பத்ரசால் வந்தவுடன் மகத வீரர்கள் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் போரிட ஆரம்பிக்க, முந்தைய வேகத்தில் சந்திரகுப்தனின் படை உள்ளே நுழைய முடியவில்லை. வாயிற்கதவருகேயே தன் படை ஸ்தம்பித்து நிற்பதை பின்னாலிருந்த சந்திரகுப்தன் கவனித்தான். ஏற்கெனவே உள்ளே போயிருந்தவர்கள் உள்ளேயிருந்த மகத வீரர்களுடன் தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்ததால் அவர்களாலும் வாசலில் இருந்த தடையைத் தளர்த்த முடியவில்லை.
சந்திரகுப்தன் இனியும்
உள்ளே நுழையக் கால தாமதமாவது ஆபத்து என்பதை உணர்ந்தான். மகதப்படைகள் அருகிலேயே தானிருக்க
வேண்டும். தகவல் தெரிந்தவுடன் அவர்கள் வந்து சேர அதிக காலம் தேவைப்படாது. அவர்கள் வருவதற்குள்
கணிசமான படை வீரர்கள் உள்ளே நுழைந்தால் தான் தங்கள் திட்டம் நிறைவேற முடியும் என்று
உணர்ந்ததால் சந்திரகுப்தன் தன் குதிரையை மிக லாவகமாக முன்னோக்கிச் செலுத்தினான். அவன்
படையினரை விலக்கிக் கொண்டே லாவகமாகப் போன விதத்தைப் பின்னாலிருந்து பார்த்த மலைகேது
மலைத்தான்.
“என்ன மனிதனிவன்
தந்தையே. யாருமே இல்லாத இடத்தில் செல்வதைப் போல இத்தனை நெரிசலுக்கிடையேயும் எத்தனை
அனாயாசமாகச் செல்கிறான்.”
பர்வதராஜன் வறண்ட
குரலில் சொன்னான். “மாடு மேய்த்துக் கொண்டு இருந்தவன் மன்னன் ஆனது வெறும் அதிர்ஷ்டத்தால்
அல்ல மகனே. போரின் முடிவுகள் கண நேரத்தில் வெற்றியிலிருந்து தோல்விக்கும், தோல்வியில்
இருந்து வெற்றிக்கும் மாறிவிடும் வாய்ப்பு இருப்பதால் பல நேரங்களில் விரைந்து செயல்படுவது
மிக முக்கியமாக இருக்கிறது....”
சந்திரகுப்தன் வாயிலை அடைந்த போது அவனுடைய
வீரர்கள் உற்சாகத்தோடு ஆரவாரம் செய்தார்கள். பத்ரசாலுக்கு
சந்திரகுப்தனின் திடீர் வரவு கூடுதல் அதிர்ச்சியாக இருந்தது. கூடவே ராக்ஷசர் அவன்
அங்கிருக்கக் கூடும் என்று முன்பே சந்தேகப்பட்டது நினைவுக்கு வந்தது. எல்லா வகையிலும்
நாடகமாடியிருக்கிறார்கள் எதிரிகள் என்று கசப்புடன் நினைத்துக் கொண்டான்.
சந்திரகுப்தன் வாயிலை நெருங்கிய பிறகு
மகத வீரர்களால் அவன் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவன் ஏதோ
ஒரு பிரம்மாண்ட சக்தியால் ஆட்டுவிக்கப் படுபவன் போல் அசுர வேகத்தில் எதிரிகளைத் தாக்கினான். பத்ரசாலே
அவன் வாள்வீச்சையும், வேகத்தையும் கண்டு அசந்து போனான். அவன் தன் இத்தனை ஆண்டு கால அனுபவத்தில்
இப்படி ஒரு வீரனைப் பார்த்ததில்லை.
சந்திரகுப்தனின் அருகில் இருப்பதாலேயே
அவன் அருகிலிருந்த அவனுடைய வீர்ர்களும் அவனிடமிருந்து அந்த அசுர சக்தியைப் பெற்றது
போல் தோன்றியது. அவர்களும் பராக்கிரமத்துடன்
போராடினார்கள். பத்ரசாலும், மற்ற மகத வீரர்களும் சிறிது சிறிதாகப் பின் வாங்க
வேண்டியதாயிற்று. சந்திரகுப்தன் பாடலிபுத்திர
வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தான். அந்த
நேரத்தில் உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்ட மகதப்படைகளும் வேகமாக அங்கே வந்து சேர ஆரம்பித்தன.
சந்திரகுப்தன் பத்ரசாலைத் தனியாகக்
குறி வைத்து தாக்க ஆரம்பித்தான். முழுவதுமாக அவர்கள் படை வந்து சேர்வதற்குள்
பத்ரசாலை வீழ்த்தினால் பின் மற்றதெல்லாம் சுலபம் என்று சந்திரகுப்தன் கணக்கிட்டான். பத்ரசால் சந்திரகுப்தனுக்குச்
சரிசமமாகப் போரிட்டாலும் போகப் போகச் சிறிது தளர்வை உணர்ந்தான். அதைப்
பயன்படுத்திக் கொண்டு சந்திரகுப்தன் வேகத்தைக் கூட்டிய போது அவன் வாள் பத்ரசாலின் இடது
தோளைப் பதம் பார்த்தது.
பத்ரசால் வேகமாகப் பின் வாங்கினான். மகதப் படைகள் அவனுக்கும் சந்திரகுப்தனுக்கும் இடையே புகுந்து தங்கள் சேனாதிபதியைப் பாதுகாக்க ஆரம்பித்தன. பத்ரசாலுக்குப் போர்க்காயங்கள் புதிதல்ல. இடது தோளில் அதிக வேதனையை அவன் அனுபவித்த போதும், காயம் அவன் வேகத்தைக் குறைக்க முடிந்ததே ஒழிய அவன் வீரியத்தைக் குறைத்து விடவில்லை. ஆனால் மகதப் படைகள் பெருமளவு அங்கு வந்து சேர்ந்து விட்டதால் இனி அங்கு இருந்து கொண்டு சந்திரகுப்தனுடன் போராடுவதை விட அரண்மனைக்குச் சென்றிருக்கும் சின்ஹரன் பெருஞ்சேதத்தை ஏற்படுத்துவதற்கு முன் அவனைத் தடுத்து நிறுத்துவது முக்கியம் என நினைத்தான்.
அங்கு
வந்து சேர்ந்திருந்த அவனுடைய படைத் தலைவன் ஒருவனிடம் “இங்கு பார்த்துக் கொள். அரண்மனையில்
மன்னருக்கும், இளவரசருக்கும் ஆபத்து. அங்கு பாதுகாப்பை ஏற்படுத்தி விட்டு மீண்டும்
இங்கு வருகிறேன்” என்று சொல்லி விட்டு பத்ரசால் அரண்மனை நோக்கி விரைந்தான்.
சுதானுவுக்கு பத்ரசால் வெளியே என்ன சலசலப்பு என்று பார்த்து விட்டு வருவதாகச் சொல்லி விட்டுப்
போனவன் திரும்பி வரத் தாமதமானது புதிய பிரச்சினையின் அறிகுறியாகத் தோன்ற ஆரம்பித்தது.
கார்த்திகேயனும் வரவில்லை, பத்ரசாலும் வரவில்லை என்பது வெளியே ஏதோ ஆபத்து ஏற்பட்டிருக்கிறது
என்பதை உணர்த்தியது. சற்று தொலைவிலிருந்து வேறு சத்தங்களும் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.
காவலை மீறி ராக்ஷசர் வந்து சேர்ந்து விட்டாரோ? எதற்கும் போய்ப் பார்க்கலாம் என்று
எண்ணி அவன் எழுந்த போது சின்ஹரன் உள்ளே நுழைந்தான்.
சுதானு கேட்டான்.
“என்ன நண்பரே வெளியே ஏதாவது பிரச்சினையா? நீங்கள் வரவும் தாமதமாகி விட்டது. வெளியே
சென்று பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பிய சேனாதிபதியும் திரும்பி
வரவில்லை நான் சற்று பயந்து விட்டேன்.”
சின்ஹரன் சொன்னான்.
“வெளியே ராக்ஷசரின் ஒற்றர்களும், அவருடைய நம்பிக்கைக்குரிய வீரர்களும் இங்கே என்ன
நடக்கிறது என்று அறிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதை சேனாதிபதியும்,
நானும் சமாளித்து விட்டோம். இப்போது முற்றுகை இட்டிருக்கும் எதிரிகள் திடீரென்று தாக்குதலை
ஆரம்பித்து விட்டார்கள் போல் தெரிகிறது. சத்தம் கேட்கிறது பார்த்தீர்களா? சேனாதிபதி
அங்கே விரைந்திருக்கிறார். நான் அவரை அனுப்பி விட்டு உங்களைச் சந்திக்க வந்தேன்.”
சுதானு கவலையுடன்
கேட்டான். “ஏன் திடீரென்று இந்த வேளையில் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறார்கள் நண்பரே?
நாம் என்ன செய்வது?”
சின்ஹரன் சொன்னான்.
“கவலைக்கு அவசியமில்லை இளவரசே. நம் படை வீரர்கள் அங்கே விரைந்திருக்கிறார்கள். சேனாதிபதியும்
சென்றிருக்கிறார். ஆரம்பித்த வேகத்திலேயே எல்லாம் அடங்கி விடும்.”
சுதானு அந்த வார்த்தைகளில்
அமைதியடைய விரும்பினாலும் தொலைவிலிருந்து அதிகமாகிக் கொண்டே வரும் போர்ச்சத்தம் அவன்
அமைதியடைய அனுமதிக்கவில்லை. அவன் ஏதோ கேட்க வாயெடுத்த போது சின்ஹரன்
ரகசியக் குரலில் சொன்னான். “நீங்கள் இனி என்றுமே கவலைப்படத் தேவையில்லாதபடியான ஒரு
நிகழ்வு நடக்கப் போகிறது இளவரசே”
சுதானு வியப்புடன்
பார்க்க, ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள நெருங்கி வருபவன் போல் அவனை நெருங்கி வந்த
சின்ஹரன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவனை இறுக்கப் பிடித்துக் கொண்டு தன் குறுவாளை உருவி
சுதானுவின் வயிற்றில் ஆழமாகச் சொருகினான். அதிர்ச்சியால் வாயடைத்துப் போயிருந்த சுதானுவின்
தொண்டைக்குழியிலிருந்து ஒரு சிறு சத்தம் பரிதாபமாய் எழுந்து அங்கேயே அடங்கியது.
சின்ஹரன் மெல்லச்
சொன்னான். “மரணம் எல்லாக் கவலைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது இளவரசே.”
சுதானு துடிதுடித்தபடி
கீழே சாய சின்ஹரன் குனிந்து தன் குறுவாளை மேலும் ஆழப்படுத்தி பின் திரும்ப உருவியெடுத்து
நிமிர்ந்தான். சுதானு திகைப்புடனேயே உயிரை விட்டான். சின்ஹரன் அங்கிருந்து செல்ல யத்தனித்த
போது அவன் அடிவயிற்றில் பத்ரசாலின் குறுவாள் ஊடுருவியது. சின்ஹரன் திகைப்புடன் எதிரே
பார்த்த போது பத்ரசால் அனல் பறக்கும் பார்வையுடன் நின்றிருந்தான். சின்ஹரன் கண நேரத்தில்
திகைப்பிலிருந்து மீண்டு தன் குறுவாளை பத்ரசால் மீது வீச அது பத்ரசாலின் இதயத்தை ஊடுருவியது.
பத்ரசால் கோரமாய்
அலறியபடி கீழே விழுந்தான். அவன் உணர்ந்த அதிர்ச்சி அவன் முகத்தில் நிரந்தரமாய்த் தங்கியது.
கீழே சாய்ந்த சின்ஹரன்
தன் உயிர் உடலை விட்டுப் பிரிவதை உணர்ந்தான். ஆனால் அதில் அவனுக்குத் துக்கமில்லை.
வலியும் பெரிதாய்த் தோன்றவில்லை. பல வருடங்களுக்கு முன்பே அவன் தன் உயிரை மாய்த்துக்
கொள்ள முயன்றவன் தான். அன்று இறந்திருந்தால் அவன் அவமானச் சின்னமாகவே இருந்திருப்பான்.
இப்போதோ அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்திருப்பதற்கான மனநிறைவே அவனிடம் இருந்தது. சாணக்கியரின்
ஒன்றிணைந்த பாரதம் என்ற கனவு நனவாக அவனும் ஒரு சிறு பங்காற்றி இருக்கிறான். ஒரு சரித்திரப்
பிழையாக ஆகவிருந்த அவன் வாழ்க்கை தடம் மாறி இன்று நிறைவை எட்டியதற்காக அவன் சாணக்கியரை
நன்றியுடன் நினைத்துப் புன்னகைத்தான். அவன்
புன்னகையுடனேயே இறந்து போனான்.
(தொடரும்)
என்.கணேசன்
இன்னும் சில நாட்களில் புதிய நாவல் கர்மா வெளியாகவிருக்கிறது!
இவ்வளவு முக்கியமான வேலையை செய்த சின்ஹரன் வீரமரணம் அடைந்தது வருத்தமே...ஆனால், தன் வேலையை முடித்து கொடுத்து விட்டு இறந்துள்ளார்...
ReplyDeleteOh Noooo! i really started to like Sinharan more and he seemed like the main lead lately . i was hoping him to be reunited with his lady love Mainika and to be promoted as army commander etc ..this is a sad ending for this great guy :(
ReplyDeleteஒவ்வொரு வீரனில் மனத்தையும் படம் பிடித்துக் காட்டி இருக்கிற்ரிகள். அற்புதம்!
ReplyDeleteSir, If possible just give short note about ' Karma'.
ReplyDelete