியணை ஏறப்போகும் அவன் தன்னை வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கேகய நாட்டுக்குக் கடுமையாகப் பதிலடி தர வேண்டும்….

 

அவன் எண்ணங்களை அவனுடைய காவல் வீரன் கலைத்தான். “தாங்கள் பாரசீகத்திற்கு அனுப்பியிருந்த ஒற்றன் வந்திருக்கிறான் இளவரசே”

 

ஆம்பி குமாரன் சொன்னான். “அவனை உள்ளே அனுப்பு வீரனே”

 

காவல் வீரன் போய் ஒற்றன் உள்ளே நுழைந்தான்.  

 

ஆம்பி குமாரன் கேட்டான் “என்ன செய்தி ஒற்றனே”

 

ஒற்றன் சொல்ல ஆரம்பித்தான். “பாரசீகத்தைத் தற்சமயம் வென்றிருக்கும் அலெசாண்டர் கிரேக்கத்தில் உள்ள மாசிடோனியா என்ற நாட்டைச் சேர்ந்தவன் என்று சொல்கிறார்கள் இளவரசே. அவன் பார்க்க தேவலோகத்தைச் சேர்ந்த மாவீரனைப் போல் தெரிகிறான்.  அவன் படை மிகப் பெரியது. ஆனால் அவன் மாசிடோனியாவை விட்டுக் கிளம்புகையில் படை இந்த அளவில் இருக்கவில்லை என்றும் வழியில் வென்ற நாட்டின் வீரர்களைச் சேர்த்துக் கொண்டு தான் படையை அந்த அளவில் பெரிதாக்கி இருக்கிறான் என்றும் சொல்கிறார்கள். அவன் படையை விடவும் அவன் பராக்கிரமம் மேலும் பெரிதாக இருக்கிறது. பயம் என்பதையே அவன் அறியாதவன் என்று அனைவரும் சொல்கிறார்கள். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தன்னுடைய நிதானத்தை இழக்காதவன் அவன் என்றும் சொல்கிறார்கள். எதிரியின் வலிமை பல மடங்கு இருந்தாலும் அதைப் பலவீனப்படுத்த விரைவில் அவன் வழி கண்டுபிடிப்பவன் என்றும் அந்த வழியில் வேகமாகவும், கச்சிதமாகவும் சென்று வென்று முடிப்பவன் என்றும் சொல்கிறார்கள். அதனாலேயே அவன் இது வரை தோல்வி காணவில்லை என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்ட அலெக்சாண்டர் இங்குள்ள நிலவரத்தை பலர் மூலம் கேட்டு அறிந்து கொண்டதுடன் இங்கே வருவதற்குக் கிளம்பி விட்டான் இளவரசே.…”


ஆம்பி குமாரனுக்கு அலெக்சாண்டரைப் பற்றிக் கேள்விப்பட்டதெல்லாம் பிரமிப்பாக இருந்தது. அவனைப் போன்றவனை நட்பாக்கிக் கொண்டால் அவனுடன் சேர்ந்து கொண்டு கேகயத்தை அல்ல மட்டும் அல்லாமல் மற்ற நாடுகளையும் கூட வென்று ஒரு புதிய சரித்திரம் படைக்கலாம் என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. யோசிக்க யோசிக்க அந்த எண்ணம் வலுப்பெற ஆரம்பித்தது.

 

ஒற்றனை அனுப்பி வைத்த ஆம்பி குமாரனுக்கு சிறிது நேரத்தில் அரசரின் உடல்நிலை கவலைக்கிடமாக ஆரம்பித்து விட்டது என்ற செய்தி வந்து சேர்ந்தது. இந்தச் செய்தி அவன் முந்தைய எண்ணத்திற்கு நல்ல சகுனமாக இருப்பதாக எண்ணிய ஆம்பி குமாரன் புன்னகைத்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன் 


இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும். 

    


Tuesday, September 13, 2022

2 IN 1 Book - ”பிரசாதம் & தோல்வி என்பது இடைவேளை” நூல் வெளியீடு!


 

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

நான் எழுதிய முதலிரண்டு நூல்கள் “பிரசாதம் (ஆத்ம தேடலும் தெளிவும்)” மற்றும் “தோல்வி என்பது இடைவேளை” இப்போது ஒரே நூலாக வெளியாகி உள்ளது. 

பிரசாதம் - மெய்ஞான, ஆன்மீகக் கட்டுரைகளின் தொகுப்பு. 

தோல்வி என்பது இடைவேளை -  தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் தொகுப்பு.

என்.கணேசன் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த 2 IN 1 நூல் 224 பக்கங்கள் கொண்டது. விலை ரூ.250/- 

அக வாழ்க்கையில் ஆனந்தமும், அமைதியும் பெறவும்,  புற வாழ்க்கையில் வெற்றியும்,  முன்னேற்றமும் அடையவும், எல்லோருக்கும் பயன்படக்கூடிய பல கட்டுரைகள் அடங்கிய நூல் இது. வாங்கிப் படித்துப் பயனடையும்படி  உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நூலை வாங்கிப் படிக்க என்.கணேசன் புக்ஸை 94863 09351 எண்ணிலோ, nganeshanbooks@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்

என்.கணேசன்


இந்த நூலையும் அச்சில் உள்ள என் கணேசனின் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

நூலின் விலையுடன் தபால் செலவு ரூ.50/- ஐயும் சேர்த்து என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபால்/குரியரில் பெற்றுக் கொள்ளலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

அனைத்து நூல்களின் விவரங்கள் அறிய  -

என்.கணேசன் நூல்கள் (nganeshanbooks.blogspot.com)


உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்க அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

சத்ரபதி, சாணக்கியன் நாவல்களை எழுதிய என்.கணேசன்

Monday, September 12, 2022

யாரோ ஒருவன்? 102




னார்தன் த்ரிவேதிக்கு அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அஜீம் அகமது அமாவாசைக்கு முன் தினமே வந்து சேர்ந்த செய்தி கிடைத்தது. அது அவருக்குச் சந்தோஷமாய் இருந்தது. காளிங்க சுவாமியின்  சீடனிடம் பேசி அமாவாசை இரவுக்கு ரிஷிகேசத்துக்கு வந்து விடுவதாகச் சொன்ன போது அவன் “நடந்தது அனைத்தையும் அவர் அறிவார் சுவாமிக்கு நீங்கள் வரப்போவது முன்பே தெரியும். அவர் அமாவாசை இரவில் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.” என்று சொன்னான்.

அஜீம் அகமது வந்து சேர்ந்ததும், காளிங்க சுவாமியின் சீடன் அப்படிச் சொன்னதும் அவருக்கு எல்லாம் இனி சரியாகி விடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. நரேந்திரன், சஞ்சயையும், மதன்லாலையும் கடத்தி சித்திரவதை செய்திருப்பது தெரிந்தும் நரேந்திரனை ஒன்றும் செய்ய முடியாத நிலைமையில் இருப்பது ஒன்று தான் அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது.  அவனிடம் ”நீ செய்திருக்கும் தகிடுதத்தம் எல்லாம் தெரிந்து விட்டது. எங்கள் ஆட்களை உன் பிடியிலிருந்து மீட்டு விட்டோம்” என்று போய் கொக்கரிக்கலாம் என்றால் அவன் மறுப்பதோடு மட்டுமல்லாமல் ”உங்கள் ஆட்களை விசாரிக்க வேண்டும் என்பதால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைத் தெரிவியுங்கள்” என்று சொல்லி விடும் வாய்ப்பு இருக்கிறது. எனவே அவனைச் சந்தித்து மிரட்டும் எண்ணத்தைக் கைவிட்டார்.

அஜீம் அகமதைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் காளிங்க சுவாமியைச் சந்திக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை இருந்தாலும், அவரை ரா ஆட்கள் ரகசியமாய் வேவு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் அஜீம் அகமது அவருடன் ரிஷிகேசம் வருவது ஆபத்து என்ற அச்சம் எழுந்தது. அஜீம் அகமது அவருடன் அங்கு போவது அவனுக்கும் ஆபத்து, அவருக்கும் ஆபத்து.... அஜீம் அகமதுக்கும் அந்த எச்சரிக்கை உணர்வு இருந்தது. அதனால் அவனுக்கும் அவருடன் சேர்ந்து காளிங்க சுவாமியைச் சந்திக்க ஆர்வம் இருந்தாலும் கூட  அவன் ”நீங்களே அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டு வந்து சொல்லுங்கள். பின்பு செய்ய வேண்டியதைச் செய்வோம்” என்று சொன்னான்.  

அவர்கள் பேசி முடித்த ஐந்தாவது நிமிடம் காளிங்க சுவாமியின் சீடன் ஜனார்தன் த்ரிவேதியின் புதிய ரகசிய எண்ணுக்குப் போன் செய்தான். “சுவாமி உங்களைத் தனியாகவும், உங்க நண்பரைத் தனியாகவும் ரிஷிகேசம் வந்து சேரச் சொன்னார். அங்கே வந்த பிறகு உங்க ரெண்டு பேரையும் எந்த உளவாளியும் பார்க்க முடியாதபடி என்ன செய்யணுமோ அதை சுவாமி செய்வார். ஆனால் உங்க நண்பர் அன்றைக்கு வந்து சுவாமியைச் சந்திப்பது ரொம்ப முக்கியம்னு சொல்லச் சொன்னார்”

சற்று முன் பேசிய விஷயத்தை அதற்குள் சுவாமிஜி அறிந்து இப்படிச் சொல்கிறாரே என்று அதிசயித்த ஜனார்தன் த்ரிவேதி அஜீம் அகமதுக்குப் போன் செய்து அந்த விஷயத்தைச் சொன்னார். அஜீம் அகமதுக்கும் அது ஆச்சரியமாக இருந்தாலும் அந்த காளிங்க சுவாமியை எந்த அளவு நம்பலாம் என்று தெரியவில்லை. அவன் ஜனார்தன் த்ரிவேதியிடம் சொன்னான். “த்ரிவேதிஜி. என்னைக் காட்டிக் கொடுத்து அந்த ஆள் பரிசுத் தொகை வாங்கிடலாம்னு நினைச்சிருப்பாரோ”

ஜனார்தன் த்ரிவேதி உறுதியாகச் சொன்னார். “அஜீம்ஜீ. அந்த சுவாமிஜியை நாற்பது வருஷங்களுக்கும் மேலாவே எனக்குத் தெரியும். கோடிகள் கூட அந்த ஆளுக்கு ஒரு பொருட்டே இல்லை. அவர் சொன்னால் அவர் காலடியில் கொண்டு போய் பணத்தைக் கொட்ட என்னை மாதிரி எத்தனையோ பேர் இருக்காங்க. அதனால அந்த சந்தேகம் மட்டும் உங்களுக்கு வேண்டவே வேண்டாம். நான் நாளைக்கு ராத்திரி பத்து மணிக்கு ரிஷிகேசம் வந்து சேர்வேன். நீங்களும் எப்படியாவது பதினோரு மணிக்குள்ளே வந்து சேர்ந்துடுங்க.”

அஜீம் அகமது ஜனார்தன் த்ரிவேதியை நம்பினாலும் கூட தன்னுடைய வழக்கமான எச்சரிக்கை உணர்வைப் புறக்கணிக்காமல் முன்பே காளிங்க சுவாமியைப் பற்றி எல்லாத் தகவல்களும் பெற ஏற்பாடு செய்திருந்தான்.

அந்தத் தகவல்கள் அவனுடைய மின்னஞ்சலுக்கு வந்து சேர்ந்தன. தகவல்களின் கோர்வை -

காளிங்க சுவாமியின் வயது நூறுக்கும் மேல் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். அப்படியிருக்க வாய்ப்பிருக்கிறது. கண்டிப்பாக தொன்னூறுக்கும் மேல் இருக்கும் என்பதற்குப் பல ஆதாரங்கள் இருக்கின்றன.  அவரிடம் அபூர்வ சக்திகள் இருக்கின்றன என்பது நிஜம். உள்ளதை உள்ளபடி சொல்லக்கூடியவர். எல்லா மத ஆட்களும் அமாவாசை இரவுகளில் ரிஷிகேசம் சென்று அவரைப் பார்த்து அருள்வாக்கு கேட்கிறார்கள்.  அவர் சொன்னது எதுவும் இதுவரை பொய்த்ததில்லை என்பது பெரும்பாலானோரின் அனுபவமாக இருக்கிறது. பாம்புகள் மத்தியில் காளிகோயிலில் வாழும் அவரை யாரும் நல்ல வெளிச்சத்தில் பார்த்தது கிடையாது. அவருடைய ஒரே பலவீனம் வெளிச்சத்தில் அவருக்கு உடல் கூசும் பிரச்சினை இருக்கிறது. ஒரு முறை அவரைச் சந்திக்கச் சென்ற பக்தர் அவரைச் சரியாக இருட்டில் பார்க்க முடியாத வருத்தத்தில் டார்ச் லைட் போட்டு பார்க்கப் போய் அவர் அமானுஷ்யமாய் கிறீச்சிட்டு அவருடைய சீடர்கள் அந்த பக்தரை நையப்புடைத்து அனுப்பியதாகச் சொல்கிறார்கள். பெரும்பாலும் அவரைச் சந்திக்கின்ற பக்தர்கள் தங்கள் பிரச்சினைகளையோ, கோரிக்கைகளையோ காளிங்க சுவாமியிடம் வாய் விட்டுச் சொல்லும் அவசியம் இருப்பதில்லை. அவரே ”நீ இதற்காக வந்திருக்கிறாய்” என்று சொல்லிவிட்டு, “இது செய்தால் சரியாகும்” என்றோ “என்ன செய்தாலும் இந்தப் பிரச்னை தீராது” என்றோ ”இந்தத் தேதி வரை இந்தப் பிரச்சினையை நீ தாக்குப்பிடித்தே ஆக வேண்டும்” என்றோ சொல்வது வழக்கம் வந்தவர்களுக்கு ஏதாவது உண்மை தெரிந்தாக வேண்டியிருந்தால் அதை எந்தப் பூச்சும் இல்லாமல் வெளிப்படையாகச் சொல்ல அவர் தயங்கியதில்லை. அமாவாசை இரவுகளில் நள்ளிரவு பூஜை சடங்குகள் முடித்துக் கொள்ளும் வரை எப்படிப்பட்ட பெரிய ஆளும் காத்திருந்தே ஆக வேண்டும். குறுக்கீடு செய்வதோ, அதற்கு முன் அவரைச் சந்திக்க அவசரப்படுவதோ கூடாது... காட்டுக்குள் காளிகோயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளோடு வசித்து வரும் அவர் இரவு நேரங்களில் சில உக்கிர பூஜைகள் செய்து அறிய விரும்பும் தேவ ரகசியங்களை அறிவார். கண்கட்டு வித்தையில் கெட்டிக்காரர். திடீரென்று மறைய விரும்பினால் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மறைந்து விடுவார்....  

தொடர்ந்து அவன் படித்த விஷயங்கள் எல்லாம் ஜனார்தன் த்ரிவேதி அவனிடம் முன்பே சொன்ன விஷயங்களாக இருந்தன. எந்தக் குறிப்பும் அந்த ஆள் ஏமாற்றுக்காரர் என்கிற வகையிலோ சக்திகள் விஷயத்தில் போலி என்றோ, நடிக்கிறார் என்றோ இருக்கவில்லை. எல்லாம் சுவாரசியமாய் இருக்கவே மாறுவேடத்தில் போய் வருவது என்று அஜீம் அகமது முடிவு செய்தான்.

அவன் வரும் முடிவைத் தெரிவித்த போது ஜனார்தன் த்ரிவேதி மிகவும் சந்தோஷப்பட்டார். “கண்டிப்பாய் நமக்கு ஒரு தெளிவான ஒரு வழியை சுவாமிஜி காட்டுவார் அஜீம்ஜீ” என்று நம்பிக்கை தெரிவித்தார்.  


உண்மையில் அஜீம் அகமது அடுத்தவர்கள் காட்டும் வழியில் போவதை கௌரவக்குறைவாகவே நினைத்தான்.  வழிகாட்டுபவன் எப்படிப்பட்ட பெரிய ஆளாய் இருந்தாலும் ஆட்டு மந்தையாகப் பின்பற்றுவதை அவன் ரசிப்பதில்லை. இந்த காளிங்க சுவாமியே கூட எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் இந்த ஆளிடம் போய் வழி கேட்பதும், அந்த ஆள் சொன்னபடி செய்வதும் அவனுக்கு உடன்பாடான விஷயமல்ல. ஆனால் சஞ்சய், மதன்லால் இருவருக்கும் ஏற்பட்ட பாம்புக்கடி விஷயத்திலும், அவர்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கும் விஷயத்திலும் நடந்திருப்பது எல்லாம் அவன் அறிவுக்கு எட்டாத மாயா ஜால விஷயமாகவே இருந்தன என்பதால் அந்த மாயா ஜாலம் எப்படி நடத்தப்பட்டிருக்கிறது என்பதை அவன் அறியத் துடித்தான். ஏனென்றால் அவனுக்குப் பிடிபடாத விஷயங்களை அப்படியே விட்டு வைப்பதை வடிகட்டிய முட்டாள்தனம் என்று நினைத்தான். இந்த மாயா ஜால நிகழ்வுகளுக்குப் பதிலடி தர வேண்டுமானால், சமாளிக்க வேண்டுமானால் இதில் வல்லுனரான காளிங்க சுவாமியைப் பயன்படுத்துவது தான் புத்திசாலித்தனம் என்று தோன்றியதால் தான் அவன் போகிறானே ஒழிய மற்றபடி இது போன்ற அபூர்வசக்தி வாய்ந்த ஆசாமிகளின் வழிகாட்டலை நம்பி அவன் இன்றல்ல என்றுமே இருந்ததில்லை



ரிஷிகேசத்திற்கு ஒரு வியாபாரியின் வேடத்தில் போக முடிவு செய்த அஜீம் அகமது தன் பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தான்.     

(தொடரும்)
என்.கணேசன்


Thursday, September 8, 2022

சாணக்கியன் 21

 

சேனாதிபதி சின்ஹரனை மயக்கத்திலிருந்து எழுப்ப சேவகனுக்குச் சிறிது நேரம் தேவைப்பட்டது. மயக்கம் தெளிந்த பின்னும் எங்கே இருக்கிறோம் என்பது சின்ஹரனின் மூளைக்கு உடனடியாக எட்டவில்லை. அந்தக் கிராதகி தாசி கடுமையான மயக்க மருந்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று நினைத்தபடியே சேவகன் சின்ஹரனின் தோளைப் பிடித்து உலுக்கியபடியே மெல்ல அழைத்தான். “சேனாதிபதி.... சேனாதிபதி.....”

 

நிலவொளியில் அருகில் தெரிந்த தன் மூத்த சேவகனின் முகத்தைப் பார்த்து திகைத்த சின்ஹரன் சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுக்குத் தான் இருக்கும் இடம் மெல்ல நினைவுக்கு வந்தது. ”எங்கே மைனிகா? நீ எதற்கு இங்கே வந்தாய்?” என்று திகைப்புடன் கேட்டான்.

 

சின்ஹரன் மயங்கியிருந்த வேளையில் அன்று அதிகாலையிலேயே கேகயப் படை தட்சசீலத்திற்குள் நுழைந்ததையும், போருக்கு காந்தாரப்படை தயாராவதற்கு முன் காந்தார அரண்மனையை ஆக்கிரமித்து விட்டதையும் சேவகன் சொல்ல, சின்ஹரன் தன் தலையில் இடி விழுந்ததைப் போல உணர்ந்தான். ”இப்போது நேரம் என்ன?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.

 

“பௌர்ணமி நடுநிசியாகி விட்டது சேனாதிபதி”

 

அப்போது தான் கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் மயக்க நிலையில் இருந்திருப்பது சின்ஹரனுக்குப் புலனாகியது. “மைனிகா?” என்று பலவீனமான குரலில் சின்ஹரன் கேட்டான்.

 

“அவள் அதிகாலையிலேயே இங்கிருந்து ஓடி விட்டாள். அவளும் இந்தச் சதியில் ஒரு அங்கம் சேனாதிபதி. அவள் கேகய நாட்டுக்காரியாக இருக்க வேண்டும்...”

 

சேனாதிபதி சின்ஹரனுக்கு நம்ப முடியவில்லை. அவனுடைய மைனிகா தாசியாக இருக்கலாம். ஆனால் அவனை அவள் ஆழமாகக் காதலித்தாள் என்பது உண்மை என்று தான் இப்போதும் முதலில் அவன் மனம் எண்ணியது. ஆனால் அது உண்மையல்ல, அவள் சதிகாரி என்ற உண்மை சிறிது சிறிதாக உறைத்து அவன் இதயத்தைப் பிளக்க ஆரம்பித்தது. அதை விட முக்கியமாய் அவன் தன் தாய்நாட்டைக் காப்பாற்றத் தவறிவிட்டான் என்ற நிஜம் மரண வேதனையை அளித்தது. நடுங்கும் குரலில் சின்ஹரன் கேட்டான். “மன்னர்?”

 

“மன்னர் பாதுகாப்பாகவும் நலமுடனும் இருக்கிறார். கேகயப்படை ஆம்பி குமாரனுக்கு பாடம் புகட்டத்தான் வந்திருக்கிறது என்று கேகய அமைச்சர் கூறினாராம். கேகயப்படை இப்போது இங்கிருந்து சென்றும் விட்டது. ஆனால் இளவரசன் ஆம்பி குமாரன் தங்கள் மீது எல்லையில்லாத கோபத்தில் இருக்கிறான். தாங்கள் மைனிகாவுடன் இங்கிருந்து ஓடிப் போய் விட்டீர்கள் என்று அவன் நம்புகிறான். தாங்கள் திரும்பி வந்தால் உடனே அவனைப் போய் காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறான். ஆனால் அவன் அனுப்பியிருக்கும் ஆட்களைப் பார்த்தால் கண்டதும் உங்களைக் கொன்று விட அவன் உத்தரவு பிறப்பித்திருப்பான் போலத் தெரிகிறது. எனவே தங்கள் உயிருக்கு ஆபத்து சேனாதிபதி. நீங்கள் திரும்பவும் மாளிகைக்கு வந்து விடாதீர்கள் என்று தங்களை எச்சரிக்கத் தான் நான் இங்கே வந்தேன்….”

 

சின்ஹரன் தன் மீதே அளவுகடந்த வெறுப்பை உணர்ந்தவனாய் சொன்னான். “உயிரோடு வாழ்வதை விட அவன் ஆட்களால் கொல்லப்படுவது மேலானது என்றே எனக்கும் தோன்றுகிறது.  அவன் கோபத்தில் தவறில்லை….”

 

சேவகன் அவனை இரக்கத்துடன் பார்த்து விட்டுச் சொன்னான். “சேனாதிபதி. சதியில் சிக்கி மயக்கத்தில் விழுந்து கிடந்ததால் தாங்கள் கடமையாற்ற முடியாமல் போனதே ஒழிய தாங்கள் அறிந்து எந்தத் தவறையும் செய்யவில்லை. எனவே தாங்கள் தயவு செய்து இந்தக் கொடுமையான வார்த்தைகளைக் கூற வேண்டாம்.  சில காலம் மறைவாய் இருந்து கொள்ளுங்கள். ஆம்பி குமாரன் உண்மை உணர்ந்து கோபம் தணியும் வரை வெளிப்பட வேண்டாம்….”

 

சின்ஹரன் விரக்தியுடன் கண்களை மூடிக் கொண்டு தலையசைத்தான்.

 

“அதிக நேரம் நான் அங்கே இல்லாமல் போனால் அவர்கள் சந்தேகம் என் மீதும் எழ வாய்ப்பிருக்கிறது. நான் கிளம்புகிறேன் சேனாதிபதி. எங்காவது தப்பித்துச் சென்று மறைவாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள்….”

 

வணங்கி விட்டு அந்தச் சேவகன் போய் விட்டான். சின்ஹரன்  மனசாட்சியின் உறுத்தலுடன் சிறிது நேரம் சிலை போல் அங்கேயே அமர்ந்திருந்தான். அவனுக்கு உயிர்வாழச் சிறிதும் விருப்பமில்லை. காமத்தைக் காதல் என்று எடுத்துக் கொண்டு ஒரு அழகிய தாசியால் ஏமாற்றப்பட்டு ஏமாந்த வரலாற்றைச் சொல்லிக் கொண்டு, தீராத பழியைச் சுமந்து கொண்டு வாழ்வதை விட மரணம் எத்தனையோ மேலானது…. அவன் கை இடையில் இருந்த குறுவாளை எடுத்தது. “என் தாய்நாடே என்னை மன்னித்து விடு” என்று தீராத குற்றவுணர்வுடன் சொல்லி விட்டு அதை ஓங்கிய போது ஒரு அமைதியான குரல் கேட்டது.


”தற்கொலை செய்து கொள்வதால் உன் பழி தீர்ந்து விடுமா சேனாதிபதி”

 

சின்ஹரன் ஒரு கணம் அதிர்ந்து மறு கணம் கூனிக் குறுகினான். யாரும் அவனைக் காண்பதற்கு முன்னால் பிணமாகி விட வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் அவன் இப்போது ஆசைப்படவில்லை. ஆனால் அதற்கும் விதி கருணை காட்டவில்லை. யாரோ அங்கிருக்கிறார்கள்….

 

சின்ஹரன் பலவீனமான குரலில் கேட்டான். “யாரது?”

 

குரலுக்குடைய நபர் இருட்டிலிருந்து நிலவொளிக்கு வந்தார்.  “என்னை விஷ்ணுகுப்தன் என்றழைப்பார்கள். நான் இங்குள்ள கல்விக்கூடத்தில் ஆசிரியராக இருக்கிறேன்…”

 

சின்ஹரன் அவரை அறிவான்.  தட்சசீல கல்விக்கூடத்தின் ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரை அறியாதவர்கள் காந்தாரத் தலைநகரில் குறைவு.  பேரறிவாளியும், பெருமரியாதைக்குரியவருமான அவரை இந்தக் கேவலமான தருணத்தில் சந்திக்க நேர்வது அவனுடைய துர்ப்பாக்கியமே….

 

“ஆச்சாரியரே. இறந்தாலும் பழி தீராதென்று நான் அறிவேன். ஆனால் வாழத் தகுதியில்லாத இந்த இழிந்தவனுக்கு மரணமே தண்டனையாக இருக்கட்டும் என்று தான் உயிரை விடத் தீர்மானித்தேன்… தயவு செய்து தடுக்காமல் இந்த இழிபிறவி இறப்பதற்கு அனுமதியுங்கள்”

 

விஷ்ணுகுப்தர் சேனாதிபதி சின்ஹரனை இரக்கத்துடன் பார்த்தார். சின்ஹரன் மைனிகாவுடன் போயிருக்க மாட்டான் என்பதை உறுதியாக நம்பியவர்களில் அவர் முதலாமானவர். சின்ஹரனைப் போன்றவர்கள் எவ்வளவு முயன்றாலும் ஓரளவுக்கு மேல் தாழ்ந்து போக முடியாது.  காமமும், காதலும் மனித இயல்புகள். சில சமயங்களில் ஒரு மனிதனின் சிந்தனா சக்தியை அவை குறைத்து விடுவதென்னவோ உண்மை தான். அப்படி அவன் ஏமாந்து விட்டிருக்க வேண்டும் என்பதை அவன் போர் புரிய வரவில்லை என்பதை வைத்தே யூகித்திருந்தார்.   என்ன நடந்திருக்கும் என்பதையும் கூட யூகித்திருந்த அவர் இந்திரதத் கிளம்பிப் போய் ஊரும் உறங்கும் வரைக் காத்திருந்து விட்டுக் கிளம்பி வந்தார். அவர் அங்கே வந்த போது தான் சேவகன் மைனிகாவின் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தான். அவன் பின்னாலேயே சத்தமில்லாமல் நுழைந்து நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவருக்குத் தன்னுடைய கணக்கு பொய்க்கவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.

 

அவர் அமைதியாகச் சொன்னார். “ஒரு முறை கடமை தவறியதற்காக ஒவ்வொருவரும் இறக்க ஆரம்பித்தால் மீதமுள்ள கடமைகளை நிறைவேற்ற ஒருவருமே ஒரு நாட்டுக்கு மிஞ்ச மாட்டார்கள் சேனாதிபதி. அப்படி நிகழ்ந்தால் அதை விட ஒரு நாட்டுக்குத் துர்ப்பாக்கியம் இருக்க முடியாது.”

 

சின்ஹரன் மெல்லக் கேட்டான். “என்ன சொல்ல வருகிறீர்கள் ஆச்சாரியரே?”

 

“நீ கடமை தவறினாலும் காந்தாரம் பாதிக்கப்பட்டு விடவில்லை சேனாதிபதி. நாடும் அரசரும் நலமாகவே இருக்கிறார்கள். கேகய நாட்டு வீரர்கள் இங்கே எதையும் கைப்பற்றி விடவில்லை. எதையும் ஆக்கிரமித்து விடவில்லை. இங்கிருந்து அவர்கள் சென்றும் விட்டார்கள்….”

 

“இருக்கலாம். ஆனால் நான் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் அல்லவா ஆச்சாரியரே?” சின்ஹரன் ஆழ்ந்த வருத்தத்துடன் கேட்டான்.

 

“உன் உயர்ந்த பார்வையில் அப்படித் தோன்றினாலும் குற்றத்திற்கு நீ பிராயச்சித்தம் தான் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தான் உன் தாய்நாட்டுக்கு நீ பட்டிருக்கும் கடன் தீரும் சேனாதிபதி. உன் மரணத்தினால் அந்தக் கடன் தீராது. உன் தாய்நாட்டுக்கு நீ செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. அதன் மன்னர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இளவரசனோ அகங்காரமும், அறியாமையும் கொண்டவனாக இருக்கிறான். இந்த நிலையில் அதன் சேனாதிபதியும் இறந்து போவது நாட்டை மேலும் பலவீனப்படுத்தி விடுவது போல் ஆகி விடாதா சேனாதிபதி யோசித்துப் பார். ஒரு முறை கடமை தவறிய நீ, இக்கட்டான நிலைமையில் இருக்கும் உன் நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் மேலும் ஏராளமாக இருக்கும் போது, அதைச் செய்யாமல் இறக்கத் தீர்மானிப்பது நாட்டுக்கு இழைக்கும் அநீதியாக ஆகி விடாதா?”

 

(தொடரும்)

என்.கணேசன்

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும். 

    

Monday, September 5, 2022

யாரோ ஒருவன்? 101




வேலாயுதம் வேகமாகப் போய் கல்யாணிடம் சற்று முன் தீபக் சொன்னதைத் தெரிவித்தார்.  கல்யாண் திகைத்தான். பல லட்சங்கள் கொடுத்தாலும் ஐந்து மாதங்கள் கழித்து தான் அப்பாயின்மெண்ட் தர முடியும் என்று உறுதியாகச் சொல்பவன் ரஞ்சனிக்கு மட்டும் இவ்வளவு சீக்கிரம் தந்தான்? தீபக் எப்படி இதைச் சாதித்தான்? இருக்கின்ற தலைவலி போதாது என்று இப்போது இது வேறா என்று கல்யாண் நொந்து போனான். இனி சீக்கிரத்திலேயே சரத்தின் போன் வரும். ஏற்கெனவே அவன் தொடைநடுங்கி. இதை தீபக் மூலம் கேள்விப்பட்டபின் அவனால் நிம்மதியாக இருக்க முடியாது... இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன் மணாலி போய் வந்த பிறகு சில நாட்கள் அவனுக்கும் உள்ளூரப் பயம் இருந்து கொண்டு தான் இருந்தது. எந்த நேரமும் போலீஸ்காரர்கள் வந்து விசாரிக்கலாம் என்ற அச்சம் அவனுக்கு இருந்து வந்தது. ஆனால் போகப் போக அவனுக்கு அந்தப் பயம் விலகிப் போய் விட்டது. அதன் பின் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி கிடைக்க ஆரம்பித்தவுடன் அசாத்திய தைரியமும், அதன் பின் அலட்சியமும் வந்து தங்கி விட்டது. பழைய பயமெல்லாம் பழங்கனவாய் அனாவசியமானதாய் தோன்ற ஆரம்பித்து விட்டது.

ஆனால் இருபத்தியிரண்டு வருடங்கள் கழித்து இப்போது அந்தப் பழைய நிகழ்வு திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தப்படுகிறது. யாராவது அதை நினைவுபடுத்துகிறார்கள். மொட்டைக்கடுதாசி வருகிறது. ரா அதிகாரி கூட விசாரிக்க வருகிறான். ’பழங்கால சாட்சியங்கள் எதுவும் எங்கும் தங்கி இருக்க முடியாது. யாரும் எதையும் நிரூபிக்க முடியாதுஎன்று அவன் திரும்பத் திரும்ப தைரியப்படுத்திக் கொண்டாலும் நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழியும் நினைவுக்கு வந்து தொலைத்தது....

செல்போன் பாடியது. யாரென்று பார்த்தான். சரத்! தன் கவலைகளையும் சந்தேகங்களையும் ஒதுக்கி விட்டு சரத்துக்கு முழு தைரியம் ஏற்படும்படி பேசி விட்டுச் சொன்னான். ”பாரு சரத்! ரஞ்சனி கிட்ட நாகராஜ் என்ன சொல்றான்னு பார்ப்போம். அதை வெச்சு நாம அவனையும் எடை போட முடியும். அவன் எல்லா உண்மையையும் கண்டுபிடிச்சு சொன்னாலும்  அவன் என்ன ஆதாரம் வெச்சிருக்க முடியும்? கொஞ்சம் யோசிச்சு பாரு. அவன் சொல்றது எதுவாவே இருந்தாலும் நாம ஒத்துகிட்டா தான் பிரச்சனை. நாம ஒரே நிலையில நிற்போம். ஞாபகம் வெச்சுக்கோ. பழைய தடயம் ஏதாவது இருந்திருந்தா இவ்வளவு நாள் யாரும் சும்மா இருந்திருக்கவும் மாட்டாங்க. அதனால இத்தனை வருஷம் கழிச்சு நம்மள யாரும் எதுவும் பண்ணிட முடியாது. அதனால நாகராஜைப் பத்தி தெளிவான ஒரு முடிவெடுக்க நமக்குக் கிடைச்சிருக்கற சந்தர்ப்பம்னு நாம சந்தோஷப்படணுமே ஒழிய பயப்படறதுல அர்த்தமில்லை....”

சரத்தை ஓரளவு அமைதிப்படுத்தி விட்டு கல்யாண் செல்போனைக் கீழே வைத்த போது களைப்பை உணர்ந்தான். சரத்தின் மிகப் பெரிய பலவீனமே ரஞ்சனி தான். வேறு எதையுமே அவன் தாங்கிக் கொள்வான். அவளுடைய வருத்தத்தையும், துக்கத்தையும் தாங்கிக் கொள்ள மாட்டான் அவன்.  ரஞ்சனியை நினைக்கையில் கல்யாண் மனம் கடந்த காலத்திற்குப் பயணம் போனது.

கல்யாண், சரத், மாதவன் மூவருடனும் ரஞ்சனி நட்பு கொண்டிருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவருடனும் ரஞ்சனி பழகிய விதங்களில் வித்தியாசம் நிறைய இருந்தது. கல்யாணும் அவளும் அறிவு சார்ந்த விஷயங்களில் எப்போதும் ஒத்துப் போவார்கள். புதிய விஷயங்களைப் புரிந்து கொள்வதில் அவர்கள் ஒரே அலைவரிசையில் இருப்பார்கள். சீக்கிரமே எதையும் புரிந்து கொள்வார்கள். அதனால் அவர்கள் இருவரும் அறிவார்ந்த விஷயங்கள் பற்றித் தான் அதிகம் பேசிக் கொள்வார்கள். சரத் மிக நெருங்கிய நண்பன் என்ற வகையில் அவள் வாழ்க்கையில் இருந்தான்.  எந்த விஷயத்தையும் அவள் அவனிடம் மனம் விட்டுச் சொல்வாள். அவன் மிகவும் பொறுமையாகக் கேட்பான். எப்போதும் அதற்கு அவன் சலித்ததோ மறுத்ததோ இல்லை. அவன் மீது அவளுக்கு ஆழமான நம்பிக்கை இருந்தது.  மாதவன் அவளுடன் உணர்வு பூர்வமான நெருக்கத்தில் இருந்தான். அவளுடைய கவிதைகளை எல்லாம் அவள் அவனிடம் தான் வாசித்துக் காட்டுவாள். அவள் என்ன உணர்கிறாளோ அதை அதே அலைவரிசையில் உணர முடிந்தவனாக மாதவன் இருந்தான். அவள் எப்போது என்ன நினைக்கிறாள் என்பதை முகம் பார்த்தே சொல்லக்கூடியவன் மாதவன் தான். பல நேரங்களில் அவள் முகம் பார்க்காமலேயே கூட இந்த விஷயத்தில் அவள் எடுக்கும் நிலைப்பாடு இதுவாகத் தான் இருக்கும் என்று கூட உறுதியாகப் புரிந்து கொள்ள முடிந்தவன் அவன்.

அவர்கள் நால்வரது நட்பை கல்லூரியில் பலரும் நால்வர் அணி என்று சொல்வார்கள். கல்லூரியில் எப்போதும் அவர்கள் நால்வரும் சேர்ந்தே காணப்படுவார்கள். அவர்களுடைய குடும்பம் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளும் கூட கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தான் இருந்தன.  எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவார்கள், விவாதிப்பார்கள், நட்பு ரீதியாக ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்வார்கள்.

எல்லாம் மாதவனின் மரணத்திற்குப் பின் மாறிப் போனது. பின் எப்போதும் ரஞ்சனி கவிதைகள் எழுதியதில்லை. சரத்தை அவள் திருமணம் செய்து கொண்ட பின் அவர்கள் இருவருடைய வாழ்க்கையும் ஒன்றானது. ஆனாலும் அவர்கள் மூவருமே முந்தைய நண்பர்களாக இருக்கவில்லை. பழைய விவாதங்களோ, பழைய நினைவுகளின் பரிமாற்றங்களோ இல்லாதபடி மாதவனின் மரணம் அவர்களை மாற்றி விட்டது. அடிக்கடி இல்லா விட்டாலும் எப்போதாவது ரஞ்சனி கல்யாணின் வீட்டுக்கு வருவதுண்டு. அப்படி வந்தாலும் மேகலாவுடனும் தர்ஷினியுடனும் பேசிய அளவுக்கு அவள் கல்யாணுடன் பேசியதில்லை. சூட்சுமமான இடைவெளி ஒன்று அவர்களுக்குள் வந்து விட்டிருந்தது....

மீண்டும் கல்யாணின் செல்போன் பாடியது. இந்த முறை அழைத்தது அவனுடைய ப்ரொடக்‌ஷன் மேனேஜர். கம்பெனியின் முக்கியமான மெஷினரி ஒன்று ரிப்பேராகி விட்டதாகச் சொன்னான். மகன் அருகில் நின்று கொண்டு மகன் முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியைக் கவனித்துக் கொண்டிருந்த வேலாயுதம் கேட்டார். “என்னடா?”

“மெஷின் ஒன்னு ரிப்பேராம். என்னவோ தெரியலைப்பா. நேரமே சரியில்லை. திரும்பின பக்கமெல்லாம் பிரச்சன. ஒன்னு விட்டா ஒன்னு வந்துகிட்டே இருக்கு. ஆஸ்திரேலியா எக்ஸ்போர்ட் பொருள்களை அவங்க திருப்பியனுப்பிச்சா இது வரைக்கும் சம்பாதிச்சதெல்லாம் இழக்கற அளவுக்கு நஷ்டமாயிடும். என்ன பண்றதுன்னே தெரியலை”

வேலாயுதம் மகனருகில் உட்கார்ந்து அவன் காதுக்கு மட்டும் கேட்கும்படி தாழ்ந்த குரலில் சொன்னார். இன்னைக்கு பீரோல இருக்கிற நாகரத்தினத்த எடுத்து சாமி முன்னாடி வெச்சி பூஜை பண்ணிட்டு மறுபடி உள்ளே வை. பக்கத்து வீட்டுக்காரன் அத்தனை சக்தி இருந்தாலும் அடிக்கடி பூஜை பண்றான் பார்த்தியில்ல. அதெல்லாம் அர்த்தத்தோட தான். இந்த நாகரத்தினம் வந்த பிறகு தான் நம்ம வாழ்க்கைல அதிர்ஷ்டமே எட்டிப்பாத்துச்சு. அதோட சக்தி இப்ப மங்கி இருக்கலாம். அதை பூஜை பண்ணி திருப்பி வெச்சிட்டா பழையபடி எல்லாம் சரியாக ஆரம்பிச்சுடும். வேணும்னா செஞ்சு பாரேன்”

கல்யாணுக்கு அவர் சொல்வதும் சரியென்றே பட்டது. அவன் எழுந்து போக வேலாயுதமும் பின்னாலேயே போனார். கல்யாண் தனதறைக்குள் போய் தன் பீரோவைத் திறந்தான். பீரோவுக்குள் பொருத்தப்பட்டிருந்த பணம் வைத்திருக்கும் லாக்கரைத் திறந்தான். உள்ளே கட்டுக் கட்டாய் இருந்த பணம், நகைகள் தாண்டி கையை உள்ளே விட்டு மூலையில் துழாவினான். நாகரத்தினத்தை வைத்திருந்த சிவப்புப் பட்டுத்துணி கைக்கு அகப்படவில்லை.  

அதை அவன் முகபாவனையிலிருந்தே உணர்ந்த வேலாயுதம் எல்லாம் வெளியே எடுத்து பொறுமையாய் தேடிப்பார்.” என்றார்.

கல்யாண் லாக்கருக்குள் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்து வெளியே வைத்து விட்டுப் பார்த்தான். லாக்கர் காலியாகவே இருந்தது. சிவப்புப் பட்டுத்துணி அங்கேயில்லை. கல்யாண் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தான்.

வேலாயுதம் சொன்னார். “ரெண்டு மூனு வாரத்துக்கு முன்னால தான நாம இதை எடுத்துப் பார்த்தோம். நீ எடுத்துப் பார்த்து திருப்பி வெச்சியா இல்லையா”

“உங்க முன்னாடி தானப்பா அதை திருப்பி வெச்சேன்”

வேலாயுதம் சிறிது யோசித்துப் பார்த்து விட்டு சொன்னார். “ஆமா…. பின்னே எப்படி காணாம போயிடுச்சு. உன் சம்சாரத்தைக் கேளு. அவ அதை எடுத்து வேறெங்காவது வெச்சிருக்கலாம்”

கல்யாண் பதற்றத்துடன் மனைவியை அழைத்து அந்த சிவப்பு பட்டுத் துணியில் வைத்திருந்த ரத்தினத்தை எடுத்தாயா என்று கேட்க அவள் “நான் உங்க பீரோவையே திறக்கறதில்லை. நீங்களே எங்கயாவது வெச்சிருப்பீங்க பாருங்க” என்றாள்

அதன் பின் எல்லா இடங்களையும் வேலாயுதமும், கல்யாணும் தேடிப்பார்த்து விட்டார்கள். சிவப்புத் துணியும், ரத்தினமும் வீட்டுக்குள் எங்கும் இல்லை.

(தொடரும்)
என்.கணேசன்