மறுநாள் காலை அலுவலகத்திற்குச் சென்ற போது முன் அறையில் கண்ணன்
இருந்தார். மேஜையில் வேலைப் பட்டியல் இருந்தது. ஷ்ரவன்
அவரை வணங்கி விட்டு வேலையை ஆரம்பித்தான். சுமார் பத்து நிமிடங்கள்
அவர் அவனுடன் இருந்து விட்டு, பின் கேட்டார் “வேலையில் சந்தேகம்
எதுவும் இல்லையே?”
ஷ்ரவன் புன்முறுவலுடன் “இல்லை” என்ற பின்
அவர் போய் விட்டார். ஷ்ரவன் அந்த அறையில் ஒரே ஒரு கண்காணிக்கும் காமிரா இருப்பதைப்
பார்த்தான், அது அவனுக்கு எதிரே இருந்தது. இந்த அறைக்கு
அடுத்த இரண்டு அறைகள் திறக்கப்பட்டு இருக்கவில்லை. அதன் பின்
பெரிய ஹால் இருப்பதும் அங்கு சில கம்ப்யூட்டர்கள் இருப்பதும் தெரிந்தது. ஹாலில்
சில துறவிகள் வேலை செய்து கொண்டிருப்பதை அவனால் பார்க்க முடிந்தது.
ஷ்ரவன் இப்போது வேலை செய்து கொண்டிருக்கும்
கம்ப்யூட்டரில் அந்த வேலை தவிர வேறு எந்த முக்கிய தகவல்களோ, ப்ரோகிராம்களோ
இல்லை. அதனால் தான் புதியவனான அவனுக்குத் தைரியமாய் அந்தக் கம்ப்யூட்டரில்
வேலை செய்ய அனுமதித்திருக்கிறார்கள் என்பதை ஷ்ரவன் புரிந்து கொண்டான். ஆனால் வல்லவனுக்குப்
புல்லும் ஆயுதம்!
இந்த அறையில் காமிரா அவனுக்கு எதிரே
இருப்பதால் அவனும், அவன் கம்ப்யூட்டரின் பின்பக்கமும் தெரியுமே தவிர அவன் கம்ப்யூட்டரில்
என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது தெரியாது. அதே போல்
அவனுக்குப் பின்னால் சுவர் இருந்தது. அதனால் பின்னாலிருந்து
யாரும் வந்து கவனிக்கும் ஆபத்தும் இல்லை. இந்த நிலைமையைப்
பயன்படுத்திக் கொண்டு, இதிலிருக்கும் தகவல்களில் ஏதாவது முக்கியத் துப்பு கிடைக்குமா
என்று தேட ஆரம்பித்தான். ஆனால் எதிரே உள்ள காமிராவுக்கு அவன் அந்தப் பட்டியலைப் பார்த்துப்
பார்த்து கம்யூட்டரில் டைப் செய்வது போலத் தான் தெரிய வேண்டும் என்பதில் கவனமாக இருந்தான். அதனால்
பட்டியலைப் பார்ப்பதும், கம்ப்யூட்டரில் டைப் செய்வதும் சீராக அதில் தெரியும்படி பார்த்துக்
கொண்டான்.
சைத்ரா என்று பெயரை அந்தத் தகவல்களில்
தேடிய போது அவள் அறை எண்.206 என்றும், அவள் தற்போது அங்கு
இல்லை என்றும் தகவல் வந்தது. அவளுக்குக் கடைசியாக ஒதுக்கிய வேலை என்ன, தேதி என்ன
என்று தேடினான். அவளுக்குக் கடைசியாக ஒதுக்கிய வேலை யோகாலயத்தில் உள்ள நூலகத்தில்
என்றிருந்தது. தேதியைப் பார்த்தான். அவளுடைய
தந்தைக்கு மொட்டைக் கடிதம் வந்ததற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் அந்த வேலையை ஒதுக்கியிருந்தார்கள். அதற்குப்
பின் இறக்கும் வரை அவளுக்கு எந்த வேலையும் ஒதுக்கப்படவில்லை. அப்படியென்றால்
இங்கேயே எங்காவது மாதக்கணக்கில் அவளை சிறைப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.
அதற்கு முன்பு சைத்ராவுக்கு அங்கு என்னவெல்லாம்
வேலை ஒதுக்கினார்கள் என்பதைப் பார்த்தான். தோட்ட வேலை, நூலக வேலை, கம்யூட்டர்
அறையில் வேலை- இந்த மூன்று வேலைகள் தான் மாற்றி மாற்றி அவளுக்குத் தரப்பட்டு
இருந்தன. அவள் அதிக நாட்கள் செய்த வேலை தோட்ட வேலையாகவும், அதற்கு
அடுத்தபடியாகச் செய்த வேலை நூலக வேலையாகவும் இருந்தது. கம்ப்யூட்டர்
அறையில் குறைவான நாட்களே அவள் வேலை பார்த்திருக்கிறாள்…
இதற்கும் மேல் இன்று தேடினால் அவன்
கம்ப்யூட்டரில் இந்த வேலை தவிர வேறெதோ
செய்கிறான் என்பதை அவர்கள் கண்டுபிடித்து விடும் அபாயம் உண்டு. ஏனென்றால்
அவன் செய்யும் வேலைக்கு எத்தனை நேரம் தேவைப்படும் என்பதை அவர்கள் அறிவார்கள். அவன் வேகமாக
வேலை செய்யக்கூடியவன் என்ற அபிப்பிராயத்தையும் அவர்களிடம் ஏற்படுத்தி விட்டிருக்கிறான். அதனால்
தேடுவதை நிறுத்தி அவர்கள் தந்த வேலையைத் தொடர்ந்து செய்து அதைச் சீக்கிரமே முடித்தான்.
அந்த ஹாலில் துறவிகள் மிக மும்முரமாக
வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களையும்
அவன் அதிகம் பார்க்கவில்லை. அவன் மீது அவர்களுக்குச் சந்தேகம் எந்த வகையிலும் வந்துவிடக்கூடாது
என்பதில் மிகவும் கவனமாக இருந்த அவன், வேலையை முடித்துக்
கொண்டு எழுந்து வெளியே வந்தான்.
அவன் அறைக்கு வந்த போது முக்தானந்தாவும், சித்தானந்தாவும்
வந்திருக்கவில்லை. கட்டிலில் சாய்ந்தபடி ஷ்ரவன் யோசித்தான். எதோ ஒரு
காரணத்திற்காக சைத்ராவை அந்தக் குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு, சிறைப்படுத்தி இருக்கிறார்கள். அறை எண் 206லேயே அவளைச் சிறைப்படுத்தினார்களா, இல்லை வேறொரு அறையில்
சிறைப்படுத்தி வைத்தார்களா என்று தெரியவில்லை….
சிறிது நேரத்தில் முக்தானந்தாவும், சித்தானந்தாவும் வந்தார்கள்.
ஷ்ரவன் சித்தானந்தாவிடம் கேட்டான். “இங்கே நூலகம்
இருக்கிறதா?”
“பெரிய நூலகம் இருக்கிறது.” சித்தானந்தா சொன்னார்.
“அது எங்கே இருக்கிறது? நீங்கள் அதைச் சொன்னதாய் எனக்கு
நினைவில்லை”
“அது விருந்தினர் கட்டிடம் தாண்டி உள்ள ஹாலின் பின்பகுதியில் இருக்கிறது. அங்கிருந்து
நாம் நூல்கள் எடுத்து வந்து படிக்க அனுமதி உண்டு. விருப்பமிருந்தால்
நீங்கள் புத்தகம் எடுத்து வந்து படிக்கலாம். காலை ஒன்பது
முதல் மாலை ஆறரை மணி வரை நூலகம் திறந்திருக்கும்.”
”அப்படியானால்
நூலகத்திலும் நாம் வேலை செய்ய முடியுமா?”
“முடியும். ஆனால் அதிகமாக
அந்த வேலையை பெண் துறவிகளுக்குத் தான் ஒதுக்குகிறார்கள்.”
“அது யார்
மேற்பார்வையில் இயங்குகிறது.”
“ஸ்வாமினி
கல்பனானந்தாவின் மேற்பார்வையில் தான் அது இயங்குகிறது.”
அவன் கேட்டதற்கெல்லாம் சரியாகப் பதில்
சொன்னாலும் சித்தானந்தா மிகவும் சோர்வாகத் தெரிந்தார். “ஏன் சுவாமிஜி. உடல் நலமில்லையா?” என்று ஷ்ரவன்
கேட்டான்.
“அப்படித்தான்
உணர்கிறேன்” என்று சித்தானந்தா சொன்னார். “சிறிது
நேரம் இளைப்பாறினால் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்” என்று சொன்னவர்
தன் கட்டிலில் படுத்துக் கொண்டார்.
மதிய உணவுக்கான மணி அடித்தது. சித்தானந்தா
அவர்களுடன் கிளம்பவில்லை. “சாப்பிடத் தோன்றவில்லை” என்று சொல்லி
விட்டார். அதனால் முக்தானந்தாவும், ஷ்ரவனும்
சாப்பிடச் சென்றார்கள்.
ஷ்ரவன் உணவருந்தும் போது இதுவரை அவன்
அறிந்த தகவல்களை வரிசைப்படுத்திப் பார்த்தான். சைத்ரா
அதிகம் வேலை செய்த தோட்ட வேலையிலும், நூலக வேலையிலும்
அவளுடைய மேற்பார்வையாளராக இருந்தவள் சுவாமினி கல்பனானந்தா தான். அதனால்
அவளுக்கு இங்கு என்ன நடந்திருந்தாலும் அது கல்பனானந்தா அறியாமல் நடந்திருக்க வாய்ப்பே
இல்லை.
கண்ணன் ஷ்ரவன் வேலை செய்த காமிராப் பதிவை முழுவதுமாகப் பார்த்தார். தேவையில்லாமல்
அந்தப் பக்கம், இந்தப் பக்கம் பார்க்காமல் அவன் தானுண்டு, தன் வேலையுண்டு
என்று இருந்தான். ஆரம்பத்திலும், கடைசியிலும் ஹாலில்
வேலை செய்பவர்களை பார்த்தான் என்றாலும் அது இயல்பான பார்வை தான். அவன் வேலை
செய்து முடித்த நேரமும் சரியாகத் தான் இருந்தது. வழக்கமாய்
செய்யும் துறவிக்கும் இதே அளவு நேரம் தேவைப்படும். அப்படிப்
பார்த்தால் புதியவனான ஷ்ரவன் வேலையை அந்த நேரத்தில் முடித்ததே ஆச்சரியம் தான். அவன் செய்த
வேலையில் ஒரு பிழையும் இல்லை என்பது கூடுதல் ஆச்சரியம்.
கல்பனானந்தா பிரம்மானந்தாவைச் சந்திக்கச் சென்ற போது அவர்
நாளைய பயணத்தின் போது சந்திக்கவிருக்கும் ஆட்கள் பற்றிய குறிப்புகளைப் படித்துக் கொண்டிருந்தார். அவளைப்
பார்த்தவுடன் அவர் அந்தக் குறிப்புகளைக் கீழே வைத்தார்.
கல்பனானந்தா அவரை வணங்கி விட்டு, அவர் நாளை
தரவிருக்கும் சொற்பொழிவுக்கான குறிப்புகளை அவரிடம் தந்தாள். அவர் அதை
வாங்கிக் கொண்டு கேட்டார். “அந்தப் புதிய பையன் ஷ்ரவன் எப்படி நடந்து கொள்கிறான்.”
கல்பனானந்தா சொன்னாள். “குறை சொல்ல
எதுவுமில்லை”
கண்ணனும், பாண்டியனும்
கூட அவரிடம் அதையே தான் சொல்லியிருந்தார்கள். திருப்தி
அடைந்த பிரம்மானந்தா சொன்னார். “எனக்கு அவன் இங்கே இரண்டு முறை பார்த்த காட்சி வினோதமாகவும், ஆச்சரியமாகவும்
இருக்கிறது. அதனால் தான் விசாரித்தேன். புதிதாக
எதையாவது இங்கே பார்த்ததாய்ச் சொன்னானா?”
“இல்லை யோகிஜி. நானாய்
கேட்கவுமில்லை.”
பிரம்மானந்தா சொன்னார். “அவனிடம்
அவ்வப்போது பேச்சு கொடு. அப்படி அவன் ஏதாவது பார்த்திருக்கிறான் என்றால் அதை நாம்
விவரமாய் கேட்டுக் கொள்வது நல்லது. உன்னிடம் அவன் ஏற்கெனவே
மனம் விட்டுப் பேசியிருக்கிறான் என்பதால் தொடர்ந்து அவன் எதாவது பார்த்தாலும் அதை உன்னிடம்
சொல்லத் தயக்கம் இருக்காது”
“சரி யோகிஜி”
(தொடரும்)
என்.கணேசன்
வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த, என்.கணேசனின் புதிய நாவல் கர்மா வெளியாகி விட்டது. நூலைப் பெற பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
கர்மா நாவல் பற்றிய விவரங்கள் அறிய -
https://nganeshanbooks.blogspot.com/2025/06/blog-post.html
Vanakkam Mr. Ganesan. Thanks for all your excellent stories that also give spiritual insights creating interest for self awareness. Can you pls provide a synopsis of your new novel "Karma"? Thanks.
ReplyDeleteமேலே லிங்க் தந்துள்ளேன்.
Deleteஷர்வனும்.. கல்பனாநந்தாவிடம் எப்படி பேச்சு கொடுக்கலாம் என்று காத்திருக்கிறான்...அதற்கு தகுந்த வழியை யோகிஜியே ஏற்படுத்திக் கொடுத்து விட்டார்....
ReplyDelete