சத்சங்கம் முடிந்து திரும்பி வருகையிலும் முக்தானந்தா வேகமாக முன்னால் போய் விட்டார். சத்சங்கத்தில் அவர் அவனைத் திரும்பிப் பார்த்ததை சித்தானந்தாவும் கவனித்திருந்ததால் ஷ்ரவன் அவரிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். “சுவாமி முக்தானந்தா ஒரு புதிராய் எனக்குத் தோன்றுகிறார். என்னை அடிக்கடி கூர்ந்து பார்க்கிறார். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.”
சித்தானந்தா சொன்னார். “அது தான் எனக்கும் ஆச்சரியமாய் இருக்கிறது. பொதுவாக
யாராவது அவர் எதிரே போய் நின்றாலும் கூட அவ்வளவாகக் கவனிக்க மாட்டார்.”
அறைக்கு வந்து ஷ்ரவன் தியானம் செய்து
முடித்த போதும் முக்தானந்தா அவனையே பார்த்துக் கொண்டு இருப்பதைக் கவனித்த ஷ்ரவன் புன்னகையுடன்
அவரிடம் நேரடியாகவே கேட்டு விட்டான். “ஏன் சுவாமிஜி என்னையே
பார்க்கிறீர்கள்? நான் தியானம் செய்வது சரியில்லையா?”
முக்தானந்தா சொன்னார். “நீ செய்யும்
தியானம் யோகாலயத்தில் சொல்லிக் கொடுத்த தியானம் போல் தெரியவில்லையே”
ஷ்ரவன் அவருடைய கவனிக்கும் திறனை வியந்தான். அவன் மந்திர
ஜெபம் தான் இப்போதும் செய்து முடித்திருக்கிறான். அவர்கள்
செய்யும் தியானம் செய்யாமல் வேறெதையோ செய்கிறான் என்பதைப் பார்வையிலேயே கண்டுபிடித்து
விட்டாரே!
ஷ்ரவன் புன்னகையுடன் சொன்னான். “உண்மை தான்
சுவாமிஜி. நான் வேறொரு தியானம் தான் செய்தேன். போய்ச்
சேரும் இலக்கு தானே முக்கியம் சுவாமிஜி, வழிகள் வேறு வேறாக
இருந்தால் என்ன? நான் முன்கூட்டியே அந்த தியானம் செய்து பழக்கப்பட்டதால் அதில்
என்னால் சீக்கிரமாய் லயிக்க முடிகிறது.”
முக்தானந்தாவும் அபூர்வமாய் புன்னகைத்தார். நல்ல வேளையாக
இருவரும் அது என்ன தியானம், எப்படிச் செய்வது என்று அவர்கள் இருவரும் ஷ்ரவனைக் கேட்கவில்லை.
அன்றிரவும் நடுநிசியில் முக்தானந்தா
பேசும் சத்தம் கேட்டு ஷ்ரவனுக்கு விழிப்பு வந்தது. முக்தானந்தா
தாழ்ந்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார். “எல்லாம்
நாடகம். எல்லாம் நாடகம்.”
அவன் நாடகமாடுவதைச் சொல்கிறாரா? இன்றும்
அதிர்ச்சியாக இருந்தது என்றாலும் நேற்றைய அளவுக்கு இல்லை. ஓரளவு பழகி
விட்டது. உலகமே நாடகமேடை, நடப்பதெல்லாம்
நாடகம் என்ற வகையில் அவர் தத்துவம் பேசியிருக்கவும் வாய்ப்புண்டு. அவன் கண்களை
நன்றாகவே திறந்து அவரைப் பார்த்தான். அவர் நேற்று போல்
அவனைப் பார்க்கும் நிலையில் தான் அமர்ந்திருந்தார். அவருக்குப்
பின்புறமிருந்து நிலவொளி வீசியதால் அவர் முக பாவனை அரையிருட்டில் அவனுக்குச் சரியாகத்
தெரியவில்லை. அவன் கண்விழித்துப் பார்ப்பது அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும்
அவர் அவனிடம் எதாவது சொல்லவோ, கேட்கவோ முற்படாமல் கட்டிலில் சாய்ந்து கொண்டு வெளிப்பக்கம்
வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்.
வேடிக்கையான மனிதர் என்று எண்ணியபடி
ஷ்ரவன் மறுபடியும் உறங்கி விட்டான். காலையில் அவன் எழுந்த
போது சித்தானந்தா குளியலறையில் இருந்தார். முக்தானந்தா
அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
ஷ்ரவன் அவரிடம் நட்பு கலந்த உரிமையுடன்
கேட்டான். “ஏன் சுவாமிஜி அடிக்கடி என்னையே பார்க்கிறீர்கள்? மற்றவர்கள்
உங்கள் எதிரிலேயே வந்தாலும் கூட நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ள மாட்டீர்கள் என்று சுவாமி
சித்தானந்தா சொன்னார்.”
முக்தானந்தா சொன்னார். “நீ எனக்கு
வித்தியாசமாய் தெரிகிறாய். அதனால் தான் உன்னைப் பார்க்கிறேன். உன்னை புரிந்து
கொள்ள முயற்சி செய்கிறேன். மற்றவர்கள் எல்லாரும் ஆட்டு மந்தைகள். ஒன்றைப்
பார்த்துப் புரிந்து கொண்டால் போதும். எல்லாவற்றையும்
புரிந்து கொண்டது போலத்தான். அதனால் அவர்களைப் பார்க்கவும் சலிப்பாய் இருக்கிறது.”
அவர் பேசும் மனநிலையில் இருக்கிறார்
என்பதால் நேற்றும், அதற்கு முந்தைய நாளும் அவர் சொன்ன வாக்கியங்களுக்கு என்ன
அர்த்தம் என்று அவன் கேட்க நினைத்தான். ஆனால் அதற்குள்
குளியலறையில் இருந்து சித்தானந்தா வெளியே வந்து விட்டார். அதனால்
அந்தக் கேள்வியைக் கேட்பதை ஷ்ரவன் தவிர்த்தான்.
அன்று காலை உணவுக்குப் பின் ஷ்ரவன்
தோட்ட வேலைக்குப் போன போது தூரத்தில் குமரேசன் தெரிந்தான். தோட்ட வேலையிலும்
கூட ஆண் துறவிகள் ஒரு பக்கம், பெண் துறவிகள் ஒரு பக்கம் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். குமரேசன்
பெண் துறவிகள் வேலை பார்க்கும் பகுதியில் இருந்தான். தொலைவிலிருந்து
இருவரும் பார்த்துக் கொண்டாலும் அவர்கள் இருவருமே
அன்னியர்கள் போலவே இருந்தார்கள். தோட்ட வேலையே அவனுக்கு ஒதுக்கப்பட்டாலும் குமரேசனிடம் நெருங்கிப்
பேசும் வாய்ப்பு அதிகமில்லை என்பது ஷ்ரவனுக்குப் புரிந்தது. ஒவ்வொரு
பகுதியிலும் கண்காணிப்பாளன் ஒருவனாவது இருந்தான். யாராவது இருவர் பேசிக் கொள்வது தெரிந்தால்
அவன் உடனடியாக அவர்களருகே சென்று விடுவதை ஷ்ரவன் கவனித்தான்.
கல்பனானந்தா ஷ்ரவனைப் பார்த்து நட்புடன்
புன்னகைத்து அவன் செய்ய வேண்டிய வேலையை அவனுக்குத் தெரிவித்து விட்டுச் சென்று விட்டாள். அவள் முற்பகல், பிற்பகல்
இரண்டு வேளைகளிலும், வேலை ஆரம்பிக்கும் சமயத்திலும், வேலை முடியும்
சமயத்திலும் மட்டுமே இருப்பதை ஷ்ரவன் கவனித்தான். மற்ற சமயங்களில்
அவளுக்கு என்ன பிரத்தியேக வேலை ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது தெரியவில்லை.
ஷ்ரவன் எங்கேயெல்லாம் வேலை செய்கிறானோ
அந்த இடத்திலிருந்து கண்ணுக்கு எட்டிய தூரம் தெரிவதை எல்லாம் மிகவும் சூட்சுமமாகக்
கவனித்து மனதில் குறித்துக் கொண்டான். உடன் இருக்கும்
ஆட்களையும் கூர்ந்து கவனித்து யாரெல்லாம் யோகாலயத்தின் ஒற்றராக இருக்கக்கூடும் என்பதையும்
கணித்து அந்த வகை ஆட்களிடம் சர்வ ஜாக்கிரதையாக நடந்து கொண்டான்.
ஆனால் எதுவுமே சைத்ரா வழக்குக்கு உதவுவது
போல் இல்லை. சைத்ரா எந்த அறையில் தங்கி இருந்தாள், அவளுடன்
தங்கியிருந்த துறவிகள் யார், இங்கு அவள் எப்படி ஆபத்தில் சிக்கினாள், அவளைக்
காப்பாற்றும் உத்தேசத்தில் மொட்டைக் கடிதம் எழுதியது யார் என்றெல்லாம் கண்டுபிடிக்க
எந்தவொரு வழியும் தெரியவில்லை. ஆண் துறவியாய் இருக்கும் அவன் அந்தப் பெண் துறவிகள் வசிக்கும்
கட்டிடத்திற்குப் போகக்கூட முடியாது என்ற நிலைமையில் தான் இருக்கிறான். ஏதாவது
ஒரு சின்னத் துப்பு கிடைத்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு சிறிதாவது முன்னேறலாம். ஆனால் அந்தச்
சின்னத் துப்பும் அவனுக்கு அகப்படுவது போல் தெரியவில்லை...
டாக்டர் சுகுமாரனின் மனைவி இரவு கூர்க்கா மூலம், அவள் ஊரில்
இல்லாத போது நடந்தது அனைத்தையும் அறிந்து கொண்டாள். கூர்க்கா
சுகுமாரனை திருநீறோடும், சிலுவையோடும் பார்த்தது பற்றிச் சொன்ன போது அவளால் நம்பவே
முடியவில்லை. ஆனால் மயான காளியின் படத்தை வாங்கும் அளவு முன்னேறி, டாமிக்குத்
தாயத்து கட்டுமளவு நிலைமை முற்றியதை யோசித்துப் பார்க்கையில் அவளால் நம்பாமல் இருக்கவும்
முடியவில்லை. அவளுக்கு அவர் தாயத்து கட்டிக் கொண்டதையாவது ஏற்றுக் கொள்ள
முடிந்தது. ஆனால் டாமிக்குத் தாயத்து கட்டியது அபத்தத்திலும், அபத்தமாக
அவள் அறிவுக்கே பட்டது. டாமியின் கழுத்திலிருந்து அதைக் கழட்டினால் கொலை விழும் என்று
ஆக்ரோஷமாய் அவர் கத்தியது அவருக்குச் சித்தம் கலங்கி விட்டதை உறுதிப்படுத்தியது.
அவள் தன்னுடைய மிக நெருங்கிய தோழியிடம், இந்த விஷயங்களைச்
சுருக்கமாகச் சொல்லி அழுத போது, அந்த தோழி, அவருக்கு ஆகாத யாரோ
அவருக்குச் செய்வினை செய்திருக்கலாம் என்று சொல்லி மேலும் பயமுறுத்தினாள். அந்தச்
செய்வினையே கூட அந்தத் தாயத்தில் இருக்கவும் கூடும் என்று அவள் தன் அனுமானத்தையும்
சொன்னாள். அதனால் தான் அந்தத் தாயத்தை நாயிடமிருந்து கூட எடுக்க விடாமல்
அவர் ஆக்ரோஷமாய் கத்துகிறார் என்று தோழி சுட்டிக் காட்டினாள். கத்துவது
அவர் அல்ல, அவரைப் பீடித்திருக்கும் செய்வினை, அவரை விட்டு
விலக மறுப்பதன் அறிகுறியே அது என்றும் சொன்னாள்.
அந்தத் தோழிக்குத் தெரியாதது எதுவுமில்லை
என்ற அபிப்பிராயம் சுகுமாரனின் மனைவிக்கு உண்டு. தோழி சொன்னதெல்லாம், தற்போது
நடந்து கொண்டிருப்பவைக்கு ஒத்தும் போவதால் இதற்கு என்ன தீர்வு என்று அவள் கேட்க, தோழி அவளுக்குத்
தெரிந்த மந்திரவாதி ஒருவர் பெயரைச் சொன்னாள்.
டாக்டர் சுகுமாரனின் மனைவி “அந்த மந்திரவாதி
எங்கேயிருக்கார்? கூப்பிட்டால் உடனடியாய் வருவாரா?” என்று ஆவலுடன்
கேட்ட நேரத்தில் தான், தற்செயலாக டாக்டர் சுகுமாரன் அங்கே வந்தார்.
மனைவி கேட்ட கேள்விகள் காய்ச்சிய ஈயமாய்
சுகுமாரனின் காதுகளில் விழுந்தன. ‘வரும் சோதனைகளுக்கு ஒரு அளவு இல்லையா?’
என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்!
சுகுமாரனுக்கு இரண்டாவது ரவுண்டு ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது...என நினைக்கிறேன்🤣🤣🤣🤣
ReplyDelete