என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, January 16, 2023

யாரோ ஒருவன்? 121



வீட்டுக்குள் ரஞ்சனியை ஒற்றை சோபாவில் அமர வைத்த தீபக் கவலையுடன் கேட்டான். “என்னம்மா ஆச்சு..?.”

அவர்களைத் தொடர்ந்து வெளியே இருந்த மற்றவர்களும் பின் தொடர்ந்து வர உள்ளே இருந்த மேகலா என்ன நடந்து விட்டது என்பதொன்றும் புரியாமல் குழப்பத்துடன் வந்து கேட்டாள். “என்ன ஆச்சு?”

ரஞ்சனி சரத்தையும், கல்யாணையும் வெறித்துப் பார்த்தாள். சரத் தன்னையும் அறியாமல் ஒரு அடி பின்னால் எடுத்து வைக்க கல்யாண் முன்னால் வந்தான். ரஞ்சனி குரல் உடைய அவனிடம் கேட்டாள். “நம்ம மாதவன் எப்படிடா செத்தான்?”

மேகலாவும், தர்ஷினியும், தீபக்கும் அதிர்ந்தார்கள். அவர்கள் அறிந்த வரை சரத்தும், கல்யாணும் நண்பர்கள். கல்யாணுக்கு ரஞ்சனி நண்பனின் மனைவி. அவர்கள் மூவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அதைத் தவிர ரஞ்சனிக்கும், கல்யாணுக்கும் இடையிலிருந்த நெருங்கிய நட்பை அவர்கள் அறிந்ததில்லை. இதுவரை ரஞ்சனியும், கல்யாணும் அதைக் காட்டிக் கொண்டதுமில்லை. எனவே அவள் டா போட்டுப் பேசியது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.   

அவள் பழைய ரஞ்சனியாக மாறிவிட்டாள் என்பதைப் புரிந்து கொண்ட கல்யாண் அவள் அமர்ந்த சோபாவுக்குப் பக்கவாட்டில் மண்டியிட்டபடி சொன்னான். “இது என்ன கேள்வி ரஞ்சனி. அவன் அந்த வெடிகுண்டு விபத்துல செத்தது எல்லாருக்கும் தெரிஞ்சது தானே?”

அவளுடையடாவிற்கு இணையாக அவனும் அப்படி மண்டியிட்டு அமர்ந்தபடிக் கேட்டது அவர்களை மேலும் ஆச்சரியப்படுத்தியது. அவன் இதற்கு முன் அப்படி யார் அருகிலும் அமர்ந்ததில்லை. அவள் பேசியதும், அவன் அப்படி அமர்ந்ததும் வேலாயுதம், சரத் இருவரையும் ஆச்சரியப்படுத்தவில்லை என்பதையும் கூடக் கவனித்த போது இந்த நட்பு அவர்களுக்குப் புதியதல்ல என்பதையும் புரிய வைத்தது....

ரஞ்சனி கல்யாணின் கண்களைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னாள். “மாதவன் அந்த வெடிகுண்டு விபத்துல சாகலை, நீங்க ரெண்டு பேரும் தான் கொன்னுட்டீங்கன்னு நாகராஜ் சொல்றார்

சரத்தின் முகம் வெளுக்க, கல்யாண் இமைக்காமல் அவளைப் பார்க்க வேலாயுதம் சொன்னார். “உன் புருஷன் மேலயும் சேர்த்து அவன் அபாண்டமா பழி போட்டிருக்கான், நீ அதைக் கேட்டுகிட்டு வந்திருக்கியேம்மா

ரஞ்சனி வேலாயுதம் பக்கம் திரும்பவுமில்லை. தர்ஷினி திகைப்புடன் சத்தமாகக் கேட்டாள். “மாதவன்கிறது யாரு?”

ரஞ்சனி கல்யாணிடம் கரகரத்த குரலில் கேட்டாள். “நம்ம குழந்தைகளுக்கு மாதவன் யாருன்னு கூட நாம ஏன் இதுவரைக்கும் சொன்னதில்லை. சொல்லுடா. அதை விடு. நாம மூனு பேரே கூட ஏன் அவனைப்பத்தி பேசிகிட்டதில்லை. அவன் அவ்வளவு நமக்கு அன்னியமா போயிட்டானா?” 

கல்யாண் நிலைமை சிக்கலாவதை மெள்ள உணர்ந்தான். ஒருவேளை நாகராஜ் ரஞ்சனியிடம் உண்மையைச் சொன்னால் அவள் உடைந்து போவாள், ஆக்ரோஷமடைவாள் என்பதை எல்லாம் அவன் முன்பே யூகித்திருந்தான். அவனுடைய நெருங்கிய நண்பர்கள் மூவரும் எதெதற்கு எப்படியெப்படி நடந்து கொள்வார்கள் என்பது அவனுக்கு அத்துப்படி. அதனால் அவள் அதிர்ச்சிக்குத் தயாராகவே இருந்த அவன், ரஞ்சனி அவர்களைத் தனியாக அழைத்து நாகராஜ் சொன்னதைச் சொல்வாள் என்று நினைத்தான். தன் மகள் மாதவன் பற்றிக் கேட்பாள் என்றோ, அதைக் கேட்டுவிட்டு ரஞ்சனி மாதவனைப் பற்றி நாம் ஏன் நம் குழந்தைகளிடமும் சொன்னதில்லை, நாமே ஏன் பேசிக் கொண்டதில்லை என்று பிள்ளைகள் முன்னாலேயே கேட்பாள் என்றோ அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

கல்யாண் ரஞ்சனியிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். “அது ஏன்னு உனக்கும் தெரியும் ரஞ்சனி. அவனை நாம அந்த அளவு நேசிச்சோம். அவனைப் பத்தி பேசி நினைவுபடுத்திகிட்டு நம்ம காயங்களைப் புதுப்பிச்சுக்க நாம விரும்பல” 

அவர் என் கிட்ட கேட்டார். நமக்கு மாதவன் ஞாபகம் வரணும்னா அவனைப் பற்றிப் பேசினா தான் வரணுமான்னுஎன்று ரஞ்சனி கேட்டு விட்டு மகன் பக்கம் வேகமாகப் பார்வையை ஒரு முறை கொண்டு போய் விட்டு கல்யாணைப் பார்த்தாள்.

கல்யாண் என்ன சொல்வதென்று யோசித்து மௌனமே உத்தமம் என்று முடிவெடுத்தான்.

ரஞ்சனி சொன்னாள். “மாதவனைப் பத்தி பேசிக்காததும், மாதவனோட வீட்டுக்கு அவன் செத்ததுக்கு அப்பறம் போகாமயே இருக்கிறதும் உங்க ரெண்டு பேரோட குற்ற உணர்ச்சியால தான்னு அவர் சொல்றார்

கல்யாண் கோபத்துடன் சொன்னான். “அதைச் சொல்ல அவன் யாரு. நீ என்ன கேள்வி கேட்கப் போனேன்னு எனக்குத் தெரியாது ரஞ்சனி. ஆனா நீ  கேட்டதுக்குப் பதில் தெரியாட்டி தெரியாதுன்னு சொல்லிட்டு அவன் மூடிகிட்டு இருக்கணும். அதை விட்டுட்டு வாய்க்கு வந்த மாதிரியெல்லாம் அவன் பேசக்கூடாது. ஆரம்பத்துல இருந்தே அவன் மேல எனக்கு சந்தேகம். இப்ப நிரூபணம் ஆயிடுச்சு. எங்க மேல அபாண்டமா பழி சுமத்தணும்னே இங்கே வந்து சேர்ந்திருக்கான்...”

வேலாயுதம் சொன்னார். “நான் அன்னைக்கே சொன்னேன். அவன் முகத்துல ஒரு திருட்டு லட்சணம் தெரியுதுன்னு. அது சரியாயிடுச்சு பார்த்தியா?”  

தர்ஷினி பார்வையால் தீபக்கிடம்என்ன இதெல்லாம்?” என்று கேட்டாள்.

தீபக் தோள்களைக் குலுக்கி ஒன்றுமே புரியவில்லை என்று சைகையால் சொன்னான்.

அவள் ரஞ்சனியைப் பார்த்து விட்டு தீபக்கிடம்உங்கம்மா கிட்ட கேள்என்று சொன்னாள். என்ன நடக்கிறது என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று ஒன்றுமே புரியாமல் இருப்பதை அவளால் தாங்க முடியவில்லை. அவனும் அதே நிலையில் இருந்ததால் அவன் தாய் அமர்ந்திருந்த சோபாவின் மறுபக்கத்தில் கல்யாணைப் போலவே மண்டியிட்டு உட்கார்ந்து கேட்டான். “அம்மா அங்கிள் கிட்ட நீங்க என்ன கேட்கப் போனீங்க? அவர் என்ன சொன்னாரு?”

ரஞ்சனி எதுவும் சொல்வதற்கு முன் வேலாயுதம் சொன்னார். “நீ இன்னும் அவனை அங்கிள்னு சொல்லியே கூப்பிடு. அவன் உங்கப்பனை கொலைகாரன்னு சொல்லிகிட்டு திரியறான்

கல்யாண் தந்தையைச் சுட்டெரிப்பது போல் பார்த்தான். ’வாயைத் தான் மூடிக் கொண்டிருங்களேன்என்று அவன் கண்கள் கட்டளையிட்டன. பேச்சின் இடையே சொன்னது அமுங்குவது போலிருக்கையில் இவர் அதை அடிக்கோடிட்டுச் சொல்வது போல் சொல்லும் அவசியம் தான் என்ன?

தர்ஷினி சொன்னாள். “நீங்கல்லாம் என்ன பேசிக்கிறீங்க என்ன சொல்றீங்கன்னு சின்னவங்க எங்களுக்கு ஒன்னுமே புரியலை.”

மேகலா சொன்னாள். “பெரியவ எனக்கே புரியல. அப்பறம் அல்ல உனக்கு புரியறதுக்கு

இவ்வளவு தூரம் இவர்களும் பேச ஆரம்பித்த பிறகு ரஞ்சனியாக எதையும் சொல்ல ஆரம்பிப்பதற்கு முன் தானே அதை ஒன்றுமில்லாத சிறிய விஷயம் போலச் சொல்வது நல்லது என்று தோன்ற கல்யாண் சுருக்கமாகச் சொன்னான். “எங்க மூனு பேருக்கும் மாதவன்னு ஒரு நெருங்கின நண்பன் இருந்தான். நாங்க மணாலிக்கு போயிருந்தப்ப அங்கே வெடிச்ச வெடிகுண்டு விபத்துல அவன் இறந்துட்டான். அது நடந்து 22 வருஷத்துக்கு மேல ஆச்சு. இப்ப நாங்க தான் அவனைக் கொலை செஞ்சோம்னு பக்கத்து வீட்டுக்காரன் சொல்றானாம். பைத்தியக்காரன்

தர்ஷினி சொன்னாள். “நீங்க யாருமே இது வரைக்கும் மாதவன்னு ஒரு ஃப்ரண்ட் உங்களுக்கு இருந்ததாய் சொல்லவேயில்லை

கல்யாண் சொன்னான். “எங்க நண்பன் இறந்தது எங்களுக்கு ரொம்பவே அதிர்ச்சியாய் இருந்துச்சு. ஏன்னா அந்த அளவு நாங்க நெருங்கி இருந்தோம். அவன் இறந்தபிறகு எங்களுக்குள்ளேயே அவனைப் பத்தி நாங்க அதிகம் பேசிக்கலை. பேசிக்கறது எங்க காயங்களை புதுப்பிச்சுக்கற மாதிரி தோண ஆரம்பிச்சுதுஎல்லாமே ஏதோ ஒரு பழங்கனவு மாதிரியாயிடுச்சு...”

தீபக் தாயிடம் மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டான். ““அம்மா அங்கிள் கிட்ட நீங்க என்ன கேட்கப்போனீங்க? அவர் என்ன சொன்னாரு?””

ரஞ்சனி கண்கலங்கச் சொன்னாள். “எனக்கு சில நாளாவே மாதவன் நம்ம வீட்டுல வந்து நிற்கற மாதிரி பார்க்கற மாதிரி எல்லாம் தோணுது. அது எதனாலன்னு கேட்கப் போனேன்.... அவன்... அவன்.... விபத்துல சாகல.... நண்பர்கள் ரெண்டு பேரும் தான்.......அவனை கொலை பண்ணிட்டாங்கன்னு அவர் சொல்றார்

கல்யாண் ஆவேசமாகச் சொன்னான். “யாராவது நெருங்கின நண்பனைக் கொலை பண்ணுவாங்களா? அப்படிப் பண்ணக் காரணம் என்னன்னு அந்த ஆள் கிட்ட நீ கேக்கலியா ரஞ்சனி?”

கேட்டேன்.... சொல்லலை. உங்க ரெண்டு பேர் கிட்ட நேரடியா கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்னு சொல்லிட்டார்

கல்யாண் பதுங்கியபடி பின்னால் நின்ற சரத்தை முறைத்தான். சந்தேகப்படுகிற மாதிரி பின்னால் போய் நிற்காதே. நீயும் ஏதாவது சொல்லு என்று பார்வையால் கட்டளையிட சரத் முன்னால் வந்து வருத்தம் கலந்த குரலில் சொன்னான். “அந்தக்காலத்துல மாதவனும் எங்க மாதிரி ஒரு அன்னக்காவடி தான். அவனைக் கொன்னு எங்களுக்கு என்ன லாபம்? சும்மா அந்த ஆள் அவதூறாய் பேசறான்

சிறிது நேரம் மயான அமைதி அங்கே நிலவியது. திடீரென்று தீபக் எழுந்து வெளியே போனான். தர்ஷினி அவன் பின்னாலேயே போனாள். சந்தேகத்துடன் வேலாயுதமும் பின்னால் போய் விட்டு  ஒரு நிமிடத்தில் ஓடி வந்து சொன்னார். ”ரெண்டு பேரும் பக்கத்து வீட்டுக்குள்ளே போறாங்க




(தொடரும்)
என்.கணேசன்



Thursday, January 12, 2023

சாணக்கியன் 39

 

கேகய நாட்டுக்கு அலெக்ஸாண்டர் அனுப்பிய தூதன் திரும்பி வந்து சொன்ன செய்தி ஆம்பி குமாரனின் காதுகளில் தேனாய் பாய்ந்தது. இந்தப் பதிலைக் கேட்டு அலெக்ஸாண்டர் கடுங்கோபம் அடைவான் என்று அவன் எதிர்பார்த்து ஏமாந்து போனான். கோபத்திற்கு மாறாக அலெக்ஸாண்டர் முகத்தில் சிறிய புன்முறுவல் பூத்தது. இந்தப் பதில் அலெக்ஸாண்டர் எதிர்பார்த்திருந்தது தான்.   முன்பே காஷ்மீரம், சிந்து, மல்லையநாடு போன்ற பகுதிகளை எல்லாம் வென்று மலைகளை வென்ற அரசன் என்று பொருள்படும் பர்வதேஸ்வரன் என்ற பெயரைப் பெற்றிருந்த புருஷோத்தமன், அவன் தூதனுப்பிய உடனே பணிந்து வருவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை

 

அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஆம்பி குமாரன் சொன்னான். “நான் முன்பே சொன்னேனல்லவா நண்பா. புருஷோத்தமன் அகம்பாவம் பிடித்தவன். எப்படி பதில் அனுப்பியிருக்கிறான் பார்த்தாயா? அவன் பதில் உனக்குக் கோபமூட்டாமல் இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறதுநாம் அவனுக்குச் சரியான பாடத்தைக் கற்பிக்க வேண்டும்…”

 

அலெக்ஸாண்டர் புன்னகையுடன் சொன்னான். “மாசிடோனியாவில் இருந்து இங்கு வந்து சேரும் வரை எத்தனையோ பேர் என்னை எதிர்த்திருக்கிறார்கள். அதனால் எனக்கு எதிர்ப்பு புதியதல்ல. எதிர்த்தவர்கள் மீதெல்லாம் நான் கோபம் கொள்ள வேண்டுமானால் என் மனநிலையை நான் கெடுத்துக் கொண்டு கஷ்டப்படுவது போலாகி விடும். மேலும், எதிர்த்தவர்கள் மீது கோபம் கொள்வது எனக்கு கால விரயமாகவே தோன்றுகிறது. எதிர்த்தவர்களுக்குப் பாடம் கற்பிப்பதும் என் வேலையல்ல. என் வேலை அவர்களை வெல்வது மட்டுமே.  புருஷோத்தமனையும் நாம் வெல்வோம். அதற்கு அதிகமாக அவனுக்கு என் மனதில் நான் ஏன் அதிக இடம் தர வேண்டும்?”

 

ஆம்பி குமாரன் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்தான். அவனுக்கு இது போன்ற சிந்தனைகள் புதிது. எதிர்ப்பவர்கள் மீது கோபமும், பாடம் புகட்ட வேண்டும் என்ற வெறியும் அவனுக்கு எப்போதும் இயல்பாகவே இருந்திருக்கிறது. அதிலும் புருஷோத்தமன் மீது அவனுக்கு ஆரம்பத்திலிருந்தே இந்த உணர்வு அதிகமாக இருந்திருக்கிறது. அதனால் அலெக்ஸாண்டர் மனநிலை அவனுக்குப் புதிராக இருந்தது. நேற்றும் தண்டராய சுவாமி மேல் கோபமாக அலெக்ஸாண்டர் போன போது அந்தத் துறவியைக் கொன்று விட்டு தான் வருவான் என்று ஆம்பி குமாரன் எதிர்பார்த்திருந்தான். ஆனால் நேற்று அந்தத் துறவியைக் கொல்லாமல் அந்த ஆளிடம் நிறைய நேரம் பேசி விட்டு அலெக்ஸாண்டர் வந்ததும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மேலும் நேற்று வந்த பின்பு யாரிடமும் பேசாமல் தனிமையில் நீண்ட நேரம் அலெக்ஸாண்டர் கழித்ததும் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. சசிகுப்தனிடம் பேசிய போது ஞானிகளிடம் நீண்ட நேரம் பேசி விட்டு வந்தாலோ, ஞான சிந்தனைகளில் ஆழமாக யோசிக்க ஆரம்பித்தாலோ அலெக்ஸாண்டர் அப்படித் தான் தனிமையில் சிந்தனையில் ஆழ்வான் என்று சொன்னான். ஞானம் பற்றி யாராவது பேசினால் காதுகளைப் பொத்திக் கொண்டு காத தூரம் ஓடும் ஆம்பி குமாரனுக்கு இதெல்லாம் ஆச்சரியமான குணாதிசயங்களாகத் தோன்றின

 

அலெக்ஸாண்டர்  தன் சேனைத் தலைவன் செல்யூகஸை வரச் சொல்லி ஒரு வீரனை அனுப்பி விட்டு ஆம்பி குமாரனிடம் சொன்னான். “என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய் நண்பா. நாம் கேகய நாட்டுடன் போருக்கு ஏற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டாமா?”

 

தன் எண்ண ஓட்டத்திலிருந்து விடுபட்ட ஆம்பி குமாரன் காதுகளில் அந்த வார்த்தைகள் தேவாமிர்தமாக விழுந்தன. “நான் இந்தக் கணத்திற்காகத் தான் பல நாளாகக் காத்துக் கொண்டிருக்கிறேன் நண்பா…”

 

அலெக்ஸாண்டர் புன்னகையுடன் சொன்னான். “சரி கேகய நாட்டுப் படைபலம் பற்றிச் சொல்

 

சசிகுப்தன் மூலமாகவும் வேறு சிலர் மூலமாகவும் ஏற்கெனவே இது குறித்து அலெக்ஸாண்டர் நிறைய தகவல்கள் பெற்றிருக்கிறான் என்பதை அறியாத ஆம்பி குமாரன் இந்தக் கேள்விக்கு ஆர்வத்துடன் பதில் சொல்ல ஆரம்பித்தான்.  

 

அலெக்ஸாண்டர் ஏற்கெனவே தெரிந்த தகவல்கள் அவை என்பதைக் காட்டிக் கொள்ளாமல் ஆம்பி குமாரன் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டான். இது போல் கேட்கையில் ஒவ்வொருவரிடமிருந்தும் கூடுதலாக ஒரு சிறு தகவலாவது அவனுக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை….

 

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு விட்டு அலெக்ஸாண்டர் கேட்டான். “படைபலம் தவிர அவனுடைய கூடுதல் பலம் என்ன நண்பா?”

 

ஆம்பி குமாரன் சிறிது யோசித்து விட்டுச் சற்றுத் தாழ்ந்த குரலில் சொன்னான். “அவனிடம் கைதேர்ந்த ஒற்றர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்

 

சாணக்கியர் அன்று மதியம் தான் தட்சசீலம் வந்து சேர்ந்தார்.   முடியாத குடுமியுடன் இருந்த அவர் பாடலிபுத்திரத்தில் மகத அரசவையில் நடந்ததைச் சுருக்கமாக பொதுவில் அனைவர் முன்னிலையிலும் சொன்னார். அதை ஒரு தகவலைச் சொல்வது போல் சொன்னாரேயொழிய சொல்கையில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை. சந்திரகுப்தனிடம் அவன் தாயும் மாமனும் நலமாக இருக்கிறார்கள் என்றும் அவனைக் காண ஆவலாக இருக்கிறார்கள் என்ற தகவலை மட்டும் சொன்னார். நீண்ட பயணத்திற்குப் பின் அவர் வந்திருப்பதால் சந்திரகுப்தனும், அவருடைய அன்பிற்கும், நம்பிக்கைக்கும் உரிய மற்ற மாணவர்களும் மற்றவர்கள் முன்னிலையில் அவரை கூடுதல் தகவல்கள் கேட்டுத் தொந்தரவு செய்யவில்லை.

 

ஆனால் அவர்கள் இரவு அவர் அறைக்கு வந்தார்கள். ஏதோ எழுதிக் கொண்டிருந்த அவர் தன் பிரியமான மாணவர்களைப் பார்த்த பிறகு அதைத் தள்ளி வைத்தார். ”இங்கு என்ன செய்தி?” என்று கேட்டார்.

 

சாரங்கராவ் சொன்னான். “அலெக்ஸாண்டர் தட்சசீலத்தில் விருந்தினர் மாளிகையில் தான் இருக்கிறான். சற்று முன் கிடைத்த தகவலின் படி கேகயத்துடன் போர் துவங்க யவனப்படையும், காந்தாரப்படையும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.”

 

சாணக்கியர் முதல் முறையாக வருத்தம் முகத்தில் தெரியச் சொன்னார். “எது நடக்கக் கூடாதென்று நினைத்தோமோ அது நடந்து விட்டது. ஆம்பி குமாரன் அன்னியனிடம் நட்புக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக புருஷோத்தமனிடம் நட்புக்கரம் நீட்டியிருந்தால் அவர்கள் இருவருமாகச் சேர்ந்து அலெக்ஸாண்டரை எல்லையிலேயே துரத்தியடித்து இருக்கலாம். இனி நடப்பதெல்லாம் அலெக்ஸாண்டரின் அடுத்த ஆக்கிரமிப்புகளாகத் தான் இருக்கப் போகிறது.” 

மாணவர்களும் வருத்தப்பட்டார்கள். சிறிது நேர மௌனத்திற்குப் பின் சாணக்கியர் இயல்பு அமைதிக்குத் திரும்பி கேட்டார். “வேறென்ன செய்திகள்?”

 

மாணவர்கள் அலெக்ஸாண்டரைப் பார்த்த காட்சியைச் சொன்னார்கள். அவன் தட்சசீலத்தில் அவனுடைய வெற்றிகளுக்கு பலி கொடுத்து பூஜைகள் செய்ததைச் சொன்னார்கள்.

 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவலைச் சொல்ல விஜயன் மட்டும் அமைதியாக இருந்ததால்  சாணக்கியர் அவனைக் கேள்விக்குறியுடன் பார்க்க அவன் சொன்னான். “நம் தலைமை ஆசிரியர் ஆம்பி குமாரனின் பட்டாபிஷேக நிகழ்ச்சிக்குப் போயிருந்தார். அவருக்கு நிறைய சன்மானங்களும் கிடைத்திருக்கின்றன. அவருடன் துணைக்குப் போன மாணவனுக்கும் ஆம்பி குமாரன் தாராளமாகப் பரிசுகள் தந்திருக்கிறான்

 

மற்ற மாணவர்கள் கஷ்டப்பட்டு சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொள்ள, சாணக்கியர் கேட்டார். “ஏன் நீ அவருடன் போகவில்லை. போயிருந்தால் உனக்குக் கிடைத்திருக்குமல்லவா?”

 

விஜயன் மெல்லச் சொன்னான். “நான் அவர் செல்லும் போது கூட வரட்டுமா என்று கேட்டேன். அவர் வேண்டாம் என்று சொல்லி இன்னொரு மாணவனை அழைத்துச் சென்று விட்டார். நான் போனால் அங்கு ஏதாவது செய்து அவருக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடுவேனாம்.”

 

இரண்டு பேர் வாய் விட்டே சிரித்து விட சாணக்கியர் லேசாகப் புன்னகை செய்தார். சிலர் பெரிய பெரிய விஷயங்களை யோசிப்பதில்லை. சில்லறை விஷயங்களிலேயே திருப்தி அடைந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட மனிதர்கள் வரலாற்றில் காலடிச் சுவடுகளைப் பதிப்பதில்லை என்றாலும் கூட பெரிய வருத்தங்கள் இல்லாமல் சில்லறைத் திருப்தியுடனேயே வாழ்ந்து விட்டு விடை பெற்றுக் கொள்கிறார்கள். ஒரு விதத்தில் பார்க்கப்போனால் பெரிய பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளாத சிக்கலில்லாத வாழ்க்கையது!

 

சாணக்கியர் சந்திரகுப்தனிடம் கேட்டார். “அலெக்ஸாண்டரைப் பார்த்தாயா? அவனைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”

 

துடிப்பானவனாகவும், மாவீரனாகவும், தெளிவானவனாகவும் தெரிகிறான்.”

 

அவனைப் பற்றி நாம் கேள்விப்பட்டதெல்லாம் உண்மை என்று தோன்றுகிறதா?”

 

நூறு சதவீதம் சரியென்றே தோன்றுகிறது ஆச்சாரியரே

 

சாணக்கியர் பெருமூச்சு விட்டார். விதி வலிது!

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, January 9, 2023

யாரோ ஒருவன்? 120


ண்பனையே காரணமில்லாமல் யாராவது கொல்வார்களா என்ற ரஞ்சனியின் கேள்விக்கு நாகராஜ் அமைதியாகப் பதில் சொன்னான். “அவங்க ரெண்டு பேரும் உயிரோட தான் இருக்காங்க. உங்களுக்கு நெருக்கமா தான் இருக்காங்க. அவங்கள நீங்க நேரடியாவே கேட்கலாம்....”

ரஞ்சனி குரல் நடுங்கச் சொன்னாள். “இந்த அபாண்டமான குற்றச்சாட்டைச் சொல்லி அவங்க கிட்ட கேட்கக்கூட எனக்கு நாக்கு கூசுதுங்க”  

நாகராஜ் சொன்னான். “நீங்க நாலு பேரும் ரொம்ப நெருங்கின நண்பர்களாய் இருந்ததா சொல்றீங்க. உங்க அளவு மாதவனை அவங்களும் நேசிச்சதா சொல்றீங்க. இந்த 22 வருஷங்கள்ல நீங்க மூனு பேரும் சேர்ந்து மாதவனைப் பத்தி எத்தனை தடவை பேசியிருப்பீங்க. பழைய நினைவுகளை பகிர்ந்திருப்பீங்க.”

ரஞ்சனி சிறிது யோசனைக்குப் பின் சொன்னாள். “அவனைப் பத்தி பேசி பழைய நினைவுகள நினைச்சு மனச ரணமாக்கிக்க அவங்க ரெண்டு பேருக்கும் மனசிருக்கல”

“மாதவன் உயிரோட இருந்த காலத்துல எத்தனையோ நாட்கள் மாதவனோட வீட்டுல அவன் அம்மாவோட அருமையான சமையல சாப்டுட்டு நாலு பேரும் கதை பேசிட்டிருந்தீங்க. அவன் இறந்ததுக்கப்புறம் அந்த வீட்டுக்கு எத்தனை தடவை போயிருப்பீங்க?”

அவன் கேட்டவுடன் அவள் இரண்டு நிமிடங்கள் பேச்சிழந்து போனாள். அவள் முகத்தில் முதல் முறையாக குற்றவுணர்ச்சி தெரிந்தது.   பின் அவள் பலவீனமான குரலில் சொன்னாள். ”அதுக்கும் அதே காரணம் தான் சொன்னாங்க...”

நாகராஜ் கேட்டான். “உங்க வாழ்க்கைல மாதவன் ஒரு பகுதியாவே ஆயிட்டதா சொன்னீங்க. உங்களுக்கு அவனை அப்பப்ப நினைக்காமல் இருக்க முடியலைன்னு சொன்னீங்க. ஆனா உங்க அளவுக்கே அவனை நேசிச்ச அவங்களுக்கு மட்டும் அவனைப்பத்தி பேசினாலோ, நினைச்சாலோ, அவன் வீட்டுக்குப் போனாலோ மனசு ரணமாயிடும்கிறது முரண்பாடா உங்களுக்குத் தெரியலையா?”

மறுபடி தர்மசங்கடமான மௌனம். பின் மெல்ல ரஞ்சனி சொன்னாள். “ஒவ்வொருத்தர் எடுத்துக்கற விதம் ஒவ்வொரு மாதிரி. சில பேருக்கு நினைவுபடுத்திகிட்டு வாழ முடியுது. சில பேருக்கு நினைவுபடுத்தறது தாங்க முடியாத ரணமாய் போயிடுது”

நாகராஜ் சொன்னான். “நினைவுபடுத்திக்கறது ரணமாய் இருக்கும்னா ரெண்டு பேரும் தீபக்கை எப்படி தினமும் பார்க்கிறாங்க?”

இந்த முறை அதிர்ச்சி ஒரேயடியாக அவளைப் பேச்சிழக்க வைத்தது. அவள் மனதில் புயல் வீச ஆரம்பித்தது. கொந்தளிக்கும் உணர்ச்சிகள் அலைமோத அவனை வெறித்துப் பார்த்தாள்.

“நண்பனைப் பத்தி அவங்க பேச மறுக்கறதுக்கு குற்றவுணர்ச்சி கூட காரணமாய் இருக்கலாம். அவங்க மறக்க நினைக்கறது அவங்க குற்றத்தையா கூட இருக்கலாம்.” அமைதியாக நாகராஜ் சொன்னான்.

அவள் இப்போதும் ஒன்றுமே சொல்லவில்லை. இடி விழுந்தவள் போல் பேச்சிழந்து அமர்ந்திருந்த அவளைப் பார்க்கையில் அவள் வேதனையைப் பரிபூரணமாக நாகராஜால் உணர முடிந்தது. அவன் இரக்கத்துடன் சொன்னான். “மன்னிக்கணும். நீங்க இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருந்திருக்கணும். நானும் உண்மையைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்திருப்பேன். நடந்ததை கடவுளால் கூட மாற்ற முடியாது. அதனால் நானும் மாற்றிச் சொல்ல முடியாது. ஒன்னே ஒன்னு மட்டும் என்னால் செய்ய முடியும். உங்க மகன் கனவுல மாதவனோட ஆத்மா வந்து தொந்திரவு செய்ததை நிறுத்தின மாதிரி  அவன் ஆத்மா உங்களை வந்து தொந்திரவு செய்யறதையும் என்னால் நிறுத்த முடியும்...”

அவள் கண்கலங்க அவனைப் பார்த்துக் கைகூப்பினாள். “இந்த உடம்புல உயிர் இருக்கற கடைசி நிமிஷம் வரைக்கும் அவன் ஆத்மா வர்றதை தொந்திரவுன்னு நான் நினைக்க மாட்டேங்க. உயிருக்குயிரா நான் அவனைக் காதலிச்சுருக்கேன். அது அவனோட மரணத்துல கூட மாறல. இனியும் மாறாது. ஆனா அந்த நல்ல ஆத்மா ஏன் மோட்சமடையலங்கற வருத்தத்துல தான் உங்களைக் கேட்க வந்தேன். நன்றிங்க”

அவள் தளர்ச்சியுடன் எழுந்தாள். ஆயிரம் வார்த்தைகள் வெளிப்படுத்த முடியாத அவளது துக்கத்தை அவளிருந்த நிலை நாகராஜுக்கு உணர்த்தியது. இங்கே நுழையும் போதிருந்த ரஞ்சனி அல்ல அவள்... இரண்டடி எடுத்து வைத்த அவள் தடுமாறி தான் அமர்ந்திருந்த நாற்காலியைப் பிடித்து தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டாள். அவன் தன் இதயத்திலும் காயம் உடைந்து ரணம் புதுப்பிக்கப்படுவதை உணர்ந்தான். சத்தியமங்கலத்து வீட்டில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டது போல் இப்போது கட்டுப்படுத்திக் கொள்வது சுலபமாய் இல்லை. அங்கே அவன் கண்டது ஆறிய காயங்களை. இங்கே அவன் அவளைக் காயப்படுத்தியிருக்கிறான். அவள் மன ரணத்தை சகிப்பது சுலபமாயில்லை...

அவள் அங்கிருந்து நடைப்பிணமாக வெளியேறினாள். நாகராஜ் கருப்புக் கண்ணாடியைக் கழற்றி விட்டு கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டான்.


தீபக்கால் வீட்டிற்குள் இருக்க முடியவில்லை. தர்ஷினி பேசிய பேச்சுகளில் மனம் தங்கவில்லை. அதைக் கவனித்து அவள் கோப்பபட்டதையும் அவன் பொருட்படுத்தவில்லை. “இவங்க என்ன கேட்கறாங்களோ, அங்கிள் என்ன சொல்றாரோ தெரியல. என்னவோ மனசு படபடங்குது தர்ஷினி” என்று அவன் கவலையுடன் சொன்னவுடன் அவள் கோபம் பறந்து போனது. அவன் தாய் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறான் என்பதை அவள் அறிவாள்.

“என்னவோ முதல் நாள் குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பிச்சுட்டு என்ன செய்யுதோன்னு கவலைப்படற அம்மா மாதிரி ஏண்டா இப்படி இருக்கே.” என்று செல்லமாய் அவன் மண்டையில் அவள் கொட்டினாள்.

சாதாரணமாக இது போல் அவள் எதாவது செய்தால் அக்கம்பக்கம் பார்த்து விட்டு அவனும் பதிலுக்கு எதாவது குறும்பு செய்வான். ஆனால் இன்று ஏனோ அவன் மனம் ஒரு நிலையில் இல்லை. ”நாம வெளியவே உட்கார்ந்துக்கலாமா தர்ஷினி” என்று சொன்னான்.

”சரிடா வா” என்று அவள் அவனை அழைத்துக் கொண்டு போனாள்.

ஏற்கெனவே வெளியே புல்வெளியில் தான் நாற்காலிகளைப் போட்டு வேலாயுதம், சரத், கல்யாண் மூவரும் பக்கத்து வீட்டையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் போய் உட்கார மனமில்லாமல் தீபக் போர்ட்டிகோவின் மேடையைக் காட்டி தர்ஷினியிடம் சொன்னான். “நாம இங்கேயே உட்கார்ந்துக்கலாம்”

இருவரும் அங்கேயே உட்கார்ந்து கொண்டார்கள்.

தர்ஷினி தீபக்கிடம் சொன்னாள். “எப்பவோ இறந்து போன ஆத்மா உங்கம்மா நினைவுல அடிக்கடி வருதாம். அதைப் பத்திக் கேட்கத் தான் அங்கே போறதா அவங்க எங்கம்மா கிட்ட சொன்னது காதுல விழுந்துச்சு”

தீபக் திகைத்தான். “எனக்கு கூட ஒரு ஆத்மா ‘நான் இயற்கையா சாகல. என்னை கொன்னுட்டாங்கன்னு’ சொல்ற மாதிரி மூனு நாள் கனவு வந்ததா உன் கிட்ட சொன்னது ஞாபகம் இருக்கா? அம்மா சொல்றதும், நான் சொல்றதும் ஒரே ஆத்மாவான்னு தெரியலையே...”

தர்ஷினி சலிப்புடன் சொன்னாள். “இருக்கறவனப் பத்தி கவலைப்படறதுக்கே இங்கே அவனவனுக்கு நேரமில்லை. நீங்கள்லாம் ஏண்டா செத்த ஆத்மாவுக்கு இப்படி கவலைப்படறீங்க?”

அவள் சொன்னதைக் கேட்டு ஒரே நேரத்தில் அவனுக்குச் சிரிப்பும், கோபமும் வந்தன. அதற்குள் பக்கத்து வீட்டுக் கதவைத் தாண்டி ரஞ்சனி தளர்ச்சியுடன் வருவது அவனுக்குத் தெரிந்தது. அவள் நடையில் தெரிந்த தளர்ச்சி அவனைப் பதற வைத்தது. பதற்றத்துடன் ஓடினான்.

ரஞ்சனி தளர்ச்சியுடன் பக்கத்து வீட்டு கேட்டை நெருங்கிய விதம் சரத், கல்யாணையும் கூடப் பதற வைத்தது. சரத் அழாத குறையாகச் சொன்னான். “அவன் உண்மையை அவ கிட்ட சொல்லிட்டான் போலருக்குடா”

தீபக் மின்னல் வேகத்தில் ஓடி பக்கத்து வீட்டுக் கேட்டருகே தாயை அடைந்தான். “அம்மா... அம்மா... என்னாச்சும்மா?”

கலங்கிய கண்களுடன் ரஞ்சனி மகனைப் பார்த்தாள். தாயை அந்த மாதிரியான கோலத்தில் இது வரை என்றுமே பார்த்திராத தீபக் உடல் நடுங்கியபடி மறுபடி கேட்டான். “சொல்லும்மா. என்னாச்சு. அவர் எதாவது வருத்தப்படற மாதிரி பேசிட்டாராம்மா. சொல்லும்மா.”

அவள் ஆமாம் என்று சொல்லி இருந்தால் வேறெதையும் பற்றி யோசிக்காமல் நாகராஜிடம் போய் தீபக் எரிமலையாய் வெடித்திருப்பான்.

ரஞ்சனி எதையும் சொல்லும் மனநிலையில் இல்லை. இல்லை என்று தலையை மட்டும் அசைத்து விட்டு அவனைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினாள். ஆனால் மகனைப் பிடித்துக் கொண்டவுடன் அவளுக்குத் தானாய் கண்கள் குளமாகி அருவியாய் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

தீபக் என்ன செய்வதென்று அறியாமல் தாயை கல்யாணின் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தான். சரத்தும், கல்யாணும் அவளைப் பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருக்க அவளும் அவர்களைப் பார்த்தாள். அவள் கண்களில் தீப்பந்தங்கள் எரிந்தன.

(தொடரும்)
என்.கணேசன்  

Thursday, January 5, 2023

சாணக்கியன் 38

 

காட்டுக்குள் நடந்ததை ஒனெஸ்க்ரீட்டஸ் வந்து சொன்னவுடன் அலெக்ஸாண்டர் சிறிது நேரம் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அவனையே பார்த்தான். தண்டராய சுவாமி அவனுடைய அன்பளிப்புகளை ஏற்க மறுத்தது அலெக்ஸாண்டரைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. ”எனக்கு விருப்பமும், பயனும் இல்லாத இந்தப் பொருள்களை நீ திரும்பவும் எடுத்துச் செல்வாயாக!” என்று தண்டராய சுவாமியால் சொல்ல முடிந்தது அந்தத் துறவியின் துறவு உண்மையானது என்பதையே சுட்டிக் காட்டுவதாக அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் “யாரையும் சென்று சந்திக்கும் உத்தேசம் எனக்கு இல்லை என்று உன்னை அனுப்பியவனிடம் சொல்வாயாக!” என்று தண்டராய சுவாமி சொன்னது அவனை மெள்ள கோபமூட்டியது.


அலெக்ஸாண்டர் ஆம்பி குமாரனை நண்பன் என்று அழைத்தாலும் அவன் உள்மனதைப் பொருத்தவரை காந்தாரம் அவன் வென்ற பூமி தான். ஆம்பி குமாரன் எதிர்த்திருந்தால் அவனை வென்று இந்தப் பூமியை அவன் அடைந்திருப்பான். ஆம்பி குமாரன் மிகவும் புத்திசாலித்தனமாக நட்புக்கரம் நீட்டி தொடர்ந்து காந்தாரத்தை ஆள அனுமதி பெற்றிருக்கிறானேயொழிய உண்மையில் இப்பகுதியின் ஆட்சியாளன் இப்போது அலெக்ஸாண்டர் தான். அப்படி இருக்கையில் ஆள்பவன் அழைத்த பிறகும் வர மறுத்ததோடு, அரசன் என்றும் அழைக்க மறுத்து ‘உன்னை அனுப்பியவன்’ என்று அலட்சியமாகச் சொன்னது மன்னிக்க முடிந்த குற்றமாக அவனுக்குத் தோன்றவில்லை. துறவிக்கும் அகம்பாவம் நல்லதல்ல....


நினைக்க நினைக்க சிறிது சிறிதாக கோபம் மேலெழ ஆரம்பித்தவுடன் அலெக்ஸாண்டர் முகம் சிவந்து போனது அவன் நிறத்துக்கு மிக நன்றாகவே தெரிந்தது. ஆம்பி குமாரன் முதல் முறையாக அவன் கோபத்தைப் பார்த்ததால் பயந்தே போனான். அரசனான தானே நிலைமை புரிந்து அனுசரித்துப் போகையில் ஒரு துறவி இப்படித் திமிராக நடந்து கொள்வதை அவனுக்கும் அகங்காரத்தின் உச்சமாகவே தோன்றியது. அலெக்ஸாண்டர் கோபப்பட்ட பிறகு, தான் கோபப்படாமலிருப்பது சரியல்ல என்று எண்ணியவனாக அவன் கோபத்துடன் கூறினான். “அகம்பாவத்துடன் பேசிய அந்தத் துறவியை மூட்டையைக் கட்டித் தூக்கி வருவது போல தூக்கிக் கொண்டு வர வேண்டியது தானே. அதை விட்டு அந்த ஆள் சொன்னதைக் கேட்டுக் கொண்டு வந்து தகவல் தெரிவிக்கிறீர்களே”


ஒனெஸ்க்ரீட்டஸ் ஒன்றும் சொல்லாமல் அலெக்ஸாண்டரைப் பார்த்தான். அலெக்ஸாண்டர் ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாக எழுந்தான்.


ஆம்பி குமாரன் அலெக்ஸாண்டரிடம் கேட்டான். “என்ன நண்பா?”


“அந்த அகம்பாவத் துறவியை நானே சென்று சந்திக்கிறேன். சிலருக்கு வாளின் மூலமாகத் தான் மரியாதையைக் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அப்படியும் கற்றுக் கொள்ள மறுத்தால் வாளுக்கு இரையாக்கவும் வேண்டியிருக்கிறது”


ஆம்பி குமாரனுக்குத் துறவிகளைக் காண்பதும், பேசுவதும் துன்பமாகவே இருந்த காரணத்தால் அவன் உடன் செல்ல விரும்பவில்லை. ஆனாலும் காந்தாரத்தில் அலெக்ஸாண்டர் ஓரிடம் செல்லும் போது உடன் செல்லா விட்டால் அது மரியாதையாக இருக்காது என்றும் தோன்றியதால் ”நானும் வரட்டுமா நண்பா?” என்று கேட்டு வைத்தான்.


ஆம்பி குமாரனின் மனநிலையைப் படிக்க முடிந்த அலெக்ஸாண்டர் புன்னகையுடன் சொன்னான். “வேண்டாம் நண்பா. நான் ஒனெஸ்க்ரீட்டஸையும் சில வீரர்களையும் அழைத்துச் செல்கிறேன்.”



காட்டின் அமைதியைக் குதிரைகளின் குளம்படிகள் சத்தம் குலைத்தது. ஒனெஸ்க்ரீட்டஸுடன் சென்றதை விட அலெக்ஸாண்டருடன் அதிக வீரர்கள் குதிரைகளில் சென்றதால் அதிகப்படியாக ஒலித்த ஓசை கேட்டு காட்டு விலங்குகள் பல வித குரல்களில் கத்தி, வரக்கூடிய ஆபத்தைத் தங்கள் சகாக்களுக்கு அறிவித்தன.


தண்டராய சுவாமி அந்த ஆபத்தை உணர்ந்த மாதிரி தெரியவில்லை. குதிரைகளின் குளம்படிச் சத்தம் நெருங்கி விட்ட போதும் அவர் மூடிய கண்களைத் திறக்காமல் இப்போதும் படுத்த நிலையிலேயே இருந்தார்.


ஒனெஸ்க்ரீட்டஸ் சற்று தொலைவில் பாறை மீது படுத்துக் கொண்டிருந்த தண்டராய சுவாமியைக் கைகாட்டினான். அலெக்ஸாண்டர் உடன் வந்த வீரர்களை அங்கேயே நிறுத்தி விட்டு ஒனெஸ்க்ரீட்டஸை மட்டும் தன்னுடன் வர சமிக்ஞை செய்து விட்டு குதிரையுடன் அந்தத் துறவியை நெருங்கினான்.


அலெக்ஸாண்டர் தன்னை நெருங்கிய பிறகும் தண்டராய சுவாமி கண்களைத் திறக்கவில்லை. அலெக்ஸாண்டர் அந்தத் துறவியிடமிருந்து தேஜஸுடன் வெளிப்பட்ட ஞான அலைகளை உணர்ந்தான். ஆனாலும் எப்போதும் மனதில் இருப்பதைத் தேவைப்பட்டால் ஒழிய முகத்தில் காட்டிக் கொள்ளும் பழக்கம் இல்லாத அலெக்ஸாண்டர் இடி முழக்கமிடும் குரலில் கர்ஜித்தான். “துறவியே”


தண்டராய சுவாமி மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தார். ஒனெஸ்க்ரீட்டஸ் அவருக்கு அலெக்ஸாண்டரை அறிமுகப்படுத்தும் வகையில் அறிவித்தான். “கடவுளின் புத்திரனும், மாவீரருமான சக்கரவர்த்தி அலெக்ஸாண்டர் வந்திருக்கிறார்...”


படுத்த நிலையிலிருந்த தண்டராய சுவாமி அலெக்ஸாண்டரைப் பார்த்த பின்னும் எழுந்திருக்கும் சிரமத்தை மேற்கொள்ளவில்லை. பார்த்த முதல் கணத்திலேயே பலர் கண்களில் காணும் பிரமிப்பை தண்டராய சுவாமியின் கண்களில் காண முடியவில்லை. அவர் விழிகளில் ஞான ஒளியைக் கண்ட போதும் அலெக்ஸாண்டரால் அவருடைய அலட்சியத்தை அலட்சியம் செய்ய முடியவில்லை. அவனுக்குள் கோபம் பொங்கியது. அதைக் கவனிக்க மறுத்தவராக அவர் ஒனெஸ்க்ரீட்டஸிடம் சொன்னார். ”அனைவரும் கடவுளின் புத்திரர்களே. நீயும், நானும், தள்ளி நிற்கும் அந்த வீரர்களும், அவர்களையும் தாண்டி இந்த வனமெல்லாம் நிறைந்திருக்கும் துறவிகளும் கூடக் கடவுளின் புத்திரர்களே. இந்தப் பெருமையை மானிடர்கள் மட்டுமே பெற்றவர்கள் அல்ல. விலங்குகளும், அனைத்து உயிரினங்களும் அப்படியே பெற்றிருக்கின்றன...”


அமைதி மாறாமல் சொன்ன தண்டராய சுவாமியின் சொற்களை ஒனெஸ்க்ரீட்டஸ் மொழி பெயர்த்துச் சொல்ல அலெக்ஸாண்டர் அனல் பறக்கும் பார்வையுடன் தண்டராய சுவாமியைப் பார்த்தபடியே தன் இடையில் சொருகியிருந்த வாளை உருவினான்.


உருவிய வாளைப் பார்த்த பின்பும் தண்டராய சுவாமி தன் அமைதியைச் சிறிதும் இழக்கவில்லை. அலெக்ஸாண்டர் கர்ஜனை செய்தான். “எனக்குச் சொந்தமான நிலத்தில் படுத்திருக்கிறாய் துறவியே. அப்படியிருந்தும் நான் அழைத்தும் நீ வர மறுக்கிறாய் என்பது தண்டனைக்குரியது.”


ஒனெஸ்க்ரீட்டஸ் அதை மொழிபெயர்த்துச் சொன்னதும் தண்டராய சுவாமி அலட்டாமல் புன்னகையுடன் சொன்னார். ”இந்த நிலம் யாருக்கும் சொந்தமானதல்ல. ஆனாலும் உன்னைப் போலவே இந்த நிலத்தை முன் எத்தனையோ காலங்களில் எத்தனையோ பேர் சொந்தம் கொண்டாடியிருக்கிறார்கள். இனி வரும் காலங்களிலும் அப்படியே பலர் இதை சொந்தம் கொண்டாடக்கூடும். ஆனாலும் இந்த வினோதம் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது”


அந்த தத்துவார்த்த சிந்தனையை மெச்சாத அலெக்ஸாண்டர் சொன்னான். “இருக்கலாம். நான் நிகழ்காலத்தைப் பற்றிப் பேசுகிறேன் துறவியே. இப்போது இது எனக்குச் சொந்தமானது.”


தண்டராய சுவாமி மறுபடியும் புன்னகைத்தார். ”என்ன வேடிக்கை. நீ சொல்லும் இந்த நிகழ்காலத்தில் இந்தப் பாறையின் அடியில் உள்ள பூச்சிகள் இந்த நிலத்தை அவற்றுக்குச் சொந்தமானதாக எண்ணிக் கொண்டிருக்கின்றன.”


இந்த வகைப் பேச்சை இனியும் வளர்த்த விரும்பாத அலெக்ஸாண்டர் தன்னுடைய வாளை தண்டராய சுவாமியின் தொண்டையருகே நீட்டினான். ”நான் நினைத்தால் இந்தக் கணமே உன் உயிரை மாய்த்து விட முடியும் முட்டாள் துறவியே.”


அப்போதும் அலெக்ஸாண்டரால் தண்டராய சுவாமியின் விழிகளில் பயத்தைப் பார்க்க முடியவில்லை. தண்டராய சுவாமியின் புன்னகையும் முகத்தில் குறையவில்லை. ”இந்தக் கணமில்லா விட்டாலும் ஏதோ ஒரு கணம் இழக்கப் போகிற உயிர் எப்போது போனால் என்ன அலெக்ஸாண்டர்? அதில் கலங்குவதற்கோ பயப்படுவதற்கோ என்ன இருக்கிறது?”


தத்துவங்கள் பேசும் எத்தனையோ மனிதர்களை அலெக்ஸாண்டர் கண்டிருக்கிறான். ஆனால் மரணத்தின் வாயிலில் நிற்க வைக்கிற போது விதிவிலக்காக விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில மனிதர்களைத் தவிர மற்றவர்களிடம் வெளிப்படுவது பயம் மட்டுமே. தத்துவங்கள் நின்று போய் பயம் மட்டுமே தங்கும் சந்தர்ப்பங்கள் அவை. இந்த மனிதரும் ஒரு விதிவிலக்கே. சாக்ரசிடீஸைப் போல. எத்தனையோ முறை சாக்ரசிடீஸைப் பற்றி அலெக்ஸாண்டர் பிரமிப்புடன் நினைத்துப் பார்த்திருக்கிறான். அந்தக் காலத்தில் வாழ்ந்திருந்தால் அந்த உயர்வை நேரடியாகப் பார்த்திருக்கலாம் என்று ஆசைப்பட்டு இருக்கிறான். அது முடியாவிட்டாலும் சாக்ரசிடீஸைப் போன்ற இந்த மனிதரைக் காணும் சந்தர்ப்பம் இன்று அவனுக்குக் கிடைத்திருக்கிறது. மகத்தான ஞானி என்று அவரது தேஜஸும் சொல்கிறது, அவர் நடந்து கொள்வதிலிருந்தும் தெரிகிறது...


அலெக்ஸாண்டர் வாளை அதன் உறையில் செருகி விட்டு அவரைத் தலைவணங்கினான். அவரிடம் நீண்ட நேரம் பேசினான். நிறைய கேள்விகள் கேட்டான். தண்டராய சுவாமியும் அமைதியாகவும், பொறுமையாகவும், ஆழமான கருத்துகளைச் சொன்னார். உலகாளக் கிளம்பிய சக்கரவர்த்தியாக அல்லாமல் அரிஸ்டாட்டிலின் சீடனாக அவரிடமிருந்து ஞானாமிர்த மொழிகளைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டுக் கடைசியில் நன்றி சொல்லி மறுபடியும் தலைவணங்கி விட்டுக் கிளம்பிய போது அலெக்ஸாண்டரின் மனம் லேசாக இருந்தது.


இந்த உணர்வு சில மணி நேரங்கள் தான் அவனிடம் தங்கப் போகிறது. மறுபடி ஏதோ ஒரு நாள் தனிமையில் அவன் இதை யோசிக்கலாம். எதுவும் அவனை மாற்றி விடப் போவதில்லை. அப்படி மாறிவிடவும் அவன் விரும்பவில்லை. ஆனாலும் அவ்வப்போது இந்த ஞானத்தை அவனால் தேடாமல் இருக்க முடியவில்லை. இதைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. சிறிது காலமே தங்கினாலும் இது தரும் ஆசுவாசம் மகத்தானது!


(தொடரும்)

என்.கணேசன்



 

Monday, January 2, 2023

யாரோ ஒருவன்? 119


ன்வர் அன்று தொழிற்சாலைக்கு வந்த போது ஏதோ யோசனையோடு வருவது போல் காட்டிக் கொண்டான். அமைதியாக உள்ளே போய் குரியர் கவர்களைக் கொடுத்து விட்டு சிந்தனைகளில் ஆழ்ந்தவனாய் யாரையும் பார்க்காமல் போய் விட்டான். அவன் வந்ததிலிருந்து போகும் வரை வேறு எங்கும் பார்வையைத் திருப்பாமல் சந்தேகத்துடன் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த எதிர் வீட்டு கூர்க்கா அவன் போன பின்பு நிம்மதி அடைந்தான். தேவையில்லாமல் இவனைச் சந்தேகப்பட்டு விட்டோம் என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது.

சுமார் ஒரு மணி நேரத்தில் நீல நிறச் சீருடையில் ஒருவன் பைக்கில் தொழிற்சாலை வாசலில் வந்து தன்னுடைய சட்டைப்பையிலிருந்து ஒரு பெரிய காகிதத்தை எடுத்து தொழிற்சாலையின் பெரிய பெயர்ப்பலகையையும், காகிதத்தில் உள்ள பெயரையும் சரி பார்த்துக் கொண்டு உள்ளே போனான். கூர்க்கா அவனையும் கூர்ந்து பார்த்தான். ஆனால் அந்த ஆள் அந்த வீட்டையோ கூர்க்காவையோ திரும்பியும் பார்க்கவில்லை.

சற்று முன் தான் ரா அலுவலத்திலிருந்து தொழிற்சாலை மானேஜிங் டைரக்டருக்குப் போன்கால் போயிருந்தது. அவர் சொல்லி தொழிற்சாலை வாசலில் உள்ள சிசிடிவி கேமராவின் மூன்று நாள் பதிவுகளை அலுவலகத்தில் எடுத்து வைத்திருந்தார்கள். நீல நிறச் சீருடையில் வந்தவன் அதை வாங்கிக் கொண்டு போனான். அவன் போகும் போதும்  எதிர் வீட்டையோ கூர்க்காவையோ பார்க்கவில்லை.    

அந்த காமிராப் பதிவுகளை நரேந்திரனும் அவன் ஆட்களும் கவனமாகப் பார்த்தார்கள். அதைப் பார்க்கும் போது தான் அவர்களுக்கு காலை ஒன்பது மணியிலிருந்து, இரவு ஒன்பது மணி வரை ஒரு கூர்க்காவும், இரவு ஒன்பது மணியிலிருந்து காலை ஒன்பது மணி வரை இன்னொரு கூர்க்காவும் காவலுக்கு இருப்பது தெரிந்தது. காலை ஆறுமணி அளவில் யாரோ ஒருவன் வந்து சில பொருள்களைத் தந்து விட்டுப் போவதும் அதை கூர்க்கா எடுத்துக் கொண்டு போய் வாசற்கதவைத் திறந்து உள்ளே வைத்து விட்டு மீண்டும் கதவைச் சாத்திக் கொண்டு திரும்ப வருவது தெரிந்தது. வேறு யாரும் வந்து போகிறவர்கள் இல்லை.

இரண்டு நாள் முன்பு மட்டும் இரவு பதினோரு மணிக்கு ஒரு கார் அந்த வீட்டு முன் வந்து நின்று இரண்டு பேர் இறங்கி வேகமாக உள்ளே போனார்கள். அரை மணி நேரம் இருந்து விட்டுத் திரும்பி வந்தார்கள். வந்தவர்கள் வேகமாகப் போய் விட்டார்கள், வீட்டுக்கு முன் விளக்கு எதுவும் இல்லாததால் போகும் போது முகங்கள் சரியாகத் தெரியவில்லை. திரும்ப வரும் போது மட்டும் தொழிற்சாலையின் முகப்பு வாசல் பெரிய விளக்கில் முகங்கள் ஓரளவு தெரிந்தன. நரேந்திரன் அந்த இரண்டு பேர் முகங்களையும் பெரிதுபடுத்திப் பார்த்தான். இருவரில் ஒருவன் அஜீம் அகமதின் மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திமான ஆள்.

“அப்படியானால் அந்த வீட்டில் இருப்பது அஜீம் அகமது தான்.” நரேந்திரன் உற்சாகத்தோடு கூவினான்.


ஞ்சனி தாம்பாளத்தட்டோடு பக்கத்து வீட்டுக் கேட் கதவைத் திறக்கும் போது காம்பவுண்டு சுவர் அருகே நின்று கொண்டே தீபக் அங்கே வெளியே சுதர்ஷன் தெரிகிறானா என்று எட்டிப் பார்த்தான். சுதர்ஷன் வெளியே தெரியவில்லை. ஆனால் கதவு திறந்தே இருந்தது. ரஞ்சனி திரும்பிப் பார்த்து மகனிடம் ’இனி நீ போ. நான் போய்க் கொள்கிறேன்’ என்று பார்வையாலேயே சொல்லி விட்டு உள்ளே நுழைந்தாள்.

வரவேற்பறையில் கருப்புக் கண்ணாடி போட்டு அமர்ந்திருந்த மனிதன் தான் நாகராஜாக இருக்க வேண்டும் என்று அனுமானித்தவளாக “நமஸ்காரம் ஐயா” என்று பயபக்தியுடன் சொன்னாள்.

நாகராஜ் வார்த்தைகள் இல்லாமல் கைகூப்பினான். எதிரில் காலியாக இருந்த நாற்காலியைக் காட்டி அமரும்படி அவன் சைகை காட்டினான். தாம்பாளத் தட்டை அவன் நாற்காலிக்கு அருகே கீழே வைத்து விட்டு அவளும் கைகூப்பி வணங்கி விட்டு அந்த எதிர் நாற்காலியில் அமர்ந்தாள்.

அவன் கருப்புக் கண்ணாடி போட்டிருப்பான் என்று தீபக் சொல்லி இருக்காதது ரஞ்சனிக்கு சிறிய மனக்குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏதாவது கண்பிரச்னையாக இருக்குமோ, அதுகுறித்து ஏதாவது சம்பிரதாயத்திற்காகக் கேட்க வேண்டுமோ என்று அவள் யோசித்தாள். ஆனால் அதிகப்பிரசங்கித் தனமாக அது ஆகிவிடுமோ என்ற எண்ணமும் அவளுக்குள் எழுந்தது. ஏற்கெனவே தீபக் பல முறை அறிவுரை சொல்லி இருக்கிறான்...

அவனாக எதாவது சொல்வான் என்று எதிர்பார்த்து அவன் ஒன்றும் சொல்லாமல் போகவே ரஞ்சனி நேரடியாக விஷயத்துக்கு வந்தாள்.

“நான் தீபக்கோட அம்மா.... என் உயிர் சினேகிதன் ஒருத்தன் 22 வருஷங்களுக்கு முன்னாடி ஒரு விபத்துல இறந்து போயிட்டான். எனக்கு சில நாளாவே அவன் வந்து என்னைப் பார்க்கற மாதிரி, கவனிக்கிற மாதிரி தோணுது. கொஞ்ச நேரம் தான். பிறகு மறைஞ்சு போயிடறான்.... அது எதனாலன்னு தெரியணும்....”

நாகராஜ் மெல்லக் கேட்டான். “அப்படி வந்து பார்க்கிறதும், கவனிக்கிறதும் உங்களுக்குத் தொந்திரவா இருக்கா?’

ரஞ்சனி சொன்னாள். “தொந்திரவுன்னு சொல்ல முடியாது. சொர்க்கத்துல எப்பவோ சாந்தி அடைஞ்சிருக்க வேண்டிய ஆத்மா இத்தனை வருஷமா இல்லாம இருந்து இப்ப திடீர்னு ஏன் வரணும்னு தான் புரியலை”

நாகராஜ் கேட்டான். “இத்தனை வருஷமா உங்களுக்கு அந்த நண்பன் ஞாபகம் வந்ததில்லையா?”

ரஞ்சனி லேசாகக் கண்கலங்கியபடி சொன்னாள். “சில பேர் நம்ம வாழ்க்கைல ஒரு பகுதியாவே ஆயிடுவாங்க. அப்படி ஆயிட்டவங்கள மறக்க முடிஞ்சா தான பிறகு நினைச்சுப் பார்க்கறதுக்கு. அந்த நண்பன் எனக்கு என் வாழ்க்கைல ஒரு பகுதியானவன். வாழ்ந்த காலத்துல வார்த்தைகள் இல்லாமயே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுப்போம். அந்த அளவு நெருக்கமானவன்கிறதால அப்பப்ப அவனை நினைச்சுகிட்டே தான் இருப்பேன். ஆனா இப்ப கொஞ்ச நாளா தான் அவன் நேர்ல வந்து பார்த்துட்டிருக்கற மாதிரி உணர்றேன். அதனால தான் ஏன்னு கேட்க வந்தேன்.”

நாகராஜ் கேட்டான். “அந்த நண்பன் பெயர் மாதவனா?”

ரஞ்சனி ஆச்சரியத்துடன் சொன்னாள். “ஆமாங்க”

நாகராஜ் அமைதியாகச் சொன்னான். “அவன் மரணம் இயற்கையாய் நடக்கலை. அவனைக் கொன்னிருக்காங்க”

ரஞ்சனி வருத்ததுடன் சொன்னாள். “உண்மை தான் அது. வெடிகுண்டு விபத்துல இறந்தான்”

நாகராஜ் சொன்னான். “மாதவன் அந்தக் கார் வெடிகுண்டு விபத்துல சாகல. வேற விதமாய் அவனைக் கொன்னுருக்காங்கன்னு சொல்றேன்”

ரஞ்சனி திகைப்புடன் பார்த்தபடி சொன்னாள். “தீபக் கனவுல கூட யாரோ ஒருத்தர் என் மரணம் இயற்கையாய் நடக்கல. என்னைக் கொன்னுட்டாங்கன்னு சொல்றதா சொன்னான். அது மாதவன் தானா?”

”ஆமா”

“நீங்க கூட அந்த ஆத்மா கிட்ட யாரோ ஒரு பொண்ணு கவிதை சொல்றதாகவும், அந்த ஆத்மா ரசிச்சுக் கேட்கறதாவும் ஒரு காட்சி தெரியறதாவும் சொல்லி இருந்தீங்க”

“ஆமா. அந்தப் பொண்ணு நீங்க தான். அதை நான் தீபக் கிட்ட சொல்லலை. அதைச் சொன்னா மாதவன் யாருன்னும் நான் அவன் கிட்ட சொல்ல வேண்டி வரும்னு சொல்லலை.”  

ரஞ்சனி அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள். அவன் அமைதியாகவே இருந்தான். சிறிது நேரம் இருவருமே ஒன்றும் பேசவில்லை.

மெல்ல ரஞ்சனி கேட்டாள். “மாதவனை யார் கொன்னாங்க?”

“அவனோட நெருங்கிய நண்பர்கள் ரெண்டு பேர்”

அண்டசராசரங்களே இடிந்து அவள் மேல் விழுவதைப் போல ரஞ்சனி உணர்ந்தாள். நிலைகுலைந்து போன அவள் சகல பலத்தையும் திரட்டி தன்னை மீட்டுக் கொண்டு உறுதியாகச் சொன்னாள். “இல்லை.... அவங்க அப்படி பண்ணியிருக்க மாட்டாங்க. நான் அவனை நேசிச்ச அளவுக்கே அவங்களும் அவனை நேசிச்சாங்க.... எனக்குத் தெரியும். ஏன்னா நாங்க நாலு பேரும் அவ்வளவு நெருங்கின நண்பர்களா இருந்தோம்...”

நாகராஜ் மௌனமாக இருந்தான். அவன் எதாவது சொல்வான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ரஞ்சனி உடைந்த குரலில் சொன்னாள். “எதாவது சொல்லுங்க....”

நாகராஜ் சொன்னான். “நான் உண்மை என்னன்னு சொல்லிட்டேன். நீங்க அப்படி இருக்காதுன்னு சொல்றீங்க. அதுக்கு நான் என்ன சொல்ல முடியும்? பல சமயங்கள்ல பொய் தான் நம்ப சுலபமானதாகவும், நிம்மதியைத் தர்றதாகவும் இருக்கு. உண்மை எப்பவுமே அப்படி சுலபமா ஜீரணிக்க முடிஞ்சதா இருக்கறதில்லை.”

ரஞ்சனி அழுகுரலில் கேட்டாள். “யாராவது நெருங்கின நண்பனையே காரணமில்லாமல் கொல்வாங்களா?”

(தொடரும்)
என்.கணேசன்